அத்தியாயங்கள்
கல்கியின் "சிவகாமியின் சபதம் "
பாகம்-3: பிக்ஷுவின் காதல்
முதல் அத்தியாயம்அழியா
மதில்
வாதாபி
சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின்
காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது, தென்னாட்டின்
சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏறக்குறைய எட்டு மாத
காலம் அந்த முற்றுகை நீடித்திருந்தது. எனினும், காஞ்சிக்
கோட்டையின் மதில்கள் கன்னியழியாமல் கம்பீரமாகத் தலைதூக்கி
நின்றன. வாதாபிப் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன் கூடக் காஞ்சிக்
கோட்டைக்குள்ளே கால் வைக்கவும் முடியவில்லை. வாதாபி வீரர்கள்
காஞ்சிக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டவுடனே, வைஜயந்தி
பட்டணத்தில் செய்தது போலவே ஒரே மூர்க்கமாய்க் கோட்டையைத்
தாக்கிக் கைப்பற்ற யத்தனித்தார்கள். காலாட் படையைச் சேர்ந்த
கணக்கற்ற வீரர்கள் ஏக காலத்தில் கோட்டையின் நாற்புறத்திலும்
அகழிகளை நீந்திக் கடக்க முயன்றார்கள். கோட்டை மதில்களின் மேல்
மறைவான இடங்களிலிருந்து மழை போல் பொழிந்த அம்புகளும்
அகழியிலிருந்த முதலைகளும் அவ்வீரர்களையெல்லாம் எமலோகத்துக்கு
அனுப்பின. தப்பித் தவறிக் கரையேறிய வீரர்கள் கோட்டை
மதிலோரமாகக் கண்ணுக்குத் தெரியாமல் அமைந்திருந்த பொறிகளில்
அகப்பட்டுத் திண்டாடினார்கள். ஆங்காங்கு அகழிகளில் இறங்கிய
யானைகளுக்கும் அகழியிலிருந்த முதலைகளுக்கும் பயங்கரமான
போராட்டம் நடந்ததில், அகழியில் நிறைந்திருந்த தண்ணீரெல்லாம்
செந்நீராக மாறியது.
முதல்
முயற்சியில் தோற்ற பிறகு, கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழியைத்
தூர்த்துக் கோட்டைக் கதவுகள் மேல் யானைகளை மோதச் செய்ய
முயன்றார்கள். காஞ்சியைச் சுற்றியிருந்த பெரிய பெரிய
விருக்ஷங்களையெல்லாம் மத்த கஜங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு
வந்து அகழியில் போட்டுத் தூர்த்தன. ஆனால், இந்த வேலை அவ்வளவு
எளிதாக நடக்கவில்லை. கோட்டை வாசலின் மேல் மாடங்களில் மறைவான
இடங்களிலிருந்து பல்லவ வீரர்கள் வேகமாய் எறிந்த வேல்கள்
யானைகளின் கண்களிலும் மற்றுமுள்ள மர்ம ஸ்தானங்களிலும் தாக்க,
அவை வீறிட்டுக் கொண்டு திரும்பியோடிச் சளுக்கர் படைகளுக்குச்
சேதமுண்டாக்கின.
பெரும்
பிரயத்தனத்தின் பேரில் கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழிகள்
தூர்க்கப்பட்டன. யானைகள் கோட்டைக் கதவுகளை முட்டிய போது, வௌிக்
கதவுகள் தகர்ந்தன. ஆனால், வௌிக் கதவுகளுக்கு உள்ளே எதிர்பாராத
அதிசயம் யானைகளுக்குக் காத்திருந்தது. புதிதாய்
அமைக்கப்பட்டிருந்த உட்கதவுகளில் நூற்றுக்கணக்கான வேல் முனைகள்
பொருத்தப்பட்டிருந்தன. இந்த வேல் முனைகளில் வேகமாய் மோதிக்
கொண்ட வாதாபி யானைகள், பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு திரும்பி,
தங்களுக்குப் பின்னாலிருந்த காலாட் படை வீரர்களையெல்லாம்
துவம்சம் செய்து கொண்டு ஓடின. பெரிய பெரிய மரக்கட்டைகளைக்
கொண்டு வந்து அந்த வேல் முனை பொருந்திய கதவுகளையும்
தகர்த்தார்கள். அப்படித் தகர்த்து விட்டுப் பார்த்தால்,
அக்கதவுகளுக்குப் பின்னால் கோட்டை வாசலை அடியோடு அடைத்துக்
கொண்டு கருங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கெட்டிச்
சுவர் காணப்பட்டது. இவ்விதமாக, ஏறக்குறைய ஒரு மாதகாலம்
கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கு முயன்று தோல்வியடைந்த
பிறகு, நீடித்து முற்றுகையை நடத்திக் கோட்டையிலுள்ளவர்களைப்
பட்டினி போட்டுப் பணியச் செய்வதென்று புலிகேசி தீர்மானித்தான்.
வாதாபிப் படைகள் காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரம் வரை
கூடாரம் அடித்துக் கொண்டு தண்டு இறங்கின.
முற்றுகையை
ஆரம்பித்து ஆறு மாத காலம் ஆன போது, கோட்டைக்குள்
இருப்பவர்களுக்கு என்ன ஆபத்து நேரிடுமென்று புலிகேசி
எதிர்பார்த்தானோ அந்த ஆபத்து வாதாபிப் படைகளுக்கே நேரலாயிற்று.
அதாவது உணவுப் பஞ்சம் நேர்ந்தது. இலட்சக்கணக்கான வீரர்களும்,
ஆயிரக்கணக்கான போர் யானைகளும், வண்டி இழுக்கும் மாடுகளும் ஒரே
இடத்தில் இருந்து கொண்டு எவ்வளவு காலத்துக்கு உணவு பெற
முடியும்? வடபெண்ணைக் கரையிலிருந்து காஞ்சி வரையில் உள்ள
வழியில் புலிகேசியின் படைகளுக்கு யாதொரு உணவுப் பொருளும்
கிடைக்கவில்லை. ஏனெனில் வடபெண்ணையிலிருந்து மெல்ல மெல்லப்
பின்வாங்கி வந்த பல்லவ சைனியம், வாதாபிப் படைக்கு உணவுப்
பொருள் ஒன்றும் கிடைக்காதபடி நன்றாய்த் துடைத்து
விட்டிருந்தது. அவ்வாறே, காஞ்சியைச் சுற்றிலும்
நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் உள்ள கிராமங்களையெல்லாம்
சூனியமாக விட்டு விட்டு ஜனங்கள் போய் விட்டபடியால், வாதாபிப்
படைக்கு உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இரண்டு மூன்று
மாத காலத்திற்குள் காஞ்சியைச் சுற்றியிருந்த காடுகள்,
தோட்டங்கள் எல்லாவற்றையும் வாதாபியின் யானைகள் அழித்துத்
தின்று விட்டன. அப்புறம் அவற்றுக்கு ஆகாரம் தேடுவதற்காகப் பல
காத தூரம் போக வேண்டியிருந்தது. அப்படிப் போனாலும் அந்த
வருஷத்துக் கடுங் கோடையில் பசுமையைக் கண்ணால் பார்ப்பதே
அபூர்வமாயிருந்தது. இதையெல்லாம் காட்டிலும் மிகப் பயங்கரமான
இன்னோர் அபாயம், கோடை முற்றிய போது வாதாபிப் படைகளுக்கு
ஏற்பட்டது, அதாவது, குடிதண்ணீருக்கே பஞ்சம் உண்டாகி விட்டது.
அந்த வருஷத்தில்
காஞ்சியைச் சுற்றிலும் ஏழெட்டுக் காத தூரம் பரவிய
பிரதேசங்களில் சில அதிசயங்கள் நடந்து வந்தன. கார்த்திகை,
மார்கழியில் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்த பெரிய
பெரிய ஏரிகளெல்லாம், தை, மாசி, மாதத்தில் எப்படியோ திடீர்
திடீரென்று கரை உடைத்துக் கொண்டு சுற்றுப் பிரதேசங்களை
வெள்ளத்தில் மூழ்கடித்தன. இது காரணமாக, சித்திரை மாதத்தில்
ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ஆங்காங்கு இருந்த
கிணறுகளும், குளங்களும், ஏரிகள் உடைத்துக் கொண்டு வெள்ளம் வந்த
போது தூர்ந்து போய் விட்டன. எங்கேயாவது கொஞ்சம் தண்ணீர்
கண்டால் குடிப்பதற்குப் பயனில்லாதபடி அழுகி நாற்றமெடுத்துக்
கிடந்தது.
அந்த நாளில்
பாலாற்றில் மூன்று இடங்களில் அணைக்கட்டு கட்டித் தண்ணீரைத்
தேக்கி வைத்திருப்பார்கள். வேனிற்காலத்தில் சிறிது சிறிதாக
விடுவார்கள். இந்த வருஷத்தில் அந்தத் தேக்கங்களை முன்னமே
உடைத்து விட்டிருந்தபடியால் கோடைக் காலத்தில் பாலாறும் வறண்டு
விட்டது. பாலாறு வறண்ட காரணத்தினால் காஞ்சியையும் கடலையும்
ஒன்று சேர்த்த கால்வாயிலும் தண்ணீர் வற்றிப் போய் விட்டது.
கோட்டையைச் சுற்றியிருந்த அகழித் தண்ணீரோ, இரத்தமும் நிணமும்
சேர்ந்த சேற்றுக் குட்டையாக மாறியிருந்தது. எனவே, வாதாபியின்
இலட்சக்கணக்கான வீரர்களுக்கும் யானைகள், குதிரைகள், மாடுகள்
எல்லாவற்றிற்கும் பாலாற்றில் ஊற்றெடுத்தே குடி தண்ணீர் கிடைக்க
வேண்டியிருந்தது. பசி, தாகங்களின் கொடுமையினால் போர் யானைகள்
அவ்வப்போது வெறி பிடித்துச் சிதறியோட, அவற்றின் கால்களில்
மிதிபட்டு வீரர்கள் பலர் எமலோகம் சென்றார்கள்.
ஆனி மாதத்திலே
ஒரு நாள் வராகக் கொடி வானளாவப் பறந்த கூடாரத்திற்குள்ளே
புலிகேசியின் யுத்த மந்திராலோசனை சபை கூடிற்று. முன்னே
வடபெண்ணை நதிக்கரையில் நாம் பார்த்த அதே படைத் தலைவர்கள்
ஏழெட்டுப் பேர், எதிரில் விரித்திருந்த கம்பளத்தில்
உட்கார்ந்திருக்க, வாதாபி மன்னன் தந்தச் சிங்காதனத்தில்
கம்பீரமாக அமர்ந்திருந்தான். முன்னைக் காட்டிலும் புலிகேசியின்
முகத்தில் கடூரமும் கோபமும் அதிகமாகக் கொதித்துக்
கொண்டிருந்தன. படைத் தலைவர்களைப் பார்த்து, அவன் கூறினான்;
"இந்த மகேந்திரவர்மனுக்குத் தகப்பன் பெயர் சிம்மவிஷ்ணு; மகன்
பெயர் நரசிம்மன். ஆனால், மகேந்திரனோ வெறும் நரியாக
இருக்கிறான். வளையில் நரி புகுந்து கொள்வது போல், இவன்
கோட்டைக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறான். நரி வளையிலிருந்து
வௌியே வருமென்று எத்தனை நாளைக்குத்தான் காத்துக்
கொண்டிருப்பது? உங்களில் யாருக்காவது ஏதாவது யோசனை
தோன்றுகிறதா?"
படைத் தலைவர்கள்
மௌனமாயிருந்தார்கள். ஒருவராவது வாய் திறந்து பேசத்
துணியவில்லை. "ஏன் எல்லோரும் மௌனம் சாதிக்கிறீர்கள்! வெற்றி
மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்த போது, நான் நீ என்று
எல்லோரும் யோசனை சொல்ல முன்வந்தீர்கள். யோசனை தேவையாயிருக்கும்
போது வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகா! நமது பிக்ஷு
மட்டும் இப்போது இங்கிருந்தால்...." என்று சொல்லிப் புலிகேசி
பெருமூச்சு விட்டான். சபையில் ஒருவன், "பிரபு! பிக்ஷுவைப்
பற்றி எந்தவிதமான தகவலும் வரவில்லையா?" என்று கேட்டான்.
"பிக்ஷுவிடமிருந்து சேதி வந்து நெடுங்காலம் ஆகிறது. வடபெண்ணைக்
கரையில் வஜ்ரபாஹு என்னும் களப்பாளத் தலைவனிடம் அனுப்பிய
ஓலைக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. மதுரைப்
பாண்டியனைப் பார்ப்பதற்கு அவர் போயிருந்த சமயத்தில், ஏதேனும்
நேர்ந்து விட்டதோ, என்னவோ? ஆகா! பிக்ஷு மட்டும்
இப்போதிருந்தால் உங்களைப் போல விழித்துக் கொண்டு இருப்பாரோ?
ஒற்றர் தலைவரே! புத்த பிக்ஷு என்ன ஆகியிருப்பாரென்று
கண்டுபிடிக்கும்படியாக எட்டு மாதத்திற்கு முன்னாலேயே சொன்னேனே?
இதுவரை ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்று கேட்க, ஒற்றர் படைத்
தலைவன் தலை குனிந்து கொண்டான்.
பிறகு புலிகேசி
அங்கே எல்லோருக்கும் முதலில் இருந்தவனைப் பார்த்து,
"சேனாதிபதி, உமக்கு என்ன தோன்றுகிறது? முற்றுகையைத் தொடர்ந்து
நடத்த வேண்டியதுதானே? மகேந்திர பல்லவனைப் பணியச் செய்ய இன்னும்
எத்தனை காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டான்.
அதற்கு வாதாபி சேனாதிபதி, "மதில் மேல் காணப்படும் பல்லவ
வீரர்கள் கொஞ்சம் கூட வாட்டமின்றிக் கொழுத்தே
காணப்படுகிறார்கள். ஆனால், நம்முடைய வீரர்களுக்கு இப்போது அரை
வயிறு உணவுதான் கொடுக்கிறோம். இன்னும் ஒரு மாதம் போனால்
அதுவும் கொடுக்க முடியாது. சுற்றுப்புறத்தில் பத்துக்
காததூரத்திற்கு ஒரு தானிய விதை கூடக் கிடையாது" என்றார்.
புலிகேசியின்
முகத்தில் கோபம் கொதித்தது, "ஆமாம்! ஆமாம்! எப்போது
பார்த்தாலும் இந்தப் பஞ்சப் பாட்டுத்தான்! இம்மாதிரி மூக்கால்
அழுவதைத் தவிர, வேறு ஏதாவது யோசனை சொல்லுவதற்கு இங்கு யாரும்
இல்லையா?" என்று கோபக் குரலில் புலிகேசி கேட்க, படைத்
தலைவர்களில் ஒருவன், "பிரபு! காவேரிக் கரையில் ஆறு மாத
காலமாகப் பாண்டிய ராஜா காத்துக் கொண்டிருக்கிறார். சோழ
வளநாட்டில் சென்ற வருஷம் நன்றாக விளைந்த தானியம் ஏராளமாக
இருக்கிறது. ஜயந்தவர்ம பாண்டியருக்கு ஓலையனுப்பினால், ஒருவேளை
அவர் உணவு அனுப்பக்கூடும்," என்றான்.
இதைக் கேட்ட
புலிகேசி சற்று நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பிறகு
திடீரென்று துள்ளிக் குதித்து எழுந்து, எல்லாரையும் ஒரு தடவை
சுற்றிப் பார்த்து விட்டு, "என்ன செய்வதென்று தீர்மானித்து
வட்டேன். இனிமேல் நான் இங்கேயே சும்மா உட்கார்ந்திருந்தால்
எனக்குப் பைத்தியமே பிடித்து விடும். சேனாதிபதி! நீர் இங்கேயே
நமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் முற்றுகையை நடத்திக்
கொண்டிரும். ஓர் இலட்சம் வீரர்களுடன் நான் தெற்கே புறப்பட்டுச்
சென்று பாண்டிய மன்னனை நேரில் பார்த்து விட்டு வருகிறேன்.
யானைப் படை என்னுடன் வரட்டும். ஆஹா! வாதாபியிலிருந்து
புறப்பட்ட போது கொழு கொழுவென்றிருந்த நம் யானைகள் உணவில்லாமல்
எப்படி மெலிந்து போய் விட்டன! காவேரிக் கரையில் நம்
யானைகளுக்கு நிறைய உணவு கிடைக்குமல்லவா?" என்றான்.
அப்போது ஒற்றர்
படைத் தலைவன், "பிரபு! தாங்கள் அப்படிச் சிறு படையுடன் போவது
உசிதமா? பாண்டியனுடைய நோக்கம் எவ்விதம் இருக்குமோ?" என்று
கூறியதற்குப் புலிகேசிப், "பாண்டியனுடைய நோக்கம் என்னவாக
இருந்தாலும் என்ன? அவன் நம்மோடு போர் செய்யத் துணிய மாட்டான்.
அவன் மோசக் கருத்துள்ளவனாயிருந்தாலும் என்ன செய்து
விடமுடியும்? காவேரிக் கரையில் ஒளிந்து கொள்வதற்குக் கோட்டை
ஒன்றும் இல்லை. எதிரி போர்க்களத்தில் நிற்கும் வரையில்
எனக்குப் பயமும் இல்லை" என்றான்.
காஞ்சி மாநகரில்,
பிரதான மந்திராலோசனை மண்டபத்தில் சபை கூடியிருந்தது. மந்திரி
மண்டலத்தாரும் அமைச்சர் குழுவினரும் பிரசன்னமாகியிருந்தார்கள்.
சக்கரவர்த்தியும், குமார சக்கரவர்த்தியும் சிம்மாசனங்களில்
நடுநாயகமாக வீற்றிருக்க, அருகே ஒரு தனிப் பீடத்தில் சேனாதிபதி
கலிப்பகையும் அமர்ந்திருந்தார். தளபதி பரஞ்சோதியை மட்டும்
அவ்விடத்திலே காணவில்லை. கோட்டைப் பாதுகாப்பு முயற்சியில்
ஈடுபட்டிருந்தபடியால் அவரால் மந்திராலோசனைக்கு வரமுடியவில்லை
போலும்.
சபையில்
கூடியிருந்தவர்களின் முகத்திலெல்லாம் இலேசாகக் கவலைக் குறி
தோன்றியது. எல்லோரையும் காட்டிலும் அதிகமான கவலை, சபையில்
எழுந்து நின்ற பண்டகசாலை அமைச்சர் பராந்தக உடையார் முகத்தில்
காணப்ட்டது. "உடையாரே! முற்றுகை ஆரம்பிக்கும் சமயத்தில் நீர்
உறுதியாகச் சொன்னீரல்லவா? குறைந்தது பதினைந்து மாதத்துக்கு
வேண்டிய தானியங்களை நம் பண்டகசாலைகளில்
பத்திரப்படுத்தியிருப்பதாக! முற்றுகை ஆரம்பித்து ஏழு மாதந்தானே
ஆகிறது? இன்னும் எட்டு மாதத்துக்கு இருக்க வேண்டுமே? மூன்று
மாதத்துக்குத் தான் தானியம் இருக்கும் என்று சொல்கிறீரே? அது
எப்படி?" என்று சக்கரவர்த்தி கேட்டார். மகேந்திர பல்லவரின்
குரல் மிகக் கடுமை பெற்றிருந்தது. அவருடைய முகத்தில்
சுருக்கங்கள் அதிகமாயிருந்தன.
பராந்தக உடையார்
குரலில் கலக்கத்துடனும், சொல்லில் தடுமாற்றத்துடனும் கூறினார்;
"பல்லவேந்திரா! நான் எதிர்பார்த்தபடி சில காரியங்கள்
நடக்கவில்லை. எதிர்பாராத காரியங்கள் சில நடந்து விட்டன. நகரை
விட்டு வௌியேறிய ஜனங்கள் பலர், புள்ளலூர்ச் சண்டைக்குப் பிறகு
நகருக்குத் திரும்பி வந்து விட்டார்கள். தொண்டை மண்டலத்திலுள்ள
சிற்பிகள் அனைவரையும் தலைநகருக்குள்ளே கொண்டு வந்து சேர்க்க
வேண்டுமென்று தங்களுடைய ஆக்ஞை பிறந்தது. இதனால் ஐயாயிரம் பேர்
அதிகமானார்கள். நமது கடிகைகள்-கல்லூரிகள் எல்லாவற்றையும் மூடி
ஆசிரியர்களையும் மாணாக்கர்களையும் வௌியே அனுப்பி விடலாமென்று
முதலில் யோசனை செய்திருந்தோம். கடைசி நேரத்தில் தாங்கள்
அவ்விதம் செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டுயிட்டீர்கள்."
"இவ்வளவுதானா?
இதனாலேயே ஐந்து மாதங்களுக்குரிய உணவு குறைந்து போய்விட்டதா?"
என்று சக்கரவர்த்தி கேட்டார். "அடியேனும் ஒரு பெரிய தவறு
செய்து விட்டேன். நகரில் உள்ள புருஷர்கள், ஸ்திரீகள்,
குழந்தைகளை மட்டும் கணக்கெடுத்துக் கொண்டு, பதினைந்து
மாதத்துக்கு உணவு இருப்பதாகச் சொன்னேன். கறவைப் பசுக்கள்,
கோயில் மாடுகள், குதிரைகள் இவற்றைக் கணக்கில் சேர்க்கவில்லை.
மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் வைக்கோலும் புல்லும்
கிடைக்காதபடியால் தானியத்தையே தீனியாகக் கொடுக்க வேண்டியதாகி
விட்டது" என்றார் அமைச்சர். "நல்லது, பராந்தகரே! தொண்டைமான்
இளந்திரையன் வம்சத்தில் பிறந்த காஞ்சி மகேந்திர பல்லவன்,
வாதாபிப் புலிகேசியிடம் சரணாகதியடைய நேர்ந்தால் அந்தப் பழியைக்
கோவில் மாடுகள் மீதும், தேர்க் குதிரைகள் மேலும் போட்டு
விடலாமல்லவா?" என்று கூறி விட்டுச் சக்கரவர்த்தி சிரித்தார்.
அந்தச் சிரிப்பில் கோபம் அதிகமாய்த் தொனித்ததா, ஏளனம்
அதிகமாய்த் தொனித்ததா என்று சொல்வதற்கு முடியாமல் இருந்தது.
அப்போது
நரசிம்மவர்மர் துள்ளி எழுந்து, "அப்பா! என்ன வார்த்தை
சொன்னீர்கள்? வாதாபிப் புலிகேசியிடம் மகேந்திர பல்லவர்
சரணாகதியடைவதா? ஒரு இலட்சம் பல்லவ வீரர்கள் ஏழு மாதமாக மூன்று
வேளை உண்டும், உறங்கியும் இந்தக் கோட்டைக்குள்ளே எதற்காக
அடைபட்டுக் கிடக்கிறார்கள்? தந்தையே! நமது பண்டகசாலை
அமைச்சரின் கணக்குப் பிழையும் ஒருவிதத்தில் நல்லதாகவே
போயிற்று. இப்போதாவது கட்டளையிடுங்கள், கோட்டைக்குள்ளே ஏழு
மாதம் ஒளிந்து கொண்டிருந்தது போதும். உலகமெல்லாம் நம்மைப்
பார்த்துச் சிரித்தது போதும். அப்பா! இப்போதாவது வாதாபிப்
படைகளைத் தாக்கி நிர்மூலம் செய்யும்படி அடியேனுக்குக்
கட்டளையிடுங்கள்!" என்று ஆத்திரமும் அழுகையுமாய்க் கூறி
விட்டு, மகேந்திர பல்லவரின் முன்னால் தரையில் விழுந்து அவருடைய
பாதங்களைப் பற்றிக் கொண்டார். மகேந்திர பல்லவர் தமது கண்களில்
துளித்த நீர்த் துளியை மறைப்பதற்காக முகத்தைப் பின்புறமாகத்
திருப்பினார்.
ஒரு நொடி
நேரத்தில் சக்கரவர்த்தி மீண்டும் சபையின் பக்கம்
திரும்பியபோது, அவர் முகத்தில் பழையபடி கடுமையும் ஏளனப்
புன்னகையும் குடிகொண்டிருந்தன. தம் பாதங்களைப் பற்றிக் கொண்டு
தரையில் கிடந்த மாமல்லரை அவர் தூக்கி நிறுத்தி, "மாமல்லா!
உன்னை வெகு காலம் நான் அந்தப்புரத்திலேயே விட்டு வைத்திருந்தது
பிசகாய்ப் போயிற்று. மூன்று தாய்மார்களுக்கு மத்தியில் நீ ஒரே
மகனாக அகப்பட்டுக் கொண்டிருந்தாயல்லவா? அதனாலேதான்
பெண்களுக்குரிய குணங்களான ஆத்திரமும் படபடப்பும் உன்னிடம்
அதிகமாய்க் காணப்படுகின்றன. உலகில் வீரச் செயல்கள் புரிய
விரும்பும் ஆண் மகனிடம் இத்தகைய படபடப்பும் ஆத்திரமும்
இருக்கக் கூடாது. நரசிம்மா! மல்யுத்தத்தில் மகா நிபுணனான
உனக்கு இதை நான் சொல்ல வேண்டுமா?" என்றார். மாமல்லருடைய
உதடுகள் துடித்தன; தந்தையின் வார்த்தைகளுக்கு மறுமொழி சொல்ல
அவருடைய உள்ளத்திலிருந்து வார்த்தைகள் பொங்கி வந்தன. ஆனால்,
அதிக ஆத்திரத்தினாலேயே அவரால் பேச முடியாமற் போய் விட்டது.
மகனுடைய நிலையைக்
கண்ட மகேந்திர பல்லவர், "குழந்தாய்! நீண்ட காலமாகப் பொறுத்து
வந்திருக்கிறாய், இன்னும் சில நாள் பொறு. நீயும் நமது பல்லவ
வீரர்களும் உங்களுடைய வீர தீரத்தை எல்லாம் காட்டுவதற்குரிய
சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரப் போகிறது. வாதாபிப்படை, இன்னும்
சில தினங்களுக்குள் கோட்டையைத் தாக்குமென்று
எதிர்பார்க்கிறேன். அந்தத் தாக்குதல் வெகு கடுமையாயிருக்கும்
என்றும் எண்ணுகிறேன். அதைச் சமாளிப்பதற்கு நாமும் நமது பூரண
பலத்தையும் பிரயோகிக்க வேண்டியதாயிருக்கும். பல்லவர்
வீரத்துக்கு மகத்தான சோதனை வரப் போகிறது. அதற்கு நாம்
எல்லோரும் ஆயத்தமாக வேண்டும்!" என்றார். இவ்விதம் மாமல்லனைப்
பார்த்துக் கூறிய பிறகு, பண்டகசாலை அமைச்சரைப் பார்த்து
மகேந்திர பல்லவர், "பராந்தகரே! இன்று முதல் காஞ்சி நகரில்
உள்ளவர் அனைவரும், மாடுகளும் குதிரைகளும் உட்பட சமண நெறியை
மேற்கொள்வோமாக!" என்றதும், சபையில் இருந்த அனைவருக்குமே
தூக்கிவாரிப் போட்டது.
"ஒரே ஒரு
காரியத்தில் மட்டும்தான் சொல்கிறேன்; அதாவது, இரவில் உணவு
உட்கொள்வதில்லையென்ற சமண முனிவர்களின் விரதத்தை எல்லாரும்
கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த உணவுப்
படியில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்து விடுங்கள்.
அரண்மனைக்கும் ஆலயங்களுக்கும் உள்படச் சொல்லுகிறேன். இனிமேல்
காஞ்சி நகரில் உள்ளவர்களுக்கெல்லாம் தினம் இரண்டு வேலைதான்
உணவு. இதன்மூலம் கைவசமுள்ள தானியத்தை நாலரை மாதம் நீடிக்குமாறு
செய்யலாமல்லவா? மந்திரிமார்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
என்று சக்கரவர்த்தி கேட்கவும், முதன்மந்திரி சாரங்கதேவர்,
"பிரபு! கோட்டை முற்றுகை நாலரை மாதத்துக்கு மேல்
நீடிக்காதென்று தாங்கள் அபிப்பிராயப்படுவதாகத் தெரிகிறது"
என்றார்.
"இல்லை! நாலரை
மாதம் கூட நீடிக்குமென்று நான் நினைக்கவில்லை.
முன்ஜாக்கிரதையாக உணவை மூன்றில் ஒரு பங்கு குறைக்கலாமென்று
சொன்னேன். புலிகேசி இன்னும் ஒரு வாரத்தில் கோட்டையைத் தாக்கத்
தொடங்குவான் என்று எதிர்பார்க்கிறேன்..." "பிரபு! அப்படித்
தாங்கள் எதிர்பார்ப்பதற்குத் தக்க காரணங்கள் இருக்கத்தான்
வேண்டும்" என்றார் சாரங்க தேவர். "ஆம்; அவற்றை உங்களுக்கும்
சொல்ல விரும்புகிறேன்! சபையோர்களே! உணவு நெருக்கடியைப்
பொறுத்தவரையில் நம்மைக் காட்டிலும் புலிகேசியின் நிலைமை
ஆபத்தானது. வாதாபிப் படையினர் மூன்று மாத காலமாக அரை வயிறு
உணவு உண்டுதான் ஜீவித்து வருகிறார்கள். புலிகேசி
வாதாபியிலிருந்து புறப்பட்ட போது ஐந்து இலட்சம் வீரர்களுடும்,
பதினையாயிரம் யானைகளுடனும் புறப்பட்டான். இப்போது வாதாபிப்
படையில் மூன்றரை இலட்சம் வீரர்கள்தான் இருக்கிறார்கள்.
பதினாயிரம் யானைகள் மட்டுமே இருக்கின்றன. சபையோர்களே! இன்னும்
ஒரு மாதம் போனால் இவர்களிலும் பாதிப் பேர் பஞ்சத்திலும்
நோயிலும் மடிந்து போவார்கள். யானைகளின் கதி என்ன ஆகுமோ
தெரியாது. ஆகையால், புலிகேசி சீக்கிரத்தில் கோட்டையைத்
தாக்கித்தான் ஆகவேண்டும். இந்தத் தாக்குதல் வெகுமூர்க்கமாய்
இருக்குமென்பதிலும் சந்தேகமில்லை."
