Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > பிரதாப முதலியார் சரித்திரம் - மயூரம் வேதநாயகம் பிள்ளை

 


பிரதாப முதலியார் சரித்திரம்
ஆசிரியர் - மயூரம் வேதநாயகம் பிள்ளை (1826 - 1889)
piratApa mutaliyAr carittiram of mayUram vEtanAyakam piLLai



Acknowledgements:
Our sincere thanks go to Mr. V. Devarajan of Durham, NC, USA for the preparation of the etext in TSCII format.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


ஆசிரியர் முன்னுரை

தமிழில் உரைநடை நூல்கள் இல்லையென்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது. இந்தக் குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்துகின்றனர். இக் குறையை நீக்கும் நோக்கத்துடன் தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன். மேலும் நீதி நூல், பெண்மதி மாலை, சமரசக் கீர்த்தனம் முதலிய ஏற்கெனவே வெளிவந்துள்ளன. எனது நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் அறநெறிக் கொள்கைகளுக்கு உதாரணங்களைக் காட்டவும் இந்த நவீனத்தை எழுதினேன்.

இந்தக் கதைக்கு நிலைக்களம் தென் இந்தியா. கதா நாயகன் இப் பக்கத்தவர்; நன்கு கல்வி பயின்றவர்; மகா புத்திசாலி; நகைச் சுவையுடனும் அறிவுச் சுடர் வீசும் வகையிலும் பேச வல்லவர். அவர் தனது பிறப்பு வளர்ப்பு, பெற்றோர், கல்வி பயின்றது, திருமணம் செய்து கொண்டது போன்ற தனது வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை விவரிக்கிறார். கதையில் இடையிடையே ஹாஸ்ய சம்பவங்களும் தமாஷான பேச்சுக்களும் பின்னப்பட்டிருக்கின்றன. அறத்துறை சம்பந்த கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த நவீனத்தில் முக்கியமான பங்கு கொள்பவர்கள் கதா நாயகனின் அன்னை 'சுந்தர அண்ணி'யும், அவருடைய மனைவி 'ஞானாம்பாளும்'. இவ்விருவரும் உயர்குடியில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்கள்; எல்லா விதமான நற்பண்புகளும் உடையவர்கள்; பெண் குலத்திற்கு அணிகலனான எல்லா லட்சணங்களும் பொருந்தியவர்கள். வாழ்க்கையில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய உயர் குணங்கள் பிரகாசிக்கின்றன. தங்களுக்கு நேரக்கூடிய கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல், அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதியையும், மனித தர்மத்தையும் காக்க முன்வருகின்றனர். தன்னால் கட்டுப்படுத்த முடியாத பல சந்தர்ப்பங்களில் எதிர்பாராத சேர்க்கையினால் 'ஞானாம்பாள்' ஆண்வேடம் பூண்டு மகோன்னத சக்தி பெற்று, புத்தி சாதுரியத்துடனும் திறமையுடனும் ஆட்சி புரிகிறாள். இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப் பட்ட அரச மாளிகையைப் பார்த்துக்கொண்டே யிருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு. இம்மாதிரி மனப் பாங்குள்ள வாசகர்களின் சுவையைத் திருப்தி செய்வதற்காக ஞானாம்பாளை மனிதர் அடையக் கூடிய மகோன்னத பதவிக்கு உயர்த்தி யிருக்கிறேன்.

கதாநாயகனின் தந்தையும், மாமனாரும் உயர் குடும்பத்தில் பிறந்தவர்கள்; ஆனால் கல்விப் பேறு பெறாத நாட்டு மக்கள்; வக்கிரப் போக்குடையவர்கள்; விசித்திர குணம் படைத்தவர்கள். ஆனால் சுந்தர அண்ணியும், ஞானாம்பாளும் கையாளும் பண்பு மிக்க தந்திரங்களால் அவர்களிடம் மயங்கிக் கிடந்த நற்பண்புகள் பிரகாசித்து, அவர்களும் புகழத்தக்க செயல் புரிகின்றனர். பல்வேறு காட்சிகளில் பல உப பாத்திரங்கள் பல்வேறு வகைகளில் தங்கள் பாகங்களில் சிறப்புற நடித்திருக்கின்றனர். அவர்களுடைய செயல்களில் பெற்றோரிடம் பாசம், சகோதர வாஞ்சை, கணவன் மனைவி அன்பு, கற்பு, எல்லோருக்கும் நலம் புரிதல், நாணயம், நன்றி முதலிய நற்பண்புகளுக்கு உதாரணங்களைக் காண்கிறோம். சமயம் போதிப்பதும், அனுபவம் உணர்த்துவதுமான நற்குணமின்றி இந்த வாழ்க்கையில் கூட இன்ப வாழ்வு வாழ முடியாது என்னும் மூதுரைக்கும் கதையில் உதாரணங்கள் காணப்படுகின்றன.

தேசியப் பண்பு, இல்வாழ்க்கை, தென்னிந்திய மக்களின் பழக்க வழக்கங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. இடையிடையே நகைச்சுவை மிக்க சம்பவங்களும், சுவை மிக்க கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. உலகத்தோரிடம் பொதுவாகக் காணப்படும் பலஹீனங்களும் குறைபாடுகளும் ஆங்காங்கே கேலி செய்யப்பட்டிருக்கின்றன. நான் கடவுள் பக்தி புகட்டியிருக்கிறேன். குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் யாவரும் செய்யவேண்டிய கடமைகளையும் வற்புறுத்தியிருக்கிறேன். நல்வழியின் இயல்பான சிறப்பையும், தீய வழியில் உள்ள கொடூரங்களையும் நான் விவரிக்க முயற்சித்திருக்கும் முறையில் வாசகர்கள் நல்லதை விரும்பித் தீயதை வெறுக்க முன்வருவார்கள். பல்வேறு பாத்திரங்களையும் சம்பவங்களையும் விவரிப்பதில் நான் இயற்கையை ஒட்டியே எழுதியிருக்கிறேன். அற்புதங்களையோ உணர்ச்சி வசப்பட்டோ எழுதுவதைத் தவிர்த்திருக்கிறேன். எந்த மதத்தினர் சமயப் பற்றையும் புண்படுத்தாமல் ஜாக்கிரதையாகவே எழுதியிருக்கிறேன்.

சில நாவலாசிரியர்கள் மனித இயல்பை உள்ளது உள்ளபடியே வருணித்திருக்கிறார்கள். இவர்கள் மனிதரில் கடையவர்களை வருணிப்பதால் அனுபவமற்ற இளைஞர்கள் இந்த உதாரணங்களைப் பின்பற்றுகின்றனர். இந்தக் கதை எழுதுவதில் இந்த முறையை நான் பின்பற்றவில்லை. முக்கியான பாத்திரங்களை நான் பூரண சற்குணம் படைத்தவர்களாகவே சித்தரித்திருக்கிறேன். பிரபல அற நோக்குள்ள ஆங்கில ஆசிரியர் டாக்டர் ஜான்சனையே இவ் விஷயத்தில் நான் பின்பற்றியுள்ளேன். அவர் 'ராம்ப்ளர்' என்னும் நூலின் நான்காவது பகுதியில் கூறுகிறார்.

"வரலாற்று அடிப்படைக் கதைகள் தவிரப் பிறவற்றில் நற்குணத்துக்குச் சிறப்பான உதாரணமாக விளங்கும் பாத்திரங்களை ஏன் சிருஷ்டிக்கலாகாது என்பது எனக்கு விளங்கவில்லை. நற்குணமட்டுமென்றால் தெய்வீகத் தன்மை வாய்ந்ததென்றோ, நடக்கக் கூடாத சம்பவமென்றோ அர்த்தமில்லை. ஏனெனில் நாம் உணரமுடியாததைப் பின்பற்ற மாட்டோம். ஆனால் மனிதர்கள் முயற்சித்து அடையக் கூடிய உயர்தர-தூய்மை மிக்க-நற்பண்பு புரட்சிகரமான சந்தர்ப்பங்களில் சில விபத்துகளைச் சமாளிப்பதிலோ அல்லது அனுபவிப்பதிலோ நாம் காட்டக் கூடிய சிறப்புக்களை நாம் அடையலாம். அல்லது நாமே செய்து காட்டலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. தீமையையும் காட்ட வேண்டியதுதான்; ஆனால் காட்டப்படும் தீமை அருவருக்கத் தக்கதாக இருக்க வேண்டும். தீமை தோன்றும் இடங்களில் எல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ள வேண்டும். அதன் அற்புதத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும். ஏனெனில் தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதை யாரும் கண்டு அஞ்சமாட்டார்கள்."

தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப் படவில்லை. ஆகையால் இந்த நூல் வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன். இம்மாதிரிப் புதிய முயற்சிகளில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொறுத்தருளுமாறு பொதுமக்களை வேண்டிக் கொள்கிறேன்.

ச. வேதநாயகம் பிள்ளை.


அத்தியாயம் - 1

இந்தத் தேசம் இங்கிலீஷ் துரைத்தனத்தார் சுவாதீனமாகிச் சில காலத்திற்குப் பின்பு சத்தியபுரி என்னும் ஊரிலே தொண்டைமண்டல முதலியார் குலத்திலே நான் பிறந்தேன். என் பாட்டனார் ஆகிய ஏகாம்பர முதலியார் இந்த தேசத்தை ஆண்ட நபாபுகளிடத்தில் திவான் உத்தியோகஞ் செய்து, அளவற்ற திரவியங்களையும் பூஸ்திதிகளையும் சம்பாதித்தார். என் பாட்டனார் படித்ததும், அவருக்குத் திவான் உத்தியோகங் கிடைத்ததும், எல்லாரும் அதிசயிக்கத் தக்க விஷயமானதால், அதை நான் கேள்விப்பட்ட பிரகாரம் விவரிக்கிறேன்.

என் பாட்டனார் சம்பளங் கொடுத்துப் படிக்க நிர்வாகம் அற்றவராயிருந்தபடியால், அவர் சில உபாத்தியாயர்களை அடுத்து அவர்கள் ஏவின வேலைகளைச் செய்து, கல்வி கற்றுக் கொண்டார். அவர் கல்வியில் பூரண பாண்டித்தியம் அடைந்து, யௌவன புருஷனா யிருக்கும்போது, ஒரு நாள் ஒரு துலுக்கன் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு, சத்தியபுரிச் சாலை மார்க்கமாகச் சாரி போனான். அவனுடைய குதிரை எதையோ கண்டு, வெருண்டு மார்க்கத்தை விட்டுக் காட்டிலும் மேட்டிலும் ஓடி அவனைக் கீழே தள்ளிவிட்டது.

அவன் காயப்பட்டு பிரக்ஞால பங்கமாய் விழுந்த இடத்திலே பிரேதம் போலக் கிடந்தான். அப்போது அவ்விடத்தி லிருந்தவர்கள், "அவன் யாரோ பக்கிரி, அவனைத் தொட்டால் ஜாதிப்பிரஷ்டத்துவம் உண்டாகும்" என்று சொல்லிக் கொண்டு, அப்பால் விலகிப் போய்விட்டார்கள். என் பாட்டனார் மட்டும் "அவன் யாராயிருந்தாலும் ஆபத்து வேளையில் உதவ வேண்டும்" என்று நினைத்து அவனைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டு, அவனுடைய காயங்களைக் கட்டி, அவன் மூர்ச்சை தெளியும்படியான பக்குவங்களைச் செய்தார். அவன் மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடனே என் பாட்டனாரைப் பார்த்து, "நீர் செய்த உபகாரத்துக்கு ஏழைப் பக்கிரியான நான் என்ன பிரதி உபகாரஞ் செய்யப் போகிறேன்" என்று பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்தான்.

உடனே என் பாட்டனார் "பிரதி உபகாரத்தை விரும்பி இந்த உபகாரத்தை நான் செய்ய வில்லை; ஆபத்துக் காலத்தில் ஒருவருக்கு உதவுவது எவ்வளவோ பெரிய சுகிர்தம்; அந்தச் சுகிர்த பலனே எனக்குப் போதும்; இம்மையில் நான் வேறு பிரதிப் பிரயோஜனத்தை அபேக்ஷ¢க்கவில்லை" என்றார். அந்தத் துலுக்கன் என் பாட்டனாரைப் பார்த்து "இம்மையிலும் உமக்கு அல்லா கிருபை செய்வார்" என, என் பாட்டனார் "நித்தியமான மறுமைப் பலனை நான் அபேக்ஷ¢க்கிறேனே தவிர இம்மைப் பலனை அபேக்ஷ¢க்கவில்லை" என்றார்.

உடனே அந்தத் துலுக்கன் எழுந்து "நான் சொல்லுவதை நீ ஆ§க்ஷபிக்கிறாயா?" என்று கோபித்து, என் பாட்டனார் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டு, குதிரையின் மேல் ஒரே தாண்டாய்த் தாண்டி ஏறிக்கொண்டு போய்விட்டான். அவ்விடத்தில் இருந்தவர்கள் எல்லாரும் என் பாட்டனாரை நோக்கி, "அந்த துஷ்டத் துலுக்கனுக்கு நீர் உபகாரஞ் செய்தற்குக் கைமேல் பலன் கிடைத்ததே" என்று பரிகாசம் பண்ணினார்கள். என் பாட்டனார் வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டு வீட்டுக்குப் போனார்.

அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு, நபாபினிடத்திலிருந்து அநேக சேவகர்கள் உருவின கத்திகளுடனே வந்து என் பாட்டனாரைப் பிடித்துக் குற்றவாளிபோற் பின்கட்டு முறையாகக் கட்டி, நபாபு சமூகத்திற்குக் கொண்டு போனார்கள். அதற்குக் காரணந் தெரியாமையினாலே, என் பாட்டனார் சித்தங் கலங்கி "நான் ஒரு பாவத்தையும் அறியேனே" என்று அழுதுகொண்டு போனார். எங்கள் பந்துக்களும், அவரைத் தொடர்ந்து, பரிதபித்துக் கொண்டு போனார்கள். அப்பொழுது சிங்காதனத்தின் மீது வீற்றிருந்த நபாபு என் பாட்டனாரைக் கண்டவுடனே எழுந்து, ஓடிவந்து என் பாட்டனாரைத் தழுவிக் கொண்டு சொல்கிறார்.

"நான் பக்கிரி போல மாறுவேஷம் போட்டுக் கொண்டு பல ஊர்களைச் சுற்றிப் பார்த்து வருகையில், சத்தியபுரியில் எனக்கு நேரிட்ட பிராணாபத்தைத் தீர்த்து இரக்ஷ¢த்தீரே, அந்த உபகாரத்துக்காகவும், உம்முடைய அபார யோக்கியதைக்காகவும் உம்மைத் திவான் உத்தியோகத்தில் நியமித்திருக்கிறோம்; உமக்குச் சம்மதா?" என்று கேட்டார். உடனே என் பாட்டனார் "இம்மைப் பலன் வேண்டாமென்று முன்னே நான் சொல்லிப் பட்ட பாடு என் ஞாபகத்திலிருக்கிறது. அதை நான் மறந்தாலும் என் கன்னம் மறவாது; ஆகையால் உங்கள் சித்தப்படி நடக்கக் காத்திருக்கிறேன்" என்றார். அதைக் கேட்டவுடனே நபாபு சிரித்துக் கொண்டு, "நீர் ஆ§க்ஷபிக்காமலிருக்கும் பொருட்டு உம்மைப் பலவந்தமாகக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தோம்" என்று சொல்லி உடனே என் பாட்டனாரைத் திவான் உத்தியோகத்தில் நியமித்துச் சன்னதுங் கொடுத்தார்.

இப்படிப்பட்ட திவான்கள் முன்னும் இல்லை பின்னும் இல்லை என்று ஜகப்பிரக்கியாதியாய் யாவருஞ் சொல்லும்படியாக என் பாட்டனார் அதிகாரஞ் செலுத்திவந்தார். ஒவ்வொரு நபாபும் அவருக்குப் பல சமயங்களில் கனகாபிஷேகஞ் செய்ததுந் தவிர, எண்ணிக்கையில்லாத கிராமங்களையும் பூமிகளையும் சர்வ மானியமாகக் கொடுத்தார்கள். என் பாட்டனார், விருத்தாப்பியம் மேலிட்டவுடனே, அவருடைய திரவியங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு, சத்தியபுரியில் வந்து வசித்தார். அவர் காலஞ் சென்றபிறகு, அவருடைய ஸ்திதிகளெல்லாம் என் பிதாவுக்குக் கிடைத்தது.

அவர் அநுபவித்து வந்தார். என் தகப்பனார் பெயர் கனகாசல முதலியார். என் தாயார் பெயர் சுந்தரத்தண்ணி. என்னுடைய பெயரைச் சொல்ல எனக்கே சங்கோசமாயிருக்கின்றது. ஏனென்றால் அந்த நாமத்துக்குத் தகுந்த குணம் என்னிடத்தில் இல்லை; மேலும் என்னுடைய பெயரை எழதி நீட்டினால் காதவழி தூரம் நீளும்; இந்தப் புஸ்தகமும் அந்தப் பெயருக்கே சரியா யிருக்கும்; ஆகையால் என்னுடைய பெயரைச் சுருக்கி, "பிரதாப முதலி" என்று என்னை எல்லாரும் கூப்பிடுகிறது வழக்கம். என் தாய் தந்தைகளுக்கு நான் ஏக புத்திரனாதலால், என்னை மிகவும் அன்பு பாராட்டி அருமையாக வளர்த்தார்கள். என் தகப்பனாருடைய பிரியத்துக்கும் தாயாருடைய பிரியத்துக்கும் பேதம் என்ன வென்றால், என் தகப்பனார் நாளை வருவதை யோசியாமல், இன்றைக்கு நான் சந்தோஷமாயிருந்தாற் போதுமென்று, நான் என் இஷ்டப்பிரகாரம் கொட்டம் அடிக்கும்படி விட்டுவிடுவார். என் தாயார் எப்போதும் நான் §க்ஷமமாயிருக்க வேண்டுமென்கிற நோக்கத்துடன் என்னை நயமும் பயமுமாக நடத்தி வந்தார்.

எனக்கு அஞ்சாம் பருவம் ஆரம்பமானது முதல் வித்தை கற்பிக்க வேண்டுமென்று என் தாயார் சர்வப் பிரயத்தனம் செய்தும் பலிக்க வில்லை. எனக்கு வயது போதாது போதாது என்று என் தகப்பனார் காலஹரணம் செய்து வந்தபடியால், என்னை எட்டாம் வயது எட்டிப் பார்க்கிற வரையில், நான் சுத்த நிரக்ஷர குக்ஷ¢யாயிருந்தேன். என் மாதாவினுடைய அலட்டைப் பொறுக்க மாட்டாமல், என் தந்தையார் என்னை ஒரு நாள் தனியே அழைத்து, "உன் தாயார் உன்னைப் பள்ளிக் கூடத்தில் வைக்கவேண்டுமென்கிறாளே, நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டார். உடனே நான் தந்தையை நோக்கி, "ஐயா, நானும் படிக்க வேண்டுமா? எனக்கிருக்கிற சுய புத்தி போதாதா? ஏழைகள் ஜீவனஞ் செய்து பிழைக்க வேண்டியதற்காக அவர்களுக்குக் கல்வி அவசியந் தான்; நான் படிக்க வேண்டிய அகத்திய மென்ன? ஏதாவது வாசிக்க வேண்டி யிருந்தால் வாசிக்கவும், எழுத வேண்டியிருந்தால் எழுதவும், நமக்குக் காரியஸ்தர்கள் இல்லையா? கணக்கர்களில்லையா?" என்றேன். இது நான் சுயமாகச் சொன்னதல்ல; என் பாட்டியார் அடிக்கடி அந்த வார்த்தைகளைச் சொல்ல நான் கேள்விப்பட்டிருந்ததால் அந்தப் பிரகாரம் நான் பாடம் பண்ணிக் கொண்டு சொன்னேன். அந்த வார்த்தைகள் என் சொந்த வார்த்தைகளென்று என் பிதா எண்ணி, ஆனந்த சாகரத்தில் மூழ்கினார். இவ்வளவு சாதுரியமாய் நான் பேசின சமாச்சாரம் வீடு முழுவதும் பரவி, எங்கள் காரியஸ்தர்கள், கணக்கர்கள், பந்துக்கள், பணிவிடைக்காரர்கள் முதலான சகலரும் ஒவ்வொருவராய் வந்து, என்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ ஆரம்பித்தார்கள்.என்னுடைய பாட்டியாரும் தம்முடைய உபதேசம் என்பதை மறந்துவிட்டு, என்னைக் கட்டித் தூக்கிக்கொண்டு, "என் கண்ணே! பொன்னே! இவ்வளவு சாமர்த்தியமாய்ப் பேச யாருக்காவது வருமோ?" என்று சொல்லிக் கொண்டு, நான் சுவாசம் விடுவதற்கு இடமில்லாமல் வாயாலும் பல்லாலும் அநேக முத்தங்கள் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ஒவ்வொரு முத்தமும் எனக்குப் பிராணாவஸ்தையாயிருந்தது. அப்போது அவ்விடத்திலே கட்டியிருந்த ஒரு கருங்குரங்கு, என் பாட்டியார் என்னை ஏதோ உபத்திரவஞ் செய்வதாக எண்ணிக் கொண்டு, அவர்கள் மேலே தாவி விழுந்து, அவர்களைக் கடிக்க ஆரம்பித்தது. அந்த வேதனை பொறுக்க மாட்டாமல், என் பாட்டியார் என்னைக் கீழே விட்டுவிட்டார்கள். நானும் அவர்கள் பற்கடிக்குத் தப்பிப் பிழைத்தேன்.

இவ்வளவு நடந்ததும் என் மாதாவுக்குத் தெரியாது. பிற்பாடு எவ்விதமாகவோ தெரிந்து கொண்டு, துயர முகத்தோடு வந்து என் பிதாவை நோக்கி, "ஏன் இவ்வளவு கூக்குரல்?" என்று வினாவ, "கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்" என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக் கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது. பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, "என் கண்மணியே, நீ சொல்வது எவ்வளவுஞ் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கின்றது? கல்வியை உணராவிட்டால் கடவுளது யதார்த்த சொரூபத்தையும், அனந்த கல்யாண குணங்களையும், தர்மாதர்மங்களின் பேதங்களையும், ஞான சாஸ்திரங்களையும், பூகோளம், ககோளம், கணிதம் முதலிய சாஸ்திரங்களையும், இகபர சுகங்களை அடையத்தக்க மார்க்கங்களையும் நாம் எப்படி அறியக்கூடும்? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? முகக் கண்ணுக்குக் கல்வியாகிய ஞானப்பிரகாசம் அவசியம் அல்லவா? சாணைக்கல்லில் தேய்க்கப்படாத நவரத்தினங்கள் பிரகாசிக்குமா? பிருதிவி ரூபமாயிருக்கிற பொன் வெள்ளி முதலான பஞ்ச லோகங்களை எடுத்துக் காய்ச்சித் திரட்டாவிட்டால் அவைகளுக்கு ஒளி உண்டாகுமா? வெட்டித் திருத்திச் சாகுபடி செய்கிற நிலம் மட்டும் பலன் கொடுக்குமேயல்லாது, சீர்த்திருத்தஞ் செய்யப்படாத நிலம் பலன் கொடுக்குமா? வெட்டித் திருத்தாத நிலம் கல்லும், முள்ளும், புல்லும் மண்டிக் கெட்டுப் போவது போல் கல்விப் பயிற்சியில்லாத மனம் துர்க்குணங்கள் நிறைந்து கெட்டுப் போகாதா? கல்வி ஏழைகளுக்குத் தான் முக்கியம் என்கிறாய். பல தொழில்களைக் கற்றுக் கொண்டு கைப்பாடு பட்டுப் பிழைக்க வேண்டியவர்களான ஏழைகளுக்குப் படிக்க நேரமேது? கல்வி விஷயத்தில் செலவளிக்க அவர்களுக்குப் பொருளேது? அவர்கள் படித்தாலும் அரைப்படிப்பு, காற்படிப்புப் படிக்கலாமேயல்லாமல் பூரணமாய்ப் படிக்கக் கூடுமா? நாம் காரியஸ்தர்களுக்கு மேல் அதிகமாய்ப் படித்திராவிட்டால் அவர்கள் நம்மை மதிப்பார்களா? அவர்களுடைய கணக்குகளிலிருக்கிற பிசகுகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்கக் கூடும்? வேலைக்காரர்கள், கிராமக் குடிகள் முதலானவர்களை நாம் எப்படி ஆளக்கூடும்? தனவான்கள் படித்தவர்களாயிருந்தால் மட்டும் அவர்களுடைய பொருள்களை சத்விஷயத்தில் உபயோகிப்பார்களே தவிரப் படியாதவர்கள் கையில் அகப்பட்டு தனமானது, பைத்தியக்காரர்கள் கையில் இருக்கிற கத்திபோல், தங்களுக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்கும். ஆதலால் கல்வி தனவான்களுக்கே முக்கியம்" என்று என் தாயார் கர்ணாமிர்தமாகப் பிரசிங்கித்தார்கள். அதைக் கேட்ட என் தகப்பனார் "நல்லது பெண்ணே! உன் மனதுப் பிரகாரம், பிள்ளைக்கு வித்தியாப்பியாசம் செய்விக்க வேண்டிய முயற்சி செய்கிறேன்" என்றார். கல்வி அனாவசியமென்று என் பாட்டியார் எனக்குப் போதித்த போதம், என் தாயாருடைய பிரசங்கமாகிய பிரசண்டமாருதத்தின் முன் பஞ்சாய்ப் பறந்து விட்டது.

உடனே என் தகப்பனார் ஒரு உபாத்தியாயரை நியமனஞ் செய்து, எங்கள் வீட்டில் தினந்தோறும் வந்து எனக்குக் கற்பிக்கும்படி திட்டஞ் செய்தார். எங்கள் கிராம காரியங்களையும், என் தகப்பனார் எவ்வளவும் கவனிக்காமல், என் தாயாரே வகித்துப் பார்த்து வந்த படியால், என் படிப்பைக் கவனிக்க என் தாயாருக்கு ஒரு நிமிஷமாவது ஒழிகிறதில்லை. ஆகையால் என் பாட்டியாரும் தகப்பனாரும் என் கல்வி விஷயத்தில் கவனம் வைக்கத் தலைப்பட்டார்கள். அது எனக்கு அநர்த்தமாய் முடிந்தது. எனக்குப் படிக்க இஷ்டமானபோது நான் படிக்கிறதென்றும், என்னை உபாத்தியாயர் கண்டனை தண்டனை செய்யக் கூடாதென்றும், ஆனால் நான் படிப்பில் சுக்கில பட்சத்துச் சந்திரன் போல், தினே தினே விருத்தி ஆகவேண்டுமென்றும் நிபந்தனை செய்தார்கள். இந்த நிபந்தனைகளின் பிரகாரம், சரியாய் நடக்க வில்லை யென்றும் சில உபாத்தியாயர்கள் நீக்கப் பட்ார்கள். என்னை மரியாதையாக அழையாமல் "வா, போ" என்று ஏகவசனமாகக் கூப்பிட்டதற்காகச் சில போதகர்கள் தள்ளப் பட்டார்கள். ஒரு உபாத்தியாயர் மாச முழுவதும் பிரசாயப் பட்டுச் சொல்லிக் கொடுத்துச் சம்பளம் வாங்குகிற சமயத்தில், சம்பளமில்லாமல் நீக்கப் பட்டார். உபாத்தியாயர்களைத் தள்ளுகிற அதிகாரம், என் தகப்பனாருக்கும் பாட்டியாருக்கும் இருந்தது போலவே நானும் அந்த அதிகாரத்தைச் சில சமயங்களில் செலுத்தி வந்தேன். இவ்வகையாக நான் பன்னிரண்டு உயிர் எழுத்துங் கற்றுக்கொள்வதற்கு முன் தள்ளுபடியான ஆசிரியர்களும் பன்னிரண்டு பேருக்கு அதிகமாயிருக்கலாம். இவ்வளவு ஆபத்துக்கும் தப்பி ஒரு உபாத்தியாயர் மட்டும் நிலைத்திருந்தார். அவர் குடும்ப சகிதமாய் எங்கள் வீட்டில் இருந்து கொண்டு எனக்கும் அவருடைய பிள்ளை கனகசபை என்பவனுக்கும் பாடம் சொல்லிக் கொண்டு வந்தார். ஒரு நாள் என் பாட்டியார் உபாத்தியாயரைப் பார்த்து, "நம்முடைய பிள்ளையாண்டான் படித்துப் படித்துத் தொண்டை வறண்டு போகிறதே! இனி மேல் உம்முடைய மகன் கனகசபை பாடம் படிக்கட்டும். அவன் படிக்கிறதைக் கேட்டு என் பேரன் கல்வி கற்றுக் கொள்ளட்டும். பிற்பாடு என் பேராண்டிக்குப் பாடம் தெரியாவிட்டால், அவனுக்குப் பயம் உண்டாவதற்காகக் கனகசபையைப் பலமாக அடியும்" என்றார்கள். உபாத்தியாயருடைய வயிற்றுக் கொடுமையினால் இந்த அநியாயமான நிபந்தனைக்கும் சம்மதித்தார். எனக்குப் பாடம் தெரியாத போதெல்லாம், உபத்தியாயர் கனகசபையை அடிப்பார். அவன் இல்லாதபோது உபாத்தியார் தன் முதுகிலும் அடித்துக் கொள்வார், நான் பாடத்தைச் சரியாய்ப் பாடித்த நேரமுமில்லை; கனக சபை அடிபடாத நேரமுமில்லை. ஒரு நாள் உபாத்தியாயர் கனகசபையை முதுகில் அடித்தபோது அவன் அழுதுகொண்டு "ஐயா! என் முதுகு ஒரு அபராதமும் செய்ய வில்லையே, இவ்வளவு பாடும் வயிற்றுப் பிழைப்புக்காகத் தானே! ஆகையால் வயிற்றில் அடியுங்கள்" என்றான். அதைக் கேட்டவுடனே எனக்கு இரக்கம் உண்டாகி, என் கண்ணில் ஜலம் ததும்ப ஆரம்பித்தது. நான் ஒரு அட்சரம் கற்றுக் கொள்வதற்குக் கனகசபை அநேகம் அடிபடுவான். இப்படியானால் தமிழ் நெடுங்கணக்கு முழுவதும் எனக்குப் பாடம் ஆவதற்கு முன் அவன் எத்தனை அடிபட்டிருப்பானென்று புத்திமான்கள் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளப் பிரார்த்திக்கிறேன். அவன் உயிருக்கும் உடலுக்கும் அபாயம் வரும்படியாக அவனுக்கு அடி வாங்கிக் கொடுத்த அட்சரங்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று பெயர் வந்தது கிரமமல்லவா?
-------------

அத்தியாயம் - 2
நான் படிப்பு விஷயத்தில் மந்தமாயிருந்தாலும், விளையாடுகிற விஷயத்தில் அதிக முயற்சி உள்ளவனாக இருந்தேன். என்னுடைய பால்ய சேஷ்டைகள் யாவருக்கும் வியப்பாயிருக்குமானதால் அவைகளை அடியில் விவரிக்கிறேன். என் வீட்டில் என்னைத் தவிர, மற்றவர்கள் எல்லாரும் சுரத்தினாலும் அம்மையினாலும் உபாதை பட்டார்கள். அவர்களைப் பல பேர் வந்து விசாரிக்கிறதும் உபசாரம் செய்கிறதுமா யிருந்தார்கள். என்னை ஒருவரும் விசாரிக்காதபடியால் நான் ஒரு மூலையில் அழுதுகொண்டு இருந்தேன். எல்லாரும் ஓடிவந்து, "ஏன் அப்பா!`அழுகிறாய்" என்று கேட்டார்கள். "எனக்குச் சுரமாவது அம்மையாவது வரவில்லையே!" என்று தேம்பித் தேம்பி அழுதேன்.

நானும் சில பிள்ளைகளும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒரு பையன் என்னைப் பார்த்து, "நான் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு ஒரு வித்தை செய்கிறேன்; நீ அந்த வித்தையை இரண்டு கண்ணையுந் திறந்துகொண்டு செய்வாயா?" என்று கேட்டான். அதற்கு நான், "நீ இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு செய்கிற வித்தையை, நான் கண்ணைத் திறந்துகொண்டு செய்யக் கூடாதா? அப்படி நான் செய்யாவிட்டால் உனக்கு நான் இவ்வளவு பந்தயம் கொடுப்பேன்" என்று ஒப்புக்கொண்டேன். உடனே அந்தப் பையன் நடுத் தெருவில் உட்கார்ந்து, இரண்டு கண்ணையும் மூடிக்கொண்டு மண்ணை அள்ளி அள்ளித் தன் கண்மேலே போட்டுக் கொண்டான். பிற்பாடு என்னைப் பார்த்து, "நீ இரண்டு கண்களையும் திறந்துகொண்டு இந்த வித்தையைச் செய்" என்று மண்ணை அள்ளி என் கையில் கொடுத்தான். நான் கண்ணை இழந்துபோவதைப் பார்க்கிலும் காசை இழப்பது நலமென்று நினைத்துப் பந்தயக் காசை அவனுக்குக் கொடுத்துவிட்டேன்.

எங்கள் வீட்டு மேல் மாடியில் அதிக விலை பெற்ற நிலைக் கண்ணாடிகள் மாட்டியிருந்தன. ஒரு கண்ணாடியில் நானும் சில பிள்ளைகளும் எங்களுடைய முக அழகைப் பார்த்தபோது எல்லாருடைய முகமும் அழகாயிருக்க, என் முகம் மட்டும் எனக்கே பார்க்கச் சகிக்காமல் விகாரமாயிருந்தது. அது கண்ணாடியினுடைய பிசகென்றெண்ணிக் கையை ஓங்கிக்கொண்டு அந்தக் கண்ணாடியில் பலமாக ஒரு குத்து குத்தினேன். அந்தக் கண்ணாடி ஆயிரம் துண்டாக உடைந்து போயிற்று.

எந்த வேலையிலும் சோம்பலாக இருக்கக் கூடாதென்றும் தொட்ட காரியத்தை உடனே முடித்துவிட வேண்டுமே தவிர நாளைக்கென்று நிறுத்தி வைக்கக் கூடாதென்றும் என் தாயார் எனக்கு அடிக்கடி புத்தி சொல்லி வருவார்கள். நான் அந்தப் புத்தியை பக்ஷண விஷயங்களில் உபயோகப் படுத்தி, எத்தனை பக்ஷணங்கள் அகப்பட்டாலும், நாளைக்கென்று வையாமல் உடனே சாப்பிட்டு, மந்தப் பட்டு வைத்தியர்களுக்கு ஓயாது வேலை கொடுத்து வந்தேன்.

எல்லாரிடத்திலும் மரியாதையாய்ப் பேசவேண்டுமென்றும், யாராவது வந்தால் அவர்களுக்கு உடனே ஆசனம் கொடுத்து உபசாரம் செய்ய வேண்டுமென்றும் என் தாயார் எனக்கு அடிக்கடி சொல்லி வருவார்கள். நான் அந்தப்படி வண்ணான், அம்பட்டன், தோட்டிக்குக் கூட ஆசனம் கொடுத்து மரியாதை செய்யத் தலைப்பட்டேன்.

தினமும் பொழுது விடிந்தவுடனே, உபாத்தியாயர் வந்து படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்தபடியால், பொழுது விடியாமலிருப்பதற்கு, என்ன உபாயமென்று யோசித்துப் பார்த்தேன். கோழி கூவிப் பொழுது விடிகிறபடியால், கோழி கூவாவிட்டால் பொழுது விடியாதென்று நினைத்து, கோழி வளர்க்கவேண்டாமென்று அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களுக்கு உத்தரவு செய்தேன்.

ஒரு நாள், ஒரு பையனிடத்தில் நான் இரண்டு வராகன் கடன் வாங்கினதாகவும், அவன் என்னை அடித்ததாகவும் சொப்பனங் கண்டு விழித்துக்கொண்டு, அந்தப் பையனை மறுநாள் பார்த்தபோது, அந்தச் சொப்பனத்தை அவனுக்குத் தெரிவித்தேன். உடனே அவன் “அந்தக் கடனைக் கொடு" என்று என் மடியைப் பிடித்துக் கொண்டான். நான் அவனுடைய கன்னத்தில் பளீர் பளீர் என்று இரண்டு மூன்று அறைகள் கொடுத்தேன். அவன் "ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டான். "இராத்திரி நீ என்னை சொப்பனத்தில் அடித்தபடியால் அதற்காக நான் இப்போது நான் உன்னை அடித்தேன்" என்றேன். அவன் "கடனுக்கும் அடிக்கும் சரியாய்ப் போய்விட்டது" என்று சொல்லிப் போய்விட்டான்.

ஒரு நாள், நான் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு துஷ்டன் அவனுடைய மாட்டை ஓங்கி ஓங்கி அடித்து ஓட்டிக் கொண்டு போனான். நான் "ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டதற்கு அவன் "என் மாட்டை எப்படியாவது நான் உபயோகிக்கிறேன். உனக்கென்ன?" என்றான். நான் உடனே என் கையில் இருந்த கழியால் அவனை அடித்து, "என் கழியை நான் எப்படியாவது உபயோகிக்கிறேன். உனக்கென்ன?" என்று சொல்லிப் போய்விட்டேன்.

எங்கள் வீட்டில் ஒரு பெரியவருக்கு அசாத்திய ரோகம் நேரிட்டு, வைத்தியர்களும் கைவிட்டுவிட்டார்கள். எமன் வநது உயிரைக் கொண்டு போகின்றதென்று நான் கேள்விப் பட்டிருந்த படியால், கதவை மூடி வைத்திருந்தால், எந்த வழியாய் வருவான் என்று நினைத்து, அந்தப் பெரியவர் படுத்திருந்த அறையின் கதவை மூடி, துவாரங்களை யெல்லாம் அடைத்துவிட்டேன். அப்படிச் செய்தும் அந்தத் துஷ்ட யமன், எந்த வழியாகவோ வந்து பிராணனைக் கொண்டுபோய்விட்டான்.

நான் ஒரு நாள், கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபிறகு, முதுகின் அழகைப் பார்க்கும் பொருட்டு கண்ணாடியை எனக்குப் பின்புறத்தில் வைத்து, முதுகாலே பார்த்தேன். ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்.

என்னுடைய நேசன் ஒருவன், ஒரு புஸ்தகம் அனுப்ப வேண்டுமென்று எனக்குத் தபால் வழியாய்க் கடிதம் அனுப்பினான். நான் அந்தப் புஸ்தகத்தை அனுப்ப வில்லை. சில நாளைக்குப் பிறகு நான் அவனைக் கண்டபோது "புஸ்தகம் அனுப்பும்படி நீ எழுதிய கடிதம் என்னிடத்தில் வந்து சேரவில்லை" என்றேன். "கடிதம் வந்து சேராவிட்டால், நான் புஸ்தகம் வேண்டுமென்று எழுதிய சமாச்சாரம் உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று அவன் கேட்க, நான் ஆடு திருடிய கள்ளன் போல் விழித்தேன்.

ஒரு முக்கியமான சங்கதியைப் பற்றி, ஒரு சிநேகிதனுக்கு நான் கடிதம் எழுதி அதன் கடைசியில் "இந்தக் கடிதம் வந்து சேரா விட்டால், உடனே எனக்குத் தெரிவி" என்று எழுதினேன். கடிதம் போய்ச் சேராவிட்டால் என்ற அந்தக் கடைசி வாக்கியத்தால் என்ன பிரயோசனமென்பதை நான் கவனிக்கவில்லை.

ஒரு பிரசித்தமான பொய்யன் என்னிடத்தில் வந்து, தன்னுடைய ஆயுசு முழுமையும் தான் ஒரு நிசம் சொன்னதில்லை என்றான். "நீ ஒரு நிசம் சொல்லியிருக்கிறாய்" என்று நான் சொல்ல, அவன் "இல்லை, இல்லை" என்றான். "ஆயுசு முழுமையும் நிசம் சொன்னதில்லையென்று நீ சொல்வது நிசம் அல்லவா?" என்றேன். அவன் சரியென்று ஒப்புக் கொண்டு என்னைப் பார்த்து "நீ ஒரு பொய் சொல்ல வேண்டும்" என்றான். நான் உடனே "நீ, யோக்கியன்" என்றேன்.

ஒரு நாள் இராத்திரி, நான் தங்கக் காப்புகளும் கொலுசுகளும் போட்டுக்கொண்டு நித்திரை செய்தேன். ஒரு திருடன் எவ்விதமாகவோ உள்ளே நுழைந்து, எல்லாரும் தூங்குகிற சமயத்தில் என்னுடைய கைக் காப்பையும் கொலுசையுங் கழற்றிக்கொண்டு ஓடினான். நான் உடனே "திருடரே! திருடரே! இன்னொரு கைக் காப்பையுங் கொலுசையும் மறந்துவிட்டீரே" என்று கூவினேன். அந்த அரவம் கேட்டு, எல்லாரும் விழித்துக் கொண்டார்கள். திருடனும் ஓடிப் போய் விட்டான்.

என் பாட்டியாருக்கு, மூன்றாம் முறை சுரம் வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலிருந்த கடியாரம், மத்தியானம் இரண்டு மணி அடித்தவுடனே, சுரம் வருவது வழக்கமாயிருந்தபடியால், கடியாரம் ஓடாமல் நின்று விட்டால் சுரமும் வராமல் நின்றுபோகுமென்று நினைத்து கடியாரத்தை நிறுத்தி விட்டேன். அப்படிச் செய்தும் அந்தத் திருட்டுச் சுரம் வராமலிருக்கவில்லை.

நானும் கனகசபையும் பின்னும் சில பிள்ளைகளும் எங்களுக்குத் தேகபலம் உண்டாவதற்காகச் சில நாளாய்ச் சிலம்பம் பழகிக்கொண்டு வந்தோம். ஒரு நாள் இராத்திரி வெகுநேரம் வரையில், நாங்கள் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்து வீட்டுக்கு வந்தபோது, எங்கள் வீட்டுக்கு எதிரேயிருக்கிற மைதானத்தில் கூத்தாடிகள் வேஷம் போட்டுக்கொண்டு, இராம நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்தபோது இராமரும், சீதையும், லட்சுமணரும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுக் காட்டுக்குப் போகிற சமயமாயிருந்தது; அப்போது தசரதர், கௌசலை முதலான சகல ஜனங்களும், அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டவுடனே, நான் கனகசபையைப் பார்த்து, "அந்தப் பொல்லாத கைகேசியினாலே இராமர் பட்டத்தை இழந்து மனமுருகி வாடவும் சம்பவித்திருக்கின்றதே! இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்பது தர்மமா?" என்று கேட்க, அவன் "இந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சி செய்யாமல் நாம் சும்மா இருப்பது அழகல்ல" என்றான். நானும், அவனும் மற்றப் பிள்ளைகளும், எங்கள் கைகளிலிருந்த சிலம்பக் கழிகளுடனே சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜனங்களின் தலைமேல் ஏறி மிதித்துக் கொண்டு, நாடகசாலைக்குள்ளே பிரவேசித்து விட்டோம். அங்கே தன் பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் ஆகுமென்கிற அகக்களிப்புடன் உட்கார்ந்துகொண்டிருந்த கைகேசியை வளைத்துக் கொண்டு, எங்கள் கை சலிக்கிற வரையில் அடித்தோம். அவள் "பரதனுக்குப் பட்டம் வேண்டாம், வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டு ஓட்டம் பிடித்தாள். அப்போது கூனி அகப்பட்டிருந்தால் அவளை எமலோகத்துக்கு அனுப்பியிருப்போம். அவளுடைய அதிர்ஷ்ட வசத்தால் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாள்; காட்டுக்குப் போகிற இராமரிடத்துக்குப் போய், நகரத்துக்குத் திரும்பும்படி சொன்னோம். அவர் "பிதுர் வாக்கிய பரிபாலனம் செய்வதற்காக நான் காட்டுக்குப் போவது அகத்தியம்" என்றார். நீர் போனால் காலை ஒடித்துவிடுவோமென்று வழி மறித்துக் கொண்டு அவருக்கு நியாயத்தை எடுத்துக் காட்டி மெய்ப்பித்தோம். எப்படி என்றால் "சும்மா இருந்த உம்மை உம்முடைய தகப்பனார் அழைத்து உம்மைப் பட்டங் கட்டிக்கொள்ளும்படி சொல்லி, நீரும் அதற்குச் சம்மதித்து ஊரெங்கும் முரசறைவித்த பிற்பாடு, உமக்குக் கொடுத்த இராச்சியத்தைப் பரதனுக்குக் கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டா? அப்படி அவர் கொடுத்திருந்தால் அது அசத்தியமல்லவா? உமக்குப் பட்டாபிஷேகம் ஆனால் தான் உமது தந்தையாருடைய சத்தியம் நிலைக்கும்.

"என்னே அரசர் இயற்கை யிருந்தவா

தன்னே ரிலாத தலைமகற்குத் தாரணியை

முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப்

பின்னே கொடுத்தாற் பிழையாதோ மெய்யென்பார்"

என்று கம்பரும் சொல்லியிருக்கிறபடியால், ஊருக்குத் திரும்பும்" என்றேன். இராமர் நான் சொன்ன வாய் நியாயத்தைப் பார்க்கிலும், தடியடி நியாயத்துக்குப் பயந்து உடனே நகரத்துக்குத் திரும்பினார். நான் வசிட்டர் முதலானவர்களை அழைத்து இராமருக்கு மகுடாபிஷேகம் செய்வித்தேன். இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும் அவருடைய தம்பியும் சீதையும் வனத்துக்குப் போகாமலும், தசரதர் இறவாமலும், இராவணன் சீதையைச் சிறை எடுத்தானென்னும் அபவாதம் இல்லாமலும், இராவணாதிகளை ராமர் கொலை செய்தாரென்கிற பழிச் சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் ராஜ்ஜியபாரம் தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் பேரை நிலை நிறுத்தினேன்.

ஒரு நாள் எங்கள் குடும்ப வைத்தியர் வீதியில் வருகிறதைக் கண்டு, அவர் கண்ணில் படாமல் நான் ஓடி ஒளிந்துகொண்டேன். கனகசபை "ஏன் ஒளிகிறீர்கள்?" என்று கேட்டான். "நமக்குச் சில நாளாய் வியாதி வரவில்லையே! வைத்தியருக்குக் கோபமாயிருக்குமென்று பயந்து ஒளிந்துகொண்டேன்" என்றேன். மறுபடி ஒரு நாள் அந்த வைத்தியர் என்னைக் கண்டு, "பூர்வீக மனுஷர்களெல்லாரும் தீர்க்காயுசாயிருந்தார்கள்; இந்தக் காலத்து மனுஷர்களுக்கு ஆயுசு குறைந்து போனதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார். நான் அவரைப் பார்த்து "பூர்வீகத்தில் வைத்தியர்கள் இல்லாதபடியால் பூர்வீக மனுஷர்கள் நீடிய ஆயுசு உள்ளவர்களாயிருந்தார்கள்; இந்தக் காலத்தில் வைத்தியர்கள் அதிகமாயிருப்பதால் ஆயுசு குறைந்து போய்விட்டது" என்றேன்.

நானும் சில பிள்ளைகளும் நீந்தக் கற்றுக் கொள்வதற்காக ஒரு குள்துக்குப் போனோம்; "நானும் நீந்தக் கற்றுக் கொள்வதற்கு முன் தண்ணீரில் இறங்கமாட்டேன்" என்று கரையில் உட்கார்ந்தேன். "தண்ணீரில் இறங்காமல் எப்படி நீந்தக் கற்றுக்கொள்கிறது?" என்று எல்லாரும் என்னைப் பரிகாசம் செய்தார்கள்.

நானும் சில பிள்ளைகளும் குதிரைப் பந்தயம் விட்டபோது என் குதிரை எல்லாருடைய குதிரைகளுக்கும் பிந்திப் போய்விட்டதால், எல்லாரும் என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தார்கள். நான் "என்னுடைய குதிரை எல்லாருடைய குதிரைகளையும் துரத்துகிறது” என்று சொல்லி அவர்களுக்கு மேல் அதிகமாகச் சிரித்தேன்.

ஒரு நாள் நானும் கனகசபையும் பின்னுஞ் சிலரும் எங்களுடைய வீரப் பிரதாபங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் கனகசபையை நோக்கி "அநேக சத்துருக்களை நான் ஓடும்படி செய்தேன்" என்றேன். அவன் "எப்படி ஓடச் செய்தீர்கள்?" என்று கேட்க, "நான் சத்துருக்களைக் கண்டவுடனே ஓட ஆரம்பித்தேன்; அவர்கள் என்னைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தார்கள்; இப்படி நான் சத்துருக்களை ஓடச் செய்தேன்" என்றேன். கனகசபை என்னுடைய சவுரியத்தை மெச்சிக்கொண்டு, "நீங்கள் சத்துருக்களை எப்படி வெல்லுவீர்கள்?" என்று கேட்க, "நான் சத்துருக்களைக் கண்டவுடனே அதிவேகமாக ஓடுவேன்! என்னுடைய ஓட்டத்தைப் பிடிக்க அவர்களாலும், அவர்கள் பாட்டனார்களாலும் முடியாது; இவ்வகையாக அவர்களை நான் வெற்றி கொள்வேன்" என்றேன். அப்போது கூட இருந்த ஒரு சிப்பாய், தான் சண்டையில் எதிரியினுடைய காலை வெட்டினதாக வீரம் பேசினான். நான் அவனைப் பார்த்து "எதிரியினுடைய தலையை வெட்டாமல் காலை வெட்டின காரணம் என்ன?" என்று கேட்க, அந்தச் சிப்பாய் "நான் என்ன செய்வேன்? எதிரியினுடைய தலையை வேறொருவன் முன்னமே வெட்டிக் கொண்டு போய்விட்டான்; பிறகு நான் காலை வெட்டினேன்" என்றான்.

சில காலத்துக்கு முன் நானும் கனகசபையும் சேர்ந்து சில கவிகள் உண்டு பண்ணினோம். அந்தக் கவிகளை இந்தக் கிரந்தத்திலே சேர்க்கலாமென்று யோசித்து, அவைகளைப் பார்வையிட்டோம். சில கவிகளின் அர்த்தம் எனக்கு மட்டும் தெரிகின்றது. கனகசபைக்குத் தெரியவில்லை. சில கவிகளின் அர்த்தம் கனகசபைக்கு மட்டும் புலப்படுகின்றது; எனக்குப் புலப்படவில்லை. சில கவிகளின் பொருள் அவனுக்கும் விளங்கவில்லை; எனக்கும் விளங்கவில்லை. அன்றியும் அநேக கவிகளுக்குச் சந்தமே தெரியவில்லை. சந்தந் தெரிகிற கவிகளுக்குப் பொருள் தெரியவில்லை. பொருள் தெரிகிற கவிகள், இலக்கண விதிக்கு ஒத்திருக்கவில்லை. ஆகையால் அந்தக் கவிகளை, இந்தப் புஸ்தகத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன்.ரு புலவர், நான் பாடின ஒரு கவியைப் பார்த்து, அதை நான் கம்பராமாயணத்திலிருந்து திருடிக் கொண்டதாகக் குறை கூறினார். "நான் திருடவே யில்லை" என்றேன். அவர் அந்தக் கவி, கம்பராமாயணத்திலிருப்பதாகக் காட்டினார். நான் உடனே அவரைப் பார்த்து, "நான் அந்தக் கவியைக் கம்பராமாயணத்திலிருந்து திருடி எடுத்துக் கொண்டு போனால், பிறகு அந்தக் கவி கமபராமாயணத்தில் எப்படி இருக்கக் கூடும்? ஆகையால் நான் திருடவில்லையென்பதற்கு அந்தக் கவி, கம்பராமாயணத்திலிருப்பதுவே சாக்ஷ¢" என்று மெய்ப்பித்தேன்.

ஒரு மூடன் என்னைப் பார்த்து, "சகல மனுஷர்களும் பிழை செய்வது சகஜம்; இந்த விஷயத்தில் விவேகிக்கும் அவிவேகிக்கும் என்ன பேதம்?" என்றான். நான் அவனை நோக்கி "அவிவேகியின் குற்றம், அவனுக்கு மட்டுந் தெரியாது; உலகத்துக்கெல்லாம் தெரியும்; விவேகியின் குற்றம், அவனுக்கு மட்டுந் தெரியும்; உலகத்துத் தெரியாது" என்றேன்.
--------------

அத்தியாயம் - 3
எனக்காகக் கனகசபை படிப்பதும், எனக்காக அவன் அடிபடுவதும், என் தாயாருக்குச் சிலநாள் வரைக்கும் தெரியாமலிருந்து, பிற்பாடு தெரிந்ததாகக் தோன்றுகிறது. ஒருநாள், அவர்கள் என்னையும் கனகசபையையும் அழைத்து, இருவருக்கும் இலைபோட்டுக் கனகசபை இலையில் மட்டும், அன்னம் பட்சணம் முதலியவைகளைப் படைத்து, என்னுடைய இலையில் ஒன்றும் படையாமல் வெறுமையாய் விட்டுவிட்டார்கள். என் மாதாவைப் பார்த்து, எனக்கும் அன்னம் படைக்கும்படி வேண்டினேன். அவர்கள் “கனகசபை அமுது செய்வதைப் பார்த்துக் கொண்டிரு” என்றார்கள். “அவன் அமுது செய்கிறதைப் பார்த்துக்கொண்டிருந்தால், எனக்குப் பசி அடங்குமா?” என்றேன். “அவன் படிக்கிறதையும் அடிபடுகிறதையும் நீ பார்த்துக் கொண்டிருந்தால், உனக்கு வித்தை வருமா?” என்றார்கள். நான் உடனே நாணம் அடைந்து, மாதாவின் முகத்தைப் பார்க்கிறதைவிட்டு பூமிதேவி முகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அன்றைய தினம் எனக்கு அன்னப்பிடி வெல்லப்பிடியாய் விட்டது. எனக்காக ஒரு ஏழைப்பிள்ளையை அடிபடும்படி செய்வித்தது பெரிய அக்கிரமமென்று என் தாயார் விஸ்தாபிரஸங்கஞ் செய்ததுமின்றி என்னைப் பார்த்து “நீ படவேண்டிய அடியை கனகசபை ஏற்றுக்கொண்டால், நீ அனுபவிக்கிற சுகங்களிலும் அவனுக்குப் பங்கு கிடைக்கவேண்டியது நியாயம்” என்று சொல்லி, அன்று முதல் அன்ன வஸ்திரபூஷணாதி விஷயங்களில், எனக்குங் கனகசபைக்கும் யாதோரு பேதமு மில்லாமல் இருவரையும் ஒரே தன்மையாய் நடத்தி வந்தார்கள். இனிமேல் நான் என் வீட்டில் படிப்பது சரியல்லவென்று, என் மாதா அபிப்பிராயப்படி எங்களுடைய சம்பந்தி முதலியார் வீட்டில், அவருடைய மகளோடுகூட வேறொரு தகுந்த உபாத்தியாரிடத்தில், நானும் கனகசபையும் படிக்கும்படி திட்டம் செய்தார்கள். அன்று முதல் என் படிப்பும் பிழைத்தது; கனகசபை முதுகும் பிழைத்தது. கனகசபையிம் தகப்பனார் சாந்தலிங்கம் பிள்ளையை என் தாயார் கைவிடாமல், அவரை எங்கள் குடும்பத்தில் பிரதான காரியஸ்தராக நியமித்து, அவரையும் அவருடைய குடும்பத்தையும் சம்ரட்சணை செய்து வந்தார்கள்.

சம்பந்த முதலியார் யாரென்றால், அவர் என் தாயுடன் பிறந்த அம்மான். அவருடைய பாட்டனார், என்னுடைய பாட்டனாரைப் போலவே கருநாடக ராஜாங்கத்தில் உத்தியோகஞ்செய்து அநேக திரவியங்களை ஆர்ஜித்துக் கொண்டு சத்தியபுரியில் வந்து வசித்தார்.அவருடைய குமாரன் சந்திரசேகர முதலியாருக்குச் சம்பந்தி முதலியாரும் என் தாயாரும் சந்ததிகள். அவர்களுக்கும் எங்களுக்கும் நெடுங்கால அநுபந்தம். மேற்படி சம்பந்தி முதலியாரும், எங்களைப் போலவே தனத்தில் மிகுந்தவர். அவருக்கு வெகு காலம் பிள்ளையில்லாமலிருந்து, பிற்பாடு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு ஞானாம்பாள் என்று நாமகரணம் செய்தார்கள். உலகத்திலிருக்கிற அழகுகளெல்லாம் கூடி ஒரு வடிவம் எடுத்து வந்தாள் போல, அவள் அதிரூபலாவண்ணியம் உடையவள்; அவளுடைய குணாதிசயங்களை யோசிக்குமிடத்தில், ஞானாம்பாள் என்கிற பேர் அவளுக்கே தகும்! அவளுடைய பிதா சம்பந்தி முதலியார் பிரபலமான திரவியவந்தராயிருந்தும், செலவளிக்கிற விஷயத்தில் அவருக்குச் சமானமான தரித்திரர்கள் ஒருவருமில்லை. அவர் பிராணத் தியாகம் செய்தாலும் செய்வாரே அல்லாது பணத் தியாகம் செய்யமாட்டார். "கொடு" என்கிற வார்த்தையைக் கேட்டால், அவர் காதில் நாராசம் காய்ச்சி விட்டது போல் இருக்கும். சங்கீதம் வாசிக்கிறவர்கள் "தா, தா" என்று தாளம் போட்டாலும், அவர் சண்டைக்கு வருவார்; யாராயினும் ஒருவர் தாதனைப் பார்த்து "தாதா" என்று கூப்பிட்டாலும் அவர் சகிக்க மாட்டார். இப்படிப்பட்ட கிருபண சிரோமணியை ஞானாம்பாள் ஐந்து வயதுக் குழந்தையாயிருக்கும்போது ஒரு வார்த்தையினாலே திருப்பி விட்டாள். எப்படியென்றால், அவருடைய கிராமக் குடிகள் செலுத்தவேண்டிய குத்தகைப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நாள் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை அவர், பொக்கிஷ அறைக்குள் அழைத்துக் கொண்டு போய், அவர்கள் கொண்டுவந்த பணத்தைத் திருப்பித் திருப்பிப் பத்து தரம் எண்ணி வாங்கி வைத்துக் கொண்டு அவர்களுக்குச் செலவு கொடுத்து அனுப்பினார். அவர்கள் வெளியே போகும்போது, "அந்த லோபியின் பணப் பெட்டிகளை நாம் பார்த்துவிட்டோம்; ஆதலால், நாமும் இனிமேல் பணக்காரர்கள் தான். அவரும் பணத்தைப் பார்க்கிறதைத் தவிர செலவழிக்கிறதில்லை. நாமும் அப்படித்தான்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு போனார்கள். அப்போது, தெருவில் விளையாடிக் கொண்டு தகப்பனாரிடம் போய் "ஐயா! லோபி என்றால் என்ன அர்த்தம்?" என்று கேட்டாள். அவர் "லோபி என்றால் ஈயாதவன்" என்று சொன்னார். அவள் "அப்படியானால், உங்களைப் பல பேர்கள் லோபி லோபி என்று சொல்லுகிறார்கள்.. உங்களுக்கு மகளாயிருக்க எனக்கு வெட்கமா யிருக்கிறது" என்று மழலைச் சொல்லால் உளறிக்கொண்டு சொன்னதைக் கேட்டவுடனே, சம்பந்தி முதலியாருக்கு வெட்கமுண்டாகி அன்று முதல் அவர் லோப குணத்தை விட்டு "தாதா" என்று பல பேரும் சொல்லும்படி புது மனுஷனாக மாறிவிட்டார்.

ஞானாம்பாளுடைய புத்தி தீக்ஷண்ணியம் தெரியும்படியாக இன்னொரு விசேஷம் தெரிவிக்கிறேன். ஒரு நாள் தமக்குச் சமானமானவர்கள் ஒருவரும் இல்லை என்கிற கர்வத்தோடும் கூடிய ஒரு பெரியவர், சம்பந்தி முதலியார் வீட்டுகு வந்திருந்தார்; அப்போது அவ்விடத்திலிருந்தவர்கள் ஞானாம்பாளைக் காட்டி "இந்தக் குழந்தை இவ்வளவு சிறு பிராயத்தில் அதிக தீக்ஷண்ணியம் உள்ளதாயிருக்கிறது" என்கிறார்கள். அதைக் கேட்ட அந்தப் பெரியவர் "சிறு வயதிலே புத்திசாலியா யிருக்கிற பிள்ளை, பிற்பாடு மட்டியாய்ப் போகிறது சகஜம்" என்றார். உடனே ஞானாம்பாள் அவரைப் பார்த்து "தாங்கள் சிறு பிராயத்தில் அதிக புத்திசாலியா யிருந்திருப்பீர்களென்று நினைக்கிறேன்" என்றாள். உடனே அவர் நாணமடைந்து அவருடைய கர்வத்தை விட்டு விட்டார்.

என் தாயார் உத்தரவுப்படி நானும் கனகசபையும் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய், ஞானாம்பாளுடைய உபாத்தியாயராகிய கருணானந்தப் பிள்ளையிடத்தில் கல்வி கற்க ஆரம்பித்தோம். எங்களுடைய படிப்பைப் பரிசோதிப்பதற்காக, அந்த உபாத்தியாயர் எங்களைப் பார்த்து “உயிரெழுத்து எத்தனை, மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்டார். அதற்கு உத்தரம் சொல்லத் தெரியாமல், நான் கனகசபை முகத்தைப் பார்த்தேன்; அவன் ஆகாசத்தைப் பார்த்தான். பிற்பாடு ஏதாவது சொல்லித் தொலைக்க வேண்டுமே என்று நினைத்து "உயிரெழுத்து 50; மெய்யெழுத்து 100" என்றேன்.

உடனே உபாத்தியாயர் அதிகாரஞ் செய்து "நீ சொல்வது சரியல்ல. ஞானாம்பாளை அழைத்து வா" என்று உத்தரவு கொடுத்தார். நான் ஞானாம்பாளிடத்திலே போய், "உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்க, அவள் "உயிரெழுத்துப் பன்னிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு" என்று சொன்னாள். "நான் உயிரெழுத்து ஐம்பது, மெய்யெழுத்து நூறு என்று அவ்வளவு அதிகமாய்ச் சொல்லியும் உபாத்தியாயர் ஒப்புக் கொள்ளவில்லையே? நீ குறைத்துச் சொல்லுகிறதை அவர் ஒப்புவாரா?" என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டுபோய் உபாத்தியாயர் முன்பாக விட்டேன். அவள் அவரிடத்திலும் முன் சொன்னபடியே சொன்னாள். உபாத்தியாயர் அவள் சொன்னதுதான் சரியென்று எங்களுக்குத் தெரிவித்தார். இவ்வகையாக நாங்கள் ஞானாம்பாளுக்கு வயதில் மூத்தவர்களா யிருந்தாலும் கல்வியில் அவளுக்குக் கனிஷ்டர்களா யிருந்தோம். நாங்கள் அவளுடன் வாசிக்க ஆரம்பித்தபோது, அவள் எடுத்த புஸ்தகம் வாசிக்கவும் அர்த்தம் சொல்லவும் பிழையில்லாமல் எழுதவும், கூட்டல், கழித்தல், பெருக்கல் முதலான கணக்குகள் பார்க்கவும் திறமையுள்ளவளா யிருந்தாள். "பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெரு மூச்சு விட்டது போல் ஞானாம்பாளுடைய கல்வித் திறமையை அறிந்தவுடனே எங்களுக்குப் பொறாமையும் வெட்கமுமுண்டாகி, அன்று முதல் நாங்கள் கல்வியில் அதிகக் கவனம் வைக்கத் தொடங்கினோம். சீக்கிரத்தில் அவளை வித்தையில் வெல்ல வேண்டுமென்பது எங்களுடைய மனோரதமாயிருந்தது. நாங்கள் எவ்வளவு பிராயசப் பட்டுப் படித்தாலும் அவளும் மேலும் மேலும் படித்துத் தினந்தோறும் கல்வியில் அபிவிருத்தி அடைந்து வந்தபடியால், அவளுடைய ஓட்டத்தைப் பிடிக்க எங்களால் முடிய வில்லை. எட்டி எட்டிப் பார்த்தும் எட்டாமையினால் கொட்டாவி விடத் துவக்கினோம். ஆயினும் அவளுடன் சேர்ந்து படிக்கும்படியான பாக்கியம் எங்களுக்குக் கிடைத்த பிற்பாடு நாங்களும் கல்வியில் முயன்று கல்விமான்களென்கிற பெயரும் பிரதிஷ்டையும் பெற்றோம்.

ஞானாம்பாள் அதிகமாகப் படித்திருக்கின்றோ மென்கிற வித்தியா கர்வமில்லாமல், சுத்த நிகர்வ சிரோமணியா யிருந்தாள். நாங்கள் கல்வியில் தனக்குக் குறைவாயிருப்பதற்காக வருத்தப் படுகிறோமென்று தெரிந்து கொண்டு, அந்த வருத்தத்தை நீக்கும் பொருட்டு எங்களைப் பார்த்து ஞானாம்பாள் சொல்கிறாள்: "ஸ்திரீகள் எவ்வளவு படித்தாலும் புருஷர்களை வெல்ல மாட்டார்கள்; ஸ்திரீகள் சொற்பகாலத்தில் வளர்ந்து புஷ்பித்து சீக்கிரத்தில் கெட்டுப் போகிற சிறு செடிகளுக்குச் சமானமா யிருக்கிறார்கள். புருஷர்களோ என்றால், வெகுநாள் தாமதப் பட்டு வளர்ந்து நெடுநாள் வரைக்கும் பலன் கொடுக்கிற விருக்ஷங்களுக்குச் சமானமா யிருக்கிறார்கள். ஸ்திரீகளுக்கு யௌவனமும், புத்தியும் சீகிரத்தில் வந்து, சீக்கிரத்தில் மாறிப் போகின்றன. புருஷர்களுக்கு யௌவனமும் புத்தியும் தாமதித்து வருகிற படியால், நெடுங் காலம் நீடித்திருக்கிறது" என்றாள். அதைக் கேட்டவுடனே எங்களுடைய வெட்கம் நீங்கி, நாங்கள் மேலும் மேலும் கல்வியில் முயல மனோற்சாகம் உண்டாயிற்று.

-------------

அத்தியாயம் - 4
ஒரு நாள் நானும் ஞானாம்பாளும் படித்துக்கொண்டிருக்கும்போது, என் பாட்டியார் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களைக் கண்டவுடனே, ஞானாம்பாள் அவ்விடத்திலே கிடந்த பிரம்பை எடுத்து ஒளிப்பது போல் ஜாலம் செய்தாள். "என்னைக் கண்டவுடனே ஏனம்மா பிரம்பை எடுத்து ஒளிக்கிறாய்?" என்று என் பாட்டியார் கேட்க, ஞானாம்பாள் "உங்களுடைய பேரனுக்குப் பாடத் தெரியாவிட்டால் என்னை அடிப்பீர்களென்று பயந்து, பிரம்பை ஒளித்தேன். அடி படுவதற்குக் கனக சபை அண்ணனும் இங்கே இல்லையே!" என்றாள். உடனே என் பாட்டியார் ஞானாம்பாளைக் கட்டிப் பிடித்து "என் புத்தியுள்ள செல்வமே!" என்று ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் பிறகு என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்.

"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பது போல ஞானாம்பாள் இவ்வளவு சிறு பிராயத்தில் நடக்கிற கிரமத்தையும் ஒழுங்கையும் யோசிக்குமிடத்தில், அவள் அறிவிலும் நற்குணங்களிலும், உன் தாயாருக்குச் சமானம் ஆவாளென்று நினைக்கின்றேன்; உன் தாயாருக்குக் கல்யாணம் ஆவதற்கு முன் நடந்த ஒரு அதிசயத்தைத் தெரிவிக்கிறேன் கேள்!" என்று என் பாட்டியார் சொல்லத் தொடங்கினார்கள். "உன் தாயார் கன்னிகையா யிருக்கும்போது, அவளுடைய குண அழகையும் ரூபலாவண்ணியத்தையும் கேள்வியுற்று, அவளை மணஞ் செய்வதற்கு நம்முடைய பந்துக்களில் அநேகர் விரும்பியும், முடவ் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டது போல, அவர்களுடைய எண்ணம் நிறைவேறாமற் போயிற்று. நமக்கு நெருங்கிய பந்துத்வம் உடைய பேராவூர் நீலகண்ட முதலியும் உன் தாயாரைக் கொள்ள, பகீரதப் பிரயத்தனஞ் செய்தான்; அந்தப் பிரயத்தனம் பலிக்காமற் போய்விட்டதால், தாயாரை எவ்வகையிலாவது சிறை எடுத்துக் கொண்டுபோய், பலவந்தமாய் விவாகஞ் செய்துகொள்ளுகிறதென்று தீர்மானித்துக் கொண்டு அதற்குத் தகுந்த சமயமும் தேடிக் கொண்டிருந்தான்; அவனுக்கு ஒரு சமயமும் வாய்த்தது. எப்படியென்றால், உன்னுடைய மாதாமகர் முதலான புருஷர்களெல்லாரும் இருகாதவழி தூரமான மங்கனூருக்குப் போயிருந்தார்கள்; வீட்டில் உன் தாயார் முதலான சில ஸ்திரீகளும், சில வேலைக்காரர்களும் மட்டும் இருந்தார்கள்; அந்தச் சமயத்தில் மேற்கண்ட நீலகண்ட முதலி, அவனுடைய இரண்டு குதிரைகள் பூட்டின நாலு சக்கர ரதத்தையும், சாரதியையும் சத்தியபுரிக்கு அனுப்பி, மங்கனூருக்குப்போயிருந்த உன் மாதாவின் தகப்பனாருக்குத் திடீரென்று மார்பு அடைத்துப் பேச்சு மூச்சு இல்லாமல், அத்தியாவஸ்தையாக இருப்பதாகவும், அதற்காக உன் தாயார் உடனே வரும்படி வண்டி அனுப்பியிருப்பதாகவும், அபாண்டமாய்த் தெரிவிக்கும்படி திட்டஞ் செய்தான்; அந்தப் பிரகாரம் சாரதி வந்து தெரிவித்தவுடனே, உன் தாயார் நிஜமென்று நம்பி, உடனே அவளும் அவளுடைய தோழியும் அந்த வண்டியில் ஏறிக் கொண்டு புறப்பட்டார்கள். அந்த வண்டி நீலகண்ட முதலியினுடைய வண்டி என்பது, உன் தாயாருக்குத் தெரியாது; தன் தகப்பனாருடைய வண்டிகளில் ஒன்றென்று நினைத்தாள்; இரண்டு குதிரைகள் கட்டின வண்டியைத் தொடர்ந்து கொண்டு ஓடுவது அசாத்திய மாகையால், வேலைக்காரர்கள் ஒருவரும் வண்டியுடன் கூடப் போகவில்லை; அந்த வண்டியைச் சாரதி அதி வேகமாய் நடத்திக் கொண்டு, தெற்கு ரஸ்தா வழியாகப் போனான். தெற்கு ரஸ்தாவில் ஒரு காதவழி தூரம் போய்ப் பிறகு மங்கனூருக்கு, மேற்கு ரஸ்தா வழியாகத் திரும்ப வேண்டியதாயிருக்க, அந்தப்படி மேற்கு ரஸ்தாவில் திரும்பாமல், பேராவூருக்குப் போகிற கிழக்கு ரஸ்தா வழியாக வண்டியை நடத்திக் கொண்டு போனான்.

வண்டியின் பலகணிகள் மூடப் பட்டிருந்தமையாலும், தகப்பனார் வியாதியாயிருக்கிறாரென்கிற துயரத்தினாலும், வண்டி கிழக்கு ரஸ்தா வழியாகப் போகிறதை உன் தாயார் கவனிக்கவில்லை. அந்தச் சாரதி சாராயப் பெட்டியைக் கிட்டத்தில் வைத்துக் கொண்டு, வழியிற் போகும்போதே சாராயத்தைக் குடித்துக் கொண்டு போனதால், அவன் அறிவு மயங்கி, அவனுடைய வெற்றிலைப் பாக்குப் பையைக் கை நழுவிக் கீழே விழும்படி விட்டு விட்டான்; அது விழுந்த வெகு நேரத்துக்குப் பிற்பாடு அவனுக்குத் தெரிந்து, அதைத் தேடிப் பார்ப்பதற்காக, அவன் வண்டியை நிறுத்திக் கீழே குதித்தான். வண்டி நின்றவுடனே, அது நிற்கவேண்டிய காரணம் என்ன என்று விசாரிப்பதற்காக உன் தாயார் ஜன்னலைத் திறந்தாள்; உடனே அந்தச் சாரதி குடிவெறியுடனே வந்து, "வெற்றிலை பாக்குப் பை கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிக்கொண்டு வருகிறேன் அம்மா" என்று சொல்லிவிட்டு, வந்த வழியைப் பார்த்துக் கொண்டு போனான்; அவன் போன பிற்பாடு, கிழக்கு ரஸ்தா வழியாக வண்டி போகிற விவரம், உன் தாயாருக்குத் தெரிந்தது. உடனே வண்டியை விட்டுக் கீழே குதித்தாள். அந்த வண்டியில் ஒரு பக்கத்தில் "நீலகண்ட முதலி" என்று பெயர் வரையப்பட்டிருந்ததாலும், அந்தக் கிழக்கு ரஸ்தா அவனுடைய ஊருக்குப் போகிற மார்க்கமென்பது உன் தாயாருக்குத் தெரியுமானதாலும் சகலமும் அவனுடைய கபட நாடகமென்று உன் தாயார் ஒரு நிமிஷத்தில் கண்டுபிடித்துக் கொண்டாள். அவள் சிறு பருவ முதல், குதிரை கட்டின வண்டிகளில் ஏறி, சில சமயங்களில் சாரத்தியம் செய்வதும் அவளுக்குப் பழக்கமாயிருந்தபடியால், அவள் ஒரு நிமிஷத்தில் அந்த வண்டியில் சாரதி ஸ்தானத்தில் ஏறி உட்கார்ந்து குதிரைகளை மேற்கே திருப்பி, வாயு கதியாக வண்டியை நடத்த ஆரம்பித்தாள், பையைத் தேடிப் போன சாரதி, வண்டி திரும்பி வருவதைக் கண்டு குடி மயக்கத்தினால் தள்ளாடித் தள்ளாடி விழுந்துகொண்டு, வண்டியை மறிக்க ஓடிவந்தான். அவன் கிட்ட நெருங்காதபடி உன் தாயார் குதிரைச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடித்தாள்; அந்த அடியும் அவனுடைய குடியும் அவனைக் கீழே தள்ளி விட்டன; உன் தாயார் மனோகதியும் பிந்தும்படி மங்கனூர்ச் சாலை மார்க்கமாக வண்டியை நடத்திக் கொண்டு போகும்போது, நீலகண்ட முதலி, ஒரு குதிரையின் மேல் ஏறிக் கொண்டு வண்டியைத் தொடர்ந்து வந்து வண்டிக்கு முன்னாலே மறித்தான்; வண்டியிலே பூட்டிய இரண்டு பரிகளும் நிற்காமல், நீலகண்ட முதலி மேலே தாவிப் பாய்ந்து ஓடின படியால், அவன் ஏறிய குதிரை வெகுண்டு மார்க்கத்தை விட்டுத் தாண்டிக் குதித்து, அவனை ஒரு படு குழியில் வீழ்த்திவிட்டுப் பக்ஷ¢போல் பறந்து போய்விட்டது. இவ்வண்ணமாக உன் தாயார் தெய்வானுகூலத்தால் தப்பி மங்கனூர் போய்ச் சேர்ந்தாள்; அவ்விடத்தில் அவளுடைய தகப்பனார், அவளைக் கண்டவுடனே ஓடிவந்து அவளைத் தழுவிக் கொண்டு "அவள் ஊரை விட்டு இவ்வளவு சடுதியில் வந்ததற்குக் காரணம் என்ன" என்று கேட்க, அவள் நடந்த காரியங்களையெல்லாம் ஆதியந்தமாய்த் தெரிவித்தாள். அதைக் கேட்டவுடனே, அவள் தகப்பனாருக்கும் மற்றவர்களுக்கும் நீலகண்ட முதலி மீது பிரமாதமான கோபம் உண்டாகி, அவனைச் சிக்ஷ¢க்கத் தொடங்கினார்கள். எப்படி என்றால், தம்முடைய ஜாதியார் எல்லாரும் ஏகமாய்க் கூட்டங்கூடி, அவனைச் சாதிப் பிரஷ்டம் ஆக்கி, சுபாசுபங்கள் இல்லாமலும், நீர் நெருப்பு இல்லாமலும் விலக்கி விட்டார்கள். அவனுக்கு ஜாதியார் ஒருவரும் பெண் கொடாதபடியால், அவன் இன்னமும் பிரமசாரியாகவே இருக்கிறான். பிள்ளையாருடைய பிரமசாரித்துவம் நீங்கினாலும், அவனுடைய பிரமசாரித்துவம் நீங்காதென்பது நிச்சயம்.

மேற்படி சங்கதி நடந்த பிறகுதான் உன் தாயாரை, உன் தந்தையாகிய என் மைந்தனுக்கு விவாகம் செய்துவைத்தது. உன் தாயாரைப் போலச் சர்வ குணாலங்கிருத பூஷணிகள் உலகத்தில் இருப்பார்களா? அவள் எனக்குச் செய்யும் அன்பும், ஆதரவும், வணக்கமும், மரியாதையும் யாருக்காவது வருமா? எனக்கு நூறு புத்திரிகள் இருந்தாலும் இந்த விருத்தாம்பியக் காலத்தில் என் மருமகளைப் போல என்னை ஆதரிப்பார்களா? நான் வியாதியாய் இருக்கும் காலங்களில் எனக்குப் பத்திய பாகங்கள் செய்து கொடுத்து, உன் தாயாரே எனக்குச் சகல பணிவிடைகளையும் செய்து வருகிறாள். அவள் இல்லாவிட்டால் நான் செத்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும். அவள் அன்னமில்லாதவர்களுக்கு அன்னமும், வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரமும் கொடுத்து எத்தனையோ ஏழைக் குடும்பங்களைக் காப்பாற்றி வருகிறாள். அவளுக்காகவே தான் மழை பெய்கிறது; அவளுக்காகவே வெயில் எரிகிறது. அவளுக்குக் கடவுள் நீடிய ஆயுசைக் கொடுத்து உனக்கும் எனக்கும் என்னுடைய மகனுக்கும் மற்ற ஏழைகளுக்கும் அவள் ஆதரவாயிருக்கும்படி கிருபை செய்ய வேண்டுமென்பது என்னுடைய இடைவிடா பிரார்த்தனையா யிருக்கிறது" என்றார்கள். 'மாமியார் மெச்சிய மருமகள் இல்லை' என்கிற பழமொழிக்கு விரோதமாக என் தாயாருடைய சுகுணப் பிரபாவங்களை என் பாட்டியார் எடுத்துப் பிரஸ்தாபித்தவுடனே இப்படிப் பட்ட புண்ணியவதி வயிற்றிலே பிறந்தோமே என்கிற சந்தோஷத்தினால் நான் புளகாங்கிதமாகி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தேன். என்னுடைய மாதாவை உலக மாதாவென்றே நினைத்து, நித்தியமும் நான் பக்தி பண்ணிக் கொண்ு வந்தேன்.

------------

அத்தியாயம் - 5
எங்கள் வீட்டுக்குப் பின்புறத்தில் எண்ணிகையில்லாத பல விருக்ஷங்கள் நிறைந்த சிங்காரத் தோட்டமும், பூஞ்சோலைகளும், தாமரைத் தடாகங்களும் இருந்தன. நாங்கள் படிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் இந்திரனுடைய கற்பகச் சோலைக்குச் சமானமான அந்தச் சிங்காரத் தோட்டத்தில் விளையாடுகிறது வழக்கம். "அவப் பொழுதிலும் தவப்பொழுது" என்பது போல் விளையாடுகிற நேரத்தையும் ஞானாம்பாள் தர்ம விஷயங்களில் உபயோகப் படுத்தி வருவாள். எப்படியென்றால், சிங்காரத் தோட்டத்தில் பழுத்திருக்கிற மாங்கனிகள், தேங்கனிகள், வாழைக்கனிகள், பலாக்கனிகள், விளாங்கனிகள் முதலியவைகளைப் பறித்து ஏழைகளுக்குக் கொடுத்து வருவாள். அந்தத் தோட்டத்தில் இருக்கிற பக்ஷ¢களை, ஒருவரும் பிடிக்காமலும், உபத்திரவஞ் செய்யாமலும் ஞானாம்பாள் பாதுகாத்து வந்தபடியால், அவைகள் மென்மேலும் பெருகி அவளைக் கண்டவுடனே ஆடிப்பாடி குதித்து விளையாடி மகோற்சவங் கொண்டாடும். சாதுக்களைக் கண்டால் சந்தோஷப் படாதவர்கள் யார்?

ஒரு நாள் நாங்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு மரத்தில் அபூர்வமாய்ப் பழுத்திருந்த இரண்டு பழங்களை, ஞானாம்பாள் பறித்துக் கொண்டு வந்து என் முன்பாகவும் கனகசபை முன்பாகவும் வைத்துப் புசிக்கும்படி சொன்னாள். நான் கணக்கில் என் வல்லமையைக் காட்டுவதற்காக, இவளைப் பார்த்து "இவைகள் எத்தனை பழங்கள்?" என்றேன். அவள் "இரண்டு பழம்" என்றாள். நான் “மூன்று பழம்” என்றேன்; அவள் “எப்படி?” என்று கேட்க, அந்தப் பழங்களை வரிசையாக வைத்து எண்ணும்படி சொன்னேன்; அவள் "ஒன்று, இரண்டு" என்று எண்ணினாள்; உடனே "ஒன்றும் இரண்டும் மூன்றல்லவா?' என்றேன். அவள் "ஆம் ஆம்" என்று கனகசபையைப் பார்த்து "அண்ணா! நீங்கள் ஒரு பழம் தின்னுங்கள். நான் ஒரு பழம் எடுத்துக் கொள்கிறேன். அத்தான் ஒரு பழம் அருந்தட்டும்" என்று சொல்லி, அவள் ஒரு பழத்தைத் தின்றுவிட்டாள்; கனகசபை ஒரு பழத்தை விழுங்கிவிட்டான்; நான் ஒன்றுமில்லாமல் வெறும் வாயைச் சப்பினேன். இவ்வகையாக என் கணக்கின் சாமர்த்தியத்தைக் காட்டப் போய்க் கனியை இழந்து ஏமாறினேன்.

கனகசபை நற்குணமும், நற்செய்கையும் உடையவனாயும், விவேக விற்பன்னனாயும், சர்வ ஜன ரஞ்சகனாயும் இருந்தான். அவனுடைய புத்திநுட்பந் தெரியும் பொருட்டு, அவனுடைய இளமைப் பருவத்தில் நடந்த ஒரு காரியத்தைத் தெரிவிக்கிறேன். அ·தென்னவெனில், சென்னைபுரி கவர்னர் தேச சஞ்சாரஞ் செய்துகொண்டு வருகையில், சத்தியபுரியில் கூடாரம் அடித்துக் கொண்டு அவருடைய பரிவாரங்களுடன் சில நாள் தங்கி இருந்தார். அப்போது ஒரு நாள் அவர் மட்டுந் தனியாய்ப் புறப்பட்டு வாகனாரூடராய், ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது அவருக்கு மறுபடியும் கூடாரத்துக்குப் போக மார்க்கந் தெரியாமையினால், வழியில் நின்று கொண்டிருந்த கனகசபையைக் கூப்பிட்டுக் கூடாரத்துக்குப் போகிற மார்க்கத்தைக் காட்டும்படி கேட்டுக் கொண்டார். அவர், கவர்னர் என்பது கனகசபைக்குத் தெரியாதாகையால் :நான் அவ்வளவு தூரம் எப்படி நடந்துவந்து வழி காட்டுவேன்?" என்று ஆ§க்ஷபித்தான். உடனே கவர்னர், தம்முடன் கூட வண்டியில் ஏறிக் கொள்ளும்படி சொன்னதால், அந்தப் பிரகாரம் கனகசபையும் வண்டியில் ஏறி வழி காட்டிக் கொண்டு போனான். அவர்கள் வழியிற் போகும்போது கனகசபை கவர்னரை நோக்கி, "ஐயா! கவர்னர் அவர்களுடைய கூடாரத்தில் பல துரைமார்கள் இருப்பார்களே! அவர்களுக்குள் கவர்னர் இன்னாரென்று தெரிந்து கொள்வதற்கு விசேஷ அடையாளம் என்ன?" என்று கேட்க, கவர்னர் கனகசபையைப் பார்த்து, "கவர்னரைக் கண்டவுடனே எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழற்றி நின்றுகொண்டு வணங்குவார்கள்; கவர்னர் மட்டும் உட்கார்ந்தபடியே இருப்பார். இது தான் அடையாளம்" என்றார். இவ்வகையாகச் சம்பாஷித்துக் கொண்டு அவர்கள் கூடாரத்தைச் சமீபித்தவுடன், கூடாரத்தில் இருந்தவர்கள் எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழட்டிக் கொண்டு கவர்னர் வருகிற வண்டியை நோக்கி வந்தனஞ் செய்தார்கள். அப்போது கவர்னர் கனசபையைப் பார்த்து "இப்போது கவர்னர் இன்னாரென்று உனக்குத் தெரிகிறதா?" என்று கேட்க, உடனே கனகசபை "நீங்களாவது கவர்னராயிருக்க வேண்டும். அல்லது நானாவது கவர்னராயிருக்க வேண்டும். ஏனென்றால் நாமிருவர் மட்டும் உட்கார்ந்தபடி இருக்கிறோம்; நம்மைக் கண்டவுடனே எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழற்றிக் கொண்டு, நமக்கு வந்தனம் செய்கிறார்கள்" என்றான். சமயோஜிதமாகவும் சாதுரியமாகவும் கனகசபை சொன்ன மறுமொழியைக் கவர்னர் வியந்து கொண்டு, அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து அனுப்பினார்.

எப்போதும் விநோத சல்லாபப் பிரியனான கனகசபை சில நாளாக நன்றாய் விளையாடாமலும், பேசாமலும், துக்காக்கிராந்தனாய் மௌனஞ் சாதித்தான். "அதற்குக் காரணம் என்ன?" வென்று அவனை நான் பலமுறை கேட்டும் அவன் தக்க மறுமொழி சொல்லாமல் மழுப்பிவிட்டான். ஒரு நாள், சிங்காரத் தோட்டத்தில் கடைசியில் இருக்கிற ஒரு பெரிய தாமரைத் தடாகத்தின் ஓரத்தில், நானும் ஞானாம்பாளும் கனகசபையும் விளையாடிக் கொண்டிருந்த போது கனகசபை கால் தவறி அந்தத் தடாகத்தில் விழுந்து விட்டான்; அவன் நீந்தத் தெரியாதவனானதால், தன்னீரில் முழுகுகிறதும் கிளம்புகிறதுமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தான். நானும் நீந்தத் தெரியாதவனானதால் இன்னது செய்கிறது என்று தோன்றாமல் மலைத்துப் போய், ஸ்தம்பாகாரமாய் நின்றுவிட்டேன். ஞானாம்பாள் அலறிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிப் பார்த்தும் உதவி செய்யத்தக்கவர்கள் ஒருவரும் அகப்பட வில்லை; எங்கள் வீடு வெகு தூரமானதால் அங்கே போய் யாரையாவது அழைத்துக் கொண்டு வருவதும் அசாத்தியமாயிருந்தது. இதை யெல்லாம் ஞானாம்பாள் ஒரு க்ஷணப் பொழுதில் ஆரோகித்துக் கொண்டு, சிங்காரத் தோட்டத்தின் கடைசியிலிருக்கிற திட்டி வாசலைத் திறந்து கொண்டு, வெளியே ஓடினாள். அவ்விடத்திலும் ஒருவரும் சமீபத்தில் இல்லையால் தூரத்தில் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்த ஒரு சந்நியாசியை "ஐயா! ஐயா!" வென்று கூப்பிட்டுக் கொண்டு, மான் போலவும், மயில் போலவும் அதி வேகமாக ஓடினாள். அவள் தனிமையாக ஓடுகிறதைப் பார்த்து நானுங் கூட ஓடினேன். ஞானாம்பாள் சந்நியாசியாரை நோக்கி, "ஐயா! ஒரு சிறுவன், குளத்தில் விழுந்து விட்டான்; தாங்கள் தயவு செய்து வந்து அவனைக் கரையேற்ற வேண்டும்" என்று மிகவும் வணக்கத்துடனே பிரார்த்தித்தாள். அந்தச் சந்நியாசியாரும் உடனே திரும்பி எங்களுடன் ஓடி வந்தார். அவர் ஓடி வரும்போதே ஞானாம்பாளைப் பார்த்து, "அந்தப் பிள்ளையை நான் கரையேற்றினால், நீ காதில் போட்டிருக்கிற வயிர ஓலைகள் முதலிய நகைகளைக் கொடுப்பாயா?" என, அவள் "அப்படியே தருகிறேன்" என்றாள். நாங்கள் வரப் பின்னுஞ் சற்று நேரம் தாமதப் பட்டிருக்குமானால், கனகசபை ஜலத்தில் மூழ்கி இறந்து போயிருப்பானென்பது நிஸ்ஸந்தேகம். ஞானாம்பாளுடைய அதி தீவிர முயற்சியால் அவன் பிழைத்தான். எப்படியென்றால், சந்நியாசியார் ஒரு நிமிஷத்தில் தடாகத்தில் குதித்துக் கனகசபையைக் கரையேற்றி விட்டார். அவன் ஜலத்தைக் குடித்து மூர்ச்சையா யிருந்ததால், அவன் குடித்த ஜலம் வெளிப்படும்படி, சந்நியாசியார் தகுந்த பக்குவங்கள் செய்து அவன் பிராணனை ரக்ஷ¢த்தார். உடனே ஞானாம்பாள் தன் காதில் இருந்த பூஷணங்களைக் கழற்ற ஆரம்பித்ாள். சந்நியாசியார் "வேண்டாம்! வேண்டாம்!" என்று கையமர்த்தி, ஞானாம்பாளைப் பார்த்து "உன்னுடைய மனோதர்மத்தை அறிவதற்காக அந்த நகைகளைக் கேட்டேன். அவைகளை நீ கொடுத்தாலும் நான் அங்கீகரிப்பேனா? ஒரு பிராணனை ரக்ஷ¢த்த புண்ணியம் எனக்குப் போதாதா? எனக்கு இயற்கையாக இல்லாவிட்டாலும் உன்னைப் பார்த்த பிறகாகிலும் எனக்குத் தர்ம சிந்தனை இல்லாமற் போகுமா? இவ்வளவு சிறு பிராயத்தில் ஒரு பிராணனைக் காப்பாற்ற நீ எவ்வளவோ முயற்சி செய்தாயே, உனக்குச் சமானமான புண்ணியவதிகள் உலகத்தில் இருப்பார்களா? இம்மையிலும் மறுமையிலும் சகல பாக்கியங்களையும் கடவுள் உனக்குத் தந்தருள்வாராக" என்று ஆசீர்வாதஞ் செய்து "சந்நியாசி பயணம் திண்ணையில்" என்பது போல் ஒரு நிமிஷத்தில் போய் விட்டார். நாங்கள் ஒன்றும் பேச நாவெழாமல் பிரமித்துப் போய் நின்றோம். "பதினாயிரம் பொன் பெற்ற ஆபரணங்களைக் கொடுக்கச் சம்மதித்த ஞானாம்பாளுடைய குணம் பெரிதா? அவைகளை வேண்டாமென்று நிராகரித்த சந்நியாசியாருடைய குணம் பெரிதா?" வென்று நான் சற்று நேரம் ஆலோசித்து, ஞானாம்பாளுடைய குணமே விசேஷமென்று தெரிந்து கொண்டேன்

இதுவரையில் பேசச் சக்தி இல்லாமல் களைத்துப் போயிருந்த கனகசபைக்குக் கொஞ்சம் திடம் உண்டாகி, அவன் எங்களைப் பார்த்துத் "தாய் தகப்பன் இல்லாமல் நிராதரவாயிருக்கிற எனக்கு இவ்வளவு பெரிய உபகாரஞ் செய்து பிராணனைப் பிரதிஷ்டை செய்தீர்களே! அதற்கு என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறேன்?" என்று பல விதமாக உபசார வார்த்தைகள் சொல்லத் தொடங்கினான். எனக்கு ஆச்சரியம் உண்டாகி, "உனக்குத் தாய் தந்தைகள் இருக்கும்போது, தாய் தகப்பனற்ற பிள்ளையென்று நீ சொன்னதற்குக் காரணமென்ன?" என்று நான் வினவ, கனகசபை கண்ணீர் விட்டு அழுதுகொண்டு சொல்லுகிறான். “என் பிரியமான அண்ணனே! தங்கையே! என் பிராணனைக் காப்பாற்றின உங்களுக்கு இனிமேல் நான் உண்மை சொல்லாமலிருக்கலாமா? உங்களுடைய முந்தின ஆசான் ஆகிய சாந்தலிங்கம் பிள்ளையையும் அவருடைய பத்தினியையுமே, நான் தந்தை தாய் என்று நினைத்திருந்தேன். அவர் சில நாளைக்கு முன் கடின வியாதியா யிருந்தபோது இனிமேல் ஜீவதசைக்கு ஏதுவில்லையென்று நினைத்துக் கொண்டு, என்னை ரகசியத்தில் கூப்பிட்டு "அப்பா! குழந்தாய்! உனக்குத் தெரியாமல் இந் நாள் மட்டும் நான் மறைத்து வைத்திருந்த ஒரு ரகசியத்தை உனக்கு வெளிப் படுத்துகிறேன். அ·தென்னவென்றால், நானும் என் பெண்சாதியும் உன்னைப் பெற்றவர்கள் அல்ல; இதற்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன் நீ ஆறு மாசக் குழந்தையாயிருக்கும்போது ஒருவன் உன்னைக் கொண்டுவந்து பிள்ளைக்குப் பால் வேண்டும் என்று கேட்டான். அதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் என் பெண்சாதிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துபோய். பால் வற்றாமல் இருந்ததால், அவள் உன்னை வாங்கி மார்பிலே வைத்து அணைத்தாள்; உடனே அவளுக்குப் பால் சுரந்து நீ சம்பூரணமாகப் பால் குடித்தாய். உன்னைக் கொண்டு வந்தவன், மறுபடியும் உன்னை எடுத்துக் கொண்டு போவதற்கு அவனால் கூடிய மட்டும் பிரயாசைப் பட்டும், நீ என் பெண்சாதியை விடாமல் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாய்; அவன் 'இந்தப் பிள்ளை உங்களுக்கு வேண்டுமானால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிப் போய் விட்டான். இப்படிப்பட்ட அதி சௌந்தரியமான பிள்ளை, நமக்குக் கிடைத்ததே என்கிற ஆநந்தத்தினால், நீ யாருடைய பிள்ளையென்று அவனை விசாரியாமல் உன் மேலே நோக்கமா யிருந்துவிட்டோம். ஆனால் அவன் கேவலம் சாமானியன் ஆனதால், அவனுக்கு நீ பிள்ளை அல்லவென்று நிச்சயம்; அது முதல் உன்னைக் கண்ணுக்குக் கண்ணாகவும், பிராணனுக்குப் பிராணனாகவும் வளர்த்தோம்; நீயும் சொந்தப் பிள்ளையைப் பார்க்கிலும் நூறு பங்கு அதிகமாகச் சகல விதத்திலும் திருப்தியாக நடந்து வந்தாய்; இனி நான் பிழைப்பேனென்கிற நம்பிக்கை இல்லாமையினாலும், சில விசை உன் மாதா பிதாக்கள் உன்னைத் தேடி வந்தால் உனக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டியதானதினாலும், இந்தக் காரியத்தை உனக்குத் தெரிவித்தேன். இப்போது நம்மை ஆதரிக்கிற சுந்தரத்தண்ணியாரும், அவருடைய பர்த்தாவும், உன்னையும் உன்னுடைய செவிலித்தாயையும் கைவிடார்கள். நீ மனம் வருந்தாதே" என்றார்.

"பிற்பாடு ஏதோ கடவுளுடைய அனுக்ரஹத்தால், என்னை வளர்த்த பிதாவாகிய சாந்தலிங்கம் பிள்ளை, ஆரோக்யம் அடைந்து பிழைத்துக் கொண்டது உங்களுக்குத் தெரியுமே! அவர் சொன்ன விருத்தாந்தத்தைக் கேட்டது முதல் எனக்கு உண்டாகியிருக்கிற கிலேசமும் துக்கமும் கடவுளுக்குத் தான் தெரியும். அந்தக் காரணத்தைப் பற்றித் தான் சில நாளாக நான் சரியாய் விளையாடாமலும் பேசாமலும் இருந்தேன். என்னைப் போல் நிர்ப்பாக்கியர்கள் உலகத்தில் இருப்பார்களா? தாய் தகப்பன் இன்னாரென்று தெரியாத பிள்ளைகளும் இருக்குமா? பால் குடிக்கிற குழந்தையைக் கைவிடுகிற தாய் தந்தைமார்களும் பூமியில் இருப்பார்களா? லோகாபவாதத்தை யார் தடுக்கக் கூடும்? தடாகத்தில் விழுந்த என்னைக் கரையேற்றி ஏன் என்னைப் பழிக்கும் நிந்தைக்கும் ஆளாக்கினீர்கள்? நான் அப்போதே இறந்து போயிருந்தால் என்னுடைய துக்கமும் அவமானமும் என்னுடன் இறந்துபோயிருக்குமே" என்று சொல்லிக் கனகசபை தாரை தாரையாய்க் கண்ணீர் விட்டு அழுதான். அவனுடைய துக்கத்தைப் பார்த்து, நானும் ஞானாம்பாளும் கூட அழுதோம். பிற்பாடு எங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, எங்களாலே கூடிய வரையில் அவனுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லியும் அவன் மனந் தேறவில்லை. அவனுடைய மனோ வியாகூலத்தால், அவன் நாளுக்கு நாள் துரும்பு போல் ஆனான். அவனுடைய சங்கதியை வெளிப் படுத்தினால், அவனுக்கு அவமானம் உண்டாகும் என்று நினைத்து, அதை நாங்கள் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. ஆனால் என் தாயார் மட்டும், அந்த ரகசியத்தை எப்படியோ தெரிந்து கொண்டு, கனகசபையிடத்தில் அத்தியந்த கிருபையும் அன்பும் பாராட்டி வந்தார்கள்.

---------

அத்தியாயம் -6
இவ்வாறு சில நாட்கள் கழிந்த பின்பு, ஒரு நாள் நானும் ஞானாம்பாளும், கனகசபையும் தெருத் திண்ணையில் வாசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அநேக ஆனைகளும், குதிரைகளும், வண்டிகளும், கொடிகளும், குடைகளும், காலாட்களும் நானாவித வாத்திய முழக்கத்துடன் தெருவில் வந்து எங்கள் வீட்டுக்கு எதிரே நின்றன. அவைகளின் மத்தியில், நான்கு குதிரைகள் கட்டின சொர்ணமயமான ரதத்திலிருந்து ராஜ வடிவான ஒரு புருஷனும், ஸ்திரீயும் இறங்கினார்கள். தடாகத்தில் விழுந்தபோது கரையேற்றி விட்ட சந்நியாசியாரும் அவர்களுக்கு முன்னே வந்து கனகசபையைக் கையாலே தொட்டுக் காட்டினார். உடனே மேற்படி ரதத்திலிருந்து இறங்கின அந்த மஹா புருஷன். கனகசபையைத் தழுவி மார்போடு அணைத்துக் கொண்டு "என் மகனே! என் கண்மணியே! என் குலதிலகமே! இந்நாள் வரைக்கும் உன்னைப் பார்க்கக் கொடுத்து வைக்காமற் போனேனே! என்ன பாவமோ உன்னைப் பிரிந்திருந்தேனே! இப்போதாவது உன்னைக் காணாமல் கண்டேனே! இனி மேல் என்னைப் போலே பாக்கியசாலிகள் உண்டா?" என்று சொல்லி, தேகபரவசமாய் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார். அவருடன் வந்த ஸ்திரீயும் கனகசபையைக் கட்டித் தழுவிக் கொண்டு "மகனே! மகனே!" என்று பிரலாபித்தாள். பிற்பாடு அந்த மஹாபுருஷன் ஞானாம்பாளை நோக்கி "ஓ! பாக்கியவதியே! ஸ்திரீ ரத்னமே! குண பூஷணியே! நீயே தர்மாவதாரம்! உனக்குச் சமானமான குணவதிகள் இந்த உலகத்தில் இருப்பார்களா? தடாகத்தில் விழுந்த என் புத்திரனை நீ அல்லவோ ரக்ஷ¢த்தாய்? உன்னால் அல்லவோ அவனைக் காணும்படியான பாக்கியம் பெற்றேன்!" என்று சொல்லித் துதித்தார்.

இப்படியாக நிகழ்ந்த அதிசயங்களைக் கேள்விப் பட்டு, எங்கள் தாய் தந்தைமார்கள் சுற்றத்தார் யாவரும் வந்து சூழ்ந்து கொண்டு அவருக்கும், அவருடைய பத்தினிக்கும் தகுந்த ஆசனங்கள் கொடுத்து வீற்றிருக்கச் செய்தார்கள். அவர்கள் இன்னாரென்றும் அவர்களிடத்தில் என்னது பேசுகிறதென்றுந் தெரியாமல் பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தோம். அவர்கள் எங்களை நோக்கி, "ஓ! புண்ணியவான்களே! புண்ணியவதிகளே! நீங்கள் இந்நாள் மட்டும் என் மகனுக்குச் செய்து வந்த உபகாரங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நான் இன்னானென்றும் இந்தப் பிள்ளையை நான் பிரிந்திருந்த காரணத்தையும் நீங்கள் அறிய விரும்புவீர்களாதலால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதிக செல்வமும் சிறப்பும் பொருந்திய ஆதியூர் பாளையப்பட்டுக்கு நான் அதிபதி. நாங்கள் பூர்வீக அரசர்களுக்கு முடியெடுத்து வைக்கிற வேளாளர்களானதால், எங்களுக்கு அநேக கிராமங்களும் பூமிகளும் தானமாய்க் கிடைத்து, சர்வ சுதந்திரமாக அநுபவித்து வருகிறோம். என்னுடைய தகப்பனார் ஆதிமூலம் பிள்ளைக்கு நானும் என் தம்பியாகிய தெய்வநாயகம் பிள்ளையும் புத்திரர்கள்; என் பேர் தேவராஜப் பிள்ளை; எங்கள் குடும்பத்தில் ஜேஷ்ட புத்திரர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் பட்டம் ஆகிறதே தவிர, கனிஷ்டர்களுக்குப் பட்டம் ஆகிறதில்லை; ஆனால் ஜேஷ்டர்களுக்குச் சந்ததி இல்லாவிட்டால், கனிஷ்டர்களுக்குப் பாத்தியம் உண்டாகும்; நான் மூத்தவன் ஆனதால் எனக்குப் பட்டாபிஷேகம் ஆகி, என் தம்பி என்னுடைய சம்ரக்ஷணையிலிருந்து வந்தான்; இதற்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன், இந்தக் குழந்தையை என் பத்தினி பிரசவித்தாள்; ஆறு மாசத்துக் குழந்தையாயிருக்கும்போது எனக்குக் குரூரமான வியாதி கண்டு, எங்கள் குடும்ப வைத்தியர்கள் பலர் ஔஷதம் கொடுத்தும் சௌக்கியப்பட வில்லை; இங்கிலீஷ் டாக்டர்கள் மருந்து கொடுத்துக் கொஞ்சம் சௌக்கியமான உடனே, நான் தேச யாத்திரை செய்தால், எனக்கு முழுதும் சௌக்கியமாகுமென்று வற்புறுத்திச் சொன்னார்கள்; இந்தக் குழந்தை அதி பால்யமாயிருந்ததால் அதை நாங்கள் கூடக் கொண்டுபோகாமல், என் தம்பி வசத்தில் ஒப்புவித்துப் பாளையத்தைச் சேர்ந்த காரியங்களையும் அவனே பார்க்கும்படி திட்டஞ் செய்து, நானும் என் பெண்ஜாதியும் பரிவாரங்களும் தேச யாத்திரை செய்யப் புறப்பட்டோம். பங்காளம் பம்பாய் முதலான இடங்களெல்லாம் சுற்றிக் கொண்டு நாங்கள் திரும்பிவர ஆறுமாசம் சென்றது; நாங்கள் பங்காளத்தில் இருக்கும்போது, எங்கள் தம்பி யிடத்திலிருந்து வந்த கடிதத்தில், எங்கள் பிள்ளை சுழிமாந்தங் கண்டு இறந்துபோனதாக எழுதியிருந்த படியால், நானும் என் பத்தினியும் பட்ட துயரம் இவ்வளவென்று சொல்லி முடியாது. என் பாரியாள் மட்டும் பிள்ளை விஷயத்தில் ஏதாவது மோசம் நடந்திருக்குமென்று சந்தேகித்தாள். எனக்கு என் தம்பியிடத்தில் இருந்த விசுவாசத்தினால் அவள் சந்தேகப்படுவது சரியல்ல என்று கண்டித்தேன்; நாங்கள் ஊருக்கு வந்த பிறகு பிள்ளை இறந்தது வாஸ்தவமென்று சகலரும் பிரஸ்தாபித்து வந்தபடியால், என் மனையாளுடைய சந்தேகமும் நிவர்த்தியாய் விட்டது.

பிற்பாடு சீமாமூலகாரியங்களை நானே வகித்துப் பார்த்துக் கொண்டு வந்தேன். என் தம்பி சில நாள் வியாதியாயிருந்து, ஒரு மாசத்துக்குமுன் தேக வியோகமானான். அவன் இறந்த விசனத்தால் அவன் பிரேதத்தின் மேல் விழுந்து புலம்பி அழுதேன். அப்போது அவன் இடுப்பிலிருந்து ஒரு கடிதம் வெளிப்பட்டது; அது என் பேரால் மேல் விலாசம் எழுதப் பட்டு, முத்திரிக்கப்பட்டிருந்த படியால், நான் தனியாக ஒரு அறைக்குள்ளே போய், அதனை வாசிக்கத் தொடங்கினேன்; அது வருமாறு:

"ஐயோ! அண்ணா! நான் உங்களுக்குப் பரம சத்துருவே தவிரத் தம்பியல்ல; தாங்கள் பங்காளத்திலிருந்தபோது தங்களுடைய பிள்ளை வியாதியால் இறந்து போனதாக நான் தங்களுக்கு எழுதினது சுத்த அபத்தம். தங்களுக்குப் பிறகு எனக்குப் பட்டம் நிலைக்க வேண்டியதற்காகத் தாங்கள் ஊரில் இல்லாத காலத்தில், தங்களுடைய பிள்ளையை எப்படியாவது தொலைத்துவிட வேணுமென்று என் பிரிய நேசனாகிய முத்துவீரனுக்குச் சொன்னேன்; அவன் அப்படிச் செய்யக் கூடாதென்று, எனக்குப் பல வகையில் போதித்தான்; நான் பிடிவாதஞ் செய்ததனால், அவன் பிள்ளையை வாங்கிக் கொண்டு 'உன் மனதுப்படி செய்கிறேன்' என்று சொல்லிப் போய்விட்டான்; அந்தச் சமயத்தில் அந்தப் பிள்ளைகளுக்குப் பால் கொடுத்தவளுடைய பிள்ளை சுழி மாந்தத்தினால் இறந்து போனதால், அவளைப் பொருள் மூலம் ஸ்வாதீனப் படுத்திக்கொண்டு, அவள் பிள்ளையைத் தங்கள் பிள்ளையென்று பேர் பண்ணி, சகலரும் அறிய இராக் காலத்தில் அந்தப் பிள்ளையைப் பிரேத ஆலயத்தில் ஆடம்பரமாக அடக்கஞ் செய்தோம். இந்த ரகசியம் எனக்கும் அந்தப் பாற்காரிக்கும் அவளுடைய புருஷனுக்கும் மட்டும் தெரியும். தங்களுடைய புத்திரனைக் கொண்டு போன முத்துவீரனை வெகு காலமாக நான் பார்க்கவில்லை; அவன் உலகத்தைத் துறந்து சந்நியாசியாகப் போனதாகக் கேள்விப்பட்டேன்; அவன் தங்கள் பிள்ளையைக் கொலை செய்திருப்பானென்றே எண்ணியிருந்தேன். முந்தாநாள் வந்த சந்நியாசி, தங்கள் பிள்ளையைக் கொலை செய்யவில்லையென்றும், சத்தியபுரியில் சாந்தலிங்கம் பிள்ளை வீட்டில் அந்தப் பிள்ளை வளருவதாகவுஞ் சொன்னான்; அந்தச் சந்நியாசியை இங்கே இருக்கும்படி சொல்லியிருக்கிறேன்; அவனை விசாரித்தால் ஆதியோடு அந்தமாகச் சகல சங்கதிகளும் விசிதமாகும்; தங்களுக்கு நான் செய்த துரோகத்துக்காக என் மனச் சாக்ஷ¢ எனக்குச் செய்த தண்டனை சாமானியம் அல்ல; என் வியாதிக்கும் மரணத்திற்கும் காரணம் என் மனச் சாக்ஷ¢யேயன்றி வேறல்ல. இனி எழுத எனக்குச் சக்தி இல்லை; சாகப் போகிற என்மேலே கோபம் வைக்க வேண்டாம்" என்று எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை நான் வாசித்த உடனே ஒரு பக்கத்தில் பெரிய ஆச்சரியமும், ஒரு பக்கத்தில் என் கனிஷ்டன் மேலே பிரதாபமான கோபமும் ஜனித்து, இன்னது செய்கிறதென்று தெரியாமல் சற்று நேரம் சித்திரம் போல அசைவற்றிருந்தேன். பிறகு பிள்ளை ஜீவந்தனாயிருக்கிறானே, அவனைக் காணலாமென்கிற சந்தோஷம் மேலிட்டு, சந்நியாசியார் வந்திருக்கிறாராவென்று விசாரித்தேன்; அவர் வந்திருக்கிறதாகக் கேள்விப்பட்டு அவரை ரகசியமாக அழைத்து, அவர் மூலமாகச் சகல சங்கதிகளையும் பரிஷ்காரமாக அறிந்து கொண்டேன். என் தம்பியினுடைய உத்தரக்கிரியைகளெல்லாம் முடித்துக் கொண்டு நானும் என் பத்தினியும், பரிவாரங்களும் புறப்பட்டு வந்து, என் பிள்ளையையும் உங்களையும் கண்டேன்; ஆனந்தங் கொண்டேன். இப்படிப்பட்ட பிரமானந்தத்தை நான் பிறந்தது முதல் ஒருநாளும் அநுபவித்ததில்லை; ஆனால் இதுவெல்லாம் மெய் தானோ, அல்லது கனவோ என்கிற சந்தேகம் ஒன்று மத்தியில் போராடுகிறது; முந்தி நாம் பார்த்த காரியங்களைக் கனவில் காணுகிறதே யல்லாமல், பாராத காரியங்களைக் கனவில் காணக்கூடுமோ? இந்த ஊரையும், ராஜ கிருஹங்களுக்குச் சமானமாகிய உங்கள் கிருஹங்களையும், அவைகளின் நானாவித அலங்காரங்களையும் மகா புண்ணியாத்துமாக்களான உங்களையும், இதற்குமுன் நான் ஒருநாளும் பாராதிருக்க இப்போது நான் பார்க்கிறபடியால் இவ்வளவும் கனவல்ல, உண்மையென்றே நிச்சயிக்கிறேன்." என்றார். பிறகு கனகசபையைச் சிறு பிள்ளை முதல் வளர்த்தவர் எங்கே என்று விசாரித்துத் தெரிந்துகொண்டு அவரை நோக்கி "ஐயா! உம்மைப் போல நல்லவர்கள் உண்டா? நாங்கள் பிள்ளையைப் பெற்ற கடமையே அல்லாமல், அவனுக்கு ஒரு நன்மையுஞ் செய்ததில்லை. நீர் எவ்வளவோ பாடுபட்டு அவனை அருமை பெருமையாக வளர்த்து அவனை மனுஷனாக்கி விட்டீரே! என் கூடப் பிறந்த தம்பி என் பிள்ளையைக் கொலை செய்ய நினைத்தானே! ஒரு சம்பந்தமும் இல்லாத நீர் சொந்தப் பிள்ளையைப் பார்க்கிலும் நூறு பங்கு அதிகமாகப் பிள்ளையை வளர்த்தீரே! உமக்கு இந்த உலகம் முழுமையும் கொடுத்தாலும், நீர் செய்த உபகாரத்துக்குத் தகுந்த பிரதிப் பிரயோஜனம் ஆகுமா?" என்று சொல்லி, பிறகு என் தாயார் தகப்பனார் பந்துக்கள் முதலிய ஒவ்வொருவரையும் பார்த்துத் தனித்தனியே ஸ்தோத்திரஞ் செய்யத் தொடங்கினார். அவர் செய்கிறதைப் பார்த்தால் உலக முடிகிறவரையில் உபசாரத்தை நிறுத்தமாட்டாரென்று தோன்றிற்று. என் தகப்பனாரும் ஞானாம்பாள் தகப்பனாரும் எழுந்து "போஜனத்துக்கு நேரமாகிறதே, கிருபை செய்ய வேண்டும்!" என்று பிரார்த்தித்தார்கள். அவரும் அவருடைய பத்தினியாரும் "எங்களால் எல்லாரும் பசியாயிருக்கிறீர்களே" என்று சொல்லி உடனே எழுந்து ஸ்நானம், ஜபம் முதலிய நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு ஒரே பந்தியாய் இஷ்டான்ன போஜனஞ் செய்தோம். மறு நாள் முதல் எங்கள் கிருகத்தில் அவர்களை வரவழைத்து வைத்துக் கொண்டு, பத்து நாள் வரையில் அவர்களுக்கு சோடசோபசாரங்களும் செய்தோம். துரும்பு போல் இளைத்திருந்த கனக சபை, தாய் தகப்பனைக் கண்ட சந்தோஷத்தினால் பாரித்துப் பூரித்து அவர்களுடன் வந்த யானைகளின் ஒன்று போல் ஆனான்.

எங்களைக் கூட அழைத்துக்கொண்டு போய்த் தகுந்த மரியாதைகள் செய்தனுப்ப வேண்டுமென்பது கனகசபையின் தகப்பனாருடைய அபே¨க்ஷயா யிருந்தாலும், நாங்கள் அதற்குச் சம்மதிக்கமாட்டோமென்று தெரிந்துகொண்டு, அவர் எங்களைப் பார்த்து "நீங்கள் ஒன்றிலும் குறைவில்லாத பாக்கியசாலியாயிருக்கிறீர்கள்!`நீங்கள் செய்த பேருபகாரத்திற்குக் கடவுள் கிருபை செய்யவேண்டுமே யல்லாமல், என்னாலே செய்யக் கூடியது யாதொன்றுமில்லை; உங்களுக்குப் பிரதி உபகாரம் செய்யவேண்டுமென்று நான் நினைத்தால், என்னைப் போல் நன்றி கெட்டவர்கள் வேறொருவரும் இருக்க மாட்டார்கள்; ஏனென்றால், உங்களுக்கு, ஒரு துன்பம் வந்த காலத்தில் அல்லவே நான் உங்களுக்குச் சகாயம் செய்யவேண்டும்; ஆகையால், உங்களுக்குப் பிரதி உபகாரஞ் செய்ய நினைப்பது, உங்களுக்குத் துன்பம் வரவேண்டுமென்று பிரார்த்திப்பது போலாகுமானதால், நான் பிரதி உபகாரஞ் செய்ய நினைக்கமாட்டேன்" என்றார். அவர் பயணப்படுமுன்னுக்கு எங்கள் பாட்டியார் வந்து, "ஐயா! உங்கள் பிள்ளை என்னால் வெகுவாக அடிபட்டான்! அதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாயிருக்கிறது" என்றார்கள். உடனே அவர் என் பாட்டியாரை நோக்கி "அவன் அடிபட்டது அவனுக்குப் பெரிய அநுகூலம். துன்பமே ஞானத்தின் பாடசாலை; துன்பப்படாதவன் ராஜாங்கத்துக்கு யோக்கியனாக மாட்டான். தான் அடிபடாதவனா யிருந்தால், அடியினால் உண்டாகிற உபத்திரவம் இன்னதென்று தெரியாமல் தன்னுடைய பிரஜைகளை அடிக்கடி அடிக்கச் சொல்லுவான்; துன்பப்படாதவனுக்கு ஏழைகளுடைய வருத்தம் எப்படித் தெரியும்?" என்றார். அப்போது தான் அடியினால் உண்டாகிற பிரயோஜனம் இன்னதென்று எனக்குத் தெரிந்தது. பிற்பாடு அவரும் அவருடைய பத்தினியாரும் கனகசபையும் அவனை வளர்த்த தந்தை தாய்மார்களையும் அழைத்துக் கொண்டு எங்களிடத்தில் தனித் தனியே விடைபெற்றுக்கொண்டு பரிவாரங்களுடன் சென்றுவிட்டார்கள். கூடப் பிறந்த அன்புள்ள சகோதரன் போல நெடுங்காலம் என்னுடன் கூட இருந்து, சகல சுகதுக்கங்களுக்கும் உடந்தையாயிருந்த கனகசபையைப் பிரிந்தது, எனக்குப் பெரிய மனோதுக்கமும் வியாசங்கமுமாயிருந்தது. அவனுக்கு அதிபால்யத்தில் நேரிட்ட ஆபத்துகளை நீக்கி, அவனை அற்புதமாக வளர்ப்பித்த கடவுளது திருவருட் செயலை வியந்து ஸ்தோத்தரித்தேன்.

--------------

அத்தியாயம் - 7
நானும் ஞானாம்பாளும் ஒரு நாள் காலையில், வெளித் திண்ணையில் படித்துக்கொண்டு இருக்கும்போது, எனக்குப் பழக்கமான ஒரு ஜோதிட சாஸ்திரியார் வந்து "செலவுக்கு ஒன்றும் இல்லாமல் வருத்தப் படுகிறேன்; ஏதாவது கொடுக்கவேண்டும்" என்று கேட்டார். அப்போது கூட இருந்த எங்கள் உபாத்தியாயர், அவரைப் பார்த்து "சகலருக்கும் சாஸ்திரஞ் சொல்லிப் பாக்கியத்தைக் கொடுக்கிற உமக்குக் கஷ்டமுண்டா?" என்றார். உடனே சாஸ்திரியாருக்கு ஆக்கிரோஷமுண்டாகிச் சொல்லுகிறார்; "நாங்கள் உலகத்தை ரக்ஷ¢க்கும்பொருட்டு தரித்திர வேஷம் பூண்டுகொண்டு திரிகிறோமே யல்லாமல், எங்களுக்கு ஒரு கஷ்டமுண்டா? நாங்கள் கற்பக விருட்சத்தை வரச்சொன்னால் வராதா? காமதேனுவைக் கூப்பிட்டால், அது வந்து நாங்கள் சொன்னபடி கேளாதா? மகமேருகிரி எங்கள் ஸ்வாதீனமல்லவா?" என்றார். அப்போது அவ்விடத்தில் கட்டியிருந்த ஒரு வேட்டை நாய் சாஸ்திரியாரைப் பார்த்துக் குலைத்துக் கொண்டிருந்தது. அவர் அந்த நாயைப் பார்த்து "கரடி, புலி முதலிய துஷ்ட மிருகங்களின் வாய்களை மந்திரத்தினாலே கட்டிவிடுகிற நான், இந்த நாயின் வாயைக் கட்டி, அது குலைக்காமலும் கடிக்காமலும் செய்ய மாட்டேனா?" என்று கையை நீட்டிக் கொண்டும் தலையை ஆட்டிக் கொண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். உடனே அந்த நாய்க்குக் கோபமுண்டாகி, கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, ஒரே பாய்ச்சலாய் சாஸ்திரியார் மேலே பாய்ந்து அவர் தேகத்தைப் பக்ஷணஞ் செய்ய ஆரம்பித்தது. சாஸ்திரியார் "ஐயையோ! போனேனே! போனேனே!" என்று கூவத் தலைப்பட்டார். உடனே எங்கள் உபாத்தியாயர் ஒரு கழியை எடுத்துக் கொண்டு நாயைத் துரத்திச் சாஸ்திரியாரை விடுவித்து "மந்திரத்தினால் அந்த நாயின் வாயைக் கட்டி விடக்கூடாதா?" என்று சாஸ்திரியாரைக் கேட்டார். அவர் "ஐயா! நாய் கடித்த உபத்திரவம் பெரிதாயிருக்கிறது; அதற்குச் சரியான பரிகாரஞ் செய்தால் உண்மையைச் சொல்லுகிறேன்" என்றார். உடனே எங்கள் ஆசிரியர் தகுந்த பக்குவஞ் செய்து வலியைச் சாந்தப் படுத்தினார்.

