Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home  > Tamils - a Trans State Nation  - தமிழ் அகம்: ஓர் உணர்வா, அல்லது இடமா? > The Tamil Heritage > Tamil Language & Literature > Culture of the Tamils Sathyam Art Gallery > Spirituality & the Tamil Nation நாலாயிர திவ்விய பிரபந்தம் - பொருள் அடக்கம் > முன்னுரை - முனைவர் கண்ணன் மானிடம் தழுவிய ஆழ்வார்கள் - ம. தனபாலசிங்கம் > பாடல்கள் 1- 473 பாடல்கள் 474 - 503  > பாடல்கள் 504 - 646  > பாடல்கள் 647 - 947 > பாடல்கள் 948-1447 >பாடல்கள் 1448 - 2031 > பாடல்கள் 2032- 2790 > பாடல்கள் 2791-3342 > பாடல்கள் 3343-4000

 

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
பாடல்கள் 948 - 1447

paniniru AzvArkaL aruLiya
nAlAyirat tivviyap pirapantam
pAcurangkaL  948 - 1447


This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding. ©Project Madurai 2002 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி



முதற் பத்து
948
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். (2) 1.1.1

949
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.2

950
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்
தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.3

951
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.4

952
கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.5

953
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்,
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,
வம்புலாஞ்fசோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி,
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.6

954
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
இன்னதோர்த்தன்மையென்றுணரீர்,
கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
கண்டவாதொண்டரைப்பாடும்,
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
சூழ்புனற்குடந்தையேதொழுமின்,
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்
நாராயணாவென்னும்நாமம். 1.1.7

955
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.8

956
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.9

957
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார்வாள்ff கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்fமாலை
இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.10

958
வாலிமாவலத்தொருவனதுடல்கெட
வரிசிலைவளைவித்து,அன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற
இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகிலதிர்தர அருவரை
அகடுறமுகடேறி,
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப்
பிரிதிசென்றடைநெஞ்சே. (2) 1.2.1

959
கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய
அருவரையணைகட்டி,
இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்
இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன
வேழங்கள்துயர்க்கூர,
பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதரு
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.2

960
துடிகொள்_ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற்
றிளங்கொடிதிறத்து, ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து,
கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
மணியறைமிசைவேழம்,
பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.3

961
மறங்கொளாளரியுருவெனவெருவர
ஒருவனதகலமார்வம்
திறந்து,வானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திடக்
கிடந்தருகெரிவீசும்,
பிறங்குமாமணியருவியொடிழிதரு
பிரிதிசென்றடைனெஞ்சே. 1.2.4

962
கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்
அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய்மேகலையலர்மகளவளொடும்
அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை
அளைமிகுதேன்fதோய்த்து,
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.5

963
பணங்களாயிரமுடையநல்லவரவணைப்
பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கிவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்து,
மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற
நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.6

964
கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய
கறிவளர்க்கொடிதுன்னி,
போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய
பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந் தினமலர்
எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.7

965
இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை
இரும்பசியதுகூர,
அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய
அருவரையிமயத்து,
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று
எண்ணிநின்றிமையோர்கள்,
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப்
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.8

966
ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு
உறுதுயரடையாமல்,
ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை
இருந்தநல்லிமயத்து,
தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற
தழல்புரையெழில்நோக்கி,
பேதைவண்டுகளெரியெனவெருவரு
பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.9

967
கரியமாமுகிற்படலங்கள்கிடந்து
அவைமுழங்கிட,களிறென்று
பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு
பிரிதியெம்பெருமானை,
வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர்
கலியனதொலிமாலை,
அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு
அருவினையடயாவே. 1.2.10

968
முற்றமூத்துக்கோல்துணையா
முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி
மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த
பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட
வாயான் வதரிவணங்குதுமே. 1.3.1

969
முதுகுபற்றிக்கைத்த
லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண்
சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவா
றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே. 1.3.2

970
உறிகள்போல்மெய்ந்நரம்
பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண்
சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம்
அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே. 1.3.3

971
பீளைசோரக்கண்ணி
டுங்கிப் பித்தெழமூத்திருமி,
தாள்கள் நோவத்தம்மில்
முட்டித் தள்ளிநடவாமுன்,
காளையாகிக்கன்று
மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,
வாளைபாயும்தண்ட
டஞ்சூழ் வதரிவணங்குதுமே. 1.3.4

972
பண்டுகாமரான
வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த
வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி
யூன்றித் தள்ளிநடவாமுன்,
வண்டுபாடும்தண்டு
ழாயான் வதரிவணங்குதுமே. 1.3.5

973
எய்த்தசொல்லோடீளைf
யேங்கி இயிருமியிளைத்துடலம்,
பித்தர்ப்போலச்சித்தம்
வேறாய்ப் பேசியயராமுன்,
அத்தனெந்தையாதி
மூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த,
மைத்தசோதியெம்பெ
ருமான் வதரிவணங்குதுமே. 1.3.6

974
பப்பவப்பர்மூத்த
வாறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப, ஐக்கள்போத
வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர்மென்கொங்கை
நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும்நங்கள்வாழ்வு
மானான் வதரிவணங்குதுமே. 1.3.7

975
ஈசிபோமினீங்கி
ரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்
கூசியிட்டீரென்று
பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம்
விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு
ழாயான் வதரிவணங்குதுமே. 1.3.8

976
புலன்கள்நையமெய்யில்
மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்கவைக்கள்போத
வுந்திக் கண்டபிதற்றாமுன்,
அலங்கலாயதண்டு
ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,
வலங்கொள்தொண்டர்ப்பாடி
யாடும் வதரிவணங்குதுமே. 1.3.9

977
வண்டுதண்டேனுண்டுவாழும்
வதரிநெடுமாலை,
கண்டல்வேலிமங்கை
வேந்தன் கலியனொலிமாலை,
கொண்டுதொண்டர்ப்பாடி
யாடக் கூடிடில்நீள்விசும்பில்,
அண்டமல்லால்மற்ற
வர்க்கு ஓராட்சியறியோமே. 1.3.10

978
ஏனமுனாகியிருநிலமிடந்து
அன்றிணையடியிமையவர்வணங்க,
தானவனாகம்தரணியில்புரளத்
தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன்,
தேனமர்சோலைக்கற்பகம்பயந்த
தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து,
வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1

979
கானிடையுருவைச்சுடுசரம்துரந்து
கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன்,
ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப
உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்,
தேனுடைக்கமலத்தயனொடுதேவர்
சென்றுசென்றிறைஞ்சிட, பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.2

980
இலங்கையும்கடலுமடலருந்துப்பின்
இருநிதிக்கிறைவனும், அரக்கர்
குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த
கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற,
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில்
வெண்துகிற்கொடியெனவிரிந்து,
வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.3

981
துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே.
தொழுதெழுதொண்டர்கள்தமக்கு,
பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும்
பேரருளாளனெம்பெருமான்,
அணிமலர்க்குழலாரரம்பையர்fதுகிலும்
ஆரமும்வாரிவந்து, அணிநீர்
மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.4

982
பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன்
பெருமுலைசுவைத்திட, பெற்ற
தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று
தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்,
சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு,
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.5

983
தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
திறத்து ஒருமறத்தொழில்புரிந்து,
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
பனிமுகில்வண்ணனெம்பெருமான்,
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
கருவரைபிளவெழக்குத்தி,
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.6

984
வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
விண்ணொடுவிண்ணவர்க்கரசும்,
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
எந்தையெம்மடிகளெம்பெருமான்,
அந்தரத்தமரரடியிணைவணங்க
ஆயிரமுகத்தினாலருளி,
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7

985
மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
மன்னவன்பொன்னிறத்துரவோன்,
ஊன்முனிந்தவனதுடலிருபிளவா
உகிர்நுதிமடுத்து, அயனரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம்
தவிர்த்தவன், தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.8

986
கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர்க்
குரைகடலுலகுடனனைத்தும்,
உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த
உம்பருமூழியுமானான்,
அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து
அங்கவனியாளலமர, பெருகு
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.9

987
வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை,
கருங்கடல்முந்நர்வண்ணனையெண்ணிக்
கலியன்வாயொலிசெய்தபனுவல்,
வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள்
வானவருலகுடன் மருவி,
இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே. 1.4.10

988
கலையும்கரியும்பரிமாவும்
திரியும்கானம்கடந்துபோய்,
சிலையும்கணையும்துணையாகச்
சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி
மதிள்நீரிலங்கைவாளரக்கர்
தலைவன், தலைபத்தறுத்துகந்தான்
சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.1

989
கடம்சூழ்fக்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்,
இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்,
தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.2

990
உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்,
நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
சலவன், சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.3

991
ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்
பேரான், பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.4

992
அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்
விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன்,
கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்
தடுத்தான், தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.5

993
தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட
வாயான், தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை
ஏயானிரப்ப, மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும்
தாயான், காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.6

994
ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை,
ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்fதானேயிருசுடராய்,
வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும்
தானாய், தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.7

995
வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து, ஓர்
சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று, என்
எந்தாய். சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில்
தந்தான், சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.8

996
தொண்டாமினமுமிமையோரும் துணைநுaல்மார்பினந்தணரும்,
அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்,
வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய,
தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.9

997
தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,
காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை,
ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள,
பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே. 1.5.10

998
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.1

999
சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,
அலம்புரிதடக்கையாயனேமாயா. வானவர்க்கரசனே., வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்fதிருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.2

1000
சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்fதமர்செய்யும்,
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த,
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.3

1001
வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை,
நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்றி எற்றிவைத்து, எரியெழுகின்ற
செம்பினாலியன்றபாவையைப் பாவீ. தழுவெனமொழிவதர்க்கஞ்சி,
நம்பனே. வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.4

1002
இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.5

1003
கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால், நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே. பாற்கடல்கிடந்தாய்.,
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.6

1004
நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்,
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்.,
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா. தானவர்க்கென்றும்
நஞ்சனே., வந்துன்fதிருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.7

1005
ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?, ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.,
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து, என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.8

1006
ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்,
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்fசரணமேசரணமென்றிருந்தேன்,
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே. திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்.,
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.9

1007
ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று, இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்தெந்தையைச்சிந்தையுள்வைத்து,
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே. 1.6.10

1008
அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. 1.7.1

1009
அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்fதுடிவாய்கடுப்ப,
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே. 1.7.2

1010
ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. 1.7.3

1011
எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி, ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 1.7.4

1012
மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. 1.7.5

1013
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,
நெரிந்தவயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.6

1014
முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 1.7.7

1015
நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த, அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்,
காய்த்தவாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.8

1016
நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்,
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்,
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச்
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே. 1.7.9

1017
செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,
எங்களீசனெம்பிரானை இருந்தமிழ்_ற்புலவன்,
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே. 1.7.10

1018
கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்,
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்,
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே. 1.8.1

1019
பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை,
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்,
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி, நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.2

1020
நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான்,
என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான்,
கன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான்,
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.3

1021
பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்,
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்,
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.4

1022
வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய்,
மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான்,
எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான்,
திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.5

1023
எண்டிசைகளுமேழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து,
பண்டோ ராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்,
ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு
திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.6

1024
பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான்,
பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம்,
காரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர,
சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.7

1025
அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன்,
வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன்,
கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்,
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.8

1026
பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,
பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,
வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,
தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. (2) 1.8.9

1027
செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை,
மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்,
சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே,
வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே. 1.8.10

1028
தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்,
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்,
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா.,
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே. 1.9.1

1029
மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.2

1030
கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,
என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,
அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.3

1031
குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்,
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன்,
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா.,
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.4

1032
எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்,
துப்பா. நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்,
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என்
அப்பா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.5

1033
மன்னாய்நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்,
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்,
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா.,
அண்ணா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.6

1034
தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,
அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.7

1035
நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால்,
ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான்.,
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா.,
ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.8

1036
பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்,
மற்றேலொன்றறியேன் மாயனே. எங்கள்மாதவனே.,
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா.,
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.9

1037
கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை,
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை,
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்,
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே. 1.9.10

1038
கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்,
திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்.,
விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய,
அண்ணா. அடியேன் இடரைக்களையாயே. 1.10.1

1039
இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர்
குலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்.,
விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய,
அலங்கல்துளபமுடியாய். அருளாயே. 1.10.2

1040
நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு,
ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்.,
சீரார் திருவேங்கடமாமலைமேய,
ஆராவமுதே. அடியேற்கருளாயே. 1.10.3

1041
உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக,
கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே,
விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய,
அண்டா. அடியேனுக்கு அருள்புரியாயே. 1.10.4

1042
தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி,
பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்.,
சேணார் திருவேங்கடமாமலைமேய,
கோணாகணையாய். குறிக்கொள்ளெனைநீயே. 1.10.5

1043
மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி,
தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன்,
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய,
என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே. 1.10.6

1044
மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த,
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா.,
தேனே. திருவேங்கடமாமலைமேய,
கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே. 1.10.7

1045
சேயனணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன், ணிவாளொளி வெண்டரளங்கள்,
வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய,
ஆயனடியல்லது மற்றறையேனே. 1.10.8

1046
வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்,
நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ.,
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய்., இனியானுன்னை யென்றும் விடேனே. 1.10.9

1047
வில்லார்மலி வேங்கடமாமலைமேய,
மல்லார்த்திரடோ ள் மணிவண்ணனம்மானை,
கல்லார்த்திரடோ ள் கலியன்சொன்னமாலை,
வல்லாரவர் வானவராகுவர்த்தாமே. 1.10.10

1048
வானவர் தங்கள் சிந்தை போலேன்
நெஞ்சமே. இனிதுவந்து, மாதவ
மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்றவெந்தை,
கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள்
ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. (2) 2.1.1

1049
உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன்
உகந்தவர் தம்மை, மண்மிசைப்
பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய்,
குறவர் மாதர்க ளோடு வண்டு
குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து,
அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.2

1050
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள்
ஏத்து வாருற வோடும், வானிடைக்
கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்,
வண்டு வாழ்வட வேங்கடமலை
கோயில் கொண்டத னோடும், மீமிசை
அண்ட மாண்டிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.3

