Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவாபுத்தகம் 7. நீதித்தலைவர்கள் புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல்புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14  - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 -  நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் &  புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயா புத்தகம் 24 - எரேமியா >  புத்தகம் 25 - புலம்பல் > புத்தகம் 26 - எசேக்கியேல் > புத்தகம் 27 - தானியேல் > புத்தகம் 28 - ஒசாயா > புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); புத்தகம் 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்) புத்தகம் 35 (அபகூக்கு); 36 (செப்பனியா); 37 - ஆகாய் & புத்தகம் 38 (செக்கரியா) > புத்தகம் 39 (மலாக்கி), புத்தகம் 40 (தோபித்து), புத்தகம் 41 (யூதித்து) புத்தகம் 42 (எஸ்தா(கி)) & புத்தகம் 43 (சாலமோனின் ஞானம்) > புத்தகம் 44 (சீராக்கின் ஞானம்) & புத்தகம் 45 (பாரூக்கு > புத்தகம் 46 (தானியேல் இணைப்புகள்), 47 (மக்கபேயர் - முதல் நூல்) 48 -மக்கபேயர் - இரண்டாம் நூல்


 

 Holy Bible - Old Testament
Book 1 -Genesis

விவிலியம் - பழைய ஏற்பாடு
புத்தகம் 1 - தொடக்கநூல்


Acknowledgements: Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version. PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 2006 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



அதிகாரம் 1.


1.    தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2.    மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
3.    அப்பொழுது கடவுள், ஒளி தோன்றுக! என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
4.    கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
5.    கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
6.    அப்பொழுது கடவுள், நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும் என்றார்.
7.    கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
8.    கடவுள் வானத்திற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.
9.    அப்பொழுது கடவுள், விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக! என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
10.   கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
11.   அப்பொழுது கடவுள், புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
12.   புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
13.   மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
14.   அப்பொழுது கடவுள், பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
15.   அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
16.   கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
17.   கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்:
18.   பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
19.   மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.
20.   அப்பொழுது கடவுள், திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக! என்றார்.
21.   இவ்வாறு, கடலின பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
22.   கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும் என்றுரைத்தார்.
23.   மாலையும் காலையும் நிறைவுற்று, ஜந்தாம் நாள் முடிந்தது.
24.   அப்பொழுது கடவுள், கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக என்றார்.
25.   கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
26.   அப்பொழுது கடவுள், மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், ம்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும் என்றார்.
27.   கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்: கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
28.   கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்: அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்: கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள் என்றார்.
29.   அப்பொழுது கடவுள், மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும்.
30.   எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
31.   கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

அதிகாரம் 2.


1.    விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.
2.    மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
3.    கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் நாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.
4.    இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம். ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது,
5.    மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை: வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை: ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை: மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை.
6.    ஆனால் நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது.
7.    அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.
8.    ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.
9.    ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.
10.   தோட்டத்திற்குள் நீர் பாய்வதற்காக ஏதேனிலிருந்து ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அது அங்கிருந்து பிரிந்து நான்கு சிறப்புமிகு ஆறுகள் ஆயிற்று.
11.   முதலாவதன் பெயர் பீசோன். இது கவீலா நாடு முழுவதும் வளைந்து ஓடுகின்றது. அங்கே பொன் விளையும்.
12.   அந்நாட்டுப் பொன் பசும்பொன். அங்கே நறுமணப் பொருள்களும் வண்ண மணிக்கற்களும் உண்டு.
13.   இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். இது எத்தியோப்பியா நாடு முழவதும் வளைந்து ஓடுகின்றது.
14.   மூன்றாவது ஆற்றின் பெயர் திக்¡£சு. இது அசீரியாவிற்குக் கிழக்கே, ஓடுகின்றது. நான்காவது ஆறு யூப்பிரத்தீசு.
15.   ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.
16.   ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.
17.   ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே: ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டுச் சொன்னார்.
18.   பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று: அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார்.
19.   ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று.
20.   கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்: தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
21.   ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.
22.   ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.
23.   அப்பொழுது மனிதன், இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்: ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள் என்றான்.
24.   இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்: இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
25.   மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.

அதிகாரம் 3.


1.    ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?“ என்று கேட்டது.
2.    பெண் பாம்பிடம், "தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்.
3.    ஆனால் "தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது: அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள் என்று கடவுள் சொன்னார்," என்றாள்.
4.    பாம்பு பெண்ணிடம், "நீங்கள் சாகவே மாட்டீர்கள்:
5.    ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும் " என்றது.
6.    அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.
7.    அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன: அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
8.    மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
9.    ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார்.
10.   "ஙுஉம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன்.
11.   "ஙுநீ ஆடையின்றி இருக்கன்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார்.
12.   அப்பொழுது அவன், "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்: நானும் உண்டேன்" என்றான்.
13.   ஆண்டவராகிய கடவுள், "நீ ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், "பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்" என்றாள்.
14.   ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்.
15.   உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார்.
16.   அவர் பெண்ணிடம் "உன் மகப்போற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்: வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்: அவனோ உன்னை ஆள்வான்" என்றார்.
17.   அவர் மனிதனிடம், "உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது: உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்.
18.   முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.
19.   நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்: மண்ணுக்கே திரும்புவாய்" என்றார்.
20.   மனிதன் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டாள்: ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
21.   ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.
22.   பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது" என்றார்.
23.   எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
24.   இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.

அதிகாரம் 4.


1.    ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் "ஙுஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்" என்றாள்.
2.    பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.
3.    சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான்.
4.    ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.
5.    ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.
6.    ஆகவே, ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?
7.    நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்" என்றார்.
8.    காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.
9.    ஆண்டவர் காயினிடம், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான்.
10.   அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.
11.   இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.
12.   நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்" என்றார்.
13.   காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.
14.   இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்: உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!" என்றான்.

16.   பின்னர் காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான்.
17.   காயின் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது காயின் ஒரு நகரத்தை நிறுவி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான்.
18.   ஏனோக்கிற்கு ஈராது பிறந்தான். ஈராதுக்கு மெகுயாவேல் பிறந்தான். மெகுயாவேலுக்கு மெத்து சாவேல் பிறந்தான். மெத்துசாவேலுக்கு இலாமேக்கு பிறந்தான்.
19.   இலாமேக்கு இரு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதா: மற்றொருத்தியின் பெயர் சில்லா.
20.   ஆதா யாபாலைப் பெற்றெடுத்தாள். இவன்தான் ஆடுமாடு மேய்த்துக் கூடாரத்தில் வாழும் மக்களின் தந்தை.
21.   அவன் சகோதரன் பெயர் யூபால். இவன்தான் யாழ் மீட்டுவோர், குழல் ஊதுவோர் ஆகியோர் அனைவரின் தந்தை.
22.   சில்லா தூபால்காயினைப் பெற்றெடுத்தாள். இவன் வெண்கலத்தாலும், இரும்பாலும் எல்லாவிதமான கருவிகள் செய்யும் கொல்லன் ஆனான். தூபால் காயினுக்கு நாகமா என்ற சகோதரி இருந்தாள்.
23.   இலாமேக்கு தன் மனைவியரிடம், "ஆதா, சில்லா, நான் சொல்வதைக் கவனியுங்கள். இலாமேக்கின் மனைவியரே, என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்: என்னைக் காயப்படுத்தியதற்காக ஒருவனை நான் கொன்று விட்டேன்: என்னை அடித்ததற்காக அந்த இளைஞனை நான் கொன்றேன்.
24.   காயினுக்காக ஏழுமுறை பழிவாங்கப்பட்டால் இலாமேக்கிற்காக எழுபது - ஏழுமுறை பழிவாங்கப்படும்" என்றான்.
25.   ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டாள். காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார் என்றாள்.
26.   சேத்துக்கும் மகன் ஒருவன் பிறந்தான்: அவனுக்கு அவன் ஏனோசு என்று பெயரிட்டான். அப்பொழுதே ¥ ஆண்டவர் என்னும் திருப்பெயரால் அவரை வழிபடலாயினர்.

அதிகாரம் 5.


1.    ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார்.
2.    ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, மனிதர் என்று பெயரிட்டார்.
3.    ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்: அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.
4.    சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
5.    மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.
6.    சேத்துக்கு நூற்றைந்து வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான்.
7.    ஏனோசு பிறந்தபின் சேத்து எண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
8.    மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான்.
9.    ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான்.
10.   கேனான் பிறந்தபின் ஏனோசு எண்ணூற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
11.   மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான்.
12.   கேனானுக்கு எழுபது வயதான போது, அவனுக்கு மகலலேல் பிறந்தான்.
13.   மகலலேல் பிறந்த பின் கேனான் எண்ணூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
14.   மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின் கேனான் இறந்தான்.
15.   மகலலேலுக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு எரேது பிறந்தான்.
16.   எரேது பிறந்தபின் மகலலேல் எண்ணூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். மகலலேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
17.   மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் மகலலேல் இறந்தான்.
18.   எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான்.
19.   ஏனோக்கு பிறந்தபின் எரேது எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். எரேதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
20.   மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் எரேது இறந்தான்.
21.   ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.
22.   மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
23.   ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.
24.   ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.
25.   மெத்துசேலாவுக்கு நூற்று எண்பத்தேழு வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான்.
26.   இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான். மெத்துசேலாவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
27.   மெத்துசேலா மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.
28.   இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான்.
29.   அவன் "ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறதல் அளிப்பான்" என்று சொல்லி அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
30.   நோவா பிறந்தபின் இலாமேக்கு ஜந்நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். இலாமேக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
31.   இலாமேக்கு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.
32.   நோவாவிற்கு ஜந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.

அதிகாரம் 6.


1.    மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது,
2.    மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர்.
3.    அப்பொழுது ஆண்டவர், "என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்" என்றார்.
4.    தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர்.
5.    மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்.
6.    மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.
7.    அப்பொழுது ஆண்டவர், "நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்" என்றார்.
8.    ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.
9.    நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்.
10.   நோவாவிற்கு சேம், காம், எப்பேத்து என்னும் மூன்று புதல்வர் பிறந்தனர்.
11.   அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.
12.   கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது. மண்ணுலகில் ஒவ்வொரு வரும் தீய வழியில் நடந்துவந்தனர்.
13.   அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: "எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன். ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.
14.   உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்: அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
15.   பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது: நீளம் முந்நூறு முழம்: அகலம் ஜம்பது முழம்: உயரம் முப்பது முழம்.
16.   பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி: பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.
17.   நானோ, வானுலகின்கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன். மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம்.
18.   உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.
19.   உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா. அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும்.
20.   வகை வகையான பறவைகள், கால்நடைகள், நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள உன்னிடம் வரட்டும்.
21.   உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள். அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்."
22.   கடவுள் தமக்குக் கட் டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.

அதிகாரம் 7.


1.    அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: "நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.
2.    தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும்.
3.    வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக் கொள்.
4.    ஏனெனில் இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழை பெய்விக்கப்போகிறேன். நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்."
5.    ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார்.
6.    மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.
7.    வெள்ளப்பெருக்கிலிருந்து தப்புவதற்காக நோவா தம் புதல்வர், மனைவி, புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் பேழைக்குள் சென்றார்.
8.    தக்க விலங்குகள், தகாத விலங்குகள், பறவைகள், நிலத்தில் ஊர்வன அனைத்தும்
9.    சோடி சோடியாக, ஆணும் பெண்ணுமாக, நோவாவுடன் கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி பேழைக்குள் சென்றன.
10.   ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
11.   நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன. வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன.
12.   நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது.
13.   நோவா தம் புதல்வர் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகியோருடன் அன்றே பேழைக்குள் நுழைந்தார்.
14.   அவர்களும் அவர்களுடன் எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில் ஊர்வனவும், பறவைகளும், இறக்கைகளையுடைய யாவும்,
15.   உயிருள்ள அனைத்தும் சோடி சோடியாக நோவாவிடம் பேழைக்குள் சென்றன.
16.   கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன. அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார்.
17.   நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது.
18.   மண்ணுலகின் மேல் வெள்ளம் பாய்ந்து மிகுதியாகப் பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதந்தது.
19.   மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின.
20.   மூழ்கிய மலைகளுக்குமேல் நீர் மட்டம் பதினைந்து முழம் உயர்ந்திருந்தது.
21.   நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் அனைவர் - ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன.
22.   தரையில் வாழ்ந்தவற்றில் நாசியால் மூச்சுவிடும் அனைத்தும் செத்துப் போயின.
23.   மனிதர் முதல் விலங்குகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் ஈறாக மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன. அவை மண்ணுலகில் இராதபடி ஒழிக்கப்பட்டன. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சியிருந்தனர்.
24.   நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று.

அதிகாரம் 8.


1.    கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்: வெள்ளம் தணியத் தொடங்கியது.
2.    பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன: வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது.
3.    மண்ணுலகில் வெள்ளம் வற்றிக் குறைந்துகொண்டே வந்து, நூற்றைம்பதாம் நாள் முடிவில் வெள்ளம் வடிந்தது.
4.    ஏழாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று அரராத்து மலைத்தொடர்மேல் பேழை தங்கியது.
5.    பத்தாம் மாதம் வரை வெள்ளம் குறைந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன.
6.    நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து,
7.    காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும் வரை போவதும் வருவதுமாக இருந்தது.
8.    பின்னர். நிலப்பரப்பிலிருந்து வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்கப் புறா ஒன்றைத் தம்மிடமிருந்து வெளியே அனுப்பினார்.
9.    ஆனால் அதற்கு கால் வைத்து தங்குவதற்கு இடம் தென்படாததால், அது அவரிடமே பேழைக்குத் திரும்பி வந்தது. ஏனெனில் நிலப்பரப்பு முழுவதிலும் இன்னும் வெள்ளம் நின்றது. ஆகவே, அவர் தம் கையை நீட்டி அதைப் பிடித்துத் தம்மிடம் பேழைக்குள் சேர்த்துக் கொண்டார்.
10.   அவர் இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்து மீண்டும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார்.
11.   மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார்.
12.   இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை.
13.   அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது.
14.   இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது.
15.   அப்பொழுது கடவுள் நோவாவிடம் கூறியது:
16.   "ஙுநீயும் உன்னுடன் உன் மனைவியும் உன் புதல்வரும் உன் புதல்வரின் மனைவியரும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள்.
17.   உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை பன்மடங்காகட்டும். பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்."
18.   ஆகவே நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் அவருடன் வெளியே வந்தனர்.
19.   விலங்குகள், ஊர்வன, பறவைகள், மண்ணுலகில் நடமாடும் அனைத்தும் வகை வகையாகப் பேழைகளிலிருந்து வெளியே வந்தன.
20.   அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார்.
21.   ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது: "மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.
22.   மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை."

அதிகாரம் 9.


1.    கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியு: "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்.
2.    மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
3.    நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.
4.    இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள்.
5.    உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
6.    ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்.
7.    நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்."
8.    கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது:
9.    "ஙுஇதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்
10.   பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.
11.   உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது."
12.   அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக,
13.   என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.
14.   மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது,
15.   எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.
16.   வில் மேகத்தின்மேல் தோன்றும்பொழுது அதை நான் கண்டு, கடவுளாகிய எனக்கும் மண்ணுலகில் இருக்கும் சதையுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இடையே என்றென்றுமுள்ள உடன்படிக்கையை நினைவுகூர்வேன்" என்றார்.
17.   கடவுள் நோவாவிடம், "எனக்கும் மண்ணுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே" என்றார்.
18.   சேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெளிவந்த நோவாவின் புதல்வர். காம் கானானின் தந்தை.
19.   இவர்கள் மூவரும் நோவாவின் புதல்வர். இவர்களிலிருந்துதான் மண்ணுலகு முழுவதும் மனித இனம் பரவியது.
20.   நோவா நிலத்தில் பயிரிடுபவராகித் திராட்சைத் தோட்டம் அமைத்தார்.
21.   அவர் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகித் தம் கூடாரத்தில் ஆடை விலகிக் கிடந்தார்.
22.   கானானின் தந்தையாகிய காம் தன் தந்தைதிறந்த மேனியாராய்க் கிடப்பதைக் கண்டு, வெளியே இருந்த தன் இரு சகோதரரிடம் அதைத் தெரிவித்தான்.
23.   அப்பொழுது சேமும், எப்பேத்தும் ஒரு துணியை எடுத்துத் தங்கள் இருவரின் தோள்மேல் போட்டுக்கொண்டு பின்னோக்கி நடந்து தங்கள் தந்தையின் திறந்த மேனியை மூடினர். அவர்கள் முகம் எதிர்ப்பக்கம் நோக்கி இருந்ததால் தங்கள் தந்தையின் திறந்த மேனியை அவர்கள் பார்க்கவில்லை.
24.   நோவாவிற்குப் போதை தெளிந்ததும், தம் இளைய மகன் தமக்குச் செய்ததை அறிந்தார்.
25.   அப்பொழுது அவர், "கானான் சபிக்கப்பட்டவன்: தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்.
26.   சேமின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவனுக்குக் கானான் அடிமையாக இருப்பான்.
27.   கடவுள் எப்பேத்து குடும்பத்தைப் பெருகச் செய்யட்டும். அவன் சேமின் கூடாரத்தில் வாழட்டும். அவனுக்கும் கானான் அடிமையாக இருக்கட்டும்" என்றார்.
28.   வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.
29.   இவ்வாறு, நோவா தொள்ளாயிரத்து ஜம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்.

அதிகாரம் 10.


1.   நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர்.
2.   எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு.
3.   கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா.
4.   யாவானின் புதல்வர்: எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம்.
5.   இவர்கள் வழிவந்த கடற்கரை நாட்டினர் மொழி, குடும்ப, இனவாரியாகப் பிரிந்து தம் நாடுகளில் பரவினர்.
6.   காமின் புதல்வர்: கூசு, எகிப்து, பூற்று, கானான்.
7.   கூசின் புதல்வர்: செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா. இராமாவின் புதல்வர்: சேபா, தெதான்.
8.   மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.
9.   ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான். இதனால் "ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்" என்ற வழக்கு ஏற்படலாயிற்று.
10     முதன்முதலில் சினயார் நாட்டிலிருந்த பாபேல், எரேக்கு, அக்காது, கல்னே ஆகியவை அவன் ஆட்சிக்குள் வந்தன.
11     அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, ஈர், காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான்.
12.     நினிவேக்கும் காலாகிற்கும் இடையே மிகப்பெரிய நகரமாகிய இரசேனை அவன் நிறுவினான்.
13.     எகிப்தின் புதல்வர்: லூதிம், அனாமிம், இலகாபிம், நப்துகிம்,
14.     பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம்.
15.     கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்: ஏத்து,
16.     எபுசி, எமோரி, கிர்காசி,
17.     இவ்வி, அற்கி, சீனி,
18.     அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின.
19.     கானானியர் நாட்டு எல்லை சீதோனிலிருந்து தெற்கே கெரார் செல்லும் திசையில் காஸாவரையும் கிழக்கில் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் செல்லும் திசையில் இலாசா வரையும் பரவியிருந்தது.
20.     இவை காம் புதல்வரின் குடும்ப, மொழி, நாடு, இனவாரியான பிரிவுகள்.
21.     எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை.
22.     சேமின் ஏனைய புதல்வர்: ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம்.
23.     ஆராமின் புதல்வர்: ஊசு, ஊல், கெத்தெர், மாசு."
24.     அர்பகசாதுக்குச் செலாகு பிறந்தான். செலாகிற்கு ஏபேர் பிறந்தான்.
25.     ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்: ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான்.
26.     யோக்தானின் புதல்வர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
27.     அதோராம், ஊசால், திக்லா,
28.     ஓபால், அபிமாவேல், சேபா,
29.     ஓபீர், அவிலா, யோபாபு.
30.     அவர்கள் வாழ்நத நாடு மேசாவிலிருந்து கிழக்கே செப்பார் செல்லும் திசையில் இருந்த மலைநாடுவரை பரவியிருந்தது.
31.     இவை சேம் புதல்வரின் குடும்ப, மொழி, நாட்டு, இனவாரியான பிரிவுகள்.
32.     இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின.

அதிகாரம் 11.


1.   அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன.
2.   மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர்.
3.   அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, "வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்" என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர்.
4.   பின், அவர்கள் "வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்" என்றனர்.
5.   மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.
6.   அப்பொழுது ஆண்டவர், "இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது.
7.   வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்" என்றார்.
8.   ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.
9.   ஆகவே அது "பாபேல்" என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.
10     சேமின் தலைமுறைகள் இவையே: வெள்ளப் பெருக்கிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சேம் நூறு வயதாக இருந்தபொழுது அவனுக்கு அர்பகசாது பிறந்தான்.
11     அர்பகசாது பிறந்தபின் சேம் ஜந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது சேமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
12.     அர்பகசாது முப்பத்தைந்து வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செலாகு பிறந்தான்.
13.     செலாகு பிறந்த பின் அர்பகசாது நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது அர்பகசாதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
14.     செலாகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான்.
15.     ஏபேர் பிறந்தபின் செலாகு நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செலாகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
16.     ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான்.
17.     பெலேகு பிறந்தபின் ஏபேர் நானூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது ஏபேருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
18.     பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான்.
19.     இரயு பிறந்தபின் பெலேகு இருநூற்று ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது பெலேகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
20.     இரயு முப்பத்திரண்டு வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செரூகு பிறந்தான்.
21.     செரூகு பிறந்தபின் இரயு இருநூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது இரயுவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
22.     செரூகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான்.
23.     நாகோர் பிறந்தபின் செரூகு இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செரூகுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
24.     நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான்.
25.     தெராகு பிறந்தபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது நாகோருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
26.     தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.
27.     தெராகின் தலைமுறைகள் இவையே: தெராகிற்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான்.
28.     ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான்.
29.     ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.
30.     சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.
31.     தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.
32.     தெராகு இருநூற்று ஜந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார்.

அதிகாரம் 12.


1.   ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.
2.   உன்னை நான் பெரிய இனமாக்குவேன்: உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்: நீயே ஆசியாக விளங்குவாய்.
3.   உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்: உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்: உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்றார்.
4.   ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.
5.   ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.
6.   ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
7.   ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, "உன் வழிமரபினர்ககு இந்நாட்டைக் கொடுப்பேன்" என்றார். ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பினார்.
8.   ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
9.   இவ்வாறு ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.
10     அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார்.
11     அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், "நீ கணணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும்.
12.     எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது இவள் அவனுடைய மனைவி எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர்: உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர்.
13.     உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லி விடு" என்றார்.
14.     ஆபிராம் எகிப்தைச் சென்றடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை எகிப்தியர் கண்டனர்.
15.     பார்வோனின் மேலதிகாரிகள் அவரைக் கண்டு அவரைப்பற்றிப் புகழ்ந்தனர். ஆகவே, அவர் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
16.     அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்: ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.
17.     ஆனால் ஆண்டவர் ஆபிராமின் மனைவி சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார்.
18.     பார்வோன் ஆபிராமை அழைத்து அவரிடம், "நீ எனக்கு இப்படிச் செய்து விட்டாயே! அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை?
19.     அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்? அதனால்தான் நான் அவளை என் மனைவியாக எடுத்துக் கொண்டேன்! இப்பொழுதே, உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு புறப்படு" என்றான்.
20.     பின் பார்வோன் தன் ஆள்களுக்குக் கட்டளையிட அவர்கள் அவரை அவர் மனைவியுடனும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் அனுப்பிவிட்டனர்.

அதிகாரம் 13.


1.   ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.
2.   அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார்.
3.   நெகேபிலிருந்து பெத்தேல் வரை படிப்படியாகப் பயணம் செய்து பெத்தெலுக்கும் ஆயிக்கும் இடையே முதலில் தம் கூடாரம் இருந்த அதே இடத்தை அடைந்தார்.
4.   தாம் முதலில் பலிபீடம் அமைத்திருந்த இடத்தை அடைந்து அங்கே அவர் ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
5.   ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன.
6.   அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.
7.   ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
8.   ஆபிராம் லோத்தை நோக்கி, "எனக்கும உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம். ஏனெனில் நாம் உறவினர்.
9.   நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்: நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்" என்றார்.
10     லோத்து கண்களை உயர்த்தி எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறிருந்தது.
11     லோத்து யோர்தான் சுற்றுப்பகுதி முழுவதையும் தேர்ந்துகொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர்.
12.     ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்து நகரங்களில் வாழ்ந்துவந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக்கொண்டார்.
13.     ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக்கொடிய பாவிகளாக இருந்தனர்.
14.     லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார்.
15.     ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப்போகிறேன்.
16.     உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம்.
17.     நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன் என்றார்.
18.     ஆகவே ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனிலிருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

அதிகாரம் 14.


1.   அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும் கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது,
2.   அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.
3.   அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.
4.   பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால் பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
5.   ஆனால் பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்தரோத்து கர்னயிமிலிருந்த இரபாயியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும்
6.   சேயிர் மலைப்பகுதியில் இருந்த ஓரியரையும் பாலை நிலத்தின் எல்லையில் இருந்த ஏல்பாரான்வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.
7.   அவர்கள் திரும்பும் வழியில் காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.
8.   அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று,
9.   ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும்-ஆக, நான்கு அரசர்கள் ஜந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர்தொடுத்தனர்.
10     இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர்.
11     வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவுப் பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
12.     அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமில் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர்.
13.     தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்து வந்தார். அவர்கள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்.
14.     தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.
15.     அவரும் அவர் ஆள்களும் அணிஅணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.
16.     அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.
17.     ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது அரசர் பள்ளத்தாக்கு என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான்.
18.     அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் உன்னத கடவுளின் அர்ச்சகராக இருந்தார்.
19.     அவர் ஆபிராமை வாழ்த்தி, "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக!
20.     உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!" என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
21.     சோதோம் அரசன் ஆபிராமிடம், "ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால் செல்வங்களை நீரே வைத்துக் கொள்ளும்" என்றான்.
22.     அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்:
23.    நான்தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன் என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்.
24.     இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்" என்றார்.

அதிகாரம் 15.


1.   இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: "ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்."
2.   அப்பொழுது ஆபிராம், "என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்!
3.   நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்" என்றார்.
4.   அதற்கு மறுமொழியாக, "இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால் உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்" என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
5.   அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்றார்.
6.   ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
7.   ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார்.
8.   அதற்கு ஆபிராம், "என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?" என்றார்.
9.   ஆண்டவர் ஆபிராமிடம், "மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா" என்றார்.
10     ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை.
11     துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.
12.     கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.
13.     ஆண்டவர் ஆபிராமிடம், "நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர்.
14.     அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டிற்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் மிகுந்த செல்வங்களுடன் அந்நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுவர்.
15.     நீ மிகவும் முதிர்ந்த வயதில் அமைதியாக உன் மூதாதையரிடம் சென்றபின், நல்லடக்கம் செய்யப்படுவாய்.
16.     நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர். ஏனெனில் எமோரியர் இழைக்கும் தீமை இன்னும் முழுமை அடையவில்லை" என்றார்.
17.     கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.
18.     அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "கிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள
19.     கேனியர், கெனிசியர், கத்மோனியர்,
20.     இத்தியர், பெரிசியர், இரபாவியர்
21.     எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.

அதிகாரம் 16.


1.   ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.
2.   சாராய் ஆபிராமிடம், "ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்" என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.
3.   ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.
4.   அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.
5.   அப்பொழுது சாராய் ஆபிராமிடம், "எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்" என்றார்.
6.   ஆபிராம் சாராயிடம், "உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்" என்றார். இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.
7.   ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது.
8.   அவர் அவளை நோக்கி, "சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?" என்று கேட்டார். அதற்கு அவள், "என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்" என்றாள்.
9.   ஆண்டவரின் தூதர் அவளிடம, "நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட" என்றார்.
10     பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், "உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்" என்றார்.
11     மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், "இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு இஸ்மயேல் எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.
12.     ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லோரையும் அவன் எதிர்ப்பான் எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்" என்றார்.
13.     அப்பொழுது, என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா? என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, காண்கின்ற இறைவன் நீர் என்று பெயரிட்டழைத்தாள்.
14.     ஆகவே, அந்தக் கிணற்றிற்கு பெயேர் லகாய்ரோயி என்ற பெயர் வழங்கலாயிற்று. அது காதேசுக்கும் பெரேதுக்கும் இடையே இருக்கின்றது.
15.     ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டார்.
16.     ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

அதிகாரம் 17.


1.   ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு.
2.   உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை நான் ஏற்படுத்திக்கொள்வேன்: உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்" என்றார்.
3.   அப்பொழுது ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது:
4.    உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.
5.   இனி உன்பெயர் ஆபிராம் அன்று: ஆபிரகாம் என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன்.
6.   மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்: உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்.
7.   தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்.
8.   நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்" என்றார்.
9.   மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
10     நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.
11     உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.
12.     தலைமுறை தலைமுறையாக எட்டு நாள் ஆன உங்கள் ஆண்குழந்தை ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும். அக்குழந்தை வீட்டில் பிறந்திருந்தாலும், உன் வழிமரபைச் சாராமல் வேற்றினத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலும், அப்படியே செய்ய வேண்டும்.
13.     உன்வீட்டில் பிறந்த குழந்தைக்கும் விலைக்கு வாங்கியதற்கும் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு என் உடன்படிக்கை உன் உடலில் என்றுமுள்ள உடன்படிக்கையாக இருக்கும்.
14.     தன் உடலில் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆண்மகனும், என் உடன்படிக்கையை மீறியதால், தன் இனத்தாரிடமிருந்து விலக்கப்படுவான்" என்றார்.
15.     பின்பு கடவுள் ஆபிரகாமிடம், "உன் மனைவியைச் சாராய் என அழைக்காதே. இனிச் சாரா என்பதே அவள் பெயர்.
16.     அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்" என்றார்.
17.     ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, "நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாய்?" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
18.     ஆபிரகாம் கடவுளிடம், "உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்" என்றார்.
19.     கடவுள் அவரிடம் , "அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ஈசாக்கு எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.
20.     இஸ் மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான்: அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும்.
21.     ஆனால், சாரா உனக்கு அடுத்து ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்" என்றார்.
22.     அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.
23.     பின் ஆபிரகாம் தம் மகன் இஸ்மயேலுக்கும் தம் வீட்டில் பிறந்த எல்லாருக்கும், தாம் விலைக்கு வாங்கிய எல்லாருக்கும், அதாவது, தம் வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆணுக்கும், கடவுள் தமக்குக் கூறியபடியே அதே நாளில் அவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்தார்.
24.     ஆபிரகாமுக்கு அவர் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது அவருக்கு வயது தொண்ணூற்றொன்பது.
25.     அவர் மகன் இஸ்மயேலுக்கு அவன் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது, அவனுக்கு வயது பதின்மூன்று.
26.     ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
27.     அவருக்குச் செய்யப்பட்டதுபோல அவர் வீட்டில் பிறந்தவர்கள், வேற்றினத்தாரிடமிருந்து அவர் விலைக்கு வாங்கியவர்கள் ஆகிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.

