Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம் > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் > 28 இராவணன் சோகப் படலம் >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 21. பிரமாத்திரப் படலம்


தூதரால் செய்தி அறிந்த இராவணன் இந்திரசித்தை அழைத்தல்

கரன் மகன் பட்டவாறும், குருதியின்கண்ணன் காலின்
சிரன் தெரிந்து உக்கவாறும், சிங்கனது ஈறும், சேனைப்
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்;
வரன்முறை தவிர்ந்தான், 'வல்லைத் தருதிர், என் மகனை!' என்றான். 1

இந்திரசித்து விரைந்து வருதல்

'கூயினன், நுந்தை' என்றார்; குன்று எனக் குவிந்த தோளான்,
'போயின நிருதர் யாரும் போந்திலர் போலும்!' என்றான்;
'ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?' என்னா,
மேயது சொன்னார், தூதர்; தாதைபால் விரைவின் வந்தான். 2

தந்தையைத் தேற்றி, இந்திரசித்து போர்க்களம் செல்லுதல்

வணங்கி, 'நீ, ஐய! "நொய்தின் மாண்டனர் மக்கள்" என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்' என்றான். 3

வலங்கொண்டு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட
பொலங் கொடி நெடுந் தேர் ஏறி, போர்ப் பணை முழங்கப் போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம், யானைக்
குலங்களும், தேரும், மாவும், குழாம் கொளக் குழீஇய அன்றே. 4

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி, கொட்டி
பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம், தூரி,
கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே. 5

யானைமேல் பறை, கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி,
மான மாப் புரவிப் பொன் - தார், மாக் கொடி கொண்ட பண்ணை,
சேனையோர் சுழலும் தாரும், சேண் தரப் புலம்ப, மற்றை
வானகத்தோடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே. 6

சங்கு ஒலி, வயிரின் ஓசை, ஆகுளி, தழங்கு காளம்
பொங்கு ஒலி, வரி கண் பீலிப் பேர் ஒலி, வேயின் பொம்மல்,
சிங்கத்தின் முழக்கம், வாசிச் சிரிப்பு, தேர் இடிப்பு, திண் கைம்
மங்குலின் அதிர்வு, - வான மழையொடு மலைந்த அன்றே. 7

வில் ஒலி, வயவர் ஆர்க்கும் விளி ஒலி, தெழிப்பின் ஓங்கும்
ஒல்லொலி, வீரர் பேசும் உரை ஒலி, உரப்பில் தோன்றும்
செல் ஒலி, திரள் தோள் கொட்டும் சேண் ஒலி, நிலத்தில் செல்லும்
கல்லொலியோடும் கூடக் கடல் ஒலி கரந்தது அன்றே. 8

நாற் கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின் -
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்மேல் தொடர்ந்து வீச,
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப்
பாற்கடல் அனைய, வாட் கண் பனிக் கடல் படைத்தது அன்றே. 9

ஆயிர கோடித் திண் தேர், அமரர்கோன் நகரம் என்ன
மேயின சுற்ற, தான் ஓர் கொற்றப் பொன் தேரின் மேலான்,
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற, நடுவண் தோன்றும்
நாயகப் பரிதி போன்றான் - தேவரை நடுக்கம் கண்டான். 10

இந்திரசித்து சங்கநாதம் செய்து, நாண் ஒலி எழுப்பி, ஆரவாரித்தல்

சென்று வெங் களத்தை எய்தி, சிறையொடு துண்டம், செங் கண்,
ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலின், ஒப்ப,
பின்றல் இல் வெள்ளத் தானை முறை படப் பரப்பி, பேழ்வாய்
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து, அமைந்து நின்றான். 11

புரந்தரன் செருவில் தந்து போயது, புணரி ஏழும்
உரம் தவிர்த்து, ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை
கரந்தது வயிற்று, கால வலம்புரி கையில் வாங்கி,
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, ஊதினான், திசைகள் சிந்த. 12

சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந் தானை, யானை
சிங்கத்தின் நாதம் வந்து செவிப் புக விலங்கு சிந்தி,
'எங்கு உற்ற?' என்னாவண்ணம் இரிந்தது; ஈது அன்றி ஏழை-
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி, ஆர்த்தான். 13

