Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Ramalinga Atikal - Vallalar >  திருவருட்பா - முதல் திருமுறை (1 - 537) > இரண்டாம் திருமுறை (571 - 1006) > இரண்டாம் திருமுறை (1007 - 1543) > இரண்டாம் திருமுறை (1544 - 1958) > மூன்றாம் திருமுறை (1959 - 2570) > நான்காம் திருமுறை (2571- 3028) >  ஐந்தாம் திருமுறை (3029-3266) >ஆறாம் திருமுறை (3267 -3871) > ஆறாம் திருமுறை (3872 - 4614) > ஆறாம் திருமுறை - (4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818) > திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் > திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை

 

tiruvarutpA of rAmalingka aTikaL
tirumuRai -II - part 3 (verses 1544-1958)

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
இரண்டாம் திருமுறை - மூன்றாம் பகுதி பாடல்கள்
(1544 - 1958)



This etext file has the tiruvarutpA verses in tamil script in unicode format
Author: Ramalinga adigal (aka vaLLaLar)
Etext input: Mr. Sivakumar of Singapore. (www.vallalar.org) . Our sincere thanks go to Mr. Sivakumar for allowing us to present the TSCII format version of tiruvarutpA verses as part of Project Madurai collections.
Proof-reading of TSCII version: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India .
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.


திருமுறைகள் வெளியீடு அட்டவணை

அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இ ரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை


80. திரு உலா வியப்பு

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1544

வெள்ளச் சடையார் விடையார்செவ்

வேலார் நூலார் மேலார்தம்
உள்ளத் துறைவார் நிறைவார்நல்

ஒற்றித் தியாகப் பெருமானர்
வள்ளற் குணத்தார் திருப்பவனி

வந்தார் என்றார் அம்மொழியை
விள்ளற் குள்ளே மனம்என்னை

விட்டங் கவர்முன் சென்றதுவே.

1

1545.

அந்தார் அணியும் செஞ்சடையார்

அடையார் புரமூன் றவைஅனலின்
உந்தா நின்ற வெண்ணகையார்

ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
வந்தார் என்றார் அந்தோநான்

மகிழ்ந்து காண வருமுன்னம்
மந்தா கினிபோல் மனம்என்னை

வஞ்சித் தவர்முன் சென்றதுவே.

2

1546.

பொன்னேர் சடையார் கீள்உடையார்

பூவை தனைஓர் புடைஉடையார்
தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த்

திகழுந் தியாகர் திருப்பவனி
இன்னே வந்தார் என்றார்நான்

எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
முன்னே மனம்என் தனைவிடுத்து

முந்தி அவர்முன் சென்றதுவே.

3

1547.

காண இனியார் என்இரண்டு

கண்கள் அனையார் கடல்விடத்தை
ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல்

ஒற்றித் தியாகப் பெருமானார்
மாண வீதி வருகின்றார்

என்றார் காண வருமுன்நான்
நாண எனைவிட் டென்மனந்தான்

நயந்தங் கவர்முன் சென்றதுவே.

4

1548.

செழுந்தெண் கடற்றெள் அமுதனையார்

தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார்

கோலப் பவனி என்றார்நான்
எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங்

கேகு முன்னர் எனைவிடுத்தே
அழுந்து நெஞ்சம் விழுந்துகூத்

தாடி அவர்முன் சென்றதுவே.

5

1549.

சால மாலும் மேலும்இடந்

தாலும் அறியாத் தழல்உருவார்
சேலும் புனலும் சூழ்ஒற்றித்

திகழுந் தியாகப் பெருமானார்
பாலுந் தேனுங் கலந்ததெனப்

பவனி வந்தார் என்றனர்யான்
மேலுங் கேட்கு முன்னமனம்

விட்டங் கவர்முன் சென்றதுவே.

6

1550.

பின்தாழ் சடையார் தியாகர்எனப்

பேசும் அருமைப் பெருமானார்
மன்றார் நடத்தார் ஒற்றிதனில்

வந்தார் பவனி என்றார்நான்
நன்றாத் துகிலைத் திருத்துமுனம்

நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
மென்தார் வாங்க மனம்என்னை

விட்டங் கவர்முன் சென்றதுவே.

7

1551.

கண்ணார் நுதலார் மணிகண்டர்

கனக வரையாங் கனசிலையார்
பெண்ணார் பாகர் தியாகர்எனப்

பேசும் அருமைப் பெருமானார்
தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில்

சார்ந்தார் பவனி என்றனர்நான்
நண்ணா முன்னம் என்மனந்தான்

நாடி அவர்முன் சென்றதுவே.

8

1552.

ஈமப் புறங்காட் டெரியாடும்

எழிலார் தில்லை இனிதமர்வார்
சேமப் புலவர் தொழும்ஒற்றித்

திகழுந் தியாகப் பெருமானார்
வாமப் பாவை யொடும்பவனி

வந்தார் என்றார் அதுகாண்பான்
காமப் பறவை போல்என்மனம்

கடுகி அவர்முன் சென்றதுவே.

9

1553.

சூலப் படையார் பூதங்கள்

சுற்றும் படையார் துதிப்பவர்தம்
சீலப் பதியார் திருஒற்றித்

திகழுந் தியாகப் பெருமானார்
நீலக் களத்தார் திருப்பவனி

நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
சாலப் பசித்தார் போல்மனந்தான்

தாவி அவர்முன் சென்றதுவே.

10

Back


81. சல்லாப வியன்மொழி

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1554.

காது நடந்த கண்மடவாள்

கடிமா மனைக்குக் கால்வருந்தத்
தூது நடந்த பெரியவர்சிற்

சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
வாது நடந்தான் செய்கின்றோர்

மாது நடந்து வாவென்றார்
போது நடந்த தென்றேனெப்

போது நடந்த தென்றாரே.

1

1555.

கச்சை யிடுவார் படவரவைக்

கண்மூன் றுடையார் வாமத்திற்
பச்சை யிடுவா ரொற்றியுள்ளார்

பரிந்தென் மனையிற் பலிக்குற்றார்
இச்சை யிடுவா ருண்டியென்றா

ருண்டே னென்றே னெனக்கின்று
பிச்சை யிடுவா யென்றார்நான்

பிச்சை யடுவே னென்றேனே.

2

1556.

கருதற் கரியார் கரியார்முன்

காணக் கிடையாக் கழலடியார்
மருதத் துறைவார் திருவொற்றி

வாண ரின்றென் மனைக்குற்றார்
தருதற் கென்பா லின்றுவந்தீ

ரென்றே னதுநீ தானென்றார்
வருதற் குரியீர் வாருமென்றேன்

வந்தே னென்று மறைந்தாரே.

3

1557.

கல்லை வளைக்கும் பெருமானார்

கழிசூ ழொற்றிக் கடிநகரார்
எல்லை வளைக்குந் தில்லையுள்ளா

ரென்றன் மனைக்குப் பலிக்குற்றார்
அல்லை வளைக்குங் குழலன்ன

மன்பி னுதவா விடிலோபம்
இல்லை வளைக்கு மென்றார்நா

னில்லை வளைக்கு மென்றேனே.

4

1558.

வெற்றி யிருந்த மழுப்படையார்

விடையார் மேரு வில்லுடையார்
பெற்றி யிருந்த மனத்தர்தமுட்

பிறங்குந் தியாகப் பெருமானார்
சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ்
சொல்லி நகைக்க வருகணைந்தார்
ஒற்றி யிருமென் றுரைத்தேனோ

னொற்றி யிருந்தே னென்றாரே.

5

1559.

விண்டங் கமரர் துயர்தவிர்க்கும்

வேற்கை மகனை விரும்பிநின்றோர்
வண்டங் கிசைக்கும் பொழிலொற்றி

வதிவா ரென்றன் மனையடைந்தார்
தண்டங் கழற்கு நிகரானீர்

தண்டங் கழற்கென் றேன்மொழியாற்
கண்டங் கறுத்தா யென்றார்நீர்

கண்டங் கறுத்தீ ரென்றேனே.

6

1560.

விற்கண் டாத நுதன்மடவாள்

வேட்ட நடன வித்தகனார்
சொற்கண் டாத புகழொற்றித்

தூய ரின்றென் மனைபுகுந்தார்
நிற்கண் டார்கண் மயலடைவா

ரென்றார் நீர்தா நிகழ்த்தியசொற்
கற்கண் டாமென் றுரைத்தேனான்

கற்கண் டாமென் றுரைத்தாரே.

7

1561.

விடையார் கொடிமே லுயர்த்தருளும்

வேத கீதப் பெருமானார்
உடையா ரொற்றி யூரமர்ந்தா

ருவந்தென் மனையி லின்றடைந்தார்
இடையா வைய மென்றார்நா

னிடைதா னைய மென்றேனாற்
கடையா ரளியா ரென்றார்கட்

கடையா ரளியா ரென்றேனே.

8

1562.

நாடொன் றியசீர்த் திருவொற்றி

நகரத் தமர்ந்த நாயகனார்
ஈடொன் றில்லா ரென்மனையுற்

றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட
மாடொன் றெங்கே யென்றேனுன்

மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண்
காடொன் றுடையீ ரென்றேன்செங்

காடொன் றுடையே னென்றாரே.

9

1563.

சொல்லா லியன்ற தொடைபுனைவார்

தூயா ரொற்றித் தொன்னகரார்
அல்லா லியன்ற மனத்தார்பா

லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
வல்லா லியன்ற முலையென்றார்

வல்லார் நீரென் றேனுன்சொற்
கல்லா லியன்ற தென்றார்முன்

கல்லா லியன்ற தென்றேனே.

10

Back


82. இன்பக் கிளவி

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1564.

தில்லை வளத்தார் அம்பலத்தார்

திருவேட் களத்தார் செவ்வணத்தார்
கல்லை வளைத்தார் என்றன்மனக்

கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
எல்லை வளைத்தார் தியாகர்தமை

எழிலார் ஒற்றி எனும்நகரில்
ஒல்லை வளைத்துக் கண்டேன்நான்

ஒன்றும் உரையா திருந்தாரே.

1

1565.

இருந்தார் திருவா ரூரகத்தில்

எண்ணாக் கொடியார் இதயத்தில்
பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார்

புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
விருந்தார் திருந்தார் புரமுன்தீ

விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
தருந்தார் காம மருந்தார்இத்

தரணி இடத்தே தருவாரே.

2

1566.

தருவார் தருவார் செல்வமுதல்

தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
மருவார் தமது மனமருவார்

மருவார் கொன்றை மலர்புனைவார்
திருவார் புயனும் மலரோனும்

தேடும் தியாகப் பெருமானார்
வருவார் வருவார் எனநின்று

வழிபார்த் திருந்தேன் வந்திலரே.

3

1567.

வந்தார் அல்லர் மாதேநீ

வருந்தேல் என்று மார்பிலங்கும்
தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத்

தந்தார் அல்லர் தயை உடையார்
சந்தார் சோலை வளர்ஒற்றித்

தலத்தார் தியாகப் பெருமானார்

பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும்
பரிசே தொன்றும் பார்த்திலமே.

4

1568.

இலமே செறித்தார் தாயர்இனி

என்செய் குவதென் றிருந்தேற்கு
நலமே தருவார் போல்வந்தென்

நலமே கொண்டு நழுவினர்காண்
உலமே அனைய திருத்தோளார்

ஒற்றித் தியாகப் பெருமானார்
வலமே வலம்என்அ வலம்அவலம்

மாதே இனிஎன் வழுத்துவதே.

5

1569.

வழுத்தார் புரத்தை எரித்தார்நல்

வலத்தார் நடன மலரடியார்
செழுத்தார் மார்பர் திருஒற்றித்

திகழுந் தியாகப் பெருமானார்
கழுத்தார் விடத்தார் தமதழகைக்

கண்டு கனிந்து பெருங்காமம்
பழுத்தார் தம்மைக் கலந்திடநற்

பதத்தார் என்றும் பார்த்திலரே.

6

1570.

பாரா திருந்தார் தமதுமுகம்

பார்த்து வருந்தும் பாவைதனைச்
சேரா திருந்தார் திருஒற்றித்

திகழுந் தியாகப் பெருமானார்
வாரா திருந்தார் இன்னும்இவள்

வருத்தங் கேட்டும் மாலைதனைத்
தாரா திருந்தார் சலமகளைத்

தாழ்ந்த சடையில் தரித்தாரே.

7

1571.

சடையில் தரித்தார் ஒருத்திதனைத்

தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப்
புடையில் தரித்தார் மகளேநீ

போனால் எங்கே தரிப்பாரோ
கடையில் தரித்த விடம்அதனைக்

களத்தில் தரித்தார் கரித்தோலை
இடையில் தரித்தார் ஒற்றியூர்

இருந்தார் இருந்தார் என்னுளத்தே.

8

1572.

உளத்தே இருந்தார் திருஒற்றி

யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
களத்தே வதிந்தார் அவர்என்றன்

கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
இளத்தே மொழியாய் ஆதலினால்

இமையேன் இமைத்தல் இயல்பன்றே
வளத்தே மனத்தும் புகுகின்றார்

வருந்தேன் சற்றும் வருந்தேனே.

9

1573.

வருந்தேன் மகளீர் எனைஒவ்வார்

வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
தருந்தேன் அமுதம் உண்டென்றும்

சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
திருந்தேன் மணாளர் எனைப்பிரியார்

என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
மருந்தேன் மையற் பெருநோயை

மறந்தேன் அவரை மறந்திலனே.

10

Back


83. இன்பப் புகழ்ச்சி

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1574.

மாடொன் றுடையார் உணவின்றி

மண்ணுன் டதுகாண் மலரோன்றன்
ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார்

ஊரை மகிழ்வோ டுவந்தாலங்
காடொன் றுடையார் கண்டமட்டுங்

கறுத்தார் பூத கணத்தோடும்
ஈடொன் றுடையார் மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே.

1

1575. .

பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார்

பேயோ டாடிப் பவுரிகொண்டார்
பத்தர் தமக்குப் பணிசெய்வார்

பணியே பணியாப் பரிவுற்றார்
சித்தர் திருவாழ் ஒற்றியினார்

தியாகர் என்றுன் கலைகவர்ந்த
எத்தர் அன்றோ மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே. 2

1576. .

கடுத்தாழ் களத்தார் கரித்தோலார்

கண்ணால் மதனைக் கரிசெய்தார்
உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை

ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத்
தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித்

துதிக்க ஒருகால் அம்பலத்தில்
எடுத்தார் அன்றோ மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே. 3

1577..

உரப்பார் மிசையில் பூச்சூட

ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
கரப்பார் மலர்தூ வியமதனைக்

கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க

வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
இரப்பார் அன்றோ மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே. 4

1578. .

கருதும் அவரை வெளிக்கிழுப்பார்

காணா தெல்லாங் காட்டிநிற்பார்
மருதில் உறைவார் ஒற்றிதனில்

வதிவார் புரத்தை மலைவில்லால்
பொருது முடிப்பார் போல்நகைப்பார்

பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
எருதில் வருவார் மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே. 5

1579. .

ஆக்கம் இல்லார் வறுமையிலார்

அருவம் இல்லார் உருவமிலார்
தூக்கம் இல்லார் சுகம்இல்லார்

துன்பம் இல்லார் தோன்றுமல
வீக்கம் இல்லார் குடும்பமது

விருத்தி யாக வேண்டுமெனும்
ஏக்கம் இல்லார் மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே. 6

1580..

ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார்

உறவொன் றில்லார் பகைஇல்லார்
பேரும் இல்லார் எவ்விடத்தும்

பிறவார் இறவார் பேச்சில்லார்
நேரும் இல்லார் தாய்தந்தை

நேயர் தம்மோ டுடன்பிறந்தோர்
யாரும் இல்லார் மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே. 7

1581. .

தங்கு மருப்பார் கண்மணியைத்

தரிப்பார் என்பின் தார்புனைவார்
துங்கும் அருட்கார் முகில்அனையார்

சொல்லும் நமது சொற்கேட்டே
இங்கும் இருப்பார் அங்கிருப்பார்

எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே
எங்கும் இருப்பார் மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே. 8

1582. .

