| 
 Kamba Ramayanam   
		கம்பர் இயற்றிய கம்பராமாயணம் 
		யுத்த காண்டம் - 
		15. கும்பகருணன் வதைப் படலம் 
		 
		இராவணன் இலங்கை மீளுதல் 
		 
		வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், 
		நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும், 
		தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும், 
		வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான். 1 
		 
		கிடந்த போர் வலியார்மாட்டே கெடாத வானவரை எல்லாம் 
		கடந்து போய், உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன், 
		தொடர்ந்து போம் பழியினோடும், தூக்கிய கரங்களோடும், 
		நடந்துபோய், நகரம் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான். 2 
		 
		மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த 
		காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான், 
		தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்க, தான் அப் 
		பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கான். 3 
		 
		நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம் 
		வாள் ஒத்த் மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த்- 
		கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு, அற்றைநாள், தன் 
		தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை. 4 
		 
		மந்திரச் சுற்றத்தாரும், வாணுதல் சுற்றத்தாரும், 
		தந்திரச் சுற்றத்தாரும், தன் கிளைச் சுற்றத்தாரும், 
		எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றி, தான் ஓர் 
		சிந்துரக் களிறு கூடம் புக்கென, கோயில் சேர்ந்தான். 5 
		 
		தூதரை அழைத்து வர கஞ்சுகியை இராவணன் ஏவுதல் 
		 
		ஆண்டு ஒரு செம் பொன் பீடத்து இருந்து, தன் வருத்தம் ஆறி, 
		நீண்டு உயர் நினைப்பன் ஆகி, கஞ்சுகி அயல் நின்றானை, 
		'ஈண்டு, நம் தூதர் தம்மை இவ்வழித் தருதி' என்றான், 
		பூண்டது ஓர் பணியன், வல்லை, நால்வரைக் கொண்டு புக்கான். 6 
		 
		எண்திசைச் சேனைகளையும் கொணர தூதர்களை இராவணன் பணித்தல் 
		 
		மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்று இவ் 
		வினை அறி தொழிலர் முன்னா, ஆயிரர் விரவினாரை, 
		'நினைவதன் முன்னம், நீர் போய் நெடுந் திசை எட்டும் நீந்தி, 
		கனை கழல் அரக்கர் தானை கொணருதிர், கடிதின்' என்றான். 7 
		 
		'ஏழ் பெருங் கடலும், சூழ்ந்த ஏழ் பெருந் தீவும், எண் இல் 
		பாழி அம் பொருப்பும், கீழ்பால் அடுத்த பாதாளத்துள்ளும், 
		ஆழி அம் கிரியின் மேலும், அரக்கர் ஆனவரை எல்லாம், 
		தாழ்வு இலிர் கொணர்திர்' என்றான்; அவர் அது தலைமேல் கொண்டார். 8 
		 
		இராவணன் வருந்தி இருத்தல் 
		 
		மூவகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார், 
		பாவகம் இன்னது என்று தெரிகிலர், பதைத்து விம்ம, 
		தூ அகலாத வை வாய் எஃகு உறத் தொளைக் கை யானை 
		சேவகம் அமைந்தது என்ன, செறி மலர் அமளி சேர்ந்தான். 9 
		 
		பண் நிறை பவளச் செவ் வாய், பைந் தொடி, சீதை என்னும் 
		பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர், 
		கண் இறை கோடல் செய்யான், கையறு கவலை சுற்ற, 
		உள் நிறை மானம் தன்னை உமிழ்ந்து, எரி உயிர்ப்பதானான். 10 
		 
		வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்;-நெடு வயிரத் தோளான்- 
		நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு நாணான்; 
		வேல் நகு நெடுங் கண், செவ் வாய், மெல் இயல், மிதிலை வந்த, 
		சானகி நகுவள்-என்றே நாணத்தால் சாம்புகின்றான். 11 
		 
		இராவணனிடம் மாலியவான் வினவுதல் 
		 
		ஆங்கு, அவன்தன் மூதாதை ஆகிய, மூப்பின் யாக்கை 
		வாங்கிய வரி வில் அன்ன, மாலியவான் என்று ஓதும் 
		பூங் கழல் அரக்கன் வந்து, பொலங் கழல் இலங்கை வேந்தைத் 
		தாங்கிய அமளிமாட்டு, ஓர் தவிசுடைப் பீடம் சார்ந்தான். 12 
		 
		இருந்தவன், இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி, 
		பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா, 
		'வருந்தினை, மனமும்; தோளும் வாடினை;-நாளும் வாடாப் 
		பெருந் தவம் உடைய ஐயா!-என், உற்ற பெற்றி?' என்றான். 13 
		 
		இராவணன் நிகழ்ந்தவை கூறல் 
		 
		கவை உறு நெஞ்சன், காந்திக் கனல்கின்ற கண்ணன், பத்துச் 
		சிவையின் வாய் என்னச் செந் தீ உயிர்ப்பு உறத் திறந்த மூக்கன், 
		நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும் 
		சுவை அறப் புலர்ந்த நாவான், இனையன சொல்லலுற்றான்: 14 
		 
		'சங்கம் வந்து உற்ற கொற்றத் தாபதர்தம்மோடு எம்மோடு 
		அங்கம் வந்து உற்றது ஆக, அமரர் வந்து உற்றார் அன்றே; 
		கங்கம் வந்து உற்ற செய்ய களத்து, நம் குலத்துக்கு ஒவ்வாப் 
		பங்கம் வந்துற்றது அன்றி, பழியும் வந்துற்றது' அன்றே? 15 
		 
		'முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக, 
		கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும், 
		வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின், 
		இளையவன் தனக்கும் ஆற்றாது, என் பெருஞ் சேனை-நம்ப! 16 
		 
		'எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப் 
		பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப் 
		பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை 
		தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை. 17 
		 
		'மலை உறப் பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை 
		நிலையுறச் செறிந்த வெள்ளம் நூற்று-இரண்டு எனினும், நேரே 
		குலை உறக் குளித்த வாளி, குதிரையைக் களிற்றை ஆளைத் 
		தலை உறப் பட்டது அல்லால், உடல்களில் தங்கிற்று உண்டோ ? 18 
		 
		'போய பின், அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால், 
		ஓயும் என்று உரைக்கலாமோ, ஊழி சென்றாலும்? ஊழித் 
		தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும்; சொல்லும், 
		வாயையும் தீய்க்கும்; முன்னின், மனத்தையும் தீய்க்கும் மன்னோ. 19 
		 
		'மேருவைப் பிளக்கும் என்றால், விண் கடந்து ஏகும் என்றால், 
		பாரினை உருவும் என்றால், கடல்களைப் பருகும் என்றால், 
		ஆருமே அவற்றின் ஆற்றல்; ஆற்றுமேல், அனந்தகோடி, 
		மேருவும், விண்ணும், மண்ணும், கடல்களும் வேண்டும் அன்றே? 20 
		 
		'வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் 
		தெரிகிலர், அமரரேயும்; ஆர் அவன் செய்கை தேர்வார்? 
		"பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக" என்று 
		கருதவே, உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டும் அன்றே. 21 
		 
		'நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாமச் 
		சொல் என, செய்யுள் கொண்ட தொடை என, தொடையை நீக்கி 
		எல்லையில் சென்றும் தீரா இசை என, பழுது இலாத 
		பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ. 22 
		 
		'இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று என்னும் 
		மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்; 
		அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா 
		நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்? 23 
		 
		'பேய் இருங் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி 
		ஏயவன் தோள்கள் எட்டும், இந்திரன் இரண்டு தோளும், 
		மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் 
		ஆயிரம் தோளும், அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா. 24 
		 
		'சீர்த்த வீரியராய் உள்ளார், செங் கண் மால் எனினும், யான் அக் 
		கார்த்தவீரியனை நேர்வார் உளர் எனக் கருதல் ஆற்றேன்; 
		பார்த்த போது, அவனும், மற்று அத் தாபதன் தம்பி பாதத்து 
		ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான்; ஆர் அவற்கு ஆற்றகிற்பார்? 25 
		 
