Kamba Ramayanam  
		கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
		பால காண்டம் - 3. நகரப் படலம்
		
		அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும்
		
செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
		வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
		எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
		அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது-அயோத்தி மா நகரம். 1
		
நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ!
		இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய
		மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ! வானோர்
		உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்? 2
		
உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
		கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர்அது காண்பான்,
		அமைப்பு அருங் காதல் அது பிடித்து உந்த, அந்தரம், சந்திராதித்தர்
		இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ! 3
		
அயில் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும், அளகையும் என்று இவை, அயனார்
		பயிலுறவு உற்றபடி, பெரும்பான்மை இப் பெருந் திரு நகர் படைப்பான்;
		மயன் முதல் தெய்வத் தச்சரும் தம்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்;-
		புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இந் நகர் புகலுமாறு எவனோ? 4
		
'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்' என்னும் ஈது அரு மறைப் பொருளே;
		மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?
		எண் அருங் குணத்தின் அவன், இனிது இருந்து, இவ் ஏழ் உலகு ஆள் இடம் என்றால்,
		ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல்? 5
		
தங்கு பேர் அருளும் தருமமும், துணையாத் தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
		பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
		செங் கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம் திருவின் வீற்றிருந்தமை 
		தெளிந்தால்,
		அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ? 6
		
நகர மதிலின் மாட்சி
		
நால் வகைச் சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன, மதி தோய்
		மால் வரைக் குலத்து இனி யாவையும் இல்லை; ஆதலால், உவமை மற்று இல்லை;
		நூல் வரைத் தொடர்ந்து, பயத்தொடு பழகி, நுணங்கிய நுவல அரும் உணர்வே
		போல் வகைத்து; அல்லால், 'உயர்வினோடு உயர்ந்தது' என்னலாம்-பொன் மதில் நிலையே. 
		7
		
மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால், வேதமும் ஒக்கும்; விண் புகலால்,
		தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும், திண் பொறி அடக்கிய செயலால்;
		காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால், காளியை ஒக்கும்;
		யாவையும் ஒக்கும், பெருமையால்; எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும். 8
		
பஞ்சி, வான் மதியை ஊட்டியது அனைய படர் உகிர், பங்கயச் செங் கால்,
		வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை, வாங்குவேய் வைத்தமென் பணைத் தோள்,
		அம் சொலார் பயிலும் அயோத்தி மா நகரின் அழகுடைத்து அன்று என அறிவான்,
		இஞ்சி வான் ஓங்கி, இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்துளதே! 9
		
கோலிடை உலகம் அளத்தலின், பகைஞர் முடித் தலை கோடலின், மனுவின்
		நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும் நோக்க அருங் காவலின், வலியின்,
		வேலொடு வாள், வில் பயிற்றலின், வெய்ய சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தின்,
		சால்புடை உயர்வின், சக்கரம் நடத்தும் தன்மையின்,-தலைவர் ஒத்துளதே! 10
		
சினத்து அயில், கொலை வாள், சிலை, மழு, தண்டு, சக்கரம், தோமரம், உலக்கை,
		கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல், என்று இவை கணிப்பு இல் கொதுகின்
		இனத்தையும், உவணத்து இறையையும், இயங்கும் காலையும், இதம் அல நினைவார்
		மனத்தையும், எறியும் பொறி உள என்றால், மற்று இனி உணர்த்துவது எவனோ? 11
		
'பூணினும் புகழே அமையும்' என்று, இனைய பொற்பில் நின்று, உயிர் நனி புரக்கும்,
		யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவிதன் குலமுதல் நிருபர்-
		சேணையும் கடந்து, திசையையும் கடந்து,- திகிரியும், செந் தனிக் கோலும்,
		ஆணையும் காக்கும்; ஆயினும், நகருக்கு அணி என இயற்றியது அன்றே. 12
		
ஆழ்ந்த அகழியின் மாண்பு
		அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி,
		பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய், புன் கவி எனத் தெளிவு இன்றி,
		கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி,
		நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;-நவிலலுற்றது நாம். 13
		
ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா,
		நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா,
		மேகம், மொண்டு கொண்டு எழுந்து, விண் தொடர்ந்த குன்றம் என்று,
		ஆகம் நொந்து நின்று தாரை அம் மதிற்கண் வீசுமே. 14
		
