Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF அந்திம காலம் - ரெ.கார்த்திகேசு


antima kAlam (a novel) -part 1
by Re. Karthigesu of Malaysia
அந்திம காலம்
(நாவல்) -பாகம் -1 ரெ.கார்த்திகேசு


Etext preparation & Proof-reading: Prof. R. Karthigesu, Penang, Malaysia
Etext prep in pdf format: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

Source Acknowledgements:
Publisher: Muhil Enterprise, 38 Jalan Selasih 19, Taman Selasih, 68100 Batu Caves, Malaysia.
Year of Publication: 1998
Author: Prof. R. Karthigesu,
Email: [email protected], 356-W Lengkok Pemancar, 11800 Penang, Malaysia.

© Project Madurai 1999 - 2003

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

Notes on the Author:
ரெ.கார்த்திகேசு ஓய்வு பெற்ற தொடர்புத் துறை (mass communication) பேராசிரியர். இந்நாவல் தவிர "வானத்து வேலிகள்"; "தேடியிருக்கும் தருணங்கள்"; "காதலினால் அல்ல" என்ற மூன்று நாவல்கள் மற்றும் "புதிய தொடக்கங்கள்"; "மனசுக்குள்"; "இன்னொரு தடவை" என்னும் சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.


 அந்திம காலம் - 1

மழைத் தாரைகள் காரின் முன் கண்ணாடியில் வீசி அடித்துக் கொண்டிருந்தன. காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது. இடை விடாத பொழிவு. அகலமான கண்ணாடியெங்கும் மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடை விடாது அழித்துக் கொண்டிருந்தது.

டடக்...டடக்...டடக்... டடக்.

அழிக்க அழிக்கப் புதிது புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் கொஞ்சமும் இல்லாத வைப்பர்.

டடக்... டடக்.. .டடக். அழி... அழி... அழி. வரை... வரை... வரை. டடக்... அழி.. டடக்... வரை... டடக்... அழி... டடக்... வரை.

எது முதல்? எது தொடர்? வரைதல் முதலா, அழிதல் முதலா?

சுந்தரத்தின் கார் அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்தது. அந்தக் கடுமையான மழையில் அவர் காரை ஓட்ட விரும்பவில்லை. பார்வை தௌிவாக இல்லை. இரண்டடிக்கு முன்னால் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மருத்துவ மனைக்குப் போய்விட்டு வீடு திரும்புகிற வழியில் இப்படித் திடும் என மழை பிடித்துக்கொண்டது.

வேணுமானால் முன் விளக்குகளைப் போட்டுக் கொண்டு நிதானமாக ஓட்டலாம். கண்ணாடி உள்ளே பனி படரும் போது துடைத்து விட்டுக் கொள்ளலாம். இந்த மழைக்குப் பயந்து வேறு யாரும் காரை நிறுத்தி விட்டதாகத் தெரியவில்லை. கார்கள் வழக்கம் போல் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு காரும் அவர் காரைக் கடக்கும் போது சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை சர்ரென்று கிழித்து அவர் காரின் மீது பாதியை ஊற்றிக் குளிப்பாட்டி விட்டுத்தான் செல்லுகிறது.

ஆனால் அவருக்கு அப்படி அவசரம் ஒன்றும் இல்லை. வீடு பக்கத்தில்தான். பத்து நிமிடம் நின்று மழை தணிந்ததும் போகலாம். மற்றவர்களுக்கு அவசரம் இருக்கிறது. அவருக்கு இல்லை. மற்றவர்களுக்கு ஆயிரம் வேலைகள். அவருக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஓய்வு பெற்று விட்ட மனிதனுக்கு ஏன் அவசரம்? அவசரமாக வேலை செய்து காலத்தை விரைவாக ஓட்டி... அப்புறம் என்ன செய்வது? ஓய்வெடுப்பதைக் கூட வெறுப்பாக்கிவிட்ட வேலை ஓய்வுக் காலத்தில் அவசரம் ஒன்றும் இல்லை.

இங்கே இப்படி இந்தக் காருக்குள் உட்கார்ந்திருப்பது நிம்மதியாகக் கூட இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. இந்த மழை இத்தனை கொடூரமாகப் பெய்தும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. பட்டாம் பூச்சியாகவிருக்கும் பியூப்பாவை இறுக்கிக் காப்பாற்றும் கூடு போல அவரை இந்தக் கார் பத்திரமாகப் பாதுகாக்கிறது. சுற்றிலும் தண்ணீர் வடூந்து வெள்ளமாகிவிட அவர்மட்டும் நனையாமல் காய்ந்திருக்கிறார். தலைக்கு ஆறு அங்குலத்திற்கு மேலே தண்ணீர். தோளுக்கு இரண்டு அங்குலம் பக்கத்தில் தண்ணீர். காலுக்கு ஓரடி கீழே வெள்ளம். ஆனால் அவர் மேல் ஒரு துளியும் தண்ணீர் இல்லை.

என்ஜின் ஓடிக்கொண்டிருக்கிறது. குளிர் சாதனக் கருவி கீழ் சுருதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணாடியில் ஆவி பரவாமல் இருக்க அது வேண்டியிருந்தது. அதனால் பரவும் குளிருக்கு அவருடைய வெப்பமான மூச்சே மாற்றாக இருக்கிறது. மழையின் "சோ" என்ற ராகமும் கூரையில் அது போடும் தட தட தாளமும் ரசிக்கும்படியாகக்கூட இருந்தன. இது பாதுகாப்பான இடம். இது நிம்மதியான சூழ்நிலை.

அதோ தண்ணீரைக் கிடூத்துக்கொண்டு போகும் லாரியில் அந்த லாரி உதவியாளன் பாதி நனைந்தவாறு போகிறான். லாரியின் தார்ப்பாலின் துணி கிழிந்து கிடக்கிறது. அவனுக்குப் பாதுகாப்பில்லை. மோட்டார் சைக்கிளில் மழைக்கோட்டு அணிந்தவாறு போகிறவனுக்கும் முகம் நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் பின்னால் உள்ள பெண் மழைக் கோட்டும் இல்லாமல் முதுகில் மழை வழிய பிளவ்ஸ் உடம்போடு ஒட்டிக்கொள்ள வெட்கப்படக் கூட வசதியில்லாமல் கணவனை -- ஒருவேளை அண்ணனாகக் கூட இருக்கலாம் -- கட்டிக் கொண்டு போகிறாள். இங்கே ஒருவன் சைக்கிளை பஸ் பிரயாணிகள் நிற்கும் நிழல் கூடத்தில் வைத்து விட்டு மழைக்குக் காப்புத் தேடியிருக்கிறான். ஆனால் மழை அவன் காலடியில் வெள்ளமாக ஏறி அவனை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவர் பாதுகாப்பாக, நனையாமல், குளிரில்லாமல், சூடாக, நிம்மதியாக, காரின் உள்ளே கர்ப்பப்பைக்குள் குழந்தை போல இருக்கிறார். நான் கடலின் மத்தியில் தீவாக இருக்கிறேன். நான் பாலைவனத்தின் மத்தியில் சோலையாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். அர்ஜுனா! மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம்.

டடக்...டடக்...வரை... டடக்...டடக்...அழி.. .டடக்...வரை...டடக்...அழி...

எது பாதுகாப்பு? எது நிம்மதி? யார் இந்த உலகில் பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கிறார்கள்? அதோ மழையில் அவதிப்பட்டு நிற்கும் அந்த சைக்கி்காரன் இன்னும் பத்து நிமிடங்களில் மழை விட்டதும் உடம்பை வழித்து விட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறி வீடு போய்ச் சேருவான். அடுத்த பத்து நிமிடங்களில் அவன் உடல் காய்ந்து விடும். திடகாத்திரமாக இருக்கிறான். இன்னும் ஐம்பது வருடங்கள் உயிரோடு இருப்பான்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அடுத்த பத்து நிமிடங்களில் மழை விட்டதும் ஜோராக காரோட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். ஆனால் என் உடல் அழுக ஆரம்பித்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் முற்றாகச் செத்துப் போய்விடுவேன்.

யாருக்கு இருக்கிறது பாதுகாப்பு? என்னுடைய தற்காலிகச் சுகத்துக்கும், அவனுடைய தற்காலிகத் துன்பத்துக்கும் என்ன பொருள்? ஏ சைக்கிளோட்டியே! இங்கே வா! இந்தக் காரையும் சுகத்தையும் எடுத்துக் கொள். உன் இடத்தில் இருந்து நான் நனைகிறேன். வெள்ளம் என் கணுக்கால்களை நனைத்து முழங்கால் வரைக்கும் வந்தாலும் பரவாயில்லை. உன் மீதியிருக்கும் ஐம்பது வருடங்களை எனக்குக் கொடுப்பாயா? மாற்றிக் கொள்வோமா?

கண்களில் கண்ணீர் படர்ந்தது. ஸ்டியரிங் சக்கரத்தைக் கைகள் அழுத்திப் பிசைந்தன. நெற்றியை மெதுவாக அந்த சக்கரத்தில் சாய்த்து மௌனமாக அழுதார். அவர் அழுகைகூட பாதுகாப்பாக இருந்து. பிறர் பார்வை பட்டு அவமானப்படுத்தாத சுகம்.

ஒரு யுகம் போல் மனசுக்குத் தோன்றினாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்காது. மின்னல் தெறிப்புக்களாக அவை மனசுக்குள் ஓடின. வாழ்ந்த வாழ்க்கை, வளர்ப்பு, படிப்பு, தொடூல், கல்யாணம், மனைவி, குழந்தைகள், எல்லாம் துண்டு துண்டாக, குழந்தை மனம்போன போக்கில் வெட்டி ஒட்டின ஒட்டுப்படம் போல....

மழையின் படபடப்பு தணிந்திருந்தது. "சோ" என்ற சத்தம் இல்லை. தலை நிமிர்ந்து பார்த்தார். வானம் தௌிந்திருந்தது. தூவானம். சூரிய வௌிச்சமும் வானவில்லும் கூடத் தோன்றியிருந்தன. சைக்கிள்காரன் இருக்கையைத் தட்டித் துடைத்துவிட்டு சைக்கிள் மேல் உட்கார்ந்து ஜிவ்வென்று போனான்.

இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்துச் சூடாக்கிக் கண்களையும் கன்னத்தையும் முகத்தையும் துடைத்துச் சுத்தமாக்கினார். பின்பார்வைக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு, பின்னால் கார் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, கியரைப் போட்டு, கை பிரேக்கை விடுவித்து, மெதுவாக, பத்திரமாகக் காரை வீட்டை நோக்கிச் செலுத்தினார்.

*** *** ***

அவருடைய காரை கேட்டின் முன் கண்டதும் ஜிம்மி ஓடிவந்தது. கேட்டின் பின்னாலிருந்து துள்ளிக் குதித்தது. பின்னங்கால்களில் நின்று முன்னங்கால்களைக் கோர்த்துக் கொண்டு முகமன் சொல்லிற்று. நாக்குத் தொங்க வாய் விரிந்து சிரித்தது. ஒரு இரண்டு மூன்று மணி நேரம் வௌியே போய் வந்தாலும் ஏதோ பத்து நாட்கள் பார்த்திராத நண்பனைக் கண்ட கொண்டாட்டம். என் அன்பு நாயே! உன்னைப் போல் என்னை என் மனைவியும் குழந்தைகளும் கூட வரவேற்பதில்லை. உனக்கு இது எப்படி வாய்த்தது? நான் போடும் சில எலும்புத் துண்டுகளுக்காகவா இத்தனை உற்சாகமான நன்றி செலுத்துகிறாய்? அதற்காகவா இந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற இங்கு வரும் அத்தனை பேரையும் பார்த்துக் குலைத்து இந்த உலகத்தையே விரோதித்துக் கொள்ளுகிறாய்?

காரிலிருந்து இறங்கி கேட்டைக் கொஞ்சமாகத் திறந்து ஜிம்மியைக் கூப்பிட்டுச் சங்கிலியில் கட்டினார். சரணடைந்து தலை கொடுத்துக் கட்டுப்பட அது வழக்கம் போல சம்மதித்தது. கட்டாவிட்டால் கேட்டைத் திறந்ததும் வௌியே ஓடி விடும். பிற நாய்களிடம் சண்டை போட்டுக் கடிபட்டு வரும். சாலையில் போகும் மோட்டார் சைக்கிளோட்டிகளைத் துரத்தும்.

காரை உள்ளே கொண்டு வந்து நிறுத்தினார். கேட்டைச் சாத்தினார். ஜானகி எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை. அவளிடம் விஷயத்தைத் தருணம் பார்த்துச் சொல்ல வேண்டும். அதிர்ச்சியைக் குறைக்கும் வகையில்... "இதெல்லாம் சாதாரண விஷயம்தான்" என்ற தோரணையில்... "எந்த மானுடன் சாகாவரம் வாங்கி வந்திருக்கிறான் இந்த உலகத்தில்..." என்ற தத்துவ முன்னுரையோடு...

ஜானகி சமயலறையிலிருந்து பரபரப்பாக வௌியே வந்தாள். "ஏங்க இவ்வளவு நேரம்?" பதில் சொல்ல வாயெடுத்த போது...

"ராதா போன் பண்ணுனாங்க... இப்பதான்.."

அவசரமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வழக்கமாகத் தொலைபேசியில் அழைத்துப் பேசும் மகளின் செய்தி இத்தனை மூச்சுத் திணறும் அவசரத்தில் வௌிப்படக் காரணமில்லை. வேறு முக்கிய விஷயம் தன் அவசர நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று முதல் நிகழ்ச்சியைத் தள்ளிப் போட்டதில் ஒரு வக்கிரமான நிம்மதி இருந்தது.

"என்ன விஷயம் ஜானகி..?"

"மறுபடி பிரச்சினையாம்..."

"பிரச்சினைன்னா?"

"அந்தப் பாவி மறுபடி போட்டு அடிச்சிருக்காங்க..." அவள் கண்களில் நீர் கட்டியது.

"ஏனாம்?"

"என்னமோ மறுபடியும் பணம் கேட்டானாம்" கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசினாள்.. "முடியாதின்னு சொன்னாளாம். வார்த்தை முத்திப் போய் அடிக்கிற அளவுக்கு வந்திருக்கு!"

மனத்தில் திகீரென்றது. எத்தனை அன்பாக இந்த மகளை வளர்த்தோம் இருவரும். கொஞ்சி குளிப்பாட்டி, படிக்க வைத்து, அவள் படிக்க விழித்திருக்கிற நாட்களில் தாங்களும் விழித்திருந்து... பட்டதாரியாக்கி, அவள் விரும்பியவனைத் தாங்கள் விரும்பாத போதும், அவள் விருப்பத்தை ஏற்று, அவனையே அவளுக்கு மணாளனாக்கி... வீடு பிடித்துக் கொடுத்து... குழந்தைப் பேறு பார்த்து... இப்படி அடிபடவா? எப்படி இவர்கள் வாழ்க்கை கசந்து போனது? ஏன் இவர்கள் காதல் வாழ்க்கை வன்முறைக்குள் வீழ்ந்தது? மனசுக்குள் கேட்டுக் கொண்டார். வாய்விட்டு யாரிடம் கேட்பது?

"நம்ப என்ன செய்றது ஜானகி?"

"அவ இன்னைக்கே புறப்பட்டு வர்ராளாம் இங்க! போனைக் கீழே வச்சதும் பேக்க எடுத்துக்கிட்டு வந்திடுவேன்னு சொன்னா..."

"பஸ்ஸிலியா...?"

"இல்லைங்க. அவ கார்ல... பையனையும் கூட்டிட்டுத் தானா ஓட்டி வரப் போறாளாம்..."

"ஒண்டியாவா? என்ன ஜானகி நீ? இதுவரைக்கும் அவ ஒண்டியா காரை ஓட்டி வந்ததில்லையே! ஏன் சரின்னு சொன்ன?"

"நான் என்ன சொல்றது? நான் புறப்பட்டுட்டம்மான்னு சொல்லிட்டு போன வச்சிட்டா. நான் என்ன பண்ண முடியும்?"

இப்போது மணி ஏழாகி விட்டது. கோலாலம்பூரிலிருந்த இப்போது புறப்பட்டாலும் இந்தப் பினாங்கு வந்து சேர நான்கு மணி நேரம் ஆகும். இரவுப் பிரயாணம். இதற்கு முன் இப்படித் தனியாக வந்ததில்லை. மூன்று வயதுக் குழந்தையையும் கூட்டிக்கொண்டு, இரவில், மழைக்காலத்தில், மனத்தில் வெறுப்பையும் எரிச்சலையும் கோபத்தையும் சுமந்து கொண்டு, இடைவிடாத 110 கிலோமீட்டர் வேகத்தில், மனசை வசியப்படுத்தி மூளையை மரத்துப் போகச் செய்யும் நெடுஞ்சாலையில்... நினைக்க பயமாக இருந்தது. விபத்துக் காட்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன.

"சே! நீ அவளத் தடுத்திருக்கணும் ஜானகி!" என்று சொல்லி அசந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.

"எப்படிங்க தடுக்கிறது? இன்னும் அங்க இருந்து அவனோட சண்டை போட்டு உதை வாங்கவா? இங்கவாவது வந்து ரெண்டு நாள் நிம்மதியா இருக்கட்டும்னு வரச் சொல்லிட்டேன்"

உண்மைதான். ராதா தன் கணவனிடம் அடிபடுவது இது முதன் முறையல்ல. இந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இது அதிகமாகிவிட்டது. அவர்கள் குடும்ப வாழ்க்கையில் பலவித விஷங்கள் கலந்து விட்டன. மருமகன் சிவமணி அதற்கு முக்கிய காரணம். அவனுக்குக் குறுக்கு வடூயில் முன்னேறவேண்டும் என்ற பேராசைகள் அதிகம்.

எல்லாம் அவனுடைய குற்றம் என்றும் சொல்லிவிட முடியாது. பெற்றோர்கள் என்ற கோணத்தில் இுந்து பார்க்கும்போது ராதாவின் மேல் பரிதாபம் தோன்றினாலும், அவளுக்கும் விட்டுக் கொடுத்துப் போகமுடியாத பண்பு உண்டு. கோபம் வந்தால் மூர்க்கமாக மாறிவிடுவாள். பிடிவாதம் உண்டு.

"எனக்குக் கொஞ்சம் டீ கலக்கிக் கொண்டா ஜானகி!" என்றார். ஜானகி மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள்.

ராதாவின் குறைகளை ஜானகி ஒருநாளும் ஏற்றுக் கொண்டதில்லை. எல்லாக் குறைகளும் மணியிடம்தான் என்பது அவள் கருத்து. ராதாவும் சிவமணியும் காதல் கொண்ட காலத்திலிருந்தே மணியை அவளுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் சிவமணியிடம் அப்போது ஒன்றும் கெட்ட பழக்கங்கள் இல்லை. ஆனால் தன் அன்பு மகளின் மனத்தை வௌியில் இருந்து வந்து ஆக்கிரமித்துக் கொண்டவன் என்ற பொறாமை ஆரம்பத்திலிருந்து உண்டு. தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்த வரை அதை அடக்கி உள்ளே போட்டிருந்தாள். அந்த உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியதும் அவள் முழுக் கோபமும் உக்கிரமாகத் தலையெடுத்துவிட்டது.

ஆனால் அந்த விரிசல் பிளவாகி அவன் அவளை அடிக்கத் தொடங்கிவிட்டான் என்று கேள்விப் பட்டபோது அவரும் அவனை ஒரு மிருகமாகத்தான் நினைத்தார். இந்த நாகரிகக் காலத்தில், இந்த நாகரிகக் குடும்பத்தில் இப்படி நடப்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ராதாவின் வாழ்க்கைத் துன்பங்கள் ஏற்கனவே அவருடைய மனத்தின் ஒரு மூலையில் பாரமாக உட்கார்ந்திருந்தன. இன்றைக்கு நடந்தவற்றைக் கேள்விப்பட்ட பிறகு அந்த பாரம் உட்கார்ந்திருந்த இடம் ரணமாகிவிட்டது. அதிலும் இன்றைக்கு டாக்டரிடம் சென்று மரண ஓலை பெற்றுக் கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில், இன்னும் ஒரு ஈட்டியா இப்படிப் பாய வேண்டும்?

எவ்வளவு துன்பங்களுக்கு இந்தச் சின்ன மனத்துக்குள் இடம் இருக்கும்? எவ்வளவு பாரம்தான் இந்தப் பைக்குள் போட்டு வைக்க முடியும்? இது எவ்வளவு போட்டாலும் தளர்ந்து விரிந்து கொடுத்து ஏற்றுக் கொள்ளுகின்ற பையா? அல்லது இதற்கும் எல்லை உண்டா? உடையும் கன அளவு உண்டா? அல்லது விரும்பினால் கருங்கல்லாகவும் விரும்பினால் ரப்பர் பையாகவும் மனிதன் இதனை மாற்றிக் கொள்ள முடியுமா?

ஜானகி ஆவி பறக்கும் டீயோடு வந்தாள். அவர் முன் மேசையில் வைத்தவாறு கேட்டாள்: "இப்படி இங்க மழை பேஞ்சுக்கிட்டு இருக்கே, அவ வர்ர வழியெல்லாம் மழை பேயுமோ என்னமோ தெரியிலியே!"

பெய்யும் என்று ஒரு வாரமாகமே வானிலை அறிக்கையில் சொல்லி வருகிறார்கள். மேற்கு மலேசியாவில் கரையோரப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை, மேகமூட்டம், தாழ் நிலங்களில் வெள்ளம் என்றுதான் தொலைக்காட்சிச் செய்தியில் சொல்லுகிறார்கள். இந்த நிலையில் ஜானகிக்கு என்ன ஆறுதல் கூறமுடியும் அவரால்?

"மழை இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? மெதுவா ஓட்டி வந்தா ஹைவேயில ஒண்ணும் ஆபத்தில்ல. கவலப் படாத! எல்லாம் பத்திரமா வந்து சேந்திருவாங்க ரெண்டு பேரும்!" ஜானகிக்குச் சொன்னாரா தனக்குத் தானே சொல்லிக்கொண்டாரோ தெரியவில்லை.

ஜானகி மீண்டும் மழைத் தாரைகள் விழ ஆரம்பித்திருந்த வீட்டுக் காம்பவுண்டை திறந்திருந்த கதவுகள் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராதாவின் நினைவும் அவளுடைய அந்த நேரத்துத் துன்பமும் அவள் மனத்தை முற்றாக ஆக்கிரமித்திருந்தன. என் அன்பு மனைவியே, புதிய துயரம் வந்ததும் காத்திருந்த இன்னொரு துயரத்தை மறந்து விட்டாயே! அப்படித்தானா வாழ்க்கை! "இப்போது" என்பதுதான் முக்கியம். இப்போது நிகழ்வதுதான் நெஞ்சில் நிறைகிறது. இப்போதுதான் உண்மை.

நான் ஒருமாதமாக தலை கடுமையாக வலிக்கிறது என்று சொன்னதும் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னதும் டாக்டர் பரிசோதனைக்குப் பலமுறை சென்று வந்ததும் இன்று பரிசோதனை முடிவு தெரிந்து கொள்ள மத்தியான வேளையில் நான் டாக்டரிடம் சென்றதும் உன் மனத்தின் கொல்லைப் புறத்தில் புதையுண்டு போய்விட்டன. மகளின் துயரம் மரமாக உன் வாசற்புறத்தில் வளர்ந்து விட்டது. அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். அவள் அடிபட்டதை, அவள் காரில் ஏறிக் கோபமாக ஓட்டி வரும் காட்சியை, உன் பேரன் அந்தக் காரின் ஓரத்தில் தொத்திக் கொண்டு வருவதை, மழை பொடூந்து வெள்ளக்காடாகிவிட்ட நெடுஞ்சாலையில் உன் மகளின் கார் இருளைக் கிழித்துக் கொண்டு வரும் அபாயகரமான காட்சிகளை கற்பனை செய்தவாறு இருக்கிறாய்.

என் அன்பு மனைவியே! மனசை இப்படி நைந்து போக விட்டு விடாதே. நான் சொல்லுகின்ற செய்தியைத் தாங்கிக்கொள்ள உனக்கு இன்னும் உரம் வேண்டும். இது பெரிது. உன் மகளின் செய்திகள் உன் மனதுக்குத் துப்பாக்கி ரவைகள் என்றால் என் செய்தி ஆயிரம் டன் டிஎன்டி. தயாராக இரு. பக்கத்தில் எதையாவது உறுதியாகப் பிடித்துக் கொள். மயக்கம் வரும். ஆண்டவனை வேண்டிக்கொள்.

ஜானகி திடீரென்று தலை நிமிர்ந்து அவர் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். "சரி, டாக்டர் என்ன சொன்னாரு? அதக் கேக்காம ராதா கதயே பேசிக்கிட்டு இருந்திட்டேனே!"

டீ கோப்பையைக் கீழே வைத்தார். ஜானகி முகத்தைப் பார்த்தார். இதை உன்னால் தாங்க முடியுமா? நீ உன் மகள் நினைவில் குலைந்திருக்கும் இந்தத் தருணத்தில் இந்தக் கல்லை உன் தலையில் போடட்டுமா? நான் சாவதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் உன்னை வதைப்பதற்குத் தயாராக இல்லை. மனிதன் வதை படுவதில் துன்பம் இருந்தாலும் கண்ணியம் உண்டு. ஆனால் மற்றவர்களை வதைப்பதில் கண்ணியமில்லை. என் அன்பு மனைவியே! இந்தச் செய்தி காத்திருக்கலாம். நான் உன்னை விதவையாக்கப் போவது நிச்சயம். ஆனால் அது நாளைக்கே நடக்கப் போவதில்லை. அது இன்னும் சொஞ்ச நாள் காத்திருக்கலாம். உனக்கு இந்த ஓரிரவுக்குப் போதிய துன்பங்கள் மனத்தில் இருக்கின்றன. இன்றிரவு உன் மகளைப் பார்த்துக் கதைகளைக் கேட்டறிந்து நாம் இருவரும் நம் புண்களில் செருகிக் கொள்ள பல வேல்கள் காத்திருக்கின்றன. இப்போது இது வேண்டாம்.

"இன்னும் லேப்ல இருந்து பரிசோதனை முடிவு வரலியாம் ஜானகி. ரெண்டொரு நாள்ல தெரியும்னு டாக்டர் சொல்றார்"

"இன்னைக்குக் கண்டிப்பா வந்திரும்னு சொன்னாங்களே..."

"சொன்னாங்க. இப்ப இல்லைங்கிறாங்க. என்ன பண்றது?"

"உங்களுக்கு வலி எப்படி இருக்கு?"

"பரவால்ல. சாப்பாட்டில கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கச் சொன்னார்."

கொஞ்சம் கால அவகாசம் வாங்கிக் கொண்டார். ஜானகி முகம் மீண்டும் மழைத் தாரைகளை நோக்கித் திரும்பியது. மழைத்தாரைகள் என்ற வெள்ளித்திரையில் ராதா - மணி இவர்களின் வாழ்க்கைப் படம் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டார். காதல், பிரிவு, வீரம் கொஞ்சமும் கலக்காத அடிதடி, சில புண்கள், ஏராளமான கண்ணீர்... இப்படி அவல ரசங்கள் நிறைந்த திரைக்கதை. இதன் முடிவை இப்போதைக்கு இந்த வெள்ளித்திரையில் காண முடியாது. அதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

இந்தக் கதையின் முடிவில் பழங்காலப் பாணியில் "சுபம் சுபம்" என்று போடமாட்டார்கள். புதிய பாணியில் டைரக்டரின் முடிவுரையாகத் தமிழ்ப் பண்பாட்டை போலித்தனமாக மிகைப் படுத்தும் குரலும் கேட்காது. விளக்குகள் மீண்டும் பளிச் பளிச்சென்று எரிந்து கற்பனை உலகிலிருந்து நம்மை நிஜ உலகுக்கு கொண்டு வராது. இது முடிந்தது என்று எழுந்து காரில் ஏறி வீடு போய்ச் சேர முடியாது. ஏனென்றால் இது வாழ்க்கை. நிஜ உலகுக் கதை.

இல்லை. இதுவும் நிஜ உலகு இல்லை. இதுவும் மாயைதான். இதற்கு அப்பால் இருக்கிறது ஒன்று. ஜானகி! அதை நான் விரைவில் தெரிந்து கொள்ளும் காலம் வந்து விட்டது.

"நான் போய் குளிச்சிட்டு வந்திட்றேன் ஜானகி!" என்றார்.

ஜானகி தன் நினைப்பில் இருந்தாள். பதில் சொல்லவில்லை. எழுந்து குளிக்கப் போனார்.


*** *** ***

ஷவர் சுகமாக இருந்தது. வெந்நீர் உடம்பில் வழிந்தோடுவது தோலுக்கு இதமாக இருந்தது. உள் உடல் வேதனை இப்போது தெரியவில்லை. மேல் உடல் சுகம் மட்டுமே தெரிந்தது. ஆனால் தோலைத் தேய்க்கும் போது ஆங்காங்கே கருமை கட்டியிருந்த இடங்களில் கொஞ்சம் வலி தெரிந்தது.

ஜெனரல் ஆஸ்பத்திரியின் புற்று நோய்ப் பிரிவில் அந்த இரண்டு டாக்டர்களும் துன்பமோ மகிழ்ச்சியோ இல்லாத இயந்திரத் தனமான குரலில் அவருடைய மருத்துவ அறிக்கையை வாசித்து விளக்கிக் காட்டியது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

"திரு சுந்தரம். உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் டாக்டர் ஷகாபுதீன்.

"அப்படித்தான் இருக்கிறது டாக்டர். தலை வலி சில நேரங்களில் தாங்க முடியவில்லை. வயிற்றில் எப்போதும் ஒரு குமட்டல் உணர்ச்சி. சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டால் உடனே வயிற்றுப் போக்கு வந்துவிடுகிறது. இரவில் சில நேரங்களில் உடல் நடுங்குகிறது" என்றார் சுந்தரம்.

டாக்டர் டான் கேட்டார்: "உங்கள் அன்றாட காரியங்களைக் கவனிக்க போதிய பலம் இருக்கிறதா?"

"கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். ஆனால் கொஞ்சம் ஏதாகிலும் வேலை பார்த்தவுடன் உடல் அசந்து விடுகிறது"

டாக்டர் டான் கையிலிருந்த கோப்பிலிருந்து தாள்களைப் புரட்டியவாறு சொன்னார்.

"உங்கள் நோய் அடையாளங்களைப் பார்த்து நாங்கள் சந்தேகப்பட்டது சரியாகப் போய்விட்டது. உங்கள் கபாலம் முதுகுத் தண்டு ஆகியவற்றின் "ஸ்கேனிங்" முடிவுகள் வந்திருக்கின்றன. உங்கள் ரத்தப் பரிசோதனையும் எலும்பு "மேரோ" பரிசோதனை முடிவுகளும் வந்துவிட்டன. கல்லீரல் "பயோப்சி" முடிவும் வந்திருக்கிறது."

சுந்தரம் அவர்கள் முகத்தை ஆவலுடன் பார்த்தார்.

ஷகாபுதீன் சொன்னார்: "உங்கள் மூளையில் ஒரு கட்டி இருக்கிறது. ஆபத்தான புற்று நோய்க்கட்டி. இரத்தப் பரிசோதனையில் வெள்ளை அணுக்கள் மிக அதிகமாக இருக்கின்றன. கல்லீரலில் புண் இருக்கிறது. இவை நிச்சயமாக உங்களுக்குப் புற்று நோய் இருப்பதற்கான ஆதாரங்கள்."

இதயத்தில் பாறை தாக்கிற்று. ஆனால் அதன் முழு வலியும் இன்னும் தெரியவில்லை.

"அப்படியா? உண்மையாகவா டாக்டர்?"

"ஆமாம். எல்லாப் பரிசோதனைகளும் செய்து விட்டோம். சந்தேகம் ஒன்றும் இல்லை!"

"ஆரம்பக் கட்டமா, முற்றி விட்டதா எப்படி...?"

"மூளையில் இருந்து உடம்பின் மற்ற உறுப்புக்களுக்கும் பரவ ஆரம்பித்து விட்டது. மிக விரைவாகப் பரவுகிறது. முற்றுவது மிக விரைவாக நடை பெறும்"

சுந்தரத்துக்கு நாக்கு வறண்டிருந்தது. "என்ன ஆகும் டாக்டர்?"

"இப்போது ஆகிக் கொண்டிருப்பது போலத்தான். தலைவலியும் மயக்கமும் இன்னும் அதிகமாகும். கல்லீரல் வீங்கி விடும். சாப்பாட்டில் ருசி போய்விடும். சாப்பாடு தங்காது. தோலில் ரணங்கள் உண்டாகும். அந்த ரணங்கள் சுலபத்தில் ஆறாது. உள் உறுப்புக்களில் புண் ஏற்பட்டால் ஆறாது. போகப்போக எந்த உறுப்பு புண்ணாகும் என்று சொல்ல முடியாது!"

இப்போதே வயிற்றில் அமிலங்கள் ஊறிப் புண்ணாய்ப் போவது போல உணர்ந்தார். கபாலத்துக்குள் மூளை மடிப்புக்களில் புழுக்கள் நௌிவது போன்ற ஒரு கண நேரக் கற்பனை. தலைகுனிந்து மௌனித்திருந்து கேட்டார்.

"மருந்துகள், சிகிட்சை...?"

"இங்கு நாங்கள் செய்வதற்கு அதிகம் இல்லை. அறுவை சிகிட்சை முடியாது என்று முடிவு செய்து விட்டோம். கட்டி உண்டாகியிருக்கும் இடம் மிக அபாயமானது. மௌன்ட் மிரியம் புற்று நோய் மருத்துவ மனையில் அட்மிட் பண்ணிக் கொள்ளுங்கள். ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியும் ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் விரிவான ரிப்போர்ட் தருகிறோம்!"

"எப்போது போக வேண்டும்?"

"எங்களைக் கேட்டால் இப்போதே அம்புலன்ஸ் வரச்சொல்லி அனுப்பி விடுவோம். அவ்வளவுக்கு முற்றியிருக்கிறது. ஒரு நாளும் கடத்தக் கூடாது. ஆனால் முடிவு உங்களுடையது"

"குணமாகிவிடுமா டாக்டர்?" கேள்வியில் குழந்தைத்தனம் இருந்தது. பயம் இருந்தது.

"அதை நாங்கள் சொல்ல முடியாது திரு. சுந்தரம். புற்று நோய் மருத்துவ மனையில் நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சோதித்துச் சொல்லுவார்கள். அதுவும் ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியும் ஆரம்பித்த பிறகுதான் உத்தேசமாகச் சொல்ல முடியும். நீங்கள் விரைவாகப் போவது நல்லது. இதில் கடிதம் இணைத்திருக்கிறோம்! ரிப்போர்ட்டும் இருக்கிறது!" ஒரு பெரிய உறையைத் தந்தார்கள்.

ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு வௌியே வந்த பிறகு மனம் அந்த முடிவுகளை மறுதலித்தது. அந்த டாக்டர்களின் அறிக்கையின் மேல் சந்தேகம் வந்தது. ஏதோ இரண்டு நாட்கள் பரிசோதித்துவிட்டு இத்தனை நிச்சயமாகச் சொல்லுகிறார்களே! எப்படி இவர்களுக்குத் தெரியும்? கொஞ்சம் தலை வலி வந்துவிட்டால் புற்று நோய் என்ற அர்த்தமாகிவிடுமா? இந்த 57 வயதில் கொஞ்சம் அசதி, கொஞ்சம் அஜீரணம், கொஞ்சம் வயிற்றுப் போக்கு, கொஞ்சம் தலைவலி இயற்கைதானே! வேறு ஒரு நல்ல டாக்டரைப் பார்த்துக் கேட்க வேண்டும். உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அரசாங்க ஆஸ்பத்திரி என்றால் இப்படித்தான். ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்குச் சென்று வேறு நல்ல டாக்டர்களைப் பார்க்க வேண்டும்.

காரில் வந்து உட்கார்ந்த போது சாவியைத் திருப்ப முடியாமல் கை நடுங்கிற்று. டாக்டர்களின் அறிக்கையின் மேல் பட்ட சந்தேகம் திடுமெனக் கரைந்து விட்டது. இவர்கள் நிபுணர்கள், என்னைப் போல் ஆயிரம் கேஸ் பார்த்தவர்கள். இவர்கள் சொல்லுக்கு அட்டியில்லை என்ற உண்மை தாக்கிற்று.

காரை எடுத்து வௌியாகி, ஜாலான் ஹோஸ்பிட்டல் சாலையிலிருந்து மெதுவாக நிதானமாக ஓட்டி வந்தார். ஜாலான் சுல்தான் அஹமட் ஷாவில் நுழைந்து தன் வீட்டுக்குப் போகும் வடூயில் தஞ்சோங் தொக்கோங் சுற்றுவட்டத்துக்கு வந்த போது இந்த விஷயத்தை ஜானகியிடம் எப்படிச் சொல்லுவது என்ற கேள்வி எழுந்தது. காரின் வேகம் குறைந்தது. தஞ்சோங் பூங்காவில் உள்ள தன் வீட்டுக்குப் போகும் பாதையில் திரும்புவதற்கு பதிலாக கர்னி டிரைவுக்குத் திரும்பினார். ஓரமாக நிறுத்திவிட்டு கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சடசடவென மழை பிடித்தது. அங்குதான் காரைப் போட்டுவிட்டுக் காத்திருந்தார். தன் நோயின் கனத்தை அசை போட்டுப் பார்த்து அழுது தௌிந்தது அப்போதுதான்.

வெதவெதவென்றிருந்த சுடு நீர் வழிந்தவாறிருந்தது. உடம்பை வருடிக்கொண்டிருந்தது. இந்த சுகங்களை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். இவை நெடுநாட்களுக்கு நிலைப்பவை அல்ல. எத்தனை நாட்களுக்கு இப்படித் தானாக எழுந்து வந்து ஷவரைத் திறந்து சோப் தேய்த்துக்கொண்டு துண்டால் உடம்பைத் துவட்டிக்கொள்ள இயலுமோ தெரியவில்லை. டாக்டர் சொல்வதைப் பார்த்தால் யமதூதர்கள் வாசலில் காத்திருப்பதாகத்தான் தோணுகிறது.

ஏன் இப்படி 57 வயதில் எனக்கு அழைப்பு? என்ன குற்றம் செய்தேன்? எனக்குத் தெரிய 90 வயது வரை வாழ்ந்தவர்கள் இருக்கிறார்களே! பிரபல இடைநிலைப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் பதவியை கௌரவமாக வகித்து எல்லாரிடமும் நல்லவர் என்று பெயரெடுத்து, கோலாகலமாக ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் ஆசிரியர்களின் அன்புக் கண்ணீர் மல்கும் பிரியா விடையைப் பெற்று இன்னும் ஈராண்டுகள் ஆவதற்குள்...

ஒருவேளை இது இறைவன் என்னைத் தண்டிக்கின்ற வேளை போலும். மகள் ராதாவின் வாழ்க்கை போன இரண்டாண்டுகளாகவே சரிந்து கொண்டிருக்கிறது. வௌிநாட்டுக்குப் படிக்கப் போன மகன் வசந்தன் இரண்டாண்டுகளாகப் பரிட்சையில் தோல்வி கண்டு திரும்பி வராமல் பணத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறான். ஓய்வு பெற்றதில் வருமானம் நின்று போய் பென்ஷன் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த நோய்.

புற்றுநோய் மருத்துவ மனைக்குப் போவதா இல்லையா? ரேடியோதெராப்பிக்கும் கெமோதெராப்பிக்கும் சம்மதிப்பதா இல்லையா? முடிவுகள் எடுக்க வேண்டும். சிரமமான முடிவுகள். கெமோதெராப்பி பற்றி அவருக்குக் கொஞ்சம் தெரியும். கதிரியக்கம் பாய்ச்சுவார்கள். வயிறு குமட்டிக் கொண்டு வரும், தலைமயிர் உதிர்ந்து மொட்டையாகும். இரவில் தூக்கம் வராது. தலை சுற்றியவாறிருக்கும்.

அவர் மனதுக்குள் பீதி படர்ந்தது. கால்கள் தளர்ந்தன. குளியலறைச் சுவரில் சாய்ந்தார்.

"எவ்வளவு நேரமா குளிக்கிறிங்க? சீக்கிரம் வாங்க! நான் சாப்பாடு எடுத்து வச்சிட்டு ராதாவுக்கும் பையனுக்கும் தங்கிறதுக்கு ரூம் தயார் பண்ணனும்!"

ஜானகி வௌியிலிருந்து சத்தம் போட்டார்.

சுந்தரம் ஷவரைத் திருகி அடைத்தார். தண்ணீர் நின்றது. தோல் ரணங்கள் நோகாமல் டவலை ஒத்தி ஒத்தி எடுத்தார்.

மகளுக்கு அறை மட்டும் தயார் பண்ணுவதோடு உன் கடமை முடிந்துவிடாது ஜானகி. கையோடு இந்தக் கணவனுக்கும் ஒரு கல்லறை தயார் பண்ணி விடு.
--------------


அந்திம காலம் - 2


பத்தரை மணிக்கு அவர்களின் மனப் படபடப்பு தொடங்கியது. ஜானகி அர்த்தமில்லாமல் சமையலறைக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். எட்டு மணியளவில் தான் சாப்பிட்ட சூப்பையும் இரண்டு ரொட்டித் துண்டுகளையும் ஜீரணிப்பதில் சிரமத்துடன் தலையில் லேசான வலியுடன் சுந்தரம் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்து, திரையில் என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஜானகியின் நடையையும் வாசலில் தோன்றித் தோன்றி மறையும் கார் விளக்குகளின் வௌிச்சத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அதில் ஏதாவது ஒன்று ராதாவின் காராக இருக்காதா என்ற நப்பாசை தோன்றித் தோன்றி அமிழ்ந்து கொண்டிருந்தது. மத்தியானம் டாக்டர் கொடுத்த மரணச் செய்தியும் ராதாவின் துயரமும் மனத்துக்குள் சுழன்று சுழன்று ஓடிக்கொண்டிருந்தன.

பதினொரு மணியளவில் ஜானகி ஒரு நிமிஷ நீளத்திற்கு வாசலில் நின்று வடூயை வெறித்துப் பார்த்தாள். "எங்கேயாவது வழியில நின்னு போன் பண்ணக் கூடாது? கொஞ்சங்கூட பொறுப்பில்லாத புள்ள..." என்று முனகிக் கொண்டாள்.

பதினொன்று முப்பதுக்கு சடசடவென மழை பெய்யத் தொடங்கியது. ஜானகி அசந்து நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். "இப்படி மழை பெய்யுதே!" என்றாள்.

தொலைக்காட்சியில் ஏதோ ஓர் ஆங்கிலப் படத்தில் இரண்டு தரப்பினர்கள் துப்பாக்கியால் தட தடவென சுட்டுக் கொண்டார்கள். பலர் சுருண்டு வீழ்ந்தார்கள். ஆனால் எங்கும் ரத்தம் சிந்திக் கிடக்கவில்லை. அப்படியே ரத்தம் சிந்தும் காட்சிகள் இருந்திருந்தால் தணிக்கைக் குழு அவற்றை இரக்கமில்லாமல் வெட்டி எறிந்திருக்கும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

தொலைக்காட்சித் துப்பாக்கிப் போர் பார்க்கச் சோர்வாக இருந்தது. தலையைத் திருப்பி வாசலைப் பார்த்தார். மழைத் தண்ணீர் வழிந்து சிறு சிறு ஆறுகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

"ஏங்க எதுக்கும் வீட்டுக்குப் போன் பண்ணி புறப்பட்டுட்டாளா இல்லையான்னு கேட்டிருவமா?" என்றாள் ஜானகி.

சுந்தரம் யோசித்தார். கேட்கலாம். ஏதாவது தகவல் கிடைத்தால் ஆறுதலாக இருக்கும். ஆனால் புறப்பட்டு நெடு நேரமாயிற்று என்று தகவல் வந்தால் ஜானகியின் பீதி இன்னும் அதிகமாகும். அதைவிட மருமகன் சிவமணி போனை எடுத்தால் என்ன பேசுவது என்று தெரியாது. அவனிடம் சொல்லிவிட்டு வருகிறாளா, சொல்லாமல் வருகிறாளா ஒன்றும் தெரியவில்லை. இந்த நிலையில் ஏதாகிலும் பேசப்போய் பிரச்சினை விபரீதமாகிவிடலாம்.

"கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம் ஜானகி. மழையினால தாமதமாகலாம். பாக்கலாம்" என்றார். ஜானகி மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தார்.

தொலைக்காட்சியில் ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. ஒரு துப்பாக்கியின் முனை தெரிந்தது. துப்பாக்கி வெடித்தது. அடுத்த ஷாட்டில் ஹெலிகாப்டர் ஒரு தீப்பந்தாக மாறி பூமியை நோக்கி விழுந்தது. அதன் பாகங்கள் நெருப்புத் துண்டங்களாகச் சிதறி விழுந்தன.

