Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > மதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார் இயற்றிய இராமாயண வெண்பா - முதல் நான்கு காண்டங்கள்


rAmAyaNa veNpA (of maturakavi Srinivasa Aiyengar)
part 1/ first 4 cantos
மதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார் இயற்றிய
இராமாயண வெண்பா

- பாகம் 1, முதல் நான்கு காண்டங்கள்


Etext Preparation (input & proof-reading) : Mr. & Mrs. Devarajan, Durham, NC, USA
Webpage preparation : Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA

? Project Madurai 1999 -2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

About the author & Source Acknowledgements:
Madurakavi Srinivasa Ayyangar is the author of this work. He lived in a small village in Madurai district during the early part of twentieth century. (He is different from Madurakavi Azhwar (one of the twelve Azhwars). He is well known for the innumerable poems composed by him. He had left the manuscript copy of this work with Madurai Tamil Sangam. It was printed and published by Thiru. R. Govindarajan, Chennai in 1990 with financial assistance provided by Govt. of India. We are grateful to him for having accorded permission to publish it in Project Madurai. The present release contains only the moolam of the work and does not include the notes and commentaries in the printed book.


இராமாயண வெண்பா - பட்டியல்

பாயிரம் (பாடல்கள் 1-8)

1. பாலகாண்டம் (பாடல்கள் 9-472 )
1.1. திரு அவதாரப் படலம்
1.2. கையடைப் படலம்
1.3. தாடகை வதைப் படலம்
1.4. வேள்விப் படலம்
1.5. மிதிலைக் காட்சிப் படலம்
1.6. தனு இறுத்த படலம்
1.7. கடிமணப் படலம்

2. அயோத்தியா காண்டம் (பாடல்கள் 473-866 )
2.1. மந்திரப் படலம்
2.2. கைகேசி சூழ்வினைப் படலம்
2.3. நகர் நீங்கு படலம்
2.4. தைல மாட்டு படலம்
2.5. கங்கைப் படலம்
2.6. சித்திர கூடப் படலம்
2.7. கிளைகண்டு நீங்கு படலம்

3. ஆரணிய காண்டம் (பாடல்கள் 877 -1408 )
3.1. விராதன் வதைப் படலம்
3.2. சாபங்கர் முத்தி யருள் படலம்
3.3. அகத்தியப் படலம்
3.4. சடாயுகாண் படலம்
3.5. சூர்ப்பனகைப் படலம்
3.6. கரன் வதைப் படலம்
3.7. மாரீசன் வதைப் படலம்
3.8. சடாயு வதைப் படலம்
3.9. அயோமுகிப் படலம்
3.10. கவந்தன் வதைப் படலம்

4. கிட்கிந்தா காண்டம் (பாடல்கள் 1409-1853 )
4.1. பம்பைப் படலம்
4.2. அனுமப் படலம்
4.3. நட்புக் கொள் படலம்
4.4. துந்துபிப் படலம்
4.5. வாலி வதைப் படலம்
4.6. அரசியற் படலம்
4.7. கார்காலப் படலம்
4.8. கிட்கிந்தைப் படலம்
4.9. நாட விட்ட படலம்
4.10. மகேந்திரப் படலம்

5. சுந்தர காண்டம் -
5.1. கடல் தாவு படலம்
5.2. ஊர்தேடும் படலம்
5.3. காட்சிப் படலம்
5.4. உருக் காட்டு படலம்
5.5. சூடாமணிப் படலம்
5.6. பொழிலிறுத்து படலம்
5.7. சம்புவாலி வதைப் படலம்
5.8. பஞ்ச சேனாபதி வதைப் படலம்
5.9. பாசப் படலம்
5.10. பிணி வீட்டு படலம்
5.11. எரியூட்டு படலம்
5.12. திருவடி தொழுத படலம்

6. யுத்த காண்டம்
6.1. இராவணன் மந்திரப் படலம்
6.2. இரணியப் படலம்
6.3. வீடணன் அடைக்கலப் படலம்
6.4. இலங்கை கேள்விப் படலம்
6.5. வருணனை வழி வேண்டு படலம்
6.6. திருவணைப் படலம்
6.7. ஒத்துக் கேள்விப் படலம்
6.8. தானைகாண் படலம்
6.9. அணிவகுப்புப் படலம்
6.10. அங்கதன் தூதுப் படலம்
6.11. முதற்போர்ப் படலம்
6.12. கும்பகருணன் வதைப் படலம்
6.13. மாயாசனகப் படலம்
6.14. அதிகாயன் வதைப் படலம்
6.15. நாக பாசப் படலம்
6.16. பிரம்மாஸ்திரப் படலம்
6.17. களங்காண் படலம்
6.18. மருந்துப் படலம்
6.19. மாயா சீதைப் படலம்
6.20. படைக் காட்சிப் படலம்
6.21. மூலபலம் வதைப் படலம்
6.22. வேலேற்ற படலம்
6.23. இராவணன் வதைப் படலம்
6.24. மீட்சிப் படலம்
6.25. திரு அபிடேக , திருமுடிசூட்டுப் படலம்


இராமாயண வெண்பா

பாயிரம்

காப்பு

ஆழிகடந்து ஆழிமகட்(கு) ஆழிஅளித்து ஆழி அங்கை
ஆழிமுகில் வண்ணற்கு அருந்தூதா - ஆழி
இலங்கை எரிஊட்டி இகல்கடந்த வீரக்
கலன் குலவு மாருதிதாள் காப்பு. ...1

நம்மாழ்வார் துதி

சொல்விரசை அன்பர்மனத் தூமலர்வாழ் சோதிபதம்
நல்விரசை ஆற்றின் நலம்பெறலாம் - செல்வத்
திருமொழிநம் மாறன் திருவாய் மொழியின்
ஒருமொழிகற் பீரேல் உவந்து....2

வில்லிபுத்தூர்க் குரவன்

மாளா நலம்புனைவான் வாழ்த்துதிஎன் மாமனமே
ஆளாக வந்த அடியேனை - மீளாத
சித்துஊர வைத்தருளும் தேசிகனாம் எங்கள்வில்லி
புத்தூர்க் குரவன் புகழ்....3

ஓர்உருவாய் நின்ற ஒளிஉருவாய் ஓதரிய
ஈர்உருவாய் மூவுருவாய் எங்குமாய்ப் - பார்உருவில்
நீர்உருவாய்க் கால்ஆய் நெருப்புஆய் நெடுவிசும்புஆய்
ஆர்உருவம் கொண்டான் அரண்....4

அவையடக்கம்

கால்மகன்போல் வாரி கடப்பதற்குக் கண்ணியஓர்
ஊன்மலியும் மந்தியினை ஒப்பாம்ஆல் - தேன்மதுர
நல்லிசைநூல் வல்லோரும் நாடரிய காகுத்தன்
சொல்லிசைநூல் பாடும் துணிபு....5

பாட்டும் தளையும் பதமும் பதிப்புணர்பும்
காட்டும் கவினும் கருதிடார் - கோட்டுசிலை
ஐயன் இராமன் அருட்சரிதம் என்றுஉளத்துள்
வையகத்து மேலோர் மதித்து....6

சொல்லும் துலையிற் சுவணமும்அக் கோற்குரிய
கல்லும் நிறையிற் கடுத்தல்போல் - ஒல்லும்நலம்
முற்றறியும் நாவலர்கள் முன்னூல் இலக்கணங்கள்
கற்றுஅறியேன் பாடுங் கவி....7

அவையடக்கம் என்பது அறியேன் இற்றாமென்று
எவையடக்கம் என்பேன் எளிதில் - சுவையடக்கு
நன்மொழிகள் இல்லேன் நவையடக்கு நாவுடையேன்
புன்மொழியுங் கொள்வீர் பொறுத்து....8

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1. பாலகாண்டம்
1.1. திரு அவதாரப் படலம்

உலகம் புகழ் அமுதம் ஒப்பாகும் தூய
நலன்மலிரா மாயணத்தை நன்கு - நிலன்மிசையான்
வெண்பாவால் பாடி வினைகடிய எப்பொழுதும்
கண்பாராய் மாருதிநீ காண்....9

ஆழியான் ஆழி அமர்ந்தான் அனவரதம்
வாழியான் ஊழிவடத்து அமர்ந்தான் - ஏழையேன்
நெஞ்சத்தான் வேத நெடுமுடியின் மீதுஅமர்ந்த
கஞ்சத்தாள் எப்பொழுதும் காப்பு....10

கோசல நாடு

வண்டாய அயன்நான் மறைபாட வாய்மலர்ந்த
தண்தா மரையின் தகைத்தாமால் - எண்தாவும்
தேசுஅலம்பும் தெய்வத் திருமா மகள்வதியும்
கோசலநல் நாட்டின் குணம்....11

மட்டுஒழுகும் வெண்தாமரை மலர்மேல் வாக்குஅருளும்
வட்டமுலைப் பூமான் மருவுதல்போல் - நட்டசெழும்
செந்நெற் பழனம் சிறப்புஎய்தச் செங்கனிவாய்
அன்னப்புள் வைகும் அரசு....12

செங்குவளைப் போதில் சிறைவண்டு கண்படுப்ப
பொங்கிப் பொழிந்து புதுத்தேறல் - கொங்குஉறத்தன்
பிள்ளைக்கு இரங்கிப் பெரிதுஅருந்தும் செந்துவர்க்கால்
வெள்ளைக் குருகர் வியந்து....13

வாழை மடல்உறுத்தி வண்ணம்உறு முப்புடைக்காய்
தாழை மடல்உறுத்தும் தண்இறால் - போழமதுத்
தேன்ஓடிப் பாயச் செழுங்கால்தொறும் அருந்தி
வான்ஓடிப் பாயும் வரால்....14

வண்ணக் குவளை மலர்விரிய வண்டுஊதும்
பண்ணிற் சிறந்த பனிவாவி - நண்ணிக்
கருஏறு சங்கம் கரும்கழல்கால் மள்ளர்
தெருஏறும் எங்கும் திரிந்து....15

நல்நான் மறைஇயம்பும் நான்முகனும் செப்பரிதேல்
என்நா இயம்ப இயலுமோ - பொன்னார்
உருஅயோத் திப்பெயரின் உம்பர் புகழும்
திருஅயோத் திப்புரியின் சீர்....16

பூமகட்கு வாண்முகமாம் பூமகட்குத் தாமரையாம்
பூமன்னர் யாரும் புகும்இடமாம் - வாமம்உற
மாகேதம் இல்லா வளன்அமைந்த மாட்சிமைசால்
சாகேதம் என்னும் தலம்....17

ஓதில் பொறியோடு உறலால் உவமைஇலா
வேதப்புண் மீது விளங்கலாற் - சோதிஉற
ஆதிக் ககனம் அளத்தலால் ஆழிஅங்கை
மாதவனில் தோன்றும் மதில்....18

திருஅனைய செல்வச் சிறப்புடைய நல்லார்
உருஅகன்ற கண்ணுக்கு உடைந்து - வெருவிஇருள்
பாழிவாய் நீலோற்பலம் படரும் பான்மைஉற
ஆழிபோல் தோன்றும் அகழ்....19

மாமதிலும் கோபுரமும் மண்டபமும் வண்மறுகும்
காமர்மணி மாடக் கவின்மனையும் - வாமச்
சினகரமும் மற்றும் தெரிவுறுத்தற்(கு) ஆமோ
அனவரதம் ஆராய்ந்து அறிந்து....20

மண்உலகில் ஆன்ற மணிஉரகர் தம்உலகில்
விண்உலகில் மற்றும் வியன்உலகில் - எண்ணரிய
ஆதிப் பரமன் அரசுஇயற்றும் அந்நகர்ச்சீர்
ஓதற்(கு) எளிதோ உவந்து....21

தானம் தவம்ஒழுக்கம் சாந்தம் தயைபொறுமை
மானம் குடிஒழுக்கம் மன்னுவோர் - ஞானநெறி
வல்லார் உறலால் வகுத்திடற்பாற் றோகமல
நல்லாள் உறையும் நகர்....22

இந்நகரின் பேரரசன் எண்தவத்தான் முண்டகப்பூ
அன்னை அருள்கொண்ட அதியோகன் - மின்அனைய
மாதர் மடல்ஊரும் வண்ணமலர்த் திண்தோளான்
சாதுரங்க வீரதளத் தான்....23

அறன்அமைந்த நெஞ்சன் அருள்அமைந்த கண்ணன்
மறன்அமைந்த திண்டோள் வலியன் - திறன்அமைந்த
பைந்துழாய் மாலைப் பரம்பொருளை எந்நாளும்
வந்தனைசெய் நீரான் மகிழ்ந்து....24

வில்லான் பகைஉறவும் இல்லான் விறல்அமைதோள்
கல்லான் பலம்சிறிதும் கல்லான்நூல் - நல்லாரின்
எல்லாம் உணர்ந்தோன் இகலோர்க்கு அரிஅனையான்
வல்லான் இக்கோசலையார் மன்....25

அஞ்சா வலியான் அருட்கொடையான் தண்ணளியான்
எஞ்சாத செல்வத்(து) இசையுடையான் - மஞ்சார்
கசரதமாத் தானைக் கடலுடையான் காட்சித்
தசரதன்என்று ஏத்திடுவோன் தான்....26

தசரதன் மனக்கவலை

இத்தகைய ஆழி இறைவன் அயன்அருளும்
உத்தமனை உள்அன்பு உறவணங்கிச் - சித்தம்
வருந்தினான் வாய்த்த மகவுஇலை யென்றுஇன்னல்
அருந்தினான் என்ன அயர்ந்து....27

எம்குலத்து முன்னோர் இதுகாறும் இவ்வுலகில்
மங்குனர் இல்லாது வயங்கினார் - இங்குஅறுபது
ஆயிரம் ஆண்டுஎல்லை அகன்றும் மகவின்றேல்
தூயஇனிச் செய்வது எவன்சொல்....28

தொல்ஆழி அன்ன துயர்ஆழி நீந்துதற்கு
வல்லாய் அருள்வாய் எனவகுத்தான் - எல்ஆர்ந்த
மன்றல்அளி கற்பகக்கா மன்னவற்கு வானுலகம்
அன்றளித்த கோமான் அயர்ந்து....29

மையல்மனத்து அரக்கர் வன்கொடுமை வானோர்கள்
வெய்யவிடம் உண்ட விரிவேணி - ஐயன்இடம்
தாழ்ந்துஉரைப்பச் சென்றான் சலசத்து அயனெடுமால்
வாழ்ந்து உறையும் ஆழிவயின்....30

திருமாலிடம் வானவர் முறையீடு

கண்ணா கருணைமழைக் கண்ணா அடியார்தம்
அண்ணா எனநின்று அடிபரவ - விண்ணோர்முன்
அஞ்சல்அஞ்சல் நும்வரவுஎன் ஆளுதும்என்றான் மழைக்கார்
மஞ்சுஎனப்புள் கோவின்மிசை வந்து....31

திருமால் அருள் உரை

வெம்சினத்து வான்அரக்கர் வெய்யகொடுங் கோலுரைப்ப
மஞ்சுஅனைய மாயன் மனம்இளகி - அஞ்சகிலீர்
வானரங்க ளாய்ப்புகுமின் மண்மிசைஓர் மன்மகன்இல்
யான்உதிப்பன் என்றான் இசைந்து....32

இவ்வாறு அருளி இறைவன் மறைந்திடலும்
அவ்வறு அமரர் அரிஉருவாய் - மய்வான்
மலைஇடத்தும் மற்றிடத்தும் வந்தனர்முன் என்றல்
கலைஇடத்தான் கண்டான் கருத்து....33

புத்திரகாமேட்டி வேள்வி

மன்னவர்கள் மன்ன மறுவில் மகப்பெறுவான்
தன்னிகரில் யாகம் தனைஆற்றின் - நன்றென
எத்தால் அதனுக்கு இயற்றுபணி என்என்றான்
பூத்தாம வேலான் புகழ்ந்து....34

வசிட்டர் கலைக்கோட்டு முனியை அழைக்கக் கூறுதல்

கொலைக்கோட்டுக் குஞ்சரம்தேர் கோமானை நோக்கி
தலைக்கோட்டுச் சாரல் தவத்தோன் - கலைக்கோட்டு
மாமுனிவன் எய்தி மகம்முடித்தல் நல்லதுஎன்றான்
தேமலர்வாழ் நான்முகத்தோன் சேய்....35

தசரதன் உரை

செய்தவத்து ஞானச்சிருங்க முனிக்கு அரசைப்
பொய்தவிர்த்த ஞானப் புலமையோய் - எய்திஇவண்
யான்அழைப்பது எவ்வாறு அருள்வாய் எனஉரைத்தான்
தேன்அழைக்குந் தாரான் தெளிந்து....36

உண்மைக்கு ஒருவன் உரோமபதன் தன்நாட்டில்
தண்மைப் புயல்சொரியத் தான்கருதி - வண்மைத்
தலைச்சிருங்க மாமுனியைத் தன்நகரில் உய்த்தான்
அலைச்சுவரும் பஞ்சம் அற....37

மின்னல்இடைக் கன்னல்மொழி வெண்தாளக் கோவைநகை
அன்னநடைப் பொன்நிகரும் ஆயிழையை - நன்னர்விதி
மாறாமை வேட்டுஅங்கண் வைகினான் தான்சொல்
மாறாமை கண்டான் மதித்து....38

மன்னர் வணங்க மதிவெண் குடைநிழற்றப்
பொன்இயலும் தேர்மீது போய்அடைந்தான் - மின்னல்
கொடிஇடையா ளோடுகலைக் கோட்டுமுனி வைகும்
படிஇடையே மாறாப் பதி...39

செங்கோல் அரசுதனது திருநாடு அடைந்த(து)
அங்குஓர்ந்(து)எழுந்து எதிர்கொண்டு ஆற்றினான் - நன்குஆரச்
செந்தா மரைவாழ் திருக்கோயில் கொண்டுஅடைந்து
வெந்தாம வேலான் விருந்து....40

யான்செய்த மாதவம்நீ இங்குவரப் பெற்றேன்என்று
ஊன்செய்த வேலான் உவந்துஉரைப்பக் - கான்செய்த
வண்ண மலர்த்தாரான் வந்த வரலாற்றை
எண்அமையச் சொற்றான் இருந்து....41

அவ்வாறு அருந்தவனை யானளிப்பன் என்றுஅறைய
வெவ்வாய் வடிவேல்விடை அடைந்தான் - கொய்வாசப்
பூஓதை வண்டுஉறங்கும் புத்தூர் எனப்புலவர்
பாஓதை மாறாப் பதி....42

காவலான் கொற்றக் கவிகையினான் போயபின்னர்
சேவலான் அன்ன திறல்முனியை - பூவில்அனப்
பேடுஉறங்கு நாட்டிற் பெயர்ந்து அருள்திர் என்றுஉரைத்தான்
ஏடுஅடர்ந்த தாரான் எடுத்து....43

காவிக் கயல்விழிஅக் காரிகையா ளோடுமலர்த்
தேவிற் சிறந்த திருமுனிவன் - ஆவிமலர்
அன்னப் பெடைவாழ் அயோத்திநகர் வந்தடைந்தான்
மின்னல் கொடித்தேரின் மேல்....44

மாமுனி வந்துஎய்த மணிமகுட மன்னர்பிரான்
தூமுனிவர் சூழத் துதித்துஎதிர்கொண்டு - ஏமவிதி
ஆங்குஇயற்றிக் கோயில் அடைந்தான் அழைத்துஅவரை
தேங்கமழ்பன் னீரால் தெளித்து....45

சித்திரம்சேர் தெய்வத் திருமுனிவன் தீதகலப்
புத்திரகா மேட்டி புரிந்துஅரசன் - மித்திரஞ்சேர்
நங்கையர்கள் மூவருக்கும் நாலுகூறு இட்டுஅளித்தான்
அங்கை மலரால் அவி....46

வேள்விமுடித்(து) அதன்பின் மெய்த்தவன்தன் பால்அடைந்தான்
வாள்விழியார் மூவர் வயாஅடைந்து - நீள்விசும்பில்
நல்தேவர் வாழ நவில்நான் மறைவாழப்
பெற்றார் மகாரைப் பெரிது....47

இராமாவதாரம்

போமதி ஒன்பான்தாள் வேய்கடகம் மேன்மை
ஆடுஅரவின் மேலே அறிதுயில்செய் - நாடறிய
தேசினனைத் தெய்வத் திருமணியைப் பெற்றுஎடுத்தாள்
கோசலையாம் செல்வக் கொடி....48

நல்தவம் எந்நாளும் நனிஓங்கப் பூசமுடன்
செற்றம்அறு மீனம் சிறந்துஓங்க - வெற்றிபுனை
மாகயம்நே ரும்பரத மன்னவனைப் பெற்றனளே
கேகயர்கோன் பெற்ற கொடி....49

புற்று அரவினோடு அம்புலிகடக மீதிலுறக்
கற்றவரும் மாலுங் களிகூறச் - செற்றம்
விலக்குவன் ஈங்குஎன்ன இலங்குஇளைய நல்லாள்
இலக்குவனைப் பெற்றாள் இனிது....50

முத்துஉருக் கொண்டுஅன்ன முழுநிறத்து மொய்ம்புஉடைய
சத்துருக்க வீரன் தனைஈன்றாள் - இத்தரையில்
கோள்அரியும் மாமகமும் கூடும்நலம் கூர்தரஅவ்
வாள்அரிமைக் கண்ணாள் மகிழ்ந்து....51

இவ்வாறுஅவ் வேந்திழையார் ஏழுலகும் போற்றஇணை
ஒவ்வா மகாரை உவந்துஅளிப்பக் - கொய்வாசப்
பூந்தாம வேலான் புனல்மூழ்கிப் பொன்மறையோர்க்கு
ஈந்தான் மழைபோல் எடுத்து....52

விண்உலகம் வாழமறை வேதியர்கள் தாம்வாழ
மண்உலகம் வாழஅறம் வாழவே - கண்ணரிய
ஈன்றோர் மகிழ இளஏறுஎன வளர்ந்தார்
ஆன்றோர் தவம்போல் அவிர்ந்து....53

நபநயனம் ஏற்றோன் நவில்அறிய நால்வர்க்கு
உபநயனம் ஆற்றி உரைத்தான் - தபனன்என
விற்கலையும் வேத விரிகலையும் மற்றுஅரிய
சொற்கலையும் மாதவத்தோன் ஆய்ந்து....54

நாற்பொருளும் நாற்கவியும் நாற்கடலும் நான்மறையும்
போற்புவியோர் போற்றிப் புகழ்ந்துஏத்த - மாற்குமரர்
மண்வளரப் பொன்வளர வான்வளரத் தாம்வளர்ந்தார்
எண்வளர் அப்பெண் வளரவே....55

மன்னர் திரைஅளப்ப வந்தியர் வாழ்த்துஎடுப்பச்
சென்னிமகுடம் சிறந்து இமைப்பப் - பொன்நிகரும்
மங்கையர்கள் வாழ்த்துஒலிப்ப வானவர்கோன் போன்றுஇருந்தான்
வெங்கண்அரி ஆதனத்தின் மேல்....56

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.2. கையடைப் படலம்
கோசிகன் வரவு

அக்காலம் ஆழ்விழுதை அன்னசடைக் கற்றையோடு
முகாலம் தேருமுனி அடைந்தான் - தக்கர்வாழ
மூள்அகண்டம் முற்றும் முருங்கஅழ லாகும்நகைக்
காளகண்டன் ஒப்பக் கடிது....57

சிங்காதனம் இழிந்துதேர் வேந்தன்சென்று எதிர்கொண்டு
அங்குஆதனம் இருத்தி ஆற்றினான் - நன்குஆர
முக்கால் வலம்புரிந்து முன்பணிந்து செய்ம்முறைமை
அக்கால் அருக்கியமோடு ஆய்ந்து....58

மன்னர்உனக்கு அபயம் என்னாமுன் வானவர்தம்
பொன்நாடு காத்த புரவலனே - என்னால்
வரும்மகனைக் காப்பான் வளம்பெறு நின்மாலாம்
திருமகனைக் காஎன்றான் தேர்ந்து....59

காதி அரசுஅளித்த காதல்சொல் வேல்பாய்ந்த
வேதனையின் நெஞ்சம் வெதும்பினான் - சீதமுகில்
வண்கொடையான் எண்சிறந்த வையம் புரக்குமதித்
தண்கொடையான் உள்ளம் தளர்ந்து....60

அன்னை முலைப்பால் அறாவாய்ச் சிறுமதலை
தன்னை அழைத்தல் தகுதியோ - முன்னம்
மலைவில்லால் அன்று மலையும் அரன்செய்த
தொலைவுஇல்லா மேலோய் துணிந்து....61

மஞ்சுஆடு மால்வரையும் வான்அகமும் வையகமும்
பஞ்சுஆடு தீயில் படராவோ - எஞ்சாத
வல்வில்லால் வாளி வழங்குவனேல் மாமறைநூல்
சொல்லில்லாய் என்றான் தொழுது....62

வானம் திரிய வரைதிரிய மண்திரியக்
கானம் திரியக் கனன்றுஎழுந்தான் - வானடையார்
மைந்துஅடக்கும் வாளான் வகுத்துஉரைப்பக் கேட்டுமனத்து
ஐந்துஅடக்கும் செங்கோல் அவன்....63

மன்னா மறுத்தியோ மாமுனியின் மாமகளைத்
துன்னாமை கண்டால் தொடருமோ - முன்நாள்
தருமத்தின் சாரம்எனத் தானாக மேவும்
கருமத்தின் விஞ்சைக் கலை....64

ஆண்மை அறிவுஒழுக்கம் ஆக்கம் அகத்தெளிவு
வாண்மை பிறவும் வருமகற்குக் - கேண்மை
வருமுனி பின்செல்ல மறேல் என்றான்கஞ்சத்
திருமுனிவன் பெற்று எடுத்த சேய்....65

தங்கள் குலகுருவாம் தாபதன்சொல் வாய்மையினாற்
புங்க முறுமுனிபின் போக்கினான் - பைங்கமுகில்
வாளை உகளும் வளநாடன் மைந்தனைச்செவ்
வேள்அனையா னோடும் விரைந்து....66

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.3. தாடகை வதைப் படலம்
அலைவுஇல்கவி நாவலர்கள் ஆழ்ந்தபொருள் சோல்போல்
தொலைவுஇல் பெரும்தூணி தூக்கி - மலைநேர்
சிலைவலம் கொண்டு ஆரியன்பின் சென்றார்கள்செந்தீ
உலைவளங்கொள் வேலார் உவந்து....67

தந்தை அருள்கொண்டு சரயு நதிதாண்டிக்
கந்தை அடருங் கரிஅனையார் - சிந்தைஅடர்
தீம்பர்ஆகப் பகையைச் செற்றமுனி யோடுபுக்கார்
பூம்பரா கத்தேம் பொழில்....68

இப்பொழில் யாதுஎன்ன இறைவன் எரிவிழியால்
அப்புமலர்க் காமன் அணிஅங்கம் - துய்ப்பொதியில்
எங்குமாய் நின்ற இராமா எரிந்துஅவிந்தது
அங்கநிலம் என்பார்கள் ஆய்ந்து....69

ஆறுகமழ் கொன்றை அரவோடு எருக்குஅணிந்து
வீறுபுகழ் ஏறு விடைஉயர்த்தோன் - தேறுமுனி
வோரால் உணர்வுஅரிய யோகுபுரிந்தான் எனில்இவ்
ஆராமச் சீர்அறைவார் யார்....70

என்றுஉரைத்துக் கோசிகன்அவ் ஏறுஅனையாரோடு அருக்கன்
குன்றுஅணையச் சென்று குறுகினான் - ஒன்றல்
பெறாதுஅனல்வாய் வெண்மதியால் பேதுறுவார் நெஞ்சில்
பெறாதுஅனல்வாய் நீள்வெம் புலம்....71

சார்ந்த பனிக்கடலும் தண்திரைவாய் நீள்நதியும்
சேர்ந்துஉறினும் ஓர்முகமாய்த் தீய்க்குமேல் - ஆய்ந்துஉணர்ந்த
நாவலரும் பாவால் நவிற்றற்கு எளிதாமோ
தீவளரும் அச்சுரத்தின் சீர்....72

நெற்றிக் கனல்விழியான் நீண்டசிலை மேருவதாய்ப்
பற்றிப் பொருத படர்சிலையான் - முற்றுஅனல்வாய்
வன்பான் மணல்இறை பெய்வானேல் எரியாதோ
புன்பால் உறுமுப் புரம்....73

மண்ணிற் பொலிதன் மனைசுரப்ப மாழாந்தோன்
எண்ணிற் சுடுபுலம்ஈண் டேஇருப்ப - நண்ணிப்
படுமாயைக்குஉள் அழிந்த பாதகரைத் தீவாய்ச்
சுடுமாறுஎவன் மறலி சூழ்ந்து....74

தாரைவாய்ச் சார்ந்து தனைஎரிக்கும் என்றுஇவன்அவ்
வீரைவாய் உண்டு மிளிர்மேகம் - பாரைமுதல்
எல்லா உலகும் இறுதியுறுநாள் பொழியும்
செல்ஆர் அவானஞ் செறிந்து....75

இக்கொடிய பாலை எதிர்தரவெள்ஏறு அனையார்க்கு
எக்கலையுந் தந்த இருடியர்கோன் - செங்கமலக்
கோமான் அளித்த குளிர்மறை ஆங்குஉரைத்தான்
பூமாரி பெய்யப் புனல்....76

கண்ஆயிரம் உடையான் கற்பகப்பூங் காஇடைவாழ்
விண்நா டருக்கும் விரவாதே - நண்ணார்
புரமூன்று எரித்தானைப் போன்றான் அன்றுஈய்ந்த
வரம்ஊன்றும் பாலை வனம்....77

அறக்கடவுள் போல்வான் அளித்துஅருள் இந்நாட்டில்
மறக்கனல் வாய்இந்த வனத்தின் - திறப்புதுமை
யாதுஅறிதி எல்லாம் அறைவாய் எனஅறைந்தான்
மூதறிவால் மேய முனி....78

இருபிறைகள் தாங்கி இருவிழித்தீ ஓங்கி
வருபொறையது ஒப்ப வருவாள் - கருமலைசேர்
வீர வாரத்தாள் வெளியெழிலி ஏறனைய
ஆர வாரத்தாள் அவள்....79

வெண்திரை வாய்ப்பெய்து விடாய்அழலை ஆற்றுகிற்பாள்
கொண்டல் கரியக் குமுறுவாள் - அண்டஅரிய
நஞ்சாகும் என்னு நயனத்தாள் நாகருக்கும்
அஞ்சாத நெஞ்சுரத் தாள்ஆய்....80

செல்வக் குபேரன் திருக்குலத்தோன் சற்சரன்ஆம்
மல்லற் புயத்து மகவானோன் - கல்வித்
துறையான் சுகேதுஎனச் சொல்வான் இருந்தான்
தரைமீது நல்ல தலம்....81

ஓர்ஆயிரம் கரியின் ஊக்கம்உறும் பெண்மகப்பூம்
தாராய் உனக்கு உதிக்கும் தான்என்னக் - கூர்வுஆய
அன்னப்புள் ஏறி அடைந்தான் தனதுஉலகம்
முன்அப்புள் தோன்றும் முனி....82

அன்னப்புள் தேவரத்தின் ஆங்குஉதித்த ஆய்இழையாள்
தன்னைப் பரிந்துமணம் தான்புரிந்தான் - நன்னர்த்
துறைஇயக்கம் மாறாத சுந்தன் எனப்பூவில்
அறைஇயக்கன் மாலை அணிந்து....83

துயக்கும் அநுராக சுகபோகத்து உள்மகிழ்ந்து
மைக்கரும்கண் தாடகையா மான்ஈன்றான் - பொய்க்கருத்துச்
சூதகர்என்று ஓதும் சுவாகு மாரீசன்எனும்
பாதகரை உள்ளம் பரிந்து....84

பொய்வளர மெய்யொதுங்கப் புண்ணியர்கள் உள்நடுங்க
வையம்எலாம் ஆர்த்து வருநாளில் - கைதவம்செய்
ஆற்றலகம் கொள்ளா அடாநெறியி னுள்மகிழ்ந்தான்
மாற்றரும்சீர் சுந்தன்எனு மன்....85

குடங்கையினில் ஆரி அறல்கொண்டு நுகர்ந்தோன்
இடம்பயிலும் மாமரங்கள் எல்லாம் - கடம்படவே
கட்டான் எறிந்தான் கலைஇரலை மான்முதல
சுட்டான் அயின்றான் அடர்ந்து...86

செய்யாத தீமைபல செய்தார்கள் வையகத்தில்
ஐயா எவர்உய்த் தனர்ஆவார் - பொய்யாக்
குறுமுனிவன் கோபக் கொடுங்கனலால் வெந்தான்
கறுவியஅப் பாவியியக் கன்....87

தோடலராச் சுந்தன் தொலைத்தமை தேர்ந்துஅந்தகனில்
தாடகைதன் மக்களொடும் சார்ந்துஅணுகி - நீடியவான்
கற்றருக்கை கொண்டு கடுங்கனல்போல் ஆர்த்துஎதிர்ந்தார்
மற்றருக்கை வென்றான் வயின்....88

வண்ணப் பொதிய மலைவாழ் தருமுனிவன்
திண்ணத்து அவரைச் சினந்துஅடைந்து - மண்ணில்
அடும்சாப வல்லரக்கர் ஆவிர்என விட்டான்
கடும்சாபம் மாறாது காண்....89

வெற்றி புனைஇலங்கை வேந்தர்க்கு உரியபெரும்
சுற்றத்தோர் என்னச் சொலியெங்கும் - பற்றலரை
உற்பாதம் ஆற்றுனரை உன்பகழிக்கு ஊட்டுவையேல்
நற்பாருக்கு அப்பால் நலம்....90

இத்தகையோர்க்கு ஈன்றதாய் என்பாள் இவரின்றி
மத்தகைம் மாவென்ன வனம்திரிந்து - தத்தைபயில்
இப்பொழில்கள் எல்லாம் இறுத்தாள் எமைஅடர்த்தாள்
எப்பொழிலும் காண எதிர்த்து....91

வேண்டும் வரம்தந்த விடைஉயர்த்தோன் வெற்புஎடுத்த
தூண்திரண்டது அன்னபெருந் தோளான்சொல் - பூண்டுஎனது
வேள்விக்கு இடையூறாய் மேவுகின்றார் என்றுஉரைத்தான்
வேள்விக்கி னேசன் விரிந்து....92

இப்பாதகி உறைவது எப்பால் எனுமுன்இறை
அப்பா தகியும் அருகடைந்தாள் - இப்போதின்
நாம்காணு நீரோஎன் ஆளுகையின் வந்தடைவீர்
போங்காணும் என்றாள் புகைந்து....93

வெந்தகையீர் என்வாய் விழுங்கிப் பசிஆற்றற்கு
அந்தக னாருந்த அடைந்தீரோ - நந்தமது
முத்தலைய சூலம் முனியாமுன் செல்திர்என்றாள்
அத்தலையில் செல்போர் அதிர்ந்து....94

மாதுஇவள் என்றுஐயன் மனம்கருதும் எல்லையினில்
யாதும் கருதல் இவளைநீ - போதில்
பெருவரால் பாயப் பிரசம் வழிநாடா
மருவரா என்றே மதி....95

வார்வாய நேமிமுனாள் மாய்த்ததுவும் வானவர்கோன்
கூர்வாய வச்சிரத்தால் கொன்றதுவும் - சீர்வாய்
குருகுறங்க வண்டு குழலிசைக்கும் நாடா
தெரிவையரை அன்றோ தெரிந்து....96

என்னாமுன் வள்ளல் இருந்தவத்தோய் யாதுபணி
சொன்னாலும் செய்யத்துணிந் தேன்யான் - பன்னாகம்
அன்னாள்தன் ஆவிஅகல் வாளிக்கு ஊட்டுவன்என்று
உன்னாமுன் நின்றாள் உருத்து....97

வில்லாளி நின்றவிறல் நோக்கி வேழம்என
அல்லாம் எனநின்ற அடல்அரக்கி - எல்லார்ந்த
மூவிலைய கூர்வாய முற்படுவ சூலம்ஒன்றை
ஏவினாள் நின்றாள் எதிர்த்து....98

என்ஊறுஎன நின்று எழுந்தனிச் சூலய்
பல்நுறு உதிதாப் படுவித்தமன் - பொன்னாரும்
மூதண்டம் தானாய் முளைத்தான் முழுவயிரக்
கோதண்ட மேவுசரம் கொண்டு....99

கல்மாரி வஞ்சக்கடும் பாதகி பொழிய
வில்மாரி கொண்டு விலக்கினான் - நெல்மாரி
பொன்மாரி பெய்யும் புயனாடன் முன்னொருநாள்
வன்மாரி காத்தான் மலைந்து....100

வாழைமுதிர் கனியில் வல்ஊசி பாய்ந்ததுஎன
ஊழை முனியும் ஒருவாளி - தாழைமடல்
புள்உறங்கும் நல்நாடன் போக்கினான் வள்உரத்தின்
உள்உறங்காது ஏகிற்று உருத்து....101

மின்னி இடிவீழ வேரோடும் சாய்ந்தகரும்
பொன்னின் சிகரப்புது வரைபோல் - மன்னன்
விடும்கணையால் வீழ்ந்தாள் விறல்அரக்கி மேனி
நெடும் குருதிபாய நிலன்....102

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.4. வேள்விப் படலம்
அய்யன் சிலைவலிகண்டு ஆனந்தம் கொண்டுமுனி
வைய படைகள் வழங்கினான் - எய்திநெடும்
காதம் இரண்டு கடந்தார்ஓர் ஓதையுற
யாதருள்திர் என்றான் இறை....103

துங்கம்உறு மானதத்தில் தோன்றி வரும்சரயு
நங்கைஎனப் போற்றும் நதியுடனே - சங்கமஞ்செய்
வானோர்புகழ் கோமதி யரவம்என்ன அப்பால்
போனார் கடந்து அப்புலம்....104

வெம்பவங்கள் தீர்க்கும் விழுநதிவேறு எய்துதலும்
எம்பெருமான் முன்பனை நின்றுஏத்தியே - என்புலர்த்து
நல்தவத்தோய் இந்த நதியின் பெருமைஎவன்
சொற்றருள் வாய்என்றான் தொழுது....105

வாடா மலரோன் வரத்துதித்த வாள்உழவன்
வாடாத தாமத்து உறுபடையால் - நாடுஆள்
தருங்குசன் நன்றுஈன்ற தனையர் ஒருநால்வர்
கரும்பிறைவன் நேர்எழிலார் கள்....106

பன்னுகுசன் குசதாபன் ஆதூர்த்தன் பின்வசுவி
மன்னர் கவுசாம்பி மகோதையம்சீர்த் - தன்மவனம்
ஏரார்கிரி விரசம் என்னும் பதியாண்டார்
போரார்வேல் இந்திரனே போல்....107

அத்தகையா ரில்குசதா பன்அருளும் ஆயிழையார்
வித்துருமக் கொம்புஅனைய மெல்லியலார் - முத்தநகை
வாள்தடம்கண் மாதர் மலர்ப்பொழில்வாய் எய்திவிளை
யாட்டுஅயர்ந்தார் காதல் அமைந்து....108

கச்சு முலையும் கருவிழியும் கண்டு உருகித்
தச்சு வரும்காமன் சரத்தனுங்கி - இச்சமையம்
என்பால் இறங்கி இனிதுஅணைவீர் என்றுஉரைத்தான்
அன்பால் சதாகதியும் ஆய்ந்து....109

எந்தையுரை இல்லாது இனிதுஅணைதல் ஏறுஅனையாய்
முந்தை முறைஅன்று எனமொழிய - இந்திரைநேர்
அன்னார் வெரின்சூறை யாய்த்திருகிப் போய்அகன்றான்
முன்னாகி அம்மான் முனிந்து....110

வார்அணங்கும் கொங்கை மடவார் நகர்ந்துபோய்
கார்அணங்கு மாடம் கலந்துஅறைய - ஓர்அணங்கும்
தையலரை வான்பிரம தத்தர்க்கு அளித்தானால்
மையறுசீர்த் தாதைஎனு மன்....111

சூளிகுமரன் துணை மலர்க்கை தீண்டுதலும்
ஆளிஇடையார் அவிர் எய்தி - கோள்வறுமெய்க்
கூன்நிமிரக் கொண்கனொடும் கூடிமகிழ் வடைந்தார்
நால்நிலமேல் அன்னார்பன் னாள்....112

மன்னன் மகப்பெறுவான் மால்வேள்வி ஆற்றுதலும்
பொன்னம் சிகைஅழல்கண் போந்தானால் - மின்னுமணிப்
பொன்காது இணைவிழிமேல் பொன்அனையார் மால்கொளும்வேல்
மன்காதி என்றுரைக்கு மால்....113

அன்னோன் தனக்கே அரசு அளித்துத் திண்குசதா
பன்னேர் பொன்னாடு படர்ந்தான்பின் - துன்னார்
அடிஅடங்கத் தீமைபல அன்றடங்க ஓரேழ்
படிஅடங்க ஆண்டான் பரிந்து....114

கோசிகன் என்பேனும் கொழும்கமலப் பூம்பொகுட்டு
வாசமட மாது வடிவுஅமைந்த - கோசிகையும்
அக்காதி மன்னன் அருந்தவத்தால் வந்துஉதித்தேம்
மைக்கோல மைந்தாவிம் மண்....115

இருசிகன்அவ் ஏந்திழையை இன்பமுற வேட்டுக்
கருதுஅரிய இன்பநிலை கண்டு - பரிவுஅறப்பூ
மீதுஇருந்தான் தன்உலகம் மேவினான் வெள்ளைவளைச்
சோதி மலர்ப்பாதம் துதித்து....116

எம்முனாள் இந்த இருநதியது ஆயினள்என்று
எம்மனோர்க்கு எல்லாம் இறையாகிக் - கைம்மலையைக்
காத்தான் உவப்பக் கழறினான் செய்தவத்தால்
மூத்தான்என்று ஏத்து முனி....117

சிற்பரனும் தெய்வச் சிலைஏத்தும் சேவகனும்
அற்புதம்கொண்டு ஏகுழியின் அங்குஒருபால் - பொற்புஉறும்தண்
மைப்பழுவம் தோன்ற வரமுனிவன் தன்முகம்பார்த்து
இப்பொழில் யாதுஎன்றான் இறை....118

ஆரணமாய் ஆரணத்தின் அந்தமாய் ஆன்றபரி
பூரணமாய் நின்ற பொருளான் - நாரணன்முன்
ஈரைம்பான் ஊழி இருந்தவம்செய் தான்இதன்சீர்
ஆர்என்பார் சொல்லற்கு அறிந்து....119

முப்பொருளாய் முக்குணமாய் முத்தொழில்செய் மூர்த்தியாய்
எப்பொருட்கும் சான்றாய் இறையாகி - ஒப்பில்
மருத்துளவ மாலைபுனை மாயோன்செய் நோன்பின்
கருத்துஎதுவோ ஆராயும் கால்....120

அந்தநாள் செய்யும் அரும்தவத்தின் ஆற்றலினால்
எந்தநாட் டுக்கும் இறையாகிக் - கந்தமலர்த்
தேன்ஆடும் தாரான் திறன்மா வலிஎன்பான்
வான்நாடும் கொண்டான் மகிழ்ந்து....121

வல்லவர்கள் நாண்அடைய வானவர்கள் ஏக்கம்உற
சொல்அறிஞர் கண்டு துதிஇயம்ப - நல்ல
சுகம்புரியும் கேள்வித் துறையோர்கள் சூழ
மகம்புரிந்தான் அம்மா வலி....122

எல்லா உலகும் இணைஅடியின் கீழ்ஒதுங்க
வல்லான் இயற்றும் மகம்நோக்கி - எல்லார்ந்த
சுந்தரத்தோள் மாயனிடம் சொல்லி முறையிட்டார்
அந்தரத்தோர் தாழ்ந்தார் அயர்ந்து....123

வானோர் அயர்வும் மகாபலியின் வான்செருக்கும்
தான்ஓர்ந்து அடல்ஆழித் தம்பிரான் - கோன்ஆன
காசிபனாம் மாதவத்தோன் கான்முளையாய் வந்துதித்தான்
மாசுஇல்ஆல் வித்துஆகி மன்....124

மறைவிளங்கத் தேவர் வலம்விளங்க முந்நூல்
முறைவிளங்கச் சோதி முகமேத் - தறைவிளங்க
ஆவலினால் கண்டோர் அதிசயிப்ப வாமனன்ஆய்
மாவலிமுன் வந்தான்அம் மால்....125

மன்னன் எதிர்பணிந்து மாதவத்தோய் நீவருதற்கு
என்னதவம் புரிந்தேன் யான்என்னாப் - பன்னிப்
பலமுறையும் போற்றப் பகர்ந்தான் விண்ணாதி
உலகமாய் நின்றான் உவந்து....126

உண்மைக்கு உரியாய் உரைக்குஉரியாய் ஒப்பில்லா
வண்மைக்கு உரியாய் எனமதித்துத் - தண்மைஉறும்
இந்துருவாய் நின்றாய் எதிர்த்தேன்நின் பால்என்றான்
சிந்துருவாய் நின்றான் தெளிந்து....127

மாவலியும் யாதுஉன் மனம்என்ன மால்அனையான்
மூவடிமண் வேண்டும் எனமொழிய - ஆவலுடன்
கொள்இ?து என்னாமுன் குறித்துஉணர்ந்து கோள்இதுஎன
வெள்ளி தடுத்தான் வெகுண்டு....128

மன்னா இவனைஒரு மாண்குறள் என்றுஎண்ணூதியோ
அன்னோ அமரர்க்காய் ஆங்குஅடைந்தான் - இன்னாளில்
ஈர்க்கவனை நம்பேல் இதுகபடம் என்றுஉரைத்தான்
பார்க்கவனும் உள்ளம் பரிந்து....129

என்றுஉரைப்ப வெள்ளி இனியான் மறுப்பனோ
நன்றுஉரைத்தாய் ஆனாலும் நான்மறேன் - கன்றும்
மறம்புரிந்தார் செய்கைஇது மாண்புஅலவே என்றும்
அறம்புரிந்தார் செய்கை யல....130

மானம்போம் கல்வி வளம்போம் மறுவிகந்த
தானம்போம் ஆண்மை தவம்போமால் - ஞான
நயம்புகலும் மேலோய் நவைதீர் உலகில்
இயம்புமொழி மாறும் எனின்....131

செல்வம் கெடினும் செழித்த புகழ்கெடினும்
வெல்வன் சினம்கொடு நீமேவிடினும் - கல்வித்
திறம்திறம்பும் ஆனாலும் செப்பிய சொல்மாறி
அறம்திறம்பி ஆற்றுவனோ யான்....132

கெடுப்பாரும் கீழ்மை கிளப்பாரும் பொய்மை
அடுப்பாரும் அல்ல அறவோய் - தடுப்பாரே
கூற்றுஉலகில் தீவாய்க் குழிஆழ்வர் என்றுஉரைத்தான்
மாற்றுஉலகில் இல்லாத மன்....133

என்றும் புகழே இரும்புவனம் ஆவதுஎனக்கு
என்றும் புகழே இரும்புதல்வர் - நின்றளத்தி
மூவடிமண் என்று மொழிந்துஅங்கை வார்த்தனன்நீர்
மாவலியாம் வேந்தன் மகிழ்ந்து....134

ஓர்அடியால் வான்உலகும் ஓர்அடியால் பூவுலகும்
ஆர்அடியார் போற்ற அளந்ததன்பின் - ஓர்அடியால்
அன்பன் உடல்கொண்டான் அமரர்க்கு அருள்புரிந்தான்
பொன்பயிலும் ஆடைப் புயல்....135

ஆதலின் இச்சோலைவனம் ஆருரைப்பார் ஆரியனே
ஓதஅரிது பூவில் உயர்வேள்வி - காதலுடன்
செய்யும் இடம்இதுவே தேறுதிநீ என்றுஉரைத்தான்
உய்யும்இடம் கண்டான் உவந்து....136

மஞ்சனைய வள்ளல் மகிழ்ந்துஅவ்வா றாகஎன
அஞ்சலித்து நிற்ப அருந்தவத்தோன் - நெஞ்சலர
வேண்டுவன கொண்டு விதிமுறையால் ஆற்றினான்
மாண்தவரோடு அந்த மகம்....137

எண்ணற்கு அரிதாய் இரண்டோடு மூன்றுநாள்
கண்ணில் கலையின் கடல்அன்னார் - விண்ணவருக்கு
ஆக்கு மறைநூல் அருமகம்அங் காமாறு
காக்குமுறை பூண்டார் கலந்து....138