முதல் அமைச்சர்
ரணதீர பல்லவராயர், "பல்லவேந்திரா! இந்த மாதிரி அதிசயத்தை
இவ்வுலகம் எப்போதும் கேள்விப்பட்டதில்லை. முற்றுகைக்கு
உள்ளானவர்கள் பசி, பட்டினிக்கு ஆளாகி மடிவதுண்டு. எதிரியிடம்
சரண் அடைந்ததும் உண்டு. ஆனால் முற்றுகை இடுகிறவர்கள்
பட்டினிக்கு ஆளானார்கள் என்று கதைகளிலே கூடக் கேட்டதில்லை!"
என்றார். "ஆம் பல்லவராயரே! திரிபுரம் எரித்த பெருமானின்
அருளினால் அம்மாதிரி அதிசயம் நடக்கிறது. தொண்டை மண்டலத்துக்
கிராமங்களில் உள்ள ஜனங்கள் எதிரிகளுக்கு ஓர் ஆழாக்கு அரிசியோ,
ஒரு பிடி கம்போ கொடுக்கவும் மறுத்திருக்கிறார்கள். கையிலுள்ள
தானியத்தையெல்லாம் வெகு பத்திரமாகப் புதைத்து
வைத்திருக்கிறார்கள். சபையோர்களே! தொண்டை மண்டலத்து ஏரிகள் கூட
நமக்குப் பெரிய உதவி செய்திருக்கின்றன. சென்ற தை மாதத்தில்
எக்காரணத்தினாலோ நம் நாட்டு ஏரிகள் எல்லாம் திடீர் திடீரென்று
உடைத்துக் கொண்டு விட்டன. அப்படி ஏற்பட்ட உடைப்பு
வெள்ளத்தினால் வாழைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் எல்லாம்
பாழாயின. கோடைக் காலத்துச் சாகுபடியும் நடக்கவில்லை.
இதனாலெல்லாம் புலிகேசியின் போர் வீரர்களுக்கும் போர்
யானைகளுக்கும் உணவு கிடைக்கவில்லை."
சேனாபதி கலிப்பகை
எழுந்து, "சபையோர்களே! தொண்டை மண்டலத்து ஏரிகள் நமது கட்சியில்
சேர்ந்து உடைத்துக் கொண்டு பகைவர்களைப் பட்டினிக்குள்ளாக்கியது
உண்மைதான். ஆனால், அவை தாமாக உடைத்துக் கொள்ளவில்லை; விசித்திர
சித்தரான நமது மன்னரின் மகேந்திர ஜால வித்தையிலேதான் ஏரிகள்
எல்லாம் உடைத்துக் கொண்டன" என்றார். "நான் செய்தது
ஒன்றுமில்லை; சத்ருக்னனுடைய தலைமையில் நமது ஒற்றர் படை வெகு
நன்றாய் வேலை செய்திருக்கிறது. தொண்டை மண்டலத்திலுள்ள கோட்டத்
தலைவர்களும் வெகு திறமையுடன் காரியம் செய்திருக்கிறார்கள்.
நாட்டில் பஞ்சம் வந்தாலும் வரட்டும் என்று ஏரிகள்,
அணைக்கட்டுகள் எல்லாவற்றையும் அவர்கள் வெட்டி
விட்டிருக்கிறார்கள். சபையோர்களே! தொண்டை மண்டலத்துப் பிரஜைகள்
இந்த யுத்தத்தில் செய்திருக்கும் உதவிக்கு நூறு ஜன்மம் எடுத்து
நான் அவர்களுக்குத் தொண்டு செய்தாலும் ஈடாகாது" என்று
சக்கரவர்த்தி கூறிய போது அவருடைய குரல் உணர்ச்சியினால்
தழுதழுத்தது.
சற்று நேரம்
சபையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு முதல் மந்திரி
சாரங்கதேவர், "பல்லவேந்திரா! புலிகேசி, பாண்டியனைச் சந்திக்கக்
கொள்ளிடக் கரைக்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறதே! பாண்டியன்
ஒருவேளை வாதாபிப் படைக்கு வேண்டிய உணவுப் பொருள் கொடுக்கலாம்
அல்லவா?" என்றார். "ஆம் மந்திரி! பாண்டியனிடம் உணவுப் பொருள்
உதவி கோருவதற்காகத் தான் புலிகேசி தெற்கே போயிருக்கிறான்.
ஆனால் அந்த உதவி அவனுக்குக் கிடைக்கும் என்று நான் கருதவில்லை.
தவிரவும், புலிகேசி சீக்கிரத்தில் வாதாபிக்குத் திரும்ப
வேண்டிய காரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சபையோர்களே! ஒவ்வொரு
நிமிஷமும் தெற்கேயிருந்து முக்கியமான செய்தியை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே மகேந்திர பல்லவர்
மண்டபத்தின் வாசற் பக்கம் பார்த்தார். பார்த்த உடனே "ஆ இதோ
செய்தி வருகிறது!" என்றார்.
காவலன் ஒருவன்
உள்ளே வந்து, சக்கரவர்த்திக்கு அடி வணங்கி, அவருடைய காதோடு ஏதோ
இரகசியமாகச் சொன்னான். சாதாரணமாக எந்தச் சந்தர்ப்பத்திலும்
ஆச்சரியமான அறிகுறியைக் காட்டாத மகேந்திர பல்லவரின் முகம்,
மேற்படி காவலன் கூறியதைக் கேட்டதும் எல்லையற்ற வியப்பைக்
காட்டியது. "சபையோர்களே! நீங்களாவது நானாவது சற்றும்
எதிர்பாராத அதிசயமான செய்தி வந்திருக்கிறது. என்னாலேயே நம்ப
முடியவில்லை. விசாரித்து உண்மை தெரிந்து கொள்ளப் போகிறேன்.
இப்போது சபை கலையட்டும், இன்றிரவு மறுபடியும் சபை கூட
வேண்டும். அப்போது எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். மாமல்லா!
நீயும் அரண்மனைக்குப் போய் உன் தாய்மாரைப் பார்த்து விட்டு
வா!" என்று கூறிக் கொண்டே மகேந்திர பல்லவர் எழுந்து சபா
மண்டபத்தின் வாசலை அடைந்து, அங்கு ஆயத்தமாய் நின்ற குதிரையின்
மீது தாவி ஏறினார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நீண்ட
காலத்திற்குப் பிறகு நாம் மறுபடியும் கண்ணபிரானுடைய
வீட்டுக்குள் பிரவேசிக்கும் போது, அங்கே 'குவா குவா' என்ற
சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிடுகிறோம். வாசற்படியில் சிறிது
தயங்கி நின்று விட்டு உள்ளே சென்றோமானால், அஸ்தமன வேளையின்
மங்கிய வௌிச்சத்தில் அங்கே ஓர் அபூர்வமான காட்சியைக்
காண்கிறோம். விபூதி ருத்ராட்சமணிந்து கனிந்த சிவப்பழமாய்த்
தோற்றமளித்த ஒரு சைவப் பெரியார் நிற்கிறார். அவருடைய நீட்டிய
இரு கரங்களிலும் ஒரு பச்சைக் குழந்தை - ஆறு மாதத்துக் குழந்தை
காணப்படுகிறது - மூக்கும் முழியுமாக வெண்ணெய் தின்ற கண்ணனைப்
போல் கிண்ணென்றிருந்த அந்தக் குழந்தைதான் 'குவா குவா' என்று
அழுகிறது. அந்தச் சைவப் பெரியாருக்கு எதிரில் கண்ணபிரானும்,
கமலியும் நின்று புன்னகை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
பெரியவர்,
குழந்தையைக் கமலியின் கைகளில் விட்டு விடப் பார்க்கிறார். கமலி
குழந்தையை வாங்கிக் கொள்ள மறுத்துப் பின்வாங்குகிறாள். "நான்
என்ன செய்வேன்? பாட்டனைக் கண்டால் பேரனுக்கு அவ்வளவு ஆசை,
என்னிடம் வர மாட்டேனென்கிறான்" என்று சொல்கிறாள் கமலி.
இதையெல்லாம் பார்த்துக் கண்ணபிரான் சந்தோஷப்பட்டுக் கொண்டே
நிற்கிறான். குழந்தை 'குவா குவா' என்று கத்திக் கொண்டே
காலையும் கையையும் உதைத்துக் கொள்கிறது. கிழவர்..."கமலி!
உன்னுடைய பொல்லாத்தனம் உன் குழந்தையிடமும் இருக்கிறது!"
என்கிறார்.
அச்சமயம்,
வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து அதாவது அரண்மனைத்
தோட்டத்திலிருந்து மணி அடிக்கும் சப்தம் கேட்கிறது. பெரியவர்
அதைக் கேட்டதும் அதிக பரபரப்பை அடைகிறார். அப்பால் இப்பால்
பார்க்கிறார், குழந்தையைத் திடீரென்று தரையில் விட்டு விட்டுத்
தோட்டத்தைப் பார்க்க ஓட்டம் பிடிக்கிறார். கமலி தன் கண்களில்
தீப்பொறி பறக்க, "பார்த்தாயா, உன் தகப்பன் சாமர்த்தியத்தை?
பச்சைக் குழந்தையைத் தரையிலே போட்டு விட்டு ஓட எப்படித்தான்
மனம் வந்ததோ?" என்றாள்.
"கமலி! அப்பாவின்
பேரில் குற்றம் இல்லை. நாதப் பிரம்மம் நேரிலே வந்து கூப்பிடும்
போது அவர் என்ன செய்வார்?" "நாதப் பிரம்மமும் ஆச்சு! நாசமாய்ப்
போனதும் ஆச்சு! வெறும் ஆஷாடபூதி. அவ்வளவு வைராக்கிய
புருஷாயிருந்தால், காட்டுக்குத் தபசு செய்யப் போவதுதானே?
அரண்மனைத் தோட்டத்தில் சிங்கார மண்டபத்தில் என்ன வேலை? சமாதி
கட்டிக் கொள்ள இங்கேதானா இடம் அகப்பட்டது? அது போகட்டும், என்
பொல்லாத்தனமெல்லாம் என் குழந்தைக்கும் வந்திருக்கிறதாமே!
கிழவரின் வாய்த் துடுக்கைப் பார்த்தாயா? இவருடைய மகன் மட்டும்
ரொம்பச் சாதுவாம்! பார்! நான் போய் விடுகிறேன். என் தங்கை
சிவகாமியைப் பார்க்க வேண்டுமென்று எனக்குக் கூட ஆசையாய்
இருக்கிறது. கோட்டைக் கதவு திறந்ததும் இந்தப் பொல்லாத
பிள்ளையையும் அழைத்துக் கொண்டு போய் விடுகிறேன்! இந்த
அரண்மனைச் சிறையில் யார் இருப்பார்கள்?"
இப்படி கமலி
மூச்சு விடாமல் பேசிக் கொண்டே தரையில் கிடந்த குழந்தையை
எடுக்கப் போனாள். கண்ணனும் அதே சமயத்தில் குழந்தையை
எடுப்பதற்காகக் கீழே குனிந்தான். இருவருடைய தலைகளும் மோதிக்
கொண்டன. "இந்தப் பொல்லாதவனை நீ ஒன்றும் எடுக்க வேண்டாம்!"
என்றாள் கமலி. "அப்படித்தான் எடுப்பேன்; நீ என்ன சொல்கிறது?"
என்றான் கண்ணன். இப்படி இவர்கள் குழந்தையைத் தரையிலிருந்து
யார் எடுப்பது என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே,
வாசலில் குதிரைச் சப்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம்
யாரோ உள்ளே வந்தார்கள். யார் என்று திரும்பிப் பார்த்த
கண்ணபிரானும் கமலியும் அப்படியே பார்த்தது பார்த்தபடி
பிரமித்து நின்றார்கள்.
ஏனெனில்,
அவ்விதம் திடீரென்று வந்தவர் சாஷாத், மகேந்திர பல்லவ
சக்கரவர்த்திதான்! "ஓஹோ! இங்கேயும் ஒரு யுத்தமா? நாட்டிலே
யுத்தம் நின்று விடும் போல் இருக்கிறது. ஆனால், உங்கள் வீட்டு
யுத்தம் மட்டும் நிற்கவே நிற்காது போலிருக்கிறதே!" என்று
சக்கரவர்த்தி கூறியதும் தம்பதிகள் இருவரும் பெரிதும்
வெட்கமடைந்து மறுமொழி சொல்ல முடியாமல் நின்றார்கள். பிறகு
மகேந்திர பல்லவர், "கமலி! உன் குழந்தை சௌக்கியமாயிருக்கிறதா?"
என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து குழந்தையின் முகத்தைப்
பார்த்து விட்டு, "கண்ணனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது!
சின்னக் கண்ணன் என்றே பெயர் வைத்து விடலாம். மாமல்லனுக்கும்
கலியாணமாகி இந்த மாதிரி ஒரு குழந்தை பிறந்தால், அரண்மனை
கலகலவென்று இருக்கும். அரண்மனையில் குழந்தை அழுகைச் சப்தம்
கேட்டு வெகுகாலம் ஆயிற்று!" என்று தமக்குத் தாமே பேசிக்
கொள்கிறவர் போல் சொல்லி விட்டு, "கண்ணா உன் தகப்பனார் எங்கே?"
என்று கேட்டார். "இப்போதுதான் வசந்த மண்டபத்துக்குப் போனார்,
பிரபு!" என்றான் கண்ணன்.
"ஆ! மகரிஷி யோக
சாதனைக்குப் போய் விட்டாரா!" என்று மகேந்திரர் கேட்டபோது, கமலி
இலேசாகச் சிரித்தாள். "கமலி சிரிக்கிறாள்! உங்களைப் போல் இளம்
வயதாயிருப்பவர்களுக்கு யோகம், சமாதி என்றால் சிரிப்பாய்த்தான்
இருக்கும். வயதாகி உலகத்தில் விரக்தி ஏற்பட்டால் அப்புறம்
நீங்களும் போகும் வழிக்குக் கதி தேடலாமென்று யோசிப்பீர்கள்.
போகட்டும்; உங்களுடைய யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துங்கள். நான்
யோகியைப் பார்த்து விட்டுப் போகிறேன்" என்று சொல்லிக்
கொல்லைப்பக்கம் நோக்கிச் சென்றவர், வாசற்படியண்டை சற்று
நின்று, "கமலி! உன் சிநேகிதி சிவகாமியைக் கூடிய சீக்கிரத்தில்
நீ பார்க்கலாம்!" என்று கூறி விட்டு மேலே நடந்தார்.
சக்கரவர்த்தி
மறைந்ததும், கமலி, "கண்ணா! இதென்ன சக்கரவர்த்தி திடீரென்று
வந்து நம் மானத்தை வாங்கி விட்டார்! சிவகாமி கூடிய சீக்கிரம்
வருவாள் என்று அவர் சொன்னதைக் கேட்டாயா, கண்ணா? யுத்தம்
சீக்கிரத்தில் முடிந்து விடப் போகிறதா? சளுக்கர்கள் தோற்று
ஓடிப் போய் விட்டார்களா?" என்று ஏதேதோ கேட்டாள். அந்தக்
கேள்விகளையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவனாய்க் கண்ணபிரான்
ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவன், சட்டென்று யோசனையை நிறுத்தி,
"கமலி! கொஞ்ச நாளாகவே எனக்கு ஒரு மாதிரி சந்தேகம் இருந்தது.
அது இன்றைக்கு ஊர்ஜிதமாயிற்று!" என்றான். "என் பேரில் சந்தேகம்
வந்து விட்டதா? அது என்ன சந்தேகம்?"
"உன் பேரில்
எனக்கு யாதொரு சந்தேகமும் இல்லை. சந்தேகம் என் தகப்பனார்
பேரில்தான். அவர் ஏதோ யோகம், தியானம் நாதப்பிரம்ம உபாசனை
என்றெல்லாம் சொல்லிக் கொண்டு நந்தவன மண்டபத்துக்குப் போய் இரவு
பகலாய் உட்கார்ந்திருக்கிறாரே, அதில் ஏதோ அந்தரங்கம் இருக்க
வேண்டுமென்று சந்தேகித்தேன். அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று
இன்று." "என்ன சந்தேகம்? எப்படி ஊர்ஜிதமாயிற்று?" "கிட்ட வா,
சொல்கிறேன்; ரொம்ப ரொம்ப அந்தரங்கமான விஷயம். இந்தப் பயலின்
காதிலே கூட விழக் கூடாது! கமலி, அப்பாவின் யோக மண்டபத்தில் ஒரு
சுரங்க வழி இருக்கிறது. அது கோட்டைக்கு வௌியே போகிறது.
சக்கரவர்த்தியின் ஒற்றர்கள் அதன் வழியாக அடிக்கடி வந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பார்த்தாயா? இந்தப்
பயல் நான் சொல்வதை எப்படி ஒற்றுக் கேட்டுக்
கொண்டிருக்கிறான்...!" என்று கண்ணபிரான் சொல்லிக் குழந்தையின்
கன்னத்தை இலேசாகக் கிள்ள, குழந்தை வீர் என்று கத்த ஆரம்பிக்க,
கமலி கண்ணபிரானைச் சண்டை பிடிக்க, கண்ணபிரான், 'அவனும் என்
கன்னத்தை வேணுமானால் கிள்ளட்டும்!' என்று கூற, கமலி
குழந்தையைப் பார்த்து, 'என் கண்ணே!' என்று அதற்கு முத்தம்
கொடுக்கப் போக, குறுக்கே கண்ணபிரான் கன்னத்தை நீட்ட, கமலி
அவனைச் சண்டை பிடிக்க, இப்படி ஏகப் பூசலாகி விட்டது.
இதற்கிடையில்
மகேந்திர சக்கரவர்த்தி அரண்மனைத் தோட்டத்திற்குள் புகுந்து
வசந்த மண்டபத்துக்குச் சென்றார். காலடிச் சப்தத்தைக்
கேட்டதும், சிவனடியாராக விளங்கிய அசுவபாலர் வௌியில் தலையை
நீட்டி, "பிரபு, தாங்கள்தானே; நல்ல சமயத்தில் வந்தீர்கள்;
இப்போதுதான் மணி அடித்தது!" என்று கூறி, மண்டபத்தின்
நடுமத்தியில் இருந்த சிவலிங்கத்தை அப்பால் நகர்த்தவும்,
சிவலிங்கம் இருந்த இடத்தில் ஒரு பள்ளமும் அதற்குள் மங்கிய
இலேசான வௌிச்சமும் தெரிந்தன. சில விநாடிகளுக்கெல்லாம் அந்தப்
பள்ளத்திலிருந்து சத்ருக்னனுடைய தலை எழுந்தது. பிறகு
சத்ருக்னனின் முழு உருவமும் வௌியில் வந்தது.
"சத்ருக்னா?
உனக்காகக் காத்திருந்து காத்திருந்து போதும் போதும் என்று
ஆகிவிட்டது. ஏன் இவ்வளவு தாமதம்? போன காரியம் என்ன? காயா?
பழமா?" என்று மகேந்திர பல்லவர் கேட்டார். "பல்லவேந்திரர்
எடுத்த காரியம் ஏதாவது காயாவது உண்டா? பழந்தான். சுவாமி!
எல்லாம் தாங்கள் போட்ட திட்டப்படியே நடந்தது. வேங்கித்
தூதனுடன் போன சளுக்க வீரர்களிடம் குண்டோதரன் அகப்பட்டுக்
கொண்டான். இருவரும் கொள்ளிடக் கரையில் புலிகேசியின்
முன்னிலைக்குக் கொண்டு போகப்பட்டார்கள்."
"குண்டோதரனை
அப்புறம் பார்த்தாயா? அல்லது அவனிடமிருந்து ஏதேனும் செய்தி
உண்டா?" "அதுதான் இல்லை; அவனுக்காகத்தான் இத்தனை நேரம்
காத்துப் பார்த்தேன். புலிகேசி மகா மூர்க்கன் என்று
கேள்வியாச்சே, சுவாமி! குண்டோதரனுடைய கதி என்ன ஆயிற்றோ என்று
சிறிது கவலையாயிருக்கிறது." "குண்டோதரனுக்கு ஒன்றும்
நேர்ந்திராது, சத்ருக்னா!" "எப்படிச் சொல்லுகிறீர்கள்? பிரபு?"
"நம்முடைய யுக்தி நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மகத்தான
பலனை அளித்துவிட்டது. கேள், சத்ருக்னா! புலிகேசி சமாதானத் தூது
அனுப்பியிருக்கிறான்! இந்த நேரம் அனுடைய தூதர்கள் என் மறு
மொழிக்காகத் தெற்குக் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்கள்.
நான் உன்னைச் சந்தித்து விட்டுப் பிறகு முடிவாக மறுமொழி
சொல்லலாம் என்றெண்ணி அவசரமாக இங்கே வந்தேன்."
"பிரபு!
புலிகேசியை நம்பலாமா? மகா வஞ்சகன் என்று சொல்லுகிறார்களே?"
என்றான் சத்ருக்னன். "அவநம்பிக்கை கொள்வதற்கு இடமே இல்லை,
சத்ருக்னா! ஆனாலும், குண்டோதரன் திரும்பி வந்தால் அவனைச் சில
விஷயம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன்."
இவ்விதம் மகேந்திரர் சொல்லிக் கொண்டிருந்தபோதே சத்ருக்னன்
எந்தப் பள்ளத்திலேயிருந்து வௌிவந்தானோ, அந்தப் பள்ளத்திற்குள்
இருமல் சப்தம் கேட்டது. பேசிக்கொண்டிருந்த இருவரும்
திடுக்கிட்டார்கள். அடுத்த வினாடி அந்தப் பள்ளத்தில்
குண்டோதரனுடைய தலை தெரியவே, அளவிறந்த வியப்போடு ஓரளவு
அமைதியும் அடைந்தார்கள்.
"குண்டோதரா!
உனக்கு நூறு ஆயுசு! இப்போதுதான் உன்னைப்பற்றிப் பேசிக்
கொண்டிருந்தோம். நீ எப்படித் திடீரென்று முளைத்தாய்?" என்று
சக்கரவர்த்தி கேட்க, "பிரபு! தாங்கள் அடிக்கடி 'சத்ருக்னரைப்
பின்பற்றி நட! சத்ருக்னரைப் பின்பற்றி நட!' என்று
சொல்லுவீர்களே, அது மிகக் கடினமான காரியம். இந்த இருட்டுச்
சுரங்க வழியில் இவரைப் பின்பற்ற முயன்று நான் ஓடோடி வந்தும்
இவரைப் பிடிக்க முடியவில்லை!" என்றான் குண்டோதரன். "உன்
வேடிக்கையெல்லாம் அப்புறம் ஆகட்டும்; நீ போன இடத்தில் என்ன
நடந்ததென்று விவரமாகச் சொல்லு" என்று மகேந்திர சக்கரவர்த்தி
கேட்க, குண்டோதரனும், நாம் முன்னமே அறிந்த அவன் வரலாற்றை
விவரமாக கூறி முடித்தான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அன்றிரவு
இரண்டாம் ஜாமத்தில் மந்திராலோசனை சபை மறுபடியும் கூடிய போது,
சபையில் கூடியிருந்த எல்லோருடைய முகத்திலும் பரபரப்புக்
காணப்பட்டது. வாதாபி வீரர்கள் இருவரும் வெள்ளைக் கொடி
பிடித்துக்கொண்டு தெற்குக் கோட்டை வாசலில் வந்து நின்றதாகவும்
அவர்கள் கொண்டு வந்த ஓலை மகேந்திரச் சக்கரவர்த்தியிடம்
சேர்க்கப்பட்டதாகவும் நகரம் முழுவதும் வதந்தி பரவிவிட்டது.
ஓலையில் என்ன எழுதியிருந்தது, மகேந்திர பல்லவர் என்ன மறு ஓலை
அனுப்பப் போகிறார் என்று அறிந்து கொள்ள அவ்வளவு பேரும் ஆவலாக
இருந்தார்கள். முக்கியமாக, நரசிம்மவர்மரின் முகத்திலே எள்ளும்
கொள்ளும் வெடித்தன. அவருடைய கண்களில் பளிச் பளிச்சென்று
மின்னல் தோன்றி மறைந்தன. தம் பக்கத்தில் நின்ற பரஞ்சோதியுடன்
அடிக்கடி சமிக்ஞா பாஷையினால் அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
அவருடைய மார்பு புயலால் தாக்குண்ட கடலைப் போல் மேலே
பொங்குவதும் கீழே அடங்குவதுமாக இருந்தது.
சக்கரவர்த்தி
வழக்கத்தைவிட மிடுக்கான நடையுடன் வந்து சிம்மாசனத்தில்
அமர்ந்தார். அவர் கையிலிருந்த ஓலை மீது எல்லாருடைய கண்களும்
கவனமும் சென்றன. "சபையோர்களே! இன்று மாலை சபை கலையும்
சமயத்தில் முக்கியமான செய்தியை எதிர்பார்ப்பதாகச் சொன்னேன்.
நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் முக்கியமான
ஆச்சரியமான செய்தி வந்திருக்கிறது. மந்திரிகளே! அமைச்சர்களே!
தளபதிகளே! அனைவரும் கேளுங்கள்! வாதாபிச் சக்கரவர்த்தி
யுத்தத்தை நிறுத்தி விட்டார். சமாதானத்தையும் சிநேகத்தையும்
வேண்டி ஓலை அனுப்பியிருக்கிறார்!" என்று சொல்லி மகேந்திர
பல்லவர் தம் கையிலிருந்த ஓலையைத் தூக்கிக் காட்டியதும் சபையில்
ஏற்பட்ட 'ஹா ஹா' காரத்தையும் மற்றும் பலவியப்பொலிகளையும்,
குதூகல சப்தங்களையும் வர்ணிக்க முடியாது. இவ்வளவுக்கிடையில்
'ஹூம்' என்ற ஆட்சேபிக்கும் சப்தம் ஒன்றும் கிளம்பியது. அது
மாமல்லர் இருந்த இடத்திலிருந்து வந்ததென்பதைச் சொல்ல
வேண்டியதில்லை.
"மந்திரிகளே!
அமைச்சர்களே! உங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன். துங்கபத்ரா நதியிலிருந்து நர்மதை நதிவரையிலும்
உள்ள மத்திய பாரத தேசத்தின் ஏக சக்கராதிபதி நம்முடைய
சிநேகத்தைக் கோருகிறார். நம்முடன் சமாதானத்தை நாடுகிறார்.
அவருக்கு நான் என்ன மறுமொழி அனுப்பட்டும்? யுத்தத்தை நிறுத்த
முடியாது; போர் நடத்தியே தீருவோம் என்று சொல்லியனுப்பட்டுமா?
அல்லது பல்லவ குலத்தின் பரம்பரைத் தர்மத்தை அனுசரித்து,
சிநேகத்தைக் கோருகிற வாதாபிச் சக்கரவர்த்தியிடம் நாமும்
சிநேகத்தைக் கைக்கொள்ளலாமா? சபையோர்களே! நன்றாக யோசித்துச்
சொல்லுங்கள். பதினையாயிரம் யானைப்படையையும், ஐந்து இலட்சம்
காலாட் படையையும் உடைய வாதாபிப் புலிகேசி மன்னர், யுத்தத்தை
நிறுத்திவிட்டு நமது விருந்தினராகக் காஞ்சி நகருக்குள்
பிரவேசிக்க விரும்புகிறார். சில தினங்கள் இங்கே தங்கி
இம்மாநகரின் சிறப்புக்களைப் பார்த்துக் களித்துவிட்டுப் போக
ஆசைப்படுகிறார். அவரை மரியாதையுடன் வரவேற்று உபசரிப்போமா
அல்லது கோட்டைக் கதவுகளுக்கு இன்னும் சில தாழ்களைப் போட்டு
அடைப்போமா? உங்களுக்குள்ளே கலந்து யோசித்துக் கொண்டு ஏகமனதாக
அபிப்பிராயத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்றார்
சக்கரவர்த்தி.
பிறகு சற்று
நேரம் சபையில் ஒரே கலகலப்பாய் இருந்தது. மந்திரிகளும்,
அமைச்சர்களும் ஒருவரோடொருவர் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டார்கள்.
கடைசியாக, பிரதம மந்திரி சாரங்கதேவ பட்டர் பேசுவதற்கு எழுந்து
நின்ற போது, சபையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது.
"பல்லவேந்திரா! தங்களுடைய இராஜ தந்திரத்திலும்
தீர்க்காலோசனையிலும் இச்சபையோர் அனைவருக்கும் பூரண நம்பிக்கை
இருக்கிறது. எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் எப்படிச் செய்ய
வேண்டுமோ, அப்படித் தாங்கள் செய்து முடிப்பீர்கள் என்று
எல்லாரும் உறுதி கொண்டிருக்கிறோம். ஆகவே, முதலில் தங்களுடைய
அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்" என்றார்.
அப்போது
சக்கரவர்த்தி, "பட்டரே! என் அபிப்பிராயத்தைக் கேட்கவும்
வேண்டுமா? அவசியத்துக்கு மேலே ஒரு வினாடியும் யுத்தத்தை
நடத்துவதில் எனக்குப் பிரியமில்லை. ஓர் உயிரேனும் வீணாகச்
சேதம் அடைவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தக் கோட்டைக்குள்
இருக்கும் நாமெல்லோரும் கூடியவரையில் ஒரு குறையும் இல்லாமல்
சௌகரியமாயிருக்கிறோம். ஆனால், கோட்டைக்கு வௌியே கிராமங்களிலும்
பட்டணங்களிலும் உள்ள பல்லவ நாட்டுப் பிரஜைகள்
பெருங்கஷ்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தொண்டை மண்டலத்தில்
இந்தக் கோடை காலத்தில் பயிர்த் தொழிலே நடக்கவில்லை. இன்னும்
சில மாத காலத்தில் பல்லவ நாட்டுப் பிரஜைகளைப் பெரும் பஞ்சம்
பீடிக்கக் கூடும். இப்பேர்ப்பட்ட நிலைமையில், அநாவசியமாக
யுத்தத்தை வளர்த்துவதற்கு எனக்குச் சம்மதமில்லை. மேலும்,
உத்தராபத ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியைப் போர்க்களத்தில்
புறங்காட்டச் செய்த வீராதி வீரரான புலிகேசி மன்னர் யுத்தத்தைத்
தாமே நிறுத்தி விட்டு வலிய வந்து சமாதானத்தைக் கோரும் போது
நாம் அதை எதற்காக நிராகரிக்க வேண்டும்? என்னுடைய அபிப்பிராயம்
சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதுதான்" என்ார்.
