Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு" - பகுதி 21 (2544 - 2644)


 
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 21 (2544 - 2644)
திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி.

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 21 (verses 2544 - 2644)
tiruppazacaip patirRRuppattantAti



Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext: S..Karthikeyan and V.S. Kannan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2007 .Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact



[1] பழைசை - பட்டீச்சரம்; இத்தலம் கும்பகோணத்தின் தென்மேற்கிலுள்ளது.

சிவமயம்.

 

    அழகியவிநாயகர் துதி.


     

    2544

    ஓங்கு பழனத் திருப்பழைசை யுறையும்
            பெருமா னிறையருட்குப்,
    பாங்குபெறுவா னொருபதிற்றுப்
            பத்தந் தாதி யுரைசெய்ய
    வாங்கு மொருகோட் டிருசெவிமும் மதநால்
            வாயைங் கரத்தலங்க,
    டாங்கு சோதிக் குணப்பெருங்குஞ்
            சரக்கன் றடிகடலைக்கொள்வாம்.

    1


     

    நூல்.


     

    2545

    பூவார் முளரிப் புத்தேளும்புயங்க வணைமேற்
            றுயில்வோனும்,
    நாவார் துதிசெய் தஞ்சலிக்கு நலமார்
            பழைசை நாயகனே,
    தேவா தேவர்க் கிறைவாநின் றிருத்தாள்
            கருத்தி லிருத்தேற்கு,
    மாவா வென்றிங் கருள்புரிந்தா யதுதா
            னின்பே ரருட்கழகே.

    1

    2546

    அழகா ருமையோர் பங்குடையோ யமர
            ரேத்துந் திருப்பழைசைக்,
    குழகா கொன்றை முடிமிலைந்த கோமா
            னேநின் னடியரொடும்,
    பழகா திருக்கும் வன்னெஞ்சப் பாவி
            யேனைப் பவமென்னுந்
    தழல்கா யழுவத் தழுத்தாது தடுத்தாட்
            கொள்ள றக்கதே.

    2

    2547

    தக்க னியற்று மகஞ்சிதைத்தாய் தறுகட்
            கூற்றந் தனைவதைத்தாய்,
    செக்கர் முகிலேய் சடைமுடிமேற் றிங்கட்
            கொழுந்தோடரவணிந்தாய்,
    முக்க ணுடையாய் திருப்பழைசை
            முதல்வா நின்றாட்கன்பில்லாப்,
    பொக்க முடையே னானாலும்
            போற்றிக் கோடல் கடுனனக்கே.

    3

    2548

    கடங்கால் பொருப்பி னுரிபோர்த்தாய்
            கண்ணார் நெற்றிப்புண்ணியனே,
    விடங்கா லரவ மரைக்கசைத்த
            விடங்கா தடங்கணுமைபாகா,
    தடங்கா மருவுஞ் செழும்பழைசைத்
            தலைவா பல நாணினைப்புகழா
    தடங்கா வுள்ளம் பொறிவழியே
            யணுகத் திரிந்தேணுறவுள்ளே.

    4

    2549

    உள்ளம் பொறியின் வழிநடையுற்
            றோடச் சுழன்றுமடமாதர்,
    கள்ள விழியின் வலைப்பட்டுக் கடையே
            னாகித் திரிவேனைத்,
    தெள்ளு தமிழ்நற் றொடைப்பாடல் செய்து
            பணியப் பணித்தாண்டான்,
    பள்ளவயற்கண் வளைமுத்தீன்
            பழைசைப் பதிவாழ் பெருமானே.

    5

    2550

    மானேர் நோக்கி யொருபாகா மறைவாய்
            முழக்க நிறைபழைசைக்,
    கோனே பொதுவிற் குனிக்குமருட் கூத்தா
            முக்கட்கொழுக்கரும்பே,
    தேனே கனியே யன்பருளந் தித்தித்
            திருக்குந்தெள்ளமுதே,
    வானே பெறினும் யானின்றாள்
            வழுத்து மன்பின்மாண்பருளே.

    6

    2551

    மாணா வுள்ளப் பறவைமட
            மானார்மையற் கண்ணிவிழ,
    நாணா துழன்று தடுமாறி நவவாய்ப்
            புழுக்கூ டதுசுமந்து,
    வீணாள்கழிக்கு மறிவில்லேன் மெய்யா
            பழைசை யையாநின்,
    பூணார் மலர்த்தாண் முடிக்கணிந்து
            புகழப் பெறுநா ளெந்நாளோ.

    7

    2552

    என்னா யகனை விண்ணவருக் கிறையா
            யவனை மறைநான்கு,
    முன்னா நிற்கும் வடிவானை மூவா
            தானை மூத்தானைப்,
    பொன்னார் மேனிப் புய்லும்விரைப்
            பூந்தா மரைவே தனுநாடிப்,
    பன்னாடிரிந்துங் காணானைப்
            பழைசை நகரிற் கண்டேனே.

    8

    2553

    கண்டேன் பழைசைப் பதியானைக் கைகான்
            முடங்குமறிவிலிவாய்த்,
    தண்டே னெடுங்கோட் டிருந்தொழுகுந்
            தன்மையெனக்கண் டுளங்களிப்புக்,
    கொண்டேன் சிரமே லிருகரமுங் குவித்தேன்
            குளித்தேன் முகமலர்ந்தேன்,
    விண்டேன் பண்டை வினைக்கடலை
            வேண்டேன் மற்றைத் தேவரையே.