சுந்தரத்தின் தலையின் வலதுப் பொட்டில் சுரீர் என்று வலித்தது. முகத்தைச் சுளித்து அந்தப் பக்கத்தைத் தடவிக் கொண்டார். வலி மறைந்து விட்டது. ஆனால் மனத்தில் கிலி வந்து புகுந்தது. என்ன செய்தி அனுப்புகிறாய் என் உடலே? உன்னை விடமாட்டேன் என்கிறாயா? சித்திரவதைக்குத் தயாராயிரு என்கிறாயா? உன் காலம் முடிகிறது, அதைக் கவனிக்காமல் தொலைக்காட்சி ஒரு கேடா என்கிறாயா?

பொறு, பொறு. இன்றிரவு உன்னைப் பற்றி அதிகம் யோசிக்க எனக்கு நேரமில்லை. என் மகள் பற்றிய செய்தி முடிவாக வேண்டும். அதன் பின் உன்னைப் பற்றி யோசிக்கிறேன்.

நெஞ்சில் லேசாகக் குமட்டல் வந்தது. தொண்டையைக் கனைத்து அடக்கிக் கொண்டார்.

மழை பட்டென்று நின்றுவிட்டது. முன்வாசல் மரத்தின் இலைகளிலிருந்து தண்ணீர் சொட்டுகின்ற ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

பதினொன்றே முக்காலுக்கு கேட்டின் முன்னால் பளீரென்று விளக்குகள் தெரிந்தன. கார் "பீப்" என்று ஹாரன் அடித்தது. ஜானகி முகத்தில் உயிர் வந்தது. "இதோ வந்திடுச்சிங்க. போய் கேட்டத் தெறங்க" என்றாள். சுந்தரம் எழுந்து சென்று கேட்டைத் திறந்தார். காரை காம்பவுண்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தினாள் ராதா.

அவர் கேட்டைச் சாத்தி வருவதற்குள் பரமா காரை விட்டு இறங்கினான். "தாத்தா" என்று கூவிக்கொண்டு ஒடிவந்தான். "பரமா... வா... வாடா கண்ணு" என்று அவனைக் கட்டித் தூக்கிக் கொண்டார். தூக்க முடிந்தது. மூன்று வயதுக் குழந்தை இலேசாகத்தான் இருந்தான். போனமுறை பார்த்தற்கு இப்போது இளைத்திருந்தான்.

"தாத்தா, டோன்ட் கால் மி பரமா. மை நேம் இஸ் பிரேம்..." என்றான் குழந்தை.

"மத்தவங்களுக்கு நீ பிரேம்... தாத்தாவுக்கு நீ பரமாதான்" என்று முத்தமிட்டார். பேரனுக்குத் தமிழ் பேசத் தெரியாது. மலேசியாவில் தமிழ்க் குடும்பங்களின் நடுத்தர வர்கத்துப் பழக்க வழக்கங்களுக்குப் பலியானது அவனுடைய குடும்பம். பிரேம் என்று அவன் பெற்றோர்கள் நாகரிகமாக வடநாட்டுப் பேராக வைத்திருந்தார்கள். சுந்தரத்திற்கு அந்தப் பெயர் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தப் பெயரை பரமா என மாற்றிக் கூப்பிட்டார்.

பரமா திமிறிக் கொண்டு பாட்டியிடம் ஓடினான். ஜானகி அவனைத் தூக்கி முத்தமிட்டாள். ராதா ஒரு சிறிய துணிப் பையையும் கைப் பையையும் எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கினாள். சுந்தரம் போய் அவள் துணிப் பையை வாங்கிக் கொண்டார்.

"ஏம்மா இவ்வளவு நேரம்?" என்று ஜானகி கேட்டாள். அவள் குரலில் படபடப்புப் போய் ஆறுதல் வந்திருந்தது.

"வர்ர வழியெல்லாம் ரொம்ப மழைம்மா. அதான் மெது மெதுவா வரவேண்டியதாப் போச்சி!" என்றாள்.

"வழியில நின்னு போன் பண்ணியிருக்கலாமே!"

"போன் பண்ண வசதியில்ல. பிரேமுக்கு சாப்பாடு வாங்கிக் குடுக்க ஒரு இடத்தில நிப்பாட்னதத் தவிர வேற எங்கியுமே நாங்க நிக்கல..." என்றாள்.

"சரி, சரி. வா. சாப்பாடு வச்சிருக்கேன். வந்து துணி மாத்திட்டு சாப்பிடு" என்றாள் ஜானகி.

"பட்டி. கிவ் மீ சொக்கலேட்" என்றான் பரமா.

"வா. மொதல்ல சோறு சாப்பிடு! அப்புறந்தான் சொக்லேட்" என்று அவனைத் தூக்கியவாறு உள்ளே போனாள்.

ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும், அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவாறு மீண்டும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தார் சுந்தரம். இப்போது ஏதோ நகைச்சுவைப் படம் நடந்து கொண்டிருந்தது. வரிக்கு வரி வெடிச்சிரிப்பு கேட்டது. கறுப்பர்கள் சிலரும் வெளுப்பர்கள் சிலரும் ஆண்களும் பெண்களுமாக சரிசமமாக ஜீன்ஸ் அணிந்து கொண்டு பெரிய பெரிய சப்பாத்துக்களுடன் வீட்டினுள் நடந்து கொண்டு பேசிப் பேசிச் சிரிக்க வைத்தார்கள். அதில் உள்ள போலித் தனத்தை சுந்தரம் நினைத்துப் பார்த்தார். இவர்கள் நாட்டில் இவர்கள் இப்படிக் குலவிக் கொள்வதில்லை. தொலைக் காட்சியில்தான் இது. வாழ்க்கையில் இவர்கள் நாட்டிலும் சரி, உலகத்தில் வேறு எங்காகினும் சரி, இத்தனை சிரிப்பில்லை. ராதாவின் வாழ்க்கையில் சிரிப்பில்லை. என் வாழ்க்கையில் இனி சிரிப்புக்கு இடமில்லை.

மீண்டும் தலைக்குள் சுரீர் என்று வலித்தது. முகம் சுளித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு பொட்டைத் தடவினார். வலி வலது முன் கையில் இறங்கி முறுக்கியது. இடது கையால் பிசைந்து விட்டுக் கொண்டார். யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தார். அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் மட்டும் வடை பொரிப்பது போல சர் சர்ரென்று சரஞ்சரமாகச் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.


*** *** ***

சாப்பாட்டு மேசையில் மௌனம்தான் கனத்திருந்தது. பரமாவுக்கு முன்னால் குடும்பக் கதைகள் பேசவேண்டாம் என ராதா நினைத்திருக்க வேண்டும். பரமா அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்து எதையும் சாப்பிடாமல் சோர்ந்து தூங்கி விழுந்தான். ராதா சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவனைத் தூங்க வைக்க அறைக்குள் போனாள். ஜானகி பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்திருந்தாள்.

தலையிலும் வயிற்றிலும் வலி இப்போது வருவதும் போவதுமாக இருந்தது. சிறிய சிறிய அலைகளாக, சுருட்டிச் சுருட்டி...

வலி தணிந்த நேரங்களில் சுந்தரத்தின் மனம் ராதாவின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி வந்தது.

இவர்களின் இந்தச் சண்டைகள் கடந்த மூன்று வருடங்களாகவே நடந்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் முற்றிக்கொண்டுதான் போகிறதே தவிர சமரசமாவதாகத் தெரியவில்லை. தம்பதிகளுக்கிடையில் உண்மையான அன்பிருந்தால் இது இப்படி மோசமாக வேண்டாமே என்று சுந்தரம் நினைத்துக் கொண்டார். அந்த அன்புச் சுனைகள் எப்படியோ வற்றிவிட்டன. அந்த வறட்சியிலிருந்து காய்ந்த எரிந்த துகள்கள் பறக்கின்றன. புதிய புல் பச்சைகள் வளர முடியாத உரமிடூந்த வெள்ளை மணலாக அது ஆகிக் கொண்டு வருகிறது.

இத்தனைக்கும் இவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். ராதா கோலாலும்பூரில் ஒரு பிரபலப் பொருளகத்தில் அதிகாரியாக இருந்தாள். சிவமணி கம்ப்யூட்டர் கம்பெனி ஒன்றில் உயர் அதிகாரியாக இருந்தான். ராதாவின் பொருளகத்தில் அவனுக்குக் கணக்கு. அங்குதான் சந்தித்தார்கள். அந்த சந்திப்பில் மந்திரம் இருந்திருக்க வேண்டும். அவனைப் பற்றி வேறொன்றையும் அறிந்து கொள்ளாமலேயே அவனோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டாள்.

அவனை முதன் முறையாக ராதா வீட்டுக்கு அழைத்து வந்த போது சுந்தரமும் ஜானகியும் அவனை அன்பாகத்தான் வரவேற்றார்கள். ஆனால் சிவமணியின் பேச்சும் போக்கும் சுந்தரத்திற்குப் பிடிக்கவில்லை. சளசளவென்று பேசினான். எல்லா நேரமும் தன் வேலை, உத்தியோக உயர்வு, தன் நண்பர்கள், பங்குச் சந்தை, அதில் எப்படி விரைவாகப் பணம் புரட்டுவது என்பது பற்றிப் பேசினான். சுந்தரத்தைப் பற்றியோ அவரின் குடும்பம் பற்றியோ ஒன்றும் அறிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் இருக்கவில்லை. ராதாவிடம் மட்டும் முற்றாக மயங்கிப் போயிருக்கிறான் என்று தெரிந்தது. அவளை "டார்லிங், டார்லிங்" என்று அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே அடிக்கடி அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான். ராதா அந்தப் பிடியில் கிறங்கிப் போயிருப்பதும் தெரிந்தது.

ராதா கண்டிப்பாகவும் ஒழுக்கம் போதிக்கப்பட்டும் அளவான பாசத்தோடும் வளர்க்கப் பட்டவள். சுந்தரம் பிள்ளைகளிடம் பாசமாக இருப்பாரே தவிர கொஞ்சுவது அதிகம் இல்லை. இப்படிக் குடும்பத்தில் மிதமான, மிகைப்படுத்தப்படாத, வௌிப்படுத்தப் படாத பாசம் அவளுக்கு ஒரு குறையாகக் கூட அமைந்து விட்டிருக்கலாம். இப்போது இங்கே இன்னொரு ஆண் கட்டுப்பாடில்லாமல், வெட்கப்படாமல் வௌிப்படையாகக் கொஞ்சுகிறபோது தந்தையிடம் கண்ட குறையை நிறைவு செய்து கொள்ளுகிறாள் என்று அவருக்குத் தோன்றியது. இதைத் தவிர இந்த சிவமணியென்கிற ஆண்பிள்ளையிடம் இவள் கண்ட சிறப்புக்கள் அதிகமாக இருக்க முடியாது.

ஜானகிக்கும் அவனைப் பிடிக்கவில்லை. ராதாவும் சிவமணியும் திரும்பப் போனபிறகு அதை வௌிப்படையாகவே சுந்தரத்திடம் சொன்னாள்.

"ஏன் பிடிக்கல உனக்கு?" என்று கேட்டார் சுந்தரம்.

"என்ன மாதிரி ஜனங்களோ தெரியிலிங்க. அவனோட சொந்தக்காரங்க யாரையும் நமக்குக் கொஞ்சங்கூட அறிமுகமில்ல. முன்ன பின்ன கேள்விப்படாத ஆளுகளா இருக்காங்க" என்றாள். அப்படியானால் அவளுக்கு உறுதியான காரணங்கள் இல்லை. தான் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லாமல் போனது, முன்பின் தெரியாத ஒருவன் தன் அனுமதிக்குக் காத்திராமல் தன் சொத்தை அபகரித்துப் போகும் உணர்வு இவைதான் காரணம் என்று தெரிந்து கொண்டார்.

"இதையெல்லாம் இப்ப நெனச்சி என்ன பிரயோஜனம் ஜானகி? உன் பெண்ணோட கண்களக் கவனிச்சியா? அவன் முகத்திலேயே அது நெலச்சிப் போச்சி. அந்தக் காதல்ல இருந்து அவள மீட்க முடியாது. அதோட அவ படிச்ச பொண்ணு. பட்டதாரி. அவளுடைய கணவனத் தேர்ந்தெடுக்கிற அளவுக்கு அவளுக்குப் புத்தியிருக்காதா?" என்றார்.

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது! பட்டப் படிப்பு படிச்சிட்டா எல்லாந் தெரிஞ்சதுன்னு அர்த்தமா? வாழ்க்கையில அனுபவப்பட வேண்டாமா? நான் அவளுக்குப் புத்தி சொல்றேன். என் பேச்சக் கேப்பா!" என்றாள் ஜானகி.

கேட்கவில்லை. அடுத்த முறை வீட்டுக்கு வந்த போது ராதாவைத் தனியாக அழைத்து ஜானகி பேசினாள். கட்டினால் அவனைத்தான் கட்டுவேன் என ஒரே போடாகப் போட்டுவிட்டாள் ராதா. அவன் அன்போடு நடந்து கொள்ளுகிறான். அவள் சொல்வதையெல்லாம் மதிக்கிறான். எந்நாளும் அவளுடனேயே குழையக் குழைய வருகிறான். தடபுடலாக உடுத்துகிறான். தன்னுடைய அந்தரங்க விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக நீதான் என் தேவதை என்று சொல்லிவிட்டான். அவளைத் தான் பூஜிக்கின்ற பீடத்தில் உயர்த்தி வைத்துவிட்டான். இந்த நிலையில் நிர்தாட்சண்யமாக, நடுநிலையாக அவனை எப்படி எடை போட முடியும் அவளால்? ஜானகி தோற்று விட்டாள்.

திருமணம் பேச அவன் பெற்றோர்கள் வந்தபோது தடங்கல்கள் நிறைய வந்தன. தங்கள் பிள்ளையைப் போலவே அவர்களும் அவர்களைப் பற்றியே நிறையப் பேசினார்கள். "எங்க சொந்தக்காரங்க ஏராளம் பாருங்க! உலகம் பூரா இருக்காங்க. என் தம்பி ஆஸ்த்திரேலியாவுல செட்டில் ஆகியிருக்கு. சிவமணிக்குப் பொண்ணக் குடுக்க காத்திக்கிட்டு இருக்காங்க. இவனுக்குத்தான் குடுத்து வைக்கில!" என்று அவன் அம்மா பிரகடனப் படுத்தி, போனால் போகிறதென்று இதற்கு உடன்பட்டதை மறைக்காமல் சொன்னாள். பின்னர் கொஞ்சமும் தயங்காமல் வரதட்சணையைப் பற்றியும் கேட்டாள் அந்த அம்மா.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரம் அந்த இடத்தில் மட்டும் உறுதியாகத் தௌிவாகச் சொன்னார். "அம்மா, நான் வரதட்சணை கொடுக்க மாட்டேன். அந்தப் பேச்சையே எடுக்க வேணாம். பொண்ணுக்கு நாங்க கொஞ்சம் பணம், நகைகள் தனியா வச்சிருக்கிறோம். அதக் கொடுப்போம். ஆனால் அது எவ்வளவுன்னு நீங்க கேக்கிறதும் நாகரிகமில்ல, நாங்க சொல்றதும் நாகரிகமில்ல!" என்றார். சம்பந்தியம்மாள் அடங்கிப் போனாள். ஆனால் அவள் முகம் தொங்கிப் போனது.

ஆனால் திருமண சமயத்தில் பல விஷயங்களில் அவள் அவர்களை நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். திருமணத்தன்று அவள் ஆர்ப்பாட்டம் சொல்லிமுடியவில்லை. ஆனால் சுந்தரமும் ஜானகியும் காரியம் கெடக்கூடாது என ஒத்துப் போனார்கள்.

திருமணம் முடிந்த ஓராண்டு அவர்கள் வாழ்க்கை இன்பமாகத்தான் இருந்தது. அப்புறம் பரமா கருத்தரித்துப் பிறந்தான். அதன் பின் சின்னச் சின்ன விரிசல்கள் ஆரம்பித்தன. சிவமணி பங்கு மார்க்கெட்டில் திடீர் பணக்காரனாக ஆசை கொண்டு கொஞ்சம் பணத்தை இழந்தான். சுந்தரம் கொடுத்துச் சரிகட்டினார். மீண்டும் அவனுக்குப் பணமுடை வந்தபோது சுந்தரம் மறுத்துவிட்டார். ராதா தன் சேமிப்பிலிருந்து கொடுத்தாள். அதற்கப்புறம் அப்படிக் கொடுக்க அவள் தயங்கியபோது சண்டைகள் தொடங்கின. அப்புறம்தான் இந்த அடிதடிக் கொடுமை.

*** *** ***
பரமாவைத் தூங்கப் போட்டுவிட்டு ராதா ஹாலில் வந்து உட்கார்ந்தாள். உடை மாற்றி இரவு டிரஸ் போட்டிருந்தாள். மேக்கப் கலைந்து எண்ணெய் முகமாக இருந்தாள். ஜானகியும் எல்லாவற்றையும் கழுவித் துடைத்துவிட்டு அங்கு வந்து உட்கார்ந்தாள். சுந்தரம் தொலைக்காட்சியை அடைத்தார்.

"நீ வந்திருக்கிறது உன் புருஷனுக்குத் தெரியுமா அம்மா?" என்று கேட்டார்.

"தெரியாது. தன் அட்டகாசங்கள் முடிஞ்சதோட ஆள் தன் காரை எடுத்துக் கொண்டு வௌியே போயாச்சி!" என்றாள் ராதா.

"என்னம்மா பிரச்சினை உன் வீட்டில...?" என்று கேட்டார்.

"எல்லாம் எப்போதும் உள்ள பிரச்சினைதான் அப்பா! அந்த மனுஷன் வரவர மிருகமாகிகிட்டு வர்ராரு. கொஞ்சம் விவகாரம் வந்திட்டா கைய நீட்டிட்றாரு!"

"என்ன விவகாரம், புதுசா?"

"என்னமோ புதுசா ஒரு பிஸ்னஸ்ல பணம் போடப் போறாராம். அதுக்கு என் சேமிப்பில இருக்கிற பணம் வேணுமாம். நான் முடியாதின்னேன். அதுக்குப் பலவிதமான ஏச்சு பேச்சு. அது முத்தினவொண்ண கையில பிடிச்சித் தள்றது, அறையிறது! நான் என்ன அவருக்கு வேலைக்காரியா, அடிமையா இதெல்லாம் ஏத்துக்கிட்டு போறதுக்கு?" கண்களை கசக்கிக் கொண்டாள்.

"என்ன மாதிரி ஜென்மம் இந்த மனுஷன்? அவங்க அப்பா அம்மா வளர்த்த வளர்ப்பு அப்படி. ஆந்த ஜனங்கள அப்ப இருந்தே எனக்குப் பிடிக்காது" என்று தான் முன்னால் சொல்லமுடியாமல் மறைத்து வைத்திருந்த குறைகளைக் கொட்டித் தீர்த்தாள் ஜானகி.

"அவங்க அம்மாகாரி மாசத்துக்கு ஒருதடவ வந்ததிர்ராம்மா ஊட்டுக்கு. வந்து என்ன தூபம் போடுவாளோ தெரியில. அவ போனவுடனே இந்த மனுஷன் என்னக் கறிக்க ஆரம்பிச்சிடுவாரு!" என்றாள் ராதா.

சுந்தரம் யோசித்துச் சொன்னார். "நான் உனக்கெதிரா பேசிறதா நெனைக்காதம்மா. உன் புருஷன் முரடனா மாறிக்கிட்டிருக்கான் அப்படிங்கிறத ஒத்துக்கிறேன். ஆனா நீ கொஞ்சம் அடங்கிப் போய் விட்டுக் கொடுத்து மாத்தலாமில்லியா? குடும்ப ஒத்துமை முக்கியம் இல்லியா? இப்படி கோவிச்சிக்கிட்டு வீட்ட விட்டு வந்திட்டா விஷயம் முத்திப் போய் ஒட்ட முடியாத அளவுக்கு ஒடஞ்சிடுமே அம்மா!"

ராதா சீறினாள். "அந்த 'பாஸ்டர்டோட' நான் இனிமே இருந்து குடும்பம் நடத்த முடியாது அப்பா. முடியவே முடியாது. அவன் மனுஷன் இல்ல மிருகம்!"

அந்தச் சொற்களின் கடுமை அவரைத் தாக்கிற்று. இவளை இத்தனை மென்மையாக வளர்த்திருந்தும் இத்தனை வன்முறை இவள் மனத்திலும் வாயிலும் எப்படி வந்து விளைந்தது?

"ராதா! எல்லா மனுஷருக்குள்ளேயும் மிருகங்கள் இருக்கத்தான் செய்யுது. அந்த மிருகத்த எழுப்பிறதுக்கு எடங் குடுக்கும் போது அது எழும்பி வந்து சீறுது. இப்ப நீ ஒரு கொடிய பாம்பாகச் சீறலியா? அப்படித்தான். இந்த முகந் தெரியாத, இனந்தெரியாத மிருகங்கள நாம் அடிச்சித் துவச்சி அடக்க முடியாதம்மா. அடிக்க அடிக்க அது புதுசா உயிரெடுத்து இன்னும் சீறும். உன்னக் கொல்ற வரையில அது உன்னத் துவம்சம் செய்யும். "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி"ன்னு திருக்குறள்ள இருந்து நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்ல..." சிறு வயதில் தன் குழந்தைகளுக்குத் தமிழும் திருக்குறளும் அவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது இப்போது ஞாபகப் படுத்தக் கை கொடுத்தது.

"அப்பா! அந்த மனுஷனப் பத்திப் புரியாம பேசிறிங்க. நான் அவன மிருகம்னு சாதாரணமா சொல்லல. மொதல்ல வாயால திட்டினாரு. பொறுத்துக்கிட்டேன். அப்புறம் பிடிச்சித் தள்ள ஆரம்பிச்சாரு. பொறுத்துக்கிட்டேன். அப்புறம் அடி, கிள்ளல். இப்ப என்ன நடக்குது தெரியுமா அப்பா?"

நைட் டிரசைக் கொஞ்சம் தூக்கி துடையைக் காட்டினாள். தளும்புகள். திட்டுத் திட்டாக... "சிகிரெட்டால சூடு வைக்கிறாருப்பா..." விம்மி அழுதாள்.

மனம் நைந்தது. எப்படி மனிதன் முற்றாக இப்படி மிருகமாகிவிட முடியும்? மிருகத்திலும் இது கொடிய மிருகம். இன்னொரு சக மிருகத்தைச் சித்திரவதை செய்கின்ற கொடிய மிருகம். இரையாக ஒரு பறவையை தாடையில் பற்றியவுடன் பகுதி பகுதியாக அதை நீண்ட நேரம் சித்திரவதைச் செய்து கொல்லுகின்ற விஷப் பாம்பு.

தன் உள்ளத்திலும் சினம் சீறி எழுவது தெரிந்தது. இப்படிச் செய்யப் பட்டால் தான் கூட கத்தியைத் தூக்கி தன் எதிராளியைக் கொல்ல முடியும் என்று தோன்றியது. மருமகன் இப்போது தன் முன் இருந்தால் "அட மிருகமே" என்று சீறி அவனை அடித்திருப்பேன் என்று தோன்றியது. உடலில் நோய் இருந்தாலும், இதனால் எனக்குத்தான் ஆபத்து என்று தெரிந்தாலும் அவற்றையெல்லாம் அந்தக் கணத்தில் மறந்துவிட்டு பழி வாங்கும் உணர்ச்சிக்குத் தான் முற்றாக ஆட்படமுடியும் எனத் தெரிந்தது.

ஆனால் அந்த எதிர்ச்செயலும் ஒரு மிருக உணர்வுதான். மிருகங்கள்தாம் கொஞ்சமும் யோசிக்க இடமில்லாமல் தங்கள் தற்காப்புக்காக வெறும் உணர்ச்சி நிலையில் எதிர்க்கின்றன. ஆனால் அறிவு நிலையில் மனிதன் அப்படிச் செய்யக் கூடாது. தன்னுடைய எட்ரினலின் சுரப்பிக்கு அவன் முற்றாக அடிமைப்பட்டுப் போக முடியாது. நீதி என்று ஒன்று இருக்கிறது. கொள்கை என்று ஒன்று இருக்கிறது. ஒழுக்கம் என்றும் வாழ்க்கை நெறி என்றும் உள்ளன. இவற்றுக்குக் கீழ்தான் மனிதன் செயல்படவேண்டும்.

57 வயதில் தனக்கு இது புரிகிறது. ஆனால் 33 வயதில் வாழ்க்கையின் சுகங்களை உணர்ச்சி நிலையில் உடல் ரீதியில் அனுபவிக்கக் காத்திருக்கும் மகளுக்கு அதைச் சொல்ல முடியுமா?

விம்மும் மகளை ஜானகி அணைத்துப் பிடித்திருந்தாள். சுந்தரம் மௌனமாக இருந்தார். அவள் விம்மல்கள் தணிந்த நேரத்தில் சொன்னார்.

"ஏம்மா! இந்த விஷயம் ரொம்ப முத்திப் போச்சின்னு தெரியுது. இத இப்படியே விட்டுட்டா குடும்பம் செதஞ்சி போயிடுமே. பிள்ளை ஒண்ணு இருக்குங்கிறதும் ஞாபகத்தில வச்சிக்க. ஆக உங்கள சமரசப் படுத்தி வைக்க நாங்க ஏதாவது செய்ய முடியுமா? சிவமணியக் கூப்பிட்டு நான் சீரியசாப் பேசிப் பாக்கட்டுமா?"

கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்: "அது இனிமே நடக்காதப்பா. சமரசம் பண்ணி வைக்கிற கட்டத்தையெல்லாம் தாண்டியாச்சி. அவரு தயாரா இருந்தாலும் நான் தயாரா இல்ல. என்னால முடியாது. அந்த நரகத்தில இருந்து நான் விடுபடணும். எனக்கு விடுதலை வேணும்!"

"ப்படின்னா...?"

"விவாக ரத்துக்கு மனுச் செய்யப் போறேம்பா!"

மீண்டும் உள்ளத்தில் சம்மட்டி அடி விழுந்தது. எத்தனை எளிதாகச் சொல்லுகிறாள்! எவ்வளவு பெரிய விஷயத்தை எத்தனை சிறிய சொற்களில் சொல்லுகிறாள்!

விவாக ரத்து இந்த நவீன காலத்தில் எல்லா சமுகங்களுக்கிடையே நடக்கிறதுதான் ஆனால் குடும்ப வாழ்வில் அந்த நிகழ்ச்சி ஏற்படுத்துகின்ற பூகம்பங்கள் சாதாரணமானவையல்ல. அதுவும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடந்த ஒரு குடும்பத்தில் இப்படி நடக்கும் போது... நீதிமன்றத்தில் ஏறி, குடும்ப ரகசியங்களைப் பொத்தாம் பொதுவில் அலசி, சொத்துப் பகிர்வுக்குப் போராடி, குழந்தைகளைப் பிரித்தெடுக்க சட்ட நுணுக்கங்கள் தேடி... இதற்காகவா ஊரறியப் பந்தல் போட்டு, மேளம் கொட்டி, அக்கினி வலம் வந்து, ஆயிரம் தெய்வங்களைத் துணைக்கழைத்து, நூறு சத்தியங்கள் செய்து திருமணம் செய்து கொள்வது?

தானும் ஜானகியும் வாழ்வில் எவ்வளவோ சண்டைகள் போட்டாயிற்று. ஆனால் மண முறிவு என்பதை நினைத்துக் கூடப் பார்ததில்லை. இளவயதில் வீட்டை விட்டுப் போய் ஓரிரு இரவுகள் கோபத்தில் வௌியே கூட இருந்து விட்டு வந்திருக்கிறார். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அறிவும் நிதானமும் எந்நாளும் உணர்ச்சிகளை வென்றிருக்கின்றன. தங்களுக்குப் பிடித்தமான ஆசைகளை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அவர்கள் இருவரும் வென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெண் முறிவுக்குத் தயாராக இருக்கிறாள். விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறாளா?

"ஏம்மா! இதனால ஏற்படக் கூடிய பின் விளைவுகள யோசிச்சிப் பாத்தியாம்மா?"

"பின் விளைவுகள் வர்ர மாதிரி வரட்டும். அதையெல்லாம் அனுபவிச்சித்தான் ஆகணும். ஆனா அதையெல்லாம் யோசிச்சி நான் காலம்பூரா இந்த பாஸ்டர்ட் கிட்ட அடிமையா இருந்து அடியும் உதையும் வாங்கிறதா அப்பா? இப்ப இவர் கிட்ட பணிஞ்சி போனா இன்னும் மோசமாத்தான் போவாரு! அப்ப எனக்கு எப்ப விடிவு? முடியாதப்பா, இனிமே முடியவே முடியாது!"

இல்லை. இவள் விளைவுகளை இன்னும் யோசிக்கவில்லை. தன் நலனைத்தான் யோசிக்கிறாள். தான் துன்பப் படக் கூடாது என்றுதான் நினைக்கிறாள். தன் குழந்தையின் துன்பமும் தன் கணவனின் துன்பமும் தன் பெற்றோர்களின் குடும்ப மானமும் இவளுக்கு இந்தக் கணத்தில் பெரிதாகத் தெரியவில்லை. தன் நலனுக்கு முன்னால் வேறு எதையும் இவள் பொருட் படுத்தவில்லை.

ஆனால் "இந்தக் காரணங்களையெல்லாம் எண்ணி நீ துன்பப் படு" என்று யோசனை சொல்ல நான் யார்? குழந்தையின் நலனுக்காகவும் குடும்பத்தின் நலனுக்காகவும் உன் தன்னலத்தைத் துறந்துவிடு என்று ஒரு தியாகத்தை அவள் மீது திணிக்க நான் யார்?

நவீன காலத்து வாழ்க்கையைத் தன்னலம்தான் இயக்குகிறது. அவள் இயங்குகின்ற சமுதாயத்தில் தனி மனிதரின் முக்கியத்துவமும் பெண் விடுதலையும் பெண் முன்னேற்றமும்தான் கருப் பொருள்களாக இருக்கின்றன. ஜானகியும் அவரும் பிறந்த தலைமுறையோடு குடும்பம் சமுதாயம் பொது நலம் என்ற உணர்ச்சிகள் முடிந்து விட்டன.

சிவமணியும் இந்தத் தலைமுறை ஆண்மகன்தான். முன்னேறு, உன்னை வளர்த்துக்கொள், கல்வி பெருக்கு, பொருள் பெருக்கு என்ற உந்துதல்களைத் தன் சூழ் நிலையில் பெற்று வளர்ந்தவன். அவன் ஆசைப்படும் அளவுக்கு, அவன் நண்பர்கள் அடைந்த அளவுக்கு அவனுக்கு முன்னேற்றம் இல்லாத போது அவனுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. வாழ்க்கையில் பணம் சேர்ப்பதைத் தவிர வேறு லட்சியங்கள் இருக்கின்றன என்பது அவனுக்குத் தெரியவில்லை. கையில் பணம் நிறைய இல்லாவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என நினைக்கிறான். அந்தப் பணத்தைப் பெற பல குறுக்கு வழிகளை நாடுகிறான். அது அவனிடமிருந்து நழுவிப் போகும் போது அவன் நெஞ்சில் பயமும், கோபமும் எரிச்சலும் நிறைகின்றன.

சுந்தரம் ஜானகியைத் தானாகப் பார்த்து விரும்பிப் பேசிப் பழகிக் காதலித்துத்தான் மணந்து கொண்டார். அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தபோது அவர் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர். முன்னூறு நானூறு வெள்ளிக்கு மேல் சம்பளம் பார்த்ததில்லை. அந்தக் காசில் சின்ன வீட்டில் சிக்கனமான வாழ்க்கைதான் வாழ முடிந்தது. ஆனால் அது செழிப்பான வாழ்க்கை. அன்பு கொடூத்த வாழ்க்கை.

ஜானகி அடங்கி கணவனுக்கு அடிமை போல் நடந்தாள். ஆனால் அவர் அவளை அடிமையாக நடத்தவில்லை. பல விஷயங்களில் ஜானகியையே எஜமானாக நடக்கவிட்டார். அவள் விடுதலை கேட்கவில்லை. இவராகவே அதைக் கொடுத்திருந்தார். அந்த வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. பண்பாட்டோடு இருந்தது. இவர்கள் எந்தக் காலத்திலும் பொருளாதார உச்சத்தில் இல்லாவிட்டாலும் அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயம் அவர்களை மரியாதையாகப் பார்த்து அன்போடு பேசியது.

ஏதாகிலும் காரணத்தால் அந்த மரியாதையையும் அன்பையும் மற்றவர்கள் அவர்களுக்குக் காட்டவில்லை என உணர்ந்தால் அவர்கள் அதை வற்புறுத்திப் பெறவில்லை. அவர்கள் எந்தக் காலத்திலும் எந்த விஷயத்திலும் முன்னுக்கு நிற்க வேண்டும் என்று முயன்றதில்லை. ஆனால் பல வேளைகளில் அவர்கள் முன்னுக்கு நிறுத்தி வைக்கப் பட்டபோது தங்கள் கடமையைப் பொறுப்புடன் ஆற்றியிருக்கிறார்கள்.

அந்தப் பண்புகள் இந்த இளைய தலைமுறையைப் போய்ச் சேரவில்லை. குடும்பம் தந்த பண்புகளை விட வௌியில் உள்ள ஆடம்பர உலகம் தந்த பண்புகளே இவர்களிடம் பதிந்துள்ளன. தங்கள் சூழ்நிலையிலிருந்து பலவற்றைத் தாங்களே கற்றுக் கொண்டார்கள். மிகச் சிறு வயதிலேயே பெற்றோர்களை அந்நியப் படுத்திக்கொண்டு தங்கள் சகவயது மக்களோடு இணைந்து வாழ்க்கையின் எல்லாவித இன்பங்களையும் அனுபவிக்கத் துடித்து, பின் அதனால் - இப்போது ராதாவின் வாழ்க்கையில் நடப்பது போல - எல்லாவிதத் துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். வேண்டாம் என்று சொல்வது, நீங்கியிருப்பது, ஒதுங்கியிருப்பது இவர்களுக்குப் பழக்கமில்லை. கொடு என்பதும் அனுபவிப்பதும் முழுகுவதும் பின்னர் துன்பப்படுவதும் இவர்கள் வாழ்க்கையாக இருக்கிறது. "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இல" என்பது இவர்களுக்கு ஒரு காலும் புரியாது.

ஜானகி என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்திருந்த வேளையில் சுந்தரமும் சொல்லிழந்து உட்கார்ந்திருந்தார். அந்த மௌனத்தில் இத்தனை நேரம் அடங்கியிருந்த வயிற்றின் நோய் தலை தூக்கிற்று. எங்கோ ஆழத்தில் ஒரு சிறிய தீப்பொறியாக ஆரம்பித்தது விறு விறுவென்று பற்றி எரிமலையாக வெடித்தது. அம்மா என்று வாய்விட்டுக் கத்த வேண்டிய நேரம்தான். ஆனால் அதற்குப் பதிலாக மௌனத்தைத் தூள் தூளாக உடைப்பது போல் டெலிபோன் மணி அலறியது. வயிற்றில் வலி கப்பென்று அடங்கிவிட்டது.

வயிற்றை லேசாகத் தடவியவாறு அவர் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தார். ஒன்றே கால். இந்த நடு நிசியில் யார் போன் பண்ணுவார்கள்?

மனத்தின் அடியில் யாராக இருக்கலாம் என்ற உத்தேசம் இருந்தது. ராதாவின் முகத்திலும் ஜானகியின் முகத்திலும் இருந்த கலவரத்தைப் பார்த்த போது அவர்கள் உத்தேசமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தது.

டெலிபோனைக் காதில் வைத்து "ஹலோ" என்றார்.

"ராதா அங்க வந்தாளா?" ஒரு ஹலோ இல்லை, வணக்கம் இல்லை, யார் பேசுவது என்ற கேள்வி இல்லை. அவனுடைய அவசரம்தான் அவனுக்குப் பெரிது.

"யார் சிவமணியா பேசிறது?"

"சொல்லுங்க மாமா! வந்தாளா?"

"ஆமாப்பா. இங்கதான் இருக்கா!"

"ப்ளடி, ஸ்டுப்பிட் வூமன். ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லாம என் பிள்ளையையும் தூக்கிடடுப் போயிட்டா!"

அவன் கோபத்தோடு அவர் போட்டி போட விரும்பவில்லை. "உன்கிட்ட நல்ல முறையில சொல்லிட்டுப் புறப்பட்ற சூழ்நிலை உன் வீட்டில இல்லைன்னு நெனைக்கிறேன்!" என்றார் அமைதியாக.

"அவளப் பேசச் சொல்லுங்க!"

சுந்தரம் போனைப் பொத்திக் கொண்டு ராதாவைப் பார்த்தார். "சிவமணி பேசணும்கிறதும்மா!"

ராதா கையை பலமாக ஆட்டினாள். மாட்டேன் என்றாள். முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சுந்தரம் போனில் சொன்னார்.

"அவ இப்ப இங்க இல்லப்பா. தூங்கிட்டான்னு நெனைக்கிறேன்!" பொய்தான். அந்தத்தருணத்தில் ஏன் பொய் இந்த வாய்க்குள் வந்தது எனத் தெரியவில்லை. நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம் என்பதாலா? "புரை தீர்ந்த நன்மை பயக்கும்" என்பதாலா?

"எனக்குத் தெரியும் மாமா! எங்கிட்ட பேசமாட்டேங்கிறாள்ள? ஓக்கே. நாளக்கு ராத்திரி புறப்பட்டு நான் அங்க வர்ரேன். அவ என்ன செஞ்சான்னு உங்க கிட்ட சொல்றேன். உங்க மக செஞ்சது சரிதானான்னு நீங்களே சொல்லுங்க!" போனை வைக்கப் போனவன் திடீரென்று கேட்டான்: "பிரேம் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்காம்பா. அசந்து தூங்கிறான்"

"மாமா! யூ ரிமெம்பர் திஸ். உங்களுக்கும் சொல்றேன், அவளுக்கும் சொல்றேன். பிரேம் என் பிள்ளை. எங்கிட்ட இருந்த பிரேம பிரிக்க நெனைச்சான்னா நான் கொலைகாரனாயிடுவேன்னு சொல்லுங்க!" படார் என்று போனை வைத்தான்.

சுந்தரம் வயிற்றில் அந்த வலி எரிமலை இன்னொருமுறை வெடித்துக் குழம்பு கக்கி அடங்கியது. முகம் சுளித்து வயிற்றைப் பிசைந்தார்.

"என்னப்பா?" என்று கேட்டாள் ராதா. அவள் தன் வலியைப் பற்றிக் கேட்கவில்லை. டெலிபோன் உரையாடலைப் பற்றிக் கேட்கிறாள் என்பதை அவர் ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

வயிற்றைப் பிசைந்தவாறு சொன்னார். "மணி நாளைக்கு ராத்திரி இங்க வருதாம்மா. பிரேம் அவரோட பிள்ளைங்கிறத ஞாபகப் படுத்தச் சொன்னிச்சி!"

"ஆமா. அதில கொறச்சல் இல்ல! பத்து மாசம் சுமந்து பெத்துப் போட்டாரில்ல!"

இன்னொரு எரிமலை வயிற்றுக்குள் வெடித்து குழம்பு வடூந்து தணிந்தது. என் வேளை வந்து விட்டதா? இத்தனை விரைவாகவா? மத்தியானம் தண்டிக்கப்பட்டு இரவுக்குள் தண்டனை நிறைவேற்றமா?

"ஜானகி! நான் போய் படுக்கிறேன். உடம்பு சரியில்ல..." படுக்கை அறையை நோக்கி நடந்தவர் திரும்பி ஜானகியைப் பார்த்துச் சொன்னார். "ஜானகி. நேரமாச்சி வந்து படு. ராதாவையும் படுக்க விடு. களைப்பா இருக்கும்."

ஜானகி அரை குறையாகத் தலையாட்டினாள்.

ஜானகிக்குத் தெரியாது. நான் கூப்பிடும் அர்த்தம் புரியாது. இந்தத் துயரம் கப்பிய சூழ்நிலையில் என் சூசகங்கள் புரியா.

ஜானகி, சீக்கிரம் படுக்கைக்கு வா. நான் செத்துப் போகும் வேளை வந்துவிட்டது. உன்னிடம் தனிமையில் சொல்லி விடைபெற்றுக் கொள்ள வேண்டும். சீக்கிரம் வா என் அன்பு மனைவியே! உன் மகள் துயரத்தை அவள் மெதுவாக அனுபவிக்கட்டும். உனக்கென தனித்துயரங்கள் நான் ரகசியமாய் வைத்திருக்கிறேன். உன்னிடம் தந்து நான் போக வேண்டும். வா. விரைந்து வா.
----


அந்திம காலம் - 3


ஆனால் ஜானகி நெடு நேரம் வரை வரவில்லை. மகளுடன் பேசியவாறே இருந்தாள். மகளின் காயப்பட்ட மனத்தின் நோவுகளுக்கு வடிகால் தேவைப் படுகின்றது. தாயின் மடியில் அதனைக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். இங்கே சுந்தரத்தின் உண்மையான உடல் நோவுக்கு அன்பு ஒத்தடம் கொடுக்க வேண்டிய மனைவியை மகள் பறித்துக் கொண்டு விட்டாள்.

சுந்தரத்துக்குத் தலைக்குள் மின்னல்கள் வெட்டின. வயிறு குமட்டியது. நெஞ்சுக்குள் ஏறி தொண்டை வரை வந்தது. குளியலறைக்கு ஓடி கழுவு பேசினில் குனிந்து குமட்டினார். ஒன்றும் வரவில்லை. எச்சில் மட்டும் துப்பினார். அந்தக் குமட்டலின் தீவிரத்தில் கண்களில் கண்ணீர் வந்தது. நெஞ்சு எரிந்தது. குழாயைத் திறந்து முகம் கழுவித் துடைத்தவாறு கண்ணாடியில் பார்த்தார்.

முகம் கருத்துத் தொங்கிக் கிடந்தது. கண்களைச் சுற்றிக் கருமை இருந்தது. முகத்தில் வெள்ளை மயிர்கள் துளிர்த்திருந்தன. பார்க்கப் பாவமாக இருந்தது. சென்ற வருடம் வரை எப்படி இருந்தேன்! "நீங்க ரிட்டையராகப் போறிங்களா? அப்படி வயசே தெரியலியே" என்று எத்தனை பேர் சொன்னார்கள்! இந்த இரண்டாண்டுகளுக்குள் இத்தனை மாற்றங்களா?

மெதுவாகப் படுக்கைக்கு வந்து சாய்ந்தார். மெதுவாகச் சுழலும் காற்றாடியிலிருந்து வரும் காற்றின் வருடல் இதமாக இருந்தது. மெத்தையின் தாங்கல் சுகமாக இருந்து. மிருதுவான தலையணையின் அணைப்பு ஆறுதலாக இருந்தது. ஆனால் மனம் ஜானகிக்கு ஏங்கியது. "ஏங்க, என்ன செய்யுதுங்க உங்களுக்கு?" என்ற படபடப்பு மிக்க கேள்விக்கும் அவள் கைகள் நெஞ்சை நீவிவிடும் சுகத்துக்கும் ஆசைப்பட்டது. ஆனால் ஜானகி மகளின் துயரத்துக்கு பாரந்தாங்கியாக அங்கேயே இருந்தாள்.

தொண்டையில் புளிப்புணர்ச்சி இருந்தது. வயிற்றின் பக்க வாட்டில் லேசான மழுங்கிய வலி இருந்தது. கல்லீரலா? சிறுநீரகமா? குடல் வாலா? எந்த உள் உறுப்பு இப்போது புண்ணாகிப் போனது? என்ன குற்றம் செய்து விட்டேன் இந்தத் தண்டனைக்கு? அதுவும் இப்படி அடுக்கடுக்கான தண்டனைகளுக்கு? எந்தத் தெய்வம் இப்படி என்னைத் தருணம் பார்த்துக் கொல்லுகிறது?

சுந்தரம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான். ஆனால் மனிதனால் எக்காலத்திலும் தன் குறுகிய மூளைக்குள் புரிந்து கொள்ள முடியாத பிரம்மாண்டமான சக்தி என்ற அளவில்தான் தெய்வத்தை நம்பினார். காடன் மாடன் கருமாரி என்ற தெய்வங்கள் மேல் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. கோவில்களிலும் அவர் சடங்குகளைச் சமூக இயல்பு கருதி இயந்திரமாகச் செய்வது தவிர நம்பிக்கையுடன் செய்ததில்லை. கோவில்களில் கண்மூடி மனம் குவித்த நேரங்களில் அந்த உருவமில்லாத அறிதற்கு அப்பாற்பட்ட சக்திக்குத்தான் அவர் வணக்கமும் நன்றியும் அர்ப்பணித்திருக்கிறார். கருவறையில் உள்ள உருவத்திற்கு அவர் எந்த நாளும் பயந்ததில்லை.