இராமனது சேனையின் நிலைமை

கீண்டன, செவிகள்; நெஞ்சம் கிழிந்தன் கிளர்ந்து செல்லா
மீண்டன, கால்கள்; கையின் விழுந்தன, மரனும் வெற்பும்;
பூண்டன, நடுக்கம்; வாய்கள் புலர்ந்தன் மயிரும் பொங்க,
'மாண்டனம் அன்றோ?' என்ற - வானரம் எவையும் மாதோ. 14

செங் கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் சிறுவந்தானும்,
அங்கதப் பெயரினானும், அண்ணலும், இளைய கோவும்,
வெங் கதிர் மௌலிச் செங் கண் வீடணன், முதலாம் வீரர்
இங்கு இவர் நின்றார் அல்லது, இரிந்தது, சேனை எல்லாம். 15

அரக்கர் சேனை கிளர்ந்து களம் புகுதல்

படைப் பெருந் தலைவர் நிற்க, பல் பெருஞ் சேனை, வெள்ளம்
உடைப்புறு புனலின் ஓட, ஊழிநாள் உவரி ஓதை
கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது; நிருதர் சேனை,
அடைத்தது, திசைகள் எல்லாம்; அன்னவர் அகத்தர் ஆனார். 16

அனுமன் தோளிலும் அங்கதன் தோளிலும் முறையே இராமனும் இலக்குவனும் ஏறி, போர்க்களம் வருதல்

மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல். 17

விடையின்மேல், கலுழன் தன்மேல், வில்லினர் விளங்குகின்ற
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் - கண்ணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார்,
தொடையின் மேல் மலர்ந்த தாரர், தோளின்மேல் தோன்றும் வீரர். 18

நீலன் முதலாக நின்ற படைத் தலைவர்களைப் பின் நிரையில் நிற்குமாறு இராமன் கூறுதல்

நீலனை முதலாய் உள்ள நெடும் படைத் தலைவர் நின்றார்,
தாலமும் மலையும் ஏந்தி, தாக்குவான் சமைந்த காலை,
ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்
மேல் அமர் விளைவை உன்னி, விலக்கினன், விளம்பலுற்றான்: 19

'கடவுளர் படையை நும்மேல் வெய்யவன் துரந்தகாலை,
தடை உள அல்ல் தாங்கும் தன்மையிர் அல்லீர்; தாக்கிற்கு
இடை உளது எம்பால் நல்கி, பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப்
படை உளதனையும், இன்று, எம் வில் தொழில் பார்த்திர்' என்றான். 20

இராம இலக்குவரின் போர்த் திறன்

அருள்முறை அவரும் நின்றார்; ஆண் தகை வீரர், ஆழி
உருள் முறை தேரின், மாவின், ஓடை மால் வரையின், ஊழி
இருள் முறை நிருதர் தம்மேல், ஏவினர் - இமைப்பிலோரும்,
'மருள் முறை எய்திற்று' என்பர் - சிலை வழங்கு அசனி மாரி. 21

தேரின்மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும்
வீரருள் வீரன் கண்டான் - விழுந்தன விழுந்த என்னும்
பாரின் மேல் நோக்கின் அன்றேல், பட்டனர் பட்டார் என்னும்
போரின் மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல். 22

'யானை பட்டனவோ!' என்றான்; 'இரதம் இற்றனவோ!' என்றான்;
'மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ!' என்றான்;
'ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க!' என்றான் -
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின், மயக்கம் உற்றான். 23

'செய்கின்றார் இருவர், வெம் போர்; சிதைக்கின்ற சேனை நோக்கின்,
"ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக!" என்று,
வைகின்றார்; அல்லர் ஆக, வரிசிலை வலத்தால் மாள
எய்கின்றார் அல்லர்; ஈது எவ் இந்திரசாலம்?' என்றான். 24

போர் நிகழ்ச்சியை இந்திரசித்து வியந்து நோக்குதல்

அம்பின் மா மழையை நோக்கும்; உதிரத்தின் ஆற்றை நோக்கும்;
உம்பரின் அளவும் சென்ற பிணக் குன்றின் உயர்வை நோக்கும்,
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும்; கொன்ற
தும்பியை நோக்கும்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும்; 25

மலைகளை நோக்கும்; மற்று அவ் வான் உறக் குவிந்த வன் கண்
தலைகளை நோக்கும்; வீரர் சரங்களை நோக்கும்; தாக்கி,
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும்
சிலைகளை நோக்கும்; நாண் ஏற்று இடியினைச் செவியின் ஏற்கும்; 26

ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை, அலங்கல் மாவை,
ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை, அறுத்தும், அப்பால்
போயின பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும்;
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு இலாப் பரப்பைப் பார்க்கும்; 27

அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற,
எறிவன, எய்வ, பெய்வ, எற்றுறு, படைகள் யாவும்,
பொறி வனம் வெந்த போலச் சாம்பராய்ப் போயது அல்லால்,
செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும்; 28

வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி,
குயில் தலத்து உக்க என்னக் குழைகின்ற குழையை நோக்கும்;
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய்த் தலை இலா ஆக்கை ஈட்டம்
பயிறலை, பறவை பாரில் படிகிலாப் பரப்பை, பார்க்கும்; 29

'அங்கதர் அனந்த கோடி உளர்' எனும்; 'அனுமன் என்பாற்கு
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும்' என்னும்;
'எங்கும் இம் மனிதர் என்பார் இருவரே கொல்!' என்று உன்னும்;
சிங்கஏறு அனைய வீரர் கடுமையைத் தெரிகிலாதான். 30

ஆர்க்கின்ற அமரர்தம்மை நோக்கும்; ஆங்கு அவர்கள் அள்ளித்
தூர்க்கின்ற பூவை நோக்கும்; துடிக்கின்ற இடத் தோள் நோக்கும்;
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிணப் பரப்பை நோக்கும்;
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும். 31

ஆயிர கோடித் தேரும் அரக்கரும் ஒழிய, வல்ல
மா இருஞ் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும், வல்லை
போயின குரக்குத் தானை புகுந்திலது அன்றே, பொன் தேர்த்
தீயவன் தன்மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா. 32

அனுமன் தோள் கொட்டி ஆர்த்தலும், அரக்கர்கள் அஞ்சி நடுங்குதலும்

தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக,
அளப்ப அருந் தேரின் உள்ள ஆயிர கோடி ஆக,
துளக்கம் இல் ஆற்றல் வீரர் பொருத போர்த் தொழிலை நோக்கி,
அளப்ப அருந் தோளைக் கொட்டி, அஞ்சனை மதலை ஆர்த்தான். 33

ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா,
தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர்; சிலர் படைகள் சிந்தி,
பாரிடை இருந்து வீழ்ந்து பதைத்தனர்; பைம் பொன் இஞ்சி
ஊரிடை நின்றுளாரும், உயிரினோடு உதிரம் கான்றார். 34

இந்திரசித்து தான் ஒருவனாய் நின்று, இராம இலக்குவர் இருவரையும் எதிர்தல்

'அஞ்சினிர், போமின்; இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியற்பாலிர்
வெஞ் சமம் விளைப்பது என்னோ? நீரும் இவ் வீரரோடு
துஞ்சினிர் போலும் அன்றோ?' என்று அவர்ச் சுளித்து நோக்கி,-
மஞ்சினும் கரிய மெய்யான் - இருவர்மேல் ஒருவன் வந்தான். 35

அக் கணத்து, ஆர்த்து மண்டி, ஆயிர கோடித் தேரும்
புக்கன - நேமிப் பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன,
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய, பாரின்
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட, தேவர் உட்க. 36

இந்திரசித்தின் தலையை வீழ்த்துவதாக இலக்குவன் சபதம் செய்தல்

மாற்றம் ஒன்று, இளையவன் வளை வில் செங் கரத்து
ஏற்றினன் வணங்கி நின்று, இயம்புவான்: '"இகல்-
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப, ஆர் அமர்
தோற்றனென்" என்று கொண்டு உலகம் சொல்லுமால்; 37

'"காக்கவும் கற்றிலன், காதல் நண்பiர்
போக்கவும் கற்றிலன், ஒருவன்; போய்ப் பிணி
ஆக்கவும் கற்றிலன்; அமரில் ஆர் உயிர்
நீக்கவும் கற்றிலன்" என்று நின்றதால்; 38

'இந்திரன் பகை எனும் இவனை, என் சரம்
அந்தரத்து அருந் தலை அறுக்கலாது எனின்,
வெந் தொழிற் செய்கையன் விருந்தும் ஆய், நெடு
மைந்தரில் கடை எனப் படுவன், வாழியாய்! 39