    9

    2554

    வரைமா திருக்கு மொருகூறு மழுமா
            னணிந்த திருக்கரமு,
    மரைசேர் வேங்கை யதளுடையு மரவா
            பரணத் தகன்மார்பும்,
    விரைசேர் கொன்றை முடியுமரை
            மேவுமடியும் வெளித்தோற்றி,
    நரைசேர் விடையான் றிருப்பழைசை
            நகரி லருளப் பெற்றேனே.

    10

    2555

    வேறு.
    பெற்ற மேறிய பிரானையெம் மிறைவனைப்
            பெய்வளைகூறானைச்,
    சுற்று நாககங் கணத்தனைப் பழைசைவாழ்
            சுந்தரப் பெருமானை,
    யற்ற மின்மதி முடியனைப் பொடியணி
            யையனைக் கரங்கூப்பிப்,
    பற்றெ லாமறப் பற்றுவா ரெவரவர்
            பவக்கடல் கடந்தாரே.

    11

    2556

    கடத்த யானையின் சருமமே யங்கக
            பாயெனக் கொண்டானைப்,
    படத்த ராவணி புயத்தனை நயத்திருப்
            பழைசையம் பதியானை,
    நடத்த பாதனை வாழ்த்தியன் பொடுதின
            நாடுவா ரெவரேனும்,
    வடத்தின் மேற்றுயின் மாலயன் முதற்சுரர்
            வாழ்த்தவீற் றிருப்பாரே.

    12

    2557

    இருப்பை நேரும்வன் னெஞ்சனாய்
            மானமி லீனனாயெழிலாரும்,
    மருப்பை நேர்முலை மாதர்பா லாதரம்
            வைத்துழன் றலைவேனைக்,
    கருப்பை நீங்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க்
            கண்ணிசூட்டிடச்செய்தான்,
    பொருப்பை வாங்கிய புராதனன்
            பழைசைவாழ்புண்ணியப் பெருமானே.

    13

    2558

    பெருகு மையலம் பறவைவீழ்ந் தறிவெனும்
            பெருங்கலந் தகர்ந்தோடத்
    திருகு வெஞ்சினத் தீவினைச் சுறவுவாய்
            திறந்துணச் செயலின்றிக்,
    கருகு நாயினே னுருகியுன் சிவானந்தக்
            கனிதருசெந்தேறல்,
    பருகு மாறளித் ததுதிருப் பழைசைவாழ்
            பரம்பரன் விளையாட்டே.

    14

    2559

    ஆட்ட மன்றிடைச் செய்பவன்
            பழைசைவா ழந்தணனந்தாத,
    நாட்ட மூன்றுடைப் புண்ணிய னாலய
            நண்ணியஞ் சலிப்பாரே,
    வாட்ட மின்றியிப் புவனபோ கந்துய்த்து
            வானிடைப் புகுந்தாங்கு,
    வேட்ட போகமுந் துய்த்துப்பின்
            சிவபுர மேவிநன் குறைவாரே.

    15

    2560

    வாரு லாமுலை மாதர்பா லாதரம்
            வைத்துழன் றலைவீர்காள்,
    தேரு லாமணி மறுகும்பொன் னெயிலுஞ்சூழ்
            திருப்பழைசையிற்சென்றே,
    காரு லாமணி கண்டனைக் கண்டுகண்
            களிப்புறத்தொழுதன்னா,
    னேரு லாம்புகழ் பாடுவீ ராடுவீ
            ரெழுபிறப் பறுமாறே.

    16

    2561

    மாறு கொண்டெனை வஞ்சித்து நின்றனை
            மதியிலா மடநெஞ்சே,
    தாறு கொண்டபைங் கமுகடர் பழைசையிற்
            சார்ந்துசந்தனக்கொங்கை,
    கூறு கொண்டதம் பிரான்டி கண்டுகை
            குவித்துக்கண் ணீர்வார,
    நீறுகொண்டணிந் துருகிலை யெங்ஙன
            நிறையருள் பெறுவாயே.

    17

    2562

    வாயி னாலுனை வாழ்த்தவுஞ் சென்னியால்
            வணங்கவு மடங்காச்செந்,
    தீயில் வீழ்மெழு கொத்துள முருகவுஞ்
            செய்தவமுனமில்லேன்,
    பேயி னேனிய தருளுறேன் பழைசைவாழ்
            பிறைமுடிப் பெம்மானிற்,
    றோயு மாறினி நின்னடிக் காம்பவந்
            தோன்றிடவருள்வாயே.

    18

    2563

    அரிதுமானிட யோனியிற் சனித்திட லதனினு மரிதாகு,
    முரிய வாகிய வுறுப்புக்கள் குறைபடா துதித்துநான் மறையாதி,
    விரியு நூலறிந் தநித்திய நித்திய விவேகமுற் றிருபற்றும், பரிய மால்
    பணி பட்டிலிங் கேசர்தாள் பற்றிநின் றிடறானே.

