|  கல்கியின் பொன்னியின் செல்வன் kalkiyin ponniyin celvan
 மூன்றாம் பாகம் - கொலை வாள்    
 
 
 
					முதலாவது அத்தியாயம் - கோடிக்கரையில் இரண்டாம் அத்தியாயம் - மோக வலை
 மூன்றாம் அத்தியாயம் - ஆந்தையின் குரல்
 நான்காம் அத்தியாயம் - தாழைப் புதர்
 ஐந்தாம் அத்தியாயம் - ராக்கம்மாள்
 ஆறாம் அத்தியாயம் - பூங்குழலியின் திகில்
 ஏழாம் அத்தியாயம் - காட்டில் எழுந்த கீதம்
 எட்டாம் அத்தியாயம் - "ஐயோ! பிசாசு!"
 ஒன்பதாம் அத்தியாயம் - ஓடத்தில் மூவர்
 பத்தாம் அத்தியாயம் - சூடாமணி விஹாரம்
 
 
 
					முதலாவது அத்தியாயம் கோடிக்கரையில்
 கடலில் அடித்த சுழிக்காற்றுச் சோழ நாட்டுக் 
கடற்கரையோரத்தில் புகுந்து, தன் துரிதப் பிரயாணத்தைச் செய்து கொண்டு போயிற்று. 
"கல்லுளிமங்கன் போன வழி, காடு மலையெல்லாம் தவிடுபொடி" என்பது போல, அந்தச் 
சுழிக்காற்றுப் போன வழியெங்கும் பற்பல பயங்கர நாசவேலைகளைக் காணும்படி இருந்தது. 
கோடிக்கரையிலிருந்து காவேரிப் பூம்பட்டினம் வரையில் சோழநாட்டுக் கடற்கரையோரங்களில் 
வாயு பகவானின் லீலை செய்த வேலைகளை நன்கு பார்க்கும் படியிருந்தது. எத்தனையோ மரங்கள் 
வேரோடு பெயர்ந்தும், கிளைகள் முறிந்தும் கிடந்தன. வீடுகளின் கூரைகளைச் சுழிக் 
காற்று அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு போய்த் தூர தூரங்களில் தூள் தூளாக்கி 
எறிந்து விட்டிருந்தது. குடிசைகள் குட்டிச் சுவர்களாயிருந்தன. கோடிக் 
கரைப்பகுதியில் எங்கே பார்த்தாலும் வெள்ளக் காடாயிருந்தது. கடல் பொங்கி வந்து 
பூமிக்குள் புகுந்து விட்டதோ என்று தோன்றியது. ஆனால் பூமிக்கும் கடலுக்கும் 
மத்தியில் இருந்த வெண்மணல் பிரதேசம் அந்தக் கொள்கையைப் பொய்ப்படுத்தியது. அந்த 
வெண்மணல் பிரதேசத்தில் ஆங்காங்குப் புதைசேறு இருந்த இடங்களில் மட்டும் இப்போது 
அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் இப்போது மனிதனோ மிருகமோ 
இறங்கி விட்டால், உயிரோடு சமாதிதான்! யானைகளைக் கூட அப்புதை சேற்றுக் குழிகள் 
இப்போது விழுங்கி ஏப்பம் விட்டு விடும்! 
 சுழிக்காற்று அடித்த இரண்டு 
நாளைக்குப் பிறகு கோடிக்கரைக்குப் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய பரிவாரங்களும் 
வந்து சேர்ந்தார்கள். பல்லக்கும் பின்தொடர்ந்து வந்தது. ஆனால் இம்முறை அந்தப் 
பல்லக்கில் அமர்ந்து இளையராணி நந்தினிதேவியே பிரயாணம் செய்தாள். "மதுராந்தகத் தேவரை 
அந்தரங்கமாக அழைத்துப்போக வேண்டிய அவசியம் இப்போது இல்லை.மேலும் சில சமயம் இளைய 
ராணியையும் உடன் அழைத்துப் போனால்தானே மறுபடி அவசிய நேரும் போது மதுராந்தரகரை 
அழைத்துபோக அந்தப் பல்லக்கு வாகனம் உபயோகமாயிருக்கும்?" இவ்வாறு நந்தினி கூறியதைப் 
பழுவேட்டரையர் உற்சாகமாக ஒப்புக்கொண்டார். காமாந்தகாரத்தில் மூழ்கியிருந்த 
அக்கிழவருக்குத் தம்முடன் அந்தப் புவனசுந்தரியை அழைத்துப் போவதில் ஆர்வம் இருப்பது 
இயல்புதானே?
 
 சுழிக்காற்றுக்கு முன்னால் அவர்கள் நாகைப்பட்டினத்துக்கு வந்திருந்தார்கள். 
அங்கே தனாதிகாரி தமது உத்தியோகக் கடமைகளை முதலில் நிறைவேற்றினார்.
 
 நாகைப்பட்டினம் அப்போது தமிழகத்தின் முக்கியத் துறைமுகப்பட்டினங்களில் 
ஒன்றாயிருந்தது. வௌிநாடுகளிலிருந்து எத்தனை எத்தனையோ பொருள்கள் பெரிய பெரிய 
மரக்கலங்களில் வந்து அத்துறைமுகத்தில் இறங்கிக் கொண்டிருந்தன. அப்பொருள்களை 
ஆயிரக்கணக்கான சிறிய படகுகள் ஏற்றிக் கொண்டு வந்து கரையில் சேர்த்தன. கரையிலிருந்து 
மாற்றுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு போய் மரக்கலங்களில் சேர்த்தன. இவற்றுக்கெல்லாம் 
சுங்க திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகள் பலர் இருந்தனர். அவர்கள் சரிவர வேலை 
செய்கிறார்களா என்பதை மேற்பார்வை பார்ப்பது சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய 
பழுவேட்டரையரின் உரிமையும், கடமையும் அல்லவா?
 
 அந்த வேலை பூர்த்தியான பிறகு 
பெிய பழுவேட்டரையர் நாகைப்பட்டினத்தில் புகழ் பெற்றிருந்த சூடாமணி புத்த 
விஹாரத்துக்கும் விஜயம் செய்தார். பிக்ஷூக்கள் அவரைத் தக்கபடி வரவேற்று 
உபசரித்தனர். புத்தவிஹாரத்துக்குத் தேவை ஏதேனும் உண்டா, பிக்ஷூகளுக்குக் குறைகள் 
ஏதேனும் உண்டா என்று தனாதிகாரி விசாரித்தார். ஒன்றும் இல்லையென்று பிக்ஷூக்கள் 
கூறி, சுந்தர சோழ மன்னருக்குத் தங்கள் நன்றியையும் தெரிவித்தார்கள்.
 
 சில 
நாளைக்கு முன் இந்த விஹாரத்தைச் சேர்ந்த பிக்ஷூக்கள் இருவர் தஞ்சைக்குச் 
சக்கரவர்த்தியைப் பார்க்க வந்திருந்தார்கள். புத்தசங்கத்தின் சார்பாகச் சுந்தரசோழர் 
விரைவில் நோய் நீங்கிக் குணம் அடையவேண்டும் என்ற வாழ்த்துக்களைத் 
தெரிவித்தார்கள்.அப்போது அவர்கள் இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையில் புத்த 
தர்மத்துக்குச் செய்துவரும் தொண்டுகளைக் குறித்துத் தங்கள் பாராட்டுதலைத் 
தெரிவித்தார்கள். இடிந்து போன புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கொடுக்கும்படியாக 
இளவரசர் கட்டளையிட்டு நிறைவேற்றியும் வருவது இலங்கையில் உள்ள புத்த பிக்ஷூக்களின் 
மகா சங்கத்துக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்து வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.
 
 "சக்கரவர்த்திப் பெருமானே! இன்னும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியும் நாங்கள் 
கேள்விப்படுகிறோம். இலங்கையின் பழமையான சிம்மாசனத்தைத் தங்களுடைய இளைய 
திருக்குமாரருக்கே அளித்து இலங்கை அரசராக முடி சூட்டி விடலாம் என்று பிக்ஷூக்களில் 
ஒரு பெரும் பகுதியார் கருதுகிறார்களாம்! அவ்விதம் தங்களுக்குள் 
பேசிக்கொண்டிருக்கிறார்களாம்! இதைக் காட்டிலும் நம் இளவரசரின் பெருமைக்கு வேறு என்ன 
சான்று வேண்டும்!" என்றார்கள்.
 
 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரிய 
பழுவேட்டரையரின் உள்ளத்தில் ஓர் அபூர்வமான யோசனை உதயமாயிற்று. பிக்ஷூக்கள் சென்ற 
பிறகு அதைச் சுந்தர சோழச் சக்கரவர்த்தியிடமும் தெரிவித்தார். "மூன்று உலகும் ஆளும் 
இறைவா! தங்கள் அதிகாரம் எட்டுத்திசையிலும் பரவி நிலைபெற்றிருக்கிறது. இந்தப் பரந்த 
பூமண்டத்தில் தங்கள் ஆணைக்குக் கீழ்ப்படியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் தங்கள் 
திருப்புதல்வர்கள் இருவர் மட்டும் இதற்கு விலக்காயிருக்கின்றனர். அவர்களுக்குத் 
துர்ப்புத்தி புகட்டும் சிலர் சோழ மகாராஜ்யத்தில் பெரிய பதவிகள் வகிக்கிறார்கள். 
ஆதித்த கரிகாலர் தங்கள் விருப்பத்தின்படி இங்கு வருவதற்கு மறுத்து தங்களைக் 
காஞ்சிக்கு வரும்படி ஓலை அனுப்புகிறார். அவருக்கு இவ்வாறு துர்புத்தி புகட்டுகிறவர் 
வேறு யாரும் இல்லை; தங்கள் மாமனாரான திருக்கோவலூர் மலையமான்தான். அவ்வாறே ஈழ 
நாட்டிலிருந்து தங்கள் இளம் புதல்வரைத் தருவிக்கும் படியாகத் தாங்கள் பன்முறை 
சொல்லிவிட்டீர்கள். நானும் ஆள் அனுப்பி அலுத்து விட்டேன். நமது ஆட்கள் இளவரசரைச் 
சந்திக்காத படியும் நம் ஓலை இளவரசரைச் சேராதபடியும் அந்தக் கொடும்பாளூர்ப் பெரிய 
வேளான் செய்துகொண்டு வருகிறான். இல்லாவிடில், தங்கள் அருமைப் புதல்வர் தங்கள் 
விருப்பந் தெரிந்த பிறகும் இத்தனைகாலம் வராமல் தாமதிப்பாரா? இந்நிலைமையில் எனக்கு 
ஒரு யோசனை தோன்றுகிறது. தாங்கள் கட்டளையிட்டால் அதைத் தெரிவிக்கிறேன்" என்றார் 
பழுவேட்டரையர்.
 
 சக்கரவர்த்தி சம்மதம் கொடுத்ததின்பேரில் தனாதிகாரி 
தெரிவித்தார். "இலங்கைச் சிம்மாதனத்தைக் கவர்ந்து முடி சூட்டிக்கொள்ளச் சதி 
செய்ததாகக் குற்றம் சாட்டி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளை 
பிறப்பித்து அனுப்புவோம். அத்தகைய கட்டளையைப் பூதி விக்கிரமகேசரி தடை செய்ய 
முடியாது. அன்றியும், இளவரசரிடம் நேரில் எப்படியேனும் கட்டளையைச் சேர்ப்பிக்கச் 
செய்துவிட்டால் இளவரசர் கட்டாயம் வந்தே தீருவார்!"
 
 இதைக் கேட்ட சுந்தர 
சோழர் புன்னகை புரிந்தார். விசித்திரமான யோசனைதான்; ஆயினும் ஏன் கையாண்டு பார்க்கக் 
கூடாது? பொன்னியின் செல்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் சக்கரவர்த்தியின் 
மனதில் பொங்கிக் கொண்டிருந்தது. தம்முடைய அந்திம காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக 
அவர் உணர்ந்தார். ஆகையால் தம் அந்தரங்க அன்புக்குரிய இளங்கோவிடம் இராஜ்யத்தைப் 
பற்றித் தம் மனோரதத்தை வௌியிட விரும்பினார். மதுராந்தகனுக்கே தஞ்சாவூர் இராஜ்யத்தை 
அளிக்க வேண்டும் என்ற தம் விருப்பத்தை அறிந்தால் அருள்மொழிவர்மன் மறுவார்த்தையே 
பேசாமல் அதை ஒப்புக்கொள்வான். பின்னர் அவன் மூலமாக ஆதித்த கரிகாலனுடைய மனத்தை 
மாற்றுவதும் எளிதாயிருக்கும்.
 
 இவ்வாறு சிந்தித்துத் தனாதிகாரியின் 
யோசனையைச் சக்கரவர்த்தி ஆமோதித்தார். அதன் பேரில்தான் அருள்மொழிவர்மரைச் 
சிறைப்படுத்தி வரும்படி கட்டளை அனுப்பப்பட்டது. இளவரசருக்கு எவ்விதத் தீங்கும் 
ஏற்படக்கூடாது என்ற கண்டிப்பான கட்டளையும் மரக்கலத் தலைவனுக்குப் 
பிறப்பிக்கப்பட்டது.
 
 மேற்கூறிய கட்டளையுடன் இருமரக்கலங்கள் ஈழநாட்டுச் 
சென்ற பிறகு, பெரிய பழுவேட்டரையர் சிறிது மனக்கவலை கொண்டார். இளவரசருக்கு ஏதேனும் 
நேர்ந்தது விட்டால் தனக்கு பெரும் பழி ஏற்படும் என்பதை உணர்ந்தார். ஆகையால் தாமே 
நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேரே சென்றிருந்து, இளவரசரைத் தக்கபடி வரவேற்றுத் 
தமது சொந்தப் பொறுப்பில் அவரைத் தஞ்சாவூருக்கு அழைத்துக் கொண்டு வர விரும்பினார்.
 
 இந்த யோசனைக்கு இன்னும் சில உபகாரணங்களும் இருந்தன. இளவரசர் தஞ்சைக்கு 
வந்து சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு முன்னால் செம்பியன்மாதேவியோ, குந்தவையோ அவரைப் 
பார்க்கும்படி விடக்கூடாது. அந்தப் பெண்கள் இருவரும் இளவரசர் மீது மிக்க செல்வாக்கு 
உள்ளவர்கள்; பழுவேட்டரையரை வெறுப்பவர்கள். ஆகையால் இளவரசரிடம் ஏதாவது சொல்லி அவர் 
மனத்தைக் கெடுத்து விடுவார்கள். தக்க சமயம் வருவதற்குள், அதாவது சுந்தரசோழர் மரணம் 
அடைவதற்குள், ஏடாகூடமாக ஏதேனும் நடந்து, காரியங்கள் கெட்டுப் போகலாம்.
 
 அன்றியும், பொக்கிஷ நிலவறையில் சுரங்க வழிக்காவலன் பின்னாலிருந்து தாக்கி 
வீழத்தப்பட்டதிலிருந்து தனாதிகாரியின் மனத்தில் ஏதேதோ விபரீத சந்தேகங்கள் 
உதித்திருந்தன. பொக்கிஷ சாலையில் யாராவது ஒளிந்திருக்கக்கூடுமா? அப்படியானால் அது 
யாராயிருக்கும்? தஞ்சைக் கோட்டைக் காவலர்களிடம் அகப்படாமல் தப்பிச் சென்ற வாணர்குல 
வீரனாயிருக்குமா? அங்ஙனமானால் அவன் இன்னும் பல இரகசியங்களை அறிந்திருக்கக்கூடும் 
அல்லவா?
 
 சின்னப் பழுவேட்டரையர் கூறுகிறபடி நந்தினியைப் பார்க்க அடிக்கடி 
வரும் மந்திரவாதிக்கு இதில் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? அதையும் தெரிந்து 
கொள்ளத்தான் வேண்டும். இளைய பிராட்டி குந்தவை தேவிதான் வந்தியதேவனை ஓலையுடன் 
இளவரசர் அருள்மொழிவர்மரிடம் அனுப்பியிருக்கிறாள் என்னும் செய்தியும் தனாதிகாரியின் 
மனத்தைக் கலங்கச் செய்திருந்தது. வந்தியத்தேவன் மூலம் என்ன செய்தி 
அனுப்பியிருப்பாள்? தாமும் சம்புவரையர் முதலியவர்களும் சோழ சிம்மாசனத்தைப் பற்றி 
முடிவு செய்துள்ள யோசனையைப் பற்றி அந்தப் பெண் பாம்புக்குச் செய்தி 
எட்டியிருக்குமோ? அதைப்பற்றி ஏதேனும் அவள் எழுதி அனுப்பியிருப்பாளோ?
 
 எப்படியிருந்த போதிலும் இளவரசர் சோழநாட்டின் கரையில் இறங்கியதும், தாம் 
அவரை முதலில் சந்திப்பதுதான் நல்லது. வந்தியதேவனையும் இளவரசருடன் சிறைபடுத்திக் 
கொண்டுவரக் கட்டளையிட்டிருப்பதால் அவனையும் முதலில் தாம் பார்த்தாக வேண்டும். 
அவனுக்கு என்னென்ன தெரியும், எவ்வளவு ூரம் தெரியும் என்பதையும் கண்டு பிடித்தாக 
வேண்டும்.
 
 இப்படியெல்லாம் யோசித்துப் பெரிய பழுவேட்டரையர் 
நாகைப்பட்டினத்துக்குப் போய்க் காத்திருக்கத் தீர்மானித்தார். அவருக்கு இருந்த 
காரணங்களைக் காட்டிலும் அதிகமாகவே நந்தினிதேவிக்கு இருந்தன. வந்தியத்தேவனை மறுபடி 
பார்க்கவும் குந்தவை அவனிடம் என்ன ஓலை கொடுத்து அனுப்பினாள் என்பதை அறிந்து 
கொள்ளவும் நந்தினி மிக்க ஆவலாயிருந்தாள். மந்திரவாதி ரவிதாஸன் போன காரியம் எவ்வளவு 
தூரம் வெற்றியடைந்தது என்று அறியவும் ஆர்வம் கொண்டிருந்தாள். ஆகையால் 
நாகைப்பட்டினத்துக்குத் தானும் வருவதாகக் கூறினாள். கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? 
கிழவர் உடனே அதற்கு இசைந்தார். கடலில் கரையோரமாக உல்லாசப் படகில் ஏறி நந்தினியுடன் 
ஆனந்தப் பிரயாணம் செய்வது பற்றி அவர் மனோராஜ்யம் செய்யலானார். அவர் உள்ளத்தையும் 
உடலையும் எரித்துக் கொண்டிருந்த தாபம் அதன்மூலம் தீர்வதற்கு வழி ஏற்படலாம் என்றும் 
ஆசை கொண்டார்.
 
 பழுவேட்டரையரும், நந்தினியும் 
நாகைப்பட்டினத்திலிருந்தபோதுதான் சுழற் காற்று அடித்தது. காற்றின் உக்கிர லீலைகளை 
நந்தினி வெகுவாக அநுபவித்தாள். கடற்கரையோரத்தில் தென்னை மர உயரத்துக்கு அலைகள் 
எழும்பி விழுவதைப் பார்த்துக் களித்தாள். ஆனால் கடலில் உல்லாசப் படகில் ஆனந்த 
யாத்திரை செய்யலாம் என்னும் பழுவேட்டரையரின் மனோராஜ்யம் நிறைவேறவில்லை.
 
 சுழிக்காற்று அல்லோலகல்லோலப்படுதி விட்டுப்போன பிறகு, கடலிலே 
கப்பல்களுக்கும் படகுகளுக்கும் சேதம் உண்டா என்பதைப் பற்றிப் பழுவேட்டரையர் 
விசாரித்து அறிந்தார். கரையோரத்தில் அனைவரும் சுழிக்காற்று வரப்போவதை அறிந்து 
ஜாக்கிரதையாயிருந்த படியால் அதிகச்சேதம் ஏற்படவில்லையென்று தெரிந்தது. ஆனால் 
நடுக்கடலில், ஈழத்துக்கும் கோடிக்கரைக்கும் நடுவில், இரு கப்பல்கள் 
தத்தளித்ததாகவும், அவற்றில் ஒன்று தீப்பற்றி எரிந்து முழுகியதாகவும் கட்டு 
மரங்களில் மீன் பிடிக்கச் சென்றிருந்த வலைஞர்கள் சிலர் கூறினார்கள். இது 
பழுவேட்டரையருக்கு மிக்க கவலையை உண்டாக்கிற்று. அந்த இரண்டு மரக்கலங்களும் 
இளவரசரைச் சிறைப்பிடித்து வந்த கப்பல்களாயிருக்கலாம் அல்லவா? அப்படியானால் 
இளவரசரின் கதி யாதாகியிருக்குமோ? இளவரசருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் தனக்குப் 
பெரும் பழி ஏற்படுமே? சோழ நாட்டு மக்களின் எல்லையற்ற அன்பைக் கவர்ந்தவராயிற்றே, 
அருள்மொழிவர்மர். மக்களுக்கு அவரைப் பற்றி என்ன சொல்வது? சக்கரவர்த்திக்குத்தான் 
என்ன சமாதானத்தைக் சொல்வது? - நிச்சயமான செய்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் 
பேராவல் அவருக்கு உண்டாயிற்று. கோடிக்கரைக்குப் போனால் ஒருவேளை விவரம் 
தெரியலாம்.மூழ்கிய கப்பலை நன்றாய்ப் பார்த்தவர்கள் அங்கே இருக்கக்கூடும். மூழ்கிய 
கப்பலிலிருந்து தப்பியவர்கள் யாரேனும் கரை சேர்ந்திருக்கவும் கூடும். ஆம்; உடனே 
கோடிக்கரைக்குப் போக வேண்டியதுதான்!
 
 இந்த எண்ணத்தை நந்தினியிடம் 
வௌியிட்டதும் அவள் ஆர்வத்துடன் அதை ஒப்புக்கொண்டாள். "கோடிக்கரையை நான் இதுவரையில் 
பார்த்ததில்லை. அந்தப் பிரதேசம் மிக அழகாயிருக்கும் என்று கேளிவிப்பட்டிருக்கிறேன். 
இச்சந்தர்ப்பத்தில் அதையும் பார்த்துவிடலாம்" என்றாள் நந்தினி.
 
 நாகைப்பட்டினத்திலிருந்து கோடிக்கரைக்கு இரண்டு வழிகள் உண்டு. 
கடற்கரையோரமாகச் சென்ற கால்வாய் வழியாகப் படகில் ஏறிப் போகலாம். அல்லது சாலை 
வழியாகவும் போகலாம். பழுவேட்டரையரின் பரிவாரங்கள் அதிகமாயிருந்தபடியால் சாலை 
வழியாகவே போனார்கள். மேலும் நந்தினி கால்வாய் வழியை விரும்பவும் இல்லை. கால்வாயில் 
படகில் போனால் பழுவேட்டரையர் தம் காதல் புராணத்தைத் தொடங்கிவிடுவார் என்று நந்தினி 
அஞ்சியது ஒரு காரணம். அது மட்டும் அன்று, சாலை வழியாகச் சென்றால் கடற்கரையோரத்தில் 
வந்து ஒதுங்கும் கட்டுமரக்காரர்களையும் படகோட்டிகளையும் விசாரித்துக்கொண்டு போகலாம் 
அல்லவா?
 
 வழியில் அப்படி விசாரித்ததில் புதிய செய்தி ஒன்றும் தெரியவில்லை. 
நடுக்கடலில் சுழிக்காற்றுப் பலமாக அடித்த சமயம் கப்பல் ஒன்று தீப்பட்டு எரிந்ததைப் 
பார்த்ததாக மட்டும் இன்னும் சிலரும் கூறினார்கள். கோடிக்கரையை அடைந்ததும் கலங்கரை 
விளக்கத்தின் காவலர் தியாக விடங்கர் தமது எளிய வீட்டைப் பழுவேட்டரையர் 
தம்பதிகளுக்காக ஒழித்துக் கொடுப்பதாகச் சொன்னார். அதை ஏற்கும்படி மன்றாடிக் 
கேட்டுக்கொண்டார். கோடிக்கரையில் தங்குவதற்கு வேறு மாட மாளிகை கிடையாது. எனினும் 
நந்தினி அதை மறுத்துவிட்டாள். கலங்கரை விளக்கிற்கு அருகில் கூடாரம் போட்டுக்கொண்டு 
தங்க விரும்புவதாகக் கூறினாள்.
 
 அவ்வாறே கூடாரங்கள் அடிக்கப்பட்டன. சற்றுத் 
தூரத்தில் ஆங்காங்கு பழுவூர்ப் பரிவாரங்களுக்கும் கூடாரங்கள் போடப்பட்டன. 
கூடாரங்கள் அடித்து முடித்தவுடனே கடலில் ஒரு பெரிய மரக்கலம் காணப்பட்டது. அது 
கரையோரமாக எவ்வளவு தூரம் வரலாமோ அவ்வளவு தூரத்தில் வந்து நின்றது.
 
 அதைக் 
கண்டதும், பழுவேட்டரையரின் பரபரப்பு மிகுந்தது. கப்பலின் பாய்மரங்கள் 
சின்னாப்பின்னமாகியிருந்ததிலிருந்து அது சுழிக்காற்றில் அகப்பட்டிருக்க 
வேண்டுமென்று தௌிவாயிற்று. அதில் இருப்பவர்கள் யார்? ஒரு வேளை இளவரசராயிருக்கலாமோ? 
புலிக்கொடி காணப்படாததில் வியப்பில்லை. சுழிக்காற்றில் அது பிய்த்து 
எறியப்பட்டிருக்கலாம் அல்லவா?
 
 கப்பலண்டை போய்த் தகவல் தெரிந்து கொண்டு 
வருவதற்காகப் பழுவேட்டரையர் அங்கிருந்து ஒரு படகை அனுப்பி வைத்தார். 
கப்பலிலிருந்தவர்கள் படகுக்காகக் காத்திருந்ததாகத் தோன்றியது. உடனே இருவர் 
கப்பலிலிருந்து படகில் இறங்கினார்கள். அவர்களில் ஒருவன் பார்த்திபேந்திர பல்லவன்.
 
 வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக மரக்கலத்திலிருந்து படகில் இறங்கிச் 
சென்ற இளவரசர் அருள்மொழிவர்மர் திரும்பக் கப்பலுக்கு வரவேயில்லை அல்லவா? இதனால் 
பார்த்திபேந்திரன் எல்லையற்ற கவலைக்கு உள்ளாகித் தத்தளித்தான். காற்று அடங்கிப் 
பொழுந்து விடிந்தபிறகு அங்குமிங்கும் கப்பலைச் செலுத்தித் தேடினான். படகில் 
இளவரசருடன் இறங்கியவர்களில் ஒருவன் மட்டும் குற்றுயிராக அகப்பட்டான். அவன் 
வந்தியத்தேவனை இளவரசர் மிக்க தீரத்துடன் காப்பாற்றிய பிறகு படகுக்கு நேர்ந்த 
கதியைச் சொன்னான். இதனால் பார்த்திபேந்திரனுடைய துயரம் பன்மடங்கு ஆயிற்று. ஒருவேளை 
கோடிக்கரை சென்று உயிருடன் ஒதுங்கியிருக்கக் கூடாதா என்ற ஆசை ஒரு பக்கத்தில் 
கிடந்து அடித்துக்கொண்டது.
 
 ஆகவே கோடிக்கரை சென்று விசாரிப்பதென்று 
தீர்மானித்தான். அதற்காகவே கப்பலை அங்கே கொண்டுவந்து நிறுத்தச் செய்தான். படகில் 
இறங்கிய பிறகு கரையை நோக்கிப் போக ஆரம்பித்ததும் பெரிய பழுவேட்டரையர் தம் இளைய ராணி 
சகிதமாக அங்கு வந்திருப்பதை அறிந்துகொண்டான். இது அவனுக்கு மிக்க எரிச்சலை 
மூட்டியது.
 
 பழுவூர் இளையராணி நந்தினியைப்பற்றி ஆதித்தகரிகாலர் கூறியவையும் 
நினைவுக்கு வந்தன. அவ்விதம் அந்த மகாவீரரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு அவரைப் 
பித்துப் பிடிக்க அடித்த மோகனாங்கி எப்படியிருப்பாள் என்று பார்க்கும் சபலமும் அவன் 
உள்ளத்தின் அடிவாரத்தில் ஒரு மூலையில் எழுந்தது. அந்த விருப்பம் விரைவில் வளர்நது 
கொழுந்துவிடத் தொடங்கியது. ஒருவேளை அவளைப் பார்க்க முடியாமற் போய் விடுமோ என்ற 
கவலையும் உண்டாகிவிட்டது.
 
 ஆனால் அந்தக் கவலை நீடித்திருக்கவில்லை. 
படகிலிருந்து கரையில் இறங்கியதும் நேரே பழுவேட்டரையரின் கூடாரத்துக்குப் 
பார்த்திபேந்திரனை அழைத்துப் போனார்கள்.கூடாரத்தின் வாசலில் பழுவேட்டரையர் 
கம்பீரமான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்.ஆஜானுபாகுவான அந்த வீராதி வீரரைக் 
'கிழவர்' என்று சொல்லுவது எவ்வளவு பெரிய தவறு என்று பார்த்திபேந்திரன் எண்ணினான். 
அவன் பார்த்திருக்கும் எத்தனையோ இளம் பிராய வாலிபர்களைக் காட்டிலும் அவர் 
தேகக்கட்டும், மனோதிடமும் வாய்ந்த புருஷ சிங்கமாகக் காட்சி அளித்தார்.
 
 இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்துக்கு உள்ளேயிருந்து 
மங்கை ஒருத்தி வௌிவந்தாள். மேகங்களுக்குப் பின்னாலிருந்து மின்னல் தோன்றுவதுபோல 
அந்தப் பொன் வண்ணப் பூவை கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் திகழ்ந்தாள். நெடிது வளர்ந்து 
உரம்பெற்ற தேக்கு மரத்தின் பேரில் படர்ந்திருக்கும் அழகிய பூங்கொடியைப் போல் அவள் 
பழுவேட்டரையருக்கு முன்னால் வந்து நின்றாள். அந்தப் புவன மோகினியைக்கண்டு திகைத்து 
நின்ற பார்த்திபேந்திரன் பேரில் தனது வேல் விழிகளைச் செலுத்திய வண்ணமாக அவள், 
"நாதா! இந்த வீர புருஷர் யார்? இவரை நான் இதுவரையில் பார்த்ததில்லையே?" என்று 
சொன்னாள். பொற் கிண்ணத்திலிருந்து அருந்திய மதுபானத்தைப் போல் அவளுடைய கிளி மொழிகள் 
பார்த்திபேந்திரனைப் போதை கொள்ளச் செய்தன.
 
 
 பக்க 
தலைப்பு 
 
 இரண்டாம் அத்தியாயம்
 மோக வலை
 வயது முதிர்ந்த பிறகு இளம் பெண்ணை மணந்து கொள்வோர் 
எப்போதும் சந்தேகம் என்னும் மாயா உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அன்னியர்கள் 
யாரைக் கண்டாலும் இயற்கையான அருவருப்பு ஏற்படுகிறது. பழுவேட்டரையருக்கு இத்தகைய 
அருவருப்பு ஏற்பட அதிகக் காரணம் இருந்தது. நந்தினி தமக்கு முன்னால் வந்து நின்று 
பேசத் தொடங்கியதை அவர் சிறிதும் விரும்பவில்லை. அதே சமயத்தில் நந்தினியைக் கடிந்து 
கொள்ளவும் அவரால் முடியவில்லை. 
 எனவே நந்தினி கேட்ட கேள்விக்கு மறுமொழியாக, "ராணி! இந்த உலகத்தில் நமக்குத் 
தெரியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எல்லாரையும் நாம் பார்த்து 
அறிந்திருக்க முடியாதல்லவா? அதனால் நமக்கு நஷ்டமும் இல்லை!" என்றார்.
 
 இதைக்கேட்ட பார்த்திபேந்திரன், "ஐயா! சோழநாட்டின் பொக்கிஷ மன்னரின் 
பட்டமகிஷிக்கு என்னைத் தெரியாததினால் நஷ்டம் ஒன்றுமில்லை; நஷ்டம் எனக்குத்தான். 
ஆகையால் என்னை நானே தெரிவித்துக் கொள்கிறேன், அம்மணி! என்னைப் பார்த்திபேந்திரப் 
பல்லவன் என்று அழைப்பார்கள்!" என்று சொன்னான்.
 
 "ஓ! அப்படியா? தங்கள் பெயரை 
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்!" என்றாள் நந்தினி.
 
 "பார்த்திபேந்திரா! ஏன் 
விருதுகளை விட்டுவிட்டுப் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டாய்? இவ்வளவு தன்னடக்கமும், 
பணிவும் எப்போது ஏற்பட்டன? நந்தினி! இவன் வெறும் பார்த்திபேந்திரன் அல்ல. 
வேங்கையும் கலிங்கமும் வென்று வீரபாண்டியன் தலைகொண்ட பார்த்திபேந்திரப் பல்லவன்!" 
என்று பழுவேட்டரையர் பரிகாசக்குரலில் கூறினார்.
 
 நந்தினியின் முகம் ஒரு கண 
நேரம் புயல் குமுறும் வானத்தைப்போல் இருண்டது. அவளுடைய இரு கண்களிலிருந்தும் இரு 
மின்னல்கள் தோன்றி ஒளி வீசி உடனே மறைந்தன. அடுத்த கணம் அவள் கலகலவென்று சிரித்தாள்.
 
 "ஐயா! வீரபாண்டியன் தலைகொண்ட பெருமையான பட்டத்தை எத்தனை பேர் சூட்டிக் 
கொள்கிறார்கள்! அதற்கு ஏதேனும் கணக்கு உண்டா?" என்று கேட்டாள்.
 
 "அம்மணி! 
தனாதிகாரி என் பேரில் உள்ள அபிமானத்தினால் அவ்விதம் கூறினார். உண்மையில் அந்த 
விருதுக்கு நான் உரியவன் அல்ல. வீரபாண்டியன் தலைகொண்ட பெருமை ஆதித்த கரிகாலர் 
ஒருவருக்கே உரியது!"
 
