Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature >  Sangam Classics:Ettuthokai/Melkannaku - the Eight Anthologies > pattuppATTu/Melkannaku - the Ten Idylls > kIzhkaNakku 18 - பதினெண் கீழ் கணக்கு > ஐந்திணை ஐம்பது, திணை மொழி ஐம்பது,இன்னிலை


patinenkiizkannakku noolkaL
ainthinai aimpathu (mARan poRaiyanAr) , ainthinai ezupathu (mUvAthiyAr)
thiNaimozhi aimpathi (kaNNan cEnthanAr & innilai (poikaiyAr)


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -II
ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார் ) - 50
ஐந்திணை எழுபது (மூவாதியார் ) - 70
திணை மொழி ஐம்பது (கண்ணன் சேந்தனார்) - 50
இன்னிலை (பொய்கையார்) - 45


Etext Preparation (input, proof-reading, webpage) : K. Kalyanasundaram
C: Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


ஐந்திணை ஐம்பது
மாறன் பொறையனார் அருளியது (காலம் - கி. பி. நான்காம் நூற்றாண்டு)
பாயிரம்
பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேரா தவர்.

முல்லை
இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்
ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார். 1

அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி !
கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்
பீர்நீர்மை கொண்டன தோள். 2

மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன
கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை
முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று
நமர்சென்ற நாட்டுள்இக் கார். 3

உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்
வள்வார் முரசின் குரல்போல் இடித்துரறி
நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார். 4

கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்
கூடி நிரந்து தலைபிணங்கி - ஓடி
வளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும்
துளிகலந்து வீழ்தருங் கண். 5

முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி
செல்சார் வுடையார்க் கினியவாய் - நல்லாய்மற்(று)
யாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமை
ஈரும் இருள்மாலை வந்து. 6

தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை
ஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் - சீர்சால்
சிறுகுழல ஓசை செறிதொடி! வேல்கொண்(டு)
எறிவது போலும் எனக்கு. 7

பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனிபோல் பொற்பத் - திருந்திழாய
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னா
கானம் கடந்துசென் றார். 8

வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்(டு)
உருகி யுடன்றழிய வேண்டா - தெரிதியேல்
பைங்கொடி முல்லை அவிழ்அரும்(பு) ஈன்றன
வம்ப மறையுறக் கேட்டு. 9

நூல்நின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக
தேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் - தான்நவின்ற
கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி
நிற்பாள் நிலையுணர்கம் யாம். 10

2. குறிஞ்சி
இடம் - மலையும் மலை சார்ந்த இடமும்
ஒழுக்கம் - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள்
நன்மலை நாடன் நலம்புனைய -மென்முலையாய்
போயின சின்னாள் புனத்து மறையினால்
ஏயினார் இன்றி இனிது. 11

மாலவரை வெற்ப! வணங்கு குரல்ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம்எம் - தூஅருவி
பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும்
பாக்கம் இதுஎம் இடம். 12

கானக நாடன் கலவான்என் தோளென்று
மானமர் கண்ணாய்! மயங்கல்நீ - நானம்
கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பும் அகன்றுநில் லா. 13

புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்
தினைகாத் திரும்தேம்யாம் ஆக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு. 14

வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) - ஆங்(கு) எனைத்தும்
பாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச்
சேந்தனவாம் சேயரிக்கண் தாம். 15

கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட் பட்டு
மடிசெவி வேழம் இரீஇ - அடியோசை
அஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருள்
துஞ்சா சுடர்த்தொடி கண். 16

மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட !
எஞ்சாது நீவருதி யென்றெண்ணி - அஞ்சித்
திருஒடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர்
உருஒடுங்கும் உள்ளுருகி நின்று. 17

எறிந்தெமர் தாம்உழுத ஈர்ங்குரல் ஏனல்
மறந்தும் கிளியனமும் வாரா - கறங்கருவி
மாமலை நாட! மடமொழி தன்கேண்மை
நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு. 18

நெடுமலை நன்னாட! நீள்வேல் துணையாக
கடுவிசை வாலருவி நீந்தி - நடுஇருள்
இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள்
என்னாவாள் என்னும்என் நெஞ்சு. 19

வெறிகமழ் வெற்பன்என் மெய்ந்நீர்மை கொண்ட(து)
அறியான்மற்(று) அன்னோ! அணங்(கு) அணங்கிற்(று) என்று
மறிஈர்த்(து) உதிரம்தூய் வேலன் தரீஇ
வெறியோ(டு) அலம்வரும் யாய். 20

3. மருதம்
இடம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரி
நுண்துளைத் துன்னூ விற்பாரின் - ஒன்றானும்
வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத்
தேற எமக்குரைப்பாய் நீ. 21

போதார்வண்(டு) ஊதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்
அறி(வு)அயர்ந்(து) எம்இல்லுள் என்செய்ய வந்தாய்
நெறிஅதுகாண் எங்கையர் இற்கு. 22

யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்
பாண! பரிந்துரைக்க வேண்டுமோ - மாண
அறிவ(து) அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று. 23

கோலச் சறுகுருகின் குத்(து)அஞ்சி ஈர்வாளை
நீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு - மேல்எலாம்
சார்தற்குச் சந்தனச்சாந்(து) ஆயினேம் இப்பருவம்
காரத்தின் வெய்யஎம் தோள். 24

அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன்
விழைதரு மார்பம் உறுநோய் - விழையின்
குழலும் குடுமிஎன் பாலகன் கூறும்
மழலைவாய் கட்டுரை யால். 25

பெய்வளைக் கையாய்! பெருநகை ஆகின்ற
செய்வய லூரன் வதுவை விழ(வு)இயம்பக்
கைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவன்
எய்தி இடருற்ற வாறு. 26

தணவயல் ஊரன் புலக்கும் தகையமோ
நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல்
வெண்மரல் போல நிறந்திரிந்து வேறாய
வண்ணம் உடையேம்மற்(று) யாம். 27