சாஸ்திரியாருக்குச் சந்தோஷம் உண்டாகிச் சொல்லுகிறார். எங்கள் வித்தையெல்லம் சுத்தப் பொய்; உலகத்தில் உதரநிமித்தம் பல பேர் பல வேஷங்கள் பூண்டுகொண்டு ஜீவிக்கிறார்கள்; அப்படியே நானும் இந்த வேஷம் போட்டுக் கொண்டு திரிகிறேன்; என்னுடைய சொந்த விஷயத்தில் சாஸ்திரம் பலிக்காமலிருக்கும்போது அன்னியர்கள் விஷயத்தில் கேட்கவும் வேண்டுமா? எனக்கு நாலு புத்திரிகள்; சாஸ்திர சகுனங்கள் பார்த்து, சாதகங்கள் பார்த்து, பொருத்த நிமித்தங்கள் பார்த்து, அவர்களைக் கலியாணஞ் செய்துக் கொடுத்தேன். அந்த நாலுபேரும் அமங்கலி யாய்விட்டார்கள். மந்திரங்கால் மதி முக்கால் என்பது போல என்னுடைய புத்தியைக் கொண்டு பிழைக்கிறேனே யல்லாது, சாஸ்திரத்தைக் கொண்டு பிழைக்கவில்லை; சகலருக்கும் சுகமுந் துக்கமுங் கலந்து வருகிறபடியால், நானும் சுகத்தையும் துக்கத்தையுங் கலந்து சகலருக்கும் சாஸ்திரஞ் சொல்லிக் கொண்டு வருகிறேன்; ஆனால், சுகத்தையே யாவரும் விரும்புகிறபடியால் சுகத்தையே அதிகமாகச் சொல்லி, யாவரையும் நான் சந்தோஷப்படுத்துகிறது வழக்கம்; இப்போது காலம் விபரீதமாய்ப் போய்விட்டது.. நான் ஒருவனுக்கு யோகம் வருமென்று சொன்னால் அவனுக்குக் கஷ்டம் சம்பவிக்கின்றது; சுபிக்ஷ காலமென்று சொன்னால் துர்பிக்ஷ காலமாய் முடிகின்றது; ஒரு கர்ப்ப ஸ்திரீயைப் பார்த்து, அவளுக்குப் பிள்ளை பிறக்குமென்று சொன்னாலும் அந்தக் கர்ப்பம் பொய்யாகி, மகோதரமாய் முடிகின்றது; கர்ப்பத்திலிருக்கிற பிள்ளை கூட என்னை ஒருதரம் மோசம் செய்துவிட்டது. எப்படியென்றால், நான் நெடுநாளாக ஆசிரதம் செய்து வந்த ஒரு பிரபு, என்னை அழைத்து கர்ப்பிணியா யிருக்கிற தன் மனைவிக்கு, என்ன குழந்தை பிறக்குமென்று கேட்டார். நான் ஆண் பெண் இரண்டில் ஒன்றுதானே பிறக்கவேண்டுமென்று நினைத்து, ஆண் குழந்தை பிறக்குமென்று அவரிடத்தில் தனிமையாகச் சொன்னேன் அவருக்குத் தெரியாமல் அவருடைய மனைவியிடத்திலே போய், பெண் குழந்தை பிறக்குமென்று அதி ரகசியமாகச் சொல்லி வைத்தேன். கடைசியாய்ப் பிறந்த குழந்தை ஆணுமல்லாமல், பெண்ணுமல்லாமல் அலியாயிருந்தது. சாஸ்திர விஷயத்தில் சகலருக்கும் இருந்த நம்பிக்கையும், நாளுக்கு நாள் குறைந்துவிட்டது. இனிமேல் இந்த தொழிலை விட்டுவிடுவதென்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது, உங்களுடைய நாயே எனக்கு நல்ல புத்தி கற்பித்துவிட்டபடியால், இனிமேல் சாஸ்திரத்தைக் கட்டித் தூரத்தில் எறிந்துவிடச் சித்தமாயிருக்கிறேன்." என்றார். அவர் நிசம் சொன்னதற்காக, அவருக்குத் தகுந்தப் பிரயோசனஞ் செய்யவேண்டுமென்று எங்கள் போதகர் சொன்னதினாலே, அவருக்கு நானும் ஞானாம்பாளும் பத்து ரூபாய் கொடுத்து அனுப்பினோம். இவ்விதமாக ஜோசியர் காரியம் ஆசியமாக முடிந்தது; எனக்குச் சோதிட விஷயத்திலிருந்த பைத்தியமும் தீர்ந்தது.

சாஸ்திரியார் போனபின்பு, உபாத்தியாயர் எங்களைப் பார்த்து "சோதிடம் பொய்யென்று, அந்தச் சாஸ்திரியே ஒப்புக்கொள்வதால், இனிமேல் உங்களுக்கு வேறே சாக்ஷ¢யம் வேண்டுவதில்லை. இனிமேல் வரும் காரியங்கள் நமக்கு முந்தித் தெரியாதபடி, நம்முடைய நன்மைக்காகவே சுவாமி மறைத்து வைத்திருக்கிறார். இனிமேல் வருகிற துன்பம், நமக்குத் தெரியாமலிருப்பதால், அந்தத் துன்பம் வருகிற நிமிஷம் வரையில் நாம் துக்கமில்லாமலிருக்கிறோம். அது முந்தி நமக்குத் தெரிந்திருக்குமானால் முந்தியுந் துக்கம் பிந்தியுந் துக்கம்; எக்காலத்திலும் துக்கமாக முடியும் அல்லவா? அப்படி நன்மை வருகிறதும் நமக்கு முந்தித் தெரியாமலிருந்து வந்தால், நமக்கு அதிக சந்தோஷத்துக்கு இடமாகும். அப்படியில்லாமல் முன்னமே தெரிந்திருக்குமானால் சந்தோஷம் மிகவும் குறைந்துபோகும். தீர்க்க தரிசனம் என்பதே, இப்போது உலகத்தில் இல்லை. அந்த மேலான வரத்தை எத்தனையோ புத்திமான்களும் இருக்க, அவர்களுக்குக் கொடாமல் இந்த சாஸ்திரிகளைப் போலொத்த சர்வ மூடர்களுக்கும், குடுகுடுப்பைக் காரர்களுக்கும், கோணங்கிக்காரர்களுக்கும், குறத்திகள் முதலானவர்களுக்கும் சுவாமி கொடுத்திருப்பாரா? பின்னும் நமக்கு வருகிற நன்மை தீமைகள், நமக்குத் தெரியாமலிருக்க அசேதன ஜந்துக்களாகிய பல்லிகளுக்கும் பட்சிகளுக்கும் தெரிந்து, அவைகள் நமக்குத் தெரியப்படுத்தக்கூடுமா?" என்று உபாத்தியாயர் செய்த பிரசங்கத்தைக் கேட்டவுடனே, என்னைப் பிடித்திருந்த சாஸ்திரப் பேய் பறந்தோடிவிட்டது.

எங்கள் கொல்லைக்குப் பின்புறத்தில் இருக்கிற சிங்காரத் தோட்டங்களின் மதிலுக்கு அப்பால், கொஞ்ச தூரத்தில் ஒரு பாழ் மண்டபமும், அதற்குப்பின் ஒரு விஸ்தாரமான காடும் இருந்தன. அந்தக் காட்டுக்கு அந்தப் பாழ்மண்டபத்தின் வழியாகத்தான் போகவேண்டும். சில காலத்துக்கு முன், அந்தப் பாழ் மண்டபத்தில் யாரோ ஒருவன் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு இறந்துபோனதாகவும், அவன் பிசாசு ரூபமாகி அந்த மண்டபத்தில் வாசஞ் செய்வதாகவும், பின்னும் ஒரு சங்கிலிக் கறுப்பு ஒரு மரத்திலிருப்பதாகவும், எப்போதும் சங்கிலி ஓசை கேட்பதாகவும், அந்த மண்டபத்துக்குப் போன ஆடு மாடு முதலான ஜீவ ஜந்துக்கள் திரும்பி வராமல் பிசாசுகளுக்கு இரையாகி விடுவதாகவும் ஒரு வதந்தி பிறந்து, வெகு காலமாக அந்த மண்டபத்துக்காவது காட்டுக்காவது ஒருவரும் போக்குவரவு இல்லாமல் நின்றுவிட்டது. இராக் காலங்களில், அந்த இடத்தில் பயங்கரமான பல சப்தங்கள் கேட்கிறதும் உண்டு. உபாத்தியாயரிடத்தில் அதைப் பற்றித் தெரிவித்தேன். அவர் "மனப் பேயே தவிர வேறு பேயில்லை; நீ என்னுடன் கூட வந்தால் காட்டுகிறேன்." என்றார். அவருடைய விவேகமும், தைரியமும் எனக்குத் தெரியுமாதலால் வேட்ட நாயையும் கையில் பிடித்துக் கொண்டு, அவரைத் தொடர்ந்து போனேன்; மண்டபம் சமீபித்தவுடனே, நான் பயப்படுவேனென்று அவர் என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார். உபாத்தியாயர் கை முன்னே இழுக்கப் பயம் பின்னே இழுக்கக் கொலைக் களத்துக்குப் போகிறவன் போல, திகில் கொண்டு நிர்ஜீவனாய் நடந்தேன். மண்டபத்துக்குள் நுழையும்போது நமனுடைய வாய்க்குள் நுழைவது போலிருந்தது; நாங்கள் மண்டபத்துக்குள் நுழைந்தவுடனே, கணக்கில்லாத பல பட்சிகள் "கா, கூ" என்று சப்தித்துக் கொண்டு புறப்பட்டன; அந்தப் பட்சிகளுடைய எச்சங்களால், மண்டபத்தில் கால் வைக்க இடமில்லாமல் துர்நாற்றம் எங்கள் குடலைப் பிடுங்க ஆரம்பித்தது; உடனே காட்டைப் பார்க்கிறதற்காக, மண்டபத்தை விட்டுக் கீழே இறங்கினோம்; எங்களுக்கு முன் எங்கள் வேட்டை நாய் மிருக வாசனை பிடித்துக் கொண்டு, காட்டுக்குள் ஓட ஆரம்பித்தது; அதைக் கண்டவுடனே நரிகளும் ஓநாய்களும், காட்டுப் பூனை முதலான பல மிருகங்களும், நாலு பக்கங்களிலும் கத்திக்கொண்டு ஓடத் தலைப்பட்டன. நாங்கள் போகும்போது ஒரு ஓநாய், ஒரு ஆட்டைப் பிடித்துத் தின்றுகொன்றிருந்தது. அந்த ஓநாய் மேல் எங்கள் வேட்டை நாய் பாய்ந்து பிடித்துக் கொண்டு, எங்களுக்குப் பாதகாணிக்கை கொண்டுவருவது போல், எங்கள் முன்பாக ஓடிவந்தது. உடனே உபாத்தியாயர், என்னை நோக்கிச் சொல்லுகிறார்:- "இந்தக் காட்டைப் பார்த்தால், உலகம் உண்டானது முதல் மனுஷ சஞ்சாரம் இல்லாதது போலத் தோன்றுகிறது. யாரோ ஒருவன் துர்மரணமாய் இறந்து போனானென்கிற பயப் பிராந்தியினால் வெகு காலமாக ஒருவரும் இவ்விடத்தில் சஞ்சரிக்காதபடியால், பட்சிகளும் பல மிருகங்களும் அந்த மண்டபத்தையும், காட்டையும் தங்கள் வாசஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டன. அவைகளால் இரவில் உண்டாகிற சப்தங்களைப் பிசாசுகளுடைய சப்தங்களென்று மௌட்டியமாக நினைத்துக்கொண்டார்கள். இந்தக் கானகத்துக்குள்ளே பிரவேசிக்கிற ஆடுமாடுகளை மிருகங்கள் தின்றுவிடுவதை அறியாமல், பிசாசுகள் தின்றுவிடுவதாக நினைத்தார்கள். இவ்விடத்தில் இருக்கிற பலவகையான மரங்களின் இலைகள் காய்ந்துபோய்க் காற்றினால் அடிபட்டுக், கலகலவென்று சப்திப்பதைச் சங்கிலிக்கறுப்பன் என்று நினைத்தார்கள். அறிவில்லாத மிருகங்களும், பட்சிகளும் நிர்ப்பயமாய் வசிக்கிற இடத்தில், அறிவுள்ள மனுஷர் சஞ்சரிக்கப் பயப்படுவது எவ்வளவு மௌட்டியம்?" என்று போதித்தார். அதற்குமுன் சோதிடப்பேய் பறந்ததுபோல் அன்றுமுதல் மனப்பேயும் பறந்துவிட்டது.

அந்தக் காட்டை எங்களிடத்தில் சாசுவதக் குத்தகையாக ஒப்புக்கொண்டு அதை வெட்டித் திருத்திச் சாகுபடி செய்து, பயிரிட்டு அநுபவிப்பதுந் தவிர, அந்த மண்டபத்தில் அவரே குடும்ப சகிதமாய்க் குடியிருந்து வருகிறார்.

எங்கள் உபாத்தியாயரிடத்தில், நான் பல புத்திகளைக் கற்றுக்கொண்டதுபோலவே, என் தாயாரிடத்திலும் ஞானாம்பாளிடத்திலும் அநேக நற்குணங்களையும் கற்றுக்கொண்டேன். எந்தக் காலத்திலாவது அவர்களிடத்தில் கோபம், குரோதம், மூர்க்கம் முதலான துர்க்குணங்களை நான் கண்டதேயில்லை; எப்போதும் அவர்கள் பேசுவது மிருது பாஷையே தவிரக் கடூர வார்த்தைகளை அவர்களிடத்தில் நான் கேட்டதே யில்லை. அவர்கள் வாயிலிருந்து வருவதெல்லாம் உண்மையே தவிரப் பொய்யென்பது மருந்துக்குக் கூட கிடையாது. ஒருநாள் என் முகத்தைக் கடுகடுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு என் வேலைக்காரனைக் கோபித்தேன். அப்போது கூட இருந்த ஞானாம்பாள் ஒன்றும் பேசாமல் எழுந்துபோய் விட்டாள். பிறகு அவளை நான் கண்டு "ஏன் போய்விட்டாய்?" என்று கேட்க, “உங்களுக்குக் கோபம் வரும்போது, உங்களைப் பார்த்தால் எனக்குப் பயமாயிருக்கிறது; நீங்கள் கோப முகத்தோடு கண்ணாடியைப் பார்த்தால், உங்களுக்குத் தெரியும்" என்று சொன்னாள். நான் தனிமையாகப் போய்க் கோப முகத்துடனே கண்ணாடியைப் பார்த்தேன்; அப்போதிருந்த கோரம் எனக்கே சகிக்காமல் அன்று முதல் கோபத்துக்கு விடை கொடுத்துவிட்டேன். ஞானாம்பாள் எனக்கு இளையவளாயிருந்தாலும், அவளுடைய விநய காம்பிரியமும் நாகரிகமும் சுசீல ஒழுக்கமும் எப்படிப்பட்டவையென்றால், பெரியோர்கள் சமூகத்தில் இருக்கும்போது எவ்வளவு மரியாதையும் சிரத்தையும் உண்டாகுமோ, அவ்வளவு மரியாதை அவளிடத்தில் இருக்கும்போதும் என்னை அறியாமலே உண்டாகும்.
அவள் ஸ்தோத்திரப்பிரியை அல்லவென்று சில திருஷ்டாந்தங்களால் நான் அறிந்துகொண்டேன். எப்படியெனில், ஒரு நாள் சிங்காரத்தோட்டத்திலிருந்து ஒரு ரோஜாப் புஷ்பத்தைப் பறித்து அவள் கையிலே கொடுத்து "உன்னுடைய முகம் இந்தப் புஷ்பத்துக்குச் சமானம்" என்றேன். அவள் "அந்தப் புஷ்பம் சீக்கிரத்தில் வாடிப்போவதுபோல, அழகும் சீக்கிரத்தில் அழிந்துபோகும்" என்றாள்; "அந்தப் பூவை உபமானித்தது சரியல்ல. உன் முகம் சந்திரனுக்குச் சமானம்" என்றேன். அவள் சற்று நேரம் சும்மா இருந்து, பிற்பாடு சொல்லத் தொடங்கினாள்; "சந்திரனுக்கு ஸ்வயம் பிரகாசம் இல்லையென்றும், சூரியனுடைய ஒளியினால் சந்திரன் பிரகாசிக்கிறதென்றும், நாம் புஸ்தகங்களில் வாசித்திருக்கிறோம். அப்படியே மனுஷர்களுடைய வடிவெல்லாம் சூரியனாகிய கடவுளிடத்திலிருந்து உண்டாவதால், அவரே ஸ்தோத்திரத்துக்குப் பாத்திரர்" என்று சொல்லிக்கொண்டு அப்பாற் போய்விட்டாள்; அன்று முதல் அவளை ஸ்தோத்திரம் செய்கிறதில்லையென்று பிரதிக்ஞை செய்துகொண்டேன்.
அதற்குச் சில நாளுக்குப் பின்பு, நானும் ஞானாம்பாளும் வழக்கப்படி சிங்காரத் தோட்டத்துக்கு விளையாடப் போனோம். நான் கொஞ்ச தூரத்தில் புஷ்பம் பறித்துக் கொண்டிருந்தேன். அவள் ஒரு மரத்து நிழலில், ஒரு சின்னவாத்தியப் பெட்டியை வைத்து வாசித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சப்தங் கேட்டவுடனே அவ்விடத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு துஷ்டக் காளை, அலறிக்கொண்டு சமீபத்திலிருக்கிற சித்திர மண்டபத்துக்கு ஒரு பக்கம் துரத்த, ஒரு பெரிய ஆட்டுக் கடா இந்தப் பக்கத்தில் துரத்த ஆரம்பித்தன. இப்படி இரண்டுக்கும் நடுவில் அகப்பட்டுக்கொண்டு அவள் அவஸ்தைப்படும்போது, நான் ஒரே ஓட்டமாய் ஓடி ஞானாம்பாளைத் தூக்கிச் சித்திரமண்டபத்து வெளித் திண்ணையின்மேல் ஏறிக்கொண்டேன். அந்தச் சித்திரமண்டபத்துத் திண்ணை அதிக உயரமானதாலும், அதன் படிகள் அந்தப் பக்கத்தில் இல்லாமல் வேறே பக்கத்தில் இருந்தமையாலும், அந்தச் சமயத்தில் நான் இல்லாமல் இருந்தால் அவளுக்குப் பெரிய அபாயம் நேரிட்டிருக்கும். இந்தச் சமாசாரம் ஞானாம்பாள் மூலமாக எங்கள் இரண்டு வீட்டாருக்கும் தெரிந்து, அவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செய்த ஸ்தோத்திரம் அபரிமிதமே. இராவணாதி அசுரர்களை நாசஞ்செய்து சீதையைச் சிறை மீட்டுக்கொண்டுபோன இராமருக்கு எவ்வளவு பிரதாபம் கிடைத்ததோ, அவ்வளவு பிரதாபம் எனக்கு வாய்த்தது.

----------------

அத்தியாயம் -8
ஒரு நாள் எங்களுக்குப் பள்ளிக்கூடம் இல்லாத விடுமுறை நாளாயிருந்தபடியால், நாங்கள் பழைய பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் தாயார் வந்து எங்களுடைய படிப்பைப் பரிசோதித்தார்கள். பிறகு ஞானாம்பாள் என் தாயாரைப் பார்த்து "அத்தையம்மா! உங்களுக்கு அநேக சரித்திரங்கள் தெரியுமே! யாதொரு பதிவிரதையினுடைய சரித்திரந் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டும்" என்று பிரார்த்தித்தாள். "அப்படியே சொல்லுகிறேன்" என்று என் தாயார் சொல்லத் தொடங்கினார்கள்.

"சில காலத்துக்கு முன் திரிசிரபுரத்தில் அரசு செய்து வந்த விஜயரங்க சொக்கலிங்க நாயகர் சந்ததியில்லாமல் இறந்து போனபடியால், அவருடைய பத்தினியாகிய மங்கம்மாளுக்குப் பட்டாபிஷேகமாகி, அவள் துஷ்டநிக்கிரஹம் சிஷ்ட பரிபாலனஞ் செய்து, மநுநீதி தவறாமல் அரசாட்சி செய்து வந்தாள். அவளுக்குக் காமியப்ப நாயக்கன் என்கிற பெயருடைய தம்பி ஒருவன் இருந்தான். மங்கம்மாளுக்குத் தம்பி மேலிருந்த பிரியத்தினால், தன்னுடைய நாட்டில் சில ஊர்களைப் பிரத்தியேகமாய்ப் பிரித்து இவனுடைய ஸ்வாதீனப் படுத்தி, தனக்குள்ளாக அவன் சிற்றரசாயிருந்து அரசாட்சி செய்யும்படி திட்டஞ் செய்தாள். அவன் புதுக்கோட்டையைத் தனக்கு ராஜதானி ஆக்கிக்கொண்டு, அரசாட்சி செலுத்திவந்தான். அவனுக்கு மகோன்னத பதவி கிடைத்த உடனே மதிமயங்கி, சமஸ்தான காரியங்களை எவ்வளவுங் கவனிக்காமல் காமாதுரனாய்ப் பரஸ்திரீ கமனம் முதலிய துர்விஷயங்களிற் காலத்தைச் செலவளிக்கத் தலைப்பட்டான். அவனுடைய ஆஸ்தான உத்தியோகஸ்தர்களில் ஒருவனாகிய மங்களாகரம் பிள்ளையினுடைய பத்தினி கற்பலங்காரி என்பவள், திவ்விய சுந்தரமும் அவளுடைய பெயருக்குத் தகுந்த சுகுணமும் உள்ளவளாயிருந்தாள். அவளிடத்தில், அந்த துஷ்டராஜனுக்கு மோகம் உண்டாகி அவளைத் தன் கைவசப்படுத்தும் பொருட்டு, அவளிடத்துக்குச் சில ஸ்திரீகளைத் தூதாக அனுப்பினான். அவர்கள், அவளுடைய புருஷன் வீட்டிலில்லாத சமயம் பார்த்து, அவளிடஞ் சென்று 'அம்மா! நீ செய்த தவ மகிமையினால் உனக்கு ராஜயோகம் வந்துவிட்டது! உன்னைப்போல் அதிர்ஷ்டசாலிகள் உண்டா? நம்முடைய அரசரே உன்னுடைய அழகை விரும்புவாரானால் உன்னுடைய பாக்கியத்துக்கு ஒரு வரம்பு உண்டா? அவருடைய தயவைப் பெற எத்தனையோ ஸ்திரீகள் தவஞ்செய்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் சிந்திக்காமல் உனக்கு அவருடைய கிருபை கிடைத்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! இனி இந்த நாட்டுக்கெல்லாம் நியே அரசி! சமஸ்தான காரியங்களெல்லாம், உன்னுடைய ஏவலின்படியே நடக்கும். ஆகையால் அவருடைய இஷ்டபூர்த்தி செய்து, அஷ்ட ஐசுவரியங்களையும் கைக்கொள்ளு!' என்றார்கள். இதைக் கேட்டவுடனே கற்பலங்காரிக்கு கோபமுண்டாகிச் சொல்லுகிறாள். 'எனக்கு அரசரும், குருவும், தெய்வமும் என்னுடைய பர்த்தாவே அன்றி வேறல்ல; அவருடைய கிருபையே எனக்கு ஐசுவரியம்! அவருக்கு முன்பாக மற்ற அரசர்கள் எல்லாரும் அஜகஜாந்தரம்; உங்கள் அரசருடைய கிருபைக்காகத் தவஞ் செய்கிற ஸ்திரீகளே அந்தக் கிருபையைப் பெற்றுக்கொள்ளட்டும். எனக்கு வேண்டாம்!' என்றாள்.

"மறுபடியும் அவர்கள் அந்த உத்தமியின் புத்தியைக் கலைக்கிறதற்குச் சகல தந்திர வித்தைகளை உபயோகப் படுத்தியும், அவள் இசையவில்லை; அவர்கள் உடனே புறப்பட்டுப் போய், அரசனுக்கு நடந்த காரியங்களைத் தெரிவித்தார்கள். அவள் நிராகரித்த சங்கதி தெரிந்தவுடனே, அவனை அதிக அதிகமாக ஆசைப்பேய் பிடித்து ஆட்ட் தலைப்பட்டது. அவளைப் பலாத்காரமாகக் கொண்டு போகிற பக்ஷத்தில், தன்னுடைய சகோதரி மங்கம்மாளுக்குத் தெரிந்தால், தன்னைச் சிரசாக்கினை செய்வாளென்று பயந்து அவன் பலாத்காரஞ் செய்யத் துணியவில்லை. பணமென்றால் பிணமும் வாயைத் திறக்குமானபடியால், பணத்தைக் கொண்டே, அவ்ளை வசியஞ் செய்யவேண்டுமென்று நினைத்து, அவன் ஒரு பெரிய பெட்டியில் தங்க நாணயங்களையும் வேறொரு பெட்டியில் ரத்னாபரணங்களையும் நிரப்பி, அந்தத் தூதிகள் கையில் கொடுத்து, அவளிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் அந்தப் பெட்டிகளைக் கற்பலங்காரி வீட்டுகுக் கொண்டுபோய்த் திறந்துகாட்டி, அவளுடைய புத்தியை மயக்கப் பிரயாசப்பட்டார்கள். அவள் அவர்களைப் பார்த்து "ஸ்திரீகளுக்குக் கற்பே சிறந்த ஆபரணம்; அந்த ஆபரணம் போய்விட்டால், இந்த ஆபரணங்களினால் வரும் பிரயோசனம் என்ன?" என்று சொல்லி, அந்த ஆபரனங்களை உதைத்துத் தள்ளி, அவர்களைத் தூஷித்துத் துரத்திவிட்டாள். அவர்கள் போய் சற்று நேரத்துக்குப் பின்பு வீட்டுக்கு வந்த தன் பர்த்தாவிடத்தில் சகல சங்கதிகளையும் தெரிவித்து "இந்த அரசனிடத்தில் உத்தியோகஞ் செய்வது முறையல்ல; உத்தியோகத்தை விட்டுவிட்டுப் பிச்சையெடுத்தாயினும் பிழைப்பது உத்தமம்" என்றாள். அவளுடைய வார்த்தையைப் புருஷன் அங்கீகரித்துக் கொண்டு உத்தியோகம் வேண்டாமென்று ஒரு பத்திரிகை அனுப்பிவிட்டு, அவரும் அவருடைய பத்தினியும் ஊரைவிட்டுப் புறப்பட்டு அடுத்த கிராமத்துக்குப் போய், ஒருவருக்குந் தெரியாமல் அந்தரங்கமாக வசித்தார்கள். உத்தியோக வரும்படியைத் தவிர வேறே சீவனத்துக்கு மார்க்கம் இல்லாதபடியால், உத்தியோகம் போன பிற்பாடு அவர்கள் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது. அவர்களுடைய நகைகள், பாத்திர சாமான்கள் முதலியவைகளை விற்றுச் சில நாள் கால§க்ஷபஞ் செய்தார்கள். பிற்பாடு, கையில் காசும் இல்லாமல், கடன் கொடுப்பாருமில்லாமல் கைப்பாடுபடவுந் தெரியாமல், இராப்பட்டினி பகற்பட்டினியாயிருக்க ஆரம்பித்தார்கள். அந்த அரசனுக்கு அவர்கள் போயிருக்கிற இடம் சில நாள் தெரியாமலிருந்து பிற்பாடு தெரிந்தது. சாம, பேத, தான, தண்டம் என்கிற நான்கு உபாயங்களைச் செய்துவிட்டோம். இனி மேல் நாலாவது உபயோகமாகிய தண்டத்தை உபயோகிப்பதே காரியமென்று அவன் நிச்சயித்து, தானாயிறந்துபோன ஒரு அநாதைப் பிரேதத்தை, நடுச் சாமத்தில் அவர்கள் இருக்கிற வீட்டிற் போட்டுவிடும்படியாயும், மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டிப் பிடிக்கும்படிக்கும் ஜாக்கிரதை செய்தான். அந்தப் பிரகாரம் சேவகர்கள் வந்து, மங்களாகரம் பிள்ளையைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்; கற்பலங்காரி வெளியே போகாதபடி வீடைச் சுற்றிப் பாரா வைத்துவிட்டார்கள்.

உத்தியோகம் போனபிற்பாடு, தரித்திர முதலிய சகல கஷ்டங்களையும் தைரியமாகச் சகித்த அந்தக் கற்பலங்காரி, தன் புருஷனைக் குற்றவாளியாக்கி, சேவகர்கள் பிடித்துக் கொண்டுபோனதைச் சகிக்க மாட்டாதவளாய் நெருப்பிலே போட்ட புஷ்பம் போல வாடிப் பதைத்து விம்மி அழுதாள். அந்தச் சமயத்தில் அந்தக் கொடுங்கோல் மன்னவனுடைய தாதிகள் வந்து, கற்பலங்காரியை நோக்கி "தானாய் வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவதுபோல, நீயே உன்னுடைய வாழ்வைக் கெடுத்துக் கொள்கிறாய். உன் புருஷன் கொலை செய்ததாகச் சாட்சிகளால் குற்றம் ஸ்தாபிக்கிறபடியால், மரண தண்டனை கிடைக்குமென்பது நிச்சயம். ஆனால் நாங்கள் சொல்லுகிறபடி, நீ கேட்டால் உன் புருஷனுக்கு ஜீவலயம் நேராது; நீயும் எப்போதும் சுமங்கலியாகவும், பாக்கியவதியாகவும் இருப்பாய்! எங்களுடைய வார்த்தையை நீ தள்ளி விட்டால் நீ அமங்கலி தான்" என்றார்கள். இந்த வார்த்தையைக் கேட்ட உடனே அந்தப் பதிவிரதையினுடைய சித்தம் சிறிதும் சலனப் படாமல் அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறாள். "எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வந் தண்டிக்காமல் விடாது. மானம் பெரிதே அல்லாமல் ஜீவன் பெரிதல்ல; என்றைக்கிருந்தாலும் மனுஷ தேகம் எடுத்தவர்கள் சாவது நிச்சயமே யல்லாது சாகாத வரம் வாங்கிக் கொண்டு வந்தவர்கள் ஒருவரும் இல்லை. எப்படியும் ஒரு நாள் சாகப் போகிறவர்கள், சில நாள் முந்திச் செத்தால் பாதகம் என்ன? நான் என் புருஷனின் உயிரைக் காப்பாற்றுகிறதற்காகக் கற்பை இழந்து, பாவத்தையும், பழியையும், நரகத்தையும் சம்பாதித்துக் கொள்கிறதைப் பார்ர்க்கிலும், பதிவிரதா பங்கமில்லாமல் நானும் என் புருஷனும் இறந்து, நித்திய மோக்ஷ சாம்ராஜ்ஜியத்தை அடைவது உசிதம் அல்லவா?" என்றாள். "அப்படியானால் வருகிறதை நீ அநுபவித்துக் கொள்" என்று அந்தத் துஷ்டர்கள் சொல்லிப் போய்விட்டார்கள். இனிமேல் கடவுளைத் தவிர வேறு திக்கு திசை இல்லாதபடியால், அந்த உத்தமி கடவுளை நோக்கிப் பிரலாபித்துத் தன் குறைகளைச் சொல்லி முறையிடுவாள் ஆயினாள்.

அவளுடைய வீட்டைச் சுற்றிப் பாரா இருக்கிறவர்களில் ஒருவன், அவளுடைய புருஷனுக்கு மித்திரன் ஆனபடியால், குற்ற விசாரணை எப்படி நடக்கிறதென்று விசாரித்துத் தெரிவிக்கும்படி சொல்லியிருந்தாள். அதிரகஸியமாய் விசாரணை நடந்தபடியால், அவனுக்குக் கூட சில நாள் வரைக்கும் சங்கதி வெளியாகாமலிருந்து, பிறகு பிரகடனம் ஆயிற்று. மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக் குற்றம் ஸ்தாபிக்கப்படுகிறதாகவும், ஆனால் மங்கம்மாளுடைய உத்தரவு இல்லாமல் மரண தண்டனை செய்ய அந்தச் சிற்றரசனுக்கு அதிகாரமில்லாதபடியால், மங்களாகரம் பிள்ளையை மரண தண்டனை செய்ய உடனே உத்தரவு அனுப்பவேண்டுமென்று இந்தக் கொடியன் மங்கம்மாளுக்கு ரகசியமாக எழுதிக்கொண்டிருப்பதாகவும், அந்தக் காவற்சேவகன் மூலமாகக் கற்பலங்காரி கேள்விப்பட்டு, அவளுக்கு உண்டான மனக்கிலேசம் எவ்வளவென்று யார் விவரிக்கக்கூடும்? அம்பு பட்டு விழுந்த மயில்போல அவள் கீழே விழுந்து புரண்டு "ஐயோ தெய்வமே! நான் என்ன செய்வேன்! இந்த அநியாயத்தை யாரிடத்திலே சொல்லுவேன்? பிரஜைகளால் துன்பத்தை அடைந்தவர்கள் அரசனிடத்தில் முறையிடுவார்கள். அரசனே அக்கிரமஞ் செய்தால் உம்மைத் தவிர வேறு யாரிடத்தில் சொல்லுவேன்? என் புருஷனை இரக்ஷ¢த்தருளும் ஸ்வாமி" என்று முறையிட்டாள். பிறகு கடவுளது கிருபையால் அவளுக்குத் திடச் சித்தம் உண்டாகி, மங்கம்மாளிடத்திலிருந்து உத்தரவு வருகிதற்குமுன், அந்த அரசியிடத்திற்குத் தான் எப்படியாவது போய்த் தன் புருஷனைக் காப்பாற்றுகிறதற்கு மார்க்கந் தேடவேண்டுமென்று நினைத்து, அந்தக் காவற்காரனுடைய சகாயத்தால் அவள் நடுச்சாமத்தில் வீட்டை விட்டு வெளிப்பட்டுத் திரிசிரபுரத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போக ஆரம்பித்தாள். ஓடும்போதே தபாற்காரன் எதிரே வருகிறானாவென்று பார்த்துக் கொண்டு ஓடினாள். தங்க விக்கிரகம் போல் அவளுடைய மேனி பிரகாசிக்க, அவளுடைய கூந்தல் அவிழ்ந்து சோர, ஜலப்பிரவாகமாய்க் கண்ணீர் வடித்துக் கொண்டு அவள் ஓடுவதைப் பார்த்தவர்கள் "இவள் தேவ ஸ்திரீயோ! அல்லது ராஜ ஸ்திரீயோ!" என்று மயங்கி அவள் துக்கத்துக்காக இரங்கி அழாதவர்கள் ஒருவருமில்லை. அவள் நடுவழியில் தபால்காரன் வருவதைக் கண்டு, அவனுக்கு நமஸ்காரஞ் செய்து "ஏதாவது விசேஷம் உண்டா?" என்று வினாவ, அவன் மகாராணியிடத்திலிருந்து மரண தண்டனை உத்தரவைக் கொண்டுபோவதாகத் தெரிவித்தான். அவள் உடனே தீர்க்க தண்டஞ் சமர்ப்பித்து, மரண தண்டனை உத்தரவை மாற்றுவதற்காகவே தான் மங்கம்மாளிடத்துக்குப் போவதாகவும், எபபடியும் அனுகூலம் கிடைக்குமென்றும், ஆகையால் அவன் புதுக்கோட்டைக்குப் போகாமல் தாமதிக்க வேண்டுமென்றும், மிகவும் பரிதாபமாய்க் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். இரக்க சுபாவமுள்ள அந்தத் தபாற்காரன், தேவ ஸ்திரீக்குச் சமானமாகிய இந்த ஸ்திரீயினுடைய பிரார்த்தனையை மறுக்கமாட்டாமல், ஒரு நாள் தாமதஞ் செய்வதாக ஒப்புக் கொண்டான். அந்தப்படி அவனிடத்தில் பிரமாணம் வாங்கிக்கொண்டு, வேடனுக்குப் பயந்து ஓடும் மான்போல, ஒரே ஓட்டமாக ஓடித் திரிசிரபுரத்தை அடைந்து மங்கம்மாளுடைய அரண்மனையில் பிரவேசித்தாள். அரண்மனைக் காவற்காரர்கள் இவள் யாரோ தேவியென்று அவளைத் தடுக்க மனம் வராமல், உள்ளே விட்டுவிட்டார்கள்.

அவள் மங்கம்மாளுடைய கொலு மண்டபத்தை நோக்கி "மகாராணியே அபயம்! மண்டலேஸ்வரியே அபயம்! மங்கையர்க்கரசியே அபயம்! உலகநாயகியே அபயம்!" என்று ஓலமிட்டு, சிம்மாசனத்தின் அடியிற் போய் விழுந்தாள். சில நாளாய் அன்னம் ஆகாரமில்லாதபடியாலும், நாற்காத வழியும் ஒரே ஓட்டமாய் ஓடி வந்தபடியாலும், தேக ஸ்மரணை தப்பி மூர்ச்சையாய் விட்டாள். அப்போது சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த மங்கம்மாள், உடனே இறங்கி, அவளைக் கட்டித் தழுவி அவளுடைய மூர்ச்சை தெளியும்படி சைத்தியோபசாரங்கள் செய்வித்து மூர்ச்சை தெளிந்தவுடனே, அவள் கையைப் பற்றி அழைத்துக் கொண்டுபோய்த் தன் பக்கத்தில் இருத்தி, அவளுடைய குறையைத் தெரிவிக்கும்படி உத்தரவு செய்தாள். கற்பலங்காரி, அந்தச் சிற்றரசன் செய்த கொடுமைகளை வியக்தமாக விக்ஞாபித்த உடனே மகாராணிக்குத் தன் தம்பி மேல் உக்கிர கோபாக்கினி மூண்டு, அவனையும் சாட்சி முதலானவர்கலையும் உடனே கொண்டுவரும்படி, குதிரைப் பட்டாளத்தைச் சேர்ந்த நூறு போர்வீரர்களைப் புதுக்கோட்டைக்கு அனுப்பினாள். அந்தத் துஷ்ட அரசன் மங்களாகாரம் பிள்ளையைக் கொல்வதற்காகக் கொலைக்களத்திலே கொண்டுபோய் வைத்துக் கொண்டு, இராணியினுடைய உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். அந்தச் சமயத்தில் நூறு போர்வீரர்களும் போய்ச் சேர்ந்து, இராணியினுடைய உத்தரவைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டவுடனே, அந்த அரசனுக்குக் கோபமுண்டாகி, அந்தப் போர்வீரர்களின் மேல் பாய்ந்து, அவர்களில் இருவரை வெட்டிக் கொன்றுவிட்டான்; மற்றவர்கள் எல்லாரும் அவனைப் பிடித்து, நிராயுதபாணி ஆக்கிப் பின்கட்டு முறையாகக் கட்டி, அவனையும் சாட்சிகள் முதலானவர்களையும் கொண்டுபோய், மகாராணி சமுகத்தில் விட்டார்கள். மகாராணி சாட்சிகளைப் பார்த்து "மங்களாகாரம் பிள்ளை கொலை செய்தது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க, அவர்கள் தங்களுக்கு யாதொன்றும் தெரியாதென்றும், ஆனால் அரசனுடைய ஆக்கினைக்குப் பயந்து தங்களுக்குத் தெரிந்தது போல் பொய் வாக்குமூலம் எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். உடனே இராக்கினி, தன் தம்பியைப் பார்த்து, "நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்க, அவன் இராணியைக் கூட மதிக்காமல், சகோதரி என்கிற தைரியத்தால், அலட்சியமாக மறுமொழி சொன்னான்; மகாராணிக்கு அடங்காத கோபம் உண்டாகி, கிங்கரர்களைப் பார்த்து "இவனை நான் உன்னத ஸ்தானத்தில் வைத்திருக்க, அந்த ஸ்தானத்துக்குத் தன்னை அபாத்திரன் ஆக்கிக் கொண்டபடியால், இவனை உன்னத ஸ்தானத்தினின்றே தள்ள வேண்டியது நியாயமாயிருக்கிறது. ஆகையால் இவனைத் தாயுமானஸ்வாமி மலைச் சிகரத்தின் மேலே ஏற்றி, அங்கே இருந்து கீழே தள்ளிவிடுங்கள்" என்று உத்தரவு கொடுத்தாள். அந்தப் பிரகாரம் அவனை மலைமேல் ஏற்றித் தள்ளிவிட்டார்கள். அவனுடைய யோகமும், தேகமும், மோகமும் இவ்வகையாக ஒரு நிமிஷத்துக்குள் முடிவு பெற்றன. பிறகு மங்கம்மாள் தனது நியாயசபையில், மங்களாகாரம் பிள்ளைக்குப் பெரிய உத்தியோகம் கொடுத்து, அவனைக் குபேர சம்பத்து உடையவன் ஆக்கினாள். "என்றைக்கிருந்தாலும் பரஸ்திரீ கமனஞ் செய்கிறவர்களுடைய கதி அதோகதி, என்பதற்கு அந்தக் காமியப்ப நாயக்கனே சாட்சி. கற்புள்ள ஸ்திரீகள் மேன்மை அடைவார்கள், என்பதற்குக் கற்பலங்காரியே சாட்சி" என்று என் தாயார் சொல்லி முடித்தார்கள். இந்தச் சரித்திரத்தைக் கேட்டு, நானும் ஞானாம்பாளும் அளவற்ற வியப்புங் களிப்பும் அடைந்தோம்.

----------

அத்தியாயம் - 9
ஒருநாள் எங்கள் உபாத்தியாயர் ஒரு விடுகதை சொல்லி, எங்களை விடுவிக்கும்படி சொன்னார். அ·து என்னவென்றால்:- "இங்குண்டு அங்கில்லை; அங்குண்டு இங்கில்லை; இங்கும் உண்டு; அங்கும் உண்டு; இங்கும் இல்லை; அங்கும் இல்லை" என்பது தான். உடனே நான் இங்குண்டு அங்கில்லை என்பதற்கு, ஒருவன் ஆஸ்திவந்தனாயிருந்து புண்ணியஞ் செய்யாமலிருப்பானானால், அவனுக்கு இந்த உலகத்தில் மட்டும் சுகமே தவிர, அந்த உலகத்திலே சுகமில்லை என்றும், "அங்குண்டு இங்கில்லை" என்பதற்கு ஒருவன் தரித்திரவானாயும், புண்ணியவானாயும் இருப்பானால், அவனுக்கு மறுமையிலே சுகமே தவிர இம்மைச் சுகம் இல்லையென்றும், "இங்கும் உண்டு அங்கும் உண்டு" என்பதற்கு, ஆஸ்தியும் தர்மமும் உடையவனுக்கு இகபரம் இரண்டிலும் சுகமென்றும், "இங்கும் இல்லை அங்கும் இல்லை" என்பதற்குச் செல்வமும் இல்லாமல், புண்ணியமும் இல்லாமல் இருப்பவனுக்கு இவ்வுலகத்திலும் சுகமில்லை, பரலோகத்திலும் சுகமில்லை என்றும் பொருள் விடுவித்தேன்.
இதைக் கேட்டவுடனே உபாத்தியாயர் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார். " அந்த விடுகதைக்கு நீ சொன்ன அர்த்தம் தகுதியானதுதான். ஆனால், அதில் சில காரியங்களைக் கவனிக்க வேண்டியது முக்கியம். இகலோக சுகத்தை அநுபவிப்பதற்குக் கூடச் செல்வப் பொருள் மட்டுமே போதாது. செல்வத்துடன் புண்ணியமும் சேர்ந்திருக்க வேண்டியது முக்கியம். சில ஆஸ்திவந்தர்கள், தாங்களும் அநுபவியாமல் பிறருக்கும் உபகாரஞ் செய்யாமலும், பொருள்களைப் பூட்டி வைத்துக் கொண்டு லோபஞ் செய்கிறார்கள். அவர்களுக்கு இகத்திலும் பரத்திலும் என்ன பாக்கியம் உண்டு? இன்னும் சிலர், எவ்வளவு தனம் இருந்தாலும் திருப்தி அடையாமல், மேலும் மேலும் ஆசைப்பட்டு நித்திய தரித்திரர்கள் போல் துக்கத்தை அநுபவிக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகத்தில் என்ன சுகம் உண்டு? இன்னும் பல ஆஸ்திவந்தர்கள் பரஸ்திரீ கமனம், சூது, மதுபானம், பரஹிம்ஸ முதலான துர்விஷயங்களில் பொருளைச் செலவழித்துப் பல வியாதிகளையும், துன்பங்களையும், அபகீர்த்தியையும், பாவத்தையும், நரகத்தையும் சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய தனம் அவர்களுக்குக் கேடாக முடிந்ததே தவிர, நன்மையைக் கொடுக்கவில்லை. ஆகையால், இம்மையின் சுகானுபவத்துக்குக் கூடப் புண்ணியம் அவசியமாயிருக்கின்றது. ஒருவன் ஏழையாயிருந்தாலும் பொய் புரட்டு இல்லாமல், தேகப் பிரயாசைப் பட்டுத் தன்னையும், தன்னை அடுத்தவர்களையும், சம்ரக்ஷ¢த்துத் தெய்வ பக்தியும் தர்ம சிந்தையும் உள்ளவனாயிருப்பானால், அவனுக்கு இகத்திலும் பரத்திலும் என்ன குறை இருக்கின்றது?

தனம், உத்தியோகம், அதிகாரம் முதலிய செல்வங்கள் அற்பமாகவும், நிலை அற்றதாகவும், முன்னே நான் சொன்னபடி துன்பஹேதுவாகவும் இருக்கின்றன. அந்தச் செல்வங்களுக்கு அதிகாரிகளாலும், திருடர்களாலும், நெருப்பு முதலிய காரணங்களாலும் அநேக அபாயங்கள் உண்டு. பின்னும் வார்த்திக தசையிலும், நாம் வியாதியாயிருக்கும் போதும், அந்தச் சுகங்களை அநுபவிக்கச் சக்தி இல்லாதவர்களாய்ப் போகிறோம். நாம் இறந்த பிற்பாடு அந்தச் செல்வங்கள் கூட வருகிறதுமில்லை; புண்ணியமோ ென்றால், நிலைமை உள்ளதாகவும், அந்நியரால் அபகரிக்கக் கூடாததாகவும், பர லோகத்திலும் நம்மைத் தொடர்ந்து வருவதாகவும் இருக்கின்றது. இந்த உலகத்திலே துன்பங்கலவாத சுகமில்லையாதலால், அந்த அற்ப சுகத்தை மதிக்காமல், புண்ணியப் பயனாகிய நித்திய சுகத்தை நாம் தேடவேண்டும்" என்றார்.

என்னுடைய உபாத்தியாயர் சொன்ன விடுகதையை என் தாயாருக்குத் தெரிவித்தபோது, என் தாயார் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்:

"உன்னுடய உபாத்தியாயராகிய கருணானந்தம் பிள்ளையைச் சாதாரண மனுஷராக நினைக்க வேண்டாம். அவர் புத்தியிலும், நற்குணங்களிலும் சிறந்தவர். அவர் பெரிய திரவியவந்தரா யில்லாவிட்டாலும், அவர் வேண்டியமட்டில் ஒரு குறைவுமில்லாலமல், சில நிலங்கள், வீடுகள் முதலிய பூஸ்திதிகள் உடையவராயிருந்தார். அவருக்கு ஒரு பெண்ணைத் தவிர, வேறே சந்ததியில்லை. அந்தப் பெண்ணை மிகவும் அன்பாக வளர்த்து, அவளுக்குப் பக்குவ காலம் வந்தவுடனே, ஒரு தகுந்த புருஷனைத் தேடிக் கலியாணஞ் செய்வித்தார். அவருக்குச் சில காலத்துக்கு முன் க்ஷயரோகங் கண்டு, பிழைப்போமென்கிற நம்பிக்கை இல்லாமையினால், ஒரு மரண சாசனம் எழுதி வைத்தார். அதில் தமது சொத்துக்கள் முழுமையும் அன்று முதல் தம்முடைய மகளும், அவள் புருஷனும் அநுபவித்துக் கொண்டு தமக்கு உத்தரக் கிரியை செய்து தம்முடைய பெண்சாதியையும் சம்ரக்ஷ¢த்து வருகிறதென்றும், சில விசை தாம் பிழைத்துக் கொள்கிற பட்சத்தில், தம்மையும் அவர்களே ஆதரிக்க வேண்டுமென்றும் நிபந்தனை செய்யப் பட்டது. அந்த மரணசாசனப்படி, சகல ஸ்திதிகளும் உடனே அவருடைய மகளுக்கும் மருமகனுக்கும் ஸ்வாதீனமாகி, மிராசும் அவர்கள் பெயரால் பதிவாகி அநுபவிக்கத் தொடங்கினார்கள். பிற்பாடு தெய்வானுகூலத்தால் கருணானந்தம் பிள்ளை தேக சௌக்கியம் அடைந்து பிழைத்துக் கொண்டார். அவரையும் அவருடைய பத்தினியையும் சில நாள் மட்டும் அவர்களுடைய மகளும் மருமகனும் சம்ரக்ஷணை செய்து, பிற்பாடு அவர்களே வீட்டைவிட்டு வெளிப்படும்படியான விதமாகக் கொடுமையைச் செய்ய ஆரம்பித்தார்கள். கருணானந்தம் பிள்ளை மறுபடியுந் தம்முடைய சொத்தை அடைகிறதற்குப் பல பிரயத்தனங்கள் செய்தும், அவர் எழுதிவைத்த மரணசாசனமே அவருக்கு விரோதமா யிருந்ததால், அவருடைய பிரயத்தனம் பலிக்கவில்லை. அவரும் அவருடைய பத்தினியும் அன்ன வஸ்திரத்துக்கு மார்க்கமில்லாமல், மிகவுந் துன்பப் பட்டார்கள். அவர் யோக்கியரென்பதும், அவர் மருமகனை நம்பி மோசம் போனதும், சகலருக்குந் தெரியுமானதால், அவருக்குப் பொருள் உதவி செய்யவேண்டுமென்று பலர் நினைத்தார்கள். ஆனால் தேகத்தில் சக்தி உள்ளவரையில் உழைத்து ஜீவிக்க வேண்டுமே தவிர, யாசகத் தொழில் ஈனத் தொழிலென்பது அவருடைய சித்தாந்தமாகையால் அவர் பிறருடைய உதவியை அபேக்ஷ¢க்கவில்லை. என் தகப்பனாராகிய சந்திரசேகர முதலியாருக்கும் இவருக்கும் சினேகமானபடியால், அவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் இவர் வாடகைக்குக் குடியிருந்து கொண்டு, அவரிடத்தில் சொற்பத் தொகை கடன் வாங்கி முதலாய் வைத்து வியாபாரஞ் செய்து கால§க்ஷபம் செய்து வந்தார்.

அவர் இழந்துபோன சொத்து, மறுபடியும் அவருக்குச் சித்திக்கும்படி உபாயஞ்செய்யவேண்டுமென்று என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் யோசித்துக் கொண்டு, ஒரு நாள் அவரை அழைத்துச் சொன்னதாவது:- "ஒரு பெரிய பெட்டியில் நாலாயிரம் வராகன் வைத்துப் பூட்டி, அதை உம்முடைய வீட்டில் ரகசியமாகக் கொண்டுவந்து வைக்கிறோம். நீர் நாளைய தினம் எங்களுக்கும், உங்களது மகள் மருமகன் முதலியோர்களுக்கும் விருந்து செய்வதாகச் சொல்லி யனுப்பும். உம்முடைய வீட்டில் நாங்கள் போஜனஞ் செய்து முடித்தவுடனே, நாங்கள் இருவரும் ஆளுக்கு இரண்டாயிரம் வராகன் வீதம் கடன் கொடுக்கும்படி உம்மைக் கேட்கிறோம். நீர் உடனே பெட்டியைத் திறந்து எங்களுக்குக் கடன் கொடுப்பது போல பாவனை பண்ணி, எங்களுடைய பணத்தை எடுத்து எங்களுக்குக் கொடுத்துவிடும். அதைப் பார்த்தவுடனே, உமது மகளும் மருமகனும் உம்மிடத்தில் இன்னமும் பொருளிருப்பதாக எண்ணி, அதையும் கிரகிப்பதற்காக உம்முடைய தயவைச் சம்பாதிக்கப் பிரயாசப் படுவார்கள்; அந்தச் சமயத்தில் அவர்கள் கையிலிருக்கிற மரண சாசனத்தை எப்படியாவது கைப்பற்றிக் கொள்ளலாம்" என்றார்கள். கருணானந்தம் பிள்ளை "உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்" என்றார். உடனே என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் ஒரு பெட்டியில் நாலாயிரம் வராகன் வைத்துப் பூட்டிக் கருணானந்தம் பிள்ளை குடியிருக்கிற வீட்டுக்கு ரகசியமாய் அனுப்பினார்கள். அவர் மறுநாள் தம்முடைய மகள் மருமகன் முதலானவர்கள் விருந்துக்கு வரும்படி சொல்லியனுப்பினார்; அவர் விருந்து செய்வதற்கு வகையேதென்று மகளும் மருமகனும் ஆச்சரியப் பட்டுக் கொண்டு அதையும் போய்ப் பார்க்கலாமென்று அவர் வீட்டுக்குப் போனார்கள். என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் விருந்துக்கு வேண்டிய சாமக் கிரியைகளை அனுப்பி, தங்களுடைய பரிசாகர்களைக் கொண்டு விருந்து செய்வித்து, அவர்களும் விருந்து சாப்பிடப் போனார்கள். விருந்து முடிந்தவுடனே என் தகப்பனார் எழுந்து, இரண்டாயிரம் வராகன் தமக்குக் கடன் கொடுக்க வேண்டுமென்று கருணானந்தம் பிள்ளையைக் கேட்டார். உன் தகப்பனாரும் இரண்டாயிரம் வராகன் கடன் கேட்டார்கள். கருணானந்தம் பிள்ளை ஒரு அறைக்குள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து, நாலயிரம் வராகன் எடுத்துக் கொண்டு வந்து கலகலவென்று கொட்டினார். அவர்கள் எண்ணி, ஆளுக்கு இரண்டாயிரம் வராகன் வீதம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இதைக் கண்டவுடனே மலத்தைக் கண்ட நாய்க்கு வாயூறுவதுபோல், கருணானந்தம் பிள்ளை மகளும் மருமகனும் வாயூறிக்கொண்டு, மலைத்து ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். ஒரு நிமிஷத்தில் நாலாயிரம் வராகன் கடன் கொடுப்பாரானால் இவருடைய செல்வம் எவ்வளவு பெரியதாயிருக்க வேண்டும்? இதை நாம் அறியாமற் போய்விட்டோமே என்று பெருமூச்சு விட ஆரம்பித்தார்கள். அந்தப் பணத்தைக் கண்டவுடனே, அவர் மேலே மகளுக்கும் மருமகனுக்கும் அத்தியந்த விசுவாசமுண்டாய் விட்டது. அவர் அந்தச் சமயத்தில், அவர்களை ஆயிரஞ் செருப்பாலே அடித்தாலும் பட்டுக் கொள்வார்கள்.

மாமனாருக்குக் குலாம் போடும்படி, மருமகன் தன் பெண்சாதிக்குக் கண்சாடை காட்டிவிட்டுப் போய்விட்டான். அவள் தகப்பனாருக்குத் தூபம் போட ஆரம்பித்தாள். எப்படியென்றால், தகப்பனாரைப் பார்த்து, "ஐயாவே! எங்களுடைய வாழ்வுகளெல்லாம் உங்களால் வந்த வாழ்வு தானே! நீங்கள் கிருபை செய்யாவிட்டால் நாங்கள் இந்நாள் மட்டும் ஜீவித்திருப்போமா? தாயுந் தந்தையுங் கைகண்ட தெய்வமென்று சகல சாஸ்திரங்களுஞ் சொல்லுகின்றனவே! நீங்கள் சொல்லாமல் எங்களை விட்டுப் புறப்பட்டு வந்த நாள் முதல், எங்களுக்கு நல்ல நித்திரை இல்லை. அன்னம் ஆகாரமில்லை. எங்களை நாங்கள் மறந்திருந்தாலும் இருப்போமேயல்லாமல், உங்களை மறந்த நேரமில்லை. உங்களுடைய தேகம் இளைத்திருப்பதை நான் பார்க்கும்போது என்னுடைய மனம் பதைக்கின்றது!" என்று பல வகையாகத் தப்பு ஸ்தோத்திரஞ் செய்தாள். இவ்வளவும் பணஞ்செய்கிற கூத்தென்று அவர் நன்றாய்த் தெரிந்துகொண்டு, மகளைப் பார்த்து “விசனப்பட வேண்டாம் அம்மா! உனக்கு ஏதாவது அபே¨க்ஷ இருந்தால் தெருவி!” என்று நயவஞ்சகமாகச் சொன்னார். அவர் “உங்களையும் குறிக்கவில்லையே!” என்றாள். “ஆம் அந்த மரண சாசனத்தையும் கொண்டுவா”என்ார்.

அவள் ஒரு நிமிஷத்தில் பட்சி போல் பறந்தோடி, மரண சாசனத்தைக் கொண்டு வந்து தகப்பனுக்குக் காட்டினாள். அவர் “அதனைக் கிழித்துவிடு. நான் வேறே சாசனம் எழுதிக் கொடுக்கிறேன்” என்றார். அவள் அந்தச் சீட்டையும், சீட்டினால் வந்த பாக்கியத்தையும் கிழித்து நாசஞ் செய்துவிட்டாள். இவர் “நான் தகுந்தபடி எழுதி வைக்கிறேன். நீயும் உனது நாயகனும் இருட்டினவுடனே வந்து, அந்தப் பெட்டியை உங்கள் வீட்டுக்குக் கொண்டுபோங்கள்” என்றார். உடனே அவள் கம்பீர ஜன்னி கண்டவள் போல எழுந்து, புருஷனுக்குச் சந்தோஷச் சமாச்சாரம் சொல்வதற்காக ஓடினாள். இருட்டினவுடனே புருஷனும் பெண்சாதியும், அந்தப் பெட்டியைக் கொண்டு போவதற்காக வந்தார்கள். அது எத்தனை பேர் கூடினாலும் தூக்கக்கூடாத பளுவாயிருந்ததால், அநேகர் கூடி முக்கி முரண்டி, ஒரு வண்டியின் மேலே ஏற்றினார்கள். அதை வீட்டுக்குக் கொண்டுபோய் புருஷனும் பாரியும் பேராசையுடனே திறந்து பார்த்தார்கள். பெட்டிக்குள்ளாக மண்ணுங் கல்லும் நிறைக்கப்பட்டிருந்ததே தவிர, இரண்டு ஓடுகளும், இரண்டு கயிறுகளும் ஒரு காகிதத் துண்டுமிருந்தன. அந்தக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது என்னவென்றால்: “நீங்கள் என் வாயில் மண் போட்டபடியினாலே, உங்களுடைய வாயிலே போட்டுக் கொள்வதற்காகப் பெட்டியில் மண் வைத்திருக்கிறேன். நீங்கள் என்னைப் பிச்சை எடுக்கும்படி விட்டுவிட்ட படியால் நீங்கள் பிச்சை எடுக்கும்படி இரண்டு ஓடுகள் வைத்திருக்கிறேன். பிச்சை எடுக்க உங்களுக்குச் சம்மதம் இல்லாவிட்டால், நீங்கள் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு சாகும்படி கயிறும் வைத்திருக்கிறேன்” என்பது தான். இதைப் பார்த்தவுடனே, அவர்களுடைய ஸ்திதி எப்படி இருந்திருக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? கருணானந்தம் பிள்ளை செய்தது சரிசரியென்று அவர்களுடைய மனமே பறையடிக்க ஆரம்பித்தது. மரண சாசனம் பரிகரிக்கப் பட்டுப் போனதால், என் தந்தையால் தம்முடைய ஆட்களைக் கொண்டு, பூஸ்திதிகளையெல்லாம் கருணானந்தம் பிள்ளை வசப்படுத்தி விட்டார். அவருடைய மகளுக்கும் மருமகனுக்கும் ஆதாரமாயிருந்த மரண சாசனமே, மரணமாய்ப் போய்விட்டபடியாலும், அதிகாரிகளெல்லாம் நியாய பக்ஷத்திலே இருந்தபடியாலும் அவர்கள் மறுபடியும் அந்தச் சொத்தை அபகரிக்கிறதற்குச் செய்த பிரயத்தனங்கள், நிஷ்பலமாய்ப் போய்விட்டன. மகளும் மருமகனும் புத்தி கெட்டுப் போவதற்கு இந்தச் சொத்துத் தானே காரணமாயிருந்ததென்று, கருணானந்தம் பிள்ளைக்கு வெறுப்புண்டாகி, அவர் தமது குடும்ப சம்ரக்ஷணைக்கு வேண்டிய சொற்ப ஸ்திதிகளை வைத்துக் கொண்டு, மற்ற ஸ்திதிகளையெல்லாம் பல பாகமாய்ப் பிரித்துத் தம்முடைய எளிய சுற்றத்தார் முதலானவர்களுக்குத் தானஞ் செய்துவிட்டார். அவருடைய மகளும் மருமகனும் ஏழைகளாய்ப் போனதால், அவர்களையும் தம்முடைய குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு ஆதரித்து வருகிறார். மனுஷ தேகம் எடுத்தவர்கள், அவர்களாற் கூடிய பரோபகாரஞ் செய்ய வேண்டுமென்றும், பரோபகாரமில்லாதவர்கள் பூமிக்குச் சுமையென்றும் நினைத்து, அவருடைய வீட்டில் தர்மப் பள்ளிக்கூடம் வைத்துக் கொண்டு, எண்ணிக்கையில்லாத பிள்ளைகளுக்கு வித்தியா தானம் செய்து வருகின்றார். அப்படியே உனக்கும் ஞானாம்பாளுக்கும் தர்மத்துக்காக கல்வி போதிக்கிறாரேயல்லாது, யாதொரு பிரயோஜனத்துக்காக அல்ல. அவர் மகாத்மாவானதால், அவர் சொல்லுகிற ஒவ்வொரு புத்தியையும் ஒவ்வொரு மாணிக்கம்போல, உன்னுடைய மனதில் பதித்துக் கொள்” என்றார்கள். உபாத்தியாயர் சரித்திரத்தை நான் கேட்டபிற்பாடு, அவரிடத்தில் எனக்கு அதிக பூஜிதையும், கௌரவமும் உண்டாகி, அவருடைய வாக்கை வேதவாக்காக எண்ணி, அந்தப் பிரகாரம் அனுஷ்டிக்கத் தொடங்கினேன்.
-----------

அத்தியாயம் - 10
உபாத்தியாயர் ஒரு நாள் எங்களுக்குப் பாடம் கொடுத்தபிறகு என்னைப் பார்த்து “கடவுளுக்கு ஒரு நிமிஷம் எப்படி?” என்றார். உடனே நான் சொன்னதாவது “ஒரு பெரிய மணல் மலை இருக்கிறது.; அந்த மலையிலிருந்து பதினாயிரம் வருஷத்திற்கு ஒரு மணல் வீதமாகக் கெட்டு, அந்த மலை முழுதும் நாசமாவதற்கு எத்தனை காலம் செல்லுமோ, அத்தனை காலங்கூட சுவாமிக்கு ஒரு நிமிஷம் ஆகமாட்டாது” என்றேன். நான் சொன்னதை குரு அங்கீகரித்துக் கொண்டு, ஞானாம்பாளைப் பார்த்து, “நீயும் ஒரு திருஷ்டாந்தம் சொல்லு” என்றார். உடனே ஞானாம்பாள் “லட்சம் வருஷத்துக்கு ஒவ்வொரு துளியாக வற்றி சமுத்திர ஜலம் முழுவதும் வற்றுவதற்கு எவ்வளவு காலம் செல்லுமோ, அவ்வளவு காலங்கூட சுவாமிக்கு ஒரு நிமிஷம் ஆகாது” என்றாள். உடனே உபாத்தியாயர் எங்களைப் பார்த்து “சுவாமிக்கு ஒரு நிமிஷம் அப்படியிருக்குமானால் அவருடைய நித்திய காலத்தை யார் அளவிடக்கூடும்? நாம் புண்ணியம் செய்வோமேயானால் முடிவில்லாத நித்திய சுகத்தை அனுபவிக்கலாம். பாவம் செய்வோமானால் முடிவில்லாத துன்பத்தை அநுபவிக்க வேண்டும்.” என்றார்.

இவ்வகையாக நானும் ஞானாம்பாளும் அவளுடைய வீட்டிலே படித்துக் கொண்டுவரும்போது, எங்களுக்கு வயது அதிகரித்ததால் இனிமேல் நாங்கள் இருவரும் ஓரிடத்திலே படிக்கக் கூடாதென்று என் தாயார் அபிப்பிராயப்பட்டு, என்னை வீட்டுக்கு வரவழைத்துக் கொண்டார்கள். அதுமுதல் ஞானாம்பாளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் நேரிடாதபடியால், எனக்கு மகத்தான விசனகரமாயிருந்தது. எங்கள் உபாத்தியாயர் முந்தி ஞானாம்பாள் வீட்டுக்குப் போய் அவளுக்குப் பாடம் கொடுத்தபிறகு, என் வீட்டுக்கு வந்து எனக்குப் பாடம் சொல்லிக்கொண்டு வந்தார். அவர் ஞானாம்பாளைப் பார்த்து வருகிறவரானபடியால் அவருடைய முகத்தைப் பார்க்கும்போதெல்லாம், ஒருவாறு எனக்குத் திருப்தியாயிருந்தது. அவர் ஒருநாள் என்னைப் பார்த்து “ஞானாம்பாள் நல்லவள் என்று நினைத்தேன். அவள் உன் தாயாருக்கு ஒரு துரோகம் செய்துவிட்டாள்” என்றார். இதைக் கேட்டவுடனே நான் மலைத்துப் போய்ப் பேசாமல் இருந்தேன். அவர் உடனே சிரித்துக் கொண்டு சொல்லுகிறார். “ஞானாம்பாள் பிறக்கிறதற்குமுன், குணத்தில் உன் தாயாருக்குச் சமமான ஸ்திரீகள் ஒருவரும் இல்லை. ஞானாம்பாள் பிறந்த பிற்பாடு அவள் உன் தாயாருக்குச் சமானம் என்று சொல்லும்படியாகப் பிரகாசிக்கிறாள். இது தான் ஞானாம்பாள் செய்த துரோகம்” என்றார். இதைக் கேட்டவுடனே என் கவலை தீர்ந்து அகமகிழ்ச்சி அடைந்தேன்.

இவ்வண்ணமாகச் சில நாள் என் வீட்டில் தனிமையாய்ப் படித்த பிற்பாடு, ஒருநாள் உபாத்தியாயர் என்னை நோக்கி வசனிக்கிறார்: “ஆசான் மாணாக்கனுக்கு எவ்வளவு கற்பிக்கலாமோ அவ்வளவு நான் உனக்குக் கற்பித்துவிட்டேன். இனி நீயே படித்துக் கல்வியைப் பூரணம் செய்யவேண்டும். ஆசானுடைய போதகம் முடிந்தவுடனே கல்வியும் முடிந்து போனதாகச் சிலர் நினைக்கிறார்கள். அப்படி எண்ணுவது தப்பு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பாடசாலையை விட்ட பிற்பாடு தான் படிப்பு ஆரம்பிக்கிறது. "பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது" என்பதுபோல் பள்ளிக்கூடத்தில் படிக்கிற படிப்பை அபிவிருத்தி செய்யாவிட்டால், அந்தப் படிப்பு ஒன்றுக்கும் உதவாது. பாடசாலையிலே படிக்கிற படிப்பு அஸ்திவாரமாகவும், பாடசாலையை விட்ட பிற்பாடு, தானே படிக்கிற படிப்பு மேற்கட்டத்துக்குச் சமானமாயு மிருக்கின்றது. ஒரு ஊருக்குப் போகிற மார்க்கத்தை மட்டும் உபாத்தியாயர் போதிப்பதே அல்லாது கல்வியையே பூரணமாய்க் கற்பிப்பது சாத்தியமல்ல. உபாத்தியார் காட்டிய வழியைப் பிடித்துக் கொண்டு, அகோராத்திரம் படித்துக் கல்வியைப் பூர்த்தி செய்வது மாணாக்கனுக்குக் கடன். வித்தையை அபிவிர்த்தி செய்யாமல் பாடசாலைப் படிப்பே போதுமென்று இருக்கிறவன், மாளிகை கட்டாமல் அஸ்திவாரமே போதுமென்று இருக்கிறவனுக்குச் சமானமாகிறான். பூட்டிவைத்திருக்கிற பொக்கிஷத்திற்குத் திறவுகோல் கொடுப்பது போல, எந்தப் புஸ்தகத்தை வாசித்தாலும், அர்த்தம் தெரிந்துகொள்ளும்படியான ஞானத்தை உனக்குப் போதித்து, வித்தியா பொக்கிஷத்தின் திறவுகோலை உன் கையிலே கொடுத்துவிட்டேன். இனி மேல் நீ உன்னுடைய முயற்சியால் அந்தப் பொக்கிஷத்தைத் திறந்து அனுபவிக்கவேண்டுமே அல்லாது, நான் செய்யத்தக்கது ஒன்றுமில்லை. அரும்பதங்களுக்கு அர்த்தம் தெரியவேண்டுமானால், அகராதி, நிகண்டு முதலிய வியாக்கியான நூல்களும் இருக்கின்றன. திருவள்ளுவர், கம்பர் முதலிய மகாவித்துவான்கள், தங்களுடைய முயற்சியால் கவிசிரேஷ்டர்கள் ஆனார்களே தவிர, அவர்களுடைய உபாத்தியாயரிடத்தில் அவர்கள் கற்றுக்கொண்டது அற்பமாகவேயிருக்கும். அந்த வித்வான்களெல்லாம் மனுஷப் பிறப்பே அல்லாமல் தெய்வீகம் அல்லவே. அவர்களைப் போல நீயும் பிரயாசப்பட்டுக் கல்வி பயின்றால், அவர்களுக்குச் சமானம் ஆவதற்கு ஆடங்கம் என்ன?

“கல்வியின் பிரயோஜனம் எல்லாங்கூடிக் கடவுளை அறிவதுதான். சகல சாஸ்திரங்களும், வேதங்களும், வேதாகமங்களும், சமயகோடிகளும் சொல்லுவதெல்லாம், கடவுளே அல்லாமல் வேறல்ல. கல்விமானுக்குத் தெய்வ பக்தியே சிறந்த பூஷணமாயிருக்கின்றது. ஒருவன் கல்விமானாயிருந்தாலும், தனவானாயிருந்தாலும், அவனிடத்தில் தெய்வநேசம் இல்லாவிட்டால் அவனைப் போல் நிர்ப்பாக்கியர்கள் ஒருவருமில்லை. ஒவ்வொரு நிமிஷமும் கடவுளிடத்தில் நாம் உண்பது அவருடைய அன்னம்; உடுப்பது அவருடைய வஸ்திரம்; குடிப்பது அவருடைய ஜலம்; நாம் வசிப்பது அவருடைய வீடு; சஞ்சரிப்பது அவருடைய பூமி; நாம் சுவாசிப்பது அவருடைய சுவாசம்; நாம் காண்பது அவருடைய பிரகாசம்; நாம் அனுபவிக்கிற நமது தேகமும் பஞ்சேந்திரியங்களும் ஆத்துமாவும் அவருடைய கொடை. அவருடைய கிருபை இல்லாவிட்டால், ஒரு நிமிஷம் நாம் சீவிக்கக் கூடுமா? அவர் நம்மை அசைக்காமல் நாம் அசையக்கூடுமா? அவர் நம்மை நடப்பிக்காவிட்டால் நாம் நடக்கக் கூடுமா? பூமியைப் பார்த்தாலும் ஆகாயத்தைப் பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் அவருடைய உபகாரமயமே அன்றி வேறுண்டா? ஆகாயம் நம்மைச் சூழ்ந்திருப்பது போல் அவருடைய உபகரணங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. சமுத்திரத்திலே பிறந்து, சமுத்திரத்திலே வளர்ந்து, சமுத்திரத்திலே சீவிக்கிற மீன்களைப் போலக் கடவுளது கிருபாசமுத்திரத்துக்குள்ளாகவே நாம் ஜனித்து வளர்ந்து சீவிக்கிறோம்.

“அரசனுடைய ஊழியத்திற்கும் தெய்வ ஊழியத்திற்கும் இருக்கிற பேதத்தைப் பார். அரசனுக்கு நாம் நின்று சேவிக்கவேண்டும். கடவுளைத் தியானிக்க நிற்கவேண்டுவதில்லை. நாம் பசியாயிருக்க, அரசன் உண்ணுகிறான். கடவுள் தாம் உண்ணாமல் நம்மை உண்பிக்கிறார். அரசன் தூங்கும்போது நாம் தூங்காமல் அவனைக் காக்கவேண்டும். கடவுள் தாம் தூங்காமல் நம்மைத் தூங்கவைத்துக் காவலாயிருக்கிறார். அரசன் ஓயாமல் நம்மிடத்தில் வேலை கொள்ளுகிறான். கடவுள் நம்மிடத்தில் ஒருவேலையும் வாங்காமல், அவரே சகல வேலைகளையுஞ் செய்கிறார். அரசன் நம்மிடத்தில் வரி யாசகம் செய்கிறான். கடவுள் நம்முடைய அன்பைத் தவிர வேறொன்றும் அபேக்ஷ¢க்கவில்லை. அரசன் அற்பக் குற்றத்தையும் க்ஷமியான். கடவுள் நாம் தினந்தோறுஞ் செய்கிற எண்ணிறந்த குற்றங்களையும் பொறுத்துக் கொண்டு சாகிற வரையில் நம்மைத் தண்டியாமல் சகல உபகாரங்களுஞ் செய்து வருகிறார்.

அரசன் சுயபுத்தி இல்லாதவன் என்பதற்கு அவனுடைய மந்திரிகளே சாக்ஷ¢. அவன் சுயசூரன் அல்ல என்பதற்கு, அவனுடைய படைகளே சாக்ஷ¢. அவன் யாசகஸ்தன் என்பதற்கு, அவன் வாங்கும் குடி இறையே சாக்ஷ¢. அவன் நியாய பரிபாலனம் செய்யத் தெரியாதவன் என்பதற்கு அவனால் நியமிக்கப் பட்ட நியாயாதிபதிகளே சாக்ஷ¢. இப்படிப்பட்ட குறைவுகளில்லாமல், சர்வக்ஞத்துவமும் சர்வ சக்தியும் சர்வ சாம்பிராச்சியமும் உடைய கடவுளை, எப்போதும் தியானிக்க வேண்டும். அவரைத் தியானிப்பது நமக்கே ஆத்மானந்தமாகவும், அவரைப் புகழ்வது வாய்க்கு மாதுரியமாகவும் அவருடைய நாமத்தைக் கேட்பது காதுக்கு இனிமையாயு மிருக்கின்றது.” என்று அமிர்த வருஷம் போற் பிரசங்கித்தார். அது முதல் உபாத்தியாயர் தினந்தோறும் வராமல் வாரத்துக்கு ஒரு முறைவந்து, எனக்குள்ள சந்தேகங்களைத் தெளிவித்துவிட்டுப் போவார். அவர் ஆஞ்ஞாபித்தபடி நான் ஒரு நிமிஷங் கூடச் சும்மா இராமல், எப்போதும் சிறந்த கால§க்ஷபம் செய்துவந்தேன்.

----------

அத்தியாயம் - 11
ஒரு நாள் என் தாயார் என்னிடத்தில் வந்து "ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து உன்னிடத்திலே பேச வந்திருக்கிறேன். அந்த விஷயம் எவ்வளவு முக்கியமானதென்று நீ தெரிந்துகொள்ளும் பொருட்டு, உனக்கு ஒரு சிறிய கதை சொல்லுகிறேன்" என்று சொல்லத் தொடங்கினார்கள்.

“ஒரு தேசத்தை ஆண்டுவந்த அரசன் இறந்துபோன பிற்பாடு, அவனுடைய ஏக குமாரனுக்குப் பட்டாபிஷேகமாகி, அரசாக்ஷ¢ செய்துவந்தான். அவனுடைய திரவியங்களை எல்லாம் துர்விஷயங்களில் செலவழித்து விட்டு அவன் மனோவியாகுலத்தோடு கூடப் படுத்துத் தூங்கும்போது, ஒரு விருத்தாப்பியன் அவன் முன்பாகத் தோன்றி, "உன் தகப்பனாருடைய பொக்கிஷ சாலைக்குக் கீழே வெட்டிப் பார். உனக்குத் திரவியம் அகப்படும்" என்று சொன்னதாக ஒரு சொப்பனங் கண்டு விழித்துக்கொண்டு அந்தப் பிரகாரம் அவன் வெட்டிப் பார்க்க, பளிங்கினால் கட்டப்பட்ட இரண்டு நில அறைகளைக் கண்டான். அந்த அறைகளில் ஒன்றில், தங்க நாணயங்கள் நிறைந்திருந்தன. மற்றொன்றில் ஒன்பது தங்கப் பீடங்களும், அவைகளுள் எட்டுப் பீடங்களில் எட்டு வயிர விக்கிரங்களும் இருந்தன. அந்த ஒவ்வொரு விக்கிரகமும் ஒரே வைரத்தினாலே செய்யப்பட்டதாயிருந்தது. ஒன்பதாவது பீடத்தில், ஒன்றுமில்லாமல் வெறுமையாயிருந்தது. அதில் அடியிற் கண்டபடி எழுதப்பட்டிருந்தது: "மகனே! அந்த எட்டு வைர விக்கிரங்களையும் வெகு கஷ்டப்பட்டுச் சம்பாதித்தேன்; உலகத்தில் ஒன்பதாவது விக்கிரகம் ஒன்று இருக்கின்றது; அது எட்டு விக்கிரகங்களைப் பார்க்கிலும் ஆயிரம் பங்கு சிரேஷ்டமானது; அது உனக்கு வேண்டுமானால், கேரோ பட்டணத்துக்குப் போய் அவ்விடத்திலிருக்கிற என்னுடைய ஊழியக்காரனைக் கண்டால், அவன் அந்த ஒன்பதாவது விக்கிரகம் கிடைப்பதற்குத் தகுந்த மார்க்கத்தைச் சொல்லுவான்" என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பிரகாரம் அந்த ராஜகுமாரன் கேரோ பட்டணத்துக்குச் சென்று, ஊழியக்காரனைக் கண்டு, அவன் மூலமாக ஒரு வேதாளத்தினுடைய தயவைச் சம்பாதித்தான். அந்த வேதாளத்தைப் பார்த்து ஒன்பதாவது விக்கிரகம் தனக்குக் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தித்தான். அந்த வேதாளம் அவனைப் பார்த்து, "பதினைந்து வயதுள்ளதாகவும், அதிரூப லாவண்ணியமும் நிர்த்தோஷமும் உள்ளவளாயும் ஒரு பெண்ணை எனக்கு நீ சம்பாதித்துக் கொடுத்தால், உனக்கு ஒன்பதாவது விக்கிரகம் கிடைக்கும்; நீ பெண்களுடைய குணத்தை அறியும் பொருட்டு, ஒரு கண்ணாடி கொடுக்கிறேன். ஒரு பெண்ணைப் பார்த்த உடனே அந்த கண்ணாடியைப் பார். அவள் களங்கம் உள்ளவளாயிருந்தால், அந்தக் கண்ணாடியிலும் களங்கந் தோன்றும். அவள் நஷ்களங்கமாயிருந்தால் கண்ணாடியும் நிஷ்களங்கமாயிருக்கும்" என்று சொல்லி ஒரு கண்ணாடியையும் அவன் கையில் கொடுத்தது. அவன் பல பல ஊர்களுக்குப் போய்ப் பல பெண்களைப் பார்த்து வேதாளம் சொன்ன குணங்குறிகளின்படி ஒரு மந்திரி மகளைச் சந்தித்தான். அந்த பெண்ணைப் பார்த்தவுடனே அவனுக்கே இச்சை உண்டானபோதிலும், அந்த இச்சையை நிக்கிரகஞ் செய்து, அந்த பெண்ணை வேதாளத்தின் முன்பாகக் கொண்டுபோய் விட்டான். வேதாளத்துக்கு அதிக சந்தோஷமுண்டாகி, அந்த ராஜகுமாரனைப் பார்த்து "நீ உன் ஊருக்குப் போய், நில அறையைத் திறந்து பார். அங்கே ஒன்பதாவது விக்கிரகத்தைக் காண்பாய்" என்றது. அவன் "அந்தப் பெண்ணை இழந்துவிட்டோமே" என்கிற துக்கத்துடன் ஊருக்குப் போய், நில அறையைத் திறந்து பார்த்தான். ஒன்பதாவது பீடத்தில் ஜகஜோதியாக ஒரு விக்கிரகம் இருந்தது. அதை நெருங்கிப் பார்க்க, இவன் வேதாளத்துக்குச் சம்பாதித்துக் கொடுத்த பெண்ணாயிருந்தது. உடனே அந்த வேதாளமும் ஆகாச மார்க்கமாய் வந்து "அந்தப் பெண் தான் ஒன்பதாவது விக்கிரகம். அவளை நீ விவாகஞ் செய்து கொண்டு சுகமாக வாழ்" என்று சொல்லி மறைந்து போய்விட்டது: அவன் பரம சந்தோஷம் அடைந்து, அந்த ஸ்திரீயை விவாகஞ் செய்துகொண்டு §க்ஷமமாயிருந்தான்.

"அந்தக் கதையில் சொல்லிய பிரகாரம் ஒருவனுக்கு உத்தம குணமுள்ள பாரி வாய்ப்பாளானால், அதற்குச் சமானமான செல்வம் வேறொன்றுமில்லை. ஞானாம்பாளை அந்த விக்கிரகமென்றே சொல்லலாம். அவளை உனக்கு விவாகம் செய்யும்படி சம்பந்தி முதலியாரைக் கேட்க யோசித்திருக்கிறோம். உன்னுடைய அபிப்பிராயம் என்ன?" என்று என் தாயார் கேட்டார்கள். இதைக் கேட்டவுடனே என் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிக் கண் வழியாய்ப் புறப்பட்டு முகத்திற் பரவிற்று. நான் உடனே என் தாயாரைப் பார்த்து "ஞானாம்பாளைக் கொள்ள எனக்கு ஆ§க்ஷபமில்லை. நீங்கள் அந்தக் கதையை ஒன்பது விக்கிரகங்களோடே முடித்துவிட்டது ஒரு குறைவாயிருக்கிறது. அந்த ஒன்பது விக்கிரகங்களுக்கும் ஆயிரம் பங்கு மேலாகப் பத்தாவது விக்கிரகம் ஒன்று இருக்கிறது. அதையும் கூடச் சேர்த்துவிட்டால், அந்தக் கதை பூரணமாகும்" என்றேன். நான் யாரைக் குறிப்பிட்டுப் பேசினேனென்று என் தாயார் அறிந்துகொண்டு, அந்த ஸ்தோத்திரத்தைக் கேட்க இஷ்டமில்லாமல் போய்விட்டார்கள். நான் சொன்ன பத்தாவது விக்கிரகம் யாரென்றால் என் தாயார்தான்.
---------------

அத்தியாயம் - 12
என்னுடைய சம்மதத்தை என் தாயார் என் தகப்பனாருக்குத் தெரிவித்தவுடனே, என் தகப்பனார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய் ஞானாம்பாளை எனக்குக் கன்னிகாதானஞ் செய்ய வேண்டுமென்று கிரமப்படி கேட்டார். அதற்குச் சம்பந்தி முதலியார், யாதொரு ஆ§க்ஷபமுஞ் சொல்லாமல் உடனே சம்மதித்தார். பிற்பாடு நிச்சயதாம்பூலம் மாற்றுவதற்காக பந்துக்கள், இஷ்டமித்திரர்களுக்கெல்லாம் தாம்பூலம் அனுப்பி, அவர்கள் எல்லாரும் சம்பந்தி முதலியார் வீட்டில் வந்து கூடினார்கள். நிச்சயதாம்பூலம் மாற்றுவதற்குமுன் சம்பந்தி முதலியார் என் பிதாவை நோக்கி "கலியாணத்துக்குப் பின்பு மாப்பிள்ளையும் பெண்ணும் ஆர் வீட்டில் இருக்கிறது?" என்று கேட்டார். உடனே என் தகப்பனார் "இந்த விஷயத்தில் உமக்கென்ன சந்தேகம் வந்தது? மாடு மேய்க்கிறவன் கூட மாமனார் வீட்டில் இருக்க மாட்டானே! என் பிள்ளை உம்முடைய வீட்டில் இருப்பானா?" என்றார். "அப்படியானால் பெண் கொடுக்கச் சம்மதமில்லை" என்று சம்பந்தி முதலியார் சொன்னார். "என் பிள்ளைக்குப் பெண் பஞ்சமா? உன் பெண் வேண்டியதில்லை" என்று என் பிதா மொழிந்தார். சம்பந்தி முதலியார் அவர் பாட்டன் காலமுதற் பிரபுவாகவும், என் தகப்பனார் அவருடைய தகப்பன் காலமுதற் பிரபுவாகவும் இருந்தபடியால், சம்பந்தி முதலியார் தம்மை ஒருபடி உயர்ந்தவராக எண்ணிக்கொண்டு, என் தகப்பனாரைப் பார்த்து "உன் பூர்வோத்தரம் தெரியாதா? உன் தகப்பனுடைய நாள் முதல்தானே நீ பிரபு; அதற்கு முன் உனக்கு ஜாதியேது?" என்று தூஷித்தார். அவரை என் தகப்பனார் "நீ அம்பட்டன் கோத்திரம் அல்லவா?" என்றார். இவரை அவர் "நீ வண்ணான் கோத்திரம் அல்லவா?" என்றார். இப்படியாக "அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர்" என்பதுபோல் இவர்களுடைய சம்வாதத்தால் மறைந்து கிடந்த எங்கள் பூர்வோத்தரங்களெல்லாம் வெளியாகிவிட்டன.

அப்போது எங்கள் பந்துக்களில் ஒரு விருத்தர் கூட இருந்தார்! அவர் யதார்த்தவாதி. அவர் தகப்பன், பாட்டன் காலத்தில் ஒன்றுமில்லாமல் இருந்த காலத்திலே பிரபுவானவர். என் தகப்பனாரும் சம்பந்தி முதலியாரும் தகப்பனார் பாட்டனார் காலத்துப் பிரபுவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டபோது, அந்தக் கிழவனாருக்குக் கோபம் அதிகரித்து அவர்களை நோக்கிச் சொல்லுகிறார்: "நீங்கள் இருவரும் பிரபுக்கள் அல்ல. நான் தான் பிரபு. எவன் பிரபுவத்தைத் தானே சம்பாதிக்கிறானோ, அவன் பெரியவனேயல்லாமல், தகப்பன் பாட்டனிடத்திலிருந்து பிரபுவத்தைச் சுதந்தரிக்கிறவன் எப்படிப் பிரபு ஆவான்? எவன் சுத்த வீரனோ அவனுக்குப் பெருமையேயல்லாது, அப்பன் பாட்டன் சுத்த வீரர்களாயிருந்ததைக் கொண்டு ஒரு பேடிக்குப் பெருமை உண்டாகுமா? எவன் வித்வானோ அவனுக்கு மகிமையேயல்லாமல், அவன் பிள்ளை மூடனாயிருந்தால் அவனுக்கு வித்வான் என்கிற பட்டம் கிடைக்குமா? உங்கள் பாட்டனார் சம்பாதித்த ஆஸ்தி போய்விட்டால், ஒரு காசு முதலாய்ச் சம்பாதிக்க உங்களுக்குத் திறமையுண்டா? வித்தையும் புத்தியும் குணமும் உள்ளவன் தான் உயர்ந்தவனே தவிர அத்தன்மையில்லாதவன் தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வது எப்படியென்றால், தூக்குண்ணும்படி தீர்மானிக்கப் பட்ட ஒரு கொலைகாரன் தூக்கு மரத்தின்மேல் நின்றுகொண்டு, தான் எல்லாரிலும் உயர்ந்தவனென்று சொல்வதற்குச் சமானம்" என்று அந்தக் கிழவனார் ஒரு பக்கத்தில் குறுக்கே யிறங்கிப்பேசத்தலைப்பட்டார். சம்பந்திகள் இருவரும் மரியாதைப்பன்மை போய், அவமரியாதைக்குரிய ஒருமையிலும், டகரப் பிரயோகங்களிலும் வாய்ச்சண்டையிலிருந்து கைச்சண்டையிலும் பிரவேசித்தார்கள். கைச்சண்டையிலிருந்து கத்திச் சண்டையில் பிரவேசிக்க யத்தனமாயிருந்தபோது, கூடியிருந்த பந்துக்கள் நயமான வார்த்தைகளைச் சொல்லி விலக்கிவிட்டார்கள். கடைசியில் சம்பந்தி முதலியார் "என் மகளை ஒரு நாய்க்குக் கொடுத்தாலும் கொடுப்பேனே யல்லாது உன் மகனுக்குக் கொடுக்கிறதில்லை" என்று சபதங் கூறினார். என் தகப்பனார் "என் மகனுக்கு ஒரு கழுதையைக் கொண்டாலும் கொள்ளுவேனேயன்றி, உன் மகளைக் கொள்ளுகிறதில்லை" என்று மார்பு தட்டிக் கொண்டு வந்துவிட்டார். இவ்வகையான எங்களுடைய கலியானம் நாய்ச் சம்பத்தத்திலும் கழுதைச் சம்பத்தத்திலும் முடிந்தது.

அன்று முதல் சம்பந்தி முதலியாருக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமற் போய்விட்டது. அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போகிறதுமில்லை; எங்கள் வீட்டுக்கு அவர்கள் வருகிறதுமில்லை. அவர்களுடைய சிநேகிதர்கள் எங்களுக்கு விரோதிகள்; அவர்களுடைய பகைவர்கள் எங்களுக்கு இஷ்டர்கள். அவர்களுடைய வேலைக்காரர்களுக்கும் எங்கள் வேலைக்காரர்களுக்கும் பகை. அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும் எங்களுடைய ஆடு மாடுகளுக்கும் பகை. இப்படிப் பிரமாதமாகக் கலகம் மூண்டுவிட்டது. ஆனால் இந்தக் கலகத்தில் நானும் ஞானாம்பாளும், என் தாயாரும் அவள் தாயாரும், இந்த நலு பேர் மட்டும் சம்பந்தப்படவில்லை. எங்கள் தாய்மார்கள் தங்கள் கணவர்களைச் சமாதானப்படுத்தக் கூடியவரையில் முயன்றும் பயன்படவில்லை.

சம்பந்த முதலியார் தம்முடைய சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு, பல ஊர்களுக்குக் கடிதம் அனுப்பி, தன் மகளுக்கு மாப்பிள்ளை விசாரிக்க ஆரம்பித்தார். அதைக் கேட்டு என் தகப்பனாரும் பல ஊர்களுக்குக் கடிதம் போக்கி, எனக்குப் பெண் விசாரிக்கத் தொடங்கினார். ஞானாம்பாளைத் தவிர வேறே தேவ ஸ்திரீயாயிருந்தாலும் விவாகஞ் செய்கிறதில்லையென்றும், என் தகப்பனார் பிரயத்தனங்களுக்கு இடங் கொடுக்கிறதில்லையென்றும் எனக்குள்ளே நிச்சயித்துக் கொண்டேன். ஆனால் ஞானாம்பாள் ஸ்திரீ ஜாதி ஆனதால் அவளுடைய தகப்பனார் அவளுக்கு வேறே புருஷனைத் தேடி, பலவந்தமாய்க் கலியாணம் செய்துவிட்டால் என்ன செய்கிறதென்ற கவலை என்னை வாதித்தபடியால், அவளை ரகசியத்தில் எங்காவது அழைத்துப் போய் விவாகஞ் செய்துகொண்டு திரும்பி வருகிறதென்று தீர்மானித்துக் கொண்டு இந்தத் தீர்மானத்தை அவளுக்குக் கடித மூலமாகத் தெரிவித்தேன். நான் எங்கே கூப்பிட்டாலும், அவள் சந்தோஷமாக வருவாளென்றும் யாதொரு ஆ§க்ஷபமும் சொல்ல மாட்டாளென்றும் நம்பி இந்தக் கடிதத்தை அனுப்பினேன். ஆனால் அவளுடைய மறுமொழியைப் பார்த்த உடனே, என்னுடைய ஆசை நிராசையாய்ப் போய் விட்டது. அந்த மறுமொழி வருமாறு:
“என் பிரியமுள்ள அத்தான்,
தாங்கள் அனுப்பிய கடிதத்தைப் பார்த்துத் துக்க சாகரத்தில் முழுகினேன். தாங்கள் எனக்கு எழுதிய கடிதம் போல், ஒரு தாசிக்குக் கூட ஒருவரும் எழுதத் துணியார்கள். என்னிடத்தில் என்ன துர்மார்க்கத்தைக் கண்டு, அப்படிப்பட்ட கடித்தை எனக்கு எழுதினீர்கள்? நாம் இருவரும் எங்கேயாவது போய், அந்தரங்கத்தில் கலியாணத்தை முடித்துக்கொள்ளலாமென்று எழுதி இருக்கிறீர்கள். விவாகம் இல்லாத ஒரு கன்னிகையும் பிரமசாரியும் சேர்ந்துகொண்டு வெளிப்படுவதினால் உண்டாகிற அவமானமும், அபவாதமும் உலகம் உள்ளவரையில் நீங்குமா? என்னை இந்த அவமானத்துக்கு உட்படுத்த, நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்த விஷயத்தில் புருஷர்களுக்குண்டாகிற அவமானத்தைப் பார்க்கிலும், ஸ்திரீகளுக்குண்டாகிற அபவாதம் நூறு பங்கு பெரிதென்று தாங்கள் ஏன் யோசிக்கவில்லை? ஐரோப்பியர்களுக்குள்ளே நடக்கிற காந்தர்வ விவாகத்தைப் புகழ்ந்து பேசுகிறீர்கள். அவர்களுக்குள்ளே பெண்ணுக்கும் புருஷனுக்கும் வயது முதிர்ந்த பின்பு விவாகம் நடப்பதுந்தவிர, விவாகத்துக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் அந்தரங்கத்தில் சந்திப்பதும், சம்பாஷிப்பதும் வழக்கமாயிருக்கின்றது. ஸ்திரீ புருஷர்கள் ஒருவரை ஒருவர் பாராமலே அதிபால்யத்தில் கலியாணம் நடக்கிற வழக்கமுள்ள இத் தேசத்துக்குக் காந்தர்வ விவாகம் தகுதியா?

விவாகத்துக்கு முன்பு ஸ்திரீ புருஷர்களுக்குள் நடக்கிற அந்தரங்க சல்லாபத்தினால் விளைகிற தீமைகளைக் குறித்து, ஐரோப்பியர்களே முறையிடுகிறதுந் தவிர, நியாய ஸ்தலங்களில் வரும் வழக்குகளிலும் அந்தத் தீமைகள் இன்னவையென்று நாம் அறிகிறோமல்லவா? அந்தத் துர்வழக்கத்தை இத்தேசத்துக்குக் கொண்டுவர யாராவது முயற்சி செய்வார்களானால், அவர்கள் தேசாபிமானிகள் அல்லவென்பது ஸ்பஷ்டம். பெரும்பாலும் தாய்தந்தைமார்கள், தங்களுடைய பிள்ளைகளின் நலத்தையே கருதுவார்கள். ஆகையால், தாய் தகப்பன்மார்களுடைய அபிப்பிராயப்படி நடப்பது உசிதமாயிருக்கின்றது. ஆனால் ஆடு மாடுகளுடைய சம்மதத்தைக் கேளாமல், அவைகளை விலை கூறுவது போல், தகுந்த வயது உள்ள பிள்ளைகளுடைய இஷ்டத்தை எவ்வளவும் மதியாமல் தாய் தந்தைமார்கள் தங்கள் இஷ்டப்படி நடத்த முயலுவார்களானால், அப்படிப்பட்ட விவாகத்துக்குச் சம்மதிக்காமல், நிராகரிக்கப் பிள்ளைகளுக்குப் பூரண சுதந்தரம் உண்டாயிருக்கின்றது. தங்களுக்குக் கன்னிகையாகிய நான் கடிதம் எழுதுவது அநுசிதமாயிருந்தாலும், என்னுடைய அபிப்பிராயம் தெரியும் பொருட்டு இந்தக் கடிதம் மட்டும் எழுதினேன். இனிமெல் எழுதமாட்டேன். தாங்கள் ஒருதரம் எனக்குச் செய்த உபகாரத்தையும் மறவேன்.
இங்ஙனம்,
தங்கள் விதேயை
ஞானாம்பாள்.

இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனே, என்னுடைய புத்தி எந்த ஸ்திதியில் இருந்திருக்குமென்று நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள். இந்தக் கடிதத்தைத் திருப்பித் திருப்பி ஆயிரந்தரம் படித்தேன். நான் என்னுடைய கடிதத்தை எவ்வளவு நம்பிக்கையோடு கூட எழுதியிருந்தேனோ, அவ்வளவுக்கு அவளுடைய மறுமொழி முழுதும் பிரதிகூலமாயிருந்தது. என்னை விவாகஞ் செய்துகொள்ள அவள் சம்மதம் உள்ளவளென்பதுகூடச் சந்தேகத்தில் வந்துவிட்டது. ஆனால் தகுந்த பிராயமுள்ள பிள்ளைகளுடைய இஷ்டத்தைத் தாய்தகப்பன்மார்கள் எவ்வளவும் கவனிக்காவிட்டால், அப்படிப்பட்ட விவாகத்தைப் பிள்ளைகள் நிராகரிக்கலாமென்று அவள் எழுதிய ஒரு வாக்கியமட்டும், கொஞ்சம் நம்பிக்கைக்கு ஆஸ்பதமாயிருந்தது. தண்ணீரில் வீழ்ந்து தத்தளிக்கிறவர்கள் ஒரு துரும்பு அகப்பட்டாலும் அதைப் பிடிப்பதுபோல, நான் அந்த அற்ப நம்பிக்கையைக் கொண்டு என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். அவளுடைய கடிதத்தின் முதற்பாகங்கள் கோபமாயிருந்தாலும், “நீங்கள் செய்த உபகாரத்தை மறவேன்” என்கிற கடைசி வாக்கியத்தைக் கொண்டு அவள் கோபம் தணிந்துவிட்டதாக நிச்சயித்துக் கொண்டேன்.
----------

அத்தியாயம் - 13
ஞானாம்பாள் என்னைத் தவிர வேறொருவருக்கு மாலை சூட்டச் சம்மதியாளென்று நான் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போது சம்பந்தி முதலியார் ஒரே பிடிவாதமாய்ப் பல இடங்களில் விசாரித்து முடிவில் தன் மகளைத் திருநெல்வேலியிலிருக்கும் வீரப்ப முதலியார் குமாரன் சந்திரசேகர முதலிக்கு விவாகஞ் செய்யத் தீர்மானித்தார். அதனைக் கேள்விப்பட்ட உடனே என் தகப்பனாருக்கு ஆக்கிரகம் உண்டாகி, எனக்குக் கோயமுத்தூரிலிருக்கும் சொக்கலிங்க முதலியார் மகள் பூங்காவனத்தை மணஞ் செய்கிறதென்று நிச்சயித்தார். சித்திரை இருபத்தி எட்டாந் தேதி காலை ஆறு மணிக்குச் சுபமுகூர்த்தம் செய்கிறதென்று சம்பந்தி முதலியார் நிர்ணயித்தார். அதைக் கேள்விப்பட்ட என் தகப்பனாரும், அந்தத் தினத்தில் அந்த முகூர்த்தத்தில் என்னுடைய விவாகத்தை நிறைவேற்றுகிறதென்று நிர்ணயித்தார். அந்த கலியாணத்தைத் தடுக்க, என் தாயார் கூடியவரையில் பிரயாசப் பட்டார்கள். சம்பந்தி முதலியாருடைய வைராக்கியத்தினாலே என் தகப்பனாருடைய வைராக்கியமும் முற்றி என் தாயார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போகவேண்டாமென்று என் தகப்பனார் கட்டுப்பாடு செய்துவிட்டபடியால் என் தாயார் தம்முடைய தமையனாராகிய சம்பந்தி முதலியாரைச் சமாதானப் படுத்தவும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.

எங்கள் ஊருக்கு நாலுகாத வழிதூரத்தில் சம்பந்தி முதலியாருக்கும் எங்களுக்கும் பொதுவாக, பூங்காவூரென்கிற பெயருள்ள ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் இருக்கிற பெரிய மெத்தை வீட்டில் தென்பாதி அவருக்கும் வடபாதி எங்களுக்கும் சொந்தம். சம்பந்தி முதலியார் ஆரம்பித்த கலியாணத்திற்குப் பெண்கள் விவாதம் செய்வதால் உள்ளூரிலே கலியாணஞ் செய்யக்கூடாதென்றும், மேற்படி பூங்காவூர் கிராமத்தில் தம்முடைய பெண்ஜாதி வீட்டில் கலியாணம் செய்கிறதென்றும் நிச்சயித்து, அந்தக் கிராமத்துக்கே நேராய் வந்து சேரும்படி திருநெல்வேலி வீரப்ப முதலியாருக்ுச் சம்பந்தி முதலியார் கடிதம் அனுப்பினார். அந்தச் சமாசாரம் என் தகப்பனார் கேள்விப்பட்டு, அவரும் அந்தக் கிராமத்தில் எங்களுடைய வடபாதி வீட்டில் என்னுடைய கலியாணத்தை நிறைவேற்றுகிறதென்று சங்கற்பித்துக் கொண்டு அந்தக் கிராமத்துக்கே பெண் வீட்டுக்காரர்கள் நேராய் வரும்படி கோயமுத்தூருக்குக் கடிதம் அனுப்பினார். சம்பந்தி முதலியார் கலியாணத்துக்கு வேண்டிய சில சாமான்கள் சேகரஞ் செய்து அந்தக் கிராமத்துக்கு அனுப்பினார். என் தகப்பனாரும் முக்கியமான தளவாட சாமான்களையும், அரிசி, பருப்பு, நெய் முதலிய புசிகரணங்களையும் அனுப்பினார். இருவரும் அந்தக் கிராமத்து வீட்டில், அவரவர்கள் பாதியில் பந்தல் போடும்படி திட்டஞ் செய்து அதுவும் முடிந்தது. இந்தக் கலியாண ஆடம்பரங்களையெல்லாம் பார்த்த உடனே ஞானாம்பாளை இழந்துவிட்டோமென்கிற துக்கம் அதிகரித்து, ஒரு தரித்திரன் நெடுங்காலந் தவஞ்செய்து பெற்றுக்கொண்ட திரவியத்தை மறுபடியும் இழந்து விட்டாற்போல அளவற்ற துக்கம் உடையவன் ஆனேன். இவ்வகையாக நான் மனங்கலங்கிக் கொண்டிருக்கும்போது, அந்தக் கலியாணத்துக்கு ஒரு இடையூறு சம்பவித்தது. அ·தென்னவெனில், கலியாணத்துக்கு எட்டுத் தினங்களுக்கு முந்தி சம்பந்தி முதலியார் வீட்டில் அவர் தாயாதிகளில் ஒருவர் இறந்துபோய்த் துக்கம் நேரிட்டு, அதனால் அந்தக் கலியாணத்தைத் தாமதப்படுத்தும்படி சம்பவித்ததால், மாப்பிள்ளை வீட்டார் இப்போது வரவேண்டாமென்று சம்பந்தி முதலியார் திருநெல்வேலிக்கு உடனே கடிதம் அனுப்பிக் கலியாணத்தை நிறுத்திவிட்டார். எங்களுக்கும் அந்தத் துக்கம் உண்டானதால் அந்த விவகாரத்தைக் கண்டு என் தகப்பனாரும் கோயமுத்தூருக்குக் கடிதம் அனுப்பி, தற்காலம் கலியாணத்தை நிறுத்திவிட்டு நிச்சிந்தையாயிருந்தார். கலியாணத்துக்கு முஸ்திப்புச் செய்யப் பூங்காவூருக்குப் போயிருந்த எங்கள் காரியஸ்தர்களும், துக்கம் விசாரிப்பதற்காகச் சத்தியபுரிக்குத் திரும்பிவந்து விட்டார்கள்.

கலியாணம் நிறுத்தலாய்ப் போன விஷயத்தைப்பற்றிக் கோயமுத்தூருக்கு எழுதிய கடிதம் போய்ச் சேர்ந்திருக்குமென்றும், பெண் வீட்டுக்காரர்கள் பயணத்தை நிறுத்தியிருப்பார்களென்றும் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். அப்படியிருக்க எங்களுடைய முந்தின கடிதப்படி பெண்வீட்டுக்காரர்களும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் பூங்காவூருக்கு வந்து அந்த முகூர்த்தத்தில் ஏதோ ஒரு கலியாணம் நடப்பிப்பதாக எங்கே பார்த்தாலும் ஏகப் பிரஸ்தாபமாகப் பேசிக்கொண்டார்கள். நானாவது ஞானாம்பாளாவது அந்த ஊருக்குப் போகாமலிருக்கக் கலியாணம் எப்படி நடக்கக் கூடுமென்று நாங்கள் ஐயுறவுப் பட்டுக்கொண்டிருக்கும் போது, எனக்குக் குறிப்பிட்ட பெண்ணின் தகப்பனாராகிய சொக்கலிங்க முதலியார், முந்திக் குறிக்கப்பட்ட முகூர்த்த தினத்திற்கு மூன்று நாளைக்குப் பின்பு எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் ஒருவருக்கும் அறிமுகமில்லாதபடியால், அவரை “யார்” என்று என் தகப்பனார் வினவ, அவர் “நான் தான் கோயமுத்தூர் சொக்கலிங்க முதலி; பெரிய வீடென்று பி¨க்ஷக்குப் போனால் கரியை அரைத்து மூஞ்சியில் தடவுவதுபோல் என்னை மோசஞ்செய்யலாமா?” என்று மிகவும் பரிதாபமாகச் சொன்னார். அதற்கு என் தகப்பனார் “துக்க நிமித்தம் கலியாணம் நின்று போன விஷயத்தைப் பற்றி உமக்குக் கடிதம் எழுதியிருந்தேன்; அது வந்து சேரவில்லையா?” என்றார். அதற்கு அவர், “அந்தக் கடிதம் வந்து சேரவில்லை. உங்களுடைய முந்தின கடிதப்பிரகாரம் நானும் பெண் முதலானவர்களும் புறப்பட்டு, முகூர்த்தத்திற்குச் சற்று நேரத்திற்கு முன் பூங்காவூருக்கு வந்து சேர்ந்தோம். அப்போது தான் திருநெல்வேலி வீரப்ப முதலியாரும், மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்களை எங்களுக்குத் தெரியாது; எங்களை அவர்களும் அறியமாட்டார்கள். அந்தக் கிராமத்திலிருக்கிற வீடு உங்களுக்கும் சம்பந்தி முதலியாருக்கும் பொதுவென்பதும், நீங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அந்த வீட்டில் ஒரே முகூர்த்தத்தில் இரண்டு கலியாணஞ் செய்ய யோசித்திருப்பதும் எங்களுக்குத் தெரியாது. மாப்பிள்ளையும் பெண்ணும் வந்து சேர்ந்தவுடனே அந்த மாப்பிள்ளை தான் என் பெண்ணுக்குக் குறிப்பிட்ட உங்கள் மகனென்று நான் எண்ணிக்கொண்டேன். என் பெண்ணைச் சம்பந்தி முதலியாருடைய பெண்ணென்று மேற்படி வீரப்ப முதலியாரும் எண்ணிக் கொண்டார். எங்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த அவ்விடத்தில் வேறே மனுஷர்களில்லை. அந்த வீட்டில் கலியாணப் பந்தல் முதலிய சிறப்புகள் செய்யப்பட்டிருந்ததுமன்றி, போஜன பதார்த்தங்களும் சித்தமாயிருந்தபடியால் அந்தத் தினத்தில் முகூர்த்தம் நிச்சயந்தானென்று நினைக்கும்படியாயிருந்தது. உங்களுடைய அந்தஸ்துக்குத் தக்க அலங்காரம் இல்லாதிருந்தபோதிலும் பெண்களுக்குள்ளே கலகமென்று நீங்கள் எழுதியிருந்தமையால், அந்தக் கலகமே அலங்காரக் குறைவுக்குக் காரணமென்று நினைத்துக் கொண்டோம். முகூர்த்த நேரம் வந்துவிட்டதால் இனித் தாமதிக்கக் கூடாதென்று எங்களுடன் கூட வந்த புரோகிதப் பிராமணர்கள் ஒரு பக்கத்தில் அலப்பினார்கள். உங்களுடைய சம்பந்தங் கிடைப்பது அரிதாகையால் “அவசரக் காரனுக்குப் புத்திமட்டு” என்பதுபோல் நாங்கள் உடனே கலியாணத்தை ஆரம்பித்து அந்த மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அந்த முகூர்த்தத்திலே விவாகம் நிறைவேற்றி, மாங்கல்ய தாரணமும் ஆய்விட்டது. பிற்பாடு, நானும் அந்த மாப்பிள்ளை வீட்டுக் காரர்களும், கலந்து யோக §க்ஷமங்களைப் பற்றிச் சம்பாஷிக்கத் தொடங்கினபோது, அந்த மாப்பிள்ளை இந்த ஊர்ச் சம்பந்தி முதலியார் பெண்ணுக்கு உத்தேசிக்கப்பட்ட மாப்பிள்ளையென்று எனக்கும், என் பெண் உங்களுடைய மகனுக்காகக் குறிக்கப்பட்ட பெண்ணென்று திருநெல்வேலி வீரப்ப முதலியாருக்கும் தெரிந்து நாங்கள் பட்ட கிலேசம் கடவுளுக்குத்தான் தெரியும். கலியாண வீடு துக்கவீடாகி நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழும்படியான ஸ்திதியில் வந்துவிட்டோம். ஏனென்றால் "அஷ்ட தரித்திரம் ஆத்தாள் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு" என்பது போல நானும் அந்த வீரப்ப முதலியாரும் பரம ஏழைகள். உங்களுடைய சம்பந்தத்தைப் பெரிதாக எண்ணி நான் வந்தது போலவே, இந்த ஊர்ச் சம்பந்தி முதலியாருடைய சம்பந்தத்தை விரும்பியே வீரப்ப முதலியாரும் ஆவலுடன் வந்தார். நாங்கள் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. இனி என்ன செய்வோம்?” என்று சொக்கலிங்க முதலியார் துக்கலிங்க முதலியாராய்ப் புலம்பி அழுதார்.

இந்த வர்த்தமானங்களைக் கேட்டவுடனே, மரண தண்டனை அடையும்படி தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு அந்தத் தண்டனை நிவர்த்தியானால் எவ்வளவு சந்தோஷம் உண்டாகுமோ, அவ்வளவு சந்தோஷத்தை அடைந்தேன். என் தந்தையாருக்குப் பெரிய ஆச்சரியமும் விசனமும் உண்டாயிற்று. என் தாயாருக்கு ஒரு பக்கத்தில் இரக்கமும், ஒரு பக்கத்தில் சந்தோஷமும் ஜனித்தன. உடனே என் தாயார் சொக்கலிங்க முதலியாரைப் பார்த்து “காரியம் முடிந்த பிற்பாடு இனி என்ன செய்யலாம்? நீங்கள் விசனப்பட வேண்டாம். நீங்கள் எங்களை நம்பிக் கோயமுத்தூரிலிருந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டபடியால், உங்களுக்கு நேரிட்ட வழிச் செலவு முதலியவைகளை ஒத்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லி என் தகப்பனாருடன் ஆலோசித்து, ஆயிரம் வராகன் சொக்கலிங்க முதலியாருக்ுக் கொடுத்தார்கள்; உடனே அவர் திருப்தியாகிவிட்டார். அப்படியே வீரப்ப முதலியார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய்க் காரியங்களைச் சொல்லி முறையிட்டுக் கொண்டதினால் அவருக்கும் ஆயிரம் வராகன் கிடைத்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். இவ்வகையாக எனக்குக் குறித்த பெண்ணாகிய பூங்காவனத்துக்கும் ஞானாம்பாளுக்குக் குறித்த மாப்பிள்ளையாகிய சந்திரசேகர முதலியாருக்கும் முகூர்த்தம் நிறைவேறி, நானும் ஞானாம்பாளும் எங்கள் பூர்வ ஸ்திதிக்குக் குறைவில்லாமலிருந்தோம். என்னுடைய பிரமசாரித்துவமும் நீங்கவில்லை. ஞானாம்பாளுடைய கன்னிமையுங் கழியவில்லை. எங்களுக்கு நெடுங்காலம் அநுபந்தம் உள்ள சம்பந்தி முதலியாருடைய சம்பந்தத்தை நீக்கி, அந்நிய சம்பந்தஞ் செய்ய ஆரம்பித்தது, தெய்வத்துக்குச் சம்மதம் இல்லாதபடியால் அது தவறிப் போய்விட்டதாக என் தாயார் தகப்பனாருக்கு அடிக்கடி சொல்லி வந்தபடியால், என் தகப்பனார் மறுபடியும் பக்கத்திலே பெண் விசாரிக்காமல் ஆலசியமாயிருந்து விட்டார். ஞானாம்பாளைக் கன்னிகாதானஞ் செய்யும்படி சம்பந்தி முதலியாருக்குப் பல ஊர்களிலிருந்து கடிதங்கள் வந்தும் அவர் வீட்டுப் பெண்டுகளுடைய இடைவிடாத முயற்சியினால் அவர் அந்தக் கடிதங்களுக்கு யாதொரு மறுமொழியும் அனுப்பாமல் அசிரத்தையாய் இருந்துவிட்டதாகக் கேள்விப்பட்டோம்.
-------------

அத்தியாயம் - 14
கோடை நாட்களில் குடும்ப சகிதமாய்க் கிராமாந்தரம் போய்ச் சில நாள் வசிப்பது எங்கள் வழக்கமாயிருந்தது. அந்த வழக்கப்படி அந்த வருஷம் நாங்கள் எங்கும் போகவில்லை. சம்பந்தி முதலியார் எங்கள் ஊருக்கு வடபுறத்தில் இரு காதவழி தூரத்திலிருக்கிற அவருக்குச் சொந்தமான பனம்பள்ளிக் கிராமத்துக்குக் குடும்ப சகிதமாய்ப் புறப்பட்டு அநேகம் வண்டிகள் குதிரைகள் பல்லக்குகளுடன் போனார். அங்கே சில நாளளவு தங்கியிருந்து ஒரு நாள் விடியற்காலத்தில் அந்தக் கிராமத்தை விட்டுப் புறப்பட்டு அவர்கள் எல்லோரும் சத்தியபுரியில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்து சேர்ந்த சற்று நேரத்திற்குப் பின்பு, அவர்கள் வீட்டிலிருந்து ஜனங்கள் அங்குமிங்கும் ஓடுவதும் கூக்குரலுமாக இருந்தது. நான் என் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டு என்ன சப்தமென்று விசாரித்தேன். பனம்பள்ளிக் கிராமத்துக்குப் போன எல்லோரும் திரும்பி வந்து வந்துவிட்டதாகவும், ஊருக்கு வந்தபிற்பாடு ஒரு பல்லக்கிலாவது ஞானாம்பாள் இல்லையென்றும் அவள் காணாமல் போயிருக்கிற காரணந் தெரியாமையினால் அவளைத் தேடுவதற்காகப் பல இடங்களுக்கும் ஆட்கள் ஓடுவதாகவும், நான் கேள்வியுற்று அப்படியே திகைத்துத் திடுக்கிட்டுச் சற்று நேரம் மதிமயங்கியிருந்தேன். பிற்பாடு என் தேகம் நிலைகொள்ளாமல் எழுந்து, நானும் என் இஷ்டர் ஒருவரும் இரண்டு பெரிய குதிரைகளின் மேலே ஏறிக்கொண்டு ஆயுதபாணிகளாய் வடக்கே நோக்கிப் புறப்பட்டோம். ஞானாம்பாளைத் தொடர்ந்து கொண்டு ஓடுவதுபோல் அதிவேகமாகச் சென்று பல இடங்களிலும் தேடி ஆராய்ந்துகொண்டு பனம்பள்ளி கிராமத்துக்குப் போய் விசாரித்தோம். அங்கும் ஞானாம்பாள் இல்லையென்று தெரிந்து உடனே புறப்பட்டு வடக்கு ரஸ்தா வழியே போனோம். அந்தக் கிராமத்துக்குக் காதவழி தூரத்தில், அஸ்தமிக்கிற சமயத்தில் ஒரு சிறிய சகடம் ரஸ்தாவில் கொஞ்ச தூரத்தில் எங்களுக்கு நேரே வந்தது. அந்த வண்டியை நாலு பேர் வளைத்துக் கொண்டு, தெற்கே வருகிற வண்டியைப் பலவந்தமாய் வடக்கே திருப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் குதிரையின் மேலும், இரண்டு பேர் பாதசாரிகளாயும் இருந்தார்கள். அவர்கள் வண்டியைத் திருப்பும்போது அந்த வண்டியிலிருந்து பெண்களுடைய கூக்குரல் ஒலி கிளம்பிற்று. அந்த துஷ்டர்கள் நாங்கள் வருவதைப் பார்த்தவுடனே, குதிரையின் மேலிருந்த இருவர்களும் கத்திகளை உருவிக் கொண்டு எங்களை வெட்டுவதற்காக ஓடி வந்தார்கள். அவர்கள் எங்கள் சமீபத்தில் வருவதற்குமுன், குண்டுகள் போட்டுக் கெட்டிக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை அவர்கள் மேலே பிரயோகித்தோம். குதிரையின் மேலிருந்த இருவர் தேகங்களிலும் குண்டுகள் பட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள். அவர்களைப் போய் வளைக்கும்படி என்னுடைய நேசருக்குச் சொல்லிய பின்பு வண்டியிலிருக்கிற ஸ்திரீகள் இன்னாரென்று அறியும் பொருட்டு, நான் குதிரையை விட்டுக் கீழே குதித்து வண்டிக்குப் பின்புறத்திலே போனேன். அந்த வண்டியிலிருந்த இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி என்னைக் கண்டவுடனே பெருஞ்சப்தமாய்க் கூவிக்கொண்டு வண்டியை விட்டுக் கீழே விழுந்தாள். அந்தச் சத்தம் ஞானாம்பாளுடைய குரலாயிருந்ததால் அவளை என் கையாலே தூக்கி நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தேன். அவள் தேகத்தில் ஒரு ஆபரணமுமில்லாமல் ஆண்டிச்சிகள் போலக் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு, முகத்திலே எதையோ பூசிக்கொண்டு, அழுக்குப் படிந்த தங்கப் பிரதிமை போல் உருமாறியிருந்தாள். அவளைப் பார்த்து “ஞானாம்பாள்! ஏனிப்படி யிருக்கிறாய்?” என்று கேட்டேன். அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டு “என்னைச் சீக்கிரத்தில் பனம்பள்ளிக் கிராமத்துக்குக் கொண்டுபோய்ச் சேருங்கள். சகல காரியங்களையும் பிற்பாடு தெரிவிக்கிறேன்” என்று நடு நடுங்கிக் கொண்டு சொன்னாள். அவளை உடனே தூக்கி வண்டியில் உட்காரவைத்து வண்டியைச் சீக்கிரமாக விடும்படி வண்டிக்காரனுக்கு உத்தரவு கொடுத்து, நான் குதிரையின் மேலேறிக் கொண்டு நானும் என்னுடைய சிநேகிதரும் வண்டிக்கு முன்னும் பின்னுமாகப் போனோம். குண்டு போட்டு மாண்டுபோனவர்களுடன் பாதசாரியாய் வந்த இருவர்களையும் பின்கட்டு முறையாகக் கட்டி அவர்களையும் கூடக் கொண்டுபோனோம். அன்று இராத்திரி எட்டு மணிக்குச் சம்பந்தி முதலியாருடைய பனம்பள்ளி கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அவ்விடத்திலே சம்பந்தி முதலியாரும் பின்னும் அநேகரும் ஏகமாய்க் கூட்டங்கூடி மூலைக்கு மூலை ஆள் அனுப்பியும் ஒரு செய்தியுந் தெரியாமல், அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். ஞானாம்பாளைக் கண்ட மாத்திரத்தில் அவளைக் கட்டிக்கொண்டு சம்பந்தி முதலியாரும் அவர் பத்தினி முதலானவர்களும் பட்ட துயரமும் அழுத அழுகையும் இவ்வளவென்று சொல்லி முடியாது. அவள் உருமாற்றமாய் அப்போதிருந்த கோலத்தைப் பார்த்தவர்கள் யார்தான் மனம் இளகாமலிருப்பார்கள்? அவள் அன்றைய தின முழுதும் அன்ன பானாதிகள் இல்லாமல் பசிக்களையாயிருப்பதாகத் தெரிந்து, உடனே அவளையும் அவளுடன் கூடவந்த ஆண்டிச்சியம்மாளையும் ஸ்னானம் செய்யும்படி சொல்லி அவர்கள் போஜனஞ் செய்த பிற்பாடு அன்றைய தினம் நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லும்படி நாங்கள் கேட்க ஞானாம்பாள் சொல்லத் தொடங்கினாள்.