துத்திப் படத்தார் சடைத்தலையார்

தொலையாப் பலிதேர் தொன்மையினார்
முத்திக் குடையார் மண்எடுப்பார்

மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
புத்திக் குரிய பத்தர்கள்தம்

பொருளை உடலை யாவையுமே
எத்திப் பறிப்பார் மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே. 9

1583.

மாறித் திரிவார் மனம்அடையார்

வணங்கும் அடியார் மனந்தோறும்
வீறித் திரிவார் வெறுவெளியின்

மேவா நிற்பார் விறகுவிலை
கூறித் திரிவார் குதிரையின்மேற்

கொள்வார் பசுவிற் கோல்வளையோ
டேறித் திரிவார் மகளேநீ

ஏதுக் கவரை விழைந்தனையே. 10

Back


84. திரு உலாத் திறம்

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1584.

தேனார் கமலத் தடஞ்சூழும்

திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
வானார் அமரர் முனிவர்தொழ

மண்ணோர் வணங்க வரும்பவனி
தானார் வங்கொண் டகமலரத்

தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
கானார் அலங்கற் பெண்ணேநான்

கண்கள் உறக்கங் கொள்ளேனே.

1

1585.

திருமால் வணங்கும் ஒற்றிநகர்

செழிக்கும் செல்வத் தியாகர்அவர்
கருமால் அகற்றுந் தொண்டர்குழாம்

கண்டு களிக்க வரும்பவனி
மருமாண் புடைய மனமகிழ்ந்து

மலர்க்கை கூப்பிக் கண்டலது
பெருமான் வடுக்கண் பெண்ணேநான்

பெற்றா ளோடும் பேசேனே.

2

1586.

சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர்

சேருஞ் செல்வத் தியாகர்அவர்
ஆல்ஆர் களமேல் விளங்குமுகம்

அழகு ததும்ப வரும்பவனி
நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை

நாடிப் புகுந்து கண்டலது
பால்ஆர் குதலைப் பெண்ணேநான்

பாயிற் படுக்கை பொருந்தேனே.

3

1587.

செல்வந் துறழும் பொழில்ஒற்றித்

தெய்வத் தலங்கொள் தியாகர்அவர்
வில்வந் திகழும் செஞ்சடைமின்

விழுங்கி விளங்க வரும்பவனி
சொல்வந் தோங்கக் கண்டுநின்று

தொழுது துதித்த பின்அலது
அல்வந் தளகப் பெண்ணேநான்

அவிழ்ந்த குழலும் முடியேனே.

4

1588.

சேவார் கொடியார் ஒற்றிநகர்

திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
பூவார் கொன்றைப் புயங்கள்மனம்

புணரப் புணர வரும்பவனி
ஓவாக் களிப்போ டகங்குளிர

உடலங் குளிரக் கண்டலது
பாவார் குதலைப் பெண்ணேநான்

பரிந்து நீரும் பருகேனே.

5

1589.

சிற்றம் பலத்தார் ஒற்றிநகர்

திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
உற்றங் குவந்தோர் வினைகளெலாம்

ஓட நாடி வரும்பவனி
சுற்றுங் கண்கள் களிகூரத்

தொழுது கண்ட பின்அலது
முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான்

முடிக்கோர் மலரும் முடியேனே.

6

1590.

சிந்தைக் கினியார் ஒற்றிநகர்

திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
சந்தத் தடந்தோள் கண்டவர்கள்

தம்மை விழுங்க வரும்பவனி
முந்தப் புகுந்து புளகமுடன்

மூடிக் குளிரக் கண்டலது
கந்தக் குழல்வாய்ப் பெண்ணே நான்

கண்ணீர் ஒழியக் காணேனே.

7

1591.

தென்னஞ் சோலை வளர்ஒற்றி

யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப்

பிறங்கா நிற்க வரும்பவனி
மன்னுங் கரங்கள் தலைகுவித்து

வணங்கி வாழ்த்திக் கண்டலது
துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான்

சோறெள் ளளவும் உண்ணேனே.

8

1592.

சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி

யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
வந்தார் கண்டார் அவர்மனத்தை

வாங்கிப் போக வரும்பவனி
நந்தா மகிழ்வு தலைசிறப்ப

நாடி ஓடிக் கண்டலது
பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான்

பாடல் ஆடல் பயிலேனே.

9

1593.

செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச்

சேருஞ் செல்வத் தியாகர்அவர்
மிக்கற் புதவாண் முகத்தினகை

விளங்க விரும்பி வரும்பவனி
மக்கட் பிறவி எடுத்தபயன்

வசிக்க வணங்கிக் கண்டலது
நக்கற் கியைந்த பெண்ணேநான்

ஞாலத் தெவையும் நயவேனே.

10

Back


85. வியப்பு மொழி

நற்றாய் நயத்தல் - திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1594.

மாதர் மணியே மகளேநீ

வாய்த்த தவந்தான் யாதறியேன்
வேதர் அனந்தர் மால்அனந்தர்

மேவி வணங்கக் காண்பரியார்
நாதர் நடன நாயகனார்

நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
கோதர் அறியாத் தியாகர்தமைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

1

1595.

திருவில் தோன்றும் மகளேநீ

செய்த தவந்தான் யார்அறிவார்
மருவில் தோன்றும் கொன்றையந்தார்

மார்பர் ஒற்றி மாநகரார்
கருவில் தோன்றும் எங்கள்உயிர்

காக்க நினைத்த கருணையினார்
குருவிற் றோன்றும் தியாகர்தமைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

2

1596.

என்னா ருயிர்போல் மகளேநீ

என்ன தவந்தான் இயற்றினையோ
பொன்னார் புயனும் மலரோனும்

போற்றி வணங்கும் பொற்பதத்தார்
தென்னார் ஒற்றித் திருநகரார்

தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
கொன்னார் சூலப் படையவரைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

3

1597.

சேலை நிகர்கண் மகளேநீ

செய்த தவந்தான் செப்பரிதால்
மாலை அயனை வானவரை

வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
வேலை விடத்தை மிடற்றணிந்தார்

வீட்டு நெறியாம் அரசியற்செங்
கோலை அளித்தார் அவர்தம்மைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

4

1598.

தேனேர் குதலை மகளேநீ

செய்த தவந்தான் எத்தவமோ
மானேர் கரத்தார் மழவிடைமேல்

வருவார் மருவார் கொன்றையினார்
பானேர் நீற்றர் பசுபதியார்

பவள வண்ணர் பல்சடைமேல்
கோனேர் பிறையார் அவர்தம்மைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

5

1599.

வில்லார் நுதலாய் மகளேநீ

மேலை நாட்செய் தவம்எதுவோ
கல்லார் உள்ளம் கலவாதார்

காமன் எரியக் கண்விழித்தார்
வில்லார் விசையற் கருள்புரிந்தார்

விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
கொல்லா நெறியார் அவர்தம்மைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

6

1600.

அஞ்சொற் கிளியே மகளேநீ

அரிய தவமே தாற்றினையோ
வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை

மேவார் பூவார் கொன்றையினார்
கஞ்சற் கரியார் திருஒற்றிக்

காவல் உடையார் இன்மொழியால்
கொஞ்சத் தருவார் அவர்தம்மைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

7

1601.

பூவாய் வாட்கண் மகளேநீ

புரிந்த தவந்தான் எத்தவமோ
சேவாய் விடங்கப் பெருமானார்

திருமால் அறியாச் சேவடியார்
காவாய்ந் தோங்கும் திருஒற்றிக்

காவல் உடையார் எவ்வெவர்க்கும்
கோவாய் நின்றார் அவர்தம்மைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

8

1602.

மலைநேர் முலையாய் மகளேநீ

மதிக்கும் தவமே தாற்றினையோ
தலைநேர் அலங்கல் தாழ்சடையார்

சாதி அறியாச் சங்கரனார்
இலைநேர் தலைமுன் றொளிர்படையார்

எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
குலைநேர் சடையார் அவர்தம்மைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

9

1603.

மயிலின் இயல்சேர் மகளேநீ

மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
வெயிலின் இயல்சேர் மேனியினார்

வெண்ணீ றுடையார் வெள்விடையார்
பயிலின் மொழியாள் பாங்குடையார்

பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
குயிலிற் குலவி அவர்தம்மைக்

கூடி உடலம் குளிர்ந்தனையே.

10

Back


86. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1604.

உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும்

ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
வள்ளால் என்று மறைதுதிக்க

வருவார் இன்னும் வந்திலரே
எள்ளா திருந்த பெண்களெலாம்

இகழா நின்றார் இனியமொழித்
தெள்ளார் அமுதே என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

1

1605.

மாலே றுடைத்தாங் கொடிஉடையார்

வளஞ்சேர் ஒற்றி மாநகரார்
பாலே றணிநீற் றழகர்அவர்

பாவி யேனைப் பரிந்திலரே
கோலே றுண்ட மதன்கரும்பைக்

குனித்தான் அம்புங் கோத்தனன்காண்
சேலே றுண்கண் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

2

1606.

பொய்யர் உளத்துப் புகுந்தறியார்

போத னொடுமால் காண்பரிதாம்
ஐயர் திருவாழ் ஒற்றிநகர்

அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
வைய மடவார் நகைக்கின்றார்

மாரன் கணையால் திகைக்கின்றேன்
செய்ய முகத்தாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

3

1607.

நந்திப் பரியார் திருஒற்றி

நாதர் அயன்மால் நாடுகினும்
சந்திப் பரியார் என்அருமைத்

தலைவர் இன்னுஞ் சார்ந்திலரே
அந்திப் பொழுதோ வந்ததினி

அந்தோ மதியம் அனல்சொரியும்
சிந்திப் புடையேன் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

4

1608.

என்ஆ ருயிர்க்கோர் துணையானார்

என்ஆண் டவனார் என்னுடையார்
பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார்

புணர்வான் இன்னும் போந்திலரே
ஒன்னார் எனவே தாயும்எனை

ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
தென்னார் குழலாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

5

1609.

மாணி உயிர்காத் தந்தகனை

மறுத்தார் ஒற்றி மாநகரார்
காணி உடையார் உலகுடையார்

கனிவாய் இன்னுங் கலந்திலரே
பேணி வாழாப் பெண்எனவே

பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
சேணின் றிழிந்தாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

6

1610.

வன்சொற் புகலார் ஓர்உயிரும்

வருந்த நினையார் மனமகிழ
இன்சொற் புகல்வார் ஒற்றியுளார்

என்நா யகனார் வந்திலரே
புன்சொற் செவிகள் புகத்துயரம்

பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
தென்சொற் கிளியே என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

7

1611.

எட்டிக் கனியும் மாங்கனிபோல்

இனிக்க உரைக்கும் இன்சொலினார்
தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ்

தலைவர் இன்னும் சார்ந்திலரே
மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல்

வழியே பழிசெல் வழிஅன்றோ
தெட்டிற் பொலியும் விழியாய்நான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

8

1612.

காலை மலர்ந்த கமலம்போல்

கவின்செய் முகத்தார் கண்நுதலார்
சோலை மலர்ந்த ஒற்றியினார்

சோகந் தீர்க்க வந்திலரே
மாலை மலர்ந்த மையல்நோய்

வசந்தம் அதனால் வளர்ந்ததையோ
சேலை விழியாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

9

1613

உலகம் உடையார் என்னுடைய

உள்ளம் உடையார் ஒற்றியினார்
அலகில் புகழார் என்தலைவர்

அந்தோ இன்னும் அணைந்திலரே
கலகம் உடையார் மாதர்எலாம்

கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
திலக முகத்தாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

10

1614.

மாலும் அறியான் அயன்அறியான்

மறையும் அறியா வானவர்எக்
காலும் அறியார் ஒற்றிநிற்குங்

கள்வர் அவரைக் கண்டிலனே
கோலும் மகளிர் அலர்ஒன்றோ

கோடா கோடி என்பதல்லால்
சேலுண் விழியாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

11

1615.

உந்து மருத்தோ டைம்பூதம்

ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார்
இந்து மிருத்தும் சடைத்தலையார்

என்பால் இன்னும் எய்திலரே
சந்து பொறுத்து வார்அறியேன்

தமிய ளாகத் தளர்கின்றேன்
சிந்துற் பவத்தாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

12

1616.

ஆடல் அழகர் அம்பலத்தார்

ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
ஊடல் அறியார் ஒற்றியினார்

உவகை ஓங்க உற்றிலரே
வாடல் எனவே எனைத்தேற்று

வாரை அறியேன் வாய்ந்தவரைத்
தேடல் அறியேன் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

13

1617.

தொழுது வணங்கும் சுந்தரர்க்குத்

தூது நடந்த சுந்தரனார்
அழுது வணங்கும் அவர்க்குமிக

அருள்ஒற் றியினார் அணைந்திலரே
பொழுது வணங்கும் இருண்மாலைப்

பொழுது முடுகிப் புகுந்ததுகாண்
செழுமை விழியாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.

14

1618.

பாவம் அறுப்பார் பழிஅறுப்பார்

பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
கோவம் அறுப்பார் ஒற்றியில்என்

கொழுநர் இன்னும் கூடிலரே
தூவ மதன்ஐங் கணைமாதர்

தூறு தூவத் துயர்கின்றேன்
தேவ மடவாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

15

1619.

உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர்

ஒற்றி நகரார் பற்றிலரைச்
செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத்

தேவர் இன்னும் சேர்ந்திலரே
வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல்

வேளம் பதனால் மெலிகின்றேன்
செயற்கை மடவாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

16

r> 1620.

ஊனம் அடையார் ஒற்றியினார்

உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
கானம் உடையார் நாடுடையார்

கனிவாய் இன்னும் கலந்திலரே
மானம் உடையார் எம்முறவோர்

வாழா மைக்கே வருந்துகின்றார்
தீனம் அடையாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

17

1621.

மலையை வளைத்தார் மால்விடைமேல்

வந்தார் வந்தென் வளையினொடு
கலையை வளைத்தார் ஒற்றியில்என்

கணவர் என்னைக் கலந்திலரே
சிலையை வளைத்தான் மதன்அம்பு

தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
திலக நுதலாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

18

1622.

பிரமன் தலையில் பலிகொள்ளும்

பித்தர் அருமைப் பெருமானார்
உரமன் னியசீர் ஒற்றிநகர்

உள்ளார் இன்னும் உற்றிலரே
அரமன் னியவேற் படையன்றோ

அம்மா அயலார் அலர்மொழிதான்
திரமன் னுகிலேன் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

19

1623

பவள நிறத்தார் திருஒற்றிப்

பதியில் அமர்ந்தார் பரசிவனார்

தவள நிறநீற் றணிஅழகர்
தமியேன் தன்னைச் சார்ந்திலரே

துவளும் இடைதான் இறமுலைகள்

துள்ளா நின்ற தென்னளவோ

திவளும் இழையாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

20

1624

வண்டார் கொன்றை வளர்சடையார்

மதிக்க எழுந்த வல்விடத்தை
உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார்

உடையார் என்பால் உற்றிலரே
கண்டார் கண்ட படிபேசக்

கலங்கிப் புலம்பல் அல்லாது
செண்டார் முலையாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

21

1625.

உணவை இழந்தும் தேவர்எலாம்

உணரா ஒருவர் ஒற்றியில்என்
கணவர் அடியேன் கண்அகலாக்

கள்வர் இன்னும் கலந்திலரே
குணவர் எனினும் தாய்முதலோர்

கூறா தெல்லாம் கூறுகின்றார்
திணிகொள் முலையாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

22

1626.

வாக்குக் கடங்காப் புகழுடையார்

வல்லார் ஒற்றி மாநகரார்
நோக்குக் கடங்கா அழகுடையார்

நோக்கி என்னை அணைந்திலரே
ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன்

உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
தேக்கங் குழலாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

23

1627.

தரையிற் கீறிச் சலந்தரனைச்

சாய்த்தார் அந்தச் சக்கரமால்
வரையற் களித்தார் திருஒற்றி

வாணர் இன்னும் வந்திலரே
கரையிற் புணர்ந்த நாரைகளைக்

கண்டேன் கண்ட வுடன்காதல்
திரையிற் புணர்ந்தேன் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

24

1628.

