இரண்டாம் அத்தியாயம்
பழைய நண்பர்கள்
ரதம் கோட்டையின்
உள் வாசலைக் கடந்து காஞ்சி மாகநகரின் அழகிய விசாலமான வீதிகளில்
போகத் தொடங்கியபோது, பரஞ்சோதிக்குப் பழைய நினைவு வந்து. எட்டு
மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் இதே அந்தி நேரத்தில்,
இதேவிதமாகப் பூரணச் சந்திரன் கீழ்வானத்தில் உதயமாகிக்
கொண்டிருந்த சமயத்தில், தாம் தெற்குக் கோட்டை வாசல் வழியாகக்
காஞ்சி நகருக்குள் பிரவேசித்ததும், அன்றிரவு நிகழ்ந்த
சம்பவங்களும் அவர் உள்ளத்தில் விரைவாகத் தோன்றின. அன்று அவர்
காஞ்சியில் பிரவேசித்ததற்கும் இன்று பிரவேசித்ததற்கும் எவ்வளவு
வித்தியாசம்?
"தளபதி! என்ன
ஒரேயடியாக மௌனத்தில் ஆழ்ந்து விட்டீர்?" என்று மாமல்லர்
கேட்டதும், பரஞ்சோதி சிந்தனை உலகிலிருந்து வௌி உலகத்துக்கு
வந்தார். "மன்னிக்கவேண்டும், பிரபு! தங்களுடைய அன்பானது அப்படி
என்னை மெய்மறக்கச் செய்துவிட்டது. தென்னாட்டிலுள்ள
மல்லர்களையெல்லாம் வென்று மகாமல்லர் என்று பட்டம் பெற்ற பல்லவ
குமாரனின் பக்கத்தில் சமமாக உட்கார்ந்து போவது நான்தானா என்று
எனக்கே சந்தேகமாயிருக்கிறது!" "நல்ல சந்தேகம்! உமக்குப்
பக்கத்தில் உட்கார்ந்து செல்வது எனக்கல்லவா கௌரவம்! ராட்சசப்
புலிகேசியின் சேனாசமுத்திரத்தை மந்திரகிரியைப் போல் கடைந்து
கலக்கிய மகா வீரனல்லவா நீர்? வாதாபி யானைப் படையாகிய
மேகத்திரளைச் சிதற அடித்த பெரும் புயற்காற்று அல்லவா நீர்?"
"பல்லவக் குதிரைப் படையின் சாகசச் செயல்களின் புகழ் காஞ்சி
வரையில் வந்து எட்டியிருக்கிறதா?" என்று தம்முடைய புகழைப்
படையின் புகழாக மாற்றிக் கூறினார் தளபதி.
"ஏன் எட்டவில்லை?
வாரந்தோறும் சக்கரவர்த்தி அனுப்பிய ஓலைகளிலிருந்து நீர் தலைமை
வகித்த குதிரைப் படையின் வீரச் செயல்களையெல்லாம் அவ்வப்போது
தெரிந்து கொண்டோம். தெரிந்த விவரங்களைப் பறையறைந்து நாடு
நகரமெல்லாம் தெரியப்படுத்தினோம்!" என்றார் மாமல்லர். "ஆஹா!
தங்களுடைய அன்பினால் எப்படி மெய்ம்மறந்து போனேன்,
பார்த்தீர்களா? சக்கரவர்த்தி கொடுத்த ஓலையைத் தங்களிடம்
கொடுக்க மறந்துவிட்டேன்!" என்று கூறிக்கொண்டே பரஞ்சோதி
இடுப்பில் பத்திரமாகச் செருகியிருந்த ஓலைக் குழாயை எடுத்துக்
கொடுத்தார்.
"தளபதி! இது
சக்கரவர்த்தி கொடுத்த ஓலைதானே? எங்கேயாவது வழி நடுவில் ஓலை
மாறிவிடவில்லையே?" என்று மாமல்லர் சிரித்துக்கொண்டே கேட்டார்.
"அந்த வரலாறுக்கூடத் தங்களுக்குத் தெரியுமா?" என்று பரஞ்சோதி
கூறியபோது அவருடைய முகத்தில் மலர்ந்த புன்னகையில் நாணமும்
கலந்திருந்தது. "ஆமாம், தெரியும்! நீர் இங்கிருந்து போகும்
வழியில் வஜ்ரபாஹுவைச் சிநேகம் செய்துகொண்டது முதற்கொண்டு
எல்லாம் எனக்குத் தெரியும்...!" என்றதும், இரண்டு பேருமே
கலகலவென்று நகைத்தார்கள்.
மாமல்லர் மேலும்
தொடந்து கூறினார்; "சக்கரவர்த்தி எட்டு மாதத்துக்கு முன்பு
இங்கிருந்து கிளம்பியபோது, 'நானும் வருவேன்' என்று எவ்வளவோ
பிடிவாதம் பிடித்தேன். சக்கரவர்த்தி அதை உறுதியாக
மறுத்துவிட்டார். அப்படியானால் வாராவாரம் போர்க்களத்தில்
நடப்பதையெல்லாம் விவரமாக எழுதியனுப்ப வேண்டும் என்று கேட்டுக்
கொண்டேன். அந்தப்படியே சக்கரவர்த்தி எழுதி அனுப்பி வருகிறார்.
தளபதி! இன்றைக்குத் தான் நான் உம்மை முதன்முதலில்
பார்க்கிறேன். ஆனாலும், நீ எனக்குப் புதியவர் அல்ல;
சக்கரவர்த்தி அனுப்பி வந்த ஓலைகளின் மூலமாக உம்முடன் சென்ற
எட்டு மாதமும் பழகி வந்திருக்கிறேன். உம்மை இன்று பார்த்ததும்,
புதிய மனிதராகவே எனக்குத் தோன்றவில்லை. வெகு காலம் பழகிய
சிநேகிதராகவே தோன்றியது...!" "பிரபு, எனக்கும் அப்படியேதான்
தோன்றுகிறது. கிளிப் பிள்ளையைப் போல் தாங்கள் சொன்னதையே
திருப்பிச் சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மையில், அப்படித்
தான் ஏனென்றால், சென்ற எட்டு மாதத்தில் சக்கரவர்த்தி தங்களைப்
பற்றி ஏதாவது பேசாத நாளே கிடையாது. அதனால், எனக்கும் தாங்கள்
புதியவராகவே தோன்றவில்லை."
குமார
சக்கரவர்த்தி பரஞ்சோதியின் கரங்களை இறுகப் பிடித்துக்கொண்டு,
"தளபதி! அப்படியானால் நாம் இருவரும் பாக்கியசாலிகள்தாம்.
தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் வாக்கு நம் விஷயத்தில்
முற்றும் உண்மையாயிற்று. புணர்ச்சி பழகுதல் வேண்டா
உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்று தமிழ்மறை
சொல்லுகிறதல்லவா? (சாதாரணமாக, ஒருவரையொருவர் அடிக்கடி
சந்தித்துக் கலந்து பழகுவதனால் நட்பு உண்டாகி வளருகிறது.
ஆனால், இரண்டு பேருக்குள் ஒத்த உணர்ச்சி இருக்கும் பட்சத்தில்,
மேற்சொன்னவாறு கலந்து பழகுதல் இல்லாமலே நட்பாகிய தலைசிறந்த
உறவு ஏற்பட்டுவிடும்.) திருக்குறள் ஆசிரியருக்குப்
பொய்யாமொழிப் புலவர் என்ற பட்டம் முற்றும் பொருத்தமானது!"
என்று உற்சாகமாகக் கூறினார்.
அதற்குப்
பரஞ்சோதி, "பல்லவ குமாரரே! மன்னிக்க வேண்டும். நான் கல்வி
அறிவு என்பதே இல்லாதவன், பள்ளிக் கூடத்தின் நிழலில்கூட
ஒதுங்காதவன். திருவள்ளுவரையும் அறியேன்; அவருடைய
திருக்குறளையும் அறியேன். எனக்குக் கல்வி புகட்டும் பொறுப்பைச்
சக்கரவர்த்தி தங்களுக்கு அளித்திருக்கிறார் ஓலையைப் படித்துப்
பார்த்தால் தெரியும்" என்றார். இந்த வார்த்தைகள் குமார
சக்கரவர்த்திக்குச் சிறிது கூச்சத்தை உண்டாக்கின. "அதற்கென்ன,
தளபதி! சக்கரவர்த்தியின் கட்டளை எதுவானாலும் சந்தோஷமாக
நிறைவேற்றிவைக்க நான் கடமைப்பட்டவன்..." என்று அவர் சொல்லி
முடிப்பதற்குள், தளபதி பரஞ்சோதி, "ஆனால், எனக்குக் கல்வி
கற்பிக்கும்படிச் சக்கரவர்த்தி தங்களுக்கு ஆக்ஞை இட்டிருப்பது
என்னுடைய நன்மைக்காக அல்ல; தங்களுடைய நன்மைக்காகத்தான்!"
என்றார்.
மாமல்லர் ஒன்றும்
விளங்காமல் பரஞ்சோதியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, அவர்
மேலும் கூறுவார்; "ஆம்! பிரபு! தங்களிடத்தில் எல்லா நல்ல
குணங்களும் இருக்கின்றனவாம்; ஆனால், பொறுமையும் நிதானமும்
மட்டும் குறைவாம். எனக்குக் கல்வி புகட்ட ஆரம்பித்தீர்களானால்,
உங்களுக்கும் பொறுமை வந்து விடுமாம்! என்னுடைய அறிவுக்
கூர்மையில் சக்கரவர்த்திக்கு அவ்வளவு நம்பிக்கை!" என்றதும்,
மாமல்லர் குபீரென்று சிரிக்க, அதைப் பார்த்துப் பரஞ்சோதி
சிரிக்க, இருவரும் சிரிப்பதைப் பார்த்து அடக்கி அடக்கிப்
பார்த்தும் முடியாமல் சாரதி கண்ணபிரானும் சிரிக்க, இந்தக்
கோலாகலம் என்னத்திற்கு என்று தெரியாமல் ரதத்தை இழுத்துச் சென்ற
குதிரைகளும் கனைத்தன. குதிரைகள் தங்களுக்குச் சுபாவமான இனிய
குரலில் கனைப்பதைக் கேட்டு மறுபடியும் ஓர் ஆவர்த்தம் மூவரும்
சிரித்தார்கள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
மூன்றாம் அத்தியாயம்
சிநேகப் பிரதிக்ஞை
ஒரு பக்கம்
மாமல்லருடன் சல்லாபம் செய்துகொண்டு வந்தபோதே, மற்றொரு
பக்கத்தில் காஞ்சி மாநகரின் விசாலமான இராஜ வீதிகளையும்,
வீதியின் இருபுறமும் காணப்பட்ட மாட மாளிகைகளையும், ஈ
மொய்ப்பதுபோல் ஜனக்கூட்டம் நிறைந்த கடை வீதிகளையும், இடையிடையே
தீபாலங்காரங்களுடன் விளங்கிய சிவாலயம் விஷ்ணு ஆலயங்களையும்
தெய்வத் தமிழை வளர்த்த சைவ வைஷ்ணவ மடங்களையும், பௌத்தர்
சமணர்களின் கோயில்களையும், வேதகோஷம் எழுந்த சமஸ்கிருத கடிகை
ஸ்தானங்களையும், சிற்பசித்திர கலா மண்பங்களையும் பரஞ்சோதி
கண்கொட்டா ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு வந்தார். எட்டு
மாதத்துக்கு முன்பு அவர் தெற்குக் கோட்டை வாசல் வழியாகப்
பிரவேசித்த அன்றிரவு இருந்ததைக் காட்டிலும் இன்று நகரில்
கலகலப்பும் களையும் அதிகமாயிருந்தன. அன்றைக்கு யுத்தச் செய்தி
திடீரென்று வந்திருந்தபடியாலும் கோட்டை வாசல்கள் சாத்தப்பட்டு
நகரமெல்லாம் ஒற்றர் வேட்டை நடந்து கொண்டிருந்தபடியாலும் காஞ்சி
நகரம் அப்படிப் பொலிவிழந்து காணப்பட்டது போலும்! அந்த ஆரம்ப
பீதிக்குப் பிறகு ஜனங்கள் மறுபடியும் ஒருவாறு மனோதைரியம்
அடையவே எல்லாக் காரியங்களும் வழக்கம்போல் நடந்து வருகின்றன
போலும்! ஆனால் இதெல்லாம் எத்தனை நாளைக்கு? அதி சீக்கிரத்தில்
மீண்டும் இந்தச் சௌந்தரிய நகரம் அழகும் பொலிவும் இழந்து
இருளடைந்து ஜனசூன்யமாகத் தோன்றப் போகிறதல்லவா? இந்த எண்ணங்கள்
எல்லாம் மாமல்லரின் ரதத்தில் வந்து கொண்டிருந்தபோது
பரஞ்சோதியின் உள்ளத்தில் இடையிடையே எழுந்துகொண்டிருந்தன.
ஏகாம்பரநாதர்
கோயில் சந்நிதிக்கு வந்ததும் அந்தத் திவ்விய சந்நிதியின்
மகோந்நதமான தோற்றத்திலிருந்தே அதுதான் ஏகாம்பரர் கோயிலாயிருக்க
வேண்டுமென்று பரஞ்சோதி ஊகித்து தம்முடைய ஊகம் சரிதானா என்று
மாமல்லரை வினவினார். "ஆம்; தளபதி! இந்தச் சந்நிதிக்கு இதற்கு
முன்னால் நீர் வந்ததே இல்லையல்லவா?" என்று மாமல்லர் கேட்டார்.
"இல்லை; வந்ததில்லை முன்தடவை இந்த நகரத்திற்குள் நான்
பிரவேசித்தபோது, ஏகாம்பரர் சந்நிதியைத்தான் தேடிக் கொண்டு
வந்தேன். ஆனால் இந்த இடம் வரையில் அன்றைக்கு வந்து சேரவில்லை.
கொஞ்சம் ரதத்தை நிறுத்தச் சொல்லுங்கள். காஞ்சியின் இருதய
ஸ்தானத்தை நன்றாய்ப் பார்க்கிறேன்" என்றார் பரஞ்சோதி.
கோயிலுக்குள்ளே
ஒரு தீப வரிசைக்குப்பின் இன்னொரு தீப வரிசையாக முடிவின்றி
ஜொலித்துக் கொண்டிருந்த அலங்கார தீபங்களையும் கோயிலுக்கெதிரே
கம்பீரமான தேர் நின்ற நாற்சந்தியையும் தேரடியிலிருந்து
நாலாபக்கத்திலும் பிரிந்து சென்ற தேரோடும் வீதிகளையும்,
குன்றுகளைப் போலப் பலவகைப் புஷ்பங்கள் குவிந்து கிடந்த
கடைகளையும், தேங்காயும் கதலியும் மலை மலையாகக் குவிந்து கிடந்த
கடைகளையும், அற்புதமான சிற்பத்திறமுடைய தூண்களின் மேலே அமைந்த
நூற்றுக்கால் மண்டபங்களையும் பரஞ்சோதி பார்த்துவிட்டு, "ஆஹா!
புலிகேசியின் காதலுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை!"
என்றார். "புலிகேசியின் காதலா? என்ன சொல்கிறீர், தளபதி?" என்று
மாமல்லர் கேட்டார். "புலிகேசி இந்தக் காஞ்சி சுந்தரியின்மேல்
கொண்டிருக்கும் காதலைப் பற்றி வீரர் வஜ்ரபாஹு எனக்குச்
சொன்னார். காஞ்சி என்னும் பெயரைக் கேட்டதும் காதலியின் பெயரைக்
கேட்டால் காதலனுடைய முகத்திலே என்ன மாறுதல் உண்டாகுமோ,
அம்மாதிரி மாறுதல் புலிகேசியின் முகத்தில் உண்டாயிற்றாம்!"
"தளபதி! வீரர் வஜ்ரபாஹு எவ்வளவுதான் சாமர்த்தியசாலியானாலும்,
அப்படித் துணிந்து புலிகேசியிடம் போயிருக்கக் கூடாதல்லவா? உம்
கருத்து என்ன?" என்று மாமல்லர் கேட்டார். அதற்கு மறுமொழி
சொல்லாமல் பரஞ்சோதி, "பிரபு! இங்கே திருநாவுக்கரசர் மடம் எது?"
என்றார். "அதோ வெறுமையாய்க் கிடக்கிறதே அந்தக்
கட்டிடந்தான்..." "ஆஹா! இந்த மடத்தில் சேர்ந்து தமிழ்க் கல்வி
கற்பதற்காகத்தான் வந்தேன். நான் கல்வி கற்பதற்காக வந்த
முகூர்த்தம் மடத்தையே மூடும்படியாகி விட்டது!" என்றார்
பரஞ்சோதி.
நரசிம்மவர்மர்
மீண்டும் இளநகை புரிந்துவிட்டு, "பல்லவ குலத்துக்கு நீர்
எவ்வளவோ மகத்தான சேவைகளையெல்லாம் செய்யவேண்டுமென்று
ஏற்பட்டிருக்கும்போது நாவுக்கரசரின் சீடராக நீர் எப்படிப்
போயிருக்க முடியும்? அதோடு, என்னிடம் நீர் தமிழ் பயிலவேண்டும்
என்பதும் தெய்வத் தமிழ்மொழியை அளித்த இறைவனுடைய சித்தமாக
ஏற்பட்டிருக்கிறதே!" "இதைத் தெரிந்து கொண்டுதான் அன்றிரவு அந்த
யானை மதங்கொண்டு ஓடி வந்ததோ, என்னவோ? அதன் காரணமாகத்தானே
இப்படியெல்லாம் நேரிட்டது?" என்றார் பரஞ்சோதி. உடனே சட்டென்று
நினைத்துக்கொண்டு, "ஐயா! ஆயனரும் சிவகாமியும்
சுகமாயிருக்கிறார்களா?" என்று கேட்டார். "சிவகாமி" என்ற
பெயரைக் கேட்டதும் மாமல்லரின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைப்
பரஞ்சோதி கவனியாமல் போகவில்லை. "ஆஹா! காதலைப் பற்றிய
வஜ்ரபாஹுவின் கூற்றுக்கு மாமல்லரே உதாரணமாக இருக்கிறார்!"
என்று மனத்தில் எண்ணிக்கொண்டார்.
மாமல்லர் மறுமொழி
கூறியபோது அவருடைய குரலிலே கூட மாறுதல் இருந்தது.
"சுகமாயிருக்கிறார்கள் என்றுதான் அறிகிறேன். தளபதி! ஆனால்,
அவர்களை நான் பார்த்துப் பல மாதங்கள் ஆயின. ஆயனரின் பழைய அரண்ய
வீட்டில் தான் அவர்கள் இருக்கிறார்கள். சக்கரவர்த்தியின்
கட்டளைப்படி துறைமுகத்தில் திருப்பணி செய்த கல்
தச்சர்களையெல்லாம் பாரத மண்டபங்கள் கட்டுவதற்கு அனுப்பிய பிறகு
ஆயனரும் மாமல்லபுரத்திலிருந்து தமது அரண்ய வீட்டுக்குத்
திரும்பி வந்து விட்டார்" என்று மாமல்லர் கூறியபோது, அவருடைய
வார்த்தைகளில் முன்னே காணப்படாத உணர்ச்சி தொனித்தது.
மறுபடியும்
மாமல்லர் பரஞ்சோதியின் கரங்களை அழுத்திப் பிடித்துக்
கொண்டவராய் உணர்ச்சி ததும்பிய குரலில் கூறினார்: "தளபதி பல்லவ
சாம்ராஜ்யத்துக்கு எவ்வளவோ சேவை சென்ற எட்டு மாதத்தில்
செய்திருக்கிறீர்; இன்னும் எவ்வளவோ செய்யப் போகிறீர். ஆனால்
அன்றிரவு நீர் செய்த வீரச் செயலைப் போன்ற மகத்தான சேவை
வேறொன்றும் இருக்க முடியாது. ஆயனரையும் சிவகாமியையும்
காப்பாற்றினீர் அல்லவா? அந்தச் செயலை நான் எவ்வளவு தூரம்
பாராட்டுகிறேன் என்பதற்கு இதோ அடையாளத்தைப் பாரும்!" என்று
கூறி அன்று மதயானை மீது பரஞ்சோதி எறிந்த வேலை எடுத்து
காட்டினார்.
மாமல்லரின்
உணர்ச்சி ததும்பிய வார்த்தைகளினால் பரஞ்சோதியின் மனமும்
கனிந்திருந்தது. எனவே, அவர் மறுமொழி கூற முடியாதவராய் மாமல்லர்
நீட்டிய வேலை வாங்கிக் கொள்வதற்காக ஒரு கையினால் அதன் அடிப்
பகுதியைப் பிடித்தார். நரசிம்மவர்மர் வேலைக் கொடுக்காமல்
தாமும் அதை ஒரு கையினால் பிடித்துக் கொண்ட வண்ணம் சொன்னார்:
"இந்த ஏகாம்பரர் சந்நிதியில் நான் எத்தனையோ தடவை எனக்கு ஓர்
உற்ற நண்பனை அளிக்க வேண்டுமென்று பிரார்த்தனை
செய்திருக்கிறேன்; அந்தப் பிரார்த்தனையின் பயனாகவே நீர் இந்தக்
காஞ்சிக்கு வந்ததாக நம்புகிறேன். தளபதி! இந்த சந்நிதியிலேயே
நீரும் நானும் இன்று சிநேகப் பிரதிக்ஞை செய்து கொள்வோம்.
ஆயனரையும் சிவகாமியையும் காத்த இந்த வீரவேலின் மீது ஆணை வைத்து
நம்முடைய நட்பை நிலைப்படுத்திக் கொள்வோம்" என்றார்.
ஏகாம்பரநாதரின் திருச்சந்நிதியில் அப்போது தீபாராதனைக்குரிய
ஆலாட்சிமணி "ஓம் ஓம்" என்று ஒலித்தது.
அன்றிரவு
கண்ணபிரான் கமலியிடம் சொன்னான்: "என் கண்ணே! உன்னுடைய சிநேகிதி
சிவகாமியின் சக்களத்தியை இன்று ரதத்தில் வைத்து ஓட்டிக்கொண்டு
வந்தேன். அதை நினைத்தால் எனக்குத் துக்கம் துக்கமாய்
வருகிறது!" "இது என்ன பிதற்றல்? நீ சொல்வது உண்மையானால் அவள்
யார் என்று இப்பொழுது சொல்லு! உடனே போய் விஷங்கொடுத்துக்
கொன்று விட்டு வருகிறேன்" என்றாள் கமலி. "அவள் இல்லை, அவன்!
மதயானை மேல் வேல் எறிந்து உன் சிநேகிதியைக் காப்பாற்றய வாலிபன்
போர்க்களத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறான். அவன் இப்போது
காஞ்சிக் கோட்டையின் தளபதியாம். அவனோடு குமார சக்கரவர்த்தி
குலாவியதைப் பார்த்தால் சிவகாமியைக் கூட மறந்து விடுவார் போலத்
தோன்றியது."
"உனக்குத்
தெரிந்த லட்சணம் அவ்வளவுதான். அந்தப் பிள்ளையின் மேல்
மாமல்லருக்கு ஏன் அவ்வளவு பிரியம் என்று நான் சொல்லட்டுமா? என்
தோழியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காகத்தான் கண்ணா! இதிலிருந்தே
மாமல்லரின் மனம் எவ்வளவு உறுதியாயிருக்கிறதென்று தெரிகிறது!"
என்றாள் கமலி. "உன் புத்திக் கூர்மையே கூர்மை! கேவலம் ஒரு ரத
சாரதியைப் போய் நீ கல்யாணம் செய்து கொண்டாயே இராஜ்யம் ஆளும்
மதிமந்திரியையல்லவா நீ மணந்து கொண்டிருக்க வேண்டும்!" என்று
கண்ணன் சொன்னான். "அதனாலேதான் காதலுக்குக் கண்ணில்லை என்ற
பழமொழி ஏற்பட்டிருக்கிறது; உனக்குத் தெரியாதா?" என்றாள் கமலி.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நான்காம் அத்தியாயம்
சிவகாமியின் பிறந்தநாள்
ஆகா! சிவகாமியை
நாம் பார்த்து எத்தனை காலம் ஆகிவிட்டது! காஞ்சியை விட்டு வௌியே
போகக் கூடாது என்று மாமல்லருக்குத்தான் சக்கரவர்த்தி கட்டளை
இட்டிருக்கிறாரே தவிர நாம் போவதற்கு எவ்விதத்
தடையுமில்லையல்லவா? எனவே, அரண்ய மத்தியிலுள்ள ஆயனரின் சிற்ப
மாளிகைக்கு உடனே செல்வோம். ஆயனரின் வீட்டை நெருங்கும்போது
எட்டு மாதத்துக்கு முன்பு அங்கே நாம் கண்ட காட்சிக்கும்
இப்போது நாம் காணும் காட்சிக்கும் உள்ள வித்தியாசம் நம்மைத்
தூக்கி வாரிப் போடுகிறது. அப்போது நாம் கண்ட கலகலப்பு இப்போது
அங்கே இல்லை. 'கல் கல்' என்ற கல்லுளியின் சத்தம் கேட்கவில்லை.
ஆயனரின் சீடர்கள் ஆங்காங்கு மரங்களின் அடியில் உட்கார்ந்து
சிற்பவேலை பயின்று கொண்டிருக்கவில்லை.
காட்டு மரங்களின்
தோற்றத்திலேகூட வித்தியாசம் இருக்கிறது. முன்னே நாம்
வந்திருந்தபோது வஸந்த காலம். விருட்சங்கள் புதிய தளிர்கள்
விட்டிருந்தன. மாமரங்களில் இளம் தளிர்களுடனே பூங்கொத்துக்கள்
குலுங்கின. அரச மரங்களும் ஆல மரங்களும் தங்கநிற இலைகளால்
மூடப்பட்டிருந்தன. இப்போதோ, மரங்களில் முற்றிய கரும் பசுமை
பொருந்திய இலைகளும் பாதி காய்ந்த சருகுகளும் காணப்படுகின்றன.
பூமியெல்லாம் இலைச்சருகுகள் பரவிக் கிடந்தன. சில இடங்களில்
குட்டை குட்டையாக மழைத் தண்ணீர் தேங்கியிருக்கிறது.
முதல்நாள் இரவு
பெய்த மழைநீர் மரங்களின் இலைகளில் தங்கியிருந்தது, குளிர்ந்த
வாடைக்காற்று அடிக்கும்போது 'சலசல'வென்று பூமியில் உதிர்கிறது.
அந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலை நினைத்து மரங்களும்
துயரப்பட்டுக் கண்ணீர் உதிர்ப்பது போலத் தோன்றுகிறது. வன
விருட்சங்களில் வாழ்ந்த பட்சிகளின் அமுதகானத்துக்கு மட்டும்
எவ்விதக் குறையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விதவிதமான மதுரக்
குரல்களில் எத்தனை எத்தனையோ கீதங்கள் கேட்கின்றன. ஆனால்,
அந்தக் குரல்களிலும் ஒரு வேற்றுமை தெரிகிறது. முன்னே
அக்குரல்களில் தொனித்த குதூகலக் களிப்பை இப்போது காணவில்லை.
சென்றுபோன ஆனந்தமான காலத்தை நினைத்து மனங்கசிந்து பாடும்
சோககீதமாகத் தொனித்தது!
வீட்டை
நெருங்கிச் சென்றோமானால் ஒரே ஒரு விருட்சத்தினடியில் மட்டும்
யாரோ இரண்டு பேர் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பது
கண்ணுக்குப் புலனாகிறது. ஆம்! அவர்களில் ஒருவர் ஆயனச்
சிற்பிதான்! ஆனால் அந்த மேதையின் முகத்தில் முன்னம் நாம்
பார்த்த சாந்தம் இப்போது எங்கே? அந்தக் கண்களிலே இந்த ஆவல்
வெறி எப்போது குடிகொண்டது? அவரும் அவருடன் இருக்கும்
இன்னொருவனும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏதேதோ
பச்சிலைகளைச் சேர்த்து அவர்கள் கல்லில் வைத்து இடித்தும்
அரைத்தும் சாறு இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு
அருகில் அடுப்பு ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு
சட்டியில் பச்சிலைச் சாறு கொதித்துக் கொண்டிருக்கிறது.
சுற்றுப்புறத்தில் பற்பல சட்டிகளில் வர்ணக் குழம்புகள்
இருக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது ஆயனச் சிற்பியார்
சித்திரம் எழுதுவதற்குரிய வர்ணச் சேர்க்கை முறைகளைப் பரிசீலனை
செய்து கொண்டிருக்கிறார் என்று ஊகிக்கலாம்.
போர்க்களத்திலிருந்து சக்கரவர்த்தி மாமல்லபுரத்திலும் மற்ற
இடங்களிலும் நடந்து கொண்டிருந்த சிற்பப் பணிகளையெல்லாம்
நிறுத்தி விடும்படி கட்டளை அனுப்பிய பிறகு ஆயனர் தமது அருமை
மகளை அழைத்துக் கொண்டு பழைய அரண்ய வீட்டுக்கு வந்து
சேர்ந்தார். தம்முடைய சீடர்களைத் தொண்டை மண்டலத்திலுள்ள
எல்லாக் கோயில்களிலும் பாரத மண்டபங்களைக் கட்டுவதற்காக
அனுப்பிவிட்டார். ஒரே ஒரு சிற்றாளை மட்டும் தம்முடைய உதவிக்கு
வைத்துக் கொண்டிருந்தார். சில காலமாகவே ஆயனருடைய உள்ளமானது
சிற்பக்கலையிலும் நாட்டியக் கலையிலும் ஈடுபடவில்லை. நாகார்ஜுன
பர்வதத்துக்கு அனுப்பிய பரஞ்சோதி திரும்பி வருவதை அவர் வெகு
ஆவலுடன் எதிர்பார்க்கலானார். சில நாளைக்கெல்லாம் அவருக்குப்
பரஞ்சோதியைப் பற்றிய வெகு விசித்திரமான செய்திகள் கிடைத்தன.
அவன் பல்லவ சைனியத்தில் சேர்ந்து, பல்லவக் குதிரைப்படையின்
தளபதியாகி விட்டான் என்றும் அதிசயமான வீரச் செயல்களைப்
புரிந்து வருகிறான் என்றும் வதந்திகள் உலாவின.
அதற்குப் பிறகு
நாகநந்தியடிகளும் அங்கு வரவில்லை. ஆயனருக்கு என்றுமழியாத வர்ண
இரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவல் ஒன்றுக்குப் பத்து மடங்காகப்
பெருகியது. எனவே அவர் சிற்பக்கலை முதலியவற்றையெல்லாம் ஒரு
பக்கத்தில் கட்டிவைத்து விட்டு வர்ணச் சேர்க்கை சம்பந்தமான
பரிசோதனைகளை ஆரம்பித்தார். சிவகாமியின் நாட்டியக்கலை
வளர்ச்சியிலே கூட அவருக்குச் சிரத்தை குறைந்துவிட்டது. இது
சிவகாமிக்கும் சௌகரியமாகவே இருந்தது. ஏனெனில் அவளுடைய
வாழ்க்கையாகிய வானத்திலே ஜகஜ்ஜோதியாக உதயமாகி அவளுடைய இதயத்
தாமரையை மலரச் செய்திருந்த பிரேம சூரியனைப் பாடிப் பரவி
வாழ்த்தி வணங்குவதற்கே அவளுக்குக் காலம் போதாமலிருந்தது.
உலகத்தில் இதுகாறும் யாரும் கண்டும் கேட்டுமறியாத அதிசயக்
காதற் செல்வம் தனக்குக் கிட்டியிருப்பதாக எண்ணிய சிவகாமி
அந்தக் காதலையும் காதலனையும் பற்றிச் சிந்திப்பதிலும்,
மனோராஜ்யம் செய்வதிலும் வருங்காலத்தைப் பற்றிய ஆகாசக்
கோட்டைகள் கட்டுவதிலும் எல்லையற்ற இன்பத்தை அடைந்து வந்தாள்.
அந்த மனோராஜ்ய வாழ்க்கையிலேதான் எத்தனை ஆனந்தம்! எத்தனை
ஏமாற்றம்! கூடிக் குலாவும் நேரம் எவ்வளவு! சொல்லம்புகளினால்
துன்புறுத்தல் எவ்வளவு? அந்த எட்டு மாதத்து மனோராஜ்ய வாழ்விலே
எத்தனையோ யுக யுகாந்திரங்களில் அனுபவிக்க வேண்டிய சோகச் சாயை
படர்ந்த ஆனந்தங்களையும் இன்ப ரேகை கலந்த வேதனைகளையும் சிவகாமி
அனுபவித்து விட்டாள் என்றே சொல்ல வேண்டும். இருக்கட்டும்;
இப்போது சிவகாமியைப் போய்ப் பார்ப்போம். அவள் அநேகமாக
வீட்டுக்குள்ளே தன்னந்தனியாக இருக்கலாம். உள்ளே போய் நேரிலேயே
சிவகாமியைப் பார்த்து அவளுடைய நிலையைத் தெரிந்து கொள்வோம்.
வீட்டை
அணுகும்போது, உள்ளே பேச்சுக் குரலைக் கேட்டுச் சற்றுத்
திகைத்து நிற்கிறோம். சிவகாமி ஏகாந்தமாயிருப்பாள் அவளுடன் மனம்
விட்டுப் பேசி அவளது மனோநிலைமையை அறியலாம் என்றல்லவா
நினைத்தோம்? அவளுடன் பேசிக் கொண்டிருப்பது யார்? ஒருவேளை
அவளுடைய செவிட்டு அத்தையாயிருக்குமோ? இல்லை; ஆடவரின் குரல்,
அதிலும் இரண்டு மூன்று ஆடவர் குரல்கள் அல்லவா கேட்கின்றன?
உள்ளே நுழைவதற்கு
முன்னால் வாசற்படிக்கு அருகில் நின்று சம்பாஷணையைச் சற்று
ஒட்டுக் கேட்டு விட்டு உள்ளே போகக் கூடிய சந்தர்ப்பந்தானா
என்பதை தெரிந்து கொள்வோம். "அம்மணி! எங்களிடம் கோபித்துக்
கொண்டு என்ன பயன்? பல்லவ குமாரரின் கட்டளையைத்தானே
நிறைவேற்றுகிறோம்?" என்று ஒரு ஆண்குரல் சொல்லிற்று.
"பல்லவகுமாரரும் ஆயிற்று! கட்டளையும் ஆயிற்று! மாமல்லருக்கு
இன்றைக்கு வேறு வேலை இல்லை போலிருக்கிறது! திடீரென்று
சிற்பியின் மகளை நினைத்துக் கொண்டாராக்கும். இருக்கட்டும்;
அந்தத் தந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது? திறந்து
காட்டுங்கள்!" என்று கோபங்கொண்ட கோமகளின் அதிகாரக் குரலில்
சிவகாமி ஆக்ஞாபித்தாள்.
"தென்பாண்டி
நாட்டிலே கொற்கைத் துறைமுகத்தில் குளித்து எடுத்த அற்புதமான
முத்துமாலைகள் இந்தத் தந்தப் பெட்டியில் இருக்கின்றன. அம்மணி!
இதோ பாருங்கள்! கன்யா குப்ஜத்து ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியின்
பட்ட மகிஷி கழுத்திலேகூட இம்மாதிரி முத்துமாலை கிடையாது!
எப்படி ஜொலிக்கிறது, பார்த்தீர்களா?" என்று ஏவலாளன் கூறினான்.
"போதும், போதும்! இந்த முத்துமாலைகள் யாருக்கு வேண்டும்?
உங்கள் குமார சக்கரவர்த்தியிடம் நான் சொன்னதாகச் சொல்லு; ஆயனச்
சிற்பியின் வீட்டுக்கு அருகே தாமரைக் குளக்கரையில் புன்னை மரம்
ஒன்று புஷ்பித்திருக்கிறது. காலை நேரத்தில் அம்மரத்தடிக்குச்
சென்றால் தரையிலே ஆயிரமாயிரம் முத்துக்கள் சொரிந்து கிடக்கும்.
அந்தப் புன்னை மலர் முத்துக்களின் அழகுக்கு உறைபோடக் காணாது
இந்தக் கொற்கை முத்து என்று சொல்லு. வேண்டுமானால், ஒருநாள்
காலையில் வந்து பார்த்து விட்டுப் போகட்டும். அதோ! அந்தத்
தங்கப் பேழையில் என்ன இருக்கிறது?" என்று சிவகாமி கேட்டாள்.
"அம்மணி!
