Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >  ஒருங்கிணைப்பு
 


Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

  ஒருங்கிணைப்பு
3 October 2005

"...சர்வதேச உலகம் தூங்கவில்லை. ஆனால் தூங்குவது போல நடிக்கின்றது. அதற்கு தூபம் போடுவதற்காக சிறிலங்காவின் அரசுகள் தமது விசமப் பரப்புரைகளை மேற்கோண்டு வருகின்றன. தூங்காமல் நடிப்பவர்களின் தூக்கம் கெடாமல் இருப்பதற்காக சிறிலங்கா அரச கோடிக்கணக்கான ரூபாய்களை தனது விசமப் பரப்புரைகளுக்காக செலவழித்து வருகின்றது...சிறிலங்கா அரசுகளின் விசமப் பரப்புரைகளை முறியடிப்பதற்கு புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் செய்ய வேண்டிய முதல் செயல்பாடு தம்மிடையே உள்ள ஒருங்கிணைப்பை இன்னும் வலிமையாக்குவதேயாகும்... "


தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலத்திலிருந்து சிறிலங்கா அரசுகள் ஒரு விடயத்தில் மிகுந்த சிரத்தை எடுத்து வந்துள்ளதை நாம் காணலாம். போர்க்காலமாக இருந்தாலும், அல்லது சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கான காலமாக இருந்தாலும் ஆட்சியில் இருந்த, இருக்கின்ற சிறிலங்கா அரசுகள் இந்த ஒரு விடயத்தில் தொடர்ந்து அக்கறை காட்டி செயற்பட்டு வந்திருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, நன்கு திட்டமிடப்பட்ட வகையில், உலகளாவிய ரீதியில் விசமப் பரப்புரையை, சிறிலங்காவின் சகல சிங்கள அரசுகளும் புரிந்து வந்ததை, வருவதைத்தான் நாம் இங்கே குறிப்பிடுகின்றோம். சிறிலங்கா அரசுகளின் இவ்வகையான விசமப் பரப்புரைகள் அண்மைக் காலத்தில் மிகவும் முடுக்கி விடப்பட்டுள்ளதோடு கோடிக்கணக்கான ரூபாய்களும் இத்தகைய விசமப் பரப்புரைகளுக்கான ஒதுக்கப்பட்டுள்ளதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.

‘உள்நாட்டு விடயம்’ என்றும் ‘பிறநாடுகள் தமது உள்நாட்டு விடயங்களில் தலையிடக் கூடாது’ என்றும் ‘இது இனப்பிரச்சனை அல்ல வெறும் பயங்கரவாதப் பிரச்சனைதான்; என்றும் சளைக்காமல் நாக்கூசாமல் கூறிவந்த சிறிலங்கா அரசுகள் இன்று சர்வதேச ரீதியில், கோடிக்காணக்கான ரூபாய்களை செலவழித்து தனது விசமப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன? அதற்கான அவசியம் என்ன? என்பவை குறித்து இன்றைய தினம் தர்க்கிக்க வேண்டியது முக்கியமாதாகும் என்று நாம் கருதுகின்றோம்.

சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசுகள் தமிழினத்தின்மீது தொடர்ச்சியாக அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மேற்கொண்ட அடக்கு முறைகள் குறித்தோ, ஒடுக்குமுறைகள் குறித்தோ தமிழினப் படுகொலைகள் குறித்தோ இக்கலவரம் என்ற பெயரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்புக் குறித்தோ இன்றைய தினம் நாம் மீண்டும் விளக்கவோ தர்க்கிக்கவோ போவதில்லை! இவை யாவும் எம்மவர்கள் அறிந்து தெரிந்து அனுபவித்து உணர்ந்த விடயங்களே!!

ஆகவே சிறிலங்கா அரசுகளின் விசமப் பரப்புரைகள் குறித்து ஆழமாகவும் தெளிவாகவும் வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதானது, ஒரு விரிவான பார்வையைத் தரக்கூடும் என்று நாம் நம்புகின்றோம்.

சிறிலங்கா அரசியல் யாப்பு முதற்கொண்டு அதன் நீதித்துறை ஜனநாயக மரபுகள் சிங்கள அரசியல் கட்சிகள் அவற்றின் தலைமைகள் அவற்றின் அரசியில் மற்றம் ராணுவக் கருத்துருவாக்கம், செயற்பாடுகள் யாவுமே சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் எழுச்சி மற்றும் நலன் குறித்தே செயல்படுபவவை ஆகும்.