“இன்றைய தினம் விடியற்காலம் நாலு மணிக்கு இந்தக் கிராமத்திலிருந்து, எல்லாரும் நம்முடைய ஊருக்குப் பிரயாணமாகும்போது நானும் எழுந்து வெளியே வந்து எந்தப் பல்லக்கில் ஏறிக்கொள்ளலாமென்று பார்த்து வருகையில் சில சிவிகையார் ஒரு பல்லக்கை எனக்குக் காட்டி “இதில் ஏறிக் கொள்ளுங்கள் அம்மா” என்றார்கள். நான் உடனே அந்தப் பல்லக்கில் ஏறிக்கொண்டு, அப்போது அதிக இருட்டாயிருந்ததனால் கதவை மூடிக்கொண்டு பல்லக்கிலே படுத்துக்கொண்டேன். பல்லக்குத் தூக்குகிறவர்கள் வழக்கப்படி சப்தமிட்டுக்கொண்டு ஓடினார்கள். நான் உடனே கண்ணை மூடிக்கொண்டு நித்திரை போய்விட்டேன். பிற்பாடு சூரியோதய நேத்தில் நான் விழித்துப் பல்லக்கின் கதவைத் திறந்து பார்த்தபோது, தெற்குமுகமாகப் போக வேண்டிய பல்லக்கு வடக்குமுகமாய் ஓடிக்கொண்டிருப்பதாகத் தெரிந்தது. மற்றப் பல்லக்குகளும் வண்டி குதிரை முதலிய வாகனங்களும் கூட வருகின்றனவாவென்று அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் எட்டி எட்டிப் பார்த்தேன். என் பல்லக்கைத் தவிர வேறே ஒரு வாகனத்தையாவது சொந்த மனுஷர்களையாவது நான் பாராதபடியால் எனக்குச் சந்தேகமுண்டாகி சிவிகையாரைக் கூப்பிட்டு “பல்லக்கு வடக்கே போவதற்குக் காரணம் என்ன” வென்றும், “மற்ற வாகனங்களெல்லாம் எங்கே” யென்றும் கேட்டேன். அவர்கள் மாறுத்தரம் சொல்லாமல் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். வழியில் யாராவது வந்தால் அவர்களை விசாரிக்கலாமென்று இரு பக்கமும் பார்த்துக் கொண்டு போனேன். வெகு தூரம் வரையில் ஒருவரும் வரவில்லை. இன்னது செய்கிறதென்று தெரியாமல் நான் திகைத்துப் போயிருக்கும்போது சிவிகையார் ரஸ்தாவுக்கு மேற்கே கொஞ்ச தூரத்தில் ஒரு கள்ளுக் கடையைக் கண்டு, கள்ளுக் குடிப்பதற்காகப் பல்லக்கை ரஸ்தாவில் நிறுத்திவிட்டுக் கள்ளுக் கடைக்குப் போய்விட்டார்கள். தப்புவதற்குச் சமயம் இது தானென்றும் இது தப்பினால் வேறு சமயம் வாய்க்காதென்றும் எண்ணி, உடனே நான் கீழ்ப்புறத்துக் கதவைத் திறந்துகொண்டு கீழே குதித்து அந்தக் கதவை மூடிவிட்டுப் பல்லக்கின் மறைவிலேபோய் ரஸ்தாவுக்குக் கீழ்ப்புறமிருக்கிற காட்டுக்குள் நுழைந்துவிட்டேன். அது அடர்ந்த காடானதால் அதற்குள்ளே இருக்கிறவர்களை ஒருவரும் கண்டுபிடிக்க முடியாது. என்னுடைய காலில் இருந்த பாதரஸம், தண்டை முதலியவைகள் சப்திக்காதபடி அவைகளைக் கழற்றி மடியில் வைத்துக் கொண்டு முள்ளிலும் கல்லிலும் விழுந்து ஓட ஆரம்பித்தேன். அந்தக் காட்டில் மனுஷருடைய கால் அடியே இல்லாதபடியால் நான் குறுக்கே விழுந்து எனக்குச் சக்தி உள்ளமட்டும் ஓடினேன். மரக் கொம்புகள் என் மயிரைப் பிடித்திழுக்க செடிகளெல்லாம் சேலையைக் கிழிக்க முன்னேயிருக்கிற மரம் முட்டித் தள்ளப் பின்னேயிருக்கிற மரம் பிடித்துத் தள்ளப் பக்கத்து மரங்கள் பாய்ந்து தாக்க இவ்வகையாக நான் வெகுதூரம் ஓடின பிற்பாடு கொஞ்ச தூரத்தில் ஒரு சிறிய மண்டபத்தைக் கண்டு அதற்கு நேரே ஓடினேன். அந்த மண்டபத்தில் இந்த ஆண்டிச்சி அம்மாளைத் தவிர வேறொருவரும் இல்லை.இந்த அம்மாள் என்னைக் கண்ட உடனே “நீ ஆர் அம்மா! உன்னைப் பார்த்தால் பரதேவதை போல் இருக்கிறதே! நான் பூசை செய்து வந்த தெய்வம் பெண் வடிவங்கொண்டு பிரத்தியக்ஷமாய் வந்ததுபோல் இருக்கிறதே!” என்று என்னை ஸ்தோத்திரம் செய்தார்கள். நான் அந்த அம்மாளுக்கு நமஸ்காரஞ்செய்து “நான் தெய்வம் அல்ல. மனுஷி தான்” என்று நடந்த காரியங்களெல்லாம் தெரிவித்து என்னை ரக்ஷ¢க்கவேண்டுமென்று பிரார்த்தித்தேன். அவர்கள் மனம் இரங்கி “என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். “எப்படியாவது என்னைப் பனம்பள்ளி கிராமத்துக்குக் கொண்டுபோய் விடவேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்தேன். அந்தத் துஷ்டர்கள் துரத்திக் கொண்டு வந்தால் என்னைக் கண்டுபிடிக்காதபடி, ஆபரணங்களையெல்லாம் கழற்றி ஒரு துணியில் முடிந்து கொண்டு, ஒரு காவி வஸ்திரத்தை எனக்குத் தரிப்பித்து என்னை உருமாற்றி, அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். நாங்கள் தெற்குமுகமாய்ப் போகிற ஓரடிப் பாதைவழியாய் வெகுநேரம் நடந்தபிற்பாடு ரஸ்தாவில் வந்துசேர்ந்தோம். அந்த ரஸ்தாவில் நடக்க எனக்கு மனமே இல்லை. ஆயினும் வேறே மார்க்கம் இல்லாதபடியாலும் எனக்குக் கால் நடக்கக் கூடாமல் வீக்கமா யிருந்தபடியால் வழியே ஒருபாய் வண்டியை வாடகைக்கு அமர்த்தி, அதன்மேலே நாங்கள் இருவரும் ஏறிக்கொண்டு அதிக நடுக்கத்துடன் செல்லும்பொழுது அஸ்தமிக்கிற சமயத்தில் வடக்கே இருந்து இரண்டு குதிரைக்காரர்களும் இரண்டு காலாட்களும் ஓடிவந்தார்கள்; அவர்களைப் பார்த்த உடனே புலியைக் கண்ட பசு போல் நாங்கள் பயந்து பாதிப் பிராணனாய்ப் போய் விட்டோம். அவர்கள் வண்டிக்குப் பின்னே வந்து, என்னை உற்றுப் பார்த்து, எப்படியோ நான் தானென்று கண்டுபிடித்துக் கொண்டு, வண்டியை வடக்கே திருப்பச் சொல்லி வண்டிக்காரனை அடித்தார்கள். அந்தச் சமயத்தில் அத்தானும் அவருடைய சிநேகிதரும் குதிரைமேல் ஏறிக்கொண்டு தெற்கே இருந்து ஓடிவந்தார்கள். அவர்களை வெட்டுவதற்காக வடக்கே இருந்து வந்த இரண்டு குதிரைக்காரர்களும் கத்தியை உருவிக்கொண்டு நெருங்கினார்கள். உடனே அவர்கள் மேலே அத்தான் பிரயோகித்த குண்டுகள் பட்டு அவர்கள் கீழே விழுந்துவிட்டார்கள். பிற்பாடு நடந்த சங்கதிகளெல்லாம் அத்தானைக் கேட்டால் தெரியும் அந்தச் சமயத்தில் அத்தான் வந்து உதவாவிட்டால் என்னை மறுபடியும் நீங்கள் காணமாட்டீர்கள்” என்று ஞானாம்பாள் சொல்லி முடித்தாள்.
-----------

அத்தியாயம் - 15
ஞானாம்பாள் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கிறவரையில் என்னை ஒருவரும் கவனிப்பார் இல்லை. அவள் பிரஸ்தாபித்த மாத்திரத்தில் எல்லாருடைய கண்களாகிய வண்டுகள் என்னுடைய முகத் தாமரைமேலே மொய்க்க ஆரம்பித்தன. சம்பந்தி முதலியார் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு செய்த ஸ்தோத்திரங்களுக்கு அளவு சங்கியையில்லை. அவர் சந்தோஷத்தினால் என்னை எவ்வளவு இறுகக் கட்டிப்பிடித்தாரென்றால், நான் மூச்சுவிட இடம் இல்லாமல் திக்குமுக்காட ஆரம்பித்தேன். நான் அவர் பிடித்த பிடியைத் திமிரிக்கொண்டு அவரைப் பார்த்து “ஞானாம்பாளைக் கொண்டு போனவர்கள் இன்னாரென்று தெரியவில்லை. வடக்கே இருந்து வந்து ரஸ்தாவில் ஞானாம்பாளை வளைத்துக் கொண்ட நாலு பேர்களில் குண்டுபட்டு விழுந்துவிட்டவர்கள் போக, மற்ற இரண்டு பேர்களையும் பிடித்துக் கட்டிக்கொண்டு வந்திருக்கிறோம். அவர்களை விசாரித்தால் உண்மை தெரியலாம்” என்று சொன்னேன். எல்லாரும் நான் சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டு, அந்த இருவரையும் விசாரிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறான்; “நாங்களிருவரும் பூங்காவூர்த் தாசில்தாருடைய சேவகர்கள். அவர் இந்த அம்மணியினுடைய அழகையும் குணாதிசயங்களையும் கேள்விப்பட்டுத் தான் மணஞ்செய்துகொள்ள வேண்டுமென்று விருப்பமானார். அதைக் குறித்துத் தங்களுக்குப் பல கடிதங்கள் அனுப்பியும், தாங்கள் அநுகூலமான மறுமொழி அனுப்பாமையால், எப்படியாவது இந்தப் பெண்ணரசியைக் கொண்டுபோய் விவாகம் செய்கிறதென்று நிச்சயித்து, அதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். நீங்கள் இந்தக் கிராமத்துக்கு வந்திருந்து, மறுபடியும் உங்கள் ஊருக்கு நடுச்சாமத்திலே போகிறீர்கள் என்று அவர் கேள்வியுற்று எங்களையும் ஒரு பல்லக்கையும் அதி ரகசியமாய் அனுப்பி, எவ்விதத்திலும் இந்த மனோன்மணியைக் கொண்டுவரும்படி உத்தரவு கொடுத்தார். அந்தப்படி நாங்கள் நேற்றையத் தினம் பாதிச்சாமத்தில் வந்து சேர்ந்து இந்த வீட்டிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த அநேகம் பல்லக்குகளின் மத்தியில் நாங்கள் கொண்டுவந்த பல்லக்கையும் வைத்துவிட்டு மற்றவர்களைப் போல நாங்களும் படுத்துத் தூங்கினோம். விடிந்து போனால் எங்களுடைய மோசம் வெளியாகுமென்று நினைத்து இருட்டிலே பயணம் புறப்படும்படி நாங்களே மற்றவர்களை யெழுப்பிவிட்டோம். உங்கள் வீட்டு அம்மாமார்கள் எல்லாரும் தனித்தனியே ஒவ்வொரு பல்லக்கின் மேலே ஏறிக்கொண்டார்கள். இந்த அம்மணி வீட்டுக்குள்ளிருந்து, வெளியே வந்தவுடனே எங்களுடைய பல்லக்கின் கதவைத் திறந்து அதில் ஏறிக்கொள்ளும்படி சொன்னோம். இந்த அம்மணி கபடம் இல்லாமல் எறிக்கதவைச் சாத்திக்கொண்டு தூங்கிவிட்டார்கள். அந்தப் பல்லக்கைச் சிவிகையார் தூக்கிக்கொண்டு ஓடும்போது நாங்கள் இருவரும் பின்தொடர்ந்து போனோம். நாங்கள் மற்றப் பல்லக்குகளுடன் எங்களுடைய பல்லக்கையும் கொண்டுபோவது போல் மாரீசம் பண்ணி பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின்வாங்கினோம். மற்ற வாகனங்களும் ஆட்களும் கண்மறைகிறவரையில் மெல்ல மெல்லக் கொண்டுபோய் இருட்டில் ஒருவருக்குந் தெரியாமல் எங்களுடைய பல்லக்கைத் திருப்பி அதிவேகமாய்க் கொண்டுபோனோம்.

நாங்கள் இருவரும் வெகு தூரம் பல்லக்குடன் சென்று, பிற்பாடு தாசில்தாருக்குச் சந்தோஷ சமாசாரம் சொல்லுவதற்காக நாங்கள் முந்திப் போய் பல்லக்கில் அம்மா வருகிற சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தோம். அவர் ஒரு வீட்டிலே தனிமையாய் இருந்துகொண்டு, சந்திரோதயத்துக்காகக் காத்திருக்கும் சாதக பக்ஷ¢போல் அகமகிழ்ச்சியுடன் வழியைப் பார்த்துக்கொண்டிருந்தார். மத்தியானம் பதினைந்து நாழிகைக்குப் பல்லக்கு வந்து சேர்ந்தது. உடனே சிவிகையார் தாசில்தாரிடத்தில் வந்து “எசமான்கள் விரும்பின மாதரசியைப் பல்லக்குடன் கொண்டுவந்து விட்டோம். நாங்கள் பட்ட பிரயாசைக்குத் தகுந்த சம்மானம் செய்யவேண்டும்” என்று சொன்னார்கள். உடனே தாசில்தார் எழுந்து ஓடி அதிக ஆவலுடன் பல்லக்கைத் திறந்து பார்க்க உள்ளே ஒருவருமில்லாமல் சுத்த சூனியமாயிருந்தது. அவரும் நாங்களும் பல்லக்கின் மூலை முடுக்களெல்லாம் தேடிப் பார்த்தோம். இந்த அம்மணியை எங்கும் காணோம். பஞ்சரத்தில் இருந்த கிளி பறந்துபோன பிற்பாடு, பஞ்சரம் வெறுமையாயிருப்பதுபோல் பல்லக்கும் வெறுமையாயிருந்தது. தாசில்தாருடைய அப்பனும் பாட்டனும் தேடி வைத்த பொக்கிஷத்தை நாங்கள் அபகரித்துக் கொண்டது போல, எங்கள் மேலே ரௌத்ராகாரமாய்க் கோபிக்க ஆரம்பித்தார். அடிப்பார் என்று பயந்துகொண்டு, நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தூரவிலகினோம். எங்களை அடிக்க அவர் கையில் ஒரு ஆயுதமும் இல்லாமல் இருந்ததால் நாங்கள் தெருவிலே கழற்றி வைத்திருந்த எங்களுடைய செருப்பை அவர் கையிலே தூக்கிக்கொண்டு துரத்தினார். நாங்கள் அகப்படாமல் சிட்டாய்ப் பறந்தோம்; நாங்கள் ஓட, அவர் ஓட இவ்வகையாக வெகு தூரம் துரத்திவந்த பிற்பாடு அவர் கையிலிருந்த செருப்பை எங்கள் மேலே எறிந்தார். திரும்பித் தாசில்தாருடைய முகத்திலே மோதிற்று. ஔஷதப் பிரயோகத்தினால் விஷம் இறங்குவதுபோல் செருப்படி பட்ட பிற்பாடு, தாசில்தாருக்குக் கோபம் தணிந்து, எங்களை நயமாய்க் கூப்பிட்டுக் காரியங்களை விசாரிக்க ஆரம்பித்தார். போகிகள் “நடு வழியில் ஒரு இடத்தில் கள்ளுக் குடிக்கிறதற்காகப் பல்லக்கை நிறுத்தினோம்” என்று ஒப்புக் கொண்டபடியால், அந்த இடத்தில் இந்த அம்மணி தப்பிப் போயிருக்கலாமென்று உத்தேசித்து உடனே தாசில்தாரும் அவருடைய நேசனும் இரண்டு குதிரைகளின்மேல் ஏறிக்கொண்டு எங்கள் இருவரையும் கூட அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

நாங்கள் காடு மேடுகளெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு சூரியாஸ்தான சமயத்தில் இந்த அம்மணி ஏறிக்கொண்டு வந்த வண்டியைக் கண்டு மறித்தோம். அப்போது நடந்த யுத்தத்தில் தாசில்தாரும் அவருடைய நேசனும், குண்டுகள் பட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள். இந்த மனோன்மணி அப்போது மாறு வேஷம் தரித்திருந்த போதிலும், மேகத்துக்குள் மறைந்திருக்கிற சந்திரசூரியர்களை அவர்களின் பிரபை காட்டிவிடுவது போல இந்த உத்தமியை அவளுடைய முகக்காந்தி காட்டிவிட்டது. மற்றச் சங்கதிகளெல்லாம் அப்போது கூட இருந்த உங்களுடைய மனுஷருக்குத் தெரியுமானதால், நான் சொல்ல வேண்டுவதில்லை” என்றான். இதைக் கேட்ட உடனே சம்பந்தி முதலியார் மறுபடியும் என்னைத் தழுவிக்கொண்டு சொல்லுகிறார்:- “நீ செய்த உபகாரத்தை நான் ஒருநாளும் மறப்பேனா? என் புத்திரிகை காணாமற் போன உடனே உன் மேலும் சந்தேகம் நினைத்தேன். பிற்பாடு பல காரணங்களால் அந்தச் சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது. என் மகளுக்கும் எங்களுக்கும் பிராண பி¨க்ஷ கொடுத்துக் காப்பாற்றினாய்; உனக்குத் திரிலோகங்களையும் கொடுத்தாலும் தகும். ஆகிலும் நீ அங்கீகரிக்கும்படியான ஒரு சம்மானத்தை உனக்குச் செய்ய யோசித்திருக்கிறேன்” என்றார். அவரும் மற்றவர்களும் எனக்குச் செய்த ஸ்தோத்திரங்களையெல்லாம் ஞானாம்பாளுடைய ஒரு மந்தஹாசத்துக்குச் சமானமாக நான் நினைக்கவில்லை.
-----------

அத்தியாயம் - 16
என்னுடைய ஸ்தோத்திரம் முடிந்தவுடனே, ஞானாம்பாளுக்குத் துணையாகவந்த ஆண்டிச்சி அம்மாளை எல்லோரும் புகழ ஆரம்பித்தார்கள். அந்த அம்மையை நோக்கி “அம்மா! நீங்கள் செய்தது பெரிய உபகாரம்; ஒருவரும் இப்படிப்பட்ட உபகாரஞ் செய்யமாட்டார்கள்; உலக நடை தெரியாத சில பெண்ணான ஞானாம்பாள், நடுக் காட்டில் உங்களிடத்தில் அடைக்கலம் புகுந்தது போல வேறே யாரிடத்திலாவது அடைக்கலம் புகுந்திருந்தால் அவளுடைய ஆபரணங்களை இச்சித்து அவளை ஜீவ வதை செய்திருப்பார்கள்; அல்லது அந்தத் தாசில்தாரிடத்தில் அவளை ஒப்பித்திருந்தாலும், அவன் தகுந்த வெகுமானஞ் செய்திருப்பான். அப்படிப்பட்ட ஆபத்துகள் இல்லாமல் ஞானாம்பாளை எங்களிடத்தில் நீங்கள் கொண்டுவந்து ஒப்புவித்தது பெரிய உபகாரம். இதற்கு நாங்கள் என்ன பிரதி உபகாரஞ் செய்யப் போகிறோம்?” என்று வாழ்த்தினார்கள். அந்த ஆண்டிச்சி அம்மாள் நல்ல அந்தஸ்திலிருந்து மெலிந்து போனதாகச் சில குறிப்புகளால் தெரிய வந்தபடியால் அவளுடைய சரித்திரத்தைச் சொல்லும்படி வேண்டிக்கொண்டோம். அவள் எங்களைப் பார்த்து யுஎன்னுடைய சரித்திரம் மகா துயரத்துக்குரியது. நீங்கள் சந்தோஷமாயிருக்கிற இந்தச் சமயத்தில் என்னுடைய சரித்திரத்தைச் சொல்லி உங்களைத் துன்பத்துட்படுத்த எனக்கு மனமில்லை. ஆயினும் உங்கள் வேண்டுகோளின்படி என்னுடைய சரித்திரத்தைச் சொல்லுகிறேன்” என்று சொல்லத் தொடங்கினாள்.

“நான் ஒரு தனவான் வீட்டில் பிறந்து தனவான் வீட்டிலே வாழ்க்கைப் பட்டேன்; நான் பிறந்த இடம் புதுவைமாநகர். புகுந்த நகர் பொன்னகரி. என் தாயார் இறந்தபிற்பாடு என் தகப்பனார் இதற்குப் பதினாறு வருஷத்திற்குமுன் இராணுவ வகுப்பில் தளகர்த்தாயிருந்த என்னுடைய அத்தை மகனுக்கு என்னைப் பாணிக்கிரகம் செய்து கொடுத்தார். எனக்குக் கலியாணமாகி நான் புருஷன் வீட்டுக்குப் போன உடனே, தூர தேசத்தில் வாழ்க்கைப் பட்டிருந்த என்னுடைய நாத்தனார் புருஷன் பிராண வியோகம் ஆனதாகச் சமாசாரம் வந்தபடியால் என் மாமியார் அந்த ஊருக்குப் போய்விட்டாள். அவள் திரும்பிவரப் பத்து மாசம் சென்றது. அந்தப் பத்து மாச காலமும் நானும் என்னுடைய பர்த்தாவும், தேகமும் சீவனும் போலவும், கரும்பும் ரசமும் போலவும் அதிகப் பிரீதியாக வாழ்ந்தோம். எங்களுடைய சந்தோஷம் நீடித்திருந்தால், இந்த உலகமே சதமென்று நாங்கள் எண்ணிவிடுவோம் என்றோ, அல்லது வேறென்ன காரணமோ எங்களுடைய சந்தோஷத்தைக் கடவுள் மாற்றிவிட்டார்; எப்படி யென்றால் பத்து மாதத்திற்குப் பிறகு என்னுடைய மாமியாரும் அமங்கலியாய்ப் போன அவளுடைய மகளும் வந்துசேர்ந்தார்கள். அவர்கள் எங்களுடைய கிருகத்தில் வந்து பிரவேசித்தது கிரகசாரமே வந்து பிரவேசித்ததுபோல் ஆயிற்று. அவர்கள் வந்து நுழைந்தபோது நானும் என் பர்த்தாவும் அதிக நேரமாகச் சல்லாபித்துக்கொண்டிருந்தோம். அதைக் கண்டவுடனே அவர்களுக்குக் கோபம் பொங்கி அவர்கள் எங்களைப் பார்த்த கடூரமான பார்வை ஆயிரங்கத்தி வெட்டுக்குச் சமானமாயிருந்தது. அந்தப் பார்வையில் நாங்கள் பட்டுப் போகாமல் பிழைத்தது யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. நான் அவர்களைக் கண்டவுடனே அவர்களுக்கு நமஸ்காரஞ் செய்து அப்பாலே போய்விட்டேன். என் மாமியார் என் பர்த்தாவை நோக்கி “நான் உன் தகப்பனாரை விவாகஞ்செய்து இருபது வருஷம் வரைக்கும் மங்கிலிய ஸ்திரீயாயிருந்தேன்; நான் இருபது வருஷ காலத்திலும் இரண்டு வார்த்தைகள் கூட என்னுடைய நாயகரிடத்தில் நான் பேசி அறியேன். புருஷன் வீட்டில் வந்து அடி வைத்த உடனே நாத்தனார் புருஷனைத் தின்றுவிட்டவள் இடத்தில் உனக்குப் பேச்சா?” என்றாள். உடனே என் பர்த்தா “நாத்தனார் புருஷன் இறந்து போனால் என் பெண்சாதி என்ன செய்வாள்? அந்த என் பெண்சாதி இடத்திலே பேசினேனே தவிர, அந்நிய ஸ்திரீயிடத்தில் பேசவில்லையே?” என்றார். இதைக் கேட்ட உடனே “அந்தச் சிறுக்கி உனக்கு இவ்வளவு பேசக் கற்றுக்கொடுத்து விட்டாளா?” என்று என் மாமி குதித்த குதிப்பும் ஆடின ஆட்டமும் சதுருக்கு விட்ட தேவடியாள் கூட ஆடமாட்டாள். என்னுடைய நாயகர் மானி ஆனதால் ஊர் சிரிக்கும் என்று பயந்து, ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டார். அன்று முதல் பல நாள் வரைக்கும் என் மாமியார் வாயும் நாத்தனார் வாயும் ஓயவேயில்லை. அவர்கள் என்னுடைய கொட்டத்தை அடக்க வேண்டுமென்று தீட்சித்துக் கொண்டு வேலைக்காரர்களையெல்லாம் தள்ளிவிட்டுச் சகல வேலைகளையும் நான் செய்யும்படி என் தலைமேலே சுமத்தினார்கள். என் பர்த்தாவுக்கு அமுது படைத்தல், தாம்பூலம் கொடுத்தல் முதலிய வேலைகளையும் நான் செய்கிறதாயிருந்தால், என்னுடைய சிரமங்களுக்கு ஒரு பரிகாரமாயிருக்கும். அந்த வேலைகளை எல்லாம் அவர்கள் வசித்துக் கொண்டு கஷ்டமான வேலைகளை எல்லாம் என் பங்கில் வைத்துவிட்டார்கள். எல்லோரும் சாப்பிட்ட பிறகு அவர்களுடைய உச்சிட்டத்துக்காக நான் காத்திருக்க வேண்டுமே அல்லாது, எனக்குப் பசித்தபோது சாப்பிடக்கூடாது. அந்த உச்சிட்டமும் பாதி வயிற்றுக்குக் கூட பற்றுகிறதில்லை. என் மாமியும் நாத்தியும் வந்த நாள் முதல் நானும் என் புருஷனும் பேசுவது குதிரைக் கொம்பாகிவிட்டது. நான் ஒரு பக்கத்திலும் அவர் ஒரு பக்கத்திலும் இருப்பதால், நாங்கள் ஒருவரை யொருவர் பார்க்கக் கூடாமலும், நயன பாஷைக்குக் கூட இடம் இல்லாமலும் போய்விட்டது. இராக்காலங்களில் என்னுடைய பர்த்தாவின் படுக்கை அறைக்குள் நான் பிரவேசிக்காதபடி, அந்த அறையின் வாசற்படி ஓரத்தில் தாயும் மகளும் படுத்துக் கொண்டு, ஒருவர் மாற்றி ஒருவர் பாராக் கொடுக்கத் தலைப்பட்டார்கள்.

“இவ்வளவு துன்மார்க்கங்களுக்கும் இடங் கொடுத்து என் கணவன் உபே¨க்ஷயாயிருப்பது எனக்கு மனவேதனையாயிருந்தாலும், அவர் மானத்துக்குப் பயந்து மௌனமாயிருக்கிறாரென்றும், அவருக்கு என்னிடத்திலிருக்கிற அன்பு குறையாதென்றும் எண்ணி நான் சகல கஷ்டநிஷ்டூரங்களையும் பொறுமையுடன் சகித்தேன். அப்படியிருக்க என் மாமியும் நாத்தியும் சில வியபசாரிகளை அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கும் என் பர்த்தாவுக்கும் சிநேகிதத்தை உண்டுபண்ணச் சர்வ பிரயத்தனஞ் செய்தார்கள். என்னுடைய கணவர் சொந்த ஸ்திரீயினிடத்திலே பேசக்கூடாதென்று விலக்கி, அந்நிய ஸ்திரீகளுடன் சகவாசஞ் செய்யும்படி முயற்சி செய்த என்னுடைய மாமியும் நாத்தியும் எப்படிப்பட்ட பொல்லாதவர்களாயிருக்க வேண்டுமென்று நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்! இந்தக் கொடுமைகளை எல்லாம் தூரதேசத்திலிருக்கிற என் தகப்பனாருக்கு நான் கடித மூலமாய்த் தெரிவித்தால் உடனே பரிகாரங் கிடைத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை. என் பாட்டனார் இறந்த பிறகு என் தகப்பனாரே அவருடைய தங்கையாகிய என் மாமியை வளர்த்து விவாகஞ் செய்து கொடுத்ததுந் தவிர அவள் விதந்துவான பிறகும் அவரே அவளையும் அவள் பிள்ளையாகிய என் பர்த்தாவையும் நெடுங்காலம் ஆதரித்து வந்தபடியாலும், அவர் துஷ்டகண்டகர் ஆனபடியாலும் அவரைக் கண்டால் கருடனைக் கண்ட பாம்பு போல் என்னுடைய மாமியும், நாத்தியும் அடங்குவார்களென்பது நிச்சயமே. ஆயினும் புருஷன் வீட்டில் நடக்கிற கொடுமைகளைத் தகப்பனுக்குத் தெரிவிப்பது பதிவிரதைகளுக்குத் தகுதி அல்லவென்றும், கலகத்துக்கும் ஆஸ்பதம் ஆகுமென்றும் நினைத்து, நான் என்னுடைய வருத்தங்களை எல்லாம் என் தகப்பனாருக்கு எழுதாமல் இருந்து விட்டேன். என்னுடைய வருத்தங்களை எல்லாம் என் புருஷனுக்கு எவ்வகையிலாவது தெரிவிக்கிறதென்று நிச்சயித்துக் கொண்டு ஒருநாள் நடுச் சாமத்தில் எல்லாரும் தூங்கின பிற்பாடு நான் எழுந்து சத்தஞ் செய்யாமல் என் பர்த்தாவின் படுக்கை அறைக்கு நேரே போனேன். அந்த அறையின் வாசற்படி ஓரத்தில் இரண்டு காவற்காரிகளும் படுத்திருந்தார்கள். அவர்களுடைய காவலைக் கடந்து உள்ளே போகிறதற்காக அவர்கள் இருவரையும் ஒரே தாண்டாய்த் தாண்டினேன். உடனே என் சேலை தடுக்கி அடியற்ற மரம் போல அவர்கள் மேல் விழுந்து விட்டேன். அப்போது இருட்டாயிருந்ததால் அவர்கள் என்னைக் கையாலே தடவிப் பார்த்து நான் தான் என்று கண்டுபிடித்துக் கொண்டு என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் என்னைப் பிடித்த பிடியை விடாமல் அடித்தபடியால் நான் அடி பொறுக்கமாட்டாமல் நகத்தால் அவர்களைக் கீறினேன். அவர்கள் தங்களுடைய நகங்களால், தங்களைத் தாங்களே அதிகமாகக் கீறீவிட்டுக் கொண்டு, “கூ! கூ! எங்களைக் கொல்லுகிறாள்!” என்று கூவினார்கள். உடனே என் கணவர் விழித்துக் கொண்டு தீபத்துடன் எங்களிடம் ஓடி வந்தார். என்னைப் பார்த்தவுடனே “உன்னுடைய அறையை விட்டு இங்கே நீ ஏன் வந்தாய்?” என்று கேட்டார். நான் உண்மையான காரணத்தைச் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, கள்ளப் புருஷன் வீட்டுக்குப் போய் அகப்பட்டுக்கொண்டவள் போல விழித்தேன். அந்த நீலிகள் இருவரும் அவர்களுடைய காயங்களை என் புருஷனுக்குக் காட்டி என்னைப் பேய் பிடித்திருக்கிறதென்றும் அல்லது பைத்தியமாவது என்னைப் பிடித்திருக்க வேண்டுமென்றும் சாதித்தார்கள். என் கணவரும் அப்படியே அபிப்பிராயப்பட்டு என்னைத் தள்ளிக் கொண்டுபோய் என்னுடைய அறைக்குள்ளாக விட்டுக் கதவை இழுத்திச் சாத்தி வெளிப்பக்கத்தில் நாதாங்கி போட்டு விட்டார். நான் புருஷனைப் பார்க்கப் போய் இப்படி வந்து சம்பவித்ததே என்று நினைத்து, அந்த இரா முழுவதும் நான் அழுத கண்ணீர் அறை முழுதும் நிறைந்து விட்டது. மறு நாள் விடிந்த உடனே வைத்தியர்களும் மந்திரவாதிகளும் வந்து கூடிவிட்டார்கள். வைத்தியர்கள் எல்லாரும் எனக்குப் பைத்தியமென்று சாதித்தார்கள். மந்திரவாதிகள் எல்லாரும் எனக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று வாதித்தார்கள். அவர்களில் ஒருவன் என்னை நூற்றெட்டுப் பேய் பிடித்திருக்கிறதென்று சொன்னான். அதைக் கேட்டவுடனே என்னை அறியாமலே எனக்குக் கோபம் ஜனித்து அவ்விடத்திற் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவன் மேலே எறிந்தேன். என்னைப் பேய் பிடித்திருக்கிறதென்பதற்கு இது பிரத்தியட்சமான ருசு ஆகிவிட்டது. உடனே என்னைப் பிடித்துக் கைவிலங்கு கால்விலங்கு போட்டு என் தலையைச் சிரைத்து வைத்தியர்கள் ஒரு பக்கத்திலும் மந்திரவாதிகள் ஒரு பக்கத்திலும் எனக்குச் செய்த சித்திராக்கினிகளை விவரிக்க என்னுடைய ஒரு வாய் போதாது. நான் அவர்களைப் பார்த்து “ஒரு உயருக்கு இத்தனை எமன்கள் வேண்டுமா? எனக்குப் பைத்தியமுமில்லை, பேயுமில்லை. என்னை வீணாக ஏன் வாதிக்கிறீர்கள்?” என்று அவர்களுக்கு இரக்கம் உண்டாகும்படி நான் நான் கற்ற வித்தைகளை எல்லாம் காட்டினேன். நான் சொல்வதெல்லாம் எனக்குப் பிரதிகூலமாய் முடிந்ததே தவிர யாதொரு அனுகூலத்தையுஞ் செய்யவில்லை.

“நான் புருஷனோடு கூடியிருந்த காலத்தில் எனக்குக் கர்ப்பம் உண்டாகி, அப்போது எனக்குத் தெரியாமலிருந்து இப்போது சில கர்ப்பச் சின்னங்கள் தோன்றியபடியால் கர்ப்பிணியாயிருக்கிற எனக்கு மருந்துகள் கொடுப்பது சரியல்லவென்று வைத்தியர்களுக்குத் தெரிவித்தேன். நான் கர்ப்பிணியென்று தெரிந்தமாத்திரத்தில், என்னுடைய மாமியும் நாத்தியும் அவர்களுடைய புருஷர்கள் அன்றைக்குத் தான் இறந்தது போற் கரைகாணாத துக்க சாகரத்தில் அமிழ்ந்து முன்னையைப் பார்க்கிலும் நூறு மடங்கு அதிகமாக என்னைப் பகைக்க ஆரம்பித்தார்கள். என்னுடைய கர்ப்பம் அழியத் தக்க ஔஷதப் பிரயோகஞ் செய்ய அவர்கள் யத்தனமாயிருக்கையில் “ராக்ஷதனுக்கும் ஒரு புரோக்ஷதன் உண்டு” என்பது போல, என் மாமியாரை அடக்கத் தக்க சுவாமியார் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் யாரென்றால் என்னுடைய தகப்பனார் தான். அவர் என்னுடைய அலங்கோலத்தைப் பார்த்த உடனே உள்ளங் கலங்கி என்னைக் கட்டிக் கொண்டு கதறினார். பிற்பாடு எனக்குப் பைத்தியமா அல்லவாவென்று நிச்சயிக்கும்பொருட்டு, என்னைப் பார்த்துப் பல கேள்விகள் கேட்டார். அவைகளுக்கு நான் தகுதியான மறுமொழி சொன்னதுந் தவிர, நடந்த காரியங்களை எல்லாம் அவருக்குச் சுருக்கமாகத் தெரிவித்தேன். என் மாமி நாத்திகளின் மேல் அதிகமாக ஒன்றுஞ் சொல்லாமல் தர்மக் கோளாக அவர்கள் செய்த இரண்டொரு காரியங்களை வெளிப் படுத்தினேன். எனக்குப் பைத்தியமுமில்லை பேயுமில்லை என்று என் தகப்பனார் கண்டுபிடித்துக் கொண்டு என் கைவிலங்கு கால் விலங்குகளை வெட்டிவிட ஆரம்பித்தார். உடனே என் மாமியார் ஓடிவந்து “அண்ணா, நீங்கள் செய்வதை யோசித்துச் செய்யுங்கள்; விலங்கை நிவர்த்தி செய்தால் அவள் யாரையாவது உபத்திரவஞ் செய்வாளே” என்றாள். இதைக் கேட்ட உடனே என் தகப்பனார் கோபாதிக்காரராய் என் மாமியாரை எட்டி உதைத்தார். அவள் எட்டுக் குட்டிக் கரணம் போட்டுக் கொண்டு கீழே விழுந்தாள். நான் உடனே என் தகப்பனார் காலைப் பிடித்துக் கொண்டு “எய்தவனை நோகாமல் அம்பை நோவதுபோல் எல்லாங் கடவுள் செயலாயிருக்க என் மாமியாரைக் கோபித்துப் பிரயோசனம் என்ன? நான் ஏதோ துஷ்கிருத்தியஞ் செய்ததற்காகக் கடவுள் என்னைத் தண்டித்தார்; என்னுடைய அத்தையை மொத்த வேண்டாம்” என்று பிரார்த்தித்தேன். அவர் உடனே என்னை நோக்கி, “அவள் ஆதியில் பெண் கேட்டபோது அவளுடைய துர்க்குணங்களைப் பற்றியே பெண் கொடுக்க நிராகரித்தேன். அவள் மறுபடியும் ஆயிரந்தரம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதினாலும், சகோதர பக்ஷத்தினாலும் கிளியை வளர்த்துப் பூனை கையிலே கொடுத்தது போல உன்னை விவாகம் செய்து கொடுத்தேன். அதற்கு வந்த லாபம் இதுதான்” என்றார்; அந்தச் சமயத்தில் என் கணவர் வந்து, என் தகப்பனாருக்கு நமஸ்காரஞ் செய்தார். அவரை என் தகப்பனார் பார்த்து “நீ சௌரியவானென்று பெயர் வைத்துக் கொண்டு, உன் வீட்டுப் பெண்டுகளை அடக்கத் திறமையில்லாமல் என்னை வரும்படி, பல கடிதங்கள் அனுப்பினாய்! இரண்டு துர்ப்பலமுள்ள ஸ்திரீகளை அடக்கச் சக்தி இல்லாத நீ யுத்தரங்கத்தில் உன்னுடைய சத்துருக்களை எப்படிச் செயிப்பாய்” என்று பரிகாசஞ் செய்தார். என் புருஷன் என் தகப்பனாருக்குக் கடிதம் எழுதி வரவழைத்ததாக என் தகப்பனாருடைய வார்த்தைகளால் வெளிப்பட்டபடியால் என் புருஷன் மீது எனக்குண்டாயிருந்த மனஸ்தாபங்களெல்லாம் ஒரு நிமிஷத்தில் பறந்துவிட்டன. என் தகப்பனாரும் பர்த்தாவும் என் விலங்குகளைத் தறித்து என் மாமியார் எனக்கு நியமித்திருந்த காராக்கிரகத்தினின்று என்னை விடுதலை செய்தார்கள். உடனே வைத்தியமும் தொலைந்தது; பைத்தியமும் தொலைந்தது; பேயும் பறந்தது. நோயும் பறந்தது. நான் பழையபடி என் பர்த்தாவை அடிக்கடி சந்திக்கவும், அவருடன் சம்பாஷிக்கவும் ஆரம்பித்தேன். இராக் காலங்களில் என் பர்த்தாவினுடைய பள்ளி அறைக்கு என் மாமியும் நாத்தியும் செய்துவந்த காவலும் ஒழிந்தது. என்னுடைய ஆவலும் ஒழிந்தது. அவர்களிருவரும் என் பிதா வந்தது முதல் பெட்டிப் பாம்பு போல் அடங்கினார்கள். என்னுடைய கர்ப்பம் நாள் தோறும் முதிர்ந்து பத்தாம் மாதத்தில் பால சூரியனைப் போல் ஒரு பாலனைப் பெற்று, நான் மனோரம்மியமாயிருக்கும்போது மறுபடியும் ஒரு தௌர்ப்பாக்கியம் எனக்கு நேரிட்டது. அ·தென்னவெனில் இராஜாங்கத்தாருக்கும் அவர்களுடைய சத்துருக்களுக்கும் தூரதேசத்தில் யுத்தம் நேரிட்டதால், அந்த யுத்தத்துக்கு உடனே போகும்படி என் பர்த்தாவுக்கு உத்தரவு வந்தது. தண்டிலே போனால் இரண்டிலே ஒன்றாதலால் அந்த உத்தரவைக் கண்ட உடனே, எங்களுக்கெல்லாம் பெரிய இடி விழுந்ததுபோல் இருந்தது. என்னுடைய பர்த்தா சண்டைக்குப் போய்த் திரும்பிவருகிற வரையில் என்னையும் என் பிள்ளையையும் என் தகப்பனார் தம்முடைய ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்ச் சம்ரக்ஷ¢ப்பதாகச் சொன்னார். அதற்கு என் புருஷனும் சம்மதித்து, அவரும் எங்களோடு கூடப் பிரயாணப்பட்டு என்னையும் என் பிள்ளையையும் என் தகப்பனார் வசத்தில் ஒப்பித்து விட்டு எங்களிடத்தில் விடை பெற்றுக் கொண்டு யுத்தத்துக்குப் போனார். அவர் போனபிற்பாடு சில காலம் வரையில் அவரிடத்திலிருந்து எங்களுக்குக் கடிதங்கள் வந்து, பிற்பாடு என்ன காரணத்தைப் பற்றியோ கடிதம் வராமல் நின்றுபோய் விட்டது. எனக்குப் பிள்ளை மட்டும் இல்லாமலிருக்குமானால் என் பர்த்தா பிரிந்த உடனே என் பிராணனும் பிரிந்து போயிருக்கும். புத்திர வாஞ்சையே என் பிராணன் போகாதபடி தடுத்துவிட்டது. என் பிள்ளை என் பர்த்தாவினுடைய சாயலாக இருந்தபடியால், பிள்ளை முகத்தைப் பார்த்துப் பார்த்து புருஷனைப் பிரிந்த சோகத்தை ஒருவாறு மாற்றினேன். என் பிள்ளையை அவர் பிள்ளையைப் போல அதிக பட்சமாக வளர்த்து இளமைப் பருவத்திலே வித்தியாப்பியாசஞ் செய்வித்தார். அந்தப் பிள்ளைக்குப் பத்து வயது நடக்கும்போது அநேக ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு ஒரு நாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை, வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. உடனே என் தகப்பனாரும் வேலைக்காரர்கள் முதலானவர்களும் வீதி வீதியாக ஓடிப் பிள்ளையைத் தேடினார்கள். பிள்ளையும் அகப்பட வில்லை. பிள்ளையைத் தேடிப் போன என் தகப்பனாரும் வரவில்லை. வேலைக்காரர்கள் பலநாள் வரையில் பல இடங்களில் தேடிப் பார்த்தும் என் பிள்ளையும் தகப்பனாரும் அகப்படவில்லை. நான் பிள்ளையையும் இழந்து பிதாவையும் இழந்து தாமரை இலைத் தண்ணீர் போல் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, என் புருஷனும் சண்டையில் காயப்பட்டு இறந்து போனதாகச் சமாசாரம் வந்தது. நான் உடனே நெருப்பில் விழுந்த புழுப்போல் துடித்துக் கீழே விழுந்து புலம்பி அழுதேன். அன்று முதல் நெடுநாள் மட்டும் நான் சித்தஸ்வாதீனமில்லாமலிருந்து பிறகு என் பந்துக்களுடைய முயற்சியால் சித்தப் பிரமை தீர்ந்து பிழைத்துக் கொண்டேன். நான் என்னுடைய புருஷனைப் பிரிந்து இப்போது பதினைந்து வருஷமாகிறது. எனக்குப் பிராணபதமான அந்த மூவரும் இறந்துபோயும், இறவாமலிருக்கிற என்னுடைய உயிர் எவ்வளவும் வல்லுயிராயிருக்க வேண்டும்? நானே என்ன மாய்த்துக் கொள்ளலாமென்று பல சமயங்களில் நினைத்தேன். ஆனால் தற்கொலை செய்வது பரம பாதகமென்றும் அதைச் செய்கிறவர்களுக்கு நரகம் பிராப்தியென்றும் பெரியோர்கள் சொல்லுகிறபடியால் நான் என் பிராணனை விடாமல் தாங்கிக் கொண்டு திரிகிறேன். என் மாதா பிதாக்களும், புருஷனும் பிள்ளையும் தர்மிஷ்டர்களானதால் அவர்கள் மோக்ஷ சாம்பிராச்சியம் அடைந்திருப்பார்களென்பது நிச்சயமே. அந்த இடத்துக்கு நானும் போய்ச் சேரவேண்டுமென்று சர்வ சதா கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். உலகத்தில் எனக்கு ஒரு அபே¨க்ஷயும் இல்லாதபடியால், என்னையும் ஒருவரும் விரும்பாதபடி ஆண்டிச்சி போல் வேஷம் பூண்டு கொண்டு இதற்குப் பத்து நாழிகை வழி தூரமான என் சிறிய தாயார் வீட்டில் வந்திருக்கிறேன். அதற்குச் சமீபமான ஒரு தனி மண்டபத்தில், நான் கடவுளை நோக்கித் தியானம் பண்ணிக் கொண்டிருக்கும்போது, மாதர் சிரோமணியாகிய ஞானாம்பாள் வந்து அடைக்கலம் புகுந்தாள். இது தான் என் சரித்திரம்” என்றாள்.

ஆண்டிச்சி யம்மாளின் சரித்திரத்தைக் கேட்டு அனுதாபப்படாதவர்கள் யாரும் இல்லை.
---------

அத்தியாயம் - 17
ஞானாம்பாள் தப்பி வந்த சமாச்சாரம் என்னுடைய தாய்தந்தையார் கேள்விப்பட்டு, அவளைப் பார்க்கும் பொருட்டு மறு நாள் உதய நேரத்துக்குப் பனம்பள்ளிக் கிராமத்துக்கு வந்தார்கள். அவர்களைக் கண்ட உடனே சம்பந்தி முதலியார் சந்தோஷ சித்தராயச் சொல்லுகிறார்: “உங்களுடைய புத்திர சிரோமணியால் எங்களுடைய அருமைக் குமாரத்தியை நாங்கள் மறுபடியும் கண்டோம். அவளை இன்னும் இரண்டு நாள் வரைக்கும் காணாமலிருப்போமானால், எங்களுடைய உயிரைக் காணமாட்டோம். நாங்கள் குடும்பத்துடன் மாண்டுபோயிருப்போம். உங்கள் குமாரனே எங்களுக்குக் குடும்பப் பிரதிஷ்டை செய்வித்தான். ஞானாம்பாளுடைய சரீரம் அவனால் ரக்ஷ¢க்கப்பட்டபடியால் அந்தச் சரீரத்தை அவனுக்கே தத்தம் செய்ய யோசித்திருக்கிறேன். இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். “உங்களுடைய இஷ்டப்படி நடக்கக் காத்திருக்கிறோம்” என்று என்னுடைய தாய் தந்தையர்கள் சொன்னார்கள். கலியாணத்தை இனித் தாமதப்படுத்தக் கூடாதென்றும், சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்கு வெளியில் யுத்தம் நடப்பதுபோல் பெரிய இரைச்சலும் சப்தமுங் கேட்டு நாங்கள் உடனே வெளியே ஓடிப் பார்த்தோம். அனேக சிப்பாய்களும் சேவகர்களும் உருவின கத்தி முதலிய ஆயுதங்களுடனே வந்து எங்கள் வீட்டை வளைத்துக் கொண்டார்கள். அவர்களுடன் கூட ஒரு பெரிய குதிரையின் மேல் ஏறிக்கொண்டு வந்த சுதேசியான ஒரு உத்தியோகஸ்தர் அதிக கோபத்துடன், பிரதாப முதலியென்பவன் யாரென்று கேட்க, நான் தானென்று அவருக்கு எதிரே போனேன். என்னைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவு கொடுத்தார். உடனே என் தகப்பனாரும், சம்பந்த முதலியாரும் ஓடி வந்து “அந்தப் பிள்ளையைக் கட்ட வேண்டிய காரணம் என்ன? அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டார்கள். உடனே எங்கள் பந்துக்கள், வேலைக்காரர்கள், அந்தக் கிராமத்துக் குடிகள் முதலான இருநூறு ஜனங்கள் கூட்டங் கூடினதை அந்த உத்தியோகஸ்தர் கண்டு பயந்து, என்னைக் கட்ட வேண்டாமென்று உத்திரவு கொடுத்து, தெருத் திண்ணைமேல் உட்கார்ந்துகொண்டு, என்னைப் பார்த்து “ஒரு பெரிய உத்தியோகஸ்தனாகிய தாசில்தாரை நிஷ்காரணமாய் நீர் கொலை செய்துவிட்டதால், அதைப் பற்றி விசாரிக்க வந்திருக்கிறோம். நீர் என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார். இதைக் கேட்ட உடனே எனக்குத் தைரியம் உண்டாகி, ஞானாம்பாள் விஷயத்தில், அந்த தாசில்தார் செய்த அக்கிரமங்களை எல்லாம் ஆதியோடந்தமாகத் தெரிவித்தேன். உடனே அவர் “நீர் சொல்வதற்குச் சாட்சிகள் உண்டா?” என்று வினவினார். சாட்சிகள் இருக்கிறார்களென்று சொல்லி, நான் பிடித்து வைத்திருந்த இரண்டு சேவகர்களையும் அவர் முன்னே கொண்டுவந்து விட்டேன். அவர்கள் ஒரு காரியத்தையும் மறைக்காமல், சகல சங்கதிகளையும் விவரமாய்ச் சொல்லி வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். பிற்பாடு ஞானாம்பாளைத் திரைமறைவில் இருக்கச் சொல்லி அவளையும் அவளுடன் கூட வந்த ஆண்டிச்சி அம்மாளையும் விசாரித்தார். கடைசியாய் அவர் உண்மையைத் தெரிந்துகொண்டு, என்னை நோக்கிச் சொல்லுகிறார்; “தாசில்தாரையும் அவருடைய நேசனையும், நீர் நிர்நிமித்தியமாய்க் கொலை செய்ததாக மட்டும் பிரஸ்தாபமே தவிரத் தாசில்தார் செய்த அக்கிரமங்களை ஒருவரும் தெரிவிக்கவில்லை. இப்போது தான் உண்மை வெளியாயிற்று. தகுந்த அந்தஸ்துள்ள ஒரு கன்னிப் பெண்ணை, அந்த தாசில்தார் பலவந்தமாய்க் கொண்டுபோனதும், பிற்பாடு அந்தப் பெண் தப்பி ஓடும்பொழுது மறுபடியும் அவளைத் தொடர்ந்து, பலாத்காரம் செய்ய யத்தனப் பட்டதும் பெரிய அக்கிரமம்; அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டு போன உம்மை, அவனும் அவனுடைய நேசனும் கத்தி உருவி வெட்ட வந்தபடியால், உமது பிராணனை ரக்ஷ¢த்துக்கொள்ளும் பொருட்டு, அந்தத் துஷ்டர்களைக் கொலை செய்ய வேண்டியது அகத்தியமாயிருந்தது; ஆகையால் இந்த விஷயத்தில் உம்மிடத்தில் யாதொரு குற்றமுமில்லை; ஜனங்களுடைய §க்ஷமத்துக்காகத் தாசிலாக நியமிக்கப்பட்ட அந்தக் கொடியன், அவனுடைய அதிகாரத்தைத் துர்விஷயத்தில் உபயோகப்படுத்தினபடியால், அவன் ராஜ தண்டனைக்கும், தெய்வ தண்டனைக்கும் பாத்திரனாக இருக்கிறான். தெய்வ தண்டனை முந்திக் கொண்டபடியால், ராஜ தண்டனைக்கு இடமில்லாமல் போயிற்று; ஆகையால் நீர் நிர்த்தோஷியென்று மேலான அதிகாரிகளுக்கு விஞ்ஞாபிக்கப்படும்” என்றார். இதைக் கேட்டவுடனே எங்களுக்கெல்லாம் தேகத்தை விட்டுப் பிரிந்துபோன உயிர் மறுபடியும் திரும்பி வந்தது போல் ஆனந்தம் உண்டாயிற்று. உடனே அந்தக் கனவான் விசாரணையான விவரங்களைக் கண்டு ஒரு விஞ்ஞானப் பத்திரிகை எழுதி, அதைச் சில சேவகர் கையிலே கொடுத்துக் கலெக்டரிடத்திற் கொடுக்கும்படி அனுப்பினார்.

அதற்குப் பிறகு அந்தக் கனவான் அவருடன் வந்த போர்வீரர்களை நோக்கி “நீங்கள் போய்க் கூடாரத்தில் இருங்கள்; நான் சீக்கிரத்தில் வருகிறேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டார். அவர்கள் போன பிற்பாடு அவர் ஏதோ பெருந்துயரத்தைக் கொண்டிருப்பதாக அவருடைய முகக்குறியினால் விளங்கிற்று. அவர் எங்களைப் பார்த்து, “திரை மறைவில் விசாரிக்கப்பட்ட இந்த வீட்டு அம்மாமார்களை நான் கண்ணாலே பார்க்கவேண்டியது முக்கியமாயிருக்கிறது; அவர்களை நான் பார்க்கலாமா?” என்று கேட்டார். உடனே சம்பந்தி முதலியார் அவரை நோக்கி, “உங்களைப் பார்த்தால் மகா உத்தம புருஷராகக் காணப்படுகின்றது. நீங்கள் எங்களுடைய பெண்டுகளைப் பார்க்கத் தடையில்லை” என்று சொல்லி ஞானாம்பாளையும் ஆண்டிச்சி அம்மாளையும் அழைத்துக் கொண்டு வந்து அவர் முன்பாக விட்டார். அவர் ஞானாம்பாளை அதிகமாகக் கவனிக்கவில்லை. ஆண்டிச்சி அம்மாளை மட்டும் அதிக கவனமாக உற்றுப் பார்த்தார். அந்த அம்மாளும் அவரைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து “ஆ! என் பிராண நாயகரே!” என்று அலறிக்கொண்டு அவருடைய பாதத்தில் விழுந்தாள். உடனே அவர் அவளை வாரித் தூக்கி “இந்தப் பஞ்சைக் கோலத்தோடு உன்னைப் பார்க்கவா வந்தேன்?” என்று கண்ணீர் மழை சொரிந்தார். அவருடைய துக்கம் சிறிது மாறின பிற்பாடு அவர் எங்களைப் பார்த்து, “இவள் என்னுடைய பத்தினி; இவளை நான் திரைமறைவில் விசாரித்தபோது, என் பெண்சாதியினுடைய குரலாயிருந்தபடியால், அவளை நான் பார்க்கவேணுமென்று கேட்டுக் கொண்டேன்; இவள் என் பெண்சாதி என்பது நிச்சயந்தான்; எங்களுடைய சரித்திரத்தைக் கேள்விப் பட்டீர்களா?" என்றார். நாங்கள் “கேள்விப் பட்டோம்” என்றோம். அவர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்; “நான் இவளைப் பிரிந்தபிறகு பல தேசங்களுக்குப் போய் சத்துருக்களுடன் யுத்தம் செய்தேன். ஆரம்பத்திலே அபஜயம் ஏற்பட்டாலும் அந்தத்தில் விஜயலக்ஷ்மி எங்கள் பங்கில் இருந்தாள். நான் சில நாள் வரைக்கும் இவளுக்குக் கடிதங்கள் அனுப்பிக் கொண்டுவந்தேன்; மத்தியில் நான் குண்டுபட்டு நெடு நாள் வைத்தியசாலையில் இருந்தபடியால் கடிதம் எழுதத் தப்பிப்போய் விட்டேன். அப்போது நான் பிழைப்பேனென்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. நான் இறந்து போனதாகவும் எங்கும் பிரஸ்தாபமாகி விட்டது. நான் அந்தத் தடவை பிழைத்தது புனர்ஜன்மந்தான். நான் சண்டை முடிந்து திரும்பி வந்தவுடனே, கவர்ன்மெண்டார் என்னுடைய சௌரியத்தை மெச்சிக் கொண்டு எனக்குச் சேனாதிபதி உத்தியோகம் கொடுத்தார்கள். என்னுடைய பெண்சாதி பிள்ளைகளைப் பார்க்கும் பொருட்டு நான் உத்தரவு பெற்றுக் கொண்டு புதுச்சேரிக்குப் போனேன். அங்கே என் பிள்ளை காணாமற் போனதாகவும், அவனைத் தேடிக்கொண்டு போன என்னுடைய மாமனாரும் திரும்பி வரவில்லையென்றும் அந்தச் சமயத்தில் நான் இறந்து போனதாகச் சமாசாரம் வந்தபடியால் இவள் சித்தம் பேதித்து நெடுநாள் வியாதியாயிருந்ததாகவும் பிற்பாடு இவள் போன இடம் தெரியவில்லையென்றும் கேள்விப்பட்டு நான் பட்ட துயரம் இவ்வளவென்று சொல்லி முடியாது. நான் சண்டையில் மாண்டுபோகாமல் இந்தத் துக்கங்களை அனுபவிக்கவா வந்தேனென்று புலம்பிக் கொண்டு பல ஊர்களைத் தேடிப் பார்த்து வரும்போது, வழியில் எனக்கு இஷ்டமான ஒரு கலெக்டரைப் பார்க்கப் போனேன். அவர் தம்முடைய தாசில்தாரை நீங்கள் கொலை செய்துவிட்டதாகவும் நீங்கள் பலவான்களானதால் அனேகம் போர்வீரர்கள் சகிதமாய்ப் போய், உங்களைப் பிடித்து விசாரித்துச் சங்கதிகளைத் தெரிவிக்கும்படியாகவும் உத்தரவு கொடுத்தார். அதற்காக நான் வந்த இடத்தில் தேடிப்போன மருந்து காலில் அகப்பட்டதுபோல், என் பெண்சாதி அகப்பட்டாள். அவள் அகப்படுவதற்குமுன் யார் போனாலும் போகட்டும், பெண்சாதி அகப்பட்டால் போதுமென்று நினைத்தேன். அவள் அகப்பட்டபிறகு பிள்ளையும் மாமனாரும் அகப்படவில்லையே என்கிற ஏக்கம் பெரிதாயிருக்கிறது. மனுஷருடைய புத்தி ஒன்றிலும் திருப்தி அடைகிறதில்லை என்பதற்கு நானே சாட்சியாயிருக்கிறேன்” என்றார்.
-------------

அத்தியாயம் - 18
ஆண்டிச்சி யம்மாளுடைய புருஷனும் நாங்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெரியவரும் ஒரு யௌவனமான குமாரனும் உள்ளே வந்து நுழைந்தார்கள். அவர்கள் யாரென்றால் ஆண்டிச்சி அம்மாளுடைய தகப்பனாரும் பிள்ளையுந்தான். அந்த நால்வரும் சந்தித்த உடனே அவர்கள் பட்ட கிலேசமும் ஆநந்தமும் இப்படிப் பட்டது என்று விவரிக்க ஒருவராலும் கூடாது. இதுவரையில் பிரிந்திருந்த துக்கமும் பிறகு எப்படியாவது சந்தித்தோமே என்கிற ஆனந்தமும் கூடி ஒரு வீட்டில் ஒரு காலத்தில் துக்கமும் கலியாணமும் நடப்பது போல் ஆயிற்று. நாங்கள் அவர்கள் அழும்போது அழுகிறதும், அவர்கள் சந்தோஷிக்கும்போது சந்தோஷிக்கிறதுமாய் இருந்தோமே தவிர வேறு செயல் அற்றவர்களாயிருந்தோம். அந்த ஆதாளி அடங்கின பிற்பாடு நாங்கள் அந்தப் பெரியவரைப் பார்த்து “ஐயா! நீங்கள் பிள்ளையைத் தேடிக் கொண்டு போன பிற்பாடு நடந்த காரியம் என்ன?" என்று வினவ, அவர் சொல்லுகிறார்.

“நான் என்னுடைய ஊரிலே பிள்ளையைத் தேடிக் கொண்டுபோனபோது ஒருவன் என்னைக் கண்டு “கடலோரத்தில் ஒரு பிள்ளையை ஒருவன் கப்பலுக்கு வரும்படி இழுத்துக் கொண்டிருந்தான். அந்தப் பிள்ளை போக மாட்டேனென்று அழுதுகொண்டிருந்தது” என்று எனக்குத் தெரிவித்தான். நான் உடனே சமுத்திரக் கரைக்கு ஓடினேன்; அவ்விடத்திலே பிள்ளையைக் காணாமையினால் ஒரு தோணியில் ஏறிப் போய்க் கப்பல் மேலே ஏறினேன். அங்கே இவன் என்னைப் பார்த்த உடனே ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு அழுதான்; அந்தக் கப்பல் திருட்டுக் கப்பலென்று பல அனுமானங்களால் நிதானித்துக் கொண்டேன். கப்பலில் இருந்தவர்களைப் பார்த்து “இந்தப் பிள்ளையை ஏன் கொண்டுவந்தீர்கள்” என்று நான் கேட்க, அவர்கள் நேரான மறுமொழி சொல்லாமல் என்னை நிராகரித்துப் பேசினார்கள். நான் அவர்களைப் பார்த்து “இந்தப் பிள்ளை தரித்திருக்கிற ஆபரணங்களையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்; பிள்ளையை மட்டும் என் வசத்தில் விட்டுவிடுங்கள்” என்று தொழுதேன்; என் பேச்சு முடிவதற்கு முன்னமே கப்பல் ஓட ஆரம்பித்தது. உடனே அந்தக் கப்பல் கேப்டனிடத்தில் ஓடி அழுதேன். அந்தப் பாவிக்கும் இரக்கம் வரவில்லை; அந்தக் கப்பலில் இன்னும் அநேகர் பலவந்தமாக ஏற்றப்பட்டிருந்தார்கள்; நாங்கள் அழுத கண்ணீர்ச் சமுத்திரம் அந்தத் தண்ணீர்ச் சமுத்திரத்தை ஒத்தது. அவர்கள் பிள்ளைமேல் இருந்த ஆபரணங்களைக் கழற்றிக் கொண்டு, பல தீவாந்தரங்களுக்குப் போய்க் கடைசியாய் அமெரிக்காவில் எங்களை அடிமைகளாக விற்றுப்போட்டார்கள். அவ்விடத்தில் நாங்கள் பல பேர்களுக்கு அடிமைகளாகி, நாங்கள் பட்ட கஷ்டங்களை நீங்கள் கேள்விப்பட்டால் அழாமல் இருக்கமாட்டீர்கள். கடைசியாய் ஒரு ஐரோப்பியத் துரையை அநுசரித்து, அவருடைய உத்தியோக சாலையில் நான் ஒரு தகுந்த உத்தியோகத்தில் அமர்ந்து இந்தப் பிள்ளையையும் சம்ரக்ஷ¢த்து அவனுக்கு வித்தியாப்பியாசமுஞ் செய்வித்தேன். அந்தத் துரையினுடைய தயவினாலே நாங்கள் மறுபடியும் கப்பலேறி புதுச்சேரித் துறைமுகத்தில் இறங்கி வீட்டுக்குப் போனோம்; அங்கே என் மகளைக் காணாமையினால் நாங்கள் உடனே புறப்பட்டுப் பல ஊர்களிலே தேடிக்கொண்டு அவளுடைய சிறிய தாயாருடைய வீட்டுக்கு வந்தோம்; என்னுடைய மகள், உங்களுடைய பெண்ணை அழைத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு நாங்களும் இவ்விடம் வந்தோம்; யுத்தத்துக்குப் போன என் மருமகன் திரும்பி வந்துவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டிருந்தாலும் இங்கே அவரைக் காண்போம் என்று நாங்கள் நினைத்து வரவேயில்லை; கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் என்னுடைய மகளையும், மருமகனையும் உங்களுடைய வீட்டிலே பார்க்கும்படி லபித்ததால் என்னைப் போல பாக்கியசாலிகள் ஒருவரும் இருக்கமாட்டார்கள்” என்றார். உடனே அவர்களுடைய மருமகன் குதூகலத்துடனே எங்களைப் பார்த்து “ஐயா! என் மாமனார் மீது எனக்கு ஒரு வழக்கு இருக்கின்றது; அது என்னவெனில் அதிக ரூபமும் யௌவனமும் உடைய ஒரு ஸ்திரீயையும் பால் குடிக்கிற பருவமுள்ள அருமையான ஒரு சிசுவையும் என் மாமனார் வசத்தில் நான் ஒப்புவித்துப் போயிருக்க, அவர் ஒரு ஆண்டிச்சியையும் ஒரு பெரிய பிள்ளையையும் எனக்குக் கொடுக்க வைத்திருக்கிறார்; இது தர்மமா?” என்று சிரித்தார். இவ்வகையாக அவர் மாமனாரைப் பரிகாசம் பண்ணிக்கொண்டிருக்கும்போது ஆண்டிச்சி அம்மாளை என் தாயார் கூப்பிடுவதாக ஒரு தாதி வந்து அழைத்துக்கொண்டு போனாள். உடனே என் தாயாரும் ஞானாம்பாள் முதலான ஸ்திரீகளும் ஆண்டிச்சி அம்மாளைப் பலவந்தமாய் ஸ்நான கட்டத்துக்குக் கொண்டுபோய்க் குளிப்பாட்டிப் பரிமள திரவியங்களைப் பூசித் திவ்யமான ஆடை ஆபரணங்களைத் தரிப்பித்து புருஷன் முன்பாகப் போகும்படி அவளை உள்ளே இருந்து தள்ளிவிட்டார்கள். அவளுக்கு முன் போல அழு உண்டாகிவிட்டபடியால் அவள் இன்னாளென்று ஒருவருக்கும் அடையாளம் தெரியவில்லை. அந்த விருத்தர் மட்டிலும் தம்முடைய மகள்தான் என்று கண்டுபிடித்துக் கொண்டார். அவருடைய மருமகன் எங்களைப் பார்த்து “இந்த அம்மா யார்?” என்று வினவினார். உடனே இந்தக் கிழவனார், “என் மாப்பிள்ளை வெட்கமில்லாமல் என் பெண்சாதியை அம்மா என்கிறார்!” என்று கை கொட்டிச் சிரித்துப் பரிகாசஞ் செய்தார். பிற்பாடு அவர் எழுந்து தம்முடைய மகள் கையைப் பிடித்து மருமகன் கையில் வைத்து “இப்போது இந்தப் பெண் உமக்குச் சம்மதமா? இல்லையா?” என்றார். அவருடைய மருமகன் “பூரண சம்மதம்! பூரண சம்மதம்!” என்று பெண்சாதி கையைப் பற்றிக் கொண்டார். இவ்வகையாக கலியாண மகோற்சவம் போற் கொண்டாடிச் சந்தோஷித்தார்கள். அவர்களுக்கு நாங்கள் அன்றைய தினம் அறுசுவை பதார்த்தங்களுடனே விருந்து முதலிய உபசரணைகள் செய்து அவர்களுடைய சினேகிதத்தையும் சம்பாதித்துக் கொண்டோம். அந்த விருத்தரும் அவருடைய மருமகனும் எங்களை நோக்கி “நீங்கள் மகா புண்ணீயசீலர்களாகையால் உங்களுடைய வீட்டில் நாங்கள் நுழைந்த உடனே எங்களுடைய துக்கங்களெல்லாம் நீங்கி நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்படியான அதிர்ஷ்டசாலிகள் ஆனோம். நாங்கள் கப்பலை விட்டு இறங்கின உடனே எங்கள் எங்கள் வீட்டுக் காரியங்களைப் பற்றி யாதொரு ஒழுங்குஞ் செய்யாமல் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டு சடுதியிற் புறப்பட்டு வந்துவிட்டதால் எங்களுடைய காரியங்களெல்லாம் அலங்கோலமா யிருக்கின்றன. நாங்கள் ஊருக்குப் போய்ச் சகல காரியங்களையும் சீர்ப்படுத்திக் கொண்டு, கூடுமானால் மறுபடி ஒரு பயணம் வந்து உங்களைத் தரிசிக்க அபேக்ஷ¢க்கிறோம்” என்று சொல்லி எங்களிடத்தில் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.
----------

அத்தியாயம் - 19
அவர்கள் போனபிற்பாடு எனக்கும் ஞானாம்பாளுக்கும் அதி சீக்கிரத்தில் விவாகம் முடிக்க வேண்டுமென்று சம்பந்தி முதலியார் அவசரப்பட்டார். அவருடைய துரிதத்தைப் பார்த்தால் அன்றையத் தினமே கலியாணம் முடிந்தாலும் அவருக்குச் சந்தோஷமாயிருக்குமென்று தோன்றிற்று. என்னுடைய மனோபீஷ்டமும் அப்படியே இருந்தது. ஆனால் என் தாய் தந்தைமார்கள் தூரத்திலிருக்கிற பந்து ஜனங்களும் தேவராஜப் பிள்ளை கனகசபை முதலானவர்களும் கலியாணத்துக்கு வரும்படியான சாவகாசத்தை யோசித்து முகூர்த்தம் நியமித்ததனால் கலியாணம் இருபது நாள் பிந்திப்போய் விட்டது. அந்த இருபது நாளும் இருபது யுகங்களைப் போல் இருந்தன. அந்தக் காலத்தைத் தொலைக்க என்னால் கூடியவரையில் பிரயாசப்பட்டும் தொலையவில்லை. தன்னுடைய இஷ்டப்படி கண்ட இடமெல்லாம் ஓடித் திரிகிற துஷ்டக்காளை வண்டியிற் கட்டின உடனே படுத்துக் கொள்வது போல, அதற்கு முன் அதி துரிதமாக ஓடிக்கொண்டிருந்த காலமானது இப்போது சுத்தமாய் அசையாமல் நின்றுவிட்டது. கடைசியாய் அந்தக் காலமும் முடிந்தது; ஞானாம்பாளுக்கும் எனக்கும் கலியாணமும் முடிந்தது. அந்தக் கலியாண மகோற்சவ வைபவத்தைப் பிறர் சொல்லவேண்டுமே அல்லாது நான் சொல்லிக்கொள்வது தற்புகழ்ச்சியாய் முடியும். அன்றியும் ஞானாம்பாளை நான் மாலை சூட்டப்பெற்ற பாக்கியத்தைப் பார்க்கிலும் மற்றக் கலியாண சம்பிரமங்கள் விசேஷமல்ல. ஆகையால் அவைகளை விவரிக்காமல் விட்டுவிடுகிறேன். தேவராஜப் பிள்ளையும் கனக சபை முதலானவர்களும் என் கலியாணத்திற்குக் கூட வந்திருந்து எண்ணிக்கை இல்லாத ஆடை ஆபரணங்களும் பாத்திர சாமான்களும் சம்மானம் செய்தார்கள். நாங்கள் அவர்களுக்குப் பதில் மரியாதையும் செய்தோம். நாங்கள் செய்தது அணுவாகவும் அவர்கள் எங்களுக்குச் செய்தது மலையாகவும் போய்விட்டது; அதனால் எங்களுக்கு வெட்கமுண்டாகி, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பாகக் கனகசபை கலியாணத்தில் மரியாதை செய்கிறதென்று சங்கற்பித்துக் கொண்டோம். கனக சபைக்கு எப்போது விவாகமென்றும் எங்கே பெண் பார்த்திருக்கிறீர்களென்றும் தேவராஜப் பிள்ளையை என் தகப்பனார் கேட்க, அவர் சொல்லுகிறார்:

“என் தங்கை பெண்ணைக் கனகசபைக்கு மணஞ்செய்கிறதென்று நிச்சயித்திருக்கிறோம். அந்தப் பெண் பெயர் குணரத்தினம். அந்தப் பெண்ணுடைய சரித்திரம் கனகசபை சரித்திரம் போல் ஆசாரியப்படத்தக்கதா யிருக்கின்றது. என் தங்கை புருஷன் மாணிக்கம்பிள்ளை பெரிய தனவான். எங்கள் ஊருக்கு நாற்பதுகாத வழி தூரத்திலிருக்கிற சிங்கனூர் அவருடைய வாசஸ்தலம். குணரத்தினத்தைத் தவிர வேறே பிள்ளை இல்லாதபடியால் அந்தப் பெண்ணைக் கண்ணுக்குக் கண்ணாகவும் உயிருக்கு உயிராகவும் வளர்த்தார்கள். அந்தப் பெண் சிறு குழந்தையா யிருக்கும்போது ஒரு அமாவாசை இராத்திரியில் அனேக ரத்னாபரணங்களுடன் தொட்டியிலே படுத்துத் தூங்கிற்று. ஒரு திருடன் நடுச்சாமத்தில் எவ்வகையாகவோ உள்ளே நுழைந்து, அந்தப் பெண் தரித்திருந்த நகைகளைக் கழற்றப் பிரயாசைப் பட்டுங் கூடாமலிருந்ததால், வெளியில் கொண்டுபோய் நகைகளைப் பறித்துக் கொள்ளலாமென்று நினைத்து அந்தப் பிள்ளையை மிருதுவாய்த் தூக்கிக்கொண்டு தெருக் கதவைத் திறந்து வெளியே ஓட ஆரம்பித்தான். அந்த அரவங் கேட்டு என் மைத்துனரும் மற்றவர்களும் விழித்துக் கொண்டு தொட்டிலில் பிள்ளயைக் காணாமையால் உடனே திருடனைத் தொடர்ந்து கொண்டு ஓடினார்கள். அந்தத் திருடன் வெகு தூரம் முன்னும், இவர்கள் பின்னுமாக ஓடும்போது அந்தத் திருடன் பயந்துகொண்டு சமீபத்திலிருந்த ஐயனார் கோவிலுக்குள்ளே நுழைந்து அந்தப் பிள்ளையை விக்கிரகத்தின் பாதத்தில் வைத்துவிட்டு அந்த விக்கிரகத்தின் பின்னாலே மறைந்து கொண்டான். என் மைத்துனர் முதலானவர்கள் நக்ஷத்திர வெளிச்சத்தில் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்ததைப் பார்த்தபடியால் அவர்களும் கோயிலுக்குள்ளே புகுந்தார்கள். அந்தத் திருடன் “இனி மேல் எப்படியும் அகப்பட்டுக் கொள்வோம்; ஆயினும் ஒரு உபாயஞ் செய்து பார்ப்போம்” என்று நினைத்து அந்த ஐயனார் பேசுவது போல் தன் குரலை வேறுபடுத்திக் கொண்டு சொல்லுகிறான்: “ஓகோ! துஷ்டர்களே! இந்தப் பிள்ளைமேல் நமக்குக் கிருபை உண்டாகி அதை ஆசீர்வதித்துச் சகல வரப்பிரசாதங்களையும் கொடுத்து அனுப்பலாமென்று யோசித்து, நான் அந்தப் பிள்ளையைக் கொண்டுவந்திருக்க, அந்த உபகாரத்தை நீங்கள் எவ்வளவும் யோசிக்காமலும் தேக சுத்தி, இருதய சுத்தி இல்லாமலும் என்னுடைய ஆலயத்திலும் வந்து பிரவேசித்தீர்கள்! ஒரு நிமிஷத்தில் உங்கள் குடலைப் பிடுங்கி மாலையாய்ப் போட்டுக் கொள்ளுவேன்! ஆனால் அந்தப் பிள்ளைமேல் இருக்கிற கருணையால் உங்கள் குற்றத்தை க்ஷமிக்கிறேன்! அந்தப் பிள்ளையை இந்த இராத்திரி மட்டும் நீங்கள் விட்டுவிட்டுப் போனீர்களானால் அதற்குச் சகல அனுக்கிரகமும் செய்து வைத்திருக்கிறேன்; நீங்கள் பிராதக் காலத்தில் வந்து, பிள்ளையை எடுத்துக்கொண்டுபோகலாம்; இதற்கு நீங்கள் சம்மதிக்காவிட்டால் அந்தப் பிள்ளையையுங் கொன்று, உங்களயும் குலநாசஞ் செய்வேன்” என்றான். என் மைத்துனர் மூடபக்தி யுள்ளவரானதால் அந்தத் திருடன் சொன்னதைத் தெய்வ வாக்காக எண்ணி அந்த விக்கிரகத்தைச் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி “சுவாமி, தங்கள் சித்தப் பிரகாரம் அந்தக் குழந்தைக்கு அனுக்கிரகம் செய்தருளவேண்டும்” என்று மொழிந்து, தன்னுடைய ஆட்களையும் அழைத்துக்கொண்டு போய்விட்டார்.
அவர்கள் போனபிற்பாடு அந்தத் திருடன் நகைகளையெல்லாம் ஒவ்வொன்றாகக் கழட்டிக்கொண்டு குழந்தையைக் கோயிலில் வைத்துவிட்டு வெளியே ஓடினான். அந்தக் கோயிற் பூசாரி வழக்கப்படி விடியற்காலத்திலே கோயிலுக்கு வந்து யாரோ திருடன் ஓடுகிறானென்று துரத்தினான். அந்தத் திருடன் பெரிய கற்களை எடுத்து வீசினபடியால், அந்தக் கல்லடி பட்டுப் பூசாரி நின்று போனான். பிற்பாடு கோயிலுக்குள் அழுகிற குழந்தையைப் பார்த்து இது யாருடைய குழந்தையோவென்று பூசாரி ஆலோசித்துக் கொண்டிருக்கையில், என் மைத்துனர் முதலானவர்கள் குழந்தைக்கு இதுவரையில் அனுக்கிரகமாயிருக்குமென்று நினைத்துக் கோயிலுக்கு வந்து, பூசாரியைக் கண்டு இராத்திரி ஐயனார் திருவாய் மலர்ந்தருளியதைச் சொன்னார்கள். இதைக் கேட்டவுடனே, “கோயிற்பூனை தேவருக்கு அஞ்சாது” என்பது போல் அந்தப் பூசாரிக்கு அடக்கக் கூடாத பெருஞ்சிரிப்பு வந்துவிட்டது. அவன் சிரிப்பு முடிந்தபிற்பாடு என் மைத்துனரைப் பார்த்துத் தான் வரும்போது கோயிலுக்குள்ளிருந்து திருடன் வெளியே ஓடினதும் தான் துரத்திக் கொண்டு போனதும் அவன் கல்லால் வீசித் தன்னைக் காயப்படுத்தினதும் பரிஷ்காரமாய்த் தெரியப் படுத்திப் பின்னும் பூசாரி சொல்லுகிறான்.

“உங்களைப் போலவே நானும் சில காலத்துக்குமுன் மோசம் போனேன். ஒரு நாள் சுவாமிக்குப் படைத்த அன்னம், பழம், தேங்காய் முதலான பிரசாதங்களை வழக்கப்படி எடுத்துக் கட்டிக்கொண்டு நான் வீட்டுக்குப் போக யத்தனப்பட்டபோது ஐயனார் விக்கிரகத்தினின்று ஒரு அசரீரி வாக்குப் புறப்பட்டது. அதென்னவெனில் “அடா! பாதகா! தினந்தோறும் எனக்குக் கொஞ்சமாவது வைக்காமல் பிரசாதங்கள் முழுதும் நீ கொண்டுபோய் விடுகின்றாயே! நான் எத்தனை நாளுக்குப் பசி பொறுப்பேன்? இனி நீ பிரசாதங்களைக் கொண்டுபோயானால் உன்னையே எடுத்துப் புசித்துவிடுவேன்” என்றது. நான் இதைத் தெய்வ வாக்காக நினைத்து அன்றுமுதல் பிரசாதங்களைக் கொண்டு போகாமல் சுவாமி முன்பாக வைத்துவிட்டுப் போகிறது வழக்கம். மறுநாட் காலையில் அந்தப் பிரசாதம் இல்லாமலிருந்தால் ஐயனார் புசித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு பிச்சைக்காரன் விக்கிரகத்துக்குப் பின்னே இருந்துகொண்டு ஐயனார் பேசுவதுபோற் பேசிப் பிரசாதங்களையும், தினந்தோறும் சாப்பிட்டு வந்ததாகச் சில நாளைக்குப் பிறகு தெரிந்து அவனையும் பிடித்துத் தகுந்த சிட்சையும் செய்தோம். அப்படியே ஒரு திருடன் உங்களையும் மோசஞ் செய்திருக்கிறான்” என்று பூசாரி சொன்ன பிற்பாடு என் மைத்துனருக்குப் புத்தி வந்தது. இந்தச் சமாசாரங்களெல்லாம் பிற்பாடு நான் கேள்விப்பட்டேன். அந்தக் குழந்தை வெகு நேரமாய்ப் பால் குடியாமலிருந்ததால் மிகுந்த பசி உண்டாகிக் களைத்துப்போய் விட்டது. அந்தக் குழந்தைக்குப் பால் கொடுத்து அது பிழைப்பதே அரிதாய்விட்டது. இதற்குச் சில வருஷங்களுக்குப் பின்பு என் மைத்துனர் இறந்துபோனார். என் தங்கைக்குப் புருஷ காபந்து இல்லாததனாலே அவள் கையிலிருந்த சொத்துக்களுடன் அவளும் அவளுடைய பெண்ணும் என் கிரஹத்துக்கு வந்து விட்டார்கள். அவளுடைய பூஸ்திதிகளையெல்லாம் நானே பராமரித்து வருகிறேன். கனகசபை ஜீவிப்பதிருப்பது எனக்குத் தெரியாமலிருந்த காலத்தில் அந்தப் பெண்ணுக்குத் தகுந்த வரன் தேடி விவாகம் செய்ய நிச்சயித்திருந்தேன் செங்கற்பட்டு ஜில்லா கலெக்டர் கச்சேரி சிரஸ்ததார் அந்தப் பெண்ணைக் கொள்ள விரும்பி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நான் யோசித்து முடிவு சொல்கிறேனென்று பறுமொழி எழுதினேன். காணாமற்போன திரவியம் அகப்பட்டதுபோல் கனகசபை என்னிடம் வந்து சேர்ந்த பிற்பாடு அவனுக்கே அந்தப் பெண்ணைச் சுயம்வரம் செய்கிறதென்று நினைத்திருக்கிறேன். கனக சபையினுடைய கருத்தும் அந்தப் பெண்ணுடைய கருத்தும் அப்படியே இருப்பதாகப் பல குறிப்புகளாலே தெரிந்து கொண்டேன். இந்த விவரங்களெல்லாம் கண்டு மேற்படி சிரெஸ்ததாருக்குக் கடிதம் அனுப்பினேன். அவனுக்குப் பெண் கொடுக்கவில்லை என்கிற கோபத்தினால் அவன் எனக்கு எவ்வகையிலாவது தீங்கு செய்யவேண்டுமென்று நினைத்திருப்பதாகக் கேள்விப்படுகின்றேன். எனக்கு ஒரு புத்திரன் பிறந்து இறந்துபோனதாகவும் வேறே பிள்ளை இல்லையென்றும் நான் சந்ததி இல்லாமல் இறந்துபோனால் என் பாளையப்பட்டைக் கவர்ன்மெண்டார் கட்டிக் கொள்வார்களென்று பயந்து ஒரு பிள்ளை காணாமற் போயிருந்து அகப்பட்டது போல நான் மாறுபாடு பண்ணுவதாகவும் அந்தச் சிரெஸ்ததார் கலெக்டருக்குப் போதித்து என்னுடைய பாளையப்பட்டை ஜப்தியில் வைக்கப் பிரயாசைப் படுகிறானாம். இதற்கெல்லாம் நான் எவ்வளவும் பயப்படவில்லை. நியாயமும் சத்தியமும் நம்முடைய பக்ஷத்திலிருக்கும் போது நமக்கு யார் என்ன செய்யக் கூடும்? நான் சீக்கிரத்தில் கனகசபைக்கு முகூர்த்தம் பார்த்துத் தெரிவிக்கிறேன். நீங்கள் விஜயஞ் செய்து தம்பதிகளை ஆசீர்வதிக்க வேண்டும்” என்று சொல்லிக் கனகசபை தகப்பனாரும் மற்றவர்களும் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.
----------

அத்தியாயம் - 20
விக்கிரமாதித்தன் காட்டில் ஆறு மாதமும் நாட்டில் ஆறு மாதமும் வசித்தது போல நானும் ஞானாம்பாளும் அவள் தகப்பனார் கிரஹத்தில் ஆறு மாதமும் என் கிரஹத்தில் ஆறு மாதமும் மாறி மாறி வசிக்கிறதென்று என் தகப்பனாரும், ஞானாம்பாள் தகப்பனாரும் நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப் பிரகாரம் நாங்கள் முந்திய ஆறு மாதம் சம்பந்தி முதலியார் வீட்டிலும், பிந்தின ஆறு மாதம் என் தகப்பனார் வீட்டிலுமிருந்து வந்தோம். என் தாயாரும் ஞானாம்பாளும் தாயும் மகளும்போல அதிக நேசமும் பிரியமுமாக ஒத்து வாழ்ந்தார்கள். ஞானாம்பாள் வருகிறதற்கு முன் என் தாயார் தங்களுடைய தேக சௌக்கியத்துக்கடுத்த காரியங்களைக் கவனிப்பதற்குக்கூட நேரமில்லாமல் குடும்ப யோக§க்ஷம காரியங்களை ஏகதேசத்திற் பார்த்துப் பரிசிரமப்பட்டார்கள். ஞானாம்பாள் வந்ததுமுதல் அவளுங் கிருக கிருத்தியங்களை வகித்துப் பார்த்து வந்ததுந் தவிர, என் தாயாருடைய தேக போஷணைக்கடுத்த காரியங்களையும் அவளுடைய கையாலேயே செய்துவந்தபடியால் என் தாயாருக்குப் பெரிய ஆறுதலும் சிரம பரிகாரமுமாயிருந்தது. அன்றியும் எனக்கு வேலை செய்யப் பல வேலைக்காரர்களிருந்தாலும் கலியாணத்துக்குப் பிற்பாடு என்னுடைய வேலையையும் ஞானாம்பாளே செய்து வருவாள். நான் ஒருநாள் அவளைப் பார்த்து “நாமென்ன ஏழைகளா? நமக்கு வேலை செய்ய ஊழியக்காரர்கள் இல்லையா? நீ உன் கையாலே வேலை செய்வது எனக்குத் திருப்தியில்லை” யென அவள் சொல்லுகிறாள்: “எளிய ஸ்திரீகள் கைப்பாடுபட்டு ஜீவனத்துக்கு வேண்டிய காரியங்களையும் சம்பாதித்துக் கொண்டு சமையல் முதலிய வீட்டு வேலைகளையும் செய்து வருகிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலைகள் யாதொன்றுமில்லை. உங்களுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளையாவது நான் செய்யக் கூடாதா?” என்றாள். “இதற்குமுன் ஒரு நாளும் நீ வேலை செய்வதை நான் பார்த்ததில்லையே. இப்போது இவ்வேலைகளையெல்லாம் எப்படிக் கற்றுக் கொண்டாய்?” என்று நான் கேட்க அவள் “பக்ஷ¢களுக்குப் பறக்கவும் மீன்களுக்கு நீந்தவும் யார் கற்பித்தார்கள்? அப்படியே நானும் வேலை செய்யப் பயின்றேன்” என்றாள்.

ஞானாம்பாள் வேலை செய்கிற நேரம் போக மற்ற நேரங்களில் நானும் அவளும் பல விஷயங்களைப் பற்றிச் சம்பாஷிக்கிறது வழக்கம். ஒரு நாள் அழகைப் பற்றிப் பிரஸ்தாபம் வந்தபோது அவள் சொல்லுகிறாள்: “குண அழகும், புத்தியின் அழகும் அழகே யல்லாமல் முக அழகு அழகல்ல.ஒரு ஸ்திரயினுடைய அழகையாவது, புருஷனுடைய அழகையாவது அழகென்று எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்களா? ஒருவனுடைய முகம் அழகென்று சிலர் ஒப்புக்கொண்டாலும் அநேகர் அதை விகாரமென்று சொல்லுகிறார்கள். 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பதுபோல் அவரவர்களுடைய பிரியத்துக்குத் தகுந்தபடி அவலக்ஷணத்தையும் லக்ஷணமென்று சொல்லுகிறார்கள். குணத்தையும் புத்தியையும் சிலாகிக்காதவர்கள் யார்? ஒருவன் குணவானாயும் கல்விமானாயும் இருப்பானானால் அவனால் உலகத்துக்கு எவ்வளவோ பிரயோஜனமுண்டு. அழகினால் யாருக்கு என்ன பிரயோஜனம்? யௌவன காலத்தில் அழகுக்கு விசேஷமே தவிர வயது செல்லச் செல்ல அழகும் குறைந்துபோகின்றது. மேலும் அம்மை முதலிய பல வியாதிகளால் அழகு விகாரமாய் மாறிவிடுகின்றது. குணமும், விவேகமும் எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் மாறாமல் ஒரே தன்மையாயிருக்கின்றது. அழகில்லாத ஆடுமாடுகள் உலகத்துக்கு உபகாரியாயிருக்கின்றன. காஞ்சிரங்கனி அழகாயிருந்து காரியமென்ன? அழகை மின்னலுக்குச் சமானமாக வித்வான்கள் வர்ணிக்கிறார்கள். மின்னல் இடியை உண்டுபண்ணுவதுபோல் அழகும் காமவிகாரம் முதலான பல தீமைகளை விளைவிக்கின்றது” என்று பிரசங்கித்தாள்.

என் தாயாரையும் ஞானாம்பாளையும் அவளுடைய தாயாரையும் தவிர வேறே ஸ்திரீகளை நான் அறியாதபடியால் ஸ்திரீகளெல்லாரும் நல்லவர்களென்று பூஜிக்கிறதும் புருஷர்களெல்லாரும் துஷ்டர்களென்று தூஷிக்கிறதும் எனக்கு வழக்கமாயிருந்தது. ஒரு நாள் ஞானாம்பாள் என்னை நோக்கி “ஸ்திரீகளில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். அப்படியே புருஷர்களிலும் சிஷ்டர்களும் துஷ்டர்களு மிருக்கிறார்கள்” என்றாள்.

“மில்ட்டன் (Milton) என்னும் இங்கிலீஷ் மகாவித்வான், அந்தகனான பிற்பாடு விவாகஞ் செய்த பெண்சாதி எவ்வளவோ கொடுமையுள்ளவளென்று அந்த வித்வானே முறையிடுகிறார். அவளை ஒரு பெரிய பிரபு ரோஜாப் புஷ்பமென்று வர்ணித்தபோது அந்த மகாவித்வான் அவரை நோக்கி “நான் குருடனானதால் அவள் அழகினுடைய சமாசாரம் எனக்குத் தெரியாது; ஆனால் என்மேலே படுகிறதெல்லாம் முட்கள்தான்” என்றார்.

“சோக்கிராட்டிஸ் (Socrates) என்னும் ஞான சாஸ்திரிக்கு வாய்த்த பெண்சாதி எவ்வளவு பொல்லாதவளென்று சகலருக்கும் தெரிந்த காரியமே. அவள் செய்த கொடுமைகளை யெல்லாம் அவர் எவ்வளவோ பொறுமையுடன் சகித்தார். ஒரு நாள் அவள் சொன்ன தூஷணங்களைச் சகிக்கமாட்டாமல் அவர் வெளியே போய் வாசற்படிக்கு முன்பாக உட்கார்ந்தார். அவள் கோபாவேசத்துடன் மேல்மெத்தை மேல் ஓடி அங்கே இருந்த அசுத்த நீர் நிறைந்த பானையை எடுத்து அவர் தலைமேல் கவிழ்த்தாள். அவர் சிரித்துக்கொண்டு “முன்னே இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறது” என்று சொல்லிப் பொறுமையாயிருந்தார்.

“ஒரு புருஷன் வடை தின்ன ஆசை கொண்டு உளுந்து வாங்கிப் பெண்சாதியிடத்திலே கொடுத்து வடை சுடும்படி ஆக்ஞாபிக்க அவள் நூறு வடை சுட்டுத் தொண்ணூற்றொன்பது வடைகளையும் அவளே தின்றுவிட்டு ஒரு வடை மட்டும் புருஷனுக்கு வைத்தாள். அவன் அத்தனை வடைகளையும் “எப்படித் தின்றாய்?” என்று கேட்க, அவள் “இப்படித் தான் தின்றேன்” என்று அந்த ஒரு வடையையும் எடுத்துத் தின்றுவிட்டாள். இவள் எப்படிப்பட்ட அரக்கியாய் இருக்கவேண்டும்?

“பின்னும் ஒரு பெண்சாதிக்கும் புருஷனுக்கும் வாக்குவாதமுண்டாகி அவன் பெண்சாதியைப் பழி வாங்குவேனென்று சொல்ல, அவள் “என்ன பழி வாங்குவாய்?” என்று கேட்க, “கொல்லையிலிருக்கிற குளத்தில் விழுந்துவிடுவேன்” என்று புருஷன் சொல்ல, அவள் “விழுகிறதை நான் கண்ணாலே பார்க்கவேண்டும் வா” என்று திட்டி மடியைப் பிடித்து இழுக்க அவன் குளத்தில் விழுகிறதற்காக ஒரே ஓட்டமாக ஓடினவன் பிற்பாடு பயந்துகொண்டு குளத்து ஓரத்தில் நின்றுவிட்டான். உடனே அவனை அவன் பெண்சாதி வாயில் வந்தபடி தூஷித்து “வெட்கம் கெட்டவனே! ஏன் குளத்தில் விழவில்லை?” என்று கேட்க அவன் “எனக்கு மனந்துணிவில்லை. பின்னும் எனக்கு நீச்சுத் தெரியுமானதால் நான் தப்பிவந்தாலும் வந்துவிடுவேன்; நான் தப்பிவராதபடி என்னுடைய இரண்டு கைகளையும் நீ பின் கட்டு முறையாய்க் கட்டி விட்டு தூரத்திலிருந்து ஓடிவந்து என்னைக் குளத்திலே தள்ளி விடு” என்று சொல்லிக் குளத்து ஓரத்தில் நின்றான். அந்தப் பிரகாரம் பெண்சாதி பர்த்தாவினுடய இரு கைகளையும் பின்புறமாய்க் கட்டிவிட்டு அவள் வெகு தூரம் பின்னிட்டுப் போய் அவனைத் தள்ளுவதற்காக அதி வேகமாக ஓடிவந்தாள். அவள் தனக்குச் சமீபத்தில் வரும்போது அவன் திடீரென்று அப்பால் விலகிவிட்டான். அவள் ஓடிவந்த விசையினால் அவளே ஒர் நிமிஷத்திற் குளத்தில் விழுந்துவிட்டாள். உடனே தன்னைத் தூக்கிவிடும்படி கத்தினாள். “நீயே என் கைகளைக் கட்டிவிடாயே! நான் என்ன செய்வேன்?” என்று புருஷன் சும்மா இருந்துவிட்டான். அவள் ஸ்வயங்கிருத அபராதத்தால் தண்ணீரில் மூழ்கி இறந்து போனாள்” என்றாள்.

மேற்படி திருஷ்டாந்தங்களை ஞானாம்பாள் சொன்னவுடனே ஸ்திரீகள் நல்லவர்களென்பதற்கு நானும் சில திருஷ்டாந்தங்கள் சொன்னேன்:

“கொன்ராட் (Conrad) என்னும் சக்கரவர்த்தி ஒரு பட்டணத்தைப் பிடித்தபோது அதிலிருந்த புருஷர்களையெல்லாம் வெட்டிப்போடும்படியாகவும் ஸ்திரீகளையெல்லாம் அவர்கள் தூக்கக் கூடுமான ஆஸ்திகளை எடுத்துக் கொண்டு பட்டணத்தை விட்டுப் போய்விடும்படியாகவும் உத்தரவு கொடுத்தார். அநேக ஸ்திரீகள் தங்களுடைய புருஷர்களை முதுகின்மேலே தூக்கிக்கொண்டு நகரத்துக்கு வெளியே போவதை அந்தச் சக்கரவர்த்தி பார்த்து 'ஆஸ்திகளை எடுத்துக்கொண்டு போகும்படி நாம் உத்தரவு கொடுத்திருக்க', 'புருஷர்கள் தான் எங்களுக்கு ஆஸ்தி' என்று அந்த ஸ்திரீகள் சொல்ல அந்தச் சக்கரவர்த்திக்கு இரக்கமுண்டாகி அந்த நகரத்துப் புருஷர்களையெல்லாம் கொலை செய்ய வேண்டாமென்று உத்தரவு கொடுத்தார்.

“இராணுவ வகுப்பைச் சேர்ந்த ஒரு உத்தியோகஸ்தர் அழகும் மேன்குலமுமுள்ள ஒரு ஸ்திரீயை விவாகஞ் செய்கிறதென்று நிச்சயித்த பிற்பாடு அவர் திடீரென்று யுத்தத்துக்குப் போகும்படி நேரிட்டது. அவர் திரும்பி வந்த பிற்பாடு கலியாணஞ் செய்வதாக வாக்குத் தத்தஞ் செய்து யுத்தத்துக்குப் போய்விட்டார். அந்தச் சண்டையில் அவர் குண்டுபட்டு நொண்டியாய்ப் போனதுந்தவிர தேகத்தில் காயங்களுண்டாகி அவர் சர்வ விகாரமாய்ப் போனார். இப்படிப்பட்ட ஸ்திதியில் அந்த ரூபவதி தன்னைக் கலியாணஞ் செய்யச் சம்மதியாளென்று அவர் மிகவும் துயரத்தை அடைந்திருந்தார். அவர் ஊருக்குத் திரும்பிவந்த உடனே அந்த ஸ்திரீயைப் பார்க்கிறதற்குக் கூட வெட்கப்பட்டுக் கொண்டிருந்து, பிற்பாடு ஒரு நாள் அவளிடம் போய்த் தன்னை அந்த ஸ்திதியிற் கலியாணஞ் செய்யச் சம்மதமா என்று கேட்க, அவள் அவரைப் பார்த்து “ஆடவர்களுக்குச் சௌரியமே அழகு; நீங்கள் சுத்த வீரர் என்பதற்கு உங்களுடைய காயங்களே சாக்ஷ¢களாயிருப்பதால் உங்களை விவாகஞ் செய்ய ஒரு தடையுமில்லை” என்று உடனே சம்மதித்தாள்.

“ஒரு திரவியந்தர் நெடு நாள் வியாதியாயிருந்து எழுந்திருக்கக் கூடாமல் அசக்தியாயிருந்த காலத்தில் அவருக்கு விரோதிகளான அநேக திருடர்கள் அவரைக் கொலை செய்யவும் சொத்துக்களைத் திருடவும் எண்ணங்கொண்டு ஒரு நாள் நடுச்சாமத்திற் பெருங் கூட்டமாய் வந்து அவர் வீட்டுத் தெருவாசற் கதவுகளைக் கோடாலியாற் பிளந்தார்கள். அவர்கள் திருடர்களென்று அவரடைய பெண்சாதி தெரிந்துகொண்டு புருஷன் படுத்திருக்கிற இடந் தெரியாமல் மறைத்துவிட்டுப் புருஷனுடைய உடுப்புகளைத் தான் தரித்து ரூபம் மாறிக்கொண்டு திருடர்களுக்கெதிரே போய் “உங்களுக்குப் புதையல் இருக்கிற இடத்தைக் காட்டிவிடுகிறேன்; என்னை உபத்திரவஞ் செய்ய வேண்டாம்” என்று சொல்ல அவர்கள் “புதையலைக் காட்டு! காட்டு” என்று பின் தொடர்ந்தார்கள். அவள் அவர்களை வெகு தூரம் அழைத்துக்கொண்டு போய் ஒரு பெரிய அறைக்குள் நுழைந்து அதில் விரித்திருந்த ரத்னக் கம்பளத்தைத் தூக்கி அதற்கடியில் தரையோடு தரையாகப் பூட்டப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதவைக் காட்டி அதைத் தூக்கி நிமிர்த்தும்படியாகச் சொன்னாள். திருடர்கள் பல பேர் கூடி அந்த இரும்புக் கதவைத் தூக்கி நிறுத்தினார்கள். அதற்கு அடியிலிருந்த படிகளின் வழியாய் அந்த ஸ்திரீயை முன்னே இறங்கச் சொல்லித் திருடர்கள் தீபங்களுடன் பின்தொடர்ந்து போனார்கள். அந்த நிலவறையில் பூட்டப் பட்டிருந்த அநேக இரும்புப் பெட்டிகளைக் காட்டி அவைகளுக்குள்ளாகத் திரவியங்களெல்லாம் இருப்பதாகத் தெரிவித்தாள். அவர்கள் “திறவுகோல் எங்கே?” என்று கேட்க, அவள் “இதோ! ஒரு நொடியிற் கொண்டுவருகிறேன்” என்று சொல்லி மான் ஓடுவதுபோல் அதிவேகமாய்ப் படிகளில் ஏறி வெளியே வந்து நிறுத்தப்பட்டிருந்த அந்த இரும்புக் கதவைக் காலே எட்டி உதைத்தாள். உடனே அந்தக் கதவு படீரென்று கீழே விழுந்து மூடிக்கொண்டது. அதன் பூட்டை ஒரு நிமிஷத்திலே பூட்டிவிட்டாள். திருடர்களெல்லாம் நில அறைக்குள்ளே அகப்பட்டுக் கொண்டார்கள். அவள் உடனே வீட்டுக்கு வெளியே ஓடிவந்து திருடர்களாலே கட்டப்பட்டிருந்த தன்னுடைய வேலைக் காரர்களை அவிழ்த்துவிட்டுக் கொஞ்ச தூரத்திற் குடியிருந்த தன் குடியானவர்களை அழைத்துவரும்படி ஆக்ஞாபித்தாள். அந்தப் பிரகாரம் இருநூறு குடியானவர்கள் வந்து திருடர்களைப் பிடித்துக் கட்டிக் குட்டையில் அடித்தார்கள். பிறகு அவர்களுக்குத் தகுந்த சி¨க்ஷயும் கிடைத்தது. அந்த ஸ்திரீ அவ்வளவு சாமர்த்தியம் செய்யாவிட்டால் திருடர்கள் அவளுடைய புருஷனையுங் கொன்று சர்வ கொள்ளை அடித்திருப்பார்கள்.

“இன்னும் அநேக ஸ்திரீகள் அந்நிய புருஷர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டு தப்புகிறதற்கு வேறே மார்க்கம் இல்லாமையினால் தங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டும் கிணற்றில் விழுந்தும் கத்திகளாற் கழுத்தை அரிந்துகொண்டும், இவ்வகையாகப் பிராணனைக் கொடுத்துக் கற்பைக் காப்பாற்றினார்களே! புருஷர்களோடு கூட உடன்கட்டை ஏறி மாண்டுபோன பதிவிரதிகளுக்குக் கணக்குண்டா/” என்றேன்.
--------

அத்தியாயம் - 21
நான் ஞானாம்பாளைப் பார்த்து “உனக்கு ஒரு துஷ்டப் புருஷன் வந்து வாய்த்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்க, அவள் என்னை நோக்கி, “இதற்குமுன் ஒரு புண்ணியவதி நடந்து வழி காட்டி யிருக்கிறாள்; நானும் அந்தப் பிரகாரம் நடப்பேன்” என்றாள். “அது என்ன?” வென்று கேட்க ஞானாம்பாள் சொல்லுகிறாள்.

“ஒரு தனவானும் அவன் பத்தினியும் ஓர் உயிரும் இரண்டு உடலும் போல ஒருவருக்கொருவர் அதிக நேசமாகவும் பிரியமாகவும் நடந்து வந்தார்கள். கலியாணமாகிப் பத்து வருஷம் வரைக்கும், இவர்களைப் போல ஸ்திரீ புருஷர்கள் உண்டாவென்று யாவரும் சொல்லும்படியாகவும் அவ்வளவு அந்நியோன்னியமாகவும் மைத்திரமாகவும் வாழ்ந்தார்கள். பிற்பாடு சில துஷ்டர்களுடைய சகவாசத்தால் அந்த தனவானுடைய புத்தி மாறி, ஒரு சோர ஸ்திரீயினிடத்தில் ஸ்நேகம் செய்ய ஆரம்பித்தான். அவளுடைய ஸ்நேகம் அதிகரிக்க அதிகரிக்க, பத்தினியிடத்தில் அவனுக்கிருந்த பிரியம் குறையத் தலைப்பட்டது. அவன் போஜனத்துக்கு மட்டும் வீட்டுக்கு வருவதே தவிர மற்ற நேரமெல்லாம் வைப்பாட்டி வீடே அவனுக்கு வாசஸ்தலமாய்விட்டது. யுவேண்டாப் பெண்ணாட்டி கால் பட்டால் குற்றம் கை பட்டால் குற்றம்ருஎன்பதுபோல் வைப்பாட்டியினுடைய கோளைக் கேட்டுக்கொண்டு, சொந்தப் பெண்சாதியைத் தாறுமாறாக நடத்தவும் ஆரம்பித்தான். அவன் என்ன கொடுமை செய்தாலும் அதையெல்லாம் சகித்துக்கொண்டு அவனுடைய பிரியத்தைப் பொறுமையினாலும் வணக்கத்தினாலும் மறுபடியும் சம்பாதிக்க அவளாற் கூடியமட்டும் பிரயாசைப்பட்டும் அநுகூல சித்தியாகவில்லை. பிற்பாடு அந்த உத்தமி கடவுளே கதியென்று அவரிடத்திலே சகல நம்பிக்கையும் வைத்து புருஷன் வரும்போது அவனுடைய பணிவிடைகளில் ஒரு குறைவும் இல்லாமல் சர்வ சாக்கிரதையாய் நடந்து வந்தாள்.

“புருஷனுக்கும் பெண்சாதிக்கும் ஒரு சம்பந்தமுமில்லாமல் செய்துவிட வேண்டுமென்று அவனுடைய வைப்பாட்டி கருதி, அவள் மேலே இல்லாத தோஷங்களையெல்லாம் உண்டுபண்ணிச் சொன்னதுந் தவிர அந்தப் பதிவிரதையினுடைய கற்புக்கும் பழுது சொல்ல ஆரம்பித்தாள். அதை அவன் நம்பவில்லையென்று கண்டு அவனுக்கு நம்பிக்கை உண்டாகும்படியாக அந்தச் சோர ஸ்திரீ அபாண்டமான கற்பனை செய்யத் தொடுத்தாள். எப்படியென்றால் அந்த உத்தமி கள்ளப் புருஷர்களுக்குக் கடிதம் எழுதி அவர்கள் அதற்குப் பதில் எழுதினதுபோல அந்த சோர ஸ்திரீ இரண்டு கடிதங்களை உற்பத்தி செய்து அதை அந்த உத்தமியினுடைய வேலைக்காரி கையிற் கொடுத்து அவளுடைய மேசைக்குள்ளாக வைத்துவிடும்படி ஜாக்கிரதை செய்தாள். அந்த வேலைக்காரி தன்னுடைய எஜமானிக்குத் துரோகஞ் செய்யமாட்டேனென்று முந்தி ஆ§க்ஷபித்தாலும் பின்பு பணப்பிசாசின் ஏவுதலால் அந்தக் கடிதங்களைத் தன்னுடைய தலைவியின் பெட்டியில் வைத்துவிட்டாள். இது நடந்த பிற்பாடு அந்தச் சோர ஸ்திரீ அந்த தனவானைப் பார்த்து “உங்களுடைய பெண்சாதி மேலே தோஷஞ் சொன்னால் நீங்கள் நம்புகிறதில்லை. உங்கள் கௌரவத்திற்குக் குறைவு வரக்கூடாதென்று நான் சொல்லுகிறேனே தவிர எனக்கு ஏதாவது லாபமுண்டா? உங்கள் பத்தினியும் அவளுடைய சோர நாயகனும் ஒருவர்க்கொருவர் அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வதாகவும் கேள்விப்படுகிறேன். அவளுடைய பெட்டி முதலானவைகளைச் சோதித்தால் கடிதங்கள் அகப்பட்டாலும் அகப்படலாம். நீங்கள் எப்படியாவது உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்றாள். உடனே அந்தத் தனவான் “நீ யார் மூலமாய்க் கேள்விப்பட்டாய்?” என, அந்தத் துஷ்டை “நான் அவர்களை இப்போது காட்டிக் கொடுக்க மாட்டேன். நீங்கள் உங்கள் வீட்டைப் பரிசோதித்துப் பாருங்கள்” என்றாள்.

“அவன் இதையும் நம்பாமல் போஜனத்துக்காகத் தன் வீட்டுக்குப் போனான். அவன் போஜனஞ் செய்தபிற்பாடு அவனுடைய பத்தினி வந்து உள்ளூரிலிருக்கிற தன்னுடைய தகப்பனார் வியாதியாயிருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் அவரைப் போய்ப் பார்த்துக்கொண்டு உடனே திரும்பி வருவதாகவும் சொல்லி உத்தரவு கேட்டாள். அவள் போனபிற்பாடு அவளுடைய பெட்டியைச் சோதிக்கும்படி வைப்பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்து அவன் உடனே பெட்டியைத் திறந்து பார்வையிட்டான். அதில் அந்த இரண்டு கற்பனைக் கடிதங்களும் அகப்பட்டன. அவைகளை அவன் படித்துப் பார்த்தவுடனே, பெண்சாதி மேலே கோபாக்கினி மூண்டுவிட்டது. அவள் அந்தச் சமயத்தில் இருந்திருப்பாளானால் தப்பாமற் பிராணாபாயம் சம்பவித்திருக்கும். அந்தக் கடிதங்களில் ஒன்றில் அன்றைய தினம் இராத்திரி பத்து மணிக்குக் கள்ளப் புருஷன் தன் பெண்சாதியிடத்தில் வருவதாக எழுதியிருந்தபடியால் அவனும் வந்த பிற்பாடு இருவரையும் ஒரே முகூர்த்தத்திலே கொன்றுவிடுகிறதென்று நிர்ணயித்து, தன்னுடைய கோபத்தையும் அடக்கிக் கொண்டிருந்ான் தகப்பனாரைப் பார்க்கப் போயிருந்த அவனுடைய பாரி அஸ்தமிக்கிற சமயத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். அவளை அவன் வாயில் வந்தபடி நிஷ்காரணமாய்த் தூஷித்துக் கொண்டிருந்தான். சில நாளாய்த் தூஷிப்பது அவனுக்கு வழக்கமாயிருந்தபடியால் அவள் எதிர்வார்த்தை ஒன்றுஞ் சொல்லாமல் மௌனமாயிருந்தாள். அவன் இராப் போசனஞ் செய்தபிற்பாடு வழக்கப்படி வைப்பாட்டி வீட்டுக்குப் போகிறவன் போலப் புறப்பட்டு வெளியே போய், சற்று நேரம் கண்மறைவாயிருந்து ஒன்பது மணி நேரத்திற்கு ஒருவருக்குந் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்துக்குள்ளாக வந்து படுக்கை அறைப் பலகணி ஓரத்தில் நிறுத்தப் பட்டிருந்த வண்டிக்குள்ளாக நுழைந்து ஆயுதபாணியாய் உட்கார்ந்திருந்தான். இந்த இடம் எந்தப் பக்கத்திலிருந்து யார் வந்தாலும் தெரியக்கூடியதாகவும், அறைக்குள்ளாக என்ன நடந்தாலும் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அந்த அறையிலிருந்த கடிகாரம் பத்து மணி அடித்ததை இவன் கேட்டவுடனே கள்ளப் புருஷன் வருவானென்று நாலு பக்கத்திலும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவரும் வரவில்லை. அந்தக் கடிகாரம் பதினோரு மணியும் அடித்தது. அப்போதும் ஆண்பிள்ளை யென்கிற காற்றுக்கூட வீசவில்லை. அவனுடைய பத்தினியோ வென்றால் அவன் வெளியே போன நிமிஷமுதல் அந்த படுக்கை அறைக்குள் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்க் கடவுளை ஜபித்துக்கொண்டிருந்தாள். அவள் இருந்த கோலத்தைப் பார்த்தால் தெய்வ பக்தி மேலிட்டு தேக பரவசமாக இருந்தாளே தவிர கள்ளப் புருஷனுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவளாகக் காணப்படவில்லை.

“அவள் நெடுநேரம் தியான நிஷ்டையில் இருந்தபின்பு நித்திரை செய்து கொண்டிருந்த தன் பிள்ளையை எழுப்பிச் சாதம் ஊட்ட ஆரம்பித்தாள்; அந்தப் பிள்ளை சாப்பிடும்போது, “ஏன், அம்மா அழுகிறீர்கள்?” என்று கேட்க, அவள் ஒன்றுஞ் சொல்லாமலே சாதம் ஊட்டினாள். அந்தப் பிள்ளை மறுபடியும் சும்மா இராமல் “ஐயா போய்விட்டார்களென்றோ அழுகிறீர்கள்? அவர்கள் தான் உங்களை அடிக்கடி திட்டுகிறார்களே! அவர்கள் போனால் போகட்டுமே! நம்மை இரக்ஷ¢க்கிறதற்கு என் பாட்டனார் ஆகிய உங்கள் ஐயா இல்லையா? மாமா இல்லையா?” என்றது. அவள் உடனே பிள்ளையைப் பார்த்து, “அப்படி எல்லாம் பேசாதே; உன்னுடைய ஐயா போய்விட்டால் நம்மை ஒருவருந் தாங்க மாட்டார்கள்; உன்னுடைய ஐயா ஒரு குறைவுமில்லாமல் §க்ஷமமாயிருக்க வேண்டுமென்று சுவாமியைப் பிரார்த்தனை செய்” என்றாள். இதைக் கேட்டவுடனே வண்டியிலிருந்தவனுடைய மனம் இளகவும், அவனுடைய கண்ணில் ஜலம் பெருகவும் ஆரம்பித்தது. அந்தப் பிள்ளை சாப்பிட்டு முடிந்தவுடனே, வேலைக்காரி அந்த அறைக்குள் ஏதோ காரியமாக வந்து நுழைந்தாள். அவளைக் கண்டவுடனே அந்தப் பிள்ளை தன் தாயாரைப் பார்த்து, “இவள் நேற்றைய தினம் உங்களுடைய பெட்டியைத் திறந்தாள். நான் வெளியே இருந்து சன்னல் வழியாய்ப் பார்த்தேன்” என்றது. அவள் “நான் பெட்டியைத் திறக்கவே யில்லை” என்றாள்; உடனே அந்தப் பிள்ளை “நீ பெட்டியைத் திறக்கவில்லையா? ஏதோ சில கடிதங்களை அந்தப் பெட்டிக்குள் வைக்கவில்லையா?” என்றது. இதைக் கேட்டவுடனே அவளுடைய மனோசாட்சியும் குற்றஞ் சாட்ட ஆரம்பித்தபடியால் முன்னுக்குப் பின் விரோதமாக வாயில் வந்தபடி உளறினாள். அவளுடைய தலைவிக்குக் கடித விஷயமொன்றுந் தெரியாதானபடியால் காசு திருடத் திறந்திருப்பாளென்று நினைத்து “இனிமேல் நீ பெட்டியைத் திறந்தால் உன்னுடைய வேலையை இழந்துபோவாய்! ஜாக்கிரதையாயிரு” என்று கண்டித்தாள். கொலைக்கு ஆயத்தமாக வண்டியிலிருந்த தலைவன் இந்தச் சம்பாஷணைகளையெல்லாம் கேட்டவுடனே அவனுடைய சந்தேகம் ஓடவும் அவனுடைய கத்தி உறைக்குள் நுழையவும் ஆரம்பித்தது. ஆயினும் உண்மையை நன்றாக அறியவேண்டுமென்று அவன் சப்தப்படாமல் வண்டியை விட்டுக் கீழே குதித்து அந்தத் தோட்டத்தில் ஒரு மூலையிலே தனிமையாயிருந்த வேலைக்காரி வீட்டுக்குப் போனான். அவள் அப்போது தான் உள்ளே நுழைந்து அந்தப் பிள்ளையால் வெளியான துன்மார்க்கத்தை நினைத்து நினைத்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். எசமான் அவளைக் கண்டவுடனே, கத்தியை உருவிக்கொண்டு “நீ ஏன் என் பெண்சாதிப் பெட்டியைத் திறந்தாய்? உண்மையைச் சொல்லாவிட்டால் இந்தக் கத்திக்கு இரையாவாய்!” என்று பயமுறுத்தினான். அவள் உடனே கீழே விழுந்து அவனுடைய இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு அவனுடைய வைப்பாட்டி இரண்டு கடிதங்களைக் கொடுத்ததாகவும் அவைகளைத் தான் தன்னுடைய தலைவியின் பெட்டியில் வைத்ததாகவும் ஒப்புக்கொண்டாள். இதனைக் கேட்டவுடனே அவனுடைய சந்தேகம் நிவாரணமாகி பத்தினியிடம் போய் அவளைக் கட்டித் தழுவிக்கொண்டு நடந்த காரியங்களையும் தான் அவளைக் கொல்ல நினைத்ததையும் சொன்னான். உடனே ஸ்திரீ புருஷர்கள் சமாதானமாகி முன்னிருந்ததைக் காட்டிலும் அதிகப் பிரீதியாய் வாழ்ந்தார்கள். அன்று முதல் அந்தத் தனவான் சோர நாயகியினுடைய ஸ்நேகத்தை விட்டுவிட்டான். அந்தப் பதிவிரதாசிரோமணியைப் போல நற்குணங்களாலும் தெய்வ பக்தியினாலும் புருஷனுடைய பிரியத்தைச் சம்பாதிக்கப் பிரயாசைப்படுவதே உத்தமம்” என்றாள்.

பிறகு ஞானாம்பாள் என்னைப் பார்த்து “உங்களுக்கு ஒரு கெட்ட பெண்சாதி வாய்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டாள். “அவளை என்னாலே கூடியவரையில் சாந்தமாகவும் நயமாகவும் பேசித் திருத்தப் பிரயாசைப்படுவேன். அவள் திருந்தாமல் முரட்டுத்தனஞ் செய்வாளானால் அரபி தேசத்து ஆயிரம் இராத்திரிக் கதைகளில் ஒன்றிற் சொல்லுகிற பிரகாரஞ் செய்வேன்” என்றேன். அந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்லவேண்டுமென்று ஞானாம்பாள் கேட்க நான் சொல்லத் தொடங்கினேன்.

“ஒரு ஆஸ்திவந்தனான வியாபாரிக்கு நாட்டுப்புறத்தில் அனேக வீடுகளும் கால்நடைகளும் இருந்தன. அவன் குடும்ப சகிதமாக ஒரு கிராமத்துக்குப் போய் அவ்விடத்திலே சில நாள் வசித்தான். அவனுக்கு மிருகங்களின் பாஷை நன்றாகத் தெரியும். ஆனால் அதை வெளிப்படுத்தினால் அவன் இறந்துபோவானென்கிற ஒரு சந்தேகமுமிருந்தது. ஒரு நாள் ஒரு காளை மாடும் கழுதையும் கட்டபட்டிருந்த கொட்டத்துக்குச் சமீபத்தில் அந்த வியாபாரி உட்கார்ந்திருந்தான். அப்போது அந்தக் காளைமாடு கழுதையைப் பார்த்து 'என்னைப் பகல் முழுதும் ஏரிலே கட்டிக் கொல்லுகிறார்கள்; நீ அதிர்ஷ்டசாலியானதால் சௌக்கியத்தை அனுபவிக்கிறாய்' என்று முறையிட்டது. 'இனி மேல் என்னை ஏரிலே கட்டவந்தால் கழுத்தைக் கொடாமல் முட்டித் தள்ளு' என்று மாட்டுக்குக் கழுதை துர்ப்போதனை செய்தது. அந்தப் படி மறுநாட் காலையில் மாடு வசப்படாமல் முரட்டுத்தனஞ் செய்தபடியால் அதைப் பற்றி வேலைக்காரன் எசமானுக்குத் தெரிவித்தான்.

