| 
 Kamba Ramayanam   
		கம்பர் இயற்றிய கம்பராமாயணம் 
		யுத்த காண்டம் - 
		14. முதற் போர் புரி படலம் 
		 
		வானர சேனைக்கு இராமன் 
		ஆணையிடல் 
		 
		'"பூசலே; பிறிது இல்லை" என, புறத்து 
		ஆசைதோறும் முரசம் அறைந்து, என 
		பாசறைப் படையின்னிடம் பற்றிய 
		வாசல்தோறும் முறையின் வகுத்திரால். 1 
		 
		'மற்றும் நின்ற மலையும் மரங்களும் 
		பற்றி,-வீரர்!-பரவையின் மும் முறை 
		கற்ற கைகளினால், கடி மா நகர் 
		சுற்றும் நின்ற அகழியைத் தூர்த்திரால். 2 
		 
		'இடுமின் பல் மரம்; எங்கும் இயக்கு அறத் 
		தடுமின்; "போர்க்கு வருக!" எனச் சாற்றுமின்; 
		கடுமின், இப்பொழுதே கதிர் மீச்செலாக் 
		கொடி மதில் குடுமித் தலைக்கொள்க!' என்றான். 3 
		 
		வானரப்படை அகழியைத் தூர்த்தல் 
		 
		தடங் கொள் குன்றும், மரங்களும் தாங்கியே, 
		மடங்கல் அன்ன அவ் வானர மாப் படை, 
		இடங்கர் மா இரிய, புனல் ஏறிட, 
		தொடங்கி, வேலை அகழியைத் தூர்த்ததால். 4 
		 
		ஏய வெள்ளம் எழுபதும், எண் கடல் 
		ஆய வெள்ளத்து அகழியைத் தூர்த்தலும், 
		தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என 
		வாயிலூடு புக்கு, ஊரை வளைந்ததே. 5 
		 
		விளையும் வென்றி இராவணன் மெய்ப் புகழ் 
		முளையினோடும் களைந்து முடிப்பபோல், 
		தளை அவிழ்ந்த கொழுந் தடந் தாமரை 
		வளையம், வன் கையில், வாங்கின-வானரம். 6 
		 
		இகழும் தன்மையன் ஆய இராவணன் 
		புகழும் மேன்மையும் போயினவாம் என, 
		நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால், 
		அகழிதானும் அழுவது போன்றதே. 7 
		 
		தண்டு இருந்த பைந் தாமரை தாள் அற, 
		பண் திரிந்து சிதைய, படர் சிறை 
		வண்டு இரிந்தன் வாய்தொறும் முட்டையைக் 
		கொண்டு இரிந்தன, அன்னக் குழாம் எலாம். 8 
		 
		ஈளி தாரம் இயம்பிய வண்டுகள் 
		பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய் 
		தாள தாமரை அன்னங்கள் தாவிட, 
		வாளை தாவின, வானரம் தாவவே. 9 
		 
		தூறு மா மரமும், மலையும் தொடர் 
		நீறு, நீர்மிசைச் சென்று நெருக்கலான், 
		ஏறு பேர் அகழ்நின்றும் எனைப் பல 
		ஆறு சென்றன, ஆர்கலிமீது அரோ. 10 
		 
		இழுகு மாக் கல் இடும்தொறு இடும்தொறும், 
		சுழிகள்தோறும் சுரித்து இடை தோன்று தேன் 
		ஒழுகு தாமரை ஒத்தன, ஓங்கு நீர் 
		முழுகி மீது எழு மாதர் முகத்தையே. 11 
		 
		தன்மைக்குத் தலையாய தசமுகன் 
		தொன்மைப் பேர் அகழ் வானரம் தூர்த்ததால்; 
		இன்மைக்கும், ஒன்று உடைமைக்கும், யாவர்க்கும் 
		வன்மைக்கும், ஒர் வரம்பும் உண்டாம்கொலோ? 12 
		 
		தூர்த்த வானரம், சுள்ளி பறித்து இடை, 
		சீர்த்த பேர் அணைதன்னையும் சிந்தின் 
		வார்த்தது அன்ன மதிலின் வரம்புகொண்டு 
		ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே. 13 
		 
		வட்டமேரு இது என, வான் முகடு 
		எட்ட நீண்ட மதில்மிசை ஏறி, விண் 
		தொட்ட வானரம் தோன்றின-மீத் தொக 
		விட்ட வெண் கொடி வீங்கின என்னவே. 14 
		 
		இறுக்க வேண்டுவது இல்லை; எண் தீர் மணி 
		வெறுக்கை ஓங்கிய மேரு விழுக் கலால் 
		நிறுக்க, நேர்வரும் வீரர் நெருக்கலால், 
		பொறுக்கலாது, மதிள் தரை புக்கதால். 15 
		 
		அரக்கர் சேனையின் எழுச்சி 
		 
		அறைந்த மா முரசு; ஆனைப் பதாகையால் 
		மறைந்தவால், நெடு வானகம்; மாதிரம் 
		குறைந்த, தூளி குழுமி; விண்ணூடு புக்கு 
		உறைந்தது, ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே. 16 
		 