1051
பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே.
பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,
கோவி நாயகன் கொண்ட லுந்துயர்
வேங்க டமலை யாண்டு, வானவர்
ஆவி யாயிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.4

1052
பொங்கு போதியும் பிண்டி யுமுடைப்
புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்
எங்கும் வானவர் தான வர்நிறைந்
தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.5

1053
துவரி யாடையர் மட்டை யர்சமண்
தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்,
தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்,
கவரி மாக்கணம் சேரும் வேங்கடம்
கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை,
அமர நாயகறகு இன்றடிமைத்தொழில் பூண்டாயே. 2.1.6

1054
தருக்கி னால்சமண் செய்து சோறுதண்
தயிரினால்திரளை,மி டற்றிடை
நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய்,
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
கோயில் கொண்டத னோடும், வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.7

1055
சேயனணியன் சிறியன் பெரிய னென்பது
சிலர்ப்பேசக் கேட்டிருந்
தே,என் னெஞ்சமென் பாய்,.எனக் கொன்று சொல்லாதே,
வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி
வேங்க டமலை கோயில் மேவிய,
ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.8

1056
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என்
நெஞ்சமென் பாய். துணிந்துகேள்,
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,
ஆடு தாமரை யோனு மீசனும்
அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.9

1057
மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க
டமலை கோயில் மேவிய,
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி
கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. (2) 2.1.10

1058
காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர்,
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்,
வேயி னன்ன தோள்fமடவார் வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. (2) 2.2.1

1059
தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்,
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள,
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.2.2

1060
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. 2.2.3

1061
பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. 2.2.4

1062
பால நாகி ஞாலமேழு
முண்டுபண் டாலிலைமேல்,
சால நாளும் பள்ளிகொள்ளும்
தாமரைக் கண்ணன்எண்ணில்,
நீல மார்வண் டுண்டுவாழும்
நெய்தலந் தண்கழனி,
ஏல நாறும் பைம்புறவி
லெவ்வுள் கிடந்தானே. 2.2.5

1063
சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்fபி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.2.6

1064
திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற,
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. 2.2.7

1065
முனிவன் மூர்த்தி மூவராகி
வேதம் விரித்துரைத்த
புனிதன், பூவை வண்ணனண்ணல்
புண்ணியன் விண்ணவர்கோன்,
தனியன் சேயன் தானொருவன்
ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன், எந்தை யெம்பெருமான்
எவ்வுள் கிடந்தானே. 2.2.8

1066
பந்தி ருக்கும் மெல்விரலாள்
பாவை பனிமலராள்,
வந்தி ருக்கும் மார்வன்நீல
மேனி மணிவண்ணன்,
அந்த ரத்தில் வாழும் வானோர்
நாயக னாயமைந்த,
இந்தி ரற்கும் தம்பெருமா
னெவ்வுள் கிடந்தானே. 2.2.9

1067
இண்டை கொண்டு தொண்டரேத்த
எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைபுறவில்
மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய்
மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே
லாள்வ ரருலகே. (2) 2.2.10

1068
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ,
செற்றவன் றன்னை, புரமெரி செய்த
சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு
பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.1

1069
வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை
விழுமிய முனிவர்கள் விழுங்கும்,
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத் தோர்தொழு தேத்தும்,
ஆதியை யமுதை யென்னை யாளுடை
அப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும், மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.2

1070
வஞ்சனை செய்யத் தாயுரு வாகி
வந்தபே யலறிமண் சேர,
நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட
நாதனைத் தானவர் கூற்றை,
விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து
துதிசெய்யப் பெண்ணுரு வாகி,
அஞ்சுவை யமுத மன்றளித் தானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. 2.3.3

1071
இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
எழில்விழ வில்பழ நடைசெய்,
மந்திர விதியில் பூசனை பெறாது
மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
அந்தமோ டினவா நிரைதள ராமல்
எம்பெரு மானரு ளென்ன,
அந்தமில் வரையால் மழைதடுத் தானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. 2.3.4

1072
இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும்
இன்பன்நற் புவிதனக் கிறைவன்,
தந்துணை யாயர் பாவைநப் பின்னை
தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி
வாயுரை தூதுசென் றியங்கும்
என்துணை, எந்தை தந்தைதம் மானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. 2.3.5

1073
அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற்
கிளையவ னணியிழை யைச்சென்று,
எந்தமக் குரிமை செய் எனத் தரியாது
எம்பெரு மானருள் என்ன,
சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம்
பெண்டிரு மெய்திநூ லிழப்ப,
இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. 2.3.6

1074
பரதனும் தம்பி சத்துருக் கனன்னும்
இலக்கும னோடுமை திலியும்
இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற
இராவணாந் தகனையெம் மானை,
குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு
குயிலொடு மயில்கள்நின் றால,
இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.7

1075
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
வாயிலோ ராயிர நாமம்,
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்
கொன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப்
பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.8

1076
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக்
கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து
சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.9

1077
மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்
மாடமா ளிகையும்மண் டபமும்,
தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத்
திருவல்லிக் கேணிநின் றானை,
கன்னிநன் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலி கன்றி,
சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார்
சுகமினி தாள்வர்வா னுலகே. (2) 2.3.10

1078
அன்றாயர்கு லக்கொடி யோடணிமா
மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க்
கென்றானு மிரக்கமி லாதவனுக்குக்
குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ்
நன்றாயபு னல்நறை யூர்த்திருவா
லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,
நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே. (2) 2.4.1

1079
காண்டாவன மென்பதொர் காடமரர்க்
கரையனது கண்டவன் நிற்க,முனே
மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்
அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்
தாண்டான்,அவுணனவன் மார்வகலம்
உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய்
நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.2

1080
அலமன்னு மடல்சுரி சங்கமெடுத்
தடலாழியி னாலணி யாருருவில்f,
புலமன்னு வடம்புனை கொங்கையினாள்
பொறைதீரமு னாளடு வாளமரில்,
பலமன்னர் படச்சுட ராழியினைப்
பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர்
நிலமன்னனு மாயுல காண்டவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.3

1081
தாங்காததோ ராளரி யாயவுணன் -
றனைவீட முனிந்தவ னாலமரும்,
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத்
ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,
பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப்
பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,
நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.4

1082
மாலுங்கட லாரம லைக்குவடிட்
டணைகட்டி வரம்புருவமதிசேர்
கோலமதி ளாயவி லங்கைகெடப்
படைதொட்டொரு காலம ரிலதிர,
காலமிது வென்றயன் வாளியினால்
கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்,
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.5

1083
பாராருல கும்பனி மால்வரையும்
கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்
காரா தென நின்றவ னெம்பெருமான்
அலைநீருல குக்கரசாகிய,அப்-
பேரானைமுனிந்தமுனிக்கரையன்
பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,
நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.6

1084
புகராருரு வாகிமுனிந்தவனைப்
புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன்
நகராயின பாழ்பட நாமமெறிந்-
ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்,
பகராதவ னாயிர நாமமடிப்
பணியாதவ னைப்பணி யாமலரில்,
நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.7

1085
பிச்சச்சிறு பீலிபி டித்துலகில்
பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனே
அச்சமிலர் நாணில ராதன்மையால்
அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்,
நச்சிநம னாரடை யாமைநமக்
கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு,
நிச்சம்நினைவார்க்கருள் செய்யுமவற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.8

1086
பேசுமள வன்றிது வம்மின்நமர்.
பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்,
நாசமது செய்திடும் ஆதன்மையால்
அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்
வாசமணி வண்டறை பைம்புறவில்
மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில்
நீசரவர் சென்றடை யாதவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.9

1087
நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்
நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில்
கடமாகளி யானைவல்லான் கலியன்
ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,உடனே
விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும்
எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,
கொடுமாகடல் வையக மாண்டுமதிக்
குடைமன்னவ ராயடி கூடுவரே. (2) 2.4.10

1088
பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்
பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்
புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,
காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. (2) 2.5.1

1089
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
பொய்ந்_லை மெய்ந்_லென் றென்றுமோதி
மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை
என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. (2) 2.5.2

1090
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே. 2.5.3

1091
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப்
பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின்,
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை
அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே
கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.4

1092
பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப்
பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன
ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப்
பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.5

1093
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்
கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை, வளைமருப்பி னேனமாகி
இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.6

1094
பேணாத வலியரக்கர் மெலியவன்று
பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை,
பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப்
பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை
உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே. 2.5.7

1095
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்
தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை
இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.8

1096
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப்
படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை
விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து
வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்
கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.9

1097
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப்
படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க்
கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்
தீவினையை முதலரிய வல்லார்தாமெ. (2) 2.5.10

1098
நண்ணாத வாளவுண
ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும்
பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடன்fமல்லைத்
தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை
யிறைப்பொழுது மெண்ணோமே. (2) 2.6.1

1099
பார்வண்ண மடமங்கை
பனிநன்மா மலர்க்கிழத்தி,
நீர்வண்ணன் மார்வகத்தி
லிருக்கையைமுன் நினைந்தவனூர்,
கார்வண்ண முதுமுந்நீர்க்
கடல்மல்லைத் தலசயனம்,
ஆரெண்ணும் நெஞ்சுடையா
ரவரெம்மை யாள்வாரே. 2.6.2

1100
ஏனத்தி னுருவாகி
நிலமங்கை யெழில்கொண்டான்,
வானத்தி லவர்முறையால்
மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,
கானத்தின் கடல்மல்லைத்
தலசயனத் துறைகின்ற,
ஞானத்தி னொளியுருவை
நினைவாரென் நாயகரே. 2.6.3

1101
விண்டாரை வென்றாவி
விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம்
அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத்
தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா
ரவரெங்கள் குலதெய்வமே. 2.6.4

1102
பிச்சச் சிறுபீலிச்
சமண்குண்டர் முதலாயோர்,
விச்சைக் கிறையென்னு
மவ்விறையைப் பணியாதே,
கச்சிக் கிடந்தவனூர்
கடன்fமல்லைத் தலசயனம்,
நச்சித் தொழுவாரை
நச்சென்றன் நன்னெஞ்சே. 2.6.5

1103
புலன்கொள்நிதிக் குவையோடு
புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
சுமந்தெக்கும் நான்றொசிந்து,
கலங்களியங் கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்,
வலங்கொள்மனத் தாரவரை
வலங்கொள்ளென் மடநெஞ்சே. 2.6.6

1104
பஞ்சிச் சிறுகூழை
யுருவாகி, மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட
அண்ணல்முன் நண்ணாத,
கஞ்சைக் கடந்தவனூர்
கடன்fமல்லைத் தலசயனம்,
நெஞ்சில் தொழுவாரைத்
தொழுவாயென் தூய்நெஞ்சே. 2.6.7

1105
செழுநீர் மலர்க்கமலம்
திரையுந்த வன்பகட்டால்,
உழுநீர் வயலுழவ
ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,
கழுநீர் கடிகமழும்
கடன்fமல்லைத் தலசயனம்,
தொழுநீர் மனத்தவரைத்
தொழுவாயென் தூய்நெஞ்சே. 2.6.8

1106
பிணங்களிடு காடதனுள்
நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம்
பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக்
கடன்fமல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை
வணங்கென்றன் மடநெஞ்சே. 2.6.9

1107
கடிகமழு நெடுமறுகில்
கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு
மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன்
கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம்
முதல்வர்முத லாவாரே. (2) 2.6.10

1108
திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை
செழுங்கட லமுதினிற் பிறந்த
அவளும்,நின் னாகத் திருப்பது மறிந்தும்
ஆகிலு மாசைவி டாளால்,
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை
சொல்லுநின் தாள்நயந் திருந்த
இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. (2) 2.7.1

1109
துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள்
துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள்
கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த,
மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.2

1110
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்
தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும்
பொருகடல் புலம்பிலும் புலம்பும்,
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம்
வளைகளும் இறைநில்லா, என்தன்
ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.3

1111
ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும்
ஒண்சுடர் துயின்றதால் என்னும்,
ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா
தென்றலும் தீயினிற் கொடிதாம்,
தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும்
சொல்லுமி னென்செய்கேன் என்னும்,
ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.4

1112
ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள்
உருகும்நின் திருவுரு நினைந்து,
காதன்மை பெரிது கையற வுடையள்
கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்,
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்,
ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.5

1113
தன்குடிக் கேதும் தக்கவா நினையாள்
தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த
வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
மென்முலை பொன்பயந் திருந்த,
என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.6

1114
உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும்
உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்,
வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை
மாயனே. என்றுவாய் வெருவும்,
களங்கனி முறுவல் காரிகை பெரிது
கவலையோ டவலம்சேர்ந் திருந்த,
இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.7

1115
அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்
கழியுமா லென்னுள்ளம். என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்
போதுமோ நீர்மலைக் கெ ன்னும்,
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக்
கொடியிடை நெடுமழைக் கண்ணி,
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.8

1116
பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள்
பொருகயல் கண்துயில் மறந்தாள்,
அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ
ணங்கினுக் குற்றநோ யறியேன்,
மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
வீங்கிய வனமுலை யாளுக்கு,
என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.9

1117
அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
ஆயஎம் மாயனே. அருளாய்,
என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும்
இடவெந்தை யெந்தை பிரானை,
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
மானவேல் கலியன்வா யொலிகள்,
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப் பாரே. (2) 2.7.10

1118
திரிபுர மூன்றெரித் தானும்மற்றை
மலர்மிசை மேலய னும்வியப்ப,
முரிதிரை மாகடல் போல்முழங்கி
மூவுல கும்முறை யால்வணங்க,
எரியன கேசர வாளெயிற்றோ
டிரணிய னாக மிரண்டுகூறா,
அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே. (2) 2.8.1

1119
வெந்திறல் வீரரில் வீரரொப்பார்
வேத முரைத்திமை யோர்வணங்கும்,
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்
தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்,
வந்து குறளரு வாய்நிமிர்ந்து
மாவலி வேள்வியில் மண்ணளந்த,
அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே. 2.8.2

1120
செம்பொ னிலங்கு வலங்கைவாளி
திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்,
உம்ப ரிருசுட ராழியோடு
கேடக மொண்மலர் பற்றியெற்றே,
வெம்பு சினத்தடல் வேழம்வீழ
வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட
அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே. 2.8.3