அப்பொழுதின் அந்தரத்தின் ஆர்த்துவடி வாள்நிருதர்
மைப்புயலின் நின்று மலைமரங்கள் - கைப்பிடியில்
தூர்த்தார் தெளித்தார் களித்தார் கனல்ஒழுகப்
பார்த்தார் எறிந்தார் படை....139

அய்யன் அறிந்தான் அடல்வாளி மாமழையால்
வெய்தின நிருதர்அடல் மெய்ச்சோரி - செய்மகத்தில்
சேராது ஒருகூடம் செய்தான் திறல்சிலையால்
வீராதி வீரன் விரைந்து....140

வண்டலம்புங் குஞ்சி மழைஅனையான் வாளியினால்
அண்டர் உவப்ப அடல்அரக்கர் - கண்டமுற
வாட்டினான் தாடகைதன் மக்கள்எதிர் வந்துஅணையக்
கோட்டினான் சாபம் குனித்து....141

ஒருவனைத்தண் கார்க்கடலில் உய்த்தான் கணையால்
ஒருவனைத்தென் பால்புலத்தில் உய்த்தான் - வருமுனியும்
முற்றினான் வேள்வி முறையால் விசும்பின்இடைச்
சுற்றினார் ஏத்தச் சுரர்....142

பூமழைகள் பெய்தார் புலவோர் புனிதம்உறு
நாமழைகள் பெய்தார் நவின்மறையோர் - கோமுனிவன்
நன்முகமே நோக்கி நவின்றான் நவையில்லா
மன்முகமே நோக்கி மகிழ்ந்து....143

அண்டம் அளந்தாய் அனைத்துஉலகும் உண்டுஉமிழ்ந்தாய்
எண்தவத்தோர் யார்க்கும் இகல்இரியக் - கண்டகரை
கூட்டினாய் தென்பால் குவலயத்து நின்புகழை
நாட்டினாய் என்றான் நயந்து....144

என்னாமுன் வள்ளல் இருந்தால்எற்கு ஈங்கினிமேல்
நின்னால் பணிஎன் நிகழ்த்துவாய் - சொன்னால்
தலையேற்றுக் கொள்வன்எனச் சாற்றினான்நாமச்
சிலைஏற்றுச் சிங்கம்அனான் தேர்ந்து....145

வரதன் இதுபகர மாதவத்தோன் மைந்த
விரத நெறிதவறா வேந்தன் - சரதன்எனும்
மாமிதிலை வேந்தன் மகமுதாம் காண்டும்எனத்
தாம்இனிது சென்றார் தடம்....146


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.5. மிதிலைக் காட்சிப் படலம்
முன்னரைய செங்கேழ் முளரி முகைஅரும்ப
வள்ளம்தேர் ஆம்பல் மலர்விரிந்து - கள்ஒழுக்க
யாணர்த் திரைவா னகம்அளப்ப ஆங்குஇழியும்
சோணநதி கண்டார் துனைந்து....147

சூரிய அஸ்தமனம்

ஐயன் கணையால் அடும்அரக்கர் மெய்ச்சோரி
செய்ய வுடல்படுதல் சிந்தித்து - வெய்தின்அதை
மாற்றுவான் எண்ணி வளர்மேல் கடல்குளித்தான்
காற்றுலாம் தேர்மேல் கதிர்....148

புள்ளுறங்கும் சோலைப் புலன் அடைந்தார் பொற்றாம
வள்ளல்இவண் யாதுஇவ் வனம்எனலும் - கள்ளமனப்
பாலகத்தை வென்ற படர்சடையக் கோசிகன்
சேவகற்குச் சொற்றான் தெளிந்து....149

வண்ணம்உறும் விஞ்சை மகள்ஒருத்தி வான்கடந்து
கண்ணன் உலகுஎய்திக் கமலைதனைப் - பண்ணிசைய
ஆலை வழியிரசம் ஆகும்எனப் பாடஒரு
மாலை கொடுத்தாள் மகிழ்ந்து....150

அந்த அணியை அவள்யாழ் இடைப்பிணித்து
சந்த மலரோன் தனதுஉலகம் - முத்தவே
கண்டான் வியந்தான் கடும்சினத்து மாமுனிவன்
கொண்டான் உவகை குனித்து....151

உலகம்எலாம் உண்டோன் ஒளிகொள்திரு மார்பத்து
இலகும் அனையளித்தது எந்தாய் - நலன்உறநீ
கொண்டுபோ வென்று கொடுத்தாள் குளிர்ந்தமலர்ச்
செண்டுபோல் நின்றமுலைத் தேன்....152

கோபக் கொடுமுனியும் கொண்டேன் பெருமைஎன
ஆர்வக் கடலின் அகத்துஆழ்ந்து - மேலரிய
எந்நாடும் போற்றும் இலக்குமியைத் தாள்பணிந்து
பொன்னாதி புக்கான் புரிந்து....153

கரும்பு அனையார் பைம்பொன் கவரிபணிமாற
அரும்பு கனைய கொங்கைஅனுங்க - விரும்பும்எழில்
விண்ணரம்பை மாதர் விளரிக்குழல் அமைந்த
பண்ணிசைந்து பாடப் பரிந்து....154

வட்டமதி போலும் வதனத்து அரம்பையர்கள்
நட்டம் இடப்புலவர் ஞாங்கருர - மட்டவிழும்
செந்தா மரைமலர்ந்து திங்கள்முடி மேல்கவிய
வந்தான் எனஓது மால்....155

வங்கம் அசைமேல் மருவுகின்ற காட்சியினில்
வெங்கண்அயி ராபதத்தின் மேல்இவர்ந்து - தங்கி
பெரும்பவனி வந்தஅண்டர் பெம்மானைக் கண்டான்
விரும்புஅவனி யேத்துமுனி வேந்து....156

பேசற்கு அரிய பெருமை யுடன்வரும் அத்
தேசற்குத் தந்தான் திருமகள்தன் - வாசப்பூங்
கோதைதனை ஆய்ந்து கொடியபகை மூன்றான
வாதைதனை வென்றான் மகிழ்ந்து....157

சாலிகைதன் தாதன் தன்னைநிகர்வோன் தான்கொடுத்த
மாலிகையைத் தோட்டியினால் வாங்கினான் - ஆலிகையால்
வன்பழி மேற்கொண்டான் மதிக்குமோ மால்கரிமேல்
இன்புஅழிய விட்டான் இருந்து....158

கண்டான் முனிவன் கருத்துள் மிகச்சினத்தான்
அண்டார் புரமூன் றழித்தான்போல் - தண்டாத
காமத்தீ பற்றக் கலங்கினைநீ காணுதியென்
ஓமத்தீ யென்றான் உருத்து....159

விண்ணும் சுழல வீதி கழல மேருவொடு
மண்ணூம் கழல மதிகழல - எண்ணூம்
சதமகனின் செல்வத் தருக்குஒழிப்பன் என்றான்
கதம்அகத்தின் மூள்தாவக் கால்....160

எவன் அருளால் யாமும்உலகு ஏனையவும் உண்டோ
அவள்அருளால் ஈந்த அணியை - தவளக்கை
மாமீ திருந்துஇற மாப்பான் மறந்தனைகொல்
சாமாறு காணவினித் தான்....161

அன்பன் அடியார் அருவருத்துத் தள்ளியஇவ்
இன்பச் செருக்கால் எமைப்போல்வார் - தம்பெருமை
காணாயோ கண்டும் களிப்படைந்த(து) என்இதுநீ
சேணாயோம் என்றோ திரிந்து....162

சேட்டானை யாய்நின் செழுநிதியு மைந்தருவும்
மோட்டானை யும்தேன் மொழியாரும் - தோட்டு
மடல்புகும்மென் தாராய்கேள் மற்றும் திருப்பால்
கடல்புக என்றான் இக்கணம்....163

கம்பன் கவிப்பெருமை காணாக் கவிவாணர்
தம்பெருமை நீங்கியஅத் தன்மைபோல் - முன்பாரும்
சாபத்தால் யாவும் தரங்கக் கடல்புகுத
ஆபத்தால் எயத்தான் அரி....164

மண்ணில் பெரிய வறுமையராய் வானோர்கள்
நண்ணிக் குறையிரப்ப நம்பெருமான் - விண்நிமிரு
மந்தரம்ஆம் மத்தான் மகரா லயம்கடைமின்
வந்துஅருள்வோம் என்றான் மகிழ்ந்து....165

வாசுகியா நாணின்எடு மந்தரத்தால் வார்கடலை
ஆசுரர்க ளோடும் அரும்புலவர் - வீசுதிரை
வான்கவிப்ப ஆமை வடிவாய்எம் மான்பரப்ப
தான்கடைந்தார் உள்ளம் தழைந்து....166

மாவலைய வாரிமறைந்த நெடும்செல்வம் எலாம்
ஏலமகிழ்வு எய்தி விளங்கினான் - பூவின்
குறைஅறிந்து நீண்ட குடுமிவரை எல்லாம்
இறைஅரிந்த விண்ணோர் இறை....167

ஆமைஅரற்கு ஈந்து அருள்திருவும் ஆரமும்தன்
கோலமணி மார்பில் கொண்டுஅணிந்தான் - ஆலத்
தருவமரர் போற்றத் தடம்புணரி சார்ந்தான்
பருவால்தீர்த்து ஆண்ட பரன்....168

அத்திதியின் மெய்த்திதியாம் ஆரணங்கு காதலனை
இத்திதியில் ஓர்மகவெற்கு ஈய்திஎன - வத்ததியில்
காசிபனு நோக்கிக் கழறினான் காரிகைநீ
ஏதில்தவம் செய்க என....169

எண்ணற்கு அருநாள் இருந்து தவம் இயற்ற
கண்ணில் சிறந்த கடவுளர்கோன் - நண்ணித்
தவத்துஊறுஉற மகவைத் தானேழு கூறுஇட்டான்
உவப்போடு தன்படையால் ஓர்ந்து....170

மாமகவுஅங் கேங்க மருத்துஎனவா னோர்புகழு
நாமம் அளித்தான் நகாரிஎழில் - கோமதலாய்
அவ்விடை ஈதுஎன்றான் அடையார்புரம் எரித்த
வெவ்விடையோன் அன்னமுனி வேந்து....171

கொங்குஉண்டு வண்டுகொழும் பாண் களிமிழற்று
பொங்குந் தருவிப் பொழில்கண்டாய் - துங்கச்
சிரவணத்தோர் போற்றும்அருள் சேய்வளரும் செல்வச்
சரவணமீது என்றான் தவன்....172

என்னும் அளவில் இருள்இரியக் கீழ்த்திசைவாய்த்
துன்னும் கதிரோனும் தோன்றினான் - அன்னபொழுது
ஆண்தகையா ரோடும் அடைந்தான் அரும்தவனும்
காண்தகைய கங்கைக் கரை....173

இன்னதியின் தோற்றம் இருந்தவநீ ஈங்கிசைத்தி
என்னலும்என் ஈசன் இளவண்டு - துன்னி
முருகுஉடைக்கும் தண்தார் முரட்சகரன் என்போன்
ஒருகுடைக்கீழ் ஆண்டான் உலகு....174

இவ்விறைவன் வேட்டார் இருவர் அவர்களில் ஓர்
மௌவற்குழல் விதர்ப்பை மானருள்சேய் - நவ்விவிழி
ஊசற் குழையார் உளம்அருளும் சுந்தரத்தோள்
போசனன்என்று ஏத்தும் புயல்....175

ஏமப்புள் கோவுக்கு இளையகம திப்பெயர்மான்
வாமத்தோள் ஈன்ற வலனுடையோர் - நாமம்உறும்
ஆறுபதி னாயிரவர் என்றுஆய்ந்து உரைப்பார்
தேறுணர்வின் மிக்கோர் தெரிந்து....176

வஞ்சம்அறும் விதர்ப்பை மானுயிர்த்த மாமகன்சேய்
அஞ்சுமான் இன்னோர் அரும்திறல்கண்டு - எஞ்சல்இலா
வண்ணப் புரவி மகம்புரிந்தான் வார்கடல்சூழ்
மண்ணுலகம் காத்தான் மகிழ்ந்து....177

தெய்வப் புரவிதனைச் சேண்நாட்டகம் புரப்போன்
வவ்விக் கொடுபோய் மறைத்தனனால் - மௌவல்
கரும்குழலார் காமக் கடல்கடந்த காட்சி
இருங்கபிலன்தன் மாட்டு எழுந்து....178

மகத்துக்கு உரியநெடு வாம்புரவி நாடி
சகத்திறைவன் தந்த தனையர் - அகப்பரிவோடு
ஏழுஉலகம்ஏத்த இருநிலம் தொட்டு ஏய்எனுமுன்
கீழ்உலகம் புக்கர் கிளர்த்து....179

கண்ணார் தவம்செய் கபிலன்மாட் டேஇருந்த
பண்ணார் மகப்புரவி பார்த்துவெகுண்டு - எண்ணாரின்
மாறுபட வைது மடிந்தார் முனிமுனிவால்
நீறுபட வுடலம் நேர்ந்து.---180

தூதுமுகம் கேட்டுத் தொடுகழலானுள் வருந்தி
யாதுபுரிவது எனமகஞ் செய் - மாதர்உறு
நன்முகமே நோக்கினான் நாகம் சிறகுஅரிந்த
மின்முகவேல் காளையன்ன வேந்து....181

ஆடல்படையாறு அயுதரு நீறு ஆயினர்பின்
கோடல் கிழங்கில் குலவுவேன் - நாடு
மகம்புரிதல் எவ்வாறு மைந்த எனச்சென்றான்
அகம்புரிந்து பாதலத்தின் ஆய்ந்து....182

உற்றான் இறைஞ்சி உற்றன ஆங்(கு)ஓதுதலும்
கற்றார் புகழும் கனதவத்தோன் - பொற்றோளாய்
மற்றுனது வேள்வியை மாக்கொடுபோ என்றுஉரைத்தான்
உற்றனகள் கூறி யுவந்து....183

வன்சடிலம் ஏவ மகமுடித்து மன்னவர்க்கு
மன்சடிதி வான்தலத்து மன்னினான் - பொன்தருவோர்
அஞ்சுமா னும்பொருவும் அங்கையினின்று ஆன்றமதி
அஞ்சுமானுக்கு இப்பூ அளித்து....184

அக்குலத்து வந்தான் அடையார் அடிவணங்கு
எக்குலத்து மன்னருநேர் இன்றுஆக - மைக்கவுள்கார்ப்
பூட்கைப் பொருகரியே போல்வான் பொருமுனைவேல்
வாட்கைப் பகிரதனா மன்....185

அன்னோன் சகரர் அடலையராய் ஆனமைதேர்ந்(து)
இன்னா முனிவற்கு எடுத்துஉரைப்பப் - பொன்னார்
தவம்செய்த தாமரைவாழ் நாயகனைப் போற்றித்
தவம்செய்க என்றான் அவன்....186

என்றான் உரையால் இமகிரித்தண் சாரல்இடை
அன்றுஓர் பதினாயிரம் ஆண்டு - நின்று
தவம்புரிய வந்தான் சகமுழுதும் தந்த
நவம்புரியும் பங்கயத்தோன் நன்கு....187

மன்னா சகரா மடிந்தார்ஓர் மாமுனிவன்
தன்னால் அவர்உடலச் சாம்பர்இடைப் - பொன்னாம்
வரநதிவந்து எய்தில் மருவுவர்வான் என்றான்
சரசமலர் மீதுஉறைவோன் தான்....188

வான்நின்று இவண்அவ் வரமாநதி வருமேல்
தான்நின்று அதனைத் தரிப்பாரார் - மானப்
பிறையிடத்த வேணிப் பெருமானை அன்றித்
தறையிடத்துஎன் றான்சலசத் தான்....189

வெள்ளை அரவுஅணிந்த வித்தகனை எண்ணிமனத்து
அள்ளல் பழனத்து அணிநாடன் - வள்ளல்
அரும்தவமுன் ஆண்டங் கரிதியற்ற வந்தான்
கரும்தடம்கண் ணாள்ஒருபங் கன்....190

காவலநின் உள்ளக் கருத்து முடிக்கும்எனப்
பூஅலரும் வெள்ளிப் பொறைபுகுந்தான் - ஓவலறப்
பொய்யா வரநதியைப் போற்றித் தவம் புரிந்தான்
ஐயாயிரம் வருடம் ஆங்கு....191

மாதுஉருவாய்க் கங்கை மகிழ்ந்துதவம் யாதுஎன்னக்
காதல்உற நடந்த காரியங்கள் - ஓதுதலும்
பித்தன்உரை மெய்யோ பெரும்அற்புதம் அறிவான்
மெய்த்தவம்செய் என்றாள் விரைந்து....192

பொய்அகலு ஞானப் புரவலர்கோன் பின்னுமவண்
ஐயரைஆண்டு ஆயிரம்அங் காற்றுதலும் - செய்யதவம்
வந்தான் எதிர்ந்துன்மனம் யாதுஎன வினவ
கொந்தார் குழலிஉமை கோன்....193

பொன்அவிருங் கொன்றைப் புரிசடையாய் கங்கைஎதிர்
துன்னிஇவை சொற்றால் எனத்தூயோன் - அன்னதியை
மன்னா சிறிது மடியாவகை புரத்தும்
என்னா வுரைத்தான் இனிது....194

அன்னபடி முன்னுரைத்த ஆண்டுதவம் புரிந்தான்
சென்னெல் விளையும் திருநாடன் - மன்னரிய
ஆரவாரத்தினொடும் ஆகாச நின்று இழிந்தான்
தீரவா ரத்தீர்த் திகை....195

பூவிலளி நீர்கால் பொடியுண்டு இவைஒழித்து
மூவயுத ஆண்டு முயன்றவனாய்த் - தாவில்
அருந்தவம்செய் தான்இவன் நிலை யாஎவர்வான்
தரும்தவம்செய் தார்இத் தரை....196

புற்பனியில் ஐயன் பொறுத்தான் புரிசடைவாய்
வெற்புஅனைய தோளாய் விடஅணுகி - அற்புதம்சேர்
சன்னுமுனி வேள்வி தனைஅழிப்பத் தான்நுகர்ந்தான்
முன்னல்வாய் கையான் முகத்து....197

புவிவேந்தன் சென்று புகழ்ந்திறைஞ்சிப் போற்றச்
செவிவாய் விடுத்தான்அத் தெண்ணீர் - சவிஆர்ந்து
மன்னுபுலன் ஐந்துஅடக்கும் மாதவத்தோன் தீதுஅகற்றும்
சன்னுமுனி என்னும் தகை....198

வான்ஆர்ந்த தெய்வ வரமா நதிமுனிவர்
கோன்ஆம் கபிலன் கொடும்சினத்தால் - மேனாளின்
மாய்த்தார் உடல்பொடியில் மன்னுதலும் வான்அடைந்தார்
வேய்த்தான் புகழ்மாலை வேந்து....199

மண்உலகில் கங்கை வரமா தவம்முயன்ற
வண்ணக் கவிகை மணிமுடியான் - எண்ணரிய
மன்னர் புகழ்ந்துஇறைஞ்ச வந்தான் மலர்ப்பொழில்சூழ்
நன்னர் அயோத்தி நகர்....200

பொன்உலகில் நின்று புவியில் கொணர்ந்தமையால்
மன்னன் பெயரும் வரமுனிவன் - தன்னொளிர்காது
உற்றமையால் அன்னோன் உயர்பெயரும் பெற்றுவந்தாள்
நற்றவம் சேர்கங்கா நதி....201

என்றான் உரையால் இறும்பூது உளன்அமையச்
சென்றார் விசாலைத் திருவாளன் - நின்றான்
அடிஇறைஞ்ச நல்லுரைகள் ஆங்குஉரைத்துச் சென்றார்
படிஇறைஞ்ச நின்றார் பரிந்து....202

செங்குமுதம் வாய்மலர்ந்து தேன்பொழிய உண்டுமகிழ்ந்(து)
அங்குவரால் பாயும் அணிநாடன் - துங்கமுடி
மன்ன ரிறைஞ்சும் வளர்புகழ்சேர் மாச்சனகன்
நன்னகரம் சென்றார் நடந்து....203

மிதிலைச் சிறப்பு

வண்ணக் குவளை மலர்விரிய வண்டுஊதும்
பண்ணில் சிறந்த பனிமொழியார் - கண்ணில்
தளங்கெழுமும் கஞ்சமலர்த் தண்தேறல் பாய்ந்து
வளம்கெழுமு மாநீர் வயல்....204

வாளை குதிப்ப வரால்உகள வன்கமுகப்
பாளை விரியும் பசும்தேறல் - நீள்அமுதக்
கும்பமேயன்ன இறால் கூண்டுஒழுகும் தேன்பாய
வம்புலவு மாநீர் வயல்....205

மயில்ஆட அன்னம் மகிழ்ந்துஒதுங்க மாவில்
குயில்பாட அஞ்சுகம் கூவ - இயலிசையில்
கோபாலர் பாடும் குழல்போல் அளிஅறுகால்
பூபாளம் பாடும் பொழில்....206

இன்னதிருநாட்டு இடைவருங்கால் எங்கள் பிறான்
பொன்னம் கழல்கால் பொடிகதுவ - முன்னர்உறும்
கல்உருவம் மாறிஒரு கன்னிகையாய் ஆங்குநின்றாள்
செல்உருவ மின்போல் திகழ்ந்து....207

நின்றஅவளை நோக்கி நெடும்தவன்மற்று ஈங்குஇவளை
அன்றுஅமரர் கோமான் அணைதலினால் - கன்றிச்
சிலைஉருவாய் வீழ்கஎனச் செப்பினான் செல்வக்
கலைஉருவாய் நின்றான் கறுத்து....208

மற்புவிஏறு அன்ன வயிரப் படைவேந்தன்
இற்புவிஆய் ஆங்குஒருபால் ஏகினான் - அற்பவினை
கண்டான் உருத்தான் கடித்தான் ஒருசாபம்
விண்டான் முனிவன் வெறுத்து....209

எண்குறி இல்லாதாய் இனியுடலில் ஆயிரமாம்
பெண்குறி வந்துஎய்தும் எனப்பேதமையோன் - விண்குறியா
வந்தான்மந் தார மருமலர்த்தார் வானவர்கோன்
சந்தாபத் தோடும் தளர்ந்து....210

விண்ணவர்கள் வேந்தன் விகற்ப உருக் கண்டுஅயர்ந்து
மண்ணதனின் மாதவன்பால் வந்துஇரப்ப - எண்ணரிய
கண்ணாக அக்குறிகள் காண்போர்க்கு எனஉரைத்தான்
தண்ணார் கடும்தவத்தோன் தான்....211

என்னா உரைப்ப இரும்தவத்தோன் எங்கள்பிரான்
அன்னாளை நோக்கி அடிபணிந்து - பொன்ஆர்ந்த
பூங்குழலாய் சேறி புனிதன்உழை என்றுஉரைப்ப
நீங்கினாள் சென்றார் நெறி....212

மாதவனு நீதிநெறி மைந்தமைந்த மைந்தர்களும்
கோதமன்வாழ் சாலை குறுகுதலும் - ஆதரவாய்
வந்துஎதிர்த்து பூசை வரன்முறையால் ஆற்றினான்
இந்தெதிர்த்த வேலை என....213

கோசிகன்அம் மாமுனிவன் கோகனமா முகம்பார்த்(து)
ஏசிலா இந்த இராமன்அடித் - தூசியினால்
மாசுஇலாள் பண்டை வடிவுஆனாள் என்றுஉரைத்தான்
காசுஇலா மெய்த்தவத்தோன் கண்டு....214

கோதமனாம் மாதவன்பால் கொண்டுவிடை பெற்றுஅகன்றார்
வேதமனார் மூவர் விரைந்துஎய்திச் - சீதமணிச்
சோதிவாய் மாடம் துலங்கு மணிமிதிலை
வீதிவாய் வந்தார் விழைந்து....215

மட்டுவளரு மலர் அணியார் மாடமிசைக்
கட்டும் கதலிக் கழைக்காடு - முட்டுமதிப்
பூஞ்சாரல் வண்ணப் பொருப்பில் கதலியினந்
தாஞ்சாரம் போலும் தகைத்து....216

வண்ணப் பனையுறலால் வான்மணியை மேவுதலால்
திண்ணக் கரிமருப்புச் சேர்தலினால் - மண்ணில்
பெரும் காவணங்கள் பிறங்கவால் என்றும்
அரும்கா வணநேர் மலை....217

பல்உருவாய் வல்லரக்கன் பாரவலிக்கு அஞ்சிமலர்
வல்லிபானின்று மணிக் கயிலை - புல்லும்
பழியுரைப்பான் வந்துநின்ற பண்போலத் தோன்றும்
எழில்நிரைக்கும் மாடத்து இலம்....218

வாசப் பொதிய வரைக்கொழுந்துக் கான்மருவிப்
பூசிப் பொலிந்த புதுவீதி - தேசப்
பணியிழையார் ஊடிப் பறித்துஎதிர்ந்த காமர்
அணியிழைமா றாத விருமாங்கு....219

வான்மருவும் கன்னிகா மாடத்து இடைவதியும்
தேன்மருவும் செம்சொல் திருமயிலைக் - கான்மருவும்
கண்ணித்தார் வேய்ந்த கருங்குழலைக் கண்டுநின்றான்
மண்ணில்தார் வேந்தன் மகன்....220

பூமயில்போல் முன்னம் பொலியும்மடப் பூம்கிளியை
காமர் திருவிழிக்கண் கண்டுஅறிந்தான் - ஏமம் உற
ஆங்குறுவாள் தேனோ அமிர்தோ எனநினைத்தான்
வாங்குசிலை ஓங்குபுய மால்....221

பேரழகும் பண்பும் பெரிதுஉடையாள் பூங்கமலத்து
ஆரணங்கோ வானத்து அரம்பையோ - வீரச்
சனகர்தவத் தால்உதித்த தையலோ என்றான்
கனகமலைத் தோள் அமலன் கண்டு....222

பொன்னங் கமலப் பொருட்டகத்து வீற்றிருக்கை
மன்னும்மயன் மாயாத மாதவத்தால் - கன்னியரை
முன்படைத்துத் தேர்ந்துஇம் முதுநிலத்து இம்மங்கையரைப்
பின்படைத்தான் கொல்லோ பிரித்து....223

இன்னவிதம் எண்ணி எமைஆளும் எம்பெருமான்
பொன்ஒளியாய் நின்ற புனமயிலை - மன்னவர்கோன்
நோக்கினான் ஆங்கவள் நோக்கினாள் உள்ளமும்ஒன்று
ஆக்கினார் பண்டைவிதி யால்....224

எண்வழியே நின்ற இருவோரும் இன்பநலம்
கண்வழியே உண்டு களிப்படைந்தார் - மண்ணில்
பெருந்தவத்தால் எய்துநலம் பெற்றால் உண்ணாமல்
வருந்துவரோ தம்மை மறந்து....225

வானோ கடலோ மரகதமோ மைக்குவளைக்
கானோ கருநீலக் காயாவோ - தேனோ
கருவிழியின் உள்மணியில் கண்டசிலை வீரன்
திருவடிவம் என்பாள் தெருண்டு....226

குஞ்சி அழகும் கொடுங்கலையின் நாணழகு
மஞ்சு அணியும் மார்பின் வரைஅழகும் - கஞ்சத்
திருவடியும் கண்டால் செகமுழுதும் காக்கும்
கருணைவடிவு ஆகும்இவன் காண். ...227

அருள்ஒழுகு கண்ணும் அமுதுஒழுகு வாயும்
இருள்ஒழுகு மேனி எழிலும் - தெருள்ஒழுகு
நன்முகமும் காணஇனி நண்ணூமோ நல்லநாள்
இன்முகமுன் காண இனி....228

நடிஅழகும் கோதண்ட நாண்அழகும் காமர்
உடைஅழகும் கண்டால் உருகிக் - கடையும்
திரண்டமணிச் செப்புஅனைய திண்முலையார் என்போல்
விரகம் கொள்ளாரோ மெலிந்து....229

மாதர்க்குப் பேதை மனம்என்னப் பாவலர்கள்
ஓதற்குச் சீற்றம் உறுவதுஎன்னோ - சீதக்
கருமுகில்ஒப் பான்அவனைக் கண்வழியே கொண்டு
ஒருவவிட்டுப் பேதுஉறல்என் ஓது....230

என்றுஇவ்வாறு உன்னி இரங்குறும்அக் கோங்குமுலை
மன்றற் குழல்பவள வாய்மயிலைத் - துன்றளி
ஆர்த்தினியபாட லறையுமலர்ப் பூவணைமேல்
சேர்த்தனர்கள் சேடியர்கள் சேர்ந்து....231

பாயல் விரித்த பனிமலரும் பல்லவமும்
தீயவை மேலும் செறியவே - ஆயிரத்தின்
ஐம்பான் இரட்டி அடுக்கினா ராய்வளையார்
என்பார் அருகில் இருந்து....232

மாதுதுயர்உழப்ப வான்மணியும் சென்று அடைந்தான்
மோது திரைக்குடபால் முந்தவே - ஆதிப்
புவிஅமரர் கையும் புனைகமலக் காடும்
குவிதர நீராடுங் குளம்....233

பாடுவார் ஆடுறுகம் பத்துஉறச் செவ்வான்என்னும்
சேடுறுவான் பங்கி செறிந்தவிர - நீடும்
இராவணமும் சேர எதிர்ந்ததே அந்தி
இராவணனார் என்ன இயைந்து....234

அன்றில் துணைஇழப்ப ஆவினங்கள் ஊர்புகுத
கன்றுமுளக் கூகைஇனம் காதலிப்ப - அன்று
கருவா யிரவிற் கதழ்ந்ததே மாயப்
பெருவாய் இருள்எனும்அப் பேய்....235

வன்பொதிய நின்று வளர்மீன் பொறிமருவி
தண்பொழில் கடாவிச் சரித்ததே - உண்கண்
ஒருகால் அனையார் உயிர்கவர்வான் ஆடிப்
பொருகால்என்று ஓதும் புவி....236

வாசமலர் தழுவி வாரி முரசு ஒலிப்ப
மாசில் உருவ மறைந்துஎதிர்ந்து - வாசிச்
சுகமகர கேதனனிற் தோன்றியது தென்பால்
சிகரநகர்ந்து ஊறியகால் தீ....237

மன்னவர்கள் மன்னன் வளர்வெண் கவிகையினில்
அன்னநடைச் சானகிதன் ஆதனத்தில் - துன்னும்
இருள்இரிய வான்மீன் எழுந்துஇலங்கத் தோய்ந்தார்
மருள்இரியக் கீழ்பால் மதி....238

பெண்ணோடு னக்குப் பெரும்பகையோ பேர்உலகில்
நண்ணாத் துயரால் நலிவேனோ - கண்ணாகி
எவ்வுயிரும் காப்பான் எனப்பகர்வது உன்னைஅன்றோ
அவ்உயிரில் யான்அயலோ ஆய்....239

அங்கம் குறைவாய் அகக்களங்க மேவுவாய்
சங்கம் படஉடலும் தான்விளர்ப்பாய் - பொங்கும்
கலைஅழிவாய் என்போல் கலங்கினையோ கங்குல்
நிலைஅழியா வான்மதியே நீ....240

தேயா இளமதியே தென்றல் சிறுபுலியே
ஓயாக் கடலே உருவிலியே - மாயாத
அன்றிலே குன்றா வளியிருளே வாட்டுதிரோ
இன்றுஇடர் நீங்கா எனை....241

என்றுஇடர்வாய் உற்றாள் இனிஉரைப்பாம் ஈங்குஇவள்தன்
மன்றல் கமல மதிமுகமும் - குன்றுஅனைய
மாமுலையும் கண்டு மனமருளும் ஆண்அழகன்
தேமருதார்த் தோளான் செயல்....242

மன்னன் எதிர்கொண்டு வரைபுரையு மாடத்தே
நன்னர் உறஇருக்கை நல்கினான் - மன்னரிய
மாமுனியும் வில்லேற்று மைந்தர்களும் ஆங்குஉறைந்தார்
ஏமுறுமால் அன்போடு இயைந்து....243

இவ்வாறு இருப்ப எழுகடல்சூழ் வையகத்தோர்
வெவ்வாய் இடுக்கண் வினைதீர்ப்போன் - கொய்வாசப்
பூத்தாள் மலர்போல் பொலிந்தான் அருள்குமரன்
போந்தான் கதிர்போல் பொலிந்து....244

எண்ணும் கலையும் இயன்மறையும் தேர்ந்தமுனி
ந்ண்ணூதலும் நீலமலை நாணவே - தண்ணென்மலர்ப்
பாதம் பரவிப் பணித்தானுக்கு ஆசிசொற்றான்
கோதமன்சேய் நற்கருணை கொண்டு....245

அண்ணல் பெரியீர் இவண்அடைதற் காம்தவங்கள்
பண்ணியதுஎன்னோ கடல்சூழ் பாரிடமென்று - எண்ணிப்
பகர்ந்தானை நோக்கிப் பரிவோடு உரைத்தான்
செகம்தேர் புகழ்க்கோசி கன்....246

இடிக்குரல் வெம்தாடகை தன்ஏமாப்பு நும்மோய்
படித்தலம்சேர் கல்உருவும் பாற - முடித்துஎனது
சத்திரமும் காத்தான்இத் தார்அணிதோள் வீரன்என்றான்
முத்திரமும் தேர்ந்த முனி....247

பானல் கரும்கணியார் பற்றுடன்இப் பாரகம்ஓர்
கானல் சலமாய்க் கருதியே - மானத்து
அரும்தவம்செய் தோய்நின் அருள்அடைந்தார்க்கு என்னோ
திருந்திடாது என்றான் தெரிந்து....248

கஞ்ச மலர்ந்த கருமுகில்ஒப் பாய்கடவுள்
தஞ்சமுனி இவ்விருந்த தாபதன்தன் - விஞ்சும்
உதாரம் பெருகும் உயர்புகழ்கேள் என்றான்
சதானந்தன் என்னும் தவன்....249

தேன்வேட்டுறு தெரியல் நிண்தோளாய் செப்புதும்கேள்
மான்வேட்டை யாடி வனத்துஒருநாள் - தான்வேட்டு
மாமலரோன் பெற்ற வரமுனிபால் உற்றனன்இக்
கோமுனிவன் தாகவிடாய் கொண்டு....250

கண்டான் நயனம் களிப்புஉறக்கங் காதரன்நேர்
கொண்டான் சுரபிதனைக் கூய்இதனை - விண்டான்
பருந்துஅளிக்கும் வேலான் படைக் குழுவுக்குஎல்லாம்
விருந்துஅளித்தி என்ன விரைந்து....251

சொன்னவாறு ஆங்குச் சுரபியும்தே வாஅமிர்தம்
என்ன அமுதுஅளித்த என்பவே - பொன்னம்
தொடைஅரசன் வண்மைச் சுயஅரசன் திங்கட்
குடைஅரசன் அன்பு கொள....252

பெட்டுச் சுரபி பிணித்துஇவண் கொண்டேகுழியின்
முட்டிக் கொடியமுரண் மருப்பால் - வட்டக்
குடைஅரசன் தானை குறைத்ததுவே கொன்று
நடைபுரிந்து நல்லா நனி....253

தஞ்சமுனி வஞ்சம்எனத் தார்வேந்தன் தன்புதல்வர்
வெம்சினம் கொண்டுஏற்று விளிந்தார்கள் - நெஞ்சம்
வழிஒழுகும் தூய மலரோன் தருசெய்
விழிஒழுகும் தீயால் விரைந்து....254

தன்மகார் நூற்றுவர்கள் தான்மடிந்த தன்மைதெரிந்(து)
இம்முனியும் ஏற்றான் இருந்தவனோடு - அம்முனியும்
தண்டம்எதிர் ஊன்றச் சரம்எவையுந்தப் பாதுஅங்(கு)
உண்டதுவே அம்மா வுருத்து....255

மாமுனிவர்க்கு அல்லால் மகிமை எவர்க்குஎன்றுமதிக்
கோமுனியும் உள்உறுதி கொண்டிருந்து - நாமம்
பரவுதலும் வீரப்படை ஒன்று தந்தான்
அரவு அணியும் சோதி அரன்....256

அப்படையை விட்டான் அனைத்து உலகும் கம்பமுற
இப்பொழுதே மாய்ப்பன் எனவேந்தி - ஒப்பில்
அருந்ததியாள் கேள்வன் அருந்தினான் கண்டாய்
மருந்துஎனவே வாங்கி மகிழ்ந்து....257

இத்தவனோடு ஒப்ப இவண்உறுவேன் எம்மனோர்
பொய்த்தலைய வாழ்வில் பொருந்தேன்என்று - ஒத்தமையைச்
சென்றான் உதய திசைவாய்த் தவம்புரிந்தான்
வென்றான் புலனை வெறுத்து....258

உற்றான் உணர்ந்தான் உறுதவத்தை உம்பர்பிரான்
தெற்றாமை வேற்கண்தி லோத்தமையை - முற்றாமண்
போக்கினான் ஆங்கு புகுந்தாள் புணர்விழியால்
தாக்கினாள் கண்டான் தளர்ந்து....259

இக்கனைய சொல்லும் இருந்தனமுங் கூர்விழியும்
மைக்குழலும் சாபமன்ன வாணுதலும் - பொற்கழலும்
கண்டான் அணைந்தான் களித்தான் கனிஇதழ்த்தேன்
உண்டான் உவந்தான் உளம்....260

விண்மகிபன் செய்த வினைஎன்று அறிந்தஅரசன்
மண்மகள் நீயாதிஎன வகுத்தான் - எண்மரினும்
வல்லான் மறலி வளம்சேர்திசை அடைந்தான்
வில்லாய் இம்மாதவத்துஓர் வேந்து. ...261

அத்திசைவாய் நண்ணி அரும்தவம்செய் ஓரைவாய்
கத்துதிரை சூழ்அவனி காக்குமடல் - சத்திரத்தான்
தென்கதிர் வேல்கோமான் திரிசங்கு எனும்அரசன்
நின்குலத்தான் அன்னாள் நினைந்து. ...262

தன்குலத்துத் தேசிகனார்தாள் இணைகள் தாழ்ந்துஇறைஞ்சி
என் குலத்து மேலோய் இருந்தனுவோடு - அன்புறயான்
வான் உலகமேவ மகமுடித்தி என்றுஉரைத்தான்
ஊன்ஒழுகும் வேலான் உணர்ந்து. ...263

வேந்தஇனி ஆண்டிறந்து மேவுகஎன மீட்டுமுனி
ஏந்தல் அவற்போற்றி இடர்நீங்க - மாண்டகையார்
மற்றொருவர் தம்மால்அம் மாமகத்தை அன்பினொடு
முற்றுவேன் என்றான் முயன்று....264

நவமதியோய் வேற்றுஒருவர் நாடிஎனை எண்ணா(து)
அவமதி நீ செய்தாய் அறவே - தவமறுநீ
நீசனா யாதிஎன நின்றான் நெடுமலர்மேல்
வாசனா மேலோன் மகன்....265

கண்டார் இகழக் கழங்கால் அக்காவலனும்
அண்டா நெடும்புலையன் ஆகியே - தண்டார்
வனத்துறைஇத் தாபதன்முன் வந்தான் வடிவான
அனைத்துஅழியும் தேசுடையன் ஆய்....266

ஆரைநீ என்ன அரும்தவனும் ஆங்குஅமைந்த
நீர்எலாம் நின்று நிகழ்த்தவே - கார்உலாம்
வான்அளிப்பன் அஞ்சேல் மகமுடித்தும் மாழ்கல்எனத்
தான்உரைத்து நின்றான் தவன்....267

தவம் உடையாரும் தபோநிதியை ஈண்டுஅச்
சிவம்உடைய சாலி அருள்சேயர் - அவம்அழியாப்
பெற்றிபெறும் இப்புலையன் பேர்உறுமா வேள்விசெயக்
கற்றிலம்யாம் என்றார் கனன்று....268

வன்கிராதர் ஆவிஎன மற்றுஅவர்க்குச் சாபம்இட்டான்
அன்புறுவார் தம்மோடு அரும்தவனும் - துன்பமற
வேள்வி முடித்தான் விளித்தான் இராசனரை
கேள்வி வடித்தான் கிளர்ந்து....269

ஈனப் புலையற்கு இடுமகம்யாம் ஏற்கிலம்என்று
ஆன்அத் தருவுரையோர் ஆங்குஉரைப்ப - மோன
குருமுனியும் வெம்சினமீக் கொண்டான் விமானம்
வருகஎன வந்ததுவே வான்....270

ஏறுகநீ என்னலுமன் ஏறிவான் ஏகிடலும்
சீறிநெடு வானோர்கள் சிந்தைஅறம் - மாறிக்
கடிதரலு மானம் கவிழ்ந்ததே அந்தோ
படிதலைகீழ் என்னும் படி....271

மன்னா உனக்குஅபைய மற்றுயான் என்றுஉரைப்ப
உள்ளேன் மறுக்கம் உறேல்என்னத் - தள்ளாக்
கடும்கோபம் உற்றான் கதழ்எரி கண்கால
அடும்காலன் என்ன அதிர்ந்து....272

இக்கடலும் இக்கிரியும் இப்பொருளும் இச்சுரரும்
இக்கதிரும் இப்புவியும் எக்கலையும் - இக்கணமே
மாறாய் அமைப்பன்என மால்வடவை போல்அழன்றான்
வீறாய் அரும்தவம்செய் வேந்து....273

செந்தா மரைவாழ் திசைமுகனை ஆதியுளோர்
வந்தார் மகம்புரியு மாதவன்பால் - நந்தா
முறைதிறம்பல் செல்லா முழுத்தவனே முன்னை
மறைதிறம்பல் என்றுஉரைத்தார் வந்து....274

மன்இருடி நீயே அரும்தவத்தோய் தென்பால்வந்(து)
உன்னரிய வைந்து நாள்ஓங்கிடுக - என்னவே
ஆங்குஉரைத்துச் சென்றார் அயனாதி அண்டர்எல்லாம்
வாங்குசிலைச் சேவகனே வான்....275

எண்தவத்தால் அய்யாஅவ் ஏந்தலுநீள் வான்இடைநாண்
மண்டலத்தி லானான்இம் மாமுனியும் - பண்டைப்
பொருள்நலங்கள் தேர்ந்தோர் புகழ்தருமாறு உற்றான்
வருணன் திசைவாய் மகிழ்ந்து....276

வம்பர்இடம் இல்லா வரிசிலைக்கை மன்னவர்கோன்
அம்பரிடன் ஆண்மை அரிஅனையான் - வெம்புருட
மாமகம்செய் வான்அடைந்தோர் மைந்தனைக்கொள் வான்புகுந்தான்
கோமகனே ஒள்நிதியம் கொண்டு....277

இருசிகன்மாடு எய்தி இருநிதியம் நல்கித்
தருமகனை ஏற்றித் தனித்தேர் - வரும்அமையம்
பச்சிளமான் தேர்வாய்ப் படர்பரிதி வானவனும்
உச்சிநிலை உற்றான் ஒளிர்ந்து....278

தேர்இழிந்து வேந்தன் செயும்நியமம் ஆற்றுழியில்
சீர்அமைந்த சேயும் செபநியம - நீர்அமைந்தங்(கு)
ஆற்றுவான் சென்றுஅங்கு அரும்தவனைக் கண்டுஇறைஞ்சிச்
சாற்றினான் எல்லாம் தளர்ந்து....279

தத்துறன்நீ என்னத் தவத்தோன்றல் தாமமுறும்
புத்திரரை நோக்கிப் புரவலனொடு - ஒத்தமையைச்
சென்மினோ என்னச் செயிர்த்தாரைத் தீஒழுக
முன்மொழிந்தான் சாப முனிந்து....280

வன்புளிஞர் ஆவிர்என மாறாக் கடும்சாபம்
முன்பகர்ந்து சேயோன் முகநோக்கி - அன்புறநீ
இம்மறையை ஓதுக என்றிசைத்தான் இன்பம்உற
எம்மறையும் தேர்ந்தான் இவன்....281

அம்மான் இசைத்த அருமறையை ஆங்குஓத
மெய்ம்மாண் புலவோர் விரைந்துஅணுகிச் - செம்மால்
அகம்சிறந்த மாமகனுக்(கு) ஆங்குஅருளி வேந்தன்
மகம்புரந்து சென்றார் மகிழ்ந்து....282

மாதவன்பின் வள்ளால் வடதிசையை நண்ணிஅவண்
ஓதுஅரிய யோகம் உஞற்றுதலு - நீதி
பொழிந்தஉலகு எங்கும் புகைப்படலம் மூடப்
புழுங்கியது கண்டாய் புலர்ந்து....283

வான்நாடும் மண்ணின் வளநாடும் வல்உரகர்
கோன்நாடும் அஞ்சிக் குலையவே - மாநாடும்
பைந்துழாய் ஆதிப் பரம்பரனை ஆதியுளோர்
முந்தினர்கள் மாதவத்தோன் முன்....284

அரும்தவத்தோய் அந்தணன்நீ ஆதிஎன ஆங்கு
வரம்கொடுத்துச் சென்றார்கண் மைந்த - பொருந்தியஇக்
கோசிகனின் காதையினை கூறினான் இ?தென்று
ஏசில்சதா னந்தன் எடுத்து....285

ஆனந்தம் ஆகி அருள்ஆழி அண்ணலும்தன்
தானம் தவம்உறும்அத் தம்பியும்போய் - வானம்
படிமாடம் எய்தி பனிமலர்ப் பூம்பள்ளி
இடையே துயின்றார் இனிது....286

வாசக் குழலும் மதிமுகம் வார்குழையாள்
நாசிக் குமிழும் நகைஅழகும் - தேசக்
கணைவிழியும் நெஞ்சில் கருதினான் காமர்
அணையின்மிசை மாயோன் அயர்ந்து....287

வாராய் இளமயிலே வந்துஎன் பெருங்கவலை
தீராய் முகமும் செழும்குழையும் - காரார்
கருங்குழலும் செல்வக் கனதனமும் காமர்
மருங்குலும் யான்காண மகிழ்ந்து....288

சேல்அயரும் கண்ணாள் திருஅழகின் உள்உடைந்து
மால்அயரும் வேலைஇடை வந்துஉதித்தான் - ஆவிஇடைப்
பங்கயம் வாய்விரியப் பல்லியங்கள் ஆர்த்துஒலிப்ப
வெம்கதிரோன் கீழ்த்திசையின் மேல்....289

மெய்முனிமுன் பொய்போல் விரிஇருள்வெய் யோற்(கு)ஒதுங்க
உய்மொழியார்ச் சார்ந்த உணர்விலிதன் - மைமனத்தின்
உள்ளம்போல் வெள்என்று ஒளிர்ந்ததே ஆங்குஉவரிப்
பள்ளநீர் சூழ்தரும்இப் பார்....290

கற்புஅழியாச் சிந்தைக் கணைவிழியார் காதலர்க்கண்டு
அற்பமையும் சிந்தை அதுபோலும் - வெற்பின்
விறைஅரிந்த வச்சிரக்கை இந்திரனைப் போலும்
நிறைகமலக் காடுஅலர்ந்த நீர்....291

பன்னுமலர்ப் பாயல் பள்ளித் துயில்உணர்ந்து
முன்னும் நியமம் முடித்ததற்பின் - கன்னல்
சிலைதாங்கும் வேள்அனையார் சென்றுஇறைஞ்சி நின்றார்
கலைதாங்கு மாதவனைக் கண்டு....292

மன்னன் சனகன் மகம் புரியும் சாலைஇடை
அன்னவர்கள் மூவரு அணுகுதலும் - முன்எதிர்ந்து
போற்றினான் உள்ளம் புரிந்தான்மற்று ஆங்கவரும்
வீற்றுஇருந்தார் ஆசனத்தின் மேல்....293

தண்தார்ச் சனகன் தவத்தான் தனைநோக்கி
கண்டார்கள் காதல் கடன்மூழ்கும் - பண்டார்ந்த
வேள்அனையார் யாவர் விளம்புகநீ என்னமழைக்
கோள்அனையான் சொற்றான் குறித்து....294

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.6. தனு இறுத்த படலம்
விண்ணவர்க்காய் வல்அசுரர் வெங்கட்டகம் எரித்த
அண்ணல் தயரதன்சேய் ஆம்இவர்கள் - எண்ணரும்நின்
பொற்சிலயும் காணுறுமா போந்தனர்கள் என்றுஉரைத்தான்
கற்சிலையான் அன்ன முனிகண்டு....295

மன்னாபுகழ் உருவாம் வைவச்சுத மனுவாம்
அன்னான்தனை யார் அறியார்கள் - முன்நாளில்
விண் சுரந்ததேவர் வியப்புஉறுமாறு எவ்வளமும்
மண்சுரந்தோன் இக்குலத்தோர் மன்....296

கான்அரங்கும் தாராய் இக்காசினியோர் தாம்வாழ
வான்அரங்கம் தந்துஅளித்த மன்னவனும் - தான்விடையாய்
இந்திரன் முன்தாங்க எதிர்த்தானும் எண்ணலரை
இந்தமரபு உற்றவர்என்று எண்....297