அலைகடலின் ஆழத்திலே சௌந்தரிய தேவதை ஒளித்து வைத்திருந்த
பவளங்கள், சமுத்திர ராஜனின் கடுங்காவலை மீறி அபகரித்துக்
கொண்டு வரப்பட்டவை, மன்னாதி மன்னர்களெல்லாம் தங்கள்
மணிமகுடத்தில் புனைவதற்கு ஆசைப்படக்கூடியவை, ஒப்பற்ற பவளங்கள்,
இந்தத் தங்கப் பேழையில் இருக்கின்றன. பாரத நாடெங்கும்
புகழ்பெற்ற பரத சாஸ்திர ராணியின் மேனியை அலங்கரிப்பதற்கு
உகந்தவை என்று இந்தப் பவள மாலைகளைப் பல்லவ குமாரர் அனுப்பி
இருக்கிறார்...." "அழகுதான்! இந்தப் பவள மாலைகள் உங்கள் பல்லவ
குமாரருக்கு அதிசயமாய்த் தோன்றலாம். ஆனால் அவரிடம் நீ போய்ச்
சொல்லு; ஆயனச் சிற்பி வீட்டின் இரண்டாம் கட்டிலே அந்தச்
சிற்பியின் மகள் வளர்க்கும் கிளிகள் இருக்கின்றன. அந்தக்
கிளிகளின் வாயில் உள்ள செம்பவளத்துக்கு எப்பேர்ப்பட்ட கடல்
பவளமும் இணையாகாது. வேண்டுமானால் நேரிலே வந்து
பார்த்துவிட்டுப் போகும்படிச் சொல்லு. இருக்கட்டும்; அதோ
அந்தக் கூடைகளிலே என்ன?"
"அரண்மனை
உத்தியானவனத்திலே மலர்ந்த சண்பகப் பூக்கள், குண்டு மல்லிகைகள்,
பிச்சி மலர்கள்..." "வேண்டாம், வேண்டாம்! உடனே எல்லாவற்றையும்
வௌியே கொண்டு போங்கள். உங்கள் பல்லவ குமாரரிடம், 'சிவகாமி ஒரு
காலத்தில் பூ என்றால் பிராணனாயிருந்ததுண்டு, ஆனால், ஏதோ ஒரு
காரணத்தினால் இப்போது பூவைக் கண்டால் பிடிப்பதேயில்லையாம்!'
என்று தெரியப்படுத்துங்கள்... ஆமாம்; இதையெல்லாம் எதற்காக
இப்போது பல்லவ குமாரர் அனுப்பினாராம்?"
"இன்றைக்குத்
தங்களுடைய பிறந்த தினம் என்பதற்காக அனுப்பியுள்ளார், அம்மணி!"
"அப்படியா? மிகவும் சந்தோஷம் இந்த ஏழைச் சிற்பி மகளின் பிறந்த
தினத்தைக் குமார சக்கரவர்த்தி நினைவு வைத்துக் கொண்டிருப்பது
பற்றி நிரம்பச் சந்தோஷம். ஆனால், அவருடைய ஞாபக சக்தியில் ஏதோ
கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும். நீங்கள் இந்தப்
பொருள்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் 'இன்று சிவகாமியின்
பிறந்த நாள் இல்லை' என்று சொல்லி விடுங்கள். 'சிவகாமி என்கிற
பெண் பூமியில் பிறக்கவே இல்லை' என்று பல்லவ குமாரரிடம்
சொல்லிவிடுங்கள்!"
இதென்ன விந்தை?
சற்று முன்னால், ஆயனச் சிற்பியை வீட்டுக்கு வௌியே மரத்தடியில்
பார்த்தோமல்லவா? இப்போது வீட்டுக்குள்ளேயிருந்து அவருடைய
கனிந்த குரலைக் கேட்கிறோம்:- "குழந்தாய்! சிவகாமி! உனக்கு என்ன
வந்து விட்டது? ஏன் இப்படி இவர்களை விரட்டியடிக்கிறாய்? குமார
சக்கரவர்த்தியே உன்னுடைய பிறந்த தினத்தை ஞாபகம் வைத்துக்
கொண்டிருந்து வரிசைகள் அனுப்பியிருக்கும்போது.." "சும்மா
இருங்கள், அப்பா! குமார சக்கரவர்த்தியை இலேசுப்பட்டவர் என்று
நினைக்காதீர்கள். முத்துமாலையையும், ரத்தின ஹாரத்தையும்,
புஷ்பக் கூடைகளையும் அனுப்பி நம்மை ஏமாற்றிவிடப் பார்ப்பார்.
யாரை நம்பினாலும் மாமல்லரை நம்பக் கூடாது. ஏவலாளர்களே! ஏன்
நிற்கிறீர்கள்? எடுங்கள் இவற்றை எல்லாம்! உடனே நடையைக்
கட்டுங்கள் எடுக்கிறீர்களா, இல்லையா!" "இதோ எடுத்துக்கொண்டு
போகிறோம், அம்மா! இதோ எடுத்துக்கொண்டு போகிறோம்."
இவ்வாறு பயந்து
நடுங்கிக் கொண்டு கூறிய ஏவலர்கள், வரிசைப் பொருள்களை
எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வௌியே வருவார்களென்று நாம்
எதிர்பார்க்கிறோம். ஆனால், யாரும் வௌியே வருகிற வழியைக்
காணோம்! நல்ல மர்மம் இது! வீட்டுக்குள்ளே பேச்சுக் குரல்
மட்டும் கேட்கிறதே தவிர, வேறு நடமாடும் சந்தடியைக் காணோமே?
வியப்பாக அல்லவா இருக்கிறது! உள்ளே போய்ப் பார்த்து விடலாம்.
உள்ளே போனால்,
நமது வியப்பு ஒன்றுக்குப் பதின்மடங்காகிறது. ஏனெனில், உள்ளே
சக்கரவர்த்திக்காக ஆயனர் அமைத்திருந்த சிற்ப சிம்மாசனத்திலே
சிவகாமி மட்டுந்தான் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாள்!
இத்தனை நேரமும் அவள் சம்பாஷணை நடத்தியதெல்லாம் யாருடன்? இதோ
மர்மம் வௌியாகிறது சிவகாமி பேசுகிறாள்; தனக்குத் தானே பேசிக்
கொள்கிறாள். "ஏவலாளர்களே, இங்கே வாருங்கள்!" என்கிறாள்.
ஒருவரும் வரவில்லை ஆனாலும் எதிரில் யாரோ இருப்பதாக எண்ணிக்
கொண்டு பேசுகிறாள். "உங்கள் பல்லவ குமாரரிடம் இதையும்
சொல்லுங்கள். 'மாமல்லர் என்றைக்கு மனம் கனிந்து சிற்பி மகள்
சிவகாமியைப் பார்ப்பதற்கு வருகிறாரோ, அன்றைக்குத்தான்
அவளுக்குப் பிறந்த தினம்' என்று சொல்லுங்கள், தெரிகிறதா?"
இவ்விதம்
சொல்லிவிட்டுச் சிவகாமி சற்றுச் சும்மா இருந்தாள். பிறகு
மறுபடியும் பேசினாள்; ஆனால் இந்தத் தடவை குரல்
மாறுபட்டிருந்தது. இப்போது நாம் கேட்பது ஆண்பிள்ளைக் குரல்;
ஏற்கனவே கேட்ட ஏவலாளனின் குரல்தான். "அம்மணி! மன்னிக்க
வேண்டும் தங்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வரிசைப்
பொருள்களை அனுப்பிய பல்லவ குமாரர், சற்று நேரத்துக்கெல்லாம்
தாமே தங்க ரதத்தில் வருவதாகவும் தெரியப்படுத்தச் சொன்னார்."
மறுபடியும
சிவகாமியின் மகிழ்ச்சி ததும்பிய உண்மைக் குரல் "ஆஹா! மாமல்லரே
வருவதாகச் சொன்னாரா! அப்படியானால் இன்றைக்கு என்
பிறந்தநாள்தான்!... அப்பா! இன்றைக்கு உங்கள் மகளின் பிறந்தநாள்
தெரிகிறதா? என்ன பேசாமல் இருக்கிறீர்கள்! இன்றைக்கு ஒரு
நாளாவது பச்சிலை அரைப்பதை நிறுத்துங்கள்... அதோ ரதம் வரும்
சத்தம் கேட்கிறதே!"
சிவகாமி,
சிம்மாசனத்திலிருந்து துள்ளி எழுந்தாள். அப்போது, உண்மையாகவே
வீட்டுக்கு வௌியில் ரதம் வரும் சத்தம் கேட்டது. முகத்தில்
சொல்ல முடியாத ஆவல் ததும்பப் பரபரப்புடன் வாசற்புறம் ஓடிவந்து
பார்த்தாள். வீட்டை நெருங்கி ரதம் வந்து கொண்டிருந்தது. அது
குமார சக்கரவர்த்தியின் தங்கரதம்தான். ரதசாரதியும் கண்ணபிரான்
தான்; ஆனால், ரதத்தில் இருப்பது யார்? வேறு யாரோபோல்
இருக்கிறதே! ஆஹா! என்ன ஏமாற்றம்! வருகிறவர் யாராயிருந்தாலும்,
நிச்சயமாக மாமல்லர் அல்ல! சிவகாமி, அந்தச் சிற்ப வீட்டின்
வாசல் தூணைப் பிடித்துக் கொண்டு கற்சிலையைப் போல் நின்றாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐந்தாம் அத்தியாயம்
காதற்புயல்
சிற்ப வீட்டின்
வாசலில் வந்து நின்ற சிவகாமியைக் கண்டதும், பரஞ்சோதியின்
கண்கள் அவளை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தரையை நோக்கின. ஆயனச்
சிற்பியின் மகள் சாதாரண மானிடப் பெண் அல்ல, தெய்வாம்சம்
உடையவள் என்ற எண்ணம் முதன்முதலில் அந்த வீட்டுக்கு
வந்திருந்தபோது பரஞ்சோதியின் உள்ளத்தில் தோன்றியிருந்தது.
சிவகாமிக்கும் மாமல்லருக்கும் ஏற்பட்டிருந்த இருதய பாசத்தைப்
பற்றி முன்பே அவர் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டிருந்தார்.
நேற்றிரவு பல்லவ குமாரரின் வாய்மொழியினாலேயே அது
உறுதிப்பட்டது.
அரண்மனை நிலா
மாடத்தில் சரத்கால சந்திரனின் அமுத கிரண போதையை அனுபவித்துக்
கொண்டு, சிநேகிதர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது,
மாமல்லர் தம்முடைய இருதயத்தையே அவருக்குத் திறந்து காட்டி
விட்டார். இத்தனை நாளும் மாமல்லரின் உள்ளத்தில் அணைபோட்டுத்
தடுத்து வைத்திருந்த பிரேமைப் பிரவாகமானது அவருடைய இருதய
அந்தரங்கத்தை வௌியிடக்கூடிய உற்ற தோழன் ஒருவன் கிடைத்த உடனே,
அணையை ஒரே மோதலில் இடித்துத் தள்ளி விட்டு அமோக வெள்ளமாகப்
பாய்ந்தது. பரஞ்சோதி அந்த வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டு
திக்குமுக்காடிப் போனார். இந்த மாதிரி காதல் வெறி அவருக்கு
முற்றிலும் புதுமையாயிருந்தது. திருவெண்காட்டில் நமசிவாய
வைத்தியர் வீட்டில் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்த நங்கை
ஒருத்தியும் இருக்கத்தான் இருந்தாள். ஆனால், அவளுடைய நினைவானது
பரஞ்சோதிக்கு அமைதி கலந்த இன்பத்தையே உண்டாக்கியது.
மாமல்லருடைய காதலோ அவருடைய உள்ளத்தை, கடும் புயல் காற்று
சுழன்று அடிக்கும் மலை சூழ்ந்த பிரதேசமாகவும், திடீர் திடீர்
என்று தீயையும் புகையையும் கக்கும் எரிமலையாகவும்,
பிரம்மாண்டமான அலைகள் மலை மலையாக எழுந்து மோதும்
குடாக்கடலாகவும் செய்திருப்பதைப் பரஞ்சோதி கண்டார்.
மாமல்லருடைய
காதல் வேகம் பரஞ்சோதிக்குப் பெருவியப்பை உண்டாக்கிற்று; அதோடு
பயத்தையும் உண்டாக்கிற்று. அவர்களுடைய காதல் பூர்த்தியாவதற்கு
எத்தனை எத்தனை தடைகள் இருக்கின்றன என்பதை எண்ணியபோது
பரஞ்சோதியின் மனம் கனிந்தது. எல்லாவற்றிலும் பெரிய தடை,
மகேந்திர சக்கரவர்த்தியின் விருப்பம்
வேறுவிதமாயிருந்ததேயாகும். அந்தப் பெருந்தடைக்குப் பரிகாரம்
உண்டா? அது எப்போதாவது நிவர்த்தியாகக் கூடுமா?
சென்ற எட்டு
மாதத்தில் சக்கரவர்த்தியிடம் நெருங்கிப் பழகி, அவருடைய
அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அநேக விஷயங்களில்
அவருடைய அந்தரங்கக் கருத்துக்களையெல்லாம் அறிந்திருந்த
பரஞ்சோதி, மாமல்லரின் காதலைப்பற்றிச் சக்கரவர்த்திக்குத்
தெரியுமென்றும் அதை அவர் விரும்பவில்லையென்றும் திட்டமாய்த்
தெரிந்து கொண்டிருந்தார். எனவே, இப்போது அவருடைய நிலைமை
மிகவும் தர்ம சங்கடமாய்ப் போயிருந்தது. ஒரு பக்கத்தில்,
அவருடைய மனப்பூர்வமான பக்திக்குப் பாத்திரமானவரும், தந்தையின்
ஸ்தானத்தை வகிப்பவருமான மகேந்திரர், குமார சக்கரவர்த்தியின்
உள்ளத்தைச் சிவகாமியிடமிருந்து திருப்ப விரும்புகிறார் என்பதை
அவர் அறிந்திருந்தார். மாமல்லரோ, தம்முடைய இருதய
அந்தரங்கத்தையெல்லாம் வௌியிடுவதற்குரிய உற்ற துணைவராக அவரைப்
பாவித்து, தம் மனோரதத்தை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அவருடைய
ஒத்தாசையை எதிர்பார்க்கிறார். சக்கரவர்த்திக்கு உகந்ததைச்
செய்தால், தம்மை நம்பிய சிநேகிதருக்குத் துரோகம் செய்வதாகும்.
சிநேகிதருக்கு உகந்ததைச் செய்தாலோ சக்கரவர்த்திக்கு
விருப்பமில்லாததைச் செய்ததாக முடியும்.
இந்தத் தர்ம
சங்கடம் ஒருபுறமிருக்க சிவகாமியின் நிலைமை என்ன? அவளுக்கு
நன்மையானது எது? இந்தப் பொருத்தமில்லாத காதலினால், அவளுக்கு
உண்மையில் நன்மை உண்டாகுமா? இது விஷயத்தில், ஆயனருடைய
அபிப்பிராயந்தான் என்ன? இத்தனை மனக் குழப்பங்களுக்கிடையே ஒன்று
மட்டும் மிகத் தௌிவாயிருந்தது. சிவகாமி என்று எண்ணியதுமே,
அவருடைய மனத்தில் பயபக்தியும் மரியாதையும் அன்பும் அபிமானமும்
சங்கோசமும் வாத்ஸல்யமும் கலந்த புனிதமான தெய்வீக உணர்ச்சி
தோன்றிற்று. சிவகாமி விஷயத்தில் அவருடைய மன நிலைமைக்குத்
தகுந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால், சீதாதேவி விஷயத்தில்
லக்ஷ்மணனுடைய மன நிலைமையைத்தான் சொல்ல வேண்டும்.
ரதத்தில்
இருந்தது மாமல்லர் அல்ல என்று கண்டதும், வருகிறவர்கள் வேறு
யார் என்று தெரிந்து கொள்ளக்கூடச் சிவகாமி ஆசைப்படவில்லை. உடனே
அவளுடைய கவனம் ரதத்தை ஓட்டிக்கொண்டு வந்த கண்ணபிரான் மீது
சென்றது. கண்ணபிரான் ரதத்தின் முகப்புத் தட்டிலிருந்து
குதித்து முன்னால் வர, பரஞ்சோதி அவனைத் தொடர்ந்து பின்னால்
வந்தார். அவர்கள் நெருங்கி வந்ததும், சிவகாமி கண்ணபிரானை
நோக்கி, "அண்ணா! வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?" என்று
கேட்டாள். அவளுடைய குரலில் தீனமும் ஏமாற்றமும் நன்கு தொனித்தன.
"இல்லை, தாயே!
இல்லை! வீட்டில் ஒருவரும் சௌக்கியம் இல்லை. கமலிக்குத் தலைவலி,
அப்பாவுக்கு முழங்கால் வலி, எனக்கும் உடம்பு சரியாகவே
இல்லை..." "உங்களுக்கு என்ன அண்ணா?" என்று சிவகாமி கேட்டாள்.
"அதுதான் தெரியவில்லை வயிற்றில் ஏதோ கோளாறு. கமலி, 'உன்
வியாதிக்கு மருந்து பூனைதான்!' என்கிறாள்." "பூனை மருந்தா? இது
என்ன கூத்து!" என்றாள் சிவகாமி. "ஆமாம், தாயே! இப்போதெல்லாம்
எனக்கு அசாத்தியமாகப் பசிக்கிறது. நேற்று ராத்திரி கமலி சுட்டு
வைத்திருந்த ஒன்பது அப்பம், ஏழு தோசை, பன்னிரண்டு கொழுக்கட்டை
அவ்வளவையும் தின்று விட்டு, 'இன்னும் ஏதாவது இருக்கிறதா கமலி!
என்று கேட்டேன். 'உன் வயிற்றில் எலி இருக்கிறது; ஒரு பூனையைச்
சாப்பிடு, அப்போதுதான் உன் பசி தீரும் என்றாள்!"
இதைக் கேட்ட
சிவகாமி 'கலீ'ரென்று சிரித்தாள். பரஞ்சோதியினாலும்
சிரிக்காமலிருக்க முடியவில்லை. பரஞ்சோதியின் சிரிப்புச்
சத்தத்தைக் கேட் சிவகாமி அவர் பக்கம் திரும்பிப் பார்த்தாள்
ஆஹா! இது யார்? பரஞ்சோதி தைரியமடைந்து, "அம்மணி! என்னைத்
தெரியவில்லையா?" என்று கேட்டார். "யார்?
திருவெண்காட்டிலிருந்து...": "ஆம் நான்தான்! திருவெண்காட்டு
நமசிவாய வைத்தியரிடமிருந்து அப்பாவுக்கு ஓலை கொண்டுவந்த
பரஞ்சோதிதான்..."
அப்போது
கண்ணபிரான் குறுக்கிட்டு, "மன்னிக்க வேண்டும்! கல்யாணச்
சந்தடியில் மாப்பிள்ளையை மறந்து போனேன். தாயே! இவர் யார் என்று
நான் சொல்கிறேன். காஞ்சிக் கோட்டையின் பிரதம தளபதி இவர்.
கோட்டைக் காவலுக்காகச் சக்கரவர்த்தியே இவரை
அனுப்பியிருக்கிறார். இனிமேல் காஞ்சிக் கோட்டையைப் போல்
ஒளிந்து கொள்வதற்குப் பத்திரமான இடம் பூலோகத்திலேயே கிடையாது.
இவருடைய கட்டளை இல்லாமல் யமன்கூட இனிமேல் கோட்டைக்குள் நுழைய
முடியாது!" என்றான்.
கண்ணபிரான்
ஒருமாதிரி விதூஷகன். இந்த மாதிரியெல்லாம் மாமல்லரிடமே
பேசுவதற்கு உரிமை பெற்றவன் என்று பரஞ்சோதி அறிந்திருந்தார்.
எனவே, அவனுடைய பேச்சைப் பொருட்படுத்தாமல், சிவகாமியை நோக்கி,
"அப்பா எங்கே? உள்ளே இருக்கிறாரா?" என்று கேட்டார்.
கண்ணபிரானுடைய வேடிக்கைப் பேச்சு அந்தச் சமயம் சிவகாமிக்கும்
பிடிக்கவில்லை என்று அவளுடைய முகக்குறி காட்டிற்று. "அப்பா அதோ
வருகிறார்!" என்றாள். பரஞ்சோதி திரும்பிப் பார்த்தார் ஆயனர்
மரத்தடியிலிருந்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர்
அருகில் வந்ததும் தளபதி பரஞ்சோதி, "ஐயா! என்னை அடையாளம்
தெரிகிறதா?" என்று கேட்டார். உடனே ஆயனர் ஆவலுடன், "யார்?
பரஞ்சோதியா?" என்று விரைந்து வந்து அவரைத் தழுவிக் கொண்டார்.
பிறகு, சற்றுத் தாழ்ந்த குரலில், "தம்பி! போன காரியம் எப்படி?
காயா, பழமா?" என்று கேட்டார்.
அப்போது அவருடைய
கண்களில் தோன்றிய வெறியையும், குரலில் தொனித்த பரபரப்பையும்
கவனித்த பரஞ்சோதிக்குக் கண்ணில் நீர் துளித்தது. தழுதழுத்த
மெல்லிய குரலில், "இந்தத் தடவை காரியம் ஜயமாகவில்லை;
வெறுங்கையுடனேதான் திரும்பி வந்திருக்கிறேன். ஆனால்,
என்றைக்காவது ஒருநாள் நிச்சயமாக அஜந்தா இரகசியத்தை அறிந்து
வந்து உங்களுக்குத் தெரிவிப்பேன்" என்று கூறினார். "வேண்டாம்,
தம்பி! வேண்டாம் நீ வழியில் பல்லவ சைனியத்தில்
சேர்ந்துவிட்டதாக நானும் கேள்விப்பட்டேன். ஒருவேளை
பொய்யாயிருக்குமோ என்று நினைத்தேன், அதனால் பாதகமில்லை.
என்றும் அழியா வர்ண இரகசியத்தை நானே சீக்கிரத்தில்
கண்டுபிடித்து விடுவேன். தம்பி! சில புதிய சோதனைகள் செய்து
கொண்டிருக்கிறேன்; வருகிறாயா காட்டுகிறேன்!" என்று ஆயனர் தாம்
உட்கார்ந்திருந்த மரத்தடியை நோக்கினார். இதற்குள், சிவகாமி
"அப்பா! அண்ணன் எட்டு மாதங்கள் கழித்து வந்திருக்கிறார். உள்ளே
வந்து உட்காரச் சொல்லுங்கள். எல்லாம் விவரமாகக் கேட்கலாம்"
என்றாள். "ஆமாம், ஆமாம்! வா, தம்பி!" என்று கூறி, ஆயனர்
பரஞ்சோதியை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஆறாம் அத்தியாயம்
கலை வெறி
ஆயனர் வீட்டுச்
சிற்ப மண்டபமானது கிட்டத்தட்ட எட்டு மாதத்துக்கு முன்பு
பார்த்தது போலவே இருப்பதையும், ஆயனர் அப்போது அரைகுறையாக வேலை
செய்து விட்டிருந்த சிலைகள் இன்னும் அரைகுறையாகவே இருப்பதையும்
பரஞ்சோதி பார்த்தபோது, அவருடைய மனத்தில் இன்னதென்று சொல்ல
முடியாத ஒரு சோர்வு உண்டாயிற்று. "இந்த யுத்தம் என்னத்திற்காக
வந்தது?" என்ற எண்ணமும் அவருடைய வீர உள்ளத்தில் தோன்றியது.
தாழ்வாரத்தின் முனையில் ஆயனரும் பரஞ்சோதியும்,
உட்கார்ந்திருந்தார்கள். சிவகாமி முன்னொரு சமயம் நின்றது போலவே
இப்போதும் அருகிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
"உங்களுக்குத்
தெரியுமா, அப்பா! இவர்தான் இப்போது காஞ்சிக் கோட்டையின்
தளபதி!" என்றாள் சிவகாமி. "அப்படியா! தம்பியின் முகக் களையைப்
பார்த்து, இவன் பெரிய பதவிக்கு வருவான் என்று அப்பொழுதே
நாகநந்தியடிகள் சொன்னார்..." என்று கூறிய ஆயனர், சட்டென்று
நினைத்துக் கொண்டு, "தம்பி! ஓலையை என்ன செய்தாய்?" என்று
கேட்டார். "ஐயா, அது விஷயத்திலேதான் ஏமாந்து போய்விட்டேன்.
தாங்களும் நாகநந்தியும் எவ்வளவோ எச்சரித்திருந்தும்
பயனில்லாமல் போய்விட்டது, ஓலை..." "அடாடா! அதைச்
சக்கரவர்த்தியிடம்..." "ஆம் ஐயா! ஓலை சக்கரவர்த்தியிடம்
சிக்கிவிட்டது." "ஆஹா!" என்ற ஆயனர், பிறகு, "மகேந்திர வர்மர்
அதைப் பற்றி என்ன சொன்னார்?" என்று கேட்டார். "மகேந்திரவர்மரா?
நான் பல்லவ சக்கரவர்த்தியைச் சொல்லவில்லையே; வாதாபி
சக்கரவர்த்தியையல்லவா சொன்னேன்? வழியில் என்னை வாதாபி வீரர்கள்
பிடித்துக் கொண்டுபோய்ப் புலிகேசியின் முன்னால்
நிறுத்தினார்கள். ஓலையையும் அவர்கள்தான் பலாத்காரமாய்
கைப்பற்றிக் கொண்டார்கள்..."
ஆயனர்
வாயிலிருந்து மீண்டும், 'ஆ!' என்னும் வியப்பொலி எழுந்தது. அதே
சமயத்தில் எங்கேயோ, யாரோ, பெருமூச்சு விடுவதுபோல் சத்தம்
கேட்டது. பாம்பின் சீறல் போன்ற அந்தச் சத்தத்தைப் பரஞ்சோதி
கவனித்தார். ஆனால், ஆயனராவது சிவகாமியாவது கவனிக்கவில்லை.
சிவகாமி அப்போது வாசற்பக்கத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.
அங்கே உள் வாசற்படியண்டை நின்ற கண்ணபிரான் சிவகாமியை நோக்கி
ஏதோ சமிக்ஞை செய்து கொண்டிருந்தான்.
"தம்பி!
உண்மையாகவே நீ வாதாபி புலிகேசி சக்கரவர்த்தியைப் பார்த்தாயா?"
என்று ஆயனர் வியப்புடன் கேட்டார். "ஆம், ஐயா! அதோ, அந்த புத்த
விக்கிரகம் உள்ள தூரத்தில் வாதாபி சக்கரவர்த்தி இருந்தார்..."
"சக்கரவர்த்தி என்ன சொன்னார்?" "யாருக்குத் தெரியும்? நான்
அறியாத பாஷையில் அவர் பேசினார்... தங்களுக்கு இருக்கும் ஆவலைப்
பார்த்தால், வாதாபி சக்கரவர்த்தியைப் பார்க்க விரும்புவதாய்த்
தோன்றுகிறதே!" "ஆம், தம்பி! உன்னை அனுப்பாமல், நானே ஓலையை
எடுத்துக் கொண்டு போயிருக்கக்கூடாதா என்று கூடத் தோன்றுகிறது!"
"ஏன் அவ்வளவு ஆர்வம், ஐயா?" "வாதாபி சக்கரவர்த்தி
இளம்பிராயத்தில் அஜந்தா மலையில் இரண்டு வருஷம் இருந்தாராம்.
ஆகையால் அவருக்கு அஜந்தா வர்ணத்தின் இரகசியம்
தெரிந்திருக்குமல்லவா?"
வஜ்ரபாஹு கலைகளை
இகழ்ந்து கூறியதெல்லாம் பரஞ்சோதிக்கு அப்போது நினைவு வந்தது.
அது எவ்வளவு உண்மை? ஆயனரின் கலை வெறி அவரை எப்படிப் பைத்தியமாக
அடித்திருக்கிறது? புலிகேசி பகை அரசன் என்பதைக்கூட, மறந்து
அவனைப் பார்க்கும் ஆவலை உண்டாக்கியிருக்கிறதல்லவா?" "ஐயா! நான்
முக்கியமாக எதற்காக வந்தேனோ, அந்தக் காரியத்தை இன்னும்
சொல்லவில்லை. சக்கரவர்த்தி தங்களிடம் ஒரு செய்தி தெரிவிக்கச்
சொல்லி எனக்கு ஆக்ஞாபித்தார்..." "எந்தச் சக்கரவர்த்தி?"
என்றார் ஆயனர். "மகேந்திர பல்லவர்தான்!"
"ஆ! மகேந்திர
பல்லவர்! அவரைப் பற்றி நான் என்னவெல்லாமோ நினைத்திருந்தேன்.
ஒரு சமயம் இந்தப் பல்லவ இராஜ்யத்திலுள்ள சிற்பிகள் எல்லாம்
சேர்ந்து சபைகூடி மகேந்திர பல்லவருக்கு 'விசித்திர சித்தர்'
என்று பட்டம் கொடுத்தோம். அதைக் காட்டிலும் 'சபல சித்தர்'
என்று அவருக்குப் பெயர் கொடுத்திருக்கலாம்." "ன் இப்படிச்
சொல்கிறீர்கள், ஐயா?" "பார், தம்பி! இங்கிருந்து என்னை
மாமல்லபுரத்துக்குப் போகச் சொன்னார். 'ஐந்து மலைக் கோயில்களும்
ஆறு மாதத்தில் முடிய வேண்டும்' என்றார். ஒரு மாதத்திற்குள்ளாக,
'கோயில் வேலையை நிறுத்து!' என்று கட்டளையிட்டார். சக்கரவர்த்தி
முன்போல் இல்லை, தம்பி; ரொம்பவும் மாறிப் போய் விட்டார்!"
"அப்படியொன்றும் அவர் மாறவில்லை ஐயா! யுத்தம் காரணமாகச்
சிற்சில காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.."
"யுத்தம்! பாழும்
யுத்தம்! இப்போது நடக்கிற யுத்தம் போதாதென்று பழைய பாரத
யுத்தத்தை வேறே கட்டிக் கொண்டு அழ வேண்டுமாம். ஒவ்வொரு ஊரிலும்
பாரத மண்டபங்கள் கட்ட வேண்டுமாம். நான் ஒரு விஷயம்
சொல்லட்டுமா, தம்பி! உண்மையில் மாமல்லபுரத்துச் சிற்ப வேலையை
சக்கரவர்த்தி நிறுத்தியது பாரத மண்டபம் கட்டுவதற்காக அல்ல,
சிற்பிகளுக்கும் சிற்றாள்களுக்கும் படி கொடுத்து வந்த அரிசி,
பருப்பு மிச்சமாகட்டும் என்றுதான்! துறைமுகப் பண்டக சாலைகளில்
இருந்த அவ்வளவு தானியங்களையும் காஞ்சிக்குக் கொண்டு போய்
விட்டார்களாம்!"
"யுத்தம்
நடத்துவதற்கு இவையெல்லாம் அவசியமான காரியங்கள், ஐயா! காஞ்சிக்
கோட்டை ஒரு வருஷமோ, இரண்டு வருஷமோ கூட முற்றுகைக்கு
ஆயத்தமாயிருக்க வேண்டும். வாதாபியின் சமுத்திரம் போன்ற சைனியம்
திரண்டு வருவதை நீங்கள் மட்டும் பார்த்திருந்தால்..." "வாதாபி
சைனியம் வருகிறது, வருகிறது என்று எட்டு மாதமாய்த்தான்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!"
"ஆனால், இன்னும்
ஏன் அந்தப் பிரம்மாண்டமான சைனியம் இங்கே வந்து சேரவில்லை
தெரியுமா? மகேந்திர பல்லவர் மட்டும் அப்போது
போர்க்களத்துக்குப் போயிராவிட்டால், இதற்குள் காஞ்சி மாநகர்
இருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும், ஐயா! வாதாபி
சைனியத்தில் வரிசை வரிசையாக, மலை மலையாக, நெடுந்தூரத்துக்கு
நெடுந்தூரம் நின்ற ஆயிரக்கணக்கான போர் யானைகளை என் கண்ணாலேயே
நான் பார்த்தேன். பல்லவ சைனியத்திலோ மொத்தம் நூறு யானைகளுக்கு
மேல் கிடையாது. அப்படியிருந்தும் எட்டு மாத காலம் வாதாபி
சைனியத்தை வடபெண்ணைக் கரையிலே நிறுத்தி வைத்திருந்தோம். இது
எதனால் சாத்தியமாயிற்று தெரியுமா? பாரத யுத்தத்தில்
பஞ்சபாண்டவர்களின் வெற்றி, ஸரீகிருஷ்ண பகவானுடைய அறிவு
பலத்தினாலும் அர்ச்சுனனுடைய வில்லின் வீரத்தினாலும்
சாத்தியமாயிற்று. இந்த நாளில் கிருஷ்ண பகவானும் அர்ச்சுனனும்
ஒரே உடம்பில் மகேந்திர பல்லவராக அவதரித்திருக்கிறார்கள், ஐயா!"
"தம்பி!
சக்கரவர்த்தியிடம் உன்னுடைய பக்தியைக் குறித்து மிகவும்
சந்தோஷம். எனக்குச் சக்கரவர்த்தி என்ன சொல்லி அனுப்பினார்?
அதைச் சொல்லு!" என்று ஆயனர் கேட்க, பரஞ்சோதி கூறினார்.
"புலிகேசியின் படைகள் வடபெண்ணையைக் கடந்து விட்டன ஐயா!
வேங்கியை வென்ற புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் படைகளும்
சேர்ந்து கொண்டிருக்கின்றன. இனி, அவற்றை வெகுகாலம் தடுத்து
நிறுத்துவது அசாத்தியம்! ஆகையினால்தான், காஞ்சிக் கோட்டையை
முற்றுகைக்கு ஆயத்தம் செய்ய என்னைச் சக்கரவர்த்தி அனுப்பி
வைத்தார். ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ முற்றுகை
நீடித்திருக்கலாம். ஆகையால் கோட்டைக்குள்ளிருந்து அநாவசியமான
ஜனங்களையெல்லாம் வௌியேற்றப் போகிறோம் கோட்டையைச் சுற்றிலுமுள்ள
கிராமங்களிலிருந்தும் ஜனங்கள் வௌியேறும்படி இருக்கும்.
இதுபற்றித்தான் தங்களுடைய விருப்பத்தைத் தெரிந்துகொள்ளும்படி
சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டார். எதிரி சைனியம் வரும்
சமயம் தாங்கள் இங்கே இருப்பது உசிதமாயிராது..."
"ஆஹா! இந்த அரண்ய
வீட்டிலேயிருந்தும் சக்கரவர்த்தி என்னைத் துரத்திவிடப்
பார்க்கிறாரா? எந்த ராஜா எந்தப் பட்டணத்துக்கு வந்தாலென்ன,
போனாலென்ன? இந்தக் காட்டுக்குள்ளே வந்து என்னை யார் எட்டிப்
பார்க்கப் போகிறார்கள்? பார்த்தால்தான் இங்கிருந்து என்னத்தை
எடுத்துக் கொண்டு போகப் போகிறார்கள்? இந்தக் கற்சிலைகளையும்
கல்லுளிகளையும் வேணுமானால் கொண்டு போகட்டும். சுவரிலே எழுதிய
சித்திரங்களை வேணுமானாலும் சுரண்டிக் கொண்டு போகட்டும்!..."
"ஐயா! தாங்கள்
ஏதோ கோபத்தில் பேசுகிறீர்கள். பல்லவ இராஜ்யத்துக்கு
எப்பேர்பட்ட ஆபத்து வந்திருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளாமல்
பேசுகிறீர்கள்..." "சக்கரவர்த்தி எங்களுக்கு என்னதான்
கட்டளையிடுகிறார்?" "தாங்களும் தங்கள் குமாரியும் காஞ்சிக்
கோட்டைக்குள்ளேயே வந்து இருந்தாலும் இருக்கலாம்! அல்லது சோழ
நாட்டுக்குப் போய்த் தங்கள் சிநேகிதர் நமச்சிவாய வைத்தியருடன்
சில காலம் தங்கியிருந்தாலும் இருக்கலாம். திருவெண்காட்டுக்குப்
போவதாயிருந்தால், தக்க பாதுகாப்புடன் தங்களை அனுப்பி
வைக்கும்படி எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார். தங்கள்
விருப்பம் எதுவோ, அப்படிச் செய்யலாம்" என்றார் பரஞ்சோதி.