		கோடு அலம்பின் கோதை அலம்பின் 
		ஆடல் அம் பரித் தாரும் அலம்பின் 
		மாடு அலம்பின, மா மணித் தேர்; மணி 
		பாடு அலம்பின, பாய் மத யானையே. 17 
		 
		இரு சேனையும் பொருதல் 
		 
		அரக்கர் தொல் குலம் வேர் அற, அல்லவர் 
		வருக்கம் யாவையும் வாழ்வுற, வந்தது ஓர் 
		கருக் கொள் காலம் விதிகொடு காட்டிட, 
		தருக்கி உற்று, எதிர் தாக்கின-தானையே. 18 
		 
		பல் கொடும், நெடும் பாதவம் பற்றியும், 
		கல் கொடும், சென்றது-அக் கவியின் கடல், 
		வில் கொடும், நெடு வேல்கொடும், வேறு உள 
		எல் கொடும், படையும் கொண்டது-இக் கடல். 19 
		 
		அம்பு கற்களை அள்ளின் அம்பு எலாம் 
		கொம்புடைப் பணை கூறு உற நூறின் 
		வம்புடைத் தட மா மரம் மாண்டன, 
		செம் புகர்ச் சுடர் வேல்-கணம் செல்லவே. 20 
		 
		மாக் கை வானர வீரர் மலைந்த கல் 
		தாக்கி, வஞ்சர் தலைகள் தகர்த்தலால், 
		நாக்கினூடும், செவியினும், நாகம் வாழ் 
		மூக்கினூடும், சொரிந்தன, மூளையே. 21 
		 
		அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம் 
		விற்கள் ஓடு சரம் பட, வெம் புணீர் 
		பற்களோடும் சொரிதர, பற்றிய 
		கற்களோடும் உருண்ட, கவிகளே. 22 
		 
		நின்று மேரு நெடு மதில் நெற்றியின் 
		வென்றி வானர வீரர் விசைத்த கல் 
		சென்று, தீயவர் ஆர் உயிர் சிந்தின, 
		குன்றின் வீழும் உருமின் குழுவினே. 23 
		 
		எதிர்த்த வானரம் மாக் கையொடு இற்றன் 
		மதில் புறங் கண்டு, மண்ணில் மறைந்தன்- 
		கதிர்க் கொடுங் கண் அர்க்கர் கரங்களால் 
		விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே. 24 
		 
		கடித்த, குத்தின, கையின் கழுத்து அறப் 
		பிடித்த, வள் உகிரால் பிளவு ஆக்கின, 
		இடித்த, எற்றின, எண் இல் அரக்கரை 
		முடித்த-வானரம், வெஞ் சினம் முற்றின. 25 
		 
		எறிந்தும், எய்தும், எழு முளைத் தண்டு கொண்டு 
		அறைந்தும், வௌ; அயில் ஆகத்து அழுத்தியும், 
		நிறைந்த வெங் கண் அரக்கர் நெருக்கலால், 
		குறைந்த-வானர வீரர் குழுக்களே. 26 
		 
		செப்பின் செம் புனல் தோய்ந்த செம் பொன் மதில், 
		துப்பின் செய்தது, போன்றது, சூழ் வiர் 
		குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்துகொண்டு 
		உப்பின் சென்றது, உதிரத்து ஒழுக்கமே. 27 
		 
		வந்து இரைத்த பறவை மயங்கின, 
		அந்தரத்தில் நெருங்கலின், அங்கு ஒரு 
		பந்தர் பெற்றது போன்றது-பற்றுதல் 
		இந்திரற்கும் அரிய இலங்கையே. 28 
		 
		தங்கு வெங் கனல் ஒத்துத் தயங்கிய 
		பொங்கு வெங் குருதிப் புனற் செக்கர் முன், 
		கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து, 
		அங்கும் இங்கும் நின்று, ஆடினவாம் அரோ. 29 
		 
		கொன் நிறக் குருதிக் குடை புட்களின் 
		தொல் நிறச் சிறையில் துளி தூவலால், 
		பல் நிறத்த பதாகைப் பரப்பு எலாம் 
		செந் நிறத்தனவாய், நிறம் தீர்ந்தவே. 30 
		 
		வானரங்கள் மதிலிலிருந்து இறங்குதல் 
		 
		பொழிந்து சோரிப் புதுப் புனல் பொங்கி மீ 
		வழிந்த மா மதில் கைவிட்டு, வானரம், 
		ஒழிந்த, மேருவின் உம்பர் விட்டு இம்பரின் 
		இழிந்த மாக் கடல் என்ன, இழிந்ததே. 31 
		 
		பதனமும், மதிலும், படை நாஞ்சிலும், 
		கதன வாயிலும், கட்டும் அட்டாலையும், 
		முதல யாவையும் புக்குற்று முற்றின- 
		விதன வெங் கண் இராக்கதர் வெள்ளமே. 32 
		 
		பாய்ந்த சோரிப் பரவையில் பற்பல 
		நீந்தி ஏகும் நெருக்கிடைச் செல்வன் 
		சாய்ந்து சாய்ந்து, சரம் படத் தள்ளலுற்று 
		ஓய்ந்து வீழ்ந்த் சில சில ஓடின. 33 
		 
		அரக்கர் சேனையின் ஆரவாரம் 
		 
		தழிய வானர மாக் கடல் சாய்தலும், 
		பொழியும் வெம் படைப் போர்க் கடல் ஆர்த்தவால்- 
		ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து 
		அழியும் மாக் கடல் ஆர்ப்பு எடுத்தென்னவே. 34 
		 
		முரசும், மா முருடும், முரல் சங்கமும், 
		உரை செய் காளமும், ஆகுளி ஓசையும், 
		விரைசும் பல் இயம், வில் அரவத்தொடும், 
		திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே. 35 
		 
		இராவணனது படை வெளி வருதல் 
		 
		ஆய காலை, அனைத்து உலகும் தரும் 
		நாயகன் முகம் நாலும் நடந்தென, 
		மேய சேனை விரி கடல், விண் குலாம் 
		வாயிலூடு புறப்பட்டு வந்ததே. 36 
		 
		நெடிய காவதம் எட்டும் நிரம்பிய, 
		படிய வாயில் பருப்பதம் பாய்ந்தென, 
		கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு 
		ஒடிய ஊன்றின, மும் மத ஓங்கலே. 37 
		 
		சூழி யானை மதம் படு தொய்யலின், 
		ஊழி நாள் நெடுங் கால் என ஓடுவ, 
		பாழி ஆள் வயிரப் படி பல் முறை 
		பூழி ஆக்கின, பொன் நெடுந் தேர்களே. 38 
		 
		பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால் 
		இடித்த மா மதில் ஆடை இலங்கையாள், 
		மடுத்த மாக் கடல் வாவும் திரை எலாம் 
		குடித்துக் கால்வன போன்ற, குதிரையே. 39 
		 
		கேள் இல் ஞாலம், கிளத்திய தொல் முறை 
		நாளும் நாளும் நடந்தன நள் இரா, 
		நீளம் எய்தி, ஒரு சிறை நின்றன, 
		மீளும் மாலையும் போன்றனர்-வீரரே. 40 
		 
		பத்தி வன் தலைப் பாம்பின் பரம் கெட, 
		முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற, 
		பித்தி பிற்பட, வன் திசை பேர்வுற, 
		தொத்தி, மீண்டிலவால்-நெடுந் தூளியே. 41 
		 
		வானரச் சேனை நிலைகுலைய, சுக்கிரீவன் சினத்துடன் போரிடல் 
		 
		நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால், 
		குரக்கு இனப் பெருந் தானை குலைந்து போய், 
		அருக்கன் மா மகன், ஆர் அமர் ஆசையால் 
		செருக்கி நின்றவன், நின்றுழிச் சென்றவால். 42 
		 
		சாய்ந்த தானைத் தளர்வும், சலத்து எதிர் 
		பாய்ந்த தானைப் பெருமையும், பார்த்து, உறக் 
		காய்ந்த நெஞ்சன், கனல் சொரி கண்ணினன், 
		ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான். 43 
		 
		வாரணத்து எதிர், வாசியின் நேர், வயத் 
		தேர் முகத்தினில், சேவகர்மேல், செறுத்து, 
		ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று, உயர் 
		தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான். 44 
		 
		களிறும், மாவும், நிருதரும், கால் அற, 
		ஒளிறு மா மணித் தேரும் உருட்டி, வெங் 
		குளிறு சோரி ஒழுக, கொதித்து, இடை 
		வெளிறு இலா மரமே கொண்டு, வீசினான். 45 
		 
		அன்ன காலை, அரிக் குல வீரரும் 
		மன்னன் முன் புக, வன் கண் அரக்கரும் 
		முன் உழந்த முழங்கு பெருஞ் செருத் 
		தன்னில் வந்து, தலைமயக்குற்றனர். 46 
		 
		கல் துரந்த களம் பட, வஞ்சகர் 
		இற்று உலந்து முடிந்தவர் எண் இலர்; 
		வில் துரந்தன வெங் கணையால் உடல் 
		அற்று உலந்த குரங்கும் அனந்தமே. 47 
		 
		கற்கள் தந்து, நிமிர்ந்து, கடுஞ் செரு 
		மற்கடங்கள் வலிந்து மலைந்திட, 
		தற்கு அடங்கி உலந்தவர்தம் உயிர் 
		தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால். 48 
		 
		பாடுகின்றன, பேய்க் கணம்; பல் விதத்து 
		ஆடுகின்ற, அறு குறை; ஆழ் கடற்கு 
		ஓடுகின்ற, உதிரம்; புகுந்து, உடல் 
		நாடுகின்றனர், கற்புடை நங்கைமார். 49 
		 
		யானை பட்ட அழி புனல் யாறு எலாம் 
		பானல் பட்ட் பல கணை மாரியின் 
		சோனை பட்டது; சொல்ல அரும் வானரச் 
		சேனை பட்டது; பட்டது, செம் புண்ணீர். 50 
		 
		அரக்கர் சேனையின் அழிவு கண்ட வச்சிரமுட்டி வந்து போரிடல் 
		 
		காய்ந்த வானர வீரர் கரத்தினால் 
		தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர் 
		பாய்ந்த தானைப் படு களம் பாழ்படச் 
		சாய்ந்ததால், நிருதக் கடல்-தானையே. 51 
		 
		தங்கள் மாப் படை சாய்தலும், தீ எழ 
		வெங் கண் வாள் அரக்கன், விரை தேரினை, 
		கங்க சாலம் தொடரக் கடற் செலூஉம் 
		வங்கம் ஆம் என வந்து, எதிர் தாக்கினான். 52 
		 
		வந்து தாக்கி, வடிக் கணை மா மழை 
		சிந்தி, வானரச் சேனை சிதைத்தலும், 
		இந்திராதியரும் திகைத்து ஏங்கினார்; 
		நொந்து, சூரியன் கான்முனை நோக்கினான். 53 
		 
		சுக்கிரீவன் வச்சிரமுட்டியை அழித்தல் 
		 
		நோக்கி, வஞ்சன் நொறில் வய மாப் பரி 
		வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து, தோள் 
		தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து, அவன் 
		யாக்கையும் சிதைத்துவிட்டு, எழுந்து ஏகினான். 54 
		 
		மலை குலைந்தென, வச்சிரமுட்டி தன் 
		நிலை குலைந்து விழுதலின், நின்றுளார் 
		குலை குலைந்து கொடி நகர் நோக்கினார்; 
		அலை கிளர்ந்தென, வானரம் ஆர்த்தவே. 55 
		 
		கீழை வாசலில் நிகழ்ந்த போர் 
		 
		வீழி வெங் கண் இராக்கதர் வெம் படை, 
		ஊழி ஆழி கிளர்ந்தென ஓங்கின, 
		கீழை வாயிலில் கிட்டலும், முட்டினர், 
		சூழும் வானர வீரர் துவன்றியே. 56 
		 
		சூலம், வாள், அயில், தோமரம், சக்கரம், 
		வாலம், வாளி, மழையின் வழங்கியே, 
		ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும், 
		காலும் வாலும் துமிந்த, கவிக் குலம். 57 
		 
		வென்றி வானர வீரர் விசைத்து எறி 
		குன்றும் மா மரமும், கொடுங் காலனின் 
		சென்று வீழ, நிருதர்கள் சிந்தினார்; 
		பொன்றி வீழ்ந்த, புரவியும் பூட்கையும். 58 
		 
		தண்டு, வாள், அயில், சக்கரம் சாயகம், 
		கொண்டு, சீறி, நிருதர் கொதித்து எழ, 
		புண் திறந்து குருதி பொழிந்து உக, 
		மண்டி ஓடினர், வானர வீரரே. 59 
		 
		நீலன் நிகழ்த்திய போர் 
		 
		எரியின் மைந்தன், இரு நிலம் கீழுற, 
		விரிய நின்ற மராமரம் வேரொடும் 
		திரிய வாங்கி, நிருதர் வெஞ் சேனை போய் 
		நெரிய, ஊழி நெருப்பு என வீசினான். 60 
		 
		தேரும், பாகரும், வாசியும், செம் முகக் 
		காரும், யாளியும், சீயமும், காண் தகு 
		பாரின் வீழப் புடைப்ப, பசும் புணின் 
		நீரும் வாரி அதனை நிறைத்ததே. 61 
		 
		அரக்கர் சேனை அடு களம் பாழ்பட 
		வெருக்கொண்டு ஓடிட, வெம் படக் காவலர் 
		நெருக்க, நேர்ந்து, கும்பானு நெடுஞ் சரம் 
		துரக்க, வானரச் சேனை துணிந்தவே. 62 
		 
		கண்டு நின்ற கரடியின் காவலன், 
		எண் திசாமுகம் எண்ணும் இடும்பன், ஓர் 
		சண்டமாருதம் என்ன, தட வரை 
		கொண்டு சீறி, அவன் எதிர் குப்புறா, 63 
		 
		தடுத்த வாளிகள் வீழும் முன், சூழ்ந்து எதிர் 
		எடுத்த குன்றை இடும்பன் எறிதலும், 
		ஒடித்த வில்லும் இரதமும், ஒல்லெனப் 
		படுத்த, வாசியும் பதாகையும் பாழ்பட. 64 
		 
		தேர் அழிந்து, சிலையும் அழிந்து உக, 
		கார் இழிந்த உரும் எனக் காய்ந்து, எதிர் 
		பார் கிழிந்து உகப் பாய்ந்தனன்-வானவர் 
		போர் கிழிந்து புறம் தர, போர் செய்தான். 65 
		 
		தத்தி, மார்பின் வயிரத் தடக் கையால் 
		குத்தி நின்ற கும்பானுவை, தான் எதிர் 
		மொத்தி நின்று, முடித் தலை கீழ் உற, 
		பத்தி வன் தடந் தோள் உறப் பற்றுவான். 66 
		 
		கடித்தலத்து இரு கால் உற, கைகளால் 
		பிடித்துத் தோளை, பிறங்கலின் கோடு நேர் 
		முடித்தலத்தினைக் கவ்வுற மூளைகள் 
		வெடித்து வீழ்தர, வீழ்த்தினனாம் அரோ. 67 
		 
		பிரகத்தன் போர் 
		 
		தன் படைத்தலைவன் படத் தன் எதிர், 
		துன்பு அடைத்த மனத்தன், சுமாலி சேய், 
		முன் படைத்த முகில் அன்ன காட்சியன், 
		வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான். 68 
		 
		வாங்கி வார் சிலை, வானர மாப் படை 
		ஏங்க நாண் எறிந்திட்டு, இடையீடு இன்றி, 
		தூங்கு மாரி என, சுடர் வாளிகள், 
		வீங்கு தோளினன், விட்டனனாம் அரோ. 69 
		 
		நூறும் ஆயிரமும் கணை நொய்தினின் 
		வேறு வேறு படுதலின், வெம்பியே, 
		ஈறு இல் வானர மாப் படை எங்கணும் 
		பாற, நீலன் வெகுண்டு, எதிர் பார்ப்புறா, 70 
		 
		குன்றம் நின்றது எடுத்து, எதிர் கூற்று எனச் 
		சென்று எறிந்து, அவன் சேனை சிதைத்தலும், 
		வென்றி வில்லின் விடு கணை மாரியால், 
		ஒன்று நூறு உதிர்வுற்றது, அக் குன்றமே. 71 
		 
		மீட்டும், அங்கு ஓர் மராமரம் வேரொடும் 
		ஈட்டி, வானத்து இடி என எற்றலும், 
		கோட்டும் வில்லும், கொடியும், வயப் பரி 
		பூட்டும் தேரும், பொடித் துகள் ஆயவே. 72 
		 
		தேர் இழந்து, சிலையும் இழந்திட, 
		கார் இழிந்த உரும் எனக் காந்துவான், 
		பார் இழிந்து, பரு வலித் தண்டொடும், 
		ஊர் இழந்த கதிர் என, ஓடினான். 73 
		 
		வாய் மடித்து அழல் கண்தொறும் வந்து உக, 
		போய் அடித்தலும், நீலன் புகைந்து, எதிர் 
		தாய் அடுத்து, அவன் தன் கையின் தண்டொடும் 
		மீ எடுத்து விசும்பு உற வீசினான். 74 
		 
		அம்பரத்து எறிந்து, ஆர்ப்ப, அரக்கனும், 
		இம்பர் உற்று, எரியின் திரு மைந்தன்மேல், 
		செம்புனல் பொழியக் கதை சேர்த்தினான், 
		உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே. 75 
		 
		அடித்தலோடும், அதற்கு இளையாதவன், 
		எடுத்த தண்டைப் பறித்து எறியா, 'இகல் 
		முடித்தும்' என்று, ஒரு கைக்கொடு மோதினான், 
		குடித்து உமிழ்ந்தெனக் கக்கக் குருதியே. 76 
		 
		குருதி வாய்நின்று ஒழுகவும் கூசலன், 
		நிருதன், நீலன் நெடு வரை மார்பினில் 
		கருதலாத முன் குத்தலும், கைத்து, அவர் 
		பொருத பூசல் புகல ஒண்ணாததே. 77 
		 
		மற்று, நீலன், அரக்கனை மாடு உறச் 
		சுற்றி வால்கொடு, தோளினும், மார்பினும், 
		நெற்றி மேலும், நெடுங் கரத்து எற்றலும், 
		இற்று, மால் வரை என்ன, விழுந்தனன். 78 
		 
		'இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன்' என்று 
		அறிந்து, வானவர் ஆவலம் கொட்டினார்; 
		வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர் 
		முறிந்து, தம்தம் முது நகர் நோக்கினார். 79 
		 
		தெற்கு வாயிலில் அங்கதன் நிகழ்த்திய போர் 
		 
		தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் 
		மல் குலாவு வயப் புயத்து அங்கதன் 
		நிற்கவே, எதிர் நின்றிலர் ஓடினார், 
		பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே. 80 
		 
		மேலை வாயிலில் அனுமன் நிகழ்த்திய போர் 
		 
		நூற்று-இரண்டு எனும் வெள்ளமும், நோன் கழல் 
		ஆற்றல் சால் துன்முகனும், அங்கு ஆர்த்து எழ, 
		மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார்,- 
		காற்றின் மா மகன் கை எனும் காலனால். 81 
		 
		நால்திசைப் போர் பற்றித் தூதுவர் இராவணனுக்குச் சொல்லுதல் 
		 
		அன்ன காலை, அயிந்திர வாய் முதல் 
		துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார், 
		'மன்ன! கேள்' என, வந்து வணங்கினார்; 
		சென்னி தாழ்க்க, செவியிடைச் செப்பினார்; 82 
		 
		'வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும், 
		குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும், 
		அடக்க அரும் வலத்து ஐம்பது வெள்ளமும், 
		படச் சிதைந்தது, நம் படை' என்றனர். 83 
		 
		'வென்றி வேற் கை நிருதர் வெகுண்டு எழ, 
		தென் திசைப் பெரு வாயிலில் சேர்ந்துழி, 
		பொன்றினான், அச் சுபாரிசன்; போயினார் 
		இன்று போன இடம் அறியோம்' என்றார். 84 
		 
		'கீழை வாயில், கிளர் நிருதப் படை, 
		ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின் 
		ஆழி அன்ன அனீகத் தலைமகன் 
		பூழியான்; உயிர் புக்கது விண்' என்றார். 85 
		 
		இராவணன் பெருஞ்சினம் கொள்ளல் 
		 
		என்ற வார்த்தை, எரி புகு நெய் எனச் 
		சென்று, சிந்தை புகுதலும், சீற்றத் தீ 
		கன்று கண்ணின்வழிச் சுடர் கான்றிட, 
		நின்று நின்று, நெடிது உயிர்த்தான் அரோ. 86 
		 
		மறித்தும், 'ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான்? 
		இறுத்துக் கூறும்' என்றான்; 'இசை எங்கணும் 
		நிறுத்தும் நீலன், நெடும் பெருஞ் சேனையை 
		ஒறுத்து, மற்று அவனோடும் வந்து உற்றனன்; 87 
		 
		'உற்ற போதின் இருவரும், ஒன்று அல, 
		கற்ற போர்கள் எலாம் செய்த காலையில், 
		நெற்றிமேல், மற்று அந் நீலன் நெடுங் கையால் 
		எற்ற, வீந்தனன்' என்ன இயம்பினார். 88 
		 
		'அன்னவன்னொடும் போன அரக்கரில் 
		நல் நகர்க்கு வந்தோம், ஐய! நாங்களே' 
		என்ன என்ன, எயிற்று, இகல் வாய்களைத் 
		தின்னத் தின்ன, எரிந்தன திக்கு எலாம். 89 
		 
		இராவணன் போருக்குப் புறப்படுதல் 
		 
		மாடு நின்ற நிருதரை, வன்கணான் 
		ஓட நோக்கி, 'உயர் படையான் மற்று அக் 
		கோடு கொண்டு பொருத குரங்கினால் 
		வீடினான்!' என்று, மீட்டும் விளம்பினான்: 90 
		 
		'"கட்டது, இந்திரன் வாழ்வை; கடைமுறை 
		பட்டது, இங்கு ஒர் குரங்கு படுக்க" என்று 
		இட்ட வெஞ் சொல் எரியினில், என் செவி 
		சுட்டது; என்னுடை நெஞ்சையும் சுட்டதால்; 91 
		 
		'கருப்பைபோல் குரங்கு எற்ற, கதிர் சுழல் 
		பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான்; 
		அருப்பம் என்று பகையையும், ஆர் அழல் 
		நெருப்பையும், இகழ்ந்தால், அது நீதியோ?' 92 
		 
		நிற்க அன்னது, நீர் நிறை கண்ணினான், 
		'வற்கம் ஆயின மாப் படையோடும் சென்று, 
		ஒற்கம் வந்து உதவாமல் உறுக!' என, 
		விற் கொள் வெம் படை வீரரை ஏவியே, 93 
		 
		மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம் 
		கண்டு நின்று, கயிலை இடந்தவன், 
		புண் திறந்தன கண்ணினன், பொங்கினான், 
		திண் திறல் நெடுந் தேர் தெரிந்து ஏறினான்- 94 
		 
		ஆயிரம் பரி பூண்டது; அதிர் குரல் 
		மா இருங் கடல் போன்றது; வானவர் 
		தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல் 
		சாய, இந்திரனே பண்டு தந்தது. 95 
		 
		ஏற்றி, எண்ணி இறைஞ்சி, இடக் கையால் 
		ஆற்றினான், தன் அடு சிலை; அன்னதின் 
		மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும், 
		கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே. 96 
		 
		மற்றும், வான் படை, வானவர் மார்பிடை 
		இற்றிலாதன, எண்ணும் இலாதன, 
		பற்றினான்; கவசம் படர் மார்பிடைச் 
		சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். 97 
		 
		பேரும் கற்றைக் கவரிப் பெருங் கடல் 
		நீரும் நீர் நுரையும் என நின்றவன், 
		ஊரும் வெண்மை உவா மதிக் கீழ் உயர் 
		காரும் ஒத்தனன், முத்தின் கவிகையான். 98 
		 
		போர்த்த சங்கப் படகம் புடைத்திட, 
		சீர்த்த சங்கக் கடல் உக, தேவர்கள் 
		வேர்த்து அசங்கிட, அண்டம் வெடித்திட, 
		ஆர்த்த சங்கம், அறைந்த, முரசமே. 99 
		 
		தேரும் மாவும் படைஞரும் தெற்றிட, 
		மூரி வல் நெடுந் தானையில் முற்றினான்; 
		நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள், 
		மேரு மால் வரை என்ன, விளங்கினான், 100 
		 
		ஏழ் இசைக் கருவி வீற்றிருந்தது என்னினும், 
		சூழ் இருந் திசைகளைத் தொடரும் தொல் கொடி, 
		வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் 
		ஊழியின் அந்தகன் நாவின், ஓங்கவே; 101 
		 
		'வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் 
		தோணி பெற்றனர்' எனக் கடக்கும் தொல் செருக் 
		காணிய வந்தவர், கலக்கம் கைம்மிக, 
		சேண் உயர் விசும்பிடை அமரர், சிந்தவே; 102 
		 
		கண் உறு கடும் புகை கதுவ, கார் நிறத்து 
		அண்ணல் வாள் அரக்கர்தம் அரத்தப் பங்கிகள் 
		வெண் நிறம் கோடலின், உருவின் வேற்றுமை, 
		நண்ணினர் நோக்கவும், அயிர்ப்பு நல்கவே; 103 
		 
		கால் நெடுந் தேர் உயர் கதலியும், கரத்து 
		ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும், 
		ஆனையின் கொடிகளும், அளவித் தோய்தலால், 
		வான யாறொடு மழை ஒற்றி வற்றவே; 104 
		 
		ஆயிரம் கோடி பேய், அங்கை ஆயுதம் 
		தூயன சுமந்து, பின் தொடர, சுற்று ஒளிர் 
		சேயிரு மணி நெடுஞ் சேமத் தேர் தெரிந்து, 
		ஏயின ஆயிரத்து இரட்டி எய்தவே; 105 
		 
		ஊன்றிய பெரும் படை உலைய, உற்று உடன் 
		ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ, 
		தோன்றினன்-உலகு எனத் தொடர்ந்து நின்றன 
		மூன்றையும் கடந்து, ஒரு வெற்றி முற்றினான். 106 
		 
		இராவணன் வருகையை ஒற்றர் இராமனுக்கு அறிவித்தல் 
		 
		'ஓதுறு கருங் கடற்கு ஒத்த தானையான், 
		தீது உறு சிறு தொழில் அரக்கன், சீற்றத்தால், 
		போது உறு பெருங் களம் புகுந்துளான்' எனத் 
		தூதுவர் நாயகற்கு அறியச் சொல்லினார். 107 
		 
		இராமன் மகிழ்ந்து போர்க்கோலம் பூணுதல் 
		 
		ஆங்கு, அவன் அமர்த் தொழிற்கு அணுகினான் என, 
		'வாங்கினென், சீதையை' என்னும் வன்மையால், 
		தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற 
		வீங்கின, இராகவன் வீரத் தோள்களே. 108 
		 
		தொடையுறு வற்கலை ஆடை சுற்றி, மேல் 
		புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான்- 
		இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர், 
		கடை உறு நோக்கினின், காணும் காட்சியான். 109 
		 
		ஒத்து இரு சிறு குறட் பாதம் உய்த்த நாள், 
		வித்தக அரு மறை உலகை மிக்கு, மேல் 
		பத்து உள விரல் புடை பரந்த பண்பு என, 
		சித்திரச் சேவடிக் கழலும் சேர்த்தினான். 110 
		 
		பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர் 
		மேவரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன்- 
		தேவியைத் திரு மறு மார்பின் தீர்ந்தனன்; 
		'நோ இலள்' என்பது நோக்கினான்கொலோ? 111 
		 
		நல் புறக் கோதை, தன் நளினச் செங்கையின் 
		நிற்புறச் சுற்றிய காட்சி, நேமியான்- 
		கற்பகக் கொம்பினைக் கரிய மாசுணம் 
		பொற்புறத் தழுவிய தன்மை போன்றதால். 112 
		 
		புதை இருட் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி 
		சிதைவு அரு நாள் வரச் சிவந்த தாமரை 
		இதழ்தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என, 
		ததைவுறு நிரை விரற் புட்டில் தாங்கினான். 113 
		 
		பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து, 
		எல்லை இல் நூற் கடல் ஏற நோக்கிய, 
		நல் இயல், நவை அறு, கவிஞர் நா வரும் 
		சொல் எனத் தொலைவு இலாத் தூணி தூக்கினான். 114 
		 
		கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என 
		அளவு அறு செஞ் சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்; 
		இள வரிக் கவட்டிலை ஆரொடு ஏர் பெறத் 
		துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். 115 
		 
		ஓங்கிய உலகமும், உயிரும், உட்புறம் 
		தாங்கிய பொருள்களும், தானும், தான் என 
		நீங்கியது யாவது? நினைக்கிலோம்; அவன் 
		வாங்கிய வரி சிலை மற்றொன்றேகொலாம்? 116 
		 
		நாற் கடல் உலகமும், விசும்பும், நாள்மலர் 
		தூர்க்க, வெஞ் சேனையும் தானும் தோன்றினான்- 
		மால் கடல் வண்ணன், தான் வளரும் மால் இரும் 
		பாற்கடலோடும் வந்து, எதிரும் பான்மைபோல். 117 
		 
		இராமன் இலக்குவனைச் சார்தல் 
		 
		ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு, தான், 
		ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என, 
		வாழிய வரி சிலைத் தம்பி, மாப் படைக் 
		கூழையின் நெற்றி நின்றானை, கூடினான். 118 
		 
		அரக்கரும் வானரரும் கைகலத்தல் 
		 
		என்புழி, நிருதராம் எழு வேலையும், 
		மின் பொழி எயிறுடைக் கவியின் வெள்ளமும், 
		தென் புலக் கிழவனும் செய்கை கீழ்ப்பட, 
		புன் புலக் களத்திடைப் பொருத போலுமால். 119 
		 
		துமிந்தன தலை; குடர் சொரிந்த் தேர்க் குலம் 
		அவிந்தன் புரவியும் ஆளும் அற்றன் 
		குவிந்தன, பிணக் குவை; சுமந்து கோள் நிலம் 
		நிமிர்ந்தது; பரந்தது, குருதி நீத்தமே. 120 
		 
		கடுங் குரங்கு இரு கையால் எற்ற, கால் வயக் 
		கொடுங் குரம் துணிந்தன, புரவி; குத்தினால் 
		ஒடுங்கு உரம் துணிந்தனர், நிருதர்; ஓடின, 
		நெடுங் குரம்பு என நிறை குருதி நீத்தமே. 121 
		 
		'தெற்கு இது; வடக்கு இது' என்னத் தேர்கிலார், 
		பற் குவை பரந்தன் குரக்குப் பல் பிணம் 
		பொற் குவை நிகர்த்தன் நிருதர் போர்ச் சவம் 
		கற் குவை நிகர்த்தன் மழையும் காட்டின. 122 
		 
		இராவணன் வில் நாண் ஒலியால் வானரம் இரிதல் 
		 
		அவ்வழி, இராவணன் அமரர் அஞ்ச, தன் 
		வௌ; விழி நெருப்பு உக, வில்லின் நாணினைச் 
		செவ் வழிக் கோதையின் தெறிக்க, சிந்தின, 
		எவ்வழி மருங்கினும் இரிந்த, வானரம். 123 
		 
		உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து 
		இரியலுற்றன, சில் இறந்தவால், சில் 
		வெருவலுற்றன, சில் விம்மலுற்றன் 
		பொரு களத்து உயிரொடும் புரண்டு போம் சில. 124 
		 
		பொர, கரு நிற நெடு விசும்பு போழ்பட, 
		இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால், 
		குரக்கினம் உற்றது என், கூறின்? தன் குலத்து 
		அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார். 125 
		 
		வீடணன் ஒருவனும், இளைய வீரனும், 
		கோடு அணை குரங்கினுக்கு அரசும், கொள்கையால் 
		நாடினர் நின்றனர்; நாலு திக்கினும் 
		ஓடினர், அல்லவர்; ஒளித்தது, உம்பரே. 126 
		 
		'எடுக்கின், நானிலத்தை ஏந்தும் இராவணன், எறிந்த நாணால் 
		நடுக்கினான், உலகை' என்பார்; 'நல்கினான்' என்னற்பாற்றோ? 
		மிடுக்கினால் மிக்க வானோர், மேக்கு உயர் வெள்ளம், மேல்நாள், 
		கெடுக்கும் நாள், உருமின் ஆர்ப்புக் கேட்டனர் என்னக் கேட்டார். 127 
		 
		சுக்கிரீவன் இராவணன் போர் 
		 
		ஏந்திய சிகரம் ஒன்று, அங்கு இந்திரன் குலிசம் என்ன, 
		காந்திய உருமின் விட்டான், கவிக் குலத்து அரசன், அக் கல் 
		நீந்த அரு நெருப்புச் சிந்தி நிமிர்தலும், நிருதர்க்கும் எல்லாம் 
		வேந்தனும், பகழி ஒன்றால், வெறுந் துகள் ஆக்கி, வீழ்த்தான். 128 
		 
		அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து, சிந்தி, 
		திண் நெடுஞ் சிகரம், நீறாய்த் திசை திசை சிந்தலோடும், 
		கண் நெடுங் கடுந் தீக் கால, கவிக் குலத்து அரசன், கையால், 
		மண்மகள் வயிறு கீற, மரம் ஒன்று வாங்கிக் கொண்டான். 129 
		 
		கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால், காட்டத் தக்க 
		கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என, கண்டம் கண்டான்; 
		விண்ட வாள் அரக்கன் மீது, விசும்பு எரி பறக்க, விட்டான், 
		பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி, பரிதி மைந்தன். 130 
		 
		அக் கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி, 
		திக்கு இரிதரப் போர் வென்ற சிலையினை வளைய வாங்கி, 
		சுக்கிரீவன் தன் மார்பில் புங்கமும் தோன்றாவண்ணம் 
		உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க, எய்தான். 131  
		 
		 
   |