Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > 1 விராதன் வதைப் படலம் > 2 சரபங்கன் பிறப்ப நீங்கு படலம் > 3 அகத்தியப் படலம் > 4 சடாயு காண் படலம் >5 சூர்ப்பணகைப் படலம் > 6 கரன் வதைப் படலம் > 7 சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் >8 மாரீசன் வதைப் படலம் > 9 இராவணன் சூழ்ச்சிப் படலம் > 10 சடாயு உயிர் நீத்த படலம் > 11 அயோமுகிப் படலம் > 12 கவந்தன் படலம் > 13 சவரி பிறப்பு நீங்கு படலம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
ஆரணிய காண்டம் - 11. அயோமுகிப் படலம்


நெடு வரைச் சாரலில் இராம இலக்குவர் தங்கியிருத்தல்

அந்தி வந்து அணுகும்வேலை, அவ் வழி, அவரும் நீங்கி,
சிந்துரச் செந் தீக் காட்டு ஓர் மை வரைச் சேக்கை கொண்டார்;
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்ததென்ன
வெந் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே. 1

துயர மிகுதியால் தூக்கமின்றி இருத்தல்

தேன் உக அருவி சிந்தி, தெருமரல் உறுவ போல,
கானமும் மலையும், எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல்,
மானமும் சினமும் தாதை மரணமும், மைந்தர் சிந்தை
ஞானமும் துயரும் தம்முள் மலைந்தென, நலிந்த அன்றே. 2

மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும்
பொய் உறு பிறவிபோல, போக்க அரும் பொங்கு கங்குல்,
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர, உயிர்ப்பு நீள,
கையறவு உறுகின்றாரால்; காணல் ஆம் கரையிற்று, அன்றே. 3

யாம் அது தெரிதல் தேற்றாம்; இன் நகைச் சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ? முகமதி காண்கிலாதோ?
தே மரு தெரியல் வீரன் கண் எனத் தெரிந்த செய்ய
தாமரை, கங்குற் போதும், குவிந்திலாத் தன்மை என்னோ? 4

பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து,
எண்ணியது அறிதல் தேற்றாம்; இமைத்தில, இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும், வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே. 5

'வண்டு உளர் கோதைச் சீதை வாள் முகம் பொலிய வானில்
கண்டனென்' என்று, வீரற்கு, ஆண்டு ஒரு காதல் காட்ட,
தண் தமிழ்த் தென்றல் என்னும் கோள் அராத் தவழும் சாரல்,
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே. 6

களியுடை அனங்கக் கள்வன் கரந்து உறை கங்குற்காலம்
வெளிபடுத்து, உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம்-
நளி இருள் பிழம்பு என்று, ஈண்டு, நஞ்சொடு கலந்த நாகத்
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என-சுட்டது அன்றே. 7

இடம்படு மானத் துன்பம், இருள்தர, எண்ணின் தீர்ந்தான்
விடம் பரந்தனையது ஆய வெண் நிலா வெதுப்ப, வீரன்,
படம் பரந்தனைய அல்குல், பால் பரந்தனைய இன் சொல்,
தடம் பெருங் கண்ணினாள்தன் தனிமையை நினையலுற்றான். 8

சீதையை நினைத்து இராமன் வருந்துதல்

மடித்த வாயன்; வயங்கும் உயிர்ப்பினன்,
துடித்து வீங்கி, ஒடுங்குறு தோளினன்;
பொடித்த தண் தளிர்ப் பூவொடு மால் கரி
ஒடித்த கொம்பு அனையாள்திறத்து உன்னுவான்: 9

'"வாங்கு வில்லன் வரும், வரும்" என்று, இரு
பாங்கும், நீள் நெறி பார்த்தனளோ?' எனும்-
வீங்கும் வேலை விரி திரை ஆம் என,
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான். 10

'தன் நினைந்திலள் என்பது சாலுமோ-
மின் நினைந்த விலங்கும் எயிற்றினான்,
"நில் நில்" என்று, நெருங்கியபோது அவள்
என் நினைந்தனளோ?' என எண்ணுமால். 11

'நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயில் மதி என மட்குவாள்,
"வெஞ் சினம் செய் அரக்கர் தம் வெம்மையை
அஞ்சினான்கொல்?" என்று ஐயுறுமால்' என்பான். 12