இவ்விதம்
சக்கரவர்த்தி கூறி நிறுத்தியதும், சாரங்கதேவ பட்டர்,
"பல்லவேந்திரா! தாங்கள் இப்பொழுது கூறிய விஷயங்கள் எல்லாம்
மந்திரி மண்டலத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உடன்பாடுதான்.
ஆனால், ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி எங்களிலே சிலருக்கு ஓர்
ஐயப்பாடு இருக்கிறது. வாதாபிச் சக்கரவர்த்தியைக் காஞ்சி
நகருக்குள் விருந்தினராக வரவேற்பது பற்றித் தாங்கள்
சொன்னீர்கள், அது உசிதமான காரியமா என்றுதான்
சந்தேகப்படுகிறோம். வாதாபி மன்னர் பழி பாவங்களுக்கு அஞ்சாத
வஞ்சகர் என்றும், அசுர குணம் படைத்தவர் என்றும்
கேள்விப்பட்டிருக்கிறோம். காஞ்சியைப் பார்க்க வருவதாக அவர்
சொல்லுவதில் ஏதேனும் அந்தரங்க சூழ்ச்சி இருக்கக்கூடுமல்லவா?"
என்றார்.
மகேந்திர பல்லவர்
புன்னகையுடன் கூறினார்; "சாரங்க தேவரே! முன் ஜாக்கிரதையுள்ள
மதி மந்திரிகள் சொல்ல வேண்டியதைத்தான் நீங்கள் சொன்னீர்கள்.
யோசிக்க வேண்டிய காரியந்தான், ஆனால் வாதாபி அரசர்
கேட்டிருப்பதில் ஒருவிதமான சூழ்ச்சியும் இருக்க நியாயமில்லை.
அவருடைய யானைப்படை, காலாட் படை எல்லாவற்றையும் காஞ்சிக்கு
இரண்டு காத தூரத்துக்கப்பால் அனுப்பி விடச் சம்மதிக்கிறார்.
அவருடைய முக்கிய மந்திரிப் பிரதானிகள் பத்துப் பதினைந்து
பேருடன் நிராயுதபாணியாகக் காஞ்சிக்குள் பிரவேசிக்கச்
சித்தமாயிருக்கிறார். சபையோர்களே! நம்மிடம் இவ்வளவு பூரண
நம்பிக்கை வைத்துச் செய்தி அனுப்பியுள்ளவரிடம் நாம்
எவ்விதத்தில் சந்தேகம் கொள்வது? ஆகவே, யுத்தமா, சமாதானமா
என்பதைப் பற்றித்தான் உங்களுடைய அபிப்பிராயம் வேண்டும்!"
மறுபடியும் மந்திரிமார்களும் அமைச்சர்களும் ஒருவரோடொருவர்
கலந்து, ஆலோசித்தார்கள். கடைசியில், சாரங்க தேவபட்டர் எழுந்து,
"பல்லவேந்திரா! மந்திரி மண்டலத்தார் சமாதானத்தையே
விரும்புகிறார்கள். வாதாபிச் சக்கரவர்த்தியைக் காஞ்சிக்குள்
வரவேற்கும் விஷயத்தில் தங்களுடைய கருத்து எதுவோ அதன்படி
செய்யலாமென்று அபிப்பிராயப்படுகிறார்கள்" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
மந்திரி
மண்டலத்தாரின் ஒருமுகமான அபிப்பிராயத்தை முதன் மந்திரி
சாரங்கதேவ பட்டர் கூறி முடித்ததும் மகேந்திர சக்கரவர்த்தி
சபையோரை ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்தார். மாமல்லரும்
பரஞ்சோதியும் இருந்த இடத்தை மட்டும் நோக்காமல் அவருடைய
கண்ணோட்டத்தை முடித்து விட்டு, "சபையோர்களே! உங்களுடைய
அபிப்பிராயத்தை முன்கூட்டியே எதிர்பார்த்து..." என்று
ஆரம்பித்தார். சிங்காசனத்தில் நிலைத்து உட்கார முடியாமல்
தத்தளித்துக் கொண்டிருந்த மாமல்லர் அப்போது துள்ளி எழுந்து,
"பல்லவேந்திரா! சாதுக்களும், சமாதானப் பிரியர்களும், இராஜ
தந்திரிகளும், தீர்க்கதரிசிகளும் வீற்றிருக்கும் இந்த மகா
சபையில் அடியேனும் ஒரு வார்த்தை சொல்லலாமா?" என்று கேட்டார்.
அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் சீறலுடன் நெருப்பைக் கக்கிக்
கொண்டு வரும் அக்னியாஸ்திரத்தைப் போல் அந்தச் சபையில்
இருந்தவர்களின் செவியில் பாய்ந்தது.
மாமல்லருடைய
அக்னியாஸ்திரங்களை, மகேந்திரர் வருணாஸ்திரத்தைப் பிரயோகித்து
அடக்க முயன்றார். "மாமல்லா! இதென்ன இப்படிக் கேட்கிறாய்? பல்லவ
சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்துக்கு உரிமை பூண்ட குமார
சக்கரவர்த்தியல்லவா நீ? சாம்ராஜ்யத்தின் மந்திராலோசனை சபையில்
கலந்து கொள்ள உனக்கு இல்லாத பாத்தியதை வேறு யாருக்கு உண்டு?
உன் மனத்தில் தோன்றுகிறது என்னவோ, அதைத் தாராளமாகச் சொல்!
ஆனால், நான் உன்னுடைய தந்தையாகையாலும், இச்சபையில்
உள்ளவர்களெல்லாம் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த
பெரியவர்களாதலாலும் எங்களையெல்லாம் அவமதித்துப் பேசும் உரிமையை
நீ கோர மாட்டாயென்று கருதுகிறேன்..." அப்போது சபையில் ஏற்பட்ட
குறுநகைப்பின் ஒலி மாமல்லர் காதில் விழவும் அவர் தம் கண்களில்
தீ எழுமாறு சபையைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தந்தையை
இடைமறித்துக் கூறினார்.
"தந்தையே!
தங்களையாவது இங்குள்ள பெரியவர்களையாவது அவமதிக்கும் எண்ணம்
எனக்குக் கொஞ்சங்கூட இல்லை. பல்லவ குலத்தையும் பல்லவ
இராஜ்யத்தையும் உலகம் என்றென்றைக்கும் அவமதிக்காமல் இருக்க
வேண்டுமே என்றுதான் கவலைப்படுகிறேன். வாழையடி வாழையாக
தொண்டைமான் இளந்திரையன் காலத்திலிருந்து வந்த வீர பல்லவ
குலத்தின் பெருமையைக் குறித்துத் தாங்கள் அடிக்கடி
சொல்லியிருக்கிறீர்கள். பல்லவ குலத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது
இதற்கு முன்னால் இவ்விதமெல்லாம் செய்ததுண்டா? போர்க்களத்தில்
எதிரியின் படைகளுக்குப் புறங்காட்டிப் பின் வாங்கி வந்ததுண்டா?
பகைவர்களின் படையெடுப்புக்குப் பயந்து, கோட்டைக்குள்ளே ஒளிந்து
கொண்டதுண்டா? கடைசியாக இப்போது, பல்லவ நாட்டுக்குள்
படையெடுத்து வரத்துணிந்த பாதகனுடன் சமாதானம் செய்து கொள்ளப்
போவதாகச் சொல்லுகிறீர்கள். பல்லவேந்திரா! கொஞ்சம் யோசித்துப்
பாருங்கள்; நாளைக்கு உலகிலெல்லாம் என்ன பேச்சு ஏற்படும்?
'வாதாபிச் சக்கரவர்த்தி படையெடுத்து வந்த போது பல்லவ
சக்கரவர்த்தி பயந்து கோட்டைக்குள் புகுந்து கொண்டார்;
கடைசியில் சரணாகதி அடைந்து சமாதானம் செய்து கொண்டார்'
என்றுதானே உலகத்தார் சொல்லுவார்கள். புலிகேசி சமாதானத்தை
வேண்டித் தூது அனுப்பினான் என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.
பாண்டியனும் சோழனும் சேரனும் களப்பாளனும் பல்லவர்களைப்
பார்த்து நகையாடுவார்கள். புள்ளலூரில் புறங்காட்டி ஓடிய கங்க
நாட்டான் மறுபடியும் துள்ளி எழுவான். உலகம் உள்ளவரைக்கும்
பல்லவ குலத்துக்கு ஏற்பட்ட இந்தப் பழி மறையாது." இப்படி
மாமல்லர் கேட்போரின் மான உணர்ச்சியைத் தூண்டும் வீரமுள்ள
வார்த்தைகளைப் பேசிக் கொண்டு வந்த போது, சபையிலே கலகலப்பு
ஏற்பட்டது. மாமல்லருடைய வார்த்தைகளில் உண்மை இருக்கிறது என்பதை
ஆமோதித்து ஒருவரோடொருவர் கசமுசவென்று பேசிக் கொண்டார்கள்.
இந்த நிலைமையைத்
தமது கூரிய கழுகுக் கண்களின் ஓரப் பார்வையினால் தெரிந்து கொண்ட
மகேந்திர சக்கரவர்த்தி, மாமல்லருடைய பேச்சில் நடுவே
குறுக்கிட்டார். "மகனே! உலகம் நீ நினைப்பது போல் அவ்வளவு
பைத்தியக்கார உலகம் அல்ல. மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு
முட்டாள்களும் அல்ல. அப்படியே இருந்த போதிலும், அதற்காக நானும்
மூடத்தனமான காரியத்தைச் செய்ய முடியாது. அவசியமில்லாத போது
யுத்தம் நடத்த முடியாது. இலட்சக்கணக்கான வீரர்களின் உயிரை வீண்
வீம்புக்காகப் பலிகொடுக்க முடியாது. காரணமில்லாமல் நாட்டின்
பிரஜைகளைச் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு உள்ளாக்க முடியாது.
மாமல்லா! இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் நான் ஏறியபொழுது, இந்த
மணிமகுடம் என் தலையில் சூட்டப்பட்ட அன்று, இச்செங்கோலை முதன்
முதலாக என்னுடைய கரத்தில் ஏந்திய உடனே, இந்த நாட்டு மக்களின்
உயிரையும் உடைமையையும் பாதுகாப்பேன்; அவர்களுக்குக் கஷ்டம்
எதுவும் வராமல் தடுப்பேன் என்று நாடறியச் சபதம் செய்தேன்.
வெறும் வீம்புக்காகவோ, உலகத்தில் மூடர்கள் ஏதேனும்
சொல்லுவார்ளே என்பதற்காகவோ அந்தச் சபதத்தை நான் கைவிட
முடியாது!" என்று கம்பீரமான குரலில் தலை நிமிர்ந்து கூறினார்.
ஆனால், மாமல்லருடைய அம்பறாத்தூணியில் இன்னும் சில பாணங்கள்
மிச்சமிருந்தன.
"தந்தையே! இந்தப்
பல்லவ நாட்டுப் பிரஜைகளைப் பற்றித்தான் தாங்கள்
கவலைப்படுகிறீர்கள் என்றால், அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம்.
தெய்வாதீனமான காரணத்தினால் ஏழு மாதத்துக்கு முன்னால் ஒரு சிறு
கிராமத்தில் நான் மூன்று தினங்கள் வசிக்க நேர்ந்தது. அப்போது
அந்தக் கிராமத்து ஜனங்கள் பேசிக் கொண்டதை என் இரு செவிகளாலும்
கேட்டேன். இந்தப் பல்லவ இராஜ்யத்தின் பிரஜைகள் சுத்த வீரர்கள்
என்றும், மானத்துக்காக உயிரையும் உடைமைகளையும் திருணமாக
மதிக்கிறவர்கள் என்றும் அறிந்தேன். புள்ளலூர்ச் சண்டையைப்
பற்றியும், அதில் நாம் அடைந்த வெற்றியைக் குறித்தும், பல்லவ
நாட்டு மக்கள் எப்பேர்ப்பட்ட குதூகலம் அடைந்தார்கள், தெரியுமா?
நாம் வீர சைனியத்துடன் இந்தக் காஞ்சிக் கோட்டைக்குள் ஒளிந்து
கொள்ளப் போகிறோம் என்ற வதந்தியை அவர்களால் நம்ப முடியவில்லை.
பல்லவேந்திரா! என் காதினால் கேட்ட வார்த்தையைச் சொல்லுகிறேன்;
மண்டபப்பட்டுக் கிராமத்து ஜனங்கள் என்ன பேசிக் கொண்டார்கள்
தெரியுமா? 'மாமல்லனைப் போன்ற புத்திரனையும், பரஞ்சோதியைப்
போன்ற தளபதியையும் படைத்த மகேந்திர சக்கரவர்த்தி
புலிகேசிக்குப் பயந்து எதற்காகக் கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளப்
போகிறார்? ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டார்' என்று பேசிக்
கொண்டார்கள். புலிகேசி காஞ்சிக் கோட்டைக்கருகில் வந்ததும்
பல்லவ சைனியம் வாதாபிச் சைனியத்துடன் வீரப் போர் புரியுமென்று
நம் பிரஜைகள் எதிர்பார்த்தார்கள். அவர்களை நாம் அடியோடு
ஏமாறும்படி செய்து விட்டோம். இப்போதாவது அவர்களுடைய
நம்பிக்கையை மெய்ப்படுத்த எனக்குக் கட்டளையிடுங்கள். இந்தக்
கோட்டைக்குள்ளே ஓர் இலட்சம் பல்லவ வீரர்கள் எப்போது போர்
வருமென்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நகரின்
மாபெரும் கொல்லர்கள் ஒன்றரை வருஷமாகச் செய்து குவித்திருக்கும்
வாட்களும் வேல்களும், 'தாகம் தாகம்' என்று தவித்துக்
கொண்டிருக்கின்றன. இதோ என் உயிர்த் தோழர் பரஞ்சோதியும்
துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். தந்தையே! சைனியத்தை நடத்திக்
கொண்டு போகக் கட்டளையிடுங்கள். வாதாபி சைனியத்தை நிர்மூலம்
செய்ய இந்த க்ஷணமே ஆக்ஞை இடுங்கள்!"
மகேந்திர பல்லவர்
உணர்ச்சி மிகுதியினால் பேச முடியாமல் தத்தளித்தார். தமது
அருமைக் குமாரனுடைய வீராவேச மொழிகளைக் கேட்டு அவருடைய கல்
நெஞ்சமும் கனிந்து விட்டதாக ஒரு கணம் தோன்றியது. எனினும்,
மறுகணமே அவர் பல்லைக் கடித்துக் கொண்டு முகத்தையும் கடுமையாக
வைத்துக்கொண்டு சொன்னார்; "குழந்தாய்! சுத்த வீரன்
சொல்லக்கூடிய வார்த்தைகளை நீ பேசினாய்; அதைக் குறித்து
எனக்குச் சந்தோஷந்தான். ஆனாலும், உன் யோசனையை நான் ஒப்புக்
கொள்வதற்கில்லை. பல்லவ நாட்டு வீரக் குடிமக்களின்
அபிப்பிராயத்தைப் பற்றிச் சொன்னாய். அதைப் பற்றியும் எனக்கு
மகிழ்ச்சியே, ஆனால் பிரஜைகளின் அபிப்பிராயம் எப்போதும் சரியான
அபிப்பிராயமாயிராது. முன் யோசனையின்றி, உணர்ச்சி வேகத்தினால்
பிரஜைகள் சொல்லும் பேச்சைக் கேட்டு அது காரணமாக இந்த நாட்டு
மக்களுக்கும், அவர்களுடைய வருங்காலச் சந்ததிகளுக்கும்
எல்லையற்ற கஷ்ட நஷ்டங்களை நான் உண்டாக்கப் போவதில்லை!"
இவ்விதம் மாமல்லரைப் பார்த்துச் சொன்னவர், சபையோரின் பக்கம்
திரும்பி, "சபையோர்களே! உங்களுடைய சம்மதத்தை எதிர்பார்த்து
நான் வாதாபிச் சக்கரவர்த்திக்கு முன்னமேயே மறுமொழி
அனுப்பிவிட்டேன். அவருடைய சமாதானத் தூதை ஏற்றுக் கொள்வதாகவும்
அவரைக் காஞ்சிமாநகருக்குள் நமது விருந்தினராக வரவேற்க
மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்வதாகவும் ஓலை எழுதி
அனுப்பிவிட்டேன். அவ்விதம் நான் கொடுத்துவிட்ட வாக்கை இனி
என்னால் மீற முடியாது!" என்றார்.
மாமல்லர் அப்போது
முன்னைவிட அதிகப் பரபரப்புடனே, "அப்பா! இது என்ன? பல்லவ
வம்சத்தின் கொடிய சத்ருவை நமது தலைநகரத்தில் வரவேற்பதா?
புலிகேசிக்கு உபசாரமா? யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் செய்து
கொள்வதோடாவது நிறுத்திக் கொள்ளுங்கள். வாதாபிப் படை இந்த
நாட்டை விட்டு ஒழியும் வரையில் நாம் கோட்டைக்குள்ளேயே
வேணுமானாலும் ஒளிந்து கொண்டிருப்போம். ஆனால், வஞ்சகப்
புலிகேசியுடன் நமக்குச் சிநேகம் வேண்டாம். வைஜயந்திப்
பட்டணத்துக்கு நெருப்பு வைத்த பெரும் பாதகன் இந்தப் புண்ணிய
நகரத்துக்குள்ளே காலடி வைக்க வேண்டாம்" என்று அலறினார்.
"முடியாது, மாமல்லா! பல்லவ குலத்தினர் ஒரு தடவை கொடுத்த வாக்கை
மீறுவது வழக்கமில்லை; புலிகேசியை நான் வரவேற்றேயாக வேண்டும்"
என்றார் மகேந்திரர்.
இதைக் கேட்ட
மாமல்லர் இரண்டு அடி முன்னால் பாய்ந்து வந்தபோது சபையோர்
ஒருகணம் திடுக்கிட்டுப் போய் விட்டார்கள். தந்தையைத்
தாக்குவதற்கே அவர் பாய்கிறாரோ என்றுகூடச் சிலர் பயந்து
போனார்கள். அவ்விதமான விபரீதம் ஒன்றும் நேரவில்லை.
சக்கரவர்த்தியின் அருகில் வந்து கைகூப்பிக் கொண்டு, "தந்தையே!
வாதாபிச் சக்கரவர்த்தியைத் தாங்கள் வரவேற்றேயாக வேண்டுமானால்,
எனக்கு ஒரு வரம் கொடுங்கள். புலிகேசியும் நானும் ஏககாலத்தில்
இந்த நகருக்குள்ளே இருக்க முடியாது. புலிகேசி உள்ளே வரும் போது
நான் வௌியே போய் விடுவதற்கு அனுமதி கொடுங்கள்!" என்றார்
மாமல்லர்.
"நானும்
அப்படித்தான் யோசித்து வைத்திருக்கிறேன். குமாரா! வாதாபிச்
சக்கரவர்த்தி வரும்போது உன்னை வௌியே அனுப்பி விடுவதாகத்தான்
உத்தேசித்திருக்கிறேன். அதற்கு வேறோர் அவசியமும்
ஏற்பட்டிருக்கிறது" என்றார் சக்கரவர்த்தி. இச்சமயத்தில் தளபதி
பரஞ்சோதி ஓர் அடி முன்னால் வந்து, "பிரபு! எனக்கும் குமாரச்
சக்கரவர்த்தியுடன் வௌியேற அனுமதி தரவேண்டும்" என்று கேட்க,
மகேந்திரர் கூறினார்: "ஆஹா! அப்படியே! இராமன் போகும்
இடத்துக்கு லக்ஷ்மணனும் தொடர்ந்து போக வேண்டியது நியாயந்தானே!
நீங்கள் இருவரும், நம் சைனியத்திலே சிறந்த முப்பதினாயிரம்
வீரர்களைப் பொறுக்கிக் கொண்டு ஆயத்தமாகுங்கள். வடநாட்டுச்
சளுக்க சைனியம் படையெடுத்த சமயம் பார்த்துக் கோழைத்தனமாகவும்,
திருட்டுத்தனமாகவும் பல்லவ இராஜ்யத்துக்குள் பிரவேசித்த
தென்பாண்டிய நாட்டானுக்கு அவசியம் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்
சீக்கிரமாகவே புறப்பட ஆயத்தமாகுங்கள்!" சக்கரவர்த்தியின் கடைசி
மொழிகள் மாமல்லருடைய கோபத்தைத் தணித்து ஓரளவு உற்சாகத்தை
அளித்ததோடு, மந்திர மண்டலத்தாரை ஒரே ஆச்சரியக் கடலில் ஆழ்த்தி
விட்டன.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அன்றிரவு வெகு
நேரத்துக்குப் பிறகு அந்தப்புரத்தில் மகேந்திர பல்லவர் தம்
பட்டமகிஷியைச் சந்தித்த போது, புவனமகாதேவி தனது மனக் கவலையைத்
தெரிவித்தாள். "பிரபு! இன்றைக்கு மந்திராலோசனை சபையில்
தங்களுக்கும் மாமல்லனுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்ததாமே!
நாலு பேருக்கு முன்னால் தந்தயும் புதல்வரும் சண்டை போட்டுக்
கொள்ளலாமா?" என்று சக்கரவர்த்தினி கேட்டாள். "தேவி! யார் என்ன
வேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். எனக்கு இன்று இருக்கிற
பெருமையையும் பூரிப்பையும் சொல்லி முடியாது. அர்ஜுனனும்
அபிமன்யுவும், லக்ஷ்மணனும் இந்திரஜித்தும் பேசுவதற்குரிய வீர
வார்த்தைகளை இன்று மாமல்லன் பேசினான். உள்ளுக்குள் எவ்வளவோ
எனக்கு ஆனந்தமாயிருந்தது. ஆனாலும், என்னுடைய நோக்கத்தை நான்
கைவிடுவதற்கு இல்லை. ஆகையால், என்னுடைய ஆனந்தத்தை வௌியே
காட்டாமல் கடுமையாகவும், கண்டிப்பாகவும் பேச நேர்ந்தது"
என்றார் சக்கரவர்த்தி. "உங்களுடைய நோக்கந்தான் என்ன? தாங்கள்
செய்யப் போகும் காரியம் எனக்கும் பிடிக்கவில்லை. நம்முடைய
கொடிய சத்துருவைக் காஞ்சி நகருக்குள் வரவேற்பது உசிதமான
காரியமா?" என்றாள் பல்லவச் சக்கரவர்த்தினி.
"தேவி! இது என்ன
வார்த்தை? சத்துருவாக வந்தவரை மித்திரராக்கித்
திருப்பியனுப்புவது பல்லவ வம்சத்துக்குப் பெருமை அல்லவா?
என்னுடைய நோக்கம் என்னவென்று கேட்டாயே? சொல்கிறேன் கேள்.
என்னுடைய வாழ்நாளில் உலகத்தில் மீண்டும் சத்திய யுகம்
பிறப்பதைக் காண வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தப் புண்ணிய
பாரத பூமியில் இன்றைய தினம் மூன்று பெரிய சாம்ராஜ்யங்கள்
இருக்கின்றன. நர்மதைக்கு வடக்கே ஹர்ஷவர்த்தனர்; நர்மதைக்கும்
துங்கபத்ராவுக்கும் மத்தியில் புலிகேசி, துங்கபத்ரைக்குத்
தெற்கே மகேந்திர பல்லவன். இந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர்
சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்தப் புண்ணிய பூமி
நரக பூமியாயிருக்கும். பஞ்சமும் பிணியும் ஜனங்களைப் பிடுங்கித்
தின்னும். அப்படியில்லாமல் இந்த மூன்று பேரும் சிநேக
தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்களாயிருந்தால், இந்தப் பாரத
பூமியே சொர்க்க பூமியாகிவிடும். தேசத்தில் வறுமை, பட்டினி,
பஞ்சம் ஒன்றும் தலை காட்டாது. கல்வியும் கலைகளும் ஓங்கி
வளரும்; சகல ஜனங்களும் சௌக்கியமாக வாழ்வார்கள். தேவி! என் இளம்
பிராயத்தில் நான் ஒரு பகற்கனவு காண்பது உண்டு. சளுக்கச்
சக்கரவர்த்தியின் விருந்தினனாக நான் சென்று அஜந்தாவின் வர்ண
சித்திர அதிசயங்களைக் கண்டு களிப்பதாகக் கனவு கண்டேன்.
அப்புறம் வடக்கே கன்யாகுப்ஜத்துக்குச் சென்று ஹர்ஷவர்த்தனர்
மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை நடத்தும் ஆனந்தக் கலைவிழாவைப்
பார்த்து மகிழ்வதாகக் கனவு கண்டேன். மாமல்லபுரத்தை ஒரு
சொப்பனச் சிற்ப உலகமாகச் சிருஷ்டித்து அதைப் பார்ப்பதற்காக
ஹர்ஷரையும் புலிகேசியையும் அழைப்பதாகக் கனவு கண்டேன்.
அதெல்லாம் இப்போது நிறைவேறுமெனத் தோன்றுகிறது. நாங்கள் மூவரும்
சிநேகர்களாகிவிட்டால் அப்புறம் இந்த நாட்டில் சமயச் சண்டை
என்பது ஏது? யுத்தந்தான் ஏது?"
"பிரபு! அன்பு
மதத்தையும் சிநேக தர்மத்தையும் பற்றிப் பேசும் தாங்கள்
பாண்டியனைத் தண்டிப்பதற்கு மாமல்லனை எதற்காக ஏவுகிறீர்கள்?"
என்று சக்கரவர்த்தினி குறுக்கிட்டுக் கேட்டாள். "அது வேறு
விஷயம், சிநேகம் என்பது சமநிலையில் உள்ளவர்களுக்கிடையேதான்
ஏற்பட முடியும். அறிவாளிகளுக்குள்ளே தான் அன்பு வளர முடியும்.
அறிவற்ற மூடர்களையும் அதிகப்பிரசங்கிகளையும் தண்டோபாயத்தைக்
கைக்கொண்டே சீர் திருத்தியாக வேண்டும்" என்று கூறினார்
மகேந்திர பல்லவர்.
மறுநாள் முதல்
காஞ்சி நகரம் ஒரு புதிய தோற்றத்தை மேற்கொண்டது. ஏதோ ஒரு பெரிய
முக்கியமான திருவிழாவை எதிர்பார்ப்பது போல ஜனங்களிடையே
அபரிமிதமான உற்சாகம் காணப்பட்டது. வீதிகளையும் வீடு
வாசல்களையும் ஜனங்கள் சிங்காரிக்கத் தொடங்கினார்கள். கடை
வீதிகள் பழையபடி சோபை பெற்று விளங்கின. கோயில்களில் உற்சவங்கள்
ஆரம்பமாயின. சிற்ப மண்டபங்களில் பழையபடி சிற்பிகள் வேலை
செய்யத் தொடங்கினார்கள். நாற்புறமும் மேள வாத்தியங்கள்
முழங்கின. சமஸ்கிருதக் கடிகைகளில் முன்போல வேதகோஷங்கள் கேட்டன.
தமிழ்க் கல்லூரிகளில் பாசுரங்கள் பாடப்பட்டன. நடன அரங்கங்களும்
நாடக மேடைகளும் புத்துயிர் பெற்றன. தாளச் சத்தத்துடன் கலந்து
பாதச் சதங்கையொலியும் எழுந்தது.
ஜனங்களின் முக
மலர்ச்சியோ சொல்ல வேண்டியதில்லை. எல்லாரும் ஒரே ஆனந்தமயமாய்க்
காணப்பட்டார்கள். புருஷர்களும் ஸ்திரீகளும் முன்போல ஆடை
ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
பெண்களின் கூந்தலில் புஷ்பக் காடுகள் மலர்ந்து நாற்புறமும்
சுகந்தத்தைப் பரப்பின. மாமல்லர் எதிர்பார்த்ததுபோல் காஞ்சி நகர
மக்கள் அதிருப்தியடைந்தவர்களாகத் தெரியவில்லை. யுத்தம் நின்று
விட்டதில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.
அதைக் காட்டிலும், சளுக்கச் சக்கரவர்த்தி காஞ்சிக்கு விஜயம்
செய்யப் போவதை நினைத்து நகரவாசிகள் அபரிமிதமான
களிப்படைந்தவர்களாகத் தோன்றினார்கள்.
புலிகேசியின்
சமாதானத்தூதன் வந்த ஐந்தாவது நாள் பிற்பகலில், காஞ்சி நகரின்
வடக்குக் கோட்டை வாசல் எட்டு மாதத்திற்குப் பிறகு மீண்டும்
திறந்தது. பேரிகைகளும், நகராக்களும் சமுத்திர கோஷம் கடுமுகம்
என்னும் வாத்தியங்களும் நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம்
உள்ளவர்களின் காது செவிடுபடும்படி முழங்கின. வாதாபிச்
சக்கரவர்த்தி தாம் இளம் பிராயத்திலிருந்து பார்க்க
ஆசைப்பட்டுக் கொண்டிருந்த 'கல்வியிற் பெரிய காஞ்சி'
மாநகரத்திற்குள் பிரவேசம் செய்தார். அவருடைய முக்கிய
பரிவாரத்தைச் சார்ந்த ஐம்பது பேர் அவருடனே வந்தார்கள்.