அதிகாரம் 18.


1.   பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில்,
2.   கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி,
3.   "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!
4.   இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள்.
5.   கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்" என்றார். "நீ சொன்னபடியே செய்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
6.   அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, "விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு" என்றார்.
7.   ஆபிரகாம் மாட்டு தந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான்.
8.   பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும்பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார்.
9.   பின்பு அவர்கள் அவரை நோக்கி, "உன் மனைவி சாரா எங்கே?" என்று கேட்க, அவர், "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்" என்று பதில் கூறினார்.
10     அப்பொழுது ஆண்டவ+: "நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன. அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
11     ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.
12.     எனவே, சாரா தமக்குள் சிரித்து, "நானோ கிழவி: என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?" என்றாள்.
13.     அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா" என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!
14.     இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்று சொன்னார்.
15.     சாராவோ, "நான் சிரிக்கவில்லை" என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், "இல்லை, நீ சிரித்தாய்" என்றார்.
16.     அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.
17.     அப்பொழுது ஆண்டவர், "நான் செய்யவிருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா?
18.     ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர்.
19.     ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
20.     ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது.
21.     என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்" என்றார்.
22.     அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.
23.     ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
24.     ஒருவேளை நகரில் ஜம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஜம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ?
25.     தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று: நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?" என்றார்.
26.     அதற்கு ஆண்டவர், "நான் சோதோம் நகரில் ஜம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்" என்றார்.
27.     அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்:
28.     ஒருவேளை அந்த ஜம்பது நீதிமான்களில் ஜந்து பேர் துறைவாயிருக்கலாம். ஜந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?" என்றார். அதற்கு அவர், "நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்" என்றார்.
29.     மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, "ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?" என்று கேட்க, ஆண்டவர், "நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்" என்றார்,
30.     அப்பொழுது ஆபிரகாம்: என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்: சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்? என, அவரும் "முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்" என்று பதிலளித்தார்.
31.     அவர், "என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?" என, அதற்கு அவர், "இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்" என்றார்.
32.     அதற்கு அவர், "என் தலைவரே, சினமடைய வேண்டாம்: இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?" என, அவர், "அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்" என்றார்.
33.     ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச்சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

அதிகாரம் 19.


1.   மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சோதோமுக்கு வந்தனர். அப்பொழுது நகரின் நுழை வாயிலில் லோத்து உட்கார்ந்திருந்தார். அவர் அவர்களைக் கண்டவுடன் எழுந்து சந்திக்கச் சென்று தரைமட்டும் தாழ்ந்து அவர்களை வணங்கினார்.
2.   பிறகு, "என் தலைவர்களே, அருள்கூர்ந்து உங்கள் அடியானின் இல்லத்திற்கு வாருங்கள். உங்கள் கால்களைக் கழுவி, இரவு தங்குங்கள். காலையில் எழுந்து உங்கள் வழிப்பயணத்தைத் தொடருங்கள்" என்று சொன்னார். அவர்களோ, "வேண்டாம், பொதுவிடத்தில் நாங்கள் இரவு தங்குவோம்" என்று மறுமொழி சொன்னார்கள்.
3.   அவர் அவர்களை மிகவும் வற்புறுத்தவே, அவர்களும் உடன் சென்று அவரது இல்லத்தினுள் நுழைந்தார்கள். அவர் புளிப்பற்ற அப்பம் சுட்டு அவர்களுக்கு விருந்தளிக்க, அவர்களும் உண்டார்கள்.
4.   பின் அவர்கள் உறங்கச் செல்லுமுன், சோதோம் நகரின் மக்களுள் இளைஞர் முதல் கிழவர் ஈறாக எல்லா ஆண்களும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.
5.   பிறகு லோத்தைக் கூப்பிட்டு, "இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா" என்றனர்.
6.   லோத்து வீட்டிற்கு வெளியே வந்து, தனக்குப் பின் கதவை மூடிக்கொண்டு,
7.   "என் சகோதரரே, தீச்செயல் செய்யாதிருங்கள்.
8.    ஆண் தொடர்பு அறியாத புதல்வியர் இருவர் எனக்கு உள்ளனர். உங்களிடம் நான் அவர்களை அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பப்படி அவர்களுடன் நடந்து கொள்ளலாம். ஆனால் எனது இல்லத்தின் பாதுகாப்பைப் பெற்றிருக்கும் இந்த ஆடவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்" என்றார்.
9.   அதற்கு அவர்களோ, "அப்பாலே போ" என்றனர். மேலும் அவர்கள் "அயல்நாட்டிலிருந்து வந்த இவனா நமக்கு நியாயம் கூறுவது?" என்று சொல்லிக்கொண்டு, "அவர்களுக்குச் செய்யவிருப்பதைவிட இப்பொழுது உனக்கு அதிகத் தீங்கு செய்வோம்" என்றனர். பிறகு லோத்தைக் கடுமையாய்த் தாக்கிக் கதவை உடைக்க நெருங்கிச் சென்றனர்.
10     அவ்வேளையில் அந்த ஆடவர் தம் கைகளை நீட்டி லோத்தைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துக் கதவைப் பூட்டிக் கொண்டனர்.
11     கதவருகே நின்று கொண்டிருந்த சிறிோர், பெரியோர்களாகிய அம்மனிதர்களை அவர்கள் குருடராக்கினர். அவர்களால் கதவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை
12.     மேலும், அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி: "இங்கே உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் உளரோ? மருமகனோ, புதல்வரோ, புதல்வியரோ உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் இந்நகரில் இருந்தால், அவர்களை இவ்விடத்திலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடு.
13.     இந்த இடத்தின் மக்களுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் ஆண்டவர் திருமுன் எழுந்துள்ளதால், நாங்கள் இந்த இடத்தை அழிக்கும்படி எங்களை அவர் அனுப்பியுள்ளார்" என்றனர்.
14.     உடனே லோத்து வெளியே போய்த் தம் புதல்வியருக்கு மண ஒப்பந்தமாகியிருந்த மருமக்களோடு பேசி, "நீங்கள் எழுந்து இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள். ஏனெனில் ஆண்டவர் இந்நகரை அழிக்கப் போகிறார்" என்றார். அவருடைய மருமக்களுக்கு இது நகைப்புக்குரியதாய்த் தோன்றியது.
15.     பொழுது விடியும் வேளையில் தூதர்கள் லோத்தை நோக்கி, "நீ எழுந்திரு! உன் மனைவியையும், உன் இரு புதல்வியரையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையேல், இந்நகரின் தண்டனைத் தீர்ப்பில் நீயும் அகப்பட்டு அழிவாய்" என்று வற்புறுத்திக் கூறினார்கள்.
16.     அவர் காலந்தாழ்த்தினார். ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால், அந்த மனிதர்கள் அவரது கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள்.
17.     அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன் அந்த மனிதர்கள் அவரை நோக்கி, "நீ உயிர்தப்புமாறு ஓடிப்போ: திரும்பிப் பார்க்காதே: சமவெளி எங்கேயும் தங்காதே: மலையை நோக்கித் தப்பி ஓடு: இல்லையேல் அழிந்து போவாய்" என்றார்கள்.
18.     லோத்து அவர்களை நோக்கி: "என் தலைவர்களே, வேண்டாம்.
19.     உங்கள் அடியானுக்கு உங்கள் பார்வையில் இரக்கம் கிடைத்துள்ளது. என் உயிரைக் காக்கும் பொருட்டு நீர் காட்டிய பேரன்பு உயர்ந்தது. ஆயினும் மலையை நோக்கித் தப்பியோட என்னால் இயலாது. ஓடினால் தீங்கு ஏற்பட்டு, நான் செத்துப்போவேன்.
20.     எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக, இதோ ஒரு நகர் அருகிலுள்ளது. அது சிறியதாய் இருக்கிறது. அதற்குள் ஓடிப்போக விடுங்கள். அது சிறிய நகர் தானே? நானும் உயிர் பிழைப்பேன்" என்றார்.
21.     அதற்கு தூதர் ஒருவர், "நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன். நீ கேட்டபடி அந்நகரை நான் அழிக்க மாட்டேன்.
22.     நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள். நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது" என்றார். இதனால் அந்த நகருக்குச் "சோவார்" என்னும் பெயர் வழங்கிற்று.
23.     லோத்து சோவாரை அடைந்த போது கதிரவன் மண்ணுலகின் மேல் உதித்திருந்தான்.
24.     அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்.
25.     அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார்.
26.     அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத்தூணாக மாறினாள்.
27.     ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கெனவே ஆண்டவர் திருமுன் நின்ற இடத்திற்குப் போனார்.
28.     அவர் சோதோமையும் கொமோராவையும் சூழ்ந்திருந்த நிலப்பகுதியையும் நோக்கிப் பார்த்தபோது சூளையின் புகைபோல நிலப்பரப்பிலிருந்து புகை கிளம்பக் கண்டார்.
29.     கடவுள் சமவெளி நகர்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவு கூர்ந்தார். எனவே லோத்து குடியிருந்த நகர்களை அழித்தபோது கடவுள் அவரைக் காப்பாற்றினார்.
30.     லோத்து சோவாரைவிட்டு வெளியேறி மலைக்குச் சென்று குடியேறினார். சோவாரில் குடியிருக்க அஞ்சியதால் தம் இரு புதல்வியருடன் ஒரு குகையில் வாழ்ந்து வந்தார்.
31.     அப்பொழுது மூத்தவள் இளையவளை நோக்கி, "நம் தந்தை வயது முதிர்ந்தவர். உலகெங்கும் உள்ள வழக்கிற்கேற்ப நம்மை மணந்து நம்முடன் உறவு கொள்ளுமாறு இப்பகுதியில் வேறு ஆடவர் எவரும் இல்லை.
32.   வா: நம் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்து, அவருடன் உறவுகொள்வோம். இவ்வாறு நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக் கொள்வோம்" என்றாள்.
33.     அவ்வாறே அன்றிரவு தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்கவைத்தார்கள். பிறகு மூத்தவள் உள்ளே நுழைந்து தன் தந்தையுடன் படுத்துக் கொண்டதோ, அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
34.     மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி, "நேற்றிரவு என் தந்தையோடு நான் படுத்துக்கொண்டேன். இன்றிரவும் அவ்வாறே அவரைத் திராட்சை மது குடிக்கவைப்போம். நீ சென்று அவருடன் படுத்துக்கொள். இவ்வண்ணமாக நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக்கொள்வோம்" என்றாள்.
35.     அவ்வாறே அன்றிரவும் தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்தார்கள். இம்முறையும் அவள் படுத்துக்கொண்டதோ அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
36.     இவ்வாறு லோத்தின் புதல்வியர் இருவரும் தம் தந்தையின் மூலம் கருத்தரித்தனர்.
37.     பின் மூத்தவள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு மோவாபு என்று பெயரிட்டாள். அவன் இன்றுவரை இருக்கிற மோவாபியருக்குத் தந்தை.
38.     இளையவள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்குப் பென் அம்மி என்னும் பெயரைச் சூட்டினாள். அவன் இன்றுவரை இருக்கிற அம்மோனியரின் தந்தை.

அதிகாரம் 20.


1.   ஆபிரகாம் அங்கிருந்து புறப்பட்டு நெகேபுக்குச் சென்று காதேசுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து, பின்னர் கெராரில் தங்கினார்.
2.   அப்போது ஆபிரகாம் தம் மனைவி சாராவைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், கெரார் மன்னனாகிய அபிமெலக்கு ஆளனுப்பி அவரை அழைத்துவரச் செய்தான்.
3.   இரவில் ஆண்டவர் அபிமெலக்குக்குக் கனவில் தோன்றி, "இதோ, நீ அழைத்துவரச் செய்த பெண்ணின் பொருட்டு நீ சாகப் போகிறாய். ஏனெனில் அவள் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்" என்று அவனிடம் கூறினார்.
4.   அதுவரை அவரைத் தொடாதிருந்த அபிமெலக்கு அது கேட்டு மறுமொழியாக, "என் தலைவரே, உண்மையாகவே நேர்மைமிக்க இனத்தவரை நீர் அழிப்பீரோ?
5.   அவன் அவளைத் தன் சகோதரி என்றும் அவள் அவனைத் தன் சகோதரன் என்றும் அறிமுகப்படுத்தவில்லையா? நான் நேரிய இதயத்தோடும் தூய கைகளோடும் இதைச் செய்தேன் " என்றான்.
6.   கடவுள், கனவில் தோன்றி, அவனை நோக்கி, "நீ நேரிய இதயத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவேன். அதனால்தான் எனக்கு எதிராகப் பாவம் செய்யாத உன்னைக் காப்பாற்றி, அவளைத் தொடவிடவில்லை.
7.   உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பிவிடு. ஏனெனில் அவன் ஓர் இறைவாக்கினன். அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவளை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் செத்து மடிவீர்கள் என்பது உறுதி" என்றார்.
8.   அபிமெலக்கு அதிகாலையில் எழுந்து தன் வேலைக்காரர் அனைவரையும் அழைத்து, அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் அச்சமுற்றனர்.
9.   பின் அபிமெலக்கு ஆபிரகாமை வரவழைத்து, "நீர் எங்களுக்கு என்ன காரியம் செய்து விட்டீர்? எனக்கும் என் நாட்டுக்கும் இப்பெரும் பழி நேரும்படி நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன்? செய்திருக்க் கூடாதவற்றை நீர் எனக்குச் செய்துவிட்டீரே!
10     நீர் எக்காரணத்தைக் கொண்டு இக்காரியம் செய்தீர்?" என்ற அவரிடம் வினவினான்.
11     ஆபிரகாம் மறுமொழியாக, "இவ்விடத்தில் கடவுளுக்கு அஞ்சுவார் எவரும் இல்லையென்றும் என் மனைவியை அடையும்பொருட்டு என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன்.
12.     மேலும், உண்மையில் இவள் என் சகோதரியே: இவள் என் தந்தைக்குப் பிறந்த மகள். ஆனால் என் தாயின் மகள் அல்ல: அவளை நான் மணந்து கொண்டேன்.
13.     மேலும், நான் என் தந்தையின் வீட்டைவிட்டுக் கடவுள் என்னை அலைந்து திரியச் செய்தபோது, நீ எனக்குப் பேருதவி செய்ய வேண்டும்: நாம் செல்லுமிடமெல்லாம், நான் உன் சகோதரன் என்று சொல் என்று அவளிடம் நான் கூறியிருந்தேன்" என்றார்.
14.     அப்பொழுது அபிமெலக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரர், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்ததுமன்றி, அவர் மனைவி சாராவையும் அவரிடம் ஒப்படைத்தான்.
15.     மேலும் அபிமெலக்கு, "இதோ உமக்கு முன்பாக எனது நாடு இருக்கிறது. உமக்கு எங்கு விருப்பமோ அங்கு நீர் வாழலாம்" என்றான்.
16.     மேலும் சாராவை நோக்கி, "இதோ உன் சகோதரருக்கு ஆயிரம் வெள்ளிக்காக கொடுத்துள்ளேன். உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து அது மறைக்கும் திரையாக அமையட்டும். அனைவர் பார்வையிலும் உன் பழி நீங்கிவிட்டது" என்றான்.
17.     ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடவே, கடவுளும் அபிமெலக்கையும் அவன் மனைவியையும் அடிமைப் பெண்களையும் குணமாக்கி அவர்களுக்குப் பிள்ளைப்பேறு அளித்தார்.
18.     ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடிகளாக்கியிருந்தார்.

அதிகாரம் 21.


1.   ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார்.
2.   கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
3.   ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டார்.
4.   கடவுள் கட்டளையிட்டபடி, ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளன்று அவனுக்கு விருத்தசேதனம் செய்தார்.
5.   அவருடைய மகன் ஈசாக்கு அவருக்குப் பிறந்த பொழுது அவருடைய வயதோ நூறு.
6.   அப்பொழுது சாரா, "கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும் இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர்" என்றும் சொன்னார்.
7.   மீண்டும் அவர், "சாரா தம் புதல்வர்களுக்குப் பாலூட்டுவார்" என்று ஆபிரகாமிடம் யாராவது சொல்லியிருப்பார்களா? ஆயினும் இதோ அவருக்கு அவரது முதிர்ந்த வயதில் நான் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளேன்" என்றார்.
8.   அந்தக் குழந்தை வளர்ந்து பால் குடியும் மறந்தது. அப்படிப் பால் குடிப்பதை நிறுத்திய நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து அளித்தார்.
9.   பின்னர் எகிப்தியளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகன் சிரித்து விளையாடுவதைச் சாரா கண்டு,
10     ஆபிரகாமை நோக்கி, "இந்தப் பணிப்பெண்ணையும் அவள் மகனையும் துரத்திவிடும். ஏனென்றால், பணிப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக்கூடாது" என்றார்.
11     தம் மகனுக்கு எதிரான இவ்வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனை அளித்தது.
12.     அப்போது கடவுள் ஆபிரகாமை நோக்கி, "பையனையும் பணிப்பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா உனக்குச் சொல்வதையெல்லாம் அப்படியே செய். ஏனெனில் ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்.
13.     பணிப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருப்பதால், அவனிடமிருந்தும் இனமொன்று தோன்றச் செய்வேன்" என்றார்.
14.     எனவே ஆபிரகாம் காலையில் எழுந்து, அப்பத்தையும், தோற்பை நிறையத் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தார்: அவற்றை அவள் தோள்மேல் வைத்து குழந்தையையும் அவளுடன் அனுப்பி வைத்தார். அவளும் புறப்பட்டுப் போய் பெயேர்செபா என்னும் பாலைநிலத்தில் அலைந்து திரிந்தாள்.
15.     தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள்.
16.     பின்பு அவள் முன்புறம் சென்று அம்புஎறி தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன் என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள்.
17.     அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, "ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார்.
18.     நீ எழுந்து பையனைத் தூக்கி விடு. அவனை உன் கையில் பிடித்துக் கொள். ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனமொன்று தோன்றச் செய்வேன்" என்றார்.
19.     அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
20.     கடவுளும் பையனோடு இருந்தார். அவன் வளர்ந்து பாலை நிலத்தில் குடியிருந்தான். அம்பு எய்வதில் வல்லவனானான்.
21.     அவன் பாரான் என்னும் பாலைநிலத்தில் வாழ்ந்து வருகையில், அவன் தாய் எகிப்து நாட்டைச் சார்ந்த ஒரு பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைத்தாள்.
22.     அக்காலத்தில் அபிமெலக்கு தன் படைத்தலைவன் பிக்கோலோடு வந்து ஆபிரகாமை நோக்கி, "நீர் செய்கிற யாவற்றிலும் கடவுள் உம்முடனே இருக்கிறார்.
23.     ஆகையால், எனக்கும் என் புதல்வருக்கும் என் இனத்தாருக்கும் நீர் வஞ்சனை செய்யாமல், உமக்கு நான் இரக்கம் காட்டியதுபோல எனக்கும், நீர் பிழைப்புக்காக வந்த இந்த நாட்டிற்கும், நீர் இரக்கம் காட்டுவதாகக் கடவுள் பெயரால் ஆணையிட்டு எனக்கு வாக்களியும்" என்றான்.
24.     அதற்கு ஆபிரகாம், "அவ்விதமே ஆணையிட்டு வாக்களிக்கிறேன்" என்று கூறினார்.
25.     பிறகு அபிமெலக்கின் ஊழியர்கள் கைப்பற்றியிருந்த நீருள்ள கிணறு ஒன்றைப் பற்றி அவனிடம் ஆபிரகாம் முறையிட்டார்.
26.     அபிமெலக்கு அதற்கு மறுமொழியாக, "இந்தக் காரியத்தைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை. இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்படுகிறேன்" என்றான்.
27.     பின் ஆபிரகாம் ஆடு மாடுகளை அபிமெலக்கிடம் கொண்டுவந்து கொடுக்க, அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
28.     அப்பொழுது ஆபிரகாம் மந்தையினின்று ஏழு பெண் ஆட்டுக்குட்டியைப் பிரித்தெடுத்துத் தனியாக நிறுத்தினார்.
29.     அபிமெலக்கு ஆபிரகாமை நோக்கி, "நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியாக நிறுத்தி வைத்திருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டான்.
30.     அவர், "இந்தக் கிணற்றைத் தோண்டியது நான்தான் என்பதற்குச் சான்றாக, நீர் இந்தப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்" என்றார்.
31.     அதன் காரணமாக அந்த இடம் பெயேர்செபா என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், அங்குத்தான் இருவரும் ஆணையிட்டு வாக்களித்துக் கொண்டனர்.
32.     இவ்வாறு பெயேர்செபாவில் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் பின் அபிமெலக்கும் அவன் படைத்தலைவன் பிக்கோலும் பெலிஸ்தியர் நாட்டிற்குத் திரும்பிச சென்றனர்.
33.     ஆபிரகாமோ பெயேர்செபாவில் ஏசல் மரத்தை நட்டு, அங்கு என்றும் வாழும் இறைவனாகிய ஆண்டவரின் திருப்பெயரைத் தொழுதார்.
34.     அவர் பெலிஸ்தியர் நாட்டில் நெடுங்காலம் குடியிருந்தார்.

அதிகாரம் 22.


1.   இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் இதோ! அடியேன் என்றார்.
2.   அவர், "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்" என்றார்.
3.   அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு, எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
4.   மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார்.
5.   உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, "நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவனிடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார்.
6.   பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர்.
7.   அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, அப்பா! என, அவர், என்ன? மகனே! என்று கேட்டார். அதற்கு அவன், "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினான்.
8.   அதற்கு ஆபிரகாம், "எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.
9.   ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார்.
10     ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.
11     அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆபிரகாம்! ஆபிரகாம் என்று கூப்பிட, அவர் இதோ! அடியேன் என்றார்.
12.     அவர், "பையன்மேல் கை வைக்காதே: அவனுக்கு எதுவும் செய்யாதே: உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார்.
13.     அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.
14.     எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு யாவேயிரே என்று பெயரிட்டார். ஆதலால்தான் மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று இன்றுவரை வழங்கி வருகிறது.
15.     ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து,
16.     "ஙுஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய்.
17.     ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர்.
18.     மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.
19.     பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்செபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.
20.     இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், "உன் சகோதரன் நாகோருக்கு மில்க்கா புதல்வரைப் பெற்றெடுத்திருக்கிறாள்" என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.
21.     மூத்த மகன் ஊசு, அவன் தம்பி பூசு, ஆராமின் தந்தையான கெமுவேல்,
22.     கெசேது, அசோ, பில்தாசு, இதிலாபு, பெத்துவேல்.
23.     பெத்துவேல் ரெபேக்காவின் தந்தை. இந்த எட்டுப் புதல்வர்களையும் மில்க்கா ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்குப் பெற்றெடுத்தாள்.
24.     மேலும், அவனுக்கு மறுமனைவியாகிய இரயுமா, தெபாகு, ககாம், தகாசு, மாக்கா என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.

அதிகாரம் 23.


1.   சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே.
2.   கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து அர்பா நகரில் சாரா இறந்தார். அவருக்காகப் புலம்பி அழுவதற்காக ஆபிரகாம் சென்றார்.
3.   பிறகு சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம் சென்று சொன்னது:
4.   "ஙுநான் உங்களிடையே அன்னியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்று விடுங்கள்" என்று கேட்டார்.
5.   இத்தியர் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:
6.   ¥ எம் தலைவரே! கேளும். நீர் எங்களிடையே ஒரு வலிமைமிக்க தலைவராய் இருக்கிறீர். எங்கள் கல்லறைகளில் சிறந்த ஒன்றில் உமது வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்யலாம். உம் வீட்டில் இறந்தாரைத் தன் கல்லறையில் நீர் அடக்கம் செய்ய எங்களுள் எவனும் மறுக்க மாட்டான் என்றனர்.
7.   அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்நாட்டு மக்களாகிய இத்தியர் முன் தாழ்ந்து வணங்கி,
8.   அவர்களை நோக்கி, "என் வீட்டில் இறந்தாரை நல்லடக்கம் செய்வதை நீங்கள் விரும்பினால், நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் சோகாரின் மகனான எப்ரோனிடம் எனக்காகப் பரிந்து பேசி,
9.   அவருக்குச் சொந்தமானதும் அவரது வயலின் மூலையில் இருப்பதுமான மக்பேலா குகையை எனக்குத் தரும்படி செய்யுங்கள். உங்களிடையே எனக்கு உடைமையான கல்லறை நிலம் இருக்குமாறு முழு விலைக்கு எனக்கு அதை விற்றுவிடும்படி கேளுங்கள்" என்றார்.
10     இத்தியனான எப்ரோன் மற்ற இத்தியரோடு அமர்ந்திருந்தான். அவன் நகரவாயிலுக்கு வரும் இத்தியர் அனைவரும் கேட்கும்படி, ஆபிரகாமை நோக்கி,
11     "வேண்டாம், என் தலைவரே! நான் சொல்வதைக் கேளும். நிலத்தையும் அதிலுள்ள குகையையும் உமக்கு நான் கொடுத்து விடுகிறேன். என் இனத்தார் முன்னிலையிலேயே அதை நான் உமக்குக் கொடுத்து விடுகிறேன். உம் வீட்டில் இறந்தாரை அங்கு அடக்கம் செய்வீராக" என்றான்.
12.     அப்போது ஆபிரகாம் அந்நாட்டு மக்கள்முன் தாழ்ந்து வணங்கி,
13.     அவர்கள் கேட்கும்படியாக எப்ரோனை நோக்கி, "நான் சொல்வதைத் தயவு செய்து கேளும். நிலத்திற்கான பணத்தைத் தருகிறேன். பெற்றுக் கொள்ளும். அப்பொழுதுதான் என் வீட்டில் இறந்தோரை அங்கு நான் அடக்கம் செய்வேன்" என்றார்.
14.     அதற்கு எப்ரோன் ஆபிரகாமை நோக்கி,
15.     "என் தலைவரே! என் வார்த்தையைக் கேளும். நீர் கேட்கிற நிலம் நானூறு வெள்ளிக் காசுகள்தான் பெறும். நமக்குள்ளே இது என்ன? உம் வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்துகொள்ளும்" என்றான்.
16.     எப்ரோன் சொன்னதற்கு இசைந்த ஆபிரகாம் இத்தியர் முன்னிலையில் பேசியபடி நானூறு வெள்ளிக்காசுகளை அன்றைய வணிக வழக்கிற்கேற்ப நிறுத்துக் கொடுத்தார்.
17.     இவ்வாறு மக்பேலாவில், மம்ரே அருகில் எப்ரோனுக்குச் சொந்தமான நிலமும், அதிலிருந்த குகையும், நிலத்திலும் அதன் எல்லையைச் சுற்றிலும் இருந்த எல்லா மரங்களும்
18.     நகர வாயிலுக்கு வரும் அனைத்து இத்தியர் முன்னிலையிலும் ஆபிரகாமுக்கு உடைமையாயின.
19.     இவ்வாறு மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் ஆபிரகாம் தம் மனைவி சாராவை அடக்கம் செய்தார். இதுவே கானான் நாட்டில் இருக்கும் எபிரோன்.
20.     இவ்வாறு அந்நிலமும் அதிலிருந்த குகையும் இத்தியரிடமிருந்து ஆபிரகாமுக்கு உடைமையான கல்லறை நிலமாக உறுதி செய்யப்பட்டது.

அதிகாரம் 24.