பூண்ட மானமும், போக்க அருங் காதலும்,
தூண்ட நின்று, இடை தோமுறும் ஆர் உயிர்,
மீண்டு மீண்டு வெதுப்ப, வெதும்பினான்,
'வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்?' என்பான். 13

வில்லை நோக்கி நகும்; மிக வீங்கு தோட்-
கல்லை நோக்கி நகும்; கடைக்கால் வரும்
சொல்லை நோக்கித் துணுக்கெனும்-தொல் மறை
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான். 14

கூதிர் வாடை வெங் கூற்றினை நோக்கினன்;
'வேத வேள்வி விதிமுறை மேவிய
சீதை என்வயின் தீர்ந்தனளோ?' எனும்-
போதகம் எனப் 'பொம்' என் உயிர்ப்பினான். 15

'நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான்,
என் துணைக் குல மங்கை ஓர் ஏந்திழை
தன் துயர்க்குத் தகவு இலென் ஆயினேன்;
நன்று நன்று, என் வலி?' என, நாணுமால். 16

சாயும், தம்பி திருத்திய தண் தளிர்;
தீயும், அங்கு அவை; தீய்தலும், செல் இருந்து
ஆயும்; ஆவி புழுங்க அழுங்குமால்-
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான். 17

பிரிந்த ஏதுகொல்? பேர் அபிமானம்கொல்?
தெரிந்தது இல்லை; திரு மலர்க்கண் இமை
பொருந்த, ஆயிரம் கற்பங்கள் போக்குவான்;
இருந்தும் கண்டிலன்; கங்குலின் ஈறுஅரோ. 18

'வென்றி விற் கை இளவலை! மேல் எலாம்
ஒன்று போல உலப்பு இல் நாள்கள் தாம்
நின்று காண்டி அன்றே? நெடுங் கங்குல்தான்
இன்று நீள்வதற்கு ஏது என்?' என்னுமால். 19

நீண்ட மாலை மதியினை, 'நித்தமும்
மீண்டு மீண்டு மெலிந்தனை, வெள்குவாய்;
பூண்ட பூணவள் வாள் முகம் போதலால்,
ஈண்டு, சால விளங்கினை' என்னுமால். 20

'நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து,
ஆணி ஆய பழி வர, அன்னது
நாணி, நாடு கடந்தனனாம்கொலோ
சேண் உலாம் தனித் தேரவன்?' என்னுமால். 21

சுட்ட கங்குல் நெடிது எனச் சோர்கின்றான்,
'முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு
கட்டி, வாள் அரக்கன், கதிரோனையும்
இட்டனன்கொல் இருஞ் சிறை?' என்னுமால். 22

'துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின்,
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய்
முடியும் ஆகின், முடியும், இம் மூரி நீர்
நெடிய மா நிலம்' என்ன, நினைக்குமால். 23

'திறத்து இனாதன, செய் தவத்தோர் உற
ஒறுத்து, ஞாலத்து உயிர்தமை உண்டு, உழல்
மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல்,
அறத்தினால் இனி ஆவது என்?' என்னுமால். 24

தேனின் தெய்வத் திரு நெடு நாண் சிலைப்
பூ நின்று எய்யும் பொரு கணை வீரனும்,
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான்;
தான் நின்று எய்யகில்லான், தடுமாறினான். 25

உழந்த யோகத்து ஒருமுதல் கோபத்தால்
இழந்த மேனியும் எண்ணி இரங்கினான்-
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ,
பழந்துயர்க்குப் பரிவுறும் பான்மையால்? 26

நீலமான நிறத்தன் நினைந்தவை
சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில்,
மூல மா மலர் முன்னவன் முற்றுறும்
காலம் ஆம் என, கங்குல் கழிந்ததே. 27

வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து, அளியும்
கள்ளும் சிலம்பும் பூங் கோதைக் கற்பின் கடலில் படிவாற்கு,
புள்ளும் சிலம்பும்; பொழில் சிலம்பும்; புனலும் சிலம்பும்; புனை கோலம்
உள்ளும் சில் அம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ ? 28