    19

    2564

    தான வாறிழி தரவரு வாரணச் சருமமே னியிற்போர்த்த,
    ஞான வாரியே யன்பருக் கமுதமே நற்பழை சையின்வாழ்வே,
    கானலார்குழ லம்மையோர் பங்குடைக் கடவு ளெல் லாம்வல்ல,
    ஞானமூர்த்திநீ யென்னையு மடிமைகொண் டாளுத லரிதாமோ.

    20

    2565

    வேறு.
    அருவரை யேய்க்குங் குஞ்சரவுரித்தா
            ரமுதொழு கியமதி முடித்து,
    மருவிய வரிண மழுவணி கைத்து
            மாண்டசெஞ் சூட்டகிப் பூட்டு,
    கருநிற வேனங் காணருந் தாட்டுக்
            கனலவிர் மத்தகக்கட்டு,
    தருவடர்பழைசை யென்னவென் னுளத்துஞ்
            சார்ந்தினி திருந்தபே ரொளியே.

    21

    2566

    ஒளிபெறு நீலப் பொருப்பென நடக்கு
            மொழுகுமுக் கடத்தகுஞ் சரத்தை,
    அளிபெறு முளரி நாளநூல் கைக்கொண்டசைத்திட
            வொருமுடச் சிறுவன்,
    தெளிவுற நினைத்த தேய்க்குமாலடியேன்
            சிற்றறிவா னின்றன் பெருஞ்சீர்,
    களியுறப் பாடி நின்மலரடிகள் கைக்கொளல்
            பழசையம் பரனே.

    22

    2567

    அம்பரம் புலித்தோ லணிகல மரவ மாமையோட்
            டொடுமுழு வெலும்பு,
    வெம்புசெந் தழல்வெய் யவன்மதி நாட்டம்
            விரும்புமூண் வெய்யவெங் காளம்,
    பம்புவெம் பேய்கள் படையெனி னருளார்
            பட்டிலிங் கேசனைப் பழிச்சு,
    மும்பர்தம் பிரானை மண்ணுல கடியா
            ருற்றுநின் றேத்தலெவ் வாறே.

    23

    2568

    எவ்வமாம் பிறவித் தொடுகட லிடைவீழ்ந்
            திந்திரி யச்சுற வரித்துக்,
    கவ்வநீள் வினையின் சுழலகப் பட்டுக்
            கதறுவேற் கின்னருள் புரிந்தான்,
    மவ்வலங் கோதை தன்னையோர் பாகம்
            வைத்தவன் பட்டிலிங் கேசன்,
    தெவ்வர்த மரண மூன்றும் வெந்தொழியச்
            சிரித்தவன் றேவர்தம் பிரானே.

    24

    2569

    தேவர்தம் பிரானே பட்டிலிங் கேசா
            செப்பரு மொப்பினின் குணங்கள்,
    தாவரு மறைக ளுரைப்பது கேட்டுச்
            சரணடைந்தேனலேன் றோலுந்,
    தீவரு விடமு மரவும்வெள் ளென்புஞ்
            செறிமுடைத் தலைகளு நமக்கே,
    யாவவென் றுடுத்துப் பூண்டு கொண்டிருக்கு
            மதிசயங் கண்டடைந் தேனே.

    25

    2570

    ஏனமு மனமு மாயவர் வாய்வாழ்த்
            திடுமொலி யெழுகட லடைக்கும்,
    வானவர் கணங்கள் வச்சிரத் தடக்கை வள்ளல்
            வாழ்த் தொலிமுகின் மாற்று,
    மானமா முனிவர் மறைமுழக் கொலியெண்
            மாச்செவி களைச்செவி டாக்கும்,
    ஞானநா யகனைப் பழசையிலடியே
            னாவழுத் தொலியெங்குப் புகுமே.

    26

    2571

    எங்குநின் னடியார் நின்னிடம் பெற்ற
            தெடுத்துரை யாடிவீற் றிருப்பார்,
    செங்கரங் குவிப்பார் கண்கணீர் சொரிவார்
            சிந்திப்பா ரவையெலா முணரேன்,
    பொங்கொளி மலையைக் குழைத்தது கேட்டுப்
            புகுந்தன னென்மன மலையுங்,
    கொங்குலா மிதழிப் பட்டிலிங்கேசா
            குழைத்தெடுத் தாளுவை யெனவே.

    27

    2572

    எனக்குநீ யருளு நல்வர மொன்றஃ
            தியாதெனி னெப்பிறப் புறினுங்,
    கனக்குழன் மடவார் மயக்கிடை விழினுங்
            கற்பகா டவிநிழ லிருந்து,
    மனக்கினி தாம்பல் போகமுந் துய்த்து
            வாழினும் வரையிடை யுதித்த,
    வனக்கொடி பாகா பட்டிலிங் கேசா
            மலர்புரை நின்னடிக் கன்பே.

    28

    2573

    அடிநினைந் துருகித் தொடுமணற் கேணி
            யதனினுங் கண்களூற் றெடுக்கப்,
    படிமிசைப் புரண்டு பதைபதைத் தலறேன்
            பாடிடே னாடிடேன் பணியேன்,
    முடிவது மறியேன் மூர்க்கனே னெனையு
            முன்னிநீ யருள்புரி வாயோ,
    பொடியணி மேனிப் புண்ணியா பழசைப்
            புராதனா பூரணப் பொருளே.