		'முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரி வெஞ் சிலையும், வீரன் 
		அற்புத வில்லுக்கு, ஐய! அம்பு எனக் கொளலும் ஆகர் 
		ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை; வேதம் 
		தப்பின போதும், அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா. 26 
		 
		'உற்பத்தி அயனே ஒக்கும்; ஓடும்போது அரியே ஒக்கும்; 
		கற்பத்தின் அரனே ஒக்கும், பகைஞரைக் கலந்த காலை; 
		சிற்பத்தின் நம்மால் பேசச் சிறியவோ? என்னைத் தீராத் 
		தற்பத்தைத் துடைத்த என்றால்; பிறிது ஒரு சான்றும் உண்டோ ? 27 
		 
		'குடக்கதோ? குணக்கதேயோ? கோணத்தின் பாலதேயோ? 
		தடத்த பேர் உலகத்தேயோ? விசும்பதோ? எங்கும்தானோ? 
		வடக்கதோ? தெற்கதோ? என்று உணர்ந்திலன்;-மனிதன் வல்வில்- 
		இடத்ததோ? வலத்ததோ? என்று உணர்ந்திலேன், யானும் இன்னும். 28 
		 
		'ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப் பாலது அன்றே? 
		ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே, அமரின் ஆற்றல்!- 
		காற்றையே மேற்கொண்டானோ? கனலையே கடாவினானோ? 
		கூற்றையே ஊர்கின்றானோ?-குரங்கின்மேல் கொண்டு நின்றான். 29 
		 
		'போய் இனித் தெரிவது என்னே? பொறையினால் உலகம் போலும் 
		வேய் எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி, 
		தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால், 
		நாய் எனத் தகுதும் அன்றே, காமனும் நாமும் எல்லாம். 30 
		 
		'வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழு வாள் அங்கை 
		ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி, 
		நாசம் வந்து உற்ற போதும், நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;- 
		பூசல் வண்டு உறையும் தாராய்!-இது இங்குப் புகுந்தது' என்றான். 31 
		 
		மாலியவான் உரை 
		 
		'முன் உரைத்தேனை வாளா முனிந்தனை; முனியா உம்பி 
		இன் உரைப் பொருளும் கேளாய்; ஏது உண்டு எனினும், ஓராய்; 
		நின் உரைக்கு உரை வேறு உண்டோ ?-நெருப்பு உரைத்தாலும், நீண்ட 
		மின் உரைத்தாலும், ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய்! 32 
		 
		'உளைவன எனினும், மெய்ம்மை உற்றவர், முற்றும் ஓர்ந்தார், 
		விளைவன சொன்னபோதும், கொள்கிலை; விடுதி கண்டாய்; 
		கிளைதரு சுற்றம், வெற்றி, கேண்மை, நம் கல்வி, செல்வம், 
		களைவு அருந் தானையோடும் கழிவது காண்டி' என்றான். 33 
		 
		மகோதரன் உரை 
		 
		ஆயவன் உரைத்தலோடும், அப் புறத்து இருந்தான், ஆன்ற 
		மாயைகள் பலவும் வல்ல, மகோதரன் கடிதின் வந்து, 
		தீ எழ நோக்கி, 'என் இச் சிறுமை நீ செப்பிற்று?' என்னா, 
		ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான்: 34 
		 
		'"நன்றி ஈது" என்று கொண்டால், நயத்தினை நய்ந்து, வேறு 
		வென்றியே ஆக, மற்றுத் தோற்று உயிர் விடுதல் ஆக, 
		ஒன்றிலே நிற்றல் போலாம், உத்தமர்க்கு உரியது; ஒல்கிப் 
		பின்றுமேல், அவனுக்கு அன்றோ, பழியொடு நரகம் பின்னை? 35 
		 
		'திரிபுரம் எரிய, ஆங்கு ஓர் தனிச் சரம் துரந்த செல்வன், 
		ஒருவன் இப் புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கிக் கொண்டோன், 
		பொருது, உனக்கு உடைந்து போனார்; மானிடர் பொருத போர்க்கு 
		வெருவுதி போலும்; மன்ன! கயிலையை வெருவல் கண்டாய்! 36 
		 
		'"வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய் 
		நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே" 
		என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ? 
		புன் தவர் இருவர் போரைப் புகழ்தியோ?-புகழ்க்கு மேலோய்! 37 
		 
		'தேவியை விடுதிஆயின், திறல் அது தீரும் அன்றே; 
		ஆவியை விடுதல் அன்றி, அல்லது ஒன்று ஆவது உண்டோ? 
		தா அரும் பெருமை அம்மா நீ இனித் தாழ்த்தது என்னே? காவல! விடுதி, இன்று இக் 
		கையறு கவலை; நொய்தின். 38 
		 
		'இனி இறை தாழ்த்தி ஆயின், இலங்கையும் யாமும் எல்லாம் 
		கனியுடை மரங்கள் ஆக, கவிக் குலம் கடக்கும் காண்டி; 
		பனியுடை வேலைச் சில் நீர் பருகினன் பரிதி என்னத் 
		துனி உழந்து அயர்வது என்னே? துறத்தியால் துன்பம்' என்றான். 39 
		 
		'முன், உனக்கு, இறைவர் ஆன மூவரும் தோற்றார்; தேவர் 
		பின், உனக்கு ஏவல் செய்ய, உலகு ஒரு மூன்றும் பெற்றாய்; 
		புல் நுனைப் பனி நீர் அன்ன மனிசரைப் பொருள் என்று உன்னி, 
		என், உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது?-எந்தாய்! 40 
		 
		'ஆங்கு அவன் தன்னைக் கூவி, ஏவுதிஎன்னின், ஐய! 
		ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே; 
		தாங்குவர் செரு முன் என்னின், தாபதர் உயிரைத் தானே 
		வாங்கும்' என்று இனைய சொன்னான்; அவன் அது மனத்துக் கொண்டான். 41 
		 
		இராவணன் மகோதரனைப் புகழ்தல் 
		 
		'பெறுதியே, எவையும் சொல்லி;-பேர் அறிவாள்!-சீரிற்று 
		அறிதியே; என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ? 
		உறுதியே சொன்னாய்' என்னா, உள்ளமும் வேறுபட்டான்;- 
		இறுதியே இயைவது ஆனால், இடை, ஒன்றால் தடை உண்டாமோ? 42 
		 
		வீரர்கள் கும்பகருணனைத் துயில் எழுப்புதல் 
		 
		'நன்று இது கருமம்' என்னா, 'நம்பியை நணுக ஓடிச் 
		சென்று இவண் தருதிர்' என்றான்; என்றலும், நால்வர் சென்றார்; 
		தென் திசைக் கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன, 
		குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மாக் கோயில் புக்கார். 43 
		 
		கிங்கரர் நால்வர் சென்று, அக் கிரி அனான் கிடந்த கோயில் 
		மங்குல் தோய் வாயில் சார்ந்து, 'மன்ன! நீ உணர்தி' என்ன, 
		தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க, பின்னும் 
		வெங்கணான் துயில்கின்றானை வெகுளியால் இனைய சொன்னார்: 44 
		 
		கிங்கரர் கூற்றும் இராவணன் செயலும் 
		 
		'உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம் 
		இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்! 
		கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே, 
		உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்'! 45 
		 
		கும்பகருணனை துயிலெழுப்பல் 
		 
		என்று சொல்ல, அன்னவன் எழுந்திராமை கண்டு போய், 
		'மன்றல் தங்கு மாலை மார்ப! வன் துயில் எழுப்பலம்' 
		அன்று, 'கொள்கை கேண்மின்' என்று மாவொடு ஆளி ஏவினான், 
		'ஒன்றன்மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர்.' 46 
		 
		'அனைய தானை அன்று செல்ல, ஆண்டு நின்று பேர்ந்திலன்; 
		இனைய சேனை மீண்டது' என்று இராவணற்கு இயம்பலும் 
		'வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்மின்' என்று, 
		இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான். 47 
		 