வௌிவாசலைத்
தாண்டி உள்ளே பிரவேசித்ததும், அங்கே தம்மை வரவேற்பதற்கு
ஆயத்தமாகக் காத்துக் கொண்டிருந்த மகேந்திர பல்லவச்
சக்கரவர்த்தியைப் புலிகேசி பார்த்தார். அவ்விரண்டு
பேரரசர்களின் கண்களும் சந்தித்தன. மகேந்திரரின் முகத்தில்
அரும்பியிருந்த இளம் புன்னகையைத் தவிர வேறு எவ்வித
உணர்ச்சியும் வௌியாகவில்லை. ஆனால், புலிகேசியின் முகமானது
அவருடைய கொதிப்படைந்த உள்ளத்தின் கொந்தளிப்பை நன்கு
காட்டுவதாய் இருந்தது. 'என்னுடைய வம்ச சத்துரு, நான் போட்டுக்
கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் தோல்வியடையச் செய்த மகேந்திர
பல்லவன் இவன்தானா?' என்று புலிகேசியின் உள்ளத்தில் உண்டான
ஆத்திரத்தை அவருடைய கண்கள் பிரதிபலித்தன. இந்த எண்ணங்களோடு,
'ஆகா! கள்ளங் கபடு அறியாதது போலப் பாவனை செய்யும் இந்தக்
கம்பீரமான முகத்தை இதற்கு முன் எங்கேயோ பார்த்தாற் போல்
இருக்கிறதே!' என்ற நினைவும் புலிகேசியின் மனத்தில் தோன்றியது.
இரு
சக்கரவர்த்திகளின் விருதுகளும் முறையே கூறப்பட்ட பிறகு,
இருவரும் அவரவருடைய குதிரையிலிருந்து கீழே இறங்கி
ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அதே சமயத்தில்
புலிகேசியின் கண்கள் மகேந்திர பல்லவருக்குப் பின்னால் நின்ற
பரிவாரங்களைத் துருவி ஆராய்ந்தன. "சத்தியாச்ரயா! யாரைத்
தேடுகிறீர்கள்?" என்று மகேந்திர பல்லவர் கேட்க, "பல்லவேந்திரா
தங்களுடைய வீரப் புதல்வர் மாமல்லரைப் பற்றி எவ்வளவோ
கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மகாவீரர், இங்கு நிற்பவர்களிலே
யாரோ?" என்று சளுக்கச் சக்கரவர்த்தி கேட்டார். மகேந்திர
பல்லவர் அப்போது இலேசாகச் சிரித்துவிட்டு, "இல்லை,
சத்தியாச்ரயா! மாமல்லன் இங்கே இலலை; அவன் வேறு முக்கிய
காரியமாக வௌியூருக்குச் சென்றிருக்கிறான்!" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பன்னிரண்டாம் அத்தியாயம்
மூன்று உள்ளங்கள்
காஞ்சி மாநகரின்
வடக்குக் கோட்டை வாசல் வழியாக வாதாபிச் சக்கரவர்த்தி
அந்நகருக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்த போது, தெற்குக்
கோட்டை வாசல் வழியாகக் குமார சக்கரவர்த்தி வௌியேறிக்
கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் முப்பதினாயிரம் பல்லவ
வீரர்கள் அடங்கிய காலாட்படையும், ஐயாயிரம் போர்க் குதிரைகளும்,
நூறு போர் யானைகளும், மற்றும் சேனைப் பரிவாரங்களும்
நகரிலிருந்து வௌியேறி, கோட்டைக்குச் சற்று தூரத்தில்
அணிவகுத்துப் பிரயாணத்துக்கு ஆயத்தமாக நின்றன. இடிந்து
தகர்ந்து, பாதி தூர்ந்து போயிருந்த அகழியின் மேல், அவசரமாக
அமைத்த பாலத்தின் மீது கண்ணபிரான் ஓட்டிய ரதம் விரைந்து
சென்றபோது, அதன் சக்கரங்கள் கடகட சடசடவென்று சப்தம் செய்தன.
ரதத்தில் மாமல்லரும் பரஞ்சோதியும் வீற்றிருந்தார்கள். அகழிப்
பாலத்தை ரதம் கடந்து அக்கரை சென்றதும், பாலம் அகற்றப்பட்டது.
உடனே, கோட்டை வாசல் கதவுகள் தடார் தடார் என்று சாத்தப்பட்டன.
அக்கதவுகளின் தாழ்களைப் போடும் 'லொடக்' 'லொடக்' என்ற சப்தமும்,
பூட்டுக்கள் பூட்டப்படும் 'டடக்', 'டடக்' என்ற சப்தமும், ரதச்
சக்கரங்களின் 'கடகட, சடசட' என்ற சப்தத்துடன் கலந்து கொண்டன.
அச்சமயம் அந்த ரதத்தில் வீற்றிருந்த மூன்று பேரின்
இருதயங்களுங்கூடப் 'படக்' 'படக்' என்று அடித்துக்
கொண்டிருந்தன.
மாமல்லர்
புறப்படுவதற்குமுன்னால் தமது அன்னை புவனமாதேவியிடம்
விடைபெற்றுக் கொள்வதற்காகச் சென்றார். அப்போது அந்த வீர
மாதரசியின் கண்கள் கலங்கியிருந்தன. அவளுடைய உள்ளமும்
கலக்கமடைந்திருந்ததாகத் தோன்றியது. துர்விநீதனைத்
தண்டிப்பதற்காகப் புள்ளலூர்ப் போர்க்களத்துக்கு மாமல்லர்
புறப்பட்டபோது, புவனமகாதேவி இத்தகைய மனக் கலக்கத்தைக்
காட்டவில்லை. அச்சமயம் முக மலர்ச்சியுடனும் பெருமிதத்துடனும்
வீரமகனை ஆசீர்வதித்து வாழ்த்தி அனுப்பினாள்.
"அம்மா! இது
என்ன, ஏன் கலங்குகிறீர்கள்? போர்க்களம் எனக்குப் புதியதா?
யுத்தந்தான் புதியதா?" என்று மாமல்லர் கேட்டதற்குச்
சக்கரவர்த்தினி, "குழந்தாய்! அதைக் குறித்தெல்லாம் நான்
கவலைப்படவில்லை. உன்னுடைய தந்தையின் காரியந்தான் என்னை
வருத்துகிறது. தசரதர் செய்ததைக் காட்டிலும் கொடுமையான
காரியத்தை உன் தந்தை செய்கிறார். தசரதர் இராமனைக் காட்டுக்கு
அனுப்புவதோடு நின்றார். உன் தந்தையோ இராமனைக் காட்டுக்கு
அனுப்பி விட்டு, அதே சமயத்தில் இராவணனையும் விருந்தாளியாக
வரவேற்கப் போகிறார்!" என்றாள். இதைக் கேட்ட மாமல்லரின்
முகத்தில் சென்ற சில காலமாகக் காணப்படாத குறுநகை மலர்ந்தது.
"தாயே! நான்
இராமன் அல்ல; இராமனாயிருந்தால், சீதையையும் கூட்டிக்
கொண்டல்லவா காட்டுக்குப் போக வேண்டும்? என் தந்தையும் தசரதர்
இல்லை; ஏனென்றால் கைகேயி வார்த்தையைக் கேட்டுக் கொண்டு அவர்
என்னை வனத்துக்கு அனுப்பவில்லை. புலிகேசியோ நிச்சயமாக இராவணன்
இல்லை. இராவணன் சுத்த வீரன், அம்மா! போர்க்களத்தில் சகலமும்
போய்த் தன்னந்தனியாக நின்ற போதும் சரணாகதி அடைய மறுத்து உயிரை
விட்டான். அந்த மகாவீரன் எங்கே, இந்தக் கோழைப் புலிகேசி எங்கே?
நூறு காத தூரம் படையெடுத்து வந்து விட்டு யுத்தம் செய்யாமலே
அல்லவா இவன் திரும்பிப் போகப் போகிறான்?" என்றார் மாமல்லர்.
"குமாரா! நீ என்னதான் சொன்னாலும் மொத்தத்தில் என் மனத்தில்
அமைதி இல்லை. பல்லவ குலத்தின் தீரா விரோதியுடன் உன் தந்தை
சிநேகம் கொண்டாடுவது எனக்குப் பிடிக்கவில்லை; இந்தச் சமயத்தில்
நீ காஞ்சியைவிட்டுப் போவதும் எனக்குச் சம்மதமாயில்லை.
இதனாலெல்லாம் என்ன விபரீதம் வருமோ எனனவோ என்று என் மனம்
சஞ்சலமடைகிறது!" என்றாள் பல்லவ சாம்ராஜ்ய சக்கரவர்த்தினி.
மேற்கண்டவாறு
அன்று காலையில் அன்னை கூறிய வார்த்தைகள் மாமல்லருடைய மனத்தில்
ஆழமாய்ப் பதிந்து கிடந்தன. இன்னதென்று சொல்ல முடியாத சோர்வு
அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. பெருமுயற்சி செய்து
அந்தச் சோர்வைப் போக்கிக் கொள்ள முயன்றார். வரப் போகும்
யுத்தத்தையும் பாண்டியனைத் தாக்கி அவனைத் தண்டிக்கப் போவதையும்
நினைத்துக் கொண்டார். அதனோடு மண்டபப்பட்டுக் கிராமத்தில்
இருக்கும் ஆயனர் மகளையும் எண்ணிக் கொண்டார். தாம் போகின்ற
மார்க்கத்தை விட்டுக் கொஞ்சம் விலகிச் சென்றால், சிவகாமியைப்
பார்த்து விட்டுப் போகலாம். ஆனால், அது உசிதமாகாது என்று
அவருடைய மனமே சொல்லிற்று. புலிகேசியைப் புறங்காட்டி ஓடச்
செய்து விட்டுத் திரும்பி அவளிடம் வருவதாக அல்லவா அன்றைக்குச்
சொல்லிக் கொண்டு விடைபெற்றோம்? பாண்டியனையாவது போர்க்களத்தில்
புறங்கண்ட பிறகுதான் சிவகாமியைச் சந்திக்க வேண்டும். இவ்வாறான
பற்பல எண்ணங்கள் அலை மேல் அலை எறிந்து மாமல்லரின் உள்ளத்தை
அலைத்துக் கொண்டிருந்தன.
தளபதி
பரஞ்சோதியும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகக் கடுமையாகத்
தம்முடைய முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய பொறுப்பு
உணர்ச்சியானது அவருடைய மனத்தில் பெரும் பாரமாய் அமர்ந்து அதை
அமுக்கிக் கொண்டிருந்தது. அன்று காலையில் சக்கரவர்த்தி அவரை
அந்தரங்கமாக அழைத்து, "தம்பி! உன்னை நம்பித்தான் மாமல்லனை
இப்போது போர்க்களத்துக்கு அனுப்புகிறேன். அவனுடைய இப்போதைய
மனநிலையில் முன்பின் யோசனையில்லாமல் முரட்டுத்தனமாகக் காரியம்
செய்வான். அவனுக்கு யாதோர் அபாயமும் நேரிடாதபடி நீதான்
பார்த்துக் கொள்ள வேணும். இந்தப் புராதன பல்லவ குலம்
நீடிப்பதற்கு அவன் ஒருவன் தான் இருக்கிறான். தளபதி! பாண்டிய
நாட்டு மறவர்கள் மகாவீரர்கள். அவர்களையும் கங்க நாட்டார்கள்
என்று நினைத்து விடாதே. எளிதாக அவர்களைப் புறங்காண முடியாது.
ஆகையால், சர்வ ஜாக்கிரதையாகவே நீ இந்த யுத்தத்தை நடத்த வேணும்"
என்று சொன்னார். மீண்டும் அவர், "மாமல்லனை நீ போர்க்களத்தில்
வேல்கள் அம்புகளிடமிருந்து மட்டும் காப்பாற்றினால் போதாது"
என்று கூறி விட்டு, மர்மமான புன்னகையுடன், "மண்டபப்பட்டுக்
கிராமத்தில் இருக்கிறாளே, சிற்பியின் மகள் சிவகாமி, அவளுடைய
கண்ணாகிய கூரிய அம்பிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்,
தெரிகிறதா? முன் தடவை துர்விநீதனைத் தொடர்ந்து போனபோது
ஏற்பட்டதைப் போல் இந்தத் தடவை ஏற்பட்டு விடக் கூடாது. போகும்
காரியத்தை முடித்து விட்டு நேரே காஞ்சிக்குத் திரும்பி வந்து
சேர வேண்டும்" என்றார்.
பரஞ்சோதி
விடைபெற்றுக் கொண்டு புறப்பட யத்தனித்த போது, கடைசியாகச்
சக்கரவர்த்தி அவரை மறுபடியும் அருகில் அழைத்து, "தளபதி! நான்
மண்டபப்பட்டுக் கிராமத்தைப் பற்றிச் சொன்னது
திருவெண்காட்டுக்குப் பொருந்தாது. பாண்டியனைத் துரத்தியடித்த
பிறகு உனக்கு விருப்பமாயிருந்தால் திருவெண்காட்டுக்குச் சென்று
உன் தாயாரையும் மாமனையும் பார்த்து விட்டு வா!" என்று
அருமையுடன் கூறினார். சக்கரவர்த்தி கூறிய ஒவ்வொரு விஷயமும்
பரஞ்சோதியின் பொறுப்பு உணர்ச்சியை அதிகப்புத்துவதாகவே
இருந்தது. ஆகா! மகேந்திர பல்லவர் எப்பேர்ப்பட்ட அபூர்வமான
மனிதர்! அவருடைய அன்பையும் நம்பிக்கையையும் இவ்வளவு தூரம்
பெறுவதற்குத் தான் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்! ஆனால்
அவ்வளவு அன்புக்கும் நம்பிக்கைக்கும் தான் பாத்திரமாக
வேண்டுமே! மாமல்லரைப் பத்திரமாய்க் காஞ்சிக்குக் கொண்டு வந்து
சேர்க்கவேண்டுமே? 'திருவெண்காட்டுக்குப் போய் விட்டு வா!'
என்று சக்கரவர்த்தி கூறியது அவருடைய பெருந்தன்மைக்கு உகந்தது.
ஆனால், அதற்கு இந்தச் சந்தர்ப்பம் தகுதியானதா? தன்னை இத்தகைய
போர்க்கோலத்திலே பார்த்தால், தாயும் மாமனும் என்ன
நினைப்பார்கள்? உமையாள் ஏற்கெனவே நாணம் அதிகம் உள்ளவள். தன்னை
அணுகுவதற்கே இப்போது பயப்படுவாளோ என்னவோ? - இவ்வாறெல்லாம்
தளபதி பரஞ்சோதி எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்.
ரதத்தின்
முனையில் அமர்ந்திருந்த கண்ணபிரானுடைய மனக் கண்ணின் முன்னால்
அடிக்கடி ஒரு காட்சி வந்து கொண்டிருந்தது. விடைபெற்றுக்
கொள்ளவேண்டிய சமயம் வந்த போது கண்ணபிரான் தன் எட்டு மாதக்
குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து "போய் வரட்டுமா, கண்ணே!"
என்று கொஞ்சினான். அந்தக் குழந்தை அர்த்தம் ஒன்றுமில்லாமலும்
அகாரணமாகவும் புன்னகை புரிந்ததுடன் தன் இரண்டு இனந்தளிர்க்
கரங்களையும் நீட்டிக் கண்ணபிரானுடைய நீண்ட இரு காதுகளையும்
பிடித்துக் கொண்டது. மேற்படி நினைவு வந்தபோதெல்லாம்
குழந்தையின் தளிர்க் கரங்கள் அவன் காதைப் பிடித்த இடங்களில்
அவனுக்கு என்னவோ செய்தது. மறுபடியும் அந்த மதுரமான ஸ்பரிச
இன்பத்தை எப்போது அடையப் போகிறோமோ என்று அவன் மனம் ஏங்கிற்று.
அதோடு கடைசியாக
அவன் புறப்பட்டபோது கமலி கூறிய மொழிகளும் அவனுக்கு அடிக்கடி
நினைவு வந்து கொண்டிருந்தன. முன்னெல்லாம், "யுத்தத்துக்கு
எப்போது புறப்படுகிறாய்?" என்று கேட்டுக் கொண்டிருந்தவள்,
கண்ணபிரான் உண்மையாகப் புறப்படும் சமயம் வந்த போது, "கண்ணா
மகேந்திர பல்லவருக்கு இப்படி ஏன் புத்தி கெட்டுப் போய்
விட்டது? வாதாபிச் சக்கரவர்த்தியை விருந்தாளியாக வரவேற்பதாம்!
பாண்டிய ராஜாவோடு சண்டை போடுவதற்கு மாமல்லரை அனுப்புவதாமே? என்
மனம் ஏனோ தத்தளிக்கிறது! கண்ணா! எது எப்படியானாலும் என் தங்கை
சிவகாமியை மறந்து விடாதே! மாமல்லருக்கு நினைவூட்டு!" என்றாள்.
இவ்விதமாக, அந்த ரதத்தில் இருந்த மூன்று பேருடைய உள்ளங்களும்
வெவ்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்தபோதிலும் பதைபதைப்பிலும்
பரபரப்பிலும் வருங்காலத்தில் என்ன நேருமோ என்ற கவலையிலும்
ஒன்றுபட்டிருந்தன. எனவே, அவர்களுடைய இருதயத் துடிப்புகள் ஒரே
ஸ்வரத்தில், ஒரே தாளத்தில் சப்தித்தன.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதின்மூன்றாம் அத்தியாயம்
இராஜோபசாரம்
வாதாபிச்
சக்கரவர்த்தி காஞ்சிக்கு விஜயம் செய்ததிலிருந்து ஏழு தினங்கள்
ஒரே திருவிழாக் கொண்டாட்டமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் நகரின்
ஒவ்வொரு பகுதிக்கு இரண்டு சக்கரவர்த்திகளும் விஜயம்
செய்தார்கள். தினம் ஒரு கோயிலுக்குச் சென்றார்கள். ஒரு நாள்
காஞ்சியின் கல்விக் கழகங்களையெல்லாம் பார்வையிட்டார்கள். ஒரு
நாள் சிற்பக் கலை மண்டபங்களையும் சித்திர சாலைகளையும்
பார்த்தார்கள். ஒருநாள் பௌத்த விஹாரங்களுக்கும் இன்னொரு தினம்
ஜைனர்களின் கோயில்களுக்கும் சென்றார்கள். ஒரு நாள் இரு
சக்கரவர்த்திகளும் பட்டத்து யானை மீது அம்பாரியில் அமர்ந்து
நகர் முழுவதும் பவனி வந்தார்கள்.
பழகப் பழக இரண்டு
சக்கரவர்த்திகளுக்குள்ளேயும் சிநேகம் முதிர்ந்து வந்ததாகத்
தோன்றியது. இந்தச் சிநேகத்தின் பயனாக வருங்காலத்தில் இரண்டு
சாம்ராஜ்யங்களும் பெரு நன்மையடையப் போகின்றன என்று மகேந்திர
பல்லவர் எதிர்பார்த்ததுடன் அதைப் புலிகேசியிடமும்
தெரியப்படுத்தினார். தமக்குச் சமண மதத்தினிடமோ புத்த
சமயத்தினிடமோ எள்ளளவும் துவேஷம் கிடையாதென்றும், சைவ சமயமானது
மற்ற எல்லாச் சமயங்களையும் சமநோக்குடன் பார்க்க இடம்
தருகிறதென்றும், அதனால்தான் தாம் சைவ சமயத்தைச்
சார்ந்ததாகவும், சமணர்களும் பௌத்தர்களும் அநாவசியமான விரோத
பாவம் தம் பேரில் கொண்டிருப்பதாகவும் மகேந்திர பல்லவர்
கூறினார். புலிகேசி தமக்கும் தீவிர மதப் பற்றோ, மதத் துவேஷமோ
கிடையாதென்றும், இராஜீய காரணங்களை முன்னிட்டே சமண
முனிவர்களுக்கு அதிகமாக இடம் கொடுத்து வந்ததாகவும்
தெரிவித்தார்.
சமய போதனையில்
ஈடுபட்ட குருமார்கள் இராஜீய விஷயங்களில் தலையிடவே
கூடாதென்றும், தலையிடுவதால் அவர்களுக்கும் சமயத்துக்கும்
நாட்டுக்குமே தீமைதான் என்றும் மகேந்திரர் கூறினார். அதை
வாதாபிச் சக்கரவர்த்தியும் ஒப்புக் கொண்டார். மகேந்திர
பல்லவர், "உண்மையான சமய பெருமானுடைய வாழ்க்கை உதாரணத்தை
எடுத்துக் காட்டினார். அந்த மகானைத் தாம் பார்க்க முடியுமா
என்று புலிகேசி கேட்டதற்கு, "யுத்தக் குழப்பங்களின் போது
அந்தப் பெரியார் இங்கே இருக்க வேண்டாம் என்று நானே அவரைத்
தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி விட்டேன். இப்போது எங்கே
இருக்கிறார் என்றே தெரியவில்லை" என்று மகேந்திரர்
தெரிவித்தார். புலிகேசி அப்போது "பல்லவ நாட்டு மகா சிற்பியைக்
கூட நான் பார்க்க முடியாதோ?" என்று கேட்க, மகேந்திரபல்லவர்,
"யாரைச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். "ஆயனர்
என்பவரைத்தான்!" என்றார் புலிகேசி. "அவரைப் பற்றி உங்களுக்கு
எப்படித் தெரியும்?" என்று மிக்க வியப்புடன் மகேந்திர பல்லவர்
கேட்டார்.
"காட்டின்
மத்தியில் உள்ள சிற்ப வீட்டை ஒருநாள் நான் பார்த்தேன். அதனுள்
உயிருள்ள பிராணி எதுவும் இல்லை. ஆனால், உயிர்ச் சிலைகள் பல
இருந்தன. அதிலும் வெகு வெகு அற்புதமான நடனச் சிலைகள் பல
இருந்தன. அப்புறம் விசாரித்தேன், அந்த வீட்டில் ஆயனர் என்னும்
மகா சிற்பியும், நாட்டியக் கலையில் வல்ல அவருடைய மகளும்
வசித்ததாகவும், கோட்டை முற்றுகை காரணமாக அவர்கள் எங்கேயோ போய்
விட்டதாகவும் தெரிந்தது. அவர்கள் தற்போது இருக்குமிடமும்
தங்களுக்குத் தெரியாதோ?" என்று வாதாபிச் சக்கரவர்த்தி
கேட்டார். "அவர்கள் இருக்குமிடமும் தெரியும்; அவர்களை அழைத்து
வர ஆளும் அனுப்பி இருக்கிறேன். நாளை கூடும் மகா சபைக்கு
அவர்கள் வந்தாலும் வருவார்கள்" என்றார் காஞ்சிச் சக்கரவர்த்தி.
அதைக் கேட்ட புலிகேசி மிக்க உற்சாகம் அடைந்தவராகக்
காணப்பட்டார்.
வாதாபிச்
சக்கரவர்த்தி காஞ்சி நகருக்குள் பிரவேசித்த எட்டாம் நாள்,
அவருக்கு பிரிவுபசாரம் நடத்துவதற்காகக் காஞ்சியின் பிரதான சபா
மண்டபத்தில் பெரிய சபை கூடியது. அந்த மகா சபையில் பல்லவ
சாம்ராஜ்யத்தின் மந்திரிகள், அமைச்சர்கள், தளபதிகள், மண்டலத்
தலைவர்கள், கோட்டத் தலைவர்கள், நகரத் தலைவர்கள், வர்த்தகச்
செல்வர்கள் முதலியோர் வீற்றிருந்தனர். இன்னும் சைவ வைஷ்ணவ சமய
குருமார்கள், வடமொழி வித்வான்கள், தமிழ் மொழிப் புலவர்கள், இரு
பாஷைகளிலும் கவி பாடத் தெரிந்தவர்கள், சங்கீத வித்வான்கள்,
சிற்பிகள், சித்திரக்காரர்கள் முதலியோரும் வரிசைக் கிரமமாக
வீற்றிருந்தார்கள்.
மேலே கூறப்பட்ட
கூட்டத்தாருக்குள் பிரமுகர்கள் வாதாபிச் சக்கரவர்த்திக்கு
அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். வடமொழி, தென்மொழி ஆகிய இரு
மொழிகளிலும் வல்ல புலவர்கள் அந்த மகத்தான சந்தர்ப்பத்துக்கேற்ற
கவிதைகளைப் புனைந்து பாடினார்கள். இரண்டு சக்கரவர்த்திகளில்
எவரையும் தாழ்த்தாமலும் ஒருவரையும் அதிகமாக உயர்த்தாமலும்
சமமான புகழுரைகளை நிறைத்துப் புலவர்கள் பாடிய கவிகள்
அவர்களுடைய கவித் திறத்தைக் காட்டிலும் அவர்களுடைய லௌகிக
ஞானத்துக்கே சிறந்த உதாரணங்களாயிருந்தன. பிறகு,
சாம்ராஜ்யத்தின் சங்கீத வித்வான்கள் தங்களுடைய வித்வத்தைக்
காட்டினார்கள். மகேந்திர பல்லவரால் புதிதாக அமைக்கப்பட்ட ஏழு
நரம்புகள் உடைய 'பரிவாதினி' என்னும் வீணையைப் புலிகேசி
பரிசீலனை செய்து மிகவும் மகிழ்ந்தார்.
இவ்வாறு நேரம்
போய்க் கொண்டேயிருந்தது. ஆனாலும், மகேந்திர பல்லவர், வாதாபிச்
சக்கரவர்த்தி இருவருமே கொஞ்சம் மன அமைதியின்றிப் பரபரப்பு
உள்ளவர்களாகக் காணப்பட்டார்கள். மகேந்திர பல்லவரின் கண்கள்
அடிக்கடி சபா மண்டபத்தின் வௌி வாசற்பக்கத்தை நோக்கிக்
கொண்டிருந்தன. கடைசியாக, அவர் உற்சாகமான குரலில், "அதோ வந்து
விட்டார்கள்!" என்று கூறிய போது, பக்கத்திலிருந்த வாதாபிச்
சக்கரவர்த்தி, "யார்? ஆயனரும் அவர் மகளுந்தானே?" என்று
வினவினார். அப்போது உண்மையாகவே அச்சபா மண்டபத்தின் வௌி வாசல்
வழியாக ஆயனரும் சிவகாமியும் உள்ளே பிரவேசித்துக்
கொண்டிருந்தார்கள். வாசற்படியைத் தாண்டும் போது சிவகாமியின்
கால் வாசற்படியில் இடறிற்று. 'ஆஹா! இது என்ன அபசகுனம்? என்று
எண்ணமிட்டுக் கொண்டே சிவகாமி மானின் நடைபெற்ற மயிலைப் போலச்
சபா மண்டபத்திற்குள் பிரவேசித்தாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினான்காம் அத்தியாயம்
"வாழி நீ மயிலே!"
ஆயனரும்
சிவகாமியும் அந்த விஸ்தாரமான சபா மண்டபத்துக்குள் பிரவேசித்த
போது மண்டபத்தில் வீற்றிருந்தவர்கள் அத்தனை பேருடைய கண்களும்
அவர்கள் மீது சென்றன. அளவில்லா வியப்பும் குதூகலமும் ஆவலும்
அந்த ஈராயிரம் கண்களிலேயும் ததும்பின. சபையில் அப்போது
வீற்றிருந்தவர்களில் ஒருசிலர் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாலே
அதே மண்டபத்தில் நடந்த சிவகாமியின் அரங்கேற்றத்தின் போது அங்கே
பிரசன்னமாயிருந்தவர்கள்; மற்றும் அநேகர் அந்த அரங்கேற்றத்தைப்
பற்றிக் கேள்வியுற்றிருந்தவர்கள். சிவகாமியின் அரங்கேற்றம்
அந்த மண்டபத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்திலேதான் முதன்
முதலில் புலிகேசியின் படையெடுப்பைப் பற்றி செய்தி
கிடைத்ததென்பதையும், அதனால் அரங்கேற்றம் தடைப்பட்டதென்பதையும்,
அவர்கள் எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள். அந்தத் தடைக்குக்
காரணமான புலிகேசிச் சக்கரவர்த்தி அச்சமயம் அந்தச் சபையில்
வீற்றிருக்கும் அதிசயத்தை எண்ணியபோது அவர்கள் எல்லாருடைய
கண்களும் மாறி மாறிச் சிவகாமியையும் புலிகேசியையும்
நோக்குவனவாயின.
ஆயனரும்
சிவகாமியும் சபா மண்டபத்துக்குள் பிரவேசித்து வரும் காட்சியைப்
பார்த்தவுடன், எல்லாரையும் போல் வாதாபி மன்னரும் சிறிது நேரம்
பிரமிப்பில் ஆழ்ந்திருந்தார். அஜந்தா மலையின் ஆழ்ந்த
குகைக்குள்ளே அவர் கண்டிருந்த அற்புத வர்ண சித்திர உருவங்களில்
ஒன்றுதான் உயிர் பெற்று எழுந்து தம் கண் முன்னால் நடந்து
வருகிறதோ என்று அவருக்குத் தோன்றிற்று. சௌந்தரியவதிகளான
எத்தனையோ பெண்களை அவர் பார்த்ததுண்டு. ஆனால், இம்மாதிரி
நடையழகு வாய்ந்த பெண்களைப் பார்த்தது கிடையாது. சிவகாமி நடந்து
வந்த போது அவளுடைய பாதங்கள் பூமியில் பட்டனவோ படவில்லையோ என்று
தெரியாதபடி நடந்தாள். சங்கீதக் கலையின் உயிர்த் தத்துவத்தை
உணர்ந்து புலவன் பாடும் போது இசை எப்படி ஒவ்வொரு ஸ்வரமும்
தனித்தனியாகவும் அதே சமயத்தில் ஒன்றோடொன்று இழைந்தும்
கேட்கப்படுகிறதோ, அதுபோல் சிவகாமி நடந்த போது, அவள் அடிகள்
எடுத்து வைக்கிறாளோ அல்லது பூமிதான் அவளுடைய பாதங்களுக்குக்
கீழே நழுவிச் சென்று கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது. சபா
மண்டபத்திலிருந்த அத்தனை பேருடைய கண்களுக்கும் சிந்தனைக்கும்
வேலை கொடுத்துக் கொண்டு பிரவேசித்த சிவகாமியோ, அவ்விதம்
எல்லோருடைய கவனத்துக்கும் கண் நோக்கும் தான் ஆளாகியிருப்பதை
உணர்ந்ததாகத் தெரியவில்லை. உயர் குலத்துப் பெண்டிருக்குரிய
இயற்கையான நாணத்தினால் சிறிதளவு தலைகுனிந்த வண்ணம் அவள் நடந்து
வந்தாள். அவளுடைய உள்ளத்தில் அல்லும் பகலும் குடிகொண்டிருந்த
கம்பீர முகத்துக்குரியவர் அந்தச் சபையில் எங்கே இருக்கிறார்
என்று தெரிந்து கொள்ள அவளுக்கு அளவற்ற ஆவல் இருந்தது. எனினும்,
அந்த ஆவலைப் பெருமுயற்சி செய்து அவள் அடக்கிக் கொண்டு இயல்பாக
எதிரே பார்த்துக் கொண்டு நடந்தாள்.