அதுதான் குற்றமோ? தான் நம்ப மறுத்த தெய்வங்களில் ஒன்று தனக்குப் புத்தி போதிக்க முடிவு செய்து விட்டதோ? தான் மரியாதை செய்ய மறுத்துவிட்ட தேவதை ஒன்று தன்னை நின்று கொல்லுகிறதோ? "உன் மூளையில் தெய்வ பக்தி வராததால் புற்றுப் பிடித்துச் சாவாயாக!" என்று கொடிய தெய்வம் ஒன்று சபித்துவிட்டதோ?

மரண வேளையில் வரும் பயங்கள் மனத்தைப் பிடித்துக் கொண்டன என்று உணர்ந்து கொண்டார். அந்தப் பயத்தை மறுக்க விரும்பவில்லை. மறுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை. சரி! நான் பிடிவாதக்காரனில்லை. தெய்வங்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். எந்தத் தேவதையை நான் அவமதித்தேனோ அந்தத் தேவதை என்னை மன்னிக்குமாக. என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமோ செய்து விடுகிறேன். தெய்வம் இல்லை என்று சொல்லும் பிடிவாதம் என்னிடம் இல்லை.

இயற்கையாகவே 'நான் இருக்கிறேன்' என்று எந்தத் தெய்வமும் இதுவரை அவரை நம்ப வைத்ததில்லை. நம்பிக்கையாளர்கள் கதை கதையாகச் சொல்வது போல அவர் ஆபத்து வேளைகள் எதிலும் எந்தத் தெய்வமும் அவர் முன் வந்து தோன்றியதில்லை. அவர் கனவில் வந்து "எனக்கு ஆடு வெட்டிப் போடு" என்று சொன்னதில்லை. கோவில்களில் தீப தூபங்களுக்கிடையிலும், நாதஸ்வர மேளத்தின் ஒலிக்கிடையிலும் மந்திரங்களுக்கிடையிலும் எந்தத் தெய்வமும் அவரைப் பார்த்து "பக்தா" என்று சிரித்ததில்லை. சிலைகளின் அழகுணர்ச்சியில் அவர் லயித்திருக்கிறார். ஆனால் சிற்பம் என்ற நிலையிலிருந்து தெய்வம் என்ற நிலைக்கு அவர் நம்பிக்கை திரும்பியதிலலை.

என் மனம் அழுக்குகள் நிறைந்தது போலும்; ஆணவம் நிறைந்தது போலும்; அதனால்தான் தெய்வ நம்பிக்கை என்பது எந்த நாளும் என் உள்ளத்தில் நிலைக்க மாட்டேனென்கிறது என நினைத்துக் கொண்டார். அவரறிய எத்தனை பேர் தீவிர நாத்திகவாதம் பேசியிருந்து மதிய வயதில் மகா பக்தர்களாக மாறியிருக்கிறார்கள்! எத்தனை பேர் வாழ்க்கையைக் குடியென்றும் கூத்தியென்றும் மூர்க்கமான வெறியோடு அனுபவித்து விட்டு பின்னர் ஏதாவது ஒரு சாமியாரிடம் சரணடைந்து எல்லாம் துறந்து கைகட்டிச் சேவகம் செய்து காலம் கழிக்கிறார்கள்!

அவர் அறிவு தெரிந்த நாளிலிருந்து ஒருகாலும் விதண்டாவாதமாக நாத்திகம் பேசியது இல்லை. வாழ்க்கை இன்பங்களை அத்தனை மூர்க்கமான வெறியோடு அணுகியதும் இல்லை. அவர் வாழ்நாள் முழுவதும் மிதமானவராக அமைதியானவராக இணக்கமானவராக இருந்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் அவருடைய மனசுக்குள்ளேயே நடந்த மௌனப் போராட்டங்கள்தாம். ஜானகியிடம் கூட அவர் அதிகம் வாதம் பண்ணியதில்லை. அவள் கோயிலுக்கும் சடங்குகளுக்கும் வலியுறுத்திக் கூப்பிடும் நேரங்களில் முனுமுனுத்துக் கொண்டாவது போய் வந்திருக்கிறார்.

ஆனால் அவர் மனது பொய்களைத் தீவிரமாக மறுத்திருக்கிறது. தன் அறிவு நம்ப மறுத்த எதையும் அவர் மனசு நம்புவதாக நடித்ததில்லை. "தன்னஞ்சறிவது பொய்யற்க" என்று வாழ்ந்திருக்கிறார். அறிவு முதிராத பிள்ளை வயதில் செய்திருக்கும் குற்றங்கள் அல்லாமல் வயது வளர்ந்து அறிவில் தௌிவு வந்த பிறகு அவர் முடிந்த அளவு நேராகத்தான் வாழ்ந்திருக்கிறார். பல வெறிகள் மனத்தில் கொப்புளித்துக் கொப்புளித்து வந்திருந்தாலும் தனது பலவீனமான வேளைகளில் எல்லாம் அவர் சாய்ந்து விடாமல் இருந்திருக்கிறார்.

இளவயதில் ஆத்திசூடி படித்த நாட்களிலிருந்து அறமாக இருக்க வேண்டும் எனவும் சினம் ஆறுதல் வேண்டும் என்றும் இயல்வது ஈயவேண்டும் என்றும் எண்ணெழுத்து போற்ற வேண்டும் என்றும் ஊக்கம் கைவிடக் கூடாது என்றும் மனத்தில் எழுதி வைத்துக் கொண்டார். பின்னர் நன்னூலும் திருக்குறளும் படித்துப் பாடமும் செய்து கொண்டார். முயற்சியை நம்பினார். உறவு சுற்றம் என்பனவற்றுக்கு வரை முறைகள் வைத்துக் கொண்டார்.

பின்னர் திரு வி.க., மு.வ., கி.ஆ.பெ., அப்துற்றஹீம், தமிழ்வாணன் போன்றவர்களும் அவருக்கு வாழ்க்கையைப் பல்வேறு நிலைகளில் உணர்த்திக் குழப்பியும் தௌிவு படுத்தியும் விட்டார்கள். அறிவார்ந்த உரைகள் அவருக்குப் பிடித்தன. ஆனால் தெய்வ பயம் எந்த நாளும் அவருக்கு ஏற்படவில்லை. பக்தி இலக்கியங்களில் உள்ள உருக்க உணர்வும் அன்பும் மொடூயழகும் பிடித்தன. ஆனால் புராணங்கள் வேடிக்கைக் கதைகளாகவே தோன்றின. அவற்றின் மீது நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் பக்தியையும் ஒரு நாளும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அதுதான் பிழையோ? தான் பயந்து மரியாதை செலுத்தியிருக்க வேண்டுமோ? அறிவுக்கு முக்கியத்தும் கொடுத்து இந்த உலகை உண்மையில் ஆட்சி செலுத்தும் சக்தி மிக்க தெய்வங்களை மதிக்காமல் செருக்கினால் அவர்களை அவமதித்து விட்டேனோ? கடவுளர்களின் மேல் அசையாத நம்பிக்கை வைத்து தபசு செய்யும் முனிவர்களுக்கு அருள அவர்கள் தபசைக் கலைக்க வரும் செருக்குமிக்க அரக்கர்களைத் தெய்வம் தண்டிக்குமாமே! "ஹாஹ்ஹா" என்று சிரித்துக் கொண்டு கையில் கதை தூக்கி வரும் அசுரர்களை, தலையைச் சுற்றி ஒளிவளையம் உள்ள சட்டை அணியாமல் நிறைய நகைகள் போட்டுக் கொண்டு இடுப்புக்குக் கீழ் சேலையணிந்த பெண்முகம் கொண்ட கடவுளர்கள் தோன்றித் தண்டிப்பதை சினிமாவில் பார்த்திருக்கிறோமே! அது உண்மைதானோ? என் ஆணவத்தால் நான் அசுரன் ஆகி எந்த முனிவனின் தவத்தையாவது கலைத்திருப்பேனோ? போன பிறப்பில்...?

வலி தணிந்து உடல் சுகப்பட்ட இடைவேளையில் இந்த நினைப்புக்களினால் அவருக்குச் சிரிப்பும் வந்தது. பயத்தில்தான் என்னென்ன எண்ணங்களெல்லாம் வருகின்றன! ஆனால் நம்பக் கூடாது என்பதில் அவர் முரட்டுத் தனம் கொண்டவர் அல்ல. ஏ தெய்வங்களே! நான் உங்களுக்கு எதிரானவன் அல்ல. நான் அசுரன் அல்ல. முனிவர்கள் தவம் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. எந்த முனிவனின் தவத்தையும் நான் கலைக்க மாட்டேன். அப்படி ஒருவரைக் கண்டால் சில கணங்கள் வியப்போடு வேடிக்கை பார்த்துவிட்டு மரியாதையாக ஓசையில்லாமல் ஊறு செய்யாமல் அப்பால் போய்விடுவேன். ஓ தெய்வங்களே! என் மனம் திறந்திருக்கிறது. நீங்கள் வரலாம். என்னை நம்பிக்கைப் படுத்தலாம். ஓ தெய்வங்களே! நீங்கள் ஆட்கொள்ளுவதற்கு ஒரு ஆத்மா தேவையானால் நான் தயாராக இருக்கிறேன்.

தலைக்குள் இன்னொரு எரிமலையின் ஆரம்ப உறுமல் கேட்டது. அதை மனம் நிதானிப்பதற்கள் அது வெடித்தது. தலையில் மட்டுமல்ல, வயிற்றில், முதுகுத் தண்டில் ஒரு அரிவாள் வெட்டு விழுந்தது. இரண்டாகப் பிளந்தது. "அம்மா" என்று அவர் வாய்விட்டுக் கத்தியபடி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொண்டு இரண்டாக மடிந்து விழுந்த அந்த நேரத்தில் தற்செயலாகக் கதவைத் திறந்து உள்ளே வந்த ஜானகி "என்னங்க, என்ன ஆச்சு?" என்று பதறி அவர் தோள்களை அணைத்தாள்.

எரிமலைக் குழம்பு வழிந்து தணிந்தவுடன் அவர் தலைநிமிர்ந்து ஜானகியின் தோள்களில் சாய்ந்தார். முகம் வேர்த்திருந்தது. உடம்புச் சூடு ஏறியிருந்தது. கண்கள் செருகியிருந்தன. "ஏங்க, என்ன செய்யுதுங்க, ஏன் இப்பிடி இருக்கிங்க...?" என்று ஜானகி கலவரத்துடன் அடுக்கடுக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

மூச்சிளைக்கப் பேசினார். "வலி ரொம்ப கடுமையா போச்சி ஜானகி!" என்றார்.

"எங்கிட்ட நீங்க சொல்லவே இல்லைய... அன்னைக்கு டாக்டர் கொடுத்த மருந்து இன்னும் கொஞ்சம் இருக்க... சாப்படிறிங்களா?"

சரி என்றார். ஜானகி அவரைத் தலையணையில் சாய்த்துவிட்டுப் போய் சுடுநீரும் மாத்திரையும் கொண்டு வந்தாள். அவற்றை விழுங்கிச் சுடுநீரை உறிஞ்சியவுடன் வலி தணிந்தது போல் இருந்தது.

"எப்ப இருந்து இப்படி அவதிப் பட்றிங்க? என்ன கூப்பிட்டிருக்கக் கூடாது?" என்று ஜானகி கோபமாகப் பேசினாள்.

இனி இவளிடம் மறைத்து வைக்க முடியாது. இன்றிரவு பட்டென்று உயிர் போய்விட்டால் நான் பொய் பேசி துரோகம் செய்தவனாகி விடுவேன். என்னோடு வாழ்க்கையை முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பகிர்ந்து கொண்டவளிடம் நல்ல முறையில் சொல்லி விடை பெற்றுக்கொள்ளாமல் நான் போய்விட முடியாது.

மகள் துயரம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதை எண்ணி என் துயர் மறைத்து ஜானகியிடம் பொய்க்காரனாகத் தான் போய்ச் சேர்ந்தால் ஆத்மா சாந்தியடையாது. ஆத்மா சாந்தியடைவது என்றால் என்ன என்று சரியாக விளங்கவில்லை. ஆனால் அப்படியென்று ஒரு நிலை இருக்குமானால் அதைத் தவிர்க்க வேண்டும். என் செய்தி எத்தனை அதிர்ச்சியை அவளுக்குக் கொடுத்தாலும் சரி. அதைச் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். அதைத் தெரிந்து கொள்ள அவள் கடமைப் பட்டிருக்கிறாள்.

"ஜானகி. டாக்டர் இன்னும் முடிவு சொல்லலன்னு அப்ப உங்கிட்ட மறைச்சிப் பேசினேன். ஆனா டாக்டர் முடிவு சொல்லிட்டார்!"

ஜானகி திகைத்திருந்தாள். முகம் இன்னும் கலவரம் அடைந்தது. படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்தாள். சுந்தரமும் தலையணையில் சாய்ந்தவாறு படுக்கையில் உட்கார்ந்துதான் இருந்தார். வரப் போவது கெட்ட செய்தி என்பதை ஜானகியால் ஊகிக்க முடிந்தது. அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தவாறு கேட்டாள்: "என்ன சொன்னார் டாக்டர்?"

பெண்ணே! உன் உலகம் சரியப் போகிறது. உன்னைத் தயார் படுத்திக்கொள். இது உன்னை வீழ்த்தும் செய்தி. ஆனால் வீழ்ந்து விடாதே. விழப் போகுபவன் நான். என் பக்கத்தில் இருந்து என்னைத் தாங்கிக்கொள்ள வலுப் பெற்றவளாக இரு.

"லேப் பரிசோதனை முடிவுகள் எல்லாம் வந்திருச்சி ஜானகி! எனக்கு வந்திருக்கிறது மூளைப் புற்று நோய். ரொம்ப முத்திப் போன நிலமை. உடம்பெல்லாம் பரவி இருக்கு. இப்படியே விட்டா மரணம் ரொம்ப சீக்கிரம் வந்திரும்னு சொல்றாரு!"

இதோ. எல்லாம் சொல்லிவிட்டேன். கொட்டிக் கவிழ்த்து விட்டேன். என் மனத்தைத் தற்காலிகமாகத் துடைத்து சுத்தப்படுத்திவிட்டேன். விளைவுகள் உன்னைப் பொறுத்தவை. அழப் போகிறாயா விழப் போகிறாயா, எழப் போகிறாயா, என்று பார்க்கிறேன். நோய்க்கு நான் பலி. நீ வேடிக்கை பார்க்கலாம். ஆனால் இந்தச் செய்திக்கு நீ பலி. நான் வேடிக்கை பார்க்கிறேன்.

ஜானகியின் மருண்ட விழிகளில் இருந்து ஓரிரு துளிகள் உருவாகி வடூந்தன. "நெஜந்தானாங்க நீங்க சொல்றது?"

தனக்கு சாதகமல்லாதவற்றை மனம் நம்பாது. ஒருவேளை தவறாக இருக்கலாமோ என மறு உறுதி தேடும். என் காதுகளில் கேட்டது பிரமையாக இருக்கலாம். மறுமுறை அதே மாதிரி கேட்டால்தான் உறுதி. மறுமுறை வேறு மாதிரி கேட்டு முதல் முறை கேட்டது தவறாகிப் போகலாம் என்ற நப்பாசை மனத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும்.

"நெஜந்தான் ஜானகி. இவ்வளவு கடுமையான விஷயத்த உறுதிப்படுத்திக்காமயா சொல்லுவேன்?"

"ஒரு வேளை அந்தப் பரிசோதனை தவறா இருந்தா?"

"இல்ல ஜானகி. அதெல்லாம் வீண் சந்தேகங்கள். இப்ப பாத்தியே, அந்த வலியில நான் துடிச்சத, அத விடவா உறுதி வேணும்?"

முகத்தைப் பொத்திக் கொண்டு விம்மினாள். சுந்தரம் அவளை அழவிட்டார். திடீரென்று சுந்தரத்தின் நீட்டியிருந்த கால்களில் ஜானகி முகத்தைப் புதைத்துக் கொண்டாள். விம்மியவாறிருந்தாள். அவர் தலை முடியைக் கோதிவிட்டார். அதைத் தவிர வேறு என்ன செய்வதென்று தோன்றவில்லை.

பல மௌனமான கணங்கள் கடூந்ததும் சுந்தரம் சொன்னார்: "அழுது என்ன பண்றது ஜானகி? தைரியமா இரு! தனியா உன் கால்ல நிக்க பழகிக்க... என்னைக்காவது ஒரு நாள் போகிற உயிர்தானே. போகட்டும். இதுக்காக அழுது, அழுது வாழ்க்கய நரகமாக்கிக்க முடியாது."

திடீரென எழுந்து உட்கார்ந்தாள் ஜானகி. "ஏன் இப்படி சாவு, சாவுன்னு பேசிறிங்க? நோய் வந்தா எல்லாருமே செத்துத்தான் போயிர்ராங்களா? எத்தனையோ சிகிச்சைகள் இல்லையா? டாக்டர் சிகிச்சை பத்தி ஒண்ணும் சொல்லலியா?" என்று கேட்டாள்.

"சொன்னார். மௌன்ட் மிரியம் புற்று நோய் ஆஸபத்திரியில போய் ரேடியோதெராப்பி சிகிச்சை ஆரம்பிக்கச் சொன்னார். ஆனா அந்த சிகிச்சை இந்த நோயைவிடக் கொடுமையானது ஜானகி. எனக்கு அதில ஆசையில்ல. அதோட இந்த நோய் ரொம்ப விரைவாப் பரவி முத்தியிருக்கு. சிகிச்சை பலனளிக்குமா அப்படிங்கிறது நிச்சயமில்ல..."

"என்ன நிச்சயமில்ல? நாம் கண்டிப்பா போகத்தான் வேணும். உங்களுக்கு என்ன அப்படி வயசாகிப் போச்சி இப்படி விட்டுக் குடுத்திட்றதுக்கு? நாளைக் காலையிலேயே போவோம் வாங்க! உடனடியா சிகிச்சைய ஆரம்பிச்சிடுவோம். நான் இருக்கேன் உங்க பக்கத்தில. உங்களுக்கு வேண்டியது எல்லாம் நான் செய்றேன். உங்களுக்கு எல்லாம் நல்லாயிடும். கவலப் படாதீங்க. இனிமே சாவப் பத்தி பேசாதீங்க. நான் சாவித்திரி மாதிரி. யமன் கிட்ட இருந்து உங்கள மீட்டுக் கொண்டாறேன்! நான் நம்புற தெய்வம் என்னக் கைவிடாது பாருங்க." அவரின் தோள்களைக் குலுக்கிக் குலுக்கிப் பேசினாள். அவர் மனசுக்குள் நம்பிக்கை நீர் சுரந்தது. வயிறு அடங்கிப்போய் சாந்தமாக இருந்தது.

என் அன்பு மனைவியே! எந்தத் தெய்வம் நீ நம்புகிற தெய்வம்? என்னைத் தண்டிக்கிற அதே தெய்வமா? இப்போதுதான் புராணங்களின் மேல் நம்பிக்கையில்லாதவன் நான் என்பதை மனசுக்குள் நினைத்துப் பார்த்தேன். உடனே புராணக் கதையைச் சொல்லி என் மனத்தில் நம்பிக்கையை விதைத்து விட்டாயே! எனக்கு இது பாடமா? எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்துக் கொள்ளாதே என்ற அறிவுரையா?

நான் மரண பயத்தில் சோர்ந்துவிட்ட நிலையிலும் நீ இத்தனை நம்பிக்கையுடன் இருக்கிறாயே, இதுதான் நம்புகிறவனுக்கும் நம்பாதவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசமா? இதுதான் உண்மையா? அல்லது மரண வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட இருக்கும் என் உயிர் ஏதாவது கையில் கிடைக்கும் ஒரு நம்பிக்கையை பற்றிக்கொண்டு கரை ஏற ஏங்குகிறதா? ஏதாக இருந்தாலும் இது ஆறுதலாக இருந்தது.

"சரி ஜானகி. ரேடியோதெராப்பிக்கு நான் தயார். ஆனா ராதா இருக்கும் போது எப்படி? அவ திரும்ப போகட்டும். ஓரிரண்டு நாள் பாத்திருந்து செய்யலாம்" என்றார்.

"அவ இருந்தா என்ன, இல்லாட்டா என்னங்க! அவ இன்னிக்கி வருவா, நாளக்கிப் போவா! எப்படியாச்சும் தொலையட்டும். அவ வசதியப் பாத்து நாம் காத்திருக்க வேணாம். நாளக்கிக் காலையிலேயே போவோம்!"

எப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டாள்! இத்தனை நேரம் பெண்ணின் கதை கேட்டு உருகி உருகி வழிந்து கணவனைக் கூட மறந்து தாயாக இருந்த நீ, இப்போது மனைவியாக அவதாரம் எடுத்து கணவனுக்காக பெண்ணின் துயரத்தை இப்படி உதறித் தள்ளிவிட்டாயே. ஏ பெண்ணே, நீ ஒரு நாளில், ஒரு மணியில் எத்தனை அவதாரங்கள் எடுப்பாய்?

"அப்படியில்ல ஜானகி. அவ இப்ப இருக்கிற நெலையில இந்த விஷயத்தச் சொல்லி அவள இன்னும் கலவரப் படுத்தாத. அவளுக்கோ மருமகனுக்கோ ஏன் நம் பையனுக்குக் கூட இந்த விஷயம் தெரிய வேண்டாம்!"

"ஏங்க?"

"எல்லாரும் என்ன 'ஐயோ பாவம்னு' பரிதாபப்பட்டு பேசிறதையும் பாக்கிறதையும் என்னால சகிச்சிக்க முடியாது. என்னோட நோய் என்னோட இருக்கட்டும். நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கட்டும். மத்தவங்க பரிதாபத்துக்கு என்ன ஆளாக்கிடாத! நோயோட கொடுமய விட மத்தவங்க காட்டிற அனுதாபம் எனக்கு இன்னும் கொடுமையானதா இருக்கும்!"

"சரிங்க. இது நமக்குள்ளேயே இருக்கட்டும்!" என்று ஜானகி ஒத்துக் கொண்டாள்.

நிமிர்ந்து வாழ்ந்து பழகியவர். மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்து வாழ்ந்தவர். ஒரு இடைநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக ஆயிரம் மாணவர்களையும் ஐம்பது அறுபது ஆசிரியர்களையும் கண்டிப்பாக ஆண்டு அவர்களுடைய வியப்பையும் மரியாதையையும் பெற்றவர். பள்ளியின் அணிவகுப்புக்களில் முதல் மரியாதை பெற்றவர். பள்ளியின் காலை மாணவர் ஆசிரியர் அசெம்பிளியில் அவர் குரல் ஒலிபெருக்கியில் ஒலிக்கும்போது கூட்டத்தின் மௌனத்தை ஆண்டவர். மாபெரும் சபைகளில் மாலைகள் பெற்றவர். ஆகவே மற்றவர் முன் கூனிக் குறுகி நிற்க முடியாது. இவன் உள்ளே சொத்தையாகப் போய்விட்டான் என்று மற்றவர்கள் ரகசியமாக தன் முதுகுப்பக்கம் பேசுவதை அனுமதிக்க முடியாது. வாழும் வரை நிமிர்ந்திருக்க வேண்டும். உள்ளே கரையான்கள் அரித்துக் கொண்டிருந்தாலும் மேலே உரமான மரமாக இருக்க வேண்டும்.

அவர் யோசித்துக்கொண்டே இருந்தார். ஜானகி அவர் மார்பில் சாய்ந்து கிடந்தாள். அவள் கை அவர் நெஞ்சின் மேல் கிடந்தது. அவருடைய கை அவள் தலையை வருடிக் கொண்டிருந்தது. கணங்கள் மௌனமாக நகர்ந்து கொண்டிருந்தன.

ஆனால் எத்தனை காலங்கள் இந்த ரகசியத்தைக் காப்பாற்ற முடியும்? எத்தனை நாள் இந்த நோயுடன் தலை நிமிர்ந்து நடக்க முடியும்? உடல் இளைக்க ஆரம்பித்த பின் அதை மற்றவர் கண்களிலிருந்து மறைப்பது எப்படி? நெஞ்சுக் கூடு வௌியே தெரிவதையும் முகத் தசைகள் வற்றிப் போவதையும் மறைப்பது எப்படி? ரேடியோதெராப்பி ஆரம்பித்தால் தலை மயிர் உதிர்வதை மறைப்பதெப்படி? தொப்பி போட்டுக் கொள்ளலாமா? அப்புறம் தப்பி போட்ட காரணத்தை எப்படி விளக்குவது?

ஏன் மறைக்க வேண்டும்? எல்லாம் ஒரு அகந்தைதானோ? மற்றவர்கள் பரிதாபப்படும் நிலையில் ஒருவன் ஆகிவிட்டால் மற்றவனுக்குக் குறைந்தவனாக ஆகிவிடுவானோ? பரிதாபப்படுபவன் உயர்ந்தவன்; பரிதாபத்துக்கு உட்பட்டவன் தாழ்ந்தவன். அப்படி ஆகிவிடுவதை மனம் எண்ணி வெட்கிக்கிறதோ? ஏன் வெட்க வேண்டும்? என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படுவது ஏன்? இது உயிர் வாழ்வு பற்றிய பிரச்சினை அல்லவா? உயிர் பிழைப்பதுதான் பெரிது. இந்தச் சாவை முடிந்த அளவு வெல்லுவதுதான் பெரிது! அந்தப் போராட்டத்தை மற்றவர்கள் பார்த்துப் பரிதாபப்படுகிறார்களா, இச்சுக் கொட்டுகிறார்களா அல்லது உள்ளுக்குள் நையாண்டி செய்கிறார்களா என்பது பற்றி எனக்கேன் கவலை?

ஆனால் எந்த அளவுக்கு? எவ்வளவு காலம் இந்தப் போராட்டம் நடக்க முடியும்? உடல் தளர்ந்து தோல் வற்றி திரைகள் தோன்றி கால்கள் நடக்கும் சக்தி இழந்து சுவாசகோசம் தன்னிச்சையாக மூச்சிழுக்கும் சக்தியில்லாமல் குழாய்கள் பொருத்தி காற்றும் திரவமும் செலுத்தப்பட்டு, தொண்டைக் குழி வற்றி இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லுகின்ற சக்தியும் இல்லாமல் போகும் வரையிலா?

அந்தக் காட்சி அவரைத் துன்பப்படுத்தியது. அந்த நிலை வந்துவிட்டால் அந்தப் படுக்கையில் கிடக்கும் உடல் இந்த சுந்தரமாக இருக்காது. அது ஒரு ஆளுமை இல்லாத, பெயரிட்டிழைக்கத் தகுதியில்லாத காய்ந்த கட்டையாக இருக்கும். அப்படித்தான் ஆகக்கூபாது.

"ஜானகி" என்று மெதுவாகக் கூப்பிட்டார்.

"ஏங்க! மறுபடி வலியா?"

"அதில்ல ஜானகி. தலையில இப்ப வலியில்ல! ஆனா நெஞ்சில ஒரு வலி வந்திருக்கு!"

"நெஞ்சிலியுமா?" நெஞ்சை நீவிவிட்டாள்.

"அதில்ல ஜானகி. நெஞ்சில வலியில்ல. நெனப்பில வலியிருக்கு!"

"அப்படின்னா?"

பொறுத்திருந்து தைரியம் கூட்டிச் சொன்னார்: "நீ சொல்ற வைத்தியமெல்லாம் நான் பண்ணிக்கிறேன் ஜானகி. அது எவ்வளவு வேதனையாயிருந்தாலும் பரவால்ல. ஆனா அதெல்லாம் பலிக்காம நான் படுத்துட்டேன்னு வை. அப்போ என்னோட உயிர செயற்கையா பிடிச்சி வைக்க வேணாம் ஜானகி. பலவிதமான குழாய்களப் பொருத்தி என்ன வதைக்க வேணாம். என்ன அமைதியாச் சாகவிட்டிரு..."

கையைத் தூக்கி வாயைப் பொத்தினாள். "ஏன் இப்படி சாவப் பத்தியே பேசிறிங்க? வேணான்னு சொன்னேன்ல..." என்றாள்.

"நான் சாவுக்காக பயந்து இப்படி உளறல ஜானகி. முழு நினைவோட தைரியத்தோடதான் சொல்றேன். இப்ப சொல்லலேன்னா பின்னால பேசக்கூட முடியாத நெலையில எப்படிச் சொல்றது? அதுக்காகத்தான்"

அவள் பதில் சொல்லவில்லை. மெதுவாக விம்மிக் கொண்டிருந்தாள். பிறகு மௌனம்தான் தொடர்ந்தது.

அந்த இருளில் ஒரு விமானம் எங்கோ உயரே பறக்கும் சத்தம் கேட்டது. அவருடைய நாய் குரைத்தது. மோட்டார் சைக்கிள் ஒன்றின் ஒலி தூரத்தில் தொடங்கி பெரிதாகி அருகில் வந்து குறைந்து தேய்ந்து மறைந்தது. யாரோ காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிச் சென்றார்கள். மிகப் பக்கத்தில், அடுத்த வீடா..? அவர் விழித்தவாறு இந்த ஓசைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மணி என்ன இருக்கும்? நாலா? நாலரையா?

கண்கள் செருகியது நினைவிருந்தது. ஆனால் தூக்கம் வந்த நேரம் தெரியவில்லை. தூக்கம் வந்து கௌவிக்கொள்ளுகின்ற வேளை யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தால் அது தூக்கமில்லை.

*** *** ***

ஐந்தரை மணிக்கு விழித்துக்கொண்டார். அந்தக் குறைந்த நேரமாவது உடல் துன்பப் படுத்தாமல் தூங்க விட்டதே என்று மகிழ்ச்சியடைந்தார்.

ஜானகி இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பாமல் மெதுவாகக் கட்டிலை விட்டு இறங்கினார். குளியலறை போய் வந்தார். அறைக் கதவைத் திறந்து வௌியே வந்தார்.

வீட்டுக்கு வௌியே சென்று வெள்ளி முளைக்கின்ற விடிகாலை வேளையை அனுபவிக்க வேண்டும் என நினைத்தார். கதவைத் திறந்து இருளில் வௌியே வந்தார்.

ஜிம்மி படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து முன்னங்கால்களை நீட்டிச் சோம்பல் முறித்துவிட்டு அவருடைய காலை முகர்ந்து பார்த்து உரசி நின்றது. அதன் தலையைச் சொறிந்து குலுக்கி விட்டார். அது தலையைச் சிலிர்த்துக் கொண்டு அவர் கையை நக்கியது.

குளிர்ந்த காற்று, பனி தோய்ந்த காலைக்காற்று முகத்திலும் நெஞ்சிலும் வீசியது. மழை இல்லை. ஆனால் காற்றில் குளிர் இருந்தது. இருள் இன்னும் விலகவில்லை. தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாசலுக்கு முன்னால் இருந்த வேப்ப மரத்தின் இலைகள் நேற்றைய மழையின் ஈரத்தில் சிலுசிலுத்துக் கொண்டிருந்தன. அதன் பக்கத்தில் நிறைமாத கர்ப்பிணியாக குலை தள்ளியிருந்த செவ்விளனி மரத்தில் ஓலைகள் சிலிர்த்துக் கொண்டிருந்தன.

காற்றை ஆழப் பருகினார். உடல் இலேசாக இருந்தது. நலமாக இருந்தது. தனக்கு எல்லாம் நன்றாக ஆகிவிடும் என்று தோன்றியது. நேற்றிரவின் பயங்களும் அழுகையும் ஜானகியுடனான உரையாடலும் தேவையில்லாதவை போன்று தோன்றின. அவை பொய் என்றும் இந்தக் கணந்தான் நிஜம் என்றும் தோன்றியது. இந்தக் கணத்தில் உண்மை இருக்கிறது. இந்தக் காற்றில் ஜீவன் இருக்கிறது. மேலே சில நட்சத்திரங்களுடன் தௌிந்த வானம். கீழே உறுதியான பூமி. அதிலே நேராக நிற்கின்ற என் கால்கள். இந்த உண்மைகள் நெஞ்சுக்கு இதமாக இருந்தன. நம்பிக்கை ஊட்டின. தனக்காகக் காத்திருக்கும் சாவை எண்ணிச் சிரித்தார். என்றோ படித்த பாரதியார் பாடல் நினைவுக்கு வந்தது.

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்"

அப்போதுதான் ராதாவின் கார் நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் இல்லை என்பதை கவனித்தார். எங்கே போயிற்று? எப்படி... என்ன... திருடன் யாராவது ராத்திரியில்... இல்லையே, ஜிம்மி விட்டிருக்காதே!

உள்ளே வந்தார். ஹால் மேஜையில் அந்தக் கடிதம் கிடந்தது. ஆங்கிலத்தில் "அப்பாவுக்கும், அம்மாவுக்கும்" என்று அந்த உறையில் எழுதப் பட்டிருந்தது. ராதாவின் கையெழுத்து. நாற்காலியில் உட்கார்ந்து உறைக்குள்ளிருந்து கடிதத்தை எடுத்தார். கார் சாவி ஒன்று உறைக்குள் இருந்து விழுந்தது. கண்ணாடியைப் போட்டுக் கொண்டு படித்தார்.

ஒரு பக்கக் கடிதம்தான். ஆனால் படிக்கப் படிக்கக் கையில் பாறையாகக் கனத்தது. படித்து மெதுவாக மடித்து வைத்தார். அது காற்றில் படபடக்காமல் இருக்கக் கார் சாவியை அதன் மேல் பாரமாக வைத்தார்.

இப்படியா செய்து விட்டாள்? என் மகளா? என் வளர்ப்பில் வளர்ந்த மகளா? எங்கு தவறு செய்தேன்? நான் நட்டு நீர்வார்த்து நேராக்கி வளர்த்த மரம் இப்படி இளவயதிலேயே கோணலாகப் போனதெப்படி?

அவர் நெஞ்சு வலித்தது. தலை வலித்தது. முதுகிலும் வலி ஆரம்பித்திருந்தது. நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடினார்.

------


அந்திம காலம் - 4


சுந்தரத்தின் வாழ்க்கை அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நேரானதாகத்தான் இருந்திருக்கிறது.. இளமையில் அவருடைய குறும்புகள் பெற்றோரினால் அடக்கப் பட்டிருந்தது உண்மைதான். ஆனால் இடைநிலைப் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த நாளிலேயே ஒழுக்கமும் நேர்மையும் அவரிடம் படிந்து விட்டன. அதிகம் பேசாத அடக்கமான புத்திசாலியான பிள்ளை என்ற பெயர் எடுத்திருந்தார். தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படித்த நீதிகளும் சமயநூல்களும் அவ்வப்போது அவரை நேர்படுத்தக் கைகொடுத்தன.

அவர் தந்தை ஓரளவு கண்டிப்பானவர்தான். ஆனால் அன்பானவர். அவருக்குக் கோபம் விரைந்து வந்தாலும் அதே வகத்தில் தணிந்து விடும். அப்பா ஒரு காலத்தில் வீட்டில் ஒரு பிரம்பு வைத்திருந்தார். அந்தப் பிரம்பை எடுத்து ஆட்டியிருக்கிறாரே தவிர அடித்ததாத சுந்தரத்துக்கு ஞாபகமில்லை. ஆனால் பிரம்பைக் கையில் எடுக்கும் அளவுக்குப் போய்விட்டால் தான் செய்த குற்றத்தை எண்ணி சுந்தரத்தின் மனம் தானே சுருங்கித் தண்டனை விதித்துக் கொள்ளும். ஒன்று ஒரு வேளை சாப்பிடமாட்டார். அல்லது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு மணிக் கணக்கில் தனிமையில் இருப்பார்.

அவருடைய தாய் அவரைப் பெற்ற ஐந்தாறு ஆண்டுகளில் அடுத்த பிள்ளைப் பேற்றின் போது பெரியம்மை நோய் கண்டு அந்தப் பிள்ளையையும் இழந்து தானும் இறந்து போனார். தன் தாயைப் பற்றிய நினைவுகள் ஒரு கனவு போலக் கூட அவருக்கு இருக்கவில்லை. தாய் என்பவள் எப்படிப் பட்டவள் என்பது பற்றித் தன் நண்பர்களின் தாயர்களைப் பார்த்துத்தான் அவர் கணித்து வைத்திருந்தார். அந்தத் தாயன்புக்கு அவர் சில முறை ஏங்கியதுண்டு. ஆனால் தந்தையின் அன்பால் அது ஓரளவு சரியாகியது.

தாய் இறந்த பின் அவர் குடும்பத்தில் அவரும் அவருடைய அக்காள் அன்னபூரணியும் அவருடைய தந்தை ஆகிய மூவருடன் கொஞ்சம் மனநோய் பிடித்தவளான அப்பாவின் விதவைச் சகோதரி ஒருத்தியும் இருந்தாள். அந்த அத்தையின் கணவர் இளவயதிலேயே ஆற்றில் மூழ்கி இறந்து விட்டாராம். அந்தச் சம்பவத்தின் போது அவர் அலறியதையும் முழுகியும் அந்த அத்தை அருகில் இருந்து பார்த்தாளாம். அத்தைக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் தன் கணவனின் மரணத்துக்குத் தான்தான் பொறுப்பு என்ற குற்ற உணர்ச்சி ஆழப் பதிந்து விட்டது. அதிலிருந்து கிணற்றிலிருந்து கடல் வரை தண்ணீரைக் கண்டால் அவள் நடுநடுங்கிப் போவாள். பெரிய அண்டாவில், தொட்டியில் தண்ணீர் பிடித்து வைத்தாலும் பயம்தான்.

அத்தை அதிகமாகப் பேசி சுந்தரம் பார்த்ததில்லை. திடீர் திடீர் என்று "தண்ணிப்பக்கம் போவியா, போவியா?" என அன்ன பூரணியையும் சுந்தரத்தையும் முதுகில் அடிப்பாள். அது வலிக்காது. விளையாட்டு அடிதான். அதைப் பார்த்து இருவரும் சிரிக்கக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் அத்தை வீட்டு வேலைகள் அத்தனையையும் பொறுப்பாகச் செய்வாள். நன்றாக ஆக்கிப் போடுவாள். ஆனால் சாப்பாடு எப்படி இருக்கிறது என்று கூடக் கேட்க மாட்டாள். சாப்பிடு என்று சொல்லவும் மாட்டாள். சுந்தரத்திற்கு அவள் ஓர் இயந்திரம் போலவே தென்பட்டாள். சொன்னதையெல்லாம் செய்வாள்.

சாப்பாடு துணி உட்பட எதையும் வாங்கித் தா என்று யாரிடமும் அவள் கேட்டதில்லை. வாங்கிக் கொடுத்தால் பிரித்தும் பார்க்கமாட்டாள். சுந்தரத்தின் இளவயதில் அத்தை என்று ஒரு ஜீவன் வீட்டில் இருப்பதை அவர் கவனித்தது கூட இல்லை. வீட்டில் கதவு இருப்பது போல ஒரு ஜடமாக இருந்தாள். ஆனால் அவர்களைக் காப்பாற்றினாள்.

பிற்காலத்தில் அத்தையைப்பற்ற நினைக்கும் போதெல்லாம் அவள் எல்லாம் அறிந்த ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என்று சுந்தரம் நினைத்துக் கொள்வார். தன்னுடைய இன்ப, துன்ப உணர்ச்சி நரம்புகளை முற்றாக வெட்டி எறிந்து விட்ட ஞானி. கடமையை மட்டும் செய்து பலனை எதிர்பார்க்காத கர்ம ஞானி. அந்தச் சலனமில்லாத உள்ளத்தோடு அவள் உடலும் உரமாக இருந்தது. ஒரு நாளும் அத்தை உடல் நலமில்லாமல் படுக்கையில் சாய்ந்து சுந்தரம் பார்த்தில்லை.

அக்காள் அன்னபூரணி அவரை விட நான்கு வயது மூத்தவள். அப்பா அவர்கள் இருவரையுமே தமிழும் ஆங்கிலமும் படிக்க வைத்தார். அக்கா அந்தக் கால மூன்றாம் பாரம் படித்ததோடு ஆசிரியர் பயிற்சிக்குப் போய்விட்டாள். சுந்தரம் தமிழ்ப் பள்ளி முடித்து ஆங்கில இடைநிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

அக்கா ஆசிரியப் பயிற்சி முடிந்து வேலைக்குப் போன முதலாண்டில் அப்பா ஒருநாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் விழுந்தார். ஸ்ட்ரோக் என்றார்கள். ஒரு பக்கம் சுத்தமாக விளங்கவில்லை. வாய் பேச முடியவில்லை. மருத்துவ மனைப் படுக்கையில் இருந்தவாறு இரண்டு பிள்ளைகளையும் ஏக்கமாகப் பார்க்க மட்டும்தான் முடிந்தது. ஒரு கை கொஞ்சம் தூக்க முடிந்தது. அந்த ஒரு கை அசைவிலும் கண்களின் உருட்டலிலும் தலையின் அசைவிலும் அவர் காட்டுகின்ற சமிக்ஞைகளில்தான் அவருக்கு வேண்டியது என்னவென்று ஊகித்துத் தண்ணீர் தந்து, வியர்வை துடைத்து, முதுகையும் நெஞ்சையும் நீவிவிட வேண்டும்.

அத்தை சமைத்த கஞ்சிச் சாப்பாட்டை பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அப்பாவுக்கு வாயில் ஊட்டிவிடும் வேலை சுந்தரத்துக்குத்தான். அக்கா தூரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்தாள். பள்ளிக் கூடம் விட்டு வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு மாலை நாலு மணிக்குத்தான் ஆஸ்பத்திரிக்கு வர முடியும். அவள் வந்த பிறகுதான் சுந்தரம் வீட்டுக்குப் போவார்.

இப்படி தவணை வைத்துக்கொண்டு, அப்புறம் இரவு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் அவரும் அக்காவுமாய் அவருக்கு ஊட்டி அவரைச் சுத்தப்படுத்திவிட்டு வீட்டுக்கு வருவார்கள்.

ஒருநாள் சுந்தரமும் அன்னபூரணியும் எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பப் புறப்பட்ட வேளையில் அன்னத்தின் கையை அவர் பிடித்துக் கொண்டார். தலை கண் சமிக்ஞையில் சுந்தரத்தின் கையைக் கொண்டு வரச் சொன்னார். அவர் கையைக் கொண்டு போனதும் இருவரின் கைகளையும் தன் ஒரு கைக்குள் பிடித்துக் கொண்டு அழுத்தினார். அன்னபூரணியை இரக்கமாகப் பார்த்தார். "இவனை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" என்று அவர் கண்கள் சொல்லியதை அன்னம் புரிந்து கொண்டாள். கொஞ்ச நேரம் அழுது பின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

மறுநாள் சுந்தரம் கஞ்சி எடுத்துச் சென்றபோது படுக்கை காலியாக இருந்தது. நர்ஸ் சவக் கிடங்கைக் காட்டினாள்.

வீட்டுக்கு ஓடிவந்து அக்காவுக்குக் காத்திருந்து அவள் வந்தவுடன் தூரத்து உறவினர்களுக்குப் போன் செய்து மற்றவர்கள் சொல்லச் சொல்ல ஈமக் கடன்களை செய்து முடித்தார் சுந்தரம்.

அத்தை ஒரு சொட்டுக் கண்ணீரும் விடவில்லை. வீட்டுக்கு வந்த உறவினர்கள் நண்பர்கள் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் யார் யார் என்ன வேலைகள் ஏவினாலும் செய்தாள். அன்றிரவு எல்லாம் ஓய்ந்திருந்த நேரத்தில் அவள் தனக்குள் ஏதோ முனகுவது கேட்டது. சுந்தரம் பக்கத்தில் போய் நின்று கேட்டார். "தண்ணிக்கிட்ட போகாதேன்னா யார் கேக்கிறாங்க? ஏன் போகணும் தண்ணிக்கிட்ட? தண்ணி முளுங்கிடுன்னு தெரியாது? இப்ப முளுங்கிடிச்சே! இன்னும் யார முளுங்கப் போவுதோ? சொன்னா கேப்பாங்களா? தண்ணிலதான் போய் நிப்பாங்க!"

சுந்தரம் பக்கத்தில் போய் "அத்தை" என்று கூப்பிட்டுப் பார்த்தார். அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. "தண்ணி தண்ணி" என்றே முனகிக் கொண்டிருந்தாள்.

அப்பா என்ற ஆதாரம் போய்விட்ட பயமும் துயரமும் மனத்தைக் கவ்விக் கொண்டிருந்தாலும் தன்னைச் சுற்றி இருந்தவர்கள் நல்லவர்களாக இருந்தது சுந்தரத்துக்குப் பெரிய பலமாக இருந்தது. அப்பாவும் அவர்களை அப்படி ஒன்றும் நிராதரவாக விட்டுவிட்டுப் போய்விடவில்லை. அவர்கள் இருந்த வீடு சின்ன வீடாக இருந்தாலும் சொந்த வீடு. பேங்கிலும் ஒரு இரண்டாயிரம் வெள்ளி வைத்திருந்தார். அக்காவுக்குச் சில நகைகள் செய்து போட்டிருந்தார்.