அந்த மா மதில் புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
		கந்தம் நாறு பங்கயத்த கானம், மான மாதரார்
		முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம்
		வந்து போர் மலைக்க, மா மதில் வளைந்தது ஒக்குமே. 15
		
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
		போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர் மா,-
		தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப ஒணா மதத்தினால்,
		ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே. 16
		
ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
		பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
		சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா,-
		போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே. 17
		
ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
		கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
		தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
		வாளும், வேலும், மீனம் ஆக, -மன்னர் சேனை மானுமே. 18
		
விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
		பளிங்கு பொன்-தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
		'தளிந்த கல்-தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
		தெளிந்து உணர்த்துகிற்றும்' என்றல் தேவராலும் ஆவதே? 19
		
அகழியைச் சூழ்ந்த சோலை
		அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
		துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு, வீங்கு, இருட் பிழம்பு
		என்னலாம், இறும்பு சூழ்கிடந்த சோலை; எண்ணில், அப்
		பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே. 20
		
நால் வாயில் தோற்றமும், ஓவியப் பொலிவும்
		எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற் முன்னம், மால்,
		ஒல்லை, உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த் வான்
		மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழக்கினால்
		நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன-வாயிலே. 21
		
தா இல் பொன்-தலத்தின், நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
		பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுக்குமால் -
		ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ, வந்து அணைந்திடாது,
		ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே. 22
		
எழு நிலை மாடம்
		கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு அரிந்து கட்டி, மீது
		எல்லுடைப் பசும் பொன் வைத்து, இலங்கு பல் மணிக் குலம்
		வில்லிடைக் குயிற்றி, வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
		புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த கால் பொருத்தியே, 23
		
மரகதத்து இலங்கு போதிகைத் தலத்து வச்சிரம்
		புரை தபுத்து அடுக்கி, மீது பொன் குயிற்றி, மின் குலாம்
		நிரை மணிக் குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளிமேல்
		விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீதுஅரோ, 24
		
ஏழ் பொழிற்கும் ஏழ் நிலத்தலம் சமைத்ததென்ன, நூல்
		ஊழுறக் குறித்து அமைத்த உம்பர் செம் பொன் வேய்ந்து, மீச்
		சூழ் சுடர்ச் சிரத்து நல் மணித் தசும்பு தோன்றலால்,
		வாழ் நிலக் குலக் கொழுந்தை மௌலி சூட்டியன்னவே. 25
		
மாளிகைகளின் அமைப்பும் எழிலும்
		'திங்களும் கரிது' என வெண்மை தீற்றிய
		சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
		வெங் கடுங் கால் பொர, மேக்கு நோக்கிய,
		பொங்கு இரும் பாற்கடல்-தரங்கம் போலுமே. 26
		
புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை,
		தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன,
		எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
		வெள்ளி அம் கிரிமிசை விரிந்த போலுமே. 27
		
வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
		செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
		உயிர் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
		அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே. 28
		
சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
		பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை,
		செந் தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
		இந்திர நீலத்த, எண் இல் கோடியே. 29
		
பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன,
		சேடரைத் தழீஇயின, செய்ய வாயின,
		நாடகத் தொழிலின, நடுவு துய்யன,
		ஆடகத் தோற்றத்த, அளவு இலாதன. 30
		
புக்கவர் கண் இமை பொருந்துறாது, ஒளி
		தொக்குடன் தயங்கி, விண்ணவரின் தோன்றலால்,
		திக்குற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
		ஒக்க நின்று இமைப்பன, உம்பர் நாட்டினும். 31
		
அணி இழை மகளிரும், அலங்கல் வீரரும்,
		தணிவன அறநெறி; தணிவு இலாதன
		மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
		பணி பிறிது இயன்றில் பகலை வென்றன. 32
		
வானுற நிவந்தன் வரம்பு இல் செல்வத்த்
		தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய்
		ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
		கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன. 33
		
அருவியின் தாழ்ந்து, முத்து அலங்கு தாமத்த்
		விரி முகிற்குலம் எனக் கொடி விராயின்
		பரு மணிக் குவையன் பசும் பொன் கோடிய்
		பொரு மயில் கணத்தன்-மலையும் போன்றன. 34
		
