Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்முதல் திருமுறை -  பாடல்கள் (1 - 721)முதல் திருமுறை - பாடல்கள் (722 - 1469) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (1 - 654 ) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (655 - 1331 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 713 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் ( 714- 1347 ) & பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33)


 

campantar tEvAram
tirumuRai 3 part 1 (verses 1 - 713)

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
மூன்றாம் திருமுறை முதல் பகுதி பாடல்கள் (1 - 713 )



Acknowledgements: Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues, Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany. Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of  electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 034 திருமுதுகுன்றம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

359

வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.

01

360.

வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு
பொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன்
மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடஞ்
செறியுளார் புறவணி திருமுது குன்றமே.

02

361.

ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமை
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடந்
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.

03

362.

உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும்
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினார் ஒலியென வோங்குமுத் தாறுமெய்த்
திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே.

04

363.

கடியவா யினகுரல் களிற்றினைப் பிளிறவோர்
இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடஞ்
செடியதார் புறவணி திருமுது குன்றமே.

05

364.

கானமார் கரியின்ஈர் உரிவையார் பெரியதோர்
வானமார் மதியினோ டரவர்தாம் மருவிடம்
ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடுந்
தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.

06

365.

மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
அஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே.

07

366.

காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினை
ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடஞ்
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.

08

367.

ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்
பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி
ஏடினார் மலர்மிசை அயனுமா லிருவருந்
தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.

09

368.

மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத்
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.

10

369.

திண்ணினார் புறவணி திருமுது குன்றரை
நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப்
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 035 திருத்தென்குடித்திட்டை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

370

முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

01

371.

மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை
நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ்
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.

02

372.

கருவினா லன்றியே கருவெலா மாயவன்
உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

03

373.

உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

04

374.

வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகந்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

05

375.

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.

06

376.

கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

07

377.

மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந்
தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங்
காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.

08

378.

நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

09

379.

குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

10

380.

தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - உலகநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 036 திருக்காளத்தி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

381

சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.

01

382.

ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ்
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.

02

383.

கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.

03

384.

கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே.

04

385.

வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.

05

இப்பதிகத்தில் 6-ம், 7-ம் செய்யுட்கள் மறைந்து போயின.

06-07

386.

முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.

08

387.

மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கணைந் துய்ம்மினே.

09

388.

வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.

10

389.

அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 037 திருப்பிரமபுரம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

390

கரமுனம்மல ராற்புனல்மலர்
தூவியேகலந் தேத்துமின்
பரமனூர்பல பேரினாற்பொலி
பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம்
ஐயன்நாடொறும் மேயசீர்ப்
பிரமனூர்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகனருள் பேணியே.

01

391.

விண்ணிலார்மதி சூடினான்விரும்
பும்மறையவன் தன்றலை
உண்ணநன்பலி பேணினான்உல
கத்துளூனுயி ரான்மலைப்
பெண்ணினார்திரு மேனியான்பிர
மாபுரத்துறை கோயிலுள்
அண்ணலாரரு ளாளனாயமர்
கின்றஎம்முடை யாதியே.

02

392.

எல்லையில்புக ழாளனும்இமை
யோர்கணத்துடன் கூடியும்
பல்லையார்தலை யிற்பலியது
கொண்டுகந்த படிறனுந்
தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்
தூமலர்சொரிந் தேத்தவே
மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர
மாபுரத்துறை மைந்தனே.

03

393.

அடையலார்புரஞ் சீறியந்தணர்
ஏத்தமாமட மாதொடும்
பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர
மாபுரத்துறை கோயிலான்
தொடையலார்நறுங் கொன்றையான்தொழி
லேபரவிநின் றேத்தினால்
இடையிலார்சிவ லோகமெய்துதற்
கீதுகாரணங் காண்மினே.

04

394.

வாயிடைம்மறை யோதிமங்கையர்
வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்எரி கானிடைப்புரி
நாடகம்இனி தாடினான்
பேயொடுங்குடி வாழ்வினான்பிர
மாபுரத்துறை பிஞ்ஞகன்
தாயிடைப்பொருள் தந்தையாகுமென்
றோதுவார்க்கருள் தன்மையே.

05

395.

ஊடினாலினி யாவதென்னுயர்
நெஞ்சமேயுறு வல்வினைக்
கோடிநீயுழல் கின்றதென்னழ
லன்றுதன்கையி லேந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
மாபுரத்துறை வேதியன்
ஏடுநேர்மதி யோடராவணி
எந்தையென்றுநின் றேத்திடே.

06

396.

செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில
ரென்றும்ஏத்தி நினைந்திட
ஐயன்ஆண்டகை அந்தணன்அரு
மாமறைப்பொரு ளாயினான்
பெய்யும்மாமழை யானவன்பிர
மாபுரம்இடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைநினைந்
தேத்துமின்வினை வீடவே.

07

397.

கன்றொருக்கையில் ஏந்திநல்விள
வின்கனிபட நூறியுஞ்
சென்றொருக்கிய மாமறைப்பொருள்
தேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்அடி
யும்முடியவை காண்கிலார்
பின்றருக்கிய தண்பொழிற்பிர
மாபுரத்தரன் பெற்றியே.

08

398.

உண்டுடுக்கைவிட் டார்களும்உயர்
கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டடக்குசொற் பேசுமப்பரி
வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின்
தண்டொடக்குவன் சூலமுந்தழல்
மாமழுப்படை தன்கையிற்
கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர
மாபுரத்துறை கூத்தனே.

09

399.

பித்தனைப்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகன்கழல் பேணியே
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
செய்துநன்பொருள் மேவிட
வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன்
வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
போற்றிசெய்யும்மெய்ம் மாந்தரே.

10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 038 திருக்கண்டியூர்வீரட்டம் - வினாவுரை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

400

வினவினேன்அறி யாமையில்லுரை
செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை
மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம
ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்
வையமாப்பலி தேர்ந்ததே.