இவை தமிழ்த் தேசிய இனத்திற்கு மட்டும் எதிரானவை அல்ல! தற்போதைய ஜனநாயக அரசயில் வாழ்வினை மேற்கொண்டுள்ள ஒட்டு மொத்த உலக நாடுகளுக்கும் எதிரான கருத்துருவாக்கத்தையும் செயலுருவாக்கத்தையும் கொண்டவையாகும். அதாவது ஜனநாயக மரபின் சகல பலவீனங்களையும் உபயோகப்படுத்திக் கொண்டு ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் அராஜகம் புரிகின்ற ஒரு பேரினவாத சர்வாதிகார ஆட்சி முறையே சிறிலங்காவின் ஆட்சி முறையாகும். இதற்கு அன்றிலிருந்து இன்றுவரை எந்த சிங்கள அரசுகளும் விதிவிலக்கல்ல.

பல உலக நாடுகள் வெட்கித் தலைகுனிய கூடிய விடயங்கள் சிறிலங்காவின் அரசியல் யாப்பிலேயே உள்ளன. எல்லோரும் சமத்துவமானவர்கள் என்ற உலக கோட்பாட்டை உடைத்தெறிந்து நிற்கின்றது. சிறிலங்காவின் அரசியல் யாப்பு அது உண்மையில் ஓர் அடிமைச் சாசனம்.!!

சமத்துவம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கும், சிறிலங்கா அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசத்தை ஒர் எளிய உதாரணத்தின் ஊடே சுட்டிக்காட்ட விழைகின்றோம்.!

சிறிலங்கா அரசியல் யாப்பு ‘மதம்’ குறித்து தனது தீர்ப்பை இவ்வாறு கூறுகின்றது. பௌத்த மதத்திற்கு இலங்கையில் அதி உயர் இடம் அளிக்கப்படுகின்றது. ஆகவே இலங்கையில் அதி உயர் இடத்தை வகிக்கின்ற மதம் பௌத்த மதமாகும். அதற்கு சமமாக வேறு எந்த ஒரு மதமும் இல்லை. என்பதே சிறிலங்காவின் அரசியல் சட்டமாகும். அதாவது ‘எம்மதமும் சம்மதமே’ என்பதோ அல்லது ‘எல்லோரும் சமமே’ என்பதோ சிறிலங்காவின் யாப்பில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இதேவேளையில் ‘இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை’ குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கிய வரைவில் குறிப்பிட்டுள்ள ஒரு சரத்தை ஒப்பீட்டளவில் தர்க்கிக்க விரும்புகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் அளித்துள்ள அந்த வரைவின் ஐந்தாவது சரத்து கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது :-

“வடக்கு கிழக்கு பகுதிகளில் எந்த ஒரு மதத்திற்கும் விசேட இடம் வழங்கப்பட மாட்டாது.”

அதாவது தமிழீழ பிரதேசத்தில் எல்லா மதங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும் என்பதையும், எந்த மதத்தை யார் பின்பற்றினாலும் எல்லோரும் சமமானவர்கள் என்பதையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்குரிய ஆலோசனை வரைவு உறுதியளிக்கின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் ஏதாவது ஒரு மதத்தின் மேலாதிக்கத்திற்காகப் போராடியவர்கள் அல்லர்! ஏதாவது ஒரு சாதிக்காகவோ, ஏதாவது ஒரு வர்க்கப் பிரிவின் மேலாண்மைக்காகப் போராடியவர்கள் ஒட்டு மொத்த தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதற்காகத் தமது வாழ்வையே அர்ப்பணித்தவர்கள்!

மிகக் கடினம் வாய்ந்ததும் தியாகம் நிறைந்ததுமான தமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமது தற்காலிக வெற்றிக்காக தமது உயரிய கொள்கைகளை பலியிடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை!

 அதற்கு பதிலாக தம்முடைய உயரிய உயிர்களைத்தான் தாரை வார்த்தார்கள்!! ஒப்பிட முடியாத ஒரு தலைமைத்துவத்தின் உறுதியான கொள்கைப் பிடிப்பினூடாக வழி நடத்தலின் ஊடாக ஒரு தெளிவான சமத்துவ உலகை நாம் காண்கின்றோம்.!!!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சமத்துவக் கொள்கைக்கும், சிறிலங்கா அரசுகளின் சிங்கள - பௌத்த மேலாதிக்கக் கொள்கைக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக ஓர் எளிமையான உதாரணத்தை மட்டும் இன்றைய தினம் சுட்டிக் காட்டினோம். ‘ஒரு பானை சோற்றிற்கு ஒருசோறு பதம்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப நாம் வேறு உதாரணங்களை இப்போது சுட்டிக்காட்ட முயலவில்லை!