    29

    2574

    பொருளலா வதனைப் பொருளென மதித்துப்
            பொறிவழிப் புலன்செலப் போக்கி,
    மருளிலா மடவார் மயக்கிடை முயங்கிமாண்டதோர்
            செய்கையு மின்றித்,
    தெருளிலா தடியேன் றியங்குவதழகோ திருப்பழ
            சையில்விருப் புடையாய்,
    இருளுலா மிடற்றா யமரர்நா யகநின்
            னிணையடிக் கறாதவன் பருளே.

    30

    2575

    வேறு.

    அன்புகுடி கொண்டுபழுத் தமைந்தமனத் துன்னடியார்
    பின்புசிவ மணங்கமழப் பித்தேறித் திரிகில்லே
    னென்புதசை பொதிகுடிலை யினிவேண்டே னிரங்காயோ
    தென்புனைபாட் டளிச்சோலைத் தேனுபுரி மேயவனே.

    31

    2576

    மேயகொடும் பாசமொடு வெம்போத்தை நடத்திவருங்
    காய்சினக்கூற் றென்செயுந்தீக் கடும்பிணிகோ ளென்செயுமால்
    வேயனமென் றிரடோளி மேவுமொரு கூறுடையான்
    தீயகொடி யேனுளமுந் தேனுபுரி யாக்கொளினே.

    32

    2577

    கொள்ளையின வண்டிழிந்து கொழுதிமூக் குழவுடைந்து
    கள்ளொழுகு நறுங்கொன்றைக் கண்ணிமுடி மிலைந்தபிரான்
    தெள்ளுபுனற் பெருவேலி திகழ்பட்டீச் சரமுமென
    துள்ளமுநான் மறைமுடியு முறையிடமாக் கொண்டானே.

    33

    2578

    ஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான்
    கூனமரு மதிமுடித்த கோதிலாக் குணக்கொண்ட
    றானமருந் தடஞ்சோலை தழைபழசைப் பதியன்றோ
    வானமரர் தாம்வாழ்வான் வலஞ்செயவந் தடைவதுவே.

    34

    2579

    அடையலார் புரம்பொடித்த வண்ணலார் நறுங்கொன்றைத்
    தொடையலா ரென்னுளம்போற் றோன்றவினி துறையுமிட
    மடையெலாந் தவழ்சங்க மணியீன்ற வயற்சாலிப்
    புடையெலா மணங்குலவப் பொலிபட்டீச் சரந்தானே.

    35

    2580

    பட்டாரு மிடைமடவாள் பாகாதென் பழசையாய்
    மட்டாருஞ் சடைமுடியாய் வானவர்தம் பெருமானே
    கட்டார்நின் றிருவடிக்கே கசிந்தணியேன் கரங்குவியேன்
    ஒட்டாம லுழல்வேனோ வுடையாய்நின் னடியேனே.

    36

    2581

    அடிமுடிபன் னாடேடி யலைந்ததுவு மறிந்திலார்
    முடிவின்மடி வதுங்கருதார் முழுவெலும்பு தலைமாலை
    பொடியணிமே னியினோக்கார் புகழ்ப் பழசைப் பரனொடுவெள்
    கொடியவர்மா லயனையுடன் குறித்தெண்ணி யெய்ப்பாரே.

    37

    2582

    எய்த்தேத முறுவேனை யிறப்பினொடு பிறப்பேற்று
    பொய்த்தேவர் புன்சமையம் புகுத்தாது புரந்தளித்தான்
    மெய்த்தேவ னுமைபாகன் விரிசெழுந்தா மரைமலருஞ்
    செய்த்தேறன் மடையுடைக்குந் திருப்பழசைப் பதியானே.

    38

    2583

    ஆனையுரி போர்த்தபிரா னருட்பழசை நகர்வாணன்
    தேனொழுகு மலர்வாயாற் றீவிடமன் றருந்தானே
    லூனொழுகு நேமிதரித் தோங்குமா லயன்முதலாம்
    வானவர்மங் கையர்கழுத்தின் மங்கலநா ணிற்குமே.

    39

    2584

    இருக்காதி மறைமுடிமே லிலங்குதிரு வடிப்பெருமான்
    மருக்காலுந் தடஞ்சோலை மந்திமதி மேற்பாயப்
    பெருக்காறு பொன்கொழிக்கும் பெரும்பட்டீச் சரமெனவுட்
    டிருக்காதி யரிறபவென் சிந்தைகுடி கொண்டானே.

    40

    2585

    வேறு.
    கொண்டலி னிருண்ட கண்டன் கோமள வல்லி பாகன்
    தண்டலை வேலி சூழுந் தடமதிட் பழசை வாணன்
    புண்டரீ கத்தாள் போற்றிப் பூசித்த பெரும்பே றன்றோ
    வண்டுளர் தண்டுழா யோன் மலரவன் குதுகலிப்பே.

    41

    2586

    கலம்பயில் கடனஞ் சுண்ட கண்டனே பழசை வாணா
    நலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோர்க்
    கலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவு
    மிலங்கிட வளிப்பாய் நீசென் றேற்றதென் னியம்புவாயே.