		சென்றனர் பத்து நூற்றுச் சீரிய வீரர் ஓடி 
		'மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற 
		இன்றுஇவன் முடிக்கும்' என்னா, எண்ணினர்; எண்ணி, ஈண்ட, 
		குன்று என உயர்ந்த தோளான் கொற்றமாக் கோயில் புக்கார். 48 
		 
		திண் திறல் வீரன் வாயில் திறத்தலும், சுவாத வாதம் 
		மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக, 
		கொண்டுறு தடக் கை பற்றி, குலமுடை வலியினாலே 
		கண் துயில் எழுப்ப எண்ணி, கடிது ஒரு வாயில் புக்கார். 49 
		 
		ஓதநீர் விரிந்ததென்ன உறங்குவான் நாசிக் காற்றால் 
		கோது இலா மலைகள் கூடி, வருவது போவதாக, 
		ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர், துணுக்கமுற்றார்; 
		போதுவான் அருகு செல்லப் பயந்தனர், பொறி கொள் கண்ணார். 50 
		 
		'இங்கு இவன் தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது?' என்று, 
		துங்க வௌ; வாயும் மூக்கும் கண்டு, மெய் துணுக்கமுற்றார்; 
		அங்கைகள் தீண்ட அஞ்சி, ஆழ் செவிஅதனினூடு, 
		சங்கொடு தாரை, சின்னம், சமைவுறச் சாற்றலுற்றார். 51 
		 
		கோடு, இகல் தண்டு, கூடம், குந்தம், வல்லோர்கள் கூடி, 
		தாடைகள், சந்து, மார்பு, தலை எனும் இவற்றில் தாக்கி, 
		வாடிய கையர் ஆகி, மன்னவற்கு உரைப்ப, 'பின்னும் 
		நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும், விரைவின்' என்றான். 52 
		 
		கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து, 
		மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை, மாலை மான 
		விட்டு உற நடத்தி, ஓட்டி, விரைவு உள சாரி வந்தார்; 
		தட்டுறு குறங்கு போலத் தடந் துயில் கொள்வதானான். 53 
		 
		கொய்ம் மலர்த் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி, 'ஐய! 
		உய்யலாம் வகைகள் என்று, அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும்; 
		கய் எலாம் வலியும் ஓய்ந்த் கவன மா காலும் ஓய்ந்த் 
		செய்யலாம் வகை வேறு உண்டோ ? செப்புதி, தெரிய' என்றார். 54 
		 
		'இடை பேரா இளையானை, இணை ஆழி மணி நெடுந் தேர் 
		படை பேரா வரும்போதும், பதையாத உடம்பானை, 
		மடை பேராச் சூலத்தால், மழு வாள் கொண்டு, எறிந்தானும், 
		தொடை பேராத் துயிலானை, துயில் எழுப்பிக் கொணர்க!' என்றான். 55 
		 
		என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ழூற்று இராக்கதர்கள், 
		வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி, 
		நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப, 
		பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 56 
		 
		மூவகை உலகும் உட்க, முரண் திசைப் பணைக் கை யானை 
		தாவரும் திசையின் நின்று சலித்திட, கதிரும் உட்க, 
		பூவுளான், புணரி மேலான், பொருப்பினான், முதல்வர் ஆய 
		யாவரும் துணுக்குற்று ஏங்க, எளிதினின் எழுந்தான், வீரன். 57 
		 
		விண்ணினை இடறும் மோலி; விசும்பினை நிறைக்கும் மேனி; 
		கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்; 
		எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன், 
		மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான். 58 
		 
		கும்பகருணன் உணவு அருந்தல் 
		 
		உறக்கம் அவ் வழி நீங்கி, உணத் தகும் 
		வறைக்கு அமைந்தன ஊனொடு, வாக்கிய 
		நறைக் குடங்கள் பெறான், கடை நக்குவான், 
		இறக்க நின்ற முகத்தினை எய்துவான்; 59 
		 
		ஆறு நூறு சகடத்து அடிசிலும், 
		நூறு நூறு குடம் களும், நுங்கினான்; 
		ஏறுகின்ற பசியை எழுப்பினான்- 
		சீறுகின்ற முகத்து இரு செங்கணான். 60 
		 
		எருமை ஏற்றை ஓர் ஈர்-அறுநூற்றையும் 
		அருமை இன்றியே தின்று, இறை ஆறினான், 
		பெருமை ஏற்றது கோடும் என்றே-பிறங்கு 
		உருமைஏற்றைப் பிசைந்து, எரி ஊதுவான். 61 
		 
		கும்பகருணன் தோற்றம் 
		 
		இருந்த போதும், இராவணன் நின்றெனத் 
		தெரிந்த மேனியன், திண் கடலின் திரை 
		நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான், 
		சொரிந்த சோரி தன் வாய் வர, தூங்குவான்; 62 
		 
		உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல் 
		உதிர, வாரி நுகர்வது ஒர் ஊணினான்; 
		கதிர வாள் வயிரப் பணைக் கையினான்; 
		கதிர வாள் வயிரக் கழற் காலினான்; 63 
		 
		இரும் பசிக்கு மருந்து என, எஃகினோடு 
		இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்; 
		வரும் களிற்றினைத் தின்றனன்; மால் அறா 
		அருங் களில் திரிகின்றது ஓர் ஆசையான்; 64 
		 
		சூலம் ஏகம் திருத்திய தோளினான்; 
		சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்; 
		காலன்மேல் நிமிர் மத்தன்; கழல் பொரு 
		காலன்; மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்; 65 
		 
		எயில் தலைத் தகர, தலத்து இந்திரன் 
		எயிறு அலைத்த கரதலத்து, எற்றினான்; 
		அயில் தலைத் தொடர் அங்கையன்; சிங்க ஊன் 
		அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான். 66 
		 
		உடல் கிடந்துழி, உம்பர்க்கும் உற்று, உயிர், 
		குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்; 
		கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ் 
		வட கடுங் கனல்போல் மயிர்ப் பங்கியான்; 67 
		 
		திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட, 
		மிக்கு அடங்கிய வெங் கதிர் அங்கிகள் 
		புக்கு அடங்கிய மேருப் புழை என, 
		தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்; 68 
		 
		காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை 
		தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து, உடல் 
		ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான்; 
		பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்; 69 
		 
		இராவணன் கும்பகருணன் சந்திப்பு 
		 
		'கூயினன் நும் முன்' என்று அவர் கூறலும், 
		போயினன், நகர் பொம்மென்று இரைத்து எழ் 
		வாயில் வல்லை நுழைந்து, மதி தொடும் 
		கோயில் எய்தினன், குன்று அன கொள்கையான். 70 
		 
		நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து 
		அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக் 
		கொலை கிடந்த வேல் கும்பகருணன், ஓர் 
		மலை கிடந்தது போல, வணங்கினான். 71 
		 
		இராவணன் கும்பகருணனைத் தழுவி, உணவு அளித்துப் போர்க்கோலம் செய்தல் 
		 
		வன் துணைப் பெருந் தம்பி வணங்கலும், 
		தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்- 
		நின்ற குன்று ஒன்று, நீள் நெடுங் காலொடும் 
		சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான். 72 
		 
		உடன் இருத்தி, உதிரத்தொடு ஒள் நறைக் 
		குடன் நிரைத்தவை ஊட்டி, தசைக் கொளீஇ 
		கடல் நுரைத் துகில் சுற்றி, கதிர்க் குழாம் 
		புரை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான். 73 
		 
		பேர விட்ட பெரு வலி இந்திரன் 
		ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள், 
		சோர விட்ட சுடர் மணி ஓடையை 
		வீரபட்டம் என, நுதல் வீக்கினான். 74 
		 
		மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட, 
		தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய 
		கையின் நாகம் என, கடல் மேனியில், 
		தெய்வம் நாறு செஞ் சாந்தமும் சேர்த்தினான். 75 
		 
		விடம் எழுந்ததுபோல், நெடு விண்ணினைத் 
		தொட உயர்ந்தவன் மார்பிடைச் சுற்றினான், 
		இடபம் உந்தும், எழில் இரு-நான்கு தோள், 
		கடவுள் ஈந்த கவசமும் கட்டினான். 76 
		 