"சிவகாமி! நீ என்ன அம்மா சொல்லுகிறாய்?" என்று கேட்டார் ஆயனர்,
திரும்பிப் பார்த்தார், ஆனால் சிவகாமி நின்ற இடத்தில் அவளைக்
காணவில்லை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஏழாம் அத்தியாயம்
சின்னக் கண்ணன்
ஆயனரும்
பரஞ்சோதியும் பேசிக் கொண்டிருக்கையில், வாசற்படியருகில் நின்ற
கண்ணபிரான் சமிக்ஞை செய்ததைச் சிவகாமி கவனித்தாள் என்று
சொன்னோமல்லவா? சற்று நேரத்துக்கெல்லாம், பேசிக்
கொண்டிருந்தவர்களின் கவனம் தன் மீது செல்லாதபடி சிவகாமி மெல்ல
நடந்து வீட்டுக்கு வௌியே வந்தாள். "அண்ணா! என்னை அழைத்தீர்களா?
ஏதாவது விஷேசம் உண்டா?" என்று கேட்டாள். "ஆமாம்; உண்டு!"
என்றான் கண்ணன். "கமலி அக்கா ஏதாவது சொல்லியனுப்பினாளா?"
கண்ணபிரான்
குரலைத் தாழ்த்திக்கொண்டு, "அதோ உள்ளே வந்திருக்கிறாரே, அந்த
வாலிபருக்கு உடனே விஷம் கொடுத்துக் கொல்லும்படி சொல்லச்
சொன்னாள்" என்றான். சிவகாமி, "இதென்ன வேடிக்கை அண்ணா? எதற்காக
விஷம் கொடுக்க வேண்டும்?" என்று புன்னகையுடன் கேட்டாள்.
"அம்மணி! விஷம் கொடுப்பது வேடிக்கையான விஷயமா?" "இல்லை,
அதனால்தான் 'எதற்காக' என்று கேட்கிறேன்." "மாமல்லருக்கு இவர்
போட்டியாக வந்திருக்கிறார், தாயே!" "என்னத்தில் போட்டி?"
"இராஜ்யத்துக்குத்தான்! ஊரிலே எல்லாம் சொல்லிக்
கொள்ளுகிறார்கள். 'சக்கரவர்த்தி, பரஞ்சோதியைத் தத்து எடுத்துக்
கொண்டு விட்டார்; பரஞ்சோதிக்குத்தான் இராஜ்யத்தைக் கொடுக்கப்
போகிறார்! மாமல்லருக்கு இராஜ்யம் இல்லை' என்று." "ஆஹா!
இதுமட்டும் உண்மையாயிருந்தால்...?"
"தங்கச்சி,
அப்படி நேர்ந்தால் உனக்கு அதில் மிக்க சந்தோஷம்
போலிருக்கிறதே?" என்றான் கண்ணபிரான். "அப்படித்தான், அண்ணா!
இந்த இராஜ்யந்தானே எனக்கும் அவருக்கும் குறுக்கே நிற்கிறது?
எனக்கு அவரும் அவருக்கு நானும் இருந்தால் போதுமே! இராஜ்யம்
என்னத்திற்கு!" "எல்லாப் பெண்களும் ஒரே மாதிரிதான்
போலிருக்கிறது! கமலிகூட இப்படியேதான் சொல்கிறாள்." "என்ன
சொல்கிறாள்!" "நீ இப்போது சொன்னது போலத்தான் சொல்கிறாள்.
'கண்ணா! உனக்கு நானும் எனக்கு நீயும் போதாதா? அரண்மனை சேவக்
என்னத்திற்கு? வா! எங்கேயாவது கிராமத்துக்குப் போய்
நிம்மதியாயிருக்கலாம்' என்கிறாள்." "அப்படிச் செய்யப்
போகிறீர்களா, அண்ணா?" "அப்படிச் செய்வதில் எனக்கும்
இஷ்டந்தான், ஆனால், சின்னக் கண்ணன் குறுக்கே நின்றான்." "அது
யார் அண்ணா, சின்னக் கண்ணன்?"
கண்ணன் கண்ணைச்
சிமிட்டிக்கொண்டு, "கொஞ்சம் மூளையைச் செலுத்தி யோசித்துப்
பார், தங்கச்சி!" என்றான். சிவகாமி, என்னத்தை யோசிக்கிறது?"
என்றாள். "இவ்வளவுதானா தங்கச்சி? இவ்வளவு
புத்திசாலியாயிருந்தும் சின்னக் கண்ணன் யார் என்று
கண்டுபிடிக்க முடியவில்லையே?" என்று கண்ணன் கேட்டுவிட்டு,
இன்னும் தாழ்ந்த குரலில் "சின்னக் கண்ணன் கமலியின் வயிற்றில்
இருக்கிறான்" என்று கூறிப் புன்னகை புரிந்தபோது அவன் முகத்தில்
அசடு வழிந்தது.
கமலி
கர்ப்பமாயிருக்கிறாள் என்பதைச் சிவகாமி தெரிந்து கொண்டு,
"அப்படியா அண்ணா! சந்தோஷம்" என்றாள். அவள் உடம்பை அப்போது
என்னவோ செய்தது. கமலியை உடனே பார்க்க வேண்டும்; அவளைக் கட்டிக்
கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் உண்டாயிற்று. கண்ணபிரான்,
"தங்கச்சி, அந்தச் சந்தோஷத்தை நீ நேரிலேயே வந்து
சொல்லிவிட்டால் தேவலை. கமலிக்கு இன்னும் கொஞ்சகாலம்
காஞ்சியைவிட்டுப் புறப்பட முடியாதாம். தங்கச்சியிடம்
சொல்வதற்கு என்னவெல்லாமோ சமாசாரம் மூட்டைக் கட்டி
வைத்திருக்கிறாளாம்!" என்றான்.
"எனக்கும்
அக்காவைப் பார்க்க ஆசைதான், அண்ணா! ஆனால் அது எப்படி
முடியும்?" என்றாள் சிவகாமி. "ஆமாம், தங்கச்சி! முடியாதுதான்!
அதனால்தான் நான் கூடக் கமலியிடம் சொன்னேன். அவர்களெல்லாம்
நம்முடைய ஏழைக் குடிசையில் வந்து தங்கியிருப்பார்களா என்று..."
"அண்ணா! அப்படிச் சொல்லவேண்டாம் நீங்களும் கமலியும் இருக்கும்
இடத்தில் ஏழ்மை ஏது? உங்களுடைய குடிசை எனக்கு அரண்மனையைவிட
ஆயிரம் மடங்கு மேல்"...என்று சொல்லி வந்தவள் சட்டென்று
நிறுத்தினாள். ஏதோ ஓர் எண்ணம் குறுக்கிட்டு அவளைத் தடை
செய்ததாகத் தோன்றியது. "அதற்கென்ன பார்த்துக்கொள்ளலாம், அண்ணா!
அப்பாவிடம் சொல்கிறேன்...வேறு ஒன்றும் விஷயமில்லையா?" என்றாள்.
"அப்படியொன்றும்
பெரிய விஷயமில்லை ஒரே ஒரு சின்ன விசேஷம் மட்டும் உண்டு; இன்று
காலை நான் ரதத்தை ஓட்டிக் கொண்டுபோய் அரண்மனை வாசலில்
நிறுத்தியதும், மாமல்லர் என்னைத் தனியாகக் கூப்பிட்டார்.
'பிரபு, என்ன விசேஷம்?' என்று கேட்டேன். 'ஒன்றுமில்லை, கண்ணா!
இராத்திரி தூங்கவில்லை' என்றார். 'அதுதான் முகத்தைப்
பார்த்தால் தெரிகிறதே, ஏன் தூங்கவில்லை?' என்றேன். 'புது
தளபதியுடன் பேசிக் கொண்டிருந்தேன்' என்றார். 'அவ்வளவுதானா?'
என்று கேட்டேன். 'அப்புறம் ஓலை எழுதினேன்' என்றார். 'யாருக்கு'
என்றேன். 'அப்பாவுக்கு' என்று சொன்னார். 'சரி' என்றேன். பிறகு
மெல்ல மெல்ல, 'இன்னோர் ஓலையும் எழுதினேன்' என்றார்." "அண்ணா!
ஓலையைக் கொடுங்கள்" என்று சிவகாமி கேட்டபோது, அவள் தொண்டையை
அடைத்துக் கொண்டது.
"கொடுக்கிறேன்,
தங்கச்சி! கொடுக்கிறேன்! ஆனால், ஓலையை வாங்கிக் கொண்டதும் நீ
ஓடிப்போய் என்னைத் திண்டாட்டத்தில் விட்டுவிடக் கூடாது..."
"என்ன திண்டாட்டம், அண்ணா?" "போன தடவை மாமல்லரின் ஓலையை
வாங்கிக் கொண்டதும் ஒரே ஓட்டமாய் ஓடிப் போய்விட்டாயல்லவா?
அதனால் எனக்கு எவ்வளவு சங்கடமாய்ப் போய்விட்டது தெரியுமா!"
'ஓலையை வாங்கிக் கொண்டதும் சிவகாமி என்ன செய்தாள்? அவள் முகம்
எப்படி இருந்தது? கண் எப்படியிருந்தது?' என்றெல்லாம் மாமல்லர்
கேட்டபோது நான் விழித்தேன்..." "போதும், அண்ணா, வேடிக்கை!
ஓலையைக் கொடுங்கள்!" இன்னும் கொஞ்சம் வேணுமென்றே தவக்கம்
செய்து விட்டுக் கடைசியாகக் கண்ணபிரான் ஓலையை எடுத்துக்
கொடுத்தான். அப்புறம் ஒரு கணநேரங்கூட அங்கே சிவகாமி
நிற்கவில்லை. வீட்டின் வலப்பக்கத்தில் சென்ற பாதை வழியாகப்
பழைய தாமரைக் குளத்தை நோக்கி விரைந்து சென்றாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
எட்டாம் அத்தியாயம்
நாகம் சீறுகிறது!
அரண்யத்தினால்
சூழப்பட்ட தாமரைக் குளக்கரையில், மகிழ மரத்தினடியில்
போட்டிருந்த மரப்பலகைச் சிங்காதனத்தில் சிவகாமி அமர்ந்து, தன்
மார்புக்கச்சில் சேர்த்துச் செருகியிருந்த ஓலையை எடுத்தாள்.
"பொல்லாத ஓலையே! பல்லவ குமாரரின் காதல் என் உள்ளத்தைக்
குத்திப் புண் செய்வது போதாதென்று நீயும் என் நெஞ்சைக்
குத்துகிறாயா?" என்று சொல்லிக்கொண்டே, அந்த ஓலையைக் கண்ணிலே
ஒற்றிக்கொண்டாள். பிறகு சற்றுத் தயங்கி, சட்டென்று தன்
செவ்விதழ்களில் அதை ஒரு தடவை வைத்து எடுத்துவிட்டு,
வெறுமையாயிருந்த மேல் ஓலையை அப்புறப்படுத்தினாள். உள் ஏட்டில்
முத்துப்போல் பொறித்த அழகிய சின்னஞ்சிறு எழுத்துக்கள்
காணப்பட்டன. கண்களில் ஆர்வம் ததும்பச் சிவகாமி படிக்கத்
தொடங்கிய போது, "அக்கா! அக்கா!" என்று பின்னாலிருந்து வந்த
சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டாள். திரும்பிப் பார்த்தால்,
அந்த மரச் சிங்காதனத்தின் கைப்பிடிமீது ஒரு பச்சைக் கிளி
உட்கார்ந்து அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது!
கிண்கிணி
ஒலிப்பதுபோல் சிவகாமி கலகலவென்று சிரித்து விட்டு, அந்தக்
கிளியைப் பார்த்து, "சுகப்பிரம்ம முனிவரே, உமக்கு என்ன இங்கே
வேலை? இளம்பெண்கள் தனிமையாக இருக்கும் அந்தப்புரத்துக்குள்
ரிஷிகள் வரலாமா? அதிலும், பூஜை வேளையில் கரடி புகுந்ததுபோல்,
ஒரு கன்னிப் பெண் தன் காதலரின் ஓலையைப் படிக்கப் போகும்
தருணத்திலா நீர் வந்து சேருவது? போம்! போம்!" என்று கையை ஓங்கி
வீசியபோது, அந்தக் கை வீச்சானது, கன்னத்தை நெருங்கிவரும்
காதலனுடைய கரத்தைத் தள்ளும் அபிநயமாகவே தோன்றியது.
அதற்கேற்றாற்போல் அந்தச் சுக மகாமுனிவரும் "மாட்டேன்!
மாட்டேன்!" என்றார்.
சிவகாமி
மறுபடியும் சிரித்துவிட்டுக் கூறினாள்: "வேஷதாரி ரிஷியே!
கதைகளிலே வரும் அரசிளங்குமரிகள் எல்லாரும் அந்தப்புரத்தில்
உம்மை வைத்துக்கொண்டு எப்படித்தான் இரகசியம் பேசினார்களோ,
தெரியவில்லை! இருக்கட்டும், இருக்கட்டும்; நான் பல்லவ
இராஜ்யத்தின் மகாராணியாகும் போது, உங்களுக்கெல்லாம்
அரண்மனையில் இடமில்லாமல் செய்து விடுகிறேன்..." அப்போது அந்த
விஷமம் நிறைந்த சுகப்பிரம்மம், "மாமல்லா! மாமல்லா!" என்று
உச்சஸ்தாயியில் கீச்சுக் குரலில் கத்திற்று.
"ஓஹோ! அப்படியா
சேதி? நான் அந்தப்புரத்திலிருந்து உங்களைத் துரத்தியடித்தால்,
மாமல்லரிடம் சலுகைக்குப் போவோம் என்று சொல்கிறீரா? நடக்காது
முனிவரே, நடக்காது! பல்லவ சிங்காதனத்திலே சிவகாமி தேவி
அமர்ந்தவுடனே முதல் காரியமாக, அந்த ராஜ்யத்திலே சோம்பித்
திரியும் ஆண்டிகள், பிக்ஷுக்கள், காவித்துணி தரித்த
சந்நியாசிகள், மண்டை ஓட்டு மாலை அணிந்த காபாலிகர்கள்
இவர்களையெல்லாம் நாட்டை விட்டு ஓட்டி விடப்போகிறாள்.
யோக்கியமாகக் கல்யாணம் செய்து கொண்டு இல்லறம்
நடத்துகிறவர்களுக்குத்தான் பல்லவ இராஜ்யத்தில் அப்புறம் இடம்
இருக்கும், தெரியுமா? நான் இந்த ஓலையைப் படிக்கும் வரையில்
உம்முடைய திருவாயை மூடிக் கொண்டு சும்மா இரும்...!"
சும்மா இருக்க
முடியாது என்பது போல், சுகர், "ரதி! ரதி!" என்றார். சிவகாமி
திரும்பிப் பார்த்தாள் அங்கே ரதி துள்ளி ஓடி வந்து
கொண்டிருந்தது. "ரதி! அந்தப்புரத்துக்கு தகுந்த சகி நீதான்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வாயைத் திறக்காமல்
மௌனமாயிருப்பாய். இந்த ரிஷியோ எதையும் அரையும் குறையுமாய்க்
கேட்டுக்கொண்டு நாலுபேர் இருக்கும்போது மானத்தை வாங்கி
விடுவார்! இந்த வேஷதாரி முனிவர் இங்கிருந்து தொலைந்து போன
பிறகு உனக்கு மாமல்லரின் ஓலையைப் படித்துக் காட்டுகிறேன்,
ரதி!" இவ்விதம் கூறி, ரதியின் மோவாய்க்கட்டையைத் தடவிக்
கொடுத்துவிட்டுச் சிவகாமி மீண்டும் ஓலையைப் பார்த்தாள். கையிலே
பணியாரத்தை வைத்துக் கொண்டிருக்கும் குழந்தை, அதைச்
சாப்பிட்டால் ஆகிப் போய்விடுமே என்ற பயத்தினால் தயங்குவது போல்
சிவகாமியும், ஓலையைப் படிக்கும் இன்பத்தைத் தள்ளிப் போட்டுக்
கொண்டேயிருந்து கடைசியில் படிக்கலானாள். ஓலையில் பிராகிருத
பாஷையில் எழுதியிருந்தது பின்வருமாறு:
"பாரதநாட்டில்
புகழ்பெற்ற சிற்ப சக்கரவர்த்தியின் செல்வக் குமாரியும்,
சௌந்தரிய தேவதை அடிபணிந்து போற்றும் சுகுமாரியும், பரத நாட்டிய
சாஸ்திரம் வலம் வந்து தொழுது வணங்கும் கலைவாணியும், மாமல்ல
பல்லவனின் இருதய சிம்மாசனத்தில் கொலு வீற்றிருந்து தனியரசு
புரியும் மகாராணியும் ஆகிய சிவகாமி தேவிக்கு: இனிமேல் ஓலை எழுத
மாட்டேன், நானே நேரில் வந்து விடுவேன் என்று முன் ஓலையில்
எழுதியிருந்தேன். அதற்கு மாறாக இதை நான் எழுதுவதற்கு இரண்டு
காரணங்கள் உண்டு. என் ஆருயிரே! முந்தா நாள் இரவு நான் ஒரு கனவு
கண்டேன். அதை நினைத்தாலே என் தேகமெல்லாம் சிலிர்க்கிறது.
கற்பனைக்கு எட்டாத இன்பம் நிறைந்த அந்த அதிசயக் கனவைக் கேள்.
கனவிலே நான் தூங்கிக் கொண்டிருந்தேன். ஆகாயவௌியில் அந்தரத்தில்
காற்றுப் படுக்கையில் மிதந்து கொண்டே தூங்கியதாகத் தோன்றியது.
அந்த அதிசயமான சொப்பனத் தூக்கம் எதனாலோ திடீரென்று கலைந்தது.
கண்களை விழித்துப் பார்க்க முயன்றேன். ஆனால், ஏற்கனவே கண்கள்
விழித்துத் தானிருந்தன. மேலும் கீழும் நாற்புறமும் ஒரே
காடாந்தகாரமாயிருந்தபடியால், என் கண்கள் திறந்திருந்தும்,
மூடியிருந்தனவோ என்று நான் ஐயப்பட நேர்ந்தது.
உன் கண் இமையில்
தீட்டிய மையைக் காட்டிலும் கரியதாய் என்னைச் சுற்றிலும்
படர்ந்திருந்த அந்த அதிசயமான இருட்டைப் பற்றி நான்
சிந்தித்துக் கொண்டிருக்கையில், எனக்குச் சற்று மேலே வட்ட
வடிவமான ஓர் ஒளி தோன்றக் கண்டேன். வர வர அந்த ஒளிவட்டம்
அகன்றுகொண்டு வந்ததோடு, அதன் ஜோதியும் அதிகமாகி வந்தது.
கண்களைக் கூசச் செய்யாமல் குளிர்ந்து விளங்கிய அந்தப் பொன்னிற
ஒளி வரவர என்னை நெருங்கி நெருங்கி வந்ததைக் கண்டேன்.
அருகே வந்ததும்,
அந்த ஒளி வட்டம் உன்னுடைய திவ்ய வதனந்தான் என்று தெரிந்தபோது,
எனக்குண்டான வியப்பையும் களிப்பையும் எவ்வாறு சொல்வேன்?
சிவகாமி! விரைவிலே உன்னுடைய உருவம் முழுவதுமே தெரிந்தது.
எல்லையில்லா அந்தகாரத்தின் நடுவில் உன் பொன் உருவத்தைப்
பார்க்கப் பார்க்க, எனக்கு ஒரு விசித்திரமான எண்ணம்
உதயமாயிற்று. உன்னுடைய உருவமானது சாதாரண மனித தேகத்தைப் போல்
இரத்தம், சதை, எலும்பு, தோல் இவைகளினால் ஆனதாக எனக்குத்
தோன்றவில்லை. நிலாமதியின் இளங்கதிரையும் மல்லிகைப் பூவின் இன்ப
மணத்தையும், அன்னப் பட்சியின் இறகிலுள்ள மென்மையையும், செவ்வழி
ராகத்தின் இன்னிசையையும் கலந்து உன் தூய திருமேனியைப் பிரமன்
படைத்திருக்க வேண்டுமென்று கருதினேன்.
இவ்வாறு நான் உன்
மேனி அழகாகிய மதுவை அருந்தி மயங்கி நிற்கையில், நீ என் அருகே
நெருங்கி வந்தாய். என் முகத்துக்கு வெகு சமீபத்தில் உனது பொன்
முகத்தைக் கண்டேன். காலையில் மலர்ந்த குவளை மலர்களில்
பனித்துளி நிற்பதுபோல் உன் நீண்ட கண்களின் முனையில் இரு
கண்ணீர்த் துளிகள் நின்றன. உன்னுடைய மூச்சுக்காற்று என்
முகத்திலே பட்டது. அவ்வளவு அருகில் வந்திருந்த உன்னைத் தழுவி
அணைத்துக் கொள்ள வேண்டுமென்று என்னுடைய தேகத்தின் ஒவ்வோர்
அணுவும் துடிதுடித்தது ஆனாலும், நான் அவ்விதம் செய்யவில்லை.
என் உள்ளத்தில்
ஒரு சந்தேகம் தோன்றியிருந்தது. உன்னைத் தொட்டேனானால், உன்
திருமேனியானது நிலா மதியின் கதிராகவும், மல்லிகையின்
மணமாகவும், அன்னப் பட்சியின் மென்மையாகவும், செவ்வழியின்
இன்னிசையாகவும் தனித் தனியே பிரிந்து மறைந்து விடுமோ என்ற பயம்
ஏற்பட்டிருந்தது. இந்தப் பயத்தை அறிந்து கொண்டவளைப் போல நீ உன்
செவ்விதழ்கள் சிறிது அகல, முத்துப் போன்ற பற்களின் நுனி தெரிய,
குறுநகை புரிந்தாய்! உன் பொன் வதனம் என்னை அமுத போதையில்
ஆழ்த்திக்கொண்டு இன்னும் அருகே நெருங்கிற்று.
ஆ என்ன சொல்வேன்
என் துரதிர்ஷ்டத்தை! அந்தச் சமயத்தில் எங்கேயோ ஒரு நாகப்
பாம்பின் சீறல் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தேன்; ஒரு
மரக்கிளையில் இரண்டு பட்சிகள் உட்கார்ந்து, ஒன்றின் மூக்கை
ஒன்று தொட்டும், 'கலகல' என்று சப்தித்தும் விளையாடிக்
கொண்டிருந்தன. அந்த மரத்தின் அடிக்கிளையிலிருந்து ஒரு நாகப்
பாம்பு - கருநிறமும் மஞ்சள் நிறமும் கலந்த உடலுடைய நீண்ட
பாம்பு அந்தப் பட்சிகள் இருந்த கிளையை நோக்கிச் 'சரசர' என்று
ஏறிக் கொண்டிருந்தது. அந்த நாகத்தின் சீறலைத்தான் நான்
கேட்டதாகத் தெரிந்து கொண்டேன். அந்தக் கணத்தில் உன்னைக் கூட
மறந்து, என் உடைவாளை அவசரமாய் எடுத்தேன்.
அவ்வளவுதான்
விழித்துக்கொண்டேன். என் கண்ணில் வளரும் பெண்ணரசியே!
சொப்பனங்களிலும் அவற்றின் பலன்களிலும் நம்பிக்கை இல்லாதவன்
நான். ஆனாலும் இந்தக் கனவுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா என்று
அடிக்கடி என்னையறியாமல் எண்ணம் உண்டாகிறது. உனக்கு ஏதேனும்
அபாயம் வருமென்பதைக் குறிப்பிடுகிறதோ என்று ஐயுறுகிறேன்.
யுத்தம் நெருங்கி வருகிறபடியால் நீ ஜாக்கிரதையாயிருக்க
வேண்டும்; ஆனால், எவ்விதக் கவலையோ, பயமோ வேண்டாம். என் கையிலே
வாள் இருக்கும் வரையில் உனக்கும் உன் தந்தைக்கும் அபாயம்
எதுவும் நேராது.
பொழுது
விடியப்போகிறது கீழ்வானம் வெளுக்கிறது. நான் சொல்ல விரும்பிய
இன்னொரு செய்தியைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறேன்.
எனக்கு ஒரு புதிய தோழன் கிடைத்திருக்கிறான். அவன் யார்
தெரியுமா? மதயானை மேல் வேல் எறிந்து உன்னையும் உன் தந்தையையும்
காப்பாற்றிய வீர வாலிபன்தான். அவனைக் கோட்டைக் காவலுக்காகச்
சக்கரவர்த்தி அனுப்பியிருக்கிறார். நேற்றிரவெல்லாம் நானும்
அவனும் பேசிக் கொண்டிருந்தோம்; பெரும்பாலும் உன்னைப் பற்றியே
பேசிக் கொண்டிருந்தோம்.
சக்கரவர்த்தியிடமிருந்து உங்களுக்கு அவன் சேதி கொண்டு
வருகிறான். நீங்கள் காஞ்சிக் கோட்டைக்காவது வந்துவிட வேண்டும்,
அல்லது சோழ நாட்டுக்குப் போய்விட வேண்டும் என்று சக்கரவர்த்தி
சொல்லியனுப்பியிருக்கிறார். ஆனால் நான் அங்கு வந்து உங்களைப்
பார்த்துப் பேசும் வரையில் அதைப்பற்றி ஒரு முடிவும் செய்ய
வேண்டாம். யுத்தம் நெருங்கி வருகிறதானது ஒரு காரியத்துக்க
ரொம்பவும் நல்லதாயிருக்கிறது. கூடிய சீக்கிரம் எனக்கு விடுதலை
கிடைத்துவிடும். கோட்டைக்கு வௌியே போகக் கூடிய நாள் விரைவிலே
வரும். அந்த நாள் வந்தவுடன் நான் நேரே அங்கு வந்து உன்னைப்
பார்த்துவிட்டு வேறு காரியங்களைக் கவனிப்பேன்.
என் செல்வமே!
ஒவ்வொரு சமயம் நினைத்தால் இந்த இராஜ்யம் என்னத்திற்கு, யுத்தம்
என்னத்திற்கு என்றெல்லாம் தோன்றுகிறது. இதெல்லாம்
சொப்பனமாயிருக்கக் கூடாதா? திடீரென்று கண் விழித்து
எழுந்ததும், நான் சக்கரவர்த்தி குமாரன் இல்லை, உன்
தகப்பனாரிடம் சிற்பக் கலை கற்றுக் கொள்ளும் சீடன் என்று
ஏற்பட்டால், எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்? அப்போது உனக்கும்
எனக்கும் இடையே ஒரு தடையும் இராதல்லவா? இவ்வாறு எட்டு மாத
காலமாக உன்னை வந்து பார்க்காமல் இருந்திருப்பேனா?"
ஓலையை ஒரு தடவை
முழுதும் படித்த பின்னர், இன்னொரு தடவையும் சிவகாமி படித்தாள்.
பிறகு ரதியைப் பார்த்து, "ரதி, பல்லவ குமாரரிடமிருந்து வந்த
ஒவ்வோர் ஓலையையும் உனக்குப் படித்துக் காட்டினேன் அல்லவா?
இந்தத் தடவை முடியாது! படித்துக் காட்டினாலும் உனக்கு
விளங்காது!" என்றாள். பிறகு ஓலையை எடுத்துக்கொண்டு, பின்னால்
இருந்த மகிழ மரத்தின் மேல் இரண்டு அடி ஏறினாள். மேலே கிளைகள்
முளைத்திருந்த இடத்தில் காணப்பட்ட பொந்தில் கையைவிட்டுத்
திரும்ப எடுத்தபோது அவளுடைய கையில் ஏழெட்டு ஓலைகள் இருந்தன.
அந்த ஓலைகளை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்து விட்டுத்
தன்னிடமிருந்ததையும் சேர்த்து மறுபடியும் பொந்திற்குள் வைத்து
விட்டுக் கீழே இறங்கினாள்.
"ரதி! வா!
போகலாம்; சுகப்பிரம்மரிஷியே! வாரும்; வீட்டுக்குப் போகலாம்.
அப்பா சாப்பிடக் காத்துக் கொண்டிருப்பார். மாமல்லரின் ஓலையைப்
படித்துக் காட்டவில்லையென்று என் பேரில் கோபமா? நாளைக்கு வந்து
உங்கள் இருவருக்கும் படித்துக் காட்டுகிறேன். நாளைக்கு
மட்டுந்தானா? என் வாழ்நாள் உள்ள வரையில் ஒவ்வொரு நாளும்
படித்துக் காட்டுவேன். ரதி! குமார சக்கரவர்த்தியைப் பற்றி நீ
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? சுக மகாமுனிவரே! மாமல்லர்
மகாகவி என்பதைத் தெரிந்து கொள்ளுவீராக. காளிதாசனையும்
பாரவியையும் போன்ற பெரிய கவி மாமல்லர், அவருடைய கவிதைக்குப்
பாத்திரமான பெண் யார் தெரியுமா? இந்த ஏழைச் சிற்பியின் மகள்
சிவகாமிதான்!"- இவ்விதம் ரதியுடனும் சுக முனிவருடனும் மாறி
மாறிப் பேசிக் கொண்டே சிவகாமி வீட்டை நோக்கிச் சென்றாள்.
காட்டு
மரங்களுக்குள்ளே சிவகாமி மறைந்ததும், தாமரைக் குளத்தின்
அருகில் இருந்த மற்றொரு பெரிய மரத்தின் மறைவிலிருந்து நாகநந்தி
அடிகள் வௌிப்பட்டார். அவர் மெல்ல நடந்து வந்து, சிவகாமி ஓலைகளை
ஒளித்து வைத்த மரப் பொந்திலிருந்து அவற்றை எடுத்தார்.
ஒவ்வொன்றாக அவற்றை விரைவாகப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.
அவ்விதம் வாசித்து வந்தபோது அவர் விட்ட பெருமூச்சானது, நாகப்
பாம்பின் சீறலைப் போலத் தொனித்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஒன்பதாம் அத்தியாயம்
ரதியின் புன்னகை
மாமல்லரின்
ஓலையில் ஒரு பகுதியைச் சிவகாமி நினைத்து நினைத்து ஆனந்தித்துக்
கொண்டே வீடு நோக்கி நடந்தாள். அப்படி அவளை மெய்மறக்கச் செய்தது
ஓலையின் கடைசிப் பகுதியேயாகும். சக்கரவர்த்தியின்
குமாரனாயிராமல் ஆயனரிடம் சிற்பக்கலை கற்கும் சீடனாயிருக்க
விரும்புவதாக மாமல்லர் தெரிவித்திருந்தாரல்லவா! ஆகா இந்த
விஸ்தாரமான பரத கண்டத்தில் மூன்றில் ஒரு பாகத்தைத் தனி அரசு
புரியும் சக்கரவர்த்தியின் குமாரர், தமக்குரிய அந்த மகத்தான
சாம்ராஜ்யத்தை வேண்டாமென்று வெறுத்துத் தள்ளச்
சித்தமாயிருக்கிறார்! எதற்காக? அரண்மனை மான்யம் பெற்று ஜீவனம்
செய்யும் ஆயனச் சிற்பியின் மகளுக்காக! அந்தப் பெண்ணிடம் தாம்
கொண்ட காதல் நிறைவேறுவதற்கு இந்தச் சாம்ராஜ்யம்
தடையாயிருக்கிறதென்பதற்காக! இம்மாதிரி அதிசயத்தைக் கதையிலோ
காவியத்திலோ கேட்டதுண்டா?
"ரதி! உன் தோழி
சிவகாமியைப் போல் பாக்கியசாலியான பெண் இந்த ஈரேழு பதினாலு
லோகத்திலும் இல்லையடி!" என்று கூறிச் சிவகாமி தன்னைத்
தொடர்ந்து வந்த மானின் முகத்தை இரு கரங்களாலும் பிடித்து
நிமிர்த்தினாள். ரதியோ தன் அழகிய கண்களை அகல விரித்து அவளை
ஆவலுடன் நோக்கிற்று. "இதோ பார், ரதி! நீயும் அதிர்ஷ்டசாலிதான்!
எட்டு மாதத்துக்கு முன்பு உன்னிடம், மாமல்லரைப்பற்றி நான்
குறைவாகக் கூறியதை மறந்துவிடு. 'இன்று இவர் கமலி வீட்டுக்கு
நான் போகக் கூடாது' என்கிறார். நாளைக்கு ரதியை உன்னுடன்
அரண்மனைக்கு அழைத்து வரக்கூடாது என்பார். இப்படிப்பட்ட பெரிய
மனிதர்களின் உறவு நமக்கு ஒத்துவராதடி, அம்மா!" என்று
சொன்னேனல்லவா? அதே பல்லவ குமாரர்தான் இன்றைக்கு 'இராஜ்யம்
என்னத்திற்கு சிவகாமி! எனக்கு நீயே போதும்!" என்கிறார். அவர்
சொல்வது நியாயந்தானே ரதி! எனக்கு அவரும், அவருக்கு நானும்
இருந்தால் போதாதா? இராஜ்யம் என்னத்திற்கு? சண்டை, கொலை, சாவு
எல்லாம் என்னத்திற்கு?"
இவ்விதம் கூறி
ரதியின் இரண்டு தூக்கிய காதுகளுக்கும் நடுவில் சிவகாமி
முத்தமிட்டுவிட்டு, மறுபடியும் சொல்லுவாள். "ரதி, உன்பாடு
யோகந்தான்! மாமல்லரும் நானும் மனித சஞ்சாரமே இல்லாத
நடுக்காட்டில் பர்ணசாலை கட்டிக் கொண்டு ஆனந்த வாழ்க்கை நடத்தப்
போகிறோம். அப்போது இந்தச் சுகப்பிரம்மரிஷியை அடித்துத்
துரத்திவிட்டு உன்னை மட்டுந்தான் எங்களுடன் வைத்துக் கொள்ளப்
போகிறேன். 'உனக்கு வேலை நிரம்ப இருக்கும், ரதி! எனக்கும்
மாமல்லருக்கும் இடையில் நீ அடிக்கடி தூது போக
வேண்டியதாயிருக்கும்!"
ரதி கண்களினாலேயே
ஒரு புன்னகை புரிந்து விட்டு, 'போதும் இந்த அசட்டுத்தனம்!'
என்பதுபோல் தலையை ஆட்டி விட்டு, சிவகாமியின் கையிலிருந்து
திமிறிக்கொண்டு புல் மேயச் சென்றது. "அம்மா! சிவகாமி!" என்ற
குரலைக் கேட்டதும் சிவகாமி திடுக்கிட்டுத் திரும்பிப்
பார்த்தாள். அவள் பார்த்த இடத்தில் செடி கொடிகளை விலக்கிக்
கொண்டு ஆயனர் நிற்பதைக் கண்டாள். தான் ரதியுடன் பேசிக்
கொண்டிருந்தது அவர் காதிலே விழுந்ததோ என்ற எண்ணத்தினால்
அவளுடைய முகத்தில் நாணமும் அச்சமும் கலந்து தோன்றின.
ஆனால், மலர்ந்த
முகத்துடன் ஆயனர் கூறிய வார்த்தைகள் அவளுடைய பயத்தைப் போக்கின.
"குழந்தாய் ! எனக்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது.
நடுக்காட்டிலே யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய் என்று
பார்த்தேன். ரதியுடன் பேசிக் கொண்டிருக்கிறாயா? பாவம்! நீ என்ன
செய்வாய்? உன்னோடு பேசுவதற்குக்கூட இவ்விடத்தில் யாரும் இல்லை.
பொழுது போவதே உனக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும். காஞ்சியிலாவது
உன் தோழி கமலி இருக்கிறாள்.." இப்படிப் பேசிக்கொண்டே நெருங்கி
வந்த ஆயனரைச் சிவகாமி கட்டித் தழுவிக்கொண்டு, "அப்பா
உங்களுக்குத் தெரியுமா? கமலி... கமலி..." என்று மென்று
விழுங்கினாள்.
ஆயனர் பதறலுடன்,
"ஐயோ கமலிக்கு என்ன, அம்மா? ஏதாவது உடம்புக்கு
வந்திருக்கிறதா?" ன்று கேட்டார். "ஆமாம், அப்பா! கமலிக்கு
உடம்பிலேதான் வந்திருக்கிறதாம்!" என்று கூறிவிட்டுச் சிவகாமி
இடி இடியென்று சிரித்தாள். அதைப் பார்த்த ஆயனர் விபரீதமாக
ஒன்றுமிராது என்று தீர்மானித்துக்கொண்டு, "பின்னே என்ன,
சிவகாமி? ஒரு வேளை இங்கே வருகிறதாகச் சொல்லி
அனுப்பியிருக்கிறாளோ?" என்றார். "இல்லை, அப்பா, இல்லை" என்று
சொல்லிக்கொண்டே சிவகாமி ஆயனரின் காதினருகில் நெருங்கி, "கமலி
வயிற்றில் சின்னக்கண்ணன் வந்திருக்கிறானாம்!" என்றாள்.