பெற்றம் இவரும் பெருமானார்

பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
உற்ற சிவனார் திருஒற்றி

யூர்வாழ் வுடையார் உற்றிலரே
எற்றென் றுரைப்பேன் செவிலிஅவள்

ஏறா மட்டும் ஏறுகின்றாள்
செற்றம் ஒழியாள் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

25

1629.

போக முடையார் பெரும்பற்றப்

புலியூர் உடையார் போதசிவ
யோக முடையார் வளர்ஒற்றி

யூர்வாழ் உடையார் உற்றிலரே
சோகம் உடையேன் சிறிதேனும்

துயிலோ அணையா குயில்ஒழியா
தேகம் அயர்ந்தேன் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

26

1630.

தாமப் புயனார் சங்கரனார்

தாயில் இனியார் தற்பரனார்
ஓமப் புகைவான் உறும்ஒற்றி

யூர்வாழ் உடையார் உற்றிலரே
காமப் பயலோ கணைஎடுத்தான்

கண்ட மகளீர் பழிதொடுத்தார்
சேமக் குயிலே என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

27

1631.

ஆரூர் உடையார் அம்பலத்தார்

ஆலங் காட்டார் அரசிலியார்
ஊரூர் புகழும் திருஒற்றி

யூரார் இன்னும் உற்றிலரே
வாரூர் முலைகள் இடைவருத்த

மனநொந் தயர்வ தன்றிஇனிச்
சீரூர் அணங்கே என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

28

1632.

காலங் கடந்தார் மால்அயன்தன்

கருத்துங் கடந்தார் கதிகடந்தார்
ஞாலங் கடந்த திருஒற்றி

நாதர் இன்னும் நண்ணிலரே
சாலங் கடந்த மனந்துணையாய்த்

தனியே நின்று வருந்தல்அல்லால்
சீலங் கடந்தேன் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

29

1633.

சங்கக் குழையார் சடைமுடியார்

சதுரர் மறையின் தலைநடிப்பார்
செங்கட் பணியார் திருஒற்றித்

தேவர் இன்னும் சேர்ந்திலரே
மங்கைப் பருவம் மணமில்லா

மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
திங்கள் முகத்தாய் என்னடிநான்

செய்வ தொன்றும் தெரிந்திலனே.

30

Back


87. குறி ஆராய்ச்சி

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1634.

நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க

நடனம் புரியும் நாயகனார்
அந்தி நிறத்தார் திருஒற்றி

அமர்ந்தார் என்னை அணைவாரோ
புந்தி இலள்என் றணையாரோ

யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்
சிந்தை மகிழக் குறமடவாய்

தெரிந்தோர் குறிதான் செப்புவையே.

1

1635.

தரும விடையார் சங்கரனார்

தகைசேர் ஒற்றித் தனிநகரார்
ஒருமை அளிப்பார் தியாகர்எனை

உடையார் இன்று வருவாரோ
மருவ நாளை வருவாரோ

வாரா தென்னை மறப்பாரோ
கருமம் அறிந்த குறமடவாய்

கணித்தோர் குறிதான் கண்டுரையே.

2

1636.

ஆழி விடையார் அருளுடையார்

அளவிட் டறியா அழகுடையார்
ஊழி வரினும் அழியாத

ஒற்றித் தலம்வாழ் உத்தமனார்
வாழி என்பால் வருவாரோ

வறியேன் வருந்த வாராரோ
தோழி அனைய குறமடவாய்

துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.

3

1637

அணியார் அடியார்க் கயன்முதலாம்

அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம்
பணியார் ஒற்றிப் பதிஉடையார்

பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ
தணியாக் காதல் தவிர்ப்பாரோ

சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
குணியா எழில்சேர் குறமடவாய்

குறிதான் ஒன்றும் கூறுவையே.

4

1638.

பொன்னார் புயத்துப் போர்விடையார்

புல்லர் மனத்துட் போகாதார்
ஒன்னார் புரந்தீ உறநகைத்தார்

ஒற்றி எனும்ஓர் ஊர்அமர்ந்தார்
என்னா யகனார் எனைமருவல்

இன்றோ நாளை யோஅறியேன்
மின்னார் மருங்குல் குறமடவாய்

விரைந்தோர் குறிநீ விளம்புவையே.

5

1639.

பாலிற் றெளிந்த திருநீற்றர்

பாவ நாசர் பண்டரங்கர்
ஆலிற் றெளிய நால்வர்களுக்

கருளுந் தெருளர் ஒற்றியினார்
மாலிற் றெளியா நெஞ்சகத்தேன்

மருவிக் கலக்க வருவாரோ
சேலிற் றெளிகட் குறப்பாவாய்

தெரிந்தோர் குறிநீ செப்புகவே.

6

1640.

நிருத்தம் பயின்றார் நித்தியனார்

நேச மனத்தர் நீலகண்டர்
ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார்

உம்பர் அறியா என்கணவர்
பொருத்தம் அறிந்தே புணர்வாரோ
பொருத்தம் பாரா தணைவாரோ

வருத்தந் தவிரக் குறப்பாவாய்

மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே.

7

1641.

கமலன் திருமால் ஆதியர்கள்

கனவி னிடத்துங் காண்பரியார்
விமலர் திருவாழ் ஒற்றியிடை

மேவும் பெருமை வித்தகனார்
அமலர் அவர்தாம் என்மனைக்கின்

றணைகு வாரோ அணையாரோ
தமல மகன்ற குறப்பாவாய்

தனித்தோர் குறிதான் சாற்றுவையே.

8

1642.

வன்னி இதழி மலர்ச்சடையார்

வன்னி எனஓர் வடிவுடையார்
உன்னி உருகும் அவர்க்கெளியார்

ஒற்றி நகர்வாழ் உத்தமனார்
கன்னி அழித்தார் தமைநானுங்

கலப்பேன் கொல்லோ கலவேனோ
துன்னி மலைவாழ் குறமடவாய்

துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.

9

1643

கற்றைச் சடைமேல் கங்கைதனைக்

கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
பொற்றைப் பெருவிற் படைஉடையார்

பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
இற்றைக் கடியேன் பள்ளியறைக்

கெய்து வாரோ எய்தாரோ
சுற்றுங் கருங்கட் குறமடவாய்

சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே.

10

1644.

அரவக் கழலார் கருங்களத்தார்

அஞ்சைக் களத்தார் அரிபிரமர்
பரவப் படுவார் திருஒற்றிப்

பதியில் அமர்ந்தார் பாசுபதர்
இரவு வருமுன் வருவாரோ

என்னை அணைதற் கிசைவாரோ
குரவ மணக்குங் குறமடவாய்

குறிநீ ஒன்று கூறுவையே.

11

Back


88. காட்சி அற்புதம்


தலைவி இரங்கல்(41)
( 41). இரங்கல்: தொ.வெ., ச.மு.க., ஆ.பா.

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1645.

பூணா அணிபூண் புயமுடையார்

பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
ஊணா உவந்தார் திருஒற்றி

யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
நீணால் இருந்தார் அவர்இங்கே

நின்றார் மீட்டும் நின்றிடவே
காணா தயர்ந்தேன் என்னடிநான்

கனவோ நனவோ கண்டதுவே.

1

1646.

ஓட்டில் இரந்துண் டொற்றியிடை

உற்றார் உலகத் துயிரைஎலாம்
ஆட்டி நடிப்பார் ஆலயத்தின்

அருகே எளிய ளாம்எனவே
ஏட்டில் அடங்காக் கையறவால்

இருந்தேன் இருந்த என்முன்உருக்
காட்டி மறைத்தார் என்னடிநான்

கனவோ நனவோ கண்டதுவே.

2

1647.

ஈதல் ஒழியா வண்கையினார்

எல்லாம் வல்ல சித்தர்அவர்
ஓதல் ஒழியா ஒற்றியில்என்

உள்ளம் உவக்க உலகம்எலாம்
ஆதல் ஒழியா எழில்உருக்கொண்

டடைந்தார் கண்டேன் உடன்காணேன்
காதல் ஒழியா தென்னடிநான்

கனவோ நனவோ கண்டதுவே.

3

1648.

தொண்டு புரிவோர் தங்களுக்கோர்

துணைவர் ஆவார் சூழ்ந்துவரி
வண்டு புரியுங் கொன்றைமலர்

மாலை அழகர் வல்விடத்தை
உண்டு புரியுங் கருணையினார்

ஒற்றி யூரர் ஒண்பதத்தைக்
கண்டுங் காணேன் என்னடிநான்

கனவோ நனவோ கண்டதுவே.

4

1649.

அடியர் வருந்த உடன்வருந்தும்

ஆண்டை அவர்தாம் அன்றயனும்
நெடிய மாலுங் காணாத

நிமல உருவோ டென்எதிரே
வடியல் அறியா அருள்காட்டி

மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார்
கடிய அயர்ந்தேன் என்னடிநான்

கனவோ நனவோ கண்டதுவே.

5

1650.

கொற்றம் உடையார் திருஒற்றிக்

கோயில்உடையார் என்எதிரே
பொற்றை மணித்தோட் புயங்காட்டிப்

போனார் என்னைப் புலம்பவைத்துக்
குற்றம் அறியேன் மனநடுக்கங்

கொண்டேன் உடலங் குழைகின்றேன்
கற்றிண் முலையாய் என்னடிநான்

கனவோ நனவோ கண்டதுவே.

6

1651.

ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார்

ஆதி நடுவீ றாகிநின்றார்
நீல மிடற்றார் திருஒற்றி

நியமத் தெதிரே நீற்றுருவக்
கோல நிகழக் கண்டேன்பின்

குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்
காலம் அறியேன் என்னடிநான்

கனவோ நனவோ கண்டதுவே.

7

1652.

சலங்கா தலிக்கும் தாழ்சடையார்

தாமே தமக்குத் தாதையனார்
நிலங்கா தலிக்கும் திருஒற்றி

நியமத் தெதிரே நின்றனர்காண்
விலங்கா தவரைத் தரிசித்தேன்

மீட்டுங் காணேன் மெய்மறந்தேன்
கலங்கா நின்றேன் என்னடிநான்

கனவோ நனவோ கண்டதுவே.

8

1653.

நிரந்தார் கங்கை நீள்சடையார்

நெற்றி விழியார் நித்தியனார்

சிரந்தார் ஆகப் புயத்தணிவார்
திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்

பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப்
பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்

கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.

9

1654.

அளித்தார் உலகை அம்பலத்தில்
ஆடி வினையால் ஆட்டிநின்றார்

தளித்தார் சோலை ஒற்றியிடைத்
தமது வடிவம் காட்டியுடன்

ஒளித்தார் நானும் மனம்மயங்கி
உழலா நின்றேன் ஒண்தொடிக்கைக்

களித்தார் குழலாய் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.

10

Back


89. ஆற்றாக் காதலின் இரங்கல்

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1655.

மந்தா கினிவான் மதிமத்தம்

மருவும் சடையார் மாசடையார்
நுந்தா விளக்கின் சுடர்அனையார்

நோவ நுதலார் கண்நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதமலி

ஒற்றி யூரில் உற்றெனக்குத்
தந்தார் மையல் என்னோஎன்

சகியே இனிநான் சகியேனே.

1

1656.

பூமேல் அவனும் மால்அவனும்

போற்றி வழுத்தும் பூங்கழலார்
சேமேல் வருவார் திருஒற்றித்

தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
தேமேல் அலங்கல் முலைஅழுந்தச்

சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
தாமேல் அழற்பூத் தாழாதென்

சகியே இனிநான் சகியேனே.

2

1657.

கருணைக் கொருநேர் இல்லாதார்

கல்லைக் கரைக்கும் கழலடியார்
அருணைப் பதியார் ஆமாத்தூர்

அமர்ந்தார் திருவா வடுதுறையார்
இருணச் சியமா மணிகண்டர்

எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்
தருணத் தின்னும் சேர்ந்திலர்என்
சகியே இனிநான் சகியேனே.

3

1658.

ஆரா அமுதாய் அன்புடையோர்

அகத்துள் இனிக்கும் அற்புதனார்
தீரா வினையும் தீர்த்தருளும்

தெய்வ மருந்தார் சிற்சபையார்
பாரார் புகழும் திருஒற்றிப்

பரமர் தமது தோள் அணையத்
தாரார் இன்னும் என்செய்கேன்

சகியே இனிநான் சகியேனே.

4

1659.

துதிசெய் அடியர் தம்பசிக்குச்

சோறும் இரப்பார் துய்யர்ஒரு
நதிசெய் சடையார் திருஒற்றி

நண்ணும் எனது நாயகனார்
மதிசெய் துயரும் மதன்வலியும்

மாற்ற இன்னும் வந்திலரே
சதிசெய் தனரோ என்னடிஎன்
சகியே இனிநான் சகியேனே.

5

1660.

எங்கள் காழிக் கவுணியரை

எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர்
திங்கள் அணியும் செஞ்சடையார்

தியாகர் திருவாழ் ஒற்றியினார்
அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில்

அணைத்தார் அல்லர் எனைமடவார்
தங்கள் அலரோ தாழாதென்

சகியே இனிநான் சகியேனே.

6

1661.

காவி மணந்த கருங்களத்தார்

கருத்தர் எனது கண்அனையார்
ஆவி அனையார் தாய்அனையார்

அணிசேர் ஒற்றி ஆண்தகையார்
பூவின் அலங்கல் புயத்தில்எனைப்

புல்லார் அந்திப் பொழுதில்மதி
தாவி வருமே என்செயுமோ

சகியே இனிநான் சகியேனே.

7

1662.

மலஞ்சா திக்கும் மக்கள்தமை

மருவார் மருவார் மதில்அழித்தார்
வலஞ்சா திக்கும் பாரிடத்தார்

மாலும் அறியா மலர்ப்பதத்தார்
நிலஞ்சா திக்கும் ஒற்றியினார்

நினையார் என்னை அணையாமல்
சலஞ்சா தித்தார் என்னடிஎன்
சகியே இனிநான் சகியேனே.

8

1663.

நாக அணியார் நக்கர்எனும்
நாமம்உடையார் நாரணன்ஓர்
பாகம் உடையார் மலைமகள்ஓர்
பாங்கர் உடையார் பசுபதியார்
யோகம் உடையார் ஒற்றியுளார்
உற்றார் அல்லர் உறுமோக
தாகம் ஒழியா தென்செய்கேன்

சகியே இனிநான் சகியேனே.

9

1664.

தீர்ந்தார் தலையே கலனாகச்

செறித்து நடிக்கும் திருக்கூத்தர்
தேர்ந்தார் தம்மைப் பித்தடையச்

செய்வார் ஒற்றித் தியாகர்அவர்
சேர்ந்தார் அல்லர் இன்னும்எனைத்

தேடி வரும்அத் தீமதியம்
சார்ந்தால் அதுதான் என்செயுமோ
சகியே இனிநான் சகியேனே.

10

1665.

ஆயும் படிவத் தந்தணனாய்

ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
தோயும் கமலத் திருவடிகள்

சூட்டும் அதிகைத் தொன்னகரார்
ஏயும் பெருமை ஒற்றியுளார்

இன்னும் அணையார் எனைஅளித்த
தாயும் தமரும் நொடிக்கின்றார்

சகியே இனிநான் சகியேனே.

11

Back


90. திருக்கோலச் சிறப்பு

தலைவி வியத்தல் - திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1666.

பொன்னென் றொளிரும் புரிசடையார்

புனைநூல் இடையார் புடைஉடையார்
மன்னென் றுலகம் புகழ்ஒற்றி

வாணர் பவனி வரக்கண்டேன்
மின்னென் றிலங்கு மாதரெலாம்

வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
இன்னென் றறியேன் அவரழகை

என்னென் றுரைப்ப தேந்திழையே. 1

1667.

அள்ளிக் கொடுக்கும் கருணையினார்

அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற

வள்ளல் பவனி வரக்கண்டேன்
துள்ளிக் குதித்தென் மனம்அவரைச்

சூழ்ந்த தின்னும் வந்ததிலை
எள்ளிக் கணியா அவரழகை

என்னென் றுரைப்ப தேந்திழையே. 2

1668.

அனத்துப் படிவம் கொண்டயனும்

அளவா முடியார் வடியாத
வனத்துச் சடையார் திருஒற்றி

வாணர் பவனி வரக்கண்டேன்
மனத்துக் கடங்கா தாகில்அதை

வாய்கொண் டுரைக்க வசமாமோ
இனத்துக் குவப்பாம் அவரழகை

என்னென் றுரைப்ப தேந்திழையே. 3

1669.