'நின்னுடை முன்னர், யான், நெறி இல் நீர்மையான் -
தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால், -
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்!-
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் அரோ. 40

'கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க, என்
சுடு சரம் இவன் தலை துணிக்கலாதுஎனின்,
முடிய ஒன்று உணர்ந்துவென்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக, ஆழியாய்!' 41

இளவலை இராமன் பாராட்டுதல்

வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள்,
'அல்லல் நீங்கினம்' என, அமரர் ஆர்த்தனர்;
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன்
நல் அறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன். 42

முறுவல் வாள் முகத்தினன், முளரிக்கண்ணனும்,
'அறிவென்; நீ, "அடுவல்" என்று அமைதி ஆம் எனின்,
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர்; வேறு இனி விளைவது யாது?' என்றான். 43

இராமனைத் தொழுது, இலக்குவன் போருக்கு எழுதல்

சொல் அது கேட்டு, அடி தொழுது, 'சுற்றிய
பல் பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக்
கொல்வென்; இங்கு அன்னது காண்டிகொல்' எனா,
ஒல்லையில் எழுந்தனன் - உவகை உள்ளத்தான். 44

அங்கதன் ஆர்ப்பும், இராமனின் சங்கநாதமும்

அங்கதன் ஆர்த்தனன், அசனி ஏறு என,
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை
சிங்கமும் நடுக்குற் திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தனன், கடலும் தள்ளுற. 45

அரக்கர் சேனையை இலக்குவன் அழித்தல்

எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம்,
முழு முரண் தண்டு, வேல், முசுண்டி, மூவிலை,
கழு, அயில் கப்பணம், கவண் கல், கன்னகம்,
விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார். 46

மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்தென,
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன்
கான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின்-
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால். 47

ஆயிரம் தேர், ஒரு தொடையின், அச்சு இறும்;
பாய் பரிக் குலம் படும்; பாகர் பொன்றுவர்;
நாயகர் நெடுந் தலை துமியும், நாம் அற்
தீ எழும், புகை எழும், உலகும் தீயுமால். 48

அடி அறும் தேர்; முரண் ஆழி அச்சு இறும்;
கடி நெடுஞ் சிலை அறும்; கவச மார்பு இறும்;
கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர் தம்
முடி அறும்; முரசு அறும்; முழுதும் சிந்துமால். 49

'இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி;
மன்னவர் இவர்; இவர் படைஞர், மற்றுளோர்'
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் -
சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால். 50

தந்தையர் தேரிடைத் தனயர் வன் தலை
வந்தன் தாதையர் வயிர வான் சிரம்
சிந்தின, காதலர்க்கு இயைந்த தேரிடை-
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன. 51

செம் பெருங் குருதியின் திகழ்ந்த, செங் கண் மீன்
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என-
தும்பை அம் தொடையலர் தடக் கை, தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன. 52

தடிவன கொடுஞ் சரம் தள்ள, தள்ளுற
மடிவன கொடிகளும், குடையும், மற்றவும்,
வெடி படு கடல் நிகர் குருதி வெள்ளத்தில்
படிவன, ஒத்தன, பறவைப் பந்தரே. 53

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி. 54

சில்லி ஊடு அறச் சிதறின சில் சில, கோத்த
வல்லி ஊடு அற, மறிந்தன் புரவிகள் மடியப்
புல்லி மண்ணிடைப் புரண்டன சில் சில, போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட, திரிந்தன வெறிய. 55

அலங்கு பல் மணிக் கதிரன, குருதியின் அழுந்தி,
விலங்கு செஞ் சுடர் விடுவன, வெளி இன்றி மிடைந்த,-
குலம் கொள் வெய்யவர் அமர்க் களத் தீயிடைக் குளித்த
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன-இரதம். 56

இராமன் அம்பு சொரிதலால் படைகள் யாவும் மடிய, இந்திரசித்து தனித்து நிற்றல்

ஆன காலையில், இராமனும், அயில் முகப் பகழி
சோனை மாரியின் சொரிந்தனன், அனுமனைத் தூண்டி;
வான மானங்கள் மறிந்தெனத் தேர் எலாம் மடிய,
தானும் தேருமே ஆயினன், இராவணன் தனயன். 57

