Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் > நான்காம் திருமுறை பாடல்கள் ( 1- 487 ) > நான்காம் திருமுறை பாடல்கள் (488 - 1070) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் (1 - 509 ) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் ( 510 -1016 ) > ஆறாம் திருமுறை பாடல்கள் ( 1-508) > ஆறாம் திருமுறை பாடல்கள் (509 - 981)


tirunAvukkaracar tEvAram
tirumuRai 6 part 1 - (verses 1 - 508 )

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
ஆறாம் திருமுறை முதற் பகுதி - பாடல்கள் ( 1 - 508 )


Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues, Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany. Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai 1999 - 2004  Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

 
உள்ளுறை
6.001 கோயில் 1-10
6.002 கோயில் 11-21
6.003 திருவீரட்டானம் 22-32
6.004 திருவதிகைவீரட்டானம் 33-43
6.005 திருவீரட்டானம் 44-53
6.006 திருவதிகைவீரட்டானம் 54-63
6.007 திருவீரட்டானம் 64-75
6.008 திருக்காளத்தி 76-86
6.009 திருஆமாத்தூர் 87-96
6.010 திருப்பந்தணைநல்லூர் 97-103
6.011 திருப்புன்கூர் - திருநீடூர் 107-116
6.012 திருக்கழிப்பாலை 117-126
6.013 திருப்புறம்பயம் 127-136
6.014 திருநல்லூர் 137-147
6.015 திருக்கருகாவூர் 148-158
6.016 திருவிடைமருது 159-168
6.017 திருவிடைமருது 169-178
6.018 திருப்பூவணம் 179-189
6.019 திருவாலவாய் 190-200
6.020 திருநள்ளாறு 201-210
6.021 திருவாக்கூர் 211-220
6.022 திருநாகைக்காரோணம் 221-231
6.023 திருமறைக்காடு 232-241
6.024 திருவாரூர் 242-251
6.025 திருவாரூர் 252-262
6.026 திருவாரூர் 263-268
6.027 திருவாரூர் 269-278
6.028 திருவாரூர் 279-289
6.029 திருவாரூர் 290-299
6.030 திருவாரூர் 300-309
6.031 திருவாரூர் 310-319
6.032 திருவாரூர் 320-329
6.033 திருவாரூர் 330-339
6.034 திருவாரூர் 340-349
6.035 திருவெண்காடு 350-359
6.036 திருப்பழனம் 360-369
6.037 திருவையாறு 370-379
6.038 திருவையாறு 380-390
6.039 திருமழபாடி 391-400
6.040 திருமழபாடி 401-407
6.041 திருநெய்த்தானம் 408-417
6.042 திருநெய்த்தானம் 418-427
6.043 திருப்பூந்துருத்தி 428-437
6.044 திருச்சோற்றுத்துறை 438-447
6.045 திருவொற்றியூர் 448-457
6.046 திருஆவடுதுறை 458-468
6.047 திருஆவடுதுறை 469-478
6.048 திருவலிவலம் 479-488
6.049 திருக்கோகரணம் 489-498
6.050 திருவீழிமிழலை 499-508

 

6. 01 கோயில் - பெரியதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
 

1

அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை
அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.1

2

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.2

3

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.3

4

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.4

5

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.5

6

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.6

7

வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.7

8

காரானை ஈருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் றன்னை
ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை
அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.8

9

முற்றாத பால்மதியஞ் சூடினானை
மூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.9

10

காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

6.1.10

    
 

திருச்சிற்றம்பலம்

 

 

6. 02 கோயில் - புக்கதிருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

  

11

மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்கு மிடமறியார் சால நாளார்
தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.1

12

நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்
பாகப் பொழுதெல்லாம் பாசூர்த் தங்கிப்
பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
வேதமும் வேள்விப் புகையு மோவா
விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
போகமும் பொய்யாப் பொருளு மானார்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.2

13

துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலுந்
தூமதியும் பாம்பு முடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்
மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.3

14

வாரேறு வனமுலையாள் பாக மாக
மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்
திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த
கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.4

15

காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட
ஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும்
உத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்
சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்
திருவாரூர்த் திருமூலத் தான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.5

16

காதார் குழையினர் கட்டங் கத்தார்
கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
முதலு மிறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ வன்று
மன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாட்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.6

17

இறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கு மென்றும் பிறவா தார்க்கும்
பெரியான்றன் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.7

18

குலாவெண் டலைமாலை யென்பு பூண்டு
குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்
கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கையோ டனலேந்திக் காடு றைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
நிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்
புலால்வெண் டலையேந்திப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.8

19

சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
சங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லாம்
மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்றப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.9

20

பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்
பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்
வேதங்க ளோதியோர் வீணை யேந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.10

21

பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத்
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.

6.2.11

  திருச்சிற்றம்பலம்
 
 


 
 
 

6. 03 திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
 

 

22

வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை
வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற் கரியசீ ரம்மான் றன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
எறிகெடிலத் தானை இறைவன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.1

23

வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னைப்
புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னைப்
பொன்பிதிர்ந் தன்ன சடையான் றன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை
வாரா வுலகருள வல்லான் றன்னை
எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.2

24

முந்தி யுலகம் படைத்தான் றன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னைத்
தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
செழுங்கெடில வீரட்ட மேவி னானை
எந்தை பெருமானை ஈசன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.3

25

மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்
அந்தரமு மலைகடலு மானான் றன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னைக்
கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்
கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
இந்திரனும் வானவருந் தொழச்செல் வானை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.4

26

ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன்
அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
திருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்
டேழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.5

27

ஆறேற்க வல்ல சடையான் றன்னை
அஞ்சனம் போலு மிடற்றான் றன்னைக்
கூறேற்கக் கூறமர வல்லான் றன்னைக்
கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை
நீறேற்கப் பூசும் அகலத் தானை
நின்மலன் றன்னை நிமலன் றன்னை
ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.6

28

குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்
டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
வானவர்க ளேத்தப் படுவான் றன்னை
எண்டிசைக்கு மூர்த்தியாய் நின்றான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.7

29

உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் றன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.8

30

நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
மறையானை மாசொன் றிலாதான் றன்னை
வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னைக்
கறையானைக் காதார் குழையான் றன்னைக்
கட்டங்க மேந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.9

31

தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் றன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலு மூதுங்
கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.10

32

முலைமறைக்கப் பட்டுநீ ராடப் பெண்கள்
முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித்
தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை
மதனழியச் செற்றசே வடியி னானை
இலைமறித்த கொன்றையந் தாரான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

6.3.11

 

திருச்சிற்றம்பலம்
 

 
   
   

6. 04 திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
 

33

சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச்
சடாமகுடத் திருத்துமே சாம வேதக்
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.1

34

ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
படவரவந் தடமார்பிற் பயில்வித் தானே
நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே
ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.2

35

முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.3

36

செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்
சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகி லதிகைவீ ரட்ட னாமே.

6.4.4

37

பாடுமே யொழியாமே நால்வே தமும்
படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்
சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்
தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.5

38

ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
வெள்ளப் புனற்கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.6

39

குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.7

40

மாலாகி மதமிக்க களிறு தன்னை
வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்
வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே
கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்
குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
ஆலால முண்டிருண்ட கண்டத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.8

41

செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல்
மணவாள னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.9

42

எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்
இளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.10

43

நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
நீண்டானே நேரொருவ ரில்லா தானே
கொடியேறு கோலமா மணிகண் டனே
கொல்வேங்கை அதளனே கோவ ணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்
புவலோகந் திரியுமே புரிநூ லானே
அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

6.4.11

  திருச்சிற்றம்பலம்  

 

 

6. 05 திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

 

 

44

எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.

6.5.1

45

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி
உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

6.5.2

46

முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.

6.5.3

47

சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

6.5.4

48

நீறேறு நீல மிடற்றாய் போற்றி
நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.

6.5.5

49

பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

6.5.6

50

மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
பார்முழுது மாய பரமா போற்றி
கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.

6.5.7

51

வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

6.5.8

52

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

6.5.9

53

முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.

6.5.10

  திருச்சிற்றம்பலம்

 
 
 
 

 

6. 06 திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

 

54

அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.

6.6.1

55

கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.

6.6.2

56

வைதெழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
கணக்கு வழக்கைக் கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.

6.6.3

57

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.

6.6.4

58

ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.

6.6.5

59

திருமகட்குச் செந்தா மரையாமடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
உருவென் றுணரப் படாதவடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.

6.6.6

60

உரைமாலை யெல்லா முடையவடி
உரையால் உணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையில் லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீரட் டானக் காபாலியடி.

6.6.7

61

நறுமலராய் நாறு மலர்ச்சேவடி
நடுவாய் உலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமுந் தந்திரமு மாயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.

6.6.8

62

அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
அடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார் வீரட்டத் தலைவனடி.

6.6.9

63

அந்தாம ரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலனடி.

6.6.10

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருவீரட்டேசுவரர்,
தேவியார் - திருவதிகைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
 

 

 

 

6. 07 திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

64

செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ்
சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந்
தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும்
நல்லூருந் தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்
கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக்
கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே.

6.7.1

65

தீர்த்தப் புனற்கெடில வீரட்டமுந்
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை
அறையணி நல்லூரும் அரநெறியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமுங்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே.

6.7.2

66

சிறையார் புனற்கெடில வீரட்டமுந்
திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்தநின்ற
சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும்
அறையார் புனலொழுகு காவிரிசூழ்
ஐயாற் றமுதன் பழனம்நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங்
கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே.

6.7.3

67

திரையார் புனற்கெடில வீரட்டமுந்
திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையா ரருவிசூழ் மாநதியும்
மாகாளங் கேதாரம் மாமேருவுங்
கரையார் புனலொழுகு காவிரிசூழ்
கடம்பந் துறையுறைவார் காப்புக்களே.

6.7.4

68

செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங்
குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்
கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்
கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.

6.7.5

69

தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ்
செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று
பவ்வந் திரியும் பருப்பதமும்
பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையும் மணிமுத்தமும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங்
கழிப்பாலை தம்முடைய காப்புக்களே.

6.7.6

70

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சிக்காலி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக்களே.

6.7.7

71

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்
திண்டீச் சரமுந் திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீச் சரமுநல் லேமங்கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங்
குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங்
காரோணந் தம்முடைய காப்புக்களே.

6.7.8

72

சீரார் புனற்கெடில வீரட்டமுந்
திருக்காட்டுப் பள்ளி திருவெண்காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்
காரார் கமழ்கொன்றைத் தாரார்க்கென்றுங்
கடவூரில் வீரட்டங் காப்புக்களே.

6.7.9

73

சிந்தும் புனற்கெடில வீரட்டமுந்
திருவாஞ் சியமுந் திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவது
இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
கந்தங் கமழுங் கரவீரமுங்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.

6.7.10

74

தேனார் புனற்கெடில வீரட்டமுந்
திருச்செம்பொன் பள்ளிதிருப் பூவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலைக்
கானார் மயிலார் கருமாரியுங்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.

6.7.11

75

திருநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மானிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்
கருநீல வண்டரற்றுங் காளத்தியுங்
கயிலாயந் தம்முடைய காப்புக்களே.

6.7.12

 

திருச்சிற்றம்பலம்

 

 


6.8 திருக்காளத்தி - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

76

விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.

6.8.1

77

இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

6.8.2

78

நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவா யன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.

6.8.3

79

செற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண்
திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க்
குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்
சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.

6.8.4

80

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

6.8.5

81

எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்
நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு
நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

6.8.6

82

கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

6.8.7

83

இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண்
வெண்ணூ லுஞ்சேர்ந்த அகலத் தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபா லிகான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

6.8.8

84

தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க
ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்
நம்பன்காண் ஞானத் தொளியா னான்காண்
வானப்பே ரூரு மறிய வோடி
மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக்
கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

6.8.9

85

இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்
குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
மறைக்காட் டுறையும் மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

6.8.10

86

உண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

6.8.11

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர்,
தேவியார் - ஞானப்பூங்கோதையாரம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

6.9 திருஆமாத்தூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

87

வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

6.9.1

88

வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே.

6.9.2

89

கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்
கடிய விடையேறிக் காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

6.9.3

90

பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

6.9.4

91

உருளுடைய தேர்புரவி யோடும் யானை
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ
அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

6.9.5

92

வீறுடைய ஏறேறி நீறு பூசி
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக்
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்
பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

6.9.6

93

கையோர் கபாலத்தர் மானின் றோலர்
கருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீ றாடித்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
மெய்யொரு பாகத் துமையை வைத்து
மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

6.9.7

94

ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றொற்றியூர் உம்மூரே உணரக் கூறீர்
நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

6.9.8

95

கல்லலகு தாங்கொண்டு காளத் தியார்
கடியவிடை யேறிக் காணக் காண
இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
என்றாருக் கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
துருத்தி பழனமோ நெய்த்தானமோ
அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

6.9.9

96

மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
மணிமிழலை மேய மணாளர் போலுங்
கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங்
கொடுகொட்டி தாள முடையார் போலுஞ்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந்
தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

6.9.10

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆமாத்தீசுவரர்,
தேவியார் - அழகியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

6.10 திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

97

நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.1

98

காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற்
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.2

99

பூதப் படையுடையார் பொங்கு நூலார்
புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி
ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.3

100

நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.4

101

தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலாய் அடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.5

102

கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.6

103

முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி உலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.7

104

கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப்
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.8

105

ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
அனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.9

106

கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலையின் மேலி ருந்து
வாளரக்கர் கோன்றலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

6.10.10

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர்,
தேவியார் - காம்பன்னதோளியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

6.11 திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

107

பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப்
பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.1

108

பின்றானும் முன்றானு மானான் றன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னை
நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி
நல்வினையுந் தீவினையு மானான் றன்னைச்
சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நின்றாய நீடூர் நிலாவி னானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.2

109

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை
இனியநினை யாதார்க் கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.3

110

கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயா டியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.4

111

நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீக்காத பேரொளிசேர் நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.5

112

பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த
முடையானை முடைநாறும் புன்க லத்தில்
ஊணலா வூணானை யொருவர் காணா
உத்தமனை யொளிதிகழும் மேனி யானைச்
சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீணுலா மலர்க்கழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.6

113

உரையார் பொருளுக் குலப்பி லானை
ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப்
புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்
புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிரையார் மணிமாட நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.7

114

கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்
சீரரவக் கழலானை நிழலார் சோலைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீரரவத் தண்கழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.8

115

கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்
செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.9

116

இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே
இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை
நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை
நலனழித்து நன்கருளிச் செய்தான் றன்னைத்
திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிகழுமா வல்லானை நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.10

 

இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன. திருப்புன்கூரில்,
சுவாமிபெயர் - சிவலோகநாதர்,
தேவியார் - சொக்கநாயகியம்மை.
திருநீடூரில்,
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர்,

திருச்சிற்றம்பலம்

 


 

6.12 திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

117

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.1

118

முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
முன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை
பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
பிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்
கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.2

119

நெளிவுண்டாக் கருதாதே நிமலன் றன்னை
நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
ஒருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்
களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.3

120

பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி
ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.4

121

விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
இறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்
கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
கழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார்
மண்ணானாய் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.5

122

விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.6

123

பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்
பேதப் படுகின்ற பேதை மீர்காள்
இணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.7

124

இயல்பாய ஈசனை எந்தை தந்தை
என்சிந்தை மேவி யுறைகின் றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான
தியம்பகன் திரிசூலத் தன்ன கையன்
கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.8

125

செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்
கற்றதோர் நூலினன் களிறு செற்றான்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.9

126

பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்
புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
கால்விரலா லூன்று கழிப்பா லையார்
வருதலங்க மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.10

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்,
தேவியார் - வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 


 

6.13 திருப்புறம்பயம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

127

கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.1

128

முற்றொருவர் போல முழுநீ றாடி
முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை
ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்
மற்றொருவ ரில்லைத் துணை யெனக்கு
மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.2

129

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன்றேந் திவந்
திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.3

130

பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப்
பனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர்
நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை
நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்
கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்
கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்
பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.4

131

செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.5

132

நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.6

133

மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு
திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.7

134

நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட் டியுங்
குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை
நல்லாலை நல்லூரே தவிரே னென்று
நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.8

135

விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.9

136

கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கின விநாய கனும்
பூவாய பீடத்து மேல யனும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.10

 

 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர்,
தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.