ஆயனர் சற்று
நிதானித்து விஷயம் இன்னதென்று தெரிந்து கொண்டார். முன்னைவிட
அருமையுடன் சிவகாமியை அணைத்துத் தழுவிக் கொண்டு "சந்தோஷம்
அம்மா! சிவகாமியின் கல்யாணத்தின்போதே நான் ஆசீர்வாதம்
பண்ணினேன்..." என்றார். "அப்பா! உங்கள் செல்வக் குமாரிக்கு
எப்போது கல்யாணம் ஆயிற்று?" என்றாள் சிவகாமி. தாம் வாய் தவறிச்
'சிவகாமி' என்று சொல்லிவிட்டது ஆயனருக்குச் சட்டென்று
புலப்பட்டது. அவர் ஓர் அசட்டுப் புன்னகை செய்துவிட்டு, "என்ன
அம்மா சொன்னேன்? சிவகாமியின் கல்யாணத்தின்போது' என்று சொல்லி
விட்டேனா? அதனால் என்ன? உனக்கும் ஒரு நாள் கல்யாணம்
நடக்கத்தான் போகிறது. நான் சொல்லவந்தது என்னவென்றால், கமலியின்
கல்யாணத்தின் போது நான் அவளுக்கு ஆசீர்வாதம் செய்தேன்;
'சீக்கிரத்தில் உனக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும். அவன்
என்னிடத்தில் சிற்பக்கலை கற்றுக்கொள்ள வரவேண்டும்' என்று..."
என்றார்.
இவ்விதம் கூறிய
ஆயனர் பேச்சை நிறுத்திவிட்டு மௌனத்தில் ஆழ்ந்தார். அவருடைய
உள்ளமானது சிவகாமியின் விவாகத்தைப் பற்றிச் சிந்திக்கத்
தொடங்கியது. பரஞ்சோதிக்கு அவளை மணம் செய்விக்கலாம் என்று தாம்
முன்னம் எண்ணியது நினைவு வந்தது. அவனோ இப்போது பெரிய போர்
வீரனாகவும் கோட்டைத் தளபதியாகவும் ஆகியிருக்கிறான். கேவலம் ஒரு
சிற்பியின் மகளை அவன் மணந்து கொள்ள இணங்குவானா?
"அப்பா! என்ன
யோசிக்கிறீர்கள்?" என்று சிவகாமி கேட்கவும், "ஒன்றுமில்லை
அம்மா! பரஞ்சோதியுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது நீ
திடீரென்று எங்கே போய் விட்டாய்? அவனிடம் சக்கரவர்த்தி ஒரு
முக்கியமான சமாசாரம் சொல்லியனுப்பியிருக்கிறார். அதைப்பற்றி
உன் அபிப்பிராயத்தைக் கேட்கலாமென்று பார்த்தால், உன்னைக்
காணோம். வா, வீட்டுக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம். உன்
அத்தை நாம் இரண்டு பேரும் சாப்பிடாமல் எங்கே தொலைந்து போய்
விட்டோம் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பாள்!" என்றார்.
இருவரும் ஒற்றையடிப்பாதையில் மௌனமாக நடந்தார்கள். ஆயனரின்
உள்ளம் சிவகாமியின் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில்
ஆழ்ந்திருந்தது. சிவகாமியின் உள்ளமோ, தேன் மலரை மொய்க்கும்
வண்டைப்போல் மகிழ மரப்பொந்தில் இருந்த மாமல்லரின் ஓலையைச்
சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பத்தாம் அத்தியாயம்
ஆனந்த நடனம்
"அப்பா! நான்
நடனம் ஆடி வெகுகாலம் ஆகி விட்டதே, இன்றைக்கு ஆடட்டுமா?" என்று
சிவகாமி கேட்டாள். இருவரும் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில்
ஒரு மரத்தடியில் கிடந்த கல்லின் மீது உட்கார்ந்திருந்தார்கள்.
பக்கத்து மரத்தடியிலே வர்ணம் அரைக்கும் கல்லுவங்களும், வர்ணம்
காய்ச்சும் அடுப்புகளும், சட்டி பானைகளும் கிடந்தன. ஆயனர்
சிறிது அதிசயத்துடன் சிவகாமியை உற்று நோக்கினார். "இன்றைக்கு
என்ன குழந்தாய், உன் முகம் இவ்வளவு களையாயிருக்கிறது?" என்று
வினவினார்.
உடனே மறுமொழி
சொல்ல முடியாமல் சிவகாமி சிறிது திகைத்துவிட்டு, பிறகு,
"கமலியைப்பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு
உற்சாகமாயிருக்கிறது. அப்பா! காஞ்சிக்குப் போய் கமலியைப்
பார்த்துவிட்டு வரலாமா?" என்றாள். உடனே, தான் பிழை
செய்துவிட்டதை உணர்ந்து நாவைப் பற்களினால் கடித்துக் கொண்டு
"ஆமாம், அப்பா! சக்கரவர்த்தி ஏதோ நமக்குச் செய்தி
அனுப்பியதாகச் சொன்னீர்களே, அது என்ன?" என்று கேட்டாள்.
"எதிரி சைனியம்
வடபெண்ணை ஆற்றைக் கடந்து விட்டதாம். காஞ்சியை நெருங்கி வந்து
கொண்டிருக்கிறதாம். காஞ்சியை முற்றுகை போட்டாலும் போடுமாம்.
அகையால், 'ஒன்று நீங்கள் காஞ்சி நகருக்கு போய்விடுங்கள்;
அல்லது சோழ தேசத்துக்குப் போங்கள்' என்று சக்கரவர்த்தி சொல்லி
அனுப்பினாராம். நீ என்ன சொல்கிறாய், அம்மா?" "நான் என்ன சொல்ல,
அப்பா! எனக்கு என்ன தெரியும்? தங்கள் இஷ்டம் எதுவோ, அதுதான்
எனக்கு இஷ்டம்..." "என் இஷ்டம் இங்கேயே இருக்க
வேண்டுமென்பதுதான். இந்தக் காட்டை விட்டு வேறு எங்கே போனாலும்
எனக்கு மன நிம்மதியிராது" என்றார் ஆயனர். "எனக்கும்
அப்படித்தான், அப்பா! இங்கேயே நாம் இருந்து விடலாமே?" என்றாள்
சிவகாமி.
மாமல்லரின்
ஓலையில், தாம் வந்து அவளைச் சந்திக்கும் வரையில் ஒன்றும்
முடிவு செய்ய வேண்டாம் என்று எழுதியிருந்ததை நினைத்துக்
கொண்டுதான் மேற்கண்ட விதம் சிவகாமி சொன்னாள். காஞ்சிக்குப்
போய்க் கமலியைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை ஒரு பக்கத்தில்
அவளுக்கு அளவில்லாமல் இருந்தது. ஆனால், எட்டு மாதத்துக்கு
முன்பு திருநாவுக்கரசரைப் பார்ப்பதற்காக காஞ்சிக்கு போய்த்
திரும்பியதும், முதன் முதலாக மாமல்லர் தனக்கு எழுதிய ஓலையை
நினைவுப்படுத்திக் கொண்டாள். "அரண்மனை நிலா மாடத்தில்,
முத்துப் பதித்த பட்டு விதானத்தின் கீழே, தங்கக்கட்டிலின் மேல்
விரித்த முல்லை மலர்ப்படுக்கையிலே படுத்துறங்க வேண்டிய நீ,
என்னுடைய ரதசாரதியின் வீட்டில் தரையிலே விரித்த கோரைப் பாயில்
படுத்துறங்கினாய் என்பதை எண்ணி எண்ணி என் மனம் புண்ணாகிறது!"
என்று பல்லவ குமாரர் எழுதியிருந்தார். இதிலே, அவர்
சிவகாமியிடம் கொண்டிருந்த காதலின் மேன்மையும் வௌியாயிற்று;
கண்ணபிரான் வீட்டிலே வந்து சிவகாமி தங்குவதை அவர் அவ்வளவாக
விரும்பவில்லை என்பதும் புலனாயிற்று.
இதைப்பற்றிச்
சிவகாமியின் உள்ளத்தில் ஒரு போராட்டம் நடந்தது. கமலியிடம்
அவளுக்கிருந்த நட்புணர்ச்சியும் பல்லவ குமாரரிடம் அவள்
கொண்டிருந்த காதல் வெறியும் போராடின முடிவிலே, காதல்தான்
வெற்றி பெற்றது. "ஆகா! எத்தகைய பேதை நாம்! மகிதலம் போற்றும்
மண்டலாதிபதியின் குமாரரிடம் காதல் கொள்ளத் துணிந்து விட்டு,
அவருடைய கௌரவத்துக்குப் பங்கம் விளையக்கூடிய காரியத்தை
செய்தோமே!" என்று வருந்தி, இனிமேல் பல்லவ குமாரரின் விருப்பம்
தெரியாமல் காஞ்சிக்கே போவதில்லையென்று தீர்மானித்திருந்தாள்.
ஆகையினாலேதான் மேற் கண்டவாறு சொன்னாள்.
அதற்கு
மறுமொழியாக ஆயனர் கவலை தொனித்த குரலில் கூறினார்; "என்ன
இருந்தாலும் மகேந்திர பல்லவர் தீர்க்கமான அறிவு படைத்தவர்.
அவருடைய கட்டளைக்கு மாறாக நடந்தால் ஏதாவது விபரீதம் வருமோ,
என்னவோ? யாரிடமாவது யோசனை கேடகலாமென்றால், அதற்கும் ஒருவரும்
இல்லை. நாகநந்தியடிகளாவது வரக்கூடாதோ? எட்டு மாதத்துக்கு
முன்பு போனவர் இன்னும் வரவில்லை. பிக்ஷுவுக்கு என்ன நேர்ந்து
விட்டதோ, என்னவோ?"
ஆயனரின்
மனச்சோர்வைக் கவனித்த சிவகாமி அவரை உற்சாகப்படுத்தும்
பொருட்டு, மறுபடியும் அப்பா! நான் நடனம் ஆடி வெகு காலமாயிற்றே!
இன்றைக்கு ஆடுகிறேன் பார்க்கிறீர்களா?" என்றாள். "சிவகாமியின்
நாட்டியத்தை நானும் பார்க்கலாமா" என்று ஒரு குரல் கேட்டது.
இரண்டு பேரும் ஏககாலத்தில் திரும்பிப் பார்த்தார்கள். சற்றுத்
தூரத்தில் நாகநந்தி அடிகள் நின்று கொண்டிருந்தார். "புத்தம்
சரணம் கச்சாமி" "தர்மம் சரணம் கச்சாமி" "சங்கம் சரணம் கச்சாமி"
என்று நாகநந்தி கோஷித்து முடித்ததும் ஆயனர், "அடிகளே!
வரவேணும்! வரவேணும்! நினைத்த இடத்தில் நினைத்த போது வந்து
அருள் செய்கிறவர் கடவுள்தான் என்று பெரியோர் சொல்லுவார்கள்.
தாங்களும் கடவுள் மாதிரி வந்திருக்கிறீர்கள். உங்களைப்பற்றி
இப்போதுதான் பேசிக் கொண்டிருந்தோம்" என்றார்.
"அப்படியா?
இந்தக் காவி வஸ்திரதாரியைப் பற்றி நினைவு வைத்துக்
கொண்டிருந்தீர்களா? சிவகாமியின் திருநாவினால் கூட நாகநந்தியின்
பெயர் உச்சரிக்கப்பட்டதா? அவ்விதமானால் என்னுடைய
பாக்கியந்தான்... ஆயனரே உங்கள் குமாரியின் புகழ் தேசமெல்லாம்
பரவியிருக்கும் அதிசயத்தை நான் என்னவென்று சொல்வேன்?
திருவதிகைக்கும் தில்லைக்கும் போனேன்! உறையூருக்குப் போனேன்;
வஞ்சிக்குப் போனேன்; நாகைக்கும் போயிருந்தேன்; இன்னும் தெற்கே
மதுரையம்பதிக்கும் கொற்கைத் துறைமுகத்துக்கும் சென்றிருந்தேன்.
எங்கே போனாலும், எனக்கு முன்னால் சிவகாமியின் புகழ்
போயிருக்கக் கண்டேன். காஞ்சியிலிருந்து நான் வந்ததாகத்
தெரிந்ததும் எல்லாரும் சிவகாமியின் பரதநாட்டிய கலையைப் பற்றியே
கேட்டார்கள். புத்த பிக்ஷுக்களும் ஜைன முனிவர்களும்
கேட்டார்கள். சைவப் பெரியார்களும் வைஷ்ணவ பக்தர்களும்
கேட்டார்கள். உறையூரில் சோழ மன்னர் கேட்டார்.
நாகப்பட்டினத்திலே சீன தேசத்திலிருந்து வந்திருக்கும்
சித்திரக்காரர்கள் கேட்டார்கள். ஆயனரே! இப்பேர்ப்பட்ட கலைச்
செல்வியைப் புதல்வியாகப் பெற நீர் எவ்வளவோ பாக்கியம்
செய்திருக்க வேண்டும்..."
இவ்வாறு, புத்த
பிக்ஷு சொன்மாரி பொழிந்து வருகையில் ஆயனரும் சிவகாமியும்
இடையில் பேசச் சக்தியற்றவர்களாகப் பிரமித்து நின்றார்கள்.
கடைசியில் நாகநந்தி, "ஓ மகா சிற்பியே! சென்ற எட்டு
மாதத்திற்குள் சிவகாமியின் நடனத் திறமை இன்னும் எவ்வளவோ
வளர்ந்திருக்க வேண்டுமே? தென்னாடெல்லாம் புகழும் நடன ராணியின்
நாட்டியத்தைப் பார்க்கும் பாக்கியம் இன்று எனக்குக் கிட்டுமா?"
என்றார். நாகநந்தியின் விஷயத்தில் சிவகாமியின் மனப்பாங்குகூட
அவருடைய புகழுரைகளினால் ஓரளவு மாறிவிட்டது. எனவே ஆயனர்,
"ஆடுகிறாயா, அம்மா!" என்று கேட்டதும் உடனே, "ஆகட்டும் அப்பா!"
என்றாள் சிவகாமி. மூவரும் வீட்டுக்குச் சென்றதும், சிவகாமி ஒரு
நொடியில் நடன உடை தரித்துக் கொண்டு நாட்டியத்துக்கு ஆயத்தமாக
வந்து நின்றாள். அவளுடைய முகத்திலும் மேனி முழுவதிலுமே ஒரு
புதிய ஆனந்தக் கிளர்ச்சி காணப்பட்டது. மாமல்லரின் காதல் கனிந்த
மொழிகளும், அவளுடைய கலைச் சிறப்பைக் குறித்து நாகநந்தி கூறிய
புகழுரைகளும் அத்தகைய கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. ஆயனர்
போட்ட தாளத்துக்கிசைய சிவகாமி நிருத்தம் ஆட ஆரம்பித்தாள்.
அதில் பாட்டு இல்லை; பொருள் இல்லை; உள்ளக் கருத்தை வௌியிடும்
அபிநயம் ஒன்றும் இல்லை. ஒரே ஆனந்தமயமான ஆட்டந்தான்.
சிவகாமியின்
ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வோர் அங்கத்தின் அசைவிலும் அந்த
ஆனந்தம் பொங்கி வழிந்தது. ஆஹா! அந்த ஆனந்த நடனத்திலே எத்தனை
விதவிதமான நடைகள்? மத்தகஜத்தின் மகோன்னதமான நடை, பஞ்ச
கல்யாணிக் குதிரையின் சிருங்கார நடை, துள்ளி விளையாடும் மான்
குட்டியின் நெஞ்சையள்ளும் நடை, வனம் வாழ் மயிலின் மனமோகன நடை,
அன்னப் பட்சியின் அற்புத அழகு வாய்ந்த நடை. இவ்வளவு நடைகளையும்
சிவகாமியின் ஆட்டத்திலே காணக் கூடியதாயிருந்தது. ஆட்டம்
ஆரம்பித்துச் சிறிது நேரத்துக்கெல்லாம் சிவகாமி நடனம்
ஆடுவதாகவே தோன்றவில்லை. தன் செயல் என்பதையே இழந்து அவள் ஆனந்த
வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது. ஆயனரும்
தம்மை மறந்த, கால எல்லையையெல்லாம் கடந்த காலதீதமான மன
நிலைக்குப் போய்விட்டார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினோராம் அத்தியாயம்
"பயங்கொள்ளிப் பல்லவன்"
சிவகாமி
நிருத்தம் ஆடியபோது சுய உணர்வுடன் இருந்தவர் ஒருவர் நல்ல
வேளையாக அங்கே இருந்தார். அவர் பிக்ஷு நாகநந்திதான் என்று
சொல்ல வேண்டியதில்லை. "போதும், ஆயனரே! ஆட்டத்தை நிறுத்துங்கள்.
இனிமேல் ஆடினால் சிவகாமியும் தாங்கமாட்டாள்; உலகமும் தாங்காது
என்ற நாகநந்தியின் வார்த்தைகளைக் கேட்டு ஆயனர் சுயபிரக்ஞை
அடைந்து தாளம் போடுவதை நிறுத்த, சிவகாமியும் ஆட்டத்தை
நிறுத்தினாள்.
புத்த பிக்ஷு
கூறினார்; "ஆயனரே! நீர் எத்தகைய துரோகம் செய்து
கொண்டிருக்கிறீர்? இப்படிப்பட்ட தெய்வீகமான கலையை இந்த
நடுக்காட்டிலே ஒளித்து வைத்துக் கொண்டிருக்கலாமா? உலோபி ஒருவன்
தனக்குக் கிடைத்த மதிப்பில்லாத இரத்தினத்தைப் பெட்டிக்குள்ளே
பூட்டி வைத்திருப்பது போல அல்லவா இருக்கிறது நீர் செய்யும்
காரியம்! தீபத்தை ஏற்றி நடுக் கூடத்தில் வைக்க வேண்டும்.
அப்படியின்றி மூலை முடுக்கிலே வைத்துத் துணியைப் போட்டு
மூடினால், தீபம் அணைந்து போவதுடன், துணியும் அல்லவா எரிந்து
போகும்? உலகம் பார்த்துப் பிரமிக்கும்படியான கலைச் செல்வம்
உமது குமாரியிடம் இருக்கிறது. அதைப் பார்த்து ஆனந்திக்க
உலகமும் காத்திருக்கிறது. நான் சொல்கிறதைச் சற்றுச் செவி
கொடுத்துக் கேளுங்கள். என்னுடன் கிளம்பிவாருங்கள்
தில்லைப்பதிக்குப் போவோம். அங்கே பரமசிவனுக்குப் போட்டியாகப்
பார்வதி ஆடியது போல் சிவகாமியும் ஆடட்டும். ஆனால் பார்வதியைப்
போல் சிவகாமி நடனப் போட்டியில் தோற்கமாட்டாள். எடுத்த
எடுப்பிலேயே நடராஜர் தோற்றுப் போவார். அவருடைய தூக்கிய
திருவடியைப் பூமியின் மேல் வைத்து இளைப்பாறுவார்.
தில்லையிலிருந்து நாகைப்பட்டினத்துக்குப் போகலாம்.
நாகைப்பட்டினத்திலே புத்த பிக்ஷுக்களின் மகா சங்கம் கூடப்
போகிறது. இந்தக் கூட்டத்துக்காகக் கன்யாகுப்ஜத்திலிருந்தும்,
காசியிலிருந்தும் கயையிலிருந்தும், கடல்களுக்கப்பாலுள்ள சாவகத்
தீவிலிருந்தும், சீனதேசத்திலிருந்தும் பௌத்தர்கள்
வருகிறார்கள். உலகத்தின் நாலா பக்கங்களிலிருந்தும், சிற்பக்
கலைஞர்களும், இசை வல்லார்களும், நடன சாஸ்திர மேதைகளும்
நாகைப்பட்டினத்தில் கூடுகிறார்கள். அந்த மகா சங்கத்திலே உங்கள்
புதல்வி நடனம் ஆடட்டும்; அவளுடைய புகழும் அவளைப் பெற்ற
உம்முடைய புகழும் உலகமெல்லாம் பரவட்டும்;
நாகைப்பட்டினத்திலிருந்து உறையூருக்குப் போவோம். உறையூர்ச்
சோழர்கள் இன்று தாழ்வடைந்து பல்லவர்களுக்குக் கப்பம்
செலுத்தும் சிற்றரசர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும்
பூர்வீகப் பெருமையுடையவர்கள். கலைகளில் அபாரப் பற்று
உடையவர்கள். பார்த்திபன் என்னும் சோழ இராஜகுமாரன் அங்கே
இருக்கிறான், சித்திரக் கலையில் தேர்ந்தவன். சிவகாமியின்
நடனத்தைப் பார்த்தால் அவனுடைய ஆனந்தத்துக்கு அளவே இராது.
பின்ன் அங்கிருந்து கிளம்புவோம், சித்தர் வாசமலையின் சித்திர
விசித்திரங்களைச் சிவகாமிக்குக் காட்டிவிட்டு மதுரை
மாநகருக்குச் செல்வோம். அங்கே மாரவர்ம பாண்டியன்
சமீபத்திலேதான் காலமாகி, அவன் மகன் சடையவர்மன் பட்டத்துக்கு
வந்திருக்கிறான். சடையவர்மன் மகா ரசிகன்; ஆஹா! சடையவர்ம
பாண்டியன் மட்டும் சிவகாமியின் நடனத்தைப் பார்த்துவிட்டால்,
உங்களை இந்த அரண்ய வீட்டிலே இப்படி நிர்க்கதியாக
விட்டிருப்பானா? மதுரை நகரிலுள்ள மாடமாளிகைக்குள்ளே மிக
உன்னதமான மாளிகை எதுவோ, அதிலே அல்லவா உங்கள் இருவரையும்
வைத்துப் போற்றுவான்?..."
இவ்விதமாக
நாகநந்தி பேசி வருகையில் ஆயனரும் சிவகாமியும் பாம்பாட்டியின்
மகுட வாத்தியத்திலே மயங்கிப் படமெடுத்தாடும் சர்ப்பத்தைப்
போல், அவருடைய மொழிகளைக் கேட்டு வந்தார்கள். கடைசியில், "என்ன
சொல்கிறீர், ஆயனரே?" என்று நாகநந்தி கூறி நிறுத்தியபோது,
ஆயனருக்கு உண்மையில் இன்னது சொல்வதென்றே தோன்றவில்லை. அவருடைய
மனதில், "சக்கரவர்த்தியின் கட்டளைக்கும் நாகநந்தியின்
யோசனைக்கும் வெகு பொருத்தமாயிருக்கிறதே!" என்ற எண்ணம் தோன்றிக்
கொண்டிருந்தது. இருந்தாலும் காரணம் தெரியாத ஒருவிதத் தயக்கமும்
உண்டாயிற்று. எனவே, "நான் என்ன சொல்வது? சிவகாமியைத்தான் கேட்க
வேண்டும்" என்று சொல்லி, சிவகாமியை நோக்கினார்.
சிவகாமிக்கோ,
சிதம்பரத்தையும் நாகைப்பட்டினத்தையும் உறையூரையும் மதுரையையும்
பற்றிக் கேட்டபோது, அங்கெல்லாம் அவள் போவது போலவும்,
பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னே ஆடுவது போலவும் அவர்களுடைய
பாராட்டுதலைப் பெற்று மகிழ்வது போலவும் மனக் கண்முன்னால்
தோன்றிக் கொண்டே வந்தது. ஆனால் அவள் மனத்திலும் ஒரு தடை,
இன்னதென்று விளங்காத ஏதோ ஒரு சந்தேகம் குறுக்கிட்டுக்
கொண்டேயிருந்தது. எனவே, ஆயனர் மேற்கண்டவாறு கேட்டதும் சிவகாமி
சற்று யோசித்து, "எனக்கு என்ன தெரியும், அப்பா? உங்களுக்கு எது
உசிதமாகத் தோன்றுகிறதோ, அப்படிச் செய்யுங்கள்" என்றாள்.
அப்போது நாகநந்தி, "ஆமாம் ஆயனரே, உம்முடைய காலம் எவ்விதம்
போய்க் கொண்டிருக்கிறது? இங்கே புதிய நடனச்சிலை எதையும்
காணோமே? நான் கடைசி முறையாக வந்துபோன பிறகு, புதிதாக ஒரு
சிலைகூட அமைக்கப்படவில்லையா?" என்றார்.
ஆயனர் ஏக்கம்
நிறைந்த குரலில், "இல்லை; கல்லுளியைக் கையினால் தொட்டு வெகு
காலமாயிற்று" என்றார். "ஏன் அப்படி? சிற்பக் கலை என்ன
பாவத்தைச் செய்தது? தென்தேசத்தின் ஒப்பற்ற மகா சிற்பி
எதற்காகக் கல்லுளியைக் கையினால் தொடாமலிருக்க வேண்டும்?" என்று
பிக்ஷு கேட்டார். சிவகாமி அப்போது குறுக்கிட்டு, "எல்லாம்
உங்களால் வந்த வினைதான், அடிகளே! அஜந்தா வர்ண இரகசியத்தைக்
கண்டுபிடிப்பதில் அப்பா முனைந்திருக்கிறார். தினம் தினம்
விதவிதமான பச்சிலைகளைத் தேடிக்கொண்டு வருவதும் அரைப்பதுந்தான்
ஏழு மாதமாய் அப்பா செய்யும் வேலை" என்றாள். "ஆகா! வீண் வேலை!
நான்தான் எப்படியும் உங்களுக்கு அதை அறிந்து சொல்வதாக வாக்குக்
கொடுத்திருக்கிறேனே?"
ஆயனர் சிறிது
பரபரப்புடன், "வாக்குக் கொடுத்தது உண்மைதான் ஆனால், அதை
நிறைவேற்றுவதாகக் காணோமே? நீங்கள் ஓலை கொடுத்தனுப்பியதுதான்
உபயோகப்படவில்லையே!" அந்தப் பிள்ளையாண்டான் இப்போது
சைனியத்தில் சேர்ந்து பெரிய தளபதியாகி விட்டான்; தெரியுமோ
இல்லையோ?" என்றார். "அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன்
நேற்றைக்குத் தான் அவன் காஞ்சிக்கு வந்தானாமே?" "ஆம்! இன்று
காலை அந்தப் பிள்ளையே இங்கே வந்திருந்தான். காஞ்சிக் கோட்டைக்
காவலுக்காக அவனைச் சக்கரவர்த்தி அனுப்பி வைத்திருக்கிறாராம்.
அடேயப்பா! எட்டு மாதத்திற்குள் அவனிடம் எவ்வளவு வித்தியாசம்?
அடக்க ஒடுக்கத்துடனும் நாணம் அச்சத்துடனும் அன்றைக்கு
உங்களுடன் வந்தானே அந்தப் பரஞ்சோதி எங்கே? இன்று காலை தளபதியாக
வந்த பரஞ்சோதி எங்கே? என்ன அகம்பாவம்? என்ன கர்வம்!"
"அப்பா, அவரிடம்
அகம்பாவம் ஒன்றுமில்லையே! தங்களிடம் எவ்வளவோ பயபக்தியுடன் தானே
நடந்து கொண்டார்? சக்கரவர்த்தியின் கட்டளையைக்கூட எவ்வளவு
தயக்கத்துடன் கூறினார்?" என்று சிவகாமி குறுக்கிட்டுச்
சொன்னாள். "ஆயனரே சக்கரவர்த்தியின் கட்டளை என்ன? நான் தெரிந்து
கொள்ளலாமா?" என்று புத்த பிக்ஷு கேட்டார். "எங்களை இந்த
வீட்டைவிட்டுப் போகச் சொல்லிக் கட்டளை! எப்படியிருக்கிறது கதை?
இந்த மகேந்திர பல்லவர் ஒரு காலத்தில் சிற்பக் கலையில் எவ்வளவு
பற்று உடையவராயிருந்தார்? அவரைப்பற்றி நான் என்னவெல்லாம்
எண்ணியிருந்தேன்?" என்று ஆயனர் எதையோ பறிகொடுத்து விட்ட
குரலில் கூறினார்.
"நானும் உங்கள்
சக்கரவர்த்தியைப் பற்றி என்னவெல்லாமோ எண்ணியிருந்தேன். அவருடைய
சாமர்த்தியம் இப்போதுதான் தெரிகிறது. உங்கள் சக்கரவர்த்தி
எப்பேர்ப்பட்ட காரியத்தைச் சாதித்திருக்கிறார் தெரியுமா,
ஆயனரே? பல்லவ சைனியத்தில் ஐம்பதாயிரம் வீரர்களுக்கு மேலே
இருக்கமாட்டார்கள். இந்த அற்பச் சைனியத்தை வைத்துக் கொண்டு
கடல் போன்ற வாதாபி சைனியத்தை எட்டு மாதத்துக்கு மேலே
வடபெண்ணைக் கரையிலேயே நிறுத்தி வைத்திருந்தார்! மகேந்திர
பல்லவர் வெகு கெட்டிக்காரர், ஆயனரே! வெகு கெட்டிக்காரர்!
இருக்கட்டும்! பரஞ்சோதி தான் போன காரியத்தைப் பற்றி என்ன
சொன்னான்? ஓலையை என்ன செய்தானாம்? அதைப் பற்றி நீங்கள் ஒன்றும்
கேட்கவில்லையா?" என்று புத்த பிக்ஷு வினவினார்.
"கேட்காமல் என்ன?
பாவம் அந்த பிள்ளைக்கு வழியிலே பெரிய விபத்து நேர்ந்து
விட்டதாம். சளுக்க வீரர்கள் அவனைப் பிடித்துக்கொண்டு
விட்டார்களாம். எப்படியோ பையன் சளுக்க வீரர்களிடமிருந்து
தப்பித்து வந்து விட்டானாம். நல்ல வேளையாகச் சிறை
பிடிக்கப்பட்டதும் ஓலையை மலைப் பள்ளத்தாக்கில் ஓடிய அருவியிலே
எறிந்து விட்டானாம்! புத்திசாலிப் பையன்!"
"புத்திசாலி!
அதோடு அதிர்ஷ்டசாலி முதன் முதலில் சாலை ஓரத்தில் அவன்
படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த போது பார்த்தவுடனேயே இவன் மிக
அதிர்ஷ்டசாலியாவான் என்று எனக்குத் தெரிந்து போயிற்று. ஆனால்,
நான் அவனுக்கு எதிர்பார்த்த அதிர்ஷ்டம் வேறு! ஆஹா, என்ன தவறு
செய்துவிட்டேன்!" என்று நாகநந்தி கூறி இலேசாக ஒரு பெருமூச்சு
விட்டார். "அடிகளே! பரஞ்சோதிக்கு இப்போது அதிர்ஷ்டம் ஒன்றும்
குறைவாகப் போய்விடவில்லையே?"
"உங்களுக்கு
தெரியாது, ஆயனரே! இன்னும் எவ்வளவோ பெரிய அதிர்ஷ்டம் அவனுக்கு
வருவதற்கிருந்தது ஏதோ ஒரு கிரகம் வந்து
குறுக்கிட்டிருக்கிறது..." "நல்லவேளை; இவ்வளவு
அதிர்ஷ்டத்தோடேயே நிற்கட்டும். இன்னும் அதிகமானால்,
பையனுக்குத் தலை கால் தெரியாமல் போய்விடும்!" என்றார் ஆயனர்.
அஜந்தா வர்ண இரகசியத்தை அறிந்து கொள்ளாமல் வந்ததில்
பரஞ்சோதியின் மேல் அவருக்கு மிக்க வெறுப்பு உண்டாகியிருந்தது.
சிவகாமி
குறுக்கிட்டு, "அப்பா! அப்பா! ஒரு செய்தி கேட்டீர்களா?
மகேந்திர சக்கரவர்த்தி ஒருவேளை பல்லவ இராஜ்யம் மாமல்லருக்கு
இல்லையென்று சொல்லிவிட்டுப் பரஞ்சோதிக்குக் கொடுத்தாலும்
கொடுத்து விடுவாராம். ஜனங்கள் அப்படி பேசிக் கொள்வதாகச் சாரதி
கண்ணபிரான் சொ்னார்" என்று கூறிவிட்டுக் கன்னங்கள் குழியக்
'கலகல' என்று சிரித்தாள். "யார், கண்ணபிரானா! அவன் கிடக்கிறான்
பைத்தியக்காரன்! இப்படித்தான் ஏதாவது உளறுவான்" என்றார் ஆயனர்.
அப்போது நாகநந்தி, "இல்லை, ஆயனரே, இல்லை சாரதி கண்ணபிரான்
சொன்னது அப்படி ஒன்றும் உளறல் இல்லை. அவன் சொன்னபடி நடந்தால்,
அதில் எனக்கு வியப்பு இராது. காஞ்சி சிங்காதனத்தில்
பயங்கொள்ளிப் பல்லவனை வைத்துப் பட்டம் கட்டுவதைக் காட்டிலும்
பரஞ்சோதிக்கு ராஜ்யத்தைக் கொடுப்பதே வீரமகேந்திர பல்லவருக்கு
உகப்பாயிருக்கும்" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பன்னிரண்டாம் அத்தியாயம்
உள்ளப் புயல்
எதிர்பாராத
நேரத்தில் வானத்திலிருந்து ஒரு மின்னல் பாய்ந்து வந்து
மண்டையைப் பீறிக்கொண்டு தேகத்துக்குள் பாய்வது போன்ற உணர்ச்சி
'பயங்கொள்ளிப் பல்லவன்' என்ற சொற்களைக் கேட்டதும் சிவகாமிக்கு
ஏற்பட்டது. ஆயனரும் திடுக்கிட்டவராய், "அடிகளே! என்ன
சொல்கிறீர்கள்? பயங்கொள்ளிப் பல்லவன் யார்?" என்று கேட்டார்.
"பயங்கொள்ளிப் பல்லவனைப் பற்றி உலகமெல்லாம் அறியுமே? நாடு
நகரமெல்லாம் பேச்சாயிருக்கிறதே? உங்களுக்குத் தெரியாதா? ஆனால்,
நீங்கள் காட்டுக்குள்ளே இருக்கிறீர்கள்! உங்களுக்குத்
தெரியாதுதான்!" என்றார் பிக்ஷு. "என்ன தெரியாது? யாரைப்பற்றி
உலகம் என்ன சொல்கிறது? ஒரே மர்மமாயிருக்கிறதே!" என்றார் ஆயனர்.
"ஒரு மர்மமும்
இல்லை உலகமெல்லாம் தெரிந்த விஷயத்தை உங்களுக்கு நான்
சொன்னால்தான் என்ன? மாமல்லன் என்று பட்டப்பெயர் பெற்ற குமார
சக்கரவர்த்தி நரசிம்ம பல்லவனைப் பற்றித்தான் சொல்கிறேன். அவன்
பெரிய கோழை, பயங்கொள்ளி என்பது உலகப் பிரசித்தமாயிற்றே? முதன்
முதலில் வாதாபி சைனியம் படையெடுத்து விட்டது என்று
கேள்விப்பட்டதுமே மாமல்லனுக்கு உடம்பெல்லாம் நடுக்கமடைந்து
மயங்கி விழுந்து விட்டானாம். அதுவும் அந்தச் சமயத்தில் அவன்
அரண்மனை அந்தப்புரத்து மாதர்களுக்கு மத்தியில் இருந்தானாம்.
சக்கரவர்த்திக்கு மானமே போய்விட்டதாம். ஆயனரே! மாமல்லனை ஏன்
சக்கரவர்த்தி யுத்த களத்துக்கு அழைத்துப் போகவில்லை என்று நீர்
கேள்விப்படவில்லையா? ஏன் காஞ்சிக் கோட்டைக்கு வௌியிலே மாமல்லன்
வரக்கூடாது என்று திட்டம் செய்துவிட்டு மகேந்திர பல்லவர்
போர்க்களம் போனார் என்று நீர் கேள்விப்படவில்லையா?"
"ஓ பொல்லாத
பிக்ஷுவே! எப்பேர்ப்பட்ட, அவதூறு சொல்கிறீர்? எம்மாதிரி
அபசாரம் பேசுகிறீர்? பதினெட்டு வயதுக்குள் தென்னாட்டிலுள்ள
பிரசித்த மல்லர்களையெல்லாம் வென்று 'மகா மல்லன்' என்று பட்டம்
பெற்ற மகாவீரனைப் பற்றி இவ்விதம் சொல்ல உமது நாக்குக்
கூசவில்லையா?" என்று ஆயனர் சற்று ஆத்திரத்துடனேயே கேட்டார்.