'எவ்வாறு பொர நினைக்கின்றீர்?' என, இராம இலக்குவரை இந்திரசித்து வினாவுதல்

பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை
வல் விலங்கல்போல் அரக்கர்தம் குழாத்தொடு மடிய,
வில் இலங்கிய வீரரை நோக்கினன், வெகுண்டான்,
சொல் விலங்கலன், சொல்லினன் - இராவணன் தோன்றல். 58

'இருவிர் என்னொடு பொருதிரோ? அன்று எனின், ஏற்ற
ஒருவிர் வந்து, உயிர் தருதிரோ? உம் படையோடும்
பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்;
தருவென், இன்று உமக்கு ஏற்றுளது யான்' எனச் சலித்தான். 59

இலக்குவன் மறுமொழி பகர்தல்

'வாளின், திண் சிலைத் தொழிலினின், மல்லினின், மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும், அமரில்
கோளுற்று, உன்னொடு குறித்து, அமர் செய்து, உயிர் கொள்வான்
சூளுற்றேன்; இது சரதம்' என்று இலக்குவன் சொன்னான். 60

இந்திரசித்தின் மறுமொழி

'முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து, உனக்குப்
பின்பு இறந்தவன் ஆக்குவென்; பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென்; இது முடியேனேல்,
என், பிறந்ததனால் பயன் இராவணற்கு?' என்றான். 61

'இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன,
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென்; "இது புகுந்து இடையே
விலக்குவென்" என விடையவன் விலக்கினும், வீரம்
கலக்குவென்; இது காணும், உன் தமையனும் கண்ணால். 62

'அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால்,
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க,
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள,
வெறுவிது ஆக்குவென், உலகை இக் கணத்தின் ஓர் வில்லால். 63

'கும்பகன்னன் என்று ஒருவன், நீர் அம்பிடைக் குறைத்த
தம்பி, அல்லன் நான்; இராவணன் மகன்; ஒரு தமியேன்;
எம்பிமாருக்கும், என் சிறு தாதைக்கும், இருவீர்
செம் புணீர்கொடு கடன் கழிப்பேன்' என்று தெரிந்தான். 64

வீடணனே உங்கள் எல்லோருக்கும் இறுதிக் கடன் செய்வான் என, இலக்குவன் மொழிதல்

'அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த,
புரக்கும் நன் கடன் செய உளன், வீடணன் போந்தான்;
சுரக்கும் நுந்தைக்கு நீ செயக் கடவன கடன்கள்,
இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும்' என்றனன், இளையோன். 65

இந்திரசித்தும் இலக்குவனும் கடும் போர் புரிதல்

ஆன காலையின், அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய,
பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி,
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான். 66

அங்கதன் தன்மேல் ஆயிரம்; அவற்றினுக்கு இரட்டி,
வெங் கண் மாருதி மேனிமேல்; வேறு உள வீரச்
சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உவப்பு இல செலுத்தி,
எங்கும் வெங் கணை ஆக்கினன் - இராவணன் சிறுவன். 67

இளைய மைந்தன்மேல், இராமன்மேல், இராவணி இகலி,
விளையும் வன் திறம் வானர வீரர்மேல், மெய் உற்று
உளையும் வெஞ் சரம் சொரிந்தனன்; நாழிகை ஒன்று,
வளையும் மண்டலப் பிறை என நின்றது, அவ் வரி வில். 68

பச்சிமத்தினும், மருங்கினும், முகத்தினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைத் துணைக் கடுமையைக் காணா,
அச்சம் உற்றனர், கண் புதைத்து அடங்கினர், அமரர். 69

மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி,
தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி,
ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறம் இலான் அறைந்த
பொய்யின் போம்படி ஆக்கினன், கடிதினின் புக்கான். 70

பிறகின் நின்றனன் பெருந்தகை, இளவலைப் பிரியான்;
'அறன் இது அன்று' என, அரக்கன்மேல் சரம் தொடுத்து அருளான்;
இறவு கண்டிலர் இருவரும், ஒருவரை ஒருவர்;
விறகின் வெந்தன, விசும்பிடைச் செறிந்தன விசிகம். 71