அப்பாவின் நண்பர் ஒருவர் இராம கிருஷ்ணன் என்பவர் மட்டும்தான் அவர்கள் குடும்பத்துக்கு அணுக்கமானவராக இருந்தார். அடிக்கடி வீட்டுக்கு வந்து அப்பாவோடு பேசிக்கொண்டிருப்பார். சுந்தரமும் அன்னமும் அவரை மாமா என்று கூப்பிடப் பழகிக்கொண்டார்கள். அவர் ஒரு வழக்கறிஞரைப் பார்த்துப் பேசி வீட்டை அவர்கள் இரண்டு பேரிலும் எழுதவும் பொருளகத்தில் உள்ள கணக்கை அக்கா பேரில் மாற்றிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். அதே நண்பர் அக்காவுக்கு இன்னொரு பெரிய நன்மையையும் செய்ய முன் வந்தார்.

"அன்னம். இது இப்ப ஆம்பிள இல்லாத வீடா போச்சி. இது நல்லதில்ல. எனக்குத் தெரிஞ்ச தங்கமான பையன் இருக்கான். நான் சொல்லி ஏற்பாடு பண்ணுறேன். சீக்கிரத்தில கல்யாணத்த பண்ணிக்கம்மா" என்றார்.

அக்கா வெட்கத்தோடு மறுத்துவிட்டாள். "தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்குப் போகட்டும் மாமா. பிறகு பாப்போம்" என்றாள். அன்று தட்டிக் கடூத்தவள்தான். அதற்கப்புறம் கல்யாணத்தையே அக்கா நினைத்துப் பார்க்கவில்லை. அப்படியே உறைந்து போனாள். அவளிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் அடங்கிப் போனார்கள்.

சுந்தரம் சீனியர் கேம்பிரிட்ஜ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தன் வகுப்பு நண்பன் வீட்டுக்கு ஒன்றாக இருந்து படிக்கப் போன காலத்தில்தான் அந்த நண்பனின் தங்கை ஜானகியை அங்கு சந்தித்தார். அந்த நண்பன் நாராயணனின் தந்தை போத்தல் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக போத்தல்களும் டின்களும் அடுக்கிக் கிடக்கும். சாக்கின் மணமும் சணலில் மணமும் வீட்டின் முகப்பிலிருந்து சமயலறை வரையில் எந்த நாளும் இருக்கும்.

நாராயணனின் அப்பா வீட்டில் இருந்தால் ஒரு நிமிஷம் கூட சட்டையோடு இருக்க மாட்டார். அவருக்கு இந்த ஊரில் ஒரு மனைவி, தமிழ்நாட்டில் ஒரு மனைவி. வருடத்தில் மூன்று நான்கு மாதங்கள் ஊரில்தான் இருப்பார். வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ஒன்று போத்தல்களையும் டின்களையும் எண்ணிக் கொண்டிருப்பார். அல்லது பணத்தை எண்ணிக்கொண்டிருப்பார்.

சுந்தரத்தைப் பார்த்தால் உற்சாகமாகப் பேசுவார். அவனை ஒரு பெரிய மனிதனாகவே நடத்துவார். நாராயணன் மேல் அவருக்குச் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. "சுந்தரம். இந்தப் பயபுள்ளைக்கி படிப்பே ஏறமாட்டெங்குது. கணக்கு சுத்தமா வரமாட்டேங்குது. என்னோட மூத்தவ புள்ளங்க, எங்க ஊர்ல, கணக்கில கெட்டின்னா அப்படிக் கெட்டி. ஏன் தெரியுமா? அங்க படிப்ப சொல்லிக்குடுக்கிற விதம் அப்படி. வாத்தியாருங்க தோல உரிச்சிப்பிடுவாங்க.... இங்கதான் வாத்தியாருமாருக பிள்ளைகளுக்குப் பயப்பட்றாங்கள! அப்புறம் புள்ளங்க எப்படி படிக்கும்? சுந்தரம்! நீ எப்படியாவது இவனுக்குக் கணக்குச் சொல்லிக் குடுத்து பரிட்சையில பாஸ் பண்ண வை!" என்பார்.

நாராயணன் சுந்தரத்திடம் கணக்குக் கற்றுக் கொண்டானோ என்னவோ, ஆனால் சுந்தரம் அவன் தங்கை ஜானகியிடம் காதலை நன்றாகக் கற்றுக் கொண்டார். கொஞ்ச காலமே பள்ளிக்கூடம் போய் "பொம்பிள பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?" என்று தகப்பனால் நிறுத்தப்பட்டு வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட அவளிடம் கட்டுப்பாடான குடும்பங்களில் வளர்க்கப்பட்ட பெண்களுக்கே உரிய வெகுளித்தனம், பாமரத்தன்மை இருந்தது. அதோடு சின்னச் சின்ன கிண்டல்கள், சடையை வீசியும் தாவணியை விரல்களில் சுருட்டியும் கால் விரல்களால் மண்ணைக் கிளறியும் தருகின்ற கவர்ச்சி, ஒளிந்து ஒளிந்து கண்களால் மட்டும் காதல் செய்தி அனுப்பும் சாமர்த்தியம், "நம்ப வீட்டில எல்லாம் சாப்பிடுவாங்களா?" என்று மறைமுகமாகப் பேசி மூக்கு முட்டச் சாப்பாடு போடும் அன்பு, சாப்பாடு போடும் சாக்கில் அம்மாவுக்குத் தெரியாமல், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அண்ணனுக்குக் கூடத் தெரியாமல் அவன் கையைப் பிடித்துக் கிள்ளுகிற குறும்பு எல்லாமாக அவனுக்குப் பலவிதமான பாடங்கள் நடத்தும் காதல் பள்ளிக் கூடமாக அவள் இருந்தாள்.

நாராயணன் சீனியர் கேம்பிரிட்ஜ் பரிட்சையில் தோற்றுப் போனான். சுந்தரம் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்தார். ஆசிரியர் வேலைக்கு மனுப் போட்டார். அவருக்கு இங்கிலாந்தில் உள்ள கெர்க்பி நகரில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ள இடம் கிடைத்தது.

அக்காவிடம் விடைபெற்ற போது அவள் அவரை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாள். "பத்திரம் தம்பி! பத்திரம்! வெள்ளக்காரங்க ஊர். ஒழுக்கத்த பாதுகாத்துக்க. சாப்பாடு ஜாக்கரதை! அடிக்கடி லெட்டர் போடு" என்று அனுப்பி வைத்தாள். அத்தையிடம் சொல்லிக்கொண்ட போது "தண்ணிப் பக்கம் போகாத!" என்று மட்டும் சொன்னாள். தண்ணிப் பக்கம் போகாமல் இங்கிலாந்துக்கு எப்படிப் போவது என்று அவன் அத்தையிடம் விவாதம் செய்ய விரும்பவில்லை.

நாராயணனிடம் சொல்லிக் கொள்வது போல அவர்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரமாகப் போய் ஜானகியிடம் சொன்னார். முந்தானையைக் கண்களில் திணித்துக் கொண்டு "என்ன மறந்துடுவிங்க! யாராச்சும் வெள்ளக்காரியக் கட்டிக்கிட்டு வந்துடுவிங்க!" என்று உண்மையில் அழுதாள்.

"அழுவாத ஜானகி. என்ன பைத்தியமா இருக்கிற? ரெண்டு வருஷத்தில உன்னோட சுந்தரமாவே வந்து உன்னையே கட்டிக்கிறேன்!" என்று அவளை அணைத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்ககேயோ வௌியே போயிருந்த நாராயணன் திடீரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். "என்ன நடக்குது இங்கே?" என்று அவன் போட்ட சத்தத்தில் ஜானகியும் சுந்தரமும் திடுக்கிட்டு நின்றனர்.

"சுந்தரம் இது நல்லா இருக்கா ஒனக்கு? எங்க அப்பாரு பாத்திருந்தார்னா என்ன நடந்திருக்கும் இந்நேரம்? உங்க ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டிருப்பாரு!" என்று கர்ஜித்தான்.

அந்த நேரத்தில் சுந்தரத்தின் மனத்தில் குற்ற உணர்வு அதிகமாக இருந்தது. செய்யக் கூடாத தவற்றைச் செய்து விட்டோம், தனக்கும் குடும்பத்திற்கும் மாறாத அவமானத்தை வாங்கித் தந்துவிட்டோம் என்ற உணர்ச்சியே ஓங்கியிருந்தது. நாராயணன் முன்னால் தலை குனிந்து நின்றார். வீட்டுக்குப் போய் அறைக்குள் தன்னைப் பூட்டிக்கொண்டு நாள் கணக்கில் வௌியே வராமல் தனக்குத் தானே தண்டனை விதித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

நாராயணன் அவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வௌியே போனான். ஒதுப்புறமான இடத்தில் வைத்து கேட்டான்.

"உங்களுக்குள்ள தகாத மொறையில ஏதாச்சிம் நடந்திச்சா?"

இல்லை என தலையாட்டினார்.

"தோ பாரு சுந்தரம், இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். நீ படிக்க வௌிநாட்டுக்குப் போற சந்தர்ப்பத்தில நமக்குள்ள அனாவசியமா சண்டை வேணாம். இதோட விட்டுடு. அப்பா ஊர்ல ஜானகிக்கு மாப்பிள்ள பாத்து வச்சிருக்காரு. அதனால அவள மறந்திட்டு வேலயப் பாரு. சொல்லிட்டேன் ஆமாம். எங்கப்பா முரட்டு ஆசாமி. அவருக்கு இந்த விஷயம் போனா கத்திய தூக்கிக்குவாரு, பாத்துக்க!"

அவன் உள்ளே சென்று சுந்தரத்தின் முகத்தில் அறைவது போலக் கதவை தடால் என்று சாத்தினான்.

வீட்டுக்குத் திரும்பும்போது மனம் அவமானத்திலும் குற்ற உணர்ச்சியிலும் கூனிக் குறுகியிருந்தாலும் வீட்டுக்கு வந்த பின் கோபத்தில் சிலிர்த்து எழுந்தது. அவரை அது வரை யாரும் இப்படி இக்கட்டான சந்தர்ப்பத்தில் பிடித்துக் கொண்டு அவமானப் படுத்தியதில்லை. என்ன செய்துவிட்டேன் என்று என் முகத்தில் அறைந்தால் போல் கதவைச் சாத்தினான் நாராயணன்? என்ன குற்றத்துக்காக அவன் அப்பன் கத்தியைத் தூக்க வேண்டும்? நான் அவர்களுக்குத் தகுதியில்லாத மாப்பிள்ளையா? எந்த வகையில் குறைந்து விட்டேன்? ஒரு இளம் பெண்ணிடம் அன்பு செலுத்துவது - அது காதலேயானாலும் சரிதான் - எந்த விதத்தில் குற்றம்? எந்த நீதி நூலிலே இது குற்றம் என்று சொல்லியிுக்கிறது?

மனத்தைத் தௌிவு படுத்திக் கொண்டார். தன்னை இப்படி அவமானப் படுத்தியவர்களிடம் புறமுதுகிட்டு ஓடிவிடக் கூடாது என்ற வைராக்கியம் மனத்தில் எழுந்தது. ஆனால் இருந்து போராட சந்தர்ப்பங்கள் சரியாக இல்லை. அக்காவின் உதவி பெற்றுத்தான் இதை நடத்தியாக வேண்டும் என்று முடிவு செய்தார்.

மறுநாள் பயணத்திற்குப் பெட்டிகளையெல்லாம் அடுக்கிக் கொண்டிருந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அக்காவிடம் சொன்னார்:

"அக்கா உங்கிட்ட ஒரு முக்கிய விஷயம் சொல்லணும்!"

அன்னம் அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.

"இந்த நாராயணனுக்கு ஒரு தங்கச்சி இருக்கு தெரியுமா அக்கா, ஜானகின்னு பேரு...." நடந்ததையெல்லாம் தயங்கித் தயங்கிச் சொன்னார்.

"அக்கா எனக்கு இப்ப கல்யாணத்துக்கு அவசரமில்ல. ஆனா அவளக் கட்டிக்கிறேன்னு வாக்கு குடுத்திட்டேன். இப்ப அவள என்னமோ ஊரு மாப்பிள்ளைக்கு கட்டி வைக்கப் போறாங்களாம். அதுக்குள்ள..."

அன்னம் பெருச்சு விட்டாள். "தம்பி! நம்ப வீட்ல பெரியவங்க இல்ல. நான் அந்த இராம கிருஷ்ணன் மாமாவ வரச்சொல்லி அவங்ககிட்ட பேசிப் பாக்கிறேன். நீ இப்ப அதப் பத்தி யோசிச்சி மனசக் குழப்பிக்காம போயிட்டு வா!" என்று அவனை அனுப்பி வைத்தாள்.

கெர்க்பியில் அவர் போய்ச் சேர்ந்ததிலிருந்து அக்காவிடமிருந்து கடிதங்களில் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருந்தன.

முதல் கடிதத்தில்: "நானும் இராம கிருஷ்ணன் மாமாவும் போய்ப் பேசினோம். எடுத்தெறிந்து பேசி விரட்டாத குறையாக அனுப்பிவிட்டார்கள். ஜானகியின் அப்பாவை விட உன் நண்பன் நாராயணன்தான் மிகவும் குதிக்கிறான். கொஞ்சம் நாள் கோபம் ஆறவிட்டு மீண்டும் போய் பேசிப் பார்க்கிறோம்!"

அடுத்த கடிதத்தில்: "ஜானகி எப்படியோ என்னைத் தேடி ரகசியமாக வீட்டுக்கு வந்துவிட்டாள். வேற மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்தால் செத்துப் போவேன் என்று சொல்லிப் போயிருக்கிறாள்!"

"போனவாரம் மீண்டும் போய்ப் பேசினோம். பழைய கதைதான். ஜானகியும் உன்னை விரும்புகிறாள் என்று எடுத்துச் சொன்னேன். அதன் பலனாக அவளுக்குத்தான் உதை விழுந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை!"

"தம்பி, நேற்று ஜானகி தன் துணிகளைத் தூக்கி அள்ளிக்கொண்டு நம் வீட்டுக்கு வந்து விட்டாள். அவள் அப்பா ஊரில் மாப்பிள்ளை ஏற்பாடு செய்து விட்டாராம். இவள் மறுத்ததும் அடித்திருக்கிறார். ஆகவே ஓடிவந்து விட்டாள். நான் போலிசில் சென்று இந்த விஷயத்தைப் புகார் செய்திருக்கிறேன்."

"ஜானகியின் அம்மாவும் அண்ணனும் வந்து ஜானகியை மீண்டும் அழைத்துக் கொண்டு போனார்கள். அவள் அழுதுகொண்டே போயிருக்கிறாள்"

"தம்பி! நேற்று ஜானகியோடு அவள் அம்மாவும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஜானகியின் அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். தான் கல்யாண ஏற்பாடு செய்யப் போவதாகவும் அதன்பின் ஜானகியை ஊருக்கு அழைத்து வரும்படியும் அவள் அம்மாவுக்கு உத்தரவு போட்டுப் போயிருக்கிறார். அவள் அம்மாவுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. அவருக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது. நாராயணன் எப்படியானாலும் ஜானகியை ஊருக்கு அனுப்பியே தீருவேன் என என்னிடம் சவால் விட்டுப் போயிருக்கிறான். அவனுடைய அப்பனுடைய முரட்டுப் புத்திதான் அவனுக்கு இருக்கிறது. நடப்பது நடக்கட்டும். ஜானகியை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்."

அதன் பின்னர் அக்கா ஒரு தந்தி அனுப்பியிருந்தாள். "ஜானகியின் தந்தை இந்தியாவில் மாரடைப்பால் இறந்து போனார். கல்யாணம் ரத்தாகிவிட்டது."

ஜானகியின் தந்தை அவர்களுக்கென்று ஒரு காசும் விட்டுப் போகவில்லை. இருந்த வீடும் வாடகை வீடு. நாராயணனுக்கு அவர் வியாபாரத்தில் கொஞ்சமும் நாட்டமில்லை. அவன் ஏதோ சில்லறை வேலைகள் பார்த்து வீட்டை மறந்து திரிய ஆரம்பித்துவிட்டான். இருந்த சரக்குகளை வந்த விலைக்கு விற்று அவர்கள் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த போது சுந்தரம் பயிற்சி முடிந்து திரும்பினார்.

சுந்தரத்துக்குப் பினாங்கிலேயே ஒரு பள்ளியில் வேலை கொடுத்திருந்தார்கள். வேலையை ஏற்றுக்கொண்டு ஜானகியைப் போய்த் தைரியமாகப் பார்த்து வந்தார். நாராயணன் உடைந்து போயிருந்தான். அவர்கள் குடும்பம் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது.

அன்னம் இராம கிருஷ்ணன் மாமாவையும் அழைத்துக் கொண்டு முறையாகப் போய் பெண் கேட்டு நாள் குறித்துத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தாள். இராம கிருஷ்ணன் மாமா தன் மனைவியோடு வந்திருந்து எல்லா உதவிகளையும் செய்தார். தங்களுக்கு உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் இருந்தும், இராம கிருஷ்ணன் மாமா போன்றவர்கள் நட்பையே உறவாக ஆக்கிக் கொண்டு இப்படி உதவி செய்வதை எண்ணிப் பார்த்துச் சுந்தரம் மகிழ்ந்தார். நல்லவர்கள் பிற நல்லவர்களைக் கவருவது இயற்கைதான் போலும். அப்பா நல்லவராக இருந்துதான் இராம கிருஷ்ணன் போன்று ஆதாயம் கருதாத அன்பு மனம் கொண்டவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்கின்றார். தானும் அக்காவும் நல்லவர்களாக இருப்பதினால்தான் அந்த நல்ல நண்பர்களைத் தங்க வைத்துக் கொண்டிருக்க முடிகிறது. தான் தொடர்ந்து நல்லவராக இருந்த வர இவை நல்ல காரணங்கள் என்று சுந்தரம் முடிவு செய்து கொண்டார்.

ஜானகியைப் பெண் பார்த்து வந்த அன்றைக்கே சுந்தரம் தன் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லி அன்றிரவே அந்த விஷயம் குடும்பச் சபையில் அலசப் பட்டது.

மாமாதான் ஆரம்பித்து வைத்தார்.

"ஏன் அன்னம். தம்பிக்குத்தான் எல்லாம் பேசி முடிச்சாச்சி. ரெண்டு பேரும் வேலையும் செய்றிங்க. இப்ப உன் கல்யாணத்தப் பத்தி யோசிக்க வேணாமா?" என்று கேட்டார்.

அன்னம் வெட்கப்பட்டாள். தலை குனிந்து பேசினாள். "இப்ப ஏன் மாமா இந்தப் பேச்சு? தம்பி கல்யாண வேல தலைக்கு மேல கிடக்குது" என்று தட்டிக் கடூத்தாள்.

"வேல என்னம்மா பெரிய வேல! நான் இதுவரைக்கும் நூறு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். இது பெரிய வேல இல்ல. ஆனா உன் முடிவச் சொல்லு. அந்தப் பையன், நான் ரெண்டு வருஷம் முன்ன சொன்னேனே அதே பையன், இன்னும் கல்யாணம் ஆகாமத்தான் இருக்கான். ஒன்னப் பாத்திருக்கான். அவனுக்குப் புடிச்சிருக்கு. தங்கமான புள்ள. சரின்னு சொல்லு. தம்பி கல்யாணத்தோட ஒரே பந்தல்ல முடிச்சிருவோம்."

மௌனமாக இருந்தாள். சுந்தரம் பேசினார். "அக்கா! நீ இப்படி இருக்கும்போது நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கே அது அவ்வளவு மகிழ்ச்சியா இல்லக்கா. மாமா சொல்றது போல நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டின்னா அதுவே ரெட்ட மகிழ்ச்சியா இருக்கும்! சரின்னு சொல்லுக்கா..." என்றாள்.

அன்னம் யோசித்தாள். "மாமா. கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு எனக்கு ஒண்ணும் வைராக்கியம் இல்ல. ஆனா இந்த மாதிரி திடீர்னு பண்ணிக்க வேணாம் மாமா. தம்பிக்கு தாய் போல நான் முன்ன நின்னு செஞ்சி வைக்கணும்னு நெனச்சிக்கிட்டு இருக்கிற போது நானும் மாலை போட்டுக்கிட்டு மணவறையில உக்காந்துட்டா எனக்கே திருப்தியா இருக்காது! இந்தக் காரியம் நல்ல படியா முடியட்டும். அப்புறம் எப்ப கல்யாணம் தேவைன்னு தோணுதோ அப்ப நானே மாமாகிட்டயும், தம்பி கிட்டயும் சொல்றேன்!"

அவர்கள் இருவரையும் முறியடித்துவிட்டு வீராங்கனையாக வேறு வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள் அன்னம்.

கல்யாணம் அடக்கமாக ஆனால் எல்லார் மனத்திலும் மகிழ்ச்சி பொங்க நடந்தது. ஜானகி மகிழ்ச்சியிலும் காதலிலும் பூரித்திருந்தாள். ஆனால் சுந்தரத்திற்கு எல்லவற்றையும் விட ஒரு வெற்றியுணர்ச்சியே அதிகம் இருந்தது. காரணங்கள் இல்லாமல் தன்னை அவமானப்படுத்திய நாராயணனையும் அவன் தந்தையையும் ஒரு மானப் போரில் வெற்றி கொண்ட மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. ஆனால் தான் களத்தில் இல்லாமல் இங்கிலாந்தில் உட்கார்ந்து கொண்டு நடத்திய அந்தப் போரில் தேரையும் ஓட்டி வில் வளைத்து அம்பும் விட்டவளாய் இருந்த அக்காவின் மீது அவருக்கு நன்றி உணர்ச்சியும் பக்தியும் கூட வளர்ந்திருந்தன.

திருமணத்தின் போது வீடு கலகலவென்றிருந்தது. பல காலம் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெற்றிராத அந்த வீட்டில் எல்லாரும் ஓர் ஈடுபாட்டுடன் ஓடியாடினார்கள். திருமணத்திற்கென்று சேமித்து வைத்திருந்தவளைப் போல அக்கா எந்தச் செலவென்றாலும் ஏன் என்று கேட்காமல் தன் கைப்பையிலிருந்து காசு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

கல்யாணத்தின் போது பின்னாலிருந்து மட்டும் வேலை செய்து கொண்டு கூட்டத்திலிருந்து ஒளிந்து கொண்டிருந்த அத்தையைத் தாலி கட்டும் நேரத்தில் முன்னால் இழுத்துக்கொண்டு வந்தாள் அக்கா. தம்பதிகள் அக்காவின் காலில் விழுந்து எழுந்தவுடன் அத்தையின் காலிலும் விழப் பண்ணினாள். அத்தை கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். ஆனால் அவர்கள் தலையைத் தொட்டாள். அவள் எந்த நேரத்திலும் "தண்ணிக்கிட்டப் போகாதே!" என்று சொல்லப் போகிறாள் என்று சுந்தரம் எதிர்பார்த்த நேரத்தில் படபடப்போடு உள்ளே ஓடிவிட்டாள்.

அத்தை அவர்கள் முதலிரவு அறையை அலங்கரித்து வைத்திருந்த விதம் அதிசயமானதாக இருந்தது. மல்லிகைப் பூவும் ரோஜா இதழுமாக கம கமவென்று கமழ்ந்திருந்தது. வர்ணத் தாள்கள் கட்டிலின் மேல் சரஞ்சரமாகப் பின்னிக் கட்டப் பட்டிருந்தன.

தனக்குள் சுருட்டிக்கொண்டு முடங்கிப்போய் கிடக்கும் அத்தைக்கு இத்தனை கலையுணர்ச்சி இருக்க முடியுமா? அவள் மனம் வளமாகத்தான் இருக்கிறது. கற்பனைத் திறனுடன் இருக்கிறது. ஆனால் வௌியில் முடங்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை மட்டும் காட்டிக் கொள்கிறாளோ? அப்படிக் காட்டிக்கொண்டால்தான் உலகம் தன்னைச் சும்மா விடும் என்றும் அந்தத் தனிமையில் பாதுகாப்பு இருக்கும் என்றும் எண்ணுகிறாளோ!

அன்றிரவு அவருக்குப் படபடப்பு மிக்க இரவாக இருந்தது. அது பெண்ணின்பம் பருகுகின்ற இரவு. இதற்கு முன் அவருக்கு அந்த அனுபவம் இருந்ததில்லை. புத்தகத்திலும் படத்திலும் பார்த்ததுதான். அவரின் நண்பர்கள் அவரைப் பலமுறை அந்த இன்பத்தை வாடகைக்குப் பருக அழைத்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஆசையிருந்தாலும் தைரியம் இருந்ததில்லை. இதனால் அவர் கேலிக்குள்ளாகியிருக்கிறார். நண்பர்கள் அடுத்த நாளில் அனுபவங்களை மிகைப்படுத்தியும் சுவைப் படுத்தியும் சொல்லி அவர் மனத்தை அலைக்கடூத்து இரவுகளில் படுக்கையில் புரளச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் பின்னர் ரகசியமாக டாக்டரை நாடி ஊசி போட்டுக்கொண்டு வெட்கத்துடன் தலை குனிந்திருக்கும் நிலை வந்த போது அவர் தனக்குள் மகிழ்ந்திருக்கிறார்.

அந்த ஆபத்துக்களை யெல்லாம் தாண்டி இன்று அந்த அனுபவம் சட்டபூர்வமாக பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு தான் விரும்பிய பெண்ணுடன் நிகழ்வதாக இருந்தும் மனத்தில் ஒரு பயமும் குற்ற உணர்ச்சியும் கூட இருந்தது. பால் உறவு என்பதே ஏதோ ஒரு குற்றம் போல மனத்தில் பதிந்திருந்து. ஏன் என்று விளங்கவில்லை. எல்லோருக்கும் இயற்கை விதித்து வைத்திருக்கிறது என்று தெரிந்தும் சமுதாயம் அது செய்யத் தகாத ஒன்று போலவே மறைத்தும் ஒதுக்கியும் வைத்திருப்பதுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

ஜானகி அறைக்குள் நுழைந்த போது கண்ணைப் பறிக்கும் பச்சைப் பட்டுப் புடவை கட்டி மோகமூட்டும் தேவதையாக இருந்தாள். இதற்கு முன் என்றுமில்லாத வெட்கம் அவளிடம் வந்து குடி கொண்டிருந்தது. படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டுத் தலையைக் குனிந்து கொண்டு அவர் தொடு முன் தோளைக் குறுக்கிக் கொண்டு... அவளுக்கும் குற்ற உணர்ச்சிதான் போலும். சமுதாயம் இந்த உறவை சடங்கு பூர்வமாக அனுமதித்திருக்கிறது என்ற உண்மை இன்னும் மனத்தில் உறுதியாக உட்காரவில்லை.

"ஏன் ஜானகி! என்னப் பாத்தா தொழு நோய்க்காரன் மாதிரி இருக்கா?" என்று கேட்டார்.

"ஐயோ, ஏன் அப்படிச் சொல்றிங்க? ராஜாவாட்டம் இருக்கிங்க!"

"நான் ராஜா மாதிரி இருந்தா நீ ராணி மாதிரி கம்பீரமா இருக்க வேண்டியதுதான! ஏன் என்னவோ கைதி மாதிரி கூனிக் குறுகிப் போய் இருக்கிற?"

"வெக்கம் இருக்க வேணாமாங்க கொஞ்சம்? உங்களப்போல நான் இங்கிலாந்தையும் அமெரிக்காவையும் கண்டவளா, தைரியமா இருக்க?"

அணைப்புக்குக் கொஞ்சமாக இடம் கொடுத்தாள். பயம் கொஞ்சம் தௌிந்தவுடன், பேசத் தைரியம் வந்தவுடன் "மாமி ரொம்ப நல்லவங்க!" என்றாள்.

"மாமியா? எந்த மாமி ஜானகி?"

"அதுதான் உங்க அக்கா. உங்களுக்கு அவங்க அம்மா மாதிரின்னா எனக்கு மாமி மாதிரிதான! வேற யாரு இருக்காங்க நான் ஆசயா மாமின்னு கூப்பிட?" அப்புறம் அக்காவைப் பற்றி நிறையப் பேசினாள். முடிந்த பின் அத்தையைப் பற்றி நிறையப் பேசினாள். தன் தாயின் விதவை வாழ்க்கை பற்றிப் பேசினாள். தன் தந்தையின் துரோகங்களைத் திட்டித் தீர்த்தாள். தன் அண்ணனின் ஊதாரித்தனம் பற்றிப் பேசினாள்.

"ஏன் ஜானகி இப்படிக் குடும்பக் கதைகளைப் பேசித் தீர்க்கிறதுக்குத்தான் முதலிரவுன்னு வச்சிருக்காங்களா?" என்று கேட்டார் சுந்தரம்.

"போங்க உங்களுக்கு ரொம்ப அவசரம்!" என்றாள். அதன் பின் "ஆமா உங்களுக்கு ஆண் குழந்த வேணுமா, பெண் குழந்த வேணுமா?" என்று கேட்டாள். அன்று இரவு அவள் ஆக செக்சியாகப் பேசிய பேச்சு அது ஒன்றுதான்.

"ஏன் கேள்வி? ஒவ்வொரு வகையிலும் ஒரு அரை டஜன் பெத்துப் போட்டுடேன்!"

"ஐயோ, போங்க" என்று அவள் சிரித்து அவர் மேல் விழுந்தவுடன் அந்த அன்பு அருவிகளின் சங்கமம் ஆரம்பமாகியது.

இரண்டு மூன்று நாட்கள் மாமியார் வீடு போதல் மறு உண்ணல் என்று கடூந்தவுடன் இருவரும் கொடிமலைக்குச் சென்று இரண்டு நாட்கள் தேனிலவு கடூத்து வந்தார்கள்.

அவர்கள் வீடு வந்த இரவு அக்கா அவர்கள் இருவரையும் அழைத்தாள். இருவர் கையையும் பிடித்து ஒரு பத்திரத்தை அவர்கள் கையில் திணித்தாள்.

"என்ன அக்கா இது?" என்று கேட்டார் சுந்தரம்.

சிரித்துக் கொண்டே சொன்னாள்: "என் கல்யாணப் பரிசு. இந்த வீடு நம்ப ரெண்டு பேர் பேர்லியும் இருந்தது. இப்ப அத உங்க ரெண்டு பேர் பேருக்கும் எழுதி வச்சிட்டேன்!"

அதிர்ந்து போனார்."ஏன் அக்கா இப்படி செஞ்ச? இதுக்கு என்ன தேவை வந்தது இப்ப?"

"உங்களுக்கு எதிர் காலத்தில தேவை வரும் தம்பி. அப்ப நீங்களா வந்து எங்கிட்டக் கையேந்தி நிக்க வேணாமில்லையா?"

"முடியாது அக்கா. இந்த வீட்டில பாதி உன்னோட. இது அப்பாவோட சொத்து. அதுக்குள்ள பணத்தையாவது நீ வாங்கிக்கத்தான் வேணும்!" என்றான்.

"எனக்கு எதுக்குத் தம்பி பணம்? என்னுடைய சேமிப்பே எனக்குப் போதும். அதோட அந்த சேமிப்பில ஒரு பகுதிய எடுத்து இன்னொரு புது வீட்டுக்கும் முன் பணம் கொடுத்திட்டேன். எல்லாம் இராம கிருஷ்ணன் மாமா மூலமாத்தான். வீடும் இப்ப ரெடியாயிடுச்சி!"

"எங்க இருக்கு அந்த வீடு?"

"மாமா இருக்கிற இடத்திலதான். தைப்பிங்கில!"

"தைப்பிங்கிலியா? அவ்வளவு தூரத்தில நமக்கு எதுக்கு வீடு?"

அப்புறம் அமைதியாக விளக்கினாள். தைப்பிங் பள்ளிக்கூடம் ஒன்றிற்குத் தான் மாற்றல் கேட்டு எழுதியிருந்ததாகவும் மாற்றல் கிடைத்து விட்டதாகவு் அடுத்த பருவம் பள்ளி தொடங்கும் போது போய் வேலை ஏற்க வேண்டும் என்றும் சொன்னாள்.

சுந்தரத்துக்கு மனம் உடைந்தது. ஜானகி அழவே ஆரம்பித்துவிட்டாள். சுந்தரம் கேட்டார்:

"ஏன் அக்கா இப்படி பண்ணின? நாங்க என்ன செஞ்சோம் உனக்கு?"

"தம்பி! நீங்க இளசுங்க. உங்க வாழ்க்கைய உங்க இஷ்டம் போல நீங்க நடத்தணும். நான் ஒருத்தி இருந்துகிட்டு உங்க மேல அதிகாரம் செலுத்திக்கிட்டு இருக்கக் கூடாது. அதோட அத்தைக்கு வயசாகிக்கிட்டு வருது! உங்க இளவயசில அவுங்க உங்களுக்கு பாரமாகிடக் கூடாது. ஆகவேதான் நாங்க ரெண்டு பேருமா கொஞ்சம் தனியா, இதோ கூப்பிடு தூரத்தில இருக்கிற தைப்பிங்கில, போய்த் தங்கிடப் போறோம்! உங்களுக்கு ஏதா ஒண்ணு வேணுமின்னா உடனே வந்து செஞ்சிட்டுப் போறோம்! இதுதான் எல்லாருக்கும் நல்லது தம்பி!"

அக்கா உறுதியானவள். எதையும் ஆழச் சிந்தித்துத் திட்டமிட்டுச் செய்பவள். மனதுக்குள் நினைத்து விட்டாளானால் மாற்ற முடியாது என்று சுந்தரத்துக்குத் தெரியும்.

அடுத்த மாதத்தில் அத்தையையும் அக்காவையும் தைப்பிங்கில் கொண்டு புது வீட்டில் இறக்கி அவள் வீட்டில் ஒரு வேளை உணவும் சாப்பிட்டு வந்தார்கள்.

அக்காவும் அத்தையும் அந்த வீட்டில் ஏற்படுத்திய வெறுமை ராதா பிறந்த பின்தான் தீர்ந்தது.

-----


அந்திம காலம் - 5


குடும்பம் சீராக நடந்து வந்தது. திருமணமான சில ஆண்டுகள் கடூத்துத்தான் ராதா பிறந்தாள். அதற்கு இரண்டாண்டுகள் கடூத்து வசந்தன் பிறந்தான். "வகைக்கு அரை டஜன்" என்று அவர்கள் பேசியது வேடிக்கைக்காகத்தான். அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்ற அறிவு இருவருக்கும் இருந்தது.

அக்கா இரண்டு குழந்தைகளின் பிரசவத்தின் போதும் அத்தையையும் அழைத்துக் கொண்டு உடன் வந்திருந்து எல்லா வகையிலும் உதவினாள். அவர்கள் ஊர் பிரிந்து வாழ்ந்தாலும் பாசம் மிகுந்ததே தவிர குறையவில்லை. விடுமுறை நாட்களில் சுந்தரமும் ஜானகியும் குழந்தைகளும் தைப்பிங் அத்தையின் வீட்டிற்குச் சென்று இருந்து வருவதென்பது ஒரு சடங்காகவே ஆகிவிட்டிருந்தது.

சுந்தரம் அர்ப்பணிப்பு உணர்வுள்ள நல்ல ஆசிரியராக இருந்தார். பள்ளிக்கூடத்தின் எந்தப் பொறுப்பையும் அவர் தட்டிக் கழிப்பதில்லை. அதோடு தன்னை வளர்த்துக் கொள்ளவும் அவர் தவறவில்லை. வேலை பார்த்த காலத்திலேயே மாலை வேளைகளில் பள்ளி உயர்வுச் சான்றிதழ் கல்வியை தனியார்ப் பள்ளியில் கற்று நல்ல முறையில் தேரினார். தனது சேவையின் பத்தாம் ஆண்டு நிறைவு பெற்ற போது பல்கலைக் கழகத்தில் சென்று பயில மனுச் செய்து இடம் கிடைத்தவுடன் கல்வி அமைச்சுக்கு மனுச் செய்து மூன்றாண்டுகள் விடுமுறையும் அரைச் சம்பளமும் பெற்று மலாயாப் பல்கலைக் கழகத்தில் பயின்று சரித்திரத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பட்டமும் பெற்றார்.

அவர் கோலாலும்பூரில் சென்று படித்த மூன்றாண்டுகளுக்கும் தைப்பிங்கிலிருந்த அத்தையை ஜானகிக்குத் துணையாக அக்கா அனுப்பி வைத்திருந்தாள். ஆகவே எந்தச் சிரமமும் தெரியவில்லை. ஜானகியும் குடும்பத்தைத் திறமையாக நடத்தக் கற்றுக் கொண்டாள். படிப்புக் குறைவுதான் என்றாலும் அறிவுக் குறை உள்ளவள் அல்ல. அவள் தகப்பனின் அடக்குமுறையால் வௌி உலகம் தெரியாமல் வெகுளியாக வளர்ந்து விட்டாலும் சுந்தரம் கொடுத்த சுதந்திரத்தில் அவள் திறமைகள் ஒளிர்ந்தன.

சுந்தரம் பட்டம் பெற்று வந்த கையோடு பினாங்கில் உள்ள மிகப் பெரிய, பழமைப் புகழ் வாய்ந்த பினேங் ஃப்ரீ ஸ்கூலுக்கு அவரை சரித்திர ஆசிரியராக மாற்றினார்கள். அந்தப் பள்ளியில் சுந்தரத்திற்கு ஏராளமான ஆசிரியர்கள் நண்பர்களானார்கள். சுந்தரத்தோடு நண்பர்கள் வீட்டுக்குப் போக வர இருக்க ஜானகியும் அந்தச் சீன மலாய் சக ஆசிரியர்கள் குடும்பத்தோடும் கலந்து பழகத் தெரிந்து கொண்டாள்.

ஆங்கிலமும் மலாயுங்கூட கற்றுக்கொண்டு பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த காலங்களில் அவர்களுக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்கவும் செய்தாள். சுந்தரத்திற்கு அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் பெருமையாக இருந்தது.

சுந்தரம் பள்ளிக்கூடத்தில் கடைபிடித்த நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, கடமை தவறாமை இவற்றைக் கண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாலிப் அவரை கட்டொழுங்கு ஆசிரியராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். சுந்தரத்திற்கு அந்தப் பொறுப்பு பிடிக்கவில்லை.

"இஞ்சே தாலிப், நான் பொறுப்புகளுக்கு பயந்தவன் அல்ல என்பது தங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலர் பணக்காரர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் பிள்ளைகள். அவர்களில் பலர் கெட்டிருக்கிறார்கள், மற்றவர்களையும் கெடுத்து வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இப்பொழுது உள்ள கட்டொழுங்கு ஆசிரியர் இதைக் கண்டும் காணாததுமாய் இருக்கிறார். என்னால் முடியாது. நான் நடவடிக்கையில் இறங்கினால் இவர்களின் பகை வரும். உங்களுக்கும் தொந்திரவுதான். என்னை விட்டு வேறு யாரையாவது நியமிப்பதுதான் நல்லது! என்னை விட சீனியரான பல ஆசிரியர்கள் இங்கே இருக்கிறார்களே" என்றார்.

"சுந்தரம், நீங்கள் சொல்லுகின்ற அதே காரணங்களுக்காகத்தான் இந்தப் பொறுப்பை உங்கள் தலையில் சுமத்துகிறேன். இந்தப் பள்ளியின் மாணவர்கள் ஒழுக்கக் குறைவைப் பற்றி மாநிலக் கல்வித் துறைக்கே முறையீடுகள் போயிருக்கின்றன. என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். இப்போதுள்ள கட்டொழுங்கு ஆசிரியர் பொறுப்பை சரிவரக் கவனிக்கவில்லை என்பது தௌிவாகி விட்டது. கல்வித் துறையில் உங்களைப் பற்றிச் சிலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களே உங்கள் பெயரை முன் மொடூந்தார்கள். ஆகவே எங்கள் நம்பிக்கையெல்லாம் உங்கள் மேல் இருக்கிறது. தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.

தலைமை ஆசிரியர் இத்தனை வலுவாகக் கூறிய பிறகு சுந்தரத்தால் மறுக்க முடியவில்லை. அந்தப் பள்ளிக் கூடத்தில் தன் சக ஆசிரியராக இருந்து உற்ற நண்பராகிவிட்ட இராமச்சந்திரனிடம் மட்டும் தனியே கலந்து பேசினார்.

ராமா தைரியம் வழங்கினார்: "ஒப்புக் கொள்ளு சுந்தரம். நீ ஒரு தலைமை ஆசிரியராக ஆக எல்லாத் திறமையும் உள்ள ஆசிரியர். ஆகவே தேடி வர்ர முக்கிய பொறுப்புக்கள தட்டிக் கடூக்கக் கூடாது. என்னால முடியும்னு காட்டணும். அப்பதான் உன் மேல நம்பிக்கை ஏற்படும். ஆனா இது சிரமமான பொறுப்புத்தான். ரொம்ப எச்சரிக்கையா இருந்துக்க" என்றார்.

சுந்தரம் ஒரு பயத்துடன் ஏற்றுக்கொண்டார். விரைவிலேயே அந்தப் பொறுப்புக்குச் சோதனை வந்தது.

ஓராண்டுக்கு முன் வந்து சேர்ந்த ராம்லி என்ற மாணவன் மாநில அரசியலில் செல்வாக்கு மிக்க ஒருவரின் மகன். முரடன். வீட்டுக்குச் செல்லப் பள்ளை. பள்ளிக் கூடத்தில் படிப்பில் அக்கறையில்லாத சில மாணவர்களுக்கு அவன் தலைவனாக இருந்தான். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களையும் அவன் தன் கேங்கில் சேர்க்க முயன்ற போது சுந்தரம் அந்த நல்ல மாணவர்களைக் கூப்பிட்டு அவர்களை எச்சரித்து வைத்தார். "ராம்லியை நான் கண்டிக்க முடியாது. நான் சொன்னால் எதிர்த்து நிற்பான். அவனுக்குப் படிப்பிலும் பள்ளிக் கூடத்திலும் அகக்கறை கிடையாது. நீங்கள் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்கள். ஆகவே கேட்பீர்கள். அவனோடு சேர்ந்து கெட்டுப் போகவேண்டாம். இநதப் பள்ளிக்கூட மாணவர்களின் நற்பெயரைக் காப்பாற்றுங்கள்" என்பதுதான் அவர் அறிவுரை.

ராம்லிககு இந்தச் செய்தி எட்டியவுடன் ஆசிரியரை மற்ற மாணவர்களிடம் கேவலமாகத் திட்டிப் பேசினான். இந்தப் பேச்சுக்கள் சுந்தரத்தின் காதுக்கு எட்டியிருந்தாலும் ஆதாரம் ஏதும் இல்லாமல் அவர் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

ஒரு நாள் ஒரு பிற்பகல் பொழுதில் அவர் வேறு வேலையாகப் பள்ளிக் கூடம் போயிருந்த பொழுது மாணவன் ஒருவன் அவசரமாக அவருடைய அறைக்கு வந்து ராம்லியும் இன்னும் சில மாணவர்களும் பள்ளிக்கூடத்தின் பின்னால் உள்ள விளையாட்டுத் தளவாடங்கள் வைக்கும் அறையில் இரண்டு மாணவிகளை அடைத்து வைத்து தொந்திரவு செய்வதாகச் சொன்னான். சுந்தரம் அங்கு விரைந்து போனார். கதவு அடைத்திருந்தது. கதவுக்கு முன்னால் ராம்லியின் கும்பலைச் சேர்ந்த ஒரு மாணவன் காவல் நின்றான். திடீரென்று சுந்தரத்தைக் கண்டதும் "ஓய் செகு மரி, செகு மரி" என்று கத்திக் கொண்டு ஓடிவிட்டான். அடுத்த நிமிடம் கதவைப் படீரென்று திறந்து கொண்டு நான்கு மாணவர்கள் நாலாபுறமும் ஓடினார்கள். அவர்களில் மூவரை சுந்தரம் அடையாளம் கண்டு கொண்டார். கடைசியாக வௌியே வந்தவன் ராம்லி. அவன் அவசரப் படவில்லை. நின்று அவரை முறைத்துப் பார்த்து விட்டுத் தன் மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.

"நில் ராம்லி, இங்கு என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்.

"உங்களுக்கு என்ன அதைப்பற்றி?" என்று கேட்டுவிட்டு அவன் மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.

சுந்தரம் கதவு திறந்து அறைக்குள் நுழைந்த போது பள்ளிச் சீருடைகள் அலங்கோலமாகக் குலைந்த இரண்டு பள்ளிப் பெண்கள் நின்றிருந்தார்கள். அவருடைய கேள்விகளுக்குப் பயந்து பயந்து பதில் சொன்னார்கள். பக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த தாங்கள் விளையாட்டுப் பயிற்சிக்கு வந்ததாகவும் ராம்லியும் அவன் நண்பர்களும் அவர்களை வௌியில் சந்தித்து வேடிக்கையாகப் பேசித் தங்களை இந்த அறைக்குள் அழைத்து வந்து பின்னர் கதவை மூடிவிட்டு முரட்டுத் தனமாக ஆடைகளைக் களைய முயன்றதாகவும் சொன்னார்கள்.