கொழுதி அளிதேன் உழுதுண்ணும்

கொன்றைச் சடையார் கூடலுடை
வழுதி மருகர் திருஒற்றி

வாணர் பவனி வரக்கண்டேன்
பழுதில் அவனாந் திருமாலும்

படைக்குங் கமலப் பண்ணவனும்
எழுதி முடியா அவரழகை

என்னென் றுரைப்ப தேந்திழையே. 4

1670.

புன்னை இதழிப் பொலிசடையார்
போக யோகம் புரிந்துடையார்

மன்னும் விடையார் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்

உன்னும் உடலம் குளிர்ந்தோங்க
உவகை பெருக உற்றுநின்ற

என்னை விழுங்கும் அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே.5

1671

சொல்லுள் நிறைந்த பொருளானார்

துய்யர் உளத்தே துன்னிநின்றார்
மல்லல் வயற்சூழ் திருஒற்றி

வாணர் பவனி வரக்கண்டேன்
கல்லும் மரமும் ஆனந்தக்
கண்ணீர் கொண்டு கண்டதெனில்

எல்லை யில்லா அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 6

1672.

நீர்க்கும் மதிக்கும் நிலையாக

நீண்ட சடையார் நின்றுநறா

ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி

வாணர் பவனி வரக்கண்டேன்

பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும்
பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
யார்க்கும் அடங்கா அவரழகை

என்னென் றுரைப்ப தேந்திழையே. 7

1673.

கலக அமணக் கைதவரைக்

கழுவி லேற்றுங் கழுமலத்தோன்
வலகை குவித்துப் பாடும்ஒற்றி

வாணர் பவனி வரக்கண்டேன்
உலக நிகழ்வைக் காணேன்என்

உள்ளம் ஒன்றே அறியுமடி
இலகும் அவர்தந் திருஅழகை

என்னென் றுரைப்ப தேந்திழையே. 8

1674.

கண்ணன் அறியாக் கழற்பதத்தார்

கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்

வண்ணம் உடையார் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்

நண்ண இமையார் எனஇமையா
நாட்டம் அடைந்து நின்றனடி

எண்ண முடியா அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 9

1675.

மாழை மணித்தோள் எட்டுடையார்

மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்

வாழை வளஞ்சூழ் ஒற்றியூர்
வாணர் பவனி வரக்கண்டேன்

யாழை மலைக்கும் மொழிமடவார்
யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்

ஏழை யேன்நான் அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 10

Back


91.சோதிடம் நாடல்

தலைவி கழிமிகு42 காதல்
42. மிகுகழி என முற்பதிப்புகளிற் காணப்படுவது சிறப்பன்று.

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1676.

பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்
இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 1

1677.

பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 2

1678.

அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 3

1679.

எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார்
வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார்
தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம்
உண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 4

1680.

தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார்
பவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
அவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ
உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 5

1681.

பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ
உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 6

1682.

தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார்
மிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன்
துக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான்
ஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 7

1683.

வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்
வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து
வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ
உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 8

1684.

ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்
பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ
ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.

9

1685.

அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்
வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்
கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ
உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.

10

Back


92. திருஅருட் பெருமிதம்

செவிலி கழறல்
திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1686.

விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

1

1687.

கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்
திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்
பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ
இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

2

1688.

மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ
கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ
இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

3

1689.

நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்
தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்
படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே.

4

1690.

திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

5

1691.

மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

6

1692

மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

7

1693.

விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

8

1694.

நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்
ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ
நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ
ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

9

1695.

உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

10

Back


93. காதற் சிறப்புக் கதுவா மாண்பு

தலைவி கழற் றெதிர்மறுத்தல் -- திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1696.

உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்
திலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

1

1697.

பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்
அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

2

1698.

எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
வல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்
கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

3

1699

என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும்
அன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும்
துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்
கன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

4

1700.

என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்
ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்
நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்
கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

5

1701.

என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும்
வன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்
புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்
கன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

6

1702.

வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்
ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்
காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

7

1703.

விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்
அமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும்
நமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும்
கமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

8

1704.

மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்
வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்
கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

9

1705.

போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்
ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்
கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

10

1706.

கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்
சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்
மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்
காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

11

1707.

உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்
அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்
கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

12

Back


94. ஆற்றா விரகம்

தோழியொடு கூறல் --- திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

1708.

ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்
நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்
ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

1

1709.

காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்
போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்
சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி
ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

2

1710.

பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்
நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள
எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

3

1711.

ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

4

1712.

சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்
சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்
ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

5

1713.

வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்
தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்
ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.

6

1714.

திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்
மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்
அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்
இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

7

1715.

அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்
இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.

8

1716.

மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்
சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்
பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்
கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

9

1717.

மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்
ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்
பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே
ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

10

Back


95. காதல் மாட்சி

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

1718.

திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை
மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து
படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

1

1719.

தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்
துக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
பக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

2

1720.

தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை
மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து
பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

3

1721.

நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண
நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து
பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

4

1722.

நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண
நீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து
பாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

5

1723

அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண
இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து
பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

6

1724.

திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்
கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

7

1725.

கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை
விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து
படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

8

1726.

தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக்
கல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி
பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

9

1727.

மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண
அடையா மகிழ்வி னொடும்வந்தால்அம்மா நமது விடயமெலாம்
படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

10

Back


96. அருண்மொழி மாலை

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

1728.

பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர்

பூவுந் தியதென் முலையென்றேன்
இதுவென் றறிநா மேறுகின்ற

தென்றா ரேறு கின்றதுதான்
எதுவென் றுரைத்தே னெதுநடுவோ

ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார்
அதுவின் றணங்கே யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

1

1729.

மருகா வொற்றி வாணர்பலி

வாங்க வகையுண் டேயென்றேன்
ஒருகா லெடுத்தேன் காணென்றா

ரொருகா லெடுத்துக் காட்டுமென்றேன்
வருகா விரிப்பொன் னம்பலத்துள்

வந்தாற் காட்டு வேமென்றார்
அருகா வியப்பா மென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

2

1730.

விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ்

வேளை யருள நின்றதென்றேன்
சுட்டுஞ் சுதனே யென்றார்நான்

சுட்டி யறியச் சொல்லுமென்றேன்
பட்டுண் மருங்கே நீகுழந்தைப்

பருவ மதனின் முடித்ததென்றார்
அட்டுண் டறியா ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

3

1731.

வேலை ஞாலம் புகழொற்றி

விளங்குந் தேவர் நீரணியும்
மாலை யாதென் றேனயன்மால்

மாலை யகற்று மாலையென்றார்
சோலை மலரன் றேயென்றேன்

சோலை யேநாந் தொடுத்ததென்றார்
ஆலு மிடையா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

4

1732.

உயிரு ளுறைவீர் திருவொற்றி

யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
வயிர மதனை விடுமென்றேன்

மாற்றா ளலநீ மாதேயாஞ்
செயிர தகற்றுன் முலைப்பதிவாழ்

தேவ னலவே டெளியென்றார்
அயிர மொழியா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

5

1733.

தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்

தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
யெண்கார் முகமாப் பொன்னென்றே

னிடையிட் டறித லரிதென்றார்
மண்கா தலிக்கு மாடென்றேன்

மதிக்குங் கணைவில் லன்றென்றார்
அண்கார்க் குழலா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

6

1734.

அலங்கும் புனற்செய் யொற்றியுளீ

ரயன்மா லாதி யாவர்கட்கும்
இலங்கு மைகா ணீரென்றே

னிதன்முன் னேழ்நீ கொண்டதென்றார்
துலங்கு மதுதா னென்னென்றேன்

சுட்டென் றுரைத்தா ராகெட்டேன்
அலங்கற் குழலா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

7

1735.

விண்டு வணங்கு மொற்றியுளீர்

மென்பூ விருந்தும் வன்பூவில்
வண்டு விழுந்த தென்றேனெம்

மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
தொண்டர்க் கருள்வீர் நீரென்றேன்

றோகாய் நாமே தொண்டரென்றார்
அண்டர்க் கரியா ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

8

1736.

மட்டார் மலர்க்கா வொற்றியுளீர்

மதிக்குங் கலைமேல் விழுமென்றேன்
எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா

ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன்
உட்டா வகற்று மந்தணர்க

ளுறையூர் மாதே யுணரென்றார்
அட்டார் புரங்க ளென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

9

1737.

ஒற்றி நகரீர் மனவாசி

யுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
பற்றி யிறுதி தொடங்கியது

பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
மற்றி துணர்கி லேனென்றேன்

வருந்தே லுணரும் வகைநான்கும்
அற்றி டென்றா ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

10

1738.

வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர்

வருந்தா தணைவே னோவென்றேன்
ஊன்றோ யுடற்கென் றார்தெரிய

வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
சான்றோ ருங்கண் மரபோர்ந்து

தரித்த பெயர்க்குத் தகாதென்றார்
ஆன்றோய் விடங்க ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

11

1739.

தீது தவிர்க்கு மொற்றியுளீர்

செல்ல லறுப்ப தென்றென்றேன்
ஈது நமக்குந் தெரியுமென்றா

ரிறையா மோவிங் கிதுவென்றேன்
ஓது மடியர் மனக்கங்கு

லோட்டு மியாமே யுணரென்றார்
ஆது தெரியே னென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

12

1740.

ஒண்கை மழுவோ டனலுடையீ

ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
வண்கை யொருமை நாதரென்றேன்

வண்கைப் பன்மை நாதரென்றார்
எண்க ணடங்கா வதிசயங்கா

ணென்றேன் பொருளன் றிதற்கென்றார்
அண்கொ ளணங்கே யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

13

1741.

ஒருவ ரெனவா ழொற்றியுளீ

ருமக்கம் மனையுண் டேயென்றேன்
இருவ ரொருபே ருடையவர்காண்

என்றா ரென்னென் றேனென்பேர்
மருவு மீறற் றயலகரம்

வயங்கு மிகர மானதென்றார்
அருவு மிடையா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

14

1742.

பேரா ரொற்றி யீரும்மைப்

பெற்றா ரெவரென் றேனவர்தம்
ஏரார் பெயரின் முன்பினிரண்

டிரண்ட கத்தா ரென்றாரென்
நேரா வுரைப்பீ ரென்றேனீ

நெஞ்ச நெகிழ்ந்தா லாமென்றார்
ஆரார் சடைய ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

15

1743.

தளிநான் மறையீ ரொற்றிநகர்

தழைத்து வாழ்வீர் தனிஞான
வொளிநா வரைசை யைந்தெழுத்தா

லுவரி கடத்தி னீரென்றேன்
களிநா வலனை யீரெழுத்தாற்

கடலில் வீழ்த்தி னேமென்றார்
அளிநாண் குழலா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

16

1744.

ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ

ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந்

தருவே மென்றா ரம்மமிகத்
தேமூன் றினநும் மொழியென்றேன்

செவ்வா யுறுமுன் முறுவலென்றார்
ஆமூன் றறுப்பா ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

17

1745.

மன்னி வளரு மொற்றியுளீர்

மடவா ரிரக்கும் வகையதுதான்
முன்னி லொருதா வாமென்றேன்

முத்தா வெனலே முறையென்றார்
என்னி லிதுதா னையமென்றே

னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார்
அன்னி லோதி யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

18

1746.

வளஞ்சே ரொற்றி யீருமது

மாலை கொடுப்பீ ரோவென்றேன்
குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன்

கொடுத்தே மென்றா ரிலையென்றேன்
உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ

ருருவு மன்றங் கருவென்றார்
அளஞ்சேர் வடிவா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

19

1747.

வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர்

விளங்கு மதனன் மென்மலரே
மாற்றா ரென்றே னிலைகாணெம்

மாலை முடிமேற் காணென்றார்
சாற்றாச் சலமே யீதென்றேன்

சடையின் முடிமே லன்றென்றார்
ஆற்றா விடையா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

20

1748.

புயப்பா லொற்றி யீரச்சம்

போமோ வென்றே னாமென்றார்
வயப்பா வலருக் கிறையானீர்

வஞ்சிப் பாவிங் குரைப்பதென்றேன்
வியப்பா நகையப் பாவெனும்பா

வெண்பா கலிப்பா வுடனென்றார்
அயப்பா லிடையா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

21

1749.

தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர்

சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
திண்ணம் பலமேல் வருங்கையிற்

சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன்

வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார்
அண்ணஞ் சுகமே யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

22

1750.

உகஞ்சே ரொற்றி யூருடையீ

ரொருமா தவரோ நீரென்றேன்
முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய்

மும்மா தவர்நா மென்றுரைத்தார்
சுகஞ்சேர்ந் தனவும் மொழிக்கென்றேன்

றோகா யுனது மொழிக்கென்றார்
அகஞ்சேர் விழியா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

23

1751.

ஊரா மொற்றி யீராசை

யுடையே னென்றே னெமக்கலது
நேரா வழக்குத் தொடுக்கின்றாய்

நினக்கே தென்றார் நீரெனக்குச்
சேரா வணமீ தென்றேன்முன்

சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
ஆரா ரென்றா ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

24

1752.

வருத்தந் தவரீ ரொற்றியுளீர்

மனத்த காத முண்டென்றேன்
நிருத்தந் தருநம் மடியாரை

நினைக்கின் றோரைக் கண்டதுதன்
றிருத்தந் தருமுன் னெழுத்திலக்கஞ்

சேருந் தூர மோடுமென்றார்
அருத்தந் தெரியே னென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

25

1753.

மைய லகற்றீ ரொற்றியுளீர்

வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
துய்ய வதன்மேற் றலைவைத்துச்

சொன்னாற் சொல்வே மிரண்டென்றார்
உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே

னுலகி லெவர்க்கு மாமென்றார்
ஐய விடையா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

26

1754.

தாவென் றருளு மொற்றியுளீர்

தமியேன் மோக தாகமற
வாவென் றுரைப்பீ ரென்றேன்பின்

வருமவ் வெழுத்திங் கிலையென்றார்
ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ

தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய்
ஆவென் றுரைத்தா ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

27

1755.

வயலா ரொற்றி மேவுபிடி

வாதர் நும்பே ரியாதென்றேன்
இயலா யிட்ட நாமமதற்

கிளைய நாம மேயென்றார்
செயலார் கால மறிந்தென்னைச்

சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
கயலா ரென்றா ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

28

1756.

என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ

ரென்னை யணைய நினைவீரேற்
பொன்மேல் வெள்ளி யாமென்றேன்

பொன்மேற் பச்சை யறியென்றார்
மின்மேற் சடையீ ரீதெல்லாம்

விளையாட் டென்றே னன்றென்றார்
அன்மேற் குழலா யென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

29

1757.

நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர்

நாகம் வாங்கி யென்னென்றேன்
காலாங் கிரண்டிற் கட்டவென்றார்

கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
வேலார் விழிமாத் தோலோடு

வியாளத் தோலு முண்டென்றார்
ஆலார் களத்த ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

30

1758.

முடியா வளஞ்சூ ழொற்றியுளீர்

முடிமே லிருந்த தென்னென்றேன்
கடியா வுள்ளங் கையின்முதலைக்

கடிந்த தென்றார் கமலமென
வடிவார் கரத்தி லென்னென்றேன்

வரைந்த வதனீ றற்றதென்றார்
அடியார்க் கெளியா ரென்னடியவ்

வையர் மொழிந்த வருண்மொழியே.

31

Back


97. இன்ப மாலை

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

1759.

ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக

ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான்
என்றும் பெரியீர் நீர்வருதற்

கென்ன நிமித்த மென்றுரைத்தேன்
துன்றும் விசும்பே யென்றனர்நான்

சூதா முமது சொல்லென்றேன்
குன்றுங் குடமு மிடையுனது

கொங்கை யெனவே கூறினரே.

1

1760.