 "அது ஏன் அப்பா, அவ்விதம் சொல்கிறாய்? செத்த பாம்பை 
அடித்த பெருமையில் உனக்குக் கொஞ்சமும் பங்கு வேண்டாமா!" என்று பழுவேட்டரையர் 
பரிகாசக் குரலில் கேட்டுவிட்டுக் குறுஞ்சிரிப்புச் சிரித்தார்.
 
 "இல்லை, 
அரசே! இல்லை! ஆதித்த கரிகாலர் செத்த பாம்பைக் கொல்லவில்லை. அவர் வாளை ஓங்கியபோது 
வீரபாண்டியன் முழு உயிர் உள்ள பாம்பாகத்தான் இருந்தான். அவன் உயிரைக் 
காப்பாற்றுவதற்காகத் தேவலோகத்து மோகினியை ஒத்த ஒரு மங்கை முன்னால் வந்து நின்று கை 
கூப்பிக் கெஞ்சினாள். வாளை ஓங்கியவன் நானாக இருந்தால், உடனே அவ்வாளை தூரவீசி 
எறிந்திருப்பேன். வீரபாண்டியன் பிழைத்துப் போயிருப்பான்!" என்று பார்த்திபேந்திரன் 
பழுவேட்டரையருக்குப் பதில் சொன்னான். ஆனால் அவனுடைய கண்களோ நந்தியின் முகத்தை 
கூர்ந்து நோக்கின.
 
 நந்தினி, பேச்சு அபாயகரமாகப் போய்க்கொண்டிருப்பதை 
உணர்ந்தாள். பழுவேட்டரையரைத் திரும்பிப் பார்த்து,
 
 "நாதா! அந்தப் பழைய கதை 
இப்போது ஏதற்கு? இவர் இங்கு வந்த காரியம் என்னவென்று விசாரிக்கலாமே!" என்றாள்.
 
 உடனே பழுவேட்டரையரும், "ஆம் தம்பி! பழைய கதை வேண்டாம்! உன் கதையைச் சொல்! 
காஞ்சியிலிருந்து எப்போது புறப்பட்டாய்? எங்கே பிரயாணம்? இங்கு இறங்கி வந்த காரணம் 
என்ன?" என்று கேட்டார்.
 
 நந்தினியைப் பார்த்ததால் மதிமயங்கிப் போயிருந்த 
பார்த்திபேந்திரனும் தான் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தான்.
 
 "ஐயா! என்னை 
மன்னிக்க வேண்டும்! ஏதேதோ பேசிக் கொண்டிருந்து விட்டேன். மிக முக்கியமான 
செய்தியுடன் வந்திருக்கிறேன். சோழ நாட்டையே துயரக் கடலில் மூழ்கச் செய்யக்கூடிய 
பயங்கரமான செய்தி - ஈழத்திலிருந்து என்னுடன் இந்தக் கப்பலில் புறப்பட்டு வந்த 
இளவரசர் அருள் மொழிவர்மர், சுழற்காற்று அடித்த சமயம் கடலில் குதித்து விட்டார். 
அவருடைய கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு வேளை இங்கே வந்து ஒதுங்கினாரோ 
என்று பார்ப்பதற்கு வந்தேன்!" என்றான் பார்த்திபேந்திரன்.
 
 அவன் கூறி 
முடிப்பதற்குள், "ஆகா! என்ன சொன்னாய்?" என்று பழுவேட்டரையர் அலறினார். சுழற் 
காற்றினால் வேருடன் பறிக்கப்பட்ட நெடுமரத்தைப் போல் தரையில் வீழ்ந்தார்.
 
 அவரைத் தாங்கி எடுப்பதற்காகப் பார்த்திபேந்திரன் பாய்ந்து சென்றான். 
நந்தினி குறுக்கே நின்று அவன் நீட்டிய கையைப் பற்றி அகற்றினாள். பழுவேட்டரையரின் 
அருகில் தான் உட்கார்ந்து அவருடைய தலையைத் தன் மடியின்மீது எடுத்து வைத்துக் 
கொண்டாள். "தண்ணீர்! தண்ணீர்! என்று கத்தினாள்.
 
 கூடாரத்திலிருந்து 
சேடிப்பெண் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தாள். இன்னும் சில வீரர்களும், கலங்கரை 
விளக்கக் காவலரும், அவர் குடும்பத்தாரும் ஓடி வந்தார்கள் நந்தினி மிக்க 
கம்பீரத்துடன் அவர்களையெல்லாம் அப்பால் நிற்கும்படி ஏவினாள். பழுவேட்டரையரின் 
முகத்தில் தண்ணீர் தௌித்தாள். "நாதா! நாதா!" என்று கொஞ்சம் குரலில் அழைத்தாள். சில 
நிமிடங்களுக்கெல்லாம் கிழவரின் கண்கள் திறந்தன. உடனே நினைவும் வந்தது. சட்டென்று 
எழுந்து உட்கார்ந்தார்.
 
 "நந்தினி! சற்று முன் என் காதில் விழுந்தது 
உண்மையா? இந்தப் பல்லவன் என்ன சொன்னான்? பொன்னியின் செல்வனைக் கடல் கொண்டு 
விட்டதாகச் சொன்னான் அல்லவா? அந்த வீரகுமாரன் சின்னஞ்சிறு குழந்தையாயிருந்தபோது 
இந்தக் கைகளால் அவனை தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தேன். இதே 
கைகளினால்தான் அவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு வரும்படியான கட்டளையில் முத்திரை 
வைத்தேன். ஐயோ! சோழ நாடு என்னைப் பற்றி என்ன நினைக்கும்?" என்று பழுவேட்டரையர் 
தலையில் அடித்துக் கொண்டார். வயிரம் பாய்ந்த அந்த வீரக் கிழவர் அவ்விதம் மனம் 
கங்கிப் புலம்பியதை அதுவரையில் நந்தினி பார்த்ததில்லை; யாருமே கண்டதில்லை.
 
 "நாதா! பதறாதீர்கள்! இவர் இன்னும் செய்தி முழுதும் சொல்லவில்லையே? முழுதும் 
கேட்டுவிட்டு மேலே செய்ய வேண்டியதைப் பற்றி யோசிப்பது நலம் அல்லவா?" என்றாள் 
நந்தினி.
 
 "ஆமாம், நீ சொல்வது சரிதான்.பார்த்திபேந்திரா! சீக்கிரம் சொல்! 
பொன்னியின் செல்வர் கடலில் முழுகி இறந்து விட்டார் என்று சொன்னாய் அல்லவா? அது 
உண்மையா? அல்லது ஏதோ துர்நோக்கத்துடன் கற்பனை செய்து சொல்கிறாயா? பசித்திருக்கும் 
புலியுடன் விளையாடாதே? ஜாக்கிரதை!" என்று அக்கிழவர் கண்களில் கனல் எழும்படி 
நோக்கிக் கர்ஜித்தார்.
 
 "ஐயா! மன்னிக்க வேண்டும்! இளவரசர் இறந்து விட்டார் 
என்று நான் சொல்லவில்லை. அவ்வளவு பயங்கரமான நஷ்டம் இத்தமிழகத்துக்கு 
ஏற்பட்டிருக்கும் என்று என்னாலும் நம்ப முடியவில்லை. சுழற்காற்று உக்கிர நிலையை 
அடைந்திருந்தபோது அவர் என் கப்பலிலிருந்து கடலில் குதித்தார் என்று தான் சொன்னேன். 
கடவுள் அருளால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். இந்தக் கடற்கரையிலே வந்து 
ஒதுங்கியிருக்கலாம். அந்த ஆசையுடன் பார்ப்பதற்கு இங்கே வந்தேன்..."
 
 "சுழற்காற்று அடித்தபோது கடலில் குதித்தாரா! எதற்காக? ஏன் குதித்தார்? 
உன்னுடைய கப்பலில் அவர் ஏன் ஏறினார்? அவர் குதித்தபோது, நீ என்ன செய்து 
கொண்டிருந்தாய்?" என்று பழுவூர் அரசர் படபடப்புடன் கேட்டார்.
 
 நந்தினி 
குறுக்கிட்டு, "ஐயா! இவர் இலங்கைக்கு எதற்குப் போனார் என்பதிலிருந்து விவரமாகச் 
சொல்லட்டும்!" என்றாள்.
 
 "ஆமாம்! உள்ளது உள்ளபடியே சொல்லு! உண்மையைச் 
சொல்லாவிட்டால் நீ உயிருடன் தப்பமுடியாது! உன்னை..." என்று பழுவேட்டரையர் பற்களை நற 
நறவென்று கடித்தார்.
 
 "அரசே! உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லி எனக்குக் 
பழக்கம் இல்லை. நான் பொய் சொல்ல நினைத்தாலும் என் நாக்குச் சொல்லாது. கேளுங்கள்! 
தாங்களும், கடம்பூர் சம்புவரையரும், மற்றும் பலரும் சோழகுலத்துக்கு விரோதமாகச் சதி 
செய்கிறீர்கள் என்று காஞ்சி நகருக்குச் செய்தி எட்டியது."
 
 "பொய்! பொய்! 
முற்றிலும் பொய்!"
 
 "செய்தி பொய்யாக இருக்கட்டும்! அதுவே நான் வேண்டுவது. 
காஞ்சிக்கு எட்டிய செய்தியையே நான் கூறினேன். அதன் பேரில் திருக்கோவலூர் 
மலையமானும், ஆதித்த கரிகாலரும் என்னை ஈழத்துக்கு அனுப்பினார்கள். அருள்மொழிவர்மரைக் 
கையோடு அழைத்து வரும்படி அனுப்பினார்கள்...."
 
 இவ்வாறு ஆரம்பித்துப் 
பார்த்திபேந்திரன், தான் இலங்கை சேர்ந்தது முதலாவது நடந்ததையெல்லாம், தான் அறிந்த 
வரையில் விவரமாகக் கூறினான்.
 
 கதை முடிந்ததும் பழுவேட்டரையர், "கடவுளே! சோழ 
நாட்டுக்குப் பெருங்கேடு வந்துவிட்டது! இந்தப் பாவியினால் தான் வந்தது! இளவரசரைச் 
சிறைப்படுத்திக்கொண்டு வரும்படி நான் அல்லவோ கட்டளை போட்டேன்? நான் அல்லவோ 
மரக்கலங்களை அனுப்பினேன்?" என்று கதறினார்.
 
 "அரசே! தங்கள் குற்றம் ஒன்றும் 
இல்லை; தாங்கள் கட்டளை பிறப்பித்திராவிட்டாலும், இந்த மனிதருடைய கப்பலில் இளவரசர் 
ஏறிக் காஞ்சிக்குப் பயணமாகியிருப்பார் அல்லவா? வீணாக நொந்து கொள்ள வேண்டாம். 
நம்முடைய செயல்களுக்கு மேலே விதியின் செயல் ஒன்று இருக்கிறது. மேலும்..."
 
 நந்தினி இவ்விடத்தில் உரத்துப் பேசுவதைச் சட்டென்று நிறுத்திப் 
பழுவேட்டரையரின் காதோடு ஏதோ சொன்னாள்.
 
 பழுவேட்டரையரின் முகம் சிறிது 
மலர்ச்சி அடைந்தது. "ஆமாம் - ஆமாம்! அது எனக்குத் தோன்றாமல் போயிற்று!" என்றார்.
 
 பிறகு பார்த்திபேந்திரனைப் பார்த்து, "பல்லவா! உன் கப்பலுக்குப் போய் நான் 
பரிசோதித்துவிட்டு வரப்போகிறேன். அதுவரை நீ இங்கேயே இருக்கவேண்டும்! தப்பிச் செல்ல 
முயல வேண்டாம். ஓட முயற்சி செய்தால் உடனே வேல் எறிந்து கொல்லும்படி என் 
வீரர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டுப் போகப்போகிறேன். ஜாக்கிரதை! முதுகிலே 
காயத்துடன் சாகாதே! உன்பரம்பரை, வீரபரம்பரை!" என்றார்.
 
 "வந்தனம், ஐயா! 
தப்பித்து ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. அத்தகைய எண்ணமிருந்தால் உங்கள் வீரர்கள் 
யாராலும் தடுக்கவும் முடியாது. முதுகிலே காயம்படும் உத்தேசமும் எனக்கு இல்லை!" 
என்றான் பல்லவன்.
 
 "அரசே! இவரைப்பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம். நானே 
பார்த்துக் கொள்ளுகிறேன். தப்பியோடப் பார்த்தால், இதோ இந்தக் கத்தி உடனே இவர் 
மார்பில் பாயும்! நீங்கள் நிம்மதியாகப் போய்க் கப்பலைச் சோதித்துவிட்டு வாருங்கள். 
மாலுமிகளையும் விசாரியுங்கள், இவர் கூறிய தெல்லாம் உண்மைதானா என்று" - இவ்விதம் 
நந்தினி கூறிக் கொண்டே இடுப்பிலிருந்து ஒரு சிறிய கத்தியை எடுத்தாள்.
 
 "ராணி! உனக்கு ஏன் இந்தப் பொறுப்பு? நீ கூடாரத்துக்குள் போயிரு! அல்லது 
தியாகவிடங்கரின் வீட்டில் போய் இரு.இவனை நம் வீரர்களே கவனித்துக் கொள்வார்கள். 
அல்லது இவனையும் நான் என்னோடு கப்பலுக்கு அழைத்துப் போகிறேன்...."
 
 "நான் 
வரவில்லை ஐயா! நான் தங்களுடன் வந்தால் தங்களுக்கு மறுபடியும் 
சந்தேகமாகத்தானிருக்கும். மாலுமிகள் எனக்காகச் சாட்சி சொல்லிவிட்டதாய் 
நினைப்பீர்கள். நான் இவ்விடத்தைவிட்டு நகரமாட்டேன். தாங்கள் கவலையின்றிப் 
போய்வாருங்கள்!"
 
 "நாதா! தாங்கள் கப்பலிருந்து திரும்பி வரும் வரையில் 
நானும் இங்கேயேதான் இருக்கப் போகிறேன். இங்கிருந்தபடி தங்களைப் பார்த்துக்கொண்டே 
இருப்பேன்!" என்றாள் நந்தினி.
 
 பிறகு பழுவேட்டரையரின் காதோடு, "இவன் இங்கே 
ஏதேனும் துப்பறிய வந்திருக்கிறானோ, என்னமோ, யார் கண்டது? மேலும் இளவரசரைப்பற்றிய 
செய்தி தாங்கள் திரும்பி வரும் வரையில் யாருக்கும் தெரியக்கூடாது" என்றாள்.
 
 பழுவேட்டரையர் தலையை அசைத்துவிட்டுப் படகில் ஏறினார். படகு மரக்கலத்தை 
நோக்கிச் சென்றது.
 படகு சிறிது தூரம் போகும்வரையில் நந்தினி படகையே 
பார்த்துக்கொண்டிருந்தாள். அதே சமயத்தில் பார்த்திபேந்திரன் கண்கொட்டாமல் தன் 
முகத்தையே பார்த்துக் கொண்டிருந்ததை அவள் உணர்ந்தாள். சட்டென்று அவன் பக்கம் 
திரும்பினாள். பார்த்திபேந்திரன் வெட்கித் தலைகுனிவான் என்று எதிர்பார்த்தாள். 
ஆனால் தேன் மலரைப் பார்த்து விட்ட வண்டு அப்பால் திரும்புமா?
 
 நந்தினி கூரிய 
சிறிய கத்தியை எடுத்து மறுபடி காட்டி, "ஜாக்கிரதை! தப்பி ஓடப் பார்க்கவேண்டாம்!" 
என்றாள்.
 
 "தேவி! கத்தியைக் காட்டி பயமுறுத்துவானேன்? தப்பியாவது ஓடவாவது! 
வலையில் அகப்பட்ட மீன் எவ்விதம் தப்பி ஓடும்? தாங்கள் விரித்த வலையில் 
அகப்பட்டு..."
 
 "என்ன, ஐயா, சொல்கிறீர்? என்னை வலைஞர் குலப்பெண் என்று 
சொல்கிறீரா? இது பழுவூர் அரசர் காதில் விழுந்தால்..."
 
 "அதைப்பற்றி நான் 
கவலைப்படவில்லை தேவி! ஆனால் மீன் பிடிக்கும் வலையை நான் குறிப்பிடவும் இல்லை. 
தங்களுடைய வேல்விழிகள் விரிக்கும் மோக வலையைச் சொல்கிறேன்..."
 
 "சீச்சீ! 
என்ன தைரியம் உமக்கு? வலைஞர் குலப்பெண் என்றாலும் பாதகமில்லை. ஆடவர்களுக்கு மோகவலை 
விரிக்கும் கனிகை என்றா என்னைச் சொல்கிறீர்?"
 
 "மன்னிக்கவேண்டும்! 
அப்படிப்பட்ட அபவாதத்தையும் நான் சொல்லவில்லை. தாங்கள் வேண்டுமென்று வலை விரிக்க 
வேண்டுமா, என்ன? சிலந்திப்பூச்சி வலை நெய்வது ஈக்களைப் பிடிப்பதற்காகவா? அது தான் 
வசிப்பதற்காக வலை பின்னுகிறது. ஈக்கள் தாமாகப் போய் அவ்வலையில் விழுகின்றன..."
 
 "என்னைச் சிலந்திப் பூச்சி என்றா சொல்கிறீர்? அவ்வளவு பயங்கரமாக இருக்கிறனோ 
நான்?"
 
 "தவறு! தவறு! நான் தீபத்தைச் சொல்லியிருக்க வேண்டும். தீபம் எரிவது 
விட்டில் பூச்சிகளுக்காக அல்ல. தீபம் எரிந்து ன்னைச் சுற்றிலும் ஒளி வீசி ஜோதி 
மயமாகச் செய்கிறது! அசட்டு விட்டில் பூச்சிகள் அதைக் கனி என்று நினைத்துக் கொண்டு 
சென்று விழுந்து மாய்கின்றன...."
 
 "ஒரு சிறிய காற்று குப் என்று அடித்தால் 
தீபம் அணைந்து விடுகிறது. வாயினால் ஊதிக்கூட அணைத்துவிடலாம். தீபத்தின் சக்தி 
அவ்வளவுதான்!"
 
 "தீபம் அணைந்துவிடும்; ஆனால் பூரணசந்திரனை யார் அணைக்க 
முடியும்? பூரணசந்திரன் சமுத்திர ராஜனுக்காக உதயமாகவில்லை. இயற்கை நியதியின்படி 
சந்திரன் உதயமாகிறது அதன் குளிர்ந்த நிலா ஒளியை வானமும் பூமியும் மகிழும்படி 
பரப்புகிறது. ஆனால் பேதைக் கடலைப் பாருங்கள்! பூரண சந்திரனைக் கண்டு கடல் எதற்காக 
அப்படிக் கொந்தளிக்க வேண்டும்? எட்டாத பழத்துக்கு ஏன் கொட்டாவி விட்டுத் தவிக்க 
வேண்டும்?"
 
 "பல்லவ குல மன்னர்களின் கவிதா ரசனையைப் பற்றியும் கற்பனைத் 
திறனைப்பற்றியும் ரொம்பவும் கேள்விப்பட்டிருக்கிறேன் அவையெல்லாம் உண்மையென்பதாக 
இப்போதுதான் உணர்கிறேன்."
 
 "புராணங்களிலும், காவியங்களிலும் நான் 
படித்ததையும் கேட்டதையும் நேற்றுவரை நம்பவில்லை; இன்றைக்குத்தான் எனக்கு நம்பிக்கை 
பிறக்கிறது."
 
 "எதைப்பற்றிச் சொல்கிறீர்கள்?"
 
 "பெண் உருவங் 
கொண்டவர்கள் சிலர் வானத்தையும் பூமியையும் தங்கள் காலடியில் போட்டுக்கொள்ளும் சக்தி 
பெற்றவர்கள் என்று கேட்டிருக்கிறேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த அசுரர்கள், 
அமுதபானம் செய்ய வேண்டிய சமயத்தில் மோகினியினால் ஏமாந்து போனார்கள். சுந்தோப 
சுந்தர்கள் ஒரு பெண் நிமித்தமாக அடித்துக்கொண்டு செத்தார்கள். மேனகையினால் 
விசுவாமித்திரர் தவங் கெட்டது. கோவலன் மாதவியின் மோக வலையில் விழுந்து கிடந்தான். 
தசரதர் கைகேயிக்காக ராமனைக் காட்டுக்கு அனுப்பினார். எகிப்து நாட்டு ராணியின் 
காரணமாக மகத்தான ரோம சாம்ராஜ்யம் அழியத் தொடங்கியது..."
 
 "போதும் ஐயா! 
போதும்! இந்த உதாரணங்களையெல்லாம் எதற்காகச் சொல்கிறீர்கள்?"
 
 "தெரியவில்லையா, தேவி! யாருக்கு உதாரணமாகச் சொல்கிறேன் என்று உண்மையாகத் 
தெரியவில்லையா?"
 
 "எனக்கு உதாரணமாகச் சொல்கிறதாயிருந்தால், அதைப் போல் பெரிய 
தவறு நீ வேறு செய்ய முடியாது."
 
 "தவறு ஒன்றுமில்லை. அவர்களுடைய சக்தியைக் 
காட்டிலும் தங்கள் சக்தி குறைந்தது அன்று."
 
 "உம்முடைய வாய்மொழியே உமக்கு 
விரோதமாயிருக்கிறது."
 
 "எப்படி, தேவி?"
 
 "பழுவூர் அரசரை நான் 
வேண்டுமென்றுதான் கப்பலுக்கு அனுப்பினேன், உம்மிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் 
கேட்பதற்காக."
 
 "தங்கள் நோக்கத்தைப் புரிந்துகொண்டுதான் நானும் அவருடன் 
போகாமல் இங்கேயே தங்கினேன்."
 
 "வீரபாண்டியனை ஒரு பெண் காப்பாற்ற முயன்றாள் 
என்றும் ஆதித்த கரிகாலன் அதைப் பொருட்படுத்தவில்லையென்றும் நீர் சொன்னீர் அல்லவா?"
 
 "ஆம் சொன்னேன்."
 
 "காப்பாற்ற முயன்ற பேதைப்பெண் யார் என்று 
தெரியுமா?"
 
 "இப்போது பழுவூர் அரண்மனையின் ஜோதியாக விளங்கும் இளைய ராணி 
நந்தினி தேவிதான்."
 
 "நீர் சற்றுமுன் வர்ணித்தபடி எனக்கு அவ்வளவு சக்தி 
இருந்தால் நான் காப்பாற்ற விரும்பிய மனிதரின் உயிரைக் காப்பாற்றி இருக்க மாட்டேனா? 
அது ஏன் என்னால் முடியாமல் போயிற்று?"
 
 "இரத்த வெறிகொண்டிருந்த ஆதித்த 
கரிகாலன் அச்சமயம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவில்லைதான். ஆனால் அதற்குப் 
பிறகு மூன்று வருஷமாக அவர் எத்தகைய சித்திரவதையை அனுபவித்து வருகிறார் என்பதை நான் 
அறிவேன்."
 
 "உமக்கு எப்படித் தெரியும், ஐயா? உம்மிடம் சொன்னாரா?"
 
 "மூன்று வருஷமாய் மனத்திலே வைத்துக்கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தார். 
அவருடைய உள்ளத்தை ஏதோ ஒரு துன்பம் அரித்துக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் 
அறிந்திருந்தேன். பத்து நாளைக்கு முன்பு, நான் ஈழத்துக்குப் புறப்பட்டதற்கு 
முதலாவது நாள்தான்,- மனத்தைத் திறந்து என்னிடம் சொன்னார். அது முதல்..."
 
 "அது முதலாவது என்ன?"
 
 "பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வேண்டும் 
என்ற ஆசை என் மனத்திலும் குடிகொண்டு விட்டது!"
 
 "ஆதித்த கரிகாலரின் நிலையில் 
நீர் இருந்திருந்தால் நான் கேட்டுக் கொண்டதற்காக வீரபாண்டியரை உயிரோடு 
விட்டிருப்பீர் என்று சொன்னது நினைவிருக்கிறதா?"
 
 "நன்றாக நினைவிருக்கிறது."
 
 "அது உண்மைதானா?"
 
 "சத்தியம், தேவி! தாங்கள் சோதித்துப் 
பார்க்கலாம்."
 
 "ஐயா! என் மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதைச் 
சொல்லட்டுமா?"
 
 "தங்கள் தங்கக் குரலில் எதைச் சொன்னாலும் என் செவிகள் இன்பம் 
அடையும்; உள்ளம் பூரிக்கும்."
 
 "நீர் என்னைச் சோதிப்பதற்காகவே இப்படிப் 
பேசுகிறீர் என்று சந்தேகிக்கிறேன். நான் விரிக்கும் மோக வலையைப்பற்றிப் பேசி, நீர் 
எனக்கு வலை விரிக்கப் பார்க்கிறீர்.என்னுடைய அந்தரங்கத்தை அறிந்து கொள்ள 
முயல்கிறீர்."
 
 பார்த்திபேந்திரன் திடுக்கிட்டுப் போனான். ஆரம்பத்தில் அவன் 
பேச ஆரம்பித்தபோது அந்த எண்ணத்தோடுதான் ஆரம்பித்தான். பிறகு அதை மறந்துவிட்டான். 
கபடமாக ஆரம்பித்த பேச்சு அவனை மோகக்கடலில் உண்மையாகவே தள்ளிவிட்டது. முதலில் அப்படி 
எண்ணியது குறித்து அவன் வெட்கப்பட்டான். அதை வௌியில் காட்டிக்கொள்ளாமல், "தேவி! 
அவ்விதம் தங்களை சோதித்து ஒற்றன் வேலை செய்ய நான் பிரயத்தனப்படும் பட்சத்தில் என் 
தலையில் இடி விழட்டும்!" என்றான். "ஐயோ! அப்படி சொல்லாதீர்" என்று நந்தினி 
அலறினாள்.
 
 "ஏன், தேவி! ஏன்?"
 
 "உங்கள் பெரிய இளவரசரிடமிருந்து 
வந்தானே, இன்னொருவன், அவன் பெயர் என்ன?..."
 
 "வந்தியத்தேவனா!"
 
 "ஆம் 
அவன்தான் என்னிடம் மிகத் தந்திரமாக ஒற்று அறிந்து போக முயன்றான். தாங்கள் சொல்வதைப் 
பார்த்தால் அவன் தலையில் இடி விழுந்தே விட்டது போலிருக்கிறதே!"
 
 "துரதிருஷ்டவசமாக அவன் தலையில் இடி விழவில்லையே! அவன் நின்ற கப்பலில் 
அல்லவா விழுந்தது? அதனால் அவனுக்கு வந்த ஆபத்து, சின்ன இளவரசரையும் அல்லவா பிடித்து 
விட்டது?"
 
 "பாவம்! பழையாறை இளைய பிராட்டியை நினைத்தால் எனக்குப் 
பரிதாபமாயிருக்கிறது. அவள் இந்த உலகில் மிகவும் பிரியம் வைத்திருந்த இருவர் 
ஏககாலத்தில் மாண்டு போனார்கள்! என்ன துரதிர்ஷ்டம்!"
 
 "தேவி! இரண்டு பேர்கள் 
யார்?"
 
 "நீர் சொன்ன இரண்டு பேருந்தான்! இளையபிராட்டிக்குத் தம்பியின் மீது 
தனி வாஞ்சை உண்டு அல்லவா?"
 
 "அது உலகம் அறிந்தது. அவருடைய பிரியத்துக்குப் 
பாத்திரமான இன்னொருவர்...?"
 
 "ஏன் உங்கள் பெரிய இளவரசர் அனுப்பிய தூதன் 
தான்."
 
 "வந்தியத்தேவனையா சொல்கிறீர்கள்?"
 
 "அவனைத்தான்!"
 
 "சீச்சீ! சோழ சாம்ராஜ்யத்தையே ஆட்டுவிக்கும் சக்தி வாய்ந்த பழையாறை 
இளையபிராட்டி அற்பனும், தற்பெருமைக்காரனும், அதிகப்பிரசங்கியுமான அந்த வாலிபன் 
மீது..."
 
 "ஆம்; அந்த வாலிபன் மீது மோகம் கொண்டாள். அதனாலே தான் அவனைப் 
பழுவேட்டரையரின் தண்டனையிலிருந்து தப்புவித்ததற்காக ஓலை கொடுத்து இலங்கைக்கு 
அனுப்பினாள்.பாவம்! இந்தக் கிழவர் இளவரசரின் துர்க்கதிக்குத் தாமே காரணம் என்று 
துடியாய்த் துடிக்கிறார், உண்மையில் அதற்கு இளையபிராட்டிதான் காரணம். அவள் ஓலை 
கொடுத்து அனுப்பாதிருந்தால்..."
 
 "உண்மை, உண்மை! இந்த விபரீதம் எல்லாம் 
ஏற்பட்டிராது."
 
 "என் கணவர் கப்பலிலிருந்து திரும்பி வந்ததும் இந்த உண்மையை 
அவருக்கு நீர் எடுத்துச் சொல்லவேண்டும். சொன்னால், என்னுடைய நன்றிக்குப் 
பாத்திரமாவீர்!"
 
 "அம்மணி தங்களுடைய நன்றிக்குப் பாத்திரமாக இது ஒன்றுதானா 
வழி? வேறு எனக்குத் தாங்கள் இடக்கூடிய பணிகள் இல்லையா?"
 
 "ஐயா! ஒரு பேதைப் 
பெண்ணின் ன்றிக்குப் பாத்திரமாக எத்தனையோ நூறு வழிகள் உண்டு."
 
 "அவற்றில் 
இன்னும் இரண்டொன்றைச் சொல்லுங்கள். ஆதித்த கரிகாலருக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பம் 
ஒன்று கிடைத்தது. அதை அவர் கைசேர விட்டுவிட்டார். விட்டு விட்டு அப்புறம் இரவு 
பகலாகத் துடிதுடிக்கிறார். நான் ஒரு நாளும் அத்தகைய தவற்றைச் செய்யமாட்டேன்!"
 
 "இது சத்தியமா, ஐயா? ஒரு பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அவள் எது 
சொன்னாலும் செய்யக்கூடிய மனிதரா நீங்கள்?"
 
 "எந்தப் பெண் என்பதைப் 
பொறுத்தது. தேவி! நேற்றுவரைக்கும் நான் பார்த்திருக்கும் எந்தப் பெண்ணின் 
விருப்பத்துக்காகவும் எதுவும் செய்திருக்கமாட்டேன்! சொன்னால் சிரித்திருப்பேன். 
இன்று அப்படியல்ல! தாங்கள் சொல்லிப் பாருங்கள். எனக்கு நூறு உயிர்கள் இருந்தால் 
அவ்வளவையும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணம் செய்வேன். ஆயிரம் 
சாம்ராஜ்யங்கள் என் வசம் இருந்தால் அவ்வளவையும் தங்கள் விருப்பத்திற்காகத் தியாகம் 
செய்வேன். இகத்தையும் பரத்தையும் என்றென்றைக்கும் இழக்கும்படி சொன்னால் அதற்கும் 
சித்தமாயிருப்பேன். கொடிய பகைவர்களை மன்னிக்கச் சொன்னால் மன்னிப்பேன். அத்தியந்த 
நண்பர்களின் தலையைக் கொண்டு வந்து தங்கள் காலடியில் போடச் சொன்னால், போட்டுவிட்டு 
மறுகாரியம் பார்ப்பேன்...!"
 
 இவ்விதம் பார்த்திபேந்திரன் வெறி 
கொண்டவனைப்போல் கூறியபோது அவனுடைய உடம்பு தலையிலிருந்து கால்வரையில் நடுநடுங்கியது. 
அவனுடைய வாயிலிருந்து வந்த சொற்கள் குழறின; உதடுகள் துடித்தன; பற்கள் கடித்தன; 
ரோமங்கள் குத்திட்டு நின்றன; மூச்சு விடும் சத்தம் கொல்லன் உலைச் சத்தத்தைப் போலக் 
கேட்டது. பார்த்திபேந்திரனுடைய இந்த மாறுதல் நேயர்களுக்கு வியப்பை அளிக்கும். ஏன்! 
அவனிடமே, "நீ இப்படி ஆவாய்" என்று முதலாவது நாள் யாராவது சொல்லியிருந்தால் அவன் 
நம்பியிருக்கமாட்டான். பிற்காலத்தில் நினைத்துப் பார்த்தால் அவனுக்கேகூட 
வியப்பளிக்கக்கூடிய காரியந்தான்.
 
 ஆனால் இது பார்த்திபேந்திரனைப் பற்றிய 
அதிசயம் மட்டும் அல்ல; மனித இயற்கையைப் பற்றிய இரசியம்.
 
 எத்தனையோ மேதாவிகள் 
காலமெல்லாம் ஆராய்ச்சி செய்த பின்னரும், மனித உடம்பின் அமைப்பு இரகசியத்தை நம்மால் 
முழுதும் அறிந்துகொள்ள முடியவில்லை. மனித இதயத்தின் அமைப்பு இரகசியத்தை நாம் 
எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? வாழ்நாளெல்லாம் பழி பாவங்களில் முழுகிக் 
கிடந்தவர்கள் திடீரென்று ஒருநாள் வைராக்கிய சீலர்களாகிறார்கள்; பக்தி பரவசமடைந்து 
ஆடிப்பாடுகிறார்கள்; இறைவன் கருணைக்குப் பாத்திரமாகிறார்கள்; மனித சமூகத்துக்கு 
ஒப்பற்ற தொண்டுகளும் புரிகிறார்கள்.
 
 இதற்கு மாறாக, நெடுங்காலமாய்த் 
தூய்மையான களங்கமற்ற வாழ்க்கை நடத்தியவர்கள் திடீரென்று ஒருநாள் வழுக்கி 
விழுகிறார்கள்! அப்படி விழும்போது அதல பாதாளத்திலேயே விழுந்துவிடுகிறார்கள்.
 
 பார்த்திபேந்திரனுடைய ஆவேச மொழிகளைக் கேட்டுவந்த நந்தினி, "போதும் ஐயா! 
போதும்! நிறுத்துங்கள்! அவ்வளவு பயங்கரமான காரியம் எதையும் செய்யும்படி தங்களை 
ஒருநாளும் நான் வற்புறுத்தப் போவதில்லை. தங்களுக்கும் எனக்கும் உகந்த சந்தோஷமான ஒரு 
காரியத்தைத் தான் சொல்லப் போகிறேன்" என்றாள்.
 
 
 பக்க 
தலைப்பு 
 
 மூன்றாம் அத்தியாயம்
 ஆந்தையின் குரல்
 நந்தினி கடலை நோக்கினாள்.பழுவேட்டரையர் 
எறிச்சென்ற படகு பார்த்திபேந்திரனுடைய கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தது. 
 நந்தினி பெருமூச்சு விட்டாள். அது பார்த்திபேந்திரனுடைய நெஞ்சில் புயலாக அடித்தது. 
"தேவி! சொல்லுங்கள். நான் செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள். தங்களுக்கும் 
எனக்கும் உகந்தது என்று பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கு எது 
உகந்ததோ அதுதான் எனக்கும் உகந்தது!" என்றான் பல்லவ வீரன்.
 
 அவன் மனத்தில் 
விசித்திரமான எண்ணங்கள் எல்லாம் அந்நேரத்தில் உதித்தன. இந்தப் பெண் அந்தக்கொடிய 
கிழவனிடம் அகப்பட்டுக்கொண்டு கூண்டுக் கிளியைப்போல் தவித்துக் கொண்டிருக்கிறாள் 
என்பதில் சந்தேகமில்லை. அந்தக் காட்டுப் பூனையிடமிருந்து இவளை ஏன் விடுதலை 
செய்யக்கூடாது? இவள் மட்டும் தன் விருப்பத்தைத் தெரிவிக்கட்டும்! அவனை 
அக்கப்பலிலேயே சிறைப்படுத்திக் கண்காணாத தேசத்துக்குக் கொண்டு போய்விட்டுவிடச் 
செய்யலாம்! சண்டாளன்! புதல்வியும், பேத்தியுமாக இருப்பதற்குரிய இளம் பிராயமுடைய 
பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள எப்படி இவன் மனந் துணிந்தது?...
 
 நந்தினி 
இன்னமும் படகையும், கப்பலையும் பார்த்துக் கொண்டிருந்தாள். படகிலிருந்து 
பழுவேட்டரையர் கப்பலில் ஏறுவதைப் பார்த்தாள். "நல்லவேளை! பத்திரமாக ஏறிவிட்டார்! 
எவ்வளவு வீரராயிருந்தாலும் வயதாகிவிட்டதல்லவா? படகிலிருந்து கப்பலில் ஏறும்போது 
தடுமாறாமல் இருக்கவேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருந்தது!" என்றாள்.
 
 பல்லவன் ஏமாற்றமடைந்தான்! 'கிழவனிடம் இவளுக்கு இவ்வளவு பரிவு ஏன்? படகிலிருந்து 
அவன் கடலில் விழுந்து இறந்தால்தான் என்ன? நாட்டுக்கும் க்ஷேமம்; இவளுக்கும் 
விடுதலை! எதற்காக இவ்வளவு பரிவு காட்டுகிறாள்?'
 
 "கிழவருக்குச் சோழ 
குலத்தாரிடம் எவ்வளவு அபிமானம் என்பது இன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது. 
இளவரசருக்கு ஆபத்து என்றதும் எப்படித் துடிதுடித்துப் போய் விட்டார்? ஐயா! இளவரசர் 
தப்பிப் பிழைத்திருக்கக்கூடும் அல்லவா? இறந்துதான் போயிருக்கவேண்டும் என்பது 
நிச்சயம் இல்லையே?" என்றாள் நந்தினி.
 
 "நிச்சயம் இல்லை; ஆனால் அப்பேர்ப்பட்ட 
சுழற் காற்றில் கடலில் குதித்தவர் பிழைத்திருப்பது அசாத்தியம்! விதியின் போக்குக்கு 
நாம் என்ன செய்யமுடியும்?" என்றான் பல்லவன்.
 
 "இதற்கு விதி காரணம் இல்லை; 
அந்தப் பழையாறை ராட்சஸியின் பேராசைதான் காரணம். தங்களுக்குத் தெரியுமா, ஐயா? 
குந்தவை தேவிக்குச் சோதிடத்திலும் ரேகை சாஸ்திரத்திலும் அபார நம்பிக்கை. தம்பியின் 
ஜாதகத்தையும், கைரேகையையும் பார்த்து வைத்துக்கொண்டு அவன் மூன்று உலகையும் ஆளும் 
சக்கரவர்த்தியாகப் போகிறான் என்று நம்பிக்கை வைத்திருந்தாள். ஐயோ! பாவம்! அந்த 
அருமைத் தம்பிக்கு இந்த கதி நேர்ந்தது என்று அறியும்போது அவள் எவ்வளவு கஷ்டம் 
அடைவாள்? அச்சமயம் நான் அவள்கூட இருந்து ஆறுதல் சொல்லவேண்டும் போலிருக்கிறது!"
 
 இவ்விதம் கூறிய நந்தினியின் குரலில் குதூகலம் தொனித்தது. பல்லவன் ஒருகணம் 
ஆச்சரியப்பட்டுப் போனான். பிறகு தன் செவிகளில்தான் கோளாறு என்று தீர்மானித்துக் 
கொண்டான்.
 
 "ராணி தாங்கள் எதற்காக ஆறுதல் சொல்லவேண்டும்? அவளுடைய 
பேராசையினால் நேர்ந்துவிட்ட விபரீதம்தானே இது? அதற்காக அவள் கஷ்டப்பட 
வேண்டியதுதான்..."
 
 "அது எப்படி ஐயா? அவள் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் 
துளித்தால், நெஞ்சு பதறுகிறவர்கள் சோழ நாட்டில் ஆயிரம் பதினாயிரம்பேர் 
இருக்கிறார்கள். அவள் சக்கரவர்த்தியின் செல்வப் புதல்வி மூன்று உலகிலும் ஈடு 
இணையற்ற அழகி!"
 
 "நானும் ஒரு சமயம் அவ்வாறுதான் நினைத்திருந்தேன்! அதாவது, 
தங்களைப் பார்ப்பதற்கு முன்னால்!"
 
 "என்னைப் பார்த்தபிறகு என்ன 
நினைக்கிறீர்கள்?"
 
 "குந்தவை தேவியின் அழகு தங்கள் பாதச் சுண்டு விரலின் 
அழகுக்கு இணையாகாது என்றுதான்."
 
 "இப்போது இப்படித்தான் சொல்வீர்கள். 
நாளைக்கு அவளைப் பார்த்தால் நான் ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறேன் என்பதையே 
மறந்துவிடுவீர்கள்!"
 
 "ஒருநாளும் மாட்டேன். தேவி! என்னைச் சோதனை செய்து 
பாருங்கள் என்றுதான் சொல்லுகிறேனே? தங்கள் கட்டளை இன்னதென்று இக்கணமே 
தெரிவியுங்கள்."
 
 "கட்டளையிடும் பாத்தியதை எனக்குக் கிடையாது. ஐயா! 
விண்ணப்பம் செய்து கொள்கிறேன். பெரிய பழுவேட்டரையரை நான் மணந்த பிறகு சோழ நாட்டில் 
பிளவும், குழப்பமும் ஏற்பட்டிருப்பதாகச் சிலர் அவதூறு சொல்கிறார்கள். அது பொய் 
என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். அதற்குத்தான் தங்கள் உதவியை நாடுகிறேன்."
 
 பார்த்திபேந்திரன் சிறிது ஏமாற்றம் அடைந்தான். நந்தினி, அவளுக்காக ஏதோ ஒரு 
கஷ்டமான காரியத்தில் தன்னை ஏவுவாள் என்று எண்ணியிருந்தான். அதை நிறைவேற்றி அவளை 
மகிழ்விக்க ஆர்வம் கொண்டிருந்தான். ஆனால் அவள் இராஜ்ய காரியத்தைப் பற்றி எதுவோ 
சொல்லுகிறாள்!
 
 "சொல்லுங்கள். ராணி! தங்கள் விருப்பம் எதுவாயிருந்தாலும் 
சொல்லுங்கள்!" என்றான்.
 
 "ஐயா! சோழநாட்டில் அமைதி ஏற்படாமல் தடுத்து வந்தவள் 
இளைய பிராட்டி. அவளுடைய அகம்பாவத்தினால் சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பெருந்தர 
அதிகாரிகளையும் கோபங்கொள்ளச் செய்தாள். தம்பி அருள்மொழிவர்மனை எப்படியாவது இந்தச் 
சோழநாட்டுச் சிம்மாசனத்தில் ஏற்றி விடவேண்டும் என்று அவளுக்கு ஆசை. இதனால் சமரசம் 
ஏற்படாமல் தடுத்து வந்தாள். இப்போது அந்தக் காரணம் போய்விட்டது. இனிமேல் சமரசம் 
செய்து வைப்பது சுலபம். கேளுங்கள், ஐயா! தாங்கள்தான் சொன்னீர்களே! மந்திரிகளும், 
மற்றப் பெருந்தர அதிகாரிகளும் சுந்தர சோழருக்குப் பிறகு மதுராந்தகருக்குப் பட்டம் 
கட்ட விரும்புகிறார்கள். சக்கரவர்த்தியும் அதற்கு இணங்கிவிட்டார்."
 
 "அப்படியா, தேவி!"
 
 "ஆம், ஐயா! இல்லாவிடில் இளவரசரைச் 
சிறைப்படுத்திக் கொண்டுவரக் கட்டளையிட்டிருப்பாரா? ஆனாலும் அது சரியல்ல என்பது என் 
கருத்து. சமரசமாகத் தீர்த்துக் கொள்வதற்கு இடம் இருக்கிறது. வெள்ளாற்றுக்கு 
வடக்கேயுள்ள ராஜ்யத்தை ஆதித்த கரிகாலருக்கு என்றும், தெற்கேயுள்ள பகுதியை 
மதுராந்தகருக்கு என்றும் பிரித்துக் கொள்ளலாமே? தங்கள் முன்னோர்கள், பல்லவ 
மகாசக்கரவர்த்திகள், தொண்டை மண்டலத்தை ஆள்வதுடன் திருப்தி அடைய வில்லையா? பூர்வீகச் 
சோழ மன்னர்கள் இரண்டு வெள்ளாற்றுக்கும் இடையே உள்ள ராஜ்யத்துடன் திருப்தி 
அடையவில்லையா?"
 
 "தேவி இதையெல்லாம் எதற்காக என்னிடம் சொல்லுகிறீர்கள் எந்தச் 
சாம்ராஜ்யம் எப்படிப் போனால் எனக்கு என்ன? யார் எந்த ராஜ்யத்தை ஆண்டால் எனக்கு 
என்ன?.. "
 
 "ஐயா! தாங்கள் ஆதித்த கரிகாலரிடம் உண்மை விசுவாசம் உள்ள 
சிநேகிதர் என்று எண்ணினேன்."
 
 "பிறருக்கு விசுவாசமாயிருந்து, பிறருடைய 
புகழுக்காகப் போராடி, பிறருடைய நன்மைக்காக உழைத்து, - இத்தனை நாளும் 
கழித்தாகிவிட்டது. இனிமேல் எனக்காக நான் வாழ விரும்புகிறேன். ராணி! இதைக் 
கேளுங்கள்! நான் எதற்காக இவ்வுலகில் பிறந்தேன். எதற்காக உயிரோடிருக்கிறேன் என்று 
பலதடவை நான் சிந்தித்ததுண்டு. என் முன்னோர்களாகிய பல்லவ சக்கரவர்த்திகள் பெரிய 
சாம்ராஜ்யங்களை ஆண்டார்கள். மாமல்லபுரத்தைப் போன்ற சொப்பன உலகங்களைச் 
சிருஷ்டித்தார்கள். அவர்களுடைய பெருமையை என் காலத்தில் மீண்டும் நிலைநாட்டப் 
பிறந்திருக்கிறனோ என்று நான் எண்ணியதுண்டு. ஆனால் அதில் என் மனம் ஈடுபடவில்லை: 
ராஜ்யங்களைச் சிருஷ்டிப்பதில் உற்சாகம் கொள்ளவில்லை: சோழ குலத்தின் பெருமைக்கு 
உழைப்பதிலேயே திருப்தி அடைந்தேன். ஆதித்த கரிகாலரின் சிநேகத்தில் மகிழ்ந்தேன். 
இப்படியே என் வாழ்நாளைக் கழித்துவிடுவது என்றுதான் எண்ணியிருந்தேன். 
இன்றைக்குத்தான் என் கண்கள் திறந்தன; சற்று முன்னாலே தான் நான் பிறந்தது எதற்காக 
என்று தெரிந்தது. அதோ கேளுங்கள்! அந்தக் கடல் அலைகளின் குரல் என் உள்ளத்தின் குரலை 
'ஆம் ஆம்' என்று ஆமோதிக்கிறது. அதோ காட்டில் வாழும் பறவைகள் எல்லாம் 'சரி, சரி' 
என்று கூவுகின்றன. தேவி! சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கு போடுவது பற்றி என்னிடம் 
சொல்லவேண்டாம். வேறு ஏதாவது சொல்லுங்கள்! கடல்களுக்குப்பால் உள்ள பவழத் 
தீவிலிருந்து விலை மதிக்க முடியாத பவழங்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். ஆழ்கடலின் 
அடியிலிருந்து முத்துக்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். மேருமலையின் உச்சிச் 
சிகரத்திலே ஏறிச் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரச் சொல்லுங்கள். மேகமண்டலத்துக்கு 
மேலே பறந்து நட்சத்திரங்களைப் பறித்துக் கொண்டு வந்து ஆரம் தொடுத்துத் தங்கள் 
கழுத்தில் போடச் சொல்லுங்கள். பூரணச் சந்திரனைக் கொண்டுவந்து தங்களுடைய முகம் 
பார்க்கும் கண்ணாடியாக்கித் தரும்படி சொல்லுங்கள்!"
 
 "போதும், ஐயா, போதும்! 
என்னை ஏற்கனவே அந்தப் பழையாறைப் பிராட்டி 'பைத்தியம்' என்று சொல்லிக் 
கொண்டிருக்கிறாள். உண்மையாகவே எனக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து விடாதீர்கள்!" 
என்றாள் நந்தினி.
 
 பார்த்திபேந்திரன் சிறிது வெட்கம் அடைந்தான். "பைத்தியம் 
பிடித்திருப்பது எனக்குத்தான்; மன்னியுங்கள். தங்களுடைய விருப்பத்தை முதலில் 
தெரிவியுங்கள்!" என்றான்.
 
 "சோழ நாடெங்கும் - தமிழகமெங்கும் - எனக்கு 
ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயரைப் போக்கிக் கொள்ள விரும்புகிறேன். அதற்குத்தான் 
தங்கள் உதவியை நாடுகிறேன். நான் இந்தக் கிழவரை மணந்ததின் காரணமாகச் சோழ குலத்துக்கே 
கேடு வந்துவிட்டதென்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களாம். மதுராந்தகத்தேவரை இராஜ்ய 
ஆசை கொள்ளச் செய்தது நான்தான் என்று சொல்லுகிறார்களாம். சோழ நாட்டுச் சிற்றரசர்களை 
அவர் பக்கம் திருப்பியதும் நான்தான் என்றும் சொல்கிறார்களாம். இந்த அவப்பெயருடன் 
இறந்து போவதற்கு நான் விரும்பவில்லை...!"
 
 "இறந்து போவதைப்பற்றி ஏன் 
பேசுகிறீர்கள்? என்னைத் துன்புறுத்துவதற்காகவா?"
 
 "பல்லவ குமாரா! தங்களுக்கு 
ரேகை சாஸ்திரம் தெரியுமா? ரேகை சாஷ்திரத்தில் தங்களுக்கு நம்பிக்கை உண்டா?" என்று 
நந்தினி சம்பந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்டாள்.
 
 பார்த்திபேந்திரன் அதற்கு 
நேர் மறுமொழி சொல்லாமல் "எங்கே? கையைக் காட்டுங்கள்!" என்றான்.
 
 நந்தினி 
வலது கையை நீட்டினாள். அதைப் பார்த்திபேந்திரன் சிறிது நேரம் உற்றுப் 
பார்த்துவிட்டு, "ஆச்சரியமான ரேகைகள். இம்மாதிரி காண்பதே அபூர்வம்! அந்தக் கையையும் 
சிறிது காட்டுங்கள்!" என்றான்.
 
 நந்தினி இன்னொரு கையையும் நீட்டினாள். 
பல்லவன் அதையும் பார்த்துவிட்டு, "தேவி! இதற்கு முன் யாராவது தங்கள் கரங்களின் 
அதிசயமான ரேகைகளைப் பார்த்துவிட்டு ஏதாவது சொல்லியிருக்கிறார்களா?" என்று கேட்டான்.
 
 "ஆம்! பழையாறை இளைய பிராட்டி ஒரு தடவை என் கையைப் பார்த்துவிட்டுச் 
சொன்னாள்..."
 
 "என்ன சொன்னாள்?"
 
 "நான் அற்பாயுளில் சாவேன் என்று 
சொன்னாள்."
 
 "அது உண்மைதான்!" என்றான் பார்த்திபேந்திரன்.
 
 "ஐயா! 
நீங்களுமா அப்படிச் சொல்லுகிறீர்கள்?"
 
 "ஆனால் அவள் அரைகுறையாக சாஸ்திரம் 
படித்தவள் என்று தெரிகிறது. இந்தக் கைரேகையில் ஒன்று அற்பாயுளைக் குறிப்பது 
உண்மைதான்; ஆனால் மற்றொரு ரேகை அந்தக் கண்டத்தைக் கடந்து புனர் ஜன்மம் ஏற்படும் 
என்றும் கூறுகிறது. அந்தப் புனர்ஜன்மத்துக்குப் பிறகு கடல் கடந்த பல நாடுகளுக்குப் 
பிரயாணம் செய்யும் பாக்கியம் உண்டு என்றும் மன்னாதி மன்னர்களுக்குக் கிட்டாத ஆனந்த 
வாழ்க்கை வெகுகாலம் உண்டு என்றும் கூறுகிறது. இவ்வளவும் தற்செயலாகக் கடற்கரையில் 
சந்தித்த ஒரு யௌவன புருஷனுடைய உண்மை அன்பினால் கிடைக்கும் என்று தெரிகிறது 
தங்களுடைய சின்னஞ் சிறு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் தன் உயிரையே அர்ப்பணம் 
செய்வான் என்று ரேகைகள் மிகத்தௌிவாகச் சொல்லுகின்றன..."
 
 இவ்விதம் 
கூறிக்கொண்டே பார்த்திபேந்திரன் சட்டென்று நந்தினியின் விரிந்த இரு கரங்களையும் 
பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
 
 நந்தினி கைகளை உதறி 
விடுவித்துக்கொண்டு, "சீச்சீ ! இது என்ன காரியம் செய்தீர்?" என்றாள்.
 
 "மன்னியுங்கள்! இவை தங்கள் கரங்கள் என்பதை மறந்து விட்டேன். இரண்டு 
செந்தாமரை மலர்கள் என்று எண்ணிக் கொண்டேன்" என்றான்.
 
 "பழுவேட்டரையர் 
பார்த்திருந்தால் உம்மை ஈட்டி முனையில் கழுவேற்றிருப்பார்!"
 
 "தேவி! 
தங்களுக்காகக் கொடுப்பதற்கு எனக்கு இருப்பது ஓர் உயிர்தானே என்று 
கவலைப்படுகிறேன்..."
 
 "அந்த ஓர் உயிரையும் இப்படிக் கொடுப்பானேன்? இந்த 
அநாதைப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காகக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருங்கள்!"
 
 "என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்!"
 
 "சோழ சாம்ராஜ்யம் 
தாயாதிக் கலகத்தினால் பாழாகி விடாமல் காப்பாற்றப்பட வேண்டும். அதற்குத் தங்களுடைய 
உதவி வேண்டும்.
 
 "எப்படி?"
 
 "தங்கள் சிநேகிதர் கரிகாலரைக் கடம்பூர் 
சம்புவரையர் வீட்டுக்கு அழைத்து வாருங்கள். சம்புவரையருக்கு ஒரு பெண் இருக்கிறாள். 
அவளை ஆதித்த கரிகாலருக்கு மணம் செய்து விட்டால் என் மனோரதம் பூர்த்தியாகும்."
 
 "இந்த அற்பக் காரியத்துக்குத்தானா இவ்வளவு பீடிகை? ஆதித்த கரிகாலரை அவசியம் 
கடம்பூருக்குக் கொண்டுவந்து சேர்க்கிறேன். அப்புறம்?"
 
 "ஆதித்த 
கரிகாலருக்குச் சம்புவரையர் மகளைக் கலியாணம் செய்து வைத்துவிட்டால் கலகம் பாதி 
தீர்ந்து விட்ட்டதாகும். சோழ சாம்ராஜ்யத்தில் மதுராந்தகருக்குத் தென்பாதியும் 
கரிகாலருக்கு வடபாதியும் என்று பிரித்துக் கொடுத்துவிட்டால் கலகம் முழுதும் 
தீர்ந்ததாகும்."
 
 "பின்னர்?..."
 
 "எனக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட 
பெயர் போய்விடும். பிறகு என் தலைவிதியை நானே நிறைவேற்றிக் கொள்வேன். நடுக்கடலில் 
விழுந்து உயிரை விடுவேன்..."
 
 "நான் பின் தொடர்ந்து வந்து தங்களைக் 
காப்பாற்றுவேன். நம் இருவருடைய புனர் ஜன்மம் ஆரம்பமாகும். கடல்களைக் 
கடந்துதூரதேசங்களுக்குச் செல்வோம். அங்கே தங்களுக்காக ஒரு மாபெரும் ராஜ்யத்தை 
ஸ்தாபிப்பேன்.
 
 "ஐயா! இப்படியெல்லாம் பேசவேண்டாம். தென் தமிழ் நாட்டுப் 
பத்தினிப் பெண்களின் மரபில் வந்தவள் நான். பழுவேட்டரையரின் தர்ம பத்தினி..."
 
 "தேவி! என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள். இந்தக் கிழவரை எதற்காக மணந்து 
கொண்டீர்கள்? இவர் பேரில் காதல் உண்டா? அல்லது இவருடைய பலாத்காரத்திற்காகவா?"
 
 நந்தினி பெருமூச்சு விட்டாள். அவளுடைய கண் விழிகள் மேல் நோக்கிச் சென்றன. 
ஏதோ, பழைய துயரமான ஞாபகங்களில் சிறிது நேரம் ஆழ்ந்திருந்தாள் என்று தோன்றியது.
 
 "பாவம்! கிழவர் பேரில் பழி சொல்ல வேண்டாம். மனதார இஷ்டப்பட்டுத்தான் இவரை 
மணந்தேன்."
 
 "ஏன்? எதற்காக? இவரிடம் அப்படி என்ன கண்டீர்கள்?"
 
 "இவரிடம் ஒன்றும் காணவில்லை. அரண்மனை வாழ்வுக்கும், அதிகாரத்துக்கும் 
ஆசைப்பட்டு நானாகவே இவரை மணந்தேன்."
 
 "என்னால் நம்பமுடியவில்லை!"
 
 "நம்ப முடியாதுதான்.ஆனாலும் அது உண்மை. சின்னஞ் சிறு பிராயத்திலிருந்து 
என்னை ஒருத்தி ஏழை என்றும், அனாதையென்றும் ஏளனம் செய்து வந்தாள். அரச குலத்துப் 
பிள்ளைகளுடன் விளையாடும் உரிமைக்கூடக் கிடையாது என்று சொல்லி வந்தாள். அந்த 
அவமதிப்பைப் பொறுக்க முடியாமல் இந்தத் தவற்றைச் செய்தேன்."
 
 "தேவி! அப்படித் 
தங்களை அவமதித்த பெண் பேய் யார்?"
 
 "தெரியவில்லையா, ஊகிக்க முடியவில்லையா?"
 
 "இளைய பிராட்டி குந்தவைதானே?"
 
 "ஆமாம்."
 
 "அவளுக்கு ஒரு நாள் 
நான் புத்தி புகட்டியே தீர்வேன்."
 
 "கடவுளே அவளுக்குத் தண்டனை 
அளித்துவிட்டார்! அருமைத் தம்பியும், ஆருயிர் காதலனும் ஒரே போக்கில் போய் 
விட்டார்கள்.இப்போது அவளுடைய நிலையை நினைத்தால் எனக்கு அநுதாபமாயிருக்கிறது."
 
 "இந்தத் தண்டனை அந்த அகம்பாவக்காரிக்குப் போதவே போதாது."
 
 "சற்று 
முன் நான் தங்களை வேண்டிக்கொண்ட காரியத்துக்கு உதவி செய்தால் அவளுடைய தண்டனை 
பூர்த்தியாகும். சோழ சாம்ராஜ்யத்திற்குத் தனி நாயகியாக இருக்க வேண்டும் என்ற அவள் 
ஆசை மண்ணோடு மண்ணாகும்."
 
 "தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். பரிசு என்ன 
தருவீர்கள்?"
 
 "எது கேட்டாலும் தருவேன். தமிழ்ப் பெண்குலத்தின் மரபுக்கு 
மாறுபடாத எதைக் கேட்டாலும் தருகிறேன்..."
 
 "ராணி மேலை நாடுகளில் ஒரு புதிய 
சமயம் தோன்றியிருக்கிறதாம். அரபுதேசம், பாக்தாத் தேசம், பாரஷீகம் முதலிய தேசங்களில் 
அது பரவியிருக்கிறதாம். அந்தச் சமயக் கோட்பாட்டின்படி கல்யாணமான தம்பதிகள் 
விரும்பினால் பிரிந்து விடலாம். அதற்குச் சடங்கு உண்டாம். ஸ்திரீகள்கூட வேறு 
கல்யாணம் செய்து கொள்ளலாமாம்.
 
 "ஆம், நானும் அவ்வாறு 
கேள்விப்பட்டிருக்கிறேன்."
 
 "நாம் அந்த நாடுகளுக்குப் போய்விடுவோம். அந்தச் 
சமயக் கோட்பாட்டில் சேர்ந்துவிடுவோம்..."
 
 "அப்படியெல்லாம் சில சமயம் நானும் 
பற்கனவு காண்பதுண்டு. ஆனால் நடக்கக்கூடிய காரியமா?"
 
 "தேவி! ஏன் நடக்காது? 
அவசியம் நடக்கும். தாங்கள் மட்டும் சம்மதித்தால் நடக்கும். தங்களுடன் கப்பல் ஏறிக் 
கடல் கடந்து செல்வேன். தூரதேசங்களில் இறங்குவேன். இந்தக் கையில் பிடித்த கத்தியின் 
வலிமையினால் பெரியதொரு ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன். நவரத்தின கசிதமான சிங்காதனத்தில் 
தங்களை ஏற்றி வைப்பேன்! தங்களுடைய சிரஸில் பார்த்தோர் கண் கூசும்படியான 
மணிமகுடத்தைச் சூட்டுவேன். இதற்காகவே நான் பிறந்திருக்கிறேன்; இதற்காகவே இவ்வளவு 
போர்க்களங்களிலும் சாகாமல் உயிரோடு இருந்து வருகிறேன்..."
 
 "ஐயா! அதோ என் 
கணவர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார். படகு கரையை நெருங்கிவிட்டது. அமைதி 
அடையுங்கள். மற்ற விஷயங்களைப் பிறகு பேசிக் கொள்ளலாம்..."
 
 "பிறகு எப்போது 
தேவி?"
 
 "எங்களுடன் தஞ்சாவூருக்கு வாருங்கள்! விருந்தாளியாக வர அழைப்புக் 
கிடைக்காவிட்டால் சிறையாளியாகவாவது வாருங்கள்!"
 
 "தங்களுடைய அழைப்பே 
எனக்குப் போதும்" என்றான் பார்த்திபேந்திரன்.
 
 பழுவேட்டரையர் ஏறி வந்த படகு 
கரையை அடைந்தது. கிழவர் படகிலிருந்து இறங்கி ஆங்காரமே உருவெடுத்தவர் போல் வந்தார்.
 
 நந்தினியும், பார்த்திபேந்திரனும் எழுந்து நின்றார்கள். அவர்களைப் 
பழுவேட்டரையர் பார்த்த பார்வையில் அனல் பொறி கிளம்பிற்று. பாவம்! அத்தனை நேரம் 
அவர்கள் சேர்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை நினைத்தாலே கிழவருக்குக் 
கோபமாயிருந்தது. அதை வௌியிடுவதற்கும் வழியில்லை. ஆகையால் உள்ளத்தில் கோபம் மேலும் 
கொதித்துப் பொங்கியது.
 
 "நாதா! கப்பலை நன்கு சோதித்தீர்களா? மாலுமிகளை 
நன்றாய் விசாரித்தீர்களா? இவர் கூறியதெல்லாம் உண்மைதானா?" என்று நந்தினி கொஞ்சம் 
குதலை மொழியில் கேட்டாள். அந்தக் குரல் பழுவூர் அரசரைக் கொஞ்சம் சாந்தப் 
படுத்தியது.
 
 "ஆம், ராணி! இவன் கூறியதெல்லாம் உண்மையென்று தெரிந்தது? சோழ 
நாட்டின் தவப்புதல்வன், சோழகுலத்தின் செல்வக்குமரன், - தமிழகத்தின் கண்ணின் மணியான 
இளவரசன், - போய்விட்டான்!" என்று கூறிப் பல்லவனைத் திரும்பிப் பார்த்து, "அதற்குக் 
காரணமானவன் இதோ நிற்கும் கொலை பாதக சண்டாளன்தான்!" என்று கர்ஜித்தார்.
 
 "ஐயா! அதற்குக் காரணம் நான் அல்ல; என் பேரில் பழி போடாதீர்கள்! இளவரசரைக் 
கடல் கொண்டதற்குக் காரணம் சோழ நாட்டையே ஆட்டுவிக்கும் பெண் உருக் கொண்ட மோகினிப் 
பிசாசு!" என்றான் பார்த்திபேந்திரன்.
 
 கிழவரின் கோபம் இப்போது அணை கடந்த 
வெள்ளமாயிற்று. நந்தினியைப் பற்றித்தான் அவன் அவ்வாறு சொன்னதாக எண்ணினார்.
 
 "அடபாவி! என்ன சொன்னாய்?" என்று கூறிக்கொண்டு தரையில் கிடந்த ஈட்டியைச் 
சட்டென்று குனிந்து எடுத்தார் பார்த்திபேந்திரனைக் குறி வைத்து ஓங்கினார்.
 
 நந்தினி அவருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். "நாதா! இது என்ன காரியம்! 
எத்தனையோ பகைவர்களைக் கொன்ற தங்கள் வெற்றிவேல் இந்த விருந்தாளியின் இரத்தத்தினால் 
கறைபடலாமா?" என்றாள்.
 
 "ராணி! இவனா விருந்தாளி! சற்று முன்னால் உன்னைப்பற்றி 
இவன் கூறியதை நீ கேட்கவில்லையா?" என்றார் கிழவர். கோபத்தினால் அவர் குரல் குழறிச் 
சொற்கள் தடுமாறின.
 
 "அவர் என்னைப்பற்றியா சொன்னார்? நன்றாகக் கேட்டுத் 
தெரிந்து கொள்ளுங்கள். அப்படியானால் என் கையிலுள்ள கத்தியினாலேயே பழி வாங்குவேன். 
தங்களுக்குச் சிரமம் தரமாட்டேன்!" என்றாள் நந்தினி.
 
 "ஐயா! நான் என்ன 
பைத்தியமா, பழுவூர் இளையராணியைப் பற்றி அவ்விதம் சொல்வதற்கு? பழையாறையில் உள்ள 
மோகினிப் பிசாசைப் பற்றியல்லவா சொன்னேன்? இளைய பிராட்டி குந்தவை வந்தியத்தேவன் என்ற 
வாலிபனிடம் இரசிய ஓலை கொடுத்து இளவரசருக்கு அனுப்பினாள். அந்த முரட்டு வாலிபனைக் 
காப்பாற்றுவதற்காக அல்லவோ நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் இளவரசர் அலைகடலில் 
குதித்தார்? ஆகையால் இளவரசரின் மரணத்துக்குக் குந்தவை காரணம் என்று சொன்னேன்" 
என்றான் பார்த்திபேந்திரன்.
 
 பழுவேட்டரையர் தம் அவசர புத்தியைக் குறித்துச் 
சிறிது வெட்கம் அடைந்தார். அதை வௌியில் காட்டிக் கொள்ளாமல் "வெறுமனே மூடி மறைக்கப் 
பார்க்காதே! இளவரசரின் அகால மரணத்துக்கு நீயும் பொறுப்பாளிதான். அத்தகைய சுழல் 
காற்று அடித்த சமயத்தில் அவர் கப்பலிலிருந்து படகில் இறங்குவதற்கு நீ எப்படிச் 
சம்மதித்தாய்? தொலைந்து போ! என் கண் முன்னால் நிற்காதே!" என்றார்.
 
 நந்தினி 
குறுக்கிட்டு, "நாதா! இவரையும் தஞ்சாவூர் அழைத்துப் போவது நல்லதல்லவா? நடந்தது 
நடந்தபடி இவரே சக்கரவர்த்தியிடம் தெரிவிப்பது நலம் அல்லவா? இல்லாவிட்டால், ஏற்கனவே 
நம் பேரில் குற்றம் சொல்லக் காத்திருப்பவர்கள் இதையும் சேர்த்துக் கொள்வார்களே? 
நாம்தான் இளவரசரைக் கடலில் மூழ்கடித்து விட்டோம் என்று கூடக் கூசாமல் பழி 
சொல்வார்களே!" என்றாள்.
 
 "சொன்னால் சொல்லட்டும்! அதற்கெல்லாம் நான் 
அஞ்சியவன் அல்ல. சொல்கிறவன் நாக்கைத் துண்டிக்கச் செய்வேன். ஆனால் இவன் நம்மோடு 
வருவதும் ஒரு காரியத்துக்கு நல்லதுதான். பார்த்திபேந்திரா! ஏன் அங்குமிங்கும் 
பார்த்து விழிக்கிறாய்? தப்பி ஓடலாம் என்று பார்க்கிறாயா?" என்று கூறிச் சற்றுத் 
தூரத்தில் நின்ற வீரர்களைக் கைகாட்டி அழைத்தார். நாலு பேர் விரைந்து வந்தார்கள்.
 
 "இவனைப் பிடித்துக் கட்டுங்கள்!" என்று கட்டளையிட்டார். வீரர்கள் 
நாலுபேரும் பார்த்திபேந்திரனை நெருங்கினார்கள். அருகில் நெருங்கி வரும் வரையில் 
அவன் சும்மாயிருந்தான். பிறகு ஒரு நொடிப்பொழுதில் தன் கைவரிசையைக் காண்பித்தான். 
நாலு வீரர்களும் நாலு பக்கம் போய் விழுந்தார்கள்.
 
 "ஐயா! என்னைக் கட்டித் 
தளையிடுவதாயிருந்தால் மற்றவர்களை அனுப்ப வேண்டாம். வீராதி வீரரும் முப்பத்தாறு 
போர்க்களங்களில் அறுபத்து நாலு காயங்களை அடைந்த வருமான பெரிய பழுவேட்டரையர் 
கையினால் கட்டுப்படுவதற்கு நான் சித்தமாயிருக்கிறேன். மற்றவர்களை என் அருகிலும் 
நெருங்க விடமாட்டேன்!" என்றான்.
 
 பழுவேட்டரையர் முகத்தில் சிறிது மலர்ச்சி 
காணப்பட்டது. "நீ வீர பல்லவ குலத்தில் பிறந்த வீரன், சந்தேகமில்லை. எங்களுடன் 
தஞ்சாவூருக்கு வந்துவிட்டுப் போகச் சம்மதம் என்றால் சொல், உன்னைக் கட்ட வேண்டிய 
அவசியமில்லை" என்றார்.
 
 "அதுதான் என் விருப்பம்; சக்கரவர்த்தியை நேரில் 
பார்த்து, நடந்தது நடந்தபடி சொல்ல விரும்புகிறேன். என் பேரிலும் வீண் பழி ஏற்படக் 
கூடாதல்லவா?" என்றான் பார்த்திபேந்திரன்.
 
 "அப்படியானால், உடனே 
புறப்படுவோம்" என்றார் பழுவேட்டரையர். அச்சமயம் அவர்கள் இருந்த இடத்துக்குச் 
சற்றுத் தூரத்திலிருந்த காட்டிலிருந்த ஆந்தை ஒன்று கூவும் சப்தம் கேட்டது. நந்தினி 
சப்தம் வந்த திக்கை நோக்கினாள். அதனால் அவள் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை மற்ற 
இருவரும் கவனிக்கவில்லை.
 
 "இந்தக் கோடிக்கரைக் காடு மிக விசித்திரமானது. 
இங்கே பட்டப்பகலிலேயே கோட்டான் கூவுகிறதே!" என்றான் பார்த்திபேந்திரன்.இன்னும் 
இரண்டு தடவை அதே மாதிரி ஆந்தையின் குரல் கேட்டது.
 
 நந்தினி திரும்பிப் 
பார்த்து, "உடனே புறப்பட வேண்டியது தானா? இன்னும் ஒருநாள் இங்கே இருந்து பார்ப்பது 
நல்லதல்லவா? இளவரசர் ஏதாவது கட்டையைப் பிடித்துக் கொண்டு கரையில் வந்து ஒதுங்கக் 
கூடும் அல்லவா?" என்றாள்.
 
 "பார்த்திபேந்திரா! இளையராணியின் மதிநுட்பத்தைப் 
பார்த்தாயா? நமக்கு இது தோன்றாமல் போயிற்றே? ஆம்; இன்னும் ஒருநாள் இங்கே இருக்க 
வேண்டியதுதான்; இருப்பது மட்டும் போதாது. கடற்கரை நெடுகிலும் ஆட்களை நிறுத்தி 
வைக்கவேண்டும்; தேடிப் பார்க்கவும் சொல்ல வேண்டும்!" என்றார் பழுவேட்டரையர்.
 
 "எனக்கு ஆட்சேபமில்லை, ஐயா! ஆனால் இளவரசர் இனி அகப்படுவார் என்ற நம்பிக்கை 
எனக்கில்லை. சுழற் காற்று அடித்தபோது கடலின் கொந்தளிப்பைப் பார்த்திருந்தால் 
தாங்களும் என்னைப் போலவே நிராசை கொள்வீர்கள்" என்றான் பார்த்திபேந்திரன்.
 
 எனினும் கிழவர் கேட்கவில்லை. கடற்கரை நெடுகிலும் ஒரு காத தூரத்துக்குத் தம் 
ஆட்களைப் பரவலாக நிறுத்தி வைத்தார். அவரும் அமைதியின்றிக் கடற்கரை ஓரமாக அலைந்து 
திரிந்தார்.
 
 
 பக்க 
தலைப்பு  
 
 நான்காம்அத்தியாயம்
 தாழைப் புதர்
 நடுக்கடலில் படகு தொட்டில் ஆடுவது போல் உல்லாசமாக 
ஆடிக்கொண்டு சென்றது. இரண்டு நாளைக்கு முன்னால் அங்கே தென்னைமர உயரம் அலைகள் 
எழும்பி விழுந்தன என்று கற்பனை செய்வதே கடினமான காரியம். 
 படகில் இளவரசர் 
பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவனும், பூங்குழலியும் இருந்தனர். பூங்குழலியின் 
கையில் துடுப்பு இருந்தது. ஆனால் அதை அவள் விசையாகப் போடவில்லை. 
வந்தியத்தேவனுக்கும் இளவரசருக்கும் நடந்த சம்பாஷணையை உற்றுக் கேட்டுக் 
கொண்டிருந்தாள். அவர்களும் பேச்சில் கவனமாக இருந்தார்கள். படகு விரைவாகப் போக 
வேண்டுமென்று ஆவல் கொண்டவர்களாகத் தோன்றவில்லை.
 
 படகும், கோடிக்கரை சேர்ந்த 
பிறகு என்ன செய்யவேண்டும் என்பது பற்றித்தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 
இளவரசர் தஞ்சாவூருக்குப் போகக்கூடாது என்றும், பழையாறைக்கு வரவேண்டும் என்றும் 
வந்தியத்தேவன் வாதிட்டுக் கொண்டிருந்தான். அதற்குப் பல காரணங்களை அவன் எடுத்துச் 
சொன்னான்.
 
 "தங்கள் சகோதரி தங்களை மிக அவசர காரியமாகப் பார்க்க 
விரும்புகிறார். தங்களைக் கையோடு அழைத்துக் கொண்டு வருவதாக வாக்களித்து 
வந்திருக்கிறேன். அதை நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று மன்றாடினான்.
 
 "உன் 
வாக்கை நிறைவேற்றுவதற்காக என் தந்தையின் கட்டளையை மீறச் சொல்கிறாயா?" என்று இளவரசர் 
கோபமாகக் கேட்டார்.
 
 "அது தங்கள் தந்தையின் கட்டளையில்லை; பழுவேட்டரையரின் 
கட்டளையல்லவா?" என்றான் வந்தியத்தேவன்.
 
 அதோடு இன்னொன்றும் சொன்னான். 
"சக்கரவர்த்தியைத் தாங்கள் பார்க்கப் போயிருந்தாலும் சுதந்திரமாகப் பா்க்கப் போவது 
நல்லதா, பழுவேட்டரையர்களின் சிறையாளியாகப் பார்க்கப் போவது நல்லதா? நான் 
சொல்கிறேன், கேளுங்கள். தங்களைப் பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் 
என்ற செய்தி பரவ வேண்டியதுதான். சோழ நாட்டு மக்கள் எல்லோரும் திரண்டு எழுந்து 
வந்துவிடுவார்கள். தங்களுடைய அருமைத் தாய்நாடு ஒரு பயங்கர ரணகளமாகி விடும் அது 
நல்லதா என்று எண்ணிப் பாருங்கள்! அப்படிப்பட்ட கேடு சோழ நாட்டுக்கு ஏற்படக் கூடாது 
என்றுதான் கடவுளே அந்தச் சுழற்காற்றை ஏவி விட்டிருக்க வேண்டும். கடவுளின் 
விருப்பத்துக்கு விரோதமாகத் தாங்கள் சோழ நாட்டில் கலவரத்தை உண்டாக்க 
விரும்புகிறீர்களா?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.
 
 அவ்வளவு நேரமும் அவன் 
சொல்லி வந்த வாதங்களுக்குள் இது இளவரசரின் மனத்தை ஓரளவு மாற்றியது. தம்மைப் 
பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தால், சோழநாட்டில் 
கலவரம் உண்டாவது சாத்தியந்தான். மக்களுக்குத் தம்மிடம் உள்ள அபிமானம் எவ்வளவு 
மகத்தானது என்பது அவருக்கு ஒருவாறு தெரிந்துதானிருந்தது. ஆகையால் இளவரசர் 
சிந்தனையில் ஆழ்ந்தார்.
 
 சிறிது நேரத்துக்குப் பிறகு, "அப்படியே உன் 
விருப்பத்தை நிறைவேற்ற நான் முடிவு செய்தாலும் அது எப்படிச் சாத்தியம்? 
கோடிக்கரையில் பழுவேட்டரையர்களின் ஆட்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்க 
மாட்டார்களா?" என்று கேட்டார்.
 
 "அதற்கு உதவி செய்ய இந்த ஓடக்காரப் பெண் 
இருக்கிறாள். கரையில் எத்தனை பேர் காத்திருந்தாலும் அவர்கள் கண்களில் படாமல் 
கோடிக்கரைக் காட்டுக்குள் நம்மைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவாள். பூங்குழலி! 
நான் கூறியது காதில் விழுந்ததா? அவ்விதம் செய்ய முடியுமா?" என்று வந்தியத்தேவன் 
கேட்டான்.
 
 பூங்குழலி அப்போது ஏழாவது சொர்க்கலோகத்தில் இருந்தாள். இளவரசரைக் 
கடலிலிருந்து காப்பாற்றிப் படகிலேற்றி அழைத்துக்கொண்டு வந்தது அவளுக்கு 
எல்லையில்லாத உள்ளக் களிப்பை அளித்திருந்தது.
 
 கோடிக்கரை சேர்ந்ததும் அவரைப் 
பிரியவேண்டுமே என்ற எண்ணம் இடையிடையே வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தது. மேலும் 
அவருக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமானால் அதைக் காட்டிலும் அவள் 
பெறக்கூடிய பேறு வேறு என்ன இருக்க முடியும்?
 
 "கோடிக்கரைக்குக் கொஞ்சம் 
மேற்கே தள்ளிப் படகைக் கொண்டுபோனால் இருபுறமும் காடு அடர்ந்த கால்வாய் ஒன்று 
இருக்கிறது. அதன் வழியாகப் படகைவிட்டுக் கொண்டு போகலாம். இருபுறமும் அங்கே 
சதுப்புநிலம். சுலபமாக யாரும் வரமுடியாது!" என்று பூங்குழலி சொன்னாள்.
 
 "எங்களை அங்கே விட்டுவிட்டு நீ கோடிக்கரை போய்த் தகவல் விசாரித்துக் கொண்டு 
வர முடியும் அல்லவா?"
 
 "முடியும்; படகை ஒருவரும் பார்க்கமுடியாதபடி 
நிறுத்துவதற்கு எத்தனையோ இடம் இருக்கிறது."
 
 "இளவரசே! கேட்டீர்களா!" என்றான் 
வந்தியத்தேவன்.
 
 "கேட்டேன், அப்பா! என்னுடைய தாய் நாட்டில் என்னைத் 
திருடனைப்போல் பிரவேசிக்கச் சொல்லுகிறாய். திருடனைப்போல் ஒளிந்திருக்கச் 
சொல்லுகிறாய்." என்றார்.
 
 படகில் சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. 
பிறகு இளவரசர், "சமுத்திரகுமாரி! ஏன் படகை அடியோடு நிறுத்தி விட்டாய்?" என்று 
கேட்டார்.
 
 பூங்குழலி வந்தியத்தேவனைப் பார்த்துவிட்டுத் துடுப்பை வலிக்க 
ஆரம்பித்தாள்.
 
 "பாவம்! இந்தப் பெண் எத்தனை நேரம் தனியாகத் துடுப்பு 
வலிப்பாள்? நான் கொஞ்சம் தள்ளிப் பார்க்கிறேன். இங்கே கொடு அம்மா, துடுப்பை!" 
என்றான் வந்தியத்தேவன்.
 
 அவனுடைய எண்ணத்தை அறிந்த இளவரசர் புன்னகை 
புரிந்தார்.
 
 "நண்பனே! உன்னுடைய சூழ்ச்சிகள் எல்லாம் வீண்தான். நான் 
பழையாறைக்கும் போகப் போகிறதில்லை. தஞ்சாவூரையும் பார்க்கப் போகிறதில்லை. கடவுள் 
என்னைக் கைலாசத்துக்கே அழைத்துக் கொண்டு போய் விடுவார் போலிருக்கிறது!" என்றார்.
 
 வந்தியத்தேவனும் பூங்குழலியும் பீதியடைந்து இளவரசரை உற்றுப் 
பார்த்தார்கள்.அவர் உடம்பு நடுங்கத் தொடங்கியிருப்பதைக் கண்டார்கள்.
 
 வந்தியத்தேவன் அவர் அருகில் சென்று, "ஐயா! இது என்ன? தங்கள் உடம்பு ஏன் 
நடுங்குகிறது?" என்று கேட்டான்.
 
 "இது குளிர் காய்ச்சல், அப்பனே! இலங்கையில் 
இந்தக் காய்ச்சல் அதிகம் பரவியிருக்கிறது என்று சொன்னேனே, ஞாபகம் இல்லையா? இந்தச் 
சுரம் வந்தவர்கள் பிழைப்பது அரிது!" என்று சொன்னார் இளவரசர். கடல் நடுவில் கப்பலின் 
பாய்மரம் இடிவிழுந்து பற்றிக் கொண்ட போதுகூட, வந்தியத்தேவன் அவ்வளவு கலக்கம் 
அடையவில்லை. இளவரசரின் வார்த்தைகள் அவ்வளவாக அவனை இப்போது கதிகலங்கச் செய்துவிட்டன.
 
 பூங்குழலியின் கையிலிருந்து துடுப்புத் தானாக நழுவிட்டது. உடம்பில் 
ஜீவசக்தி அடியோடு மங்கிவிட்டது. கண்களில் மட்டுமே உயிரின் ஒளி தோன்றியது. அந்தக் 
கண்களினால் இளவரசரை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
 
 இளவரசரின் உடல் 
நடுக்கம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் தூக்கித் 
தூக்கிப்போட ஆரம்பித்தது. "ஐயா! நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்! ஒன்றும் 
புரியவில்லையே? படகை எங்கே கொண்டு போகட்டும்? பூங்குழலி! கோடிக்கரையில் வைத்தியர் 
இருக்கிறார் அல்லவா?" என்று வந்தியத்தேவன் பதறினான்.
 
 பூங்குழலியோ 
பேசாமடந்தை ஆகியிருந்தாள். இளவரசர் திடீரென்று குதித்து எழுந்தார். நடுங்கிக் 
கொண்டிருந்த அவர் உடம்பு இப்பொழுது நிற்க முடியாமல் தள்ளாடியது.
 
 "என்னை என் 
தமக்கையிடம் கொண்டு போங்கள்! என்னை உடனே இளைய பிராட்டியிடம் கொண்டு போங்கள்!" என்ற 
வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து குளறலாக வௌிவந்தன. இதைக்கேட்ட வந்தியத்தேவன் 
குதூகலம் அடைந்தான். அந்தக் குதூகலத்தில் இன்னது செய்வது என்று தெரியாமல் திகைத்து 
நின்றான்.
 
 நடுக்கத்துடன் ஆடிக்கொண்டு நின்ற இளவரசர் அடுத்த கணத்தில், 
"அக்கா! இதோ வருகிறேன்! உன்னைப் பார்க்க இதோ வருகிறேன்! யார் தடுத்தாலும் இனிமேல் 
கேட்கமாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே படகிலிருந்து கடலில் பாயப் போனார்.
 
 நல்லவேளையாக வந்தியத்தேவன் அப்போது நிலைமை இன்னதென்பதை உணர்ந்தான். இளவரசர் 
சுரத்தின் வேகத்தினால் சுய உணர்வு இழந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டான். கடலில் 
பாயப் போனவரைச் சட்டென்று பிடித்து நிறுத்தினான்.
 
 ஏற்கெனவே மிக்க பலசாலியான 
இளவரசர், இப்போது சுரத்தின் வேகத்தினால் பன்மடங்கு அதிக பலம் பெற்றிருந்தார். 
வந்தியத்தேவனுடைய பிடியிலிருந்து திமிறிக் கொள்ள முயன்றார். தன்னால் மட்டும் அவரைத் 
தடுக்க முடியாது என்பதை வந்தியத்தேவன் கண்டு, "பூங்குழலி! பூங்குழலி! சீக்கிரம் ஓடி 
வா!" என்று அலறினான்.
 
 செயலற்று நின்ற பூங்குழலி உயிர் பெற்றாள். ஒரு 
பாய்ச்சல் பாய்ந்து இளவரசர் அருகில் வந்து அவரைக் கடலில் விழமால் தடுப்பதற்காக ஒரு 
கரத்தைப் பற்றினாள். சுர வேகத்தினால் இளவரசர் பெற்றிருந்த மதயானையின் பலம் உடனே 
மாயமாய்ப் போய்விட்டது. சின்னஞ்சிறு குழந்தையைப் போல் ஆனார்.
 
 "அக்கா! நீ 
சொல்கிறபடியே பேசாமல் படுத்திருக்கிறேன். என் பேரில் வருத்தப்படாதே அக்கா! நீ 
ஒருத்தி இல்லாவிடில் என்னுடைய கதி என்ன?" என்று இளவரசர் கூறிவிட்டு விம்மினார்.
 
 வந்தியத்தேவனும், பூங்குழலியும் இளவரசரை மெதுவாகப் படகில் படுக்க 
வைத்தார்கள்.
 
 அதன் பிறகு பொன்னியின் செல்வர் சும்மா படுத்திருந்தார். 
அவருடைய கண்கள் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவருடைய வாயிலிருந்து 
ஏதேதோ வார்த்தைகள் குழறிக் குழி வந்து கொண்டிருந்தன. சிலவற்றுக்குப் பொருள் 
விளங்கின. பெரும்பாலும் சம்பந்தமற்ற வார்த்தைகளாகத் தோன்றின.
 
 இளவரசரிடம் 
ஆலோசனை கேட்பதில் பயனில்லை என்பதை வந்தியத்தேவன் உணர்ந்தான். இந்த மிகப் பயங்கரமான 
ஆபத்திலிருந்து பொன்னியின் செல்வரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புத் தன் தலையில் 
சுமந்திருக்கிறது என்பதையும் அறிந்தான். ஆனால் புத்திசாலியான இந்தப் பெண் ஒருத்தி 
இருக்கிறாள். இளவரசரைப் பாதுகாப்பதில் தன்னைப் போலவே இவளும் கவலை 
கொண்டவள்தான்.பின்னர், எத்தனையோ அபாயங்களிலிருந்து தன்னைத் தப்புவித்த கடவுளின் 
கருணையும் இருக்கவே இருக்கிறது.
 
 "பூங்குழலி! படகை இனிமேல் வேகமாகச் 
செலுத்திக் கொண்டு போக வேண்டியதுதானே?" என்றான் வந்தியத்தேவன். பூங்குழலியின் 
கரங்கள் இழந்திருந்த வலிமையைப் மீண்டும் பெற்றன. படகு துரிதமாகச் சென்றது.
 
 வந்தியத்தேவன் இளவரசரின் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். மறுபடியும் அவர் 
சுர வேகத்தில் கடலில் குதித்து விட்டால் என்ன செய்வது என்பதை நினைத்தபோதே அவன் கதி 
கலங்கியது. ஆகையால் சர்வ ஜாக்கிரதையாக அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அதே 
சமயத்தில் மேலே செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் உள்ளம் தீவிரமாகச் 
சிந்தனை செய்தது.
 
 "பெண்ணே! உனக்கு என்ன தோன்றுகிறது! நாம் துணிந்து 
கோடிக்கரைக்கே போய் விடலமா? இளவரசரைப் பாதுகாப்பதற்கு உன் குடும்பத்தார் உதவி 
செய்வார்கள் அல்லவா?" என்று கேட்டான்.
 
 "ஐயா! இந்தக் காலத்தில் யாரை 
நம்பலாம். யாரை நம்பக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்? என் தமையன் மனைவி 
ஒருத்தி இருக்கிறாள். அவள் பணத்தாசை பிடித்தவள். என் தந்தைக்குப் படி அளப்பவர்கள் 
பழுவேட்டரையர்கள்!" என்றாள் பூங்குழலி.
 
 "மேலும், தங்களைப் பிடிக்க வந்த 
பழுவூர் ஆட்கள் இன்னும் கோடிக்கரையில் தங்கியிருக்கலாம். இளவரசரின் வரவை 
எதிர்பார்த்து மேலும் புதிய ஆட்களும் வந்திருக்கலாம்!" என்று தொடர்ந்து கூறினாள்.
 
 அவளுடைய முன் யோசனையைக் குறித்து வந்தியத்தேவன் வியப்படைந்தான். இந்த 
இக்கட்டான சமயத்தில் தனக்கு அவளுடைய உதவி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.
 
 "அப்படியானால், நேரே கோடிக் கரைக்குப் போவது அபாயம் என்று நீயும் 
எண்ணுகிறாயா?" என்றான்.
 
 "அதோ பாருங்கள்!" என்று சுட்டிக் காட்டினாள் 
பூங்குழலி.
 
 அவள் சுட்டிக்காட்டிய திசையில் கப்பல் ஒன்று நின்று 
கொண்டிருந்தது அதற்கு அப்பால் கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் உச்சியும் தெரிந்தது.
 
 "ஆகா! பெரிய மரக்கலம் ஒன்று நிற்கிறதே! அது யாருடைய கப்பலோ என்னமோ! ஒரு 
வேளை பார்த்திபேந்திரனுடைய கப்பலாயிருக்கலாம். அப்படியிருக்குமானால், இந்த நிலையில் 
இளவரசரைக் காஞ்சிக்கு அழைத்துப் போவதே நல்லதல்லவா?"
 
 "பழுவேட்டரையரின் 
கப்பலாகவும் இருக்கலாம், ஐயா! கப்பலுக்குப் பின்னால் ஏதாவது தெரிகிறதா!"
 
 "கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் உச்சி தெரிகிறது!"
 
 "அதில் ஏதாவது 
வித்தியாசமாய்க் காணப்படுகிறதா!"
 
 "எனக்கு ஒன்றும் வித்தியாசமாய்த் 
தெரியவில்லையே."
 
 "எனக்குத் தெரிகிறது; அதன் உச்சியில் கூட்டமாக மனிதர்கள் 
நின்று கடலை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது."
 
 "அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு இந்தப் படகு தெரியுமா?"
 
 "தெரியாது. 
இன்னும் கொஞ்சம் கரையை நெருங்கினால் தெரியும்."
 
 "எல்லாவற்றுக்கும் நாம் 
முன் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது. நீ முன்னம் சொன்னாயே, கோடிக்கரைக்கு மேற்கே 
கால்வாய் ஒன்று இருக்கிறதென்று? அங்கேயே படகை விடலாமா?"
 
 "அப்படித்தான் 
செய்ய வேண்டும். இருட்டுகிற சமயத்துக்கு அங்கே போய்ச் சேரலாம். ஐயா! நீங்கள் ஒரு 
நாள் இருண்ட மண்டபத்தில் ஒளிந்திருந்தீர்களே? அதற்கு வெகு சமீபம் வரையில் அந்தக் 
கால்வாய் வருகிறது.இளவரசருடன் தாங்கள் சற்று நேரம் அங்கே தாமதித்தால் நான் போய் 
எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு விரைவில் வந்து சேருகிறேன்."
 
 "கால்வாய் 
அங்கேயே நின்று விடுகிறதா, பூங்குழலி! மேலும் எங்கேயாவது போகிறதா?"
 
 "கோடிக்கரையிலிருந்து நாகைப்பட்டினம் வரையில் அந்தக் கால்வாய் போகிறது" 
என்றாள் பூங்குழலி.
 
 இந்தச் சமயத்தில் பொன்னியின் செல்வர் சுரவேகத்தில் 
தனக்குத்தானே பேசிக்கொண்டது கொஞ்சம் உரத்த சப்தத்துடன் கேட்டது.
 
 "ஆமாம். 
அக்கா, ஆமாம்! நாகைப்பட்டினத்துப் புத்த பிக்ஷுக்கள் சொன்னதாகக் கூறினாயே? அதன் 
படியே நடந்தது. அநுராதபுரத்தில் புத்த பிக்ஷுக்களின் மகா சங்கத்தார் எனக்கு 
இலங்கைச் சிங்காதனத்தையும், கிரீடத்தையும் அளிக்க முன் வந்தார்கள். நான்தான் 
மறுத்து விட்டேன், அக்கா! இராஜ்யத்தில் எனக்கு ஆசையில்லாதபடியால்தான் மறுதளித்தேன். 
நீ வேறு எது சொன்னாலும் கேட்கிறேன். இராஜ்யம் ஆளும் தொல்லை மட்டும் எனக்கு 
வேண்டாம்! அதைக் காட்டிலும் கடலில் படகு விட்டுக்கொண்டு எவ்வளவு 
ஆனந்தமாயிருக்கலாம். கேள், அக்கா! கோடிக் கரையில் ஓடக்காரப் பெண் ஒருத்தி 
இருக்கிறாள்..."
 
 இதைக் கேட்ட பூங்குழலியின் உடம்பெல்லாம் 
புளங்காங்கிதமடைந்தது.வந்தியத்தேவனுக்கோ ஆத்திரம் வந்தது. மேலே என்ன சொல்லப் 
போகிறாரோ என்று கேட்க இருவரும் அடங்கா ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென்று 
இந்த இடத்தில் இளவரசருக்குச் சுய உணர்வு கொஞ்சம் வந்ததாகத் தோன்றியது.
 
 சுற்று முற்றும் விழித்துப் பார்த்துவிட்டு, "இன்னும் கோடிக்கரை 
வரவில்லையா?" என்று ஈன சுரத்தில் கேட்டார் இளவரசர்.
 
 வந்தியத்தேவன், "அதோ 
கரை தெரிகிறது!" என்றான்.இளவரசரிடம் யோசனை கேட்கலாமா, வேண்டாமா என்று அவன் 
யோசிப்பதற்குள் மீண்டும் இளவரசர் நினைவை இழந்து சுரப்பிராந்தி உலகத்துக்குப் 
போய்விட்டார்.
 
 இளவரசர், கடைசியாக 'ஓடக்காரப்பெண்'ணைப் பற்றிக் கூறிய 
வார்த்தைகள் பூங்குழலியின் மனத்தில் எண்ண அலைகளை எழுப்பி விட்டிருந்தன. 
வந்தியத்தேவனையும், இளவரசரையும் பார்ப்பதற்கே அவளுக்குச் கூச்சமாயிருந்தது. ஆகையால் 
படகு சென்ற திசையையே பார்த்த வண்ணம் துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்தாள். அதுகாறும் 
கப்பல் நின்ற இடத்தை நோக்கிச் சென்ற படகு இப்போது திசை திரும்பித் தென் மேற்குப் 
பக்கமாகச் சென்று கொண்டிருந்தது.
 
 இருட்டுகிற நேரத்தில் கடலிலிருந்து 
பூமிக்குள் குடைந்து சென்ற கால்வாயின் உள்ளே பிரவேசித்தது. பூங்குழலி கூறியது போலவே 
அங்கே இருபுறமும் கரைகள் உயர்ந்த மேடாக இருந்தன. அந்த மேட்டுக் கரைகளில் மரங்கள் 
அடர்த்தியாகவும், உயரமாகவும் வளர்ந்திருந்தன.
 
 படகைக் கரையோரமாக 
நிறுத்திவிட்டுப் பூங்குழலி மெல்லிய குரலில், "ஐயா சற்றுப் படகைப் பார்த்துக் 
கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுக் கரையில் இறங்கினாள். கரையில் வளர்ந்திருந்த 
உயரமான ஒரு மரத்தின் மேல் ஏறிச் சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறகு அவசரமாக இறங்கி 
வந்தாள். "நல்லவேளை! இங்கே வந்தோம். கடற்கரையோரமாகச் சுமார் ஒரு காத தூரத்துக்கு 
ஆட்கள் நின்று காவல் புரிகிறார்கள். கலங்கரை விளக்கின் அருகில் ஒரு கூட்டமும் 
கோஷமுமாக இருக்கிறது!" என்றாள்.
 
 "யாராயிருக்கும் என்று ஏதாவது தெரிகிறதா?" 
என்று வந்தியத்தேவன் ஆவலுடன் கேட்டான்.
 
 "நன்றாய்த் தெரியவில்லை, ஆனால் 
பழுவேட்டரையரின் ஆட்களாய்த்தான் இருக்கவேண்டும். வேறு யாராயிருக்க முடியும்? 
எப்படியிருந்தாலும், நான் சொன்ன இடத்துக்கு முதலில் போய்ச் சேருவோம். இரவு இரண்டாம் 
ஜாமத்துக்குள் நான் என் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் நிசசயமாய்த் தெரிந்து 
கொண்டு வருகிறேன்" என்றாள்.
 
 "பெண்ணே! உன்னை யாராவது பார்த்து விட்டால், 
என்ன செய்கிறது? உனக்கு ஏதேனும் இச்சமயம் நேர்ந்துவிட்டால், எங்கள் கதி அதோகதி 
தான்!" என்றான் வந்தியத்தேவன்.
 
 "ஐயா! என் உயிரைப் பற்றி இத்தனை நாளும் நான் 
இலட்சியம் செய்ததில்லை. இன்றைக்குத்தான் கவலை பிறந்திருக்கிறது. இளவரசருக்கு அபாயம் 
நீங்கும் வரையில் என் உயிருக்கு ஒன்றும் வராது!" என்றாள் பூங்குழலி.
 
 படகு 
கால்வாய்க்குள் மெள்ளச் மெள்ளச் சென்றது. சப்தம் சிறிதும் வௌியில் கேளாதபடி மிக 
மெதுவாகப் பூங்குழலி துடுப்பு வலித்தாள்.
 
 கால்வாயின் இருபுறமும் இருள் 
சூழ்ந்திருந்தது கரை ஓரமாக உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் கரிய நிழல்கள் 
கால்வாயில் விழுந்து அதன் கரிய நீரை மேலும் கரியதாக்கின.
 
 வானத்திலிருந்து 
விண்மீன்கள் எட்டிப் பார்த்தன. வந்தியத்தேவனைப் போலவே நட்சத்திரங்களும் மிகுந்த 
கவலையுடன் அப்படகின் போக்கைக் கவனித்ததாகத் தோன்றியது.
 
 நீரில் பிரதிபலித்த 
நட்சத்திரங்கள், கரையிலிருந்த மரங்கள் காற்றில் ஆடிய போது அவற்றின் நிழலும் 
ஆடியபடியால், அடிக்கடி சலனமடைந்து கொண்டிருந்தன. வந்தியத்தேவனுடைய உள்ளத்தின் 
சஞ்சலத்தை அவை சரியாகவே பிரதிபலித்தன.
 
 ஒரு யுகம்போலத் தோன்றிய ஒரு நாழிகை 
நேரம் படகு கால்வாயில் சென்ற பிறகு, பூங்குழலி படகைக் கரையோரமாக நிறுத்தினாள்.
 
 பூங்குழலி கால்வாயின் கரைமீதேறிக் காட்டு வழியில் புகுந்து சென்றாள். 
அதாவது அவளுடைய உடம்பு சென்று கொண்டிருந்தது; அவளுடைய உயிர் கால்வாயில் விட்டிருந்த 
படகிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
 
 அந்த முன்னிருட்டி நேரத்தில் 
முட்செடிகள், மேடு பள்ளங்கள், காட்டு ஜந்துக்கள் ஒன்றையும் இலட்சியம் செய்யாமல் 
அதிவிரைவாக நடந்து சென்றாள். தடைகள் இல்லாத இடங்களில் ஓடவும் செய்தாள். நேரே 
கோடிக்கரைக் குழகர் கோயிலைக் குறி வைத்துக்கொண்டு போனாள். அவள் கோயில் வாசலை 
அடைந்ததற்கும், குருக்கள் சுவாமி சந்நிதியின் கதவைப் பூட்டுவதற்கும் சரியாக 
இருந்தது.
 
 அக்கம் பக்கம் பார்த்து, வேறு யாரும் இல்லை என்று தெரிந்து 
கொண்டாள். கதவைப் பூட்டிவிட்டுத் திரும்பிய குருக்கள் எதிரில் போய் நின்றாள். 
குருக்கள் அவளை அந்த நேரத்தில் பார்த்துச் சிறிது வியப்படைந்தார். அவளுடைய 
சுபாவத்தை நன்கு அறிந்தவராயிருந்தும் கூடக் கொஞ்சம் திடுக்கிட்டுத் திகைத்துப் போய் 
விட்டார்.
 
 "நீயா, பூங்குழலி! வேறு யாரோ என்று பார்த்தேன். கோடிக்கரை 
முழுதும்தான் ஒரே அமர்க்களப்படுகிறதே; எங்கே அம்மா, உன்னைக் கொஞ்ச நாளாகக் காணோம்? 
இவ்வளவு தடபுடலிலும் உன்னைப்பற்றித் தகவல் இல்லையே என்று இன்று சாயங்காலம் கூட 
யோசித்தேன்" என்றார்.
 
 "வௌியூருக்குப் போயிருந்தேன்.சுவாமி! ஏதோ 
அமர்க்களமாயிருக்கிறதேயென்றுதான் உங்களிடம் விசாரிக்கலாம் என்று வந்தேன். 
கடற்கரையெல்லாம் நிற்பவர்கள் யார்?" என்று பூங்குழலி கேட்டாள்.
 
 "உனக்கு 
ஒன்றுமே தெரியாதா? வீட்டுப் பக்கம் போக வில்லையா?"
 
 "வீட்டுப் பக்கம் 
போனேன். அங்கே யார்யாரோ கூட்டமாயிருக்கவே திரும்பிவிட்டேன்.புது மனிதர்களைக் 
கண்டால் எனக்குப் பிடிக்காது என்றுதான் உங்களுக்குத் தெரியுமே? வந்திருப்பவர்கள் 
யார்?"
 
 "பெரிய பழுவேட்டரையர் வந்திருக்கிறார்.அவருடைய இளையராணி 
வந்திருக்கிறாள். அவர்களுடைய பரிவாரங்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் 
காஞ்சிபுரத்துப் பார்த்திபேந்திர பல்லவனாம்! அவனும் வந்திருக்கிறான். வெறுமனே 
வரவில்லை, பயங்கரமான செய்தியுடன் வந்திருக்கிறான். உனக்கு அதுகூடத் தெரியாதா, 
பூங்குழலி?"
 
 "அது என்ன பயங்கரமான செய்தி? எனக்கு ஒன்றுமே தெரியாதே?"
 
 "அந்தப் பாவியினுடைய கப்பலில் இளவரசர் பொன்னியின் செல்வரும் வந்தாராம். 
வழியில் சுழற்காற்று அடித்ததாம். யாரையோ காப்பாற்றுவதற்காக இளவரசர் கடலில் குதித்து 
விட்டாராம்! பிறகு அகப்படவேயில்லையாம்! ஒருவேளை இந்தக் கடற்கரையில் வந்து 
ஒதுங்குவாரோ என்று பார்ப்பதற்காகத்தான் பழுவேட்டரையரின் ஆட்கள் கோடிக்கரையெங்கும் 
அலைகிறார்கள். ஏன் அவருடைய இளையராணி கூட அலைகிறாள். சற்று முன்னால் இங்கேகூட அந்த 
அம்மாள் வந்திருக்கிறாள். பூங்குழலி! பழுவூர் இளையராணியைப் பற்றி ஜனங்கள் 
என்னவெல்லாமோ பேசிக்கொள்கிறார்கள். அதெல்லாம் சுத்தத் தவறு! நம் இளவரசருக்கு 
நேர்ந்த கதியைக் குறித்து அந்த அம்மாள் எப்படித் துடிதுடிக்கிறாள் தெரியுமா?"
 
 "அப்படியா குருக்களய்யா? பழுவூர் ராணியின் நல்ல குணத்தைப் பற்றித் தாங்கள் 
சொல்வது எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. ஆனால் இங்கே எதற்காக அந்த ராணி வந்தாளாம்?"
 
 "இளவரசர் எப்படியாவது உயிரோடு அகப்படவேண்டும் என்று குழகரைப் 
பிரார்த்தித்துக் கொள்வதற்காக வந்தாளாம். உன்னைப் போல் எல்லோரும் கல்நெஞ்சு 
படைத்தவர்களாயிருக்கிறார்களா? இளவரசரைப் பற்றிய பயங்கரச் செய்தி கேட்டுக்கூட நீ 
துளிக்கூடக் கலங்கவில்லையே?
 
 "நாம் கலங்கி என்ன பயன் சுவாமி? எல்லாம் 
விதியின்படி நடக்கும் என்று நீங்களே எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறீர்களே அது 
போனால் போகட்டும். அவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருக்கும்போது நான் என் 
வீட்டுக்குப் போக விரும்பவில்லை. கையிலே வைத்திருக்கும் பிரஸாதத்தை என்னிடம் 
கொடுத்துவிட்டுப் போங்கள். நான் இங்கேயே சாப்பிட்டுவிட்டுக் கோவிலிலேயே இருந்து 
விடுகிறேன்."
 
 "நீ ஒரு தனிப்பிறவிதான், பூங்குழலி! பெரிய மனிதர்கள் வந்தால் 
எல்லோரும் அவர்களைப் போய்ப் பார்க்கவும், பழக்கம் செய்து கொள்ளவும் 
விரும்புவார்கள். உனக்கு வேற்று மனிதகளையே பிடிப்பதில்லை. அதிலும் பெரிய மனிதர்கள் 
என்றால் ஒரே பயம். பெரிய மனிதர்கள் என்றால் உன்னைக் கடித்து விழுங்கி விடுவார்களா? 
எதற்காக இந்தக் காட்டில் தனியாக இருக்க வேண்டும்?"
 
 "குருக்களய்யா! 
பிரஸாதத்தைக் கொடுக்க உங்களுக்கு இஷ்டமில்லாவிடில் வேண்டாம். என்னை வீணில் 
திட்டாதீர்கள்!"
 
 "சிவ சிவா! உன்னை ஏன் நான் திட்டுகிறேன்? இந்தப் பிரஸாதம் 
உன் பசிக்குப் போதாதே என்று பார்த்தேன். தாராளமாய் வாங்கிக்கொள்!" என்று அர்ச்சகர் 
துணியில் கட்டிவைத்திருந்த சுவாமிப் பிரஸாதத்தைக் கொடுத்தார்.
 
 மூட்டையை 
வாங்கிப் பூங்குழலி பிரித்துப் பார்த்துவிட்டு, "என் பசிக்கு இது போதாதுதான்! 
அவ்வளவு பெரியசுவாமிக்கு இவ்வளவு குறைவாக நைவேத்தியம் வைக்கிறீர்களே! இது நியாயமா, 
சுவாமி! போனால் போகட்டும்; அந்தக் கெண்டியில் என்ன இருக்கிறது? குடிக்கிற ஜலமா?"
 
 "இல்லை, சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால்! குழந்தைக்காக எடுத்துக்கொண்டு 
போகிறேன்."
 
 "இன்றைக்கு நானே உங்கள் குழந்தையாயிருக்கிறேன். அதையும் 
கொடுத்துவிட்டுப் போங்கள் உங்களுக்குப் புண்ணியம் உண்டு."
 
 "நல்ல பெண் 
அம்மா, நீ! போகட்டும், கெண்டியையாவது பத்திரமாய் வைத்திரு!"
 
 இவ்விதம் 
சொல்லிக் குருக்கள் கெண்டியையும் பூங்குழலியிடம் கொடுத்தார். அச்சமயம் தூரத்தில் 
எங்கிருந்தோ ஆந்தையின் குரல் கேட்டது.
 
 பூங்குழலி சிறிது திகைத்து, "ஐயா! 
அது என்ன சப்தம்?" என்று கேட்டாள்.
 
 "தெரியவில்லையா, அம்மா! கோட்டான் 
கூவுகிறது. இந்தக் கோடிக்கரைக் காட்டில் கோட்டானுக்கா பஞ்சம்!" என்று சொன்னார் 
குருக்கள்.
 
 மறுபடியும் அந்தக் குரல் கேட்டது.
 
 "ஆமாம்; கோட்டான் 
குரல் மாதிரிதான் இருக்கிறது!" என்றான் பூங்குழலி.
 
 "உன்னை ஒரு கோட்டானும் 
ஒன்றும் செய்யாது. கோயில் பிரகாரக் கதவைத தாளிட்டுக் கொண்டு படுத்துக்கொள், அம்மா!" 
என்று சொல்லிவிட்டுக் குருக்கள் நடையைக் கட்டினார்.
 
 குருக்கள் மறைந்ததும், 
பூங்குழலியும் புறப்பட்டாள். பிரஸாதத்தை மடியில் கட்டிக்கொண்டு, கெண்டியைக் கையில் 
எடுத்துக்கொண்டு கிளம்பினாள். கோட்டானின் குரல் கேட்ட திசையை நோக்கிச் சென்றாள். 
கொஞ்ச தூரம் போனதும், ஒரு குறுகிய வாய்க்கால் குறுக்கிட்டது. அதன் இருபுறமும் 
தாழம்பூப் புதர்கள் காடாக மண்டி வளர்ந்திருந்தன.
 
 அந்த வாய்க்காலின் கரையைப் 
பிடித்துக்கொண்டே பூங்குழலி நடந்தாள். தாழம்பூச் செடிகளின் முட்கள் சில சமயம் 
குத்தின. அதை அவள் பொருட்படுத்தவில்லை.
 
 தாழம்பூக்கள் வெடித்து மலர்ந்து 
நறுமணத்தைப் பரப்பின. அந்த மணம் மற்றவர்களைப் போதை கொள்ளச் செய்திருக்கும். ஆனால் 
பூங்குழலிக்கு அந்த ஞாபகம் கூட வரவில்லை.
 
 கரையோடு காலடிச் சப்தம் கேளாதபடி 
மெள்ளமெள்ள நடந்து போனாள். அவள் செவிகள் வெகு கவனமாக உற்றுக் கேட்டுக் 
கொண்டிருந்தன. காட்டுப் பிரதேசத்தில் இரவில் எத்தனையோ விதவிதமான சப்தங்கள் கேட்கும் 
அல்லவா? அவையெல்லாம் அவளுடைய கவனத்தைக் கவரவில்லை.
 
 பின்னர், அவள் என்ன சப்தத்தைத்தான் எதிர் பார்த்தாள். இதோ!...இருவர் 
மெல்லிய குரலில் பேசும் சப்தம் கேட்டது. ஒன்று ஆண்குரல், இன்னொன்று பெண்ணின் குரல். 
பூங்குழலி நன்றாக மறைந்து நின்று கொண்டாள். அவர்கள் பேசுவது இன்னதென்பதைக் கவனமாக 
உற்றுக் காதுகொடுத்துக் கேட்டாள்.
 
 "மந்திரவாதி! இளவரசர் கடலில் விழுந்து 
இறந்து விட்டதாகத்தான் உன்னைப்போல் எல்லாரும் நம்புகிறார்கள். பழுவேட்டரையரும் 
உருகி மாய்கிறார். ஆனால் நான் நம்பவில்லை!" என்று அந்தப் பெண்குரல் கூறியது.
 
 
 பக்க 
தலைப்பு 
 
 ஐந்தாம் அத்தியாயம்
 ராக்கம்மாள்
 பழுவேட்டரையரும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து 
கடற்கரையோரமாக உலாவச் சென்ற பிறகு, நந்தினி சிறிதுநேரம் தனியாக இருந்தாள். கடல் 
அலைகளைப் பார்த்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். 
 "ராணி அம்மா!" என்று 
குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். கலங்கரை விளக்கின் காவலர் தியாக 
விடங்கரின் மருமகள் அங்கே நின்றாள்.
 
 "நீ யார்?" என்று நந்தினி கேட்டாள்.
 
 "என் பெயர் ராக்கம்மாள்!"
 
 "எங்கே வந்தாய்?"
 
 இதற்கு மறுமொழி 
சொல்லாமல் ராக்கம்மாள் நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
 
 "என்னடி பார்க்கிறாய்? என் முகத்தில் அப்படி என்ன இருக்கிறது?"
 
 ராக்கம்மாள் திடுக்கிட்டு, "மன்னிக்க வேண்டும், அம்மா தங்களை பார்த்ததும் 
இன்னொரு முகம் எனக்கு ஞாபகம் வந்தது. ஆனால், அப்படி ஒரு நாளும் இருக்க முடியாது" 
என்றாள்.
 
 "என்னடி உளறுகிறாய்? எது எப்படி இருக்க முடியாது?"
 
 "அந்த 
ஊமை வெறியளுக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்க முடியாது."
 
 "அவள் யார் ஊமை?"
 
 "ஈழத்தில் ஒருத்தி இருக்கிறாள்! என் 
மாமனாருக்குப் பெரியப்பன் மகள். சில சமயம் இங்கேயும் வருவாள்."
 
 "அவளுக்கும் 
எனக்கும் என்ன?"
 
 "அதுதான் சொன்னேனே, உறவு ஒன்றும் இருக்க முடியாது என்று."
 
 "பின் ஏன் என்னைப் பார்த்ததும் அவளுடைய ஞாபகம் வந்தது?"
 
 "என் 
கண்களின் கோளாறுதான். தங்கள் முகம்..."
 
 "அவள் முகம் மாதிரி இருந்ததா?"
 
 "முதலில் அப்படித் தோன்றியது."
 
 "ராக்கம்மா! இப்போது அந்த ஊமை இங்கே 
இருக்கிறாளா?"
 
 "இல்லை, அம்மா! அபூர்வமாக எப்போதாவது வருவாள்."
 
 "மறுபடியும் வரும்போது என்னிடம் அழைத்து வருகிறாயா?"
 
 "எதற்காக, 
ராணி அம்மா?"
 
 "என் முகம் மாதிரி முகமுடையவளைப் பார்க்க விரும்புகிறேன்."
 
 "அதுதான் என் கண்களின் பிரமை என்று சொன்னேனே?"
 
 "எதனால் அப்படி 
நிச்சயமாகச் சொல்கிறாய்?"
 
 "ராணி! தாங்கள் பாண்டிய நாட்டைச் 
சேர்ந்தவர்தானே?"
 
 "ஆமாம்; நீ?"
 
 "நானும் பாண்டிய நாட்டாள். சற்று 
முன் நான் சொன்ன ஊமை, சோழ நாட்டவள். ஆகையால்.."
 
 "இருந்தாலும் பாதகமில்லை; 
உன்னைப் போல் இன்னும் சிலரும் அவளைப் பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவளை 
என்னிடம் அழைத்து வருகிறாயா? அழைத்து வந்தால் உனக்கு வேண்டிய பொருள் தருவேன்."
 
 "ராணி! அவளை அழைத்து வருவது சுழற்காற்றை அழைத்து வருவது போலத்தான். இருந்த 
இடத்தில் அவள் இருக்கமாட்டாள். பிறர் சொல்லுவதையும் கேட்கமாட்டாள். வெறிபிடித்தவள் 
என்று சொன்னேனே?"
 
 "சரி! நீ எதற்காக இப்போது வந்தாய்? அதையாவது சொல்!"
 
 "ராணி! சில நாளைக்கு முன்பு இரண்டு பேர் இங்கே வந்தார்கள். தங்கள் பெயரைச் 
சொன்னார்கள்."
 
 "என் பெயரை ஏன் சொன்னார்கள்?"
 
 "தங்கள் 
காரியத்துக்காக அவசரமாக இலங்கைக்குப் போக வேண்டும் என்றார்கள். என் புருஷனை 
அவர்களுக்குப் படகோட்ட அனுப்பி வைத்தேன்."
 
 "திரும்பி வந்து விட்டானா?"
 
 "வரவில்லை. அதுதான் கவலையாயிருக்கிறது, அவருக்கு ஏதாவது 
நேர்ந்திருந்தால்..."
 
 "ஒன்றும் நேராது கவலைப்படாதே! அப்படி ஏதாவது 
நேரிட்டிருந்தால் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன். படகிலே போன மனிதர்களைப் பற்றி 
ஏதாவது தெரியுமா?"
 
 "அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். சற்றுமுன் 
ஆந்தையின் குரல் கேட்டதே! அதைக் கவனிக்கவில்லையா?"
 
 "கவனித்தேன். அதனால் 
என்ன?"
 
 "அது மந்திரவாதியின் குரல் என்று தெரிந்து கொள்ள வில்லையா?"
 
 "உனக்கு எப்படி அது தெரியும், நீ மந்திரவாதியைச் சேர்ந்தவளா?"
 
 "ஆமாம், ராணி!" என்று சொல்லிவிட்டு, ராக்கம்மாள் கையினால் கோலம் போட்டுக் 
காட்டினாள்.
 
 நந்தினி அவளை வியப்புடன்உற்றுப் பார்த்துவிட்டு "இப்போது 
அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள்.
 
 "மந்திரவாதி தங்களைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறார்."
 
 "என்னை 
வந்து பார்ப்பதுதானே? எதற்காக காத்திருக்க வேண்டும்?"
 
 "இப்போது இங்கு வந்த 
பல்லவனை மந்திரவாதி சந்திக்க விரும்பவில்லை. ஈழத்தில் அவனை பார்த்தாராம். தங்கள் 
கணவரைப் பார்க்கவும் விரும்பவில்லை."
 
 "மந்திரவாதியை நீ பார்த்தாயா?"
 
 "சற்றுமுன் ஆந்தைக் குரல் கேட்டுப் போயிருந்தேன். தங்களை அழைத்து வரும்படி 
சொன்னார். குழகர் கோயிலுக்கருகில் ஓடைக் கரையில் ஒளிந்திருப்பதாகச் சொன்னார். 
வருகிறீர்களா ராணி?"
 
 "அது எப்படி நான் போக முடியும்?"
 
 "குழகர் 
கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் போகலாம்."
 
 "நல்ல யோசனைதான்; வேறு 
துணை வேண்டாமா?"
 
 "அவசியமில்லை! வேண்டுமானால் சேந்தன் அமுதனைத் துணைக்கு 
அழைத்துப் போகலாம்."
 
 "அவன் யார்?"
 
 "தஞ்சவூர் ஊமையின் மகன்!"
 
 "சிவ சிவா! எத்தனை ஊமைகள்?"
 
 "இந்த குடும்பம் சாபக்கேடு அடைந்த 
குடும்பம். சிலர் பிறவி ஊமைகள். சிலர் வாயிருந்தும் ஊமைகள். என் புருஷன் அப்படி 
அருமையாகத்தான் பேசுவார். நான்தான் பேசவேண்டாம் என்று திட்டம் செய்திருக்கிறேன்."
 
 "இலங்கை ஊமைக்கு மக்கள் உண்டா? உனக்குத் தெரியுமா?"
 
 "ஒரு தடவை 
இரட்டைக் குழந்தைகள் பெற்றாளாம். குழந்தைகள் என்ன ஆயின என்று ஒருவருக்கும் 
தெரியவில்லை. நானும் அந்த இரகசியத்தைத் தெரிந்துகொள்ள எத்தனையோ நாளாக முயன்று 
வருகிறேன் இதுவரை பலிக்கவில்லை."
 
 "தஞ்சாவூர்க்காரன் இங்கே எதற்காக 
வந்திருக்கிறான்?"
 
 "அவனுடைய மாமன் மகள் பூங்குழலியைத் தேடிக் கொண்டு 
வந்தான். அவள் இல்லை. அதனால் காத்திருக்கிறான்."
 
 "அவள் எங்கே போய் 
விட்டாள்?"
 
 "நானே சொல்ல வேண்டும் என்றிருந்தேன். மந்திரவாதியை என் புருஷன் 
படகில் ஏற்றிக்கொண்டு போனதற்கு மறுநாள் இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்களைப் 
பிடிப்பதற்காகப் பழுவூர் ஆட்களும் தொடர்ந்து வந்தார்கள். அவர்களில் ஒருவனை என் 
நாத்தி படகில் ஏற்றிக்கொண்டு இரவுக்கிரவே இலங்கைக்குப் போனாள்."
 
 "அவளுக்குப் படகுவிடத் தெரியுமா?"
 
 "படகு விடுவதே அவளுக்கு வேலை. 
படகு விடாத நேரங்களில் கோடிக்கரைக் காடுகளில் சுற்றி அலைவாள். இந்தக் காட்டில் 
அவளுக்குத் தெரியாத மூலைமுடுக்கு ஒன்றும் கிடையாது."
 
 "அவள் இன்னும் 
திரும்பி வரவில்லையென்றால், அதைக் கொண்டு நீ என்ன ஊகிக்கிறாய்?"
 
 "யாரோ 
கடலில் முழுகிப் போய் விட்டதாக இவர்கள் அலறி அடித்துக் கொள்கிறார்களே, அது 
நிச்சயமல்லவென்று சொல்கிறேன். பூங்குழலி வந்து பிறகு அது நிச்சயமாகும்."
 
 "அந்தப் பெண்ணும் முழுகியிருக்கலாம் அல்லவா?"
 
 "அவள் முழுகமாட்டாள். 
கடல் அவளுக்குத் தொட்டில். மேலும்..."
 
 "மேலும், என்ன?"
 
 "சற்று 
முன்னால் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெகு 
தூரத்தில் ஒரு படகு வருவதுபோல் தோன்றியது..."
 
 "அப்புறம்?"
 
 "அப்புறம் அது கரைக்கு வரவில்லை."
 
 "என்ன ஆகியிருக்கும்?"
 
 "இங்கே கடற்கரை ஓரத்தில் கூட்டமாயிருப்பதைப் பார்த்து விட்டு வேறு சதுப்பு 
நிலக் கால்வாயில் படகு விட்டுக் கொண்டு போயிருக்கக் கூடும்."
 
 "அது கூடச் 
சாத்தியமா?"
 
 "பூங்குழலிக்குச் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை. 
தஞ்சாவூர்க்காரனும் என்னுடன் உச்சிக்கு வந்து பார்த்துக் கொண்டிருந்தான். 
அவனுக்கும் அப்படியே தோன்றியதாம்."
 
 "சரி; எப்படியாவது இருக்கட்டும்; நாம் 
இப்போது குழகர் கோவிலுக்குப் போகலாம், வா!"
 
 "துணைக்குச் சேந்தன் அமுதனைக் 
கூப்பிடட்டுமா?"
 
 "வேண்டாம்! அவன் அவனுடைய மாமன் மகளைத் தேடட்டும். நாம் 
அதற்குக் குறுக்கே நிற்க வேண்டாம்.
 
 இருவரும் குழகர் கோவிலை நோக்கிப் 
புறப்பட்டார்கள். பூங்குழலியைப் போலவே ராக்கம்மாளுக்கும் கோடிக்கரையின் 
புதைசேற்றுக் குழிகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது.நந்தினிக்கு ஜாக்கிரதையாக 
வழிகாட்டி அழைத்துக் கொண்டு போனாள்.
 
 இருவரும் குழகர் ஆலயத்தை அடைந்தார்கள். 
கோவில் பட்டர் அவர்களைக் கண்டு வியப்படைந்தார். "ராணி! இது என்ன, இந்த நேரத்தில் 
தனியாக வந்தீர்கள்? பரிவாரங்கள் இல்லாமல்? முன்னாலேயே எனக்குச் சொல்லியனுப்பி 
இருக்கக்கூடாதா? தங்களை வரவேற்க ஆயத்தமாக இருந்திருப்பேன்?" என்றார்.
 
 "அதற்கெல்லாம் இதுதானா சமயம்? பட்டரே! சோழ நாட்டுக்குப் பெரும் விபத்து 
நேர்ந்திருக்கிறதே! சோழ நாட்டு மக்களின் கண்ணின் மணியான இளவரசரைக் கடல் கொண்டு 
விட்டதாகச் சொல்கிறார்களே? இளவரசரைக் காப்பாற்றி அருளும்படி குழகரிடம் முறையிட்டுக் 
கொள்வதற்காக வந்தேன்." என்றாள் நந்தினி.
 
 "அப்படியெல்லாம் ஒன்றும் நேராது. 
தாயே! தாங்கள் கவலைப்பட வேண்டாம். நம் பொன்னியின் செல்வருக்குச் சமுத்திர ராஜனால் 
ஆபத்து ஒன்றும் நேராது!" என்றார் குருக்கள்.
 
 "எதனால் அவ்வளவு உறுதியாகச் 
சொல்லுகிறீர்கள், பட்டரே?"
 
 "இளவரசர் பிறந்த நட்சத்திரமும், லக்கினமும் 
அப்படி, அம்மா! உலகமாளப் பிறந்தவரைக் கடல் கொண்டு விடுமா? தாங்கள் 
வருத்தப்படாதீர்கள்! குழகரைப் பிராத்தித்துக் கொள்ளுங்கள். அவசியம் இளவரசரைக் 
காப்பாற்றுவார்" என்றார் பட்டர்.
 
 இவ்வாறு கூறிவிட்டு சுவாமிக்குத் 
தீபாராதனை செய்து, திருநீறும் கொடுத்தார். "அம்மணி! தாங்கள் இவ்வளவு மேலான 
நிலைமையில் இருப்பது குறித்து மிக்க சந்தோஷம்!" என்றார்.
 
 "என்னை உங்களுக்கு 
முன்னமே தெரியுமா, பட்டரே?"
 
 "தெரியும் ராணி! பழையாறையில் 
பார்த்திருக்கிறேன். வைகைக் கரைக்கோவிலிலும்பார்த்திருக்கிறேன். தங்கள் தமையன், 
திருமலை, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்?"
 
 "ஆழ்வார்களின் 
பிரபந்தங்களைப் பாடிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து கொண்டிருக்கிறான். அவனை நான் 
பார்த்து வெகு காலமாயிற்று."
 
 "அவனுக்குக்கூட அதைப்பற்றிக் குறைதான், அம்மா! 
தாங்கள் பழுவூர் ராணியான பிறகு அவனைப் பார்க்கவேயில்லையென்று வருத்தப்பட்டான்."
 
 "அதற்கென்ன செய்யலாம், ஐயா! நான் புகுந்த இடத்தில் எல்லாம் பரம சைவர்கள். 
அவனோ வீர வைஷ்ணவன். 'ஆழ்வார்க்கடியான்' என்று பட்டப் பெயர் வைத்துக்கொண்டு, 
சைவர்களோடு சண்டை போட்டுக்கொண்டு திரிகிறான்.அவனை எப்படி நான் சேர்ப்பது? புகுந்த 
வீட்டாரின் மனங்கோணாமல் நான் நடந்து கொள்ள வேண்டாமா?"
 
 "உண்மை தாயே, உண்மை! 
தங்கள் பதியின் மனங் கோணாமல் நடப்பதுதான் முக்கியமானது. ஆழ்வார்க்கடியான் 
எப்படியாவது போகட்டும்!"
 
 பட்டரிடம் விடைபெற்றுக்கொண்டு இருவரும் 
கிளம்பினார்கள்.
 
 "தனியாகப் போகிறீர்களே? சற்றுப் பொறுத்தால் நானும் 
வந்துவிடுவேன்."
 
 "வேண்டாம் ஐயா! எங்களுக்காக அவசரப்பட வேண்டாம். இந்தப் 
பெண்ணுக்கு இந்தப் பக்கமெல்லாம் நன்றாய்த் தெரிகிறது. அதோடு இன்றைக்குத்தான் 
கோடிக்கரை முழுதும் அமளிதுமளிப்படுகிறதே! பயம் ஒன்றுமில்லை. நாங்கள் போகிறோம்" 
என்றாள் நந்தினி.
 
 இரு பெண்களும் ஆலயத்துக்கு வௌியில் வந்தார்கள். பட்டர் 
கண்பார்வையிலிருந்து மறைந்ததும், ராக்கம்மாள் நந்தியினின் கையைப் பிடித்து 
ஆலயத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்றாள். சிறிது நேரத்துக்கெல்லாம் தாழைப் 
புதர்கள் செறிந்த ஓடைக்கரையை அடைந்தார்கள். நட்சத்திர ஒளியின் உதவியைக் கொண்டு 
ஓடைக் கரையோடு நடந்தார்கள்.
 
 
 பக்க 
தலைப்பு 
 
 ஆறாம் அத்தியாயம்
 பூங்குழலியின் திகில்
 தாழைப் புதரின் மறைவில் பூங்குழலி மூச்சைப் 
பிடித்துக் கொண்டு நின்றாள். மந்திரவாதியும், நந்தினியும் மெல்லிய குரலில் பேசிய 
போதிலும், அவர்களுடைய பேச்சு பெரும்பாலும் அவள் காதில் விழுந்தது. 
 இளவரசரைக் கடல் கொண்டது என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று நந்தினி கூறியதற்கு 
மந்திரவாதி "ராணி! என் பேச்சில் உங்களுக்கு எப்போதுமே நம்பிக்கையிருப்பதில்லை. 
எதனால் இப்போது அவநம்பிக்கைப் படுகிறீர்கள்?" என்று கேட்டான்.
 
 "இளவரசரின் 
ஜாதக பலத்தைப் பற்றி நீ கேட்டதில்லையா? சற்று முன்னால்கூடக் குழகர்கோவில் பட்டர் 
அதைப் பற்றிச் சொன்னார்."
 
 "பைத்தியக்காரத்தனம். கிரஹங்கள், 
நட்சத்திரங்களின் சக்தியைக் காட்டிலும் என்னுடைய மந்திரசக்தி வலியது.அமைதி குடி 
கொண்டிருந்த கடலில் நான் மந்திரம் ஜபித்துச் சுழற்காற்றை வருவித்தேன் என்பது 
தங்களுக்குத் தெரியுமா? முதலில் அந்தக் காஞ்சிநகர் ஒற்றனும் அதை நம்பவில்லை. 
பிற்பாடு கடலில் முழுகி உயிரை விடும்போது, கட்டாயம் நம்பியிருப்பான்!"
 
 "அவன் கடலில் மூழ்கி இறந்ததை நீ பார்த்தாயா?"
 
 "நான் பார்க்காவிட்டால் என்ன? 
அவன் இருந்த கப்பல் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்தேன்."
 
 "தீப்பிடித்த 
கப்பலிலிருந்து அவனைத் தப்புவிக்க இளவரசர் கடலில் குதித்துப் போனாராமே?"
 
 "போனவர் திரும்பி வந்தாரா?"
 
 "திரும்பிப் பல்லவனுடைய கப்பலுக்கு 
வரவில்லை..."
 
 "பின்னே என்ன? இரண்டு பகைவர்களும் ஒரே நாளில் பலியாவதற்காகவே 
வந்தியத்தேவனை உயிரோடு விட்டுவிட்டு வந்தேன். "
 
 "நீ என்னதான் சொன்னாலும், 
என் மனம் நம்பவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் உயிரோடிருப்பதாக என் மனத்திற்குள் 
ஏதோ சொல்லுகிறது. பூங்குழலியை உனக்குத் தெரியுமா?"
 
 "நன்றாய்த் தெரியும். 
இலங்கையில் அவள் எங்களுக்குத் தொல்லையாயிருந்தாள். அவளும் சுழற்காற்றில் 
போயருக்கலாம்."
 
 "அதுதான் இல்லை. சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு படகு தூரத்தில் வந்தது. 
கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ராக்கம்மாள் பார்த்தாளாம். திடீரென்று அது 
மறைந்தது விட்டதாம். படகில் இரண்டு மூன்று பேர் இருந்ததாகத் தோன்றியதாம்."
 
 "அப்படியானால் தாங்கள் கிழவரை அழைத்து கொண்டு உடனே நடையைக் கட்டுங்கள். 
நான் இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்."
 
 "நாங்கள் இருந்தால் என்ன?"
 
 "கிழவர் இருந்தால் இளவரசருக்கு இராஜ மரியாதைகள் செய்து அழைத்துக்கொண்டு 
போகப் பார்ப்பார். காரியமெல்லாம் கெட்டுப் போகும்."
 
 "மந்திரவாதி! 
நானும்தான் கேட்கிறேன். அவர்கள் இறக்க வேண்டிய அவசியம் என்ன? மதுராந்தகனுக்குப் 
பட்டம் கட்டிவிட எல்லாரும் சம்மதித்து விட்டால்..."
 
 "அம்மணி! 
பெண்புத்தியைக் காட்டிவிட வேண்டாம். காஞ்சி ஒற்றனுக்கு நம் இரகசியம் எல்லாம் 
தெரியும். அவன் இளவரசரிடமும், சொல்லியிருப்பான். பொழுது விடிவதற்குள் நீங்கள் 
புறப்பட்டுச் சொல்லுங்கள். ராக்கம்மா! பூங்குழலி அவர்களை அழைத்து வந்தால் காட்டில் 
எங்கே வைத்திருப்பாள்?"
 
 "மறைந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. அதுதான் அவளுடைய 
அந்தரங்க வாசஸ்தலம். காஞ்சி ஒற்றனை அதிலேதான் ஒரு பகல் முழுவதும் மறைத்து 
வைத்திருந்தாள். பிறகு அதை நான் கண்டு பிடித்தேன்."
 
 "நல்லது; அந்த மறைந்த 
மண்டபம் இருக்குமிடம் எனக்கும் தெரியும். அங்கே போய்க் காத்திருக்கிறேன். ராணி! 
சக்கரவர்த்தி எப்படியிருக்கிறார்? ஏதாவது செய்தி உண்டா?"
 
 "எந்தச் 
சக்கரவர்த்தியைப் பற்றிக் கேட்கிறாய்?"
 
 "நோயாளி சுந்தர சோழனைச் 
'சக்கரவர்த்தி' என்று இந்த வாய் ஒரு நாளும் சொல்லாது. நமது சக்கரவர்த்தியைப் 
பற்றித் தான் கேட்கிறேன்."
 
 "சௌக்கியமாயிருப்பதாகப் பத்து நாளைக்கு முன்பு 
செய்தி கிடைத்தது. ஆகா! எத்தனை நாள் ஆயிற்றுப் பார்த்து...?"
 
 "சரி,சரி! 
சீக்கிரம் புறப்படுங்கள். அந்த முட்டாள் பல்லவன் என்ன செய்யப் போகிறானாம்."
 
 "அவனையும் தஞ்சைக்கு அழைத்துப் போகிறோம்."
 
 "அவனிடம் 
ஜாக்கிரதையாயிருங்கள்."
 
 "அவனைப் பற்றிக் கவலையில்லை. நான் காலால் இட்டதை 
அவன் தலையால் செய்யக் காத்திருக்கிறான்!"
 
 "இருந்தாலும், 
ஜாக்கிரதையாயிருப்பது நல்லது. காஞ்சி ஒற்றன் வந்தியத்தேவனிடம் தாங்கள் கொஞ்சம் 
ஏமாந்து போனீர்கள் அல்லவா?"
 
 "அது உண்மைதான்; அதனாலேயே அவனை உயிரோடு 
மறுபடியும் பார்க்க விரும்புகிறேன்."
 
 "அந்த ஆசையை அடியோடு விட்டுவிடுங்கள், 
ராணி!"
 
 இவ்வாறு பேசிக்கொண்டே, அவர்கள் அங்கிருந்து நகரத் தொடங்கினார்கள் 
என்று தெரிந்தது. பூங்குழலி தன்னை அவர்கள் பார்க்காத வண்ணம் இன்னும் நன்றாய்ப் 
புதரில் மறைந்து கொண்டாள். நல்ல வேளையாக, அவள் இருந்த பக்கம் அவர்கள் வரவில்லை. 
வேறு திசையாகச் சென்று விட்டார்கள்.
 
 பூங்குழலி தற்செயலாக ஒட்டுக்கேட்ட 
விஷயங்கள் அவளுக்குப் பெருந்திகிலை உண்டு பண்ணிவிட்டன. பொன்னியின் செல்வரை 
எத்தனைவித அபாயங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிய போது அவளுடைய கைகால்கள் 
நடுங்கின; கண்கள் இருண்டன; தொண்டை வறண்டது; உள்ளம் குழம்பியது. தான் விட்டுவிட்டு 
வந்த படகை உடனே போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலியதாக முன் நின்றது; 
படகை விட்டு வந்த திசையை நோக்கி விரைந்து சென்றாள்.
 
 இளவரசர் கொடிய விஷ 
சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார். அவரைச் சிறைப்படுத்திப் போவதற்குப் 
பழுவேட்டரையர் காத்திருந்தார். அவரைக் கொன்று விடுவதற்குக் கொலையாளிகள் 
காத்திருந்தனர். அவர்களுக்குத் துணையாக இந்தப் பெண்ணுருக் கொண்ட மோகினிப் பிசாசு 
இருந்தது. பார்த்திபேந்திரனும் அவளுடைய மாய வலையில் விழுந்து விட்டான். இளவரசரைத் 
தான் அழைத்துச் சென்று பத்திரமாய் வைத்திருக்கலாம் என்று எண்ணிய மறைந்த மண்டபம் கூட 
இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
 
 இவ்வளவு அபாயங்களிலிருந்தும் இளவரசரைப் 
பாதுகாக்கும் பொறுப்புத் தன் தலையில் சுமந்திருப்பதாகப் பூங்குழலி உணர்ந்தாள். 
ஆகையினாலேயே அவளுடைய மூளை குழம்பிற்று. இதுகாறும் அவளுடைய வாழ்நாளில் என்றுமில்லாத 
ஓர் அநுபவம் நேர்ந்தது. அதாவது காட்டில் வழி தவறி விட்டோமோ என்ற பீதி உண்டாயிற்று.
 
 சுற்றிச் சுற்றிப் புறப்பட்ட இடத்துக்கே வந்து கொண்டிருக்கிறோமோ' என்ற 
எண்ணம் தோன்றியது. அப்படிச் சுற்றிவரும்போது இளவரசரின் எதிரிகள் யாரேனும் 
எதிர்ப்பட்டு விட்டால் என்ன செய்வது? அவர்களுக்கு என்ன சமாதனம் சொல்வது? எப்படி 
அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்வது?...'
 
 இல்லை, இல்லை! சரியான 
வழியிலேதான் வந்திருக்கிறோம். இதோ கால்வாய் தெரிகிறது. படகை விட்டு வந்த இடம் அதோ 
அந்த மூலையில் இருக்கிறது. பூங்குழலி அவ்விடத்தை நோக்கிப் பாய்ந்து ஓடினாள்.அவளுடைய 
நெஞ்சு அடித்துக் கொள்ளாமல் நின்று விட்டது. ஏனெனில், அவள் விட்டிருந்த இடத்தில் 
படகைக் காணவில்லை! ஐயோ! படகு எங்கே போயிருக்கும்?
 
 ஒருவேளை தான் இல்லாத 
சமயத்தில் பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கேயே வந்திருப்பார்களோ! வந்து இளவரசரையும் 
வந்தியத்தேவனையும் சிறைப்படுத்திக் கொண்டு போயிருப்பார்களோ? அப்படி நடந்திருந்தால் 
கூடப் பாதகமில்லை. அதை விடப் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்திருக்குமோ? வந்தியத்தேவன் 
இளவரசரைத் தூக்கிக் கொண்டு மறைந்த மண்டபத்தை தேடிப் போயிருப்பானோ? அப்படியானால் 
அங்கே கொலைஞர்கள் காத்திருப்பார்களோ? அடடா! என்ன தவறு செய்து விட்டோம்?...
 
 அந்த மறைந்த மண்டபத்துக்கு உடனே போய்ப் பார்க்க வேண்டுமென்ற பரபரப்பு 
பூங்குழலியின் மனத்தில் குடி கொண்டது. காட்டு வழியில் ஓட்டம் பிடித்து ஓடினாள். 
மறுபடியும் அந்தப் பழைய சந்தேகம்: வழி தவறி விட்டோமோ என்ற சந்தேகம். சுற்றிச் 
சுற்றி வருகிறோமோ என்ற மயக்கம்.'
 
 அது என்ன? ஐயோ! அது என்ன? ஏதோ காலடிச் 
சத்தம் போலிருக்கிறதே? யாரோ நம்மைத் தொடர்ந்து வருவது போலிருக்கிறதே? 
யாராயிருக்கும்? எதற்காக இருக்கும்? ஒரு வேளை அந்தப் பயங்கர மந்திரவாதி தானா? 
அப்படியானால் ஏன் பயப்படவேண்டும்? இடுப்பில் செருகியுள்ள கத்தியை எடுத்துக்கொண்டால் 
போயிற்று! யாராயிருந்தால்தான் என்ன? எதற்காக ஓட வேண்டும்?...
 
 இல்லை, இல்லை! 
ஓட வேண்டியதுதான். இச்சமயம் யாருடனும் சண்டை பிடிக்கும் சமயம் அன்று. கையில் வலிவு 
இல்லை. கத்தியும் குறி தவறிப் போகும். உயிரை எப்பாடு பட்டாவது காப்பாற்றிக் கொள்ள 
வேண்டும். நமக்கு இத்தருணம் ஏதேனும் நேர்ந்தால் இளவரசருடைய கதியாதாகும்? முன்னமே 
அந்த வந்தியத்தேவன் எச்சரித்தானே? உயிரைப் பத்திரமாய்க் காப்பாற்றிக் கொண்டு 
வருவதாகச் சொன்னோமே? அதை நிறைவேற்ற வேண்டியதுதான்?'
 
 பூங்குழலி மேலும் 
மேலும் நெருக்கமான காட்டில் புகுந்து ஓடினாள். ஆனால் துரத்தி வந்தவன் மேலும் பின் 
தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். பூங்குழலி போன வழியில் மரங்களிலிருந்த பட்சிகள் 
அலறிப் புடைத்துக் கொண்டு ஓடின. வளைகளிலிருந்து நரிகள் கிளம்பி ஓடின. தூங்கிய 
காட்டுப் பன்றிகள் விழித்தெழுந்து விழுந்தடித்து ஓடின. மான் ஒன்று விர்ரென்று 
பாய்ந்துவந்து அவள் மேலேயே இடித்துப் புடைத்துக்கொண்டு ஓடியது. இவ்வளவுக்கும் 
மத்தியில் பின்னால் தொடர்ந்து வந்தவன் விட்டபாடாக இல்லை. அவனுடைய காலடிச் சத்தமும் 
அவன் ஓடியதால் பெருமூச்சு விடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தன.
 
 பூங்குழலி ஓடிஓடிச் சலித்துப் போனாள். அந்தச் சலிப்பு அளவில்லாத கோபமாக 
மாறியது. வருகிறவன் யாராயிருந்தாலும் அவனை ஒருகை பார்த்தவிடுவது என்று முடிவு 
செய்தாள்.
 
 
 பக்க 
தலைப்பு 
 
 ஏழாம் அத்தியாயம்
 காட்டில் எழுந்த கீதம்
 பூங்குழலி கோபத்துடன் ஓடுவதை நிறுத்தித் திரும்பி 
நின்ற அதே சமயத்தில், இருள் சூழ்ந்த அக்காட்டகத்தே, ஓர் இனிய கீதம் எழுந்தது. "பொன்னார் மேனியனே
 புலித்தோலை அரைக்கசைத்து
 மின்னார் செஞ்சடைமேல்
 மிளிர்கொன்றை அணிந்தவனே!" அந்தக் குரல் சேந்தன் அமுதனுடைய குரல் என்பதைப் பூங்குழலி 
உடனே அறிந்துகொண்டாள். கலகலவென்று சிரித்தாள். சத்தம் வந்த திசை வேறு என்பதைக்கூட 
அச்சமயம் அவள் மறந்து போனாள்.
 
 "அத்தான்! நீதானா?"
 
 "ஆமாம்! 
பூங்குழலி!"
 
 "எங்கே இருக்கிறாய்? இப்படி வா!"
 
 "இதோ வந்துவிட்டேன்!" 
என்று சொல்லிக் கொண்டே சேந்தன் அமுதன் அவள் முன்னால் வந்தான்.
 
 "நன்றாய் 
என்னைப் பயமுறுத்தி விட்டாய்! எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்?"
 
 "பூங்குழலி! உன்னைப் பார்ப்பதற்காகவும், உன் இனிய கானத்தைக் 
கேட்பதற்காகவும் தஞ்சையிலிருந்து பலநாள் பிரயாணம் செய்து வந்தேன். இங்கே வந்த 
பிறகும் உன்னைக் காணாமல் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்! தற்செயலாக உன்னைப் 
பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன். ஏன் அப்படி ஓடினாய்? எங்கே, ஒரு கீதம் 
பாடு கேட்கலாம்!!"
 
 "பாடுவதற்கு நல்ல இடம்; அதைவிட நல்ல சந்தர்ப்பம்!"
 
 "நீ பாடாவிட்டால் நானே இன்னொரு பாட்டுப் பாடுகிறேன். இந்தக் காட்டில் 
தூங்கிக் கொண்டிருக்கும் மிருகங்களையெல்லாம் விழித்தெழுந்து ஓடச் செய்கிறேன், பார்!
 
 "பித்தா! பிறைசூடி
 பெருமானே அருளாளா!"
 
 "போதும், அத்தான்! 
கொஞ்சம் பாட்டை நிறுத்து!"
 
 "அப்படியானால் நீ பாடுகிறாயா?" - இவ்விதம் 
இரைந்து கேட்டுவிட்டுச் சேந்தன் அமுதன் உடனே மெல்லிய குரலில், "பூங்குழலி! உன்னைத் 
தொடர்ந்து இன்னொருவன் வந்து கொண்டிருந்தான்.உனக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே சத்தம் 
போட்டுப் பாடினேன். அவனுக்கும் உன் அண்ணன் மனைவிக்கும் இன்று சாயங்காலம் ஏதோ இரகசிய 
சம்பாஷனை நடந்தது. அவன் யார் என்று உனக்குத் தெரியுமா?" என்றான்.
 
 பிறகு 
மீண்டும், உரத்த குரலில், "என்ன சொல்லுகிறாய்! நீ பாடுகிறாயா? நான் பாடட்டுமா? 
சிவபெருமான் சுடுகாட்டில் ஆடினார்; நீ வெறுங் காட்டில் பாடக்கூடாதா?" என்று 
இரைந்தான்.
 
 "இதோ பாடுகிறேன்; கோபித்துக் கொள்ளாதே!" என்று சொல்லிவிட்டுப் 
பூங்குழலி பின்வருமாறு பாடினாள்:
 
 
	"பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்! 
	அறக்கண் எனத்தகும் அடிகள் ஆரூரரை 
	மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும் 
	உறக்க மில்லாமையும் உணர்த்த வல்லீர்களே!" 
 இவ்விதம் 
					பாடிவிட்டு மெல்லிய குரலில், "அமுதா! நான் வந்தது உனக்கு 
					எப்படித் தெரியும்?" என்று கேட்டாள். 
 "பூங்குழலி! 
					கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து படகு வருவதைப் பார்த்தேன். 
					நீயாக இருக்கலாம் என்று உத்தேசமாக எண்ணி இங்கே உன்னைத் தேடி 
					வந்தேன். அதே சமயத்தில் பழுவூர் ஆட்கள் சிலரும் இந்தப் பக்கம் 
					வந்தார்கள். படகில் உன்னைக் காணவில்லை. ஆனால் என் நண்பன் 
					வல்லவரையனையும் இளவரசரையும் பார்த்தேன். வல்லவரையனிடம் பழுவூர் 
					ஆட்கள் வருவது பற்றிக் கூறினேன். பிறகு இளவரசரை நாங்கள் 
					இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் 
					சேர்த்தோம்."
 
 "ஐயோ! என்ன தவறு செய்துவிட்டீர்கள்! படகு என்ன ஆயிற்று!"
 
 "படகை 
					யாராவது பார்த்தால் சந்தேகம் ஏற்படும் என்று ஓடை நீரில் 
					கவிழ்த்து விட்டோம்! - ஏன் பூங்குழலி! பாட்டை ஏன் 
					நிறுத்திவிட்டாய்! மிச்சத்தையும் பாடு!" என்று பிற்பகுதியை 
					உரத்த குரலில் கூறினான் சேந்தன் அமுதன்.
 
 "மறந்துவிட்டது அமுதா இந்தக் கோடிக்கரைக் குழகரைப் பற்றி ஒரு 
					பாடல் உண்டே! உனக்கு அது நினைவிருக்கிறதா?- நினைவிருந்தால் 
					பாடு!"
 
 "ஓ! நினைவிருக்கிறது!" என்று சேந்தன் அமுதன் 
					இரைந்து சொல்லிவிட்டுப் பாடினான்:
 
	"கடிதாய்க் காற்று வந்தெற்றக் கரைமேல் 
	குடிதானயலே இருந்தால் குற்றமாமோ? 
	கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர் 
	அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே!" 
 பாட்டு 
					முடிந்தவுடனே பூங்குழலி, "அத்தான்! என்னைத் தொடர்ந்து வந்தவன் 
					போய்விட்டானா? பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறானா?" 
					என்று மெல்லிய குரலில் கேட்டாள். 
 "நாம் இங்கே நின்ற 
					பிறகு காலடி சத்தம் கேட்கவில்லை. அவன் இங்கேதான் பக்கத்தில் 
					எங்கேயோ மறைந்து நிற்க வேண்டும். அவன் யார் என்று உனக்குத் 
					தெரியுமா?"
 
 பூங்குழலி இரைந்து, "தெரியாமல் என்ன? 
					நன்றாய்த் தெரியும். கோடிக்கரை ஆந்தைகளைப் பற்றிச் சுந்தரர் 
					பாடியிருப்பதுதானே? இதோ கேள்!
 
 
	காடேன் மிகவால் இது காரிகை யஞ்சக் 
	கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற 
	வேடித் தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர் 
	கோடிக் குழகா விடங்கோயில் கொண்டாயே! 
 பார்த்தாயா! 
					அமுதா! சுந்தரமூர்த்தியின் காலத்தில் ஆந்தைகளும் கூகைகளும் 
					இன்று போலவே இக்காட்டில் கத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது 
					இக்காட்டில் மனிதர்கள் கூட ஆந்தைபோலச் 
					சத்தமிடுகிறார்கள்.சற்றுமுன் அத்தகைய குரல் ஒன்று கேட்டேன். 
					அந்தத் தீய சழக்கர் யாராயிருக்கும் என்று உனக்கு ஏதாவது 
					தெரியுமா?" இப்படி உரத்த குரலிலேயே பூங்குழலி கேட்டாள். 
					கேட்டுவிட்டு, "எனக்கு அம்மாதிரி கத்த வருகிறதா என்று 
					பார்க்கிறேன். ஆந்தைக் குரல் மாதிரி இருக்கிறதா, கேட்டுச் 
					சொல்லு!" என்றாள். 
 பின்னர், ஆந்தை மாதிரியே மூன்று தடவை குரல் கொடுத்தாள்.
 
 "அப்படியே 
					ஆந்தைக் குரல் மாதிரியே இருக்கிறது! தேனினும் இனிய குரலில் 
					தெய்வீகக் கீதங்களைப் பாடுவாயே? இதை எங்கே கற்றுக் கொண்டாய்?" 
					என்று அமுதன் கேட்டான்.
 
 "மந்திரவாதி ஒருவனிடம் கற்றுக்கொண்டேன். மந்திரம் பலிப்பதற்கு இப்படி ஆந்தை 
					போலக் கத்தத் தெரிந்திருக்க வேண்டுமா!"
 
 "உனக்கு 
					மந்திரவித்தைகூடத் தெரியுமா, என்ன?"
 
 "ஏதோ கொஞ்சம் 
					தெரியும். என்னுடைய மந்திரசக்தியைப் பரீட்சித்துப் 
					பார்க்கிறாயா?"
 
 "எப்படிப் பரீட்சிக்கிறது?"
 
 "இப்பொழுது நாம் பேசுவதையெல்லாம் நமக்குப் பக்கத்தில் ஒருவன் மறைந்திருந்து 
					கேட்டுக்கொண்டிருக்கிறான். நீ வேண்டுமானால் தேடிப் பார்!" 
					இவ்விதம் பூங்குழலி கூறி வாய் மூடுவதற்குள்ளே காட்டில் 
					சலசலப்புச் சத்தம் கேட்டது. மந்திரவாதி ரவிதாஸன் மறைவிலிருந்து 
					வௌியே வந்தான். "ஹா ஹா ஹா!" என்று சிரித்துக் கொண்டே வந்தான்.
 
 "பெண்ணே! அப்படியா சமாசாரம்? உனக்குத் தந்திரம் தான் தெரியும் என்று 
					நினைத்தேன்; மந்திரம்கூடத் தெரியுமா?" என்று கேட்டான்.
 
 "அட பாதகா! நீதானா?"
 
 "பெண்ணே! நான் யார், என்று உனக்குத் தெரியுமா?"
 
 "இலங்கையில் 
					இளவரசரைக் கொல்லப் பார்த்தவன் நீ! அது உன்னால் முடியவில்லை. 
					ஆகையால் நடுக்கடலில் மந்திரம் போட்டுச் சுழற்காற்றை வரவழைத்து 
					இளவரசரையும் அவருடைய சிநேகிதனையும் முழ்க அடித்து விட்டாய்!"
 
 "அவர்கள் மூழ்கியது உனக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்? நீ 
					பார்த்தாயா?"
 
 "இரண்டு பேருடைய உடல்களும் கரையில் வந்து 
					ஒதுங்கின. பூதத் தீவிலே குழி தோண்டி அவர்களைப் புதைத்து விட்டு 
					வந்தேன். துரோகி! உன் மந்திரத்தில் இடி விழ!"
 
 "பெண்ணே! 
					என்னை ஏமாற்றப் பார்க்காதே! என்னுடைய மந்திரத்திற்குப் பதில் 
					மந்திரம் போட்டு நீ அவர்களை உயிர் பிழைக்கச் செய்யவில்லையா?"
 
 "ஐயோ! அது எப்படி உனக்குத் தெரிந்தது?"
 
 "இந்த 
					ரவிதாஸனுக்குப் புறக் கண்ணைத் தவிர அகக் கண்ணும் உண்டு. நூறு 
					காத தூரத்தில் நடப்பதையும் என்னுடைய மந்திரசக்தியினால் 
					தெரிந்து கொள்வேன்."
 
 "அப்படியானால் என்னை எதற்காகக் 
					கேட்கிறாய்?"
 
 "உன்னைப் பரிசோதிப்பதற்காகக் கேட்கிறேன்! 
					அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்பதைச் சொல்லிவிடு! 
					இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் இங்கேயே எரித்துச் 
					சாம்பலாக்கி விடுவேன்!" என்றான் ரவிதாஸன்.
 
 அவனுடைய புறக்கண்கள் அச்சமயம் நெருப்புத் தணல்களைப் போல் அனல்வீசி 
					ஜொலித்தன.
 
 "என்ன? உண்மையைச் சொல்கிறாயா, மாட்டாயா! ஓம் 
					ஹ்ரீம் ஹ்ராம் வஷட்! - இதோ என் மந்திரத்தின் சக்தியைக் காட்டப் 
					போகிறேன்."
 
 பூங்குழலி பயத்தினால் நடுநடுங்கிச் சேந்தன் 
					அமுதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவனிடம் மெல்லிய 
					குரலில், "நான் இப்போது ஓடப் போகிறேன். நீ அவனைத் தடுத்து 
					நிறுத்தப்பார்!" என்றாள்.
 
 மந்திரவாதியைப் பார்த்து உரத்த குரலில், "என்னை ஒன்றும் செய்ய வேண்டாம். 
					அவர்கள் இருக்குமிட்டத்தைக் காட்டி விடுகிறேன்!" என்று 
					கூறினாள்.
 
 "என்னுடன் வா! காட்டுகிறேன்!" என்று சொல்லி 
					விட்டுப் பாழடைந்த மண்டபத்துக்கு நேர்மாறான திசையை நோக்கி 
					நடந்தாள்.
 
 மந்திரவாதி அவளைப் பின் தொடரப் பார்த்தான். 
					சேந்தன் அமுதன் பின்னாலிருந்து அவனைப் பிடித்து நிறுத்த 
					முயன்றான். பூங்குழலி ஓடத் தொடங்கினாள். மந்திரவாதி சேந்தன் 
					அமுதனை ஒரே தள்ளாகத் தலைகுப்புறத் தள்ளிவிட்டுப் பூங்குழலியைத் 
					தொடர்ந்து ஓடினான்.
 
 பூங்குழலி மானைப்போல் விரைந்து 
					பாய்ந்து ஓடினாள். மந்திரவாதி மானைத் துரத்தும் வேடனைப்போல் 
					அவளைப் பிடிக்க ஓடினான். ஆனால் அவளைப் பிடிப்பது எளிதில் 
					முடிகிற காரியமாயில்லை.
 
 மந்திரவாதி அவளைத் துரத்துவதை 
					விட்டு நின்று விடலாமா என்று எண்ணியபோது பூங்குழலியும் 
					களைத்துப் போனவளைப் போல் நின்றாள். மந்திரவாதி மறுபடியும் 
					அவளைத் துரத்தினான்.
 
 இருவருக்கும் பின்னால் சேந்தன் அமுதனும் தட்டுத் தடுமாறி விழுந்தடித்து 
					ஓடிவந்து கொண்டிருந்தான். ஓடும்போது மறைந்த மண்டபத்துக்குப் 
					போய் அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்யலாமா என்று அவன் 
					அடிக்கடி நினைத்தான். அதே சமயத்தில் பூங்குழலியை 
					மந்திரவாதியிடம் தனியாக விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனம் 
					வரவில்லை.
 
 பூங்குழலி ஒரு மேட்டின்மீது ஏறி 
					நின்றாள்.அங்கே சற்றுக் காத்திருந்ததோடு அல்லாமல், திரும்பிப் 
					பார்த்து மந்திரவாதியைக் கைதட்டி அழைத்தாள். மந்திரவாதி 
					மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் அருகில் போய் நின்றான். 
					அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவள் கன்னத்தில் நாலு அறை 
					கொடுக்க வேண்டும் என்று அவன் எண்ணிய சமயத்தில் பூங்குழலி, "அதோ 
					பார் என் காதலர்களை!" என்றாள்.
 
 அவள் சுட்டிக்காட்டிய 
					திசையை மந்திரவாதி பார்த்தான். முன்னொரு தடவை வந்தியத்தேவன் 
					கண்ட காட்சியை அவனும் கண்டான். சதுப்பு நிலத்தில் ஆங்காங்கு 
					தீப் பிழம்புகள் குப் குப் என்று தோன்றுவதும் கப் கப் என்று 
					மறைவதுமாயிருந்தன. ரவிதாஸனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தின் 
					காரணம் என்னவென்று தெரியுமென்றாலும் அச்சமயம் அவனுக்கு ரோமம் 
					சிலிர்த்தது.
 
 "மந்திரவாதி! உனக்கு மந்திரம் 
					தெரியுமென்றால், இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளை ஓட்டுவதற்கு 
					ஒரு மந்திரம் போடு பார்க்கலாம்! இவை என்னைப் பாடாய்ப் படுத்தி 
					வைக்கின்றன!" என்றாள். ரவிதாஸ்னுக்கு அளவில்லாத கோபம் பொங்கிக் 
					கொண்டு வந்தது.
 
 "பெண்ணே! என்னை ஏமாற்றலாம் என்று 
					பார்க்கிறாயா!" என்று கர்ஜித்தான்.
 
 "உன்னை எதற்காக 
					நான் ஏமாற்ற வேண்டும்?"
 
 "இளவரசரும் வல்லவரையனும் 
					இருக்குமிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி நீ என்னை இழுத்து 
					அடிக்க வில்லையா?"
 
 "அவர்கள் இறந்து விட்டார்கள் என்று 
					நான் சொன்னதை நீ நம்பவில்லை. வேறு என்ன செய்யட்டும்?"
 
 "இளவரசர் இறந்தது உண்மைதானா? ஆணையிட்டுச் சொல்வாயா?"
 
 "ஆணை எதற்கு! அதோ ஆகாசத்தைப் பார்!" ரவிதாஸன் வானத்தை 
					நோக்கினான். வால் நட்சத்திரம் தெரிந்தது.
 
 "வால் 
					நட்சத்திரம் தோன்றினால் அரச குலத்தில் மரணம் என்று உனக்குத் 
					தெரியாதா? அப்படியே நடந்துவிட்டது!" என்றாள் பூங்குழலி.
 
 "பெண்ணே! அப்படியானால் உன் கையில் உள்ள கெண்டியை இப்படிக் 
					கொடு; அதில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா உன்னோடு ஓடி வந்ததில் 
					எனக்குத் தாகம் எடுத்து விட்டது!...?"
 
 பூங்குழலி 
					திடீரென்று மறுபடி ஓட்டம் பிடித்தாள். மேட்டிலிருந்து தாவிக் 
					குதித்து இறங்கிக் கொள்ளிவாய்ப் பிசாசுகள் தோன்றி மறைந்த 
					சதுப்பு நிலப்பரப்பை நோக்கி ஓடினாள். ரவிதாஸன் ஆத்திரத்தினால் 
					அறிவை இழந்தான். பூங்குழலியைப் பிடித்து அவளுடைய கழுத்தை 
					நெறித்துக் கொன்று விடவேண்டும் என்று வெறியை அடைந்தான். 
					தலைகால் தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.
 
 சிறிது தூரம் ஓடிய பிறகு பூங்குழலி சட்டென்று கொஞ்சம் குனிந்து 
					நாலைந்தடி ஒரு புறமாக நகர்ந்து கொண்டாள். அதிகவேகமாக அவளைத் 
					துரத்தி வந்த ரவிதாஸனால் அவள் நின்ற இடத்தில் நிற்க 
					முடியவில்லை. அவளுகு அப்பால் சில அடிதூரம் வரையில் சென்று 
					நின்றான். திரும்பி அவளைப் பிடிப்பதற்காகப் பாயப் பார்த்தான்; 
					ஆனால் முடியவில்லை. கால்களுக்குத் திடீரென்று என்ன நேர்ந்து 
					விட்டது? அவை ஏன் இப்பொழுது நகரவில்லை? அவை ஏன் 
					சில்லிட்டிருக்கின்றன?
 
 இது என்ன? உள்ளங்காலிலிருந்து 
					சில்லிப்பு மேலே மேலே வந்து கொண்டிருக்கிறதே? இல்லை, இல்லை! 
					கால்கள் அல்லவா கீழே கீழே போய்க் கொண்டிருக்கின்றன!
 
 ரவிதாஸன் குனிந்து பார்த்தான். ஆம், அவனுடைய கால்கள் கீழே புதை 
					சேற்றில் அமிழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டான்.ஒவ்வொரு அணுவாக, 
					ஒவ்வொரு அங்குலமாக, அவன் கால்கள் கீழே சேற்றில் மெதுவாகப் 
					புதைந்து கொண்டிருந்தன.
 
 ரவிதாஸன் தன்னுடைய அபாய நிலையை உணர்ந்தான் சேற்றிலிருந்து வௌிவர முயன்றான். 
					கால்களை உதவி எடுக்கப் பிரயத்தனம் செய்தான். அவனுடைய 
					பிரயத்தனம் பலன் தரவில்லை.
 
 கீழே சேற்றுக்கடியில் ஏதோ ஒரு பூதம் இருந்தது அவனைப் பற்றி இழுப்பது போலத் 
					தோன்றியது.
 
 பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.
 
 "மந்திரவாதி! என்ன விழிக்கிறாய்? பூதத்தின் வாயில் அகப்பட்டுக் 
					கொண்டாயா? மந்திரம் போட்டுப் பார்ப்பது தானே?" என்றாள்.
 
 மந்திரவாதி ஒரு பக்கம் பீதியானாலும் மறுபக்கம் கோபத்தினாலும் 
					நடு நடுங்கினான்.
 
 "அடி பாவி! உன் வேலையா இது?" என்று 
					கையை நெறித்தான்.
 
 "என் கழுத்தைப் பிடித்து நெறிக்க 
					வேண்டுமென்று நீ ஆசைப்பட்டாயல்லவா? அதற்குப் பதிலாக கையை 
					நெறித்துக் கொள்!" என்றாள்.
 
 ரவிதாஸன் கோபத்தை அடக்கிக்கொண்டு, "பெண்ணே! சத்தியமாகச் சொல்கிறேன். உன்னை 
					நான் ஒன்றும் செய்யவில்லை, சற்றுக் கைகொடுத்து என்னைக் கரையிலே 
					தூக்கிவிடு!" என்றான்.
 
 பூங்குழலி 'ஹா ஹா ஹா' என்று 
					சிரித்தாள். "உன்னைக் கரையேற்றிவிட என்னால் ஆகாது! உன் 
					மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பேய் பிசாசுகளை யெல்லாம் 
					கூப்பிடு!" என்றாள்.
 
 ரவிதாஸன் இதற்குள் தொடை வரையில் 
					சேற்றில் புதைந்து போயிருந்தான். அவன் முகத்தைப் பார்க்கப் 
					பயங்கரமாயிருந்தது. அவனுடைய கண்கள் கொள்ளிக் கட்டைகள் போலச் 
					சிவப்புத் தணல் ஒளியை வீசின.
 
 கைகளை நீட்டிப் புதை 
					சேற்றுக்கு அப்பால் இருந்த கரையைப் பற்றினான். அங்கே நீண்டு 
					வளர்ந்திருந்த கோரைப் புற்களின் அடிப்பகுதியைப் பிடித்துக் 
					கொண்டான். மறுபடியும் சேற்றில் இருந்து வௌிவரப் பிரயத்தன் 
					செய்தான். ஆனால் புதைந்திருந்த கால்களை அசைக்கவும் 
					முடியவில்லை.
 
 "பெண்ணே, உனக்குப் புண்ணியம் உண்டு! என்னைக் காப்பாற்று!" என்று 
					ஓலமிட்டான்.
 
 இதற்குள் அங்கே சேந்தன் அமுதன் வந்து 
					சேர்ந்தான். ரவிதாஸனுடைய நிலைமை இன்னதென்பதை அவன் ஒரு நொடியில் 
					அறிந்து கொண்டான். அவனுடைய கண்களில் இரக்கத்தின் அறிகுறி 
					புலப்பட்டது.
 
 பூங்குழலி அவனைப் பார்த்து, "வா, 
					போகலாம்!" என்றாள்.
 
 "ஐயோ! இவனை இப்படியே விட்டுவிட்டா 
					போகிறது!"
 
 "ஏன் சேற்றில் இவன் முழுவதும் புதைகிற வரையில் இருந்து பார்க்க 
					வேண்டுமென்கிறாயா!"
 
 "இல்லை, இல்லை! இவனை இப்படியே 
					விட்டுவிட்டுப் போனால் வாழ்நாளெல்லாம் கனவு காணுவேன். இவனைக் 
					கரையேற்றி விட்டுப் போகலாம்."
 
 "அத்தான்! இவன் என்னைக் கழுத்தை நெறித்துக் கொல்ல நினைத்தான்."
 
 "அவனுடைய பாவத்துக்குக் கடவுள் அவனைத் தண்டிப்பார். நாம் 
					காப்பாற்றிவிட்டுப் போகலாம்."
 
 "அப்படியானால் உனது மேல் 
					துண்டைக் கொடு" என்றாள் பூங்குழலி.
 
 அமுதன் தன் மேல் 
					துண்டைக் கொடுத்தான். அதன் ஒரு முனையைப் புதைசேற்றுக் குழிக்கு 
					அருகில் இருந்த ஒரு புதரின் அடிப்பகுதியில் பூங்குழலி 
					காட்டினாள். இன்னொரு முனையை ரவிதாஸனிடம் கொடுத்தாள்.
 
 "மந்திரவாதி! இதோ பார்! இந்தத் துண்டின் முன்னையைப் பிடித்துக் கொண்டிரு! 
					அதிகம் பலங் கொண்டு இழுத்தால் புதர் வேரோடு வந்துவிடும். 
					ஆகையால் மெல்ல பிடித்துக் கொண்டிரு. நீயாகக் கரையேற முயலாதே! 
					பொழுது விடிந்ததும் யாராவது இந்தப் பக்கம் வருவார்கள். அவர்கள் 
					உன்னைக் கரையேற்றுவார்கள்!' என்றாள்.
 
 "ஐயோ! இரவெல்லாம் 
					இப்படியே கழிக்க வேண்டுமா? என்னால் முடியாது அதைக்காட்டிலும் 
					என்னைக் கொன்று விட்டுப் போய் விடு!"
 
 பூங்குழலி அவன் 
					கூக்குரலைப் பொருட்படுத்த வில்லை. சேந்தன் அமுதனைக் 
					கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்ப ஓடத் 
					தொடங்கினாள்.அவர்கள் மேட்டின் மேல் ஏறி அப்பால் காட்டில் 
					இறங்கும் வரையில் மந்திரவாதியின் ஓலக் குரல் கேட்டுக் 
					கொண்டிருந்தது.
 
 அந்தக் குரல் மறைந்த பிறகு, "அத்தான்; 
					நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தாய்! நீ எப்படி இங்கு வந்தாய்? 
					எதற்காக?" என்று பூங்குழலி கேட்டாள்.
 
 "பாதாளச் சிறை 
					அனுபவத்துக்குப் பிறகு தஞ்சாவூரில் இருக்க எனக்குப் 
					பிடிக்கவில்லை. அடிக்கடி பழுவூர் வீரர்களும், ஒற்றர்களும் 
					வந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆகையால் 
					பழையாறைக்குப் போனேன். குந்தவை தேவி என்னை இவ்விடம் 
					அனுப்பினார். இளவரசருக்கு அபாயம் அதிகமாயிருப்பதாகவும், 
					ஆகையால் அவரை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் கொண்டு 
					சேர்த்து விட்டு வரும்படியும் வந்தியத்தேவனிடம் சொல்லும்படி 
					கூறினார். எனக்கும் உன்னைப் பார்த்து உன்பாட்டைக் கேட்க 
					வேண்டும் என்று ஆசையாயிருந்தது..."
 
 "பாட்டுக் கேட்பதற்கு நல்ல சமயம் பார்த்தாய்! இளையபிராட்டி கூறியது 
					உண்மைதான். இளவரசருக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் இப்படி 
					அப்படியல்ல. பகைவர்களின் சூழ்ச்சிகளோடு குளிர் காய்ச்சல் வந்து 
					விட்டது."
 
 "ஆமாம், நானுந்தான் பார்த்தேன். நாங்கள் 
					இரண்டு பேருமாக அவரைத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த 
					மண்டபத்தில் சேர்த்தோம். அதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனோம். 
					பூங்குழலி! நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புத்த 
					பிக்ஷூக்கள் வைத்திய சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். இளவரசரைக் 
					குணப்படுத்தி விடுவார்கள்."
 
 "நாகைப்பட்டினத்துக்கு 
					எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது?"
 
 "கால்வாய் 
					வழியாகத்தான்!"
 
 "கால்வாய் வழியாக எப்படிப் போவது? படகைத் தொலைத்து விட்டீர்களே?"
 
 "படகு தண்ணீரில் முழுகித்தானே இருக்கிறது? திரும்ப எடுத்து விட்டால் 
					போகிறது!"
 
 "அப்படியானால் இன்று இராத்திரியே கிளம்பிவிட 
					வேண்டியதுதான். அந்தச் சிறிய படகில் நாம் எல்லோரும் போக 
					முடியாதே!"
 
 "வேண்டியதில்லை, பூங்குழலி! அதெல்லாம் 
					நாங்கள் பேசி முடிவு செய்துவிட்டோம். வல்லவரையன் இங்கிருந்து 
					நேரே பழையாறைக்குப் போவான். நானும் நீயும் இளவரசரைப் படகில் 
					ஏற்றி நாகைப்பட்டினம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது."
 
 பூங்குழலிக்குப் புல்லரிததது. மீண்டும் இளவரசருடன் பிரயாணம்! 
					கால்வாயில், படகில் நாகைப்பட்டினம் வரையில்! வழியில் அபாயம் 
					ஒன்றும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.
 
 இருவரும் மறைந்த 
					மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தை நெருங்கியதும் சேந்தன் 
					அமுதன் பலமாகக் கையைத் தட்டினான்.
 
 "யார் அங்கே?" என்று வந்தியத்தேவனுடைய கடுமையான குரல் கேட்டது.
 
 "நான்தான் சேந்தன்!"
 
 "இன்னும் யார்?"
 
 "என் மாமன் மகள்!" 
					வந்தியத்தேவன் மண்டபத்தின் வாசலில் வந்து எட்டிப் பார்த்தான்.
 
 "வேறு யாரும் இல்லையே?"
 
 "இல்லை, ஏன் சந்தேகம்?"
 
 "மெல்லப் பேசுங்கள்; இளவரசர் தூங்குகிறார். கொஞ்ச நேரத்துக்கு 
					முன்னால் இங்கே யாரோ ஒருவன் வந்தான். நீதானாக்கும் என்று 
					நினைத்து வௌியில் வந்தேன். நீ இல்லை. மந்திரவாதியைப் போல் 
					தோன்றியது."
 
 "அப்புறம்?"
 
 "அச்சமயம் உன் பாட்டின் குரல் கிளம்பியது. பாடுவதற்கு 
					நல்ல நேரம் பார்த்தாய் என்று எண்ணிக் கொண்டேன். நல்ல வேளையாக 
					அதை மந்திரவாதியும் கேட்டுவிட்டுத் திரும்பிப் போனான். அவனை 
					நீங்கள் பார்த்தீர்கள்?"
 
 "பார்த்தோம்."
 
 "அவனை என்ன செய்தீர்கள்?"
 
 "நான் ஒன்றும் 
					செய்யவில்லை. இவள் தான் அவனைப் புதைசேற்றுக்குழியில் 
					இடுப்புவரையில் இறக்கி நிறுத்திவிட்டு வந்திருக்கிறாள்!"
 
 "இவளுடைய குரல் கூடக் கொஞ்சம் கேட்டதே!"
 
 "ஆம், பூங்குழலியும் ஒரு பாட்டுப் பாடினாள்."
 
 "அதைக் கேட்டதும் 
					இளவசருக்குக் சுய உணர்வு வந்தது போலத் தோன்றியது. 'யார் 
					பாடுகிறது?" என்று கேட்டார். 'ஓடக்காரப் பெண்' என்றேன். 
					பாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டார்."
 
 பூங்குழலிக்கு மீண்டும் மெய்சிலிர்த்தது.
 
 "இவள் பாட்டு மட்டுந்தானா 
					பாடினாள்? ஆந்தை போலவும் கத்தினாளே!"
 
 "அதுவும் என் 
					காதில் விழுந்தது.காட்டில் ஏதோ அதிசயம் நடைபெறுகிறதென்று 
					நினைத்துக் கொண்டேன். நீங்கள் - அத்தானும், மாமன் மகளும் - 
					வசந்தோத்ஸவம் கொண்டாடுகிறீர்களோ என்று நினைத்தேன்..."
 
 "இது என்ன வீண் பேச்சு?" என்றாள் பூங்குழலி.
 
 "வேறு என்ன செய்வது? 
					இரவை எப்படியேனும் கழித்தாக வேண்டும்!" என்றான் வந்தியத்தேவன்.
 
 "இல்லை; பொழுது விடிந்து இங்கே இருந்தால் தப்பிப் பிழைக்க 
					முடியாது. இராத்திரியே புறப்பட்டாக வேண்டும்."
 
 அச்சமயம் எங்கேயோ வெகு தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின. 
					அந்த ஊளைச் சப்தத்துக்கு இடையில் ஆந்தைக் குரல் ஒன்றும் 
					கேட்டது. சேந்தன் அமுதன் நடுங்கினான். அவன் மனக் கண்ணின் 
					முன்னால் மந்திரவாதி சேற்றில் புதைந்திருப்பதும், அவனைச் 
					சுற்றி நரிகள் ஊளையிட்டுக் கொண்டு நெருங்கி நெருங்கி வருவதும், 
					மந்திரவாதி ஆந்தையைப்போல் கத்தி நரிகளை விரட்டப் பார்ப்பதும் 
					தென்பட்டன.
 
 வந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரின் தூக்கம் கலையாமல் தூக்கிக் 
					கொண்டார்கள், பூங்குழலி பின் தொடர்ந்து சென்றாள்.
 
 கால்வாயின் கரையை அவர்கள் அடைந்தபோது சந்திரன் 
					உதயமாகியிருந்தது.
 
 கரையில் இளவரசரை ஒரு மரத்தின் 
					பேரில் சாய்த்து படுக்க வைத்தார்கள். பூங்குழலியை அவர் 
					பக்கத்தில் இருக்கச் செய்து விட்டு வந்தியத்தேவனும், சேந்தன் 
					அமுதனும் தண்ணீரில் இறங்கினார்கள். முழுகிப் போயிருந்த படகை 
					மிகப் பிரயாசையுடன் மேலே எடுத்துக் கரையோரமாகக் கொண்டு 
					வந்தார்கள்.
 
 இளவரசர் கண் விழித்தார். மிக மெல்லிய குலில் "தாகமாயிருக்கிறது!" என்றார்.
 
 பக்கத்தில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலி 
					கெண்டியிலிருந்த பாலை அவருடைய வாயில் ஊறிறினாள்.
 
 சிறிதளவு பால் அருந்திய பிறகு இளவரசர், "பூங்குழலி, நீ தானா? 
					சொர்க்க லோகத்தில் யாரோ ஒரு தேவ கன்னிகை என் வாயில் அமுதத்தை 
					ஊற்றுவது போலத் தோன்றியது" என்றார்.
 
 
 பக்க 
தலைப்பு 
 
 எட்டாம் அத்தியாயம்
 "ஐயோ! பிசாசு!"
 கற்பக விருட்சம் பூங்குழலியின் மீது வர்ண 
மலர்களைச் சொரிந்தது. தேவலோகத்துக் கின்னரி வாத்தியங்கள் இன்ப கீதங்களைப் 
பொழிந்தன். ஏன்? பூங்குழலியின் மேனி நரம்புகளே யாழின் நரம்புகளாக்கித் தெய்வ கானம் 
இசைத்தன. இளவரசரின் கனிவு செறிந்த மொழிகள் அவளுக்கு அத்தகைய போதையை அளித்தன. 
 "இளவரசே! நான் தேவலோக கன்னிகை அல்ல; ஏழை ஓடக்காரப் பெண். தாங்கள் அருந்தியதும் 
தேவலோகத்து அமுதம் அல்ல. குழகர் கோயிலில் கிடைத்த பாலமுதம்!" என்றாள்.
 
 "நீ 
தேவலோக கன்னிகையில்லையென்றால், நான் நம்பி விடுவேனோ? வருணனின் திருப்புதல்வி அல்லவா 
நீ? சமுத்திரகுமாரி! எத்தனை தடவை எனக்கு நீ உயிர் அளித்திருக்கிறாய்? உனக்கு நான் 
என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்றார் இளவரசர்.
 
 "ஐயா! இன்னும் ஒரு 
பகலும், ஒரு இரவும் தங்களுடன் இருக்க இந்த ஏழையை அனுமதிக்க வேண்டும்" என்றாள் 
பூங்குழலி.
 
 "அது எப்படி முடியும்? உடனே நான் பழையாறைக்குப் புறப்பட வேண்டுமே" என்றார் 
இளவரசர்.
 
 "இல்லை, தங்களை நாகைப்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும்படி 
செய்தி வந்திருக்கிறது."
 
 "யாரிடமிருந்து?"
 
 "இளைய 
பிராட்டியிடமிருந்துதான்!"
 
 "அது யார் அங்கே, இன்னொருவன்? வந்தியத்தேவனுடன் 
படகை இழுத்து வருகிறவன்?"
 
 "என் அத்தான் சேந்தன் அமுதன். இளையபிராட்டி 
அவனிடந்தான் செய்தி அனுப்பியிருக்கிறார். தங்களை நாகைப்பட்டினத்தில் உள்ள சூடாமணி 
விஹாரத்திற்கு அழைத்துச் செல்லும்படி."
 
 "ஆஹா! என் தமக்கையின் மனம் மாறி 
விட்டதா? எனக்கு முடிசூட்டும் ஆசை அகன்று விட்டதா? வெகு காலமாக எனக்குப் புத்த 
சங்கத்தில் சேரவேண்டும் என்ற ஆசை உண்டு. புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்ஷூ ஆவேன். 
தூர தூர தேசங்களுக்கு யாத்திரை செய்வேன்; சாவகம் - கடாரம் - மாயிருடிங்கம் - 
மாபப்பாளம் - சீனம்! ஆஹா என்னுடைய பாக்கியமே பாக்கியம்; பூங்குழலி! வா, போகலாம்!" 
என்று கூறி இளவரசர் எழுந்து நின்றார்.
 
 அவருக்கு இன்னும் முழுநினைவு 
வரவில்லை, சுரவேகத்திலேயே பேசுகிறார் என்று பூங்குழலி சந்தேகித்தாள். அதே சமயத்தில் 
தூரத்தில் ஓலமிடும் குரல் ஒன்று கேட்டது.
 
 இளவரசர் திடுக்கிட்டு நின்று, 
"பூங்குழலி! அது என்ன?" என்றார்.
 
 "ஆந்தை கத்துகிறது ஐயா!" என்றாள்.
 
 "இல்லை! அது மனிதக் குரல்! ஏதோ பெரும் அபாயத்தில் சிக்கியவனின் அபயக்குரல்! 
அவனைக் காப்பாற்றிவிட்டுப் போகலாம்.புத்த சங்கத்தில் சேருவதற்கு முன்னால் ஒரு 
புண்ணியகாரியம் செய்யலாம்!!" என்று இவ்விதம் கூறிவிட்டு இளவரசர் பாய்ந்து ஓட 
முயன்றார். அந்த முயற்சியில் திடீரென்று கீழே விழுந்தார். பூங்குழலி அவரைத் 
தாங்கிக் கொண்டாள்.
 
 படகைக் கரை சேர்ந்தவர்கள் இருவரும் ஓடி வந்தார்கள். 
மீண்டும் உணர்ச்சியை இழந்துவிட்ட இளவரசரை அவர்கள் மெதுவாகத் தூக்கிக் கொண்டு போய்ப் 
படகில் பத்திரமாய்ச் சேர்த்துப் படுக்க வைத்தார்கள்.
 
 கால்வாயில் படகு போக 
ஆரம்பித்தது. இளவரசரைத் தவிர்த்து, மற்ற மூவரும் இட நெருக்கடியுடன் அதில் 
உட்கார்ந்திருந்தார்கள். வந்தியத்தேவன், "பூங்குழலி! நாலுபேரை இந்தப் படகு 
தாங்குவது கடினம். எப்படியும் நான் உங்களிடம் விடை பெற்றுக் கொள்ள வேண்டியவன். 
இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். இளவரசரைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பது 
உங்கள் பொறுப்பு. உங்களுக்கு அதிகம் நான் சொல்ல வேண்டியதில்லை!" என்று சொன்னான்.
 
 அவனுடைய குரல் தழுதழுத்தது. நிலாக் கிரணம் அவன் முகத்தில் விழுந்தபோது 
கண்களில் முத்துத் துளிகள் ஒளிவீசித் திகழ்ந்தன.
 
 "கோடிக்கரைக் காடு தாண்டிய 
பிறகு இறங்கிச் செல்லலாமே? என் குதிரையையும் அங்கேதான் நிறுத்தி வைத்திருக்கிறேன். 
அடையாளம் நினைவிருக்கிறதல்லவா?" என்றான் சேந்தன் அமுதன்.
 
 "வேண்டாம். நான் 
இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். குழகர் கோயில் பிராகாரதில் சற்று நேரம் படுத்துத் 
தூங்கிவிட்டுப் பொழுது விடிவதற்குள் எழுந்து புறப்படுகிறேன். இல்லாவிடில் 
நாளைக்குப் பிரயாணம் செய்ய முடியாது! வழியில் எவ்வளவு தடங்கல்களோ!" என்றான் 
வந்தியத்தேவன்.
 
 பூங்குழலி அத்தனை நேரமும் தன் மடியில் பத்திரப் படுத்தி 
வைத்திருந்த பொட்டணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள். "இந்தா! குழகர் கோயில் 
பிரசாதம். இதை சாப்பிட்டு விட்டுத் தூங்கு!" என்றாள்.
 
 "நீங்களும் ஒன்றும் 
சாப்பிடவில்லையே, உங்களுக்கு வேண்டாமா?"
 
 "கோடிக்கரையிலிருந்து காத தூரம் 
கால்வாயில் போய் விட்டால் எத்தனையோ கிராமங்கள். நானாவது சேந்தனாவது போய் உணவு 
சம்பாதித்துக் கொண்டு வருவோம். உன் விஷயம் அப்படியல்ல. நீ ஒருவர் கண்ணிலும் படாமல் 
பழையாறை போய்ச் சேர வேண்டும் அல்லவா?"
 
 "படகில் இளவரசர் இருக்கிறார் என்பதை 
நீங்களும் மறந்து விடக்கூடாது."
 
 "இந்தப் படகில் இருப்பவர் இளவரசர் என்று 
யார் நம்புவார்கள்? அதைப்பற்றிக் கவலைப்படாதே! எங்கள் பொறுப்பு. இந்த ஓட்டைப் படகை 
யாரும் கவனிக்க மாட்டார்கள்."
 
 "சரி, அப்படியானால் இங்கேயே நான் இறங்கிக் 
கொள்கிறேன்."
 
 அச்சமயம் மறுபடியும் அந்த ஓலக்குரல் கேட்டது. "ஆ! அது என்ன?" 
என்று இளவரசர் கேட்டுவிட்டு மறுபடியும் உணர்வை இழந்தார். பூங்குழலி எழுந்து 
நின்றாள்.
 
 "முடியாது; என்னால் முடியாது, இளவரசருக்குத் தெரிந்தால் என்னை 
மன்னிக்க மாட்டார். இன்னும் கொஞ்ச நேரம் படகில் இரு. அந்த மந்திரவாதியைச் 
சேற்றிலிருந்து எடுத்து விட்டுவிட்டு வருகிறேன். இங்கிருந்து அந்த இடம் கிட்டத்தான் 
இருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே படகிலிருந்து கால்வாயின் கரையில் குதித்தாள்.
 
 "அப்படியானால் நானும் உன்னோடு வருகிறேன். அந்தப் பாதகனிடம் உன்னைத் தனியாக 
விடமாட்டேன்" என்றான் சேந்தன் அமுதன்.
 
 "இல்லை, அமுதா! நீ படகில் இரு! 
இளவரசரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். நான் பூங்குழலியுடன் போய் வருகிறேன். 
எனக்கும் அந்த மந்திரவாதியைப் பார்க்க வேண்டிய காரியம் இருக்கிறது!" என்று 
சொல்லிவிட்டுப் பூங்குழலியைப் பின் தொடர்ந்து வேகமாக ஓடினான் வந்தியத்தேவன்.
 
 பூங்குழலியின் மனக்கண் முன்னால் மந்திரவாதி மார்பளவு சேற்றில் 
புதைந்திருக்க, அவனைச் சுற்றி நரிகள் நின்று அவனைப் பிடுங்கித் தின்னப் பார்க்கும் 
பயங்கரக் காட்சி தோன்றிக் கொண்டிருந்தது. அதற்கிடையே இளவரசர் அவளைப் பார்த்து 
"பெண்ணே நீ கொலை பாதகி!" என்று குற்றம் சாட்டும் காட்சியும் தோன்றியது! இந்தக் 
காட்சிகள் அவளுடைய கால்களுக்கு மிக்க விரைவைக் கொடுத்தன. மந்திரவாதியை அமிழ்த்திய 
சேற்றுப் பள்ளத்தை அதி விரைவில் நெருங்கினாள். அங்கே மந்திரவாதியைக் காணாமல் பெரும் 
ஏமாற்றம் அடைந்தாள்.
 
 பின் தொடர்ந்து வந்த வந்தியத்தேவன், அவள் பக்கம் 
நெருங்கியதும் அவள் தயங்கி நிற்பதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
 
 "வேறு ஒரு சேற்றுப் பள்ளமாயிருக்கலாம். கோடிக்கரையில் எத்தனையோ பள்ளங்கள் 
உண்டு அல்லவா? நீ மறந்து போயிருப்பாய்!" என்றான்.
 
 புதரில் ஒரு முனை 
க்டியிருந்த சேந்தன் அமுதனின் மேல் துண்டைப் பூங்குழலி சுட்டிக் காட்டினாள். பாவம்! 
அவளால் பேச முடியவில்லை.
 
 "சேற்றில் அமிழ்ந்திருப்பான் என்று நினைக்கிறாயா? 
இல்லை, இல்லை! ரவிதாஸனை அப்படியெல்லாம் கொன்று விட முடியுமா? அவனுக்கு நூறு உயிர் 
ஆயிற்றே? தப்பிப் போயிருப்பான்!" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் புதரில் 
கட்டப்பட்டிருந்த துண்டை அவிழ்த்து எடுத்துக் கொண்டான். பூங்குழலிக்கு ஆறுதலாக 
அவ்விதம் சொன்னானே தவிர, அவன் மனத்திற்குள், ரவிதாஸன் மாண்டு தான் போயிருப்பான்; 
அவனுக்கு இந்தக் கோர மரணம் வேண்டியதுதான்!' என்ற எண்ணமும் தோன்றியது.
 
 இருவரும் அங்கே மேலும் நிற்பதில் பயனில்லை என்பதை ஒருங்கே உணர்ந்தார்கள்.மீண்டும் 
கால்வாயை நோக்கி நடந்தார்கள். கால்வாயின் கரைகளை அங்கே இருபுறமும் மரங்கள் 
மறைத்துக் கொண்டிருந்தன. ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு நின்று இரு உருவங்கள் 
எட்டிப் பார்த்தது தெரிந்தது.
 
 அவற்றில் ஒன்று ஆண் உருவம்; இன்னொன்று பெண் 
உருவம்.
 
 "அதோ!" என்று பூங்குழலி சுட்டிக் காட்டினாள்."
 
 "ஆமாம்; 
அவர்கள் யார் என்று தெரிகிறதா?"
 
 "மந்திரவாதி ஒருவன்! இன்னொருத்தி என் 
அண்ணன் மனைவி எனக்கு முன்னால் அவள் வந்து மந்திரவாதியை விடுவித்திருக்கிறாள்."
 
 "நல்லதாய்ப் போயிற்று."
 
 "நல்லது ஒன்றுமில்லை. கால்வாயில் படகு வருவதை 
அவர்கள் உற்றுப் பார்க்கிறார்களே?"
 
 அச்சமயம் இரண்டு உருவங்களில் ஒன்று திரும்பி இவர்கள் வரும் திசையைப் 
பார்த்தது. உடனே இரண்டு உருவங்களும் புதர்களும் அடியில் மறைந்து விட்டன."ஐயோ! 
அவர்கள் நம்மையும் பார்த்து விட்டார்கள்!"
 
 "பேசாமல் என்னுடன் வா! நான் ஒரு 
யுக்தி செய்கிறேன். நான் என்ன சொன்னாலும் ஆச்சரியப் படாதே! என்னை ஒட்டியே பேசு!" 
என்றான் வந்தியத்தேவன்.
 
 இருவரும் மேற்கூறிய உருவங்கள் நின்ற இடத்துக்குச் 
சமீபமாகப் போனார்கள். அந்த இடத்தைக் கடந்து சிறிது அப்பால் சென்று கால்வாயின் ஓரமாக 
உட்கார்ந்து கொண்டார்கள். பின்னால் புதரில் மறைந்திருந்தவர்களுக்குத் தங்கள் பேச்சு 
நன்றாய்க் கேட்கும் என்று வந்தியத்தேவன் நிச்சயப் படுத்திக் கொண்டான்.
 
 "பூங்குழலி! இதோ பார்! ஏன் கவலைப்படுகிறாய்? மந்திரவாதி செத்து ஒழிந்து 
போனான். போனதே க்ஷேமம்" என்றான் வந்தியத்தேவன்.
 
 "ஐயோ! என்ன பயங்கரமான 
சாவு!" என்றாள் பூங்குழலி.
 
 "கொலை செய்தது செய்துவிட்டு, இது என்ன 
பரிதாபம்?"
 
 "ஐயோ! நானா கொலை செய்தேன்?"
 
 "பின்னே அவன் சேற்றில் 
விழச் செய்தது யார்? நீ தானே? திடீரென்று அப்புறம் உனக்குப் பச்சாத்தாபம் 
வந்துவிட்டது. தப்புவிக்கலாம் என்று வந்தாய்! அதற்குள் அவனை சேறு விழுங்கிவிட்டது. 
தப்புவிக்கத்தான் வந்தாயோ, அல்லது செத்துப் போய் விட்டானா என்று பார்ப்பதற்குத்தான் 
வந்தாயோ. யார் கண்டது?"
 
 "உன்னை யார் என்னைத் தொடர்ந்து வரச் சொன்னது?"
 
 "வந்ததினால்தானே நீ செய்த கொலையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது? அடி 
கொலை பாதகி!"
 
 "நானா கொலை பாதகி!"
 
 "ஆம், நீ கொலை பாதகிதான்! நான் 
மட்டும் யோக்கியன் என்று சொல்கிறேனோ? அதுவும் இல்லை. நான் இளவரசரைக் கடலில் முழுக 
அடித்துக் கொன்றேன். நீ மந்திரவாதியைச் சேற்றில் அமுக்கிக் கொன்றாய். அதற்கும் 
இதற்கும் சரியாகப் போய் விட்டது. நான் செய்த கொலையைப் பற்றி நீ வௌியில் 
சொல்லாமலிருந்தால், நீ செய்த கொலையைப் பற்றி நானும் யாரிடத்திலும் சொல்லவில்லை!"
 
 "இளவரசரைக் கொன்றவன் நீதானா? சற்றுமுன் அவரைப் பார்க்கவேயில்லை என்று 
சொன்னாயே?"
 
 "வேண்டுமென்றுதான் அப்படிச் சொன்னேன். இனிமேல் அப்படி உன்னிடம் 
சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நான் கூறியதை ஒப்புக் கொள்வாயா, மாட்டாயா?"
 
 "மாட்டேன் என்று மறுத்தால்?"
 
 "உடனே நந்தினி தேவியிடம் போய் நீ 
மந்திரவாதியைச் சேற்றில் அமுக்கிக் கொன்றதைக் கூறுவேன்.நான் செய்த கொலைக்குச் 
சாட்சியம் இல்லை; உன் கொலைக்குச் சாட்சியம் உண்டு..."
 
 "நந்தினி என்னை என்ன 
செய்துவிடுவாள்?"
 
 "வேறொன்றும் செய்யமாட்டாள். உன்னைப் பூமியில் கழுத்து 
வரையில் புதைத்து யானையின் காலினால் இடறும்படி செய்வாள்!"
 
 "ஐயோ! என்ன 
பயங்கரம்!"
 
 "வேண்டாம் என்றால், நான் கூறுகிறபடி செய்வதாக ஒப்புக்கொள்."
 
 "என்ன செய்ய வேண்டும்?"
 
 "அதோ உன் அத்தான் கொண்டு வருகிறானே, அந்தப் 
படகில் ஏறிக் கொள். இரண்டு பெரும் நேரே இலங்கைக்குப் போய்விட வேண்டும். அங்கே போய் 
உன் இளவரசரை நினைத்து அழுதுகொண்டிரு!"
 
 "எதற்காக நான் இலங்கை போகவேண்டும்? 
இங்கேயே இருந்தால் உனக்கு என்ன?"
 
 "ஆ! நீ போய் பழுவேட்டரையரிடம் என்னை 
பற்றிச் சொல்லிவிட்டால்! அவருக்கு என்ன இருந்தாலும் இளவரசர் பேரில் அபிமானம் உண்டு. 
என்னைப் பழி வாங்கப் பார்ப்பார்; எனக்கு இந்த உலகில் இன்னும் கொஞ்சம் வேலை 
இருக்கிறது."
 
 "அட பாவி! இளவரசரை நீ ஏன் கொன்றாய்! அதையாவது சொல்லிவிடு!"
 
 "சொன்னால் என்ன? நன்றாகச் சொல்லுகிறேன். இளவரசரும் அவருடைய தமக்கையும் 
சேர்ந்து, ஆதித்த கரிகாலரின் இராஜ்யத்தைப் பறிப்பதற்குச் சதி செய்தார்கள். ஆதித்த 
கரிகாலர் என்னுடைய எஜமானர். அவருடைய விரோதி என்னுடைய விரோதி. அதனால்தான் இளவரசரைக் 
கொன்றேன். தெரிந்ததா?"
 
 "இந்த மகாபாவத்துக்கு நீ தண்டனை அநுபவிப்பாய்."
 
 "அதைப்பற்றி நீ கவலைப்படாதே! நான் சொன்னபடி நீ செய்யப்போகிறாயா, இல்லையா?"
 
 "செய்யாவிட்டால் வேறு வழி என்ன? அதோ படகு வருகிறது, போய் ஏறிக் 
கொள்கிறேன்."
 
 "இதோ பார்! நன்றாய்க் கேட்டுக் கொள். படகில் ஏறியதும் நேரே 
கடலை நோக்கிச் செல்ல வேண்டும்.கோடிக்கரைப் பக்கம் திரும்பினாயோ, உன் கதி அதோ 
கதிதான்! இங்கேயே இருந்து நான் உங்கள் படகைப் பார்த்துக் கொண்டிருப்பேன். படகு கடலை 
அடைந்த பிறகுதான் இங்கிருந்து நகருவேன்."
 
 "சரி சரி! இங்கேயே இரு! உன்னை 
நூறு நரிகள் பிடுங்கித் தின்னட்டும்!"
 
 வந்தியத்தேவன் செய்த சமிக்ஞையைப் 
பார்த்து விட்டுப் பூங்குழலி அங்கிருந்து விரைந்து போய்ப் படகில் ஏறிக் கொண்டாள். 
படகு மேலே சென்றது. வந்தியத்தேவன் அவளிடம் கூறியபடி அங்கேயே உட்கார்ந்திருந்தான். 
அரை நாழிகை சென்றது. படகு கால்வாயில் வெகு தூரம் வரை சென்று மறைந்தது.
 
 திடீரென்று வந்தியத்தேவனுக்குப் பின்னால் 'ஹா ஹா ஹா' என்று ஒரு பயங்கரச் 
சிரிப்பு கேட்டது.
 
 வந்தியத்தேவன் திடுக்கிட்டவன் போலப் பாசாங்கு செய்து, 
சட்டென்று எழுந்து நின்று பார்த்தான்.
 
 மந்திரவாதி புதர்களுக்கு மத்தியில் 
எழுந்து நின்று பேய் சிரிப்பது போலப் பயங்கரமாய்ச் சிரித்தான்.
 
 "ஐயோ! 
பிசாசு" என்று அலறிக்கொண்டு வந்தியத்தேவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
 
 
 பக்க 
தலைப்பு  
 
 ஒன்பதாம் அத்தியாயம்
 ஓடத்தில்மூவர்
 பொழுது புலர்ந்தது, கருநிற அழகியான இரவெனும் தேவி 
உலக நாயகனை விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து செல்ல நேர்ந்தது. நாயகனைத் 
தழுவியிருந்த அவளுடைய கரங்கள் இலேசாகக் கழன்று விழுந்தன. வாழ்க்கையிலே கடைசி 
முத்தம் கொடுப்பவளைப் போல் கொடுத்து விட்டு இரவெனும் தேவி இன்னும் தயங்கி நின்றாள். 
"மாலையில் மறுபடியும் சந்திப்போம். நாலு ஜாம நேரந்தானே இந்தப் பிரிவு? சந்தோஷமாகப் 
போய்வா!" என்றது உலகம். இரவு தயங்கித் தயங்கி உலகத்தைத் திரும்பித் திரும்பிப் 
பார்த்துக் கொண்டு சென்றது. 
 உள்ளத்திலே அன்பில்லாத கள்ளக் காதலனைப் போல் 
இரவு பிரிந்து சென்றதும் உலகம மகிழ்ச்சியினால் சிலிர்த்தது. "ஆகா; விடுதலை!" என்று 
ஆயிரமாயிரம் பறவை இனங்கள் பாடிக் களித்தன. மரங்களிலும், செடிகளிலும் மொட்டுக்கள் 
வெடித்து மலர்ந்தன. எங்கிருந்தோ வண்டுகள் மந்தை மந்தையாக வந்து இதழ் விரிந்த 
மலர்களைச் சூழ்ந்து கொண்டு இன்னிசை பாடிக் களித்தன. விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள 
தட்டாரப் பூச்சிகள் நாலா பக்கங்களிலும் ஆனந்தக் கூத்தாடின.
 
 கீழ்வானத்தில் 
பொன்னிறம் கண்டது. வானச் சுடர்கள் ஒவ்வொன்றாக ஒளி மங்கி மறைந்தன. இதுவரையில் 
வானவீதியில் பவனி வந்து கொண்டிருந்த பிறைச் சந்திரன் "நிற்கட்டுமா? போகட்டுமா?" 
என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
 
 ஓடையில் படகு மெள்ள மெள்ளச் சென்று 
கொண்டிருந்தது. பட்சிகளின் கோஷ்டி கானத்தோடு துடுப்பு தண்ணீரைத் தள்ளும் சலசல 
சப்தமும் பூங்குழலியின் செவிகளில் விழுந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தாள். ஒரு 
கிளையில் வெடித்த இரண்டு அழகிய நீலநிற மொட்டுக்கள் ஒருங்கே மலர்ந்தது போல் அவளுடைய 
கண்ணிமைகள் திறந்தன. எதிரே இளவரசரின் பொன்முகம் தோன்றியது. இன்னும் அவர் தூங்கிக் 
கொண்டிருந்தார். தூக்கந்தானா? அல்லது சுரவேகத்தில் இன்னமும் 
உணர்ச்சியற்றிருக்கிறாரா? தெரியவில்லை. எனினும் அவருடைய திருமுகம் எவ்வளவு 
பிரகாசமாயிருக்கிறது!
 
 அப்பால் சேந்தன் அமுதன் துடுப்புத் தள்ளிக் 
கொண்டிருந்தான்.
 
 "பூங்குழலி! ஏன் அதற்குள் விழித்துக் கொண்டாய்? இன்னும் 
சற்று நேரம் தூங்குவதுதானே?" என்றான்.
 
 பூங்குழலி புன்னகை பூத்தாள். 
முகத்திலிருந்த இதழ்களிலே மட்டும் அவள் புன்னகை செய்யவில்லை. அவளுடைய திருமேனி 
முழுதும் குறுநகை பூத்தது.
 
 காட்டிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்தவள் 
பூங்குழலி. ஆயினும் பட்சிகளின் கானமும், வண்டுகளின் கீதமும் இவ்வளவு இனிமையாக 
அவளுடைய செவிகளில் என்றைக்கும் தொனித்ததில்லை.
 
 "அத்தான்! உதய ராகத்தில் ஒரு 
பாட்டுப் பாடு!" என்றாள் பூங்குழலி.
 
 "நீ இருக்குமிடத்தில் நான் வாயைத் 
திறப்பேனா? நீ தான் பாடு!" என்றான் சேந்தன் அமுதன்.
 
 "இராத்திரி இருளடர்ந்த 
காட்டில் பாடினாயே?"
 
 "காரிய நிமித்தமாகப் பாடினேன். இப்போது நீ பாடு!"
 
 "எனக்கும் பாட வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் இளவரசருக்குத் 
தொந்தரவாயிருக்கு மல்லவா?"
 
 "எனக்குத் தொந்தரவு ஒன்றுமில்லை. இரண்டு பேரும் 
சேர்ந்து பாடுங்கள்!" என்றார் அருள்மொழிவர்மர்.
 
 பூங்குழலி வெட்கத்தினால் 
தலை குனிந்து கொண்டாள்.
 
 "படகு எங்கே போகிறது?" என்று இளவரசர் கேட்டார்.
 
 "நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்திற்கு" என்றாள் பூங்குழலி.
 
 "அப்படியானால் இராத்திரி நான் கண்டது கேட்டதெல்லாம் கனவல்லவா? உண்மைதானா?"
 
 "ஆம், ஐயா! இதோ இவர்தான் தங்கள் தமக்கையாரிடமிருந்து செய்தி கொண்டு 
வந்தவர்."
 
 "இளையபிராட்டி கூறியதையெல்லாம் விவரமாகச் சொல்லு, அமுதா! என்னைப் 
புத்த சங்கத்தில் சேர்ந்து விடும்படிதானே என் தமக்கை சொல்லி அனுப்பினார்?"
 
 இதற்கு என்ன விடை சொல்வதென்று அமுதன் தயங்கிய போது, குதிரையின் காலடிச் 
சத்தம் கேட்டது. பூங்குழலியும் சேந்தன் அமுதனும் திடுக்கிட்டார்கள்.
 
 இளவரசரின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை.
 
 "என் நண்பன் எங்கே? 
வாணர் குலத்து வீரன்?"என்று இளவரசர் கேட்டார். கேட்டுவிட்டுக் கண்கள் மூடிக் 
கொண்டார்.
 
 சிறிது நேரத்துக்குள் குதிரைமீது வந்தியத்தேவன் தோன்றினான்.
 
 படகு நின்றது.
 
 வந்தியத்தேவன் குதிரைமீதிருந்து இறங்கி வந்தான்.
 
 "ஒன்றும் விசேஷமில்லை. நீங்கள் பத்திரமாயிருக்கிறீர்களா என்று 
பார்த்துவிட்டுப் போக வந்தேன்.இனி அபாயம் ஒன்றுமில்லை" என்றான் வந்தியத்தேவன்.
 
 "மந்திரவாதி?" என்று பூங்குழலி கேட்டாள்.
 
 "இந்தப் படகில் இளவரசர் 
இருக்கிறார் என்ற சந்தேகமே அவனுக்கில்லை. நான் கூறியதை அவன் அப்படியே நம்பி 
விட்டான்!"
 
 "அவனைப் பார்த்தயா?"
 
 "பார்த்தேன். ஆனால் அவனுடைய 
பிசாசைப் பார்த்ததாக பயந்து பாசாங்கு செய்தேன்."
 
 "உன்னைப் போல பொய் சொல்லக் 
கூடியவனை நான் பார்த்ததேயில்லை."
 
 "பொய் என்று சொல்லாதே! கற்பனா சக்தி என்று 
சொல்லு. இளவரசர் எப்படியிருக்கிறார்?"
 
 "நடுநடுவே விழித்துக்கொண்டு இரண்டு 
வார்த்தை சொல்கிறார்; அப்புறம் நினைவு இழந்து விடுகிறார்."
 
 "இந்தச் சுரமே 
அப்படித்தான்."
 
 "எத்தனை நாளைக்கு இருக்கும்?"
 
 "சில சமயம் ஒரு 
மாதம்கூட இருக்கும். சூடாமணி விஹாரத்தில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்து 
விடுங்கள். பிக்ஷூக்கள் வைத்தியம் செய்தால், இரண்டு வாரத்தில் குணப்படுத்தி 
விடுவார்கள். ஜாக்கிரதை, பூங்குழலி! உன்னை நம்பித்தான் இளவரசரை ஒப்படைத்து விட்டுப் 
போகிறேன். உன் அத்தான் எங்கேயாவது கோவில் கோபுரத்தைக் கண்டால், தேவராம் 
பாடிக்கொண்டு சுவாமி தரிசனத்துக்குப் போய் விடுவான்!"
 
 சேந்தன்அமுதன், 
"உன்னோடு பழகிய பிறகு அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். சிவ கைங்கரியம் செய்யும் 
ஆசைகூட எனக்குக் குறைந்துவிட்டது!" என்றான்.
 
 "என்னால் குறைந்துவிட்டதா? 
அல்லது இந்தப் பெண்ணினாலா? உண்மையைச் சொல்!"
 
 சேந்தன்அமுதன் அதைக் காதில் 
போட்டுக் கொள்ளாமல் "குதிரையை நான் சொன்ன இடத்தில் கண்டு பிடித்தாயா?" என்று 
கேட்டான்.
 
 "குதிரை என்னைக் கண்டுபிடித்தது. இது நான் உன்னிடம் தஞ்சையில் 
விட்டு வந்த குதிரை அல்லவா?"
 
 "ஆமாம்."
 
 "இருட்டில் இது அடர்ந்த 
காட்டுக்குள்ளே என்னைப் பார்த்துவிட்டுக் கனைத்தது. அராபியர்களிடம் நான் 
அகப்பட்டுக் கொண்டதில் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன், அமுதா! குதிரைகளை 
வெறுங்காலோடு ஓடச்செய்வது பாவம்.குளம்புக்கு அடியில் இரும்புக் கவசம் அடித்து 
ஓட்டவேண்டும்.முதன் முதலில் நான் பார்க்கும் கொல்லுப்பட்டறையில் இதன் குளம்புக்குக் 
கவசம் அடிக்கச் சொல்லப்போகிறேன். சரி, சரி! அதையெல்லாம் பற்றிப் பேச நேரமில்லை. 
மறுபடியும் உங்களையும் இளவரசரையும் பார்ப்பேனோ என்னமோ, தெரியாது. இளவரசர் மறுபடி 
விழித்தால் நான் பழையாறைக்குப் போகிறேன் என்று சொல்லுங்கள். அங்கிருந்து விரைவில் 
செய்தி அனுப்புவதாகவும் சொல்லுங்கள். அப்போதுதான் நிம்மதியாக இருப்பார்."
 
 வந்தியத்தேவன் குதிரையைத் திருப்பிவிட்டுக் கொண்டு போனான். விரைவில் 
இவர்களுடைய பார்வையிலிருந்து அவன் மறைந்தான்.
 
 இருபுறமும் தாழம்புதர்கள் 
அடர்ந்திருந்த ஓடைக் காலின் வழியாகப் படகு போய்க் கொண்டிருந்தது. பொன்னிறத் 
தாழம்பூக்களும், தந்த வர்ண வெண் தாழம்பூக்களும் இருபக்கமும் செறிந்து 
கிடந்தன.அவற்றின் நறுமணம் போதையை உண்டாக்கிற்று. சில இடங்களில் ஓடைக் கரையில் 
புன்னை மரங்கள் வளர்ந்திருந்தன. சில இடங்களில் கடம்ப மரங்களும் இருந்தன. 
முத்துநிறப் புன்னை மலர்களும், குங்கும வர்ணக் கடம்ப மலர்களும் ஓடைக் கரைகளில் 
சொரிந்து கிடந்தன.
 
 பூலோகத்திலிருந்து புண்ணியசாலிகள் சொர்க்கத்திற்குப் 
போகும் பாதை ஒன்று இருந்தால், அது இப்படித்தான் இருக்கும் என்று பூங்குழலிக்குத் 
தோன்றியது.
 
 இடையிடையே கிராமம் தென்பட்ட இடத்தில் சேந்தன் அமுதன் சென்று 
இளவரசருக்குப் பாலும், பூங்குழலிக்கு உணவும் வாங்கிக் கொண்டு வந்தான்.
 
 இளவரசர் கண்விழித்த போதெல்லாம் பூங்குழலி சற்று விலகி நின்றாள். நேருக்கு 
நேர் அவரைப் பார்க்க முடியாமல் அங்குமிங்கும் பார்த்தாள். அவர் உணர்விழந்திருந்த 
நேரங்களில் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சேந்தனுடன் பல விஷயங்களைப் 
பற்றிப் பேசிக் கொண்டுமிருந்தாள். சிலசமயம் இரண்டு பேரும் சேர்ந்து பாடிக் 
களித்தார்கள்.
 
 சேந்தன் அமுதன் உணவு தேடிக் கிராமங்களுக்குச் சென்ற 
சமயங்களில் பூங்குழலி இளவரசரின் நெற்றியைத் தடவிக் கொடுத்தும், தலையைக் 
கோதிவிட்டும் பணிவிடை செய்தாள். அப்போதெல்லாம் அவள் உள்ளம் பொங்கி, உடல் 
சிலிர்த்து, பரவச நிலையிலிருந்தாள். இம்மாதிரி அவள் எத்தனை எத்தனையோ பூர்வ 
ஜன்மங்களில் அவருக்குப் பணிவிடை செய்தது போன்ற உணர்வு தோன்றியது.உருவமில்லாத 
ஆயிரமாயிரம் நினைவுகள் இறகுகளைச் சடசடவென்று அடித்துக் கொண்டு அவளுடைய உள்ளத்தில் 
கும்பல் கும்பலாகப் புகுந்து வௌியேறிக் கொண்டிருந்தன.
 
 ஒரு பகலும் ஓர் 
இரவும் அவர்கள் அந்த ஓடைக்கால் வழியாகப் படகில் சென்றார்கள். பூங்குழலியும், 
சேந்தனும் முறை போட்டுக்கொண்டு அவ்வப்போது சிறிது நேரம் கண்ணயர்ந்தார்கள். 
கண்ணயர்ந்த நேரத்தில் உருவந் தெரியாத இன்பக் கனவுகள் பலவற்றைப் பூங்குழலி கண்டாள்.
 
 மறுநாள் சூரியோதய நேரத்தில் உலகமே பொன்னிறமாக ஜொலித்த வேளையில், படகு 
நாகைப் பட்டினத்தை அடைந்தது. நாகைப் பட்டினத்தின் அருகில் அந்த ஓடையிலிருந்து ஒரு 
கிளை பிரிந்து சூடாமணி விஹாரத்திற்கே நேராகச் சென்றது. அந்தக் கிளை வழியில் படகைக் 
கொண்டு போனார்கள். புத்த விஹாரத்தின் பின்புறத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
 
 அச்சமயம் அந்தப் புகழ்பெற்ற சூடாமணி விஹாரத்தில் ஏதோ குழப்பம் நேர்ந்து 
கொண்டிருந்ததாகத் தோன்றியது. விஹாரத்தின் வாசலில் ஜனக்கூட்டத்தின் இரைச்சல் 
கேட்டுக் கொண்டிருந்தது. பிக்ஷூக்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
 
 படகிலிருந்து மூவரும் கரையில் இறங்கினார்கள். சேந்தன் அமுதன் தான் 
விஹாரத்துக்குச் சென்று, குழப்பத்தின் காரணம் என்னவென்று தெரிந்து வருவதாகச் 
சொல்லிவிட்டுப் போனான்.
 
 
 பக்க 
தலைப்பு 
 
 பத்தாம் அத்தியாயம்
 சூடாமணி விஹாரம்
 பூம்புகார் என்னும் காவிரிப் பட்டினத்தைக் கடல் 
கொள்ளை கொண்டு போய்விட்டது அல்லவா? அதற்குப் பிறகு சோழ வளநாட்டின் முக்கியத் 
துறைமுகப்பட்டினம் என்ற அந்தஸ்தை நாகைப்பட்டினம் நாளடைவில் அடைந்தது. பொன்னி நதி 
பாய்ந்த இயற்கை வளம் செறிந்திருந்த சோழ நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு கொள்ள எத்தனையோ 
அயல்நாட்டார் ஆவல் கொண்டிருந்தனர். பெரிய பெரிய மரக்கலங்களிலே வர்த்தகப் பண்டங்கள் 
வந்து இறங்கியபடி இருந்தன. முத்தும், மணியும், வைரமும், வாசனைத் திரவியங்களும் 
கப்பல்களில் வந்து இறங்கியதோடு அரபு நாட்டுக் குதிரைகளும் விற்பனைக்காக வந்து 
இறங்கின. 
 ஸரீ சுந்தர மூர்த்தி நாயனாரின் காலத்தில் நாகைப்பட்டினம் சிறந்த 
மணிமாட நகரமாயிருந்தது. அந்த நகரத்தைக் கண்ட நம்பி ஆரூரர்,
 "காண்பினிய மணிமாடம் 
நிறைந்த நெடு வீதிக்
 கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே!" என்று வர்ணித்தார். கடல் நாகைக் 
காரோணத்தில் மேவியிருந்த காயாரோகணப் பெருமானிடம் ஸரீ சுந்தர மூர்த்தி நாயனார் 
என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று கேட்டார் தெரியுமா? மற்ற ஊர்களிலே போலப் பொன்னும், 
மணியும், ஆடை ஆபரணங்களும் கேட்டதோடு, நாகைப்பட்டினத்திலே ஓர் உயர்ந்த சாதிக் 
குதிரையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
 "நம்பிதாமும் அந்நாட் போய்நாகைக் 
காரோணம் பாடி
 அம்பொன்மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா" ஆகியவை 
பெற்றுக்கொண்டு திருவாரூர் திரும்பிச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது.
 
 நாகைப் பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய அரபு நாட்டுக் குதிரைகளைப் 
பார்த்ததும் நாயனாருக்கும் குதிரை ஏறிச் சவாரி செய்யவேண்டும் என்று தோன்றி விட்டது 
போலும்!
 
 நாகைப் பட்டினத்தைப் பற்றிப் புராணம் வர்ணிப்பது ஒருபுறமிருக்க, 
சரித்திர பூர்வமான கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அந்நகரைப் பற்றிச் 
சொல்லியிருக்கின்றன.
 
 "பல கோவில்களும், சத்திரங்களும், நீர் நிலைகளும், 
சோலைகளும், மாட மாளிகைகளும் நிறைந்த வீதிகளையுடைய நாகைப்பட்டினம்" என்று ஆனைமங்கலச் 
செப்பேடுகள் அந்நகரை வர்ணிக்கின்றன.
 
 அதே ஆனைமங்கலச் செப்பேடுகள், அந்நாளில் 
நாகைப்பட்டினத்தில் புகழ்பெற்று விளங்கிய சூடாமணி விஹாரம் என்னும் பௌத்த ஆலயத்தைப் 
பற்றியும், அதன் வரலாற்றையும் கூறுகின்றன.
 
 மலாய் நாடு என்று இந்நாளில் நாம் 
குறிப்பிடும் தீபகற்பம் அக்காலத்தில் ஸரீ விஜய நாடு என்னும் பெயரால் பிரசித்தி 
பெற்றிருந்தது. அந்த நாட்டில் ஒரு முக்கிய நகரம் கடாரம். அந்த மாநகரைத் தலைநகராக 
வைத்துக்கொண்டு நாலா திசையிலும் பரவியிருந்த மாபெரும் ஸரீ விஜய சாம்ராஜ்யத்தை 
நெடுங்காலம் ஆண்டு வந்தவர்கள் சைலேந்திர வம்சத்தார். அந்த வம்சத்தில் மகரத்துவஜன் 
சூடாமணி வர்மன் என்னும் மன்னன் மிகவும் கீர்த்தி பெற்று விளங்கினான். அவ்வரசன் 
"இராஜ தந்திரங்களில் நிபுணன்; ஞானத்தில் சூர குருவான பிரகஸ்பதியை ஒத்தவன்; 
அறிவாளிகளான தாமரை மலர்களுக்குச் சூரியன் போன்றவன்; இரவலருக்குக் கற்பகத் தருவாய் 
விளங்கினான்" என்று ஆணை மங்கலச் செப்பேடுகள் வியந்து புகழ்ந்து கூறுகின்றன.
 
 அத்தகைய பேரரசனின் மகன் மாற விஜயோத்துங்க வர்மன் என்பவன் தன் தந்தையின் 
திருநாமம் நின்று நிலவும் படியாக "மேரு மலையை யொத்த சூடாமணி விஹாரத்தை 
நாகைப்பட்டினத்தில் கட்டினான்" என்றும் அச்செப்பேடுகள் கூறுகின்றன.
 
 கடாரத்து அரசனாகிய மாற விஜயோத்துங்கன் நாகைப் பட்டினத்துக்கு வந்து புத்த 
விஹாரத்தைக் கட்டுவானேன் என்று வாசகர்கள் கேட்கலாம். சோழ வளநாட்டுடன் நீடித்த 
வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த அயல் நாடுகளில் ஒன்று ஸரீ விஜய நாடு. அந்நாட்டுப் 
பிரஜைகள் பலர் நாகைப்பட்டினத்துக்கு வந்து நிரந்தரமாகவே குடியேறி இருந்தனர்.வேறு பல 
அடிக்கடி வந்து திரும்பினர். கடாரத்து அரசனும், அவனுடைய குடிகளும் புத்த மதத்தைச் 
சார்ந்தவர்கள். அவர்கள் புத்தரை வழிபடுவதற்கு வசதியாயிருக்கட்டும் என்றுதான் 
அம்மன்னன் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தைக் கட்டினான். புத்த மதத்தின் 
தாயகம் பாரத தேசமாயிற்றே என்ற காரணமும் அவன் மனத்தில் இருந்திருக்கலாம்.
 
 தமிழகத்து மன்னர்கள் எக்காலத்திலும் சமய சமரசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், 
ஆகையால் அவர்கள் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் கட்டுவதற்கு அநுமதி 
கொடுத்தார்கள். அநுமதி கொடுத்தது மட்டுமா? அவ்வப்போது அந்தப் புத்தர் கோயிலுக்கு 
நிவந்தங்களும், இறையிலி நிலங்களும் அளித்து உதவினார்கள். (இந்தக் கதை நடந்த 
காலத்திற்குப் பிற்காலத்தில் இராஜ ராஜ சோழன் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்கு 
ஆனைமங்கலம் கிராமத்தையும் அதைச் சார்ந்த பல ஊர்களையும் முற்றூட்டாக அதாவது 
எந்தவிதமான வரியும் விதிக்கப்படாத இறையிலி நிலமாகத் தானம் அளித்தான்; இந்த நில 
தானத்தை இராஜராஜனுடைய குமாரன், சரித்திரப் புகழ் பெற்ற இராஜேந்திர சோழன் - 
செப்பேடுகளில் எழுதுவித்து உறுதிப்படுத்தினான்.இவை தாம் ஆனைமங்கலச் செப்பேடுகள் 
என்று கூறப்படுகின்றன. மொத்தம் இருபத்தொரு செப்பேட்டு இதழ்கள். ஒவ்வொன்றும் 14 
அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் உள்ளனவாய் ஒரு பெரிய செப்பு வளையத்தில் 
சேர்க்கப்பட்டிருக்கின்றன. இச்செப்பேடுகள் சமீப காலத்தில் கப்பல் ஏறிக் கடல் கடந்து 
ஐரோப்பாவில் ஹாலந்து தேசத்தில் உள்ள லெயிடன் என்னும் நகரத்தின் காட்சி சாலையில் 
வைக்கப்பட்டிருக்கின்றன. ஆையினால் இச்செப்பேடுகளை 'லெயிடன் சாஸனம்' என்றும் சில 
சரித்திர ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவதுண்டு.)
 
 விஜயாலய சோழரின் 
காலத்திலிருந்து சோழ மன்னர்கள் சிவபக்தியில் திளைத்தவர்களாயிருந்தனர். ஆதித்த 
சோழரும், பராந்தக சோழரும், கண்டராதித்தரும் சைவப் பற்று மிக்கவர்கள். பற்பல 
சிவலாயத் திருப்பணிகள் செய்வித்தார்கள். எனினும் அவர்கள் பிற மதங்களைத் 
துவேஷிக்கவில்லை, தங்கள் இராஜ்யத்தில் வாழும் பிரஜைகள் எந்தெந்த மத்தைச் 
சேர்ந்தவர்களாயினும் அவர்களையும் அவர்களுடைய மதங்களையும் நடுநிலைமை தவறாமல் 
பராமதித்தார்கள். சுந்தர சோழ சக்கரவர்த்தி தமது முன்னோர்களைக் காட்டிலும் சில 
படிகள் முன் சென்றார். புத்தப் பள்ளிகளுக்கு விசேஷச் சலுகைகள் அளித்தார். இதனால் 
சோழ சாம்ராஜ்யத்தில் அச்சமயம் வாழ்ந்திருந்த பௌத்தர்கள் அனைவரும் மிக்க உற்சாகம் 
கொண்டிருந்தார்கள். இலங்கையில் அருள்மொழிவர்மர் இடிந்து போன புத்த விஹாரங்களைப் 
புதுப்பிக்கும்படி ஏற்பாடு செய்தது அவர்களுடைய உற்சாகத்தை மேலும் 
அதிகமாக்கியிருந்தது.
 
 அப்படியெல்லாமிருக்க, இன்று அந்தப் பெயர் பெற்ற 
சூடாமணி விஹாரத்தில் நேர்ந்த குழப்பத்துக்குக் காரணம் என்ன? பிக்ஷூக்கள் நிலை 
கொள்ளாமல் அங்குமிங்கும் பரபரப்பாக ஏன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? சூடாமணி 
விஹாரத்தின் வாசற்புரத்தில் என்ன அவ்வளவு இரைச்சலும் கூச்சலும்? - நல்லது நாமும் 
சேந்தன் அமுதனைப் பின்பற்றிச் சென்று பார்ப்போம்.
 
 சேந்தன் அமுதனும், மற்ற 
இருவரும் கால்வாயின் வழியாகப் படகைச் செலுத்திக் கொண்டு சூடாமணி விஹாரத்தின் 
உட்பகுதிக்கே வந்து விட்டதாகச் சொன்னோம். அங்கே ஒருவரையும் காணாமையால் சேந்தன் 
அமுதன் தட்டுத்தடுமாறி வழி தேடிக்கொண்டு, விஹாரத்தின் வாசற்பக்கம் போய்ச் 
சேர்ந்தான். அங்கேதான் பொதுமக்கள் வந்து வழிபடுவதற்குரிய புத்தர் பெருமானின் 
சைத்யம் என்னும் கோயில் இருந்தது. பக்தர்கள் பலர் அந்தக் காலை நேரத்தில் தாமரை 
மலர்களும் செண்பகப் பூக்களும், மற்ற பூஜைத் திரவியங்களும் நிறைந்த தட்டுக்களை 
ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் வந்த காரியத்தை அவர்கள் மறந்து விட்டதாகத் 
தோன்றியது. சைத்யத்தில் ஏறுவதற்குரிய படிகளில் புத்த பிக்ஷூக்கள் நின்று 
கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கிக் கீழே நின்றவன் ஒருவன் ஏதோ சொல்லிக் 
கொண்டிருப்பதைச் சேந்தன் அமுதன் கண்டான். பிக்ஷூக்கள் சிலருடைய கண்களில் கண்ணீர் 
ததும்பி நிற்பதையும் பார்த்தான். கீழே நின்ற பக்தர்களில் பலர் வழக்கப்படி "சாது! 
சாது!" என்று கோஷிப்பதற்குப் பதிலாக, "ஆஹா!", "அடாடா!" "ஐயோ!" என்று அங்கலாய்த்துக் 
கொண்டிருப்பதையும் கவனித்தான்.
 
 அருகில் நெருங்கிச் சென்று சிறிது நேரம் 
கேட்ட பின்னர் விஷயம் இன்னதென்று தெரிந்தது. பிக்ஷூக்களிடம் பேசிக் கொண்டிருந்தவன் 
பார்த்திபேந்திரனுடைய கப்பலிலே இருந்த மாலுமிகளில் ஒருவன். கப்பல் முதலாவது நாள் 
இரவு நாகைப்பட்டினத்துக்கு வந்துவிட்டது. மாலுமிகள் கரையில் இறங்கியதுமே இளவரசரைக் 
கடல் கொண்டு விட்டது என்ற செய்தியைச் சிலரிடம் சொல்ல, அது நகரமெல்லாம் பரவி 
விட்டது. அச்செய்தி உண்மைதானா என்று அறிய அதிகாலையில் அம்மாலுமிகளில் ஒருவனைச் 
சூடாமணி விஹாரத்தின் பிரதம பிக்ஷூ அழைத்து வரச் செய்தார். அவன் தான் அறிந்ததை 
அறிந்தபடி கூறினான், "சுழற்காற்று அடித்த போது இளவரசர் கடலிலே குதித்தவர் திரும்பி 
வரவேயில்லை" என்று துயரக் குரலிலே சொன்னான்.
 
 அப்போது அக்கூட்டத்திலே விம்மி 
அழும் குரல்கள் பல எழுந்தன.
 
 பிரதம பிக்ஷூவின் கண்களிலிருந்து கண்ணீர் 
அருவியாகப் பெருகித் தாரை தாரையாக வழிந்தது.
 
 அவர் குனிந்த தலை நிமிராமல் 
படிகளில் ஏறிச் சென்று சைத்தியத்தைத் தாண்டி விஹாரத்துக்குள் பிரவேசித்தார். மற்ற 
பிக்ஷூக்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். சேந்தன் அமுதனும் அவர்களோடு வந்ததை 
ஒருவரும் கவனிக்கவில்லை.
 
 பிரதம பிக்ஷூ மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார்:- 
"புத்த பகவானின் கருணை இப்படியா இருந்தது? பற்பல மனக் கோட்டைகள் கட்டிக் 
கொண்டிருந்தேனே? சக்கரவர்த்தியைப் பார்க்கச் சமீபத்திலே தஞ்சாவூருக்குப் 
போயிருந்தேன் பாருங்கள்! அச்சமயம் இலங்கையில் அருள்மொழிவர்மரின் அற்புதச் 
செயல்களைப்பற்றிக் கூறினேன். அதையெல்லாம் இளைய பிராட்டி குந்தவை தேவியும் கேட்டுக் 
கொண்டிருந்தார். பிறகு என்னைத் தனியாக வரவழைத்து இந்த விஹாரத்தையொட்டி ஆதுரசாலை 
ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று அதற்குத் தேவையான நிபந்தங்கள் அளிப்பதாகவும் 
கூறினார். அது மட்டுமா? ஆச்சாரியாரே! நாட்டில் பலவாறு பேச்சுக்கள் நடந்து 
கொண்டிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை இளவரசர் சூடாமணி விஹாரத்தில் சில நாள் 
விருந்தாளியாக இருக்கும்படி நேரும். அவரை வைத்துப் பாதுகாக்க முடியுமா?' என்று 
குந்தவை பிராட்டி கேட்டார்.'தேவி! அத்தகைய பேறு எங்களுக்குக் கிடைத்தால் கண்ணை இமை 
காப்பதுபோல் வைத்துப் பாதுகாப்போம்' என்று கூறினேன். என்ன பயன்! இளவரசரா கடலில் 
முழுகினார்? இந்த நாட்டிலுள்ள நல்லவர்களின் மனோரதமெல்லாம் முழுகிவிட்டது! சோழ 
சாம்ராஜ்யமே முழுகிவிட்டது. சமுத்திர ராஜன் இவ்வளவு பெருங்கொடுமையைச் செய்ய 
எப்படித் துணிந்தான்? அக்கொடியவனைக் கேட்பார் இல்லையா?"
 
 மற்ற பிக்ஷூக்கள் 
அனைவரும் மௌனமாகக் கண்ணீர் பெருக்கினார்கள்.
 
 தலைமைப் பிக்ஷூ பேசி 
நிறுத்தியதும் சிறிது நேரம் அங்கே மௌனம் குடி கொண்டிருந்தது.
 
 சேந்தன் 
அமுதன் அதுதான் சமயம் என்று புத்த பிக்ஷூக்களிடையே புகுந்து ஆச்சாரியரை அணுக 
யத்தனித்தான். உடனே அவனைப் பலர் தடுத்தார்கள். "இவன் யார்? இங்கே எப்படி வந்தான்?" 
என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள்.
 
 "ஐயா அடியேன் பெயர் சேந்தன் 
அமுதன்! தஞ்சையைச் சேர்ந்தவன். உங்கள் தலைவரிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்!" 
என்றான்.
 
 "சொல், சொல்!" என்றார்கள் பலர்.
 
 அவனுடைய தயக்கத்தைப் 
பார்த்துவிட்டு ஆச்சாரியர், "இவர்களுக்குத் தெரியக்கூடாத ரகசியம் ஒன்றுமில்லை; 
சொல்" என்றார்.
 
 "ஐயா! நோயாளி ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன்!"
 
 "அது யார் நோயாளி? என்ன நோய்? எங்கே விட்டிருக்கிறாய்?"
 
 "விஹாரத்தில் நடுமுற்றத்தில் விட்டிருக்கிறேன்...."
 
 "எப்படி அங்கே 
வந்தாய்?"
 
 "கால்வாய் வழியாக, நோயாளியைப் படகில் கொண்டு வந்தேன். நடுக்கும் 
குளிர்க்காய்ச்சல் - தாங்கள் உடனே...."
 
 "பகவானே! நடுக்கும் சுரம் தொற்றும் 
நோய் ஆயிற்றே! இங்கே ஏன் அந்த நோயாளியை அழைத்து வந்தாய்? அதிலும் நல்ல சமயம் 
பார்த்து..."
 
 "ஆச்சாரிய! அசோக சக்கரவர்த்தி புத்த மதத்தினர் என்று 
இதுகாறும் நினைத்திருந்தேன். இப்போது இல்லை என்று தெரிகிறது..."
 
 "அது ஏன் 
அப்படிக் கூறுகிறாய்?"
 
 "அசோக ஸ்தம்பம் ஒன்றை நான் காஞ்சிக்கு அருகில் 
பார்த்தேன். அதில் நோயாளிக்குச் சிகிச்சை செய்வதை முதன்மையான தர்மமாகச் 
சொல்லியிருக்கிறது. நீங்களோ இப்படி விரட்டி அடிக்கிறீர்கள்!" என்றான் அமுதன்.
 
 ஆச்சாரிய பிக்ஷூ மற்றவர்களைப் பார்த்து "கொஞ்சம் பொறுங்கள்; நான் போய்ப் 
பார்த்து விட்டு வந்து சொல்லுகிறேன்" என்று கூறிவிட்டு, "வா! அப்பனே" என்று அமுதனை 
அழைத்துக் கொண்டு சென்றார்.
 
 விஹாரத்தின் நடு முற்றத்தில் கால்வாய்க்கு 
அருகில் ஒரு யுவனும், யுவதியும் இருப்பதைப் பார்த்துப் பிக்ஷூ திடுக்கிட்டார். "இது 
என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? இந்த விஹாரத்துக்குள் ஸ்திரீகளே ரக்கூடாதே! 
பிக்ஷூணிகளுக்குக் கூட வேறு தனி மடம் அல்லவா கட்டியிருக்கிறது?"
 
 அருகில் 
போய் அந்த இளைஞர் யார் என்பதை உற்றுப் பார்த்ததும், பிக்ஷூ திகைத்துப் போனார் என்று 
சொன்னால் போதாது! வியப்பினாலும் களிப்பினாலும் அவரால் சிறிது நேரம் பேச 
முடியவில்லை.
 
 சந்தேக நிவர்த்திக்காக, "இளவரசர் அருள்மொழிவர்மர் தானா?" 
என்று சேந்தன் அமுதனைக் கேட்டார்.
 
 இது இளவரசர் காதில் விழுந்தது. "இல்லை, 
ஆச்சாரியரே இல்லை. நான் இளவரசனுமில்லை ஒன்றுமில்லை. இந்தப் பெண்ணும் இந்த 
பிள்ளையுமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறார்கள். நான் ஒரு 
ஓடக்காரன். சற்றுமுன் இந்தப் பெண்ணைப் பார்த்து, 'பெண்ணே! என்னை மணம் புரிந்து 
கொள்வாயா? இருவரும் படகில் ஏறித் தூரதேசங்களுக்குப் போகலாம்' என்றேன். "இவள் ஏதேதோ 
பிதற்றினாள். நான் உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவனாம்! ஏழை வலைஞர் குலப் 
பெண்ணாகிய இவள் என்னை மணந்து கொள்ள மாட்டாளாம். நான் சுகமாயிருந்தால் இவளுக்குப் 
போதுமாம்.வருங்காலத்தில் என்னுடைய மகத்தான வெற்றிகளைக் கேட்டு இவள் மகிழப் 
போகிறாளாம். எப்படியிருக்கிறது கதை? உண்மையில் எனக்குச் சித்தப்பிரமையா? இவளுக்கா?"
 
 சேந்தன்அமுதன் ஆச்சாரிய பிக்ஷூவின் காதோடு ஏதோ கூறினான். அதற்கு முன்னாலேயே 
இளவரசர், சுரவேகத்தினால் நினைவிழந்த நிலையில் பேசுகிறார் என்பதை பிக்ஷூ 
உணர்ந்திருந்தார். குந்தவை தேவி தம்மிடம் இளவரசருக்கு அடைக்கலம் தரும்படி 
கேட்டிருந்ததும், அவருக்கு நினைவு வந்தது.
 
 மற்ற பிக்ஷூக்களைப் பார்த்து 
அவர், "இந்தப் பிள்ளைக்கு விரு சுரம்தான் வந்திருக்கிறது. இவனை வௌியில் அனுப்பினால் 
இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வந்துவிடும். இலங்கையில் எத்தனையோ ஆயிரம் பேர் 
சுரத்தினால் இறந்து போனார்கள். ஆகையால் இந்த இளைஞனை என் அறைக்கு அழைத்துப் போய், 
நானே பணிவிடையும் செய்யப்போகிறேன், இடையில் சுர வேகத்தினால் இவன் ஏதாவது 
பிதற்றினால் அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்!" என்றார்.
 
 உடனே தலைமைப் 
பிக்ஷூ இளவரசர் அருகிலே நெருங்கி ஒரு கையினால் அவரை அணைத்துத் தூக்கினார். 
சேந்தன்அமுதன் இன்னொரு பக்கத்தில் இளவரசரைப் பிடித்துக் கொண்டு உதவினான். எல்லாரும் 
படிகளில் ஏறிச் சென்றார்கள்.
 
 இதோ, இன்னும் சில விநாடி நேரத்தில் படிக்கட்டு 
முழுவதும் ஏறிவிடுவார்கள். கதவைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பார்கள். பிறகு 
கதவு சாத்தியாகிவிடும், சாத்தினால் சாத்தியதுதான். அப்புறம் அவரைப் பார்க்க 
முடியாது.'
 
 பூங்குழலி எதிர்பார்த்தபடியே நடந்தது. மாடிப்படி ஏறியதும் கதவு 
திறந்தது. சேந்தன் அமுதனை மட்டும் வௌியில் நிறுத்தித் தலைமைப் பிக்ஷூ ஏதோ கூறினார். 
பிறகு திறந்த கதவு வழியாக எல்லாரும் பிரவேசித்தார்கள்.
 
 கதவு படார் என்று 
சாத்திக்கொண்டது. அது பூங்குழலியின் இதயமாகிய கதவையே அடைப்பது போலிருந்தது.
 
 இனி இந்தப் பிறவியில் இளவரசரைப் பார்க்கலாம் என்ற நிச்சயமில்லை. அடுத்த 
ஜனமத்திலாவது அத்தகைய பாக்கிய தனக்குக் கிடைக்குமா? - இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே 
இளவரசர் மறைவதைப் பார்த்துக்கொண்டு நின்றாள் பூங்குழலி.
 |