		கும்பகருணன்-இராவணன் உரையாடல் 
		 
		அன்ன காலையின், 'ஆயத்தம் யாவையும் 
		என்ன காரணத்தால்?' என்று இயம்பினான்- 
		மின்னின் அன்ன புருவமும், விண்ணினைத் 
		துன்னு தோளும், இடம் துடியாநின்றான். 77 
		 
		'வானரப் பெருந் தானையர், மானிடர், 
		கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும் 
		ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர் 
		போனகத் தொழில் முற்றுதி, போய்' என்றான். 78 
		 
		கும்பகருணனின் அறிவுரை 
		 
		'ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச் 
		சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ? 
		வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் 
		போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே? 79 
		 
		'கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச் 
		சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால், 
		திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை 
		விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 80 
		 
		'கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும் 
		சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை 
		வெல்லலாம் என்பது, சீதை மேனியைப் 
		புல்லலாம் என்பது போலுமால்-ஐயா! 81 
		 
		'புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு 
		குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ? 
		வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு 
		நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால். 82 
		 
		'கொடுத்தனை, இந்திரற்கு உலகும் கொற்றமும்; 
		கெடுத்தனை, நின் பெருங் கிளையும்; நின்னையும் 
		படுத்தனை; பல வகை அமரர்தங்களை 
		விடுத்தனை; வேரு இனி வீடும் இல்லையால். 83 
		 
		'அறம் உனக்கு அஞ்சி, இன்று ஒளித்ததால்; அதன் 
		திறம் முனம் உழத்தலின், வலியும் செல்வமும் 
		நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி, நீ 
		இற, முன் அங்கு, யார் உனை எடுத்து நாட்டுவார்? 84 
		 
		'தஞ்சமும் தருமமும் தகவுமே, அவர் 
		நெஞ்சமும் கருமமும் உரையுமே; நெடு 
		வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் 
		உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ? 85 
		 
		'காலினின் கருங் கடல் கடந்த காற்றது 
		போல்வன குரங்கு உள் சீதை போகிலன்; 
		வாலியை உரம் கிழித்து ஏக வல்லன 
		கோல் உள் யாம் உளேம்; குறை உண்டாகுமோ?' 86 
		 
		என்று கொண்டு இனையன இயம்பி, 'யான் உனக்கு 
		ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல், 
		நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின், 
		பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய்! 87 
		 
		'தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின் 
		ஐயறு தம்பியோடு அளவளாவுதல் 
		உய் திறம்; அன்று எனின், உளது, வேறும் ஓர் 
		செய் திறம்; அன்னது தெரியக் கேட்டியால்: 88 
		 
		'பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை 
		சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல் 
		மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன் 
		உந்துதல் கருமம்' என்று உணரக் கூறினான். 89 
		 
		இராவணன் சினந்து உரைத்தல் 
		 
		'உறுவது தெரிய அன்று, உன்னைக் கூயது; 
		சிறு தொழில் மனிதரைக் கோறி, சென்று; எனக்கு 
		அறிவுடை அமைச்சன் நீ அல்லை, அஞ்சினை; 
		வெறுவிது, உன் வீரம்' என்று இவை விளம்பினான்; 90 
		 
		'மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை; 
		பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை; 
		இறங்கிய கண் முகிழ்த்து, இரவும் எல்லியும் 
		உறங்குதி, போய்' என, உளையக் கூறினான். 91 
		 
		'மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக் 
		கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில் 
		ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்; 
		யான் அது புரிகிலேன்; எழுக போக!' என்றான். 92 
		 
		'தருக, என் தேர், படை; சாற்று, என் கூற்றையும்; 
		வருக, முன் வானமும் மண்ணும் மற்றவும்; 
		இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும் 
		பொருக, வெம் போர்' எனப் போதல் மேயினான். 93 
		 
		கும்பகருணன் போருக்கு எழுதல் 
		 
		அன்னது கண்டு, அவன் தம்பியானவன் 
		பொன் அடி வணங்கி, 'நீ பொறுத்தியால்' என, 
		வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான், 
		'இன்னம் ஒன்று உரை உளது' என்னக் கூறினான்: 94 
		 
		'வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி 
		நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது; 
		பொன்றுவென்; பொன்றினால், பொலன் கொள் தோளியை, 
		"நன்று" என, நாயக விடுதி; நன்றுஅரோ. 95 
		 
		'இந்திரன் பகைஞனும், இராமன் தம்பி கை 
		மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்; 
		தந்திரம் காற்று உறு சாம்பல்; பின்னரும் 
		அந்தரம் உணர்ந்து, உனக்கு உறுவது ஆற்றுவாய். 96 
		 
		'என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல! 
		உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால், 
		பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை- 
		தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே. 97 
		 
		'இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன 
		குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ! 
		அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய! 
		பெற்றனென் விடை' என, பெயர்ந்து போயினான். 98 
		 
		படைகளை கும்பகருணனுடன் செல்ல இராவணன் பணித்தல் 
		 
		அவ் வழி இராவணன் அனைத்து நாட்டமும் 
		செவ் வழி நீரொடும் குருதி தேக்கினான்; 
		எவ் வழியோர்களும் இரங்கி ஏங்கினார்; 
		இவ் வழி அவனும் போய், வாயில் எய்தினான். 99 
		 
		'இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக! 
		பெரும் படை இளவலோடு' என்ற பேச்சினால், 
		வரும் படை வந்தது, வானுளோர்கள் தம் 
		சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே. 100 
		 
		படைப் பெருக்கம் 
		 
		தேர்க் கொடி, யானையின் பதாகை, சேண் உறு 
		தார்க் கொடி என்று இவை தகைந்து வீங்குவ- 
		போர்க் கொடுந் தூளி போய்த் துறக்கம் பண்புற, 
		ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ. 101 
		 
		எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட 
		நண்ணுறு பொறிகளும், படைக்கு நாயகர் 
		கண்ணுறு பொறிகளும், கதுவ, கண் அகல் 
		விண்ணுறு மழை எலாம் கரிந்து, வீழ்ந்தவால். 102 
		 
		தேர் செல, கரி செல, நெருக்கிச் செம் முகக் 
		கார் செல, தேர் செல, புரவிக் கால் செல, 
		தார் செல, கடை செல, சென்ற தானையும், 
		'பார் செலற்கு அரிது' என, விசும்பில் பாய்ந்ததால். 103 
		 
		கும்பகருணன் புறப்பாடு 
		 
		ஆயிரம் கோள் அரி, ஆளி ஆயிரம், 
		ஆயிரம் மத கரி, பூதம் ஆயிரம், 
		மா இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது 
		ஏய் இருஞ் சுடர் மணித் தேர் ஒன்று ஏறினான். 104 
		 
		தோமரம், சக்கரம், சூலம், கோல், மழு, 
		நாம வேல், உலக்கை, வாள், நாஞ்சில், தண்டு, எழு, 
		வாம வில், வல்லையம், கணையம், மற்று உள 
		சேம வெம் படை எலாம் சுமந்து, சென்றவால். 105 
		 
		நறையுடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன் 
		குறைவு இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு, 
		பிறையுடை எயிற்றவன் பின்பு சென்றனர், 
		முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார். 106 
		 
		ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை 
		பின்ற அரும் பிலனிடைப் பெய்யுமாறு போல், 
		வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே, 
		சென்றனன், யாவரும் திடுக்கம் எய்தவே. 107 
		 
		'கணம் தரு குரங்கொடு கழிவது அன்று, இது; 
		நிணம் தரு நெடுந் தடிக்கு உலகு நேருமோ? 
		பிணம் தலைப்பட்டது; பெயர்வது, எங்கு இனி; 
		உணர்ந்தது கூற்றம்' என்று, உம்பர் ஓடினார். 108 
		 
		கும்பகருணனைப் பற்றி இராமன் வீடணனிடம் வினவல் 
		 
		பாந்தளின் நெடுந் தலை வழுவி, பாரொடும் 
		வேந்து என விளங்கிய மேரு மால் வரை 
		போந்ததுபோல் பொலந் தேரில் பொங்கிய 
		ஏந்தலை, ஏந்து எழில் இராமன் நோக்கினான். 109 
		 