அந்தரத் தோர்க்கு ஆர்அமிர்தம் ஆழிகடைந்துஈந்தானும்
இந்தநெடும் குலத்துஓர் ஏந்தல்காண் - முந்தப்
புலிப்போத்தும் புல்வாயும் போர்இன்றி வாழ
வலித்தானும் இக்குலத்தோர் மன்...298

வானவர்க்காய்த் தானவரை மாய்த்தாலும் எண்புறவுக்(கு)
ஊன்அறுத்துத் தந்த உரவோனும் - ஆதிநிமித்தம்
சீகரம்கொள் வாரிஎனத் தின்புவியைத் தொட்டநெடும்
சாகரரும் இக்குலத்தோர் தாம்....299

என்னதியின் நாமம்நினைந்து ஏத்தும்யாம் எப்பொழுதும்
அன்னதிக்குத் தன்பேர் அளித்தானும் - கன்னல்
பழன வயநாடாஇப் பார்அரசர்க்கு எல்லாம்
அழகுஉறும் ஓர் செங்கோல் அரசு....300

சந்திரனை வென்றவனும் தாணுதனைச் சாய்த்தவனும்
துந்துவினை ஆவி தொலைத்தவனும் - இந்திரனை
வென்றவனும் இந்துமதி மெல்லியலை வேட்டவனும்
இன்றுஅறிதி அக்குலத்தோர் என்று....301

புயவலியால் சம்பரனைப் போர்தொலைத்து வென்ற
தயரதன்தன் செல்வத் தனையர் - வியன்உலகில்
விற்கலையும் மற்கலையும் விஞ்சைக் கலையுடனே
எக்கலையும் தேர்வார் இவர்....302

வில்வலியால் யான்புரிந்த வேள்விதனைக் காத்துஎதிர்ந்த
கல்வலிநேர் தாடகையைக் காதலரைக் - கொல்வலிசேர்
நாள்ஒழித்தான் நாள்கமலம் தாணும் அடிப்பொடியால்
கோள்ஒழித்தான் ஆலிகைக்குஇக் கோ....303

ஈங்குஇவன்தன் மெய்வரலாறு ஈதாம் எனஉரைத்தான்
பாங்குஉறயும் வேந்தன் பரிவுமிக - ஆங்குஅவரை
நோக்கினான் வில்வலியை நோக்கினான் நான்மறைநூல்
வாக்கினான் வாய்மை மதித்து....304

மற்கொண்ட திண்புயத்து மாச்சனக மன்னவர்கோன்
விற்கொண்டு வம்மின்என விள்ளுதலும் - கற்கொண்ட
ஆகத்தர் திண்தோளர் ஆறுபதின் ஆயிரவர்
ஏகிக் கொணர்ந்தார் எழுந்து....305

வந்து இரைத்தார்மேரு வரைபுரையும் வன்சிலையை
நொந்துஉரைத்தார் தம்விழியால் நோக்கினார் - பைந்தொடியாள்
பெற்றதவம் என்னஆமோ பேசுங்கால் என்றுஉரைத்தார்
கற்றவரும் மற்றவரும் கண்டு....306

கழையில் பிறந்த கரு அன்று இதுநம்
உழையில் பிறந்த உருவே - இழையில்
சிறந்தார் இவ்வள்ளல் தெரியல் புனைதிண்தோள்
இறந்தாள்எனில் இறந்தார் இன்று....307

இத்தகையாய் அந்நகரில் யாரும் இயம்புங்கால்
வித்தகனை நோக்கி விளம்பினான் - சித்திபெறும்
மெய்ம்முனி நல்வாழ்வுஅரசு விட்ட விரதமுனி
இம்முனியின் தோற்றம் எலாம்....308

மைக்கண் மரகததேர் வல்லி தனைஇகழ்ந்த
தக்கன் இயற்றும் தழல்வேள்வி - முக்கண்
அழல்புகைவந்து ஈண்ட அழித்தான் இவ்வில்லால்
கழைச்சிலை வேள் அன்னாய்அக் கால்....309

வள்ளல் குரிசில்இந்த வன்சிலையை இக்குலத்தோர்
புள்ளிக்கதிர் வேல்புரவலன் மாட்டு - ஒள் அழல்கண்
காதுஅரவப் பூண்அணிந்த கங்கா தரக்கடவுள்
கோதுஅகல வைத்தான் குறித்து....310

இச்சிலையின் தோற்றம் இதுஎன்று இயம்புதலும்
நச்சிலைய கூர்வேல் நராதிபனும் - மெச்சுபுகழ்ச்
செந்திருவாள் தோற்றம் தெரிப்பேன் எனஉரைத்தான்
அந்தணர் கோமானுக்கு அவண்....311

வண்பளிங்கு மாநுகத்தின் வல்ஏறு இணைந்துநெடும்
கண்பறியும் பொற்படையில் கால்திணைந்து - நண்புறயாம்
யாகம்செய் பூமி அலகில்பல சால்உழுதேம்
யோகம்செய் மேலோய் உவந்து....312

அம்முகத்தில் பொன்மணியாய் எழில்பே ழையின்மற்று
எம்முகத்தும் சோதி எரித்திடவே - மெய்முகத்த
வாள்உருவம் தோன்ற மடமயில்போல் வந்துஉதித்தாள்
நாளமலர் நாயகம்அந் நாள்....313

அங்குஉதித்த காதலியை ஆரமுதம் வேட்டுவந்த
புங்கவர்கள் சூழ்ப் புணரிசூழ் - இங்கண்உறும்
முக்குலத்து வேந்தர் முறைமுறை வந்துஆதரித்தார்
நெக்குஉருக நெஞ்சம் நினைத்து...314

இச்சிலையின் ஏற்றத்து இழிந்தார் எழில்மாரன்
கைச்சிலையினானும் கருத்து அழித்தார் - மெய்ச்சிலையோடு
ஏற்றார் அவ்விண்ணோர் இனிதுஅருளும் எண்படையால்
தோற்றார் புவிஅரசர் சூழ்ந்து....315

மாதவ அவ்வில்லை வணக்குமேல் மற்றுஎனது
கோதகலும் என்றுஅரசு கூறுதலும் - வேதியன்அம்
மைந்தன் முகம்நோக்க மடங்கல்போல் ஆங்குஎழுந்தான்
துந்துமி வான் கொட்டச்சுரர்....316

காசறுபொன் மாடமிசைக் காரிகையைக் கண்டபொழுது
ஆசைஎழுந்த விதம் ஆம்ஆறும் - வாசக்
குழல்மாது நெஞ்சம் குழைந்துஊறும் காதல்
எழுமாறும் ஒத்தான் இவன்....317

மால்விடைஅது என்கேனோ மாநாகம் என்கேனோ
கால்விடையும் செல்வக் களிறுஎன்கோ - நீலப்
புயல்என்கோ வீரப்புலி என்கோ மற்றுஎன்
அயல்உரைப்பன் நல்உவமை ஆய்ந்து....318

நஞ்சம் புரையும்விழி நங்கையர்கள் மாமாரன்
அஞ்சம்பு பாய அலசினார் - கஞ்சமலர்
கண்இணையும் தோளும்இரு காலும்அணி நூலும்முகில்
வண்ணமும்கண்டு உள்ளம் மருண்டு....319

கண்டார் நயனம் களிகூரக் காதல்மிகக்
கொண்டார் உவகை குளித்துஏற - விண்டாரும்
புங்கவர்கள் ஆசிபுகன்று ஏத்தப் போர்மதத்தின்
மங்குல்என நடந்தான் மால்....320

வாழைஇளம் தண்டை மதகரிதன் வன்கரத்தால்
கூழை படமுறிக்கும் கொள்கைபோல் - பாழிச்
சிலைஒடித்தான் தேவர் திரண்டனர்கள் வாழ்த்தி
மலைஒடித்தான் என்றுஉரைப்ப மற்று....321

அண்டம் பிளந்ததுஎன அயிர்த்தார் ஆங்குஅமரர்
எண்திசையோர் எண்துளங்கி ஏங்கினார் - மண்டலம்வாழ்
மற்றோர் தகைமை வகுப்பதுஎவன் வையமிசை
இற்றசிலை ஓசை எழ....322

கைஇலகும் ஆழிக் கருணாகரன் கமலத்(து)
ஐயன்இவர் ஒன்றாய் அவதரித்த - செய்யமலர்க்
கண்ணனோ மும்மைநெடும் கண்ணனோ ஆயிரம்பொன்
கண்ணனோ என்பார்கள் கண்டு....323

இவ்உலகம் செய்தவமோ இந்நகரம் செய்தவமோ
வெல்விலைவேல் மன்னன் விழுத்தவமோ - நல்விழிப்
பெண்அணங்கு செய்த பெருந்தவமோ என்றுஉரைப்பார்
மண்ணவரும் விண்ணவரும் வந்து....324

ஊரைப் புகழ்துமோ உற்றமுனி பெற்றநெடும்
சீரைப் புகழ்துமோ தேர்வேந்தன் - வீரத்
திருமகனை வாழ்த்துதுமோ தேர்கிலேம் என்றார்
திருநகரில் வாழ்வோர் தெரிந்து....325

சீதையின் நிலை

இத்தன்மையாரும் இயம்பிட அன்னான் இயம்பும்
முத்தன்னமூரல் முகம் கொண்டாள் - சித்தம்
கலங்கினாள் ஆழிக் கருமுகிலை உன்னி
மலங்கினாள் உள்ள மருண்டு....326

வீறிட்டு எழுந்த முலைகாள் விண் ஓங்கினீர்
கூறிட்டு எழுந்து குலவினீர் - சீறிப்
பொருதீர் மலையை அவற் புல்லாதுநின்றீர்
கருதீர் பெரும்பயனைக் கண்டு....327

பூண்அணிந்த மொய்ம்பும் புயல்அனைய தண்நிறமும்
நாண்அணிந்த கையும் நகைமுகமும் - காணக்
கிடிக்குமோ என்று கிளக்குங்கால் அந்த
மடக்குயில் முன்வந்தாள் ஓர் மான்....328

மங்காய் தசரதனாம் மன்னன் அருள்மகனாம்
சங்குஆழி கொண்ட தகைஅனையான் - மங்காத
நீல கிரிபோல நின்றான் மரைமலர்ந்த
மால்ஒப்பான் அன்னான் மதி....329

ஒருமுனி ஏக ஒருமுனிகை தாங்கி
அருகுஒருவன் போத அழகார் - கருமுகிலில்
வில்ஒருகை தாங்கிஇவண் மேவினான் என்றுஉரைப்பார்
அல்லியம் பூங்கோதை அவன்....330

இக்குரிசில்வில்லை இறுத்தான் அவ்வோசை எல்லாத்
திக்கினும்போய்ச் சென்றதுநீ தேறாயோ - இக்கண் உறு
மாலை ஒழிஎன்று வகுத்தாள் மலர்நீல
மாலை மொழியாலைஎனு மான்....331

தம்பியொடு நல்ல தவத்தோ னொடும்முகில்தேர்
நம்பிஎனச் சொற்றவுரை நம்பினாள் - இம்பரில்யான்
கண்ணினால் கண்ட கடவுளே என்றுமனத்து
எண்ணினாள் என்னை இருந்து....332

காலுக்கும் ஓசைக் கடலுக்கும் காமன்மலர்க்
கோலுக்கும் உள்ளம் குழையேன்என்று - ஆலித்த
கோங்குமுலை நோக்கிக் குளிர்ந்தாள் கொழும்கயல்கண்
வாங்கும்இடைத் தேம்கிளவி மான்....333

வில்இறுத்தான் என்மனத்தே வீற்றிருப்பான் அல்லனேல்
சொல்இறுத்தான் ஆவி துறப்பன்என - வல்லிக்
கொடிஇடையாள் கூறிஉளம் கோதுகுலம் உற்றாள்
வடிமலர்ப்பூம் பள்ளி வதிந்து....334

குளமுலா மாதவத்துக் கோதனனோடு எண்ணி
அளவளாய் ஆனந்தம் ஆகித் - தனமுலா
மாலைமுடிச் சனகன் மன்னவர்கள் மன்னவனுக்கு
ஓலை விடுத்தான் உவந்து....335

சென்றுஅடைந்தார் தூதர் செழும்குவளை மேய்ந்துகரும்
குன்றுஅடைந்தால் என்னக் குலமேதி - சென்று நறும்
தேமா நிழல்உறங்கும் செந்நெல் பழனம்சூழ்
நாமாண் அயோத்தி நகர்....336

மன்னர் முடிஉரிஞ்ச வந்தியர்கள் வாழ்ந்துஇயம்ப
சென்னிமகுடம் சிறந்து இமைப்பப் - பொன்னின்
அரியாதனத்து இருந்தான் அன்றுஅமரர் கோமான்
சரிஆதனத்து உறைந்தான் தான்....337

அருள்முறையின் ஈண்டி அடிபணிந்து நின்று
பொருள்முறைகள் யாவும் புகன்று - திருமகனின்
பாட்டுஇயலும் சீர்இதுநீ பார்என்று பட்டோலை
நீட்டினார் கோமானை நேர்ந்து....338

வாங்கினான் ஓலை மதித்தான் புயம்மலைபோல்
ஓங்கினான் வாரி உதவினான் - நீங்கரிய
பொன்னும் மணியும் புனைகலனும் பொன்தூசும்
மன்னவர்கள் மன்னன் மகிழ்ந்து....339

வள்ளல் இருந்த மணி மிதிலைக் கேஅரச
வெள்ளமொடு தானை விரவுகஎனத் - தெள்ளும்
முரசு அறைதிர் என்று மொழிந்தான் அரசர்
திரை சொரியு முன்றிலான் தேர்ந்து....340

மதகரிமேல் வள்ளுவர்கள் மாமுரசம் எற்ற
அதனமன மகிழ்ச்சி ஆரப் - புதன்அனைய
மைந்தவர்க்கு மற்றவர்க்கு மங்கையர்க்கும் வந்துஎழுந்த
சிந்தைநலம் ஆருரைப்பார் தேர்ந்து....341

நஞ்சவிழி அஞ்சனத்து நங்கையரும் ஆடவரும்
மஞ்சணிகள் பூண்டு வயங்கினார் - விஞ்சும்
விருந்தளித்தார் வானோர் விரிகடலன்று ஈய்ந்த
மருந்துஅளித்தால் என்ன மகிழ்ந்து....342

யானைமேல் வாளி அயமேல் அரும்சிவிகை
மானமேல் சென்றார் மடந்தையர்கள் - தானச்
சயந்தனமேல் சென்றார் தனிமகர கேது
வயந்தன்நிகர் ஆடவர்கள் மற்று....343

நன்நடையர் முன்னூல் நவின்றுவரு நாவர்
மென்நடையர் மேல்நிவந்த வெண்குடையர் - மன்னரிய
சத்திதவம் வேள்வி தருமம்தனை நடத்தும்
அந்தணர்கள் சென்றார் அணிந்து....344

ஆயிரம் பொன்மாதர் அரும்சிவிகை சூழ்ந்துவரக்
காய்எரிகால் கண்ணார் கடுவிசையார் - ஆயுமணித்
தூசுஅலைக்கும் கஞ்சுகத்தார் சுற்றிவர ஏகினள்பொன்
கோசலைமாது என்னும் கொடி....345

பொன்அனையர் எண்அரிய பூவையர்கள் சூழ்ந்துவர
மின்அவிரும் கஞ்சிகையின் மேல்மருவி - மன்னுதல்போல்
கேகயர்கோன் மாதும் கிளிநேர் சுமித்திரையும்
ஏகினர்கள் மன்னோ எழுந்து....346

வள்ளலுடன் பிறந்த மற்றுஇருவர் சூழ்ந்துவர
ஒள்அழல்வாள் கையார் உடன்அணைய - தெள்ளுமணிக்
கஞ்சிகைமேல் சென்றான் கலைதேர் வதிட்டன்எனும்
செஞ்சொல்முனி வஞ்சியொடும் சேர்ந்து....347

கண்ணன் எமக்குஉரிய கந்தன்கரு முகில்நேர்
வண்ணன் திருவடியை வாழ்த்தியே - மண் அமரர்
உள்ளம் தெவிட்ட ஒருகோடி பொன்அளித்தான்
வெள்ளநீர்க் கோசலை யார்வேந்து....348

அரசர் அடிவணங்க அந்தணர்கள் வாழ்த்த
முரசுஅதிரக் காளம் முழங்கப் - பரசும் மதி
மந்திரியர்சூழ மணித்தேர் மிசை அடைந்தான்
இந்திரிவேந்து அன்னான் எழுந்து,...349

கலைசரியச் சங்கம் சுழல மதமாநேர்
முலைபுளக ஆரம் முறுவ - நிலவு அரும்பச்
சிங்கார மாதர் தெருமந் திடநடந்தான்
மங்காத செங்கோல்அம் மன்....350

விஞ்சுபெரும் தானையொடும் வேல்வேந்தன் தான்அடைந்தான்
கஞ்சமலர்வவிக் கராக்(கு) ஒதுங்கி - அஞ்சுதருக்
கான்ஓங்கும் செல்வக் கனநதி பாய்ந்துஉறங்கும்
வான்ஓங்கு இந்து மலை....351

பூநாக மாடு பொருதடையு மானாகம்
பூநாக மாடு பொருவின்மணி - மானாகம்
மீனாக ஒப்ப விலங்கி ஒளிவீசும்
வானாக மாடு மகிழ்ந்து....352

அரிமுக மாக்கன் மலரும் அம்மலையின் ஓர்பால்
பரிமுக மாக்கண் மலரும்பாலாம் - வரிமுகமார்
மாவேங்கை தாவும் வனசரர்போல் மாழைஎன
மாவேங்கை தாவும் வலம்....353

மாசுகந் தத்தை மருவும் பொழில் மருவி
மாசுகந் தத்தை வளர்க்கும்கால் - மாசுஇல்
அடக்கரும் மந்தார வருநிழலில் வாழ்வோர்
கடக்கஅருமந் தாம்அக் களம்....354

வண்டுஅரங்கம் முந்துஉறங்கும் வாரிஅய னார்வனசம்
வண்டுஅரங்கம் முந்துஅரங்கம் மல்குமால் - விண்டுஅரங்கம்
பாவித் தவம்புரியாப் பண்பின்ஒடும் பல்துறையும்
ஆவித் தவம்புரிவார் ஆங்கு....355

மஞ்சமஞ்ச நாகம் வலியபுழைக் கைநீட்டி
மஞ்சமஞ்ச நாகம் வளைக்குமாம் - நெஞ்சமஞ்ச
வல்அரியில் புல்அரிய வாள்விழியின் ஓடுரறி
மல்அரிகள் பாயும் மலைந்து....356

மால்அரும்பும் கொங்கை வளம்அரும்பும் வல்லிஇடை
நூல்அரும்பும் பூவை நுவல்அரும்பும் - கோல்அரும்பும்
கைஅரும்பும் காந்தள் கடிஅரும்பும் பையரவ
மெய்அரும்பும் சோக மிடைந்து....357

விண்தொடர நின்ற வடகுன்றம்என மண்டலமோடு
எண்திசையும் மண்டியிட லின்றியே - கொண்டுஇலகும்
வானமலை இன்றிமலை வாய்அமலை மேயமலை
தானமலை நீலமலை தான்....358

கலாவதி அங்குஎய்தக் கதிர்முடியின் ஆன்ற
நிலாமணியின் கான்ற நெடுநீர் - குலாவுறும்வான்
விண்கும்ப வாய்நிறைப்ப மீனமதில் தாவுறும்சீர்
வண்கும்ப மேய வரை....359

செல்லைப் பொருவும் செழும்குழலார் சேய்அரிக்கண்
கொல்லைப் புனம்வாழ் குறமகளிர் - வில்லினுக்கேழ்
ஆம்இடகை பற்றிஅரும் குயிலின் மீட்டுஉறும்சீர்
வேமலியும் காமலியும் வெற்பு....360

வான்மருவும் கங்கை மணிநீர் தெளிந்தருகார்
பான்மதியில் சந்தம் படஅரைத்துக் - கான்மருவும்
வாசக் குறமகளிர் மந்தரதேர் மாமுலைமேல்
பூசிக் களிக்கும் பொருப்பு....361

வண்கும்ப மாமுலையார் வன்பால் குறமகளிர்
விண்கும்ப வாய்நிறைய மேல்உறையான் - தண்கும்பத்(து)
ஏந்துமடி யின்பால் கறந்துஇதையம் இன்பம்உற
மாந்தும் வளம்சேர் மலை....362

வான்உறும்பொற் காவாய் வரும்பிறைய வாள்ஒளியார்
கூன்இரும்பில் பற்றிக் கொடும்கயல்கண் - தான்அக்
கனைவயிரக் கால்குறவர் காரிகையர் கையால்
தினைஅறியும் செல்வச் சிலம்பு....363

இம்மலையின் பேர்அணியை எய்தி இருகண்களிப்ப
அம்மஎன நோக்கி அதிசயித்தார் - விம்மும்
படமாடம் எய்திப் பரிவோடு உறைந்தார்
வடமாடும் பூணார் மகிழ்ந்து....364

ஆடினார் பாடினார் ஆடித்தொடை மாலை
சூடினார் சூடித்துயில் கொண்டார் - நீடும்
அனுராகம் கொண்டுஎழில் ஆடவரும் ஆங்கு
தனுநேர் நுதலினரும் தான்....365

வையத்து இருள் கடித்து வானத்து ஒளிபரவ
செய்ய நிறக்கீழ்த் திசைஅடைந்தான் - மைய
இருள்படாம் நீக்கி இரவிஎழும் மாத்தேர்
மருள்படாம் நீத்ததுஎன வான்....366

கஞ்சம் முகமலரக் காதலர்கள் கண்மலர
வஞ்சிஇடை மாதர்முகம் வாள்மலரத் - தஞ்சமுறும்
தானை புடைசூழத் தார்வேந்தன் தான்அடைந்தான்
நாணநீர்ச் சோண நதி....367

வெய்யோன் நடுஅணைய வேனிலான் வீற்றுஇருக்கும்
துய்யமலர்ச் சோலை துருவினார் - பெய்வளைக்கை
மங்கையரும் ஆடவரும் மாமலர்கள் கொய்துவந்தார்
செங்கைமலர் வாடத் திரண்டு....368

கொங்கை அசையக் கொடியிடையின் இடைஆடப்
பொங்கும் குழல்சரியப் பூம்தானை - அங்குஅலையத்
தேடினார் மின்போல் செழும்கோட்டு அலர்சூடி
ஆடினார் ஆய்வளையார் ஆய்ந்து....369

காதலுடன் பூமேல் கனிஒருத்தி சென்றுஅடைய
சீதமதி முகத்தைச் செம்மலர்என்று - ஏதில்
சுதிபாடி வண்டுஇனங்கள் சூழ்வனஅன் னோரை
எதிர்கொள் வனநிகரா மே....370

வெண்டா மரைமலரோர் வெம்தறுகண் ஏறுஅனையான்
வண்டுஓதி உள்ளம் மகிழவே - கொண்டான்
அடும்கவுள்மால் யானை அடல்புழைய கையால்
படும்கவளம் கொண்ட படி....371

சேய நிறம்அமைந்த செம்மலரும் வெண்மலரும்
ஏய சுரம்இரண்டில் ஏந்தினான் - காய்எரிகால்
தூயவளை யோடும் சுரிமுகச்சங்கு ஏந்தியமா
மாயவனை ஒத்தான்ஓர் மால்....372

குயிலோ(டு) உறவாடிக் கொம்போடு ஒசிந்து
மயிலோ(டு) இயலாய் மகிழ்ந்து - பயிலும்
கடம்ஆட வாள்கைக் கணவரொடும் மேவித்
தடம்ஆடல் ஆனார் தளிர்ந்து....373

ஏந்து முலைஒருத்தி இன்கனிவாய் இன்னுரையால்
காந்தள்முக நோக்கிஎன் காதலீர் - நீந்து அரிய
நீரின்இடைப் போதும்என நின்றான் நினைவறியான்
மாரன்எனும் ஓர்படிவ மால்....374

இந்திரைஒப் பாள்ஓர் எழில்மா திருநதிவாய்
அந்திரைநீர் அள்ளி அலர்க்கையின் - உந்த
இறைந்தாள்ஓர் மன்னன் எழுவுறழும் தோள்மேல்
மறைத்தாள்தன் கையால் மகிழ்ந்து....375

இருகமலம் கையால்ஓர் ஏந்திழையால் காதில்
ஒருகணவன் சூட்ட உவந்தாள் - திருவின்எழும்
செம்சுடரும் வெண்சுடரும் சேரஉதித்தன போல்
அம்சுடர் விட்டாள் அவள்....376

சந்திரனும் தாரகையும் தண்பிடியும் வன்களிறும்
மந்திரமும் மாமயிலும் மானவே - சந்தக்
குழலாரும் காதல் கொழுனரும் நீராடிக்
கழலா(து) அடைந்தார் கரை....377

அந்நீர் வெறிதா அடைந்தார் அரும்துகிலும்
பொன்னார் அணியும் புனைந்துஉடுத்தார் - மின்னின்
இடைக்குயில்அன் னார்ஓடு இணைந்துஆடு வோன்போல்
கடல் குளித்தான் செய்ய கதிர்....378

வெய்யவனுக்கு, அங்கம் மெலிந்தான் விரிமலர்ப்பொன்
தையலருக்கு ஆவி தளர்ந்தான் - மெய்நிறையும்
பூம்கலைகொண்டு ஏற்றான் புதன்எனும்ஓர் புண்ணியனை
ஆங்குகருளில் பெற்றான் அவிர்த்து....379

வெள்ளைநிலா வெள்ளம் விரிந்துஓட வெண்தரளக்
கொள்ளைஅணி பூண்டமடக் கோதையரும் - உள்ளம்
வழிந்து ஓடும் வேற்கை மருவுஆடவரும்
விழைந்தார்கள் ஆர்வம் மிக....380

மதுக்கடத்துள் மன்னும் மதிவதனம் கண்டு
விதுப்பகைகொண்டு என்விழிமுன் மேவித் - துதிக்கும்
அணிபலவும் பூண்டான் அறிந்தனிரோ வென்று
மணிமுறுவல் கொண்டாள் ஓர்மான்....381

மாதுஒருத்தி கண்தாள் மனம்நடுங்க மாற்றலன்இப்
போதின் நகைத்த(து) எவன் போந்துஎன்னக் - கோதினோடும்
முன்னிக் குழைந்தாள் ஒருகணவன் தன்வதனம்
பொன்நறவுள் தோன்றப் புலர்ந்து....382

முன்நாள் புலவியினை முன்னுவாள் நாயகனோடு
அதன்னாட் குடன்கூட்டு அணிஇழைபோல் - மன்னா
இருந்ததே வானத்து இரவுஒளி வள்ளத்(து)
அருந்துதேன் ஒக்கும் அளி....383

கம்பமத யானைக் களிறுஅனைய காதலனோர்
விம்பமதி அனைய மெல்இயலை - இம்பரில்நின்
மாட்டே எனதுமனம் என்றான்அவ் வார்குழலும்
மீட்டேதும் ஒராள் வெறுத்து...384

நல்லோர் தமது நலன்அறியா நானிலம் வாழ்
புல்லோர்புகழ போலப் போயிற்றே - அல்லார்ந்த
திங்களொளி மழுங்கிச் செங்கதிரோன் கீழ்த்திசையில்
பொங்குதைய மாகும் பொழுது....385

தேரும் பரியும் கரியும் செழும் குடையும்
நேரும் கொடியும் நெருங்கிவர - வீர
முரசுஒலிப்பச் சங்கம் முழங்கவே சென்றான்
விரைசெய்பூந் தாரான் விரைந்து....386

சிங்கஏறு அணைய திறல்மன்னன் சேனையொடும்
பங்கேருகம் மலரும் பைந்துறையில் - கொங்குஏறும்
வாளைபாய் செல்வ வரமா நதியடைந்தான்
காளைஏறு என்னக் களித்து....387

மண்உலகில் தன்னை வரவழைத்த மன்னவன்தன்
ஒண்மரபில் வந்தோன்இங்கு உற்றான்என்று - எண்மலர்கொள்
ஆன்ற திரைக்கரத்தால் அன்பினொடும் அள்ளிஎறிந்(து)
என்றிரைத்த தன்றே எதிர்ந்து....388

அந்நதிபின் னாக அடைந்தான் அடல்மான் தேர்
மன்னிய வெம்சேனை மருங்கு அடையக் - கன்னிப்
பெடை அன்னம் வைகும் பெரும் துரை நீர் நாடன்
நடை அன்ன மாம்மிதிலைநாடு....389

வந்தான் தசரதபூ மான்என்று வண்டுஊதும்
அந்தார மார்பன் ஆடல்சனகன் - சிந்தேபோல்
பல்இயங்கல் ஆர்ப்பப் பணைஒலிப்ப வந்துஎதிர்ந்தான்
சில்லியம் பொற்றேர்மீது சென்று....390

மாவிரிநீர் வாரிஎதிர் வந்துஅடையும் வண்ணம்அணிக்
காவிரிநீர் என்னக் கலந்ததே - தூவலியால்
கொடுஅழியா வீரக் குலப்படையில் கோச்சனகன்
பாடுஅழியா வீரப் படை....391

தேர்இழிந்து வேந்தன் திருத்தேர் மருங்குஅடைய
போர்அரசன் கைகொடுநீ போதுகஎன்று - ஆர்வமுடன்
செப்பினான் வேதச் செழும்பொருளை ஈன்ற
வைப்பினான் மெய்ப்பா மதித்து....392

வானம் தடவும் மணித்தேர் மிசைமருவும்
தானம் தவம்உறும்அத் தார்அரசை - வானம்
தரும்தடக்கை நீட்டித் தழுவினான் தாமப்
பொருந்தலர்க்குஏறு அன்னான் புகழ்ந்து....393

உவாப்பருவத்து எய்தும் ஒருசுடர்கள் ஒப்பார்
அவாக்கடலில் மூழ்கி அளைந்து - தவாப்பெருமை
ஒக்க அளவளாய் உம்பர்மலர் மாரிபெய்யப்
புக்கனர்கள் சீதா புரி....394

மாதலிதேர் தூண்ட வரும்இளைய வாசவன்ஓடு
ஆதரவோடு எய்தும் அரியேபோல் - சோதிஎழில்
தம்பியொடும் செல்வத் தனித்தேர் மிசைஅடைந்தான்
பைம்புயலும் பூவையும்ஒப் பான்....395

காயாஅனைய கருநிறத்(து)எம் கண்ண பிரான்
ஓயா உவகை உறும்அரசன் - மாயாச்
செழும்தா மரைமுடியில் சேர்த்தான் மைமேகக்
கொழுந்துஆம் எனவே குழைந்து....396

வந்துஅடியில் தாழ்ந்த மணிநிறத்து வள்ளலைஅப்
புந்தி மகிழ்வுஉறும் அப்போர்வேந்தன் - கொந்துஅவிழும்
தார்அணைந்த மார்பில் தழுவினான் பொன்மலையோர்
கார்அணைந்த(து) என்னக் களித்து....397

மாதரம்பொன் மேனி வடிவுஉடைய வள்ளலும்அப்
பூதரம் போல்நின்ற புயவேந்தைக் - காதலுடன்
போந்துஇறைஞ்ச மெய்யார் புறத்தழுவி உள்உவந்தான்
வேந்தர் பிரான் உள்ளம் விழைந்து....398

தாயரையும் அவ்வாறு இறைஞ்சத் தனிஆண்மைச்
சேயரைமுன் கண்டு திறல்வேந்தற்(கு) - ஆயிரம்பங்(கு)
ஆதரம்கொண் டார்கருணைக்(கு) ஆகரமாம் அம்புயத்து
மாதுநிகர் மாதர்அனை மார்....399

விரதம் தவம் ஒழுக்கம் மெய்ம்மை நெறிபோதம்
சரதம் பொறுமை இவை சார்ந்த - பரதன்மணிச்
சத்துருக்கன் ஓடுஅனகன் தாள்மலர்மேற் றாம்பணிந்தார்
ஒத்துஇருக்கும்உள்ளம் வந்துதித்தோன் உவந்து....400

பின்னர்எழில் சேடன் எனப்பேர் உலகில்
மன்னும் பரதன் மலர்அடியை - சென்னி
வணங்குதலும் சத்துருக்கன் வந்துஇறைஞ்சி நின்றார்
மணம்கெழுதார்த் தம்முனைநேர் வந்து....401

இப்பரிசுஇங்கு எய்தியமேல் ஏழ்கடல்நேர் தானையொடு
மைப்புயலை ஒத்த மணிவண்ணன் - ஒப்பருதன்
தாதைஉரை தாங்கிமுனஞ் சார்ந்தான் தனிமறையோர்
வேதஒலி கீதம்எழ வே....402

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.7. கடிமணப் படலம்
வாம்பரி மேல் தம்பியர்கள் மன்னிவர மாமலரின்
தேம்பொதியும் செல்வச் செழும்தேர்மேல் - காம்பனைய
சோதிவாய் மென்தோள் சுரிகுழலார் சூழ்மிதிலை
வீதிவாய்ச் சென்றான் விரைந்து....403

வலம்புரியும் காகளமும் மாமுரசும் கொம்பும்
குலம்புரியு மஞ்சில் குமுற - நலம்புரியும்
மாமயில்போல் ஈண்டி மதிமுதத்து மான்அனையார்
காமன்இவன் என்றுஉரைப்பார் கண்டு....404

நங்காய்இத் தோன்றல் நலன்நுகர்வார் நானிலத்தில்
எங்கு ஆய்ந்(து) உரைப்பன் இனிஎன்னச் - செங்கை
கழலமணிச் சங்கம் கலைநெகிழக் காமர்
குழல்சரியச் சென்றாள்ஓர் கொம்பு....405

கண்டீரோ இந்தக் கருமுகில் ஒப்பானை இரு
குண்டலப் பொன்காதும் குறுநகையும் - மண்டலம்சேர்
நல்வதனத் தாமரையும் என்றாள் நனவிழந்தாள்
வல்வடிவ மாமுலைஓர் மான்....406

மஞ்சுஅனையஓதி மயிலேஇவ் வள்ளல் வந்துஎன்
நெஞ்சம் புகுந்தான் நினைப்பதன்முன் - கஞ்சமலர்க்
கண்வழியே சென்றான்நீ கண்டனையோ என்றாள்ஓர்
பண்வழியும் வாயாள் பரிந்து....407

நெஞ்சம்அதைத் தூது விடுத்தேன்நன் நேர்இழைமீர்
அஞ்சுகலைக் காலும் ஆனதே - கொஞ்சி
உறவாடிப் போன உளவறியேன் என்றாள்
திறவா விழித்தெரிவைத் தேன்....408

விண்அகன்ற தேரில் விடலைஅவன் சேர்கினும்என்
கண்அகன்று செல்லக் கடவனோ - பண்அமைந்த
யாழ்மொழியாய் நின்உளத்தும் அல்லனோ என்றுஉரைத்தாள்
தாழ்குழலாள் ஓர்மடவாள் தான்....409

இன்னணம்அக் கொம்புஅனையார் எய்திடப் பொன்மலரோன்
மன்மகனும் கோசிகனும் வந்துஉறையும் - நன்மணியால்
ஆன்றமணி மாடத்(து) அடைந்தான் அறம்காக்கத்
தோன்றினான் என்னும் சுடர்....410

இரகுரவர் பாதம் இறைஞ்சி இளையோர்
அருகுறஆன் ஏற்றின் அரிய - திருமணிப்
பூந்தவிசின் ஏறிப் பொலிந்தான்அப் பூமகள்தன்
காந்தன்எனும் பூமான் களித்து....411

கண்டவர்தம் உள்ளம் களிகூரக் காமன்என
மண்டபத்தில் எய்தி மலர்அணைமேல் - அண்டர்
குலபதியை ஒப்பக் குலவினான் மன்னோ
வலமருவும் கோசலத்தார் மன்....412

அங்கம் அருணம் அவந்தி யரும்குடகம்
கொங்கண நேபாளம் குருகல் இந்தச் - சிங்களம்பொன்
சீனம் கடாரம் திராவிடம்வங் காளமொடு
தானமலி தானவமச் சம்....413

மராடம் கலிங்கம் மகதம் கன்னாடம்
கிராடம் கருசம் கிராடம் - விராடமொடு
வங்கம் விதர்ப்பம் மலாடு கருநாடம்
தெங்கணம்சோ ணாடுநறும் சிந்து....414

இந்நாட்டு அரசர் எனப்பலரும் ஈண்டமணி
மன்னாட்டும் வெண்க வரிஅசையப் - பொன்னாட்டும்
திங்கள் குடைச்சிறப்பச் செம்கதிர்போல் வீற்றிருந்தால்
கங்கைநீர் நாடன் களித்து....415

அன்ன பொழுதில் அயன் அளித்த ஆண்தகையும்
கன்னிதனை அழைத்தி காவல - என்னலும் அங்கு
ஆயிழையார்க் கோத அவர்தா தியர்க்கறைய
ஏயினார் மங்கை இடம்....416

கன்னல் அடுபாகைக் கனியும் செழும்கனியைப்
பன்னரிய வேம்பின் பழரசத்தால் - இன்அமுதம்
ஆற்றினார் என்னஅணி இழைக்கு அவ்ஆயிழையார்
ஆற்றினார் பொன் அணிகள் ஆய்ந்து....417

மைஅணிந்த கூந்தல் மழைஅணிந்தார் வண்பிறையும்
செய்யசுடரும் செழும் கொழுந்தும் - துய்ய
அறுகால் வண்டுஆடும் அணிமலரும் மாதி
மறிதாவும் கண்ணார் மகிழ்ந்து....418

பல்நிறம்சேர் அம்பொன் பரிதிமதி நாட்கணம்என்று
உன்னும்இவை வள்ளை ஒளிர்வபோல் - பொன்னம்
குழைஅணிந்தார் செல்வக் குழைபொருந்தக் கூர்வேல்
உழைபொருந்தும் கண்ணார் உவந்து....419

பாதி இளம்பிறையும் அல்ல பனிஅகத்துஇப்
போதின் வளைந்த புனைவும்அல - ஆதரம்சேர்
நெற்றியே என்று நிகழ்த்துவார் என்னவே
பொற்றிலத மிட்டார் புரிந்து....420

ஈங்கு அணைந்தான்வில்லை இறுத்தோன் என்று இறுமாந்(து)
ஓங்கி வளரும் உயர்முலைக்குப் - பூம்கனகக்
கச்சுஅணிந்தார் வெம்தறுகண் காலனையும் வாளையும்வென்று
அச்சுறுத்தும் கண்ணார் அவர்....421

வெள்ளையாய் உள்ஒளித்த வெண்மணியார் வெம்மதத்திண்
கொள்ளை மால்யானைக் கொழும்கோட்டை - எள்ளுதல்போல்
முத்துஆரம் இட்டார் முலைமுகட்டு முன்றிலிடைக்
கைத்தாயர் உள்ளம் களித்து....422

வலம்புரிதன் பாங்கர் மணிகொழித்து என்ன
நலம்புரியும் செங்கேழ் நளினப் - பொலன்கலனால்
சீதை திருக்கழுத்தின் செம்சோதி மாற்றினார்
ஓது குயிலன்னார் உவந்து....423

மெய்ஆழி கொண்ட விறலோற்கு வந்தாடன்
கையாழி பூண்ட கவின் ஓதின் - ஐயாழி
மீதுஎழுந்த செம்கதிரோன் மேல்அலர்ந்த தாமரையின்
போதுஅலர்ந்தது ஒப்பாம் பொலிந்து....424

அனிச்சமலர் தூவி அரும்பனி நீர்மேவித்
தனிபெரும்பட்டு ஆடை தனைச்சாத்திப் - பனிப்புஉறும்அப்
பொன்அடியில் சாத்தும் புனைகுரல்சில் ஓசைஅறா
மன்அணிகட்கு ஏதுஉவமை வைப்பு....425

மாதா அனைய மடமயில் அவ்வாறு அணிந்து
பாதார விந்தம் பனிப்பஉலகு - ஆதாரம்
ஈங்குஇவளே என்ன இசைகூர வேஅடைந்தாள்
ஆங்கழன்மா மன்னர் அவை....426

வல்லி இடையும் வளரும் கனதனமும்
அல்லி இதழும் அரும்கருணை - புல்லி
வழிந்துஓடு கண்ணும் மலர்முகமும் பொன்னம்
கொழும்தோடும் கண்டார் குழைந்து....427

நிதானமயில் அன்னார் நிரைவளையத் தங்க
விதான நிழல்கீழ் விரிந்து - சதாநற்
கவரி பணிமாறக் கவின்அருவாள் என்னப்
புவியில் நடந்தாள் அப்பொன்....428

கலைமகளோ செல்வக் கடல்மகளோ பூவின்
தலைமகளோ என்னத் தழைந்து - குலவி
உடல்பூரித்து உள்ளம் உவந்தான்ஒண் செம்கேழ்
மடல்பூரித்து உற்றதோள் மன்....429

மாமடந்தை மன்னவையின் வந்தாள் வடிவுஉடைய
பூமடந்தை நாயகனைப் பொற்பினால் - தூமருவும்
மங்கையரைப் பார்க்கும் வகைகடைக்கண் பார்த்துஉணர்ந்து
சங்கைஅற நீத்தாள் தழைந்து....430

கோதமனை நோக்கிக் குடைவேந்தன் கோகனக
மாது மணநாள் வரைதியென - மாதவனும்
வாளை உகளும் மணிநீர் மணிநாட
நாளையே என்றான் நயந்து....431

அப்பொழுதில் வேந்தர் அடிபணிய அம்பொன்வரை
ஒப்பு அமையும் மாடம் உறைந்தான்விண் - ?இப்புவனம்
காத்தான் கரிய கருமுகிலும் போயிருந்தான்
மாத்தான நேரா மனை....432

மாதருக்கும் அந்த வளநகர்வாழ் மைந்தருக்கும்
ஆதரவின் எய்தும் அகமகிழ்வை - ஓதில்
பெரும்தடம்கண் சீதைக்கும் பேர்ஆழி யாற்கும்
வரும்தகைமை ஒப்பாகு மால்....433

வாமக்கடலில் மறைந்தான் வயங்(கு) அருணன்
காமக்கடலில் கரைகாணா(து) - ஏமக்
கனிவாய் அருந்ததியும் கண்ணனை எண்ணித்
தனியே இருந்தாள் தளர்ந்து....434

கொம்புஅனையாள் மன்றல் குறித்ததின நாளைஅணி
வம்புஅமைய நன்கு வனைதிர்என - உம்பல்வாய்
இந்முரசம் ஆர்ப்ப எழுந்தான் நெறிகடல்வாய்
வின்மருவும் ஓராழி வேந்து....435

வாசப் புகைஅணிந்தார் மாலைஅணி வீக்கினார்
தேசப்புலவர் சிறந்(து) அடைந்தார் - பாசக்
கரும் குழலார் ஊடிக் கழித்தஅணி எல்லாம்
ஒருங்(கு)அகற்றி வந்தார் உவ்ந்து....436

கன்னல் தெரிவார் கடிமணம்ஈங்கு என்றுஉரைப்பார்
இன்அமுதம் ஊட்டுவார் இன்புறுவார் - சொன்ன
கடிகைவந்தது என்பார் கருதுகஈங்கு என்பார்
விடியும் வினைஎன்பார் வியந்து....437

புலியடிய பைங்காய் புனல்அரம்பை யோடு
பொலியும் மரகதத்திண் பூகம் - இலகவே
தூணந் தொறுநிரைப்பார் தோரணங்கள் தூக்குவார்
சேண்அந் தரம்திகழத் தேர்ந்து....438

கண்ணூக்கு மைஅணிவார் கச்சுஅணிவார் மாமுலைக்கு
மண்ணுக்கு ஆன்ற வடம்புனைவார் - விண்ணுக்கு
வெம்கதிரோன் என்ன விளங்குமணிக் குண்டலங்கள்
அங்குஅணிவார் ஆங்குஅனையர் ஆய்ந்து....439

பொன்னால் மணியால் புனைந்த மணமண்டபத்து
தன்னேர் அரசர் தணிந்(து) ஏத்த - மின்ஆர்ந்த
மன்மலரோன் ஈன்ற அரும்தவத்து மாமுனியோ(டு)
என்மருவும் வேலான் எழுந்து....440

கோச்சனகர் கோமான் குடைநிழலில் உற்றுஅடைந்தான்
மாச்சபையின் மற்றவரும் வந்துஉறைந்தார் - வாச்சொளிரும்
அண்டம்உண்ட மால்தன் அகடுபோல் ஆயினது
விண்தலம்சேர் மாடம் விரிந்து....441

கங்கை காளித்தி கலைமகள் காவேரியோடு
துங்கம் உறுகடலின் தோயமதால் - அங்கைவாய்
கஞ்சம் அனையான் கருணா கரக்கடவுள்
மஞ்சனநீர் கண்டான் மகிழ்ந்து....442

கருவரையைச் சூழ்ந்த கதிர்போல் பொன்ஆடை
மருவ அணிந்தான் மலர்மேல் - பிரமனொடும்
என்நாமம் உற்றார் எனைவரும்அன் பால்அணிநீ
தன்நாமம் சாத்தினான் தான்....443

தன்குலத்தோர் போற்றும் தனிஅரங்க நாதன்அடி
இன்பமுற ஏத்தி இறைஞ்சினான் - மின்குலவும்
கன்னியரை ஈய்ந்தான் கனகமொடு காசினியை
மன்னுமறை அந்தணர்க்(கு) உவந்து....444

வாசவனும் தண்தா மரைவதிந்த மாதவனும்
ஈசன்என ஏத்தும் இறையோனும் - நேசமுற
வந்துஅடைந்தார் வான மனையா ரொடும்மலர்ந்த
சிந்தையராய் அன்னாள் தெரிந்து....445

வேத முறைவழுவா வேதியர்கள் சூழ்வரநன்
மாதவனும் மாதும் மணவேள்விக்(கு) - ஏதமறும்
மெய்த்தருப்பை ஆதியொடும் மேவினான் ஆங்(கு)உரிய
வித்து அணிந்தான் முந்நூல்விதி....446

பரிவயங்கள் ஆரப் பரப்பினான் பாங்கர்
விரியும் இதழ்த்தருப்பை வேய்ந்தான் - பரிதிஎன
மண்டலங்கள் நாட்டினான் மாமலர் பெய்(து)ஓமநெறி
கண்டு வளர்த்தான் கனல்....447

தேவாதி தேவனும்அத் தெய்வத் திருமகளும்
ஓவா(து) உறைந்(து)ஆங்(கு) உயர்கமல்ப் - பூவாரும்
மங்கையுடன் மேவி மகிழ்நீர் எனச்சனகன்
செங்கைநீர் வார்த்தான் தெளிந்து....448

பொன்மாரி பெய்த புனல்மேகம் புண்ணியர்கள்
சொல்மாரி பெதார் சுகந்தமலர் - என்மாரி
தூற்றினார் வானோர் சொரிந்தார் கவிமாரி
போற்றி நாவல்லார் புகழ்ந்து....449

வெய்ய கனல்வாய் விதித்த விதியாவும்
செய்து முடித்துச் செழும்கரத்தான் - நெய்யமைந்த
ஆகுதிகண் தேர்ந்தான் அரும்பவள வல்லிகரம்
ஓகையொடு தொட்டான் உவந்து....450

உடல்உயிரும் ஒன்றாய் உறுவதுபோல் யாணர்
மடல்புனையும் தீவலமும் வந்தார் - இடமலியும்
பொம்மல்உறும் செம்நெறி பொறிதூவிப் பொற்(பு)உறும்கல்
அம்மி மிதித்தார் அடைந்து....451

அற்புதம்சேர் கற்பின் அருந்ததியும் கண்டுவந்தார்
விற்பனம்சேர் எல்லா விதிமுடித்து - நற்படிவ
மாதவரைத் தாழ்ந்து வணங்கினார் பெற்றுஎடுத்த
தாதை பதயுளகம் சார்ந்து....452

மாவுறையுஞ் செல்வ மனைபுகுந்து பெற்றுஎடுத்த
மூவரையும் போற்றி முறையாகத் -தாவிலாச்
சானகியும் கோலத் தடம்புயனும் தாழ்ந்து நின்றார்
வானகமும் மின்னலும்போல் வந்து....453

கொங்காரும் சோலைக் குளக்கரையில் சூல்உயிர்க்கும்
சங்கார் பழனத் தடநாடன் - மங்காத
சாயல் மயில்ஓடுமத் தண்பாற் கடல்புரையும்
பாயல் உறைந்தார் பரிந்து....454

வேலை முரசுஅதிர வேந்தன் உளமுவப்ப
மாலை முடிச்சனக மன்னர்பிரான் - சால்புறுந்தன்
தம்பியரு நவ்விழித் தையலரை எம்பெருமான்
தம்பியரும் வேட்டார் தழைந்து....455