இரண்டு
சக்கரவர்த்திகளும் வீற்றிருந்த இடத்துக்கு அருகில் வந்ததும்,
ஆயனர் கும்பிட்டு நிற்க, சிவகாமி நமஸ்கரித்து நின்றாள்.
மகேந்திர பல்லவர், "ஆயனரே! உமது புதல்வி சிவகாமியின் நாட்டியக்
கலைத் திறமையின் புகழானது நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பரவி
வாதாபிச் சக்கரவர்த்தியின் காது வரையில் எட்டியிருக்கிறது. இதோ
இன்று நமது அருமைச் சிநேகிதராக வீற்றிருக்கும் சத்யாச்ரய
புலிகேசி மன்னர் சிவகாமியின் நடனத்தைப் பார்க்க
விரும்புகிறார். அதற்காகவே உங்களை இவ்வளவு அவசரமாகக் கூட்டி
வரச் செய்தேன். சிவகாமியினால் இப்போது உடனே நடனம் ஆட முடியுமா?
உம்முடைய விருப்பம் என்ன?" என்று வினாவிய போது, ஆயனர், "மகாப்
பிரபு! தங்களுடைய கட்டளை எதுவோ, அதுதான் என்னுடைய விருப்பம்.
சிவகாமிக்கு, அவளுடைய கலைத் திறமையைக் காட்டுவதற்கு இதைக்
காட்டிலும் சிறந்த சபையும் சந்தர்ப்பமும் எங்கே கிடைக்கப்
போகிறது? இரண்டு மாபெருஞ் சக்கரவர்த்திகளும் இரண்டு
சூரியர்களைப் போலவும் இரண்டு தேவேந்திரர்களைப் போலவும் ஏக
காலத்தில் கூடியிருக்கிறீர்கள்!" என்று சொல்லி விட்டுச்
சிவகாமியை நோக்கினார்.
முதலில் மகேந்திர
பல்லவர் பேசிய போது, சிவகாமி சிறிது தலைநிமிர்ந்து
அரைக்கண்ணால் வாதாபிச் சக்கரவர்த்தியைப் பார்த்தாள். பிறகு,
அவளுடைய கண்கள் கட்டுக்காவல்களை உடைத்துக் கொண்டு, இரண்டு
சக்கரவர்த்திகளின் சிம்மாசனங்களையும் சுற்றிச் சிறிது
தூரத்துக்கு வட்டமிட்டன. ஆனால் அவை அடைந்தது ஏமாற்றந்தான்.
சிவகாமியின் கண்கள் தேடிய வீர சௌந்தரிய வதனம் அங்கே
தென்படவில்லை. "ஆ! அவர் எங்கே? ஏன் சக்கரவர்த்திக்கு அருகில்
அவர் காணப்படவில்லை?" என்று அவளுடைய உள்ளம் பதைபதைத்தது. சில
கண நேரத்திற்குள் பற்பல எண்ணங்கள் மின்னலைப் போல் தோன்றி
மறைந்தன. ஏதாவது அவருக்கு விபத்து நேர்ந்திருக்குமோ? இராது,
இராது இராது. அப்படி இருந்தால், மகேந்திர பல்லவர் இந்த
வைபவத்தை நடத்துவாரா? "மிக்க சந்தோஷம் ஆயனரே! அதோ வாத்தியக்
கோஷ்டியும் ஆயத்தமாயிருக்கிறது. உங்களுக்காகவே இந்தச் சபையை
இவ்வளவு நேரம் வளர்த்திக் கொண்டிருந்தோம்!" என்றார் மகேந்திர
பல்லவர்.
சிவகாமி தான்
நின்ற இடத்திலிருந்து நடன வட்டத்துக்குப் போகத் திரும்பிய
போது, மீ்டும் அவளுடைய கண்கள் ஒருமுறை சுற்றிச் சுழன்றன.
அப்போது அவளுடைய பார்வை தற்செயலாகப் புலிகேசியின் முகத்தில்
விழுந்தது. வெறித்து நோக்கிய புலிகேசியின் கொடுங் கண்களைச்
சந்தித்த போது திடீரென்று வீசிய வாடைக் காற்றில் அடிபட்ட
மல்லிகைக் கொடியைப் போல அவளுடைய உள்ளம், உடம்பு எல்லாம்
சில்லிட்டு நடுநடுங்கின. இது ஒரு வினாடி நேரந்தான். அகாரணமாகத்
தோன்றிய அந்த உணர்ச்சியை எப்படியோ சிவகாமி சமாளித்துக் கொண்டு
நடன வட்டத்தை நோக்கி நடந்தாள். அப்போது இன்னதென்று சொல்ல
முடியாத அருவமான நிழல் போன்ற ஞாபகம் ஒன்று அவளைப்
பின்தொடர்ந்து சென்றது.
நடன வட்டத்தில்
சென்று நின்றதும் சிவகாமி மேற்கூறிய நிழல் ஞாபகத்தை உதறித்
தள்ளிவிட்டு ஆட்டத்துக்கு ஆயத்தமானாள். அப்போது அவள்
தன்னடக்கத்துக்குப் பங்கமில்லாமல் அந்த மகாசபையின்
நாலாபுறத்திலும் கண்ணைச் சுழற்றிப் பார்த்தல்
சாத்தியமாயிருந்தது. மண்டபத்தின் மேல் மச்சு மாடங்களிலே
சக்கரவர்த்தினியும் மற்ற அந்தப்புரத்து மாதர்களும்
வீற்றிருப்பது அவள் பார்வைக்குப் புலனாயிற்று. முன்னொரு நாள்
அதே மண்டபத்தில் நடந்த அரங்கேற்றத்தின் போது இன்று போலவே
மாமல்லரைக் காணாமல் முதலில் தான் ஏமாற்றமடைந்ததும், பிற்பாடு
அவர் தாய்மார்களுடன் மேல் மாடத்திலிருந்து பார்த்துக்
கொண்டிருந்ததாகத் தெரியப்படுத்தியதும் நினைவு வந்தன.
இன்றைக்கும் அவர் அவ்வாறே தன் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு
மறைவான இடத்திலிருந்து தன்னுடைய நடனத்தைப் பார்த்துக்
கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. இந்த எண்ணம் ஏற்பட்டதும்
இதற்கு முன் அவளுக்கு ஏற்பட்டிருந்த ஏமாற்றம், சோர்வு, மனக்
கலக்கம், நடுக்கம் எல்லாம் மாயமாய் மறைந்து போயின, நடனமும்
உடனே ஆரம்பமாயிற்று. நடனம் ஆரம்பமாகிச் சிறிது
நேரத்துக்கெல்லாம் அச்சபையில் இருந்தவர்கள் எல்லாம், அது ஒரு
இராஜ சபை என்பதையும், அதில் ஒரு பெண் நடனமாடுகிறாள்
என்பதையும், தாங்கள் அங்கேயிருந்து அதைப் பார்க்கிறோம்
என்பதையும் மறந்தே போனார்கள். இந்த ஜட உலகத்தையே விட்டு விட்டு
அனைவரும் ஒரு புதிய ஆனந்தக் கனவுலகத்துக்கே போய் விட்டார்கள்.
நடனம்
ஆரம்பமாகும் சமயத்தில் சிவகாமி தௌிந்த தன்னுணர்ச்சி
பெற்றிருந்தாள். தன் வாழ்க்கையிலேயே அது ஒரு முக்கியமான தினம்
என்றும், அன்று தான் ஆடப் போகும் நடனம் தன் வாழ்க்கையில் ஒரு
முக்கிய சம்பவம் என்றும் உணர்ந்திருந்தாள். கன்னி சிவகாமியின்
உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த இரு பேருணர்ச்சிகளில் ஒன்று
மாமல்லர் மேல் கொண்ட காதல் என்பதையும், இன்னொன்று நடனக் கலை
மீது அவளுக்கிருந்த பிரேமை என்பதையும் முன்னமே
பார்த்திருக்கிறோம். இப்போது இங்கே கூடியிருப்பது போன்ற ஒரு
மகா சபை தனது கலைத் திறமையைக் காட்டுவதற்குக் கிடைப்பது
மிகவும் அரிது என்பதை ஆயனரைப் போல் அவளும் உணர்ந்திருந்தாள்.
அன்றியும் சிவகாமிக்குத் தன்னுடைய கலைத் திறமை முழுவதையும்
அந்தச் சபையில் காட்ட வேண்டுமென்ற ஊக்கம் ஏற்படுவதற்கு இன்னொரு
முக்கிய காரணமும் இருந்தது.
மகேந்திர பல்லவர்
மற்ற விஷயங்களில் எவ்வளவு கடின சித்தராயிருந்தபோதிலும்,
கலைகளுக்கு மனம் உருகக் கூடியவர். தன் கலைத் திறமையினால்
அவருடைய நன்மதிப்பைக் கவர வேண்டும்; தான் மாமல்லரை மணந்து
கொள்வதற்கு அவர் தடை சொல்லாதபடி செய்ய வேண்டும். வயிர
நெஞ்சமுள்ள ஒரு மகா சக்கரவர்த்தியின் மனத்தை மாற்றித் தன்
விருப்பத்துக்கிணங்கும்படி செய்வதற்குத் தன்னிடம் உள்ள ஒரே
ஆயுதம் நடனக் கலையே அல்லவா? எனவே, அன்றைக்குத் தன்னுடைய நடனம்
பரத நாட்டியத்தின் சரித்திரத்திலேயே ஓர் அற்புத சம்பவமாயிருக்க
வேண்டுமென்று சிவகாமி சங்கற்பம் செய்து கொண்டாள். ஆனால்
இத்தகைய தன்னுணர்ச்சியெல்லாம், சிவகாமி ஆட்டத்தைத் தொடங்கும்
வரையிலேதான் இருந்தது. ஆட்டம் ஆரம்பமாயிற்றோ, இல்லையோ, இத்தனை
காலமும் சிவகாமியின் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த கலை
உணர்ச்சியானது பொங்கிப் பெருகத் தொடங்கியது. சிவகாமி தான்
என்னும் உணர்ச்சி அற்றுக் கலை வடிவமாகவே மாறி விட்டாள்.
பின்னர் சிவகாமி நடனம் ஆடவில்லை; நடனக் கலையானது அவளை
ஆட்கொண்டு ஆட்டுவித்தது.
சிவகாமியின்
உள்ளமானது நாட்டியக் கலையின் அம்சங்களாகிற தாளங்களையும்,
ஜதிகளையும், அடைவுகளையும், தீர்மானங்களையும் பற்றி எண்ணவில்லை.
அந்தத் தாளங்கள், ஜதிகள், அடைவுகள், தீர்மானங்கள் எல்லாம், அவை
அவை அந்தந்த இடத்தில் ஓடி வந்து சிவகாமிக்குச் சேவை செய்தன.
சிவகாமியின் உள்ளம் ஆனந்த வௌியிலே மிதந்து கொண்டிருந்தது.
அவளுடைய தேகமோ எல்லையற்ற ஆனந்த வெள்ளத்திலே அனாயாசமாக மிதந்து
கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த சபையோர்களும் ஆனந்த
சாகரத்தில் மிதக்கலாயினர். பரத நாட்டிய வினிகையில் முதற்
பகுதியான 'நிருத்தம்' முடிவடைந்த போதுதான் சபையோர் தாங்கள்
சஞ்சரித்த ஆனந்தக் கனவுலோகத்திலிருந்து பூவுலகத்துக்கு
வந்தனர். அப்போது சபையின் நானா புறங்களிலிருந்தும் பிரமாதமான
கரகோஷம் எழுந்தது. அவ்விதம் கரகோஷம் செய்து தங்கள்
மகிழ்ச்சியைத் தெரிவித்தவர்கள் இரு சக்கரவர்த்திகளும்
கூடத்தான்.
நடனம்
ஆரம்பிப்பதற்கு முன்னால், சிவகாமியும் ஆயனரும் மகேந்திர
சக்கரவர்த்தியிடம் கட்டளை பெற்றுக் கொண்டு நடன வட்டத்தை
நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வாதாபி மன்னர் மகேந்திர
பல்லவரைப் பார்த்து, "இதென்ன? இவர்களுக்கு இவ்வளவு மரியாதை
செய்கிறீர்களே? எங்கள் நாட்டிலே சாட்டையினால் அடித்து நடனம்
ஆடச் சொல்வோம்!" என்றார். "சத்யாச்ரயா! எங்கள் நாட்டில்
அப்படியில்லை. இங்கே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நாங்கள்
மிக்க மரியாதை செய்கிறோம். இராஜ்யம் ஆளும் மன்னர்களையும்
சக்கரவர்த்திகளையும் போலவே கலை உலகிலும் இங்கே அரசர்களும்
சக்கரவர்த்திகளும் உண்டு. 'சிற்ப சக்கரவர்த்தி', 'கவிச்
சக்கரவர்த்தி' என்ற பட்டங்கள் அளிக்கிறோம். ஆயனர் 'சிற்ப
சக்கரவர்த்தி' என்ற பட்டம் பெற்றவர். இராஜ்யம் ஆளும்
சக்கரவர்த்திகளுக்குச் செய்யும் மரியாதையை மக்கள் இவருக்கும்
செய்கிறார்கள்" என்றார். "அழகாய்த்தானிருக்கிறது உங்கள்
நாட்டின் வழக்கம்!" என்று பரிகசித்தார் வாதாபி மன்னர்.
சிவகாமியின்
நிருத்தம் முடிந்தவுடனே வாதாபிச் சக்கரவர்த்தியும்
மற்றவர்களைப் போல் கரகோஷத்தில் ஈடுபட்டதைக் கண்ட மகேந்திர
பல்லவர், "இப்போது என்ன சொல்கிறீர்கள்? கலைஞர்களுக்கு மரியாதை
செய்வது பற்றி உங்களுடைய அபிப்பிராயத்தை மாற்றிக்
கொண்டீர்களா?" என்று கேட்டார். "நடனம்
அற்புதமாய்த்தானிருக்கிறது; இம்மாதிரி நான் பார்த்ததேயில்லை.
ஆனாலும்...." என்று கூறி இடையில் நிறுத்தி விட்டுப் புலிகேசி
ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.
அன்று
அபிநயத்துக்குச் சிவகாமி முதன் முதலாக எடுத்துக் கொண்டு பாடல்
செந்தமிழ் நாட்டின் ஆதிதேவதையான வேலனைப் பற்றியது. வேலன்
தன்னிடம் பக்தி கொண்ட பெண்ணுக்கு, "நான் திரும்ப வந்து உன்னை
ஆட்கொள்கிறேன்!" என்று வேலின் மீது ஆணையிட்டு
வாக்களித்திருக்கிறான். ஆனால் அவ்வாக்குறுதியை அவன்
நிறைவேற்றவில்லை. அதனால் அந்தப் பெண் ஏமாற்றமும் மனத் துயரமும்
அடைகிறாள். அந்த நிலைமையிலும் வேலனிடத்திலே கோபங்கொள்ளவோ, அவன்
மீது குறை சொல்லவோ அவளுக்கு விருப்பமில்லை. எனவே,
குற்றத்தையெல்லாம் வேலனுடைய வாகனமாகிய மயிலின் மீது
போடுகிறாள். மயிலை நிந்திக்கிறாள்; கோபிக்கிறாள்; பலவிதமாகவும்
இடித்துக் காட்டுகிறாள். இந்தக் காலத்தில், 'ஆனந்த பைரவி'
என்றும் வழங்கும் பழமையான ராகத்தில், நடனத்துக்கும்
அபிநயத்துக்கும் ஏற்ற தாளத்துடன் அமைந்த பாடல் பின்வருமாறு:
மறவேன் மறவே னென்று
வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே!(மற)
உருகி உருகி உள்ளம் அவரை
நினைவதையும்
உயிரும் கரைவதையும் - அறியாரோ
மயிலே?(மற)
அன்பர் வரவு நோக்கி இங்குதான்
காத்திருக்க
அன்னநடை பயில்வாயோ - வண்ண
மயிலே! பெம்மான் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறிப் பாதையை மறந்தாயோ
- பேதை மயிலே! வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைந்து வழியில்
உறங்கினாயோ - வாழி நீ மயிலே!(மற)
தன்னிகரில்லாதான் தனயர்பால்
மையல் கொண்ட
மங்கைமீ திரங்காயோ - தங்க
மயிலே! சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய் உன்னை நொந்
தாவதென்ன? - வன்கண் மயிலே! மன்னும் கரிபரிகள் புவியில் பல இருக்க உன்னை
ஊர்தியாய்க் கொண்டோர் - தன்னையே நோகவேணும்(மற)
|
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினைந்தாம் அத்தியாயம்
"நமனை அஞ்சோம்!"
வேலனின் காதலி
நீல மயில் ஒன்றை வளர்த்து வருகிறாள். அந்த மயிலைப் பார்க்கும்
போதெல்லாம் அவளுக்கு முருகனுடைய நினைவு வருகிறது, காதலின்
தாபம் அதிகமாகிறது. ஒருநாள் மயிலைப் பார்த்துச் சொல்கிறாள்;
"நீ பெருமான் முருகனுடைய வாகனமல்லவா? போ! போய் அவரை இங்கு
விரைவில் அழைத்து வா!" என்று கட்டளை இடுகிறாள்.
கட்டளையிடுவதுடன் நிற்காமல் மயிலை அடிப்பதாக பயமுறுத்தி
விரட்டி விடுகிறாள். நீலமயில் விரைவில் திரும்பி வரும்
என்றும், வரும்போது தன்மீது வேலனை ஏற்றிக்கொண்டு
ஆடிவருமென்றும் காதலி வழிபார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால்
நெடுநேரம் காத்திருந்தும் மயிலையும் காணவில்லை; வேலனையும்
காணவில்லை. "வேலன் ஒருவேளை அடியோடு தன்னை மறந்து
விட்டிருப்பாரோ?" என்று ஒரு கணம் தோன்றுகிறது.
உடனே அந்த பழைய
சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. கடைசித் தடவை வேலனை அவள்
சந்தித்தபோது, "என்னை மறந்து விடக் கூடாது" என்று தான் இரந்து
கேட்டுக் கொண்டதும், அவர் தம் வேலின் மேல் ஆணையாக "உன்னை ஒரு
நாளும் மறக்க மாட்டேன்!" என்று வாக்களித்ததும் நினைவுக்கு
வருகின்றன. உடனே, "இல்லை, அவர் ஒருநாளும் மறந்திருக்க
மாட்டார். இந்த மயில்தான் தாமதம் செய்கிறது" என்று
தீர்மானித்துக் கொள்கிறாள். தன் மனக் கண்ணின் முன்னால் மயிலை
உருவகப்படுத்தி நிறுத்திக் கொண்டு சொல்கிறாள்; "மறவேன் மறவேன்
என்று வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ நீல மயிலே!"
என்று சிவகாமி பாடிக் கொண்டு அபிநயமும் பிடித்தபோது, சபையோரின்
கண் முன்னாலிருந்து சிவகாமி மறைந்து விட்டாள். தமிழகத்தின்
அதிதெய்வமான ஸரீசுப்ரமண்யர் கையில் வேலுடனே அவர்கள் கண்
முன்னால் நின்றார். கருணையும் அன்பும் ததும்பிய கண்களினால்
முருகப் பெருமான் தன்னிடம் காதல் கொண்ட பெண்ணை நோக்குவதையும்,
கையில் பிடித்த வேலின் மேல் ஆணை வைப்பதையும், 'உன்னை என்றும்
மறவேன்!' என்று உறுதி கூறுவதையும் சபையோர் பிரத்தியட்சமாய்க்
கண்டார்கள்.
அடுத்த கணத்தில்
வேலனும் வேலும் மறைய, வேலனைப் பிரிந்த காதலியையும் நீல
மயிலையும் சபையோர்கள் தங்கள் எதிரே பார்த்தார்கள். காதலியின்
உயிர் வேலனைப் பிரிந்திருக்கும் ஆற்றாமையினால் உருகிக்
கரைவதையும் அவர்கள் கண்டார்கள். "அன்பர் வரவுநோக்கி இங்குநான்
காத்திருக்க அன்னநடை பயில்வாயோ வன்ன மயிலே!" என்னும் அடிக்குச்
சிவகாமி அபிநயம் பிடித்தபோது, முதலிலே தன்னந் தனியான ஒரு பெண்,
கண்களில் அளவற்ற ஆசையுடனும் ஆர்வத்துடனும், முடிவில்லாமல்
நீண்டு சென்ற வழியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதைப்
பார்த்தார்கள். பிறகு, அந்தப் பெண், அன்னநடை பயிலும் வன்ன
மயிலைப் பரிகசிப்பதற்காகத் தானும் அன்ன நடை நடந்து
காட்டியபோது, சபையில் 'கலீர்' என்ற சிரிப்பு உண்டாயிற்று.
அவ்விதமே, முருகன் தன்னை வாகனமாய்க் கொண்ட பெருமிதத்தினால்
மயிலின் தலைக்கேறிய போதையைக் காட்டியபோதும், அதனால் மயில்
பாதையை மறந்து திண்டாடிய பேதைத் தனத்தைக் குறிப்பிட்ட போதும்
சபையில் ஒரே குதூகலமாயிருந்தது. "ஒருவேளை என்மேல் பழி
தீர்த்துக் கொள்வதற்காக வழியில் வேணுமென்று படுத்து உறங்கி
விட்டாயா?" என்று மயிலைப் பார்த்துக் கேட்டுவிட்டு,
அப்பேர்ப்பட்ட அநியாயத்தைச் செய்த மயிலை, "என்னவோ, நீ
எப்படியாவது சௌக்கியமாயிரு!" என்று மனங்கசந்து
ஆசீர்வதிப்பதற்கு அறிகுறியாக, "வாழி நீ மயிலே!" என்று
வாழ்த்தி, அதற்குரிய பாவமும் காட்டியபோது, அந்தச் சபையில்
ஏற்பட்ட ஆரவாரத்தைச் சொல்லி முடியாது.
மறுகணத்தில்
காதலியின் உள்ளப்பாடு மாறுகிறது. "தங்க மயிலே!" என்று கொஞ்சி
அழைத்து, இந்த மங்கை மீதிரங்க மாட்டாயா?" என்று கெஞ்சுகிறாள்.
"உனக்காகவும் தெரியாது; சொன்னாலும் நீ கேட்க மாட்டாய்! உன்னைக்
குற்றம் சொல்லி என்ன பயன்? ஏ! வன் கண் மயிலே!" என்று மயிலின்
கொடுமையான கண்களின் சலனப் பார்வையைச் சிவகாமி காட்டியபோது,
சபையோர் அதிசயத்தில் மூழ்கினார்கள். "உன்னை நொந்து பயனில்லை;
உலகத்தில் யானைகள், குதிரைகள் என்பதாக எத்தனையோ நல்ல நல்ல
பிராணிகள் இருக்க, உன்னைப் போய் வாகனமாய்ப் பிடித்தானே
அவனையல்லவா நோக வேண்டும்?" என்று பாட்டை முடிக்கும் போது,
அதில் அடங்கியிருந்த சோகம், மனக் கசப்பு, பரிகாசம், நகைச்சுவை
ஆகிய உள்ளப் பாடுகள் அவ்வளவையும் சேர்ந்தாற்போல் முகத்தில்
காட்டிய சிவகாமியின் அற்புதக் கலைத்திறமை சபையோரைப்
பரவசப்படுத்தியது.
ஆம்; மேற்கூறிய
பாடலும் அபிநயமும் சபையில் எல்லோரையும் பரவசப்படுத்தத்தான்
செய்தன - ஒரே ஒருவரைத் தவிர, அந்த ஒருவர் மகேந்திர
பல்லவர்தான். அவர் முகத்தில் சிணுக்கம் காணப்பட்டது. வேலனிடம்
காதலை வௌியிடும் வியாஜத்தில் சிவகாமி மாமல்லரிடம் தன்னுடைய
மனம் ஈடுபட்டதையும் தெரிவிக்கிறாள் போலும். 'வேலின் மேல்
ஆணையிட்ட மன்னர்' என்பதில், அடங்கிய சிலேடை மிகத் தௌிவாக
மகேந்திரருக்கு விளங்கியது. 'தன்னிகரில்லாதான்' என்னும்போது
சிவகாமி தம்மைப் பார்த்ததின் கருத்தையும் தெரிந்து கொண்டார்.
ஆகா! இந்த பெண்ணுக்குத்தான் என்ன தைரியம்! தம்மைத் தோத்திரம்
செய்து அவளுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள எண்ணுகிறாள்,
போலும்! ஆகா! மகேந்திர பல்லவனுடைய இயல்பை இவள் இன்னும் அறிந்து
கொள்ளவில்லை! இவ்விதம் எண்ணமிட்ட சக்கரவர்த்தி, அருகிலிருந்த
ஏவலாளனிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். அவன் போய் ஆயனர் காதோடு
ஏதோ கூறினான். ஆயனர் சிவகாமியிடம், "அம்மா! வாகீசப் பெருமானின்
பதிகம் ஒன்று பாடு!" என்று கூறினார்.
ஏற்கெனவே,
சக்கரவர்த்தியின் சிணுங்கிய முகத்திலிருந்து அவருடைய
மனப்பாங்கைச் சிவகாமி ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தாள். அவர்
சொல்லி அனுப்பிய செய்தியினால் அது ஊர்ஜிதமாயிற்று. அந்தக் கல்
நெஞ்சரைத் தன்னுடைய கலையின் மூலம் இளகச் செய்து, அவருடைய
ஆதரவைப் பெறலாம் என்று எண்ணிய தன்னுடைய பிசகை நினைக்க அவளுக்கு
வெட்கமாயிருந்தது. அந்த வெட்கமே மறுகணம் கோபமாக மாறி அவள்
உள்ளத்தில் கொந்தளித்தது. பின்வரும் பாடலை ஆரம்பித்தாள்:
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!..." அதுவரையில் ஒரே
ஆனந்தத்திலும் குதூகலத்திலும் ஆழ்ந்திருந்த அந்தச் சபையில்
திடீரென்று ஒரு மாறுதல் உண்டாயிற்று. ஒரு கல்யாண
வைபவத்தின்போது, எதிர்பாராத அபசகுனம் ஏதேனும் ஏற்பட்டால்
எல்லாருடைய மனமும் முகமும் எப்படி மாறுமோ அப்படிப்பட்ட
மாறுதல். 'இந்தப் பாட்டை இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன்
பாடவேண்டும்' என்று அத்தனை பேரும் எண்ணியதாக அவர்களுடைய முகக்
குறியிலிருந்து தெரிந்தது.
மேற்படி பாடலின்
சரித்திரம் அத்தகையதாகும். சமண சமயத்தைத் தழுவிய மருள்
நீக்கியார்மீது பாடலிபுரத்துச் சமணர்கள் பற்பல குற்றங்களைச்
சுமத்திக் காஞ்சிப் பல்லவ சக்கரவர்த்திக்கு விண்ணப்பம்
செய்துகொள்ள, மகேந்திர பல்லவர் உண்மையை விசாரித்து உணரும்
பொருட்டு அவரைக் காஞ்சிக்கு வரும்படி கட்டளை அனுப்பினார்.
கட்டளையைக் கொண்டு போன இராஜ தூதர்கள் அந்த மகா புருஷரைக்
கொஞ்சம் அச்சுறுத்தினார்கள். "எனக்கு இறைவன், சிவபெருமான்
தான்; உங்களுடைய அரசன் கட்டளையை நான் மதியேன்!" என்று
திருநாவுக்கரசர் கூறித் தூதர்களைத் திடுக்கிடச் செய்தார்.
"உம்மைச் சுண்ணாம்புக் காளவாயில் போடுவோம், யானையின் காலால்
மிதிக்கச் செய்வோம்; கழுத்திலே கல்லைக் கட்டிக் கடலிலே
போடுவோம்" என்றெல்லாம் தூதர்கள் பயமுறுத்தினார்கள். அப்போது,
மருள்நீக்கியார் ஒரு பாடலைப் பாடினார்: நாமார்க்குங்
குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளுந்
துன்பமில்லை! தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரனற்
சங்கவெண் குழையோர் காதில் கோமாற்கே நாமென்று மீளா வாளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே!
மேற்கண்ட பாடலை
ஓலையிலே எழுதுவித்து, "இதை எடுத்துக்கொண்டு போய் உங்கள்
அரசரிடம் கொடுங்கள்" என்றார் சிவனடியார். தூதர்களும்
தங்களுக்கு வேறு கட்டளையில்லாமையால் திரும்பிச் சென்று பாடலைச்
சக்கரவர்த்தியிடம் கொடுத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தற்கு
மாறாகக் காரியம் நடந்தது. அதாவது பாடலைப் படித்த மகேந்திர
பல்லவர் அத்தகைய தெய்வப் பாடலைப் பாடக் கூடிய மகானைத் தரிசிக்க
விரும்பினார். அவரைத் தரிசித்த பிறகு, தாமும் ஜைன
மதத்தைவிட்டுச் சைவ சமயத்தைச் சேர்ந்தார். இதெல்லாம்
தெரிந்தவர்களானபடியாலேதான் சபையோர் அத்தகைய அஸ்வாரஸ்யத்தைக்
காட்டினார்கள்.
ஆனால்,
சபையோருடைய மனோபாவத்துக்கு நேர்மாறாக இருந்தது மகேந்திர
பல்லவருடைய மனோபாவம். அந்தப் பாடல் அவருக்கு மிகுந்த
உற்சாகத்தை அளித்ததாகத் தெரிந்தது. பாடல் ஆரம்பித்த உடனே, அது
எந்தச் சந்தர்ப்பத்தில் பாடப்பட்டதென்பதை மகேந்திரர்
புலிகேசிக்கு அறிவித்தார். புலிகேசிக்கு அது எல்லையற்ற
வியப்பையும் உவகையையும் அளித்ததாகத் தெரிந்தது. "அழகுதான்!
