Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
 

Home > Tamil Language & Literature > Paventhar Bharathidasan - பாரதிதாசன் > புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி > காவியம் >  இயற்கை > காதல் தமிழ்  > பெண்ணுலகு > புதிய உலகம்

CONTENTS
OF THIS SECTION
10/06/09

Acknowledgements -

EText input : Mr.P.I.Arasu, Toronto, Ontario, Canada.; Ms.Suhitha Arasu, Toronto, Ontario, Canada. & Ms.Mahitha Sridhar, Toronto, Ontario, Canada.
Proof-reading: Mr.P.K.Ilango, Erode, Tamilnadu, India. Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland 

© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


Literary Works of Bharathidaasan
( Kanakasubbaratnam, 1891-1964)
புரட்சி கவிஞர் பாரதிதாசன்
(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்

mutaRl tokuti - 75 kavitaikaL
புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி - 75 கவிதைகள்
தமிழ்


உள்ளுறை
தமிழ்
1.19 தமிழின் இனிமை
1.20 இன்பத் தமிழ்
1.21 தமிழ் உணவு
1.22 தமிழ்ப் பேறு
1.23 எங்கள் தமிழ்
1.24 தமிழ் வளர்ச்சி
1.25 தமிழ்க் காதல்
1.26 எந்நாளோ?
1.27 சங்க நாதம்
1.28 தமிழ்க் கனவு


1.19. தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ்என்
அறிவினில் உறைதல் கண்டீர்!

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு - கானில்
நாவி லினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1. 20. இன்பத் தமிழ் தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1. 21. தமிழ் உணவு

ஆற்றங் கரைதனிலே - இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றிலுட் கார்ந்திருந்தேன் - வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர் - வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார் - சிலர்
தங்கள் மணாளரின் அண்டை யிருந்தனர்;
ஆற்றங் கரைதனிலே!

நாட்டின் நிலைபேசிப் - பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர்புறம்.
ஓட்டம் பயின்றிடுவார் - நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன்உருக்கிச் - செய்த
குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகள்
ஆட்ட நடைநடந்தே - மண்ணை
அள்ளுவர், வீழுவர், அம்புலி வேண்டுவர்;
ஆற்றங் கரைதனிலே!

புனலும் நிலாவொளியும் - அங்குப்
புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்துபறந் - தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்!
தனிரு வெள்ளிக்கலம் - சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நக்ஷத்திரம்!
புனையிருள் அந்திப்பெண்ணாள் - ஒளி
போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த
ஆற்றங் கரைதனிலே!

விந்தை உரைத்திடுவேன் - அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்தஓர் பாட்டுரைத்தாள் - அது
முற்றும் தெலுங்கில் முடிந்து தொலைந்தது;
பிந்தி வடக்கினிலே - மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்.
எந்தவிதம் சகிப்பேன்? - கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன.
ஆற்றங் கரைதனிலே!

பொருளற்ற பாட்டுக்களை - அங்குப்
புத்தமு தென்றனர்; கைத்தாள மிட்டனர்;
இருளுக்குள் சித்திரத்தின் - திறன்
எற்படுமோ இன்பம் வாய்த்திடக் கூடுமோ?
உருவற்றுப் போனதுண்டோ - மிக்க
உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு?
கருவுற்ற செந்தமிழ்ச்சொல் - ஒரு
கதியற்றுப் போனதுண்டோ அடடா! அந்த
ஆற்றங் கரைதனிலே!

சங்கீத விற்பனனாம் - ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை;
அங்கந்தப் பாட்டினிலே - சுவை
அத்தனையும் கண்டு விட்டது போலவே
நம்குள்ளர் வாய்திறந்தே - நன்று
நன்றென ஆர்ப்பரித்தார்! அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில் - ஓர்
இன்ப நறுங்கவி கேட்டது காதினில்
ஆற்றங்கரைதனிலே!

"அஞ்சலை, உன்ஆசை - என்னை
அப்புறம் இப்புறம் போக விடாதடி
கொஞ்சம் இறங்கிடுவாய் - நல்ல
கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களிப்பாய்!" - என்ற
வண்ணத் தமிழ்ப்பதம் பண்ணிற் கலந்தென்றன்
நெஞ்சையும், வானத்தையும் - குளிர்
நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும்

ஒன்றெனச் செய்ததுவே! - நல்
உவகை பெறச்செய்த தேதமிழ்ப் போசனம்!
நன்று தமிழ்வளர்க! - தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ்வளர்க! - கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந் தோங்குக!
இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!
ஆற்றங் கரைதனிலே!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.22. தமிழ்ப் பேறு ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட
"என்னை எழு"தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
யுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைகருஎனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,

இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்."

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.23. எங்கள் தமிழ்

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்.
இனிமைத் தமிழ்மொழி...