“முந்தின நாள் கழுதை செய்த உபதேசம் எசமானுக்குத் தெரியுமானதால் மாட்டுக்குப் பதிலாகக் கழுதையை ஏரிலே கட்டி உழும்படி ஆக்ஞாபித்தான். அந்தப் படி கழுதை அன்றையத் தினம் ஏரிலே கட்டப்பட்டு அது பட்டபாடு சாமானியம் அல்ல. கழுதை பாதிப் பிராணனுடன் அஸ்தமனத்துக்குக் கொட்டத்துக்கு வந்தவுடன் மாட்டைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு 'நாளைத் தினம் நீ என்ன செய்யப்போகிறாய்?' என்று கேட்க 'இன்றைத் தினஞ் செய்ததுபோலவே நாளைத் தினமும் செய்யப்போகிறேன்' என்று மாடு சொல்ல உடனே கழுதை 'அப்படிச் செய்யாதே; ஏனென்றால் எசமான் நீ வியாதியாயிருப்பதாக உன்னைக் கொனறுவிடும்படி ஆளுக்கு உத்தரவு கொடுத்ததை நான் காதினாலே கேட்டேன். நாளைத் தினம் உன்னை நீ ஏரிலே கட்டும்போது நீ முரட்டுத்தனஞ் செய்யாமலிருந்தால் பிழைத்தாய்; அப்படியில்லாமல் சண்டித்தனஞ் செய்வாயானால் உன் பிராணம் உனக்குச் சொந்தமல்ல.' என்றது.

“இதை வியாபாரி கேட்டுக் கொண்டிருந்ததால் அவனுக்குப் பெருஞ்சிரிப்பு வந்து விட்டது. அப்போது கூட இருந்த அவன் பத்தினி 'ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்க 'மாடும் கழுதையுஞ் செய்துகொண்ட சம்பாஷணையைக் கேட்டுச் சிரித்தேன். அதை உனக்குச் சொன்னால் என் பிராணன் போய்விடும்' என்றான். அவள் 'நீங்கள் அதனைச் சொல்லாவிட்டால் என் பிராணன் போய்விடும்' என்று சொல்லி அன்ன ஆகாரமில்லாமல் ஒரு அறைக்குள்ளே போய்ப் படுத்துக்கொண்டு அழுதாள். புருஷன் என்ன நியாயஞ் சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவளுடைய தாய் தகப்பன் முதலானவர்கள் வந்து அவர்களாலே கூடிய வரையில் புத்தி சொல்லியும் அவள் கேளாமற் பிடிவாதஞ் செய்தாள். அப்போது அந்த வீட்டிலிருந்த ஒரு சேவலும் ஐம்பது பெட்டைக் கோழிகளும் கூடிக் கொஞ்சிக் குலாவிக்கொண்டு திரிவதைப் பிரமாணிக்கமுள்ள ஒரு நாய் பார்த்து 'சேவலே1 சேவலே! நம்முடைய எசமானியும் எசமானிச்சியும் மனஸ்தாபக் கொண்டு வருத்தப் படுகிற காலத்தில் நீ உன் பெண்சாதிகளுடனே கூடிக் கொண்டு கொட்டம் அடிக்கிறாயே! இது அழகா?' என்று கேட்க, அந்தச் சேவல் நாயைப் பார்த்து 'நம்முடைய எசமான் முழுமூடன். ஒரு பெண்சாதியை அடக்கி ஆள அவனுக்குத் திறமையில்லை. நான் ஐம்பது பெண்சாதிகளை அடக்கி ஆளவில்லையா? எசமான் செய்ய வேண்டியது என்னவென்றால் ஒரு கழியை எடுத்துக்கொண்டு பெண்சாதிக்குத் தகுந்தபடி பூஜை கொடுத்தால் அவள் உடனே அடங்குவாள்' என்று சொல்லிற்று. அதைக் கேட்டுக்கொண்டிருந்த எசமான் நல்ல உபாயமென்றெண்ணி ஒரு பெரிய கழியை எடுத்துக்கொண்டு பெண்சாதி படுத்துக்கொண்டிருந்த அறைக்குள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டு மர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் உடனே பெண்சாதிக்குப் புத்தி வந்தது. அவளுடைய பிடிவாத துர்க்குணத்தை விட்டுவிட்டாள்” என்றேன்.

இந்தக் கதையைக் கேட்டவுடனே ஞானாம்பாள் சிரித்த சிரிப்பை இப்போது நினைத்தாலும் எனக்கும் சிரிப்பு வருகிறது.
-----------

அத்தியாயம் - 22
முந்தின அதிகாரத்திற் சொல்லியபடி ஞானசல்லாபங்களிலும் கிருகஸ்தாச்சிர தர்மங்களிலும் சந்தோஷமாகக் காலம் போக்கிக் கொண்டு வந்தோம். கலியாணத்துக்கு முன்பு பிடாரியைப் பிடித்துத் தள்ளினாலும் போகாமலிருந்த காலம் இப்போது வாயு வேகம் மனோ வேகமாக ஓடத் தலைப்பட்டது. கலியாணத்துக்குப் பின்பு ஒன்றரை வருஷம் ஒன்றரை நிமிஷம்போற் பறந்துவிட்டது. நாங்கள் இரண்டாவது தடவை சம்பந்தி முதலியார் வீட்டில் இருக்க வேண்டிய ஆறு மாசமும் கடந்துபோய் விட்டதால் ஞானாம்பாளை என் வீட்டுக்கு வரும்படி உத்தரவு செய்து நான் முந்திப் போய்விட்டேன். அதற்குச் சற்று நேரத்துக்குப் பின்பு சம்பந்தி முதலியார் என் தகப்பனாரிடத்திற்கு வந்து “ஞானாம்பாள் கர்ப்பவதியாயிருப்பதாக அவளுடைய தாயார் சொல்லுகிறாள். அவளுக்கு முதற் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்குமென்று அவளுடைய ஜாதகத்தில் எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் பிள்ளையை எனக்கு நீர் ஸ்வீகாரம் கொடுக்கவேண்டும்; அதற்கென்ன சொல்லுகிறீர்?” என்றார். என் தகப்பனார் சிரித்துக்கொண்டு “கர்ப்பமே நிச்சயமென்று தெரியவில்லை; அது நிச்சயமாயிருந்தாலும் ஆண் பிள்ளைதான் பிறக்குமென்று எப்படி நிச்சயிக்கக் கூடும்? பின்னும் ஜேஷ்டபுத்திர ஸ்வீகாரமும் புத்திரிகா புத்திரி ஸ்வீகாரமும் செல்லாதென்று தர்மசாஸ்திர வசனமும் இருக்கின்றதே” என்றார். சம்பந்தி முதலியார் என் தகப்பனாரைப் பார்த்து “உம்மை நான் தர்ம சாஸ்திரம் கேட்கவில்லை. நீர் அந்தப் பிள்ளையை ஸ்வீகாரம் கொடுப்பீரா? மாட்டீரா? இரண்டிலொன்று சொல்லும்” என்றார். உடனே என் தகப்பனார் “எனக்குப் பௌத்திரன் வேண்டாமா? உமக்கெப்படி ஸ்வீகாரம் கொடுப்பேன்?” என்றார். இதைக் கேட்டவுடனே சம்பந்தி முதலியாருக்கு ஆக்கிரம் உண்டாகி, அவர் வீட்டுக்குப் போய் “ஞானாம்பாளைக் கூப்பிட்டு “உனக்கு நான் வேண்டுமா? புருஷன் வேண்டுமா?” என்று கேட்க, அவள் “இருவரும் தான் வேண்டும்” என்றாளாம். “இருவரிலும் யார் விசேஷம்?” என்று அவர் மறுபடியும் கேட்க அவள் புருஷன் தான் விசேஷமென்று நேரே உத்தரவு சொன்னால் தகப்பனாருக்குக் கோபம் வருமென்று நினைத்து “என் தாயாருக்குத் தன் தகப்பனாரைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷமல்லவா?” என்று வினயமாகவும் மறை பொருளாகவும் மறுமொழி சொன்னாள். அதற்குச் சற்று நேரம் அவருக்குப் பயன் தெரியாமலிருந்து பிற்பாடு தெரிந்துகொண்டு ஞானாம்பாளை வாயில் வந்தபடி தூஷித்து “இனி மேல் நீ உன் புருஷன் வீட்டுக்குப் போவதைப் பார்க்கலாம். அவனும் இங்கே வருவதைப் பார்க்கலாம்” என்று சொன்னாராம். தூஷணியான வார்த்தைகளை அவள் கேளாதவளானபடியால் உடனே நடுக்கலும் சுரமும் கண்டு கர்ப்பத்துக்கு அபாயம் வந்துவிட்டது.

இந்தச் செய்திகளெல்லாம் என் தகப்பனார் கேள்விப்பட்டு அவர் என்னை அழைத்து “உனக்குத் தகப்பன் வேண்டுமா? பெண்சாதி வேண்டுமா?” என, நான் “இருவரும் தான் வேண்டும்” என்றேன். அவர் “அது கூடாது; நான் வேண்டுமானால் உன் பாரியைத் தள்ளி விட வேண்டும்” என்றார். நான் என் தகப்பனாரைப் பார்த்து “பிதுர் வாக்கியம் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் ஒத்திருக்கிற பக்ஷத்தில் நான் அந்தப்படி நடக்கவேண்டியது தான். சகல சாஸ்திரங்களுக்கும், வேத வாக்கியங்களுக்கும் விரோதமாகவும் நிஷ்காரணமாகவும் என் பாரியைத் தள்ளிவிடும்படி சொல்கிறீர்கள். அந்த உத்தரவை நான் எப்படி அனுஷ்டிக்கக் கூடும்?” என்றேன். உடனே அவருக்குக் காலாக்கினி போல் கடுங் கோபமுண்டாகி “அடா! பயலே! இதற்குத் தானா உன்னை நான் பெற்றேன்? வளர்த்தேன்? நேற்று வந்தவளைப் பொருளாயெண்ணி என்னை அலக்ஷ¢யஞ் செய்தாயே! இனி மேல் அவளும் இங்கே வரக் கூடாது. நீயும் அங்கே போகக் கூடாது. இனி நீ அவளிடத்தில் பேசினால் எனக்கு நீ பிள்ளையுமல்ல; நான் உனக்குத் தகப்பனுமல்ல; என்னுடைய ஆஸ்தியும் உனக்கு நாஸ்தி தான்” என்றார். இதைக் கேட்டவுடனே எனக்கு எவ்வளவு துயர முண்டாயிருக்குமென்பதை இதை வாசிக்கிறவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமே யல்லாது அதை விவரிக்க நான் சக்தியுள்ளவனல்ல. இப்படிப்பட்ட வார்த்தைகளை இதற்குமுன் ஒரு நாளும் நான் கேட்டதில்லையாதனால் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் பாணம் போல் என் இருதயத்தைப் பிளந்தது. சம்பந்தி முதலியார் வீட்டுக்கு நானும் போகக் கூடாது. என் வீட்டுக்கு ஞானாம்பாளும் வரக்கூடாதென்று சம்பந்தி முதலியாரும் என் தகப்பனாரும் ஆணையிட்டு மறித்தபிற்பாடு இனி மேல் அவளை எப்போது காணப்போகிறோம் என்று நான் துக்காக்கிரனாயிருக்கும் போது என் தாயார் பரிதாப முகத்துடன் என்னிடம் வந்தார்கள்.

அவர்களைக் கண்டவுடனே “அம்மா! நடந்த சங்கதிகளை எல்லாம் கேள்விப்பட்டீர்களா?” என்று சொல்லி அழுதேன். அவர்களும் சற்று நேரம் என்னுடன்கூட விசனப்பட்ட பிற்பாடு என் கண்ணீரைத் துடைத்துச் சொல்லுகிறார்கள்: “அப்பா! நீ கிலேசப்பட வேண்டாம்; பெரியவர்களா யிருக்கிறவர்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் கோபம் வருகிறதும் பிற்பாடு தணிகிறதும் வழக்கம் தான். இப்போது உன் தந்தையார் ஏதோ சொன்னார்களென்று துக்கிக்க வேண்டாம். நீ பிறந்தது முதல் இந்நாள் மட்டும் உன்னை உயிருக்கு உயிராய் வளர்த்தவர்கள் இப்போது கோபமாய் ஒரு வார்த்தை சொன்னால் அதற்காக மனஸ்தாபப் படலாமா? அதற்குமுன் அவர்கள் செய்த நன்மையை மறந்து விடலாமா? அவர்கள் கோபத்திலே சொன்ன வார்த்தைகளை யெல்லாம் நிசமென்று நீ மனம் வருந்தாதே. ஞானாம்பாளை நீ சீக்கிரத்தில் பார்ப்பாய்” என்று பலவிதமாக என் தாயார் எனக்குத் திடஞ்சொன்னார்கள். அவர்கள் என் கூட இருந்த வரையில் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாகவிருந்தது. அவர்கள் போனவுடனே அந்த ஆறுதலும் போய்விட்டது. என்னுடைய வியாகுலத்தை அதிகப்படுத்துவதற்கு இன்னொரு காரணமும் கூடச் சேர்ந்தது. அ·து என்னவென்றால் சம்பந்தி முதலியாருக்கும் என் தகப்பனாருக்கும் உண்டான சண்டை நிமித்தம் ஞானாம்பாளுக்கு வியாதி அதிகரித்து, அவளுடைய கர்ப்பமும் அழிந்து போனதாக நான் கேள்விப்பட்டு, வேல் தொளைத்த புண்ணிலே கொள்ளிக் கட்டையைச் சொருகினது போல் பெருந்துயரத்தை அடைந்தேன். அந்தச் சண்டைக்குக் காரணமாயிருந்த கர்ப்பம் அழிந்துபோயும் அதனால் விளைந்த கலகம் தீரவில்லை. குதிரை தூக்கிப் போட்டதுமில்லாமல் மேலே ஏறியும் மிதித்ததுபோல், என் தகப்பனார் மறுபடியுஞ் சும்மா இராமல் எனக்கு வேறே பெண் விசாரித்துக் கலியாணம் செய்விக்கவேண்டுமென்று எண்ணங் கொண்டதாக நான் கேள்விப்பட்டு இப்படிப்பட்டவர்களுடைய முகத்தில் விழிக்காமல், ஞானம்பாளையும் அழைத்துக்கொண்டு எங்கேயாவது போய்விடலாமென்கிற எண்ணம் உண்டாயிற்று. ஆனால் ஞானாம்பாள் வியாதியாயிருப்பதினாலே, அவளை அழைத்துக் கொண்டு போவது தகுதியல்லவென்றும் நான் முந்திப் போய் ஒரு இடத்தில் நிலைத்திருந்துகொண்டு பிற்பாடு அவளை அழைத்துக்கொள்ளலாமென்றும் எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் அவளுக்குத் தெரிவிக்காமற் போனால் அவளுடைய வியாதி அதிகரிக்குமென்று பயந்து சகல விவரங்களையும் ஒரு அந்தரங்கக் கடிதம் மூலமாக அவளுக்குத் தெரிவித்தேன். அதற்கு உடனே மறுமொழி அனுப்பினாள். அதில் நான் தேசாந்தரம் போகக் கூடாதென்றும் , சில விசை நான் தேசாந்தரம் போகிற பக்ஷத்தில் தன்னையும் அழைத்துக்கொண்டு போகவேணுமென்றும் எழுதியிருந்தாள். நான் அவளை அழைத்துக்கொண்டு போவதற்குள்ள அசந்தர்ப்பங்களை விவரித்து இரண்டாவது கடிதம் அனுப்பினேன். அதற்கு ஒரு பதிலும் வராதபடியால் நான் சொன்ன நியாயங்களை அவள் ஏற்றுக்கொண்டாளென்று ஊகித்துக் கொண்டேன். அவளுக்கு நான் புறப்படப் போகிற தினத்தையும் தெரிவிக்கவில்லை.
-----------

அத்தியாயம் - 23
ஒருநாள் இராத்திரி எல்லாரும் தூங்குகிற சமயத்தில் எனக்கு விசுவாசமுள்ள இரண்டு வேலைக்காரர்களையும் கூட்டிக் கொண்டு வழிக்கு வேண்டிய சாமான்களையும் எடுத்துக்கொண்டு, எங்களுக்குச் சொந்தமான ஒரு யாத்திரை வண்டியின் மேலேறிக் கொண்டு கிழக்கு ரஸ்தா வழியாகப் பிரயாணம் புறப்பட்டேன். எல்லாரும் தாங்கள் போகிற ஊரை நிச்சயித்துக் கொண்டு அந்த ஊருக்குப் போகிற மார்க்கமாய்ப் போவார்கள். நான் இன்ன ஊருக்குப் போகிறதென்ற நிச்சயமில்லாமல் கிழக்கு ரஸ்தாவைப் பிடித்துக்கொண்டு அதி துரிதமாய்ப் போனேன். நான் போகும்போது என்னுடைய தேகம் மட்டும் கூட வந்ததே தவிர என் மனம் கூடவராமல் என் தாயாரிடத்திலும் ஞானாம்பாளிடத்திலும் தங்கிவிட்டது. வழியில் என்ன அதிசயமென்று யாராவது கேட்டால் எனக்கு இன்னதென்று தெரியாது. மறுநாள் மத்தியான்னம் எங்கே தங்கியிருந்தோம், என்ன ஆகாரம் செய்தோமென்பதை வேலைக்காரர்களைக் கேட்கவேண்டுமே தவிர எனக்கு யாதொன்றும் தெரியாது; என் பிராணன் மனம் முதலியவைகளை யெல்லாம் சத்தியபுரியில் வைத்து விட்டு, நான் ஒரு சஞ்சாரப் பிரேதம் போல் சென்றேன். அன்றையத் தினம் ஐந்து காதவழி நடந்து இராத்திரிப் பத்து மணிக்கு நல்லூர் என்னும் கிராமத்தை அடைந்தோம். அந்த ஊரில் சத்திரத்தில் ஒரு தனிமையான இடத்தில் பஞ்சணையை விரித்துப் படுத்துக்கொண்டேன். என்னுடைய வேலைக்காரர்கள் சமையல் செய்வதற்காகப் போய் விட்டார்கள். நான் முகம் மறைய முக்காடிட்டுப் படுத்துக்கொண்டு இனி மேல் ஞானாம்பாளைப் பார்க்கும்படி யாயிருக்குமோ, அல்லது அவளைப் பார்க்கக்கூடாதென்று என் பிதா சொன்ன வாக்கியமே நிறைவேறிப் போகுமோ என்று மனங் கலங்கி எண்ணாததெல்லாம் எண்ணிக்கொண்டு படுத்திருந்தேன். நான் படுத்த சற்று நேரத்துக்குப் பின்பு யாரோ வந்து என்னைத் தட்டினார்கள். நான் என்னுடைய முக்காட்டைத் திறந்து பார்க்க ஞானாம்பாள் வந்து நிற்பது போலத் தோன்றிற்று. இது கனவோ அல்லது உருவெளித் தோற்றமோ என்று நான் மயங்கிக் கொண்டிருக்கையில், அவளுடைய கண்ணீர்ப் பிரவாகம் என் முகத்தின்மேல் விழுந்து என் மயக்கத்தைத் தெளிவித்தது. உடனே அவள் என்னைத் தழுவிக்கொண்டு, “நான் உங்களுக்கு என்ன அபராதம் செய்தேன்? என் முகத்தில் விழிக்காமல் வந்து விட்டீர்களே?” என்று கண்ணீர் விட்டுப் பொருமினாள். நானும் சற்று நேரம் கண் கலங்கின பிற்பாடு அவளைப் பார்த்து “நான் இன்றையத்தினம் புறப்படுகிறேனென்பதும், இந்த வழியாய்ப் போகிறேனென்பதும் உனக்கெப்படித் தெரியும்? நீ இவ்வளவு தூரம் எப்படி வந்தாய்?” என்று கேட்க அவள் சொல்லுகிறாள்: “நீங்கள் பிரயாணப்படுகிறது நிச்சயமென்று உங்கள் கடிதங்களால் அறிந்துகொண்டேன். நீங்கள் எங்கே போனாலும் உங்களுக்குப் பிரியமான ஊழியக்காரர்களாகிய கந்தசாமி, வினைதீர்த்தான் இவர்களைக் கூட அழைத்துக்கொண்டு போவீர்களென்பதும் எனக்குத் தெரியும். அவர்களுடைய பெண்சாதிகள் எனக்குத் தாதிகளானதினாலே அவர்களுடைய புருஷர்களை விசாரித்து, நீங்கள் புறப்படுகிற நிச்சயமான தினத்தை அறியும்படி சொல்லியிருந்தேன். நீங்கள் உங்களுடைய பெண்சாதிக்கு உண்மையை மறைத்தாலும் உங்களுடைய வேலைக்காரர்கள் அவர்களுடைய பெண்சாதிகளுக்கு உண்மையை மறைக்கவில்லை. ஆகையால் அவர்கள் மூலமாக நீங்கள் புறப்படுகிற தினத்தைத் தெரிந்துகொண்டு நானும் புறப்படுகிறதற்கு முஸ்திப்பாயிருந்தேன். என்னுடைய தாதிகளும் தங்கள் புருஷர்களைப் பிரிந்திருக்க மனமில்லாதவர்களாய்த் தங்களை அழைத்துக்கொண்டு போகும்படி பிரார்த்தித்தார்கள். அவர்களும் நானும் புறப்பட்டுச் சற்று நேரத்திற்குப் பின்பு ஒருவருக்குந் தெரியாமல் ஒரு வண்டியின் மேலே ஏறிக்கொண்டு உங்களுடைய கண்ணிலே படாமல் கொஞ்சதூரம் பின்னிட்டு உங்களுடைய வண்டியைத் தொடர்ந்துகொண்டு வந்து சேர்ந்தோம்” என்றாள்.
ஞானாம்பாளைக் கண்டவுடனே சூரியனைக் கண்ட பனி போல என்னுடைய துக்கமெல்லாம் விலகிவிட்டது. ஆனால் அவள் வியாதிப்பட்டு மெலிந்திருந்தபடியால் “இப்படிப்பட்ட பலவீன ஸ்திதியில் நீ யாத்திரை செய்யக் கூடுமா?” என்று கேட்டேன். அவள் தனக்குப் பூரண சௌக்கியமாய்விட்டதால் யாத்திரை செய்யலாமென்று சொன்னாள். நான் அவளைப் பார்த்து “என்னை நீ கலியாணஞ் செய்த நிமித்தம் உன்னுடைய உற்றார் பெற்றோரையும் சகல சுகங்களையும் இழந்து வனாந்தரத்தில் சஞ்சரிக்கும்படி நேரிட்டதே!” என்றேன். அவள் என்னைப் பார்த்து “நான் சொல்லவேண்டியதை நீங்கள் சொல்லுகிறீர்கள்! என்னாலே தான் உங்களுக்கு இப்படிப்பட்ட கதி வாய்த்தது. பின்னும் நீங்கள் இல்லாத இடம் நாடாயிருந்தாலும் அது தான் காடு. உங்களுடன் கூடியிருக்கிற காடே எனக்கு நாடு” என்று சீதை ராமனுக்குச் சொன்னதுபோல் எனக்குச் சொன்னாள். அவள் மறுபடியும் என்னைப பார்த்து “எனக்குத் தங்கை எப்போது வருவாள்?” என்று கேட்டாள். அதற்கு நான் அர்த்தம் தெரியாமல் மயங்கினேன். அவள் சிரித்துக் கொண்டு “என்னுடைய மாமா உங்களுக்கு வேறே பெண் தேடி விவாகம் செய்ய யோசித்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன்” என்றாள். அதற்கு நான் “என்னுடைய சிநேகிதன் ஒருவன் இரண்டு தாரங் கலியாணஞ் செய்து பட்ட பாடுகளை நினைக்கும்போது எனக்குத் தலை நடுக்கமாயிருக்கின்றது. நான் சந்திர சூரியர் தெற்கு வடக்கானாலும் இரண்டு தாரங் கொள்ளச் சம்மதியேன்” என்றேன். அவள் “உங்களுடைய சிநேகிதர் என்ன பாடு பட்டார்?” என்று கேட்டாள். அதற்கு நான் சொன்னதாவது:
“இரண்டு தாரம் கொண்ட ஒருவன் என்னிடத்திலே பேசும்போது தூங்கித் தூங்கி விழுந்துகொண்டு பேசினான். நான் 'ஏன் தூங்கி விழுகிறாய்?' என்று கேட்க, அவன் என்னைப் பார்த்து 'எனக்கு இரா முழுவதும் தூக்கமேயில்லை. என்னுடைய தாரங்களில் ஒருத்தியை ஒரு பக்கத்திலும் மற்றொருத்தியை மற்றொரு பக்கத்திலும் படுக்கவைத்து நான் நடுவே படுத்துக்கொள்கிறது வழக்கம். அவள் பக்கத்தில் நான் திரும்பினால் இவள் திட்டுகிறாள்; இவள் பக்கத்திலே திரும்பினால் அவள் திட்டுகிறாள்; ஒருத்தியையும் பாராமல் மல்லாக்காய்ப் படுத்துக்கொண்டால் இருவரும் திட்டுகிறார்கள். பின்னுங் கூடி என் தலையை மொட்டையாக்கி விட்டார்கள். எப்படியென்றால் அவளுடைய பக்கத்தில் திரும்பியிருக்கும்போது இவளும், இவள் பக்கத்தில் திரும்பியிருக்கும்போது அவளும் கோபத்தினால் தனித்தனியே என் தலைமயிரைக் கத்தரித்து முண்டிதம் ஆக்கிவிட்டார்கள்' என்று சொல்லித் தன்னுடைய மொட்டைத் தலையைச் சாக்ஷ¢ காட்டினான்” என்றேன். இவ்வகையாக வினோத சல்லாபத்தில் நானும் ஞானாம்பாளும் அந்த இரவைப் போக்கினோம்.
----------

அத்தியாயம் - 24
மறு நாள் விடியுமுன் எழுந்து, மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம். பகல் முழுதும் யாத்திரை செய்கிறதும் இரவில் எந்த ஊர் நேருகிறதோ அந்த ஊரில் தங்குகிறதும் இவ்வகையாக நாங்கள் பயணஞ் செய்துகொண்டு போகும்போது ஒரு நாள் அஸ்தமிக்கிற வரையில் நாங்கள் தங்கும்படியாகச் சத்திரமாவது ஊராவது தென்படவில்லை. அன்றையத் தினம் அமாவாசை இருட்டானதால் எங்கே தங்கலாமென்று யோசித்துக்கொண்டு போகையில் வழிக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு சாவடி காணப்பட்டது. அந்தச் சாவடியில் தங்கலாமா வென்று அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்களை விசாரித்தோம். அவர்கள் அது தகுதியான இடமென்று சொன்னதினால் நாங்கள் வண்டியை நிறுத்தி அந்தச் சாவடியில் தங்கி, நானும் ஞானாம்பாளும் வழியில் வந்த களைப்பினால் முன்னேரத்தில் படுத்துத் தூங்கினோம். வேலைக்காரர்கள் சுயம்பாகஞ் செய்து எங்களை எழுப்பி அன்னம் படைத்தார்கள்.

போஜனம் முடிந்தவுடனே எங்கள் வேலைக்காரர்களில் ஒருவன் எங்களைப் பார்த்து “ஐயா! நான் ஜலம் கொண்டுவரக் குளத்துக்குப் போனபோது ஒரு மனுஷன் என்னைக் கண்டு இந்த இடம் கள்ளர்கள் வசிக்கிற இடமென்றும், இந்தச் சாவடியில் அநேகம் விசை கொள்ளையுங் கொலையும் நடந்திருப்பதாகவும் சொன்னான். இந்தச் சாவடி தங்குவதற்குத் தகுந்த இடமென்று சில ஆட்கள் சொன்னதை நம்பி நாங்கள் தங்கினோமென்று நான் தெரிவித்தேன். அப்படி யாராவது உங்களுக்குத் தெரிவித்திருந்தால் அவர்கள் திருடர்களாகவே இருப்பார்கள். நீங்கள் சர்வ ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என்று அந்த மனுஷன் எச்சரிக்கை செய்து போய்விட்டான்” என்றான். இதைக் கேட்டவுடனே எனக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போலிருந்தது. ஞானாம்பாளில்லாமலிருந்தால் நான் பயப்படமாட்டேன். அவள் கூட இருப்பதால் என்ன அவமானம் நேரிடுவோமென்கிற பயம் அதிகரித்து, அவளை எங்கேயாவது ஒளித்து வைக்கலாமென்று பார்த்தால், எங்கும் வெட்டார வெளியாயிருந்ததால் தகுந்த இடம் அகப்படவில்லை. அவள் பயந்து நடுங்குவதைக் கண்டு “ஞானாம்பாள்! நீ ஒன்றுக்கும் பயப்படாதே. நானும் வேலைக்காரர்களும் உட்பட ஆறு பேர்கள் இருக்கிறோம். நமக்கு வேண்டிய ஆயுதங்களும் இருக்கின்றன. திருடர்கள் எத்தனை பேர்கள் வந்தாலும் ஒரு கை பார்க்கிறோம்” என்று ஞானாம்பாளுக்குப் பயம் நீங்கும்படியான வார்த்தைகளைச் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து “நான் பயப்படுகிறதெல்லாங் கூடி திருடர்கள் வந்தால் நீங்கள் சும்மா இருக்க மாட்டீர்கள். அவர்களை எதிர்த்துச் சண்டை செய்வீர்கள். அப்போது என்ன அபாயம் நேரிடுமோ வென்று தான் அஞ்சுகிறேன். என் பயத்தை உங்களுடைய வார்த்தை ஸ்திரப்படுத்துகிறது. நம்முடைய பலத்தையும் எதிரியினுடைய பலத்தையும் இடம் காலம் முதலிய பலாபலங்களையும் யோசிக்காமல் யுத்தத்துக்குப் புறப்படுவது உசிதமல்ல. சொத்துக்களைத் திருடுவதற்காகவே திருடர்கள் வருகிறார்கள். அவர்களுடைய எண்ணத்துக்கு யாதொரு விக்கினம் நேரிட்டால் அவர்கள் கொலைபாதகத்துக்கு அஞ்சுவார்களா? அடியாளுக்குத் தோன்றுகிறதெல்லாம் கூடி கள்ளர்களுடைய கூட்டம் அதிகமாயிருக்கிற பக்ஷத்தில் அவர்களை எதிர்க்காமல் நம்முடைய கையில் உள்ள சொத்துக்களை அவர்களிடத்தில் கொடுத்து மரியாதையையும் பிராணனையும் காப்பாற்றிக் கொள்வதே விவேகமென்று தோன்றுகிறது. பின்னும் இந்தச் சமயத்தில் கடவுளைத் தவிர வேறு துணை இல்லாதபடியால் அவரை நம்பினால் கைவிட மாட்டார்” என்றாள்.

இவ்வாறு நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மேற்குத் திசையில் வெடி சப்தங் கேட்டு, நான் சாவடித் திண்ணையை விட்டுக் கீழே குதித்து அந்தத் திசையைப் பார்த்தேன். சிறிது தூரத்தில் வெளிச்சங்களுடனே திருடர்கள் பெருங் கூட்டமாய் வருகிறதைக் கண்டு, திண்ணை மேலேறி நாங்கள் வைத்திருந்த தீபம் வெளியிலே தெரியாதபடி மறைவாக வைத்துவிட்டு சுவாமி மேலே சகல பாரத்தையும் போட்டுவிட்டு, திருடர்கள் வந்தவுடனே அவர்களிடத்தில் கொடுக்க வேண்டியதற்காகப் பணப் பெட்டியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் போலப் பயந்து நடுநடுங்கிக் கொண்டு இருந்தோம். ஞானாம்பாள் ஒரு மூலையில் கண்ணீர்ப் பிரவாகத்துடனே கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தாள்.

மேற்கேயிருந்து வந்த திருடர்கள் ரஸ்தாவில் வந்து சேர்ந்து நாங்கள் இருந்த சாவடிக்கு நேரே திரும்பி வந்தார்கள். அவர்கள் வரும்போது அவர்களுக்கு நேரே கிழக்கேயிருந்து ஒரு பெருங் கூட்டம் வந்து அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஆரடா?” வென்று வினாவ, அவர்கள் “நீங்கள் ஆரடா” என்று எதிர்த்துக் கேட்டார்கள். உடனே கிழக்கேயிருந்து வந்தவர்களுக்குக் கோபம் உண்டாகி மேற்கேயிருந்து வந்தவர்கள் மேலே விழுந்து கத்திகளாலும் கழிகளாலும் யுத்தஞ் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் அடித்துக் கொள்ளுகிற அடிகள், எங்கள் தலைமேலே அடிக்கிறது போலவே கேட்டு, நாங்கள் விடுவிடென்று நடுங்கிக் கொண்டிருந்தோம். அவர்கள் சண்டை செய்கிற காரணம் இன்னதென்று தெரியவில்லை. ஆனால் எனக்குத் தோன்றினதெல்லாங்கூடி அன்றைய தினம் திருடவேண்டிய முறை இன்னாருடையதென்று ஸ்தாபித்துக் கொள்வதற்காக அவர்கள் சண்டை செய்வதாக அனுமானித்தேன். அந்த இரு பக்ஷத்தாரும் சமான கக்ஷ¢யாயிருந்தமையால் ஒரு கக்ஷ¢க்காவது தோற்புக் கெலிப்பு இல்லாமல் நெடு நேரஞ் சண்டை செய்தார்கள். ஆனால் கிழக்கேயிருந்து வந்த கூட்டத்தாருக்கு மறுபடியும் மறுபடியும் உப பலம் சேர்ந்து கொண்டிருந்தபடியால், அவர்கள் பக்ஷத்தில் ஜயம் உண்டாகி மேற்குத் ிசையார் ஓட ஆரம்பித்தார்கள். அவர்களைக் கிழக்குத் திசையார் வெகு தூரம் வரையில் தொடர்ந்து போய்ப் பிற்பாடு நாங்கள் இருந்த சாவடியை நோக்கித் திரும்பினார்கள். அவர்கள் வருவதைப் பார்த்தவுடனே, எங்களிடத்தில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த அற்பப் பிராணனும் மேற்குத் திசையார் போல ஓட ஆரம்பித்தது.

அந்தக் கூட்டத்தார் சிறிது தூரம் வந்து பிறகு நின்று விட்டார்கள். அவர்களில் இரண்டு பேர் மட்டும் எங்களை நோக்கி வந்தார்கள். அவர்களை யம தூதர்களாகவே எண்ணினோம். அவர்கள் தூரத்தில் வரும்போதே என் பெயரைச் சொல்லி மரியாதையாய்க் கூப்பிட்டுச் சொல்லுகிறார்கள்: “ஐயா! பிரதாப முதலியாரே! திருடர்கள் ஓடிப் போய்விட்டார்கள்; இனி மேல் நீங்கள் அஞ்சவேண்டாம்; நாங்கள் திருடர்கள் அல்ல” என்று சொல்லிக் கொண்டு எங்களை நோக்க, எங்கள் வேலைக்காரன் “ஐயா! நான் குளத்துக்கு ஜலம் மொள்ள வந்தபோது நாங்கள் ஜாக்கிரதையா யிருக்கவேண்டு மென்று சொன்னவர்கள் நீங்கள் தானே?” என்று வினாவ, அவர் “ஆம்” என்று சொல்லிக்கொண்டு என்னிடம் வந்து நமஸ்காரஞ் செய்தார். அவருடைய முகக் குறியால் அவர் யோக்கியர் என்று தெரிந்து கொண்டு நானும் அவருக்கு நமஸ்காரஞ் செய்து “நீங்கள் யார்?” என்று வினாவ, அவர் சொல்லுகிறார்:

“நான் இதற்கு இரண்டு நாழிகை வழி தூரத்திலிருக்கிற பொன்னூரில் வசிக்கிறவன். என் பெயர் புண்ணியகோடி செட்டி. என் தகப்பனாராகிய ஞானி செட்டி சத்தியபுரியில் தங்கள் தகப்பனாரிடத்தில் அனேக வருஷகாலம் காரியம் பார்த்து வந்து நான் அதி பால்லியமாயிருக்கும்போது இறந்துபோனார். அதுமுதல் என்னையும் என் தாயாரையும் தங்களுடைய தாயாரும் தகப்பனாரும் அன்ன வஸ்திரங் கொடுத்து ஆதரித்ததுமல்லாமல் எனக்கு வித்தியாப்பியாசமுஞ் செய்து வைத்தார்கள். இது நீங்கள் பிறக்கிறதற்குச் சில காலத்துக்கு முன் நிகழ்ந்த சங்கதியானதால் தாங்கள் அறிய மாட்டீர்கள். சத்தியபுரியில் தங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் நானும் என் தாயாரும் குடியிருந்துகொண்டு, மேற் சொன்னபடி தங்களுடைய தாய் தந்தைமார்களால் சம்ரக்ஷ¢க்கப்பட்டு வந்தோம். எனக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்போது ஒரு நாள் அந்த வீட்டுக் கொல்லையில் மரம் வைக்கவேண்டியதற்காக ஒரு சிறிய மண்வெட்டியால் பள்ளம் பறித்துக் கொண்டிருந்தோம். அந்தப் பள்ளத்தில் மண்வெட்டுப்பட்டு, வெண்கல ஓசை போல் கணீரென்று சப்தங் கேட்டது. அது என்னவென்று மறுபடியும் தோண்டிப் பார்க்கத் தோலினால் மூடப்பட்ட ஒரு வெண்கலத் தோண்டி அகப்பட்டது. அதை என் தாயார் வீட்டுக்குள்ளே கொண்டுபோய்த் தெருக் கதவை மூடிவிட்டு வெண்கலத் தோண்டியைத் திறந்து பார்க்க, அறுநூறு பூவராகனும் அநேக ரத்னாபரணங்களும் அடக்கஞ் செய்யப் பட்டிருந்தன. அவ்வளவு பொருளை நாங்கள் ஒருநாளும் பாராதவர்களான படியால் அந்த சங்கதியை வெளிப்படுத்த வேண்டாமென்று என் தாயார் எனக்குச் சொன்னாள். நான் உடனே என் தாயாரைப் பார்த்து 'இந்த வீடுங் கொல்லையும் நம்மை இரக்ஷ¢க்கிற கனகாசல முதலியாருக்குச் சொந்தமானதால் அதில் அகப்பட்ட நிதேக்ஷமும் அவருக்குத் தானே சொந்தம்? இந்தச் சங்கதியை அவருக்குச் சொல்லாமலிருப்பது கிரமமா?' என்று சொல்லிக் கொண்டு கதவைத் திறந்தேன். உடனே என் தாயார் நான் வெளியே போகாதபடி என்னைக் கட்டிப் பிடித்தாள்; நான் திமிறிக் கொண்டு உங்கள் வீட்டுக்குப் போவதற்காக வெளியே ஓடினேன். என் தாயாரும் கதவைப் பூட்டிவிட்டு வெகுதூரம் வரையில் என்னைத் துரத்திக் கொண்டு ஓடிவந்தாள். நான் அகப்படாமல் ஓடி வந்து உங்கள் வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டேன். என் தாயார் இனி மேல் காரியமில்லை யென்று வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டாள். நான் ஓடி வந்த ஓட்டத்தினால் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டுக்கொண்டு உள்ளே வந்து நுழைந்ததைத் தங்கள் தாய் தந்தையார் கண்டு 'ஏன் அப்பா! இப்படி ஓடி வந்தாய்?' என்று கேட்டார்கள். நான் ஓடி வந்த சிரமம் நீங்கினவுடனே புதையல் அகப்பட்ட விவரமும் மற்றச் சங்கதிகளும் அவர்களுக்கு விக்ஞாபித்தேன். அவர்கள் 'உன்னைப் போல் நல்ல பிள்ளைகள் உண்டா?' என்று என்னைப் புகழ்ந்துகொண்டிருக்கும்போது, என் தாயார் இனிமேல் மறைக்கக் கூடாதென்று நினைத்து வெண்கலத் தோண்டியுடனே வந்து புதையல் அகப்பட்ட விவரத்தை உண்மையாகவே தெரிவித்தாள். அவள் முந்தி மறைக்க யத்தனப் பட்டதை உங்கள் தாய்தந்தையர்கள் காட்டிக்கொள்ளாமலே அவளையும் புகழ்ந்தார்கள்.

“பிற்பாடு தங்கள் தாய் தந்தைமார்கள் அறைக்குள்ளே போய்ச் சற்று நேரம் ஆலோசித்துக்கொண்டு வெளியே வந்து என்னைப் பார்த்து 'பொய்யும் சூதும் வஞ்சனையும் நிறைந்த இந்த உலகத்தில் உன்னைப் போல யோக்கியமான பிள்ளை அகப்படுவது அருமையானதால் உன்னுடைய நற்குணத்திற்குத் தகுந்த சம்மானமாக அந்தப் புதையலைக் கடவுள் வெளிப்படுத்தியிருக்கிறார்; அந்தத் திரவியத்தை நீயே வைத்துக்கொண்டு சுகமாயிரு' என்றார்கள். இதைக் கேட்டவுடனே நானும் என் தாயாரும் ஆனந்த பாஷ்பஞ் சொரிந்துகொண்டு அவர்களுடைய பாத கமலங்களில் விழுந்து விழுந்து அநேகந் தரம் சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்தோம். அவர்கள் நாங்கள் மறுபடியும் விழாதபடி எங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். இப்போது நான் வசிக்கிற பொன்னூர்க் கிராமத்தை அவர்களே என் பெயரால் கிரயம் வாங்கி எனக்குத் தகுந்த பிராயம் வருகிறவரையில் என் தாயுடன் பிறந்த அம்மானைக் காரிய துரந்தரனாக நியமித்து என்னைக் குடும்பப் பிரதிஷ்டை செய்தார்கள். நான் இப்போது சாப்பிடுகிறது உங்களுடைய அன்னந்தான்; எரிக்கிறது உங்களுடைய விளக்குத் தான்; தண்ணீர்த் துறையில் உங்களுடைய வேலைக்காரனைப் பார்த்த போது நீங்கள் வந்திருக்கிற சமாசாரம் தெரிந்துகொண்டேன்; திருடர்களே உங்களை ஏமாற்றி இந்தச் சாவடியில் தங்கும்படி செய்ததாக எனக்குத் தோன்றினபடியால், அந்த ஆபத்தைத் தீர்க்க என்ன உபாயஞ் செய்யலாமென்று நான் பல வகையில் யோசித்தேன். என்னுடைய கிராமத்துக்கு உங்களை அழைத்துக்கொண்டு போகலாமென்றால் வண்டி போகும்படியான மார்க்கமில்லை. நீங்கள் வயல் வழியாக நடக்கமாட்டீர்களானதால் நானே என் கிராமத்துக்குப் போய் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு வருவதே நலமென்று நினைத்து அந்தப் படி ஆட்களைக் கூட்டிக்கொண்டு அதி சீக்கிரமாக வந்தேன். நாங்கள் வந்த சமயமும் திருடர்கள் வந்த சமயமும் ஒத்துக்கொண்டபடியால் திருடர்கள் உங்களைக் கிட்டாதபடி அவர்களை அடித்துத் துரத்தி விட்டோம். அதோ அங்கு நிற்கிற கூட்டம் நம்முடைய கூட்டந்தான். அவர்கள் எல்லோரும் இங்கு வந்தால் திருடர்களென்று நினைத்து நீங்கள் பயப்படுவீர்களென்று கருதி நாங்கள் இருவர் மட்டும் வந்து உங்களைக் கண்டோம்; கண் குளிர்ந்தோம். நாங்கள் செய்த பூஜாபலம் இப்போதுதான் எங்களுக்குப் பிராப்தமாயிற்று. உங்களுடைய தர்ம பத்தினியின் உத்தம குணங்களை இதற்கு முன் கேட்டு நாங்கள் சுரோத்திராநந்த மடைந்தோம். இப்போது அந்த உத்தமியைத் தரிசித்து நேத்திராநந்தத்தை அடைகிறோம். எங்களுடைய கண்ணுக்கும் காதுக்கும் இந்த விவாதம் இன்றோடு தீர்ந்துவிட்டது” என்றார். நான் அவரைப் பார்த்து “என் தாய் தந்தையர் உங்களுக்குச் செய்த உபகாரம் ஒரு பாக்காகவும், நீங்கள் எங்களுக்குச் செய்த உபகாரம் தோப்பாகவும் மாறிவிட்டது. நீங்கள் சமயத்தில் வந்து எங்களை ரக்ஷ¢க்காவிட்டால் எங்களுடைய யாத்திரை பரலோக யாத்திரையாக முடிந்திரக்கும்.

"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"

சமயத்திற் செய்த ஒரு சிறிய உதவி பூமியினும் பெரிதென்று திருவள்ளுவர் சொல்லுகிறார். அப்படியானால் நீங்கள் சமயத்திற் செய்த பேருதவிக்கு யாரை ஒப்பிடுவேன்?” என்று பலவகையாக என்னுடைய நன்றியறிதலை வெளிப்படுத்தினேன். அவர் பொழுது விடிந்தவுடனே தம்முடைய ஊருக்கு வரவேண்டுமென்று பிரார்த்தித்தார். நாங்கள் திரும்பி வரும்போது அகத்தியம் வருவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம்.
----------

அத்தியாயம் - 25
ஒரு நாள் மத்தியானத்தில் இரண்டு பக்கமும் மலைகள் அடர்ந்த கானகத்தின் வழியாக நாங்கள் யாத்திரை செய்துகொண்டிருக்கையில் திடீரென்று வானம் இருண்டு பெருங் காற்றுடனே மழையும் துவங்கிற்று. நாங்கள் இருந்த வண்டியில் நாலு பக்கமும் தூவானம் அடித்து நாங்கள் நனையும்படியான ஸ்திதியில் இருந்தபடியால் மழை விடுகிறவரையில் மலைக் குகைக்குள்ளே இருக்கலாமென்று நினைத்து வண்டியினின்று கீழே இறங்கி நானும் ஞானாம்பாளும் வேலைக்காரர்களும் அவர்களுடைய பெண்சாதிகளும் மலை அடிவாரத்துக்குப் போனோம். வண்டிக்காரர்கள் வண்டிகளுக்குக் காவலாக இருந்தார்கள். நாங்கள் மலை அடிவாரத்தில் இருள் அடைந்த ஒரு கெபியைக் கண்டு அதற்குள்ளே நுழைந்து வாசற்படியோரத்தில் உட்கார்ந்தோம். மழை நின்று கொஞ்சம் வெளிச்சம் கண்டவுடனே அந்தக் கெபியைப் பார்த்தோம். எங்களுக்குக் கொஞ்ச தூரத்தில் அந்த குகையில் இரண்டு புலிகளைக் கண்டு நாங்கள் திகில் அடைந்து ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஓட ஆரம்பித்தோம். எங்கள் வேலைக்காரர்கள் எங்களையும் அவர்களுடைய பெண்சாதிகளையும் விட்டு விட்டு ஒரு நிமிஷத்தில் போன இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள். நான் ஞானாம்பாளையும் வேலைக்காரிகளையும் முன்னே ஓடச் சொல்லிப் பின்னே ஓடினேன். ஓடச் சக்தியில்லாமல் அந்த ஸ்திரீகளும் நானும் சேற்றிலே சறுக்கி விழுந்துகொண்டு தள்ளாடித் தள்ளாடி ஓடும் பொழுது பின்னே திரும்பிப் பார்த்தோம். அந்தப் புலிகள் குகையை விட்டு ஓடி வருகிறதைக் கண்டு அந்த ஸ்திரீகளைப் பார்த்து “புலிகள் தொடர்ந்து வருகிறபடியால் சீக்கிரமாய் ஓடுங்கள்” என்றேன். இதைக் கேட்டவுடனே அந்த வேலைக்காரிகள் கிலி பிடித்துக் கீழே விழுந்து உதைத்துக் கொண்டார்கள். அவர்களை அந்த ஸ்திதியில் விட்டு எப்படிப் போகிறதென்று நானும் ஞானாம்பாளும் மலைத்து நின்றோம். புலிகள் சமீபித்தவுடனே அவைகளைச் சுடலாமென்று என் கையிலிருந்த துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டிக்க ஆரம்பித்தேன்.

ஞானாம்பாள் சற்று நேரம் அந்தப் புலிகளை உற்றுப்பார்த்து “அவைகள் நாலுகாற் புலிகளாயிராமல் இரண்டு காற் புலிகளாகக் காணப்படுகின்றன; அவைகளை நன்றாய்ப் பாருங்கள்” என்றாள். நான் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தவுடனே அந்தப் புலிகளிடத்தினின்று ஒரு வாக்கியம் புறப்பட்டது; என்னவென்றால் “ஐயா! எங்களைச் சுட வேண்டாம். நாங்கள் புலிகள் அல்ல. நாங்கள் வேஷக்காரர்கள்” என்பது தான். சற்று நேரத்தில் நெருங்கி வந்து எங்களைப் பார்த்து “அல்லாப் பண்டிகைக்காகப் புலி வேஷம் போட்டுக்கொண்டு பல ஊர்களுக்குப் போய் யாசகம் வாங்குவதற்காகப் புறப்பட்டோம்; மழையினால் எங்களுடைய வேஷம் கலைந்துபோகுமென்று நினைத்து அந்தக் குகைக்குள்ளாக உங்களுக்கு முன்பாக வந்து உட்கார்ந்திருந்தோம்; இது தான் நடந்த வாஸ்தவம்” என்றார்கள். அவர்கள் புலி அல்லவென்றும் வேஷக்காரர்களென்றும் எங்களுக்குப் பிரத்தியட்சமாய்த் தெரிந்தவுடனே எங்களுடைய பயம் நீங்கிவிட்டது. கீழே விழுந்து கிடந்த அந்த வேலைக்காரிகளுடைய நடுக்கம் தீரவேயில்லை. அவர்கள் எழுந்திருக்கும்படியாக நாங்கள் பட்ட பாடு கொஞ்சமல்ல. அவர்களுடைய புருஷர்கள் போன வழி தெரியாமையால் அவர்களை நாலு பக்கமும் தேட ஆரம்பித்தோம். சற்று நேரத்துக்குப் பின்பு சாமான்களை விலக்கிப் பார்த்தோம். அந்த வேலைக்காரர்கள் சாமான் வண்டிக்குள் நுழைந்து சாமான்களை வாரி மேலே போட்டு மறைத்துக்கொண்டு படுத்திருந்தார்கள். அவர்களை எழுப்பி வெளியே விட்டு, “ஆபத்து வரும்போது நாங்கள் முன்னின்று தலை கொடுப்போம் என்று சொல்லி வந்த நீங்கள் இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து “சுவாமி! எங்கள் மேலே தோஷமில்லை; ஆபத்து இல்லாத காலத்தில் நாங்கள் பூரண தைரியசாலிகளா யிருக்கிறோம்; ஆபத்தைக் கண்டவுடனே எங்களுடைய கால்கள் நிலை கொள்ளாமல் எங்களையும் இழுத்துக்கொண்டு ஓடுகின்றன; நாங்கள் என்ன செய்வோம்?” என்றார்கள். இப்படிப்பட்ட சுத்த வீரர்களைக் கோபிப்பதில் பிரயோசனம் என்ன? அவர்களுடைய பெண்சாதிகளை ஆபத்து வேளையில் கைவிட்டு ஓடினதற்காக அவர்களே புருஷர்களைக் கோபிப்பார்களென்று நினத்து நான் சும்மா இருந்துவிட்டேன். அந்த மூடப் பெண்சாதிகள் புருஷர்களைக் கோபிப்பதற்குப் பதிலாய் அவர்களைப் பார்த்து “நீங்கள் ஓடும்போது உங்கள் பாதங்களில் கல்லும் முள்ளும் தைத்திருக்குமே; சாமான்களைத் தூக்கி மேலே போட்டுக் கொண்டபோது தேகத்தில் காயம் பட்டிருக்குமே” என்று அநுதாபப்பட்டார்கள். பக்ஷத்துக்குக் கண் இல்லை என்பது அப்போது தான் எனக்குத் தெரிந்தது.

இவ்வகையாகச் சிலநாள் யாத்திரை செய்த பின்பு ஒரு நாள் எங்களுக்கு நேரே ஒரு நகரம் குறுக்கிட்டது. அது என்ன ஊரென்று விசாரிக்க, தேவராஜப் பிள்ளையினுடைய ஊராகிய ஆதியூரென்று கேள்விப்பட்டோம். உடனே எங்களுக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாகி ஒளியப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல், நாம் ஒருவரும் காணாதபடி தூரதேசத்துக்குப் போக உத்தேசித்துப் போகும்போது இந்த ஊர் வந்து குறுக்கிட்டதே! இந்த ஊருக்கு வருகிறதென்றும் நாம் நினைக்கவே இல்லையே! நாம் இவ்வளவு சமீபத்தில் வந்தும் அவர்களைப் பார்க்காமல் போனால் பிற்பாடு அவர்களுக்கு உண்மை தெரியும்போது மனஸ்தாபப்படுவார்களே! இந்தத் தரும சங்கடத்துக்கு என்ன செய்கிறதென்று நானும் ஞானாம்பாளும் வண்டியை நிறுத்தி ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது ரஸ்தாவில் எங்களுக்கு எதிரே நாலு குதிரைகள் கட்டின இரண்டு இரதங்கள் ஓடி வந்தன. முன்னர் வந்த ரதத்தில் யார் இருக்கிறார்களென்று எட்டிப் பார்த்தேன். அதில் தேவராஜப் பிள்ளையும் அவருடைய மகன் கனகசபையும் இருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்தவுடனே ரதத்தை நிறுத்திக் கீழே குதித்தார்கள்; நானும் கீழே குதித்தேன்; அவர்கள் முகமகிழ்ச்சியோடும் அகமகிழ்ச்சியோடும் என்னைக் கட்டிக்கொண்டு “நீங்கள் வர இந்த ஊர் என்ன தவஞ் செய்ததோ நாங்கள் செய்த புண்ணிய பலன் இன்றைக்குத் தான் எங்களுக்குக் கிடைத்தது.” என்று பலவாறாக உபசரித்தார்கள். மற்றொரு ரதத்திலிருந்து தேவராஜப் பிள்ளையின் பத்தினியும் அவருடைய தங்கையும் கீழே இறங்கி ஞானாம்பாளைத் தழுவிக்கொண்டு பலவகையான முகமன் கூறினார்கள். தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் ஞானாம்பாளுக்கும் தக்கபடி இனிய வசனம் கூறி அவளை அந்த ஸ்திரீகள் வந்த ரதத்தில் ஏற்றுவித்து என்னைத் தங்களுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்பினார்கள்.

நாங்கள் வழியே போகும்போது தேவராஜப் பிள்ளை என்னை நோக்கி “இன்றையத்தினம் உங்கள் தந்தையாரிடத்திலிருந்து தபால் மார்க்கமாக வந்த கடிதத்தில் நீங்கள் ஒருவருக்கும் சொல்லாமல் ஊரைவிட்டுப் போய்விட்டதாகவும் இன்ன ஊருக்குப் போனீர்களென்று தெரியவில்லையென்றும் தாங்கள் பல ஊர்களுக்கு மனுஷர்களும் கடிதங்களும் அனுப்பி இருப்பதாகவும் நீங்கள் இந்த ஊருக்கு வந்தால் உடனே தெரிவிக்கவேண்டுமென்றும் எழுதப்பட்டிருந்தது. நீங்கள் இந்த ஊருக்கு வராமல் வேறே எங்கே போகிறீர்களோ என்று நாங்கள் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். உங்களை எங்கள் தெய்வந்தான் கொண்டு வந்துவிட்டது; நாங்கள் கிருதார்த்தர்களானோம்” என்று சொல்லிப் பின்னும் என்னைப் பார்த்து “நீங்கள் ஒருவருக்கும் சொல்லாமல் ஏழைகளைப் போல ஊரை விட்டு வெளிப்பட்டதற்குக் காரணம் என்ன?” வென்று வினாவினார். என் தகப்பனாருடையவும் மாமனாருடையவும் வீணான சண்டையை வெளிப் படுத்த எனக்கு மனமில்லாமலிருந்தாலும் பொய்யான காரணத்தைச் சொல்லக் கூடாதென்று நினைத்து ஞானாம்பாளுக்குக் கர்ப்பச் சின்னங்கள் தோன்றினதும், அந்தக் கர்ப்பக் குழந்தையை என் மாமனார் ஸ்வீகாரம் கொடுக்கும்படி கேட்டு அது மூலமாகச் சண்டை விளைந்ததும் நான் சங்§க்ஷ¡பமாகத் தெரிவித்தேன். அதைக் கேட்டவுடனே அவருக்கு உண்டான பெருஞ் சிரிப்பு எப்படிப்பட்டதென்றால் அவர் அவ்வகையாக இன்னும் சற்று நேரம் சிரித்திருப்பாரானால் அவர் மரித்திருப்பாரென்பதும் கனசபை தகப்பன் இல்லாப் பிள்ளையாகி இருப்பான் என்பதும் நிச்சயமே. பிறகு எனக்கு வருத்தமாயிருக்குமென்று அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்லுகிறார்:

“தாய் தகப்பன்மார்களுடைய சண்டைகளெல்லாம் பிள்ளைகளின் மேல் இருக்கிற பக்ஷத்தினால் விளைகின்றனவே அல்லாமல் மற்றப்படி அல்ல. உம்முடைய மாமனார் தம்முடைய மகள் பிள்ளை தமக்குப் பிள்ளையாயிருக்கவேணுமென்று அபேக்ஷ¢த்து அந்தப் பிள்ளையைத் தமக்கு ஸ்வீகாரம் கொடுக்கும்படி கேட்டார். உமது தகப்பனார் தம்முடைய பேரப் பிள்ளையைப் பிரிய இஷ்டமில்லாமல் ஆ§க்ஷபித்தார்; ஆகையால் உங்கள் மேலும் உங்கள் சந்ததிகளின் மேலும் அவர்களுக்கு உண்டாயிருக்கிற பக்ஷத்தினால் அந்தச் சண்டை விளைந்ததென்பது நிதரிசனமாயிருக்கின்றது. அநேக சமயங்களில் பொல்லாங்கிலிருந்து சுவாமி நன்மையை விளைவிப்பது போல் இந்தச் சண்டையினால் எனக்கு ஒரு நன்மையைச் செய்திருக்கிறார். இந்தச் சண்டை நேராவிட்டால் உங்களை இப்போது தரிசிக்கும்படியான பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்குமா?” என்றார். இவ்வகையாகச் சல்லாபித்துக் கொண்டு அவருடைய அரண்மனையிலே போய்ச் சேர்ந்தோம். அங்கே எங்களுக்கு நடந்த உபகாரங்களும் மரியாதைகளும் இப்படிப்பட்டது என்று விவரிப்பது எளிதல்ல. தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் என்னைவிட்டு ஒரு நிமிஷமாவது பிரிகிறதில்லை. அவருடைய பத்தினியும் தங்கையும் தங்கை மகளும் ஞானாம்பாளை விட்டுச் சற்றும் பிரிகிறதில்லை. ராஜோபசாரங்களும் வேடிக்கை விநோதங்களும் செய்து எங்களைச் சந்தோஷிப்பித்தார்கள்.
---------

அத்தியாயம் - 26
நாங்கள் வந்து சேர்ந்த மறு தினமே எங்களுடைய §க்ஷமலாபங்களைக் குறித்து தேவராஜப் பிள்ளை என் தகப்பனாருக்குத் திருமுகங்கள் அனுப்பினார். காலம் போகப்போக எங்கள் தாய் தந்தைகளை விட்டுப் பிரிந்த துக்கம் பெரிதாயிருந்தது. எங்கள் தந்தையர்களிடத்தில் எங்களுக்கு இருந்த அற்ப மனஸ்தாபமும் நாளாவட்டத்தில் தீர்ந்துபோய் விட்டது. ஒரு நாள் நானும் ஞானாம்பாளும் அடியிற் கண்டபடி சல்லாபித்துக் கொண்டோம்.

“தாய் தகப்பனைப்போல நமக்கு உபகாரிகள் யார் இருக்கிறார்கள்? மற்றவர்கள் எல்லாரும் ஏதாவது அற்ப உதவி செய்வார்கள். தாய் தகப்பன்மாரோவென்றால் தேகத்தையும் பிராணனையும் பூலோக வாழ்வையும் நமக்குக் கொடுத்த பரம தாதாக்களாயிருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பெற்று வளர்த்து பெயரூட்டிப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டிச் சம்ரக்ஷ¢த்தார்கள். மற்றவர்கள் எல்லாரும் யாதொரு பிரதி உபகாரத்தை விரும்பி உதவி செய்வார்கள். தாய் தந்தையர்கள் யாதொரு பிரதி பலனையும் வேண்டாமல் நம்முடைய சுகமே அவர்களுடைய சுகமாகவும் நம்முடைய துக்கமே அவர்களுடைய துக்கமாகவும் எண்ணி நாம் அழும்போதுகூட அழுதும் நாம் சந்தோஷிக்கும்போது கூடச் சந்தோஷித்தும் அத்தியந்த அன்பு பாராட்டினார்கள். நாம் வியாதியில்லாமலிருக்கும் பொருட்டு அவர்கள் மருந்துகளை உண்டு பத்தியம் பிடித்தார்கள். நாம் §க்ஷமமாயிருக்கும் பொருட்டுப் பல விரதங்களை அநுஷ்டித்து தேவதாப் பிரார்த்தனை செய்தார்கள். நாம் தூங்கும்போது அவர்கள் தூங்காமல் நம்மைப் பாதுகாத்தார்கள். நாம் வியாதியாயிருக்கும்பொழுது அவர்கள் அன்னம் ஆகாரம் நித்திரையைத் துறந்துவிட்டார்கள். நம்முடைய வாந்தி மல ஜலாதி அசுத்தங்களையுஞ் சகித்தார்கள். நம்மைச் சௌக்கியத்தில் வைக்கும்பொருட்டு அவர்களுடைய சௌக்கியங்களைக் குறைத்துக் கொண்டார்கள். துக்கங்களை எல்லாம் அவர்கள் தாங்கிக்கொண்டு சுகங்களை நமக்குக் கொடுத்தார்கள்” என்று பலவாறாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் எங்களிடத்துக்கு வந்தார்கள். நாங்கள் தாய்தகப்பன்மார்கள் செய்த நன்மைகளைக் குறித்துச் சம்பாஷிக்கிறோ மென்பதை தேவராஜப்பிள்ளை தெரிந்துகொண்டு அவர் எங்களைப் பார்த்து “கொடுமையான தாய்தகப்பன்மார்களுக்குக் கூடச் சில நல்ல பிள்ளைகள் எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில சரித்திரங்களைச் சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று சொல்லுகிறார். “சில காலத்துக்குமுன் தஞ்சை நகரத்திலே சுப்பையன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு புத்திரர்கள். அவர்களில் மூத்தவனுடைய ஜாதக பலன் தகப்பனுக்கு ஆகாது என்று ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருந்தபடியால் அவனைத் தகப்பன் சத்துரு பாவமாக எண்ணத் தலைப்பட்டான். அந்தப் பிள்ளையை அவன் கண்ணாற் பார்க்கிறதுமில்லை; கையால் தொடுகிறதுமில்லை. மூத்த பிள்ளை அவனுக்கு வேம்பாகவும், இளைய பிள்ளை கரும்பாகவும் போய்விட்டார்கள். மூத்த பிள்ளை நன்மை செய்தாலும் அது தகப்பனுக்குத் தீமையாகத் தோன்றும். இளைய பிள்ளை செய்கிற தீமையெல்லாம் நன்மையாகத் தோன்றும். மூத்த பிள்ளை இடத்தில் தகப்பனுக்கு உண்டாயிருக்கிற துவேஷத்தைப் பரிகரிக்கிறதற்கு அந்தப் பிள்ளையின் தாயார் அவளாற் கூடியமட்டும் பிரயாசைப்பட்டும் நிஷ்பிரயோசனமாய்ப் போய்விட்டது. ஆயினும் மாதா உள்ளவரைக்கும் மூத்த பிள்ளைக்குப் பத்தாம் வயதும், இளைய பிள்ளைக்கு ஒன்பதாம் வயதும் நடக்கும்பொழுதும் கஷ்டகாலம் ஆரம்பித்தது. அந்தப் பிள்ளையைத் தகப்பன் திரும்பிப்பார்க்கிறதே யில்லை. தகப்பனுக்கு ஒரு அற்பத் துன்பம் நேரிட்டாலும், மூத்த பிள்ளையினுடைய ஜாதகப் பலன் என்று நினைத்து அந்தப் பிள்ளையைத் தகப்பன் விரோதித்து வந்ததுந் தவிர, இளைய பிள்ளையும் தமையன் மேலே கோளுங்குறைகளையுஞ் சொல்லித் தகப்பனுடைய துவேஷம் அதிகரிக்கும்படி செய்தான். மூத்த பிள்ளை இன்னும் சில நாள் வரைக்கும் தகப்பன் வீட்டில் இருந்திருப்பானானால் அவனுடைய ஆயுசு முடிந்து தாய் போன இடத்துக்குப் போயிருப்பான் என்பது சத்தியம். அவன் படுகிற கஷ்ட நிஷ்டூரங்களை அவன் தாயுடன் பிறந்த அம்மான் கேள்விப்பட்டு, அவன் வந்து அந்தப்பிள்ளையைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சம்ரக்ஷ¢த்துவந்தான். அவன் எப்படியாவது தொலைந்தானே யென்று தகப்பன் சந்துஷ்டியடைந்து தன்னுடைய பிரியத்தையெல்லாம் இளைய பிள்ளைக்கே தத்தஞ் செய்துவிட்டான். மூத்த பிள்ைக்கு இருபத்திரண்டு வயது நடக்கும்போது தகப்பனுக்குக் கபவாத சுரங்கண்டு அநேக மாசம் வரைக்கும் அவஸ்தைப்பட்டான். அந்த வியாதியும் மூத்த பிள்ளையினுடைய ஜாதக விசேஷத்தால் நேரிட்டதென்று தகப்பன் எண்ணி அந்தப் பிள்ளைக்கு ஒன்றும் வைக்காமல் சகல சொத்துக்களுக்கும் இளைய பிள்ளையைப் பாத்தியப்படுத்திப் பிரசித்தமாக ஒரு மரண சாசனம் எழுதிவைத்தான். மூத்த பிள்ளை நற்குண சம்பன்னன் ஆகையால் தகப்பன் என்ன கொடுமை செய்தாலும் அதைப் பாராட்டாமல் வியாதியாயிருக்கிற தன் தகப்பனை அடிக்கடி போய்ப் பார்த்துக்கொண்டு வருவான். அவனைக் கண்டபோதெல்லாம் தகப்பன் பாம்புபோல் சீறி வைது துரத்திக்கொண்டு வந்தான். ஒரு நாள் விழலினால் மேயப்பட்டிருந்த மேல்மாடியில் தகப்பன் வியாதியுடன் படுத்திருக்கும்போது அந்த மேல்மாடிக்குப் போகிற படிகளில் நெருப்புப் பிடித்துக் கொண்டு மேல் மாடியிலும் தாவ ஆரம்பித்தது. படிகளில் நெருப்புப் பற்றிக் கொண்டபடியால் வியாதியஸ்தனை ரக்ஷ¢க்கும் பொருட்டு மேல் மாடியில் ஏறுவதற்கு மார்க்கமில்லாமல் போய் விட்டது. இவ்வகையாகத் தகப்பனுக்கு நேரிட்ட ஆபத்தை மாமன் வீட்டிலிருந்த மூத்த பிள்ளை கேள்வியுற்று உடனே ஓடிவந்து படி வழியாய் மேல்மாடிக்குப் போக யத்தனித்தான். அவனுடைய பிரயத்தனத்துக்கு அக்கினிச் சுவாலை இடங்கொடுக்கவில்லை. அந்த ஜேஷ்ட புத்திரத் துரோகிக்கு மகன் செய்யும் உபகாரம் அக்கினிக்குச் சம்மதம் இல்லாதது போல வழி மறித்துக்கொண்டது. மேல் மாடியின் பின்புறத்திலிருக்கிற பலகணிகளின் வழியாய் உள்ளே நுழைந்து தகப்பனை வெளிப்படுத்துகிறதென்று மூத்த பிள்ளை நிச்சயித்துக் கொண்டு அந்தப் பலகணிகள் ஒரு தென்னைமர உயரத்திலிருந்தபடியால் இரண்டு பெரிய ஏணிகளைச் சேர்த்துக் கட்டி ஜன்னலுக்கு நேரே நிறுத்தி அவைகளின் வழியாக ஏறி ஜன்னலின் மரக்கம்பிகளை அரிவாளால் வெட்டிப் பிளந்து கொண்டு உள்ளே பிரவேசித்து தகப்பனை மிருதுவாகத் தூக்கி ஜன்னல் வழியாக இறக்கி ஏணியின் மேல் நிறுத்திக் கைலாகு கொடுத்துப் படிப்படியாய் நடத்திக்கொண்டு வந்து பூமியிலே சேர்த்தான். அப்படிச் செய்யாமல் சிறிது நேரம் தாமதப்பட்டிருக்குமானால் தகப்பனுடைய சரீரமும் அவனுடைய ஓர வஞ்சகமும் அவன் இளைய பிள்ளைக்கு எழுதி வைத்த மரண சாசனமும் அக்கினியில் வெந்து படுசூரணமாய்ப் போயிருக்குமென்பது அந்த அக்கினியே சாட்சி. ஒரு காலத்திலும் மூத்த பிள்ளையைத் தொடாமலிருந்த தகப்பன் அன்றையத் தினம் மார்போடு இறுகக் கட்டித் தழுவிச் சொல்லுகிறான்: “என் புத்திர பாக்கியமே! என் குலவிளக்கே! என் கண்மணியே! உன்னைப்போல தர்மிஷ்டர்களும் என்னைப் போலே பாபிஷ்டர்களும் இந்த உலகத்தில் இருப்பார்களோ? நான் உனக்குச் செய்ததெல்லாம் கொடுமை; நீ எனக்குச் செய்ததெல்லாம் நன்மை; நான் உன்னுடைய குணத்தையும், என்னுடைய குணத்தையும் யோசிக்குமிடத்தில் நான் உனக்குத் தகப்பனாயிருக்க எவ்வளவும் யோக்கியன் அல்ல. நான் உனக்குச் செய்த துரோகமே, நெருப்பாக வந்து விளைந்ததே தவிர வேறல்ல. அந்த நெருப்பினின்று நீ என்னை ரக்ஷ¢த்தபடியால் நீயே என்னைப் பெற்ற தாயும் தகப்பனும் ஆனாய்!” என்று பலவகையாக ஸ்தோத்திரஞ் செய்ததுமன்றி தான் செய்த கொடுமைகளை நினைத்து நினைத்து மனம் உருகி அழுதான். அன்று முதல் மூத்த பிள்ளையே தனக்குச் சகல பாக்கியமுமென்று நினத்து அவன் வசத்தில் ஆஸ்திகளையெல்லாம் ஒப்புவித்துத் தானும் இளைய குமாரனும் அவனால் போஷிக்கப்பட்டு வாழ்ந்தார்கள்.

வெகு காலத்துக்கு முன்பாக யூரோப்பிலே (Europe) சிசிலி (Sicily) நாட்டில் இருக்கிற அக்கினி மலை அக்கினியைக் கக்கி, அநேக ஊர்களைச் சுட்டு நிர்மூலமாக்கினபோது ஜனங்கள் எல்லாரும் அதிக விலை பெற்ற சொத்துக்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்கள். அவர்களில் அநப்பியஸ் (Anapius) அம்பினோமஸ் (Amphinomas) என்கிற இரண்டு பாலகர்கள் யாதொரு ஆஸ்தியையும் தொடாமல் வயோதிகர்களான தங்களுடைய தாய் தந்தைகளைத் தூக்கிக்கொண்டு சென்று அவர்களுடைய பிராணனை ரக்ஷ¢த்துப் பிரக்கியாதி அடைந்தார்கள்.

ரோமாபுரியை மூவேந்தர் கூடி அரசாக்ஷ¢ செய்து வந்த காலத்தில் பெயர் பெற்ற பிரசங்க வித்வானாகிய சிசரோ (Cicero) என்பவரையும் அவருடைய சகோதரராகிய குவின்டஸ் (Quintus) என்பவரையும் இன்னும் அநேகரையும் கொண்டுவிடும்படி அந்த மூவேந்தர்கள் தீர்மானித்தார்கள். இந்தச் சமாச்சாரம் கேட்டவுடனே சிசரோவும் அவருடைய சகோதரரும் தப்பி ஓட ஆரம்பித்தார்கள். பிறகு சிசரோ தம்முடைய சகோதரனைப் பார்த்து “நான் கடற்கரைக்குப் போய்ப் பிரயாணக் கப்பல் திட்டஞ் செய்கிறேன். நீ வீட்டுக்குப் போய் வழிச் செலவுக்குப் பணம் கொண்டுவா” என்று ஆக்ஞாபித்தார். அந்தப் பிரகாரம் குவின்டஸ் என்பவர் வீட்டுக்குப் போனார். அவர் வீட்டுக்கு வந்திருக்கிற சமாசாரம் தெரிந்து அவரைப் பிடித்துக் கொல்வதற்காக அநேகம் போர்வீரர்கள் வீட்டுக்குள்ளே பிரவேசித்து அவரைத் தேடினார்கள். அவர் அகப்படாதபடி வீட்டுக்குள் ஒரு பக்கத்தில் ஒளிந்துகொண்டார். அந்தச் சேவகர்களுக்கு ஆக்கிரகம் உண்டாகி, அவருடைய மகனைப் பிடித்துத் தகப்பன் ஒளித்திருக்கிற இடத்தைக் காட்டும்படி அந்தப் பிள்ளையை அடித்துப் பலவிதமாக உபத்திரவஞ் செய்தார்கள். தாங்கக் கூடாத உபத்திரவங்களையெல்லாம் அந்தப் பிள்ளையாண்டான் சகித்துக் கொண்டு தகப்பன் ஒளிந்திருந்த இடத்தைக் காட்டாமலிருந்தான். குவின்டஸ் என்பவருக்கு தனது மகன் படுகிற உபத்திரவம் தெரிந்தவுடனே மனஞ் சகியாமல் வெளியே ஓடிவந்து அந்தக் கொலைஞரைப் பார்த்து “நிர்த்தோஷியான அந்தப் பிள்ளையை ஏன் உபாதிக்கிறீர்கள்? என்னைக் கொல்லுங்கள்!” என்று அழுதார். உடனே அவருடைய மகன் “என்னைக் கொல்லுங்கள்! தகப்பனாரைக் கொல்லவேண்டாம்” என்று பிரார்த்தித்தான். அந்தப் பரம சண்டாளர்கள் சற்றும் இரக்கமில்லாமல் தகப்பனையும் மகனையும் ஒரே காலத்தில் வெட்டிக் கொன்றார்கள்.

பெருமையிற் சிறந்த அலெக்சாண்டர் (Alexander) என்னும் அரசனுடைய தாயாராகிய ஒலிம்பியாஸ் (Olympias) என்பவள் அதிகாரப் பிரியம் உள்ளவளாய் ராஜரீகக் காரியங்களிர் பிரவேசித்து மகனுக்கு ஓயாத சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டு வந்தாள். அப்படி இருந்தும் மாதாவின் மீதுள்ள அன்பு குறையாமல் அவர் திக்குவிஜயஞ் செய்யப் போன இடங்களில் அகப்பட்ட அபூர்வ வஸ்துக்களைத் தாயாருக்கு அனுப்பி வந்தார். அவரால் நியமிக்கப்பட்ட கவர்னராகிய அன்டிப்பாட்டர் (Antipater) என்பவரே தேச காரியங்களை நடப்பிக்க வேண்டாமென்றும் அலெக்சாண்டர் எழுதிய கடிதத்துக்கு அவருடைய தாயார் கடுங்கோபமாய் மறுமொழி எழுதியும் அந்த அரசனுக்கு மாதாமேலே எவ்வளவுங் கோபம் உண்டாகவில்லை. அவளுடைய உபத்திரவத்தைப் பொறுக்கமாட்டாமல் அன்டிப்பாட்டர் என்னும் கவர்னர் அலெக்சாண்டருக்கு அநேக கடிதங்கள் அனுப்பினார். அதற்கு அலெக்சாண்டர் சொன்னதாவது: “அன்டிப்பாட்டர் அறுநூறு கடிதங்கள் அனுப்பினாலும் அத்தனைக் கடிதங்களையும் என் தாயாருடைய கண்ணீர்த்துளி அழித்து அபலமாக்கிவிடுமென்பதை அன்டிப்பாட்டர் அறியவில்லை” என்றார்.

புருசியா (Purussia) தேசத்து அரசராகிய பிரடரிக் (Frederick) என்பவர் ஒருநாள் வேலைக்காரனை அழைப்பதற்காக வழக்கப்படி மணியை ஆட்டினார். ஒருவரும் வராதபடியால் அவர் வேலைக்காரனிருக்கிற இடத்தைப் போய்ப் பார்க்க வேலைக்காரன் ஒரு கட்டிலின் மேலே படுத்து நித்திரை செய்துகொண்டிருந்தான். அவனுடைய சட்டைப்பையில் ஒரு கடிதம் நீட்டிக்கொண்டிருந்தபடியால் அவனை எழுப்பாமல் அவர் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்து வாசித்தார். அது அந்த ஊழியக்காரனுக்கு அவனுடைய தாயாரால் எழுதப்பட்ட கடிதமாயிருந்தது. அதில் “மகனே! உன்னுடைய சம்பளத்தில் மிச்சம் பிடித்து என்னுடைய கஷ்ட காலத்துக்கு உதவும்படியாக அனுப்பிக் கொண்டு வருகிறாயே! இந்த உபகாரத்திற்காகக் கடவுள் உனக்குக் கிருபை செய்வார்” என்று எழுதப்பட்டிருந்தது. உடனே அந்த அரசர் சில தங்க நாணயங்களை அந்தக் கடிதத்துடன் சேர்த்து வேலைக்காரனுடைய சட்டைப் பையில் மிருதுவாக வைத்துவிட்டு மறுபடியும் அவருடைய அறைக்குள்ளே போய் மணியை அதிக பலமாக ஆட்டினார். வேலைக்காரன் விழித்துக் கொண்டு அரசருடைய சமூகத்துக்கு ஓடினான். அரசர் அவனைப் பார்த்து “நீ நல்ல தூக்கம் தூங்கினாய்” என அவன் “க்ஷமிக்க வேண்டும்” என்று பிரார்த்தித்தான். பிறகு தன் சட்டைப்பை கனமாயிருப்பதைக் கண்டு உள்ளே கையைவிட அந்தத் தங்க நாணயங்கள் அகப்பட்டன.

அந்தத் தங்க நாணயங்கள் வந்த விவரந் தெரியாமல் அவன் மதிமயங்கி அழுதுகொண்டு அரசனுடைய காலில் விழுந்து “மகாராஜாவே! யாரோ என் குடியைக் கெடுக்க இந்த நாணயங்களை என் சட்டைப் பையில் வைத்து விட்டார்கள்” என்றான். உடனே வேந்தன் அவனைப் பார்த்து “கடவுள் சில சமயங்களில் நித்திரையில் நமக்கு நன்மையை அனுப்புகிறதும் உண்டு. நீ என்னுடைய வந்தனத்துடன் அந்த நாணயங்களை உன் தாயாருக்கு அனுப்புகிறதும் அன்றி உன்னையும் உன் தாயாரையும் கைவிட மாட்டேன் என்று உன் மாதாவுக்குத் தெரிவி” என்றார்.

ஆஸ்திரியா (Austria) தேசத்தின் ராஜதானியாகிய வியன்னா (Vienna) நகரத்தில் ஒரு எளிய கைம்பெண்மாது இருந்தாள். அவளுடைய புருஷன் இறந்த பிற்பாடு கால§க்ஷபத்துக்கு மார்க்கமில்லாமல் அவளும் அவளுடைய பிள்ளையும் மகா கஷ்டப்பட்டார்கள். அவளுடைய வறுமையின் நிமித்தமே அவளுக்கு வியாதியுந் துர்ப்பலமும் அதிகரித்தன; சில நாளளவும் படுத்த படுக்கையிலே இருந்தாள். அவளுடைய புத்திரன் அதி பாலியனாயிருந்ததால் அவன் யாதொரு கைத்தொழில் செய்ய அசக்தனாயிருந்தான். அந்தச் சிறுவன் பல வைத்தியர்கள் வீட்டுக்குப் போய்த் தன்னுடைய தாயாருக்கு வைத்தியம் பார்க்க வரவேண்டுமென்று பிரார்த்தித்தான். அவர்கள் எல்லோரும் முன் பணமில்லாமல் வரமாட்டோமென்று சொல்லிவிட்டார்கள். அந்தப் பையன் அவர்களுக்கு இரக்கம் உண்டாகும்படி அவர்களுடைய காலில் விழுந்து நமஸ்காரஞ் செய்து அவனாற் கூடியமட்டும் இரந்து மன்றாடியும் அந்தப் பாவிகளுக்கு இரக்கம் உண்டாகவில்லை. அந்தப் பாலன் அழுதுகொண்டு தெருவிலே போகும்போது அந்தத் தேசத்துச் சக்கரவர்த்தியாகிய இரண்டாவது ஜோசேப் (Joseph II) என்பவர் ஒரு சாதாரணமான வண்டியின் மேலே ஏறிக்கொண்டு சவாரி போய்க்கொண்டிருந்தார். அவர் சக்கரவர்த்தி யென்பது அந்தப் பையனுக்குத் தெரியாதபடியால் அவன் அவருக்கு முன்பாகப் போய் வியாதியாயிருக்கிற தன் மாதாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகப் பொருளுதவி செய்யவேண்டுமென்று விண்ணப்பஞ் செய்தான். அவன் மாதாவுக்காகப் படும் பரிதாபத்தைப் பார்த்துச் சக்கரவர்த்திக்கு இரக்கம் உண்டாகி, “நான் உன்னுடைய மாதாவுக்கு வைத்தியஞ் செய்கிறேன். உன்னுடைய வீட்டைக் காட்டு” என்று சொல்லி, அவனையும் வண்டியின்மேல் ஏற்றுவித்துக் கொண்டு போனார். அவர் அந்த வீட்டுக்குப் போன உடனே அந்த ஸ்திரீ பசியினால் வாடிக் கண்ணிருட்டிக் காதடைத்து மெலிந்து போயிருக்கிறதைப் பார்த்து அவளுக்கு தரித்திரத்தைத் தவிர வேறு வியாதியில்லை யென்றும் அதற்கு ஔஷதம் பொருள் தானென்றும் தெரிந்து கொண்டு அந்தப் பையனைப் பார்த்து “உன்னுடைய தாயார் வியாதிக்குத் தகுந்த ஔஷதம் இன்னதென்று எழுதிக் கொடுக்கிறேன். மைக்கூடும் இறகும் காகிதமுங் கொண்டு வா” என்றார். அவன் அந்தப்பிரகாரங் கொண்டுவந்து கொடுத்தான். அவர் அந்தப் பொக்கிஷசாலை உத்தியோகஸ்தனுக்கு உத்தரவு எழுதி அனுப்பினார். அந்தப் பிரகாரம் அவர்களுக்கு நூறு வராகன் கிடைத்து அவர்களுடைய தரித்திர வியாதியை அதஞ் செய்தது.
-------------

அத்தியாயம் - 27
ஒரு நாள் சாயர¨க்ஷ நானும் தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் வேடிக்கையாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்பொழுது என்னுடன் சத்தியபுரியிலிருந்து வந்த வண்டிக்காரன் ஒருவன் வெளியே யிருந்து மேல்மூச்சு கீழ்மூச்சுடன் ஓடி வந்து உள்ளே நுழைந்து எங்களைப் பார்த்து “சந்தோஷ சமாசாரம்! சந்தோஷ சமாசாரம்!” என்று சொல்லிக்கொண்டு ஆநந்த நர்த்தனஞ் செய்தான். நாங்கள் “அந்த சமாசாரம் என்ன?” என்று கேட்க, அவன் “சுவாமிகளே! நான் இரண்டு நாழிகை வழி தூரம் ஓடி வந்ததால் எனக்கு இரைக்கின்றது.! இரைப்பு அடங்கின உடனே சொல்லுகிறேன்” என்று மறுபடியுங் குதித்துக் கூத்தாடினான். நான் அவனைப் பார்த்து “இப்பொழுது நீ எத்தனையோ வார்த்தைகள் பேசினாய்! சந்தோஷச் செய்தி இன்னதென்று ஒரு வார்த்தையிலே சொல்லக் கூடாதா?” என்று உறுக்கினேன். அவன் மறுபடியும் காரியம் இன்னதென்று தெரிவிக்காமல் சம்பந்தமில்லாத காரியங்களைச் சொல்லி நேரம் போக்கினான். எனக்குக் கோபம் ஜனித்து அவனை அடிக்கிறதற்காகக் குதிரைச் சவுக்கைக் கையிலே எடுத்தேன். அவன் கத்திக் கொண்டு “நான் சந்தோஷ சமாசாரங் கொண்டுவந்ததற்கு இது தானா சம்மானம்? நான் இன்று நேற்று வந்தவனல்லவா? நான் எத்தனையோ காலமாக உங்களுக்கு ஊழியஞ் செய்து வருகிறேன். பெரிய ஐயா, அம்மா கூட என்னை ஒரு வார்த்தை சொன்னதில்லை; ஒரு அடி அடித்ததில்லையே! நேற்றைப் பிள்ளையாகிய நீங்கள் என்னை அடிக்கலாமா? வையலாமா?” என்று பல அசங்கதமான காரியங்களைப் பேசினானே தவிரச் சங்கதி இன்னதென்று தெரிவிக்கவில்லை. உடனே எனக்குக் கோபாக்கினி மூண்டு குதிரைச் சவுக்கை அவன் மேலே பிரயோகிக்க ஆரம்பித்தேன். அவன் இருபது அடி வாங்கின பிற்பாடு எங்களை நோக்கி “சத்தியபுரியிலிருந்து ஐயா, அம்மா எல்லாரும் வருகிறார்கள். நான் ஆற்றுக்குப் போனபோது அவர்களை வழியிலே கண்டு சந்தோஷ சமாசாரஞ் சொல்வதற்காக இரண்டு நாழிகை வழி தூரம் குடல் தெறிக்க ஓடி வந்தேன்” என்றான். இதைக் கேட்டவுடனே தேவராஜப் பிள்ளை பெருங் களிப்புடனே எழுந்து பெட்டியைத் திறந்து இரண்டு கோடி வஸ்திரங்களை எடுத்து சந்தோஷ சமாசாரங் கொண்டுவந்ததற்காக அந்த வண்டிக்காரனுக்கு வெகுமானஞ் செய்தார். அவன் அத்தனை அடிபட்டும் எங்களுக்குச் சங்கதியைப் பூரணமாய்த் தெரிவிக்கவில்லை. அவன் சொன்னதைக் கொண்டு என் தாய்தகப்பனார் மட்டும் வருவதாக எண்ணிக்கொண்டோமே தவிரச் சம்பந்தி முதலியாரும் அவருடைய பத்தினியும் வருவதாக ஊகிப்பதற்கு இடமில்லாமலிருந்தது. ஆனால் அவன் ஞானாம்பாள் இடத்திலே போய் அவளுடைய தாய் தந்தை வருவதாக மட்டுஞ் சொல்லி என் தாய் தந்தையருடைய வரவைப் பற்றி ஒன்றும் பிரஸ்தாபிக்காமலிருந்து விட்டான். நானும் ஞானாம்பாளும் சந்தித்தபோது தான் அவளுடைய தாய் தந்தைகள் வருவதாக எனக்கும் என்னுடைய தாய்தந்தைகள் வருவதாக ஞானாம்பாளுக்கும் வெளியாயிற்று. ஞானாம்பாள் என்னை நோக்கி “அந்த வண்டிக்காரனுடைய குதூகலிப்பையும் ஆனந்தத்தையும் யோசிக்குமிடத்தில் நம்முடைய தாய்தந்தையர் வரவையன்றி வேறு காரணமும் இருக்க வேண்டும். அதை இப்போது நான் அறிகிறேன்” என்று சொல்லி அந்த வண்டிக்காரனை அழைத்து அவனைப் பார்த்து “எல்லோரும் வருவதாகச் சொன்னாயே! அவர்களுடன் கூட உன் பெண்சாதியும் வருகிறாளா?” என்று கேட்டாள். அவன் “ஆம் அம்மா! ஆம் அம்ம!” என்று சொல்லி மறுபடியும் நடனஞ் செய்யத் தொடங்கினான். அவன் ஆனந்த நடனத்துக்கும் அவன் பாதிச் சமாசாரஞ் சொல்லிப் பாதியைச் சொல்லாமல் விட்டதற்கும் இப்போது தான் காரணம் தெரிந்தது.

அவன் வந்த உடனே காரியத்தைத் தெரிவித்திருப்பானால் நானும் தேவராஜப் பிள்ளை முதலானவர்களும் என் தாய் தந்தைமார்களை வழியிலே எதிர்கொண்டு அழைப்பதற்காகப் போயிருப்போம். அவன் காரியத்தைச் சொல்லாமல் கால விளம்பனஞ் செய்தபடியால் நாங்கள் எதிர்கொண்டுபோக அவகாசம் இல்லாமற் போய்விட்டது. பிறகு சற்று நேரத்திற்குள் அநேகம் வண்டிகள் பல்லக்குகள் முதலிய வாகனங்கள் வருகிற ஓசை §ட்டு நாங்கள் வெளியே ஓடினோம். என் தகப்பனாரும் சம்பந்த முதலியாரும் இரண்டு குதிரைகள் பூண்ட ரதத்தினின்று கீழே இறங்கினார்கள். உடனே தேவராஜப் பிள்ளை அஞ்சலியஸ்தராய் அவர்களிடஞ் சென்று கைலாகு கொடுத்து அழைத்துக்கொண்டு வந்து அவர்களைத் தக்க ஆசனங்களில் இருத்தி உபசரித்தார். அவருடைய பத்தினி முதலிய ஸ்திரீகள் என் தாயார் மாமியார் முதலியோர்களை எதிர்கொண்டு அழைத்து வந்து மரியாதை செய்தார்கள். நான் என் தாய் தந்தையரைக் கண்டவுடனே பூமியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து அவர்களுடைய திருப் பாதங்களை என் கண்ணீராற் கழுவினேன். அவர்கள் ஒவ்வொருவரும் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு நெட்டுயிர்ப்புடன் பொருமி அழுது அவர்களுடைய கண்ணீரால் என்னை ஸ்நானஞ் செய்வித்தார்கள். என்னுடைய பிரிவின் நிமித்தம் அவர்கள் பாதி உடம்பாய் மெலிந்து போயிருந்தபடியால் இப்படிப்பட்ட பக்ஷமுள்ள தாய் தந்தையர்களை விட்டுப் பிரிந்தோமேயென்று நினைத்து நினைத்து நெடுநேரம் விம்மி அழுதேன். பிறகு என் தந்தையார் ஒரு பிரகாரம் அவருடைய பொருமலை அடக்கிக் கொண்டு தேவராஜப் பிள்ளையைப் பார்த்து “ஐயா!`இந்தப் பிள்ளை பிறந்த நாள் முதல் ஒருநாளாவது நான் பிரிந்ததில்லை. அப்படிப்பட்ட என்னை இத்தனை நாளாகப் பிரிந்திருக்கும்படி செய்துவிட்டான். எங்களுக்குப் பிராணன் இவனேயன்றி வேறு பிராணன் இல்லை. இவன் பிரிந்த நாள் முதல் நாங்கள் பிராணன் இல்லாத சரீரம் போலிருந்தோமேயல்லாமல் மற்றப்படியல்ல. 'பெற்ற மனம் பித்து பிள்ளை மனங் கல்' என்கிற பழமொழியை மெய்யாக்கிவிட்டான். ஆயினும் இவன் மேலே தோஷம் சொல்வதற்கு இடமில்லை. நான் இவளையும் ஞானாம்பாளையும் நிஷ்காரணமாய்த் தூஷித்து ஒரு நாளுஞ் சொல்லாத கடுஞ் சொற்களைப் பிரயோகித்தபடியால் அவர்கள் எங்களைப் பிரியும்படி நேரிட்டது. என்னுடைய குற்றத்தை இப்போது நன்றாக உணருகிறேன். இனி ஒருக்காலும் இவனையும் ஞானாம்பாளையும் நான் தூஷிக்கிறதில்லையென்றும் உங்கள் முன்பாக நான் பிரமாண பூர்வமாகச் சொல்லுகிறேன். இவனும் என்னை ஒருநாளும் பிரிகிறதில்லையென்று பிரமாணம் செய்யவேண்டும்” என்றார். பக்ஷம் நிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே நான் மனம் உருகி என் தகப்பனார் பாதத்தில் விழுந்து “ஐயா! உங்களுக்குச் சொல்லாமல் நான் வெளிப்பட்டது என்மேலே குற்றமேயன்றி உங்கள்மேலே அணுவளவுங் குற்றமில்லை. நீங்கள் எனக்குச் செய்த எண்ணிறந்த உபகாரங்களுக்குப் பிரதியாக என்னுடைய தேகத்தை உங்களுக்குச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலுந் தகும்; இனி ஒரு நாளும் உங்களுடைய உத்தரவில்லாமல் உங்களைப் பிரிகிறதில்லையென்று நான் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்” என்றேன். இந்தச் சமயத்தில் சம்பந்தி முதலியாரும் வந்து கலந்துகொண்டார். அவர் என்னை ஆலிங்கனஞ் செய்துகொண்டு நெடு நேரம் என்னை விடாமற் பொருமினார். என்னை விட்டுவிட்டால் நான் மறுபடியும் அவருடைய மகளை அழைத்துக் கொண்டு தேசாந்தரம் போய்விடுவேனென்று பயந்து அவர் பிடித்த பிடியை விடாமல் என்னை ஆலிங்கனஞ் செய்ததாகத் தோன்றிற்று. கடைசியாக அவருடைய ஆலிங்கனமும் நின்றது; மூச்சுத் திணறலும் அடங்கிற்று.

பிறகு என் தகப்பனாரும் மாமனாரும் தேவராஜப் பிள்ளையை நோக்கி “ஐயா! எங்கள் பிள்ளைகள் முகம் அறியாத தேசத்திலே போய் என்ன துன்பப்படுகிறார்களோ வென்று நாங்கள் சித்தாங்கிரந்தர்களாயிருந்தோம். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல அவர்கள் உங்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிற சமாசாரந் தெரிந்த பிறகு தான் எங்களுக்கு ஆறுதல் உண்டாயிற்று. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றதுபோல் உங்களிடத்தில் வந்து சேர்ந்த பிற்பாடு அவர்களுக்கு என்ன குறைவு இருக்கிறது? ஆனால் அவர்கள் வெளிப்பட்டபிறகு எங்களுடைய கிருகங்கள் தாமரையில்லாத தடாகம் போலவும் சந்திரனில்லாத இரவு போலவும் இருள் அடைந்திருக்கின்றன. ஆகையால் அவர்களைத் தாங்கள் உத்தரவு கொடுக்கவேண்டும். கனக சபைக்குக் கலியாணம் நடக்கும்போது நாங்கள் அகத்தியம் வருகிறோம். அவனுடைய கலியாணத்தை நிறைவேற்றாமல் ஏன் தாமதஞ் செய்கிறீர்கள்?” என்று வினவத் தேவராஜப் பிள்ளை சொல்லுகிறார்:

“கனக சபை கலியாணத்தை எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேனோ அவ்வளவுக்கு அது பிந்திப் போகின்றது. பாளையப்பட்டுச் சம்பிரதாயம் என்னவென்றால் எங்களுக்குள் கலியாணம் நடக்கிறதற்கு முன் கலெக்டர் ரிவின்யூ போர்ட் முதலான அதிகாரஸ்தர்களுக்கு எழுதி உத்தரவு பெற்றுக்கொண்டு கலியாணஞ் செய்கிறது வழக்கம். நான் அந்த அதிகாரஸ்தர்களூக்குப் பல மனுக்கள் அனுப்பியும் யாதொரு மறுமொழியும் வரவில்லை. அந்தக் கலெக்டர் கச்சேரி சிரெஸ்ததார் கேட்டுக்கொண்டபடி என் தங்கை மகளைத் தனக்குக் கலியாணஞ் செய்து கொடுக்கவில்லை யென்கிற அகங்காரத்தினால் கனகசபை கலியாணம் நிறைவேறாதபடி அவன் ஏதேதோ விகற்பங்கள் செய்துவருகிறான். அவனுடைய துர்ப்போதனைகளுக்குச் செவி கொடுத்துக் கலெக்டர் என்னுடைய பாளையப்பட்டை ஜப்தியில் வைக்கவேண்டிய முயற்சிகள் செய்து வருகிறார். நான் ஜப்தி செய்யக்கூடாதென்பதற்குள்ள நியாயங்களைக் கண்டு கவர்ன்மெண்டாரவர்களுக்கு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறேன். அதற்கு அனுகூலமான மறுமொழி கிடைக்குமென்று தினந்தோறும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்; கனகசபை எனக்குப் பிள்ளையல்லவென்றும் கவர்ன்மெண்டாரை வஞ்சிக்கிறதற்காக நான் அவனைப் பிள்ளை போல் பாவிப்பதாகவும் அந்தச் சிரெஸ்ததார் கலெக்டர் முதலான அதிகாரிகளுக்குப் போதித்து வருகிறான். என் தம்பி செய்த மாறுபாடு இவ்வளவு பிரமாதமாய் வந்து விளைந்திருக்கிறது. ஆயினும் சத்தியத்தை அசத்தியம் வெல்லுமா? புண்ணியத்தைப் பாவம் ஜயிக்குமா? சுத்த நிர்த்தோஷியான என்னைக் கடவுள் கைவிடுவாரா? எப்படியும் சில தினங்களுக்குள் கலியாணத்துக்கு உத்தரவு வருமென்று நிச்சயமாக நம்பியிருக்கிறேன். அதுவரையுந் தாங்களிருந்து அந்தக் கலியாணத்தைச் சிறப்பிக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.” என்றார். அந்தப் பிரகாரம் என் தகப்பனாரும் மாமனாரும் சம்மதித்துப் பயணத்தை நிறுத்தினார்கள். அவர்களுக்கு நடந்த உபசாரங்களும் மரியாதைகளும் அரசர்களுக்குக் கூட நடவா. போக பூமியில் வசிப்பவர்கள் போல் நாங்கள் எங்களுடைய ஊரையுங் கிருகங்களையும் சுத்தமாய் மறந்து விட்டோம்.

இந்த அதிகாரத்தின் துவக்கத்திலே சொல்லியபடி என் தாய் தந்தையரின் வரவைப் பற்றி முந்தி வந்து சமாசாரந் தெரிவித்த அந்த வண்டிக்காரன் மறுபடியும் என்னிடத்தில் வந்து “ஐயா! நான் சந்தோஷ சமாசாரந் தெரிவித்ததற்காக நீங்கள் ஒரு வெகுமானமுஞ் செய்யவில்லையே. இப்போது நான் கேட்கிறபடி உத்தரவு செய்யவேண்டும்” என்று ன் காலில் விழுந்து வணங்கினான். “நீ கேட்கிற காரியம் கிரமமாயிருந்தால் அந்தப் படி செய்கிறேன். அது இன்னதென்று சொல்லு” என்றேன். அவன் “அது கிரமமாயிருந்தாலும் அக்கிரமாயிருந்தாலும் அகத்தியம் செய்யவேண்டும்” என்றான். நான் அவனைப் பார்த்து “யுக்தா உக்தம் பாராமல் ஒரு காரியத்தையும் வாக்குத் தத்தஞ் செய்யக்கூடாது. அலெக்சாண்டர் மகாராஜனிடத்தில் ஒருவன் வந்து 'மகாராஜாவே! நீங்கள் யார் என்ன கேட்டாலும் ஆ§க்ஷபியாமற் கொடுக்கிறீர்களென்கிற பிரக்கியாதி பெற்றிருக்கிறீர்கள்; எனக்கு ஒருகாசு கொடுக்க வேண்டும்' என்று கேட்டான். உடனே அந்த அரசர் 'அவ்வளவு அற்பப் பொருள்களைக் கொடுப்பது என்னுடைய அந்தஸ்துக்குத் தகாது' என்றார். அவன் 'அப்படியானால் எனக்கு ஒரு ராஜ்யங் கொடுங்கள்' என்றான். இவர் அவனைப் பார்த்து 'அவ்வளவு பெரிய காரியத்தைக் கேட்பது உன்னுடைய அந்தஸ்துக்குத் தகாது' என்றார். அப்படிப் போல உன்னுடைய அந்தஸ்துக்கும் என்னுடைய அந்தஸ்துக்கும் தக்க காரியத்தை நீ கேட்டுக்கொண்டால் செய்கிறேன்” என்றேன். அவன் என்னை நோக்கிச் சொல்லுகிறான்: “நான் உட்கார்ந்திருக்கும்போதே தூங்கி விழுகிறேனென்று அடிக்கடி என்னைக் கோபிக்கிறீர்கள்; தூக்கத்தை அடக்க என்னாலே சாத்தியப்படவில்லை. நான் சந்தோஷ சமாசாரங் கொண்டுவருவதற்காக நான் கேட்கும் வெகுமானம் ஏதென்றால் நான் தூங்கி விழும்படியாக உத்தரவு கொடுக்க வேண்டும்” என்றான். இதைக் கேட்டவுடனே எனக்கும் அப்போது கூட இருந்த தேவராஜப்பிள்ளை முதலானவர்களுக்கும் பெரு நகைப்பு வந்துவிட்டது. தேவராஜப் பிள்ளை என்னைப் பார்த்து “உங்கள் வண்டிக்காரனுடைய பிரார்த்தனையானது நான் வாசித்த ஒரு கதையை நினைப்பூட்டுகின்றது” என்றார்.

-----------------

அத்தியாயம் - 28
>
தேவராஜப் பிள்ளையினுடைய பாளையப்பட்டியின் எல்லைக்குள்லாக என்ன குற்றம் நடந்தாலும் அதை விசாரித்து தீர்மானிக்கிற அதிகாரம் கவர்ன்மெண்டாரால் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் ஒரு நாள் அதிகாலையில் ஏதோ சில விசாரணை செய்வதற்காக வெளியே போனவர் சூரியாஸ்தமன காலம் வரையில் வீட்டுக்கு வரவில்லை. அவர் திரும்பி வந்தவுடனே எங்களைப் பார்த்து “பெருந் துயரத்துக்குரிய சில சங்கதிகள் இன்று நடந்தன; அவைகளை நினைக்கும் போது எனக்கு மயிர்க்கூச்சிடுகின்றது; மனம் உருகுகின்றது; கண்ணீர் பெருகுகின்றது. அந்தச் சங்கதிகளைச் சொல்லுகிறேன். கேளுங்கள்” என்று சொல்லத் தொடங்கினார்.

“கும்பகோணத்தில் வைசியர் குலத்திலே இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் போதுமான பூஸ்திதிகளும் நிதி, நி§க்ஷபம், நகை, பாத்திர முதலிய ஜங்கமங்களும் இருந்தன. அவர்களில் மூத்தவன் பொய் வஞ்சகம் பேராசை முதலிய துர்க்குண புஞ்சமாயும், இளையவன் சற்குண சம்பன்னனாயு மிருந்தார்கள். அவர்களுடைய தகப்பன் லோகாந்தரஞ் சென்ற பிறகு மூத்தவனே குடும்ப வியாபகனாய் மேல் விசாரணை செய்து வந்தபடியால் சகல ஸ்திதிகளும் கணக்குகளும் அவன் கைவசமாகவே இருந்தன. இளையவன் தமையனே கதியென்று நம்பியிருந்தபடியால் தங்களுக்கு இவ்வளவு ஆஸ்தியென்பதுமே இளையவனுக்குப் பரிச்சேதந் தெரியாது. இளையவனுக்குக் கலியாணப் பருவம் வந்து வெகுநாளாகியும் அவனுக்குக் கலியாணஞ் செய்விக்காமல் மூத்தவன் காலங்கடத்தி வந்தான். அவர்களுடைய தாயுடன் பிறந்த அம்மானுக்கு இந்த ஊர் வாசஸ்தலமானபடியால் அவன் மேற்படி இளைய பிள்ளையை இந்த ஊருக்கு வரவழைத்து தன்னுடைய மகளைக் கன்னிகாதானஞ் செய்வித்து மகளையும் மருமகனையும் கும்பகோணத்துக்கு அனுப்பினான். அவர்களுக்கு அன்ன வஸ்திரங் கொடாமல் மூத்தவன் அநாதரவு செய்தபடியால் இளையவன் தமையனைப் பார்த்து “அண்ணா! குடும்ப ஸ்திதிகளில் ஏதாவது தங்களுக்கு இஷ்டமானதைக் கொடுத்தால் நான் எங்கேயாவது போய்ப் பிழைத்துப் போகிறேன். தேவரீர் கிருபை செய்யவேண்டும்” என்று மிகுந்த பயபக்தியுடன் இரந்து மன்றாடினான்; அந்த மன்றாட்டையெல்லாம் மூத்தவன் ஆற்றில் கரைத்த புளியாக்கி இளையவனையும் அவன் மனைவியையும் புறக்கணித்துத் தள்ளி விட்டான். அவர்கள் இருவரும் பட்டினியும் பசியுமாக இந்த ஊருக்கு வந்து விட்டார்கள். தமையன் அவ்வளவு கொடுமை செய்தும் அவன் மேலே பாகவியாஜ்ஜியஞ் செய்ய இளையவன் அநிஷ்டனாயிருந்தான். ஆயினும் அவனுடைய மாமனார் முயற்சியினாலே கும்பகோணத்தில் பாக வழக்குச் செய்யப்பட்டது. மூத்தவன் தன் கையிலிருந்த திரவியங்களையெல்லாம் பல பேர் கையில் ரகசியமாய்க் கொடுத்து விட்டு, தன்னிடத்தில் பூஸ்திதிகளைத் தவிர வேறொரு பொருளுங் கிடையாதென்றும் பூஸ்திதிகள் பல பெயர்களிடத்தில் வாங்கப்பட்ட கடன்களுக்கு உத்தரவாதமாயிருப்பதாகவும் தனக்கு ஒருவருங் கடன் கொடுக்க வேண்டியதில்லை என்றும் எதிர் வழக்காடி அந்தப்படி பொய்க் கணக்குகளைக் கொண்டும் நிரூபணஞ் செய்தான். அன்றியுந் தன் தம்பியினுடைய சாக்ஷ¢களைப் பொருள் மூலமாகக் கலைத்து அவர்கள் தன் தம்பி பக்ஷத்தில் சாக்ஷ¢ சொல்லாதபடி அழிம்பு செய்தபடியால் தம்பி வழக்கு அபஜயமாய்ப் போய்விட்டது.

இவ்வண்ணம் இளையவன் பிதுரார்ஜிதத்தை இழந்து பரதேசிக் கோலமாய் மாமனார் வீட்டில் வந்து சேர்ந்தான். மாமனாரிடத்தில் அவன் சில தொகை கடன் வாங்கி சத்தியந் தவறாமல் வர்த்தகஞ் செய்தபடியால் அவனுடைய யோக்கியதை எங்கும் பரிமளித்தது. புஷ்பத்தை நாடி வரும் வண்டுகள் போலச் சகலரும் அவனிடத்திலே கொள்ளல் விற்றல் செய்யவும் பரபத்தியங்கள் பண்ணவும் ஆரம்பித்தபடியால் அவனுக்குச் செல்வம் அமோகமாய்ப் பெருகிப் பெரிய திரவியவான் ஆனான். இளையவனை அவனுடைய தர்மந் தலைகாத்தது போல் மூத்தவனை அவனுடைய மோசமே நாசஞ் செய்துவிட்டது. எப்படியெனில் அவன் தம்பிக்குப் பயந்து கொண்டு யாரிடத்தில் பொருள்களை அந்தரங்கமாய்க் கொடுத்து வைத்தானோ அவர்கள் எல்லாரும் அந்தத் தனங்களை அபகரித்துக் கொண்டு அவனுக்கு நம்பிக்கைத் துரோகஞ் செய்து விட்டார்கள். தனக்கு யாதொரு சொத்துங் கிடையாதென்று அவனே நியாய சபையார் அறியச் சொல்லிவிட்டபடியால் அந்த நம்பிக்கைத் துரோகிகள் மேல் அவன் வழக்குத் தொடர மார்க்கம் இல்லாமற் போவிட்டது. பூஸ்திதிகள் பல பெயர்களுடைய கடன்களுக்குப் பாத்தியமாயிருப்பதாக அவனே தன் தம்பி வழக்கில் ஒப்புக்கொண்டபடியால் அந்தப் பொய்யான கடன்காரர்களெல்லாருந் தங்களுக்கு மெய்யாகக் கடன் வரவேண்டியதுபோலத் துர்வழக்குகள் செய்து அந்தப் பூஸ்திதிகளையெல்லாம் ஏலம் போட்டுக் கைவசப் படுத்திக்கொண்டார்கள். அவனுக்கு வரவேண்டிய கடன்களையெல்லாம் நியாஸ்தலத்தில் மறைத்த படியால் கடன் கொடுக்க வேண்டியவர்களெல்லாரும் அவனை மோசஞ் செய்து விட்டார்கள். அவனும் அவர்கள் மேல் வழக்கிடக்கூடாமற் போய்விட்டது. இவ்வாறு கைப்பொருள்களையெல்லாம் இழந்து கன தரித்திரனாய்ப் போய் விட்டான். மூத்தவன் வீட்டில் மூத்தவளே வந்து குடியிருக்கத் தலைப்பட்டதால் பி¨க்ஷத் தொழிலைத் தவிர வேறு வழியில்லாமற் போய்விட்டது. அவன் கனிஷ்டத் துரோகியென்று ஊரெங்குந் தெரியுமானபடியால் அவனுக்கு இரங்குவார் இல்லை. அவன் தம்பியிடத்திற்குப் போகலாமென்றால் அவனுடைய மனச்சாக்ஷ¢ இடம் கொடுக்க வில்லை.

மூத்தவனும் அவன் பெண்சாதி பிள்ளைகளும் கஷ்டப்படுகிறதை இளையவன் கேள்வியுற்று அவர்களைத் தன்னிடத்துக்கு வரும்படி அவன் கடிதம் அனுப்பினதுமல்லாமல் அவர்களுடைய வழிச் செலவுக்காகப் பணமும் அனுப்பினான். உடனே மூத்தவன் சமுசார சகிதமாய்ப் புறப்பட்டுத் தம்பியிடம் வந்து சேர்ந்தான். தம்பியைப் பார்த்தவுடனே தமையன் கட்டிக்கொண்டு “தம்பி! பிறருக்கு வெட்டின குழி தனக்கே வந்து லபிப்பதுபோல் உனக்கு நான் செய்த தீங்கு எனக்கே வந்து லபித்துவிட்டது. உன்னுடைய பாகச் சொத்தை உனக்கு நான் கொடுத்திருப்பேனானால் மற்ற ஸ்திதிகளை வைத்துக்கொண்டு நான் §க்ஷமமாய் வாழ்ந்திருப்பேன். உன்னுடைய பாகத்தை வஞ்சிக்க நினைத்துச் சொத்துகளை யெல்லாம் நான் பராதீனஞ் செய்தபடியால் அந்தப் பராதீனமே நிலைத்து என்னுடைய ஸ்வாதீனம் மாறிப்போய் விட்டது. யுஆடவன் செத்த பிறகு அறுதலிக்குப் புத்தி வந்ததுரு என்பது போல் சொத்துக்களெல்லாம் போன பிறகு எனக்குப் புத்தி வந்தது அப்பா!” என்று சொல்லி அழுதான். தமையன் செய்த துரோகங்களைத் தம்பி எள்ளளவும் நினையாமல் அவனுக்குச் சர்வோபசாரங்களுஞ் செய்தி தாசானு தாசனாக நடந்தான். ஆனால் அவனுடைய இல்லாள் கொழுந்தனிடத்தில் துன்பப்பட்டவளானதால் அவள் தன் புருஷனுக்குத் தெரியாமல் கொழுந்தனைக் காணும்போதெல்லாம் கடுகடுத்துக் கொண்டு வந்தாள்.

சில நாளாயினபின், தமையன் ஊருக்குப் போகவேண்டுமென்று உத்தரவு கேட்டபடியால் கனிஷ்டன் தன் பத்தினிக்குத் தெரியாமல் பெட்டியைத் திறந்து நுறு தங்க நாணயங்களை எடுத்துத் தமையன் கையிற் கொடுத்து அவற்றை மூலதனமாக வைத்துக்கொண்டு வியாபாரஞ் செய்யும்படியாகவும் இன்னும் வேண்டுங் காரியங்களுக்கு எழுதும்படியாகவுஞ் சொல்லி தமையன் பத்தினிக்கும் பிள்ளைகளுக்கும் வஸ்திராபரணங்கள் கொடுத்து அனுப்பினான். அவர்கள் போனபிறகு இளையவனுடைய பெண்சாதி பெட்டியைத் திறந்து பார்க்கத் தங்க மோகராக்களைக் காணாமையினால் புருஷன் தன் தமையனுக்குக் கொடுத்திருப்பானென்று நிச்சயித்துக் கொண்டு அவள் கோப சன்னதத்துடன் புருஷனுக்குத் தெரியாமல் வெளியே புறப்பட்டுக் கொழுந்தனாரைத் தொடர்ந்து கொண்டு ஓடினாள். கொழுந்தனும் அவன் பத்தினி முதலானவர்களும் சிறிது தூரம் போய் வெயிலுக்காக ஒரு பாழ்மண்டபத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவள் கொழுந்தனைக் கண்டவுடனே அவன் செய்த கொடுமைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக்காட்டி அவனை வாயில் வந்தபடி ஏசினாள். அவன் அந்தத் தூஷணங்களைச் சகிக்கமாட்டாதவனாய் அந்தக் கொடியவளைப் பார்த்து “இந்தப் பணத்துக்காகத் தானே இவ்வளவு பேச்சும் பேசுகிறாய்! இந்தா உன் பணம்” என்று சொல்லி அவன் கையிலிருந்த மோகராப் பையை அவள் முன்பாக எறிந்துவிட்டான். அவள் நல்ல காரியம் என்று மோகராப் பையை எடுத்துக்கொண்டு போய்விட்டாள். அவள் சொன்ன தூஷணங்களும் தன்னுடைய சொந்த மனச்சாக்ஷ¢யும் இனிச் சாப்பாட்டுக்கு என்ன செய்வோமென்கிற ஏக்கமுங் கூடி அவனுக்குச் சித்த விகாரத்தை உண்டுபண்ணினபடியால் அவன் தன் பெண்சாதி பிள்ளைகளையுங் கொன்று தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளுகிறதென்று தனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டான். அந்தச் சமயத்தில் அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் தாகத்துத் தண்ணீர் வேண்டும் என்று சொன்னபடியால் அவன் ஜலங் கொண்டுவருகிறேன் என்று சொல்லிக் குளத்துக்குப் போய் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு அதில் விஷத்தைக் கலந்து தன்னுடைய பெண்சாதிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்து தானும் விஷபானம் பண்ணினான். சற்று நேரத்தில் விஷம் தலைமண்டை கொண்டு அவர்கள் கால்மாடு தலைமாடாய்க் கீழே விழுந்து இறந்துபோய் விட்டார்கள்.

மூத்தவன் எறிந்துவிட்ட மோகராப் பையை எடுத்துக்கொண்டு இளையவன் பெண்சாதி வீட்டிற்குள் வந்து நுழைந்தாள். அவள் கையில் மோகராப் பையைக் கண்டவுடனே அவளுடைய நாயகனுக்குக் கோபம் உண்டாகி அவளைத் திட்டியடித்து அந்தப் பையைப் பிடுங்கிக்கொண்டு அதைத் தமையனிடத்தில் மறுபடியும் கொடுப்பதற்காக ஓடினான். தமையன் முதலானவர்கள் வெயிலுக்காகப் பாழ்மண்டபத்தில் நுழைந்ததாக இளையவன் வழியிலே கேள்வியுற்று அவனும் அந்தப் பாழ்மண்டபத்துக்குப் போனான். அங்கே எல்லாரும் இறந்து கிடக்கிறதைக் கண்டு அவர்கள் மேலே விழுந்து கோகோவென்று கத்தி அழுதான். பிறகு அவர்கள் சமீபத்திலிருந்த விஷஜல பாத்திரத்தைக் கண்டு அவர்கள் விஷபானம் பண்ணி இறந்து போனதாக அறிந்துகொண்டு அதில் மிஞ்சியிருந்த விஷ ஜலத்தைத் தானுங் குடித்து மரணத்துக்கு ஆயத்தமாய்த் தமையனுடைய பிரேதத்தைக் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டான். அவன் விஷம் அருந்தினது சில வழிப்போக்கர்களுக்குத் தெரிந்து அவர்கள் என்னிடத்தில் ஓடிவந்து அறிக்கை யிட்டார்கள். நான் உடனே வைத்தியர்களை அழைத்துக்கொண்டு ஓடினேன். மூத்தவனும் அவனுடைய பெண்சாதி பிள்ளைகளும் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டதால் அவர்களுக்கு வைத்தியஞ் செய்வது நிஷ்பிரயோசனமென்று வைத்தியர்கள் தெரிவித்தார்கள். இளையவன் எல்லோருக்கும் பின்பு விஷம் உண்டபடியால் அவன் இறவாமற் குற்றுயிராயிருந்தான். அவனுக்கு வைத்தியர்கள் ஔஷதப் பிரயோகஞ் செய்து அவன் உண்ட விஷத்தை வெளிப்படுத்தி அவனைப் பிழைப்பித்தார்கள். அவன் எழுந்து உடனே தன் தமையன் முதலானவர்களைப் பிழைக்கும்படி வைத்தியர்களை வேண்டிக்கொண்டான். அவர்கள் பிழைப்பது சாத்தியம் அல்லவென்று அவனுக்குத் தெரிந்தவுடனே அவன் விழுந்து புரண்டு அழுத பரிதாபத்தை ஒருவருங் கண் கொண்டு பார்க்கக்கூடாது. அவனுடைய தமையனுங் குழந்தைகளும் மாண்டு கிடப்பதையும் அவர்கள் கீழே மேலே அவன் விழுந்து விழுந்து அலறி அழுவதையும் பார்த்தவர்களுடைய மனங் கல்லாயிருந்தாலும் கரையாமலிருக்குமா? இரும்பாயிருந்தாலும் இளகாமலிருக்குமா? இளையவனுடைய மனைவியோ என்றால் தன்னுடைய தௌஷ்டியத்தினால் இவ்வளவு பிரமாதம் வந்து விளைந்ததென்று தெரிந்தவுடனே அவள் மதிமயங்கிக் கீழே விழுந்து இன்னமுஞ் சித்த ஸ்வாதீனம் இல்லாமல் இருக்கிறாள். மூத்தவன் ஆதியில் தன் தம்பியை மோசஞ் செய்யாமல் அவனுடைய பாகத்தைக் கிரமப்படி கொடுத்திருப்பானானால் மூத்தவனுக்கு இப்படிப்பட்ட கதி வாய்த்திராதென்பது உறுதி தான். என்றைக்கிருந்தாலும் துன்மார்க்கர்களைக் கடவுள் இந்த உலகத்திலும் தண்டிக்கிறாரென்பதற்கு இந்தச் சரித்திரமே போதுமான சாக்ஷ¢யமாயிருக்கிறது. மேற்படி சங்கதிகளை யெல்லாம் நான் கூலங்கஷமாய் விசாரணை செய்து இறந்து போனவர்களை யெல்லாந் தகனஞ் செய்யும்படி உத்தரவு கொடுத்து வர இந்நேரஞ் சென்றது” என்றார்.

தேவராஜப் பிள்ளை அந்தச் சரித்திரத்தைச் சொல்லி முடித்தவுடனே என் தகப்பனார் என்னைப் பார்த்து “நீ கல்வி பயிலும்போது இரண்டு நல்ல சகோதரர்களுடைய சரித்திரத்தை நீ வாசிக்கக் கேட்டிருக்கிறேன். அந்தச் சரித்திரத்தை இப்போது சொல்லு” என்று உத்தரவு கொடுத்தார்கள். தேவராஜப் பிள்ளையும் அதைக் கேட்க விரும்பினபடியால் நான் சொல்லத் தொடங்கினேன்.

“பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகல் (Portugal) தேசத்திலிருந்து கோவா (Goa) பட்டணத்துக்குப் புறப்பட்டு வந்த ஒரு கப்பலில் ஆயிரத்து இருநூறு ஜனங்கள் ஏறியிருந்தார்கள். அந்தக் கப்பல் ஒரு மலையில் மோதி உடைந்துபோனதால் இருபது பெயர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் சமுத்திரத்தில் முழுகி இறந்து போனார்கள். அந்த இருபது ஜனங்களும் ஒரு சிறு படகிலேறித் தப்பிக்கொண்டார்கள். அவர்களுக்குப் போதுமான புசிகரணங்கள் இல்லாமல் இருந்தபடியால் திருவுளச் சீட்டுப் போட்டுத் தங்களிற் சிலரைக் கடலில் தள்ளிவிடுகிறதென்று தீர்மானித்துக் கொண்ார்கள். அவர்களுக்குள்ளாக இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவனைக் கடலிலே தள்ளும்படித் திருவுளச் சீட்டு விழுந்தது. அவனை இளையவன் மிகுந்த அன்போடு கட்டித் தழுவி அழுதுகொண்டு மற்றவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான். “என் தமையனுக்குப் பெண்சாதியும், பிள்ளைகளும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள். அவர்களைப் போஷிக்கிறதற்கு என் தமையனாரைத் தவிர வேறு கதியில்லை; நானோ ஏகாங்கியா யிருக்கிறேன். நான் இறந்து போவதினால் ஒருவருக்கும் நஷ்டமில்லை. ஆகையால் என்னுடைய ஜேஷ்டருக்குப் பதிலாய் என்னைச் சமுத்திரத்தில் தள்ள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். தம்பியினுடய பக்ஷ மிகுதியைக் கண்டு தமையன் ஆச்சரியம் அடைந்து “இப்படிப்பட்ட உத்தம சகோதரனை எனக்காக இறக்கும்படி செய்வது அநீதியானதால் என்னையே தள்ளிவிட வேண்டும்” என்று மன்றாடினான். மூத்தவனைக் கடலில் தள்ளாதபடி இளையவன் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். அவன் எவ்வளவு பலமாகத் தமையனைக் கட்டிக் கொண்டானென்றால் அவர்கள் இருவரையும் வெவ்வேறாய்ப் பிரிப்பது அசாத்தியமாயிருந்தது. இறுதியில் இளையவனுடைய தொந்தரவைப் பொறுக்கமாட்டாமல் அவனுடைய இஷ்டப்படி அவனைச் சமுத்திரத்தில் தள்ளிவிட்டார்கள். அவன் நல்ல நீச்சுக்காரணானதால் அவன் நீஞ்சிக் கொண்டு வந்து அந்தப் படகின் சுக்கானை ஒரு கையாலே பிடித்தான். அந்தக் கையை ஒரு மாலுமி வாளாலிலே வெட்டி விட்டான். அவன் உடனே சமுத்திரத்தில் விழுந்து எழுந்து படகை மற்றொரு கையாற் பிடித்தான். அந்தக் கையையும் அந்தப் பாவிப்பயல் தறித்து விட்டான். அவன் இரண்டு கைகளையும் இழந்தும் தண்ணீரில் முழுகாமல் இரத்தப் பிரவாகத்துடன் காலினால் நீந்திக்கொண்டு தண்ணீரில் நிற்கிற பரிதாபமான காக்ஷ¢யும் அவனுடைய சகோதர பக்ஷமும் படகிலிருந்தவர்களுக்கு இரக்கத்தை உண்டுபண்ணின படியால் அவர்கள் யுஇந்த ஒரு பிராணனை ரக்ஷ¢ப்பதனால் நமக்கு என்ன நஷ்டம் சம்பவிக்கக்கூடும்ரு என்று சொல்லி அவனைப் படகின் மேல் ஏற்றிக்கொண்டு அவனுடைய காயங்களைக் கட்டி சொஸ்தப்படுத்தினார்கள். அவர்கள் சில நாள் யாத்திரை செய்து தெய்வ சகாயத்தினால் குறித்த இடத்துக்குச் சிந்தாத்திரையாகப் போய்ச் சேர்ந்தார்கள்” என்றேன்.
----------

அத்தியாயம் - 29
ஒரு நாள் தேவராஜப் பிள்ளை என்னையுங் கனகசபையையும் பார்த்து “இங்கிலீஷில் சகல சாஸ்திரப் பண்டிதராகிய பேக்கன் (Bacon) என்பவர் யுஅற்பப் படிப்பு ஆபத்துரு என்று சொல்லுகிறார். அதற்கு அஜகுணமாக எனக்குத் தெரிந்த ஒரு அற்பப் படிப்பாளியின் சரித்திரத்தைக் கேளுங்கள்” என்று செப்பலுற்றார்.

சென்னை நகரத்தில் சுப்பையன் என்று பெயர் கொண்ட ஒரு ஏழைப் பிராமணன் இருந்தான். அவன் ஒரு தர்ம சத்திரத்தில் குடியிருந்து கொண்டு அதில் வந்து இறங்குகிற வழிப்போக்கருக்குச் சாதம் சமையல் பண்ணி விற்றுக் கால§க்ஷபஞ் செய்து வந்தான். அவனுடைய பிள்ளை அனந்தையனைத் தர்மப் பள்ளிக் கூடங்களில் விட்டு, தமிழும் இங்கிலீஷ¤ம் அப்பியாசிக்கும்படி செய்வித்தான். அனந்தையன் இங்கிலீஷில் அதிக கவனமுள்ளவனாய், அந்தப் பாஷையில் கூடியவரையில் எழுதவும் பேசவுங் கற்றுக் கொண்டு பாடசாலையை விட்டுவிட்டான். இங்கிலீஷில் அவனுக்குத் தெரிந்த அற்பப் படிப்பைக் கொண்டு, அந்தப் பாஷையில் தான் பூரண விற்பத்தியடைந்து விட்டது போல் அகம்பிரமம் அடைந்தான். தமிழ்ப் பாஷையை அவன் எவ்வளவுங் கவனிக்காமையினால் அந்தப் பாஷையில் நெடுங் கணக்குக் கூட அவனுக்குப் பூரணமாய்த் தெரியாது.

தமிழ் பாஷையை வாசிப்பதும் பேசுவதும் தனக்குக் கௌரவக் குறைவாக எண்ணிவிட்டான். அவனுடைய தயவு யாருக்காவது வேண்டியிருந்தால் அவன் இங்கிலீஷில் பூரண வித்வானென்றும், தமிழில் ஒன்றும் தெரியாதவனென்றும் யாராவது சொன்னால் அவர்களிடத்தில் அத்தியந்த விசுவாசமும் வைப்பான். அவனுக்குச் சுதேஷ பாஷா ஞானம் எப்படி இல்லாமற் போய் விட்டதோ அப்படியே தேசாபிமானமும் போய்விட்டது. இந்தத் தேசத்தையும் தேசாசாரங்களையும் நிந்திப்பதும் ஐரோப்பாக் (Europe) கண்டத்தைப் புகழுவதுமே அவனுக்கு நித்திய கால§க்ஷபம். அவன் தமிழ் பாஷை பேசுகிற வழக்கத்தை கட்டோடே விட்டுவிட்டு எப்போதும் இங்கிலீஷ் பாஷையிலே சம்பாஷிப்பதால் அந்தப் பாஷை தெரியாத அவனுடைய தாய் தந்தை சுற்றத்தார் முதலானவர்களுடைய சல்லாபத்தையும் நேசத்தையும் இழந்து போனான். அவன் அவர்களிடத்தில் பேசும்படியான அகத்தியம் நேரிட்டால் இங்கிலீஷ¤ம் தமிழும் தெரிந்த துவிபாஷிகள் மூலமாய்ப் பேசுகிறதே தவிர அவன் வேறே ஒரு வார்த்தையும் பேசுகிறதில்லை. தொப்பி ஒன்று தவிர மற்ற விஷயங்களில் ஐரோப்பியருடைய நடை உடை பாவனைகளையெல்லாம் அனுசரிக்கத் தலைப்பட்டான். அவனுடன் எப்போதும் இங்கிலீஷ் பேசத் தகுந்த மனுஷர்கள் அகப்படாமையினாலும் இங்கிலீஷ் துரைமார்களுடைய சல்லாபம் அவனுக்குக் கிடைப்பது அரிதாகையாலும் அவர்களுடைய பரிசாரகர்கள் சுயம்பாகிகள் எளிய சட்டைக்காரர்கள் முதலானவர்களுடைய சகவாசமே அவனுக்கு நிலைத்துவிட்டது. அவர்களில் சிலர் தினந்தோறும் பல் விளக்காமையினால் இவனும் பல் விளக்குகிற வழக்கத்தை விட்டுவிட்டான். அவர்கள் ஸ்நானஞ் செய்யாமையினால் இவனும் ஸ்நானத்தை விட்டுவிட்டான். அவர்கள் சுருட்டுக் குடிக்கிறது வாயில் புகையிலை போட்டுக்கொள்ளுகிறது கள்ளு சாராயம் அருந்துகிறது முதலான வழக்கங்களை அநுசரிப்பதால் இவனும் அந்தத் துர்வழக்கங்களை ஆசரிக்கத் தொடங்கினான். அவர்களிடத்தில் துர்ப்பாஷைகளையும் கற்றுக் கொண்டான். அவர்களுடைய ஸ்திரீகள் அந்நிய புருஷர்களிடத்தில் சங்கோசம் இல்லாமல் சம்பாஷிப்பது சகஜமானபடியால் அந்த வழக்கத்தை இவனுடைய பத்தினி முதலான ஸ்திரீகளுக்குத் தானே பிரயாசப்பட்டுக் கற்பித்தான். தன்னுடைய இஷ்டர்கள் சந்திக்க வரும்போது தன்னுடைய பத்தினியைக் கூட வைத்துக் கொண்டு பேட்டி கொடுப்பதும் தான் யாரையாவது காணப் போகும்பொழுது ஸ்திரீ சகிதமாய்ப் போய்க் காணுகிறதும் அவனுடைய வழக்கம். அந்த வழக்கத்தை நிறுத்தவேண்டுமென்று அவனுடைய பத்தினி முதலானவர்கள் பிரயாசைப்பட்டும் அவர்களுடைய ஜபம் நடக்கவில்லை.

இங்கிலீஷில் சன்மார்க்கமான புஸ்தகங்கள் எத்தனையோ இருந்தாலும் அவைகளை அனந்தையன் வாங்குகிறதும் இல்லை. படிக்கிறதும் இல்லை. லெக்கி எல் (Lucky.L), ஸ்டீபன் (Stephen), பெயின் (Bain), டார்வின் (Darwin), கமெடி எஸ் (Comete S), மில் (Mill), ஹெர்பர்ட் (Herbert), ஸ்பென்சர் (Spencer), ஹக்ஸ்லி (Huxley), ஹ¥ம் (Hume), காலின்ஸ் (Collins), டிண்டால் (Tyndal), வால்டேர் (Voltaire) முதலான வேத விரோதிகளுடைய கிரந்தங்களை அவன் படித்ததினால் தெய்வம் இல்லை; வேதம் இல்லை; பாபபுண்ணியங்கள் இல்ல; நரகம் மோக்ஷம் இல்லை; உலக சுகமே சுகம் என்கிற சித்தாந்தம் உள்ளவனானான். மேற்சொல்லிய சமய விரோதிகள் உலகத்துக்கு ஒரு சமயம் அவசியந்தானென்றும் அப்படியில்லாதவரையில் அக்கிரமம் நடக்குமென்றும் ஒப்புக் கொண்டார்கள். அப்படியே வால்டேர் (Voltaire) ஒரு தேவாலயம் கட்டினார். ஹ¥ம் (Hume) சில சமயங்களில் கோவிலுக்குப் போனான். காலின்ஸ் (Collins) தன்னுடைய வேலைக்காரர்கள் தன்னைக் கொலை செய்யாமலும் திருடாமலும் இருக்கவேண்டியதற்காக அவர்கள் கோவிலுக்குப் போகும்படி கட்டாயஞ் செய்தான். ஹக்ஸ்லி (Huxley) பைபிள் (Bible) என்னும் சுவிசேஷத்தைப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படிக்கவேண்டுமென்று முயற்சி செய்தான். டிண்டால் (Tyndal) தன்னை யாராவது சமய விரோதி என்று சொன்னால் சண்டைக்கு வருான். இவ்வாறாக மேற்படி வித்வான்களுடைய நூல்கள் ஒருவிதமாகவும் நடை வேறொரு விதமாகவும் இருந்தன. ஆனால் அனந்தையனுடைய வார்த்தையும் நடையும் ஒரே தன்மையாயிருந்தன. தெய்வம் இல்லை பாபபுண்ணியம் இல்லை என்கிற சித்தாந்தத்தைத் தனக்குள்ளே வைத்துக் கொள்ளாமல் தன் பெண்சாதி பிள்ளைகள் முதலானவர்களுக்கு உபதேசிக்கவும் தானே துன்மார்க்கங்கள் செய்து அவர்களுக்கு வழிகாட்டவும் ஆரம்பித்தான். பணமே தெய்வமென்றும் அதனைச் சம்பாதிக்கிறதற்கு ரகசியத்தில் எந்த அக்கிரமம் வேண்டுமானாலுஞ் செய்யலாமென்றும் ஆனால் யோக்கியனைப் போல் வேஷம் போடுவது உத்தியோகத்தையும் பணத்தையும் சம்பாதிக்கிறதற்கு மார்க்கமா யிருப்பதால் அந்தப்படி செய்ய வேண்டியது அகத்தியம் என்றும் நினைத்து அவன் வெளிவேஷம் போட்டுக் கொண்டு வந்ததால் அவனுக்கு ஒரு தாலூகா முன்சீப் உத்தியோகங் கிடைத்தது. அந்த உத்தியோகம் கிடைத்தவுடனே இந்திரப் பட்டம் கிடைத்தது போல் அவன் சுத்தமாய்த் தன்னை மறந்துவிட்டான். தன்னுடைய எளிய தகப்பனைத் தகப்பனென்று சொல்லவே அவனுக்குச் சங்கோசம் வந்துவிட்டது. பெரிய பணக்காரர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுத் தான் அவர்களுக்குப் பிள்ளையா யிராமற் போனதற்காக ஓயாமல் மனஸ்தாபப் படுவான். யாராவது ஒரு திரவியவந்தனைத் தனக்குப் பிதாவென்று சொல்லிக் கொள்ள அவனுக்குச் சம்மதந்தான். ஆனால் அந்தத் திரவியவந்தர் கேள்விப் பட்டால் சண்டைக்கு வருவாரென்று பயந்து சும்மா இருந்துவிட்டான்.

அனந்தையன் தன் தகப்பனைத் தகப்பனென்று சொல்லுவதற்குக் கூட வெட்கப்படுகிறானென்று பல பெரிய மனுஷர்களுக்குத் தெரியும். அவர்களிற் சிலர் அனந்தையனைக் கண்டுகொள்வதற்காக அவனுடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வருகிற சமாசாரங் கேள்விப்பட்டு அனந்தையன் எதிர்கொண்டுபோய் அவர்களுக்குக் கைலாகு கொடுத்து அழைத்துக்கொண்டு வந்தான். அப்போது தெருத் திண்ணையில் அவனுடைய தகப்பனார் சுப்பையர் உட்கார்ந்திருந்தார். அவருடைய முகச் சாயலும் ஒரே தன்மையாயிருந்தபடியால் அவர் யாரென்று அந்தப் பெரிய மனுஷர்கள் அனந்தையனை இங்கிலீஷ் பாஷையில் கேட்க அவன் தன்னுடைய வேலைக்காரனென்று அனந்தையன் இங்கிலீஷில் மறுமொழி சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே போய் அவர்களுக்குத் தக்க மரியாதை செய்து சம்பாஷிக்கத் துவங்கினான். அவர்கள் இவன் தகப்பனையே வேலைக்காரனென்று சொல்கிறானென்று அனுமானித்துக் கொண்டு அவனை அவமானப்படுத்த வேண்டுமென்கிற எண்ணத்துடன் “ உம்முடைய தாயையும் தந்தையையும் நாங்கள் பார்க்கக்கூடாதா? அவர்களை நாங்கள் பார்த்து சந்தோஷிக்கும் பொருட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று பிடிவாதஞ் செய்தார்கள். அனந்தையன் திருடனைப் போலச் சற்று நேரம் பரக்கப் பரக்க விழித்தபிற்பாடு “தகப்பனார் வியாதியா யிருக்கிறார்; தாயாரை மட்டும் அழைத்து வருகிறேன்” என்று சொன்னான். உடனே அவர்கள் எழுந்து “உம்முடைய தகப்பனார் வியாதியாயிருந்தால் அவரை அகத்தியம் நாங்கள் பார்க்கவேண்டும்; அவர் இருக்கிற இடத்தைக் காட்டும்” என்று அனந்தையனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அவன் கொலைக் களத்துக்குப் போகிறவன் போல் போகும்போது அவனுடைய தாயார் எதிரே வந்தாள். அவளைக் காண்பித்துவிட்டால் பிறகு தன் தகப்பனைத் தேடமாட்டார்களென்று நினைத்து இவள் தன் தாயென்று அனந்தையன் காட்டினான். உடனே அவர்கள் “அம்மா! உங்களைப் பார்த்தோம்; அகமகிழ்ந்தோம்; உங்கள் பர்த்தாவையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்; அவர் இருக்கிற இடத்தைக் காட்ட வேண்டும்” என்று சொல்ல, அந்த அம்மணி கபடம் இல்லாமல் அவர்களை அழைத்துக் கொண்டுபோய்த் தெருத் திண்ணையிலிருந்த தன் பர்த்தாவைக் காட்டிவிட்டாள். உடனே அவர்கள் அனந்தையனுடைய முகத்தைப் பார்த்தார்கள். அனந்தையன் வெட்கத்தினால் பூமி தேவி முகத்தைப் பார்த்தான். அந்தக் கனவான்கள் அனந்தையனைப் பார்த்து “உம்முடைய தகப்பனாரை வேலைக்காரனென்று சொன்னீரே! இது தர்மமா?” என்று கேட்டார்கள். இதைக் கேட்டவுடனே சுப்பையருக்குத் தன் பிள்ளை மேல் பிரமாதமான கோப சன்னதம் உண்டாகி அந்தக் கனவானை நோக்கி “ஐயா! இந்தப் பயலுக்கு நான் வேலைக்காரன் தான். இவனுடைய தாயார் வேலைக்காரனுடன் தேக சம்பந்தப்பட்டு இவனைப் பெற்றாள். அது உண்மையா பொய்யா அவனுடைய தாயாரையே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று சரமாரியாகக் கொடுங் சொற்களைப் பிரயோகித்தார். உடனே அனந்தையன் அநந்த லோகத்துக்கே போய் விட்டதுபோல எந்த மூலையிலோ போய் ஒளிந்துகொண்டான். அந்தக் கனவான்கள் “இந்தப் பிதுர்த் துரோகி வீட்டில் இருந்தாலும் பாவம்” என்று சொல்லிக் கொண்டு போய்விட்டார்கள். சுப்பையரும் அவர் பத்தினியும் இனிமேல் இந்தச் சண்டாளன் வீட்டில் இருப்பது மரியாதையல்ல வென்று நினைத்துப் பிரத்தியேகமாக ஒரு சத்திரத்துக்குக் குடி போய்விட்டார்கள். அவர்கள் சில மத்தியஸ்தர் மூலமாக “நாங்கள் உன்னுடன் சேர்ந்திருப்பதுதான் உனக்கு அவமானமாயிருக்கிறதே! நாங்கள் சத்திரத்திலே குடி யிருக்கிறோம்; எங்களுக்குச் சாப்பாட்டுக்கு மார்க்கஞ் செய்யவேண்டும்”என்று மகனுக்குச் சொல்லி அனுப்பினார்கள். அவன் “நான் ஒன்றும் கொடுக்க மாட்டேன்; ஊரில் பி¨க்ஷயெடுத்துச் சாப்பிடுங்கள்” என்று கோபமாய் மறுமொழி சொல்லி யனுப்பினான். அதைக் கேட்டவுடனே சுப்பையரும் அவர் பாரியும் கந்தைத்துணிகள் உடுத்திக் கொண்டு கையில் ஓடுகளை யெடுத்துக் கொண்டு “நாங்கள் இந்த ஊர் முன்சீப்தாருடைய தாய் தந்தையர்கள்; எங்களை ஆதரிக்காமல் பி¨க்ஷயெடுக்கும்படி விட்டுவிட்டான்; எங்களுக்குப் பி¨க்ஷயிடுங்கள்!” என்று வீடு வீடாகச் சொல்லி அனந்தையனை லச்சை கெடுக்க ஆரம்பித்தார்கள். அதை அவன் கேள்விப்பட்டு அவமானத்தையடைந்து “ஒரு சக்கிலியத் தொழிலாவது செய்து பிழைக்கக் கூடாதா? பி¨க்ஷ யெடுக்க வெட்கமில்லையா?” என்று சொல்லியனுப்பினான். உடனே சுப்பையர் “நான் முன்சீப்தாருடைய தகப்பன்; நான் சக்கிலியத் தொழில் செய்கிறபடியால் செருப்பு ஜோடு முதலியவர்கள் என்னிடத்தில் வாங்கிக்கொள்ளலாம்” என்று விளம்பரம் எழுதித் தான் குடியிருக்கிற சத்திரத்தின் வாசற்படியில் ஒட்டி வைத்தார். இந்த சமாசாரங்கள் ஊரெங்கும் பிரசித்தமாகி அனந்தையனைக் காரித் துப்பாதவர்கள் ஒருவருமில்லை. அவன் நிரீச்சுரவாதி யென்றும் பாப புண்ணியம் பாராத பரம சண்டாளனென்றும் பிதுர்த் துரோகியென்றும் துரைமார்கள் கேள்விப்பட்டு அந்தக் காரணத்துக்காகவே அவனை உத்தியோகத்தினின்று நீக்கிவிட்டார்கள். அவனுக்கு உத்தியோகம் போனபிற்பாடு அவனை மதிக்கிறவர்கள் ஒருவருமில்லை. அவன் எல்லாருக்கும் தீங்கு செய்தபடியால் உத்தியோகம் போனபிறகு அவனுக்கு எல்லாரும் தீங்கு செய்யத் தொடுத்தார்கள். தெய்வம் இல்லை; பாப புண்ணியம் இல்லயென்று அவன் எப்பொழுதும் செய்து வந்த பிரசங்கத்தைக் கேட்டுக் கேட்டு அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் துன்மார்க்கத்திற் பிரவேசித்து அவனை அலட்சியஞ் செய்து வந்தார்கள்.

அவனுக்கு உத்தியோகம் போன விசனத்தினால் வியாதி நேரிட்டு அவன் படுத்த படுக்கையில் இருக்கும்போது அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் சற்றும் இரக்கமில்லாமல் அநேகம் பொருள்களை யெடுத்துக் கொண்டு அவனை அந்தரத்தில் விட்டு விட்டு ஓடிப்போனார்கள். அவனுடைய வேலைக்காரர்களும் அவர்களுடைய கையில் அகப்பட்டதைக் கரகித்துக் கொண்டு சொல்லாமற் புறப்பட்டு நடந்துவிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட நிராதரவான ஸ்திதியிலிருக்கும்போது திருடர்கள் வந்து பிரவேசித்து வியாதியிலிருந்தவனைத் தூணிலே சேர்த்துக் கட்டிப் புதையலைக் காட்டும்படி கணக்கில்லாத அடிகள் அடித்தார்கள். அவன் கதறிக்கொண்டு “இப்படி அக்கிரமஞ் செய்யலாமா?” என்று கேட்க அவர்கள் “நீ தான் தெய்வம் இல்லை; பாப புண்ணியம் இல்லையென்று உபதேசிக்கிறாயே! அப்படியிருக்க அக்கிரமம் ஏது?” என்று மறுபடியும் அடித்தார்கள். அவன் “ராஜ தண்டனை இல்லையா?” என வினவ, அவர்கள் “சாட்சி இல்லாவிட்டால் ராஜதண்டனை ஏது? உனக்கு சாட்சி சொல்ல யார் இருக்கிறார்கள்?” என்று மீளவும் அடித்தார்கள். அவன் அடி பொறுக்கமாட்டாமல் புதையலைக் காண்பித்தான். அவர்கள் உள்ளதெல்லாம் வாரிக்கொண்டு வெளியே போகும்போது அனந்தையன் அவர்களைப் பார்த்து “இப்படி அநியாயஞ் செய்தீர்களே! உங்களுக்கு ராஜ தண்டனை இல்லாவிட்டாலும் தெய்வதண்டனை இல்லாமற்போகுமா?” என்றான்; அவர்கள் உடனே கைகொட்டிச் சிரித்துக்கொண்டு “எங்களால் நீ தெய்வத்தின் உண்மை அறிந்ததால் உனக்கு மதி வந்தது; எங்களுக்கு நிதி வந்தது; உனக்குக் குணம் வந்தது; எங்களுக்குப் பணம் வந்தது” என்று மொழிந்துகொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

அன்று முதல் அவன் தெய்வம் இல்லையென்கிற வார்த்தையை விட்டு விட்டபடியால், அவனுடைய தாய் தந்தை ஆசாரியர்களைப் பார்க்கிலும் அந்தத் திருடர்களே அவனுக்குப் போதக குருவென்று சொல்லலாம். அவர்கள் குருதட்சணையைப் போல அவனுடைய பொருளையெல்லாம் கவர்ந்துகொண்ட படியால், யுபழைய குருடி கதவைத் திறடிரு என்பதுபோல அவனுடைய பூர்வ தரித்திர தசையில் வந்துவிட்டான். அவன் பொருளையும் இழந்து பிணியினால் வருந்துவதை அவனுடைய தந்தை தாய் கேள்வியுற்று அவன் செய்த துரோகங்களையெல்லாம் மறந்துவிட்டு, அவன் வீட்டுக்குப் போய் வேண்டிய காரியங்களைச் செய்து அவனைச் சௌக்கியப்படுத்தினார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் உதவி செய்யாவிட்டால் அவன் பிராணவியோகம் ஆயிருப்பானென்பதில் சந்தேகமில்லை. அவன் ஒரு ஆண்டு முழுமையும் தீர்க்கரோகமா யிருந்தமையால் அவனுடைய தாய் தந்தையர் யாசகஞ் செய்து அவனைக் காப்பாற்றினார்கள். அவன் சௌக்கியம் அடைந்த பிறகு யாசகத் தொழிலைத் தவிர இவன் ஜீவிக்கிறதற்கு மார்க்கமில்லை. அவனுடைய தாய் தகப்பனுக்கு இரங்கி யாசகங் கொடுக்கிறார்களே தவிர அவனுக்கு இரங்குகிறவர்கள் ஒருவருமில்லை. நான் ஒருநாள் தெய்வத்தைக் குறித்துப் பேசினேன். அவன் தனக்குத் துரோகஞ் செய்து ஓடிப்போன தன் பெண்சாதி பிள்ளைகளும், வேலைக்காரர்களும், திருடர்களும் இந்த உலகத்தில் ராஜநீதியைத் தப்பிக்கொண்டபடியால் அவர்களைத் தண்டிக்கிறதற்கு ஒரு தெய்வமும், அவர்களை உபாதிக்கிறதற்கு ஒரு நரகமும் அவசியமென்றும் தான் செய்த துரோகங்களை க்ஷமித்துத் தன்னைக் காப்பாற்றின தாய் தந்தையர்களுக்குத் தகுந்த சன்மானம் இந்த உலகத்தில் இல்லாதபடியால், அவர்களுக்காக ஒரு மோட்சமும் அகத்தியம் வேண்டியதென்றும் ஆகையால் தெய்வமும், நரகமும், மோட்சமும் உண்டென்பது சத்தியமென்றும் ஒப்புக்கொண்டான்.
-------------

அத்தியாயம் -30
கவர்ன்மெண்டாருக்குத் தேவராஜப் பிள்ளை எழுதிய மனுவுக்கு எப்போது உத்தரவு வருமோவென்று நாங்கள் சதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் குதிரைத் தபால் வழியாகக் கவர்ன்மெண்டாருடைய உத்தரவு வந்து சேர்ந்தது. அதைத் தேவராஜப்பிள்ளை ஆவலாக வாங்கிப் பிரித்து வாசித்தார். அவருக்குக் கனகசபை சொந்தப் பிள்ளையா அல்லவாவென்று விசாரிக்கும்படி, மூன்று துரைமார்களை விசாரணைக் கர்த்தர்களாக நியமித்திருப்பதாகவும், அவர்கள் முன்பாக சாக்ஷ¢ சாதனங்களுடன் போய்ச் சங்கதிகளைத் தெரிவித்துக் கொள்ளும்படியாகவும் அந்த விசாரணைக் கர்த்தர்களுடைய அபிப்பிராயப்படி தீர்மானஞ் செய்ய அவர்களுக்குப் பூரண அதிகாரங் கொடுத்திருப்பதாகவும் கவர்ன்மெண்டாருடைய உத்தரவினால் தெரியவந்தது. அதைப் பார்த்தவுடனே, இனி மேல் எப்படியும் நியாயங் கிடைக்குமென்று நாங்கள் எல்லோரும் ஆனந்த பரிதர்கள் ஆனோம். பிற்பாடு மேற்படி விசாரணைக் கர்த்தர்கள் இடத்திலிருந்து வந்த உத்தரவில் வேதபுரி என்னுமூரில் விசாரணை நடக்குமென்றும் சகல சாக்ஷ¢ சாதனங்களுடன் அவ்விடத்துக்கு வரும்படியாகவும் ஆக்ஞாபிக்கப் பட்டிருந்தது. அந்தப் பிரகாரம் ஆதியூரிலும் பக்க ஊர்களிலும் வசிக்கின்ற தகுந்த கௌரவமுள்ள பெரிய பிரபுக்களும் நானும் என் தகப்பனாரும் சம்பந்தி முதலியாரும் சாந்தலிங்கம் பிள்ளையும் சந்நியாசியாரும் உள்பட நூறு சாக்ஷ¢கள் சகிதமாக தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் பயண சந்நாகமாய்ப் புறப்பட்டு வேதபுரிக்குப் போனோம். அந்த மூன்று விசாரணைக் கர்த்தர்களில் இருவர் கலெக்டர் வீட்டில் இறங்கியிருப்பதாகக் கேள்வியுற்று நாங்கள் குறு விசாரம் அடைந்தோம். ஆயினும் மூன்று துரைமார்கள் கூடி அநியாயஞ் செய்ய மாட்டார்களென்று நாங்கள் எங்களைத் தைரியப் படுத்திக் கொண்டோம். விசாரணைக் கர்த்தர்கள் தேவராஜப் பிள்ளையை முந்தி விசாரித்தார்கள். அவர் கனகசபை பிறந்தது முதல் நடந்த ஒவ்வொரு சங்கதியையும் விடாமல் பரிஷ்காரமாய் வாக்குமூலம் எழுதி வைத்தார். பிற்பாடு சந்நியாசியாரையும் கனகசபையையும் அவனை வளர்த்த தகப்பனாரையும் என்னையும் என் தகப்பனாரையும் சம்பந்தி முதலியாரையும் தனித்தனியே விசாரித்தார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு விஷயத்தையும் பூரணமாகத் தெரிவித்தோம். பிற்பாடு நாங்கள் கொண்டு போன பெரிய மனுஷர்களையும் பின்னும் அந்த விசாரணைக் கர்த்தர்களுடைய இஷ்டப்படி வரவழைக்கப் பட்ட நூறு பிரபுக்களையும் பிரத்தியேகம் பிரத்தியேகமாய் விசாரித்தார்கள். அவர்கள் எல்லோரு ஒரே வாக்காய்த் தேவராஜப் பிள்ளை பட்சத்தில் சாட்சி சொன்னார்கள். விசாரணைக் கர்த்தர்கள் அவர்கள் கையிலிருந்த ஒரு கடிதத்தைத் தேவராஜப் பிள்ளைக்குக் காட்டி, அது முழுவதும் யார் கையெழுத்து என்று கேட்டார்கள். அவர் மேல் விலாசமட்டும் தம்முடைய கையெழுத்தென்றும் உள்ளேயிருக்கிற கடிதம் தமது கையெழுத்து அல்லவென்றும் தம்முடைய லிகிதம் போல் யாரோ எழுதியிருப்பதாகவும் சொன்னார்.

மூன்று விசாரணைக் கர்த்தர்களும் ஒரு அறைக்குள்ளே போய் ஆலோசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நெடு நேரம் சம்வாதஞ் செய்துகொண்டு பிற்பாடு வெளியே வந்து சிம்மாசனரூடர் ஆனார்கள். அவர்களில் கலெக்டர் வீட்டில் இறங்கியிருந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்களும் அநேக சிப்பாய்கள் உருவின கத்திகளுடனே எங்களைச் சுற்றிக் காவலாயிருக்கும்படி செய்வித்து தீர்மானம் சொல்லத் தொடங்கினார்கள்: “இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் ஒரே அபிப்பிராயமா யிருக்கிறோம். ஒரு விசாரணைக் கர்த்தர் மட்டும் எங்கள் அபிப்பிராயத்துக்கு இசையவில்லை. அப்படியிருந்தாலும் அந்த ஒரு விசாரணைக் கர்த்தருடைய அபிப்பிராயத்தைப் பார்க்கிலும் இருவருடைய அபிப்பிராயம் விசேஷமானதால் எங்களுடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகிறோம். இந்த விஷயத்தில் சாட்சி சொன்ன ஒருவருடைய வார்த்தையையாவது நாம் நம்பவில்லை. எல்லோருமாய்க் கூடிப் பெரிய பொய்க்கோட்டை கட்டியிருக்கிறார்கள் என்பது சத்தியமே. சந்ததி இல்லாமல் பாளையதார் இறந்துபோனால் பாளையப்பட்டு கவர்ன்மெண்டுக்குச் சித்தித்துப போமென்று யோசித்து கவர்ன்மெண்டாரை மோசஞ் செய்வதற்காக இப்படிப்பட்ட அபாண்டமான பொய்யை உண்டுபண்ணி யிருப்பதாக அபிப்பிராயப் படுகிறோம். ஏழைகளாயிருந்து பொய் சொன்னாலும் அதை க்ஷமிக்கலாம். பெரிய பிரபுக்களென்று பெயர் வைத்துக்கொண்டு பொய்ச் சத்தியஞ் செய்து பொய்ச் சாட்சியம் சொல்லியிருப்பது பெரிய அக்கிரமமாகவும் பிரபல துன்மார்க்கமாகவும் இருக்கின்றது. இந்தியா தேச முழுதும் தெரியும்படிக்குப் பொய்ச் சத்தியஞ் செய்தவர்களுக்குத் தகுந்த சிட்சை செய்யவேண்டியது முக்கியமாயிருக்கிறது. ஆகையால் பாளையதார் உள்படச் சகல சாக்ஷ¢களையும் அவர்களுடைய ஆயுள் பரியந்தம் தீவாரந்தத்துக்கு அனுப்புகிறதென்றும் அவர்களுடைய சொத்துக்களை யெல்லாம் பறிமுதல் செய்து கவர்ன்மெண்டாரைச் சேருகிறதென்றும் தீர்மானஞ் செய்திருக்கிறோம்” என்று சொல்லி எங்களுக்குக் கைவிலங்கு கால்விலங்கு மாட்டிக் காவலில் வைக்கும்படி உத்தரவு செய்தார்கள்.

இந்தத் தீர்மானத்தைக் கேட்டவுடனே எங்களுடைய நிலைமை எப்படி இருந்திருக்குமென்று நான் சொல்லவும் வேண்டுமா? உடனே “ஐயோ! தெய்வமே! என்ன செய்வோம்?” என்கிற கூக்குரலும், அழுகைக் குரலும் எங்கும் கிளம்பிற்று. பெண்சாதிகளை நினத்து அழுகிறவர்களும், பிள்ளைகளை நினைத்து அழுகிறவர்களும், தாய்தந்தை சுற்றத்தாரை நினைத்து அழுகிறவர்களும், ஆஸ்திகளை நினைத்து அழுகிறவர்களும் இவ்வகையாக எங்கும் அழுகைக் குரலே தவிர வேறொரு சப்தமுமில்லை. தேவராஜப் பிள்ளை எழுந்து மற்றவர்களை நோக்கி “ஐயையோ! உங்கள் எல்லோருக்கும் நான் ஒருவன் கூற்றுவனாயிருந்தேனே! என்னாலே உங்கள் ஆஸ்திகளை இழந்தீர்களே! பெண்சாதி பிள்ளைகளை இழந்தீர்களே! ஆயுசு வரையில் தண்டனையும் அடைந்தீர்களே! நீங்கள் எனக்கு உபகாரஞ் செய்ய வந்து பெருந் துன்பத்தை அடைந்தீர்களே! இந்தத் துக்கத்தை நான் எப்படிச் சகிப்பேன்!” என்று சொல்லிப் புலம்பினார். பிறகு அவர் என்னையும் என் தகப்பானாரையும், என் மாமனாரையும் நோக்கி “இந்தத் துன்பத்தை அனுபவிக்கத் தானா நீங்கள் ஊரைவிட்டு இவ்வளவு தூரம் வந்தீர்கள்/? நீங்களும் உத்தம பத்தினிகளுஞ் செய்த தர்மங்கூட உங்களைத் தலைகாக்காமற் போய்விட்டதே! அந்த மகா உத்தமிகள் இந்தச் செய்திகளைக் கேட்டுச் சகிப்பார்களா? பிராணனை வைத்திருப்பார்களா? நீங்களாவது தப்பியிருந்தால் எங்களுக்காகச் சர்வப் பிரயத்தனஞ் செய்வீர்களே! இப்போது அந்த நம்பிக்கையும் இல்லாமற் போய்விட்டதே! நான் என்ன செய்வேன்?” என்று சொல்லிக் கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதார். அப்படியே ஒவ்வொருவரும் தங்களுடைய துயரத்தைச் சொல்லிப் பொருமினார்கள். அப்போது மண்ணூம், விண்ணும், மரமும், மலையும், சகலமும் அழுவது போல் தோன்றின. அந்த இரண்டு பாவிகளாகிய விசாரணைக் கர்த்தர்களுடைய மனம் மட்டும் இரங்கவில்லை.

புருஷர்களாகிய எங்களுடைய கதியே இப்படியிருக்கும்போது எங்களுடைய ஸ்திரீ ஜாதிகள் பட்ட துக்கங்களை நான் எப்படி விவரிக்கப் போகிறேன்? அப்போது நான் கூட இராவிட்டாலும் நான் கேள்விப்படதை எழுதுகிறேன். இந்தச் சமாசாரம் அவர்களுக்குத் தெரிந்த உடனே பட்டணம் அல்லோல கல்லோலமாய்ப் போய்விட்டது. எல்லா ஸ்திரீகளும், பாளையதார் அரண்மனையில் வந்து கூட்டங்கூடித் தலைமயிரைப் பிச்சிக்கொண்டும், வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டும், முகத்தில் அறைந்துகொண்டும், வயிற்றில் அடித்துக்கொண்டும் கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதார்கள். அவர்களுடைய கூந்தல்கள் மேகங்கள் போலவும், அவர்களுடைய தேகங்கள் மின்னல் போலவும், அவர்களுடைய கூக்குரல் இடியோசை போலவும், அவர்களுடைய கண்ணீர் மழை பொழிவது போலவும் இருந்தன. “ஐயோ! எங்கள் நாயகர்களை இழந்து போனோமே! இனிமேல் அவர்களை ஒருநாளும் பார்க்கமாட்டோமோ? எங்களுடைய ஆஸ்தி பாஸ்திகளையும் தோற்றோமே! நாங்களும் எங்கள் பிள்ளைகளும் என்ன செய்வோம்? எந்தத்தெருவில் நிற்போம்?” என்று புலம்பினார்கள். அவர்களுடன் அழுது புலம்பிக் கொண்டிருந்த என் தாயார் திடீரென்று எழுந்து மற்ற ஸ்திரீ ஜனங்களைப் பார்த்து “தங்கைமாரே! தமக்கைமாரே! அழுது பிரயோசனமில்லை. வெள்ளம் தலைக்குமேல் ஓடிவிட்டது. இனிமேல் சாண் ஓடினால் என்ன? முழம் ஓடினால் என்ன? நம்முடைய புருஷர்கள் எல்லாரும் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களில் யாராவது ஒருவர் தப்பியிருந்தால் மற்றவர்களை ரக்ஷ¢க்கும் பொருட்டு அவர்களால் கூடியவரையில் முயற்சி செய்வார்கள். அவர்கள் எல்லாரும் அகப்பட்டுக்கொண்டிருப்பதால் இனி மேல் நம்மைத்தவிர நம்முடைய புருஷர்களுக்காகப் பிரயாசைப் படத்தக்கவர்கள் யார்? இனி மேல் நாம் செய்யத்தக்கது ஒன்றும் இல்லையென்று நினைத்து நாம் முயற்சி செய்யாமலிருக்கலாமா? கப்பல் உடைந்து கடலில் முழுகுகிறவர்களும் ஏதாவது ஒரு பலகையைப் பிடித்துக் கொண்டு கரையேற முயலுகிறார்கள். விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கூடத் தகுந்த வைத்தியஞ் செய்து அவர்க¨ளைப் பிழைப்பிக்க வகை தேடுகிறார்கள். பிராணன் போன பிற்பாடு கூட மூச்சு அடங்கியிருக்குமென்று நினைத்துப் பிரேத வைத்தியஞ் செய்கிறார்கள். அப்படிப்போல் நாமும் பிரயத்தனஞ் செய்வது அத்தியாவசியமா யிருக்கின்றது. ஆனால், காரியம் மலையாய் வளர்ந்து போயிருப்பதால் அதற்குத் தகுந்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர அற்பப் பிரயத்தனத்தால் அனுகூலம் உண்டாகாது. வியாதி எவ்வளவு பெரிதோ அதற்குத் தகுந்த ஔஷதங்களைப் பிரயோகிக்கவேண்டும். சென்னைப் பட்டணம் கவர்னர் அவர்கள் மகா நீதிமானென்றும் தர்மிஷ்டரென்றூங் கேள்விப்படுகிறேன். அவருக்கு நாம் மனு அனுப்பினால் கிரமப்படி உத்தரவாகக் கால தாமதம் ஆகும். உத்தரவு வருகிறதற்கு முன் நம்முடைய நாயகர்களைக் கப்பல் வழியாய்த் தீவாந்தரம் அனுப்பி விடுவார்கள். ஆகையால் இப்போதே நாம் எல்லோருமாய்க் கூடிச் சென்னைப் பட்டணம் போய்க் கவர்னர் அவர்கள் பாதத்தில் விழுந்து நம்முடைய நாயகர்களுக்காக மன்றாடுவோம். இத்தனை ஸ்திரீகளுடையவும், பாலகர்களுடையவும் பிரார்த்தனை வியர்த்தம் ஆகாதென்று நினைக்கிறேன். அந்தப்புர ஸ்திரீகளாகிய நாம் எப்படி வெளியே புறப்பட்டு அதிகாரிகளிடம் போகிறதென்று யோசிப்பீர்கள். நமக்குத் தகப்பனுக்குச் சமானமான கவர்னர் அவர்களிடத்திற் சென்று நம்முடைய குறையைச் சொல்லுவதினால் நமக்கு என்ன அவமானம்? நம்முடைய பிரயத்தனத்தால் அதை விடப் பெரிய பாக்கியமும் கீர்த்தியும் வேறென்ன இருக்கிறது? ரோம் (Rome) பட்டணத்தைச் சத்துருக்கள் வளைத்துக் கொண்டபோது அந்தப் பட்டணத்து ஸ்திரீகளுடைய பிரயத்தனத்தால் அவர்களுடைய புருஷர்கள் பிழைத்தார்களே! அப்படிப்போல் நாமும் முயற்சி செய்வோம்! புறப்படுங்கள்! புறப்படுங்கள்!” என்றார்கள். இதைக் கேட்டவுடனே எல்லாருக்கும் தைரியம் உண்டாகி என் தாயாரைப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.

ஒரு ஸ்திரீ மட்டும் என் தாயாருடைய அபிப்பிராயத்தை அங்கீகரிக்காமல் குதர்க்கம் பேசினாள். அவள் சொன்னது என்னவென்றால் “இந்தச் சீமாட்டி சொல்வது எலிகள் கூடிப் பூனையைத் தப்புகிறதற்குச் செய்த உபாயம் போலிருக்கிறது. ஒரு காலத்தில் எலிகளெல்லாஞ் சேர்ந்து ஆலோசனைச் சபை கூடி, பூனைக்குத் தப்புகிறதற்கு என்ன உபாயஞ் செய்யலாமென்று ஆலோசிக்கத் தொடங்கின. பல எலிகள் பல அபிப்பிராயங்களை வெளியிட்டாலும் அந்த அபிப்பிராயங்கள் அயுக்தமென்று தள்ளப்பட்டன. ஒரு சுண்டெலி எழுந்து வாசக தாட்டியாகவும் அலங்கர நயமாகவும் தன்னுடைய அபிப்பராயத்தை வெளியிட்டது. எப்படியெனில் “காலங் கண்ட பெரியோர்களும் ஞாதாக்களும் நிறைந்த இந்தச் சபையில் சிற்றறிவை யுடைய சிறியேன் வாய் திறக்க அபாத்திரனாயிருந்தாலும் தாங்கள் கிருபை கூர்ந்து என்னுடைய அபிப்பிராயத்தையுஞ் சிரவணஞ் செய்யவேண்டும். பூனை நம்மை வருகிற சமயம் தெரியாமையினால் நாம் அதன் வாய்க்கு இரையாகிறோம். பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டால் அது வருகிற ஓசை கேட்டு, உடனே நம்முடைய வளைகளில் நுழைந்து தப்பிக்கொள்ளலாம்” என்றது. இதைக் கேட்டவுடனே எலிகளெல்லாஞ் சந்தோஷித்து அந்தச் சுண்டெலியைப் புகழ்ந்து கொண்டாடின. அப்போது ஒரு மூலையில் மௌனமாய் உட்கார்ந்திருந்த நரை திரையுள்ள ஒரு கிழ எலி எழுந்து சொன்னதாவது: “அந்தச் சுண்டெலி மகா சதுரனே! அது சொல்லுகிற உபாயமும் நல்ல உபாயந்தான். ஆனால் நமக்குள் யார் பூனையின் கழுத்தில் மணியைக் கட்டுகிறதென்று அந்தச் சுண்டெலியைக் கேட்டுத் தெரிவிக்கவேண்டும்” என்றது. இதைக் கேட்டவுடனே எலிகளெல்லாம் நாணம் அடைந்து ஓடிப்போய்விட்டன.

“அந்தக் கிழ எலி கேட்டதுபோல நானும் இந்த அம்மையை ஒரு கேள்வி கேட்கிறேன். கவர்னர் நமக்குத் தரிசனங் கொடுக்காத பட்சத்தில் நாம் என்ன செய்கிறது?” என்றாள். உடனே என் தாயார் “கவர்னர் பேட்டி நமக்குக் கிடைக்காத பட்சத்தில் நாம் ஒரு விண்ணப்பம் எழுதி அவர் வெளியே வரும்போது கொடுக்கலாம்” என்றார்கள். இதைக் கேட்டவுடனே எல்லாருஞ் சரியென்று ஒப்புக்கொண்டு பிரயாணம் ஆரம்பித்தார்கள். தூய்மையான வஸ்திரங்களையும் முக்கியமான சில ஆபரணங்களையும் தரித்துக்கொண்டு அவர்களுடைய பிள்ளைகளுடனே வாகனங்களில் ஏறிக் கொண்டு பிரஸ்தானப்பட்டுச் சென்னை நகரம் போய்ச் சேர்ந்தார்கள். அந்த நகரத்திலும் மார்க்கங்களிலும் உள்ள அனேக பிரபுக்களுடைய வீட்டு ஸ்திரீகள் இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்டு அவர்களும் வாகனாரூடராய்ப் பின் தொடர்ந்தார்கள். எல்லாங் கூட ஐந்நூறு (500) வாகனங்களுக்கு மேற்பட்டுக் கவர்னர் அவர்களுடைய அரண்மனைத் தோட்டத்தின் வெளி வாசலுக்கு முன்னே வந்து, நிறைந்து நின்றன. அப்போது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்த கவர்னரவர்கள் வாகனங்களின் சப்தத்தைக் கேட்டு அதிசயப்பட்டு என்னவென்று விசாரிக்க எண்ணிக்கையில்லாத ஸ்திரீகள் அழுத கண்ணூம் சிந்திய மூக்குமாய்த் தங்களுடைய குறையை விக்ஞாபனம் பண்ண வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு, தம்முடைய சபா மண்டபத்துக்கு வரும்படி உத்தரவு கொடுத்தார். அந்தப் பிரகாரம் எல்லா ஸ்திரீகளும் வாகனத்தை விட்டு இறங்கி சபா மண்டபத்திலே பிரவேசித்தார்கள். அவர்கள் எல்லாரும் பிரபுக்கள் வீட்டு ஸ்திரீகள் என்று அவர்களுடைய முக விலாசத்தினால் கவர்னர் அவர்கள் அறிந்துகொண்டு, அவர்களையெல்லாம் ஆசனத்தில் உட்காரச் செய்து தாமும் தம்முடைய தேவியாரும் பீடத்தில் இருந்துகொண்டு “நீங்கள் உங்களுடைய துன்பத்தைத் தெரிவிக்கலாம்” என்று இனிமையாக மொழிந்தார். வேறொருவரும் பேசத் துணியாமையினால் என் தாயார் எழுந்து நின்றுகொண்டு, அடியிற் கண்டபடி விக்ஞாபனம் செய்தார்கள்.

“இந்தத் தேசத்தை ஆளுகின்ற மகாப் பிரபுவே! சிஷ்ட பரிபாலனமும், துஷ்ட நிக்கிரகமும் உங்களுடைய வேலையானதால் அந்த வேலையை உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு துஷ்டன் ஒரு பெண்ணைக் கொள்ள அபேக்ஷ¢த்து அந்த ஆசை நிறைவேறாமையால் இருநூறு பெண்கள் தங்கள் நாயகர்களையும் ஆஸ்திகளையும் இழந்துபோகும்படி செய்துவிட்டான். தான் ஒரு ஸ்திரீக்குப் புருஷன் ஆகாத நிமித்தம் இருநூறு புருஷர்களுக்குத் தாரங்கள் இருந்தும் இல்லாதவர்களாகச் செய்துவிட்டான்.

பாளையப்பட்டுச் சங்கதியை விசாரிக்கும்படி தங்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கர்த்தர்கள் முன்பாக இருநூறு பெரிய பிரபுக்கள் அந்தப் பாளையதார் பக்ஷத்தில் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய சாக்ஷ¢யத்தை நம்பாமல் அந்த விசாரணைக் கர்த்தர்களில் இருவர் அந்த இருநூறு பிரபுக்களையும் பாளையதாரையும் ஆயுசு முழுதும் தண்டித்து அவர்களுடைய ஆஸ்திகளையும் பறிமுதல் செய்யும்படி தீர்மானித்திருக்கிறார்கள். அந்த சாக்ஷ¢களில் நூறு சாட்சிகள் பாளையதார் கொண்டுபோன சாட்சிகளாகவும் மற்றவர்கள் விசாரணைக் கர்த்தர்களால் நேரே வரவழைத்து விசாரிக்கப்பட்ட சாட்சிகளாகவும் இருக்கிறார்கள். இத்தனை பிரபுக்கள் கூடித் தங்களுக்குச் சம்பந்தமில்லாத பாளையதார் விஷயத்தில் தப்புப் பிரமாணம் பண்ணிப் பொய் சொல்லத் துணிவார்களா? நம்பிக்கையான ஏக சாட்சியினுடைய ருசு போதுமானதென்று சாட்சிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்க, நம்பிக்கையான கௌரவமும் உள்ள இருநூறு சாட்சிகளுடைய ருசுவை அவமதிப்பது எவ்வளவு பெரிய அநியாயம்? கலெக்டர் கச்சேரிச் சிரஸ்ததாரும் அவனுடைய துர்ப்போதனைகளுக்கு உட்பட்டிருக்கிற கலெக்டருமே பாளையதாருக்கும் எதிரிகளாயிருக்க அந்தக் கலெக்டர் வீட்டில் இரண்டு விசாரணைக் கர்த்தர்கள் வாசஞ் செய்துகொண்டு விசாரித்தது தர்மமா? கலெக்டர் வீட்டில் தங்காமல் தனியே கூடாரம் அடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசாரணைக் கர்த்தர் பாளையதார் பக்ஷத்தில் அபிப்பிராயப்பட்டது அவருக்குப் பெரிய அநுகூலம் அல்லவா? அந்த இருநூறு சாட்சிகளும் பொய் சொல்லியிருந்தாலுங் கூட யாவத்தராளும் ஜீவபரியந்தம் அவர்களைத் தேசாந்தரம் அனுப்பும்படியான அவ்வளவு பெரிய குற்றமாகுமா? அவர்களுடைய ஆஸ்திகளையும் பறிமுதல் செய்வது ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை செய்வதற்குச் சமானமல்லவா? விசாரணைக் கர்த்தர்கள் சொல்லுகிறபடி எங்கள் புருஷர்களேதான் குற்றஞ்செய்தார்கள்; நாங்களும் எங்கள் பிள்ளைகளும் ஆஸ்திகளை இழப்பதற்கு நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? இப்போது நான் சொல்வதைக்கொண்டு எங்கள் புருஷர்களைப் பார்க்கிலும் ஆஸ்திகளை விசேஷமாக எண்ணியிருக்கிறோமென்று தாங்கள் நினைக்காமலிருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் மாங்கலியப் பி¨க்ஷ கேட்க வரவில்லை. எங்களுக்கு மங்கலியப் பி¨க்ஷ கிடைக்காத பட்சத்தில் எங்களுக்கு ஆஸ்திகளும் வேண்டியதில்லை. தங்கள் சமூகத்தில் எல்லா விஷயங்களையும் நேரே விசாரித்து எங்கள் பட்சத்தில் நியாயமிருந்தால் செய்யும்படி பிரார்த்திக்கிறோமேயல்லாது எங்களுடைய அழுகைக்கும் பிரலாபத்துக்கும் இரங்கிப் பட்சபாதஞ் செய்யும்படி நாங்கள் கேட்கவில்லை. இங்கிலீஷ் கவர்ன்மெண்டு பூமண்டல முழுவதும் எவ்வளவோ கெடிபெற்றதாயிருக்கின்றது. உங்கள் உத்தியோகஸ்தனும் எங்கள் தேசத்தானுமான ஒரு பரமதுஷ்டன் உங்களுடைய கீர்த்தியையும் எங்களுடைய நன்மையும் அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறான். அவனைச் சிக்ஷ¢த்து எங்களை ரக்ஷ¢க்கும்படி பிரார்த்திக்கிறோம். சகலமும் தெரிந்த மகாப்பிரபுவாகிய உங்களுக்குப் புருஷர்களை இழந்து இந்தத் தேசத்து ஸ்திரீகளுடைய நிர்ப்பாக்கியங்களை விவரிக்க வேண்டுவதில்லை. ஆகையால் எங்களுக்கு நாயகர்களையும் எங்களுடைய பிள்ளைகளுக்குத் தந்தைமார்களையும் கொடுத்தருளுங்கள்! நாங்கள் சொல்வது பொய்யென்று தாங்கள் அபிப்பிராயப்படுகிற பக்ஷத்தில் அந்தக் குற்றத்துக்காக எங்களையும் தண்டித்து எங்கள் நாயகர்களுடனே எங்களையும் தீவாந்திரத்துக்கு அனுப்பி விடுங்கள்” என்று மிருதுவாகவும், நயமாகவும், வணக்கமாகவும் விக்ஞாபித்துக்கொண்டார்கள். இதைக் கேட்கும்போது கவர்னர் அவர்களுக்கும் அவருடைய தேவியாருக்கும் கண்ணீர் பெருகி அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.

பிறகு கவர்னர் என் தாயாரையும் மற்ற ஸ்திரீகளையும் நோக்கி “இது பெரிய விஷயமானதால் நாம் உங்கள் ஊருக்கே வந்து விசாரித்து நியாயப்படி தீர்மானிக்கிறோம்; அது வரையில் விசாரணைக் கர்த்தர்கள் செய்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்கும்படி இப்பொழுதே உத்தரவு அனுப்புவோம்; நீங்கள் ஊருக்குப் போகலாம்” என்று உத்தரவு கொடுத்தார். உடனே என் தாயார் முதலிய ஸ்திரீகள் புறப்பட்டுக் கவர்னரவர்களுடைய உத்தியானம் தாண்டி வெளியே வந்தார்கள். அந்த உத்தியான வாசற்படிக்கு வெளியே பட்டண ஸ்திரீகளெல்லாம் திரண்டு மொய்த்து என் தாயாரையும் ஞானாம்பாளையும் மற்ற ஸ்திரீகளையும் பார்த்துப் பரிதாபப் படுகிறவர்களும், என் தாயாரைப் புகழ்ந்து கொண்டாடுகிறவர்களும் அவர்களைத் தங்கள் வீட்டுக்கு வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறவர்களுமா யிருந்தார்கள். அவர்களில் எங்களுக்கும் பாளையதாருக்கும் பந்துக்களும் பரிச்சயமானவர்களும் அநேகர் இருந்தபடியால் அவர்கள் கிருகங்களுக்குப் போய்ப் போஜனம் செய்தபிற்பாடு எங்களுடைய ஸ்திரீகள் வாகனாரூடராய்ப் புறப்பட்டுப் போய்த் தங்கள் ஊரை அடைந்தார்கள். மறுநாளே கவர்னர் அவர்கள் அவருடைய பரிவாரங்களுடன் வேதபுரி என்னும் ஊருக்கு வந்து, கூடாரங்களில் இருந்து கொண்டு பரிசீலனை பண்ணத் தொடங்கினார். பாளையதாரும் சாக்ஷ¢களும் எழுதி வைத்த வாக்குமூலங்களையும் இரண்டு விசாரணைக் கர்த்தர்கள் செய்த தீர்மானத்தையும் அதற்கு விரோதமாய் மற்றொரு விசாரணைக் கர்த்தர் கொடுத்த அபிப்பிராயத்தையும் இன்னும் மற்ற லிகிதங்களையும் வாசித்துப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டார். பாளையதார் தனக்குப் பிள்ளையில்லை யென்று சிரெஸ்ததாருக்கு எழுதினதாகச் சொல்லப்பட்ட கடிதம் ஒன்று தான் பாளையதார் கக்ஷ¢க்குக் கொஞ்சம் பாதகமாயிருந்தது. பாளையதார் சிரெஸ்ததாருக்கு எழுதியிருந்த ஒரு வாஸ்தவமான கடிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டு அது வைத்திருந்த உறைக்குள்ளே சிரெஸ்ததார் ஒரு பொய்யான கடிதத்தை எழுதி வைத்துக் கொண்டு மாறுபாடு செய்ததாக அநேக சாக்ஷ¢களாலும் அனுமானங்களாலும் ஸ்தாபிக்கப்பட்டபடியால் கவர்னர் அவர்களுக்கு உண்டாயிருந்த அற்ப சந்தேகமும் நிவர்த்தியாய் விட்டது. உடனே கவர்னர் அந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்களுடைய தீர்மானத்தை மாற்றிப் பாளையதார் கக்ஷ¢யை ஸ்தாபித்து அவரும் நான் முதலான சாக்ஷ¢களும் நிரபராதிகளென்று சித்தாந்தஞ் செய்தார். அந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்களையும் கலெக்டரையும் உத்தியோகத்தை விட்டு நீக்கி அவர்கள் எங்களைத் தீவாந்தரம் அனுப்ப வைத்திருந்த கப்பலில் அவர்களையேற்றிச் சீமைக்கு அனுப்பிவிட்டார். அந்த சிரெஸ்ததார் பொய்க் கடிதத்தை உண்டுபண்ணி பாளையதார் முதலானவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்தபடியால் அவனை உத்தியோகத்திலிருந்து விலக்கி, அவன் எங்களுக்கு நியமித்திருந்த தீவாந்தரத்துக்கு அவனையே அனுப்பி அவனை தேசப்பிரஷ்டம் ஆக்கினார்.
---------

அத்தியாயம் -31
முந்தின அதிகாரத்தில் சொல்லியபடி தீர்மானஞ் செய்த பிறகு கவர்னர் எங்களை நோக்கிச் சொல்லுகிறார்: “இப்போது விசாரணையான சங்கதியில் அசம்பாவிதமென்று நினைக்கும்படியான சில விஷயங்கள் கலந்திருந்தாலும் அந்த விஷயங்களெல்லாம் வாஸ்தவமென்றும் பாளையதார் கக்ஷ¢ உண்மையானதென்றூம் நிர்த்தாரணஞ் செய்திருக்கிறோம். பாளையதார் பிள்ளை இறவாமலிருக்க அந்தப் பிள்ளை இறந்தது போல அவருடைய சகோதரன் மாய்மாலம் பண்ணி அந்தப் பிள்ளைக்குப் பதிலாகப் பால்காரிப் பிள்ளையை அடக்கஞ் செய்ததும், அந்த மாறுபாடு பாளையதார் குடும்பத்தில் ஒருவருக்கும் தெரியாமற் போனதும், பாளையதார் தம்பி கொலை செய்வதற்காக முத்துவீரனிடத்திற் கொடுத்த பிள்ளையை அவன் கொலை செய்யாமல், சாந்தலிங்கம் பிள்ளை வசத்தில் ஒப்புவித்து சாந்தலிங்கம் பிள்ளை தன் சொந்தப்பிள்ளையைப் போல் வளர்த்ததும், அந்த ரகசியம் அநேக வருஷ காலம் பாளையதார் முதலானவர்களுக்குத் தெரியாமலிருந்ததும் சாதாரணமாய் நடக்கக் கூடுமான காரியங்கள் அல்ல. ஆயினும் அவைகளெல்லாம் வாஸ்தவமென்று உங்களுடைய பத்தினிகளின் ஊக்கமான முயற்சியினால் நாம் கண்டுபிடித்துக் கொண்டோம். முக்கியமாகச் சத்தியபுரி சுந்தரத்தண்ணிக்கு நீங்கள் எல்லாரும் கிருதக்ஞர்களா யிருக்கவேண்டும். வசன சாதுரியமாயும் மாதுரியமாயும் மிருதுபாக்ஷ¢தமாயும் சாரசங்கிரகமாயும் சுந்தரத்தண்ணி நியாயங்களை எடுத்துக் காட்டினபடியால் நாம் உண்மையைக் கண்டு கொள்வது அதிசுலபமாயிருந்தது. இப்படிப்பட்ட நியாயவாதினி உங்களுக்குக் கிடைத்தது உங்களுடைய அதிர்ஷ்ட விசேஷந்தான். ஐரோப்பாவிற் கூடச் சுந்தரத்தண்ணியைப் போல் ஆயிரத்தில் ஒரு ஸ்திரீ அகப்படுவது அருமை. சுந்தரத்தண்ணியைத் தாரமாகப் பெற்ற புருஷன் புருஷனே யல்லாமல் மற்ற ஆண்மக்களெல்லாரும் வீண் மக்கள்தான். அழகும் துக்கமும் உருவெடுத்து வந்தது போல உங்களுடைய ஸ்திரீகள் குழந்தைகள் சகிதமாய் நம்மிடத்தில் வந்து அபயப் பிரதானங் கேட்டதும், அவர்கள் மத்தியில் சுந்தரத்தண்ணி எழுந்து நின்று கொண்டு நியாய வாதஞ் செய்ததும் நம்முடைய புத்தியிலும் அப்போது கூட இருந்தவர்களுடைய புத்தியிலும் நன்றாய்ப் பதிந்து போயிருக்கிறது. அந்தப் பிரகாரம் ஒரு படம் எழுதும்படி உத்தரவு செய்திருக்கிறோம். அது முடிந்தவுடனே உங்களுக்குஞ் சில படங்கள் கொடுக்கப்படும்” என்றார். பிறகு அவர் தேவராஜப் பிள்ளையை நோக்கி “உம்முடைய புத்திரன் கலியாணத்தை இனி நீர்த் தாழ்க்காமல் உடனே நிறைவேற்ற வேண்டிய கிருஷி செய்யலாம்.” என்று உத்தரவு கொடுத்துவிட்டுச் சென்னை நகரத்துக்குப் போய்விட்டார்.

கவர்னர் போன பின்பு விடுதலையான எல்லாப் பிரபுக்களும், அவர்களுடைய குடும்பங்களும், ஆதியூரிலும் சுற்றுக் கிராமங்களில் வசிக்கிறவர்களும், சமுத்திரம் கரைபுரண்டு வருவதுபோற் கூட்டங் கூட்டமாய்த் தேவராஜப் பிள்ளை வீட்டுக்கு வந்து சந்தோஷம் கொண்டாடினார்கள். அவர்களுடைய கொண்டாட்டமே ஒரு பெரிய திருவிழாவாகவும், அந்தத் திருவிழாவுக்குத் தேவராஜப் பிள்ளை கிருகமே ஆலயமாகவும், அந்த ஆலயத்துக்கு என் தாயாரே தெய்வமாகவும் இருந்தாற்போலச் சகலரும் என் தாயாரை வாழ்த்தி வணங்கினார்கள்; அந்நிய புருஷர்களுக்கு என் தாயாருடைய தரிசனங் கிடைக்காமையினால் அவர்கள் எல்லாரும் என்னையும் என் தகப்பனாரையும் வைத்து எங்களை அபரிமிதமாகப் புகழ்ந்தார்கள். தேவராஜப் பிள்ளையும் மற்றவர்களும் செய்த ஸ்தோத்திரங்களினால் என் தாயாருக்குச் சலிப்புஞ் சங்கோசமும் உண்டாகி தேவராஜப் பிள்ளையைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:

“ஐயா! நமக்கு இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் சகலமும் கடவுளது செயலேயன்றி நம்முடைய செயல் ஒன்றுமில்லை. மேகத்திலிருந்து விழுகிற மழைத்துளிகள் இத்தனையென்றும் பூமியிலும் ஆகாயத்திலும் இருக்கிற அணுக்கள் இத்தனை யென்றும் அவர் கணக்கு வைத்திருக்கிறார்; அவருக்குச் சித்தமானால் அணுவை மலையாக்குவார்; மலையை அணுவாக்குவார்; அவருடைய கிருபா கடாக்ஷம் இல்லாமல் நமக்கு யாதொரு அனுகூலம் உண்டாகக் கூடுமா? நானும் மற்ற ஸ்திரீகளும் கடவுள் கொடுத்த வாக்கைக் கொண்டும், அவர் கொடுத்த புத்தியைக் கொண்டும் ஏதோ சில முய்சிகள் செய்தோம். உங்கள் பக்ஷத்தில் நியாயம் இல்லாமலும் தெய்வானுக்கிரகம் இல்லாமலும் இருக்கிற பக்ஷத்தில் நமக்கு ஜெயமுண்டாகுமா? ஆகையால் கடவுளே ஸ்தோத்திரத்துக்குப் பாத்திரராயிருக்கிறார். அந்த ஸ்தோத்திரத்தை நான் பெற்றுக்கொண்டால் கடவுளுக்குரிய ஸ்தோத்திரத்தை நான் கவர்ந்து கொண்டது போல் ஆகுமல்லவா? அன்றியும் எனக்குப் பலரும் சொல்லுகிற புகழ்ச்சியானது என்னிடத்தில் ஆணவத்தையும் இறுமாப்பையும் ஆத்ம ஸ்தௌத்தியத்தையும் விளைவிக்குமென்று பயப்படுகிறேன். ஆகையால் எனக்குப் பிதா ஸ்தானமாகிய நீங்கள் கிருபை கூர்ந்து இனி என்னை ஒருவரும் புகழாதபடி செய்ய வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்” என்றார்கள். உடனே தேவராஜப் பிள்ளை என் தாயாரை நோக்கி, “அம்மா! நீங்கள் சொல்லுகிறபடி எல்லாங் கடவுள் செயல் தான். அவர் அசையாமல் அணுவும் அசையாதென்பது நிச்சயமே. ஆனால் கடவுள் அநேக நன்மைகளை மனுஷர்களைக் கொண்டு செய்விக்கிறபடியால் அவர்களுக்கும் நன்றியறிந்த ஸ்தோத்திரம் தங்களுக்கு அப்பிரியமா யிருக்கிற படியால், இனி மேல் எங்களுடைய நன்றியறிதலை வாயினால் வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளே வைத்துக் கொள்ளுவோம்” என்றார். அவர் என்ன சொல்லியும் இதர ஜனங்கள் கேளாமல் அநேக நாள் அளவும் அவர் வீட்டுக்கு வருகிறதும் என் தாயாரைப் பரோக்ஷமாயும் அபரோக்ஷமாயும் வாழ்த்துகிறதுமே மணியமாயிருந்தார்கள்.

கனகசபையின் கலியாண விஷயத்தில் நேரிட்ட சகல விக்கினங்களும் நிவாரணம் ஆகிவிட்டதால், அந்தக் கலியாணத்துக்கு வேண்டிய கிருஷிகளெல்லாஞ் செய்து அதுவும் நிறைவேறிற்று. எப்படியெனில் ஊர் முழுதும் மகர தோரணங்கள் கட்டி, வாழை கமுகுகள் நாட்டிப் பந்தல் அலங்கரித்து, மணமகனையும், மணமகளையும் சுகந்த பனி நீரால் திருமஞ்சனம் ஆட்டி, திவ்விய வஸ்திராபரணங்கள் பூட்டி, ஸ்வர்ண மயமாயும் நவரத்தின கஜிதமாயும் அலங்கரிக்கப்பட்ட கலியாண மண்டபத்தில், கோடி சூரியர்கள் தீபக் கோடிகள் பிரகாசிக்க, சமுத்திர கோஷம் போல் நானாபேத மங்கல வாத்தியங்கள் முழங்க, மயிற்கூட்டங்கள் போல் நாட்டியப் பெண்கள் நடனஞ்செய்ய, குயிற்கூட்டங்கள் போற் பாடினிகள் சுபசோபனம் பாட, கோதானம், பூதானம் முதலிய மாதானங்களுடன் கனகசபையின் கலியாணம் நடந்தேறியது. நாங்கள் செய்ய வேண்டிய சீர் வரிசைகளெல்லாம் ஏராளமாகச் செய்தோம்.

தேவராஜப் பிள்ளை கிருகத்தில் கனகசபையின் கலியாணத்துடன் இன்னும் மூன்று கலியாணங்கள் நடந்தன. அந்த நாலு கலியாணங்களும் ஒரே முகூர்த்தத்தில் நடந்தபடியால் புரோகிதப் பிராமணர் நாலு மங்கிலியங்களையும் வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாய் எடுத்து அபிமந்திரித்து ஆசீர்வதித்து மாப்பிள்ளைகள் கையில் கொடுக்க அவர்கள் வாங்கிப் பெண்கள் கழுத்திலே கட்டினார்கள். இந்தப் பிரகாரம் கனகசபை உள்பட மூன்று மாப்பிள்ளைகள் மங்கிலியஞ் சூட்டினார்கள். ஒரு மாப்பிள்ளையினுடைய மங்கலியத்தை மடியிலே வைத்துக்கொண்டு மறந்துபோய் விட்டதால் அந்த மாப்பிள்ளை தாலி கட்டவில்லை. அதை அந்த மாப்பிள்ளையாவது பெண்ணாவது மற்றவர்களாவது கவனிக்கவில்லை. இரா முகூர்த்தம் ஆனதால் எல்லாக் காரியங்களுஞ் சரியாய் நடந்திருக்குமென்று நினைத்துக் கொண்டார்கள். அன்றைக்கு நடக்க வேண்டிய கலியாணச் சடங்குகளெல்லாம் முடிந்து புரோகிதர் வீட்டுக்குப் போனபிறகு ஒரு மங்கலியம் தன்னுடைய மடியிலிருப்பது அவருக்குத் தெரிந்தது. உடனே திடுக்கிட்டு “ஐயையோ! இந்த விஷயம் விடிந்த உடனே கலியாணக்காரர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் என்னைச் சும்மா விடமாட்டார்களே! நான் என்ன செய்வேன்!” என்று அவர் ஆலோசித்துக் கடைசியாய்க் கலியாண வீட்டுக்குப் போய் தாமும் படுத்திருந்த நடுச்சாமத்தில் எல்லாரும் உறங்குகின்ற சமயத்தில் அந்தத் தாலியைப் பெண் கழுத்தில் கட்டிவிடுகிறதென்று நிர்த்தாரணஞ் செய்துகொண்டார். அவர் வீட்டில் இராப்போஜனஞ் செய்தபிறகு புறப்பட்டு முகூர்த்த வீட்டுக்குப் போய்த் தாமும் ஒரு பக்கத்திலே போய்ப் படுத்துக்கொண்டார். அவர் அர்த்த சாமத்தில் நிசப்தமாக எழுந்து கலியாணப்பெண் படுத்துத் தூங்குகிற அறைக்குள் நுழைந்து யாருடைய கழுத்தில் தாலியில்லாமல் வெறுங் கழுத்தாயிருக்கிறதென்று நிச்சயிக்கும் பொருட்டு எல்லாப் பெண்களுடைய கழுத்துக்களையும் ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்துக்கொண்டு வந்தார். அந்தப் பெண்களுடனே கூட விதந்துவாய்ப் போன ஒரு பெண்ணும் படுத்துத் தூங்கினாள். அவள் கழுத்தில் தாலியில்லாமலிருந்ததால் அவள் தான் அந்தக் கலியாணப் பெண்ணென்று புரோகிதர் நிச்சயித்துக் கொண்டு அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டி அமங்கலையைச் சுமங்கலியாக்கிவிட்டார். விடிந்த உடனே விதந்து கழுத்தில் தாலியிருப்பதையும், கலியாணப் பெண் கழுத்துத் தாலியில்லாமல் வெறுமையாயிருப்பதையும் எல்லாரும் பார்த்து ஆச்சரியம் அடைந்து, இது வெளியானால் வெட்கக்கேடு என்று நினைத்துச் சில பெண்கள் அந்த விதந்து கழுத்திலிருந்த தாலியை அவிழ்த்து மணப்பெண் கழுத்திலே கட்டிவிட்டார்கள். புரோகிதர் செய்த மாறுபாட்டை அவர் என்னிடத்தில் ஒப்புக்கொண்டபடியால் அந்த ரகசியம் எனக்கு மட்டுந் தெரியும்; வேறொருவருக்கும் தெரியாது. இந்த விஷயத்தில் எனக்கு இரண்டு சாஸ்திர சங்கைகள் இருக்கின்றன. முதலாவது சாஸ்திரப்படிக்கும் தேசாசாரப் படிக்கும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டவேண்டியது அநிவாரியமானபடியால் அந்தப்படி தாலி கட்டப்படாத மேற்படி கலியாணம் செல்லுமா? செல்லாதா? அது செல்லாமலிருக்கிற பட்சத்தில் அநேக புத்திர பௌத்திரர்களைப் பெற்றுக்கொண்டு இப்போது §க்ஷமமாய் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த ஸ்திரீயையும் புருஷனையும் அவர்களுடைய சந்ததிகளையும் இனி மேல் என்ன செய்கிறது? இரண்டாவது அந்தப் புரோகிதர் விதந்து கழுத்தில் தாலி கட்டினபடியால் அது பிரம சமாஜத்தார் பிரசங்கித்து வருகிற புநர் விவாகம் ஆகுமா? இந்தக் கேள்விகளுக்குத் தர்மசாஸ்திரப் பண்டிதர்கள் தக்க விடை கூறுவார்களென்று நம்புகிறேன்.

கனகசபையின் சுயம்வரம் முடிந்து சில நாள் சென்ற பின்பு என் தந்தையாரும் மாமனாரும் ஊருக்குப் போக உத்தரவு கேட்டார்கள். உடனே தேவராஜப் பிள்ளை அவர்களைப் பார்த்து “ஐயா! நீங்கள் இங்கே இருந்தது எங்களுக்குப் பெரிய அரணுங் கவசமும் போல் இருந்தது. உங்களுடைய பிரிவை நினைக்கும்போது எனக்கு மனசு பகீரென்கிறது. அந்த விசாரணைக் கர்த்தர்கள் அநியாயத் தீர்மானஞ் செய்த காலத்தில் நீங்களும் சுந்தரத்தண்ணியாரும் இவ்விடத்தில் இல்லாமலிருந்தால் எங்களுடைய கதி எப்படி முடிந்திருக்கும்? நீங்கள் போன பிற்பாடு நாங்கள் காவல் இல்லாத நகரம் போலவும் இறகில்லாத பக்ஷ¢கள் போலவும் மனம் வருந்துவோம்” என்றார். உடனே என் தகப்பனார் அவரை நோக்கி, “இனி மேல் கடவுள் உங்களுக்கு ஒரு ஆபத்தும் வர ஒட்டார். நாங்கள் எங்கள் ஊரை விட்டுவந்து வெகுநாள் ஆகிறபடியால் தாங்கள் கிருபை செய்து உத்தரவு கொடுக்க வேண்டும்” என்றார். உடனே கனகசபை எழுந்து என் தகப்பனார் பாதத்தில் விழுந்து “ஐயா! நீங்கள் இங்கே விஜயம் செய்த பிற்பாடு நான் இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டி போல எவ்வளவோ மனமகிழ்ச்சியா யிருந்தேன்? இப்போது நீங்கள் எல்லாரும் ஒருமிக்கப் போய் விட்டால் நான் எப்படிச் சகிப்பேன்? அண்ணனும் அண்ணியாவது இன்னுஞ் சில நாள் இவ்விடத்தில் இருக்கும்படி உத்தரவு செய்யவேண்டும். ஒரு மாசத்துக்குள் நாங்கள் எல்லாருஞ் சத்தியபுரிக்கு வந்து உங்களைக் கண்டுகொள்ளுகிறோம்” என்றான். தேவராஜப் பிள்ளையும் அந்தப்படி வேண்டிக்கொண்டபடியால் அவர்களுடைய பிரார்த்தனையை நிராகரிக்க மாட்டாமல், நானும் ஞானாம்பாளும் இன்னும் ஒரு மாசம் வரைக்கும் ஆதியூரில் இருக்கும்படி நிரம்மியமாக உத்தரவு கொடுத்துவிட்டு, என் தாய் தகப்பனார் மாமனார் மாமியார் முதலானவர்கள் சத்தியபுரிக்குப் போய் விட்டார்கள்.
---------

அத்தியாயம் -32
ஒரு நாள் இரவு ஒரு தையற்காரன் அவனுடைய மேல் வேஷ்டியில் ஒரு ரூபாயை முடிந்து தோளிற் போட்டுக் கொண்டு தெரு வீதி வழியாகப் போனான். அதை நிலா வெளிச்சத்தில் ஒரு திருடன் கண்டு, அந்தத் தையற்காரனைப் பின் தொடர்ந்து சென்றான். திருடன் தொடர்ந்து வருவதைத் தையற்காரன் கடைக் கண்ணாற் கண்டும் காணாதது போல் நடந்தான். திருடன் அரவஞ் செய்யாமல் கிட்ட நெருங்கி அந்த முடிச்சைக் கத்தரிக்கோலினார் கத்தரித்தான். உடனே தையற்காரன் திரும்பி அவன் கையிலிருந்த கத்தரியினால் திருடன் காதைக் கத்தரித்து விட்டான். அந்த உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் திருடன் “கூ! கூ! கொலை! கொலை!” என்றான். உடனே தையற்காரன் “கூ! கூ!கொள்ளை! “ என்றான். பிறகு கள்ளன் தையற்காரனைப் பார்த்து “இந்தா! உன் பணம்” என்று அவன் முன்பாக விட்டெறிந்தான். உடனே தையற்காரன் “இந்தா! உன் காது” என்று விட்டெறிந்தான். பிறகு அந்தத் தையற்காரன் திருடனைப் பிடித்துக் கொண்டு வந்து தேவராஜப் பிள்ளை முன்பாக விட்டான். திருடன் தேவராஜப் பிள்ளை முன்பாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டு சொல்லுகிறான்:

“ஐயா! நான் ஒரு பெரிய குடும்பி. எனக்கு ஒரு பெண்சாதியும், பல பிள்ளைகளும் அதிக விருத்தாப்பியமான தாய் தந்தைகளும், விதந்துவாய்ப் போன இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். அவர்களைச் சம்ரக்ஷ¢ப்பதற்கு என்னைத் தவிர வேறே நாதன் இல்லை. நான் தேகப்பிரயாசைப்பட்டு அவர்களை ஆதரித்து வந்தேன். இப்போது பஞ்ச காலமானதால் எனக்கு எங்கும் வேலை அகப்படவில்லை. யாசகங் கொடுப்பாரும் இல்லை; நான் ஒருவன் மட்டும் பட்டினியாயிருந்தால் எப்படியாவது சகித்துக் கொள்வேன். அதிவிருத்தர்களான என் தாய் தந்தையர்களும் சிறு பிள்ளைகளும் மற்றவர்களும் பல நாள் பட்டினியாயிருப்பதைப் பார்த்துச் சகிக்க மாட்டாமல் நான் இந்தத் திருட்டுத் தொழிலில் பிரவேசித்தேன்; ஆனால் பெண்டுகளிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் நல்லவர்களிடத்திலும் திருடுகிறதில்லையென்றும், லோபிகளிடத்திலும் பாவிகளிடத்திலும் மட்டுந் திருடுகிறதென்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறேன்.

இப்போது நான் ஒரு ரூபா திருடினதற்காக என்னைத் தண்டிக்கப் போகிறீர்கள்; நான் அந்தத் தையற்காரனிடத்தில் ஒரு ரூபா கடன் வாங்கிக்கொண்டு பிறகு அதைக் கொடாமல் மோசஞ் செய்திருப்பேனானால் என்னைத் தண்டிப்பீர்களா? பிரதி தினமும் ஆயிரம், பதினாயிரம், லக்ஷம் பொன் கடன் வாங்கிக் கொண்டு அந்தக் கடனைக் கொடாமல் மாறுபாடு செய்கிறவர்களுக்குக் கணக்குண்டா? இவர்கள் எல்லாரும் எங்களுக்கு அண்ணன்மார்கள் அல்லவா? எங்களுடைய திருட்டுக்கும் அவர்களுடைய திருட்டுக்கும் பேதம் என்னவென்றால், நாங்கள் பொய்யும் புரட்டும் பேசாமல் எங்கள் கையில் அகப்பட்டதைக் கவர்ந்து கொள்ளுகிறோம். அவர்கள் ஆயிரம் பொய் சொல்லிக் கடன் வாங்கிக் கொண்டு, பிறகு அதைக் கொடாமல் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு, எத்தனையோ சூதுகளும் வாதுகளும் பொய்ச் சத்தியங்களுஞ் செய்கிறார்கள். அவர்களுடைய திருட்டில் பொய்யும் புரட்டும் நம்பிக்கைத் துரோகமும் ருண பாதகமும் கலந்திருக்கின்றன. எங்களுடைய திருட்டில் அப்படிப்பட்ட தோஷங்கள் கலக்கவில்லை. ஒரு ரூபா திருடின என்னை ஒரு மாசம் காவலிலிருக்கும்படி நீங்கள் தீர்மானித்தால் பெருங் கொள்ளைக்காரர்களாகிய அந்த ருண பாதகர்களையாவது ஜீவ பரியந்தந் தண்டிக்க வேண்டாமா?

நான் திருட ஆரம்பிப்பதற்கு என்னுடைய தரித்திரத்தைக் காரணமாகச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இப்படிப்பட்ட யாதொரு காரணமும் இல்லாமல் அநேக அரசர்கள் அந்நிய ராஜாக்களுடன் யுத்தத்துக்குப் புறப்பட்டு வழிகளில் இருக்கிற கோட்டை கொத்தளங்கள் மாளிகைகளையெல்லாம் இடித்து. கோடானு கோடி ஜனங்களை மாய்த்து அகப்பட்ட பொருள்களையெல்லாம் சர்வ கொள்ளை அடிக்கிறார்களே! அந்த அரசர்களும் எங்களுடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா? அலெக்ஸாண்டர் (Alexander) முதலிய சுத்த வீரர்கள் தாங்கள் பிடித்த தேசங்களை மறுபடியும் கொடுத்து விட்டதாக அவர்களுக்குப் புகழ்ச்சியாகச் சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள். புருஷர்களையெல்லாங் கொலை செய்து அவர்களுடைய மாட மாளிகைகளையெல்லாங் கொள்ளையிட்டபிறகு, நிராதரவான கைம்பெண்சாதிகளும் சிறு பிள்ளைகளும் நிறைந்த தேசத்தை மறுபடியும் பழைய அரசனுக்குக் கொடுப்பதினால் என்ன பிரயோசனம்? அப்படிக் கொடுப்பது பெருமையாயிருக்குமானால் நானும் திருடிய ஒரு ரூபாயை மறுபடியும் அந்தத் தையற்காரன் முன்பாக எறிந்துவிடவில்லையா? அலெக்ஸாண்டர் முதலிய சுத்தவீரர்கள், தங்கள் சத்துருக்களுடைய பெண்சாதி பிள்ளைகளை உபத்திரவஞ் செய்ததில்லை யென்று சரிதாசிரியர்கள் சொல்லுகிறார்கள். பெண்டுகளையும் பிள்ளைகளையுந் திருடுகிறதில்லையென்று நானும் பிரதிக்ஞை செய்து கொள்ளவில்லையா? ஒரு கொலை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கிறீர்கள். அப்படியானால் லக்ஷ¡தி லக்ஷங் கொலைகளுங் கொள்ளைகளுஞ் செய்கிற அந்த அரசர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை விதிக்கவேண்டும்? பின்னும் ஜனங்கள் தாங்கக் கூடாத பல வரிகளைச் சுமத்திக் கொடுமை செய்கிற அரசர்களும் பெருங்கொள்ளைக் காரர்கள்தானே? ஒரு கொடுங்கோல் மன்னன் அநியாய வரிகள் வாங்கினபடியால், ஒரு எளியவன் தனக்கு வரி கொடுக்க நிர்வாகமில்லையென்று அரசனுக்கு அறிவித்தான். அரசன் 'நீ வரி கொடுக்காவிட்டால் நம்முடைய தேசத்திலிருக்கக் கூடாது' என்றான். எளியவன் “நான் எங்கே போவேன்?” என்று சொல்ல, அரசன் 'சீரங்கப் பட்டணத்துப் போ' என்றான். எளியவன் 'சீரங்கப் பட்டணத்தை உம்முடைய அண்ணன் ஆளுகிறபடியால் நான் அங்கே போகமாட்டேன்' என்று எளியவன் மறுத்துவிட்டான். இப்படிப்பட்ட கொடுங்கோல் மன்னர்களைப் பார்க்கிலும் நாங்கள் பொல்லாதவர்களா?

நியாயாதிபதிகள் முதலிய அதிகாரிகள் பரிதானத்தை அபேக்ஷ¢க்காதபடி அவர்களுக்குத் துரைத்தனத்தார் போதுமான சம்பளங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருந்தும், அந்த அதிகாரிகள் பிரதி வழக்கிலும் உபயவாதிகளிடத்திலும் கைலஞ்சம் வாங்கிக்கொண்டு அதை சீரணிக்கும்பொருட்டு இரு பக்ஷத்தாருக்கும் சிறிது சாதகமும், சிறிது பாதகமும் பண்ணுகிறார்கள். ஒருவனுக்கு முழுதுஞ் சாதகஞ் செய்யக்கூடாத பக்ஷத்தில் அவனிடத்தில் வாங்கின லஞ்சத்தைத் திருப்பிக் கொடாமல் இனிமேல் வரும் வழக்குக்கு அச்சாரமாக வைத்துக் கொள்ளுகிறார்கள். அன்றியும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வருஷத்துக்கு வேண்டிய வஸ்திரங்களை வியாபாரிகள் கொடுக்கிறார்கள்; தானிய தவசங்களைப் பூபாலர்கள் கொடுக்கிறார்கள். அப்படியே உப்பு முதல் கற்பூரம் வரையில் உள்ள பல சரக்குகளையும் பல வியாபாரிகள் இலவசமாகக் கொடுக்கிறார்கள்; நாங்கள் அமாவாசையில் மட்டுந் திருடப்போகிறோம்; அந்த அதிகாரிகள் அகோராத்திரங் கொள்ளையடிக்கிற படியால் அவர்களுடைய கொள்ளைகளுக்கு எங்களுடை கொள்ளைகள் உறை போடக் காணுமா? நாங்கள் திருடப்போன இடத்தில் அகப்பட்டுக் கொண்டு அந்த அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு வரும்போது 'குயவனுக்குப் பல நாள் வேலை; தடியடிக்காரனுக்கு ஒரு நிமிஷ வேலை' என்பது போல், நாங்கள் வெகு காலம் பிரயாசைப் பட்டுத் திருடிவைத்த பொருள்களை அவர்கள் ஒரு நிமிஷத்தில் தட்டிப் பறித்துக் கொள்ளுகிறார்கள். திருடர்கள் இடத்திலும் திருடுகிற திருடர்கள் எப்படிப்பட்ட திருடர்களா யிருக்க வேண்டும்? சில புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்வதினால் தோஷபரிகாரம் ஆவதாகச் சில சமயிகள் சொல்லுகிறார்கள். ஆனால் அதை நாம் திருஷ்டாந்தமாகக் கண்டதில்லை. இந்த அதிகாரிகளுக்கு யார் கொடுக்கிறார்களோ அவர்கள் பெருங் குற்றவாளிகளாயிருந்தாலும் குற்ற நிவர்த்தி அடைகிறார்கள். அவர்களுக்குக் கொடாதவர்கள் மாசற்றவர்களா யிருந்தாலும் குற்றவாளிகள் போலத் தண்டிக்கப் படுகிறார்கள். சில அதிகாரிகள் ஒவ்வொரு வழக்கிலும் லஞ்சம் வாங்கினால் பெயர் கெட்டுப் போகுமென்று பயந்து, தங்கள் கிருகங்களில் நடக்கிற சுபா சுப முதலான விசேஷ தினங்களில் சகல பொருள்களையும் வாங்கிக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய கிருகங்களில் அடிக்கடி கலியாணங்களும் ருது சாந்திகளும் உப நயனங்களும் பிதுர் சிரார்த்தங்களும் வருகிற வழக்கம். ஒவ்வொரு அதிகாரியினுடைய குடும்பத்திலும் நூறு பெயர்களிருந்தால் எத்தனை சுபா சுபங்கள் நடக்குமோ அத்தனை சுபா சுபங்கள் ஒவ்வொருத்தருடைய வீட்டிலும் நடக்கின்றன. இதற்குக் காரணம் வருமானமேயன்றி வேறல்ல. அதிகாரியா யிருந்தாலும் யாராயிருந்தாலும், ஒவ்வொருவனுக்கு ஒரு தகப்பன் மட்டும் இருந்து இறந்து போயிருக்க வேண்டும். அப்படியிருக்க ஒவ்வொரு வருஷத்திலுந் தகப்பனுக்குப் பல சிரார்த்தங்கள் வருகிறது எவ்வளவு ஆச்சரியம்?

இரண்டு பூனைகளின் வியாச்சியத்தைக் குரங்கு எப்படி தீர்த்து விட்டதோ அப்படியே சில நியாயாதிபதிகள் தீர்த்துவிடுகிறார்கள். ஒரு பணியாரத்தைப் பிரித்துக் கொள்ளுகிற விஷயத்தில் இரண்டு பூனைகளுக்குள் விவாதம் நேரிட்டு அதைச் சமபாகமாகப் பிரித்துக் கொடுக்கும்படி அந்தப் பூனைகள் ஒரு குரங்கை வேண்டிக்கொண்டன. அந்தக் குரங்கு அந்தப் பணியாரத்தை இரண்டாகப் பிட்டு ஒரு தராசில் வைத்து நிறுத்தது. ஒரு பக்கத்துத் தட்டுக் கனமாயிருந்தபடியால் அதைச் சமன் செய்வதற்காக அந்தத் தட்டில் இருந்த பணியாரத்தில் ஒரு துண்டைக் குரங்கு வாயினால் கவ்வி விழுங்கிவிட்டது. பிறகு மற்றொரு தட்டுக் கீழே இழுத்தபடியால் அதிலும் ஒரு துண்டைக் குரங்கு வாயினாற் கவ்வித் தின்றுவிட்டது. இதைப் பார்த்த உடனே பூனைகளுக்குப் பயம் உண்டாகி 'ஐயா! நீங்கள் நிறுத்தது போதும்! நாங்கள் திருப்தி ஆகிவிட்டோம்! எங்களுடைய பாகங்களை எங்களுக்குக் கொடுங்கள்!' என்று பிரார்த்தித்துக் கொண்டன. உடனே குரங்கு பூனைகளைப் பார்த்து 'நீங்கள் திருப்தி அடைந்தாலும் நாம் திருப்தி அடையவில்லை. இப்படிப்பட்ட சிக்கலான வியாச்சியத்தை ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரமாகத் தீர்மானிக்கக்கூடாது' என்று சொல்லிக்கொண்டு தராசைத் தூக்கி நிறுத்து நிறுத்துப் பக்ஷணத்தைத் துண்டு துண்டாகக் கடித்து பக்ஷ¢க்க ஆரம்பித்தது. பூனைகள் குரங்கை நோக்கி 'ஓ! நியாயாதிபதியே! இனிமேல் நீங்கள் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம். §க்ஷமமாயிருக்கிற பணியாரத்தையாவது எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்' என்றன. உடனே குரங்கு 'நான் பட்ட சிரமத்துக்குக் கூலி வேண்டாமா? சம்பளம் இல்லாமல் யாராவது உத்தியோகஞ் செய்வார்களா?' என்று சொல்லி மிச்சப் பணியாரத்தையும் பக்ஷ¢த்துவிட்டது. அந்தக் குரங்கு செய்தது போல் விவாதப்படுகிற சொத்தைத் தாங்கள் அபகரித்துக் கொண்டு வழக்காளிக்கு ஒன்றுங் கொடாமல் துரத்திவிடுகிற நியாயாதிபதிகளும் உலகத்தில் இருக்கிறார்களே!

'கல்லுளிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடுபொடி' என்பதுபோல் மாமிச பக்ஷணிகளான சில பெரிய அதிகாரிகள் அவர்களுடைய அதிகார எல்லைக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் போகும்போது அக்கம்பக்கங்களில் உள்ள ஆடு மாடு முதலிய மிருகங்களும், கோழி கொக்கு முதலிய பக்ஷ¢களும் அதமாய் விடுகின்றன. நூறு புலிகள் புறப்பட்டாலும் அத்தனை பிராணிகளை அவ்வளவு சீக்கிரத்தில் பக்ஷ¢யா. நவ தானியங்களும் வைக்கோல் புல் விறகு முதலியவைகளும் பல கிராமங்களிலிருந்து சுமை சுமையாக வருகின்றன. அந்தப் பெரிய அதிகாரிகளுக்கு உபயோகமான சாமான்கள் போக, மீந்தவைகளைச் சில்லரை அதிகாரிகளாகிய துர்த்தேவதைகள் பங்கிட்டுக் கொள்ளுகிறார்கள். பின்னும் அவர்களுக்காகப் பந்தல் அலங்கரிக்கவும், தோரணங்கள் கட்டவும், வாழை கமுகு தென்னை முதலிய விருக்ஷங்களெல்லாம் வெட்டப்படுகின்றன. அவர்களுடைய சாமான்களைக் கொண்டு போவதற்காக ஊரில் உள்ள சகல வண்டிகளும் பலவந்தமாய்ப் பிடிக்கப்படுகின்றன. மேற் சொல்லிய தானியம் முதலியவைகளின் கிரயமும், வண்டி வாடகையும் உடையவர்களுக்குக் கிடைக்கின்றனவா அல்லவாவென்பது கடவுளுக்கு வெளிச்சம்.

பசுவுக்குப் புலியும், கிளிக்குப் பூனையுங் காவல் வைத்ததுபோல், ஜனங்களுக்குப் பாதுகாவலாகச் சில உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய அந்நியார்ஜிதங்கள் வாசாமகோசரமா யிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய செய்கைகளைத் திருடர்களாகிய நாங்கள் வெளிப்படுத்தினால் எங்களைப் போல நன்றி கெட்டவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுடைய சகாயத்தால் நாங்கள் ஜீவிக்கிறோம்; எங்களால் அவர்கள் ஜீவிக்கிறார்கள். அவர்களுக்கு நாங்களே துணை; எங்களுக்கு அவர்கள் துணை. எங்களுடைய அந்தரங்களையெல்லாம் அவர்கள் அறிவார்கள்; அவர்களுடைய அந்தரங்களையெல்லாம் நாங்கள் அறிவோம். எங்களுடைய ரகசியங்களை அவர்களும் வெளியிடார்கள்; அவர்களுடைய ரகசியங்களையும் நாங்களும் பிரசித்தஞ் செய்யோம். அவர்களுடைய கிருபை இல்லாவிட்டால் எங்களில் அநேகர் தூக்கு மரத்தில் மாண்டுபோயிருப்பார்கள். அநேகர் காவற்கூட வாசிகளாயிருப்பார்கள். நாங்கள் திருடுகிற சொத்தில் அவர்களுக்கு ஒரு பங்கு கொடுக்கிறபடியால் அவர்கள் ஒருநாளும் எங்களைக் காட்டிக் கொடார்கள். குற்றம் அற்றவர்களையும் தங்களுக்குக் கொடாதவர்களையும் அவர்கள் பிடிக்கிறதேயன்றி, எங்கள் சோலிக்கு வருகிறதில்லை. ஆகையால் அவர்களுடைய செயல்களை வெளிப்படுத்தாமல் ஆகாயத்தைப் படல் கொண்டு மறைப்பது போல் மறைத்துவிடுகிறேன்.

வஸ்திர வியாபாரிகளுடைய புரட்டுகள் சர்வலோகப் பிரசித்தமானதால், அவைகளை நான் விவரிக்க வேண்டுவதில்லை. அவர்களுடைய வஸ்திரங்களின் இழைகளை எண்ணினாலும் அவர்கள் செய்யும் குத்திரங்களை எண்ணுவது அசாத்தியம். அவர்கள் பழைய ஆடையைப் புதிதாக்கி, வெள்ளையைக் கறுப்பாக்கி, கறுப்பைச் சிவப்பாக்கி இந்திரஜால வித்தை செய்கிறார்கள். நல்ல வஸ்திரத்தைக் காட்டி அதற்குத் தக்க விலை வாங்கிக்கொண்டு, மட்ட வஸ்திரத்தைக் கொடுக்கிறார்கள். ஒரு வஸ்திரத்தை வைத்துக் கொண்டு கோடி வஸ்திரம் என்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு வாங்கின துணியைப் பத்து ரூபாய்க்கு வாங்கினதாகப் பட்டோலை காட்டுகிறார்கள். அவர்களுடைய மோசத்துக்குப் பயந்துகொண்டே ஆடு, மாடு முதலிய மிருகங்களும், பக்ஷ¢களும் நிர்வஸ்திரமாயிருக்கின்றன. ஜைன விக்கிரகம் நிர்வாணமாயிருப்பதற்கும் சிவன் புலித்தோலையும் யானைத்தோலையு் தரித்துக் கொண்டதற்கு அது தான் காரணம்.

இரத்ந வியாபாரிகள் செய்யும் மாறுபாடுகள் அபாரம் அல்லவா? செங்கல்லை மாணிக்கமென்றும், வெண்கல்லை வயிரமென்றும், பசுங்கல்லை மரகதமென்றுஞ் சொல்லி அவர்கள் சகலரையும் ஏமாற்றவில்லையா? அந்தக் கற்களுக்கு மாற்று, உரை, நிறை இல்லாதபடியால் “கடல் மீனுக்கு நுழையனிட்டதே சட்டம்” என்பதுபோல, அந்த வியாபாரிகள் வாய்கொண்டமட்டும் விலை கூறி எத்திப் பறிக்கவில்லையா? சில பொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு கோடி பொடிகளென்று கோடி பொய்கள் சொல்லுகிறார்கள். அந்தக் கற்கள் பிரகாசியாவிட்டால் பாடவேளையில்லை யென்கிறார்கள். அவைகள் ஸ்வயம் பிரகாசம் உள்ளவைகளாயிருந்தால் எந்த வேளையிலும் பிரகாசியாமலிருப்பதற்குக் காரணம் என்ன? பல வியாபாரிகள் கூடி விலை மதிக்கும்போது, அவர்கள் சகலரும் அறிய வாயினாற் பேசிக்கொள்ளாமல் கைகளைத் துணியினால் மறைத்துக்கொண்டு, கைகளாற் பேசுகிறார்கள். அன்றியும் அவர்கள் பேசுவது பரிபாஷையே யல்லாமல் சரியான பாஷையிற் பேசுகிறதில்லை. அந்தக் கற்கள் உலகத்தில் இல்லாமற் போனால் யாருக்கு என்ன நஷ்டஞ் சம்பவிக்கக்கூடும்? அந்தச் செங்கல், வெண்கல், பசுங்கல்லைப் பார்க்கிலும் வீடு கட்ட உதவுகிற செங்கல், வெண்கல், கருங்கல் உலகத்துக்கு முக்கியம் அல்லவா? நிருபயோகமான அந்த ரத்நக் கற்களுக்கு ஜனங்களுடைய அறியாமையினால் மகிமை உண்டானதேயன்றி மற்றப்படி அல்லவே?

தட்டார்களுடைய புரட்டைச் சொல்ல எட்டாறு வாய்கள் இருந்தாலும் போதுமா? ஆயிரம் பேர் கண்ணை விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அத்தனை பெயர்களுடைய கண்களையுங் கட்டிவிட்டு, அரை வராகனெடைப் பொன்னில் கால்வராகனெடைப் பொன்னைத் திருடிக் கொண்டு செம்பைக் கலந்து விடுகிறார்கள். இரும்பு முதலிய உலோகங்களைத் தங்கம் ஆக்குகிற வாதிகளிருப்பதாக உலகத்தார் சொல்லுகிறார்கள். அவர்கள் இந்தத் தட்டார்களேயன்றி வேறொருவரையும் நாம் பிரத்தியக்ஷமாகக் கண்டதில்லை. அவர்கள் திருடித் திருடி எவ்வளவு கைபழகியிருக்கிறார்களென்றால் அவர்கள் சொந்த உபயோகத்துக்காக நகை செய்தாலுங்கூட அதிலுஞ் சிறிது பொன்னைத் திருடிக் கொள்வார்கள். நாம் மலையளவு பொன் கொடுத்தாலும் அதைக் கடுகு அளவாக நிறுத்துக் காட்டுவார்கள். அவர்கள் கடுகு அளவு பொன் கொடுத்தாலும் அதை மலை அளவாக நிறுத்துக் காட்டுவார்கள். அவர்கள் கையிலிருக்கிற பொன் ஆறுமாற்றாயிருந்தாலும் பத்து மாற்றாகக் காட்டுவார்கள். நம்முடைய கையிலிருக்கிற பொன் பத்து மாற்றாயிருந்தாலும் ஆறு மாற்றாக மாற்றுவார்கள். அவர்கள் கையிலிருக்கிற இரும்பையுந் தங்கமாகிக் கொடுப்பார்கள். ஆபரணஞ் செய்கிற விஷயத்தில் தட்டார்கள் செய்யும் கரவடங்களுக்குப் பயந்தே சிவன் சர்ப்பாபரணந்தரித்துக் கொண்டதாக ஒரு புலவர் பாடியிருக்கிறார்.

கட்டளைக் கலித்துறை

ஒட்டாக ஒட்டியுங் காற்பொன்னின் மாப்பொன்னு பாயமதாத்

தட்டா திரான்பணி செய்யா திரான்செம்பொன் மேருவினைக்

கட்டாகக் கட்டிக் கடுவள வாநிறை காட்டவல்ல

தட்டானுக் கஞ்சியல் லோஅணிந் தான்சிவன் சர்ப்பத்தையே.

தட்டார்கள் எட்டு நாளையில் ஒரு நகை செய்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டால், எட்டு வருஷத்திலுங் கொடார்கள். அவர்கள் சொல்லுஞ் சாக்குகளும் போக்குகளும் ஜாலங்களுந் தெரியும் பொருட்டுப் பூர்வீக சங்கராசாரியார் காலத்தில் நடந்த ஒரு விசேஷத்தைத் தெரிவிக்கிறேன். சகல சாஸ்திரங்களிலும் வித்தைகளிலுந் தொழில்களிலும் நிபுணரான அந்த சங்கராசாரியார் பல தொழிலாளிகளும் வந்து தம்மைப் பரீக்ஷ¢க்கும்படி விளம்பரஞ் செய்தார். அந்தப் பிரகாரம் பலரும் வந்து அவரைப் பரீக்ஷ¢த்தது மன்றித் தட்டாரும் அவரைச் சோதிக்க வந்தார்கள். அவர் தட்டார்களைப் பார்த்து எட்டு நாளைக்குப் பிறகு வரும்படி ஆக்ஞாபித்தார். அவர்கள் அந்தப்படி வந்தார்கள். நாலு நாளைக்குப் பிறகு வரும்படி மறுபடியும் உத்தரவு செய்தார். அவர்கள் அந்தப் பிரகாரமும் வந்தார்கள். இரண்டு நாளைக்குப் பிறகு வரும்படி உத்தரவு செய்து அந்தப்படிக்கு வந்து அலைந்தார்கள். பிறகு “நாளைக்கு வாருங்கள்! நாளைக்கு வாருங்கள்!” என்று அநேக மாசக்காலம் அவர்களை அலைக்கழித்தார். இந்தப் பிரகாரம் இழுத்துவிடுவது கம்மாளர்களுடைய வழக்கமானதால் அவர்கள் சங்கராசாரியாரைப் பார்த்து “ஸ்வாமி! எங்களுடைய வித்தை உங்களுக்குப் பூரணமாய் வந்து விட்டது. இனி மேல் உங்களைப் பரீக்ஷ¢க்க வேண்டுவதில்லை” என்று சொல்லி யோக்கியப் பத்திரிகை கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். வஸ்திர வியாபாரமும், ரத்ந வியாபாரமும், தட்டார் தொழிலும் உலகத்தில் நடப்பது ஸ்திரீகள் பொருட்டாகவே யல்லாமல் மற்றப்படி அல்ல. உலகத்தில் ஸ்திரீகள் இல்லாமலிருந்தால் அந்த வியாபாரிகள் இல்லாமற் போனால் ஸ்திரீகளுடைய ஜபம் நடக்குமா?

அரசர்கள் தேசங்களைத் திருடுகிறதுபோலப் பெரிய பெரிய மிராஸ்தார்கள் தங்களுக்கு அடுத்த சின்ன மிராஸ்தார்களுடைய நிலங்களைக் கொஞ்சங் கொஞ்சமாய்த் திருடிச் சேர்த்துக் கொள்கிறார்களே! இந்த ஸ்தாவரத் திருட்டைப் பார்க்கிலும் எங்களுடைய ஜங்கமத் திருட்டு மீசரமா?

நான் இது வரையில் மனுஷர்களுடைய சொத்தைத் திருடுகிற திருடர்களைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். தெய்வ சொத்தைத் திருடுகிற திருடர்கள் எத்தனையோ பெயர்கள் இருக்கிறார்கள். தேவாலயம், தர்ம சத்திரம் முதலியவைகளின் விசாரணைக் கர்த்தர்களும், மற்ற உத்தியோகஸ்தர்களும் தினந்தோறும் அடிக்கிற கொள்ளைகள் எண்ணித் தொலையுமா? ஏட்டில் அடங்குமா? இப்படியாக உலகத்தில் எண்ணிக்கை யில்லாத பகற் கொள்ளைக்காரர்கள் இருக்க அவர்களையெல்லாந் தண்டிக்காமல் விட்டு விட்டுத் தரித்திரத்தின் கொடுமையினால் திருடப் புகுந்த என் மேலே தாங்கள் குற்றம் பாரிப்பது தர்மமா?” என்றான். இதைக் கேட்டவுடனே தேவராஜப் பிள்ளை அந்தத் திருடனுடைய குடும்ப ஸ்திதியைப் பற்றியும், அவனுடைய யோக்கியதையைப் பற்றியும் பல பெயர்களை விசாரித்தார். அவனுடைய குடும்ப விஷயத்தைப் பற்றி அவன் சொன்னதெல்லாம் வாஸ்தவமென்றும் தெரிந்து கொண்டு அவனைப் பார்த்துச் சொல்லுகிறார்: “நீ குற்றத்தை ஒப்புக்கொள்ளுகிறபடியால் உன்னைத் தண்டிக்காமல் விடுவது நியாயப் பிரமாணத்துக்குச் சரியாயிராது. ஆயினும் நீ செய்த குற்றத்தின் பளுவைக் குறைக்கும்படியான சில சாதகங்கள் உன் பக்ஷத்தில் இருக்கிறபடியால் ஒரு மாசமட்டும் நீ வெறுங்காவலிலிருக்கும்படி அற்பமாகத் தீர்மானிக்கிறோம். யுபல நாளைத் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ரு என்கிற பழமொழிப்படி நீ சொன்ன பகற் கொள்ளைக்காரர்கள் ஒரு நாள் அகப்பட்டுத் தண்டிக்கப் படுவார்கள். அவர்களுடைய தண்டனை உன்னுடைய தண்டனையைப் போல அற்பமாயிராது” என்றார். அந்தத் திருடன் காவற்கூடத்திலிருந்து விடுதலையான உடனே தேவராஜப் பிள்ளை அவனுக்கு ஒரு கிராமச் சேவகஞ் செய்துகொடுத்து அவன் பிரமாணிக்கமாய் வேலை பார்த்து வருகிறான். அந்தத் திருடனுக்கு முடிவில் நல்ல கதி வாய்த்தது போல் அவன் சொன்ன பகற்கொள்ளைக் காரர்களுக்கும் முடிவில் நல்ல கதி வாய்க்குமா என்பது சந்தோகாஸ்பதமா யிருக்கிறது.
--------------

அத்தியாயம் -33
ஆதியூரில் அருமைநாத பிள்ளை என்பவன் ஒருவன் இருந்தான். அவன் சனியனை விலைக்கு வாங்குவது போல் ஏக காலத்தில் இரண்டு தாரங்களை மணஞ் செய்துகொண்டான். அந்தத் தாரங்கள் இருவருஞ் சகோதரிகள். கலியாண் நடந்த மறு வருஷத்தில் மூத்தவள் ஒரு பெண் குழந்தை பெற்றாள். அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாசத்துக்குப் பின்பு இளைய தாரமும் ஒரு புத்திரியைப் பெற்றாள். மூத்த தாரத்தின் மகள் பேர் குணபூஷணி. இளைய தாரத்தின் மகள் பெயர் மோகனமாலை. அந்தப் பெண்களுக்குப் பத்து வயசு நடக்கும்போது மூத்த தாரம் இறந்து அவளுடைய முன்னோர்கள் போன இடத்துக்குப் போய்விட்டாள். அவள் இறந்துபோன பிறகு அவளுடைய மகளான குணபூஷணி இடத்தில் கஷ்டகாலம் வந்து இஷ்டஞ் செய்ய ஆரம்பித்தது. சிட்டுக் குருவி மேல் பாரதம் தொடுத்தது போல சிறிய தாயாரும் அவளுடைய மகளும் குணபூஷணியை எப்போதும் சிறுமைப் படுத்தினார்கள். மோகன மாலை கட்டிக் கழித்த பழந்துணிகளைக் கட்டிக் கொள்ளுகிறதே யல்லாது, குண பூஷணி நல்ல வஸ்திரங்களைக் கட்டி அறியாள். எல்லாருஞ் சாப்பிட்டு மிஞ்சின உச்சிட்டத்தை உண்கிறதே தவிர, நல்ல சாதம் அருந்தி அறியாள். வருஷத்துக்கு ஒரு தரம் தீபாவளியில் அவள் தேகத்தில் எண்ணெய் பட்டிருக்குமோ என்னவோ அதுவும் சந்தேகம். சிட்டுக் குருவியின் தலை மேலே பனங்காயைக் கட்டினது போல, வீட்டு வேலைகளையெல்லாம் அவளே செய்யும்படி அவள் மேல் சுமத்தினார்கள். சிறிய தாயாருக்கும் அவளுடைய மகளுக்கும் வேலை யென்னவென்றால் குணபூஷணியைத் திட்டுகிறதும் அடிக்கிறதும் கொடுமை செய்கிறதேயன்றி வேறொரு வேலையும் இல்லை. அவர்கள் என்ன கொடுமை செய்தாலும் பொறுமையை அநுசரித்து வந்தாள். அவளுடைய தகப்பன் இளைய தாரத்தினுடைய கோளைக் கேட்டுக் கொண்டு மகளுக்கு நடக்கிற அநியாயங்களை விசாரிக்காமல் பாராமுகமாயிருந்து விட்டான். அதனால் அருமைநாத பிள்ளைக்கு எருமைநாதப் பிள்ளை யென்கிற பட்டப் பெயர் கிடைத்தது.

புஷ்பத்தை மறைத்து வைத்தாலும் அதனுடைய வாசனை காட்டிவிடுவது போல, குணபூஷணி குளிக்காமலும் முழுகாமலும், நல்ல ஆடையாபரணங்களைத் தரியாமலும் இருந்த போதிலும் அவளுடைய அழகுங் குணமும் ஊரெங்கும் பிரகாசித்தபடியால், அவளை மணங் செய்ய விரும்பாதவர்கள் இல்லை. விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டினதுபோல, மோகனமாலை சர்வாபரணபூஷிதையா யிருந்தாலும் அவளுடைய துர்க்குணம் யாவருக்கும் பிரசித்தமான படியால் அவளை மணஞ்செய்ய விரும்புவார்களும் இல்லை. அதனால் அவளுடைய தாயாருக்கு அதிக பொறாமையும் மாற்சரியமும் உண்டாகி குணபூஷணி மேலே இல்லாத தோஷங்களைக் கற்பித்து அவளை ஒருவருங் கொள்ளாதபடி விகாதஞ் செய்து வந்தாள். நாகப்பட்டணத்திலிருக்கும் நல்லதம்பி பிள்ளையென்று பெயர் கொண்ட ஒரு கனவானுக்குப் பென் விசாரிக்கிறதற்காகச் சில ஸ்திரீகள் ஆதியூருக்கு வந்தார்கள். அவர் அருமைநாத பிள்ளைக்கு இரண்டு புத்திரிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு அந்தப் பெண்களுடைய குணத்தைத் தாங்களே நேராக அறிந்து கொள்ளும்பொருட்டுச் சில நாள் வரைக்கும் அருமநாதப் பிள்ளை வீட்டிலே தங்கியிருந்தார்கள். அவர்கள் குணபூஷணியே யோக்கியமான பெண்ணென்று அதி சீக்கிரத்தில் கண்டுபிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய அபிப்பிராயம் சிறிய தாயாருக்குத் தெரிந்து, அந்த நல்ல அபிப்பிராயத்தைக் கெடுக்கும்பொருட்டு அவள் குணபூஷணி மேலே பிரமாண்டமான ஒரு திருட்டுக் குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தாள். பெண் பார்க்க வந்திருந்த அந்த ஸ்திரீகளுடைய பணப்பையைச் சிறிய தாயார் திருடி ஒருவருக்குந் தெரியாமல் குணபூஷணியினுடைய பெட்டியில் வைத்து மறைத்து விட்டாள். அந்த ஸ்திரீகள் பணப்பையைக் காணோமென்று தேடினபோது, எல்லோருடைய பெட்டிகளையுஞ் சோதிக்கும்படி சிறிய தாயாரே அவர்களைத் தூண்டிவிட்டாள். ஒருவருடைய பெட்டியிலும் பணப்பை அகப்படாமல் குணபூஷணியின் பெட்டியில் அகப்பட்டபோது அவள் திடுக்கிட்டு நடுநடுங்கித் தான் திருடவேயில்லை யென்று சொல்லி அழுதாள். உடனே அவளுடைய சிறிய தாயார் அவளைப் பார்த்து “நீலிக்குக் கண்ணீர் நிலைமையிலே என்பது போல் ஏன் கள்ள அழுகை அழுகிறாய்? நீ திருடாவிட்டால் அந்தப் பை உன் பெட்டியில் எப்படி வந்திருக்கக் கூடும்? கையுங் களவுமாக அகப்பட்டுக் கொண்ட பிறகு கூட ஏன் பாசாங்கு பண்ணுகிறாய்? நீ எப்போதும் பசப்புக் கள்ளி யென்பது எனக்குத் தெரியாதா?” என்றாள். சிறிய தாயாருடைய வார்த்தையை மறுத்துப் பேசத் துணியாமல் குணபூஷணி அழுதுகொண்டு மௌனமாயிருந்தாள். அவளுடைய முகத் தோற்றத்தினாலும் நிஷ்கபடமான வார்த்தைகளாலும் அவள் மாசற்றவளென்று ஊரிலிருந்து வந்த ஸ்திரீகள் அபிப்பிராயப் பட்டாலும் அவளுடைய சிறிய தாயாரே அவள் மேலே தோஷாரோபணம் பண்ணினபடியால் அவள் தோஷக்கிரஸ்தி யென்று அவர்களும் நினைக்கும்படியா யிருந்தது. ஆகையால் அவர்கள் ஆதியிற் கொண்ட கருத்தை மாற்றி மோகனமாலையைக் கன்னிகாதானஞ் செய்து கொடுக்க வேண்டுமென்று அவளுடைய தாய் தந்தையரைப் பிரார்த்தித்தார்கள். அதற்கு அவர்கள் நிரா§க்ஷபமாகச் சம்மதித்தார்கள். மணமகனுடைய ஊர் தூரமானதால் ஒரு மாசத்துக்குப் பிறகு விவாகஞ் செய்கிறதென்று முகூர்த்த தினமுங் குறிக்கப் பட்டது. அந்த ஸ்திரீகள் நாகப்பட்டணத்துப் போய் மணமகன் முதலானவர்களை அழைத்துக் கொண்டு முகூர்த்த நாளைக்கு முன் வந்து சேர்வதாகச் செலவு பெற்றுக்கொண்டு போய் விட்டார்கள். கலியாணத்துக்கு வேண்டிய ஆடையாபரணங்கள் சாமக்கிரியைகள் முதலியவைகளை யெல்லாம் சேகரஞ் செய்துகொண்டு மாப்பிள்ளை முதலானவர்கள் நாகப்பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் சில நாள் யாத்திரை செய்த பின்பு ஒரு நாள் காட்டின் மத்தியில் போகும்போது, திருடர்கள் வந்து வளைத்துக்கொண்டு அவர்கள் கையிலிருந்த சகல சொத்துக்களையும் பறித்துக் கொண்டு ஓடிப் போய்விட்டார்கள். மாப்பிளை முதலானவர்களுக்கு இடுப்பில் கட்டிக் கொள்வதற்குக் கூட வஸ்திரமில்லாமற் சகல சொத்துக்களையும் இழந்து கோவணாண்டிகளாகி விட்டதால் அந்தக் கோலத்தோடு கலியாண வீட்டுக்குப் போக வெட்கப்பட்டுக் கொண்டு அவர்கள் நாகப்பட்டணத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். கள்ளர்களே என்றால் அவர்கள் கொள்ளையடித்த ஆஸ்திகளைப் பிதுரார்ஜிதம் போல் பாகித்துக் கொண்டார்கள். மாப்பிளையினுடைய வேலைக்காரனே திருடர்களுக்கு உளவாயிருந்து திருடும்படி செய்வித்ததால், அவன் மூலமாகப் பெண் வீட்டுக் காரர்களுடைய ஊர், பெயர் முதலான சகல விவரங்களையும் திருடர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களில் “அஞ்சாத சிங்கம்” என்று பெயர் கொண்ட ஒரு சோரன் மற்றவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான்:-

“அண்ணன்மார்களே! கலியாணக்காரர்களிடத்தில் அடிக்கிற கொள்ளையேயல்லாமல் மற்றக் கொள்ளைகளெல்லாம் கொள்ளையே. இந்த ஒரு திருட்டில் நமக்கு எவ்வளவோ திரவியங்கள் கிடைத்தன. நாம் பத்து மாசம் வரைக்கும் ஓயாமல் திருடினாலும் இவ்வளவு சொத்துகள் நமக்குக் கிடைக்குமா? நாம் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடத்தில் திருடிக் கொண்டதால் இனி மேல் பெண் வீட்டுக்காரகளிடத்திலும் திருடுவது நியாயமாயிருக்கின்றது. பெண் வீட்டுக்காரர்களுடைய ஊர், பெயர் முதலான சகல விவரங்களும், முகூர்த்த தினமும் உளவன் மூலமாக நாம் அறிந்து கொண்டோம். அவர்களுக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இதற்கு முன் பரிச்சயமில்லை யென்பதும் நன்றாய் விளங்குகின்றது. ஆகையால் நாம் பெண் வீட்டுக்குப் போய் நாமே நாகப்பட்டணத்திலிருந்து வந்த மாப்பிள்ளை முதலானவர்களென்று பாசாங்கு பண்ணி அந்தப் பெண்ணுக்குத் தாலி கட்டி ஒரு ராத்திரி மட்டும் அங்கே தங்கியிருந்து அகப்பட் சொத்துக்களை யெல்லாங் கவர்ந்துகொண்டு ஓடிவந்து விடலாமென்று யோசிக்கிறேன்” என்றான். இதைக் கேட்டவுடனே மற்றவர்கள் அவனைப் பார்த்து “தம்பீ! உன்னுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம். ராஜரீக தந்திர நிபுணர்களுக்குக் கூட உன்னுடைய புத்தியும் யுக்தியும் வருமா? அஞ்சாத சிங்கம் என்ற பெயர் உனக்கே தகும். நீ சொல்லுகிற காரியம் நிறைவேறி நம்முடைய எண்ணம் முற்றினால் இராமாயணம் மகாபாரதம் முதலிய மகா காவியங்கள் போல் உன் சரித்திரத்தையும் வித்வான்களைக் கொண்டு பாடுவித்து உன்னைத் தெய்வீகம் ஆக்கிவிடச் சித்தமாயிருக்கிறோம்” என்றார்கள். ஆனால் சில திருடர்கள் அஞ்சாத சிங்கத்தின் அபிப்பிராயத்தை அங்கீகரிக்காமல் அவர்களுடைய பாகச் சொத்தை வாங்கிக் கொண்டு தங்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். அஞ்சாத சிங்கம் உள்பட ஆறு திருடர்கள் மட்டும் பெண்வீட்டுக்குப் போகவும் நினைத்த காரியத்தை முடிக்கவும் துணிந்தார்கள்.