தங்களுடைய அதிகாரத்தை மறுதலித்து ஒரு பரதேசி பாடல் பாடுவது;
அதை ஒரு பெண், சபை நடுவில் அபிநயம் பிடிப்பது; அதை நீங்களும்
பார்த்துச் சந்தோஷப்படுவது; இதையெல்லாம் என்னால் நம்பவே
முடியவில்லையே!" என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி. "அதுதான்
கலையின் மகிமை, சத்யாச்ரயா! ஒருவன் வாய்ப் பேச்சாக என் ஆக்ஞையை
மறுத்திருந்தால், உடனே அவனைச் சிரச்சேதம் செய்யும்படி
கட்டளையிட்டிருப்பேன். அதுவே செந்தமிழ்க் கவிதையாக வந்தபோது,
'இத்தகைய அற்புதக் கவிதையைப் பாடியவரைப் பார்க்க வேண்டும்'
என்ற விருப்பம் எனக்கு உண்டாகிவிட்டது" என்றார் ரஸிக
சிகாமணியான காஞ்சிச் சக்கரவர்த்தி. இதற்குள்ளாகப் பாடல் ஒரு
தடவை பாடி முடிந்து, அபிநயமும் ஆரம்பமாகியிருந்தது. 'நமனை
அஞ்சோம்' என்னும் பகுதிக்குச் சிவகாமி அபிநயம் பிடிக்கத்
தொடங்கியிருந்தாள். மார்க்கண்டனுடைய கதை சபையோரின் கண்முன்னால்
வந்தது.
மல்லிகைப் பூவின்
மெல்லிய இதழ் போன்ற மிருதுவான சரீரத்தையுடைய அந்த யுவதி ஒரு
கணத்தில் கையிலே தண்டாயுதத்துடனும் பாசக் கயிற்றுடனும்
கண்டவர்கள் உயிர்க் குலையும் பயங்கரத் தோற்றத்துடன் வரும்
யமதர்மராஜனாக மாறுகிறாள்! அடுத்த கணத்தில் அவளே பதினாறு
வயதுள்ள இளம் பாலகனாக மாறி, முகத்தில் சொல்ல முடியாத
பீதியுடன், சிவலிங்கத்தை அணைத்து ஆலிங்கனம் செய்து
கொள்ளுகிறாள். மறுகணத்தில் யமதர்மராஜன் தன் பாசக் கயிற்றை வீசி
எறிந்து மார்க்கண்டனுடைய உயிரை வலிந்து கவரப் பார்க்கிறான்.
அந்த இளம் பிள்ளையின் முகமோ முன்னைக் காட்டிலும் பதின்மடங்கு
பீதியையும் பரிதாபத்தையும் காட்டுகிறது.
ஆஹா!
அடுத்தகணத்தில் அந்தச் சிவலிங்கத்திலிருந்து சம்ஹார
ருத்ரமூர்த்தி கிளம்புகிறார்! சிவகாமியின் நெடிதுயர்ந்த
ஆகிருதி இப்போது இன்னும் உயர்ந்து தோற்றமளிக்கிறது. ஒரு கணம்
கருணை ததும்பிய கண்கள் சற்று கீழ்நோக்கிப் பார்க்கின்றன.
கரங்கள், பாலன் மார்க்கண்டனுக்கு அபாயம் அளிக்கின்றன. மறு
கணத்தில் கண்கள் எதிர்ப்புறம் நோக்குகின்றன. யமனைக் கோபத்துடனே
பார்க்கும் கண்களில் அக்னி ஜுவாலை தழல் விடுகிறது.
புருவங்களுக்கு மத்தியிலே நெற்றிக் கண் இதோ
திறந்துவிடப்போகிறது என்று நினைக்கும்படியாக ஒரு
துடிதுடிப்புக் காணப்படுகிறது.
கோர பயங்கர
உருவம் கொண்ட யமதர்மனிடம் இப்போது சிறிது பணிவைக் காண்கிறோம்.
"என் பேரில் ஏன் கோபம்? என்னுடைய கடமையைத்தானே செய்கிறேன்?"
என்று சொல்லும் தோற்றம். கோபம் கொண்ட சம்ஹார ருத்ரமூர்த்தி
மீண்டும் சபையோருக்கு தரிசனம் தருகிறார். ஒரு காலைத் தூக்கி
ஓங்கி உதைக்கிறார். 'தடார்' என்ற சத்தத்துடன் யமன் உதைபட்டுக்
கீழே விழுகிறான். மீண்டும், பாலன் மார்க்கண்டனின் பால் வடியும்
முகம். ஆகா! அந்த முகத்தில் இப்போது பயம் இல்லை, பீதி இல்லை!
பக்திப் பரவசமும் நன்றியும் ததும்புகின்றன.
அபிநயம்
ஆரம்பித்தவுடனேயே சபையோர் தங்களுடைய பழைய விரஸ உணர்ச்சியை
மறந்துவிட்டார்கள். பாட்டு யார் பாடியது; எந்தச்
சந்தர்ப்பத்தில் பாடியது என்பதெல்லாம் அவர்களுக்கு அடியோடு
மறந்து போய்விட்டது. வௌியுலகத்தை மறந்து, தங்களையும் அடியோடு
மறந்துவிட்டார்கள். பாடல் முழுவதும் முடிந்து, பூலோகத்திற்கு
வந்தவுடனே "எப்படி?" என்று மகேந்திர பல்லவர் புலிகேசியைக்
கேட்டார். "நாகநந்தி எழுதியது உண்மைதான்!" என்று வாதாபி மன்னர்
சொல்லிவிட்டு மகேந்திர பல்லவரை உற்று நோக்கினார். மகேந்திரரின்
முகத்தில் எவ்வித மாறுதலும் காணப்படவில்லை. "நாகநந்தி யார்?"
என்று சாவதானமாக மகேந்திரர் கேட்டார். "நீங்கள் நாகநந்தி
பெயரைக் கேள்விப்பட்டதே இல்லையா? தென்னாடெங்கும் பலநாள்
யாத்திரை செய்த புத்த பிக்ஷு." "பிக்ஷு என்ன எழுதியிருந்தார்
தங்களுக்கு?" "அவருடைய யாத்திரை விவரங்களை என்கு அவ்வப்போது
தெரிவுக்கும்படி கேட்டிருந்தேன். அந்தப்படியே எழுதிக் கொண்டு
வந்தார். 'ஆயனரைப் போன்ற மகா சிற்பியும் சிவகாமியைப் போன்ற நடன
கலா ராணியும் இந்தப் பரத கண்டத்தில் வேறு எங்கும் இல்லை!'
என்று ஒரு தடவை எழுதியிருந்தார்." "நாகநந்தி பிக்ஷு நல்ல
ரசிகர் போலிருக்கிறது; அவர் இப்போது எங்கேயோ?" "அதுதான்
தெரியவில்லை; ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாமென்று
நினைத்தேன். மகேந்திரர் மௌனமாயிருந்தார். "நாட்டில் இருந்த
புத்தபிக்ஷுக்களையெல்லாம் ஒற்றர்கள் என்று நீங்கள் பிடித்துச்
சிறைப்படுத்தியதாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை நாகநந்தி
பிக்ஷுவையும் ஒற்றர் என்று சந்தேகித்துச் சிறைப்படுத்தி
விட்டீர்களோ, என்னவோ?"
மேற்குறித்த
சம்பாஷணை நடந்து கொண்டிருக்கையில், சிவகாமியின் கண்கள் கரகோஷம்
செய்து ஆரவாரித்துக் கொண்டிருந்த சபையோரின் மலர்ந்த முகங்களைப்
பார்த்த வண்ணம் சுற்றிக் கொண்டு வந்து, மகேந்திர பல்லவரின்
உற்சாகம் ததும்பும் முகத்தைப் பார்த்து விட்டு, அடுத்தாற்போல்
வாதாபிச் சக்கரவர்த்தியின் கிளர்ச்சி கொண்ட முகத்தில் வந்து
நின்றன. அவ்விதம் நின்றதும் சிவகாமியின் உள்ளத்தில் இத்தனை
நேரமும் படர்ந்து வேதனை செய்து கொண்டிருந்த மாயத்திரை
பளிச்சென்று விலகிற்று. நிழலாயிருந்த ஞாபகம் தௌிந்த
உருவெருத்து மனக்கண் முன்னால் நின்றது. ஆ! அந்த முகம்!
அப்படியும் இருக்க முடியுமா? இரு மனிதருக்குள் அத்தகைய முக
ஒற்றுமை சாத்தியமா? அல்லது இருவரும் ஒருவர்தானா? மகேந்திர
சக்கரவர்த்தி பலவித மாறுவேஷங்கள் போட்டுக் கொண்டு திரிவதுண்டு
அல்லவா? அதுபோலவே, வாதாபிச் சக்கரவர்த்தியும் நாகநந்தி
பிக்ஷுவாகத் தென்னாட்டில் உலவிக் கொண்டிருந்தாரா?
இத்தகைய
எண்ணங்களினால் சிவகாமியின் உள்ளம் குழம்பிக்
கொண்டிருக்கும்போதே, மகேந்திர பல்லவர் நடனத்தை முடித்து
விடலாம் என்று ஆயனருக்குச் சமிக்ஞை செய்தார். நடனக் கலையின்
அதி தெய்வமும் தமிழ் நாட்டின் தனிப் பெருந்தெய்வமுமான ஸரீ
நடராஜமூர்த்தி தில்லைப் பதியில் ஆடிய ஆனந்த நடனத்தை
வர்ணிக்கும் பாடலோடும், அதற்குரிய நடன அபிநயத்துடனும் அன்றைய
நடன வினிகை முடிவுற்றது. "இம்மாதிரி ஒரு நடனம் இதற்கு முன்னால்
நடந்ததில்லை; இனிமேலும் நடக்கப் போவதில்லை!" என்று
அம்மகாசபையில் கூடியிருந்த ரஸிகர்கள் ஏகமனதாக
அபிப்பிராயப்பட்டார்கள்.
மகேந்திர பல்லவர்
மீண்டும் சமிக்ஞை செய்ததின் பேரில் ஆயனரும் சிவகாமியும் இரு
சக்கரவர்த்திகளும் அமர்ந்திருந்த சிம்மாசனங்களுக்கு அருகே
சென்று வணங்கி நின்றார்கள். மகேந்திர பல்லவர், "ஆயனரே! முன்
தடவை இதே இடத்தில் சிவகாமியின் அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்த
போது, இடையிலே தடைப்பட்டதல்லவா? அந்தத் தடைக்குக் காரணமான
வாதாபிச் சக்கரவர்த்தியே இங்கு இன்று வீற்றிருப்பது உமது
குமாரியின் அற்புத நடனத்தைப் பார்த்துக் களித்தார்!" என்று
கூறி விட்டுச் சிவகாமியைப் பார்த்து, "அம்மா, சிவகாமி!
வாதாபிச் சக்கரவர்த்தி உன்னுடைய நடனக் கலைத்திறமையில்
ஒரேயடியாக மயங்கிப் போய்விட்டார். உன்னையும் உன் தகப்பனாரையும்
தம்முடன் வாதாபிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்கிறார். உனக்குப்
போகச் சம்மதமா?" என்று வினவினார்.
சிவகாமி
கோபத்தினால் தன்னடக்கத்தை இழந்து, "பிரபு இந்த ஏழைப் பெண்
இந்தத் தேசத்தில் இருப்பதே தங்களுக்குப் பிடிக்கவில்லையா?"
என்றாள். இம்மொழிகள் ஆயனருக்கும் இன்னும் பக்கத்தில்
நின்றவர்களுக்கும் வியப்பையும் பயத்தையும் அளித்தன. ஆனால்
மகேந்திர பல்லவரின் முகத்தில் மட்டும் புன்னகைதான் தவழ்ந்தது.
அவர் வாதாபிச் சக்கரவர்த்தியைப் பார்த்து, "சத்யாச்ரயா!
பார்த்தீர்களா? சாட்டையினால் அடித்து நடனம் ஆடச் சொல்லும்
நாட்டுக்குக் கலைஞர்கள் போக விரும்புவார்களா?" என்றார்.
அப்போது
புலிகேசியின் முகம் கறுத்ததையும், அவருடைய கண்களில் கனல்
எழுந்ததையும் கவனியாமல், மகேந்திரர் "அம்மா சிவகாமி! உன்னை
நாட்டை விட்டுத் துரத்த நான் விரும்பவில்லை. இந்த நகரத்தை
விட்டு உங்களைப் போகச் சொல்லவே எனக்கு இஷ்டமில்லை. ஆயனரே!
இன்று இவ்வளவு அற்புதமாக நடனம் ஆடிய சிவகாமிக்கு நான் பரிசுகள்
கொடுக்க வேண்டும். அதுவரை சில தினங்கள் நீங்கள் நகரிலேயே
இருக்க வேண்டும். கமலியின் வீட்டில் போயிருங்கள்; கமலியும்
சிவகாமியைப் பார்க்க ஆவலாயிருக்கிறாள். பின்னர் அங்கு நான்
வந்து உங்களுடன் சாவகாசமாகப் பேசுகிறேன்!" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினாறாம் அத்தியாயம்
புலிகேசியின் புறப்பாடு
மறு நாள் காஞ்சி
நகரில் மீண்டும் ஒரு பெரிய கொண்டாட்டம். அன்று வாதாபிச்
சக்கரவர்த்தி புலிகேசி காஞ்சியிலிருந்து புறப்படுவதாக
ஏற்பாடாகியிருந்தது. புறப்படுவதற்கு முன்னால் இன்னொரு தடவை
காஞ்சிமா நகரை நன்றாய்ப் பார்க்க வேண்டுமென்று புலிகேசி
விரும்பினார். எனவே இரு சக்கரவர்த்திகளும் பட்டத்து யானை மீது
அமர்ந்து நகர்வலம் கிளம்பினார்கள். இந்த வைபவத்தை முன்னிட்டுக்
காஞ்சி நகரம் அன்று மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நகர மாந்தர்கள் - ஸ்தீரிகளும் புருஷர்களும் அழகிய ஆடை
ஆபரணங்கள் பூண்டு தெரு ஓரங்களில் கும்பலாக நின்று
கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே பலவகை வாத்தியங்கள் முழங்கிக்
கொண்டிருந்தன. உப்பரிகை மேல் மாடங்களிலிருந்து இரு
சக்கரவர்த்திகளும் அமர்ந்து சென்ற பட்டத்து யானை மீது மலர்
மாரி பொழிந்து கொண்டிருந்தது.
காஞ்சிமா நகரின்
அழகிய விசாலமான வீதிகளையும், மாடமாளிகைகளையும், கோயில்களையும்,
கோபுரங்களையும், சிற்ப சித்திர மண்டபங்களையும், நடன
அரங்கங்களையும், புத்த விஹாரங்களையும் சமணர் ஆலயங்களையும்
எவ்வளவுதான் பார்த்தாலும் புலிகேசிக்கு அலுப்பு ஏற்பட்டதாகத்
தெரியவில்லை. "பாரவியை மகா கவி என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். அவர் எவ்வளவு மட்டமான கவி என்பது இப்போதுதான்
தெரிகிறது..." என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி திடீரென்று.
"அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்? பாரவியின் 'கிராதார்ஜுனீயம்'
எவ்வளவு அழகான காவியம்?... தாங்கள் படித்திருக்கிறீர்கள்
அல்லவா?" என்றார் மகேந்திர பல்லவர்.
"ஆ! இந்தக்
கவிகள் மலையையும் காட்டையும் மழையையும் மேகத்தையும் வர்ணிக்கச்
சொன்னால் வர்ணிப்பார்கள். இந்த மாதிரி ஒரு நகரத்தை வர்ணிக்கச்
சொன்னால் அப்போது அவர்களுடைய சாமர்த்தியமெல்லாம் எங்கோ போய்
விடுகிறது! பாரவி இந்த நகரத்தைப் பற்றி எனக்கு எழுதிய
வர்ணனையெல்லாம் இதன் உண்மைச் சிறப்பில் கால் பங்குகூட வராது...
பல்லவேந்திரா! நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறீர்களா? நாம்
இருவரும் ஒரு பரிவர்த்தனை செய்து கொள்வோம். நர்மதையிலிருந்து
துங்கபத்திரை வரை பரந்து கிடக்கும் என்னுடைய சாம்ராஜ்யம்
முழுவதையும் எடுத்துக் கொண்டு அதற்கு மாற்றாக இந்தக் காஞ்சி
நகரை மட்டும் எனக்குக் கொடுங்கள்!" என்றார் வாதாபி அரசர்.
"மன்னர் மன்னா!
திவ்யமாக இந்த் காஞ்சி நகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு
மாறாக, உங்கள் இராஜ்யம் முழுவதையும் எனக்குக் கொடுக்க
வேண்டாம். அஜந்தா மலையையும் அதன் குகைகளையும் மட்டும்
கொடுத்தால் போதும்! கல்லினாலும் சுண்ணாம்பினாலும் மண்ணினாலும்
மரத்தினாலும் கட்டிய இந்த மாநகரின் கட்டடங்கள் எல்லாம் ஒரு
காலத்தில் இடிந்து தகர்ந்து போனாலும் போகலாம்; அஜந்தா மலைக்
குகைகளில் எழுதிய அழியா வர்ணச் சித்திரங்கள் நீடூழி காலம்
இருக்கும். சளுக்க குல சிரேஷ்டரே! தங்களுக்கு ஒரு சமாசாரம்
தெரியுமா? நேற்று நடன மாடினாளே, சிவகாமி! "வாதாபிக்குப்
போகிறாயா?" என்று கேட்டதும், அவள் அவ்வளவு மனத்தாங்கலுடன்
பேசினாள் அல்லவா? நீங்கள் மட்டும் அவள் தந்தை ஆயனரிடம்
அஜந்தாவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதான்; உங்களுடன்
வந்தால் அஜந்தா வர்ண இரகசியத்தைத் தெரியப்படுத்துவதாகச் சொல்ல
வேண்டியதுதான். உடனே உங்களுடன் புறப்பட்டு வர ஆயத்தமாகி
விடுவார்!..."
"அப்படியா? ஆயனச்
சிற்பிக்கு அஜந்தா வர்ண விஷயத்தில் அவ்வளவு அக்கறையா?" என்று
புலிகேசி கேட்ட போது ஏதோ பழைய நினைவு வந்தவரைப் போல அவருடைய
கண்களில் சிந்தனைக் குறி தோன்றியது. "ஆமாம்; ஆமாம், அஜந்தா
வர்ண இரகசியத்தைத் தெரிந்து கொண்டு வருவதற்காக ஆயனர் தூது கூட
அனுப்பினாரே, அது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?" என்றார் பல்லவ
சக்கரவர்த்தி. பின்னர் தொடர்ந்து, "ஆகா! அந்த ஓலையைப் படிக்கக்
கேட்டபோது நீங்கள் எப்படித் திகைத்தீர்கள்!" என்று
கூறிவிட்டுக் கலகலவென்று நகைத்தார். விதி, விதி என்று
சொல்கிறார்களே, அந்த விதியானது அப்போது மகேந்திரவர்மரின்
நாவிலே வந்து உட்கார்ந்து கொண்டது. அது காரணமாக,
மகாமேதாவியும், தீர்க்க திருஷ்டியுள்ளவரும், சாணக்கிய
சாகஸத்தில் இணையற்றவருமான அந்தப் பல்லவ சிரேஷ்டர், நாவின்
அடக்கத்தை இழந்தார். யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்னும் பொய்யாமொழிப் புலவரின்
வாக்கை நன்கறிந்தவராயினும் அச்சமயம் அதை மறந்துவிட்டார்.
அவருடைய இதய அந்தரங்கத்துக்குள்ளே கிடந்த ரகசியங்கள்
ஒவ்வொன்றாய் வௌி வரலாயின.
மகேந்திர
பல்லவரின் கடைசி வார்த்தைகள் புலிகேசியின் உடம்பில் ஏக
காலத்தில் பல தேள்கள் கொட்டியது போன்ற உணர்ச்சியை
உண்டாக்கியதாகத் தோன்றியது. "சத்ருமல்லா! எதைப்பற்றிச்
சொல்கிறீர்கள்? உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று
கேட்டுவிட்டு, பாம்பு சீறுவதைப்போல் பெருமூச்சு விட்டார்
புலிகேசி. மகேந்திர பல்லவர் மறுபடியும் நகைத்து, "ஆமாம்!
அந்தக் காட்சியை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்புச்
சிரிப்பாய் வருகிறது. வடபெண்ணை நதியை நீங்கள்
நெருங்கிவிட்டீர்கள். முதலில் ஒரு தூதன் ஓலையைக் கொண்டு வந்து
கொடுக்கிறான். அதிலே நீங்கள் எதிர்பாராதவிதமாய் ஏதோ
எழுதியிருக்கிறது. உங்களுக்குக் கோபம் கோபமாய் வருகிறது.
அந்தச் சமயத்தில் ஓர் இளம் பிள்ளையைச் சிறைப்படுத்திக் கொண்டு
வருகிறார்கள், அவனிடமும் ஓர் ஓலை இருக்கிறது. அதைப் படித்தால்,
பூஜை வேளையில் கரடியை விடுவதுபோல், அஜந்தா வர்ண இரகசியத்தைப்
பற்றிக் கேட்டிருக்கிறது. அப்போது உங்களுடைய முகத்தைப் பார்க்க
வேண்டுமே? அதிர்ஷ்டவசத்தினால், அந்தப் பிள்ளையாண்டானை உடனே
சிரச்சேதம் பண்ணச் சொல்லாமல் நாகார்ஜுன மலைக்கு அனுப்பச்
செய்தீர்கள்!" என்றார்.
"விசித்திர
சித்தரே! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? கிட்ட
இருந்து பார்த்தது போல் சொல்கிறீர்களே?" என்று பல்லைக்
கடித்துக் கொண்டு கேட்டார் புலிகேசி. "கிட்ட இருந்து
பார்த்ததனால்தான் தெரிந்தது!" என்றார் மகேந்திர சக்கரவர்த்தி.
புலிகேசி மகேந்திரரின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு "ஆ!
அப்படியானால், அந்த வஜ்ரபாஹு என்கிற தூதன் தாங்கள்
தானாக்கும்!" என்றார். "அடியேன்தான்!" என்றார் மகேந்திர
பல்லவர். "என் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த பல மர்மங்களில்
ஒன்று வௌியாகிவிட்டது. மீதமுள்ள மர்மங்களைக் கண்டுபிடிப்பதில்
இனிமேல் கஷ்டமேயிராது என்று புலிகேசி மெல்லிய குரலில் தமக்கு
தாமே சொல்லிக் கொண்டார். பிறகு உரத்த குரலில் "அப்படியானால்
வஜ்ரபாஹு கொண்டு வந்த அந்த ஓலை?.." என்று கேட்டார். "தூதனையே
சிருஷ்டி செய்தவனுக்கு ஓலையைச் சிருஷ்டி செய்வதுதானா பெரிய
காரியம்?" "இல்லை, இல்லை! காஞ்சி மகேந்திர பல்லவருக்கு எதுவுமே
பெரிய காரியம் இல்லை!.... ஐயா! இப்போதாவது எனக்குச்
சொல்லலாமல்லவா? எது நிஜ ஓலை! எது பொய் ஓலை?"
"சத்யாச்ரயா!
அந்தப் பிள்ளை முதலில் கொண்டுவந்த நிஜமான ஓலை மட்டும்
உங்களிடம் அப்போது வந்திருந்தால் இன்றைக்கு நீங்களும் நானும்
இந்தக் காஞ்சி நகரின் வீதிகளில் பட்டத்து யானையின் மீது
அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருக்க மாட்டோம். ஊர்வலம்
வருவதற்கு வீதியே இராது; காஞ்சி நகரமும் இராது. வைஜயந்தி
அடைந்த கதியைக் காஞ்சியும் அடைந்திருக்கும். நண்பரே! இப்போது
நீங்களும் உண்மையைச் சொல்லுங்கள். இந்த அழகான நகரை, அடியோடு
அழித்துவிடும் எண்ணம் அப்போது உங்கள் உள்ளத்தில்
இருக்கவில்லையா?" என்று மகேந்திரர் கேட்டார். புலிகேசி தன்
மனத்திற்குள், "அப்போது அவ்வளவாக இல்லை; இப்போதுதான் இந்த நகரை
எரித்துப் பொசுக்கிச் சாம்பலாக்கி விட வேண்டுமென்று
தோன்றுகிறது" என்று எண்ணிக் கொண்டார். வௌிப்படையாக,
"பல்லவேந்திரா! முதல் ஓலையில் - நிஜ ஓலையில் - என்ன
எழுதியிருந்தது?" என்று கேட்டார். "வேறொன்றுமில்லை, பாகப்
பிரிவினைத்தான் செய்திருந்தது! 'பல்லவ சாம்ராஜ்யத்தையும்
காஞ்சி சுந்தரியையும் நீ எடுத்துக் கொள்; நடன கலா ராணி
சிவகாமியை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு' என்று பிக்ஷு
உங்களைக் கேட்டிருந்தார்!" இதைக் கேட்ட வாதாபிச் சக்கரவர்த்தி
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டு, "காஞ்சி சுந்தரியைக்
கைப்பற்றுவது அவ்வளவு சுலபமான காரியமா?" என்றார். "நண்பரே!
அந்த ஓலையில் எழுதியிருந்தபடி நீங்கள் நேரே காஞ்சிக்கு
வந்திருந்தால் அது சுலபமாகத்தான் இருந்திருக்கும். அப்போது
இந்தக் காஞ்சிக் கோட்டை வாசல்களின் கதவுகள் உங்கள் யானைப்
படையில் ஒரு யானையின் மோதலுக்குக் கூட ஈடு கொடுத்து
நின்றிருக்க முடியாது!" என்றார் மகேந்திர பல்லவர்.
புலிகேசியின்
உள்ளத்தில் பல தீ மலைகள் ஏக காலத்தில் நெருப்பைக் கக்க
ஆரம்பித்தன. மகேந்திரரை ஏறிட்டு நோக்கி, "பல்லவேந்திரா! அர்த்த
சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் உங்களிடம் பிச்சை வாங்க
வேண்டும்!" என்றார். "எங்கள் தென்னாட்டிலும் ஒரு பிரபல இராஜ
தந்திரி உண்டு. அவர் பெயர் திருவள்ளுவர்; அந்தப் பெரியார்
எழுதிய பொருளதிகார நூலை உங்களுக்குப் பரிசளிக்க வேண்டுமென்று
எனக்கு விருப்பம். ஆனால், எங்கள் செந்தமிழ் மொழியை இன்னும்
நீங்கள் நன்றாய்ப் பயிலவில்லையே?" என்றார் சத்துருமல்லர்.
பிறகு, "நண்பரே!
போனதெல்லாம் போயிற்று, அதையெல்லாம் பூர்வ ஜன்ம அனுபவமாக
நினைத்து மறந்துவிடுங்கள். இந்தப் பத்துத் தினங்களில்
நீங்களும் நானும் அத்தியந்த சிநேகிதர்களாகி விட்டோம். உங்களை
நான் அறிந்து கொண்டேன்; என்னையும் நீங்கள் அறிந்து
கொண்டீர்கள். உங்களுடைய படையெடுப்பைத் தடுப்பதற்கு நான்
கையாண்ட தந்திரங்களையெல்லாம் என் மனத்திற்குள் வைத்திருப்பது
சிேகிதத் துரோகம் என்றுதான் அவற்றை உங்களுக்குச் சொன்னேன்.
இனிமேல் நமது நேசத்திற்கு எவ்விதத் தடங்கலும் இல்லை,
நம்மிருவருடைய ஆயுளும் உள்ளவரையில் நாம் இனிமேல் சிநேகிதர்கள்.
என் ஆயுட் காலத்தில் தங்களுக்கு விரோதமாக இனி நான் ஒன்றும்
செய்ய மாட்டேன்; தாங்களும் அப்படித்தானே?" என்று மகேந்திர
பல்லவர் உண்மையான உள்ள நெகிழ்ச்சியுடன் கேட்டார். "சத்ருமல்லா!
அதைப்பற்றிக் கேட்க வேண்டுமா?" என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி.
நகர்வலம் எல்லாம்
முடிந்து பட்டத்து யானை காஞ்சியின் வடக்குக் கோட்டை வாசல்
அண்டை வந்து நின்றது. இரு சக்கரவர்த்திகளும் பிரியவேண்டிய
சமயம் வந்தது. யானையின் மீதிருந்தவர்கள் பூமியில்
இறங்கினார்கள். ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள்.
"பல்லவேந்திரா! உங்கள் நகருக்கு விருந்தினனாக வந்ததில் எனக்கு
எவ்வளவோ சந்தோஷம். அபூர்வமான காட்சிகளைக் கண்டேன்; அபூர்வமான
விஷயங்களைக் கேட்டேன். ஆனால், தங்கள் வீரப் புதல்வன்
மாமல்லனைப் பார்க்காமல் திரும்பிப் போவதிலேதான் கொஞ்சம்
வருத்தம்!" என்றார் புலிகேசி. "ஆம்; மாமல்லனையும்
பார்க்கவில்லை; உங்களுக்கு முதலில் ஓலை கொண்டு வந்த
வாலிபனையும் நீங்கள் பார்க்கவில்லை; நாகநந்தி பல்லவ
ராஜ்யத்துக்குப் பெரியதொரு உபகாரம் செய்தார். சிறந்த வீரத்
தளபதி ஒருவனை அளித்தார்...."
புலிகேசி
குறுக்கிட்டு, "ஆமாம்; தளபதி பரஞ்சோதியைப் பாராததிலும் எனக்கு
ஏமாற்றந்தான். அவர்களிருவரும் எங்கே என்பதை இன்னும் தாங்கள்
சொல்லவில்லையே?" என்றார். "பாண்டிய மன்னனை வழி அனுப்ப அவர்கள்
போயிருக்கிறார்கள்! இன்றைக்குக் காலையிலேதான் செய்தி வந்தது.
பாண்டியனைக் கீழைச் சோழ நாட்டின் எல்லை வரையில் கொண்டு
போய்விட்டு விட்டார்களாம்!" "ஆஹா! நினைத்தேன்; ஏதோ
பாண்டியனுக்கு நீங்கள் சம்பந்தியாகப் போவதாக ஒரு வதந்தி
இருந்ததே!" "சம்பந்தி உபசாரம் செய்வதற்குத்தான் மாமல்லனும்
பரஞ்சோதியும் போனார்கள்!" என்று கூறி மகேந்திர பல்லவர்
நகைத்தார்.