"தப்பாக ஏதாகிலும் நடந்ததா?" என்று கேட்டார்.

"இல்லை. நல்ல வேளையாகச் செகு வந்து விட்டீர்கள்" என்றார்கள்.

அவர்களைத் தன் அறையில் உட்கார வைத்துக் கேள்விகள் கேட்டு பெயர் அடையாளக்கார்டுகள் பதிந்துகொண்டு ஒரு புகார் எழுதிக் கொண்டு தலைமை ஆசிரியர் தாலிபுக்குப் போன் செய்தார். அவர் வீட்டில் இல்லை. போலிசுக்குப் போன் செய்வதா என்று யோசித்து விட்டுத் தலைமை ஆசிரியரைக் கலக்காமல் செய்யவேண்டாம் என்று முடிவு செய்து மாணவிகளை அனுப்பி விட்டார்.

மறுநாள் காலையில் முதல் வேலையாகத் தலைமை ஆசிரியரைப் பார்த்து விஷயத்தைக் கூறி எழுத்து பூர்வமான புகாரையும் அவரிடம் கொடுத்தார். தாலிபுக்குக் கோபத்தில் முகம் சிவந்து விட்டது. "பார்த்தீர்களா சுந்தரம். இவர்களெல்லாம் இந்தப் பள்ளியின் பெயரைக் கெடுக்க வந்தவர்கள் இவர்களைச் சும்மா விடக் கூடாது!" என்று அந்த மாணவர்களைக் கூப்பிடப் பணித்தார்.

இதற்கிடையே பள்ளிக் கூடம் முழுவதும் அந்த செய்தி பரவி பரபரப்பாக இருந்தது. சுந்தரத்தை வடூயில் சந்தித்த ஆசிரியர்கள் "உண்மைதானா? உண்மைதானா?" என்று கேட்டார்கள். செய்தி இவ்வளவு விரைவில் பரவியதற்குக் காரணம் நேற்று தன்னிடம் முதலில் வந்து செய்தி சொல்லி நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த பையனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் யூகித்துக் கொண்டார்.

ராம்லியும் அவன் நண்பர்களும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தார்கள். ஒட்டு மொத்தமாகத் தங்களுக்கும் அந்த சம்பவத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்றார்கள். சுந்தரம் ஆசிரியருக்குத் தங்களை என்றுமே பிடிக்காதாகையால் யாரோ செய்த குற்றத்தைத் தங்கள் மேல் போடுவதாகச் சாதித்தார்கள்.

தலைமை ஆசிரியர் திகைத்தார். அதன் பின் முதலில் வந்து சுந்தரத்திடம் சொன்ன மாணவனை அழைத்துக் கேட்டார்கள். அவன் தயங்கித் தயங்கி அங்குமிக்கும் பார்த்தவாறு சொன்னான்:

"செகு! அந்த அறையில் இரண்டு பெண்களும் சில பையன்களும் நுழைவதைப் பார்த்தேன்! உடனே சென்று செகு சுந்தரத்திடம் சொன்னேன்!"

"யார் அந்தப் பையன்கள்?" என்று கேட்டார் தாலிப்.

"தெரியாது! நான் கவனிக்கவில்லை!"

"ராம்லி என்று நீ சொன்னதாகத்தானே செகு சுந்தரம் எழுதியிருக்கிறார்!"

"தூரத்தில் இருந்த பார்க்கும் போது ராம்லி போல இருக்கிறது என்று சொன்னேன்! ராம்லிதான் என்று சொல்லவில்லை!"

தலைமை ஆசிரியர் சுந்தரத்தைப் பார்த்தார். ராம்லியோ அவனைச் சார்ந்தவர்களோ இந்தப் பையனை மிரட்டியிருக்கிறார்கள் என்பது இருவருக்குமே தெரிந்தது.

அந்தப் பெண்கள் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியைக்கு தாலிப் போன் செய்தார். அந்தப் பெண்களின் விவரங்களைக் கொடுத்து இந்தப் பையன்களைத் தான் அங்கு பள்ளிக்குக் கொண்டு வருவதாகவும் பெண்களை விசாரித்து அடையாளம் காட்டும் படியும் கேட்டுக் கொண்டார்.

தாலிப், சுந்தரம் இருவரும் தங்கள் கார்களிலேயே பையன்களை ஏற்றிக் கொண்டு அந்தப் பள்ளிக்குப் போனார்கள். அந்த இரண்டு சிறுமிகளும் அங்கு தலைமை ஆசிரியை அறையில் காத்திருந்தார்கள். நேற்று நடந்தது உண்மைதான் என ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பையன்களை அடையாளம் காட்டச் சொன்ன போது இவர்கள் அல்ல என்றார்கள். தங்களைக் கெடுக்க முயன்ற பையன்களைத் தங்களுக்குத் தெரியாதென்றும் எந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடத் தெரியாதென்றும் சாதித்து விட்டார்கள். இங்கும் ராம்லியின் மிரட்டல் நடந்திருக்க வேண்டும் என்பது சுந்தரத்திற்குப் புரிந்தது.

ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பையன்களை எச்சரித்துத் திரும்ப அனுப்பினார் தலைமை ஆசிரியர். ராம்லி கேட்டான்: "செகு பெசார்! எங்களை ஏன் எச்சரிக்கிறீர்கள்? செகு சுந்தரம் எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார். எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார். எச்சரிக்கப்பட வேண்டியவர் அவர்தான்! அவர் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிடில் எங்கள் பெற்றோர்களிடம் சொல்லிப் போலிசில் புகார் செய்யச் சொல்லுவோம்!"

சுந்தரம் அதிர்ச்சியடைந்தார். இவ்வளவு தைரியம் உள்ளவனா? இவ்வளவு கெட்டவனா? இவ்வளவு கெட்டிக்காரனா?

தலைமை ஆசிரியர் சுந்தரத்தைத் தனியாயக் கொண்டு போய் பேசினார்.

"சுந்தரம். ஒரு வேளை நீங்கள்தான் அவசரத்தில் தவறாக அடையாளம் கண்டு விட்டீர்களோ?"

"இஞ்சே தாலிப். அவன் வௌியில் வந்து நின்று என்னிடம் பேசினான்! "உங்களுக்கு என்ன அதைப் பற்றி?" என்று கேட்டு அவனுடைய மோட்டார் சைக்கிளில் ஏறிப் போனான். எப்படி நான் தவறாக அடையாளம் கண்டிருக்க முடியும்?"

தலைமை ஆசிரியர் மேலும் கீழும் நடந்தார். பெரு மூச்சு விட்டார்: "சரி! நான் நம்புகிறேன். ஆனால் சாட்சிகள் சம்பந்தப் பட்டவர்கள் எல்லாம் திரும்பி விட்டார்கள். நீங்களும் உடனடியாகப் போலிசில் புகார் செய்யவில்லை. இப்போதைக்கு இதோடு விட்டு விடுவோம்!" என்றார்.

"அப்போது என் வார்த்தைக்கு என்ன மதிப்பு, இஞ்சே தாலிப்? இம்மாதிரி தறுதலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் நாளைக்கு என்னையும் உங்களையும் யார் மதிப்பார்கள்?" என்று கேட்டார் சுந்தரம்.

தலைமை ஆசிரியர் அமைதியிழந்து அலைந்தார். "சரி. இந்த மாணவர்களின் பெற்றோர்களை நாளை வரவழைத்துப் பேசுவோம்! கண்டித்து வைக்கச் சொல்லுவோம்!" என்றார்.

அன்று பிற்பகல் ராம்லியின் தந்தை டத்தோ யூசுப் மாநில அரசின் பெயர் பொறித்த அதிார்வ பூர்வ பெரிய காரில் வந்து பள்ளிக்கூடத்தில் வந்து இறங்கினார். முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு தலைமை ஆசிரியர் அறையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர்கள் கூறிய புகார்களைக் கேட்டார். இறுதியில் சொன்னார்: "நான் இந்த விஷயத்தை என் பையனிடமும் மற்றவர்களிடமும் விசாரித்து விட்டேன். அவர்கள் இப்படிப்பட்ட தவற்றைச் செய்யக்கூடியவர்கள் அல்ல. உங்கள் கட்டொழுங்கு ஆசிரியர் என் மகன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் யாரோ செய்த குற்றத்தை அவன் தலை மேல் சுமத்துகிறார். ஆகவே அவர்தான் தன் தவற்றுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் இந்தக் குற்றச் சாட்டை மீட்டுக் கொண்டு என் மகனிடமும் மற்ற மாணவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் இந்த விஷயத்தை இதோடு விட்டு விடுகிறேன். இல்லையானால் கல்வித் துறைக்கும் போலிசுக்கும் சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்வேன்! இது என் எச்சரிக்கை!" என்றார்.

தலைமை ஆசிரியர் தாலிப் அதிர்ச்சியடைந்திருந்தார். சுந்தரமும் இந்த எதிர்பாராத தாக்குதலின் கடுமையில் அதிர்ந்துதான் இருந்தார். என்ன நடக்கிறது இங்கே? நானா குற்றவாளியாகிவிட்டேன்? இரண்டு மாணவிகள் மானபங்கம் செய்யப் படுவதினின்றும் காப்பாற்றித் தன் கடமையை ஆற்றியதற்குக் கிடைக்கும் பரிசா இது?

தாலிப் சுந்தரத்தைத் தனியாக அழைத்துப் போனார். "சுந்தரம். இந்த விஷயம் இப்படித் திரும்பி விட்டதற்கு வருத்தப் படுகிறேன். ஆனால் உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய சாட்சிகள் எல்லாம் மாறிப் போய் விட்டதால் ஒரு சிறிய மன்னிப்போடு இந்த விஷயத்தை முடித்துவிடுவோம். மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாம். டத்தோவிடம் மட்டும் கேட்டு மற்றவர்கள் காது படாமல் நம் மூவருக்குள் முடித்துவிடுவோம். அதுதான் இந்தப் பள்ளிக் கூடத்துக்கும் உங்களுக்கும் நல்லது" என்று சுந்தரம் காதில் கிசுகிசுத்தார்.

சுந்தரம் மலைத்திருந்தார். இங்கு வந்திருப்பவர் அதிகாரம் மிக்கவர். அவர் மகன் சொல்லியிருப்பது பொய்யேயானாலும் அவருக்கு அது தெரிந்திருக்க நியாயாமில்லை. பொய்யைப் பொய் என்று அறிந்து கொள்ளாமல் அதைத் தற்காக்க வந்திருக்கிறார். தலைமை ஆசிரியரோ இந்த விஷயத்தை இதோடு முடித்துவிட்டு தன் பெயரையும் பள்ளிக்கூடத்தின் பெயரையும் தற்றகாத்துக் கொள்ள முனைந்திருக்கிறார்.

ஆனால் தான் பேசுவது சத்தியம். ஆகவே தான் இந்த அதிகாரத்துக்கும் பகைக்கும் பொய்க்கும் அடி பணிந்து போக வேண்டியதில்லை. அடிபணிந்தால் இப்போதைக்குத் துன்பங்களைத் தவிர்த்து விடலாம். ஆனால் இந்தத் தோல்வியை வாழ்நாள் முழுவதும் வடுவாகச் சுமந்து வாழவேண்டியிருக்கும். அதில் தனக்குப் பெருமை இருக்காது. ராம்லியும் அவன் நண்பர்களும் பின்னால் சிரிப்பார்கள். சுந்தரம் இப்படி வெகுளித்தனமாகத் தப்புச் செய்து மாட்டிக்கொண்ட கதை ஆசிரியர்கள் மத்தியில் பரவும். அதற்கு இடம் கொடுக்க முடியாது.

இது வரை நிமிர்ந்து வாழ்ந்து விட்டேன். இந்தச் சிறிய விபத்தினால் முதுகு உடைந்தவனாக இனி குனிந்து வாழ முடியாது. எப்படியோ இந்தச் செயலைத் தொடங்கிவிட்டேன். அதனால் பகை விளைந்து விட்டது. "வினை பகை என்றிரண்டின் எச்சம்" விட்டு வைக்காதே, அது மீண்டும் வளர்ந்து உன்னைக் கெடுக்கும் என வள்ளுவர் கூறியிருக்கிறார்.

சுந்தரம் நெஞ்சு நிமிர்ந்து நின்றார். "இஞ்சே தாலிப், டத்தோ யூசோப், நான் இந்தப் புகாரில் கூறியிருப்பவை அனைத்தும் என் நெஞ்சறிய உண்மை. ஆகவே அதை மீட்டுக் கொள்வதோ மன்னிப்புக் கேட்பதோ தேவையில்லாதது. ஆகவே நான் அப்படிச் செய்ய மாட்டேன்! டத்தோ அவர்கள் தன் மகனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொள்ளலாம்!" என்றார்.

டத்தோ யூசுபும் தாலிப்பும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டனர். டத்தோ கோபத்தில் முகம் சிவக்கச் சொன்னார்: "தாலிப்! உங்கள் ஆசிரியர் இதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி அறியாமல் பேசுகிறார். இந்தப் பழம் பெருமை வாய்ந்த பள்ளிக்கூடத்திற்கு இந்த வழக்கினால் எவ்வளவு கெட்ட பெயர் என்பதை எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள்!"

தாலிப் ஏதோ கூறவந்ததை சுந்தரம் இடை மறித்தார். "இந்தப் பள்ளிக்கூடம் வெறும் கல்லும் மண்ணும் சேர்த்த கட்டிடம். நான் இரத்தத்தாலும் உணர்ச்சியாலும் ஆன மனிதன். ஆகவே பள்ளிக்கூட மானத்தை விட என் மானம் முக்கியமானது. அப்படியே பள்ளிக்கூடம் புனிதமானது என்று பார்த்தாலும் அதைத் தன் தீய செயலால் களங்கப் படுத்தியவன் உங்கள் மகன்! அந்த மாதிரித் தீய செயல்களை வளரவிடாமல் முறியடிக்க வேண்டும் என்று நினைக்கும் நான் இதன் நற்பெயரைக் காப்பாற்றத்தான் நினைக்கிறேன். ஆகவே என் முடிவில் மாற்றம் இல்லை!"

டத்தோ யூசுப் அவர்களை முறைத்துப் பார்த்துவிட்டுக் கதவைப் படீரென அடித்துச் சாத்திவிட்டுப் போனார்.

அடுத்த சில இரவுகள் அவருக்குத் தூக்கம் குறைந்த இரவுகளாகின. ஜானகி அவருக்கு எந்த மாற்று வடூயும் கூறமுடியாமல் முதுகு நீவி கால் பிடித்துத் தூங்கச் செய்தாள்.

தாலிப் இன்னும் ஓரிரு முறை அவரிடம் பேசிச் சமாதானம் செய்ய முயன்றார். இந்த வழக்கு தோற்றுவிட்டால் சுந்தரத்தின் வேலைக்கே ஆபத்து வரலாம் என்றும் சொன்னார். சுந்தரம் இணங்கவில்லை. அவர் தன் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள வேலை இழக்கவும் தயாரானார். உலகில் நீதி என ஒன்றிருந்தால் தன் உண்மை வெல்லும் எனக் காத்திருந்தார்.

ராமச்சந்திரனுக்கு இந்த விஷயம் தெரிய வந்த போது அவரிடம் வந்து ஆறுதல் கூறினார். "சுந்தரம்! நீ செய்றதுதான் சரி. ஆனா இந்தப் பசங்க ரொம்ப கெட்டவங்க! ஜாக்கிரதையா இரு. ஆனா இவங்களுக்குத் தலை வணங்கி விட்டுக் கொடுத்திராத. உண்மை உன் பக்கம் இருக்கிறவரைக்கும் பயப்பட வேணாம்!" என்று சொன்னார்.

டத்தோ யூசுபும் அவர் மகனும் கல்வி இலாகாவுக்குப் புகார் எழுதிப் போட்டுவிட்டார்கள். துணைக் கல்வி இயக்குநர் எல்லோரையும் கூப்பிட்டு ஒரு சுற்று விசாரித்தார். முதன் முறையாக பலவந்தம் செய்யப்பட்ட பெண்களின் பெற்றோர்களிடமும் அவர் விசாரணை நடத்தினார். எல்லாரும் முதலில் சொல்லிய கதையையே சொன்னார்கள்.

துணைக் கல்வி இயக்குநர் மீண்டும் ஒரு நாள் சுந்தரத்தின் பள்ளிக்கூடத்திற்கு வந்தார். தலைமை ஆசிரியர் அறைக்குள் அவர் முன்னிலையில் சுந்தரத்தை அழைத்துப் பேசினார்:

"இஞ்சே சுந்தரம். எங்கள் விசாரணை முடிந்து விட்டது. புதிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. நீங்கள் குற்றம் சாட்டும் மாணவர்கள் யாரும் அந்தக் குற்றத்தைச் செய்ததற்கான ஆதாரம் இல்லை. ஆகவே உங்கள் சொல் ஒன்று மட்டுமே இருக்கிறது. இதை வைத்து நீங்கள்தான் தவறான குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறீர்கள் என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எங்களால் வர முடியவில்லை. ஆகவே உங்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் தர மாநிலக் கல்வி இயக்குநர் தீர்மானித்திருக்கிறார். ஆனால் நீங்கள் நல்ல உதாரணமான ஆசிரியர். உங்கள் சேவை இதுநாள் வரை அப்பழுக்கற்றதாக இருந்திருக்கிறது. ஆகவே சம்பந்தப் பட்டவர்களிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் இந்தப் பிரச்சினையை யாருக்கும் பாதிப்பில்லாமல் சுமுகமாக முடிவு செய்யலாம் என அவர் ஆலோசனை கூற என்னை அனுப்பியிருக்கிறார்.

"நீங்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையாகவே இருந்தாலும் கூட அதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆகவே வீண் பிடிவாதம் வேண்டாம். மன்னிப்புக் கேட்டுவிடுங்கள் அப்படிச் செய்யவில்லையானால் கல்வி இயக்குனர் எசசரிக்கைக் கடிதம் அனுப்புவார். அதற்கு மேல் டத்தோ யூசுப் உங்கள் மேலும் பள்ளிக்கூடத்தின் மேலும் வழக்குத் தொடரவும் கூடும். உங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தந்திருக்கிறார். அதற்குள் நீங்கள் மன்னிப்புக் கேட்க இணங்காவிட்டால் அவர் கடித்தில் கையெழுத்திட்டு அனுப்புவார்."

துணை இயக்குநர் போய்விட்டார். சுந்தரம் தமது அறைக்குப் போய் நெடு நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார். அவருடைய எதிர்காலம் அவர் கண் முன் ஊசலாடிக் கொண்டிருந்தது. உலகம் தனக்கெதிராகத் திரும்பிவிட்டது அவருக்குத் தெரிந்தது. சத்தியம் அவரைக் கைவிட்டுவிட்டது.

உலகம் என்பது நன்மை தீமை என்னும் வேறுபாடு பார்த்து இயங்கவில்லை என்று நினைத்தார். அது இயந்திர கதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. புத்தியுள்ளவர்கள் அதன் போக்கிற்கேற்ப வளைந்தும் நௌிந்தும் பிழைத்துக் கொள்ளுகிறார்கள். தர்மம் நியாயம் என்று நம்பியிருப்பவர்கள் வளைய முடியாமல் முறிந்து விடுகிறார்கள். "கற்றூண் பிளந்திறுவதல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோதான்?" என்றோ படித்தது நினைவுக்கு வந்தது.

ஆனால் நியாயத்திற்காக முறிவதில் பெருமை இருக்கிறது. அதனால்தான் நியாயம் என்பது நிலைத்திருக்கிறது. அதனால்தான் மனித நாகரிகம் வளர்ந்திருக்கிறது. தான் முறிய அவர் தயாராகி விட்டார். மன்னிப்புக் கேட்டு இந்த வேலையைத் தங்க வைத்துக் கொள்வதை விட இதைத் துறந்து விடுவது நல்லது. என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்களுக்கு இதனால் எக்களிப்பு இருக்கும். இந்த ஏமாளி வாத்தியார் தோற்றுவிட்டார் என்று வெற்றி முழக்கம் இடுவார்கள். அதைத் தான் தடுக்க முடியாது. தீமை சக்தி வாய்ந்தது. புயல் போல, வயிற்று வலி போல அதற்குத் தற்காலிக பலம் அதிகம். அதை அந்தக் கணத்தில் எதிர்த்துப் போராடிப் பலனில்லை. ஆனால் இது இறுதியில் அடங்கும். அமைதி நிலைக்கும்.

இப்போது தனக்கு முன்னால் உருவாகி இருக்கின்ற இந்தத் தீய புயலுடன் நான் மோத முடியாது. ஆனால் அதற்காக இந்தத் தீமைக்கு முன்னால் தலை வணங்கவும் முடியாது. ஒதுங்கிவிடலாம் அதுதான் நல்லது. அதற்குப் பின் வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசிக்கக் கூடாது. யோசித்தால் பயம் வரும். பயம் வந்தால் பணிந்து போகச் சொல்லும். பணிந்து போனால் தீமை வெல்லும்.

ஒரு தாளெடுத்தார். டைப்ரைட்டரில் சொருகி தன் வேலைத் துறப்புக் கடிதத்தைச் சுருக்கமாக எழுதினார். படித்துக் கையெழுத்திட்டார். தலைமை ஆசிரியரின் அறைக்கு வௌியே உட்கார்ந்திருந்த கிளர்க்கிடம் அதைக் கொடுத்தார். அங்கிருந்து நேராக வௌியேறி காரை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

"என்ன இன்னக்கி வெள்ளன வீடு வந்து சேர்ந்திட்டிங்க?" என்று கேட்ட ஜானகியிடம் "நான் வேலய விட்டுட்டேன் ஜானகி" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

மருண்ட விழிகளுடன் "என்ன சொல்றிங்க?" என்று அவள் கேட்டதும் அவள் மார்பில் முகம் புதைத்து அழத் தொடங்கினார்.

இரவெல்லாம் தூக்கமில்லாமல் விழித்திருந்தார். "நியாயம் தோற்றுவிட்டது, நியாயம் தோற்றுவிட்டது" என்று மனது ஓலமிட்டுக் கொண்டே இருந்தது. அப்புறம் "நியாயம் ஏன் தோற்றது?" என்ற கேள்வி எழுந்தது. பொய்க்கும் அநீதிக்கும் புயலுக்குண்டான வேகமும் பலமும் இருப்பது சரிதான். ஆனால் உண்மையும் நீதியும் என்றும் உள்ள மூச்சுக் காற்றல்லவா? அதுதானே இறுதியில் வென்று நிலைக்க வேண்டும். அது தானாக வெல்லுமா? அது வெல்லத் தான் ஏதாவது செய்ய வேண்டுமெனத் தோன்றியது.

மறுநாள் காலையில் வெள்ளென எழுந்தார். குளித்துவிட்டுத் தான் அதிகமாக நுழையாத ஜானகியின் சாமி அறைக்குள் நுழைந்து கும்பிட்டார். பசியாறிவிட்டு காரை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் பள்ளிக்குப் போய்த் தலைமை ஆசிரியைச் சந்தித்தார். சம்பந்தப் பட்ட அந்த இரண்டு சிறுமிகளின் வீட்டு முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார். தலைமை ஆசிரியை முதலில் தயங்கினாலும் அவருடைய நிலைமையை எண்ணிக் குறித்துக் கொடுத்தார்.

ஆயர் ஈத்தாமிலுள்ள ஒரு அழகிய இரண்டு மாடித் தொடர் வீட்டில் அந்த மலாய்க் குடும்பம் இருந்தது. சென்று அழைப்பு மணியை அடித்தார். வீட்டின் முன் கார் இருந்தது. குடும்பத் தலைவர், அந்தச் சிறுமியின் தந்தை மொக்தார், இன்னும் வேலைக்குப் புறப்படவில்லை. மொக்தாரை அவர் இதற்கு முன் பார்த்ததில்லை. முன்பின் தெரியாது. ஆனால் மனிதர்களின் நற்குணங்களை நம்பி அவர் வந்திருக்கிறார்.

மொக்தாரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும் அவர் அன்போடு வரவேற்றார். "செகு சுந்தரம். நான் கேள்விப் பட்டிருக்கிறேன் அன்றைக்கு என் மகள் விஷயமாக விசாரிக்க கல்வி அதிகாரி வந்த போது உங்கள் பெயரைச் சொன்னார்" என்றார். மொக்தாரின் மனைவி காப்பி கொண்டு வந்து கொடுத்தார். உயர்ந்த இஸ்லாமிய பண்பாடும் அழகிய மலாய் கலையணர்வும் தவழும் வீடு.

"இஞ்சே மொக்தார், ஒருவர் தான் செய்த நல்ல காரியத்தைச் சொல்லிக் காட்டுவதும் அதற்குப் பிரதியுபகாரத்தை வாய் விட்டுக் கேட்பதும் தமிழர்களாகிய எங்களுக்கும் நல்ல பண்பாடல்ல, மலாய்க்காரரான உங்களுக்கும் நல்ல பண்பாடல்ல. ஆனால் நான் இப்போது வேலையை இழக்கும் நிலையில் நிற்கிறேன். ஆகவேதான் இதை உங்களிடம் வாய்விட்டுக் கேட்க வேண்டியிருக்கிறது.!" என்றார்.

"நீங்கள் ஏன் வேலையை இழக்க வேண்டும்? நடந்தது ஒன்றும் உங்கள் குற்றமில்லையே!" என்று கேட்டார் மொக்தார். தான் வேலை துறந்த நிகழ்வுகளைச் சுருக்கிச் சொன்னார் சுந்தரம்.

"நான் என்ன செய்ய முடியும்?" மொக்தார் கேட்டார்.

"இஞ்சே மொக்தார். அன்றைக்கு உங்கள் மகள் இருந்த நிலையில் நான் அந்த நேரத்துக்குப் போயிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?" என்று சுந்தரம் கேட்டார்.

கேட்டுக் கொண்டிருந்த மொக்தாரின் மனைவி "யா அல்லா!" என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார். "செகு. நீங்கள் செய்த உதவி மிகப் பெரியது. என் மகளின் மானத்தைக் காப்பாற்றினீர்கள்!" என்றார்.

"அம்மா உங்கள் பெண்ணுக்கு அந்தப் பையன் யார் என்று தெரியும். அவர்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்தான். மாட்டிக் கொண்ட பின் மறைக்கப் பார்க்கிறார்கள்!"

"அப்படியா? யாரோ தெரியாத மாணவர்கள் இழுத்துக் கொண்டு போனதாக அல்லவா சொன்னார்கள்?"

"பொய். நான் கண்ணால் பார்த்தவன் சொல்கிறேன். டத்தோ யூசுபின் மகனைக் காப்பாற்றவும் தான் இசைந்து அங்கு போனதை மறைக்கவும் இப்படிக் கதை சொல்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து செய்கின்ற சதி இது. இதற்குப் பலியானவன் நான்!"

திருமதி மொக்தார் "யா அல்லா, யா அல்லா!" என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.

மொக்தார் ஏதோ யோசித்தவாறு இருந்தார். அப்புறம் திடீரென எழுந்து நின்றார். "செகு. எனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டது. நான் புறப்பட வேண்டும்" என்றார். "உனக்குக் கொடுத்த நேரம் முடிந்து விட்டது. நீ போகலாம்" என அவர் சொல்வதைப் புரிந்து கொண்டார் சுந்தரம். அந்த சந்திப்பு இப்படித் திடீரென முடிந்தது ஏமாற்றமாக இருந்தது.

சுந்தரம் விடை பெற்று வந்தார். கடவுளே! நான் செய்ய வேண்டியதைச் செய்து விட்டேன். நான் செய்தது சரிதானா? இது எப்படிப் போய் முடியும் எனத் தெரியவில்லை. நான் இவர்களுக்குப் பெரிதா? நான் ஒருவன் அவமானப் படுவதும் வேலை இழப்பதும் இவர்களுக்கு ஒரு பொருட்டா?

ஏன் அவர்கள் சுந்தரத்தை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டும்? அவரை ஒரு பொருட்டாக மதித்து விஷயத்த நேர் செய்ய முற்பட்டால் பல பேருக்குப் பாதிப்பு இருக்கிறது. டத்தோ யூசுப், அவர் மகன், அந்த இரண்டு சிறுமிகள், பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளியின் நல்ல பெயர், கல்வித் துறையின் நல்ல பெயர் எல்லாருக்கும் பாதிப்பு இருக்கிறது.

மாறாக எல்லோரும் தங்கள் தங்கள் சுயநலத்தைப் பாதுகாத்துக்கொள்ள இது நல்ல சந்தர்ப்பம். சுந்தரம் என்ற ஒருவனைப் பற்றிக் கவலைப் படாமல் "அவன் பாவம்" என்று மனதுக்குள் சொல்லிப் புதைத்து விடலாம். புதைத்து விட்டால் குழப்பமும் கலவரமும் இல்லை. யாருடைய பெயரும் கறைபடப் போவதில்லை. சுந்தரத்துக்குப் பதில் இன்னொரு ஆசிரியரை அமைத்துக் கொண்டு பள்ளி ஜாம் ஜாம் என்று நடக்கும்.

என்ன செய்து விட்டேன் நான்? எந்த நம்பிக்கையில் அந்நியர்களிடம், எனக்கு முன் பின் தெரியாதவர்களிடம் நியாயம் கேட்கப் போனேன்? பட்டது போதாதா? இன்னும் இவர்களால் மீண்டும் ஓரு முறை உதாசீனப் படுத்தப்பட வேண்டுமா? தன் சுய கௌரவமும் சுயமதிப்பும் இன்னும் குறைந்து அதள பாதாளத்துக்குப் போக வேண்டுமா?

வீட்டுக்கு வந்து சேர்ந்த போது உள்ளம் மிகச் சோர்ந்திருந்தது. நம்பிக்கைகள் கரைந்திருந்தன. மனத்தின் ஒரு மூலையில் உள்ள கருமை, புகையாய்ப் பெருகி நெஞ்சை கப்பென்று மூடிக் கொண்டது. "என்ன ஆச்சிங்க? எங்க போனிங்க?" என்ற ஜானகியின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் படுக்கையில் சென்று விழுந்தார். கணவரின் வாழ்க்கையிலும் மனசுக்குள்ளும் என்ன நடக்கிறது என்று சரியாகப் புரியாமல் கடவுளை வேண்டியவாறே இருந்தாள் ஜானகி.

இன்னும் ஓர் இரக்கமில்லாத இரவை உறக்கமில்லாத மனிதராக அவர் கடத்தினார்.

காலையில் தொலைபேசி அழைப்பு வந்தது. தலைமை ஆசிரியர் தாலிப் பேசினார். "சுந்தரம் உடனே புறப்பட்டு இங்கு வாருங்கள். கல்வித் துறை துணை இயக்குநர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறார்." என்றார்.

"எதற்காகக் கூப்பிடுகிறீர்கள் சே தாலிப்?" என்று கேட்டார்.

"அதெல்லாம் நேரில் சொல்கிறேன். நல்ல சேதிதான் வாருங்கள்!" என்றார்.

தொலைபேசியைக் கீழே வைத்தார். மனசுக்குத் தெம்பு வந்தது. "சுற்றி நில்லாதே போ, பகையே! துள்ளி வருகுது வேல்!" என்று மனசுக்குள் பாரதி வந்து பாடினான்.

அவர் தலைமை ஆசிரியர் அறையில் நுழைந்த போது டத்தோ யூசுப் அங்கிருந்தார். அவர் மகன் ராம்லியும் இருந்தான். மொக்தாரும் மொக்தாரின் மகளும் இருந்தார்கள். அந்தப் பெண் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள். அன்றைக்கு அவளோடு பிடிபட்ட இன்னொரு பெண்ணும் தலைகுனிந்து நின்றிருந்தாள். துணைக் கல்வி இயக்குநரும் இருந்தார்.

தலைமை ஆசிரியர் சுந்தரத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினார். தொடர்ந்து துணைக் கல்வி இயக்குநரும் வந்து கை குலுக்கினார். "செகு சுந்தரம். மொக்தாரின் மகள் ராம்லிதான் தன்னைக் கெடுக்க முயன்றவன் என்று அடையாளம் காட்டி விட்டாள். ராம்லியும் ஒத்துக் கொண்டான். ஆகவே நீங்கள் இனி மனம் வருந்தத் தேவையில்லை. உங்கள் பிரச்சினை தீர்ந்து விட்டது!" என்றார்.

மொக்தார் வந்து கையைப் பிடித்துக் கொண்டார். "செகு. நீங்கள் என் மகளின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். அதற்கு அவள் துரோகம் செய்து விட்டாள். நேற்றிரவு அவளிடம் பேசி உண்மையை வரவழைத்தேன். அவளுடைய சிநேகிதியையும் கண்டு பிடித்து உண்மையை உறுதிப் படுத்திக் கொண்டேன். நேற்றே டத்தோவையும் கல்வி அதிகாரியையும் அழைத்து உண்மையைச் சொல்லிவிட்டேன். எங்களை மன்னித்து விடுங்கள்!" என்றார்.

டத்தோ யூசுப் வந்து மனமில்லாமல் கைகுலுக்கினார்.

இத்தனை பேருக்கு முன்னால் அழக் கூடாது என்று முயன்றும் முடியவில்லை. திரும்பிக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டார். உடனே ஜானகிக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் மனதில் தோன்றியது.

துன்பங்கள், தோல்விகள், வெற்றிகள், களிப்புக்கள், தற்காலிக இன்பங்கள், விபத்துகள், துன்பங்கள், நோய்கள்... நினைவுகள், ஆயிரம் நினைவுகள். என்றைக்கு இந்த சக்கரம் நிற்கும்? இந்த சக்கரத்தில் கையும் காலும் கட்டப்பட்டு, உயரே போய் தலைகீழாகி கீழே வந்து நேராகி மீண்டும் தலை கீழாகி, எப்போது நிற்கும்? எப்போது நிற்கும்? விரைவில் நிற்கப் போகிறது.

கையில் இருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்தது. அதைக் குனிந்த எடுக்கப் போனபோது அறைக் கதவில் நிழல் தெரிந்தது. "தாத்தா! வேர் இஸ் மை மம்மி?" என்று கண்ணைக் கசக்கியவாறு கேட்டுக் கொண்டு அங்கு நின்றான் பரமா.

------


அந்திம காலம் - 6


"பரமா! வாடா கண்ணு! தாத்தா கிட்ட வா" என்று கூப்பிட்டார். அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு நின்ற இடத்திலேயே நின்றான்.

பேச்சு சத்தம் கேட்டு ஜானகி அறையிலிருந்து பரபரப்பாக ஓடிவந்தாள். "ஐயோ! நான் ஒரேயடியா தூங்கிட்டங்க! விடிஞ்சது கூடத்தெரியல!" பரமாவைத் தூக்கிக் கொண்டு அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். "நீங்க வெள்ளனே எழுந்திருச்சிட்டிங்களா? ஏன்? உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா?"

இனி இது இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டார். கொஞ்சம் கனைத்தாலும், கொஞ்சம் குனிந்தாலும், வெள்ளன எழுந்தாலும், தாமதமாக எழுந்தாலும் அடுத்த கணம் இவன் செத்துவிடப் போகிறானோ என்ற பயத்துடன் இருப்பாள். சாகப் போவது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு கணமும் மனத்தால் சாகவேண்டாமே ஜானகி!

"எனக்கு உடம்பு பரவால்ல ஜானகி. ஆனா. இதோ பாரு, உன் மகள் நம்ப ரெண்டு பேரு தலையிலியும் ஒரு பெரிய பாரத்தத் தூக்கி வச்சிட்டுப் போயிருக்கா!" கடிதத்தைக் கொடுத்தார்.

"என்ன கடிதம்? யார் எழுதினது? எங்க ராதா?" என்று படபடத்தாள்.

"பாட்டி! வேர் இஸ் மை மம்மி?" என்று ஜானகியின் மடியில் திமிறினான் பரமா.

"என்னங்க? ராதா அறையில இல்லியா? ராதா..." என்று குரல் கொடுத்துப் பார்த்தாள்.

"படபடக்காத ஜானகி! அவனுக்கு ஏதாகிலும் குடிக்கக் கொடு. அவன விளையாட விட்டுட்டு வா, நான் விவரமா சொல்றேன்" என்றார்.

"என்னமோ மர்மமாவே பேசிறிங்க!" என்று முனுமுனுத்துக் கொண்டே பரமாவை அழைத்துக்கொண்டு சமையலறைப் பக்கம் போனாள். "பரமா! மைலோ குடிக்கிறியா, ஹார்லிக்ஸ் குடிக்கிறியா?" என்றாள்.

"ஐ வான்ட் கொக்கோ கோலா!" என்றான் பரமா.

"அதெல்லாம் இப்ப கிடையாது. மொதல்ல மைலோவக் குடி!" என்றாள்.

சுந்தரம் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை படிக்க ஆரம்பித்தார். கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது.

"அன்புள்ள அப்பா, அம்மா!

"இப்படிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவோடு இரவாகப் போவது, அதிலும் என் அன்பு மகனை விட்டுப் போவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஆனால் எனக்கு வேறு வடூயில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்.

"என் கணவர் என் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார். அவரை நம்பி நான் ஏமாந்து போனேன். என்னைக் காதலிப்பதாக நடித்து என்னைப் பணம் கறக்கும் மாடாக நடத்தத் தொடங்கிவிட்டார். அநாகரீகமான மனிதர். நான் அவர் மேல் இருந்த அன்பையெல்லாம் இழந்து விட்டேன் அவரை நினைத்தாலே வெறுப்பு குமட்டிக் கொண்டு வருகிறது. இனி அவரோடு என்னால் வாழ முடியாது. விவாகரத்துக்கு விரைவில் மனுச் செய்யப் போகிறேன்.

"அப்பா, அம்மா! நான் இவரிடம் வெறுப்புக் கொண்டு ஒரு ஆணின் அன்புக்கு ஏங்கி நின்றபோது ஒரு நல்லவரைச் சந்தித்தேன். அவர் ஒரு ஆங்கிலேயர். எங்கள் பொருளகத்தின் லண்டன் அலுவலகப் பொறுப்பாளர். இங்க அவர் வந்திருந்த போது பழகிக் காதலாகிவிட்டோம்.

"அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறார். என் விவாகர்து முடிவானவுடன் அவரைத் திருமணம் செய்து கொள்வேன். பிரேமையும் அவர் ஏற்றுத் தன் மகனாக வளர்க்கத் தயாராக இருக்கிறார்.

"நேற்றிரவு இந்த உண்மைகளை உங்களிடம் சொல்ல மனம் வரவில்லை. இரவெல்லாம் யோசித்தும் சொல்லத் தைரியம் வரவில்லை. ஆகவேதான் இந்தக் கடிதம்.

"நான் என் காதலருடன் லண்டன் சென்று வாழ முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். வேலையைத் துறந்து விட்டேன். இன்று லண்டனுக்குச் செல்ல டிக்கெட் எடுத்துவிட்டேன். இது ஒன்றுதான் என் கொடுமைக்காரக் கணவனிடமிருந்து விடுதலை பெறும் ஒரே வழி. என் நிம்மதி இனி என் காதலனிடம்தான். பிரேமை உங்களிடம் விட்டுவிட்டு விடைபெற்றுப் போகத்தான் முக்கியமாக வந்தேன்.

"அம்மா, பிரேமைத் தற்காலிகமாக உங்களிடம் விட்டுச் செல்லுகிறேன். அவனைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தற்காலிகமாகத்தான். என் மறுமணம் முடிந்தவுடன் மறுநாளே வந்து அவனைப் பெற்றுக் கொள்வேன். மகனை யார் வைத்துக் கொள்வது என்று அந்த மிருகத்துடன் விவாதித்து கோர்ட் மூலம் முடிவு காண வேண்டும். கோர்ட்டு ஏறும் அவசியம் வந்தால் அவன் செய்த கொடுமைகள் எல்லாவற்றையும் சொல்லுவேன்.

"எந்தக் காரணம் கொண்டும் பிரேமை அந்த மிருகத்திடம் கொடுக்காதீர்கள். அவர்கள் குடும்பத்திடமும் ஒப்படைக்காதீர்கள். அம்மா, பிரேம் என்னைத் தவிர உங்களிடமும் அப்பாவிடமும் மட்டும்தான் ஒட்டியிருப்பான். என் மாமனார் மாமியாருடன் அவனுக்கு ஒட்டுதல் இல்லை.

"அப்பா, அம்மா! உங்கள் கால்களைப் பிடித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். நான் உள்ளுக்குள் எவ்வளவு வெட்கப்படுகிறேன், ஈனப்படுகிறேன் என்பதை இந்தக் கடிதத்தில் எழுதிவிட முடியாது! ஆனால் என்னை இந்த நிலைக்கு சிவமணி தள்ளி விட்டார். என் துயரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

"இப்போதைக்கு என் லண்டன் முகவரி நான் தரவில்லை. உங்களுக்குத் தந்தால் சிவமணிக்கு அது போய் அதனால் தொந்திரவு உண்டாகும். ஆனால் லண்டன் சென்று சேர்ந்ததும் உங்களுடன் போனில் தொடர்பு கொள்ளுகிறேன்.

"மீண்டும் என்னை மன்னியுங்கள்! என்னை வெறுக்காதீர்கள்! எனக்கு வேறு வழியில்லை! என் செல்வனைக் காப்பாற்றுங்கள்!

"பிரேம்! அம்மா உன்னை சீக்கிரம் வந்து அழைத்துக் கொள்ளுகிறேன். என் அன்பு முத்தங்கள்

இப்படிக்கு

ராதா

பின் குறிப்பு: காரை விமான நிலயப் பார்க்கில் விட்டுச் செல்லுகிறேன். பார்க்கிங் டிக்கெட் காருக்குள் வைக்கிறேன். காரின் இன்னொரு சாவி இக்கடிதத்துடன் விட்டுச் செல்கிறேன்."

படித்துக் கண்ணாடியைக் கழற்றும் போது "என்னதான் எழுதியிருக்கு இந்த கடிதத்தில? ராதா எங்க போயிட்டா? சொல்லுங்களேன்!" என்ற கேட்ட படியே ஜானகி வந்தாள். பரமா சமயலறையில் தன் மைலோவுடன் இருக்கிறான் எனப் புரிந்து கொண்டார்.

சுந்தரம் கடிதத்தையும் தன் கண்ணாடியையும் அவளிடம் கொடுத்தார். ஜானகி படிக்கத் தொடங்கினாள். படித்து முடிக்கு முன்னரே அவள் கண்களில் நீர்கட்டி வழிய ஆரம்பித்து விட்டது. படித்து முடித்துக் கண்ணாடியைக் கழற்றினாள்.

"பாவி, மூதேவி. இப்படிப் பண்ணியிருக்காள பாத்திங்களா?" என்றாள்.

அவள் பாவியா, மூதேவியா அல்லது தன் வாழ்க்கைத் துன்பங்களுக்கு நிவாரணம் தேடும் சாதாரணப் பெண்ணா என சுந்தரத்தால் தீர்மானிக்க முடியவில்லை. ஒன்று தெரிந்தது. மகள் புதிய சமூக அமைப்பில் தனது சுதந்திரத்தையும் தனது நிம்மதியையும் மட்டுமே பெரிது படுத்தும் சுயநலமியாகிவிட்டாள். இதனால் தன் கணவன், தன் பெற்றோர் தன் குழந்தை பாதிக்கப் படுவார்களே என்பது பற்றிய அக்கறை பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட்டது. அதைப் பிறகு சமாளித்துக் கொள்ளலாம். தன் காரியம் முதலில் நடந்தாகவேண்டும் என்று நினைக்கிறாள்.

எந்தக் கட்டத்தில் நாம் போற்றி வந்த குடும்பப் பண்புகள், இவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்த விட்டுக் கொடுத்தல், பொறுமையாய் இருத்தல், பிறர் நலம் பேணல், அன்பு காட்டுதல் என்ற பண்புகள் மறைந்து, என் இன்பம், என் வாழ்வு, என் நலம் என்ற பண்புகள் முதன்மை பெற்றன? அநேகமாக அவள் தானாக சம்பாதிக்க ஆரம்பித்து பொருளாதார நீரோட்டத்துக்குள் நுழைந்த போதே அது ஆரம்பித்திருக்க வேண்டும். பணச்சேமிப்பு, தனக்கே சொந்தமான கார் வாங்குதல், இன்ஷூரன்ஸ் வாங்குதல், பங்கு வாங்குதல் என்பதில் அது வலுப் படுகிறது. திருமணத்துக்குப் பிறகு அதே கொள்கைகள் கொண்ட கணவனுடன் சேர்ந்து வீடு வாங்குதல், வீட்டு அலங்காரப் பொருள்கள் வாங்குதல், தம் ஒத்த வயது நண்பர்களைப் பார்த்துப் பார்த்து அவர்களுக்குக் குறையாமல் வாழ முனைதல் என்பதில் அது தீவிரப் பட்டிருக்க வேண்டும். இந்த ஆசையின் உச்சத்தில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே என் இஷ்டம் உன் இஷ்டம் என்ற விரிசல்கள் தோன்றுகின்றன. இந்த விரிசல்கள் வெடிப்புக்கள் ஆகின்றன. சுயநலம் மேலும் இறுகுகிறது. அன்பு நீர் வற்றி சுயநலச் சூட்டின் வெம்மையில் வாழ்க்கை வறண்டு போய் அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவைகள் ஆகி....