‘இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை’ குறித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆலோசனை வரைவுத் திட்டத்தை சிங்கள அரசு எவ்வாறு புறக்கணித்தது என்பதையும் நாம் எல்லோரும் அறிவோம்.! அதற்கும் பின்னர் ஆழிப்பேரலை தந்திட்ட அழிவினைச் சந்திப்பதற்காக நிவாரணத்திட்டங்களைக் கொண்ட பொதுக்கட்டமைப்பு திட்டத்தை சிறிலங்காவின் நீதித்துறை எவ்வாறு தடுத்து வைத்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

நாம் மட்டுமல்ல அன்பர்களே! சர்வ உலகமும் அறியும்! உள்ளதைச் சொல்லப்போனால் எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எம்மையும் விட இந்த சர்வதேச உலக நன்கு அறியும்.

சர்வதேச உலகம் தூங்கவில்லை. ஆனால் தூங்குவது போல நடிக்கின்றது. அதற்கு தூபம் போடுவதற்காக சிறிலங்காவின் அரசுகள் தமது விசமப் பரப்புரைகளை மேற்கோண்டு வருகின்றன. தூங்காமல் நடிப்பவர்களின் தூக்கம் கெடாமல் இருப்பதற்காக சிறிலங்கா அரச கோடிக்கணக்கான ரூபாய்களை தனது விசமப் பரப்புரைகளுக்காக செலவழித்து வருகின்றது.

இந்த பின் பலத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் தமிழீழ மக்களின் குறிப்பபாக புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் குறித்தும் சில கருத்துக்களையும், தர்க்கங்களையும் முன் வைக்க விழைகின்றோம்.

ஒரு விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஒரு பேரினவாத அரசு பிரயோகிக்க கூடிய வழிகள் பலவாகும். விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஓர் இனத்தின் ஒற்றுமையை குலைப்பதும் விடுதலை குறித்த கருத்துருவாக்கத்தை சிதைப்பதும் விடுதலைப் போராட்டம் குறித்துப் பல ஐயப்பாடுகளைக் கிளப்பி போராட்டத்தின் வீரியத்தை மழுங்கடிக்க முனைவதும் இவ்வழிகளின் சிலவாகும்.

இராணுவ வன்முறையால் எதிர் கொள்ள முடியாமல் இருப்பதை அரசியல் வன்முறைகள் மூலம் மேற்கொள்வதற்கு பேரினவாத சக்திகள் முயன்று வருகின்றன. அதற்காகப் பலவிதமான விசமப் பரப்புரைகளை மேற்கொள்ளும் பொருட்டு அதே இனத்தைச் சேர்ந்தவர்களை விலைக்கு வாங்கும் வேலைகளையும் பேரினவாத சக்திகள் செய்கின்றன.

குறிப்பாகப் புலம் பெயர்ந்து வாழுகின்ற இனங்களுக்கு தத்தமது தாய் நாட்டின் விடுதலைப் போராட்டம் குறித்து சஞ்சலத்தை ஏற்படுத்த முனைவது இவ் விசமப் பரப்புரைகளின் நோக்கங்களில் முக்கியமான ஒன்றாகும்.!

இன்று உலகெல்லாம் புலம் பெயர்ந்து வாழுகின்ற யூத இன மக்கள் தம்தமக்கிடையே வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும் தமது நாடான ‘இஸ்ரேல்’ என்று வரும்போது கருத்தொருமித்து ஒருங்கிணைவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த வகையில் யூத மக்களின் கருத்துருவாக்கம் ஒன்றினை நாம் இந்த வேளையில் தர்க்கிப்பதானது தமிழ் மக்களின் ஒருங்கிணைப்பின் வலிமை குறித்தும் அதன் அவசியம் குறித்தும் ஒரு தெளிவான பார்வையை தரக் கூடும்.

ஆவுஸ்திரேலியா-இஸ்ரேல் மற்றும் யூத விவகார ஆலோசனைச் சபையின் நிறைவேற்று இயக்குநராக இருக்கின்ற திரு கொலின் ரூபன்ஸ்டெயின் அவர்கள் அண்மையில் வலியுறுத்தியிருந்த ஒரு கருத்துருவாக்கம் எமது தர்க்கத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

பாலஸ்தீன அதிபர் அபாஸ் செய்ய முனைந்துள்ள ஒரு காரியத்தை கொலின் ரூபன்ஸ்டெய்ன் பாராட்டுகின்றார். அதை இவ்வாறு கொலின் கூறுகின்றார் -

“Abbas has said the right things, promising to promote. ‘One authority and one gun’

அதாவது அவுஸ்திரேலியா-இஸ்ரேல் மற்றும் யூத விவகார ஆலோசனைச் சபையின் நிறைவேற்று இயக்குநராக விளங்குகின்ற யூதரான திரு கொலின் அவர்கள் பாலஸ்தீன அதிபர் திரு அபாஸை பாராட்டுகின்ற அளவிற்கு அபாஸ் செய்ய முனைகின்ற காரியம் என்ன பாலஸ்தீன நாட்டோடு இஸ்ரேல் சரியான முறையில் சமாதானப் பேச்சு வார்த்தைகளை நடத்தவேண்டும் என்றால் பாலஸ்தீன நாடு ஒரே அதிகாரத்தின் கீழ் ஒரே துப்பாக்கியின் கீழ் இயங்க வேண்டும் என்பதேயாகும்.

அதனை அபாஸ் செய்ய முடியாவிட்டால் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை சரியான விதத்தில் நடாத்த முடியாது என்பதும் கொலினின் வாதமுமாகும். அதாவது பல்வேறு ஆயுதக்குழுக்கள் பாலஸ்தீனத்தில் இருந்தால் முறையான சமாதானப்பேச்சு உருவாக முடியாது என்று இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றது.

இதே தர்க்கம் தமிழீழத்திற்கும், சிறிலங்காவிற்கும் சரியாகவே பொருந்தும்.

ஆயினும் இங்கே ஒரு முக்கியமான விடயத்தை வித்தியாசமான விடயத்தை நாம் கவனிக்கின்றோம். தமிழீழத்தை பொறுத்த வரையில் அங்கே தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் அதன் சமூக விரோதச் செயல்களுக்கும் ஆதரவாக இருப்பது சிறிலங்கா அரசேயாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் ஏற்றுக்கொண்டவாறு தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை சிறிலங்கா களைந்திருக்க வேண்டும்.

மாறாக இந்த ஆயுதக் குழுக்களுக்கு மேலும் ஆயுதங்களை வழங்கி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழப் பகுதிகளிலும் சிறிலங்காவின தலைநகர்ப் பகுதிகளிலும் இவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதற்குச் சிறிலங்கா அரசே துணை போகின்றது.

இந்த தமிழ்க் குழுக்களின் ஆயுதங்களை ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டவாறு களையும் படி தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் வேண்டுகோள்களைப் விடுத்து வருகின்றார்கள். சிறிலங்கா அரNசு அல்லது சம்பந்தப்பட்ட உலக நாடுகளோ இவற்றைக் கண்டு கொள்வதாக இல்லை.

ஆனால் நாம் முன்னர் கூறியவாறு சிறிலங்கா அரசின் விசமப் பரப்புரை தனது அராஜகச் செயல்களைத் தரித்துக் கூறுவதோடு மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது வீண்பழியை போடுவதிலேயே முனைப்பாக உள்ளது. அத்துடன் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் ஒருங்கிணைப்பைக் குலைக்கும் நோக்கில் முழு முனைப்புடன் தனது விசமப் பரப்புரைகளை முடுக்கியும் வருகின்றது.

அதனால்தான் கடந்த ஆண்டு தனது மாவீரர் தினப்பேருரையின் போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உலக நாடுகளுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். எமது இந்த இக்கட்டான நிலையை தமிழரின் இன்பபிரச்சனையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையில் சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம். என்று தேசியத் தலைவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆகவே சமாதானப் பேச்சு வார்த்தைக் காலத்தில் சிறிலங்கா அரசு முனைப்பாக தொடர்கின்ற அதன் விசமப் பரப்புரையானது எவரை யெல்லாம் குறி வைக்கின்றது என்பதைப் பார்க்கின்றோம்.

ஒரே சட்டமும், ஒரே நியாயமும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான முறையில் வழங்கப்படுவதைப் பார்த்தோம். எது எப்படியிருப்பினும் யூத மக்கள் தனது இஸ்ரேல் நாட்டு நலனுக்காக ஒருங்கிணைந்து இருப்பதையும் கண்டோம்.

சிறிலங்கா அரசுகளின் விசமப் பரப்புரைகளை முறியடிப்பதற்கு புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் செய்ய வேண்டிய முதல் செயல்பாடு தம்மிடையே உள்ள ஒருங்கிணைப்பை இன்னும் வலிமையாக்குவதேயாகும். இந்த ஒருங்கிணைப்பு பல அநீதிகளை உடைக்க வல்லதாகும். நியாயத்திற்கு வலுச்சேர்க்க கூடியதாகும். ஒட்டு மொத்த தமிழீழத் தேசிய இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தை வழி நடத்துகின்ற அந்தத் தேசியத் தலைமையின் கரங்களை பலப்படுத்தக் கூடியதாகும். இன்றைய கால கட்டத்தில் இதுவே எமது முக்கிய கடமையுமாகும்.!

 

 
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home