"விசித்திர
சித்தரே! போய் வருகிறேன்; போவதற்கு முன்னால் கடைசியாக ஒரு
வார்த்தை கேட்கிறேன். நாகநந்தி பிக்ஷு யார் என்பது
உங்களுக்குத் தெரியுமா?" என்று புலிகேசி கேட்க மகேந்திர
பல்லவர், "உத்தேசமாகத் தெரியும்!" என்று கூறி வாதாபிச்
சக்கரவர்த்தியின் காதோடு ஏதோ கூறினார். "ஆ! உங்களுக்குத்
தெரியாதது ஒன்றுமேயில்லை. அப்படித் தெரிந்திருக்கும் போது,
அவரை நீங்கள் விடுதலை செய்து என்னுடன் அனுப்பப் போவதில்லையா?"
என்று புலிகேசி ஆங்காரமான குரலில் கேட்டார். "சக்கரவர்த்தி
கோரினால் அவ்விதமே செய்யத் தடையில்லை!" என்றார் மகேந்திர
பல்லவர். "வாதாபி சளுக்க குலத்தார் யாரிடமும் எந்தக்
கோரிக்கையும் செய்து கொள்வதில்லை!" என்று புலிகேசி
கம்பீரமாய்க் கூறினார்." "காஞ்சிப் பல்லவ குலத்தினர்
யாருக்கும் கோராத வரத்தைக் கொடுப்பதில்லை" என்றார் மகேந்திர
பல்லவர். "பல்லவேந்திரா! போய் வருகிறேன்" என்றார் புலிகேசி.
"சத்யாச்ரயா! ஞாபகம் இருக்கட்டும்" என்றார் மகேந்திரர். "ஒரு
நாளும் மறக்க மாட்டேன்" என்றார் வாதாபி மன்னர்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஏறக்குறைய ஒன்றரை
ஆண்டு காலம் பிரிந்திருந்த பிறகு, சிவகாமியும் கமலியும்
சந்தித்த போது, அந்த இளம் பிராயத் தோழிகளுக்கு ஏற்பட்ட உள்ளக்
கிளர்ச்சியை விவரிக்க முடியாது. ஒருவரை ஒருவர் தழுவிக்
கொண்டார்கள்; ஒருவருடைய தலையை ஒருவர் தோளில் வைத்துக்கொண்டு
கண்ணீர் விட்டார்கள்! விம்மி அழுதார்கள்; திடீரென்று
சிரித்தார்கள்; ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டார்கள்; உடனே
வைது கொண்டார்கள். இருவரும் ஏக காலத்தில் பேச முயன்றார்கள்;
பிறகு இருவரும் சேர்ந்தாற்போல் மௌனமாயிருந்தார்கள். அந்த
ஒன்றரை வருஷத்துக்குள் இருவருடைய வாழ்க்கையிலும் எத்தனை
எத்தனையோ முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. அவற்றில் எதை
முதலில் சொல்வது எதை அப்புறம் சொல்வது என்று நிர்ணயிக்க
முடியாமல் தவித்தார்கள். அந்தப் பிரச்னையை அவர்களுக்காகச்
சின்னக் கண்ணன் தீர்த்து வைத்தான்.
தொட்டிலில்
படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, தான் விழித்துக்
கொண்டு விட்டதை ஒரு கூச்சல் மூலம் தெரியப்படுத்தியதும், கமலி
ஓடிப் போய்க் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தாள்.
சிவகாமி சின்னக் கண்ணனைக் கண்டதும் சற்று நேரம்
திகைத்துப்போய், பார்த்தது பார்த்தபடி நின்றாள். வௌிப்படையில்
அவள் ஸ்தம்பித்து நின்றாளே தவிர, அவளுடைய உடம்பின் ஒவ்வோர்
அணுவும் அப்போது துடித்தது. அவளுடைய இதய அந்தரங்கத்தின்
ஆழத்திலிருந்து இதுவரை அவளுக்கே தெரியாமல் மறைந்து கிடந்த ஏதோ
ஓர் உணர்ச்சி பொங்கி வந்து, மளமளவென்று பெருகி, அவளையே
முழுதும் மூழ்கடித்து விட்டது போலிருந்தது.
"ஏனடி இவ்விதம்
ஜடமாக நிற்கிறாய்? சின்னக் கண்ணன் உன்னை என்ன செய்தான்? இவன்
பேரில் உனக்கு என்ன கோபம்?" என்று கமலி கேட்டதும், சிவகாமி
இந்தப் பூவுலகத்திற்கு வந்தாள். "கமலி! இவன் யாரடி?
எங்கிருந்து வந்தான்? எப்போது, வந்தான்? என்னிடம் வருவானா?"
என்று சிவகாமி குழறிக் குழறிப் பேசிக் கொண்டே இரண்டு கைகளையும்
நீட்ட, குழந்தையும் சிவகாமியின் முகத்தைத் தன் அகன்ற கண்கள்
இன்னும் அகலமாக விரியும்படி பார்த்துக் கொண்டே, அவளிடம்
போவதற்காகக் கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டு
பிரயத்தனப்பட்டது. "உன்னிடம் வருவானா என்றா கேட்கிறாய்?
அதற்குள் என்னவோ மாயப் பொடி போட்டுவிட்டாயே! கள்ளி
மாமல்லருக்குப் போட்ட மாயப்பொடியில் கொஞ்சம் மிச்சம் இல்லாமல்
போகுமா?" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே கமலி குழந்தையைச்
சிவகாமியிடம் கொடுத்தாள்.
மாமல்லரைப்
பற்றிக் குறிப்பிட்டது சிவகாமிக்குக் குதூகலத்தையும்
நாணத்தையும் ஒருங்கே அளித்தது. அவள் குழந்தையைக் கையில் வாங்கி
மூக்கும் விழியும் கன்னமும் கதுப்புமாயிருந்த அதன் முகத்தைப்
பார்த்துக் கொண்டே, 'ஆமாண்டி அம்மா, ஆமாம்! நீ கண்ணனுக்குப்
போட்ட மாயப் பொடியில் கொஞ்சம் மீத்துக் கொடுத்ததைத்தானே நான்
மாமல்லருக்குப் போட்டேன்? பார்! அப்படியே அப்பாவின் முகத்தை
உரித்து வைத்தது போலிருக்கிறது! கமலி! இவன் அப்பா எங்கே?"
என்று கேட்க, கமலி, "இது என்ன கேள்வி? மாமல்லர் எங்கே
இருக்கிறாரோ, அங்கேதான் இவன் அப்பா இருப்பார்!" என்றாள். "ஓஹோ!
அப்படியானால் அண்ணனும் இன்று அரண்மனையில்தான் இருந்தாரா?
சபையில் என்னுடைய நாட்டியத்தைப் பார்த்திருப்பார் அல்லவா? நீ
ஏனடி வரவில்லை?" என்று சிவகாமி கேட்டதும் கமலி, "என்ன தங்கச்சி
உளறுகிறாய்? உன் அண்ணனாவது நாட்டியம் பார்க்கவாவது? உனக்குத்
தெரியாதா, என்ன? மாமல்லர் தான் தெற்கே பாண்டியனோடு சண்டை
போடுவதற்குப் போயிருக்கிறாரே?" என்றாள்.
இதைக் கேட்டதும்
சிவகாமிக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், தன் மடியில் இருந்த
குழந்தையைக் கூட மறந்துவிட்டு எழுந்தாள். குழந்தை தரையில்
'பொத்' என்று விழு்து, 'வீர்' என்று கத்திற்று. கமலி அலறும்
குரலில், "அடிப்பாவி! ஏனடி குழந்தையைக் கீழே போட்டாய்? நீ
நாசமற்றுப்போக! உன்னைப் புலிகேசி கொண்டு போக!" என்றெல்லாம்
திட்டிக் கொண்டே, சின்னக் கண்ணனை எடுத்து மார்போடு அணைத்து
இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டே, "வேண்டாமடா, கண்ணே!
வேண்டாமடா!" என்று சமாதானப்படுத்தினாள். குழந்தை மீண்டும்
மீண்டும் வீரிட்டு அழுதவண்ணம் இருக்கவே, கமலி கோபம் கொண்டு"அடே
வாயை மூடுகிறாயா? அல்லது புலிகேசியை வந்து உன்னைப் பிடித்துக்
கொண்டுபோகச் சொல்லட்டுமா?" என்றாள். குழந்தை அதிகமாக அழுதால்
இந்த மாதிரி புலிகேசியின் பெயரைச் சொல்லிப் பயமுறுத்துவது
வழக்கமாயிருந்தது. அதனால் தான் சிவகாமியையும் மேற்கண்டவாறு
சபித்தாள்.
குழந்தை ஒருவாறு
அழுகையை நிறுத்தியதும் அதைக் கீழே விட்டு விட்டுக் கமலி
சிவகாமியைப் பார்த்தாள். அவளுடைய திகைப்பைக் கவனித்துவிட்டு,
"தங்கச்சி! மாமல்லர் பாண்டியனோடு யுத்தம் செய்யப் போயிருப்பது
உனக்குத் தெரியாதா, என்ன?" என்று கேட்டாள். "தெரியாது, அக்கா!"
என்று சிவகாமி உணர்ச்சி பொருந்திய கம்மிய குரலில் கூறினாள்.
தான் சபையில் நடனமாடியபோது மாமல்லர் எங்கேயோ மறைவான
இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார் என்று எண்ணியதை
நினைத்து ஏமாற்றமடைந்தாள். ஆம்! கமலி சொல்வது உண்மையாகத்தான்
இருக்க வேண்டும். மாமல்லர் மட்டும் இங்கு இருந்திருந்தால்
அந்தக் காட்டுப் பூனையின் முன்னால் தன்னை ஆட்டம் ஆடச் சொல்லிப்
பார்த்துக் கொண்டிருப்பாரா?
மாமல்லர் இல்லாத
சமயத்தில் புலிகேசியின் முன்னால்தான் ஆடியதை நினைத்தபோது
சிவகாமிக்கு இப்போது அசாத்திய வெட்கமாயிருந்தது. மகேந்திர
பல்லவர் மீது கோபம் கோபமாய் வந்தது. மாமல்லர் இல்லாதபோது அவர்
இல்லை என்கிற தைரியத்தினாலேயே சக்கரவர்த்தி தன்னைப்
புலிகேசியின் முன்னால் ஆடச் சொல்லி
அவமானப்படுத்தியிருக்கிறார். இத்தகைய குழப்பமான எண்ணங்கள்
சிவகாமியின் உள்ளமாகிற ஆகாசத்தில் குமுறி எழுந்தன. திடீரென்று,
மின்னலைப் போல் ஓர் எண்ணம் தோன்றிக் குழப்பமாகிற கரிய இருளைப்
போக்கியது. அந்த மின்னல் ஒளியிலே அவள் கண்டு தெரிந்து கொண்ட
விஷயம், தன்னைக் கெடுப்பதற்கு மகேந்திர பல்லவர் செய்த சூழ்ச்சி
எவ்வளவு பயங்கரமானது என்பதுதான். அதாவது மாமல்லர் தெற்கே
போகும் போது தன்னை மண்டபப்பட்டில் சந்திக்காதிருக்கும்
பொருட்டே, தன்னை இங்கே சக்கரவர்த்தி வரவழைத்திருக்கிறார்!
என்று அவள் முடிவு செய்தாள்.
சிவகாமியின்
முகத் தோற்றத்தையும் அவளுடைய கண்களில் ஜொலித்த கோபக் கனலையும்
கவனித்த கமலி சிறிது நேரம் தானும் வாயடைத்துப் போய் நின்றாள்.
அப்புறம் சமாளித்துக் கொண்டு "தங்கச்சி! இது என்ன கோபம்?
ஒன்றும் முழுகிப் போய்விடவில்லையே! மாமல்லருக்கு யுத்தம்
புதிதா? பாண்டியனை முறியடித்து விட்டு வெற்றி வீரராகத்
திரும்பி வர போகிறார்! அதுவரையில்..." என்று கமலி சொல்லி
வந்தபோது, "ஆ! போதும்! போதும்! வாதாபிப் புலிகேசியை ஜயித்து
வாகை மாலை சூடியாகி விட்டது; பாண்டியனை ஜயிப்பதுதான் மிச்சம்!
போடி, அக்கா, போ! இந்தப் பல்லவ குலத்தாரைப் போல்
மானங்கெட்டவர்களை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை" என்றாள்
சிவகாமி. கமலிக்குத் தூக்கிவாரிப் போட்டது! 'இது என்ன இவள்
இப்படிப் பேசுகிறாள்? சூரியனிடம் காதல் கொள்ளத் துணிந்த
பனித்துளிக்கு ஒப்பிட்டுத் தன்னைத்தானே எத்தனையோ தடவை நொந்து
கொண்ட சிவகாமிதானா இவள்? குமார பல்லவரின் ஒரு கடைக்கண்
நோக்குக்காகத் தன் உயிரையே கொடுக்கச் சித்தமாயிருந்த
சிவகாமிதானா இவள்?'
இப்படிக் கமலி
எண்ணி வியந்து கொண்டிருக்கும்போதே, சிவகாமியினுடைய முகபாவம்
மாறியது. கமலியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, "அக்கா! ஏதோ
பிதற்றுகிறேன்; மன்னித்து விடு, எல்லாம் விவரமாகச் சொல்லு.
மாமல்லர் எப்போது யுத்தத்துக்குப் போனார்? வாதாபிச்
சக்கரவர்த்தி காஞ்சிக்கு வருவதற்கு முன்னாலா? அப்புறமா?
அவருடன் அண்ணனைத் தவிர இன்னும் யார் யார் போயிருக்கிறார்கள்?
எல்லாம் விவரமாகச் சொல்லு. போகும்போது அண்ணன் உன்னிடம் என்ன
சொல்லிவிட்டுப் போனார்? என்னை இங்கே சக்கரவர்த்தி நாட்டியம் ஆட
வரவழைக்கப் போவது அவர்களுக்குத் தெரியுமா? சொல்லு அக்கா! ஏன்
மௌனமாயிருக்கிறாய்? என் பேரில் உனக்குக் கோபமா?" என்று
கேள்விகளை மேலும் மேலும் அடுக்கிக் கொண்டே போனாள்.
அதன் பேரில்
கமலியும் தனக்குத் தெரிந்த வரையில் கூறினாள். சிவகாமி
நாட்டியமாடுவதற்காக வரப்போகும் செய்தி யுத்தத்துக்குப்
போனவர்களுக்குத் தெரிந்திருக்கவே நியாயமில்லையென்றும், தனக்கே
இன்றுதான் தெரியுமென்றும் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டு
விட்டுச் சிவகாமி, "அக்கா! நீ ஒன்றும் தப்பாக நினைத்துக்
கொள்ளாதே! உன்னை நான் பார்த்து எத்தனையோ நாளாயிற்று. உன்னோடு
பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உன் குழந்தை
இந்தக் கண்மணியோடு எத்தனை யுகம் கொஞ்சினாலும் எனக்கு ஆசை
தீராது. ஆனாலும் இப்போது இங்கே இருப்பதற்கில்லை.
மண்டபப்பட்டுக்கு உடனே புறப்பட்டுப் போக வேண்டும்; அப்பாவிடம்
இதோ சொல்லப் போகிறேன்!" என்றாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினெட்டாம் அத்தியாயம்
"புலிகேசிக்குத் தெரியுமா?"
மறுநாள் மாலை
கண்ணபிரானுடைய வீட்டுக் கூடத்தில் ஆயனர், சிவகாமி, கமலி,
கமலியின் மாமனார் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
புலிகேசியும் மகேந்திர பல்லவரும் நகர்வலம் வந்தது பற்றியும்,
அவர்கள் வடக்குக் கோட்டை வாசலில் ஒருவரிடம் ஒருவர்
விடைபெற்றுக் கொண்ட காட்சியைப் பற்றியும், புலிகேசி அக்கோட்டை
வாசல் வழியாக வௌியேறியது பற்றியும் யோகி அசுவபாலர்
மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். புலிகேசி
காஞ்சிக்கு விஜயம் செய்த நாளிலிருந்து அந்த யோகி தமது யோக
சாதனத்தை அடியோடு மறந்து நகரில் நடந்த களியாட்டங்களில்
ஈடுபட்டிருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
மேற்படி பேச்சுக்கு இடையிடையே அங்கே தவழ்ந்து வட்டமிட்டுக்
கொண்டிருந்த சின்னக் கண்ணன் அவர்களுடைய கவனத்தைக் கவர முயற்சி
செய்தான். கமலியும் அவனுடைய நோக்கத்துக்குத் துணை
செய்கிறவளாய், பேச்சை மறித்து, சின்னக் கண்ணனுடைய பிரதாபங்களை
அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம்
அசுவபாலர் அவளை, "ஐயோ! பைத்தியமே! இப்படியும் ஒரு அசடு உண்டா?"
என்று சொல்லும் தோரணையில் பார்த்துவிட்டு, மேலே தமது
வரலாற்றைத் தொடர்ந்தார்.
எல்லாம்
முடிந்ததும் சிவகாமி, "மாமா வாதாபிச் சக்கரவர்த்திதான் போய்த்
தொலைந்துவிட்டாரே? கோட்டைக் கதவுகளை இனிமேல்
திறந்துவிடுவார்கள் அல்லவா?" என்று கேட்டாள். எல்லாம் நாளை
மறுநாள் தெரிந்து விடும், அம்மா! எனக்கென்னவோ அவ்வளவு
நம்பிக்கை ஏற்படவில்லை. அந்த வாதாபி சளுக்கனுடைய முகத்தில்
பத்து நாளாக இருந்த முகமலர்ச்சியை இன்றைக்குக் காணோம்.
பல்லவரிடம் விடைபெற்று வௌியே போகும் சமயத்தில் முகத்தைக்
கடுகடுவென்று வைத்துக் கொண்டிருந்தான்! அந்த ராட்சதன் என்ன
செய்கிறானோ, என்னவோ?" "அப்படி என்ன செய்துவிடுவான்?" என்று
சிவகாமி கேட்டாள். "மறுபடியும் அவன் கோட்டையை முற்றுகை போடத்
தொடங்கலாம்; அல்லது கோட்டையைத் தாக்கிப் பிடிக்க முயலலாம்."
"அப்படியெல்லாம் செய்வார்களா, என்ன? இத்தனை நாள் இவ்வளவு
சிநேகம் கொண்டாடிவிட்டு?" என்று சிவகாமி வியப்புடன் கேட்டாள்.
"தங்கச்சி! இது
என்ன நீ கூட இப்படிக் கேட்கிறாயே? இராஜ குலத்தினருக்கு விவஸ்தை
ஏது? இன்றைக்குச் சிநேகிதர்களாயிருப்பார்கள்; நாளைக்குக்
குத்திக் கொள்வார்கள். இன்றைக்குப் பெண் கொடுத்துச்
சம்பந்தியாவார்கள்; நாளைக்குப் போர்க்களத்தில் சண்டை
போடுவார்கள்!" என்றாள் கமலி. ஆயனர், அசுவபாலரைப் பார்த்து,
"வாதாபி அரசருக்கு என்ன கோபமாம்? எதாவது தெரியுமா?" என்று
கேட்டார். "சளுக்கனும் பாண்டியனும் சிநேகிதர்களாம். கொள்ளிடக்
கரையில் இரண்டு பேரும், ரொம்ப உறவு கொண்டாடினார்களாம்.
சளுக்கன் இங்கே வந்திருக்கும் போது, மாமல்லர் பாண்டியன் மீது
படையெடுத்துச் சென்றதில் இவனுக்குக் கோபம் என்று சிலர்
சொல்லுகிறார்கள். இன்னும் ஒரு அபிப்பிராயம் என்ன
தெரியுமா?...." என்று அசுவபாலர் நிறுத்தினார். "என்ன
சொல்லுங்களேன்?" என்றார் ஆயனர்.
"சிவகாமியின்
நடனத்தைப் பார்த்து விட்டு மயங்கிப் போய் வாதாபி அரசர்
சிவகாமியைத் தம்முடன் அனுப்பும்படி கேட்டாராம். பல்லவேந்திரர்
மறுத்து விட்டாராம்! - அதனால்தான் புலிகேசிக்குக் கோபமாம்!"
என்றார் அசுவபாலர். "அவன் நாசமாய்ப் போக! அவன் தலையிலே இடி
விழ!" என்றாள் கமலி அழுத்தந் திருத்தமாக. அப்போது, "ஆஹா!
இவ்வளவு திவ்யமான ஆசீர்வாதம் யார் வாயிலிருந்து வருகிறது?"
என்று ஒரு குரல் கேட்டதும், அனைவரும் திடுக்கிட்டு எழுந்து
நின்று, குரல் வந்த பக்கத்தைப் பார்த்தார்கள். அந்தக்
கம்பீரமான குரல் சின்னக் கண்ணனுடைய கவனத்தைக் கூடக் கவர்ந்து
விட்டதாகத் தோன்றியது. அவனும் உட்கார்ந்தபடியே ஆவலுடன் குரல்
வந்த திசையை நோக்கினான். வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே
வந்தவர் வேறு யாருமில்லை; மகேந்திர பல்லவ சக்கரவர்த்திதான்.
"அசுவபாலரே! நீர்
சொல்லிக் கொண்டிருந்த வதந்தி என் காதிலும் விழுந்தது. ஆனால்
அது உண்மையல்ல; வாதாபிச் சக்கரவர்த்தி சிவகாமியைத் தம்முடன்
அனுப்பும்படி என்னைக் கேட்கவில்லை. பின்னே என்ன சொன்னார்
தெரியுமா? 'இந்தப் பெண்ணுக்கு என்னவோ இவ்வளவு பிரமாத மரியாதை
செய்கிறீரே? என்னுடன் வாதாபிக்கு அனுப்பினால் சாட்டையினால்
அடித்து நாட்டியம் ஆடச் சொல்வேன்' என்றார். அவ்வளவு ரஸிக
சிகாமணி அந்த மூர்க்கப் புலிகேசி!" என்றார் சக்கரவர்த்தி.
அப்போது அவருடைய கண்களில் உண்மையான கோபத்துக்கும்
வெறுப்புக்கும் அறிகுறி காணப்பட்டது.
அப்போது சிவகாமி
ஓர் அடி முன் வந்து சக்கரவர்த்தியை ஏறிட்டுப் பார்த்து,
"பிரபு! அப்பேர்ப்பட்ட பரம ரஸிகரின் முன்னிலையிலே என்னை
நாட்டியம் ஆடச் சொன்னீர்களே! அது தர்மமா?" என்று கம்பீரமாக
கேட்டாள். "அது தவறுதான், குழந்தாய்! புலிகேசியின் முன்னால்
உன்னை நான் ஆடியிருக்கச் சொல்லக்கூடாதுதான்; ஆனால் நான்
கண்டேனா? அஜந்தாவின் அற்புத வர்ண சித்திரங்கள் எவனுடைய
இராஜ்யத்தில் உள்ளனவோ, அவன் இப்பேர்ப்பட்ட ரஸிகத் தன்மையற்ற
மூர்க்கனாயிருப்பான் என்று நான் நினைக்கவில்லை.... ஆயனரே! ஒரு
செய்தி கேட்டீரா? காஞ்சிக் கோட்டைக்கு வௌியே இத்தனை மாதம்
சளுக்க சக்கரவர்த்தி தண்டு இறங்கியிருந்தாரல்லவா? ஒரு
தடவையாவது மாமல்லபுரத்துக்குப் போய் அவர் பார்க்கவில்லையாம்!
நான் கேட்டதற்கு, 'உயிருள்ள மனிதர்கள் இருக்கும் போது வெறும்
கல் பதுமைகளை யார் போய்ப் பார்த்துக் கொண்டிருப்பது?' என்று
விடை சொன்னார். இது மட்டுமா? 'அஜந்தாவிலே அப்படி என்ன
பிரமாதமாயிருக்கிறது? சுவரில் எழுதிய வெறும் சித்திரங்கள்
தான்?' என்றார். இப்பேர்ப்பட்ட மனுஷரிடந்தான் அஜந்தா வர்ண
இரகசியத்தை அறிந்து வரும் பொருட்டு நாகநந்தியின் ஓலையுடன்
பரஞ்சோதியை நீர் அனுப்பி வைத்தீர்; உமக்கு அது ஞாபகம்
இருக்கிறதா?" என்று மகேந்திர பல்லவர் ஆயனரை நோக்கிக் கேட்டார்.
ஆயனருக்கு
அப்போது உண்டான அளவு கடந்த ஆச்சரியத்தை அவருடைய முகக் குறி
காட்டியது. 'பல்லவேந்திரா! உண்மையாகவா? வாதாபிச்
சக்கரவர்த்திக்கா நாகநந்தி ஓலை கொடுத்து அனுப்பினார்? இது
தங்களுக்கு எப்படி...?" என்று தயங்கினார். "எப்படித் தெரிந்தது
என்றுதானே கேட்கிறீர்? ஓலையை நானே படித்துப் பார்த்தேன். ஆனால்
நாகநந்தி ரஸிகர் இந்த மூர்க்கப் புலிகேசியைப் போன்றவர் அல்ல.
அவர் என்ன எழுதியிருந்தார் தெரியுமா? 'சைனியத்துடன் சீக்கிரம்
வந்து பல்லவ ராஜ்யத்தையும் காஞ்சி சுந்தரியையும் நீ
கைப்பற்றிக் கொள். சிவகாமியை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு!'
என்று எழுதியிருந்தார்; எப்படியிருக்கிறது, விஷயம்?...ஆயனரே?
உம்முடைய அத்தியந்த சிநேகிதர் நாகநந்தியினால் இந்தப் பல்லவ
இராஜ்யத்துக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வருவதற்கு இருந்தது,
தெரியுமா?" என்றார் சக்கரவர்த்தி. ஆனால், ஆயனரோ சக்கரவர்த்தி
கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கவனித்தவராகக் காணப்படவில்லை.
வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்தவராகக் காணப்பட்டார். 'ஆஹா! புத்த
பிக்ஷு கொடுத்த ஓலை வாதாபிச் சக்கரவர்த்திக்கா?...
அப்படியானால், அஜந்தா வர்ண இரகசியம் புலிகேசி மகாராஜாவுக்குத்
தெரியுமா?' என்று தமக்குத் தாமே மெதுவான குரலில் சொல்லிக்
கொண்டார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பத்தொன்பதாம் அத்தியாயம்
சுரங்க வழி
ஆயனர் அஜந்தா
வர்ண ரகசியத்தில் மனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கையில்,
சக்கரவர்த்தி அசுவபாலரைப் பார்த்து, "என்ன யோகியாரே, யோகப்
பயிற்சியெல்லாம் இப்போது எப்படியிருக்கிறது? இந்த வாதாபி
மன்னர் வந்தாலும் வந்தார்; யோக சாதனத்தில் மனதைச் செலுத்தவே
அவகாசம் இல்லாமல் போய்விட்டது!" என்று கூறி கண்களினால் சமிக்ஞை
செய்யவே, அசுவபாலர் சக்கரவர்த்தியைப் பின்தொடர, இருவரும்
வீட்டுக்குப் பின்னால் அரண்மனை உத்தியானவனத்தில் இருந்த யோக
மண்டபத்துக்குச் சென்றார்கள். அவர்கள் போனதும், சிவகாமி
கமலியைப் பார்த்து, "அக்கா! சக்கரவர்த்தி கற்ற கலை எல்லாம்
போதாதென்று யோகக் கலை வேறு கற்றுக்கொள்ள
ஆரம்பித்திருக்கிறாரா?" என்று கேட்டாள். அதற்குக் கமலி, கண்ணை
விஷமமாகச் சிமிட்டிக் கொண்டே இரகசியம் பேசும் குரலில்,
"யோகமாவது, மண்ணாங்கட்டியாவது; எல்லாம் மோசம்! அப்புறம்
சொல்கிறேன்" என்றாள்.
சற்று
நேரத்துக்கெல்லாம் மகேந்திர பல்லவர் யோக மண்டபத்திலிருந்து
திரும்பி அந்த வீட்டின் வழியாக வௌியே சென்ற போது ஆயனர் சென்று
குறுக்கிட்டு வணங்கி "பல்லவேந்திரா! இங்கே நாங்கள் வந்த
காரியம் ஆகிவிட்டதல்லவா? இனி மண்டபப்பட்டுக்குத் திரும்பலாமா?"
என்று இரக்கமான குரலில் கேட்டார். மகேந்திரர் புன்னகையுடன்,
"ஆயனரே! சிவகாமியின் அற்புத நடனத்துக்கு இன்னும் நான்
வெகுமதிகள் அளிக்கவில்லையே? கொஞ்சம் பொறுத்திருங்கள். மேலும்
மண்டபப்பட்டுக்கு நீங்கள் திரும்பிப் போகவேண்டிய அவசியமே
நேராது. உங்களுடைய பழைய அரண்ய வீட்டுக்கே போகலாம்!" என்றார்.
ஆயனர் கவலை
மிகுந்த குரலில், "பிரபு ஒவ்வோரிடத்திலும் ஆரம்பித்த வேலை
அப்படி அப்படியே நடுவில் நிற்கிறதே! இந்தத் துரதிர்ஷ்டசாலியின்
பாக்கியம் போலிருக்கிறது. மண்டபப் பட்டில் ஆரம்பித்த
திருப்பணியும் அப்படியே நின்றுவிட்டால்..." என்று கூறி
வந்தபோது, மகேந்திர பல்லவர் குறுக்கிட்டு, "மகா சிற்பியாரே!
மனித வாழ்க்கை அற்பமானது. இதில் நாம் ஒவ்வொருவரும் ஆரம்பித்த
காரியத்தைப் பூர்த்தி செய்துவிட முடிகிறதா? நான் தொடங்கிய
காரியங்களும் எத்தனையோ நடுவில் நின்றுதான் போயிருக்கின்றன.