"மகா சிற்பியே! தங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதென்பது
எனக்குத் தெரியாது. பெரிய இடத்துச் சமாச்சாரம்; நமக்கு என்ன
கவலை? ஆனாலும் என் வார்த்தையில் நீங்கள் அவநம்பிக்கை கொள்வதால்
சொல்கிறேன், அந்த "மகாமல்லன் பட்டமெல்லாம் வெறுங்கதை!
நரசிம்மவர்மனோடு போரிட்ட மல்லர்களுக்கெல்லாம் முன்னாலேயே
கட்டளையிடப்பட்டிருந்தது, சீக்கிரத்தில் தோற்றுப் போய்விட
வேண்டுமென்று. இப்படியெல்லாம் செய்தாலாவது பிள்ளைக்கு வீரமும்
தைரியமும் வராதா என்று சக்கரவர்த்தி பார்த்தார். பாவம்!
பலிக்கவில்லை! யுத்தம் என்று வந்ததும் நடுங்கிப் போய்விட்டான்.
சாக்ஷாத் உத்தர குமாரனுடைய அவதாரந்தானாம் நரசிம்மவர்மன். ஊர்
ஊராகப் பாரத மண்டபம் கட்டிப் பாரதம் படிக்க வேண்டுமென்று
சக்கரவர்த்தி ஏற்பாடு செய்திருக்கிறாரே, எதற்காகத் தெரியுமா?
முக்கியமாக, அவருடைய திருக்குமாரனை உத்தேசித்துத்தான்!..."
"அடிகளே! நிறுத்துங்கள்! குமார சக்கரவர்த்தியைப் பற்றி
இப்படியெல்லாம் கேட்க என் மனம் சகிக்கவில்லை" என்றார் ஆயனர்.
"இன்னும் மிச்சமுள்ள உண்மையையும் கேட்டால் என்ன சொல்வீர்களோ,
தெரியவில்லை, ஆனால் தங்கள் குமாரி சிவகாமி இருக்கும்போது
சொல்லக் கூடாது...." என்று கூறி நாகநந்தி சிவகாமி இருந்த
இடத்தை நோக்கினார்.
சிவகாமி ஏழெட்டு
வயதுச் சிறுமியாயிருந்தபோது ஒரு சமயம் ஒரு தேன் கூட்டில் கையை
வைத்துவிட்டாள். கையிலும் உடம்பிலும் தேனீக்கள் கொட்டிவிட்டன.
ஒரு நாளெல்லாம் வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதைக்
காட்டிலும் ஆயிரம் மடங்கு வேதனையை நாகநந்தி நரசிம்மவர்மரைப்
பற்றிச் சொல்லி வந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தபோது சிவகாமி
அனுபவித்துக் கொண்டிருந்தாள். பிக்ஷுவின் வார்த்தை ஒவ்வொன்றும்
பழுக்கக் காய்ச்சிய ஈயத்துளியைப்போல் அவள் காதில் விழுந்து
கொண்டேயிருந்தது.
பிக்ஷு, "உங்கள்
குமாரி இருக்கும்போது சொல்லக்கூடாத விஷயங்கள்" என்று
கூறியதும், இதுதான் சமயம் என்று சிவகாமி சட்டென்று
எழுந்திருந்தாள். அவர்கள் பக்கமே பாராமல் நடந்து வீட்டின்
இரண்டாங்கட்டுக்குள் பிரவேசித்தாள். சிவகாமியின் செம்பஞ்சு
ஊட்டிய பாதங்களைக் கதவின் அடியில் இருந்த இடைவௌியில் புத்த
பிக்ஷு பார்த்துவிட்டு, கொஞ்சம் உரத்த குரலில் சொன்னார்.
"ஆயனரே! உமது
குமாரி சிறந்த கலைவாணி மட்டுமல்ல; ரொம்பவும் இங்கிதம்
தெரிந்தவள் எப்படிச் சட்டென்று எழுந்து போனாள் பாரும்!... நான்
என்ன சொல்ல வந்தேன் என்றால், சக்கரவர்த்திக்குத் தம் புத்திரன்
விஷயத்தில் இன்னொரு பெரிய கவலையாம். பல்லவ குலத்தில் இவ்வளவு
இளம் வயதில் இவனைப் போல் ஸ்திரீலோலன் ஆனவனே கிடையாதாம். ஒரு
சமயம் மாமல்ல பல்லவன் ஒரு பெண்ணுக்கு எழுதிய காமவிகாரம்
ததும்பிய ஓலை சக்கரவர்த்தியிடம் அகப்பட்டு விட்டதாம்.
இதையெல்லாம் உத்தேசித்துத்தான், மாமல்லனைக் காஞ்சியிலேயே
இருக்கவேண்டுமென்று சக்கரவர்த்தி திட்டம்
செய்திருக்கிறாராம்!..." இப்படி நாகநந்தி சொல்லிக்
கொண்டிருந்தபோது, கதவின் அடியில் தெரிந்த பாதங்கள் மறைந்தன.
நாகநந்தியும் பிறகு தமது குரலைத் தாழ்த்திக்கொண்டு பேசலானார்.
ஆயிரம்
பேய்களினால் துரத்தப்பட்டவளைப் போல் சிவகாமி வீட்டின்
பின்கட்டுகளைத் தாண்டிக் கொல்லைப் பக்கம் ஓடினாள்.
காட்டுக்குள்ளே எங்கே போகிறோம் என்ற உத்தேசமில்லாமல் ஓடினாள்.
ஓடி ஓடிக் களைத்துக் கடைசியில் ஒரு மரத்தடியில் வேரின் மீது
உட்கார்ந்தாள். சிவகாமியைப் பின் தொடர்ந்து மானும் கிளியும்
பின்னால் வந்து கொண்டிருந்தன. அவற்றை அவள் கவனிக்கவேயில்லை.
மரத்தடியில் உட்கார்ந்த சிறிது நேரத்துக்குப் பிறகு ரதி
அருகில் வந்து மெதுவாகத் தன் முகத்தை அவள் கரத்தின்மீது
வைத்தது. சிவகாமி அதை ஒரு தள்ளுத் தள்ளி, "சீ தரித்திரமே!
பீடை! ஒழிந்துபோ!" என்று கத்தினாள்.
சந்தர்ப்பம்
தெரியாத அசட்டுச் சுகரிஷி, 'மாமல்லா! மாமல்லா!' என்றது.
சிவகாமி கையை ஓங்கி, 'சனியனே! மூதேவி!' என்று அதை அடிக்கப்
போனாள். கிளி இறகுகளை அடித்துக் கொண்டு அவளிடம் அகப்படாமல்
தப்பிச் சென்றது. திடீரென்று தாமரைக் குளக்கரையில் மகிழமரப்
பொந்தில் இருந்த ஓலைகளின் நினைவு வந்தது. அந்த ஓலைகளை உடனே
எடுத்து நெருப்பிலே போட்டு எரித்துச் சாம்பலாக்கிவிட
வேண்டுமென்று நினைத்துத் தாமரைக் குளத்தை நோக்கி ஓடினாள். அதி
சீக்கிரத்தில் குளக்கரையை அடைந்து, உட்காரும் பலகையின் மீது
காலை வைத்து ஏறி மரப்பொந்திலே கையை விட்டாள்.
ஐயோ! அந்தப்
பொந்திலே ஏதாவது நாகசர்ப்பம் இருந்து அவள் கரத்தைத்
தீண்டிவிட்டதா என்ன? அவள் முகத்திலே ஏன் அவ்வளவு பயங்கரம்?
கையை ஏன் அவ்வளவு அவசரமாய் வௌியில் எடுத்தாள்? இன்னும் கொஞ்சம்
மேலே கிளம்பிப் பொந்திற்குள்ளே உற்றுப் பார்க்கிறாளே, ஏன்?
அந்தப் பொந்து வெறுமையாய், சூனியமாயிருந்ததுதான் காரணம்.
காலையில் அந்தப் பொந்தில் இருந்த ஓலைகள் எங்கே போயிருக்கும்?
சிவகாமி அந்த
மகிழ மரத்தை ஓடி அடைந்த அதே சமயத்தில் தாமரைக் குளத்தின்
எதிர்க்கரையில் இருந்த காட்டில் புத்த பிக்ஷு விரைந்து வந்து
கொண்டிருந்தார். மரப் பொந்தில் அவள் கையை விட்டு வெறுங்கையை
வௌியில் எடுத்ததை அவர் பார்த்தார். அப்போது சிவகாமியின்
முகத்தில் தோன்றிய வியப்பும், பயமும், பிக்ஷுவுக்கும்
எல்லையற்ற ஆச்சரியத்தை உண்டாக்கிற்று என்பது அவருடைய
முகக்குறியினால் தெரிய வந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதின்மூன்றாம் அத்தியாயம்
சத்ருக்னன் வரலாறு
பாபாக்கினி
நதிக்கரையில் பல்லவ சைனியத்தின் பாசறையில் ரிஷபக்கொடி
கம்பீரமாகப் பறந்த கூடாரத்தின் உள்ளே மகேந்திர சக்கரவர்த்தி
வீற்றிருந்தார். அவருக்கெதிரே சக்கரவர்த்தியின் அந்தரங்க
ஒற்றனாகிய சத்ருக்னன் நின்று கொண்டிருந்தான். அவனைப்
பார்த்தால் வெகு தூரம் பிரயாணம் செய்து வந்தவனாகக்
காணப்பட்டான். உடம்பெல்லாம் சொட்டச் சொட்ட வியர்த்திருந்தது.
எட்டு மாதத்திற்கு முன்னால் அவனைப் பார்த்ததற்கு இப்போது
அடையாளம் கூடக் கண்டுபிடிக்க முடியாதபடி உருவம்
மாறிப்போயிருந்தது.
சக்கரவர்த்தி,
சத்ருக்னனை உற்றுப் பார்த்துவிட்டு, "யார் சத்ருக்னனா?" என்று
கேட்டார். "அடியேன்தான், பல்லவேந்திரா!" "ரொம்பவும் உருவம்
மாறிப் போயிருக்கிறாய்." "ஆமாம், பிரபு! சக்கரவர்த்தியின்
சேவையில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் என் தேகம்
புஷ்டியடைகிறது!" "இல்லை; மெலிந்திருக்கிறாய் என்று சொன்னேன்.
எட்டு மாதத்துக்கு முன்பு உன்னிடம் ஏதோ முக்கியமான காரியத்தை
ஒப்படைத்ததாக ஞாபகம். என்ன காரியம் என்று நினைவிருக்கிறதா?"
என்று மகேந்திரர் கேட்டார்.
சத்ருக்னன்,
"நன்றாக நினைவிருக்கிறது, பிரபு! வேறு நினைவே எனக்குக்
கிடையாது!" என்றான். "மறந்தது நான்தான்; கொஞ்சம்
ஞாபகப்படுத்து, பார்க்கலாம்!" என்றார் சக்கரவர்த்தி.
"பிக்ஷுவைப் பின் தொடரச் சொன்னீர்கள்." "ஓஹோ! அப்புறம்?"
"ஆயனரைக் கவனிப்பதற்கு ஆள் போடச் சொன்னீர்கள்." "அவ்வளவுதானா?"
"இன்னும் ஒரு கடினமான வேலையும் கொடுத்தீர்கள், பிரபு! குமார
சக்கரவர்த்தியின் போக்குவரவுகளைக் கவனித்து வரும்படி
கட்டளையிட்டீர்கள்!" "ஆம்! ஆம்! ஞாபகத்துக்கு வருகிறது"
"ஏதேனும் முக்கியமான தகவல் கிடைத்தால், நம்பிக்கையான ஆள் மூலம்
செய்தி அனுப்பச் சொன்னீர்கள். மிக முக்கியமான
செய்தியாயிருந்தால் என்னையே நேரில் வரச் சொன்னீர்கள்.
"அப்படியானால், மிக முக்கியமான செய்தி இப்போது கொண்டு
வந்திருக்கிறாய் போலிருக்கிறது." "ஆம், பல்லவேந்திரா! வேறு
யாரிடமும் அனுப்ப முடியாத செய்தி; அதனால்தான் நானே வந்தேன்.
"ஒவ்வொன்றாகச் சொல், பார்க்கலாம்!" சத்ருக்னன் நாகநந்தியைத்
தான் பின்தொடர்ந்தது பற்றி முதலில் சொன்னான் அந்த வரலாறு பின்
வருமாறு:
நாகநந்தி
பரஞ்சோதியிடம் ஓலை கொடுத்து அவனை நாகார்ஜுன மலைக்குப்
போகும்படி அனுப்பிய பிற்பாடு, தெற்கே கிளம்பிப் போனார்.
சத்ருக்னனும் அவரைப் பின் தொடர்ந்து போனான். கெடில
நதிக்கரையில் அடர்ந்த காடும் சிறிய குன்றுகளும் சூழ்ந்த ஓர்
இடத்தில் கட்டியிருந்த புத்த விஹாரத்தை அடைந்து சில தினங்கள்
தங்கினார். அங்கே இருந்த புத்த பிக்ஷுக்கள் சிலருக்கு ஏதேதோ
செய்தி சொல்லி நாலாபுறமும் அனுப்பினார். அவர்களில் ஒருவர்
உறையூருக்கும் இன்னொருவர் கங்கராஜ்யத்தின் தலைநகரான
தலைக்காட்டுக்கும் சென்றதாகத் தெரிந்தது.
பிறகு, நாகநந்தி
மறுபடியும் தெற்கு நோக்கிப் பிரயாணமானார். கொள்ளிடத்தையும்
காவேரியையும் கடந்து நாகப்பட்டினம் சென்றார். அங்கேயிருந்து
மதுரைக்குப் பிரயாணமானார் மதுரைக்கு நாகநந்தியும் சத்ருக்னனும்
போன சமயம் மாறவர்ம பாண்டியன் கடும் நோய்வாய்ப்பட்டு 'இன்றைக்கோ
நாளைக்கோ' என்றிருந்தான். அடுத்தபடி பட்டத்துக்கு வரவேண்டிய
இளம் பாண்டியனுடைய கட்டளையினால் அயலூர்க்காரர் எல்லாரும்
சிறையில் அடைக்கப்பட்டார்கள். நாகநந்தியும் சத்ருக்னனும் ஒரே
சிறையில் இருக்கும்படி நேர்ந்தது. அங்கே பிக்ஷுவுடன் சிநேகம்
செய்து கொண்டான். இவர்கள் சிறையில் இருக்கும் போதே மாறவர்மன்
காலமாகி சடையவர்மன் சிம்மாசனம் ஏறினான். பின்னர் இவர்களுக்கு
விடுதலை கிடைத்தது. நாகநந்தி புதிய பாண்டியனைச் சந்தித்தார்.
அவர்களுக்குள் பல தினங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்கிடையில் மாமல்லருக்குப் பெண் கொடுக்கும் விஷயமாகக்
காஞ்சிக்குப் போன தூதர்கள் திரும்பி வந்தார்கள். மறுபடியும்
சில நாள் நாகநந்திக்கும் சடையவர்மனுக்கும் சம்பாஷணை நடந்த
பிறகு, பாண்டியன் நாடெங்கும் படை திரட்டும்படி கட்டளை
பிறப்பித்தான்.
நாகநந்தி பிறகு
மதுரையிலிருந்து கிளம்பி வடக்கு நோக்கிப் பிரயாணமானார்.
சத்ருக்னனும் அவரோடு புறப்பட்டான். வழியெல்லாம் புத்த பிக்ஷு
பெரும் சிந்தனையில் ஆழ்ந்தவராய்க் காணப்பட்டார். காவேரியையும்
கொள்ளிடத்தையும் தாண்டி அவர்கள் கெடில நதிக்கரையில் இருந்த
புத்த விஹாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இதற்குள்ளாகச்
சத்ருக்னனுக்குப் புத்த பிக்ஷு தன்னை ஒற்றன் என்று தெரிந்து
கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் உண்டாகியிருந்தது. அச்சமயம்
அந்தப் புத்த விஹாரத்தில் ஏற்கெனவே காஞ்சி இராஜ விஹாரத்தில்
இருந்த இளம் பிக்ஷு இருந்தான். அந்த இளம் பிக்ஷு சத்ருக்னனை
வெறித்து வெறித்துப் பார்த்ததிலிருந்து சத்ருக்னனுடைய சந்தேகம்
உறுதிப்பட்டது. எனவே, அன்று இளம் பிக்ஷு சத்ருக்னனுக்கு அளித்த
உணவை அவன் உடனே சாப்பிடாமல் நதியின் வெள்ளத்தில் கொஞ்சம்
போட்டுப் பார்த்தான். அதைச் சாப்பிட்ட மீன்கள் உடனே நீலநிறமாக
மாறிச் செத்துத் தண்ணீரில் மிதந்ததைக் கண்டான். அன்று இரவு
நாகநந்திக்கும் இளம் பிக்ஷுவுக்கும் தெரியாதபடி அந்தப் புத்த
விஹாரத்தையும் அதை அடுத்திருந்த குன்றுகளையும் சுற்றிப்
பார்த்தான். குன்றுகளில் குடைந்திருந்த இரகசியக் குகைகளுக்குள்
பலவகைப் போர்க் கருவிகள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதைக்
கண்டான். குன்றுகளைச் சுற்றி வந்தபோது ஓர் இடத்தில் கேட்டவுடனே
இருதயம் நின்று போகும்படியான அவ்வளவு பயங்கரமான சீறல்
சத்தத்தைக் கேட்டான். ஆயிரம் நாக சர்ப்பங்கள் சீறுவது போன்ற
அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க
அவன் ஆனமட்டும் முயன்றும் ுடியவில்லை. மறுநாள் உதயத்தில் புத்த
பிக்ஷு இந்த இரகசிய புத்த விஹாரத்திலிருந்து புறப்பட்டு,
சமுத்திரம்போல் அலைமோதிக் கொண்டிருந்த திருப்பாற்கடல் என்னும்
ஏரிக்கரை வழியாக வடக்கு நோக்கிச் சென்றார். அவர் அறியாதபடி
அவரைப் பின் தொடர்ந்து சத்ருக்னனும் சென்றான். கடைசியில்
ஆயனரின் அரண்ய வீட்டை நாகநந்தி அடிகள் அடைந்தார்.
தான் இல்லாதபோது
ஆயனரைக் கவனித்துக் கொள்ளுவதற்காகக் குண்டோதரன் என்பவனைச்
சத்ருக்னன் விட்டுவிட்டுப் போயிருந்தான். அவன் ஆயனரிடம்
சிற்பக் கலையும் சித்திரக் கலையும் கற்கும் சீடனாக அமர்ந்து
ஆயனர் வீட்டிலே இருந்து வந்தான். குண்டோரதன் விசேஷமாகச் செய்தி
ஒன்றும் சொல்லவில்லை. சாரதி கண்ணபிரானும் அவன் மனைவி கமலியும்
சில முறை அங்கு வந்துவிட்டுப் போனதாக மட்டும் தெரிவித்தான்.
காஞ்சியில்,
நரசிம்மவர்மரின் போக்கு வரவுகளைக் கவனித்து வரும்படி,
கண்ணபிரானுடைய தந்தையைச் சத்ருக்னன் ஏற்படுத்தியிருந்தான்.
நரசிம்மவர்மர் சக்கரவர்த்தியின் கட்டளையைப் பரிபூரணமாக
நிறைவேற்றி வைத்ததாகத் தெரிய வந்தது. சென்ற எட்டு மாதத்தில்
காஞ்சியை விட்டு மாமல்லர் வௌியே போகவேயில்லை. காஞ்சிக்
கோட்டையை முற்றுகைக்கு ஆயத்தம் செய்வதிலேயே பெரும்பாலும்
காலத்தைக் கழித்து வந்தாரென்று தெரிந்தது.
மேற்கூறிய விதம்
சத்ருக்னன் தான் அறிந்து வந்த வரலாற்றையெல்லாம் கூறி முடித்த
பிறகு, சக்கரவர்த்தி, "சத்ருக்னா! என்னுடைய கட்டளையை மிக
நன்றாக நிறைவேற்றியிருக்கிறாய். செய்தி இவ்வளவுதானா? உன்
முகத்தைப் பார்த்தால் இன்னும் ஏதோ முக்கிய சமாசாரம் இருப்பது
போல் தோன்றுகிறதே!" என்று கூறினார். "ஆம் பிரபு! சில ஓலைகள்
கிடைத்தன அவற்றைத் தங்களைத் தவிர யாரும் பார்க்கக் கூடாதென்று
நேரில் கொண்டு வந்தேன்." "ஓலையா? என்ன ஓலை?" என்று
சக்கரவர்த்தி வியப்புடன் கேட்டுக்கொண்டே கரத்தை நீட்டினார்.
"பல்லவேந்திரா!
ஒருவேளை நான் செய்தது குற்றமாயிருந்தால் மன்னிக்க வேண்டும்..."
சக்கரவர்த்தி துள்ளி எழுந்து, "முட்டாளே! துர்விநீதனுக்குப்
புலிகேசி அனுப்பிய ஓலையைத் தடுத்து நிறுத்தி விட்டாயா?" என்று
கோப கர்ஜனை செய்தார். "இல்லை, பல்லவேந்திரா! மன்னிக்க வேண்டும்
நான் சொல்லும் ஓலை யுத்தத்தைப் பற்றியதே அல்ல!" "நல்லவேளை!
எங்கே அப்படி ஏதாவது அசட்டுத்தனமாய்க் குறுக்கிட்டுக்
காரியத்தைக் கெடுத்து விட்டாயோ என்று பயந்து போனேன். பின்னே
எந்த ஓலையைச் சொல்லுகிறாய்?" "பல்லவேந்திரா! நான் கொண்டு
வந்திருப்பது காதல் ஓலை!"
'ஆ!' என்ற
வியப்பொலியுடன் சக்கரவர்த்தி தமது பீடத்தில் அமர்ந்தார்.
அவருடைய புருவங்கள் நெறித்தன; நெற்றியில் சுருக்கங்கள்
காணப்பட்டன. "எங்கே? எடு, ஓலையைப் பார்க்கலாம்" என்றார்.
சத்ருக்னன் தலையிலிருந்து முண்டாசை எடுத்தான்,
அதற்குள்ளேயிருந்த ஓலைச் சுருள்கள் எட்டையும் எடுத்துத்
தயக்கத்துடன் சக்கரவர்த்தியிடம் கொடுத்தான். மகேந்திரர் ஓலைகளை
வாங்கிக் கொண்டார். சற்று நேரம் ஓலைகளைக் கையிலே
வைத்துக்கொண்டு சிந்தனை செய்தார். பிறகு "சத்ருக்னா! இராஜ்யம்
ஆளுவதைப் போல் கொடுமையான காரியம் வேறொன்றும் இல்லை.
இராஜ்யத்தின் நன்மைக்காக நான் இந்த நீசத்தனமான காரியத்தைச்
செய்ய வேண்டியிருக்கிறது! மாமல்லனுடைய குழந்தை உள்ளத்தைக்
கீறிப் பார்க்கும் பயங்கரமான பாவத்தைச் செய்யப் போகிறேன்"
என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினான்காம் அத்தியாயம்
மகேந்திரர் தவறு
சத்ருக்னன்
கொடுத்த ஓலைகளைப் படித்து வந்தபோது மகேந்திரருக்கு அடிக்கடி
கைகள் நடுங்கின. முதலிலே இரண்டு மூன்று ஓலைகளைச் சற்றுச்
சாவகாசமாகப் படித்தார், மற்றவையெல்லாம் விரைவாகப் பார்த்து
முடித்தார். கடைசியில் சத்ருக்னனைப் பார்த்து, "சத்ருக்னா!
இந்த ஓலைகளை நீ கொண்டு வந்திருக்கக் கூடாது; என்னிடம்
கொடுத்திருக்கவே கூடாது!" என்று சோகக் குரலில் கூறினார்.
"பல்லவேந்திரா! மன்னிக்க வேண்டும்!" என்றான் சத்ருக்னன்.
"உன் பேரில்
குற்றம் ஒன்றுமில்லை சத்ருக்னா! மன்னிப்புக் கேட்பதற்குரிய
காரியம் எதுவும் நீ செய்யவில்லை. உன்னுடைய கடமையையே நீ
செய்தாய், என் மனத்துக்கு அது எவ்வளவு வேதனை தரும் காரியம்
என்பது உனக்கு எப்படித் தெரியும்? அரண்மனைத் தோட்டத்திலே ஓர்
அழகான பூஞ்செடி முளைத்தது. அரண்யத்தின் நடுவிலே ஒரு மனோகரமான
மலர்க் கொடி தழைத்தது. இரண்டும் இளந்தளிர்கள் விட்டு வளர்ந்தன.
பருவ காலத்தில் அரும்பு விட்டுப் பூத்து குலுங்கின. அந்தப்
பூஞ்செடியையும் மலர்க் கொடியையும் வேரோடு பிடுங்கி நெருப்பிலே
போட்டுப் பொசுக்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
சத்ருக்னா! அது எவ்வளவு குரூரமான பொறுப்பு என்பதை நீ கொண்டு
வந்த இந்த ஓலைகளிலிருந்து நன்றாக அறிகிறேன்..." மகேந்திர
பல்லவர் பெருமூச்சு விட்டுவிட்டு, "சத்ருக்னா! மாமல்லரின் கோமள
இருதயத்தை நான் எவ்வளவு தூரம் புண்படுத்தியிருக்கிறேன்,
தெரியுமா? எவ்வளவு தூரம் அவன் மன உறுதியைச்
சோதித்திருக்கிறேன், தெரியுமா? இதைக் கேள்" என்று கூறி
ஓலையிலிருந்து பின்வரும் பகுதியை வாசித்தார்.
'என் ஆருயிரே!
உன்னை வந்து பார்ப்பதற்கு என் உயிர், உடல், ஆவி அனைத்தும்
துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் காஞ்சிக் கோட்டையைப்
போல் நூறு மடங்கு கட்டும் காவலுமுள்ள கோட்டைக்குள்ளே என்னை
வைத்திருந்தாலும் எல்லாக் கட்டுக் காவலையும் மீறிக்கொண்டு
உன்னிடம் நான் பறந்து வந்து விடுவேன். கடல்களுக்கு நடுவிலுள்ள
தீவில் இராவணன் சீதையைச் சிறை வைத்தது போல் உன்னை, யாராவது
வைத்திருந்தால் அங்கேயும் உன்னைத் தேடி வந்தடைவேன். சொர்க்க
லோகத்திலே இந்திரனும், பாதாள லோகத்திலே விருத்திராசுரனும்
உன்னைச் சிறைப்படுத்தியிருந்தாலும், நான் உன்னை வந்து அடைவதைத்
தடைப்படுத்த முடியாது. ஆனால் இதையெல்லாம் காட்டிலும் பெரிதான
தடை வந்து குறுக்கிட்டிருக்கிறது. அது என் தந்தையின்
கட்டளைதான். தாம் அனுமதி அளிக்கும் வரையில் காஞ்சிக் கோட்டையை
விட்டு வௌியே போகக் கூடாதென்று மகேந்திர பல்லவர் எனக்குக்
கட்டளையிட்டிருக்கிறார். சிவகாமி! இந்த உலகத்தில் என்னால்
செய்ய முடியாத காரியம் ஒன்று உண்டு என்றால், அது என் தந்தையின்
கட்டளையை மீறுவதுதான். நெற்றிக் கண் படைத்த சிவபெருமான் என்
முன்னால் பிரத்தியட்சமாகி, மகேந்திர பல்லவரின் கட்டளைக்கு
விரோதமாக ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னால், ஒருநாளும் அதை
நான் செய்ய மாட்டேன். அவ்வளவு தூரம் என் பக்திக்கு உரியவரான
என் தந்தை இப்போது என்னை எப்பேர்ப்பட்ட கொடுமைக்கு ஆளாக்கி
விட்டார் தெரியுமா? என்னுடைய உயிரைக் காட்டிலும் எனக்குப்
பிரியமான காதலிகள் இருவரையும் நான் சந்திக்க முடியாதபடி
செய்துவிட்டார். அந்த இரண்டு காதலிகளில் ஒருத்தி ஆயனச்
சிற்பியின் மகள் சிவகாமி. அவளை அரண்ய மத்தியிலுள்ள தாமரைக்
குளக்கரையில் நான் ஏகாந்தமாகச் சந்திக்க விரும்புகிறேன்.
இன்னொரு காதலி யார் தெரியுமா? அவள் பெயரை உனக்குச்
சொல்லட்டுமா? சொன்னால் நீ அசூயை அடையாமல் இருப்பாயா? அவள்
பெயர் ஜயலக்ஷ்மி. அந்தக் காதலியை நான் இரத்தவெள்ளம் ஓடும்
யுத்த களத்தின் மத்தியில் சந்திக்க ஆசைப்படுகிறேன். சந்தித்து
அவள் என் கழுத்தில் சூடும் வெற்றி மாலையுடனே திரும்பி வந்து
உன்னைப் பார்க்க விரும்புகிறேன்!" மகேந்திரர் இவ்விதம்
வாசித்து வந்தபோது, சத்ருக்னன் தலைகுனிந்து பூமியைப்
பார்த்தவண்ணம் நின்றான்.
"கேட்டாயா,
சத்ருக்னா! இப்பேர்ப்பட்ட புதல்வனைப் பெறுவதற்கு நான் எவ்வளவு
பாக்கியம் செய்திருக்க வேண்டும்? இராமனைப் பெற்ற தசரதரைவிட
நான் பாக்கியசாலி அல்லவா? இராமன் அப்படி என்ன தியாகம் செய்து
விட்டான்? இராஜ்யத்தைத் துறந்து சீதையோடும் லக்ஷ்மணனோடும்
வனத்துக்குச் சென்றான். இராஜ்யம் ஆளுவதைக் காட்டிலும் வனத்தின்
உல்லாச வாழ்க்கையை இராமன் விரும்பியதில் வியப்பு என்ன? ஆனால்,
தந்தையின் வாக்கைப் பரிபாலனம் செய்யும் பொருட்டு வனத்துக்குப்
போவதைக் காட்டிலும் போர்க்களத்துக்குப் போகாமலிருக்க நூறு
மடங்கு மன உறுதி வேண்டும். பரிசுத்தமான இளம் உள்ளத்திலே முதன்
முதலாகக் காதலித்த பெண்ணைப் பார்க்கப் போகாமல் இருப்பதற்கு
அதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு திடசித்தம் வேண்டும். இத்தகைய
கடும் சோதனையில் நரசிம்மன் தேறியிருக்கிறான் என்பதை நினைக்கும்
போது, என் உள்ளம் பூரிக்கிறது. ஆனால் சோதனையை ஏற்படுத்திய நானோ
படுதோல்வியடைந்தேன். நரசிம்மனையும் சிவகாமியையும் பிரித்து
வைத்திருந்தால், அவர்கள் ஒருவரையொருவர் பார்க்காமலிருந்தால்,
சிவகாமியின் காதல் வலையிலிருந்து நரசிம்மன் மீண்டு விடுவான்
என்று நினைத்தேன். காதலை நெருப்பு என்று கூறுவது முற்றும்
பொருத்தமானது. சத்ருக்னா! நெருப்பு சொற்பமாயிருந்தால், காற்று
அடித்ததும் அணைந்து விடுகிறது. பெருநெருப்பாயிருந்தால், காற்று
அடிக்க அடிக்க நெருப்பின் ஜ்வாலை அதிகமாகிக் கொழுந்துவிட்டு
எரிகிறது. நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக்
காதலுக்குப் பிரிவு என்று தோன்றுகிறது. பொய்க்
காதலாயிருந்தால், பிரிவினால் அது அழிந்து விடுகிறது. உண்மைக்
காதலாயிருந்தாலோ, பிரிவினால் அது நாளுக்கு நாள் வளர்ந்து பெரு
நெருப்பாய் மூளுகிறது! நரசிம்மன் விஷயத்தில் அப்படித்தான்
நடந்து விட்டது. நான் எவ்வளவோ யோசனை செய்து போட்ட
திட்டங்களையெல்லாம் காமதேவன் தன்னுடைய மெல்லிய பூங்கணை
ஒன்றினால் காற்றில் பறக்கச் செய்துவிடுவான் போலிருக்கிறது.
சத்ருக்னா! வாதாபி சக்கரவர்த்தியிடம் தோற்றாலும் தோற்கலாம்.
கேவலம் மன்மதனுடைய மலர்க்கணைக்கா மகேந்திர பல்லவன்
தோற்றுவிடுவது? ஒரு நாளும் இல்லை!" என்று கூறி மகேந்திர
சக்கரவர்த்தி மீண்டும் சிரித்தபோது அவருடைய சிரிப்பில்
எக்களிப்பு தொனித்தது.
"மாமல்லனுக்கு
நான் இட்ட கட்டளையை இந்தக் கணமே மாற்றிவிடுகிறேன். சத்ருக்னா!
நான் தரும் ஓலையை எடுத்துக் கொண்டு வாயுவேக மனோவேகமாய்க்
காஞ்சிக்குப் போக வேண்டும். தலைக்காட்டிலிருந்து
துர்விநீதனுடைய சைனியம் காஞ்சியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.
அதை எதிர்த்து நிர்மூலமாக்குவதற்கு நரசிம்மன்
போர்க்களத்துக்குச் செல்லட்டும். போவதற்கு முன்னால் ஆயனர்
வீட்டுக்குப் போய்ச் சிவகாமியைப் பார்த்துவிட்டு
போவதாயிருந்தாலும் போகட்டும் அதற்கு நான் குறுக்கே நிற்கப்
போவதில்லை!" இதைக் கேட்டதும், சத்ருக்னனுடைய முகத்திலே தோன்றிய
விசித்திரமான புன்னகை, "என்னிடம் கூடவா உங்களுடைய கபட நாடகம்?"
என்று கேட்பது போலிருந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினைந்தாம் அத்தியாயம்
கிளியும் கருடனும்
"கமலி!" "கண்ணா!"
"எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை!" "ஏன் அப்படி?" "புதிய
தளபதிக்கு வந்த வாழ்வை நினைக்க நினைக்க கோபமாய் வருகிறது."
"கோபித்து என்ன பயன்? அவர் யுத்தகளத்துக்குப் போய் வீராதிவீரர்
என்று பெயர் எடுத்து வந்திருக்கிறார்." "யுத்தத்துக்குப்
போகவேண்டுமென்று என் மனமுந்தான் துடியாய்த் துடிக்கின்றது."
"யார் குறுக்கே விழுந்து மறிக்கிறார்கள்?" "வேறு யார்?
மாமல்லர்தான்! மாமல்லருக்கு ஏன் நான் ரதசாரதியானேன் என்று
இருக்கிறது, அவராலேதானே நானும் இந்தக் கோட்டைக்குள்ளேயே
அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது?" "இல்லாமற் போனால் வெட்டி
முறித்து விடுவாயாக்கும்!"
"எப்படியும்
ஒருநாளைக்கு மாமல்லர் யுத்தத்துக்குப் போகாமல் இருக்கமாட்டார்.
அப்போது நானும் போகிறேனா, இல்லையா பார்! ஒருவேளை நான்
போர்க்களத்தில் வீரசொர்க்கம் அடைந்தால் என்னைப்பற்றிச் சின்னக்
கண்ணனுக்குச் சொல்வாயல்லவா?" "ஆகட்டும், ஆகட்டும்!
வீட்டுக்குள்ளே உட்கார்ந்து வீரம் பேசுவதிலே உனக்கு இணை இந்தப்
பல்லவ ராஜ்யத்திலேயே கிடையாது என்று கண்ணம்மாளிடம்
சொல்கிறேன்." "என்ன சொன்னாய்? கண்ணம்மாளா?" "ஆமாம்;
கண்ணம்மாளாய்த்தான் இருக்கட்டுமே?" "போதும், போதும்!
பூலோகத்தில் பெண்களே பிறக்கக் கூடாது என்று நான் சொல்வேன்
கூடவே கூடாது."