பங்குனியின் உத்திரத்தில் பாரகமெல் லாம்புகழு
மங்குல் அனையான் மணநாள்என்று - அங்குஅணைவார்
போற்றிசெயப் பூம்கணைவேள் போலவரு மற்றவரும்
வீற்றுஇருந்தார் உள்ளம் விழைந்து....456

கோசிகனும் மாசுஇலாக் கொற்றவர்க்கும் மற்றவர்க்கும்
ஆ(சு)இலா வாரிஅளித்து அடைந்தான் - தேசுலாம்
திங்கள்முடிச் செல்வன் திரிஅம் பகன்ஒருபால்
மங்கை பிறந்த மலை....457

வின்மைந்(து) அமைந்த விறல்வேல் படைசூழ
மன்மைந்தர் தன்பால் மருவவே - பொன்மலிந்த
நல்நுதலார் மேவ நடந்தான் அணிநகரம்
மின்னுரை வாள்கையான் விரைந்து....458

ஆனை பரிஇரதம் ஆதிஅரும் கலன்கள்
ஏனை பரிசும் இனிதாக - நானமலர்க்
கொந்தார் முடிச்சனகர் கோன்அருளச் செல்லும்கால்
வந்தான் மழுத்தரித்த மால்....459

தீஒளி போல்மேனி திகழச் செழும்கரத்தில்
பாயொளிகால் வீரப் பரசவிரக் - காயும்அடல்
கோபவடவைக் கொழுந்(து)எரிய வந்தான்கல்
சாபவரை என்னத் தகைந்து....460

வரதலும் மாமன்னன் மனம்தளர்ந்து முன்சென்று
இருபதங்கள் ஏத்தி இறைஞ்சி - அரன்அனையாய்
ஈங்(கு) அடைதற்(கு) ஏற்ற நிபம் என்னோ என உரைத்தான்
தாங்(கு) அரிய வெய்ய தவத்தான்....461

இற்ற சிலையின் இகல் அறிவேன் ஈண்டு எனது
மல்தோள் தினவுடைத்துஉன் மல்அமைந்த - பொன்தாமத்
திண்தோள் செயலும் தெரிவான்வந் தாம் எனவே
விண்டான் உருமின் வெகுண்டு....462

முனியேன் முனியேன் முதுப்பருவம் என்னை
முனியே முனிதன் முறையோ - இனியானும்
மைந்தர்களும் சேனைகளும் மற்றுஉளரும் நின்புகலாய்
வந்தனம்ஆள்(க) என்றான் அயர்ந்து....463

ஆழிஉலகம் அளித்தாய் அரும் தவனுக்(கு)
ஊழின் முறைபறவை ஓம்பினாய் - ஏழை
அடியேம் பொருளோய் அருளுக என்று ஏத்திப்
படிமேல் விழுந்தான் பதைத்து....464

பொருவலிசால் மேருப் பொலன்வரையை ஓத்த
இருசிலைஉண்டு அன்னான் எழில்சேர் - கருமுகிலும்
காயாவும் ஒத்த கதிர்ஒளியும் காளநுகர்
வாயானும் ஏற்றார் மலைந்து....465

அச்சிலையின் ஏற்றம் அறிவான் அன்று அந்தரத்(து)ஓர்
மெய்ச்சிலையினாரை விரைந்(து) ஏத்தக் - கைச்சிலையின்
ஏர்ந்து பொரும்கான் எறிந்ததே நெற்றிவிழி
சேர்ந்த பிரான் கைத்திண் சிலை....466

இருசிகன்தன் பால்இவ் இரும் சிலையை ஈய்ந்தான்
கருமுகில்நேர் கஞ்சமலர்க் கண்ணன் - ஒரு சிலையை
இந்திரன் பால் வைத்தான் இளம்பிறை மேல் பை அரவம்
முந்தணிந்த ஆதி முதல்....467

இத்தன்மை ஆதலின் அவ் ஈனச்சிலை முறித்தது
அத்தன்மை வீரம் அதுஆமோ - பைத் தலைய
நாகஅணையான் வில்இதனை நாண் ஏற்றுக என்று அளித்தான்
மாகவரை ஒப்பான் வலித்து....468

வாங்கியவில் வாங்கி வளைத்தான் இவ்வன் சிலையின்
ஓங்கும்வடி வாளிக்கு உணவுஅளித்தி - ஈங்கு எனலும்
சந்திதவம் தந்தேன் தடுத்(து) ஆள் என அளித்தான்
அந்தணர்பா லன்புடையான் ஆங்கு....469

மழுவுடைய வள்ளல் மகிழ்ந்து ஏத்தி நீங்கத்
தொழு(து) அமரர் வாழ்த்தித் துதிப்ப - வழுவிலாத்
தாதை மகிழத் தடமாநகர் அடைந்தான்
வேதமுத லாகியஅவ் வேள்....470

அல்லி முகைஅவிழ அம்புயம் போதுஆறுபடச்
செல்வரால் பாயும் திருநாடன் - சொல்வலிசால்
ஆழி உலகம் அளித்தான் அரும் கிளைகள்
வாழ அறம் வாழ மகிழ்ந்து....471

மாதாதை ஊதி வரிபாடும் பூம்பொழில்சூழ்
மூதாதைதன் நகரம் முந்தினான் - கோதுஇல்
விரதம் தவம்தூய்மை மெய்அன்பு கொண்ட
பரதன் சரதன் புரிந்து....472


பாலகாண்டம் முற்றும்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2. அயோத்தியா காண்டம்


2.1. மந்திரப் படலம்
சாத்துவார் தண்ணம் துழாய்கொண்டு தன்பதத்தை
ஏத்துவார் உள்ளம்என இசைப்பாம் - சீர்த்தகையோர்
தம்பிரான் தேவர் தனிப்பிரான் சத்துவம்சேர்
எம்பிரான் வாழும் இடம்....473

திங்கள் குடைஇலகச் சேய்இழையார் செங்கைஇடைத்
துங்கக் கவரி சுழன்றுஅலையப் - புங்கம்உறு
மந்திரம் செய்மாட வரைபுகுந்து வீற்றுஇருந்தான்
இந்திரனை ஒப்பான் எழுந்து....474

ஆங்கு அடைந்தபின்னர் அயல் உறைவார் நீங்கிடுக
ஈங்கறிஞர் போத இசைமின்எனத் - தேம்கமழ்தார்
ஏந்தல் உரைப்ப எதிர்ந்தான் இகல்கடந்த
வேந்துமுனி வென்றமுனி வேந்து....475

உற்றதுணையும் உறுபகையும் ஓர்ந்து உரைப்பார்
குற்றம் இலாக் காட்சிக் குறிஉடையோர் - வற்ற
அலைக்கடலை உண்ட அகத்தியனை ஒப்பக்
கலைக்கடலை உண்டோர் கணித்து....476

பாவத் தருவைப் பறித்தார் படுபகையாம்
கோபக் கனலைக் குளிப்பித்தார் - சாபக்
குறிஎனவே காலம் குணித்துஉரைப்பார் காம
வெறிகடிந்த மேலோர் வெறுத்து....477

வருமுறையின் எய்தி வணங்கினார் மன்னன்
தருமுறையின் ஆசனமும் சார்ந்தார் - பெருமுறையின்
ஆங்குஅவரை நோக்கி அறைந்தான் அறைகழல்கால்
ஓங்குவரைத் தோளான் உணர்ந்து....478

வெம்கதிரோன் தன்குலத்து வேந்தர் எனவிளங்க
இங்கு உலகக் காவல் இசைஆரத் - திங்கள்என
ஓர்அறுபான் ஆயிரம்ஆண்டு ஆண்டோம் பின்னும்வலியால்
வீரம் குறையா விதம்....479

மாதம்ஓர் மூன்று மழைபொழிய மாதவமும்
வேதமொரு மூன்றும் விரிந்து ஓங்க - நீதி
அரசாட்சி செய்தேன் அகில முழுதும்
பரசாட்சி எய்தப் பரிந்து....480

பன்னகமும் பூட்கைப் பருப்பதமும் தான்பரித்த
மன்னுலகம் ஆளும்வரம் வேண்டேன் - மின்னின்
இறந்தவரும் யாக்கை இனிஅடையா மார்க்கம்
மறந்துஉறைய மாட்டேன் மருண்டு....481

நற்கதி ஒன்றேறா நவைதீரப் பெற்றயான்
பிற்கதியை எய்தல் பிழைஎன்னோ - முற்கதியின்
முந்துமா வுற்ற முதுப்பருவம் மூண்டிடுங்கால்
இந்தஉலகு ஓம்பல் எவன்....482

மண்புரத்தல் நல் ஒழுக்கம் மன்னர்தமக்கு என்றாலும்
கண்புரக்கு நல்இமைபோல் காணுவீர் - விண்புரக்கும்
வேந்தன்எனக் காரிகையார் மெய்ச்சுகத்தை நச்சிடுதல்
சாந்துணையும் என்னாம் தகைத்து....483

செருக்களத்தில் மாளான் திருவனைய நல்லார்
பெருக்கமதில் வாழ்வுஉடைய பித்தன் - முருக்கிதழ்வாய்
மங்கையர்கள் ஏசும் வயோதிகத்தன் என்றதற்பின்
தங்குவதோ நல்அறிவு தான்....484

துறந்து பெறுதல்இன்றித் தொல்உலகில் அம்மா
அறம்புரிந்து ளோரும் அயலே - மறம்புரிந்து
வென்றோரும் செல்வம் மிகுத்தோரும் பெற்றாரோ
குன்றாநலன் அடையும் கோள்....485

பிறந்து பெறும்பயனைப் பேசில் அறிவீர்
துறந்து பெரும்பயனே சொல்வார் - திறம்புரிந்து
மேலா நலன்அடைய வேண்டும்இவண் என்றுஉரைத்தான்
தாவா நலம்புனைவோன் தான்....486

வரும்விதியின் கோட்பால்அம் மன்னவன் சென்றுஏகப்
பெருவலியான் இவ்வுலகம் பேணல் - வரன்முறையாம்
என்னா வலித்தார் இவைநன்று எனமொழிந்தார்
பொன்னாம் உளத்தார் புகழ்ந்து....487

தன்கருத்து நோக்கும் தலைவன் திருக்குறிப்பு
மன்கருத்து மேலான மந்திரிமார் - நன்கருத்து
முற்றும் உணர்ந்து மொழிந்தான் முதுமறைதேர்
நற்றவனாம் மேலோன் நயந்து....488

வண்டுஅரற்றும் தாரோய் மகிதலம்வாண் நேமியினால்
பண்டுஉருட்டி ஆண்டோர் பலர்அவரில் - கெண்டைவிழிச்
செங்கமல மாதுவளர் சீமானைப் பெற்றெடுத்தார்
இங்குனையே அன்றி எவர்....489

கராமடிய யானைதனைக் காத்த முதலே
இராமன்என உற்றான் எனில்இங்கு - அராவகிலங்
காத்தர்க்கு மற்றவரைக் காண்கிலேன் காசினிமான்
பூத்ததவம் அன்றோ புகல்....490

மண்ணுக்குச் சான்ற வடிவுஉடைய சானகிதன்
கண்ணுக்குச் சான்ற கவின்உடையான் - எண்ணூம்
புவிக்குஇசைந்த தோள்உடையான் பூமான்எம் கோமான்
அவிக்குஇசைந்தான் ஈங்குஇவனே யாம்....491

உச்ச நிலைமீதில் உணர்வுறுத்திக் காண்பவனும்
அச்சம் அகற்றி அளிப்பவனும் - பச்சைமணிப்
பூங்காவு மேனிப் புயலே எனப்புகன்றான்
ஆங்காரம் அற்றான் அறிந்து....492

அவ்வுரையைக் கேட்டான் அரசர் பெருமானும்
எவ்வம்இனி இல்லை எனமகிழ்ந்தான் - செவ்வித்
திருமுகமே நோக்கிஇவை செப்பினான் தேர்ந்து
கருமம்உணர் மேலவனக் கால்....493

மன்னா நினதுகுல மன்னர் வரன்முறையை
உன்னா(து) இழைப்ப(து) ஒழுக்கன்றால் - என்னாமுன்
தேங்கமழ் தார்ச்செல்வத் திருப்பவள வாயானை
ஈங்குஅழைத்தி என்றான் இருந்து....494

தொழுதுபணி சூடிச் சுடர்நெடும்தேர் தூண்டி
எழுஅடுதோள் மைந்தனிடம் வந்து - ஒழிவில்
கருணைமுக நாடிக் களித்தான் இறைஞ்சி
வருகருமம் சொல்வோன் மதித்து....495

தார்க்கொந்து அவிழும் தடம்புயத்தாய் தாதைநினைப்
பார்க்கும்படி அழைத்தான் பாங்கு என்னப் - போர்க்கும்
பணைமுரசம் ஆர்ப்பப் படர்ந்தான்பொற் றேர்மேல்
அணைஅரவ மாயோன் அமர்ந்து....496

பார படீரப் பணைமுலையார் வாழ்ந்துஒலிப்ப
தேரும் கவரி திரண்டுஅலைய - நேரும்
கொடிமருகில் சென்றான் கொழுநீலம் காயா
வடிவுஉடைய பூமான் மகிழ்ந்து....497

எள்பொரியின் மேவி எழுந்த சிலஇளநீர்
உள்பசலை பூத்த ஒருசிலவே - மைப்பயிலும்
கண்சிவந்த காமக் கனலால் கழைஅடர்தோள்
பண்சிவந்த வாயார்தம் பால்....498

நாகம் அனையான் நரேசன் இருந்துதுழிச் சென்று
ஏக மனதாய் இருந்தவனைப் - பூகமுற
முற்பணிந்து போற்றி முறையால் வணங்கினான்
தற்பயந்த தாதை சரண்....499

எழுந்து இறைஞ்சு மைந்தன் எழிலார் அகலம்
அழுந்த அணைத்தான் அயன்சேய் - இழுந்தகலா
ஆக்கையொடும் துறக்கம் ஆயினான்போல் ஆனான்
மாக்கைஅரி அன்னான் மகிழ்ந்து....500

முத்தத் துவத்தின் முடிவுறுவான் வேண்டிடுமென்
சித்தத் துவக்கொழியச் செய்வாய்என்று - இத்தலையில்
கூவியது மைந்தவெனக் கூறினான் கோகனகத்
தேவிஅருள் பெற்றான் தெரிந்து....501

மன்னன் உரைத்தன் மறுப்பதுஅறம் அன்றுஎனவே
உன்னி எதிர்மாற்றம் உரையானால் - பன்னி
வெறுப்பர் எவைஎனினும் மேலோர்சொல் வாய்மை
மறுப்பரோ நல்லோர் மதித்து....502

குறிஅறிந்து வேந்தர் குழுத்தொடரச் சென்றான்
நெறிஅறிந்து தேர்மேல் நிருபன் - பொறிஅறிந்த
மாதவரும் வேதியரும் வானவரும் வாழ்த்தியம்பச்
சோதிநெடும் கோயில் துனைந்து....503

அஞ்சனக்குன்று அன்ன அரியேறும் அம்பொன்மணிச்
செஞ்சுடர்ப்பொற் றேரின்மிசைச் சென்றானால் - கஞ்சமலர்
பூத்து அலர்ந்த காளமுகில் போல்தனது கோயில் இடை
ஏற்றுஅமரர் ஆசிசொல வே....504

மன்னர் வருகஎன வான்சிறைப்புள் கோஉறையும்
பொன்அவிரும் தாமப் பொலன்தோடு - நன்னர்உறப்
போக்கினான் செல்வப் புரிஅணிமின் என்றுஉரைத்தான்
வாக்கின் நேரில்லாத மன்....505

அங்கிருந்த மன்னர்க்கு அடைவே அறிவித்தான்
சங்குஅணிந்த கையான் தனக்குஅரசுஎன்று - இங்கிதம்தேர்
அன்னவரும் தங்கட்(கு) அரசுஅணைந் தாம்எனவே
மன்னினார் உள்ளம் மகிழ்ந்து....506

கம்பமத யானைக் கடல்வேந் தனும்கணிதக்
கும்பமுனி அன்னவரைக் கூவினான் - செம்பொன்முடி
சூட்டும்தாள் மைந்தனுக்குச் சொல்கஎனச் செப்பினான்
வேட்டனிசேர் தாரான் மிடைத்து....507

பூளை முடிவேய்ந்த புராதனனை ஒப்புஅமைவார்
நாளை முடிபுனையும் நாள்என்ன - வாளை
பெருகும் வயல்நாடன் பெருமுனிவன் தன்னை
வருகஎன வந்தான் மகிழ்ந்து....508

வந்தமுனிவன் வதன மலர் நோக்கி
மைந்தன் தனக்கு மனுநீதி - முந்தஅருள்க
எந்தாய் எனலும் இனிதே எனநடந்தான்
சந்தாவன் இல்லாத் தவன்....509

கங்கைநீர் பாயும் கங்கை வளநாடன்
சங்க முனிவன் தனைஎதிர் கொண்டு - அங்கண் அரி
ஆதனத்தில் ஏற்றி அடிஇறைஞ்ச அந்தணனும்
நீதிஇவை சொற்றான் நினைந்து....510

ஆரணனும் ஆதி அரனும் அடல் ஆழி
வாரணனும் வானவர்க்கு மன்னவனும் - பூரணமாய்
கற்றுஅறியும் அந்தணர்தம் காட்சியினால் பேர்ஆற்றல்
உற்றனர்என்று ஓர்வாய் உளந்து....511

ஆற்றல் அமைந்த அரன்ஆ தியர்எனினும்
ஏற்றஅருள் இன்றி இருப்பரேல் - சேற்றவளை
ஆமைஎழில் காட்டும்அகன் பணைசூழ் நன்நாடா
மானம்உளர் என்றே மதி....512

அருள்உடையன் வண்மை அறிவுஉடையன் தூய
பொருள்உடையன் மங்கையரால் போந்த - இருள்உடைய
காமம்இலான் என்னில் கடல்உலகில் கார்வண்ணா
சேமம்அல்லால் தீமைஉண்டோ செப்பு....513

தேவர்க்கும் எல்லாத் திசையும் புரப்பவர்க்கும்
யாவர்க்கும் மேலா அடல்மைந்த - மூவர்க்கும்
மந்திரத்தோர் வாய்மை மறவாது இருத்தலே
அந்தரம்என்று ஆய்தி அகத்து....514

ஏனை அறியும் இயம்பினான் எம்பெருமான்
ஆனை அளித்தான் அமர்ந்துஉறையும் - தானமதை
நண்ணினான் ஆற்றும் நலம்புரிந்தான் நாரணனை
எண்ணினான் யோகத்(து) இருந்து....515

தாடாளான் வேதத்தலை உறைவோன் தாமம்உற
நாடாள்தல் நாளைஎன நண்ணியே - கோடுஆர்ந்த
வள்வார் முரசம் அறைவித்தார் வள்ளுவர்கள்
தெள்வார் அமுதம்எனத் தேர்ந்து....516

பூங்கமுகம் தாழைபலா பொற்கதலி நாட்டிமணி
ஓங்கநெடும் பந்தர் உஞற்றினார் - தேம்கொள்அணி
நாற்றினார் நாலுமறை நாயகனை ராகவனைப்
போற்றினார் வாயால் புகழ்ந்து....517

பொன்நாடோ நாகர் புகழ்நாடோ போற்றரிய
என்நாடோ என்றுஎவரும் எண்ணவே - தென்நாடும்
பல்அணியால் பல்மணியால் பல்கலனால் பல்மலரால்
நல்லணிகள் வேய்ந்தார் நகர்....518

பூரண கும்பங்கள் பூரித்தார் பொற்கிரிதேர்
வாரணங்கள் உய்ந்தார் வளன் அமைந்த - தோரணங்கள்
நாட்டினார் அந்தணர்க்கு நல்கினார் நல்நிதியம்
பூட்டினார் ஆரம் புனைந்து....519


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.2. கைகேசி சூழ்வினைப் படலம்
அவ்வழியில் வெய்ய அரவம்போல் அன்புஅறியா
வெவ்அரக்கர் செய்த வினையேபோல் - கவ்வைஉற
மூன்று உலகம் கம்பம்உற மூளும் ஒரு காலம்போல்
தோன்றினாள் கூனி துணிந்து....520

மருவளர்ந்த செந்தா மரையலர்ந்த மின்னின்
உருவளர்ந்த பூங்கொடிபோல் ஒங்கித் - திருவளர்த்த
மஞ்சத்தின்மீது வளர்ந்துஅருள்கை கேசி தன்பால்
நஞ்சத்தின் சார்ந்தாள் நனி....521

வந்தகொடும் கூனி மலர்க்கழலைத் தீண்டிமணிப்
பைந்தொடிதன் பாப்புஉறக்கண் பார்த்திருந்து - நொந்திலர்போல்
ஒன்றும் தெரியாது உறங்குதியோ என்றுஉரைத்தாள்
கன்று மனத்தாள் கதழ்ந்து....522

கூனி உரைப்பக் கொடி அனையாள் கூனியடி
ஆனிஎவன் அன்னோ அடுப்பதுவாம் - தேனைப்
பொழியாய்ப் புதல்வர் புறத்துஇருப்ப மற்றென்
அழிவுஉண்டாம் என்றாள் அறிந்து....523

செந்தாமரை போல் சிவந்த திருவிழியான்
எந்தாய் இராமன் இருக்கவே - நொந்தாய்
வினைஉளதோ இச்சொல் விளம்புவதுஎன் நீதி
தனைமதியாது என்றாள் தடுத்து....524

அவ்வுரையைக் கேட்டாள் அறிவில் கொடும்கூனி
நவ்வி விழிமயிலே நானிலத்தை - தெய்வத்
திருஇழந்தாய் வாழ்ந்தாள் சிறந்தாள்என் தேவி
உருவளர்த்தாள் கோசலைஎன்று ஓர்....525

அன்னபடி ஓத அறிவுஇல்லாள் அம்புவிக்கோர்
மன்னவர்கள் மன்னன் மணவாளன் - பொன்னிதழ்ப்பூம்
கொந்துஅவிழும் கூர்வேல் குலப்பரதன் மைந்தன்எனின்
வந்ததுஎன்னோ மாற்றுஅவட்கு மாண்பு....526

இலம்கிளியே பெண்கொலைசெய் ஏடவிழ்தார் மார்பன்
களங்கனியே ஒப்பான கள்வற்கு - உளங்கனிந்து
காளையே அன்னான் கவிக்கும் கனகமுடி
நாளையே என்றாள் கனன்று....527

கேட்டாள் உவகை கிளர்ந்துஏறக் கேழ்கிளர்ப்பொன்
தோட்டுஆரம் நீட்டுதலும் தோமிலா - நாட்டம்
சிவந்தாள் சிறுவாயைத் தின்றாள் திண்கூனி
உவந்தாயோ என்றாள் உருத்து....528

பொன்னே மணியே புனமயிலே பூம்கிளியே
அன்னே இராமன் அரசானால் - இன்னேஉன்
மைந்தன் பரதன் வனம்அடைதல் மாண்புஅன்றோ
சிந்தையினால் எண்ணுக தீர்ந்து....529

மன்னர் குலம்பிறந்து மன்னர் குலம்புகுந்து
மன்னர் வணங்கும் வரம்பெற்றாய் - இன்னல்
தழல் வீழ்வாய் அந்தோ தனியாகித் துன்ப
விழல்வீழ்வாய் என்றாள் வெறுத்து....530

எனக்குநீ அல்லை இனிஉலகம் காப்பான்
தனக்கு நீஅல்லை தனுவின் - மனக்கொடியாய்
எல்லார்க்கும் நல்லன் இராமன் அவற்குரியது
அல்லாதுஎன் சொன்னாய் அடி....531

தேவரினும் மற்றைத் திசை உறைவோர் தங்களினும்
யாவரினும் நீதி முறை ஆயுங்கால் - ஏவரினும்
மூத்தவற்கே ஆட்சி முறைஎன்றாள் மூவுலகும்
ஏத்தும் மகப்பெற்றாள் இனிது....532

என்முன் அகல்திஇன்று இச்சிலர்கள் ஈங்கறிந்தால்
துன்மதிநிற் கொல்லத் துணிவராம் - நின்முதிய
நாஅறுக்கு முன்னம் நடஎன்றுஇவை மொழிந்தாள்
கோவருக்கம் ஏத்தும் குயில்....533

தீதுஅமைந்தோர்க்கு எத்துணையும் செப்பவல்லார் செப்பினும்அப்
போதனைசென்று ஏறாப் புதுமைபோல் - நீதிநெறித்
தேன்இனிது சொற்ற திறன்அறியாத் தீயகுணக்
கூனிஇவை சொற்றாள் கொதித்து....534

மூத்தவர்க்கு வாய்த்த முறைமையேன் மூவுலகம்
காத்தவற்கு மூத்தவனோ கண்ணனார் - வாய்த்த
பொருள்அழியா ஏழை புகழ்அடைதி போலாம்
அருள்அழியா மாற்றாள் வயின்....535

மன்னவர்கள் மன்னன் மனையாட்டி என்றுஅறிந்து
முன்னி இரந்தான் முதுமறையோர் - வன்னமயில்
கோசலைபால் ஏற்றுக் கொடுத்தியோ கோமாட்டி
பூசுதியோ சாந்தம் புனைந்து....536

மன்னன் மிதிலையோர்கோன் மார்ச்சனகன் வானவர்கோன்
என்னவே வாழ்வன் இனிக்கண்டாய் - நின்னில்
பிறந்தார்க்குஎன் வாழ்வு பிறிதும் உளதாமோ
மறந்தாயோ அந்தோ மதி....537

உன்நெஞ்சே போல உரன்இலா என்மனமும்
கன்நெஞ்சோ பாவி கரைவேனோ - இன்னம்
மனம்தரிப்ப தில்லைஎனை வைதுவதைசெய் என்று
இனம்பிரிப்பாள் சொற்றாள் இவை....538

அந்தணர்கள் தேவர் அரும்தவத்தால் நல்அறத்தின்
வந்தனையான் நீதி வரும்பயனால் - சிந்தை
மறந்தாள் அக்கூனி வடித்தமொழி தன்னால்
துறந்தாள்தன் வாய்மைத் துணிபு....539

வருமந் தரையேஎன் மைந்தன் அரசுஎய்தும்
கருமம் தலைக்கட்டிக் காத்துஎன் - தெருமந்த
சிந்தைஉவப்பு எய்துமா செய்திநீ என்றுஉரைத்தாள்
கொத்தவிழும் கேகயர்கோன் கொம்பு....540

தானவர்ஏ றாகியஅச் சம்பரனைச் செற்றஅன்னாள்
மானம்உறப் பெற்ற வரம்இரண்டால் - மானப்
பரதன் புவிஆளப் பத்துநா லாண்டு
வரதன்கான் ஆள மதித்து....541

வேந்தன்பால் பெற்று விடுதிநீ என்றுஇசைப்பச்
சாந்துஅளவும் பொன்னம் தடமுலையாள் -ஆய்ந்துஉணர்வோடு
என்ஆ ருயிர்த்துணநீ என்றுஇருகை கொண்டுஅணைத்துப்
பொன்ஆரம் தந்தாள் புகழ்ந்து...542

கூனி அகலக் குழை மருவு காதுஅணியும்
ஏனை அணியும் இறநீத்தாள் - சோனைநறும்
கூந்தல் அவிழ்க் குலைத்தாள் கொடிஎன்னச்
சாய்ந்து கிடந்தாள் தாரை....543

அப்பொழுது மன்னன் அடைந்தான் அவள் அகத்து
மெய்ப்புழுதி யார விரைமலர்ப்பூம் - கொப்புஎனவே
வீழ்ந்து கிடந்தமட மெல்லியலைக் கண்டுமனத்(து)
ஆழ்ந்த துயர்உற்றான் அயர்ந்து....544

மண்ணுக்கு(கு) இசைந்த மடமயிலே வன்தரைமேல்
விண்ணுக்(கு) இசைந்த ஒளிமின்போல - நண்ணிக்
கிடப்பதுஎவன் என்னாக் கிளர்ந்(து)இருகை கொண்டுஆங்கு
எடுத்துஅணைத்தான் மார்போடு இணைத்து....545

மன்னும் தவள மதிவெண் குடைநிருபன்
மின்அனையாள் தன்னை விளங்கிழையாய் - என்னை
உனக்குஇடர்வந்து உற்றது உரைஎன்ன ஓதக்
கனக்குழலாள் சொற்றாள் கனன்று....546

காரில் சிறந்தகொடைக் காவலநின் கண்அருள்என்
ஆர்வத்து அடங்குதலின் அற்றதினால் - வீரப்
புலிஏறு அனைய திறல்பூமா இவ்வாறு
மெலியனோ என்றாள் வெகுண்டு....547

என்றாளை நோக்கி எனதுஉயிரே என்துணையே
மின்தாழ வீழ்ந்த(து)அன்ன மெல்லியலே - இன்றே
நினைத்த(து) எலாம்ஈய்வன் நிகழ்த்துதிநீ என்றான்
பனைத்தடக்கை மாஅனையான் பார்த்து....548

என்றபொழுதின் இடம்விரித்த பூங்குழலாள்
நன்று நடுவுடைய நாயகனேல் - அன்று
கொடுத்தவரம் இரண்டு கோடாது அருள்என்று
எடுத்து மொழிந்தாள் எதிர்....549

வஞ்சம் அறியான் மறுஇல் மனம்உடையான்
வஞ்சி அனையாய் மடமயிலே - நஞ்சம்
பொருமான் விழியாய் புகல்வரங்கள் இன்னே
தருவன்இசை என்றான் தளர்ந்து....550

பத்துநா லாண்டு பரதன் உலகுஆள
மைந்தமுகில் அன்னான் வனம் ஏக - ஒத்த
வரம்இரண்டு தாஎன்றான் மைஅணிந்த நீலக்
கரம்இரண்டு கொண்டாள் கசிந்து....551

நஞ்சம் உண்டயானை எனநாகாதி பன்அனையான்
வஞ்சமட மால்உரைத்த வாசகத்தால் - அஞ்சி
அழிந்தான் அகிலத்(து) அருவரையது என்ன
விழுந்தான் அயர்ந்தான் மெலிந்து....552

ஆவிஉலையும் அயரும் அயர்ந்து அடங்கும்
பாவி உரைத்தாள்பழி என்னும் - நாவி
பருகினான் என்னப் பதைக்கும் பரிவால்
உருகும் உழைக்கும் உயிர்த்து....553

தெய்வச் செயலோ திகழ்அறத்தின் பேர் அறனோ
வைவச் சுதமன் மரபுக்குஓர் - கௌவை
பிறக்கும்நாள் உண்டோ பெரும்பாவி வெம்சொல்
மறக்கும்நாள் உண்டோ மனம்....554

தேனே மயிலே தெவிட்டாத தெள்அமுதே
யானோ விருத்தன் எனைவருத்தல் - கான்ஏகா
வண்ணம் கருமேக வண்ணனைநீ காத்திஎன்றான்
எண்ணவர்க்(கு)ஏறு அன்னான் இணைந்து....555

ஈய்வன்எனச் சொன்னவரம் ஈயாய் எனில்இன்னே
மாய்வன்எனக் கேகயர்கோன் மான்உரைப்ப - நோயில்
சுழன்றான் அறிவுஅழிந்து சோகத்து இருந்தான்
உழன்றான் இருந்தான் உலைந்து...556

ஆயிரம்நா அந்தோ அலரோன் படைத்திலன்ஓர்
வாயில்எவ் வாறு வருந்திடுவேன் - தீயில்
கொடியாள் பழிபாவம் கொண்டாள்சொல் கேட்ட
படியாளும் மன்னவன் பரிவு....557

கண்வேண்டு மேனும் கலங்கியஎன் ஆவியொடு
மண்வேண்டு மேனும் மறுத்துரையேன் - என்வேண்டும்
பூவைமொழிக் காவியங்கண் பொன்னேஎண்ணா(து) அளிப்பன்
தேவைஎது என்றான் திகைத்து....558

சீர்இயன்ற வெய்யோன் திருக்குலத்தில் வந்துஉதித்தாய்
நேர்இயன்ற நீதி நிரம்பினாய் - கார்இயன்ற
வான்அறிய மண்அறிய மற்றுஎனக்குத் தந்தவரம்
ஏன்மறுத்தி என்றாள் இசைந்து....559

புள்பொருட்டால் தன்உடலைப் போக்கியஅப் போர்வேந்தை
நட்பமையும் மாவலியாம் நல்லோனைக் - கண்புலனில்
காணாய் எனினும்அவர் காதைஉளம் தேர்ந்திலையோ
பூண்ஆர மார்பா புகல்....560

என்உயிரே என்மணியே என்அப்பா என்சிறுவா
மன்னர்பிரான் உன்னை மறந்தானோ - மன்னும்
வரதாஇ ப்பாவி வயிற்றில்ஏன் வந்தாய்
பரதாநீ என்றாள் பரிந்து....561

மூஉலகம் வேண்டுகினும் முன்ஈவேன் நீமொழியும்
மாவரம்தந் தால்உலகம் வாழுமோ - பூவைநல்லாய்
என்றுஅடியில் வீழ்ந்தான் இரும்புவன வேந்தர்எலாம்
துன்றுஅடியில் வீழும் துரை....562

அல்லி அரும்ப அரவிந்தம் வாய்நெகிழ
எல்இலங்க வானம் இருள்இரிய - ஒல்லென்று
ஒலிஆழி வையம் உவந்துஇறைஞ்ச உற்றான்
கலிஆழித் தேர்மேல் கதிர்....563

முற்பொழுதில் ஐயன் முடிசூடும் நாள் என்ன
நற்புளகம் ஏற நகைமுகமாய்ப் - பொற்புஅணியார்
குங்குமக் கோட்டு ஆரமுலைக் கோதையரும்ஆடவரும்
பொங்குவகை உற்றார் புரிந்து....564

கோசலையை ஒத்தார் குலக்கொடியார் கோகனகப்
பூசுரனை ஒத்தார் புவித்தேவர் - தேசுறுமெய்
மன்னவனை ஒத்தார் வயவேந்தர் மற்றவரை
என்இனிஎன் சொல்வது எடுத்து....565

மதிபவளம் செந்தா மரைஅமுதம் வண்ணக்
கதிர்வதனம் செவ்வாய் கரும்கண் - துதிபெறும்சொல்
மாதரம் பொன்மேனி மயில்அனையார் வந்துஎதிர்ந்தார்
காதலொடும் உள்ளம் களித்து....566

ஆய அளவில் அரவிந்த மாமலரோன்
சேயான் குசமுதல சேகரித்துத் - தூயமறை
அந்தணர்கள் சூழ அடைந்தான் அணிமாடம்
சந்த மறைமுழங்கத் தான்....567

கங்கை முதலாய்க் கடல்இறுதி யாய்அமைந்த
சங்கமுக தீர்த்தம் தனைஏத்தி - மங்கலம்சேர்
அங்கா ரகனை அருச்சித்(து) அறம்புரிந்தான்
சிங்கா தனமும் தெரிந்து....568

ஏய பிறவும் இழைத்தான் இருந்தவனும்
தூய சுமந்திரனைத் தொல்லோய்நீ - நாயகனைத்
தந்துஅருள்க என்றுஉரைப்பச் சார்ந்தார்அத் தார்வேந்தன்
விந்தைஉறை கோயில் விரைந்து....569

கொந்து அவிழ்தார்க் கோமான்இருந்த குலமாடம்
வந்து அணைந்த(து)ஓர்ந்து மயில்அனையாள் - பைந்துளவத்
தாரானை ஈண்டுத் தருகஎனச் சென்றுஅடைந்தான்
ஆராய வல்லான் அறிந்து....570

தன்னையே ஓர்ந்து தனிஉறையும் தாசரதி
தன்னை இறைஞ்சிஇவை சாற்றுதலும் - அன்னமாய்
வேதம் தருபரனை வீழ்ந்துஇறைஞ்சிச் சென்றுஅடைந்தான்
நாதம்இயல் தேர்மேல் நனி....571

மன்னவர்கள் ஏத்த மறையோர்கள் வாழ்த்துஇயம்ப
கன்னல்மொழி மாதர்களிப்பு எய்த - மின்னுமணி
மாத்தடம்தேர் வந்துஅடைந்தான் வான்உலகும் மண்உலகும்
பூத்தவனைப் பூத்த புயல்....572

தோளும் குறுநகையும் தூய திருக்கமலத்
தாளும் கருணைத் தடம்கண்ணும் - நாளும்இனிச்
சேவிக்கும் வாழ்வு சிறந்தது எனத்துதிப்பார்
ஆவிக்கயல் விழியார் ஆங்கு....573

பட்டமரம் தளிர்க்கப் பால்ஒழுகும் மாமுகத்துச்
சிட்டன் எதிர்தோன்றத் திருக்குடையாள் - கட்டுஅவிழ்பூம்
தாமரைக் கைகூப்பி அடிதாழ்ந்தான் சகத்திரமாம்
நாமம்உடை எம்பெருமான் நன்கு....574

தானை ஒடுக்கிச் சரண்தாழ்ந்து நின்றுஅருள்சீ
மானைமுக நோக்கி இவைவகுத்தாள் - ஏனைப்
பழிஎல்லாம் ஒன்றாகப் பார்உதித்த பாவி
வழிஅல்லாத் தீயவிழி மாது....575

தந்தை உரைத்த தனிமொழிஒன்று உண்டுஉனக்கு
மைந்தாஎனக் கூறுதலும் மாதாவே - நும்தமது
வாய்மொழி என்றாலும் மறுப்பனோ என்றுஉரைத்தான்
பேய்மொழியும் கேட்கும் பிரான்....576

ஆழிஉலகம் அடல்பரதன் ஆள்தரநீ
ஏழ்இரண்டுஆண்டு எல்லை இருங்கானம் - தாழ்சடைகள்
தாங்கித் தவம்புரிக என்றான்நின் தாதைஎன்றாள்
வாங்கும்இடைக் கேகயர்கோன் மான்....577

எம்பிபரதன் இனிது அடைக இவ்வுலகம்
வம்பியலும் கானம் வதிவன்எனப் - பைம்புயலின்
சிற்றவைதன் பாதம்முடி சேர்த்தான் சிரித்துஎழுந்தான்
கொற்றவைசேர் திண்புயத்தான் கூர்ந்து....578

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.3. நகர் நீங்கு படலம்
இங்கு நடந்த தெனைத்தும் அறிந்துவகைப்
பொங்கும் கடல்குளித்த பூவைமொழி - நங்கையரும்
ஆடவரும் கொண்ட அரந்தைக்(கு) அளவுண்டோ
பாடவருமோ கவியால் பார்த்து....579

பன்னரிய காட்சிப் பரிப்போர்இப் பார்வேந்தர்
மன்னவனை ஒத்து மயங்கினார் - அன்னநடைக்
கோசலையை ஒத்துக் குழைந்தார் குழல்கோல
மூசுவரி வண்டுஅனையார் மொய்த்து....580

மாவாதம் தாக்கி மறிப்புண்ட மாமரம்போல்
ஆவாவென்று ஏங்கி அறிவுஅழுங்கிப் - பூவாரும்
வேந்தர்எலாம் வீழ்ந்தார் வெருண்டு அவ்விண்ணேறியுண்ட
பாந்தள்என உள்ளம் பதைத்து....581

மண்அழுத பொன்மா மரம்அழுத வாய்அலறி
விண்அழுத கோக்கள் மெலிந்தழுத - தண்ணம்
புனல்அழுத புள்அழுத பூஅழுத குன்றின்
வனம்அழுத மாஅழுத மாழ்ந்து....582

மண்செய்த பாவமோ மாமலர்மேல் வீற்றிருக்கும்
பெண்செய்த பாவமோ பேருலகில் - புண்செய்த
மீளா விருத்தம் விதியோ எனஅழுதார்
கேளார் நலிவு கிளர்ந்து....583

பரதன் அரசியற்றான் பாவியுரை மாறாள்
விரதன் வளத்திடையே மேவல் - சரதம்இனி
யாம்செய்வது என்என்று அழுவார் விழுந்துஅயர்வார்
தேன்செய்தார் வாடத் திகைத்து....584

கைகை நெடும்கூனி கலந்துஅழித்தார் காசினியில்
உய்கைஇனி உண்டோ உணர்வுறும்கால் - பெய்யுமலர்ப்
பொன்தோளான் தன்புறனே போதுநாம் அன்றுஎனில்ஈங்கு
எற்றோ இருப்பேம் இனைந்து....585

இத்தலையில் ஏங்கி இருந்(து)உழியில் இந்திரனை
ஒத்தசிறை வைத்தோன் உடல்குருதி - மொய்த்ததிரை
ஆறுஎடுப்பச் செற்றான் அறிந்தான் இவைஅனைத்தும்
போர்எடுத்தான் உள்ளம் புதைந்து....586

சிங்கத்துக்(கு)இட்ட திறல்ஊன் சுவை அதனை
செங்கண் சுவாக்(கு)அளிக்கும் செய்கைபோல் - நங்கைஎனும்
சிற்றாய் எடுத்த திறன்நன்று எனமொழிந்தான்
செற்றார்க்(கு) அரிஅனைய சேய்....587

வில் எடுத்து வாள்விசித்து வீரக் கழல்வீக்கி
சொல்எடுத்த தூணிபுறம் தூக்கினான் - மல்எடுத்த
பொன்னம் கிரிபோல் பொலிந்தான் புராரியெனப்
பன்னம்புஓர் கையில் பரித்து....588

பாதக்கழல் ஒலிப்பப் பாரச்சிலை ஒலிநாண்
மீதில் பொலிஇடியின் மேல்முழங்கப் - பூதக்
கணக்(கு)எலாம் ஓயக் கடையுகநாள் தோன்றும்
தணப்படையான் என்னவுருத் தான்....589

அண்டம் அளந்தாற்(கு) அனைத்(து)உலகும் தந்தபிராற்(கு)
உண்டுஉலகம் என்னா வுலோபர்முடி - கண்டம்உற
ஆக்குவன்காண் என்றான் அசுரேசர் காலன்எனும்
கோக்குமரன் அன்னான் கொதித்து....590

வான்உலகத்(து) உற்றோர் மலரோன் அரன்அரிமால்
ஏனைஉலகத்தோர் இகல் புரிவான் - தான்உறினும்
மங்கையர்தம் பேர்ஒழிய மாட்டுவன்என் றான்குருளைச்
சிங்கம் அனையான் செயிர்த்து....591

இவ்வண்ணம் ஊழிதிரிந்(து) ஏற்குநாள் இன்றுஎன்னக்
கைவண்ண வில்லான் கனன்றுழியம் - மைவண்ணப்
பைங்காவி மேவிப் பரமன்அறிந் தான்இளையோன்
உங்கார வில்நாண் ஒலி....592

இமைக்கும் சுமித்திரைகோ யில்இருந்து நீங்கி
அமைத்தடவில் லான்பால் அணுகி - உமைக்குஒருவன்
என்னக் கனன்றாய் எவன்இடம்ஈங்(கு) என்றுஉரைத்தான்
வண்ணக்கார் அன்னான் மதித்து....593

கண்ணாவென் கையில் கடும்கார் வலிஇருக்க
விண்ணோர் எனினும் விலக்குவரோ - வண்ணமுடி
நிற்களிப்பன் காண்என்றான் நீள்வெம் சிலைஅமைந்த
பொற்கிரியை ஒப்பான்அப் போது....594

பொன்னங் கிரிபோல் பொலிவோன் இதுபுகல
மின்னும் முறுவல் விளைத்தமலன் - என்னவி?து
உற்றனைவெங் கோபம்உனக்(கு) உண்டுகொலோ எங்கனநீ
கற்றனைநீ என்றான்அக் கால்....595

உடைமகுட நீக்கிஉனக்(கு) உற்றதுஅல என்று
சடைமகுடந் தந்துபுனஞ் சார்தல் - அடைவிதுஎனும்
பற்றிலியர் என்னப் பரந்தாம யான்பொறுமை
கற்றிலன் என்றான் கனன்று....596

நதியின் பிழையோ நறும்புனல் இல்லாமை
பதியின் பிழையோ பயந்தாள் - புதிய
மதியின் பிழையோ மகன்பிழையோ ஐயா
விதியின் பிழையே விளைவு....597

மானம் கெடுக்கும் மதிஅழிக்கும் வண்மையொடு
தானம் துடைக்கும் தவம்துறக்கும் - ஏனைப்
பெருநரகு சேர்க்கும் பெரும்கோபம் ஐயா
கருதுவரோ மேலோர் கணம்....598

பாவம் பழிமடவை பாராது வெம்தருகண்
கோவம் கொலைவருதல் கோள்உறுதல் - தீபம்எனும்
மாமதியே எண்ணாது மாற்றுதிநீ என்றுஉரைத்தான்
பூமகனைப் பெற்ற புயல்....599

அன்னையுநீ தந்தையுநீ அல்லவுநீ ஆதலினால்
முன்னைமுறை நீத்தல் முறைஆமோ - என்னை
விலக்கலைநீ என்றான் விலங்கலால் அன்று
கலக்கலைநீர் அன்னான் கனன்று....600

வில்எடுத்து போர்புரிந்து மேதினியைத் தான்புரத்தல்
மல்எடுத்தோய் தந்தைதனை மாதாவைச் - சொல்அடுத்த
முன்னவனைக் கொன்றோ மொழிஎன்று எடுத்(து)உரைத்தான்
மன்னவர்கள் மன்னன் மகன்....601

சினம்தணிந்து வள்ளல்மலர்ச் சீர்அடியைப் போற்றி
மனம்தணிந்து மாதாவை வாழ்த்தி - அனந்தன்எனும்
நற்கலையான் நாரணனை நாயகனைப் பின்தொடர்ந்தான்
வற்கலையைத் தான்உடுத்(து) வந்து....602

பொன்அணைந்த கோலப்புயல் அனையபோர் ஏற்றின்
பின்அணைந்து சென்று பிழையாமல் - மின்அணைந்த
பொன்வரைய அன்னாய் புகுதிநீ என்றுஇசைத்தாள்
மின்வரையும் கொம்புஅனையாள் மீண்டு....603

பின்னல் திரைக்கடல்சூழ் பேர்உலகில் பேசுங்கால்
மன்னச் சிறந்த மதியுடையோய் - நின்னை
எடுத்துரைக் காட்டாக ஏகுதிநீ என்றாள்
வடுக்கயல்நேர் கண்ணாள்பின் வந்து....604

தண்ணளியால் ஆன்ற தடம்கயல்கண் தாய்தனதாள்
வண்ணமுடி சேர்த்து வணங்கினார் - பண்அமைந்த
சொற்கலைகள் தாங்குமனத் தூயோர் தொழுதுஏத்த
வற்கலைகள் தாங்கி மகிழ்ந்து....605

தாழ்தல் பெருமை தவிர்தல் அவைவருதல்
ஊழ்வலியால் அன்றி உளதாமோ - பூவில்
படர்ந்தவனும் நெற்றிவிழிப் பண்ணவனும் காலம்
கடந்தனரோ என்றார் கணித்து....606

சீரை அணிந்த திருவரையன் தம்பியொடும்
காரை அனைய கரியோபோல் - பார்உறுதல்
கண்டார் படும்துயரம் கட்டுரைக்க ஒண்ணுமோ
அண்டர்பிரா னாலும் அறிந்து....607

வேதியர்கள் வேந்தர் விரிநகர்வாழ் மெல்லியர்கள்
சாதுசனர் மற்றுஎவரும் தான்அடைந்து - போதப்
பொலிவுஇழந்தார் பொன்றினார் போலவே ஆனார்
கலன்இழந்தார் என்னக் களைத்து....608

விழுந்தார் அயர்ந்தார் விதிஎன்று நொந்தார்
குழைந்தார் உயிர்த்தார் கொடிபோல் - அழிந்தார்
நலன்இழந்தோம் என்ன நடுங்கினார் காட்சிப்
பலன்இழந்தோம் என்றார் பதைத்து....609

வானமணி என்போன் வயவேந்தன் தேவியர்தம்
கான்அமரும் தாமரையும் கண்டுஆனான்- மானத்(து)
அளகேச னேனும் அரந்தை உறில்என்னாம்
விளையா வலம்வருதல் மெய்....610

இப்படியே நொந்துஇரங்கி எண்ணிலர்கள் சூழ்ந்துவர
ஒப்பிலா மன்னன் உயர்கோயிற்(கு) - அப்புறனே
சென்றான் செகம்ஏழும் தேவரும் மற்றுஏனையரும்
நின்றுஏத்து மேலோன் நினைந்து....611

அட்டில் இழந்த அனல்புகை நல்ஆர் அமிர்த
வட்டில் இழந்த வனக்கிளிகள் - தொட்டில்
குழவி இழந்த(து)இனிக் கூறுவதுஎன் கூறின்
அழும்ஒலியே எங்கும்உள தாங்கு....612

வேதம் இழந்தார்நல் வேதியர்கள் மின்அனையார்
கீதம் இழந்தார் கிரிஅனையர் - போதகங்கள்
தானம் இழந்த தகைஇழந்த வாம்புரவி
கானம் இழந்தஅறு கால்....613

வயல்மறந்த செந்நெல் மதிமறந்த வானம்
புயல்மறந்த மாரி பொழிதல் - நயமருவும்
ஆமறந்த கன்றுக் அரும்பா லுணவளித்தல்
காமறந்த தீந்தேன் கனி....614

கூந்தல் இழந்த கொழும்புகைகள் கூர்அமிர்தம்
மாந்தல் இழந்த மணிக்குழவி - வாய்ந்த
நடைஇழந்த பாய்மா நலன்இழந்த மாடம்
குடைஇழந்த வேந்தர் குழாம்....615

ஈண்டியஅத் துன்பமொடும் எல்லாரும் பின்தொடர
நீண்ட புகழோன் நெறிஅடைந்தான் - மாண்டகுலச்
சீதைஎனும் பேர்எழில்வாய் செங்கரும்கண் பால்மொழித்தண்
கோதை இருந்தமனைக் கு....616

ஆயம் புடைசூழ அந்தணர்கள் நொந்துவரத்
தாயர் உலைந்து தடுமாற - மேயஎழில்
சீரை தரித்துவரும் சேவகனைக் கண்டுஅயர்ந்து
வீரைஎவன் என்பாள் வெயர்த்து....617

என்றுஎழுந்த பொன்னை எதிர்மாமியர் தழுவி
நின்றுகலங்க நிபம் அறியாள் - ஒன்றும்
உணர்ந்திலாள் ஓர்ந்த(து) உரைத்துஅருள்க என்றாள்
நிணங்குலவும் வேலோன்முன் நேர்ந்து....618

சிற்றலையார் தன்வரத்தால் தெண்டிரைசூழ் இப்புவிக்குக்
கொற்றவனாம் நற்பரதன் கூர்விழியாய் - மற்றுஇனியான்
கானம் மருவிவரும் காலும் கனம்குழாய்
நீநலியல் என்றான் நினைந்து....619

பரதன் புவியளிப்பப் பாதவஞ்சேர் கான்வாய்
வரதன் உறும்என்ன வருந்தாள் - இரதம்உற
ஈண்டு இருத்திஎன்ன இசைத்ததற்கே ஏம்பலுற்றாள்
பூண்திருத்தும் பூங்கொடிநேர் பொன்....620

அப்பொழுதில் ஐயன் அயர்வதுஎவன் அன்னம்அனாய்
புல்படியும் கான்இடைநீ போதரினோ - வெற்கதிர்வாய்
கல்அரக்கும் கால்நினது கால்வருந்தும் என்றுஉரைத்தான்
மல்அரக்கும் தோளான் மறித்து....621

செந்தாமரை போல் தெளிந்த திருமுகத்தாய்
எந்தாய் இராமா இனம்பிரிந்து - நந்தாத
மான்போல்உன் னைப்பிரிந்து வாழ்வனோ என்றுஉரைத்தாள்
மீன்போலும் கண்ணாள் வெகுண்டு....622

கஞ்சமலர்க் கண்ணன் கருணைக் குறிப்புஅறிந்து
மஞ்சணியும் கோயில்அகம் மன்னினாள் - அஞ்சமென
வற்கலையும் தாங்கி மருவினாள் மாதவன்பால்
பொற்கலைகொள் மெய்யாள் பொலிந்து....623

அச்செயலைக் கண்டு அனைவரும் அந்தோஉருகிப்
பிச்சர் எனமயங்கிப் பேதுற்றார் - நச்சயின்ற
பங்கியையும் ஒத்தார் படர்வான் ஒளிஇழந்த
சக்கியையும் ஒத்தார் தளர்ந்து....624

வற்கலைபூண்டு ஐயன் மருங்குவர மன்னர்பிரான்
நற்கலையார் அன்ன நடையாளே - பொற்கலைசேர்
கான்இடத்து நீவருதல் கண்கலக்கம் என்றுஉரைத்தான்
மானிடத்து வந்தருளு மால்....625


உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.4. தைல மாட்டு படலம்
சீரை புனைந்து திருமகளார் பின்செல்ல
தீரன் இளயோன்முன் செல்லவே - பேரும்
பெருமானைக் கண்டார்தம் பெற்றிமையான் பேச
வருமோஓர் வாயால் மதித்து....626

மன்னும்அறம் புரிந்த மாதவத்தான் மங்கையுடன்
பொன்னம் பொருப்பனையான் போதரவே - வன்னமணித்
தேர்மீது சென்றான் தெரிந்தார் செயலற்றுப்
பார்மீது சென்றார் பதைத்து....627

அவ்அளவில் வெய்யோன் அருந்துயர மென்கரத்தில்
வெய்யதுஎனத் தேர்மேல் விரைந்(து)அணுகி - மெய்அயர்ந்தான்
அத்தன மாகவெதி ரந்நகர்மாந் தர்முகமே
ஒத்தனவா லம்போரு கம்....628

காதம் இரண்டு கழியக் கடல்அனையான்
மாதவம்செய் தம்பி மருங்குஉறையச் - சீதையுடன்
கல்லணைமேல் பஞ்சணையில் காத லுடன்விரித்த
புல்லணைமேல் கண்துயின்றான் போந்து....629

நண்படைய முன்புஅடைந்த நாரியரும் ஆடவரும்
கண்படைகொள் காலம் கருதினான் - பண்படைந்த
சூதன்முகம் நோக்கிஇவை சொன்னான் சுரர்பொருட்டு
சாதமது கொண்டான் தரை....630

ஈங்கு துயில்வோர் எழுமேல் செலவரிது
நீங்குகநீ யென்ன நினைந்(து)உருகித் - தாங்கரிய
ஏதக் கடல்வீழ்ந்து எழுந்தான் இவைமொழிந்தான்
நாதத்தேர் வல்லான் நலிந்து....631

நட்டுவத்து கானகத்து நாயகனைப் பூமகளை
விட்டுவந்தேன் என்று விளம்புவனோ - கட்டமைந்த
வன்சிலையாய் பெற்றுஎடுத்த மாதருக்கும் மற்றவர்க்கும்
என்சொல்வன் என்றான் எடுத்து....632

வாழ்ந்தார் பெருமையினும் வாய்மைநெறி மாறாது
தாழ்ந்தார் பெருமை தகவுடைத்துச் - சூழ்ந்தாயின்
என்இனிநீ சோர்வடைதல் ஏகுக என்றுஇசைத்தான்
மன்இனிய சொல்லான் மதித்து....633

அன்னோர் அடிவணங்கி அன்புடைய முன்பனுமப்
பொன்னார் நெடுந்தேர்மேல் போயினான் - பன்னாகம்
தாங்கியவித் தாரணியைத் தாங்கியதோள் மன்னவனில்
வீங்(கு)உயிர்ப்போ(கு) உள்ளம் விதிர்ந்து....634

கட்புலன் எட்டாமல் கருத்துஅறிய ஒண்ணாமல்
விட்புலன்வாய்ச் சென்(று)இரவி மேவுதலும் - அப்பொழுதில்
என்றொன்று இராமன் எனஎழுந்தான் இந்துவும்அக்
கல்என்ற ஓதைக் கடல்....635

எப்பொருளும் ஆனோர்க்(கு)இடர் உறுமேல் இவ்வுலகில்
அப்பொருளுக்(கு) இன்றோ அலமருதல் - துப்பினிதழ்
மட்டு அவிழ்ததில்லை மரைமருவி அல்லிஒளி
விட்(டு)எதிர்ந்து போதும் விது....636

வெள்ளைக் கலையால் விரித்தனபோல் வெண்மதியம்
கொள்ளைக் கலைவிரிப்பக் கோக்குமரன் - கிள்ளைமொழிச்
சாணகியாள் பின்தொடரத் தம்பியோ டும்சென்றான்
மானகஞ்சேர் கான்வாய் மகிழ்ந்து....637

அய்யன் சரிதம்அதுவாக ஆங்(கு) அகன்ற
தொய்யன் மனத்துச் சுமந்திரனும் - வெய்யநெடும்
கார்ஓட்டி வந்த கதிபோல் கலியுருளைத்
தேர்ஓட்டி வந்தான் திரிந்து....638

தேர்அடைந்த(து) என்னத் தெரிந்தார் செவியுரைப்பப்
பார்அடைந்த வேந்தன் பரிவடையா - ஆர்வமுடன்
எங்கள் இராமன் எனஇசைத்தான் அம்முனிவன்
அங்கு நடந்த(து) அறிந்து....639

ஒன்றும் உரையான் உரைத்தான் அரசன்உயிர்
பொன்றும் இயல்பைப் பொருந்துதலும் - அன்றுஉருகி
இத்துயரம் காண்அரிது இங்குஎன்னா எழுந்(து)அகன்றான்
முத்துயரம் இல்லா முனி....640

சேரலர்கோன் பின்னும் தெளிந்தான்நம் சேவகன்எத்
தூரம்உள்ளான் என்னச் சுமந்திரனும் - நேர்இயன்ற
அற்புதநாற் காதம் அகன்றான் எனக்கழிந்த(து)
ஒப்புவமை இல்லான் உயிர்....641

வானவர்கள் ஏத்தி மலர்மா மழைபொழிந்து
மானமதில் ஏற்றி மறுவில்லாத் - தேன்அமரும்
பைந்துளவ மாலைப் பரந்தாமன் வாழ்தரும்வை
குந்தமதி லுய்த்தார் குறித்து....642

வாகைக் கதிர்நெடுவேல் மன்னன் உயிர்துறப்பச்
சோகத் துடன்உலைந்து சோர்வெய்தித் - தோகைமயில்
மால்வரைமேல் மொய்த்த(து)என வந்துஅழுதார் நொந்தலறி
வேல்விழியின் நீர்சோர விட்டு....643

ஆங்குஅழுது சோரும் அரியவரைத் தான்அகற்றி
ஈங்(கு)உரிமை செய்வோர் இலைஎன்னத் - தேங்கும்
தயிலக்கடல் விடுத்தான் தார்வேந்தன் தன்னைக்
கயிலைக்கு இறையனையான் கண்டு....644

முருகு அவிழ்ந்து வாய்நெகிழ மூசியளி மொய்த்துப்
பருகவரும் பைந்தார்ப் பரதன் - வருகஎன
ஓலை விடுத்தான் உறைந்தான் உடன்றுவரும்
மாலை விடுத்தான் மதித்து....645

மற்றுஇதுஇங்கு ஆக வனத்தில் துயில்புரிவார்க்(கு)
உற்ற செயல்அனைத்தும் ஓதுவாம் - வெற்றி
மழைஅனையை கோவும் மயிலும் இளையோனும்
பிழைஇலா(து) ஏகிஅதன் பின்....646

வனம்விடுத்த தொன்மை வழிமறுத்த மான்மேல்
சினம்எடுத்த செல்வன்எனத் தேர்மேல் - கனம்எடுத்த
மைஆர் திரைநீர் மருவும் கடல்எழுந்தான்
வெய்யோன் குணபால் விரிந்து....647

ஓங்கும் இருள்அகல ஓவாடு உடன்உறைந்து
தூங்கினோர் யாரும் துயில்ஒரீஇ - ஆங்குறைந்த
காதலரைக் காணாது கண்கலக்கம் கொண்(டு)எழுந்தார்
ஏதிலர்போல் நின்றார் இனைந்து....648

ஓடினார் ஓடி உலைந்தார் உயிர்உருக
நாடினார் எங்கும் நகர்அடைந்தார் - மாடிமிடை
ஏறினாம் வீழ்தும் இனிஎன்பார் ஏங்கிடுவார்
தேறினார் ஆடிம் திகைத்து....649

இவ்வண்ணம் ஆக எனைத்(து)உலகும் இன்னல்உறப்
பைவ்வண்ணக் கானில் படர்ந்(து)எழுந்த - மைவ்வண்ணக்
கோதைதாழ் மார்பன் குதைநாண் வரிசிலையான்
காதைஎடுத்(து) உரைப்பாம் கண்டு. ...650

மன்நந்து இனங்கள் மணிகொழிக்கும் வண்தடத்து
பொன்நந்து உறையில் புளினமிசை - அன்னம்
பெடையோடு உறங்குவன பேர்அணியை நோக்கி
இடையாமம் சென்றார் எழுந்து....651

பஞ்சில் பழுத்த பனிமொழியாள் பாதமலர்க்
கஞ்சம் பருக்கைக் கணம்உறுத்த - விஞ்சும்
விதிவாய்ந்த(து) என்றால் விளம்புவ(து) என்மற்றோர்
கதிவாய்ப்ப தம்மா கணித்து....652

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.5. கங்கைப் படலம்
பண்டு பரமன் பதத்தில் பிறந்த(து)எனக்
கொண்டு முனிவர் குழாம்பரவ - மண்டும்
பவம்துடைக்கும் செல்வப் பரமநதி கண்டார்
அவம்துடைப்பான் வந்தோர் அடைந்து....653

ஆண்டு முனிவர் அடைந்தார் அகத்(து)ஆர்வம்
பூண்ட களிக்கலவை பூசினார் - நீண்டபுகழ்ச்
சீமானும் ஏத்திச் சிரம்பணிந்தான் செங்கமலப்
பூமானோடு அன்பு புரிந்து....654

மாரன்ஒரு கோடி வடிவுஅமைந்த மன்னர்பிரான்
கார்அனைய கூந்தல் களிமயிலோடு - ஆர்வமுடன்
கங்கைநதி ஆடிக் களித்தான் கழறுவ(து)என்
பொங்குதிரை ஆற்றின் புகழ்....655

தாள்மலர்முன் தீண்டத் தவம்புரிந்த கங்கைநதி
நீள்மகியோர் பாவம்எலாம் நீக்கும்நதி - வாண்மருவும்
ஆகம்எலாம் தீண்டும் நதியாமேல் அதன்பெருமை
யோகம்எவர் சொல்வார் உணர்ந்து....656

நீர்ஆடி யோக நியம வினைமுடித்துப்
போர்ஆடும் வில்லி புறம்போதக் - கார்ஆடும்
ஐம்பால் அமிர்தத்(து) அரிவை யொடும்துறவோர்
தம்பால் அடைந்தான்எந் தை....657

ஆழிஉலகுக்(கு) அமுது அளிக்கும் ஆதிபரன்
வாழிமுனிவர் வகுத்(து) அமைத்த - பாழிக்
கனிஅமுதம் உண்டு களித்தான் மெய்க்கற்பின்
வனிதையொடு மன்னோ மகிழ்ந்து....658

நிலத்தாமரை அலர்ந்த நீலமுகில் ஒப்பான்
குலத்தார் மறையோர் குழாத்தே - நலத்தார்
மருமலர்ந்த கற்பகத்தார் மாலை அணிவானோர்
தருமம்என இருந்தான் தான்....659

ஆயபொழுதில் அருநீர்த் துறை விடுக்கும்
ஆயிரம்பே ரம்பிக் கடலரசன் - பாயும்
பலிஏறு அனையான் பொழியும் அழல்கண்ணான்
கவியாத தோள்வீரத் தான்....660

துடியன் செருப்பின் தொகுத்த கழலன்
இடியின் இசைக்கும் இசையன் - வடிவக்
கடல்நிறத்தன் கங்கைக் கரைநகரை ஆள்வான்
அடல்நிறத்தன் கோல்கரத்தன் ஆம்....661

வயஅரியின் வால்விசித்த வல்அரையன் மாகப்
புயவரையன் நீண்டசிலை பூண்டோன் - தயரதனம்
மன்மகளைக் காணுமா வந்தான் வரைஅனயை
வன்குகனாம் வேடர்குல மன்....662

தேன்எடுத்து வெண்ணெய்த் திரள்எடுத்து வந்ததன
மீன்எடுத்து வேந்தன்பிரான் மேவுளியில் - தான்அடுத்து
கூவாமுன் வந்தான் கொடும் கோள்அரியான்
ஏவாமுன் நண்ணான் எழுந்து....663

நீயாரைஎன்ன நெடியோய் நிற்காணும் நசை
நாயேன்ஓர் வேடன்என நம்பிஇடைப் - போயான்முன்
சொற்றான் வருகஎனச் சொல்லினான் மாமறைநூல்
கற்றானும் சென்றான் அக்கால்....664

இளம்கோல் அரிஅழைப்ப எய்தினான் மன்னோ
உளம்கோடும் உள்ளத்(து) உவகை - வளம்கோட
கண்டான் அழகன் கழல்வீழ்ந்து இறைஞ்சினான்
தண்டாது முன்செய்தவத் தால்....665

தாள்இறைஞ்சி ஏத்தும் தவத்தோன் தனைநோக்கி
ஆளுடைய வள்ளல் அறிவோய்நின் - கேளிர்நலம்
வாழியவோ என்றான் மறைநாலும் காண்அரிய
ஏழுஉலக நாதன் இருந்து....666

ஆழி அமுதம் அளிக்கும் அருள்வாரி
ஏழை யிடத்தில் இதுவாமேல் - வாழியாய்
தேனொடு மீனும் திருத்தினேன் சிந்தையெவன்
தானோ வருள்தியென்றான் தாழ்ந்து....667

மாதவரை நோக்கி மணிமுறுவல் பூத்திவன்தன்
காதல்இது ஆமேல் கரைபெறா - ஈதில்
சிறந்த(து)உண்டோ என்றான் செகமுழுதும் காப்பான்
பிறந்துநடம் செய்யும் பிரான்....668

காளை அனையாய் கடும்திரைநீர்க் கங்கைஇடை
நாளை வருதும் நலியற்க - மீள்வுறநின்
சுற்றமொடு செல்கஎனத் தோழன் குகப்பெருமான்
கொற்றவகேள் என்றான் குறித்து....669

கட்டழகு கூருங் களிமதுவுண் காட்சியின்றி
இட்டம் எவையும் இலன்என்ன - மட்டுஅவிழும்
பாதமலர் போற்றிப் பணிந்தான் பரம்பரனும்
ஈதுரைத்தான் அன்போடு இசைந்து....670

தம்பி வதனம் தளிரியல்தன் வாண்முகம்பார்த்(து)
இம்பர்இவன் அன்புக்(கு) எதிர்உண்டோ - நம்படியன்
ஆகும்இவன் என்றான் அருகுஇருத்தி என்றுஉரைத்தான்
நாகஅணையில் மேயபிரான் நன்கு....671

வல்லிரவாம் சிற்றவையால் வாய்த்தபகற் காலம்எனும்
நல்அரசு நீங்கி நளிர்கிரணத்(து) - எல்இயலும்
வற்கலைகள் தாங்கி வருணன் திசைஅடைந்தான்
விற்கலைசேர் வெய்யோன் விரைந்து....672

மாலைக் குழல்முடித்து மாலைக் குழன்முடித்த
சேலைப் பொருகயல்கண் தேவியுடன் - கோலப்பொன்
புல்அணையில் கண்துன்றான் போர்வாள் அரவம்எனும்
நல்அணையின் மேயபிரான் நன்கு....673

எல்அணைந்த சோதி இளையோன் முகம்நோக்கிக்
கொல்அணைந்த வேல்கைக் குகன்என்பான் - வில்அணைந்த
மேகமே போல்வான்இவ் வேள்அரசுஎய் தாதுவனம்
ஆகுமாறு என்என்றான் ஆய்ந்து....674

சிற்றவையாம் கொற்றவன்தன் தேவி வரம்இரண்டால்
உற்ற செயல்அனைத்தும் ஓதினான் - மற்றுஅதனைச்
சூதாட்டம் என்னத் துணிந்தான் துயர்உழந்து
கோதாட்டம் என்றான் குகன்....675

வீரன்விழித் தாமரையும் மெல்லியல்தன் வாண்முகமாம்
சாரசமும் மெல்லத் தளைஅவிழ - ஆரமணிக்
கார்ஆழி வண்ணக் கடல்எழுந்தான் காய்கதிரோன்
ஓர்ஆழித் தேர்மேல் உறைந்து....676

நாட்கடமை ஆற்றிநலம் பெறுவான் ஞாங்கர்உறை
பூட்கை நிகர்குகனைப் போர்வல்லாய் - தாட்கிலைநீ
நாவாய் கொணர்தி நனிஎன்றான் ஆகம்எனும்
பூவாய் அமளிப் புயல்....677

பொய்இலேம் எங்கள் புகல்இடமும் இவ்வனவே
மெய்அறிவேம் வேண்டும் வினைஅறிவேம் - ஐயம்அறத்
தேன்உளது தெய்வத் தினைஉளதுஎம் மோய்க்(கு)இனிய
மான்உளது காண்டி மகிழ்ந்து....678

கங்கை உளது கமழும் துறைஉளது
மங்கைக்(கு) இனிய மலர்உளது - பங்கயக்கண்
பேர்அழகா ஈண்டுஇருத்தி என்றான் பிறவாத
சீர்அழகு கொண்டான் தெரிந்து....679

அண்ணல் அதுகேட்(டு) அறிவுடையோய் ஆன்றபெரும்
புண்ணிய தீர்த்தப் புனல்படிந்து - நண்ணும்
பெருந்தவரைப் போற்றிப் பெயரும் அளவும்
வருந்தல்நீ என்றான் மதித்து....680

மறுத்(து)உரையான் ஆகமணி வண்ண மழைஅன்ன
கறுத்த வடிவுடைய கண்ணன் - பொறுத்ததவப்
புங்கவரைப் போற்றிநெறி போனான் பொருப்புஅனைய
கொங்கைமயி லோடும் குறித்து....681

செவ்வேள் அனையதிறற் சேவகனும் பின்தொடர
வெவ்வாய் வடிவேல் விழிமருவ - நவ்வேயும்
நாவாய் விடுக நனிஎன்றான் நாட்கமலப்
பூவாயும் மேனிப் பொருள்....682

சூன்முதிர்ந்த செல்வச் சுகமனையார் தம்நடையில்
கான்முதிர்ந்த ஞண்டின் கனிஇரசப் - பான்முதிர்ந்த
வண்ணக் கிளிமொழிவாய் மங்கைஉவப்(பு) ஏறஅணை
அண்ணியது நாவாய் அசைந்து....683

அத்திசையின் ஏகியபின் அன்பன்முகம் நோக்கிச்
சித்திரகூ டத்தில் செலுநெறிநீ - மெய்த்தகையோய்
செப்புதியால் என்றான் செழும்கமலம் பூத்ததொரு
மைப்புயலை ஒப்பான மால்....684

கல்லேன் எனினும் கமலத் தடம்கண்ணா
ஒல்லேன் பிரிதற்(கு) உனைஅடியேன் - வில்லாரம்
ஒன்னார் வரினும் உயிர்அனையாய் அஞ்சுவன்யான்
என்னா(து) உடன்கொள் எனை....685

அன்பால் உரைத்த மொழியின் பொருள்அனைத்தும்
தன்பால் உளதாம் தடம்நிறைய - முன்புஆர்ந்த
வேடர் பெருமானை நோக்கி இவைவிரித்தான்
மூடர் அறியா முதல்....686

என்இளையான் நீஇவனும் நின்இளையான் ஏதம்இலா
நன்நுதலும் நின்கொழுந்தி நானிலமும் - நின்னதுவே
யானும் நினக்(கு)உரியேன் ஈங்குஎன்றான் எவ்வுலகும்
தானுமாய் நின்றான் தழைத்து....687

மன்னன் அரிய மகப்பேற்றால் வந்துஉதித்தேம்
உன்னரிய நட்புக்(கு) ஒருவன்எனும் - நின்னுடனே
ஐம்புலனை ஒப்ப அமைந்தோம் அறிவுடையாய்
வெம்புவதுஏன் நீஉள் மெலிந்து....688

தம்பி பரதன் தனிஇருப்ப தாலும்எனை
முன்பின் பிரிந்த முறையாலும் - வெம்பியுளம்
நையும்இனி நீஅருகில் நண்ணுதலால் ஆய்திஎன
ஐயன் உரைத்தான் அவற்கு....689

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.6. சித்திர கூடப் படலம்
ஆண்டகைதன் ஏவல் அதைமறுத்தற்(கு) அஞ்சிஅவன்
பூண்ட பணியினொடு போயினான் - நீண்டவனும்
தேன்ஆர் குழலும் சிலைக்கை இலக்குவனும்
போனார்கள் கானம் புகுந்து....690

ஈரப் பசையென்பது இல்லாத மாந்தர்மனம்
நேரப் படிந்த நெடுங்கானம் - சேரப்
படிமே லறம்புரிந்து பாலித்தார் தங்கள்
குடிபோல் தழைத்தனவாம் கொம்பு....691

அந்த வனத்தில் அனைத்துலகும் தந்தபிரான்
வந்தது அறிந்து மகிழ்ந்துஎதிர்ந்தான் - முந்தை
வரத்துவந்த கேள்வி மலர்அயனை ஒப்பான்
பரத்துவனாம் மேலோன் பரிந்து....692

வந்த முனிவன் மலர்த்தாள் இறைஞ்சிஎதிர்
எந்தைபிரான் நிற்ப எதிர்தழீஇ - அந்தமிலான்
இவ்வுருவோ காண இழைத்தேன் இருந்தவமென்று
அவ்வயின்என்று உழன்றான் ஆய்ந்து....693

மாலை முடிதுறந்து வாழியாய் மற்றுஇவண்நீ
காலை வருந்திக் கடந்தவனம் - சீலம்உறும்
கோலக் குமரனொடும் கோனகை யோடும்வரல்
பாலதுஎவன் என்பான் பரிந்து....694

சாலை யுடன்கொடுபோய்த் தாபதனும் தாமரைக்கண்
பாலன்முகம் நோக்கிப் பரந்தாம - சீலம்உறும்
கங்கைகா ளிந்தி கலைமகள்இம் மூவருறும்
துங்கம்இவண் என்றான் தொகுத்து....695

ஆதலின் என்பால் இருத்தியான்முத லோர்செய்தவமும்
மேதகவு சேரும் வினையணுகா - பாதவம்சேர்
நற்கனியும் காயும் நனிஉளதுஎன் றான்அறத்தின்
சொற்கனியும் வாய்உடையான் சூழ்ந்து....696

பொற்கமலம் பூத்தமுகில்போல் வான் புனிதமறை
அற்புத வென்னாட்டுக்(கு) அருகுளதிக் - கற்பவனம்
ஆதலினால் நேர்வ ரருங்கிளைஞர் என்றுஉரைத்தான்
போதநெறி காட்டும் பொருள்....697

ஆயதுவேல் காதம் அகன்றால் அரும்தவர்வாழ்
தேயம் புகழ்சித் திரகூடம் - மேயதுமுன்
கண்டாய் அவண்உறைதி என்றான் கலைக்கடலை
உண்டான் உணர்ந்தான் ஒருங்கு....698

பரத்துவம்தேர் வானப் பரத்துவனார் ஆணை
வரத்துவிடை கொண்டு மருவிச் - சிரத்(து)இடையே
செங்கதிரும் சேரநெறி சென்றுஅடைந்தார் வெங்கதிரோன்
கங்கைஎனும் மாநதியாண் மாட்டு....699

அந்நதியின் ஆடி அரும்கடமை ஆற்றியபின்
பொன்னமலை என்னப் பொலிஇளையோன் - வன்னமணிப்
பூங்கழையால் அம்பி புனையாமுன் நீந்தினான்
வாங்கும் இடையோடுஇருப்ப மால்....700

ஆங்குகரை ஏறி அடைந்தார் அரும்தமிழின்
வேந்தர் கொடும்கவியால் வீறுஇழந்த - மாந்தர்
குலன்இலா வாறுமழைக் கொண்மூ இலா(து)என்றின்
வலன்உலாம் அன்பால் வழி....701

ஏற்றார்க்(கு) உதவான் இருங்குடிபோல் யாதொன்றும்
தோற்றா(து) இரவில் துணைபிரிந்தோர் - மாற்றாத்
துயர்கூரும் புண்மனம்போல் துன்னினரைக் காயும்
வெயில்கூரும் வெம்சுரத்தின் வெப்பு....702

அப்பாலை அன்னார் அடைந்தார் அடைவதன்முன்
எப்பாலும் நற்பால் இயன்றவால் - எப்பாலும்
வெம்பாலும் தண்பாலா மேவியது மெல்லடைகள்
தம்பாலும் கொண்ட தரு....703

உரைத்தநாள் வந்திலன்என்று உள்ளம் உலைவாள்முன்
இரைத்ததேர் மீதிலுற ஏந்தல் - விரைக்கமலத்(து)
உள்ளம் குளிர்ந்தவா(று) ஒக்குமே யுச்சுரமும்
தெள்ளியர்ஆங்(கு) எய்தச் செழித்து....704

ஆயசுரம் கடந்தார் அண்டம் அளந்தவனின்
மேயநெடும் கிரியை மேயினார் - தூய
மடமானுக்(கு) அந்த மலைவளங்கள் எல்லாம்
திடமாதவன் உரைப்பான் தேர்ந்து....705

போர்அணைந்த வெங்கண் புழைக்கரம்கொண்டு அங்குஅணையும்
கார்அணைந்த வெம்பிடிக்(கு)ஓர் கார்க்களிறு - நீர்அணைந்து
பூழி ஒழியப் புனல்கொடுதுப் பாற்றுவதை
ஆழியங்கட் பொன்னே அறி....706

மாணிக்கம் பச்சை வயிர மணிப்பவளம்
ஆணிக் கனகம் அரும்படிகம் - மாண்நிறத்து
நீலம்இவை எல்லாம் நெடும்கிரக மண்டலநேர்
போலும்இவை நோக்காய் புரிந்து....707

நாள்ஏறும் தண்கதிர்வாய் நாள்அரசன் மீதுஅமர்ந்த
வாள்ஏறும் கூர்ங்கண் மடநல்லாய் - தாள்ஏறும்
பொற்பதும நின்சரணம் போலாது கூம்பியதோர்
அற்புதம்நீ நோக்காய் அமைந்து....708

கொங்கைக் குயில்அனையாய் கோவுலகம் மீதுஎழுந்த
பைங்கண் கமுகப் பசுங்காய்விள் - அங்குஅனைமார்
வெள்ளிடைஉண் பான்அமுதின் விண்எழுந்து கொள்எழிலை
அள்ளிலைவேல் கண்ணாய் அறி....709

ஈண்டு தருவின் இடைஇருந்து நம்நேர்மை
காண்டும் எனஒளித்துக் காண்உறும்அவ் - ஆண்டுஎழில்வாய்
கான்மனிதன் பெண்மைக் கணநினையே கண்டிடுதன்
மான்விழியாய் நோக்காய் மகிழ்ந்து....710

நெய்தவழும் பாறை நெடுமுடிமேல் நீண்மதியைத்
துய்யநிலை யாடியெனச் சூழ்குறவர் - தையலர்கள்
வாண்முகங்கள் நோக்கிவிழி மைஎழுதும் பான்மையினைக்
காண்மதிநீ என்றான் களித்து....711

இவ்வாறு செல்வத்(து) இளமயிலுக்(கு) ஆங்குஇயம்பிச்
செவ்வாறு செல்லும் திறத்தினரைத் - தெவ்வேந்தர்
கோமான் பணிந்(து)அவர்தம் கூட்டத்(து) உடன்இருந்தான்
பூமாறு பெய்யப் புயல்....712

வேந்தர்பிரா னுக்(கு)கிளைய மேதகைவேய்க் கான்நிறுவி
ஏந்து முகடுஒழுக்கி இன்பம்உற - ஆர்ந்தநெடும்
கைவிசித்தும் நார்வரிச்சும் கட்டினான் தேக்கடையால்
செவ்விபெற வேய்ந்தான் தெரிந்து....713

நாணல்புல் வேய்ந்து நலம்கிளர்மட் பித்திகையேர்
காணத் தனியிலைவேல் கைஅழுத்திப் - பேணுமயில்
மென்தோகை கொண்டு விரித்தான் விதானம்உளத்
துன்தோகை கொண்டுஇளையோன் சூழ்ந்து....714

சாலை அமைத்தான் தனிமிதிலை நாடியர்க்கு
கோலக் கனகம் கொடுநிரைத்தான் - நீலநிறப்
புண்ணியனும் கண்டான் புனல்இரு கண்பால்சோர
எண்ணி இருந்தான் இனைந்து....715

வெற்றி உடையோய் விறல்உடையோய் இத்தொழிலும்
கற்றனையோ இக்கடனும் காண்பனோ - பெற்றியினி
என்னாம் வருந்தி எனத்தேறி ஆங்(கு)இருந்தான்
பொன்நாடர் போற்றும் புயல்....716

பொன்உலகம் வாழப் புவிவாழப் போந்தபிரான்
மன்னியஅச் சாலை மனைபுகுந்தான் - என்இனியான்
பேசுவது மாமறையைப் பேரரவை மேனாட்டை
ஏசுவது போலும் இது....717

வான்செய்த மாதவத்தான் மங்கையொடும் தம்பியொடும்
தேன்செய்த வண்ணச் செழும்துளவோன் - கான்செய்த
சித்திரகூ டத்(து)இருப்பச் செப்புவாம் நன்னகர்வாய்
அத்திறமை எல்லாம் அறிந்து....718

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.7. கிளைகண்டு நீங்கு படலம்.
மாகயத்தில் வாளை வரால்பாயும் தண்பணைசூழ்
கேகயத்தில் சென்று கிளர்மனுப்பூண் - ஆகயதேர்
தாதூர்தண் தார்ப்பரதன் தம்பி தமைவணங்கி
மாதூதர் வந்துநின்றார் மற்று....719

என்அனையர் எம்பியுடன் என்உயிரே போல்வானும்
மன்னவனும் எதிலரோ மற்றுஎன்ன - முன்னர்
ஒருமுகத்து மாண்மைதனக்(கு) ஒப்பருமுன் தந்தை
திருமுகம்காண் என்றார் தெரிந்து....720

மண்மூடு தோட்டு மணிமுடங்கல் வாங்கிமழைக்
கொண்மூ அனைய குழகனும் - கண்மாடு
கண்டான் உவந்து களித்தான் கதிர்முடிமேல்
கொண்டான் உளமும் குளிர்ந்து....721

காலம் பொழுது கருதான் கரும்கடல்நேர்
கோலன் தனைமருவு கோளினான் - சாலக்
கரிபரிதேர் வாண்மருவும் காலாளர் சூழ்ந்து
வரஎழுந்தான் அப்பரத மால்....722

பல்லியங்கள் ஆர்ப்பப் பனிவெண் குடைநிழற்ற
மல்லன் மணித்தேர் மருவினான் - தொல்லைவளக்
கோசலநாடு உற்றான் கொழும்கருணைக் கொண்டல்எனத்
தேசுபுனை வாசவன்நேர் சேய்....723

நீர்துறந்த பண்ணை நிலம்துறந்த பல்வளங்கள்
தார்துறந்த சோலை தனில்வண்டு - சீர்துறந்து
பால்மறந்த கன்று பழம்மறந்த காமரங்கள்
வான்மறந்த பைங்கூழ் மருண்டு....724

பார்ப்புக் கிறையும் பசுங்குழவிக்கு ஊட்டமுதம்
வார்ப்பறைக்கு வள்ளொலியும் மாங்கனிக்குத் - தீப்பொலிவும்
வட்ட முலையிணைக்கு வாசப் பரிமளமும்
இட்டமுற ஆங்குஎதுவும் இல்....725

இத்தன்மை நாட்டை யெதிர்ந்தான் இளம்கொண்டல்
எத்தன்மை எய்துமோ என்றுஇனைந்தான் - முத்தமிழ்தேர்
மாந்தர் பெருமையென வானார் மதில்வாயில்
சேர்ந்தனன் தம்பியொடும் சேர்ந்து....726

மங்கலத்தின் பேரொலியும் மால்வரைநேர் மாமுலையார்
தங்கள் வண்டலாட்டும் தனித்தனியாய் - அங்கண்உறு
நல்விழவும் காணான் நனிஉழன்றான் நாடிஎங்கும்
மல்வரைய தோளான் மருண்டு....727

காரணங்கள் மற்றும் கருதினான் சம்புநிகர்
பூரணனை நோக்கிப் புரைஇல்லாய் - நேர்எதிரும்
இன்நிமித்தம் எல்லாம் எவையுயற்காம் என்றுஉரைத்தான்
பொன்அமைத்த திண்தோள் புயல்....728

முத்துஉருவை ஒத்த முதலோனும் மொய்ம்(பு)உடையோய்
இத்தலையில் கஞ்சத்(து) இடைஇருந்தாள் - கைத்தறவு
நீத்தாளாம் என்ன நெடும்தகையும் ஆகம்எலாம்
வேர்த்தான் அயிர்த்தான் மெலிந்து....729

உற்றது அறிவான் ஒருங்(கு)உணரும் தம்பியொடும்
செற்றமறும் தந்தை திகழ்கோயில் - மற்றுஉறுமுன்
மன்னுமணிச் கந்தரநேர் வார்குழல்பொன் மாமுலையோர்
அன்னமிசை சொன்னாள் அடைந்து....730

அன்னை யடிகாள் அழைத்தாள் எனஅவனும்
மன்னி நிலனில் வணங்கியே - பொன்னனையாய்
தந்தைஎவண் என்னாமுன் தவ்வை அனையாள்அறிவோய்
அந்தரமீது என்றாள் அவண்....731

கேகயர்மான் சொல்லிடத்தில் கிம்புரிக்கோட் டோங்கல்எனும்
மாகயம்சோர்ந்(து) இன்னிலம்வீழ் வண்ணம்என - சோகம்உற
வீழ்ந்தான் அறிவுஅழிந்து மெய்அயர்ந்து வெய்துஉயிர்த்துள்
ஆழ்ந்தான் விழிப்புனலின் ஆங்கு....732

வாடினான் உள்ளம் வருந்தினான் இன்உயிரும்
வீடினான் என்ன வெறுத்துஉயிர்த்தான் - ஆடி
அரற்றினான் அந்தோ அதுகண்டோர் தாமும்
அரற்றினார் நைந்தார் அயர்ந்து...733

கண்டகராத் தானவர்தம் கட்டறுப்பான் இன்னமுனை
விண்டலத்தோர் கூவ விரைந்தாயோ - மண்டலத்தோர்
யாரைத் துணைக்கொளுவார் என்செய்தாய் அன்புஇழந்தேன்
காரைக்கை வைத்தவனே காண்....734

என்றுஅரற்றி நைந்தான் இறைவன் பதங்குறுகி
இன்றுஇவ்இடர் தீர்ப்பன் இனிஎனலும் - குன்றிணைத்த
வன்முலையாள் தீக்குணம்சேர் மங்கைஇவை அங்குஉரைத்தாள்
கண்மனத்தாள் உள்ளம் கதித்து....735

இலக்குவன்பின் னாக இருங்குழல்பொன் மேனி
நலக்குரிய சீதையொடு நம்பி - வலத்துறுகான்
சென்றான் எனலும் திகைத்தான் திறமழிந்து
நின்றான் உலைந்தான் நெகிழ்ந்து....736

எல்லார்க்கும் நல்லன் இராமபிரான் யார்இழைத்த
பொல்லா வினைவயத்தால் போயினான் - வில்லார்
முடித்தலைவன் ஆவிவிடு முன்னரோ பின்னோ
எடுத்(து)உரைப்பாய் என்றான் இனைந்து....737

யாரும் இழைத்தவினை அன்று வரம்இரண்டால்
தூரிழைத்த காட்டிடையே தூண்டினேன் - பார்இழைத்த
பட்டம் நினக்குஅளித்துப் பார்த்திபனார் வீடுஉறுமுன்
கிட்டினன்கான் என்றாள் கிளர்ந்து....738

கேட்டான் இனிஎன் கிளத்துவது கேழ்கிளரும்
வாள்தானை மன்னன் வயப்புருவங் - கோட்டான்
நுதல்கிழிய வேறு நுவல்வான் உருமில்
கதழ்எரிகண் காலக் கடிந்து....739

கொன்றாய் அறத்தைக் குடித்தாய் கொழும்கருணை
தின்றாய் ஒழுக்கம் சிறிதுஅறியாய் - நன்றாய்
முடிந்தாய் பெரும்பழியை முற்றினாய் வெம்போர்
கடிந்தாய் பெரும்புகழைக் காண்....740

கான்இடைஎம் முன்னைக் கழித்தேன் பொய்க்கண்டகரில்
வான்இடையில் எந்தைஉற வாக்கினேன் - ஈனம்அற
வையகமும் ஆண்டேன் வருன்பயன்என் மற்றுஇதனின்
மெய்அடைவு முண்டோ விளம்பு....741

முக்குலத்தின் ஆன்ற முதல்குலத்தின் நீபுகுதப்
புக்குயர்ந்த தன்றோ புகழ்என்ப - தொக்கஎனை
ஈன்றுஎடுத்த தாய்எனவே எண்ணினேன் அன்றுஎனில்முன்
தோன்றுதியோ என்றான் தொகுத்து....742

முன்எதிர் நிற்பின் முடைவாளுக்(கு) உன்உயிரை
மன்இரையாய் ஈய்வன்என மாழ்கிஇவை - பன்னுதலும்
கோசலையாள் எய்திக் குணம்ஊ றிலன்என்றாள்
ஆசின்மொழி சொற்றாள் அறிந்து....743

மஞ்சாநின் தாய்இழைத்த வஞ்சனையால் நேர்ந்ததுயர்க்(கு)
அஞ்சாயோ நீதான் அறிந்திலையோ - எஞ்சாஎன்
கண்மணியே என்னக் கலங்கினான் கட்டுரைகள்
பெண்மணிக்குச் சொல்வான் பிரித்து....744

பரதனின் வஞ்சினம்

போரில் புறம்கொடுத்தோன் பொய்உரைகள் கூறினோன்
சீர்உற் றவரைச் சினந்துளோன் - காரைப்
பழித்துளோன் அஞ்சிப் பதுங்கினோர் தம்மை
அழித்துளோன் செல்நெறியே யான்....745

ஆரியனைத் தாதையரை அன்னையரை அன்பினரை
நேர்இழையாம் தம்மை நெடும்தவரைச் சீரியரை
வேதியரைப் பான்மகரை வெம்படையால் கொன்றுஒழித்த
பாதகம் எற்காகப் படர்ந்து....746

தண்ணம் துழாய்முடியோன் தாளே பரத்துவம்என்று
எண்ணறியான் நல்அறத்தை ஏசினான் - புண்ணியமே
செய்யான் ஒழுக்கம் சிறிதுஅறியான் ஈங்குஇவர்சேர்
மையார் நரகுஎனக்கு மற்று....747

நன்றி மறந்தோன் நடுவில் வழக்குஉரைத்தோன்
கன்றுபசி எய்தக் கரத்துஉண்டோன் - மன்றில்
பிறர்பொருளை வௌவினோன் பேராசை கொண்டோன்
எறிநரகம் எற்குஆக இன்று....748

கன்னியரை மங்கையரைக் கற்புஅழித்த கண்டகனும்
பன்னியரை விற்றுஉண்ணும் பாதகனும் - மன்னுநெறி
வந்தோரைக் காவா வறிஞனும்சேர் வன்நரகம்
நந்தாதுஎனக்(கு) உறுக நன்று....749

பந்தவர்கள் துன்பம் பரிப்பப் பரிவுடனே
இந்திரன்போல் செல்வத்(து) இருந்தாலும் - அந்தணர்தம்
இல்எரியை வைத்தோனும் ஏகுநரகு எற்குஆகும்
அல்லல்உறேல் அம்மா அயர்ந்து....750

வில்லின் வலியும் விறலும் மிகும்பிறவும்
புல்லில் உகுத்துப் பொருவார்முன் - மல்லிழந்து
மானம் இழந்து வலிஇழந்து பின்னிடைந்தோர்
தானம் எனக்குஉறுக தான் ....751

ஏற்றார்க்(கு) உதவான் இழிகுலத்தில் பெண்உகந்தோன்
மாற்றான் எனவே மனைஇருப்போன் - வேற்றோர்
நகைவிளம்ப வேட்டகத்தின் நண்ணிஅமுது உண்போன்
புகுநரகே எற்குப் புகல்....752

மாற்றார் எதிர வளநகரத்(து) ஏற்றஎலாம்
தோற்றேன் இடுங்கால் துவக்குண்டேன் - ஆற்றேன்
தலைஇரங்கி நிற்பேன்என் தாயேஅம் மாற்றல்
கலைஇரங்க யான்அறிந்தக் கால்....753

என்றுஇனைய வஞ்சினங்கள் எல்லாம் இயம்புதலும்
கன்றுஇரங்கும் ஆவின் கசிந்துஉருகி - நின்றுஇருகை
புல்லினாள் மோந்தாள் புழுங்கினாள் வெய்துஉயிர்த்தாள்
தல்லிஎனும் கோசலையாள் தான்....754

அன்ன பொழுதில் அருந்ததிதன் கேள்வன்எதிர்
மன்னுதலும் அம்பொன் மலர்த்தாரான் - சென்னிகரம்
கொண்டான் திகைத்தான் குளித்தான் விழிப்புனலின்
மண்டான் விழுந்தான் மருண்டு....755

மாதவத்த னோடு மருவினான் வான்தயிலத்
தாதைஎழில் மேனி தனைக்கண்டான் - மீதுயிர்த்துக்
கண்ணநீர் ஆட்டிக் கழுவினான் கண்ணுடையார்க்கு
எண்ணுநீர் ஆமோ இது....756

வாரி முரசுஒலிப்ப மன்னர் புடைஇரங்கக்
காரிகையார் கண்ணீர் கலுழ்ந்துவரத் - தாராசை
மானம்அதில் ஏற்றி மருவினார் வண்சரயு
மாநதியின் ஒண்கரையின் வாய்....757

ஏற்ற கடமைக்(கு) எழும்பரதன் தன்னைஇவண்
ஆற்றற்(கு) அருக னலகண்டாய் - மாற்றரிய
மன்ஆவி சோராமுன் மற்றுஉனைஇத் தீக்கடன்மை
பன்னான்என் றான்முனிவன் பார்த்து....758

என்றுமுனி கூற இதுவோயான் பெற்றவரம்
என்றுஉருகி நைந்தான் எனைப்பெற்ற - கன்றுமனத்(து)
அன்னை இழைத்த அறம்ஈது எனஉரைத்தான்
மன்னும்வளக் கோசலையார் மன்....759

அந்தலையின் எய்தி அரும்கடன்மை யால்அனைத்தும்
சத்துருக்கன் ஆற்றத் தவறாமல் - வித்துருமக்
கொம்புஅனையார் மூவரலால் கோலக் கொடிஅனையார்
வெம்புதழல் மேயார் விரைந்து....760

மற்றும் வினைமுடித்து வந்தான் திருக்கோயில்
சுற்றி இனத்தோர் சுருதிநூல் - கற்றுஉணர்ந்த
வேதியரைப் போற்றி விரிதிரைசூழ் வேண்முழுதும்
பாதுகத்(து) ஈய்ந்தான் பரிந்து....761

ஐயிரண்டு நாளும் அகன்றபின் அவ்வேலை
மையிரண்டு நீத்த மறையாளர் - தெய்வத்
திருமுனியோடு எய்திஇவை செப்பினார் வாய்மைக்(கு)
ஒருவன்எனும் நற்பரதற்கு) ஊங்கு....762

மன்இறந்தா னின்முன் வனத்(து)அடைந்தான் வையகத்தைப்
பின்அறிந்து காப்பார் பிறர்உண்டோ - உன்னைஅன்றி
நீயேஎன் கட்டுரையை நீத்தாய் அலைஇனியார்
வாயேஎன் றான்அறத்தோர் மன்....763

வான்இன்றிப் பைங்கூழ் வயங்கா வளம்சிறந்த
கான்இன்றி மான்இனமும் காணோமோய் - ஊன்இன்றி
ஆவி உறுமோ அதுபோல் அவனியும்அக்
கோஇலையேல் என்ஆகும் கொள்....764

என்னாமுன் வள்ளல் இதுவும் எனக்(கு)உரித்தே
உன்நீர்மை அன்னைகுணம் ஒத்துஉளதே - அன்னோ
கலியுலகம் ஈதோ கருதுஇளையேன் அன்றோ
வலன்உடையாய் என்றான் மருண்டு....765

நீர்ஆளும் செவ்வி நிலம்ஆளும் நன்நிலைமை
வார்ஆளும் கொங்கை மலர்வந்தாள் - தார்ஆளும்
கூந்தல் மணம்நுகர்ந்த கொண்டல்எனக் கோலம்உறும்
வேந்தனுக்கே என்றான் விரித்து....766

அங்குஇருந்த திண்மை அறப்பால் உடையோர்கள்
கொங்குஇருந்த தண்தார்க் குழகனையே - சங்குஇருந்த
கைஆழிவண்ணக் கடவுளும்ஒவ் வான்எனவே
மெய்ஆய்ந்(து) உரைத்தார் வியந்து....767

சங்குஅணைந்த வெண்நிறத்துத் தம்பிமுகம் நோக்கிமழை
மங்குல் அனையதிரு மாமணியை - இங்குஅழைப்பான்
இன்நகர மாக்கள் எழுகநவில்க என்றுஉரைத்தான்
சொன்னஉரை மாறான் தொகுத்து....768

ஆழி முரசம் அறைதலும்அந் நாட்டுஉடையோர்
வாழிஅறம் என்று வழுத்தினர் - வீழிக்
கனிவாய் உடையாரும் காளையரும் யாரும்
இனிவாய் எழுந்தார் இரைத்து....769

வேதியர்கள் தாதியர்கள் மேலோர்கள் கீழோர்கள்
மாதர் கரிபரிதேர் மற்றுஉள்ளோர் - ஓதக்
கடல்போல் எழுந்துவரக் காதல் உளமுந்த
உடல்மேல் உயிர்உலவ உற்று....770

கொடிநெருங்க வண்ணக் குடைநெருங்க வேகப்
பிடிநெருங்க யானை பெயரப் - படிநெருங்க
வான்அளப்பப் பூழி மழைபோல் கரிமதங்கள்
தான்அவிப்பச் சேறுஆம் தரை....771

கார்உற்ற வண்ணக் கடல்போல் வரும்சேனை
பேர்உற்றி டுங்கால் பெரும்குணத்தோன் - சீரைஉடை
சுற்றினான் தம்பியொடும் தோன்றினான் பொன்தேர்மன்
முற்றினான் சேனை முகம்....772

ஆதி மறைதேர் அரும்தவர்கள் அந்தணர்கள்
நீதி உறுதாயர் நெறியுடையோர் - போதரவே
செல்லும்கால் மந்தரையாம் தீயவளைக் கண்(டு)இவளைக்
கொல்வன்எனச் சென்றான் கொதித்து....773

ஆயது அறிந்தான் அறிவன் அறிவுடையோய்
நாயகனார் ஆணை நலியுமே - நீஇழைப்ப(து)
ஓரும்கால் என்னாம் உலகுக்(கு) எனஉரைத்தான்
காரும்போன் நின்றானைக் கண்டு....774

கொண்டமுனிவு ஆறிக் குளிர்ந்தான்அக் கோஒடும்போய்ப்
புண்டரிகக் கண்ணன் பொறியொடும்போய் - திண்திறல்சேர்
தம்பியொடுமன்னும் தடம்பொழில் வாய்த் தான்உறைந்தான்
வம்பவிழ்தார்க் கோசலையார் மன்....775

கன்னற் கனியும் கரும்காயும் தான்நுகரான்
இன்னற்கு உறையுள் எனத்துயின்றான் - பொன்னினொடும்
வில்அணைந்த தோளான் விரும்பித் துயில்புரியும்
புல்அணையின் ஓர்பால் புலர்ந்து....776

எல்லை எதிர இணைஅடிப்பொற் பூதலிய
வல்லைவள மாவும் மதகரியும் - செல்வத்
தனித்தேரும் பின்தொடரத் தான்நடந்து சென்றான்
வனத்தே பரதன்எனும் மன்....777

தேசிகமெய்த் தூசுபுனை சீதரன்பொற் பாதமலர்
வாசனைசேர் கங்கை மருவினான் - காசலம்பு
நன்நாடு பின்ஆக நாமவேல் தானையொடும்
என்நாடும் ஏத்தும் இறை....778

மன்னன் பரதன் வயச்சேனை யுண்டிடுங்கால்
சன்னுமுனி யுண்டபொழுது அத்தனையது - இன்னுமைகோன்
பொற்சடையி னின்று புவியின் இடைப்போந்த
நற்சரயு ஒத்த நதி....779

அஞ்சனக்குன்று அன்னான் அடல்சேனை அக்கோணி
எஞ்சல்இலா வாறயுதம் என்பரால் - கஞ்சமலர்க்
கங்கை நதிஅடையக் கண்டான் கரும்கழல்கால்
கொங்(கு)அவிழும் தண்தார்க் குகன்....780

கச்சுஇறுக்கிக் கூற்றுங் கலங்கக் கலங்காத
நச்சுஇறுத்த(து) என்ன நனிவிழியான் - உச்சமுறும்
வாள்எடுத்தான் தாள்எடுத்து மண்கிழியத் தென்கரையில்
கீழ்அடுத்தான் வில்எடுத்துக் கின்று....781

இப்படைகள் எல்லாம் இரலைக் குழாமடைவே
துப்புடையேன் வல்லியயென் சுற்றத்தீர் - வெப்படையா
மன்னர்க்(கு) அரசுஅளிப்பான் வன்போர் புரிமின்எனப்
பின்னும் உரைப்பான் பெயர்ந்து....782

பாவம் கருதான் பழிஉணரான் இப்பரதன்
ஆவம் புறத்தில் அறியானோ - சாவம்எனும்
கூற்றம் கரத்துஇருப்பக் கூடாரைத் தீஎனவே
நீற்றிவிடு வேன்அலனோ நேர்ந்து....783

யான் ஒருவன் உள்ளேன் எனஅறியான் இப்பரதன்
மானவலி கண்டான் மலைவனோ - தேன்இனத்தைத்
தும்பி துகைப்ப(து)எனத் தோளால் பிசைந்துஎறிவன்
தம்பியன்றோ யானும்இனித் தான்....784

அம்பி விடுவேன் அவரும் நதிகடப்பார்
நம்பிதனை வெல்வார் நணுகியே - தம்பிஎனும்
யானும் உயிர்கொண்டு இருப்பேன் இதுஅன்றோ
வான்உயரும் கீர்த்தி வளம்....785

தயிர்மதிக்கும் மத்தில்எதிர் சார்வாரைத் தாக்கி
உயிர்மதித்து மீளாது ஒழிப்பேன் - அயிர்கிடக்கும்
பானச் சிறுகூவல் பார்த்துப் பதுங்குமோ
மானக்கடல் நீர் மருண்டு....786

என்றுஉரைத்து நின்றான் எயினர்கோன் இக்குறியைச்
சென்றுஉணர்வன் என்றுஓர் திறவல்லான் - குன்றுஇணைந்த
கொற்றப் புயத்தின்இளம் கோஅடிகட்(கு) ஆங்குஉரைத்தான்
உற்றதுஎலாம் ஓதி ஒருங்கு....787

கார்வரையை ஒப்பான் கணக்(கு)இறந்த நாவாயான்
வார்விசித்த வாளான் வலியினான் - நீர்பரித்த
கங்கா தரன்போல் கதல்வரியின் ஆடையினான்
மங்காக் குகன்எனும்பேர் மன்....788

ஆரியர்க்கு வாய்ந்த அருநட்பான் அல்அமைந்த
மேருமலை ஒப்பான் விடும்நாவாய் - ஊர்அமைந்த
கார்அடுத்த(து) அன்னான் கரியோய்நின் மேல்கனன்று
போர்எடுத்தான் என்றான் புகுந்து....789

என்முன் உவக்கும் இவன்பால் எழுமனமே
தன்முன் உவந்து தழுவாயோ - என்அறிவே
என்றான் மகிழ்ந்(து)எதிர்முன் நின்றான் இவன்எதிரே
வன்தானை வேடர்குல மன்....790

மாசுஅடைந்த தூய வடிவானை மாநிலத்துத்
தேசுஅடைந்த வண்மை திகழ்வானை - ஆசுஅடைந்த
மாமலர்க்கண் நோவ வருவானைக் கண்டுனைந்தான்
நாமம் குகன்என்போன் நன்கு....791

மஞ்சனையான் எம்முன் வடிவுடையான் அவ்வள்ளல்
கஞ்ச முகத்(து)இளைய காளையே - நெஞ்சுஉவப்பத்
தோன்றுவார் இக்குலத்துத் தோன்றினோர் எப்பிழையும்
ஊன்றுவரோ என்றான் உளைந்து....792

இவ்வண்ணம் எண்ணி எதிரே தொழுவானை
மைவண்ணன் சென்று வணங்கினான் - கைவண்ணப்
போதகம்அன் னானும்அவற் புல்லினான் புல்லியஅச்
சாதகனும் சொற்றான் தளர்ந்து....793

மல்அடுதோள் வீரவரவு எவனோ என்றுஇறைஞ்சக்
கொல்உலைவேல் தாதை குடிதுறந்தான் - அல்லல்அற
நீத்தான்றனைக் கொணர என்றான் நினைந்துஉருகி
மாய்த்தான் பிறவி வலை....794

புறவுக்கு உயிர்கொடுத்த புண்ணியனை ஆதி
அறனுக்(கு) உயிர்கொடுத்தோர் யாரும் - சரதத்(து)
ஒருவனே மன்னா வுனைநேர்வர் கொல்லோ
இருண்முகில்சூழ் வாரி யிடத்து....795

என்றுஉரைப்ப ஐயன் எதிர்நோக்கி எம்பெருமான்
அன்றுஉறைந்தது எப்பால் அறைதிஎன - குன்றுறைந்த
கானகத்தில் ஈங்குஎனவே காட்டினான் வானகம்சேர்
மானகத்தோள் வல்எயினர் மன்....796

உலகங்கள் எல்லாம் ஒருசேர ஆளும்
திலகன் மகனாம்எம் தெய்வம் - சிலைமிசையில்
பாழிஅணை மேல்வளரும் பான்மையும்உற் றான்எனில்அவ்
ஊழில் பெரியதுஉள வோ....797

ஏந்தல் தகைமை இதுவேல் இடரறப்பின்
போந்தபிரான் செய்கை புகல்கஎன்னச் - சேந்தவழி
வான்உரைத்த வண்ணன் மதகரிநேர் வல்எயினர்
கோன்உரைத்தான் உள்ளம் குழைந்து....798

அற்புதனும் செவ்வி அணங்கும் அவண்உறங்க
விற்பிடித்த கையன் விழிஇமையான் - பொற்புறுந்தன்
வண்ணம்என எல்லை வருகாறும் காத்திருந்தான்
கண்ணநீர் சோரக் கலுழ்ந்து....799

கேட்டான் உயிர்த்துயிர்த்துக் கேடில் புகழ்கொண்டான்
காட்டாக நின்றான்இக் காசினிமேல் - நாட்டார்க்(கு)
அடாப்பழியான் பூண்டேன் அமைதிஇலேன் யானே
கெடாப்புவியில் என்றான் கிளர்ந்து....800

கூட்டுக்(கு) ஒருவன் குகப்பெருமான் தன்னைஇனி
ஓட்டும் புணைகொண்டு உருவோமைப் - பாட்டளிசூழ்
அல்லிமுகை அவிழ்க்கும் அந்நதிதென் பால்கடத்தி
வல்லைஇனிது என்றான் மருண்டு....801

ஆவதுவே என்ன அடைந்தான் அணிநாவாய்
மாவரைபோல் ஈண்ட மகிழ்ந்(து)ஏறிக் - காவலரும்
மாவும் கரியும் மணித்தேரும் மங்கையரும்
யாவர்களும் சென்றார் இருந்து....802

நாள்அலர்ந்த பங்கயப்பூ நங்கைமார் மானமிசைக்
கோள்அலர்ந்த வானில் குறுகல்போல் - வாள்அலர்ந்த
மாமணியார் தெய்வ வரமா நதிகடந்தார்
மாமகளிர் எல்லாம் மகிழ்ந்து....803

அன்னையர்கள் மூவர்உடன் அம்பொற்கழல் பரதன்
பின்னவனும் நாவாய் பெயர்ந்(து)ஏறி - மன்னும்கால்
நற்குகனும் நோக்கி நலம்உடையாய் இந்நின்ற
கற்புடையார் யார்என்றான் கண்டு....804

மூஉலகும் காத்த முழுமுதல்வன் முன்தேவி
ஏவுலகும் காப்பான இவள்உதித்த - தேவன்எனும்
அண்ணல் இராமற்(கு) அரும்தாய் அரசுஇழந்து
நண்ணினள்கான் என்றான் நலிந்து....805

என்றானைப் பின்னும் இவர்ஆர் எனவினவ
தன்தாதை சொல்லின் தவம்உடையான் - பின்தாழ்ந்து
போயினான் பெற்ற பொரியாள் எனஉரைத்தான்
வாயினால் பொய்யுரையா மன்....806

ஈண்(டு) இருப்பார்யார் என்(று)எயினர் இறைவினவ
நாண்துறந்தாள் பெண்மை நலம்இழந்தாள் - வேண்டும்
கலைஇழந்தாள் அன்னைஎனக் கண்டிலையோ என்றான்
உலைஒளிர்ந்த வேலான் உயிர்த்து....807

அம்மூ வரையும் அடிபணிய அப்பொழுதில்
எம்மோய் இவன்யார் எனவினவ - அம்மாகேள்
எம்பியற்கும் எற்கும் இவனே முதற்பிறந்தோன்
தம்பியவற்(கு) என்றான் தளர்ந்து....808

கேட்டாள் உவந்தாள் கிளிபோல் இவைமொழிந்தாள்
நாட்டார் உவப்ப நலமருவிக் - காட்டும்
பழிஇன்றி ஐவீரும் பராள்திர் என்றாள்
ஒழிவில் புகழுடையாள் ஓர்ந்து....809

என்றுகரை அடைந்து சென்றான் இரும்புவனம்
நின்ற புகழோன் நெடும்காதம் - ஒன்றும்
பரத்துவனைக் கண்டான் பரதன் அவன்தாள்
சிரத்து வணங்கினான் சேர்த்து....810

சாலை அடைந்தான் தமரொடும்அத் தாபதன்செய்
கோல விருந்(து)அமுது கொண்டுஉலைந்தான் - மூலச்
செழும்தா மரைஎனவே செம்கதிரோன் கீழ்பால்
எழுந்தான் இருள்ஒழிய வே....811

பங்கயன்முன் தோன்றப் பரதன் பெரும்சேனை
வங்க மறிகடல் போல் வந்ததால் - கங்குல்நிறக்
காமன்அம்பால் மீறி எழும்காமநோய்க் காரிகையார்
மாமனநேர் பாலை வனம்....812

பாலை கடந்து பரதன் பெரும்சேனை
சீலம்உறு சித்திர கூடம் - வேலைஎன
வந்துஎதிர்தல் கண்டான் மணித்தார் இலக்குவன்ஆங்(கு)
கந்தெதிர்ந்த தோளான் கனன்று....813

வண்ண மலையோர் மருங்(கு)ஏறி மாக்கடல்செல்
வண்ணம்என எத்திசையும் மன்னியே - நண்ணிடும்அச்
சேனைதனை நோக்கிநிலம் சேர்ந்தான்அத் தேவர்தொழும்
கோனைமற வாதஇளம் கோ....814

வீரச் சுரிகைஇடை வீக்கினான் மேருநிகர்
பாரத் தனுஇடக்கை பற்றினான் - போரடர்க்கும்
தோல்அணியும் பொற்கவசம் தொட்(டு)அமைத்தான் சூழ்தழைநேர்
கால்அணிந்தான் வீரக் கழல்....815

அய்யன் சமுகம் அடைந்தான் அடிபணிந்தான்
பொய்யன் பரதன் புகல்இலான் - வெய்யநெடும்
சேனையொடு நின்மேல் சினங்கொண்டான் உற்றுஅடைந்தான்
மேல்நடப்ப(து) என்னோ விதி....816

பரதன் புயத்தின் பலமும் படையின்
உரமும் ஒருவேன் உரமும் - பரிவுடனே
கண்(டு)இருத்தி சென்றுஇக் கணத்தில் கருங்காலன்
உண்டுஉவப்பக் காண்பேன் உருத்து....817

கொம்பும் கரமும் கொடியும் கொடும்குறங்கும்
வெம்பும் விழியும் விரைவாலும் - இம்பர்இடை
வெவ்வேறாய் உம்பர்இடை வீழ அடுசரங்கள்
பெய்வேகம் நோக்காய் பெயர்ந்து....818

தேர்இழந்து வாசித் திரைஇழந்து செம்முகத்திண்
கார்இழந்து காலாட் கணக்(கு)இறந்து - பார்இழந்து
கேகயர்மான் தொண்டை கிழித்(து)அரற்ற ஓர்சரத்தால்
வாகைமுடி கொள்வேன் மதி....819

கைஅறவும் வீரர் கழுத்(து)அறவும் கைக்கணையால்
மெய்அறவும் நீண்ட வெரினறவும் - தெய்வச்
சிலைஅறவும் மானச் சிரம்அறவும் செம்பொன்
கலைஅறவும் காண்டி கடிது. ...820

என்றானை நோக்கி இராமன் நகைத்(து)இதுநீ
ஒன்றோ பிறவும் உஞற்றுவாய் - நன்றே
இறைப்பொழுது தாழ்வாய் இனித்தெரியும் அன்றே
பொறைப்பரதன் ஆற்றிடும்அப் போர்....821

நம்குலத்தோர் முன்பின் நடுஎந்த நாளும்நலம்
பொங்(கு)அறனை நீத்தார் புகல்உளரோ - சங்கைஅறக்
கொண்ட அர(சு)அளிப்பான் கூவுவான்அன்றி உள்வேறு
உண்டுஎனல் நன்றால் உனக்கு....822

வேதத் துறையின் விதியேஅவ் வித்தகன்தன்
நீதத் துறையும் நினைதியால் - ஆதிப்
பெருநூல் உணர்ந்தோய் பெயர்திசினம் என்றான்
அருநூல் மறைஉரைத்தோன் ஆங்கு....823

ஒன்றும் உரைத்திலன்ஆங்கு உற்றுழியில் வண்ணமணித்
தன்துணைவ னோடும் தவனோடும் - வென்றிப்
பெரும்படைபின் னாகப் பெயர்ந்தான் மழைக்கார்
வரும்தகை மான மருண்டு....824

வற்கலையன் வார்சடையன் மண்படிந்த மேனியினான்
எற்கலைந்த ஆனனத்தோ(டு) எய்துவான் - சொல்கனிந்து
தென்திசையே நோக்கிவரும் செய்கைதனைக் கண்உற்றான்
கன்றிரங்கும் அப்போல் கசிந்து....825

ஐயஇவன் தன்மை அறிந்தனையோ ஆரமர்தான்
செய்யும் கருத்தினனோ தேர்என்றான் - வெய்ய
கனல்போல் கனன்றஇளம் கால்முளைக்குக் காவி
அனையான்கண்நீர் வார அங்கு....826

அக்கால் அடைந்தான் அருவிநீர் சோர்விழியான்
நெக்கா உருகி நிலைஅழிவான் - மைக்கோலத்(து)
எந்தாய் உனதுஅடியேன் எப்பிழை செய்தேன்எனவே
வந்தான் பணிந்தான் மருண்டு....827

நின்றானை நோக்கி நெடி(து)உயிர்த்தான் சீரைஎனவே
வன்தானை நோக்கி மனம்சலித்தான் - பின்தாழ்ந்த
பொற்சடையை நோக்கி எதிர்புல்லினான் பூவைஎனக்
கற்கனியத் தோன்றும் கடல்....828

கண்என்னும் தெய்வக் கலசத்தின் ஆரமுதாம்
மண்ணு நீராட்டி மறுகினான் - எண்ணும்
உரைஅறியான் ஓய்ந்தான் உயிர்த்தான் உளைந்தான்
கரைஅறியாக் காதலால் கண்டு....829

நந்தாதை மெய்வலிமை நன்றோ எனவினவ
எந்தாய் உனைப்பிரிந்த இன்னலால் - நந்தாத
வானவர் நாடு மருவினான் என்றுஉரைத்தான்
மானவர்க்குள் மாமதிபோல் வான்....830

ஆதாரமாக அனைத்(து)உயிரும் காத்து வந்த
தாதா எமைப்பிரிதல் தக்கதோ - வேதா
விதித்த விதிஇதுவோ வேறுஎதுவோ மன்னா
மதித்(து)அறியேன் என்றுஅயர்ந்தான் மன்....831

உளைந்தான் எழுந்தான் உயிர்த்தான் உடலம்
களைந்தான் எனவே கசிந்தான் - அளந்(து)அறிதற்(கு)
எண்ணொணா இன்னற்(கு) இடமானான் ஏழ்பொழிலும்
கண்ணொணா இன்பக் கடல்....832

தம்பியரும் மற்றுமுள தாபதரும் மன்னவரும்
எம்பெருமான் தன்னை எடுத்(து)அணைத்து - வெம்பும்உளம்
தேற்றினார் மாமலரோன் சேய்எனும்அத் தாபதனும்
ஆற்றினான் சொற்றான் அணைந்து....833

விண்நாட்டின் மண்நாட்டில் வெவ்வே(று) உலகத்தில்
எண்நாட்டும் ஆவி இனம்எல்லாம் - கண்ணா
பிறந்த(து)உண்டேல் ஓர்நாள் பெயர்ந்(து)இறப்ப(து) அன்றி
மறந்(து)இருப்ப(து) உண்டோ மதி....834

மாமறைநூல் தேரும் மதியோய்வண் தண்டொடுநூல்
தாமரைநீர் மன்திகிரி சங்(கு)அணிந்தோர் - ஆம்எனினும்
கால வலையைக் கடப்பரோ காரணத்தின்
சீலநிலை எல்லாம் தெரிந்து....835

வினைக்கருமம் பூண்டு விழிசெவிவாய் ஆதி
மனப்பொறியி னோடும் மருவித் - தினைப்பொழுது
நில்லா உடம்பை நினைதியோ நீண்மறைநூல்
வல்லாய் உறவாய் மதித்து....836

எனைத் துணையோ ஆண்(டு)ஆண்(டு) இருந்தாற்(கு)இரங்கி
மனத்துயர் நீதி வழக்கோ - நினைக்கும்கால்
எத்தனைதாய் தந்தையர் எத்தனையோ பல்பிறவி
உத்தமனே வாழும் உயிர்க்கு....837

அச்(சு)அதனால் சக்கரம்நின்(று) ஆடும் அசை(வு)இன்றி
அச்(சு)அழிந்தால் சக்கரம்நின்(று) ஆடுமோ - அச்செயல்போல்
அச்சுதனே காலம் அவைஒழிந்தால் ஆவ(து)எவன்
இச்சைஉறும் இவ்உடலால் ஈங்கு....838

அன்றியும்நின் தாதை அயன்தனக்கும் எட்டாத
மன்றல் தரும்துளப மாமார்பன் - ஒன்றும்
பரமபதம் உற்றான் பரிந்(து)அயர்வ(து) என்னோ
சரமவிதி முற்றுகநீ தான்....839

கண்ணீர் உகுத்துக் கலங்குவ(து)என் கார்வண்ணா
எண்ணீர் உகுப்பாய் எனஇசைத்தான் - மண்ணாதி
ஐவகைப் பூதம் அளித்தோன் அயன்ஈன்ற
மெய்வகையன் என்பான் விரித்து....840

அஞ்சனமா மேனி அழகன் அயர்வுஒழிந்து
மஞ்சனநீர் ஆடி வரன்முறையாய்க் - கஞ்சமலர்க்
கையினால் எல்லாக் கடனும் கழித்தனனால்
செய்யும் முறைதிறம்பான் தேர்ந்து....841

மற்றும் வினைமுடித்து மாமலராள் வீற்(று)இருந்த
பொற்றநெடுஞ் சாலைஇடைப் போயினான் - மற்றவரும்
வந்தார் தனிஉறைந்த மாதரசைக் கண்(டு)அயர்ந்தான்
அந்தார்ப் பரதன் அடைந்து....842

செய்ய கமலத் திருவடியில் வீழ்ந்(து)அழுத
கைகயமான் ஈன்ற களிற்றரசை - ஐயன்மலர்க்
கையால் எடுத்தான் கழிந்தான்என் தாதைஅவண்
தையால் எனஉரைத்தான் சார்ந்து....843

கேட்ட கிளிமொழியாள் கெண்டையம்கண் நீருகுத்துக்
கோட்டு முலைமேல் குழைந்துஅழுதாள் - வாட்டம்
அறிந்தார் முனிவர் அரிவையர்கள் ஆற்றப்
பொறிந்தாள் தெளிந்தாள் புலர்ந்து. ...844

ஆய்இடையில் அன்னம் அனையாளை அங்(கு)அனைமார்
தூய நீராட்டித் துகள்நீங்க - நாயகன்பால்
கூட்டி இமைப்பொழுதில் கோசலையை ஆதியுளம்
நாட்டினர் உற்றார் நடந்து....845

வந்(து)அடைந்த தாயர் மலர்த்தாள் விழுந்தழுதான்
எந்தை இராமன் இடர்உற்றான் - முந்த(து)அடைந்த
நன்நகர மாந்தர்களும் நண்ணினார் மேல்திசைவாய்
மன்னினான் மெய்யோன் மறைந்து....846

அன்றொழிந்த பின்னர் அனைவோரும் அன்புடைய
கன்றெதிர்ந்த ஆன்போல் கரிந்துஅணைய - நன்றிபுனை
மால்வண்ணன் தூய மணிவண்ணன் மாதவம்சேர்
மால்வண்ணற்(கு) ஈதுஉரைத்தான் மற்று....847

மன்னன் இறப்ப மதிஉடையோய் மாமணியார்
பொன்னின் மகுடம் புனையாது - முன்னோர்
விரதம்அது பூண்ட விதிஎதுவோ என்றான்
பரதன்முகம் நோக்கிப் பரிந்து....848

தீயாள்என் றாய்சொல் திறம்பாது சேர்ந்துவனம்
நீஆளயானோ நிலம் ஆள்வேன் - மாயாப
பெரும் புகழ்ஈ(து)அன்றோ பிறி(து)இதன் உண்டோ
வரும்பெருமை யாவதுதான் மற்று....849

என்தாய் இழைத்த இடரால் உளைந்து
பொன்றாதுஇவண் அடைந்த புண்ணியர்கள் - நன்றாய்
நலம்தழைப்ப நீயேவன் நாடாள்க என்றான்
குலம்தழைப்ப வந்தான் குழைந்து....850

சேயோன் உரைத்த மொழிதேர்ந்தான் செகநாதன்
தூயோய் அறிவும் சொலும்அறமும் - மாயாப்
பெரும்புகழும் மற்றும் பிதாஉரையைப் போற்றி
வரும்செயல்ஆர்க்(கு) என்றாய் மனத்து....851

அவ்வுரையான் கொண்டேன் அதுபோல் என(து)உரையும்
மெய்வலியோய் கோடல் விதிஅன்றோ - எவ்வம்அறும்
மேதைமொழி மாதவர்சொல் வித்தை தருவார்சொல்
தாதைதன்உரை அன்றோ சகத்து....852

தன்தாதை மெய்உரையைத் தாழாது பொய்யாக்க
வந்தான் இவன்எனவே மானிலத்தோர் - நந்தா
உரைபெறுவன் என்றால் இதின்ஊங்கும் உண்டோ
திரைஎறிநீர் வையகத்(து)என் சீர்....853

நீர்ஆழி வண்ணன் நிகழ்த்த இவை நேயம்உறும்
ஓர்ஆழி நின்றும் உல(கு)உதித்தோன் - பேர்ஆழி
மாநிலம்கொள் ளாய்எனில்யான் மற்(று)உனது பின்அடைந்து
தான்இழைப்பன் என்றான் தவம்....854

அப்பொழுதில் ஐயன் அருளார்முகம் நோக்கி
மெய்ப்பொருள் தேர்ந்த விழுந்தவத்தேன் - மைப்புயதேர்
மைந்தாநின் முன்னோன் மனுமுதல்இன் றாம்அளவும்
வந்தேன் குலகுருவாய் வாய்ந்து....855

ஆதலினால் வள்ளல் அறைதரும்என் றன்மொழியும்
நீதன்என உள்ளம் நினைத்துநீ - பேதம்அற
நா(டு)ஆள்தி என்ன நவின்றான் அலமருவ
வாடா மலரோன் மகன்...856

வித்தகனும் கேட்டு விதிஅனைய மெய்த்தவனே
எத்தன்மை யேனும் இயம்புவனேல் - சித்தம்
கலங்கிஅதை மாற்றுவது கண்டாயோ என்றான்
வலம்கிளரும் சக்கரக்கை மால்....857

மற்றொன்றும் கூறாது மாதவனும் ஆங்கிருப்ப
வெற்றி புனைஇளைய மேதகையும் - முற்றும்இனி
ஆளுமவர் ஆள்க அடியேன் தனக்(கு)அடைவு
சூள்உறுநோன்பு என்றான் துணிந்து....858

ஆய(து) அறிந்தார் அமர ரரும்கானம்
மாயவனார் வைக மகிஆள்க - தூய
பரதனே என்னப் பகர்ந்தார்கள் பண்டை
விரதமொழி பொய்யா விதம்....859

வானவர்தம் ஆணை மறுக்கேன் மறா(து)இனிநீ
ஆன உல(கு)அளித்தி ஐயஎனத் - தானநிறை
கையினால் தம்பி கரமலர்கள் தீண்டினான்
ஐயன்ஓர் ஆயிரம்பே ரான்....860

மன்னும் பரதன் வகுத்தநாட் காலவரை
உன்னி உறாயேல் உயிர்மாய்வன் - முன்எரிவீழ்ந்து
என்றான் இராமன் இனிமறுப்ப தெவ்வாறென்று
இன்றுஏக என்றான் இயைந்து....861

மற்றோர் செயல்மறந்து மாமழைநேர் மால்வண்ணா
எற்றே பிறிதல் இனிஉன்தாள் - குற்றேயும்
பாதுகம்ஈ என்னப் பரதன் அவைஅளித்தான்
ஆதரவோடு ஏற்றான் அவன்....862

வில்அமைந்த மேகம்என வீற்றிருக்கும் வித்தகன்தாள்
புல்லிவிடை கொண்டுஅயர்ந்து போயினான் - மல்அமைந்த
தம்பிமுகம் நோக்கித் தவத்தோரும் மற்றவரும்
உம்பரும்கண்(டு) ஏங்க உலைந்து....863

ஈன்றதாய் மாரும் ஏனையோரும் போயினார்
மூன்றுநூல் ஒன்ற முனிவரனும் - ஆன்றவரும்
சென்றார் குகனும் சிருங்கி புரம்அடைந்தான்
குன்றேய் முகில்விடைமேல் கொண்டு....864

நாயகனார் பாதுகம்கொள் நற்றவனும் நன்னகரம்
போய்அடையான் நந்திஎனும் பொற்பதியின் - வாய்அடைந்து
கங்குல் உறக்கம் கழித்தான் இருந்தான்விண்
புங்கவர்கள் போற்றப் புகழ்ந்து....865

வன்னமணிச் சாரல் வரைஇடத்தே வீற்றிருந்த
மன்னர்பிரான் இன்னும் மருவுவர்கேள் - என்ன
நடந்தான் அணியிழையும் நம்பியும்பின் னாக
கடம்தாழ் நெடிய கடம்....866

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

அயோத்தியா காண்டம் முற்றும்.

3. ஆரணிய காண்டம்
3.1. விராதன் வதைப் படலம்
பொய்மாலை போக்கிப் புரந்(து)அருளும் பொன்மார்பன்
செய்மாலை சேரும் திருஅரங்கன் - மெய்மாலை
வண்ணத்தான் மாதர் மணிநிறத்தான் மாதவர்வாழ்
எண்ணத்தான் எங்கட் கிறை....867

அண்ணன் கருணை அழகன் கதிஅருளும்
கண்ணன் திருநிறஞ்சேர் காகுத்தன் - தண்அளியார்
ஐயன் அனகர்க் கரியன் கரியன்அரும்
துய்யன் கழல்கால் துணை....868

பூவிருந்த வல்லியொடும் பொன்மலைநேர் தம்பியொடும்
மேவிருந்த வில்லியுடன் மேவினான் - தேவிருந்த
முத்தழலான் பொற்சடையான் முண்டகத்தான் அன்னமுனி
அத்திரிதன் சாலை அகம்....869

கண்டான் எதிர்ந்தான் கரைதெரியாக் காதல்உளம்
கொண்டான் முனிவன் குளிர்மலர்த்தாள் - தண்டாத
வாசிஅளித் தாருடையார் வந்(து)இறைஞ்ச மாதவனும்
ஆசி அளித்தான் அமர்ந்து....870

பூவிருந்தான் வெள்ளிப் பொறைஇருந்தான் பூம்புனல்சேர்
தாவிருந்தான் தெய்வத் தருவிருந்தான் - மேவிஎதிர்
உற்றாலும் நும்வரவை ஒப்பரோ என்றுரைத்தான்
கற்(று)ஆய்ந்த மேலோன் களித்து....871

ஆத்தவன்தன் பன்னி அனசூயை மைதிலியார்க்(கு)
ஒத்த அணிஒப்பனை செய்(து)ஓங்கவே - சித்தமிக
அல்லார்த் தவண்உறைந்தான் அம்பரத்தோ(டு) இம்பர்புகழ்
மல்லாண்ட தோளான்எம் மால்....872

ஓர்ஆழி வண்ணத்(து) ஒருதேர் உதையத்தில்
கார்ஆழி வண்ணக் கடல்அனையான் - பேராளன்
வில்லி திருவினொடும் மேவினான் தண்டகத்தில்
கல்அதரும் மெல்அதராய்க் கண்டு....873

உரல்அடிகள் ஆளி உழுவை ஒருகை
விரல்அடுக்கி ஓர்கை மிசைவான் - நிரல்அடுத்த
வக்கிரப்பல் வாயான் மழைபோல் கருநிறத்தான்
உக்கிரம்சேர் பல்படையான் ஊங்கு....874

உற்(று)அடைந்தோர் வாசி உயர்தேர் கரிஆதி
தெற்றி அரவில் செறிதொங்கன் - முற்றியசை
மற்புயத்தான் மாலைஎன மானம் தொடுத்(து)அணிவான்
பொற்பொறையை ஒப்பான் பொலிந்து....875

தீக்கொழுந்து போலும் சிகையான் திறல்அரிசேர்
மேக்(கு)உயர்ந்த வெற்பால் விடுகுழையான் - காக்கரிய
வெம்பொறிக டாவும் விழியான் விறற்கரியின்
கொம்(பு)அனைய பன்னிரையான் கூர்ந்து....876

மைவிராய் உற்ற வடிவான் வளர்பசியான்
வெவ்விரா தப்பேர் வெகுளியான் - தெம்மடர்க்கும்
இம்அடிகள் நூறா யிரம்வலிசேர் மொய்ம்புடையான்
வெம்அடியான் உற்றான் விரைந்து....877

அடைந்த கொடியோன் அரும்குயில் அன்னாளைத்
தொடர்ந்(து)இருகை பற்றிச் சுடர்வான் - படர்ந்திடலும்
நம்பியர்கள் வஞ்சனைசெய் நாய்அணையாய் நாள்முடிவோய்
இம்பர்உறு(க) என்றார் எதிர்ந்து....878

மான்மலரான் ஆணை வரத்தான் நலிவிலன்என்
வேன்முகநின்(று) ஆவி விளியாதிர் - மான்விழியை
விட்(டு)அகல்திர் என்றான் விடாநெடிய சாபத்தால்
கெட்ட(து)அறி யாதான் கிளர்ந்து....879

நன்றுஇதுவே என்ன நகம்அனைய தோற்றத்த
வென்றிவரி வில்நாண் விசைத்(து)எறிந்தான் - நின்ற
திசைக்கரியும் பாதலம்வாழ் சேடனும்உள் ஏங்க
விசைக்(கு)உரிய கோமான் எதிர்ந்து....880

வல்உழுவை வாய்ப்பட்ட மான்பிணையின் மம்மரடைந்து
அல்லல்உறு வாளை அகற்றியே - கொல்உலையார்
முத்தலைய சூலம் முடுக்கினான் முன்அமரர்
அத்தலையின் ஓவ அடைந்து....881

வெம்சரத்தால் சூலம் விழுந்(து)இரண்டு துண்டாக
மஞ்சனையான் ஏவ வலிஅரக்கன் - நெஞ்(சு)அழன்று
கட்டான் நெடிய கனவரைகள் கொண்டுஎதிர்ந்து
விட்டான் நெடியோன் மிசை....882

விட்டமலை அனைத்தும் வேறாகி நீறுபட
மட்டுஅமையா வாளி மழைபொழியத் - துட்டன்எனும்
மைஅரக்கன் அங்(கு)ஓர் மராமரம்கொண்டு எற்றுதற்குஅங்கு
ஐயன்எதிர் வந்தான் அனன்று....883

கைப்பிடித்தவன் மரமோர் கண்டம்பல் கூறாக
வப்பு மழையால் அறுத்(து)அரக்கன் - மைப்புயனேர்
அங்கம் துளைத்தான் அயர்ந்தான் அடல்வாளிப்
புங்கம் முழுதும் புக....884

கரம்துணித்தும் என்னக் கடியோன் புயத்தில்
விரைந்(து) அவனிமன் குமரர்மேவ - வரம்தருசீர்
எந்திரம்போல் மீக்கொண்டு எழுந்தான் இழிகுருதி
முந்(து)உறைபோல் சோர முனிந்து....885

பொன்அனைய மேனிப் புனிதனுடன் பொற்(பு)உயர்வில்
தன்அனைய ஆதித் தனிமுதலை - முன்நிமிர்ந்த
வேகம் உடையான் விசையனொடு கண்ணனைக்கொண்(டு)
ஏகிமையில் ஒத்தான் எழுந்து....886

இக்கணைந்த வில்லன் இணையார் இருவரொடு
மிக்(கு)உயர்ந்த சென்னியொடு மேவுவான் - முக்கவட்டுக்
குன்றமே ஒத்தான் குறிகொண்(டு) இமையோரும்
இன்(று)அயிர்த்தார் என்ஆமோ என்று....887

ஆயிடையில் அன்னம் அறிந்தாள் அலமந்தாள்
மேய விதிஎனவே விம்மினாள் - நீஎனையே
தின்பாய் எனமொழிந்தாள் தேம்பினாள் மெய்மறந்தாள்
அன்பாஎன அழைத்தாள் ஆங்கு....888

இளையோன் அறிந்தான் இனிஎம் பெருமான்
விளையாடேல் எந்தாய் மிகவும் - உளையாமுன்
முந்திவனைக் கோறிஎன முன்னோன் திருக்கழலால்
உந்துதலும் வீழ்ந்தான் உவண்....889

வீழ்ந்தான் புயமலையை வீழ்த்தினார் வெவ்வாளால்
தாழ்ந்தார் புவியில் தனிஅரக்கன் - போழ்ந்த
இடைக்குருதி பாய இருவர்மேல் உற்றான்
நடைப்பணியை ஒப்பான் நனி....890

மேல்எழுதல் கண்டு விறலார் இளையோய்இம்
மாலவனை மண்ணில் மறைத்திடுதல் - சீலம்எனத்
தொட்டான் தொடுகுழியில் சுந்தரத்தோள் காகுத்தன்
விட்டான் கழலால் விரைந்து....891

உல(கு)அளந்த பாதமலர் ஊறு படலால்
கலைகடந்த ஞானம் கஞல - மலைகடந்த
தோள்அரக்கன் தொன்னாள் தொடர்சாபம் நீங்கிடவான்
வாள்உதிப்ப நின்றான் மகிழ்ந்து....892

வெங்கரவு பற்ற விளித்தோர் மதவேழம்
எங்கள் குலமுத லேஎன்னப் - பொங்கும்
கருணையொடும் வந்(து)அளித்த கார்வண்ணன் நீயே
இருமைவினை நீக்கும் இறை....893

நீயே உல(கு)அனைத்தும் நீயேநெடும் பிரமன்
நீயே கருணா நிதிஎவையும் - நீயே
அரிஅரனும் நீயே அளிஅனல்கால் நீயே
கரியரன்நீ யேஅறியுங் கால்....894

காப்பானும் நீயே அவைகடைக்கா லத்(து)அனைத்தும்
தீய்ப்பானும் நீயே செகம்எல்லாம் - வாய்ப்பாகப்
பூப்பானும் நீயே புரக்கும் பொருள்அனைத்தும்
வாய்ப்பானும் நீயே மகிழ்ந்து....895

ஆதிப் பரமனும்நீ ஆதிக் கமலனும்நீ
ஆதிக் கருணை அரியும்நீ - வேதத்தின்
வித்துநீ எல்லா விளைவும்நீ விண்ஆதி
பத்தும்நீ அன்றோகண் பார்....896

நார்வேடம் கொண்டு நடிப்பாய் உனையான்
வரம்வேண்டேன் என்விழிமுன் வந்தாய் - புரகரனார்
சாபம்தீர்த்(து) ஆண்ட சயம்பே தளர்தருவென்
பாபம்தீர்த் தாள்வாய் பரிந்து....897

என்(று)உரைப்ப நீயார் எனஎம் இறைவினவ
தன்தளிர்க்கை கூட்டாத் தமியனேன் - நன்றுஎழில்ஆர்
உம்பர் இயக்கர்க்(கு) உறும்அரசன் சாபத்தால்
வெம்(பு)அரக்கன் ஆயினன்இவ் வேள்....898

வாழியாய் மற்(று)உன் மலர்க்கழலின் ஊறுபட
ஏழையேன் சாபம் இறும்என்றான் - ஊழ்முறையே
பெற்றேன் பெரும்பிறவிப் பேறுடையேன் தீமைஇனி
அற்றேன் பிழைபொறுப்பாய் ஆல்....899

தும்புரு நாமத்தேன் தொழுதேன் அருள்வாய்என்(று)
உம்பர் வழியே ஒருவினான் - நம்பியரும்
கண்டார் வியந்தார் கடுகினார் போய்உறைந்தார்
தண்தா(து)ஓர் சோலைத் தலம்....900

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.2. சாபங்கர் முத்தி யருள் படலம்
வல்இரவு நீங்க மணிமிதிலை நாடியுடன்
அல்லி மலர்க்கண் அபிராமன் - தொல்லை
சரபங்கர் வைகும் தடம்பொழிலை உற்றான்
உரம்உந்து தம்பி யொடும்....901

அப்பொழுது வந்தான் அணியார் ஒளியதனான்
மைப்பரவை வண்ணநிற மாறவே - செப்பரிய
மந்தார மாலை மணம்மருவ அங்கநிறத்(து)
தந்தா வளமுடையான் தான்....902

எண்ணில் பெரிய எழிலான் இனவரையின்
வண்ணச் சிறைஅரித்த வச்சிரத்தான் - மண்ணில்
பொலிந்த முகில்ஒப்பான் புவனம் முழுதும்
மலிந்தபுகழ் வானவர்கோ மான்....903

வண்ணக் கதிர்முடியான் வார்கழலான் ஆயிரம்பொன்
கண்ணில் திகழும் கருத்(து)உடையான் - எண்ணும்
பெருந்தேவர் அன்றிப் பிறி(து)எவரும் போற்றும்
அரும்தேவ ராசன் அவன்....904

இத்தன்மை உற்ற இமையோர் பதிஎதிர
முத்திநெறி உற்ற முனிவரனும் - சித்தம்
மகிழ்ந்தெதிர் கொண்(டு)ஆற்றும் வரன்முறையைச் செய்தான்
திகந்தம்உறும் சீர்த்தியினான் தேர்ந்து....905

மாதவத்தோய் நின்தவத்தின் மாட்சிமைஓர்ந்(து) அந்தணன்தன்
மீ(து)உலகில் நின்னை விளித்தனன்நீ - போதுவையேல்
நின்எதிரே தோன்றும் நினைவென்னோ என்றுரைத்தான்
மன்னுசத மாமகக்கோ மான்....906

நல்லோய் உடன்நீ நடஎன்(று) அவன்உரைப்ப
பல்லோர் புகழப் படர்தவத்தோன் - கல்லேயும்
மல்லாடு திண்புயத்து வச்சிரக்கை வாசவற்குச்
சொல்லாடும் தன்மனத்தே சூழ்ந்து....907

அற்பம் கருதேல் அரும்தவம்யான் செய்ததுவோ
கற்பம் பலவும் கழிந்ததால் - நிற்பதிலா
அன்னாடு வேண்டுவனோ அம்புவியும் உம்பர்உறை
பொன்னாடும் ஆள்வாய்இப் போது....908

ஆதி நடுவீறு அடையா வழிஅடையா
நீதி பிறழா நெறிகுறையாச் - சாதலிலாக்
காலவரை இல்லாக் கனிஒருவர் நற்பதமே
சால எனக்குத் தகும்....909

என்றுஉரைக்கும் வேளை இளங்குமரர் எய்திஅவன்
நின்றுஉணர்ந்தார் சொல்லும் நிறைஉரையை - வன்திறல்சேர்
தந்த மலையூர்ந்து தவன்பால் சதமகத்தோன்
வந்தனன்என்(று) ஆய்ந்தார் மதித்து....919

மஞ்சுஅனைய வள்ளல் மயில்அணங்கை வல்இளைய
குஞ்சரத்தை நின்மின் குறிப்(பு)அறிந்து - செஞ்சரத்தின்
ஏகி இவண்உறுவல் என்(று)அடைந்தான் ஈறுஇல்புகழ்ச்
சாகரத்தா ரேயும் தலம்....911

கண்டனன் ஓர்ஆயிரமாம் கண்மலரால் கஞ்சமலர்க்
கொண்டல் எனநின்ற குணக்கடலைப் - பண்டை
அருமறையும் காணா அருள்ஆழி யானை
ஒருமுதலை அன்பால் உவந்து....912

கண்டுவந்து போற்றிக் கதிர்முடியான் நாள்நாளும்
அண்டரொடு போற்றி அடிதொழுவான் - புண்டரிகக்
கையால் தொழுது கவல்வான் கலைமறையின்
மெய்யால் துதித்தான் விழைந்து....913

கருதி முறைஅளித்தும் துன்னாரைச் செற்றும்
திருஅளித்தும் வீடுஅளித்தும் சேரத் - தரும்உயிராய்க்
கண்ணாய்த் தவமாய்க் கவசமாய்க் காத்(து)அருளும்
அண்ணாஉனை அறிவார் ஆர்....914

பொன்ஆழி கொண்ட புயலேஎன் போல்வார்கள்
நின்ஆழி யானை நினைப்பரேல் - அன்னோ
கெடுவாய் நரகில் கிடந்(து)உழைப்பர் கொல்லோ
விடுவார் பயன்அடையா(து) எய்த்து....915

ஊழிதோறும் பல்வே(று) உருக்கொண்(டு) எமைப்புரப்பான்
ஆழி உலகில் அவதரிப்பாய் - ஏழையேம்
செய்யும்கை மாறுஎவனோ தேறேஞ் செழுங்கமலக்
கையுடையாய் கண்உடையாய் காண்....916

மூலப் பழமறையும் காணா முழுமுதலே
ஆலில் துயிலும் அரும்பொருளே - ஞாலம்
அளந்தோனே எங்கள் அபிராமா நாயேன்
உளம்தேறல் ஒண்ணா(து) உனை....917

உண்டாய் உமிழ்ந்தாய் ஒருகொம்பில் ஏந்தினாய்
தண்டாதர வெனவே தாங்கினாய் - பண்டே
அளந்தாய் நிலமகள்தன் ஆசையோ மற்றோ
உளந்ததே(து) அனையாய் உரை....918

வான்ஆய் வளிஆய் வசுஆய் வனமகியாய்
மீன்ஆய் வெயில்ஆய் விபுவாகி - நான்ஆன
மூலமாய் வித்தாய் முளைத்(து)எழுந்த சத்தியத்தின்
கோலமாய் நின்றாய்எம் கோன்....919

ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்(கு)உயிராய்
கன்றாய்ப் பசுவாய்க் களைகண்ணாய் - நின்றோனே
ஆழி அமுதம் அளித்தாய் கடைந்(து)எமக்கே
ஏழையேம் என்புரிந்தேம் என்று....920

பரத்துவமாய் முப்பொருளாய்ப் பல்வடியாய்ப் பண்டைச்
சரத்தசரத்(து) உள்ளுறையும் சம்பாய் - வரத்துயரும்
அர்ச்சையாய் ஆணாய் அலியாய் அலதாகி
எச்செயலு மாவா யிருந்து....921

இவ்வண்ணம் ஏத்தி இமையோர் பதிஅடைந்தான்
பொய்வண்ணம் இல்லாப் புதுமையோன் - செவ்விச்
செலவி னொடும்வசந்தத் தேன்பாடும் செய்ய
மலர்மலியும் கற்பகம் சூழ்வான்....922

சென்றான் அகநிலைமை தேர்ந்தான் செகநாதன்
நின்றான் உவகை நிறைந்(து)எதிர்கொண்டு - இன்றே
வலைப்பிறவி மாய்ந்ததென வாழ்த்தினான் மன்னோ
இலைகனிகாய் உண்போன் எழுந்து....923

அம்முனியை ஏத்தி அடிபணிந்து நம்பெருமான்
பொம்மல் உறும்சோலைப் புறன்உறைந்த - செம்மைத்
திருவளரும் பூங்கமலச் செல்வியொடு தம்பி
வருகஎன வந்தார் மகிழ்ந்து....924

வந்தவரோ(டு) ஆழி வளர்வான் முனிஅமர்ந்த
சந்தநெடும் சாலை தனில்உறைந்தான் - முந்திரவும்
கண்உறக்கம் எய்தக் கடல்மேல் எழுந்தான்அவ்
வண்ண நெடுவான் மணி....925

ஏயபொழு(து) ஐயன் எதிரே அருந்தவனும்
காயும் கனல்வளர்க்கக் கண்உறீஇ - நீஇயற்றல்
செப்புதிஈங்கு என்னத் தெரிந்தான் தவஞ்சிறந்து
முப்புவனம் போற்று முனி....926

எல்லையிலாப் பல்லாண்(டு) இயற்றும் இருந்தவத்தின்
நல்வினையால் தேவருக்கு நண்ணரிய - மல்வலிகால்
வில்லிஉனைக் காணும் விதிஅடைந்தேன் இவ்வுடலத்(து)
இல்லிறுக்கு மாறுஎன் இனி....927

வானவர்கோன் எய்தி மலர்மேல் அயன்உலகம்
தான்அடைதல் வேண்டும்எனத் தான்அழைத்தான் - யான்அதனை
மாற்றினேன் மாயா வலன்அடையு மாறுனையே
போற்றினேன் இன்றே புகல்....928

என்றுஎரியின் மூழ்கி இணையிலாப் பன்னியொடும்
ஒன்றும் பரமன் உலகுஅடைந்தான் - மன்றல்
கமலா லயன்முதலோர் கண்டு தொழுதுஏத்தத்
தமராக மற்ற தவன்....929

நாரா யணமுகுந்தா நாதா எனவழுத்தும்
பேரார் பெருமை பெரி(து)என்ப - நேரே
இறுதியில்அத் தேவை எதிர்த்தோர்தம் பேற்றை
அறுதி யிடஎவரால் ஆம்....930

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.3. அகத்தியப் படலம்.
கோக்குமரர் கொம்போடும்அக் கோதிலான் தன்வழிநின்(று)
ஆகமணம் நாறும் அடவியுடன் - மேக்குயரும்
குன்றும் நதியும் குளமும் பலகடந்து
சென்றனர்கள் கான்வாய்த் தெரிந்து....931

சீலம் உறுசெய்ய திருமலரோன் ஈன்றுஅருளும்
வாலகி வராதி வரமுனிவர் - மூலமறைத்
தண்டகத்தோர் மற்றும் தவத்தோர் அடைந்தனர்
கொண்டலையே காணக் குறித்து....932

கண்டார் இராமன்எனும் கார்முகிலைக் கண்கலக்கம்
விண்டார் அரக்கர்எனும் வெவ்அழல்வாய்த் - தண்டாக்
கடும்பாலை மேவிக் கலங்குவார் கற்ப
நெடும்பாலைச் சார்ந்தார் நினைந்து....933

அந்தகனேர் வெவ்வாள் அரக்கன்எனும் வெவ்வரவால்
தந்தம் உணர்வுஇழந்த தாபதகர்கள் - மந்த
மதவேழ முன்னின்ற மாயோனைக் கண்ட
விதநேர ஆங்குவந்தார் மேல்....934

அல்லமைந்த மேனி அடலார் அரக்கர்எனும்
பல்உகுத்த வல்விடத்தால் பாடுறுவார் - எல்அமைத்த
பொற்கிரிநேர் மாலிகங்க பூபதியைக் கண்டாரில்
சிற்குணனைக் கண்டார் தெளிந்து....935

வலைப்பிறவி யாழ்ந்து மதிமருண்டு மாழ்கி
அலைப்புறுவோர் என்றும் அழியா - நலப்பயனார்
ஞானம் தரும்பரம நற்கதிஉற் றார்எனவே
ஆனந்தம் உற்றார் அடைந்து....936

இத்தன்மை யான இரும்தவத்தோர் எய்துதலும்
அத்தலையி னான அடல்வீரர் - மெத்த
தொழுந்தோறும் ஆசியுரை சொற்றார்கள் மேகக்
கொழுந்தேர் தம(து)உளத்தில் கொண்டு....937

சாற்(று)அரிய தங்கள்நெடும் சாலை உடன்கொடுபோய்
ஏற்றதலம் நல்கி இருந்தவர்கள் - மாற்றரிய
மல்அரக்கும் சுந்தரத்தோள் மால்வண்ணற்கு) ஆங்குஉரைத்தார்
வல்அரக்கர் தீமைஎலாம் மற்று....938

வேதக் கொழுந்தே விறல்அரக்கர் வெம்மையினால்
நீதித் துறைமுடியேம் நீண்மறைகள் - ஓதித்
தவம்புரியேம் முப்பொழுதில் சந்திமுறை ஆற்றேம்
நவம்புரியும் அந்தணராம் நாம்....939

வேள்வி முடியேம் விணைமுடியேம் வித்தகம்சேர்
கேள்வி முடியேம் கிளர்மறைநூல் - ஆள்வினைகொண்(டு)
ஏதம் உரையேம் இவைஒழிந்தேம் ஆயின்எமக்(கு)
ஆதாரம் என்னோ அறை....940

வானவர்தம் கோன்உளனேல் வஞ்சக் கரஅரக்கர்
போனகம்செய் வேலை பொருந்தினான் - ஆனதுவேல்
எத்தரத்தர் காப்பார் இனிஉன் சரண்சரணம்
அத்தனே என்றார் அடைந்து....941

இப்புறத்தும் அப்புறத்தும் எப்புறத்தும் எய்தினரைத்
துப்பறவிற் கொண்டு துமியேனில் - இப்பொழுதுஎன்
தோள்வலிமை என்ஆம் துயரேன்மின் என்றுஉரைத்தான்
வாள்வலியால் ஆங்(கு)உறைந்த மன்....942

தாய்வரம்கொண்டுஇவ் வனம்யாம் சார்ந்ததுமுன் தாம்இழைத்த
நோய்வரமோ வெவ்அரக்கர் நொய்விணையோ - காய்வினையோ
எண்ணும்கால் ஏதெனினும் எஞ்சாதிர் என்றுஉரைத்தான்
வண்ணம்கார் போல்வான் மதித்து....943

வெள்ளை அர(வு)அணிந்த வித்தகனும் வெள்இலைவேல்
வள்ளல்உடன் ஆழி வளையோனும் - உள்எதிர்ந்து
காத்திடினும் கண்டகரைக் கைப்பிடித்த கார்முகத்தால்
கூத்தன் உல(கு)உய்ப்பேன் குறித்து....944

தத்தும் கடல்சூழ்புவியில் தக்கோர் எனின்எனது
சித்தம் அவர்திறனே செல்லுமால் - இத்தலையில்
அஞ்சன்மின் என்றான் அரிஆய் அரன்ஆன
மஞ்சனைய மெய்யான் வகுத்து....945

அண்ணல் உரைஅமுதின் ஆனந்தம் கொண்டறிஞர்
எண்ணும் அழ(கு)உடையாய் இங்ஙனே - நண்ணி
எமைப்புரத்திர் என்றார் எழுதாக் கிளவி
அமைத்(து)எழுதும் உள்ளத் தவர்....946

கொத்தார் குழவியொடும் கோஇளைய தம்பியொடும்
பத்(து)ஆண்டு இருப்பப் பனிமுகில்தேர் - அத்தா
அகத்தியனைக் காணின்நல மாகும்எனச் சொற்றார்
மகத்தியல்பு தேர் மாதவர்....947

அவ்உரைகொண் டான்ற அறிவுடையார் அன்னையொடும்
நவ்விவிளை யாடும்வனம் நாடியே - செவ்விச்
சுதீக்கணனார் வைகும் துடவைதனை உற்றார்
அதீச்சுர சம்பத்தார் அவண்....948

அப்பொழிலின் மேய அருந்தவனைத் தாழ்தலுமம்
முப்பகையை வென்ற முழுத்தவத்தோன் - இப்பொழுது
நீவிர்உற எத்தவம்யான் நேர்ந்தனன் என்றான்அவனுக்(கு)
ஆவிஎன உறைந்தார் அங்கு....949

அய்யன்முகநோக்கி அரும்தவனும் யானிழைத்த
செய்ய தவம்உனக்கே சேர்கஎன்ன - மெய்உடையோய்
எல்லாம் உனதருளே என்றான் இனிஒருசொல்
வல்லாய்கேள் என்(று)உரைப்பான் மால்....950

அகத்தியனைக் காணும் அவாஇருந்த(து) என்ன
மகத்துவனும் நோக்கி மதியோய் - அகத்திடையான்
எண்ணியதே சொற்றாய் இணைஇலா அம்முனிபால்
நண்ணிடுதிர் என்றான் நனி....951

அற்புதனும் அவ்உரை கொண்(டு)ஆன்ற குறுமுனிவாழ்
கற்பகநேர் பூம்பொழிலைக் கண்உற்றான் - வெற்(பு)அடக்கும்
கையான் கரும்கடலை உண்டான் கணிச்சியைநேர்
மெய்யான் அறிந்தான் விரைந்து....952

விண்ணிற் படந்தநெடு விந்தம்எனும் வெற்படக்கி
வண்ணப் பவள வரைபுரையெண் - கண்ணன்
உரைகொண்டு தென்பால் உறையும் பொதிய
வரையிருந்த மாதவத்தோர் மன்....953

மண்டலங்கள் வாழ மறையோர் குலம்வாழப்
பண்டை வினையும் பறந்தோடக் - குண்டிகையில்
காவிரிநீர் தந்தான் கடல்அவுணற் காய்த்தருந்தி
ஏவுலகும் காத்தான் இசைந்து....954

அண்டருக்காய் வேலைஎழும் ஆலத்தை உண்டுமணிக்
கண்டம் அமைந்த கனல்கடவுள் - பண்டை
அருமறையின் உய்த்த அரும்தமிழ்தந் தான்எம்
கருமுகிலைக் கண்டான் களித்து....955

வண்ணக் கருமணிநேர் மாதவனு மாதவனை
மண்ணில் படிந்து வணங்குதலும் - நண்ணித்
தழீஇஉவந்து வாழ்த்திநலம் சார்ந்தேன்ஈங்(கு) என்றான்
வழுவுறுமெய் மாதவத்தோர் மன்....956

வேதத்தும் மேலிடத்தும் மெய்உணர்ந்த யோகியர்தம்
போதத்தும் எல்லாப் பொருள்இடத்தும் - நீதத்தும்
நின்றானை நோக்கி நிலைஅடைந்தேன் யான்என்ன
ஒன்றா மகிழ்வடைந்தான் ஊங்கு....957

அறப்பயிர்கள் ஓங்கும் அரும்பவங்கள் மாயும்
மறக்கொடிய வஞ்சகரும் வாழார் - புறத்(தி)என்னி
மாதவரும் வேதியரும் வானவரும் வாழ்ந்தனர்என்று
ஆதரவு கொண்டான் அவன்....958

அத்தவனும் மாதவரும் அம்பொன் மலர்தூவிச்
சத்தமறை ஓதிநெடும் தண்தலைவாய் - வித்தகனைக்
கொண்டுஏகி நல்விருந்து கூர்ந்(து)அமைந்தா வாரிஅமுது
உண்டாரின் உண்டார் உவந்து....959

மாதவனை நோக்கி மலையா சலத்துமுனி
ஆதரவாய் நீஅடைந்த ஆற்றினால் - போதம்இலா
வெவ்அரக்கர் ஆற்றும் வினைச்செயலால் வேதநெறி
எவ்வம்உறேம் கண்டாய் இனி....960

தண்டகத்தின் உற்றனன்இத் தண்டலையும் சாரும்எனக்
கொண்டகத்தின் எண்ணும் குறைமுடித்தாய் - முண்டகப்பூ
அன்னைஅணி மார்பா அரக்கரையும் கொன்(று)அருள்க
மன்னிஇவண் என்றான் மகிழ்ந்து....961

தென்தமிழ் கடந்த திருமுனியே தெவ்அரக்கர்க்
கொன்றருளி வந்த குறைதீரத் - துன்றிஅவர்
மேவுதிசை உறைவான் மேயவிடமெற் கருளால்
நீவகுத்தி என்றான் நினைந்து....962

ஆவதுவே என்ன அகத்தியனும் ஐயவிது
மூவர்பிரான் கொண்டது வன்மொய்ம்புடைய - தேவமரும்
வில்லிதுநீ கோடிஎன வெம்கணையின் புட்டிலுடன்
அல்லனையாற்(கு) ஈய்ந்தான் அவன்....963

பொறை உறைந்த புத்தேள் புரம்எரித்த வெவ்வாய்க்
கறைஅமைந்த வெற்றிக் கணையும் - உறைசுமந்த
வாளும் அளித்தான் மறைபோல் தமிழ்தந்த
ஆளும் பெருமான் அணைந்து....964

வாலுகம்கண் மேவி வளர்தருக்கள் மேல்ஒங்கிச்
சீலம்உறும் நல்துறைகள் சேர்ந்(து)எழில்ஆர்ந்து - ஏலம்உறும்
பஞ்சவடி சேறி பயன்உண்டு எனமொழிந்தான்
அஞ்சவரை வென்றான் அறிந்து....965

நடைகொண்ட மாமுனிவன் நன்குதரப் பெற்ற
விடைகொண்டு வள்ளல் விரைந்தான் - புடையே
வெயில்அனய மேனி விமலனொடு கோல
மயில்அனைய மாதும் வர....966

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.4. சடாயுகாண் படலம்
மன்றல் கமல மலர்த்துறையும் மாநதியும்
குன்றும் குளமும் குளிர்பொழிலும் - சென்று
கடந்தார்கள் கண்டார் கழுகுக்(கு) அரசை
நடந்தார்கள் வீரர் நனி...967

மேல்எழுந்த விந்தம் விரிசிறையின் ஓர்வரையின்
பால்எழுந்து நின்ற பரிசேபோல் - நீலமணிப்
பொற்கனகக் குன்றில் பொலிவானைப் புண்ணியனை
அற்புதனைக் கண்டார் அயிர்த்து....968

பாரமழை மேகம் படியும் நெடுவரையில்
போர்அமையு மேனி பொலியவே - வார்அமையும்
கால்ஒளிகள் மீது கதுவக் கதிர்முடிவான்
மேல்ஒளிபோல் கால வெயில்....969

வல்அவுணன் துஞ்ச வதைத்த நரமடங்கல்
மல்லற் கரத்தின் வளைநகம்போல் - எல்அமைந்த
துண்டத்தான் தொல்அருணன் தோன்றல் சுதைஅனைய
கண்டத்தான் ஆங்(கு)உரைந்தான் காண்....970

அன்னவனைக் கண்டார் அயிர்த்தார் இவனரக்கர்
மன்னவனோ அன்றேல் வலிஅமைந்த - பொன்னிறம்சேர்
புள்அரசோ என்னப் புகன்றார் புகன்றோனும்
ஒள்ளியரைக் கண்டான் உவந்து....971

பொற்சடையர் வில்லர் புரிதவத்தர் போல்புனைந்த
வற்கலையர் நீதி வடிவமைந்தார் - எற்கலையா
ஆனனத்தர் ஓர்மா(து) அருகுவர வாயினர்இக்
கானனத்தம் யா(து)என்பேன் கண்டு....972

மூவரையும் கண்டேன் முழுக்கருப்பு வில்லினையும்
தேவரையும் கண்டேன் திரண்டபுயம் - மாவளரும்
கோவடிவு பெற்ற இவர்கோலம்உறும் காட்சிஎதிர்
ஆவரோ என்பான் அறிந்து...973

வாழி அமரர் மனமகிழ வான்புரந்த
ஆழி அரசன் அவன்அனையர் - கேழ்கிளரும்
தோற்றத்தார் தம்நிலைமை சோரா(து)உணர் குவன்என்று
ஏற்றத்தால் உற்றான் எதிர்....974

நீவிர்யார் என்ன நெடியோன் புவிமுழுதும்
காவலான் கொற்றக் கவிகையான் - பாவலான்
மைந்தர்யாம் என்ன வலியனோ அப்பெரியோன்
முந்தருள்திர் என்(று)உரைத்தான் முன்....975

மெய்உரையால் விண்ணின்மிசை மேயினான் வேந்(து)என்னப்
பொய்உரையான் உள்ளம் பொருமினான் - வெய்(து)உயிர்த்தான்
என்துணைவா என்றான் எழுந்தான் விழுந்(து)அழுதான்
பொன்றினான் போன்றான் புலர்ந்து....976

விண்ணவர்க்காய்த் தானவரை வேர்அறுத்த மெய்ச்சுடராம்
அண்ணல் உடனீயா னாவிஎன - மண்ணில்
உரைத்தஉரை பொய்யோ உரைதவறாய் அன்றோ
வரைப்புயத்தாய் என்றான் மருண்டு....977

நன்(கு)அமைந்து நோக்கி நலம்எதுவோ என்(று)உருகி
தன்கைகொடு சேரத் தழுவியே - இங்குளைந்த
நீயாரை என்ன நிகழ்த்தினான் நேயமொடும்
ஆயோ தனத்(து)அரியன் தான்....978

தாணு அனையபெரும் தக்கன் அளித்(து)அருளும்
மாண்இழையார் பன்மூ வரைமணந்தான் - ஏணமையும்
பொய்க்காசு மூன்றும் பொடித்தான் புலன்அடக்கும்
மெய்க்கா சிபமுனிவன் வேட்டு....979

அப்பெரியான் தோய அதிதிஎனும் அம்கயல்கண்
துப்புறழும் செவ்வாய்த் துடிஇடைப்பொன் - முப்பத்து
முக்கோடி விண்ணவரை முற்பயந்தாள் மிக்கபுகழ்த்
தக்கோர் களிஅரும்பத் தான்...980

திதிதனுவாம் ஆனார் திறல்அசுரர்ப் பெற்றார்
மதிஎன்பாள் மாந்தர் வருண - மதியுறுப்பும்
ஈன்றாள் குதிரைஎரு(து) ஆனஇவை அளித்தாள்
வான்தோய் சுரபு மணி....981

ஒட்டைமரை ஆதி உயிர்த்தாள் குரோதவசை
வட்டு முலையாள் மயில்வினதை - விட்(டு)இலகும்
ஏறுஇடிமின் ஆதி இகல்அருணன் பேருவணன்
பாறுமுதல் ஈன்றாள் பரிந்து....982

காம்(பு)அடைந்த வில்லீர்காள் காடைமுதல் ஊர்க்குருவி
தாம்பிரைப்பெண் நல்கத் தனிக்கழைமான் - ஏம்பலுடன்
இங்கு கொடிசெடிகள் ஈன்றாள்அக் கத்துருவும்
அங்களித்தாள் பல்தலைப்பாம்பு ஆய்ந்து....983

ஓர்தலைய நாகம் உயிர்த்தாள் உயர்சுதைமான்
ஆர்உடும்பே ஆதி அனில்எல்லாம் - சீர்நிரம்பு
மெய்யரிட்டை ஈன்றாள் விளங்(கு) இளையாள் பெற்(று)எடுத்தாள்
ஐய சலசரங்கள் ஆய்ந்து....984

இன்னோரில் நல்வினதை ஈன்றஅடல் பேரருணன்
பொன்னேர் அரம்பை தனைப்புல்லியெமை - அன்னாள்
அளித்தான் அவன்படரும் அவ்வுலகும் செல்வேன்
அளித்தாம வேலுடையீர் யான்....985

மாசில் வருணம் வகுக்கும்நாள் வந்துதித்தே
காசினியில் நான்ஓர் கழு(கு)அரசன் - ஏசலறும்
தாதைக்கு நட்(பு)உடையேன் சம்பாதி பின்வந்தேன்
ஆதிச் சடாயுஎன்பே ராம்....986

காளையரும் தாதை கழிந்ததற்பின் அத்தாதை
மீளஉறும் தகைமை மேவினார் - கோள்அறுசீர்
உண்மைக்(கு) உரியார் உயிர்த்தார் உலைந்(து)அழுதார்
கண்முத்(து) அரும்பக் கலுழ்ந்து....987

இன்னல் படுவாரை இரும்சிறக ரால்தழுவி
மன்னன் இறப்ப மதியுடையீர் - என்உயிரைக்
கொள்ளேன் எரியில் குதிப்பென் எனமுயன்றான்
வள்ளார் புயத்(து)எருவை மன்....988

எந்தாதை தீர்ந்த இனல்ஒழிப்ப நீஉளைஎன்(று)
அந்தோ இருந்தோம் அதுமறந்து - நந்தா
எரிபுகுவன் என்றாய் இனித்துணையார் என்றார்
அரன்அயன்மா லானார் அயர்ந்து....989

முன்னவனும் நோக்கி முறையால் இவண்இருந்து
நன்னகர நீவிர் நடந்ததற்பின் - என்உயிரைப்
போக்குவன்நீர் வந்த புதுமைஎவன் என்(று)உரைத்தான்
நீக்(கு)அரிய அன்பால் நினைந்து....990

மக்காள் வலாரிமுதல் வானவரால் மற்றவரால்
மிக்காய துன்பம் விளைந்திடினும் - தக்கார்முன்
கொன்(று)அளிப்பல் அன்பு குறையன்மின் என்றுஉரைத்தான்
குன்றிநிகர் வல்எருவைக் கோன்....991

சிற்றவையால் வந்த செயல்அனைத்தும் தேர்ச்சிபெற
வெற்றி இளையோன் விளம்புதலும் - கொற்றவனாம்
தாதைபுகழ் ஏறத் தழுவினீர் ஈ(து)அன்றோ
காதலர்கள் செய்யும் கடன்....992

பானம்கண் பாகுமொழி பாவைஇவர் ஆர்என்ன
மேல்நடந்த(து) எல்லாம் விரித்(து)உரைத்தான் - ஞானியரில்
விண்நாட்டில் மண்நாட்டில் மேதக்க நல்தவத்தால்
எண்நாட்டு மேலோன் எடுத்து....993

நாட்டில் இருந்த நலம்போல நாஉறைஇக்
காட்டில்இருந்(து) அன்னாள் கழிமின்எனக் - கோட்டுசிலை
மஞ்சுஅனையான் பஞ்ச வடிஉறையுமாறு எனது
நெஞ்சம்எனச் சொற்றான் நினைந்து....994

என்றான் இராமன் இதுவே நலம்என்ன
மின்தோய் சிறகர் விரித்(து)ஏக - அன்றே
படர்வான் நிழலில் படர்ந்தனர்கள் சென்றார்
மடமா மயிலோடு வந்து....995

பஞ்சவடி எய்திப் பரந்தாமன் தம்பியொடும்
கஞ்சவடி அங்கயல்கண் கன்னியொடும் - நெஞ்(சு)உவந்து
வீற்றுஇருப்பக் காத்தான் விழியை இமைகாப்பதுபோல்
கூற்றனுங்கும் வல்எருவைக் கோன்....996

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.5. சூர்ப்பனகைப் படலம்
நாளும் ஒருபடித்தாய் நன்னிலைமை பூண்(டு)ஒழுகி
வாள்அணிகள் தாங்கி வருவோர்க்குக் - கேளிர்என
ஊண்அமுதம் ஊட்டி உயர்குலத்து மாதர்என
வெண்நரைசேர் கோதா விரி....997

கலைக்கடலாம் நண்பற் கலந்(து)ஒழுகி நாளும்
அலைச்சுதையின் ஆங்குஇனிமை ஆர்ந்து - துலக்குபுகழ்
இல்அறம்செய் கோதை எனக்கிடந்த எண்மணியின்
வில்அணியார் கோதா விரி...998

தாமரைகள் மன்னுதலால் தாமரைகள் முன்னுதலான்
மாமணிசேர் வண்ண மணிஉறலால் - காமர்உறும்
வண்ண மதிவதன வாள்விழியால் நின்வடிவை
நண்ணிய(து)ஈங்கு என்றா நதி....999

கல்லார மேவிஎழில் கல்லார மன்னுதலால்
வில்லார் அரும்பும் விரவலால் - எல்லாரும்
கோலமுடி துறந்த கோமானே நின்வடிவம்
போல்அமைவது என்றாள் புனல்....1000

இத்தன்மை ஓதி இளையோன் இழைத்தநெடும்
சுத்தம்உறும் பஞ்சவடிச் சூழல்வாய்ப் - பத்திஉறும்
சாலை உறைந்தான் தமனியப்பொன் மாமலர்வாழ்
மாலைமயி லோடும் மகிழ்ந்து....1001

இராவணனுக்(கு) எய்தா இறுதிவினை ஈட்டித்
தராதரங்கள் எல்லாம் சரித்துப் - பராவும்
சுரக்கிடச் செய்தாலம் துனிஉருக் கொண்டுஅன்ன
அரக்கிஇவள் ஆனாள் அறிந்து....1002

வெவ்அரக்கர் செய்யும் வினைபோல வெம்தறுகண்
தவ்வைபோல் பெண்மைச் சமன்என்னக் - கவ்வைதரு
நஞ்சம்போல் சூர்ப்பணகை நண்ணினாள் வண்ணமணி
மஞ்சனையான் வீற்றுஇருக்கும் வாய்....1003

கண்டனள்தன் கண்ணால் கரும்குவளை நாண்மலர்போல்
கொண்டல்போல் வீற்(று)இருந்த கோமளத்தை - வண்டல்
செறிபழனக் கோசலையார் தெய்வத்தைத் தேனைப்
பொறிவளரு மார்பினனைப் போந்து....1004

காளகண்டன் நெற்றிக் கனலால் எரித்தமதன்
மீளவடி(வு) எடுத்து மேவினனோ - நாளமலர்க்
கண்ணனோ ஆயிரம்பொற் கண்ணனோ ஆறுஇரண்டு
கண்ணனோ என்பாள் கனிந்து....1005

பேர்அழகு வாய்ந்து பெருங்கமலம் பெண்உறைந்து
கார்அழகு வாய்ந்து கனிந்துஇறுகிச் - சேரப்
பருத்தொருவில் தாங்கிப் பளபளத்து வான்சேர்
பொருப்புளதேல் ஒக்கும் புயம்....1006

நாள்நாளுந் தேயும் நகைமதியை நாரணன்நேர்
ஆள்நா யகனார் அருள்ஒழுகும் - வாள்மால்
வதன நிகராக வழங்கினால் வான்மீன்
கதிர்இரவி ஆகும்அன்றோ காண்....1007

நங்கையர்கள் நோற்ற நலமோஇன் னானிலத்தோர்
தங்கயணஞ் சார்ந்த தவம்கொல்லோ - எங்கள்
குலப்பயனோ என்றுவகை கூர்ந்தாள்தன் ஆவி
மலர்க்கணையாள் வாட மருண்டு....1008

ஐங்கணையான் காமன் அயில்வேல் அடல்குமரன்
இங்குஇவரைப் பேர்அழகுக்கு ஏற்றம்எனச் - சங்கைஅறத்
தான்மொழிவர் இன்னோன்பொன் தாள்பொடியும் நேர்வர்என
யான்மொழியேன் என்பாள் எதிர்...1009

என்று பலவும் நினைத்(து)எழுமான் தோள்மலைமேல்
சென்ற விழிமீட்டும் திறம்இலாள் - நின்று
தெருமந்தாள் ஆவிசிறி(து) இலைஉண்டு என்ன
அருமந்த மெய்எழிலை ஆய்ந்து....1010

பந்துமுலைப் பங்கயப் பொற்பாவைதனை எண்ணிஒரு
மந்திரத்தை ஓத மதிமுகம்பெற்(று) - அந்தம்இலா
நல்அழகு வாய்த்தினிய நம்பிதனைச் சேர்வல்என
வல்லிஎன வந்தாள் மருண்டு....1011

மைஅணிந்த கண்ணும் மலர்அணிந்த பூங்குழலும்
கைஅணிந்த காசும் கலைஅணியும் - மெய்அணிந்த
பூஅணியும் பெற்றோர் புதுஅழகுப் பொற்கொடிபூ
மேவியதை ஒத்தாள் மிளிர்ந்து....1012

கொங்கலரும் வல்லிக் கொடிபோல் இடைதுவள
அங்கை அளகம் அவிழ்ந்(து)அலையத் - தங்கக்
கலைநெகிழப் பொற்சரிகைக் கச்சுஅடர்ந்த காமர்
முலைநெகிழ வந்தாள் முயன்று....1013

மேகலையும் நூபுரமும் மெல்என் ஒலிசிறப்ப
தோகைமயில் என்னவரு சுந்தரியை - நாகர்புகழ்
வண்ணத்தான் மாமழைநேர் வண்ணத்தான் மாதவர்தம்
எண்ணத்தான் கண்டான் எதிர்....1014

மெய்அணிகள் மின்ன விழிவலைகள் வீசிதறும்
தொய்யில் முலைகள் துணைநெகிழ - மையலொடு
நாணி அயல்ஒதுங்கி நாடிக் கரம்கூப்பி
பூண்ஒளியின் நின்றாள் பொலிந்து....1015

மட்டங்கா ஞான மணிச்சுடராம் வள்ளலந்தத்
துட்ட நினைப்புடைய தோகைதனைச் - சட்டம்உறத்
தூக்கினான் உள்ளத் துலையால் எழில்உலகம்
ஆக்கினான் கண்ணால் அறிந்து....1016

மானிடவர் பெண்ணோ மணிஉரகர் மாதரசோ
வான்அரம்பை மானோ மலர்த்திருவோ - தேன்அனையாய்
பொய்அறநின் பேரும் புரியும் புகழ்உறவும்
தையல்உரை என்னஉரைத் தான்....1017

காதல் உளத்(து)அடங்காக் காரிகையும் கார்அனையோய்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - சோதிஅரி
பெற்றான் திருப்புதல்வன் பேரன்அவன் பின்பிறந்தேன்
முற்(று)ஆய்தி என்றாள் மொழிந்து....1018

என்றாள் இறைவன் இவள்குணம்வே றாம்போலும்
நன்றுஆய்ந்து அறிதும் நயந்(து)என்னம் - பின்றா
இராவணனார் தங்கைஎனில் இவ்வுருவம் மேவி
விராவணன்என் என்றான் வியந்து....1019

தானம் தயைஒழுக்கம் சார்ந்தேன் தவச்செயலால்
மானவரில் பெற்ற வரம்என்ன - வானதுவேல்
இந்து நுதலாய் இராவணனார் தங்கைஇவண்
வந்தவரவு என்என்றான் மால்....1020

பொய்யுருவாள் வீரன் புகல்மொழிஓர்ந்(து) அந்தணர்மாட்டு
எய்து பணிபுரிவேன் எய்தினேன் - வெய்தினினைக்
காணியவந் தேன்என் கருத்துஈது எனமொழிந்தாள்
வாள்நிலா மூரலாள் மற்று....1021

நின்உறவு பெற்றேன் நிருதர ருளடைந்தேன்
என்எனக்கு வாரா தினிஎன்ன - மன்னர்பிரான்
வான்நிலவ தக்கான் மணிமிதிலை மான்எனுமப்
பாணவிழி வந்தாள்அப் பால்....1022

வந்தவளை நோக்கி வனசமலர் மீ(து)உறைந்த
பைந்தொடியோ என்னப் பணித்(து)அயர்ந்தாள் - முந்திவரும்
என்னைப்போல் உற்றாள் இடையே எனஉரைத்தாள்
மின்னைப்போல் உற்றாள் வெறுத்து....1023

ஆயிடையில் அன்னம் அணையாள்அப் பேதமையை
நீஇவளைத் தேர்தி நெடியோனே - பேய்அனையள்
பொய்உருவாள் என்று புகன்றாள் அப்பூவைநிறத்து
ஐயனிட மேவி யணைந்து....1024

அப்போது அரக்கி அகங்கரித்து நீஇடையில்
எப்போது வந்தாய் எனஉறுப்பத் - துப்பார்ந்த
வல்லியோள் ஐயன் மணித்தோள் இடைமருவிப்
புல்லினாள் அஞ்சிப் புகுந்து....1025

அளையனைய வாயாள் அரக்கி முகம்நோக்கி
இளையன் உறின் மிக்கஇடறாம் - உளைவறவே
சேறிஎன விட்(டு)அகன்று சென்றான் செழும்சாலை
வீறுஅணைந்த கார்அனைய வேள்....1026

நம்பி அகல நடந்தாள் ஒருபொழில்வாய்
வெம்பி உளைந்தாள் விரிகதிரும் - பைம்பொன்
கடல்குளித்தான் செக்கர்க் கடிவாய் அரவாள்
இடர்குளித்தாள் தீயாள் இவள்....1027

தென்றல் புலிக்கும் சிறுபிறைக்கும் செக்கருக்கும்
அன்றில் பெடைக்கும் அறி(வு)இழந்து - வென்றிக்
கருப்பனுக்கு மோதக் கடலுக்கு மாழாந்(து)
அருப்பம்உற்றாள் உள்ளம் அயர்ந்து....1028

வண்ணம் கடல்அனையார் வாய்கண்கை உந்திபதம்
எண்ணும் கமலம்எனும் நீரார் - நண்ணித்
தழுவும்வகை உண்டோ தடமுலைகாள் என்னே
எழுமலையை ஒத்தீர் எவன்....1029

உளைக்கும் உயிர்க்கும் உடல்சோரும் எண்ணி
இளைக்கும் அயிர்க்கும் இனையும் - களைக்கும்
கலங்கும் உலைஇருக்கும் கைத்துணையால் வெம்பி
மலங்கும் நகைக்கும் மருண்டு....1030

வேதனைஇவ் வா(று)உழக்கும் வேலையில்அவ் வேலைவாய்
ஆதவனும் தோன்ற அதிர்குரலாள் - சோதிமணிப்
பெய்வளையாள் உள்ளவரைப் பேணா னவட்கவர்வல்
எய்தின்இவண் என்றாள் விரைந்து....1031

சந்தி தவம்முடிப்பான் சாமி ரகுராமன்
அந்தில் அகன்றான் அடல்இளையோன் - கத்தமலர்க்
காஉறைதல் காணாள் கருகினாள் காளம்எனப்
பூஉறையும் பூவைமுனம் போந்து....1032

தனிஇருந்தாள் இப்பொழுதே தக்க(து)என எண்ணி
வனிதை இருந்துழியின் மன்ன - முனிவுடனே
நில்லடி என்ன நினைவதன்முன் நேர்ந்(து)உருத்தான்
வில்எடாது எண்ணி விரைந்து....1033

சுரிகுழகைப் பற்றிச் சுரிகை இடைவாங்கி
விரிகுழையும் மூக்கும் விடமார் - கரிமுலையும்
போக்கினான் மன்னோப் புரந்தரனைப் பொன்உலகில்
ஆக்கினான் என்ன அடர்ந்து....1034

அவ்வேலை வல்அரக்கி ஆர்த்(து)அரற்றும் ஒல்லோதை
எவ்வேலையும் போல்இரைந்து எழவே - கொய்வான்
புழைஒழுகும் சோரி புவிநிறைந்த(து) அம்மா
மழைஅருவி என்ன மலிந்து....1035

உயிர்த்தாள் உளைத்தாள் உயிர்உலைய ஏங்கிச்
செயிர்த்தாள் சிறுவாயைத் தின்றாள் - பெயர்த்துஇனிஎன்
மூக்கிழந்தேன் என்றாள் முழைவாய் திறந்துநலம்
போக்கினேன் என்றாள் புலர்ந்து....1036

பிறைச்சடையான் வெள்ளிப் பிறங்கல் ஒருதோளால்
இறைப்பொழுதின் முன்னி எடுத்தோய் - தறைக்குளிரு
மானிடவர் செய்த வடுக்காண வாராயோ
ஊன்ஒழுக நிற்பேனை ஓர்ந்து....1037

இந்திரனை அந்நாள் இரும்சிறையில் எய்துவித்த
மைந்தா மருகா வலிஉடைய - நம்தமக்குப்
போனகம்அன் னார்இழைத்த பொல்லா வினைப்பழியை
யான்அடையு மாறோ அயர்ந்து....1038

வானவரை வென்று வலியால் செருமுனையில்
தானவரை வென்று சயம்கொண்டோய் - யானடைந்த
கையறவு காணாய் களிஅரும்பக் கண்உறக்கம்
எய்தியோ ஐயா இனிது....1039

மரன்அமைந்த கானில் வதிதருவார் வண்மை
நரர்இருவர் செய்தவினை நாடி - அரன்அமையும்
தண்டக் கரனே தனிக்கரனே சார்ந்தவரைத்
தண்டனைசெய் யாயோ தகைந்து....1040

இன்னவிதம் முன்னிஅவள் இன்னல்உற மன்னும்எழில்
மன்னவனும் அந்நிலையில் மன்னினான் - பொன்அனைய
கோகனகை மேயஒரு கோமளைமுன் ஆகவரும்
மேகம்என நாகம் எனவே....1041

வந்தானை நோக்கி வயிறலைத்து மம்மருழந்(து)
எந்தாய்நின் அன்பால் எனக்(கு)அடைந்த - சந்தாபம்
பார்என்ன வீழ்ந்தாள் பதைத்தாள் படும்சோரி
கார்இழிவ(து) என்னக் கலந்து....1042

எக்குற்ற மேனும் இவள்புரிந்தாள் என்பதுவும்
அக்குற்றம் நோக்கி அடல்இளையோன் - கைக்குற்ற
வாளால் அரிந்த வகையும் மனத்துணர்ந்தான்
தோளா மணிநேர் சுடர்....1043

நீரார் எனவினவ நேரார்குலம் அறுத்த
வீராதி வீரன் விரு(து)உடையோன் - பேரார்
இராவணனார் தங்கை எனஅறியாய் கொல்லோ
பராபரனே என்றாள் பதைத்து....1044

தவம்செய்வேம் எம்உழைநீ சார்தல் எவன்என்ன
பவம்செய்த பாவிஇவள் பார்த்து - நவம்செய்த
நென்னல் பொழுதின்இடை நேர்ந்திலனோ யான்என்ன
அன்னளோ என்றான் அறிந்து....1045

இத்தன்மை செய்தற்(கு) இளையோய் இவள்இழைத்த
பொய்த்தன்மை என்கொல் புகறிஎனச் - சித்தம்
அறிந்திலேன் எம்மோய் அவள்மேல் கனன்று
பொறிந்(து)எதிர்ந்தாள் என்றான் புகைந்து....1046

ஏற்றான் உரைப்ப எதிர்மொழிஇப் பூவுலகின்
மாற்றாளைக் கண்டால் மழைஅனையாய் - தோற்றாத
வன்சினம் உண்டதால் வழக்கே எனஉரைத்தாள்
நஞ்சனைய தீயாள் நகைத்து....1047

நின்குலமும் நின்உறவும் நீயும் கெடுவதன்முன்
நன்ககல்தி என்ன நடலையொடும் - தன்குடிக்கோர்
ஈறு நினைப்பாள் இவைபின்னும் ஓதினாள்
சீறுவிடம் அன்னாள் செயிர்த்து....1048

வாரணம்சேர் வாரணன்வெள் வாரணத்தோன் வாரிசத்தோன்
வாரணஞ்சேர் கேதனத்தான் மான்மழுவான் - ஏவரெலாம்
கம்பத்தான் என்றால் கதிஇழப்பர் காப்புமிழந்(து)
என்பத்தை யோரீ ரெவன்....1049

என்முனாற்(கு) இவ்வுரைவந்(து) எய்துமுனம் என்னுடன்நீ
அன்முகம்இன் றாக அணைகஅன்றேல் - நன்முகனார்
வாள்எடுத்த கைஇலக்கு வன்னுடனே யாக்கிடுக
கோள்அடுப்ப தன்றுஉறுதி கோள்....1050

மண்உலகில் விண்ணுலகின் மற்றும்உள பேருலகில்
எண்ண வரும்மாற்றலர் வந்(து)ஏற்றிடினும் - அண்ணல்
தயமுகனார் தங்கைஎனில் தாம்இரிவ தல்லால்
வயமுகம்சேர் வாகைஉண்டோ மற்று....1051

மூக்(கு)இழந்தேன் என்று முனிவீர்காள் முன்அடைந்த
தாக்(கு)அணங்குக்கு ஏற்றவிடை தான்உண்டோ - பாக்கியமே
வந்த(து)என ஏற்கும் வகைஉளதேல் மாற்(று)எழில்வாய்
முந்(து)உருவைக் கொள்வேன் முயன்று....1052

என்றான் இராமன் இளமுறுவல் பூத்(து)உனது
பின்றா நிருதப் பெரும்படையை - இன்றேஓர்
வில்லடீ காண்டிஅடி வேர்அறுப்பன் நில்லாது
செல்லடீ என்றான் சினந்து....1053

கூற்றுவன்நேர் உன்முன் கொடும்படையும் வெம்படையும்
காற்(று)எதிர்பஞ் சாகக் கடித்(து)ஒறுப்பன் - மாற்றம்எலாம்
கண்டேன் இனிஒழுதி என்றான் கழிக்கரைவாய்
வண்(டு) ஏறுநாடன் வகுத்து....1054

பின்னும் கொடியாள் பிதற்றுதலும் பேர்இளையோன்
இன்னும் இவளுக்(கு) இரங்குவ(து)என் - முன்னம்இவள்
வல்உயிரை மாய்ப்பன்என வாள்எடுத்தான் வல்அரக்கி
ஒல்லை அகன்றாள் உயிர்த்து....1055

உங்கள் உயிருக்(கு) உறுதிஇனி உண்டோகொல்
கொங்கை அறுத்தீர் கொடியீர்காள் - சங்கைஅறக்
கூற்(று)அனைய வெம்கரனைக் கூய்வருவல் என்றுஅகன்றாள்
மாற்(று)இலா வஞ்ச மகள்....1056

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.6. கரன் வதைப் படலம்
தென்னிலங்கை மன்னனுக்குத் தீநிமித்தம் என்னவே
உன்ன இழந்த உறுப்பினாள் - மின்அனைய
வேற்கரனை உற்றாள் விழுந்தாள் புரண்டழுதாள்
சூற்பனகை என்பாள் துணைந்து....1057

புகைபிறந்த வாயன் புலியனையன் சீறி
நகைபிறங்கு மாவி?து நங்காய் - பகைஅரும்ப
மூக்கும் குழையும் முடித்தாரை விண்ணுலகம்
ஆக்குவேன் என்றான் அதிர்ந்து....1058

மதனன் அனையர் மனிதர் இருவர்
புதன்அனையார் புத்திப் பொலிவில் - விதனமிலா
நற்றவத்தர் கார்முகத்தர் நங்கையொடு மேவினார்
கற்றவர்கள் வேதம் கலை....1059

அரக்கரைக் கொன்று ஆவி அமரர் குலத்தைப்
புரக்கவந்த புண்ணியர்கள் போல்வார் - கரக்குமடல்
காமன்நோய் இல்லார் கருணைத்தண் காரனையார்
கோமகர்கள் போல்வார் குறிப்பு....1060

இத்தகையர் பாலிருந்த ஏழை மலர்இருந்த
அத்தருணி போலும் அழகுடையாள் - பத்தி
இலங்கையர் கோனுக்கா எடுத்துறு வான்எல்லை
வலங்கையாற் செய்தார்இம் மாசு....1061

என்றாள் உரைதேர்ந்து எரிவிழித்துப் பற்கடித்து
நின்றாரை நோக்கி நிமைப்பொழுதில் - சென்றேநம்
தேர்தருதிர் என்னத் திறலுடைய அவ்வரக்கர்
போர்தருதிர் என்றார் புகழ்ந்து....1062

தானவர்கள் அல்லர் தரும்பகைமை சார்ந்துஉறைந்த
வானவர்கள் அல்லர் மனிதரே - ஆனதினாம்
சென்றால் இதுபழியாம் தேறுங்கால் இப்பணியை
ஒன்றே எமக்கே உரை....1063

என்றுரைப்ப அற்றே இயையும் இனிநீவிர்
சென்று அவரைக்கொன்று திருமகளை - நன்றுஇனிநீர்
வல்லை உடன்கொண்டு வருமின் நடமின்எனச்
சொல்லினன் செல்என்னத் தொனித்து....1064

விடைகொண்டு வல்லரக்கர் மேவினார் தீமை
உடைகொண்ட பாவியும்வந்து உற்றாள் - நடைகொண்ட
மாதவனைச் சுட்டினாள் மண்ணுக்கும் விண்ணுக்கும்
தீதகற்ற நின்றாள் சினந்து....1065

ஆர்த்தார் உறுத்தார் அலையார் அலைக்கடலிற்
போர்த்தார் புகுந்து புழுங்கினார் - சேர்த்துஇவனைக்
கட்டுதிர்நீர் என்றார் கடித்தார் கனல்விழித்தார்
திட்டினார் சூழ்ந்தார் தெளித்து....1066

அய்யன் அறிந்தான் அடல்இளையோய் ஆர்அமிர்தாம்
தய்யலைநீ காத்திஎனச் சார்ந்துமலர்க் - கைஎடுத்த
வில்லால் எழுநான்கு வெங்கரமும் வீழ்த்தினான்
எல்லார் படையோடு இற....1067

மலைஓ டினபோல்அவ் வள்ளல் சரத்தால்
தலைஓ டிடலும் தனியாள் - உலையாமுன்
ஓடினாள் சென்றாள் உரைத்தாள் உரக்கரற்கு
வீடினார் என்ன விரைந்து....1068

ஈரெழுவர் மாய்ந்தார் எனும்உரைகேட்டு எண்ணரிய
பாரவலி ஓங்குஅப் படப்பணிபோல் - வேர்அறவே
சென்று களைவன்எனச் சீறினான் தேவர்எலாம்
அன்றுஅயர்ந்தார் உள்ளம் அயிர்த்து....1069

தேர்வருக வாசித் திரைவருக திண்முகக்கைக்
கார்வருக காலாட் கடல்வருக - வீர
வளைமுழக்கிச் செல்கஎன வாள்எடுத்துச் சென்றான்
அளைமுழக்கும் கார்போல் அதிர்ந்து....1070

மாற்றார்தம் ஆவி மலைந்துஉகுத்த கண்ணீரின்
சேற்றால் அணிந்த திலதநுதல் - காற்றாம்
கடுவேகக் கார்போற் கலந்ததே கானக்
கொடியோடும் வேழக் குழாம்....1071

நேரார் மணிமகுடம் நீறுஆக்கிப் பொற்குளம்பால்
காரார் இடிபோல் கனைத்திடுவ - பார்ஏய்
வளைமுகத்த விண்மிசையும் வாவுவன வண்ணக்
களைமுகத்த வாசிக் கணம்....1072

வேர்உறையும் நாகம் விடம்பொழிந்து கண்பிதுங்க
பார்கிழியச் செல்லும் பரமுடைய - நீரில்
நெருப்பில் பொருப்பில் நெடுவானில் செல்லும்
திருப்பணிய கேதனத்திண் தேர்....1073

கனல்விழியர் வேகக் கடுநடையர் காகத்து
அனல்விழியர் பேய்விழியர் அஞ்சும் - புனல்விழியர்
எண்விழியர் பின்விழியர் எஞ்சா வலிஉடையர்
விண்வழியுஞ் செல்வார் விரைந்து....1074

மழுஅயில்வாள் வன்தோ மரம்குலிசம் ஈட்டி
எழுஉலக்கை பாசம் இருங்கோல் - முழுவயிரக்
குந்தம் வலையம் கொடுஞ்சரம்வில் ஆழிவலம்
முந்து முசுண்டி முதல்....1075

பாலம் நெடும்கப் பணம்ஏந்து கையுடையர்
ஆலம் அனையர் அனல்விழியர் - வேலைஎன
வந்தார் இவர்தலைமை வாய்ந்தோர் எழுபதின்மர்
மந்தேயர் ஒப்பார் வலி....1076

பேய்முகமும் வேழப் பெருமுகமும் பித்துடைய
நாய்முகமும் வஞ்ச நரிமுகமும் - தீய
அரிமுகமும் வெந்தறுகண் ஆளி முகமும்
பரிமுகமு மேயப் படை....1076

கொடியும் கவரிக் குழாமும் குடையும்
பிடியும் களிறும் பெயரக் - கடல்எனவே
போர்ப்பணைகள் ஆர்ப்ப புரந்தரனார் பொன்உலகம்
போர்க்கும் புழுதி புக....1077

திரிசிரா என்னும் திறல்அரி ஒப்பானும்
பரிசிரா வெய்ய பழிசார் - கிரிஉலாம்
தோள்அடல்வெம் தூடணனும் தோன்றினார் மைக்கடல்வாய்
காளகம்சேர் காளமெனக் காய்ந்து....1078

விண்ணவர்கள் மேலோர் வெருக்கொளவும் வெண்திரைசூழ்
மண்ணவர்கள் கண்புதைந்து வாடவும் - பண்ணமைந்த
தேர்ஏறிச் சென்றான் சிலையோடும் சீயம்எனக்
கார்ஏறும் காயக் கரன்....1080