மயிலும் பெடையும் உடன் திரிய, மானும் கலையும் மருவி வர,
பயிலும் பிடியும் கட கரியும் வருவ, திரிவ, பார்க்கின்றான்;
குயிலும், கரும்பும், செழுந்தேனும், குழலும், யாழும், கொழும் பாகும்,
அயிலும், அமுதும், சுவை தீர்த்த மொழியைப் பிரிந்தான் அழியானோ? 29

முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான்-முது கங்குல்
விடி நாள் கண்டும், கிளி மிழற்றும் மென் சொல் கேளா, வீரற்கு, 'ஆண்டு
அடி நாள், செந் தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால், யான் அடைந்த
கடி நாள் கமலத்து' என அவிழ்த்துக் காட்டுவான்போல், கதிர் வெய்யோன். 30

பொழிலை நோக்கும்; பொழில் உறையும் புள்ளை நோக்கும்; பூங்கொம்பின்
எழிலை நோக்கும்; இள மயிலின் இயலை நோக்கும்; இயல்பு ஆனாள்
குழலை நோக்கி, கொங்கை இணைக் குவட்டை நோக்கி, அக் குவட்டின்
தொழிலை நோக்கி, தன்னுடைய தோளை நோக்கி, நாள் கழிப்பான். 31

சீதையைக் கவர்ந்த அரக்கனைத் தேட இராம இலக்குவர் முயல்தல்

அன்ன காலை, இள வீரன், அடியின் வணங்கி, 'நெடியோய்! அப்
பொன்னை நாடாது, ஈண்டு இருத்தல் புகழோ?' என்ன, புகழோனும்,
'சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து' என்ன,
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெங் கானம் போயினரால். 32

ஆசை சுமந்த நெடுங் கரி அன்னார்
பாசிலை துன்று வனம் பல பின்னா,
காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார்;
யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார். 33

மண்படி செய்த தவத்தினில் வந்த
கள் படி கோதையை நாடினர், காணார்,
உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க,
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார். 34

ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்;
நாரியை எங்கணும் நாடினன், நாடி,
பேர் உலகு எங்கும் உழன்று, இருள் பின்னா,
மேருவின்-வெங் கதிர்-மீள மறைந்தான். 35

அரண்டு, அருகும் செறி அஞ்சன புஞ்சம்
முரண்டன போல், இருள் எங்கணும் முந்த,
தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி,
இருண்டன, மாதிரம் எட்டும் இரண்டும். 36

இளிக்கு அறை இன் சொல் இயைந்தன, பூவை,
கிளிக்கு அறையும் பொழில், கிஞ்சுக வேலி,
ஒளிக் கறை மண்டிலம் ஒத்துளது, ஆங்கு ஓர்
பளிக்கு அறை; கண்டு, அதில் வைகல் பயின்றார். 37

இலக்குவன் நீர் தேடிச் செல்லுதல்

அவ் இடை எய்திய அண்ணல் இராமன்
வௌ; விடைபோல் இள வீரனை, 'வீர!
இவ் இடை நாடினை, நீர் கொணர்க' என்றான்;
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான். 38

இலக்குவனைக் கண்ட அயோமுகி காமுறுதல்

எங்கணும் நாடினன்; நீர் இடை காணான்;
சிங்கம் எனத் தமியன் திரிவானை,
அங்கு, அவ் வனத்துள், அயோமுகி என்னும்
வெங் கண் அரக்கி விரும்பினள் கண்டாள். 39

நல் மதியோர் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்;
'மன்மதன் ஆம் இவன்' என்னும் மனத்தாள். 40

அழுந்திய சிந்தை அரக்கி, அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து, எதிர் நின்றாள்;
'புழுங்கும் என் நோவொடு புல்லுவென்; அன்றி,
விழுங்குவெனோ' என விம்மல் உழந்தாள். 41

'இரந்தனென் எய்தியபோது, இசையாது
சுரந்தனனேல், நனி கொண்டு கடந்து, என்
முரஞ்சினில் மேவி முயங்குவென்' என்று,
விரைந்து எதிர் வந்தனன், தீயினும் வெய்யான். 42

உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள்; ஒன்ற
எயிற்றின் மலைக் குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள்; வயக் கொடு மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த முலை, குழி கண்ணாள்; 43

பற்றிய கோள் அரி, யாளி, பணிக்கண்
தெற்றிய பாத சிலம்பு சிலம்ப,
இற்று உலகு யாவையும் ஈறுறும் அந் நாள்,
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள். 44