		'வீணை என்று உணரின், அஃது அன்று; விண் தொடும் 
		சேண் உயர் கொடியது, வய வெஞ் சீயமால்; 
		காணினும், காலின் மேல் அரிய காட்சியன்; 
		பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்? 110 
		 
		'தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின், 
		நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர் 
		தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர் 
		ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்? 111 
		 
		'எழும் கதிரவன் ஒளி மறைய, எங்கணும் 
		விழுங்கியது இருள், இவன் மெய்யினால்; வெரீஇ, 
		புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது; 
		அழுங்கல் இல் சிந்தையாய்! ஆர் கொலாம் இவன்? 112 
		 
		'அரக்கன் அவ் உரு ஒழித்து, அரியின் சேனையை 
		வெருக் கொளத் தோன்றுவான், கொண்ட வேடமோ? 
		தெரிக்கிலேன் இவ் உரு; தெரியும் வண்ணம், நீ 
		பொருக்கென, வீடண! புகறியால்' என்றான். 113 
		 
		வீடணன் கும்பகருணனைப் பற்றி எடுத்துரைத்தல் 
		 
		ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, 'ஐய! 
		பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னோன்; 
		கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும் 
		கூரிய சூலத்தான்' என்று, அவன் நிலை கூறலுற்றான்; 114 
		 
		'தவன் நுணங்கியரும் வேதத் தலைவரும் உணரும் தன்மைச் 
		சிவன் உணர்ந்து, அலரின் மேலைத் திசைமுகன் உணரும் தேவன் - 
		அவன் உணர்ந்து எழுந்த காலத்து, அசுரர்கள் படுவது எல்லாம், 
		இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர், எந்தாய்! 115 
		 
		ஆழியாய்! இவன் ஆகுவான், 
		ஏழை வாழ்வுடை எம்முனோன் 
		தாழ்வு இலா ஒரு தம்பியோன்; 
		ஊழி நாளும் உறங்குவான், 116 
		 
		'காலனார் உயிர்க் காலனால்; 
		காலின் மேல் நிமிர் காலினான்; 
		மாலினார் கெட, வாகையே, 
		சூலமே கொடு, சூடினான்; 117 
		 
		'தாங்கு கொம்பு ஒரு நான்கு கால் 
		ஓங்கல் ஒன்றினை, உம்பர்கோன் 
		வீங்கு நெஞ்சன் விழுந்திலான் 
		தூங்க, நின்று சுழற்றினான்; 118 
		 
		'கழிந்த தீயொடு காலையும் 
		பிழிந்து சாறு கொள் பெற்றியான்; 
		அழிந்து மீன் உக, ஆழி நீர் 
		இழிந்து, காலினின் எற்றுவான்; 119 
		 
		'ஊன் உயர்ந்த உரத்தினான், 
		மேல் நிமிர்ந்த மிடுக்கினான்; 
		தான் உயர்ந்த தவத்தினான், 
		வான் உயர்ந்த வரத்தினான்; 120 
		 
		'திறம் கொள் சாரி திரிந்த நாள், 
		கறங்கு அலாது கணக்கு இலான்; 
		இறங்கு தாரவன் இன்று காறு 
		உறங்கலால், உலகு உய்ந்ததால்; 121 
		 
		'சூலம் உண்டு; அது சூர் உளோர் 
		காலம் உண்டது; கைக் கொள்வான்; 
		ஆலம் உண்டவன் ஆழிவாய், 
		ஞாலம் உண்டவ! நல்கினான்; 122 
		 
		'மின்னின் ஒன்றிய விண்ணுளோர், 
		'முன் நில்' என்று, அமர் முற்றினார்- 
		என்னின், என்றும் அவ் எண்ணிலார் 
		வென்னில் அன்றி, விழித்திலான்; 123 
		 
		"தருமம் அன்று இதுதான்; இதால் 
		வரும், நமக்கு உயிர் மாய்வு" எனா, 
		உருமின் வெய்யவனுக்கு உரை 
		இருமை மேலும் இயம்பினான். 124 
		 
		'மறுத்த தம்முனை, வாய்மையால் 
		ஒறுத்தும், ஆவது உணர்த்தினான்; 
		வெறுத்தும், 'மாள்வது மெய்' எனா 
		இறுத்து, நின் எதிர் எய்தினான். 125 
		 
		'"நன்று இது அன்று நமக்கு" எனா, 
		ஒன்று நீதி உணர்த்தினான்; 
		இன்று காலன் முன் எய்தினான்' 
		என்று சொல்லி, இறைஞ்சினான். 126 
		 
		சுக்கிரீவன், கும்பகருணனை உடன் சேர்த்துக் கொள்ளல் நலம் எனல் 
		 
		என்று அவன் உரைத்தலோடும், இரவி சேய், 'இவனை இன்று 
		கொன்று ஒரு பயனும் இல்லை; கூடுமேல், கூட்டிக்கொண்டு 
		நின்றது புரிதும்; மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்; 
		"நன்று" என நினைந்தேன்' என்றான்; நாதனும், 'நயன் இது' என்றான். 127 
		 
		கும்பகருணனை அழைத்து வர வீடணன் செல்லுதல் 
		 
		'ஏகுதற்கு உரியார் யாரே?' என்றலும், இலங்கை வேந்தன், 
		'ஆகின், மற்று அடியனே சென்று, அறிவினால், அவனை உள்ளம் 
		சேகு அறத் தெருட்டி, ஈண்டுச் சேருமேல், சேர்ப்பென்' என்றான்; 
		மேகம் ஒப்பானும், 'நன்று, போக!' என்று விடையும் ஈந்தான். 128 
		 
		தந்திரக் கடலை நீந்தி, தன் பெரும் படையைச் சார்ந்தான்; 
		வெந் திறலவனுக்கு, 'ஐய! வீடணன் விரைவில் உன்பால் 
		வந்தனன்' என்னச் சொன்னார்; வரம்பு இலா உவகை கூர்ந்து, 
		சிந்தையால் களிக்கின்றான் தன் செறிகழல் சென்னி சேர்ந்தான். 129 
		 
		கும்பகருணன் வீடணனிடம் 'நீ வந்தது தகுதி அன்று' எனல் 
		 
		முந்தி வந்து இறைஞ்சினானை, முகந்து உயிர் மூழ்கப் புல்லி, 
		'உய்ந்தனை, ஒருவன் போனாய்' என மனம் உவக்கின்றேன் தன் 
		சிந்தனை முழுதும் சிந்த, தெளிவு இலார் போல மீள 
		வந்தது என், தனியே?' என்றான், மழையின் நீர் வழங்கு கண்ணான். 130 
		 
		'அவயம் நீ பெற்றவாறும், அமரரும் பெறுதல் ஆற்றா, 
		உவய லோகத்தினுள்ள சிறப்பும், கேட்டு உவந்தேன், உள்ளம்; 
		கவிஞரின் அறிவு மிக்கோய்! காலன் வாய்க் களிக்கின்றேம்பால் 
		நவை உற வந்தது என், நீ? அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ? 131 
		 
		'"குலத்து இயல்பு அழிந்ததேனும், குமர! மற்று உன்னைக் கொண்டே 
		புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று" என்னா, 
		வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்; மன்ன! வாயை 
		உலத்தினை, திரிய வந்தாய்; உளைகின்றது உள்ளம், அந்தோ! 132 
		 
		'அறப் பெருந் துணைவர், தம்மை அபயம் என்று அடைந்த நின்னைத் 
		துறப்பது துணியார், தங்கள் ஆர் உயிர் துறந்த போதும்; 
		இறப்பு எனும் பதத்தை விட்டாய்; இராமன் என்பளவும் மற்று இப் 
		பிறப்பு எனும் புன்மை இல்லை; நினைந்து, என்கொல் பெயர்ந்த வண்ணம்? 133 
		 
		'அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று, அவன் தனாலே 
		மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி, மற்றும், 
		திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ! 
		பிறர் மனை நோக்குவேமை உறவு எனப் பெறுதி போலாம்? 134 
		 