ஒல்லென்(று) ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு
வல்லென்(று) என்நெஞ்சம் வாட்கண்ணாய் - நில்லென்னா(து)
ஏக்கற்றாங்(கு) என்மகன் தான்நிற்ப என்னானும்
நோக்கான்தேர் ஊர்ந்து கண்டு. 28

ஒல்லென் ஒலிபுனல் ஊரன் வியன்மார்பம்
புல்லேன்யான் என்பேன் புனையிழையாய்! - புல்லேன்
எனக்கோர் குறிப்பும் உடையனோ ஊரன்
தனக்(கு)ஏவல் செய்தொழுகு வேன். 29

குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்
வளியெறியின் மெய்யிற்(கு) இனிதாம் - ஒளியிழாய் !
ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி
கூடல் இனிதாம் எனக்கு. 30

4. பாலை
இடம் - குறிஞ்சியும் முல்லையும் திரந்த மணல் வெளி
(நீர்வற்றிய இடம்)
ஒழுக்கம் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்
எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்(கு)
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்
துன்பம் கலந்தழியும் நெஞ்சு. 31

விலங்கல் விளங்கிழாய்! செல்லாரோ வல்லர்
அழற்பட்(டு) அசைந்த பிடியை - எழிற்களிறு
கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்(டு)
உச்சி ஒழுக்கஞ் சுரம். 32

பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்
ஆயமும் ஒன்றும் இவைநினையாள் - பால்போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின்
காய்ந்து கதிர்தெறூஉங் காடு. 33

கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்(டு) ஆறலைக்கும் அத்தம் பலநீந்தி
வேட்ட முனைவயின் சேறீரோ ஐய! நீர்
வாள்தடங்கண் மாதரை நீத்து. 34

கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்த
தடிநிணம் மாந்திய பேஎய் - நடுகல்
விரிநிழல் கண்படுக்கும் வெங்கானம் என்பர்
பொருள்புரிந்தார் போய சுரம். 35

கடி(து)ஓடும் வெண்தேரை நீராம்என்(று) எண்ணிப்
பிடியோ(டு) ஒருங்கோடித் தாள்பிணங்கி வீழும்
வெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல் நல்லாய்
தொடியோடி வீழத் துறந்து. 36

தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்
வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாது
கல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்
வல்லவோ மாதர் நடை. 37

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. 38

மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோ டப்
புடைபெயர் போழ்தத்து மாற்றாள் - படர்கூர்ந்து
விம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ
நம்மில் பிரிந்த இடத்து. 39

இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா
நன்கு வதிந்தனை நன்னெஞ்சே! - நாளைநாம்
குன்றதர் அத்தம் இறந்து தமியமாய்
என்கொலே சேக்கும் இடம். 40

5. நெய்தல்
இடம் - கடலும் கடல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)
ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்த
சேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ
பூந்தலை அன்றில் புலம்பு. 41

கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்
ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் - நெடுந்தேர்
கடந்த வழியைஎம் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ. 42

பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை
வரிப்புற வார்மணல்மேல் ஏறித் - தெரிப்புறத்
தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல்
ஆழியால் காணாமோ யாம். 43

கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்
கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன். 44

ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்
சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை
மாந்தளிர் மேனியாய் ! மன்ற விடுவனவோ
பூந்தண் பொழிலுள் குருகு. 45

ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்
பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்
கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழி
தோள்நலம் தோற்பித்தல் நீ. 46

பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்
உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்
அணங்காகும் ஆற்ற எமக்கு. 47

எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த
நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியா தார். 48

கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ
இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம்
தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்
செய்தான் தெளியாக் குறி. 49

அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட
மணிஅரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும்
புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்
உள்ளுருகு நெஞ்சினேன் ஆய். 50.

ஐந்திணை ஐம்பது முற்றிற்று


--------------------------------------------------------------------------------

ஐந்திணை எழுபது
மூவாதியார் அருளியது(காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு)
கடவுள் வாழ்த்து
எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு
நண்ணுங் கலையனைத்தும் நல்குமால் - கண்ணுதலின்
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் நலஞ்சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு.

குறிஞ்சி

அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி கடமா கதூஉம் படர்சாரல்
கானக நாட! மறவல் வயங்கிழைக்(கு)
யானிடை நின்ற புணை. 1

மன்றத் துறுகல் கருங்கண முசுஉகளும்
குன்றன நாடன் தெளித்த தெளிவினை
நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி
ஒன்றுமற்(று) ஒன்றும் அனைத்து. 2

மன்றப் பலவின் களைவிளை தீம்பழம்
உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்(து)
ஆமா சுரக்கும் அணிமலை நாடனை
யாமாப் பிரிவ(து) இலம். 3

சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி
வலியாகிப் பின்னும் பயக்கும் மெலிவில்
கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை
நயந்திகழும் என்னும்என் நெஞ்சு. 4

பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலை
நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு
நின்னல(து) இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்(து)
இன்னுயிர் தாங்கும் மருந்து. 5

காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள்
ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள்
தேன்கலந்து வந்த அருவி முடைந்தாடத்
தாம்சிவப் புற்றன கண். 6

வெறிகமழ் தண்சுனைத் தண்ணீர் துளும்பக்
கறிவளர் தேமா நறுங்கணி வீழும்
வெறிகமழ் தண்சோலை நாட! ஒன்(று) உண்டோ
அறிவின்கண் நின்ற மடம். 7

கேழல் உழுத கரிபுனக் கொல்லையுள்
வாழை முதுகாய் கடுவன் புதைத்தயரும்
தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழி
நேர்வனை நெஞ்(சு) ஊன்று கோல். 8

பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக்
கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும்
சுரும்(பு)இமிர் சோலை மலைநாடன் கேண்மை
பொருந்தினார்க்கு |ஏமாப்(பு) உடைத்து. 9

குறையொன்(று) உடையேன்மன் தோழி நிறையில்லா
மன்னுயிர்க்(கு) ஏமம் செயல்வேண்டும் இன்னே
அராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில்
இராவாரல் என்ப(து) உரை. 10

பிரைசங் கொளவீழ்ந்த தீந்தேன் இறாஅல்
மரையான் குழவி குளம்பில் துகைக்கும்
வரையக நாட! வரையால் வரின்எம்
நிரைதொடி வாழ்தல் இவள். 11

வார்குரல் ஏனல் வளைலாயக் கிளைகவரும்
நீரால் தெளிதிகழ் காநாடன் கேண்மையே
ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும்
ஈர வலித்தான் மறி. 12

இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்
குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்
வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னை
அலையும் அலைபோயிற்(று) இன்று. 13

கொல்லைப் புனத்த அகில்சுமந்து கல்பாய்ந்து
வானின் அருவி ததும்பக் கவினிய
நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும்
வாடல் மறந்தன தோள். 14

முல்லை

செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்
பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்
காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்
நீரோ(டு) அலமரும் கண். 15

தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார்
மடநடை மஞ்ஞை அகவக் - கடல்முகந்து
மின்னோடு வந்த(து) எழில்வானம் வந்தென்னை
என்னாதி என்பாரும் இல். 16

தண்ணுறங் கோடல் துடுப்பெடுப்பக் காரெதிரி
விண்ணுயர் வானத்(து) உரும்உரற்றத் - திண்ணிதின்
புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை
கொல்லுநர் போல வரும். 17

கதழுறை வானம் சிதற இதழ்அகத்துத்
தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅ
இடிப்பது போலும் எழில்வானம் நோக்கித்
துடிப்பது போலும் உயிர். 18

ஆலி விருப்புற்(று) அகவிப் புறவெல்லாம்
பீவி பரப்பி மயில்ஆலச் - சூலி
விரிகுவது போலும்இக் கார்அதிர ஆவி
உருகுவது போலும் எனக்கு. 19

இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
யானும் அவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும். 20

காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்
கார்கொடி முல்லை எயிறீனக் - காரோ(டு)
உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின்
மடம்பட்டு வாழ்கிற்பார் இல். 21

கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக்
கன்றமர் ஆயம் புகுதா - இன்று
வழங்கிய வந்தன்று மாலையாம் காண
முழங்கிவில் கோலிற்று வான். 22

தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்ப
ஆர்கலி வானம் பெயல்தொடங்கிக் - கார்கொள
இன்(று)ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர்
ஒன்றாலும் நில்லா வளை. 23

கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை
முல்லை தளவொடு போதவிழ - எல்லி
அலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்
முலைவற்று விட்டன்று நீர். 24

25, 26 - இரண்டு பாடல்கள் மறைந்தவை

கார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லாம்
ஆர்ப்போ(டு) இனவண்(டு) இமிர்ந்தாட - நீர்த்தின்றி
ஒன்றா(து) அலைக்கும் சிறுமாலை மாறுழந்து
நின்றாக நின்றது நீர். 27

குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப
ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய்!
பின்னொடு நின்று பெயரும் படுமழைகொல
என்னொடு பட்ட வகை. 28

பாலை

பொறிகிளர் சேவல் வரிமரல் குத்த
நெறிதூர் அருஞ்சுரம்நரம் உன்னி - அறிவிட்(டு)
அலர்மொழி சென்ற கொடியக நாட்ட
வலனுயர்ந்து தோன்றும் மலை. 29

ஒல்லோம்என்(று) ஏங்கி உயங்கி இருப்பாளோ
கல்லிவர் அத்தம் அரிபெய் சிலம்(பு)ஒலிப்பக்
கொல்களி(று) அன்னான்பின் செல்லுங்கொல் என்பேதை
மெல்விரல் சேப்ப நடந்து. 30

பொரிபுற ஓமைப் புகர்படு நீழல்
வரிநுகல் யானை பிடியோ(டு) உறங்கும்
எரிமயங்கு கானம் செலவுரைப்ப நில்லா
அரிமயங்கு உண்கண்ணுள் நீர். 31

எழுத்துடைக் கல்நிரைக்க வாயில் விழுத்தொடை
அம்ஆ(று) அலைக்கும் சுரநிறைத்(து) அம்மா
பெருந்தரு தாளாண்மைக்(கு) ஏற்க அரும்பொருள்
ஆகும்அவர் காதல் அவா. 32

வில்லுழுது உண்பார் கடுகி அதரலைக்கும்
கல்சூழ் பதுக்கையார் அத்தத்தில் பாரார்கொல்
மெல்லியல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்(கு)இவர்ந்து
நில்லாத வுள்ளத் தவர். 33

நீரல் அருஞ்சுரைத்(து) ஆமான் இனம்வழங்கும்
ஆரிடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய்!
நாணினை நீக்கி உயிரோ(டு) உடன்சென்று
காணப் புணர்ப்பதுகொல் நெஞ்சு. 34

பீரிவர் கூரை மறுமனைச் சேர்ந்(து) அல்கிக்
கூருகிர் எண்கின் இருங்கினை கண்படுக்கும்
நீரில் அருஞ்சுரம் உன்னி அறியார்கொல்
ஈரமில் நெஞ்சில் அவர். 35

சூரல் புறவின் அணில்பிளிற்றும் சூழ்படப்பை
ஊர்கெழு சேவல் இதலொடு - போர்தினைக்கும்
|தேரொடு கானம் தெருளிலார் செல்வார்கொல்
ஊரிடு கவ்வை ஒழித்து. 36

கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி
கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டு
நெடுவரை அத்தம் இறப்பர்கொல் கோண்மாப்
படுபகை பார்க்குஞ் சுரம். 37

கோளவல் கொடுவரி நல்வய மரக்குழுமும்
தாள்வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்
ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்றுணரா
மீளிகொள் மொய்ம்பி னவர். 38

பேழ்வாய் இரும்புலி குஞ்சரம் கோட்பிழைத்துப்
பாழூர்ப் பொதியில் புகாப்பார்க்கும் ஆரிடைச்
சூழாப் பொருள்நசைக்கண் சென்றோர் அருள்நினைந்
வாழ்தியோ மற்றோ உயிர். 39

முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை
புள்ளி வெருகுதன் குட்டிக்(கு) இரைபார்க்கும்
கள்ளர் வழங்கும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. 40

மன்ற முதுமரத்து ஆந்தை குரல்இயம்பக்
குன்றனம் கண்ணிக் குறும்(பு)இறந்து - சென்றவர்
கள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்(து)
ஒள்ளிய தும்மல் வரும். 41

பூங்கணிடம் ஆடும் கனவும் திருந்தின
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம்நினைப்ப
வீங்கிய மெள்தோள் கவினிப் பிணைதீரப்
பாங்கத்துப் பல்லி படும். 42

மருதம்

பேதையர் என்று தமரைச் செறுபவோர்
போதுறழ் தாமரைக்கண் ஊரனை நேர்நோக்கி
வாய்முடி யிட்டும் இருப்பஏர் மாண்ழாய்!
நோவதென் மார்(பு)யுஅறிம் இன்று. 43

ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை
உள்ளம்கொண்(டு) உள்ளானென்(று) யார்க்குரைக்கோ - ஒள்ளிழாய்
அச்சுப் பணிமொழி உண்டேனோ மேனாள் ஓர்
பொய்ச்சூள் எனஅறியா தேன். 44

ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்
மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக்
கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேல்
பட்டஞ் சிதைப்ப வரும். 45

அகன்பனை யூரனைத் தாமம் பிணித்த(து)
இகன்மை கருதி யிருப்பன் - முகன்அமரா
ஏதின் மகளிரை நோவ தெவன்கொலோ
பேதமை கண்டொழுகு வார். 46

போத்தில் கழுத்தில் புதல்வன் உணச்சான்றான்
மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள்
நீத்துநீர் ஊனவாய்ப் பாண!நீ போய்மொழி
கூத்தாடி உண்ணினும் உண். 47

யாணர்நல் லூரன் திறங்கிளப்பல் என்னுடை
பாண! இருக்க வதுகளை - நாணுடையான்
தன்னுற்ற எல்லாம் இருக்க இரும்பாண!
நின்உற்ற(து) உண்டேல் உரை. 48

உழலை முருக்கிய செந்நோக்(கு) எருமை
பழனம் படிந்துசெய் மாந்தி - நிழல்வதியும்
தண்டுறை யூரன் மலரன்ன மால்புறப்
பெண்டிர்க்(கு) உரைபாண! உய்த்து. 49

பேதை புகலை புதல்வன் துணைச்சான்றோன்
ஓதை மலிமகிழ்நற்(கு) யாஅம் எவன்செய்தும்
பூவார் குழற்கூந்தல் பொன்னன்னார் சேரியுள்
ஓவாது செல்பாண! நீ. 50

பொய்கைநல் லூரன் திறங்கிளத்தல் என்னுடைய
எவ்வம் எனினும் எழுந்தீக - வைகல்
மறுவில் பொலந்தொடி வீசும் அலற்றும்
சிறுவன் உடையேன் துணை. 51

உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்இரியும்
தண்டுறை யூர! தருவதோ? - ஒண்டொடியைப்
பாராய் மனைதுறந்(து) அச்சேரிச் செல்வதனை
ஊராண்மை யாக்கிக் கொளல். 52

வளவயல் ஊரன் மருளுரைக்கு மாதர்
வளைகிய சக்கரத்(து) ஆழி - கொளைபிழையா
வென்றிடை யிட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்
ஒன்றி அனைத்தும் உளேன். 53

உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்றென்(று)
எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும்என்(று) - எண்ணி
வழிபாடு கொள்ளும் வயவயல் ஊரன்
பழிபாடு நின்மே லது. 54

காதலில் தீரக் கழிய முயங்கல்மின்
ஓதம் துவன்றும் ஒலிபுனல் ஊரனைப்
பேதைப்பட்(டு) ஏங்கல்மின் நீயிரும் எண்ணிலா
ஆசை ஒழிய வுரைத்து. 55

தேன்கமழ் பொய்கை அகவயல் ஊரனைப்
பூங்கண் புதல்வன் மிதித்துழக்க - ஈங்குத்
தளர்முலை பாராட்டி என்னுடைய பாவை
வளர்முலைக் கண்ஞமுக்கு வார். 56

நெய்தல்

ஒழுகு நிரைக்கரை வான்குருகின் தூவி
உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப்
பேதையான் என்றுணரும் நெஞ்சும் இனி(து)உண்மை
ஊதியம் அன்றோ உயிர்க்கு. 57

என்னைகொல் தோழி! அவர்கண்ணும் நன்கில்லை
அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர்
புன்னையம் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல(து) இல்லென்(று) உரை. 58

இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன்
கடுமான் மணியவரம் என்று- கொடுங்குழை
புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர்
உள்ளரவம் நாணுவர் என்று. 59

மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
அணிநலம் உண்டகன்றான் என்றுகொல் எம்போல்
திணிமணல் எக்கர்மேல் ஓதம் பெயரத்
துணிமுந்நீர் துஞ்சா தது. 60

கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித்
தண்ணந் துறைவனோ தன்இலன் ஆயிழாய்!
வண்ணகைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப்
பண்ணமைத் தேர்மேல் வரும். 61

எறிசுறாக் குப்பை இனங்கலக்கத் தாக்கும்
ஏறிதிரைச் சேர்ப்பன் கொடுமை - யறியாகொல்
கானகம் நண்ணி அருள்அற் றிடக்கண்டும்
கானலுள் வாழும் குருகு. 62.

நுண்ஞான் வலையில் பரதவர் போத்தந்த
பன்மீன் உணங்கல் கவரும் துறைவனைக்
கண்ணினாற் காண அமையுங்கொல் என்தோழி!
வண்ணந்தா என்கம் தொடுத்து. 63

சிறுமீன் கவுள்கொண்ட செந்தூவி நாராய்
இறுமென் குரலநின் பிள்ளைகட்கே யாகி
நெறிநீர் இருங்கழிச் சேர்ப்பன் அகன்ற
நெறியறிதி மீன்தபு நீ. 64

தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரைமாந்திப்
பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணர்அன்றில்!
தண்ணந் துறைவற்(கு) உரையாய் மடமொழி
வண்ணம்தா என்று தொடுத்து. 65

அடும்பிவர் எக்கர் அலவன் வழங்கும்
கொடுங்கழிச் சேர்ப்பன் அருளான் எனத்தெளிந்து
கள்ள மனத்தான் அயல்நெறிச் செல்லுங்கொல்
நல்வளை சோர நடந்து. 66

கண்டதிரள் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப்
பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை
முண்டகக் கானலுள் கண்டேன் எனத்தெளிந்தேன்
நின்ற உணர்விலா தேன். 67

இவர்திரை நீக்கியிட்(டு) எக்கர் மணன்மேல்
கவர்கால் அலவன் தனபெடை யோடு
நிகரில் இருங்கழிச் சேர்ப்ப! என்தோழி
படர்பசலை ஆயின்று தோள். 68

69, 70 இரண்டு பாடல்களும் மறைந்தன.

ஐந்திணை எழுபது முற்றிற்று

--------------------------------------------------------------------------------

திணை மொழி ஐம்பது
ஆசிரியர் கண்ணன் சேந்தனார் (காலம் கி. பி. நான்காம் நூற்றாண்டு)

1. குறிஞ்சி

புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்
புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும்
வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா
யானை யுடைய கரம். 1

கணமுகை கையெனக் காந்தள் கவின
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்
விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ
புனமும் அடங்கின காப்பு. 2

ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப்
பாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலா
ஈங்கு நெகிழ்ந்த வளை. 3

ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்(டு) எல்லிடைக்
கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்
வானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழி
மேனி பசப்புக் கெட. 4

விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்
வரையிடை வாரல்மின் ஐய! உரைகடியர்
வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர். 5

யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
|ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்
காணினும் காய்வர் எமர். 6

யாழும் குழலும் முழவும் இயைந்தன
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
மாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்
ஊரறி கெளவை தரும். 7

வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்
சோர்ந்து குருதி ஒழுகமற்(று) இப்புறம்
போந்த(து)இல் ஐய! களிறு. 8

பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
மணிமலை நாடன் வருவான்கொல் தோழ!
கணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு ஆர்க்கும்
அணிநிற மாலைப் பொழுது. 9

பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்
எலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்
புலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து) அன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து. 10

2, பாலை

கழுநீர் மலர்க்கண்ணாய்! கெளவையோ நிற்கப்
பொருள்நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்
அழிநீர் வாகி அரித்தெழுந்து தோன்றி
வழிநீர் அறுத்த சுரம். 11

முரிபரல வாகி முரணழிந்து தோன்றி
எரிபரந்த கானம் இயைபொருட்குப் போவீர் !
அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார்யார் தேரும் இடத்து. 12

ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்
கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்
பொலந்தொடீஇ பொய்த்த குயில். 13

புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்
பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
வருநசை பார்க்கும்என் நெஞ்சு. 14

சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்
நெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி !
முறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து)
ஆர்பொருள் வேட்கை அவர். 15

கருங்கால் மராஅம் நுணாவோ(டு) அலர
இருஞ்சிறை வண்டினம் பாலை முரல
அரும்பிய முள்ளெயிற்(று) அஞ்சொல் மடவாய்
விரும்புநாம் செல்லும் இடம். 16

கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும்
வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்
எல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇ
நல்கா துறந்த நமர். 17

கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும்
வெதிர்பிணங்கும் சோலை வியன்கானம் செல்வார்க்(கு)
எதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னே
உதிர்வன போல உள. 18

கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்
நிலைஅஞ்சி நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி!
முலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோ
வளையொடு சோரும்என் தோள். 19

ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்
பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்
கூற்றின வல்வில் விடலையோ(டு) என்மகள்
ஆற்றுங்கொல் ஐய நடந்து. 20

3. முல்லை

அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்
வந்தார் திகழ்நின் தோள். 21

மென்முலைமேல் ஊர்ந்த பசலைமற்(று) என்னாங்கொல்
நன்னுதல் மாதராய்! ஈதோ நமர்வருவர்
பல்நிற முல்லை அரும்பப் பருவஞ்செய்(து)
இன்னிறம் கொண்ட(து)இக் கார். 22

சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிஃதோ
வெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்
தண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்து
இன்றையில் நாளை மிகும். 23

செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீர்இஃதோ
வஞ்சினம் சொல்லி வலித்தார் வருகுறியால்
வெஞ்சினம் பொங்கி இடித்(து)உரறிக் கார்வானம்
தண்பெயல் கான்ற புறவு. 24

கருவியல் கார்மழை கால்கலந்(து) ஏத்த
உருகு மடமான் பிணையோ(டு) உகளும்
உருவ முலையாய்! நம் காதலர் இன்னே
வருவர் வலிக்கும் போது. 25

இருங்கடல் மாந்திய ஏர்கொள் எழிலி
சுருங்கொடி முல்லை கவின முழங்கிப்
பெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார்
பொருந்த நமக்குரைத்த போழ்து. 26

ஆயர் இனம்பெயர்த்(து) ஆம்பல் அடைதாய்
பாய முழங்கிப் படுகடலுள் நீர்முகந்து
மாயிரு ஞாலம் இருள்கூர் மருண்மாலை
செயவர் செய்த குறி. 27

அதிர்குரல் ஏறோ(டு) அலைகடல் மாந்தி
முதிர்மணி நாகம் அனுங்க முழங்கிக்
கதிர்மறை மாலை கனைபெயல் தாழப்
பிதிரும் முலைமேல் கணங்கு. 28

கோடல்அம் கூர்முகை கோளரா நேர்கருதக்
காடெலாம் கார்செய்து முல்லை அரும்(பு)ஈன
ஆறெலாம் நுண்ணறல் வார் அணியிழாய்!
போதராய் காண்பாம் புறவு. 29

அருளி அதிரக் குருகிலை பூப்பத்
தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற
வரிவனைத் தோளி! வருவார் நமர்கொல்
பெரிய மலர்ந்த(து)இக் கார். 30

4. மருதம்

பழனம் படிந்த படுகோட்(டு) எருமை
கழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு)
உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன்
கிழமை யுடையன்என் தோட்டு. 31

கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து)
இணைக்கால் நீலத்(து) இதழ்மேல் சொரியும்
பணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன்
இணைத்தான் எமக்குமோர் நோய். 32

கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர!
உடைய இளநலம் உண்டாய் - கடைய
கதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி
எதிர்நலம் ஏற்றுநின் றாய். 33

செந்நெல் விளைவய லூரன் சிலபகல்
தன்னலம் என்அலார்க்(கு) ஈயான் எழுபாண!
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்
வாரிக்குப் புக்குநின் றாய். 34

வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும்
கூனிவண்(டு) அன்ன குளிர்வயல் நல்லூரன்
மாணிழை நல்லார் இளநலம் உண்டவர்
மேனி ஒழிய விடும். 35

செந்தா மரைலருஞ் செய்வயல் நல்லூர!
நொந்தான்மற்(று) உன்னைச் செயப்படுவ(து) என்னுண்டாம்
தந்தாயும் நீயே தரவந்த நன்னலம்
கொண்டாயும் நீஆயக் கால். 36

பல்காலும் வந்து பயின்றுரையல் பாண! கேள்
நெல்சேர் வயவல லூரன் புணர்ந்தநாள்
எல்வளைய மென்தோளேம் எங்கையர் தம்போல
நல்லஅருள் நாட்டம்இ லேம். 37

நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண!
சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா - ஒழிதிநீ
எல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல்
சொல்லுமவர் வண்ணம் சோர்வு. 38

கருங்கயத்(து) ஆங்கண கழுமிய நீலம்
பெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன்
விரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்
கரும்பின்கோ(து) ஆயினேம் யாம். 39

ஆம்பல் அணித்தழை ஆரம் துயல்வரும்
தீம்புனல் ஊரன் மகளிவள் ஆய்ந்தநறும்
தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்
தாமரை தன்ஐயர் பூ. 40

5. நெய்தல்

நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்
செய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்!
ஐயகொல் ஆன்றார் தொடர்பு. 41

முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை
தத்தும் திரைதயங்கும் தண்ணங் கடற்சேர்ப்ப!
சித்திரப் பூங்கொடி அன்னாட்(கு) அருள்ஈயாய்
வித்தகப் பைம்பூணின் மார்பு. 42

எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ
நெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச் சேர்ப்பன்
அறிவுஅறா இன்சொல் அணியிழையாய்! நின்னில்
செறிவுஅறா செய்த குறி. 43

இளமீன் இருங்கழி ஓதம் உலாவ
மணிநீர் பரக்கும் துறைவ! தகுமோ
குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்
நினைநீர்மை இல்லா ஒழிவு. 44

கடல்கொழித்(து) ஈட்ட கதிர்மணி முத்தம்
படமணி அல்குல் பரதர் மகளிர்
தொடலைசேர்த்(து) ஆடும் துறைவ! என்தோழி!
உடலுள் உறுநோய் உரைத்து. 45

முருகியல் கானல் அகன்கரை யாங்கண்
குருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச் சேர்ப்ப
மருவி வரலுற வேண்டும்என் தோழி
உருவழி உன்நோய் கெட. 46

அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலான
மணியெழில் மேனி மலர்பசப்(பு) ஊரத்
துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி!
தணியும்எள் மென்தோள் வளை. 47

கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப்
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப
வறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்க
நிறங்கூரும் மாலை வரும். 48

மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும்என் நெஞ்சு. 49

பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப்
புகழக் கொணர்ந்து புற(வு) அடுக்கும் முன்றில்
தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி
திகழும் திருஅமர் மார்பு. 50

திணை மொழி ஐம்பது முற்றிற்று

--------------------------------------------------------------------------------

இன்னிலை
ஆசிரியர் பொய்கையார்

கடவுள் வாழ்த்து
வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத் தமரிய கொழுவேல்
கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்
கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே.
- பாரதம் பாடிய பெருந்தேவனார்

1. அறப்பால்

அன்றமரில் சொற்ற அறவுரைவீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகைதேர்மின் - பொன்றா
அறமறிந்தோன் கண்ட அறம்பொருள்கேட்(டு) அல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு. 1

பொருள்விழையார் போற்றார் உடல்நலன் நம்மை
அருள்விழையார் அஃதே முழுஎவ்வம் பாய்நீல்
இருள்இழையார் வீழ்வார்மேல் பாலஆக்கார் ஆம்ஆ(று)
அருள்இழையார் தாமும் அது. 2

கோலப் புறவின் குரல்கூவிப் புள்சிமிழ்ந்தோன்
காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் - மாலின்
வரிநிழல் தாம்எய்தார் தீப்பழுவத்(து) உய்ப்பர்
உரிமை இவண்ஒரா தார். 3

கழிவிரக்கங் கொள்ளார் கதழ்வாளார் வேர்த்துப்
பழிமுறுகக் கோடார் பயன்பேர்த்(து) - அழிமுதலை
இல்லம்கொண்(டு) ஆக்கார் இடும்பைத் தளைகணப்பா
நல்லறனை நாளணிகொள் வார். 4

திரைந்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த
பயன்தவர் செய்வார் சிலரேதம் நெஞ்சத்(து)
இயன்றவா செய்வார் பலர். 5

அம்மை இழைத்த தலைப்பட்(டு) அழிவாயா
இம்மையும் கொண்டுறுத்தும் ஈர்ம்பெயலாம் - மும்மை
உணர்ந்தார் திருவத்தர் ஓரார் உழண்டைத்
தளைப்படுவர் தட்பம் தெறார். 6

தாம்ஈட்(டு) அருவினைகள் தண்டா உடம்(பு)ஒன்ற
நாம்மீட்டு ஒறுக்(கு)ஒணா ஞாங்கரடித் தீம்பால்
பிதுக்கப் பெயல்போல் பிறப்(பு)இறப்புப் போகா
கதுப்போ(டு) இறுத்தல் கடன். 7

தூயசொல் லாட்டும் துணிவறிவும் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல்
படுக்கும் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கும் மடிச்சேரா வாறு. 8

கடன்முகந்து தீம்பெயலை ஊக்கும் எழிலி
மடனுடையார் கோதசுற்றி மாண்புறுத்தல் ஏமம்
படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு. 9
(மூன்று அடிகளில் அமைந்த சிந்தியல் வெண்பா)

இடிப்பதென்(று) எண்ணி இமைவானைக் காயார்
முடிப்பர் உயிரெனினும் முன்னார் - கடிப்பக்
கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே நீண்மோத்தை
ஒன்ற உணராதார் ஊங்கு. 10

உண்மையொராப் பித்தர் உடைமை மயக்கென்ப
வண்மையுற ஊக்கல் ஒருதலையே - கண்ணீர்
இருபாலும் தோன்றன்ன ஈர்க்கலார் போழ்வாள்
இருபால் இயங்கலினோ(டு) ஒப்பு. 11

உடைமையறா(து) ஈட்டல் உறுதுணையாம் யாண்டும்
உடைமையராச் சென்றக்கால் ஊரெல்லாம் சுற்றம்
உடைமைக்கோல் இன்றங்குச் சென்றக்கால் சுற்றம்
உடையவரும் வேறு படும். 12

மண்ணீர் உடையார் வழங்கிச் சிறுகாலைத்
தண்ணீரார் சாரும் நிலம்சார்வர் - உண்ணீர்
அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே வெண்ணீர்ச்
சிறியரையும் ஏர்ப்படுத்தும் செய். 13

மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூஒழுக்கும்
மெய்யா அளிக்கும் வெறுக்கையிலார் - வையத்துப்
பல்கிளையும் வாடப் பணையணைதோள் சேய்திரங்க
ஒல்(கு)உயிர்நீத்(து) ஆரும் நரகு. 14

குருட்டாயன் நீள்கானம் கோடல் சிவணத்
தெருட்டாயம் காலத்தால் சேரான் - பொருட்டாகான்
நல்லறமும் பேணானாம் நாரமிவர்த் தானாம்
பொல்லாங்கு உறைவிடமாம் புல். 15

முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன்
முப்பொருள் உண்மை உடையான் அருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பான் இறைஆங்கு
முப்பொருள் உண்மைக்(கு) இறை. 16

கால்கலத்தால் சேர்பொருளும், கண்ணற்றார் தேர்பொருளும்
நாலிரண்டாற் கூடு நலப்பொருளும் - கோல்தாங்கிக்
கோடும் அரசிற்கு உரியாமே தொல்புவிக்கீழ்
ஆடும் பொருளோடு அணந்து. 17

ஆம்போன் வினையான் அணைவுற்ற பேர்வெறுக்கை
ஓம்(பு)ஒம்(பு) எனமறை கூறத் தலைப்பெயல்என்
எம்போம் எனவரைதல் ஈட்டுநெறி தேராமை
சாம்போழ்(து) அலறும் தகைத்து. 18

பட்டாங்குத் தூயர் பழிச்சற்(கு) உரியராய்
ஒட்டின்(று) உயர உலகத்தோர் - கட்டளை
யாம்வெறுக்கை யின்றி அமையாராம் மையாவின்
ஆம்வெறுக்கை நிற்க உடம்பு. 19

3. இன்பப் பால்

அறங்கரை நாவானம் ஆய்மயிலார் சீர்இல்
லறங்கரையா நாப்பண் அடைவாம் - புறங்கரையாத்
திண்மை நிலையின் உயர்புலத்தில் சேர்வாம்ஈண்(டு)
எண்நிலைக்(கு) உய்வாய் இது. 20

துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காதார் ஆகல் - புணைதழீஇக்
கூட்டுங் கடுமிகையான் கட்டியில் கொண்டற்றால்
வேட்டபோழ்(து) ஆகும் அணி. 21

ஒப்பாவில் வேட்டோ ன் ஒருநிலைப்பட்(டு) ஆழ்ந்தசெயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிய -துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து. 22

பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் - தழைகாதல்
வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந்(து) அணைந்து. 23

அழக்குடம்பு யாத்தசீர் மெல்லியவை ஆணம்
முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக் - குழீஇக்கூடல்
என்னே செறிகாமம் பூட்டும் இயல்மாரன்
மனஅரசால் மாண்பூப்(பு) உலகு. 24.