ஆழி வறக்க முகக்க அமைந்த
மூழை எனப் பொலி மொய் பில வாயாள்;
கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால்,
ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள்; 45

தடி தடவ, பல தலை தழுவ, தாள்
நெடிது அடைய, குடர் கெழுமு நிணத்தாள்;
அடி தடவ, பட அரவம் இசைக்கும்
கடி தடம் உற்றவள், உருமு கறிப்பாள்; 46

இவை இறை ஒப்பன என்ன, விழிப்பாள்;
அவை குளிர, கடிது அழலும் எயிற்றாள்;
குவை குலையக் கடல் குமுற உரைப்பாள்;
நவை இல் புவித்திரு நாண நடப்பாள். 47

நீள் அரவச் சரி, தாழ், கை, நிரைத்தாள்;
ஆள் அரவப் புலி ஆரம் அணைத்தாள்;
யாளியினைப் பல தாலி இசைத்தாள்;
கோள் அரியைக் கொடு தாழ் குழை இட்டாள்; 48

அரக்கியை யார் என இலக்குவன் வினவல்

நின்றனள், ஆசையின் நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப, குளிர்ப்ப விழிப்பாள்
மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால்,
கன்று இருளில் திரி கோளரி கண்டான். 49

'பண்டையில் நாசி இழந்து பதைக்கும்
திண் திறலாளொடு தாடகை சீராள்;
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர்
ஒண்தொடி ஆம், இவள்' என்பது உணர்ந்தான். 50

'பாவியர் ஆம் இவர், பண்பு இலர்; நம்பால்
மேவிய காரணம் வேறு இலை' என்பான்;
'மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய்!
யாவள் அடீ? உரைசெய், கடிது' என்றான். 51

அயோகியின் காம வெறி

பேசினன், அங்கு அவள் பேசுற நாணாள்;
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான்,
'நேசம் இல், அன்பினளாயினும், நின்பால்
ஆசையின் வந்த அயோமுகி' என்றாள். 52

பின்னும் உரைப்பவள், 'பேர் எழில் வீரா!
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணித் தட மார்பு புணர்ந்து, என்
இன் உயிரைக் கடிது ஈகுதி' என்றாள். 53

ஆறிய சிந்தையள் அஃது உரைசெய்ய,
சீறிய கோளரி கண்கள் சிவந்தான்;
'மாறு இல் வார் கணை, இவ் உரை வாயில்
கூறிடின், நின் உடல் கூறிடும்' என்றான். 54

மற்று அவன் அவ் உரை செப்ப, மனத்தால்
செற்றிலள்; கைத் துணை சென்னியில் வைத்தாள்;
'கொற்றவ! நீ எனை வந்து உயிர் கொள்ளப்
பெற்றிடின், இன்று பிறந்தனென்' என்றாள். 55

வெங் கதம் இல்லவன் பின்னரும், 'மேலோய்!
இங்கு நறும் புனல் நாடுதி என்னின்,
அங்கையினால் எனை, "அஞ்சலை" என்றால்,
கங்கையின் நீர் கொணர்வென் கடிது' என்றாள். 56

சுமித்திரை சேய் அவள் சொன்ன சொல் அன்ன
கமித்திலன்; 'நின் இரு காதொடும் நாசி
துமிப்பதன் முன்பு அகல்' என்பது சொல்ல,
இமைத்திலள், நின்றனள், இன்ன நினைந்தாள். 57

'எடுத்தனென் ஏகினென், என் முழைதன்னுள்
அடைத்து, இவன் வெம்மை அகற்றிய பின்னை,
உடற்படுமால், உடனே உறும் நன்மை;
திடத்து இதுவே நலன்' என்று, அயல் சென்றாள். 58

அயோமுகி இலக்குவனை தூக்கிச் செல்லுதல்

மோகனை என்பது முந்தி முயன்றாள்;
மாக நெடுங் கிரி போலியை வவ்வா
ஏகினள்-உம்பரின் இந்துவொடு ஏகும்
மேகம் எனும்படி-நொய்தினின் வெய்யாள். 59

மந்தரம் வேலையில் வந்ததும், வானத்து
இந்திரன் ஊர் பிடி என்னலும், ஆனாள்;
வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள். 60

ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி,
பூங் கழல் வார் சிலை மீளி பொலிந்தான்;
வீங்கிய வெஞ் சின வீழ் மத வெம் போர்
ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான். 61

இப்படி ஏகினள், அன்னவள், இப்பால்
'அப்பு இடை தேடி நடந்த என் ஆவித்
துப்புடை மால் வரை தோன்றலன்' என்னா,
வெப்புடை மெய்யொடு வீரன் விரைந்தான். 62

இலக்குவனைக் காணாத இராமன் துயருறுதல்

வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர்
ஐது ஆதலினோ? அயல் ஒன்று உளதோ?
நொய்தாய் வர, வேகமும் நொய்திலனால்,
எய்தாது ஒழியான்; இது என்னைகொலாம்? 63

'"நீர் கண்டனை இவ் வழி நேடினை போய்,
சார் கொண்டு" என, இத்துணை சார்கிலனால்;
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்பால்
போர் கொண்டனனோ? பொருள் உண்டு இது' எனா, 64

'அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன்
வஞ்சித்த இராவணன் வவ்வினனோ?
நஞ்சின் கொடியான் நடலைத் தொழிலால்,
துஞ்சுற்றனனோ, விதியின் துணிவால்? 65

'வரி விற் கை என் ஆர் உயிர் வந்திலனால்;
"தரு சொல் கருதேன்; ஒரு தையலை யான்
பிரிவித்தனென்" என்பது ஓர் பீழை பெருத்து
எரிவித்திட, ஆவி இழந்தனனோ? 66

'உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன்
கண்தான்; அயல் வேறு ஒரு கண் இலெனால்;
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென்;
எண்தான் இலென்; எங்ஙனம் நாடுகெனோ? 67

'தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்-
உள்ளாய்! ஒரு நீயும் ஒளித்தனையோ?
பிள்ளாய்! பெரியாய்! பிழை செய்தனையால்;
கொள்ளாது உலகு உன்னை; இதோ கொடிதே! 68

'பேரா இடர் வந்தன பேர்க்க வலாய்!
தீரா இடர் தந்தனை; தெவவர் தொழும்
வீரா! எனை இங்ஙன் வெறுத்தனையோ?
வாராய், புறம் இத்துணை வைகுதியோ? 69

'என்னைத் தரும் எந்தைய, என்னையரை,
பொன்னைப் பொருகின்ற பொலங் குழையால்-
தன்னை, பிரிவேன்; உளென் ஆவதுதான்,
உன்னைப் பிரியாத உயிர்ப்பு அலவோ? 70

'பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள்-
தன்-தேடி வருந்து தவம்புரிவேன்,
நின்-தேடி வருந்த நிரப்பினையோ?
என்-தேடினை வந்த இளங் களிறே! 71

'இன்றே இறவாது ஒழியேன்; எமரோ
பொன்றாது ஒழியார், புகல்வார் உளரால்;
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
கொன்றாய்; கொடியாய்! இதுவும் குணமோ? 72

'மாந்தா முதல் மன்னவர்தம் வழியில்,
வேந்து ஆகை துறந்தபின், மெய் உறவோர்
தாம் தாம் ஒழிய, தமியேனுடனே
போந்தாய்; எனை விட்டனை போயினையோ?' 73

என்னா உரையா, எழும்; வீழும்; இருந்து
உன்னா, உணர்வு ஓய்வுறும்; ஒன்று அலவால்;
'மின்னாது இடியாது, இருள்வாய் விளைவு ஈது
என் ஆம்? எனும், என் தனி நாயகனே. 74

நாடும், பல சூழல்கள் தோறும் நடந்து;
ஓடும், பெயர் சொல்லி உளைந்து; உயிர் போய்
வாடும் வகை சோரும்; மயங்குறுமால்-
ஆடும் களி மா மத யானை அனான். 75

'கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று
இமையாதவன், இத்துணை தாழ்வுறுமோ?
சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு,
அமையாதுகொல் வாழ்வு? அறியேன்' எனுமால். 76

அரக்கியின் அலறல்

'அறப் பால் உளதேல், அவன் முன்னவன் ஆய்ப்
பிறப்பான் உறில், வந்து பிறக்க' எனா,
மறப் பால் வடி வாள் கொடு, மன் உயிரைத்
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்வாய். 77