அஞ்சாத சிங்கம் முகவசீகரம் உள்ளவனாகவும், பராக்கிரமசாலியாகவும் இருந்தபடியால் அவன் மணமகன் போல வேஷம் பூண்டுகொண்டான். மற்றவர்கள் எல்லாரும் அவனுடன் கூடக் கலியாணத்துக்கு வந்த பந்துக்கள் போலப் புருஷீகரித்தார்கள். அவர்கள் எல்லாரும் புறப்பட்டு முகூர்த்த தினத்துக்கு முந்தின நாள் இரவில் பெண் வீட்டிற் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் யாரென்று அருமைநாத பிள்ளையும் அவனுடைய மனைவியும் வினவ, அவர்களைப் பார்த்து அஞ்சாத சிங்கம் சொல்லுகிறான்:- நாகப்பட்டணத்திலிருக்கும் நல்லதம்பி பிள்ளை நான் தான்; உங்களுடைய உத்தரவுப்படி புருஷர்களும் ஸ்திரீகளும் உட்பட நாங்கள் இருபது பேர் புறப்பட்டு வழியில் வரும்போது திருடர்கள் வந்து வளைத்துக்கொண்டு எங்கள் கைவசமாயிருந்த சகல சொத்துக்களையுங் கொள்ளை யடித்துக் கொண்டு போய்விட்டார்கள். என்னுடைய இடுப்பிலிருக்கிற பாடி வஸ்திரந் தவிர மற்ற வஸ்திராபரணங்களையெல்லாங் கொள்ளை போய்விட்டன. எங்களுடன் கூட வந்த மற்றப் புருஷர்களும் ஸ்திரீ ஜனங்களும் இடுப்பிற் கட்டிக் கொள்ளக் கூடத் தகுந்த வஸ்திரம் இல்லாமையினால் கலியாண வீட்டுக்கு வர வெட்கப்பட்டு நாகப்பட்டணத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். நீங்கள் குறித்த முகூர்த்தம் தவறிப் போகாமலிருக்க வேண்டியதற்காக நாங்கள் ஆறு பேர் மட்டும் ஊருக்குத் திரும்பாமல் உங்களிடம் வந்து சேர்ந்தோம்” என்றான். இதைக் கேட்டவுடனே அருமைநாதப் பிள்ளையும் மற்றவர்களும் அவன் உண்மையான மாப்பிள்ளையென்றும் அவன் சொன்னதெல்லாம் யதார்த்தமென்றும் நம்பிக்கை கொண்டார்கள். மாப்பிள்ளையைப் பார்த்தவுடனே மாமனாருக்கு ஒரு புஜம் இரு புஜமாகவும் இரு புஜம் இருபத்து நாலு புஜமாகவும் ஆயின. மாமியார் எட்டி எட்டிப் பார்த்து மனம் பூரித்தாள். மணமகள் அடுத்த அறையிலிருந்துகொண்டு மணமகனுடைய இனிமையான குரலைக் கேட்டுக் கேட்டு மன மகிழ்ந்தாள். அருமைநாத பிள்ளை அந்தத் திருட்டு மாப்பிள்ளையை நோக்கிச் சொல்லுகிறான்:- “என்னுடைய அருமையான மாப்பிள்ளைத் துரையே! உம்மைக் கண்டேன்; கண் குளிர்ந்தேன்; உம்மைத் தரிசித்தது எனக்கு நேத்திரோற்சவஞ் செய்தது போலிருக்கின்றது. என்னுடைய மகளுடைய பாக்கியமே பாக்கியம்! ரதிக்கு மன்மதன் வாய்த்தது போலவும், இந்திராணிக்கு இந்திரன் வாய்த்தது போலவும், என்னுடைய மகளுக்கு மணவாளனாக வந்து வாய்த்தீர்! இப்படிப்பட்ட லோகோத்தரமான மாப்பிள்ளை யாருக்காவது கிடைக்குமா? திருடர்களிடத்திலே பறி கொடுத்ததைப் பற்றி நீர் எவ்வளவுஞ் சிந்திக்க வேண்டாம். இந்த நிமிஷ முதல் என்னுடைய கிருகமும் திரவியங்களும் என்னுடைய மகளும் உம்முடைய ஆதீனந்தான்” என்று சொல்லிச் சொல்லி நடுச்சாமம் வரைக்கும் மாப்பிள்ளையைப் புகழ்ந்து கொண்டிருந்தான். மறு நாள் உதய முகூர்த்தமானதால் நடுச் சாமந் துவக்கி மணமகளையும் மணமகனையும் அலங்காரஞ் செய்தார்கள். விடிந்த உடனே மணமகன் மணக்கோலத்துடன் கல்யாண பீடத்தில் உட்கார்ந்து பெண்ணுக்குத் திருமாங்கலியமுஞ் சூட்டினான். வேத விதிப்படி நடக்கவேண்டிய மற்றக் கிரியாசாரங்களும் கிரமப்படி நடந்தன. இவ்வாறாகத் திருட்டு மாப்பிள்ளைக்கும் மோகனமாலைக்கும் விவாகம் நிறைவேறிய பின்பு, நாகப்பட்டணத்திலிருந்து உண்மையான மாப்பிள்ளையாகிய நல்லதம்பி பிள்ளையும் அவனுக்குச் சொந்தமான சில புருஷர்களும் வந்து கலியாண வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் ஒருவருக்கும் முகப்பழக்கமில்லாதவர்களான படியால் அவர்கள் யாரென்று அருமைநாத பிள்ளை வினவினான். உடனே நல்லதம்பி பிள்ளை தான் இன்னானென்று தெரிவித்ததுந் தவிரத் தானும் மற்றவர்களும் புறப்பட்டு மார்க்கத்தில் வரும்போது கொள்ளை நடந்ததும், தாங்கள் ஊருக்குத் திரும்பிப் போய்ச் சாமான்கள் சேகரித்துக் கொண்டு வந்ததும் முதலான விவரங்களையும் தெரிவித்தான். இதைக் கேட்டவுடனே அங்கே இருந்தவர்களெல்லாம் பிரமித்து மயங்கி நின்றார்கள். உடனே திருட்டு மாப்பிள்ளையாகிய அஞ்சாத சிங்கம் அந்த உண்மையான மாப்பிள்ளையைப் பார்த்து “அட! சண்டாளா! என் தகப்பனை உன் தகப்பனென்றும், என் பெயரை உன் பெயரென்றும் சுத்த அபாண்டமான பெயரைச் சொல்லுகிறாயே! உன் தலை மேலே இடி விழாதா? நீயும் இப்போது வந்திருப்பவர்களுந் தானே எங்களை வழிப்பறி செய்தீர்கள். அது போதாதென்று மாப்பிள்ளை வேஷம் போட்டுக் கொண்டு இங்குந் திருட வந்துவிட்டீர்களா? இப்போது நீங்கள் தரித்திருக்கிற ஆடையாபரணங்கள் எங்கள் உடைமைகள் அல்லவா? அவைகளுக்கு வாயிருந்தால் அவைகளே எங்களுக்குச் சாக்ஷ¢ சொல்லுமே!” என்று வெண்கலக் கடையில் மதயானை புகுந்தது போல் மடமடவென்று மூச்சு விடாமல் நெடு நேரம் பேசினான். இதைக் கேட்டவர்கள் அஞ்சாத சிங்கம் தான் உண்மையான மாப்பிள்ளையென்றும் உண்மையான மாப்பிள்ளையைத் திருடனென்றுங் கிராஹியஞ் செய்தார்கள்; அஞ்சாத சிங்கமே தாலி கட்டிக் கலியாணம் முடிந்து போய்விட்டபடியால் எல்லாரும் அவன் பக்ஷத்திலிருந்தார்கள். உண்மையான மாப்பிள்ளையானவன் நெடு நேரம் மலைத்துப் போயிருந்து பிறகு சொல்லுகிறான்:- “கலியாணம் நிறைவேறிக் காரியம் முடிந்து போய் விட்டதால் இனி மேல் நான் இன்னானென்று நிரூபணஞ் செய்வதினால் ஒரு லாபமுமில்லை. ஆயினும் என்னை அவன் திருடனென்று சொல்லுகிறபடியால் அவன் திருடனா நான் திருடனா வென்று ஒரு நிமிஷத்தில் மெய்ப்பிக்கிறேன். இந்த ஊரிலும் எனக்கு அறிமுகமான சில கனவான்களிருக்கிற படியால் அவர்களை அழைத்து வந்து உங்களுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறேன்” என்று சொல்லி அவனும் அவனுடன் கூட வந்தவர்களும் வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் வீண் போக்குச் சொல்லிப் போய்விட்டதாகவும், இனி மேல் திரும்பி வரமாட்டார்களென்றும் பெண் வீட்டார்கள் எண்ணிக் கொண்டார்கள். ஆனால் அஞ்சாத சிங்கம் மட்டும் அஞ்சுகிற சிங்கம் ஆனான். “தன்னெஞ்சறியாத பொய்யில்லை; தாயறியாத சூலில்லை” என்பது போல், தான் செய்த காரியந் தனக்கே தெரியுமானதால் அந்த உண்மையான மாப்பிள்ளை தகுந்த மனுஷர்களைக் கொண்டு வந்து உண்மையை ருசிப்பித்தால் என்ன செய்கிறதென்ற பயங்கரம் அஞ்சாத சிங்கத்தைப் பிடித்துக் கொண்டது. கலியாண வீட்டில் எல்லாரும் பலபல வேலைகளிற் பிரவேசித்துப் பராக்காயிருக்கும் போது அஞ்சாத சிங்கமும் அவனைச் சேர்ந்தவர்களும் அவர்கள் மேலே தரித்திருந்த விலை மதிக்கக்கூடாத வஸ்திர பூஷணாதிகளுடன் அற்ப சங்கைக்குப் போகிறவர்கள் போற் கொல்லைத் தோட்டத்துக்குள் நுழைந்து சுவரேறிக் குதித்து சமீபத்திலிருக்கிற மலைகள் சூழ்ந்த காட்டுக்குள்ளே நுழைந்து ஒளிந்துகொண்டார்கள்.

சாக்ஷ¢ கொண்டுவரப் போன நல்லதம்பி பிள்ளை, சில பெரிய மனுஷர்களை அழைத்துக்கொண்டு கலியாண வீட்டுக்கு வந்தான். அவர்கள் அருமைநாத பிள்ளைக்கு உண்மையைத் தெரிவித்ததும் தவிர “மணமகளுக்குத் தாலி கட்டின மாப்பிள்ளை எங்கே?” என்று வினவினார்கள். உடனே மாப்பிளையைத் தேட ஆரம்பித்தார்கள். அநுமார் இலங்கையிலே சீதையைத் தேடினதுபோல் கோட்டைகள் கொத்தளங்கள் மூலைகள் முடுக்குகள் சந்துகள் பொந்துகள் கோயில்கள் குளங்கள் தெருக்கள் திண்ணைகள் தோட்டங்கள் துரவுகள் எங்கும் தேடிச் சல்லடை போட்டுச் சலித்தார்கள். மாப்பிள்ளையும் அகப்படவில்லை. மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்களும் அகப்படவில்லை. “சந்தையில் அடித்ததற்குச் சாக்ஷ¢யா?” என்பதுபோல், அவர்கள் திருடர்களென்பதற்கு அவர்கள் தரித்திருந்த ஆடையாபரணங்களுடன் ஓடிப் போய்விட்டதே பிரத்தியக்ஷ நிதரிசனமானதால் அந்தச் சுப வீடு அசுபவீடாகி, அருமைநாதப் பிள்ளயும் அவனுடைய பெண்சாதி முதலானவர்களும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு குய்யோ முறையோவென்று கதறி அழுதார்கள். இந்தச் சமாசாரங்களெல்லாம் தேவராஜப் பிள்ளை கேள்விப்பட்டு, அவர் என்னையும் கனகசபையையும் அழைத்துக் கொண்டு கலியாணவீட்டுக்குப் போனார். நாங்கள் போகும்போது அருமைநாத பிள்ளை மனைவி பெருஞ்சப்தத்துடன் ஒப்பாரி சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அந்த ஒப்பாரியில் “ அக்காள் மகளை அநியாயஞ் செய்தேனே! பையை எடுத்தேன்! பழியவற்மேற் போட்டேனே! ஐயையோ! தெய்வமே! அத்தனையும் வீணாச்சே!” என்று சொல்லி அழுதாள்.

தேவராஜப் பிள்ளை அங்கேயிருந்தவர்களைப் பார்த்து “அந்த ஸ்திரீ அவ்வகையாக ஒப்பாரி சொல்லி அழவேண்டிய காரணம் என்ன?” என்று விசாரித்தார். உடனே அவர்கள் அக்காள் மகளுக்கு அவள் செய்த கொடுமைகளைத் தேவராஜப் பிள்ளைக்கு ரகசியமாகத் தெரிவித்தார்கள். “பையை எடுத்தேனே பழியவற்மேற் போட்டேனே!” என்றதற்குப் பயன் என்னவென்று மறுபடியும் தேவராஜப் பிள்ளை வினவினார். உடனே நாகப்பட்டணத்திலிருந்து வந்த நல்லதம்பி பிள்ளை தேவராஜப் பிள்ளையை நோக்கிச் சொல்லுகிறான்:- “ ஐயா! போன மாசத் துவக்கத்தில் எனக்குப் பெண் விசாரிக்கிறதற்காக என் தாய் முதலான ஸ்திரீகள் இந்த ஊருக்கு வந்தபோது இந்த வீட்டில் இரண்டு பெண்களிருப்பதாகக் கேள்விப்பட்டு அந்தப் பெண்களுடைய குணங்களை அனுபவ சித்தியாக அறியும்பொருட்டு இந்த வீட்டில் சில நாள் தங்கியிருந்தார்கள்; குணபூஷணி யென்ற பெண்ணே அவர்களுடைய கருத்துக்கு இசைந்ததாயிருந்ததால், அந்தப் பெண்ணை எனக்காகக் கேட்கிறதென்று எண்ணங் கொண்டிருக்கையில், அவர்களுடைய பணப் பை அகஸ்மாத்தாய்க் காணாமற் போய்விட்டது. எல்லாருடைய பெட்டிகளையுஞ் சோதித்தபோது குணபூஷணியின் பெட்டியிலிருந்து அந்தப் பணப்பை அகப்பட்டது. அந்தப் பெண் மேலே என் தாயாருக்கு எவ்வளவுஞ் சந்தேகமில்லாதிருந்த போதிலும், அவளுடைய சிறிய தாயாரே அவள் மேலே குற்றஞ் சாட்டினபடியால் என் தாயார் ஆதியிற் கொண்ட கருத்தை மாற்றி, மோகனமாலை என்கிற பெண்ணை எனக்காகக் கேட்டு நிச்சயார்த்தஞ் செய்து வந்தார்கள். இந்தச் சங்கதிகளெல்லாம் என் தாயார் மூலமாக நான் கேள்விப்பட்டேன். இப்போது அந்த ஒப்பாரியின் கருத்தை யோசிக்குமிடத்தில் சிறிய தாயாரே பையைத் திருடிக் குணபூஷணியின் பெட்டியில் வைத்து அவள் மேலே பழி போட்டதாகத் தோன்றுகிறது” என்றான். தேவராஜப் பிள்ளைக்கும், எனக்கும், மற்றவர்களுக்கும் அப்படியே அபிப்பிராயம் ஆயிற்று. தேவராஜப் பிள்ளை யாதொரு அக்கிரமத்தைப் பற்றிக் கேள்விப் பட்டால் உடனே அதற்குப் பரிகாரஞ் செய்யவேண்டுமென்ற கவலையுள்ளவரானதால், குணபூஷணிக்கும் நாகப்பட்டணத்திலிருந்து வந்த மாப்பிள்ளைக்கும் விவாகஞ் செய்விக்க வேண்டுமென்கிற இச்சையுடையவரானார். அவருடைய கருத்துக்கு எல்லாரும் இசைந்தபடியால் அவருங்கூட இருந்து அந்தப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்பிரமாகக் கலியாணம் நடப்பித்தார். குணபூஷணி அந்தக் கலியாணத்தில் சந்தோஷமாயிராமல் தன்னுடைய தங்கைக்கு நேரிட்ட அவமானத்தை நினைத்து நினைத்துப் பொருமிக் கொண்டிருந்தாள். இதுவும் அவளுடைய கீர்த்திப் பிரதாபத்தை மென்மேலும் விளங்கச்செய்தது. திருடன் அவகடமாய் வந்து மோகனமாலைக்குத் தாலி கட்டினது செல்லாதென்றும், அவளை வேறு யாருக்காவது பாணிக்கிரகணஞ் செய்து கொடுக்கத் தடையில்லையென்றுஞ் சாஸ்திரந் தெரிந்த பிராமணோத்தமர்கள் வியாக்கியானம் செய்தபோதிலும், அவளுக்குத் திருடன் தாலி கட்டினானென்கிற அபக்யாதி ஊரெங்கும் பிரசித்தமானபடியால், அவளை ஒருவரும் வதுவை செய்யத் துணியவில்லை. குணபூஷணியினுடைய ஓயா முயற்சியினால் நாகப்பட்டணத்தில் மோகனமாலைக்கு ஒரு புருஷன் கிடைத்து விவாகம் நிறைவேறி எல்லாரும் §க்ஷமமாயிருக்கிறார்கள்.
-----------

அத்தியாயம் -34
ஆதியூருக்கு வடக்கே இரு காத வழி தூரத்துக்கு அப்பால் எல்லை காணக்கூடாத விஸ்தீரணமான காடுகளும் மலைகளும் இருந்தன. அவைகளில் யானை, புலி, கரடி, முதலிய துஷ்ட மிருகங்கள் பெருகி அடுத்த கிராமங்களிலிருக்கிற ஜனங்களுக்கும் ஆடு, மாடு முதலியவைகளுக்கும் சேதத்தை உண்டுபண்ணினபடியால், அந்த மிருகங்களை நாசஞ் செய்யும்படி வேட்டைக்காரர்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டுமென்று, பல கிராமத்தார் வந்து தேவராஜப் பிள்ளையிடத்தில் முறையிட்டுக் கொண்டார்கள். உடனே அவர் வேட்டைக்காரர்களை அழைப்பித்து மிருக வேட்டையாடும்படி உத்தரவு கொடுத்தார். நானும் கனகசபையும் வேட்டை பார்க்க விரும்பினமையால் தேவராஜப் பிள்ளை அவருடைய பெரிய பட்டத்து யானையைச் சிங்காரித்து வேட்டையாடுகிற கானகத்திலே கொண்டு போய்ச் சித்தமாய் வைத்திருக்கும்படி உத்தரவு செய்தார். நானும் கனகசபையும் குதிரைகளின் மேலேறிக்கொண்டு கானகத்துக்குப் போனோம். என்னுடைய குதிரை யானை நின்ற இடத்துக்கு முந்திப் போய்விட்டதால் நான் குதிரையினின்று யானைமேல் ஏறி, அம்பாரியில் உட்கார்ந்துகொண்டேன். யானைப்பாகன் கனகசபையைக் காணாமையினால் வழியைப் பார்த்துக்கொண்டு யானைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். வேடர்களால் கலைக்கப்பட்டு ஒரு பெரும்புதரில் பதுங்கிக் கொண்டிருந்த ஒரு புலியானது அந்தப் பாகன் மேலே பாய்ந்து அவனைத் தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. உடனே நான் என் கையிலிருந்த துப்பாக்கியிற் குண்டு போட்டுக் கெட்டித்துப் புலியின் மேலே பிரயோகித்தேன். அந்தக் குண்டுகளையும் புலி லக்ஷ¢யஞ் செய்யாமல், பாகனைத் தூக்கிக்கொண்டு ஓடிற்று. தன் முதுகின் மேலே வெடிச்சத்தங் கேட்டவுடனே யானை வீறிட்டுக் கொண்டு அந்தப் புலியைத் தொடர்ந்து சென்றது. புலி வெகு தூரம் வரையில் ஓடி, யானை நுழையக்கூடாத ஒரு மலைக்குள்ளாக நுழைந்து விட்டது. ஒரு பர்வதம் மலையருவிகளுடன் நடந்து போவது போல அந்த மத யானை மதஜலங்களை ஒழுக விட்டுக் கொண்டு குறுக்கே இருக்கிற மரங்கள், செடிகளை முறித்துத் தள்ளி, இடி முழக்கம் போல சப்தித்துக் கொண்டு கன வேகத்துடன் கானகத்துக்குள்ளாக நடந்து போவதைப் பார்த்த மற்ற யானைகள், புலி, கரடி முதலியவை அஞ்சி நடுநடுங்கி அங்கும் இங்கும் ஓடிப் பதுங்கிக்கொண்டன. இவ்வகையாக அந்த யானை பல நாள் வரைக்கும் என்னைச் சுமந்துகொண்டு அநேக கான்யாறு மலைகளெல்லாந் தாண்ட, வட திசையை நோக்கி ஓடிற்று. அதை வசப்படுத்தித் திருப்ப நான் செய்த பிரயத்தனங்களெல்லாம் வியர்த்தமாய்ப் போய் விட்டன. நான் புலி வாயில் அகப்பட்ட மான் போலவும், பூனை வாயில் அகப்பட்ட கிளி போலவும், யமன் கையில் அகப்பட்ட உயிர் போலவுந் தத்தளித்துத் தடுமாறித் தயங்கினேன். எனக்காகவுங் கனக சபைக்காகவும் பல பாத்திரங்களில் அநேக வகையான பக்ஷணங்களும், பலகாரங்களும், ஜலமும் அம்பாரிக்குள் வைக்கப் பட்டிருந்தாலும் நான் மனக்கலக்கத்தினால் மூன்று நாள் வரைக்கும் ஆகாரத்தை நினைக்கவேயில்லை. பிறகு நான் அந்தப் பக்ஷணத்தையும் ஜலத்தையும் அருந்தி ஒருவாறு பசி தீர்த்துக் கொண்டேன். பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது அந்த ஸ்திதியில் தானும் ஒரு ஆகாரத்தை அபேக்ஷ¢த்தால் எப்படியோ அப்படிப்போல் அந்த மத யானையிடத்தில் அகப்பட்டுக் கொண்டு பரிதபிக்கிற நானும் ஆகாரஞ் செய்தேன்; அந்த யானை ஒரு இடத்திலும் நில்லாமல் அல்லும் பகலுமாக அநேக நாள் ஓடின பிறகு, ஒரு மலையருகில் வந்து சேர்ந்தது. அந்த மலைச் சாரலில் எண்ணிறந்த யானைகள் கூட்டங் கூட்டமாய்ச் சஞ்சரித்துக்கொண்டிருந்தன. அந்த யானைகளில் ஒன்றாவது இந்த யானையைப் போலப் பெருங் காத்திரமுள்ளதா யிருக்கவில்லை. மாமிச பர்வதம் போலவும், இடி முழக்கத்துடன் மேகங் கர்ச்சித்துக்கொண்டு வருவது போலவும் இந்த யானை ஓடி வருவதைக் கண்ட மற்ற யானைகள் கர்ப்பங் கலங்கிக் கிடு கிடாய் மானமாய் அங்குமிங்கும் ஓடிப் போய்விட்டன. இந்த யானை எங்கும் நில்லாமல் ஒரே ஒட்டமாய் அந்த மலைச் சார்பை நாடி வந்ததை யோசிக்குமிடத்தில் ஆதியில் இந்த இடம் அந்த யானை வசித்த இடமாயிருக்கலாமென்று தோன்றிற்று. யானை மலையோரத்தில் சென்று தாண்டி தாண்டித் தன் மேலிருந்த அம்பாரியை மலையுடன் சேர்த்து மோதிற்று. உடனே அந்த அம்பாரி சுக்குசுக்காக உடைந்து அதிலிருந்து நான் வெளிப்பட்டு மலைமேலே தொத்திக் கொண்டேன். நான் அம்பாரியிற் கழற்றி வைத்திருந்த என் தலைமுண்டாசு சட்டை முதலியவைகள் அந்த மலையில் எனக்கு எட்டாத இடத்தில் மாட்டிக் கொண்டன. பிறகு அந்த யானை என் கண்ணுக்கு மறைவாய்ப் போய்விட்டதால் அதன் செய்தி யாதொன்றும் எனக்குத் தெரியாது.

யானைகளுடைய பயத்தினால் நான் கீழே இறங்கக் கூடாமலும், மேலே போவதற்கு மார்க்கம் இல்லாமலும் திரிசங்கு சுவர்க்கம் போலே நான் அந்தரத்தில் அகப்பட்டுக்கொண்டேன். அந்த மலை செங்குத்தாயிராமல், சாய்வாகவும் கரடு முரடாகவும் இருந்தபடியால், நான் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏற ஆரம்பித்தேன். நான் போகிற வழியிலுள்ள மரங்களில் என் பெயரை ஒரு ஆணியினால் வரைந்துகொண்டு போனேன். நான் மலை விருக்ஷங்களின் கனிகளை யுண்டு பசி தீர்த்துக் கொண்டு மலை மேல் ஏற இரண்டு நாட்கள் சென்றன. நான் மலை முகட்டிற் சேர்ந்தவுடனே அந்தப் பக்கத்தில் இறங்குவதற்கு வழியிருக்கிறதோ வென்று ஆராய்ந்தேன். மலைக்கு வடபுறத்தில் மனுஷர்கள் ஏறும்படியாகவும் இறங்கும்படியாகவும் படிகள் வெட்டப் பட்டிருந்தன. அவைகளைப் பார்த்தவுடனே எனக்குச் சந்தோஷம் உண்டாகி அந்தப் படிகளின் வழியாக இறங்க ஆரம்பித்தேன். நான் ஒருநாட் பகலும் இரவும் மெள்ள மெள்ள இறங்கி மறுநாள் காலையில் அடிவாரத்தில் வந்து சேர்ந்தேன். அந்த மலை எவ்வளவு உயரமோ அவ்வளவு உயரமான மதிளும் நாக லோகம் வரையில் செல்லாநின்ற அகழியும் உடைய ஒரு பெரிய நகரம் அந்த மலையடிவாரத்திலிருந்தது. நான் கோட்டை வாசலைக் கடந்து தெரு வழியாய்ப் போகும்போது ஒரு சக்கிலியன் இரண்டு ஜோடுகளைக் கையில் வைத்துக்கொண்டு விலை கூறிக்கொண்டு எதிரே வந்தான். அப்போது வெயில் அதிகரித்து பூமியில் கால் வைக்கக் கூடாமலிருந்தபடியால் அந்த ஜோடுகளை வாங்கி என் காலில் மாட்டிப் பார்த்தேன். அவைகள் என் காலுக்குச் சரியாயிருந்தபடியால் நான் அந்தச் சக்கிலியனைப் பார்த்து “உன்னை நான் சந்தோஷப் படுத்துகிறேன். இந்த ஜோடுகளை விலைக்குக் கொடு” என்றேன். அவன் நல்லதென்று சம்மதித்தான். அந்த ஜோடுகள் அரை வராகன் பெறுமானதால் அந்தத் தொகையைச் சக்கிலியன் கையில் கொடுத்தேன். அவன் “எனக்குச் சந்தோஷம் வரவில்லை” என்றான். நான் மறுபடியும் கால் வராகன் கொடுத்தேன். அவன் அதையும் வாங்கிக் கொண்டு “சந்தோஷம் வரவில்லை” என்றான். நான் பின்னும் சில தொகை கொடுத்தேன். அவன் நான் கொடுப்பதையெல்லாம் வாங்கிக்கொண்டு “சந்தோஷம் இல்லை! சந்தோஷம் இல்லை!” என்றான். நான் அவனைப் பார்த்து “உன்னுடைய ஜோடு எனக்கு வேண்டாம். என்னுடைய பணத்தைக் கொடு” என்றேன். அவன் உடனே என்னைப் பிடித்துக்கொண்டு “என்னைச் சந்தோஷப்படுத்துவதாக ஒப்புக்கொண்ட நீ அப்படிச் செய்யத் தவறிப்போய் விட்டதால் உன்னை நான் சும்மா விடுவேனா? என்னுடைய ஜோட்டை நீ காலில் மாட்டிப் பார்த்தபிறகு அவைகளை நீ கொடுத்தால் நான் வாங்குவேனா? நியாய சபைக்குப் போவோம் வா?” என்று என்னைப் பற்றி இழுத்துக்கொண்டு போனான். அவன் கையைத் திமிறிக்கொண்டு நான் தப்பித்துக் கொள்வது எளிதாயிருந்தாலும் “தன்னூருக்கு யானை அயலூருக்குப் பூனை” என்பது போல் நான் என்னுடைய ஸ்வரூபத்தைக் காட்டாமல் அடக்கிக்கொண்டு போனேன்.

போகும்போது சக்கிலியனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு நிழலுக்காகச் சற்று நேரம் ஒரு திண்ணையில் உட்கார்ந்தேன். அந்தத் திண்ணையிலே சிலர் சூது விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து “பந்தயம் என்ன?” என்று கேட்டேன். அவர்கள் “சும்மா” என்றார்கள். நான் பந்தயமில்லையென்று நினைத்து அவர்களுடன் கூடி ஒரு ஆட்டம் ஆடித் தோற்றுப்போனேன். சக்கிலியன் எனக்கு உத்தரவு கொடுத்த நேரங் கடந்துபோய் விட்டதால் நான் அவனுடன் போவதற்காகத் திண்ணையை விட்டு எழுந்தேன். உடனே அந்தச் சூதாடிகள் “சும்மாவைக் கொடு” என்று என் மடியைப் பிடித்துக்கொண்டார்கள். நான் ஒன்றும் தோன்றாமல் மேலுங் கீழுமாக விழித்தேன். அவர்கள் என்னைப் பார்த்து “நீ பந்தயம் என்னவென்று எங்களைக் கேட்டபோது நாங்கள் சும்மா என்றோம். அதற்கு நீ சம்மதித்துத் தானே எங்களுடன் விளையாடினாய். நீ தோற்றுப் போனதால் நீ ஒப்புக்கொண்டபடி சும்மாவைக் கொடுக்க வேண்டும்” என்றார்கள். நான் “சும்மாவென்பது யாது?” என்றேன். உடனே “நியாய சபைக்கு வா” என்று அவர்கள் ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தார்கள்.

நாங்கள் போகும்போது ஒற்றைக்கண் குருடன் ஒருவன் எங்களுக்கு எதிரே வந்தான். அவன் என்னைக் கண்டவுடனே ஓடி வந்து “அடா! திருடா! நீ போன வருஷத்தில் திருநாளுக்குப் போவதற்காக உன்னுடைய குருட்டுக் கண்ணை எனக்குக் கொடுத்துவிட்டு என்னுடைய நல்ல கண்ணை இரவல் வாங்கிக்கொண்டு போனாயே! கெடுத் தப்பி இத்தனை நாளாகியும் ஏன் என் கண்ணைக் கொடுக்கவில்லை?” என்று அவன் ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக் கொண்டான்.

பிறகு ஒற்றைக் கால் நொண்டியான ஒருவன் வந்து என்னைப் பார்த்து “என்னுடைய நல்ல காலை இரவல் வாங்கிக்கொண்டு நொண்டிக்காலைக் கொடுத்துவிட்டுப் போன நீ இந்நாள் வரையில் அகப்படாமல் மறைந்திருந்தாயே! நியாய சபைக்கு வா” என்று அவனும் என் கையைப் பற்றிக்கொண்டான்.

நாங்கள் போகிற மார்க்கத்தில் தேசாந்திரிகளுக்குச் சமையல் செய்து விற்கிற பாகசாலை ஒன்று இருந்தது. சமையல் செய்கிற இடத்திலிருந்து கம கமவென்று பரிமள வாசனை வந்தபடியால், நான் சற்றுநேரம் சன்னலுக்கு நேரே நின்று அந்த வாசனையை மூக்கினால் இழுத்தேன். உடனே பாகசாலைக்காரன் ஓடி வந்து ன்னைப் பார்த்து “பாகஞ் செய்யப்பட்ட பதார்த்தங்களின் வாசனையை நீ மூக்கினால் கிரகித்துச் சாப்பிட்டபடியால், அந்தப் பதார்த்தங்களுக்கு நீ விலை கொடுக்கவேண்டும்” என்று அவனும் பிடித்துக்கொண்டான்.

நான் மறுபடியும் செல்லும்பொழுது என்னுடைய நிழல் வழியில் நின்றுகொண்டிருந்த ஒரு தாசியின் மேலே பட்ட உடனே, அவள் ஓடிவந்து “நீ என்னை ஆலிங்கனம் செய்தபடியால் அந்த ஆலிங்கனத்துக்காக ஆயிரம் வராகன் கொடுக்கவேண்டும்” அவளும் என்னைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டாள்.

விலங்கை விட்டுத் தொழுவத்தில் மாட்டிக்கொண்டதுபோல், நான் மத யானைக்குத் தப்பிப் பிழைத்து, இந்தக் கொடியர்களிடத்தில் அகப்பட்டுக்கொண்டு பட்ட பாடுகள் ஜன்ம ஜன்மத்துக்குப் போதும். என்னுடைய கழுத்திலும், காதுகளிலும், கைகளிலும் நான் பல ஆபரணங்களைத் தரித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆபரணங்களை இச்சித்தே அவர்கள் என்னை அநியாயஞ் செய்ததாக எனக்கு ஸ்பஷ்டமாய் விளங்கிற்று. அந்த அநியாயக்காரர்களுக்கு நகைகளைக் கொடுத்துத் தயவு சம்பாதிப்பதைப் பார்க்கிலும் நியாயாதிபதிகள் செய்யுந் தீர்மானத்துக்கு உட்படுவது நலமென்று நினைத்து நியாயசபைக்குப் போனேன். நாங்கள் போவதற்கு முந்தி, நியாயசபை கலைந்துபோய்விட்டதால் அன்றைக்கு விசாரணை நடக்கவில்லை. அந்தத் துஷ்டர்கள் என்னைக் காவல் கிடங்கில் ஒப்புவிப்பதற்காகக் கொண்டு போனார்கள். என்னுடைய நகைகளை நானே ஸ்வேச்சையாய்க் கொடுத்து விடுவேனென்று அவர்கள் எதிர்பார்த்தும் நான் கொடுக்கவில்லை. அவர்களும் விடாத கண்டர்கள்; நானுங் கொடாத கண்டனாதலால் அவர்கள் என்னை வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்கள். எப்படியென்றால் மாலைக்காலம் வந்து இருட்டிய உடனே அவர்களுள் ஒருவன் என் பின்னே வந்து என் கண்களைப் பொத்திக்கொண்டான். இருவர் என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் எல்லாரும் என்மேலிருந்த ஆபரணங்களைக் கழற்றி ஆளுக்கொரு ஆபரணமாகத் தரித்துக்கொண்டார்கள். உடனே நான் “கூ! கூ! கொள்ளை யடிக்கிறார்கள்” என்று கூவினேன். அந்தச் சப்தங் கேட்டுக் காவற்சேவகர்கள் வந்து வளைத்துக்கொண்டு நடந்த சங்கதியை விசாரித்தார்கள். நான் “என்னுடைய ஆபரணங்களை அந்தப் படுபாவிகள் கழற்றிக் கொண்டார்கள்” என்று முறையிட்டேன். அவர்கள் என் சொல்லை மறுத்து அந்த ஆபரணங்கள் தங்களுக்குச் சொந்தம் என்று சாதித்தார்கள். அந்தக் காவல் சேவகர்கள் என்னைப் பார்த்து “அந்த நகைகள் உனக்குச் சொந்தமல்லவென்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவர்களுக்குச் சொந்தமல்லவென்று நீ சொல்லுகிறாய். ஆகையால் நீங்கள் இரு தரத்தாரும் அந்த நகைகளுக்குச் சுதந்தரவாளிகள் அல்லவென்பதற்கு உங்களுடைய வாய்ப்பிறப்பே போதுமானதாயிருக்கிறது. நாதன் இல்லாச் சொத்துக்கு நாங்கள் பாத்தியஸ்தர்களானதால், அந்த நகைகள் எங்களுக்குத்தான் சொந்தம்” என்று சொல்லி நகைகளைப் பறித்துக்கொண்டார்கள். பிறகு அந்தச் சக்கிலியன் முதலிய துர்வழக்காளிகள் என் மேலே குற்றஞ்சாட்டி என்னைக் காவலில் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அந்தப் பிரகாரம் சேவகர்கள் என்னைப் பிடித்துக் கை விலங்கு கால் விலங்கு மாட்டி திரௌபதியைத் துகிலுரித்தது போல் என்னுடைய வஸ்திரங்களையும் பிடுங்கிக்கொண்டு கௌபீனத்துடன் என்னைக் காவலில் வைத்துக்கொண்டார்கள். வேலியே பயிரை மேய்ந்தது போல அந்தக் காவல் சேவகருடைய செய்கையே அப்படியிருக்குமானால் என்னைப் பிடித்துக்கொண்டு வந்த சக்கிலியன் முதலானவர்கள் மேல் குறை சொல்ல எனக்கு வாயுமுண்டா?
--------

அத்தியாயம் -35
தாடி பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்டது போல், அந்தக் காவல்வீரர்கள் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:- “இந்த ஊரிலே சில ஆஸ்திவந்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு ஒன்றும் கொடுக்கிறதுமில்லை; குற்றஞ் செய்கிறதுமில்லை. அவர்கள் உன்னிடத்திலே திருடினதுபோற் குற்றஞ் சாட்டிச் சில தடையங்களை அவர்களுடைய வீட்டிற் போட்டு எடுத்து அவர்களை விசாரணைக்குக் கொண்டுவர யோசித்திருக்கிறோம். நீ அந்தத் திருட்டுக் குற்றம் வாஸ்தவந்தானென்று சாக்ஷ¢ சொன்னால், எங்களுக்குக் கிடைக்கிற தொகையில் உனக்கு நாங்கள் பங்கு கொடுக்கிறதுமல்லாமல் உன் மேலே இப்போது வந்திருக்கிற குற்றங்களையும் நிவர்த்தி செய்துவிடுகிறோம்” என்கிறார்கள். அவர்கள் சொன்ன ஆசை வார்த்தைகள் எப்படிப்பட்டவர்களுடைய புத்தியையும் மயக்கக் கூடியவைகளா யிருந்தாலும், என்னுடைய தாய் தகப்பன்மார்கள் எனக்குச் செய்த பால போதத்தினால் நான் துர்ப்புத்திக்கு இடங் கொடாமல், அந்தக் காவற் சேவகர்களை நோக்கி “நீங்கள் சொல்லுகிறபடி பொய்ச்சாக்ஷ¢ சொல்ல நான் அருகனல்ல. நான் ஒரு குற்றமுஞ் செய்யாமலிருக்கும்போதே கடவுள் என்னை இந்த நிலைமையில் விட்டிருக்கிறார். நான் பொய்ச்சாக்ஷ¢ சொல்லவும் வேண்டுமா?” என்றேன். அவர்கள் மறுபடியும் என்னை நோக்கி “நீ பொய்ச்சாக்ஷ¢ சொல்ல அஞ்சுகிறபடியால் வேறொரு காரியஞ் சொல்லுகிறோம். அதையாவது நீ செய்யவேண்டும். எங்களுக்கு வெகு காலமாக உத்தியோகம் உயரவில்லை; ஏனென்றால் நாங்கள் மானத்தைப் பார்க்கிலும் பிராணனைப் பெரியதாக எண்ணுகிற சூரர்களானபடியால் ஒரு வீட்டில் திருடர்கள் பிரவேசித்துத் திருடும்போதாவது, அல்லது வேறு குற்றங்கள் நடக்கும்போதாவது நாங்கள் போய்க் கலந்து கொள்ளுகிறதில்லை. திருடர்கள் சொத்துக்களையெல்லாம் வாரிக்கொண்டு ஓடின பிற்பாடு, நாங்கள் திருட்டு நடந்த இடத்துக்குப் போய் விசாரிக்கிறது வழக்கம். நாங்கள் குற்றம் நடக்கும்போது பிரவேசித்துத் தடுக்காமலும், திருடர்களைக் கையுங் களவுமாய்ப் பிடிக்காமலிருப்பதால், எங்களை உத்தியோகத்தில் உயர்த்தமாட்டோமென்று மேலான அதிகாரிகள் சொல்லுகிறார்கள். ஆகையால் நாங்களே சில திருடர்களைச் சேர்த்து ஒரு வீட்டில் திருடும்படி செய்து அவர்களைக் கையும் மெய்யுமாய்ப் பிடித்ததுபோற் பாவனை செய்ய யோசித்திருக்கிறோம். அவர்களைக் காட்டிக் கொடுக்கிறதில்லை யென்று நாங்கள் வாக்குறுதி செய்தால் அவர்கள் எங்களுடைய வார்த்தையை நம்பி அகத்தியந் திருடச் சம்மதிப்பார்கள். அவர்கள் திருடின பிற்பாடு அவர்களைக் காட்டிக் கொடுத்தால் தோஷம் என்ன? அவர்கள் திருடுகிற சொத்தை நாங்கள் கைப்பற்றிக் கொள்வதுமன்றி எங்களுக்கு உத்தியோகம் உயரவும் ஹேதுவாயிருப்பதால் இரண்டு விதமான அனுகூலங்கள் இருக்கின்றன. சில திருடர்கள் தங்களுடைய கிருகங்களைப் பார்க்கிலும் காராக்கிருகத்தைச் சிரேஷ்டமாக எண்ணி அவ்விடத்துக்கு எப்போது போவோமோ என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருடர்களை ஒரு வீட்டில் திருடும்படி ஏவிப் பிறகு அவர்களைக் காட்டிக்கொடுப்பதினால் அவர்களுக்கு நாங்கள் உபகாரஞ் செய்கிறோமே யன்றித் தீங்கு செய்யவில்லை. நீயும் அந்தத் திருடர்களுடன் சேர்ந்து திருடினால், உன்னை மட்டும் நாங்கள் ஒரு நாளுங் காட்டிக் கொடோம். உன்னைத் தகப்பனாக வைத்துக் கொண்டு நாங்கள் நினைத்த காரியத்தை முடிக்கிறோம்” என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட உடனே நான் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டு, இப்படிப்பட்ட அயோக்கியர்களுடன் சகவாசஞ் செய்யும்படி லபித்ததே யென்று நினத்து நினத்து நெடு நேரம் பெருமூச்செறிந்தேன். அந்த ஊர் தவிர வேறெந்த ஊரிலாவது அப்படிப்பட்ட வார்த்தைகளை யாராவது ொல்லியிருந்தால் அவர்களுடைய நாவு உடனே அறுபட்டிருக்கும். அவர்களுடைய முப்பத்திரண்டு பல்லும் உடைபட்டிருக்கும். ஆயிரம் பாம்புகளுக்குள் ஒரு தேரையைப் போல அகப்பட்டுக்கொண்டு தவிக்கிற நான் என்ன செய்யக் கூடும்? நான் அவர்களைப் பார்த்து “நீங்கள் சொல்லுகிற காரியத்தை நிறைவேற்ற நான் சமர்த்தன் அல்ல. அதற்குத் தகுந்த பக்குவசாலிகள் உங்களுக்கு யதேஷ்டமாக அகப்படுவார்கள். ஆகையால் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றேன். இதனைக் கேட்டவுடனே அந்தப் பாபிஷ்டர்கள் கோபிஷ்டர்களாகி என்மேலே ஏற்பட்டிருக்கிற குற்றங்களை பலப்படுத்தவும், அந்தக் குற்றங்களை அவர்கள் முன்பாக நான் ஒப்புக்கொண்டது போலப் படுமுடிச்சு முடியவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்ப்பது யாருக்கும் அசாத்தியமாகையால், நான் வலையில் அகப்பட்ட மான் போலவும், தூண்டிலில் அகப்பட்ட மீன் போலவும் துடித்துப் பதைத்துத் தடுமாறினேன்.

என்னோடு கூடக் காவற்கூடத்தில் இருந்தவர்களில் ஒருவன் சுமுகனாயும் சரசியாயுங் காணப்பட்ட படியால், நான் அவனைப் பிரத்தியேகமாக அழைத்து இந்த ஊர்ப் பெயரும் அரசன் பெயரும் என்னவென்றும், ராஜரீக தர்மமும் நியாய பரிபாலனமும் எப்படியென்று விசாரித்தேன். அவன் என்னைப் பார்த்து, “நீர் அன்னிய தேசஸ்தர் போற் காணப்படுகின்றது. இந்த ஊருக்கு விக்கிரமபுரி என்று பெயர். பல நாடுகளுக்கு இது ராஜ நகரமாயிருக்கின்றது. இதை ஆண்ட அரசன் இதற்கு இரண்டு வருஷத்துக்கு முன்பு புருஷப் பிரஜையில்லாமல் இறந்துபோனான். அதுமுதற் இந்த ஊர் அரசனில்லாமல் பிராஜாதிபத்தியமா யிருக்கிறது. ஒவ்வொருவனும் தான் தான் பெரியவனென்று தலைக்குத் தலை மூப்பாய்த் தறிதலையாய்த் திரிகிறபடியால் இந்த நாடு தலையில்லாத சரீரம் போலத் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. சூரியன் போனபிற்பாடு துஷ்ட மிருகங்கள் வெளிப்பட்டுச் சஞ்சரிப்பதுபோல, அரசன் போனபிற்பாடு அக்கிரமக்காரர்கள் கிளம்பி ஊரைப் பாழாக்கிவிட்டார்கள். சாதுக்கள் எல்லாரும் ஒடுங்கிப் போனார்கள். வெளியே போனால் மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வருவோமென்கிற நம்பிக்கையில்ல. நம்முடைய பொருளை நாமே சுதந்திரமாக அநுபவிப்போமென்கிற நிச்சயமில்லை. “பாழூருக்கு நரி ராஜா”என்பது பால துஷ்டர்களே சர்வ வியாகபகமாயிருக்கிறபடியால் லக்ஷ¡திபதியா யிருக்கிறவன் ஒரு நிமிஷத்தில் பிக்ஷ¡திபதியாகிறான். பிக்ஷ¡திபதியா யிருக்கிறவன் லக்ஷ¡திபதியாகிறான். இந்த ஊருக்கு விக்கிரமபுரி யென்கிற பெயர் போய் அக்கிரமபுரி யென்கிற பெயர் வந்துவிட்டது. பெரிய அரண் போல மலைகளும் சமுத்திரங்களும் சூழ்ந்திருப்பதால் இந்த ஊருக்கு வெளிச் சத்துருக்கள் ஒருவரும் இல்லை. உள் சத்துருக்களுடைய போராட்டமே பெரிதாயிருக்கின்றது. குடியரசு, கொடிய அரசாகிவிட்டதால் சீக்கிரத்தில் ஒரு அரசனை நியமிக்க வேண்டுமென்பது சாதுக்களுடைய மனோபாவமாயிருக்கின்றது. அப்படிப்பட்ட நல்ல காலம் எப்போது வருமோ தெரியவில்லை” என்றான்.

நான் அந்த மனுஷனைப் பார்த்து “இப்போது அரசனில்லாத படியால் நம்முடைய சங்கதிகளை யார் விசாரிப்பார்கள்?” என்று கேட்டேன். அவன் என்னைப் பார்த்துச் சொல்லுகிறான்:- “அரசனால் நியமிக்கப்பட்ட ஒரு நியாயாதிபதி யிருக்கிறான். அவன் தான் நம்முடைய சங்கதிகளை விசாரிப்பான். அவன் அரசன் உள்ளவரையில் உருத்திராக்ஷப் பூனை வேஷம் போட்டுக்கொண்டு வந்தான். அரசன் இறந்த பிறகு அவனுடைய யதார்த்த சொரூபத்தைக் காட்டி விட்டான். யமனுக்கு தர்மராஜா என்கிற பெயர் வாய்த்தது போல், இவனுக்கு நியாயாதிபதி என்கிற பெயர் கிடைத்திருக்கின்றது. அவன் சிஷ்ட நிக்கிரகமும் துஷ்டாநுக்கிரகமுஞ் செய்கிறதேயன்றி, அவன் துஷ்டநிக்கிரகமும் சிஷ்டாநுக்கிரகமும் செய்கிறதில்லை. ஒரு மாசத்தில் ஒரு தரம் அல்லது இரண்டு தரந்தான் நியாய சபைக்கு வருகிற வழக்கம். அந்த ஒரு நாளையிற் கெடுகிற குடிகள் ஆயிரத்துக்கு அதிகமாயிருக்கலாம். அவன் நியாயா நியாயங்களைப் பார்த்துத் தீர்மானிக்காமல் குருட்டு நியாயமாக ஆறு மாசம் வரையில் வாதிகள் பக்ஷத்திலும், ஆறு மாசம் வரை பிரதிவாதிகள் பக்ஷத்திலும் தீர்மானிக்கிற வழக்கம். இப்போது வாதிகள் பக்ஷந் தீர்மானிக்கிற காலமானபடியால், நம் மேல் வந்திருக்கிற வழக்குகளை நமக்குப் பிரதிகூலமாகவும் வாதிகளுக்கு அநுகூலமாகவும் தீர்ப்பானென்கிறதற்குச் சந்தேகமில்ல. நாம் பிராணனுடன் வீட்டுக்குத் திரும்பிப்போய் நம்முடைய பெண்ஜாதி பிள்ளைகள் முகத்தில் விழிப்போமென்கிற நம்பிக்கையைக் கட்டோடே விட்டுவிட வேண்டியது தான்” என்றான். இதைக் கேட்ட உடனே எனக்கு உண்டான துயரம் எப்படிப்பட்டதென்றால் அதற்கு முன் ஒருநாளும் அப்படிப்பட்ட துயரத்தை நான் அநுபவித்ததில்லை. தேவராஜப் பிள்ளைக்குச் சாக்ஷ¢ சொன்னதற்காக விசாரணைக் கர்த்தர்கள் விதித்த தண்டனைக்குத் தப்பி, மத யானைக்குத் தப்பி, இந்தப் பாவிகளுடைய ஊரிலே இறக்கவா வந்தோமென்று நினைத்து நினைத்து நெஞ்சம் புண்ணாகிக் கலங்கினேன்.

“கண் குருடானாலும் நித்திரைக்குக் குறைவில்லை” என்பது போல் நியாயாதிபதி தினந்தோறும் நியாயசபைக்கு வராவிட்டாலும் அவன் என்றைக்கு வருவானென்கிற நிச்சயந் தெரியாமையினால் நாங்கள் தினந்தோறும் நியாயசபைக்குப் போய் அலைந்து கொண்டு வந்தோம். அவன் இருபது நாளைக்குப் பிறகு ஒரு நாள் விசாரிக்க ஆரம்பித்தான். சக்கிலியனுடைய வழக்கு முதல் வழக்கானதால் நியாயாதிபதி சக்கிலியனுடைய வாதத்தையும் என்னுடைய வாதத்தையும் கேட்டுக்கொண்டு தீர்மானஞ் சொல்லத் தொடங்கினான். நியாயாதிபதி என்னைப் பார்த்து “சக்கிலியனைச் சந்தோஷப்படுத்துவதாக நீ ஒப்புக்கொண்ட படியால் நீ நாளைத் தினம் அருணோதயத்துக்கு முன் அவனை நீ எப்படியாவது சந்தோஷப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் நாளைத்தினம் விடிந்த உடனே அவன் உன்னுடைய பிராணனைக் கேட்டாலும் நீ கொடுக்க வேண்டியதுதான்” என்றான். இதைக் கேட்ட உடனே இடியோசையைக் கேட்ட நாகம் போல் நடுநடுங்கி வேர்த்து விறுவிறுத்துப் போனேன்.

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல, இந்த ஒரு வழக்கின் தீர்மானத்தைக் கொண்டு மற்ற வழக்குகள் எப்படித் தீருமென்பதை நான் அறிந்துகொண்டபடியால் இனி மேல் என் பிராணன் எனக்குச் சொந்தமல்லவென்று நிச்சயித்துக்கொண்டேன். பிராணனை இழப்பது நிச்சயமாயிருந்தாலும், அந்த விபத்தைத் தடுக்கும்பொருட்டு என்ன உபாயஞ் செய்யலாமென்று ஆலோசித்தேன். எனக்கு அண்டசாஸ்திரம் தெரியுமானதால் மறுநாள் சூரிய கிரகணமென்றும் அது பாதாள கிரகணமானதால் நெடுநேரம் வரையில் சூரியன் ஒருவருக்குந் தோன்றாதென்றும் நான் சாஸ்திரத்தினால் அறிந்துகொண்டதும் தவிர, அந்த ஊராருக்குக் கிரகணங் கணிக்கிற முறையே தெரியாதென்றும் தெரிந்துகொண்டேன். நான் அந்த நியாயாதிபதியைப் பார்த்து “நாளையத் தினம் பொழுது விடிகிறதற்குமுன் நான் சக்கிலியனைச் சந்தோஷப் படுத்த வேண்டுமென்று அநீதமாகத் தீர்மானஞ் செய்திருக்கிறீர்கள். நாளைத் தினம் பொழுது விடியாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்றேன். அவன் “நாளைக்குப் பொழுது விடியாதபடி செய்ய உன்னால் ஆகுமா?” என்றான். “என்னால் ஆகுமென்பதும் ஆகாதென்பதும் நாளைத் தினம் பார்த்துக்கொள்ளலாம்” என்றேன்.அவன் கோபத்துடன் என்னை நோக்கி “நீ பொழுது விடியாதபடி செய்தால் நீ சமர்த்தன் தான். நாளைக்கு வக்குப்படி பொழுது விடிந்தால் உனக்கு இறுதி உண்டாகுமென்பது உறுதி தான். இவ்விரண்டில் ஒன்று தெரிந்தபிறகு தான் மற்ற வழக்குகள் விசாரிக்கப்படும்” என்று சொல்லி மூர்க்காவேசத்துடன் வீட்டுக்குப் போய் விட்டான்.

அங்கே இருந்தவர்கள் எல்லாரும் என்னைப் பார்த்து “யானை தன் தலை மேலே தானே மண்ணைப் போட்டுக்கொள்வது போல, நீயே உனக்குத் தீங்கைத் தேடிக்கொண்டாயே! பொழுது விடியாதபடி செய்ய உன்னால் கூடுமா?” என்று என்னத் தூஷித்தார்கள். அநேகர் நான் சொன்னபடி நடந்தாலும் நடக்குமென்று பயந்துகொண்டு அன்று இரா முழுதும் தூங்காமலிருந்ததாகக் கேள்விப்பட்டேன். நானும் அந்த இரா முழுதும் நித்திரை செய்யாமல் மந்திர தந்திரங்கள் செய்வது போல மாமாலம் பண்ணினதுந் தவிர ஒரு வெண்பாவும் பாடிப் பிரசுரஞ் செய்தேன்.

முடியரசன் போனபின்பு மூர்க்கரெல்லாங் கூடிப்
குடியரசென் றோர்பெயரைக் கூறி - நெடிய
பழுதே புரியுமிந்தப் பாழூ ரதனிற்
பொழுதே விடியாமற் போ.

மறு நாள் கிரகணம் பிடித்துக் கொண்டபடியால் வெகுநேரம் வரையிற் பொழுது விடியவே யில்லை. இதைப் பார்த்த உடனே பட்டணம் கிடுகிடுத்துப் போய்விட்டது. அந்த நியாயாதிபதி பொழுது விடியவில்லையென்று தெரிந்த உடனே புறப்பட்டுக் காவற்கூடத்துக்கு ஓடி வந்தான். அவனைக் கண்ட உடனே ஜனங்கள் மண்ணை வாரி இறைத்து “அட பாவி! சண்டாளா! அந்த புண்ணியவானுக்கு விரோதமாகத் தீர்மானஞ் செய்து பொழுது விடியாதபடி பண்ணிவிட்டாயே!” என்று வாயில் வந்தபடி அவனைத் தூஷித்தார்கள். அவன் என்னிடத்தில் வந்து நமஸ்காரஞ் செய்து “சுவாமி! உங்களுடைய மகிமையை அறியாமல் அபராதஞ் செய்துவிட்டேன். சக்கிலியன் பக்கத்தில் நான் தீர்மானத்தை இப்போதே மாற்றி விடுகிறேன். பொழுது விடியும்படி கிருபை செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தான். மற்ற ஜனங்களும் அந்தப் படி கிருபை செய்ய வேண்டும்” என்று என் காலில் விழுந்து கும்பிட்டார்கள். நான் ஜனங்களைப் பார்த்து “பொழுது விடிந்தவுடனே நீங்கள் குடியரசனை நீக்கி ஒரு அரசனை நியமித்துக் கொள்வதாக எனக்கு வாக்குத்தத்தஞ் செய்தால், நான் பொழுது விடியும்படி செய்கிறேன்” என்றேன். அவர்கள் அந்தப்படி வாக்குத்தத்தஞ் செய்தார்கள். கிரகணம் விடுகிற சமயம் நெருங்கி விட்டதால் இனி மேல் நான் தாமதஞ் செய்தால் என்னையல்லாமற் பொழுது விடிந்து போகுமென்று பயந்து கொண்டு நான் உடனே ஒரு வெண்பாப் பாடினேன்.

வாடு பயிர்க்குவரு மாமழைபோல் நைந்துருகி
நாடுமக வுக்குதவு நற்றாய்போல் - நாடு
முழுதே யழுதேங்க மூடுமிருள் நீங்க
பொழுதே விடிவாயிப் போது.

என் பாட்டு முடிந்த உடனே கிரகணம் கொஞ்சங் கொஞ்சமாய் விலகி வெளிச்சங் காண ஆரம்பித்தது. அப்போது மேகக்கூட்டங்கள் சூரியனை மறைத்துக் கொண்டபடியால் கிரகணம் விடுகிற சமாச்சாரம் ஜனங்களுக்குத் தெரியாது. கிரகணம் முழுவதும் நீங்கின உடனே சூரியன் ஜகஜ்ஜோதியாய்ப் பிரகாசிக்க ஆரம்பித்தது. உடனே ஜனங்களுக்கு உண்டான சந்தோஷத்தையும் அவர்கள் எனக்குச் செய்த ஸ்தோத்திரங்களையும் நான் விவரிக்கவும் வேண்டுமா? அவர்கள் என்னை மட்டுமிதமில்லாமற் புகழ்ந்த பிற்பாடு என்னைப் பார்த்து “சுவாமி! உங்களுடைய உத்தரவுப்படி நாங்கள் இன்றையத் தினமே ஒரு அரசனைத் தெரிந்து கொள்ளப் போகிறோம். நாங்கள் தேவாலயத்துக்குப் போய்ப் பிரார்த்தனை செய்து கொண்டு, பட்டத்து யானையைச் சிங்காரித்து அதன் கையிலே பூமாலையைக் கொடுத்து அனுப்புவோம். அந்த யானை யார் கழுத்திலே பூமாலையைப் போட்டுத் தன் முதுகிலே தூக்கி வைத்துக் கொள்ளுகிறதோ அவரை அரசனாக நாங்கள் அங்கீகரித்துக்கொள்வது வழக்கமாயிருக்கிறது. ஆகையால் அந்தப்படி செய்ய உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று சொல்லி என்னிடத்தில் செலவு பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்.
------------

அத்தியாயம் -36
சூரியனைப் பிடித்த கிரகணம் நீங்கியும் என்னைப் பிடித்த பீடை நீங்காமையினால் நான் காவற்கூடத்திலே யிருந்தேன். அரசனை நியமிக்கிறதற்காகப் போன ஜனங்கள் உடனே தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தபிறகு, பட்டத்து யானை கையிலே பூமாலையைக் கொடுத்துவிட்டதாகவும் அது ஒரு மகா புருஷன் கழுத்திலே மாலையைப் போட்டுத் தன் முதுகின்மேலே தூக்கி வைத்துக்கொண்டதாகவும் அந்த மகா புருஷனை ஜனங்கள் அரசனாகத் தெரிந்துகொண்டதாகவும் அன்றையத் தினம் சாயங்காலத்தில் நான் கேள்விப்பட்டு த் திருப்தி அடைந்தேன். அந்த அரசனுடைய ஊர், பெயர், ஜாதி முதலிய பூர்வோத்தமங்களும் குணா குணங்களும் ஒருவருக்குந் தெரியவில்லை. ஆனால் அவருடைய அதிரூப சௌந்தரியத்தைப் பற்றிப் புகழாதவர்கள் ஒருவருமில்லை. அன்றையத் தினம் சூரியன் அஸ்தமித்து இருட்டின பிறகு சில சேவகர்கள் ஓடி வந்து “புதிதாக வந்திருந்த அரசர் அநேக வழக்குகள் விசாரணையாகாமல் வெகு காலமாய்ப் பாக்கியிருக்கின்றனவென்று கேள்விப்பட்டு உடனே எல்லாரையும் அழைத்துக்கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தார்” என்று தெரிவித்தார்கள். உடனே நாங்கள் எல்லாரும் புறப்பட்டுக் கொலுமண்டபத்துக்குப் போனோம். புது ராஜாவினுடைய மாதிரி தெரியாமையினால் எப்படித் தீர்மானஞ் செய்வாரோவென்று நான் பயந்து அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு போவதுபோற் போனேன். அப்போது இராக்காலமாகவும் அநேக ஜனக்கூட்டமாகவும் இருந்தபடியால் அரசருடைய முகம் எனக்கு நன்றாகத் தெரியவில்லை. அவர் மிருது பாஷியாயிருந்தபடியால் அவருடைய குரலும் நன்றாகக் கேட்கவில்லை.

ஒரு உத்தியோகஸ்தன் என்னுடைய வாதியான சக்கிலியன் பெயரைச் சொல்லிக் கூப்பிட சக்கிலியன் சபை முன்னே வந்து “இந்த மனுஷன் என்னுடைய ஜோட்டை வாங்கி உபயோகித்துக்கொண்டு அதற்காக என்னைச் சந்தோஷப்படுத்துவதாக ஒப்புக்கொண்டவன் அந்தப்படிச் செய்யாததினால் என்னைச் சந்தோஷப்படுத்தும்படி உத்தரவு செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தான். நானும் என்னுடைய எதிர்வாதங்களைத் தெரிவித்தேன். அரசர் சற்று நேரம் மௌனமாயிருந்து பிறகு சக்கிலியனை நோக்கி “நாம் இப்போது அரசனாக வந்திருக்கிறோம்! உனக்கு எப்படி இருக்கிறது?” என்று வினவினார். அவன் “எனக்கு சந்தோஷமாயிருக்கிறது” என்றான். உடனே அரசர் “நீ சந்தோஷமாயிருப்பதாக ஒப்புக் கொள்ளுகிறபடியால் ஜோட்டுக்காக அந்த சந்தோஷத்தை எடுத்துக்கொள்” என்று சொல்லி அவனைப் பிடித்துத் தள்ளிவிடும்படி உத்தரவு கொடுத்தார்.

இரண்டாவது சூதாடிகள் வந்து சும்மாவை வாங்கிக் கொடுக்கும்படி வேண்டினார்கள். அரசர் சற்று நேரம் ஆலோசிக்கிறவர் போல மௌனமாயிருந்து பிறகு சிம்மாசனத்துக்குப் பக்கத்தில் வெறுமையாயிருந்த ஒரு வெண்கலப் பானையைச் சூதாட்டிகளுக்குக் காட்டி “அதில் என்ன இருக்கிறது பாருங்கள்!” என்றார்.அவர்கள் உள்ளே பார்வையிட்டு “சும்மா இருக்கிறது” என்றார்கள். உடனே அரசர் அவர்களைப் பார்த்து “அந்தச் சும்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தீர்மானித்தார்.

மூன்றாவது ஒற்றைக்கண் குருடன் வந்து “இவன் தன்னுடைய குருட்டுக் கண்ணைக் கொடுத்துவிட்டு என்னுடைய நல்ல கண்ணை இரவல் வாங்கிக் கொண்டு போனவன், மறுபடியுங் கொடாததினால் என்னுடைய நல்ல கண்ணை வாங்கிக் கொடுக்கவேண்டும்” என்றான். உடனே அரசர் அவனைப் பார்த்து “நீ பிரதிவாதியினுடைய குருட்டுக் கண்ணை முந்தி வாங்கிக்கொண்டதாக ஒப்புக்கொள்ளுகிற படியால் அந்தக் கண்ணைத் தோண்டி அவருக்குக் கொடுத்துவிடு. அவருடைய நல்ல க்ணைப் பற்றி பிற்பாடு தீர்மானஞ் செய்கிறோம்” என்றார். அவன் “குருட்டுக்கண்ணை எப்படித் தோண்டுவேன்?” என்றான். “அது உன்னாற் கூடாத பக்ஷத்தில் நாம் தோண்டும்படிச் செய்விக்கிறோம்” என்று ஒரு குறடு கொண்டுவரும்படி அரசர் உத்தரவு கொடுத்தார். இதைக் கேட்ட உடனே அந்த ஏகாக்ஷ¢ “என்னைச் சும்மா விட்டாற் போதும்; எனக்கு நல்ல கண் வேண்டாம்! வேண்டாம்!” என்று கதறிக்கொண்டு ஓடினான்.

நொண்டிக்காலன் வழக்கிலும் நொண்டிக்காலை முந்தி எனக்கு வெட்டிக்கொடுக்கும்படித் தீர்மானஞ் செய்யப்பட்டது. அவனும் “எனக்கு நொண்டிக்காலே போதும்! நல்ல கால் வேண்டாம்! வேண்டாம்!” என்று சொல்லி ஓடினான்.

பாகசாலைக்காரன் அவனுடைய வழக்கைச் சொல்லிக்கொண்ட உடனே அரசர் சில வெள்ளி நாணயங்களை எடுத்துக் கலகலவென்று சப்திக்கும்படியாக ஒரு வெண்கலத் தட்டிற் கொட்டி பாகசாலைக் காரனைப் பார்த்து “அந்தப் பணங்களின் ஓசையைக் கேட்டாயா?” என்றார். அவன் “கேட்டேன்” என்றான். உடனே அரசர் அவனைப் பார்த்து “பிரதிவாதி உன்னுடைய சாதத்தின் வாசனையை மூக்கினால் கிரகித்ததற்கும் அதன் கிரயப் பணத்தின் சப்தத்தை நீ காதினாற் கேட்டதற்குஞ் சரியாய்ப் போய் விட்டது. ஆகையால் நீ வீட்டுக்குப் போகலாம்” என்று உத்தரவு கொடுத்தார்.

பிறகு தாசியானவள் வந்து, பிரதிவாதி தன்னை நிழலினால் ஆலிங்கனஞ் செய்ததாகத் தெரிவித்தாள். உடனே அரசர் அவளைப் பார்த்து “பிரதிவாதி உன்னை நிழலினால் ஆலிங்கனஞ் செய்தபடியால் உனக்குப் பணம் கொடுக்கப்படும்” என்று சொல்லி அந்த தாசியை வெளிச்சத்தில் நிறுத்தி அவள் மேலே பண நிழல் படும்படி பணத்தை மேலே தூக்கிக் காட்டும்படி திட்டஞ் செய்தார். மலை போல வந்த துன்பமெல்லாம் பனிபோல் நீங்கினது போல, என் மேலே வந்த துர்வழக்குகளெல்லாம் எனக்கு அநுகூலமாக முடிந்தபடியால் நான் கரைகாணாத களிப்புக் கடலில் மூழ்கினேன்.

என்னுடைய வழக்குகள் முடிந்த பிற்பாடு அரசர் ஜனங்களை நோக்கிச் சொல்லுகிறார்:- “இப்போது நாம் விசாரணை செய்த துர்வழக்குகளினால் இந்த ஊர் எவ்வளவு கெட்ட ஸ்திதிக்கு வந்திருக்கிறதென்பதை நாம் கரதலாமலகம் போற் கண்டுகொண்டோம். இப்படிப்பட்ட வழக்குகளை நாம் எந்த ஊரிலும் கேள்விப்பட்டதில்லை. இப்படிப்பட்ட வழக்குகளைக் கொண்டுவருகிறவர்கள் நம்மையும் நம்முடைய நியாயாசனத்தையும் அவமானப்படுத்துகிற படியால் அவர்களைத் தண்டிக்க வேண்டியது நம்முடைய கடமையாயிருக்கின்றது. ஆயினும் நமக்குப் பட்டாபிஷேகமான இந்த மங்கள தினத்தில் ஒருவரையுந் தண்டிக்க நமக்கு இஷ்டமில்லாதபடியால் அந்தத் துர்வியாஜ்ஜியக்காரர்களை இந்தத் தடவை மன்னித்திருக்கிறோம். இனிமேல் இத் தன்மையான வழக்குகளை யாராவது கொண்டு வருவார்களானால் அவர்கள் தப்பாமல் தண்டிக்கப்படுவார்கள். ஸ்தாவர ஜங்கமங்களை அநியாயமாக இழந்துபோனவர்களும் அல்லது வேறுவிதமான துன்பத்தை அடைந்தவர்களும் நம்மிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டால் நாம் கிரமப்படி விசாரணை செய்து நிஷ்பக்ஷபாதமாகவும் நிர்த்தாட்சண்ணியமாகவுந் தீர்மானஞ்செய்யச் சித்தமாயிருக்கிறோம். இந்த ஊரிலே குடியரசு நிலைத்த பிற்பாடு அக்கிரமம் நிலைபெற்று தர்மங் குடியோடிப் போய்விட்டதாகத் தெரியவருகிறது. நம்முடய காலத்தில் தர்மந் தலையெடுக்கும்; அநியாயம் அதோகதியாகப் போகும். இதை நீங்கள் சீக்கிரத்தில் காண்பீர்கள்!” என்றார்.

இந்த உபந்நியாசத்தைக் கேட்ட உடனே, சர்க்கரைப் பந்தலிலே தேன் மாரி பொழிந்ததுபோல் சாதுக்களெல்லாரும் பரம சந்தோஷம் அடைந்தார்கள். துஷ்டர்களெல்லாரும் கருடனைக் கண்ட பாம்புபோல அடங்கினார்கள். நான் இது தான் சமயமென்று நினைத்து, என்னுடைய வஸ்திராபரணங்களைக் கவர்ந்து கொண்ட காவல்வீரர்களை நோக்கி, “நீங்கள் செய்த அக்கிரமங்களை நான் அரசனுக்குத் தெரிவிக்கப் போகிறேன்” என்று சொல்லி என் காலை எட்டி வைத்தேன். அவர்கள் உடனே என்னை வழிமறித்துக் கொண்டு “சுவாமி! உங்களுடைய சொத்துக்களைக் கொடுத்துவிடுகிறோம். எங்களுடைய செய்கையை அரசனுக்குத் தெரிவிக்க வேண்டாம்!” என்று பதினாறு பல்லையுங் காட்டிக் கெஞ்சினார்கள். நான் அரசனிடத்திற் போகாமல் திரும்பி, என்னுடைய உடைமைகளைக் கொடுக்கும்படிக் கேட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து, “சுவாமி! இந்த ஆடை ஆபரணங்கள் உங்களுக்கு ஒரு விஷயமா? பொழுது விடிவதும் விடியாமற் போவதுமே, உங்களுடைய ஸ்வாதீனத்தில் இருக்கும்போது உங்களுடைய சக்திக்கு மேற்பட்டது யாது? நீங்கள் வானத்தை வில்லாக வளைப்பீர்கள்! மணலைக் கயிறாகத் திரிப்பீர்கள்!! நீங்கள் ஆகாயத்தை ஆடையாக்கி அணிந்துகொள்வீர்கள். மண்ணையும் கல்லையும் ஆபரணமாக்கிப் பூண்டுக் கொள்வீர்கள். எங்களுக்குக் கொடுத்துவிட்ட ஆடையாபரணங்களை மறுபடியும் கேட்கலாமா?” என்றார்கள். நான் அவர்களைப் பார்த்து, “நான் அவைகளை உங்களுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்திருந்தால் நான் மறுபடியும் கேட்கமாட்டேன். அவைகளை நீங்களே துராக்கிருதமாய்க் கவர்ந்துகொண்ட படியால் மறுபடியும் கொடுக்க வேண்டும்” என்றேன். அவர்கள் என் சொத்துக்களைக் கொண்டுவருவதாகச் சொல்லி வெளியே போய் சற்று நேரத்திற்குப் பின்பு ஒரு மூட்டையைக் கொண்டுவந்து கொடுத்து என்னுடைய உடைமைகளெல்லாம் அதற்குள் இருப்பதாகச் சொல்லிப் போய்விட்டார்கள். அவர்களை நான் பயமுறுத்தி மறுபடியும் என்னுடய சொத்துக்களை வாங்கிக்கொண்ட விஷயத்தில் என்னுடைய சாமர்த்தியத்தை நானே மெச்சிக்கொண்டேன். நடு சாமத்தில் ராஜசபை கலைந்து, அரசன் முதலிய எல்லாரும் அவரவர்களுடைய கிருகங்களுக்குப் போய்விட்டார்கள். வாய் கொழுப்புச் சீலையால் வடிந்தது போல் அந்த ஊராரிடத்தில் வாய் கொடுத்தால் பாடாவதியாய் வருகிறபடியால், இனி மேல் ஒருவரிடத்திலும் வாயைத் திறக்கிறதில்லை யென்றும், பொழுது விடிகிற வரையில் எங்கேயாவது படுத்திருந்து, விடிந்த உடனே அந்த ஊரை விட்டுப் போய்விடுகிறதென்றும் நிச்சயித்துக்கொண்டேன். நான் கொலு மண்டபத்தை விட்டு வெளியே போவதற்குமுன் வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ளலாமென்று நினைத்து, அந்தச் சேவகர்கள் கொடுத்த மூட்டையை அவிழ்த்தேன். வெங்காயம் உரிக்க உரிக்கத் தோலாயிருப்பது போல், அந்த மூட்டை அவிழ்க்க அவிழ்க்க பழங்கந்தையா யிருந்ததேயல்லாமல் என்னுடைய ஆடைகளையுங் காணேன். ஆபரணங்களையுங் காணேன்; எனக்காக இத்தனை கந்தைகளை அந்தப் படுபாவிகள், எப்படிப் பொறுக்கிச் சேர்த்து வைத்திருந்தார்களென்பது பெரிய ஆச்சரியமா யிருந்தது. நமன் வாயில் அகப்பட்ட உயிர் திரும்பினாலும், அவர்களிடத்தில் அகப்பட்ட சொத்து மீளாதென்ற உண்மை அப்போது தான் எனக்குத் தெரிந்தது.

நான் கொலுமண்டபத்தை விட்டு வெளியே போக எத்தனமாயிருக்கையில், ஒரு சேவகன் ஓடி வந்து என்னைப் பார்த்து, “ஐயா! இந்த ஊர், துஷ்டர்களுக்கு வாசஸ்தலமாயிருப்பதால், இந்த அர்த்த ராத்திரியில் நீங்கள் வெளியே போகாமல், கொலு மண்டபத்திலே படுத்துக்கொள்ளும்படி மகராஜா உத்தரவு செய்தார்கள்” என்று சொல்லிப் போய் விட்டான். நான் அரசனுடைய ஜீவகாருண்யத்தை வியந்துகொண்டு, அவர் தீர்க்காயுஷாயிருக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்த பிறகு, அந்த மண்டபத்தில் ஒரு மூலையில் பூமியே புஷ்பமெத்தையாகவும் என் கையைத் தலையணயாகவும் வைத்துக் கொண்டு கௌபீனத்துடன் படுத்துக்கொண்டேன். படுத்தவுடனே அந்த மண்டபத்தில் புத்திர பௌத்திர ப்ரபௌத்திரர்களுடன் தலைமுறை தலைமுறையாய் ாழ்ந்துகொண்டிருந்த மூட்டுப் பூச்சிகள் வந்து என் மேல் ஏறி கவசம் போட்டதுபோல் மொய்த்துக்கொண்டன. அவைகள் உபத்திரவத்தினால் எனக்கு நல்ல நித்திரையில்லாமற் பாதி நித்திரையாய்க் கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தேன்.

படுத்துச் சற்று நேரத்திற்குப் பின்பு அந்தக் கொலுமண்டபத்திற்கும் ராஜமாளிகைக்கும் மத்தியிலிருந்த வாசற்படிக் கதவு படீரென்று திறந்த சப்தம் கேட்டு என்ன ஆபத்து வருமோ என்று பயந்துகொண்டு என்னுடைய இரண்டு கண்களையும் இறுக மூடிக்கொண்டேன். சற்று நேரத்திற்குப் பின்பு யாவரோ வந்து என்னை மிருதுவாகத் தட்டினார்கள். நான் முழுக்கண்ணையுந் திறவாமல் பாதிக் கண்ணைத் திறந்து பார்த்தேன். ஞானாம்பாள் வந்து நிற்பது போலத் தோன்றிற்று. இந்த இடத்துக்கு ஞானாம்பாள் எப்படி வரக்கூடும்? நாம் கனவு காண்கிறோமென்று நினைத்து மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டேன். அவள் தன்னுடைய இரண்டு கைகளாலும் என்னைப் பிடித்துத் தூக்கி உட்காரவைத்து “ஐயோ! அத்தான்! இந்தப் பஞ்சைக் கோலத்துடன் தேவரீரைப் பார்க்க நான் என்ன பாவஞ் செய்தேன்?” என்று சொல்லி அழுதாள். நான் கண்ணை விழித்து “நீ யார்?” என்றேன். அவள் “என்னை இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டீர்களா? நான் ஞானாம்பாள் அல்லவா?” என்றாள். நான் அவளைப் பார்த்து “நான் தூங்குகிறேனென்றும் விழித்திருக்கிறேனென்றும் நிச்சயந் தெரியவில்லை. அந்த நிச்சயந் தெரியும் பொருட்டு உன்னுடைய நகத்தினாலே என்னைக் கிள்ளு!” என்றேன். அவளை நான் பூரண பக்ஷத்துடன் அங்கீகரிக்கவில்லை யென்கிற கோபத்தினாலும், என்னுடைய நித்திரை மயக்கத்தைத் தெளிவிக்கவேண்டும் என்கிற எண்ணத்தினாலும் அவள் என்னைப் பலமாகக் கிள்ளி எனக்கு முத்தம் கொடுப்பது போல என்னை வெடுக்கென்று பல்லாலே கடித்தாள். உடனே நான் திடுக்கென்று விழித்துக் கொண்டேன். எனக்கு நித்திரை மயக்கந் தெளிந்து அவள் ஞானாம்பாள் என்று நிச்சயந் தெரிந்த உடனே அவளைக் கட்டிக்கொண்டு சிறு பிள்ளை போல நெடுநேரங் கதறினேன். அவளும் என்னுடன் புலம்பின பிறகு என்னைப் பார்த்து “உங்களை இந்த கோலத்தோடு நான் ஒரு நாளும் பார்த்ததில்லை. உங்களைப் பார்க்கப் பார்க்க என் வயிறு பற்றி எரிகின்றது. நீங்கள் ஊரை விட்டுப் புறப்பட்டது முதல் நடந்த சங்கதிகளை யெல்லாம் தெரிவிக்க வேண்டும்” என்றாள்.

நான் வேட்டை பார்க்கப் புறப்பட்டது முதல் நடந்த ஒவ்வொரு விஷயத்தையுந் தெரிவித்ததுந் தவிர கடைசியாகப் புது அரசன் என்னை விடுதலை செய்த விவரத்தையுஞ் சொல்லி “அந்த அரசருக்குக் கடவுள் பூரண ஆயுசைக் கொடுக்க வேண்டும்; அவராலே தான் உன்னை நான் இப்பொழுது காணும்படியான பாக்கியம் கிடைத்தது” என்றேன். ஞானாம்பாள் என்னைப் பார்த்து “உங்களை விடுதலை செய்த புது அரசன் நான் தான்” என்றாள். இதைக் கேட்ட உடனே நான் ஆச்சரியங் கொண்டு பிரமித்து நான் மறுபடியும் தூங்குகிறேனோ விழித்திருக்கிறேனோ வென்று என் கண்ணைத் தடவிப் பார்க்க ஆரம்பித்தேன். அவள் என்னைப் பார்த்து “உங்களுடைய புத்தியைச் சிதற விட வேண்டாம். நான் சொல்வது வாஸ்தவந்தான்; எல்லா காரியங்களையும் சவிஸ்தாரமாகச் சொல்லுகிறேன்; வாருங்கள்” என்று சொல்லி என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அரண்மனைக்குப் போனாள்.
------------

அத்தியாயம் -37
நானும் ஞானாம்பாளும் கொலுமண்டபம், ஆஸ்தான மண்டபம், சித்திர மண்டபம், சிங்கார மண்டபங்களெல்லாம் கடந்து ஏகாந்த மண்டபத்திற் போய்ச் சேர்ந்தோம். இராத்திரியென்பதே தெரியாமற் பட்டப் பகலென்று சொல்லும்படியாக அநேக தீபகோடிகள் அந்த மண்டபங்களிற் பிரகாசித்தன. ஞானாம்பாள் என்னை ஒரு ஆசனத்திலிருத்தி அவளுடைய வரலாறுகளைச் சொல்லத் தொடங்கினாள்.

“நீங்கள் வேட்டை பார்க்கப் போனபிறகு கானகத்தில் என்ன ஆதங்கள் நேரிடுவோமென்று நான் சித்தாஞ்சல்லியப் பட்டுக்கொண்டிருக்கும்போது, நீங்களும் நீங்கள் ஏறிய யானையும், யானைப்பாகனும் போன வழி தெரியவில்லை யென்றும், நீங்கள் ஆதியூருக்குத் திரும்பி வந்துவிட்டீர்களாவென்று விசாரித்துக் கொண்டு வரும்படி கனகசபை யண்ணன் உத்தரவு கொடுத்ததாகவும் சிலர் வந்து தெரிவித்தார்கள். நீங்கள் ஆதியூருக்குத் திரும்பிவராமையினால் தேவராஜப் பிள்ளையும் இன்னும் அநேகரும் உடனே புறப்பட்டுக் கானகத்துக்குப் போய்த் தேடியும் உங்களுடைய செய்தி ஒன்றும் தெரியவில்லை. வேடர்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த இடத்துக்கும் யானை நின்ற இடத்துக்கும் அதிக தூரமாகையால் யானை வீறிட்டுக்கொண்டு போன சப்தம் மட்டுந் தங்கள் காதில் விழுந்ததாகவும், அந்த யானை எந்தத் திசை நோக்கி நடந்ததென்பது தெரியாதென்றும் வேடர்களும் மற்றவர்களும் அந்தக் காட்டில் நுழையக் கூடாத இடங்களெல்லாம் நுழைந்து தேடியும் நீங்கள் அகப்படவில்லை. தேவராஜப் பிள்ளை, கனகசபை யண்ணன் முதலானவர்கள் வீட்டுக்குத் திரும்பி வராமல் அந்தக் காட்டிலே கூடாரம் அடித்துக்கொண்டு பல நாள் வரைக்குந் தேடியும் தாங்கள் அகப்படாமையினால், நான் சித்தங் கலங்கி தேக ஸ்மரணை தப்பிப் பைத்தியம் பிடித்தவள்போற் புலம்பிக்கொண்டு திரிந்தேன். தேவராஜப் பிள்ளை முதலானவர்கள் எனக்கு ஆறுதலாகச் சொன்ன வார்த்தைகளெல்லாம் செவிடன் காதிற் சங்கநாதஞ் செய்ததுபோல நிஷ்பலமாகிவிட்டன. நான் சரியான ஆகாரமும் உறக்கமு மில்லாமல் எப்போதும் அழுதுகொண்டு வட திசையை நோக்கிப் பார்த்தவண்ணமாயிருந்தேன். ஒரு நாள் நடுச்சாமத்தில் நான் மேல்மாடியில் உட்கார்ந்துகொண்டு சாளரத்தின் வழியாக வடக்கை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அதிக தூரத்தில் ஒரு கரிய மேகம் நடந்து வருவதுபோல ஒரு யானையானது பாகனுமில்லாமல் அம்பாரி முதலிய அலங்காரமுமில்லாமல் வெறுமையாய் நடந்து வந்தது. அந்த யானை சமீபத்தில் வந்த உடனே நிலா வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தேன். அதுதான் உங்களை மோசஞ் செய்த பட்டத்து யானையென்று எனக்குப் பரிஷ்காரமாய் விளங்கிற்று. அந்த யானையானது வழக்கமாய்க் கட்டப்படுகிற கொட்டத்துக்குள்ளே வந்து தானே நுழைந்து கொண்டது. அப்போது எல்லாரும் அருநித்திரையாயிருந்தபடியால் அந்த யானை வந்தது என்னைத் தவிர வேறொருவருக்குந் தெரியாது. அந்த யானையைப் பார்த்த உடனே எனக்குச் சகிக்கக்கூடாத சஞ்சலம் உண்டாகி நான் ஒருவருக்குந் தெரியாமல் எழுந்து அந்த யானை நின்ற இடத்துக்குப் போனேன். அந்த யானை என்னைப் பார்த்த உடனே அதனுடைய துதிக்கையை என்மேலே நீட்டி மிருதுவாகத் தடவிற்று. நான் உடனே அந்த யானையைப் பார்த்து “ஐயோ! துஷ்ட மிருகமே! என்னுடைய பர்த்தாவை என்ன செய்தாய்? எந்தத் திக்கிலே கொண்டுபோய் விட்டாய்? அவரைக் கொன்றுவிட்டாயோ? அல்லது உயிரோடு விட்டாயோ? ஒன்றுந் தெரியவில்லயே!! நீ ஆணோடு பெண்ணோடு பிறக்கவில்லையா? நீ ஆணோடு பிறந்திருந்தால் என் பர்த்தாவை ஏன் அவகடஞ் செய்தாய்? நீ பெண்ணோடு பிறந்திருந்தால் பெண்ணாகிய எனக்கு நீ இரங்கமாட்டாயா? என் பர்த்தா இருக்குமிடத்தைக் காட்டாயா? என் துன்பத்தை ஓட்டாயா?” என்று பல விதமாகச் சொல்லிப் புலம்பினேன். என்னுடய கண்ணீர்த் துளிகள் அந்த யானையின் துதிக்கையை நனைத்து விட்டன. உடனே அந்த யானையானது தன்னுடைய துதிக்கையை என்னுடைய இடுப்பிலே சுற்றி என்னை அதி மிருதுவாகத் தூக்கித் தன் முதுகின் மேலே வைத்துக்கொண்டு நடந்தது. ஆரம்பத்தில் எனக்குப் பயம் ஜனித்த போதிலும் அந்த யானை வட திசையை நோக்கி நடந்தபடியால் நீங்களிருக்கிற இடத்தில என்னைக் கொண்டுபோய் விட்டாலும் விடுமென்று நான் மனத்திடஞ் செய்துகொண்டேன். அப்போது அர்த்த சாமமாகவும் எல்லாருந் தூங்குகிற சமயமாகவும் இருந்தபடியால் யானை என்னைத் தூக்கிக் கொண்டு போனது ஒருவருக்குந் தெரியாது.

அந்த யானையானது உள்நகர் புறநகரெல்லாங் கடந்து கானகத்துக்குள் நுழைந்து மரஞ் செடிகளையெல்லாம் நெறு நெறென்று சாய்த்துத் தள்ளிக்கொண்டு அநேகங் காடுகள், மலைகள், ஆறுகளெல்லாந் தாண்டி வட திசையை நோக்கி இரவும் பகலுமாகக் கடுமையாக நடந்தது. நான் வழியிலிருகிற மரக் கனிகளை உண்டு பசி தீர்த்துக் கொண்டு போனேன். யானை பல நாள் நடந்தபிறகு ஒரு பெரிய மலையடிவாரத்தில் வந்து சேர்ந்து அந்த மலையோரத்தில் அசையாமல் நின்றது. நான் அந்த மலையில் ஒரு பக்கத்தில் அம்பாரி உடைந்து கிடப்பதைக் கண்டு யானையை விட்டுத் தாண்டி, அந்த மலை மேலே தொற்றிக் கொண்டேன். அந்த அம்பாரி கிடந்த இடத்துக்குக் கொஞ்ச தூரத்தில் சில வஸ்திரங்கள் கிடந்தன. அவைகளை ஒரு நீளக் கழியினால் இழுத்து என் கையிலே எடுத்துப் பார்க்க அவைகள் உங்களுடைய சட்டையாகவும் முண்டாசாகவுமிருந்தபடியால் எனக்கு உண்டான மனோ விசாரம் இவ்வளவென்று சொல்ல ஒண்ணாது. அவைகளைக் கண்களில் ஒத்தித் தலையிலே சூடி, வாயிலே வைத்து அநேக முத்தங்கள் கொடுத்தேன். அவைகளைக் கையில் எடுத்துக்கொண்டு மலைமேல் ஏறும்பொழுது உங்களுடைய பெயர் எழுதப்பட்டிருந்த மரங்களையும் பார்வையிட்டேன். அந்த மரங்களையே வழிகாட்டியாக வைத்துக்கொண்டு நடந்து மலையின் உச்சியில் வந்து சேர்ந்தேன். அந்த மலைக்கு வடபுறத்தில் வெட்டப்படிருந்த படிகளைக் கண்ட உடனே அவைகளின் வழியாக நீங்கள் இறங்கிப் போயிருக்கலாமென்று நிச்சயித்துக் கொண்டேன். ஆனால் பெண் வடிவாய்ப் போகிறது எப்போதும் ஆபத்தை விளைவிக்குமானதால் புருஷ வேஷந் தரித்துக்கொண்டு போவது சர்வோத்தமமென்று நினைத்து அப்போது நான் இடையிலே தரித்திருந்த வெள்ளைச் சல்லாச் சேலையை இரண்டாகக் கிழித்து இடுப்பு வேஷ்டியாகவும் அங்கவஸ்திரமாகவும் உபயோகித்துக் கொண்டு உங்களுடைய சட்டையை மேலே தரித்துக்கொண்டு உங்களுடைய முண்டாசையும் என் தலை மேலே தரித்துக்கொண்டேன். இப்படியாக ஆண்வேஷந் தரித்துக்கொண்டு படிவழி இறங்கி அடிவாரத்தில் வந்து சேர்ந்தேன்.

நான் வந்து சேர்ந்தபோது பட்டணத்து ஜனங்களெல்லோரும் மலையடிவாரத்தில் ஏகமாய்க் கூட்டங்கூடியிருந்தார்கள். அவர்களால் விடப்பட்ட ஒரு யானையானது என்னிடத்தில் வந்து என் கழுத்திலே பூமாலையைப் போட்டு என்னைத் தூக்கித் தன் முதுகின் மேலே வைத்துக்கொண்டது. உடனே ஜனங்களெல்லோரும் என்னை நோக்கி “மகாராஜாவே! சக்கரவர்த்தியே! நீங்கள் தீர்க்காயுசாயிருக்க வேண்டும். நாங்கள் ஒரு ராஜாவை நியமிக்க வேண்டியதற்காக யானையின் கையில் பூமாலையைக் கொடுத்து அனுப்பினோம். அது உங்களுடைய கழுத்திலே மாலையைப் போட்டபடியால், இனி மேல் நீங்கள் தான் எங்களுக்கு மகாராஜா. நாங்கள் உங்களுக்குப் பிரஜைகள். நீங்கள் எங்களுக்குப் பிதா. நாங்கள் உங்களுக்குப் பிள்ளைகள்” என்று சொல்லி பூமியில் சாஷ்டாங்கமாக விழுந்து என்னை நமஸ்கரித்தார்கள். கூத்துப் பார்க்கப் போன இடத்திலே பேய் பிடித்தது போலப் புருஷனைத் தேடிவந்த இடத்தில் இப்படிப்பட்ட சகடயோகம் வந்ததேயென்று நான் திகைத்து ராஜாங்கம் வேண்டாமென்று நிராகரிக்க எண்ணங் கொண்டேன். ஆனால் நான் வேண்டாமென்றாலும் ஜனக்கள் என்னை விடமாட்டார்களென்கிற பயத்தினாலும், நான் அரசனாயிருக்கிற பக்ஷத்தில் நீங்கள் இருக்கிற இடத்தை அநாயாசமாய்க் கண்டுபிடிக்கலாமென்கிற நம்பிக்கையாலும் நான் ராஜாங்கம் வேண்டாமென்று சொல்லாமல் சும்மாயிருந்து விட்டேன். உடனே அவர்கள் பட்டணப் பிரதக்ஷணஞ் செய்வித்து அரண்மனைக்குக் கொண்டுபோய் மகுடஞ் சூட்டினார்கள். அப்போது ஒரு பக்கத்தில் பரத நாட்டியமும், ஒரு பக்கத்தில் மேள வாத்திய முழக்கமும், ஒரு பக்கத்தில் சங்கீத கானமும், ஒரு பக்கத்தில் பிராமணருடைய வேதகோஷமும், ஒரு பக்கத்தில் வித்வான்களுடைய ஸ்தோத்திரப் பாடல்களும், ஒரு பக்கத்தில் ஆசியக்காரர்களுடைய விகடமுங் கூடி எனக்குத் தலை மூர்ச்சனையாய்ப் போய்விட்டது. அந்த ஆரவாரங்களெல்லாம் போதுமென்றும் நான் ஏகாந்தமாயிருக்க அபேக்ஷ¢க்கிறேனென்றும் நான் ஆயிரந்தரம் தெரிவித்தபிறகு அவர்கள் ஒருவர் ஒருவராய்த் தொலைந்தார்கள். அவர்கள் தொலைந்ததும் ஆயிரம் பேர் என்னைச் சுற்றிக்கொண்டு பங்கா போடுகிறவர்களும், கவரி வீசுகிறவர்களும், குடை பிடிக்கிறவர்களும், படிக்கம் ஏந்துகிறவர்களும், அடப்பம் ஏந்துகிறவர்களும், பன்னீர் தெளிப்பவர்களும், கந்தப்பொடி இறைப்பவர்களும், பூமழை பொழிகிறவர்களூம், “சுவாமி! பராக்கு! பராக்கு!” என்று கட்டியங் கூறுகிறவர்களும், வாழத்துகிறவர்களும், இன்னும் அநேகவித கோலாகலஞ் செய்கிறவர்களுமாயிருந்தார்கள். அவர்கள் எந்தச் சமயத்திலும் என்னுடன் கூட இருக்கிறார்களென்று கேள்விப்பட்டு எனக்கு மகத்தாகிய சித்தாகுலம் உண்டாயிற்று.

நான் அரண்மனைக்குச் சேர்ந்த சிங்கார வனத்துக்காவது போய்ச் சற்று நேரம் ஏகாந்தமாயும் அமரிக்கையாகவும் இருக்கலாமென்று நினைத்துப் புறப்பட்டேன். நான் பகிர் பூமிக்குப் போவதாக நினைத்து, என்னை நூறு பேர் தொடர்ந்து வந்தார்கள். “ஏன் வருகிறீர்கள்?” என்று கேட்டேன். “மகாராஜாவுக்குக் கொல்லையிலே பங்காப் போடவும், கால் கழுவிவிடவும், பல் விளக்கி விடவும், முகங்கழுவித் துடைக்கவும், வேஷ்டி கட்டிவிடவும் இன்னும் பல பல வேலைகள் செய்யவும் கொல்லையில் நூறு பேர் காத்திருப்பது வழக்கம்” என்றார்கள். நான் உடனே கொல்லைக்குப் போகாமல் திரும்பி வந்துவிட்டேன். உங்களைத் தவிர வேறு புருஷர்களை நான் முகாலோபனஞ் செய்ததேயில்லை. நம்முடைய வீட்டில் வேலைக்காரர்களிடத்தில் பேசும்போது கூட எனக்கு நாணமுஞ் சங்கோசமுமா யிருக்கும். இப்படிப்பட்ட எனக்கு இத்தனை புருஷர்களுடைய மத்தியிலிருப்பது எவ்வளவு மனவருத்தமாயிருக்கு மென்பதை நீங்களே ஊஹித்துக்கொள்ள வேண்டும். நான் உடனே இதற்குப் பரிகாரந் தேடவேண்டுமென்று நினைத்து, அந்தப் புருஷர்களை நோக்கி “எந்தத் தேசத்திலும் ராஜாக்களுக்கு ஸ்திரீகள் பணிவிடை செய்வது வழக்கமா யிருக்கின்றது. இந்த ஊரில் ஏன் அந்த வழக்கம் அநுஷ்டிக்கப்படவில்லை? இது ஸ்திரீகள் இல்லாத நகரமா? அல்லது ராஜாவுக்கு ஊழியஞ் செய்வதை ஸ்திரீகள் தங்களுக்குக் கௌரவக் குறைவாக எண்ணுகிறார்களா? அதன் வயணந் தெரியவேண்டும்” என்றேன். உடனே அவர்கள் “மகாராஜாவே! உங்களுடைய அபிப்பிராயந் தெரியாமையினால் நாங்கள் உங்கள் பணிவிடைகளைச் செய்ய ஆரம்பித்தோம். கணக்கில்லாத ஸ்திரீகள் உங்களுடைய ஊழியங்களைச் செய்யச் சித்தமாய்க் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைப்பிக்கும்படி உத்தரவானால் இந்த நிமிஷத்தில் வரவழைக்கிறோம்” என்றார்கள். நான் அவர்களை நோக்கி “எனக்கு ஸ்திரீகள் பணிவிடை செய்வது திருப்தியே யல்லாது புருஷர்கள் பணிவிடை செய்வது திருப்தி அல்ல; ஆகையால் நீங்கள் போய் ஸ்திரீகளை வரச் சொல்லுங்கள்” என்றேன். அவர்கள் நான் ஸ்திரீலோலனென்றுங் கோலாகல புருஷனென்றும் எண்ணிக்கொண்டு உடனே புறப்பட்டுப் போய் நூறு ஸ்திரீகளை அனுப்பினார்கள். நான் உட்கார்ந்திருக்கும் போதே சில ஸ்திரீகள் எனக்குக் கால் பிடிக்கவும் சில ஸ்திரீகள் கை பிடிக்கவும் பல ஸ்திரீகள் உடம்பெல்லாந் தடவி விடவும ஆரம்பித்தார்கள். நான் அவர்களை வரவழைத்தது சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கில் மாட்டிக்கொண்டது போல் ஆயிற்று. ஏனென்றால் அந்தப் புருஷர்கள் என் சமீபத்தில் வரப் பயந்துகொண்டிருந்தார்கள். இந்த ஸ்திரீகளோ என்றால் நிர்ப்பயமாக என்னை நெருங்கித் தொடவும், மோகாபிநயங்கள் செய்யவும் ஆரம்பித்தார்கள். அவர்களை நான் கடுகடுத்துக் கொண்டு “என்னுடைய உத்தரவில்லாமல் யாராவது தொட்டாலுங் கிட்ட நெருங்கினாலும் அவர்கள் சிரச்சேதஞ் செய்யப்படுவார்கள்” என்று அச்சுறுத்தினேன். உடனே அவர்கள் என்னை விட்டு விலகிப் போய்விட்டார்கள்.

நான் ஸ்நான கட்டத்துக்குப் போனபோது, எனக்கு அழுக்கு தேய்க்கிறதற்காகச் சில ஸ்திரீகள் என் வலது காலைப் பிடித்துக்கொண்டார்கள். சிலர் இடது காலைப் பிடித்துக்கொண்டார்கள். சிலர் இடது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அப்படியே பல ஸ்திரீகள் என்னுடைய பல அவயவங்களையும் பங்கிட்டுக் கொண்டார்கள். அப்போது நான் அவர்களைக் கடிந்துகொண்டு என்னுடைய கரசரணாதி அவயவங்களை அவர்களுடைய ஸ்வாதீனத்திலிருந்து என் ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள நான் பட்ட பாடு போதுமென்றாய்விட்டது.

ஸ்நானம், ஜபம் முதலிய நித்திய கர்மானுஷ்டானங்கள் முடிந்த பிற்பாடு, நான் அமுது செய்வதற்காகப் போஜனசாலைக்குள் நுழைந்தேன். அங்கே எனக்கு அமுது படைக்கிறதற்கு முன் இரண்டு பெயருக்கு இலையில் அமுது படைக்கப்பட்டு அவர்கள் எனக்கு முந்திப் புசிக்க ஆரம்பித்தார்கள். நான் ஆச்சரியம் அடைந்து அவர்கள் யாரென்று வினவினேன். உடனே மடப்பள்ளி விசாரணைக் கர்த்தர்கள் என்னை நோக்கி “மண்டலாதிபதியே! அந்த இருவருக்கும் 'உண்டுகாட்டிகள்' என்று பெயர். அவர்களை விஷபரீக்ஷகர்களென்றுஞ் சொல்லலாம். மகாராஜாவினுடைய உணவில் யாராவது சத்துருக்கள் விஷங் கலக்கக் கூடுமாகையால் அதைப் பரீக்ஷ¢ப்பதற்காக அந்த இருவருக்கும் சாதம் படைப்பதும் அவர்கள் முந்திப் புசிப்பதும் வழக்கம். அவர்கள் போஜனஞ் செய்து இரண்டு நாழிகைக்குப் பிறகு அவர்களுக்கு விஷ உபத்திரவம் இல்லையென்று தெரிந்த பிறகு மகாராஜா சாப்பிடவேண்டும்” என்றார்கள். எனக்குத் தாளக்கூடாத பசியாயிருந்தாலும் விஷசோதனை செய்வதற்காக நான் வெகு நேரம் வரையில் அன்னத்தைத் தொடாமல் உட்கார்ந்திருந்தேன். பிறகு வாழை இலை போலத் தங்கத்தினாற் செய்யப்பட்ட இலையிலே அன்னமும் பலவகையான அறுசுவைப் பதார்த்தங்களும் படைக்கப் பட்டன. நான் போஜனஞ் செய்வதற்காக இலைக்கு முன்பாக உட்கார்ந்தேன். என் பக்கத்திலே பல ஸ்திரீகள் உட்கார்ந்து ஒரு ஸ்திரீ எனக்கு சாதம் ஊட்டவும், பல ஸ்திரீகள் பல கறிகளை எடுத்து என் வாயில் வைக்கவும் ஆரம்பித்தார்கள். நான் அவர்களை முனிந்துகொண்டு “ஒருவரும் எனக்கு ஊட்டவேண்டாம். நானே அள்ளிச் சாப்பிடுகிற வழக்கம்” என்று சொல்லி அதட்டினேன். அவர்கள் நடுநடுங்கிக் கொண்டு தூரத்திற் போய்விட்டார்கள். சகல விகாதங்களுந் தீர்ந்துபோய் விட்டபடியால் இனிமேல் அமரிக்கையாகப் புசிக்கலாமென்று நினைத்து சாதத்தை அள்ளி வாயில் வைத்தேன். உடனே இரண்டு வைத்தியர்கள் என் முன்பாக நின்றுகொண்டு “மகாராஜா! ராஜேந்திரா! அந்தப் பதார்த்தம் வாயு; இந்தப் பதார்த்தம் சூடு; அந்தக் கறி பித்தம்; இந்தக் கறி சீதளம்” என்று சொல்லி அநேக பதார்த்தங்களை நான் புசிக்காதபடி தடுத்தார்கள். நான் அவர்களுடைய வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் எனக்கு இஷ்டமான பதார்த்தங்களை யெல்லாம் பரிபூரணமாக உண்டு பசி தீர்த்துக் கொண்டேன். பிறகு நான் ஸ்வயம்பாகிகளைப் பார்த்து “இந்த வைத்தியர்கள் கறிகளுக்கெல்லாந் தோஷஞ் சொல்லுகிறபடியால் அவர்கள் சாப்பிடும்போது அவர்களுக்குக் கறிகள் படைக்காமல் தண்ணீருஞ் சாதமும் படையுங்கள்” என்று ஆக்ஞாபித்தேன். அந்தப்படி ஸ்வயம்பாகிகள் உடனே நிறைவேற்றினார்கள்.

நான் சாப்பிட்டபிறகு நடந்த உபசாரங்களும் அநந்தம். இந்த உபசாரங்களை யெல்லாம் நான் அபசாரங்களென்றே நினைத்தேன். நான் ராஜாவாயிருந்து பட்ட பாடுகள் நீங்கள் காவற்கிடங்கிற் கூடப் பட்டிருக்க மாட்டீர்கள்.

“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்” என்பது போல, நான் பட்ட உபத்திரவங்களின் மத்தியில் உங்களை நான் மறக்கவில்லை. இந்த ஊரில் என்ன விசேஷம் என்றும், யாராவது அந்நியர்கள் வந்திருக்கிறார்களா வென்றும், நான் பொதுவாக வேவுக்காரர்களை விசாரித்தபோது, அவர்கள் “ஒரு அந்நிய தேசத்தார் வந்திருக்கிறார். அவர் மேலே பல துர்வழக்குகள் வந்திருக்கின்றன. அவர் பொழுது விடியச் சொன்னால் விடிகின்றது. விடிய வேண்டாமென்றால் விடிகிறதில்லை” என்றார்கள். அவர்கள் சொன்ன அடையாளங்களைக் கொண்டு நீங்கள் தானென்று நிச்சயித்துக் கொண்டு உடனே உங்க¨ளையும் மற்றவர்களையும் விசாரணைக்குக் கொண்டுவரும்படி உத்தரவு செய்தேன். நீங்கள் இருந்த கோலத்தை நான் நியாயசபையிற் பார்த்தபோது என் பிராணந் துடித்துப் போய்விட்டது. நான் மெய்மறந்து சிங்காசனத்தை விட்டுக் கீழே விழும்படியான ஸ்திதியில் இருந்தேன். ஆயினும் பூண்ட வேஷத்தைச் சரியாக நிறைவேற்ற வேண்டுமென்கிற எண்ணத்துடன் நான் மனந் திடஞ் செய்துகொண்டு உங்கள் மேல் வந்த வழக்குகளை விசாரித்தேன். அந்த விசாரணை முடிந்தபிறகு நீங்கள் கொலு மண்டபத்தை விட்டு அப்பால் போகவேண்டாமென்று ஒரு சேவகன் மூலமாக நான் தான் உங்களுக்குச் சொல்லியனுப்பினேன்” என்றாள். இந்த வரலாற்றை யெல்லாங் கேட்ட உடனே எனக்கு உண்டான ஆச்சரியம் அளவுகடந்து போய் விட்டது.
------------

அத்தியாயம் -38
நானும் ஞானாம்பாளும் எங்களுடைய துயரங்களை ஒருவருக்கொருவர் சொல்லி மனந்தேறின பிறகு, ஞானாம்பாள் என்னை நோக்கி “நீங்கள் உங்களுடைய வரலாறுகளை எனக்குத் தெரிவித்தபோது ஒரு முக்கியமான சங்கதியைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டீர்கள். நீங்கள் பொழுது விடியாமல் பாடினதாகவும், அந்தப் பிரகாரம் பொழுது விடியாமலிருந்ததாகவும், பிறகு நீங்கள் வேறொரு பாட்டுப் பாடி பொழுது விடியும்படி செய்ததாகவும் நான் கேள்விப்பட்டேன். அந்தச் சங்கதியை எனக்கு விவரமாகத் தெரிவிக்கவேண்டும்” என்று சொல்லிக் கும்பிட்டாள். சக்கிலியன் பக்ஷமாக நியாயாதிபதி தீர்மானஞ் செய்ததும், நான் கிரகணத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு பொழுது விடியாமற் பாடினதும், பிறகு ஜனங்களுடைய வேண்டுகோளின் பிரகாரம் நான் பொழுது விடியும்படி பாடினதும் ஞானாம்பாளுக்குப் பூரணமாகத் தெரிவித்தேன். அதைக் கேட்ட உடனே அவள் நெடுநேரம் வரைக்கும் குலுங்கக் குலுங்கச் சிரித்தாள். பிறகு அவள் என்னுடைய சாமர்த்தியத்தை மெச்சிக்கொண்டு “என்னுடைய அத்தான் நெருப்பைச் சுடுமென்பார்; தண்ணீர் குளிர்ந்திருக்குமென்பார். ஈ பறக்குமென்பார். காகங் கறுப்பாகவும், கொக்கு வெண்மையாகவும் இருக்குமென்பார். ஆகையால் அத்தானைப் போல் சமர்த்தர்கள் யார்?” என்னும் கருத்தை அடக்கி ஒரு வெண்பாப் பாடினாள். அ·து:-

தீயே சுடுமென்பர் தெண்ணீர் குளிருமென்பர்
ஈயே பறக்குமென்பர் ரின்னமுந்தான் - பாய்காகஞ்
சுத்தக் கறுப்பென்பர் சூழ்கொக்கு வெண்மையென்பர்
அத்தானைப்போல் சமர்த்தர் யார்?

என்பதுதான்.

நான் அத்தானென்கிற முறைமை பற்றி, ஞானாம்பாள் பரிகாசமாகப் பாடினபடியால் ஒருவரும் விகற்பமாக எண்ணார்களென்று நம்புகிறேன்.

ஞானாம்பாள் என்னைப் பார்த்து “நீங்கள் இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குச் சாதகமாயிருக்குமென்று நினைத்தே நான் இந்த ராஜ்யபாரத்தை அங்கீகரணஞ் செய்தேன்? இப்போது என்னுடைய மனோரதம் நிறைவேறி உங்களைக் காணும்படியான பெரும்பேறு கிடைத்துவிட்டதால் இனி நமக்கு இந்த ராஜ்யபாரம் வேண்டுவதில்லை. எனக்கு நீங்களே எஜமான் நான் உங்களுக்கு ஊழியக்காரி. நான் உங்களுடைய ஊழியத்தை விட்டு விட்டு ராஜாங்கத்தை வகிப்பது முறையல்ல. அன்றியும் அரசாட்சி செய்யத் தகுந்த யோக்கியதையும் என்னிடத்தில் இல்லை. ஆகையால் ஒருவருக்குந் தெரியாமல் நாம் இந்த ஊரைவிட்டுப் போய்விடுவதே சர்வோத்தமம் என்றாள்”. நான் அவளைப் பார்த்து “இந்த ஊர் சில காலமாக அரசனில்லாமல் அராஜகமாக இருப்பதால் துஷ்டர்கள் அதிகரித்து சாதுக்கள் எல்லோரும் ஆலையில் அகப்பட்ட கரும்பு போலத் துன்பப் படுகிறார்கள். இதை நாம் ஸ்வாநுபோகமாகத் தெரிந்திருந்தும் அந்தச் சாதுக்களைக் கைவிட்டுப் போவது தர்மமா? அன்றியும் நீ மகாராணியாய் இருப்பதும் உனக்கு நான் கணவனாயிருப்பதும் எனக்கு எவ்வளவோ மேன்மை. அந்த மேன்மையை இழந்துவிட எனக்குச் சம்மதமில்லை” என்றேன். அதற்கு ஞானாம்பாள் சொல்லுகிறாள்:- “ராஜ்ய பாரத்தை வகிப்பது எனக்கு அசம்மதமாயிருந்தாலும் அது உங்களுக்குப் பிரியமாயிருக்கிற படியால் உங்களுடைய சித்தப் பிரகாரம் நடக்கக் காத்திருக்கிறேன். பெரிய மலையைத் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்டது போல ராஜாங்க பாரத்தை நான் வகித்துக் கொண்டபடியால், அதை நான் தாங்கும்படி நீங்களும் எனக்கு உதவி செய்யவேண்டும். ஏனென்றால் அரசு செலுத்துவது நம்முடைய வீட்டுக் கிள்ளுக்கீரை யல்ல. உலகத்திலுள்ள சகலத் தொழில்களிலும் அதிகாரங்களிலும் ராஜாதிகாரம் எப்படி மேலானதா யிருக்கிறதோ, அப்படியே அதைச் சேர்ந்த வேலைகளும் அபாரமாயிருக்கின்றன. ஒரு குடும்பத்துத் தலைவனாயிருக்கிறவன் அந்தக் குடும்பத்துக்காக ஓயாமல் பாடுபடுகிறான். கோடானுகோடி குடும்பங்களுக்குத் தலைவனாயிருக்கிற இறைவன் ஒரு நிமிஷமாவது சும்மா யிருக்கலாமா? சொற்பக் கூலியை வாங்கிக்கொண்டு வேலை செய்கிறவன் அகோராத்திரம் உழைக்கிறான். அப்படியானால் எண்ணிக்கை யில்லாத வருமானங்களையும் ஊதியங்களையும் ராஜ சுதந்திரங்களையும் ஜனங்களிடத்தில் பெற்றுக்கொண்டு அநுபவிக்கிற அரசன், அந்த ஜனங்களுக்காக எவ்வளவு பாடுபடவேண்டும்? அரசனுடைய நேரமும் புத்தியும் சக்தியும் ஜனங்களுக்குச் சொந்தமேயன்றி, அரசனுக்குச் சொந்தமல்ல. ஜனங்களுடைய சௌக்கியத்துக்காக ராஜாங்கம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, தன்னுடைய சௌக்கியத்துக்காக ஏற்பட்டிருக்கவில்லை என்பதை அரசன் எப்போதும் தன்னுடைய கருத்தில் வைக்கவேண்டும். அரசன் ஜனங்களுடைய சுகாசுகங்களையே தன்னுடைய சுகாசுகங்களாக எண்ணவேண்டுமே யல்லாது, தன்னையும் ஜனங்களையும் பிரத்தியேகமாக எண்ணக்கூடாது. அப்படிப் பிரத்தியேகமாக எண்ணுகிற பக்ஷத்தில், தன்னைப் பார்க்கிலும் ஜனங்களையே விசேஷமாக எண்ணவேண்டும். ஒரு அன்புள்ள தகப்பன், தன் பிள்ளைகளுடைய சௌக்கியத்தின் மேலே நாட்டமாயிருப்பது போல் அரசனும் பிரஜைகளுடைய நன்மைகளையே எப்போதும் தேடவேண்டும். அரசன் நல்ல சட்டதிட்டங்களை உண்டுபண்ணி அந்தப்படி தான் முந்தி நடந்து வழிகாட்டவேண்டும். எப்போது யாவரும் காணும்படியான முகாரவிந்தத்தை உடையவனாகவும், அருள் பொழியாநின்ற கண்ணை உடையவனாகவும், ஜனங்களுடைய குறைகளைக் கேட்க எப்போது சித்தமாயிருக்கிற காதுகளை உடையவனாகவும், சத்தியமும் இன்சொல்லுங் குடிகொண்ட நாவையுடையவனாகவும் ஜனங்களுடைய பயத்தைத் தீர்க்கும் அபயாஸ்தங்களை உடையவனாகவும் பரஸ்திரீகள் காணாத மார்புடையவனாகவும் சத்துருக்கள் காணாத முதுகுடையவனாகவும் தர்மமே அவதரித்தது போன்ற நற்குண நற்செய்கைகளை உடையவனாகவும் அரசன் பிரகாசிக்க வேண்டும்.

ஜலமும் விவசாயத்தொழிலும் உலகத்துக்கு முக்கியமானதால், ஆறுகள், குளங்கள், ஏரிகள், பாய்க்கால்கள், வடிகால்கள் முதலியவைகளை நன்றாக வெட்டி வேளாண்மைக்குரிய சாதகங்களை அரசன் செய்து கொடுக்க வேண்டும். வியாபாரங்களும் பல தொழில்களும் கிரமமாய் நடக்கும்படி சர்வ ஜாக்கிரதை செய்யவேண்டும். பாலங்கள், மதகுகள், ரஸ்தாக்கள், சாலை மார்க்கங்கள் முதலியவைகளை உண்டாக்கி அவைகளை எப்போதும் செவ்வையான ஸ்திதியில் வைத்திருக்கவேண்டும். குருடர் முடவர் முதலிய அங்கஹீனர்களும் பாடுபடச் சக்தியில்லாத விருத்தர்களும் ஸ்திரீகளும் ரோகஸ்தர்களும் அநாதப் பிள்ளைகளும் பரம ஏழைகளும் வெளியே போய் பி¨க்ஷ எடுக்காதபடி தர்மசாலைகளை உண்டாக்கி அவர்களை அரசனே சம்ரக்ஷ¢க்கவேண்டும். வைத்திய சாலை, ஔஷதசாலை முதலியவைகளை ஊர்கள் தோறும் ஏற்படுத்தி ஏழைகளுக்குத் தர்ம வைத்தியஞ் செய்யும்படி தகுந்த வைத்தியர்களை நியமிக்கவேண்டும். வித்தியா சாலைகளை உண்டாக்கி அக்ஷராப்பியாசம், இலக்கணம், இலக்கியம், பூகோளம், ககோளம், கணிதம், பல தேச சரித்திரம் முதலியவைகளைப் படிப்பதுமன்றி சத்தியம், பிரமாணிக்கம், நீதிநெறி, தெய்வபக்தி, பரோபகாரம் முதலிய சன்மார்க்கங்களையும் கற்பிக்க வேண்டும். பணங் கொடுத்துப் படிக்க நிர்வாகமில்லாத பிள்ளைகள் இலவசமாகப் படிக்கும்படி அரசன் திட்டஞ் செய்யவேண்டும். பிள்ளைகளுக்குத் தேகப்பலமும் சௌக்கியமும் உண்டாகும்படி சிலம்பக் கூடம் முதலியவைகளை ஸ்தாபிக்கவேண்டும். சிற்பவேலை, நெசவுத்தொழில், தச்சு வேலை, கொற்றுவேலை முதலிய பல தொழில்களைக் கற்றுக்கொள்ள இஷ்டமுள்ளவர்களுக்கு உபயோகமாகும்படி பல தொழிற்சாலைகளை நிருமிக்கவேண்டும். மார்க்கங்களிலும் இன்னும் முக்கியமான இடங்களிலும் வழிப்போக்கர் தங்கும்படியாகச் சத்திரஞ்சாவடி முதலியவைகளை நிலைப்படுத்த வேண்டும். ஜனக்களுடைய வீடுகளும் தெருக்களும் சுத்தமாகவும் நாகரீகமாகவும் காற்று நடமாட்டமாகவும் இருக்கும்படி ஜாக்கிரதை செய்வதுமன்றி மல ஜல ஆதி அசுத்தங்களும் ஜனங்களுடைய பார்வையிற் படாதபடி அடிக்கடி அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

பெயர்ப்போன வித்தியா பாரங்கதர்களுக்கும் அருமையான தொழிலாளிகளுக்கும் அரசன் வெகுமதிகளும் உபகாரச் சம்பளங்களும் கொடுத்து அவர்களைக் கனப்படுத்த வேண்டும். அரசன் சாதுஜன மித்திரனாகவும் அசாத சத்துருவாகவும் இருக்கவேண்டும். அரசன் ஜனங்களை அறியாவிட்டால் அவர்களை எப்படி ஆளக்கூடும்? ஆகையால் அரசன் ஜனங்களுக்குள்ளே தானும் ஒருவனாகச் சஞ்சரித்து அவர்களுடைய குணாகுணங்களையும் ஆசாரக் கிரமங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். அரசன் காக்ஷ¢க்கெளியனாய் மதுர பாஷியாய்ச் சகலருடைய குறைகளையுங் கேட்டு உடனே பரிகாரஞ் செய்யவேண்டும். அரசன் எல்லாருக்குங் காது கொடுக்க வேண்டுமே தவிர தகுந்த விசாரணையில்லாமல் எல்லாருடைய வார்த்தைகளையும் நம்பவொண்ணாது.