இன்ப இயல்ஓரார் யாணர் விழைகாமம்
பொன்னின் அணிமலரின் செல்விதாம் - தன்மேனி
முத்த முறுவல் முயக்(கு)ஒக்கின் அன்னத்தின்
பெற்றியரின் என்பேறும் பேறு. 25

தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பையலர்
காவியன சேல்கண் குறுந்தொடியார் - ஆவிக்கு
இனியர் இணைசேரார் ஈர்ங்கண் மாஞாலத்
தனிமைக்(கு) அவரோர் கரி. 26

காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின்
ஏம இருக்கையே தூந்திரையாம் - |ஏமத்(து)ஈண்டு
ஆம்பரலே தோன்றும் அளியூடல் ஆம்பரவில்
தெற்றித் தெறிப்பாம் ஒளிஒளிபாய் கண்ணேசீர்த்(து)
உற்றுகப்பாய்ப் பெற்ற மகவு. 27

கறங்குபறை காணா வுறுவூனைக் காதல்
பிறங்கறை நாவாகும் அஃதே - திறம்இரங்கி
ஊடி உணர்வாரே தாமிசைவார் பல்காலம்
ஈடில தோர்இன்ப விருந்து. 28

தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை
யேற்றுக் கழல்தொடியார் மிக்காரை யார்வரைவர்
போற்றளி கூடல் கரி. 29

காதல் விரிநிலத்(து) ஆரா வகைகாணார்
சாதல்நன் றென்ப தகைமையோர் - காதலும்
ஆக்கி அளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே
நோக்கிலரை நோவ தெலன். 30

அளகும் அளிநாகைப் பேண அணியார்
அழகரிவை வீழ்முயக்கை அண்ணாத் - தனியாளர்
பெற்ற பிறத்தெறிந்து புத்தாய பெட்டுழலும்
பெற்றியர் பெட்ட கழுது. 31

4. வீட்டுப் பால்
4.1 இல்லியல்

ஒத்த உரிமையனர் ஊடற்(கு) இனியளாக்
குற்றம் ஒருஉங் குணத்தளாக் சுற்றறிஞர்ப்
பேணும் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து
நாணும் தகையளாம் பெண். 32

மனைக்கொளிசேய் நாற்பணியோன் நாரப் புலக்கார்
விளக்கொளியாம் கட்காம் அனலி முனைக்(கு)அஞ்சா
வீரர் ஒளியா மடமே அரிவையார்க்காம்
ஏரொளியாம் இல்லுடையான் துப்பு. 33

எய்ப்பில்லைப் பாக வருவாயில் ஐந்தொன்றை
மெய்ப்பிணி சேய்வரை வில் கூட்டிடுக - கைப்பொருள்வாய்
இட்டில்உய் வாய்இடுக்க வீங்க விழையற்க
வட்டல் மனைக்கிழவன் மாண்பு. 34

ஐம்புலத்தோர் நல்குரவோர் ஓம்பித் தலைப்பட்ட
செம்பாக நன்மனையைப் பேணிக் - கடாவுய்த்த
பைம்புல் நிலைபேணி யூழ்ப்ப வடுஅடார்
ஐம்புலர்ஈர்த் தாரில் தலை. 35

உள்ளவா சேறல் இயைபெனினும் போம்வாய
வெள்ளத்(து) அனசேறல் வேண்டல் - மனைக்கிழவன்
நள்அளவின் மிக்காய கால்தொழிலை ஓம்பலே
தெள்அறிஞர் கண்ட நெறி. 36

ஐங்குரவர் ஓம்பல் இனல்நீக்கல் சேர்ந்தோர்க்குப்
பைங்கூடு களைகணாப் பார்த்தளித்தல் = நையுளத்தார்க்(கு)
உற்ற பரிவுஈர்த்தல் எண்ணான்(கு) அறநெறியில்
உத்த புரிதல் கடன். 37

நல்லினம் சாரல் நயணுணர்தல் பல்லாற்றான்
நல்லினம் ஓம்பல் பொறையாளல் - ஒல்லும்வாய்
இன்னார்க்(கு) இனிய புரிதல் நெறிநிற்றல்
நன்னாப்பண் உய்ப்பதோர் ஆறு. 38

முனியான் அறம்மறங்கள் முக்குற்றம் பேணான்
கனிகாக்கும் ஒண்மை உறைப்படுத்தும் பண்போல்
பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரான் நடுக்கற்(று)
இனியனா வான்மற் றினி. 39

துறவியல்

முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாவை
முப்பால் மயக்(கு)ஏழ் பிறப்பாகி - எப்பாலும்
மெய்ப்பொருள் தேறார் வெளிஒரார் யாண்டைக்கும்
பொய்ப்பாலை உய்வாய்ப் போந்து. 40

உண்மைமால் ஈர்ந்து இருள்கடிந்து சார்ஐயம்
புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர் - நுண்ணுனர்நான்
அண்ணா நிலைப்படுவர் ஆற்றம் விழப்புலனை
ஒண்பொருட்(டு) ஊர்இயலைச் சார்ந்து. 41

மாக்கல் வீறும் ஒளியன்ன நோன்புடையார்
மூசா இயற்கை நிலன்உணர்வார் - ஆர்சுற்றி
இன்னல் இனிவாயாம் கொள்வார் பிறப்(பு)இறப்பில்
துன்னார் அடையும் நிலன். 42

பேராப் பெருநிலன் சேய்த்தே உடம்பொன்றா
பேரா ஒருநிலனா நீங்காப் பெரும்பொருளை
யேரா அறிந்துய்யும் போது. 43

மெய்யூணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம்
பொய்யுணர்வான் ஈண்டிய எல்லாம் ஓருங்(கு) அழியும்
ஐயுணர்வாம் ஆயந்து அறஞ்சார்பாச் சார்(பு)ஒறுக்க
நையா நிலைவேண்டு வார். 44

ஒண்றுண்டே மற்றுடலிற் பற்றி வினையிறுக்கும்
பொன்றா உணர்வால் விலங்கொறுக்க பைம்மறியாத்
தன்பால் பெயர்க்குந்து பற்றுதலைப் பட்டோ ர்
நன்பால் அறிந்தார் துறந்தார் வரல்உயர்ந்தார்
புல்பாலாற் சுற்றப் படார். 45

இன்னிலை முற்றிற்று

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home