மாடு எரிந்து எழுந்து, இருவர் தம் கணைகளும் வழங்க,
காடு எரிந்தன் கன வரை எரிந்தன் கனக
வீடு எரிந்தன் வேலைகள் எரிந்தன் மேகம்
ஊடு எரிந்தன் ஊழியின் எரிந்தன, உலகம். 72

படம் கொள் பாம்பு-அணை துறந்தவற்கு இளையவன், பகழி,
விடம் கொள் வெள்ளத்தின்மேல் அவன் விடுவன விலக்கி,
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும்
மடங்கல் ஐ-இருநூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான். 73

தேர் அழிந்திட, சேமத் தேர் பிறிது இலன், செறிந்த
ஊர் அழிந்திடத் தனி நின்ற கதிரவன் ஒத்தான்;
'பார் அழிந்தது, குரங்கு எனும் பெயர்' எனப் பதைத்தார்;
சூர் அழிந்திடத் துரந்தனன், சுடு சரம் சொரிந்தான். 74

அற்ற தேர்மிசை நின்று, போர் அங்கதன் அலங்கல்
கொற்றத் தோளினும், இலக்குவன் புயத்தினும், குளித்து
முற்ற, எண் இலா முரண் கணை தூர்த்தனன்; முரண் போர்,
ஒன்றைச் சங்கு எடுத்து ஊதினான், உலகு எலாம் உலைய. 75

சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல,
வெங் கடுங் கணை ஐ-இரண்டு உரும் என வீசி,
சிங்கஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான். 76

இலக்குவனது வெற்றி கண்டு, வானரர் ஆர்த்தல்

கண்ட கார் முகில் வண்ணனும், கமலக் கண் கலுழ,
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற,
அண்டம் உண்ட தன் வாயினால், 'ஆர்மின்' என்று அருள,
'விண்டது அண்டது' என்று, உலைந்திட ஆர்த்தனர், வீரர். 77

இலக்குவன், அயன் படை விட முயல இராமன் அதைத் தடுத்தல்

கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான்;
அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி,
பண்ணவற்கு, 'இவன் பிழைக்குமேல், படுக்கும் நம் படையை;
எண்ணம் மற்று இலை; அயன் படை தொடுப்பேன்' என்று இசைத்தான். 78

ஆன்றவன் அது பகர்தலும், 'அறநிலை வழா தாய்!
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில், இவ் உலகம்
மூன்றையும் சுடும்; ஒருவனால் முடிகலது' என்றான்,
சான்றவன்; அது தவிர்ந்தனன், உணர்வுடைத் தம்பி. 79

தெய்வப் படையை விட எண்ணிய இந்திரசித்து, மறைந்து இலங்கைக்கு செல்லுதல்

மறைந்துபோய் நின்ற வஞ்சனும், அவருடைய மனத்தை
அறிந்து, தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான்,
'பிறிந்து போவதே கருமம், இப்பொழுது' எனப் பெயர்ந்தான்;
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர், சிரித்தார். 80

அஞ்சி ஓடியதாக எண்ணி, வானரர் மகிழ்ந்து ஆரவாரித்தல்

செஞ் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்மேல் செல்வான்,
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற,
'அஞ்சினான் மறைந்தான், அகன்றான்' என, ஆர்த்தார்-
வெஞ் சினம் தரு களிப்பினர், வானர வீரர். 81

உடைந்த வானரச் சேனையும், ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து, இரைந்து, ஆர்த்து, எழுந்து ஆடி,
தொடர்ந்து சென்றது; கொற்றம் அன்று இளவற்குத் தோற்றான்
கடைந்த வேலைபோல் கலங்குறும் இலங்கையில் கரந்தான். 82

இந்திரசித்தின் உட்கருத்தை உணராத இராம இலக்குவர் போர்க்கோலம் களைந்து நிற்றல்

'எல் கொள் நான்முகன் படைக்கலம், இவர் என்மேல் விடா முன்,
முற்கொள்வேன்' எனும் முயற்சியன், மறை முறை மொழிந்த
சொல் கொள் வேள்வி போய்த் தொடங்குவான் அமைந்தவன் துணிவை
மல் கொள் தோளவர் உணர்ந்திலர்; அவன் தொழில் மறந்தார். 83

அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி,
தனுவும், வெங் கணைப் புட்டிலும், கவசமும், தடக் கைக்கு
இனிய கோதையும், துறந்தனர், இருவரும்; இமையோர்
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர்; வாழ்த்தினர் பல்கால். 84

சூரியன் மறைதல்

ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க,
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான், அகன்று இரவி;
'தீர்த்தன்மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்தப்
பார்க்கிலேன்; முந்திப் படுவதே நன்று' எனப் பட்டான். 85

இராமன் ஆணைப்படி சேனைகளுக்கு உணவு கொணர வீடணன் செல்லுதல்

'இரவும் நன் பகலும் பெரு நெடுஞ் செரு இயற்றி,
உரவு நம் படை மெலிந்துளது; அருந்துதற்கு உணவு
வரவு தாழ்த்தது; வீடண! வல்லையின் ஏகி,
தரவு வேண்டினென்' என்றனன், தாமரைக்கண்ணன். 86

'இன்னதே கடிது இயற்றுவென்' எனத் தொழுது எழுத்து,
பொன்னின் மௌலியன் வீடணன், தமரொடும், போனான்;
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையைக் கடந்தான்;
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான். 87

சேனைகளைக் காக்குமாறு இலக்குவனுக்கு இராமன் கட்டளையிட்டு, தெய்வப் படைகளுக்குப் பூசனை இயற்றச் செல்லுதல்

'தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து
மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால்;
ஐய! நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும்,
கை கொள் சேனையைக் கா' எனப் போர்க்களம் கடந்தான். 88

நிகழ்ந்தவற்றை இந்திரசித்து இராவணனுக்குக் கூறி, தன் திட்டத்தைக் கூறல்

தந்தையைக் கண்டு, புகுந்துள தன்மையும், தன்மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும்,
சிந்தையுள் புகச் செப்பினன்; அனையவன் திகைத்தான்,
'எந்தை! என், இனிச் செயத் தக்கது? இசை' என, இசைத்தான். 89

'"தன்னைக் கொல்லுகை துணிவரேல், தனக்கு அது தகுமேல்,
முன்னர்க் கொல்லுகை முயல்க!" என்று அறிஞரே மொழிந்தார்;
அந் நற் போர் அவர் அறிவுறாவகை மறைந்து, அயன் தன்
வெல் நற் போர்ப் படை விடுதலே நலம்; இது விதியால். 90

தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல், அப் படை தொடுத்தே,
தடுப்பர்; காண்பரேல், கொல்லவும் வல்லர், அத் தவத்தோர்;
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை; நல் வேள்வியை இயற்றி,
முடிப்பேன், இன்று அவர் வாழ்வை, ஓர் கணத்து' என மொழிந்தான். 91

'என்னை அன்னவர் அறிந்திலாவகை செயல் இயற்ற,
துன்னு போர்ப் படை முடிவு இலாது அவர்வயின் தூண்டின்,
பின்னை, நின்றது புரிவென்' என்று அன்னவன் பேச,
மன்னன், முன் நின்ற மகோதரற்கு இம் மொழி வழங்கும்: 92

இராவணன், மகோதரனுக்கு இட்ட கட்டளை

'வெள்ளம் நூறுடை வெஞ் சினச் சேனையை, வீர!
அள் இலைப் படை அகம்பனே முதலிய அரக்கர்
எள் இல் எண் இலர்தம்மொடு விரைந்தனை ஏகி,
கொள்ளை வெஞ் செரு இயற்றுதி, மனிதரை குறுகி. 93

'மாயை என்றன, வல்லவை யாவையும், வழங்கி,
தீ இருட் பெரும் பிழம்பினை ஒழிவு அறத் திருத்தி,
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய்;
போய் உருத்து, அவர் உயிர் குடித்து உதவு' எனப் புகன்றான். 94

மகோதரன் பெருஞ் சேனையோடு போர்க்குச் சென்ற காட்சி

என்ற காலையின் , 'என்று கொல் ஏவுவது?' என்று,
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான்;
சென்று தேர்மிசை ஏறினன்; இராக்கதர் செறிந்தார்,
குன்று சுற்றிய மத கரிக் குலம் அன்ன குறியார். 95

கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் குறித்த
ஆடல் ஆனைகள், அணிதொறும் அணிதொறும் அமைந்த்
ஓடு தேர்க் குலம், உலப்பு இல, ஓடி வந்து உற்ற்
கேடு இல் வாம் பரி, கணக்கையும், கடந்தன, கிளர்ந்த. 96