கடவுளைப் போல அரசனுக்குச் சர்வலோக சஞ்சாரமும் சர்வசக்தியும் இல்லாதபடியால், உத்தியோகஸ்தர்கள் மூலமாகவே அநேக காரியங்களையும் அரசன் நடத்தவேண்டியதாயிருக்கும். அந்த உத்தியோகஸ்தர்கள் ராஜப்பிரதிநிதிகளாகையால், அவர்கள் சர்வோத்தமர்களாக இருக்கவேண்டும். அப்படி யில்லாவிட்டால் அரசனைப் பாவமும் பழியும் தொடருமானதால், அரசன் திறமையும் சன்மார்க்கமும் உள்ளவர்களைத் தேடி அவர்களுக்கே தகுந்த உத்தியோகங்களைக் கொடுக்கவேண்டும். ஒருவன் வேலை பார்க்குந் திறமையில் அதி மேதாவியா யிருந்தாலும், நற்குண சூனியனாயிருப்பானானால் அவனுக்கு அரசன் அற்ப உத்தியோகமுங் கொடுக்கக் கூடாது. அரசன் யோக்கியர்களையே நாடுகிறானென்று யாவருக்குந் தெரிந்தால் உலகத்தில் யோக்கியதை அதிகரிக்கவும் அயோக்கியதை வலசை வாங்கிப் போகவும் இடமாகுமல்லவா? சில ராஜாங்கத்தார் யோக்கியதையைக் குறித்து யாதொரு பரீ¨க்ஷயுஞ் செய்யாமல் கல்வி பரீ¨க்ஷ மட்டுஞ் செய்துகொண்டு, அதில் யார் தேர்ந்து வருகிறார்களோ அவர்களுக்கே எந்த உத்தியோகங்களையும் கொடுக்கிறார்கள். நாம் வித்தியா பரீ¨க்ஷயோடே யோக்கியதா பரீ¨க்ஷயுஞ் செய்யாமல் ஒருவருக்கும் உத்தியோகங் கொடுக்கக் கூடாது. இங்கிலீஷ் துரைத்தனத்தாரால் நியமிக்கப்பட்டிருக்கிற பாடசாலைகளில் ஈசுர நிச்சயம் சன்மார்க்கம் முதலிய ஆத்மார்த்தமான விஷயங்கள் கற்பிக்கப்படாமல் லௌகீக சம்பந்தமான சில காரியங்கள் மட்டுங் கற்பிக்கப் படுகிறபடியால் அந்தப் பாடசாலைகளிற் கல்வி கற்கிற பிள்ளைகள் உலகாயதர்களாயும் நாஸ்திகர்களாயும் பரிணமிக்கிறார்கள். அவர்களுக்கு உத்தியோகமான உடனே, பணமே தெய்வமென்று நினைத்து அதைச் சம்பாதிப்பதற்காகச் சகல அக்கிரமங்களையுஞ் செய்கிறார்கள். இங்கிலீஷ் துரைத்தனத்தாருடைய சட்டத்தில் லஞ்சம் வாங்குகிறவர்களுக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருப்பது போலவே, லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்குகிறவர்களுக்குச் சர்வாகூலமான சட்டம் இதைவிட வேறொன்றிருக்கக் கூடுமோ? திருடனுடைய இம்மைக்குப் பயந்து அவர்களுக்குப் பொக்கிஷத்தின் திறவுகோலைக் கொடுப்பவர்கள் போல உத்தியோகஸ்தர்ளுடைய நிர்ப்பந்தத்தினால் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்களே தவிர, அவர்களுக்கு மனப்பூர்வமாய் லஞ்சங் கொடுக்கிறவர்கள் ஒருவருமில்லை. யுஅதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்ரு என்கிற பழமொழிப்படி ஒரு அதிகாரிக்கு யார்மேலே துவேஷமிருக்கிறதோ அவர்களைக் கெடுக்கிறதற்குப் பல சமயங்கள் நேரிடுகின்றன. வழக்கமாய் லஞ்சம் வாங்குகிற அதிகாரிகளுக்கு எவன் லஞ்சங் கொடுக்கவில்லையோ அவன் அந்த அதிகாரிக்கு ஜன்ம சத்துருவாகிறான். அவனுடைய வழக்குகளையெல்லாங் கெடுத்து மடிமாங்காய் போட்டுக் கழுத்தறுக்க அதிகாரி சமயந் தேடுகிறபடியால், கை லஞ்சங் கொடுத்து அவனுடைய தயவைச் சம்பாதிக்க வழக்காளிகள் உடன்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களினால் லஞ்சங் கொடுக்கச் சம்மதிக்கிறார்களே தவிர மனத் திருப்தியாக லஞ்சங் கொடுக்கிறவர்களைத் தண்டிப்பது சிரமமாயிருக்கும். இங்கிலீஷ் ஆளுகையில் லஞ்சங் கொடுத்தவர்களுக்குந் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் லஞ்சப் பிரியாது கொண்டுவர ஒருவரும் துணிகிறதில்லை. அப்படி யாராகிலும் துணிந்தாலும், அதிகாரிகளுக்கு விரோதமாகச் சாக்ஷ¢கள் அகப்படுவது துர்லபமாயிருக்கின்றது. லஞ்சப் பிரியாது செய்த குற்றத்திற்காகப் பிரியாதுக்காரன் பலவகையாகத் தண்டிக்கப்படுகிறதுமன்றி, அவன் எப்போதும் அதிகாரிகளினுடைய க்ஷ¡த்திரத்திற்குப் பாத்திரனாகிறான். இவ்வகையாக லஞ்சம் வாங்கிகளுக்குப் பல சாதகங்களிருக்கிறபடியால், அவர்கள் லஞ்சம் வாங்குகிறதற்கு உத்தாரச் சீட்டு பெற்றுக் கொண்டது போல நிர்ப்பயமாய்ச் சர்வ கொள்ளையடிக்கிறார்கள். அதுவும் போதாதென்று அவர்களுடைய ஆயுசு வரையில் அவர்களுக்குத் துரைத்தனத்தார் உபகாரச் சம்பளங்களையும் கொடுக்கிறார்கள்.

லஞ்சம் கொடுக்கிறவர்களைத் தண்டிக்கிறதென்கிற விதியை நாம் பரிச்சேடம் அநுசரிக்கக்கூடாது. அன்றியும் ஒரு உத்தியோகஸ்தன் பரிதானம் வாங்குகிறானென்றாவது அல்லது வேறு பிரபலமான துஷ்கிருத்தியங்கள் செய்கிறானென்றாவது, பல பெயர்களுக்குப் பகிரங்கமாய்த் தெரிந்திருந்தால் அதைப் பற்றிப் பூரண விசாரணை செய்து கொண்டு அவன் மேலே பிரியாது வராமலிருந்தாலுங் கூட அவனை உடனே உத்தியோகத்தினின்று நீக்கி விட வேண்டும். அரசன் அயோக்கியமான உத்தியோகஸ்தர்களை எப்போதும் நன்கு மதித்து அபிமானிக்கவேண்டும். அவர்கள் மூப்பு ரோகம் முதலிய காரணங்களால் வேலை பார்க்க அசக்தர்களாயிருக்கும்போது அரசன் அவர்களுக்கு உபகாரச் சம்பளங் கொடுத்து ஆதரிக்க வேண்டும். அவர்கள் அகால மரணமாய் இறந்து போய், அவர்களுடைய புத்திர களத்திராதிகள் அன்ன வஸ்திரத்துக்கு வழியில்லாமல் நிர்க்கதியாயிருப்பார்களானால், அவர்களை அரசன் போஷிக்கவேண்டும். தங்களுக்குப் பிற்காலந் தங்களுடைய குடும்ப சம்ரக்ஷணைக்கு மார்க்கஞ் செய்யவேண்டுமென்கிற எண்ணத்துடன் அனேகர் லஞ்சத்தைக் கையாளுகிறபடியால், அரசன் தங்களுக்குப் பிற்காலத்தில் தங்களுடைய குடும்பங்களைப் போஷிப்பானென்கிற நிச்சயமிருந்தால் அநேகர் லஞ்சம் வாங்காமற் பரிசுத்தராயிருப்பார்களென்பது உண்மையே.

ராஜ பதவி எல்லாருடைய அந்தஸ்துக்கும் மேற்பட்டதாயிருப்பது போலவே, அரசன் நற்குணங்களிலும் புத்தியிலும் சாமர்த்தியங்களிலும் மற்றவர்களுக்கு மீசரமாயிருக்க வேண்டும். அப்படியில்லா விட்டால் அவனை யார் மதிப்பார்கள்? சூரியன் தன்னுடைய ஒளியினால் எல்லாப் பொருள்களையும் பிரகாசிக்கச் செய்வதுபோல், அரசனுந் தன்னுடைய நற்குணங்களாற் குடிகளுடைய குணந் திருந்தும்படி செய்யவேண்டும். அரசன் சிற்றின்பத்தைத் திரஸ்கரிக்க வேண்டும். அன்னிய ஸ்திரீகளுடைய அழகுக்குக் குருடனாயிருக்க வேண்டும். தப்பு ஸ்தோத்திரத்துக்குச் செவிடனாயிருக்க வேண்டும். அரசனுக்குச் செங்கோலின் பலம் பலமேயல்லாமல் ரத கஜ துரக பதாதிகள் பலமல்ல. செங்கோல் கோணாமல் அரசாளுகிற மன்னனுக்கு நாடெல்லாம் அரணானதல் வேறு அரண் வேண்டுவதில்லை. குடிகளெல்லாம் அவனுக்குப் படையாகையால், வேறு படை வேண்டுவதில்லை. அவர்களுடைய மனங்களெல்லாம் அவனுக்கு வாசஸ்தலமானதால் வேறு அரண்மனை வேண்டுவதில்லை. அந்த அரசனுக்குச் சத்துருக்களுமில்லை. கொடுங்கோல் மன்னனுக்குக் குடிகளே பகைவர். அவனுடைய கோட்டையே யுத்த பூமி. அவன் அடி வைக்கும் இடமெல்லாம் படுகுழி. அவன் உண்ணூம் அன்னமே விஷம். அவனைச் சூழ்ந்திருப்பவர்கள் எல்லாரும் யம தூதர்கள். அவனுடைய அரண்மனையே மயானம். ஆகையால் கொடுங்கோல் மன்னர் உய்வதற்கு வழி இல்லை” என்று தேன்மழை பொழிவது போல ஞானாம்பாள் பிரசங்கித்தாள். நான் அளவற்ற ஆக்லாந்தடைந்து அவளைப் பார்த்து “நீ இவ்வளவு கையிருப்பு வைத்துக் கொண்டு அரசாளத் தெரியாதென்று சொன்னாயே! இப்போது உலகத்தில் அரசு செய்கிறவர்களுக்கு உனக்குத் தெரிந்த காரியங்களில் நூற்றில் ஒரு பங்கு கூடத் தெரியுமா?” என்றேன். அவள் என்னைப் பார்த்து “வாய்த்தைக்குத் தரித்திரமுண்டா? வாய்ப் பந்தல் போட யாராலே கூடாது? அரசன் நடக்கவேண்டிய நெறிகளைப் பற்றி நான் வாசா கைங்கரியமாகப் பேசினபோதிலும் பேசினபடி நடப்பதல்லவோ கஷ்டம்” என்றாள். நானும் ஞானாம்பாளும் ஒருவரையொருவர் சந்தித்த சந்தோஷத்தினால் நேரம் போவதுகூடத் தெரியாமல் நாங்கள் சம்பாஷித்துக்கொண்டிருக்கும்போது உதயபேரி முதலிய வாத்தியங்கள் முழங்கினபடியால் விடியற்காலம் ஆய்விட்டதென்று தெரிந்து கொண்டோம். உடனே ஞானாம்பாள் ஒரு அறைக்குள்ளே போய்ப் பெண் ரூபத்தை மாற்றிப் புருஷ ரூபந் தரித்துக் கொண்டு என் முன்பாக வந்தாள். அதற்கு முன் பெண்ணுக்குப் பெண் ஆசிக்கும்படியான அதிரூபவதியாயிருந்தாள். இப்போது ஆணுக்கு ஆண் அபேக்ஷ¢க்கும்படியான அழகிய புருஷ வேஷம் பூண்டுகொண்டு வந்தாள். அவள் சாக்ஷ¡த் புருஷ வடிவமாகவே யிருந்தபடியால் அவள் பெண்ணென்பதை மறந்துவிட்டு “இந்த மகா புருஷனை மணஞ்செய்வதற்கு நாம் பெண்ணாய்ப் பிறக்காமற் போய் விட்டோமே” என்று சற்று நேரம் மதிமயங்கிப் பிற்பாடு தெளிந்துகொண்டேன்.
---------------

அத்தியாயம் -39
நான் அருணோயதமாவதற்கு முன், ஞானாம்பாளைப் பார்த்து “நீ மகாராஜாவாயிருப்பதால் உன்னோடு கூட நான் சமான ஸ்கந்தமாயிருப்பதைப் பார்க்கிறவர்கள் விபரீதமா யெண்ணிக் கொள்வார்கள். நான் இன்னானென்று உண்மையைத் தெரிவிப்பதும் கூடாத காரியமாயிருக்கின்றது. நீயும் பொய் சொல்லமாட்டாய். இந்தச் சங்கடங்களை யெல்லாம் யோசிக்கும்போது நான் ஒரு இடத்தில் தனிமையிலிருப்பது உத்தமமென்று நினைக்கிறேன்” என்றேன். அவள் என்னைப் பார்த்து “மத யானை ஏறியுந் திட்டிவாசலில் நுழைவது போல, நமக்கு ராஜபட்டங் கிடைத்தும் நாம் ஒருவருக்குப் பயப்படவேண்டுமா? உங்களை மேலான இடத்தில் வைத்து, நான் கைகட்டிச் சேவிக்காமல் இந்த ராஜாங்க நிமித்தம் உங்களை எனக்குச் சமானமாக வைத்துக்கொள்ளும்படி நேரிட்டிருப்பது எனக்கு எவ்வளவோ மனஸ்தாபமாயிருக்கிறது. நீங்கள் அதைக்கூட ஜனங்கள் வித்தியாசமாய் நினைப்பார்களென்று சொல்லுகிறீர்கள். ஜனங்கள் எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். நான் இனிமேல் உங்களை ஒரு நிமிஷங்கூடப் பிரிகிறதில்லையென்று பிரதிக்ஞை செய்துகொண்டிருக்கிறேன். நான் இதற்குமுன் உங்களைப் பிரிந்துபட்ட துன்பம் போதாதா? இன்னமும் பிரியவேண்டுமா? நீங்கள் இன்னாரென்று மற்றவர்களுக்கு உண்மையைத் தெரிவிப்பது அசாத்தியமாயிருந்தாலும் நான் பொய்யுஞ் சொல்லாமல் தக்கபடி சொல்லிச் சமாளித்துக்கொள்வேன்” என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து “மகாராஜாவே! உங்களுடைய கட்டளைப் பிரகாரம் நடக்கச் சித்தமாயிருக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தேன். அவளுடைய சிவந்த வாயைத் திறந்து பல்வரிசை தோன்றும்படியாக அவள் சிரித்தது எப்படி யிருந்ததென்றால், பவளப் பெட்டியைத் திறந்து அதிலிருக்கிற முத்துச் சரங்களை விரித்துக்காட்டினது போலிருந்தது.

அன்றையத் தினம் பட்டாபிஷேகமான மறு நாளானதால், மந்திரி பிரதானி முதலானவர்கள் வந்து தரிசன மகாலில் ராஜபேட்டிக்குக் காத்திருப்பதாக உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். நானும் ஞானாம்பாளும் உயர்ந்த வஸ்திராபணங்களைத் தரித்துக்கொண்டு தரிசனமாலுக்குப் போய்ச் சித்திராசனத்தில் வீற்றிருந்தோம். நான் ராஜாவோடுகூடச் சமானமாயிருப்பதைப் பார்த்தவர்கள் எல்லாரும் ஆச்சரியம் அடைந்து என் முகத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். உடனே ஞானாம்பாள் அவர்களை நோக்கிச் சொல்லுகிறாள்:- “என்னோடுகூட ஆசனத்திலிருப்பவர் என்னுடைய அத்தை குமாரர். அவரும் நானும் ஒரே இடத்தில் பிறந்து ஒரே இடத்தில் வளர்ந்து ஒரே இடத்தில் கல்வி கற்று ஒரே இடத்தில் வாழ்ந்தோம். எனக்குப் பிராணன் அவர்தான். அவருக்குப் பிராணன் நான்தான். எனக்கு அவரே பிரியர். அவரே அன்பர். இளமைப் பருவமுதல் எனக்கு அவரே காவலர். அவரே துணைவர். என்னை ஒருநாளும் பிரியாதவர் பிரிந்து வெளிப்பட்டு வந்துவிட்டதால் அவரைத் தேடிக்கொண்டு வந்த இடத்தில் எனக்குப் பட்டாபிஷேகங் கிடைத்தது. அவருடைய யோக்கியதையை நீங்களும் அறிவீர்கள். பொழுது விடியாதபடி முந்திப் பாடிப் பிறகு பொழுது விடியும்படியாகப் பாடினவர் இவர்தாம்” என்றாள். இதைக் கேட்டவுடனே மந்திரி பிரதானிகள் எல்லோரும் “ஆம்! ஆம்! இவர் மகா வரப்பிரசாதி. புண்ணியாத்மா. இவரை அரசராக நியமிக்கவேண்டுமென்பது அநேகருடைய கருத்தாயிருந்தது. இவர் மகாராஜாவுக்குச் சமீபப் பந்துவாயிருந்தது எங்களுக்குப் பரம சந்தோஷம்” என்றார்கள். உடனே ஞானாம்பாள் அவர்களை நோக்கி “இவரை அரசராகத் தெரிந்துகொள்ள அநேகர் அபேக்ஷ¢த்ததாக நீங்கள் சொல்லுகிறபடியால் இவரை உபராஜாவாக வைத்துக்கொண்டு ராஜ்ஜியபாரஞ் செய்ய வேண்டுமென்பது என்னுடைய ஆசத்தியமாயிருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்றாள். உடனே அவர்கள் “இவருடைய மகிமையை நாங்கள் பிரத்தியக்ஷமாக அறிந்திருக்கிறோமாதலால் அவர் உங்களுக்கு உபராஜாவாயிருக்க எங்களுக்குச் சம்மதந்தான். நீங்களிருவரும் அரோகதிகாத்திரராய் நெடுங்காலம் அரசாளும்படி கடவுள் அநுக்கிரகிப்பார்” என்று சொல்லி உத்தரவு பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் போன பிற்பாடு நான் ஞானாம்பாளைப் பார்த்து “உன்னுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம். நீ நினைத்தபடி நிறைவேற்றிவிட்டாய். நான் இன்னானென்று அவர்களுக்குத் தெரிவித்த விஷயத்தில் நீ ஒரு பொய்யையுங் கலக்காமல் உண்மையையே பேசினாய். பிரியன், அன்பன், காவலன், துணைவன் என்கிற வார்த்தைகளினால் நான் உனக்குப் பர்த்தாவென்று தெரிவித்தாய். ஆனால் அந்த வார்த்தைகளை நீ உபயார்த்தமாக உபயோகித்தபடியால் நான் உனக்குப் பிரியமான நேசன், சிறு பருவமுதல் நான் உனக்குத் துணையாயிருந்தவன், காவலாயிருந்தவனென்று அவர்கள் அர்த்தம் பண்ணியிருப்பார்களே யன்றி நான் உனக்குக் கணவனென்று கிரகித்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாக்குச் சாதுரியமாகப் பேச யாருக்காவது வருமா?” என்றேன். அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு “நீங்கள் பொழுது விடியாமற் போகவும் பிறகு விடியவுஞ் செய்த சாமர்த்தியமும் என்னுடைய வாய்ச் சாமர்த்தியமும் இரண்டும் சமானந்தான். மனதிலே கபடத்தை வைத்துக்கொண்டு சிலேஷையாக ஒருவரிடத்திற் பேசுவது பொய்தானே. நம்முடைய வார்த்தைக்குப் பிறர் தப்பான அர்த்தஞ் செய்கிறார்களென்று தெரிந்தவுடனே அவர்களைத் திருத்தாமலிருப்பதுங் கரவடம் அல்லவா? ஆனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தது போல நான் தரித்துக் கொண்டிருக்கிற ஆண் வேஷமே முழு மோசமானதால் அதை ஸ்தாபிக்கிறதற்கு இத்தனை பொய்களினுடைய சகாயம் வேண்டியிருக்கிறது” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தாள்.

மகாராஜாவாகிய ஞானாம்பாளும் உபராஜாவாகிய நானும் சிங்காசனம் ஏறி ராஜ்ஜிய பரிபாலனஞ் செய்யத் தொடங்கினோம். செங்கோல் கோணாமலும் மநுநீதி தவறாமலும் வர்ணாசாரங்கள் பேதிக்காமலும் மாதமும்மாரி பெய்யவும் முப்போகம் விளையவும் ஆறில் ஒரு கடமை வாங்கி அரசாக்ஷ¢ செய்தோம். முந்தின அதிகாரத்தில் விவரித்தபடி, ராஜாக்கள் பிரஜைகளுக்குச் செய்யவேண்டிய அனுகூலங்களையெல்லாம் குறைவறச் செய்தோம். தேவாலயம் தர்மசத்திரம் பாடசாலை வைத்தியசாலை பல தொழிற்சாலை முதலியவைகளிற் பழமையாயிருந்தவைகளையெல்லாம் புதுப்பித்தோம். இல்லாத கட்டடங்களை நூதனமாகக் கட்டுவித்தோம். ஜீரணமாயிருந்தவைகளை ஜீரயோத்தாரணஞ் செய்தோம்.

பழைய ராஜாங்கத்தில் உத்தியோக நியமன விஷயத்தில் நடந்திருந்த அக்கிரமங்களை யெல்லாம் நாங்கள் திருத்திச் சீர்ப்படுத்தினோம். எப்படியென்றால், “அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்” என்கிற பழமொழிப்படி ஒரு வேலை கூடப் பார்ர்க்கச் சக்தியில்லாதவனுக்கு ரிவினியூ வேலை, மாஜிஸ்திரேட்டு வேலை, சிவில் விவகார வேலை முதலிய பல வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தன. பலசரக்குக் கடைக்காரனைப் பயித்தியம் பிடித்ததுபோல், அந்த அதிகாரி ஒரு வேலையையாவது சரியாய்ப் பார்க்காமல் எல்லா வேலைகளையும் போட்டுக் குழப்பிக்கொண்டு காலம் போக்கினான். நாங்கள் ஒவ்வொரு வேலையையுந் தனியே பிரித்து ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு உத்தியோகஸ்தனைப் பிரத்தியேகமாக நியமித்தோம். இருகாத வழி முக்காத வழி தூரத்துக்கு அப்பால் ஒவ்வொரு கச்சேரியிருந்தபடியால் ஜனங்கள் அவ்வளவு தூரம் போய் நியாயம் பெற்றுக்கொள்வது பியாசமா யிருந்தது. நாங்கள் சமீபமான இடங்களில் கச்சேரிகளை ஸ்தாபித்து ஜனக்களுக்குச் சகாயஞ் செய்தோம். உத்தியோக வரிசையில் ஒழுங்கீனமாய்க் கீழ்ப்படியிலிருக்க வேண்டியவர்கள் மேற்படியிலும், மேற்படியிலிருக்க வேண்டியவர்கள் கீழ்ப்படியிலும் வைக்கப் பட்டிருந்தார்கள். நாங்கள் அந்த ஏற்பாட்டைத் தலைகீழாக மாற்றி அவரவர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த ஸ்தானங்களில் நியமித்தோம். அதிக வேலையுள்ள உத்தியோகஸ்தர்களுக்குக் குறைந்த சம்பளமும், குறைந்த வேலையுள்ளவர்களுக்கு அதிக சம்பளமும் நிஷ்கரிஷிக்கப்பட்டிருந்தன. நாங்கள் அந்த அக்கிரமத்தையும் திருத்திச் சரிப்படுத்தினோம். சில உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு வேலயுமில்லாமலிருக்க, அவர்களுக்கு வகைதொகை யில்லாமல் ஏராளமாய்ச் சம்பளங்கள் ஏற்றப்பட்டிருந்தன. நாங்கள் அந்த உத்தியோகங்கள் அநாவசியமென்று அடியோடே மர்த்தனஞ் செய்துவிட்டோம்.

ஜனங்களுடைய நன்மைக்கு விரோதமாக உத்தியோகஸ்தர்களுக்கு அபரிமிதமான சம்பளங்களை ஏற்படுத்தி அந்தச் சம்பளங்களைக் கொடுப்பதற்காகவே, நிலவரி வீட்டுவரி முதலிய நியாயமான வரிகளைத் தவிரக் காற்றுவரி, மழைவரி, தீபவரி, கால்நடைவரி, மார்க்கவரி, கல்யாணவரி, துக்கவரி, ஜனனவரி, மரணவரி, மலஜலவரி முதலிய அநியாயவரிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். நாங்கள் நிலவரி வீட்டுவரி முதலிய நியாயமான வரிகளை வைத்துக்கொண்டு மற்ற வரிகளையெல்லாம் நீக்கிவிட்டோம். சில தேசங்களில் வியாஜ்ஜியங்களுக்கு முத்திரைவரி ஏற்பட்டிருப்பது போல விக்கிரமபுரியில் வியாஜ்ஜியங் கொண்டுவருகிற ஒவ்வொருவரும் வியாஜ்ஜியத் தொகைக்குத் தக்கபடி முந்தி வரி கொடுக்கவேண்டுமென்றும், வரி கொடாதவர்களுடைய வழக்கை அங்கீகரிக்கக் கூடாதென்றும் சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த சட்டம் அக்கிரமமென்று நாங்கள் மாற்றிவிட்டோம். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரீரத்துன்பம் இல்லாமலும் சொத்து நஷ்டமில்லாமலும் ரக்ஷ¢க்க வேண்டியது ராஜாக்களுடைய பிரதான கடமையாய் இருக்கிறது. அதற்காகவே நிலவரி வீட்டுவரி முதலான வரிகள் வாங்கப்படுகின்றன. அந்தக் காரணத்தைப் பற்றியே சரீரத் துன்பம் களவு முதலிய குற்ற விஷயங்களில் ஒரு வரியும் வாங்காமல் ராஜாவே வாதியாயிருந்து, துன்ப நிவாரணம் செய்கிறான். அப்படியே சில வியவகாரங்களிலும் ராஜாவே வாதியாயிருந்து சொத்து நஷ்டம் அடைந்தவர்களிடத்தில் யாதொரு வரியும் வாங்காமல் அவர்களுக்கு நஷ்டப்பரிகாரம் செய்யவேண்டியது நியாயமா யிருக்கிறது. முன்னமே பொருள் நஷ்டம் அடைந்து வியாஜ்ஜியம் கொண்டுவருகிறவனைப் பார்த்து, “நீ நமக்கு வரியுங் கொடுத்தால்தான் உன் வழக்கை அங்கீகரிப்போம்” என்று சொல்லுவது எவ்வளவு நியாயம்! துன்பப் பட்டவர்களுக்கு யாதொரு செலவும் இல்லாமல் துஷ்டநிக்கிரகம் சிஷ்டபரிபாலனம் செய்யவேண்டியது ராஜாக்களுடைய முக்கியமான கடமை யல்லவா? நியாயபரிபாலனத்துக்கு வரி வாங்குவது துஷ்டர்களுக்கு அநுகூலமாயும் சிஷ்டர்களுக்குப் பிரதிகூலமாயும் முடியுமல்லவா? வியாஜ்ஜியங்களுக்கு வரி வாங்காவிட்டால், துர்வியாஜ்ஜியங்கள் அதிகரிக்குமென்று சிலர் சொல்லுகிறார்கள். ஒருவன் துர்வியாஜ்ஜியம் கொண்டுவந்ததாக ருசுவான பிற்பாடு அவனை மட்டுந் தண்டிப்பது கிரமமே யல்லாமல், துர்வழக்குகள் வருமென்கிற காரணத்துக்காக நியாய வழக்குகளிலும் முந்தியே வரி வாங்குவது அக்கிரமமல்லவா? ஒரு ஊரில் குற்றவாளி இன்னானென்று தெரியாமலிருக்கும்போது, இந்த ஊரில் உள்ளவர்களையெல்லாம் தண்டித்துவிட்டால் குற்றவாளியும் தண்டனையடைவான் என்கிற எண்ணத்துடன், ஊரில் உள்ளவர்களையெல்லாம் தண்டிப்பது கிரமமாயிருக்குமா? அப்படியே துர்வழக்குக்காரன் இன்னனென்று தெரிவதற்கு முன்னமே, அவனைத் தண்டிப்பதற்காக நியாய வழக்குக்காரர்களிடத்திலும் வரி வாங்குவது நியாயமாயிருக்குமா? நியாயஸ்தலங்களில் நூறு வழக்குகள் வந்தால் தொண்ணூறு வாதி பக்ஷத்திலும், பத்துமட்டும் பிரதிவாதி பக்க்ஷத்திலும் தீர்மானிக்கிறது சர்வத்திர சாதாரணமாயிருக்கிறது. அந்தப் பத்துத் துர்வழக்காளிகள் இன்னாரென்று தெரிவதற்கு முன்னமே அவர்களைத் தண்டிப்பதற்காகத் தொண்ணூறு நியாய வழக்காளிகளையும் தண்டிப்பது முறையா? துர்வழக்குகள் வருகிறதற்கு நியாயாதிபதிகளுடைய அறியாமையும் பக்ஷபாதமும் அபரிசுத்தமுமே முக்கிய காரணமாயிருக்கிறது. நியாயாதிபதிகள் தகுந்த சமர்த்தர்களாயும் சாஸ்திர விற்பன்னர்களாயும் அநுபோகஸ்தர்களாயும் நீதிமான்களாயும் இருப்பார்களானால், அவர்கள் முன்பாகத் துர்வழக்குகள் வருமா? வந்தாலும் ஜெயிக்குமா? உலகத்தில் ஆஸ்திவந்தர்கள் ஏழைகள் என்கிற இரண்டு வகுப்பில் ஆஸ்திவந்தர்கள் எந்த வரியாயிருந்தாலும் கொடுத்துவிட்டு வியாஜ்ஜியம் தொடங்குவார்கள். ஆஸ்திவந்தர்களால் துன்பத்தை யடைந்த ஏழைகள் வரி கொடுக்க நிர்வாகமில்லாமையினால், வியாஜ்ஜியஞ் செய்ய அசக்தர்களாயிருப்பார்கள். ஆகையால் வியாஜ்ஜியவரி பணக்காரர்களுக்கு மட்டுஞ் சாதகமாயும் ஏழைகளுக்குத் துன்பமாயுமிருக்கும். இப்படிப்பட்ட பல காரணங்களால் வியாஜ்ஜியவரியை நீக்கி விட்டோம். ஆனால் துர்வழக்குக்காரர்களைக் கண்டிக்க வேண்டியது அகத்தியமானதால், நியாயாதிபதிகள் பூரண விசாரணை செய்து துர்வழக்கென்று அபிப்பிராயப்பட்டால் அந்த வழக்காளி ராஜாவுக்கு அபராதமும் பிரதிவாதியினுடைய செலவுகளுங் கொடுக்கும்படி சட்டம் ஏற்படுத்தினோம். அந்தத் துர்வழக்குக்காரன் அப்பீல் செய்யாவிட்டாலும் அல்லது அப்பீல் செய்து தோற்றுப்போனாலும் அவனிடத்தில் அந்தத் தொகையை வசூல் செய்கிறதென்று நிபந்தனை செய்தோம்.

லிகித ரூபமாகப் பிறக்கிற சகல பத்திரங்களையும் ஆதரவுகளையும் பதியும்படி ஊருக்கு ஒரு உத்தியோகசாலையை உண்டுபண்ணித் தக்க உத்தியோகஸ்தர்களை நியமித்தோம். அவர்கள் ஒவ்வொரு ஆதரவும் வாஸ்தவமென்றும், உபயவாதிகளுடைய பூரண சம்மதத்துடன் பிறந்ததாவென்றும், நியாயத்துக்குந் தர்மத்துக்கும் ஒத்திருக்கிறதாவென்றும், பூரணமாய் விசாரித்துத் தெரிந்துகொண்டு புஸ்தகத்திற் பதியும்படிக்கும் அப்படிப் பதிவான ஆதரவுகள் நியாயஸ்தலத்தாருடைய தீர்ப்புக்குச் சமானமென்றும் அவைகளைப் பற்றி வேறே வியாஜ்ஜியஞ் செய்யாமலே நிறைவேற்றலாமென்றும் நிபந்தனை செய்தோம். அதனால் ஜனங்களுக்குச் சந்தோஷம் உண்டாகி எங்களை மேன்மேலும் ஆசீர்வதித்தார்கள். வக்கீல்களுக்கும் எழுத்துக் கூலிக்காரர்களுக்கும் வருமானங் குறைந்துபோய்விட்டதால் அவர்கள் எங்களுக்கு அளவிறந்த சாபங்கள் கொடுத்தார்கள். அவர்களுடைய சாபங்களுக்கு ஜனங்களுடைய ஆசீர்வாதங்களை ஈடாகக் கொடுத்துவிட்டு நாங்கள் நினைத்த காரியங்களை நிர்ப்பயமாக நடத்தினோம். விகித சம்பந்தமான வியாஜ்ஜியங்களெல்லாம் மேற்கண்டபடி சுலபமாய்த் தீர்ந்துபோய்விட்டபடியால் பாக வழக்குகள், பாத்திய வழக்குகள், ஜீவனாம்ஸவழக்குகள், வாயுடம்படிக்கை பற்றிய வழக்குகள் (tort) என்கிற நஷ்டவழக்குகள் முதலியவைகள் மட்டும் நியாயஸ்தலங்களில் செய்யப்பட்டன. அந்த வழக்குகளும் காலதாமதமில்லாமலும் ஜனங்களுக்குத் தொந்தரவும் செலவுமில்லாமலும் சீக்கிரத்திலே தீரும்படிக்கு அநேக விதிகளை ஏற்படுத்தினோம்.

முந்திய ராஜாங்கத்தில் நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள், தினந்தோறும் உத்தியோகசாலைக்குப் போகாமல் கார்த்திகைப் பிறை போலவும், வால்நக்ஷத்திரம் போலவும், எப்போாவது ஒரு காலத்தில் தோன்றி மறைந்து போனார்கள். சில நியாயாதிபதிகள் நியாயசபைக்குப் போகிற நேரம் ஒரே தன்மையாயிராமல் ஒரு நாள் காலையிலும் ஒரு நாள் மத்தியானத்திலும் ஒரு நாள் மாலையிலும் ஒரு நாள் அஸ்தமித்தபின்பும் நியாயசபைக்குப் போகிற வழக்கமாயிருந்தபடியால் வியாஜ்ஜியக்காரர்கள் தாங்கள் எந்த நேரத்தில் நியாயஸ்தலத்துக்குப் போகிறதென்றும் தெரியாமல் அவஸ்தைப் பட்டார்கள். நியாயாதிபதி நேற்றைத் தினங்காலையில் வந்தபடியால் இன்றைய தினமும் காலையில் வருவானென்று வழக்காளிகள் போய்க் காத்திருந்தால் நியாயாதிபதி காலையில் வராமல் கட்சிக்காரர்கள் இல்லாத சமயங்களில் வந்து, கூப்பிட்ட போது கட்சிக்காரர்கள் ஆஜராகவில்லை யென்னுங் காரணத்தால் வியாஜ்ஜியங்களைத் தள்ளிக்கொண்டு வந்தார். கூப்பிட்டபோது ஆஜராகியவர்களுடைய வழக்குகளை விசாரிக்கிறதில்லை. அவர்கள் ஆஜராகாமற்போனால் மட்டும் வழக்குகள் தள்ளப்பட்டன. சில கலெக்டர் தாசில்தார் முதலான அதிகாரிகள் சித்தாதிகளைப் போல இன்றைக்கு ஒரு ஊர் நாளைக்கு ஒரு ஊராகச் சஞ்சரித்து ஒரு ஊரில் மனுக் கொடுத்தவர்களை அதற்குத் தூரமான வேறொரு ஊரிற் கூப்பிட்டு, அவர்கள் காத்திருக்கவில்லை யென்னுங் காரணத்தினால் அவர்களுடைய மனுக்களை நிர்மூலஞ் செய்தார்கள். சில நியாயாதிபதிகள் வியாஜ்ஜியங்களை விசாரிக்கும்படியான சிரமத்தை நீக்கிக்கொள்வதற்காக நான்-ஞாயிண்டர் (non joinder) மிஸ்-ஜாயிண்டர் (mis-joinder) முதலிய பல தோஷங்களைச் சொல்லி வழக்குகளைச் சர்வ சங்காரஞ் செய்துவந்தார்கள். சில நியாயாதிபதிகள் பிரியாது முதலிய தஸ்தாவேஜுகளைப் பார்வையிட்டாலும் ஒவ்வொரு வியாஜ்ஜியத்துக்கும் ஆதாரமான சட்ட சாஸ்திரங்களைத் தாங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளாமலும் வக்கீல்களுடைய வாய்ப்பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கிறதும், வக்கீல்கள் நியாயத்தை எடுத்துக் காட்டவில்லையென்று அவர்கள் மேலே குறை சொல்லி அநியாயத் தீர்ப்புச் செய்கிறதுமா யிருந்தார்கள். சில அதிகாரிகள் அஷ்டாவதானஞ் செய்வதுபோல் அநேக வியாஜ்ஜியங்களை ஒரே காலத்தில் விசாரிக்கத் தொடங்கி ஒன்றையும் முடிக்காமல் திருப்பதி அம்பட்டன் க்ஷவரஞ் செய்ததுபோல் அரையுங் குறையுமாகத் தீர்த்துவந்தார்கள். சில அதிகாரிகள் விசாரணைக் கெடுவை ஒத்தி வைத்துக் காலத்தை நீட்டிவிட்டுக்கொண்டு கக்ஷ¢க்காரர்களை சிக்ஷ¢த்து வந்தார்கள். சிலர் விசாரணைக் கெடுவை வழக்காளிகளுக்குத் தெரிவிக்காமல் குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர்மிடாவிலே நெறி கட்டினதுபோல், நியாயம் ஒரு பக்ஷமிருக்க வேறொரு பக்ஷத்தில் நியாயாதிபதிகள் இருந்துகொண்டு அதற்குத் ததானுசாரமாகச் சாக்ஷ¢களை அதட்டி உருட்டி வாக்குமூலங்கள் வாங்கிக்கொண்டு, எக்கச் சக்கமாய்த் தீர்மானித்து வந்தார்கள். சில நியாயாதிபதிகள் தீர்க்கதரிசிகள் போல, வழக்காளிகளைப் பார்த்த மாத்திரத்தில் இவன் யோக்கியன் அவன் அயோக்கியன் என்று தப்பான எண்ணங்கொண்டு, அதற்குத் தக்கபடி சாதக பாதகஞ் செய்து வந்தார்கள். செப்பிடு வித்தைக்காரர்கள் ஒரு நிமிஷத்தில் செப்பையும் பந்தையும் மாற்றுவதுபோலச் சில நீதியதிபர்கள் ஒருவருடைய அநுபவச் சுதந்திரங்களை ஒரு நிமிஷத்தில் மாற்றி அநியாயஞ் செய்தார்கள். குற்றவிசாரணை செய்வதற்கு முன்னமே ஒவ்வொருவரையும் குற்றவாளியென்று நிச்சயித்து தண்டனை செய்வதிலே முயற்சியாயிருந்த நீதிக்காரர்களும் பலரே. சில நியாயாதிபதிகள் எப்போதும் வாதி பக்ஷத்திலும் சில நியாயாதிபதிகள் எப்போதும் பிரதிவாதி பக்ஷத்திலும் இருந்து நியாயத்தைப் புரட்டினார்கள். சில நியாயாதிபதிகள் வியாஜ்ஜியக்காரர்களைக் கண்டவுடனே அக்கினி தேவனுக்கு அபிஷேகஞ் செய்ததுபோல், அவர்கள் மேல் சீறி விழுந்து அசப்பிய வார்த்தைகளைப் பிரயோகித்து வந்தார்கள். நாங்கள் அந்த அதிகாரிகளுக்கு அபராதம் ஆக்கினைகள் விதித்து அவர்கள் இனிமேல் அநுசரிக்கவேண்டிய நீதி நெறிகளைப் போதித்ததுமன்றி, ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடிக்க அவர்களால் கூடிய பிரயாசம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், எந்த நியாயாதிபதியாவது நியாயத்தைக் கண்டுபிடியாமல் தீர்மானஞ் செய்தால் அவன் உத்தியோகத்துக்கு அநர்கனென்னும் எச்சரிக்கை செய்தோம்.

வியாதி வந்தபிற்பாடு பரிகாரஞ் செய்வதைப் பார்க்கிலும் வியாதி வராமலே தடுக்கப் பிரயாசப்படுவது நன்மையா யிருப்பதுபோலக் குற்றம் நடந்த பிற்பாடு, தண்டிப்பதைப் பார்க்கிலும் குற்றம் நடவாமலே தடுக்கப் போலீசுவீரர்கள் பிரயாசப்பட வேண்டுமென்று உத்தரவு செய்தோம். குற்றவாளியைத் தண்டிக்கிற விஷயத்தில் நீதியும் இரக்கமும் பொருந்தி இருக்க வேண்டுமென்றும், குற்றம் ருசுவாகியவரையில் ஒவ்வொருவனும் மாசற்றவனென்று ஊகிக்க வேண்டுமென்கிற விதியையும், சந்தேகத்தின் பிரயோசனத்தைக் குற்றவாளிக்குக் கொடுக்க வேண்டுமென்கிற விதியையும் அநுசரிக்க வேண்டுமென்றும், தண்டனையான குற்றவாளி அப்பீல் செய்கிற பக்ஷத்தில் அப்பீல் முடிவாகிற வரையில் தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் கட்டளை யிட்டோம். குற்றவாளிகளைச் சாட்டை முதலிய கருவிகளால் அடிக்கும்படி விதிக்கப்படுகிற தண்டனையானது மிருகங்களுக்கும் மிருகப்பிராயமான மிலேச்சர்களுக்கும் உரியதே தவிர நாகரிகமடைந்த தேசங்களுக்கு அநுசிதமாகையால் அந்தக் கொடிய தண்டனை எங்களுடைய ராஜ்ஜியத்தில் இல்லாதபடி நீக்கிவிட்டோம். பகுத்தறிவுள்ள சிறு பிள்ளைகள் தண்டிக்கப்படுகிற பக்ஷத்தில் அவர்களை மற்றக் குற்றவாளிகளிடம் சேர்க்காமல் பிரத்தியேகமான இடத்தில் வைத்து அவர்களுக்குரிய தொழில், கல்வி முதலியவைகளைப் பயிற்றும்படி திட்டஞ் செய்தோம். அப்படியே தண்டனை அடைந்த ஸ்திரீகளுக்கும் பிரத்தியேகமான காராக்கிருகம் ஏற்படுத்தி அவர்களுடைய மானத்தைக் காப்பாற்றினோம்.
------------

அத்தியாயம் -40
விக்கிரமபுரி சில காலங் குடியரசாயிருந்த நிமித்தம், அநேக ஜனங்கள் ராஜபக்தி என்பதையே சுத்தமாய் மறந்துவிட்டார்கள். ராஜாவாயிருக்கிற நாங்களே ராஜபக்தியை உபதேசிப்பது கிரமமல்ல வென்று நினைத்து, சில விவேகிகளை ஏவி ஜனங்களுக்கு ராஜபக்தியைப் போதிக்கும்படி செய்வித்தோம். அவர்கள் அடியிற்கண்டபடி பிரசங்கித்தார்கள்.

“ஒவ்வொரு மனுஷனும் ஜீவிக்கிறதற்குப் பலருடைய உதவி வேண்டியிருப்பதால் ஒவ்வொருவனும் தனிமையாக வனவாசம் செய்வது சாத்தியமில்லாத காரியமா யிருக்கிறது. ஆகையால் ஆதிகாலந் துவக்கிக் கிராமங்களிலும் நகரங்களிலும் ஜனங்கள் கூட்டுறவாய் வாழ்வது வழக்கமாயிருக்கின்றது. விவசாயம், நெசவு, சிற்பம், தச்சுவேலை, கொல்லுவேலை முதலிய பல தொழில்கள் உலகத்துக்கு முக்கியமானபடியாலும், அந்தத் தொழில்களை ஒவ்வொருவனுங் கற்றுக்கொள்வது அசாத்தியமாகையாலும், அந்தத் தொழிலாளிகள் உள்ள இடங்களில் வசிப்பது ஜனங்களுக்குப் பெரிய சௌகரியமாயிருக்கிறது. கூட்டுறவாய் வாழ்கிற ஜனங்கள் ஒருவருக்கொருவர் உபத்திரவஞ் செய்துகொள்ளாமலும், ஒருவருடைய சொத்தை ஒருவர் அபகரிக்காமலும் பாதுகாப்பதற்காகவும் இன்னும் தேசோபகாரமான பல நன்மைகளைச் செய்யவுமே ஒவ்வொரு தேசத்திலும் ராஜாங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஜனங்கள் தங்கள் நன்மைக்காக அரசனை நியமித்துக் கொண்டிருப்பதால் அரசனுடைய கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியது அகத்தியமா யிருக்கிறது. ஒரு சிறிய குடும்பத் தலைவன் சொற்படி நவாத குடும்பஸ்தர்கள் துன்பமடைவார்களானால், அநந்தங் குடும்பங்களுக்குத் தலைவனாகிய அரசன் சொற்படி கேளாதவர்கள் எப்படி §க்ஷமம் அடைவார்கள்? உலகமாகிய உடலுக்கு அரசன் தலையாகவும் பிரஜைகள் பல அவயவங்களாகவும் இருக்கிறார்கள். எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானமாயிருப்பது போல், உலகமாகிய உடலுக்கு அரசனே பிரதானமா யிருக்கிறான். தலையில்லாத சரீரம் எப்படி ஜீவிக்காதோ அப்படியே அரசனில்லாத தேசம் நாசத்தையடையும்.

“சகல சாஸ்திரங்களும், புராணங்களும், சமய நூல்களும் அரசனை விசேஷமாகச் சொல்லுகின்றன. அரசன் ஜனங்களால் நியமிக்கப்பட்டவனா யிருந்தாலும் அவன் சகலருக்கும் மேலான புருஷ ஸ்ரேஷ்டனென்று சகல தேசங்களிலும் நன்கு மதிக்கப் படுகிறான். சூரியன் உயர்வான இடத்திலிருந்து பிரகாசியா விட்டால் உலகம் ஒளி பெறுமா? மேகம் மேலான இடத்திலிருந்து வருஷியாவிட்டால் உலகத்துக்குப் பயன்படுமா? ஆறு குளங்கள் உயர்வாகவும், வயல்கள் தாழ்வாகவும் இருந்தால் மட்டும் ஜலம் பாயுமே யல்லாமல், ஆற்றைப் பார்க்கிலும் உயர்வாயிருக்கிற கழனிகளுக்கு ஜலம் பாயுமா? அப்படியே அரசனுக்குக் குடிகள் தாழ்ந்திருக்க வேண்டியவர்களே யல்லாது அரசனுக்குக் கீழ்ப்படியாத குடிகள் §க்ஷமத்தை அடைவார்களா? 'மாதாவுக்குச் சுரமிருந்தால் கர்ப்பத்துக்குஞ் சுரம்' என்பது போல் அரசன் சுகமாயிருந்தால் மட்டும் ஜனக்களுக்கும் சுகமானதால், அவனுடைய §க்ஷமத்தை ஜனங்கள் எப்போதும் பிரார்த்திக்க வேண்டும். அரசனை வணக்கமாயும், மரியாதையாயும், பயபக்தியாயும் பூஜிதை செய்யவேண்டும். அரசனுடைய சுகதுக்கங்களைத் தங்களுடைய கண்ணிற் பட்டதாகவும் பிரஜைகள் எண்ணி எப்போதும் ராஜபக்தி செய்யவேண்டும். சூரியனிடத்தில் வெப்பமும், சந்திரனிடத்தில் களங்கமும், மேகத்தினிடத்தில் இடியும், புஷ்பங்களிடத்தில் முட்களுமிருப்பது போல, அரசனும் நம்மைப் போல் மனுஷனானதால் அவனிடத்திலே சில குண தோஷங்களிருப்பதும் சகஜம். அதற்காக அரசனை நாம் அவமதிக்காமல் நீரைப் பிரித்துப் பாலை உண்ணும் அன்னம் போல, அரசனுடைய குற்றத்தை நீக்கிக் குணத்தை மட்டும் கிரகித்துக் கொள்ளவேண்டும். அரசனுடைய செய்கைகளுக்கு நமக்குக்காரணந் தெரியாதபோது அவன் நல்ல எண்ணத்துடனே செய்ததாக ஊகிக்கவேண்டுமே தவிர, விபரீதமாக எண்ணக்கூடாது. அரசன் ஒரு அக்கிரமஞ் செய்தாலுங் கூட, அதைக் கிரமமான மனுமூலமாகப் பரிகரிக்கவேண்டுமே யல்லாது, ராஜத் துரோகத்தைக் கனவிலுஞ் சிந்திக்கக் கூடாது. ராஜ நிந்தையை நாமும் பேசக்கூடாது. பிறர் பேசவும் இடம் கொடுக்கக்கூடாது.

“சத்துருக்களையும், துஷ்டர்களையும் அடக்கவும், நியாய பரிபாலனம் நடத்தவும், தேச நன்மைக்கடுத்த பல வேலைகளைச் செய்யவும் போதுமான சதுரங்கச் சேனைகளையும் உத்தியோகஸ்தர் முதலியவர்களையும் நியமித்து அநுபாலிக்க அரசன் கடமைப்பட்டிருப்பதால், அதற்காக விதிக்கப்பட்ட வரிகளை ஜனங்கள் மனோற்சாகமாகச் செலுத்த வேண்டும். வரி வாங்காவிட்டால் அரசன் தேச காரியங்களை எப்படி நடத்தக்கூடும்? வேரில் விடப்பட்ட ஜலம் மரம் முழுவதும் பரவுவது போலவும் நாம் வயிறு நிரம்பப் புசிக்கும் உணவு ஜீரணித்துத் தேகம் முழுதும் வியாபிப்பது போலவும், அரசனுக்குப் பிரஜைகள் கொடுக்கிற வரிகள் பிரஜைகளுக்கே உபயோகமாகிறபடியால், அரசனால் விதிக்கப்பட்ட நியாயமான வரிகளைப் பிரஜைகள் நிராடங்கமாகச் செலுத்தவேண்டும்.

ரோமாபுரியில் பல வரிகள் ஏற்பட்டிருந்த காலத்தில் ஜனங்கள் வரி கொடுக்க மாட்டோமென்று நிராகரித்து ஊரை விட்டு வெளியே போய்விட்டார்கள். அவர்களை அழைத்து வரும்படி அகிரிப்பா என்னும் தளகர்த்தனை ஆலோசனைச் சங்கத்தார் அனுப்பினார்கள். அந்தத் தளகர்த்தன் ஒரு விசித்திரமான கட்டுக் கதையைச் சொல்லி ஜனங்களை வசியப் படுத்தினான். அ·தென்னவெனில்:-

முற்காலத்தில் வயிற்றுக்கும் மற்ற அவயவங்களுக்குஞ் சடுத்தம் உண்டாகி அந்த அவயவங்களெல்லாம் ஒன்று கூடி வயிறு ஒரு வேலையுஞ் செய்யாமலிருப்பதால் இனிமேல் வயிற்றுக்காகத் தாங்கள் ஒரு பாடும் படுகிறதில்லையென்று பிரதிக்ஞை செய்து கொண்டன. கைகள் “ஒரு வேலையுஞ் செய்யோம்” என்று சும்மா இருந்தன. கால் “வயிற்றுக்காக ஒரு அடி கூட எடுத்து வைக்கமாட்டேன்” என்றது. வாய் “ஒன்றையும் புசிக்க மாட்டேன்” என்றது. கண், காது முதலியவைகளும் தங்களுடைய தொழில்களைச் செய்ய நிராகரித்தன. இவ்வகையாக அந்த அவயவங்கள் செய்த பந்துக்கட்டு தங்களுக்கே தீங்காய் விளைந்தது. வயிற்றுக்கு ஆகாரமில்லாமையினால் கை சோர்ந்து, கால் அயர்ந்து, வாய் உலர்ந்து, கண் இருண்டு, காது அடைத்துத் தங்களுக்கே உபத்திரவம் உண்டானபடியால் வயிறு தான் பிரதானமென்றும், வயிற்றுக்கு ஆகாரங் கொடாவிட்டால் தாங்கள் ஜீவிக்கிறதற்கு மார்க்கமில்லை என்றும் அந்த அவயவங்கள் அறிந்துகொண்டன. வயிற்றுக்கு இடுகிற அன்னம் தேகத்தின் அவயவங்களுக்கெல்லாம் பிரயோஜனமாவது போல அரசனுக்குக் கொடுக்கப்பட்ட வரிகள் ஜனங்களுக்கே உபயோகமாகிற படியால் “வரி கொடுக்கிற விஷயத்தில் ஜனங்கள் ஆடங்கம் செய்யக்கூடாது” என்றார்கள்.

அந்தப் பிரசங்கிகள் மறுபடியும் ஜனங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:- “இந்த ஊர் குடியரசாயிருந்த காலத்தில் நாம் பட்ட அவஸ்தைகளும், இப்போது நமக்கு உண்டாயிருக்கிற சௌகரியங்களும், நமக்குப் பிரத்தியக்ஷப் பிரமாணமாய்த் தெரிந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தர்ம ராஜாங்கம் இந்தப் பூமண்டலத்தில் எங்கேயாயினும் இருக்குமா? சில மூட ராஜாக்கள் செய்த அக்கிரமங்களை நீங்கள் கேள்விப்பட்டால் இப்போது நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகளென்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்! ஒரு சம்ஸ்கிருத வித்துவான் “அநியாய பஞ்சகம்” என்று ஐந்து ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். அவைகளுள் மூன்று சுலோகங்களை மொழி பெயர்த்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

அநியாய பஞ்சகம்

1.அநியாயபுரி என்னும் பட்டணத்தை மூர்க்கராஜன் என்பவன் ஆண்டுகொண்டு வந்தான். அவன் எலி வேட்டைக்குப் போயிருந்தபோது அவனுடைய பத்தினியை ஒரு பாம்பு கடித்து விட்டதாகவும், விஷம் தலையில் ஏறினவுடனே அவளுக்குப் பிராணலயம் உண்டாகுமென்றும், அரண்மனை உத்தியோகஸ்தர்கள் மந்திரிக்குத் தெரிவித்தார்கள். விஷம் தலையில் ஏறாதபடி தலையை வெட்டிப் பத்திரமாய் வைத்திருக்கும்படி மந்திரி உத்தரவு செய்தான். அந்தப் பிரகாரம் ராஜபத்தினியின் தலை வெட்டப் பட்டது. பாம்பு ஒரு வீட்டில் நுழைந்து வெளிப்படாமல் இருந்தபடியால் அந்த வீட்டைக் கொளுத்திவிடும்படி மந்திரி ஆக்ஞாபித்து அந்தப் பிரகாரம் நெருப்பு வைக்கப்பட்டது. அந்த நெருப்பு நகரமெங்கும் பரவி எல்லா வீடுகளையும் பொருள்களையும் நாசஞ் செய்துவிட்டது. தீயை அவிப்பதற்காக ஏரியின் கரையை உடைக்கும்படி மந்திரி உத்தரவு செய்து அந்தப் பிரகாரம் ஏரியின் கரை உடைக்கப்பட்டது. ஏரியின் ஜலமெல்லாம் வீணாய்ப் போய்விட்டதால் வயலுக்குப் பாய்ச்சத் தண்ணீரில்லாமல் பயிர்களெல்லாம் வாடி வதங்கின. பயிர்கள் வெய்யிலினால் வாடாதபடி ஊரிலுள்ள மரங்களையெல்லாம் வெட்டிப் பயிருக்குப் பந்தலிடும்படி செய்வித்தான். இந்தப் பிரகாரம் மந்திரி ஊரையெல்லாம் பாழாக்கி விட்டான்.

2.பயறு அளக்கிற விஷயத்தில் விற்கிறவனுக்கும் கொள்கிறவனுக்கும் கலகம் உண்டாகி, மத்தியஸ்தர்களிடத்தில் முறையிட்டுக் கொண்டார்கள். விற்கிறவன் “மரக்காலைக் கவிழ்த்துப் பின்புறத்தால் அப்பேன்” என்றான். வாங்குகிறவன் “வழக்கப்படி மரக்காலின் முன்புறத்தால் அளக்க வேண்டும்” என்றான். மத்தியஸ்தர்கள் இருவருக்கும் பொதுவாக மரக்காலைப் படுக்க வைத்து குறுக்காக அளக்கும்படி தீர்மானித்தார்கள்.

3.ஒரு சேணியனுடைய பிள்ளை குளத்தில் விழுந்து இறந்து போய்விட்டது. அந்தக் குளத்துக்குடையவன் மேலே சேணியன் குற்றஞ் சாட்டினான். உடையவனை அரசன் வரவழைத்து விசாரித்தபோது அவன் குளம் வெட்டின கூலிக்காரன் மேலே குற்றஞ் சுமத்தினான். அவர்கள் குளம் நிறையும்படி மழை பெய்த மேகத்தின் மீது குறை கூறினார்கள். குயவனுடைய சூளையினின்று கிளம்புகிற புகையினால் மேகம் உண்டாவதாக அரசன் எண்ணிக் குயவர்களை யெல்லாம் குலநாசஞ்செய்தான்” என்றார்கள்.

என்னுடைய அபிப்பிராயமும் ஞானாம்பாளுடைய அபிப்பிராயமும் அநேக விஷயங்களில் ஏகபாவமாக ஒத்திருந்தாலும், இரண்டொரு விஷயக்களில் நானும் அவளும் பின்னாபிப்பிராயப் பட்டோம். ராஜாங்க வருமானத்தைப் பார்க்கிலும் செலவு அதிகரித்துப் பணம் போதாமலிருந்தபடியால், ஜனங்களிடத்தில் அதிக வரி வசூல் செய்யவேண்டுமென்பது என்னுடைய கருத்தாயிருந்தது. ஞானாம்பாள் என்னுடைய அபிப்பிராயத்தை ஒப்புக்கொள்ளாமல் என்னைப் பார்த்துச் சொல்கிறாள்:- “ஜனங்களுக்கு நியாயமாக எவ்வளவு வரி ஏற்படுத்தக்கூடுமோ அவ்வளவு வரி முன்னமே ஏற்பட்டிருப்பதால் நாம் செலவைக் குறைக்க மார்க்கம் தேடவேண்டுமே யல்லாது, ஜனங்களுடைய தலை மேலே அதிக வரிகளைச் சுமப்பது தர்மமல்ல. 'சுண்டைக்காய் காற் பணம் சுமைக்கூலி முக்காற் பணம்' என்பது போல, அநேக உத்தியோகஸ்தர்களுக்கு வேலை குறைவாக இருக்க, அவர்களுக்கு அபரிதமான சம்பளங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த பூலோகத்தில் ஒரு ராஜாங்கத்திலும் இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வில்லை. கோட்டை போல நாலு பக்கத்திலும் மலைகளுங் கடலுஞ் சூழ்ந்திருக்கிறது. இந்த நாட்டுக்குச் சத்துரு பயமென்கிற பிராந்தியே யில்லாமலிருக்க, எண்ணிறந்த ரத கஜ துரக பதாதிகளை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நாம் சம்பளம் கொடுப்பது அக்கிரமமல்லவா? அன்றியும் மராமத்து டிபார்ட்மெண்டு (P.W.D.) என்கிற ஒரு பெரும் பூதமானது நம்முடைய பொக்கிஷப் பணங்களையெல்லாம் புசித்து விடுகின்றது. அநாவசியமான செலவுகளையெல்லாம் குறைத்து விட்டால் நம்முடைய வருமானம் செலவுக்கு மேல் மிஞ்சிக் கையிருப்புக்கும் இடம் உண்டாகும். சம்பளங்களைக் குறைப்பது உத்தியோகஸ்தர்களுக்கு அதிருப்தியா யிருக்குமென்பது நிச்சயந்தான். ஆனால் சில உத்தியோகஸ்தர்களுடைய திருப்திக்காகக் கோடானுகோடி ஜனங்களுடைய சௌக்கியத்துக்கு நாம் குறைவு செய்யலாமா?” என்றாள். ஞானாம்பாள் சொன்ன நியாயங்கள் மறுக்கக்கூடாதவைகளா யிருந்தபடியால் நானும் அவளுடைய கருத்துக்கு இசைந்தேன். விசுவாமித்திரர் அண்டங்களைப் புதிதாக சிருஷ்டிக்க ஆரம்பித்ததுபோல, நாங்களும் புதிய ஏற்பாடுகள் செய்யத் துவக்கினோம். விசுவாமித்திரர் நினைத்தபடி முடிக்காமல் மத்தியில் தங்கிவிட்டது போல் நாங்கள் தங்காமல் எங்களுடைய எண்ணங்களைப் பரிபூர்த்தி செய்தோம். ஒரு ஆயுதமில்லாமல் யுத்தமுஞ் செய்யாமல் ஒரு வார்த்தையினாலே படைகளையெல்லாம் ஒழித்துவிட்டோம். மராமத்துப் பூதத்தைக் கிழித்து விட்டோம். அதிகச் சம்பளங்களைக் கழித்துவிட்டோம். இவ்வாறு செழித்து விட்டோம். படைகளிலும் மராமத்து வகுப்பு உத்தியோகத்திலும் அவசியமானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வீட்டுக்குப் போகும்படி உத்தரவு கொடுத்துவிட்டோம். எங்களாற் பிரதிகூலம் அடைந்தவர்களெல்லாரும் எங்களைத் தூஷித்தார்கள். அநுகூலம் அடைந்தவர்கள் எல்லாரும் பூஜித்தார்கள். நாங்கள் ஒன்றுக்கும் அஞ்சாமல் ஒரு கதையிற் சொல்லியபடி, எங்களுக்கு யுக்தமாய்த் தோன்றின பிரகாரம் நடப்பித்தோம். அந்தக் கதையைச் சுருக்கிச் சொல்லுகிறேன்.

“பேசுகிற பக்ஷ¢யும், பாடுகிற மரமும், தங்கத் தண்ணீரும் ஒரு மலைச் சிகரத்திலிருப்பதாக ஒரு ராஜகுமாரத்தி கேள்வியுற்று, அவைகள் தனக்கு வேண்டுமென்று தன்னுடைய தமையன்மார்களிடத்திலே தெரிவித்தாள். மூத்த தமையன் அவைகளைத் தான் கொண்டுவருவதாகச் சொல்லிப் பயணம் புறப்பட்டான். அவன் புறப்பட்ட இருபதாம் நாள் ஒரு சந்நியாசியைக் கண்டு அந்த மலைக்குப் போகிற மார்க்கத்தை விசாரித்தான். சந்நியாசி ராஜகுமாரனைப் பார்த்து “அந்த மலை மேலே ஏறுவது சுலப சாத்தியமல்ல; ஏறும்போது பயங்கரமான சப்தங்களும் தூஷணமான வார்த்தைகளும் பல பக்கங்களிலும் கேட்கப்படும். அந்தச் சப்தஞ் செய்கிறவர்கள் அரூபிகளானதால், அவர்கள் நம்முடைய கண்களுக்குத் தோன்றார்கள். மலைமேல் ஏறுகிறவன் அந்தச் சப்தங்களுக்குப் பயப்படாமலும் பின்னே திரும்பிப் பாராமலும் ஏறுவானானால், அவன் மலை மேலே போய்ச் சேர்ந்து அந்த அபூர்வ வஸ்துக்களையுங் கைவசஞ் செய்துகொண்டு திரும்புவான். அவன் பின்னே திரும்பிப் பார்ப்பானானால் உடனே கருங்கல்லாய்ச் சமைந்து போவான். அநேகர் என் சொல்லைக் கேட்காமற் போய்க் கல்லாய் சமைந்து போனார்கள். நீ போனாலும் அப்படித்தான் சம்பவிக்கும்” என்று சந்நியாசி ராஜகுமாரனைப் போக வேண்டாமென்று தடுத்தான். ராஜகுமாரன் தான் அகத்தியம் போகவேண்டுமென்று முஷ்கரஞ் செய்தபடியால் சந்நியாசி மலைக்குப் போகிற மார்க்கத்தைத் தெரிவித்தான். ராஜகுமாரன் மலைமேல் ஏற ஆரம்பித்த உடனே சந்நியாசி சொன்னபடி பல சப்தங்கள் உண்டாயின. “அந்த மூடன் எங்கே போகிறான்? அவனை விடாதே! பிடி! அடி! கொல்லு!” என்றும் இன்னும் பல விதமாகவும் சப்திப்பதைக் கேட்டு ராஜகுமாரன் பீதி உடையவனாய்ப் பின்னே திரும்பிப்பார்த்தான். உடனே கல்லாய்ச் சமைந்து போனான். அவனைத் தேடிக்கொண்டு வந்த அவனுடைய சகோதரனும் சந்நியாசி வார்த்தையைக் கேளாமல் மலைக்குப் போய்க் கல்லானான். ஆண் வேஷம் பூண்டுகொண்டு அண்ணன்மார்களைத் தேடிப் போன ராஜகுமாரத்தி சந்நியாசியைச் சந்தித்து மலைக்குப் போகிற மார்க்கத்தை விசாரித்தாள். அவளையும் போக வேண்டாமென்று சந்நியாசி தகுந்த புத்திமதிகள் சொல்லியும் அவள் கேட்கவில்லை. ஒரு சப்தமுங் கேளாதபடி தன்னுடைய இரண்டு காதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு, நிர் விக்கினமாய் மலைமேல் ஏறி, அந்த அபூர்வ வஸ்துக்களையும் ஸ்வாதீனஞ் செய்துகொண்டு, கல்லாய்ச் சமைந்திருந்த அண்ணன்மார் முதலானவர்களையும் எழுப்பிக் கொண்டு ஒட்டோலகமாய்ப் பட்டணத்துக்குத் திரும்பினாள்.”

அந்த ராஜ குமாரத்தியைப் போல நாங்களும் அந்நியர்களுடைய தூஷணைகளையாவது பூஷணைகளையாவது கவனிக்காமல் எங்களுக்கு நியாயமாகத் தோன்றின காரியங்களை ஊக்கமாகவும் நிர்ப்பயமாகவுஞ் செய்து முடித்தோம்.
---------

அத்தியாயம் -41
மொட்டைத் தலைச்சிக்குக் கூந்தல் அழகியென்று பெயர் வைத்ததுபோல விக்கிரமபுரியில் நியாயசாஸ்திரந் தெரியாதவர்களெல்லாம் நியாயவாதிகளாக நியமிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களை யெல்லாம் ஞானாம்பாள் வரவழைத்துப் பின்வருமாறு பிரசங்கித்தாள். “உலகத்தில் நடக்கிற வர்த்தகம், வியாபாரம், பல தொழில்கள், கொள்ளல், விற்றல், பரபத்தியங்கள் தாயபாகங்கள் முதலிய பரஸ்பர நிபந்தனைகளைப் பற்றி எண்ணிறந்த சட்ட திட்டங்களும், ஒழுங்குகளும், மனுநீதிகளும், நியாயப்பிரமாணங்களும் உண்டாயிருக்கிற படியாலும், அந்த ஒழுங்குகளையெல்லாம் ஒவ்வொருவனுங் கற்றுக்கொண்டு நியாயசபையில் விவகரிப்பது கஷ்டசாத்தியம் ஆகையலும், சட்டந் தெரியாத பாமர ஜனங்களுக்கு உபகார்த்தமாக நியாயவாதத் தொழில் சகல தேசங்களிலும் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றது. நியாயவாதிகள் துன்பம் அடைந்தவர்களுக்குத் துணைவர்களாயும் ஆஸ்திகளை இழந்தவர்களுக்கு அடைக்கல ஸ்தானமாயும், பாத்தியக் கிரமங்களுக்குப் பாதுகாவலராயு மிருக்கிறார்கள். நியாயவாதிகளே நியாய சாஸ்திரந் தெரியாமலிருப்பார்களானால் அவர்கள் மற்றவர்களுக்கு எப்படிச் சகாயஞ் செய்யக்கூடும்? குருடனுக்குக் குருடன் வழிகாட்டவும், செவிடனுக்கு ஊமையன் உபதேசிக்கவுங் கூடுமா? கூடாதாகையால், நியாயவாதிகள் சகக சாஸ்திரப் பண்டிதர்களா யிருக்கவேண்டும். நியாய ஸ்தலங்களில் சகல விதமான வழக்குகளும் வருகிறபடியால் அந்த வழக்குகளுக்குச் சம்பந்தமான சகல சட்டங்களும் நியாயவாதிகளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலப் பாடமா யிருக்கவேண்டும். ஒரு அற்பத் தொழிலாளிகூட, வெகு காலம் பிரயாசைப்பட்டுக் கற்றுக் கொண்டு பிறகு அந்தத் தொழிலில் பிரவேசிக்கிறான். அப்படியானால் வக்கீல் வேலையைக் கற்றுக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் எவ்வளவு பரிசிரமப்பட வேண்டும்? யுத்த சாஸ்திரந் தெரியாதவன் யுத்தத்திற் பிரவேசித்தது போலவும், மாலுமி சாஸ்திரந் தெரியாதவன் மரக்கலம் ஓட்டப் புகுந்தது போலவும், நியாய சாஸ்திரந் தெரியாத நியாயவாதி எப்போதும் பரம சங்கடப்பட ஹேதுவாகுமாகையால் நியாய வாதிக்குச் சகல சாஸ்திரங்களும் விவகார அனுபவங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

வக்கீல் ஒரு வழக்கை அங்கீகரித்துக் கொள்வதற்குமுன், அதை நன்றாகப் பரிசோதித்து நியாய வழக்காயிருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அநியாய வழக்குகளை அங்கீகரிக்கக் கூடாது. வக்கீல் தன்னிடத்தில் வருகிற வழக்காளிகளின் சங்கதிகளைப் பூராயமாய் விசாரித்தால் பெரும்பாலும் உண்மையைக் கண்டுபிடிப்பது பிரயாசையாயிராது. ஒருவன் கொலை செய்திருப்பதாக வக்கீலுக்கு உண்மை தெரிந்த பிற்பாடு, அவன் கொலையே செய்யவில்லை யென்று வக்கீல் பேசுவது தெய்வ சம்மதமாகுமா? அந்த வக்கீலினுடைய மனசாக்ஷ¢க்குத் தான் பொருத்தமா யிருக்குமா? ஒருவன் திருடனென்று வக்கீலினுடைய மனசுக்குத் தெரிந்திருக்க, அவன் திருடவேயில்லையென்று வக்கீல் சலஞ்சாதிப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம்? அந்தக் கொலையையுங் களவையும் வக்கீல் செய்திருந்தால் எவ்வளவு தோஷமோ அவ்வளவு தோஷம் வக்கீலைச் சாராதா? ஒருவன் பொய்ப் பத்திரத்தை உண்டுபண்ணினதாக வக்கீலுக்குப் பரிஷ்காரமாய்த் தெரிந்தபிறகு, அந்தப் பத்திரம் உண்மையென்று வக்கீல் வாதித்தால் அந்தப் பத்திரத்தை சிருஷ்டி செய்தவனுக்கும் வக்கீலுக்கும் என்ன பேதமிருக்கிறது? இந்த வழக்காளியும் மனதறியப் பொய்யாதரவை உண்டுபண்ணினான். வக்கீலும் மனதறியப் பொய்ப்பத்திரத்தை மெய்ப் பத்திரமென்று சாதித்தான். ஆகையால் அவ்விருவருங் குற்ற விஷயத்தில் துல்லியமா யிருக்கிறார்கள். ஒரு வழக்கு நிர்த்தோஷமாகக் காணப்படுகிற பக்ஷத்தில், சில அற்பவிஷயங்களில் இப்படியோ அப்படியோ என்கிற சந்தேகமிருந்தாலுங் கூட அந்த வழக்கை வக்கீல் ஏற்றுக்கொள்ளத் தடையில்லை. ஏனென்றால் உண்மையைக் கண்டுபிடிப்பது கோர்ட்டாருடைய கடமையே யல்லாது வக்கீலுடைய கடமையல்ல. அன்றியும் ஒரு கக்ஷ¢ பொய்யென்று ஸ்தாபிக்கப் படுகிற வரையில் அதை மெய்யென்றே ஊகிக்கவேண்டியது சுபாவமுறைமையா யிருக்கிறது. சில வக்கீல்கள் வழக்கின் தன்மையை யோசிக்காமல், வந்த வழக்கு எந்த வழக்காயிருந்தாலும் உடனே அங்கீகரித்துக் கொண்டு தங்களுடைய மனசாக்ஷ¢க்கு விரோதமாக கறுப்பை வெள்ளையென்றும், வெள்ளையைக் கறுப்பென்றும் வாதித்துப் பெயரைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அந்நியாயவாதிகள் என்கிற பெயர் பொருந்துமேயல்லாமல் நியாயவாதிகளென்கிற பெயர் பொருந்துமா?

ஒரு வழக்கை வக்கீல் அங்கீகரிக்கும்போது அது துர்வழக்கென்று தெரியாமலிருந்து பிறகு எப்போது தெரிந்தாலும், அதை உடனே நிஷேதித்து விடவேண்டியது வக்கிலின் கடமையா யிருக்கிறது. ஒருவனுடைய கக்ஷ¢யை வக்கீல் பார்வையிட்டு அதை அங்கீகரிக்கமாட்டேனென்று நிராகரித்தபின்பு, அவனுடைய எதிரியின் கக்ஷ¢யையும் வக்கீல் ஏற்றுகொள்வது முறையல்ல. ஏனென்றால் எந்தக் கக்ஷ¢க்காரனுடைய வழக்கை வக்கீல் முந்திப் பார்வையிட்டாரோ அந்தக் கக்ஷ¢க்காரனுடைய ரகசியங்களும் பலாபலங்களும் வக்கீலுக்குத் தெரிந்திருக்குமாதனாலும், அவைகளை அந்தக் கக்ஷ¢க்காரனுக்கு விரோதமாகவும் எதிர்க் கக்ஷ¢க்காரனுக்குச் சாதகமாகவும் உபயோகிக்கும்படியான துர்ப்புத்தி வக்கீலுக்கு உண்டாகுமாதலாலும் வக்கீல் எதிர்க்கக்ஷ¢யை ஏற்றுக்கொள்வது தர்மமல்ல. வக்கீலிடத்தில் வருகிற கக்ஷ¢க்காரன் அறியாப் புத்தியினால் ஆதாரமற்ற வழக்கைச் செய்ய எத்தனிக்கிறானென்று வக்கீலுக்குத் தெரிந்த மாத்திரத்தில், அவன் வீண் வழக்காடி நஷ்டப்படாதபடி அவனுக்கு வக்கீல் புத்தி போதிக்க வேண்டும். சமாதானப் படுத்த வேண்டியது வக்கீலின் கடமையா யிருக்கிறது. வக்கீல்கள் தங்களுடைய சொந்தப் பிரயோஜனத்துக்காக வழக்குகள் சமாதானமாகாதபடி விக்கினஞ் செய்கிறார்களென்னும் அபவாதத்துக்கு வக்கீல்கள் இடங் கொடுக்கக் கூடாது.

ஒரு துர்நியாயவாதியானவன் கக்ஷ¢க்காரனைக் கண்ட உடனே “உன்னுடைய அதிர்ஷ்டந்தான் உன்னை என்னிடத்தில் கொண்டுவந்து விட்டது. என்னிடத்தில் எப்போது வந்தாயோ அப்பொதே உன்னுடைய காரியமெல்லாம் அனுகூலந் தான். வல்லவனுக்குப் புல்லுமாயுதம் என்பது போல உன்னுடைய வழக்கு எப்படிப்பட்ட வழக்காயிருந்தாலும் ஜயித்துக் கொடுக்கிறேன். உன்னுடைய எதிரியைத் தலை காட்டாதபடி அடிக்கிறேன். அவன் லா (law) மேலே போனதால் நான் ஈக்விடி (equity) மேலே போவேன். அவன் தர்மசாஸ்திரத்தை ஆதாரமாகக் காட்டினால் நான் இங்கிலீஷ் லாவைக் கொண்டு வெல்கிறேன். அவன் பிரெஞ்சு லாவைப் (french law) பிரயோகித்தால் நான் ஜெர்மன் லாவைப் (german law) பிரயோகிக்கிறேன். அவன் ஜெர்மன் லாவால் என்னை அடித்தால் அவனை ரோமன் லாவால் (Roman law) அடிக்கிறேன்” என்று மெய்யாகவே யுத்தத்துக்குப் புறப்படுகிறவன் போல் வீரச் சல்லாபங் கூறுகிறான். மதில் மேல் ஏறிய பூனையைப் போலவும் சேற்றில் நட்ட கம்பம் போலவும் வியாஜ்ஜியம் எந்தப் பக்கம் தீருமென்பது நிச்சயமில்லாமலிருக்கிற வக்கீல் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லிக் கக்ஷ¢க்காரர்களை ஏமாற்றுவது தர்மமா?

வியாஜ்ஜியத் தொகையையும் வக்கீலினுடைய பிரயாசத்தையும் வழக்காளியினுடைய நேர் நிர்வாகத்தையும் யோசித்து, அதற்குத் தக்கபடி கிரமமான பீஸ் (fees) வக்கீல் வாங்கவேண்டுமே தவிர அதிக பீஸ் கேட்பது கிரமமல்ல. வியாஜ்ஜியக்காரனுக்குப் பல செலவுகளுந் துன்பங்களும் நேரிடுகிறபடியால் வக்கீலும் அதிக பீஸ் வாங்கி அவனைத் துன்பப்படுத்துவது நியாயாமல்ல. ஒரு வழக்காளி தோற்கிற பக்ஷத்தில் அவன் கொடுத்த பீசுகளும் செய்த செலவுகளும் அவனுக்கு மறுபடியும் கிடைக்கிறதற்கு மார்க்கமில்லாமல் நஷ்டமடைகிறான். அவன் ஜெயிக்கிற பக்ஷத்தில் சட்டத்திற் குறிக்கப்பட்ட கிரமமான பீஸ் மட்டும் அவனுக்கு எதிரியினால் கிடைக்குமே யல்லாமல் அவன் அதிகமாகக் கொடுத்த பீஸ் அவனுக்குக் கிடைக்க வழியில்லை. ஆகையால் இந்த விஷயங்களையெல்லாம் வக்கீல்கள் யோசித்துப் பீஸ் வாங்குகிற விஷயத்தில் அதிக்கிரமிக்கக் கூடாது. துன்பப் படுகிறவர்களுக்குச் சகாயஞ் செய்ய வேண்டியது எல்லாருடைய கடமையா யிருப்பதைப் போலவே வக்கீல்களுக்கும் முக்கிய கடமையாயிருக்கிறது. சொத்து நஷ்டமாவது அல்லது சரீரத் துன்பமாவது அடைந்து, பீஸ் கொடுக்க நிர்வாகமில்லாத பரம ஏழைகளிடத்தில் வக்கீல்கள் ஒன்றும் வாங்காமல் அவர்களுடைய கக்ஷ¢யில் பேசிச் சாதிப்பார்களானால், அவர்களுக்குப் பரம சுகிர்தமும் கீர்த்தியுமாயிருக்கும். வக்கீல்களுக்கு வாய் வார்த்தையால் வருகிற படியால் அவர்கள் எப்போதும் ஆபத்சகாயிகளாயும் தீனோபகாரிகளாயுமிருக்க வேண்டும். அந்த ஏழைகளுக்குப் பொருளுதவி வேண்டுமானாலுஞ் செய்து அவர்கள் ஜெயித்தபின்பு அந்தத் தொகையை வாங்கிக் கொள்வதும் பெரிய உபகாரந் தானே!

சில தேவதைகள் அடிக்கடி பலி கேட்பதுபோலச் சில வக்கீல்கள் ஒரு வழக்கில் அடிக்கடி பீஸ் கேட்பதாகக் கேள்விப்படுகிறோம். எப்படியென்றால் அவர்கள் வியாஜ்ஜிய ஆரம்பத்திலே சரியான பீஸ் வாங்கியிருக்கப் பிறகு வியாஜ்ஜியம் முதல் விசாரணையாகும்போது வேறு பீஸ் கொடுக்கவேண்டுமென்றும் கொடாதவரையில் கோர்ட்டில் ஆஜராகமாட்டோமென்றும் பிடிவாதஞ் செய்கிறார்கள். கக்ஷ¢க்காரனுக்கு வேறே மார்க்கமில்லாமையால் அப்போதும் பீஸ் கொடுக்கிறான். பிறகு சாக்ஷ¢ விசாரணையாகும்போதும் வக்கீல்கள் கோர்ட்டுக்கு வரமாட்டோமென்று படுத்துகிறார்கள். அல்லது வேறொரு கோர்ட்டில் அதிக பீஸ் வருவதாகச் சொல்லிப் பயணச் சன்னாகமாயிருக்கிறார்கள். அப்போதும் அவர்களுக்குத் தக்ஷணை கொடுத்து வசப்படுத்த வேண்டியதாயிருக்கிறது. இப்படியாகச் சிவில் விஷயமாவது அல்லது கிரிமினல் விஷயமாவது விசாரணையாகிற ஒவ்வொரு தினத்திலும் புதிது புதிதாக வக்கீலுக்குக் காணிக்கை கொடுத்து கக்ஷ¢க்காரன் பி¨க்ஷக்காரனாகிறான். ஒரு வழக்குக்காக வக்கீல் பூரணப் பீஸ் வாங்கிக்கொண்டு அதைக் கோர்ட்டில் தாக்கல் செய்தபின்பு, அந்த வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு அனுப்பப்படுகிற பக்ஷத்தில் அந்தக் கோர்ட்டிலும் பேச அந்த வக்கீலுக்குப் பாத்தியம் இருந்தால்கூட, வேறு பீஸ¤ம் போக வர வழிச்செலவும், படிச்செலவும் முதலியவைகளௌம் வாங்கிக் கொண்டு தான் அந்த வக்கீல் மற்றொரு கோர்ட்டுக்குப் போகிறார். குறித்த தினத்தில் விசாரணையாகாத பக்ஷத்தில் மறுபடியும் வேறு பீஸ¤ம் படிச்செலவும் வக்கீல் வாங்கிக்கொள்கிறார்.

சில வக்கீல்கள் பல ஜில்லாக்களில் வழக்குகளை வாங்கிக் கொண்டு பூப் பிரதக்ஷணஞ் செய்து வருகிறார்கள். அவர்களைக் காலையில் காசியிற் பார்க்கலாம்; மத்தியானத்தில் மதுரையில் பார்க்கலாம்; அந்தி நேரத்தில் அயோத்தியில் பார்க்கலாம். அவர்கள் ஆசையையே இறகாகக் கொண்டு பக்ஷ¢ போல் பறந்து திரிகிறார்கள். அவர்களுக்கு ரயில் வண்டி வேகமும் போதாமையினால் தந்தி தபால் வழியாகப் பிரயாணஞ் செய்யக் கூடாமலிருப்பதற்காகச் சர்வதா விசனப் படுகிறார்கள். இந்த விசுவ சஞ்சாரிகளிடத்தில் வியாஜ்ஜியங்களைக் கொடுப்பதைப் பார்க்கிலும் சகல அஸ்தாந்தரங்களையும் அக்கினிக்குத் தத்தஞ் செய்துவிடுவது நன்மையா யிருக்கும். ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்குப் போகிற வக்கீல் தனக்காக வேறொரு வக்கீலை ஆஜராகும்படி சொல்லிவிட்டுப் போவது வழக்கமாயிருக்கிறது. இந்த வழக்கம் யாரால் எக்காலத்தில் ஏற்பட்டதென்பது ஒருவருக்குந் தெரியாது. ஒரு வக்கீல் கக்ஷ¢க்காரனிடத்தில் பீஸ் வாங்கிக் கொண்டு அவனுடைய வழக்கு முழுமையும் தானே சுயமாக நடத்துவதாக ஒப்பபுக்கொண்டிருக்க, அந்த உடன்படிக்கைக்கு விரோதமாக அந்த வக்கீல் வேறொரு வக்கீலை எப்படி நியமிக்கக் கூடும்? கவர்ன்மெண்டாரால் நியமிக்கப் பட்ட உத்தியோகஸ்தன் சுயமே வேலை பாராமல் தன்னுடைய ஸ்தானத்தில் வேறொரு உத்தியோகஸ்தனை நியமிக்கக் கூடுமா? ஒரு காரியஸ்தன் எசமானுடைய உத்தரவில்லாமல் தனக்குப் பதிலாக வேறொரு காரியஸ்தனை நியமித்துவிட்டு நினைத்தபடி திரியலாமா? இந்த வினாக்களுக்கு யாவரும் எதிர்மறையாக உத்தரம் சொல்லுவார்களென்று நம்புகிறோம். அப்படியானால் ஒரு கக்ஷ¢க்காரனால் நியமிக்கப் பட்ட வக்கீல் தனக்காக ஆஜராகிப் பேசும்படி வேறொரு வக்கீலுக்கு எப்படி ஆதாரம் கொடுக்கக் கூடும்? ஒரு வக்கீல் சம்பந்தப்பட்ட வழக்கைக் கோர்ட்டார் விசாரிக்கப் போகிற தற்சமயத்தில் அந்த வக்கீல் வேறொரு வக்கீலை நியமித்துவிட்டுப் போகிறபடியால் அந்தப் புது வக்கீலுக்கு வியாஜ்ஜிய நடவடிக்கைகளைப் பார்க்க மனமுமில்லாமல் நேரமுமில்லாமல் அநேக வழக்குகள் அதோகதியாய்ப் போகின்றன. சில சமயங்களில் அந்தப் புது வக்கீலுக்கும் அந்தக் கக்ஷ¢க்காரன் தஸ்தூரி கொடுத்துப் பல விதத்திலும் நஷ்டமடைகிறான். தன்னுடைய வக்கீல் ஆஜராகமற் போனால் நஷ்டமடைந்த கக்ஷ¢க்காரன் அந்த நஷ்டத்துக்காக வக்கில் மேலே தாவா செய்ய யாதொரு தடையுமில்லை. ஒரு வக்கீலுக்காக வேறொரு வக்கீல் ஆஜராகிற வழக்கம் அக்கிரமத்திலே பிறந்து, அக்கிரமத்திலே வளர்ந்து, அக்கிரமத்திலே நிலைமை பெற்றிருப்பதால் அதை ஒவ்வொரு கோர்ட்டாரும் திக்காரஞ் செய்யவேண்டும். அந்த துர்வழக்கம் மேலான கோர்ட்டுகளிலும் நடந்து வருகிறதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அக்கிரமத்தைக் கிரமாக்கவும் கிரமத்தை அக்கிரமாக்கவும் ஒரு கோர்ட்டாருக்கும் அதிகாரமில்லை என்பது பொது விதியா யிருக்கிறது.

வக்கீல் தனக்குள்ள நேரத்தையும் சாவகாசத்தையும் தன்னுடைய சக்தியையும் ஆலோசித்து, மிதமாக வியாஜ்ஜியங்களை அங்கீகரிக்க வேண்டுமே தவிரப் பொருளாசையினாற் பல ஊர்களிலும் எண்ணிக்கையில்லாத வியாஜ்ஜியங்களை வாங்கிக் கொண்டு, ஒன்றையுங் கவனிக்க நேரமில்லாமல் திண்டாடப்படக் கூடாது. வக்கீலினுடைய சக்திக்கு மேற்பட்ட வழக்குகளை வாங்குவது கக்ஷ¢க்காரர்களுக்கு நஷ்டகரமாயும் வக்கீலுடைய சரீர சௌக்கியத்துக்கே குறைவாகவும் முடியும். ஒரு வழக்கை வக்கீல் அங்கீகரித்துக் கொண்டால், அது அநுகூலிக்கும் பொருட்டு வக்கீலாற் கூடிய மட்டும் பரிசிரமப்பட வேண்டும். அந்த வழக்கின் சாராம்சங்களையும் சகல சங்கதிகளையும் வக்கீல் நன்றாகக் கவனித்து, அதற்கேற்ற சட்டங்களையும் சாஸ்திரங்களையும் மேற்கோர்ட்டாருடைய சித்தாந்தங்களையும் எதிர்க் கக்ஷ¢யின் துர்ப்பலங்களையும் எடுத்துக் காட்டி சபாகம்பமில்லாமல் வாசகதாட்டியாகவும் சமயரஞ்சிதமாகவும் வாதிக்கவேண்டும். ஆனால் நடந்த காரியங்களை வக்கீல் விவரிக்கிற விஷயத்தில் கக்ஷ¢க்காரன் சொன்னபடி விவரிக்க வேண்டுமே யல்லாது நூதன சங்கதிகளைச் சிருஷ்டிப்பதும் கக்ஷ¢க்கரனுக்குச் சாக்ஷ¢ திட்டம் பண்ணிக்கொடுப்பதும் வக்கீலுடைய வேலையல்ல. சில வக்கீல்கள் எதைக் கிரமமென்று ஒரு வழக்கில் வாதித்தார்களோ அதைத் தானே அக்கிரமென்று வேறொரு வழக்கில் வாத்திக்கிறார்கள். பிள்ளைகளுக்குத் தகுந்த வயது வராமலிருக்கும் போது தகப்பன் எந்தக் காரணத்தைப் பற்றியும் சொத்துக்களை விநியோகஞ் செய்யக் கூடாதென்றும், அப்படி விநியோகஞ் செய்தால் தகுந்த வயது வந்த உடனே பிள்ளைகள் ஆ§க்ஷபிக்கலாமென்றும், ஒரு வழக்கில் வக்கீல் வாதிக்கிறார். பிறகு அந்த வழக்கில் தானே அன்றைத் தினம் விசாரணையாகிற வேறொரு வழக்கில் பிள்ளைகள் பாலியர்களாயிருக்கும்போது தகப்பன் எதேச்சா விநியோகம் செய்யலாமென்றும் பிள்ளைகள் ஒரு காலத்திலும் அதை ஆ§க்ஷபிக்கக் கூடாதென்றும் வாதிக்கிறார். யாதொரு காரணமு மில்லாமல் புருஷனை விட்டு வெளிப்பட்டுப் போய்விட்ட ஸ்திரீக்குப் புருஷன் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமென்று ஒரு வழக்கில் வக்கீல் வாதிக்கிறார். அதே விதமான வேறொு வழக்கில் புருஷன் பெண்சாதிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய தில்லையென்று வாதிக்கிறார். இப்படியாகச் சமயத்துக்குத் தக்கபடி வழக்குக்கு வழக்கு பரஸ்பர விரோதமாக வக்கீல் செய்யும் வாதம் துர்வாதமல்லவா?

சகல வழக்குகளிலும் சாஸ்திரமும் நியாயமும் ஒரே தன்மையா யிருக்குமேயல்லாது வழக்குக்கு வழக்கு பேதிக்குமா? ஆனால் நடந்த சங்கதிகளிலும் விஷயாந்தரங்களிலும் பேதமிருக்குமானால் அந்தந்த வியாஜ்ஜிய விதிக்குத் தக்கபடி வெவ்வேறு விதமாக வாதிப்பது கிரமமே. எப்படியென்றால் தகப்பன் ஊதாரியாயும் ஆராதூரிக்காரனாயும் துர்த்தனாயுமிருந்து, சிறு பிள்ளைகளுடைய ஹிதத்துக்கு விரோதமாக சொத்துக்களைத் துர்விநியோகஞ் செய்திருப்பானானால், அந்த விநியோகஞ் செல்லாதென்று வக்கீல் ஆ§க்ஷபிக்க என்ன தடையிருக்கிறது? வேறொரு வழக்கில் தகப்பன் பிள்ளைகளுடைய ஹிதத்தை நாடியே குடும்ப உபயோகர்த்தமாக சத்விநியோகஞ் செய்திருந்தால் அந்த விநியோகம் செல்லுமென்று வக்கீல் வாதிக்கவும் பிரதி பந்தமில்லை. ஒரு வழக்கில் புருஷன் பர ஸ்திரீயைச் சேர்த்துக் கொண்டு தன் பத்தினியை நிஷ்காரணமாய் அடித்துத் துரத்தி அநியாயஞ் செய்திருப்பானானால், அவன் பெண்சாதிக்குப் பிரத்தியேக ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமென்று வக்கீல் வாதிக்கலாம். வேறொரு வழக்கில் பெண்சாதி யாதொரு காரணமு மில்லாமல் ஸ்வேச்சையாய்ப் புருஷனை விட்டு விலகிப் போயிருப்பாளானால் அவள் பிரத்தியேக ஜீவனாம்சத்துக்கு அபார்த்தியஸ்தி யென்று வக்கீல் பேச என்ன விக்கின மிருக்கின்றது? இப்படிப்பட்ட விஷய பேதமான வழக்குகளில் வக்கீல் வெவ்வேறு விதமாக வாதிக்கலாமே யல்லாது ஒரே தன்மையான வழக்குகளில் வித்தியாசமாகப் பேசுவது விபரீத மல்லவா? நியாயவாதிகள் நியாயாதிபதிகளுக்கு அடுத்த படியி லிருப்பதாலும், ஒரு கால் அவர்கள் நியாயாசனத்தில் ஏறவும் கூடுமாகையாலும், நியாயவாதிகள் நீதிமான்களாயும் சர்வ குணோத்தமர்களாயும் பிரகாசிக்க வேண்டும்” என்றாள்.
-----------

அத்தியாயம் -42
முந்தின அதிகாரத்தில் கூறியபடி ஞானாம்பாள் வக்கீல்களுக்கு நியாயபோதஞ் செய்தபிறகு மறுபடியும் அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறாள்:- “இங்கிலீஷ் அரசாட்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற தமிழ்க் கோர்ட்டுகளில், சில தமிழ் நியாயவாதிகள் தமிழில் வாதிக்காமல் இங்கிலீஷில் வாதிக்கிறார்களென்று கேள்விப் படுகிறோம். தேச பாஷையும் தமிழ்! கோர்ட்டில் வழங்காநின்ற பாஷையும் தமிழ்! நியாயாதிபதியும் தமிழர்! வாதிக்கிற வக்கீலும் தமிழர்! மற்ற வக்கீல்கள் கக்ஷ¢க்காரர்கள் முதலானவருந் தமிழர்களே! இப்படியாக எல்லாந் தமிழ் மயமாயிருக்க அந்த வக்கீல்கள் யாவருக்குப் பிரீதியாப்தமாக இங்கிலீஷில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை! அப்படி வாதிக்கிறதினால் அவர்களுக்குத் தான் என்ன சிலாக்கியம்? மற்றவர்களுக்குத் தான் என்ன பாக்கியம்? நியாயாதிபதியாவது அல்லது வக்கீலாவது இங்கிலீஷ்காரராயிருக்கிற பக்ஷத்தில் இங்கிலீஷில் வாதிப்பது நியாயமா யிருக்கலாம். தமிழ் நியாயாதிபதி முன்பாக தமிழ் வக்கீல் இங்கிலீஷில் வாதிப்பது ஆச்சரியமல்லவா? ஜனங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதாகையால் ஐரோப்பியர்கள் கூட இத் தேச பாஷையில் பரீ¨க்ஷ கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் தேச பாஷையிலே சம்பாஷிக்க வேண்டுமென்றும் சட்டம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அந்தப்படி பரீ¨க்ஷ கொடுத்து வருவதுமின்றி கக்ஷ¢க்காரர்களிடத்தில் தேச பாஷையிலேயே சம்பாஷிக்கப் பிரியப் படுகிறார்கள். அப்படி யிருக்க சுதேசிகளான வக்கீல்கள் சொந்தப் பாஷையைத் தள்ளிவிட்டு அந்நிய பாஷையில் வாதிப்பது அசந்தர்ப்ப மல்லவா? தங்களுக்குத் தமிழில் நன்றாகப் பேசத் தெரியாமையினால் இங்கிலீஷில் வாதிப்பதாகத் தங்களுக்குக் கௌரவம் போலச் சொல்லுகிறார்கள். சுய பாஷை பேசத் தெரியாமலிருப்பதைப் போல இழிவான காரியம் வேறொன்றிருக்கக் கூடுமா? ஒரு ஐரோப்பியர் தம்முடைய சுய பாஷையில் பேசத் தெரியாதென்று சொன்னால் இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டர்களா? அப்படியே தங்களுடைய சுயபாஷையில் தங்களுக்கு வாதிக்கத் தெரியாதென்று சொல்வது அவர்களுக்கு அவமானமல்லவா?

நியாய சாஸ்திரங்களெல்லாம் இங்கிலீஷ் பாஷையிலிருப்பதாலும் இங்கிலீஷிலிருக்கிற நீதி வாக்கியங்களுக்குச் சரியான பிரத பதங்கள் தமிழில் இல்லாமையாலும் தாங்கள் இங்கிலீஷ் பாஷையை உபயோகிப்பதாக சில வக்கீல்கள் சொல்லுகிறார்கள். இங்கிலீஷ் வார்த்தைகளுக்குச் சரியான பிரதி பதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்லுவது அவர்களுடைய தெரியாமை யல்லாமல் உண்மையல்ல. தமிழ் நூல்களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால் பிரதி பதங்கள் அகப்படுவது பிரயாசமா? அப்படித் தான் இரண்டொரு சங்கேத வார்த்தைகளுக்குத் தமிழிலாவது சம்ஸ்கிருதத்திலாவது பிரதிபதங்கள் அகப்படாத பக்ஷத்தில் அந்த வார்த்தைகளை மட்டும் இங்கிலீஷிலே பிரயோகித்தால் அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்? தமிழிலே வாதித்தால் இங்கிலீஷ் மறதியாய்ப் போகுமென்கிற பயத்தினால் சிலர் இங்கிலீஷிலேயே வாதிக்கிறார்கள். அவ்வளவு சொற்பத்தில் மறந்து போகிற இங்கிலீஷ் இந்த வக்கீல்களுடன் எத்தனை நாள் கூடி வாழப்போகிறது? வக்கீல்கள் இங்கிலீஷில் வாதிப்பது அக்கிரமமென்று சில தமிழ் நியாயாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தும் அதைக் கண்டித்தால் தங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதென்று வக்கீல்களும் மற்றவர்களும் நினைப்பார்களென்று எண்ணி இங்கிலீஷ் வாதத்திற்கு இடங் கொடுத்து வருகிறார்கள். பின்னும் அந்த நியாயாதிபதிகளும் கோர்ட்டுகளில் எப்போதும் இங்கிலீஷையே உபயோகப் படுத்தி, அநேக நடவடிக்கைகளை இங்கிலீஷிலேயே நடத்துகிறார்கள். சில சமயங்களில் வக்கீலும் நியாயாதிபதிகளும் இங்கிலீஷை நன்றாகப் படியாதவர்களானதால் ஒருவர் சொல்லுவது ஒருவருக்குத் தெரியாமல் கை சாடை செய்துகொண்டு சர்வ சங்கடப்படுகிறார்கள். அந்த கோர்ட்டுகள் நாடகசாலையாகத் தோன்றுகின்றனவே யல்லாமல் நியாயசபையாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி சொல்லவேண்டியது கோர்ட்டாருடைய கடமையா யிருக்கிறது. ஜனங்களுக்குத் தெரிந்த பாஷையிலே வக்கீலினுடைய வாதமும் மற்ற நடவடிக்கைகளும் நடந்தால் மட்டும் உண்மை வெளியாகுமே தவிர, அவர்களுக்குத் தெரியாத பாஷையில் நடந்தால் எப்படி உண்மை வெளியாகும்? இங்கிலீஷ் தெரிந்த சுதேச நியாயாதிபதிகள் சித்தாந்தம் மட்டும் இங்கிலீஷில் எழுதலாமென்று சிவில் ப்ரொசீஜர் கோட் (Civil procedure code) சொல்லுகிறதே யல்லாமல் மற்ற நடபடிகளையும் இங்கிலீஷில் நடத்தும்படி சொல்லவில்லை. வெளிப்பிரதேசக் கோர்ட்டுகளில் சுதேச பாஷைகளையே உபயோகிக்கவேண்டுமென்றும், அந்நிய பாஷைகளை உபயோகிக்கக் கூடாதென்றும், இங்கிலீஷ் துரைத்தனத்தாரே உத்தரவு செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கச் சில தமிழ் நியாயாதிபதிகளும் சில வக்கீல்களும் இங்கிலீஷ் பாஷையை மறந்து போகாமலிருக்க வேண்டியதற்காக இங்கிலீஷைக் கலந்து நியாயபரிபாலனத்தைக் குறளுபடி செய்வது கிரமமா?

கோர்ர்ட்டில் நடக்கிற விசாரணைகளும், தீர்மானங்களும் அபராதங்களும், ஆக்கினைகளுஞ் சகல ஜனங்களுக்கும், பிரசித்தமாய்த் தெரிந்திருந்தால் அவர்கள் தங்கள் தங்களுடைய காரியங்களில் ஜாக்கிரதையா யிருக்கவும் துன்மார்க்கங்களில் பிரவேசிக்காமலிருக்கவும் எல்லாருக்கும் அநுபோகம் உண்டாகுமல்லவா? கோர்ட்டில் நடக்கிற விவகாரங்களைக் கேட்டு விவேகமடைவதற்காகவே ஜனங்கள் கூட்டங் கூட்டமாய்க் கோர்ட்டுகளுக்குப் போய்க் காத்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்திலே கரியைத் தடவுவது போல அவர்களுக்குத் தெரியாத பாஷையில் விவகாரம் நடந்தால் அவர்களுக்கு என்ன ஞானம் உண்டாகக்கூடும்? குருடன் கூத்துப் பார்க்கப் போனது போலவும், செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போலவும் யாதொரு பிரயோஜனமு மில்லாமல் அவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். தமிழ்க் கோர்ட்டுகளில் இரண்டொரு வக்கீல்களெல்லாரும் இங்கிலீஷ் தெரியுமேயன்றி, மற்ற வக்கீல்களெல்லாரும் இங்கிலீஷ் தெரியாதவர்களா யிருக்கிறார்கள். ஒரு வக்கீல் இங்கிலீஷில் வாதிப்பது இங்கிலீஷ் தெரியாத மற்ற வக்கீல்களுக்கு அவமானம் அல்லவா? அவர்களுடைய வருமானத்துக்குக் குறைவல்லவா? தமிழ் நியாயாதிபதி முன்பாக இங்கிலீஷில் வாதிக்கிற தமிழ் வக்கீல்கள் இந்தத் தமிழ் நாட்டையும், தமிழ் பாஷையையும் மற்ற வக்கீல்களையும், கக்ஷ¢க்காரர்களையும், சகல ஜனங்களையும் மெய்யாகவே அவமானப் படுத்துகிறார். அவருடைய வாதம் யாவருக்குங் கர்ணக் கடூரமாயிருப்பதால் அவர் எப்போது நிறுத்துவாரோ வென்று எல்லாருங் கடுகடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் முகம் இருக்கிற கோரத்தை இந்த வக்கீலே திரும்பிப் பார்ப்பாரானால் அப்பால் ஒரு வார்த்தை கூடப் பேச அவருக்குத் தைரியமுண்டாகாது. இப்படியாக அந்த வக்கீல்களுடைய வாதம் அபவாதமாக முடிகிறபடியால் நீங்களும் அவர்களைப் போல அந்நிய பாஷைகளில் வாதிக்காமல் தமிழிலே வாதிப்பீர்களென்று நம்புகிறோம்.

புலியைப் பார்த்து நரி சூடிட்டுக்கொண்டது போல, இங்கிலீஷில் வாதிக்கிற வக்கீல்களைப் பார்த்து இங்கிலீஷ் நன்றாகத் தெரியாத சில வக்கீல்களும், அரைப் படிப்பைக் கொண்டு அம்பலமேறுவது போல, இங்கிலீஷில் வாதிக்கத் துணிகிறார்கள். அவர்கள் சொல்வது கோர்ட்டாருக்குத் தெரியாமலும் கோர்ட்டார் சொல்வது அவர்களுக்குத் தெரியாமலும் அவஸ்தைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வக்கீல் ஒரு பெரிய ஜமீன்தாருக்கு வக்கீலாயிருந்தார். அந்த வக்கீலினுடைய இங்கிலீஷ் வாதத்தினாலேயே அந்த வழக்கு அபஜெயமாய்ப் போய் ஜமீன்தாருக்கு விரோதமாய்க் கோர்ட்டார் இங்கிலீஷில் ஒரு பெரிய சித்தாந்தம் எழுதிப் படித்தார். அந்தச் சித்தாந்தம் ஜமீன்தாருக்கு அநுகூலமென்று வக்கீல் பிசகாக எண்ணிக்கொண்டு ஜமீன்தாருடைய ஊருக்குப் போய் அவர் பக்ஷம் தீர்ப்பானதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டவுடனே ஜமீன்தாருக்கு ஆநந்தம் உண்டாகி, வக்கீலுக்கு அளவற்ற வெகுமானஞ் செய்ததுமன்றி, கோயிலுக்குக் கோயில் அபிஷேகங்களும் தான தர்மங்களும் ஏழைகளுக்குக் கலியாணங்களும் விருந்துகளும் வேடிக்கைகளும் செய்தார். கோர்ட்டார் தீர்மானஞ் சொன்ன அன்றைத் தினமே கோடைக் காலத்துக்காக இரண்டு மாசக் காலம் கோர்ட்டு நிறுத்தப்பட்டு, எல்லாரும் அவரவர்களுடைய ஊர்களுக்குப் போய்விட்டதால் ஜமீன்தாருக்கு உண்மை தெரிய இடமில்லாமற் போய் விட்டது. அவர் வரப்போகிற வியாஜ்ஜியச் சொத்தை நம்பி, கையிலிருந்த சொத்துக்களை யெல்லாம் மேற்கூறியபடி விருதா விரயஞ் செய்துவிட்டார். கோர்ட்டு திறந்து உண்மை தெரிந்தவுடனே ஜமீன்தாருக்கும் வக்கீலுக்கும் என்ன பிரமாதம் நடந்திருக்குமென்பதை நான் சொல்ல வேண்டுவதில்லையே!

இங்கிலீஷ் அரசாட்சியில் வக்கீல்களைப் போலவே மற்ற உத்தியோகஸ்தர்களும் வித்தியார்த்திகளும் சுதேச பாஷைகளை நிகிர்ஷ்டம் செய்கிறார்கள். “ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தினது” போல இங்கிலீஷ் பிரென்ச் முதலிய அந்நிய பாஷைகள் மேலிட்டு தேச பாஷைகளின் சீரைக் குலைத்துவிட்டன. அந்த ராஜ பாஷைகள் ஜீவனத்துக்கு மார்க்கமாயிருக்கிற படியால், அநேகர் வயிறே பெரிதென்று எண்ணி அந்தப் பாஷைகளை மட்டும் அதிக சிரத்தையாகப் படிக்கிறார்கள். ராஜாங்கத்தாருடைய சகாயம் இல்லாமலிருக்குமானால் சில வருஷங்களுக்கு முன்னமே சுதேச பாஷைகள் இருந்த இடந் தெரியாமல் அப்பிரசத்தமாய்ப் போயிருக்கும். ராஜாங்கத்தார் சுதேஷ பாஷைகளைச் சில பரீ¨க்ஷகளுடன் சேர்த்து அவைகள் இந்நாளளவும் ஜீவித்திருக்கும்படி ஆதரித்து வந்தார்கள். இப்போது அவர்களே உபே¨க்ஷயாயிருப்பதால் சுதேஷ பாஷைகளுக்கு நாளுக்கு நாள் ஜீவதாது குறைந்து வருகின்றது. வித்தியார்த்திகளுடைய இஷ்டப்படி சுதேஷ பாஷைகளையாவது அல்லது லத்தீன் (Latin), சமஸ்கிருதம் முதலிய பாஷைகளையாவது படிக்கலாமென்று துரைத்தனத்தாரே நியமனஞ் செய்திருப்பதால், சுதேஷ பாஷைகளுக்கு ஜீவாந்த காலஞ் சமீபித்திருக்கின்றது. சென்னைப் பட்டணம் செனட் (Senate) என்னும் ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்த அநேக பிரபுக்கள் சுதேச பாஷையை ஆதரிக்காமல் விட்டு விட்டார்கள். ஆனால் அந்தச் சங்கத்தில் இரண்டொரு சுதேசக் கனவான்கள் அத்தியாவஸ்தையிலிருக்கிற சுதேச பாஷைகளுக்குப் பிராணதாரங் கொடுத்துக் காப்பாற்றி வருகிறார்கள். இங்கிலீஷ்காரர்கள் தங்களுடைய சுதேசங்களில், இங்கிலீஷையாவது அல்லது வேறெந்தப் பாஷையையாவது இங்கிலீஷ் பிள்ளைகள் படிக்கலாமென்று உத்தரவு செய்தார்களா? அப்படி ராஜாங்கத்தார் உத்தரவு செய்தாலும் ஜனங்கள் இங்கிலீஷ் பாஷையை விட்டுவிட்டு அந்நிய பாஷையை அப்பியசிப்பார்களா? அப்படியிருக்க இந்தத் தேசத்தார் சொந்தப் பாஷைகளையாவது அல்லது எந்தப் பாஷைகளையாவது படிக்கலாமென்று இங்கிலீஷ் துரைத்தனத்தார் உத்தரவு செய்திருப்பதும், அந்த உத்தரவைச் சுதேச கனவான்கள் ஆ§க்ஷபிக்காமல் சும்மா இருப்பதும் நியாயமா? நம்முடைய தேசாசாரங்களையுங் குல சம்பிரதாயங்களையும் அதிகாரிகள் விட்டுவிடச் சொன்னால் விட்டுவிடுவோமா? மத்தியில் உண்டான தேசாசாரங்களைப் பார்க்கிலும் ஆதிகாலமுதல் உண்டாயிருக்கிற தேச பாஷை அதி உத்கிருஷ்டமல்லவா?

எண்ணிறந்த தேவாலயங்களும், பிரமாலயங்களும் அன்ன சத்திரங்களும், நீர்வளமும், நிலவளமும், நாகரிகமும், ஆசார நியமங்களும் நிறைந்த இந்தத் தமிழ்நாடு, மற்றைய நாடுகளிலும் விசேஷமென்றும், அப்படியே தமிழ் பாஷையும் சர்வோத்கிருஷ்டமான பாஷையென்றுஞ் சகலரும் அங்கீகரிக்கிறார்கள். அகஸ்தியர் நாவிலே பிறந்து, ஆரியத்தின் மடியிலே வளர்ந்து, ஆந்திரம் முதலிய பாஷைகளின் தோழமை பெற்று, சங்கப் புலவர்களுடைய நாவிலே சஞ்சரித்து, வித்வான்களுடைய வாக்கிலே விளையாடி, திராவிட தேசம் முழுதும் ஏக சக்ராதிபத்தியஞ் செலுத்தி வந்த தமிழ் அரசியை இப்போது இகழலாமா? நம்மைப் பெற்றதும் தமிழ் வளர்த்ததும் தமிழ் நாட்டைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ். நம்முடைய மழலைச் சொல்லால் நமது தாய் தந்தையரைச் சந்தோஷிப்பதுந் தமிழ். நாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்தபோது முந்தி உச்சரித்ததுந் தமிழ். நம்முடைய அன்னையுந் தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டினதுந் தமிழ். தாய், தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததுந் தமிழ். ஆதிகாலம் முதல் நம்முடைய முன்னோர்களெல்லோரும் பேசின பாஷையும் எழுதிவைத்த பாஷையுந் தமிழ். இப்போதும் நம்முடைய மாதா பிதாக்களும் பந்து ஜனங்களும் இஷ்ட மித்திரர்களும் இதரர்களும் பேசுகிற பாஷையும் தமிழ். நம்முடைய வீட்டு பாஷையுந் தமிழ். நாட்டு பாஷையுந் தமிழ். இப்படிப்பட்ட அருமையான பாஷையை விட்டுவிட்டு சம்ஸ்கிருதம் லத்தீன் முதலிய அந்நிய பாஷைகளைப் படிக்கிறவர்கள், சுற்றத்தார்களை விட்டு விடடு அந்நியர்களிடத்தில் நேசஞ் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். ஆபத்துக் காலத்தில் சுற்றத்தார் உதவுவார்களே யல்லாது அந்நியர்கள் எப்படி உதவ மாட்டார்களோ அப்படியே எந்தக் காலத்திலும் நமக்கு சுய பாஷை உதவுமே யல்லாமல், அந்நிய பாஷைகள் உதவுமா? லத்தீனுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் சொந்தக்காரர்கள் இல்லாமையால் அவைகள் இறந்துபோன பாஷைகளாயும் தமிழ் முதலிய தேச பாஷைகள் ஜீவிக்கிற பாஷைகளாயும் இருக்கின்றன. பல பாஷைக்காரர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசும்போது ஒருவருடைய கருத்தை வெளிப்படுத்துவதுமே பாஷாந்தரங்களைப் படிப்பதனால் உண்டாகிற முக்கியப் பிரயோஜனமா யிருக்கிறது. ஒரு பாஷைக்குச் சொந்தக்காரர்களே இல்லாமலிருப்பார்களானால், அந்தப் பாஷையை நாம் படித்து யாரிடத்திலே சம்பாஷிக்கப் போகிறோம்? சமஸ்கிருதம், லத்தீன் முதலிய பாஷைகள் அதிகக் கடினமும் வருத்தமுமான பாஷைகளாயும் சீக்கிரத்தில் மறந்துபோகத் தக்கவைகளாயும் இருக்கின்றன. அவைகளின் இலக்கணம், இலக்கியம், தர்க்கம் முதலிய பல பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவைப் படிப்பதற்கு ஒரு புருஷ ஆயுஷ¤ போதாதென்று, அந்த பாஷைகளை உணர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். சம்பாஷணைக்கும் உலக வியாபாரங்களுக்கும் உபயோகமில்லாத அந்த பாஷைகளை அவ்வளவு பிரயாசைப்பட்டுப் படித்தும் பிரயோஜனமென்ன? ஆனால் சமஸ்கிருதமும், லத்தீனும் அதிக சிறப்பும் அழகும் அலங்காரமும் பொருந்திய பாஷைகளென்பதற்குச் சந்தேகமில்லை. அவகாசமுள்ளவர்கள் சொந்த பாஷையோடு அந்த பாஷைகளையும் படிப்பது அதிக விசேஷந்தான்; ஆனால் சொந்த பாஷைகளை நன்றாகப் படிக்காமல் அந்நிய பாஷைகளிலே காலமெல்லாம் போக்குவது அகாரியமென்று தான் நாம் ஆ§க்ஷபிக்கிறோம்.

இங்கிலீஷ், பிரென்ச் முதலிய ராஜ பாஷைகளைப் படிப்பிக்க வேண்டாமென்று நாம் விலக்கவில்லை. ஏனென்றால் நாம் நடக்கவேண்டிய சட்டங்களும், ஒழுங்குகளும், நியாயப் பிரமாணங்களும் ராஜ பாஷைகளிலே இருக்கிற படியால் அந்தப் பாஷைகள் நமக்குத் தெரியாவிட்டால் அந்த ராஜாங்கத்தில் நாம் எப்படி நிர்வகிக்கக் கூடும்? அன்றியும் சன்மார்க்கங்களைப் பற்றியும் உலகத்துக்கு மிகவும் உபயோகமான பல விஷயங்களைப் பற்றியும் அந்த ராஜ பாஷைகளில் அநேக அருமையான கிரந்தங்கள் இருக்கிற படியால் அவைகளைப் படிக்கப் படிக்க அறிவு விசாலிக்குமென்பது திண்ணமே! ஆனால் மாதா வயிறெரிய மகேஸ்வர பூஜை செய்வதுபோல், சொந்த பாஷைகளைச் சுத்தமாக விட்டு விட்டு ராஜ பாஷைளை மட்டும் படிப்பது அநுசிதமல்லவா? அநேகர் தங்கள் சுய பாஷைகளில் தங்களுடைய கையெழுத்துக்களைக் கூட பிழையில்லாமல் எழுத அசக்தர்களாயிருக்கிறார்கள். சிலர் தமிழ் பாஷை தெரியாமலிருப்பது தங்களுக்குக் கௌரவமாகவும் அந்தப் பாஷையை அறிந்திருப்பது தங்களுக்கு அகௌரவமாகவும் எண்ணுகிறார்கள். சுய பாஷா ஞானம் தங்களுக்கு எவ்வளவு குறைவாயிருக்கிறதோ அவ்வளவுக்கு ராஜ பாஷைகளில் தங்களைச் சமர்த்தர்களென்று சகலரும் எண்ணுவார்களென்று நினைத்துச் சுய பாஷைகளை முழுவதும் அலக்ஷ¢யம் செய்கிறார்கள். அவர்கள் தமிழ்ப் புத்தகங்களைக் கையிலே தொடுகிறதாயிருந்தால், பாம்பின் புற்றுக்குள்ளே கையை விடுவது போலிருக்கும், அவர்களுக்குத் தமிழ் பாஷை பேசுகிறது வேப்பிலைக் கஷாயம் குடிப்பது போலிருக்கும். தமிழ் வார்த்தைகளைக் கேட்பதும் அவர்களுக்குக் கர்ணக்கடூரமா யிருக்கும். அவர்கள் தமிழ் பாஷை பேசினாலும் முக்காற் பங்கு இங்கிலீஷ¤ம் காற் பங்கு தமிழுமாகக் கலந்து பேசுவார்கள். அவர்களுக்குத் தேசாபிமானமும் இல்லை பாஷாபிமானமுமில்லை. யானை முதல் எறும்பு கடையாக உள்ள சகல ஜீவ ஜந்துக்களுக்கும், தனித்தனியே ஒவ்வொரு பாஷை சொந்தமாயிருக்கின்றது. அந்தந்த ஜந்துக்களுக்குரிய பாஷைகளை அவைகள் ஒரு காலத்திலும் மறவாமல் எப்பொதும் உபயோகித்துக்கொண்டு வருகின்றன. இங்கிலீஷ்காரர் முதல் ஐரோப்பியர்கள், தாங்கள் தங்களுடைய சொந்த பாஷைகளை எவ்வளவோ கௌரவமாகப் போற்றி வருகிறார்கள் என்பதை இந்த வித்தியார்த்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும் தங்கள் ஜன்ம பாஷையாகிய தமிழையும், தமிழ் வித்துவான்களையும் அவமதிக்கலாமா? தமிழ் நூல்களையே பாராத இவர்கள் அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திருவள்ளுவருடைய குறளை அவர்கள் ஜன்மாந்திரத்திலும் பார்த்திருப்பார்களா? கம்பருடைய கற்பனையைக் கனவிலுங் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப்பார்களா? அவ்வையாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? இன்னம் எண்ணிக்கையில்லாத தமிழ்ப் புலவர்களுடைய பிரபந்தங்களை இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்.

இங்கிலீஷ், பிரென்ச் முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசன காவியங்கள் இல்லாமலிருப்பது பெருங்குறை யென்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். அந்தக் குறையைப் பரிகரிப்பதற்காகத் தான் எல்லாரும் ராஜ பாஷைகளும் தமிழும் கலந்து படிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ராஜ பாஷகளும் சுதேச பாஷைகளும் நன்றாக உணர்ந்தவர்கள் மட்டும் உத்தமமான வசனக் காவியங்களை எழுதக் கூடுமேயல்லாது இதரர்கள் எழுதக் கூடுமா? வசனக் காவியங்களால் ஜனங்கள் திருந்தவேண்டுமே யல்லாது, செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியமல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல் இருக்கிறவரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம். சுதேச பாஷைகளைப் படிக்காமல் ராஜ பாஷைகளை மட்டும் படிக்கிறவர்கள் மற்ற ஜனங்களைக் கலவாமல் தாங்கள் ஒரு அந்நிய தேசத்தார் போல் ஜீவிக்கிறார்கள். ராஜ பாஷைகள் தெரியாத தங்களுடைய மாதா பிதாக்கள் மனைவி மைந்தர் முதலியோர்களிடத்தில் பேசுவது கூட அவர்களுக்கு அருவறுப்பா யிருக்கிறது. தாங்களும் சுய பாஷைகளை நன்றாகப் படிக்காமலும் மற்றவர்களுக்குப் போதிக்காமலும் இருப்பது அவர்களுடைய பிசகே யல்லாமல் அவர்களுடைய பந்து ஜனங்களின் பிசகல்லவே! ராஜ பாஷையைப் படித்துக் கல்வியின் அருமை அறிந்தவர்களே சுய பாஷைகளைக் கவனிக்காமலிருப்பார்களானால் இதர ஜனங்கள் எப்படி கவனிக்கக் கூடும்? ஸ்திரீகளும் மற்ற ஜனங்களும் சு¢ய பாஷைகளைப் படித்துத் திருத்தவேண்டுமே யல்லாது அவர்கள் எல்லாரும் ராஜ பாஷைகளைக் கற்றுணர்வது சாத்தியமான காரியமா? சுய பாஷையைக் கல்லாமல் ராஜ பாஷையை மட்டும் படிக்கிறவர்கள் தாங்கள் மட்டும் பிழைக்க அறிவார்களேயன்றி மற்றவர்களுக்கு அவர்களால் என்ன சாதகம்? சுய பாஷையைப் படிக்காதவர்கள் தாங்கள் கெடுவது மன்றி ஐரோப்பியர்களையும் கெடுக்கிறார்கள். முன் வந்த ஐரோபியர்கள் இத் தேச பாஷைகளை எவ்வளவோ கவனமாகப் படித்தார்கள். இப்பொது சுதேசிகளே சுய பாஷைகளைக் கைவிட்டபடியால் ஐரோபியர்களும் அந்த பாஷைகளை அபதார்த்தமாக எண்ணுகிறார்கள். இவ்வாறு நம்முடைய பாஷைகளை அந்நியர் அவமதிக்கும்படி செய்வது அயுக்தமல்லவா?