    42

    2587

    இயம்புபல் லண்ட மெல்லா மிமைப்பொழு தழித்து மாற்றி
    வயங்கெழ மட்டித் தாடும் வல்லவன் பழசை வாணன்
    சயம்பெறு வான்கூட் டுண்ணுந் தரியல ராண மூன்றுந்
    தயங்கற வழித்தா னென்று சாற்றுதல் சீர்த்தியாமே.

    43

    2588

    சீரமர் கஞ்சத் தண்ணல் சிரங்கர நகத்தாற் கொய்தாய்
    தாரம ரடிந கத்தாற் சலந்தர னுடலங் கீண்டாய்
    போரமர் வேளைப் பார்த்தும் புரத்தினை நகைத்துந் தீத்தாய்
    வாரமர் பழசை யாய்கைம் மழுச்சூலஞ் சுமந்த தென்னே.

    44

    2589

    என்னிது விடையு நீவிற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி
    மன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப்
    பொன்னிற வாளிகொண்ட புராதனா பழசை வாணா
    சென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே.

    45

    2590

    செய்தவ முடையீர் நுங்கள் செறிபிறப் பகலக்காண்மின்
    கையில்வெண் டலையொன் றேந்திக் கடியபாம் பரைக்கசைத்துப்
    பொய்யினூற் சரட்டாற் பொல்லம் பொத்துகோ வணமுஞ்சாத்தி
    யையனற் பழசை வாண னாடுவா னெங்கும் போந்தே.

    46

    2591

    எங்கணு நிறைந்து நின்றோ னெழினகர்ப் பழசை வாணன்
    றிங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதி பாத
    பங்கயம் புணையாப் பற்றிப் பவக்கடல் கடக்க வல்லா
    ரிங்கெவ ரேனு மன்னா ரிணையடிக் கடிய னியானே.

    47

    2592

    யானுனக் குரைப்ப தொன்றுண் டறிவினெஞ் சினிது கேட்டி
    வேனெடுங் கண்ணி னார்கள் விருப்பறுத் துய்ய வேண்டி
    னூனுடற் குயிரே யாயவ் வுயிர்க்குமோ ருயிராய் நின்ற
    பானலங் குழலி பாகன் பழசையை வணங்கு வாயே.

    48

    2593

    வணங்குநுண் ணிடையாள் பாகன் மானிட மேந்தும் வள்ளல்
    குணங்கினந் துணங்கை கொண்டு குதித்திடக் குனிக்கு மையன்
    பணங்கெழு மரவப் பூணன் பட்டிலிங் கேசன் யான்றன்
    மணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே.

    49

    2594

    அருட்பெருங் கடலைத் தேவ ரணிமணி முடியை யின்பத்
    திருக்கிளர் தவத்தோர் நெஞ்சுட் டித்திக்கு மமுதை யென்னை
    யுருக்குமொள் ளொளியை மாட முயர்பழ சையிற்கண் டோர்கள்
    கருக்குழி வீழார் காலன் கண்ணுற வும்ப டாரே.

    50

    2595

    வேறு.
    படவர வணிகலம் பலிக்க லந்தலை
    யுடல்பொதி சாந்தநீ றுறையு மூர்வனம்
    விடமுண வுடையதண் மேவக் கண்டும்வா
    னடர்சுரர் பழசையாற் கடிமை யாவரே.

    51

    2596

    ஆவலித் தழுதுதீ யடுத்த வெண்ணெயை
    யோவருங் கல்லென வுருகித் தேம்பியே
    பாவலர் குழாம்புகழ் பழசை வாணனுக்
    கேவர்தா மிரங்கிடா திருந்த பேர்களே.

    52

    2597

    பேரருண் மேனியன் பிறைமு டித்தவன்
    தாரணி கொன்றையன் சரும வாடையன்
    பார்புகழ் பழசையன் பதக னேனையு
    மோரடி யானென வுயக்கொண் டானின்றே.

    53

    2598

    இன்றமிழ் மாலைபொன் னிணைய டிக்கியான்
    பொன்றிகழ் கொன்றையிற் புனைந்து சூட்டிடேன்
    பன்றிகண் டறிவரு பழசை வாணன்றா
    ளொன்றிவெம் பவமறுத் துய்யு மாறெனே.

    54

    2599

    என்னினி யான்பெறு மிலாப மாவது
    பன்னரும் புகழுடைப் பழசை நாயகன்
    பொன்னடி மலர்தலை பூணப் பெற்றது
    மன்னிய சீர்த்திவாய் வாழ்த்தப் பெற்றதே.

    55

    2600

    பெறற்கரும் பேறெலாம் பெறவ ளித்தருள்
    சிறக்குநன் பழசையிற் செழிக்கு மையனை
    யறக்கொடி பாகனை யமரர் நாதனை
    மறக்கொடும் பதகரே மறக்கு நெஞ்சரே.

    56

    2601

    நெஞ்சிடைக் கவலையு நீங்கிற் றேதஞ்செய்
    வெஞ்சினக் கூற்றமும் விலகிற் றெம்பிரான்
    பஞ்சடி கூறுடைப் பழசைநாயகன்
    செஞ்சடைப் பிரானடி சேர்ந்த பின்னரே.

    57

    2602

    பின்னிய குழன்முடிப் பேதை பாகனார்
    பன்னிய மறையொலிப் பழசை வாணனார்
    பொன்னடி துதித்தபின் பொய்யனேன் மற்றோ
    ரன்னைதன் வயிற்றுதித் தலற லற்றதே.

    58

    2603

    அற்றமின் மதிக்கலை யணிந்த வேணியன்
    நற்றமிழ்ப் பழசைவாழ் நாய கன்வசை
    சற்றுமில் லவனடி தாழ்ந்த வென்றலை
    மற்றொரு தேவர்க்கும் வணக்கஞ் செய்யுமே.

    59

    2604

    செய்யுறு பழசையிற் சிறக்கு நாயகன்
    மெய்யறி வானந்தம் விளங்கு மூர்த்தியா
    மையனை யன்றிமற் றவரை நாயினேன்
    கையுமஞ் சலிக்குமே கண்ணு நோக்குமே.

    60

    2605

    வேறு.
    நோக்க மூன்றுடை நோன்மைய னான்மறை
    யாக்கும் வாய னருளும் பழசையான்
    தேக்குந் தேனினுந் தித்திக்குஞ் சீர்புகழ்
    வாக்கு வந்திட மாய்ந்ததென் றுன்பமே.

    61

    2606

    துன்ப மேயடர் சோற்றுத் துருத்தியாம்
    புன்பு லாற்புழுக் கூடு பொறுக்கிலே
    னின்ப மேவு மெழிற்பழ சைப்பதிக்
    கன்ப னேயெனை யாட்கொண் டருள்வையே.

    62

    2607

    வையு லாமயின் மானு நெடுங்கணார்
    மையல் வாரியின் மாழ்கி யழுந்துவேன்
    பைய ராவணி பட்டிலிங் கேசவென்
    னைய வுய்ய வளித்தருள் செய்வையே.

    63

    2608

    செய்யி ருக்குந் திருப்பழ சைச்சிவா
    நெய்யி ருக்கு நெறிக்குழல் பாகனே
    பொய்யி ருக்கும் புலைத்தொழி லேற்கருண்
    மெய்யி ருக்குமுன் னன்பருண் மேவவே.

    64

    2609

    மேவி ராமன் வணங்கும் விமலனார்
    தேவ தேவர் சிறக்கும் பழசையார்
    தாவின் மெல்லடித் தாமரை வாழுமே
    தீவி னைச்சிறி யேனுட் சிலையினே.

    65

    2610

    சில்ல ரிச்சிலம் பாரடிச் சேயிழை
    புல்லும் பாகன் புரக்கும் பழசையான்
    எல்லை யில்வினை யாவு மடியனேற்
    கொல்லை நீக்கின னோரில் வியப்பிதே.

    66

    2611

    இதையந் தீமெழு கென்ன வுருகுவார்
    புதைகொள் கண்ணியர்க் குப்பொற் பழசையிற்
    சிதைவி லான்றனைத் தேர்கிலர் காலனா
    ருதைய மெய்தினெங் கோடி யொளிப்பரே.

    67

    2612

    ஓடு வீருழல் வீரைம் பொறிக்கிரை
    தேடு வீர்கிடை யாமற் றிகைத்துப்பின்
    வாடு வீரிங்கு வம்மின் பழசையைக்
    கூடு வீரெங்கள் கூத்தனை வாழ்த்தவே.

    68

    2613

    கூத்த யர்ந்து குழைந்து கசிந்துநின்
    றேத்தும் பட்டிலிங் கேசனை நேசனைத்
    தோத்தி ரஞ்செய்ம்மின் றொல்லை வினையறக்
    காத்த ளிப்பன் கருணை வடிவனே.

    69

    2614

    வடியுண் கண்ணியோர் கூறன் மழுவலான்
    பொடிகொண் மேனியன் பூம்பழ சைப்பிரா
    னெடிய பாத நினைப்பவர் யாங்கணு
    முடிவி லின்பத்து மூழ்கி யிருப்பரே.

    70

    2615

    வேறு.
    இருவி னைக்கிட மாயவிப் புழுக்குடி லினிதென்
    றொருவி டாதெடுத் துழலவே னியமனா ருடன்று
    துருவி நாளையென் முன்வரி லென்செய்வேன் சுருதி
    மருவி யேத்துநற் பழசையம் பதியுறை மணியே.

    71

    2616

    மணியை மாதவர் முத்தியைப் பழசைநன் மருந்தைப்
    பணியை நேரல்குன் மாதரார் மையலிற் படுவார்
    பிணியை மெய்யடி யார்நிதிச் சேமத்தைப் பெட்பி
    னணியை யாசையை மாற்றியா னடைவதெந் நாளே.

    72

    2617

    நாளெ லாம்வறி தாய்ச்செல வஞ்சரை நட்டு
    வாளெ லாமணி கண்ணியர்க் குருகிமா ழாந்தேன்
    றோளெ லாமர வணிந்தவா பழசைவாழ் தூயா
    ஆளெ லாம்வல்ல வுனக்கெனைப் புரப்பது மரிதே.

    73

    2618

    அரிமு ரட்கருங் கேழலா கியுமுல களித்தோன்
    வரிசி றைப்பெரு வாரன மாய்முன மேவித்
    தெரிவ தற்கரி தாகிய பழசையான் றிருத்தாள்
    பரிவு பெற்றவோர் பற்றிலார்க் கெளிதகப் படுமே.

    74

    2619

    படரு மண்புன லனல்வளி விண்ணெனப் பட்டங்
    கடரு மவ்வைந்தி னோடிய மானனிந் தருக்கன்
    றொடரு மெட்டுரு வாகிய பழசையான் றோற்று
    மிடரும் வீணுமென் றனக்கிலை யாக்குவ னினியே.

    75

    2620

    இனிய வாசக மிதுபறி தலையிக லருகர்
    முனித ரும்புத்தர் சூனிய வாதியர் முதலீர்
    புனித மாமறைப் பழசைவாழ் பூரண னவனே
    நனிசெய் முத்தொழிற் றலைவன்யா வருக்கு நாயகனே.

    76

    2621

    நாயி னேனுக்கு மின்னருள் சுரந்தவ னலஞ்சேர்
    தூய மாதவர் சூழ்பழசைப்பதித் தோன்றல்
    பாயும் வெண்கதி ரொண்மணிப் பந்தரொண் காழி
    மேய பிள்ளையார்க் கருளினா னென்பதும் வியப்பே.

    77

    2622

    ஏத மாறுந்தென் கூடலிற் பழசைவா ழிறைவா
    ஓது நாவொரு பாணற்கா விறகெடுத் துழன்றாய்
    வாத வூரெம தடிகட்கா மண்சுமந் துடலிற்
    போத வோரடி பொறுத்தது போதுமோ வுனக்கே.

    78

    2623

    உன்னு வோர்க்கருள் சுரக்குநற் பழசையுத் தமனே
    பன்னு மப்பர்தம் வயிற்றிடை நஞ்சினைப் பதித்தாய்
    மன்னு காழியர்க் கமுதுவைத் தாயிது வஞ்ச
    மன்ன தாலன்றோ நினக்குமூ ணஞ்சமா கியதே.

    79

    2624

    ஆக மாதுற வருளிய பழசையம் மானே
    யேகி நாவலூ ரார்மணந் தவிர்த்ததென் னினிநீ
    போக தூதென வவர்சொலு முனம்புரி குழல்பால்
    வேக மாகவே நடந்ததென் னிதுவிளம் புவையே.

    80

    2625

    வேறு.
    விளம்புவதொன் றுளதுனக்கு மடநெஞ்சே
            கேட்டியருள் வேட்டுநின்று,
    வளம்புகுநன் மணச்சோலை வளர்பழசைப்
            பெருமானை வானோ ருய்யத்,
    தளம்புதிரைக் கடனஞ்ச முண்டவனைக்
            கண்டுகரந் தலைமேற் கூப்பிக்,
    களம்புனையா தாடிடுவை பாடிடுவை
            யவன்றிருத்தாள் காணுமாறே.

    81

    2626

    காணியிது வெனமண்ணைக் கருதியரைக்
            காணியருள் வேறுங் காணா,
    தூணியைபொன் மனைமாத ரெனவுழல்வீ
            ருய்யுமா றுரைப்பக் கேண்மின்,
    சேணியைகற் பகந்தாழுஞ் செழுஞ்சோலைத்
            திருப்பழசைத் தேவதேவன்,
    வேணியிலொண் புனறரித்தான் றாள டைமி
            னுங்கள்வினை வீயத் தானே.

    82

    2627

    வீயாத பெருவாழ்விங் கடிமைநா
            யேற்கிதனின் மேலுமுண்டோ,
    வேயார்மென் றடந்தோளி யொருபாகன்
            றிருப்பழசைமேவு மையன்,
    தீயார்தம் புன்சமையத் தீநெறியிற்
            செலுத்தாது தேவர் வாய்வாழ்த்,
    தோயாத தன்னடிக்கே யெனைப்புகுவித்
            தாண்டதையிங் குணருங் காலே.

    83

    2628

    காலனார் விழச்சினந்த கழற்காலா
            பழசைநகர்க் கடவுள் கேட்டீ,
    கோலவா ளரக்கன்முடி நெரித்துமண்டோ
            தரிக்கின்பங்கொடுத்தாய் நட்புச்,
    சாலவியற் பகைபாற்சென் றென்னேற்றாய்
            பொன்னனையா டனக்கென் செய்தா,
    யேலவிவை கண்டலவோ வம் மையுடற்
            பாதிகொண்டா ளென்செய் வாளே.

    84

    2629

    செய்யேந்துந் திருப்பழசை யெம்பிரா
            னுடையின்றிச் சென்னியோடு,
    கையேந்தி யரவசைத்துச் சண்ணித்த
            நீறுகவின் புதைப்பக்காள,
    மையேந்து மிடற்றொடுசென் றிடுபலியேற்
            றான் கண்ட மாயோன் மாழ்கிப்,
    பையேந்து மரவல்கு லாவானேற்
            பெண் கள்மயல் பட்டிடாரே.

    85

    2630

    பட்டாரு மிடையாளைப் பாகத்து
            வையாயேற் பழசை வாணா,
    கட்டாருங் குழலார்நீ பலியேற்ற
            ஞான்று மனங் கலங்கிச் சோர்ந்தார்,
    முட்டாத மால்கொண்டா னெடுமாலா
            தலினழகு முழுதுங் கண்ணுற்,
    றெட்டாமன் மலர்மாதர் முதலரம்பை
            மாதரெல்லா மிகல்செய் வாரே.

    86

    2631

    செய்யிருக்குங் கழைகுழைக்கு மைங்கணைக்கா
            ளையை விழியாற் சினந்து சுட்டீ,
    ரையிருக்குஞ் சடைதரித்தீர் விற்கருஞ்செங்
            கற்றோய்த்த வாடை கொண்டீர்,
    மையிருக்கு மணிமிடற்றீர் துறவி
            யர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர்,
    பொய்யிருக்கு மருங்குலாண் முலைச்சுவடு
            கொண்டதென்னை புகலு வீரே.

    87

    2632

    வீரமழு வலந்தரித்த பழசைநகர்ப்
            பெருமானே வெய்யோர் மேவு,
    மாரலொரு மூன்றுமெரித் தம்மூவர்
            நிரயம் வீழ்ந் தாழா தாண்டாய்,
    சோருமறி வுடைநாயே னின்றிருத்தா
            ளன்றியொரு துணையுங் காணேன்,
    சீரருடந் தாண்டிடினுய்ந் திடுவேன்
            கை விடில்வாடித் தியங்கு வேனே.

    88

    2633

    வேனில்வேள் கணைகிழிக்கப் பொறிவழிச்சென்
            மனமலைப்ப வெம்பி வாடிப்,
    பானலார் கண்ணியர்வாய்ப் பட்டுழலு
            வேற் குமருள் பாலிப் பாயோ,
    கானவார் பசுங்கதலி கமுகுநிறை படப்பையிற்
            போய்க் கழுநீர் பாயுந்,
    தேனவாம் பொழிற்பழசைச் சிவபுரத்
            தில் வீற்றிருக்குஞ் செம்பொற் குன்றே.

    89

    2634

    குன்றனைய முலைமடவாள் கூறானை
            நீறானைக் கொன்றை வேய்ந்த,
    பொன்றிகழ்செஞ் சடையானை விடையானைக்
            கருமிடற்றுப் புனிதன் றன்னை,
    வன்றறுகட் கூற்றொடுங்கச் சினந்தானை
            மானேந்து மலர்க்கை யானை,
    கன்றுகுணி லாக்கொண்டோன் காணானைப்
            பழசைநகர்க் கண்டே னியானே.

    90

    2635

    வேறு.
    கண்ட பேர்க்குடன் காணு மற்புதம்
    பண்ட மாடமார் பழசை வாணனார்
    வண்டு லாங்குழல் வல்லி பாகனார்
    தொண்ட னேற்கருள் சுரந்த வாற்றையே.

    91

    2636

    ஆற்ற வஞ்சினே னளவி னாளெலாம்
    போற்றி வைத்தவிப் புழுக்கு டம்பையைக்
    கூற்ற நாடுமுன் கூவிக் கொள்ளுவாய்
    பாற்ற டங்கள்சூழ் பழசை வள்ளலே.

    92

    2637

    வள்ள லேயினி மற்றொர் பற்றிலேன்
    றள்ளு வாயெனிற் றளர்வ தன்றிப்பின்
    கொள்ளு வாரிலை கூவிக் கொள்ளுவாய்
    பள்ள வாவிசேர் பழசை யப்பனே.

    93

    2638

    அப்பு லாஞ்சடைப் பழசை யையனே
    துப்பு லாமிதழ்த் தோகை பாகனே
    கப்பு லாவுடல் கழிய நின்னருள்
    வெப்பு லாமனத் தேற்கு வேண்டுமே.

    94

    2639

    வேண்டு நந்திநீ விலகெ னச்சொனாய்
    பூண்ட வன்புடைப் புகலி வள்ளற்கா
    மூண்ட வென்வினை விலக முன்னினு
    மீண்டுய் வேனருள் பழசை யெந்தையே.

    95

    2640

    எந்தை யெம்பிரா னெங்கு முள்ளவன்
    நந்த லில்சுக நல்க வேண்டினூல்
    வந்த நாவலீர் வம்மி னிங்ஙனம்
    பந்த நான்மறைப் பழசை பாடுமே.

    96

    2641

    பாட வேண்டுநின் பழசை யம்பதி
    கூட வேண்டுநின் கூட்டத் தார்களைத்
    தேட வேண்டுநின் செம்பொற் சீரடி
    வீட வேண்டுமென் வினைகள் யாவுமே.

    97

    2642

    வினையி லாதவன் விடையொன் றுள்ளவன்
    புனைந றுங்குழற் பூவை பங்குளான்
    றனைய டைந்தனன் பழசை யந்தலத்
    தினைவு தீர்ந்தன னின்ப மெய்தியே.

    98

    2643

    எய்யு மாரனை யெரித்த வீரனார்
    பைய ராவணிப் பட்டி லிங்கர்தஞ்
    செய்ய தாண்மலர் சிரத் திருத்தியே
    யுய்ய வேண்டுவீ ரொருங்கு வம்மினே.

    99

    2644

    வம்மி னெந்தைவாழ் பழசை வந்துநீர்
    கைம்ம லர்கொடு காலிற் சூட்டிநின்
    றெம்மை யாளென வெளிமை யின்மைவெம்
    பொய்ம்மை தீர்ப்பனம் பூவை பாகனே.

    100


    திருப்பழசைப்பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று.
     

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home