கொடிகள் பறக்கும் அழகு
		அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின,
		முகிலொடு வேற்றுமை தெரிகலா, முழுத்
		துகிலொடு நெடுங் கொடிச் சூலம் மின்னுவ்-
		பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே. 35
		
துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
		அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
		கொடியிடைத் தரள வெண் கோவை சூழ்வன்-
		கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே. 36
		
காண் வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்,
		தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன்
		வாள் நனி மழுங்கிட மடங்கி, வைகலும்
		சேண் மதி தேய்வது, அக் கொடிகள் தேய்க்கவே. 37
		
மாளிகைகளின் ஒளிச் சிறப்பும் மணமும்
		பொன் திணி மண்டபம் அல்ல, பூத் தொடர்
		மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
		குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
		முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே. 38
		
மின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,
		துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
		கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,
		பொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே! 39
		
எழும் இடத்து அகன்று, இடை ஒன்றி, எல் படு
		பொழுதிடைப் போதலின், புரிசைப் பொன் நகர்,
		அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை
		நிழல் எனப் பொலியுமால்-நேமி வான் சுடர். 40
		
ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
		வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
		தோய்ந்த மா கடல் நறுந் தூபம் நாறுமேல்,
		பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ? 41
		
ஆடலும் பாடலும்
		
குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
		மழலை,-அம் குழல் இசை; மகர யாழ் இசை,
		எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை,
		பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை. 42
		
கண்ணிடைக் கனல் சொரி களிறு, கால் கொடு
		மண்ணிடை வெட்டுவ் வாட் கை மைந்தர்தம்
		பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன்
		சுண்ணம் அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன. 43
		
பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
		சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
		அந்தம் இல் சில தியர்; ஆற்ற குப்பைகள்,
		சந்திரன் ஒளி கெட, தழைப்ப, தண் நிலா. 44
		
அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
		கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
		உருங்குவ் மற்று, அவர் உயிர்கள் அன்னவர்
		மருங்குல்போல் தேய்வன் வளர்வது, ஆசையே. 45
		
பொழிவன சோலைகள் புதிய தேன் சில்
		விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
		நுழைவன் அன்னவை நுழைய, நோவொடு
		குழைவன, பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே. 46
		
இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை
		நிறங் கிளர் பாடலான் நிமிர்வ் அவ்வழி
		கறங்குவ வள் விசிக் கருவி; கண் முகிழ்த்து
		உறங்குவ, மகளிரோடு ஓதும் கிள்ளையே. 47
		
மங்கையரின் அழகு மேனி
		குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
		பதயுகத் தொழில்கொடு, பழிப்பு இலாதன
		ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்,
		உதைபடச் சிவப்பன, உரவுத் தோள்களே. 48
		
பொழுது உணர்வு அரிய அப் பொரு இல் மா நகர்த்
		தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு எனப்
		பழுது அறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்,
		எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே? 49
		
தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
		இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன,
		திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
		மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே. 50
		
மதங்கியரின் ஆடல் பாடல்
		பதங்களில், தண்ணுமை, பாணி, பண் உற
		விதங்களின், விதி முறை சதி மிதிப்பவர்
		மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
		சதங்கைகள்; அல்லன புரவித் தார்களே. 51
		
மாந்தரின் மகிழ்ச்சி
		
முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந் துயர்
		விளைப்பன் அன்றியும், மெலிந்து நாள்தொறும்
		இளைப்பன நுண் இடை; இளைப்ப, மென் முலை
		திளைப்பன, முத்தொடு செம் பொன் ஆரமே. 53
		
தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
		முழை விழை, கிரி நிகர் களிற்றின் மும் மத
		மழை விழும்; விழும்தொறும், மண்ணும் கீழ் உறக்
		குழை விழும்; அதில் விழும், கொடித் திண் தேர்களே. 54
		
ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன,
		சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
		ஓடுவார் இழுக்குவது, ஊடல் ஊடு உறக்
		கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே. 55
		
இளைப்ப அருங் குரங்களால், இவுளி, பாரினைக்
		கிளைப்பன் அவ் வழி, கிளர்ந்த தூளியின்
		ஒளிப்பன மணி; அவை ஒளிர, மீது தேன்
		துளிப்பன, குமரர்தம் தோளின் மாலையே. 56
		