01

401.

உள்ளவாறெனக் குரைசெய்ம்மின்னுயர்
வாயமாதவம் பேணுவீர்
கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை
வைத்ததும்பெரு நீரொலி
வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு
மங்கையாளுட னாகவே.

02

402.

அடியராயினீர் சொல்லுமின்னறி
கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்துகண்டியூர்
வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாயிவ்வைய
முழுதுமாயழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி
நூலும்பூண்டெழு பொற்பதே.

03

403.

பழையதொண்டர்கள் பகருமின்பல
வாயவேதியன் பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி
மன்னுகண்டியூர் வீரட்டன்
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு
குன்றின்மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்துகந்த பொலிவதே.

04

404.

விரவிலாதுமைக் கேட்கின்றேனடி
விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
கரவெலாந்திரை மண்டுகாவிரிக்
கண்டியூருறை வீரட்டன்
முரவமொந்தை முழாவொலிக்க
முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல்
நஞ்சமுண்ட பரிசதே

05

405.

இயலுமாறெனக் கியம்புமின்னிறை
வன்னுமாய்நிறை செய்கையைக்
கயல்நெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி
கண்டியூருறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக்
காகவன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில்
ஊனுகந்த அருத்தியே.

06

406.

திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச்
செல்வன்றன்னது திறமெலாங்
கருந்தடங்கண்ணி னார்கள்தாந்தொழு
கண்டியூருறை வீரட்டன்
இருந்துநால்வரோ டால்நிழல்லறம்
உரைத்ததும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யால்அம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே

07

407.

நாவிரித்தரன் தொல்புகழ்பல
பேணுவீரிறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப்பயன் ஆன்அஞ்சாடிய
கொள்கையுங்கொடி வரைபெற
மாவரைத்தலத் தாலரக்கனை
வலியைவாட்டிய மாண்பதே.

08

408.

பெருமையேசர ணாகவாழ்வுறு
மாந்தர்காளிறை பேசுமின்
கருமையார்பொழில் சூழுந்தண்வயல்
கண்டியூருறை வீரட்டன்
ஒருமையாலுயர் மாலும்மற்றை
மலரவன்னுணர்ந் தேத்தவே
அருமையாலவ ருக்குயர்ந்தெரி
யாகிநின்றஅத் தன்மையே.

09

409.

நமரெழுபிறப் பறுக்குமாந்தர்கள்
நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூருறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண்
ஆதரோது மதுகொளா
தமரரானவர் ஏத்தஅந்தகன்
றன்னைச்சூலத்தி லாய்ந்ததே.

10

410.

கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர்
வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக்
கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம்
பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வா ருயர்ந்தார்களே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை.
இறை உத்தரவு.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 039 திருஆலவாய்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

411

மானின்நேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன்
என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

01

412.

ஆகமத்தொடு மந்திரங்க
ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த
சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போல்திரிந்து
புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

02

413.

அத்தகுபொருள் உண்டுமில்லையு
மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
சனங்கள்வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

03

414.

சந்துசேனனும் இந்துசேனனுந்
தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

04

415.

கூட்டினார்கிளி யின்விருத்தம்
உரைத்ததோரொலி யின்தொழிற்
பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும்
எக்கர்தங்களைப் பல்லறங்
காட்டியேவரு மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

05

416.

கனகநந்தியும் புட்பநந்தியும்
பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந்
திவணநந்தியும் மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோமெனுஞ்
சினகருக்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

06

417.

பந்தணம்மவை யொன்றிலம்பரி
வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மதி
புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

07

418.

மேலெனக்கெதி ரில்லையென்ற
அரக்கனார்மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலுஞ்
சீலிகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

08

419.

பூமகற்கும் அரிக்குமோர்வரு
புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போல்தலை
யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

09

420.

தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
தரிப்பொணாதநற் சேவடி
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

10

421.

எக்கராம்அமண் கையருக்கெளி
யேனலேன்திரு ஆலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்தும்
உரைப்பவர்க்கிடர் இல்லையே.

11

இது பாண்டியராசனுடைய சுரப்பிணி தீர்ப்பதற்காகத் திருஞான சம்பந்தசுவாமிகள்
எழுந்தருளியிருக்கும்போது பாண்டிமாதேவி யாகிய மங்கையர்க்கரசியார்கண்டு சுவாமிகளுடைய
திருமேனி மிகுந்த பாலியமாயிருக்கின்றதுமன்றித் தனிமையாயுமிருக்கின்றது;
சமணர்களோ சரீரதிடமுள்ளவர்களும் பலருமாயிருக்கின்றார் களென்று உட்பரிவுற்றக்
குறிப்பினைத் திருஞானசம்பந்த சுவாமி கள் திருவுள்ளத்திலுணர்ந்து
கொண்டு அன்னையே அஞ்சவேண்டு வதில்லை யென்று கட்டளையிட்ட பதிகம்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 040 தனித்திருவிருக்குக்குறள்
பொது - திருப்பதிகம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

(முதல் திருமுறையிற் போலப் பாடல் அடிகள் நான்காகக் கொள்ளப்படும்.)

422. .

கல்லால் நீழல், அல்லாத் தேவை
நல்லார் பேணார், அல்லோம் நாமே.

01

423. .

கொன்றை சூடி, நின்ற தேவை
அன்றி யொன்று, நன்றி லோமே.

02

424. .

கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன்
சொல்லா தாரோ, டல்லோம் நாமே.

03

425. .

கூற்று தைத்த, நீற்றி னானைப்
போற்று வார்கள், தோற்றி னாரே.

04

426. .

காட்டு ளாடும், பாட்டு ளானை
நாட்டு ளாருந், தேட்டு ளாரே.

05

427. .

தக்கன் வேள்விப், பொக்கந் தீர்த்த
மிக்க தேவர், பக்கத் தோமே.

06

428. .

பெண்ணா ணாய, விண்ணோர் கோவை
நண்ணா தாரை, எண்ணோம் நாமே.

07

429..

தூர்த்தன் வீரம், தீர்த்த கோவை
ஆத்த மாக, ஏத்தி னோமே.

08

430..

பூவி னானுந், தாவி னானும்
நாவி னாலும், ஓவி னாரே.

09

431..

மொட்ட மணர், கட்ட தேரர்
பிட்டர் சொல்லை, விட்டு ளோமே.

10

432. .

அந்தண் காழிப், பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர், உய்ந்து ளோரே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 041 திருவேகம்பம் - திருவிருக்குக்குறள்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

433

கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே.

01

434. .

மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே.

02

435..

கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே.

03

436. .

வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே.

04

437..

படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே.

05

438. .

நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே.

06

439..

கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே.

07

440. .

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.

08

441..

மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே.

09

442..

பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே.

10

443..

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 042 திருச்சிற்றேமம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்

444

நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.

01

445..

மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேமம் மேவினான்
ஆகத்தோர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே.

02

446..

நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே.

03

447..

கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்கண் ஏறுடை யாதிமூர்த்தி யல்லனே.

04

448. .

வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதோடும் மகிழ்ந்தமைந்தன் அல்லனே.

05

449..

பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
முனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே.

06

450. .

கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன்
தளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லனே.

07

451..

சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்
ஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே.

08

452..

தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.

09

453. .

வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.

10

454..

கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பொன்வைத்தநாதர், தேவியார் - அகிலாண்டேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 043 சீகாழி
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

455

சந்த மார்முலை யாள்தன கூறனார்
வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.

01

456..

மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத்
தேனி டங்கொளுங் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டென் உச்சியில் நிற்பரே.

02

457..

மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளர வாட்டும் படிறனார்
கைகொள் மான்மறி யார்கடற் காழியுள்
ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே.

03

458. .

புற்றின் நாகமும் பூளையும் வன்னியுங்
கற்றை வார்சடை வைத்தவர் காழியுட்
பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல்
உற்ற போதுடன் ஏத்தி யுணருமே.

04

459..

நலியுங் குற்றமும் நம்முட னோய்வினை
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே.

05

460..

பெண்ணோர் கூறினர் பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாய அடிகள் சரிதையே.

06

461..

பற்று மானும் மழுவும் அழகுற
முற்று மூர்திரிந் துபலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுட்
பெற்றம் ஏற துகந்தார் பெருமையே.

07

462..

எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுள்
கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.

08

463..

காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
மாலு நான்முகன் தானும் வனப்புற
ஓல மிட்டுமுன் தேடி யுணர்கிலாச்
சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே.

09

464..

உருவ நீத்தவர் தாமும் உறுதுவர்
தருவ லாடையி னாருந் தகவிலர்
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி யேயடைந் துய்ம்மினே.

10

465..

கானல் வந்துல வுங்கடற் காழியுள்
ஈன மில்லி இணையடி யேத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 044 திருக்கழிப்பாலை
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

466

வெந்த குங்கிலி யப்புகை விம்மவே
கந்தம் நின்றுல வுங்கழிப் பாலையார்
அந்த மும்மள வும்மறி யாததோர்
சந்த மாலவர் மேவிய சாந்தமே.

01

467..

வானி லங்க விளங்கும் இளம்பிறை
தான லங்கல் உகந்த தலைவனார்
கானி லங்க வருங்கழிப் பாலையார்
மான லம்மட நோக்குடை யாளொடே.

02

468. .

கொடிகொள் ஏற்றினர் கூற்றை யுதைத்தனர்
பொடிகொள் மார்பினிற் பூண்டதோர் ஆமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
அடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே.

03

469. .

பண்ண லம்பட வண்டறை கொன்றையின்
தண்ண லங்கல் உகந்த தலைவனார்
கண்ண லங்க வருங்கழிப் பாலையுள்
அண்ண லெங்கட வுள்ளவ னல்லனே.

04

470..

ஏரி னாருல கத்திமை யோரொடும்
பாரி னாருட னேபர வப்படுங்
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெஞ்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.

05

471. .

துள்ளும் மான்மறி அங்கையி லேந்தியூர்
கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின வோயுமே.

06

472..

மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
பெண்ணி னார்பிறை நெற்றியோ டுற்றமுக்
கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே.

07

473. .

இலங்கை மன்னனை ஈரைந் திரட்டிதோள்
துலங்க வூன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

08

474. .

ஆட்சி யால்அல ரானொடு மாலுமாய்த்
தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்
காட்சி யாலறி யான்கழிப் பாலையை
மாட்சி யால்தொழு வார்வினை மாயுமே.

09

475..

செய்ய நுண்துவ ராடையி னாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மையெ னோகழிப் பாலையெம்
ஐயன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.

101

476..

அந்தண் காழி அருமறை ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுல காடன் முறைமையே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 045 திருவாரூர்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

477

அந்த மாயுல காதியு மாயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

01

478..

கருத்த னேகரு தார்புரம் மூன்றெய்த
ஒருத்த னேஉமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு ஆரூரெந் தீவண்ண
அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே.

02

479. .

மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்
சிறைவண் டார்பொழில் சூழ்திரு ஆரூரெம்
இறைவன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

03

480..

பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரிந்
தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான்
செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்
அல்லல் தீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.

04

481. .

குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.

05

482..

வார்கொள் மென்முலை யாளொரு பாகமா
ஊர்க ளாரிடு பிச்சைகொள் உத்தமன்
சீர்கொள் மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
ஆர்க ணாவெனை அஞ்சலெ னாததே.

06

483..

வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு ஆரூரான்
இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ.

07

484. .

இலங்கை மன்னன் இருபது தோளிறக்
கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ்திரு ஆரூரான்
அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ.

08

485. .

நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படிய வன்பனி மாமதிச் சென்னியான்
செடிகள் நீக்கிய தென்திரு ஆரூரெம்
அடிகள் தானெனை யஞ்சலெ னுங்கொலோ.

09

486..

மாசு மெய்யினர் வண்துவ ராடைகொள்
காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல்
தேசம் மல்கிய தென்திரு ஆரூரெம்
ஈசன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

10

487. .

வன்னி கொன்றை மதியொடு கூவிளஞ்
சென்னி வைத்த பிரான்திரு ஆரூரை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 046 திருக்கருகாவூர்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

488

முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

01

489..

விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாங்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

02

490. .

பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழக ரென்றுகுழை யாவழை யாவருங்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

03

491. .

பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன்
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

04

492. .

மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச்
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

05

493..

மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.

06

494..

வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.

07

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

08

495..

பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங்
கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

09

496..

போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

10

497..

கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர்
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர், தேவியார் - கரும்பனையாளம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 047 திருஆலவாய்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

498

காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.

01

499. .

மத்த யானையின் ஈருரி மூடிய
அத்த னேயணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்றவ வேடத்த ராஞ்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.

02

500..

மண்ண கத்திலும் வானிலும் எங்குமாந்
திண்ண கத்திரு ஆலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.

03

501..

ஓதி யோத்தறி யாவமண் ஆதரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
ஆதி யேதிரு ஆலவா யண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே.

04

502..

வைய மார்புக ழாயடி யார்தொழுஞ்
செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய்
கையி லுண்டுழ லும்மமண் கையரைப்
பைய வாதுசெ யத்திரு வுள்ளமே.

05

503..

நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய
தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு வுள்ளமே.

06

504. .

பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழுந்
தொண்ட ருக்கெளி யாய்திரு ஆலவாய்
அண்ட னேயமண் கையரை வாதினில்
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.

07

505. .

அரக்கன் றான்கிரி யேற்றவன் தன்முடிச்
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு ஆலவாய்ப்
பரக்கும் மாண்புடை யாயமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே.

08

506. .

மாலும் நான்முக னும்மறி யாநெறி
ஆல வாயுறை யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு வுள்ளமே.

09

507. .

கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.

10

508.

செந்தெ னாமுர லுந்திரு ஆலவாய்
மைந்த னேயென்று வல்லம ணாசறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 048 திருமழபாடி
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

509

அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யாற்றொழு வார்தக வாளரே.

01

510.

விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாம்மழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.

02

511.

முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல வுங்கையி லேந்திய
மழுவி னானுறை யும்மழ பாடியைத்
தொழுமின் நுந்துய ரானவை தீரவே.

03

512.

கலையி னான்மறை யான்கதி யாகிய
மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.

04

513.

நல்வி னைப்பயன் நான்மறை யின்பொருள்
கல்வி யாயக ருத்தன் உருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்தும் அதுபுக ழாகுமே.

05

514.

நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
ஆடி னானெரி கானிடை மாநடம்
பாடி னாரிசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே.

06

515.

மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
மன்னி னானுறை மாமழ பாடியைப்
பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின வோயுமே.

07

516.

தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
தன்னி லங்க அடர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னி லங்க வுறுபிணி யில்லையே.

08

517.

திருவின் நாயக னுஞ்செழுந் தாமரை
மருவி னானுந் தொழத்தழல் மாண்பமர்
உருவி னானுறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.

09

518.

நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
மெலியும் நம்முடன் மேல்வினை யானவே.

10

519.

மந்தம் உந்து பொழில்மழ பாடியுள்
எந்தை சந்தம் இனிதுகந் தேத்துவான்
கந்த மார்கடற் காழியுள் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 049 நமச்சிவாயத் திருப்பதிகம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

520

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

01

521.

நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

02

522.

நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.

03

523.

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.

04

524.

கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.

05

525.

மந்த ரம்மன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.

06

526.

நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.

07

527.

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.

08

528.

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.

09

529.

கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.

10

530.

நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 050 திருத்தண்டலைநீணெறி
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

531

விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங்
கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.

01

532.

இகழுங் காலன் இதயத்தும் என்னுளுந்
திகழுஞ் சேவடி யான்திருந் தும்மிடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே.

02

533.

பரந்த நீலப் படரெரி வல்விடங்
கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ்
சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.

03

534.

தவந்த என்புந் தவளப் பொடியுமே
உவந்த மேனியி னானுறை யும்மிடஞ்
சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.

04

இப்பதிகத்தில் 5, 6, 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

05-07

535.

இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடஞ்
சலங்கொள் இப்பி தரளமுஞ் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.

08

536.

கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்
றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.

09

537.

கலவு சீவரத் தார்கையில் உண்பவர்
குலவ மாட்டாக் குழகன் உறைவிடஞ்
சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே.

10

538.

நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீணெறிநாதேசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 051 திருஆலவாய்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

539

செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.

01

540.

சித்த னேதிரு ஆலவாய் மேவிய
அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.

02

541.

தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே.

03

542.

சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்
துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

04

543.

நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்
அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.

05

544.

தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே
வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.

06

545.

செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
கங்கு லார்அமண் கையரிடுங் கனல்
பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.

07

546.

தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்
ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.

08

547.

தாவி னான்அயன் தானறி யாவகை
மேவி னாய்திரு ஆலவா யாயருள்
தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.

09

548.

எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய
அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

10

549.

அப்பன் ஆலவா யாதி யருளினால்
வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 052 திருஆலவாய் - திருவிராகம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

550

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.

01

551.

பட்டிசைந்த அல்குலாள் பாவையாளோர் பாகமா
ஒட்டிசைந்த தன்றியும் உச்சியா ளொருத்தியாக்
கொட்டிசைந்த ஆடலாய் கூடல்ஆல வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.

02

552.

குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய்
சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்பம் என்றிவை
முற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.

03

553.

முதிருநீர்ச் சடைமுடி முதல்வநீ முழங்கழல்
அதிரவீசி யாடுவாய் அழகன்நீ புயங்கன்நீ
மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே.

04

554.

கோலமாய நீள்மதிற் கூடல்ஆல வாயிலாய்
பாலனாய தொண்டுசெய்து பண்டுமின்றும் உன்னையே
நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலுஞ்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.

05

555.

பொன்தயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை
பின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய்
நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.

06

556.

ஆதியந்த மாயினாய் ஆலவாயில் அண்ணலே
சோதியந்த மாயினாய் சோதியுள்ளோர் சோதியாய்
கீதம்வந்த வாய்மையால் கிளர்தருக்கி னார்க்கல்லால்
ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே.

07

557.

கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடற்
துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.

08

558.

தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறுங்
கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலும்நின்
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.

09

559.

தேற்றமில் வினைத்தொழில் தேரருஞ் சமணரும்
போற்றிசைத்து நின்கழற் புகழ்ந்துபுண்ணி யங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றிசைக்கும் மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.

10

560.

போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண் டாலவாயில் அண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 053 திருவானைக்கா - திருவிராகம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

561

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும்ஏதம் இல்லையே.

01

562.

சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று சேணுலா
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே.

02

563.

தாரமாய மாதராள் தானோர்பாக மாயினான்
ஈரமாய புன்சடை யேற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை யானைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.

03

564.

விண்ணினண்ணு புல்கிய வீரமாய மால்விடை
சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான்
அண்ணல்கண்ணோர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க் கேதமொன்றும் இல்லையே.

04

565.

வெய்யபாவங் கைவிட வேண்டுவீர்கள் ஆண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று சென்னியெம்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

05

566.

நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
ஆணும்பெண்ணு மாகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணுங்கண்ணு மூன்றுடைக் கறைகொள்மிடறன் அல்லனே.

06

567.

கூருமாலை நண்பகற் கூடிவல்ல தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
பாரும்விண்ணுங் கைதொழப் பாயுங்கங்கை செஞ்சடை
ஆரநீரோ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே.

07

568.

பொன்னமல்கு தாமரைப் போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்டுறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழல் துன்னவல்லர் விண்ணையே.

08

569.

ஊனொடுண்டல் நன்றென வூனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினாற் பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்
றானொடஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.

09

570.

கையிலுண்ணுங் கையருங் கடுக்கடின் கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை யறிகிலார்
தையல்பாக மாயினான் தழலதுருவத் தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

10

571.

ஊழியூழி வையகத் துயிர்கள்தோற்று வானொடும்
ஆழியானுங் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 054 திருப்பாசுரம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

572

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

01

573.

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.

02

574.

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.

03

575.

ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.

04

576.

ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.

05

577.

ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.

06

578.

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே.

07

579.

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.

08

580.

பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.

09

581.

மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்
பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.

10

582.

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.

11

583.

நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல
எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்
பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.

12

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 055 திருவான்மியூர்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்

584

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய் உமைநங்கையோர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும்
அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே.

01

585.

இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மி யூருறையும்
அடிகேள் உன்னையல்லால் அடையாதென தாதரவே.

02

586.

கையார் வெண்மழுவா கனல்போல்திரு மேனியனே
மையார் ஒண்கண்நல்லாள் உமையாள்வளர் மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூருறையும்
ஐயா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

03

587.

பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

04

588.

கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மி யூருறையும்
அண்ணா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

05

589.

நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்தலை யொன்றினையுஞ்
சேதீ சேதமில்லாத் திருவான்மி யூருறையும்
ஆதீ உன்னையல்லால் அடையாதென தாதரவே.

06

590.

வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவருங்
கானார் ஆனையின்தோல் உரித்தாய்கறை மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மி யூருறையும்
ஆனா யுன்னையல்லால் அடையாதென தாதரவே.

07

591.

பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மி யூருறையும்
அறிவே யுன்னையல்லால் அடையாதென தாதரவே.

08

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

09

592.

குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
திண்டேர் வீதியதார் திருவான்மி யூருறையும்
அண்டா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

10

593.

கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்
நன்றா னபுகழான் மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி யூரதன்மேற்
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 056 திருப்பிரமபுரம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

594

இறையவன் ஈசன்எந்தை இமையோர்தொழு தேத்தநின்ற
கறையணி கண்டன்வெண்தோ டணிகாதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே.

01

595.

சடையினன் சாமவேதன் சரிகோவண வன்மழுவாட்
படையினன் பாய்புலித்தோ லுடையான்மறை பல்கலைநூல்
உடையவன் ஊனமில்லி யுடனாயுமை நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம் பிரமாபுரம் பேணுமினே.

02

596.

மாணியை நாடுகாலன் உயிர்மாய்தரச் செற்றுக்காளி
காணிய ஆடல்கொண்டான் கலந்தூர்வழிச் சென்றுபிச்சை
ஊணியல் பாகக்கொண்டங் குடனேயுமை நங்கையொடும்
பேணிய கோயில்மன்னும் பிரமாபுரம் பேணுமினே.

03

597.

பாரிடம் விண்ணுமெங்கும் பயில்நஞ்சு பரந்துமிண்ட
பேரிடர்த் தேவர்கணம் பெருமானிது காவெனலும்
ஓரிடத்தே கரந்தங் குமைநங்கையொ டும்முடனே
பேரிட மாகக்கொண்ட பிரமாபுரம் பேணுமினே.

04

598.

நச்சர வச்சடைமேல் நளிர்திங்களு மொன்றவைத்தங்
கச்சமெ ழவிடைமேல் அழகார்மழு வேந்திநல்ல
இச்சை பகர்ந்துமிக இடுமின்பலி யென்றுநாளும்
பிச்சைகொள் அண்ணல்நண்ணும் பிரமாபுரம் பேணுமினே.

05

599.

பெற்றவன் முப்புரங்கள் பிழையாவண்ணம் வாளியினாற்
செற்றவன் செஞ்சடையில் திகழ்கங்கைத னைத்தரித்திட்
டொற்றை விடையினனாய் உமைநங்கையொ டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.

06

600.

வேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி
கீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான்
பேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.

07

601.

இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன் அடர்த்தும்மலை அன்றெடுப்பக்
குமையது செய்துபாடக் கொற்றவாளொடு நாள்கொடுத்திட்
டுமையொ டிருந்தபிரான் பிரமாபுரம் உன்னுமினே.

08

602.

ஞாலம் அளித்தவனும் அரியும்மடி யோடுமுடி
காலம் பலசெலவுங் கண்டிலாமையி னாற்கதறி
ஓல மிடஅருளி உமைநங்கையொ டும்முடனாய்
ஏல இருந்தபிரான் பிரமாபுரம் ஏத்துமினே.

09

603.

துவருறும் ஆடையினார் தொக்கபீலியர் நக்கரையர்
அவரவர் தன்மைகள்கண் டணுகேன்மின் னருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக் கழிகாலமெல் லாம்படைத்த
இவரவர் என்றிறைஞ்சிப் பிரமாபுரம் ஏத்துமினே.

10

604.

உரைதரு நான்மறையோர் புகழ்ந்தேத்தவொண் மாதினொடும்
வரையென வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்
தரசினை யேத்தவல்ல அணிசம்பந்தன் பத்தும்வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 057 திருவொற்றியூர்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

605

விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ
டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே.

01

606.

பாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனா
ஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.

02

607.

விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகி
அளிதரு பேரருளான் அரனாகிய ஆதிமூர்த்தி
களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றியூரே.

03

608.

அரவமே கச்சதாக அசைத்தானலர்க் கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரையார்வரை மார்பன்எந்தை
பரவுவார் பாவமெல்லாம் பறைத்துப்படர் புன்சடைமேல்
உரவுநீ ரேற்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.

04

609.

விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.

05

610.

கமையொடு நின்றசீரான் கழலுஞ்சிலம் பும்ஒலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான் விரிகொன்றையுஞ் சோமனையும்
அமையொடு நீண்டதிண்டோ ள் அழகாயபொற் றோடிலங்க
உமையொடுங் கூடிநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.

06

611.

நன்றியால் வாழ்வதுள்ளம் உலகுக்கொரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலுங் கருமால்வரை யேசிலையாப்
பொன்றினார் வார்சுடலைப் பொடிநீறணிந் தாரழல்அம்
பொன்றினால் எய்தபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.

07

612.

பெற்றியாற் பித்தனொப்பான் பெருமான்கரு மானுரிதோல்
சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன் னுடலைச்செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றுமாள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.

08

613.

திருவினார் போதினானுந் திருமாலுமோர் தெய்வமுன்னித்
தெரிவினாற் காணமாட்டார் திகழ்சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ
டொருவனாய் நின்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.

09

614.

தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த்துழல்வார்
ஆகம செல்வனாரை அலர்தூற்றுதல் காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக்கொள்ளன்மின் ஏழுலகும்
ஓகைதந் தாளவல்லான் உறையும்மிடம் ஒற்றியூரே.

10

615.

ஒண்பிறை மல்குசென்னி இறைவன்னுறை யொற்றியூரைச்
சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும் பரவிப்பணிந் தேத்தவல்லார்
விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே.

11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர், தேவியார் - வடிவுடையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 058 திருச்சாத்தமங்கை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

616

திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை
அருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே.

01

617.

பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை
அடிகள்நக் கன்பரவ அயவந்திய மர்ந்தவனே.

02

618.

நூனலந் தங்குமார்பில் நுகர்நீறணிந் தேறதேறி
மானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவே
தானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.

03

619.

மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசி
புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே.

04

620.

வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன்
பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
அந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே.

05

621.

வேதமாய் வேள்வியாகி விளங்கும்பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந் நிலைதான்சொல்ல லாவதொன்றே
சாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே.

06

622.

இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி
உமையையோர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
அமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே.

07

623.

பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.

08

624.

பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே.

09

625.

கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே
சங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே.

10

626.

மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அயவந்தீசுவரர், தேவியார் - மலர்க்கணம்பிகையம்மை.
சாத்தமங்கை என்பது ஸ்தலம், அயவந்தி என்பது ஆலயம்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 059 திருக்குடமூக்கு
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

627

அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.

01

628.

ஓத்தர வங்களோடும் ஒலிகாவிரி யார்த்தயலே
பூத்தர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்ல
கூத்தர வங்களோவாக் குழகன்குட மூக்கிடமா
ஏத்தர வங்கள்செய்ய இருந்தானவன் எம்மிறையே.

02

629.

மயில்பெடை புல்கியால மணல்மேல்மட அன்னமல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங்காவிரிப் பைம்பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
இயலொடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.

03

630.

மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ
அக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
எக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே.

04

631.

வடிவுடை வாட்டடங்கண் ணுமையஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட வுரிகொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங் குழகன்குட மூக்கிடமா
இடிபடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.

05

632.

கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே.

06

633.

மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தானெழில் வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புர மூன்றினையுங்
குலைமலி தண்பலவின் பழம்வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி இருந்தானவன் எம்மிறையே.

07

634.

நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப் பருமால்வரைக் கீழடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு பழம்வீழ்குட மூக்கிடமா
இடுமணல் எக்கர்சூழ இருந்தானவன் எம்மிறையே.

08

635.

ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமா
ஈரிரு கோவணத்தோ டிருந்தானவன் எம்மிறையே.

09

636.

மூடிய சீவரத்தார் முதுமட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா முடையான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவன் எம்மிறையே.

10

637.

வெண்கொடி மாடமோங்கு விறல்வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தனல்ல
தண்குட மூக்கமர்ந்தான் அடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கும்பேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 060 திருவக்கரை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

638

கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் தன்றலையிற் பலிகொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.

01

639.

பாய்ந்தவன் காலனைமுன் பணைத்தோளியோர் பாகமதா
ஏய்ந்தவன் எண்ணிறந்தவ் விமையோர்கள் தொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்புதுமே.

02

640.

சந்திர சேகரனே யருளாயென்று தண்விசும்பில்
இந்திர னும்முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத்தானிடம் வக்கரையே.

03

641.

நெய்யணி சூலமோடு நிறைவெண்மழு வும்மரவுங்
கையணி கொள்கையினான் கனல்மேவிய ஆடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரிகோவண ஆடையின்மேல்
மையணி மாமிடற்றான் உறையும்மிடம் வக்கரையே.

04

642.

ஏனவெண் கொம்பினோடும் இளவாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையுங் குளிர்மத்தமுஞ் சூடிநல்ல
மானன மென்விழியா ளொடும்வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.

05

643.

கார்மலி கொன்றையோடுங் கதிர்மத்தமும் வாளரவும்
நீர்மலி யுஞ்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும்வக்கரை மேவியவன்
பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.

06

644.

கானண வும்மறிமான் ஒருகையதோர் கைமழுவாள்
தேனண வுங்குழலாள் உமைசேர்திரு மேனியினான்
வானண வும்பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்
ஊனண வுந்தலையிற் பலிகொண்டுழல் உத்தமனே.

07

645.

இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.

08

646.

காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.

09

647.

மூடிய சீவரத்தர் முதிர்பிண்டிய ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ்சப்படுந் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக்கென்றுபல் வீதிதோறும்
வாடிய வெண்டலைகொண் டுழல்வானிடம் வக்கரையே.

10

648.

தண்புன லும்மரவுஞ் சடைமேலுடை யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன்னுறை வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர்தம்வினை பற்றறுமே.

11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சந்திரசேகரேசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 061 திருவெண்டுறை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

649

ஆதியன் ஆதிரையன் னனலாடிய ஆரழகன்
பாதியோர் மாதினொடும் பயிலும்பர மாபரமன்
போதிய லும்முடிமேற் புனலோடர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே.

01

650.

காலனை யோருதையில் உயிர்வீடுசெய் வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்
மாலைம தியொடுநீர் அரவம்புனை வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே.

02

651.

படைநவில் வெண்மழுவான் பலபூதப் படையுடையான்
கடைநவில் மும்மதிலும் எரியூட்டிய கண்ணுதலான்
உடைநவி லும்புலித்தோல் உடையாடையி னான்கடிய
விடைநவிலுங் கொடியான் விரும்பும்மிடம் வெண்டுறையே.

03

652.

பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம்
எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிரமன்தலை யிற்பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும்பும்மிடம் வெண்டுறையே.

04

653.

பாரிய லும்பலியான் படியார்க்கும் அறிவரியான்
சீரிய லும்மலையாள் ஒருபாகமுஞ் சேரவைத்தான்
போரிய லும்புரமூன் றுடன்பொன்மலை யேசிலையா
வீரிய நின்றுசெய்தான் விரும்பும்மிடம் வெண்டுறையே.

05

654.

ஊழிக ளாயுலகா யொருவர்க்கும் உணர்வரியான்
போழிள வெண்மதியும் புனலும்மணி புன்சடையான்
யாழின்மொ ழியுமையாள் வெருவவ்வெழில் வெண்மருப்பின்
வேழமு ரித்தபிரான் விரும்பும்மிடம் வெண்டுறையே.

06

655.

கன்றிய காலனையும் முருளக்கனல் வாயலறிப்
பொன்றமுன் நின்றபிரான் பொடியாடிய மேனியினான்
சென்றிமை யோர்பரவுந் திகழ்சேவடி யான்புலன்கள்
வென்றவன் எம்மிறைவன் விரும்பும்மிடம் வெண்டுறையே.

07

656.

கரமிரு பத்தினாலுங் கடுவன்சின மாயெடுத்த
சிரமொரு பத்துமுடை அரக்கன்வலி செற்றுகந்தான்
பரவவல் லார்வினைகள் அறுப்பானொரு பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும்பும்மிடம் வெண்டுறையே.

08

657.

கோலம லரயனுங் குளிர்கொண்டல் நிறத்தவனுஞ்
சீலம றிவரிதாய்த் திகழ்ந்தோங்கிய செந்தழலான்
மூலம தாகிநின்றான் முதிர்புன்சடை வெண்பிறையான்
வேலைவி டமிடற்றான் விரும்பும்மிடம் வெண்டுறையே.

09

658.

நக்குரு வாயவருந் துவராடைந யந்துடையாம்
பொக்கர்கள் தம்முரைகள் ளவைபொய்யென எம்மிறைவன்
திக்குநி றைபுகழார் தருதேவர்பி ரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும்பும்மிடம் வெண்டுறையே.

10

659.

திண்ணம ரும்புரிசைத் திருவெண்டுறை மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர் தந்தலைவன்
எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன்சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்டுறைநாதேசுவரர், தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 062 திருப்பனந்தாள்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

660

கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

01

661.

விரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயலேழுலகில் லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறைபேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

02

662.

உடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமோர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா மிக்கமாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

03

663.

சூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் அனல்பொங்கர வும்புனைந்த
தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

04

664.

விடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான் அவன்எம்மிறை சேருமிடம்
படம்புரி நாகமொடு திரைபன்மணியுங் கொணருந்
தடம்புனல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

05

665.

விடையுயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகுபூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னிதுன்னெருக் கும்மணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

06

666.

மலையவன் முன்பயந்த மடமாதையோர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதிஆடரவும் மணிந்த
தலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

07

667.

செற்றரக் கன்வலியைத் திருமெல்விரலால் அடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்
புற்றரவம் புலியின் னுரிதோலொடு கோவணமுந்
தற்றவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

08

668.

வின்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்
புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணுநாரண னும்மறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

09

669.

ஆதர் சமணரொடும் மடையைந்துகில் போர்த்துழலும்
நீதர் உரைக்குமொழி யவைகொள்ளன்மின் நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரி யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

10

670.

தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரத்துக்
கண்ணய லேபிறையான் அவன்றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால் மிகுஞானசம் பந்தன்நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சடையப்பஈசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 063 திருச்செங்காட்டங்குடி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

671

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.

01

672.

பொன்னம்பூங் கழிக்கானற் புணர்துணையோ டுடன்வாழும்
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்காள்
கன்னவில்தோள் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய
இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே.

02

673.

குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.

03

674.

கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேனமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.

04

675.

ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே.

05

676.

குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னி கணபதீச்சரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே.

06

677.

கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்
ஒருவடியாள் இரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.

07

678.

கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழுந்
தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே.

08

679.

நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதே
சிறப்புலவன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.

09

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

10

680.

செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவுஞ்
சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே.

11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 064 திருப்பெருவேளூர்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

681

அண்ணாவுங் கழுக்குன்றும் ஆயமலையவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்
கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரமெரித்த
பெண்ஆணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

01

682.

கருமானின் உரியுடையர் கரிகாடர் இமவானார்
மருமானார் இவரென்றும் மடவாளோ டுடனாவர்
பொருமான விடையூர்வ துடையார்வெண் பொடிப்பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.

02

683.

குணக்குந்தென் திசைக்கண்ணுங் குடபாலும் வடபாலுங்
கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும்
வணக்கஞ்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்
பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

03

684.

இறைக்கண்ட வளையாளோ டிருகூறா யொருகூறு
மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த சிலைவலவர்
கறைக்கொண்ட மிடறுடையார் கனல்கிளருஞ் சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

04

685.

விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக்
குழையாதார் குழைவார்போற் குணநல்ல பலகூறி
அழையாவும் அரற்றாவும் அடிவீழ்வார் தமக்கென்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

05

686.

விரித்தார்நாண் மறைப்பொருளை உமையஞ்ச விறல்வேழம்
உரித்தாராம் உரிபோர்த்து மதில்மூன்றும் ஒருகணையால்
எரித்தாராம் இமைப்பளவில் இமையோர்கள் தொழுதிறைஞ்சப்
பெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

06

687.

மறப்பிலா அடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாஞ்
சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லார் ஒருகணையால்
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றுங் கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

07

688.

எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் தனைவீழ
முரியார்ந்த தடந்தோள்கள் அடர்த்துகந்த முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

08

689.

சேணியலும் நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக்
காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ணர் அடியிணைக்கீழ்
நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து
பேணியஎம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

09

690.

புற்றேறி யுணங்குவார் புகையார்ந்த துகில்போர்ப்பார்
சொற்றேற வேண்டாநீர் தொழுமின்கள் சுடர்வண்ணம்
மற்றேரும் பரிமாவும் மதகளிரும் இவையொழியப்
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

10

691.

பைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர் கனியுந்தி
அம்பொன்செய் மடவரலார் அணிமல்கு பெருவேளூர்
நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் சாராவே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரியாவீசுவரர், தேவியார் - மின்னனையாளம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 065 திருக்கச்சிநெறிக்காரைக்காடு
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

692

வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினிற்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

01

693.

காரூரும் மணிமிடற்றார் கரிகாடர் உடைதலைகொண்
டூரூரன் பலிக்குழல்வார் உழைமானின் உரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

02

694.

கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமேல் இளமதியோ
டாறணிந்தார் ஆடரவம் பூண்டுகந்தார் ஆன்வெள்ளை
ஏறணிந்தார் கொடியதன்மேல் என்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

02

695.

பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள்
மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

04

696.

அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோளரவம் நாண்கொளுவி
ஒன்றாதார் புரம்மூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

05

697.

பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில்
வின்மலையின் நாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காறைக் காட்டாரே.

06

698.

புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா அலைபுனலோ டிளமதியம் ஏந்துசடைப்
பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

07

699.

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

08

700.

ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரும் ஓரிருவர் அறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

09

701.

குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவார் உரைப்பனகள் மெய்யல்ல
வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகங்
கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

10

702.

கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே.

11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காரைத்திருநாதஈசுவரர், தேவியார் - காரார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3. 066 திருவேட்டக்குடி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

703

வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவங்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளந்
தெண்டிரைக்கண் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.

01

704.

பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்குங்
காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்
போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாருந் திருவேட்டக் குடியாரே.

01

705.

தோத்திரமா மணலிலிங்கத் தொடங்கியஆன் நிரையிற்பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.

03

706.

கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும்
அலவஞ்சேர் அணைவாரிக் கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய்
நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடுந்
திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே.

04

707.

பங்கமார் கடலலறப் பருவரையோ டரவுழலச்
செங்கண்மால் கடையஎழு நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
அங்கம்நான் மறைநால்வர்க் கறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந் திருவேட்டக் குடியாரே.

05

708.

நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையால் எயின்மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.

06

709.

பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே.

07

710.

துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும்
இறைபயிலும் இராவணன்றன் தலைபத்தும் இருபதுதோள்
திறலழிய அடர்த்தாருந் திருவேட்டக் குடியாரே.

08

711.

அருமறைநான் முகத்தானும் அகலிடம்நீ ரேற்றானும்
இருவருமாய் அளப்பரிய எரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.

09

712.

இகழ்ந்துரைக்குஞ் சமணர்களும் இடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற் கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலின் நிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே.

10

713.

தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்டமிழ்நூல் இவைபத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோ டுயர்வானத் திருப்பாரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேனியழகீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
மூன்றாம் திருமுறை முதல் பகுதி முற்றும்.

   

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home