அதனால் என்ன? நமக்குப் பின்வரும் சந்ததிகள் நிறைவேற்றி
வைப்பார்கள், அதற்காகக் கவலைப்பட வேண்டாம். மேலும் நமது
அரண்மனையில் கூடிய சீக்கிரத்தில் ஒரு கல்யாணம் நடக்கப்
போகிறது. அப்போது உம் குமாரி நாட்டியம் ஆட வேண்டியிருந்தாலும்
இருக்கும்!" என்று கூறி விட்டு, மேலே நடந்து சென்றவர்,
வாசற்படியண்டை சற்றுத் தயங்கி நின்று, "ஆயனரே! உங்கள்
விருப்பத்துக்கு விரோதமாக இருக்கும்படி கட்டாயப்படுத்த நான்
விரும்பவில்லை. உங்களுக்கு அவசியம் போக வேண்டுமானால் கோட்டை
வாசல் கதவுகள் திறந்ததும் போய் வாருங்கள், தேவை ஏற்படும்போது
சொல்லி அனுப்புகிறேன்" என்று கூறி விட்டு, விரைந்து
வாசற்படியைக் கடந்து சென்றார்.
சக்கரவர்த்தி போன
பிறகு, சிவகாமி திடீரென்று தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு
விம்மி விம்மி அழத் தொடங்கினாள். கமலி அவளுடைய தலையைத்
தூக்கித் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "என் கண்ணே! நீ
ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன காரியம் ஆக வேண்டுமோ சொல்! எந்தப்
பாடுபட்டாவது, உயிரைக் கொடுத்தாவது நான் செய்து கொடுக்கிறேன்.
நீ கண்ணீர் விட்டால் என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது!"
என்றாள்.
சிவகாமி மறுமொழி
சொல்லாமல் விம்மவே, "அசடே! நீ எதற்காக அழுகிறாய் என்று
எனக்குத் தெரியும். சக்கரவர்த்தி கலியாணத்தைப் பற்றிச்
சொன்னதற்காகத்தானே? அது எப்படி நடக்கும், சிவகாமி? மாமல்லர்
உனக்கு வாக்குக் கொடுத்திருக்கும் போது, எப்படி நடக்கும்? இந்த
மகேந்திர சக்கரவர்த்தி என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் மாமல்லர்
வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டார். மாமல்லரின்
குணம் எனக்கு நன்றாய்த் தெரியும். அவரிடம் இந்தச்
சக்கரவர்த்தியின் சூழ்ச்சி ஒன்றும் பலிக்காது!" என்றாள் கமலி.
சென்ற சில
நாளாகக் காஞ்சி நகரில் மாமல்லரின் விவாகத்தைப் பற்றிப் பலவித
வதந்திகள் உலாவி வந்தன. பாண்டியனைப் புலிகேசியிடமிருந்து
பிரிக்கும் பொருட்டு, பாண்டிய குமாரியை மாமல்லருக்குக்
கலியாணம் செய்து கொள்வதாகச் சக்கரவர்த்தி ஓலை
அனுப்பியிருக்கிறார் என்று சிலர் சொன்னார்கள். இன்னும் சிலர்
வாதாபிச் சளுக்கர் குலத்திலேயே மாமல்லருக்குப் பெண் கொள்ளப்
போவதாகப் பிரஸ்தாபித்தார்கள். இதெல்லாம் கமலியின் காதுக்கும்
எட்டியிருந்தபடியால், அவளுடைய மனமும் ஒருவாறு வேதனைப்பட்டுக்
கொண்டிருந்தது. ஆகையினால்தான் மாமல்லரின் மன உறுதியைப் பற்றி
அவ்வளவு வற்புறுத்தி, சிவகாமிக்கு அவள் தேறுதல் கூறினாள்.
ஆனால் சிவகாமி தேறுதல் அடையவில்லை. மாமல்லரின் பெயரைக் கேட்ட
பிறகு இன்னும் விசித்து அழலானாள். "இல்லை, அக்கா, இல்லை!
மாமல்லர் என்னை வெறுத்து விடுவார். என்னிடம் அவருக்கிருந்த
ஆசையெல்லாம் விஷமாகிவிடப் போகிறது. அவருக்கு அப்படித் துரோகம்
செய்து விட்டேன், இந்தப் பாவி! முன்னமே ஒரு தடவை அவர் என்னை
வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருக்க, நான் ஊர் சுற்றப்
போய்விட்டேன். இப்போது என்னை மண்டபப்பட்டிலேயே இருக்கும்படி
சொல்லியிருக்க, இங்கே நாட்டியம் ஆட வந்துவிட்டேன். அக்கா! அவர்
பாண்டியனை வென்று விட்டு நேரே மண்டபப்பட்டுக்கு வருவார்! வந்து
என்னைத் தேடுவார்! அங்கே என்னைக் காணாமற் போனால், அவருக்கு
எப்படி இருக்கும்? நான் இங்கே புலிகேசிக்கு முன்னால் நாட்டியம்
ஆடவந்துவிட்டேன் என்று கேள்விப்பட்டால் அவருக்கு என்னமாய்
இருக்கும்? ஆஹா! இந்தச் சக்கரவர்த்தி என்னை எப்படி வஞ்சித்து
விட்டார்!" என்று விம்மிக் கொண்டே கூறினாள் சிவகாமி.
கமலி சற்று நேரம்
யோசனையில் ஆழ்ந்திருந்தாள். "சிவகாமி! இதற்கு ஏன் இவ்வளவு
கவலை? கோட்டை வாசல் திறந்ததும் நீ போகலாம் என்றுதான்
சக்கரவர்த்தியே சொல்லி விட்டாரே!" என்றாள். "ஆஹா! அவருடைய
சூழ்ச்சி உனக்குத் தெரியாது! எனக்காகவே கோட்டை வாசலை வெகு நாள்
வரையில் சாத்தி வைத்திருப்பார், அக்கா! மாமல்லர் இங்கு வந்து
சேரும் வரையில் திறக்கமாட்டார்! நீ வேணுமானால் பார்!" என்று
சிவகாமி விம்மினாள். "தங்கைச்சி! நீ கவலைப்படாதே! கோட்டை வாசல்
திறக்காவிட்டால் போகட்டும்; நான் உன்னை எப்படியாவது வௌியே
அனுப்பி வைக்கிறேன்!" என்றாள் கமலி.
உடனே, சிவகாமி
விம்மலை நிறுத்தி எழுந்து உட்கார்ந்து, "அக்கா! நிஜமாகத்தானா?
அது சாத்தியமா? என்று கேட்டாள். "நான் மனம் வைத்தால் எது தான்
சாத்தியமாகாது? என்னை யார் என்று நினைத்தாய்? இந்த மகேந்திர
சக்கரவர்த்தியின் சூழ்ச்சியெல்லாம் என்னிடம் பலிக்குமா?"
"அக்கா! எப்படி என்று சொல்! எங்களை எவ்விதம் வௌியில் அனுப்பி
வைப்பாய்?" என்று சிவகாமி பரபரப்புடன் கேட்க, கமலி அவள்
காதண்டைத் தன் வாயை வைத்து, "சுரங்க வழி மூலமாக!" என்றாள்.
சிவகாமி, ஏற்கெனவே காஞ்சியிலிருந்து வௌியே போக இரகசியச் சுரங்க
வழி இருக்கிறதென்று கேள்விப்பட்டதுண்டு. எனவே, இப்போது கரை
கடந்த ஆவலுடன், "சுரங்க வழி நிஜமாகவே இருக்கிறதா? உனக்கு
நிச்சயமாய்த் தெரியுமா?" என்று கேட்டாள்.
கமலி மீண்டும்
இரகசியக் குரலில் கூறினாள்; "இரைந்து பேசாதேயடி! மாமாவின் யோக
சாதனத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்றேன் அல்லவா? யோகம்
என்பதெல்லாம் பொய். தங்கச்சி! சுத்தப் பொய்! அந்த மண்டபத்திலே
சுரங்க வழி இருக்கிறது! அதற்குள்ளேயிருந்து குண்டோதரன்
அடிக்கடி வௌி வருவதை நான் பார்த்திருக்கிறேன்; சக்கரவர்த்தி
கூடச் சில சமயம்....." "என்ன அக்கா சொல்கிறாய்? குண்டோதரனா?"
"ஆமாமடி தங்கச்சி! ஆமாம்! குண்டோதரன் என்று சக்கரவர்த்தியின்
ஒற்றன் ஒருவன் இருக்கிறான். சத்ருக்னன் என்று இன்னொருவன்
இருக்கிறான். இரண்டு பேரும் பொல்லாத தடியர்கள்!....என்னடி
யோசிக்கிறாய்?"
"ஒன்றுமில்லை,
சொல், அக்கா! அந்தச் சுரங்க வழி உனக்கு எப்படித் தெரிந்தது?"
"அந்த யோக மண்டபத்தின் பக்கம் நான் வரவே கூடாது என்று என்
மாமனார் சொல்லியிருந்தார். அதனாலேயே அவருக்குத் தெரியாமல் நான்
அடிக்கடி போய்ப் பார்ப்பேன். ஒரு நாள் நான் போய் எட்டிப்
பார்த்தபோது, மண்டபத்தின் மத்தியில் இருந்த சிவலிங்கம் அப்பால்
நகர்ந்திருந்தது. லிங்கம் இருந்த இடத்தில் ஒரு பெரிய துவாரம்
தெரிந்தது. அதற்குள்ளேயிருந்து குண்டோதரன் வௌியே வந்து
கொண்டிருந்தான். அப்போது மண்டபத்திற்குள்ளே யார் இருந்தது
என்று நினைக்கிறாய்? என் மாமனாரோடு சக்கரவர்த்தியும் நின்று
கொண்டிருந்தார்!"
சிவகாமி சற்றுச்
சிந்தித்துவிட்டு "கமலி அக்கா! எப்படியாவது அந்தச்
சுரங்கத்தின் வழியாக எங்களை நீ வௌியே அனுப்பி விட்டால்,
உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. என்றென்றைக்கும் நான் உன்
அடிமையாயிருப்பேன்!" என்றாள். "பேச்சைப் பார், பேச்சை! எனக்கு
அடிமையாயிருக்கப் போகிறாளாம்! அடி பொல்லாத நீலி! நீ இந்த
இராஜ்யத்துக்கே இராணியாகப் போகிறாய்; எனக்கு அடிமையாகி
விடுவாயா நீ! வாக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் திண்டாடாதே!"
என்றாள்.
பிறகு,
"ஆகட்டும், தங்கச்சி கொஞ்சம் பொறுமையாயிரு! அந்த மண்டபத்தின்
மத்தியில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை இடம் விட்டு
நகர்த்தினால் சுரங்க வழி தெரியும். லிங்கத்தை எப்படி இடம்
விட்டு நகர்த்துவதென்பதை இன்றைக்கு அல்லது நாளைக்குள்
எப்படியாவது தெரிந்து கொள்கிறேன். ஆனால் நீ இவ்வளவு
அவசரப்பட்டு என்ன பிரயோஜனம்? உன் தகப்பனார் உன்னுடன்
வருவதற்குச் சம்மதிக்க வேண்டுமே?" என்று கமலி கவலையுடன்
கேட்டாள். "என்னைவிட அவர்தான் வௌியே போவதற்கு அதிக
அவசரப்படுவார்! அதற்குக் காரணம் இருக்கிறது" என்றாள் சிவகாமி.
அதே சமயத்தில்
வாசற் பக்கமிருந்த ஆயனர் அவர்களின் அண்டையில் வந்து, "இன்னும்
எத்தனை நாளைக்கு இந்தக் கோட்டைக்குள் அடைப்பட்டுக் கிடக்க
வேண்டுமோ தெரியவில்லை... சிவகாமி! உனக்குத் தெரியுமா? முன்னொரு
நாள் அந்தப் பரஞ்சோதி என்கிற பிள்ளையிடம் நாகநந்தி ஓலையைக்
கொடுத்து அனுப்பினாரே, அஜந்தா வர்ண இரகசியத்துக்காக? புலிகேசி
மகாராஜாவுக்குத்தான் அந்த ஓலையைக் கொடுத்து அனுப்பினாராம்;
அடாடா! வாதாபி மகாராஜா காஞ்சியில் இருக்கும் போதே இதைச்
சொல்லியிருந்தால், நான் அந்தச் சளுக்க குலசிரேஷ்டரிடம்
கெஞ்சிக் கூத்தாடி அஜந்தா வர்ண இரகசியத்தைப் பற்றிக் கேட்டுத்
தெரிந்து கொண்டிருப்பேனல்லவா?" என்று புலம்பினார். "புலிகேசி
மகாராஜாவுக்கு அந்த இரகசியம் தெரிந்திருப்பது என்ன நிச்சயம்
அப்பா?" என்று சிவகாமி குறுக்கிட்டுக் கேட்டாள். "கட்டாயம்
தெரிந்திருக்க வேண்டும், சிவகாமி! புலிகேசியின் இளம்
பிராயத்தில் அவர் அஜந்தா மலைக் குகையிலேயே கொஞ்ச காலம் ஒளிந்து
கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றார் ஆயனர்.
அப்போது கமலியும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துப்
புன்னகை புரிந்து கொண்டார்கள். ஆயனர் மேற்கண்டவாறு பேசப் பேச
அவர்களுக்கு உற்சாகம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபதாம் அத்தியாயம்
காபாலிகர் குகை
வாதாபிச்
சக்கரவர்த்தி புறப்பட்டுச் சென்று மூன்று நாள் ஆகியும்,
கோட்டைக் கதவுகள் திறக்கப்படவில்லை. இதைப் பற்றி நகரில் பல வகை
வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. "ஒப்பந்தப்படி வாதாபிப்
படைகள் திரும்பிப் போகவில்லை; மறுபடியும் கோட்டையை நெருங்கி
வந்து வளைத்துக் கொண்டிருக்கின்றன!" என்று சிலர் சொன்னார்கள்.
புலிகேசி வௌியில் போன பிறகு மகேந்திர பல்லவருக்கு ஏதோ ஓலை
அனுப்பியிருந்ததாகவும், அதற்கு மறு மொழியை எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். "வாதாபி
மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவரான யாரோ ஒரு புத்த பிக்ஷுவை
மகேந்திர பல்லவர் சிறையில் வைத்திருக்கிறாராம். அவரை உடனே
விடுதலை செய்து அனுப்பாவிடில் மீண்டும் யுத்தம் தொடங்குவேன்!"
என்று அந்த ஓலையில் எழுதியிருப்பதாகச் சிலர் சொன்னார்கள்.
"ஆயனரையும் சிவகாமியையும் என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
இல்லாவிடில் யுத்தத்துக்கு ஆயத்தமாக வேண்டும்" என்று
எழுதியிருந்ததாக இன்னொரு வதந்தி உலாவியது.
மகேந்திர
பல்லவருடைய ஆட்சிக் காலத்தில் காஞ்சி நகரத்து மக்கள் முதன்
முதலாக இப்போதுதான் அவருடைய காரியங்களைப் பற்றிக் குறை கூற
ஆரம்பித்தார்கள். "புலிகேசியைக் காஞ்சிக்குள் வர விட்டதே
தவறு!" என்று சிலர் சொன்னார்கள். "அப்படியே நகருக்குள்
விட்டாலும் அவனுக்கு என்ன இவ்வளவு உபசாரம்? சத்துரு அரசனிடம்
இவ்வளவு தாழ்ந்து போகலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அந்த
மூர்க்கனுக்கு முன்னால், நமது கலைச்செல்வி சிவகாமியை ஆடச்
சொல்லியிருக்க வேண்டியதில்லை; சிவகாமியின் நடனத்தைப் பார்த்து
விட்டுத்தான் புலிகேசி தேன் குடித்த நரியாக ஆகிவிட்டான்!"
என்று வேறு சிலர் அபிப்பிராயப்பட்டார்கள்.
அந்த மாதிரியான
நகர மாந்தர் பேச்செல்லாம் கமலி மூலமாக வடிகட்டி வந்து ஆயனரின்
காதிலேயும் எட்டியது. அதிலெல்லாம் ஒரே ஒரு விஷயந்தான் ஆயனர்
மனத்தில் ஆழமாய்ப் பதிந்தது. அதாவது வடக்குக் கோட்டை
வாசலுக்குக் கொஞ்ச தூரத்தில் வாதாபிப் படையின் தண்டு இன்னும்
இருக்கிறது என்பதுதான். "வாதாபி மன்னர் புறப்படுவதற்குள்
இந்தக் கோட்டையை விட்டு நாம் வௌியேறி விட்டால் எவ்வளவு
நன்றாயிருக்கும்? அவரை எப்படியும் பார்த்து அஜந்தா வர்ணத்தைப்
பற்றிக் கேட்டு விடுவேனே?" என்று அடிக்கடி ஆயனர் சொல்லிக்
கொண்டிருந்தார். ஒரு தடவை திடீரென்று எதையோ நினைத்துக்
கொண்டவர் போல், "நகரிலிருந்து வௌியே போவதற்குச் சுரங்க வழி
ஒன்று இருக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தால்
போய் விடலாம்!" என்றார்.
இதைக் கேட்ட
சிவகாமி கண்களில் மின்வெட்டுடன், "நிஜந்தானா, அப்பா! சுரங்க
வழி தெரிந்தால் நாம் வௌியே போய் விடலாமா!" என்று கேட்டாள்.
"போய் விடலாம்; நான் கூட அந்தச் சுரங்க வழியில் கொஞ்ச நாள்
வேலை செய்திருக்கிறேன். ஆனால் அதற்கு வாசல் எங்கே என்று
மட்டும் தெரியாது! அதை எப்படிக் கண்டுபிடிப்பது?" என்று ஆயனர்
ஏமாற்றமான குரலில் கூறினார். "அப்பா நம் கமலி அக்காவுக்கு
அந்தச் சுரங்க வழி தெரியுமாம்!" என்று சிவகாமி மெல்லிய குரலில்
கூறியதும், ஆயனர் பரபரப்புடன் எழுந்து கமலியின் அருகில் வந்து
அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, "என் கண்ணே குழந்தாய்! உன்
தங்கச்சி சொல்வது உண்மைதானா? அப்படியானால் நீ எனக்கு அந்தச்
சுரங்க வழியைக் காட்டவேணும். இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை
மறக்க மாட்டேன்" என்றார். "ஆகட்டும், சித்தப்பா! ஆனால், சமயம்
பார்த்துத்தான் உங்களைச் சுரங்க வழிக்கு அழைத்துப் போக
வேண்டும்; அங்கே பலமான காவல் இருக்கிறது!" என்றாள் கமலி.
மூன்று தினங்களாக
அசுவபாலர் அநேகமாக யோக மண்டபத்திலேயே காலம் கழித்து வந்தார்.
மண்டபத்திலிருந்து அடிக்கடி மணிச் சப்தமும் கலகலத் தொனியும்
பேச்சுக் குரலும் கேட்டுக் கொண்டிருந்தன. நாலாம் நாள் இரவு
ஜாமத்தில் ஆயனர் தூக்கம் பிடிக்காமல் பலகணியின் வழியாக
அரண்மனைத் தோட்டத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நிலா
வௌிச்சத்தில் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டார். தோட்டத்தின்
வழியாக நல்ல ஆஜானுபாகுவான ஆகிருதி உடைய ஒருவரை இரண்டு
புறத்திலும் இரண்டு பேர் கையைப் பிடித்து நடத்திக் கொண்டு
வந்தார்கள். நடுவில் இருந்தவரின் கண்கள் துணியினால்
கட்டப்பட்டிருந்ததாகக் காணப்பட்டது.
இன்னும் சிறிது
உற்றுப் பார்த்தபோது, நடுவில் நடந்து கொண்டிருந்த ஆஜானுபாகுவான
உருவம் ஒரு புத்த பிக்ஷுவின் வடிவமாகக் காணப்பட்டது. அந்த
உருவம் ஆயனருக்கு நாகநந்தியை நினைவூட்டியது. ஒருவேளை
நாகநந்திதானோ அவர்? ஊர் வதந்தியின்படி இந்தப் புத்த
பிக்ஷுவுக்காகத்தான் புலிகேசி இத்தனை நாள்
காத்துக்கொண்டிருந்தாரோ? நாகநந்தியை அதற்காகத்தான் சுரங்க
வழியாக அனுப்புகிறார்களோ? அப்படியானால் நாகநந்தி போய்ச்
சேர்ந்ததும் புலிகேசி புறப்பட்டு விடுவாரல்லவா? ஆஹா!
எப்பேர்ப்பட்ட அருமையான சந்தர்ப்பம் கை நழுவிப் போய்க்
கொண்டிருக்கிறது.
நாகநந்திக்கும்
புலிகேசிக்கும் உள்ள உருவ ஒற்றுமை ஆயனருடைய மனத்திலும் அப்போது
தென்பட்டது. நாகநந்தியடிகள் உண்மையில் யாராயிருக்கலாம்?...
இவ்விதம் பற்பல எண்ணங்களினால் அலைப்புண்ட ஆயனர் அன்றிரவு
தூங்கவே இல்லை. பொழுது புலரும் சமயத்தில் யோக
மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்த அசுவபாலர் ஆயனரைப்
பார்த்தார். "என்ன சிற்பியாரே! இரவெல்லாம் நீர் தூங்கவில்லை
போலிருக்கிறது!" என்றார். "ஆம் ஐயா! தோட்டத்தில் உங்களுடைய யோக
மண்டபத்தில் இரவெல்லாம் ஒரே கலகலப்பாயிருந்ததே! என்ன விசேஷம்?"
என்று ஆயனர் கேட்டார். அசுவபாலர், "கலகலப்பாவது, ஒன்றாவது?
ஒருவேளை நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள்" என்று சொல்லிவிட்டு,
"நண்பரே, ஆனால் ஒன்று உண்மை. நேற்றிரவு யோக சாதனத்தில் நான்
ஓர் அபூர்வமான அனுபவத்தை அடைந்தேன். அதை உடனே போய்ச்
சக்கரவர்த்தியிடம் சொல்லிவிட்டு வரவேண்டும்!" என்று கூறி
விரைந்து வௌியே சென்றார்.
அவர் போய்ச் சில
நிமிஷத்துக்கெல்லாம் கமலி வந்து ஆயனர், சிவகாமி இருவரையும்
அவசரப்படுத்தினாள். ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடி முக்கியமான
துணிமணிகளை ஒரு ஓலைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு,
எந்த நிமிஷமும் கிளம்புவதற்கு அவர்கள் சித்தமாக இருந்தார்கள்.
எனவே, உடனே மூவரும் கிளம்பி அரண்மனைத் தோட்டத்திலிருந்த
மண்டபத்துக்குள் சென்றார்கள். மண்டபத்தின் மத்தியில் இருந்த
சிவலிங்கத்தைக் கமலி லாகவமாக அப்புறம் நகர்த்தினாள். லிங்கம்
இருந்த இடத்தில் சுரங்க வழியின் படிக்கட்டுக் காணப்பட்டது.
கமலி ஆயத்தமாக வைத்திருந்த தீபத்தை எடுத்து ஆயனரிடம் கொடுத்து,
"சித்தப்பா, சீக்கிரம்!" என்றாள். ஆயனர் தீபத்தை வாங்கிக்
கொண்டு சுரங்க வழியின் படிக்கட்டில் இறங்கினார்.
சிவகாமி கமலியை
ஆர்வத்துடன் கட்டிக் கொண்டாள். இருவருடைய கண்களிலும் கண்ணீர்
ததும்பிற்று. "அக்கா! போய்வருகிறேன்!" என்று தழுதழுத்த குரலில்
கூறினாள் சிவகாமி. "தங்கச்சி! போய்வா! மறுபடி காஞ்சிக்குத்
திரும்பி வரும் போது பல்லவ குமாரரின் பட்ட மகிஷியாகத் திரும்பி
வர வேண்டும்!" என்று கமலி ஆசி கூறினாள். "அக்கா! நான் திரும்பி
வரும்வரை எனக்காகச் சின்னக் கண்ணனுக்குத் தினமும் ஆயிரம்
முத்தம் கொடு!" என்றாள் சிவகாமி. கமலி சிரித்துக் கொண்டே,
"அவன் மூச்சு முட்டிச் சாக வேண்டியதுதான்!" என்றாள். சிவகாமி
சுரங்கப் படியில் இறங்கிய போது அவளுடைய உள்ளம் பதை பதைத்தது.
மார்பு படபட என்று அடித்துக் கொண்டது. ஒளி நிறைந்த குதூகலமான
உலகத்திலிருந்து இருளும் ஐயமும் பயங்கரமும் நிறைந்த ஏதோ பாதாள
உலகத்துக்குப் போவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அந்த
உணர்ச்சியை மனோதிடத்தினால் போக்கிக் கொண்டு ஆயனரின் பின்னால்
நடந்தாள்.
இருளடர்ந்த
சுரங்கப் பாதையில் ஆயனரும் சிவகாமியும் ஏறக்குறைய ஒரு
முகூர்த்த நேரம் நடந்தார்கள். இவ்வளவு நேரமும் அவர்களுக்குள்
அதிகமான பேச்சு ஒன்றும் நடைபெறவில்லை. அடிக்கடி ஆயனர் நின்று
சிவகாமியின் கையைப் பிடித்து "இனி அதிக தூரம் இராது, அம்மா!
சீக்கிரம் வழி முடிந்து விடும்!" என்று தைரியப்படுத்திக்
கொண்டு போனார். ஒரு முகூர்த்த நேரத்துக்குப் பிறகு, திடீரென்று
வெப்பம் மாறி ஜில்லிப்பு உணர்ச்சி ஏற்பட்டது. "அம்மா, சிவகாமி!
கோட்டைக்கு வௌியே வந்து விட்டோம், அகழியை கடக்கிறோம்!"
என்றார். ஒரு கணம் அங்கே நின்று, "குழந்தாய்! இங்கேதான் நான்
வேலை செய்ததாக ஞாபகம் இருக்கிறது. அகழித் தண்ணீர் உள்ளே வராமல்
வெகு சாதுரியமாக இங்கே வேலை செய்ய வேண்டியிருந்தது. அதோடு
இல்லை, ஏதாவது ஆபத்துக் காலங்களில் இந்தச் சுரங்க வழியை
மூடிவிடவும் இங்கேதான் உபாயம் இருக்கிறது. அதோ, பார்த்தாயா?
அந்த அடையாளமிட்ட இடத்தில் ஒரு கல்லை இலேசாகப் பெயர்த்தால்,
அகழி ஜலம் கடகடவென்று உள்ளே புகுந்து விடும். அப்புறம்
வௌியிலிருந்தும் உள்ளே போக முடியாது, உள்ளேயிருந்தும் வௌியே
போக முடியாது!" என்றார்.
"நல்ல வேளை!
அப்படி ஏதாவது ஏற்படுவதற்கு முன்னால் நாம் வௌியே
போய்விடுவோமல்லவா?" என்றாள் சிவகாமி. அதற்குப் பிறகு இன்னும்
ஒரு முகூர்த்த நேரம் வழி நடந்த பிறகு, மேலேயிருந்து வௌிச்சம்
வருவதைக் கண்டார்கள். "ஆ! சுரங்க வழி முடிந்துவிட்டது!"
என்றார் ஆயனர். இருவரும் படிகள் வழியாக மேலே ஒளிவந்த இடத்தை
நோக்கி ஏறிச் சென்றார்கள்.
அவர்கள் ஏறி
வந்து நின்ற இடம் ஒரு சின்ன மலைப்பாறையில் குடைந்து
அமைக்கப்பட்ட சமணர்களின் குகைக் கோயில். ஜைன
தீர்த்தங்கரர்களின் பெரிய பிரதிமைகள் மூன்று அங்கே காணப்பட்டன.
ஆனால் என்ன பயங்கரம்? காபாலிகர்கள் அந்தச் சமணக் குகையை
ஆக்கிரமித்து விட்டதாகத் தோன்றியது. எங்கே பார்த்தாலும் மண்டை
ஓடுகள் சிதறிக் கிடந்தன. போதாதற்கு, மூன்று தீர்த்தங்கரர்களின்
சிலைகளுக்கு அப்பால் நாலாவது சிலையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு
காபாலிகன் உட்கார்ந்திருந்தான். உடம்பெல்லாம் சாம்பலைப்
பூசிக்கொண்டு மண்டை ஓட்டு மாலை அணிந்திருந்த அவனுடைய தோற்றம்
பார்ப்பதற்கு மிகக் கோரமாயிருந்தது. ஆனால், நல்ல வேளையாக அவன்
கண்களை இறுக மூடிக் கொண்டு யோக நிஷ்டையில்
உட்கார்ந்திருந்தான்.
ஆயனரும்,
சிவகாமியும் இரண்டாவது தடவை அவனைப் பார்க்காமல் பாறையின்
படிகள் வழியாக இறங்கி விரைந்து சென்றார்கள். கொஞ்ச தூரம் சென்ற
பிறகு, "அப்பா! இதென்ன? சமணர் குகைக் கோவிலில் காபாலிகன் வந்து
உட்கார்ந்திருக்கிறானே?" என்று சிவகாமி கேட்டாள். "அம்மா!
இந்தப் பாறை ஒரு காலத்தில் சமணப் பள்ளியாக இருந்தது. மகேந்திர
பல்லவரிடம் கோபித்துக் கொண்டு சமணர்கள் இந்த நாட்டை விட்டுப்
போய்விட்டார்களல்லவா? கோட்டை முற்றுகைக்கு முன்னால் காஞ்சி
நகரிலுள்ள காபாலிகர்களையெல்லாம் வௌியில் துரத்தியபோது இந்தக்
குகையை அவர்கள் பிடித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது!
அவர்களுக்கு யுத்தம் என்றால் கொண்டாட்டந்தானே! கபாலங்கள்
ஏராளமாய்க் கிடைக்குமல்லவா?"
இப்படிப்
பேசிக்கொண்டு ஆயனரும், சிவகாமியும் காட்டுப் பிரதேசத்தின்
வழியே நடந்து போனார்கள். கொஞ்ச தூரம் போவதற்குள்ளே,
அவர்களுக்கு எதிர்ப்புறத்திலிருந்து பலர் கும்பலாக வரும் பெரு
முழக்கம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம், ஒரு பெரும்
கும்பல் அவர்கள் கண் முன்னால் எதிர்ப்பட்டது. அப்படி
வந்தவர்கள் வாதாபிப் படையைச் சேர்ந்த வீரர்கள்தான்!
அவர்களுக்கு மத்தியில் தூக்கிப் பிடிக்கப்பட்டிருந்த வராகக்
கொடியிலிருந்து இது தௌிவாகத் தெரிந்தது!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப