Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை……> Reports of Armed Conflict
 

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை……

22 January 2007


 வாகரையைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து, இதற்கான யுத்த நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதிலிருந்து தென்தமிழீழ மக்கள் மிகக் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச சர்வகட்சி மகாநாடு என்றும், சமாதானத்தீர்வு என்றும் பொய்ப்பரப்புரைகளை ஒரு புறம் மேற்கொண்டு வருகின்ற அதே வேளையில் மறுபுறம் யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீதுபிரயோகித்து வருவதானது சமாதானத்தீர்வு ஒன்றில் அவருக்கு இருக்கும் அக்கறையின்மையைத் தெளிவாகப் புலப்படுத்தி வருகின்றது. மாவிலாறு சம்பூர் மூதூர் வாகரை என்று மகிந்தாவின் ‘சமாதானத்தீர்வு’ செயல்பட்டு வருவதை நாம் வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது.

‘சமாதானத்திற்கான காலம்’ என்று அழைக்கப்பட்ட கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில், தமிழ் மக்கள் உரிய பலன் எதையும் அனுபவித்திராத நிலையில் இப்போது சிறிலங்கா அரசின் கொடிய போர் நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுத்துத் துன்புற்று வருகின்றார்கள். மாவிலாறு-சம்பூர் -வாகரை என்று தமிழீழப் பிரதேசங்களைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து வருவதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்களோ? என்ற ஐயமும் சிலருக்கு-குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு-ஏற்பட்டு வருவதை நாம் அறியக்கூடியதாக உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள், ஏன் இன்னும் முழுமையான போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள்? என்றும் சிலர் வினாவக் கூடும்.!

தற்போதைய நிலவரத்தை வெறும் இராணுவ காரணிகளைக் கொண்டு மட்டும் ஆராயாமல், அரசியற் காரணிகளோடும் சேர்த்துப் பொருத்திப் பார்த்துத் தர்க்க்ப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்!.

சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச கொண்டிருக்கும் நீண்டகாலத் திட்டங்களில் ஒன்று கிழக்குப் பகுதியைப் பிரிப்பதாகும். முதலில் அரசியல் ரீதியாகவும், ப ன்னர் இராணுவ ரீதியாகவும், கிழக்குப் பகுதியைத் துண்டாடுகின்ற திட்டத்தின் முதல்கட்டமாக நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினூடாக வட-கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது. பின்னர் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இப்போது இராணுவ ரீதியாக ஆக்கிரமிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்குப் பகுதியை இயலுமானவரை பல துண்டுகளாகப் பிரித்தப ன்னர், வடக்குப் பகுதியைப் பிடிப்பது மகிந்த ராஜபக்சவின் அடுத்த கட்டத்திட்டமாகும். இவற்றை செய்வதன் மூலம் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து இலங்கைத்தீவை முழுமையான சிங்கள ஆட்சியின் கீழ்கொண்டு வருவது மகிந்தவின் நீண்ட காலத்திட்டத்த ன் நீட்சியாகும். இந்த முழுமையான சிங்கள ஆட்சியில் மூலம் தமிழர்களை அழித்து சிங்கள-பௌத்தப்பேரினவாத அரசை நிலைநிறுத்துவது மகிந்தவின் திட்டத்தின் இறுதிக் கட்டமாகும்!

இப்போது வாகரைப் பகுதியை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதானது, மகிந்தவின் நீணட காலத்திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இப்படிப்பட்ட நிலையில் தோற்றம் ஒன்று இயல்பாகவே உருவாகும். அதாவது மகிந்தவின் திட்டம் படிப்படியாக வெற்றி பெறுவது போன்ற ஒரு தோற்றம் வெளிப்பார்வைக்கு உருவாகும். அதனைத்தான் நாம் இப்போது காண்கின்றோம்.

இந்தக்கருத்துக்களை உள்வாங்கியவாறு தற்போதைய இராணுவக் காரணிகளை தர்க்கிப்பது பொருத்தமானதாக இருக்கக் கூடும்.