படைக்கலங்களும், பரு மணிப் பூண்களும், பரு வாய்
இடைக் கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும், எறிப்ப,
புடைப் பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள,
விடைக் குலங்கள் போல், இராக்கதப் பதாதியும் மிடைந்த. 97

கொடிக் குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள,
இடிக் குழீஇ எழு மழைப் பெருங் குலங்களை இரித்த்
அடிக் குழீஇயிடும் இடம்தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த
பொடிக் குழீஇ, அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த. 98

ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி
வான யாறுகள், வாசி வாய் நுறையொடு மயங்கி,
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன, கடுகிப்
போன, போக்க அரும் பெருமைய, புணரியுள் புக்க. 99

தடித்து மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ-சலத்தின்
மடித்த வாயினர், வாள் எயிற்று அரக்கர், தம் வலத்தின்
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திடப் பிறழ்ந்து,
பொடித்த வெம் பொறி புகையொடும் போவன போல்வ. 100

சொன்ன நூறுடை வெள்ளம், அன்று இராவணன் துரந்த
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி,
முன்னம் வேலையை முழுவதும் குடித்தது, 'முறை ஈது'
என்ன, மீட்டு உமிழ் தமிழ்முனி ஒத்தது, அவ் இலங்கை. 101

சங்கு பேரியும், காளமும், தாளமும், தலைவர்
சிங்க நாதமும், சிலையின் நாண் ஒலிகளும், சின மாப்
பொங்கும் ஓதையும், புரவியின் அமலையும், பொலந் தேர்
வெங் கண் ஓலமும், மால் என, விழுங்கிய உலகை. 102

அரக்கர்க்கும் வானரர்க்கும் நிகழ்ந்த பெரும் போர்

புக்கதால் பெரும் போர்ப் படை, பறந்தலைப் புறத்தில்;
தொக்கதால், நெடு வானரத் தானையும் துவன்றி,
ஒக்க ஆர்த்தன, உறுக்கின, தெழித்தன, உருமின்
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி. 103

குன்று கோடியும் கோடிமேல் கோடியும் குறித்த
வென்றி வானர வீரர்கள், முகம்தொறும் வீச,
ஒன்றின், நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார்;
பொன்றி வீழ்ந்தன, பொரு கரி, பாய் பரி, பொலந் தேர். 104

மழுவும், சூலமும், வலயமும், நாஞ்சிலும், வாளும்,
எழுவும், ஈட்டியும், தோட்டியும், எழு முனைத் தண்டும்,
தழுவும், வேலொடு கணையமும், பகழியும், தாக்க,
குழவினோடு பட்டு உருண்டன, வானரக் குலங்கள். 105

முற்கரங்களும், முசலமும், முசுண்டியும், முளையும்,
சக்கரங்களும், பிண்டிபாலத்தொடு தண்டும்,
கப்பணங்களும், வளையமும், கவண் உமிழ் கல்லும்,
வெற்புஇனங்களை நுறுக்கின் கவிகளை வீழ்த்த. 106

கதிர் அயில் படைக் குலம் வரன்முறை முறை கடாவ,
அதிர் பிணப் பெருங் குன்றுகள் படப் பட, அழிந்த
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட,
எதிர் நடக்கில, குரக்குஇனம்; அரக்கரும் இயங்கார். 107

மடிந்த வானரரும் அரக்கரும் தேவர்கள் ஆதல்

யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர், எவரும்
தேவர் ஆதலின், அவரொடும் விசும்பிடைத் திரிந்தார்;
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி,
ஆவி ஒன்றிடத் தழுவினர், பிரிவு நோய் அகன்றார். 108

சுரக்கும் மாயமும், வஞ்சமும், களவுமே, கடனா,
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா,
அரக்கரைப் பெருந் தேவர்கள் ஆக்கின அமலன்
சரத்தின், வேறு இனிப் பவித்திரம் உளது எனத் தகுமோ? 109

இலக்குவன் பெரும் போர் விளைவித்தல்

அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான்.
இந்து வெள் எயிற்று அரக்கரும், யானையும், தேரும்,
வந்த வந்தன, வானகம் இடம் பெறாவண்ணம்
சிந்தினான் சரம், இலக்குவன், முகம்தொறும் திரிந்தான். 110


 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home