கானார் சடையீ ரென்னிருக்கைக்

கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்
மானார் விழியாய் கற்றதுநின்

மருங்குற் கலையு மென்றார் நீர்
தானா ரென்றே னனிப்பள்ளித்

தலைவ ரெனவே சாற்றினர்நான்
ஆனா லொற்றி யிருமென்றே

னங்கு மிருந்தே னென்றாரே.

2

1761.

வானங் கொடுப்பீர் திருவொற்றி

வாழ்வீ ரன்று வந்தீரென்
மானங் கெடுத்தீ ரென்றேன்முன்

வனத்தார் விடுத்தா ரென்றார்நீர்
ஊனந் தடுக்கு மிறையென்றே

னுலவா தடுக்கு மென்றார்மால்
ஏனம் புடைத்தீ ரணையென்பீ

ரென்றே னகலா ரென்றாரே.

3

1762.

இருமை யளவும் பொழிலொற்றி

யிடத்தீர் முனிவ ரிடரறநீர்
பெருமை நடத்தீ ரென்றேனென்

பிள்ளை நடத்தி னானென்றார்
தரும மலவிவ் விடையென்றேன்

றரும விடையு முண்டென்றார்
கரும மெவன்யான் செயவென்றேன்

கருதாண் பாலன் றென்றாரே.

4

1763.

ஒசிய விடுகு மிடையாரை

யொற்றி யிருந்தே வுருக்குகின்ற
வசியர் மிகநீ ரென்றேனென்

மகனே யென்றார் வளர்காமப்
பசிய துடையே னென்றேனுட்

பணியல் குலுமப் படியென்றார்
நிசிய மிடற்றீ ராமென்றேன்

நீகண் டதுவே யென்றாரே.

5

1764.

கலையா ளுடையீ ரொற்றிநின்றீர்

காம மளித்தீர் களித்தணையீர்
மலையா ளுமது மனைவியென்றேன்

மலைவா ளுனைநான் மருவினென்றார்
அலையாண் மற்றை யவளென்றே

னலைவா ளவளு மறியென்றார்
நிலையாண் மையினீ ராவென்றே

னீயா வென்று நின்றாரே.

6

1765.

சீலம் படைத்தீர் திருவொற்றித்

தியாக ரேநீர் திண்மைமிகுஞ்
சூலம் படைத்தீ ரென்னென்றேன்

றொல்லை யுலக முணவென்றார்
ஆலம் படுத்த களத்தீரென்

றறைந்தே னவளிவ் வானென்றார்
சாலம் பெடுத்தீ ருமையென்றேன்

றார மிரண்டா மென்றாரே.

7

1766.

ஞால ராதி வணங்குமொற்றி

நாதர் நீரே நாட்டமுறும்
பால ராமென் றுரைத்தேனாம்

பால ரலநீ பாரென்றார்
மேல ராவந் திடுமென்றேன்

விளம்பேல் மகவு மறியுமென்றார்
கோல ராமென் றுரைத்தேன்யாங்

கொண்டோ முக்க ணென்றாரே.

8

1767.

வண்மை தருவீ ரொற்றிநின்று

வருவீ ரென்னை மருவீர்நீர்
உண்மை யுடையீ ரென்றேனா

முடைப்பேம் வணங்கி னோர்க்கென்றார்
கண்மை யுடையீ ரென்றேனீ

களமை யுடையேம் யாமென்றார்
தண்மை யருளீ ரென்றேனாந்

தகையே யருள்வ தென்றாரே.

9

1768.

ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ

ரொற்றி யுடையீ ருவப்புடனே
யென்னா குலத்தை யோட்டுமென்றே

னிடைய ரலநா மென்றுரைத்தார்
பொன்னாற் சடையீ ரென்றேனென்

புதிய தேவி மனைவியென்றார்
சொன்னாற் கேள்வி வியப்பென்றேன்

சுத்த வியப்பொன் றென்றாரே.

10

1769.

கனிமா னிதழி முலைச்சுவடு

களித்தீ ரொற்றிக் கடிநகரீர்
தனிமா னேந்தி யென்றேனென்

றலைமே லொருமா னேந்தியென்றார்
துனிமாற் றுகிலீ ரென்றேனற்

றுகில்கோ வணங்கா ணென்றாரென்
பனிமால் வரையீ ரென்றேனென்

பனிமால் வரைகா ணென்றாரே.

11

Back


98. இங்கித மாலை

கலைமகள் வாழ்த்து

நேரிசை வெண்பா

 

1770.

அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
காக்கக் கடனுனக்கே காண்.

1

காப்பு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1771.

ஒருமா முகனை யொருமாவை

யூர்வா கனமா யுறநோக்கித்
திருமான் முதலோர் சிறுமையெலாந்

தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
கருமா லகற்றுங் கணபதியாங்

கடவு ளடியுங் களித்தவர்பின்
வருமா கருணைக் கடற்குமர

வள்ள லடியும் வணங்குவாம்.

1

பாடாண் திணை

கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்

(வினா உத்தரம்)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1772.

திருவார் கமலத் தடம்பணைசூழ்

செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
மருவார் கொன்றைச் சடைமுடிகொள்

வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
னொருவா தடைந்தே னினிநமக்கிங்

குதவ வருந்தோ றுன்முலைமே
லிருவா ரிடுநீ யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

1

1773.

தண்ணார் மலரை மதிநதியைத்

தாங்குஞ் சடையா ரிவர்தமைநா
னண்ணா லொற்றி யிருந்தவரே

யைய ரேநீர் யாரென்றே
னண்ணா ரிடத்து மம்பலத்து

நடவா தவர்நா மென்றுசொலி
யெண்ணா தருகே வருகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

2

1774.

பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப்

பிச்சைத் தேவ ரிவர்தமைநான்
றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ

தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன்
மட்டி னொருமூன் றுடனேழு

மத்தர் தலையீ தென்றுசொலி
யெட்டி முலையைப் பிடிக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

3

1775.

மடையிற் கயல்பா யொற்றிநகர்

வள்ள லாகு மிவர்தமைநா
னடையிற் கனிவாற் பணியென்றே

யருளீ ருரியீ ருடையென்றேன்
கடையிற் படுமோர் பணியென்றே

கருதி யுரைத்தே மென்றுரைத்தென்
னிடையிற் கலையை யுரிகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

4

1776.

மன்றன் மணக்கு மொற்றிநகர்

வாண ராகு மிவர்தமைநா
னின்றன் பொடுங்கை யேந்தனத்தை

யேற்றோர் கலத்திற் கொளுமென்றே
னன்றன் புடையா யெண்கலத்தி

னாங்கொண் டிடுவே மென்றுசொலி
யென்றன் முலையைத் தொடுகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

5

1777.

கோமாற் கருளுந் திருவொற்றிக்

கோயி லுடையா ரிவரைமத
மாமாற் றியநீ ரேகலவி

மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத்
தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன்

றாவென் றார்தந் தாலென்னை
யேமாற் றினையே யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

6

1778.

அம்மா லயனுங் காண்பரியீர்க்

கமரும் பதிதான் யாதென்றே
னிம்மா லுடையா யொற்றுதற்கோ

ரெச்ச மதுகண் டறியென்றார்
செம்மா லிஃதொன் றென்னென்றேன்

றிருவே புரிமேற் சேர்கின்ற
வெம்மான் மற்றொன் றென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

7

1779.

கண்கள் களிப்ப வீண்டுநிற்குங்

கள்வ ரிவரூ ரொற்றியதாம்
பண்க ளியன்ற திருவாயாற்

பலிதா வென்றார் கொடுவந்தேன்
பெண்க டரலீ தன்றென்றார்

பேசப் பலியா தென்றேனின்
னெண்கண் பலித்த தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

8

1780.

ஆரா மகிழ்வு தருமொருபே

ரழக ரிவரூ ரொற்றியதா
நேராய் விருந்துண் டோ வென்றார்

நீர்தான் வேறிங் கிலையென்றேன்
வாரார் முலையாய் வாயமுது

மலர்க்கை யமுது மனையமுது
மேரா யுளவே யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

9

1781.

அடுத்தார்க் கருளு மொற்றிநக

ரைய ரிவர்தா மிகத்தாகங்
கடுத்தா மென்றார் கடிதடநீர்

கண்டீ ரையங் கொளுமென்றேன்
கொடுத்தாய் கண்ட திலையையங்

கொள்ளு மிடஞ்சூழ்ந் திடுங்கலையை
யெடுத்தாற் காண்பே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

10

1782.

இந்தா ரிதழி யிலங்குசடை

யேந்த லிவரூ ரொற்றியதாம்
வந்தார் பெண்ணே யமுதென்றார்

வரையின் சுதையிங் குண்டென்றே
னந்தார் குழலாய் பசிக்கினும்பெண்

ணாசை விடுமோ வமுதின்றே
லெந்தா ரந்தா வென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

11

1783.

தன்னந் தனியா யிங்குநிற்குஞ்

சாமி யிவரூ ரொற்றியதா
மன்னந் தருவீ ரென்றார்நா

னழைத்தே னின்னை யன்னமிட
முன்னம் பசிபோ யிற்றென்றார்

முன்னின் றகன்றே னிவ்வன்ன
மின்னந் தருவா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

12

1784.

மாறா வழகோ டிங்குநிற்கும்

வள்ள லிவரூ ரொற்றியதாம்
வீறா முணவீ யென்றார்நீர்

மேவா வுணவிங் குண்டென்றேன்
கூறா மகிழ்வே கொடுவென்றார்

கொடுத்தா லிதுதா னன்றென்றே
யேறா வழக்குத் தொடுக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

13

1785.

வண்மை யுடையார் திருவொற்றி

வாண ரிவர்தாம் பலியென்றா
ருண்மை யறிவீர் பலியெண்மை

யுணர்கி லீரென் னுழையென்றேன்
பெண்மை சிறந்தாய் நின்மனையிற்

பேசும் பலிக்கென் றடைந்ததுநா
மெண்மை யுணர்ந்தே யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

14

1786.

திருவை யளிக்குந் திருவொற்றித்

தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
வெருவ லுனது பெயரிடையோர்

மெய்நீக் கியநின் முகமென்றார்
தருவ லதனை வெளிப்படையாற்

சாற்று மென்றேன் சாற்றுவனே
லிருவை மடவா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

15

1787.

முந்தை மறையோன் புகழொற்றி

முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
கந்தை யுடையீ ரென்னென்றேன்

கழியா வுன்றன் மொழியாலே
யிந்து முகத்தா யெமக்கொன்றே

யிருநான் குனக்குக் கந்தையுள
திந்த வியப்பென் னென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

16

1788.

துன்ன லுடையா ரிவர்தமைநீர்

துன்னும் பதிதான் யாதென்றே
னென்ன லிரவி லெமைத்தெளிவா

னின்ற நினது பெயரென்றா
ருன்ன லுறுவீர் வெளிப்படவீ

துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
லின்ன லடைவா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

17

1789

சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத்

தேவர் நீரெங் கிருந்ததென்றே
னெமைக்கண் டளவின் மாதேநீ

யிருந்த தெனயா மிருந்ததென்றா
ரமைக்கு மொழியிங் கிதமென்றே

னாமுன் மொழியிங் கிதமன்றோ
விமைக்கு மிழையா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

18

1790.

நடங்கொள் பதத்தீர் திருவொற்றி

நங்கள் பெருமா னீரன்றோ
திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந்

தீரென் றேனின் னடுநோக்காக்
குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார்

குடம்யா தென்றே னஃதறிதற்
கிடங்கர் நடுநீக் கென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

19

1791.

சங்க மருவு மொற்றியுளீர்

சடைமே லிருந்த தென்னென்றேன்
மங்கை நினது முன்பருவ

மருவு முதனீத் திருந்ததென்றார்
கங்கை யிருந்த தேயென்றேன்

கமலை யனையாய் கழுக்கடையு
மெங்கை யிருந்த தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

20

1792.

துதிசே ரொற்றி வளர்தரும

துரையே நீர்முன் னாடலுறும்
பதியா தென்றே னம்பெயர்முற்

பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது

நிகழ்த்து மென்றே னீயிட்ட
தெதுவோ வதுகா ணென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

21

1793.

உடற்கச் சுயிரா மொற்றியுளீ

ருமது திருப்பேர் யாதென்றேன்
குடக்குச் சிவந்த பொழுதினைமுன்

கொண்ட வண்ண ராமென்றார்
விடைக்குக் கருத்தா வாநீர்தாம்

விளம்பன் மிகக்கற் றவரென்றே
னிடக்குப் புகன்றா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

22

1794.

மணங்கே தகைவான் செயுமொற்றி

வள்ளலிவரை வல்விரைவேன்
பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன்

பிணங்கா விடினு நென்னலென
வணங்கே நினக்கொன் றினிற்பாதி

யதிலோர் பாதி யாகுமிதற்
கிணங்கேஞ் சிறிது மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

23

1795.

ஒற்றி நகரா ரிவர்தமைநீ

ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்
மற்றுன் பருவத் தொருபங்கே

மடவா யென்றார் மறைவிடையீ
திற்றென் றறிதற் கரிதென்றே

னெம்மை யறிவா ரன்றியஃ
தெற்றென் றறிவா ரென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

24

1796.

கண்ணின் மணிபோ லிங்குநிற்குங்

கள்வ ரிவரூ ரொற்றியதாம்
பண்ணின் மொழியாய் நின்பாலோர்

பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
மண்ணின் மிசையோர் பறவையதா

வாழ்வாயென்றா ரென்னென்றே
னெண்ணி யறிநீ யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

25

1797.

சேடார் வளஞ்சூ ழொற்றிநகர்

செல்வப் பெருமா னிவர்தமைநா
னோடார் கரத்தீ ரெண்டோ ள்க

ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
கோடா கோடி முகநூறு

கோடா கோடிக் களமென்னே
யீடா யுடையா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

26

1798.

துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித்

தோன்றா லிங்கு நீர்வந்த
கருமஞ் சொலுமென் றேனிவண்யாங்

கடாதற் குன்பா லெம்முடைமைத்
தருமம் பெறக்கண் டாமென்றார்

தருவ லிருந்தா லென்றேனில்
லிருமந் தரமோ வென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

27

1799.

ஒருகை முகத்தோர்க் கையரெனு

மொற்றித் தேவ ரிவர்தமைநான்
வருகை யுவந்தீ ரென்றனைநீர்

மருவி யணைதல் வேண்டுமென்றேன்
றருகை யுடனே யகங்காரந்

தனையெம் மடியார் தமைமயக்கை
யிருகை வளைசிந் தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

28

1800.

திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ்

தேவ ரேயிங் கெதுவேண்டி
வருத்த மலர்க்கா லுறநடந்து

வந்தீ ரென்றேன் மாதேநீ
யருத்தந் தெளிந்தே நிருவாண

மாகவுன்ற னகத்தருட்க
ணிருத்த வடைந்தே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

29

1801.

வளஞ்சே ரொற்றி மாணிக்க

வண்ண ராகு மிவர்தமைநான்
குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண்

கோலச் சடையீ ரழகிதென்றேன்
களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண்

காண வோரைந் துனக்கழகீ
திளஞ்சேல் விழியா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

30

1802.

பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர்

பதிவே றுண்டோ நுமக்கென்றே
னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா

ருண்டோ நீண்டமலையென்றேன்
வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த

மலைகா ணதனின் மம்முதல்சென்
றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

31

1803

வயலா ரொற்றி வாணரிவர்

வந்தார் நின்றார் வாய்திறவார்
செயலார் விரல்கண் முடக்கியடி

சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார்
மயலா ருளத்தோ டென்னென்றேன்

மறித்தோர் விரலா லென்னுடைய
வியலார் வடிவிற் சுட்டுகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

32

1804.

பேர்வா ழொற்றி வாணரிவர்

பேசா மௌன யோகியராய்ச்
சீர்வாழ் நமது மனையினிடைச்

சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே
னோர்வா ழடியுங் குழலணியு

மொருநல் விரலாற் சுட்டியுந்தம்
மேர்வா ழொருகை பார்க்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

33

1805.

பெருஞ்சீ ரொற்றி வாணரிவர்

பேசா மௌனம் பிடித்திங்கே
விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு

மேலு நோக்கி விரைந்தார்யான்
வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை

வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

34

1806

வலந்தங் கியசீ ரொற்றிநகர்

வள்ள லிவர்தாம் மௌனமொடு
கலந்திங் கிருந்த வண்டசத்தைக்

காட்டி மூன்று விரனீட்டி
நலந்தங் குறப்பின் னடுமுடக்கி

நண்ணு மிந்த நகத்தொடுவா
யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

35

1807.