பேர்ந்தான், நெடு மாயையினில் பிரியர்
ஈர்ந்தான், அவள் நாசி பிடித்து, இளையோன்;
சோர்ந்தாள் இடு பூசல் செவித் துளையில்
சேர்ந்து ஆர்தலுமே, திருமால் தெருளா, 78

'பரல் தரு கானகத்து அரக்கர், பல் கழல்
முரற்று அரு வெஞ் சமம் முயல்கின்றார், எதிர்
உரற்றிய ஓசை அன்று; ஒருத்தி ஊறுபட்டு,
அரற்றிய குரல்; அவள் அரக்கியாம்' எனா, 79

இராமன் இலக்குவனை தேடிச் சேர்தல்

அங்கியின் நெடும் படை வாங்கி, அங்கு அது
செங் கையில் கரியவன் திரிக்கும் எல்லையில்,
பொங்கு இருள் அப் புறத்து உலகம் புக்கது;
கங்குலும், பகல் எனப் பொலிந்து காட்டிற்றே. 80

நெடு வரை பொடிபட, நிவந்த மா மரம்,
ஒடிவுற, நிலமகள் உலைய, ஊங்கு எலாம்,
'சட சட' எனும் ஒலி தழைப்பத் தாக்கவும்,
முடுகினன் இராமன், வெங் காலின் மும்மையான். 81

ஒருங்கு உயர்ந்து, உலகின்மேல் ஊழிப் பேர்ச்சியுள்
கருங் கடல் வருவதே அனைய காட்சித் தன்
பெருந் துணைத் தம்முனை நோக்கி, பின்னவன்
'வருந்தலை வருந்தலை வள்ளியோய்!' எனா. 82

'வந்தனென் அடியனேன்; வருந்தல், வாழி! நின்
அந்தம் இல் உள்ளம்' என்று, அறியக் கூறுவான்,
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன்;
சிந்தின நயனம் வந்தனைய செய்கையான். 83

ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன்,
ஈற்று இளங் கன்றினைப் பிரிவுற்று, ஏங்கி நின்று,
ஆற்றலாது அரற்றுவது, அரிதின் எய்திட,
பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான். 84

நடந்தது கூற இராமன் வேண்டுதல்

தழுவினன் பல் முறை; தாரைக் கண்ணின் நீர்
கழுவினன், ஆண்டு அவன் கனக மேனியை;
'வழுவினையாம் என மனக் கொடு ஏங்கினேன்;
எழு என, மலை என, இயைந்த தோளினாய்! 85

'என்னை ஆங்கு எய்தியது? இயம்புவாய்' என,
அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும்,
இன்னலும், உவகையும், இரண்டும் எய்தினான்-
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான். 86

'ஆய்வுறு பெருங் கடல் அகத்துள் ஏயவன்
பாய் திரை வருதொறும், பரிதற்பாலனோ?
தீவினைப் பிறவி வெஞ் சிறையில் பட்ட யாம்,
நோய், உறு துயர் என நுடங்கல் நோன்மையோ? 87

'மூவகை அமரரும், உலகம் மும்மையும்
மேவ அரும் பகை எனக்கு ஆக மேல்வரின்,
ஏவரே கடப்பவர்? எம்பி! நீ உளை
ஆவதே வலி; இனி அரணும் வேண்டுமோ? 88

'பிரிபவர் யாவரும் பிரிக் பேர் இடர்
வருவன யாவையும் வருக் வார் கழல்
செரு வலி வீர! நின்-தீரும் அல்லது,
பருவரல், என்வயின் பயிலற்பாலதோ? 89

'வன் தொழில் வீர! "போர்வலி அரக்கியை
வென்று, போர் மீண்டனென்" என, விளம்பினாய்;
புன் தொழில் அனையவள், புகன்ற சீற்றத்தால்
கொன்றிலைபோலுமால்? கூறுவாய்' என்றான். 90

'துளைபடு மூக்கொடு செவி துமித்து உக,
வளை எயிறு இதழொடு அரிந்து, மாற்றிய
அளவையில் பூசலிட்டு அரற்றினாள்' என,
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான். 91

'தொல் இருள் தனைக் கொலத் தொடர்கின்றாளையும்,
கொல்லலை; நாசியைக் கொய்து நீக்கினாய்;
வல்லை நீ; மனு முதல் மரபினோய்' என,
புல்லினன் - உவகையின் பொருமி விம்முவான். 92

வருண மந்திரம் சொல்லி வான் நீர் உண்ணல்

பேர அருந் துயர் அறப் பேர்ந்துளோர் என,
வீரனும், தம்பியும் விடிவு நோக்குவார்,
வாருணம் நினைந்தனர்; வான நீர் உண்டு,
தாரணி தாங்கிய கிரியில் தங்கினார். 93

கல் அகல் வெள்ளிடை, கானின் நுண் மணல்,
பல்லவம், மலர் கொடு படுத்த பாயலின்,
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன்,
மெல் அடி, இளையவன் வருட, வீரனே. 94

இராமன் பிரிவாற்றாமையால் துயருறுதல்

மயில் இயல் பிரிந்தபின், மான நோயினால்,
அயில்விலன் ஒரு பொருள்; அவலம் எய்தலால்
துயில்விலன் என்பது சொல்லற்பாலதோ?
உயிர், நெடிது உயிர்ப்பிடை, ஊசலாடுவான். 95

'மானவன் மெய் இறை மறக்கலாமையின்
ஆனதோ? அன்று எனின், அரக்கர் மாயமோ?-
கானகம் முழுவதும், கண்ணின் நோக்குங்கால்
சானகி உரு எனத் தோன்றும் தன்மையே! 96

கருங்குழல், சேயரிக் கண்ணி, கற்பினோர்க்கு
அருங் கலம், மருங்கு வந்து இருப்ப, ஆசையால்
ஒருங்குறத் தழுவுவென்; ஒன்றும் காண்கிலென்;
மருங்குல்போல் ஆனதோ வடிவம், மெல்லவே? 97

'புண்டரிகப் புது மலரில் தேன் போதி
தொண்டை அம் சேயொளித் துவர்த்த வாய் அமுது
உண்டனென்; ஈண்டு அவள் உழையள் அல்லளால்;
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ? 98

'மண்ணினும், வானினும், மற்றை மூன்றினும்,
எண்ணினும், பெரியது ஓர் இடர் வந்து எய்தினால்,
தண் நறுங் கருங் குழல் சனகன் மா மகள்
கண்ணினும், நெடியதோ, கொடிய கங்குலே? 99

'அப்புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என-
உப்புடை இந்து என்று உதித்த ஊழித் தீ,
வெப்புடை விரி கதிர் வெதுப்ப-மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ, கொதிக்கும் வானமே? 100

இன்னன இன்னன பன்னி, ஈடு அழி
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்;
அன்னது கண்டனன், அல்கினான் என,
துன்னிய செங் கதிர்ச் செல்வன் தோன்றினான். 101

'நிலம் பொறை இலது' என, நிமிர்ந்த கற்பினாள்,
நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய,
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில், கடிது போயினார். 102

மிகைப் பாடல்கள்

'மாங்கனி, தாழையின் காய், வாழையின் கனிகளோடும்,
ஆம் கனி ஆவதே என்று அருந்தி, நான் விரும்பி வைத்தேன்;
பாங்கின் நல் அமுது செய்மின்' என்று அவள் பரவி, நல்கும்
தேம் கனி இனிதின் உண்டு, திரு உளம் மகிழ்ந்தான், வீரன். 5-1

'பாரிடமே இது; பரவை உற்றுறும்
பார் இடம் அரிது எனப் பரந்த மெய்யது;
பார், இடம் வலம் வரப் பரந்த கையது;-
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய்! 21-1

காவாய் என்பால், தன் ஐயரான் கைவிட வல்லேன்;
வேவா நின்றே நிற்க, 'இவ் வெய்யோற்கு இணை ஆவார்
நீ வா' என்ன, அன்னது கண்டும், அயர்கில்லேன்;
போவேன் யானே; எவ் உலகோ, என் புகல் அம்மா! 29-1

என்று அவள் கூறலும், மைந்தனும், 'இன்னே
நன்றியதாய நறும் புனல் நாடி,
வென்றி கொள் வீரன் விடாய் அது தீர்ப்பான்
இன்று இவண் வந்தனன்' என்று உரைசெய்தான். 55-1


 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home