"உண்மைதான்! ஆண்
பிள்ளைகளைப் போன்ற நிர்மூடர்கள் இருக்கிற உலகத்தில் பெண்களைப்
பகவான் படைக்கக்கூடாது தான். உங்களால் நாங்கள் படுகிற கஷ்டம்
எவ்வளவு என்பதை உணர்ந்து கொள்ளக்கூட உங்களுக்குச் சக்தி
இல்லை." "இது என்ன அபாண்டம், கமலி! உங்களை நாங்கள் அப்படி என்ன
கஷ்டப்படுத்துகிறோம்?" "சற்று முன்னால் யுத்தத்துக்குப் போய்
நான் செத்துப் போகப் போகிறேன்; நீ வீட்டிலே சுகமாயிரு என்று
சொன்னாயே? அது என்னைக் கஷ்டப்படுத்துகிறதல்லவா? தங்கச்சி
சிவகாமியை எட்டுமாத காலமாக மாமல்லர் போய்ப்
பார்க்காமலிருக்கிறாரே, அது அவளைக் கஷ்டப்படுத்துகிறதாகாதா?"
"எப்போதும் உன்
தங்கச்சியைப் பற்றியேதான் உனக்கு யோசனை வேறு நினைவே கிடையாது."
"ஆமாம், கண்ணா! கொஞ்ச நாளாக நான் அவளைப் பற்றியே தான்
யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசிக்க யோசிக்க
வருத்தமாயிருக்கிறது. சிவகாமி எதற்காக மாமல்லர் மேல் காதல்
கொண்டாள் என்று இருக்கிறது. கிளி கிளியுடனும், குயில்
குயிலுடனும் கூடி வாழ வேண்டும். மரக் கிளையில் வாழும்
பச்சைக்கிளி உச்சி வானத்தில் பறக்கும் கருடனுக்கு மாலையிட
ஆசைப்படலாமா!"
"இதென்ன கமலி,
இப்படிப் பேசுகிறாய்? கொஞ்ச நாளைக்கு முன்னாலெல்லாம் நீதானே
உன் தங்கைக்கு இணை மூன்று உலகத்திலும் இல்லை என்றும், மன்னாதி
மன்னர்களெல்லாம் அவள் காலில் வந்து விழுவார்களென்றும் சொல்லிக்
கொண்டிருந்தாய்?" "ஆமாம், கண்ணா! என் தங்கை மேலுள்ள ஆசையினால்
அப்படியெல்லாம் சொன்னேன். ஆசையிருக்குமிடத்தில் அறிவு
மழுங்கிவிடும் அல்லவா? ஆர அமர யோசித்துப் பார்த்ததில்
இதெல்லாம் நல்லதுக்கில்லை என்று தோன்றுகிறது. நான் சிவகாமிக்கு
உடன்பாடாகப் பேசி அவள் ஆசையை வளர்த்து வந்ததும் தப்பு;
மாமல்லரின் ஓலைகளை நீ அவளுக்குக் கொண்டு போய்க் கொடுத்துக்
கொண்டிருந்ததும் தப்பு!.."
"இப்பேர்ப்பட்ட
ஞானோதயம் உனக்கு எப்படி உண்டாயிற்று?" என்று கண்ணன் பரிகாசக்
குரலில் கேட்டான். "கொஞ்சாவது வெட்கமில்லாமல் நீ 'சின்னக்
கண்ணன், சின்னக் கண்ணன்' என்று சொல்கிறாயே, அவன் என் வயிற்றில்
வந்த பிற்பாடுதான்!" என்றாள் கமலி. "இதென்ன கமலி! உன் தங்கை
சிவகாமிக்கு மாமல்லரைக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் சின்னக்
கண்ணனுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்க வில்லையே?" என்று
கூறிக் கண்ணபிரான் 'கலகல' என்று சிரித்தான். "உனக்கு ஒன்றுமே
விளங்காது கண்ணா! குதிரைகளோடு பழகிப் பழகிக் குதிரைகளுக்கு
இருக்கிற அறிவுதான் உனக்கும் இருக்கிறது" என்றாள் கமலி. "இதோ
பார், கமலி! நீ என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லு!
கேட்டுக் கொள்கிறேன். என் குதிரைகளைப் பற்றி மட்டும் ஒன்றும்
சொல்லாதே! குதிரைகளுக்கு உள்ள அறிவு மனிதர்களுக்கு இருந்தால்
இந்த உலகம் எவ்வளவோ மேலாயிருக்குமே!" என்றான் கண்ணன்.
குதிரைகளைப்
பற்றிக் கமலி கேவலமாகப் பேசியதில் கண்ணனுக்கு மிக்க கோபம்
உண்டாகிவிட்டது. பின்பு சற்று நேரம் அவன் எதுவும் பேசாமல் வேறு
பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். கமலியும் ஏதோ யோசனையில்
ஆழ்ந்திருந்தாள். எனவே, கண்ணன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்
கொண்டு பேச வேண்டியதாயிற்று. "நீ என்னதான் சொல்லுகிறாய் கமலி?
மாமல்லர் உன் தங்கையைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு என்ன தடை?"
என்று கேட்டான்.
"கண்ணா! இத்தனை
நாளாக நீ அரண்மனைச் சேவகம் செய்கிறாய். ஆனாலும் அரண்மனை
நடைமுறை ஒன்றும் உனக்குத் தெரியவில்லை. இராஜாக்களும்
இராஜகுமாரர்களும் கல்யாணம் செய்து கொள்வதென்றால் நீயும் நானும்
கல்யாணம் செய்து கொள்வது போலவா? மாமல்லருடைய மகன் ஒரு நாள்
இந்தக் காஞ்சி சிம்மாசனத்தில் ஏறவேண்டியிருக்குமல்லவா?" "இதைத்
தெரிந்துகொள்ள அபாரமான அறிவு வேண்டியதில்லை. குதிரைகளுக்கு
இருக்கும் அறிவுகூடப் போதுமே!" "அப்படியானால் அந்த அறிவைச்
செலுத்தி இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்! சிற்பியின் மகள்
வயிற்றிலே பிறக்கும் பிள்ளையைப் பல்லவ சிம்மாசனத்தில் ஏற்றி
வைக்க முடியுமா?" "ஏன் முடியாது? அதிலே என்ன கஷ்டம்? நமது
அரண்மனைச் சிம்மாசனம் அப்படி ஒன்றும் அதிக உயரமில்லையே? நான்
ஒருவனாகவே தூக்கி அதில் உட்கார்த்தி வைத்துவிடுவேனே?"
"நீ
விளையாடுகிறாய், கண்ணா! ஆயனச் சிற்பியின் பேரன் பல்லவ
குலத்துச் சிம்மாசனத்தில் ஏறுவதற்கு நாட்டார் - நகரத்தார்
சம்மதிப்பார்களா?" "நாட்டார் - நகரத்தாரைச் சம்மதிக்கச்
செய்வது என் பொறுப்பு. கமலி! நீ பார்த்துக்கொண்டே இரு! இரண்டு
கையிலும் இரண்டு குதிரைச் சாட்டையை எடுத்துக்கொண்டு போய்
நாட்டார் - நகரத்தாரின் முதுகில் வெளுவெளு என்று வெளுத்துச்
சம்மதிக்கும்படி செய்கிறேனா, இல்லையா பார்!" "அது மட்டுமல்ல,
கண்ணா! மகேந்திரபல்லவரின் சித்தப்பா பேரன் ஒருவன்
வேங்கிபுரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறானே, உனக்குத்
தெரியாதா? அந்த ஆதித்தவர்மன் பல்லவ சிம்மாசனத்துக்குப்
போட்டிக்கு வர மாட்டானா?"
"வரமாட்டான்
கமலி, வரமாட்டான்; வேங்கிபுரம் அடியோடு போய்விட்டது.
வேங்கியோடு ஆதித்தவர்மனும் நாசமாய்ப் போய்விட்டான் இனிமேல்
வரமாட்டான்!" "மேலும், நமது குமார சக்கரவர்த்தி மற்ற தேசத்து
இராஜகுமாரர்களைப்போல் அல்லவே! ஆசைக்குச் சிவகாமியைக் கல்யாணம்
செய்துகொண்டு பட்டத்துக்கு இன்னொரு இராஜகுமாரியைக் கல்யாணம்
செய்துகொள்ள மாமல்லர் இணங்கமாட்டார் அல்லவா? அவருடைய சுபாவம்
மகேந்திர சக்கரவர்த்திக்கும் நன்றாய்த் தெரியும். ஏகபத்தினி
விரதங்கொண்ட இராமனைப் போன்றவர் அல்லவா நமது மாமல்லர்?" "ஆமாம்,
கமலி! சந்தேகமே இல்லை மாமல்லர் அது விஷயத்தில் இராமனையும்
கண்ணனையும் போன்றவர்தான்!... கோகுலத்துக் கண்ணனை நான்
சொல்லவில்லை அந்த அயோத்தி ராமனையும் இந்தக் காஞ்சிக்
கண்ணனையும் போன்றவர்!" என்று கண்ணபிரான் தன்னைச் சுட்டிக்
காட்டிக் கொள்ளவே, கமலிக்குச் சிரிப்புப் பீரிட்டுக் கொண்டு
வந்தது.
சற்றுப்
பொறுத்துக் கண்ணபிரான், "கமலி! எனக்கு ஒரே அதிசயமாயிருக்கிறது!
இவ்வளவு மர்மமான இராஜரீக விவகாரங்களெல்லாம் உனக்கு எப்படித்
தெரிந்தது?" என்று கேட்டான். "எல்லாம் எனக்கே
தெரிந்துவிடவில்லை, கண்ணா! நானாக யோசித்ததில் கொஞ்சம்
தெரிந்தது; ஒட்டுக் கேட்டதில் மற்றதெல்லாம் தெரிந்தது."
"என்னத்தை ஒட்டுக் கேட்டாய்? எப்போது கேட்டாய்?"
"நாலைந்து
நாளைக்கு முன்னால் நீ வீட்டில் இல்லாத போது இங்கே ஒரு மனிதர்
வந்திருந்தார், கண்ணா! அவரும் மாமாவும் வெகுநேரம்
பேசிக்கொண்டிருந்தார்கள். சிவகாமியின் பெயர் காதில் விழவே நான்
சுவர் ஓரமாய் நின்று கேட்டேன். இந்த விஷயமெல்லாம் அவர்கள்
பேசிக் கொண்டிருந்தார்கள் அதோடு..." "அதோடு என்ன கமலி?"
"இன்னொரு முக்கிய விஷயமும் பேசினார்கள்." "சொல்லு!"
"சிவகாமிக்கு மாமல்லர் ஓலை எழுதுவதும், அதை நீ கொண்டு போய்க்
கொடுத்து வருவதும் உன் அப்பாவுக்குத் தெரிந்திருக்கிறது.
அதைப்பற்றி அந்தப் புதுமனிதரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்!"
"ஆஹா! அந்தக் கிழ
கோட்டான், அந்த இராவண சந்நியாசி, அந்த ருத்ராட்சப் பூனை
அப்படியா செய்து கொண்டிருக்கிறது?" என்றான் கண்ணபிரான்.
அவனுடைய தந்தையைப் பற்றித்தான் அவ்வளவு மரியாதையான
வார்த்தைகளைச் சொன்னான்! கமலி அவனுடைய வாயைப் பொத்தினாள்.
"அந்தப் புது மனிதர் யார் தெரியுமா, கமலி!" என்று கண்ணன்
கேட்டான். "தெரியாது அதற்கு முன்னால் அவரை நான் பார்த்ததே
இல்லை" என்றாள் கமலி.
அந்தச் சமயத்தில்
தெருவில் விரைவாக குதிரை பாய்ந்துவரும் சத்தம் கேட்டது.
கண்ணன், கமலி இருவரும் பலகணி வழியாய் வீதியில் பார்த்தார்கள்.
நாலுக்கால் பாய்ச்சலில் சென்ற குதிரை மீது ஒருவன் போய்க்
கொண்டிருந்தான். அவனுடைய முகம் ஒரு கணம் கண்ணன் வீட்டுப்
பக்கம் திரும்பி மறு கணம் எதிரே நோக்கியது. கமலி, "கண்ணா!
அவர்தான்! அந்தக் குதிரையில் போகிறவர்தான் அன்றைக்கு வந்து
மாமாவுடன் பேசிக் கொண்டிருந்தவர்! அவர் யார், உனக்குத்
தெரியுமா?" என்று கேட்டாள். "தெரியும், கமலி! அவர்தான் ஒற்றர்
தலைவன் சத்ருக்னன். மகேந்திர சக்கரவர்த்தியிடம் போய்விட்டுத்
திரும்பி வருகிறான். ஏதோ விசேஷச் செய்தி கொண்டு வருகிறான். இதோ
போய்த் தெரிந்துகொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டுக் கண்ணன்
வௌியேறினான்.
ஒரு
நாழிகைக்கெல்லாம் அந்த வீட்டுவாசலில் 'கடகட' என்ற சத்தத்துடன்
ரதம் வந்து நின்றது. கண்ணபிரான் ரதத்தின் முன் தட்டிலிருந்து
குதித்து உள்ளே ஓடிவந்து, சமையற்கட்டிலிருந்து வந்து
கொண்டிருந்த கமலியின் மேல் மோதிக் கொண்டான். "அவ்வளவு என்ன
அவசரம்?" என்றாள் கமலி. கண்ணபிரான், "என்ன அவசரமா?
யுத்தத்துக்குப் போகிற அவசரந்தான்!" என்றான். "என்ன,
யுத்தத்துக்குப் போகிறாயா?" என்று கமலி பாய்ந்து வந்து கண்ணன்
கழுத்தைத் தன் இரு கரங்களாலும் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.
"ஆமாம், கமலி!
ஒற்றர் தலைவன் சத்ருக்னன் மகேந்திர சக்கரவர்த்தியிடமிருந்து
ஓலை கொண்டு வந்திருக்கிறான். மாமல்லர் போர்க்களத்துக்குப்
போகச் சக்கரவர்த்தி அனுமதி கொடுத்து விட்டார். இன்னும் அரை
நாழிகையில் மாமல்லர் கிளம்புகிறார், கமலி!..." "நீயும்
கிளம்புகிறாயா, ண்ணா! நிஜமாகவா?" "இது என்ன கேள்வி, கமலி!
மாமல்லர் போனால் நான் அவருடன் போகாமல் எப்படி இருக்க
முடியும்?" "மாமல்லர் சக்கரவர்த்தியின் திருக்குமாரர்;
நாளைக்குப் பல்லவ சிம்மாசனத்தில் ஏறப்போகிறவர். அவர்
போர்க்களத்துக்குப் போய் யுத்தம் செய்ய வேண்டும், நீ ஏன் போக
வேண்டும்? எந்த ராஜா வந்தாலும் எந்த ராஜா போனாலும் நமக்கு என்ன
வந்தது?" "இது என்ன, கமலி? நேற்றுவரை நீ இப்படியெல்லாம்
பேசினதே இல்லையே? நாம் பிறந்த நாட்டுக்கு அபாயம்
வந்திருக்கும்போது, நமக்கென்ன என்று நாம் வீட்டில் இருப்பதா?"
"நாட்டுக்கு அபாயம், நகரத்துக்கு அபாயம் என்று ஓயாமல்
சொல்கிறாயே, கண்ணா! அப்படி என்ன அபாயம் வந்துவிட்டது?"
"பல்லவ
நாட்டுக்கு இது பொல்லாத காலம், கமலி. வடக்கேயிருந்து வாதாபி
புலிகேசி மிகப் பெரிய சைனியத்துடன் வந்து கொண்டிருக்கிறார்.
அந்தச் சைனியத்தைத்தான் சக்கரவர்த்தி தடுத்து நிறுத்திக்
கொண்டிருக்கிறார். இந்தப் பக்கத்தில் கங்க நாட்டு ராஜாவுக்கு
அதற்குள் அவசரம் பொத்துக் கொண்டுவிட்டது. புலிகேசிக்கு
முன்னால் தான் காஞ்சிக்கு வந்துவிட வேண்டுமென்று மேற்குத்
திக்கிலிருந்து படை எடுத்து வந்து கொண்டிருக்கிறான். கங்க
நாட்டு ராஜாவின் பெயர் என்ன தெரியுமா, கமலி! துர்விநீதன்! -
துரியோதனனுடைய மறு அவதாரம் இவன்தான் போலிருக்கிறது. இந்தத்
துர்விநீதனை எதிர்க்கத்தான் மாமல்லர் கிளம்புகிறார், கமலி!
நானும் கிளம்புகிறேன். இத்தனை நாளும் நான் எப்போது வரும் என்று
ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம் வந்திருக்கிறது.
மனப்பூர்வமாக, உற்சாகமாக எனக்கு விடை கொடுத்து அனுப்பு!"
"கண்ணா! நான்
என்ன செய்யட்டும்? என் மனத்தில் ஏனோ உற்சாகமில்லை. என் தங்கை
சிவகாமியை நினைக்க மனச்சோர்வு அதிகமாகிறது. அவளுடைய தலைவிதி
என்னவோ என்று எண்ண எண்ண, ஏக்கமாயிருக்கிறது." "ஆகா! முக்கியமான
விஷயத்தைச் சொல்லாமல் விட்டு விட்டேனே? மகேந்திர
சக்கரவர்த்தியைப் பற்றி நீ என்னவெல்லாமோ சந்தேகப்பட்டாய்
அல்லவா, கமலி! அதெல்லாம் சுத்தத் தப்பு! சக்கரவர்த்தி என்ன
சொல்லி அனுப்பி இருக்கிறார், தெரியுமா? மாமல்லரைப்
போர்க்களத்துக்குப் போவதற்கு முன்னால் நேரே ஆயனர் வீட்டுக்குச்
சென்று ஆயனரையும் சிவகாமியையும் உடனே காஞ்சிக் கோட்டைக்கு
அனுப்பச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை நானே அவர்களை ரதத்தில்
ஏற்றிக் கொண்டு வந்து இங்கே விட்டுப் போனாலும் போவேன்.
மகேந்திரப் பல்லவரைப் பற்றி இப்போது என்ன சொல்கிறாய், கமலி!
அவர் நல்லவரா, பொல்லாதவரா?" என்று கண்ணபிரான் தலைநிமிர்ந்து
கர்வத்துடன் கேட்டான். "எப்படியாவது எல்லாம் நன்றாக
முடியட்டும். கண்ணா; நீயும் போர்க்களத்திலிருந்து க்ஷேமமாய்த்
திரும்பி வர வேண்டும்!" என்று கமலி கூறியபோது, அவள்
கண்களிலிருந்து அருவி பெருகியது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினாறாம் அத்தியாயம்
முற்றுகைக்கு ஆயத்தம்
கண்ணபிரானும்
கமலியும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அதே சமயத்தில்
அரண்மனை அந்தப்புரத்தின் முன் வாசல் மண்டபத்தில் அமர்ந்து,
மகேந்திர பல்லவரின் பட்ட மஹிஷியான புவன மகாதேவியும், மாமல்ல
நரசிம்மரும், தளபதி பரஞ்சோதியும் வார்த்தையாடிக்
கொண்டிருந்தார்கள். "தேவி! சென்ற எட்டு மாதங்களாக இந்தக்
கோட்டைக்குள்ளே அடைபட்டுக் கிடக்க நேர்ந்ததன் பொருட்டுக் குமார
சக்கரவர்த்தி ஓயாமல் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறாரே? அவர்
குறைப்படுவதற்குக் காரணம் ஒன்றுமே இல்லை. கோட்டை மதில், நகரம்
எல்லாவற்றையும் நான் நன்றாய்ச் சுற்றிப் பார்த்தாகிவிட்டது.
இந்தக் காஞ்சிக் கோட்டையை ஏறக்குறையப் புதிய கோட்டையாகவே
செய்து விட்டிருக்கிறார். தேவேந்திரனும் விருத்திராசுரனும்
சேர்ந்து படையெடுத்து வந்தாலும் கூடக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே
புக முடியாது; வாதாபி புலிகேசியும் தலைக்காட்டுத்
துர்விநீதனும் என்ன செய்துவிடப் போகிறார்கள்!" என்று தளபதி
பரஞ்சோதி கூறினார்.
"கோட்டையை
அவ்வளவு பலப்படுத்த மாமல்லன் என்னென்ன காரியங்கள்
செய்திருக்கிறான்? நீதான் எனக்குச் சொல்லவேண்டும், பரஞ்சோதி!
மாமல்லன் எனக்கு ஒன்றுமே சொல்வதில்லை. அந்தப்புரத்திற்குள்
அடைபட்டுக் கிடக்க வேண்டிய அபலை ஸ்திரீக்கு யுத்த விஷயங்கள்
என்ன தெரியப் போகிறது என்று அவருக்கு எண்ணம்!" என்றாள்
மகேந்திர பல்லவரின் பட்டமஹிஷி.
"அம்மா!
அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபலை ஸ்திரீ உண்மையில்
தாங்களா? நானல்லவா பெண்ணிலும் கேடானவனாகக் கோட்டைக்குள்ளேயே
அடைபட்டுக் கிடக்கிறேன்! மகேந்திர பல்லவர் இப்படி என்னை
வஞ்சிப்பார் என்று நான் நினைக்கவில்லை!" என்று கூறி மாமல்லர்
கைகளைப் பிசைந்து கொண்டார். "குழந்தாய்! உன் தந்தையைப் பற்றி
எதுவும் சொல்லாதே! அவர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அது
முன் யோசனையுடனும் தீர்க்க திருஷ்டியுடனும் இருக்கும்..."
என்று புவன மகாதேவி கூறுவதற்குள் பரஞ்சோதி, "உண்மை தேவி!
உண்மை! மகேந்திர சக்கரவர்த்தியைப் போல் மதிநுட்பமும்
முன்யோசனையும் உள்ளவர்களை ஈரேழு பதினாலு உலகத்திலும் காண
முடியாது என்று நான் சத்தியம் செய்வேன்!" என்றார்.
"ஒருவருக்கு
இரண்டு பேராய்ச் சேர்ந்து கொண்டீர்கள் அல்லவா? அப்படியென்றால்
நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளுகிறேன். மகேந்திர பல்லவர்
ரொம்பவும் முன் யோசனையுடன் காரியங்களைச் செய்கிறவர்தான்;
சந்தேகமில்லை. ஆனால், அவருடைய தந்தை சிம்மவிஷ்ணு மகாராஜா
இன்னும் அதிக முன் யோசனை உள்ளவர். ஆகையினால்தான் அவர்
துர்விநீதனுடைய தந்தைக்குப் பட்டங்கட்டி வைத்தார். அவரே நேரில்
கங்கதேசம் சென்று தம் கையினாலேயே மகுடம் சூட்டினார்! அந்தக்
காரியத்துக்கு எவ்வளவு நன்றாய் இப்போது துர்விநீதன் நன்றி
செலுத்துகிறான் பாருங்கள்! சிங்கமும் சிங்கமும் சண்டை போட்டுக்
கொண்டிருக்குபோது நடுவில் நரி நுழைவது போல், புலிகேசி
படையெடுத்திருக்கும் சமயம் பார்த்துத் துர்விநீதனும் பல்லவ
ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறான்! அவசர அவசரமாக எங்கும்
இராத் தங்காமல் துர்விநீதன் தன் சைனியத்துடன் வந்து
கொண்டிருக்கிறான்! இது தெரிந்தும், நான் இந்தக் கோட்டைக்
குள்ளே அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது! நீங்கள்
சக்கரவர்த்தியின் மதிநுட்பத்தையும் தீர்க்காலோசனையையும் பற்றி
பேசுகிறபோது, எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது!" என்று
மாமல்லர் கூறுகையில், அவருடைய கண்கள் நெருப்புத் தணலைப் போல்
சிவந்து தீப்பொறியைக் கக்கின.
"குழந்தாய்!
வீணாக நொந்து கொள்ளாதே! கங்கபாடி அரசனின் நன்றியற்ற துரோகச்
செயலை நினைத்தால் எனக்கும் கோபமாய்த் தானிருக்கிறது! அதற்காக
என்ன செய்யலாம்? எதற்கும் காலம் வரவேண்டுமல்லவா?" என்றாள்
புவனமகாதேவி. "தேவி! துர்விநீதனுக்குத் தக்க தண்டனை கொடுக்க
இதற்குள்ளாகவே சக்கரவர்த்தி திட்டம் போட்டிருப்பார்;
சந்தேகமில்லை" என்றார் தளபதி பரஞ்சோதி.
"சக்கரவர்த்தி
திட்டம் போட்டிருப்பார்; அதை நிறைவேற்றவும செய்வார். ஆனால்
நான் ஒருவன் எதற்காக யுவ மகாராஜா, குமார சக்கரவர்த்தி,
மாமல்லன் முதலிய பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறேன்? அம்மா!
பாரதக் கதையில் வரும் உத்தர குமாரனைவிடக் கேடானவன் ஒருவன்
உண்டு என்றால், அவன் நான் தான். உத்தர குமாரனாவது
போர்க்களத்துக்குப் போய்விட்டுத் திரும்பி ஓடிவந்தான். நானோ
அரண்மனையை விட்டு வௌிக் கிளம்பவே இல்லை. மகாபாரதக் கதையை
எழுதியதுபோல் இந்தக் காலத்து கதையை யாராவது எழுதினால்,
என்னுடைய வீரத்தையும் தீரத்தையும் எவ்வளவு பாராட்டுவார்கள்?
ஆனாலும் நான் சாந்தமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் இருவரும்
சேர்ந்து உபதேசிக்கிறீர்கள்!" என்று கூறியபோது, வீர மாமல்லரின்
கண்களில் நீர் ததும்பி நின்றது.
அவருடைய முகத்தை
நேருக்கு நேர் பார்க்க முடியாதவராயிருந்த பரஞ்சோதி
சக்கரவர்த்தினியை நோக்கி, "தேவி! பல்லவ குமாரர் தம்மை உத்தர
குமாரனுடன் ஒப்பிட்டுக் கொள்வது கொஞ்சமும் பொருத்தமாயில்லை.
மற்ற எல்லாரும் போருக்குப் போனபோது உத்தர குமாரன் என்ன செய்து
கொண்டிருந்தான்? தன்னுடைய தங்கை உத்தரகுமாரி நாட்டியம் கற்றுக்
கொள்வதைப் பார்த்துக் கொண்டு காலம் கழித்தான். மாமல்லர்
அப்படிக் காலம் கழிக்கவில்லையே!" என்றார். இவ்விதம் அவர்
சொல்லி வருகையில் மூன்று பேருக்கும் சிவகாமியின் நாட்டியக் கலை
விஷயம் ஞாபகம் வந்தது மாமல்லரின் முகம் சுருங்கியது.
பரஞ்சோதி தாம்
நடனக் கலையைப் பற்றிப் பிரஸ்தாபித்தது உசிதத் தவறு என்பதை
உணர்ந்து கொண்டு, "மேலும், யுத்தம் இன்னும் ஆரம்பமாகக்கூட
இல்லையே? மகாபாரத யுத்தத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு
பெரிய யுத்தம் இனிமேல் தானே நடக்க இருக்கிறது? மாமல்லர் வீரச்
செயல்கள் புரிவதற்கு இனி மேல்தானே சந்தர்ப்பங்கள் வரப்
போகின்றன?" என்றார். "போதும், போதும்! எத்தனை யுத்தம்
நடந்தால்தான் என்ன? எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பம் வந்தால்தான்
என்ன? அப்பா என்னை இந்தக் கோட்டைக்குள்ளேயே பூட்டி வைக்க
மாட்டார் என்பது என்ன நிச்சயம்?" என்று மாமல்லர் கொதிப்புடன்
கேட்டார்.
புதல்வனின் மன
நிலையைக் கண்ட அன்னை பேச்சை மாற்ற விரும்பி, "பரஞ்சோதி!
கோட்டையைப் பத்திரப் படுத்துவதற்கு மாமல்லன் செய்திருக்கும்
காரியங்களைப் பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே?" என்றாள்.
"தேவி! நமது கோட்டை மதிலைச் சுற்றியுள்ள அகழியைத் தாங்கள்
பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?" "ஆமாம்; எட்டு மாதங்களுக்கு
முன்னால் பார்த்திருக்கிறேன். சக்கரவர்த்தி புறப்பட்டுச் சென்ற
பிறகு நான் அரண்மனையை விட்டு வௌிக் கிளம்பவே இல்லை."
"நானும் எட்டு
மாதங்களுக்கு முன்பு பார்த்ததுதான். முன்னே பார்த்தபோது சிறு
கால்வாய் மாதிரி இருந்தது. இப்போது பார்த்தால் சமுத்திரம்
மாதிரி அலைமோதிக் கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும்
முதலைகள் வாயைப் பிளந்து கொண்டு காணப்படுகின்றன. வாதாபிச்
சைனியத்தில் எத்தனை பேருக்கு இந்த அகழியில் மோட்சம் கிடைக்கப்
போகிறதோ!" என்றார் பரஞ்சோதி. "அகழியில் அவர்கள் இறங்கினால்
தானே? பாலங்கள் அமைத்துக் கொண்டு வந்தால்? அல்லது படகிலே
வந்தால்?"
"தேவி! அகழியின்
அருகில் வருகிறவர்கள் மீது அம்புகளைப் பொழிய ஐயாயிரம் வில்
வீரர்கள் மதில் சுவர்கள் மீது மறைந்து காத்திருப்பார்கள்!
அப்படியும் அகழியைத் தாண்டி வருகிறவர்களுக்கு மதில்
சுவருக்கும் அகழிக்கும் மத்தியில் எத்தனையோ அதிசயங்கள்
காத்துக் கொண்டிருக்கும். வௌிக்குத் தெரியாத பள்ளங்களில்
அவர்கள் விழுந்து காலை ஒடித்துக் கொள்வார்கள். ஆங்காங்கே
கண்ணுக்குத் தெரியாதபடி விரித்திருக்கும் வலைகளிலும்
பொறிகளிலும் சிக்கிக் கொள்வார்கள். இவற்றையெல்லாம் மீறி வந்து
மதில்சுவர் மேல் ஏற முயலும் சளுக்க வீரர் தலைகளின் மீது
மதில்சுவரின் மேல் வைத்திருக்கும் பாறாங்கற்கள்
உருண்டுவிழும்!"
"வாதாபிச்
சைனியம் கடலைப்போல் பெரியதென்று சொல்கிறார்களே, பரஞ்சோதி!
லட்சக்கணக்கான வீரர்கள் மனம் வைத்தால் அகழியை ஆங்காங்கே
தூர்த்து வழி ஏற்படுத்திக் கொள்ளலாமல்லவா!" "ஆமாம் தேவி!
அகழியைத் தூர்க்கலாம்; ஆனால் கோட்டை மதிலை அவ்வளவு சுலபமாக
இடிக்க முடியாது!" "கோட்டை வாசலுக்கு எதிரே அகழியைத்
தூர்த்துக் கொண்டு யானைகளை ஏவினால் என்ன செய்கிறது? மத்த
கஜங்களின் தாக்குதலுக்கு எதிரே கோட்டையின் மரக் கதவுகள் என்ன
செய்யும்?" என்று பட்டமகிஷி கேட்ட போது, பரஞ்சோதி எதையோ
நினைத்துக் கொண்டவர்போல் சிரித்தார். "அப்பா! ஏன்
சிரிக்கிறாய்?" என்றாள் சக்கரவர்த்தினி.
"தாங்கள் கேட்டதை
நினைத்துத்தான் சிரிக்கிறேன். உண்மைதான் தேவி! வாதாபி வீரர்கள்
அப்படித்தான் செய்யப் போகிறார்கள். நமது கோட்டை வாசல்களுக்கு
எதிரே அகழியைத் தூர்க்கப் போகிறார்கள் அல்லது பெரிய பெரிய
மரங்களை வெட்டிக் கொண்டு வந்து பாலம் போடப் போகிறார்கள்.
போட்டுவிட்டுக் கோட்டைக் கதவுகளைத் தகர்க்க யானைகளை ஏவப்
போகிறார்கள். அந்த யானைகளுக்கு முதலில் மதுவைக் கொடுத்து
விட்டுத்தான் ஏவப்போகிறார்கள்! ஆனால், ஆகா! அந்த யானைகள்
எப்பேர்ப்பட்ட அதிசயத்தை அனுபவிக்கப் போகின்றன? கோட்டை வாசலின்
மேல்மண்டபத்திலிருந்தும் பக்கத்து மதில் சுவர்களின்
மேலிருந்தும் வஜ்ராயுதம் விழுவது போல் வேல்கள் வந்து அவற்றின்
தலைமீது விழும்போது, அந்த மதுவுண்ட யானைகள் பயங்கரமாய்ப்
பிளிறிக் கொண்டு திரும்பி ஓடி வாதாபி வீரர்களை துவைத்து
நாசமாக்கப் போகிற காட்சியை நினைத்துப் பார்க்கையிலே எனக்குச்
சிரிப்பு வருகிறது! இது மட்டுமா? மேலேயிருந்து விழுகிற
வேல்களுக்குத் தப்பிச் சிற்சில யானைகள் வந்து கதவிலே மோதக்
கூடுமல்லவா? அதனால் கோட்டைக் கதவு பிளக்கும் போது அந்த
யானைகளுக்கு மகத்தான அதிசயம் காத்திருக்கும் தேவி! வௌிக் கதவு
பிளந்ததும், உள்ளே நீட்டிக் கொண்டிருக்கும் வேல் முனைகள்
அவற்றின் மண்டையைப் பிளக்கும்போது ஆகா, அந்த யானைகள் வந்த
வேகத்தைக் காட்டிலும் திரும்பி ஓடும் வேகம் அதிகமாயிராதா?"
என்றார் பரஞ்சோதி. "அப்படியா?" என்று மாமல்லரின் அன்னை
அதிசயத்துடன் கேட்டாள்.
அதுவரையில்
மௌனமாயிருந்த மாமல்லர் அப்போது சம்பாஷணையில் சேர்ந்து, "ஆம்
அம்மா! ஆனால், இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் மூல காரணம் யார்
தெரியுமா? நமது தளபதி பரஞ்சோதிதான்! இவர் முதன் முதலில்
காஞ்சியில் புகுந்த அன்று மதயானையின் மேல் வேல் எறிய, யானை
திரும்பி ஓடிற்றல்லவா? அதற்கு மறுநாளே இந்தக் காஞ்சி
மாநகரிலுள்ள கொல்லர்கள் எல்லோரும் வேல் முனைகள் செய்ய
ஆரம்பித்துவிட்டார்கள்! தளபதி அன்று செய்த காரியத்தினாலேதான்,
வாதாபியின் யானைப் படையை எதிர்ப்பதற்குத்தக்க யோசனை அப்பாவின்
மனத்தில் உதயமாயிற்றாம். இதையெல்லாம் அப்பாவே என்னிடம்
சொன்னார்!" என்று மாமல்லர் பெருமையுடன் கூறிப் பரஞ்சோதியை
அன்புடன் தழுவிக் கொண்டார்.
"தேவி! இந்த
எட்டு மாதத்தில் காஞ்சி நகர்க் கொல்லர்கள் செய்திருக்கும்
வேலையை நேற்று நான் பார்த்தேன். லட்சோபலட்சம் வேல்களைச் செய்து
குவித்திருக்கிறார்கள். காஞ்சி நகர் கொல்லர்கள் வெகு
கெட்டிக்காரர்கள், அம்மா! நான் கொண்டு ந்திருந்த சோழ நாட்டு
வேலைப்போலவே அவ்வளவும் செய்திருக்கிறார்கள். என்னையே அவர்கள்
ஏமாறச் செய்து விட்டார்கள். வடநாட்டுக்கு நான் யாத்திரை
சென்றபோது என்னிடம் கொடுக்கப்பட்ட வேல் என்னுடைய சொந்த வேல்
தான் என்று எண்ணி நான் ஏமாந்துபோனேன். இங்கே திரும்பி
வந்ததும்தான் என்னுடைய வேலை மாமல்லர் பத்திரமாய்
வைத்திருந்தார் என்று தெரிந்தது. எட்டு மாதமும் வீணில்
கழித்ததாக மாமல்லர் எண்ணுவது பெரும் பிசகு. அம்மா! கோட்டை
மதில் பாதுகாப்புக் காரியம் மட்டுமல்ல; கோட்டையை முற்றுகைக்கு
ஆயத்தமாக இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறார். காஞ்சி மக்களுக்கு
இரண்டு வருஷத்துக்குத் தேவையான தானியங்கள் வந்து
சேர்ந்திருக்கின்றன. நகருக்குள்ளிருந்த அநாவசியமான மக்கள்
எத்தனையோ பேரை வௌியேற்றியாகிவிட்டது. முக்கியமாகக் காஞ்சி
நகருக்கே அவலட்சணமாயிருந்த காபாலிகர்களை வௌியேற்றிவது பெரிய
காரியம். அதற்குக் குமார சக்கரவர்த்தி வெகு நல்ல யுக்தியைக்
கையாண்டார். தேவி! காஞ்சியிலுள்ள மதுபானக் கடைகளையெல்லாம்
மூடிவிட வேண்டும் என்று நேற்றைய தினம் கட்டளை போட்டார்.