வௌிநாட்டு வாழ்க்கையின்ஆடம்பரம், வெள்ளைக்காரக் காதலனின் கவர்ச்சி இவற்றில் மயங்கிப் பிறந்த நாட்டையும் அதன் வாழ்க்கை முறைகளையும் புறக்கணிக்கவும் தயாராகிவிட்டாள்

"ஏங்க, நீங்க இப்ப இருக்கிற நிலையில, இந்தப் பிள்ளையையும் என் தலையில போயிட்டு போயிருக்காளே, எப்படிங்க நான் சமாளிப்பேன்...?" ஜானகி அழுதாள்.

"ஜானகி. இதோ பாரு. நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன். ஆகவே ரெண்டு பேரும் சேந்து சமாளிப்போம். சும்மா அழுதுக்கிட்டு இருக்காம ஆக வேண்டிய வேலயப் பாரு" என்றார்.

இந்த நிலைமை என்னைக் கேட்காமலேயே வந்து விடிந்திருக்கிறது. என் துன்பங்கள் அடுக்கடுக்காகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. துன்பங்கள் தொடர் தொடராய் வரும் என்பது வாழ்க்கையில் அவர் ஏற்கனவே கற்றுக் கொண்ட பாடம்தான். இன்பங்கள் அடுக்கடுக்காய் வரும் போது களியாட்டம் போடும் இதயம் துன்பங்கள் வரும்போது மட்டும் ஏன் வாழ்க்கையைச் சபிக்க வேண்டும்? சுந்தரம்! இதுதான் தைரியமாக இருக்கும் வேளை. ஜானகிக்கும் தைரியம் கொடுக்க வேண்டிய வேளை. சுந்தரம்! இந்தத் துன்பங்களை எதிர்த்து நில். வாழ்க்கையை நடத்து. வாழ்க்கையை வெல்.

அடி வயிற்றில் சுரீர் என்று வலித்தது. வயிற்றைப் பிசைந்தவாறு குனிந்தார். "என்னங்க?" என்று முதுகைப் பற்றினாள் ஜானகி. சில விநாடிகளில் வலி தணிந்தது.

"இப்படித்தான் ஜானகி, வலி வருது, போவுது"

"சரி நீங்க குளிச்சிட்டு கிளம்புங்க! டாக்டர் சொன்னது போல மௌன்ட் மிரியம் போயிட்டு வந்திருவோம்! இதோ நான் அரை மணி நேரத்தில கிளம்பிர்ரேன்" என்றாள்.

"பரமாவை என்ன செய்யப் போர?" என்றார். விடூத்தாள். அவன் ஒருவன் இருப்பதை ஒரு கணம் மறந்து விட்டாள்.

"அவனையும் கூட்டிட்டுதான் போகணும் வேற என்ன செய்றது?" என்றாள்.

"வேண்டாம் ஜானகி! அவனையும் இழுத்துக்கிட்டு அங்க போய் நின்னு கஷ்டப் பட முடியாது. நான் தனியா போயிட்டு வாரேன்!" என்றார்.

"முடியவே முடியாது. நீங்க இருக்கிற நிலையில தனியா உங்கள விடமாட்டேன்! எல்லாருமா போகலாம், போய் குளிச்சிட்டு ரெடியாயிடுங்க. நான் அதுக்குள்ள மத்தியானம் சாப்பாட்டுக்கு ஏதாகிலும் சமைச்சி வச்சிட்டு வந்திர்ரேன்" என்று பரபரப்பாக எழுந்தாள்.

"இரு ஜானகி. பெரும்பாலும் அங்க போனா அங்கயே தங்கச் சொல்வாங்கன்னுதான் நினைக்கிறேன். அப்படின்னா நீ ஒண்டியா திரும்பி வர முடியாது. அதோட ராத்திரிக்கு சிவ மணி வேற வாரேன்ு சொல்லியிருக்கான். ஆகவே நான் போயி ஆஸ்பத்திரியில படுத்துக்கிட்டா நீ இப்படி இதெல்லாம் ஒண்டியா சமாளிப்ப?"

"எப்படியோ நான் சமாளிக்கிறேன். ஆஸ்பத்திரிக்கு போறத எந்தக் காரணத்தக் கொண்டும் நீங்க தள்ளிப் போட வேணாம்" என்று உறுதியாகச் சொன்னாள்.

இவள் அன்புப் பிடியில் அகப்பட்டுக் கொண்டேன். இனி என் மூச்சுத் திணறும் வரை என்னை அணைத்துக் கொண்டு தொல்லைப் படுத்திவிடுவாள் என்று நினைத்தார். ஆனால் இவளுடைய இந்த அன்பு அரவணைப்புக்கள் இல்லாமல் இருந்தால் நான் எப்போதே செத்துப் போயிருப்பேன் என்றும் நினைத்துக் கொண்டார்.

யோசித்தார். எல்லா ஆபத்துக்களுக்கும் எல்லா வேலைகளுக்கும் உதவும் அவருடைய சக ஓய்வு பெற்ற ஆசிரியர் இராமச்சந்திரனின் நினைவு வந்தது. அதுதான் வடூ.

"சரி. நான் சொல்றத கேளு. ராமச்சந்திரனை வரச் சொல்றேன். அவர் கார்லயே எல்லாருமா போவோம். நான் ஆஸ்பத்திரியில தங்க வேண்டி இருந்தா தங்கிக்கிறேன். உன்னையும் பரமாவையும் அவர் கொண்டு வந்து வீட்டில விட்டிருவாரு. ராத்திரிக்கு சிவமணி வர்ரதுக்குள்ள நான் டாக்டர்கிட்ட அனுமதி வாங்கி வீட்டுக்கு வந்திர்ரேன். உக்காந்து பேசிட்டு நாளக்குக் காலையில மறுபடி ஆஸ்பத்திரிக்குப் போயிட்றேன்" என்றார்.

"சரி" என்றாள். அந்த ஏற்பாட்டில் அவளுக்கும் நிம்மதி தோன்றியிருக்க வேண்டும். சிவமணி ஒரு புயலாக வரப் போகிறான். எப்படிக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போகிறான் என்று தெரியாது. ராதா ஓடிவிட்டாள் என்ற தகவல் அறிந்ததும் இன்னும் எப்படிக் கொந்தளிப்பானோ சொல்ல முடியாது. அவனைத் தனியாக நேர்கொள்ள ஜானகியால் முடியாது. தன்னுடைய துணை அவளுக்குக் கண்டிப்பாகத் தேவை.

எழுந்து ராமச்சந்திரனுக்குப் போன் செய்தார். ஏன், எதற்கு என்ற கேள்விகள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் ஒப்புக் கொண்டார் அவர். இவன் உற்ற நண்பன். உடுக்கை இழந்தவனின் கை போன்ற துணை. ராமச்சந்திரனின் மீது நன்றிப் பெருக்கு மனத்தில் ஊற்றெடுத்தது.

தற்காலிகமாகச் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட நிம்மதியுடன் குளிக்க எழுந்தார். வயிறு, முதுகு வலிகள் அறிகுறிகள் இல்லை. உடலில் ஒரு அமைதி நிலவிற்று. ஆனால் சமயலறையில் பரமாவின் அழுகுரல் ஓங்கிக் கேட்டது.

"பாட்டி! வேர் இஸ் மை மம்மி?"

ஜானகி தனக்குத் தோன்றும் தற்காலிக பதில் ஏதாவது சொல்லட்டும் என்று குளியலறைக்குள் நுழைந்தார்.


*** *** ***

குளித்து உடை மாற்றி வந்தபோது ஜானகி உடுத்தித் தயாராக இருந்தாள். பரமாவையும் தயார்ப்படுத்தியிருந்தாள். அவனுக்குக் குடிக்க மைலோ தயார் செய்து பிளாஸ்கில் வைத்திருந்தாள். சாப்பிட பிஸ்கட்டும் சாக்லெட்டும் வைத்திருந்தாள். அவனுக்கு மாற்று உடையும் துடைத்துவிடத் துண்டும் வைத்திருந்தாள். எல்லாம் ஒரு பேக்கில் போட்டு வைக்கப் பட்டிருந்தது.

சுந்தரத்தைக் கண்டவுடன் "இங்க வாங்க" என்று அவரை அழைத்துச் சாமியறைக்குள் நுழைந்தாள். தீபம் காட்டினாள். "வேண்டிக்கிங்க! உங்களுக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுன்னு வேண்டிக்கிங்க!" என்றாள். குரல் அந்த வேளையில் தளுதளுத்திருந்தது.

கையைக் கூப்பினார். என்ன வேண்டுவது? எல்லாம் தெரிந்த இறைவனாக இருந்தால் அவனுக்குத் தெரியாததென்ன? புதிதாக என்ன சொல்வது? ஆட்டுவிப்பவன் அவன் என்றால் இது அவனுடைய ஆட்டுவிப்புத்தான். நடக்கிறபடி நடக்கட்டும். ஓ தெய்வமே! உன் இஷ்டப்படி செய்! என்னை எடுத்துக்கொள்ள நேரம் வந்து விட்டால் எடுத்துக் கொள். ஆனால் என் மீது மூர்க்கமாக விளையாட வேண்டாம். நான் தாங்க மாட்டேன்.

நான் திருநாவுக்கரசர் போல் சமயத்தை உயிர்ப்பித்து உய்விக்க வந்த பெரிய மனிதனல்ல. நான் சாதாரணன். உலகாயதவாதி. உன் படைப்பில் எண்ணிறந்த புழுக்களில் நான் ஒரு புழு. என் மீது இந்தச் சூலை நோயை எய்திப் பிரயோஜனமில்லை. இந்தச் சோதனையிலிருந்து மீண்டு வந்து செயற்கரிய காரியங்கள் செய்ய என்னால் முடியாது. என்னை விட்டு விடு. நான் வாழ்வில் வேண்டுவதெல்லாம் இன்னும் சில ஆண்டுகள் இதோ இந்த ஜானகிக்குத் துணையாக இருந்து முதுமையில் இவளைக் காதலித்து தள்ளாத காலம் வந்தபோது தானாக செத்துப் போய்விட வேண்டும் என்பதுதான். சின்னச் சின்ன ஆசைதான். எல்லாருக்கும் இருக்கும் ஆசைதான். அதுதான் வேண்டும். அதைக் கொடுத்தால் போதும்.

விழுந்து வணங்கி எழுந்தார். ஜானகி திருநீறு பூசி விட்டாள்.

"ரொட்டி டோஸ்ட் பண்ணட்டுமா?" என்று கேட்டாள். உணவு என்றவுடன் வயிறு குமட்டியது.

"வேணாம்! சாப்பிட முடியாது! காப்பி மட்டும் குடு" என்றார். வரவேற்பறைக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார். பரமா வந்து அவர் மடிமீது ஏறினான். அவன் வயதுக்கு அவனுக்கு கனம் இல்லை. ஒரு இறகு போல லேசாகத்தான் இருந்தான்.

"பாட்டி செய்ட் யூ ஆர் சிக்!" என்றான் பரமா. டை கட்டிய சட்டையும் அரைக்கால் சிலுவாரும் போட்டிருந்தான்.

"ஆமா பரமா! அதுக்குத்தான் ஆஸ்பத்திரிக்குப் போறோம்!" என்றார் சிரித்துக் கொண்டே.

அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். "ஆர் யூ கோயிங் டு டை?" என்று கேட்டான்.

காப்பியோடு வந்த ஜானகி கத்தினாள்: "வாய மூடு சனியன! சும்மா இரு" என்றாள். பரமா பயந்து அவர் மடிக்குள் முகம் புதைத்தான். அவனை அணைத்துக் கொண்டார்.

"சும்மா இரு ஜானகி! குழந்தயத் திட்டாத! அவனுக்கு என்ன தெரியும்? பொறுமையாத்தான் பதில் சொல்லணும்" என்றார்.

"அப்படி வளத்து வச்சிருக்காங்க ரெண்டு பேரும். இவங்க போட்டி போட்டு சண்ட போட்றதுல குழந்தைக்கு ஒரு பண்பாட்டச் சொல்லித் தரத் தெரியில. பாருங்க பேசிற பேச்ச!"

அவர் பரமாவின் தலையைக் கோதிவிட்டார். "பரமா. தாத்தா சாகப் போகல. ஆஸ்பத்திரிக்குப் போனா டாக்டர் என்ன குடுப்பாங்க?"

"மெடிசன்!"

"அவ்வளவுதான். மெடிசன் குடிச்சா தாத்தா உடம்பு நல்லாயிடும்!" என்றார். பரமா எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவனிடம் அவர் விடாமல் தமிடூலேயே பேசுவார். அவன் புரிந்து கொள்வான். ஆனால் அவன் வாயில் மட்டும் தமிழ் நுழைவதில்லை.

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து பிறகு கேட்டான்: "வென் வில் மம்மி கம் பேக்?"

"அம்மாதான! கொஞ்ச நாள் கடூச்சி வருவாங்க. நீ கொஞ்ச நாள் தாத்தாவோடயே இரு!" என்றார்.

"டேக் மீ டு மங்க்கி கார்டன்!" என்றான்.

"ஓ எஸ்! கண்டிப்பா!" என்றார். அம்மா இல்லாத குறையை குரங்குப் பூங்காவுக்குப் போவதன் மூலம் சரி செய்து விட முடியுமா? அப்படித்தான் குழந்தை மனம் தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறது. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றிக் கொள்கிறது. எனக்குத்தான் பற்றிக்கொள்ள ஒன்றுமில்லை. வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறேன். பரமா உனக்கு குரங்குப் பூங்கா இருக்கிறது. பொம்மை இருக்கிறது. ஐஸ்கிரீம் இருக்கிறது. எனக்கு?

இந்தக் குறும்புப் பிள்ளையை ஜானகி எப்படி ஒண்டியாகச் சமாளிப்பாள் என்று நினைத்தவுடன் கலக்கம் வந்தது. வீட்டில் அவர்கள் வேலைக்கு உதவியாகக் கூட யாரையும் வைத்துக் கொள்வதில்லை. அதற்கு இத்தனை நாள் தேவையில்லாமல் இருந்தது. இப்போது?

"ஜானகி! பரமாவை வச்சிக்கிட்டு எப்படிச் சமாளிக்கப் போற?" என்று கேட்டார்.

"காலையில அக்காவுக்குப் போன் பண்ணிட்டங்க! இன்னைக்கே புறப்பட்டு வர்ரன்னு சொன்னாங்க!" என்றாள்.

அக்கா! ஆமாம். அவள் ஒருத்தி ஆபத்து அவசரத்துக்கான காப்புத் தெய்வமாக இருப்பது மறந்து விட்டது. ஆனால்...!

"என்ன சொன்ன ஜானகி? என்னப்பத்தியும் சொல்லிட்டியா?"

"இல்ல. பரமாவ ராதா விட்டுட்டுப் போனத மட்டுந்தான் சொன்னேன். ஆனா அவங்க வந்த பிறகு இத மறைக்க முடியாதுங்க! எதுககு மறைக்கணும்? நம்ம உறவாவும் ஆதரவாவும் இருக்கிறவங்ககிட்ட இருந்து எதுக்கு மறைக்கணும். நானும் நீங்களுமே இத உள்ள வச்சி வேகணும்னு சொல்றிங்களா?"

உண்மைதான். இதை உள்ளுக்குள் போட்டு கொதிக்கவைத்துக் கொண்டே இருக்க முடியாது. அக்காவிடம் சொல்லலாம். அழுது ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டாள். அமைதியாகக் கேட்டுக் கொள்வாள். தானும் ஜானகியும் சாய்ந்து கொள்ளத் தக்க உறுதியான தூணாக இருப்பாள்.

அதே போலத்தான் நண்பன் ராமாவிடமும் சொல்லலாம். அவன் ஒருவன்தான் உற்ற நண்பனாக இருக்கிறான். அவனுக்குத் தெரியவேண்டும்.

நினைத்துக் கொண்டிருந்த போது ராமாவின் கார் வௌியில் வந்து நின்றது. அவர்கள் போய் காரில் ஏறினார்கள். "மன்னிக்கணும் ராமா! திடீர்னு கூப்பிட்டு உன்னோட திட்டங்களயெல்லாம் வீணாக்கிட்டேனா?" என்று கேட்டுக்கொண்டே காரில் உட்கார்ந்தார்.

ராமா சிரித்தார். "நம்ம திட்டம் ஒனக்குத் தெரியாததா? காலையில வாக்கிங். அப்பறம் பேப்பர். குளியல். பசியாறிட்டு மறுபடியும் பேப்பர். அப்புறம் மார்க்கெட்டுக்கு போறது! இந்தத் திட்டத்த நீ வீணாக்கினதில எனக்கு ரொம்ப சந்தோஷம் சுந்தரம்!" என்றார். பரமாவைப் பார்த்தார். "ஓ உங்க பேரப்பிள்ள இங்க இருக்கிறாரே! குட் மார்னிங் மிஸ்டர் பரமா!" என்றார்.

"மை தாத்தா இஸ் சிக்!" என்றான் பரமா.

"இந்த சனியன் வாயில நல்ல வார்த்தையே வராது!" என்றாள் ஜானகி.

ராமா அமைதியாகக் காரோட்டினார். ஏன் ஏது என்று ஒன்றும் கேட்கவில்லை.

மௌவுன்ட் மிரியம் மருத்துவ மனைக்குப் போகும்படி சொன்னார். இராமச்சந்திரன் பேசாமல் காரை தஞ்சோங் பூங்கா சாலை வடூயாக ஓட்டினார். சுந்தரத்தின் வீட்டிலிருந்து மௌன்ட் மிரியம் பக்கத்தில்தான் இருந்தது. பத்து நிமிடங்களுக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.

சுந்தரம் கேட்டார்: "ஏன் ராமா? எதுக்காக நான் மௌவுன்ட் மிரியம் போறேன்னு கேக்க மாட்டியா?"

ரோட்டில் பதிந்திருந்த கண்களை மீட்காமல் ராமா சொன்னார்: "நீயா சொல்லட்டும்னுதான் காத்திருக்கேன்!"

"நான் சொல்லாமலே இருந்திட்டா?"

"அப்ப அது எனக்குத் தெரியக் கூடாத விஷயம்னு பேசாம இருந்திருவேன்!"

"இதுதான் நட்புக்கு லட்சணமா, ராமா?"

"அப்ப நீ சொல்லாம இருக்கிறதுதான் நட்புக்கு லட்சணமா?"

சுந்தரம் கொஞ்ச நேரம் காருக்கு வௌியே பார்த்தார். பரமாவைத் திரும்பிப் பார்த்தார். அவன் வௌியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தணிந்த குரலில் சொன்னார். "எனக்குப் புற்று நோய் வந்தாச்சி ராமா! மூளையில் புற்று நோய்! ரொம்ப முத்தின நிலைமை! உடல் பூரா பரவிடுச்சி"

ராமா தன் கனத்த மூக்குக் கண்ணாடிகளூடே சாலையையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்றும் சொல்லவில்லை. முகம் இறுகியிருந்தது.

"ஏதாகிலும் சொல்லு ராமா!"

"ஓ கே" என்றார் ராமா.

"என்ன ஓ கே?"

"ஓ கே. அதுக்கு என்ன பண்றது இப்ப? இன்னக்கி நீ! நாளக்கி நானாக இருக்கலாம்!"

"அவ்வளவுதானா?"

முதன் முறையாகத் திரும்பிப் பார்த்தார் ராமா. "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியில சுந்தரம். ஏதோ வாய்க்கு வந்ததச் சொன்னேன்! இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள திறமையா வார்த்தகளப் போட்டுப் பேச எனக்குத் தெரியாது!" மீண்டும் சாலையை நோக்கினார்.

அமைதியாகப் போனார்கள். சாலை விளக்குப் பகுதிக்கு வந்து நின்று ஃபெட்டஸ் பார்க் பகுதிக்குள் திரும்பினார்.

குடியிருப்பு வீடுகளிடையே ராமாவின் கார் வளைந்து வளைந்து சென்றது. சந்திர வீதி என்னும் அழகிய பொருளுள்ள ஜாலான் பூலானில் மௌவுன்ட் மிரியம் என்ற அந்த அடக்கமான ஐந்து மாடிக் கட்டடம் இருந்தது. ஆஸ்பத்திரியின் கேட் திறந்தே இருந்தது. ராமா காரை உள்ளே கொண்டு சென்றார்.

"தாத்தா! லுக்! பாட்டி இஸ் கிரையிங்" என்றான் பின் சீட்டிலிருந்த பரமா.


-----


அந்திம காலம் - 7


"ஆண்டவன் என்னும் அன்பில், எல்லா சகோதரர்களும் சகோதரிகளும், அவர்கள் பிரார்த்தனையில் இருக்கும் போதும், கர்த்தரின் சொல்லை அறிவிக்கும் போதும், சாதாரண உடலுழைப்பு வேலை செய்யும் போதும் எல்லாவற்றிலும் எளிமையாக இருக்க வேண்டும். அவர்கள் புகழை நாடக் கூடாது. தற்பெருமை கொள்ளக் கூடாது. தங்கள் நற்செய்கைகளை கடவுளின் நற்செய்கைகளாக நினைத்து அதைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் எல்லா நன்மைகளும் உலகாளும் அந்த உயர்ந்த கர்த்தனுக்கே உரியது என நினைந்திருக்க வேண்டும். யாரிடமிருந்து இந்த நன்மைகள் அனைத்தையும் பெருகிறோமோ அவனுக்கே எல்லா நன்றிகளும் உரித்தாக வேண்டும்"

-செயின்ட் பிரான்சிஸ் அசிசி
சேவகர்களின் விதி.

தான் காத்து உட்கார்ந்திருந்த அறையில் மௌன்ட் மிரியம் மருத்துவ மனையின் கையேட்டைப் புரட்டிக் கொண்டிருந்த போது இந்த வரிகள் அவரைக் கவர்ந்தன. பிரான்சிஸ்கன் மிஷனரியின் கீழ் நடத்தப்படும் அந்த மருத்துவ மனையில் கிறிஸ்துவர்களின் சேவை மனப்பான்மை ஒவ்வொரு அம்சத்திலும் இருந்தது.

மௌன்ட் மிரியத்தற்குள் நுழைந்தவுடனேயே கண்ணில் பட்டவர்களையெல்லாம் இவருக்கு என்ன புற்று நோயாக இருக்கும் என்று மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது. ஆனால் அங்கிருந்த பலரும் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். சிலர் சிரித்துப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். உடலளவில் இளைத்திருந்தாலும் உற்சாகமாகக் காணப்பட்டார்கள்.

காலையில் வந்து பதிவு செய்து கொண்டு, மருத்துவ அறிக்கைகளையெல்லாம் சமர்ப்பித்த பின் ஓர் ஓய்வறைக்கு அவரை அனுப்பி அங்கு காத்திருக்கச் சொன்னார்கள். விரைவில் ஒரு சிஸ்டர் வந்து பார்ப்பார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் ஒரு குமாஸ்தா. ஜானகி, பரமா, ராமா ஆகியோரை வௌியே காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் அறைக்குள் சென்று காத்திருந்தார். அங்குள்ள சில நாளிதழ்களையும், இதழிகளையும் புரட்டிக் கொண்டிருந்தார்.

அறை சுத்தமாக இருந்தது. மருத்துவ மனை அறைபோல் இல்லாமல் அலுவலகக் கூட்டம் நடக்கும் அறை போல இருந்தது. அமைதியாக இருந்தது. அவர் மனத்துக்குள் மட்டும் "ஓ" என்று ஒரு பய ஓசை இருந்தது. யாராகிலும் வந்து ஏதாவது சொல்லமாட்டார்களா என்று படபடப்புடன் காத்திருந்தார்.

ஒரு பத்து நிமிடத்தில் கட்டையாக ஒல்லியாக கிறித்துவ கன்னிமார் உடையில் ஓர் அம்மையார் பரந்த சிரிப்புடன் உள்ளே வந்தார். கையில் ஒரு கோப்பு வைத்திருந்தார். "மிஸ்டர் சுந்தரம், என் பெயர் மதர் மேக்டலினா. நீங்கள் என்னை மதர் மேகி என்று கூப்பிடலாம்" என்றார். கையை நீட்டிக் குலுக்கினார்.

கைகுலுக்கினார். "நீங்களும் இந்த மிஸ்டரை விட்டுவிட்டு வெறும் சுந்தரம் என்றே கூப்பிடலாம்" என்றார்.

"நல்லது, நல்லது, சுந்தரம்!" என்று ஒரு முறை பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டார் மதர் மேகி.

தலையைச் சுற்றிக் கட்டியிருந்த ஸ்கார்ஃப் அழகாக இருந்தது. வெள்ளை வெளேரென்ற தோல் அவரை ஒரு மேற்கத்திய நாட்டினர் என்பதைக் காட்டியது. ஆங்கிலத்தைக் கொஞ்சம் பிரஞ்சு போன்ற ஐரோப்பிய வாடையுடன் பேசினார். அகன்ற நெற்றி. அமைதியான முகம். முப்பது முப்பத்தைந்து வயது இளமைத் தோற்றம் இருந்தாலும் அவருக்கு நாற்பத்தைந்து ஐம்பது வயது இருக்கலாம் என ஊகித்துக் கொண்டார்.

"நான் டாக்டர் அல்ல சுந்தரம். ஓரளவு நர்சிங் பழகியிருக்கிறேன். இங்கு நான் பொது உறவு அதிகாரி போன்ற ஒரு பொறுப்பில் இருக்கிறேன். உங்களுக்கு எங்கள் சிகிச்சை முறை பற்றி கொஞ்சம் அறிமுகப் படுத்துவதுதான் என் வேலை. சிகிச்சையளிக்கும் டாக்ர் பின்னால் உங்களைப் பார்ப்பார்" என்றார்.

"தேங்க் யூ, மதர் மேகி" என்று பலவீனமாகச் சொன்னார் சுந்தரம்.

"உங்கள் விவரங்களை இப்போதுதான் மேலோட்டமாகப் பார்த்தேன். நீங்கள் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என அறிந்து கொண்டேன்" என்றார்,.

"ஆமாம். இப்போதுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்"

"மிகவும் மகிழ்ச்சி. என் தகப்பனாரும் ஒரு பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்தான். இன்னமும் பெல்ஜியத்தில் வேலை பார்த்து வருகிறார். நான் பெல்ஜியம் பிரஜை. இந்த பிரான்சிஸ்கன் மிஷனில் சேர்ந்த பிறகு சேவைக்கு என்னைப் பல நாடுகளுக்கு அனுப்பி விட்டார்கள். போன வருடம்தான் மலேசியாவுக்கு வந்தேன்" என்றார்.

"எங்கள் நாடு பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார் சுந்தரம். மதர் மேகியின் குரலினிமையில் நோயை மறந்து விட்டு அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் போல் தோன்றியது.

"அற்புதமான நாடு. இத்தனை இனமக்கள் இவ்வளவு சுமுகமாகப் பழகி வாழ்கிறீர்களே! அதோடு இந்த நாடு எவ்வளவு பசுமையாக இருக்கிறது பாருங்கள். ஆண்டு முழுக்க வெயில் அடிக்கிறது. மழை பெய்கிறது. இதுதான் சுவர்க்கம்" என்றார் மதர் மேகி.

அவருடைய உற்சாகமும் அன்பும் பண்பும் மற்றவர்களிடம் சுலபமாக பூசிக் கொள்ளும் என சுந்தரம் எண்ணிக் கொண்டார். அவருடைய நோய் இப்போதே கொஞ்சம் குணமாகிவிட்டதைப் போல் இருந்தது.

மதர் மேகி கோப்பைத் திறந்தார். "சுந்தரம், உங்கள் நோயைப் பற்றி உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். உங்கள் டாக்டர்கள் சொல்லியிருப்பார்கள்."

பயம் நெஞ்சைத் திடீரென கவ்விக் கொண்டது. தெரிந்த விஷயமாக இருந்தாலும் மரண தண்டனை விதிக்கப் படுவதைக் கேட்கவிருக்கும் கைதி போல மனம் படபடத்தது.

"ஆமாம் சொன்னார்கள். மூளையில் புற்று நோய்க் கட்டி என்று..."

"நீங்கள் படித்தவராக இருப்பதால் நான் அதிகம் உங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டியிருக்காது"

'சொல்லுங்கள் அம்மா, தைரியம் சொல்லுங்கள்' என மனம் உள்ளுக்குள் கெஞ்சியது.

"முதலில் புற்று நோய் என்றால் அது மரணப் பாதை என யாரும் நினைக்க வேண்டியதில்லை. எத்தனையோ பேர் குணமாகி சாதாரண வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா நோயையும் போலத்தான் இந்த நோயும். இதைக் குணப் படுத்த எத்தனையோ மருந்துகள் இப்போது உள்ளன."

கேட்க சுகமாக இருந்தது.

"உடலை நாங்கள் குணப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்வோம். மனத்தளவில் நீங்கள்தான் உறுதியாக இருக்க வேண்டும்"

தாம் உறுதியாக இருக்கிறோமா எனத் தன்னைத் தானே கேட்டுப் பார்த்தார் சுந்தரம். இல்லை. மரண பயம் உலுக்குகிறது. மனம் செத்துச் செத்துப் பிழைக்கிறது.

"நோய் குணமாகும் என்று நம்புங்கள். அந்தச் செயலை இறைவனிடம் ஒப்படையுங்கள். அவனால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும்" என்றார் .

'அவன் என்னைக் கைவிட்டு விட்டான் என்றே தோன்றுகிறது' என மனசுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம்.

"உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா, சுந்தரம்?" என மதர் மேகி கேட்டது முகத்தில் அறைந்தது போல இருந்தது.

தனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என அவருக்கே சரியாக விளங்கவில்லை. மற்றவர்களைப் பார்த்துப் பார்த்து நம்ப வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொண்டதைத் தவிரத் தாமாகக் கடவுளை நம்புகிற சுய நம்பிக்கை இன்னும் உள்ளத்தில் முற்றாகத் தோன்றவில்லை என்றே தோன்றியது. ஆனால் பழக்க தோஷத்தில் தலை மட்டும் மதர் மேகியின் முன் 'ஆம்' என்று ஆடியது.

"நல்லது. அதுதான் முக்கியம். நம் கையில் ஒன்றுமில்லை. அவன் பார்த்துக் கொள்வான் என விட்டுவிடுவதில் உள்ள நிம்மதி போல் வேறு இன்பம் கிடையாது. உங்கள் மருத்துவ அறிக்கைகளை டாக்டரிடம் கொடுத்துவிட்டேன். அடுத்த வாரம் அவர் உங்களைப் பார்த்து சிகிச்சை பற்றிப் பேசுவார்"

"அடுத்த வாரமா? ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா?" படபடப்போடு கேட்டார் சுந்தரம்.

"ஆமாம். மன்னித்துக் கொள்ளுங்கள். நிறைய நோயாளிகள் இருக்கிறார்கள். உங்கள் சிகிச்சை ஒரு வாரம் கழித்துத்தான் ஆரம்பிக்கும். இதற்கிடையில் வலி நிவாரணிகள் கொஞ்சம் தருவோம். வலி வரும் போது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்."

கோப்பிலிருந்து சில கையேடுகளை எடுத்துத் தந்தார். "புற்று நோய் பற்றிய பொதுவான விவரங்களும், ரேடியோதெராப்பி, கிமோதெராப்பி இவை பற்றிய பொதுவான விவரங்களையும் இந்த சிறு புத்தகங்களில் பார்க்கலாம். உடல் சிகிச்சையோடு புற்று நோய் பற்றிய ஒரு பயிற்று நிகழ்ச்சியும் உங்களுக்கு நடத்துவோம். அதற்கு முன் நீங்கள் வீட்டில் இவற்றைப் படித்துப் பார்க்கலாம்"

பல கையேடுகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் சில தமிழிலும் இருந்தன. மார்பகப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் பற்றிய படங்கள் சில பயத்தை ஊட்டின. மருந்து செலுத்துகின்ற முறை, பக்க விளைவுகள் பற்றியும் விவரங்கள் இருந்தன.

"டாக்டர் உங்கள் விவரங்களைப் பார்த்துவிட்டு அடுத்த வாரம் இன்னும் சில சோதனைகள் செய்து என்ன சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்வார். ஒரு சிகிச்சைத் திட்டத்தை வகுத்து உங்களுக்கு விளக்கிச் சொல்லுவார். அதன்பின்தான் சிகிச்சை ஆரம்பமாகும்" என்றார் மதர் மேகி.

"இங்கு தங்க வேண்டியிருக்குமா மதர்?" என்வறு கேட்டார்.

"பெரும் பாலோர் இங்கு தங்க வேண்டியதில்லை. சிகிச்சை பெற்றுக் கொண்டு வீட்டுக்கே திரும்பிவிடலாம். உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா சுந்தரம்?" என்று கேட்டார்.

"இருக்கிறார்கள். மனைவி, இரண்டு பிள்ளைகள், ஒரு பேரப்பிள்ளை. இப்போது கூட மனைவியும் பேரப்பிள்ளையும் வௌியில் இருக்கிறார்கள்!"

"மிக நல்லது. நல்ல அன்பான குடும்பத்தைப் போல வேறு மருந்து உலகத்தில் இல்லை" என்றார் மதர் மேகி.

அந்த நேரத்தில் ஏனோ சுந்தரத்தின் உள்ளத்தில் அந்தக் கேள்வி திடீரென வந்து முளைத்தது. மதர் மேகி இவ்வளவு அன்பாகப் பேசி நெருக்கத்தைக் காட்டியதால்தான் இருக்க வேண்டும்.

"அப்படி இருக்கும் போது நீங்கள் மட்டும் உங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து விட்டீர்களே!"

மதர் மேகி திகைத்தது போல் இருந்தார். அப்புறம் அவர் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. "என்னை அதிர்ச்சியடைய வைத்து விட்டீர்கள், சுந்தரம். இதுவரை நான் சந்தித்த எந்த நோயாளியும் என்னை நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்டதில்லை. தங்கள் துயரத்தில் தங்களைப்பற்றியே சிந்தித்து வருந்திக் கொண்டிருப்பார்களே தவிர, என்னை ஒரு சுமைதாங்கியாக நினைப்பார்களே ஒழிய, என்னைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை" என்றார்.

"மன்னிக்க வேண்டும். உங்கள் மனத்தைப் புண்படுத்தி விட்டேனோ?"

"இல்லை, இல்லை. என்னை மகிழச் செய்திருக்கிறீர்கள். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகிறேன். என் குடும்பம் அன்பான குடும்பம். இன்னும் அவர்கள் மேல் ஆழமான அன்பு வைத்துள்ளேன். ஆனால் கர்த்தருக்குச் சேவகம் செய்ய வந்ததனால் கர்த்தரின் மந்தைகள் அனைத்தும் என் குடும்பம் ஆகிவிட்டது. ஆகவே என் அன்பு இப்போது உலகத்தவர் அனைவருக்கும். குறிப்பாக வருந்துபவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும். அதற்குப் பிரதியாக நான் சந்திக்கும் அனைவரின் அன்பையும் நான் பெற்றுக் கொள்ளுகிறேன். ஒரு சிறிய குடும்பத்தைப் பிரிந்து ஒரு பெரிய குடும்பத்தில் இணைந்து விட்டேன்"

மதர் மேகியின் பேச்சும் உதட்டில் இருந்த மாறாத சிரிப்பும் கண்களின் கூர்மையும் சுந்தரத்தின் உள்ளத்தைத் தொட்டன. "உங்கள் உள்ம் மிகவும் பண்பட்டதாக இருக்கிறது!" என்றார்.

"நீங்களும் ஒரு நல்ல மனிதர். உங்களை இங்கு சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இனி இங்கு அடிக்கடி சந்திப்போம். உங்கள் நோய் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்வேன்."

ஒரு மருந்துச் சீட்டுக் கொடுத்தார். "மருந்துக் கௌண்டரில் சென்று இந்த வலி நிவாரணிகளை மட்டும் இன்று வாங்கிக் கொள்ளுங்கள். டாக்டரைப் பார்க்க வேண்டிய அடுத்த அப்பாயின்ட்மென்ட் இந்தக் கார்டில் எழுதியிருக்கிறேன். குட் பை" என்று எழுந்து போய்விட்டார்.


*** *** ***

வீட்டுக்கு விரைவாகத் திரும்பி விட்டதில் ஜானகிக்குப் பெரிய நிம்மதி என்றாலும் சிகிச்சையை ஒரு வாரம் தள்ளிப் போட்டது அவளுக்குப் பொறுக்கவில்லை. காரில் திரும்புகிற போது "என்ன இப்படித் தள்ளிப் போட்டுட்டாங்களே. மனுஷங்களோட வருத்தம் புரியாதவங்களா இருக்கிறாங்க!" என்று கோபித்துக் கொண்டாள்.

சுந்தரத்திற்கு சிகிச்சை தள்ளிப் போனது ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது. சிகிச்சையின் பயத்தையும் வலிகளையும் ஒத்திப் போடுவதில் ஒரு நிம்மதி இருந்தது. "ஏன் இப்படி அலட்டிக்கிற ஜானகி? அவங்களுக்குத் தெரியாததா! நமக்குத்தான் நோய் முதன் முதல்ல அனுபவிக்கிறதில அது ரொம்ப பயங்கரமாத் தெரியுது. அவங்க ஆயிரக் கணக்கில பாத்தவங்க. எப்ப அவசரப்படணும், எப்ப அலட்டிக்காம இருக்கலான்னு அவங்களுக்குத்தான் தெரியும்" என்றார்.

"அவங்க அவசரப்படாம இருக்கிறதிலியே உன் நோய் அவ்வளவு மோசமில்லன்னு தெரியுதில்ல" என்றார் ராமா. அப்படியும் இருக்கலாம். ஆனால் இது முற்றிப் போன கேஸ். அவசரப்பட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதாகவும் இருக்கலாம் என சுந்தரம் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். ஆனால் அதை வாய் விட்டுச் சொல்லி, மருத்துவ மனைக்குப் போகும் போது இருந்த கடுமை மாறி கலகலப்பாக இருக்கும் சூழ்நிலையைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. பரமா கூட காரில் ஆடிக் கொண்டே

"ரோ, ரோ, ரோ யுவர் போட், ஜென்ட்லி டவுன் த ஸ்ட்ரீம்,
மெரிலி, மெரிலி, மெரிலி, மெரிலி, லைஃப் இஸ் பட் எ ட்ரீம்..."

என்று நர்சரி ரைம் பாடிக் கொண்டிருந்தான். காரில் இருந்த சுமுகச் சூழ்நிலை அவனையும் உற்சாகப் படுத்தியிருக்க வேண்டும்.

மனிதர்களின் மனநிலைகள் எவ்வளவு சீக்கிரம் மாறிவிடுகின்றன என எண்ணிப் பார்த்தார். இருட்டுகள் எப்போதுமே இருட்டுகளாக இருப்பதில்லை. சாம்பலாக வெளுத்து சுண்ணாம்பாகப் பளிச்சிடுகின்றன. வௌிச்சங்கள் வௌிச்சங்களாகவே இருப்பதில்லை. புகையாக மங்கித் தார் போல கருத்து விடுகின்றன. நிலையானது என ஒன்று இல்லை. மாற்றம்தான் நிலையானது. இந்த ஓடிக்கொண்டே இருக்கும் அருவியில் மகிழ்ச்சியாக மெதுவாக உன் படகைச் செலுத்து. மெரிலி, மெரிலி, மெரிலி....

இன்றிரவு ஒரு கரிய இரவாக இருக்கப் போகிறது என்பதை நினைவு படுத்திக் கொண்டார். சிவமணி வந்திறங்கப் போகிறான். "என் மனைவி எங்கே?" என்று சீறப் போகிறான். அவள் இல்லை என்று அறிந்து வீட்டைக் கலக்கப் போகிறான்.

தலைப் பொட்டில் அவருக்கு வலி தொடங்கியது. வயிற்றில் கொஞ்சம் குமட்டல் இருந்தது.. வீட்டை அடைந்ததும் மாத்திரை போடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

காரில் யாரும் பேசவில்லை. ஆனால் பரமா மட்டும் பின் சீட்டிலிருந்து மெல்லிய குரலில் இயந்தரத் தனமாக "மெரிலி, மெரிலி, மெரிலி, மெரிலி" என்று திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தான். சுந்தரத்தின் நெஞ்சில் கொஞ்சமாக இருள் கவிந்தது.


*** **** ****

இருளுக்கு முன் ஒளி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இருள் கவிய வழி இல்லை. சிவமணி என்னும் இருள் இன்றிரவு கவியப் போகிறது என்ற எண்ணத்தோடு மத்தியானம் ஒரு மணி போல் வீடு சேர்ந்து ராமாவின் காரிலிருந்து இறங்கிய போது அவர் வீட்டு வாசலில் அக்கா என்னும் ஒளி பூத்திருந்தது. கார் சத்தம் கேட்டு அன்னம் உள்ளே இருந்து எட்டிப் பார்த்தாள்.

வாய் முழுக்க சிரிப்பாக "எப்ப வந்த அக்கா?" என்று கேட்டுக் கொண்டே இறங்கினார்.

"நான் பதினொரு மணிக்கெல்லாம் வந்திட்டேன் தம்பி. வீடு பூட்டியிருந்திச்சி. பக்கத்து வீட்டு அம்மா சாவி கொண்டாந்து குடுத்தாங்க!" என்றாள் அக்கா.

"அன்ட்டி" என்றவாறு அவளை ஓடிக் கட்டிக் கொண்ட பரமா "தாத்தா இஸ் வெரி சிக்!" என்று அறிவித்தான். ஜானகி "சனியன், சனியன்" எனத் தலையில் அடித்துக் கொண்டே இறங்கினாள்.

சமயலறையிலிருந்து கமகமவென குழம்பு வாசனை வந்தது. அத்தை அடுப்படியில் நின்று சமைத்துக் கொண்டிருந்தாள். "என்ன மாமியும் அத்தையும் வந்தவுடன சமைக்க ஆரம்பிச்சாச்சா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ஜானகி.

அன்னத்தின் முகம் கொஞ்சம் கவலையால் இருண்டது. "என்ன தம்பி ஒடம்புக்கு? ஜானகி ஒண்ணுமே சொல்லலியே!" என்றாள்.

"மெதுவா சொல்றேங்கா. நீதான் வந்திட்டல்ல, இனிமே என் உடம்பு நல்லாயிடும்" என்றார் சுந்தரம். அக்காவைப் பார்த்தது உண்மையிலேயே தெம்பாக இருந்தது.

ராமா அன்னபூரணியிடம் நலம் விசாரித்து காரை எடுத்துக் கொண்டுத் திரும்பத் தயாரானார்.

"அதெல்லாம் ஒண்ணும் முடியாது! கண்டிப்பா நீ சாப்பிட்டுத்தான் போகணும். இன்னைக்கு அத்தையோட சமையல். பிரமாதமா இருக்கும்!" என்று அவரைத் தடுத்து உட்காரப் பண்ணினார் சுந்தரம். ஆனால் தான் சாப்பிட முடியும் எனத் தோன்றவில்லை. மனது உற்சாகமாக இருந்தாலும் வயிறு குமட்டியவாறே இருந்தது.


*** *** ***

சாப்பாடு முடிந்து ராமா காரை எடுத்துக் கொண்டு போய்விட்டார். தனது உதவி எப்போது வேண்டுமானாலும் கூப்பிடும்படி சொல்லிவிட்டுப் போனார்.

ஓய்ந்து உட்கார்ந்த வேளையில் அன்னம் வந்து கேட்டாள்: "என்ன தம்பி உடம்புக்கு? எப்பவும் எங்கியும் சொந்தமா கார ஓட்டிப் போற நீ, உன் நண்பரக் கூப்பிட்டு அவர் கார்ல போற அளவுக்கு உன் உடம்புக்கு என்ன வந்திச்சி? ஆளும் ரொம்ப இளச்சிருக்கியே!"

சுந்தரம் சிரித்தார். "எல்லாருக்கும் போற காலம் ஒண்ணு வருந்தானக்கா! எனக்கு அது கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கு அவ்வளவுதான்!" என்றார்.

"என்ன வந்திருக்கு?"

"மூளையில புற்று நோய். ரொம்ப முத்தியிருக்கு!"

அன்னம் அவர் முகத்தை வைத்த கண் வாங்காமல் ஒரு முழு நிமிடம் பார்த்தாள்.

"உண்மையா தம்பி?"

எதிர் பார்த்த எதிரொலிதான். ஒருமுறை சொல்லியவுடன் நம்பக் கூடிய செய்தி அல்ல. முதல் முறை கேட்டது தவறில்லை, பொய்யில்லை, விளையாட்டில்லை என மறுமுறை கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய செய்தி. இரண்டாவது முறையில் "சும்மா பொய் சொன்னேன்" என்ற நிம்மதியான வார்த்தை வராதா என்ற எதிர்பார்ப்பு.

"உண்மைதாங்கா! எல்லா டாக்டர்களும் உறுதிப் படுத்தியாச்சி!"

"சீரியசா!"

"சீரியஸ்தான். சிகிச்சை வெற்றி பெறலன்னா சாவுதான். அதுக்கு முன்னால படவேண்டிய நரக வலியெல்லாம் ஆரம்பிச்சாச்சி!" உணர்ச்சியில்லால் சொன்னார். இதெல்லாம் எனக்குப் பழகிவிட்டது என்ற தொனியுடன்.

"என்ன செய்யிது?" அக்காவின் குரல் தளுதளுக்கத் தொடங்கியிருந்தது.

"தலையில பிளக்கிற மாதிரி வலி. அடிக்கடி மயக்கம். வயித்தில குமட்டல், வாந்தி. வலி. சில சமயத்தில முதுகிலியும் வலி. சோர்வு. சின்ன வேல செஞ்சாலும் உடல் களைப்பு. தூக்கம் பிடிக்கிறதில்ல. சாப்பாடு தங்கிறதில்ல. சாப்பிட ருசியும் இல்ல..." அவர் குரலிலும் தளுதளுப்பு இருந்தது. அக்காவுக்குச் சொல்வது போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சுய இரக்கத்தில் ஆழ்ந்து விடுவது அவருக்குத் தெரிந்தது. வயிற்றில வலியும் குமட்டலும் ஆரம்பித்திருந்தன. அடக்கி உட்கார்ந்திருந்ார்.

அன்னம் தலையைக் கைகளில் கவிழ்த்துக் கொண்டு அழத் தொடங்கியிருந்தாள். விசும்பினாள். அவள் தோள்கள் குலுங்கின.

சமயலறைச் சுவருக்குப் பக்தத்திலிருந்து மெல்லிய முனகல் குரல் கேட்டது. "தண்ணிப் பக்கம் போகாத போகாதன்னா யார் கேக்கிறாங்க? ஏன் தண்ணிப் பக்கம் போகணும்? தண்ணில ஏன் எறங்கணும்?" அத்தை அங்கு மறைவாக உட்கார்ந்து தங்கள் உரையாடலைக் கேட்டிருக்கிறாள் எனப் புரிந்து கொண்டார்.

ஜானகி சமயலறை வேலைகளை முடித்து விட்டு அங்கு வந்து உட்கார்ந்தாள். அன்னம் அவளை ஏறிட்டுப் பார்த்தாள். "ஏன் ஜானகி இந்த விஷயத்த எங்கிட்ட முன்னாலிய சொல்லல? எங்கிட்ட இருந்து மறைக்கலான்னு பாத்திங்களா?" என்று கோபமாகக் கேட்டாள்.

"ஐயோ, எனக்கே நேத்து ராத்திரிதான் தெரியும் மாமி. வலிக்குது வலிக்குதுன்னு டாக்டரப் போய் பாத்துப் பாத்திட்டு வந்தாங்க. சாதாரண தலவலி வயித்து வலின்னுதான் நானும் இருந்தேன். ரெண்டு வாரத்துக்கு முன்னதான் ஜெனரல் ஆஸ்பத்திரியில எல்லா டெஸ்டும் பண்ணி நேத்துதான் முடிவு சொன்னாங்க. அப்புறம் ராதா வேற இந்தப் பிள்ளய கூட்டிட்டு ராத்திரி வந்திருந்தாளா? நேத்து இங்க நடந்த கூத்தில எனக்கு தலையே சுத்திப் போச்சி. அப்புறந்தான் காலையில உங்களுக்குப் போன் பண்ணினேன்."

"இதுக்கு மருந்து, சிகிச்சை இருக்கணுமே தம்பி. இப்பதான் மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கே!" என்றாள் அன்னம்.

மதர் மேகியின் முகம் அவர் மனதுக்குள் வந்தது. அவருடைய இனிய சொற்கள் காதில் ஒலித்தன.

"இருக்கு அக்கா. அடுத்த வாரந்தான் மௌன்ட் மிரியம் ஆஸ்பத்திரியில சிகிச்சை ஆரம்பிக்கப் போறாங்க. ரேடியோதெராப்பி, கெமோதெரப்பி கொடுப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதிலியும் கடுமையான பக்க விளைவுகள் இருக்கு. நெனச்சா பயமாத்தான் இருக்கு!"

"பயந்தா முடியுமா! எல்லாத்தையும் செஞ்சிதான் பாக்கணும். எல்லாம் குணமாயிடும்கிற நம்பிக்கை வேணும். மனசு உற்சாகமா இருக்கணும். கவலப் படக் கூடாது!" அன்னம் பேசுவது மதர் மேகி பேசுவது போல இருந்தது. மதர் அழகிய பிரஞ்சு வாசனை உள்ள ஆங்கிலத்தில் சொன்னார். அன்னம் பாசமான வீட்டுத் தமிழில் சொல்கிறாள். அதுதான் வேறுபாடு.

"பாட்டி கிவ் மீ சொக்கலேட்" என்றவாறு பரமா அங்கு வந்தான்.

"இந்த சந்தர்ப்பத்தில இவன் வேற இங்கு வந்து மாட்டிக்கிட்டான் மாமி!" என்றவாறு அவனை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டாள் ஜானகி. "நேத்து ராத்திரி அவங்க அம்மா கொண்டாந்து...."

"ஜானகி" என்று அதட்டினார் சுந்தரம். "அந்தக் கதையெல்லாம் பிறகு அக்காகிட்ட தனியா இருக்கும் போது சொல்லு. குழந்தயப் பக்தத்தில வச்சி அவனுக்குக் கலவரத்த உண்டாக்காத!" என்றார்.

ஜானகி அடங்கிப் போனாள். அன்னமும் அமைதியானாள். சமயலறையில் அத்தை விசும்பி அழும் குரல் கேட்டது. சாதாரண புத்தி உள்ளவர்களுக்கே மனதில் இருளை உண்டாக்கும் இந்த நோய்ச் செய்தி அத்தையின் குழம்பிப்போன முதிர்ந்த மனதில் என்னென்ன இருண்ட அதல பாதாளங்களை உண்டாக்குகிறதோ என எண்ணினார்.

இந்த வீட்டில் கருமை படர்ந்திருக்கிறது. இந்த வீட்டினுள் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன. இனி இரவில் கடும் புயல் சுழன்று வீசப் போகிறது. தன் மனத்தின் அவலங்களுக்கு ஒரு முடிவு இல்லை என எண்ணினார் சுந்தரம். இது ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் காலம். உறுத்தி வருத்தித்தான் விடும். இதிலிருந்து தப்பிப்பது என்பது இல்லை.

நெஞ்சு குமட்டியது. மெதுவாக எழுந்து குளியலறையை நோக்கிச் சென்றார்.

அந்த வீடு சிவமணியின் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தது.

----


அந்திம காலம் - 8


மாலை 6 மணியளவில் போன் அடித்தது. சுந்தரம் சென்று எடுத்து "ஹலோ" என்றார்.

"வேர் இஸ் தெட் பிச்?" என்றது சிவமணியின் முரட்டுக் குரல்.

அருவருப்போடு கேட்டார்: "யார் சிவமணியா? உன் மனைவியக் கேக்கிறியா?"

"கூப்புடுங்க அவள" என்றான்.

"அவ இப்ப இங்க இல்ல" என்றார்.

"ஓ, போனுக்கு வரமாட்டாளா! நேர்ல வந்து பேசிக்கிறன்னு சொல்லுங்க... மாமா, இப்பத்தான் கோலாலம்பூர்ல இருந்து புறப்பட்றேன். பத்து மணி போல வந்துடுவேன். அவள அங்கயே வெயிட் பண்ணச் சொல்லுங்க!" போனைத் துண்டித்தான்.

மெதுவாகப் போனைக் கீழே வைத்தார். அவன் தனது கைத் தொலைபேசியில் இருந்து பேசுகிறான் என்பதை ஊகித்துக் கொண்டார். அவன் குரலில் மூர்க்கமும் முரட்டுத் தனமும்தான் இருந்தன. தன் மனைவியுடன் சமாதானம் பேச அவன் வரவில்லை. சண்டை போடுவதற்காகவே வருகிறான். வந்தவுடன் தன் மனைவி இங்கு இல்லை எனத் தெரிந்ததும் என்ன மாதிரி ஆர்ப்பாட்டங்கள் பண்ணப் போகிறானோ என அஞ்சினார்.

ஒரு நிமிடம் நண்பர் ராமாவைக் கூப்பிட்டு துணைக்கு இருக்கச் சொல்லலாமா என நினைத்தார். ஆனால் அடுத்த நிமிடம் மனதை மாற்றிக் கொண்டார். ராமாவுக்கு இன்று காலை கொடுத்த தொல்லைகள் போதும். இனியும் அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என முடிவு செய்தார். மேலும் இது என் குடும்ப விவகாரம். என் சண்டை. நானாகத் தனித்துத்தான் இதை நடத்த வேண்டும். அடுத்தவர் துணையை நாடுவது பெருமையல்ல.

சோர்ந்து டெலிவிஷன் முன் வந்து உட்கார்ந்தார். மத்தியானம் கொஞ்ச நேரம் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. மாத்திரைகளின் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். உடல் முழுக்க வலிகள் குறைந்திருந்தன. சோர்வாக இருந்தாலும் நிம்மதியாக இருந்தது.

உட்கார்ந்திருந்த நாற்காலியில் முதுகுக்கு ஒரு தலையணையை முட்டுக் கொடுத்துக் கொண்டார். முதுகுக்கு அந்தச் சுகம் தேவைப் பட்டது. தான் விரைவாகக் கிழமாகிக் கொண்டு வருவதாகத் தோன்றியது.

டெலிவிஷனில் ஏதோ சீன சண்டைப் படம் ஓடிக் கொண்டிருந்தது. பரமா அங்கு உட்கார்ந்து அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் தன்னை மறந்திருந்தான். "பரமா" என்று கூப்பிட்டார். அவன் டெலிவிஷனில் வைத்த கண் மாறாமல் பின்னோக்கி நடந்து அவரிடம் வந்தான். அவனைத் தூக்கி மடியில் உட்கார வைத்தார். காற்று போல லேசாக இருந்தான்.

அவன் கண்கள் படத்திலேயே இருந்தன. "என்ன பாக்கிற பரமா?" என்று கேட்டார்.

"குங் ஃபூ" என்றான். டெலிவிஷனில் ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டிப் பறக்கும், இடுப்பில் கருப்புத் துண்டு கட்டியிருந்த சீன வீரனின் உதையில் எதிரிகள் சிதறி விழுந்து கொண்டிருந்தார்கள்.

"இந்தப் படம் உனக்கு விளங்குதா கண்ணு?" என்று கேட்டார்.

"ஹீ இஸ் கில்லிங் ஆல் த பேட் பீப்பல்" என்றான் பரமா. ஆமாம். விளங்கிக் கொள்ள அது போதும். இந்த டெலிவிஷன் திரை உலகில் எல்லாப் பாத்திரங்களும் சுலபமாக நல்லவன் கெட்டவன் எனத் தெரிகிறார்கள். கருப்பும் வெள்ளையுமாய் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறார்கள். வெள்ளை ஹீரோ கருப்பு வில்லன்களை அடித்து வீழ்த்துவார். இங்கு பண்போ பச்சாதாபமோ தேவையில்லை. வில்லன்கள் எந்த வகையிலும் பரிதாபத்துக்குரியவர்கள் அல்ல. உருவத்தால் கூட அவர்கள் அழகாக இருக்க மாட்டார்கள். ஆனால் ஹீரோ எப்போதுமே அழகாக இருப்பான். இந்த டெலிவிஷன் மொழியைப் புரிந்து கொண்டால் பேச்சு மொழி பற்றி கவலைப்படத் தேவையில்லை.

தாம் சின்ன வயதில் ஆங்கில மொழி கொஞ்சமும் தெரியாத நிலையில் "டார்ஸன்" படங்களும் "கேப்டன் அமெரிக்கா" படங்களும் பார்த்து அனுபவித்ததை நினைத்துக் கொண்டார். அங்கு மொழி புரியாமலேயே கதைகள் தௌிவாக இருக்கும். சண்டைகள் பலமாக இருக்கும். நல்லவனான ஹீரோ எப்போதும் வென்று அப்பாவி மக்களை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவான். ஜேன் தொல்லையில் மாட்டிக கொள்ளும் போதெல்லாம் எங்கிருந்தும் வந்து காப்பாற்றி விடுவான். ஜேன் அவனைக் காதல் ஒழுகும் கண்களால் பார்த்து பார்ப்பவர்கள் உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்துவாள்.

வாழ்க்கை இந்தப் படங்களைப் போல் இருந்தால் எத்தனை எளிதாக இருக்கும்! ஜேன் எந்த நாளிலும் வில்லன்களைக் காதலிக்க மாட்டாள். மிருகங்கள் கூட ஹீரோ பக்கத்தில்தான் இருக்கும். ஹீரோவாக இருக்கும் யாரும் வில்லன்களாக மாறமாட்டார்கள்.

ஆனால் வாழ்க்கையில் சிவமணி போன்றவர்கள் ஹீரோவாகக் காட்சி தந்து வில்லன்களாக மாறிவிடுகிறார்கள். ஜேன்களுக்கு முதல் பார்வையில் இவர்கள் ஹீரோக்களா வில்லன்களா என்று சொல்ல முடிவதில்லை.

ஆனால் அந்த வில்லன்களோடு போரிட்டு ராதா போன்ற ஜேன்களைக் காப்பாற்ற நிஜ வாழ்க்கையில் டார்ஸன் போன்ற ஹீரோக்கள் இல்லை. அநேகமாக நிஜ உலகில் ஹீரோக்கள் எங்குமே இல்லை. அப்படி இல்லாததால்தான் டார்ஸன், பேட்மேன், சூப்பர்மேன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போன்றோர் போடும் பல்வேறு வேடங்கள் போன்ற கற்பனைகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு மனித குலம் சுகம் கண்டு கொண்டிருக்கிறது. நிஜ உலகில் ஹீரோக்கள் போலீஸ்காரன், வக்கீல், நீதிபதி போன்று சம்பளத்துக்கு வேலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் பாதிப் பேர் ஹீரோ வேடத்தில் உள்ள வில்லன்களாகத்தான் இருக்கிறார்கள்.

டெலிவிஷனில் சண்டைகள் ஓய்ந்து சீன ஹீரோவின் காதலி அவனருகில் அணைந்து நின்று அவனைச் சிருங்காரப் பார்வை பார்த்தாள். அவர்கள் இதழ்கள் நெருங்கி வரும் நேரம் தணிக்கையாளரின் கத்தரிப்பில் காட்சி மாறியது.

சண்டை முடிந்து சிருங்காரம் ஆரம்பித்ததும் பரமாவுக்கு படம் பார்க்கும் ஆர்வம் விட்டுப் போய் விட்டது. "தாத்தா, ஐ வான்ட் சொக்கலேட்" என்றான்.

"சொக்கலேட் வேணுன்னா பாட்டியப் போய்க் கேளேன்!" என்றார்.

"ஷீ வில் ஸ்கோல்ட்" என்றான்.

"சரி. பரமா! நான் எடுத்துத் தாரேன். ஆனா அதையே தமிழ்ல கேளு பாப்போம்" என்றார்.

"ஹௌ?"

"தாத்தா! எனக்கு சொக்லேட் வேணும்!"

"தாத்தா! எனக்கு சொக்லேட் வான்ட்"

"இல்ல, சொக்லேட் வேணும்!"

"சொக்லேட் வேணும்" என்றான் மழலையில்.

தட்டிக் கொடுத்தார். எழுந்து அடுப்பங்கரைக்குச் சென்று பிரிட்ஜைத் திறந்து சொக்லட் தேடினார்.

"என்ன தேட்றிங்க?" என்று கேட்டாள் ஜானகி.

"பரமாவுக்கு சொக்லட் வேணுமாம், ஜானகி!" என்றார்.

"ஐயோ குடுக்காதீங்க! சாப்பிட்டு சாப்பிட்டு இருமுறான். வாந்தி கூட எடுக்கிறான்!" என்றாள் ஜானகி.

"ஒரு சின்னத் துண்டு ஜானகி. ஆசையா கேக்கிறான் பாரு!"

ஒரு சிறிய துண்டு உடைத்துக் கொடுத்தாள். "இப்படியே சீனியா குடுத்துப் பழக்கி வச்சிருக்காங்க. பிள்ளைக்கு உடம்பு ரொம்ப கெட்டிருக்குங்க!" என்றாள்.

"அதுக்காக உடனே நிறுத்திட முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா நிறுத்துவோம்!" என்றார்.

சொக்கலேட்டுடன் பரமாவை நோக்கித் திரும்பிய போது தலை கிர்ரென்று ஒருமுறை சுற்றி நின்றது.


*** *** ***

பத்தரை மணிக்குள் தன் கைத் தொலை பேசியிலிருந்து மூன்று முறை அழைத்து விட்டான். தஞ்சோங் மாலிமில் இருக்கிறேன், தாப்பாவில் இருக்கிறேன், புக்கிட் மேராவில் இருக்கிறேன் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் ராதாவோடு பேச வேண்டும் என்று அடம் பிடித்தான். "நேராக வா பேசிக் கொள்ளலாம்" என்று சொல்லிச் சமாளித்தார். ஒரு முறை பரமாவை அழைத்துப் பேசினான். பேசிப் போனை வைத்த பரமா "மை பாதர் சேய்ஸ் ஹீ இஸ் கமிங்" என்று மட்டும் சொன்னான். அப்பனைக் காணுகின்ற ஆனந்தம் ஒன்றும் அவன் முகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

பதினொரு மணிக்குத்தான் அவனுடைய பாஜேரோ ஜீப் அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. ஒரு குட்டி யானை போல இருந்த அந்த ஜீப்பின் இரண்டு விளக்குகளும் தீப்பந்தங்கள் போல் இருந்தன. அந்த விளக்கின் பிரகாசத்தில் சுந்தரத்தின் கண்கள் குறுகிப் போயிருக்க ஒரு ராட்சச நிழல் போல ஜீன்சுடன் கீழே இறங்கினான் சிவமணி. கட்டி வைக்கப் பட்டிருந்த ஜிம்மி அவனைப் பார்த்துக் குரல் வெடிக்கக் குலைத்தது.

ஜீப்பின் விளக்குகளை அணைத்துவிட்டு உள்ளே வந்தான். பெண்கள் அனைவரும் உள்ளே போய்விட்டார்கள். பரமா தூங்கி விட்டிருந்தான்.

"வா சிவமணி" என முகமனுக்காக வரவேற்றார் சுந்தரம்.

"எங்க மாமா என் டியர் வைஃப்? வரச் சொல்லுங்க!" என்றான்.

"உட்காரப்பா! சாப்பிட்டியா, ஏதாகிலும் சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லட்டுமா?" என்று கேட்டார். அவனைப் போல மொட்டையாக விவகாரத்தை ஆரம்பிக்கத் தயங்கினார்.

"ஒண்ணும் வேண்டாம். வர்ர வழியில சாப்பிட்டுட்டேன்!" என்றான். "எங்க போயிட்டா ராதா? ஒளிஞ்சிக்கிட்டிருக்காளா? பிரேம் எங்கே?" என்று கேட்டான்.

"பிரேம் தூங்கிட்டான். எழுப்பட்டுமா?" என்றார்.

"வேணாம். அப்புறம். ராதாவ வரச்சொல்லுங்க" என்றான்.

நாற்காலியில் அழுந்த உட்கார்ந்து கொண்டார். "ராதா இங்க இல்லப்பா!" என்றார்.

"எங்க போயிட்டா?" ஆத்திரத்துடன் கேட்டான்.

"எனக்கு விவரமெல்லாம் தெரியாது. கடிதம் எழுதி வச்சிட்டுப் போயிருக்கா. அதுதான் தெரியும்!" கடிதத்தை அவனிடம் நீட்டினார். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. தான் தயங்கித் தயங்கிச் சொல்வதை விடக் கடிதம் தௌிவாகச் சொல்லும். அவள் வார்த்தைகளிலேயே அவனுக்கு உறைக்குமாறு செய்தி போய்ச் சேரட்டும் என்றிருந்தார்.

படித்து முடித்துக் கடித்ததைக் கசக்கி எறிந்தான். "பிளடி பிச், பிளடி பிச்..." என்று கத்தினான். எழுந்து அங்குமிக்கும் நடந்தான். உட்கார்ந்தான். தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்திருந்தான். அப்புறம் தலையைத் தூக்கி அவரை முறைத்தான். இதற்கிடையே ஜானகியும் அன்னமும் ஒன்றாக வந்து ஹாலில் உட்கார்ந்தார்கள்.

"பாத்திங்களா உங்க மக செஞ்ச வேலய! பாத்திங்களா என்ன தேவடியாத் தனம் பண்ணியிருக்கன்னு! பாத்திங்களா அத்தை! உங்களுக்கெல்லாம் நல்லா இருக்கா இது?" என்று கத்தினான்.

ஜானகி பேசினாள். "எங்கள ஏம்ப்பா சத்தம் போட்ற? எங்களுக்கு இது பத்தி ஒண்ணுமே தெரியாது. உங்க புருஷன் பெஞ்சாதிக்குள்ள உறவக் காப்பாத்திக்க உங்களால முடியில. இதுக்கு வௌியார் நாங்க என்ன பண்ண முடியும்? எங்களுக்கும் கடிதத்தப் பாத்து அதிர்ச்சியாத்தான் இருக்குது!" என்றாள்.

"பொம்பளயா அவ, பொம்பிளயா? பேய். வேசி!" என்றான்.

சுந்தரம் சொன்னார்: "பொறுமையா பேசு சிவா. அக்கம் பக்கத்தில உள்ளவங்க கேட்டா நல்லா இருக்காது. குடும்பத்துக்குத்தான் அவமானம்!" என்றார்.

"எங்க இருக்கு குடும்பம்? அதத்தான் தொலைச்சிட்டுப் போயிட்டாளே!" என்று மீண்டும் கத்தினான்.

"குடும்பம் தொலைஞ்சதுக்கு அவ மட்டுமா காரணம்? நீ நல்லபடி இருந்திருந்தா விஷயம் இவ்வளவு தூரம் போயிருக்குமா?" என்றாள் ஜானகி.

"நான் என்ன பண்ணிட்டேன் இவள? புதிசா ஒரு கம்பெனிய ஆரம்பிச்சி அதில போட இவளக் கொஞ்ச பணம் கடனா கேட்டேன். குடுக்க மாட்டேன்னுட்டா! அதனால கொஞ்சம் சத்தம் போட்டேன். அவ்வளவுதான!" என்றான்.

"இதுக்கு முன்னால ஆரம்பிச்ச கம்பெனி எல்லாம் என்னப்பா ஆச்சி? இதுக்கு முன்னால அவகிட்ட இருந்து வாங்கின கடன் எல்லாம் என்ன ஆச்சி?" என்று ஜானகி கேட்டாள்.

"அத்த, வியாபாரத்தில நட்டம் லாபம்கிறது எல்லாருக்குமே உள்ளதுதான! முதல் கம்பெனி நொடிச்சிப் போச்சின்னுதான் இரண்டாவது கம்பெனி ஆரம்பிச்சேன்!" என்றான்.

பொறுமையாக இருந்த சுந்தரம் கேட்டார்: "அவ காசு குடுக்காதத்துக்காக நீ அவள அடிச்சதா சொல்லியிருக்காளே! அது உண்மையா?"

அவரை முறைத்துப் பார்தான். "ஆத்திரத்தில அப்படி இப்படி தட்டியிருப்பேன். அது ஒரு பெரிசா?"

"சிகரெட்டால சூடு வச்சியா?" என்று கேட்டார்.

"நோ, தவறிப் பட்டிருக்கலாம்!" என்றான்.

"சிவமணி, இந்த மாதிரி ஒரு மனைவிய நடத்திறது நாகரிகமாப்பா?" என்று கேட்டார்.

அவனுக்குக் கோபம் வெடித்துக் கொண்டு வந்தது.

"அவ மட்டும் ரொம்ப ஒழுங்கா! பாருங்க ஒரு வெள்ளக்காரனோட ஓடிப் போயிருக்கா! இதுதானா நீங்க புள்ளய வளத்த லட்சணம்?" என்று கூவினான். தன் குறைகள் வௌிப்பட ஆரம்பித்தவுடன் கூச்சலால் அதை முழுகடிக்க முயன்றான்.

"நாங்க வளர்த்த லட்சணத்தப் பாத்துத்தானப்பா நீ விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட! நீ அவள வச்சிருந்த லட்சணந்தான் அவள இந்த நெலமைக்குத் தள்ளியிருக்கு. நீ அவள அன்பா வச்சிருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா?" என்றார் சுந்தரம். ராதாவின் சிகரெட் சுட்ட தளும்புகள் நினைவுக்கு வந்தன. அதைச் செய்த இந்த மிருகமா வளர்த்த லட்சணம் பற்றிப் பேசுகிறது?

மனத்தைப் பற்றி நின்ற வெறித் தனமான கோபத்தில் உடம்பின் உபாதைகள் மறந்திருந்தன. ஒழுக்கத்தையும் நெறிகளையும் வாழ்நாள் முழுதும் போற்றி நின்ற என்னை ஒரு மிருகமா கேள்வி கேட்பது? என்ற மூர்க்கமே மனதில் நின்றது.

"மாமா, நான் இவளச் சும்மா விட மாட்டேன். எங்க இருந்தாலும் தேடிப் பிடிப்பேன் பாருங்க. பிடிச்சி இவ தலை முடிய பிடிச்சி இழுத்து உதைக்கறனா இல்லியா பாருங்க!" என்றான்.

எழுந்து நின்றார். குரலை உயர்த்தினார்: "போடா. பிடிச்சி இழு! உதை! ஒன்னப்போல பண்பில்லாத மிருகங்களுக்கு வேற என்ன தெரியும்? ஆனா இந்த நாட்டில சட்டம்னு ஒண்ணு இருக்கு. நீ அப்படியெல்லாம் செய்ய அது விட்டுடாது. உன்னக் கம்பி எண்ண வைக்காம விடாது!" என்றார்.

அறை வாசலில் நிழல் தெரிந்தது. பரமா கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றான். ஜானகி போய் அவனை அணைத்துக் கொண்டாள்.

"கம் ஹியர் மை போய்!" என்று சிவா அதட்டிக் கூப்பிட இயந்திரம் போல் அவன் அருகே போய் நின்றான். முகத்தில் பயமும் கலவரமும் இருந்தன.

"உங்க அம்மா என்ன செஞ்சிருக்கா பாத்தியா பிரேம்?" என்று அவனைக் கேட்டான் சிவா.

"சிவா. குழந்தைக்கு நாங்க ஒண்ணும் சொல்லல. அவன பயமுறுத்தாதே!" என்றார் சுந்தரம்.

"வேர் இஸ் மை மம்மி?" என்று கேட்டு அழுதான் பரமா.

"ஷீ இஸ் நோட் யுவர் மம்மி! ஷீ இஸ் எ பிச்!" என்றான் சிவா.

சுந்தரம் பரமாவை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டார். பரமா அவர் மடியோடு ஒட்டிக் கொண்டு பலமாக இருமினான். பயந்து போய் இருந்தான் எனத் தெரிந்தது. என்ன ஜென்மம் இவன்? பிள்ளையிடமா இப்படிப் பேசுவது? இத்தனை பண்புக் கேடனாகவா மாறிவிட்டான்? ராதா இவனை விட்டு ஓடிப் போனது முற்றிலும் சரி எனப்பட்டது அவருக்கு!

"சிவா. இதெல்லாம் என்ன பேச்சு? அதுவும் பச்சைக் குழந்தை முன்னால. உனக்கும் உன் மனைவிக்கும் உள்ள சண்டைய உங்களுக்குள்ள போட்டுக்குங்க. குழந்தய அதில இழுக்க வேணாம்!" என்றார்.

அவன் குழந்தையை மறந்து விட்டான். "மாமா! இவள நான் கோர்ட்டுக்கு இழுக்காம விடமாட்டேன். இது அடல்டரி. இவ மேல கேஸ் போட்டு லட்ச லட்சமா நஷ்ட ஈடு கேக்கப் போறேன். இவ கத ஊர் முழுக்க சிரிக்கட்டும்!" என்றான்.

இது வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்னம் இப்போது கேட்டாள்: "ஏம்பா சிவமணி! இந்தக் கதையெல்லாம் கோர்ட்டுக்குப் போனா ஊர் அவள மட்டும்தான் பாத்துச் சிரிக்குமா? நீ அவளப் பண்ணின கதையெல்லாம் கேட்டு உன்னப் பாத்து சிரிக்காதா?"

அன்னத்தையும் முறைத்துப் பார்த்தான். "ஓஹோ எல்லாரும் ஒரு கேங்கா என் மேலேயே குத்தம் சொல்றிங்களா? அவ உங்க ஊட்டுப் பொண்ணுக்கிறதினால தலயில தூக்கி வச்சிட்டு ஆட்றிங்களா?" என்றான்.

"நாங்க தலையில தூக்கி வச்சிக்கிலன்னாலும், ஒன்னப் போல அவளத் தரையில போட்டு மிதிக்கத் தயாரா இல்ல. அவள் ஒன்னோட கொடுமை தாங்காமத்தானே இப்படி பண்ணியிருக்கான்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தியா?" என்று கேட்டாள் அன்னம்.

அவன் எழுந்து நின்றான். "நான் போறேன். உங்களோட பேசி என்ன பிரயோஜனம்? நான் யாருங்கிறத உங்களுக்கெல்லாம் காட்றேன்" என்றான். திடீரென பரமாவைப் பார்த்தான். "கமான் போய். போலாம் வா!" என்றான்.

சுந்தரம் திடுக்கிட்டார். பரமா அவர் மடியில் இன்னும் ஆழமாகப் பதிந்தான்.

"அவன ஏன் கூப்பிட்ற சிவா?"

"அவன் என் மகன்! அந்த வேசையோட அவனுக்கு ஒரு சம்பந்தமும் வேண்டாம்! அவன இங்கிருந்து வௌியேத்த வேணும்!" என்றான்.

"வௌியேத்தி எங்க கொண்டி வச்சிக்குவ? வீட்டில அவன யார் பாத்துக்குவா?"

"அதப்பத்தி உங்களுக்கென்ன? என் மகன நான் எப்படியாவது வளத்துக்குவேன்!" என்றான்.

"தாத்தா, ஐ டோன்ட் வான்ட் டு கோ!" என்று அழுதான் பரமா. அவன் தொண்டை விக்கியது. இருமலும் சளியுமாக வந்தது.

"நீ இப்ப என்னோட வாரியா, இல்ல இழுத்து ரெண்டு போடட்டுமா?" என மிரட்டினான் சிவா.

அவனை இறுக அணைத்துக் கொண்டு பேசினார். "சிவா, உன் கோவத்தில உன் பிள்ள வாழ்க்கைய பாழாக்காத! எப்படி பயந்து போயிருக்கான் பாரு! நீ ஒருத்தனா அவன வளர்க்க முடியாது. அவன் எங்களோட இருக்கட்டும். உங்க விவகாரமெல்லாம் முடிஞ்சவுடன அழச்சிக்கிட்டுப் போ!" என்றார்.

கடைசி வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் பயந்தான் பரமா. "நோ, ஐ டோன்ட் வான்ட் டு கோ!" என்று கால்களை உதைத்துக் கொண்டு அலறினான்.

விருட்டென்று எழுந்து வௌியே போனான் சிவா. வாசலிலிருந்து கத்தினான். "ஓக்கே! கொஞ்ச நாள்தான் மாமா! எனக்கு இன்னொரு பொம்பளயத் தேடிக்கிட்டு பிரேமை என்னோட அழச்சிக்குவேன். அது வரைக்கும் இங்க விட்டு வைக்கிறேன். ஆனா உங்க மகளயும் உங்க குடும்பத்தயும் சும்மா விட்ற மாட்டேன். கோர்ட்டில ஏத்தி சந்தி சிரிக்க வைக்காம விட மாட்டேன்! பாத்துக்கிங்க!"

பாஜேரோவில் பாய்ந்து ஏறினான். என்ஜின் சீறியது. இரண்டு விளக்குகளும் நெருப்பைக் கக்கின. வீட்டின் உள்ளே வௌிச்சம் உஷ்ணமாகப் பாய்ந்தது. ரிவர்சில் எடுத்தான். ரோட்டில் டயர்கள் தேய வேகமாக ஓட்டினான். ஜிம்மி சங்கிலியில் திமிறிக் கொண்டு விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது.

ஜானகி வந்து பரமாவைத் தூக்கிக் கொண்டாள். அவன் விம்மியவாறே இருந்தான். மூக்கில் சளியும் வாயில் எச்சிலும் ஒழுகிக் கொண்டிருந்தன. ஜானகி துடைத்துத் தலையைக் கோதி விட்டாள். அவனைக் கொண்டு படுக்கையில் போட்டு ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தாள்.

அன்னமும் சுந்தரமும் மட்டும் அங்கு உட்கார்ந்திருந்தார்கள். சுந்தரத்தின் கைலி பரமாவின் கண்ணீரிலும் சளியிலும் நனைந்திருந்தது. மாற்ற வேண்டும் என நினைத்தார். ஆனால் எழுந்திருக்கச் சக்தியும் மனமும் இல்லை.

அந்த வீட்டுக்குள் ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. புயல் ஓய்ந்த நிம்மதி இருந்தாலும் அது விளைத்த சேதங்களை அனைவரின் மனங்களும் அசை போட்டுக் கொண்டிருந்தன. மீண்டும் புயல் வருமோ, போன சிவா தன் ராட்சச பாஜேரோவில் திரும்பி வந்து விடுவோனோ என்பதைப் போல சுந்தரம் கொஞ்ச நேரம் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மெதுவாக எழுந்து வௌியே சென்று கேட்டை அடைத்துப் பூட்டினார். ஜிம்மியை அவிழ்த்துவிட வந்த போது அது அவர் கையையும் முகத்தையும் பாய்ந்து பாய்ந்து நக்கியது. அவிழ்த்து விட்ட பின் குதித்துக் குதித்து அவரைச் சுற்றி வந்தது. அதனிடமிருந்து மீண்டு சுந்தரம் உள்ளே வந்து கதவையும் சாத்தினார்.

அன்னம் இருந்த இடத்திலிருந்து கேட்டாள்: "எப்படித் தம்பி இப்படி ஒரு முரடன் நம்ப குடும்பத்தில வந்து சேந்தான்?"

சுந்தரம் சிரித்தார். "என்ன பண்ணுறது அக்கா! நான் செஞ்ச பாவமா, அல்லது ராதா செஞ்ச பாவமோ தெரியில! யாரையோ தண்டிக்கத்தான் இவன தெய்வம் நம்ப குடும்பத்துக்கு அனுப்பியிருக்கு!" என்றார். அன்னம் பேசவில்லை.

தண்டிக்கப் படுவது தானாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த நோய், இந்த முரட்டு மருமகன் எல்லாம் அந்தத் தண்டனையின் பகுதிகள்தான் எனத் தோன்றியது. உடலின் களைப்பு ஆளைத் தள்ளிற்று.

"அக்கா, நான் போய் படுக்கிறேன்!" என்றார்.

"ஒடம்பு ஏதாவது செய்யிதா?" என்று கவலையுடன் கேட்டாள் அன்னம்.

"எப்போதும் செய்றதுதான். புதிசா என்ன செய்ய இருக்கு? ஆனா உடம்பு நோய விடக் களைப்புத்தான் அதிகமா இருக்கு!" என்றார்.

"சரி போய் தூங்கு தம்பி!" என்று அன்னம் எழுந்து உள்ளே போனாள். போய் படுப்பது எளிது. ஆனால் தூக்கம் வருமா எனத் தெரியவில்லை. தெய்வம் எல்லாம் தண்டித்து முடிந்திருந்தால் தூக்கம் கொடுக்கும். ஆனால் தண்டனைகள் மிச்சம் இருந்தால் பஞ்சணை கொடுத்தாலும் தூக்கம் கொடுக்காது. உயிர் கொடுத்தாலும் சுகம் கொடுக்காது. மனம் கொடுத்தாலும் நிம்மதி கொடுக்காது.


சுந்தரம் மெதுவாகப் படுக்கை நோக்கி நடந்தார்.


*** *** ***

தூக்கம் வரவில்லை. கண்கள் சொருகிச் சொருகிப் போனாலும் மூடும் சமயத்தில் எங்காவது வலி வந்தது. ஒரு நேரம் முன் தலையில், ஒரு நேரம் பிடறியில், முதுகில், வயிற்றில் இப்படியே மாறி மாறி. புரண்டு புரண்டு படுத்தார். வலியைத் திசைமாற்ற முயன்று தோற்றார்.

சிவாவிடம் சண்டை போடும் மோது மட்டும் வலி போன இடம் தெரியவில்லை. அப்போது அவனிடம் சண்டையிட எல்லா உயிர்ச் சக்திகளையும் உடல் திரட்டி சேமிப்பில் வைத்திருந்தது. அவனை முறியடிக்க வேண்டும் என்ற வெறியில் மற்ற எல்லா வலிகளையும் தள்ளி வைத்திருந்தது. இப்போது அந்தப் போர்க் களத்தில் வௌி எதிரி மறைய உள் எதிரிகள் உக்கிரமாகத் தலை தூக்கி விட்டார்கள்.

ஒரு முறை வயிறு குமட்ட குளியலறையில் சென்று வாந்தியெடுக்க முயன்றார். ஆனால் ஒன்றும் வரவில்லை. அந்த முயற்சியில் தொண்டை வறண்டு கண்களில் கண்ணீர் மட்டும் வந்தது. முகத்தைக் கழுவித் துடைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தார்.

அன்னமும் ஜானகியும் சமயலறையில் உட்கார்ந்து மெதுவாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அன்றைய நிகழ்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லி ஜானகி அழுகிறாளோ? இந்த இரண்டு நாட்களில் ஜானகிக்குத் தாங்க முடியாத அதிர்ச்சிகள்தான். முதலில் ராதாவின் சோகம், அப்புறம் தனது நோய், காலையில் ராதா வீட்டைவிட்டு ஓடிய செய்தி, பரமா திடீரென்று அவள் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டது, இப்போது இந்த சிவமணி எழுப்பிய புயல்... ஒரே நாளில் இத்தனை அடுக்கடுக்கான அதிர்ச்சிகளா? அவராலேயே நம்ப முடியவில்லை. அன்னம் அவள் கவலைகளுக்கு ஒரு வடிகாலாக வந்திருக்கிறாள். பேசட்டும். பேசித் தணியட்டும் என நினைத்துக் கொண்டார்.

இந்த கரிய இரவுகள் எப்போது விடியும்? தனக்கு விடியல் உண்டா? அல்லது இது எல்லையில்லாத இருளாகித் தன்னை முற்றாக விழுங்கிக் கொள்ளுமா? அப்படித்தான் இருக்க வேண்டும். இது சாயங்காலம், தான் சாயுங் காலமாகத்தான் இருக்க வேண்டும்.

தலையில் எரிமலைகள் வெடிக்க ஆரம்பித்திருந்தன. படுத்தவாறே தலையை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்தார். மதர் மேகியின் நினைவு வந்தது. "ஓ அன்னையே, ஏன் என் சிகிச்சையைத் தள்ளிப் போட்டாய்?" என மனதுக்குள் கேட்டார். அந்த வெளுத்த கருணை உள்ள முகத்தை நினைத்தார்.

"ஓ என் அன்பு மகனே, உன்னைப் போல் ஓராயிரம் பேருக்குப் புற்று நோய் இருக்கிறது. அத்தனையும் கர்த்தரின் மந்தைகள். அவற்றைப் பார்த்துக் கொள்ள என் தந்தை எனக்கு ஆணையிட்டுச் சென்றிருக்கிறார். நீ ஆயிரம் ஆடுகளில் ஒரு ஆடு. உனக்காக மற்ற எல்லா ஆடுகளையும் நிராகரிக்க முடியுமா? உன் முறை வரும் மகனே, பொறுத்திரு, பொறுத்திரு" என்று மதர் மேகி சொல்வதாகக் கற்பனை செய்து கொண்டார்.

வலி முதுகில் இறங்கியது. வயிற்றுக்குள் நுழைந்தது. குடலைப் பிடித்துத் திருகியது. கல்லீரலைப் பிடித்துப் பிசைந்தது. வலியின் உச்சத்தில் "அம்மா, அம்மா" என முனகினார். ஜானகி பக்கத்தில் இருந்தால் ஆறுதலாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அவளை வாய்விட்டுக் கூப்பிட மனம் வரவில்லை. அது பயங்கொள்ளித் தனம் எனத் தோன்றியது. என் நோய் என்னுடன்... ஜானகியைக் கூப்பிட்டு ஏன் வருத்த வேண்டும் என்று எண்ணினார்.

இருந்தாலும் இந்த வேதனைக்கு அவள் மார்பு ஒத்தடமாக இருக்கும். அவள் உடம்புச் சூட்டில் இந்த வலி பாதியாகத் தணியும். அவள் புடவைத் தலைப்பில் இந்த வலி வழித்து விடப்படும். அவள் துணைக்காக ஏங்கினார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு "அம்மா, அம்மா" என முனகினார்.

பட்டுப் போன்ற கரங்கள் அவர் முதுகைத் தடவின. அப்புறம் பட்டுப் பட்டென்று தட்டின. ஜானகியா தட்டுகிறாள்?

"தாத்தா, வை ஆர் யூ கிரையிங்?" என்று கேட்டான் பரமா.

எப்படி வந்தான்? தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து விட்டானா?

"பரமா! என்ன செய்ற இங்க?" என்று கேட்டார்.

"ஐ கெனோட் ஸ்லீப்!" இருமியவாறே சொன்னான். அழுதிருக்கிறான் என்று தெரிந்தது.

"ஏன் கண்ணு?"

"ஐ எம் ஃபிரைட்டன்ட்!" என்றான்.

அவனை அணைத்துக் கொண்டார். ஒரு சிறிய புறாக் குஞ்சு போல அடங்கிக் கொண்டான். இன்று நடந்த சம்பவங்களில் இந்தப் பிஞ்சு மனம் எப்படி வெம்பிப் போயிருக்கும் என நினைத்துப் பார்த்தார். வௌியில் சொல்ல முடியாமல் எத்தனை பயங்கரமான கரிய சிந்தனைகள் அந்த மனத்தில் ஓடியிருக்க வேண்டும்?

நேற்று அவன் அம்மா அவனைக் கைப்பிடியாக இழுத்துக் காரில் ஏற்றி பினாங்குக்குக் கொண்டு வந்தது; இன்று காலை அவள் மறைந்து போனது; அப்பறம் இந்த ஆஸ்பத்திரிப் பயணம்; இன்றிரவு அவன் அப்பன் வந்து படுத்திய கொடுமை; பரமா, எப்படி தாங்கியிருந்தாய்? எப்படித் தாங்கியிருந்தாய்?

அவனை இறுக அணைத்துக் கொண்டார். தாய்க் கோழி போல கைகளுக்குள் அடக்கிக் கொண்டார். அவன் அவர் நெஞ்சுக்குள் ஆழமாக முகம் புதைத்திருந்தான்.

கொஞ்சம் திமிறி முகம் தூக்கிச் சொன்னான்: " தாத்தா, டோன்ட் லெட் மை ஃபாதர் டேக் மீ எவே!"

"நோ டார்லிங்! ஒரு நாளும் அவன் கிட்ட ஒன்ன ஒப்படைக்க மாட்டேன்! நீ தாத்தாகிட்டயே படுத்துக்கோ, படுத்துக்கோ!" என்று மீண்டும் தன் அணைப்பில் இறுக்கினார். அவன் கொஞ்ச நேரம் இருமிக் கொண்டிருந்து தூங்கிப் போனான். அவனை அணைத்திருக்கும் போது அவருடைய வலிகள் அனைத்தும் மறந்து போயிருந்தன.

-------


அந்திம காலம் - 9


அவர் மல்லாந்து படுத்திருந்த போது அந்த இயந்திரத்தின் வட்டமான ஒற்றைக் கண்ணாடிக் கண் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்புறம் அவரை ஒருக்களித்துப் படுக்க வைத்தார்கள். இப்போது அவரால் இயந்திரத்தைப் பார்க்க முடியவில்லை. படுக்கையின் மேல் அவருடைய தலைக்கு நேராக அந்த இயந்திரம் முகம் கவிந்திருந்தது. கொஞ்சம் வலமும் இடமுமாக அசைவது ஓரக் கண்ணில் தெரிந்தது. அந்த அசைவின் போது அதன் பாகங்கள் கிர் கிர்ரென அமைதியான ஓசை எழுப்பின.