தமிழ்எங்கள் உயிர்என்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்
தமிழ்குன்று மேல்தமிழ் நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு!
தமிழ்என்று தோள்தட்டி ஆடு! - நல்ல
தமிழ்வெல்க வெல்கஎன் றேதினம் பாடு!
இனிமைத் தமிழ்மொழி...

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1. 24. தமிழ் வளர்ச்சி

எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்;
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
தமிழ்மொழியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.
இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.
எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை.
தகத்தகா யத்தமிழைத் தாபிப்போம் வாரீர்!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.25. தமிழ்க் காதல் கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர்சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால்
அமையும்அன் னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி-அப் பூஞ்சோலை - எனைத்
தன்வசம் ஆக்கிவிட் டாள்ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலையெ லாம்ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெ லாம்அளிக்கும்
கோலஇன் பத்தையென் உள்ளத்திலே - வந்து
கொட்டிவிட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.26. எந்நாளோ?

என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இம மலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக்கேட் டிடல் எந்நாளோ?

கைத்திறச் சித்தி ரங்கள்,
கணிதங்கள், வான நூற்கள்,
மெய்த்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவி யங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தக சாலை எங்கும்
புதுக்குநாள் எந்த நாளோ?

தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ,
ஆரிதைப் பகர்வார் இங்கே?

பார்த்தொழில் அனைத்தும் கொண்ட
பயன்தரும் ஆலைக் கூட்டம்
ஆர்த்திடக் கேட்ப தென்றோ?
அணிபெறத் தமிழர் கூட்டம்
போர்த்தொழில் பயில்வ தெண்ணிப்
புவியெலாம் நடுங்கிற் றென்ற
வார்த்தையைக் கேட்டு நெஞ்சு
மகிழ்ந்து கூத்தாடல் என்றோ?

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்
றுடலினால் பலராய்க் காண்பார்;
கள்ளத்தால் நெருங் கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
சொக்கும்நாள் எந்த நாளோ?

தறுக்கினாற் பிறதே சத்தார்
தமிழன்பால் என்நாட் டான்பால்
வெறுப்புறும் குற்றஞ் செயதா
ராதலால் விரைந் தன்னாரை
நொறுக்கினார் முது கெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்தசொல் கேட்டின் பத்திற்
குதிக்கும்நாள் எந்த நாளோ?

நாட்டும்சீர்த் தமிழன் இந்த
நானில மாயம் கண்டு
காட்டிய வழியிற் சென்று
கதிபெற வேண்டும் என்றே
ஆட்டும்சுட் டுவிரல் கண்டே
ஆடிற்று வையம் என்று
கேட்டுநான் இன்ப ஊற்றுக்
கேணியிற் குளிப்ப தெந்நாள்?

விண்ணிடை இரதம் ஊர்ந்து
மேதினி கலக்கு தற்கும்
பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப்
பாரினை மயக்கு தற்கும்
மண்ணிடை வாளை யேந்திப்
பகைப்புலம் மாய்ப்ப தற்கும்
எண்ணிலாத் தமிழர் உள்ளார்
எனும்நிலை காண்ப தென்றோ?

கண்களும் ஒளியும் போலக்
கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடு தன்னில்,
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற் பாயப்
பருகுநாள் எந்த நாளோ?

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.27. சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.28. தமிழ்க் கனவு

தமிழ்நா டெங்கும் தடபுடல்! அமளி!!
பணமே எங்கணும் பறக்குது விரைவில்
குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!!
தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார்,
ஓடினார், ஓடினார், ஓடினார் நடந்தே!
ஆயிரம் ஆயிரத் தைந்நூறு பெண்கள்
ஒளிகொள் விழியில் உறுதி காட்டி
இறக்கை கட்டிப் பறக்கின் றார்கள்!
ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உத்ஸாகம்!
சமுத்திரம் போல அமைந்த மைதானம்!
அங்கே கூடினார் அத்தனை பேரும்!
குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்!
வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்!
உரக்கக் கேட்டான்: யுஉயிரோ நம்தமிழ்?ரு
அகிலம் கிழிய யுஆம்!ஆம்!ரு என்றனர்!!
"ஒற்றுமை" என்றான்; "நற்றேன்" என்றனர்.
உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச் சேர்த்தமைத் தார்கள்!
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத் தையெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்க்கவி தொடங்கினர்! பறந்தது தொழும்பு!
கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்,
வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்,
தொழில்நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்!
காற்றி லெலாம் கலந்தது கீதம்!
சங்கீத மெலாம் தகத்தகா யத்தமிழ்!
காதலெலாம் தமிழ் கனிந்த சாறு!
கண்ணெதிர் தமிழக் கட்டுடல் வீரர்கள்!
காதல் ததும்பும் கண்ணா ளன்றனைக்
கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால்
புகழ்ந்தா ளென்று பொறாமல் சோர்ந்து
வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன்.
அந்தோ! அந்தோ! பழய
நைந்த தமிழரொடு நானிருந்தேனே!

 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home