திருச்சிற்றம்பலம்

 


 

 

6.14 திருநல்லூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

 

137

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.1

138

பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.2

139

தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.3

140

வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.4

141

விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.5

142

உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.6

143

மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.7

144

குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.8

145

சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.9

146

பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.10

147

குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

6.14.11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்,
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.

திருச்சிற்றம்பலம்

 


 

 

 

6.15 திருக்கருகாவூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

 

148

குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.1

149

வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டு முருவமாம் விரும்பி நின்ற
பத்தா மடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாந்
தொத்தா மமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.2

150

பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்
ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.3

151

இரவனாம் எல்லி நடமா டியாம்
எண்டிசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம்
ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங்
குரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்
கரவனாங் காட்சிக் கெளியா னுமாங்
கண்ணாங் கருவூ ரெந்தை தானே.

6.15.4

152

படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் றானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம்
அசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகுங்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.5

153

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாஞ்
சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாங்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.6

154

அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.7

155

துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
படிதானாம் பாவ மறுப்பா னாகும்
பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங்
கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்
கடியானாங் காட்சிக் கரியா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.8

156

விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் றானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.9

157

பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானாய்ச்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத் தீமூட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி
இருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.10

158

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகுங்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

6.15.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்,
தேவியார் - கரும்பனையாளம்மை.

திருச்சிற்றம்பலம்


 

 

6.16 திருவிடைமருது - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

 


 

159

சூலப் படையுடையார் தாமே போலுஞ்
சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.1

160

காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்
காரானை ஈருரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப் படுவார் போலும்
பத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்
சீரால் வணங்கப் படுவார் போலுந்
திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.2

161

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்
பூதங்க ளாய புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும்
பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
ஏதங்க ளான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.3

162

திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
பரங்குன்ற மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.4

163

ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
படுவெண் டலையிற் பலிகொள் வாரும்
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்
ஏகம்ப மேயாரு மெல்லா மாவார்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.5

164

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.6

165

பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.7

166

தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆல மமுதாக வுண்டார் போலும்
அடியார்கட் காரமுத மானார் போலுங்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.8

167

பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.9

168

கொன்றையங் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி
நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
அன்றவ் வரக்கன் அலறி வீழ
அருவரையைக் காலா லழுத்தி னாரும்
என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.10

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்,
தேவியார் - நலமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 


 

6.17 திருவிடைமருது - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

169

ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர்
அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்
நீறு தடவந் திடப மேறி
நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்
கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறுந் நடுவு முதலு மாவார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

6.17.1

170

மங்குல் மதிவைப்பர் வான நாடர்
மடமா னிடமுடையர் மாத ராளைப்
பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங் கொண்டாரே.

6.17.2

171

ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்
அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்
கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
கொடுமழுவர் கோழம்ப மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

6.17.3

172

தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ்
செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்
நேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு
நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்
ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

6.17.4

173

கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்
கரவாதே தந்நினைய கிற்பார் பாவந்
துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
தூய மறைமொழியர் தீயா லொட்டி
நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்
இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

6.17.5

174

கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்
குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
பொடியாரு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடியார் குடியாவர் அந்த ணாளர்
ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

6.17.6

175

பச்சை நிறமுடையர் பாலர் சாலப்
பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
கலனொன்று கையேந்தி இல்லந் தோறும்
பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்
பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்
இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

6.17.7

176

காவார் சடைமுடியர் காரோ ணத்தர்
கயிலாய மன்னினார் பன்னு மின்சொற்
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
பயிலுந் திருவுருவம் பாக மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட
ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

6.17.8

177

புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர்
பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்
பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்
பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை
எவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

6.17.9

178

விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
செழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால்
இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

6.17.10

 

திருச்சிற்றம்பலம்

 

 

6.18 திருப்பூவணம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

179

வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.1

180

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
ஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்
சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.2

181

கல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ்
சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.3

182

படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று
மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.4

183

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.5

184

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்
சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.6

185

தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றுந்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.7

186

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்
திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.8

187

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.9

188

ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங்
குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.10

189

ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை
மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை
நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

6.18.11

     
 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர்,
தேவியார் - மின்னாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

6.19 திருவாலவாய் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

190

முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.1

191

விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்
கரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னைத்
தெண்ணிலவு தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.2

192

நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை
நிலமருவி நீரோடக் கண்டான் றன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் றன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைக்
காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
கடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித்
தீத்திரளைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.3

193

வானமிது வெல்லா முடையான் றன்னை
வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
கானமதில் நடமாட வல்லான் றன்னைக்
கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்
ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை
உணர்வாகி அடியேன துள்ளே நின்ற
தேனமுதைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.4

194

ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை
ஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும்
பேரானைப் பிறர்க்கென்று மரியான் றன்னைப்
பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை
அருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ்
சீரானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.5

195

மூவனை மூர்த்தியை மூவா மேனி
உடையானை மூவுலகுந் தானே யெங்கும்
பாவனைப் பாவ மறுப்பான் றன்னைப்
படியெழுத லாகாத மங்கை யோடும்
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.6

196

துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத்
துன்பந் துடைத்தாள வல்லான் றன்னை
இறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை
எல்லி நடமாட வல்லான் றன்னை
மறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை
மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்
சிறந்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.7

197

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.8

198

பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் றன்னைப்
பழியிலியாய் நஞ்சமுண் டமுதீந் தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை
வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை
மேலாய தேவாதி தேவர்க் கென்றுந்
திகைச்சுடரைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.9

199

மலையானை மாமேறு மன்னி னானை
வளர்புன் சடையானை வானோர் தங்கள்
தலையானை என்றலையின் உச்சி யென்றுந்
தாபித் திருந்தானைத் தானே யெங்குந்
துலையாக ஒருவரையு மில்லா தானைத்
தோன்றாதார் மதின்மூன்றுந் துவள வெய்த
சிலையானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.10

200

தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் றன்னைத்
தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் றன்னைப்
பரிந்தவற்குப் பாசுபத மீந்தான் றன்னை
ஆத்தனை அடியேனுக் கன்பன் றன்னை
அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.11

திருச்சிற்றம்பலம்


 

6.20 திருநள்ளாறு - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

201

ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமைய மாதோர்கூ றாயி னானை
மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.1

202

படையானைப் பாசுபத வேடத் தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை அடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் றன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.2

203

படவரவ மொன்றுகொண் டரையி லார்த்த
பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
அமுதாக உண்டானை ஆதி யானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மாணிக்காய்க் காலன் றன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.3

204

கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்
கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்
சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.4

205

உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ்
சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்
திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோ கனைக்
கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானைக்
கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.5

206

குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக்
குலவரையன் மடப்பாவை இடப்பா லானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்
சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்
தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.6

207

பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் றன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை உதைத்தவன்றன் சிரங்கொண் டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.7

208

சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற
வில்லானை எல்லார்க்கு மேலா னானை
மெல்லியலாள் பாகனை வேதம் நான்குங்
கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்
காளத்தி யானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.8

209

குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை
அன்றாக அவுணர்புர மூன்றும் வேவ
ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்
சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்
நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.9

210

இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி இன்னிசைகேட் டிரங்கி மீண்டே
உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.10

 

திருச்சிற்றம்பலம்
 

 

 

6.21 திருவாக்கூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

211

முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்
கல்லலகு பாணி பயின்றார் போலுங்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.1

212

ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணரப் படாதொன் றில்லை போலுங்
காதிற்குழை யிலங்கப் பெய்தார் போலுங்
கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.2

213

மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்
ஐவா யரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.3

214

வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
பூங்கங்கை தோய்ந்த சடையார் போலுங்
கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலுங்
கட்டங்க மேந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.4

215

ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
இடுவெண் டலைகலனா ஏந்தி நாளும்
மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
மாகாச மாயவெண் ணீருந் தீயும்
மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாச மென்றிவையு மானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.5

216

மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள்
மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலு மிறுதியு மில்லார் போலுந்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.6

217

மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
மான்றோ லுடையா மகிழ்ந்தார் போலுங்
கோலானைக் கோளழலாற் காய்ந்தார் போலுங்
குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலுங்
காலனைக் காலாற் கடந்தார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஆலானைந் தாட லுகப்பார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.7

218

கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
ஊழித்தீ யன்ன ஒளியார் போலும்
எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லு மிறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.8

219

கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியானுஞ் சதுர்முகனுந் நேட நின்ற
நீலநற் கண்டத் திறையார் போலும்
படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்
அடியார் புகலிடம தானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.9

220

திரையானுஞ் செந்தா மரைமே லானுந்
தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறிச் செல்வார் போலுங்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
காலத்தீ யன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதவீசுவரர்,
தேவியார் - கட்கநேத்திராம்பிகை.