1.   ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார்.
2.   ஒருநாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, "உன் கையை என் தொடையின் கீழ் வைத்து,
3.   விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்: நான் வாழ்ந்துவரும் இக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண்கொள்ளமாட்டாய் என்றும்
4.   சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண்கொள்வாய் என்றும் சொல்" என்றார்.
5.   அதற்கு அவர், "ஒரு வேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்து விட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?" என்று கேட்டார்.
6.   அதற்கு ஆபிரகாம், "அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு.
7.   தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து என்னோடு பேசி, இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன் என்று ஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள்.
8.   உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக் கொண்டு போகாதே" என்றார்.
9.   அவ்வாறே அவ்வேலைக்காரரும் தம் தலைவர் ஆபிரகாமின் தொடையின் கீழ் கையை வைத்து அக்காரியத்தைக் குறித்து வாக்குறுதியளித்தார்.
10     பின் தம் தலைவரின் ஒட்டகங்களிலிருந்து பத்து ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, அவருக்குரிய எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தம் கையோடு எடுத்துக்கொண்டு மெசபொத்தாமியாவிலிருந்த நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
11     பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை நேரத்தில், நகர்ப்புறமிருந்த கிணற்றின் அருகில் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டுமாறு அவர் அவற்றை மண்டியிடச் செய்தார்.
12.     அப்போது அவர் சொன்னது, "என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வெற்றி அளித்தருளும். என் தலைவர் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.
13.     இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். நகர் மக்களின் புதல்வியர் தண்ணீர் எடுக்க இங்கே வருவார்கள்.
14.     அப்பொழுது நான் தண்ணீர் பருகும்படி உன் குடத்தைச் சாய்த்துக் கொடு என்று கேட்க, குடியுங்கள்: மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன் என்று எந்த இளம்பெண் மறுமொழி சொல்வாளோ, அவளே உம் ஊழியனாகிய ஈசாக்கிற்கு உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவள் ஆவாளாக! நீர் என் தலைவருக்குப் பேரன்பு காட்டினீர் என்று இதனால் நானும் அறிந்து கொள்வேன்" என்றார்.
15.     அவர் இவ்வார்த்தைகளைத் தமக்குள் சொல்லி முடிக்குமுன்பே, இதோ ரெபேக்கா தம் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தார். அவர் ஆபிரகாமின் சகோதரர் நாகோருக்கும் அவர் மனைவி மில்க்காவுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள்.
16.     அவர் எழிமிக்க தோற்றமுடையவர்: ஆண் தொடர்பு அறியாத கன்னிப்பெண். அவர் நீரூற்றுக்குள் இறங்கிக் குடத்தை நிரப்பிக் கொண்டு மேலேறி வந்தார்.
17.     ஆபிரகாமின் வேலைக்காரர் அவரைச் சந்திக்க ஓடிச்சென்று, "உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா?" என்று கேட்டார்.
18.     உடனே அவரும் குடியுங்கள் ஜயா என்று விரைந்து தம் குடத்தை தோளினின்று இறக்கி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.
19.     அவர் குடித்து முடித்ததும், மீண்டும் அவரை நோக்கி, "உங்கள் ஒட்டகங்களும் குடித்து முடியுமட்டும் நான் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்" என்றார்.
20.     குடத்து நீரைத் தொட்டியில் விரைவாய் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைக்க நீரூற்றுக்குள் ஓடிச் சென்று ஒட்டகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் இறைத்து ஊற்றினார்.
21.     அந்த வேலைக்காரர் இதைக்கண்டு வாயடைத்துப்போய் தமது பயணத்திற்கு ஆண்டவர் வெற்றியளித்தாரா இல்லையா என்று அறியும்படி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
22.     ஒட்டகங்கள் நீர் குடித்து முடிந்தபின் அவர் அவருக்கு ஆறு கிராம் நிறையுள்ள பொன் மூக்கணியும், நூற்று இருபது கிராம் நிறையுள்ள இரண்டு காப்புகளும் கொடுத்தார்.
23.     பின்னர் அவரை நோக்கி, நீ யாருடைய மகள்? சொல்! உன் தந்தையின் வீட்டில் நாங்கள் இரவு தங்குவதற்கு இடம் இருக்குமா?" என்று வினவினார்.
24.     அவரோ மறுமொழியாக, "நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள் நான்" என்றார்.
25.     மேலும், "எங்கள் வீட்டில் வைக்கோலும் தீவனமும் மிகுதியாக இருப்பதுமன்றி, தங்குவதற்கு இடமும் உண்டு" என்றார்.
26.     அந்த மனிதர் ஆண்டவரை வணங்கித் தொழுது,
27.     "என் தலைவர் ஆபிரகாமின் ஆண்டவர் போற்றி! போற்றி! என் தலைவருக்கு அவர் காட்டியிருந்த பேரன்பையும் உண்மையையும் விட்டு விலகவில்லை. என் தலைவரின் சகோதரன் வீட்டிற்கு வரும் வழியில் அவர் என்முன்னே சென்றார்" என்றார்.
28.     அந்த இளம்பெண் ஓடிச் சென்று தன் தாயின்வீட்டில் உள்ளோருக்கு இந்நிகழ்ச்சிகளைப்பற்றிக் கூறினார்.
29.     ரெபேக்காவுக்கு லாபான் என்னும் சகோதரன் இருந்தான். அவன் வெளியே வந்து அந்த மனிதரைப் பார்க்க நீரூற்றை நோக்கி ஓடினான்.
30.     ஏனெனில் தன் சகோதரி அணிந்திருந்த மூக்கணியையும் கைக்காப்புகளையும் அவன் கண்டிருந்தான். "அந்த மனிதர் என்னிடம் இவ்வாறு சொன்னார்" என்று தன் சகோதரி ரெபேக்கா கூறிய வார்த்தைகளையும் கேட்டிருந்தான். அவன் அந்த ஆளிடம் ஓடிச்சென்று நீரூற்றருகில் ஒட்டகங்களோடு அவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.
31.     அவன் அவரை நோக்கி, "ஆண்டவரின் ஆசி பெற்றவரே வருக! இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்காக இடத்தையும் துப்புரவு செய்து வைத்திருக்கிறேன்" என்று சொன்னான்.
32.     அவன் அவரை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, ஒட்டகங்களின் சுமையை இறக்கி, வைக்கோலும் தீவனமும் இட்டு, அவருக்கும் அவரோடு வந்த ஆள்களுக்கும் கை கால் கழுவத் தண்ணீர் கொடுத்தான்.
33.     பின் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. அவரோ, "நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லுமுன் சாப்பிட மாட்டேன்" என, லாபான் சொல்லும் என்றான்.
34.     அப்பொழுது அவர், "நான் ஆபிரகாமி் வேலைக்காரன்.
35.     தலைவருக்கு ஆண்டவர் மிகுதியான ஆசி வழங்கி, அவரைச் செல்வராக்கி, ஆடு மாடுகளையும், பொன் வெள்ளியையும், வேலைக்காரர் வேலைக்காரிகளையும், ஒட்டகங்கள் கழுதைகளையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
36.     மேலும், என் தலைவரின் மனைவியாகிய சாரா தம் வயது முதிர்ந்த காலத்தில் என் தலைவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அவரும் அவனுக்குத் தமக்குரிய அனைத்தையும் கொடுத்திருக்கிறார்.
37.     என் தலைவர் என்னை ஆணையிடச் செய்து. நான் வாழ்ந்து வரும் இந்தக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்கு நீ பெண் கொள்ளமாட்டாய் என்றும்
38.     தந்தையின் வீட்டாரிடமும், என் இனத்தாரிடமும் சென்று என் மகனுக்கு நீ பெண்கொள்வாய் என்றும் சொல் என்றார்.
39.     அப்போது நான் என் தலைவரை நோக்கி, ஒரு வேளை பெண் என்னோடு வரவில்லையென்றால்? என்று வினவினேன்.
40.     அதற்கு அவர் மறுமொழியாக, ஆண்டவர் திருமுன் நான் வாழ்ந்து வருபவன். அவர் உன்னோடு தம் தூதரை அனுப்பி உனது பயணத்தை வெற்றிபெறச் செய்வார். என் இனத்தாரிடையே, என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் மகனுக்குப் பெண்கொள்வாய்.
41.     அப்பொழுது நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். அப்படியே நீ என் இனத்தாரிடம் போய்க் கேட்டும். அவர்கள் தராவிட்டால், நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய் என்றார்.
42.     இன்று நான் அந்த நீரூற்றின் அருகில் வந்தவுடன், என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, நான் மேற்கொண்ட பயணத்திற்குக் கருணைகூர்ந்து வெற்றி தாரும்.
43.     இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். தண்ணீர் எடுக்க வரும் இளம் பெண்ணிடம் நான் பருகும்படி உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா என்றுகேட்க,
44.     அவள், குடியுங்கள்: மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன் , என்று சொல்வாளாயின், அவளே என் தலைவரின் மகனுக்கு ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்டவள் ஆவாள் என்று
45.     என் மனத்திற்குள் சொல்லி முடிக்கும் முன்பே, இதோ ரெபேக்கா தன் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தாள். நீர் இறைக்குமாறு அவள் நீரூற்றுக்குள் இறங்கினாள். அப்பொழுது நான் அவளிடம் எனக்குக் குடிக்கத் தா என்றேன்.
46     அவள் உடனே தோளிலிருந்து குடத்தை இறக்கி, குடியுங்கள்: உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டுவேன் , என்று கூற, நானும் குடித்தேன்: ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் காட்டினாள்.
47     பின்பு, நான் அவளை நோக்கி, நீ யாருடைய மகள்? என, நான் நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள் என்றாள். உடனே நானும் அவள் மூக்கில் மூக்கணியும் அவள் கையில் காப்புகளையும் அணிவித்தேன்.
48     மேலும் நான் ஆண்டவரை வணங்கித் தொழுதேன். ஏனெனில் என் தலைவரின் சகோதரியின் மகளையே, அவருடைய மகனுக்காகப் பெண் பேச வருமாறு நேர் வழியில் என்னை நடத்தி வந்த என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றினேன்.
49     இப்பொழுது நீர் என் தலைவருக்கு அன்பும் நம்பிக்கையும் காட்டுவீரா இல்லையா என்று எனக்குத் தெரிவியும்: அதற்கேற்ப வலமோ இடமோ எங்காகிலும் திரும்பிச் செல்வேன்" என்றார்.
50 அதற்கு லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக, "இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது. நாங்கள் உம்மிடம் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக் கூடாது.
51 இதோ, ரெபேக்கா உம்முன் இருக்கிறாள். ஆண்டவர் சொன்னபடியே அவள் உம் தலைவருடைய மகனுக்கு மனைவி ஆகும்படி அவளை அழைத்துக் கொண்டு போங்கள்" என்றார்.
52 ஆபிரகாமின் வேலைக்காரர் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டதும் ஆண்டவரைத் தொழுதார்.
53 பிறகு அவர் பொன், வெள்ளி நகைகளையும் ஆடைகளையும் எடுத்து ரெபேக்காவுக்குக் கொடுத்தார். அவர் சகோதரருக்கும் தாய்க்கும் விலையுயர்ந்த அன்பளிப்புகளையும் கொடுத்தார்.
54 பின் அவரும் அவரோடு இருந்தவர்களும் உண்டு, குடித்து அங்கு இரவைக் கழித்தார்கள். அவர்கள் மறுநாள் காலை எழுந்ததும் அவர், "என் தலைவரிடம் போக விடை தாருங்கள்" என்றார்.
55 ரெபேக்காவின் சகோதரனும் தாயும் அவரை நோக்கி, "பெண் பத்து நாள்களேனும் எங்களோடு இருக்கட்டும்: அதன் பின் புறப்பட்டுப் போகலாம்" என்று மறுமொழி கூறினர்.
56 ஆனால் அவர் அவர்களிடம், "என்னை நீங்கள் தாமதப்படுத்தாதீர்கள். ஆண்டவர் என் பயணத்திற்கு வெற்றியைத் தந்திருக்கிறார். என் தலைவரிடம் நான் செல்லும்படி விடை கொடுங்கள்" என்றார்.
57 அதற்கு அவர்கள், "பெண்ணை அழைத்து அவள் விருப்பத்தைக் கேட்போம்" என்றனர்.
58 அப்படியே ரெபேக்காவை அழைத்து, இவரோடு போகிறாயா? என்று அவரைக் கேட்டனர். அவரும் போகிறேன் என்றார்.
59 எனவே, அவர்கள் தங்கள் சகோதரி ரெபேக்காவையும் அவர் தாதியையும், ஆபிரகாமின் வேலைக்காரரையும் அவரைச் சேர்ந்தவர்களையும், அனுப்பி வைத்தனர்.
60 அப்பொழுது அவர்கள் ரெபேக்காவுக்கு ஆசி வழங்கி அவரை நோக்கி, "எம் சகோதரியே! ஆயிரம் ஆயிரமாக நீ பெருகுவாய். உன் வழி மரபினர் தங்கள் பகைவரின் நகர்களை உரிமையாக்கிக் கொள்வார்களாக!" என்றனர்.
61 பின்பு, ரெபேக்காவும் அவருடைய தோழியரும் ஒட்டகங்களின் மீதேறி, அந்த மனிதரைத் தொடர்ந்தனர். அந்த வேலைக்காரர் அவரை அழைத்துக் கொண்டு போனார்.
62 இதற்கிடையில், பெயேர்லகாய்ரோயி என்ற இடத்திலிருந்து ஈசாக்கு புறப்பட்டு நெகேபு பகுதியில் வாழ்ந்து வந்தார்.
63 மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார்.
64 ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தைவிட்டு இறங்கினார்.
65 அவர் அந்த வேலைக்காரரிடம், "“வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?" என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், "அவர்தாம் என் தலைவர்" என்றார். உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.
66 அப்பொழுது அவ்வேலைக்காரர் ஈசாக்கிடம் தாம் செய்தது அனைத்தையும்பற்றிக் கூறினார்.
67 ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச்சென்று மணந்துகொண்டார். அவரும் ஈசாக்குக்கு மனைவியானார். அவர் ரெபேக்காமீது அன்பு வைத்திருந்தார். இவ்வாறு தம் தாயின் மறைவுக்குப் பிறகு ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.

அதிகாரம் 25.


1.   ஆபிரகாம் கெற்றூரா என்ற பெயருடைய வேறொரு பெண்ணை மணந்து கொண்டார்.
2.   அவர் அவருக்குச் சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இசுபாக்கு, சூவாகு என்பவர்களைப் பெற்றெடுத்தார்.
3.   யோக்சான், சோபாவையும் தெதானையும் பெற்றான். தெதானின் புதல்வர் ஆசூரிம், லெத்தூசிம், இலயுமிம் ஆவர்.
4.   மிதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா ஆவர். இவர்கள் அனைவரும் கெற்றூராவின் புதல்வர்.
5.   ஆபிரகாம் தம்மகன் ஈசாக்கிற்குத் தமக்குரிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார்.
6.   ஆனால் அவருடைய மறுமனைவியின் பிள்ளைகளுக்கு அன்பளிப்புக்களைக் கொடுத்துத் தாம் உயிரோடிருக்கும்போதே தம் மகன் ஈசாக்கிடமிருந்து பிரித்துக் கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பிவிட்டார்.
7.   ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தார்.
8.   அவர் முதியவராகி நிறைந்த வாழ்நாள்களைக் கடந்து, நல்ல நரைவயதில் இறந்து, தம் மூதாதையரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
9.   அவர் புதல்வர்களாகி ஈசாக்கும் இஸ்மயேலும் மம்ரே நகருக்குக் கிழக்கே இத்தியனான சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த மக்பேலா குகையில் அவரை அடக்கம் செய்தனர்.
10     அவர் அந்த நிலத்தைத் தான் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். அதில் அவர் தம் மனைவி சாராவோடு அடக்கம் செய்யப்பட்டார்.
11     ஆபிரகாம் இறந்தபின் அவர் மகன் ஈசாக்கிற்குக் கடவுள் ஆசி வழங்கினார். பெயேர்லகாய்ரோயி என்ற இடத்தில் ஈசாக்கு வாழ்ந்து வந்தார்.
12.     சாராவின் பணிப்பெண்ணும் எகிப்தியளுமான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மயேலின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர்:
13.     பிறந்த வரிசையின்படி இஸ்மயேலின் புதல்வரின் பெயர்கள்: இஸ்மயேலின் மூத்த மகன் நெபயோத்து, கேதார், அத்பியேல், மிப்சாம்,
14.     மிசுமா, தூமா, மாசா,
15.     அதாது, தேமா, எற்றூர், நாப்பிசு, கேதமா.
16.     இவர்களே இஸ்மயேலின் புதல்வர்கள் பன்னிரு குலங்களின் தலைவர்களான இவர்கள் தம் குடியிருப்புகளுக்கும் பாளையங்களுக்கும் தம் பெயர்களையே இட்டனர்.
17.     இஸ்மயேல் மொத்தம் நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்: அவர் இறந்து தம் இனத்தாரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
18.     அவர்கள் அவிலாவுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்தனர். இது எகிப்திற்குக் கிழக்கே அசீரியா வரை உள்ளது. இவர்கள் தங்கள் சகோதரர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து வாழ்ந்தனர்.
19.     ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
20.     ஈசாக்கிற்கு நாற்பது வயதானபோது பதான் அராமைச் சார்ந்த அரமேயன் பெத்துவேலின் மகளும் அரமேயன் லாபானின் சகோதரியுமான ரெபேக்காவை மணந்துகொண்டார்.
21.     ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார். அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.
22.     ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர் எனக்கு இப்படி நடப்பது ஏன்? என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.
23.     ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன: உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்" என்றார்.
24.     அவருக்குப் பேறுகாலம் நிறைவுற்றபோது, இரட்டைப் பிள்ளைகள் கருப்பையில் இருந்தன.
25.     முதலாவது வெளிவந்த பிள்ளை செந்நிறமாகவும் அவன் உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது. எனவே அவனுக்கு ஏசா என்று பெயர் இட்டனர்.
26.     இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிடப்பட்டது. அவர்கள் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது அறுபது.
27.     இருவரும் வளர்ந்து இளைஞரானபோது, அவர்களுள் ஏசா வேட்டையில் வல்லவனாய், திறந்தவெளி மனிதனாய் வாழ்ந்துவந்தான். ஆனால் யாக்கோபு பண்புடையவனாய், கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்து வந்தான்.
28.     ஏசா வேட்டையாடித் தந்த உணவின் பொருட்டு ஈசாக்கு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார். ரெபேக்காவோ யாக்கோபின்மீது அன்பு கொண்டிருந்தார்.
29.     ஒரு நாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக்கொண்டிருந்தபொழுது, ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான்.
30.     அவன் யாக்கோபிடம், "நான் களைப்பாய் இருக்கிறேன். இந்த செந்நிறச் சுவையான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு," என்றான். அவனுக்கு ஏதோம் என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.
31.     யாக்கோபு அவனை நோக்கி, "உனது தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு" என்றான்.
32.     அவன், "நானோ சாகப்போகிறேன். தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?" என்றான்.
33.     யாக்கோபு, "இப்போதே எனக்கு ஆணையிட்டுக் கொடு" என்றான். எனவே ஏசா ஆணையிட்டுத் தலைமகனுரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.
34.     யாக்கோபு, ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், சுவையான பயிற்றங்கூழும் கொடுக்க, அவனும் தன் வழியே சென்றான்.

அதிகாரம் 26.


1.   முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.
2.   அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு.
3.   அந்நாட்டில் நீ அன்னியனாய் வாழ்வாய். நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன். இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன். உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.
4.   உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன். உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.
5.   ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்" என்றார்.
6.   எனவே ஈசாக்கு கெராரிலேயே தங்கிவிட்டார்.
7.   அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது, அவள் என் சகோதரி என்றார். ஏனெனில் ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால், அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து, அவள் என் மனைவி என்று சொல்ல அஞ்சினார்.
8.   பல நாள்கள் அவர் அங்கு வாழ்ந்த பின் ஒருநாள் பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கு சாளரம் வழியாகப் பார்க்க நேர்ந்தபோது, ஈசாக்கு தம் மனைவி ரெபேக்காவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.
9.   உடனே அபிமெலக்கு ஈசாக்கை அழைத்து, "அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே! பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஒரு வேளை அவளை முன்னிட்டு நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்" என்று அவனுக்குப் பதில் அளித்தார்.
10     அபிமெலக்கு, "நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால், பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய்?" என்றான்.
11     மேலும், "இந்த மனிதனையோ அவன் மனைவியையோ தொடுபவன் கொல்லப்படுவது உறுதி" என்று அபிமெலக்கு தன் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தான்.
12.     ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.
13.     அவர் செல்வமுடையவர் ஆனார். செல்வத்திற்குமேல் செல்வம் பெற்று மாபெரும் செல்வரானார்.
14.     மேலும் அவருக்கு ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் இருந்தன. வேலைக்காரர் பலர் இருந்தனர். எனவே பெலிஸ்தியர் அவர்மீது பொறாமை கொண்டனர்.
15.     அவர் தந்தை ஆபிரகாமின் காலத்தில் அவருடைய வேலையாள்கள் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்து விட்டனர்.
16.     மேலும் அபிமெலக்கு ஈசாக்கை நோக்கி, "நீ எங்களைவிட வலிமையுள்ளவனாய் இருப்பதால், எங்களை விட்டு அகன்று போ" என்றான்.
17.     எனவே, ஈசாக்கு அங்கிருந்து வெளியேறிக் கெரார் பள்ளத்தாக்கில் குடியேறி வாழலானார்.
18.     அங்கே, தம் தந்தை ஆபிரகாமின் காலத்தில் தோண்டப்பட்டு, அவர் இறந்த பின் பெலிஸ்தியரால் மூடப்பட்ட கிணறுகளை அவர் தோண்டித் தூரெடுத்தார்: தம் தந்தை இட்டிருந்த அதே பெயர்களால் அவற்றை அழைத்தார்.
19.     பின் அவருடைய வேலைக்காரர் நீர்ப்படுகையில் தோண்ட, அங்கே பொங்கியெழும் நீரூற்றைக் கண்டனர்.
20.     ஆனால், கெராரில் இருந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களோடு, "இந்தத் தண்ணீர் எங்களதே" என்று வாதாடினர். இவ்வாறு அவர்கள் அவரோடு தகராறு செய்ததால் அந்தக் கிணற்றுக்கு அவர் ஏசேக்கு என்று பெயரிட்டார்.
21.     மீண்டும் அவர்கள் வேறொரு கிணறு தோண்டினர். முன்புபோல் அதைப் பற்றியும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அதற்குச் சித்னா என்று அவர் பெயரிட்டார்.
22.     அவர் அவ்விடத்தை விட்டகன்று, வேறொரு கிணற்றைத் தோண்டினார். இம்முறை வாக்குவாதம் ஒன்றும் ஏற்படவில்லை. அதன் பொருட்டு, "ஆண்டவர் நம் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார். நாட்டில் நாம் வளர்ச்சியுறுவோம்" என்று சொல்லி, அதற்கு இரகபோத்து என்று பெயரிட்டார்.
23.     பின் அவர் அவ்விடத்திலிருந்து பெயேர்செபாவுக்குப் போனார்.
24.     அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். உனக்கு ஆசி வழங்கி, என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு உனது வழிமரபைப் பெருகச் செய்வேன்" என்றார்.
25.     எனவே ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவரது திருப்பெயரைப் போற்றினார்: அங்கே கூடாரம் அடித்துத் தங்கினார். ஈசாக்கின் வேலைக்காரர் அங்கே ஒரு கிணறு வெட்டினர்.
26.     அப்பொழுது கெராரிலிருந்து அபிமெலக்கு தன் உற்ற நண்பன் அகுசாத்துடனும் படைத்தலைவன் பிக்கோலுடனும் அவரிடம் வந்தான்.
27.     அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி, "நீங்கள் என்னை வெறுத்து உங்களிடமிருந்து விரட்டிவிட்டு, இப்பொழுது என்னிடம் வருவது ஏன்?" என்றார்.
28.     அவர்கள் மறுமொழியாக, "ஆண்டவர் உம்மோடு இருக்கிறாரென்று தெளிவாகக் கண்டோம். ஆதலால் நமக்குள், எங்களுக்கும் உமக்குமிடையே, ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். நாங்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்வோம்.
29.     நாங்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை. உம்மை நல்ல முறையில் நடத்தி, சமாதானமாய் அனுப்பி வைத்தோம். அதுபோல ஆண்டவரின் ஆசி பெற்ற நீரும் எங்களுக்கு எவ்விதத் தீமையும் செய்யாதிருப்பீர்" என்றனர்.
30.     ஈசாக்கு அவர்களுக்கு விருந்து அளித்தார். அவர்களும் உண்டு குடித்தனர்.
31.     அதிகாலையில் அவர்கள் எழுந்து, ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்தனர். பின் ஈசாக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அவர்களும் அவரிடமிருந்து சமாதானமாய்ப் பிரிந்து சென்றனர்.
32.     அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர், தாங்கள் தோண்டிய கிணற்றைக் குறித்துச் செய்தி கொண்டு வந்து தண்ணீர் கண்டோம் என்றனர்.
33.     ஆதலால் அவர் அதற்குச் சிபா என்று பெயரிட்டார். எனவே அந்நகருக்கு பெயேர்செபா என்னும் பெயர் இன்றுவரை வழங்கி வருகிறது.
34.     ஏசா நாற்பது வயதானபோது, இத்தியன் பெயேரியின் மகள் யூதித்தையும் இத்தியன் ஏலோனின் மகள் பாசமத்தையும் மணந்துகொண்டான்.
35.     இவர்களால் ஈசாக்கும் ரெபேக்காவும் மனக்கசப்பு அடைந்தனர்.

அதிகாரம் 27.


1.   ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, என் மகனே என்றார்: ஏசா, இதோ வந்துவிட்டேன் என்றான்.
2.   அவர் அவனை நோக்கி, "இதோ பார்: எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்றறியேன்.
3.   இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக்கூட்டையும் எடுத்துக்கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக்கறி கொண்டு வா.
4.   நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்" என்றார்.
5.   ஈசாக்கு தம் மகன் ஏசாவிடம் பேசியதை ரெபேக்கா கேட்டுக் கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டு வருமாறு ஏசா காட்டிற்குப் புறப்பட்டவுடன்,
6.   அவர் தம் மகன் யாக்கோபை நோக்கி, "உன் தந்தை உன் சகோதரன் ஏசாவுக்குச் சொன்னது என் காதில் விழுந்தது. அவர் சொன்னது:
7.    நீ போய் வேட்டையாடி, வேட்டைக்கறியை சமைத்துக் கொண்டு வா. நான் உண்பேன். நான் சாவதற்கு முன் ஆண்டவர் திருமுன் உனக்கு ஆசி வழங்குவேன்.
8.   இப்பொழுது என் மகனே, நான் கட்டளையிடுவதைக் கருத்தாய்க் கேள்.
9.   உடனே மந்தைக்குப் போ, அங்கிருந்து இரு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. நான் அவற்றை உன் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சுவையான உணவு வகைகளாகச் சமைத்துத் தருவேன்.
10     நீ அவற்றை உன் தந்தைக்கு உண்ணக் கொடுத்து அவர் சாவதற்கு முன் அவர் ஆசியைப் பெற்றுக்கொள்" என்றார்.
11     யாக்கோபு தன் தாய் ரெபேக்காவிடம், "என் சகோதரன் ஏசா உடலில் அடர்ந்த உரோமம் உடையவன்: நானோ மிருதுவான உடல் கொண்டவன்.
12.     என் தந்தை என்னைத் தடவிப் பார்த்தால் என்ன ஆவது? அவரை நான் ஏமாற்றுவதாகத் தெரிந்துவிட்டால், என்மேல் ஆசிக்குப் பதிலாக சாபத்தையல்லவா விழச் செய்துகொள்வேன்" என்றான்.
13.     ஆனால் அவன் தாய் அவனிடம், "மகனே! உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும்: நான் சொல்வதை மட்டும் செய்: போ: அவற்றை என்னிடம் கொண்டு வா" என்றார்.
14.     அவனும் அவ்வாறே போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் அவன் தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரித்தார்.
15.     மேலும் ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார்.
16.     அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலால் மூடினார்.
17.     அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.
18.     அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று, அப்பா என்று அழைத்தான். அவரும் மறுமொழியாக, ஆம் மகனே, நீ எந்த மகன்? என்று கேட்க,
19.     யாக்கோபு தன் தந்தையிடம், "நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குங்கள்" என்றான்.
20.     ஈசாக்கு தம் மகனை நோக்கி, "மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?" என்று கேட்க, அவன், "உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் எனக்கு இது நிகழ்ந்தது," என்றான்.
21.     ஈசாக்கு யாக்கோபிடம், "மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப்பார்த்துத் தெரிந்துகொள்வேன்" என்றார்.
22.     யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான். ஈசாக்கு அவனைத் தடவிப் பார்த்து, குரல் யாக்கோபின் குரல்: ஆனால் கைகளோ ஏசாவின் கைகள் என்றார்.
23.     அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. எனவே அவனுக்கு ஆசி வழங்கினார்.
24.     மீண்டும் அவர் நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா? என்று வினவ, அவனும் ஆம் என்றான்.
25.     அப்பொழுது அவர், மகனே உண்பதற்கு வேட்டைப்பதார்த்தங்களைக் கொண்டு வா. மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன் என்றார். அவ்வாறே யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார். பின், அவன் திராட்சை ரசம் கொண்டுவர, அவர் அதைக் குடித்தார்.
26.     அப்பொழுது அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி மகனே, அருகில் வந்து என்னை முத்தமிடு என்றார்.
27.     அவனும் அருகில் போய் அவரை முத்தமிட, ஈசாக்கு அவன் அணிந்திருந்த ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே: "இதோ, என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசி பெற்ற விளைநிலத்தின் வாசனையாம்!
28.     வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக!
29.     நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிவிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!"
30.     இவ்வாறு ஈசாக்கு யாக்கோபிற்கு ஆசி வழங்கி முடிந்ததும், யாக்கோபு தந்தையின் முன்னிலையிலிருந்து விரைந்து வெளியேற, அவன் சகோதரன் ஏசா வேட்டைக்கறியுடன் வந்தான்.
31.     அவனும் சுவையான உணவுவகைகளைச் சமைத்துத் தன் தந்தையிடம் கொண்டுவந்து அவரை நோக்கி, "என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக்கறியை உண்டு, மனமார எனக்கு ஆசி வழங்குவாராக" என்றான்.
32.     அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி: நீ யார் என, அவன்: நான் தான் உங்கள தலைப்பேறான மகன் ஏசா என்றான்.
33.     ஈசாக்கு மிகவும் நடுநடுங்கி, "அப்படியானால் வேட்டையாடி எனக்குக் கொண்டு வந்தவன் எவன்? நீ வருமுன் அந்த உணவை நான் உண்டு அவனுக்கு ஆசி வழங்கி விட்டேன். அவனே ஆசி பெற்றவனாய் இருப்பான்" என்றார்.
34.     ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு, மிகவும் மனக்கசப்படைந்து பெருங்குரலெழுப்பிக் கதறி அழுதான். அவன் தன் தந்தையை நோக்கி, "அப்பா! எனக்கும் ஆசி வழங்குவீர்" என்றான்.
35.     அதற்கு அவர்: "உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரிய ஆசியைப் பெற்றுச் சென்றுவிட்டான்" என்றார்.
36.     அதைக் கேட்ட ஏசா, "யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில், அவன் இருமறை என்னை ஏமாற்றிவிட்டான். ஏற்கெனவே எனக்குரிய தலைமகனுரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்குரிய ஆசியையும் பிடுங்கிக்கொண்டான்" என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி: நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா? என்று கேட்டான்.
37.     ஈசாக்கு ஏசாவிடம், "நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் உறவினர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனுக்குத் தானியத்தையும் திராட்சை இரசத்தையும் நிறைவாக வழங்கிவிட்டேன். இப்படி இருக்க என் மகனே! நான் உனக்கு வேறென்ன செய்ய முடியும்?" என்று சொல்ல,
38.     ஏசா அவரை நோக்கி, "அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா" என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான்.
39.     அவன் தந்தை ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக, "உன் குடியிருப்புக்கு நிலத்தின் செழுமையோ மேல்வானின் பனித்துளியோ கிட்டாது.
40.     நீ உன் வாளினால் வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்கு அடிமையாய் இருப்பாய்: நீ கிளர்ந்து எழும்போது உன் கழுத்தில் அவன் சுமத்திய நுகத்தடியை முறித்து விடுவாய்" என்றார்.
41.     தந்தையிடமிருந்து யாக்கோபு பெற்றிருந்த ஆசியை முன்னிட்டு ஏசா அவன் மீது வர்மம் கொண்டு, என் தந்தைக்காகத் துக்கம் கொண்டாடும் நாள்கள் நெருங்கிவிட்டன. அதன்பின், என் தம்பி யாக்கோபைக் கொன்று போடுவேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
42.     தம்மூத்த மகன் ஏசாவின் திட்டம் பற்றி ரெபேக்கா கேள்விப்பட்டதும் அவர் ஆளனுப்பித் தம் இளைய மகன் யாக்கோபை அழைத்து, "இதோ! உன் சகோதரன் ஏசா உன்னைக் கொலை செய்து, தன்னைத் தேற்றிக்கொள்ள விரும்புகிறான்.
43.     ஆகையால், மகனே நான் சொல்வதைக் கேள். உடனே கிளம்பி காரானில் உள்ள என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போய்,
44.     உன் சகோதரன் சீற்றம் தணியும்வரை சிலநாள் அவரிடம் தங்கி இரு.
45.     தனக்கு விரோதமாய் நீ செய்ததை அவன் மறந்து கோபம் தீர்ந்த பின் நான் உனக்குச் சொல்லியனுப்பி, உன்னை அங்கிருந்து இவ்விடத்திற்கு அழைத்துக் கொள்வேன். ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் நான் ஏன் இழந்து போக வேண்டும்?" என்றார்.
46     பின் ரெபேக்கா ஈசாக்கை நோக்கி: "இத்தியப் பெண்களை முன்னிட்டு என் வாழ்க்கை எனக்குச் சலித்துப் போயிற்று. யாக்கோபும் இவர்களைப் போன்ற இந்நாட்டுப் பெண்களினின்றும் ஒருத்தியை மணந்து கொண்டால் என் வாழ்க்கை என்ன ஆவது?" என்றார்.

அதிகாரம் 28.


1.   ஈசாக்கை யாக்கோபை அழைத்து அவனுக்கு ஆசி வழங்கிக் கட்டளையிட்டுக் கூறியது: "நீ கானானியப் புதல்வியருள் எவளையும் மணந்து கொள்ளாதே.
2.   புறப்பட்டு, பதான் அராமுக்குப்போய், உன் தாயின் தந்தையாகிய பெத்துவேல் வீட்டிற்குச் செல். அங்கு உன் தாய்மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்துகொள்.
3.   எல்லாம் வல்ல இறைவன் உனக்கு ஆசி வழங்கி, நீ பல இனங்களுக்குத் தந்தையாகும்படி உன்னைப் பலுகிப் பெருகச் செய்வாராக!
4.   ஆபிரகாம் பெற்ற ஆசியை அவர் உனக்கும் உன் வழிமரபினருக்கும் வழங்குவாராக! அதனால் நீ அன்னியனாய் வாழும் நாட்டை, அதாவது கடவுள் ஆபிரகாமுக்குத் தந்த நாட்டை, உரிமையாக்கிக் கொள்வாய்."
5.   இவ்வாறு ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவைக்க, அவனும் பதான் அராமுக்குச் சென்று, அரமேயனான பெத்துவேலின் மகனும் யாக்கோபு, ஏசாவின் தாய் ரெபேக்காவின் சகோதரனுமான லாபானிடம் வந்து சேர்ந்தான்.
6.   ஈசாக்கு யாக்கோபுக்கு ஆசி வழங்கி, அவனைப் பதான் அராமில், மணமுடித்துக் கொள்ளுமாறு அங்கு அனுப்பி வைத்ததும், ஆசி வழங்குகையில் கானானியப் பெண்களிடம் பெண் எடுக்கக் கூடாது என்று கட்டளையிட்டதும்,
7.   யாக்கோபு தன் தாய் தந்தைக்குக் கீழ்ப்படிந்து பதான் அராமுக்குச் சென்றதும் ஏசாவுக்குத் தெரிய வந்தன.
8.   ஈசாக்கிற்குக் கானானியப் பெண்களைப் பிடிக்கவில்லை என்பதை ஏசா கண்டு,
9.   இஸ்மயேலிடம் சென்று ஏற்கெனவே தனக்கிருந்த மனைவியரைத் தவிர, ஆபிரகாமின் மகன் இஸ்மயேலின் மகளும், நெபயோத்தின் சகோதரியுமான மகலாத்தை மணந்து கொண்டான்.
10     யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, கரானை நோக்கிச் சென்றான்.
11     அவன் ஓரிடத்திற்கு வந்தபோது கதிரவன் மறைந்துவிட்டான். எனவே அங்கே இரவைக் கழிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துறங்கினான்.
12.     அப்போது அவன் கண்ட கனவு இதுவே: நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.
13.     ஆண்டவர் அதற்கு மேல் நின்றுகொண்டு, "உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே. நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் வழிமரபிற்கும் தந்தருள்வேன்.
14.     உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய். உன்னிலும் உன் வழிமரபிலும் மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன.
15.     நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டான்" என்றார்.
16.     யாக்கோபு தூக்கம் தெளிந்து, "உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்: நானோ இதை அறியாதிருந்தேன்" என்று
17.     அச்சமடைந்து, "இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது! இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்" என்றார்.
18.     பிறகு யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து,
19.    லூசு என்று வழங்கிய அந்த நகருக்குப் பெத்தேல் என்று பெயரிட்டார்.
20.     மேலும் அவர் நேர்ந்து கொண்டது: கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து,
21.     என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார்.
22.     மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்.

அதிகாரம் 29.


1.   யாக்கோபு கீழ்த்திசை மக்களின் நாட்டை நோக்கிக் காலெடுத்து வைத்துப் பயணமானார்.
2.   இதோ! வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டார். அந்தக் கிணற்றிலிருந்துதான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும். அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.
3.   மந்தைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபின் இடையர்கள் கல்லைப் புரட்டி, அவை குடித்து முடிந்ததும், மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின்மேல் தூக்கிவைப்பது வழக்கம்.
4.   யாக்கோபு இடையர்களை நோக்கி, சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என, அவர்கள்: நாங்கள் காரானிலிருந்து வருகிறோம் என்றார்கள்.
5.   மீண்டும் அவர்: நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க, அவர்கள், அவரை எங்களுக்குத் தெரியும் என்றார்கள்.
6.   அவர் நலம்தானா? என்று யாக்கோபு கேட்க, அவர்கள் ஆம், அவர் நலமே. இதோ! அவர் மகள் ராகேல் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள் என்றார்கள்.
7.   அப்பொழுது யாக்கோபு, பொழுது சாய இன்னும் வெகுநேரம் இருக்கிறது! மந்தைகளை ஒன்றுசேர்ப்பதற்கு நேரம் ஆகவில்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லுங்கள் என்றார்.
8.   அதற்கு அவர்கள், "நாங்கள் அப்படிச் செய்யக்கூடாது. ஏனெனில், எல்லா மந்தைகளையும் ஒன்றுசேர்த்த பின்னரே கிணற்று வாயினின்று கல் புரட்டப்படும். அப்பொழுதுதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்" என்று சொன்னார்கள்.
9.   இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பவளான ராகேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
10     ராகேல் தன் தாய்மாமன் லாபானின் மகள் என்றும் ஆடுகள் அவனுடையவை என்றும் யாக்கோபு கண்டார்: எனவே கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டித் தன் தாய்மாமன் லாபானின் மந்தைக்குத் தண்ணீர் காட்டினார்:
11     பின் ராகேலை முத்தமிட்டுக் கதறி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
12.     பின்பு தாம் அவள் தந்தைக்கு உறவினர் என்றும் ரெபேக்காவின் மகன் என்றும் அவளுக்குத் தெரிவிக்க, உடனே அவள் ஓடிப்போய்த் தன் தந்தையிடம் சொன்னாள்.
13.     தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன் லாபான் அவருக்கு எதிர்கொண்டோடி, அவரை அரவணைத்து முத்தமிட்டுத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு யாக்கோபு தமக்கு நேர்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தார்.
14.     லாபான் அவரிடம், நீ என் எலும்பும் சதையுமல்லவா? என்றான். அவனுடன் அவர் ஒரு மாத காலம் தங்கியிருந்தார்.
15.     அதன்பின் லாபான் யாக்கோபை நோக்கி, "நீ என் உறவினன் என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல்" என்றான்.
16.     லாபானுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயா: இளையவள் பெயர் ராகேல்.
17.     ஆனால் லேயா மங்கிய பார்வை உடையவள். ராகேலோ வடிவழகும் எழில் தோற்றமும் உள்ளவள்.
18.     யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், "உம் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்" என்றார்.
19.     அதற்கு லாபான், அவளை அன்னியன் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, உனக்குக் கொடுப்பதே மேல். என்னோடு தங்கியிரு என்றான்.
20.     அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் ராகேலை முன்னிட்டு வேலை செய்தார். ஆனால் அவர் அவள்மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் அது அவருக்குச் சில நாட்களாகவே தோன்றியது.
21.     பின் யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் மனைவியோடு சேரும்பொருட்டு, அவளை எனக்குத் தாரும். என் ஒப்பந்த நாள்கள் நிறைவெய்திவிட்டன என்றார்.
22.     ஆகவே லாபான் அவ்வூர் மக்கள் அனைவரையும் அழைத்துத் திருமண விருந்தளித்தான்.
23.     ஆனால், மாலையானதும் அவன் தன் மகள் லேயாவை அழைத்துக் கொண்டுபோய் யாக்கோபிடம் விட, அவர் அவளுடன் உறவு கொண்டார்.
24.     லாபான் தன் மகள் லேயாவுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் சில்பாவைக் கொடுத்தான்.
25.     அதிகாலையில் அந்தப் பெண் லேயா என்று கண்டு, யாக்கோபு லாபானை நோக்கி: நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா நான் உம்மிடம் வேலைசெய்தேன்? என்னை ஏமாற்றியது ஏன்? என்றார்.
26.     அதற்கு லாபான்: "மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கமில்லை.
27.     ஆகையால் நீ இவளோடு ஏழு நாள்களைக் கழி. இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் அவளையும் உனக்குக் கொடுப்பேன்" என்றான்.
28.     அவ்வாறே யாக்கோபு லேயாவுடன் ஏழு நாள்களைக் கழித்தார். அதன் பின் லாபான் தன் மகள் ராகேலை அவருக்கு மனைவியாகக் கொடுத்தான்.
29.     லாபான் தன் மகள் ராகேலுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் பில்காவைக் கொடுத்தான்.
30.     யாக்கோபு ராகேலுடன் கூடிவாழ்ந்தார். அவளை லேயாவைவிட அதிகம் நேசித்தார். லாபானிடம் மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்தார்.
31.     இப்படியிருக்க லேயா வெறுப்புக்குள்ளானதை ஆண்டவர் கண்டு அவருக்குத் தாய்மைப்பேறு அருளினார். ராகேலோ மலடியாகவே இருந்தார்.
32.     லேயா கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இப்பொழுது என் கணவர் என்மீது அன்புகூர்வார் என்பது உறுதி என்று கூறி, அவனுக்கு ரூபன் (1) என்று பெயரிட்டார்.
33.     மீண்டும் அவர் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு, இவனையும் எனக்குத் தந்தருளினார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் (2) என்று பெயரிட்டார்.
34.     அவர் மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றெடுத்தார். இப்பொழுது என்கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி. ஏனெனில் நான் அவருக்கு மூன்று புதல்வரைப் பெற்றெடுத்துள்ளேன் என்று கூறி அவனுக்கு லேவி (3) என்று பெயரிட்டார்.
35.     அவர் மீண்டும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். இப்போது ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன் , என்று சொல்லி அவனுக்கு யூதா (4) என்று பெயரிட்டார். அதன்பின் அவருக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

அதிகாரம் 30.


1.   தாம் யாக்கோபுக்குப் பிள்ளை பெறவில்லையே என்று ராகேல் தம் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார். அவர் தம் கணவனை நோக்கி, நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும். இல்லையேல் செத்துப் போவேன் என்றார்.
2.   யாக்கோபு அவர் மீது சினம் கொண்டு, நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார் என்றார்.
3.   அப்பொழுது ராகேல் இதோ என் பணிப்பெண் பில்கா. நீர் அவளோடு கூடி வாழ்வீர். அவள் எனக்காக பிள்ளை பெற்று என் மடியில் வைக்க, நானும் அவள் மூலம் பிள்ளைப் பேறு பெறுவேன் என்றார்.
4.   பின்பு அவர் அவருக்குத் தம் பணிப்பெண் பில்காவை மனைவியாகக் கொடுக்க, அவரும் அவளுடன் கூடி வாழ்ந்தார்.
5.   பில்கா கருவுற்று யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
6.   ராகேல், ஆண்டவர் எனக்கு நீதி வழங்கி, என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு மகனைத் தந்தார் என்று சொல்லி அவனுக்குத் தாண் (5) என்னும் பெயரிட்டார்.
7.   பில்கா மீண்டும் கருவுற்று மற்றொரு மகனைப் பெற்றாள்.
8.   ராகேல் நான் என் சகோதரியோடு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றி கொண்டேன் என்று கூறி, அவனுக்கு நப்தலி (6) என்று பெயரிட்டார்.
9.   லேயா தமக்குப் பிள்ளைப்பேறு நின்றுவிட்டதென்று கண்டு, தம் பணிப்பெண் சில்பாவை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தார்.
10     லேயாவின் பணிப்பெண் சில்பா யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
11     லேயா, நான் நற்பேறு பெற்றுள்ளேன் என்று சொல்லி அவனுக்குக் காத்து (7) என்று பெயரிட்டார்.
12.     லேயாவின் பணிப்பெண் சில்பா மீண்டும் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
13.     லேயா எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி! பெண்டிர் என்னை மகிழ்ச்சி பெற்றவள் என்பர் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் (8) என்று பெயரிட்டார்.
14.     கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயல்வெளியில் தூதாயிம் கனிகளைக் கண்டு, அவற்றைத் தன்தாய் லேயாவிடம் கொண்டுவந்து கொடுத்தான். ராகேல் அவரிடம், உன் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளில் எனக்கும் கொஞ்சம் கொடு என்று கேட்டார்.
15.     அதற்கு அவர், என் கணவனை நீ பறித்துக் கொண்டது போதாதா? என் மகன் கொண்டு வந்த கனிகளையும் பறித்துக் கொள்வாயோ? என்றார். அப்பொழுது ராகேல், "ஙுசரி, உன் மகன் கொண்டு வந்த தூதாயிம் கனிகளுக்குப் பதிலாக அவர் இன்றிரவு உன்னோடு கூடியிருக்கட்டும்" என்றார்.
16.     மாலை வேளையில் யாக்கோபு வயல் வெளியினின்று திரும்பி வரும்போதே, லேயா அவருக்கு எதிர்கொண்டுபோய், நீர் என்னோடு கூடியிருக்க வேண்டும். ஏனெனில், என் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளை ஈடாகக் கொடுத்து உம்மை நான் வாங்கிக்கொண்டேன் என்றார். அவர் அன்றிரவு அவரோடு கூடியிருந்தார்.
17.     கடவுள் லேயாவுக்குச் செவிசாய்த்தார். அவர் கருத்தாங்கி யாக்கோபுக்கு ஜந்தாம் மகனைப் பெற்றெடுத்தார்.
18.    நான் என் பணிப்பெண்ணை என் கணவருக்குக் கொடுத்ததற்காகக் கடவுள் எனக்கு ஈடு செய்துள்ளார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் (9) என்று பெயரிட்டார்.
19.     மீண்டும் லேயா கருத்தாங்கி ஆறாம் மகனைப் பெற்றெடுத்தார்.
20.     லேயா கடவுள் எனக்கு ஒரு சிறந்த கொடை கொடுத்துள்ளார். இனிமேல் என் கணவர் என்னைப் பெருமையாக நடத்துவார். ஏனெனில், நான் அவருக்கு ஆறு புதல்வரைப் பெற்றிருக்கிறேன் என்று கூறி அவனுக்குச் செபுலோன் (10) என்று பெயரிட்டார்.
21.     பிறகு அவர் ஒரு பெண்மகவைப் பெற்று, அவளுக்குத் தீனா என்று பெயரிட்டார்.
22.     பின்பு கடவுள் ராகேலை நினைவுகூர்ந்தார். அவர் அவருக்குச் செவிசாய்த்துத் தாய்மைப்பேறு அருளினார்.
23.     அவரும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்து கடவுள் என் இழிவைப் போக்கினார் என்றார்.
24.     மேலும் அவர் ஆண்டவர் இன்னொரு மகனையும் எனக்குச் சேர்த்துத் தருவாராக என்று கூறி, அவனுக்கு யோசேப்பு (11) என்று பெயரிட்டார்.
25.     ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்த பின் யாக்கோபு லாபானை நோக்கி, "என் சொந்த இடத்திற்கும் நாட்டிற்கும் திரும்பிப்போக என்னை அனுப்பி வைப்பீராக!
26.     என் மனைவியரையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தந்து என்னைப் போகவிடும். அவர்களுக்காக நான் உம்மிடம் வேலை செய்துள்ளேன். நான் உமக்குச் செய்துள்ள வேலை இன்னதென்று உமக்குத் தெரியும்" என்றார்.
27.     லாபான் அவரை நோக்கி, "உமக்குத் தடையேதும் இல்லையெனில் தயவுகூர்ந்து இங்கேயே தங்கிவிடும். உம் பொருட்டு ஆண்டவர் எனக்கு ஆசி வழங்கியிருக்கிறார் என்பதைக் குறிபார்த்து அறிந்து கொண்டேன்.
28.     உமக்குரிய கூலியைக் குறிப்பிடும். நான் அதைக் கொடுத்து விடுகிறேன்" என்றான்.
29.     அதற்கு அவர், "நான் உம்மிடம் எவ்வளவு வேலை செய்துள்ளேன் என்பதையும் உம் மந்தை என்னிடம் எப்படி இருந்தது என்பதையும் நீர் அறிவீர்.
30.     நான் உம்மிடம் வருமுன் உமக்கிருந்தது கொஞ்சமே: இப்பொழுதோ மிகுதியாகப் பெருகிவிட்டது. நான் கால்வைக்கும் இடமெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கியிருக்கிறார். என் குடும்பத்திற்காக நான் உழைப்பது எப்போது?" என்றார்.
31.     அதற்கு லாபான், "நான் உமக்கு என்ன தரவேண்டும்?" என, யாக்கோபு "எனக்கு நீர் ஒன்றும் தர வேண்டியதில்லை. இந்த ஒன்றை மட்டும் நீர் எனக்குச் செய்தால், நான் தொடர்ந்து உம் மந்தையை மேய்த்துப் பாதுகாப்பேன்.
32.     உம் மந்தைகளூடே இன்று நான் செல்வேன். அவற்றினின்று கலப்பு நிறமோ புள்ளியோ உடைய செம்மறியாடுகளையும் கறுப்பு நிறம் கொண்ட ஆட்டுக் குட்டிகள் அனைத்தையும் புள்ளியோ கலப்பு நிறமோ உடைய வெள்ளாடுகளையும் தனியாகப் பிரித்துக் கொள்வேன். இவை எனக்குரிய கூலியாக இருக்கட்டும்.
33.     எனக்குரிய பங்கைச் சரிபார்க்க நீர் வரும்போது என் நேர்மை எனக்குச் சான்று பகர்வதாக! கலப்பு நிறமோ புள்ளியோ இல்லாத வெள்ளாட்டையோ, கறுப்பு நிறமற்ற ஆட்டுக் குட்டியையோ நீர் கண்டால், அது திருடப்பட்டதாக எண்ணப்படும்" என்றார்.
34.     அதற்கு லாபான், "நீர் சொன்னபடியே ஆகட்டும்" என்றான்.
35.     ஆனால் அன்றே அவன் வரியோ புள்ளியோ உடைய வெள்ளாட்டுக் கிடாய்களையும், கலப்பு நிறமோ புள்ளியோ உடைய வெள்ளாடுகள் அனைத்தையும் வெள்ளைப் புள்ளி கொண்ட எல்லாவற்றையும், கறுப்பாய் இருந்த எல்லா ஆட்டுக்குட்டிகளையும் பிரித்துத் தம் புதல்வரிடம் ஒப்படைத்து,
36.     தனக்கும் தன் மந்தைகளை மேய்த்துவந்த யாக்கோபுக்கும் இடையில் மூன்று நாள் வழித்தூரம் இருக்கும்படியும் செய்துவிட்டான்.
37.     அது கண்ட யாக்கோபு புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் பசிய கொப்புகளை வெட்டி, அவற்றில் இடையிடையே உள்தண்டின் வெள்ளைப்பகுதி தெரியுமாறு உரித்தார்.
38.     மேலும் தம் மந்தைகள் தண்ணீர் குடிக்க வரும்போது, ஆடுகள் அந்த வரியுள்ள கொப்புகளை எதிரில் கண்டு பொலிந்து சினைப்படும் பொருட்டு, நீர்த்தொட்டிகளில் அவற்றை அவர் போட்டு வைத்தார்.
39.     பொலியும் நேரத்தில் அக்கொப்புகளைக் கண்டு பொலிந்த ஆடுகள் வரியோ, கலப்பு நிறமோ, புள்ளியோ உடைய குட்டிகளை ஈன்றன.
40.     மேலும் யாக்கோபு ஆட்டுக்குட்டிகளைப் பிரித்தெடுத்தார். லாபானின் மந்தைகளில் வரியோ கறுப்பு நிறமோ உடைய ஆடுகளை நோக்கி மந்தையை நிற்கச் செய்தார். தமக்குரிய மந்தைகளை லாபானின் மந்தையோடு சேராமல் பிரித்து வைத்தார்.
41.     மந்தையின் வலிமையுள்ள ஆடுகள் பொலியும்போது, மந்தைக்கு எதிரேயிருந்த நீர்த்தொட்டியில் அக்கொப்புகளப் போட்டார்: அக்கொப்புகளிடையே அவை பொலிந்தன.
42.     வலிமையற்ற ஆடுகளுக்குமுன் கொப்புகளைப் போடவில்லை. எனவே லாபானின் ஆடுகள் வலுவற்றவையாகவும் யாக்கோபின் ஆடுகள் வலுவுள்ளவையாகவும் ஆயின.
43.     இவ்வாறு யாக்கோபு பெரும் செல்வரானார். மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றை அவர் பெருமளவில் கொண்டிருந்தார்.

அதிகாரம் 31.


1.   லாபானின் புதல்வர், நம் தந்தைக்குரிய யாவற்றையும் யாக்கோபு கைப்பற்றி அவருடைய சொத்தைக்கொண்டே, இந்தச் செல்வத்தை எல்லாம் சேர்த்துக்கொண்டான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை யாக்கோபு கேட்டார்.
2.   லாபானின் மனமும் முன்புபோல் இல்லை என்று யாக்கோபு கண்டார்.
3.   ஆண்டவர் யாக்கோபை நோக்கி, "உன் மூதாதையரின் நாட்டிற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ: நான் உன்னோடு இருப்பேன்" என்றார்.
4.   எனவே யாக்கோபு ராகேலையும் லேயாவையும் தம் மந்தை இருந்த புல்வெளிக்கு வரும்படி ஆளனுப்பினார்.
5.   பிறகு அவர் அவர்களை நோக்கி, "உங்கள் தந்தையின் மனம் என்பால் முன்பு போல் இல்லை என்று காண்கிறேன். என் தந்தையின் கடவுளோ என்னோடு இருந்து வருகிறார்.
6.   உங்கள் தந்தைக்காக முழு வலிமையுடன் உழைத்தேன் என்று உங்களுக்குத் தெரியும்.
7.   உங்கள் தந்தையோ என்னை ஏமாற்றி, என் கூலியைப் பத்து முறை மாற்றினார். அவர் வழியாக எனக்கு எவ்விதத்தீங்கும் நேரிடக் கடவுள் விடவில்லை
8.   ஏனெனில், கலப்பு நிறமானவை உனக்குரிய ஊதியம் என்றபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளையே ஈன்று வந்தன. வரியுள்ளவை உனக்குரிய ஊதியம் என்றபோதோ ஆடுகளெல்லாம் வரியுடைய குட்டிகளையே ஈன்றன.
9.   இவ்விதமாய்க் கடவுளே உங்கள் தந்தையின் மந்தைகளை எடுத்து எனக்குத் தந்தருளினார்.
10     ஆடுகள் சினையுறும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஆடுகளோடு பொலியும் கிடாய்கள் வரியும், கலப்பு நிறமும், புள்ளியும் உடையனவாய் இருந்தன.
11     அக்கனவில் கடவுளுடைய தூதர், யாக்கோபு! என்று என்னை அழைக்க, நான், இதோ! அடியேன் என்றேன்.
12.     அவர், உன் கண்களை உயர்த்திக் கிடாய்கள் யாவும் வரியும் கலப்புநிறமும் புள்ளியும் உடைய ஆடுகளுடன் பொலிவதைப் பார். ஏனெனில், லாபான் உனக்குச் செய்தது அனைத்தையும் நான் கண்டேன்.
13.     நீ கல்லைத் திருப்பொழிவு செய்து, எனக்கு நேர்ச்சை செய்து கொண்ட இடமாகிய பெத்தேலின் இறைவன் நானே. நீ உடனே எழுந்து இந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு உன் பிறந்த நாட்டுக்குத் திரும்பிச் செல் என்று கூறினார்" என்றார்.
14.     அதற்கு ராகேலும், லேயாவும், "எங்கள் தந்தையின் குடும்பத்தில் எங்களுக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் இன்னும் உண்டோ?
15.     அவர் எங்களை அன்னியப் பெண்களைப் போல் விலைக்கு விற்று, எங்களுக்காக வாங்கியதையும் முழுமையாக விழுங்கிவிடவில்லையா?
16.     ஆனால், செல்வத்தையெல்லாம் எங்கள் தந்தையிடமிருந்து கடவுள் பிடுங்கி, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரிமையாக்கினார். ஆகையால் கடவுள் உங்களுக்குச் சொன்னதையெல்லாம் செய்யுங்கள்" என்றனர்.
17.     அப்போது யாக்கோபு, தம் மக்களையும், மனைவியரையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
18.     பதான் அராமில் ஈட்டிய செல்வம் அனைத்தையும் திரட்டிக்கொண்டு, மந்தைகள் எல்லாவற்றையும் ஓட்டிக்கொண்டு, கானான் நாட்டிலிருந்த தம் தந்தை ஈசாக்கை நோக்கிப் பயணமானார்.
19.     லாபான் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கப் போயிருந்தபொழுது, ராகேல் தம் தந்தையின் குலதெய்வச் சிலைகளைத் திருடிக் கொண்டுவிட்டார்.
20.     மேலும் யாக்கோபு, தாம் ஓடிப்போகிற செய்தியை அரமேயனான லாபானுக்குத் தெரிவிக்காமல் ஏமாற்றிவிட்டார்.
21.     அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நதியைக் கடந்து கிலயாது மலைநாட்டை நோக்கித் தப்பியோடினார்.
22.     யாக்கோபு தப்பியோடிய செய்தி லாபானுக்கு மூன்றாம் நாள் தெரிவிக்கப்பட்டது.
23.     உடனே அவன் தன் உறவினர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழு நாள்களாக அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவர் இருந்த கிலயாது மலைப்பகுதியை நெருங்கினான்.
24.     அன்றிரவு கனவில் அரமேயனான லாபானுக்குக் கடவுள் தோன்றி அவனை நோக்கி, நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம் என எச்சரித்தார்.
25.     லாபான் யாக்கோபை நெருங்கியபொழுது, யாக்கோபு கிலயாது மலைப்பகுதியில் கூடாரம் அடித்திருந்தார். அம்மலைப் பகுதியில் லாபானும் அவன் உறவினரும் கூடாரமடித்துத் தங்கினர்.
26.     அவன் யாக்கோபை நோக்கி: "நீர் இப்படிச் செய்யலாமா? என்னை ஏமாற்றி என் புதல்வியரை வாள் முனையில் பிடித்த கைதிகளைப் போல் இட்டுச் செல்லலாமா?
27.     எனக்கு ஒன்றும் தெரிவிக்காமல் என்னை ஏமாற்றிவிட்டு, ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்? நான் மேளதாள வாத்தியங்களுடன் மகிழ்ச்சியாய் உங்களை வழியனுப்பி வைத்திருப்பேனே!
28.     என் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் நான் முத்தமிட விடாமல் செய்துவிட்டது ஏன்? நீர் முட்டாள்தனமாக நடந்து கொண்டீர்.
29.     இப்போதோ, உமக்குத் தீங்கிழைக்க என்னால் முடியும். ஆனால் நேற்றிரவு உம் தந்தையின் கடவுள் என்னை நோக்கி, நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம் என்று எச்சரித்தார்.
30.     உம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பும் ஆவலினால் நீர் இவ்வாறு வந்துவிட்டீர். ஆனால் என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்?" என்றான்.
31.     யாக்கோபு அவனுக்கு மறுமொழியாக, "நீர் உம் புதல்வியரை வன்முறையில் என்னிடமிருந்து பிரித்து வைத்துக்கொள்வீர் என்று அஞ்சினேன்.
32.     ஆனால், உம் குலதெய்வச் சிலைகளை யாரேனும் திருடியிருந்தால், அவன் உயிரோடு இருக்க வேண்டாம். உம்முடைய பொருள் ஏதாவது இங்கே என்னிடம் இருக்கின்றதா என்று நம் உறவினர் முன்னிலையில் பரிசோதித்துப் பார்த்து எடுத்துக் கொள்ளும்" என்றார். அவற்றை ராகேல் திருடியிருந்தது யாக்கோபுக்குத் தெரியாது.
33.     அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாவின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் நுழைந்து தேடிப்பார்த்தும் ஒன்றையும் கண்டு பிடிக்கவில்லை. பின் அவன் லேயாவின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து, ராகேலின் கூடாரத்திற்குள் நுழைந்தான்.
34.     இதற்கிடையே ராகேல் குலதெய்வச் சிலைகளை எடுத்துத் தம் ஒட்டகச் சேணத்தினுள் ஒளித்துவைத்து, அதன் மேல் உட்கார்ந்துகொண்டார். லாபான் கூடாரமெங்கும் சோதித்துப் பார்த்தும் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை.
35.     அவர் தன் தந்தையை நோக்கி, "என் தலைவராகிய உம் முன்னிலையில் என்னால் நிற்க முடியவில்லை என்று சினம்கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் மாதவிலக்காய் இருக்கிறேன்" என்றார். எனவே அவன் எவ்வளவு தேடிப்பார்த்தும் குலதெய்வச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
36.     அப்பொழுது யாக்கோபு சினமுற்று லாபானுடன் வாதிட்டு மறுமொழியாகக் கூறியது: "நான் செய்த குற்றம் என்ன? நான் செய்த பாவம் என்ன? ஏன் இப்படி என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்?
37.     என் உடைமைகளெல்லாம் சோதித்துப் பார்த்தீரே: உம் வீட்டுப் பொருளில் ஏதேனும் கண்டுபிடித்தீரா? அப்படியானால், அதை என் உறவினர், உம் உறவினர் முன்னிலையில் இங்கே வையும். இவர்களே உமக்கும் எனக்கும் இடையே தீர்ப்பு வழங்கட்டும்
38.     இதற்கானத்தானா நான் உம்மோடு இருபது ஆண்டுகளாக இருந்தேன்? உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் சினை அழியவில்லையே! உம்முடைய மந்தைக்கிடாய்களில் ஒன்றையும் நான் தின்னவில்லையே!
39.     கொடிய விலங்குகளால் அடிபட்டவைகளை நான் உம்மிடம் கொண்டுவரவில்லையே! மாறாக அவற்றிற்கும் ஈடு செய்தேன். ஆனால் இரவிலோ பகலிலோ களவுபோனவற்றிற்காக நீர் என் கையிலிருந்து ஈடு வாங்கிக்கொண்டீரே!
40.     பகலில் கொடும் வெயிலும் இரவில் கடும் குளிரும் என்னை வாட்டின. அதனால் என் கண்களுக்கு உறக்கமே இல்லை.
41.     இவ்விதமாய் நான் உமது வீட்டில் உம் புதல்வியருக்காகப் பதினான்கு ஆண்டுகளும் உம் மந்தைகளுக்காக ஆறு ஆண்டுகளுமாக இந்த இருபதாண்டுகள் உம்மிடம் வேலை செய்தேன். நீரோ என் ஊதியத்தைப் பத்துமுறை மாற்றினீர்.
42.     ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் அச்சமுமான என் தந்தையின் கடவுள் என்னோடு இருந்திராவிடில், உண்மையாகவே நீர் என்னை வெறுங்கையனாய் அனுப்பியிருப்பீர். ஆனால், கடவுள் என் துன்பத்தையும் கடின உழைப்பையும் கண்டு நேற்றிரவு உம்மை எச்சரித்திருக்கிறார்" என்றார்.
43.     அதற்கு மறுமொழியாக லாபான் யாக்கோபை நோக்கி, "இப்புதல்வியர் என் புதல்வியர்: இப்பிள்ளைகள் என் பிள்ளைகள். இம் மந்தை என் மந்தை. நீர் காண்பவை யாவும் என்னுடையவையே. இப்படியிருக்க, என் புதல்வியர்க்கோ அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கோ நான் இன்று என்ன செய்துவிடப்போகிறேன்?
44.     வாரும்: நானும் நீரும் இப்பொழுது உடன்படிக்கை செய்துகொள்வோம். அது உமக்கும் எனக்குமிடையே சான்றாக இருக்கட்டும்" என்றான்.
45.     எனவே யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, நினைவுத்தூணாக நிறுத்தினார்.
46     யாக்கோபு தம் உறவினரை நோக்கி, "கற்கள் சேகரித்துக்கொண்டு வாருங்கள்" என்றார். அவர்களும் கற்களைக் கொண்டு வந்து ஒரு குவியல் எழுப்பினர்.
47     அதற்கு லாபான் எகர்சகதுத்தா என்றும் யாக்கோபு கலயேது என்றும் பெயரிட்டனர்.
48     பின்னர் லாபான், இக்குவியல் இன்று உமக்கும் எனக்கும் சான்றாகுக என்றான். ஆகவே, அதற்கு அவன் கலயேது என்று பெயரிட்டான்.
49     மீண்டும் அவன், நாம் ஒருவர் ஒருவரை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் ஆண்டவரே நம்மைக் கண் காணிப்பாராக!" என்று சொல்லி அதற்கு மிஸ்பா என்றும் பெயரிட்டான்.
50 மேலும் அவன், "நீர் என் புதல்வியரைத் துன்புறுத்தினாலோ, அவர்களைத் தவிர வேறு பெண்களை மணந்து கொண்டாலோ, நம்மிடையே வேறு எவரும் இல்லையெனினும், உமக்கும் எனக்குமிடையே கடவுளே சாட்சி என்பதை நினைவில்கொள்ளும்" என்றான்.
51 மீண்டும் லாபான் யாக்கோபை நோக்கி, "இதோ இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் பாரும். இவற்றை எனக்கும் உமக்கும் இடையே நிறுத்தி வைத்துள்ளேன்.
52 நான் இந்தக் குவியலைக் கடந்து வந்து உமக்குத் தீங்கிழைக்கமாட்டேன் என்பதற்கும் நீர் இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் கடந்து வந்து எனக்குத் தீங்கிழைக்க மாட்டீர் என்பதற்கும் இந்தக் குவியல் சான்று: இந்த நினைவுத் தூண் சான்று.
53 ஆபிரகாமின் கடவுள், நாகோரின் கடவுள், அவர்களின் தந்தையின் கடவுள், நம்மிடையே நீதி வழங்குவாராக" என்றான். பின்னர் யாக்கோபு ஈசாக்கின் அச்சம் என்ற தம் தந்தையின் கடவுள் பெயரால் ஆணையிட்டு வாக்களித்தார்.
54 பின்பு அவர் மலையின் மேல் பலி செலுத்தி உணவு அருந்தும்படி தம் உறவினரை அழைத்தார். அவர்கள் உணவருந்திய பின் அன்றிரவு மலையிலேயே தங்கினார்கள்.
55 அதிகாலையில் லாபான் எழுந்து, தன் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் முத்தமிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கினான். பின்னர் அவன் அவர்களை விட்டுப்பிரிந்து தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.

அதிகாரம் 32.


1.   பின்னர், யாக்கோபு தம் பயணத்தைத் தொடர்ந்தார். கடவுளின் தூதர்கள் வழியில் அவரைச் சந்தித்தார்கள்.
2.   யாக்கோபு அவர்களைக் கண்டபோது, இதுதான் கடவுளின் படை என்று கூறி, அந்த இடத்திற்கு மகனயிம் என்று பெயரிட்டார்.
3.   பின்பு, யாக்கோபு ஏதோம் நாட்டிலுள்ள சேயிர் பகுதியில் வாழ்ந்து வந்த தம் சகோதரன் ஏசாவிடம் தூதரை அனுப்பினார்.
4.   அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: "நீங்கள் என் தலைவன் ஏசாவிடம் போய், உம் ஊழியனாகிய யாக்கோபு கூறுவது: நான் இதுவரை லாபானிடம் அன்னியனாய் தங்கியிருந்தேன்.
5.   மாடுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் எனக்கு உள்ளனர். உம் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கும்படி என் தலைவரான உமக்கு ஆளனுப்பி அறிவிக்கிறேன் என்று சொல்லுங்கள்."
6.   அத்தூதர் யாக்கோபிடம் திரும்பி வந்து, "நாங்கள் உம் சகோதரர் ஏசாவிடம் போனோம். அவர் இதோ நானூறு பேருடன் உம்மைச் சந்திக்க வருகிறார்" என்றனர்.
7.   யாக்கோபு மிகவும் அஞ்சிக் கலங்கித் தம்முடன் இருந்த ஆள்களையும், ஆடுமாடு ஒட்டகங்களாகிய மந்தைகளையும் இரு பகுதிகளாகப் பிரித்தார்.
8.   ஏனெனில், ஏசா வந்து ஒரு பகுதியைத் தாக்கினாலும் எஞ்சிய பகுதியாவது தப்புமே என்று நினைத்துக் கொண்டார்.
9.   மேலும் யாக்கோபு, "என் மூதாதை ஆபிரகாமின் கடவுளும் என் தந்தை ஈசாக்கின் கடவுளுமான ஆண்டவரே! நீர் என்னை நோக்கி, உன் சொந்த நாட்டிற்கும் உன் உறவினரிடமும் திரும்பிப் போ: நான் உனக்கு நன்மையே புரிவேன் என்று உரைத்தீர்.
10     அடியேனுக்கு நீர் காட்டிய பேரன்பு முழுவதற்கும் நம்பிக்கைக்குரிய தன்மை முழுவதற்கும் நான் தகுதியற்றவன். நான் இந்த யோர்தானைக் கடந்து சென்றபோது என்னிடமிருந்தது ஒரு கோல் மட்டுமே. இப்போதோ, இரண்டு பரிவாரங்கள் உடையவன் ஆனேன்.
11     என் சகோதரர் ஏசாவுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன். அவர் கையினின்று என்னை விடுவித்தருளும். இல்லையேல் அவர் வந்து என்னையும் பிள்ளைகளையும், தாய்களையும் தாக்குவார்.
12.     நீர் நான் உனக்கு உறுதியாக நன்மை புரிவேன்: உன் வழிமரபை எண்ண முடியாத கடல் மணலைப் போலப் பெருகச் செய்வேன் என்று வாக்களித்துள்ளீர் என்றார்.
13.     அன்றிரவு அவர் அங்கேயே தங்கி, தமக்குச் சொந்தமானவற்றிலிருந்து
14.     சகோதரர் ஏசாவுக்கு அன்பளிப்பாக இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கிடாய்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது செம்மறிக் கிடாய்களையும்,
15.     முப்பது பெண் ஒட்டகங்களையும் அவற்றின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும், இருபது பெண் கழுதைகளையும், பத்து ஆண் கழுதைகளையும் தேர்ந்தெடுத்தார்.
16.     அவற்றுள் ஒவ்வொரு மந்தையையும் வேலைக்காரர் கையில் தனித்தனியாய் ஒப்புவித்து, நீங்கள் மந்தைகளுக்கு இடையே இடம்விட்டு, எனக்குமுன் ஓட்டிக்கொண்டு போங்கள் என்று சொன்னார்.
17.     பின்பு அவர் முதலில் போகிறவனை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது: "என் சகோதரர் ஏசா உனக்கு எதிர்ப்பட்டு, நீ யாருடைய ஆள்? நீ எங்கே போகிறாய்? உனக்கு முன் செல்லும் இவை யாருடையன? என்று உன்னிடம் கேட்டால்,
18.    இவை உம் ஊழியன் யாக்கோபினுடையவை. அவர் தம் தலைவராகிய ஏசாவுக்கு இவற்றை அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார். அவரும் எங்கள் பின்னர் வருகிறார் என்று நீ சொல்வாய்" என்றார்.
19.     அதேவிதமாய் அம்மந்தைகளை ஓட்டிச் செல்லும் இரண்டாம், மூன்றாம் ஆள்களுக்கும் மற்ற அனைவருக்கும் கட்டளையிட்டுக் கூறியது: "ஏசாவை நீங்கள் சந்திக்கும்பொழுதும்,
20.    இதோ உம் ஊழியன் யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார் என்று சொல்லுங்கள்". ஏனெனில், யாக்கோபு நான் அவர் முன்னே இவ்வன்பளிப்புகளை அனுப்பி அவரை அமைதிப்படுத்துவேன். பின்பு நான் அவரை நேரில் காணும்பொழுது, அவர் ஒருவேளை என்னை ஏற்றுக் கொள்வார் என்று நினைத்தார்.
21.     அவ்விதமே யாக்கோபின் அன்பளிப்புகள் அவருக்கு முன் சென்றன. அவரோ அன்றிரவு கூடாரத்தில் தங்கினார்.
22.     அந்த இரவிலேயே அவர் எழுந்து, தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும் புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார்.
23.     அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார்
24.     யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார்.
25.     யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது.
26.     அப்பொழுது ஆடவர் என்னைப் போகவிடு: பொழுது புலரப்போகிறது என, யாக்கோபு, "நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்" என்று மறுமொழி சொன்னார்.
27.     ஆடவர், "உன் பெயர் என்ன?" என,
28.     அவர்: "நான் யாக்கோபு" என்றார். அப்பொழுது அவர், "உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, இஸ்ரயேல் எனப்படும். ஏனெனில், நீ கடளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்" என்றார்.
29.     யாக்கோபு அவரை நோக்கி "உம் பெயரைச் சொல்லும்" என்றார். அவர் "என் பெயரை நீ கேட்பதேன்?" என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.
30.     அப்பொழுது யாக்கோபு, "நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்" என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டார்.
31.     அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார்.
32.     அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார்.


அதிகாரம் 33.


1.   யாக்கோபு தம் கண்களை உயர்த்திப் பார்க்க, ஏசா நானூறு ஆள்களோடு வருவதைக் கண்டார். உடனே அவர் லேயாவிடமும் ராகேலிடமும் இரு வேலைக்காரிகளிடமும் பிள்ளைகளைப் பிரித்து ஒப்படைத்தார்.
2.   முதல் வரிசையில் வேலைக்காரிகளையும் அவர்கருடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லேயாவையும், அவருடைய பிள்ளைகளையும், இறுதியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினார்.
3.   அவர் அவர்களுக்கு முன் சென்று தம் சகோதரரை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார்.
4.   ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.
5.   பின் கண்களை உயர்த்தி, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு, "உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?" என்று கேட்டார். அவரும் "உம் அடியானாகிய எனக்குக் கடவுள் கருணையுடன் அருளிய பிள்ளைகளே இவர்கள்" என்று பதில் சொன்னார்.
6.   அப்பொழுது வேலைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் அணுகி அவரை வணங்கினர்.
7.   அவ்வாறே லேயாவும் அவருடைய பிள்ளைகளும் வணங்கினர். இறுதியாக யோசேப்பும் ராகேலும் நெருங்கி வந்து வணங்கினர்.
8.   அப்போது ஏசா யாக்கோபை நோக்கி, "எனக்கு எதிர்கொண்டு வந்த பரிவாரம் எதற்காக?" என்று கேட்டார். யாக்கோபு, "என் தலைவராகிய உம் பார்வையில் எனக்குத் தயை கிடைப்பதற்காக" என்று பதில் சொன்னார்.
9.   ஏசா, "என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் மிகுதியாக உள்ளது. உன்னுடையதை நீயே வைத்துக்கொள்" என்றார்.
10     யாக்கோபு, "இல்லை. உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருப்பது உண்மையானால் நான் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும். உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல் இருக்கிறது. ஏனெனில், நீர் எனக்குக் கனிவு காட்டியுள்ளீர்.
11     எனவே, உமக்கு அடியேன் கொண்டு வந்துள்ள அன்பளிப்பைத் தயவு செய்து ஏற்றுக் கொள்ளும். ஏனெனில், கடவுளின் கருணையினால் எனக்கு வேண்டிய மட்டும் உள்ளது" என்று சொல்லி வற்புறுத்த, அவரும் அவற்றைப் பெற்றுக்கொண்டார்.
12.     பிறகு அவர் "நாம் சேர்ந்து பயணம் செய்வோம். உனக்குமுன் நான் செல்வேன்" என்றார்.
13.     அதற்கு யாக்கோபு, "பச்சிளங்குழந்தைகளும் பால் கொடுக்கும் ஆடு, மாடுகளும் என்னிடம் உள்ளன என்று என் தலைவராகிய உமக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக் கொண்டு வந்தால், என் மந்தையெல்லாம் செத்துப் போகும்.
14.     தலைவராகிய நீர் எனக்குமுன்னே செல்வீராக! நானோ மந்தைகள், பிள்ளைகளின் நடைக்கு ஏற்ப மெதுவாக வந்து சேயிரில் உம்மைச் சந்திப்பேன்" என்றார்.
15.     அதற்கு ஏசா, "அப்படியானால் என்னுடைய ஆள்களில் சிலரை உன்னிடம் விட்டுச் செல்கிறேன்" என்று சொல்ல, அவர் "வேண்டாம்: என் தலைவராகிய உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்ததே போதும்" என்றார்.
16.     ஆகையால், ஏசா அன்றே புறப்பட்டு, தாம் வந்த வழியே சேயிருக்குத் திரும்பினார்.
17.     யாக்கோபு சுக்கோத்தை வந்தடைந்தவுடன், அங்கே தமக்கென்று ஒரு வீடு கட்டினார். தம் மந்தைகளுக்குக் குடில்களை அமைத்தார். இதனால் அந்த இடத்திற்குச் சுக்கோத்து என்று பெயரிட்டார்.
18.     இவ்வாறு யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வந்தபின் கானான் நாட்டைச் சார்ந்த செக்கேம் நகருக்கு நலமுடன் வந்து சேர்ந்தார். அந்நகருக்கு எதிரே பாளையம் இறங்கினார்.
19.     கூடாரமடித்துத் தங்கிய அந்நிலப்பகுதியை செக்கேமின் தந்தை ஆமோரின் புதல்வரிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு அவர் விலைக்கு வாங்கினார்.
20.     பின்பு, அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி அதற்கு ஏல்-எலோகே-இஸ்ரயேல் என்று பெயரிட்டார்.

அதிகாரம் 34.


1.   யாக்கோபுக்கு லேயா பெற்றெடுத்த மகளான தீனா அந்நாட்டு மகளிரைப் பார்க்க வெளியே புறப்பட்டுப் போனாள்.
2.   இவ்வியனான ஆமோரின் மகனும் அந்நாட்டின் தலைவனுமான செக்கேம் அவளைக் கண்டு தூக்கிச்சென்று அவளுடன் உறவு கொண்டு சிறுமைப்படுத்தினான்.
3.   யாக்கோபின் மகள் தீனாவிடம் அவன் மனம் மேலும் ஈர்க்கப்பெற, அவன் அப்பெண்ணின்மேல் காதல் கொண்டு அவளது மனத்தைக் கவரும் முறையில் பேசினான்.
4.   எனவே செக்கேம் தன் தந்தை ஆமோரிடம், "இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துவையுங்கள்" என்று கூறினார்.
5.   தம் மகள் தீனா த¨ட்டுப்படுத்தப்பட்டாள் என்று யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவருடைய புதல்வர் புல்வெளியில் மந்தைகளோடு இருந்தனர். எனவே அவர்கள் திரும்பி வரும்வரை யாக்கோபு அமைதியாய் இருந்தார்.
6.   செக்கேமின் தந்தை ஆமோர் யாக்கோபோடு பேச வந்தார்.
7.   யாக்கோபின் புதல்வர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டுப் புல்வெளியிலிருந்து வந்தனர். அவர்கள் துயரமும் கடுஞ் சீற்றமும் கொண்டனர். ஏனெனில் யாக்கோபின் மகளுடன் உறவு கொண்டதால் செய்யத் தகாததைச் செய்து செக்கேம் இஸ்ரயேலை அவமானப்படுத்தினான் என்று நினைத்தனர்.
8.   அப்பொழுது ஆமோர் அவர்களை நோக்கி, "என் மகன் செக்கேமின் மனம் உங்கள் மகள்மீது ஈர்க்கப்பட்டுள்ளது. அவளை அவனுக்கு மணமுடித்துத் தாருங்கள்.
9.   நீங்கள் எங்களோடு கலப்பு மணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுத்து எங்கள் பெண்களை உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
10     நீங்கள் எங்களோடு இந்நாட்டில் எங்கும் தங்கலாம். அதில் குடியிருந்து, வணிகம் செய்து, செல்வம் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
11     அப்பொழுது செக்கேம் தீனாவின் தந்தையையும், சகோதரர்களையும் நோக்கி, உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கட்டும். நீங்கள் கேட்பதைத் தருவேன்.
12.     பெண்ணுக்குரிய பணமும் பரிசமும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள். நீங்கள் கேட்பதைத் தருவேன். பெண்ணை மட்டும் எனக்கு மணமுடித்துத் தாருங்கள் என்றான்.
13.     யாக்கோபின் புதல்வர் தங்கள் சகோதரியைச் செக்கேம் தீட்டுப்படுத்தியதால், அவனையும் அவன் தந்தை ஆமோரையும் நோக்கிக் கபடமாய்க் கூறிய மறுமொழியாவது:
14.   நீங்கள் கேட்டபடி செய்ய எங்களால் முடியாது. ஏனெனில் விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஆடவனுக்கு எங்கள் சகோதரியைக் கொடுப்பது அவமானமாகும்.
15.     ஆனால் நீங்களும் உங்களுள் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்து கொண்டால் மட்டும்
16.     எங்கள் பெண்களை உங்களுக்குக் கொடுத்து உங்கள் பெண்களை எங்களுக்கு எடுத்துக்கொள்வோம். உங்களிடையே வாழ்ந்து ஓரினமாக ஆவோம்.
17.     எங்கள் சொற்படி நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள இசையாவிட்டால் நாங்கள் எங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விடுவோம்" என்றனர்.
18.     அவர்கள் சொன்னது ஆமோருக்கும் அவன் மகன் செக்கேமுக்கும் நலமாகத் தோன்றியது.
19.     அந்த இளைஞன் யாக்கோபின் மகள்மீது கொண்ட காதலினால் அவர்கள் சொன்னதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தவில்லை. மேலும் அவன் தன் தந்தை வீட்டார் அனைவரிடையிலும் பெருமதிப்புக்குரியவனாய் இருந்தான்.
20.     எனவே, ஆமோரும் அவன் மகன் செக்கேமும் தம் நகரவாயிலுக்கு வந்து மக்களை நோக்கி,
21.     "இந்த மனிதர்கள் நம்முடன் நட்புறவு கொள்பவர்கள். ஆகவே நம் நாட்டில் குடியிருந்து வணிகம் செய்யட்டும். அவர்கள் வாழ்வதற்கு நம் நாட்டில் நிறைய நிலம் இருக்கிறது. அவர்களிடம் பெண் எடுத்து, அவர்களுக்குப் பெண் கொடுப்போம்.
22.     ஆனால் இவர்கள், தாங்கள் செய்து கொண்டது போல, நம் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டால் மட்டும் நம்முடன் ஒரே இனமாகச் சேர்ந்து வாழ இசைவு தருகிறார்கள்.
23.     அப்படிச் செய்தால் அவர்களுடைய மந்தைகள், சொத்துக்கள், அனைத்துக் கால்நடைகள் ஆகியன நமக்குரியன ஆகுமன்றோ! எனவே நாம் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்போம். அவர்களும் நம்முடன் குடியிருக்கட்டும்" என்றார்கள்.
24.     ஆகவே நகரவாயிலுக்கு வெளியே வந்த அனைவரும் ஆமோரும் அவன் மகன் செக்கேமும் கூறியதை ஏற்றுக் கொண்டனர். நகரிலிருந்த அனைத்து ஆண்களும் செய்து கொண்டனர்.
25.     மூன்றாம் நாளன்று அவர்கள் அனைவரும் வலியால் வருந்தியபோது, யாக்கோபின் புதல்வர்களும் தீனாவின் சகோதரர்களுமான சிமியோன், லேவி என்னும் இருவரும் அவரவர் வாளை எடுத்துக் கொண்டு, சந்தேகம் எழாதபடி நகருக்குள் புகுந்து அனைத்து ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர்.
26.     அவர்கள் ஆமோரையும், அவன் மகன் செக்கேமையும் வாளினால் வெட்டி வீழ்த்தியபின் தீனாவை செக்கேம் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
27.     அதன்பின் யாக்கோபின் புதல்வர்கள் வந்து, வெட்டுண்டவர்களின் சடலத்தின் மீது மிதித்துச் சென்று தங்கள் சகோதரியைத் தீட்டுப்படுத்திய அந்நகரைக் கொள்ளையிட்டனர்.
28.     நகரிலும் வெளிப்புறத்திலும் இருந்த அவர்களுடைய ஆடு, மாடு, கழுதைகளைக் கைப்பற்றினர்.
29.     அவர்களுடைய எல்லாச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு, எல்லாக் குழந்தைகள் பெண்டிரையும் கைதிகளாக்கி, வீடுகளிலிருந்த அனைத்தையும் கொள்ளையடித்தனர்.
30.     யாக்கோபு சிமியோனையும் லேவியையும் நோக்கி, "நீங்கள் என்னைத் தொல்லைக்கு உட்படுத்திவிட்டீர்கள். இந்நாட்டில் வாழ்வோரிடத்திலும் கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என்னை இழிவுப்படுத்திவிட்டீர்கள். என்னிடமோ சில ஆள்களே உள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து என்னைத் தாக்கினால் நானும் என் குடும்பத்தாரும் அழிந்து போவோம்" என்றார்.
31.     அதற்கு, "அவன் மட்டும் எங்கள் சகோதரியை ஒரு விலைமாதைப் போல நடத்தலாமோ?" என்று அவர்கள் மறுமொழி கூறினர்.

அதிகாரம் 35.


1.   அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி, "நீ எழுந்து பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பியோடியபோது உனக்குத் தோன்றின இறைவனுக்கு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தை எழுப்பு" என்றார்.
2.   யாக்கோபு தம் வீட்டாரையும் அவரோடிருந்த அனைவரையும் நோக்கி, "உங்களிடம் உள்ள வேற்றுத் தெய்வங்களின் சிலைகளை அகற்றிவிட்டு உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
3.   எழுந்து வாருங்கள்: பெத்தேலுக்குச் செல்வோம். அங்கே, என் துன்ப நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளி நான் சென்றவிடமெல்லாம் எனக்கு வழித் துணையாய் இருந்த இறைவனுக்கு ஒரு பலிபீடத்தை எழுப்புவேன்" என்றார்.
4.   அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த எல்லா வேற்றுத் தெய்வங்களின் சிலைகளையும் தங்கள் காதணிகளையும் யாக்கோபின் கையில் கொடுக்க, அவர் அவற்றைச் செக்கேம் அருகிலிருந்த ஒரு கருவாலி மரத்தின் அருகே புதைத்தார்.
5.   அவர்கள் புறப்பட்டுச் சென்றபொழுது, அவர்களைச் சூழ்ந்திருந்த எல்லா நகரத்தினருக்கும் கடவுள் திகிலூட்டினார். எனவே, அவர்கள் யாக்கோபின் புதல்வரைத் துரத்திச் செல்லவில்லை.
6.   இவ்வாறு யாக்கோபும் அவரோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற பெத்தேலுக்கு வந்து சேர்ந்தனர்.
7.   யாக்கோபு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பித் தம் சகோதரனிடமிருந்து தப்பி ஓடினபொழுது, கடவுள் தம்மை அங்கே அவருக்கு வெளிப்படுத்தியதால், அந்த இடத்திற்கு ஏல்-பெத்தேல் என்று பெயரிட்டார்.
8.   அப்பொழுது ரெபேக்காவின் பணிப்பெண்ணாகிய தெபோரா இறந்தாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். எனவே. அவ்விடத்திற்கு அல்லோன்-பாகூத்து என்னும் பெயர் வழங்கலாயிற்று.
9.   யாக்கோபு பதான்-அராமிலிருந்து திரும்பி வந்தபின் கடவுள் மீண்டும் அவருக்குத் தோன்றி, ஆசி வழங்கினார்.
10     கடவுள் அவரை நோக்கி, "உன் பெயர் யாக்கோபு. இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படமாட்டாய்: உன் பெயர் இஸ்ரயேல் எனப்படும்" என்றுரைத்து இஸ்ரயேல் என்று அவருக்குப் பெயரிட்டார்.
11     மேலும், கடவுள் அவரை நோக்கி, "நானே எல்லாம் வல்ல இறைவன். நீ பலுகிப் பெருகக்கடவாய். ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும். அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள்.
12.     ஆபிரகாம், ஈசாக்குக்கு நான் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் கொடுப்பேன்" என்றார்.
13.     பின்னர் கடவுள் அவரோடு பேசிய இடத்தினின்று மேலெழும்பிச் சென்றார்.
14.     யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்தில் ஒரு கல்தூணை நினைவுத் தூணாக நாட்டி, அதன் மேல் நீர்மப் பலியையும் எண்ணெயையும் வார்த்தார்.
15.     யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்திற்குப் பெத்தேல் என்று பெயரிட்டார்.
16.     பின்பு அவர்கள் பெத்தேலைவிட்டுப் புறப்பட்டனர். எப்ராத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் இருந்தபொழுது, அங்கே ராகேலுக்குப் பேறுகாலம் வந்தது. அப்பொழுது அவர் மிகவும் வேதனைப்பட்டார்.
17.     பேறுகால வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருக்கையில், மருத்துவப் பெண் அவரை நோக்கி, அஞ்சாதே! உனக்கு இன்னொரு மகன் பிறந்துள்ளான்! என்றாள்.
18.     அவர் சாகக்கிடந்து உயிர்பிரியும் வேளையில் அவனுக்குப் பென்-ஓனி என்று பெயரிட்டார். அவன் தந்தையோ அவனைப் பென்யமின் (12) என்று அழைத்தார்.
19.     இவ்வாறு ராகேல் இறந்துபோக, பெத்லகேம் என்ற எப்ராத்திற்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டார்.
20.     யாக்கோபு அவருடைய கல்லறையின் மேல் ஒரு நினைவுத்தூணை நாட்டிவைத்தார். இன்றுவரை அது ராகேலின் கல்லறைக்கு நினைவுத்தூணாக இருக்கின்றது.
21.     மீண்டும், இஸ்ரயேல் அங்கிருந்து புறப்பட்டு மிக்தால் ஏதேருக்கு அப்பால் கூடாரம் அடித்தார்.
22.     இஸ்ரயேல் அந்நிலப்பகுதியில் குடியிருந்தபொழுது, ரூபன் தன் தந்தையின் மறுமனைவியாகிய பிலகாவுடன் உடலுறவு கொண்டான். இஸ்ரயேல் அதைக் கேள்விப்பட்டார். யாக்கோபின் புதல்வர்கள் பன்னிருவரின் பெயர்களாவன:
23.     லேயாவின் புதல்வர்கள்: யாக்கோபின் தலைமகன் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.
24.     ராகேலின் புதல்வர்கள்: யோசேப்பு, பென்யமின்.
25.     ராகேலின் பணிப்பெண் பிலகாவின் புதல்வர்கள்: தாண், நப்தலி.
26.     லேயாவின் பணிப்பெண் சில்பாவின் புதல்வர்கள்: காத்து, ஆசேர். இவர்கள் யாக்கோபுக்கு பதான் அராமில் பிறந்தவர்கள்.
27.     ஆபிரகாமும், ஈசாக்கும் வாழ்ந்த இடம் கிரியத்து அர்பா என்ற எபிரோன் ஆகும். யாக்கோபு தம் தந்தை ஈசாக்கிடம் மம்ரே என்னும் கிரியத்து அர்பாவுக்கு வந்தார். அதுவே ஆபிரகாமும் ஈசாக்கும் குடியிருந்த எபிரோன் ஆகும்.
28.     ஈசாக்கு நூற்றெண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.
29.     அவர் வயது முதிர்ந்தவராய் இறந்து, தம் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் புதல்வர்கள் ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம் செய்தனர்.

அதிகாரம் 36.


1.   ஏதோம் என்ற ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
2.   ஏசா கானான் நாட்டுப் பெண்களில் இத்தியன் ஏலோனின் மகள் ஆதாவையும் இவ்வியன் சிபெயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமாவையும்,
3.   இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பாசமத்தையும் மணந்து கொண்டார்.
4.   ஏசாவுக்கு ஆதா எலிப்பாசைப் பெற்றெடுத்தாள். பாசமத்து இரகுவேலைப் பெற்றெடுத்தாள்.
5.   ஒகோலி பாமா எயூசு, யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றெடுத்தாள். இவர்கள் ஏசாவுக்குக் கானான் நாட்டில் பிறந்த புதல்வர்கள்.
6.   பின் ஏசா தம் மனைவியர், புதல்வர், புதல்வியர், தம் வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, தம் மந்தைகள், கால்நடைகள், கானான் நாட்டில் சேர்த்திருந்த உடைமைகள் யாவற்றோடும் தம் சகோதரன் யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனார்.
7.   ஏனெனில், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாத அளவு அவர்களுடைய உடைமைகள் பெருகிவிட்டன. அவர்கள் தங்கியிருந்த நிலம் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதாதிருந்தது.
8.   ஆகையால் ஏசா என்ற ஏதோம் சேயிர் என்ற மலைநாட்டிற்குச் சென்று குடியேறினார்.
9.   சேயிர் மலைநாட்டில் வாழும் ஏதோமியரின் மூதாதையாகிய ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
10     ஏசாவின் புதல்வர்கள் பெயர்களாவன: ஏசாவின் மனைவி ஆதாவின் மகன் எலிப்பாசு, அவருடைய இரண்டாம் மனைவியான பாசமத்தின் மகன் இரகுவேல்.
11     எலிப்பாசின் புதல்வர்கள்: தேமான், ஓமார், செப்போ, காத்தாம், கெனாசு.
12.     ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி திம்னா எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள். இவர்களே ஏசாவின் மனைவி ஆதாவின் பேரப் பிள்ளைகள்.
13.     இரகுவேலின் புதல்வர்கள்: நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே ஏசாவின் மனைவி பாசமத்தின் பேரப்பிள்ளைகள்.
14.     சிபயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமா ஏசாவுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள்: எயுசு, யாலாம், கோராகு.
15.     ஏசாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்: ஏசாவின் தலைமகன் எலிப்பாசின் புதல்வர்களான தேமான், ஒமார், செப்போ, கெனாசு.
16.     கோராகு, காத்தாம், அமலேக்கு ஆகிய இவர்கள் அனைவரும் எலிப்பாசுக்குப் பிறந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள். இவர்களே ஆதாவின் பேரப்பிள்ளைகள்.
17.     ஏசாவின் மகன் இரகுவேலின் புதல்வர்களுள் தலைவர்களாயிருந்தவர்கள்: நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே இரகுவேலின் புதல்வர்கள், ஏசாவின் மனைவி பாசுமத்தின் பேரப்பிள்ளைகள். இவர்கள் இரகுவேலின் வழிவந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள்.
18.     ஏசாவின் மனைவி ஒகோலிபாமாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்: எயுசு, யாலாம், கோராகு. இவர்கள் அனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமான ஒகோலிபாமா வழிவந்த தலைவர்கள்.
19.     இவர்களே ஏதோம் எனப்பட்ட ஏசாவின் புதல்வர்களும், அந்த இனத்தின் தலைவர்களும் ஆவர்.
20.     அந்த நாட்டில் குடியிருந்த ஓரியனான சேயிரின் புதல்வர்கள்: லோத்தான், சோபால், சிபயோன், அனா,
21.     தீசோன், ஏட்சேர், தீசான். இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த சேயிரின் மக்களாகிய ஓரியரின் தலைவர்கள்.
22.     லோத்தானின் புதல்வர்கள் இவர்களே: ஓரி, ஏமாம். லோத்தானின் சகோதரி திம்னா.
23.     சோபாலின் புதல்வர்கள் இவர்களே: அல்வான், மானகத்து, ஏபால், செப்போ, ஓனாம்.
24.     சிபயோனின் புதல்வர்கள் இவர்களே: அய்யா, அனா. இந்த அனா தன் தந்தை சிபயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பாலை நிலத்தில் வெப்ப நீரூற்றுகளைக் கண்டுபிடித்தான்.
25.     அனாவின் மகன் தீசோன்: அனாவின் மகள் ஒகோலிபாமா.
26.     தீசானின் புதல்வர்கள் இவர்களே: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
27.     ஏட்சேரின் புதல்வர்கள் இவர்களே: பில்கான், சகவான், ஆக்கான்.
28.     தீசோனின் புதல்வர்கள் இவர்களே: ஊசு, ஆரான்.
29.     ஓரியனின் தலைவர்கள் இவர்களே: லோத்தான், சோபால், சிபயோன், அனா,
30.     தீசோன், ஏட்சேர், தீசான். இவர்கள் சேயிர் நாட்டின் குலப்பிரிவுகளுக்கு ஏற்ப ஓரியரின் தலைவர்களாய் இருந்தவர்கள்.
31.     இஸ்ரயேலரிடையே முடியாட்சி தொடங்குமுன்னரே ஏதோமில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் இவர்களே.
32.     பெகோரின் மகன் பேலா ஏதோமில் ஆட்சி புரிந்தான். அவனது நகரின் பெயர் தின்காபா.
33.     பேலா இறந்தபின் போஸ்ராவைச் சார்ந்த செராகின் மகன் யோபாபு ஆட்சிக்கு வந்தான்.
34.     யோபாபு இறந்தபின் தேமானியரின் நாட்டைச் சேர்ந்த ஊசாம் ஆட்சிக்கு வந்தான்.
35.     ஊசாம் இறந்தபின் பெதாதின் மகன் அதாது ஆட்சிக்கு வந்தான். இவன் மோவாபு நாட்டில் மிதியானியரைத் தோற்கடித்தவன். அவனது நகரின் பெயர் அவீத்து.
36.     அதாது இறந்தபின், மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான்.
37.     சம்லா இறந்தபின் யூப்பிரத்தீசு நதிக்கருகில் இருந்த இரகபோத்தைச் சார்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான்.
38.     சாவூல் இறந்தபின், அக்போரின் மகன் பாகால் அனான் ஆட்சிக்கு வந்தான்.
39.     பாகால் அனான் இறந்தபின், அதார் ஆட்சிக்கு வந்தான். அவனது நகரின் பெயர் பாகூ. அவன் மனைவியின் பெயர் மெகேற்றபேல். அவள் மேசகாபின் மகளான மத்ரேத்தின் மகள்.
40.     தங்கள் குலப்பிரிவின்படியும், நிலப்பகுதிகளின்படியும் ஏசாவின் வழிவந்த தலைவர்களின் பெயர்கள் இவைகளே: திம்னா, ஆல்வா, எத்தேத்து.
41.     ஒகோலிபாமா, ஏலா, பினோன்,
42.     கெனாசு, தேமா, மிபுசார்,
43.     மக்தியேல், ஈராம். ஏதோமியர் உரிமையாகக் கொண்டு குடியேறி வாழ்ந்த நிலப்பகுதிகளின்படி தலைவர்களாய் இருந்தவர்கள் இவர்களே. இந்த ஏதோமியரின் மூதாதைதான் ஏசா.

அதிகாரம் 37.


1.   கானான் நாட்டில் தம் தந்தை தங்கியிருந்த நிலப்பகுதிகளில் யாக்கோபும் வாழ்ந்து வந்தார்.
2.   யாக்கோபின் குடும்ப வரலாறு இதுவே: யோசேப்பு பதினேழு வயது இளைஞனாய் இருந்தபோது, தம் தந்தையின் மறு மனைவியரான பிலகா, சில்பா என்பவர்களுடைய புதல்வர்களான தம் சகோதரரோடு மந்தை மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் தம் சகோதரர் செய்து வந்த தீச்செயலைப் பற்றித் தம் தந்தைக்குத் தகவல் கொடுத்தார்.
3.   இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.
4.   அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.
5.   யோசேப்பு தாம் கண்ட ஒரு கனவைத் தம் சகோதரருக்குத் தெரிவித்தார். இதனால் அவர்கள் அவரை மேலும் அதிகமாய் வெறுத்தனர்.
6.   அவர் அவர்களை நோக்கி, "நான் கண்ட இந்தக் கனவைக் கேளுங்கள்.
7.   நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டும் பொழுது திடீரென எனது அரிக்கட்டு எழுந்து நிற்க, உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கின" என்றார்.
8.   அப்பொழுது அவர் சகோதரர் அவரை நோக்கி, "நீ எங்கள் மீது உண்மையிலேயே ஆட்சி செலுத்தப்போகிறாயோ? நீ எங்கள் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்தப் போகிறாயோ?" என்று கேட்டனர். இவ்விதக் கனவுகளின் காரணமாகவும் அவருடைய தகவல்களின் காரணமாகவும் அவரை அவர்கள் இன்னும் அதிகமாய் வெறுத்தனர்.
9.   மேலும் அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். "நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்: அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்" என்றார்.
10     இதை அவர் தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விவரித்தபோது, அவர் தந்தை அவரைக் கண்டித்து, "நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும், உன் சகோதரர்களும் தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?" என்று கேட்டார்.
11     அதன் பொருட்டும் அவர் சகோதரர் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் தந்தையோ இக்காரியத்தைத் தம் மனத்தில் கொண்டார்.
12.     அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.
13.     இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி: "உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறர்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன்," என்று கூற, அவர், "இதோ நான் தயார்" என்றார்.
14.     அவர் அவரிடம், "நீ போய் உன் சகோதரர், மந்தைகள் நலமா என்று விசாரித்து வந்து எனக்குத் தெரிவி" என்று சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலிருந்து அவரை அனுப்பினார். அவரும் செக்கேமிற்கு வந்தார்.
15.     அவர் புல்வெளியில் வழி தவறி அலைவதை ஒரு மனிதன் கண்டு, "என்ன தேடுகிறாய்?" என்று அவரைக் கேட்டான்.
16.     யோசேப்பு, "என் சகோதரர்களைக் தேடுகிறேன3 அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்" என்றார்.
17.     அதற்கு அம்மனிதன், "அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள். தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டதை நான் கேட்டேன்" என்று பதிலளித்தான். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.
18.     தொலையில் அவர் வருதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
19.     அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ, வருகிறான் கனவின் மன்னன்!
20.     நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்" என்றனர்.
21.     ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, "நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்" என்றார்.
22.     ரூபன் அவர்கள் நோக்கி, "அவன் இரத்தத்தை சிந்தாதீர்கள். அவனைக் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்" என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.
23.     யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு,
24.     அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி.
25.     பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் வெள்ளைப் போளத்தையும், அவர்கள் ஒட்டகங்களின் மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்ற கொண்டிருந்தனர்.
26.     அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, "நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்?
27.     வாருங்கள்:" இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கைவைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்" என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.
28.     ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.
29.     பின்னர் ரூபன் ஆழ்குழி அருகில் திரும்ப வந்தார். இதோ! யோசேப்பு அங்கே இல்லை. உடனே அவர், தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,
30.     தம் சகோதரரிடம் திரும்பி வந்து, "பையனைக் காணோமே! நான் எங்குச்“ சென்று தேடுவேன்" என்றார்.
31.     அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்டனர். ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அடித்து அதன் இரத்தத்தில் அந்த அங்கியைத் தோய்த்தனர்.
32.     அழகு வேலைப்பாடு நிறைந்த அந்த அங்கியைத் தம் தந்தையிடம் எடுத்துச் சென்று, "இதை வழியில் கண்டோம். இது உங்கள் மகனது அங்கியா என்று பாருங்கள்" என்றனர்.
33.     தந்தை அதை அடையாளம் கண்டு, "இது என் மகனது அங்கியே! ஏதோ ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டது! ஜயோ, யோசேப்பு ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டுப் போனானே!" என்று நினைத்து,
34.     தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இடுப்பில் சாக்கு உடையைக் கட்டிக் கொண்டு பல நாளகளாய்த் தம் மகனுக்காகத் துக்கம் கொண்டாடினர்.
35.     அவர் புதல்வர், புதல்வியர் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்ல வந்தனர். அவரோ எந்த ஆறதலான வார்த்தைக்கும் செவிகொடாமல், "நான் துயருற்றுப் பாதாளத்தில் இறங்கி என் மகனிடம் செல்வேன்" என்ற அவருக்காக அழுது புலம்பினார்.
36.     இதற்கிடையில் மிதியானியர் எகிப்தை அடைந்து பார்வோனின் அதிகாரிகளுள் ஒருவனும் மெய்க்காப்பாளர் தலைவனுமான போத்திபாரிடம் யோசேப்பை விற்றனர்.

அதிகாரம் 38.


1.   அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார்.
2.   அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.
3.   அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.
4.   அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.
5.   கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.
6.   யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.
7.   யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால், ஆண்டவர் அவனை சாகடித்தார்.
8.   அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி, "நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ். சுகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் கசோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்" என்றார்.
9.   அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றாதவாறு தன் விந்தைத் தரையில் சிந்திவந்தான்.
10     அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால், ஆண்டவர் அவனையும் சாகடித்தார்.
11     ஆதலால் யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி, "என் மகன் சேலா பெரியவனாகும் வரை உன் தந்தை வீட்டில் விதவையாய்த் தங்கியிரு" என்றார். ஏனெனில் அவனும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று அஞ்சினர். தாமாரும் அவ்விதமே தம் தந்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்தார்.
12.     பல நாள்களுக்குப்பின், சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்தாள். யூதா அவளுக்காகத் துக்கம் கழித்தபின், தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்குத் தம் அதுல்லாமிய நண்பன் ஈராவுடன் சென்றார்.
13.     அப்போது "உன் மாமனார் தம் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்" என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.
14.     சேலா பெரியவனாகியும் தம்மை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை என்று அவர் கண்டு தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு, முக்காடிட்டுத் தம்மை மறைத்துக்கொண்டு திம்னாவுக்குச் செல்லும் பாதையில் இருந்த ஏனயிம் நகர்வாயிலில் அமர்ந்துகொண்டார்.
15.     யூதா அவரைக் கண்டபோது, அவர் முகம் மூடியிருந்ததால் அவர் ஒரு விலைமாது என்று நினைத்தார்.
16.     அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். அதற்கு அவர், "என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?" என்று கேட்டார்.
17.     அவர், "என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் அனுப்புகிறேன்" என்றார். அதற்கு அவர், "நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?"ஙு என்று கேட்டார்.
18.     "அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?" என்று அவர் கேட்க, அவர் உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும் என்றார். அவருக்கு அவற்றைக் கொடுத்த பின் அவருடன் உடலுறவு கொண்டார். அவரும் கருவுற்றார்.
19.     பின்பு, அவர் எழுந்துபோய், தம் முக்காட்டை எடுத்துவிட்டு விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டார்.
20.     அவரிடம் தாம் கொடுத்திருந்த அடைமானத்தைத் திரும்பப் பெறுமாறு, யூதா தம் அதுல்லாமிய நண்பன் மூலம் ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அனுப்பினார். அவனோ அவரைக் காணவில்லை.
21.     அங்கிருந்த ஆள்களை நோக்கி, ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே? என்று கேட்க, அவர்கள், இங்கே விலைமாது எவளுமில்லை என்றனர்.
22.     அவன் யூதாவிடம் திரும்பி வந்து, "நான் அவளைக் காணவில்லை. மேலும் அங்கிருந்த ஆள்கள், இங்கு விலைமாது எவளுமில்லை என்றனர்" என்று சொன்னான்.
23.     யூதா, அவளே வைத்துக்கொள்ளட்டும்: இல்லையேல் நம்மைப் பார்த்துப் பிறர் சிரிப்பர். நானும் இந்த ஆட்டுக்கிடாயை அவளுக்கு அனுப்பி வைத்தேன். உன்னாலும், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
24.     மூன்று மாதம் சென்றபின்னர், "உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்" என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்: அவள் எரிக்கப்பட வேண்டும் என்றார்.
25.     அவ்வாறே அவரை இழுத்துக்கொண்டு வருகையில், அவர் தம் மானமாருக்கு, "இந்தப் பொருள்கள் எவனுடையவையோ அவனாலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும் இடைவாரும் கைக்கோலும் யாருடையவை என்று பாரும்" என்று சொல்லியனுப்பினர்.
26.     யூதா அவற்றைப் பார்த்தறிந்து, "அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள். அவளை நான் என் மகன் சேலாவுக்கு மணமுடிக்காமல் போனேனே!" என்றார். ஆயினும், அதற்குப்பின் அவர் அவரோடு உடலுறவு கொள்ளவில்லை.
27.     தாமாருக்குப் பேறுகாலம் வந்தபோது, அவர் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.
28.     அவர் பிள்ளை பெறுகிற வேளையில் ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. மருத்துவப்பெண் அதன் மணிக்கட்டில் கருஞ்சிவப்பு நூலைக் கட்டி இதுவே முதலில் வந்தது என்றாள்.
29.     ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக்கொண்டபின், மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது அவள் நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா! என்று சொன்னாள். எனவே அவனுக்குப் பெரேட்சு என்று பெயரிடப்பட்டது.
30.     பின் கருஞ்சிவப்பு நூல் கையில் கட்டப்பெற்ற அவன் சகோதரன் வெளிப்பட அவனுக்கு செராகு என்று பெயரிடப்பட்டது.

அதிகாரம் 39.


1.   யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கொண்டு போகப்பட்டபோது, பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனும் படைத்தலைவனுமான போத்திபார் என்ற எகிப்தியன் அவரை, அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மயேலரிடமிருந்து விலைக்கு வாங்கினான்.
2.   ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.
3.   ஆண்டவர் அவரோடு இருந்ததையும் அவர் தொட்ட காரியமனைத்தையும் ஆண்டவர் துலங்கச் செய்ததையும் அவர் தலைவன் கண்டான்.
4.   எனவே அவனுடைய தயை யோசேப்புக்குக் கிடைத்தது. அவன் அவரைத் தன் சிறப்புப் பணியாளராகவும் வீட்டின் மேலாளராகவும் நியமித்து, தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் ஒப்படைத்தான்.
5.   இவ்வாறு தன் வீட்டையும் தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் விட்டதிலிருந்து, எகிப்தியனின் வீட்டுக்கு யோசேப்பின் பொருட்டு ஆண்டவர் ஆசி வழங்கினார். வீட்டிலும் வயல்வெளியிலும் அவனுக்கிருந்த அனைத்தின்மீதும் ஆண்டவர் ஆசி பொழிந்தார்.
6.   இவ்வாறு யோசேப்பின் பொறுப்பில் தனக்கிருந்த அனைத்தையும் ஒப்படைத்த பின், தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதைப் பற்றியும் அவன் விசாரிக்கவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் கொண்டிருந்தார்.
7.   சில நாள்கள் சென்றபின், யோேப்பின் மீது கண்வைத்திருந்த அந்தத் தலைவனின் மனைவி அவரிடம், என்னோடு படு என்றாள்.
8.   அவர் அதற்கு இணங்க மறுத்து, தம் தலைவரின் மனைவியை நோக்கி, "என் தலைவர் எல்லாவற்றையும் என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டார். வீட்டிலுள்ள எதைப்பற்றியும் அவர் விசாரிப்பதுகூட இல்லை.
9.   இந்த வீட்டில் என்னைவிட அதிகாரம் பெற்றவர் ஒருவருமில்லை. நீங்கள் அவருடைய மனைவியாயிருப்பதால், உங்களைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இருக்கவில்லை. இந்த மாபெரும் தீச்செயலைச் செய்து, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?" என்றார்.
10     அவள் நாள்தோறும் வற்புறுத்தியபோதிலும், யோசேப்பு அவளோடு படுக்கவோ இருக்கவோ இணங்கவில்லை.
11     இவ்வாறிருக்க, ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக்குள் சென்றார். உள்ளே வீட்டைச் சார்ந்தவர் வேறு எவரும் இல்லை.
12.     அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, என்னோடு படு என்றாள். உடனே அவர் அவள் கையில் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார்.
13.     அவர் தம் மேலாடையை அவள் கையில் விட்டுவிட்டு வெளியே ஓடியதைக் கண்டு,
14.     அவள் தன் வீட்டு ஆள்களைக் கூப்பிட்டு: "என் கணவர் நம்மை அவமானப்படுத்துவதற்காகவா இந்த எபிரேயனை வீட்டிற்குக் கொண்டுவந்தார்? இதோ இவன் என்னோடு படுப்பதற்காக என்னிடம் வந்தான். உடனே நான் பெரும் கூச்சலிட்டுக் கத்தினேன்.
15.     ஆனால் நான் கூச்சலிட்டதைக் கண்டு அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய் விட்டான்" என்றாள்.
16.     மேலும் அவள், அவருடைய மேலாடையைத் தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை வைத்திருந்துஅவனிடம்,
17.     "நீர் நம்மிடம் அழைத்து வந்துள்ள எபிரேய அடிமை என்னோடு சரசம் பண்ணும்படி என்னிடம் வந்தான்.
18.     அப்போது நான் கூச்சலிட்டுக் கத்தியதும், அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய்விட்டான்" என்று கதை கட்டினாள்.
19.    உம் அடிமை எனக்கு இப்படிச் செய்துவிட்டான் என்று தன் மனைவி சொல்லக் கேட்ட அவர் தலைவன், கடுஞ்சினம் கொண்டான்.
20.     யோசேப்பின் தலைவன், அரசக் கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த அதே சிறைச்சாலைக்கு அவரை இழுத்துச் சென்று அடைத்து வைத்தான்.
21.     ஆண்டவர் யோசேப்புடன் இருந்து, அவர்மீது பேரன்பு காட்டி, சிறை மேலாளன் பார்வையில் அவருக்குத் தயை கிடைக்கும்படி செய்தார்.
22.     எனவே சிறைமேலாளன் சிறையிலிருந்த கைதிகள் அனைவரையும், அங்குச் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும், யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தான்.
23.     அவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும் சிறைமேலாளன் விசாரிக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.

அதிகாரம் 40.


1.   இவை நிகழ்ந்தபின், எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும், அப்பம் தயாரிப்போனும் தங்கள் தலைவனாகிய எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர்.
2.   பார்வோன் தன் மது பரிமாறுவோரின் தலைவனும் அப்பம் தயாரிப்போரின் தலைவனும் ஆகிய இரு அதிகாரிகள் மீதும் கடும் கோபம் கொண்டு,
3.   காவலர் தலைவன் வீட்டிலிருந்த சிறைச்சாலைகளில் அவர்களை அடைத்து வைத்தான். யோசேப்பு அடைபட்டிருந்த இடமும் அதுவே.
4.   காவலர் தலைவனோ, அவர்களை யோசேப்புடன் சிறையிருக்குமாறு குறித்தான். யோசேப்பும் அவர்களைக் கண்காணித்து வந்தார். அவர்கள் பல நாள்கள் சிறையில் இருந்தனர்.
5.   எகிப்திய மன்னனால் சிறைப்பட்டிருந்த மது பரிமாறுவோன், அப்பம் தயாரிப்போன் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டனர். ஒவ்வொரு கனவும் வெவ்வேறு பொருள் கொண்டிருந்தது.
6.   காலையில் யோசேப்பு அவர்களிடம் வந்தபோது அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டார்.
7.   தம்முடன் தம் தலைவன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனின் அதிகாரிகளை நோக்கி, அவர், இன்று உங்கள் முகம் இவ்வளவு வாடியிருப்பதேன்? என்று வினவினார்.
8.   அவர்கள், "நாங்கள் இருவரும் கனவு கண்டோம்: அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வார் யாருமில்லை" என்று பதில் கூறினர். யோசேப்பு அவர்களை நோக்கி, கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்கு உரியதல்லவா? என்னிடம் விவரமாகச் சொல்லுங்கள் என்றார்.
9.   அப்போது மதுபரிமாறுவோர் தலைவன் தன் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்: என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது.
10     அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை அரும்பிப் பூத்து, கொத்துக் கொத்தாய்ப் பழுக்கக் கண்டேன்.
11     கையில் பார்வோனின் கிண்ணம் இருந்தது. நான் பழங்களைப் பறித்து, பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து, அந்தக் கிண்ணத்தைப் பார்வோனின் கையில் கொடுத்தேன் என்றான்.
12.     யோசேப்பு அவனை நோக்கி, கனவின் பொருள் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
13.     இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உன்னைத் தலைநிமிரச் செய்து உன்னை மீண்டும் முன்னைய பதவியில் அமர்த்துவான். முன்பு நீ பார்வோனின் மதுபரிமாறுவோனாய் இருந்த காலத்தில் செய்ததுபோல அவன் கிண்ணத்தை அவன் கையில் கொடுப்பாய்.
14.     உனக்கு வாழ்வு நலமாய் அமைந்தபின், என்னை மறவாமல் எனக்குத் தயைகாட்ட வேண்டுகிறேன். பார்வோனிடம் சொல்லி என்னை இச்சிறையிலிருந்து விடுவி.
15.     ஏனெனில், நான் எபிரேயரின் நாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டேன். என்னைக் காவற்கிடங்கில் தள்ளிவிடுமளவிற்கு நான் யாதொன்றும் செய்யவில்லை என்றார்.
16.     யோசேப்பு இவ்வாறு தகுந்த விளக்கம் அளித்ததைக் கண்டு, அப்பம் தயாரிப்போரின் தலைவன் அவரிடம் நானும் ஒரு கனவு கண்டேன். இதோ மூன்று அப்பக் கூடைகள் என் தலையில் இருந்தன.
17.     மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட பலவகை அப்பங்கள் இருந்தன. பறவைகள் வந்து என் தலை மேலிருந்த கூடையிலிருந்து அவற்றைத் தின்றுவிட்டன என்றான்.
18.     அதற்கு யோசேப்பு, கனவின் பொருள் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
19.     இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உனது தலையை வெட்டி உன்னைக் கழுமரத்தில் ஏற்றுவான். பறவைகள் வந்து உன் சதையைத் தின்னும் என்றார்.
20.     மூன்றாம் நாள், பார்வோனின் பிறந்த நாள் விழா. அன்று தன் அலுவலர் அனைவருக்கும் அவன் விருந்து அளித்தான். அந்த அலுவலர் முன்னிலையில் மது பரிமாறுவோரின் தலைவன், அப்பம் தயாரிப்போரின் தலைவன் ஆகிய இருவரின் தலைகளையும் நிமிர்த்தினான்.
21.     மது பரிமாறுவோரின் தலைவனை முன்னைய பதவிக்கு உய+த்த, முன்புபோல் அவன் பார்வோனின் கையில் கிண்ணத்தைக் கொடுக்கலானான்.
22.     ஆனால், அப்பம் தயாரிப்போரின் தலைவனைப் பார்வோன் கழுமரத்தில் ஏற்றினான். யோசேப்பு அவர்களுக்கு விளக்கிச் சொன்னபடியே இவ்வாறு நடந்தது.
23.     ஆனால் மதுபரிமாறுவோரின் தலைவன் யோசேப்பைப் பற்றிய நினைவேயில்லாமல் அவரை மறந்து விட்டான்.

அதிகாரம் 41.


1.   இரண்டு முழு ஆண்டுகள் கழிந்தபின், பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன் நைல் நதிக் கரையில் நின்று கொண்டிருந்தான்.
2.   அப்பொழுது அழகிய கொழுத்த ஏழு பசுக்கள் நதியிலிருந்து கரைக்கு வந்து கோரைப்புற்களிடையே மேய்ந்து கொண்டிருந்தன.
3.   அவற்றைத் தொடர்ந்து, நலிந்து ெலிந்த வேறு ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளி வந்து கரையில் இருந்த மற்ற பசுக்களோடு நின்று கொண்டன.
4.   நலிந்து மெலிந்த பசுக்கள் அழகிய, கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன. அதன்பின் பார்வோன் துயில் கலைந்தான்.
5.   மீண்டும் அவன் கண்ணயர்ந்தபோது இரண்டாவது கனவு கண்டான். அக்கனவில் செழுமையான பொன் நிறமான ஏழு கதிர்கள் ஒரே தாளில் காய்த்திருந்தன.
6.   அதன் பின் கீழைக் காற்றினால் தீய்ந்துபோன கதிர்கள் தோன்றின.
7.   அந்தப் பதரான கதிர்கள் ஏழும் செழுமையான, முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் கண்விழித்து, தான் கண்டது கனவு என்று உணர்ந்தான்.
8.   காலையில் அவன் மனம் கலக்கமுற, எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்துத் தன் கனவுகளை எடுத்துரைத்தான். ஆனால் அவற்றை அவனுக்கு விளக்கிக் கூறுவார் எவருமில்லை.
9.   அப்போது மதுபரிமாறுவோரின் தலைவன் பார்வோனை நோக்கி, "என் பிழை இன்றுதான் என் நினைவிற்கு வருகிறது.
10     பார்வோனாகிய தாங்கள் முன்னொரு சமயம் உம் ஊழியர்மீது கடுஞ்சினமுற்று அடியேனையும் அப்பம் தயாரிப்போரின் தலைவனையும் காவலர் தலைவனின் வீட்டில் சிறைவைத்தீர்.
11     அச்சமயம் ஒரே இரவில் வெவ்வேறு பொருள் கொண்ட கனவுகளை நானும் அவனும் கண்டோம்.
12.     அங்கே காவலர் தலைவரின் ஊழியனாகிய எபிரேய இளைஞன் ஒருவன் எங்களோடு இருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளை விவரித்துச் சொன்னோம். அவன் எங்கள் கனவுகளுக்கு, அவனவன் கனவுக்கேற்ப விளக்கம் கூறினான்.
13.     அவன் எங்களுக்கு விளக்கிக் கூறியபடியே யாவும் நடந்தன. முன்னைய பதவி எனக்கு மீண்டும் அளிக்கப்பட்டது: அவனோ கழுமரத்தில் ஏற்றப்பட்டான்" என்றான்.
14.     பார்வோன் ஆளனுப்பி யோசேப்பை அழைத்துவரச் செய்தான். அவர்களும் அவரைக் காவற்கிடங்கிலிருந்து விரைவாக வெளிக் கொணர்ந்தனர். அவர் முடி திருத்திக் கொண்டு, புத்தாடை அணிந்து பார்வோன் முன்னிலைக்கு வந்தார்.
15.     பார்வோன் யோசேப்பை நோக்கி, நான் கனவு கண்டேன். ஆனால் அதற்கு விளக்கம் சொல்வார் யாருமில்லை. கனவைக் கேட்டால் நீ தகுந்த விளக்கம் கூறுவாய் என்று உன்னைப்பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டேன் என்றான்.
16.     யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக, நானல்ல, கடவுளே பார்வோனுக்கு நலமிகு மறுமொழி வழங்குவார் என்றார்.
17.     அப்பொழுது பார்வோன் யோசேப்பிடம் சொன்னதாவது: என் கனவில் நைல் நதிக்கரையில் நான் நின்று கொண்டிருந்தேன்.
18.     அப்பொழுது கொழுத்த, ஏழு அழகிய பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி வந்து, கோரைப் புற்களிடையே மேய்ந்துகொண்டிருந்தன.
19.     அவற்றிற்குப்பின், வற்றிய, மிகவும் நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் கரையேறி வந்தன. அத்தகைய அருவருப்பான பசுக்களை எகிப்து நாட்டில் நான் எங்கும் எப்போதும் கண்டதில்லை.
20.     நலிந்து மெலிந்த இந்தப் பசுக்கள் முதலில் வந்த கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன.
21.     ஆனால் இவை அவற்றை விழுங்கிய பின்னும் விழுங்கியனவாகவே தெரியவில்லை: முன்புபோலவே மெலிந்து தோன்றின. அதன்பின் நான் துயில் கலைந்தேன்.
22.     மீண்டும் ஒரு கனவு கண்டேன். அதில் செழுமையான, முற்றிய ஏழு கதிர்கள் ஒரே தாளில் தோன்றக் கண்டேன்.
23.     அவற்றிற்குப்பின் தீய்ந்த, பதராகிக் கீழைக் காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் வெளிவந்தன.
24.     இந்தப் பதரான ஏழு கதிர்கள் அழகிய ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. இதைப்பற்றிய மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால், எவராலும் எனக்குப் பொருள்கூற முடியவில்லை."
25.     அதற்கு யோசேப்பு பார்வோனை நோக்கி, "பார்வோனாகிய தாங்கள் கண்ட கனவுகள் குறிப்பன ஒன்றே. கடவுள் தாம் செய்யவிருப்பதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
26.     ஏழு நல்ல பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு நல்ல கதிர்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். ஆக, கனவுகள் குறிப்பன ஒன்றே.
27.     அவற்றிற்குப்பின் வந்த மெலிந்த, அருவருப்பான ஏழு பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். பதராகி வெப்பக் காற்றினால் தீய்ந்துபோன ஏழு கதிர்கள் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.
28.     நான் பார்வோனாகிய தங்களுக்குச் சொன்னது போலவே, கடவுள் தாம் செய்ய இருப்பதைப் பார்வோனாகிய தங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
29.     எகிப்து நாடெங்கும் மிக வளமான ஏடு ஆண்டுகள் வரவிருக்கின்றன.
30.     அதன்பின் ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும். அப்பொழுது எகிப்து நாட்டின் அனைத்து வளமும் மறந்து போகுமளவிற்கு அந்நாட்டைப் பஞ்சம் பாழாக்கும்.
31.     நாட்டின் வளமை நினைவுக்கே வராது: வரவிருக்கும் பஞ்சம் அந்த அளவிற்குக் கடுமையாய் இருக்கும்.
32.     இது கடவுளால் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதற்கும் அவரால் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதற்கும் அறிகுறியாகவே பார்வோனுக்குக் கனவு இருமுறை வந்தது.
33.     எனவே, பார்வோன் உடனடியாக மதிநுட்பமும் ஞானமும் செறிந்த ஒருவனைக் கண்டுபிடித்து எகிப்து நாட்டின் அதிகாரியாக அமர்த்தவேண்டும்.
34.     மேலும், ஏழு வளமான ஆண்டுகளில் எகிப்து நாட்டின் விளைச்சலில் ஜந்திலொரு பகுதியைக் கொள்முதல் செய்யுமாறு மேற்பார்வையாளர்களையும் பார்வோன் தொடர்ந்து நியமிக்கட்டும்.
35.     வரவிருக்கும் வளமான இந்த ஆண்டுகளிலேயே, தானியம் முழுவதையும் பார்வோனின் அதிகாரத்தில் அவர்கள் கொள்முதல் செய்து, பின்னர் உண்ணக் கொடுப்பதற்கென நகர்களில் சேமித்து வைக்கட்டும்.
36.     எகிப்து நாட்டில் பஞ்சம் வரவிருக்கும் ஏழாண்டுகளில் பயன்படுத்துமாறு தானியம் இவ்வாறு சேமித்து வைக்கப்படட்டும். நாடும் பஞ்சத்தினால் அழியாதிருக்கும்" என்றார்.
37.     அவர் சொன்னது பார்வோனுக்கும் அவன் அலுவலர் அனைவருக்கும் நலமெனத் தோன்றியது.
38.     பார்வோன்தன் அலுவலர்களை நோக்கி, இறையாவி பெற்றுள்ள இவரைப் போல் வேறெவரையும் நாம் காணமுடியுமோ? என்றான்.
39.     பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர்.
40.     எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர். உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும். அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன் என்றான்.
41.     பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, இதோ! எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன் என்று சொன்னான்.
42.     உடனே பார்வோன் தன்கையில் அணிந்திருந்த அரச கணையாழியைக் கழற்றி அதை யோசேப்பு கையில் அணிவித்து, அவருக்குப் பட்டாடை உடுத்தி, பொன் கழுத்தணியை அவருக்கு அணிவித்தான்.
43.     மேலும் அவரைத் தன் இரண்டாம் தேரில் வலம்வரச் செய்து இவருக்கு முழந்தாளிடுங்கள் என்று ஏவலர் கட்டியம் கூறச் செய்தான்: இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான்.
44.     மேலும் அவன் யோசேப்பை நோக்கி, பார்வோனாகிய நான் கூறுகிறேன். உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ காலையோ உயர்த்தக்கூடாது என்றான்.
45.     பின் பார்வோன் யோசேப்பிற்கு சாபனாத்துபனேகா என்று புதிய பெயர் சூட்டி, ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகளான ஆசினத்தை அவருக்கு மணமுடித்து வைத்தான். எகிப்து நாடு முழுவதற்கும் யோசேப்பு ஆளுநர் ஆனார்.
46     எகிப்தின் மன்னனாகிய பர்வோனிடம் பணியேற்றபொழுது, யோசேப்பிற்கு வயது முப்பது. அவர் பார்வோனிடம் விடைபெற்று எகிப்து நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.
47     வளமிக்க ஏழாண்டுகளில் நிலம் மிகுதியான விளைச்சல் தந்தது.
48     அந்த ஏழாண்டுகளில் எகிப்து நாட்டில் விளைந்த எல்லா உணவுப் பொருள்களையும் நகர்களில் அவர் சேகரித்து வைத்தார். ஒவ்வொரு நகரிலும் அதைச் சுற்றியுள்ள வயல்களில் விளைந்த உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்தார்.
49     கடற்கரை மணல் அளவுக்கு மிகுதியான தானியத்தை யோசேப்பு கொணர்ந்து குவித்தார். கணிக்க இயலாத அளவிற்கு உணவுப் பொருள்கள் சேர்ந்தமையால், கணிப்பதை நிறுத்தினார்.
50 பஞ்சத்தின் ஆண்டு வருமுன்னே யோசேப்பிற்கு, ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகள் ஆசினத்து, மைந்தர் இருவரைப் பெற்றெடுத்தாள்.
51 யோசேப்பு எல்லாத் துன்பங்களையும் என் தந்தையின் வீட்டையும் கடவுள் மறக்கச் செய்தார் என்று சொல்லித் தலைமகனுக்கு மனாசே என்று பெயரிட்டார்.
52 பின் நான் துன்புற்ற இந்த நாட்டில் கடவுள் என்னைப் பலுகச் செய்தார் என்று சொல்லி, அடுத்தவனுக்கு எப்ராயிம் என்று பெயரிட்டார்.
53 எகிப்து நாட்டின் வளமான ஏழாண்டுகள் முடிவுற்றன.
54 யோசேப்பு முன்னறிவித்தபடி, ஏழாண்டுப் பஞ்சம் தொடங்கியது. எல்லா நாடுகளிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆனால் எகிப்து நாடு முழுவதற்கும் உணவு கிடைத்தது.
55 எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, "யோசேப்பிடம் செல்லுங்கள்: அவர் சொல்வதைச் செய்யுங்கள்" என்று கூறினான்.
56 நாடுமுழுவதும் பஞ்சம் பரவிய பொழுது, யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்குமாறு செய்தார். ஏனெனில் எகிப்து நாட்டில் பஞ்சம் கடுமையாய் இருந்தது.
57 உலகமெங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.

அதிகாரம் 42.


1.   எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி யாக்கோபு கேள்விப்பட்டு, தம் புதல்வர்களை நோக்கி, "நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?
2.   இதோ எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்படுகிறேன். நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரோடிருக்குமாறு, நீங்கள் அங்குச் சென்று நமக்கெனத் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்" என்றார்.
3.   எனவே யோசேப்பின் சகோதரர் பதின்மரும் தானியம் வாங்கும் பொருட்டு எகிப்திற்குப் புறப்பட்டுப் போனார்கள்.
4.   ஆனால் யோசேப்பின் சகோதரனான பென்யமினை அவனுடைய சகோதரர்களோடு யாக்கோபு அனுப்பவில்லை. ஏனெனில், அவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிடக்கூடும் என்று எண்ணினார்.
5.   கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச்சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர்.
6.   அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே அவருடைய சகோதரர்கள் வந்து, தரைமட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள்.
7.   யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும் அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று வினவினார். அவர்களோ, நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம் என்று பதில் கூறினார்கள்.
8.   யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்ட போதிலும், அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
9.   அப்பொழுது தாம் அவர்களைப் பற்றிக் கண்ட கனவுகளை நினைவில் கொண்டு, அவர்களை நோக்கி, "நீங்கள் ஒற்றர்கள்: பாதுகாப்பாற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீ¡கள்" என்றார்.
10     அதற்கு அவர்கள், "எம் தலைவரே! அப்படி அல்ல. உம் ஊழியர்களாகிய நாங்கள் உணவுப் பொருள்கள் வாங்கவே வந்துள்ளோம்.
11     நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்: ஒற்றர்கள் அல்ல" என்றனர்.
12.     அவர்களிடம் அவர், "இல்லை, இல்லை. பாதுகாப்பற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்தவர்களே நீங்கள்" என்று சொன்னார்.
13.     அவர்கள் மறுமொழியாக "உம் அடியார்களாகிய நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள். இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்துவிட்டான்" என்றனர்.
14.     யோசேப்பு மீண்டும் அவர்களிடம், "நான் சொன்னது போலவே நீங்கள் ஒற்றர்கள்தாம்.
15.     இதோ நான் உங்களை சோதித்தறியப் போகிறேன். பார்வோனின் உயிர்மேல் ஆணை! உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய, நீங்கள் இங்கிருந்து புறப்படப்போவதில்லை.
16.     எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் சொற்களைச் சோதித்து உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில் பார்வோனின் உயிர்மேல் ஆணை! நீங்கள் ஒற்றர்கள்தாம்" என்றார்.
17.     பின்னர் அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார்.
18.     மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, "நான் சொல்கிறபடி செய்யுங்கள்: செய்தால், பிழைக்கலாம். ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன்.
19.     நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம்.
20.     உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்குள்ளாகமாட்டீர்கள்" என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.
21.     அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், "உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவி சாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்" என்று சொல்லிக் கொண்டனர்.
22.     அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், "பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது!" என்றார்.
23.     யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை.
24.     அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார். பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில் சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.
25.     பின்பு, அவர்களுடைய கோணிப்பைகளைத் தானியத்தால் நிரப்பி, அவனவன் பணத்தைத் திரும்ப அவனவன் பையிலிட்டுக் கட்டவும், வழிக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் உத்தரவிட்டார். அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
26.     அவர்கள் தங்கள் கழுதைகளின் மேல் தானியத்தை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.
27.     பின்பு, அவர்களில் ஒருவன் சாவடியில் தன் கழுதைக்குத் தீனி போடவதற்காகத் தன் கோணியைத் திறக்கவே, அதன் வாயில் தன் பணம் இருக்கக் கண்டான்.
28.     அவன் தன் சகோதரரை நோக்கி, "என் பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது: இதோ என் கோணியில் இருக்கிறது" என்றான். அவர்களோ மனக்கலக்கமுற்று, நடுநடுங்கி, ஒருவரோடொருவர், "கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?" என்றனர்.
29.     பின்பு, அவர்கள் கானான் நாட்டில் தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்து, தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர்.
30.     அவர்கள் கூறியது: "அந்நாட்டின் தலைவர் எங்களிடம் கடுமையாகப் பேசினார். நாட்டை வேவு பார்க்கவந்தவர்கள் போல் எங்களை நடத்தினார்."
31.     நாங்களோ அவரைப் பார்த்து, "நாங்கள் நேர்மையானவர்கள்: ஒற்றர்கள் அல்ல.
32.     நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரு சகோதரர். ஒருவன் இறந்துவிட்டான். இளையவன் கானான் நாட்டில் இப்பொழுது எங்கள் தந்தையோடு இருக்கிறான்" என்று சொன்னோம்.
33.     அப்பொழுது, நாட்டின் தலைவரான அந்த ஆள், "நீங்கள் நேர்மையானவர்கள்தாம் என்பதை நான் அறிந்துகொள்ள உங்கள் சகோதரர்களுள் ஒருவனை என்னிடம் விட்டுச்செல்லுங்கள். பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு போங்கள்.
34.     ஆனால், உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அதன் மூலம் நீங்கள் ஒற்றர்கள் அல்ல, நேர்மையானவர்கள்தாம் என்று நானும் அறிந்துகொள்வேன். அதன்பின் உங்கள் சகோதரனை உங்களிடம் ஒப்படைப்பேன்: பின்னர் நீங்கள் நாடெங்கும் வணிகம் செய்யலாம் என்றார்."
35.     பின்பு, அவர்கள் கோணிப் பைகளைத் திறந்து கொட்டியபொழுது, ஒவ்வொருவன் கோணிப்பையிலும் அவனவன் பணமுடிப்பு காணப்பட்டது. பணமுடிப்புகளைக் கண்டு அவர்களும் அவர்கள் தந்தையும் திகிலுற்றனர்.
36.     தந்தை யாக்கோபு அவர்களை நோக்கி, "என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள். யோசேப்பு இல்லை, சிமியோனும் இல்லை: இப்பொழுது பென்யமினையும் கூட்டிக்கொண்டு போகவிருக்கிறீர்களே! எல்லாமே எனக்கு எதிராக உள்ளன!" என்றார்.
37.     அதற்கு ரூபன் தம் தந்தையிடம், "நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டுவராவிடில், என் இரு மைந்தரையும் கொன்றுவிடுங்கள். அவனை என் கையில் ஒப்புவியுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்" என்றார்.
38.     ஆனால் யாக்கோபு, "என் மகனை உங்களோடு போகவிடமாட்டேன். இவன் சகோதரன் இறந்து போனான். இவன் ஒருவனே எஞ்சி இருக்கிறான். நீங்கள் போகும் வழியில், இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்" என்றார்.

அதிகாரம் 43.


1.   நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது.
2.   எகிப்திலிருந்து வாங்கி வந்திருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. அவர்கள் தந்தை அவர்களை நோக்கி, "நீங்கள் திரும்பிப் போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்" என்றார்.
3.   அதற்கு யூதா, "அந்த ஆள் உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்து வராவிடில் நீங்கள் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று எங்களைக் கடுமையாய் எச்சரித்துள்ளார்.
4.   ஆதலால் நீங்கள் எம் சகோதரனை எங்களோடு அனுப்பினால் மட்டுமே நாங்கள் அங்குச் சென்று உணவுப் பொருள்களை உங்களுக்கு வாங்கிக்கொண்டு வருவோம்.
5.   நீங்கள் அவனை அனுப்பாவிடில், நாங்கள் போகமாட்டோம். ஏனெனில் அந்த ஆள், உங்கள் சகோதரன் உங்களுடன் வராவிடில், நீங்கள் என் முகத்தில் விழிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்று சொன்னார்.
6.   இஸ்ரயேல் அவர்களை நோக்கி, "உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான் என்று அம்மனிதருக்குத் தெரிவித்து, நீங்கள் ஏன் எனக்குத் துன்பம் வருவித்தீர்கள்" என்று முறையிட்டார்.
7.   அவர்கள், "அந்த ஆள் நம்மைப்பற்றியும் நம் உறவினரைப்பற்றியும் துருவித் துருவிக் கேட்டார். உங்கள் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா? உங்களுக்கு வேறு சகோதரன் உண்டா? என்று வினவினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தோம். உங்கள் சகோதரனை இங்கே கொண்டு வாருங்கள் என்று அவர் சொல்வார் என்று நாங்கள் அறிந்திருக்கக் கூடுமோ?" என்று மறுமொழி கூறினர்.
8.   மேலும் யூதா தம் தந்தை இஸ்ரயேலை நோக்கி, "எங்கள் குழந்தைகளும், நீங்களும் நாங்களும் சாகாமல் உயிரோடிருக்க வேண்டுமானால், இளைஞனை என்னோடு அனுப்பி வையுங்கள். நாங்களும் புறப்பட்டுச் செல்வோம்.
9.   அவனுக்கு நானே பொறுப்பாளி. அவனைப்பற்றிய பொறுப்பை என்கையில் விட்டுவிடுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டுவந்து ஒப்புவிக்காவிடில், உங்களுக்கு முன்பாக, அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்.
10     இவ்வளவு காலந்தாழ்த்தியிராவிட்டால், இதற்குள் இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருக்கலாம்" என்றார்.
11     அதைக் கேட்டு, அவர்களின் தந்தை இஸ்ரயேல், அவர்களை நோக்கி, "அவ்வளவு அவசியமானால், நீங்கள் அப்படியே செய்யுங்கள். ஆனால், இந்த நாட்டின் விளைச்சலில் மிகச் சிறந்த சிலவற்றை உங்கள் பைகளிலே எடுத்துச் செல்லுங்கள். கொஞ்சம் தைல வகைகள், தேன், நறுமணப் பொருள்கள், வெள்ளைப் போளம், தேவதாருக் கொட்டைகள், வாதுமைப் பருப்பு ஆகியவற்றை அம்மனிதருக்குக் காணிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
12.     மேலும் இருமடங்கு பணத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கோணிப்பை வாயில் வைக்கப்பட்டிருந்த பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். ஒரு வேளை அது தவறுதலாய் நேர்ந்திருக்கக்கூடும்.
13.     உங்கள் சகோதரனை அழைத்துக்கொண்டு மீண்டும் அந்த மனிதரிடம் செல்லுங்கள்.
14.     அந்த மனிதர் ஏற்கெனவே அங்குள்ள உங்கள் சகோதரனையும் இந்தப் பென்யமினையும் உங்களோடு அனுப்பிவைக்கும்படி எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குக் கருணை காட்டுவாராக! நானோ பிள்ளைகளை இழக்கவேண்டியிருந்தால், பிள்ளைகளை இழந்தவனாகவே இருப்பேன்" என்றார்.
15.     அவர்களும் மேற்குறிப்பிட்ட காணிக்கைகளையும் இருமடங்கு பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பென்யமினுடன் எகிப்திற்குச் சென்று யோசேப்பின் முன்னிலையில் வந்து நின்றனர்.
16.     யோசேப்பு அவர்களையும் அவர்களுடன் பென்யமினையும் கண்டவுடன் தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "நீ இம்மனிதர்களை என் வீட்டிற்கு அழைத்துச் செல். இவர்கள் பகலுணவை இன்று என்னோடு உண்பார்கள். கால்நடை ஒன்றை அடித்து உணவு தயார் செய்" என்றார்.
17.     அவனும் யோசேப்பு சொன்னபடியே அம்மனிதர்களை அவர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான்.
18.     யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதால் அவர்கள் அச்சமுற்றனர். ஏனெனில், முன்பு நம் கோணிப்பைகளில் வைக்கப்பட்ட பணத்தை முன்னிட்டே இங்குக் கொண்டுவரப்பட்டுள்ளோம். நம்மைத் தாக்கி மடக்கி அடிமைகளாக்கி நம் கழுதைகளைக் கைப்பற்றிக் கொள்ளுமாறு இவ்வாறு கொண்டுவந்திருக்கிறார்களோ? என்று நினைத்துக்கொண்டனர்.
19.     எனவே, அவர்கள் யோசேப்பின் வீட்டு வாயிற்படியிலே மேற்பார்வையாளனை அணுகிக் கூறியது:
20.     "ஜயா, முன்பு ஒருமுறை நாங்கள் தானியம் வாங்குவதற்கும் இங்கு வந்திருந்தது உண்மையே.
21.     திரும்பவும் வழியில் சாவடியில் எங்கள் கோணிப்பைகளைத் திறந்தபோது, பைகளின் வாயிலே நாங்கள் கொடுத்த பணம் அப்படியே இருக்கக் கண்டோம். அதே அளவு திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம.
22.     மேலும், எங்களுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு வேறு பணமும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் கோணிப்பைகளில் வைத்தது யாரென்று அறியோம்" என்றனர்.
23.     அதற்கு அவன், "உங்களுக்கு அமைதி உண்டாகுக! அஞ்சவேண்டாம்! உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர் உங்கள் கோணிப்பைகளில் அந்தப் பணத்தை உங்களுக்குப் புதையலாகத் தந்திருப்பார்! உங்கள் பணம் தான் என்னிடம் வந்ததே!" என்று சொல்லியபின், சிமியோனை அவர்களிடம் அழைத்து வந்தான்.
24.     மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவிக் கொண்டனர். பின்பு, அவர்களுடைய கழுதைகளுக்கு அவன் தீனி போட்டான்.
25.     நண்பகலில் யோசேப்பு வரும் நேரத்தில், அவருக்குத் தருவதற்காக அவர்கள் தங்கள் காணிக்கைகளைத் தயார் செய்தனர். ஏனென்றால், தாங்கள் அங்கேயே உணவு அருந்தப்போவதாகக் கேள்விப்பட்டிருந்தனர்.
26.     யோசேப்பு தம் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் அவர்கள் கையில் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை அவர்முன் வைத்து, தரை மட்டும் தாழ்ந்து வணங்கினர்.
27.     அவரோ அவர்களிடம் நலம் விசாரித்தபின் "நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த முதிர்வயதான உங் கள் தந்தை நலமாய் இருக்கிறாரா? இன்னும் உயிரோடிருக்கிறாரா?" என்று விசாரித்தார்.
28.     அவர்கள், "உங்கள் ஊழியராகிய எங்கள் தந்தை நலமுடன் இருக்கிறார். இன்னும் உயிரோடிருக்கிறார்" என்று பதில் கூறித் தரைமட்டும் தாழ்ந்து வணங்கினர்.
29.     யோசேப்பு கண்களை உயர்த்தி, தம் சகோதரனும், தம் தாயின் மகனுமான பென்யமினைப் பார்த்து, "நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த உங்கள் இளைய சகோதரன் இவன்தானோ?" என்று கேட்டபின், "மகனே, கடவுள் உனக்கு அருள்புரிவாராக!" என்றார்.
30.     யோசேப்பு தம் சகோதரனைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து அழுவதற்கு ஓரிடம் தேடினார். உடனே தம் உள்ளறைக்குள் விரைந்துசென்று கண்ணீர்விட்டார்.
31.     பின்பு, முகத்தைக் கழுவியபின் வெளியே வந்தார். தம்மை அடக்கிக்கொண்டு, உணவு பரிமாறுங்கள் என்றார்.
32.     யோசேப்பிற்குத் தனியாகவும் சகோதரர்களுக்குத் தனியாகவும் அவருடன் உண்ணவிருந்த எகிப்தியருக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. ஏனென்றால், எகிப்தியர் எகிரேயரோடு உண்பதில்லை. அப்படி உண்பதை எகிப்தியர் அருவருப்பாகக் கருதினர்.
33.     மேலும் அவருக்கு முன் அவர்களில் மூத்தவன் தலைமகன் உரிமைப்படி முதலாவதாகவும், இளையவர்கள் அவரவர் வயதின்படியும் அமர்த்தப்பட்டதால் ஒருவர் மற்றவரை வியப்புடன் நோக்கினர்.
34.     யோசேப்பின் முன் வைக்கப்பட்ட தட்டுகளினின்று அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. மற்றவர்களது பங்கைப்போல் ஜந்து மடங்கு மிகுதியாகப் பென்யமினுக்குப் பரிமாறப்பட்டது. அவருடன் அவர்கள் மதுவருந்தி விருந்துண்டனர்.

அதிகாரம் 44.


1.   பின்னர் யோசேப்பு, தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "அவர்களுடைய கோணிப்பைகளில் அவர்கள் தூக்கிச் செல்லுமளவு தானியம் நிரப்பி, அவனவன் பணத்தைப் பையின் வாயில் வைத்துக் கட்டிவிடு.
2.   இளையவனது கோணிப்பை வாயில் எனது வெள்ளிக்கோப்பையையும், தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் வைத்துக் கட்டிவிடு" என்று கட்டளையிட்டார். யோசேப்பு சொன்னவாறே அவனும் செய்தான்.
3.   காலையில் கதிரவன் உதித்ததும் அவர்கள் தங்கள் கழுதைகளோடு அனுப்பிவைக்கப்பட்டனர்.
4.   அவர்கள் நகரை விட்டுச் சிறிது தூரம் போயிருப்பர். அப்பொழுது யோசேப்பு தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "நீ எழுந்து அம்மனிதர்களைத் துரத்திப் பிடித்து, நன்மைக்குக் கைமாறாக நீங்கள் தீமை செய்வது ஏன்?
5.   இது என் தலைவர் பருகப் பயன்படுத்துவது அல்லவா? இது அவர் குறிபார்க்கப் பயன்படுத்துவது அல்லவா? நீங்கள் செய்தது மிகப்பெரும் மோசடி! என்று சொல்வாய்" என்றார்.
6.   அவனும் அவர்களை விரட்டிப் பிடித்து, இந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.
7.   அதற்கு அவர்கள் அவனிடம், "ஜயா, தாங்கள் இப்படிப் பேசுவதேன்? உம் அடியார்களாகிய நாங்கள் இத்தகைய முறையற்ற செயலைச் செய்திருப்போமா?
8.   நாங்கள் கோணிப்பைகளின் வாயில் கண்ட பணத்தைக் கூடக் கானான் நாட்டினின்று உம்மிடம் திரும்பக் கொண்டு வந்தோம் அல்லவா! அப்படியிருக்க, நாங்கள் உம் தலைவர் வீட்டில் தங்கமாவது வெள்ளியாவது திருடிக்கொண்டு போவோமா?
9.   உம் அடியார்களாகிய எம்முள் எவனிடமாவது அது காணப்பட்டால் அவன் செத்தொழியட்டும்! நாங்களும் எங்கள் தலைவருக்கு அடிமைகள் ஆவோம்" என்று பதில் சொன்னார்கள்.
10     அதுகேட்டு அவன், "நன்று நன்று: உங்கள் சொற்களின்படி ஆகட்டும். அது எவனிடம் அகப்படுமோ அவன் எனக்கு அடிமையாக இருப்பான்: மற்றவர்கள் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னான்.
11     அப்பொழுது அவர்கள் விரைந்து கோணிப்பைகளைத் தரையில் இறக்கிவைத்தார்கள். ஒவ்வொருவனும் தன் கோணிப்பையைத் திறந்தான்.
12.     மூத்தவன் முதல் இளையவன்வரை அவன் சோதித்தபோது, அந்தக் கோப்பை பென்யமின் பையில் காணப்பட்டது.
13.     அப்பொழுது அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, கழுதைகளின் மேல் சுமையை ஏற்றி நகருக்குத் திரும்பி வந்தனர்.
14.     அதுவரை யோசேப்பு அங்கேதான் இருந்தார். யூதா தம் சகோதரருடன் வந்து சேர்ந்தார். அவர்கள் அவருக்குமுன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
15.     யோசேப்பு அவர்களை நோக்கி, "நீங்கள் என்ன, இப்படிச் செய்துவிட்டீர்கள்? குறிபார்ப்பதில் என்னைப் போன்றவர் எவருமிலர் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று வினவினார்.
16.     அதற்கு யூதா, "என் தலைவராகிய தங்களிடம் நாங்கள் என்ன சொல்வோம்? என்னதான் பேசுவோம்? எங்கள் மாசின்மையை எப்படி நாங்கள் எண்பிக்க முடியும்? கடவுளே உம் அடியார்களின் தீச்செயலைக் கண்டுபிடித்தார். இதோ நாங்களும், எவனிடம் கோப்பை கண்டுபிடிக்கப்பட்டதோ அவனும், தங்களுக்கு அடிமைகளாவோம்" என்று சொன்னார்.
17.     அது கேட்டு யோசேப்பு, "அத்தகைய முறையற்ற செயலை நான் செய்ய மாட்டேன். கோப்பை எவனிடம் அகப்பட்டதோ அவன் மட்டும் எனக்கு அடிமையாக இருப்பான். மற்றவர்கள் உங்கள் தந்தையிடம் நலமாகச் செல்லுங்கள்" என்றார்.
18.     யூதா அவர் அருகில் வந்து, "என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர்.
19.     என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா? என்று கேட்டீர்கள்.
20.     அதற்கு நாங்கள், எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்பு கொண்டிருக்கிறார் என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம்.
21.     அப்பொழுது தாங்கள், அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும் என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.
22.     நாங்கள் அந்த இளைஞன் தன் தந்தையை விட்டுப் பிரிய இயலாது: பிரிந்தால் அவர் இறந்து போவார் என்று தலைவராகிய தங்களிடம் சொன்னோம்.
23.     அதற்குத் தாங்கள் உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.
24.     உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம்.
25.     பிறகு எங்கள் தந்தை, நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப்பொருள் வாங்கி வாருங்கள் என்றார்.
26.     நாங்கள் எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம் என்றோம்.
27.     உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாளென்று உங்களுக்குத் தெரியும்.
28.     ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை.
29.     இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாகிப் பாதாளத்திற்குள் இறங்கச்செய்வீர்கள் என்றார்.
30.     ஆகையால் உம் பணியாளராகிய என் தந்தையிடம் நான் செல்லும்போது அவர் உயிருக்கு உயிராக இருக்கும் இந்த இளைஞன் எங்களோடு இல்லையெனில்,
31.     இளைஞன் இல்லையென்று கண்டு அவர் உடனே இறந்து போவார். உம் பணியாளர்களாகிய நாங்கள் நரைத்த முடியுள்ள உம் ஊழியரான எங்கள் தந்தையைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்தவர்கள் ஆவோம்.
32.     எம் தந்தையிடம் இளைஞனின் பாதுகாப்புக்கு உம் அடியான் பொறுப்பேற்றிருக்கிறேன். ஏனெனில், என் தந்தையே, அவனை நான் திரும்பக் கூட்டி வராவிட்டால், உம் முன்னிலையில் அப்பழி எந்நாளும் என்னையே சாரும் என்றேன்.
33.     ஆகையால் இப்பொழுது இளைஞனுக்குப் பதிலாய் அடியேனை உமக்கு அடிமையாக்கியருளும். இளைஞனையோ அவன் சகோதரர்களோடு சேர்ந்து போகவிடும்.
34.     இளைஞன் என்னோடு இல்லாவிடில், எப்படி என் தந்தையிடம் நான் திரும்புவேன்? என் தந்தைக்கு நேரிடவிருக்கும் துன்பத்தை எப்படி நான் பார்த்துக் கொண்டிருப்பேன்?" என்றார்.

அதிகாரம் 45.


1.   அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், எல்லோரும் என்னைவிட்டு வெளியே போங்கள் என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும் பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை.
2.   உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர்.
3.   பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, "நான் தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?" என்று கேட்டார். ஆனால் அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகிலடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
4.   ஆனால் யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, "என் அருகில் வாருங்கள்" என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், "நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்!
5.   நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ள வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.
6.   நாட்டில் பஞ்சம் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளன. இன்னும் ஜந்தாண்டுகள் உழவோ அறுவடையோ இராது.
7.   ஆதலால் உலகில் உங்களுள் எஞ்சி இருப்போரைப் பாதுகாக்கவும், பெரும் மீட்புச் செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும், கடவுள் உங்களுக்குமுன் என்னை அனுப்பி வைத்தார்.
8.   என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல, கடவுள்தாம். அவரே என்னைப் பார்வோனுக்குத் தந்தையாகவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவராகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தியுள்ளார்.
9.   நீங்கள் என் தந்தையிடம் விரைந்து சென்று அவருக்குச் சொல்லுங்கள். "உங்கள் மகன் யோசேப்பு தெரிவிப்பது இதுவே: கடவுள் என்னை எகிப்து முழுவதற்கும் ஆளுநராக நியமித்துள்ளார். எனவே காலந்தாழ்த்தாமல் என்னிடம் வாருங்கள்.
10     நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் உங்கள் ஆடு மாடுகளோடும் உங்களுக்குச் சொந்தமான யாவற்றோடும் கோசேன் பகுதியில் எனக்கு அருகில் குடியேறி வாழலாம்.
11     அங்குள்ள உங்களை நான் பேணிக் காப்பேன். ஏனெனில் இன்னும் ஜந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும். இங்கு வராவிடில், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்களுக்குள்ள அனைத்தும் வறியோராய் வாடுவீர்கள்.
12.     இதோ உங்களோடு பேசுவது என் வாய்தான் என்பதை நீங்களும் என் சகோதரன் பென்யமினும் கண்ணாரக் காண்கிறீர்கள்.
13.     நான் எகிப்தில் அடைந்துள்ள சிறப்பு அனைத்தையும் நீங்கள் இங்குக் கண்ட யாவற்றையும் என் தந்தைக்குத் தெரிவியுங்கள். விரைந்துபோய், என் தந்தையை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.
14.     பிறகு, தம் சகோதரன் பென்யமினை அரவணைத்து அவன் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதார். பென்யமினும் அப்படியே அவர் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதான்.
15.     பின் யோசேப்பு தம் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு அழுதார். இதன்பின் அவர்கள் அவரோடு உரையாடினர்.
16.     யோசேப்பின் சகோதரர்கள் வந்துள்ளனர் என்ற செய்தி பார்வோனின் அரண்மனையை எட்டவே, பார்வோனும் அவன் அலுவலர்களும் அகமகிழ்ந்தனர்.
17.     அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கிக் கூறியது: "நீர் உம் சகோதரர்களுக்கு இவ்வாறு சொல்வீர்: நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில், உங்கள் கால்நடைகளின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குத் திரும்பிச் சென்று,
18.     அங்கிருந்து உங்கள் தந்தையையும் குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்: நான் உங்களுக்கு எகிப்து நாட்டின் சிறந்த பகுதியைத் தருவேன். நீங்களும் நிலத்தின் வளமையை அனுபவிக்கலாம்.
19.     உம் சகோதரர்களுக்கு நீர் மீண்டும் சொல்ல வேண்டியது: நீங்கள் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளையும் மனைவியரையும் அழைத்து வருமாறு, எகிப்து நாட்டினின்று வண்டிகளைக் கொண்டு போங்கள். உங்கள் தந்தையையும் அழைத்துக்கொண்டு வந்து சேருங்கள்.
20.     உங்கள் தட்டுமுட்டுகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்: ஏனெனில், எகிப்து நாட்டில் சிறந்தவையெல்லாம் உங்களுக்கே உரியவையாகும்."
21.     இஸ்ரயேலின் புதல்வர்கள் அவ்வாறே செய்தனர். பார்வோன் கட் டளையின்படி யோசேப்பு அவர்களுக்கு வண்டிகளையும் வழிக்கு உணவுப் பண்டங்களையும் கொடுத்தார்.
22.     மேலும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் வேறு புத்தாடைகளும் கொடுத்தார். பென்யமினுக்கோ முந்நூறு வெள்ளிக் காசுகளும் ஜந்து ஆடைகளும் கொடுத்தார்.
23.     அப்படியே தம் தந்தைக்குப் பத்து ஆண் கழுதைகளின் மேல் எகிப்தின் சிறந்த பொருள்களையும், அவரது பயணத்திற்குப் பத்துப் பெண் கழுதைகளின் மேல் தானியத்தையும், அப்பம் முதலிய உணவு வகைகளையும் ஏற்றி அவர்களோடு அனுப்பி வைத்தார்.
24.     பின்பு, அவர் தம் சகோதரர்களை வழியனுப்பி வத்தார். அவர்களை விட்டுப் பிரியும்போது, "நீங்கள் வழியில் சச்சரவு செய்யாதீர்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
25.     அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டிலிருந்த தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்தனர்.
26.     அவர்கள் அவரிடம், "யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறார்: அவரே எகிப்து நாடு முழுவதற்கும் ஆளுநர்" என்று அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு மன அதிர்ச்சியுற்று அவர்கள் சொன்னதை நம்பவில்லை.
27.     ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன யாவற்றையும் அவருக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டும், யோசேப்பு அவரை அழைத்து வர அனுப்பியிருந்த வண்டிகளைக் கண்டும் அவர்கள் தந்தை யாக்கோபு புத்துயிர் பெற்றவர் ஆனார்.
28.     இறுதியில் இஸ்ரயேல், "என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருப்பது ஒன்றே போதும். நான் இறக்குமுன் சென்று அவனைக் காண்பேன்" என்றார்.

அதிகாரம் 46.


1.   பின்பு இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.
2.   அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, யாக்கோபு! யாக்கோபு! என்று அழைத்தார். அவர், இதோ அடியேன் என்றார்.
3.   கடவுள், "உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன்.
4.   நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்" என்றார்.
5.   யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக் கொண்டனர்.
6.   கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார்.
7.   தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
8.   எகிப்திற்கு வந்துசேர்ந்த யாக்கோபும் அவர் புதல்வர்களுமாகிய இஸ்ரயேலரின் பெயர்கள் பின்வருமாறு: யாக்கோபின் தலைமகன் ரூபன்.
9.   ரூபனின் புதல்வர்கள்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.
10     சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஒகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.
11     லேவியின் புதல்வர்: கெர்சோன், கோகாத்து, மெராரி.
12.     யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, பெரேட்சு, செராகு. இவர்களுள் ஏரும் ஓனானும் கானான் நாட்டில் இறந்து போயினர். எட்சரோன், ஆமூல் என்பவர்கள் பெரேட்சுக்குப் பிறந்த புதல்வர்கள்.
13.     இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசூபு, சிம்ரோன்.
14.     செபுலோனின் புதல்வர்: செரேது, ஏலோன், யாகுலவேல்.
15.     இவர்கள் லேயாவின் பிள்ளைகள். இவர் இவர்களையும் தீனா என்ற மகளையும் பதான் அராமில் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தார். லேயா வழிவந்த அவர் புதல்வர், புதல்வியர் மொத்தம் முப்பத்துமூன்றுபேர்.
16.     காத்தின் புதல்வர். சிபியோன், அக்கி, சூனி, எட்சபோன், ஏ¡£, அரோதி, அரேலி.
17.     ஆசேரின் புதல்வர்: இம்னா, இசுவா, இசுவி, பெரியா. இவர்களுடைய சகோதரி செராகு. பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல்.
18.     இவர்கள் லாபான் தன் மகள் லேயாவுக்குக் கொடுத்த சில்பாவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் இந்தப் பதினாறுபேர்.
19.     யோசேப்பு, பென்யமின் என்பவர் யாக்கோபின் மனைவி ராகேலின் புதல்வர்.
20.     யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர். ஓன் நகர் அர்ச்சகர் போற்றி பெராவின் மகளான அசினத்து அவர்களை அவருக்குப் பெற்றெடுத்தாள். அவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர்.
21.     பென்யமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், அசுபேல், கேரா, நாகமான், ஏகி, ரோசு, முப்பிம், குப்பிம், அருது.
22.     ராகேல் வழிவந்த யாக்கோபின் புதல்வர் மொத்தம் பதினான்கு பேர்.
23.     தாணின் மகன், ஆசும்.
24.     நப்தலியின் புதல்வர்: யாகுட்சேல், கூனி, ஏட்சேர், சில்லேம்.
25.     இவர்கள் லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பில்காவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர்.
26.     யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.
27.     எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.
28.     கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள்.
29.     யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்து கொண்டு வெகுநேரம் அழுதார்.
30.     அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், "இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடு தான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!" என்றார்.
31.     பின்னர் யோசேப்பு தம் சகோதரரையும் தம் தந்தையின் குடும்பத்தாரையும் நோக்கி, "நான் பார்வோனிடம் போய், கானான் நாட்டிலிருந்து என் சகோதரரும், என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.
32.     அவர்கள் மந்தை மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடு மாடுகளையும் தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரிவிப்பேன்.
33.     பார்வோன் உங்களை வரவழைத்து, உங்கள் தொழில் என்ன? என்று கேட்கும்பொழுது,
34.     நீங்கள் மறுமொழியாக, எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரை உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம் என்று சொல்லுங்கள். நீங்கள் கோசேன் பகுதியில் குடியிருக்கும்படி அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்" என்றார்.

அதிகாரம் 47.


1.   பின்பு, யோசேப்பு பார்வோனிடம் போய், "என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடு மாடுகளோடும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் கோசேன் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்" என்று அறிவித்தார்.
2.   மேலும் தம் சகோதரரில் ஜந்து பேரைப் பார்வோன் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தினார்.
3.   பார்வோன் அவர்களை நோக்கி, உங்கள் தொழில் என்ன? என்று கேட்க, அவர்கள் அவனிடம் "உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் ஆடு மேய்ப்பவர்கள்.
4.   கானான் நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருப்பதாலும், உம் பணியாளர்களாகிய எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாது போனதாலும், சிறிதுகாலம் இந்நாட்டில் தங்கி இருக்க வந்திருக்கிறோம். உம் பணியாளர்களாிய நாங்கள் கோசேன் பகுதியில் தற்போதைக்குக் குடியிருக்க இசைவு தருமாறு வேண்டுகிறோம்" என்றனர்.
5.   அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி, "உம் தந்தையும் உம் சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்கள் அல்லவா?
6.   எகிப்து நாடு உமக்கு முன்பாக இருக்கிறது. இந்த நாட்டின் சிறந்த பகுதியில் உம் தந்தையும் சகோதரரும் குடியேறும்படி செய்யும். கோசேன் பகுதியில் அவர்கள் வாழட்டும். அவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீரானால், எனக்குச் சொந்தமான மந்தைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளாக அவர்களை ஏற்படுத்தலாம்" என்றான்.
7.   பின்னர், யோசேப்பு தம் தந்தையை அழைத்துவந்து அரசன் முன் நிறுத்தினார். யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்துமொழி கூறினார்.
8.   பார்வோன் யாக்கோபை நோக்கி, உமது வயதென்ன? என்று வினவினான்.
9.   அதற்கு யாக்கோபு பார்வோனை நோக்கி, "என் வாழ்க்கைப் பயண நாள்கள் நூற்றுமுப்பது ஆண்டுகள். அவை எண்ணிக்கையில் குறைந்தவை: துன்பத்தில் மிகுந்தவை. ஆனால் அவை என் மூதாதையரின் நாள்களுக்குக் குறைந்தவையே" என்றார்.
10     யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்து மொழி கூறியபின் அவனிடம் விடைபெற்றுச் சென்றார்.
11     பார்வோன் கட்டளையிட்டிருந்தபடி, யோசேப்பு தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.
12.     மேலும், யோசேப்பு தம் தந்தை, தம் சகோதரர், தம் தந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் அவரவர் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப உணவளித்து அவர்களைப் பேணிக் காத்துவந்தார்.
13.     பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது. உலகெங்கும் உணவு கிடைக்கவில்லை. குறிப்பாக எகிப்துநாடும் கானான்நாடும் பஞ்சத்தால் வாடின.
14.     எகிப்தியருக்கும் கானானியருக்கும் தானியம் விற்றதால் கிடைத்த பணத்தையெல்லாம் ஒன்று சேர்த்து யோசேப்பு பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுவந்தார்.
15.     எகிப்து, கானான் நாடுகளில் பணம் தீர்ந்துபோனபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பிடம் வந்து, "எங்களுக்கு உணவு தாரும்: பணம் இல்லையென்பதால், உம் முன் நாங்கள் ஏன் சாகவேண்டும்?" என்றனர்.
16.     அதற்கு அவர், "உங்களிடம் பணம் இல்லையெனில், உங்கள் மந்தைகளைக் கொண்டு வாருங்கள்: அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் தருவேன்" என்றார்.
17.     எனவே அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்தபோது, யோசேப்பு குதிரைகளையும் ஆட்டுமந்தைகளையும், மாட்டுமந்தைகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்தார். இப்படிக் கால்நடைகளையெல்லாம் ஈடாகப் பெற்று அவர்களை அந்த ஆண்டு காப்பாற்றினார்.
18.     அந்த ஆண்டு முடிந்தபின் அடுத்த ஆண்டில் அவர்கள் மீண்டும் வந்து, அவரை நோக்கி, "எம் தலைவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பணம் தீர்ந்து போயிற்று. கால்நடைகளும் எம் தலைவருக்கு சொந்தமாகிவிட்டன. எம் தலைவருக்கு அளிக்க எங்கள் உடலும் நிலமும் தவிர எங்களிடம் எஞ்சியிருப்பது எதுவுமில்லை.
19.     உம் கண்முன் நாங்களும் எங்கள் நிலமும் ஏன் அழிய வேண்டும்? எங்களையும் எங்கள் நிலத்தையும் உணவுப் பொருளுக்கு ஈடாக எடுத்துக்கொள்ளும். நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாய் இருப்போம். நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும் நிலம் பாழடையாமல் இருக்கவும் எங்களுக்குத் தானியம் தாரும்" என்றனர்.
20.     அவ்வாறே யோசேப்பு எகிப்திய நிலம் முழுவதையும் பார்வோனுக்கென்று வாங்கிக்கொண்டார். ஏனென்றால், பசியின் கொடுமையால் எகிப்தியர் அனைவரும் தங்கள் வயல்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டனர். அந்த நாடே பார்வோனுக்குச் சொந்தமாயிற்று.
21.     எகிப்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரை இருந்த மக்கள் அனைவரையும் யோசேப்பு அடிமை வேலைக்கு உள்ளாக்கினார்.
22.     அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான். பார்வோன் அவர்களுக்குத் தந்திருந்த மானியத்திலிருந்து அவர்கள் உண்டு வந்ததால், அவர்கள் தங்கள் நிலபுலன்களை விற்கவில்லை.
23.     அப்பொழுது யோசேப்பு மக்களை நோக்கி, "இன்று உங்களையும், உங்கள் நிலங்களையும் பார்வோனுக்கு உடைமையாக வாங்கிவிட்டேன். இப்போது, உங்களுக்கு விதைத்தானியம் தருகிறேன். அதை நிலத்தில் விதையுங்கள்.
24.     விளைச்சலில் ஜந்திலொரு பாகம் பார்வோனுக்குச் செலுத்துங்கள். எஞ்சிய நான்கு பாகம் உங்கள் வயல்களுக்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும் இருக்கட்டும்" என்று சொன்னார்.
25.     அதற்கு அவர்கள், "எங்கள் உயிரைக் காப்பாற்றிவிட்டீர். தலைவராகிய உம் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைப்பதாக! நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாகவே இருப்போம்" என்றார்கள்.
26.     யோசேப்பு எகிப்து நாட்டில் நிலச்சட்டம் ஒன்று கொண்டுவந்தார். அது இன்றுவரை வழக்கில் உள்ளது. ஜந்திலொரு பாகம் பாவோனுக்கு உரியது என்றாயிற்று. அர்ச்சகர்களின் நிலபுலன்கள் மட்டும் பார்வோனின் உடைமையாகவில்லை.
27.     இஸ்ரயேலர் எகிப்து நாட்டில் கோசேன் பகுதியில் குடியேறி, அதனை உரிமையாக்கிக்கொண்டு, அங்கே மிகவும் பல்கிப் பெருகினர்.
28.     யாக்கோபு பதினேழு ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார். அவரது வாழ்நாள் மொத்தம் நூற்றுநாற்பத்தேழு ஆண்டுகள்.
29.     அவர் தாம் இறக்கும் நாள் நெருங்கி வருவதைக் கண்டு, தம் மகன் யோசேப்பை வரவழைத்து, அவரை நோக்கி, "உன் பார்வையில் எனக்குத் தயை கிடைக்குமானால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, எனக்குக் கனிவும் பற்றும் காட்டுவதாக வாக்களி. என்னை எகிப்து நாட்டில் அடக்கம் செய்யாதே.
30.     நான் என் மூதாதையரோடு துஞ்சியபின், என்னை எகிப்தினின்று எடுத்துக் கொண்டு சென்று, என் மூதாதையரின் கல்லறையில் என்னையும் அடக்கம் செய்" என்றார். அதற்கு யோசேப்பு, நீர் சொன்னபடியே செய்வேன் என்றார்.
31.     அவரோ, எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றார். யோசேப்பும் ஆணையிட்டுக் கொடுத்தார். அப்பொழுது இஸ்ரயேல் படுக்கையின் தலைப்பக்கம் திரும்பித் தொழுதார்.

அதிகாரம் 48.


1.   இந்நிகழ்ச்சிகளுக்குப்பின், உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார் என்று யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
2.    இதோ உம் மகன் யோசேப்பு உம்மைக் காண வந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன், யாக்கோபு பெருமுயற்சி செய்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.
3.   யாக்கோபு யோசேப்பை நோக்கி, "எல்லாம் வல்ல இறைவன் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற இடத்தில் எனக்குக் காட்சியளித்து ஆசி வழங்கி,
4.    நான் உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன். உன்னைத் திரளான மக்கள் கூட்டமாக ஆக்குவேன். இந்நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் வழிமரபினர்க்கும் என்றுமுள உடைமையாகத் தருவேன் என்று வாக்களித்தார்.
5.   ஆகையால், நான் எகிப்திற்கு வந்து உன்னிடம் சேர்வதற்கு முன்பே உனக்கு இந்நாட்டில் பிறந்த இரு மைந்தரும் என் புதல்வர்களாய் இருப்பார்கள். ரூபன், சிமியோன் போன்று எப்ராயிமும் மனாசேயும் என்னுடையவர்களே.
6.   இவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் ஏனைய புதல்வர்கள் உன்னுடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் மூத்த சகோதரர்களின் பெயர் வரிசையில் சேர்க்கப்பட்டு, அவர்களது உரிமையில் பங்கு பெறுவர்.
7.   ஏனெனில், நான் பதானைவிட்டு வரும்பொழுது, வழியில் ராகேல் கானான் நாட்டில் இறந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தினாள். அப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன். எப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில் அவளை அடக்கம் செய்தேன்" என்றார்.
8.   பின் அவர் யோசேப்பின் புதல்வர்களைக் கொண்டு, இவர்கள் யார்? என்று கேட்டார்.
9.   யோசேப்பு தம் தந்தையிடம், இந்நாட்டில் கடவுள் எனக்குத் தந்தருளின மைந்தர்கள் இவர்கள்தாம் என்று சொல்ல, அவர், அவர்களை என் அருகில் கொண்டு வா: நான் அவர்களுக்கு ஆசி வழங்குகிறேன் என்றார்.
10     ஏனெனில், வயது முதிர்ச்சியினால் இஸ்ரயேலின் பார்வை மங்கிப்போக, அவர் எதையும் காண முடியாதவராய் இருந்தார். யோசேப்பு அவர்களை அவர் அருகில் கொண்டுவந்தவுடன் அவர் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டார்.
11     பின்னர், இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, "உன் முகத்தை நான் காண மாட்டேன் என்றே நினைத்தேன்: ஆனால் உன் வழிமரபையும் கூட நான் காணும்படி கடவுள் அருள்செய்தார்" என்றார்.
12.     பின்னர் யோசேப்பு அவர்மடியிலிருந்த தம் பிள்ளைகளை இறக்கிவிட்டு, தரையில் முகம் குப்புறவிழுந்து வணங்கினார்.
13.     பின்பு யோசேப்பு எப்ராயிமைத் தம் வலக்கையால் இஸ்ரயேலுக்கு இடப்புறமும், மனாசேயைத் தம் இடக்கையால் இஸ்ரயேலுக்கு வலப்புறமும் இருக்கும்படி அழைத்து வந்து இருவரையும் அவர் அருகில் நிறுத்தினார்.
14.     ஆனால் இஸ்ரயேல் தம் கைகளைக் குறக்காக நீட்டி வலக்கையை இளையவன் எப்ராயிமின் தலைமீதும் இடக்கையை தலைமகன் மனாசேயின் தலைமீதும் மாற்றி வைத்தார்.
15.     அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது: "என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ அந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆயராக விளங்கிவருகிறார்.
16.     அந்தக் கடவுள், என்னை எல்லாத் தீமையினின்றும் மீட்ட தூதர், இச்சிறுவர்களுக்கு ஆசி வழங்குவாராக! மேலும், என் பெயரும், என் தந்தையரான ஆபிரகாம், ஈசாக்கின் பெயர்களும் இவர்கள் மூலம் நிலைநிற்பனவாக! மண்ணுலகில் இவர்கள் பெருந்திரளாகப் பல்குவார்களாக!"
17.     தம் தந்தை வலக்கையை எப்ராயிம் தலைமேல் வைத்திருந்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் எப்ராயிம் தலைமேலிருந்த தம் தந்தையின் கையை மனாசேயின் தலைமேல் வைக்கும்படி எடுக்க முயன்றார்.
18.     யோசேப்பு தம் தந்தையை நோக்கி, "தந்தையே! இது சரியன்று: இவன் தான் தலைமகன். இவன் தலையின் மேல் உமது வலக்கையை வையும்" என்றார்.
19.     ஆனால் அவர் தந்தை மறுத்து, "தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு மக்களினமாகப் பல்கிப் பெருகுவான். ஆனால் இவன் தம்பி இவனிலும் பெரியவன் ஆவான். அவன் வழிமரபினர் மக்களினங்களாகப் பெருகுவர்" என்று கூறினார்.
20.     மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது: " எப்ராயிம், மனாசேயைப்போல் உன்னையும் கடவுள் வளரச் செய்வாராக என்று உங்கள் பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும்." இவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு முன் வைத்தார்.
21.     பின்பு இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, "இதோ நான் சாகப் போகிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். உங்கள் மூதாதையரின் நாட்டிற்கு உங்களை அவர் திரும்பவும் நடத்திச் செல்வார்.
22.     நான் என் வாளாலும் வில்லாலும் எமோரியரிடமிருந்து கைப்பற்றிய செக்கேம் பகுதியை, உன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில், உனக்கே தருகிறேன்" என்றார்.

அதிகாரம் 49.


1.   யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழவிருப்பதை நான் அறிவிக்கப் போகிறேன்.
2.   கூடிவந்து உற்றுக்கேளுங்கள்: யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.
3.   ரூபன்! நீயே என் தலைமகன்: என் ஆற்றல் நீயே: என் ஆண்மையின் முதற்கனி நீயே: மாண்பிலும் வலிமையிலும் முதன்மை பெற வேண்டியவனும் நீயே!
4.   ஆனால், நீரைப்போல் நிலையற்றவனாய், முதன்மையைப் பெறமாட்டாய். ஏனெனில் உன் தந்தையின் மஞ்சத்தில் ஏறினாய்: ஆம், என் படுக்கையைத் தீட்டுப்படுத்தினாய்.
5.   சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன் பிறப்புகளே! அவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்!
6.   மனமே, அவர்களது மன்றத்தினுள் நுழையாதிரு! மாண்பே, அவர்களது அவையினுள் அமராதிரு! ஏனெனில் கோப வெறி கொண்டு அவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்தார்கள். வீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்.
7.   அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும். அவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும். அவர்களை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன். அவர்களை இஸ்ரயேலினின்று சிதறடிப்பேன்.
8.   யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர்.
9.   யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென, அவன் கால் மடக்கிப் படுப்பான்: அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்?
10     அரசுரிமை உடையவர் வரும்வரையில் மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது: அவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது.
11     அவன் திராட்சைக் செடியில் தன் கழுதையையும், செழுமையான திராட்சைக்கொடியில் தன் கழுதைக் குட்டியையும் கட்டுவான். திராட்சை இரசத்தில் தன் உடையையும் திராட்சைச் சாற்றில் தன் மேலாடையையும் தோய்த்திடுவான்.
12.     அவன் கண்கள் திராட்சை இரசத்தினும் ஒளியுள்ளவை: அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.
13.     செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்: அவன் கப்பல் துறையில் இருந்திடுவான்: அவனது எல்லை சீதோன் வரை பரவியிருக்கும்.
14.     இசக்கார், இரு பொதியின் நடுவே படுத்திருக்கும் வலிமைமிகு கழுதை போன்றவன்.
15.     அவன் இளைப்பாறும் இடம் நல்லதென்றும் நாடு மிக வசதியானதென்றும் காண்பான்: எனவே சுமை தூக்கத் தோள் சாய்ப்பான். அடிமை வேலைக்கு இணங்கிடுவான்.
16.     தாண், இஸ்ரயேலின் குலங்களில் ஒன்றாக, தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
17.     தாண், வழியில் கிடக்கும் பாம்பு ஆவான்: அவன் பாதையில் தென்படும் நாகம் போல, குதிரைமேல் இருப்பவன் மல்லாந்து விழும்படி அதன் குதிங்காலைக் கடித்திடுவான்.
18.     ஆண்டவரே! உமது மீட்பிற்காகக் காத்திருக்கிறேன்.
19.     காத்து, கொள்ளைக் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாவான். அவனும் அவர்களைத் துரத்தித் தாக்கிடுவான்.
20.     ஆசேரின் நிலம் ஊட்ட மிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.
21.     நப்தலி, அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழந்த பெண்மான் ஆவான்.
22.     யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்: நீரூற்றருகில் மதில்மேல் படரும் கொடிபோல் கனி தருவான்.
23.     அவனுக்கு வில்லில் வல்லார் தொல்லை கொடுத்தார்: அவன்மீது அம்பெய்தார்: அவனிடம் பகை வளர்த்தார்.
24.     ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது: அவனுடய புயங்கள் துடிப்புடன் இயங்கின: ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார். இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.
25.     உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்: எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்: மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும் கீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும் கொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும் அவர் உனக்கு ஆசி வழங்குவார்.
26.     தந்தையின் ஆசிகள், பழம் பெரும் மலைகளின் ஆசியிலும், என்றுமுள குன்றுகளின் வள்ளன்மையிலும், வலியவை: இவை அனைத்தும் யோசேப்பின் மீது இறங்கிடுக! தன் சகோதரரின் இளவரசனாய்த் திகழ்வோனின் நெற்றியில் அவை துலங்கிடுக!
27.     பென்யமின், பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்: காலையில் வேட்டையாடிய இரையை அவன் விழுங்குவான்: மாலையில், கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வான்".
28.     இவர்கள் அனைவரும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தார் ஆவர். இவற்றை மொழிந்து இவர்களின் தந்தை இவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆசியை அளித்து வாழ்த்துரை வழங்கினார்.
29.     மேலும் அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: "இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்படவிருக்கிறேன். என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள்.
30.     அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தைக் கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார்.
31.     அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்: அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர்: அங்கே தான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன்.
32.     அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை."
33.     யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

அதிகாரம் 50.


1.   அப்பொழுது யோசேப்பு, தம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார்.
2.   பின்பு, தம் தந்தையின் உடலை மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர்.
3.   இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன. ஏனெனில் ஒரு சடலத்திற்கு முறையான பாதுகாப்புச் செய்ய நாற்பது நாள்கள் தேவைப்படும். எகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.
4.   துக்க நாள்கள் முடிந்த பின், யோசேப்பு பார்வோன் வீட்டாரிடம், "உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருக்கிறது என்றால், பார்வோனின் செவிகளில் இவ்வாறு சொல்லுங்கள்:
5.   தந்தை, நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆகவே, நான் எனக்காகக் கானான் நாட்டில் வெட்டி வைத்துள்ள கல்லறையில் என்னை நீ அடக்கம் செய் என்று சொல்லி என்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டார். ஆகவே, இப்பொழுது நான் அங்கே போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு விடை கொடுங்கள்" என்றார்.
6.   பார்வோன், "நீர் உறுதிமொழி கொடுத்துள்ளபடியே உம் தந்தையை அடக்கம் செய்யப் போய்வாரும்" என்றான்.
7.   ஆகவே, யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்யச் செல்கையில், பார்வோனின் அலுவலர், குடும்பப் பெரியோர், எகிப்து நாட்டுப் பெரியோர் அனைவரும் அவருடன் சென்றனர்.
8.   யோசேப்பின் வீட்டார், அவர் சகோதரர், அவர் தந்தை வீட்டார் அனைவரும் அவருடன் சென்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் மட்டும் கோசேன் பகுதியில் விட்டுச் சென்றனர்.
9.   தேர்களும் குதிரை வீரர்களும் அவருடன் சென்றார்கள். இப்படியாக மிகப்பெரிய பரிவாரம் அவரைப் புடை சூழ்ந்து சென்றது.
10     அவர்கள் யோர்தான் நதிக்கு அப்பால் இருந்த கோரேன் அத்தத்து என்ற இடத்திற்கு வந்ததும் அங்கே ஓலமிட்டுக் கதறி ஒப்பாரி வைத்துப் பெரிதும் புலம்பினர். யோசேப்பு தம் தந்தைக்காக ஏழுநாள் புலம்பல் சடங்கு நடத்தினார்.
11     அங்கே, கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு, "இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு" என்றனர். ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு ஆபேல் மிஸ்ராயிம் என்ற பெயர் வழங்கலாயிற்று.
12.     இப்படியாக அவருடைய புதல்வர் அவர் கட்டளைப்படியே அவருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தனர்.
13.     அவருடைய புதல்வர் அவரைக் கானான் நாட்டிற்கு எடுத்துச் சென்று மம்ரேக்கு எதிரில் மக்பேலா என்ற நிலத்தில் இருந்த குகையில் அடக்கம் செய்தனர். இந்த இடத்தை ஆபிரகாம் தமக்கென்று கல்லறை நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக எப்ரோன் என்ற இத்தியனிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.
14.     யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்தபின், அவரும் அவர் சகோதரரும் அவருடன் அவர் தந்தையை அடக்கம் செய்யச் சென்றிருந்த அனைவரும் எகிப்திற்குத் திரும்பினர்.
15.     அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு, "யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழி வாங்குவர்" என்று எண்ணினர்.
16.     எனவே அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: "உம் தந்தை இறப்பதற்குமுன், உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள் என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
17.     ஆகவே, இப்பொழுது உம்தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்." அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார்.
18.     அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, நாங்கள் உம் அடிமைகள் என்றனர்.
19.     யோசேப்பு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்: நான் கடவுளுக்கு இணையானவனா?
20.     நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.
21.     ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்" என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்: அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார்.
22.     யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.
23.     எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.
24.     யோசேப்பு தம் சகோதரரிடம், "நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால் கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்" என்றார்.
25.     மீண்டும் யோசேப்பு "கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்" என்று சொல்லி, இஸ்ரயேல புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார்.
26.     யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார். அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர்.

 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home