இன்றைக்கு அவ்வளவு காபாலிகர்களும் கையில் மண்டை ஓட்டையும்
மாட்டுக் கொம்பையும் எடுத்துக் கொண்டு வடக்குக் கோட்டை வாசல்
வழியாகப் போய்விட்டார்கள்...!"
இப்படிப்
பரஞ்சோதி சொல்லிக் கொண்டே வருகையில் அந்தப்புரத்துச் சேடி
ஒருத்தி, அரண்மனை முன்கட்டிலிருந்து உள்ளே வந்து
புவனமகாதேவியின் அருகில் நின்று மெதுவான குரலில் ஏதோ கூறினாள்.
அதைக் கேட்ட தேவி முகத்தில் கிளர்ச்சியுடன், "மாமல்லா!
அப்பாவிடமிருந்து செய்தியுடன் சத்ருக்னன் வந்திருக்கிறானாம்!"
என்று சொன்னாள். மாமல்லர் பரபரப்புடன் எழுந்து போக
முயற்சித்தபோது, "குழந்தாய்! சத்ருக்னன் இங்கேயே வரட்டும்.
செய்தி என்னவென்று நானும் தெரிந்து கொள்கிறேன்" என்றாள் அன்னை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினேழாம் அத்தியாயம்
விடுதலை
வியர்க்க
விறுவிறுக்க மூச்சுவாங்கிக் கொண்டு வந்த சத்ருக்னனின் முகத்தை
மூவிரண்டு கண்கள் இமையையும் அசைக்காமல் ஆவலுடன் உற்று நோக்கின.
ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு ஒரு கணநேரம் கூட கொடுக்காமல்,
"சத்ருக்னா! யாருக்கு என்ன செய்தி கொண்டு வந்தாய்?" என்று தேவி
கேட்டாள். "தாயே! இங்குள்ள மூன்று பேருக்கும் செய்தி கொண்டு
வந்திருக்கிறேன்" என்று கூறி மூவருக்கும் வணக்கம் செலுத்தினான்
சத்ருக்னன். பின்னர், "தேவி! மகேந்திர பல்லவரின் முதல் செய்தி
தங்களுக்குத்தான்! வீர பத்தினி என்னும் பெயருக்கு இதுகாறும்
தாங்கள் உரிமை பெற்றது போல் வீரத்தாய் என்னும் பெயருக்கும்
உரிமை பெற வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது என்று
தங்களுக்குத் தெரியப்படுத்தச் சொன்னார். எட்டு மாதங்களுக்கு
முன்பு அகமும் முகமும் மலர்ந்து பதியைப் போர்க்களத்துக்கு
அனுப்பி வைத்தது போல் இன்று தங்களுடைய அருமைப் புதல்வரை
அனுப்பி வைக்க வேண்டிய காலம் வந்து விட்டதாகத் தெரிவிக்கச்
சொன்னார்!" என்றான் சத்ருக்னன்.
விவரிக்க முடியாத
உணர்ச்சி வெள்ளம் உள்ளத்தில் பொங்க, தோள்கள் பூரித்து வீங்க,
தேகமெல்லாம் சிலிர்க்க, மாமல்ல நரசிம்மர் அன்னையின் அருகில்
பாய்ந்து சென்று அவளுடைய பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்
கொண்டார். "அம்மா! சக்கரவர்த்தியின் விருப்பத்தை
நிறைவேற்றுவீர்கள் அல்லவா? அவர் எனக்கு அளித்த விடுதலையை
நீங்களும் மனமுவந்து அளிப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டார்
மாமல்லர். "பொறு, குழந்தாய்! செய்தியை முழுதும் கேட்போம்!"
என்றாள் தேவி. மாமல்லர் உடனே திரும்பி, "சத்ருக்னா! எனக்கு
என்ன செய்தி கொண்டுவந்தாய்?" என்று கேட்டார்.
"நல்ல
செய்திதான்; பிரபு! தங்கள் மனத்திற்கு உகந்த செய்திதான்.
நன்றிகொன்ற பாதகனாக கங்கநாட்டு மன்னன் துர்விநீதன் சளுக்கப்
புலிகேசிக்கு முன்னால் காஞ்சியை அடைந்து விட வேண்டுமென்ற
துராசையினால் விரைந்து வந்து கொண்டிருக்கிறான். பல்லவ
குலத்துக்குக் கங்கர் குலம் பட்டிருக்கும் நன்றிக்
கடனையெல்லாம் மறந்துவிட்டு இந்தப் படுதுரோகமான காரியத்தில்
அவன் இறங்கியிருக்கிறான். அந்தத் துர்விநீதனுக்குத் தக்க
தண்டனையளிக்கும் பொறுப்பைத் தங்களுக்குச் சக்கரவர்த்தி
அளித்திருக்கிறார். கழுக்குன்றத்திலுள்ள படையுடன் தாங்கள்
புறப்பட்டுச் சென்று, துர்விநீதன் காஞ்சியை அணுகுவதற்கு
முன்னால் அவனை முறியடிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி
இருக்கிறார்!"
மாமல்லர் ஆவேசம்
வந்தவரைப் போல் சத்ருக்னனிடம் ஓடிச் சென்று அவனைத்
தழுவிக்கொண்டு, "சத்ருக்னா! இவையெல்லாம் உண்மைதானே? நான் கனவு
காணவில்லையே? நிஜமாகத்தானே சக்கரவர்த்தி என்னைக் கங்க நாட்டுப்
படையுடன் போராடுவதற்குப் போகச் சொல்லியிருக்கிறார்?" என்று
பரபரப்புடன் கேட்டார். "ஆம், பிரபு! இதெல்லாம் கனவல்ல;
உண்மைதான், இதோ 'விடைவேல் விடுகு'ம்
கொடுத்தனுப்பியிருக்கிறார்!" என்று சத்ருக்னன் ஓலை ஒன்றை
அவரிடம் எடுத்துக் கொடுத்தான்.
பல்லவ குலத்தின்
சின்னங்களாகிய விடை (ரிஷபம்)யும் வேலும் பொறித்த அந்த ஓலையை
மாமல்லர் படிக்கும்போது அவர் முகத்தில் உற்சாகம் பொங்கிற்று.
படித்து முடிக்கும் சமயத்தில் அவருடைய புருவங்கள் சிறிது
நெறிந்தன. நிமிர்ந்து பார்த்து, "சத்ருக்கனா! உன்னிடம் ஏதோ
வாய்மொழியாகச் செய்தி அனுப்பியிருப்பதாகச் சக்கரவர்த்தி
எழுதியிருக்கிறாரே, அது என்ன?" என்று கேட்டார். "ஆம், பிரபு!
எத்தனையோ சாம்ராஜ்யக் கவலைகளுக்கிடையே பல்லவ நாட்டின் கலைச்
செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் சக்கரவர்த்தியால் மறக்க
முடியவில்லை. ஆயனச் சிற்பியாரும் அவர் மகளும் காஞ்சிக்கு
வந்துவிட்டார்களா என்று என்னைக் கேட்டார். 'இல்லை' என்று நான்
தெரிவித்தேன். தாங்கள் போர்க்களத்துக்குக் கிளம்புவதற்கு
முன்னால் நேரில் ஆயனர் வீட்டுக்குச் சென்று அவர்களைக்
காஞ்சிக்கு அனுப்பிவிட்டுப் போகவேண்டும் என்று தெரிவிக்கச்
சொன்னார்."
மாமல்லரின்
மகிழ்ச்சி பூரணமாயிற்று. யுத்தத்துக்குப் போவதற்கு முன்னால்
சிவகாமியைப் பார்த்து விடை பெற்றுக்கொண்டு போக அவர்
விரும்பினார். இப்போது தயக்கமின்றி ஆயனர் வீட்டுக்குப் போகச்
சௌகரியம் ஏற்பட்டுவிட்டது. சிவகாமியின் விஷயத்தில் தம்
மனநிலையை அறிந்துதான் சக்கரவர்த்தி அவ்விதம்
செய்தியனுப்பியிருப்பாரோ என்று ஒரு கணம் அவருக்குத் தோன்றியது.
ஆனால், அவருக்குத் தன் மனநிலை எப்படித் தெரிந்திருக்க
முடியும்? ஆ! தம் அருமைத் தோழர் பரஞ்சோதிதான் சொல்லி
அனுப்பியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தினால் பரஞ்சோதியின்மேல்
அவருக்கிருந்த சிநேக உணர்ச்சி பன்மடங்கு பெருக, அருகேயிருந்த
அவருடைய கரத்தைப் பற்றித் தம் நன்றியைத் தெரிவிப்பதற்கு
அறிகுறியாக அழுத்திப் பிடித்தார்.
பரஞ்சோதியோ,
மனக்குழப்பத்துடன் சத்ருக்னனைப் பார்த்து "ஐயா! எனக்கும் ஏதோ
செய்தி இருப்பதாகச் சொன்னீரே! அது என்ன?" என்று கேட்டார்.
"லக்ஷ்மணன் இரமனைப் பின் தொடர்ந்தது போல் மாமல்லரைத் தொடர்ந்து
உங்களைப் போகும்படி சொன்னார். காஞ்சிக்குச் சக்கரவர்த்தியே
சீக்கிரத்தில் வந்து கோட்டைப் பாதுகாப்பைக் கவனித்துக்
கொள்வதாகச் சொன்னார்." "ஆஹா என் அருமைத் தோழரும் என்னுடன்
வருகிறாரா?" என்று மாமல்லர் மேலும் பொங்கிய மகிழ்ச்சியுடன்
பரஞ்சோதியைத் தழுவிக்கொண்டார். பிறகு, அன்னையை நெருங்கி
அவருடைய பாதங்களில் நமஸ்கரித்து, "அம்மா! விடை கொடுங்கள்"
என்றார். பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி கண்களில்
அப்போது கண்ணீர் துளித்தது. "குழந்தாய்! வெற்றிமாலை சூடி
க்ஷேமமாய்த் திரும்பி வா!" என்றார்.
மாமல்லர் எழுந்து
நின்றார், ஏதோ சொல்ல எண்ணியவர் சிறிது தயங்கினார். "மாமல்லா!
இன்னும் ஏதாவது சொல்ல வேணுமா?" என்று தேவி கேட்டார். "ஆம்,
அம்மா! ஆயனரையும் சிவகாமியையும் பற்றித் தந்தை
சொல்லியனுப்பியதைக் கேட்டீர்களல்லவா?" "கேட்டேன், நரசிம்மா!
அதைப்பற்றி என்ன?" "அவர்களைக் காஞ்சிக்கு அனுப்பிவிட்டு நான்
போர்க்களம் போகிறேன், அம்மா." "அப்படியே செய், குழந்தாய்!"
"சிவகாமி இங்கே இருக்கும்போது அவளைத் தாங்கள் மருமகளைப் போல்
பார்த்துக்கொள்ள வேண்டும்!" "மருமகளைப் போலவா? முடியவே
முடியாது. அந்தத் தாயில்லாப் பெண்ணை என் சொந்த மகளைப் போலவே
பார்த்துக் கொள்கிறேன், மாமல்லா!" இதைக்கேட்ட மாமல்லர்
புன்னகையுடன், "இல்லை அம்மா! மருமகளைப் போல் பார்த்துக்
கொண்டால் போதும்!" என்றார்.
புவனமகா தேவியின்
புருவங்கள் அப்போது நெறிந்தன. "ஏன் அப்படிச் சொல்கிறாய்,
குமாரா! மகளைப்போல் பார்த்துக் கொள்கிறேன் என்று நான் சொன்னதை
ஏன் மறுக்கிறாய்? ஒரு வேளை..." என்று கூறிவிட்டுத் தேவி
பரஞ்சோதியை நோக்கினாள். உடனே, அவளுடைய முகத்தில் மலர்ச்சி
காணப்பட்டது. "ஓஹோ! புரிந்தது! ஆயனரிடம் சிற்பம் கற்க வந்த
பரஞ்சோதி, ஆயனரின் மிகச் சிறந்த சிற்ப வடிவத்தையே கொள்ளை
கொள்ளப் பார்க்கிறானா?" என்றார். மாமல்லர், பரஞ்சோதி இருவருடைய
முகங்களும் அப்போது பெரிதும் வேதனையைக் காட்டின.
"இருக்கட்டும், அம்மா! தாமதிக்க நேரம் இல்லை; நாங்கள்
புறப்படவேண்டும் விடை கொடுங்கள்" என்றார் மாமல்லர்.
சத்ருக்னன்
காஞ்சிக்கு வந்து இரண்டு நாழிகைக்குள்ளே, குமார
சக்கரவர்த்தியும், தளபதி பரஞ்சோதியும் காஞ்சிக் கோட்டையின்
வடக்கு வாசல் வழியாகப் புறப்பட்டார்கள். திருக்கழுக்குன்றம்
சென்று அங்கிருந்து தற்காப்புப் படைகளை மறுநாள் அதிகாலையில்
புறப்பட ஆயத்தமாகும்படிக் கட்டளையிட்டார்கள். அன்று மாலையே
ஆயனரின் வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு
வந்துவிடவேண்டுமென்றும், மறுநாள் அதிகாலையில் சைனியத்துடன்
தாங்களும் கிளம்பிவிட வேண்டுமென்றும் உத்தேசித்து, நரசிம்மரும்
பரஞ்சோதியும் புரவிகள் மீதேறி, ஒரு சிறு குதிரைப் படை தங்களைப்
பின்தொடர, விரைந்து சென்று ஆயனர் வீட்டை அடைந்தார்கள்.
போகும்போது,
சிவகாமியிடம் இப்படி இப்படிப் பேச வேண்டும், இன்னின்ன
சொல்லவேண்டும் என்பதாக மாமல்லர் எவ்வளவோ மனக்கோட்டைகள் கட்டிக்
கொண்டு போனார். ஆனால் ஆயனரின் அரண்ய வீட்டை அடைந்தபோது,
அவருடைய ஆகாசக் கோட்டைகள் எல்லாம் சிதறி விழுந்தன. வீட்டின்
முன் கதவைப் பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டியிருந்தது!
வீட்டிற்குள்ளேயும் வௌியிலும் பூரண நிசப்தம்
குடிகொண்டிருந்தது!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினெட்டாம் அத்தியாயம்
பிரயாணம்
கார்த்திகை
மாதத்தில் ஒருநாள் மாலை நேரத்தில் காஞ்சியிலிருந்து சிதம்பரம்
போகும் சாலையில் கூண்டு இல்லாத இரட்டை மாட்டு வண்டி ஒன்று
போய்க் கொண்டிருந்தது. அதில் சிவகாமியும் அவளுடைய அத்தையும்
உட்கார்ந்திருந்தார்கள். வண்டிக்குப் பின்னால் சற்றுத்
தூரத்தில் ரதி துள்ளி விளையாடிக் கொண்டும் ஆங்காங்கே
சாலைக்குப் பக்கங்களிலே முளைத்திருந்த புல்லை மேய்ந்து
கொண்டும் வந்தது. சுகப்பிரம்ம ரிஷி ஒவ்வொரு சமயம் ரதியின்
முதுகின் மேல் உட்கார்ந்தும், சில சமயம் சிவகாமியின் தோளின்
மேல் உட்கார்ந்தும், சில சமயம் வண்டிக்கு மேலாகப் பறந்தும்
ஆனந்தமாகப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். பின்னால் இன்னும்
சற்றுத் தூரத்தில் புத்த பிக்ஷுவும் ஆயனச் சிற்பியாரும் பேசிக்
கொண்டு நடந்து வந்தார்கள்.
அந்த வருஷம்
ஐப்பசி மாதத்திலேயே மழை பிடித்துக் கொண்டு பதினைந்து நாட்கள்
வரையில் விடாமல் பொழிந்தது. அதன் காரணமாக, ஏரிகள், குளங்கள்
எல்லாம் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தன. சாலை
ஓரத்தில் ஓடைகளில் தண்ணீர் அலைகள் மோதிக் கொண்டிருந்தன. ஆறுகள்
வாய்க்கால்களில் இரு கரையையும் தொட்டுக்கொண்டு பிரவாகம் ஓடிக்
கொண்டிருந்தது.
நன்செய்
வயல்களில் இரண்டாம் போகத்து வேளாண்மை அப்போதுதான்
ஆரம்பமாகியிருந்தது. புன்செய்க் காடுகளில் கம்பும் கேழ்வரகும்
செழித்து வளர்ந்திருந்தன. சாலையின் இரு புறத்திலும்
வளர்ந்திருந்த மரங்களும் ஆங்காங்கே வயல்களுக்கிடையே காணப்பட்ட
தென்னந்தோப்பும் வாழைத் தோட்டங்களும் கண்ணைக் குளிர்விக்கும்
காட்சியளித்தன. பெரு மழை விட்டுப் பல நாள் ஆகிவிட்டதாயினும்,
வானத்தில் இப்போதும் மேகத்திரள்கள் காணப்பட்டன. இவை இடையில்
தங்குவதற்கு நேரமில்லாத நெடுந்தூரப் பிரயாணிகளைப்போல்
ஆகாயத்தில் அதிவேகமாகப் பிரயாணம் செய்தன. சில சமயம்
நீர்த்துளிகளை அள்ளித் தௌித்துவிட்டுச் சிதறி மறைந்தன.
நீர்
நிலைகளின்மீது தவழ்ந்தும், பசுமையான தோப்புக்களில் புகுந்தும்,
மழைத்துளிகளை அளாவியும் வந்துகொண்டிருந்த குளிர்ந்த வாடைக்
காற்று உடம்பின்மீது பட்டபோது, துணியை இழுத்துப்
போர்த்திக்கொள்ளத் தோன்றியது; ஆயினும் அது அபூர்வமான சுகத்தை
அளித்தது. அந்தக் குளிர்ந்த வாடைக் காற்றில் அடிபட்டதனால்
பட்சிகளுக்குக்கூடத் தொண்டை கட்டிக்கொண்டது போல் தோன்றியது.
சாதாரணமாய், 'கலகல' என்றும் 'கிளுகிளு' என்றும் கேட்கும்
புள்ளினங்களின் குரல் ஒலியில் இப்போது 'கரகரப்பு'ச் சத்தம்
கலந்திருந்தது.
வண்டியில்
அத்தைக்கும் மருமகளுக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது.
"இன்றைக்கு மழை பெய்யுமா சிவகாமி?" என்று அத்தை கேட்டாள்.
மலையா? எங்கே இருக்கிறது?" என்றாள் சிவகாமி. "ஆமாம்; மழையைக்
கண்டால் மயிலுக்குக் கொண்டாட்டந்தான்!" என்றாள் அத்தை.
"மாலையில் வெயில் அடித்தால் கொண்டாட்டத்துக்கு என்ன குறைவு?"
என்றாள் சிவகாமி. "என்ன சொன்னாய்?" என்றாள் அத்தை. "என்ன
கேட்டீர்கள்?" என்றாள் சிவகாமி.
"கொஞ்சம்
செவிமந்தமுள்ள அத்தைக்குப் பேசுவதிலே அதிகப் பிரியம். எனவே,
அவ்வப்போது சிவகாமியிடம் ஏதாவது கேட்டுக் கொண்டும்
சொல்லிக்கொண்டும் வருவாள். கற்பனை உலகில் சஞ்சரித்துக்
கொண்டிருந்த சிவகாமி அத்தையின் பேச்சுக்களை மனத்தில் வாங்கிக்
கொள்ளாமலேயே ஏதாவது பொருத்தமில்லாத மறுமொழி சொல்லுவாள். அது
காதில் நன்றாய் விழாமல் அத்தை வேறு ஒன்றைக் கூறுவாள். இதே
ரீதியில் அவர்களுடைய பிரயாணம் நடந்து கொண்டிருந்தது.
காஞ்சியிலிருந்து ஏறக்குறைய ஆறு காத தூரம் அவர்கள் பிரயாணம்
செய்திருந்தார்கள்.
மாரிக் காலத்து
மாலைப் பொழுதில் வௌி உலகமானது எவ்வளவுக்குக் குளிர்ந்திருந்ததோ
அவ்வளவுக்குச் சிவகாமியின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.
அதில் எரிமலை நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது. கொழுந்து
விட்டெரியும் ஜ்வாலைகளுடனே அக்கினி ஆறு பிரவகித்துக்
கொண்டிருந்தது. மாமல்லரைப்பற்றி நாகநந்தி பிக்ஷு கூறிய
விஷயங்கள் அவளுடைய மனத்தில் அத்தகைய பிரளயக் குழப்பத்தை உண்டு
பண்ணியிருந்தன.
நம்
அன்புக்குரியவர்களைப் பற்றி சாதாரணமாக ஏதேனும் கெடுதலான
விஷயத்தைக் கேள்விப்பட்டால் நம் உள்ளம் சுலபத்தில்
நம்புவதில்லை. 'அப்படியெல்லாம் இராது' என்று மனத்தைத் திருப்தி
செய்து கொள்கிறோம். அவதூறு சொல்கிறவர்களிடம் சண்டை பிடிக்கவும்
ஆயத்தமாயிருக்கிறோம். ஆனால், எக்காரணத்தினாலாவது நமக்கு
வேண்டியவர்களிடம் குற்றம் இருக்கிறதென்று நம்பும்படி நேர்ந்து
விட்டால் உள்ளத்தில் கோபம் கொழுந்துவிட்டெரியத் தொடங்குகிறது.
வேண்டியவர்கள் மீது மட்டுமல்ல; உலகத்தின் மேலேயே கோபம்
கொள்ளுகிறோம். இந்த மனித இயற்கை, காதலர்களின் விஷயத்தில்
ஒன்றுக்கு நூறு மடங்கு ஆகிறது.
காதலன் எவனும்
தன்னுடைய காதலியைச் சாதாரண மானிடப் பெண்ணாகக் கருதுவதில்லை.
தெய்வப் பிறவி என்றே கருதுகிறான். தேவலோகத்தில் அமிர்தபானம்
செய்து கொண்டு ஆனந்த அமர வாழ்க்கை நடத்த வேண்டியவள் தன் பேரில்
கொண்ட அன்பினாலேயே இந்தப் பூலோகத்திலே வாழ்ந்து வருவதாகக்
கருதுகிறான். காதலியோ, குழந்தைப் பிராயத்திலிருந்து தன்
மனத்தில் தானே சிருஷ்டி செய்துகொண்டிருந்த இலட்சிய
புருஷனுக்குரிய சகல உத்தம குணங்களையும் காதலன்மீது ஏற்றி
அவனைக் குற்றங்குறையில்லாத தெய்வீகப் புருஷனாகவே
எண்ணிக்கொள்கிறாள். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தினால் அவர்களுடைய
நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படும்போது மகத்தான ஏமாற்றம் உண்டாகி
விடுகிறது. மலையின் சிகரத்திலிருந்து திடீரென்று அதல
பாதாளத்தில் விழுகிறவர்களைப்போல் ஆகிவிடுகிறார்கள்.
சிவகாமி தன்
இருதயத்தில் ஓர் அற்புதமான திருக்கோயிலை அமைத்து, அதிலே மாமல்ல
நரசிம்மரைத் தெய்வங்களுக்கெல்லாம் மேலான பரதெய்வமாகப்
பிரதிஷ்டை செய்திருந்தாள். நாகநந்தி கூறிய நஞ்சு தோய்ந்த
வார்த்தைகளினால் அந்தத் திருக்கோயில் ஒரு நொடியில் இடிந்து
தகர்ந்து விழுந்துவிட்டது! அதிலே பிரதிஷ்டை செய்திருந்த
தெய்வச் சிலையும் விழுந்து நொறுங்கிப் பொடிப் பொடியாய்ப் போய்
விட்டது. குமார சக்கரவர்த்தியைப் பற்றி நாகநந்தி கூறிய அவதூறு
அவ்வளவு சாமர்த்தியமாகவும் நம்பும்படியாகவும் அமைந்திருந்தது.
சிவகாமி அவர் கூறியது அவ்வளவையும் அப்படியே நம்பி விட்டாள்.
இராஜ்யத்திலே அவ்வளவு பெரிய யுத்தம் நடந்து
கொண்டிருக்கும்போது, மாமல்லர் காஞ்சிக்குள்ளேயே ஒளிந்து
கொண்டிருப்பதற்கு வேறு காரணம் என்ன இருக்க முடியும்?
போர்க்களத்திலே
பரஞ்சோதியின் வீரதீரச் செயல்களைப் பற்றிய வரலாறுகள் காற்றிலே
மிதந்து ஆயனரும் சிவகாமியும் வசித்த காட்டுக்குள்ளேகூட
எட்டியிருந்தன. அதெல்லாம் உண்மை என்பதைப் பரஞ்சோதியை நேரிலே
பார்த்த சிவகாமி தெரிந்துகொண்டிருந்தாள். தமிழ் படிக்கவும்
சிற்பம் கற்கவும் வந்த பட்டிக்காட்டுப் பிள்ளை இப்போது பெரிய
தளபதி ஆகிவிட்டான். அரங்கேற்றத்தன்று அவன் யானைமீது வேல்
எறிந்து தங்களைக் காப்பாற்றிய சம்பவமும் சிவகாமியின்
உள்ளத்தில் அழியாதபடி பதிந்திருந்தது. பரஞ்சோதியின் வீர
வாழ்க்கையோடு மாமல்லர் கோட்டைக்குள்ளே ஒளிந்திருந்ததை
ஒப்பிட்டுப் பார்த்து மாமல்லரைப் 'பயங்கொள்ளிப் பல்லவன்' என்று
நாடு நகரமெல்லாம் அழைப்பதில் வியப்பில்லை என்று சிவகாமி
எண்ணினாள். இதனால், நாகநந்தியின் வார்த்தைகளில் அவளுக்கு
நம்பிக்கை ஏற்பட்டது.
ஒரு விஷயத்தில்
நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, அதையொட்டிய இன்னொன்றிலும் நம்பிக்கை
பிறப்பது இயல்பேயல்லவா? எனவே, மாமல்லரை 'ஸ்திரீ லோலன்' என்று
நாகநந்தி கூறியதிலும் அவளுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. வீர
மன்னர்களுக்குப் பிறந்த தூர்த்தர்களான இராஜ குமாரர்களைப் பற்றி
அவள் கதைகளிலே கேள்விப்பட்டதுண்டு. மாமல்லர் அவர்களிலே ஒருவர்
என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், அதுவும் உண்மையாகத்
தான் இருக்கவேண்டும் என்று இப்போது தோன்றியது. ஆகா! மாய
வார்த்தை பேசி ஏழைப் பெண்ணைக் கெடுப்பதிலே அவர்
கைதேர்ந்தவராயிருக்க வேண்டும்! கள்ளங்கபடமறியாத தன்னிடம்
என்னவெல்லாம் சொல்லி ஏமாற்றினார்? பல்லவ சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்திலேயே தன்னை ஏற்றிவைத்து விடுகிறவர்போல் அல்லவா
பசப்பினார்! புருஷர்கள்தான் எவ்வளவு நயவஞ்சகர்கள்! அதிலும்
இராஜகுலத்தவர் எப்பேர்ப்பட்ட ஈவிரக்கமில்லாத கிராதகர்கள்!
வழி
பிரயாணத்தின்போது இந்த மாதிரி எண்ணங்கள் சிவகாமியின்
உள்ளத்தில் அடிக்கடி தோன்றி நரகவேதனையளித்தன. சில சமயம்
அவளுக்குத் தன்னுடைய மனோராஜ்யத்தில் ஆசையுடன் நிர்மாணித்து
வந்த இன்ப வாழ்க்கையாகிய கோட்டை இடிந்து தூளாகிவிட்டபடியால்,
இனிமேல் தன் வாழ்க்கை என்றென்றைக்கும் சோகமயமாகவே இருக்கும்
என்று தோன்றியது. மாரிக்காலத்தின் முடிவில் வானத்தில் சிதறி
ஓடிய மேகங்கள் சில மழைத்துளிகளை உதிர்த்துவிட்டுப் போகும் போது
தன்னுடைய கதிக்காக உலகமே கண்ணீர் வடிப்பதாக அவள் எண்ணினாள்.
இந்த ஒரு வாழ்க்கை மட்டுமல்ல; இதற்கு முன்னர் எத்தனை எத்தனையோ
ஜன்ம ஜன்மாந்திரங்களிலும் தன்னுடைய வாழ்க்கை இப்படியே
சோகமயமாயிருந்ததாகத் தோன்றியது.
ஆனால், இரவில்
எங்கேயாவது தங்கியிருந்து விட்டுக் காலையில் மறுபடியும்
பிரயாணம் தொடங்கும் போது ஜகஜ்ஜோதியாகச் சூரியன் உதயமாகி
மரக்கிளையில் தங்கியிருக்கும் நீர்த்துளிகளை வைரமணிகளாக ஒளி
வீசச் செய்யும் காட்சியைப் பார்த்துவிட்டுச் சிவகாமி சிறிது
உற்சாகம் கொள்வாள். மாமல்ல நரசிம்மர் பயங்கொள்ளி, தூர்த்தர்
என்று ஏற்பட்டதன் பொருட்டுத் தன் வாழ்க்கையை எதற்காகப்
பாழாக்கிக் கொள்ளவேண்டும் என்று கருதுவாள். உலகம் எவ்வளவோ
விஸ்தாரமானது; பல்லவ இராஜ்யத்துக்கு அப்பாலும் உலகம்
இருக்கத்தானே செய்கிறது? தன்னிடம் அற்புதமான நாட்டியக் கலையும்
இருக்கிறதல்லவா? அந்தக் கலையைப் பார்த்து அனுபவித்து ஆனந்தமடைய
நாகநந்தி சொல்வதுபோல், உலகம் காத்திருக்கிறதல்லவா? எதற்காகத்
தன் வாழ்க்கை பாழாகிவிட்டதாக எண்ணிக் கொள்ள வேண்டும்?...
இவ்விதம் எண்ணிச் சிவகாமி உற்சாகம் அடையப் பார்ப்பாள். தூர தூர
தேசங்களிலே, பெரிய பெரிய சபைகளிலே தான் நாட்டியம்
ஆடுவதுபோலவும், கணக்கற்ற ஜனங்கள் கண்டு களித்துத் தன்னைப்
பாராட்டி உபசரிப்பது போலவும் கற்பனை செய்துகொண்டு
களிப்புறுவாள்.
இத்தகைய
மனோபாவத்துடனேயே சிவகாமி தன் தந்தையைப் பெரிதும் வற்புறுத்தி
நாகநந்தி பிக்ஷுவின் யோசனையை ஒப்புக்கொள்ளச் செய்தாள். அதன்
பேரிலே தான் இந்தப் பிரயாணம் அவர்கள் தொடங்கினார்கள். ஆனால்,
என்னதான் மனத்தை வேறு விஷயங்களில் செலுத்திப் பார்த்தாலும்,
எவ்வளவுதான் பிரயத்தனம் செய்து உற்சாகம் கொள்ளப் பார்த்தாலும்,
சாத்தியமாயில்லை. அவ்வப்போது குமுறிக் கொண்டுவந்த வேதனை
உணர்ச்சியை மாற்ற முடியவில்லை. பொங்கியெழுந்த ஆத்திரத் தீயை
அணைக்க முடியவில்லை. முக்கியமாக, அந்தி மயங்கி நாற்புறமும்
இருள் சூழ்ந்து வந்த நேரங்களில் சிவகாமியினுடைய உள்ளத்தில்
வேதனையும் துயரமும் பெருகி அவளைச் சோகக் கடலில் மூழ்கச்
செய்தன.
அன்று சாயங்காலம்
அவ்வாறு சோகத்தில் ஆழ்ந்த உள்ளத்துடன் சிவகாமி கட்டை வண்டியில்
பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது, அவளுடைய நினைவை வேறு பக்கம்
திருப்பும்படியான சம்பவம் ஒன்று நேர்ந்தது. சாலையில்
அவர்களுக்கெதிரே ஒரு பெரும்படை வந்து கொண்டிருக்கிறதென்பதற்கு
அறிகுறிகள் தென்பட்டன. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை, பேரிகை,
எக்காளம், சமுத்திரகோஷம் முதலிய வாத்தியங்களில் பேரொலியும்,
அநேக குதிரைகளும் மனிதர்களும் நடந்துவரும் காலடிச் சத்தமும்,
போர் வீரர்களுடைய பேச்சுச் சத்தமும், போர் முழக்கங்களின்
கோஷமும் கலந்த பேரிரைச்சல் நிமிஷத்துக்கு நிமிஷம் நெருங்கி
வந்துகொண்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் சைனியத்தின்
முன்னணிப் படைவீரர்கள் அவர்களின் கண்ணுக்குத் தென்படலாயினர்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பத்தொன்பதாம் அத்தியாயம்
வந்தான் குண்டோதரன்
படைகளின்
முழக்கத்தைக் கேட்டதும் சற்றுப் பின்னால் வந்துகொண்டிருந்த
ஆயனரும் புத்த பிக்ஷுவும் வேகமாக நடந்து வண்டியை நெருங்கி
வந்தார்கள். முன்னணிப் படை கண்ணுக்குத் தெரிந்ததும், வண்டி
சாலையில் ஒதுக்குப் புறமாக நின்றது. சிவகாமியும் அத்தையும்
வண்டியிலிருந்து இறங்கி நின்றுகொண்டார்கள். படை வரும் முழக்கம்
அத்தையின் காதில் விழாதபடியால், மற்றவர்களைப் போல் அவளிடம்
பரபரப்பு இல்லை.
புத்த பிக்ஷு
சாலை ஓரத்து மரத்தின் பின்னால் தெரிந்தும் தெரியாததுமாக
நின்றுகொண்டார். அவர் இராஜ வம்சத்தினரைக் கண்ணாலும்
பார்ப்பதில்லை என்பது போன்ற விரதங்கள் கொண்டவர் என்பது
தெரியுமாதலால் அவர் மறைந்து நிற்பது பற்றி மற்றவர்களுக்கு
வியப்பு ஏற்படவில்லை. ஆனால், எல்லோருக்கும் மனம் ஒருவாறு
கலக்கமடைந்து தான் இருந்தது. வருகிறது என்ன படை? எங்கே
போகிறது? எதற்காக? தெற்கே இருந்து வருகிறபடியால் அது வாதாபிப்
படையல்ல என்பது நிச்சயம், பின்னே யாருடைய படை?
காஞ்சியிலிருந்து
கிளம்பி வருகிற வழியில் நம் பிரயாணிகள் பெரும்பாலும் யுத்தப்
போக்கைப்பற்றியும், யுத்த முடிவு என்ன ஆகும் என்பதைப்பற்றியும்
பேசிக்கொண்டு வந்தார்கள். யுத்தத்தை நினைவூட்டும் காட்சிகளே
எங்கெங்கும் தோன்றி வந்தன. சாலையில் ஜனநடமாட்டம்
அதிகமாயிருந்தது. எல்லோரும் தெற்கு நோக்கிப் போகிறவர்களாகவே
இருந்தார்கள். அநேகமாக அவர்கள் அனைவரும் காஞ்சி நகரிலிருந்தும்
காஞ்சிக்குச் சுற்றிலுமுள்ள கிராமங்களிலிருந்தும் யுத்த
நிலைமையை முன்னிட்டுப் புறப்பட்டவர்கள். அப்படிப் புறப்பட்டு
வந்தவர்களிலே ஸ்திரீகள், குழந்தைகள், வயோதிகர்கள், ஆண்டிப்
பரதேசிகள், கூனர், குருடர், காபாலிகர் முதலியோர் அதிகமாகக்
காணப்பட்டார்கள்.
முக்கியமாகக்
காபாலிகர்கள் வழியெல்லாம் பல்லவ இராஜ குலத்தைச் சபித்துக்
கொண்டு போனார்கள். காஞ்சி நகரில் கள்ளுக் கடைகளை மூடித் தங்களை
நகரைவிட்டுத் துரத்திய குமார சக்கரவர்த்தியின் பேரில் அவர்கள்
தங்களுடைய சாபங்களுக்குள்ளே மிகக் கடுமையான சாபங்களைப்
பொழிந்து கொண்டு போனார்கள். நராதமர்களுக்குள்ளே அதமனான மாமல்ல
நரசிம்மன் என்னும் சண்டாளனை ரணபத்திர காளிக்குப் பலி கொடுத்து,
தாங்கள் மதுபானம் செய்யும் மாட்டுக் கொம்பிலே அவனுடைய
இரத்தத்தை ஏந்திக் குடித்துத் தங்களுடைய பயங்கரமான மரண
தாகத்தைத் தணித்துக் கொள்ளப் போவதாக அவர்களில் பலர் உரத்த
சத்தம் போட்டுச் சபதம் செய்தார்கள். இன்னும் சிலர், மாமல்ல
நரசிம்மனையும் தளபதி பரஞ்சோதியையும் சேர்த்துக் கட்டி மயான
ருத்திரனுக்குப் பிரீதியாக உயிரோடு கொளுத்தி அவர்களுடைய
எலும்புச் சாம்பலைத் தங்கள் உடம்பெல்லாம் பூசிக்கொண்டு உஷ்ணம்
தணியப் போவதாகச் சபதம் செய்தார்கள். இந்தச் சாபங்கள், சபதங்கள்
எல்லாம் பிராகிருத பாஷையிலும் வேறு கலப்பு மொழிகளிலும்
செய்யப்பட்டதானது, அந்தக் காபாலிகர்கள் வடதேசத்திலிருந்தும்
மேற்குப் பிராந்தியத்திலிருந்தும் வந்தவர்கள் என்பதைத்
தெரியப்படுத்தியது.