இந்த இயந்திரத்துக்கு உயிர் உண்டா? என எண்ணிப் பார்த்தார். இதற்கு உயிர் இல்லை என்று யார் சொல்ல முடியும்? உயிர் என்பது என்ன என்று யாருக்குத் தெரியும்? எந்த விஞ்ஞானி, எந்த வேதாந்தி இந்த உலகில் உயிரின் உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள்? இதோ இந்த இயந்திரம் என்னைப் பார்க்கிறது. என் தோலுக்குள் ஊடுருவிப் பார்க்கிறது. என் தலைக்குள் அதனால் பார்க்க முடிகிறது. என் மூளை மடிப்புக்களை, என் மூளைச் சோற்றை அதனால் காண முடிகிறது. அந்தச் சோற்றுக்குள் மண்ணாய் வளர்கின்ற புற்றுகளை அதனால் கணிக்க முடிகிறது. அப்புறம் எந்த இடத்தில் இருந்து லேசர் கதிர்களைப் பாய்ச்சினால் மூளையில் வளரும் இந்தப் புற்றைக் கரைக்கலாம் எனத் தீர்மானிக்கிறது. இவ்வளவு செய்ய முடிந்த இந்த இயந்திரத்திற்கா உயிரில்லை!.

ஏ இயந்திரமே! ஓ ஒற்றைக் கண் மிருகமே! என் மூளையை உன்னால் பார்க்க முடிகிறதே, அப்போது என் சிந்தனையையும் உன்னால் பார்க்க முடிகிறதா? நான் உன்னைப் பற்றி இப்போது யோசிப்பதும் உன்னோடு மானசீகமாகப் பேசுவதும் உன்னால் அறிய முடிகிறதா?

இயந்திரம் கிர்ரென்ற சத்தத்துடன் கொஞ்சம் இடப் பக்கம் சாய்ந்தது. இந்த கிர்ரென்ற ஒலி உன் பேச்சா? எனக்குப் பதில் சொல்லுகிறாயா? "ஆம்" என்கிறாயா "இல்லை" என்கிறாயா? இந்த கிர்ரென்ற ஒலி என் கேள்விக்கு நீ தரும் பதில் என்றால் அந்த பதில் "இல்லை" என இருக்க முடியாது. "ஆம்" என்றுதான் இருக்க வேண்டும். ஆம்! நீ உயிருள்ள புத்தியுள்ள இயந்திரம்தான்.

நீ இங்கிலாந்தில் செய்யப் பட்டிருந்தாலும் உனக்கு என் மொழி புரியும். எல்லா மொழிகளும் புரியும். ஏனென்றால் நீ பேசும் மொழி வாய் வழியான மொழியல்ல. நீ எல்லாருடைய மூளையோடும் நேரடியாகப் பேசுகிறாய். எண்ணங்களை அவற்றின் வேரிலிருந்தே அறிந்து கொள்ளுகிறாய். ஆகவே மனித மொழி உனக்குத் தேவையற்றது.

இயந்திரம் கிர்ரென்று கீழிறங்கி காதுக்கு அருகில் வந்தது. என் இனிய இயந்திரமே! என் பேச்சைக் கேட்டு அருகில் வருகிறாயா? காதோடு பேசவா? உனக்கு அருகில் தூரத்தில் என்ற வேறுபாடுகள் தேவையில்லையே. நீ காத தூரத்தில் இருந்தாலும் காதின் அருகில் இருந்தாலும் மனதின் மர்மங்கள் தெரிந்த உனக்கு தூரங்கள் ஒரு பொருட்டல்லவே!

அது கொஞ்சமாக சென்டிமீட்டர் அளவு மட்டும் நகர்ந்தது. இன்னும் நெருக்கமாகவா உயரமாகவா எனக் கண்டு பிடிக்க முடியவில்லை.

இன்னொரு முறை அதன் கண் எப்படியிருக்கிறது எனப் பார்க்கும் ஆசை எழுந்து. கோபத்தில் சிவந்திருக்கிறதா? அன்பில் கனிந்திருக்கிறதா? ஐயோ இவன் நோய் இத்தனை மோசமாக இருக்கிறதே எனக் கசிந்திருக்கிறதா? அவர் தனது விழிகளை ஓரத்திற்குக் கொண்டு வந்து இயந்திரத்தைப் பார்க்க சிரமப் பட்டபோது தலை கொஞ்சம் அசைந்திருக்க வேண்டும்.

"சுந்தரம். தயவு செய்து தலையை அசைக்காதீர்கள். அசைத்தால் படம் சரியாக வராது" என்று குரல் கொடுத்தார் அடுத்த அறையிலிருந்து இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த ரேடியோகிராபர்.

*** *** ***


இந்த Ximatron என்ற சிமுலேட்டர் கருவி பற்றி நேற்று காலை டாக்டர் லிம் அவருக்கு விளக்கமாகக் கூறியிருந்தார்.

சுந்தரத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த அப்பாய்ன்ட்மென்ட் படி நேற்று காலை நண்பர் ராமாவின் துணையுடன் அவர் மௌன்ட் மிரியத்திற்கு வந்திருந்தார். ஜானகியை அழைத்து வரவில்லை. அவள் பரமாவுடன் வீட்டிலிருக்க ஒப்புக் கொண்டாள். நோய் பற்றித் தொடக்கத்தில் அவளிடமிருந்த படபடப்பு கொஞ்சம் அடங்கியிருந்தது. தான் ஒருவாரம் உயிர் பிழைத்திருந்து விட்டதால் வரவிருக்கும் ஆபத்து அப்படி ஒன்றும் பெரியதல்ல எனக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தவள் போல் இருந்தாள். மேலும் அன்னபூரணி அக்காவும் தைப்பிங் திரும்பியிருந்தாள். சில டியூஷன் வகுப்புக்கள் இருப்பதால் அவற்றை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு அத்தையை மட்டும் துணைக்கு விட்டுவிட்டு அக்கா தைப்பிங் போய்விட்டாள்.

அவன் அப்பன் சிவமணி வந்து போனதிலிருந்து பரமா சோர்ந்து சோர்ந்து இருந்தான். அடிக்கடி இருமிக் கொண்டிருந்தான். சரியாகச் சாப்பிடுவதுமில்லை. அடிக்கடி அவனுடைய தாயைப் பற்றிக் கேட்டவாறே இருந்தான். பரமாவை கவனிப்பதே ஜானகிக்கு முழு நேர வேலையாக இருந்தது. அத்தை சமையல், வீடு சுத்தப் படுத்துதல் போன்ற எல்லா வேலைகளையும் தானாக தன் மௌனம் கலையாமல் பார்த்துக் கொண்டாள்.

டாக்டர் லிம் சுந்தரத்திடம் அவர் நோயின் எல்லா அம்சங்களையும் கவனமாக விவரித்தார். ஏற்கனவே அரசாங்க மருத்துவ மனையில் இந்த விளக்கங்கள் பெற்றிருந்ததால் இவை சுந்தரத்திற்கு அதிர்ச்சியை ஊட்டவில்லை.

"புற்று நோய் என்பதே ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் நோயுற்று அளவுக்கு அதிகமாக வளர ஆரம்பிப்பதுதான். அப்புறம் அந்த வளர்ச்சிக் கட்டுப் படுத்த முடியாமல் போய் ஆரோக்கியமான செல்களை அவை இயங்க விடாமல் தடுக்கின்றன. பின்னர் இந்தத் தீய செல்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து வெவ்வேறு இடங்களுக்குப் பரவி அங்கும் புற்றுகள் போல் வளர ஆரம்பித்து அங்குள்ள அவயவங்களையும் செயல் படாமல் ஆக்குகின்றன. உங்கள் உடம்பில் இந்த நடவடிக்கை எல்லாம் இப்போது நடக்கிறது. முற்றிய நிலை!"

மௌனமாக இருந்து மீண்டும் சொன்னார்: "இந்த நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாது. நவீன வாழ்க்கையில் காற்றில் உணவில் அதிகமாகிப் போன தூய்மைக் கேடுகள் என்று சொல்கிறார்கள். அதற்கான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வருகின்றன. ஆனால் நிச்சயமான முடிவுகள் தெரியவில்லை. ஒரே சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கிடையிலும் சில பேருக்கு புற்று நோய் தோன்றுகிறது. பலருக்குத் தோன்றுவதில்லை. உடல் வாகுவைப் பொறுத்தும் பாதிக்கும் என்று சொல்லலாம். சில பலவீனங்களை நம் பெற்றோரின் உயிரணுக்களிலிருந்தும் பெற்றிருப்போம். விஞ்ஞானம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. இவ்வளவு நாளாக ஆராய்ச்சி செய்து நாம் புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்கத்தான் கற்றிருக்கிறோமே தவிர விடைகளைப் பெறத் தெரிந்திருக்கவில்லை" என்றார்.

இந்த டாக்டருக்கு இந்து சமயம் சொல்லும் ஊழ்வினை பற்றியும் முற்பிறப்புக்களில் செய்த பாவங்களை நாம் சுமப்பது பற்றியும் தெரியுமா என சுந்தரம் நினைத்துப் பார்த்தார். நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மிக அதிகமாகப் படித்த கூர்மையான அறிவுள்ளவர். இவற்றைப் பற்றியெல்லாம் படித்தறிந்திராமல் இருக்க மாட்டார். ஆனால் அவற்றைப் பற்றிப் பேசமாட்டார். ஏனெனில் அவை அறிவியல் உண்மைகளாகக் கருதப் படுவதில்லை. இவர் விஞ்ஞானி. தத்துவங்கள் பக்கம் போய்க் குழப்ப மாட்டார். விஞ்ஞான பூர்வமல்லாத எதையும் தன் தொழிலோடு போட்டுக் குழப்ப மாட்டார்.

அதற்காகத்தான் மதர் மேகி போன்றவர்களை இங்கு வைத்திருக்கிறார்கள். மனிதன் எவ்வாறு இயங்குகிறான் என்று கற்றுத் தௌிந்து அந்த இயக்கத்தைச் சீர்படுத்த டாக்டர் லிம்மின் விஞ்ஞானம் உதவும். ஆனால் அந்த மனிதன் ஏன் இயங்குகிறான் என்பதை மதர் மேகி போன்றவர்கள்தான் சொல்ல முடியும். அந்த இயக்கம் தோன்றுவதற்கும் அடங்குவதற்குமான காரணங்களை இந்த விஞ்ஞானத்துக்கு மேற்பட்ட மெய்ஞானம்தான் விளக்க வேண்டும். அதை மதர் மேகி தெரிந்திருப்பார். ஆனால் அதைக் கல்லூரியில் படித்திருக்க மாட்டார். கர்த்தரை சிந்தையில் நிறுத்தி அவரிடம் சரணடைந்து கேட்டுத் தௌிந்திருப்பார். அதனால்தான் அவரால் எந்த நாளிலும் புன்னகை பூத்த வண்ணம் இருக்க முடிகிறது. இந்த விளக்கங்கள் எல்லாம் முடிந்த பின் மதர் மேகியை ஒருமுறை பார்த்து விட்டுத்தான் போக வேண்டும் என சுந்தரம் முடிவு செய்து கொண்டார்.

அதன் பிறகு சுந்தரத்திற்கு சிகிச்சையளிக்கவிருக்கும் அறை, இயந்திரங்கள் ஆகியவற்றையும் டாக்டர் லிம் கொண்டு காட்டினார். அந்த இயந்திரங்களில் Ximatron என்னும் புதிய சிமுலேட்டர் கருவி பிரம்மாண்டமானதாக இருந்தது.

"சுந்தரம், இந்த Ximatron கருவி உங்கள் மூளையின் பகுதிகளைத் துல்லிதமாக எக்ஸ்ரே எடுத்துக் காட்டிவிடும். மூளையில் கட்டி உள்ள சரியான இடம், அதன் அளவு, அதன் வீரியம் எல்லாவற்றையும் காட்டிவிடும். இந்தப் பாகங்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்களே இயக்குகின்றன. ஆகவே மனிதப் பிழை ஏற்படும் வாய்ப்புக்கள் மிகக்குறைவு. அதன் பிறகு அது தரும் படங்களைக் கொண்டு எந்த அளவுக்கு உங்களுக்குக் கதிரியக்கம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வோம். தலையின் எந்தப் பகுதியின் வடூயாகச் செலுத்துவது என்பதையும் முடிவு செய்வோம். உங்கள் தலையின் பகுதியில் அந்த வழியின் வாசலை மார்க்கர் பேனாவால் கோடு போட்டு வைப்போம். அந்தக் கோடுகள் சில காலத்திற்கு அடூயாமல் இருக்கும். அடுத்த முறை நீங்கள் சிகிச்சைக்கு வரும் போது அந்த இடத்தைக் கண்டறிய இது உதவும்."

Ximatron-ஐத் தொட்டுப் பார்த்தார் சுந்தரம். சில்லென்றிருந்தது. டாக்டர் லிம் சிரித்தார். "இப்போது இதனால் அபாயம் இல்லை. ஆனால் எக்ஸ்ரே பாய்ச்சப்படும் பொழுது நாங்கள் யாரும் அருகில் இருக்க மாட்டோம். அதிகமான எக்ஸ்ரே உடலில் புகுவது நல்லதல்ல. அதனாலேயே புற்று நோய் உண்டாகலாம்" என்றார்.

"ஆனால் நோயாளிகள் மூளைக்குள் மட்டும் எப்படிப் பாய்ச்ச முடிகிறது?"

"இது சாதாரண மனிதர்களுக்கு விஷம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் நோயாளிகளுக்கு இந்த விஷமே மருந்தாகிறது. நாங்கள் உங்கள் புற்று நோய் செல்களை நோக்கிப் பாய்ச்சுகிற லேசர் கதிர்கள் கொள்ளிக் கட்டை போல. நோய் செல்களை இவை தீய்த்து எரித்துவிடும்"

"அப்படியானால் நோயில்லாத நல்ல செல்கள்...?"

"அவையும் கொஞ்சம் தீயத்தான் செய்யும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்த Ximatron கருவி இருப்பதால் தீப்படும் இடத்தைக் கட்டுப் படுத்தலாம். ஆரோக்கியமான செல்கள் அதிகமாகப் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்யலாம். ஆனால் பயப்படாதீர்கள். நல்ல ஆரோக்கியமான செல்கள் மீண்டும் உயிர்த்து வளர்ந்து விடும். நோய்பட்ட செல்கள் மட்டுமே தீய்ந்து மடியும்"

சுந்தரத்தின் முகத்தில் கலவரம் படர்வதை டாக்டர் லிம் கவனித்திருக்க வேண்டும். "பார்த்தீர்களா! உங்களுக்கு விளக்க வேண்டும் என்ற உற்சாகத்தில் தவறான வார்த்தைகளைப் பயன் படுத்தி உங்களைக் கலவரப் படுத்தி விட்டேன். இந்த கொள்ளிக் கட்டை, தீய்த்து விடுவது என்பதெல்லாம் ஒரு உருவகம்தான். உண்மையில் உங்களுக்கு ஒரு வலியும் இருக்காது. இந்த கதிரியக்கம் பாய்ச்சப்படுவது ஒரு சில நிமிடங்கள்தான். உங்களால் அதைப் பார்க்கவோ உணரவோ முடியாது" என்று விளக்கினார்.

"எவ்வளவு காலத்திற்கு டாக்டர்?" என்று கேட்டார் சுந்தரம்.

"வாரத்திற்கு ஐந்து நாளும் நீங்கள் சிகிச்சைக்கு வரவேண்டும். மூளைக் கட்டிக்குக் கதிரியக்கம் பாய்ச்சலாம். அது எவ்வளவு கரைகிறது என்பதை ஒவ்வொரு நாளும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியிருக்கும் புற்று நோய்க்கு மருந்துகள் கொடுக்கப் போகிறோம். ஒரு நாளைக்கு மூன்று முறை நீங்கள் சாப்பிட வேண்டும். தினசரி ரத்த சோதனை பண்ணி அது தணிகிறதா என்று பார்ப்போம். கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் உங்களுக்கு அந்தக் கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. அது மருந்தால் தணிகிறதா என்று பார்ப்போம். ஒரு வாரத்தில் தணிய வில்லையானால் அதற்கும் கதிரியக்க சிகிச்சைதான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு வாரம் கடூத்து அதை முடிவு பண்ணுவோம்!" என்றார்.

"நான் இங்கு தங்க வேண்டுமா?" என்று கேட்டார்.

"வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் காலையில் வந்து கதிரியக்க சிகிச்சை மட்டும் பெற்றுச் செல்லுங்கள். வீட்டுக்குத் திரும்பி உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கலாம். அதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை!" என்றார்.

வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்ற செய்தி நிம்மதியாக இருந்தது. ஆனால் சந்தோஷமாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. ராதா, சிவமணி, ஜானகி, பரமா என பலரின் துன்பங்களுக்கிடையில் சந்தோஷம் என்பது எப்படி விளையும் என விளங்கவில்லை. ஆனால் டாக்டருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வடூயில்லை என நினைத்துக் கொண்டார்.

கேட்பதற்குத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டார் சுந்தரம்: "டாக்டர் லிம்! இதற்குப் பக்க விளைவுகள் அதிகம் இருக்குமென்று சொல்கிறார்களே?"

"ஆமாம் திரு. சுந்தரம். பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும். அதை உங்களுக்குச் சுட்டிக் காட்ட நான் கடமைப் பட்டுள்ளேன். ஆனால் முதலில் இந்த விளைவுகள் கடுமையாக இருந்தால் கூட தற்காலிகமானவை என்பதை நீங்கள் உணர வேண்டும். சிகிச்சை முடிந்த இரண்டு மூன்று வாரங்களில் இவை முற்றாக மறைந்து விடும்.

"முதலில் உங்களுக்குக் கதிரியக்கம் பாய்ச்சப்படும் இடத்தில் தோல் கருத்துப் போகும். புண் உண்டாகும். நாங்கள் கொடுக்கின்ற களிம்புகளை மட்டும் பூசி வாருங்கள். சிகிச்சை நீடிக்கும் வரை களைப்பாக இருக்கும். பசி இருக்காது. வாந்தி குமட்டல் இருக்கும். தொண்டை வறண்டு விடும். புண்ணாகி விட்டதைப் போல் இருக்கும். வலிக்கும்"

சுந்தரத்தின் முகம் கருத்திருந்து.

டாக்டர் அவர் தோள்களைத் தொட்டுச் சொன்னார்: "பாருங்கள் திரு. சுந்தரம். நான் சொல்லும் இந்தப் பக்க விளைவுகள் நீங்கள் இப்போது இந்தப் புற்று நோயால் அனுபவித்து வரும் துன்பங்களை விடக் கொடியவையல்ல. சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகள் தற்காலிகமானவை. சிகிச்சை அளிக்காமல் விட்டால் இது நீங்கள் சாகும் வரை நீடிக்கும். ஆகவே பக்க விளைவுகளின் துன்பங்களைச் சிந்திக்காமல் அதனால் வரும் நன்மைகளைச் சிந்தியுங்கள்" என்றார்.

"சரி டாக்டர். நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகப் புரிகிறது!" என்று புன்னகைத்தவாறே பதில் சொன்னார் சுந்தரம்.

"ஓகே! நீங்கள் தௌிவான ஆளாக இருக்கிறீர்கள். இந்த சிகிச்சைக்கு வேண்டிய மன பலம் உங்களுக்கு இருக்கிறது. அது மிகவும் முக்கியம். நாளைக்குக் காலையில் வந்து விடுங்கள். சிகிச்சையை ஆரம்பித்துவிடுவோம்!" என்றவர் திடீரென்று நினைவு வந்தவர் போல் சொன்னார்: "ஓ! உங்கள் தலைமுடி கொட்டிவிடும் என்பதைச் சொன்னேனா? ஆமாம் தற்காலிகமாகக் கொட்டி மீண்டும் வளர்ந்து விடும். ஆனால் பரவாயில்லை. கொட்டுவதற்கு அப்படி ஒன்றும் அதிகமான முடி உங்கள் தலையில் இல்லை!" சிரித்துத் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு டாக்டர் லிம் போய்விட்டார்.


*** *** ***

அவர் போன பிறகு சுந்தரம் வரவேற்பறைக்குப் போய் மதர் மேகியைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார். காத்திருக்கச் சொன்னார்கள். ராமாவுடன் ஹாலில் காத்திருந்தார்.

"அன்னைக்கு நீ இந்த மதர் மேகிய எங்கிட்ட காட்டலியே!" என்றார் ராமா.

"நான் என்ன செய்றது ராமா? அறையிலேயே உக்காந்து பேசினாங்க! போயிட்டாங்க! ஏன் கேக்கிற?"

"இல்ல அவங்களப் பத்தி இவ்வளவு அன்பா பேசிறியே, அதினால அவங்களப் பாக்கணுன்னு எனக்கும் ஒரு ஆச!" என்றார் ராமா.

காத்திருந்தார்கள். மதர் மேகி வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிற்று. வந்தவுடன் "சுந்தரம்! ஹலோ!" என்று கை குலுக்கினார். சுந்தரம் ராமாவை அறிமுகப் படுத்தி வைத்தார்.

"ஓ உங்கள் பெயர் ராமாவா? நீங்கள்தான் ராமாயணத்தின் கதைத் தலைவரா?" என்று கேட்டார் மதர் மேகி.

"மதர் மேகி, ராமரின் பெயரைக் கொண்டிருப்பதைத் தவிற நான் ராமாயணம் எல்லாம் படித்ததில்லை. என்னிடம் கேட்காதீர்கள். அநேகமாக ராமாயணத்தைப் பற்றி என்னை விட உங்களுக்கே அதிக் தெரியலாம்!" என்றார் ராமா.

"நான் ராமாயணம் மொழிபெயர்ப்புச் சுருக்கம் படித்திருக்கிறேன். ராமாயணம் டெலிவிஷனில் பார்த்திருக்கிறேன். ஆகவே கொஞ்சம் தெரியும்!" மதர் மேகிக்கு இந்து சமயம் சொல்லும் வாழ்வுத் தத்துவங்கள் நன்றாகத் தெரிந்திருக்கும் என சுந்தரம் நினைத்துக் கொண்டார். சில கிறித்துவப் பாதிரியார்கள் இந்து மட்டுமல்லாது பௌத்த, இஸ்லாமிய உண்மைகளையும் பாடமாகத் தங்கள் மதக் கல்லூரிகளில் படிப்பதை சுந்தரம் அறிந்திருக்கிறார்.

மதர் மேகி அவர்கள் இருவரையும் ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். "உங்களை நீண்ட நேரம் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள். எங்கள் பேஷண்டாக இருந்த ஒரு பத்து வயதுப் பெண் இன்று காலை இறந்து விட்டாள். லியுகேமியா. நல்ல பாசமுள்ள பெண். கேள்விப் பட்டதும் அவர்கள் வீடு சென்று ஜபம் செய்து கர்த்தரிடம் ஒப்புவித்து வந்தேன்." என்றார்.

"அப்படியா? வருந்துகிறேன் மதர் மேகி!" என்றார் சுந்தரம். மனத்தினுள் "உன்னுடைய முறை சீக்கிரம் வருகிறது" என ஏதோ ஒன்று சொல்லிற்று.

"என்ன செய்யலாம்? கர்த்தரின் அழைப்புக்கு நாம் அனைவரும் இணங்கித்தான் போக வேண்டும். சிறுவயதில் இறப்பவர்கள் கடவுளுக்குப் பிரியமானவர்கள் என்று எங்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு."

கனிய முகமுடைய அன்னையே! மரணத்தின் ரகசியம் உனக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும். அதனால்தான் நோயின் மத்தியிலும் சாவின் மத்தியிலும் உன்னால் சிரித்துக் கொண்டே வாழ முடிகிறது.

மௌனமாக இருந்து பின் கேட்டார்: "டாக்டர் லிம்மைப் பார்த்து விட்டீர்களா? என்ன சொன்னார்?" சுந்தரம் நடந்தவைகளைச் சொன்னார்.

"நல்லது! டாக்டர் லிம் மிகவும் அக்கறையும் பரிவும் அதே போல கண்டிப்பும் உள்ள டாக்டர். அவர் கையில் நீங்கள் நல்ல குணமடைவீர்கள்" என்றார் மதர் மேகி.

"சிகிச்சையும் பக்க விளைவுகளையும் நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. டாக்டர் எவ்வளவுதான் ஊக்கமூட்டினாலும் பயம் போகவில்லை" என்றார்.

மதர் மேகி சிரித்தார். "சிறு வயதில் எனக்குப் பல் பிடுங்கக் கூட்டிப் போனார்கள். டாக்டரின் அந்தப் பிடுங்கும் குறட்டைக் கண்டதும் நான் போட்ட கூச்சல் அந்த ஊர் முழுக்கக் கேட்டிருக்கும். ஆனால் எனஸ்தீசியா போட்டு பல் பிடுங்கப் பட்ட போது வலியே தெரியவில்லை. வலியை விட வலி பற்றிய பயம்தான் கொடுமையானது" என்றார். களங்கமில்லாமல் வாய்விட்டுச் சிரித்தார். மரணத்தின் ரகசியத்தின் ஒரு பகுதியைச் சொல்லிவிட்டாரோ!

பிறகு தொடர்ந்தார்: "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சுந்தரம்? நம் உடம்பின் வலியையெல்லாம் நம்மை உணரச் செய்வது இந்த மூளைதான். ஆனால் இந்த மூளை தனது சொந்த வலியைத் தான் உணரமுடியாது. அதற்கு வலி என்பதே இல்லை. ஆகவே அதை வெட்டினாலும் கொத்தினாலும் எந்தத் துன்பமும் இருக்காது. தன் சொந்த வலியை உணரும் சக்தியை இறைவன் அதற்கு வைக்கவில்லை!"

அவர்கள் அதைக் கிரகித்துக் கொண்டார்களா என்று கொஞ்சம் மௌனமாகக் கவனித்துவிட்டுப் பின் தொடர்ந்தார்: "இந்த உடல் முழுவதும் ஒரே யூனிட். மற்ற இயந்திரங்களைப் போல தனித்தனியாக செய்து பூட்டப் பட்டதல்ல. ஒரே ஒரு செல்லிலிருந்து இரட்டிப்பு இரட்டிப்பாகப் பல்கிப் பெருகியது. ஆகவே உடம்பிலுள்ள பில்லியன், டிரில்லியன் செல்களும் ஒன்றாகப் பிறந்தவை. அத்தனையும் ரெட்டைப் பிள்ளைகள் போல. அதனால்தான் உடம்பின் எந்த இடத்தில் நோய் வந்தாலும் உடலிலுள்ள அத்தனை அவயவங்களும் அதில் ஈடுபடுகின்றன. கால் பெருவிரலில் காயம் பட்டால் கை அங்கு போய் தடவிக் கொடுக்கிறது. முகம் சுளிக்கிறது. இருதயம் ரத்த ஓட்டத்தைத் துரிதப் படுத்துகிறது. வாய் முனகுகிறது. கண் அழுகிறது. பாருங்கள். ஆகவேதான் நோயாளிகளுக்கு சிகிச்சை முழுமையாக அளிக்க வேண்டும். நோயுற்ற பாகத்திற்கு மட்டிலும் மருந்திட்டால் போதாது!" என்றார்.

அப்புறம் கொஞ்ச நேரம் முகமனாகப் பேசிக்கொண்டிருந்த பின், மதர் மேகி தனக்கு வேறு வேலைகள் இருப்பதைச் சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.

திரும்பி வரும் போது ராமாவுக்கு மதர் மேகி மேல் ஒரு பெரிய பாசமே உருவாகி விட்டது. "நீ சொன்னது சரிதான் சுந்தரம். தன் வாய் புன்னகை மாறாம எவ்வளவு இனிமையா பேசிறாங்க இந்த அம்மா! இவங்க பேச்சிலேயே நோய் தீர்ந்திடும் போல இருக்கு!" என்றார்.

சுந்தரம் வேறு எதையோ யோசித்தவர் போல இருந்தார். மௌனமாக இருந்தார். அவருக்கு உரையாடலில் ஆர்வமில்லை எனத் தெரிந்து கொண்டு அமைதியாகக் காரோட்டினார் ராமா.

சுந்தரம் அமைதியைக் கலைத்தார். "வாரத்துக்கு ஐந்து நாள் வரணும்னு சொல்றாங்களே ராமா!" என்று கவலையுடன் கூறினார்.

"ஆமாம், அதுக்கென்ன இப்போ?"

"நான் கஷ்டப்பட்டாவது கார ஓட்டிக்கிட்டுத்தான் வரணும்!"

"ஏன்? நான் ஒருத்தன் இருக்கும் போது உனக்கு ஏன் அந்தக் கவல?"

"இல்ல ராமா! ஒரு ஆபத்துக்கு உதவுறது வேற மாதிரி. ஆனா வாரத்துக்கு அஞ்சு நாள் நீ வேலயெல்லாம் போட்டுட்டு...!" இந்த மாதிரி வேளைகளில்தான் ஜானகிக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற நினைவு வருகிறது. அவள் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றிருந்தாலும் இது ஒன்றை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை.

"இதோ பார் சுந்தரம். எனக்கு ஒண்ணும் அப்படி வெட்டி முறிக்ககிற வேல எதுவும் வீட்டில காத்துக்கிட்டு இருக்கில. அப்படியே வேல இருந்தா உங்கிட்டச் சொல்லி வேற ஏற்பாடு பண்ணிக்கச் சொல்றேன். அதுவரைக்கும் ஒன்ன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வர்ரது, வீட்டுக்குக் கொண்டு போறது என் வேலன்னு எங்கிட்டயே விட்டிடு!" என்றார் ராமா.

நன்றியுணர்ச்சியுடன் ராமாவைப் பார்த்தார். அந்த நட்புக்கு எவை எல்லைகள்? இன்னும் தெரியவில்லை. இருக்கட்டும். இப்போது இந்த நண்பனின் நெஞ்சில் பரிவும் பாசமும் அதிகமாக இருக்கின்றன. கொஞ்ச நாள் ஓய்வில்லாமல் இந்த வேலையைச் செய்து அவனின் மற்ற வேலைகளுக்கு இது குறுக்கீடாய் இருக்கும் போது அவனாக விலகிக் கொள்வான். அல்லது சூசகமாகச் சொல்வான். அது வரை இப்படியே அவன் திருப்திக்கு அவன் செய்யட்டும்.

அல்லது இந்த நண்பனுக்கு இந்த சேவை சலிக்காததாக இருக்குமோ! "அக்குளத்தில் நெட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலுமே ஒட்டுயுறுவார் உறவு" என்ற பழைய செய்யுள் நினைவுக்கு வந்தது. என்னோடே இருந்து இந்த நண்பனும் துன்பங்களைக் கடைசி வரையில் பகிர்ந்து கொள்ளப் போகிறானா?

பொதுவாக மனித உறவுகளில் அவருக்கு நிரந்தரமான நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தது. ஒருவர் இன்னொருவருக்கு அன்பின் அடிப்படையில் பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் நன்மை செய்து கொண்டே இருக்க முடியும் என அவரால் நம்ப முடியவில்லை. ஒவ்வொரு நன்மையும் ஒரு பிரதி உபகாரத்தை எதிர்பார்க்கும் சுய நலமாகத்தான் இருக்க முடியும் போலும். அந்தப் பிரதி உபகாரம் கிடைக்காது போனால் உதவி செய்வதில் உள்ள ஆர்வமும் குன்றி விடும்.

ஆனால் அவர் வாழ்வில் பலபேர் அந்த அவநம்பிக்கையைப் பொய்யாக்கி வைத்தும் அவரை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறார்கள். இதோ இப்போதைக்குத் தனக்குக் காரோட்டும் இந்த நண்பன். அதே போல அன்னம் அக்காள். எதை எதிர்பார்த்துத் தனக்காக இத்தனை கஷ்டப் பட்டிருக்கிறாள் இந்த அக்கா!

அத்தை! தாங்கள் போடும் மூன்று வேளை சோற்றுக்காகவும் கட்டும் துணிக்காகவுமா இப்படி வாய் பேசாமல் மாடாய் உழைக்கிறாள். "தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும்" பெருமக்கள் இந்த உலகத்தில் இருந்து இந்த நவீன பொருளாதாரத்திலும் இன்னும் மறைந்து விடவில்லை என எண்ணிக் கொண்டார்.

மதர் மேகி! அவருடைய இனிய முகம் அவர் மனதில் வந்து நின்றது. நோய்க்கும் மரணத்துக்கும் நடுவில்தான் வாழ்வது எனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். வாழ்க்கையில் பிற இன்பங்கள் இல்லை. குடும்பத்தைத் துறந்தாயிற்று. திருமணம், உடலுறவு என்ற ஆசைகளைத் தீய்த்தாயிற்று. இதையெல்லாம் தீய்ப்பதற்கும் ஒரு Ximatron கருவி இருக்குமா? "ஏசு" என்ற சொல்லே இவற்றையெல்லாம் தீய்த்திருக்கிறது. ஆனால் தீக்கொள்ளியால் கொடுமையாக எரிக்கவில்லை. தன் பார்வையை, தன் சொல்லை, தன் அன்பை, கருணையை ஊற்றாகப் பெருக்கி இந்த சில்லறை இன்பங்களை முழுகடித்துப் பேரின்பத்தைப் பெருக்கியுள்ளது.

"என்ன ஒரே கவலப்பட்ற மாதிரி இருக்குது. எனக்கொண்ணும் இதெல்லாம் சிரமம் இல்ல. பொழுது போகாம கஷ்டப் பட்றவன் நான். ஆகவே என் பொழுது ஒரு மாதிரி போக இது ஒரு வடூ, தெரியுதா சுந்தரம்" என்றார் ராமா.

"சரி ராமா! தேங்க் யூ!" என்றார்.

அப்படிச் சொன்னது போலவே, இன்று காலை சரியாக வீடு வந்து அவரைக் கொண்டு ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு, சுந்தரம் Ximatron இயந்திரத்தின் அடியில் படுத்திருக்கும் போது வௌியே வெயிட்டிங் ரூமில் ஓரமாக ஒரு நாற்காலியில் சாய்ந்து கொண்டு குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார் ராமா.

*** *** ***

சுந்தரத்தின் வலது காதுக்கு மேலாக கபாலத்தில் கொஞ்சம் தலைமுடியை வடூத்து விட்டு டாக்டர் லிம் மார்க்கர் பென்னால் கோடுகள் போட்டார். அதுதான் கதிரியக்கம் பாய்ச்சப் படும் வாசல் என விளக்கினார்.

சுந்தரத்தின் தலை அசையாமல் இருக்குமாறு பிடித்து வைத்துவிட்டு டாக்டரும் ரேடியோ கிராபரும் வௌியே போய்விட்டார்கள். டாக்டர் அப்புறம் பேசியது இன்டர்காம் வழியாக மட்டுமே கேட்டது. "சுந்தரம் அசையாமல் இருங்கள். இப்போது லேசர் சிகிச்சை ஆரம்பிக்கப் போகிறோம். ஏறக்குறைய ஒரு நிமிடம்தான். அப்புறம் நீங்கள் எழுந்து விடலாம்."

கணங்கள் யுகங்களாகும் சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று போலும். கிர், கிர்ரென ஓசைகள் கேட்டன. ஆனால் அவர் உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அசையாமல் படுத்திருந்தார். Ximatron-ஓடு பேசிக் கொண்டிருந்தார். தன் புற்று நோய் செல்கள் எரிந்து கருகுவதாகக் கற்பனை செய்து கொண்டார். உடலில் புதிய செல்கள் வளர்ந்து தாம் புதிய மனிதனாக ஆகி வருவதாக நினைத்துக் கொண்டார்.

ஒரு நிமிடத்தில் ரேடியோகிராபர் உள்ளே வந்தார். இயந்திரத்தைத் தள்ளி வைத்தார். "அவ்வளவுதான்! நீங்கள் எழுந்து கொள்ளலாம்" என்றார். அவ்வளவு எளிதில் எழ முடியவில்லை. உடம்பு ஆளைத் தள்ளியது. மெதுவாக எழுந்து உட்கார்ந்தார்.

டாக்டர் லிம் உள்ளே வந்தார். "இன்றைக்கு அவ்வளவுதான் மிஸ்டர் சுந்தரம். வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டுத் தொடருவோம். மருந்துகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். எப்படி எத்தனை முறை என்பதெல்லாம் மருந்துக் கௌண்டரில் சொல்வார்கள். தவறாமல் சாப்பிடுங்கள்!"

"சரி டாக்டர்" என்றார் சோர்வாக.

"உடல் களைப்பு அதிகமாகும். சாப்பாட்டில் ஆசை இருக்காது. ஆனால் முயன்று சாப்பிடுங்கள். உடம்புக்குச் சத்து வேண்டும். காரமான எண்ணெய் மிக்க ஆகாரங்கள் சாப்பிடாதீர்கள். கொஞ்சம் தண்ணீராகவும் சூப்பாகவும் செய்து சாப்பிடுங்கள். பால், தண்ணீர் நிறைய அருந்துங்கள்" என்றார்.

நன்றி சொல்லி உடைகளைப் போட்டுக் கொண்டு மெதுவாக நடந்து வௌியில் வந்தார். கதவுக்கு வௌியே கதிரியக்க சிகிச்சைக்காக நோயாளிகள் கியூவில் நின்றார்கள். அவர்களுடைய உறவினர்களும் சூழ்ந்து நின்றதால் அந்தப் பகுதி முழுவதிலும் நடப்பதற்கு மட்டும் இடம் விட்டு நெருக்கடி மிகுந்திருந்தது.

இத்தனை பேருக்கா புற்று நோய் கண்டிருக்கிறது? ஓராண்டில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புற்று நோய் சிகிச்சைக்காக மௌன்ட் மிரியத்துக்கு வருவதாக மதர் மேகி கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதிலும் மூளையிலும் தலைப்பகுதியிலும் புற்று நோய்க் கண்டவர்களே அதிகம் எனவும் கூறியிருந்தார்.

சிகிச்சைக்காக வரிசை பிடித்து இருந்தவர்களில் பலர் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தார்கள். கழுத்தில், மார்பகத்தில், கருப்பையில், நுரையீரலில் இப்படி பல இடங்களில் புற்று நோய் கண்டவர்கள்.

இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது தெய்வம் தண்டிப்பதற்குத் தன்னை மட்டும் தனியாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை எண்ணி ஆறுதல் தோன்றியது. ஆனால் ஆரோக்கியமாய் பழுதில்லாதவனாய் சாமானியனாய் உலவிக்கொண்டிருந்த என்னை இந்தக் கூட்டத்துடன் தெய்வம் சேர்த்து விட்டதுவே என்ற அடங்காத துயரமும் வந்து தங்கியது.

மருந்துக் கௌன்டரில் கலர் கலராக பல மருந்துகள் கொடுத்தார்கள். எப்படி சாப்பிட வேண்டும் என்றும் சொன்னார்கள்.

நாற்காலியில் சாய்ந்து தூங்கிவிட்ட ராமாவின் அருகில் போய்த் தட்டி எழுப்பினார். தலை குலுங்கி எழுந்தார் ராமா. "முடிஞ்சதா சுந்தரம். சீச்சீ, படுத்துத் தூங்கிட்டம் பாரு!" என்றார்.

"அதினால என்ன ராமா! உனக்கும் களைப்புத்தான!" ராமாவுடன் காரை நோக்கி நடந்தார்.


*** *** ***

மாலையில் வீட்டில் சோர்ந்து படுத்திருந்த வேளையில் டெலிபோன் அடித்தது. கை நீட்டி மெதுவாக எடுத்து "ஹலோ" என்றார்.

"அப்பா, ராதா பேசிறேன்!" என்றாள். துணைக் கோளம் வழியாக இங்கிலாந்திலிருந்து பாய்ந்த குரல் ஒரு வித எதிரொலியுடன் இருந்தது.

"ராதா! எப்படிம்மா இருக்கே? இப்பதான் கூப்பிட மனசு வந்ததா உனக்கு?" என்றார். குரலில் கோபம் தொனித்துவிட வேண்டாம் என கவனமாகப் பேசினார்.

"லண்டன்ல இருந்துதான் பேசிறேன் அப்பா. எப்படியிருக்கிங்க?" என்றாள்.

"ஏதோ இருக்கிறோம்மா!" என்றார்.

"அப்பா, உங்ககிட்ட பேசவே வெக்கமா இருக்கு. என்ன மன்னிச்சிருங்க..." குரல் குழைந்தது. அழுகிறாள் எனத் தெரிந்தது.

"சரி, சரி. செய்றத செஞ்சிட்டு இப்ப அழுது என்ன புண்ணியம்! அங்க நீ சுகமா இருக்கியாம்மா?" என்று கேட்டார்.

"இங்க சுகமா இருக்கேம்பா. ஹென்றி ரொம்ப நல்லவர். அன்பானவர். நீங்க அவர ரொம்ப விரும்புவிங்க அப்பா!" என்றாள்.

அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டார்.

"பிரேம் எப்படியிருக்கான் அப்பா?" என்று கேட்டாள்.

"இருக்கிறாம்மா! உன்னக் கேட்டபடி இருக்கிறான். ஏக்கத்தில அவனுக்கு அடிக்கடி உடம்பு கூட சரியில்லாம போயிடுது" என்றார்.

"அவனுக்கு உடம்புக்கு என்னப்பா?" என்றாள். மீண்டும் குரல் தளுதளுத்திருந்தது.

"சும்மா இருமல் காய்ச்சல்தான். மருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறோம். சரியா போயிடும்னு நெனைக்கிறேன்!" என்றார்.

அப்புறம் பரமாவைக் கூப்பிட்டுப் பேசினாள். "வை ஆர் யு நோட் கமிங் டூ தாத்தாஸ் ஹவுஸ்?" என்று பரமா கேட்டான். என்ன பதில் சொன்னாள் என்று தெரியவில்லை.

"ஐ எம் சிக். தாத்தா இஸ் அல்சோ சிக்" என்று அறிவித்தான் பரமா.

பின்பு ஜானகியைக் கூப்பிட்டுப் பேசினாள். "இப்படி பண்ணிட்டுப் போயிட்டியே ராதா, இது உனக்கே நல்லா இருக்கா!" என்று ஜானகி திட்ட ஆரம்பித்த போது சுந்தரம் சைகை காட்டி அவளை அடக்கினார்.

பின்னர் சுந்தரம் மீண்டும் டெலிபோனை வாங்கிப் பேசினார். சிவமணி வந்து விட்டுப் போனதை அவளுக்கு அறிவித்தார்.

பின்னர் "ஏம்மா! ஏதாச்சும் ஒண்ணுன்னா உன்ன எப்படி நாங்க தொடர்பு கொள்றது? ஒன்னோட டெலிபோன் நம்பரக் கொடுக்கிறியா?" என்று கேட்டார்.

"இப்ப வேணாம்பா! பின்னால கொடுக்கிறேன். ானே உங்களுக்கு அடிக்கடி போன் பண்ணித் தெரிஞ்சிக்கிறேன்!" என்றாள்.

"அப்பா, என் பிரேமை பத்திரமாப் பாத்துக்குங்க! எப்படியும் ஒரு ரெண்டு மாசத்துக்குள்ள நான் வந்து அவன அழச்சிக்கிட்டு வந்திர்ரேன்பா. மறுபடி என்ன மன்னிச்சிக்குங்க அப்பா! நீங்களும் அம்மாவும் என்ன மன்னிச்சிடுங்க" அழுது கொண்டே போனை வைத்தாள்.

ஜானகி அவளைத் திட்டியவாறே இருந்தாள். "தறுதல, தறுதல! எப்படித்தான் இந்தக் குடும்பத்தில வந்து பொறந்தாளோ!" என்று புலம்பினாள்.

ஊழ்வினை வசமாகத்தான் அவள் வந்து இந்தக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். ஊழ்வினை பற்றி மீண்டும் சிந்தித்தார் சுந்தரம். எத்தனை வகையாக இது தோன்றும்? எந்த வினைக்கு என்ன தண்டனை? இந்த உலகில் நாம் நீதிமன்றங்களில் இந்தக் குற்றத்திற்கு இந்தத் தண்டனை என விதித்திருப்பதைப் போல தெய்வம் விதித்து வைத்திருக்கிறதா? எந்தக் குற்றம் செய்தால் புற்றுநோய்த் தண்டனை விதிக்கப்படும்? எந்தக் குற்றம் செய்தால் மூன்று வயதுப் பிஞ்சுப் பருவத்தில் அப்பாவையும் அம்மாவையும் பிரிந்து வாழும் தண்டனை விதிக்கப்படும்? எந்தக் குற்றம் செய்தால் அன்புக் கணவன் அநியாயக்காரனாக மாறி தோலில் எரியும் சிகெரெட்டால் சுடுகின்ற தண்டனை விதிக்கப்படும்? எந்தக் குற்றம் செய்தால் கணவனை இளவயதில் பறிகொடுத்து விட்டு வாழ்நாள் முழுவதும் தண்ணீருக்கு பயந்து வாய்பேசாமல் தன்னை மற்றவர்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு பிரமை பிடித்து வாழும் தண்டனை விதிக்கப்படும்?

"இவ்வளவு நாளாக ஆராய்ச்சி செய்து நாம் புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்கத்தான் கற்றிருக்கிறோமே தவிர விடைகளைப் பெறத் தெரிந்திருக்கவில்லை." டாக்டர் லிம்மின் குரல் மனத்தின் ஆழத்தில் எதிரொலித்தது.


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home