இந்த தேசத்துப் பெரிய பிரபுக்கள், தனவான்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தார்கள், பாரிவர்த்தகர்கள் முதலானவர்களுடைய அறியாமையை நினைக்கும்போது நமக்குப் பிரலாபமும், பெருமூச்சும் உண்டாகின்றன. அவர்களில் அநேகர் சுத்த நிரக்ஷரகுக்ஷ¢களாயிருக்கிறார்கள். சிலர் தங்குடைய கையெழுத்துக்களை மட்டும் எழுதக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். 'சுப்பிரமணியன்' என்பதற்குச் 'சுக்கிரமணியன்' என்றும் 'சிதம்பரம்' என்பதற்குச் 'செலம்பரம்' என்றும், 'துரைசாமி' என்பதற்கு 'தொரைசாமி' என்றும், 'பொன்னம்பலம்' என்பதற்கு 'பொண்ணம்பலம்' என்றும், 'வைத்தியலிங்கம்' என்பதற்கு 'வைத்திலிங்கம்' என்றும் கையெழுத்து வைக்கிறார்கள். இந்த வித்வ சிரோமணிகளே, ஜூரிகளாகவும் முனிசிபல் கமிஷனர்களாகவும் லோகல் பண்டு மெம்பர்களாகவும், பென்ச்மேஜிஸ்திரேட்டுகளாகவும் தேவாலய தர்மாலய விசாரணைக் கர்த்தாக்களாகவும் (Trustees of temples and charitable institutions) நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய அதிகார ஸ்தானங்களுக்குப் போகும்போது, பிரதிமைகளைப் போல் நாற்காலிகளில் வீற்றிருக்கிறார்களே யல்லாது அவர்களுடைய வேலை இன்னதென்பதைப் பரிச்சேதம் அறியார்கள். பிரதிமைகளுக்கும் இவர்களுக்கும் பேதம் என்னவென்றால் பிரதிமைகள் அசையாமலிருக்கின்றன, இவர்கள் நாற்காலிகளில் தூங்கி விழுந்து அசைந்துகொண்டிருக்கிறார்கள். தேச காவியங்களில் தகுந்த வசன காவியங்கள் இருக்குமானால் இவ்வளவு நிர்ப்பாக்கியமான ஸ்திதியிலிருப்பார்களா? ஆதலால் இங்கிலீஷ், பிரென்ச் முதலிய ராஜபாஷைகளைப் படிக்கிறவர்கள், தேச பாஷைகளையுந் தீர்க்கமாக உணர்ந்து இந்த தேசத்தைச் சூழ்ந்திருக்கிற அறியாமை யென்னும் அந்தகாரம் நீங்கும்படி வசன காவியங்களென்னும் ஞான தீபங்களை ஏற்றுவார்களென்று நம்புகிறோம். தமிழ் படிக்காதவர்கள் தமிழ் நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்ல. அவர்கள் எந்த ஊர் பாஷையைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால் சுய பாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பி விடுவோம். பிரென்ச் மட்டும் படிக்கிறவர்களைப் பாரிஸ் பட்டணத்துக்கு அனுப்புவோம். லத்தீனுக்குஞ் சம்ஸ்கிருதத்துக்குஞ் சொந்த ஊர் இல்லாதபடியால் அந்த பாஷைகளைப் படிக்கிறவர்களை நாம் அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம்” என்றாள்.
---------

அத்தியாயம் -43
விக்கிரமபுரியில் முந்தின ராஜாவால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி, கர்விஷ்டனாயும் பரம துஷ்டனாயும் இருந்தான். “அற்பனுக்கு ஐசுவரியம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்கிற பழமொழிப்படி அவனுக்கு அதிகாரம் கிடைத்தவுடனே தன்னுடைய பூர்வ ஸ்திதியைச் சுத்தமாய் மறந்து தன்னை ஒரு அவதாரப் புருஷன் போல் எண்ணிக் கொண்டான். வித்தியிலும் புத்தியிலும் தனத்திலும் குலத்திலும் தனக்குச் சமமானவர்கள் ஒருவரும் இல்லையென்கிற அகம்பாவமும் மமதையும் உடையவன் ஆனான். அவன் இருக்கிற இடத்தில் பறக்கக் கூடாது. எறும்பு வரக் கூடாது. குருவி சுத்தக் கூடாது. ஒருவரும் பேசக் கூடாது. எப்போதும் நிசப்தமாய் இருக்கவேண்டும். அவனுடைய வீட்டுக்கு எதிரே ஒருவரும் ஜோடு போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது. அங்க வஸ்திரம் போடக் கூடாது. கை வீசிக்கொண்டு நடக்கக் கூடாது. தாம்பூலந் தரிக்கக் கூடாது. சிங்கத்தின் குகை ஓரத்திற் போகிறவர்கள் பயந்து பதுங்கிக் கொண்டு போகிறது போல, இவன் வீட்டுக்கு எதிரே போகிறவர்களும் நடுங்கிக் கொண்டு நிசப்தமாகப் போக வேண்டும். அவன் வெளியே புறப்பட்டால், உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லாரும் எழுந்து விட வேண்டும். நடக்கிறவர்கள் எல்லோரும் நின்றுவிட வேண்டும். சகலரும் பூமியிலே விழுந்து சாஷ்டாங்கமாகத் தண்டஞ் செய்யவேண்டும். அப்படிச் செய்யாதவர்களுக்கு அபராதங்களும், ஆக்கினைகளுங் கிடைப்பது சித்தமே. அவனைக் கண்டவுடன் ஜோடு போட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லாரும் அவைகளைக் கழற்றுகிற வேகத்தைப் பார்த்தால் அவனை அடிப்பதற்காகவே கழற்றுகிறது போலத் தோன்றும். ஆனால் மரியாதைக்காக ஜோடுகளைக் கழற்றுகிறார்களே யன்றி அவனை அடிப்பதற்காக அல்ல. அவன் தெருவில் நடக்கும்போது தெரு முழுதும் தனக்கே சொந்தம் போல அடைத்துக் கொண்டு காலொரு பக்கம், கையொரு பக்கம், வேஷ்டியொரு பக்கம், தானொரு பக்கமாக விறைத்துக் கொண்டு நடப்பான். நடக்கும்போது அவனுடைய ஜோடு அவனைப் படீர் படீரென்று அடித்துக் கொண்டே போகும். அவனை மட்டும் எல்லோரும் வணங்கவேண்டுமே தவிர அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு நடக்கிறதே யல்லாது எவரையும் வணங்குகிறதில்லை. அவன் இறுமாப்புடன் பூமியைப் பார்த்து நடக்கிறதில்லை. அவன் காலிலே விஷம் தீண்டினாலுங் குனிந்து பார்க்கிறதில்லை. தலையிலே வாசற்படி இடித்தாலுங் குனிகிறதில்லை.

அவன் அதிகாரி ஸ்தானத்திலிருக்கும்போது, ஜனங்களெல்லோருங் கைகட்டிக் கொண்டும் வேஷ்டிகளைத் தூக்கிக் கட்டிக்கொண்டும் தூரத்தில் நிற்கவேண்டுமேயல்லாது, அவன் சமீபத்தில் ஒருவரும் நெருங்கக் கூடாது. அவன் கண்ணாலே ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்கிறதில்லை. அவனுடைய வாயிலே திட்டுக்களும் உதாசீனங்களும் புறப்படுமே யல்லாது, நல்ல வார்த்தைகள் புறப்படுகிறதில்லை. பேய்க்குக் கள் வார்த்தது போல அவனுடைய முகத்தில் எப்போதும் கோபம் கூத்தாடிக் கொண்டிருக்கிறதே யல்லாது, பொறுமையாக ஒரு காரியத்தையும் விசாரிக்கிறதில்லை. அவனை யார் அதிகமாக வணங்கித் தப்பு ஸ்தோத்திரஞ் செய்கிறார்களோ அவர்கள் பக்ஷந் தீர்மானிக்கிறதே யன்றி உண்மையைக் கண்டுபிடித்துத் தீர்மானிக்கிறதில்லை. நானொரு நாள் மாறு வேஷம் போட்டுக்கொண்டு அவனுடைய அதிகார ஸ்தானத்துப் போய், மற்ற ஜனங்களுடன் தூரத்தில் நின்றுகொண்டிருந்தேன். அவனை ஏமாற்றித் தீர்ப்புப் பெற்றுக்கொள்வதற்காக, அவனை ஒரு வழக்காளி ஸ்தோத்திரஞ் செய்யத் தொடங்கினான். எப்படியென்றால் “மகாப் பிரபுவே! மண்டலாதிபதியே! இந்த பஞ்ச சாஷ்டக் கோடி பூமண்டலத்தில் உங்களுக்குச் சமமாக யார் இருக்கிறார்கள்? தனத்திலே நீங்கள் குபேரன். வித்தையிலே நீங்கள் ஆதிசேஷன். புத்தியிலே பிரகஸ்பதி. அழகிலே மன்மதன். சாக்ஷ¡த் கடவுள் நீங்களே. அது பேசாத் தெய்வம்; நீங்கள் பேசுந்தெய்வம். அது அப்பிரத்தியக்ஷம்; நீங்கள் பிரத்தியக்ஷமான தெய்வம். நீங்கள் நினைத்தால் அநேகங் குடிகளை வாழ்விக்கலாம். அநேகக் குடிகளைக் கெடுத்து விடலாம். அந்தத் தெய்வத்தினாலே அப்படிச் செய்யமுடியுமா?” என்று பலவாராக முகஸ்துதி பேசிக் கொண்டிருந்தான். அந்த அதிகாரியுந் தன்னைத் தெய்வமென்றே நமஸ்கரித்துக் கொண்டு புன்னகையுடன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அப்போது ஒரு கொள்ளித் தேள் எப்படியோ வந்து அதிகாரியை நறுக்கென்று கடித்து விட்டது. உடனே அந்த பிரத்தியக்ஷமான தெய்வம் கீழே விழுந்து, கட கடவென்று உருள ஆரம்பித்து வைத்தியர்களும் மாந்திரீகர்களும் வந்து கூடிவிட்டார்கள். நான் “தெய்வத்தைத் தேள் கொட்டுமா?” என்று சொல்லிக் கொண்டு அரண்மனைக்குப் போய் நடந்த சங்கதிகளை யெல்லாம் ஞானாம்பாளுக்கு விளம்பினதுமன்றி, அந்த அதிகாரியை ஒரு நாள் அழைப்பித்துத் தனிமையாக வைத்துக் கொண்டு பின் வருமாறு அவனுக்குப் புத்தி சொன்னேன்.

“மனுஷன் தன்னைத் தானே அறிவானானால், அவன் ஒரு நாளுங் கர்வப்பட மாட்டான். நம்முடைய தேகத்தின் அசுத்தங்களையும் நம்முடைய ஆசாபாசங்களையும் துர்க்குணங்களையும் துஷ்கிருத்தியங்களையும் சித்த விகாரங்களையும் நமக்கு உண்டாகிற வியாதிகளையும் துர்ப்பலங்களையும் தேக அநித்தியத்தையும் மரணத்தையும் நாம் யோசிப்போமானால், நாம் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டியதேயல்லாமல், கர்வப்படுகிறதற்கு எனன இடமிருக்கிறது? நாம் அசுத்தமான கர்ப்பத்தில் உற்பத்தியாகி அசுத்தத்திலே பிறந்து அசுத்தத்திலே வளர்ந்து அகசியமான பதார்த்தங்களையே புசித்து அசுசியாகவே ஜீவித்து அசுசியாகவே இறந்து போகிறோம். இரத்தமும் மாமிசமும் எலும்பும் நரம்பும் மலஜலாதியங்களுங்கூடிய நம்முடைய தேகம் அசுத்தமேயன்றி வேறல்லவே. கண்ணிலே பீளை காதிலே குறும்பி மூக்கிலே சளி வாயிலே எச்சில் தலையிலே பேன் தேகமுழுதுந் துர்நாற்றம் இப்படியாக முழுதும் அசுத்தமாக இருக்கிறது. நாம் அடிக்கடி தேகத்தைக் கழுவாவிட்டால் நம்முடைய துர்க்கந்தம் நமக்கே சகிக்குமா?

நம்முடைய வாழ்வுந் தாழ்வும் சுவாமியினுடைய கையில் இருக்கின்றனவே யல்லாது, நம்முடைய ஸ்வாதீனத்தில் என்ன இருக்கிறது? அடுத்த நிமிஷத்தில் இன்னது வருமென்பது நமக்குத் தெரியுமா? நம்முடைய ஆஸ்திகளை நினைத்துக் கர்வப்படுவோமானால், அந்த ஆஸ்திகளும் அநித்தியம்; அவைகளை அநுபவிக்கிற நாமும் அநித்தியர்களா யிருக்கும்போது நாம் எப்படி கர்வப்படக் கூடும்? நாம் பிறக்கும்போது ஒரு கோவணத்துக்குக் கூட வழியில்லாமல் சுத்த நிர்வாணிகளாய்ப் பிறந்து நிர்வாணிகளாயிறந்து போகிறோம். நாம் பிறக்கும்போது ஒரு ஆஸ்தியையும் நாம் கூடக் கொண்டு வந்ததுமில்லை; கூடக் கொண்டுபோவதுமில்லை. நாம் அநுபவிக்கிற பொருள்கள் எத்தனை நாள் நம்மோடு கூடியிருக்கு மென்பதும் நிச்சயமில்லையே! நம்முடைய கல்வியைப் பற்றி நாம் இறுமாப்பு அடைவோமானால், அது நமக்குப் பிறர் போதித்ததேயன்றி நாம் பிறக்கும்போது நம்மோடுகூடப் பிறந்ததல்லவே! அல்லாமலும் நம்முடைய தலையை மிதிக்கும்படியான கல்விமான்கள் உலகத்தில் அநேகர் இருக்கவில்லையா? “எவன் தன்னைத் தானே உயர்த்திக்கொள்கிறானோ அவன் தாழ்த்தப்படுவான். எவன் தன்னைத்தானே தாழ்த்துகிறானோ அவன் உயர்த்தப்படுவான்” என்பது வேத வாக்கியமல்லவா?

ஜனங்களுடைய நன்மைக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஜனங்களுடைய சம்பளங்களையே அதிகாரிகள் வாங்கிச் சாப்பிடுகிறபடியால் அதிகாரிகள் ஜனங்களுக்கு ஊழியக்காரர்களே யல்லாது எஜமான்கள் அல்லவென்பதை அவர்கள் எப்போதும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். அப்படி எண்ணாமல் ஜனங்களைத் தங்களுக்கு அடிமைகளைப் போல எண்ணுகிற அதிகாரிகள் அக்கிரமிகள் அல்லவா? நீர் மேற்குலமென்று பெருமை பாராட்டிக்கொண்டு மற்றவர்களை யெல்லாம் ஈன ஜாதிகளென்றும் ஏழைகளென்றும் அடிக்கடி தூஷிப்பதாகக் கேள்விப்படுகிறோம். குணமும் புத்தியும் சிரேஷ்டமே தவிர ஜாதிபேதங்களும் அந்தஸ்துக்களும் மனுஷர்களுடைய கட்டுப்பாடு என்பதை நீர் அறியாமற்போனது பெரிய ஆச்சரியமல்லவா?

நல்ல மரத்திலே புல்லுருவி பாய்ந்தது போல், ஒரு நற்குணமுடைய அரசனுக்குத் துர்க்குணமுள்ள புத்திரன் ஒருவன் இருந்தான். அவன் தன்னை மிகவும் உயர்வாக எண்ணி மற்றவர்களைத் தாழ்வாக நடத்தி வந்தான். அவனைத் திருத்துவதற்காக ராஜா எவ்வளவு பிரயாசைப் பட்டும் அவன் திருந்தவில்லை. அந்த ராஜகுமாரனுக்கு விவாகமாகி ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளைக்கும் அப்போது பிறந்த வேறொரு ஏழைப் பிள்ளைக்கும் ஒரே மாதிரியாக உடை உடுத்தி இரண்டு பிள்ளைகளையும் ஒரே இடத்தில் வைத்திருக்கும்படி, ராஜா திட்டஞ் செய்திருந்தார். அந்த ராஜகுமாரன் தன் பிள்ளையைப் பார்க்கிறதற்காக ஓடின போது இரண்டு பிள்ளைகளைக் கண்டு தன் பிள்ளை இன்னதென்று தெரியாமல் வேலைக்காரர்களைக் கோபித்துக் கொண்டான். அந்த சமயத்தில் ராஜா வந்து தன் புத்திரனைப் பார்த்து “மகனே! மேன்மையான அந்தஸ்தும் உயர்ந்த ரத்தமும் உள்ள உன் பிள்ளையை நீ கண்டு கொள்ளக் கூடாதா? ஏன் மயங்குகிறாய்?” என்றார். ராஜகுமாரனுக்கு நாணமுண்டாகி தலை கவிழ்ந்து கொண்டு அதோ முகமாக நின்றான். உடனே அந்தப் பிள்ளைகளில் ஒரு பிள்ளையைத் தொட்டுக்காட்டி “இது தான் உன் பிள்ளை. இந்தப் பிள்ளையின் காலில் ஒரு நாடாவைக் கட்டி வைத்திருந்தேன். அப்படிச் செய்யாவிட்டால் உன் பிள்ளை இன்னதென்று தெரியாது. பிறக்கும்போது எல்லோரும் சமானமென்றும் உயர்குலமும் மேம்பாடும் சுத்தக் கற்பிதமென்றும் அறிந்துகொள்” என்றார்.

அந்த ராஜகுமாரனும் ஒரு வேலைக்காரனும் வியாதியாயிருந்தபோது, வைத்தியர் வந்து பார்வையிட்டு இருவருக்கும் ரத்தங் குத்தி வாங்கும்படி சொன்னார். அந்தப்படி இருவருடைய ரத்தமும் எடுத்து வெவ்வேறு பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ராஜா தன்னுடைய குமாரன் கூட இருக்கும்போது வைத்தியரை அழைத்து அந்த இரண்டு பாத்திரங்களும் இருக்கிற ரத்தங்களில் எது நல்ல ரத்தமென்று பரிசோதித்துத் தெரிவிக்கும்படி சொன்னார். உடனே ராஜா தன் குமாரனைப் பார்த்து “நம்முடைய வம்சமும் ரத்தமும் மேலானது என்று எண்ணிக்கொண்டிருந்தோம். உன்னுடைய ரத்தத்தைப் பார்க்கிலும் வேலைக்காரனுடைய ரத்தம் மேலாயிருப்பதாக வைத்தியர் சொல்லுகிறார். அவன் நம்மைப் போல் கண்ட பதார்த்தங்களையெல்லாம் புசிக்காமல் மித போஜனம் செய்கிறபடியாலும், அவன் தேகப்பிரயாசைப் பட்டு ஜீவிக்கிற படியாலும், அவனுடைய ரத்தம் அதிக சுத்தமாய் இருக்கிறது. அப்படியிருக்க நம்முடைய ரத்தம் மேலானதென்று நாம் அகம்பாவம் அடைவது தகுமா?” என்றார்.

ஒரு ஊரில் ஒரு பெரிய பிரபுவினுடைய சிகரத்துக்குச் சமீபத்தில் ஒரு நாணற்காடு இருந்தது. அது கூடை பின்னிவிற்கிற ஒரு ஏழைக்குச் சொந்தமாக இருந்தது. அந்தக் காட்டை விலைக்கு வாங்கவேண்டுமென்று அந்தப் பிரபு முயற்சி செய்தான். அந்த ஏழைக்கு அந்தக் காட்டைத் தவிர வேறு ஜீவனத்துக்கு மார்க்கமில்லாதபடியால் காட்டை விலைக்குக் கொடுக்க நிராகரித்தான். அந்தப் பிரபுவுக்குக் கோபமுண்டாகி, அந்த நாணல்களில் நெருப்பு வைத்து நிர்மூலமாக்கி அந்த ஏழையையும் அடித்து உபத்திரவஞ் செய்தான். எளியவன் ராஜாவினிடத்தில் முறையிட்டுக் கொண்டதனால் ராஜா பிரபுவை வரவழைத்து விசாரணை செய்தார். பிரபு அரசனைப் பார்த்து “அந்தப் பயல் என்னுடைய கௌரவத்தை எவ்வளவும் மதிக்காமற் போய்விட்டதால் அவனை நான் அடித்தது கிரமந்தான்” என்றான். அரசன் பிரபுவைப் பார்த்து “உன்னுடைய முப்பாட்டன் விறகு வெட்டிக் கால§க்ஷபஞ் செய்துவந்தான். பின்பு அவன் படைவீரனாகி சௌரிய பராக்கிரமங் காட்டியபடியால் என்னுடைய பாட்டனாருக்குச் சந்தோஷமுண்டாகி, அவனை மேம்படுத்தித் திரவியவந்தன் ஆக்கினான். உன்னுடைய முப்பாட்டன் ஆதியில் விறகுத் தலையனாயிருந்த போதிலும், பிறகு தன்னுடைய சுய சாமர்த்தியத்தினால் மேன்மையடைந்தான். நீ அவன் தேடின ஆஸ்தியை வைத்துக் கொண்டு சுய யோக்கியதையில்லாமல் காலங் கழிக்கிறாய்” என்றார். பிறகு அரசன் ஒரு மாலுமியைப் பார்த்து “இவர்கள் இருவரையும் ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் ஒரு தீவில் நிர்வாணமாய் விட்டுவிடு. இவர்களில் எவன் சமர்த்தன் என்பதை அறிவோம்” என்றார். உடனே அந்தப் படி நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீவில் அந்தப் பிரபு வஸ்திரமில்லாமல் பனியிலுங் குளிரிலும் பட்ட அவஸ்தை மரணாவஸ்தைக்குச் சமானமாயிருந்தது. அந்த ஏழைக்கு ஒரு கஷ்டமும் தோன்றவில்லை. அவன் சில செடிகளைப் பிடுங்கி நார் உரித்துத் தனக்கும் அந்தப் பிரபுவுக்கும் வஸ்திரஞ் செய்துகொண்டான். அந்தத் தீவில் வசிக்கிற அநாகரிகமான காட்டு ஜனங்களுக்கு, அந்த எளியவன் கூடை முதலானது பின்னிக் கொடுத்தபடியால் அவர்களுக்குச் சந்தோஷமுண்டாகி அவனுக்கு உணவு முதலிய பதார்த்தங்கள் கொடுத்தார்கள். அவன் தானும் புசித்து அந்த வெறும் பிரபுவுக்குஞ் சாப்பாடுங் கொடுத்து ரக்ஷ¢த்தான். அந்தப் பிரபு ஒரு வேலையுஞ் செய்யாமல் சும்மாயிருப்பதை அந்த மிலேச்சர்கள் அறிந்து அவனைக் கொல்ல ஆரம்பித்தார்கள். அப்போது அந்த எளியவன் சிபாரிசு செய்து பிரபுவை விடுவித்துப் பிராணப் பிரதிஷ்டை செய்வித்தான். உடனே பிரபுவுக்கு ஞானோதயம் உண்டாகி அந்த எளியவன் இல்லாவிட்டால் அந்தத் தீவே தனக்கு மயானப் பூமியாக இருக்குமென்று தெரிந்து கொண்டான். சில நாளைக்குப் பிறகு ராஜா அந்த இருவரையுங் கொண்டுவரும்படி உத்தரவு செய்தார். ராஜா முன்பாக அந்தப் பிரபு தன்னுடைய அறியாமையையும் எளியவன் தனக்குச் செய்த உபகாரங்களையும் ஒப்புக்கொண்டு தன்னுடைய ஆஸ்திகளிற் பாதியை அந்த ஏழைக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். ராஜா அந்தப் பிரபுவைப் பார்த்டுச் சொல்லுகிறார்:- “அந்த ஏழை இல்லாவிட்டடால் அந்தக் கானகத்தை விட்டு நீ வானகத்துக்குப் போயிருப்பாயென்பது நிச்சயம். அப்படியே சகல தேசங்களில் இருக்கிற பிரபுக்களும் ஏழைகளால் ஜீவிக்கிறார்களே யல்லாமல் மற்றப்படியல்ல. எண்ணிக்கையில்லாத ஏழைகளுடைய தேகப் பிரயாசத்தினால் நமக்குச் சகல பாக்கியங்களுங் கிடைக்கிற படியால் அவர்களை நாம் பெரிய உபகாரிகளாக மதிக்க வேண்டுமென்றார்.

ஒரு பிரபு தனக்குப் பிள்ளை பிறந்த உடனே பால் கொடுப்பதற்காக அந்தப் பிள்ளையைப் பாற்காரி கையில் ஒப்புவித்தார். அந்தப்பிள்ளையும் பாற்காரி பிள்ளையும் சமான வயதாகவும் அபேதமாகவும் இருந்தபடியால் அந்தப் பாற்காரி தன் பிள்ளையைப் பிரபு பிள்ளையாகவும் பிரபுவின் பிள்ளையைத் தன் பிள்ளையாகவும் மாற்றி விட்டாள். இந்தப் பிரகாரம் பாற்காரிப் பிள்ளை பிரபுவாகவும், பிரபு வீட்டுப் பிள்ளை ஏழையாகவும் மாறிப்போய் விட்டார்கள். சில பிரபுக்கள் அகம்பாவத்தினால் அந்நியரிடத்தில் வாயைக் கொடுத்து அவமானப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில திருஷ்டாந்தங்களைத் தெரிவிக்கிறேன்.

ஒரு அரசன் சில அந்நிய தேசத்து வர்த்தகர்களிடத்தில் சில குதிரைகளை விலைக்கு வாங்கிக்கொண்டு, பின்னும் இரண்டு லக்ஷ ரூபாய் அவர்கள் கையில் அதிகமாகக் கொடுத்து அந்தப் பணத்துக்குள்ள குதிரைகளைக் கொண்டு வரும்படி சொன்னான். அந்த வியபாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டுபோய்விட்டார்கள். பிறகு ஒரு நாள் அந்த ராஜா தன் மந்திரியை அழைத்து தன் தேசத்தில் உள்ள மூடர்களுடைய பெயுர்களையெல்லாம் எழுதிக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தான். மந்திரி ராஜாவைப் பார்த்து “நான் முன்னமே அந்தப்படி ஒரு அட்டவணை எழுதி வைத்திருக்கிறேன். அதில் எல்லாருக்கும் முந்தி உங்களுடைய பெயரை எழுதியிருக்கிறேன். ஏனென்றால் அந்த வர்த்தகர்கள் இன்ன ஊரென்று தெரிந்துகொள்ளாமலும் அவர்களிடத்தில் ஜாமீன் வாங்காமலும் இரண்டு லக்ஷ ரூபாய் அவர்கள் கையில் நீங்கள் கொடுத்துவிட்டதால் மூடருடைய ஜாப்தாவில் முதன்மையாக உங்களுடைய பெயரை எழுதியிருக்கிறேன்” என்றான். அரசன் மந்திரியைப் பார்த்து “ அவர்கள் குதிரைகளைக் கொண்டு வந்தால் அப்போது என்ன செய்வாய்?” என்றான். “அவர்கள் குதிரைகளைக் கொண்டு வந்தால் உங்கள் பெயரைக் கிறுக்கிவிட்டு அவர்கள் பெயரைப் பதித்துக்கொள்ளுவேன்” என்று மந்திரி பிரதி உத்திரஞ் சொன்னான்.

ஒருவனுக்குப் பெரிய உத்தியோகங் கிடைத்தபடியால் அவனுடைய சிநேகிதன் அவனுக்கு மங்கள வார்த்தை சொல்வதற்காக வந்தான். அவன் தன்னுடைய உத்தியோக மமதையால் சினேகிதனைப் பார்த்து “நீ யார்?” என்று வினாவினான். சினேகிதனுக்கு கோபம் ஜனித்து “நான் உன்னுடைய பழைய நேசன். உனக்கு இரண்டு கண்ணும் அவிந்து போனதாக கேள்விப்பட்டு துக்கங் கொண்டாட உன்னிடத்துக்கு வந்தேன்” என்றான்.

ஒரு நியாயாதிபதி ஒரு சாக்ஷ¢க்காரனைப் பார்த்து “ நீ திருடனென்று கண்ணாடிபோல உன் முகங் காட்டுகிறது” என்றான். உடனே சாக்ஷ¢க்காரன் அந்தக் கெட்ட நியாதிபதியைப் பார்த்து “என்னுடைய முகங் கண்ணாடியானதால் இதில் உங்கள் முகத்தைக் காணுகிறீர்கள்” என்றான். ஆகையால் நியாயாதிபதி திருடனென்பதாயிற்று.

ஒரு வழக்காளி நியாயசபையிற் பேசிகொண்டிருக்கும் போது அவனை, அவனுடைய எதிரியின் வக்கீல் பார்த்து “நீ ஏன் நாய் போற் குரைக்கின்றாய்?” என்றான். “திருட்டுப் பயலைப் பார்த்தால் நாய் குரைக்காதா?” என்று அந்த வழக்காளி மறுமொழி சொன்னான். இதனால் வக்கீலைத் திருடன் ஆக்கிவிட்டான்.

ஒரு அரசனும் அவனுடைய மகனும் ஒரு விகடகவியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குப் போனார்கள். வேட்டை ஆடிக் கொண்டிருக்கும்போது மழை பிடித்துக்கொண்டு ராஜாவும் அவர் மகனும் நனைந்து போய்விட்டார்கள். நனைந்து போன அவர்களுடைய உடுப்புக்களைக் கழற்றி ஒரு மூட்டையாகக் கட்டி விகடகவி தலைமேலே வைத்தார்கள். அவன் தூக்கிக்கொண்டு போகும் போது ராஜாவும் அவர் மகனும் “விகடகவி ஒரு கழுதைப் பாரஞ் சுமந்துக்கொண்டு போகிறான்” என்று பரிகாசமாகப் பேசிக்கொண்டு போனார்கள். விகடகவி அவர்களைத் திரும்பி பார்த்து “ஒரு கழுதை பாரந்தானா? இரண்டு கழுதைப் பாரஞ் சுமக்கிறேன்” என்று சொல்லி ராஜாவையும் அவர் மகனையும் கழுதைகள் ஆக்கிவிட்டான்.

தரித்திரமான ஒரு வித்துவான் ஒரு தனவான் வீட்டுக்குப் போய் அவனுக்கும் தனக்கும் ஒரு சாண் தூரம் இருக்கும்படியான சமீபத்தில் உட்கார்ந்தான். அந்தத் தனவான் கோபங்கொண்டு வித்துவானைப் பார்த்து “கழுதைக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?” என்றான். வித்துவான் “ஒரு சாண்தான் வித்தியாசம்” என்று அளந்து காட்டினான்.

ஒரு அரசன் பொழுது விடியுமுன் எழுந்து வேட்டையாடுவதற்காக காட்டுக்குப் போனான். காட்டில் மத்தியானம் வரைக்குஞ் சுற்றித்திரிந்தும் வேட்டை அகப்படவில்லை. அன்றையதினம் விடியற்காலத்தில் அரசன் ஒரு குடியானவன் முகத்தில் விழித்தபடியால் அது நிமித்தந் தனக்கு வேட்டை அகப்படவில்லையென்று நினைத்து, அந்தக் குடியானவனைக் கொன்றுவிடும்படி உத்திரவு செய்தான். அந்தக் குடியானவன் அரசனைப் பார்த்து, “மகாராஜாவே! பிராதக்காலத்தில் நீங்கள் என் முகத்தில் விழித்தேன். என் முகத்தில் நீங்கள் விழித்ததற்கு உங்களுக்கு வேட்டை அகப்படவில்லை. உங்கள் முகத்தில் நான் விழித்ததற்கு என்னுடைய பிராணனை இழந்து போகும்படி சம்பவித்திருக்கிறது.” என்றான். இதைக் கேட்டவுடனே அரசனுக்கு விவேகம் உண்டாகி “குடியானவனைக் கொல்லவேண்டம்” என்று உத்திரவு செய்தான்.

ஒரு வக்கீல் ஒரு நியாயசபையில் ஒரு நியாயவாதஞ் செய்து கொண்டிருக்கும்போது நியாயாதிபதி “கழுதை கத்துகிறது கழுதை கத்துகிறது” என்று வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அதை வக்கீல் கேட்டுங் கேளாதவர் போலத் தன் கக்ஷ¢யைப் பேசினார். பிறகு நியாயாதிபாதி தீர்மானஞ் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு யதார்த்தமான கழுதை தெருவிலே கத்தத் துவங்கிற்று. உடனே நியாதிபதி தீர்மானஞ் சொல்வதை நிறுத்தி, “அது கோர்ட்டாருடைய எதிரொலிதான் வேறொன்றும் அல்ல” என்றார். நியாதிபதி அதோமுகம் ஆனார்.

ஒருவனை ஒருவன் அடித்த சங்கதியைப் பற்றி நியாய சபையில் விசாரணை நடந்தபோது பிரியாதுக்காரனைக் குற்றவாளி அடித்ததைத் தான் பார்த்ததாக ஒரு சாக்ஷ¢க்காரன் சொன்னான். குற்றவாளியின் வக்கீல் அந்தச் சாக்ஷ¢க்காரனைப் பார்த்து “அந்த அடி எப்படிப்பட்ட அடி?” என்று கேட்டார். கையை ஓங்கிப் பலமாக அடித்தாகச் சாக்ஷ¢க்காரன் சொன்னான். வக்கீல் அவனைப் பார்த்து “அது இப்படிப்பட்ட அடியென்று எனக்கு நீ மெய்ப்பிக்க வேண்டும்” என்றான். சாக்ஷ¢க்காரன் கோர்ட்டாரைப் பார்த்து “அது இப்படிப்பட்ட அடியென்று நான் எப்படி மெய்ப்பிப்பேன்? அது பலமான அடிதான்” என்றான். நியாயாதிபதி சாக்ஷ¢க்காரனைப் பார்த்து “வக்கீல் சொல்லுகிறபடி அவருக்கு நீ மெய்ப்பிக்கத்தான் வேண்டும்” என்றான். உடனே சாக்ஷ¢க்காரன் இரண்டு கைக¨ளையும் ஓங்கி தன் பலமெல்லாம் கூட்டி வக்கீலை அடித்து “இவ்வகையாகத்தான் குற்றவாளி அடித்தான்” என்றான். வக்கீல் அந்த அடி பொறுக்கமாட்டாமல் கீழே விழுந்துவிட்டார். இது வக்கீலினுடைய ஸ்வயங்கிருத அபராதமானதால் சாக்ஷ¢க்காரனை ஒன்றுஞ் செய்யக்கூடாமற் போய்விட்டது” என்றேன்.
----------

அத்தியாயம் -44
விக்கிரமபுரி குடியரசாவதற்கு முந்தி அதை ஆண்டுவந்த அரசனுக்குப் புருக்ஷப்பிரஜை யில்லையென்பதை முன்னமே தெரிவித்திருக்கிறேன். அவருக்கு அதிரூப செளந்தரியமான ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தது. அந்தப் பெண் பெயர் ஆநந்தவல்லி. அந்தக் குழந்தை அதிபால்லியமாயிருக்கும் போது தாயும் தகப்பனும் இறந்துபோய்விட்டதால் பாட்டியாருடைய கையிலே வளர்ந்தது. ஞானாம்பாளுக்குப் பட்டாபிஷேகமான பிறகு அந்தக் குழந்தையைத் தன் குழந்தைபோற் பாவித்து மிகுந்த அன்போடுங் கரிசனத்தோடும் ஆதரித்துவந்தாள். தகுந்த உபாத்தியாயர்களைக் கொண்டு வித்தியாப்பியாசஞ் செய்வித்ததுமின்றி தன்னாற் கூடிய போது அந்தப் பெண்ணுக்குச் சன்மார்க்கங்களையும் ராஜநீதிக¨ளையும் ஞானாம்பாள் போதித்து வந்தாள். அந்தப் பெண்ணுக்குப் பக்குவகாலஞ் சமீபித்த உடனே அவளுக்கும் எங்களுக்கும் முகதரிசனமில்லாமல் அந்தப்புரவாசமா யிருந்தாள். அவளுடைய அந்தஸ்துக்குரிய காரியங்களில் ஒரு குறைவுமில்லாமல் சகல மேம்பாடுகளும் உபசார மரியாதைகளும் நடந்துவந்தன.

ஞானாம்பாள் ஆண்வேடம் பூண்டுகொண்டு அரசு செய்வது தனக்கு அரிகண்டமா யிருப்பதால், தான் பெண்பால் என்பதை ஜனங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று அனேக ஆவர்த்தி அபேக்ஷ¢த்தாள். நான் கூடாதென்று தடுத்தபடியால் என் பிரியத்துக்காக அவன் ஆண் வேஷத்துடன் அரசு செய்து வந்தாள். ஆனால் ராஜ்ஜியபாரத்தைச் சேர்ந்து பல கவலைகளினாலும் தன்னுடைய உற்றார் பெற்றாரைப் பிரிந்திருக்கிற ஏக்கத்தினாலும் ஞானாம்பாள் சிலநாளாய்ச் சந்தோஷமாயிராமல் தேகம் மெலிந்து போனாள். அவள் ஒருநாள் என்னை நோக்கி நெட்டுயிர்ப்புடன் சொல்லுகிறாள்:- “எப்படிப்பட்ட முழுமூட்சுக்களாயிருந்தாலும் பிரபஞ்ச மாயாவிகாரத்தில் மதிமயங்காதிருப்பது அதிதுர்லபமென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். நமக்குப் பிரபஞ்ச மாயையுடனே கூட ராஜயோகம் வந்துவிட்டதால் நாம் சித்தம் பேதித்து நம்முடைய உற்றார் பெற்றார்களையெல்லாம் மறந்துவிட்டோம். நாம் அவர்களை மறந்து விட்டது போல் அவர்கள் நம்மை ஒரு நிமிஷமாவது மறந்திருப்பார்களா? நாம் ஆதியூரை விட்டுத் தப்பிப் போன சமாசாரங் கேள்விப்பட்ட உடனே அவர்கள் பிராணனையும் வைத்திருப்பார்களா? அவர்களை இன்னொரு தரங் காண்போமா? அவர்களுடைய அமிருத வாசகத்தைக் கேட்போமா? என்னுடைய அத்தையாரைப் போலப் புண்ணியவதிகளை நான் எந்த உலகத்திலே காணப்போகிறேன்?” என்று சொல்லி முத்துமாலைபோற் கண்ணீர் விட்டுத் தேம்பினாள். அதைக் கேட்டவுடனே எனக்குஞ் சகிக்கக் கூடாத சஞ்சலம் உண்டாகிச் சிறிது நேரம் பொருமினேன். மறுபடியும் ஞானாம்பாள் என்னைப் பார்த்து “உங்களுடைய பிரியத்துக்காக இதுவரையும் அபாரமான இந்த ராஜாங்க பாரத்தைச் சுமந்தேன். இனி மேற் சுமக்க என்னால் முடியாது. இருக்கிற இடந் தெரியாமல் எவ்வளவோ அடக்க ஒடுக்கமாயிருக்க வேண்டிய ஸ்திரீ ஜாதியாகிய நான் புருஷவேஷம் பூண்டுகொண்டு எத்தனை நாளைக்குக் கஷ்டப்படுவேன்? இனி என்னால் நிர்வகிக்கச் சாத்தியமில்லாதபடியால் நீங்கள் என் தலைமேலே தூக்கிவைத்த பாரத்தை இறக்கிவிடும்படி கிருபை செய்யப் பிரார்த்திக்கிறேன்” என்றாள் நான் அவளைப் பார்த்து “நான் செய்ய வேண்டிய காரியம் இன்னதென்று சொன்னால் உடனே அந்தப்படி செய்கிறேன்” என்றேன்.

ஞானாம்பாள் என்னைப் பார்த்து “நம்முடைய ஊரில் நமக்கு என்ன பாக்கியங் குறைவாயிருக்கிறது? இந்த ஊர்க் குடிகளுடைய சௌக்கியத்துக்காக நாம் இந்த அரசாக்ஷ¢யத்தை ஏற்றுக் கொண்டதே யல்லாது, நமக்கு ஏதேனும் லாபம் உண்டா? குடிகளுக்கு வேண்டிய சௌக்கியங்களையும் சட்ட திட்டங்களையும் நாம் ஏற்படுத்திவிட்ட படியால், இனி மேல் இந்த ஊரை ஆளுகிறவர்களுக்கு அதிகப் பிரயாசம் இராது. இந்த ஊரை முன்னே ஆண்ட ராஜாவின் புத்திரியாகிய ஆநந்தவல்லி கூடிய வரையிற் கல்வி கற்று குணசாலியாகவும் பட்டத்துக்கு யோக்கியமாயும் இருப்பதால், அவளுக்குப் பட்டாபிஷேகஞ் செய்வித்து நாம் நம்முடைய ஊருக்குப் போவது நன்மையென்று நினைக்கிறேன்” என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து உன்னுடைய இஷ்டப்படி நடக்க என்னால் ஆடங்கமில்லை. ஆனால் அந்த ஜனங்கள் அந்த ராஜபுத்திரிக்கு மகுடஞ் சூட்டச் சம்மதிப்பார்களோ, சம்மதியார்களோ தெரியவில்லை. அன்றியும் இந்த நாடு மலைகளாலும் சமுத்திரங்களாலும் சூழப்பட்டிருப்பதால் நம்முடைய ஊருக்கு எந்த மார்க்கமாய்ப் போகிறதென்றுந் தெரியவில்லை. அந்த விவரங்களெல்லாந் தெரிந்துகொண்டு பிறகு அந்த ராஜ கன்னிகைக்கு மகுடாபிஷேகஞ் செய்விப்பதைப் பற்றி யோசிக்கலாம். அது வரையில் நம்முடைய எண்ணம் பிறர் அறியாதபடி ரகசியமாயிருக்க வேண்டும். ராயரும் அப்பாஜியும் அரசாண்ட காலத்தில் டில்லிப் பாச்சா ஒரே மாதிரியான மூன்று விக்கிரகங்களை அனுப்பி அவைகளின் தாரதம்மியங்களைத் தெரிவிக்கும்படி நிருபம் அனுப்பினான். மூன்றும் ஒரே தன்மையாயிருந்தபடியால் அவைகளின் உயர்வு தாழ்வு தெரியாமல் எல்லோரும் மயங்கினார்கள். அப்பாஜி அந்த விக்கிரகங்களின் காதுத்தொளை வழியாக ஈர்க்குகளை விட்டுப் பார்த்தான். ஒரு விக்கிரகத்தின் காதிலே விட்ட ஈர்க்கு, மற்றொரு காது வழியாகப் புறப்பட்டது. இன்னொரு விக்கிரகத்துக்கு வாய் வழியாகப் புறப்பட்டது. மற்றொரு விக்கிரகத்தின் காது வழியாய் விட்ட ஈர்க்கு, வெளியே வராமல் உள்ளே தங்கிவிட்டது. அந்த மூன்றாவது விக்கிரகம் போல எவன் ரகசியங்களை வெளியே விடாமல் உள்ளே அடக்குகிறானோ, அவன் உத்தமனென்றும், எவர்கள் காதினால் கேட்டதை வெளியே விட்டு விடுகிறார்களோ, அவர்கள் மத்திமரும் அதமரென்றும் அப்பாஜி பொருள் விடுவித்தான். அப்படிப் போல் நாமும் ரகசியங் காப்பாற்றவேண்டும்” என்றேன். நான் சொன்னது சரியென்று ஞானாம்பாளும் அங்கீகரித்துக் கொண்டாள்.

அதற்குச் சிலநாளைக்குப் பின்பு ஒரு நாட்காலையில், மந்திரி பிரதானிகள் முதலிய பெரிய உத்தியோகஸ்தர்களும், பெரிய பிரபுக்களும், இன்னும் அநேக ஜனங்களும், அரண்மனையில் வந்து ராஜசேவைக்குக் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டு, நானும் ஞானாம்பாளும் எழுந்துபோய் வந்தவர்களுக்குப் பேட்டி கொடுத்தோம். அவர்கள் பெருங் கூட்டமாய் வந்திருந்தபடியால், நாங்கள் ஆச்சரியம் அடைந்து “என்ன விசேஷம்?” என்று வினவினோம். வயோதிகர்களான சில பிரபுக்கள் எழுந்து ஞானாம்பாளைப் பார்த்து “மண்டலேச்வரா! மகிபரிபாலா!! நாங்கள் ஒரு பெரிய காரியத்தை உத்தேசித்து வந்திருக்கிறோம். தாங்கள் ஒரு ஆ§க்ஷபமுஞ் சொல்லாமல் எங்களுடைய மனோரதத்தை நிறைவேற்றவேண்டும்” என்றார்கள். ஞானாம்பாள் அவர்களை நோக்கி “நீங்கள் உத்தேசித்திருக்கிற காரியம் புக்தமாயும் சாத்தியமாயும் இருக்கிற பக்ஷத்தில் அந்தப்படி செய்யத் தடையில்லை. ஆனால் காரியம் இன்னதென்று தெரிந்துகொள்ளாமல், முந்தி வாக்குத்தத்தம் செய்வது சரியல்லவே” என்றாள். அந்தப் பிரபுக்கள் ஞானாம்பாளைப் பார்த்து “நீங்கள் கலியாணமில்லாமல் பிரமசாரியா யிருப்பது எங்களுக்குப் பெரிய மனோவியாகூலமா யிருக்கிறது. தக்க பருவத்தில் கலியாணஞ் செய்யாதிருப்பதால் உங்களுடைய தேகம் நாளுக்கு நாள் இளைத்துப் போகின்றது. நீங்கள் சுகமாயிருந்தால் தானே எங்களுக்குச் சுகம் உண்டு. நாங்கள் எத்தனையோ உபகாரங்களைப் பெற்றுக் கொண்டோம். உங்களுக்கு நாங்கள் என்ன உபகாரஞ் செய்யப் போகிறோம்? உங்களுடைய கலியாண மகோற்சவத்தைப் பார்க்க வேண்டுமென்று எங்கள் கண்கள் அபேக்ஷ¢க்கின்றன. எங்களுடைய முந்தின ராஜாவின் மகளுடைய அழகுங் குணமும் உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அந்தப் பெண்ணினுடைய பாட்டியார் முதலான பந்துக்களுடைய கருத்தையும் அறிந்தோம். அவர்கள் எல்லாரும் அந்தப் பெண்ணை உங்களுக்குக் கன்னிகாதானஞ் செய்யப் பூரண சம்மதமாயிருக்கிறார்கள். அந்தப் பெண்ணினுடைய கருத்துந் தங்களையே நாடியிருப்பதாகவுந் தெரிந்து கொண்டோம். உங்களையும் அந்தப் பெண்ணையும் அதிர்ஷ்டம் வந்து மடியைப் பிடித்து இழுக்கும்போது நீங்கள் வேண்டாம் என்பீர்களா? அந்தக் கன்னிகாரெத்தினத்துக்குத் தக்க மாப்பிள்ளை நீங்களே! உங்களுக்குத் தக்க பெண் அந்தப் பெண்ணேயன்றி வேறில்லை” என்றார்கள். இதைக் கேட்டவுடனே ஞானாம்பால் திடுக்கிட்டுத் திகைத்து ஒன்றும் பேசாமல் என் முகத்தைப் பார்த்தாள். அவள் பொய் பேசுகிறவளாயிருந்தால், சமயானுகூலமாக எப்படியாவது பொய் சொல்லித் தப்பித்துக்கொள்ளுவாள். பொய்யுஞ் சொல்லக் கூடாமல் மெய்யுஞ் சொல்லக்கூடாமல் இருந்தபடியால் அவள் இவ்வாறு மலைப்பதற்கு இடமாயிற்று. நான் அந்தப் பிரபுக்களைப் பார்த்து “நீங்கள் சொல்லுவது பெரிய காரியமானதால் உடனே எப்படி மறுமொழி சொல்லக்கூடும்?” என்றேன். அவர்கள் என்னைப் பார்த்து “உபராஜப் பிரபுவே! இந்த விஷயத்தில் ஆலோசிக்கவேண்டிய சங்கதி என்ன இருக்கிறது? பெண்ணினுடைய குணத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறீர்களா? அல்லது குலத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறீர்களா? எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரிந்தது தானே. இன்றைக்கு மறுமொழி சொல்லக் கூடாவிட்டாலும், நாளைக்காவது எங்களுடைய இஷ்டப்படி மறுமொழி சொல்ல வேண்டும். உபராஜாவாகிய நீங்கள் அந்த மகாராஜாவுக்குச் சொல்லி அகத்தியம் எங்கள் இஷ்டப்படி நிறைவேற்றவேண்டும். அந்த ராஜ கன்னியின் மனம் மகாராஜாவை நாடியிருப்பதால் மகாராஜா அந்தப் பெண்ணை வேண்டாமென்றால் பெண்பாவம் அல்லவா? ஆகையால் நீங்களும் முயற்சி செய்து இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உங்களுக்கும் வேறே பெண் தேடி விவாகஞ் செய்விக்கிறோம். அநுகூலமான மறுமொழியைக் கேட்பதற்காக நாளைக்கு ஆவலுடனே வருவோம்” என்று சொல்லிவிட்டு எல்லாரும் போய்விட்டார்கள். அவர்கள் போன வகையைப் பார்த்தால் தங்களுடைய வார்த்தையை நாங்கள் அர்த்தாங்கீகாரம் பண்ணிக்கொண்டதாக நினைத்துப் போனதாகத் தோன்றிற்று. எனக்கும் பெண் தேடி விவாகஞ் செய்வதாக அவர்கள் சொன்னவுடனே துயர முகமாயிருந்த ஞானாம்பாளுக்கும் புன்னகை உண்டாகிப் பிறகு அடக்கிக் கொண்டாள்.

அவர்கள் எல்லாரும் போனபிறகு ஞானாம்பாள் என்னைப் பார்த்து துக்க முகத்துடனே சொல்லுகிறாள்:- “விளையாட்டுச் சண்டை வினைச் சண்டையானது போல நான் ஆண்வேஷம் பூண்டுகொண்டு பேடிசம் பண்ணினது இவ்வளவு பிரமாதமாய் விளைந்திருக்கிறது. நான் ஆதியிலே உண்மையைச் சொல்லியிருந்தால் இவ்வளவு விபரீதம் நேரிடுமா? என்னுடைய ஆண் வேஷத்தை எத்தனை நபர்கள் மோசம் போகிறார்கள்? முக்கியமாக அந்த ராஜபுத்திரியினுடைய நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அந்தப் பிரபுக்கள் சொல்வது வாஸ்தவமா யிருக்கிற பக்ஷத்தில் அவளை நான் கொள்ளமாட்டேனென்று நிராகரிப்பதாக கேள்விப்படும்போது அவளுக்கு எத்தனை துக்கத்திற்கு இடமாயிருக்கும்? தாய் தகப்பன் இல்லாத ஒரு அருமையான பெண்ணை, நாம் இவ்வகையாக துன்பப்படுத்துவது தகுமா? அது பெண் துரோகம் அல்லவா? ஆகையால் காரியம் இன்னும் பிரமாதமாய் வளருவதற்கு முன் உண்மையைச் சொல்லிவிடுவது உத்தமமாகக் காணப்படுகிறது. நாளைத்தினம் அவர்கள் வந்து கேட்கும்போது நான் பெண்ணென்பதை அவர்களுக்குத் தெரிவிக்க யோசித்திருக்கிறேன்” என்றாள். நான் அவளைப் பார்த்து “நீ சொல்வதெல்லாம் வாஸ்தவந்தான். ஆனால் இப்போது உண்மையை வெளிவிடுவது விவேகமாய்த் தோன்றவில்லை. ஜனங்கள் எல்லாரும் உன்னை புருஷனென்றே நினைத்துச் சகல உபசார மரியாதைகளும் வணக்கமுஞ் செய்து வருகிறார்கள். நீ பெண்ணென்று திடீரென்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் அவர்களுடைய புத்தி எப்படியிருக்குமோ தெரியாது. இந்தத் தேசத்தார் ஸ்திரீகளை நிதிருஷ்டமாக எண்ணி அவர்களைப் பட்டாபிஷேகத்துக்கு யோக்கியர்கள் அல்லவென்று நினைக்கிறார்கள். அன்றியும் நாம் அநேக உத்தியோகஸ்தர்களையும் படைகளையும் நீக்கி அநேகருடைய விரோதங்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால் இந்தச் சமயத்தில் உண்மையைச் சொல்வது சரியல்லவென்று நினைக்கிறேன்” என்றேன். உடனே அவள் “நான் உண்மைக்காகத் தலை கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் ஒரு காரியத்தைப் பற்றி மட்டும் யோசிக்கிறேன்” என்று சொல்லி அந்தக் காரியம் இன்னதென்று தெரிவிக்காமல் மௌனமாயிருந்தாள். அவள் குறித்துச் சொன்ன காரியம் இன்னதென்று எனக்கு நன்றாக விளங்கிற்று. அவள் உண்மைக்காகத் தன் தலை கொடுக்கச் சித்தமாயிருந்தாலும் எனக்கு என்ன பொல்லாங்கு விளையுமோவென்று மட்டும் ஆலோசிப்பதாகத் தெரிந்து கொண்டேன். ஞானாம்பாள் என்னிடத்தில் வைத்திருக்கிற அணைகடந்த அன்பின் நிமித்தம் அவள் பல சங்கடங்களுக்கு உட்பட்டிருப்பதை நினைக்கும்போது என் மனம் பதைத்து உலை மெழுகு போல் உருகிற்று. யாதொரு அபாயமுமில்லாமல் அவளை ரக்ஷ¢க்கவேண்டுமென்று அடிக்கடி நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

மறுநாட் காலையிலும் மந்திரி பிரதானி முதலிய சகல உத்தியோகஸ்தர்களும் ஊரிலுள்ள சகல பிரபுக்களும் அரண்மனையில் வந்து கூட்டங் கூடினார்கள். அவர்கள் ஞானாம்பாளைக் கண்டவுடனே “மகாராஜாவே! நாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்று கோயிலுக்குக் கோயில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய குலதெய்வம் இந்தக் காரியத்தை அகத்தியங் கூட்டி முடிக்குமென்று நிச்சயமாய் நம்பியிருக்கிறோம். அதற்குத் திருஷ்டாந்தமாக நாங்கள் வழியில் வரும்போது நல்ல நல்ல சகுனங்கள் கண்டோம். இந்தக் கலியாணம் முடியவேண்டுமென்று விரும்பாதவர்கள் ஒருவருமில்லை. அரைஞாண் கட்டின பிள்ளைகள் முதலாகச் சகலரும் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஜனங்களுடைய எண்ணத்துக்கு விரோதஞ் செய்ய மாட்டீர்களென்று நம்புகிறோம்” என்றார்கள்.

ஞானாம்பாள் அவர்களை நோக்கி “இத்தனை ஜனங்களுடைய அபேஷைக்கு விரோதம் செய்வது எனக்கு மெய்யாகவே வருத்தமாயிருக்கிறது. ஆனால் என்னாலே கூடாத காரியத்துக்கு நான் என்ன செய்வேன்? அந்தப் பெண்ணை நான் கொள்வதற்கு ஒரு பெரிய பிரதிபந்தமிருக்கிறது. அது ஒருவராலும் நிவர்த்தி செய்யக் கூடாததாயிருக்கிறது” என்றாள்.

ஜனங்கள் “அந்தப் பிரதிபந்தம் இன்னதென்று தெரிவித்தால் எங்குடைய பிராணனைக் கொடுத்தாயினும் அல்லது எங்களுடைய ஆஸ்திகளையெல்லாஞ் செலவழித்தாயினும் அந்தப் பிரதிபந்தத்தை நிவர்த்தி செய்கிறோம்” என்றார்கள்.

ஞானாம்பாள் “அந்தப் பிரதிபந்தத்தை நிவர்த்தி செய்ய ஒருவராலுங் கூடாது. பெண்ணை ஆணாக்கவும் ஆணைப் பெண்ணாக்கவும் எப்படிக்கூடாதோ அப்படியே இதுவுங் கூடாத காரியந்தான். அன்றியும் நீங்கள் கலியாணமில்லாத பிரமசாரியென்று நினைத்து எனக்குக் கலியாணம் செய்விக்க முயலுகிறீர்கள். நான் பிரமசாரியல்ல” என்றாள்.

ஜனங்கள் “உங்களுக்கு முன்னமே கலியாணம் நடந்திருந்தாலுங் கூட அந்த ராஜகன்னியை உங்களுக்குத் துதிய விவாகஞ் செய்ய எல்லாரும் சம்மதிக்கிறார்கள். சகல சங்கதிகளையும் நாங்கள் முன்னமே கலந்து பேசிக்கொண்டு தான் உங்களிடத்தில் வந்தோம். ஒரு பெண்ஜாதி யிருக்கும்போது வேறு ஸ்திரீகளை விவாகஞ் செய்வது சாஸ்திரோக்தமே தவிர அசாஸ்திரியம் அல்லவே” என்றார்கள்.

ஞானாம்பாள் “உங்களுடைய அபிப்பிராயப்படி பல ஸ்திரீ விவாகம் சாஸ்திரோக்தமாக யிருந்தாலும் கொள்ளுகிறவனுடைய சம்மதம் வேண்டாமா?” என்றாள்.

ஜனங்கள் “கொள்ளுகிறவனுடைய சம்மதத்தைக் கேளாமலே இந்தத் தேசத்தில் கலியாணங்கள் நடப்பது வழக்கமாயிருக்கின்றது. நாங்கள் அப்படிச் செய்யத் துணியாமல் உங்களுடைய சம்மதத்தை கேட்கவே வந்திருக்கிறோம். இத்தனை ஜனங்களுடைய பிரார்த்தனையை நிராகரிப்பது நியாயமா? எங்களை பாராவிட்டாலும் தாய்தகப்பன் இல்லாத அந்தப் பெண் முகத்தையாவது பாருங்கள்! அந்தப் பெண் உங்களை வேண்டுமென்று விரும்பும்போது நீங்கள் வேண்டாமென்று தள்ளிவிடுவது பெண் துரோகம் அல்லவா?” என்றார்கள்.

ஞானாம்பாள் “அந்தப் பெண்ணுக்காக இவ்வளவு பரிந்து பேசுகிற நீங்கள் அந்தப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான நன்மையைச் செய்யாமலிருக்கிறீர்கள். அந்த நன்மையைச் செய்தால் ராஜராஜாக்களெல்லோரும் அந்தப் பெண்ணை விரும்புவார்களே!” என்றாள்.

ஜனங்கள் “அந்தப் பெண்ணுக்கு நாங்கள் என்ன நன்மை செய்யாமல் விட்டுவிட்டோம்? அது இன்னதென்று உத்திரவானால் இந்த நிமிஷத்தில் செய்கிறோம். இது சத்தியம் சத்தியம்” என்றார்கள்.

ஞானாம்பாள் “அந்தக் கன்னிகையினுடைய தகப்பனார் புருஷ சந்ததியில்லாமல் இறந்துபோன உடனே பாராம்பரை பாத்தியக் கிரமப்படி அந்தப் பெண்ணுக்கு பட்டாபிஷேகம் செய்யவேண்டியது நியாயமாயிருக்க, நீங்கள் அந்தப்படி செய்யத் தப்பிப் போய்விட்டீர்கள்! ஒரு ராஜா இறந்த உடனே பாராம்பரை பாத்தியகிரமத்தை அனுசரிக்காமல் புது ராஜாவை நியமிக்கிறதாயிருந்தால் பெரிய கலகங்களுக்கு ஆஸ்பதமாகும். எப்படியென்றால் பலவானாயிருக்கிற ஒவ்வொருவனுந் தன்னை நியமிக்கவேண்டும் தன்னை நியமிக்கவேண்டுமென்றும் வல்லடி வழக்குச் செய்வான். ஒவ்வொருவனுடைய கட்சியிலும் பலபேர் சேர்ந்து யுத்தந் தொடங்கி ஒருவரையொருவர் மாய்த்துக் கொள்வார்கள். நியாய பரிபாலனம் நடவாமல் நின்று போகுமானதால் ஊரிலே திருட்டுகளும் புரட்டுகளும் கொள்ளைகளும் கொலைகளும் அதிகரிக்கும். இதுதான் சமயமென்று அந்நிய தேசத்து சத்ருக்களும் பிரவேசித்துச் சர்வ கொள்ளையடிப்பார்கள். ஒரு ராஜா இறந்தவுடனே அவனுடைய சந்ததி ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அந்தச் சந்ததிக்கே பட்டமாகிறபக்ஷத்தில் ஒரு கலகத்துக்கும் இடமில்லை. அது சர்வஜன சம்மதமாயிருக்கும். ராஜாவினுடைய புத்திரன் அல்லது புத்திரிகை விஷயத்தில் சகல ஜனங்களுக்கும் அதிக கெளரவமும் மதிப்பும் பயபக்தியும் உண்டாகும். யுராஜாவுக்கு சாவில்லைரு என்கிற நீதி வாக்கியப்படி ஒரு அரசன் எந்த நிமிஷத்தில் இறந்து போகிறானோ அந்த நிமிஷத்தில் அவனுடைய வாரிசுக்குத் தேசாதிபத்தியம் உண்டாகிறபடியால், நியாயபரிபாலனங்களெல்லாம் நில்லாமல் தொடர்ச்சியாய் நடந்துவரும். ஆண் சந்ததியாவது பெண் சந்ததியாவது அல்லது வேறே உரிமைக்காரனாவது இல்லாமல் ஒரு அரசன் மாண்டுபோகிற பக்ஷத்தில், புது அரசன் நியமிக்கலாமே யல்லாது, தகுந்த சுதந்தரவாளிகளிருக்கும்போது புது அரசனை நியமிப்பது அசங்கதம். சகல விஷயங்களும் மகா மந்திராலோசனைச் சபையாருடைய அனுமதிப்படி நடக்கிறபடியால் ராஜாவின் வாரிசுகள் திறமையற்றவர்களாயிருந்தாலும்கூட அவர்களை நியமிக்கத் தடையில்லை. ராஜாவினுடைய வார்சுகளை நியமிப்பதினால் உண்டாகிற நன்மையையும் அதனால் விளையத்தக்க தீங்கையும் சீர்தூக்கிப் பார்க்குமிடத்தில் தீமையைப் பார்க்கிலும் நன்மைகள் அதிகமாயிருக்கிறபடியால் பாரம்பரை கிரமப்படி நியமிப்பதே உசிதமாயிருக்கிறது. அப்படியே புது அரசனையாவது அல்லது குடியரசையாவது நியமிப்பதனால் உண்டாகிற சாதக பாதகங்களை யோசிக்குமிடத்தில் சாதகத்தைப் பார்க்கிலும் பாதகம் பெரியதாயிருப்பதால் புதுராஜ நியமனத்தையுங் குடியரசையும் நிஷேதிக்கவேண்டியது எல்லாருடைய கடமையாகவும் இருக்கிறது. யானையினுடைய கையிலே பூமாலையைக் கொடுத்து யார் கழுத்திலே போடுகிறதோ அவனை அரசனாக நியமிப்பது இந்த ஊர் வழக்கமாயிருக்கிற்து. மனுஷர்களுடைய யோக்கியதை யானைக்கு எப்படித் தெரியக்கூடும்? அது ஒரு மூடன் கழுத்திலே மாலையைப் போட்டாலும் அவனை அரசனாக ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே! அதைப் பார்க்கிலும் இறந்து போன ராஜாவினுடைய பாத்தியஸ்தர்களையே நியமிப்பது சர்வ சிலாக்கியம் அல்லவா? உங்களுடைய அதிர்ஷ்ட வசத்தால் உங்களுடைய பழைய ராஜாவின் குமாரத்தி பட்டாபிஷேகத்திற்குச் சகல விதத்திலும் யோக்கியதை உள்ளவளாகயிருக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு மகுடஞ் சூட்ட நீங்கள் ஒரு ஆ§க்ஷபமுஞ் சொல்லமாட்டீர்களென்று நம்புகிறேன்” என்றாள்.

ஜனங்கள் “மகாராஜாவே! உங்களைப் போல தர்மராஜாக்கள் இந்த பூமண்டலத்தில் இருப்பார்களா? தங்களுடைய பட்டத்தை வேறொருவருக்குக் கொடுக்க யாராவது சம்மதிப்பார்களா? தகப்பன் ஜீவந்தனாயிருக்கும்போதே தன் பிள்¨ளைக்குப் பட்டாபிஷேகஞ் செய்யச் சம்மதிக்கிறதில்லை. இப்போது ரரஜாக்கள் ஒரு சொற்ப தேசத்தைச் சம்பாதிப்பதற்காக எத்தனை உயிர்களைக் கொன்று எவ்வளவோ பாடுபடுகிறார்கள். புராணங்களிலே சொல்லப்பட்ட இராமன், தர்மன், அரிச்சந்திரன், நளன் முதலிய அரசர்கள் கூட நிர்ப்பந்தத்தினால் சில நாள் ராஜாங்கத்தை விட்டு நீங்கியிருந்தார்களே யல்லாது மனப்பூர்வமாய் விட்டவர்கள் ஒருவருமில்லை. அந்த அரசர்கள் எல்லாரும் உங்களுக்குச் சமானமாவார்களா? இப்படிப்பட்ட தர்ம ராஜாவை நாங்கள் ஒருகாலத்திலும் விடுவோமா? எங்களுடைய அபீஷ்டப்படிக்கும் உங்களுடைய மனோபீஷ்டப்படிக்கும், அந்த ராஜ கன்னிகைக்கு மகுடமும் மாலையுஞ் சூட்டி, நீங்கள் மூவரும் கூடி அரசு புரிவதைக் காண விரும்புகிறோம்” என்று சொல்லி சர்வ ஜனங்களும் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்.
-----------

அத்தியாயம் -45
ஜனங்கள் எல்லாரும் போனபின்பு, ஞானாம்பாள் என்னைப் பார்த்து “அத்தான்! அந்த ஜனங்கள் சொல்வதைப் பார்த்தால் விபரீதமாயிருக்கிறது. அவர்கள் நம்முடைய இஷ்டப்படி அந்தப் பெண்ணுக்குப் பட்டாபிஷேகஞ் செய்யச் சம்மதித்தது சந்தோஷமான காரியந்தான். ஆனால் அந்தப் பெண்ணுக்கு நான் மாலை சூட்டி, ரோம் பட்டணத்தை ஒரு காலத்திலே மூவேந்தர்கள் ஆண்டது போல நீங்களும் நானும் அந்தப் பெண்ணும் ஆகிய மூவருங்கூடி அரசாளவேண்டுமென்பது ஜனங்களுடைய தாற்பரியம் போலக் காணப்படுகிறது. இந்தத் தர்மசங்கடத்துக்கு என்ன செய்கிறது?” என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து “நீ சம்மதித்துத்தானே அந்தப் பெண்ணுக்கு மாலை சூட்ட வேண்டும்? உன்னுடைய சம்மதமில்லாமல் யார் என்ன செய்யக்கூடும்? அந்தப் பெண்ணுக்குச் சீக்கிரத்தில் மகுடாபிஷேகஞ் செய்துவிட்டு நாம் ஒருவருக்குந் தெரியாமல் இந்த ஊரை வீட்டுப் புறப்பட்டுக் கம்பி நீட்டிவிட்டால் அப்பால் ஜனங்கள் என்ன செய்வார்கள்? ஆகையால் நீ ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்” என்று அவளுக்குத் தேறுதல் சொன்னேன்.

அன்றையத் தினம் சாயர¨க்ஷ வீதிக்கு வீதி பேரிகை முழக்கமும் ஜனங்களுடைய சந்தோஷ ஆரவாரமுங் கேட்டு “அது என்ன சப்தம்?” என்று சாரணர்களை விசாரித்தோம். அவர்கள் எங்களைப் பார்த்து “மகாராஜாவுக்கும் பழைய அரசருடைய புத்திரிக்கும் வருகிற சுக்கிரவாரங் காலையில் கலியாண முகூர்த்தமும் அன்றையத்தினஞ் சாயங்காலம் அந்த ராஜபுத்திரிக்குப் பட்டாபிஷேகமும் நடப்பதாகவும் அதற்காக எல்லாரும் ஊரை அலங்கரிக்க வேண்டுமென்று முரசு முழக்குகிறார்கள். அதைக் கேட்டு ஜனங்கள் எல்லாரும் ஆநந்த கோஷஞ் செய்கிறார்கள்” என்றார்கள்.இதைக் கேட்டவுடனே நாங்கள் பிரமித்துச் சிறிது நேரம் சிலை போல அசையாமல் உட்கார்ந்திருந்தோம். அந்தச் சமயத்தில் மந்திரிகள் வந்து நுழைந்தார்கள். ஞானாம்பாள் அவர்களைப் பார்த்து “முரசு அறையும்படி யார் உத்தரவு கொடுத்தார்கள்?” என்று வினவினாள். மந்திரிகள் “மகாராஜாவே! இன்று காலையில் நீங்கள் சொன்ன அபிப்பிராயத்துக்கு விரோதமாக ஒன்றும் நடக்கவில்லை. பட்டாபிஷேகமுங் கலியாணமும் ஒரே தினத்தில் நடக்கவேண்டுமென்பது எல்லாருடைய பிரார்த்தனையாகவும் இருக்கிறது. இந்த விஷயத்தில் எல்லாரும் ஒரு மனமாயும் ஒரே குமுக்கமாயுமிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்கு விரோதஞ் செய்தால் பெருங் கலகத்துக்கு இடமாகுமென்று தோன்றுகிறது. மேலும் அந்தக் குமாரத்தி தனக்குப் பட்டாபிஷேகஞ் செய்துவிட்டு நீங்கள் போய்விடுவீர்களென்று நினைத்து தனக்குப் பட்டாபிஷேகமே வேண்டாமென்று அழுதது. நீங்கள் தன்னைக் கலியாணஞ் செய்துகொள்வீர்களென்று கேள்விப்பட்ட பிறகு தான் அது சந்தோஷமாயிருக்கிறது. உங்களுடைய முயற்சியினாலே தனக்குப் பட்டாபிஷேகம் ஆகிறதென்று தெரிந்து கொண்டு முன்னையைப் பார்க்கிலும் நுறு பங்கு அதிகமாக உங்களிடத்திற் பக்ஷமும் பாசமுமாயிருக்கிறது. ஆகையால் அந்தப் பெண்ணினுடைய ஆசையைக் கெடுக்க வேண்டாம், மகாராஜாவே!” என்று சொல்லி நாங்கள் மறுமொழி சொல்வதற்கு இடமில்லாமல் திடீரென்று சடுதியிற் போய்விட்டார்கள். இந்தச் சமாச்சாரங்களைக் கேட்டபின்பு, முன்னே எனக்கிருந்த தைரியம் நீங்கி என்பாடுந் தடுமாற்றத்தில் வந்துவிட்டது. “ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்” என்பதுபோல நாங்கள் அந்த ஊரில் இருந்தால் ஞானாம்பாள் அந்தப் பெண்ணுக்கு அகத்தியம் தாலி கட்டவேண்டியதாயிருக்கிறது. மாட்டேனென்றால் ஊராருடைய பகையையும், அந்தப் பெண் பழியையுஞ் சம்பாதித்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்களுடைய ஊருக்குப் போகலாமென்றால், கடலும் மலைகளுஞ் சூழ்ந்த விக்கிரமபுரியை விட்டு இன்ன மார்க்கமாய்ப் போகிறதென்று தெரியவில்லை. அரண்மனையில் எங்களைச் சூழ்ந்திருக்கிறவர்கள் எல்லாரும் மணமுரசு கேட்டுச் சந்தோஷிக்கிறவர்களா யிருந்ததால் நானும் ஞானாம்பாளும் சகல சங்கதிகளையும் கலந்து தாராளமாய்ப் பேசவும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.

ஒருவரையுங் கூட அழைத்துக்கொண்டு போகாமல் நானும் ஞானாம்பாளும் விடிவதற்குமுன் எழுந்து சில சமயங்களில் வெளியே உலாவப் போகிறது வழக்கமாயிருந்தது. நாங்கள் ஆதியில் விக்கிரமபுரிக்கு வந்தபோது ஏறி வந்த மலையின்மேல் ஏறி உலாவுவதும், அந்த மலைமேலிருக்கிற அரண்மனையில் இரண்டொரு நாள் வசிப்பதும் வழக்கமாயிருந்தது. அந்த வழக்கப்படி போகிறவர்கள் போல் நானும் ஞானாம்பாளும் ஒரு நாள் நடுச்சாமத்தில் எழுந்து வேறொருவரையுங் கூட அழைத்துக்கொண்டு போகாமல் நாங்கள் மட்டும் புறப்பட்டுப் போய் அந்த மலைமேல் ஏறினோம். ஏறின உடனே நான் ஞானாம்பாளைப் பார்த்து “இனி மேல் இந்த ஊரில் இருப்பது சரியல்ல; ஆனால் நம்முடைய ஊருக்காவது ஆதியூருக்காவது எந்த மார்க்கமாய்ப் போகிறதென்று தெரிய வில்லை. நாம் முன்னே வந்த வழியாய்ப் போகலாமென்றால் துஷ்ட மிருகங்கள் நிறைந்த காடுகளைத் தாண்டி எப்படிப் போகக்கூடும்?” என்றேன். ஞானாம்பாள் என்னைப் பார்த்து “இந்த ஊரிலிருந்து பெண்ணும் பெண்ணுங் கலியாணஞ் செய்துகொள்வதைப் பார்க்கிலும் அந்த மிருகங்களுடன் வாசஞ் செய்வது சுலபமாய்த் தோன்றுகிறது” என்றாள். அவள் மறுபடியும் என்னைப் பார்த்து “நாம் முன்னேறிவந்த மலையின் தென்புறத்து வழியாக இறங்கிப் பார்ப்போம். கடவுளுடைய கிருபையால் அந்தக் காடுகளைக் கடந்து போவதற்குத் தக்க மார்க்கங் கிடைத்தாலும் கிடைக்கும்” என்றாள். அந்தப் பிரகாரம் தென்புறத்தில் இறங்கி, அருணோதயத்துக்கு அடிவாரத்தில் வந்து சேர்ந்தோம். அடிவாரத்தில் முன்னே இருந்த காடுகளெல்லாம் அழிக்கப்பட்டுப் போய், மனுஷர்கள் சஞ்சரிக்கும்படியாயிருந்தது. உடனே நாங்கள் ஸ்வாமிக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு தெற்கு வழியாக கடு நடையாக நடந்து போனோம். ஞானாம்பாள் ஆண் வேஷத்தை மாற்றிப் பெண் வடிவாகவே வந்தாள். ஒரு பெரிய ராஜாங்கத்தையும் திவ்விய சுந்தரமான ஒரு ராஜ புத்திரியையும் வேண்டாமென்று விட்டுவிட்டு ஓடுகிறவர்கள் எங்களைத் தவிர வேறொருவரும் இருக்கமாட்டார்கள்.

பயம் பின்னே யிருந்து எங்களைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போனதால், ஓடுகிற சிரமங்கூடத் தெரியாமல் காத வழி தூரம் ஓடினோம். பிறகு கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய கூடாரம் அடிக்கப்பட்டிருந்தது. “யாரோ வந்து கூடாரம் அடித்திருக்கிறார்கள்” என்று நாங்கள் பேசிக்கொண்டு அந்தக் கூடாரத்துக்கு நேரே போய் உள்ளே நுழைந்தோம். தேவராஜப் பிள்ளையுங் கனகசபையும் உள்ளேயிருந்தவர்கள் எங்களைக் கண்டவுடனே ஆவலுடன் ஓடி வந்து தழுவிக்கொண்டு, சற்று நேரம் அங்கலாய்த்துப் பிறகு களிகூர்ந்தார்கள். நான் தேவராஜப்பிள்ளையையுப் பார்த்து “ஐயா! நாங்கள் பெரிய ஆபத்துக்குத் தப்பி ஓடிவந்திருக்கிறோம். சிலவிசை யாராவது எங்களைத் தொடர்ந்து வந்தாலும் வருவார்கள். ஆகையால் நாம் புறப்பட்டு ஆதியூருக்குப் போவது நன்மை. வழியிற் போகும்போது சகல சமாசாரங்களும் சொல்லுகிறேன்” என்றேன். உடனே இரண்டு வண்டிகளிற் குதிரைகள் பூட்டி, ஒரு வண்டியில் ஞானாம்பாளை ஏற்றுவித்துக்கொண்டு, மற்றொரு வண்டியில் நானும் தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் ஏறிக்கொண்டு புறப்பட்டோம். என்னையும் ஞானாம்பாளையும் பட்டத்து யானை தூக்கிக்கொண்டு போய் மலையில் விட்டதும், நாங்கள் விக்கிரமபுரிக்குப் போய் அரசாண்டது முதலிய சகல சங்கதிகளையும் நான் வழியில் வரும்போதே தேவராஜப் பிள்ளைக்கும் கனகசபைக்கும் தெரிவித்தேன். ஞானாம்பாள் புருஷ வேஷம் பூண்டுகொண்டு அரசாண்ட வகையைக் கேள்விப்பட்டு, அவர்கள் மிதமில்லாத ஆச்சரியமும் ஆநந்தமும் அடைந்தார்கள். ஞானாம்பாளைப் புருஷனென்று நினைத்து அந்த ராஜகன்னிகையாகிய ஆநந்தவல்லி இச்சைப் பட்டதும் அவர்கள் இருவருக்கும் விவாகஞ் செய்வதற்காக முகூர்த்தங்கள் குறிக்கப்பட்டதும், அதற்காகத் தப்பி நாங்கள் ஓடி வந்ததுங் கேள்விப்பட்டுத் தகப்பனும் பிள்ளையும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பொழுது விடயவும் விடியாமலிருக்கவும் நான் பாடினதும் கேள்விப்பட்டவுடனே அவர்கள் ஆடியாடிக்கொண்டு சிரித்த சிரிப்பினால் நாங்கள் ஏறியிருந்த வண்டி கலகலத்துப் போய் விட்டது.

அவர்களுடைய சிரிப்பு அடங்கின பிறகு, என்னுடைய தாய் தந்தையர் மாமனார் மாமியார் முதலியவர்களைப் பற்றி விசாரித்தேன். தேவராஜப் பிள்ளை என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்:- “நீங்கள் இருவரும் காணாமற்போன சமாசாரத்தை உடனே அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சகிக்கக்கூடாத துக்கம் உடையவர்களாய் ஆதியூருக்கு வந்தார்கள். இந்தக் காட்டு வழியாக அந்த யானை உங்களிருவரையுந் தனித்தனியே தூக்கிக்கொண்டு போனதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னபடியால் உங்களைத் தேடுவதற்காக இந்தக் காடுகளையெல்லாம் அழித்து நிர்மூலஞ் செய்ததுமின்றி மிருகங்களையும் கொன்று நாசஞ் செய்துவிட்டோம். இப்போது நாங்கள் மலைகளையும் அரணியங்களையும் அணுஅணுவாய் ஆராய்ந்து பார்த்தோம். இன்னமும் உங்களைத் தேடிப் பார்ப்பதற்காகவே நடுக்காட்டில் கூடாரம் அடித்துக்கொண்டு இவ்விடத்தில் வாசமாயிருந்தோம். உங்கள் தாய் தந்தையர், மாமனார் மாமியார் முதலானவர்களும் எங்களுடன் கூட வந்திருந்து உங்களைத் தேடிப் பார்த்தும் நீங்கள் அகப்படவில்லை. அவர்கள் உங்களைப் பிரிந்த ஏக்கத்தினால் சரியான ஊண் உறக்கமில்லாமல் துரும்பு போல் இளைத்துப் போயிருப்பதால் அவர்களை இந்தக் காட்டிலிருக்க வேண்டாமென்று கட்டாயப் படுத்தி ஆதியூருக்கு அனுப்பிவிட்டோம். அவர்களை நீங்கள் பார்த்தால் அடையாளங் கண்டுபிடிக்க மாட்டீர்கள். இன்னும் ஒரு மாசம் அவர்கள் உங்களைக் காணாமலிருப்பார்களானால் அவர்கள் ஜீவித்திருப்பது பிரயாசம். எங்கள் ஊரில் உங்களை நிறுத்திக்கொண்ட நிமித்தம் இப்படிப்பட்ட வியாசங்கள் உங்களுக்கு நேரிட்டபடியால் நாங்கள் பட்ட சஞ்சலம் கொஞ்சம் அல்ல. கடவுள் எங்களுடைய பிரார்த்தனைக்கு இரங்கி மறுபடியும் உங்களை §க்ஷமமாய்க் கொண்டு சேர்த்ததற்காக அவருக்கு நாங்கள் அத்தியந்த கிருதக்ஞர்களா யிருக்கிறோம்” என்றார். என்னுடைய தந்தை தாய் முதலானவர்கள் ஆதியூரில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டவுடனே அவர்களைச் சீக்கிரத்திற் பார்க்க வேண்டுமென்கிற பெரிய அவாவுடன் சென்றேன்.

முன்னே எங்களை யானை தூக்கிக்கொண்டு போன வழி சுற்றுவழியாகவும் இப்போது நாங்கள் போவது நேர் வழியாகவும் இருந்தபடியால் நாங்கல் புறப்பட்ட நாலாம் நாள் சாயர¨க்ஷ ஆதியூரை அடைந்தோம். என்னையும் ஞானாம்பாளையும் பார்த்தவுடனே எங்களுடைய தாய் தந்தைகள் ஓடிவந்து எங்களை ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக்கொண்டு பிரலாபித்துப் பிறகு மனந்தேறினார்கள். அவர்களுடைய தேகமெலிவையும் இளைப்பையும் பார்த்தவுடனே எங்களுக்கு ஆற்றாமையும் துக்கமும் உண்டாகி இனி மேல் ஒரு காலத்திலும் அவர்களை விட்டுப் பிரிகிறதில்லையென்று சங்கேதஞ் செய்துகொண்டோம். நாங்கள் ஊரை விட்டுப் போனபிறகு விக்கிரமபுரியில் நிகழ்ந்த சகல வர்த்தமானங்களையும் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிரகாரம் தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் வர்ணித்து வர்ணித்து என் தாய் தந்தையர், மாமனார் மாமியார் முதலானவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். அதைக் கேட்டவுடனே எல்லாருக்கும் உண்டான ஆச்சரியமும் ஆனந்தமும் அபரிமிதமே. தேவராஜப் பிள்ளையுங் கனகசபையுஞ் சொன்னது போதாதென்று அந்த அதிசயங்களை யெல்லாம் என் வாயாலே ஒருதரம் கேட்டார்கள். பிறகு நான் சொன்னது போதாதென்று ஞானாம்பாள் வாயாலே ஒரு தரம் கேட்டார்கள். இவ்வகையாக அந்த இரவு முழுவதும் தேவராஜப்பிள்ளை வீடு சந்தோஷ அமர்க்களமாயிருந்ததே யன்றி ஒருவராவது உறங்கவில்லை.

மறுநாட் காலையில் ஞானாம்பாள் என்னிடத்திலும் என் தாயாரிடத்திலும் ஆலோசனை செய்துகொண்டு தான் பெண்ணென்பது முதலான விவரங்களைக் காட்டி அடியிற் கண்டபடி ஆநந்தவல்லிக்கு ஒரு நிருபம் எழுதியனுப்பினாள்:-

“என் பிரியமான தங்கையே!

மகாராஜாவாக விக்கிரமபுரியை அரசாண்ட நான் உன்னைப்போற் பெண்ணே தவிர ஆண் அல்ல. உபராஜாவாயிருந்து அந்த ஊரை ஆண்டவர் தான் என்னுடைய கணவர். நான் ஆண்வேஷம் பூண்டுகொண்டு என்னைவிட்டுப் பிரிந்து போன என் பிராண நாயகரைத் தேடிக்கொண்டு வந்த இடத்தில் எனக்கு ராஜபட்டங் கிடைத்து நான் அரசாண்ட விவரங்களெல்லாம் உனக்குத் தெரியுமே! என்னைப் புருஷனென்று நினைத்து என்னை நீ பாணிக்கிரகணஞ் செய்துகொள்ள விரும்பியதாக நான் கேள்விப்பட்டு அளவற்ற வியாகூலம் அடைந்தேன். பல காரணங்களால் நான் பெண்ணென்கிற உண்மையை உனக்குத் தெரிவிக்கக் கூடாமற் போய்விட்டது. உனக்குப் பட்டாபிஷேகஞ் செய்துவிட்டு நான் வெளியே வந்துவிடலாமென்று நினைத்து ஜனங்களிடத்தில் உன்னுடைய பட்டாபிஷேகத்தைக் குறித்துப் பேசினேன். அவர்களும் என்னுடைய வார்த்தையை அங்கீகரித்துக் கொண்டார்கள். பிறகு உனக்கும் எனக்கும் விவாகமும் பட்டாபிஷேகமும் ஒரே தினத்தில் நடப்பதாக என்னுடைய அநுமதியில்லாமல் ஜனங்கள் பேரிகை முழங்கிப் பிரசித்தஞ் செய்தபடியால் இனி மேல் அவ்விடத்தில் இருப்பது சரியல்லவென்று நினைத்து நானும் என் நாயகரும் வெளிப்பட்டு வந்து விட்டோம். உனக்கும் மற்றவர்களுக்கும் உண்மை தெரியாதானபடியால் நானும் அவ்விடத்திலிருந்து மாலை சூட்ட நிராகரித்தால் உனக்குப் பெரிய மனஸ்தாபமும் அவமானமும் நேரிடுமென்பதை நினைத்தே நான் சொல்லாமல் வந்து விட்டேன். இனி மேல் நான் ஆணென்பதை நீ சுத்தமாய் மறந்துவிட்டு உன்னுடன் கூடப் பிறந்த சகோதரி போல என்னைப் பாவிக்க வேண்டும். நான் புருஷனென்று நினைத்து என்னிடத்தில் நீ வைத்த நேசமானது நான் பெண்ணென்று தெரிந்த பிறகும் மாறாமலிருக்குமென்று நம்புகிறேன். முந்தின ராஜாவுடைய புத்திரியான உனக்குப் பிராகிருத ராஜாத்தியாகிய நான் என்னுடைய ராஜ்ஜியத்தை உதகதாரா பூர்வமாகத் தத்தஞ் செய்கிறபடியாலும், சகல ஜனங்களும் உன்னை ராஜாத்தியாக அங்கீகரித்துக் கொண்டு முரசு அறைவித்திருப்பதாலும், இனி நீயே அரசியென்பதற்கு ஐயமில்லை. ஆகையால் உன்னுயிர் போல மன்னுயிரைத் தாங்கி அரசாக்ஷ¢ செய்யும்படி சுவாமி உனக்குப் போதுமான ஞானத்தையும் திறமையையும் அநுக்கிரகிக்கும்படி அவரைப் பிரார்த்திக்கிறேன்.

இங்ஙனம்,
ஞானாம்பாள்."

அந்த நிருபத்தோடு கூட மந்திரி பிரதானிகள் முதலான உத்தியோகஸ்தர்கள் நடக்கவேண்டிய கிரமங்களைப் பற்றி அவர்களுக்கும் நிருபங்கள்அனுப்பினோம்.

சில நாளாய் ஆதியூரில் நாங்கள் தங்கியிருந்து போக வேண்டுமென்று தேவராஜப் பிள்ளை கனகசபை முதலானவர்கள் வருந்திக் கேட்டுக்கொண்ட படியால் நாங்கள் அந்தப் பிரகாரஞ் சில நாள் தங்கியிருந்தோம். நாங்கள் விக்கிரமபுரிக்கு அனுப்பிய நிருபங்கள் போய்ச் சேர்ந்தவுடனே ஆநந்தவல்லி மந்திரி பிரதானிகள் முதலிய அதிகாரிகளும், இன்னும் அநேக பிரபுக்களும், ஜனங்களும் எங்களைக் கண்டுகொள்வதற்காக ஆதியூருக்கு வந்தார்கள். ஆநந்தவல்லி முன்னே புருஷ வடிவமாகப் பார்த்த ஞானாம்பாளை இப்போது பென் வடிவமாகக் கண்டவுடனே பிரமித்து மதிமயங்கி முகம் மாறி முத்து முத்தாகக் கண்ணீர் வடித்தாள். அதைக் கண்டவுடனே ஞானாம்பாளும் மனம் உருகி அழுதாள். என்னுடைய தாயார் அவர்கள் இருவரையும் பிரத்தியேகமாய் அழைத்து வைத்துக் கொண்டு ஆநந்தவல்லி மனந்தேறும்படியாக அநேக உறுதிகளைச் சொன்னார்கள். ஆநந்தவல்லி ஒருவாறு மனந்தேறின பிறகு அவள் ஞானாம்பாளைப் பார்்து “அக்கா! எனக்குத் தாயுந் தந்தையுமாயிருந்த சகல உபாகாரங்களையுஞ் செய்து நீங்கள் என்னை அந்தரத்தில் விட்டுவிட்டு வந்து விடலாமா? ஒன்றுந் தெரியாத சிறு பேதையாகிய நான் எப்படி ராஜாங்கத்தை வகிப்பேன்? ஆகையால் நீங்களும் உங்கள் நாயகரும் வந்து முன்போல் அரசு செய்யவேண்டும்” என்று மிகவும் நைச்சியமாகப் பிரார்த்தித்துக் கொண்டாள். அப்படியே மந்திரி பிரதானிகள் முதலிய மற்றவர்களும் வேண்டிக் கொண்டார்கள். ஞானாம்பாள் ஆநந்தவல்லியைப் பார்த்து “ராஜபுத்திரியாகிய உனக்கே அந்த ராஜாங்கம் சொந்தம். அதில் பிரவேசிக்க எங்களுக்குப் பாத்தியமும் இல்லை; இஷ்டமும் இல்லை. நான் குடித்தன முறையை அநுசரித்து என்னுடைய நாயகர் மாமனார் மாமியார் முதலானவர்களை உபசரிக்க வேண்டியவளே தவிர நான் அரசு செய்வது தகுதி அல்ல” என்றாள். என்ன நியாயம் சொல்லியும் ஆநந்தவல்லி ஒப்புக் கொள்ளாமல் அசந்துஷ்டியாகவேயிருந்தாள். பிறகு நாங்களும் எங்கள் தாய் தந்தையர் முதலியவர்களும் விக்கிரமபுரிக்குப் போய் எங்கள் கையாலே ஆநந்தவல்லிக்கு மகுடாபிஷேகஞ் செய்வித்தோம். அந்த ஊரார் தங்களை ஆண்ட மகாராஜா பெண்ணென்று தெரிந்த உடனே முன்னையைப் பார்க்கிலும் பதின்மடங்கு அதிக விசுவாசமும் பக்தியும் உள்ளவர்களாய் ஞானாம்பாளையும் என்னையும் மட்டுமிதமில்லாமல் வாழ்த்தினார்கள். நாங்கள் அந்த வாழ்த்துக்களே பரமப் பிரயோஜனமாக எண்ணி மனமகிழ்ச்சியுடன் ஆதியூருக்குத் திரும்பினோம்.
----------

அத்தியாயம் -46
நாங்கள் ஆதியூருக்குப் போய் ஒருநாள் தங்கியிருந்து மறு நாள் தேவராஜப் பிள்ளை முதலானவர்களிடத்தில் அநுக்ஞை பெற்றுக் கொண்டு சத்தியபுரிக்குப் பயணப் பட்டோம். நாங்கள் போகிற மார்க்கங்களில் உள்ள ஊர்களில் வைசூரி கண்டு அநேக ஜனங்கள் மடிந்து போனார்கள். சில பிரேதங்கள் எடுத்து அடக்கஞ் செய்யப் பாத்தியஸ்தர்களில்லாமல் நாங்கள் செலவு கொடுத்துச் சேமிக்கும்படிச் செய்வித்தோம். ஆதியூருக்கும் சத்தியபுரிக்கும் நடு மத்தியமான சந்திரகிரி யென்னும் ஊர் வழியாக நாங்கள் போகும்பொழுது ஞானாம்பாளுக்கு அம்மைக் கொப்புளங்கள் உண்டாகி எங்களுடைய பயணத்தை நிறுத்தும்படியாகச் சம்பவித்தது. ஞானாம்பாளுக்கு அந்தப் பயங்கரமான வியாதி கண்டவுடனே எங்களுக்கு உண்டான பயத்தையும் வியாகூலத்தையும் நான் எப்படி விவரிக்கப் போகிறேன்? அந்த ஊரிலே வசிக்கிறதற்குத் தகுந்த சத்திரமாவது சாவடியாவது இல்லாமலிருந்தபடியால், நாங்கள் கூடாரம் அடிக்க யத்தனமாயிருந்தோம். அப்போது “அம்மை கண்டவர்களையெல்லாம் அந்த ஊரிலுள்ள கவர்ன்மெண்டு வைத்திய சாலைக்குக் கொண்டுபோய் வைத்தியம் பார்க்கவேண்டுமென்றும், அப்படிச் செய்யாமல் வீடுகளிலாவது மார்க்கங்களிலாவது அந்த வியாதியஸ்தர்களை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் கவர்ன்மெண்டால் தண்டோரா மூலம் விளம்பரஞ் செய்தார்கள். ஞானாம்பாளை வைத்தியசாலைக்குக் கொண்டுபோக மனமில்லாமல் நாங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது அவள் வியாதியாயிருப்பது எப்படியோ சில இங்கிலீஷ் டாக்டர்களுக்குத் தெரிந்து அவர்கள் எங்களிடத்தில் வந்து அம்மை கண்ட ஸ்திரீகளுக்கு வைத்தியசாலையில் இங்கிலீஷ் துரைசானிகள் (English Doctors) வைத்தியஞ் செய்வதால் ஒரு குறைவும் உண்டாகாதென்றும், ஞானாம்பாளை உடனே வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டுமென்றும் முஷ்கரஞ் செய்தார்கள். நாங்கள் அந்தப் பிரகாரம் ஞானாம்பாளை வைத்தியசாலையிற் கொண்டுபோய் விட்டோம். அந்த டாக்டர்கள் எங்களுடைய அந்தஸ்தைத் தெரிந்துகொண்டு அதற்குத் தக்கபடி ஞானாம்பாளை ஒரு தனி அறையில் வைத்து இங்கிலீஷ் துரைசானிகளைக் கொண்டு சகல பக்குவங்களுஞ் செய்வித்தார்கள். அது தொத்து வியாதியானதால் நாங்கள் அடிக்கடி போய் ஞானாம்பாளைப் பார்க்கிறதற்கு வைத்தியர்கள் இடங்கொடுக்க வில்லை. அதனால் எங்களுக்கு உண்டான சஞ்சலம் கொஞ்சம் அல்ல. எங்களுடைய பிராணங்களையும் ஆஸ்திகளையும் ஒன்றாகத் திரட்டி அந்த வைத்தியசாலையில் வைத்திருந்தால் எப்படியோ அப்படிப் போல நாங்கள் ஒரு பக்கத்திலும் தரியாமல் இரவும் பகலும் அந்த வைத்திய சாலையைச் சுற்றிக்கொண்டே திரிந்தோம்.

ஞானாம்பாள் பதினைந்து நாள் வியாதியாயிருந்தாள். அந்தப் பதினைந்து நாளும் பதினைந்து யுகம் போல இருந்தது. வைத்தியர்கள் எங்களைக் காணும் போதெல்லாம் “சௌக்கியம் ஆகும். சௌக்கியம் ஆகும்” என்று தாது புஷ்டியாகச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். பதினாறாம் நாள் வைத்தியர்கள் எங்களைக் கண்டவுடனே அழுதுகொண்டு “காரியம் மிஞ்சிப்போய் விட்டது. வியசனப்பட வேண்டாம்” என்றார்கள். அந்த வார்த்தையைக் கேட்டவுடனே ஆயிரம் இடி எங்கள் தலைமேலே விழுந்ததுபோல அடித்து மோதிக் கீழே விழுந்து புரண்டு புரண்டு பொருமினோம்; புலம்பினோம்; பதறினோம்; கதறினோம். இன்னும் பல பெயர்கள் இறந்துபோய் விட்டதால் அந்த வைத்தியசாலைச் சுற்றிலும் அழுகைக் குரலேயல்லாமல் வேறு குரல் இல்லை. இத்தனை பெயர்களைக் கொண்டுபோன அந்த வியாதி எங்களையும் வந்து கொண்டு போகாதாவென்று எத்தனையோ தரம் பிரார்த்தித்தோம். அந்தத் துர்வியாதி எங்களை நாடவில்லை. ஞானாம்பாளுடைய உத்தரக் கிரியைகளைச் செய்யும்படி பிரேதத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கும்படி கேட்டுக்கொண்டோம். அம்மையினால் இறந்து போகிற பிரேதங்களை வெளியே கொண்டுபோகாமல் அந்தக் கொல்லையிலே அடக்கஞ் செய்யும்படி மேலான அதிகாரிகள் உத்தரவு செய்திருப்பதாகவும் ஆகையால் பிரேதத்தைக் கொடுக்க மாட்டோமென்றுஞ் சொன்னார்கள். பிரேதத்தைக் கைப்பற்றுகிறதற்கு நாங்கள் எவ்வளவோ பிரயாசைப்பட்டும் பயன்படவில்லை. அம்மை மும்முரமாயிருக்கிற அந்த ஊரில் ஒருவரும் இருக்கக் கூடாதென்றும், உடனே அவரவர்களுடைய ஊர்களுக்குப் போய்விட வேண்டுமென்றும் அதிகாரிகள் ஒரு பக்கத்தில் நிர்ப்பந்தித்தார்கள். ஞானாம்பாள் வியாதியாயிருக்கும்போது அவளுக்கு எங்கள் கையாலே பக்குவங்கள் செய்யக் கூடாமலும் அவள் இறந்த பிறகு அவள் முகத்திலே கூட விழிக்கக் கூடாமலும் அவளுடைய பிரேதத்தையாவது எங்கள் கையிலே எடுத்து அடக்கஞ் செய்வதற்குக் கூட இடமில்லாமலும் போய்விட்டதால் நாங்கள் பட்ட துயரம் இவ்வளவு என்று விவரிக்க ஒருவராலும் கூடாது. நான் உடனே மெய்சோர்ந்து மூர்ச்சித்து ஸ்மரணை தப்பிப் போய்விட்டேன். அப்பால் நடந்தது யாதொன்றும் எனக்குத் தெரியாது. சத்தியபுரிக்குப் போனபிறகு தான் எனக்கு மயக்கந் தெளிந்து நல்ல நினைவு வந்தது. அப்போது என் தாய் தந்தையர் முதலானவர்கள் எல்லோரும் என் படுக்கையைச் சுற்றி அழுதுகொண்டு நின்றார்கள். நான் கண்ணை விழித்த உடனே என் தாயாரைப் பார்த்து யுஞானாம்பாள் எங்கே அம்மா?” என்றேன். அவர்களும் மற்றவர்களும் ஒன்றுஞ் சொல்லாமல் தேம்பித் தேம்பி அழுதார்கள். நான் மறுபடியும் மெய்சோர்ந்து மெய் கலங்கி அறிவு தடுமாறித் துக்கித்தேன். எங்களுடைய வீட்டில் ஞானாம்பாள் இருந்த இடத்தையும் அவள் கட்டின வஸ்திரங்களையும் அவள் படித்த புஸ்தகங்களையும் மற்றச் சாமான்களையும் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கரைந்தேன். சத்தியபுரியில் உள்ளவர்கள் எல்லாரும் நித்தியமும் வந்து ஞானாம்பாள் ரகசியத்திலே செய்து வந்த தானங்களையும் தருமங்களையுஞ் சொல்லிச் சொல்லி, எங்களுடைய துக்கங்களைப் புதுப்பித்தார்கள். ஞானாம்பாளை நினைத்து அழாதவர்கள் ஒருவரும் இல்லை. ஏழைள் எல்லாரும் “எங்களுடைய ரக்ஷகி போய்விட்டாளே!” என்று ஏங்கினார்கள். செல்வர்கள் எல்லாரும் “எங்கள் சீமாட்டி போய்விட்டாளே!” என்று தேம்பினார்கள். மாதர்கள் எல்லாரும் “எங்கள் மனோன்மணி போய்விட்டாளே!” என்று மயங்கினார்கள். புருஷர்கள் எல்லாரும் “பூவையர்க்கரசி போய் விட்டாளே!” என்று புலம்பினார்கள். பாவலர்கள் எல்லாரும் “எங்கள் பாக்கியம் போய்விட்டதே!” என்று பதறினார்கள். உதயாஸ்தமன சமயங்களில் சூரியன் சிவந்த வர்ணமாயிருப்பதைப் பார்த்தால், ஞானாம்பாளுக்காகச் சூரியன் அழுது, அழுது, கண்ணும் முகமுஞ் சிவந்து போனதாகத் தோன்றிற்று. வானத்தில் நின்று விழுகிற பனி நீரினால் வானமும் அழுவதாகத் தோன்றிற்று. மலையருவிகளை பார்க்கும் போது மலையும் அழுவதாக விளங்கிற்று. சமுத்திரமும் அழுவது போல் சப்தித்துக் கொண்டிருந்தது. என்னுடைய துயர மிகுதியினால் சகல ஜீவகோடிகளும் ஸ்தாவர ஜங்கமங்களும் அழுவது போலவே காணப்பட்டன.

என் தாயார் எனக்குப் பல சமயங்களில் ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் வாயைத் திறக்கும் போதெல்லாம், அழுகையுந் துக்கமும் அடைத்துக் கொண்டு, அவர்களைப் பேச ஒட்டாமல் செய்துவிட்டது. கடைசியாக அவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டு சொல்லுகிறார்கள்:-

“மகனே! கடந்துபோன காரியத்தை நினைத்து அநுதாபப்பட்டு லாபம் என்ன? நாம் எவ்வளவுதான் அழுதாலும் ஞானாம்பாள் வரப் போகிறாளா? உலகத்தில் பிறக்கிறதும் இறக்கிறதும் சகஜமேயல்லாமல் நூதனமான காரியம் என்ன இருக்கிறது? நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் இறந்து போனார்களே! நாமும் ஒரு நாள் இறந்து போகவேண்டியவர்கள் தானே! நம்மை வீடு 'போ போ' என்கிறது. காடு 'வா வா' என்கிறது. காலம் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது ஓடும்பொழுது நம்முடைய ஆயுசையும் வாரிக்கொண்டு போகிறது. நாள், வாரம், மாசம், ஆண்டு என்று பல ரூபம் எடுத்துப்போவது நம்முடைய ஆயுசேயன்றி வேறென்ன? சிறியோர்களாயிருந்தாலும், பெரியோர்களாயிருந்தாலும், ஏழைகளாயிருந்தாலும், தனவான்களாயிருந்தாலும் ஒருவரையும் மரணம் விடுவதில்லை. செத்துப்போன பிணத்துக்காக இனிமேல் இறக்கப்போகிற பிணம் கத்துகிறதென்று பட்டணத்துப் பிள்ளை சொன்னது உண்மை தானே! இதற்கு நூறு வருஷத்திற்கு முன் இருந்த ஜனங்களில் யாராவது ஒருவர் இப்போது இருக்கிறார்களா? அவர்கள் எல்லாரும் இறந்துபோய் அவர்களுடைய சந்ததிகள் இப்போது உலகத்தில் வசிக்கிறார்கள். இன்னும் நூறு வருஷத்திற்குள் இப்போது இருக்கிற சகல ஜனங்களும் மடிந்துபோய் அவர்களுடைய சந்ததிகள் வருவார்களென்பதற்குச் சந்தேகமா? மரங்களில் இலைகள் பழுத்து உதிர்ந்துபோய்ப் புது இலைகள் உண்டாவதுபோல், உலகத்திலுள்ள ஜனங்கள் புதிது புதிதாக மாறிக்கொண்டே யிருக்கிறார்கள். காணப்பட்ட பொருள்களெல்லாம் அழிந்துபோவது நிச்சயமே. பூலோக வாழ்வைப் போல அநிச்சயமான காரியமும் வேறொன்றும் இல்லை. நேற்று இருந்தவர் இன்றைக்கு இல்லை. இன்றைக்கு இருக்கிறவர்கள் நாளைக்கு இரார்கள். நாம் அடுத்த நிமிஷத்தில் ஜீவித்திருப்போமென்பது நிச்சயமில்லை.

ஞானாம்பாள் ஊரில் வந்தாவது இறந்து போகாமல், மார்க்கத்தில் இறந்துபோனதற்காக நாம் அதிகமாகத் துக்கிக்கிறோம். அவள் ஊரில் வந்து இறந்துபோனால் நாம் துக்கிக்காமல் இருப்போமா? நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், வீட்டிலிருந்தாலும், எங்கே இருந்தாலும் இறப்பது நிச்சயந்தானே! மரணத்தை யார் தடுக்கக்கூடும்?

தலைமுறை தலைமுறையாய்க் கப்பலில் ஜீவனம் செய்கிற ஒரு மாலுமியை, அவனுடைய நேசன் 'உன்னுடைய முப்பாட்டன் எங்கே இறந்துபோனான்?' என்று கேட்டான். 'கப்பலில் இறந்து போனான்' என்று மாலுமி சொன்னான். 'உன் பாட்டன் எங்கே இறந்து போனான்?' என்று சினேகிதன் கேட்க, 'அவனுஞ் சமுத்திரத்திலே இறந்து போனான்' என்றான். பிறகு 'உன் தகப்பன் எங்கே இறந்து போனான்?' என்று கேட்க, 'தகப்பனும் கப்பலிலே மாண்டான்' என்று மாலுமி சொன்னான். உடனே அந்தச் சிநேகிதன் மாலுமியைப் பார்த்து 'உன்னுடைய முன்னோர்கள் எல்லாருங் கப்பலிலே இறந்து போனதால், நீயுங் கப்பலிலே ஜீவனஞ் செய்வதால் கப்பலிலே இறந்து போவாய்! ஆகையால் இந்த ஜீவனத்தை விட்டுவிடு' என்றான். மாலுமி சற்று நேரம் மௌனமாயிருந்து, பிறகு நேசனைப் பார்த்து 'உன்னுடைய முப்பாட்டன் எங்கே இறந்தான்?' என்றான். சிநேகிதன் 'என்னுடைய முப்பாட்டன் சமுத்திரத்திலே இறக்கவில்லை. மற்றவர்களைப் போலப் பூமியிலே இறந்தான்' என்றான். 'உன் பாட்டனுந் தகப்பனும் எங்கே இறந்தார்கள்?' என்று மாலுமி கேட்க 'அவர்களும் பூமியில் இறந்தார்கள்' என்று சிநேகிதன் மறுமொழி சொன்னான். உடனே மாலுமி அவனைப் பார்த்து 'உன்னுடைய முப்பாட்டனும், பாட்டனும், தகப்பனும் பூமியில் இறந்துபோனதால், நீ பூமியில் இருப்பது சரியல்ல' என்றான். அந்த மாலுமி சொன்னது போல பூமியில் எங்கே இருந்தாலும் சாவது நிச்சயந் தானே. ஒருவன் தன்னுடைய அன்பனைப் பார்த்து 'உலகத்தில் ஜீவித்திருப்பதும் இறந்து போவதும் இரண்டும் எனக்குச் சமானந்தான்' என்றான். அப்படியானால் 'இறந்து போ' என்று சிநேகிதன் சொல்ல 'இரண்டுஞ் சமானமானதால் நான் ஜீவித்திருக்கிறேன்' என்றான். அவன் சொன்னது போல நாம் சாவையும் வாழ்வையும் சமானமாக நினைக்க வேண்டும்.

பிள்ளைகளுக்குக் கசப்பான மருந்துகளைக் கொடுத்து அடித்துத் திருத்தி வளர்க்கிற அன்புள்ள தாய் தந்தையர் போலக் கடவுளும் நம்மைத் திருத்துவதற்காகவே அநேக சமயங்களில் நமக்குத் துன்பங்களைக் கொடுக்கிறார். நித்தியமான பரலோக பாக்கியம் பெரிதேயன்றி, நீர்க்குமுழி போல் நிலைமையில்லாத இந்த உலகத்தில் நாம் அநுபவிக்கிற சுகமுஞ் சுகமல்ல; துன்பமுந் துன்பம் அல்லவே! கடவுளை நாம் காணாதபடி நம்முடைய தேகம் ஆகிய திரை மறைத்துக் கொண்டிருப்பதால் அந்தத் திரை எப்போது நீங்குமோவென்று புண்ணியவான்களெல்லாரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஞானாம்பாளுக்குத் தேகமாகிய திரை நீங்கிவிட்டதால், அவளுக்குக் கடவுளுடைய தரிசனமும் நித்திய பாக்கியமுங் கிடைத்திருக்குமெபதற்குச் சந்தேகம் இல்லை. அவள் நித்தியானந்தத்திற் பிரவேசித்திருப்பது நமக்குச் சம்மதமில்லாதது போல, நாம் அவளுக்காக அழுது பிரலாபிப்பது எவ்வளவுஞ் சரியல்ல. ஞானாம்பாள் போல நாமும் சன்மார்க்கத்தை அனுசரிப்போமானால், நாமும் மோக்ஷ வீட்டிற் பிரவேசித்து ஞானாம்பாளுடன் நித்திய காலமுங் கூடிவாழலாமென்பது சத்தியமே” என்றார்கள்.

எனக்கு என் தாயார் சொன்ன புத்திமதிகளெல்லாம் நீர் மேல் எழுத்துப் போலவும், கல்லின் மேல் விரைத்த விரை போலவும் பயன்படாமற் போய்விட்டன. எனக்கு ஹிதஞ் சொன்ன என் தாயாரே ஆறுதல் இல்லாமல் ஓயாத மனமடிவுள்ளவர்களா யிருப்பார்களானால் என்னுடைய நிலைமையும் நன் விவரிக்க வேண்டுமா? நாங்கள் கரை காணாத துக்கக் கடலில் அமிழ்ந்தி, கரை ஏறுவதற்கு வழியில்லாமற் கலங்கிப் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் தேவராஜப் பிள்ளையும் கனகசபை முதலானவர்களும் எங்களுடைய வீட்டுக்குள்ளே வந்து நுழைந்தார்கள். ஞானாம்பாள் பிராண வியோகமானதைக் குறித்து சந்திரகிரியில் இருந்து நாங்கள் அவர்களுக்குக் கடிதம் அனுப்பினபடியால், அவர்கள் துக்கம் விசாரிக்க வந்திருப்பார்களென்று நினைத்து, தேவராஜப் பிள்ளையையுங் கனகசபையையும், நான் தனித்தனியே கட்டிக்கொண்டு அழுதேன். அவர்கள் என்னோடுகூட அவுமில்லை. முகத்தில் துக்கக் குறி விளங்கவுமில்லை. அவர்கள் இரக்கமில்லாத மனுஷர்களென்று நினைத்து நான் முகத்தைச் சுளித்துக்கொண்டு அப்பாற் போய் மௌனமாயிருந்தேன். உடனே தேவராஜப் பிள்ளை என்னைப் பார்த்து “சந்தோஷச் செய்தி கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் அழவேண்டாம். உங்களுடைய துக்கத்தை கடவுள் சந்தோஷமாக மாற்றிவிட்டார். எப்படியென்றால் உங்களுடைய துக்கக் கடிதம் வந்தவுடனே நாங்கள் அளவிறந்த துக்காக்கிரந்தர்களாய் உங்களை வந்து கண்டுகொள்வதற்காக உடனே பயணம் புறப்பட்டோம். நாங்கள் சந்திரகிரியில் வந்து சேர்ந்து உடனே ஞானாம்பாள் இறந்தவகையைக் குறித்து விசாரிப்பதற்காக வைத்தியசாலைக்குப் போனோம். அம்மை வியாதியின் கடுமையினால் ஞானாம்பாளுக்கு வெகு நேரம் மூச்சு அடங்கியிருந்ததாகவும், அதைக் கொண்டு அவள் இறந்து போனதாக எண்ணி அடக்கத்துக்கு யத்தனஞ் செய்ததாகவும், பிறகு ஸ்வாமி கிருபையினால் ஞானாம்பாளுக்குப் போன பிராணன் திரும்பி வந்து விட்டதாகவும். இன்னமும் அவள் வைத்திய சாலையிலே இருப்பதாகவும், இனி மேல் ஜீவபயமில்லை யென்றும் கேள்விப் பட்டோம். உடனே வைத்தியசாலைக்குள்ளே போய் ஞானாம்பாளையும் பார்வையிட்டுப் பரம சந்தோஷம் அடைந்தோம். ஞானாம்பாளுக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்களை எனக்குத் தெரியுமானதால் ஞானாம்பாளை ஊருக்கு அழைத்துக் கொண்டு போவதற்காக என் வசத்தில் ஒப்புவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் “ஞானாம்பாள் மிகவும் துர்ப்பலமாயிருப்பதால் இரண்டு நாளைக்குப் பிறகு அழைத்துக் கொண்டு போகவேண்டும்” என்றார்கள். நாங்கள் அந்தப் பிரகாரம் மூன்று நாள் வரைக்குங் காத்திருந்து ஞானாம்பாளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஞானாம்பாளும் என்னுடைய மனைவியும் மருமகளும் ஒரு வண்டியில் இதோ வருகிறார்கள். நாங்கள் இந்தச் சந்தோஷச் சமாசாரஞ் சொல்வதற்காக முந்திவந்தோம்” என்றார். அவர் வார்த்தை முடிவதற்குமுன் ஞானாம்பாளும் மற்றவர்களும் வந்து உள்ளே புகுந்தார்கள். நான் என் காதலியைக் கண்டேன். கவலை யெல்லாம் விண்டேன். உள்ளம் பூரித்தேன். உடலம் பாரித்தேன். பரமாற்புதமாக ஞானாம்பாளைப் பிழைப்பித்த ஜகதீசனுடைய பெருங் கருணையை நினைந்து நினைந்து ஆநந்தக் கண்ணீர் சொரிந்து அடிக்கடி மானச பூஜை செய்தேன்.

நாங்கள் எல்லாருந் துக்கக்கடலினின்று கரையேறி ஆநந்த சமுத்திரத்தில் ஆடிக்கொண்டிருக்கும்பொழுது, ஆநந்தவல்லியும் அவளுடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள். ஞானாம்பாள் இறந்த செய்தி கேட்டது முதல் ஆநந்தவல்லி அழுதழுது முகம் வீங்கிப்போயும் தேகம் இளைத்துப்போயும் இருந்தாள். ஞானாம்பாள் உயிரோடிருப்பதைப் பார்த்தவுடனே ஆநந்தவல்லி என்கிற பெயர் அவளுக்கே தகும் என்று சொல்லும்படியாகப் பிரமானந்தம் அடைந்து தேக பரவசம் ஆனாள். பிறகு ஆண்டிச்சியம்மாளும் அவளுடைய புருஷன், பிள்ளை முதலானவர்களும் வந்து எங்களுடைய சந்தோஷத்தைப் பாகித்துக் கொண்டார்கள். அவர்கள் எல்லாரையும் நாங்கள் ஒரு மாசம் வரைக்கும் நிறுத்தி வைத்துக்கொண்டு, ஞானாம்பாள் பிழைத்ததற்காகத் தினந்தோறும் தேவாராதனைகளும், ஏழைகளுக்குத் தானதர்மங்களுஞ் செய்து வந்தோம்.

பல நாளாயினபின் ஞானாம்பாள் ஆண் வேஷம் பூண்டு அரசாங்க பாவனையாக இப்போது காட்டவேண்டுமென்று ஞானாம்பாளை என் பாட்டியார் முதலானவர்கள் வேண்டினார்கள். ஞானாம்பாளுக்கு எவ்வளவும் இஷ்டமில்லா விட்டாலும் பல பெயர்களுடைய நிர்ப்பந்தத்தினால் ஒரு நாள் ஞானாம்பாள் அரசனைப் போல வேஷம் பூண்டுகொண்டாள். சாக்ஷ¡த் ராஜவடிவாகவே தோன்றின ஞானாம்பாளைப் பார்த்து எல்லாரும் அதிசயித்துக் கொண்டிருக்கும்போது ஆநந்தவல்லி அகக்களிப்புடனே வந்து ஞானாம்பாளைப் பார்த்து “அக்கா! என்னை வேண்டி நீங்கள் ஆணாகவே இருந்து விடுங்கள். இனிப் பெண்ரூபம் எடுக்கவேண்டாம்” என்று சொல்லி இரு கைகளையுங் கூப்பிக் கும்பிட்டாள். உடனே சம்பந்த முதலியார் வந்து மகளைப் பார்த்து “ஆம் அம்மா! ஆண் பிள்ளை இல்லையென்று உன் தாயாருக்கும் எனக்கும் உண்டாயிருக்கிற வருத்தந் தீரும் பொருட்டு நீ ஆணாகவே இருந்துவிடு” என்றார். அப்போது நான் ஞானாம்பாளை நோக்கி “இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னைத் தெருவில் விடாதே! ஞானாம்பாள்!” என்றேன். இதைக் கேட்ட உடனே அண்டகடாகமும் வெடிக்கும்படியாக எல்லாரும் துள்ளித் துள்ளி விழுந்து சிரித்தார்கள். நான் விக்கிரமபுரிக்குப் போன உடனே அந்தத் துர்வழக்காளிகளிடத்திலும் காவற் சேவகர்களிடத்திலும் அகப்பட்டுக் கொண்டு அவஸ்தைப்பட்ட பாவனையாக வேஷம் போட்டுக் காட்டும்படி என் பாட்டியார் என்னை வேண்டிக் கொண்டார்கள். நான் என் பாட்டியாரைப் பார்த்து “அந்தப் பாவிகளை மனசிலே நினைத்தாலும் எனக்குச் சிம்ம சொப்பனமாயிருக்கிறது. வேடிக்கைக்குக் கூட அந்த வேஷம் போட என் மனந் துணியவில்லை” என்று சொல்லி நிராகரித்து விட்டேன். பிறகு ஊரில் இருந்து வந்தவர்கள் எல்லாருந் தனித்தனியே எங்களிடத்தில் விடை பெற்றுக்கொண்டு அவர்களுடைய ஊருக்குப் பிரயாணம் ஆனார்கள்.

ஆநந்தவல்லி அவளுக்குப் பந்துவான ராஜகுமாரனைப் பாணிக்கிரகஞ் செய்துகொண்டு §க்ஷமமாயிருக்கிறாள். விக்கிரமபுரிக்குஞ் சத்தியபுரிக்கும் விவாகம் ஆனது போல் அந்த ஊர்கள் ஒன்றையொன்று எப்போதுந் தழுவிக் கொண்டேயிருக்கின்றன. அந்த ஊரில் இருக்கிறவர்கள் இந்த ஊருக்கும் இந்த ஊரில் இருக்கிறவர்கள் அந்த ஊருக்கும் அடிக்கடி போக்குவரவாயிருக்கிறார்கள். அப்படியே சத்தியபுரியும் ஆதியூரும் சவுக்கியமாகவே யிருக்கின்றன. என் தாயாருடைய கீர்த்திப் பிரதாபமும் ஞானாம்பாளுடைய கியாதியும் ஐரோப்பா வரைக்கும் எட்டி, சக்கரவர்த்தினியவர்கள் கிருபை கூர்ந்து 'ராஜ ஸ்திரீகள்' என்கிற பட்டமுங் கொடுத்து அநேக ஜாகீர்களும் விட்டார்கள். தெய்வானுக்கிரகத்தினாலும் உங்களுடைய ஆசீர்வாத மகிமையினாலும் நாங்கள் சகல சாம்பிராஜ்யங்களும் பெற்றுச் சந்தோஷமாக ஜீவிக்கிறோம். இந்த சரித்திரத்திலே பிரஸ்தாபிக்கப்பட்ட பலரும் இந்த நிமிஷம் வரையில் ஒரு குறைவும் இல்லாமல் சுக ஜீவிகளா யிருக்கிறார்கள். அப்படியே இதை வாசிக்கிறவர்கள் எல்லாரும் வச்சிர சரீரிகளாய் நித்திய மங்களமாய் வாழ்ந்திருக்கக் கடவார்கள்.

பிரதாப முதலியார் சரித்திரம் முற்றும்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home