விலக்க அருங் கரி மதம் வேங்கை நாறுவ்
		குலக் கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ்
		கலக் கடை கணிப்ப அருங் கதிர்கள் நாறுவ்
		மலர்க் கடி நாறுவ, மகளிர் கூந்தலே. 57
		
கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
		தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
		யாவையும் வழங்கு இடத்து இகலி, இந் நகர்
		ஆவணம் கண்டபின், அளகை தோற்றதே! 58
		
அதிர் கழல் ஒலிப்பன் அயில் இமைப்பன்
		கதிர் மணி அணி வெயில் கால்வ் மான்மதம்
		முதிர்வு உறக் கமழ்வன் முத்தம் மின்னுவ்
		மதுகரம் இசைப்பன்-மைந்தர் ஈட்டமே. 59
		
வளை ஒலி, வயிர் ஒலி, மகர வீணையின்
		கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,
		துளை ஒலி, பல் இயம் துவைக்கும் சும்மையின்
		விளை ஒலி, -கடல் ஒலி மெலிய, விம்முமே. 60
		
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்,
		அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்,
		உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்,
		பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம். 61
		
இரவியின் சுடர் மணி இமைக்கும், தோரணத்
		தெரிவினின் சிறியன, திசைகள்; சேண் விளங்கு
		அருவியின் பெரியன, ஆனைத் தானங்கள்;
		பரவையின் பெரியன, புரவிப் பந்தியே. 62
		
சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
		மாளிகை மலர்வன, மகளிர் வாள் முகம்;
		வாளிகள் அன்னவை மலர்வ் மற்று அவை,
		ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே. 63
		
மன்னவர் கழலொடு மாறு கொள்வன,
		பொன் அணித் தேர் ஒலி, புரவித் தார் ஒலி;
		இன் நகையவர் சிலம்பு ஏங்க, ஏங்குவ,
		கன்னியர் குடை துறைக் கமல அன்னமே. 64
		
நகர மாந்தரின் பொழுது போக்குகள்
		ஊடவும், கூடவும், உயிரின் இன் இசை
		பாடவும், விறலியர் பாடல் கேட்கவும்,
		ஆடவும், அகன் புனல் ஆடி அம் மலர்
		சூடவும், பொழுது போம்-சிலர்க்கு, அத் தொல் நகர். 65
		
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்,
		எழும் குரத்து இவுளியடு இரதம் ஏறவும்,
		பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
		வழங்கவும், பொழுது போம்-சிலர்க்கு, அம் மா நகர். 66
		
கரியடு கரி எதிர் பொருத்தி, கைப் படை
		வரி சிலை முதலிய வழங்கி, வால் உளைப்
		புரவியில் பொரு இல் செண்டு ஆடி, போர்க் கலை
		தெரிதலின், பொழுது போம்-சிலர்க்கு, அச் சேண் நகர். 67
		
நந்தன வனத்து அலர் கொய்து, நவ்விபோல்
		வந்து, இளையவரொடு வாவி ஆடி, வாய்ச்
		செந் துவர் அழிதரத் தேறல் மாந்தி, சூது
		உந்தலின் பொழுது போம்-சிலர்க்கு, அவ் ஒள் நகர். 68
		
கொடிகளும், தோரண வாயில் முதலியவும்
		நானா விதமா நளி மாதிர வீதி ஓடி,
		மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணு மாபோல்,
		ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப் போய்,
		வான் ஆறு நண்ணி, புனல் வற்றிட நக்கும் மன்னோ. 69
		
வன் தோரணங்கள் புணர் வாயிலும், வானின் உம்பர்
		சென்று ஓங்கி, 'மேல் ஓர் இடம் இல்' எனச் செம் பொன் இஞ்சி-
		குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன-
		ஒன்றோடு இரண்டும், உயர்ந்து ஓங்கின, ஓங்கல் நாண. 70
		
காடும், புனமும், கடல் அன்ன கிடங்கும், மாதர்
		ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும், உம்பர்
		வீடும், விரவும் மணப் பந்தரும், வீணை வண்டும்
		பாடும் பொழிலும், மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ! 71
		
செல்வமும் கல்வியும் சிறந்த அயோத்தி
		
தௌ; வார் மழையும், திரை ஆழியும் உட்க, நாளும்,
		வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
		கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
		கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ. 72
		
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற
		வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;
		எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே,
		இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ. 73
		
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
		ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
		சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
		போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே. 74