‘முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதி’ என்று அழைக்கப்படுகின்ற இடம் என்பது, இராணுவ ரீதியாக பல தகைமைகளைக் கொண்டிருக்கும் பகுதியாகும். அப்பகுதியில் மரபுசார் படைகளும், மரபுசார்படைக் கலன்களும் மரபுசார் படத்தளமும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கொண்ட பகுதியைத்தான் “இராணுவ ரீதியான முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதி” என்று போரியல் கூறும்.

ஆனால் மாவிலாறோ, சம்பூரோ, வாகரையோ இப்படிப்பட்ட தகைமைகளைக் கொண்ட பகுதிகள் அல்ல! இங்கே விடுதலைப்புலிகளின் படைகளோ, படைக்கலன்களோ அல்லது படைத்தளமோ இருக்கவில்லை. இப்படிப்பட்ட பகுதியை கைப்பற்றுவதற்காகச் சிறிலங்கா இராணுவம் இவ்வளவு பாரிய முன்னெடுப்புக்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதுதான் நாம் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்ற யதார்த்த நிலையாகும்.! அதாவது விடுதலைப்புலிகள் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்காத ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது.

இனிப் போரியல் வரலாற்றின் ஊடாகச் சில சம்பவங்களையும், உத்திகளையும் மீட்டுப் பார்ப்பதன்மூலம் தற்போதைய நிலைமைகளை ஒப்பிட்டுப்பார்க்க விழைகின்றோம்.

தமிழீழத் தன்யரசை அமைப்பதற்கான, மிகத்தெளிவான திட்டங்களைத் தேசியத் தலைமை வகுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. அந்தத் திட்டங்களுக்கான நிகழ்ச்சிநிரலை குழப்புவதற்கான செயற்பாடுகளைச் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. விடுதலைப் போராட்டங்கள் முன்னேறிச் செல்வதற்கான பாதைகளை குழப்புவதற்காகவும், போராட்டத்தின் வெற்ற்க்கான திட்டங்களை முழுமையாகச் செயற்படுத்த முடியாதவாறு தொடர்நது இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்காகவும் பலவிதமான உத்திகளை அடக்குமுறையாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளதைப் போரியல் வரலாறு எடுத்துக்காட்டும். வரலாற்றில் இருந்து விலகி நின்று ஒரு நடைமுறை உதாரணத்தை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

மிகமுக்கியமான தேர்வு ஒன்றிற்காக, ஒரு மாணவன் மிக ஊக்கமாக படித்துக் கொண்டிருக்க்ன்றான் என்று வைத்துக்கொள்வோம். ஆதனைக் குழப்பி, அந்த மாணவன் தேர்வில் தோல்வி அடையவேண்டும் என்பதற்காக அந்த மாணவனின் வீட்டுக்கு விஷமி ஒருவன் அடிக்கடி கற்களை எறிந்து வருகின்றான். அந்த மாணவன் தனது கவனத்தை சிதறவிடாமல் தொடர்ந்து படித்து முடிப்பதா? அல்லது அந்த விஷமியைத் துரத்தித் துரத்தி அடித்து விரட்டுவதா என்ற கேள்வி ஒன்று எழக்கூடும். அந்த மாணவன் அந்த விஷமியை துரத்தித் துரத்தி அடித்து விரட்டினால் வெளிப்பார்வைக்கு மாணவன் வெற்றி அடைந்தது போல் தெரியக்கூடும். ஆனால் மாணவனைப் படிக்கவிடாமல் செய்யவேண்டும் என்ற அந்த விஷமியின் நோக்கம்தான் உண்மையில் வெற்றிபெறும். ஆகவே தேர்வு முடியும்வரை பொறுமை காத்து கவனம் சிதறாமல் படிக்கும் ஒரு மாணவனை அவனது திறமையை அவனது மதியூகத்தை நாம் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.!

இந்த எளிய உதாரணம் ஒரு தனிப்பட்ட மாணவன் எதிர்கால நலன் பற்றிய உதாரணமேயாகும். ஆனால் தமிழீழ தேசியத்தலைமை தனது ஒட்டு மொத்த மக்களின் எதிர்கால நன்மைக்காகவும், விடிவுக்காகவும் தற்போது பொறுமை காட்டுவதன் பலனை எதிர்காலம் கூறும்.

‘இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி’ என்பது குறித்து முன்னர் குற்ப்பிட்டிருந்தோம். இந்தியப்படையினர் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் எந்த நிலப்பரப்பும் இருக்கவில்லை. ஆயினும் என்ன நடந்தது? முடிவில் இந்திய இராணுவம் தமிழீழத்தை விட்டு முற்றாக வெளியேற வேண்டி வந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் போரியல் வரலாற்றில் மிக வித்தியாசமான விடுதலைப்போராட்ட இயக்கத்தினர் ஆவார்கள். அவர்கள் முழுமையான மரபுவழிப்படையினர் அல்லர். ஆனால் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப கரந்தடிப் போர்முறையையோ அல்லது மரபுவழி கலந்த கரந்தடிப் போர்முறையையோ கையாளக்கூடும். அந்த வகையில் வாகரையில் சிறிலங்கா இராணுவம் இனி நிலை கொண்டிருக்கும் பட்சத்தில் அங்கே தொடர்ச்சியான இழப்புக்களை சிறிலங்கா இராணுவத்தினர் எதிர்கொள்ள வேண்டி வரும். விடுதலைப்புலிகளோ பாரிய அளவில் தமக்கு இழப்பு ஏற்படாத வகையில்தான் தமது தாக்குதல்களை நடாத்துவார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் பின்வாங்கிய போது அழிபடாமல் பாரிய இழப்புக்கள் ஏற்படாமல் பின்வாங்கினார்கள் இன்று சிறிலங்கா அரசு நாற்பத்னாயி ரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை யாழ்ப்பாணத்தில் ஒன்றுசேரக் குவித்து வைத்திருப்பதன் காரணம் விடுதலைப்புலிகள் பலவீனமாகாமல் பின்வாங்கியதுதான்.! விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுப் பின்வாங்கியிருந்தால் இன்று இந்த நாற்பதினாயிரம் படையினரும் வன்னிக்குள் படையெடுப்பை நடத்திக் கொண்டிருகக்கூடும். ஆனால் மாறாக இன்று நாற்பதினாயிரம் சிறிலங்கா படையினர், யாழில் முடக்கி வைக்கப்பட்டிருப்பதன் பின்னணியை நாம் உணரக்கூடியதாக உள்ளது. இது இனி வாகரைக்கும் பொருந்திவரும்.

ஓர் இடத்தை விட்டு பின்வாங்குவது போராட்டத்தின் இறுதி நிலையைத் தீர்மானிக்க மாட்டாது. உதாரணத்துக்கு நெப்போலியன், சோவியத் ரஷ்யாமீது படையெடுத்துச் சென்றதை நாம் குறிப்பிடலாம். நெப்போலியன் ரஷ்யாவிற்குள் முன்னேறி சென்றபோது மிகப் பெரிய வல்லரசான சோவியத் தனது தலைநகரைக் கைவிட்டுப் பின்வாங்கியது. ஓர் அரசு தனது தலைநகரைக் கைவிட்ட மிகப் பெரிய வரலாற்றுச் சம்பவம் அது. ஆனால் சோவியத் தன்னுடைய இராணுவ பலத்தை தக்கவைத்துப் பின்வாங்கியதால் மீண்டும் படையெடுத்து நெப்போலியனை முறியடித்து தனது தலைநகரை கைப்பற்றியது. இந்தச் சம்பவத்தை இப்போதும் பலர் புகழ்ந்து பேசுகிறார்கள். புகழ்ந்து எழுதுகின்றார்கள். அதேபோல் தமிழீழப் போரியல் வரலாற்றை புகழ்ந்து எதிர்காலம் எழுதும் பேசும்.!

யார் என்ன சொன்னாலும், போர் என்பது உயிர் சம்பந்தப்பட்ட விடயமாகும். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் போர்என்பது உயிர் இழப்புக்களை கொண்டுவரும். அதுவும் போர் என்பது ஒரு மக்கள் கூட்டத்த ன்மீது ஒரு இனத்தின்மீது, ஒரு நாட்டின்மீது வலிந்து திணிக்கப்படும் போது உயிர் இழப்புக்கள் ஏற்பட்டே தீரும் என்பதே யதார்த்தமாகும். பிரித்தானியாவின் மீது ஹிட்லர் வான்படைத் தாக்குதல்களை நடாத்தியபோது பிரித்தானிய அரசால்கூட அத்தாக்குதல்களை முறையாக எதிர்கொள்ள முடியவில்லை. பல்லாயிரக்கணக்கில் பிரித்தானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பிரித்தானிய அரசால், ஹிட்லரின் வான் தாக்குததல்களைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் தனது மக்களை நாட்டுப்புறங்களுக்கு பிரித்தானிய அரசு அனுப்பி வைத்தது. தனதுமக்களின் பாதுகாப்பிற்காக தனது மக்களை பிரித்தானிய அரசே இடம் பெயரச் செய்தது. தமது நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக பிரித்தானிய பொதுமக்கள் படையில் சேர்ந்தார்கள். பிரித்தானிய அரசு கட்டாய ஆட்சேகரிப்பையும் நடாத்தியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் வியட்நாம் போர் குறித்தும், சில விடயங்களைக் கூறலாம். அமெரிக்கா தென்வியட்நாம் அரசுக்கு ஆதரவாக வட விடயட்நாமின் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டது. வட வியட்நாம் சகல சோதனைகளுக்கும் முகம் கொடுத்து கால நீடிப்புப் போரைச் செய்து தனது போராட்டத்தை முன் நகர்த்திச் சென்றது. ஒரு கட்டத்தில் தென்வியட்நாமின் தலைநகர்மீதும், அதன் நகரங்கள்மீதும் சமகாலத்தில் தாக்குதல்களை வடவியட்நாம் மேற்கொண்டது. இத்தாக்குதல்கள் வெற்றிபெறாத போதும் அமெரிக்காவிற்கு சரியான செய்தி கொடுக்கப்பட்டது. 1973ம் ஆண்டளவில் அமெரிக்கா வெளியேற வேண்டி வந்தது.

சமகாலப் போரியல் வரலாற்றையும் சற்றுக் கவனிப்போம். அமெரிக்கா ஈராக்மீது படையெடுத்தபோது மிக எளிதில் மிகக் குறுகியகாலத்தில் ஈராக்கை வென்றது. ஆனால் இன்று வெளியேற முடியாமல், அமெரிக்கா தவிக்கின்றது. ஈராக் முன்னரேயே கரந்தடிப்போர் முறையை மேற்கொண்டிருந்தால் அமெரிக்காவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். “இருட்டறையில் முப்பரிமாணச் சதுரங்க விளையாட்டை (?) அமெரிக்காமேற்கொண்டிருக்கின்றது”என்பதைவெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது. இன்று அமெரிக்க அரசு மட்டுமல்ல, அமெர க்க மக்களும் ஈராக் மீதான போரின் பாதிப்பை உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் சிங்கள மக்களுக்கு இன்னும் பாதிப்பு விளங்கவில்லை. சமாதானக் காலத்திற்கான பலனைத் தாம் மட்டுமே அனுவித்து வந்து விட்ட மகிழ்வில் இன்று சாதாரணச் சிங்கள மக்கள்கூட போர்க்குரல் எழுப்புகின்ற விபரீதத்தை நாம் காண்கின்றோம். மகிந்த ராஜபக்ச ச ங்கள மக்களுக்குப் பொய்யான கனவைத் தொடர்ந்தும் ஊட்டி வருகின்றார். இந்தக் கனவு கலையும் காலம் விரைவில் வரும்!

தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் அரசு இன்று பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இராணுவ செயற்பாட்டுக்களுக்காகச் செலவு செய்து வருகின்றது. இதன்மூலம் தமிழீழ மக்கள் அழிக்கப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம். நாம் முன்னர் சுட்டிக்காட்டிய போரியல் வரலாற்றுச் சம்பவங்களில் ஊடாக மக்களின் அழிவுகளையும், வெற்றிகளையும் நாம் அறிந்துகொண்ட போதும் எமது மக்களின் அழிவினைத் தடுக்க புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் என்ன செய்யலாம, என்று இந்த வேளையில் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டியது எமது கடமையாகும்.

நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தவாறு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இராணுவ செயற்பாடுகளுக்காக சிறிலங்கா அரசு செலவுசெய்து வருகின்றது. தமிழ் மக்களைக் கொன்று ஒழிப்பதற்காக சிறிலங்கா அரசு இத்தகைய பாரிய செலவை செய்து வருகின்றது. சிறிலங்கா அரசு தமிழ் மக்களை அழிக்கமுனையும் இச் சமர்களில் விடுதலைப்புலிகள் இறந்துகொண்டு தமது மக்களைக் காப்பாற்ற முனைந்து வருகின்றார்கள். இந்தவேளையில் இப்படிப்பட்ட அழிவைத் தடுக்கவேண்டும் என்றால் முதலில் வீணாகச் சஞ்சலப்படுவதையும், சலித்துக்கொள்வதையும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.! எவ்வாறு தமிழீழத் தேசியத்தலைமையின் கரங்களைப் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் பலப்படுத்த முடியும் என்பதை மட்டுமே சிந்தித்துப்பார்ப்போம். - அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

”தனியரசை நோக்கிய விடுதலைப்பாதையில் சென்று சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவது” என்ற தீர்க்கமான முடிவைக் கடந்த மாவீரர் தினநாளில் தமிழீழத் தேசியத் தலைமை எடுத்து விட்டது. தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான தார்மீகக் கடமையை ஆற்றுமாறும், அதற்குரிய உதவியையும் நல்லாதரவையும் தருமாறும் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய எங்களிடமும், தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எமது தேசியத்தலைவர் உரிமையோடு வேண்டுகோளை விடுத்திருந்தார். அவருடைய வேண்டுகோளை நாம் எப்படி, எப்படியெல்லாம் நிறைவேற்றலாம், என்பதில் மட்டுமே, நாம் எமது சிந்தனையைச் செலுத்துவோம். சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசு பேரழிவுக்கான போர் ஒன்றை எமது மக்கள் மீது திணித்துக் கொண்டிருக்கும்போது போராடி வாழ்வதா? அல்லது போராடாமல் அழிந்து முடிவதா? என்ற கேள்விக்குரிய பதில் என்னவென்று எவருக்கும் தெரிந்ததே!

தமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் ரீதியாகத் தகுந்த முறையில்தான் போராடி வருகின்றார்கள் என்பதற்குப் பல சான்றுகளை எடுத்துக் காட்டினோம். இன்னும் பல மாவிலாறுகளையும், சம்பூர்களையும், வாகரைகளையும் எமது விடுதலைப் போராட்டம் சிறிது காலத்திற்குச் சந்திக்கவும் கூடும். ஆனால் நாம் முன்னர் கூறியபடி காலமும் சூழலும் நேரமும் விரைவில் சரியாக அமைகின்ற வேளையில் புலி பாயும்.! தமிழீழத் தேசியத்தலைவர் மீது நாம் கொண்டுள்ள முழு நம்பிக்கையோடு அவரது கரங்களைப் பலப்படுத்தும் எமது தார்மீக கடமையை நாம் செய்வோம்!.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home