திருச்சிற்றம்பலம்

6.22 திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

221

பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானை
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
திகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் றன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.1

222

விண்ணோர் பெருமானை வீரட் டானை
வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
பெண்ணானை ஆணானைப் பேடி யானைப்
பெரும்பெற்றத் தண்புலியூர் பேணி னானை
அண்ணா மலையானை ஆனைந் தாடும்
அணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னைக்
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.2

223

சிறையார் வரிவண்டு தேனே பாடுந்
திருமறைக்காட் டெந்தை சிவலோ கனை
மறையான்றன் வாய்மூருங் கீழ்வே ளூரும்
வலிவலமுந் தேவூரும் மன்னி யங்கே
உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்
பற்றியாள் கின்ற பரமன் றன்னைக்
கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.3

224

அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
ஆச்சிரா மன்னகரு மானைக் காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் றன்னை
மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்
சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடிச்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.4

225

நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை
ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய
படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்
பன்மையே பேசும் படிறன் றன்னை
மடையிடையே வாளை யுகளும் பொய்கை
மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்
கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.5

226

புலங்கொள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப்
பூம்புகார்க் கற்பகத்தை புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை
அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னைக்
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.6

227

பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்
புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்
சின்மணிய மூவிலைய சூலத் தானைத்
தென்சிராப் பள்ளிச் சிவலோ கனை
மன்மணியை வான்சுடலை யூராப் பேணி
வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.7

228

வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை
விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்
புண்டலைய மால்யானை யுரிபோர்த் தானைப்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
எண்டிசையு மெரியாட வல்லான் றன்னை
ஏகம்ப மேயானை எம்மான் றன்னைக்
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.8

229

சொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத்
தொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னை
வில்லானை மீயச்சூர் மேவி னானை
வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்
பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்றப்
பொறியரவம் மார்பாரப் பூண்டான் றன்னைக்
கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.9

230

மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்
மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை
அவன்பற்றே பற்றாகக் காணி னல்லாற்
கனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.10

231

நெடியானும் மலரவனும் நேடி யாங்கே
நேருருவங் காணாமே சென்று நின்ற
படியானைப் பாம்புரமே காத லானைப்
பாம்பரையோ டார்த்த படிறன் றன்னைச்
செடிநாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று
சென்றானை நின்றியூர் மேயான் றன்னைக்
கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.11

திருச்சிற்றம்பலம்


 

6.23 திருமறைக்காடு - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

232

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

6.23.1

233

கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

6.23.2

234

சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

6.23.3

235

கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர்பிறைமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

6.23.4

236

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையு மண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

6.23.5

237

ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

6.23.6

238

வேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய்
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய்
பால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய்
பருப்பதத் தான்கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

6.23.7

239

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய்
என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கு மருந்து கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

6.23.8

240

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்
ஆதியு மந்தமு மானான் கண்டாய்
பால விருத்தனு மானான் கண்டாய்
பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

6.23.9

241

அயனவனும் மாலவனு மறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று
சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாலன் றானே.

6.23.10

திருச்சிற்றம்பலம்


 

6.24 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

242

கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மானத் தொளியன்ன மேனி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.1

243

ஊனேறு படுதலையில் உண்டி யான்காண்
ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண்
அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
தேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.2

244

ஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் றான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
அனலாடி காண்அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.3

245

கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்
கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்
எங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
ஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண்
பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண்
பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்
செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.4

246

காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
போரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண்
புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்
நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.5

247

பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்
பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்
இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்
இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்
சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.6

248

தலையுருவச் சிரமாலை சூடி னான்காண்
தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்
அலையுருவச் சுடராழி ஆக்கி னான்காண்
அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்
கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்
கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்
சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.7

249

ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
கையன்காண் கடற்பூதப் படையி னான்காண்
கண்ணெரியால் ஐங்கணையோ னுடல்காய்ந் தான்காண்
வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
செய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.8

250

மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்
மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்
கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.9

251

பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்
மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.10

திருச்சிற்றம்பலம்


 

6.25 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

252

உயிரா வணமிருந் துற்று நோக்கி
உள்ளக் கிழியி னுரு வெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.

6.25.1

253

எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியா லுறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.

6.25.2

254

தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்
கண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலா மொப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே.

6.25.3

255

கோவணமோ தோலோ உடை யாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வ துதான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ
தீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடித்
திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
அறியேன்மற் றூராமா றாரூர் தானே.

6.25.4

256

ஏந்து மழுவாளர் இன்னம் பரார்
எரிபவள வண்ணர் குடமூக் கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாக மாக
வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்
போந்தா ரடிகள் புறம்ப யத்தே
புகலூர்க்கே போயினார் போரே றேறி
ஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்
அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.

6.25.5

257

கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.

6.25.6

258

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே.

6.25.7

259

ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
பாடுவார் தும்புருவும் நார தாதி
பரவுவார் அமரர்களு மமரர் கோனுந்
தேடுவார் திருமாலும் நான்மு கனுந்
தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.

6.25.8

260

நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரு மொழியாமே ஒற்றித் தெங்கும்
உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.

6.25.9

261

நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
இராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

6.25.10

262

கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்
கருவரைபோற் களியானை கதறக் கையால்
உரித்தெடுத்துச் சிவந்ததன்றோல் பொருந்த மூடி
உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்
திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த்தானம்
திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்
அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி
அப்பனார் இப்பருவ மாரூ ராரே.

6.25.11

திருச்சிற்றம்பலம்


 

6.26 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

263

பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்
பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை
வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை
வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச்
சோதிச்சந் திரன்மேனி மறுச்செய்தானைச்
சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை
ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.1

264

வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை
ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை
அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை
அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.2

265

ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை
ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை
வருகாலஞ் செல்கால மாயி னானை
வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைப்
பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்
புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை
அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.3

266

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை
உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.4

267

பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்
பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத்
துண்டத்தின் துணிபொருளைச் சுடுதீ யாகிச்
சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக்
கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து
கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை
அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.5

268

நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப்
பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்
பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச்
சோதியாய் இருளாகிச் சுவைக ளாகிச்
சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.6

இப்பதிகத்தில் 7,8,9,10-ம் செய்யுட்கள்

6.26.7-10

திருச்சிற்றம்பலம்

6.27 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

269

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

6.27.1

270

ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க்
கில்லையே னுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி
ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னார்நின்ற அரனைக் காண்பேன்
தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.

6.27.2

271

சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்
செழுங்கணால் நோக்குமிது வூக்க மன்று
பல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூதப்
பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்
சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்
தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால்
நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.

6.27.3

272

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.

6.27.4

273

துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.

6.27.5

274

பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்றும்
அதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை ஆரூர்ச்
செல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே.

6.27.6

275

இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
அமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.

6.27.7

276

விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரிற்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே.

6.27.8

277

மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்
ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.

6.27.9

278

சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித்
துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல்
செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்க னாகந்
தளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழுந் தருளியவெம் பெருமான் பாதத்
திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

6.27.10


திருச்சிற்றம்பலம்

6.28 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

279

நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்
நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங்
காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்
கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங்
கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங்
கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்
ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.1

280

பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
பாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங்
காபாலங் கட்டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்க ளட்டார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.2

281

துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந்
தூய திருமேனிச் செல்வர் போலும்
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும்
மணியுடைய மாநாக மார்ப்பார் போலும்
வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.3

282

ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்
ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்
காட்டகத்தே ஆட லுடையார் போலுங்
காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.4

283

ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்
இமையவர்க ளேத்த இருந்தார் போலுங்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
வானத் திளமதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுந்தாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.5

284

காமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலுஞ்
சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ்
சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும்
நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையுந் திருமுடியார் தாமே போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.6

285

முடியார் மதியரவம் வைத்தார் போலும்
மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலுஞ்
செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
செல்கதி தான்கண்ட சிவனார் போலுங்
கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியார் அடிமை உகப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.7

286

இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலுஞ்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந்
தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.8

287

பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
பிறவி யிறவி இலாதார் போலும்
முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
முழுநீறு பூசு முதல்வர் போலுங்
கண்டத் திறையே கறுத்தார் போலுங்
காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.9

288

ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை அஞ்ச லென்பார்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.10

289

நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்
கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்
கோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலுஞ்
சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்
திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.11


திருச்சிற்றம்பலம்

6.29 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

290

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.1

291

பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப்
பொங்குவெண் ணூலானைப் புனிதன் றன்னை
மின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் றன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி
அன்னானை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.2

292

ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை
ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக்
கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னைக்
காற்றானைத் தீயானை நீரு மாகிக்
கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள
ஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.3

293

முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை
மூவாத மேனிமுக் கண்ணி னானைச்
சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்
சங்கரனைச் சங்கக் குழையான் றன்னை
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
மறுமையு மிம்மையு மானான் றன்னை
அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.4

294

பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்
பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே
உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்
ஓரிபல விடநட்ட மாடி னானைத்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி
நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற
அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.5

295

பழகிய வல்வினைகள் பாற்று வானைப்
பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங்
குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்
கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை
விழவனை வீரட்ட மேவி னானை
விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
அழகனை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.6

296

சூளா மணிசேர் முடியான் றன்னைச்
சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்
கோள்வா யரவ மசைத்தான் றன்னைக்
கொல்புலித்தோ லாடைக் குழகன் றன்னை
நாள்வாயும் பத்தர் மனத்து ளானை
நம்பனை நக்கனை முக்க ணானை
ஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.7

297

முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை
மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து
கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னைப்
பத்தனைப் பத்தர் மனத்து ளானைப்
பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை
அத்தனை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.8

298

பையா டரவங்கை யேந்தி னானைப்
பரிதிபோற் றிருமேனிப் பால்நீற் றானை
நெய்யாடு திருமேனி நிமலன் றன்னை
நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்
செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்
செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.9

299

சீரார் முடிபத் துடையான் றன்னைத்
தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்
பேரார் பெருமை கொடுத்தான் றன்னைப்
பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப்
போரார் புரங்கள் புரள நூறும்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
ஆரானை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.10


திருச்சிற்றம்பலம்

6.30 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

300

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.1

301

அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் சொல்லுந்
தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந்
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.2

302

நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தான்காண்
வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்
வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
காரேறு முகிலனைய கண்டத் தான்காண்
கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
சீரேறு மணிமாடத் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.3

303

கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்
கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்
ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.4

304

பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
வானவரு மறியாத நெறிதந் தான்காண்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.5

305

சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண்
தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண்
அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக
அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.6

306

நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்
நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
மின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
துன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண்
சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த
தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.7

307

பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்
புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
கோலமா நீறணிந்த மேனி யான்காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.8

308

விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்
மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்
புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண்
தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.9

309

செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
தென்னானைக் காவன்காண் தீயில் வீழ
மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண்
அருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு தோளுநெரிந் தலற வன்று
திருவிரலா லடர்த்தவன்காண் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.

6.30.10


திருச்சிற்றம்பலம்

6.31 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

310

இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்
சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்றுந்
தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்
கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும்
ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.

6.31.1

311

செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாகப்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்
அம்மானே ஆரூரெம் மரசே யென்றுங்
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

6.31.2

312

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குக்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.

6.31.3

313

புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம்
நெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள்நீ
நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும்
நுந்தாத வொண்சுடரே யென்று நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
எண்ணரிய திருநாம முடையா யென்றும்
எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.

6.31.4

314

இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால்
இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும்
பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும்
அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்
அணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங்
குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே
குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.

6.31.5

315

நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்
சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ்
சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்
திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.

6.31.6

316

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்
பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.

6.31.7

317

மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதி யென்றும்
அம்மானே ஆரூரெம் மையா வென்றுந்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்
சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

6.31.8

318

பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே
பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே
திருவாரூர்த் திருமூலத் தானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும்
எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே.

6.31.9

319

புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்றுந்
தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
இலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும்
எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்
நலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும்
நாடோ றும் நவின்றேத்தாய் நன்மை யாமே.

6.31.10


திருச்சிற்றம்பலம்

6.32 திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

320

கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.1

321

வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.2

322

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி
ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.3

323

பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.4

324

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.5

325

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.6

326

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேத மாறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.7

327

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.8

328

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.9

329

பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.

6.32.10


திருச்சிற்றம்பலம்

6.33 திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

330

பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப்
பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்
காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
இருங்கனக மதிலாரூர் மூலத் தானத்
தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.1

331

கற்பகமும் இருசுடரு மாயி னானைக்
காளத்தி கயிலாய மலையு ளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை
விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலத் தானம்
பொருந்தியவெம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.2

332

பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்
பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை
வேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலத் தானம்
புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.3

333

நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை
நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலத் தானம்
இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.4

334

சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்
சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை
விடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை
மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலத் தானம்
மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.5

335

தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்
தகுதில்லை நடம்பயிலுந் தலைவன் றன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலத் தானம்
விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.6

336

பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்
புகலூரும் புறம்பயமும் மேயான் றன்னை
மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
இருளியல்நற் பொழிலாரூர் மூலத் தானத்
தினிதமரும் பெருமானை இமையோ ரேத்த
அருளியனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.7

337

காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்
காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப்
பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப்
பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச்
சேலுகளும் வயலாரூர் மூலத் தானஞ்
சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற
ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.8

338

ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை
ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
வைப்பவனை மாணிக்கச் சோதி யானை
மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானை
*மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற
வினையிலியைத் திருமூலத் தானம் மேய
அப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
* இச்செய்யுளின் பின்னிரு அடிகள் பிற பதிப்புகளில்
காணப்படவில்லை.

6.33.9

339

பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப்
பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
இகலவனை இராவணனை இடர்செய் தானை
ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலத் தானம்
பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.33.10


திருச்சிற்றம்பலம்


6.34 திருவாரூர் - திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்



340

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.1

341

மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.2

342

பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.3

343

ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
தக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.4

344

பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே
நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே
நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.5

345

திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து
மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ
பிறங்கியசீர்ப் பிரமன்றன் தலைகை யேந்திப்
பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.6

346

நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.7

347

பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.8

348

புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டுந்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.9

349

ஈசனா யுலகேழும் மலையு மாகி
இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ
வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.10


திருச்சிற்றம்பலம்

6.35 திருவெண்காடு - திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்

350

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.1

351

பாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.2

352

நென்னலையோர் ஓடேத்திப் பிச்சைக் கென்று
வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி யாடும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.3

353

ஆகத் துமையடக்கி ஆறு சூடி
ஐவா யரவசைத்தங் கானே றேறிப்
போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்
புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.4

354

கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங்
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல
உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
கள்ள விழிவிழிப்பார் காணாக் கண்ணாற்
கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.5

355

தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்
சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்
பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாராற்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக்
கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.6

356

பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக்
கோள்நாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்
உண்பா ருறங்குவார் ஒவ்வா நங்காய்
உண்பதுவும் நஞ்சன்றே லோபி யுண்ணார்
பண்பா லவிர்சடையர் பற்றி நோக்கிப்
பாலைப் பரிசழியப் பேசு கின்றார்
விண்பால் மதிசூடி வேத மோதி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.7

357

மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
வானவரும் மாலயனுங் கூடித் தங்கள்
சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்
தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்
கருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல்
என்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து
விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.8

358

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
காணார் பொறியழலாய் நின்றான் றன்னை
உள்ளானை யொன்றலா உருவி னானை
உலகுக் கொருவிளக்காய் நின்றான் றன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும்
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.9

359

மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி
மாவேழம் வில்லா மதித்தான் றன்னை
நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் றன்னைக்
காக்குங் கடலிலங்கைக் கோமான் றன்னைக்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி
வீக்கந் தவிர்த்த விரலார் போலும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

6.35.10


திருச்சிற்றம்பலம்


6.36 திருப்பழனம் - திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்

360

அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
அமரர்களுக் கருள்செய்யு மாதி தாமே
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே
சிலையாற் புரமூன் றெரித்தார் தாமே
தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.1

361

வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே
மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே
கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே
கருத்துடைய பூதப் படையார் தாமே
உள்ளத் துவகை தருவார் தாமே
உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.2

362

இரவும் பகலுமாய் நின்றார் தாமே
எப்போது மென்னெஞ்சத் துள்ளார் தாமே
அரவ மரையி லசைத்தார் தாமே
அனலாடி யங்கை மறித்தார் தாமே
குரவங் கமழுங்குற் றாலர் தாமே
கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே
பரவு மடியார்க்குப் பாங்கர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.3

363

மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே
வரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறு கொடுஞ்சூலக் கையார் தாமே
என்பா பரண மணிந்தார் தாமே
பாறுண் தலையிற் பலியார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.364

364

சீரால் வணங்கப் படுவார் தாமே
திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே
ஆரா வமுதமு மானார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
நீரார் நியம முடையார் தாமே
நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே
பாரார் பரவப் படுவார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.5

365

கால னுயிர்வௌவ வல்லார் தாமே
கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவு முகப்பார் தாமே
கோள்நாக நாணாகப் பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே
பால விருத்தரு மானார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.6

366

ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே
ஏழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
தீவா யரவதனை யார்த்தார் தாமே
பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.7

367

ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
உள்ளூறு மன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை யிருந்தார் தாமே
பிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே
ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே
உலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவத் திடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.8

368

நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே
நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே
பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே
பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே
ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.9

369

விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே
விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே
புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே
பூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே
அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே
அரக்கனையு மாற்ற லழித்தார் தாமே
படையாப் பல்பூத முடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.10


திருச்சிற்றம்பலம்


6.37 திருவையாறு - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

370

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா வமுதேயென் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.1

371

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
இடும்பைக் கடல்நின்று மேற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.2

372

அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது
நிறையு மமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.3

373

தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை
வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.4

374

இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.5

375

பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
பசுபதி பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.6

376

விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
பசுபதி பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.7

377

அவனென்று நானுன்னை அஞ்சா தேனை
அல்ல லறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று
பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.8

378

கச்சியே கம்பனே யென்றேன் நானே
கயிலாயா காரோணா வென்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.9

379

வில்லாடி வேடனே யென்றேன் நானே
வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
சொல்லாய சூழலா யென்றேன் நானே
சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.37.10

திருச்சிற்றம்பலம்


6.38 திருவையாறு - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

380

ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.1

381

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.2

382

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ

6.38.3

383

வானுற்ற மாமலைக ளானாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.4

384

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.5

385

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.6

386

எல்லா வுலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.7

387

ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.8

388

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.9

389

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.10

390

ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்று மட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுங் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.11


திருச்சிற்றம்பலம்


6.39 திருமழபாடி - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

391

நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்மரண மட்டான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.1

392

கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.2

393

நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.3

394

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.4

395

உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேத மாறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.5

396

தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய்
தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய்
புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.6

397

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.7

398

பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.8

399

ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்
காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.9

400

ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய்
ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை
ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.10

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்,
தேவியார் - அழகாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

 

6.40 திருமழபாடி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
 

 

401

அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற்
சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.40.1

402

அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த
மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக்
கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம்
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.40.2

403

உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட
பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம்
பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.40.3

404

ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு
ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா
நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.40.4

405

சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்
திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்
ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.40.5

406

சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.40.6

407

சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப்
பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.

6.40.7

இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.

6.40.8-10


திருச்சிற்றம்பலம்


6.41 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
 

408

வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலாந் தொழச்செல்வாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.1

409

ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றுங்
கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
கோடிகா மேய குழகா வென்றும்
பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா வென்றுந்
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.2

410

அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றுங்
கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்
காளத்திக் கற்பகமும் நீயே யென்றுஞ்
சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுஞ்
சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றுஞ்
செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.3

411

மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும்
வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்
பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்
பூத கணநாதன் நீயே யென்றும்
என்னா விரதத்தாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றுந்
தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.4

412

முந்தி யிருந்தாயும் நீயே யென்றும்
முன்கயிலை மேவினாய் நீயே யென்றும்
நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்
நடமாடி நள்ளாறன் நீயே யென்றும்
பந்திப் பரியாயும் நீயே யென்றும்
பைஞ்ஞீலி மேவினாய் நீயே யென்றுஞ்
சிந்திப் பரியாயும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.5

413

தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
ஆக்கூரில் தான் றோன்றி நீயே யென்றும்
புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
புள்ளிருக்கு வேளுராய் நீயே யென்றுந்
தெக்காரு மாகோணத் தானே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.6

414

புகழும் பெருமையாய் நீயே யென்றும்
பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்
இகழுந் தலையேந்தி நீயே யென்றும்
இராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும்
அகழும் மதிலுடையாய் நீயே யென்றும்
ஆலவாய் மேவினாய் நீயே யென்றுந்
திகழும் மதிசூடி நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.7

415

வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும்
வானக் கயிலாயன் நீயே யென்றுங்
கான நடமாடி நீயே யென்றுங்
கடவூரில் வீரட்டன் நீயே யென்றும்
ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்
ஒற்றியூ ராரூராய் நீயே யென்றுந்
தேனாய் அமுதானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.8

416

தந்தைதாய் இல்லாதாய் நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
முந்திய முக்கணாய் நீயே யென்றும்
மூவலூர் மேவினாய் நீயே யென்றுஞ்
சிந்தையாய் தேனூராய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.9

417

மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்
வீழி மிழலையாய் நீயே யென்றும்
அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.10

   
 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்


 

6.42 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

   

418

மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்
இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.1

419

ஈண்டா இரும்பிறவி துறவா ஆக்கை
இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ
விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை
ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த
அம்மானை அரியயனுங் காணா வண்ணம்
நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.2

420

பரவிப் பலபலவுந் தேடி யோடிப்
பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா
குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக்
குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ
இரவிக் குலமுதலா வானோர் கூடி
எண்ணிறந்த கோடி அமர ராயம்
நிரவிக் கரியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.3

421

அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே
அகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து
தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனற்கொன்றை யெறிநீர்த் திங்கள்
இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும்
நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.4

422

தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகு மாளலா மென்று பேசும்
ஆங்காரந் தவிர்நெஞ்சே அமரர்க் காக
முனைத்துவரு மதின்மூன்றும் பொன்ற வன்று
முடுகியவெஞ் சிலைவளைத்து செந்தீ மூழ்க
நினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.5

423

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி
வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் றாதை
கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பு மார்ப்ப
அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.6

424

பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு
வாசக் குழல்மடவார் போக மென்னும்
வலைப்பட்டு விழாதே வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்
துதைந்திலங்கு நூன்மார்பன் தொடர கில்லா
நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.7

425

அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண்
டருநோய்க் கிடமாய வுடலின் றன்மை
தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே
தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா
மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும்
நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.8

426

பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி
போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி
இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே
இமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்
கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங்
கண்ணுதல்கண் டமராடிக் கருதார் வேள்வி
நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.9

427

உரித்தன் றுனக்கிவ் வுடலின் றன்மை
உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்
தரித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே
தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்
எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே
எம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தான மேவி னானை
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.42.10

 

திருச்சிற்றம்பலம்

 


6.43 திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

 
   

428

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாவென் னெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
காணா தனவெல்லாங் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் னோய்தீர்த்த புனிதன் றன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.1

429

குற்றாலங் கோகரணம் மேவி னானைக்
கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் றன்னை
உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை
உணராவென் னெஞ்சை உணர்வித் தானைப்
பற்றாலின் கீழங் கிருந்தான் றன்னைப்
பண்ணார்ந்த வீணை பயின்றான் றன்னைப்
புற்றா டரவார்த்த புனிதன் றன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.2

430

எனக்கென்று மினியானை எம்மான் றன்னை
எழிலாரு மேகம்பம் மேயான் றன்னை
மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்
நில்லானை நின்றியூர் மேயான் றன்னைத்
தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட
சங்கரனைச் சங்கவார் குழையான் றன்னைப்
புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் றன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.3

431

வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை
வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை
அறியா தடியே னகப்பட் டேனை
அல்லற் கடல்நின்று மேற வாங்கி
நெறிதா னிதுவென்று காட்டி னானை
நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் றன்னைப்
பொறியா டரவார்த்த புனிதன் றன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.4

432

மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை
விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி
நக்கானை நான்மறைகள் பாடி னானை
நல்லார்கள் பேணிப் பரவ நின்ற
தக்கானைத் தண்டா மரைமே லண்ணல்
தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம்
புக்கானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.5

433

ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா
அசைத்தானை அழகாய பொன்னார் மேனிப்
பூத்தானத் தான்முடியைப் பொருந்தா வண்ணம்
புணர்த்தானைப் பூங்கணையான் உடலம் வேவப்
பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை
படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை
போர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.6

434

எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி
உமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்
திருச்சடைமேற் றிங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.7

435

வைத்தானை வானோ ருலக மெல்லாம்
வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்
வித்தானை வேண்டிற்றொன் றீவான் றன்னை
விண்ணவர்தம் பெருமானை வினைகள் போக
உய்த்தானை ஒலிகங்கை சடைமேற் றாங்கி
ஒளித்தானை ஒருபாகத் துமையோ டாங்கே
பொய்த்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.8

436

ஆண்டானை வானோ ருலக மெல்லாம்
அந்நா ளறியாத தக்கன் வேள்வி
மீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி
விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேர
நீண்டானை நெருப்புருவ மானான் றன்னை
நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்
பூண்டானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.9

437

மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் றன்னை
மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால்
இறுத்தானை எழுநரம்பின் இசைகேட் டானை
எண்டிசைக்குங் கண்ணானான் சிரமே லொன்றை
அறுத்தானை அமரர்களுக் கமுதீந் தானை
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.43.10

 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பு?பவனநாதர், தேவியார் - அழகார்ந்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

 

 

 

6.44 திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

 

 

 

438

மூத்தவனா யுலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனா யேழுலகு மாயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனா யெல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

6.44.1

439

தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே
நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட
கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த
சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

6.44.2

440

முற்றாத பான்மதியஞ் சூடி னானே
முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே
உற்றாரென் றொருவரையு மில்லா தானே
உலகோம்பும் ஒண்சுடரே ஓதும் வேதங்
கற்றானே எல்லாக் கலைஞா னமுங்
கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

6.44.3

441

கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே
காலங்கள் ஊழிகண் டிருக்கின் றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கு மருள்செய் வானே
வேதனாய் வேதம் விரித்திட் டானே
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

6.44.4

442

நம்பனே நான்மறைக ளாயி னானே
நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமா நகரு ளானே
கடிமதில்கள் மூன்றினையும் பொடியா வெய்த
அம்பனே அளவிலாப் பெருமை யானே
அடியார்கட் காரமுதே ஆனேறேறுஞ்
செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.44.5

 

443

ஆர்ந்தவனே உலகெலாம் நீயே யாகி
அமைந்தவனே அளவிலாப் பெருமை யானே
கூர்ந்தவனே குற்றால மேய கூத்தா
கொடுமூ விலையதோர் சூல மேந்திப்
பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய
பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்
சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

6.44.6

444

வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே
கடிய அரணங்கள் மூன்றட் டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

6.44.7

445

தன்னவனா யுலகெல்லாந் தானே யாகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனா யென்னிதயம் மேவி னானே
ஈசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

6.44.8

446

எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே
ஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானே
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம்
ஆதியு மந்தமு மாகி யங்கே
பிறிந்தானே பிறரொருவர் அறியா வண்ணம்
பெம்மானென் றெப்போது மேத்து நெஞ்சிற்
செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

6.44.9

447

மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை
வானவரு மறியாத வண்ணச் சூலக்
கையவனே கடியிலங்கைக் கோனை யன்று
கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற
மெய்யவனே அடியார்கள் வேண்டிற் றீயும்
விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்
செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.44.10
 

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

 

6.45 திருவொற்றியூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

 

 

 

448

வண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்க ளாயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
ஒற்றியூர் மேய ஒளிவண் ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
கடும்பிணியுஞ் சுடுதொழிலுங் கைவிட் டவே.

6.45.1

449

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
அணிகங்கைச் செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவார்
பசுவேறி உழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் றன்னை வீழக்
கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைக ளோத லோவா
ஒளிதிகழு மொற்றியூர் உறைகின் றாரே.

6.45.2

450

வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்
வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்
கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்
கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி
உள்ளத்தை நீர்கொண்டீர் ஓத லோவா
ஒளிதிகழு மொற்றியூ ருடைய கோவே.

6.45.3

451

நரையார்ந்த விடையேறி நீறுபூசி
நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட
எம்மடிக ளும்மூர்தா னேதோ வென்ன
விரையாதே கேட்டியேல் வேற்க ணல்லாய்
விடுங்கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்
திருவொற்றி யூரென்றார் தீய வாறே.

6.45.4

452

மத்தமா களியானை யுரிவை போர்த்து
வானகத்தார் தானகத்தா ராகி நின்று
பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்
பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தம் பலருடனே கூடிப் பாடிப்
பயின்றிருக்கு மூரேதோ பணியீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
ஒளிதிகழு மொற்றியூர் என்கின் றாரே.

6.45.5

453

கடிய விடையேறிக் காள கண்டர்
கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்
எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்
வருவாரை எதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடு வெண்டலையொன் றேந்தி வந்து
திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.

6.45.6

454

வல்லராய் வானவர்க ளெல்லாங் கூடி
வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லையெம் பெருமானைக் காணோ மென்ன
எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி
நாமிருக்கு மூர்பணியீர் அடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்
ஒளிதிகழு மொற்றியூர் என்கின் றாரே.

6.45.7

455

நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்
நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்
கலந்து பலியிடுவேன் எங்குங் காணேன்
சலப்பாடே இனியொருநாள் காண்பே னாகிற்
தன்னாகத் தென்னாக மொடுங்கும் வண்ணம்
உலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்
ஒற்றியூ ருறைந்திங்கே திரிவா னையே.

6.45.8

456

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை
இரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

6.45.9

457

மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச
மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்
திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண
ஓங்கினவவ் வொள்ளழலார் இங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்
செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே.

6.45.10

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

 

6.46 திருஆவடுதுறை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

458

நம்பனை நால்வேதங் கரைகண் டானை
ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லா லிருந்தான் றன்னைக்
கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.

459

மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை
வெண்முகிலா யெழுந்துமழை பொழிவான் றன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி
என்னானை யெந்தை பெருமான் றன்னை
இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.2

460

பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்
பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் றன்னைச்
சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை
வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.3

461

பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பித்தரா மடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை இடர்க்கடலுள் சுழிக்கப் பட்டிங்
கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்
தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்
சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்
ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.4

462

ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை
உதயத்தி னுச்சியை உருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
தீங்கரும்பின் இன்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.5

463

ஏற்றானை யெண்டோ ளுடையான் றன்னை
எல்லி நடமாட வல்லான் றன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக்
குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் றன்னை
நீற்றானை நீளரவொன் றார்த்தான் றன்னை
நீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.6

464

கைம்மான மதகளிற்றை யுரித்தான் றன்னைக்
கடல்வரைவான் ஆகாச மானான் றன்னைச்
செம்மானப் பவளத்தைத் திகழு முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயா னானை
எம்மானை யென்மனமே கோயி லாக
இருந்தானை என்புருகு மடியார் தங்கள்
அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.7

465

மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை
வெள்ளடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்
கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த
கண்ணானைக் கண்மூன் றுடையான் றன்னைப்
பையா டரவமதி யுடனே வைத்த
சடையானைப் பாய்புலித்தோ லுடையான் றன்னை
ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.8

466

வேண்டாமை வேண்டுவது மில்லான் றன்னை
விசயனைமுன் னசைவித்த வேடன் றன்னைத்
தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்
சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட வுதைசெய்த மைந்தன் றன்னை
மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்
ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.9

467

பந்தணவு மெல்விரலாள் பாகன் றன்னைப்
பாடலோ டாடல் பயின்றான் றன்னைக்
கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்
கோலமா நீல மிடற்றான் றன்னைச்
செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத்
திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.10

468

தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் றன்னைத்
தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் றன்னைப்
பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பெருவலியால் மலையெடுத்த அரக்கன் றன்னை
நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை
நீசனேன் உடலுறுநோ யான தீர
அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.46.11

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

 

6.47 திருஆவடுதுறை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

 

 

 

469

திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேயென் னுறவே யென்னூனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோ யடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.47.1

470

மாற்றேன் எழுத்தஞ்சு மென்றன் நாவின்
மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு
வேதனைக்கே இடங்கொடுத்து நாளு நாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 6.47.2

 

471

வரையார் மடமங்கை பங்கா கங்கை
மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்
உரையா வுயிர்போகப் பெறுவே னாகில்
உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே
கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்
காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்
கரையா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 6.47.3

 

472

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
சிலைவளைவித் துமையவளை அஞ்ச நோக்கிக்
கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்
களிறுரித்த கங்காளா எங்கள் கோவே
நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்
நில்லா வுயிரோம்பு நீத னேனான்
அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.47.4

473

நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி
நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
துறவாத துன்பந் துறந்தேன் றன்னைச்
சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னே
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
அறவா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.47.5

474

கோனா ரணன்அங்கந் தோள்மேற் கொண்டு
கொழுமலரான் றன்சிரத்தைக் கையி லேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
நானார் உமக்கோர் வினைக்கே டனேன்
நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.47.6

475

உழையுரித்த மானுரிதோ லாடை யானே
உமையவள்தம் பெருமானே இமையோ ரேறே
கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா
கயிலாய மலையானே உன்பா லன்பர்
பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்
கடனன்றே பேரருளுன் பால தன்றே
அழையுறுத்து மாமயில்கள் ஆலுஞ் சோலை
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.47.7

476

உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோர்
உலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு
கலந்தார் மனங்கவருங் காத லானே
கனலாடுங் கையவனே ஐயா மெய்யே
மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய
மயக்குளே விழுந்தழுந்தி நாளு நாளும்
அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 6.47.8

 

477

பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்
பசுவேறி யூரூரன் பலிகொள் வானே
கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்
கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்
எல்லாரு மென்றன்னை இகழ்வர் போலும்
ஏழையமண் குண்டர்சாக் கியர்க ளொன்றுக்
கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.47.9

478

துறந்தார்தந் தூநெறிக்கட் சென்றே னல்லேன்
துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்
பிறந்தேன் நின்றிருவருளே பேசி னல்லாற்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் றன்னைச்
செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
 

6.47.10

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

 

6.48 திருவலிவலம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

 

 

 

479

நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

6.48.1

480

ஊனவன்காண் உடல்தனக்கோ ருயிரா னான்காண்
உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட் கென்றுந்
தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண்
தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட
கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண்
களியானை ஈருரிவை கதறப் போர்த்த
வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. 6.48.2

 

481

ஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண்
இன்பன்காண் துன்பங்க ளில்லா தான்காண்
தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யெங்கும்
ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
அகங்குழைந்து மெய்வருந்தி யழுவார் தங்கள்
வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

6.48.3

482

உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண்
ஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்
வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண்
விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத் தென்றும்
பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண்
புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி
வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

6.48.4

483

கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண்
குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய
நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண்
நிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கை
ஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ
மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

6.48.5

484

நிலையவன்காண் தோற்றவன்காண் நிறையா னான்காண்
நீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்த
சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல்
தேன்மொழியை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக்
கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ
மலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

6.48.6

485

பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும்
பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண்
எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி
இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங்
கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன்காண் மதியவன்காண் கடலேழ் சூழ்ந்த
மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

6.48.7

486

முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி
முதலவன்காண் முடிவவன்காண் மூன்று சோதி
அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும்
அணியவன்காண் சேயவன்காண் அளவில் சோதி
மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம்
வேண்டினன்காண் ஈண்டுபுனற் கங்கைக் கென்றும்
மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

6.48.8

487

நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா
நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங்
கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண்
காலங்கள் ஊழியாக் கலந்து நின்ற
பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண்
பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

6.48.9

488

பங்கயத்தின் மேலானும் பால னாகி
உலகளந்த படியானும் பரவிக் காணா
கங்கைவைத்த சென்னியராய் அளக்க மாட்டா
அனலவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங்
குழகன்காண் அழகன்காண் கோல மாய
மங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

6.48.10

 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - மாழையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்

 

 

 

6.49 திருக்கோகரணம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

489

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான் காண்சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தில் அசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.1

490

தந்தவத்தன் றன்றலையைத் தாங்கி னான்காண்
சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்
கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண்
கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்
வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண்
வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்
வந்தொத்த நெடுமாற்கு மறிவொ ணான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.2

491

தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண்
தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள
பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண்
புராணன்காண் பூதங்க ளாயி னான்காண்
மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் றான்காண்
மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.3

492

ஆறேறு செஞ்சடையெம் மாரூ ரன்காண்
அன்பன்காண் அணிபழன மேயான் றான்காண்
நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண்
நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்
கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்
மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.4

493

சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண்
தீயம்பன் காண்திரிபு ரங்கள் மூன்றும்
பொன்றப் பொடியாக நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையா ளிகாண்
அன்றப் பொழுதே அருள்செய் தான்காண்
அனலாடிகாண் அடியார்க் கமுதா னான்காண்
மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. 6.49.5

 

494

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபா லிகாண்
கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடி னான்காண்
ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.6

495

மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண்
விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்
முன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண்
மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்
எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண்
ஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்று
மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.7

496

பின்னுசடை மேற்பிறை சூடி னான்காண்
பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்
முன்னி யுலகுக்கு முன்னா னான்காண்
மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்
இன்னவுரு என்றறிவொ ணாதான் றான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.8

497

வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண்
வீரன்காண் வீரட்ட மேவி னான்காண்
பொட்ட அனங்கனையும் நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையி னான்காண்
கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.9

498

கையாற் கயிலை யெடுத்தான் றன்னைக்
கால்விரலாற் றோள்நெரிய வூன்றி னான்காண்
மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு
மீண்டே அவற்கருள்கள் நல்கி னான்காண்
பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண்
போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்
மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.10

 

 

 

 

இத்தலம் துளுவதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - மாபலநாதர், தேவியார் - கோகரணநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

 

 

 

 

 

6.50 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

 

 

 

 

499

போரானை ஈருரிவைப் போர்வை யானைப்
புலியதளே யுடையாடை போற்றி னானைப்
பாரானை மதியானைப் பகலா னானைப்
பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.50.1

500

சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு
தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் றன்னைப்
பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்
கவர்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னைக்
கழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்
சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.50.2

501

அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை
அகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட
நின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை
நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்
வென்றானை மீயச்சூர் மேவி னானை
மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்
சென்றானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.50.3

502

தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் றன்னைச்
சங்கரனைச் சந்தோக சாம மோதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 6.50.4

 

503

நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த
நஞ்சமுது செய்தானை அமுத முண்ட
மற்றமரர் உலந்தாலும் உலவா தானை
வருகாலஞ் செல்காலம் வந்த காலம்
உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா
ஒருசுடரை யிருவிசும்பி னூர்மூன் றொன்றச்
செற்றவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.50.5

504

மைவான மிடற்றானை யவ்வான் மின்போல்
வளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்
பெய்வானைப் பிச்சாட லாடு வானைப்
பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்
பொய்வானைப் பொய்யிலா மெய்யன் றன்னைப்
பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை
செய்வானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.50.6

505

மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை
வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்
புக்கானை எப்பொருட்கும் பொது வானானைப்
பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்
தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்
தத்துவனைத் தடவரையை நடுவு செய்த
திக்கானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.50.7

506

வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் றன்னை
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை
ஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்
உயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற
கானவனைக் கயிலாய மேவி னானைக்
கங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்
தேனவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.50.8

507

பரத்தானை இப்பக்கம் பலவா னானைப்
பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்து ளானை
மாருதமால் எரிமூன்றும் வாயம் பீர்க்காஞ்
சரத்தானைச் சரத்தையுந்தன் றாட்கீழ் வைத்த
தபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்
சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.50.9

508

அறுத்தானை அயன்றலைகள் அஞ்சி லொன்றை
அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் றோள்கள்
இறுத்தானை எழுநரம்பி னிசைகேட் டானை
இந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்
பறித்தானைப் பகீரதற்கா வானோர் வேண்டப்
பரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்
செறித்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 

6.50.10

 

திருச்சிற்றம்பலம்

 


திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த
ஆறாம் திருமுறை முதற் பகுதி முற்றும்.
திருச்சிற்றம்பலம்