1121
மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி
மாமழை காத்தொரு மாயவானை
யஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும்
ஆயர்கொல் மாய மறியமாட்டேன்,
வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி
வேதமு னோதுவர் நீதிவானத்து,
அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே. 2.8.4

1122
கலைகளும் வேதமும் நீதிநூலும்
கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை
நிலைகளும் வானவர்க் கும்பிறர்க்கும்
நீர்மையி நாலருள் செய்து,நீண்ட
மலைகளும் மாமணி யும்மலர்மேல்
மங்கையும் சங்கமும் தங்குகின்ற,
அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே. 2.8.5

1123
எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில்
ஏது மறிகிலம், ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம்
தம்மன வாகப் புகுந்து,தாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயாப்
போதவிழ் நீலம் புனைந்தமேகம்,
அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே. 2.8.6

1124
முழுசிவண் டாடிய தண்டுழாயின்
மொய்ம்மலர்க் கண்ணியும்,மேனியஞ்சாந்-
திழிசிய கோல மிருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார்,
எழுதிய தாமரை யன்னகண்ணும்
ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்,
அழகிய தாமிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே. 2.8.7

1125
மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க
வேத முரைப்பர்முந் நீர்மடந்தை
தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால்
சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,
காவியொப் பார்க்கட லேயுமொப்பார்
கண்ணும் வடிவும் நெடியராய்,என்
ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே. 2.8.8

1126
தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு,
வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி
வாய்திறந் தொன்று பணித்ததுண்டு,
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம்
நானிவர் தம்மை யறியமாட்டேன்
அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே. 2.8.9

1127
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்
நீள்முடி மாலை வயிரமேகன்,
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி
அட்ட புயகரத் தாதிதன்னை,
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்
காமரு சீர்க்கலி கன்றி,குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. (2) 2.8.10

1128
சொல்லுவன் சொற்பொருள் தானவை யாய்ச்சுவை
யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்,
நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந்
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
பல்லவன் வில்லவ னென்றுல கில்பல
ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்f
பல்லவன், மல்லையர் கோன்பணிநத பர
மேச்சுர விண்ணக ரமதுவே. (2) 2.9.1

1129
கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட
ரும்நில னும்மலை யும்,தன்னுந்தித்
தார்மன்னு தாமரைக் கண்ணனி டம்தட
மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,
தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு
வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பர
மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.2

1130
உரந்தரு மெல்லணைப் பள்ளிகொண் டானொரு
கால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,
வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு
வாயி லுகச்செரு வில்முனநாள்,
பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.3

1131
அண்டமு மெண்டிசை யும்நில னுமலை
நீரொடு வானெரி கால்முதலா
உண்டவன், எந்தைபி ரானதி டமொளி
மாடங்கள் சூந்தழ காயகச்சி,
விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரைந்
தாரிரி யச்செரு வில்முனைந்து,
பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.4

1132
தூம்புடைத் திண்கைவன் தாள்களிற் றின்துயர்
தீர்த்தர வம்வெருவ,முனநாள்
பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந்
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசைப்
பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,
பாம்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.5

1133
திண்படைக் கோளரி யினுரு வாய்த்திற
லோனக லம்செரு வில்முனநாள்,
புண்படப் போழ்ந்த பிரானதி டம்பொரு
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை
வெல்கொடி வேற்fபடை முன்னுயர்த்த,
பண்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.6

1134
இலகிய நீண்முடி மாவலி தன்பெரு
வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,
சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந்
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
உலகுடை மன்னவன் தென்னவ னைக்கன்னி
மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,
பலபடை சாயவென் றான்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.7

1135
குடைத்திறல் மன்னவ னாயொரு கால்குரங்
கைப்படை யா,மலை யால்கடலை
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு
வச்செரு வேல்வலங் கைப்பிடித்த,
படைத்திறல் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.8

1136
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து
முன்னொரு கால்செரு வில்லுருமின்,
மறையுடை மால்விடை யேழடர்த் தாற்கிடந்
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
கறையுடை வாள்மற மன்னர்க்கெ டக்கடல்
போல முழங்கும் குரல்கடுவாய்,
பறையுடைப் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.9

1137
பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர் கோன்பணிந்
தபர மேச்சுர விண்ணகர்மேல்,
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை
வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல் லார்த்திரு
மாமகள் தன்னரு ளால்,உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல் சூழ்செழு
நீருல காண்டு திகழ்வர்களே. (2) 2.9.10

1138
மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும்
வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,
எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர்
இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்
தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. (2) 2.10.1

1139
கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்,
சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை
தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,
வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து
வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,
சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.2

1140
கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்
கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,
அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி
அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,
எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட
இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட,
செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.3

1141
தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து
தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை,
ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும்
அடியவர்கட் காரமுத மானான் றன்னை,
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்
குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்fவளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.4

1142
கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி
கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்,
பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம்
பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை,
மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும்
மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத,
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்
ிருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.5

1143
உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங்
குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க,
தறியார்ந்த கருங்களிறே போல நின்று
தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,
வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு,
வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச்
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.6

1144
இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி
இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து,
வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு
வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை,
கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று
காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,
செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள்சோலைத்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.7

1145
பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு
பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை
செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை,
போரேறொன் றுடையானு மளகைக் கோனும்
புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்,
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.8

1146
தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு
சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,
காவடிவின் கற்பகமே போல நின்று
கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,
சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை
செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,
தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.9

1147
வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல
மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை,
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று
வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்
வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,
காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக்
கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2) 2.10.10
பெரிய திருமொழி மூன்றாம் பத்து

1148
இருந்தண் மாநில மேனம தாய்வளை
மருப்பினி லகத்தொடுக்கி,
கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம்
கமலநன் மலர்த்தேறல்
அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம்
பொதுளியம் பொழிலூடே,
செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு
திருவயிந் திரபுரமே. (2) 3.1.1

1149
மின்னு மாழியங் கையவன் செய்யவள்
உறைதரு திருமார்பன்,
பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய
பரனிடம் வரைச்சாரல்,
பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப்
பிணியவிழ் கமலத்து,
தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு
திருவயிந் திரபுரமே. 3.1.2

1150
வைய மேழுமுண் டாலிலை வைகிய
மாயவன், அடியவர்க்கு
மெய்ய னாகிய தெய்வநா யகனிடம்
மெய்தகு வரைச்சாரல்,
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய
முல்லையங் கொடியாட,
செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு
திருவயிந் திரபுரமே. 3.1.3

1151
மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்
மார்பக மிருபிளவா,
கூறு கொண்டவன் குலமகற் கின்னருள்
கொடுத்தவ னிடம்,மிடைந்து
சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை
விசும்புற மணிநீழல்,
சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ்
திருவயிந் திரபுரமே. 3.1.4

1152
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
றகலிட மளந்து ஆயர்,
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம்
பொன்மலர் திகழ்,வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு
குரக்கினம் இரைத்தோடி
தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு
திருவயிந் திரபுரமே. 3.1.5

1153
கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்
திறத்திளங் கொடியோடும்,
கானு லாவிய கருமுகில் திருநிறத்
தவனிடம் கவினாரும்,
வானு லாவிய மதிதவழ் மால்வரை
மாமதிள் புடைசூழ,
தேனு லாவிய செழும்பொழில் தழுவிய
திருவயிந் திரபுரமே. 3.1.6

1154
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்
விலங்கலின் மிசையிலங்கை
மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன
திடம்மணி வரைநீழல்,
அன்ன மாமல ரரவிந்தத் தமளியில்
பெடையொடு மினிதமர,
செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண்
திருவயிந் திரபுரமே. 3.1.7

1155
விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம்
வில்லிறுத்து அடல்மழைக்கு,
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன்
நிலவிய இடம்தடமார்,
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு
மலைவள ரகிலுந்தி,
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே. 3.1.8

1156
வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில்
விசயனுக் காய்,மணித்தேர்க்
கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம்
குலவுதண் வரைச்சாரல்,
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம்
பாளைகள் கமழ்சாரல்,
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே. 3.1.9

1157
மூவ ராகிய வொருவனை மூவுல
குண்டுமிழ்ந் தளந்தானை,
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்
திருவயிந் திரபுரத்து,
மேவு சோதியை வேல்வல வன்கலி
கன்றி விரித்துரைத்த,
பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப்
பாவங்கள் பயிலாவே. (2) 3.1.10

1158
ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு
உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா
தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே
கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,
தேனாட மாடக் கொடியாடு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. (2) 3.2.1

1159
காயோடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் _கர்ந்து நெடுங்காலம், ஐந்து
தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா
திருமார்பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்,
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த,
தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.2

1160
வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய்
விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த,
வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான்
அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்,
பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து
படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த,
செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.3

1161
அருமா நிலமன் றளப்பான் குறளாய்
அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த,
பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம்
பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர்.
கருமா கடலுள் கிடந்தா னுவந்து
கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்,
திருமால் திருமங் கையொடாடு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.4

1162
கோமங்க வங்கக் கடல்வைய முய்யக்
குலமன்ன ரங்கம் மழுவில் துணிய,
தாமங் கமருள் படைதொட்ட வென்றித்
தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர்,
பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்
புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்
சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.5

1163
நெய்வா யழலம் புதுரந்து முந்நீர்
துணியப் பணிகொண் டணியார்ந்து,இலங்கு
மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம்
மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்,
அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான்
அருமா மறையந் தணர்சிந் தைபுக,
செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.6

1164
மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து
மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த,
தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு
திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்
கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்,
தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத்
திருச்சித்ர கூடம சென்றுசேர் மின்களே. 3.2.7

1165
மாவாயி னங்கம் மதியாது கீறி
மழைமா முதுகுன் றெடுத்து,ஆயர் தங்கள்
கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன்
குரைமா கழல்கூ டும்குறிப் புடையீர்,
மூவா யிரநான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.8

1166
செருநீல வேற்கண் மடவார் திறத்துச்
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்,
அருநீல பாவ மகலப் புகழ்சேர்
அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்,
பெருநீர் நிவாவுந்தி முத்தங்கொ ணர்ந்தெங்கும்
வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள,
திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.9

1167
சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத்
திருசித்ர கூடத் துறைசெங்கண் மாலுக்கு,
ஆராத வுள்ளத் தவர்க்கேட் டுவப்ப
அலைநீ ருலகுக் கருளே புரியும்,
காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா
ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார்,
பாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப்
பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே. (2) 3.2.10

1168
வாட மருதிடை போகி
மல்லரைக் கொன்றொக்க லிட்டிட்டு,
ஆடல்நல் மாவுடைத் தாயர்
ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான்,
கூடிய மாமழை காத்த
கூத்த னெனெவரு கின்றான்,
சேடுயர் பூம்பொழில் தில்லைச்
சித்திர கூடத்துள் ளானே. (2) 3.3.1

1169
பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட
பிள்ளை பரிசிது வென்றால்,
மாநில மாமகள் மாதர்
கேள்வ னிவனென்றும், வண்டுண்
பூமகள் நாயக னென்றும்
புலங்கெழு கோவியர் பாடி,
தேமலர் தூவ வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.2

1170
பண்டிவன் வெண்ணெயுண் டானென்
றாய்ச்சியர் கூடி யிழிப்ப
எண்டிசை யோரும்வ ணங்க
இணைமரு தூடு நடந்திட்டு,
அண்டரும் வானத் தவரு
மாயிர நாமங்க ளோடு,
திண்டிறல் பாட வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.3

1171
வளைக்கை நெடுங்கண் மடவா
ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப,
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தண்தடம் புக்கண்டர் காண,
முளைத்த எயிற்றழல் நாகத்
துச்சியில் நின்றது வாட,
திலைத்தமர் செய்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.4

1172
பருவக் கருமுகி லொத்து
முட்டுடை மாகட லொத்து,
அருவித் திரள்திகழ் கின்ற
வாயிரம் பொன்மலை யொத்து,
உருவக் கருங்குழ லாய்ச்சி
திறத்தின மால்விடை செற்று,
தெருவில் திளைத்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.5

1173
எய்யச் சிதைந்த திலங்கை
மலங்க வருமழை காப்பான்,
உய்யப் பருவரை தாங்கி
ஆநிரை காத்தானென் றேத்தி,
வையத் தெவரும் வணங்க
அணங்கெழு மாமலை போலே,
தெய்வப்புள் ளேறி வருவான்
சித்திர கூடத்துள் ளானே. (2) 3.3.6

1174
ஆவ ரிவைசெய் தறிவார்?
அஞ்சன மாமலை போலே,
மேவு சினத்தடல் வேழம்
வீழ முனிந்து,அழ காய
காவி மலர்நெடுங் கண்ணார்
கைதிழ வீதி வருவான்,
தேவர் வணங்குதண் தில்லைச்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.7

1175
பொங்கி யமரி லொருகால்
பொன்பெய ரோனை வெருவ,
அங்கவனாக மளைந்திட்
டாயிரந் தோளெழுந் தாட,
பைங்க ணிரண்டெரி கான்ற
நீண்ட எயிற்றொடு பேழ்வாய்,
சிங்க வுருவில் வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.8

1176
கருமுகில் போல்வதோர் மேனி
கையன வாழியும் சங்கும்,
பெருவிறல் வானவர் சூழ
ஏழுல கும்தொழு தேத்த,
ஒருமக ளாயர் மடந்தை
யொருத்தி நிலமகள், மற்றைத்
திருமக ளோடும் வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.9

1177
தேனமர் பூம்பொழில் தில்லைச்
சித்திர கூட மமர்ந்த,
வானவர் தங்கள் பிரானை
மங்கையர் கோன்மரு வார்f,
ஊனமர் வேல்கலி கன்றி
யொண்டமி ழொன்பதோ டொன்றும்,
தானிவை கற்றுவல் லார்மேல்
சாராதீவினைதானே. (2) 3.3.10

1178
ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி
உலகனைத்து மீரடியா லொடுக்கி, ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர், தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும்
அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்,
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே. (2) 3.4.1

1179
நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை
நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி, நக்கன்
ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை
ஒளிமலர்ச்கே வடியணைவீர், உழுசே யோடச்
சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத்
தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தி யங்க,
தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.2

1180
வையணைந்த _திக்கோட்டு வராக மொன்றாய்
மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து,
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோ ள்
நேர்ந்தவந்தா ளணைகிற்பீர், நெய்த லோடு
மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும்
மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்,
செய்யணைந்து களைகளையா தேறும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.3

1181
பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள்
பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண்
நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட
நின்மலந்தா ளணைகிற்பீர், நீல மாலைத்
தஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே
தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால்,
செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.4

1182
தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு
திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்தி செய்து,
வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட
விண்ணவர்க்கோன் தாளணைவீர், விகிர்த மாதர்
அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட
அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்,
செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.5

1183
பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப்
படர்வனத்துக் கவந்தனொடும் படையார்த்திண்கை,
வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த
விண்ணவர்க்கோன் தாளணைவீர், வெற்புப்போலும்
துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்
துடியிடையார் முகக்கமல்ச் சோதி தன்னால்,
திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.6

1184
பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும்
புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த,
செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன்
திருவடிசேர்ந் துய்கிற்பீர், திரைநீர்த் தெள்கி
மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி
வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி
தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.7

1185
பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய்
பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்,
மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்
மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள்தாவ
நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ
நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத்
தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.8

1186
பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்
பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து,
கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்
கலந்தவந்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித்
துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத்
தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி,
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.9

1187
செங்கமலத் தயனனைய மறையோர் காழிச்
சீராம விண்ணகரென் செங்கண் மாலை
அங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன்
அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம்
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்
கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன
ச்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்
தடங்கடல்சூ ழுலகுக்குத் தலைவர் தாமே. (2) 3.4.10

1188
வந்துன தடியேன் மனம்புகுந்தாய்
புகுந்ததற்பின் வணங்கும்,என்
சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே,
அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள்
கலந்து, அவை யெங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே. (2) 3.5.1

1189
நீலத் தடவரை மாமணி நிகழக்
கிடந்ததுபோல், அரவணை
வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்,
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட
மழைமுகில் போன்றெழுந்து, எங்கும்
ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே. 3.5.2

1190
நென்னல்போய் வருமென்றென் றெண்ணி
யிராமையென் மனத்தே புகுந்தது,
இம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில்,
செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார்
முகத்தெழு வாளைபோய், கரும்பு
அந்நற் காடணையும் அணியாலி யம்மானே. 3.5.3

1191
மின்னில் மன்னு _டங்கிடை மடவார்தம்
சிந்தை மறந்து வந்து,நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்,
புன்னை மன்னு செருந்தி வண்பொழில்
வாயகன் பணைகள் கலந்தெங்கும்,
அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே. 3.5.4

1192
நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி
தொழுதேத்தும், என்மனம்
வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா,
பாட லின்னொலி சங்கி நோசை பரந்து
பல்பணை யால்மலிந்து, எங்கும்
ஆட லோசையறா அணியாலி யம்மானே. 3.5.5

1193
கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர்
சேவடி கைதொழுதெழும்,
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்,
சந்தி வேள்வி சடங்கு நான்மறை
ஓதி யோதுவித் தாதி யாய்வரும்,
அந்த ணாள ரறாவணியாலி யம்மானே. 3.5.6

1194
உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்துன்
அடியேன் மனம்புகுந்த,அப்
புலவ. புண்ணிய னே.புகுந் தாயைப் போகலொட்டேன்,
நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல்
தண்டாமரை மலரின் மிசை,மலி
அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே. 3.5.7

1195
சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை
யுள்கிடந்தாய், அருள்புரிந்து
இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ,
கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி
இன்னிள வண்டு போய்,இளம்f
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே. 3.5.8

1196
ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி
நின்னடைந் தேற்கு,ஒரு பொருள்
வேதியா. அரையா.உரையாய் ஒருமாற்றமெந்தாய்,
நீதி யாகிய வேதமா முனியாளர்
தோற்ற முரைத்து, மற்றவர்க்
காதியாய் இருந்தாய். அணியாலி யம்மானே. 3.5.9

1197
புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ்
தென்னாலி யொருந்த மாயனை,
கல்லின் மன்னு திண்டோ ள் கலிய னொலிசெய்த,
நல்ல இன்னிசை மாலை நாலுமோ
ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன்
வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே. (2) 3.5.10

1198
தூவிரிய மலருழக்கித்
துணையோடும் பிரியாதே,
பூவிரிய மதுநுகரும்
பொறிவரிய சிறுவண்டே,
தீவிரிய மறைவளர்க்கும்
புகழாளர் திருவாலி,
ஏவரிவெஞ் சிலையானுக்
கென்னிலைமை யுரையாயே. (2) 3.6.1

1199
பிணியவிழு நறுநீல
மலர்க்கிழியப் பெடையோடும்,
அணிமலர்மேல் மதுநுகரும்
அறுகால சிறுவண்டே,
மணிகெழுநீர் மருங்கலரும்
வயலாலி மணவாளன்,
பணியறியேன் நீசென்றென்
பயலைநோ யுரையாயே. 3.6.2

1200
நீர்வானம் மண்ணெரிகா
லாய்நின்ற நெடுமால்,தன்
தாராய நறுந்துளவம்
பெருந்தகையெற் கருளானே,
சீராரும் வளர்ப்பொழில்சூழ்
திருவாலி வயல்வாழும்,
கூர்வாய சிறுகுருகே.
குறிப்பறிந்து கூறாயே. 3.6.3

1201
தானாக நினையானேல்
தன்னினைந்து நைவேற்கு,ஓர்
மீனாய கொடிநெடுவேள்
வலிசெய்ய மெலிவேனோ?
தேன்வாய வரிவண்டே.
திருவாலி நகராளும்,
ஆனாயற் கென்னுறுநோ
யறியச்சென் றுரையாயே. 3.6.4

1202
வாளாய கண்பனிப்ப
மென்முலைகள் பொன்னரும்ப
நாணாளும் நின்னினைந்து
நைவேற்கு,ஓமண்ணளந்த
தாளாளா தண்குடந்தை
நகராளா வரையெடுத்த
தோளாளா, என்றனக்கோர்
துணையாள னாகாயே. 3.6.5

1203
தாராய தண்டுளவ
வண்டுழுத வரைமார்பன்,
போரானைக் கொம்பொசித்த
புட்பாக னென்னம்மான்,
தேராரும் நெடுவீதித்
திருவாலி நகராளும்,
காராயன் என்னுடைய
கனவளையும் கவர்வானோ. 3.6.6

1204
கொண்டரவத் திரையுலவு
குரைகடல்மேல் குலவரைபோல்,
பண்டரவி னணைக்கிடந்து
பாரளந்த பண்பாளா,
வண்டமரும் வளர்ப்பொழில்சூழ்
வயலாலி மைந்தா,என்
கண்டுயில்நீ கொண்டாய்க்கென்
கனவளையும் கடவேனோ. 3.6.7

1205
குயிலாலும் வளர்ப்பொழில்சூழ்
தண்குடந்தைக் குடமாடி,
துயிலாத கண்ணிணையேன்
நின்னினைந்து துயர்வேனோ,
முயலாலு மிளமதிக்கே
வளையிழந்தேற்கு, இதுநடுவே
வயலாலி மணவாளா.
கொள்வாயோ மணிநிறமே. 3.6.8

1206
நிலையாளா நின்வணங்க
வேண்டாயே யாகினும்,என்
முலையாள வொருநாளுன்
னகலத்தால் ஆளாயே,
சிலையாளா மரமெய்த
திறலாளா திருமெய்ய
மலையாளா, நீயாள
வளையாள மாட்டோ மே. 3.6.9

1207
மையிலங்கு கருங்குவளை
மருங்கலரும் வயலாலி,
நெய்யிலங்கு சுடராழிப்
படையானை நெடுமாலை,
கையிலங்கு வேல்கலியன்
கண்டுரைத்த தமிழ்மாலை,
ஐயிரண்டு மிவைவல்லார்க்
கருவினைக ளடையாவே. (2) 3.6.10

1208
கள்வன்கொல் யானறியேன்
கரியானொரு காளைவந்து,
வள்ளிமருங் குலென்றன்
மடமானினைப் போதவென்று,
வெள்ளிவளைக் கைப்பற்றப்
பெற்றதாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி
யணியாலி புகுவர்க்கொலோ. (2) 3.7.1

1209
பண்டிவ னாயன்நங்காய்.
படிறன்புகுந்து, என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய்
நுகர்ந்தானை யுகந்து,அவன்பின்
கெண்டையொண் கண்மிளிரக்
கிளிபோல்மிழற் றிநடந்து,
வண்டமர் கானல்மல்கும்
வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.2

1210
அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய்.
அரக்கர்க்குலப் பாவைதன்னை,
வெஞ்சின மூக்கரிந்த
விறலோந்திறங் கேட்கில்,மெய்யே
பஞ்சியல் மெல்லடியெம்
பணைத்தோளி பரக்கழிந்து,
வஞ்சியந் தண்பணைசூழ்
வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.3

1211
ஏதுஅவன் தொல்பிறப்பு
இளைய வன்வளை யூதி,மன்னர்
தூதுவ னாயவனூர்
சொலுவீர்கள். சொலீரறியேன்,
மாதவன் தந்துணையா
நடந்தாள்தடஞ் சூழ்புறவில்,
போதுவண் டாடுசெம்மல்
புனலாலி புகுவர்க்கொலோ. 3.7.4

1212
தாயெனை யென்றிரங்காள்
தடந்தோளி தனக்கமைந்த,
மாயனை மாதவனை
மதித்தென்னை யகன்றைவள்,
வேயன தோள்விசிறிப்
பெடையன்ன மெனநடந்து,
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவர்க்கொலோ. 3.7.5

1213
எந்துணை யென்றெடுத்தேற்
கிறையேனு மிரங்கிற்றிலள்,
தன்துணை யாயவென்றன்
தனிமைக்கு மிரங்கிற்றிலள்,
வன்துணை வானவர்க்காய்
வரஞ்செற்றரங் கத்துறையும்,
இந்துணை வன்னொடும்போ
யெழிலாலி புகுவர்க்கொலோ. (2) 3.7.6

1214
அன்னையு மத்தனுமென்
றடியோமுக் கிரங்கிற்றிலள்,
பின்னைதன் காதலன்றன்
பெருந்தோள்நலம் பேணினளால்,
மின்னையும் வஞ்சியையும்
வென்றிலங்கு மிடையாள்நடந்து,
புன்னையும் அன்னமும்சூழ்
புனலாலி புகுவர்க்கொலோ. 3.7.7

1215
முற்றிலும் பைங்கிளியும்
பந்துமூசலும் பேசுகின்ற,
சிற்றில்மென் பூவையும்விட்
டகன்றசெழுங் கோதைதன்னை,
பெற்றிலேன் முற்றிழையைப்
பிறப்பிலிபின் னேநடந்து,
மற்றெல்லாம் கைதொழப்போய்
வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.8

1216
காவியங் கண்ணியெண்ணில்
கடிமாமலர்ப் பாவையொப்பாள்,
பாவியேன் பெற்றமையால்
பணைத்தோளி பரக்கழிந்து,
தூவிசே ரன்னமன்ன
நடையாள்நெடு மாலொடும்போய்,
வாவியந் தண்பணைசூழ்
வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.9

1217
தாய்மனம் நின்றிரங்கத்
தனியேநெடு மால்துணையா,
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவரென்று,
காய்சின வேல்கலிய
னொலிசெய்தமிழ் மாலைபத்தும்,
மேவிய நெஞ்சுடையார்
தஞ்சமாவது விண்ணுலகே. (2) 3.7.10

1218
நந்தா விளக்கே அளத்தற் கரியாய்.
நரநா ரணனே கருமா முகில்போல்
எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று
இமையோர் பரவு மிடம்,எத் திசையும்
கந்தா ரமந்தே னிசைபாடமாடே
களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. (2) 3.8.1

1219
முதலைத் தனிமா முரண்தீர வன்று
முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய,
விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி
வினைதீர்த்த வம்மானிடம்,விண்ணணவும்
பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப்
பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம்,
மதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.2

1220
கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று
கொடுமா முதலைக் கிடர்செய்து, கொங்கார்
இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ
டணைந்திட்ட வம்மானிடம்,ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பு மகிலும்
அணிமுத்தும் வெண்சா மரையோடு,பொன்னி
மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.3

1221
சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று
திசைநான்கும் நான்கு மிரிய, செருவில்
கறையார் நெடுவே லரக்கர் மடியக்
கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்,
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்
ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்,
மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.4

1222
இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு
இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,
தழைவாட வந்தாள் குருந்த மொசித்துத்
தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,
குழையாட வல்லிக் குலமாடமாடே
குயில்கூவ நீடு கொடிமாட மல்கு,
மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்,
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.5

1223
பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப்
பகுவாய்க் கழுதுக் கிரங்காது, அவள்தன்
உண்ணா முலைமற் றவளாவி யோடும்
உடனே சுவைத்தா நிடம்,ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக்
கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து,
மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.6

1224
தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத்
தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்,
இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல்
அடிவைத்த அம்மா னிடம்,மாமதியம்
திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில்
செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று,மூன்றில்
வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.7

1225
துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம்
துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும், முற்றா
விளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம்
விளைவித்த வம்மானிடம்,வேல் நெடுங்கண்
முளைவாளெயிற்று மடவார் பயிற்று
மொழிகேட் டிருந்து முதிராதவின்சொல்,
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.8

1226
விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த
விகிர்தா விளங்கு சுடராழி யென்னும்,
படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று
இமையோர் பரவு மிடம்,பைந் தடத்துப்
பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத்
தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர்,
மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.9

1227
வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர்
மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு,என்றும்
தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன்
கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
கண்டார் வணங்கக் களியானை மீதே
கடல்சூ ழுலகுக் கொருகா வலராய்,
விண்டோ ய் நெடுவெண் குடைநீழ லின்கீழ்
விரிநீ ருலகாண் டுவிரும் புவரே. (2) 3.8.10

1228
சலங்கொண்ட இரணியன
தகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்தமுதங்
கொண்டுகந்த காளை,
நலங்கொண்ட கருமுகில்போல்
திருமேனி யம்மான்
நாடோ றும் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்,
சலங்கொண்டு மலர்சொரியும்
மல்லிகையொண் செருந்தி
சண்பகங்கள் மணநாறும்
வண்பொழிலி னூடே,
வலங்கொண்டு கயலோடி
விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. (2) 3.9.1

1229
திண்ணியதோ ரரியுருவாய்த்
திசையனைத்தும் நடுங்கத்
தேவரொடு தானவர்கள்
திசைப்ப,இரணியனை
நண்ணியவன் மார்வகலத்
துகிர்மடுத்த நாதன்
நாடோ றும் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்,
எண்ணில்மிகு பெருஞ்செல்வத்
தெழில்விளங்கு மறையும்
ஏழிசையும் கேள்விகளு
மியன்றபெருங் குணத்தோர்,
மண்ணில்மிகு மறையவர்கள்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.9.2

1230
அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளு மெல்லாம்
அமுதுசெய்த திருவயிற்றன்
அரன்கொண்டு திரியும்,
முண்டமது நிறைத்தவன்கண்
சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்,
எண்டிசையும் பெருஞ்செந்ந
லிளந்தெங்கு கதலி
இலைக்கொடியொண் குலைக்கமுகொ
டிகலிவளம் சொரிய
வண்டுபல விசைபாட
மயிலாலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.9.3

1231
கலையிலங்கு மகலல்குல்
அரக்கர்க்குலக் கொடியைக்
காதொடுமூக் குடனரியக்
கதறியவ ளோடி,
தலையிலங்கை வைத்துமலை
யிலங்கைபுகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்,
சிலையிலங்கு மணிமாடத்
துச்சிமிசைச் சூலம்
செழுங்கொண்ட லகடிரியச்
சொரிந்தசெழு முத்தம்,
மலையிலங்கு மாளிகைமேல்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.9.4

1232
மின்னனைய _ண்மருங்குல்
மெல்லியற்கா யிலங்கை
வேந்தன்முடி யொருபதும்தோ
ளிருபதும்போ யுதிர
தன்நிகரில் சிலைவளைத்தன்
றிலங்கைபொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்,
செந்நெலொடு செங்கமலம்
சேல்கயல்கள் வாளை
செங்கழுநீ ரொடுமிடைந்து
கழனிதிகழ்ந் தெங்கும்,
மன்னுபுகழ் வேதியர்கள்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.9.5

1233
பெண்மைமிகு வடிவுகொடு
வந்தவளைப் பெரிய
பேயினது உருவுகொடு
மாளவுயி ருண்டு
திண்மைமிகு மருதொடுநற்
சகடமிறுத் தருளும்
தேவனவன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்,
உண்மைமிகு மறையொடுநற்
கலைகள்நிறை பொறைகள்
உதவுகொடை யென்றிவற்றி
னொழிவில்லா, பெரிய
வண்மைமிகு மறையவர்கள்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.9.6

1234
விளங்கனியை யிளங்கன்று
கொண்டுதிர வெறிந்து
வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள்
வைத்ததயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுதுசெய்திவ்
வுலகுண்ட காளை
உகந்தினிது நாடோ றும்
மருவியுறை கோயில்,
இளம்படிநற் கமுகுகுலைத்
தெங்குகொடிச் செந்நெல்
ஈன்கரும்பு கண்வளரக்
கால்தடவும் புனலால்,
வளங்கொண்ட பெருஞ்செல்வம்
வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.9.7

1235
ஆறாத சினத்தின்மிகு
நரகனுர மழித்த
அடலாழித் தடக்கையன்
அலர்மகட்கும் அரற்கும்,
கூறாகக் கொடுத்தருளும்
திருவுடம்பன் இமையோர்
குலமுதல்வன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்,
மாறாத மலர்க்கமலம்
செங்கழுநீர் ததும்பி
மதுவெள்ள மொழுகவய
லுழவர்மடை யடைப்ப,
மாறாத பெருஞ்செல்வம்
வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.9.8

1236
வங்கமலி தடங்கடலுள்
வானவர்க ளோடு
மாமுனிவர் பலர்கூடி
மாமலர்கள் தூவி,
எங்கள்தனி நாயகனே
எமக்கருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்,
செங்கயலும் வாளைகளும்
செந்நெலிடக் குதிப்பச்
சேலுகளும் செழும்பணைசூழ்
வீதிதொறும் மிடைந்து,
மங்குல்மதி யகடுரிஞ்சு
மணிமாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.9.9

1237
சங்குமலி தண்டுமுதல்
சக்கரமுனேந்தும்
தாமரைக்கண் நெடியபிரான்
தானமரும் கோயில்,
வங்கமலி கடலுலகில்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர்மேல்
வண்டறையும் பொழில்சூழ்,
மங்கையர்தம் தலைவன்மரு
வலர்தமுடல் துணிய
வாள்வீசும் பரகாலன்
கலிகன்றி சொன்ன,
சங்கமலி தமிழ்மாலை
பத்திவைவல்லார்கள்
தரணியொடு விசும்பாளும்
தன்மைபெறு வாரே. (2) 3.9.10

1238
திருமடந்தை மண்மடந்தை
யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல
அடியவர்கட் கென்றும்
அருள்நடந்து,இவ் வேழுலகத்
தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்
பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு
கைதைகள்செங்க் கழுநீர்
தாமரைகள் தடங்கடொறு
மிடங்கடொறும் திகழ,
அருவிடங்கள் பொழில்தழுவி
யெழில்திகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. (2) 3.10.1

1239
வென்றிமிகு நரகனுர
மதுவழிய விசிறும்
விறலாழித் தடக்கையன்
விண்ணவர்கட்கு, அன்று
குன்றுகொடு குரைகடலைக்
கடைந்தமுத மளிக்கும்
குருமணியென் னாரமுதம்
குலவியுறை கோயில்,
என்றுமிகு பெருஞ்செல்வத்
தெழில்விளங்கு மறையோர்
ஏழிசையும் கேள்விகளு
மியன்றபெருங் குணத்தோர்,
அன்றுலகம் படைத்தவனே
யனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.2

1240
உம்பருமிவ் வேழுலகு
மேழ்கடலு மெல்லாம்
உண்டபிரான்ண்டர்கள்முன்
கண்டுமகிழ வெய்த,
கும்பமிகு மதயானை
மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சிபிடித் தடித்தபிரான்
கோயில்,மருங் கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம்
பலபுன்னை காட்டப்
பலங்கனிகள் தேன்காட்டப்
படவரவே ரல்குல்,
அம்பனைய கண்மடவார்
மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.3

1241
ஓடாத வாளரியி
னுருவமது கொண்டு அன்
றுலப்பில்மிகு பெருவரத்த
விரணியனைப் பற்றி,
வாடாத வள்ளுகிரால்
பிளந்தவன்றன் மகனுக்
கருள்செய்தான் வாழுமிடம்
மல்லிகைசெங் கழுநீர்,
சேடேறு மலர்ச்செருந்தி
செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணநாறும்
வண்பொழிலி னூடே,
ஆடேறு வயலாலைப்
புகைகமழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.4

1242
கண்டவர்தம் மனம்மகிழ
மாவலிதன் வேள்விக்
களவில்மிகு சிறுகுறளாய்
மூவடியென் றிரந்திட்டு,
அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளு மெல்லாம்
அளந்தபிரா னமருமிடம்
வளங்கொள்பொழி லயலே,
அண்டமுறு முழவொலியும்
வண்டினங்க ளொலியும்
அருமறையி னொலியும்மட
வார்சிலம்பி னொலியும்,
அண்டமுறு மலைகடலி
னொலிதிகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.5

1243
வாணெடுங்கண் மலர்க்கூந்தல்
மைதிலிக்கா இலங்கை
மன்னன்முடி யொருபதும்தோ
ளிருபதும்போ யுதிர,
தாணெடுந்தின் சிலைவளைத்த
தயரதன்சேய் என்தன்
தனிச்சரண்வா னவர்க்கரசு
கருதுமிடம், தடமார்
சேணிடங்கொள் மலர்க்கமலம்
சேல்கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய
வுதிர்ந்தசெழு முத்தம்,
வாணெடுங்கண் கடைசியர்கள்
வாருமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.6

1244
தீமனத்தான் கஞ்சனது
வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனைத
னாருயிரும் செகுத்தான்,
காமனைத்தான் பயந்தகரு
மேனியுடை யம்மான்
கருதுமிடம் பொருதுபுனல்
துறைதுறைமுத் துந்தி,
நாமனத்தால் மந்திரங்கள்
நால்வேதம் ஐந்து
வேள்வியோ டாறங்கம்
நவின்றுகலை பயின்று,அங்
காமனத்து மறையவர்கள்
பயிலுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.7

1245
கன்றதனால் விளவெறிந்து
கனியுதிர்த்த காளை
காமருசீர் முகில்வண்ணன்
காலிகள்முன் காப்பான்,
குன்றதனால் மழைதடுத்துக்
குடமாடு கூத்தன்
குலவுமிடம் கொடிமதிள்கள்
மாளிகைகோ புரங்கள்,
துன்றுமணி மண்டபங்கள்
சாலைகள்தூ மறையோர்
தொக்கீண்டித் தொழுதியொடு
மிகப்பயிலும் சோலை,
அன்றலர்வாய் மதுவுண்டங்
களிமுரலு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.8

1246
வஞ்சனையால் வந்தவள்த
னுயிருண்டு வாய்த்த
தயிருண்டு வெண்ணெயமு
துண்டு,வலி மிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ்
வுலகுண்ட காளை
கருதுமிடம் காவிரிசந்
தகில்கனக முந்தி,
மஞ்சுலவு பொழிலூடும்
வயலூடும் வந்து
வளங்கொடுப்ப மாமறையோர்
மாமலர்கள் தூவி,
அஞ்சலித்தங் கரிசரணென்
றிரைஞ்சுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே. 3.10.9

1247
சென்றுசின விடையேழும்
படவடர்த்துப் பின்னை
செவ்வித்தோள் புணர்ந்துகந்த
திருமால்தன் கோயில்,
அன்றயனு மரன்சேயு
மனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகர
மமர்ந்தசெழுங் குன்றை,
கன்றிநெடு வேல்வலவன்
மங்கையர்தம் கோமான்
கலிகன்றி யொலிமாலை
யைந்தினொடு மூன்றும்,
ஒன்றினொடு மொன்றுமிவை
கற்றுவல்லார் உலகத்
துத்தமர்கட் குத்தமரா
யும்பருமா வர்களே. (2) 3.10.10
பெரிய திருமொழி நான்காம் பத்து

1248
போதலர்ந்த பொழில்சோலைப்
புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும்
தடமண்ணித் தென்கரைமேல்
மாதவன்றா னுறையுமிடம்
வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும்
திருத்தேவ னார்தொகையே (4.1.1)

1249
யாவருமா யாவையுமா
யெழில்வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய
மூர்த்தியமர்ந் துறையுமிடம்,
மாவரும்திண் படைமன்னை
வென்றிகொள்வார் மன்னுநாங்கை
தேவரும்சென் றிறைஞ்சுபொழில்
திருத்தேவ னார்தொகையே (4.1.2)

1250
வானாடும் மண்ணாடும்
மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான்
தலைவனமர்ந் துறையுமிடம்,
ஆனாத பெருஞ்செல்வத்
தருமறையோர் நாங்கைதன்னுள்
தேனாரு மலர்பொழில்சூழ்
திருத்தேவ னார்தொகையே (4.1.3)

1251
இந்திரனு மிமையவரும்
முனிவர்களும் எழிலமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும்
கதிரவனும் சந்திரனும்,
எந்தையெமக் கருள், எனநின்
றருளுமிடம் எழில்நாங்கை
சுந்தரநல் பொழில்புடைசூழ்
திருத்தேவ னார்தொகையே (4.1.4)

1252
அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளும் குலவரையும்
உண்டபிரா னுறையுமிடம்
ஓளிமணிசந் தகில்கனகம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும்
திகழ்மண்ணித் தென்கரைமேல்,
திண்திறலார் பயில்நாங்கைத்
திருத்தேவ னார்தொகையே (4.1.5)

1253
ஞாலமெல்லா மமுதுசெய்து
நான்மறையும் தொடராத
பாலகனா யாலிலையில்
பள்ளிகொள்ளும் பரமனிடம்,
சாலிவளம் பெருகிவரும்
தடமண்ணித் தென்கரைமேல்
சேலுகளும் வயல்நாங்கைத்
திருத்தேவ னார்தொகையே (4.1.6)

1254
ஓடாத வாளரியி
னுருவாகி யிரணியனை
வாடாத வள்ளுகிரால்
பிளந்தளைந்த மாலதிடம்,
ஏடேறு பெருஞ்செல்வத்
தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சேடேறு பொழில்தழுவு
திருத்தேவ னார்தொகையே (4.1.7)

1255
வாராரு மிளங்கொங்கை
மைதிலியை மணம்புணர்வான்,
காரார்திண் சிலையிறுத்த
தனிக்காளை கருதுமிடம்
ஏராரும் பெருஞ்செல்வத்
தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சீராரும் மலர்பொழில்சூழ்
திருத்தேவ னார்தொகையே (4.1.8)

1256
கும்பமிகு மதயானை
பாகனொடும் குலைந்துவிழ
கொம்பதனைப் பறித்தெறிந்த
கூத்தனமர்ந் துறையுமிடம்,
வம்பவிழும் செண்பகத்தின்
மணங்கமழும் நாங்கைதன்னுள்,
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ்
திருத்தேவ னார்தொகையே (4.1.9)

1257
காரார்ந்த திருமேனிக்
கண்ணனமர்ந் துறையுமிடம்,
சீரார்்த பொழில்நாங்கைத்
திருத்தேவ னார்தொகைமேல்
கூரார்ந்த வேற்கலியன்
கூறுதமிழ் பத்தும்வல்லார்
எரார்ந்த வைகுந்தத்
திமையவரோ டிருப்பாரே (4.1.10)

1258
கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன்
கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு
அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி
சூதகம் வாழைகள்சூழ்
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே (4.2.1)

1259
பல்ல வந்fதிகழ் பூங்கடம் பேறியக்
காளியன் பணவரங்கில்,
ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த
உம்பர்க்கோ னுறைகோயில்,
நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை
வேள்வியோ டாறங்கம்,
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே (4.2.2)

1260
அண்ட ரானவர் வானவர் கோனுக்கென்
றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன்
உகந்தினி துறைகோயில்,
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில்
குலமயில் நடமாட,
வண்டு தானிசை பாடிடு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே (4.2.3)

1261
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன்
பாகனைச் சாடிப்புக்கு,
ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை
உதைத்தவ னுறைகோயில்,
கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு
கழனியில் மலிவாவி
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே (4.2.4)

1262
சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன்
படையொடுங் கிளையோடும்
ஓட வாணனை யாயிரந் தோள்களும்
துணித்தவ னுறைகோயில்,
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப்
பகலவ னொளிமறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே (4.2.5)

1263
அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன்
அலர்கொடு தொழுதேத்த,
கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய
கண்ணன்வந் துறைகோயில்,
கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள்
காட்டமா பதுமங்கள்,
மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே (4.2.6)

1264
உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன
துரம்பிளந் துதிரத்தை
அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய
அப்பன்வந் துறைகோயில்,
இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ
டெழில்கொள்பந் தடிப்போர்,கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே (4.2.7)

1265
வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன்
சாபமற் றதுநீங்க
மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம்
முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன்
பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே (4.2.8)

1266
இந்து வார்சடை யீசனைப் பயந்தநான்
முகனைத்தன் னெழிலாரும்
உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன்
உகந்தினி துறைகோயில்,
குந்தி வாழையின் கொழுங்கனி _கர்ந்துதன்
குருளையைத் தழுவிப்போய்,
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே (4.2.9)

1267
மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர்
வண்புரு டோ த்தமத்துள்,
அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன்
ஆலிமன் அருள்மாரி,
பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப்
பத்தும்வல் லார்,உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ
ரோடும் கூடுவரே (4.2.10)

1268
பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும்
பேரரு ளாளனெம் பிரானை,
வாரணி முலையாள் மலர்மக ளோடு
மண்மக ளுமுடன் நிற்ப,
சீரணி மாட நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காரணி மேகம் நின்றதொப் பானைக்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.1)

1269
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப்
பேதியா வின்பவெள் ளத்தை,
இறப்பெதிர் காலக் கழிவுமா னானை
ஏழிசை யின்சுவை தன்னை,
சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக்
கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.2)

1270
திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும்
செழுநிலத் துயிர்களும் மற்றும்,
படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை,
பங்கயத் தயனவ னனைய,
திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.3)

1271
வசையறு குறளாய் மாவலி வேள்வி
மண்ணள விட்டவன் றன்னை,
அசைவறு மமர ரடியிணை வணங்க
அலைகடல் துயின்றவம் மானை,
திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
உயர்மணி மகுடம் சூடிநின் றானைக்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.4)

1272
தீமனத் தரக்கர் திறலழித் தவனே.
என்றுசென் றடைந்தவர் தமக்கு,
தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும்
தயரதன் மதலையைச் சயமே,
தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.5)

1273
மல்லைமா முந்நீ ரதர்பட மலையால்
அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,
கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை
கலங்கவோர் வாளிதொட் டானை,
செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அல்லிமா மலராள் தன்னொடு மடியேன்
கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே (4.3.6)

1274
வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும்
வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,
கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக்
கருமுகில் திருநிறத் தவனை,
செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக்
கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே (4.3.7)

1275
அன்றிய வாண னாயிரம் தோளும்
துணியவன் றாழிதொட் டானை,
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல்
மேவிய வேதநல் விளக்கை,
தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.8)

1276
களங்கனி வண்ணா. கண்ணணே. என்றன்
கார்முகி லே என நினைந்திட்டு,
உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள்
உள்ளத்து ளூறிய தேனை,
தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.9)

1277
தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்
மங்கையார் வாட்கலி கன்றி,
ஊனமில் பாட லொன்பதோ டொன்றும்
ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,
மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு
வானவ ராகுவர் மகிழ்ந்தே (4.3.10)

1278
மாற்றரசர் மணிமுடியும்
திறலும் தேசும்
மற்றவர்தம் காதலிமார்
குழையும், தந்தை
கால்தளையு முடன்கழல
வந்து தோன்றிக்
கதநாகம் காத்தளித்த
கண்ணர் கண்டீர்,
நூற்றிதழ்கொ ளரவிந்தம்
நுழைந்த பள்ளத்
திளங்கமுகின் முதுபாளை
பகுவாய் நண்டின்,
சேற்றளையில் வெண்முத்தம்
சிந்து நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே (4.4.1)

1279
பொற்றொடித்தோள் மடமகள்தன்
வடிவு கொண்ட
பொல்லாத வன்பேய்ச்சி
கொங்கை வாங்கி,
பெற்றெடுத்த தாய்போல
மடுப்ப ஆரும்
பேணாநஞ் சுண்டுகந்த
பிள்ளை கண்டீர்,
நெல்fதொடுத்த மலர்நீலம்
நிறைந்த சூழல்
இருஞ்சிறைய வண்டொலியும்
நெடுங்க ணார்தம்,
சிற்றடிமேல் சிலம்பொலியும்
மிழற்று நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே (4.4.2)

1280
படலடைந்த சிறுகுரம்பை
நுழைந்து புக்குப்
பசுவெண்ணெய் பதமாரப்
பண்ணை முற்றும்,
அடலடர்த்த வேற்கண்ணார்
தோக்கை பற்றி
அலந்தலைமை செய்துழலு
மையன் கண்டீர்,
மடலெடுத்த நெடுன்தெங்கின்
பழங்கல் வீழ
மாங்கனிகள் திரட்டுருட்டா
வருநீர்ப் பொன்னி,
திடலெடுத்து மலர்சும்தங்
கிழியு நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே (4.4.3)

1281
வாராரும் முலைமடவாள்
பின்னைக் காகி
வளைமருப்பிற்f கடுஞ்சினத்து
வன்தா ளார்ந்த,
காரார்திண் விடையடர்த்து
வதுவை யாண்ட
கருமுகில்போல் திருநிறத்தென்
கண்ணர் கண்டீர்,
ஏராரும் மலர்ப்பொழில்கள்
தழுவி யெங்கும்
எழில்மதியைக் கால்தொடா
விளங்கு சோதி,
சீராரு மணிமாடம்
திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே (4.4.4)

1282
கலையிலங்கு மகலல்குல்
கமலப் பாவை
கதி ர்முத்த வெண்ணகையாள்
கருங்க ணாய்ச்சி,
முலையிலங்கு மொளிமணிப்பூண்
வடமும் தேய்ப்ப
மூவாத வரைநெடுந்தோள்
மூர்த்தி கண்டீர்,
மலையிலங்கு நிரைச்சந்தி
மாட வீதி
ஆடவரை மடமொழியார்
முகத்து இரண்டு
சிலைவிலங்கி மனஞ்சிறைகொண்
டிருக்கும் நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே (4.4.5)

1283
தான்போலு மென்றெழுந்தான்
தரணி யாளன்
அதுகண்டு தரித்திருப்பா
னரக்கர் தங்கள்,
கோன்போலு மென்றெழுந்தான்
குன்ற மன்ன
இருபதுதோ ளுடன்துணித்த
வொருவன் கண்டீர்,
மான்போலு மென்னோக்கின்
செய்ய வாயார்
மரகதம் போல் மடக்கிளியைக்
கைமேல் கொண்டு,
தேன்போலு மென்மழலை
பயிற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே (4.4.6)

1284
பொங்கிலங்கு புரிநூலும்
தோலும் தாழப்
பொல்லாத குறளுருவாய்ப்
பொருந்தா வாணன்
மங்கலம்சேர் மறைவேள்வி
யதனுள் புக்கு
மண்ணகலம் குறையிரந்த
மைந்தன் கண்டீர்,
கொங்கலர்ந்த மலர்க்குழலார்
கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பளைந்த
கோலந் தன்னால்,
செங்கலங்கல் வெண்மணல்மேல்
தவழும் நாங்கூர்த்
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே (4.4.7)

1285
சிலம்பினிடைச் சிறுபரல்போல்
பெரிய மேரு
திருக்குளம்பில் கணகணப்பத்
திருவா காரம்
குலுங்க, நில மடந்தைதனை
யிடந்து புல்கிக்
கோட்டிடைவைத் தருளியவெங்
கோமான் கண்டீர்,
இலங்கியநான் மறையனைத்து
மங்க மாறும்
ஏழிசையும் கேள்விகளு
மெண்டிக் கெங்கும்,
சிலம்பியநற் பெருஞ்செல்வம்
திகழும் நாங்கூர்த்
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே (4.4.8)

1286
ஏழுலகும் தாழ்வரையு
மெங்கு மூடி
எண்டிசையு மண்டலமும்
மண்டி, அண்டம்
மோழையெழுந் தாழிமிகும்
ஊழி வெள்ளம்
முன்னகட்டி லொடுக்கியவெம்
மூர்த்தி கண்டீர்,
ஊழிதொறு மூழிதொறு
முயர்ந்த செல்வத்
தோங்கியநான் மறையனைத்தும்
தாங்கு நாவர்,
சேழுயர்ந்த மணிமாடம்
திகழும் நாங்கூர்த்
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே (4.4.9)

1287
சீரணிந்த மணிமாடம்
திகழும் நாங்கூர்த்
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலை,
கூரணிந்த வேல்வலவன்
ஆலி நாடன்
கொடிமாட மங்கையர்கோன்
குறைய லாளி
பாரணிந்த தொல்புகழான்
கலியன் சொன்ன
பாமாலை யிவையைந்து
மைந்தும் வல்லார்,
சீரணிந்த வுலகத்து
மன்ன ராகிச்
சேண்விசும்பில் வானவராய்த்
திகழ்வர் தாமே (4.4.10)

1288
தூம்புடைப் பனைக்கை வேழம்
துயர்கெடுத் தருளி, மன்னு
காம்புடைக் குன்ற மேந்திக்
கடுமழை காத்த எந்தை,
பூம்புனல் பொன்னி முற்றும்
புகுந்துபொன் வரண்ட, எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே (4.5.1)

1289
கவ்வைவா ளெயிற்று வன்பேய்க்
கதிர்முலை சுவைத்து,இ லங்கை
வவ்விய இடும்பை தீரக்
கடுங்கணை துரந்த எந்தை,
கொவ்வைவாய் மகளிர் கொங்கைக்
குங்குமம் கழுவிப் போந்த,
தெய்வநீர் கமழும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே (4.5.2)

1290
மாத்தொழில் மடங்கக் செற்று
மறுதிற நடந்து வன்தாள்
சேத்தொழில் சிதைத்துப் பின்னை
செவ்வித்தோள் புணர்ந்த எந்தை,
நாத்தொழில் மறைவல் லார்கள்
நயந்தறம் பயந்த வண்கைத்
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே (4.5.3)

1291
தாங்கருஞ் சினத்து வன்தாள்
தடக்கைமா மருப்பு வாங்கி,
பூங்குருந் தொசித்துப் புள்வாய்
பிளந்தெரு தடர்த்த எந்தை,
மாங்கனி நுகர்ந்த மந்தி
வந்துவண் டிரிய வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே (4.5.4)

1292
கருமக ளிலங்கை யாட்டி
பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்
வருமவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை,
பெருமகள் பேதை மங்கை
தன்னொடும் பிரிவி லாத,
திருமகள் மருவும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தனே (4.5.5)

1293
கெண்டையும் குறளும் புள்ளும்
கேழலு மரியும் மாவும்,
அண்டமும் சுடரும் அல்ல
ஆற்றலு மாய எந்தை,
ஓண்டிறல் தென்ன னோட
வடவர சோட்டங் கண்ட,
திண்டிற லாளர் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தனே (4.5.6)

1294
குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்
தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே (4.5.7)

1295
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும்,
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை,
பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய,
செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே (4.5.8)

1296
பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை,
மூவரி லெங்கள் மூர்த்தி இவன், என முனிவரோடு,
தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே (4.5.9)

1297
திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை
மங்கையர் தலைவன் வண்தார்க்f கலியன்வா யொலிகள் வல்லார்,
பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும்
வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே (4.5.10)

1298
தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,
நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந்தீர்த்தாய்,
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே (4.6.1)

1299
மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,
கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே (4.6.2)

1300
உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி,
கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரசளித்தாய்,
பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக்
கருத்தனே காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே (4.6.3)

1301
முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து, ஆங்
கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,
கனைகழல் காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே (4.6.4)

1302
படவர வுச்சி தன்மேல் பாய்ந்துபன்னடங்கள் செய்து,
மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,
தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,
கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே (4.6.5)

1303
மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,
பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,
நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,
கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே (4.6.6)

1304
மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,
பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்
காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களை கணீயே (4.6.7)

1305
ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,
காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே (4.6.8)

1306
சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி,
அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்,
மந்தமார் பொழில்க டோ றும் மடமயி லாலும் நாங்கை,
கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே (4.6.9)

1307
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே (4.6.10)

1308
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா, அடியே னிடரைக் களையாயே (4.7.1)

1309
கொந்தார் துளவ மலர்கொன் டணிவானே,
நந்தா தபெரும் புகழ்வே தியர்நாங்கூர்,
செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்
எந்தாய், அடியே னிடரைக் களையாயே (4.7.2)

1310
குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,
நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்
சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்
நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே (4.7.3)

1311
கானார் கரிகொம் பதொசித்த களிறே,
நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,
தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே (4.7.4)

1312
வேடார் திருவேங் கடம்மேய விளக்கே,
நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்,
சேடார் பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய்,
பாடா வருவேன் விணையா யினபாற்றே (4.7.5)

1313
கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,
நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,
எல்லா இடரும் கெடுமா றருளாயே (4.7.6)

1314
கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,
நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,
சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்
மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே (4.7.7)

1315
வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,
நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்,
சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆரா வமுதே, அடியேற் கருளாயே (4.7.8)

1316
பூவார் திருமா மகள்புல் லியமார்பா,
நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்
தேவா திருவெள்ளக் குளத்துறை வானே,
ஆவா அடியா னிவன், என் றருளாயே (4.7.9)

1317
நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை,
கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,
வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே (4.7.10)

1318
கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும், காமருசீர்க்
குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும்,
தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும்,
பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.1)

1319
கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும்,
வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும்,
செஞ்சொலாளர் நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.2)

1320
அண்டர்கோனென் னானையென்றும் ஆயர்மாதர் கொங்கைபுல்கு
செண்டனென்றும், நான்மறைகள் தேடியோடும் செல்வனென்றும்,
வண்டுலவு பொழில்கொள்நாங்கை மன்னுமாய னென்றென்றோதி,
பண்டுபோலன் றென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.3)

1321
கொல்லையானாள் பரிசழிந்தாள் கோல்வளையார் தம்முகப்பே,
மல்லைமுன்னீர் தட்டிலங்கை கட்டழித்த மாயனென்றும்,
செல்வம்மல்கு மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி,
பல்வளையா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.4)

1322
அரக்கராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,
குரக்கரச னென்றும்கோல வில்லியென்றும், மாமதியை
நெருக்குமாட நீடுநாங்கை நின்மலன்தா னென்றென்றோதி,
பரக்கழிந்தா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.5)

1323
ஞாலமுற்று முண்டுமிழிந்த நாதனென்றும், நானிலஞ்fசூழ்
வேலையன்ன கோலமேனி வண்ணனென்றும், மேலெழுந்து
சேலுகளும் வயல்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பாலின்நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.6)

1324
நாடியென்ற னுள்ளொங்கொண்ட நாதனென்றும், நான்மறைகள்
தேடியென்றும் காணமாட்டாச் செல்வனென்றும், சிறைகொள்வண்டு
சேடுலவு பொழில்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பாடகம்சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.7)

1325
உலகமேத்து மொருவனென்றும் ஒண்சுடரோ டும்பரெய்தா,
நிலவுமாழிப் படையனென்றும் நேசனென்றும், தென்திசைக்குத்
திலதமன்ன மறையோர்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பலருமேச வென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.8)

1326
கண்ணனென்றும் வானவர்கள் காதலித்து மலர்கள்தூவும்,
எண்ணனென்று மின்பனென்றும் ஏழுலுகுக் காதியென்றும்,
திண்ணமாட நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பண்ணினன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (4.8.9)

1327
பாருள்நல்ல மறையோர்நாங்கைப் பார்த்தன்பள்ளி செங்கண்மாலை,
வார்கொள்நல்ல முலைமடவாள் பாடலைந்தாய் மொழிந்தமாற்றம்,
கூர்கொள்நல்ல வேல்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்,
ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள் இன்பம்நாளு மெய்துவாரே (4.8.10)

1328
நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,
இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே,
எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி,
நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே? (4.9.1)

1329
சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா, அந்த ணாலி மாலே. சோலை மழகளிறே
நந்தா விளக்கின் சுடரே. நறையூர் நின்ற நம்பீ, என்
எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. (4.9.2)

1330
பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த,
மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும்
ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்
ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே. (4.9.3)

1331
ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு,
காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே. (4.9.4)

1332
தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்-
கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே. (4.9.5)

1333
சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,
எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை,
நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,
எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே. (4.9.6)

1334
மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா
விட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே,
காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த,
நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே (4.9.7)

1335
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால்,
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையுந் திருமேனி,
இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. (4.9.8)

1336
எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்,
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்,
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி,
இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே (4.9.9)

1337
ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை,
காரார் புறவில் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த,
சீரா ரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து,
ஆரா ரவரே யமரர்க் கெ்று மமர ராவாரே (4.9.10)

1338
ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்டொருகால் ஆலிலை வளர்ந்தவெம்
பெருமான்,
பேய்ச்சியை முலயுண் டிணைமரு திறுத்துப் பெருநில மளந்தவன் கோயில்,
காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களி னடுவே,
வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.1)


1339
ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டரக்கர் தம் சிரங்களை யுருட்டி,
கார்நிறை மேகம் கலந்தோ ருருவக் கண்ணனார் கருதிய கோயில்,
பூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப் பொதும்பிடை வரிவண்டு மிண்டி,
தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.2)

1340
கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன்
படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன் கோயில்,
படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடகத் தொலிபோய்,
அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.3)

1341
கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன்,
பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்,
துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால்,
செறிமணி மாடக் கொடிகதி ரணவும் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.4)

1342
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து, ஒருகால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில்,
ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென்றெண்ணி,
சீர்மலி பொய்கை சென்றணை கின்ற திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.5)

1343
காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை,
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன்
கோயில்,
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி,
சேற்றிடைக் கயல்க ளுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.6)

1344
ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு,
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே
(4.10.7)

1345
முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர் தம்பெரு மானை,அன் றரியாய்
மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்,
படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபன் மணிகளி னொளியால்,
விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.8)

1346
குடிகுடி யாகக் கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த
அடியவர்க் கருளி யரவணைத் துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில்,
கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய,
வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யதுவே
(4.10.9)

1347
பண்fடுமுன் ஏன மாகியன் றொருகால், பாரிடந் தெயிற்றினில் கொண்டு,
தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை,
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,
கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே (4.10.10)
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து

1348
அறிவ தரியா னனைத்துலகும்
உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமருமிடம்,
நறிய மலர்மேல் சுரும்பார்க்க
எழிலார் மஞ்ஞை நடமாட,
பொறிகொள் சிறைவண் டிசைபாடும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.1)

1349
கள்ளக் குறளாய் மாவலியை
வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின்
துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப்
பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.2)

1350
மேவா வரக்கர் தென்னிலங்கை
வேந்தன் வீயச் சரம்துரந்து,
மாவாய் பிளந்து மல்லடர்த்து
மருதம் சாய்த்த மாலதிடம்,
காவார் தெங்கின் பழம்வீழக்
கயல்கள் பாயக் குருகிரியும்,
பூவார் கழனி யெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.3)

1351
வெற்பால் மாரி பழுதாக்கி
விறல்வா ளரக்கர் தலைவன்றன்,
வற்பார் திரள்தோ ளைந்நான்கும்
துணித்த வல்வில் இராமனிடம்,
கற்பார் புரிசை செய்குன்றம்
கவினார் கூடம் மாளிகைகள்,
பொற்பார் மாட மெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.4)

1352
மையார் தடங்கண் கருங்கூந்தல்
ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,
நெய்யார் பாலோ டமுதுசெய்த
நேமி யங்கை மாயனிடம்,
செய்யார் ஆரல் இரைகருதிச்
செங்கால் நாரை சென்றணையும்,
பொய்யா நாவில் மறையாளர்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.5)

1353
மின்னி னன்ன நுண்மருங்குல்
வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,
மன்னு சினத்த மழவிடைகள்
ஏழன் றடர்த்த மாலதிடம்,
மன்னு முதுநீ ரரவிந்த
மலர்மேல் வரிவண் டிசைபாட,
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.6)

1354
குடையா விலங்கல் கொண்டேந்தி
மாரி பழுதா நிரைகாத்து,
சடையா னோட அடல்வாணன்
தடந்தோள் துணித்த தலைவனிடம்,
குடியா வண்டு கள்ளுண்ணக்
கோல நீலம் மட்டுகுக்கும்,
புடையார் கழனி யெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.7)

1355
கறையார் நெடுவேல் மறமன்னர்
வீய விசயன் தேர்கடவி,
இறையான் கையில் நிறையாத
முண்டம் நிறைத்த வெந்தையிடம்,
மறையால் மூத்தீ யவைவளர்க்கும்
மன்னு புகழால் வண்மையால்,
பொறையால் மிக்க அந்தணர்வாழ்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.8)

1356
துன்னி மண்ணும் விண்ணாடும்
தோன்றா திருளாய் மூடியநாள்,
அன்ன மாகி யருமறைகள்
அருளிச் செய்த அமலனிடம்,
மின்னு சோதி நவமணியும்
வேயின் முத்தும் சாமரையும்,
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.9)

1357
கற்றா மறித்து காளியன்றன்
சென்னி நடுங்க நடம்பயின்ற
பொற்றாமரையாள் தன்கேள்வன்
புள்ளம் பூதங்குடிதன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்க்கோன்
காரார் புயற்கைக் கலிகன்றி,
சொல்தானீரைந் திவைபாடச்
சோர நில்லா துயர்தாமே (5.1.10)

1358
தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே (5.2.1)

1359
செறும்திண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,
நறுந்தண் தீம் fதே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே (5.2.2)

1360
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,
கள்ள நாரை வயலுள், கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே (5.2.3)

1361
கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்
ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,
சேற்றே ருழுவர் கோதைப் போதூண்,
கோல்தேன் முரலும் கூட லூரே (5.2.4)

1362
தொண்டர் பரவச் சுடர்சென் றணவ,
அண்டத் தமரும் அடிக ளூர்போல்,
வண்ட லலையுள் கெண்டை மிளிர,
கொண்ட லதிரும் கூட லூரே (5.2.5)

1363
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,
துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,
எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்
கொக்கின் பழம்வீழ் கூட லூரே (5.2.6)

1364
கருந்தண் கடலும் மலையு முலகும்,
அருந்தும் அடிகள் அமரு மூர்போல்,
பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,
குருந்தம் தழுவும் கூட லூரே (5.2.7)

1365
கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்
மலைவா ழெந்தை மருவு மூர்போல்,
இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூட லூரே (5.2.8)

1366
பெருகு காத லடியேன் உள்ளம்,
உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,
அருகு கைதை மலர, கெண்டை
குருகென் றஞ்சும் கூட லூரே (5.2.9)

1367
காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்
மேவித் திகழும் கூட லூர்மேல்,
கோவைத் தமிழால் கலியன் சொன்ன,
பாவைப் பாடப் பாவம் போமே (5.2.10)

1368
வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை
மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர்
வகையெனக் கருள்புரியே,
மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை
மௌவலின் போதலர்த்தி,
தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு
வெள்ளறை நின்றானே (5.3.1)

1369
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற்
கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ
னே எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய
மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு
வெள்ளறை நின்றானே (5.3.2)

1370
வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன்
உடலக மிருபிளவா,
கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே
எனக் கருள்புரியே,
மையி னார்தரு வராலினம் பாயவண்
தடத்திடைக் கமலங்கள்,
தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு
வெள்ளறை நின்றானே (5.3.3)

1371
வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக
ஐவர்க்கட் கரசளித்த,
காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின்
காதலை யருளெனக்கு,
மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில்
வாயது துவர்ப்பெய்த,
தீம்ப லங்கனித் தேனது _கர்திரு
வெள்ளறை நின்றானே (5.3.4)

1372
மான வேலொண்கண் மடவரல் மண்மகள்
அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,
ஏன மாகியன் றிருநில மிடந்தவ னே
எனக் கருள்புரியே,
கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண்
முறுவல்செய் தலர்கின்ற,
தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு
வெள்ளறை நின்றானே (5.3.5)

1373
பொங்கு நீண்fமுடி யமரர்கள் தொழுதெழ
அமுதினைக் கொடுத்தளிப்பான்,
அங்கொ ராமைய தாகிய வாதி.நின்
னடிமையை யருளெனக்கு,
தங்கு பேடையொ டூடிய மதுகரம்
தையலார் குழலணைவான்,
திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணை
திரு வெள்ளறை நின்றானே (5.3.6)

1374
ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி
அரக்கன்றன் சிரமெல்லாம்,
வேறு வேறுக வில்லது வளைத்தவ னே
எனக் கருள்புரியே,
மாறில் சோதிய மரதகப் பாசடைத்
தாமரை மலர்வார்ந்த,
தேறல் மாந்திவண் டின்னிசை முரல
திரு வெள்ளறை நின்றானே (5.3.7)

1375
முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக
உம்பர்கள் தொழுதேத்த,
அன்ன மாகியன் றருமறை பயந்தவ
னே.எனக் கருள்புரியே,
மன்னு கேதகை சூதக மென்றிவை
வனத்திடைச் சுரும்பினங்கள்,
தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு
வெள்ளறை நின்றானே (5.3.8)

1376
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
றகலிட முழுதினையும்,
பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழு
வேனெனக் கருள்புரியே,
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்
டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு
வெள்ளறை நின்றானே (5.3.9)

1377
மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு
வெள்ளறை யதன்மேய,
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை
ஆதியை யமுதத்தை,
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி
கன்றிசொல் ஐயிரண்டும்,
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை
யோர்க்ர சாவார்க்களே (5.3.10)

1378
உந்தி மேல்நான் முகனைப்
படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள்
தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும்
கொழிக்கும்புனல்f காவிரி,
அந்தி போலும் நிறத்தார்
வயல்சூழ்தென் னரங்கமே (5.4.1)

1379
வையமுண் டாலிலை மேவு
மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான்
பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா
லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி
புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2)

1380
பண்டிவ் வைய மளப்பான்
சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழித் தடக்கைக்
குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார்
புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே (5.4.3)

1381
விளைத்த வெம்போர் விறல்வா
ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை
யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு
மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா
விரிசூழ்தென் னரங்கமே (5.4.4)

1382
வம்புலாம் கூந்தல் மண்டோ தரி
காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த
அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும்
வந்தீண்டி வணங்கும், நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே (5.4.5)

1383
கலையு டுத்த அகலல்குல்
வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண்
டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப்
பொழிலூடும் வந்துந்தி, முன்
அலையெ டுக்கும் புனற்கா
விரிசூழ்தென் னரங்கமே (5.4.6)

1384
கஞ்சன் நெஞ்சும் கடுமல்
லரும்சகடமுங்காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி
யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ
டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும்
கமழும்தென் னரங்கமே (5.4.7)

1385
ஏன மீனா மையோடு
அரியும்சிறு குறளுமாய்,
தானு மாயத் தரணித்
தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப்
புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன்
னவர்சேர்த்தென் னரங்கமே (5.4.8)

1386
சேய னென்றும் மிகப்பெரியன்
நுண்ணேர்மையி னாய,இம்
மாயையை ஆரு மறியா
வகையானிட மென்பரால்,
வேயின் முத்தும் மணியும்
கொணர்ந்தார்ப்புனற் காவிரி,
ஆய பொன்மா மதிள்சூழ்ந்
தழகார்தென் னரங்கமே (5.4.9)

1387
அல்லி மாத ரமரும்
திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங்
கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி
ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு
பின்வானுல காள்வரே (5.4.10)

1388
வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே .
வேங்கடமே . எங்கின் றாளால்,
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்
துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன்
ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.1)

1389
கலையாளா வகலல்குல் கனவளையும்
கையாளா என்செய் கேன்நான்,
விலையாளா வடியேனை வேண்டுதியோ
வேண்டாயோ? என்னும், மெய்ய
மலையாளன் வானவர்த்தம் தலையாளன்
மராமரமே ழெய்த வென்றிச்
சிலையாளன், என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.2)

1390
மானாய மென்னோக்கி வாநெடுங்கண்
ணீர்மல்கும் வளையும் சோரும்,
தேனாய நறுந்துழா யலங்கலின்
திறம்பேசி யுறங்காள் காண்மின்,
கானாயன் கடிமனையில் தயிருண்டு
நெய்பருக நந்தன் பெற்ற
ஆனாயன், என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.3)

1391
தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத்
தோடணையாள் தடமென் கொங்கை-
யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான்
திருவரங்க மெங்கே? என்னும்,
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட
பெருவயிற்றன் பேசில் நங்காய்,
மாமாய னென்மகளைச் செய்தனகள்
மங்கைமீர் . மதிக்கி லேனே . (5.5.4)

1392
பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண்
மையெழுதாள் பூவை பேணாள்,
ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான்
திருவரங்க மெங்கே என்னும்,
நாண்மலராள் நாயகனாய் நாமறிய
வாய்ப்பாடி வளர்ந்த நம்பி,
ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.5)

1393
தாதாடு வனமாலை தாரானோ
வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,
யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான்
திருவரங்கம் என்னும், பூமேல்
மாதாளன் குடமாடி மதுசூதன்
மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன், என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சொல்லு கேனே . (5.5.6)

1394
வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே
றாயினவா றெண்ணாள், எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள் இப்
பெண்பெற்றே னென்செய் கேன்நான்,
ாராளன் தண்குடந்தை நகராளன்
ஐவர்க்கா யமரி லுய்த்த
தேராளன், என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் செப்பு கேனே . (5.5.7)

1395
உறவாது மிலளென்றென் றொழியாது
பலரேசும் அலரா யிற்றால்,
மறவாதே யெப்பொழுதும் மாயவனே.
மாதவனே. என்கின் றளால்,
பிறவாத பேராளன் பெண்ணாளன்
மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன், என்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.8)

1396
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும்
பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ
என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு
தைத்திரியன் சாம வேதி,
அந்தோ.வந் தென்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.9)

1397
சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத்
தம்மானைச் சிந்தை செய்த,
நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத்
தாய்மொழிந்த வதனை, நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி
ஒலிமாலை கற்று வல்லார்,
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப்
பொன்னுலகில் வாழ்வர் தாமே (5.5.10)

1398
கைம்மான மழகளிற்றைக்
கடல்fகிடந்த கருமணியை,
மைம்மான மரகதத்தை
மறையுரைத்த திருமாலை,
எம்மானை எனக்கென்று
மினியானைப் பனிகாத்த
வம்மானை, யான்கண்ட
தணிநீர்த் தென் னரங்கத்தே (5.6.1)

1399
பேரானைக் குறுங்குடியெம்
பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர்
உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும்
மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.2)

1400
ஏனாகி யுலகிடந்தன்
றிருநிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத்
தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித்
திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.3)

1401
வளர்ந்தவனைத் தடங்கடலுள்
வலியுருவில் திரிசகடம்,
தளர்ந்துதிர வுதைத்தவனைத்
தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை, பெருநிலமீ
ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை, யான்கண்ட
தணிநீர்த்தென் னரங்கத்தே (5.6.4)

1402
நீரழலாய் நெடுநிலனாய்
நின்றானை, அன்றரக்கன்
ஊரழலா லுண்டானைக்
கண்டார்பின் காணாமே,
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப்
பின்மறையோர் மந்திரத்தின்,
ஆரழலா லுண்டானைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.5)

1403
தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார்
தவநெறியை, தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக
முண்டுமிழ்ந்த கற்பகத்தை,
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்
விசையுருவை யசைவித்த,
அஞ்சிறைப்புட் பாகனையான்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.6)

1404
சிந்தனையைத் தவநெறியைத்
திருமாலை, பிரியாது
வந்தெனது மனத்திருந்த
வடமலையை, வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ
லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை, யான்கண்ட
தணிநீர்த்தென் னரங்கத்தே (5.6.7)

1405
துவரித்த வுடையார்க்கும்
தூய்மையில்லச் சமணர்க்கும்,
அவர்கட்கங் கருளில்லா
அருளானை, தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு
மெம்மாற்கு மெம்மனைக்கும்,
அமரர்க்கும் பிரானாரைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.8)

1406
பொய்வண்ணம் மனத்தகற்றிப்
புலனைந்தும் செலவைத்து,
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு
மெய்ந்நின்ற வித்தகனை,
மைவண்ணம் கருமுகில்போல்
திகழ்வண்ண மரதகத்தின்,
அவ்வண்ண வண்ணனையான்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.9)

1407
ஆமருவி நிரைமேய்த்த
அணியரங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி
யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை
நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல்
சாராதீ வினைதாமே (5.6.10)

1408
பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப்
பதங்களும் பதங்களின் பொருளும்,
பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும்
பெருகிய புனலொடு நிலனும்,
கொடல்மா ருதமும் குரைகட லேழும்
ஏழுமா மலைகளும் விசும்பும்,
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.1)

1409
இந்திரன் பிரம னீசனென் றிவர்கள்
எண்ணில்பல் குணங்களே யியற்ற,
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் சுற்றிநின் றகலாப்
பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும்
பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.2)

1410
மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்
வானமும் தானவ ருலகும்,
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித்
தொல்லைநான் மறைகளும் மறைய,
பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்
பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.3)

1411
மாயிருங் குன்ற மொன்றுமத் தாக
மாசுண மதனொடும் அளவி,
பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப்
படுதிரை விசும்பிடைப் படர,
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும்
தேவரும் தாமுடன் திசைப்ப,
ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.4)

1412
எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால்
இரணியன் இலங்குபூ ணகலம்,
பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து
பொழிதரு மருவியொத் திழிய,
வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல்
விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,
அங்ஙனே யொக்க அரியுரு வானான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.5)

1413
ஆயிரும் குன்றம் சென்றுதொக் கனைய
அடல்புரை யெழில்திகழ் திரடோ ள்,
ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி
மற்றவன் அகல்விசும் பணைய,
ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச
அறிதுயி லலைகடல் நடுவே,
ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.6)

1414
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த
கொடுமையிற் கடுவிசை யரக்கன்,
எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய்
திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,
வரிசிலை வளைய அடிசரம் துரந்து
மறிகடல் நெறிபட, மலையால்
அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.7)

1415
ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால்
உடையதே ரொருவனாய் உலகில்
சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை
மலங்கவன் றடுசரந் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப்
பகலவ னொளிகெட, பகலே
ஆழியா லன்றங் காழியை மறைத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.8)

1416
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால்
பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து
மணிமுடி வானவர் தமக்குச்
சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென்
சிந்தையுள் வெந்துய ரறுக்கும்,
ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.9)

1417
பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து
பொருதிரை மாநதி புடைசூழ்ந்து,
அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த
அரங்கமா நகரமர்ந் தானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
மானவேற்f கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப் பாரே (5.7.10)

1418
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா
திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கியுன் தோழி,
உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து
தோழ னீயெனக் கிங்கொழி என்ற
சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,
ஆழி வண்ணநின்னடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.1)

1419
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு
மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று
கோதில் வாய்மையி னாயொடு முடனே
உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்
ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.2)

1420
கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை
வைகு தாமரை வாங்கய வேழம்,
முடியும் வண்ணமோர் முழுவலி முதலை
பற்ற மற்றது நின்சரண் நினைப்ப
கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக்
கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்
அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.3)

1421
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
வெருவி வந்துநின் சரணெனச் சரணா
நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக்
கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து
வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர்
கொடிய செய்வன வுள,அதற் கடியேன்
அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.4)

1422
மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும்
மலர டிகண்ட மாமறை யாளன்,
தோகை மாமயி லன்னவ ரின்பம்
துற்றி லாமையிலத்தவிங் கொழிந்து
போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே
போது வாய், என்ற பொன்னருள், எனக்கும்
ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.5)

1423
மன்னு நான்மறை மாமுனி பெற்ற
மைந்த னைமதி யாதவெங் கூற்றந்
தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த்
தகவில் காலனை யுகமுனிந் தொழியா
பின்னை யென்றும்நின் திருவடி பிரியா
வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்
அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.6)

1424
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,
காத லென்மகன் புகலிடங் காணேன்,
கண்டு நீதரு வாயெனக் கென்று,
கோதில் வாய்மையி னானுனை வேண்டிய
குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.7)

1425
வேத வாய்மொழி யந்தண னொருவன்
எந்தை நின்சர ணென்னுடை மனைவி,
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப
ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச்
செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.8)

1426
துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில்
தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங்
கோடு நாழிகை யேழுடனிருப்ப,
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச்
செய்த வாறடி யேனறிந்து, உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.9)

1427
மாடமாளிகை சூழ்திரு மங்கை
மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,
ஆடல் மாவல் வன்கலி கன்றி
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,
நீடு தொல்புக ழாழிவல் லானை
எந்தை யைநெடு மாலைநி னைந்த,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்.
பாட நும்மிடைப் பாவம்நில் லாவே (5.8.10)

1428
கையிலங் காழி சங்கன்
கருமுகில் திருநி றத்தன்,
பொய்யிலன் மெய்யன் தந்தாள்
அடைவரே லடிமை யாக்கும்,
செய்யலர் கமல மோங்கு
செறிபொழில் தென்தி ருப்பேர்
பையர வணையான் நாமம்
பரவிநா னுய்ந்த வாறே (5.9.1)

1429
வங்கமார் கடல்க ளேழும்
மலையும்வா னகமும் மற்றும்,
அங்கண்மா ஞால மெல்லாம்
அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,
திங்கள்மா முகில்அ ணவு
செறிபொழில் தெந்தி ருப்பேர்,
எங்கள்மா லிறைவன் நாமம்
ஏத்திநா னுய்ந்த வாறே (5.9.2)

1430
ஒருவனை யுந்திப் பூமேல்
ஓங்குவித் தாகந் தன்னால்,
ஒருவனைச் சாபம் நீக்கி
உம்பராள் , என்று விட்டான்,
பெருவரை மதிள்கள் சூழ்ந்த
பெருநகர் அரவ ணைமேல்
கருவரை வண்ணன் தென்பேர்
கருதிநா னுய்ந்த வாறே (5.9.3)

1431
ஊனமர் தலையொன் றேந்தி
உலகெலாம் திரியு மீசன்
ஈனமர் சாபம் நீக்காய்,
என்னவொண் புனலை யீந்தான்,
தேனமர் பொழில்கள் சூழ்ந்த
செறிவயல் தென்தி ருப்பேர்,
வானவர் தலைவன் நாமம்
வாழ்த்திநா னுய்ந்த வாறே (5.9.4)

1432
வக்கரன் வாய்முன் கீண்ட
மாயவனே என்று வானேர்
புக்கு, அரண் தந்த ருள்வாய்,
என்னப்பொன் னாகத் தானை,
நக்கரி யுருவ மாகி
நகங்கிளர்ந் திடந்து கந்த,
சக்கரச் செல்வன் தென்பேர்த்
தலைவன்தா ளடைந்துய்ந் தேனே (5.9.5)

1433
விலங்கலால் கடல டைத்து
விளங்கிழை பொருட்டு, வில்லால்,
இலங்கைமா நகர்க்கி றைவன்
இருபது புயம்து ணித்தான்,
நலங்கொள்நான் மறைவல் லார்கள்
ஒத்தொலி யேத்தக் கேட்டு
மலங்குபாய் வயல்தி ருப்பேர்
மருவிநான் வாழ்ந்த வாறே (5.9.6)

1434
வெண்ணெய்தா னமுது செய்ய
வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,
கண்ணியர் குறுங்க யிற்றால்
கட்டவெட் டென்றி ருந்தான்,
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த
தென்திருப் பேருள், வேலை
வண்ணனார் நாமம் நாளும்
வாய்மொழிந் துய்ந்த வாறே (5.9.7)

1435
அம்பொனா ருலக மேழும்
அறியஆய்ப் பாடி தன்னுள்,
கொம்பனார் பின்னை கோலம்
கூடுதற் கேறு கொன்றான்,
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த
தென்திருப் பேருள் மேவும்,
எம்பிரான் நாமம் நாளும்
ஏத்திநா னுய்ந்த வாறே (5.9.8)

1436
நால்வகை வேத மைந்து
வேள்வியா றங்கம் வல்லார்,
மேலைவா னவரின் மிக்க
வேதிய ராதி காலம்,
சேலுகள் வயல்தி ருப்பேர்ச்
செங்கண்மா லோடும் வாழ்வார்,
சீலமா தவத்தர் சிந்தை
யாளியென் சிந்தை யானே (5.9.9)

1437
வண்டறை பொழில்தி ருப்பேர்
வரியர வணையில் பள்ளி
கொண்டுறை கின்ற மாலைக்
கொடிமதிள் மாட மங்கை,
திண்டிறல் தோள்க லியன்
செஞ்சொலால் மொழிந்த மாலை,
கொண்டிவை பாடி யாடக்
கூடுவார் நீள்வி சும்பே (5.9.10)

1438
தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி
சும்பு மவையாய்,
மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை
யாய பெருமான்,
தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட
மார்வர் தகைசேர்,
நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.1)

1439
உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி
யாமை முனநாள்,
மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்
மேவு நகர்தான்,
மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்
கிண்டி யதன்மேல்,
நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.2)

1440
உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி
யாமை முனநாள்,
தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட
மார்வர் தகைசேர்,
வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி
கங்குல் வயல்சூழ்,
நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.3)

1441
பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென
வந்த அசுரர்
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல
நின்ற பெருமான்,
சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல
அடிகொள் நெடுமா,
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.4)

1442
மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென
வந்த அசுரர்,
தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி
யாம ளவெய்தான்,
வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை
யங்கை யுடையான்,
நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.5)

1443
தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை
யாக முனநாள்,
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது
மேவு நகர்தான்,
கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி
லார்பு றவுசேர்,
நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.6)

1444
தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல்
நந்தன் மதலை,
எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ
நின்ற நகர்தான்,
மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள்
ஆடுபொழில்சூழ்,
நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.7)

1445
எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி
யாளர் திருவார்,
பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு
கூட எழிலார்,
மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்
தாம லர்கள்தூய்
நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.8)

1446
வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக
மிக்க பெருநீர்,
அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி
யார றிதியேல்,
பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி
யெங்கு முளதால்,
நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.9)

1447
நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணி யுறையும்,
உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை
யானை, ஒளிசேர்

கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை
யைந்து மைந்தும்,
முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள்
முழுத கலுமே (5.10.10)

 



 



 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home