தேனார் பொழிலா ரொற்றியில்வாழ்

தேவ ரிவர்வாய் திறவாராய்
மானார் கரத்தோர் நகந்தெரித்து

வாளா நின்றார் நீளார்வந்
தானா ருளத்தோ டியாதென்றேன்

றங்கைத் தலத்திற் றலையையடி
யேனா டுறவே காட்டுகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

36

1808.

செச்சை யழகர் திருவொற்றித்

தேவ ரிவர்வாய் திறவாராய்
மெச்சு மொருகாற் கரந்தொட்டு

மீண்டு மிடற்றக் கரம்வைத்தார்
பிச்ச ரடிகேள் வேண்டுவது

பேசீ ரென்றேன் றமைக்காட்டி
யிச்சை யெனையுங் குறிக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

37

1809.

மன்றார் நிலையார் திருவொற்றி

வாண ரிவர்தா மௌனமொடு
நின்றா ரிருகை யொலியிசைத்தார்

நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார்
நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார்

நடித்தா ரியாவு மையமென்றே
னின்றா மரைக்கை யேந்துகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

38

1810.

வாரா விருந்தாய் வள்ளலிவர்

வந்தார் மௌன மொடுநின்றார்
நீரா ரெங்கே யிருப்பதென்றே

னீண்ட சடையைக் குறிப்பித்தா
ரூரா வைத்த தெதுவென்றே

னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
தேரார் கரத்தாற் சுட்டுகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

39

1811.

செங்கேழ் கங்கைச் சடையார்வாய்

திறவா ராக வீண்டடைந்தா
ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா

ணெங்கள் பெருமா னென்றேனென்
னங்கே ழருகி னகன்றுபோ

யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
யிங்கே நடந்து வருகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

40

1812.

கொடையா ரொற்றி வாணரிவர்

கூறா மௌன ராகிநின்றார்
தொடையா ரிதழி மதிச்சடையென்

துரையே விழைவே துமக்கென்றே
னுடையார் துன்னற் கந்தைதனை

யுற்று நோக்கி நகைசெய்தே
யிடையாக் கழுமுட் காட்டுகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

41

1813

பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய

புனித ரிவரூ ரொற்றியதா
முன்னைத் தவத்தா லியாங்காண

முன்னே நின்றார் முகமலர்ந்து
மின்னிற் பொலியுஞ் சடையீரென்

வேண்டு மென்றே னுணச்செய்யா
ளின்னச் சினங்கா ணென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

42

1814

வயலார் சோலை யெழிலொற்றி

வாண ராகு மிவர்தமைநான்
செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ்

சிரத்து முரத்துந் திகழ்கரத்தும்
வியலாய்க் கொண்ட தென்னென்றேன்

விளங்கும் பிநாக மவைமூன்று
மியலாற் காண்டி யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

43

1815.

பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர்

பூவுந் தியதென் விழியென்றே
னிதுவென் றறிநா மேறுகின்ற

தென்றா ரேறு கின்றதுதா
னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ

ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

44

1816.

இட்டங் களித்த தொற்றியுளீ

ரீண்டிவ் வேளை யெவனென்றேன்
சுட்டுஞ் சுதனே யென்றார்நான்

சுட்டி யறியச் சொலுமென்றேன்
பட்டுண் மருங்குற் பாவாய்நீ

பரித்த தன்றே பாரென்றே
யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

45

1817.

பாற்றக் கணத்தா ரிவர்காட்டுப்

பள்ளித் தலைவ ரொற்றியினின்
றாற்றப் பசித்து வந்தாரா

மன்ன மிடுமி னென்றுரைத்தேன்
சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ்

சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி
யேற்றுக் கிடந்தா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

46

1818.

குருகா ரொற்றி வாணர்பலி

கொள்ள வகையுண் டோ வென்றே
னொருகா லெடுத்தீண் டுரையென்றா

ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்
வருகா விரிப்பொன் னம்பலத்தே

வந்தாற் காட்டு கின்றாம்வீ
ழிருகா லுடையா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

47

1819.

வேலை ஞாலம் புகழொற்றி

விளங்குந் தேவ ரணிகின்ற
மாலை யாதென் றேனயன்மான்

மாலை யகற்று மாலையென்றார்
சோலை மலரன் றேயென்றேன்

சோலை யேநாந் தொடுப்பதென
வேல முறுவல் புரிகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

48

1820.

உயிரு ளுறைவீர் திருவொற்றி

யுடையீர் நீரென் மேற்பிடித்த
வயிர மதனை விடுமென்றேன்

வயிரி யலநீ மாதேயாஞ்
செயிர தகற்றுன் முலையிடங்கொள்

செல்வ னலகாண் டெளியென்றே
யியல்கொண் முறுவல் புரிகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

49

1821.

தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்

தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
யெண்கார் முகமாப் பொன்னென்றே

னிடையிட் டறித லரிதென்றார்
மண்கா தலிக்கு மாடென்றேன்

மதிக்குங் கணைவி லன்றென்றே
யெண்கா ணகைசெய் தருள்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

50

1822.

செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர்

திருமான் முதன்முத் தேவர்கட்கு
மைகா ணீரென் றேனிதன்மே

லணங்கே நீயே ழடைதி யென்றார்
மெய்கா ணதுதா னென்னென்றேன்

விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே
யெய்கா ணுறவே நகைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

51

1823.

விண்டு வணங்கு மொற்றியுளீர்

மென்பூ விருந்தும் வன்பூவில்
வண்டு விழுந்த தென்றேனெம்

மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன்

றோகாய் நாமே தொண்டனென
வெண்டங் குறவே நகைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

52

1824.

மட்டார் மலர்க்கா வொற்றியுளீர்

மதிக்குங் கலைமேல் விழுமென்றே
னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா

மிசைத்தே மென்றா ரெட்டாக
வுட்டா வுறுமவ் வெழுத்தறிய

வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க்
கிட்டார் நாம மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

53

1825.

ஒற்றி நகரீர் மனவசிதா

னுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
பற்றி யிறுதி தொடங்கியது

பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
மற்றி துணர்கி லேனென்றேன்

வருந்தே லுள்ள வன்மையெலா
மெற்றி லுணர்தி யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

54

1826.

வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர்

வருந்தா தணைவே னோவென்றே
னூன்றோ யுடற்கென் றார்தெரிய

வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
சான்றோ ருமது மரபோர்ந்து

தரித்த பெயர்க்குத் தகாதென்றே
யேன்றோர் மொழிதந் தருள்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

55

1827.

தீது தவிர்க்கு மொற்றியுளீர்

செல்ல லறுப்ப தென்றென்றே
னீது நமக்குத் தெரிந்ததென்றா

ரிறையா மோவிங் கிதுவென்றே
னோது மடியார் மனக்கங்கு

லோட்டு நாமே யுணரன்றி
யேது மிறையன் றென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

56

1828.

ஒண்கை மழுவோ டனலுடையீ

ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
வண்கை யொருமை நாதரென்றேன்

வண்கைப் பன்மை நாதரென்றா
ரெண்க ணடங்கா வதிசயங்கா

ணென்றேன் பொருளன் றிவையதற்கென்
றெண்சொன் மணிதந் தருள்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

57

1829.

ஒருவ ரெனவா ழொற்றியுளீ

ருமக்கம் மனையுண் டோ வென்றே
னிருவ ரொருபே ருடையவர்கா

ணென்றா ரென்னென்றே னெம்பேர்
மருவு மீறற் றயலகரம்

வயங்கு மிகர மானதென்றே
யிருவு மொழிதந் தருள்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

58

1830.

பேரா ரொற்றி யீரும்மைப்

பெற்றா ரெவரென் றேனவர்தம்
மேரார் பெயரின் முன்பினிரண்

டிரண்டா மெழுத்தா ரென்றாரென்
னேரா யுரைப்பீ ரென்றேனீ

நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென்
றேரா யுரைசெய் தருள்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

59

1831.

தளிநான் மறையீ ரொற்றிநகர்

தழைக்க வாழ்வீர் தனிஞான
வொளிநா வரசை யைந்தெழுத்தா

லுவரி கடத்தி னீரென்றேன்
களிநா வலனை யீரெழுத்தாற்

கடலின் வீழ்த்தி னேமென்றே
யெளியேற் குவப்பின் மொழிகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

60

1832.

ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ

ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந்

தருவே மென்றா ரம்மமிகத்
தேமூன் றினநும் மொழியென்றேன்

செவ்வா யுறுமுன் னகையென்றே
யேமூன் றுறவே நகைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

61

1833.

மன்னி விளங்கு மொற்றியுளீர்

மடவா ரிரக்கும் வகையதுதான்
முன்னி லொருதா வாமென்றேன்

முத்தா வெனலே முறையென்றா
ரென்னி லிதுதா னையமென்றே

னெமக்குந் தெரியு மெனத்திருவா
யின்ன லமுத முகுக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

62

1834.

வளஞ்சே ரொற்றி யீரெனக்கு

மாலை யணிவீ ரோவென்றேன்
குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின்

கோல மனைக்க ணாமகிழ்வா
லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின்

னுளத்தி லணிந்தே முணரென்றே
யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

63

1835.

வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர்

விளங்கு மலரே விளம்புநெடு மாற்றா ரென்றே னிலைகாணெம்

மாலை முடிமேற் பாரென்றார்
சாற்றாச் சலமே யீதென்றேன்

சடையின் முடிமே லன்றென்றே
யேற்றா தரவான் மொழிகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

64

1836.

புயப்பா லொற்றி யீரச்சம்

போமோ வென்றே னாமென்றார்
வயப்பா வலருக் கிறையானீர்

வஞ்சிப் பாவிங் குரைத்ததென்றேன்
வியப்பா நகையப் பாவெனும்பா

வெண்பா கலிப்பா வுரைத்துமென்றே
யியற்பான் மொழிதந் தருள்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

65

1837.

1837. தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர்

சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
றிண்ணம் பலமேல் வருங்கையிற்

சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன்

மடவா யுனது மொழிக்கென்றே
யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

66

1838.

உகஞ்சே ரொற்றி யூருடையீ

ரொருமா தவரோ நீரென்றேன்
முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய்

மும்மா தவர்நா மென்றுரைத்தார்
சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன்

றோகா யுனது மொழிக்கென்றே
யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

67

1839.

ஊரா மொற்றி யீராசை

யுடையே னென்றே னெமக்கலது
நேரா வழக்குத் தொடுக்கின்றாய்

நினக்கே தென்றார் நீரெனக்குச்
சேரா வணமீ தென்றேன்முன்

சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
யாரார் மடவா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

68

1840.

வருத்தந் தவிரீ ரொற்றியுளீர்

மனத்தி லகாத முண்டென்றே
னிருத்தந் தொழுநம் மடியவரை

நினைக்கின் றோரைக் காணினது
வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க

முற்றே மற்ற வெல்லையகன்
றிருத்த லறியா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

69

1841.

மைய லகற்றீ ரொற்றியுளீர்

வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச்

செவ்வ னுரைத்தா லிருவாவென்
றுய்ய வுரைப்பே மென்றார்நும்

முரையென் னுரையென் றேனிங்கே
யெய்யுன் னுரையை யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

70

1842.

தாவென் றருளு மொற்றியுளீர்

தமியேன் மோக தாகமற
வாவென் றருள்வீ ரென்றேனவ்

வாவின் பின்னர் வருமெழுத்தை
மேவென் றதனிற் சேர்த்ததிங்கே

மேவி னன்றோ வாவென்பே
னேவென் றிடுகண் ணென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

71

1843.

என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ

ரென்னை யணைவா னினைவீரேற்
பொன்மேல் வெள்ளி யாமென்றேன்

பொன்மேற் பச்சை யாங்கதன்மே
லன்மேற் குழலாய் சேயதன்மே

லலவ னதன்மேன் ஞாயிறஃ
தின்மே லொன்றின் றென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

72

1844.

வயலா ரொற்றி மேவுபிடி

வாதர் நாம மியாதென்றேன்
மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர்

வந்த விளைய நாமமென்றார்
செயலார் கால மறிந்தென்னைச்

சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
கியலா ரயலா ரென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

73

1845.

நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர்

நாகம் வாங்க லென்னென்றேன்
காலாங் கிரண்டிற் கட்டவென்றார்

கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
வேலார் விழிமாப் புலித்தோலும்

வேழத் தோலும் வல்லேமென்
றேலா வமுத முகுக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

74

1846.

முடியா வளஞ்சூ ழொற்றியுளீர்

முடிமே லிருந்த தென்னென்றேன்
கடியா வுள்ளங் கையின்முதலைக்

கடிந்த தென்றார் கமலமென
வடிவார் கரத்தி லென்னென்றேன்

வரைந்த வதனீ றகன்றதென்றே
யிடியா நயத்தி னகைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

75

1847.

ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக

ருடையீர் யார்க்கு முணர்வரியீ
ரென்றும் பெரியீர் நீர்வருதற்

கென்ன நிமித்த மென்றேன்யான்
றுன்றும் விசும்பே காணென்றார்

சூதா முமது சொல்லென்றே
னின்றுன் முலைதா னென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

76

1848.

வானார் வணங்கு மொற்றியுளீர்

மதிவாழ் சடையீர் மரபிடைநீர்
தானா ரென்றே னனிப்பள்ளித்

தலைவ ரெனவே சாற்றினர்கா
ணானா லொற்றி யிருமென்றே

னாண்டே யிருந்து வந்தனஞ்சே
யீனா தவணீ யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

77

1849.

பற்று முடித்தோர் புகழொற்றிப்

பதியீர் நுமது பசுவினிடைக்
கற்று முடித்த தென்னிருகைக்

கன்று முழுதுங் காணென்றேன்
மற்று முடித்த மாலையொடுன்

மருங்குற் கலையுங் கற்றுமுடிந்
திற்று முடித்த தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

78

1850.

வானங் கொடுப்பீர் திருவொற்றி

வாழ்வீ ரன்று வந்தெனது
மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன்

மாநன் றிஃதுன் மானன்றே
யூனங் கலிக்குந் தவர்விட்டா

ருலக மறியுங் கேட்டறிந்தே
யீனந் தவிர்ப்பா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

79

1851.

ஞானம் படைத்த யோகியர்வாழ்

நகரா மொற்றி நலத்தீர்மா
லேனம் புடைத்தீ ரணையென்பீ

ரென்னை யுவந்திப் பொழுதென்றே
னூனந் தவிர்த்த மலர்வாயி

னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே
மீனம் புகன்றா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

80

1852.

கருமை யளவும் பொழிலொற்றிக்

கணத்தீர் முனிவர் கலக்கமறப்
பெருமை நடத்தி னீரென்றேன்

பிள்ளை நடத்தி னானென்றார்
தரும மலவிவ் விடையென்றேன்

றரும விடையு முண்டென்பா
லிருமை விழியா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

81

1853.

ஒசிய விடுகு மிடையாரை

யொற்றி யிருந்தே மயக்குகின்ற
வசியர் மிகநீ ரென்றேனெம்

மகன்கா ணென்றார் வளர்காமப்
பசிய தொடையுற் றேனென்றேன்

பட்ட மவிழ்த்துக் காட்டுதியே
லிசையக் காண்பே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

82

1854.

கலையா ளுடையீ ரொற்றிநின்றீர்

காம மளித்தீர் களித்தணைவீர்
மலையா ளுமது மனையென்றேன்

மருவின் மலையா ளல்லளென்றா
ரலையாண் மற்றை யவளென்றே

னறியி னலையா ளல்லளுனை
யிலையா மணைவ தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

83

1855.

சீலம் படைத்தீர் திருவொற்றித்

தியாக ரேநீர் திண்மையிலோர்
சூலம் படைத்தீ ரென்னென்றேன்

றோன்று முலகுய்ந் திடவென்றா
ராலங் களத்தீ ரென்றேனீ

யாலம் வயிற்றா யன்றோநல்
லேலங் குழலா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

84

1856.

ஞால நிகழும் புகழொற்றி

நடத்தீர் நீர்தா னாட்டமுறும்
பால ரலவோ வென்றேனைம்

பாலர் பாலைப் பருவத்திற்
சால மயல்கொண் டிடவருமோர்

தனிமைப் பால ரியாமென்றே
யேல முறுவல் புரிகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

85

1857.

வண்மை தருவீ ரொற்றிநகர்

வாழ்வீ ரென்னை மருவீரென்
னுண்மை யறியீ ரென்றேன்யா

முணர்ந்தே யகல நின்றதென்றார்
கண்மை யிலரோ நீரென்றேன்

களமை யுடையேங் கண்மையுற
லெண்மை நீயே யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

86

1858.

தவந்தங் கியசீ ரொற்றிநகர்

தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
ருவந்தென் மீதிற் றேவர்திரு

வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற்

றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

87

1859.

ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ

ரொற்றி யுடையீ ரும்முடைய
பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம்

பூவை மிலைந்தீ ரென்னென்றே
னின்னா ரளகத் தணங்கேநீ

நெட்டி மிலைந்தா யிதிலதுகீ
ழென்னா ருலக ரென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

88

1860

கனிமா னிதழி முலைச்சுவடு

களித்தீ ரொற்றிக் காதலர்நீர்
தனிமா னேந்தி யாமென்றேன்

றடங்கண் மடந்தாய் நின்முகமும்
பனிமா னேந்தி யாமென்றார்

பரைமான் மருவி னீரென்றே
னினிமான் மருவி யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

89

1861

சிறியேன் றவமோ வெனைப்பெற்றார்

செய்த தவமோ வீண்டடைந்தீ
ரறியே னொற்றி யடிகேளிங்

கடைந்த வாறென் னினைத்தென்றேன்
பொறிநே ருனது பொற்கலையைப்

பூவார் கலையாக் குறநினைத்தே
யெறிவேல் விழியா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

90

1862

அளிக்குங் குணத்தீர் திருவொற்றி

யழக ரேநீ ரணிவேணி
வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான்

விளியா விளம்பத் திரமென்றேன்
விளிக்கு மிளம்பத் திரமுமுடி

மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ
யெளிக்கொண் டுரையே லென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

91

1863

வாசங் கமழு மலர்ப்பூங்கா

வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
நேசங் குறிப்ப தென்னென்றே

னீயோ நாமோ வுரையென்றார்
தேசம் புகழ்வீர் யானென்றேன்

றிகழ்தைத் திரிதித் திரியேயா
மேசங் குறிப்ப தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

92

1864

பேசுங் கமலப் பெண்புகழும்

பெண்மை யுடைய பெண்களெலாங்
கூசும் படியிப் படியொற்றிக்

கோவே வந்த தென்னென்றேன்
மாசுந் தரிநீ யிப்படிக்கு

மயங்கும் படிக்கு மாதருனை
யேசும் படிக்கு மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

93

1865

கொடியா லெயில்சூ ழொற்றியிடங்

கொண்டீ ரடிகள் குருவுருவாம்
படியா லடியி லிருந்தமறைப்

பண்பை யுரைப்பீ ரென்றேனின்
மடியா லடியி லிருந்தமறை

மாண்பை வகுத்தா யெனிலதுநா
மிடியா துரைப்பே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

94

1866

என்னே ருளத்தி னமர்ந்தீர்நல்

லெழிலா ரொற்றி யிடையிருந்தீ
ரென்னே யடிகள் பலியேற்ற

லேழ்மை யுடையீர் போலுமென்றே
னின்னே கடலி னிடைநீபத்

தேழ்மை யுடையாய் போலுமென
வின்னே யங்கொண் டுரைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

95

1867

நல்லார் மதிக்கு மொற்றியுளீர்

நண்ணு முயிர்க டொறுநின்றீ
ரெல்லா மறிவீ ரென்னுடைய

விச்சை யறியீர் போலுமென்றேன்
வல்லா யறிவின் மட்டொன்று

மனமட் டொன்று வாய்மட்டொன்
றெல்லா மறிந்தே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

96

1868

மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம்

வல்லீ ரொற்றி மாநகரீர்
பொறிசே ருமது புகழ்பலவிற்

பொருந்துங் குணமே வேண்டுமென்றேன்
குறிநே ரெமது விற்குணத்தின்

குணத்தா யதனால் வேண்டுற்றா
யெறிவேல் விழியா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

97

1869

ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ

ரூர்தான் வேறுண் டோ வென்றே
னோரூர் வழக்கிற் கரியையிறை

யுன்னி வினவு மூரொன்றோ
பேரூர் தினையூர் பெரும்புலியூர்

பிடவூர் கடவூர் முதலாக
வேரூ ரனந்த மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

98

1870

விழியொண் ணுதலீ ரொற்றியுளீர்

வேதம் பிறவி யிலரென்றே
மொழியு நுமைத்தான் வேயீன்ற

முத்த ரெனலிங் கென்னென்றேன்
பழியன் றணங்கே யவ்வேய்க்குப்

படுமுத் தொருவித் தன்றதனா
லிழியும் பிறப்போ வென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

99

1871

விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர்

விளங்குந் தாம மிகுவாசத்
தண்ணார் மலர்வே தனையொழிக்கத்

தருதல் வேண்டு மெனக்கென்றேன்
பண்ணார் மொழியா யுபகாரம்

பண்ணாப் பகைவ ரேனுமிதை
யெண்ணா ரெண்ணா ரென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

100

1872

செம்பான் மொழியார் முன்னரெனைச்

சேர்வீரென்கோ திருவொற்றி
யம்பார் சடையீ ருமதாட

லறியே னருளல் வேண்டுமென்றேன்
வம்பார் முலையாய் காட்டுகின்றா

மன்னும் பொன்னா ரம்பலத்தே
யெம்பால் வாவென் றுரைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

101

1873

மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி

வைத்தீ ருண்டோ மனையென்றேன்
கைக்க ணிறைந்த தனத்தினுந்தங்

கண்ணி னிறைந்த கணவனையே
துய்க்கு மடவார் விழைவரெனச்

சொல்லும் வழக்கீ தறிந்திலையோ
வெய்க்கு மிடையா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

102

1874

ஆறு முகத்தார் தமையீன்ற

வைந்து முகத்தா ரிவர்தமைநான்
மாறு முகத்தார் போலொற்றி

வைத்தீர் பதியை யென்னென்றே
னாறு மலர்ப்பூங் குழனீயோ

நாமோ வைத்த துன்மொழிமன்
றேறு மொழியன் றென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

103

1875

வள்ளன் மதியோர் புகழொற்றி

வள்ளா லுமது மணிச்சடையின்
வெள்ள மகண்மேற் பிள்ளைமதி

விளங்க லழகீ தென்றேனின்
னுள்ள முகத்தும் பிள்ளைமதி

யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி
யெள்ள லுடையா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

104

1876

உள்ளத் தனையே போலன்ப

ருவக்குந் திருவா ழொற்றியுளீர்
கள்ளத் தவர்போ லிவணிற்குங்

கரும மென்னீ ரின்றென்றேன்
மெள்ளக் கரவு செயவோநாம்

வேட மெடுத்தோ நின்சொனினை
யெள்ளப் புரிந்த தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

105

1877

அச்சை யடுக்குந் திருவொற்றி

யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்
விச்சை யடுக்கும் படிநம்பான்

மேவினோர்க்கிவ் வகில நடைப்
பிச்சை யெடுப்பே மலதுன்போற்

பிச்சை கொடுப்பே மலவென்றே
யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

106

1878

அள்ளற் பழனத் திருவொற்றி

யழக ரிவர்தம் முகநோக்கி
வெள்ளச் சடையீ ருள்ளத்தே

விருப்பே துரைத்தாற் றருவலென்றேன்
கொள்ளக் கிடையா வலர்குமுதங்

கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு
மெள்ளத் தனைதா வென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

107

1879

விஞ்சு நெறியீ ரொற்றியுளீர்

வியந்தீர் வியப்பென் னிவணென்றேன்
கஞ்ச மிரண்டு நமையங்கே

கண்டு குவிந்த விரிந்திங்கே
வஞ்ச விருதா மரைமுகையை

மறைக்கின் றனநின் பால்வியந்தா
மெஞ்ச லறநா மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

108

1880

அளியா ரொற்றி யுடையாருக்

கன்ன நிரம்ப விடுமென்றே
னளியார் குழலாய் பிடியன்ன

மளித்தாற் போது மாங்கதுநின்
னொளியார் சிலம்பு சூழ்கமலத்

துளதாற் கடகஞ் சூழ்கமலத்
தெளியார்க் கிடுநீ யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

109

1881

விச்சைப் பெருமா னெனுமொற்றி

விடங்கப் பெருமா னீர்முன்னம்
பிச்சைப் பெருமா னின்றுமணப்

பிள்ளைப் பெருமா னாமென்றே
னச்சைப் பெறுநீ யம்மணப்பெண்

ணாகி யிடையி லையங்கொள்
ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

110

1882.

படையம் புயத்தோன் புகழொற்றிப்

பதியீ ரரவப் பணிசுமந்தீர்
புடையம் புயத்தி லென்றேன்செம்

பொன்னே கொடையம் புயத்தினுநன்
னடையம் புயத்துஞ் சுமந்தனைநீ

நானா வரவப் பணிமற்று
மிடையம் பகத்து மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

111

1883

கூம்பா வொற்றி யூருடையீர்

கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே
னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள்

ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப்
பாம்பா வதுவே கொடும்பாம்பெம்

பணிப்பாம் பதுபோற் பாம்பலவென்
றேம்பா நிற்ப விசைக்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

112

1884.

புயல்சூ ழொற்றி யுடையீரென்

புடையென் குறித்தோ போந்ததென்றேன்
கயல்சூழ் விழியாய் தனத்தவரைக்

காண லிரப்போ ரெதற்கென்றார்
மயல்சூழ் தனமிங் கிலையென்றேன்

மறையா தெதிர்வைத் திலையென்ற
லியல்சூ ழறமன் றென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

113

1885.

நடவாழ் வொற்றி யுடையீர்நீர்

நாக மணிந்த தழகென்றேன்
மடவா யதுநீர் நாகமென

மதியே லயன்மான் மனனடுங்க
விடவா யுமிழும் படநாகம்

வேண்டிற்காண்டி யென்றேயென்
னிடவா யருகே வருகின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

114

1886.

கோடா வொற்றி யுடையீர்நுங்

குலந்தான் யாதோ கூறுமென்றேன்
வீடார் பிரம குலந்தேவர்

வேந்தர் குலநல் வினைவசியப்
பாடார் குலமோர் சக்கரத்தான்

பள்ளிக் குலமெல் லாமுடையே
மேடார் குழலா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

115

1887.

நலமா மொற்றி யுடையீர்நீர்

நல்ல வழக ரானாலுங்
குலமே துமக்கு மாலையிடக்

கூடா தென்றே னின்குலம்போ
லுலகோ துறுநங் குலமொன்றோ

வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
கிலகா நின்ற தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

116

1888.

> மதிலொற் றியினீர் நும்மனையாண்

மலையின் குலநும் மைந்தருளோர்
புதல்வர்க் கானைப் பெருங்குலமோர்

புதல்வர்க் கிசையம் புலிக்குலமா
மெதிரற் றருள்வீர் நுங்குலமிங்

கெதுவோ வென்றேன் மனைவியருள்
ளிதுமற் றொருத்திக் கென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

117

1889.

தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர்

திகழுந் தகரக் காற்குலத்தைப்
பூமா னிலத்தில் விழைந்துற்றீர்

புதுமை யிஃதும் புகழென்றே
னாமா குலத்தி லரைக்குலத்துள்

ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண்
டேமாந் தனைநீ யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

118

1890.

அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ

ரகில மறிய மன்றகத்தே
மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர்

வனப்பா மென்றே னுலகறியத்
தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ

தானுந் தகரத் தலைகொண்டா
யினஞ்சூ ழழகா மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

119

1891.

பங்கே ருகப்பூம் பணையொற்றிப்

பதியீர் நடுவம் பரமென்னு
மங்கே யாட்டுக் காலெடுத்தீ

ரழகென் றேனவ் வம்பரமே
லிங்கே யாட்டுத் தோலெடுத்தா

யாமொன் றிரண்டு நீயென்றா
லெங்கே நின்சொல் லென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

120

1892.

மாணப் புகழ்சே ரொற்றியுளீர்

மன்றார் தகர வித்தைதனைக்
காணற் கினிநான் செயலென்னே

கருதி யுரைத்தல் வேண்டுமென்றேன்
வேணச் சுறுமெல் லியலேயாம்

விளம்பு மொழியவ் வித்தையுனக்
கேணப் புகலு மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

121

1893.

நல்லா ரொற்றி யுடையீர்யா

னடக்கோ வெறும்பூ வணையணைய
வல்லா லவணும் முடன்வருகோ

வணையா தவலத் துயர்துய்க்கோ
செல்லா வென்சொன் நடவாதோ

திருக்கூத் தெதுவோ வெனவிடைக
ளெல்லா நடவா தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

122

1894.

ஆட்டுத் தலைவர் நீரொற்றி

யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ
ராட்டுத் தலைதந் தீரென்றே

னன்றா லறவோ ரறம்புகல
வாட்டுத் தலைமுன் கொண்டதனா

லஃதே பின்ன ரளித்தாமென்
றீட்டுத் தரமீந் தருள்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

123

1895.

ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா

ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க்

குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார்

புரத்தே மதியந் தேய்கின்ற
தெற்றைத் தினத்து மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

124

1896.

இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ

ரென்ன சாதி யினரென்றேன்
தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண்

சாதி நீபெண் சாதியென்றார்
விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான்

வியப்பா மென்றே னயப்பானின்
னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

125

1897.

உடையா ரென்பா ருமையொற்றி

யுடையீர் பணந்தா னுடையீரோ
நடையா யேற்கின் றீரென்றே

னங்காய் நின்போ லொருபணத்தைக்
கடையா ரெனக்கீழ் வைத்தருமை

காட்டேம் பணிகொள் பணங்கோடி
யிடையா துடையே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

126

1898.

என்னா ருயிர்க்குப் பெருந்துணையா

மெங்கள் பெருமா னீரிருக்கு
நன்னா டொற்றி யன்றோதா

னவில வேண்டு மென்றுரைத்தேன்
முன்னா ளொற்றி யெனினுமது

மொழித லழகோ தாழ்தலுயர்
விந்நா னிலத்துண் டென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

127

1899.

பெருந்தா ரணியோர் புகழொற்றிப்

பெருமா னிவர்தம் முகநோக்கி
யருந்தா வமுத மனையீரிங்

கடுத்த பரிசே தறையுமென்றேன்
வருந்தா திங்கே யருந்தமுத

மனையா ளாக வாழ்வினொடு
மிருந்தா யடைந்தே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

128

1900.

செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர்

திகழாக் கரித்தோ லுடுத்தீரே
யும்மை விழைந்த மடவார்க

ளுடுக்கக் கலையுண் டோ வென்றே
னெம்மை யறியா யொருகலையோ

விரண்டோ வனந்தங் கலைமெய்யி
லிம்மை யுடையே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

129

1901.

கற்றைச் சடையீர் திருவொற்றிக்

காவ லுடையீ ரீங்கடைந்தீ
ரிற்றைப் பகலே நன்றென்றே

னிற்றை யிரவே நன்றெமக்குப்
பொற்றைத் தனத்தாய் கையமுதம்

பொழியா தலர்வாய்ப் புத்தமுத
மிற்றைக் களித்தா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

130

1902.

கற்றீ ரொற்றீர் முன்பொருவான்

காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை
விற்றீ ரின்றென் வளைகொண்டீர்

விற்கத் துணிந்தீ ரோவென்றேன்
மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர்

மனையின் வளையைக் கவர்ந்துகளத்
திற்றீ தணிந்தா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

131

1903.

உடுக்கும் புகழா ரொற்றியுளா

ருடைதா வென்றார் திகையெட்டு
முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ

வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது
முடுக்கும் பெரிய வரைச்சிறிய

வொருமுன் றானை யான்மூடி
யெடுக்குந் திறங்கண் டென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

132

1904.

காவா யொற்றிப் பதியுடையீர்

கல்லா னைக்குக் கரும்பன்று
தேவாய் மதுரை யிடத்தளித்த

சித்த ரலவோ நீரென்றேன்
பாவா யிருகல் லானைக்குப்

பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ
யீவா யிதுசித் தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

133

1905.

ஊட்டுந் திருவா ழொற்றியுளீ

ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத்
தாட்டுந் திறத்தீர் நீரென்றே

னணங்கே யிருசெப் பிடையாட்டுந்
தீட்டும் புகழன் றியுமுலகைச்

சிறிதோர் செப்பி லாட்டுகின்றா
யீட்டுந் திறத்தா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

134

1906.

கந்த வனஞ்சூ ழொற்றியுளீர்

கண்மூன் றுடையீர் வியப்பென்றேன்
வந்த வெமைத்தான் பிரிபோது

மற்றை யவரைக் காண்போதுஞ்
சந்த மிகுங்கண் ணிருமூன்றுந்

தகுநான் கொன்றுந் தானடைந்தா
யிந்த வியப்பென் னென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

135

19070.

ஆழி விடையீர் திருவொற்றி

யமர்ந்தீ ரிருவர்க் ககமகிழ்வான்
வீழி யதனிற் படிக்காசு

வேண்டி யளித்தீ ராமென்றேன்
வீழி யதனிற் படிக்காசு

வேண்டா தளித்தா யளவொன்றை
யேழி லகற்றி யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

136

1908.

உற்ற விடத்தே பெருந்துணையா

மொற்றிப் பெருமா னும்புகழைக்
கற்ற விடத்தே முக்கனியுங்

கரும்பு மமுதுங் கயவாவோ
மற்ற விடச்சீ ரென்னென்றேன்

மற்றை யுபய விடமுமுத
லெற்ற விடமே யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

137

1909.

யான்செய் தவத்தின் பெரும்பயனே

யென்னா ரமுதே யென்றுணையே
வான்செ யரசே திருவொற்றி

வள்ளால் வந்த தென்னென்றேன்
மான்செய் விழிப்பெண் ணேநீயாண்

வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
தேன்கண் டிடவே யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

138

1910.

கருணைக் கடலே யென்னிரண்டு

கண்ணே முக்கட் கரும்பேசெவ்
வருணப் பொருப்பே வளரொற்றி

வள்ளன் மணியே மகிழ்ந்தணையத்
தருணப் பருவ மிஃதென்றேன்

றவிரன் றெனக்காட் டியதுன்ற
னிருணச் சளக மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

139

1911

காவிக் களங்கொள் கனியேயென்

கண்ணுண் மணியே யணியேயென்
னாவித் துணையே திருவொற்றி

யரசே யடைந்த தென்னென்றேன்
பூவிற் பொலியுங் குழலாய்நீ

பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன்
னீவைக் கருதி யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

140

1912.

கண்ணும் மனமுங் களிக்குமெழிற்

கண்மூன் றுடையீர் கலையுடையீர்
நண்ணுந் திருவா ழொற்றியுளீர்

நடஞ்செய் வல்லீர் நீரென்றேன்
வண்ண முடையாய் நின்றனைப்போன்

மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ
வெண்ண வியப்பா மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

141

1913.

தாங்கும் விடைமே லழகீரென்

றன்னைக் கலந்துந் திருவொற்றி
யோங்குந் தளியி லொளித்தீர்நீ

ரொளிப்பில் வல்ல ராமென்றேன்
வாங்கு நுதலாய் நீயுமெனை

மருவிக் கலந்து மலர்த்தளியி
லீங்கின் றொளித்தா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

142

1914.

அம்மை யடுத்த திருமேனி

யழகீ ரொற்றி யணிநகரீ
ரும்மை யடுத்தோர் மிகவாட்ட

முறுத லழகோ வென்றுரைத்தேன்
நம்மை யடுத்தாய் நமையடுத்தோர்

நம்போ லுறுவ ரன்றெனிலே
தெம்மை யடுத்த தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

143

1915.

உண்கண் மகிழ்வா லளிமிழற்று

மொற்றி நகரீ ரொருமூன்று
கண்க ளுடையீ ரென்காதல்

கண்டு மிரங்கீ ரென்னென்றேன்
பண்கொண் மொழியாய் நின்காதல்

பன்னாண் சுவைசெய் பழம்போலு
மெண்கொண் டிருந்த தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

144

1916.

வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர்

வளஞ்சே ரொற்றி மாநகரீர்
குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக்

கொண்டீர் கொள்கை யென்னென்றே
னணங்கே யொருபா லன்றிநின்போ

லைம்பா லிருள்கொண் டிடச்சற்று
மிணங்கே மிணங்கே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

145

1917.

கரும்பி லினியீ ரென்னிரண்டு

கண்க ளனையீர் கறைமிடற்றீர்
பெரும்பை யணியீர் திருவொற்றிப்

பெரியீ ரெதுநும் பெயரென்றே
னரும்பண் முலையாய் பிறர்கேட்க

வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ
ரிரும்பொ னிலையே யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

146

1918.

நிலையைத் தவறார் தொழுமொற்றி

நிமலப் பெருமானீர்முன்ன
மலையைச் சிலையாக் கொண்டீர்நும்

மாவல் லபமற் புதமென்றேன்
வலையத் தறியாச் சிறுவர்களு

மலையைச் சிலையாக் கொள்வர்களீ
திலையற் புதந்தா னென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

147

1919.

உதயச் சுடரே யனையீர்நல்

லொற்றி யுடையீ ரென்னுடைய
விதயத் தமர்ந்தீ ரென்னேயென்

னெண்ண மறியீ ரோவென்றேன்
சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ

துறந்து வெளிப்பட் டெதிரடைந்தா
மிதையுற் றறிநீ யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

148

1920.

புரக்குங் குணத்தீர் திருவொற்றிப்

புனித ரேநீர் போர்க்களிற்றை
யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ

ருள்ளத் திரக்க மென்னென்றேன்
கரக்கு மிடையாய் நீகளிற்றின்

கன்றைக் கலக்கம் புரிந்தனைநின்
னிரக்க மிதுவோ வென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

149

1921.

பதங்கூ றொற்றிப் பதியீர்நீர்

பசுவி லேறும் பரிசதுதான்
விதங்கூ றறத்தின் விதிதானோ

விலக்கோ விளம்பல் வேண்டுமென்றே
னிதங்கூ றிடுநற் பசுங்கன்றை

நீயு மேறி யிடுகின்றா
யிதங்கூ றிடுக வென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

150

1922.

யோக முடையார் புகழொற்றி

யூரிற் பரம யோகியராந்
தாக முடையா ரிவர்தமக்குத்

தண்ணீர் தரநின் றனையழைத்தேன்
போக முடையாய் புறத்தண்ணீர்

புரிந்து விரும்பா மகத்தண்ணீ
ரீக மகிழ்வி னென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

151

1923.

வளநீ ரொற்றி வாணரிவர்

வந்தார் நின்றார் மாதேநா
முளநீர்த் தாக மாற்றுறுநீ

ருதவ வேண்டு மென்றார்நான்
குளநீ ரொன்றே யுளதென்றேன்

கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
விளநீர் தருக வென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

152

1924.

மெய்ந்நீ ரொற்றி வாணரிவர்

வெம்மை யுளநீர் வேண்டுமென்றா
ரந்நீ ரிலைநீர் தண்ணீர்தா

னருந்தி லாகா தோவென்றேன்
முந்நீர் தனையை யனையீரிம்

முதுநீ ருண்டு தலைக்கேறிற்
றிந்நீர் காண்டி யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

153

1925

சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர்

சிறிதாம் பஞ்ச காலத்துங்
கோலஞ் சார்ந்து பிச்சைகொளக்

குறித்து வருவீ ரென்னென்றேன்
காலம் போகும் வார்த்தைநிற்குங்

கண்டா யிதுசொற் கடனாமோ
வேலங் குழலா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

154

1926

ஊற்றார் சடையீ ரொற்றியுளீ

ரூரூ ரிரக்கத் துணிவுற்றீர்
நீற்றால் விளங்குந் திருமேனி

நேர்ந்திங் கிளைத்தீர் நீரென்றேன்
சோற்றா லிளைத்தே மன்றுமது

சொல்லா லிளைத்தே மின்றினிநா
மேற்றா லிகழ்வே யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

155

1927.

நீரை விழுங்குஞ் சடையுடையீ

ருளது நுமக்கு நீரூருந்
தேரை விழுங்கும் பசுவென்றேன்

செறிநின் கலைக்கு ளொன்றுளது
காரை விழுங்கு மெமதுபசுக்

கன்றின் றேரை நீர்த்தேரை
யீர விழுங்கு மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

156

1928.

பொன்னேர் மணிமன் றுடையீர்நீர்

புரிந்த தெதுவெம் புடையென்றே
னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென்

றாரென் னென்றே னியம்புதுமேன்
மின்னே நினது நடைப்பகையா

மிருகம் பறவை தமைக்குறிக்கு
மென்னே யுரைப்ப தென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

157

1929.

அடையார் புரஞ்செற் றம்பலத்தே

யாடு மழகீ ரெண்பதிற்றுக்
கடையா முடலின் றலைகொண்டீர்

கரமொன் றினிலற் புதமென்றே
னுடையாத் தலைமேற் றலையாக

வுன்கை யீரைஞ் ஞூறுகொண்ட
திடையா வளைக்கே யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

158

1930.

தேவர்க் கரிய வானந்தத்

திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
மேவக் குகுகு குகுகுவணி

வேணி யுடையீ ராமென்றேன்
தாவக் குகுகு குகுகுகுகுத்

தாமே யைந்து விளங்கவணி
யேவற் குணத்தா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

159

1931.

கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர்

குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா
னொன்றப் பெருங்கோ ளென்மீது

முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன்
நன்றப் படியேற் கோளிலையா

நகரு முடையே நங்காய்நீ
யின்றச் சுறலென் னென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

160

1932.

புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர்

புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
முரியும் புலித்தோ லுடையீர்போ

லுறுதற் கியலு மோவென்றேன்
றிரியும் புலியூ ரன்றுநின் போற்

றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
யிரியும் புலியூ ரென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

161

1933.

தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித்

தேவர் தமைநா னீரிருத்த
லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே

யேழூர் நாலூ ரென்றார்பின்
னவ்வூர்த் தொகையி னிருத்தலரி

தாமென் றேன்மற் றதிலொவ்வூ
ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

162

1934.

மணங்கொ ளிதழிச் சடையீர்நீர்

வாழும் பதியா தென்றேனின்
குணங்கொண் மொழிகேட் டோ ரளவு

குறைந்த குயிலாம் பதியென்றா
ரணங்கின் மறையூ ராமென்றே

னஃதன் றருளோத் தூரிஃது
மிணங்க வுடையே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

163

1935.

ஆற்றுச் சடையா ரிவர்பலியென்

றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
சோற்றுத் துறையென் றார்நுமக்குச்

சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
றோற்றுத் திரிவே மன்றுநின்போற்

சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
வேற்றுத் திரியே மென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

164

1936.

ஓங்குஞ் சடையீர் நெல்வாயி

லுடையே மென்றீ ருடையீரேற்
றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை

சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே
னேங்கும் படிநும் மிடைச்சிறுமை

யெய்திற் றலதீண் டெமக்கின்றா
லீங்குங் காண்டி ரென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடீ.

165

Back


99. கண் நிறைந்த கணவன்

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

1937.

மைய லழகீ ரூரொற்றி

வைத்தீ ருளவோ மனையென்றேன்
கையி னிறைந்த தனத்தினுந்தங்

கண்ணி னிறைந்த கணவனையே
மெய்யின் விழைவா ரொருமனையோ

விளம்பின் மனையும் மிகப்பலவாம்
எய்யி லிடையா யென்கின்றா

ரிதுதான் சேடி யென்னேடி.(43)

1

(43). ஆ.பா. இதனைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்திருக்கிறார். 'இது ஒற்றியூர்ப் பதிகங்கள் சிற்சில கொண்ட ஒரு சுவடியில்
2-ஆம் திருமுறை உள்ளப் பஞ்சகத்தில் ''பிறவாநெறியது'' என்ற பாடலை அடுத்து ஓர் தனிப்பாசுரமாகச் சுவாமிகளால் எழுதப்
பட்டிருக்கிறது' என்பது ஆ. பா. குறிப்பு. பொன்னேரி சுந்தரம் பிள்ளை திரட்டிய ஆறு திருமுறைகளும் சேர்ந்த முதற்பதிப்பில்
(1892) ஆறாந் திருமுறையில் பல்வகைய தனிப்பாடல்கள் என்ற தொகுப்பில் இங்கிதமாலையின் தொடர்ச்சி என்ற தலைப்புடன்
இது முதன்முதலாக அச்சிடப்பெற்றிருக்கிற்து. ச.மு.க. பதிப்பில் இது இங்கிதமாலை யுடனேயே 166ஆம் பாவாகச் சேர்க்கப்
பெற்றுள்ளது.

Back


100. இராமநாம சங்கீர்த்தனம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1938.

காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்
நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே.

1

Back


101. இராமநாமப் பதிகம் (44)

(44). கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1939.

திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்

செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்

தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்

தென்அரசே என்அமுதே என்தா யேநின்
மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ

மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.

1

1940.

கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்

கடத்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்

மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்

தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்

நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே.

2

1941.

மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்

மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்

வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
புண்ணாளா நின்றமன முடையேன் செய்த

பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்

கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.

3

1942.

தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்

சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ
வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம

வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்
இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்

கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ
செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்

திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே.

4

1943.

வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல

மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்

தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்

குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்

காட்டினையே என்னேநின் கருணை ஈதோ.

5

1944.

பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்

போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ

என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்

பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்

ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.

6

1945.

அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்

ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே

நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய
மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோ ர்

வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்
திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்

திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே.

7

1946.

கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே

கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்

இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்

புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்

ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.

8

1947.

மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே

மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்

அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்

புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்

வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.

9

1948.

கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்

குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்
ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ

அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்
ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்

ஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்

திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே.

10

Back


102. வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

திருஎவ்வுளூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1949.

தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

1

1950.

பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

2

1951.

மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.

3

1952.

இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

4

1953.

அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

5

Back


103. இரேணுகை தோத்திரம்

சென்னை ஏழுகிணறு(45)
(45). அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக் கிணங்க அருளிச் செய்தது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1954.

சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச்

செல்வமும் கல்வியும் பொறையும்
பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும்

பத்தியும் எனக்கருள் பரிந்தே
வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய்

மணிவளர் அணிமலர் முகத்தாய்
ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத்

திரேணுகை எனும்ஒரு திருவே.

1

1955.

உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய

உலுத்தர்தம் கடைதொறும்ஓடி
அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன்

அகமலர்ந் தருளுதல் வேண்டும்
நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே

நலந்தரு நசைமணிக் கோவை
இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத்

திரேணுகை எனும்ஒரு திருவே.

2

1956.

விருந்தினர் தம்மை உபசரித் திடவும்

விரவுறும் உறவினர் மகிழத்
திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும்

சிறியனேற் கருளுதல் வேண்டும்
வருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை

வாரியே வடிவுறு மயிலே
இருந்திசை புகழும் இசைதுலுக் காணத்

திரேணுகை எனும்ஒரு திருவே.

3

1957.

புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும்

புத்திரர் மனைவியே முதலாய்
நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும்

நன்கும் எனக்கருள் புரிவாய்
விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய்

விளங்கருள் ஒழுகிய விழியாய்
எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத்

திரேணுகை எனும்ஒரு திருவே.

4

1957.

மனமெலி யாமல் பிணியடை யாமல்

வஞ்சகர் தமைமரு வாமல்
சினநிலை யாமல் உடல்சலி யாமல்

சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய்
அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய்

அழகுசெய் காஞ்சன உடையாய்
இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத்

திரேணுகை எனும்ஒரு திருவே.

5

திருச்சிற்றம்பலம்

இரண்டாம் திருமுறை முற்றிற்று  

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home