		'நீதியும், தருமம் நிறை நிலைமையும், புலமைதானும், 
		ஆதி அம் கடவுளாலே அருந் தவம் ஆற்றிப் பெற்றாய்; 
		வேதியர் தேவன் சொல்லால், விளிவு இலா ஆயுப் பெற்றாய்; 
		சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்,-தக்கோய்! 135 
		 
		ஏற்றிய வில்லோன், யார்க்கும் இறையவன், இராமன் நின்றான்; 
		மாற்ற அருந் தம்பி நின்றான்; மற்றையோர் முற்றும் நின்றார்; 
		கூற்றமும் நின்றது, எம்மைக் கொல்லிய் விதியும் நின்ற் 
		தோற்ற எம் பக்கல், ஐய! வௌ; வலி தொலைய வந்தாய். 136 
		 
		'ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே 
		உய்கிலைஎன்னின், மற்று இல் அரக்கராய் உள்ளோர் எல்லாம் 
		எய் கணை மாரியாலே இறந்து, பாழ் முழுதும் பட்டால், 
		கையினால் எள் நீர் நல்கி, கடன் கழிப்பாரைக் காட்டாய். 137 
		 
		'வருவதும், இலங்கை மூதூர்ப் புலை எலாம் மாண்ட பின்னை; 
		திருவுறை மார்பனோடும் புகுந்து, பின் என்றும் தீராப் 
		பொருவ அருஞ் செல்வம் துய்க்கப் போதுதி, விரைவின்' என்றான், 
		'கருமம் உண்டு உரைப்பது' என்றான்; 'உரை' என, கழறலுற்றான்; 138 
		 
		இராமனைச் சரண் புகுமாறு கும்பகருணனுக்கு வீடணன் உரைத்தல் 
		 
		'இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன் 
		அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி, 
		மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும் 
		உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே. 139 
		 
		'எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் 
		நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்; 
		உனக்கு இதின் உறுதி இல்லை; உத்தம! உன் பின் வந்தேன் 
		மனக்கு நோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு வாழி! 140 
		 
		'போதலோ அரிது; போனால், புகலிடம் இல்லை; வல்லே, 
		சாதலோ சரதம்; நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் 
		ஆதலால், உளதாம் ஆவி அநாயமே உகுத்து என்? ஐய! 
		வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும். 141 
		 
		'தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார், 
		தாய் அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்? 
		நீ அவை அறிதி அன்றே? நினக்கு நான் உரைப்பது என்னோ? 
		தூயவை துணிந்த போது, பழி வந்து தொடர்வது உண்டோ ? 142 
		 
		'மக்களை, குரவர்தம்மை, மாதரை மற்றுளோரை, 
		ஒக்கும் இன் உயிர் அன்னாரை, உதவி செய்தாரோடு ஒன்ற, 
		"துக்கம், இத் தொடர்ச்சி" என்று, துறப்பரால், துணிவு பூண்டோர்; 
		மிக்கது நலனே ஆக, வீடுபேறு அளிக்கும் அன்றே! 143 
		 
		'தீவினை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர் 
		வீவினை உறுதல், ஐய! மேன்மையோ? கீழ்மைதானோ? 
		ஆய் வினை உடையை அன்றே? அறத்தினை நோக்கி, ஈன்ற 
		தாய் வினை செய்ய அன்றோ, கொன்றனன், தவத்தின் மிக்கான்? 144 
		 
		'கண்ணுதல், தீமை செய்ய, கமலத்து முளைத்த தாதை 
		அண்ணல்தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே? 
		புண் உறு புலவு வேலோய்! பழியொடும் பொருந்தி, பின்னை, 
		எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ? 145 
		 
		'உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து, அதன் உதிரம் ஊற்றி, 
		சுடல் உறச் சுட்டு, வேறு ஓர் மருந்தினால், துயரம் தீர்வர்; 
		கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால் 
		மடலுடை அலங்கல் மார்ப! மதி உடையவர்க்கு மன்னோ! 146 
		 
		'காக்கலாம் நும் முன் தன்னை எனின், அது கண்டது இல்லை; 
		ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும், ஆவது இல்லை; 
		தீக் கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம்; செருவில் ஆவி 
		போக்கலாம்; புகலாம், பின்னை நரகு; அன்றிப் பொருந்திற்று உண்டோ ? 147 
		 
		'மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை; மண்ணின் மேலா 
		இறங்கினை; இன்றுகாறும் இளமையும் வறிதே ஏக, 
		உறங்கினை என்பது அல்லால், உற்றது ஒன்று உளதோ? என், நீ 
		அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது?-ஐயா! 148 
		 
		திரு மறு மார்பன் நல்க, அனந்தரும் தீர்ந்து, செல்வப் 
		பெருமையும் எய்தி, வாழ்தி; ஈறு இலா நாளும் பெற்றாய்; 
		ஒருமையே அரசு செய்வாய்; உரிமையே உனதே; ஒன்றும் 
		அருமையும் இவற்றின் இல்லை; காலமும் அடுத்தது, ஐயா! 149 
		 
		'தேவர்க்கும் தேவன் நல்க, இலங்கையில் செல்வம் பெற்றால், 
		ஏவர்க்கும் சிறியை அல்லை; யார், உனை நலியும் ஈட்டார்?- 
		மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார், அறத்தை முற்றும் 
		காவற்குப் புகுந்து நின்றார், காகுத்த வேடம் காட்டி! 150 
		 
		'உன் மக்கள் ஆகி உள்ளார், உன்னொடும் ஒருங்கு தோன்றும் 
		என் மக்கள் ஆகி உள்ளார், இக் குடிக்கு இறுதி சூழ்ந்தான்- 
		தன் மக்கள் ஆகி உள்ளார், தலையொடும் திரிவர் அன்றே- 
		புன் மக்கள் தருமம் பூணாப் புல மக்கள் தருமம் பூண்டால்? 151 
		 
		'முனிவரும் கருணை வைப்பர்; மூன்று உலகத்தும் தோன்றி 
		இனி வரும் பகையும் இல்லை; "ஈறு உண்டு" என்று இரங்க வேண்டர் 
		துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்;- 
		கனி வரும் காலத்து, ஐய! பூக் கொய்யக் கருதலாமோ? 152 
		 
		'வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி, விட்டான்; 
		காதலால், என்மேல் வைத்த கருணையால், கருமம் ஈதே; 
		ஆதலால், அவனைக் காண, அறத்தொடும் திறம்பாது, ஐய! 
		போதுவாய் நீயே' என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான். 153 
		 
		கும்பகருணனின் மறுப்புரை 
		 
		'தும்பி அம் தொடையல் மாலைச் சுடர் முடி படியில் தோய, 
		பம்பு பொற் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள் 
		தம்பியை எடுத்து, மார்பில் தழுவி, தன் தறுகணூடு 
		வெம் புணீர் சொரிய நின்றான், இனையன விளம்பலுற்றான்; 154 
		 
		'நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் 
		போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்; 
		தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின், 
		கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி, 155 
		 
		'மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால், நீ 
		உலைவு இலாத் தருமம் பூண்டாய்; உலகு உளதனையும் உள்ளாய்; 
		தலைவன் நீ, உலகுக்கு எல்லாம்; உனக்கு அது தக்கதேயால்; 
		புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால். 156 
		 
		'கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத் 
		திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின், 
		பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி, 
		ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா. 157 
		 
		'தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப, சுற்றும் 
		வெம்பு வெஞ் சேனையோடும், வேறு உள கிளைஞரோடும், 
		உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு, 
		தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல்? 158 
		 
		'அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக, 
		பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெருங் கிரி நெருங்கப் பேர்த்த 
		பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப, கூசி, 
		துணை இன்றிச் சேரல் நன்றோ, தோற்றுள கூற்றின் சூழல்? 159 
		 
		'செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி, 
		வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி, 
		அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, ஐய! 
		கும்பிட்டு வாழ்கிலேன் யான் -கூற்றையும், ஆடல் கொண்டேன்! 160 
		 