சிவகாமிக்கு
ஆங்காங்கு வண்டியில் பிரயாணம் செய்தபடியாலும் அவளுடைய உள்ளம்
வேறு வேறு உலகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபடியாலும்,
அவளுடைய காதில் அந்தப் பயங்கர சாபங்கள் ஒன்றும் விழவில்லை.
ஆனால் ஆயனருடைய காதில் அவை எல்லாம் கர்ண கடூரமாக விழுந்தன.
அவற்றைக் கேட்கச் சகிக்காமல் அவர் காதைப் பொத்திக் கொண்டார்.
புத்த பிக்ஷுவின் செவிகளுக்கு மட்டும் அந்தச் சாபங்கள் எவ்வித
அருவருப்பையும் அளித்ததாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக,
அவருடைய முகத்தின் கடூரத்தை இன்னும் கடூரமாக்கிக் கொண்டு சில
சமயம் புன்னகை தோன்றியது.
பிக்ஷு ஒரு தடவை
காபாலிகர் கூட்டத்தில் புகுந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு,
வௌிவந்து ஆயனரை அணுகியதும், "ஆயனரே! எப்போதாவது நான் புத்த
சமயத்தைத் துறந்து சைவனாகும் பட்சத்தில், காபாலிகத்திலேயே
சேர்வேன்!" என்றார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆயனர்,
"சுவாமி! அத்தகைய எண்ணம் தங்களுக்கு ஏன் வரவேண்டும்? புத்த
சமயத்தின் மீது தங்களுக்கு என்ன கோபம்? யுத்தங்களினால்
ஏற்படும் சங்கடங்களையும் துன்பங்களையும் பார்க்கப் பார்க்க,
புத்த பகவான் காட்டிய அஹிம்சா மார்க்கமே உத்தமமான மார்க்கம்
என்றல்லவா எனக்கே இப்போது தோன்றி வருகிறது!" என்றார்.
"அதனாலேதான் நானும் சொல்லுகிறேன், நீங்கள் கால சம்ஹார
மூர்த்தியைக் கைவிட்டுப் புத்த பகவானை அடைவதாயிருந்தால்,
அதற்குப் பிரதியாகக் காபால ருத்திரமூர்த்திக்கும் ஓர் அடியார்
வேண்டுமல்லவா?" என்று நாகநந்தி கூறியது ஆயனருக்கு மேலும் மனக்
குழப்பத்தை உண்டாக்கிற்று.
சாலைகளில்
அபூர்வமாய்த் தெற்கேயிருந்து வரும் பிரயாணிகள் சிலர்
காணப்பட்டபோது அவர்களைக் காஞ்சிக்குப் பக்கமிருந்து
வருகிறவர்கள் நிறுத்தி "தெற்கே என்ன விசேஷம்?" என்று
கேட்பார்கள். அவர்கள் மறுமொழி சொல்லி விட்டுக் காஞ்சி
நிலைமையைப் பற்றி விசாரிப்பார்கள். இத்தகைய
பேச்சுக்களையெல்லாம் நாகநந்தி ஆங்காங்கு நின்று வெகு
சுவாரஸ்யமாகக் கவனிப்பார். இப்படி ஒரு தடவை கூட்டத்தில் நின்று
பேச்சு கேட்ட பிறகு, நாகநந்தி, ஆயனர் சிவகாமி இருவர் காதிலும்
விழும்படியாக, "நாம் ஒன்று நினைக்க யுத்ததேவன் வேறொன்று
நினைக்கிறான் போலல்லவா தோன்றுகிறது? உத்தேசித்தபடி நமது
பிரயாணம் நடைபெறாது போலிருக்கிறதே!" என்றார். "அப்படியா? புத்த
தேவர் என்ன கருணை செய்கிறார்? அவருடைய திருவுள்ளம் என்ன?"
என்றார் ஆயனர். "அத்தையைப் போல் அப்பாவுக்கும் காது மந்தமாகி
வருகிறது!" என்று கூறிச் சிவகாமி புன்னகை புரிந்தாள்.
அந்த நகைச்சுவையை
அனுபவித்த நாகநந்தி செவிடருடன் பேசுவது போன்ற உரத்த குரலில்,
ஆயனரே! நான் புத்த தேவரைச் சொல்லவில்லை: யுத்த தேவனைச்
சொல்கிறேன்" என்றார். "அப்படியா? யுத்த தேவன் என்ன சொல்கிறார்?
நம்மை வழி மறிக்கப்போகிறாரா?" "அப்படித்தான்!" என்று சொன்ன
நாகநந்தி மறுபடியும் மெல்லிய குரலில் கூறினார்; "பல்லவ
இராஜ்யத்துக்கு எதிர்பாராத ஆபத்துக்கள் எல்லாம் வந்து
கொண்டிருக்கின்றன. மேற்கே இருந்து கங்க நாட்டுச் சைனியம் படை
எடுத்து வந்து எல்லைப் புறத்தில் நிற்கிறதாம். தெற்கே பாண்டிய
மன்னர் பெரும்படை திரட்டிக் கொண்டு வருகிறாராம். பாண்டியர்
சைனியம் கிழக்குச் சோழ நாட்டு எல்லைக்கே வந்துவிட்டதாம்,
வடதிசையிலிருந்து வரும் வாதாபி சைனியத்தைப் பற்றித்தான்
உங்களுக்கே தெரியும். பல்லவ சைனியம் தப்பிப் பிழைப்பதற்கு
இன்னும் ஒரே திசைதான் பாக்கியிருக்கிறது...!" "எந்தத் திசையைச்
சொல்லுகிறீர்கள்?" என்று ஆயனர் கேட்டார். "கிழக்குத்
திசையைத்தான் சொல்லுகிறேன்: கிழக்கே சமுத்திர ராஜனிடம்
வேணுமானால் மகேந்திர பல்லவர் அடைக்கலம் புகலாம்."
"சமுத்திரத்திலே விழுந்து சாகலாம் என்கிறீர்களா? அடிகளே!
உங்களுடைய இருதயம் இப்படி ஈரப்பசையே இல்லாத பாலைவனமாக எப்போது
ஆயிற்று? என்று ஆயனர் கோபக்குரலில் கூறினார்.
"ஓ! மகா
ஸ்தபதியே! என்னை அவ்வளவு நீச குணமுள்ளவன் என்று ஏன் தாங்கள்
கருதவேண்டும்? பல்லவ குலம் கடல் தந்த குழந்தையிலிருந்து
தோன்றியதாயிற்றே? இப்போது அந்த வம்சத்துக்கு ஆபத்து
வந்திருக்கும் சமயத்தில் அந்தக் கடல் அடைக்கலம் தராதா என்று
சொன்னேன். கடலில் அடைக்கலம் என்றால் கடலில் முழுகிவிடுதல்
என்றுதான் பொருளா? கப்பல் ஏறி இலங்கைக்குப் போய்த்
தப்பலாமல்லவா? ஆனால், அதற்கும் ஓர் ஆபத்து இருக்கிறது.
இலங்கையில் இப்போதுள்ள அரசன் மகேந்திர பல்லவரின் அருமைச்
சிநேகிதன்தான். ஆனால், அவனை இலங்கைச் சிம்மாசனத்திலிருந்து
தள்ளிவிட ஒரு பெருங்கலகம் அங்கே நடக்கிறதாம். பாவம்!
பல்லவர்களுக்கு வந்திருக்கும் கஷ்ட காலம் அவர்களுடைய
சிநேகிதர்களைக் கூடப் பீடிக்கிறதே" என்று கூறிவிட்டுப் புத்த
பிக்ஷு ஒரு கோரச் சிரிப்புச் சிரித்தார்.
ஆயனர் அப்போதும்
விட்டுக்கொடுக்காமல், "எதற்காக மகேந்திர பல்லவர் இலங்கைக்கு ஓட
வேண்டும்? காஞ்சிக் கோட்டை இருக்கிறதல்லவா?" என்றார். "ஆமாம்;
காஞ்சிக் கோட்டை இருக்கிறது அதில் எட்டு மாதத்துக்கு முன்பு
பயங்கொள்ளிப் பல்லவன் ஒளிந்து கொண்டதுபோல் இப்போது அவனுடைய
தந்தையும் ஒளிந்து கொள்ளலாம். வாதாபிப் படை வழி தங்காமல்
வந்திருந்தால் கோட்டை ஒரு நொடியில் தகர்ந்து போயிருக்கும்.
இப்போது கோட்டை பலப்பட்டுவிட்டது. ஆகையால், சில காலம்
கோட்டைக்குள் பத்திரமாயிருக்கலாம். வாதாபிப் படை ஆறு மாதமாக வட
பெண்ணைக் கரையில் என்ன செய்து கொண்டிருந்தது என்றுதான்
தெரியவில்லை!" என்றார் புத்த பிக்ஷு.
இந்த வார்த்தைகள்
எல்லாம் சிவகாமியின் செவிகளில் புண்ணில் கோல் இடுவதுபோல்
விழுந்தன. 'கடவுளே! நாக்கிலே விஷமுள்ள இந்த நாகநந்தியின்
கர்வத்தை அடக்கமாட்டாயா?' என்று வேண்டிக் கொண்டாள். புத்த
பிக்ஷுவின் விஷயத்தில் சிவகாமியின் மனநிலை
சஞ்சலமுள்ளதாயிருந்தது. அவரிடம் காரணமில்லாத அருவருப்பும்
இன்னதென்று தெரியாத பயமும் அவள் மனத்தின் ஆழத்தில்
குடிகொண்டிருந்தன. மாமல்லரைப்பற்றி அவர் கூறிய செய்திகளைக்
கேட்டபின் அவரிடம் அவளுடைய அருவருப்பு அதிகமாயிற்று.
இன்னொரு பக்கம்
புத்த பிக்ஷுவின் விசாலமான உலக அனுபவமும், ஆழ்ந்த கலைஞானமும்
அவரிடம் அவளுக்குப் பக்தியையும் மரியாதையையும் உண்டு
பண்ணியிருந்தன. மேலும், தூர தூர தேசங்களெல்லாம் சென்று
அங்கங்கே மகாசபைகளில் நாட்டியம் ஆடி, 'பரத கண்டத்தின் ஒப்பற்ற
நடன ராணி' என்று பெயரும் புகழும் பெறுவதுபற்றிப் பிக்ஷு
அடிக்கடி கூறி அவளுடைய உள்ளத்தில் திக்விஜயப் பகற் கனவுகளை
உண்டு பண்ணியிருந்தார். அதெல்லாம் அவருடைய உதவியினாலேதான்
சாத்தியமாகக் கூடும் என்பதும் உலகமறியாத சாதுவான தன்
தந்தையினால் ஆகாது என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தன. எனவே
புத்த பிக்ஷுவிடம் தன் மனத்தில் குடிகொண்டிருந்த அருவருப்பைப்
போக்கிக்கொண்டு அவரிடம் சிநேகபாவத்தை வளர்த்துக் கொள்ள
வேண்டுமென்று அவள் முடிவு செய்திருந்தாள். ஆனாலும், புத்த
பிக்ஷு பல்லவ குலத்தைப் பற்றியும் மாமல்லரைப் பற்றியும்
அடிக்கடி கூறிய வசைமொழிகள் அவளுடைய சிநேக முயற்சிக்குக்
குறுக்கே நின்று அருவருப்பை வளர்த்து வந்தன.
வாதாபிப் படை
வடபெண்ணைக் கரையில் ஆறு மாதமாக இருந்ததுபற்றிப் புத்த பிக்ஷு
குறிப்பிட்டதும் சிவகாமி ஆத்திரமான குரலில், "சுவாமி!
வடபெண்ணைக்குப் போய் வாதாபிப் படைகளை நீங்களே கையைப் பிடித்து
அழைத்துக் கொண்டு வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே! பல்லவ
குலத்தின் மேல் உங்களுக்கு என்ன அவ்வளவு கோபம்?" என்று
கேட்டாள். பிக்ஷு சாந்தமான குரலில், "பல்லவ குலத்தின் மேல்
எனக்கு என்னத்திற்கு அம்மா கோபம்? அவர்களுடைய
கையாலாகாத்தனத்தினால் இப்போது நாம் நினைத்து வந்தபடி பிரயாணம்
செய்ய முடியாமலிருக்கிறதே என்றுதான் வருத்தமாயிருக்கிறது.
சிதம்பரத்துக்குப்போய் அங்கிருந்து கீழைச் சோழ நாட்டு
ஸ்தலங்களைத் தரிசனம் செய்து கொண்டு நாகப்பட்டினத்தில்
நடக்கப்போகும் மகா புத்த சங்கத்துக்கு உங்களை அழைத்துப்
போவதாகச் சொன்னேனல்லவா? இப்போது பாண்டிய சைனியம் கீழைச் சோழ
நாட்டில் படையெடுத்து வருவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட
சமயத்தில் நாம் சோழ நாட்டுக்குப் போவது உசிதமா என்றுதான்
யோசிக்கிறேன்" என்று கூறினார்.
"பின்னே, நாம்
என்னதான் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று
ஆயனர் கேட்டார். "கெடில நதிக்கரையில் ஒரு அமைதியான இடம்
இருக்கிறது. தங்களுடைய சிற்பவேலைகளை நடத்துவதற்கும் அங்கே
நிறைய வசதி உண்டு. குன்றுகளும் பாறைகளும் ஏராளமாய்
இருக்கின்றன. இந்த யுத்தக் குழப்பமெல்லாம் முடியும் வரையில்
நீங்கள் அங்கே இருக்கலாமென்று நினைக்கிறேன்" என்றார் பிக்ஷு.
பிக்ஷுவிடம் வரவரச் சந்தேகம் அதிகம் கொண்டுவந்த ஆயனர் "போகப்
போகப் பார்த்துக் கொள்ளலாம், சுவாமி!" என்றார்.
இப்படியெல்லாம்
அவர்களுக்குள் இரண்டு தினங்களாகச் சம்பாஷணை
நடந்திருந்தபடியால், எதிரே படைவரும் சத்தம் கேட்டதும் ஒருவேளை
படையெடுத்து வரும் பாண்டிய சைனியந்தானோ அது என்று ஆயனரும்
சிவகாமியும் ஐயுற்றார்கள். ஆனால் முன்னணியில் பறந்த கொடியில்
ரிஷபத்தைப் பார்த்ததும் பல்லவர் படை என்று எல்லாருக்கும்
தெரிந்துவிட்டது. படை வீரர்கள் எழுப்பிய கோஷங்கள் இதை
உறுதிப்படுத்தின. "வாதாபி அழிக!" "தலைக்காடு வாழ்க!"
"புலிகேசிக்கு நாசம்!" "துர்விநீதனுக்குத் துர்மரணம்!" என்னும்
கோஷங்களையும், "காஞ்சி வாழ்க!" "மகேந்திர பல்லவர் வாழ்க!"
"மாமல்லரின் வீரத் தோள் வெல்க!" என்னும் முழக்கங்களையும்
மாற்றி மாற்றி அந்த வீரர்கள் எழுப்பிக் கொண்டு கம்பீரமாக
நடந்தார்கள்.
இந்தக் குரல்
ஒலிகளுக்கு இடை இடையே பேரிகை முதலிய யுத்த வாத்தியங்கள்
எட்டுத் திக்கும் எதிரொலி எழும்படி ஆர்த்தன. மேற்படி கோஷங்கள்
எழுந்தபோது மரத்தின் பின்னால் மறைந்திருந்த நாகநந்தியடிகளின்
முகத்தை யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், படமெடுத்து
ஆடும் நாக சர்ப்பத்தின் தீக்ஷண்யமான கண்களிலிருந்து தீப்பொறி
கிளம்புவதுபோல் அவருடைய கண்களிலிருந்தும் பொறி கிளம்பிக்
கொண்டிருந்ததைக் கவனித்திருக்கலாம். படை சின்னப் படைதான்;
நாற்பது ஐம்பது குதிரைகளும் இரண்டாயிரம் காலாட்களும்
இருக்கலாம். எனவே, அரை நாழிகைக்குள் நமது பிரயாணிகள்
நின்றிருந்த இடத்தைத் தாண்டி படை சென்றுவிட்டது. சற்று முன்
கலகலப்பாக இருந்த சாலையில் நிசப்தம் குடிகொண்டது. பெரிய
நகரத்திலிருந்து திடீரென்று நிர்மானுஷ்யமான காட்டுக்குள்
வந்துவிட்டதுபோல் தோன்றியது.
படை வீரர்கள்
எழுப்பிய கோஷங்களில் "மாமல்லர் வாழ்க!" "மாமல்லரின் வீரத் தோள்
வெல்க!" என்னும் கோஷங்கள் சிவகாமியின் உள்ளத்தில்
பெருங்கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. மாமல்லர்
பயங்கொள்ளியாயிருந்தால் பல்லவ வீரர்கள் அவரைப்பற்றி இம்மாதிரி
வீர கோஷங்களைச் சொல்வார்களா? "ஆயனரே போகலாமா? அசோகபுரம்
இன்னும் ஒரு நாழிகை தூரம் இருக்கிறது!" என்று நாகநந்தியின்
குரல் கேட்டது. "ஆகா! போகலாமே! சிவகாமி! வண்டியில் ஏறிக்கொள்,
அத்தையையும் ஏறச்சொல்" என்றார் ஆயனர்.
சிவகாமி
வண்டியில் ஏறாமலே, "அப்பா! இந்தப் படை வீரர்கள் எங்கே
போகிறார்கள்?" என்று கேட்டாள். "எனக்குத் தெரியவில்லை, அம்மா!
பார்த்தால், யுத்தத்துக்குப் போகும் படையாகத் தோன்றுகிறது.
அந்த வீரர்கள் செய்த யுத்த கோஷங்களைக் கேட்டபோது எனக்குக்கூடக்
கல்லுளியைப் போட்டு விட்டுக் கத்தியை எடுத்துக்
கொள்ளவேண்டுமென்று தோன்றியது. எதற்காக இப்படிப் பயந்து
ஊரைவிட்டு ஓடுகிறோம் என்று வெட்கமாயிருக்கிறது" என்றார் ஆயனர்.
"ஆயனரே! இத்தகைய
சஞ்சலம் உமக்கு எப்போது வந்தது? சற்று முன்னால் அஹிம்சா
மூர்த்தியான புத்த பகவானிடம் உமது அபார பக்தியைத் தெரிவித்துக்
கொண்டீரே?" என்றார் புத்த பிக்ஷு. அந்தச் சமயத்தில் சாலையில்
படை மறைந்த திக்கிலிருந்து ஒரு தனிக்குதிரை வரும் சத்தம்
'டக்டக்' டக்டக்' என்று கேட்டது வர வர அது சமீபித்து வந்தது.
வருகிறது யார் என்று தெரிந்துகொள்வதில் அவர்கள் எல்லாருக்குமே
ஆவல் இருந்தபடியால் நின்ற இடத்திலேயே நின்றார்கள்.
குதிரை
அவர்களுடைய அருகில் வந்தது. குதிரையின் மேல் இருந்தது இன்னார்
என்று தெரிய வந்தபோது ஆயனருக்கும் சிவகாமிக்கும் உண்டான
வியப்புக்கு அளவேயில்லை. ஏனெனில், குதிரைமேல் இருந்தவன்,
அவர்களுடைய அரண்ய வீட்டிற்குப் பரஞ்சோதி வந்த தினத்தில்
அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலே மாயமாய் மறைந்த குண்டோதரன்தான்.
"குருவே! நான் என்ன தவறு செய்தேன்! என்னை இப்படி அநாதையாய்க்
கைவிட்டு விட்டுச் சொல்லாமல் புறப்பட்டு வந்து விட்டீர்களே!"
என்று அலறினான் குண்டோதரன்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபதாம் அத்தியாயம்
குண்டோதரன் கதை
குண்டோதரன்
குதிரையிலிருந்து குதித்து இறங்கி வந்து, சாலையில் நின்ற
ஆயனரின் பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். பின்னர்,
எழுந்து நின்று, "ஐயா! என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்.
தங்களுடைய திருவருளினால்தான் நான் உங்களை தேடிக்
கண்டுபிடித்தேன்" என்று சொன்னான். "ரொம்பவும் சந்தோஷம்,
குண்டோதரா! நீ தேடிக் கொண்டு வந்து சேர்ந்ததில் எனக்கு வெகு
சந்தோஷம். ஆனால் உன்னைக் கைவிட்டு விட்டு நாங்கள் வந்துவிட
வில்லையே? நீ அல்லவா திடீரென்று எங்களைக் கைவிட்டு விட்டு
மாயமாய் மறைந்து விட்டாய்?.. எங்கே அப்பா போயிருந்தாய்?" என்று
ஆயனர் கேட்க, குண்டோதரன், "குருவே! நான் என்ன செய்வேன்!
காஞ்சியிலிருந்து அன்றைக்கு ரதம் ஓட்டிக்கொண்டு கண்ணபிரான்
வந்தானல்லவா? அவன் ஒரு சமாசாரம் சொன்னான். என் பாட்டி எனக்குக்
கல்யாணம் பண்ணி வைப்பதற்காகப் பெண் பார்த்து வைத்திருக்கிறாள்
என்றும், உடனே வரச் சொன்னாள் என்றும் தெரிவித்தான். அப்புறம்
காரியம் மிஞ்சிவிடப் போகிறது என்று உடனே போய் பாட்டியிடம்
கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வருவதற்காகக் காஞ்சிக்கு
ஓடினேன். உங்களிடம் சொல்லிக் கொண்டு போகலாமென்று பார்த்தால்,
வீட்டில் உங்கள் இரண்டு பேரையும் காணவில்லை. ஒருவேளை தாமரைக்
குளக்கரையில் இருப்பீர்களோ என்று ஓடிப்போய்ப் பார்த்தால்,
அங்கேயும் உங்களைக் காணவில்லை. இந்தப் புத்த பிக்ஷு தான்
தாமரைக் குளக்கரையில் நின்று கொண்டிருந்தார்..' என்று சொல்லிக்
குண்டோதரன் நாகநந்தியடிகளை ஏறிட்டுப் பார்த்தான்.
"என்னைச்
சொல்கிறாயா, தம்பி? இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தில் உள்ள புத்த
பிக்ஷு நான் ஒருவன்தானா? வேறு யாரையாவது பார்த்திருப்பாய்!"
என்றார் நாகநந்தி அடிகள். "இல்லை, சுவாமி, இல்லை! தங்களைத்தான்
பார்த்தேன். கையிலே ஏழெட்டு ஓலைச் சுருள்களை வைத்துக்கொண்டு,
ஒரு ஓலையைப் படித்துக் கொண்டிருந்தீர்கள். நாகப்பாம்பு
சீறுவதைப்போல் சீறிக் கொண்டிருந்தீர்கள்.."
சிவகாமியின்
மனத்தில் அப்போது சுறுக்கென்றது. மரப் பொந்திலே அவள்
வைத்திருந்த மாமல்லரின் ஓலைகள் காணாமற்போனது அவளுக்கு நினைவு
வந்தது. அப்போது நாகநந்தி, "என்ன அப்பா உளறுகிறாய்? நானாவது
தாமரைக் குளக்கரையில் நின்று ஓலை படிக்கவாவது?" என்றார்.
ஆயனரும், "வேறு யாராவது இருக்கும் குண்டோதரா! அப்புறம் உன்
கதையைச் சொல்!" என்றார். "இல்லை, குருவே! இவரையேதான்
பார்த்தேன். இவருடைய முகத்தையும் இவர் சீறுவதையும் பார்த்ததும்
எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? ஆ! அதைச் சொல்லக்கூடாது
சொன்னால், பிக்ஷுவுக்குக் கோபம் வரும். கோபம் வந்து என்னைக்
கடித்தாலும் கடித்து விடுவார்!" என்றான்.
நாகநந்தியின்
கண்களில் தீப்பொறி பறந்தது. ஆயனரோ நிலைமை விரஸமாய்ப் போய்க்
கொண்டிருப்பதை உணர்ந்து, "பாருங்கள் சுவாமி! இப்பேர்ப்பட்ட
புத்திசாலி சிஷ்யனை வைத்துக் கொண்டு என்ன சிற்ப வேலையைச்
செய்வது? அதனால்தான் எட்டு மாதமாக நான் ஒன்றும்
செய்யவில்லை.... போகட்டும் குண்டோதரா! அப்புறம் உன் கதையைச்
சொல்லு! உன் பாட்டி பேசிவைத்த பெண்ணின் கதி என்ன?" என்றார்.
"குருவே! பாட்டியிடம் கண்டிப்பாய்ச் சொல்லி விட்டேன். 'பாட்டி,
பாட்டி! நம்முடைய மகேந்திர சக்கரவர்த்தியின் குமாரர் மாமல்லர்
எத்தனை எத்தனையோ ராஜாக்கள் பெண் கொடுப்பதாக வந்தும் இன்னும்
கலியாணம் பண்ணிக் கொள்ளாமல் பிரம்மச்சாரியாயிருக்கிறார். என்
குருநாதருடைய செல்வப் புதல்வி சிவகாமிக்கு இன்னும்
கலியாணமாகவில்லை. அவர்கள் எல்லாம் அப்படி இருக்கும்போது எனக்கு
மட்டும் கலியாணம் என்னத்திற்கு, பாட்டி? நீ வேணுமானால்
கலியாணம் பண்ணிக்கொள் நான் கிட்ட இருந்து நடத்துகிறேன்' என்று
சொன்னேன்...."
குண்டோதரன்
இவ்வாறு கூறியதும், எல்லாரும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள்.
சிவகாமிின் அத்தையும் கூடச் சிரித்துவிட்டு, "என்னத்திற்காகச்
சிரிக்கிறீர்கள்?" என்று சிவகாமியைக் கேட்டாள்.
"குண்டோதரனுக்குக் கலியாணமாம்!" என்றாள் சிவகாமி. ஆயனர், "சரி
தம்பி! நாங்கள் இங்கே கிளம்பி வந்தது உனக்கு எப்படித்
தெரிந்தது?" என்று கேட்டார். குண்டோதரன் சொல்கிறான்; "குருவே!
பாட்டியிடம் அவசரமாகச் சொல்லிவிட்டு ஓட்டம் ஓட்டமாய் நமது
வீட்டுக்கு வந்து பார்த்தால், வீடு பூட்டிக் கிடந்தது!
நம்முடைய குருநாதரே நம்மைக் கைவிட்டு விட்டார். இனிமேல்
கடவுள்தான் நமக்குத் துணை என்று தீர்மானித்து அப்படியே
மரத்தடியில் படுத்துத் தூங்கிப் போய்விட்டேன். "அப்போது
பாருங்கள்! கடவுளே பார்த்து அனுப்பியதுபோல் நமது குமார
சக்கரவர்த்தியும் புதிய தளபதி பரஞ்சோதியாரும் அங்கே வந்து
சேர்ந்தார்கள்!"
"யார் வந்தது!"
என்று ஆயனர், சிவகாமி இரண்டு பேரும் ஏக காலத்தில் கேட்டார்கள்.
"மாமல்லரும் தளபதி பரஞ்சோதியாரும் வந்தார்கள். குதிரை மேல்
வந்தார்கள்! ஆகா! குதிரை என்றால், அதுவல்லவா குதிரை..."
"அப்புறம்!" என்றார் ஆயனர். "அவர்களுக்குப் பின்னால் இன்னும்
பல குதிரை வீரர்கள் வந்தார்கள். கண்ணபிரான் ரதம் ஓட்டிக்
கொண்டு வந்தான். "சரி, அப்புறம் என்ன நடந்தது?" என்றார் ஆயனர்.
மாமல்லர் வந்தார்
என்று கேட்டதும் சிவகாமிக்குத் தலை சுற்றியது, தேகமெல்லாம்
நடுங்கியது. என்னவெல்லாமோ கேட்க வேண்டுமென்று உள்ளம்
துடித்தது, உதடுகளும் துடித்தன. எனினும், "யார் வந்தது?" என்று
கேட்டதற்குப் பிறகு அவளுடைய வாயிலிருந்து வார்த்தை எதுவும்
வரவில்லை. ஆனால், விஷயத்தைச் சொல்லாமல் குண்டோதரன்
என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்ததில் அவளுக்குக் கோபமாய்
வந்தது.
குண்டோதரன்
சொல்கிறான்; "குருவே! வீடு பூட்டிக் கிடந்ததைக் கண்டதும்
எனக்கு எவ்வளவு கோபம் வந்ததோ அதைவிட மூன்று மடங்கு கோபம் நமது
குமார சக்கரவர்த்திக்கு வந்துவிட்டது. மாமல்லர் குதிரையைத்
திருப்பிவிட்டுக் கொண்டு போன வேகத்தைப் பார்க்க வேண்டுமே? அடே
அப்பா! நமது குமார சக்கரவர்த்திக்கு இவ்வளவு மூக்குக்கு மேல்
கோபம் வரும் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. குமார
சக்கரவர்த்தியின் குதிரை திரும்பியதும், மற்றக் குதிரைகள் சட
சடவென்று திரும்புவதற்குப் பட்டபாட்டைப் பார்க்க வேண்டுமே...
என்ன அவசரம்? என்ன தடபுடல்?.. நான் கண்ணைக் கசக்கிக் கொண்டு
எழுந்து மரத்தின் பின்னாலிருந்து வௌியே வருவதற்குள்ளே அவ்வளவு
குதிரைகளும் காற்றாய்ப் பறந்து மறைந்து போய் விட்டன..."
சிவகாமியின்
உள்ளத்தில் அப்போது மகிழ்ச்சி, பயம், கோபம், கவலை முதலிய
உணர்ச்சிகள் ததும்பி, புயற்காற்று அடிக்கும்போது சமுத்திரம்
கலங்குவது போல் கலங்கச் செய்து கொண்டிருந்தன. மாமல்லர் தன்னைத்
தேடி வந்தார் என்பதில் மகிழ்ச்சி; அவருக்கு வந்த கோபத்தைக்
கேட்டதில் பயம்; அவர் வருவதற்கு முன்னால் கிளம்பும்படி செய்த
நாகநந்தியின் மேல் கோபம்; செய்த தவறை எப்படித் திருத்துவது
என்பது பற்றிக் கவலை இப்படிப்பட்ட பலவகை உணர்ச்சிகளுக்கிடையே
ஒரே ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல்
துடிதுடித்தது. ஒருவாறு நெஞ்சை உறுதிப்படுத்திக்கொண்டு,
"அப்பா! குண்டோதரன் சொல்வது எனக்கு நிஜமாகத் தோன்றவில்லை.
குமார சக்கரவர்த்தியாவது, நம் வீட்டுக்கு வரவாவது? அவர்தான்
யுத்தத்துக்குப் பயந்துகொண்டு கோட்டையில் ஒளிந்து
கொண்டிருந்தாரே!" என்றாள். ஆயனர் அதற்கு மறுமொழி சொல்லத்
தெரியாதவராய் குண்டோதரனைப் பார்க்க, அவன், "குருவே!
இப்படிப்பட்ட நாராசமான வார்த்தைகள் சிவகாமி அம்மையின்
வாயிலிருந்துதானா உண்மையில் வௌிவந்தன? வீராதி வீரரான
மகாமல்லவராவது, யுத்தத்துக்குப் பயந்து கோட்டையில் ஒளிந்து
கொண்டிருக்கவாவது? இப்பேர்ப்பட்ட கொடிய அவதூறை எந்தப் பாவி
சிவகாமி அம்மையின் காதில் போட்டது? சக்கரவர்த்தியின்
கட்டளைக்காக அல்லவா மாமல்லர் இத்தனை நாளும் கோட்டைக்குள்ளே
இருந்தார். சக்கரவர்த்தியின் ஆக்ஞை வந்தவுடனே மாமல்லர் நேரே
போர்க்களத்துக்கல்லவா புறப்பட்டுப் போகிறார்!"
"போர்க்களத்துக்கா? எந்தப் போர்க்களத்துக்கு?" என்று ஆயனர்
கேட்க, "தெரியாதா, குருவே? நாடு நகரமெல்லாம் அறிந்த
விஷயமாயிற்றே? மகேந்திர சக்கரவர்த்தி வடபெண்ணைக் கரையில்
முடக்கப்பட்டிருக்கும் தைரியத்தினால், கங்க நாட்டுத்
துர்விநீதன் காஞ்சியின் மேல் படையெடுத்து வரும் செய்தி
தங்களுக்குத் தெரியாதா? அவனையும் அவனுடைய படையையும்
எதிர்த்துத் துவம்ஸம் செய்வதற்குத்தான் மாமல்லர்
திருக்கழுக்குன்றத்திலிருந்து நமது தற்காப்புப் படையுடன்
போயிருக்கிறார். சற்று முன்னால், இந்தச் சாலையில் ஒரு படை
போயிற்றே, நீங்கள் பார்க்கவில்லையா? அந்தப் படை தென் பெண்ணைக்
கரையிலேயே காவலுக்கு இருந்த படை; போர்க்களத்திற்குப் போகும்
மாமல்லருடனே சேர்ந்து கொள்ளத்தான் போகிறது. இதையெல்லாம்
நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா?" என்றான் குண்டோதரன்.
வெகு
சாதுவாகவும், பேசவே தெரியாத மந்தனாகவும் இத்தனை நாளும் தோன்றிய
குண்டோதரன் இப்போது இவ்வளவு வாசாலகனாய் மாறியிருந்தது
ஆயனருக்கு ஒரே ஆச்சரியத்தை அளித்தது. அவனிடம் இன்னும் ஏதோ அவர்
கேட்கப் போனார். அந்தச் சமயம், நாகநந்தி கலக்கமடைந்த குரலில்,
"ஆயனரே! நன்றாய் இருட்டி விட்டதே? மிச்ச வழியையும் கடந்து இரவு
தங்குவதற்கு அசோகபுரிக்குப் போய்விட வேண்டாமா! குண்டோதரன்
நம்முடன் வருகிறானே, எல்லா விவரங்களும் சாவகாசமாய் அவனிடம்
கேட்டுக் கொண்டால் போகிறது!" என்றார்.
உண்மையிலேயே
அப்போது நன்றாய் இருட்டிவிட்டிருந்தபடியால், நாகநந்தியின்
முகத்தை யாரும் நன்றாய்ப் பார்க்க முடியவில்லை. பார்க்க
முடிந்திருந்தால், அந்தக் கோரமான முகம் அப்போது இன்னும்
எவ்வளவு சர்வ கோரமாயிருக்கிறதென்று அறிந்து பயந்து
போயிருப்பார்கள். ஆயனர் சிவகாமியைப் பார்த்து "குழந்தாய்!
அடிகள் கூறுவது உண்மைதான்; வண்டியில் ஏறிக்கொள்! குண்டோதரனிடம்
எல்லாம் பிறகு விவரமாய்க் கேட்கலாம்" என்றார். சிவகாமியின்
உள்ளத்தில் குண்டோதரனைக் கேட்பதற்கு எத்தனையோ கேள்விகள்
தோன்றிக் கொண்டிருந்தன. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவள் ஒரு
கேள்வி கேட்க விரும்பினாள். அதாவது, குண்டோதரனுக்குக் குதிரை
எப்படிக் கிடைத்தது? ஒருவேளை குமார சக்கரவர்த்தியின் கோபம்
தணிந்து தங்களைப் போய்த் திருப்பி அழைத்து வருவதற்காக அவர்தான்
குண்டோதரனுக்குக் குதிரை கொடுத்து அனுப்பியிருக்கிறாரோ என்று
அவள் மனத்திற்குள்ளே ஒரு சபல நினைவு தோன்றியது. எனவே "அப்பா!
அத்தை வண்டியில் ஏறிக் கொள்ளட்டும் நான் சற்று நேரம் உங்களுடன்
நடந்து வருகிறேன்" என்றாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப