ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி 
	 
	
	
ஸ்ரீ: 
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 
நாச்சியார் திருமொழித் தனியன்கள் 
	
திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது 
நேரிசை வெண்பா 
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
	
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
	
வேயர் பயந்த விளக்கு. 
கட்டளைக் கலித்துறை 
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
	
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
	
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே. 
 
	
	ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி 
	
1: தையொரு திங்கள் 
	
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
504: 
தையொரு திங்களும் தரைவிளக்கித் 
	
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள், 
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து 
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா, 
	
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி 
உன்னையு மும்பியை யும்தொழுதேன், 
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை 
	
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. (2) 1 
505: 
வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து 
	
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து, 
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து 
	
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா, 
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு 
	
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி, 
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் 
இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2 
	
506: 
மத்தநன் னறுமலர் முருக்கமலர் 
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி, 
	
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து 
வாசகத் தழித்துன்னை வைதிடாமே, 
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு 
	
கோவிந்த னென்பதோர் பேரேழுதி, 
வித்தகன் வேங்கட வாணனென்னும் 
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3 
	
507: 
சுவரில் புராணநின் பேரேழுதிச் 
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும், 
	
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும் 
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா, 
	
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும் 
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள், 
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் 
	
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4 
508: 
வானிடை வாழுமவ் வானவர்க்கு 
	
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி, 
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து 
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப, 
	
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று 
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள், 
மானிட வர்க்கென்று பேச்சுப்படில் 
	
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5 
509: 
உருவுடை யாரிளை யார்கள்நல்லார் 
	
ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல் 
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் 
	
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா, 
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் 
கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத் 
	
திருவுடை முகத்தினில் திருக்கண்களால் 
திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6 
	
510: 
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் 
கட்டி யரிசி யவலமைத்து, 
	
வாயுடை மறையவர் மந்திரத்தால் 
மன்மத னே.உன்னை வணங்குகின்றேன், 
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் 
	
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம், 
சாயுடை வயிறுமென் தடமுலையும் 
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7 
	
511: 
மாசுடை யுடம்பொடு தலையுலறி 
வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு, 
	
தேசுடை திறலுடைக் காமதேவா. 
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய், 
	
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் 
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம் 
	
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் 
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8 
	
512: 
தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் 
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன், 
	
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே 
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான், 
அழுதழு தலமந்தம் மாவழங்க 
	
ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய், 
உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து 
	
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9 
513: 
கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் 
	
கழலிணை பணிந்தங்கோர் கரியலற, 
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த 
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று, 
	
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் 
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை, 
	
விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார் 
விண்ணவர் கோனடி நண்ணுவரே. (2) 10 
	
2: நாமமாயிரம் 
கலி விருத்தம் 
514: 
நாமமாயிர மேத்தநின்ற 
	
நாராயணாநர னே,உன்னை 
மாமிதன்மக னாகப்பெற்றா 
லெமக்குவாதை தவிருமே, 
	
காமன்போதரு காலமென்றுபங் 
குனிநாள்கடை பாரித்தோம், 
தீமைசெய்யும் சிரீதரா.எங்கள் 
	
சிற்றில்வந்து சிதையேலே. (2) 1 
515: 
இன்றுமுற்றும் முதுகுநோவ 
	
இருந்திழைத்தஇச் சிற்றிலை, 
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் 
ஆர்வந்தன்னைத் தணிகிடாய், 
	
அன்றுபாலக னாகியாலிலை 
மேல்துயின்றவெம் மாதியாய், 
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் 
	
கம்மெழாததெம் பாவமே. 2 
516: 
குண்டுநீருறை கோளரீ.மத 
யானைகோள்விடுத் தாய்,உன்னைக் 
	
கண்டுமாலுறு வோங்களைக்கடைக் 
கண்களாலிட்டு வாதியேல், 
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் 
	
கைகளால்சிர மப்பட்டோ ம், 
தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள் 
சிற்றில்வந்து சிதையேலே. 3 
	
517: 
பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன், 
பேச்சும்செய்கையும், எங்களை 
	
மையலேற்றி மயக்கவுன்முகம் 
மாயமந்திரந் தான்கொலோ, 
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை 
	
நோவநாங்களு ரைக்கிலோம், 
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் 
சிற்றில்வந்து சிதையேலே. 4 
	
518: 
வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் 
விசித்திரப்பட, வீதிவாய்த் 
	
தெள்ளிநாங்களி ழைத்தகோல 
மழித்தியாகிலும், உன்றன்மேல் 
உள்ளமோடி யுருகலல்லால் 
	
உரோடமொன்று மிலோங்கண்டாய், 
கள்ளமாதவா. கேசவா.உன் 
முகத்தனகண்க ளல்லவே. 5 
	
519: 
முற்றிலாதபிள் ளைகளோம்முலை 
போந்திலாதோமை, நாடொறும் 
சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி 
	
துண்டுதிண்ணென நாமது 
கற்றிலோம்,கட லையடைத்தரக்- 
கர்குலங்களை முற்றவும் 
	
செற்று,இலங்கையைப் பூசலாக்கிய 
சேவகா.எம்மை வாதியேல். 6 
520: 
	
பேதநன்கறி வார்களோடிவை 
பேசினால்பெரி திஞ்சுவை, 
யாதுமொன்றறி யாதபிள்ளைக 
	
ளோமைநீநலிந் தென்பயன், 
ஓதமாகடல் வண்ணா.உன்மண 
வாட்டிமாரொடு சூழறும், 
	
சேதுபந்தம் திருத்தினாயெங்கள் 
சிற்றில்வந்து சிதையேலே. 7 
521: 
	
வட்டவாய்ச்சிறு தூதையோடு 
சிறுசுளகும்மண லுங்கொண்டு, 
இட்டமாவிளை யாடுவோங்களைச் 
	
சிற்றிலீடழித் தென்பயன், 
தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச் 
சக்கரம்கையி லேந்தினாய், 
	
கட்டியும்கைத் தாலின்னாமை 
அறிதியேகடல் வண்ணனே. 8 
522: 
முற்றத்தூடு புகுந்துநின்முகங் 
	
காட்டிப்புன்முறு வல்செய்து, 
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் 
கக்கடவையோ கோவிந்தா, 
	
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற 
நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்- 
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் 
	
பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்? 9 
523: 
சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் 
	
சிற்றில்நீசிதை யேல். என்று, 
வீதிவாய்விளை யாடுமாயர் 
சிறுமியர்மழ லைச்சொல்லை, 
	
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி 
புத்தூர்மன்விட்டு சித்தன்றன், 
கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை 
	
வின்றிவைகுந்தம் சேர்வரே. 2 10 
3: கோழியழைப்பதன் 
524: 
கோழி யழைப்பதன் முன்னம் 
	
குடைந்துநீ ராடுவான் போந்தோம், 
ஆழியஞ் செல்வ னெழுந்தான் 
அரவணை மேல்பள்ளி கொண்டாய், 
	
ஏழைமை யாற்றவும் பட்டோ ம் 
இனியென்றும் பொய்கைக்கு வாரோம், 
தோழியும் நானும் தொழுதோம் 
	
துகிலைப் பணித்தரு ளாயே. (2) 1 
525: 
இதுவென் புகுந்ததிங் கந்தோ. 
	
இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய், 
மதுவின் துழாய்முடி மாலே. 
மாயனே.எங்க ளமுதே, 
	
விதியின்மை யாலது மாட்டோ ம் 
வித்தகப் பிள்ளாய். விரையேல், 
குதிகொண் டரவில் நடித்தாய். 
	
குருந்திடைக் கூறை பணியாய். 2 
526: 
எல்லே யீதென்ன இளமை 
எம்மனை மார்காணி லொட்டார், 
	
பொல்லாங்கீ தென்று கருதாய் 
பூங்குருந் தேறி யிருத்தி, 
வில்லாலி லங்கை யழித்தாய்.நீ 
	
வேண்டிய தெல்லாம் தருவோம், 
பல்லாரும் காணாமே போவோம் 
பட்டைப் பணித்தரு ளாயே. 3 
	
527: 
பரக்க விழித்தெங்கும் நோக்கிப் 
பலர்குடைந் தாடும் சுனையில், 
	
அரக்கநில் லாகண்ண நீர்கள் 
அலமரு கின்றவா பாராய், 
இரக்கமே லொன்று மிலாதாய். 
	
இலங்கை யழித்த பிரானே, 
குரக்கர சாவ தறிந்தோம் 
குருந்திடைக் கூறை பணியாய். 4 
	
528: 
காலைக் கதுவிடு கின்ற 
கயலோடு வாளை விரவி, 
வேலைப் பிடித்தெந்னை மார்கள் 
	
ஓட்டிலென் னவிளை யாட்டோ , 
கோலச்சிற் றாடை பலவுங் 
கொண்டுநீ யேறி யிராதே, 
	
கோலங் கரிய பிரானே. 
குருந்திடைக் கூறை பணியாய். 5 
529: 
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் 
	
தாள்களெங் காலைக் கதுவ, 
விடத்தே ளெறிந்தாலே போல 
வேதனை யற்றவும் பட்டோ ம் 
	
குடத்தை யெடுத்தேற விட்டுக் 
கூத்தாட வல்லஎங் கோவே, 
படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள் 
	
பட்டைப் பணித்தரு ளாயே. 6 
530: 
நீரிலே நின்றயர்க் கின்றோம் 
நீதியல் லாதன செய்தாய், 
	
ஊரகம் சாலவும் சேய்த்தால் 
ஊழியெல் லாமுணர் வானே, 
ஆர்வ முனக்கே யுடையோம் 
	
அம்மனை மார்காணி லொட்டார், 
போர விடாயெங்கள் பட்டைப் 
பூங்குருந் தேறியி ராதே. 7 
	
531: 
மாமிமார் மக்களே யல்லோம் 
மற்றுமிங் கெல்லாரும் போந்தார், 
	
தூமலர்க் கண்கள் வளரத் 
தொல்லையி ராத்துயில் வானே, 
சேமமே லன்றிது சாலச் 
	
சிக்கென நாமிது சொன்னோம், 
கோமள ஆயர்கொ ழுந்தே. 
குருந்திடைக் கூறை பணியாய். 8 
	
532: 
கஞ்சன் வலைவைத்த வன்று 
காரிரு ளெல்லில் பிழைத்து, 
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் 
	
நின்றஇக் கன்னிய ரோமை, 
அஞ்ச உரப்பாள் அசோதை 
ஆணாட விட்டிட் டிருக்கும், 
	
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட 
மசிமையி லீ.கூறை தாராய். 9 
533: 
கன்னிய ரோடெங்கள் நம்பி 
	
கரிய பிரான்விளை யாட்டை, 
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த 
புதுவையர் கோன்பட்டன் கோதை, 
	
இன்னிசை யால்சொன்ன மாலை 
ஈரைந்தும் வல்லவர் தாம்போய், 
மன்னிய மாதவ னோடு 
	
வைகுந்தம் புக்கிருப் பாரே. 2 10 
4: தெள்ளியார் பலர் 
கலி விருத்தம் 
	
534: 
தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார், 
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார், 
	
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட, 
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1 
	
535: 
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், 
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன், 
	
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும் 
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. (2) 2 
	
536: 
பூம கன்புகழ் வானவர் போற்றுதற் 
காம கன்,அணி வாணுதல் தேவகி 
	
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம், 
கோம கன்வரில் கூடிடு கூடலே. 3 
537: 
	
ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட, 
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து, 
	
வாய்த்த காளியன் மேல்நட மாடிய, 
கூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4 
	
538: 
மாட மாளிகை சூழ்மது ரைப்பதி 
நாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு, 
	
ஓடை மாமத யானை யுதைத்தவன், 
கூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5 
539: 
	
அற்ற வன்மரு தம்முறி யநடை 
கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால் 
செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி, 
	
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6 
540: 
அன்றின் னாதன செய்சிசு பாலனும், 
	
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும், 
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன் 
	
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7 
541: 
ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி 
	
மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக் 
காவ லன்,கன்று மேய்த்து விளையாடும், 
கோவ லன்வரில் கூடிடு கூடலே. 8 
	
542: 
கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று, 
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில், 
	
அண்ட மும்நில னும்அடி யொன்றினால், 
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9 
	
543: 
பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம் 
ஒழுகு வாரண முய்ய வளித்த,எம் 
	
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள், 
குழக னார்வரில் கூடிடு கூடலே. 10 
	
544: 
ஊடல் கூட லுணர்தல் புணர்தலை, 
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர், 
	
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய, 
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. (2) 11 
	
5: மன்னு பெரும்புகழ் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
	
545: 
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி 
வண்ணன் மணிமுடி மைந்தன் 
	
தன்னை, உகந்தது காரண மாகஎன் 
சங்கிழக் கும்வழக் குண்டே, 
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் 
	
பொதும்பினில் வாழும் குயிலே, 
பன்னியெப் போது மிருந்து விரைந்தென் 
பவளவா யன்வரக் கூவாய். (2) 1 
	
546: 
வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட 
விமல னெனக்குருக் காட்டான், 
	
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் 
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும், 
	
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் 
களித்திசை பாடுங் குயிலே, 
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் 
	
வேங்கட வன்வரக் கூவாய். 2 
547: 
மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் 
	
இராவணன் மேல்,சர மாரி 
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த 
தலைவன் வரவெங்குங் காணேன், 
	
போதலர் காவில் புதுமணம் நாறப் 
பொறிவண்டின் காமரங் கேட்டு,உன் 
காதலி யோடுடன் வாழ்குயி லே.என் 
	
கருமாணிக் கம்வரக் கூவாய். 3 
548: 
என்புரு கியின வேல்நெடுங் கண்கள் 
	
இமைபொருந் தாபல நாளும், 
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் 
தோணி பெறாதுழல் கின்றேன், 
	
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது 
நீயு மறிதி குயிலே, 
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் 
	
புண்ணிய னைவரக் கூவாய். 4 
549: 
மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் 
	
வில்லிபுத் தூருறை வான்றன், 
பொன்னடி காண்பதோ ராசயி னாலென் 
பொருகயற் கண்ணிணை துஞ்சா, 
	
இன்னடி சிலோடு பாலமு தூட்டி 
எடுத்தவென் கோலக் கிளியை, 
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே. 
	
உலகளந் தான்வரக் கூவாய். (2) 5 
550: 
எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் 
	
இருடீகே சன்வலி செய்ய, 
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் 
முலயு மழகழிந் தேன்நான், 
	
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை 
கொள்ளு மிளங்குயி லே,என் 
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் 
	
தலையல்லால் கைம்மாறி லேனே. 6 
551: 
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் 
	
புணர்வதோ ராசயி னால்,என் 
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் 
தாவியை யாகுலஞ் செய்யும், 
	
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு 
ஆழியும் சங்குமொண் தண்டும், 
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ, 
	
சாலத் தருமம் பெறுதி. 7 
552: 
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் 
	
சதுரன் பொருத்த முடையன், 
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் 
நானு மவனு மறிதும், 
	
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் 
சிறுகுயி லே,திரு மாலை 
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில் 
	
அவனைநான் செய்வன காணே. 8 
553: 
பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் 
	
பாசத் தகப்பட்டி ருந்தேன், 
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி 
லே.குறிக் கொண்டிது நீகேள், 
	
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் 
பொன்வளை கொண்டு தருதல், 
இங்குள்ள காவினில் வாழக் கருதில் 
	
இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9 
554: 
அன்றுல கம்மளந் தானை யுகந்தடி- 
	
மைக்கண வன்வலி செய்ய, 
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை 
நலியும் முறைமை யறியேன், 
	
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் 
தகர்த்தாதே நீயும் குயிலே, 
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் 
	
இங்குத்தை நின்றும் துரப்பன். 10 
555: 
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை 
	
வேற்கண் மடந்தை விரும்பி, 
கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு 
கருங்குயி லே. என்ற மாற்றம், 
	
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் 
பட்டர்பி ரான்கோதை சொன்ன, 
நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ- 
	
நாராய ணாயவென் பாரே. (2) 11 
6:வாரணமாயிரம் 
கலி விருத்தம் 
	
556: 
வாரண மாயிரம் சூழவ லம்செய்து, 
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், 
	
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், 
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1 
	
557: 
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, 
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், 
	
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் 
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2 
	
558: 
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம், 
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து, 
	
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை, 
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3 
	
559: 
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி, 
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி, 
	
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை, 
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4 
	
560: 
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி, 
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள, 
	
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும் 
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5 
	
561: 
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத, 
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ் 
	
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6 
	
562: 
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால், 
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து, 
	
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி, 
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7 
	
563: 
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான், 
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி, 
	
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி, 
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8 
	
564: 
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு 
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி, 
	
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து, 
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9 
	
565: 
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து, 
மங்கல வீதி வலம்செய்து மணநீர், 
	
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல், 
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10 
	
566: 
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, 
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல், 
	
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், 
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11 
	
7: கருப்பூரம் நாறுமோ 
கலிவிருத்தம் 
567: 
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ, 
	
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ, 
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், 
	
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1 
568: 
கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன் 
	
உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத் 
திடரில் குடியேறித் தீய வசுரர், 
	
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2 
569: 
தடவரை யின்மீதே சரற்கால சந்திரன், 
	
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும் 
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில், 
	
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3 
570: 
சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில், 
	
அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில், 
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே, 
	
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4 
571: 
உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை, 
	
இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண், 
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம், 
	
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5 
572: 
போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம், 
	
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு 
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய 
	
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே. 
573: 
செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல் 
	
செங்கட் கருமேனி வாசுதே வனுடய, 
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும், 
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7 
	
574: 
உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம், 
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே, 
	
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார், 
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8 
	
575: 
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப, 
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம், 
	
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால், 
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9 
	
576: 
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும், 
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை, 
	
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும், 
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. (2) 10 
	
8: விண்ணீல மேலாப்பு 
தரவு கொச்சகக் கலிப்பா 
577: 
விண்ணீல மேலாப்பு 
	
விரித்தாற்போல் மேகங்காள், 
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் 
திருமாலும் போந்தானே, 
	
கண்ணீர்கள் முலைக்குவட்டில் 
துளிசோரச் சோர்வேனை, 
பெண்ணீர்மை யீடழிக்கும் 
	
இதுதமக்கோர் பெருமையே? (2) 1 
578: 
மாமுத்த நிதிசொரியும் 
மாமுகில்காள், வேங்கடத்துச் 
	
சாமத்தின் நிறங்கொண்ட 
தாடாளன் வார்த்தையென்னே, 
காமத்தீ யுள்புகுந்து 
	
கதுவப்பட்டு இடைக்கங்குல், 
ஏமத்தோர் தென்றலுக்கிங்- 
கிலக்காய்நா னிருப்பேனே. 2 
	
579: 
ஒளிவண்ணம் வளைசிந்தை 
உறக்கத்தோ டிவையெல்லாம், 
எளிமையா லிட்டென்னை 
	
ஈடழியப் போயினவால், 
குளிரருவி வேங்கடத்தென் 
கோவிந்தன் குணம்பாடி, 
	
அளியத்த மேகங்காள். 
ஆவிகாத் திருப்பேனே. 3 
580: 
மின்னாகத் தெழுகின்ற 
	
மேகங்காள், வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை 
தங்கியசீர் மார்வற்கு, 
	
என்னாகத் திளங்கொங்கை 
விரும்பித்தாம் நாடோ றும், 
பொன்னாகம் புல்குதற்கென் 
	
புரிவுடைமை செப்புமினே. 4 
581: 
வான்கொண்டு கிளர்ந்தெழுந்த 
மாமுகில்காள், வேங்கடத்துத் 
	
தேன்கொண்ட மலர்ச்சிதறத் 
திரண்டேறிப் பொழிவீர்காள், 
ஊன்கொண்ட வள்ளுகிரால் 
	
இரணியனை யுடலிடந்தான், 
தான்கொண்ட சரிவளைகள் 
தருமாகில் சாற்றுமினே. 5 
	
582: 
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த 
தண்முகில்காள், மாவலியை 
நிலங்கொண்டான் வேங்கடத்தே 
	
நிரந்தேறிப் பொழிவீர்காள், 
உலங்குண்ட விளங்கனிபோல் 
உள்மெலியப் புகுந்து,என்னை 
	
நலங்கொண்ட நாரணற்கென் 
நடலைநோய் செப்புமினே. 6 
583: 
சங்கமா கடல்கடைந்தான் 
	
தண்முகில்காள், வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் 
அடிவீழ்ச்சி விண்ணப்பம், 
	
கொங்கைமேல் குங்குமத்தின் 
குழம்பழியப் புகுந்து,ஒருநாள் 
தங்குமே லென்னாவி 
	
தங்குமென் றுரயீரே. (2) 7 
584: 
கார்காலத் தெழுகின்ற 
கார்முகில்காள், வேங்கடத்துப் 
	
போர்காலத் தெழுந்தருளிப் 
பொருதவனார் பேர்சொல்லி, 
நீர்காலத் தெருக்கிலம் 
	
பழவிலைபோல் வீழ்வேனை, 
வார்காலத் தொருநாள்தம் 
வாசகம்தந் தருளாரே. 8 
	
585: 
மதயானை போலெழுந்த 
மாமுகில்காள், வேங்கடத்தைப் 
பதியாக வாழ்வீர்காள். 
	
பாம்பணையான் வார்த்தையென்னே, 
கதியென்றும் தானாவான் 
கருதாது,ஓர் பெண்கொடியை 
	
வதைசெய்தான். என்னும்சொல் 
வையகத்தார் மதியாரே. (2) 9 
586: 
நாகத்தி னணையானை 
	
நன்னுதலாள் நயந்துரைசெய், 
மேகத்தை வேங்கடக்கோன் 
விடுதூதில் விண்ணப்பம், 
	
போகத்தில் வழுவாத 
புதுவையர்கோன் கோதைதமிழ், 
ஆகத்து வைத்துரைப்பார் 
	
அவரடியா ராகுவரே. (2) 10: 
9: சிந்தூரச் செம்பொடி 
கலிநிலைத்துறை 
	
587: 
சிந்துரச் செம்பொடிப்போல் 
திருமாலிருஞ் சோலையெங்கும், 
இந்திர கோபங்களே 
	
எழுந்தும்பரந் திட்டனவால், 
மந்தரம் நாட்டியன்று 
மதுரக்கொழுஞ் சாறுகொண்ட 
	
சுந்தரத் தோளுடையான் 
சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1 
588: 
போர்களி றுபொரும்மா 
	
லிருஞ்சோலையம் பூம்புறவில், 
தார்க்கொடி முல்லைகளும் 
தவளநகை காட்டுகின்ற, 
	
கார்க்கொள் படாக்கள்நின்று 
கழறிச்சிரிக் கத்தரியேன், 
ஆர்க்கிடு கோதோழி. 
	
அவன்தார்ச்செய்த பூசலையே. 2 
589: 
கருவிளை யொண்மலர்காள். 
காயாமலர் காள்,திருமால் 
	
உருவொளி காட்டுகின்றீர் 
எனக்குய்வழக் கொன்றுரையீர், 
திருவிளை யாடுதிண்டோ ள் 
	
திருமாலிருஞ் சோலைநம்பி, 
வரிவளை யில்புகுந்து 
வந்திபற்றும் வழ்க்குளதே. 3 
	
590: 
பைம்பொழில் வாழ்குயில்காள். 
மயில்காள்.ஒண் கருவிளைகாள், 
	
வம்பக் களங்கனிகாள். 
வண்ணப்பூவை நறுமலர்காள், 
ஐம்பெரும் பாதகர்காள். 
	
அணிமாலிருஞ் சோலைநின்ற, 
எம்பெரு மானுடைய 
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 4 
	
591: 
துங்க மலர்ப்பொழில்சூழ் 
திருமாலிருஞ் சோலைநின்ற, 
செங்கட் கருமுகிலின் 
	
திருவுருப் போல்,மலர்மேல் 
தொங்கிய வண்டினங்காள். 
தொகுபூஞ்சுனை காள்,சுனையில் 
	
தங்குசெந் தாமரைகாள். 
எனக்கோர்சரண் சாற்றுமினே. 5 
592: 
நாறு நறும்பொழில்மா 
	
லிருஞ்சோலை நம்பிக்கு, நான் 
நூறு தடாவில்வெண்ணெய் 
வாய்நேர்ந்து பராவிவைத்தேன், 
	
நூறு தடாநிறைந்த 
அக்கார வடிசில்சொன்னேன், 
ஏறு திருவுடையான் 
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6 
	
593: 
இன்றுவந் தித்தனையும் 
அமுதுசெய் திடப்பெறில்,நான் 
ஒன்று நூறாயிரமாக் 
	
கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன், 
தென்றல் மணங்கமழும் 
திருமாலிருஞ் சோலைதன்னுள் 
	
நின்ற பிரான்,அடியேன் 
மனத்தேவந்து நேர்படிலே. 7 
594: 
காலை யெழுந்திருந்து 
	
கரியகுரு விக்கணங்கள், 
மாலின் வரவுசொல்லி 
மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ, 
	
சோலை மலைப்பெருமான் 
துவராபதி யெம்பெருமான், 
ஆலி னிலைப்பெருமான் 
அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8 
	
595: 
கோங்கல ரும்பொழில்மா- 
லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் 
தூங்குபொன் மாலைகளோ- 
	
டுடனாய்நின்று தூங்குகின்றேன், 
பூங்கொள் திருமுகத்து 
மடுத்தூதிய சங்கொலியும், 
	
சார்ங்கவில் நாணொலியும் 
தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9 
596: 
சந்தொடு காரகிலும் 
	
சுமந்துதடங் கள்பொருது, 
வந்திழி யும்சிலம்பா- 
றுடைமாலிருஞ் சோலைநின்ற, 
	
சுந்தரனை, சுரும்பார் 
குழல்கோதை தொகுத்துரைத்த, 
செந்தமிழ் பத்தும்வல்லார் 
	
திருமாலடி சேர்வர்களே. (2) 10 
10: கார்க்கோடல் பூக்காள் . 
	
கலிநிலைத்துறை 
597: 
கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல் 
வண்ணனென் மேல்உம்மைப் 
	
போர்க்கோலம் செய்து போர 
விடுத்தவ னெங்குற்றான், 
ஆர்க்கோ இனிநாம் பூச 
	
லிடுவது, அணிதுழாய்த் 
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் 
படைக்கவல் லேனந்தோ. (2) 1 
	
598: 
மேற்றோன்றிப் பூக்காள் மேலுல 
கங்களின் மீதுபோய், 
மேற்றோன்றும் சோதி வேத 
	
முதல்வர் வலங்கையில், 
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் 
போலச் சுடாது,எம்மை 
	
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து 
வைத்துகொள் கிற்றிரே. 2 
599: 
கோவை மணாட்டி. நீயுன் 
	
கொழுங்கனி கொண்டு,எம்மை 
ஆவி தொலைவியேல் வாயழ- 
கர்தம்மை யஞ்சுதும் 
	
பாவி யேன்தோன்றிப் பாம்பணை- 
யார்க்கும்தம் பாம்புபோல், 
நாவு மிரண்டுள வாய்த்து 
	
நாணிலி யேனுக்கே. 3 
600: 
முல்லைப் பிராட்டி.நீயுன் 
முறுவல்கள் கொண்டு,எம்மை 
	
அல்லல் விளைவியே லாழிநங் 
காய்.உன்ன டைக்கலம், 
கொல்லை யரக்கியை மூக்கரிந் 
	
திட்ட குமரனார் 
சொல்லும் பொய்யானால், நானும் 
பிறந்தமை பொய்யன்றே. 4 
	
601: 
பாடும் குயில்காள். ஈதென்ன 
பாடல்,நல் வேங்கட 
நாடர் நமக்கொரு வாழ்வுதந் 
	
தால்வந்து பாடுமின், 
ஆடும் கருளக் கொடியுடை 
யார்வந் தருள்செய்து, 
	
கூடுவ ராயிடில் கூவிநும் 
பாட்டுகள் கேட்டுமே. 5 
602: 
கணமா மயில்காள். கண்ணபி 
	
ரான்திருக் கோலம்போன்று, 
அணிமா நடம்பயின் றாடுகின் 
றீர்க்கடி வீழ்கின்றேன், 
	
பணமா டரவணைப் பற்பல 
காலமும் பள்ளிகொள், 
மணவாளர் நம்மை வைத்த 
பரிசிது காண்மினே. 6 
	
603: 
நடமாடித் தோகை விரிக்கின்ற 
மாமயில் காள்,உம்மை 
நடமாட்டங் காணப் பாவியேன் 
	
நானோர் முதலிலேன், 
குடமாடு கூத்தன் கோவிந்தன் 
கோமிறை செய்து,எம்மை 
	
உடைமாடு கொண்டா னுங்களுக் 
கினியொன்று போதுமே ? 7 
604: 
மழையே. மழையே. மண்புறம் 
	
பூசியுள் ளாய்நின்ற, 
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் 
வேங்கடத் துள்நின்ற, 
	
அழகப் பிரானார் தம்மையென் 
நெஞ்சத் தகப்படத் 
தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண் 
	
டூற்றவும் வல்லையே? 8 
605: 
கடலே. கடலே. உன்னைக் 
கடைந்து கலக்குறுத்து 
	
உடலுள் புகுந்துநின் றூறல் 
அறுத்தவற்கு, என்னையும் 
உடலுள் புகுந்துநின் றூறல் 
	
அறுக்கின்ற மாயற்குஎன் 
நடலைக ளெல்லாம் நாகணைக் 
கேசென்று ரைத்தியே. 9 
	
606: 
நல்லஎன் தோழி. நாக 
ணைமிசை நம்பரர், 
செல்வர் பெரியர் சிறுமா 
	
னிடவர்நாம் செய்வதென், 
வில்லி புதுவை விட்டுசித் 
தர்தங்கள் தேவரை, 
	
வல்ல பரிசு வருவிப்ப 
ரேலது காண்டுமே. (2) 10 
11: தாமுகக்கும் 
	
தரவு சொச்சகக் கலிப்பா 
607: 
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ, 
	
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர், 
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர், 
	
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே. (2) 1 
608: 
எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர், 
	
குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில் 
எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய 
	
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2 
609: 
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், 
	
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான், 
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார், 
	
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. (2) 3 
610: 
மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார், 
	
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற, 
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல், 
	
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே ? 4 
611: 
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று, 
	
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான், 
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான், 
	
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5 
612: 
கைப்பொருள்கள் முன்னமே 
	
கைக்கொண்டார், காவிரிநீர் 
செய்ப்புரள வோடும் 
திருவரங்கச் செல்வனார், 
	
எப்பொருட்கும் நின்றார்க்கு 
மெய்தாது, நான்மறையின் 
சொற்பொருளாய் நின்றாரென் 
	
மெய்ப்பொருளும் கொண்டாரே. 6 
613: 
உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து, 
	
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம், 
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார், 
	
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7 
614: 
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள் 
	
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம், 
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார், 
	
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. (2) 8 
615: 
கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான், 
	
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து, 
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த, 
	
பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9 
616: 
செம்மை யுடைய 
திருவரங்கர் தாம்பணித்த, 
	
மெய்ம்மைப் பெருவார்த்தை 
விட்டுசித்தர் கேட்டிருப்பர், 
தம்மை யுகப்பாரைத் 
	
தாமுகப்ப ரென்னும்சொல், 
தம்மிடையே பொய்யானால் 
சாதிப்பா ராரினியே . (2) 10 
	
12: மற்றிருந்தீர் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
	
617: 
மற்றிருந் தீர்கட் கறியலாகா 
மாதவ னென்பதோ ரன்புதன்னை, 
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் 
	
ஊமைய ரோடு செவிடர்வார்த்தை, 
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் 
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி, 
	
மற்பொருந் தாமற் களமடைந்த 
மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின். (2) 1 
	
618: 
நாணி யினியோர் கருமமில்லை 
நாலய லாரும் அறிந்தொழிந்தார், 
	
பாணியா தென்னை மருந்து செய்து 
பண்டுபண் டாக்க வுறுதிராகில், 
மாணி யுருவா யுலகளந்த 
	
மாயனைக் காணில் தலைமறியும், 
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் 
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2 
	
619: 
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் 
தனிவழி போயினாள். என்னும்சொல்லு, 
	
வந்தபின் னைப்பழி காப்பரிது 
மாயவன் வந்துருக் காட்டுகின்றான், 
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் 
	
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற, 
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே 
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின். 3 
	
620: 
அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் 
அவன்முகத் தன்றி விழியேனென்று, 
	
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் 
சிறுமா னிடவரைக் காணில்நாணும், 
	
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் 
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா, 
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய் 
	
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4 
621: 
ஆர்க்குமென் நோயி தறியலாகா 
	
தம்மனை மீர்.துழ திப்படாதே, 
கார்க்கடல் வண்ணனென் பானொருவன் 
கைகண்ட யோகம் தடவத்தீரும், 
	
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக் 
காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து, 
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த 
	
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 5 
622: 
கார்த்தண் முகிலும் கருவிளையும் 
	
காயா மலரும் கமலப்பூவும், 
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் 
டிருடீகே சன்பக்கல் போகேயென்று, 
	
வேர்த்துப் பசித்து வயிறசைந்து 
வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று 
பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும் 
	
பத்தவி லோசநத் துய்த்திடுமின். 6 
623: 
வண்ணம் திரிவும் மனங்குழைவும் 
	
மானமி லாமையும் வாய்வெளுப்பும், 
உண்ண லுறாமையு முள்மெலிவும் 
ஓதநீர் வண்ணனென் பானொருவன், 
	
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு 
சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப் 
பண்ணழி யப்பல தேவன்வென்ற 
	
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7 
624: 
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் 
	
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான், 
பற்றி யுரலிடை யாப்புமுண்டான் 
பாவிகாள். உங்களுக் கேச்சுக்கொலோ, 
	
கற்றன பேசி வசையுணாதே 
காலிக ளுய்ய மழைதடுத்து, 
கொற்றக் குடையாக வேந்திநின்ற 
	
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின். 8 
625: 
கூட்டி லிருந்து கிளியெப்போதும் 
	
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும், 
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் 
உலகளந் தான். என் றுயரக்கூவும், 
	
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள் 
நன்மை யிழந்து தலையிடாதே, 
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் 
	
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9 
626: 
மன்னு மதுரை தொடக்கமாக 
	
வண்துவ ராபதி தன்னளவும், 
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் 
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை, 
	
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் 
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை, 
	
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை 
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10 
	
13: கண்ணனென்னும் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
	
627: 
கண்ண னென்னும் கருந்தெய்வம் 
காட்சி பழகிக் கிடப்பேனை, 
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் 
	
புறநின் றழகு பேசாதே, 
பெண்ணின் வருத்த மறியாத 
பெருமா னரையில் பீதக 
	
வண்ண ஆடை கொண்டு,என்னை 
வாட்டம் தணிய வீசீரே. (2) 1 
628: 
பாலா லிலையில் துயில்கொண்ட 
	
பரமன் வலைப்பட் டிருந்தேனை, 
வேலால் துன்னம் பெய்தாற்போல் 
வேண்டிற் றெல்லாம் பேசாதே, 
	
கோலால் நிரைமேய்த் தாயனாய்க் 
குடந்தைக் கிடந்த குடமாடி, 
நீலார் தண்ணந் துழாய்கொண்டென் 
	
நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2 
629: 
கஞ்சைக் காய்ந்த கருவல்லி 
	
கடைக்க ணென்னும் சிறைக்கோலால், 
நெஞ்சூ டுருவ வேவுண்டு 
நிலையும் தளர்ந்து நைவேனை, 
	
அஞ்சே லென்னா னவனொருவன் 
அவன்மார் வணிந்த வனமாலை, 
வஞ்சி யாதே தருமாகில் 
	
மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3 
630: 
ஆரே யுலகத் தாற்றுவார் 
	
ஆயர் பாடி கவர்ந்துண்ணும், 
காரே றுழக்க வுழக்குண்டு 
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, 
	
ஆரா வமுத மனையான்றன் 
அமுத வாயி லூறிய, 
நீர்தான் கொணர்ந்து புலராமே 
	
பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4 
631: 
அழிலும் தொழிலு முருக்காட்டான் 
	
அஞ்சே லென்னா னவனொருவன், 
தழுவி முழுகிப் புகுந்தென்னைச் 
சுற்றிச் சுழன்று போகானால், 
	
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே 
நெடுமா லூதி வருகின்ற 
குழலின் தொளைவாய் நீர்கொண்டு 
	
குளிர முகத்துத் தடவீரே. 5 
632: 
நடையொன் றில்லா வுலகத்து 
நந்த கோபன் மகனென்னும், 
	
கொடிய கடிய திருமாலால் 
குளப்புக் கூறு கொளப்பட்டு, 
புடையும் பெயர கில்லேன்நான் 
	
போட்கன் மிதித்த அடிப்பாட்டில் 
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் 
போகா வுயிரென் னுடம்பையே. 6 
	
633: 
வெற்றிக் கருள கொடியான்றன் 
மீமீ தாடா வுலகத்து, 
வெற்ற வெறிதே பெற்றதாய் 
	
வேம்பே யாக வளர்த்தாளே, 
குற்ற மற்ற முலைதன்னைக் 
குமரன் கோலப் பணைத்தோளோடு, 
	
அற்ற குற்ற மவைதீர 
அணைய வமுக்கிக் கட்டீரே. 7 
634: 
உள்ளே யுருகி நைவேனை 
	
உளளோ இலளோ வென்னாத, 
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் 
கோவர்த் தனனைக் கண்டக்கால், 
	
கொள்ளும் பயனொன் றில்லாத 
கொங்கை தன்னைக் கிழங்கோடும் 
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் 
	
எறிந்தென் அழலை தீர்வேனே. 8 
635: 
கொம்மை முலைக ளிடர்தீரக் 
கோவிந் தற்கோர் குற்றேவல், 
	
இம்மைப் பிறவி செய்யாதே 
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென், 
செம்மை யுடைய திருமார்வில் 
	
சேர்த்தா னேலும் ஒருஞான்று, 
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி 
விடைதான் தருமேல் மிகநன்றே. 9 
	
636: 
அல்லல் விளைத்த பெருமானை 
ஆயர் பாடிக் கணிவிளக்கை, 
வில்லி புதுவை நகர்நம்பி 
	
விட்டு சித்தன் வியன்கோதை, 
வில்லைத் தொலைத்த புருவத்தாள் 
வேட்கை யுற்று மிகவிரும்பும், 
	
சொல்லைத் துதிக்க வல்லார்கள் 
துன்பக் கடளுள் துவளாரே. (2) 10 
	
14: பட்டி மேய்ந்து 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
	
637: 
பட்டி மேய்ந்தோர் காரேறு 
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய், 
இட்டீ றிட்டு விளையாடி 
	
இங்கே போதக் கண்டீரே?- 
இட்ட மான பசுக்களை 
இனிது மறித்து நீரூட்டி, 
	
விட்டுக் கொண்டு விளையாட 
விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 1 
638: 
	
அனுங்க வென்னைப் பிரிவுசெய் 
தாயர் பாடி கவர்ந்துண்ணும், 
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் 
	
கோவர்த் தனனைக் கண்டீரே?- 
கணங்க ளோடு மின்மேகம் 
கலந்தாற் போல, வனமாலை 
	
மினுங்க நின்று விளையாட 
விருந்தா வனத்தே கண்டோ மே. 2 
639: 
மாலாய்ப் பிரந்த நம்பியை 
	
மாலே செய்யும் மணாளனை, 
ஏலாப் பொய்க ளுரைப்பானை 
இங்கே போதக் கண்டீரே?- 
	
மேலால் பரந்த வெயில்காப்பான் 
வினதை சிறுவன் சிறகென்னும், 
மேலாப் பின்கீழ் வருவானை 
	
விருந்தா வனத்தே கண்டோ மே. 3 
640: 
கார்த்தண் கமலக் கண்ணென்னும் 
	
நெடுங்கயி றுபடுத் தி,என்னை 
ஈர்த்துக் கொண்டு விளையாடும் 
ஈசன் றன்னைக் கண்டீரே?- 
	
போர்த்த முத்தின் குப்பாயப் 
புகர்மால் யானைக் கன்றேபோல், 
வேர்த்து நின்று விளையாட 
	
விருந்தா வனத்தே கண்டோ மே. 4 
641: 
மாத வன்என் மணியினை 
வலையில் பிழைத்த பன்றிபோல், 
	
ஏது மொன்றும் கொளத்தாரா 
ஈசன் றன்னைக் கண்டீரே?- 
பீதக வாடை யுடைதாழப் 
	
பெருங்கார் மேகக் கன்றேபோல், 
வீதி யார வருவானை 
விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5 
	
642: 
தரும மறியாக் குறும்பனைத் 
தங்கைச் சார்ங்க மதுவேபோல், 
புருவ வட்ட மழகிய 
	
பொருத்த மிலியைக் கண்டீரே?- 
உருவு கரிதாய் முகம்செய்தாய் 
உதயப் பருப்ப தத்தின்மேல், 
	
விரியும் கதிரே போல்வானை 
விருந்தா வனத்தே கண்டோ மே. 6 
643: 
பொருத்த முடைய நம்பியைப் 
	
புறம்போ லுள்ளும் கரியானை 
கருத்தைப் பிழைத்து நின்றஅக் 
கருமா முகிலைக் கண்டீரே?- 
	
அருத்தித் தாரா கணங்களால் 
ஆரப் பெருகு வானம்போல், 
விருத்தம் பெரிதாய் வருவானை 
	
விருந்தா வனத்தே கண்டோ மே. 7 
644: 
வெளிய சங்கொன் றுடையானைப் 
	
பீதக வாடை யுடையானை, 
அளிநன் குடைய திருமாலை 
ஆழி யானைக் கண்டீரே?- 
	
களிவண் டெங்கும் கலந்தாற்போல் 
கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல், 
மிளிர நின்று விளையாட 
	
விருந்தா வனத்தே கண்டோ மே. 8 
645: 
நாட்டைப் படையென்று அயன்முதலாத் 
	
தந்த நளிர்மா மலருந்தி, 
வீட்டைப் பண்ணி விளையாடும் 
விமலன் றன்னைக் கண்டீரே?- 
	
காட்டை நாடித் தேனுகனும் 
களிறும் புள்ளு முடன்மடிய, 
வேட்டை யாடி வருவானை 
	
விருந்தா வனத்தே கண்டோ மே. 9 
646: 
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த 
	
பரமன் றன்னை, பாரின்மேல் 
விருந்தா வனத்தே கண்டமை 
விட்டு சித்தன் கோதைசொல், 
	
மருந்தா மென்று தம்மனத்தே 
வைத்துக் கொண்டு வாழ்வார்கள், 
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் 
	
பிரியா தென்று மிருப்பாரே. (2) 10 
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்