Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம் > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் > 28 இராவணன் சோகப் படலம் >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 5. இலங்கை கேள்விப் படலம்
 


இராமன் வீடணனுக்கு உறையுள் அளித்தலும், சூரியன் மறைதலும்

வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழித்
தந்தனன் விடுத்த பின், இரவி, 'தன் கதிர்
சிந்தின வெய்ய' என்று எண்ணி, தீர்ந்தனன். 1

அந்தி மாலையின் தோற்றம்

சந்தி வந்தனைத் தொழில் முடித்து, தன்னுடைப்
புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை
சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. 2

மாத் தடந் திசைதொறும் வளைத்த வல் இருள்
கோத்தது, கருங் கடல் கொள்ளை கொண்டென்
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர்
பூத்தென மீன்களால் பொலிந்தது, அண்டமே. 3

சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய
வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வேட்கையால்,
எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால்,
மல்லிகைக் கானமும், வானம் ஒத்ததே. 4

ஒன்றும் உட் கறுப்பினோடு, ஒளியின் வாள் உரீஇ,
'தன் திருமுகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன்'
என்றது போல, வந்து எழுந்தது - இந்துவே. 5

'கண்ணினை அப்புறம் கரந்து போகினும்,
பெண் நிறம் உண்டுஎனின், பிடிப்பல் ஈண்டு' எனா,
உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான். 6

புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல்,
'உடைக் கருந் தனி நிறம் ஒளித்துக் கொண்டவன்,
அடைக்க வந்தான் எனை, அரியின் தானையால்;
கிடைக்க வந்தான்' எனக் கிளர்ந்தது ஒத்ததே. 7

மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்
தோல் உகுத்தாலென, அரவத் தொல் கடல்,
வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்,
பால் உகுத்தாலென, நிலவு பாய்ந்ததால். 8

மன்றல்வாய் மல்லிகை எயிற்றின், வண்டு இனம்
கன்றிய நிறத்தது, நறவின் கண்ணது,
குன்றின்வாய் முழையின் நின்று உலாய கொட்பது,
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால். 9

கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய
மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். 10

இராமன் சீதையை நினைந்து வருந்துதல்

உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்குமால்;
இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்;
கடலினை நோக்கும்; அக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால். 11

பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்,
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்,
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ? 12

வீடணனோடு மேல் விளைவு பற்றி எண்ணமாறு சுக்கிரீவன் இராமனிடம் கூறுதல்

ஆயது ஓர் - அளவையின், அருக்கன் மைந்தன், 'நீ
தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை;
மேயவன் தன்னொடும் எண்ணி, மேல் இனித்
தூயது நினைக்கிலை' என்னச் சொல்லினான். 13

இராமன் கட்டளைப்படி, வீடணனை அழைத்துவருதல்

அவ்வழி, உணர்வு வந்து, அயர்வு நீங்கினான்,
'செவ்வழி அறிஞனைக் கொணர்மின், சென்று' என,
'இவ்வழி வருதி' என்று இயம்ப, எய்தினான் -
வௌ; வழி விலங்கி, நல் நெறியை மேவினான். 14

இராமன் இலங்கையின் அரண் முதலியன பற்றி வீடணனை வினவுதல்

'ஆர்கலி இலங்கையின் அரணும், அவ் வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்,
தார் கெழு தானையின் அளவும், தன்மையும்,
நீர் கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்' என்றான். 15

வீடணன் விடை பகர்தல்

எழுதலும், 'இருத்தி' என்று இராமன் ஏயினான்,
முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்புற,
தொழுது உயர் கையினான், தெரியச் சொல்லினான்: 16

இலங்கையின் அரண்

'நிலையுடை வட வரை குலைய நேர்ந்து, அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும் முடி வாங்கி, ஓங்கு நீர்
அலை கடல் இட்டனன், அனுமன் தாதையே. 17

'ஏழு நூறு யோசனை அகலம்; இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை; ஆழி மால் வரை,
வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால். 18

'மருங்குடை வினையமும், பொறியின் மாட்சியும்,
இருங் கடி அரணமும், பிறவும், எண்ணினால்,
சுருங்கிடும்; என், பல சொல்லி? சுற்றிய
கருங் கடல் அகழது; நீரும் காண்டிரால். 19

வாயில் முதலியவற்றைக் காக்கும் காவலர்

'வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்,
இடை இலர், எண் - இரு கோடி என்பரால்;
கடையுக முடிவினில் காலன் என்பது என்?
விடை வரு பாகனைப் பொருவும் மேன்மையோர். 20

'மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு
ஏற்றமும் உள, அவர்க்கு இரண்டு கோடி மேல்;
கூற்றையும் கண் - பொறி குறுகக் காண்பரேல்,
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார். 21

'தென் திசை வாயிலின் வைகும் தீயவர்
என்றவர் எண் - இரு கோடி என்பரால்;
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்?
வன் திறழ் யமனையும் அரசு மாற்றுவார். 22

'கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர்
ஈட்டமும் எண் - இரு கோடி என்பரால்;
கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும்
தாள் துணை பிடித்து, அகன் தரையின் எற்றுவார். 23

'விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
எண் - இரு கோடியின் இரட்டி என்பரால்;
மண்ணிடை வானவர் வருவர் என்று, அவர்
கண் இலர், கரை இலர், கரந்து போயினார். 24

'பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும்,
உறங்கலர், உண் பதம் உலவை ஆதலால்,
கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல்,
அறைந்துளது ஐ-இரு நூறு கோடியால். 25

'இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ?
மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார். 26

'சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார்,
அறப் பெரும் பகைஞர்கள், அளவு இல் ஆற்றலர்,
உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர்,
இறப்பு இலர், எண் - இரு நூறு கோடியே. 27

கோயில் வாயிலின் காவலர்

'"விடம் அல, விழி" எனும், வெகுளிக் கண்ணினர்,
"கடன் அல, இமைத்தலும்" என்னும் காவலர்,
வட வரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர், எண் - எண் கோடியால். 28

'அன்றியும், அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்,
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்;
குன்றினும் வலியவர்; கோடி கோடியால். 29

படைகளின் பெருக்கம்

'தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக்
கார்வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம்
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே. 30

'பேயனேன், என், பல பிதற்றி? பேர்த்து அவன்
மா இரு ஞாலத்து வைத்த மாப் படை
தேயினும், நாள் எலாம் தேய்க்க வேண்டுவது,
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது - ஆழியாய்! 31

இராவணனது துணைவர்கள்

'இலங்கையின் அரண் இது; படையின் எண் இது;
வலங் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர், அந்தம் இல்
வலங்களும் வரங்களும், தவத்தின் வாய்த்தவர். 32

'உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்,
சுகம் பல் போர் அலால் வேறு இலன், பொரு படைத் தொகையான்,
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான்,
அகம்பன் என்று உளன்; அலை கடல் பருகவும் அமைவான். 33

'பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும்,
உருப்ப விற் படை, ஒன்பது கோடியும் உடையான்,
செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து செறுத்த
நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு நெடியோன். 34

'தும்பி ஈட்டமும், இரதமும், புரவியும், தொடர்ந்த
அம் பொன் மாப் படை ஐ-இரு கோடி கொண்டு அமைந்தான்,
செம் பொன் நாட்டு உள சித்திரைச் சிறையிடை வைத்தான்,
கும்பன் என்று உளன்; ஊழி வெங் கதிரினும் கொடியான். 35

'பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது
ஆய தேர்ப் படை ஐ - இரு கோடி கொண்டு அமைந்தான்,
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா
மாயையான் உளன், மகோதரன் என்று ஒரு மறவோன். 36

'குன்றில் வாழ்பவர் கோடி நால் - ஐந்தினுக்கு இறைவன்,
"இன்று உளார் பினை நாளை இலார்" என எயிற்றால்
தின்றுளான், நெடும் பல் முறை தேவரைச் செருவின்
வென்றுளான், உளன், வேள்வியின் பகைஞன், ஓர் வெய்யோன். 37

'"மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால்,
உண்ணும் நாள் ஒரு நாளின்" என்று ஒளிர் படைத் தானை
எண்ணின் நால் - இரு கோடியன், எரி அஞ்ச விழிக்கும்
கண்ணினான், உளன், சூரியன் பகை என்று ஒர் கழலான். 38

'தேவரும், தக்க முனிவரும், திசைமுகன் முதலா
மூவரும், பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான்,
தா வரும் பக்கம் எண் - இரு கோடியின் தலைவன்,
மாபெரும்பக்கன் என்று உளன், குன்றினும் வலியான். 39

'உச் சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன்,
நச் சிரப் படை நால் - இரு கோடிக்கு நாதன்,
முச் -சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரு மொய்ம்பன்,
வச்சிரத்துஎயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான். 40

'அசஞ்சலப் படை ஐ - இரு கோடியன், அமரின்
வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான்,
இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரொடும், முன் நாள்
பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு பித்தன். 41

'சில்லி மாப் பெருந் தேரொடும், கரி, பரி, சிறந்த
வில்லின் மாப் படை ஏழ் - இரு கோடிக்கு வேந்தன்,
கல்லி மாப் படி கலக்குவான், கனல் எனக் காந்திச்
சொல்லும் மாற்றத்தன், துன்முகன் என்று அறம் துறந்தோன். 42

'இலங்கை நாட்டினன், எறி கடல் தீவிடை உறையும்
அலங்கல் வேற் படை ஐ - இரு கோடிக்கும் அரசன்,
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்,
விலங்கு நாட்டத்தன் என்று உளன், வெயில் உக விழிப்பான். 43

'நாமம் நாட்டிய சவம் எனின், நாள் தொறும் ஒருவர்
ஈம நாட்டிடை இடாமல், தன் எயிற்றிடை இடுவான்,
தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன்,
தூம நாட்டத்தன் என்று உளன், தேவரைத் துரந்தான். 44

'போரின் மத்தனும், பொரு வயமத்தனும், புலவர்
நீரின் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் படையார்;
ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அமரில்
பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய்! 45

சேனை காவலன் பிரகத்தன்

'இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் -
அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு அமைந்தார்?
சொன்ன சொன்னவர் படைத் துணை இரட்டியின் தொகையான்,
பின்னை எண்ணுவான், பிரகத்தன் என்று ஒரு பித்தன்; 46

'சேனை காவலன்; இந்திரன் சிந்துரச் சென்னி
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல,
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய,
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான். 47

கும்பகருணனின் வலிமை

'தம்பி, முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும்
கும்ப மாக் கிரிக் கோடு இரு கைகளால் கழற்றி,
செம் பொன் மால் வரை மதம் பட்ட தாம் எனத் திரிந்தான்,
கும்பகன்னன் என்று உளன், பண்டு தேவரைக் குமைந்தான். 48

இராவணனது புதல்வர்களின் ஆற்றல்

'கோள் இரண்டையும் கொடுஞ் சிறை வைத்த அக் குமரன்
மூளும் வெஞ் சினத்து இந்திரசித்து என மொழிவான்;
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை,
தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு. 49

'தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான்,
முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் சிலையான்,
அன்னவன் தனக்கு இளையவன், அப் பெயர் ஒழிந்தான்
பின் ஒர் இந்திரன் இலாமையின்; பேர் அதிகாயன். 50

'தேவராந்தகன், நராந்தகன், திரிசிரா, என்னும்
மூவர் ஆம், - "தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின்,
போவாராம்; தகை அழிவராம்" எனத் தனிப் பொருவார்
ஆவாரம் - தகை இராவணற்கு அரும் பெறல் புதல்வர். 51

இராவணனது திறம் எடுத்துரைத்தல்

'இனைய நன்மையர் வலி இஃது; இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி அளவு எலாம் அறைவென்;
தனையன், நான்முகன் தகை மகன் சிறுவற்கு; தவத்தால்,
முனைவர் கோன் வரம், முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான். 52

'என் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும்
வெள்ளி அம் பெருங் கிரியினை வேரொடும் வாங்கி,
அள்ளி விண் தொட எடுத்தனன், உலகு எலாம் அனுங்க. 53

'ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை
ஊன்று கோடு இற, திரள் புயத்து அழுத்திய ஒண்மை
தோன்றும் என்னவே, துணுக்கமுற்று இரிவர், அத் தொகுதி
மூன்று கோடியின்மேல் ஒரு முப்பத்து மூவர். 54

'குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய,
அலங்கல் வாள் கொடு காலகேயரைக் கொன்ற அதன்பின்,
"இலங்கை வேந்தன்" என்று உரைத்தலும், இடி உண்ட அரவின்
கலங்குமால் இனம், தானவர் தேவியர் கருப்பம். 55

'குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன்,
திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், இழந்து,-
புரண்டு, மான் திரள் புலி கண்டது ஆம் என, போனான்-
இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து. 56

'"புண்ணும் செய்தது முதுகு" என, புறங்கொடுத்து ஓடி,
"உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் தன் உயிர்மேல்
நண்ணும் செய்கையது" எனக் கொடு, நாள்தொறும், தன் நாள்
எண்ணும் செய்கையன், அந்தகன், தன் பதம் இழந்தான். 57

'இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க் என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, பண்டு அமரில்,
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு, பயத்தால்
வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து மறைந்து. 58

'என்று, உலப்புறச் சொல்லுகேன், இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் கொற்றம்?
இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சில நாள்
சென்று உலப்பினும், நினக்கு அன்றி, பிறர்க்கு என்றும் தீரான். 59

அனுமன் இலங்கையில் புரிந்த வீரச் செயல்கள்

'ஈடு பட்டவர் எண்ணிலர், தோரணத்து, எழுவால்;
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால்;
சூடு பட்டது, தொல் நகர்; அடு புலி துர்ந்த
ஆடு பட்டது பட்டனர், அனுமனால் அரக்கர். 60

'எம் குலத்தவர், எண்பதினாயிரர், இறைவர்,
கிங்கரப் பெயர்க் கிரி அன்ன தோற்றத்தர், கிளர்ந்தார்;
வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி,
சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார். 61

'வெம்பு மாக் கடற் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான்,
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி,
உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று உற்றான்,
சம்புமாலியும், வில்லினால் சுருக்குண்டு - தலைவ! 62

'சேனைக் காவலர் ஓர் ஐவர் உளர், பண்டு தேவர்
வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர்,
தானைக் கார்க் கருங் கடலொடும், தமரொடும், தாமும்,
யானைக் கால் பட்ட செல் என, ஒல்லையின் அவிந்தார். 63

'காய்த்த அக் கணத்து, அரக்கர்தம் உடல் உகு கறைத் தோல்,
நீத்த எக்கரின், நிறைந்துள கருங் கடல்; நெருப்பின்
வாய்த்த அக்கனை, வரி சிலை மலையொடும் வாங்கி,
தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் தெருவில். 64

'சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச்
சின்னம் ஆனவர் கணக்கு இலர்; யாவரே ஆதரிப்பார்?
இன்னம் ஆர் உளர், வீரர்? மற்று, இவன் சுட எரிந்த
அன்ன மா நகர் அவிந்தது, அக் குருதியால் அன்று. 65

இலங்கை அனலால் அழிந்ததும், அதை அயன் மீண்டும் படைத்ததும்

'விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ-
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த
கலங்களோடும், அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள்
இலங்கை வேந்தனும், ஏழு நாள் விசும்பிடை இருந்தான்! 66

'நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன்;
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்;
இது மற்று அவ்வழி எய்தியது; இராவணன் விரைவினின் ஏவ,
பதுமத்து அண்ணலே பண்டுபோல் அந் நகர் படைத்தான். 67

வீடணன் தான் போந்த காரணத்தை உரைத்தல்

'காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின்
வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று; அவ் இலங்கை
தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப்
போந்தவா கண்டும், நான் இங்குப் புகுந்தது - புகழோய்!' 68

இராமன் அனுமனைப் புகழ்ந்து உரைத்தல்

கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான்,
வாள் கொள் நோக்கியை, பாக்கியம் பழுத்தன்ன மயிலை,
நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கி, தன் தூதனைப் பார்த்து, இவை சொன்னான்: 69

'கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்;
ஊட்டினாய், எரி ஊர் முற்றும்; இனி, அங்கு ஒன்று உண்டோ?
கேட்ட ஆற்றினால், கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும்
மீட்டிலாதது, என் வில் தொழில் காட்டவோ? - வீர! 70

'நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்;
பின் செய்தோம் சில் அவை இனிப் பீடு இன்று பெறுமோ? -
பொன் செய் தோளினாய்! - போர்ப் பெரும் படையொடும் புக்கோம்;
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்? 71

'என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும்
உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்!
முன்னது ஆக்கிய மூஉலகு ஆக்கிய முதலோன்
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.' 72

என்று கூறலும், எழுந்து, இரு நிலன் உற இறைஞ்சி,
ஒன்றும் பேசலன் நாணினன், வணங்கிய உரவோன்;
நின்ற வானரத் தலைவரும் அரசும், அந் நெடியோன்
வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார். 73

மிகைப் பாடல்கள்

திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும்,
அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே,
'அரு வரை அனைய தோள் அறிஞ! நீ புகல்
பொருள் உளது எமக்கு; அது புகலக் கேட்டியால். 14-1

மருக் கிளர் தாமரை வாச நாள்மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்,
திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை,
'இருக்க, ஈண்டு எழுந்து' என இருந்த காலையில். 14-2

'வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு,
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனைத்
தலம் கொடு சமைத்து, நல் நகரும் தந்து, இதற்கு
"இலங்கை" என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள். 18-1

'ஆய இந் நகரிடை, அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினைத் தெரிக்கின், எண் இல் நாள்
போயிடத் துணிந்து, அவை புந்தி ஓரினும்
ஓயுமோ? அறிந்தவை உரைப்பென், ஆழியாய்! 19-1

'பேயர்கள் என்ன யான் பிதற்ற, பேர்கிலா
மா இரும் புற மதில் வகுத்த மாப் படை
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள்
ஆயிர வெள்ளமே அறிந்தது, ஆழியாய்! 28-1

'ஈங்கு இவை அன்றியும், ஏழு தீவினும்,
ஓங்கு பாதலத்தினும், உயர்ந்த வானத்தும்,
தாங்கிய சக்கர வாளச் சார்பினும்,
ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால். 30-1

'ஆயவர் அளவிலர், அறத்தை நுங்கிய
தீயவர், தேவரைச் செறுத்து, தேவர் ஊர்
காய் எரி படுத்திய கடுமையார்களில்,
நாயக! அறிந்தமை நவிலக் கேட்டியால். 32-1

'இன்னும் மைந்தர்கள் இயம்பின், மூவாயிர கோடி
என்ன உண்டு; அவர் இரதமும், கரிகளும், பரியும்,
துன்னும் ஆள் வகைத் தொகுதியும், செறிந்திட, மேல்நாள்
பன்னகாதிபன் உலகினைப் பரிபவப் படுத்தோர். 51-1

கோ...ன் குடைப்பரா கடு களிற்றை மீக்கொள்ளா
வாடலிந்திர .......ளடைவர வமரிற்
கோடி வெங்கரி கோள் அரி கண்டெனக் குலையா
ஓடினான் தரு முதலியர் பிற விழுந்துருகி. 56-1

'பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும்
திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின் இவர்ந்தே,
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து, அரசுரிமை
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில், கொடியோன். 58-1

'சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி வாழ்தற்கு
உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன், சிவன் கொடுத்திடப் பெரு வரம்; பெரியோய்!
இற்று அவன் செயல்' என்று கொண்டு இனையன உரைப்பான்: 58-2

'ஈது நிற்க, மற்று எந்தை! நீ ஏவிய தூதன்
மோது வாரிதி கடந்து, ஒரு கணத்தினில் முடுகி,
ஆதி நாயகிதன்னைக் கண்டு, அணி நகர் அரணும்,
காது வெஞ் சினத்து அரக்கர் தம் வலிமையும், கடந்தான். 59-1

மழுவும் ஈட்டியும் தோட்டியும் முசலமும் மலையும்
தழுவு மாப் படை முடிவு இலாது அதனொடும் தாமும்,
எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக்
குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார். 63-1

'இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது எவனோ?
அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான் அணிந்த
கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான். 65-1



 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home