		'அனுமனை, வாலி சேயை, அருக்கன் சேய்தன்னை, அம் பொன் 
		தனு உடையவரை, வேறு ஓர் நீலனை, சாம்பன் தன்னை, 
		கனி தொடர் குரங்கின் சேனைக் கடலையும், கடந்து மூடும் 
		பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென்; பார்த்தி! 161 
		 
		'ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட, 
		சூலம் கொண்டு ஓடி, வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற, 
		நீலம் கொள் கடலும் ஓட, நெருப்பொடு காலும் ஓட, 
		காலம் கொள் உலகும் ஓட, கறங்கு எனத் திரிவென்; காண்டி! 162 
		 
		'செருவிடை அஞ்சார் வந்து, என் கண் எதிர் சேர்வர் ஆகின், 
		கரு வரை, கனகக் குன்றம், என்னல் ஆம் காட்சி தந்த 
		இருவரும் நிற்க, மற்று அங்கு யார் உளர், அவரை எல்லாம், 
		ஒருவரும் திரிய ஒட்டேன், உயிர் சுமந்து உலகில்' என்றான். 163 
		 
		'தாழ்க்கிற்பாய் அல்லை; என் சொல் தலைக்கொளத் தக்கது என்று 
		கேட்கிற்பாய் ஆகின், எய்தி, அவரொடும் கெழீஇய நட்பை 
		வேட்கிற்பாய்; "இனி, ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு" என்று, 
		சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும் தொழ நிற்பாய்!" என்னச் சொன்னான். 164 
		 
		'போதி நீ, ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற 
		வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று, மெய்ம்மை 
		ஆதி நூல் மரபினாலே, கடன்களும் ஆற்றி, ஏற்றி, 
		மா துயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ. 165 
		 
		'ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப் 
		போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்; 
		சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது, 
		ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!' 166 
		 
		வீடணன் விடை பெறுதல் 
		 
		என்று, அவன் தன்னை மீட்டும் எடுத்து, மார்பு இறுகப் புல்லி, 
		நின்று நின்று, இரங்கி ஏங்கி, நிறை கணால் நெடிது நோக்கி, 
		'இன்றொடும் தவிர்ந்தது அன்றே, உடன்பிறப்பு' என்று விட்டான்; 
		வென்றி வெந் திறலினானும், அவன் அடித்தலத்து வீழ்ந்தான். 167 
		 
		வணங்கினான்; வணங்கி, கண்ணும் வதனமும் மனமும் வாயும் 
		உணங்கினான்; உயிரோடு யாக்கை ஒடுங்கினான்; 'உரைசெய்து இன்னும் 
		பிணங்கினால் ஆவது இல்லை; பெயர்வது; என்று உணர்ந்து போந்தான். 
		குணங்களால் உயர்ந்தான், சேனைக் கடல் எலாம் கரங்கள் கூப்ப. 168 
		 
		வீடணன் செல்ல, கும்பகருணன் கண்ணீர் உகுத்து நிற்றல் 
		 
		'கள்ள நீர் வாழ்க்கையேமைக் கைவிட்டு, காலும் விட்டான்; 
		பிள்ளைமை துறந்தான்' என்னாப் பேதுறும் நிலையன் ஆகி, 
		வெள்ள நீர் வேலைதன்னில் வீழ்ந்த நீர் வீழ, வெங் கண் 
		உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான். 169 
		 
		வீடணன் உரையைக் கேட்ட இராமன் கூற்று 
		 
		எய்திய நிருதர் கோனும், இராமனை இறைஞ்சி, 'எந்தாய்! 
		உய் திறம் உடையார்க்கு அன்றோ, அறன் வழி ஒழுகும் உள்ளம்? 
		பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென்; பெயருந் தன்மை 
		செய்திலன்; குலத்து மானம் தீர்ந்திலன், சிறிதும்' என்றான். 170 
		 
		கொய் திறச் சடையின் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் 
		நொய்தினில் துளக்கி, 'ஐய! "நுன் எதிர், நும்முனோனை 
		எய்து இறத் துணித்து வீழ்த்தல் இனிது அன்று" என்று இனைய சொன்னேன்; 
		செய் திறன் இனி வேறு உண்டோ ? விதியை யார் தீர்க்ககிற்பார்?" 171 
		 
		அரக்கர் சேனை வானர சேனையைச் சுற்றி வளைத்தல் 
		 
		என இனிது உரைக்கும் வேலை, இராக்கதர் சேனை என்னும் 
		கனை கடல், கவியின் தானைக் கடலினை வளைந்து கட்டி, 
		முனை தொழில் முயன்றதாக, மூவகை உலகும் முற்றத் 
		தனி நெடுந் தூளி ஆர்த்தது; ஆர்த்தில, பரவை தள்ளி, 172 
		 
		ஓடின புரவி; வேழம் ஓடின் உருளைத் திண் தேர் 
		ஓடின் மலைகள் ஓட, ஓடின உதிரப் பேர் ஆறு; 
		ஓடின கவந்த பந்தம்; ஆடின அலகை; மேல்மேல் 
		ஓடின பதாகை; ஓங்கி ஆடின, பறவை அம்மா! 173 
		 
		மூளையும், தசையும், என்பும், குருதியும், நிணமும், மூரி 
		வாளொடும் குழம்பு பட்டார், வாள் எயிற்று அரக்கர்; மற்றுஅவ் 
		ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள்;-அம்பொன் 
		தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க. 174 
		 
		எய்தனர், நிருதர்; கல்லால் எறிந்தனர், கவிகள்; ஏந்திப் 
		பெய்தனர், அரக்கர்; பற்றிப் பிசைந்தனர் அரிகள்; பின்றா 
		வைதனர், யாதுதானர்; வலித்தனர்; வானரேசர்; 
		செய்தனர், பிறவும் வெம் போர்; திகைத்தனர், தேவர் எல்லாம். 175 
		 
		கும்பகருணன் போர் 
		 
		நீரினை ஓட்டும் காற்றும், காற்று எதிர் நிற்கும் நீரும், 
		போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி, 
		தேரினை ஓட்டி வந்தான் - திருவினைத் தேவர் தங்கள் 
		ஊரினை நோக்காவண்ணம், உதிர வேல் நோக்கியுள்ளான். 176 
		 
		ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப, 
		பூழியில் பட்டு, செந்நீர்ப் புணரியில் பட்டு, பொங்கும் 
		சூழியில் பட்ட நெற்றிக் களிற்றொடும், துரந்த தேரின் 
		ஆழியில் பட்ட அன்றே-அவனியில் பட்ட எல்லாம். 177 
		 
		குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி 
		ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித் 
		தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்; 
		மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும். 178 
		 
		வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத் தேய்க்கும்; வாரி 
		நீரிடைக் குவிக்கும்; அப்பால், நெருப்பிடை நிமிர வீசும்; 
		தேரிடை எற்றும்; எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும்; 
		தூரிடை மரத்து மோதும்; மலைகளில் புடைக்கும், சுற்றி. 179 
		 
		பறைந்தனர், அமரர் அஞ்சி; பல் பெரும் பிணத்தின் பம்மல் 
		நிறைந்தன, பறவை எல்லாம்; நெடுந் திசை நான்கும் நான்கும் 
		மறைந்தன் பெருமை தீர்ந்த, மலைக் குலம்; வற்றி வற்றிக் 
		குறைந்தன, குரக்கு வெள்ளம்; கொன்றனன், கூற்றும் கூச. 180 
		 
		'மற்று இனி ஒருவர்மேல் ஓர் மரனொடும் கற்கள் வீசப் 
		பெற்றிலம் ஆதும் அன்றே; இன்றொடும் பெறுவது ஆமே; 
		அற்றன, தீங்கும்' என்னா, அரிக் குலத் தலைவர் பற்றி, 
		எற்றின, எறிந்த, எல்லாம் இணை நெடுந் தோளின் ஏற்றான். 181 
		 
		கல்லொடு மரனும், வேரும், கட்டையும், காலில் தீண்டும் 
		புல்லொடு பிறவும், எல்லாம், பொடிப் பொடி ஆகிப் போன் 
		'இல்லை, மற்று எறியத் தக்க, எற்றுவ, சுற்றும்' என்ன, 
		பல்லொடு பல்லு மென்று பட்டன, குரங்கும் உட்கி. 182 
		 
		குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின் குழாம் கொடு குதித்துக் கூடி, 
		சென்று மேல் எழுந்து பற்றி, கைத் தலம் தேயக் குத்தி, 
		வன் திறல் எயிற்றால் கவ்வி, வள் உகிர் மடியக் கீளா, 
		'ஒன்றும் ஆகின்றது இல்லை' என்று, இரிந்து ஓடிப் போன. 183 
		 
		நீலன் பொருது தோற்றல் 
		 
		மூலமே மண்ணில் மூழ்கிக் கிடந்தது ஓர் பொருப்பை, முற்றும் 
		காலம் மேல் எழுந்த கால் போல், கையினால் கடிதின் வாங்கி, 
		நீலன், மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு எனத் திரிந்து விட்டான்; 
		சூலமே கொண்டு நூறி, முறுவலும் தோன்ற நின்றான். 184 
		 
		'பெயர்ந்து ஒரு சிகரம் தேடின், அச்சம் ஆம் பிறர்க்கும்' என்னா, 
		புயங்களே படைகள் ஆகத் தேர் எதிர் ஓடிப் புக்கான், 
		இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய, யாரும் 
		பயம் கொள, கரங்கள் ஓச்சிக் குத்தினான், உதைத்தான், பல் கால். 185 
		 
		கைத்தலம் சலித்து, காலும் குலைந்து, தன் கருத்து முற்றான். 
		நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன் தன்னை, 
		எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான், இடது கையால்; 
		மெய்த்தலை, சூலம் ஓச்சான், வெறுங் கையான் என்று வெள்கி. 186 
		 
		நீலன் தளர்ந்தது கண்டு, அங்கதன் வந்து பொருதல் 
		 
		ஆண்டு, அது நோக்கி நின்ற அங்கதன், ஆண்டுச் சால 
		நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி, 
		'மாண்டனன் அரக்கன் தம்பி' என்று உலகு ஏழும் வாழ்த்தத் 
		தூண்டினன்; அதனை அன்னான் ஒரு தனித் தோளின் ஏற்றான். 187 
		 
		ஏற்ற போது, அனைய குன்றம் எண்ண அருந் துகளது ஆகி, 
		வீற்று வீற்று ஆகி, ஓடி விழுதலும், கவியின் வெள்ளம், 
		'ஊற்றம் ஏது, எமக்கு!' என்று எண்ணி, உடைந்தது; குமரன் உற்ற 
		சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன், சென்று பாதம். 188 
		 
		இடக் கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிரத் தண்டு, 
		தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது, தருக்கின் வாங்கி, 
		'மடக்குவாய் உயிரை' என்னா, வீசினன்; அதனை மைந்தன் 
		தடக் கையால் பிடித்துக் கொண்டான், வானவர் தன்னை வாழ்த்த. 189 
		 
		பிடித்தது சுழற்றி, 'மற்று அப் பெரு வலி அரக்கன் தன்னை, 
		இடித்து, உரும் ஏறு, குன்றத்து எரி மடுத்து, இயங்குமா போல், 
		அடித்து, உயிர் குடிப்பென்' என்னா, அனல் விழித்து, ஆர்த்து, மண்டி, 
		கொடித் தடந் தேரின் முன்னர்க் குதித்து, எதிர் குறுகி, நின்றான். 190 
		 
		கும்பகருணன் அங்கதன் உரையாடல் 
		 
		நின்றவன் தன்னை அன்னான் நெருப்பு எழ நிமர நோக்கி, 
		'பொன்ற வந்து அடைந்த தானைப் புரவலன் ஒருவன் தானோ? 
		அன்று, அவன் மகனோ? எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்தம்மை 
		வென்றவன் தானோ? யாரோ? விளம்புதி, விரைவின்' என்றான். 191 
		 
		'நும்முனை வாலின் சுற்றி, நோன் திசை நான்கும் தாவி, 
		மும் முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த 
		வெம் முனை வீரன் மைந்தன்; நின்னை என் வாலின் வீக்கி, 
		தெம் முனை இராமன் பாதம் வணங்கிட, செல்வென்' என்றான். 192 
		 
		'உந்தையை, மறைந்து, ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்குப் 
		பந்தனைப் பகையைச் செற்றுக காட்டலை என்னின், பாரோர் 
		நிந்தனை நின்னைச் செய்வர்; நல்லது நினைந்தாய்; நேரே 
		வந்தனை புரிவர் அன்றே, வீரராய் வசையின் தீர்ந்தார்? 193 
		 
		'இத்தலை வந்தது, என்னை இராமன்பால், வாலின் ஈர்த்து 
		வைத்தலைக் கருதி அன்று; வானவர் மார்பின் தைத்த 
		முத் தலை அயிலின் உச்சி முதுகு உற, மூரி வால்போல் 
		கைத்தலம் காலும் தூங்க, கிடத்தலைக் கருதி' என்றான். 194 
		 
		அங்கதன் எறிந்த தண்டு பல துண்டமாதல் 
		 
		அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து, அசனி குன்றத்து 
		உற்றது போலும் என்னும் ஒலிபட, உலகம் உட்க, 
		பொன் தடந் தோளின் வீசிப் புடைத்தனன்; பொறியின் சிந்தி, 
		இற்றது நூறு கூறாய், எழு முனை வயிரத் தண்டு. 195 
		 
		அனுமன் போரிடுதல் 
		 
		தண்டு இற, தடக் கை ஓச்சி, 'தழுவி அத் தறுகணானைக் 
		கொண்டு இறப்புறுவென்' என்னா, தலையுறக் குனிக்குங் காலை, 
		புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த, 
		மண் திறப்பு எய்த வீழ்ந்தான்; மாருதி இமைப்பின் வந்தான். 196 
		 
		மறித்து அவன் அவனைத் தன் கை வயிர வான் சூலம் மார்பில் 
		குறித்துற எறியலுற்ற காலையில், குன்றம் ஒன்று 
		பறித்து, அவன் நெற்றி முற்றப் பரப்பிடை, பாகம் உள்ளே 
		செறித்தெனச் சுரிக்க வீசி, தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான். 197 
		 
		தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றதன்ன 
		மலையினைக் கையின் வாங்கி, மாருதி வயிர மார்பின், 
		உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப, 
		குலை உறு பொறிகள் சிந்த, வீசி, தோள் கொட்டி ஆர்த்தான். 198 
		 
		அவ்வழி வாலி சேயை அரிகுல வீரர் அஞ்சார் 
		வவ்வினர் கொண்டு போனார்; மாருதி வானை முற்றும் 
		கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி, 
		எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று, இனைய சொன்னான். 199 
		 
		'எறிகுவென் இதனை நின்மேல்; இமைப்புறும் அளவில் ஆற்றல் 
		மறிகுவது அன்றி, வல்லை மாற்றினை என்னின், வன்மை 
		அறிகுவர் எவரும்; பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்; 
		பிறிகுவென்; உலகில், வல்லோய்! பெரும் புகழ் பெறுதி' என்றான். 200 
		 
		மாற்றம் அஃது உரைப்பக் கேளா, மலை முழை திறந்தது என்னக் 
		கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து, 'நீ கொணர்ந்த குன்றை 
		ஏற்றனென்; ஏற்ற காலத்து, இறை அதற்கு ஒற்கம் எய்தின், 
		தோற்றனென், உனக்கு; என் வன்மை சுருங்கும்' என்று அரக்கன் சொன்னான். 201 
		 
		மாருதி, 'வல்லை ஆகின், நில், அடா! மாட்டாய் ஆகின், 
		பேருதி, உயிர்கொண்டு' என்று, பெருங் கையால் நெருங்க விட்ட 
		கார் உதிர் வயிரக் குன்றைக் காத்திலன், தோள் மேல் ஏற்றான்; 
		ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது, எவ் உலகும் உட்க. 202 
		 
		இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து, 'இவனது ஆற்றல் 
		அளக்குறற்பாலும் ஆகர் குலவரை அமரின் ஆற்றர் 
		துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி 
		பிளக்குமேல், பிளக்கும்' என்னா, மாருதி பெயர்ந்து போனான். 203  
		 
   |