மூக்கறுந்த மெய்யாள் முதலாக மொய்அமரின்
ஏக்கமொடும் சேனை எதிர்ந்தவால் - காக்கமுகில்
வாளை உகளும் வளநாடன் கோசலையார்
காளையவன் முன்னே கனன்று....1081

இடிப்பறையின் ஆர்ப்பும் எதிர்விண் அளாவும்
கொடிக்கதலித் திண்தேர்க் குழாமும் - மடுத்துவரும்
தூளி படரவரும் தூசியுங்கண் டான்கழற்கால்
ஆளியன மொய்ம்புடையான் ஆங்கு....1082

கரன்வருவது என்னக் கவசமொடும் வேகச்
சரனமைந்த வில்லும் தரித்தான் - உரன்அமைந்த
வாள்எடுத்தான் தம்பி மதிவதனம் நோக்கிஇது
கேள்என்றான் நம்பி கிளர்ந்து....1083

வேண்டினேன் உன்னை விரைமலர்த்தார்ப் பூங்குழலை
ஈண்டுநீ காத்தி இமைப்பொழுதில் - மாண்ட
தவத்தோர்க்கு உரைத்தமொழி தப்பாமல் யானே
அவத்தோரைக் கொல்வேன் அடைந்து....1084

ஏவல் கடவான் இலக்குவனும் ஏங்குறும்அப்
பூவைதனைக் காத்துப் புறம்நின்றான் - காவலனும்
மால்விடைபோற் சாலை வயினின்று எழுந்தான்பொற்
கால்வளையும் வில்லுடன்அக் கால்....1085

வந்துஎதிர்ந்த பூவை வடிவானைச் சுட்டினாள்
முந்தவருந் தூசி முனைவருவாள் - அந்தகன்தேர்
வேற்கரனும் நோக்கி வெறும்மா னிடவனுயிர்
போக்கிடுவன் என்றான் புகைந்து....1086

என்றபொழு தத்தே இரைத்தார் பெருங்கடல்போல்
வென்றி அரக்கர்எனும் வீரர்எலாம் - வன்திண்
சிலைவளைத்தார் நாண்எறிந்தார் சேவகனை நண்ணி
மலைவளைத்தது என்ன வளைத்து....1087

வில்உடையர் வாள்உடையர் வேல்உடையர் விண்இடியின்
சொல்உடையார் பாவத் தொழில்உடையார் - எல்லைஇலா
ஆயுதத்தார் சுற்றினார் ஆர்த்தார் அமர்புரிந்தார்
தீயுமிழ்ந்த கண்ணார் தெளித்து....1088

கருணை மழைஅனைய காகுத்தன் கைவில்
உருமின் நெடுநாண் உரற்றிப் - பரியமுனை
வல்வாய்ப் பகழி மழைபொழிந்தான் வச்சிரத்திண்
கல்வாய்த்த தோளினர்மேற் காய்ந்து....1089

வாளுங் கரமும் வயிறும் வயப்படைஆர்
தோளும் தலையும் துமித்தவால் - நாளும்அறா
விக்ரமத்தி ருக்கரத்தன் வெற்றிபெற்ற கொக்கரையிற்
கொக்கரித்து டற்றுமுக்ர கோல்....1090

கையுங் கழுத்தும் கரியின் கறைப்பதமும்
மெய்யும் விழியும் விசைவாலும் - கொய்துஒழித்தான்
சக்கரத் திருக்கரத்தின் உக்ரமச்சி லைச்சரத்தின்
விக்ரமச்செ ருக்களத்தின் மேல்....1091

வளைமுகமும் காலும் மணிவயிறும் பாகர்
உளைமுகமும் வாசி உரமும் - களன்முகத்தே
கண்டதுண்டம் விஞ்சமுந்து கங்கபந்தி யுஞ்செறிந்த
விண்டவன் சரந்துறந்த மேல்....1092

அச்சழிந்து செல்லுமணி ஆழி அணிஇழந்து
தச்சழிந்து வாசித் தலையழிந்து - வச்சரப்பொற்
கந்தழிந்து முந்துருண்ட கந்தரங்கள் எங்கள்நந்தன்
உந்துவெஞ்ச ரம்மழுந்த வும்...1093

செல்மாரிபெய்த செலதரம்போல் சேவகனும்
வில்மாரி பெய்ய விழுந்தவால் - வன்மாய
வல்லரக்கர் கையும் வலியும் அவர்வரமும்
கல்அரக்கும் தோளும் கடிது....1094

அற்ற நெடுஞ்சூலம் அற்ற அயில்பாலம்
அற்ற முழுவயிரத்து அம்பொடுசோல் - அற்றசிலை
அற்ற கருந்தலைகள் அற்ற கடும்பரிகள்
அற்றகொடித் தேரும் ஆங்கு....1095

அல்ஆம் நிறமுடையார் ஆர்ப்பரித்து வெம்சரங்கள்
எல்லாரும் ஒன்றாய் எதிர்ந்துஎய்தார் - வில்லாளன்
நூறு ஆயிரமா நொறிலார் தருங்கணையால்
நீறாக எய்தான்முன் நேர்ந்து....1096

கார்இருள்போல் வந்து கனன்றாரைக் கைச்சரத்தால்
வேர்அறவே நூறி விழுத்தினான் - பாரில்அறம்
செய்யாரை மாளச் செழுந்தவஞ்செய் மாமறையோர்
வைதார் எனவே வகிர்ந்து....1097

முற்றும் எதிர்ந்த வலியாரை வன்கணையால்
முற்றும் அவித்தான் முழுமுதல்வன் - வெற்றிஎன
முத்தலையான் கண்டு முடுகினான் தானையொடும்
அத்தலையின் மால்போல் அதிர்ந்து....1098

பொய்போலச் சூழ்ந்து பொருவார் இடைப்புறத்து
மெய்போல வீரன் விளங்கினான் - மைபோல
வந்தாரை வாளி மழையால் அவித்துஒழித்தான்
செந்தாரை பாயச் சினந்து....1099

காகமும் பேயும் கழுகும் களம்அடைந்த
ஆகம் உறும்புண் அழிகுருதி - வேகமொடும்
உப்புஉவரி பாய்ந்தது உடற்குருதி ஆறெனவே
செப்பும் செருக்களத்திற் சேர்ந்து...1100

முச்சிகரம் ஒத்த முடியான் முனிந்துஎதிர்ந்து
வச்சிரநேர் வாளி மழைபொழியா - அச்சுதனை
ஆர்த்தான் மறைத்தான் அறிவோன் அறிந்துஅழித்தான்
போர்த்தாம வில்லாற் பொருது...1101

தேர்அழித்து வாசித் திரையழித்து வச்சிரத்திண்
கார்அழித்து பாகர்க் கடிந்துஅழித்து - வீரத்து
முத்தலையின் ஒன்றுஒழிய மற்றிரண்டும் மொய்கணையால்
அத்தலையின் வீழ்ந்தான் அடர்ந்து....1102

ஒருதலையின் ஊழி உறுங்கனல்போல் சீறி
வருசிலையின் நாண்எறிந்து வாங்கி - அருள்முகில்மேல்
பெய்தான் சரமழையைப் பெய்திடும்அக் கார்முகமும்
கொய்தான் ஒருகணையால் கோன்....1103

வில்லிழந்தும் வெய்யான் விசையால் எடுத்துஎறியும்
கல்லிழவான் என்னக் கருதியே - வல்அமைந்த
தாளிரண்டும் நீண்ட தலைஒன்றும் ஐங்கணையால்
தோளிரண்டும் வீழ்த்தான் துணித்து....1104

முத்தலையான் ஆவி முடிந்ததற்பின் வல்லரக்கர்
எத்தலையும் ஓடி இரிந்திடவே - அத்தலையில்
தூடணனார் என்னும் தொடுகழல்கால் தோள்வலியன்
நாடினான் செவ்வே தனி....1105

ஓடினார் தம்மை உறுத்தான் அமர்க்களத்தில்
வீடினார் என்னும் வியன்இன்றிப் - பாடுஇறவா
வாளோடும் ஊர்புகுந்தால் மாதர்நகை செய்யாரோ
நாளோடு போமோ நகை....1106

என்றுஅவரைத் தேற்ற எதிர்த்தான் இகலரக்கன்
குன்றுஎதிர்வது என்னக் குழுவினார் - வென்றிச்
சிலைவலியான் கைக்கணையால் தென்திசையை உற்றார்
கலைநிமிட மாத்திரையாம் கால்....1107

என்னும்அள வின்கண் எரிஎழித்துப் பற்கடித்துத்
துன்னும்வலித் தூடணனும் தோன்றினான் - மின்உமிழும்
கூர்வாய்க் கணைமூன்று கோத்துஎய்தான் கொற்றமுறும்
வார்வாய்ச் சிலைமுகின்மேல் மற்று....1108

நன்றுஉனது வீரம் எனராகவனும் அப்பொழுதில்
தன்தனுவின் சாயகத்தால் சாய்த்தறவே - குன்ற
நெடுந்தேரும் கார்முகமும் நீக்கினான் மன்னோ
கடந்தோர் களியரும்பக் காய்த்து....1109

வானவர்கள் வாழ்த்த வலாரிதலை எடுப்ப
மானவர்கள் ஏத்தி மகிழவே - ஈனநெறி
தூடணனார் வன்தலையைத் தொல்இலங்கை ஆழ்கடலின்
பாடுஉறவே வீழ்த்தான் பறித்து....1110

தம்பி தலைதுமிந்த தன்மை தெரிந்துமனம்
வெம்பி உளைந்த விறல்கரனார் - கொம்புதலை
கட்டும் குலக்கரியில் காகுத்தன் தன்னைஎதிர்
முட்டினான் மன்னோ முனிந்து....1111

கடல்போலச் சூழ்ந்து கனன்றார் அரக்கர்
விடநாகம் என்ன விரவ - அடல்வீரன்
மண்உருவ நீர்உருவ வான்உருவ வாள்நிருதர்
எண்உருவ எய்தான் எதிர்ந்து....1112

வந்துஎதிர்ந்தோர் ஆவி வயவீரன் வெம்சரத்தால்
நொந்தழிய மந்தரத்தின் நோன்மைஉறும் - எந்திரம்மீ(து)
உற்றான் கனல்போல் உறுத்தான் அவ்உம்பர்முதல்
செற்றாரை வென்றான் செயிர்த்து....1113

தீஉருவ கால்விசைய செவ்வியன வெம்பகழி
ஆயிரம்கொண்டு எய்தான் அடல்அரக்கன் - ஏஎனும்முன்
தீஉருவ கால்விசைய செவ்வியன வெம்பகழி
ஆயிரம்கொண்டு எய்தான் அரி....1114

பூமடங்கா வெய்ய பொருபகழி ஓர்ஒன்பான்
கோமடங்கல் அன்னான்குறித்(து) எய்தான் - மாமடங்கல்
ஒப்பானும் ஒன்பான் உறுபகழி கொண்(டு) அறுத்தான்
மைப்பாந்தள் ஒப்பான் வலிந்து....1115

மாமாயம் செய்து வலிஅரக்கன் வன்பகழி
மாமாரி பெய்து மறைத்திடலும் - கோமானும்
இன்னே முடிப்பன் இவன்ஆவி என்(று)உருத்தான்
ஒன்னார் நடுக்கம் உற....1116

தாங்கும் அரவுஅனைய சாப நெடுநாணில்
வாங்கினான் ஆகன்மேன் மன்னர்பிரான் - நீங்குஅரிய
அண்டமுகிடு கிழித்(து) அற்றதுஎனும் மார்ப்பினொடும்
விண்டுஒடிந்த(து) அன்றேஅவ் வில்....1117

வில்ஒடிந்த தன்ன வெருவினார் விண்உறைவோர்
அல்அணிந்த மேனி அபிராமன் - எல்அலர்ந்த
தோட்டுநாள் தாமரைநேர் தூய திருச்செம்கரனை
நீட்டினான் மன்னோ நினைந்து....1118

அந்தரங்கம் ஆகிவரும் அன்பர்மனம் நாடுறுங்கால்
வந்த(து)அருள்செய் மாருதிபோல் மன்னர்பிரான் - கந்தமலர்க்
கைநீட்டத் தந்தான்அக் கார்முகத்தைக் காசினிசூழ்
மைநீட்ட வாரிதிக்(கு)ஓர் மன்....1119

விற்கொண்ட மேகம்எனும் வேந்தர்பிரான் வீங்குபுயத்
தற்கொண்ட மேனி அபிராமன் - முற்கொண்ட
எந்திரம்நீ றாக்கினான் எல்அனைய பல்கணையால்
அந்தரம்மீ(து) உற்றான் அவன்....1120

மாயைகொடு வல்அரக்கன் வாளிமழை பொழியத்
தீயின் வலியதோர் செஞ்சரத்தான் - ஆயோன்
வலக்கை அறுத்தான் வயவீரன் வெம்பி
உலக்கை எடுத்தான் உவன்....1121

அவ்உலக்கை அற்(று)ஒழிய அம்பொன்றில் வீழ்த்தினான்
தெவ்அரக்கன் பின்னும் சினந்துஎதிர்ந்து - வெவ்விடம்போல்
மாமரம்கொண்(டு) எற்றுதற்கு வந்தான் அதைஅரிந்தான்
நாமம்இரண்(டு) எழுத்தோன் நன்கு....1122

வில்வாய்க் கொளுவி விடுத்தான் வெயில்அனைய
வெல்வாய் நெடிய விறல்வாளி - மல்வாய்
மலைதுமிந்து வீழ்ந்த(து)என மண்மேல் அரக்கன்
தலைதுமிழ்ந்து வீழ்ந்ததுவே தான்....1123

மாமுனிவர் ஆடினார் வானவர் கொண்டாடினார்
பூமகளும் நின்று பொறைஉயிர்த்தாள் - கோமகனும்
அன்னபொழு(து) உற்றான் அழுதுஆவி சோர்ந்(து)இதையம்
இன்னல் உறுகோதை இடம்....1124

மடமயிலும் தம்பியும்அம் மால்வடிவில் தீய
அடையவர்கள் தம்செருவின் ஆய - பொடிஇரத்தம்
கண்ணீர் பொழிந்து கழுவினார் காதலுளார்க்(கு)
எண்ணீர்மை அன்றோ இது....1125

மூத்தம்எனும் வேளை முனிந்தோர்தம் ஆவிகளை
நீத்த முதல்வன் நெடுவானோர் - ஏத்த
இருந்துழியில் சொல்வாம் இகல்அரக்கி தன்னால்
வரும்தகைமை எல்லாம் வகுத்து....1126

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.7. மாரீசன் வதைப் படலம்
கரன்முதலோர் மாண்டசெயல் கண்டாள் கலங்கி
உரன்அமைந்த நாசி ஒழுகும் - குருதிஓடும்
வல்இடியின் ஓசைபட வாயால் உளைந்துஅரற்றி
கல்இலங்கை வந்தாள் கடிந்து....1127

எங்கள்பிரான் தோள்மீது இவர்ந்தபெரும் காதலொடு
மங்கை சனகி வடிவுஅனைத்தும் - அங்கைஉறும்
ஆமலகம் என்ன அறிவிப்பேன் என்(று)இலங்கைக்
கோமகனை உற்றாள் கொதித்து....1128

ஆன்ற தவத்தோர் அளவா அரும்தவம்சேர்
மூன்றுலகில் சான்ற முழுத்தச்சன் - ஏன்றரிதில்
ஆற்றுமணி மண்டபத்தில் ஆலம் வடிவுஎடுத்து
வீற்றுஇருந்தது என்ன மிளிர்ந்து....1129

பன்நிறம்கொள் வெம்கதிர்ஓர் பத்துஉதைய மால்வரைமேல்
மன்னுதலை ஒப்ப மணிமகுடம் - சென்னி
வெயில்எறிப்ப ஆரம் மினுமினுப்ப மார்பின்
எயில்எரித் தோன்நாண விருந்து....1130

எண்ணான் இளமதியம் இந்திரவின் நீலமணி
விண்ஆர்ந்த வெற்(பு)இடையின் மின்னுதல்போல் - தண்ஆர்ந்த
ஆசைக் கரியின் அடல்படைகள் நின்(று)இலங்க
தே(சு)உற்ற மார்பில் திகழ்ந்து....1131

நாலைந்து வன்றலைய நாகபண பந்தியினில்
நீலமணி கண்டர் நெடுவரையைச் - சால
எடுத்ததோள் தோன்ற எரிப்பொரிக டாவும்
விடத்து உவமைசால விழி....1132

எப்பொழுதில் என்னபணி எம்பெருமான் என்றுஇமையோர்
நிற்பஅருள் நோக்கி நெடும்உரகர் - அற்புதம்சேர்
மாமணிகள் ஈய வலாரி முறைவணங்கி
நாமம் துதிப்ப நயந்து....1133

அங்கோர் திறத்தில் அறையினுமவ் விஞ்சையர்கள்
எங்கோன் பணிஎன் எனஇசைப்பச் - சங்கீதப்
பாடல்இசை வானவர்தம் பாவையர்கள் ஆடல்செய
சேடன்வெருக் கொளவும் சேர்ந்து....1134

முத்து மணியும் முழுமலரும் குப்பைஎன
அத்தலையின் நின்றும் அகற்றியே - சுத்தம்உற
காற்றின் கடவுள் கருதப்புனல் தெளிப்ப
மாற்றிலாச் சீகரநீர் மன்....1135

கஞ்சுகத்தர் வேத்திரத்திண் கைஉடையர் காவலவன்
நெஞ்சுக்கு மாறருகர் நிற்கவே - அஞ்சவித்த
பூசுரனை ஆதி புகுந்தோர்க்குப் பொன்னுசனன்
ஆசனங்கள் ஈய அடைந்து....1136

பாசமுத லின்றிப் பகுவாய் நெடும்கரனால்
தூசுகொடு பொத்தித் தொழுதுஅருகே - பேசும்
கணித முறைதவறான் காவலரை கூறத்
தணிவில் புகழ்த்தருமன் சார்ந்து....1137

மங்கையர்கள் வானமடந் தையர்கள் மால்உரக
நங்கையர்கள் பாடல்இசை நல்கவே - சிங்கஅரி
ஆதனத்தின் மேல்இருந்தான் அந்தரம்சேர் யாழ்எனும்அக்
கேதனத்தான் மன்னோ கிளர்ந்து....1138

அவ்வழிவந்து உற்றாள் அரற்றும்பல் வாயோ(டு)
எவ்வழியும் உற்றார் இழைத்துஎழவே - எவ்வம்அறும்
உத்தரவாய் வந்தாள் உழையார் உயிர்த்(து)அழுதார்
எத்துனியோ வந்தது என....1139

இக்கொடுமை செய்தார் எவரோ இராவணனார்
விக்கிரம ஆணை விளிந்ததோ - தக்க(து)இனி
என்னோ இவள்செயல் ஈதாமேல் இலங்கைஉளார்க்(கு)
அன்னோ வழிஎன்பார் ஆய்ந்து....1140

இந்திரனோ என்னில் இதுசெய்ய வல்லனோ
அந்தணனோ பின்னை அரிகொலோ - முந்தை
விடமுண்ட கண்டனோ வே(று)எவரோ தம்தம்
குடிகண்ட மாமே குலைந்து....1141

கான்றவர்கள் என்னில்இது கைதவமே யாம்உலகில்
ஆன்றவர்கள் செய்த அரும்பழியே - சான்ற
இலங்கைஅர சற்குஉறு கண்எய்து நாள்கொல்லோ
நலங்கைவிடு நாளோ நனி....1142

இன்னபடி அந்நகரத்(து) ஏழையர்கள் ஏங்கிவர
என்னவிதம் என்(று) எவரும்ஏங்கவே - மின்னும்இடி
மாரிபோல் வீழ்ந்(து)அழுதாள் வாய்திறந்து வல்அரக்கி
மூரிஅரி ஏறுஅனையான் முன்....1143

கண்டான் அரக்கன் கனல்ஒழுகக் கட்செவியில்
கொண்டான் தணியாக் கொடும்கோபம் - அண்டாமல்
ஓடினார் ஓடி ஒளிந்தார் உலைந்(து)என்ன
பாடுஉறுமோ என்னப் பயந்து....1144

அலைதிரிந்த நாளோ(டு) அருக்கன்மதி கோள்கள்
நிலைதிரிந்த பூதலம்மேல் நின்ற - மலைதிரிந்த
இந்திரனும் இன்னே இடர்வந்த(து)என்று அழிந்தான்
சந்திரனும் நொந்தான் சலித்து....1145

செல்இடித்த(து) ஒத்துத் தெளிந்தான் சிறுநுதால்
அல்லல் இவைஇழைத்தார் யார்என்னப் - புல்லும்
பழிஉலகம் உள்ளளவும் பாலிப்பா டீயாள்
வழிமுறையே சொல்வாள் வகுத்து....1146

காடுடைய வாழ்க்கைக் கவின்உடையார் கார்முகத்தர்
வீடுடைய நல்தவரின் மேயினோர் - பீடுஉடையர்
மானிடவர் கொய்தார் வலியால் எனஉரைத்தாள்
ஊன்ஒழுக நிற்பாள் உயிர்த்து....1147

வகைஇலா வாழ்க்கை மனிதர் செயல்என்ன
நகைநிலா முந்த நகையா - மிகைஇதுநீ
சொற்றமொழி ஒன்றோ துணுக்கம்எவன் சோர்தியலை
முற்றும்மொழி என்றான் முனிந்து....1148

கோடி மதன உருக்கொண்டார் கொஞ்சீரை
ஆடை புனைந்த அரையுடையர் - சேடநிகர்
வில்லார் தவத்தர்உரை மேல்கொண்டார் நம்மவரைக்
கொல்வான் இருந்தார் குறித்து....1149

அன்னோர்க் குவமை அறையவலேல் அந்தணனும்
தன்னேர் இலாத தயரமதன் - பொன்னேர்
இளம்குமரர் நந்தா வெறுழ்வலியர் என்றாள்
களங்கமனம் இல்லாதாள் கண்டு....1150

நன்றுஎனது வீரம் நரர்இழைத்த வா(று)இதுவும்
நன்றுஎனது கொற்றம் நவில்வதுஎவன் - வென்றிபெறும்
மன்னவரைக் கொன்றால் அலவோ இத்தென்இலங்கை
மன்னவன்யான் என்றான் வடித்து....1151

அந்தணர்தம் ஊக்கத்(து) அடைவும் அவர்பொருட்டால்
வந்தவர்கள் பெற்ற வலிஉரமும் - சிந்தி
இராவணன்ஆங்கு எய்தி இழைத்திலனேல் என்பேர்
இராவணனோ கண்டீர் இனி....1152

என்றுஉருத்து நங்காய் இயல்கரனை ஆதிஉளோர்
பொன்றினரோ நின்றிலரோ போந்(து)என்னக் - குன்றுஎனவே
வந்தார் கரன்முதலோர் மாண்டார்அக் காகுத்தன்
சந்தான வில்லால் தடித்து....1153

என்றாளை நோக்கி இளையாய் உனைஇவ்வாறு
ஒன்றா வினைமுடித்தற்கு உற்றதுஎவன் - இன்றுஎனக்குக்
கூறுகநீ என்று கொதித்தான் குலம்அடங்க
நீறுகவே நின்றான் நிலத்து....1154

ஏத்தும் சிலைக்கை இராமனுடன் மேவினாள்
பூத்த மணிக்கொம்பர் போல்உளாள் - சீர்த்தமுகில்
மின்பால் இடையுடையாள் வேந்தா இவள்திறத்தால்
என்பால் அடைந்தது இது....1155

தேயா மதிமுகமும் செம்பவளம் போல்வாயும்
மாயாத மின்போல் வடிவழகும் - காயாத
செங்கமலம் அன்ன திருவடியும் சின்மொழியும்
எங்குஅறியப் போவாய் இனி,...1156

குழைஅழகும் ஆர்ந்த குழல்அழகும் மென்தோள்
கழைஅழகும் கண்அழகும் கண்டு - விழைதலிலார்
விண்ணாட்டில் பண்ணவர்வாழ் மேனாட்டில் ஈங்குஒலிநீர்
மண்நாட்டில் உண்டோ மதி....1157

தித்திக்கும் மென்கரும்பும் தீம்பாகும் செந்தேனும்
எத்திக்கும் போற்றும் எழிலமுதும் - பத்திக்
கவிக்குஇனிய ஒள்அமுதக் காரிகையார் சொல்போல்
செவிக்குஇனியது ஆமோ தெளிந்து....1158

மின்ஒளியோ பொன்னொளியோ மேனிஒளி முறுவல்
தன்ஒளியும் முத்தின் தகைஒளியோ - மன்னும்
சிலையோ நுதல்அதரம் செம்பவளத் துண்டோ
மலையோ முலைஅவட்கு மற்று....1159

பாகத்தும் நாவிடத்தும் பைம்பொன் பருப்பதநேர்
ஆகத்தும் வைத்தார் அரிவையரை - யோகத்தின்
நொவ்விடையைப் பெற்றால் நொடிப்பொழுது நோவின்றி
எவ்விடைநீ வைப்பாய் இனி....1160

மாதவத்தால் வாய்ந்த மடமயிலின்சாயல் உடை
சீதை நலமுழுதும் தேக்குவாய் - மேதினியில்
அன்பால் உயர்ந்த அபிராம நாதனைநீ
என்பால் தகுதி எனில்....1161

அன்னவளை நின்பால் அடைவிப்பான் யான்முயன்று
மன்னுதலும் தூய மணிவண்ணன் - பின்னவனார்
வாள்உருவிக் கோள்இழைத்த வாறுஈது எனமொழிந்தாள்
தேன்அனையை தீயாள் தெரிந்து....1162

சுதைமருவு காஞ்சனியில் தோன்றாது தோன்றி
கதமருவு கோபம் கலிநாண் - மதமருவும்
மானம் வலிவே(று) ஆகமம்மர்நோய் கொண்டுஉழன்றான்
தானவரை வாகை தரித்தான்....1163

இளையாளுக்(கு) உற்ற இயல்பும் இழைத்த
வளைய வலியார் வலமும் - இளையார்கன்
மாண்டதுவும் என்னோ மறந்தான் மறந்திலான்
நாண்துறந்தாள் சொல்லின் நயம்....1164

எல்லா அறிவும் இயல்பால் உரைத்தமறை
வல்லான் எனினும் மதன்இழைத்த - பொல்லாத
காதல்நோய் கொண்டு கலங்கினான் கற்றிருந்தும்
போதம்இன்றேல் என்னாம் புலன்....1165

மேய விதியின் விளைவாலும் மேதக்கோர்
தூய தவத்தின் தொடர்பாலும் - ஆய
பெருந்துன்பக் காமம் பெருகிற்றே அந்தோ
மருந்துகொள்ளா நோய்போல் வளர்ந்து....1166

காமம் உளத்துஅடங்காக் காவலன்ஓர் மந்திரத்தில்
தாமஅணைமீது தளர்வு அடைந்தான் - வாம
மதவேள் மடலார் மலர்க்கணைகள் எய்தான்
இதுவே சமயம் என....1167

உழைக்கும் உயிர்க்கும் உடல்சோரும் உன்னி
அழைக்கும் அயரும் அயிர்க்கும் - புழைக்கைமதப்
பாகலங்கோள் வெய்ய பருத்தாள் பணைப்பகடு
பாகலம்கோள் என்னப் பதைத்து....1168

முன்நின்றாள் என்னும் முனியும் முனிந்துயிர்க்கும்
பின்நின்றாள் என்னும் பிதற்றுமால் - மின்நின்றது
ஒப்பாளை எப்பாரும் முப்போதும் உச்சிகரம்
வைப்பாளை நட்பா மதித்து....1169

தென்றலே அன்றிலே தேமா நறும்குயிலே
மன்றல்ஏய் வாச மலர்ப்பூவே - வென்றிச்
சிலைமாரன் செய்யும் செருத்தொழிலைத் தெய்வக்
கலைமானுக் கோதீரோ காண்....1170

என்றான் ஒருகோடி இன்னற்கு இடம்ஆகி
நின்றான் இருந்தான் நெடிதுயிர்த்துப் - பொன்றா
அடல்ஆழிப் பொற்றேர் அருணஒளி ஆரக்
கடல்மீது எழுந்தான் கதிர்....1171

அன்ன பொழுதில் அரக்கன் விழிஉணர்ந்தான்
நென்னல் பொழுதின் நிறைமதியே - மன்னும்
இறைஅளவும் ஆகாது இரவி இவனன்று
பிறைஅழைமின் என்றான் பெயர்ந்து....1172

கல்வி அறிவில் கருதும்கால் காசினியில்
செல்வத் தவமே சிறப்புஅல்லால் - நல்வித்தம்
வேறுஇல்லை வெய்யோன் விழிக்குஎதிராய் மேவியது
பேறுஉடைய வானப் பிறை....1173

மெய்அமையும் காம வினைஉடையார்க்கு எப்பொருளும்
நையுமாறு இன்றி நலம்செயுமோ - எய்தும்
பிறைக்கதிர்வெய் யோன்உடலில் பேதுறுமாறு எய்த
இறைப்பொழுதும் ஆற்றான் இனைந்து....1174

இப்பிறையில் துப்பிரவி எற்குஇனிது மைப்புயலுக்கு
ஒப்பிரவை இப்பொழுதின் உய்த்திடுமின் - செப்பம்எனச்
சேடார்ந்த விண்ணும் திசையும் செறிந்தனவால்
காடாந்த காரம் கடிந்து....1175

ஆலமோ அன்றேல் அலையோ உலகுஅடங்கும்
காலமோ மாயத்தின் கற்பனையோ - நீலநிறச்
சாலமோ வேசையர்கள் தம்கருத்தோ அன்றுஎனில்எக்
கோலமோ இவ்இருளின் கோள்....1176

செம்பவள வாயும் சிறுநுதலும் சிற்றிடையும்
பைம்பொன் வடிவும் பரும்தனமும் - உம்பர்உற
மாய வடிவம்என வந்துஎதிர்ந்தோர் மங்கைஎதிர்
ஏயாள் இருளின் இடை....1177

மின்னல்இவண் எய்தா வெளியடையா வீணைஎனச்
சொல்நயங்கள் தோன்றா துயர்உறுத்தா - முன்அணுகி
எங்கை உரைத்த இளமயிலே இந்நின்ற
மங்கைஎனச் சொற்றான் மதித்து....1178

முன்நின்ற பின்னை முகம்நோக்கி மொய்குழால்
மின்நின்ற தென்ன விழிமுன்னே - இந்நின்ற
மாதரசி நீஉரைத்த மங்கையோ என்றுரைத்தான்
காதல்உரு வெளியைக் கண்டு....1179.

இந்திரநீ லம்போல் எழிலும் எழில்முகமும்
மந்தரம்போல் தோளும் வடிவழகும் - செந்திருவாழ்
மார்புமாய் என்முன் வருவான்அவ் வள்ளல்என
ஆர்வமொடு சொற்றாள் அவள்....1180

இம்மாயம் என்னே இருவருக்கும் வேறுபட
அம்மா எவர்புரிந்த தாம்என்ன - விம்மா
அயர்வானை நோக்கி அறைந்தாள் அவற்குக்
குயிலா வினைசெயும்ஓர் கூற்று....1181

காமநோய் கொண்டு கலங்குவதுஎன் காவலவ
தாமதமென் வல்லை சனகிதனை - நீமருவிக்
கொண்டு அணைக என்றாள் குலத்துக்குஓர் கோடாலித்
தண்டுபோல் வந்துதித்தாள் தான்....1182

நன்றுஇதுதான் என்ன நவின்றான் நலம்கருதும்
தன்துணைவ ரோடும் தனித்துஎண்ணி - வென்றிஎன
மாரீசன் பால்அடைந்தான் மானமிசை வல்அரக்க
மாரீசன் வல்லே மதித்து....1183

வந்தானை நோக்கி வரவுஎவனோ என்றுமனம்
சந்தாப முற்றுத் தகுவனசெய்து - எந்தாய்
எளியேன் இருக்கைக்கு எழுந்துஅருளும் பெற்றி
தெளியேன் அருள்என்றான் தேர்ந்து....1184

ஓசைப் பரவை விடம்உண்டோன் மலைவலியும்
ஆசைக் கரியின் அகச்செருக்கும் - பாசத்தான்
முந்துரமும் மாற முணைந்த முனைமாற
வந்ததுவே அம்மான் வசை....1185

நரர்இருவர் நின்மருகி நாசிமுலை கொய்து
கரன்முதலாம் பல்படையைக் கட்டு - வரன்அமைந்த
நம்தமையும் கொல்வான் நணுகினராம் நன்றுஅன்றோ
நும்தமக்கும் என்றான் நுனித்து....1186

ஆயிருக்கும் காணா அதிமாயை வல்லவன்எனும்
நீஇருக்க என்தோள் நிலைஇருக்கச் - சேய்இருக்க
இப்பழியான் பூணல் எழிலோ இகல்கடந்த
துப்பழியா வேலோய்நீ சொல்....1187

ஆயவர்தம் பால்மருவும் ஆடகப்பொன் தோள்மயிலை
நீஅலது யார்தருவார் நேயம்உளோய் - மாயையினால்
கொண்டுஅணைதி என்றான் குலத்துக்கோர் கோள்அனையான்
பண்டை வினைப்பவத்தாற் பார்த்து....1188

வெய்ய வினையான் விளம்புதலும் மேதினியில்
தையல் பொருட்டால் தகைஇழந்தோர் - ஐய
அளக்கர் அதரினும் எண்ணற்றார் அற்றோமேல்
கிளத்துவதுஎன் கண்டாய் கிடாய்....1189

நண்ணற்கு அரியபல நாள்இருந்து நல்தவங்கள்
பண்ணிப் பழுத்த பயன்எல்லாம் - மண்ணில்
விழற்குஇரைத்த நீர்போல் வெறிதாக்கு கிற்றி
அழல்கொடிய வேலோய் அறிந்து....1190

கற்றோர் இகழும் களிநுகர்தல் பொய்மொழிதல்
அற்றோர்க்கு அகலாது அயர்வியற்றல் - மற்றுஒருவர்
தாரம் கவர்தல்இவை தக்கோர் செயல்அன்றால்
பாரங் கதம்உடையோய் பார்....1191

பெண்ணால் அறிவுஇழந்த பித்தர்தமைப் பேசிடுங்கால்
கண்ஆ யிரத்தோன் கலைமதியோன் - மண்நாட்டில்
எத்தனைபேர் என்கேன் இதுஅறிந்தும் ஈனம்உற
நத்துதல்நன்கு ஆமோ நயந்து....1192

தேவரையும் வென்று திசைஅனைத்தும் போர்கடந்து
மூவரையும் வென்று முறைஅடைந்த - தாவில்வளத்
தென்இலங்கைச் செல்வம் சிறுவிலையில் விற்றுஉண்பான்
என்ன இழந்தாய் இனி....1193

தாக்கவந்த வெவ்விரா தப்பெயரோன் ஆதியர்கள்
ஆக்கம் அழிந்தார் அயில்வேலோய் - நோக்குதிநீ
எம்பிக்கும் ஆய்க்கும் இறுதி யுறுமாறே
அம்புஉய்த்தான் அன்றே அவன்....1194

ஈசன் பிடித்த இணையிலா வில்இறுத்த
ஓசை செவியின் உணர்கிலையோ - நீசம்உற
என்நினைந்தாய் என்செய்தாய் ஏதிலர்பால் உற்றவலி
முன்னினைந்தால் அன்றோ முறை....1195

முறை அற்றார் மூதுலகில் மூத்தோர்தம் நீதித்
துறைஅற்றார் மாயவினை சூழ்ந்தார் - கறைஅற்றார்
கற்புஅழிக்க எண்ணூம் கடைஞர் இவர்கடைக்கால்
பொற்புஅழிவார் அன்றோ புலர்ந்து....1196

செருக்குஅடைவது என்னே சிறுநுதலாள் கற்பால்
அருக்கன் அடைந்தது அறியாய் - மருக்கிளர்ந்த
செங்கமலம் மீதுஇருந்த சேயிழையே நீஉரைத்த
மங்கைஎன உள்ளத்தே வை....1197

மாமன்நான் என்னும் வழக்கா லிவைஉரைத்தேன்
நீமுனியல் என்று நிகழ்த்தினான் - தாம்ஒருவர்
முன்ஒருக்கால் பட்ட முயற்சியடி வைப்பரோ
பின்னொருக்கால் அம்மா பெயர்ந்து....1198

கேட்டான் வெகுளி கிளம்பக் கெடுவாய்நீ
நாட்டார் நகைக்க நவின்றனைநீ - சேட்டானத்
தேவர்நகை செய்யத் திறம்தெரிந்தாய் செப்பியஉன்
பாவகம்என் னாம்இனிநீ பார்....1199

மூவர் முதல்வர் முனிவர் முழுப்பகையாம்
தேவர் அசுரர் திசைஉளோர் - யாவரும்என்
ஆணை கடவார் அறைந்தாய் அறம்எனக்கு
கோணை மதியாய் குறித்து....1200

வசைவிளைத்த மானிடரை வாயார மன்னோ
இசைஉரைத்தாய் என்பெருமை எண்ணாய் - திசைநிலைத்த
திக்கசங்கள் வென்ற திறன்அறியாய் துஞ்சுதற்கு
நெக்குஉருகி நின்றாய் நெரிந்து....1201

என்ஆணாய் மேலாய் இருந்தாய் இதுகாறும்
உன்ஆவி உண்பன் எனஉருத்தான் - தன்ஆவி
போக்குவாற்கு என்னோ புகல்வது எனநினைந்து
வாக்கினால் சொற்றான் மதித்து....1202

கேடுவரு முன்னே மதிகெட்டுவரும் என்றுஉரைத்த
பாடல்அது பொய்யோ பலபலஎன் - நாடுவது
யாதுபணி சொற்றருள்க என்றான் உலகுக்காம்
வேதனையை மீட்பான் விரித்து....1203

இவ்வண்ணம் சொற்றான் எழில்மார் புறத்தழுவி
மைவண்ண நீல மணிவண்ணன் - கைவ்வண்ணம்
பொற்றொடியை என்பால் புணர்த்துதிநீ என்றுஉரைத்தான்
மற்றுஅவனும் சொல்வான் மதித்து....1204

முன்ஒருநாள் தம்பியொடும் மூண்டபெரும் போரின்இடை
என்உயிர்கொண்டு ஐய இனிதுஅடைந்தேன் - அன்னவர்பால்
போய்இயற்றல் யாதோ புகல்மின்எனப் போர்கடந்தோன்
மாயையால் என்றான் மதித்து....1205

மாயம் இயற்றல் வலியோர் திறன்அன்று
மேயவரை வென்று விறலோடு - நீஅவளை
கோள்உறுதல் மானம்எனக் கூறினான் கோமகனால்
மாளுவான் நின்றான் மதித்து....1206

புக்கவரைக் கோறல் பொருளன்று பொன்றுவரேல்
அக்கயற்கண் ஆவி அழியுமால் - தக்கதுஇனி
மாயைகொடு வவ்வுதலே வாய்ப்பாகும் என்றுஉரைத்தான்
சீயமே அன்னான் செயிர்த்து....1207

நஞ்சுஅனைய தீயான் நயந்தெரியான் நாள்இழந்து
துஞ்சும்என உள்ளம் துணிந்துஅடலோய் - வஞ்சியையான்
எம்மாயம் ஆற்றி இனிக்கவர்வது என்றுஉரைத்தான்
அம்மானாம் அம்மான் அவன்....1208

தானாக மாயஞ் சமைதல் தனக்குஇசையான்
மானாக மன்ன வலியோனை - மேனாடிப்
பொன்மான் உருவாய்ப் புணர்த்துதிபோ என்றுஉரைத்தான்
பொன்மானும் பூவைமுனம் போய்....1209

ஆயதுவே செய்வல் அளியேன் எனஅகன்றான்
மாயமா ரீசன் வலிஉடையான் - சேயதுஎன
மாறோர் நெறிவாய் மருவினான் வாய்த்ததுஎன
தூறேய் நெடுங்கான் தொடர்ந்து....1210

வந்தமா ரீசன் மருவினான் மாமலர்வாழ்
விந்தமுலைச் சானகிபால் மேவினான் - அந்தரம்சேர்
அண்டர் தவத்தால் அணியார்பொன் மான்உருவாய்
கண்டகம்சேர் கானம் கடிது....1211

அம்மானைக் கண்ட அயன்மான்மு தல்பலமான்
செம்மா மலர்வாழ் சிறையளிபோல் - அம்மா
பதங்கன் போல்உற்ற படர்ஒளியில் வீழும்
பதங்கம்போல் மொய்த்ததுகண் பார்த்து....1212

கண்டாள் செழும்கமலக் கண்களால் காதலுடன்
வண்டார் பொழில்வாய் மலர்எடுத்து - விண்தோயும்
மின்னல்எனப் பொற்பணிவில் வீசவரும் மெல்லியலாள்
மன்னும்எழில் பொன்உருவ மான்....1213

மாணிக்கம் என்னும் மணிச்செவிகால் வாய்உடையது
ஆணிக் கனகத்து அவிர்உளது - பாணிக்கை
வெற்றிக்கை வீர விதியன்று வல்விரைவில்
பற்றித்தா என்றாள் பரிந்து....1214

கொந்தளகக் கோலக் குழல்அவிழ பூங்கொம்பர்
வந்தது எனச்சிந்தை மகிழ்ந்துஅரிவை - முந்துஇசைப்ப
ஆண்டையதோ என்ன அபிராம வள்ளல்விழி
காண்டருவான் உற்றான் கடிது....1215

அக்கால் இளையோன் அறிந்தான் அடல்வலியோய்
எக்காலும் கேட்டது இலைஇதுதான் - முக்காலு
சேயமான் அன்று செயல்அறிதி தேரும்கால்
மாயமான் என்றே மதி....1216

அய்யஇது என்னே அயன்படைத்த பல்உயிரில்
வையமிசை எண்ணும் வழக்குஉண்டோ - பொய்அலவே
எத்தனையோ பல்நிறங்கள் எத்தனையோ பல்லுருக்கள்
எத்தனையோ பேதம் இவண்....1217

இன்னம் ஒருபுதுமை இப்புவியில் பொன்ஒளியேழ்
அன்னம் பிறந்தது அறிந்திலையோ - என்னச்
சனகிஇது வல்லே தருதிஎன மாழ்கி
அனகற்கு உரைத்தாள் அயர்ந்து....1218

அன்னம் உரைத்தது அறிந்தான் அணிஇழாய்
நன்னுதல்நீ காட்டதென நம்பெருமான் - முன்அணுகி
கண்டான் அம்மானைக் கனியா உவகைநலம்
கொண்டான் வியந்தான் குறித்து....1219

அத்தா இதுநீ அறிந்தனையோ அம்தரளம்
ஒத்தோய் முறுவல் உருவம்பொன் - மத்தார்
தயிர்த்துளியில் தோன்றும் சவிநிறைந்த புள்ளி
மயிர்த்தொகுதி நுண்மணலா மற்று....1220

என்றுஉரைப்ப ஐயன் இளையோன் எதிர்நோக்கி
வென்றி அரக்கர் வினைஇதுவாம் - குன்றுஅனையாய்
பொன்உருவம் என்று புகழேல் புலன்மறையும்
மின்உருவம் என்றான் வெறுத்து....1221

அப்பொழுதில் அன்னை அகலாமுன் அன்பஇனி
எப்பொழுது பற்றுதல்என்றே ஏங்குதலும் - மைப்புயல்நேர்
ஐயன் விரைந்தான் அதுகண்டு அடல்இளையோன்
வெய்யதுஇது என்பான் விரித்து....1222

பின்னுளார் மாயம் பிடித்த வகைஅறியேன்
நின்உளாய் வேள்வி நிலைஎதிர்த்தோன் - கொன்னுலாம்
மாரீச னேஇவ் வகைமான் எனஉரைத்தான்
நேரீசன் ஒப்பான் நினைந்து....1223

இவ்வாறு இளையோன் இயம்பாமுன் எண்அரிய
மைவாச மன்னு மலர்க்குழலாள் - வௌவாமல்
நிற்றியோ வென்று நிகழ்த்தினாள் நீராவி
மற்றுஇருகண் வார மருண்டு....1224

ஆயிழையின் நோக்கம் அறிந்தான் அடல்அரக்கர்
மாயமேல் அன்னார் மதமாய்ப்ப - நீயயரல்
ஈண்டுஇருத்தி என்ன இணைந்தாள் பெயர்த்தனனான்
மாண்டகுலக் கோசலையார் மன்....1225

பாயும் படரும் பதியும் பசும்புற்கள்
மேயும் விசையும் வெருளுமால் - நாயகன்முன்
கிட்டுங் கிளரும் கிளத்துவதுஎன் கெண்டையம்கண்
வட்டமுலை யாரின் மருண்டு....1226

காற்றும் கனலும் கருத்தும் இதன்கடுமை
ஆற்றுமோ என்ன அபிராமன் - மாற்றுஉயர்ந்த
தோட்டு முகைஅவிழ்க்கும் தூயதிருச் செங்கமலம்
நீட்டினான் மன்னோ நினைந்து....1227

நின்றுழியின் நிற்கும் நிலைஅடைந்து நேர்மைபெறச்
சென்றுழியின் செல்லும் திருகிவரும் - குன்றாம்
தனக்குஉரிய காமம் தனைவிலைசெய் நல்லார்
மனக்குநிகர் என்னா அம்மான்....1228

மான்புரிந்த மாய வலியன்று வல்அரக்கர்
தான்புரிந்த மாயம்இது தான்என்னா - வான்புரிந்த
வெஞ்சரம்ஒன்று எய்தான் விதிஅளித்த சாபம்என
மஞ்சனைய கோசலையார் மன்....1229

மொய்கணைஒன்று ஏவ விழுந்தான்ஓர் வெங்குரல்விட்டு
எங்கும் அதிர இடிபோலப் - பைங்கனகப்
பொன்உருவம் இன்உருவப் புல்வாய் உருவுஅழிந்து
முன்உருவம் ஆகி முடிந்து....1230

இக்குரலால் உள்ளம் இனையும் இவன்மாயம்
புக்குஇழைத்தான் மாரீசன் போல்உளான் - நெக்குருகி
நங்கை வருந்தும்எனின் நன்றுஇளையோன் தேற்றும்என
அங்குஅகன்றான் ஐயன் அறிந்து....1231

மைஒழுகும் காமர் வடிவுஅமைந்த மாமழைநேர்
ஐயன்கதை ஈது அவண்உறைந்த - தெய்வமலர்
மாமடந்தை தன்மை வகுப்பாம் இனிமலர்க்கை
ஆமலகம் போல அறிந்து....1232

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.8. சடாயு வதைப் படலம்
வெய்யோன் உரைத்த விதம்கேட்டு வேல்விழியாள்
ஐயோ எனவே அறிவுஇழந்தாள் - நெய்வெதுப்ப
முற்றுஆங்கு உருகினாள் உள்அழிந்தாள் வெய்துயிர்த்தாள்
இற்றோ எனக்குஅடையும் என்று....1233

வித்துருமக் கொம்புஒசிய வீழ்ந்துஅழுது என்நாயகனாம்
அத்தன் தனக்கோர் அவதிஉற - இத்தலையில்
இன்னும் இருத்தியோ என்றாள் இளையோனை
மின்னல் இடையாள் விடைந்து....1234

கண்முத்தம் கான்று கலுழ்வாள் முகம்நோக்கி
எண்முற்றும் வீரரே என்போஉம் - விண்முற்றும்
என்றாலும் அன்னாய் எதிர்நிற்க வல்லாரோ
மூன்றாம் உலகுஉடையான் முன்....1235

வேதத்து உறைவழுவும் விண்மதிகான் மீயுலையும்
சாதித் துறையும் தளர்வடையும் - மேதக்க
அன்புஅழியும் மெய்மை அழியும் அழிவில்லா
எம்பிராற்குஈறு உண்டு எனின்....1236

வேதம் அனைத்தும் விளிந்தாலும் விண்ஆதி
பூதம் அனைத்தும் புரண்டாலும் - ஏதம்இலா
அம்மானுக்கு இன்னல் அணுகுமோ நண்ணாதே
எம்மோய் சரதம் இது....1237

முப்புரத்தை மாய்த்த முழுமுதல் வில்இறுத்த
துப்புரமும் நீர்அறியாச் சூழ்ச்சியோ - இப்பொழுதில்
வள்ளல் பகழிஉற மாய்ந்தோன் உரைஅதனைக்
கொள்ளகலீர் என்றான் குழைந்து....1238

இளைய பெருமாள் இசைப்ப எழிலாள்
உளைவனதேர்ந்து இன்னும் உளையோ - விளைவனவும்
எண்ணாய் எரியின்இடை வீழ்ந்து இறப்பல்எனப்
பெண்ணாவி சொற்றாள் பெயர்ந்து....1239

அத்தலையில் வீரன் அறிந்தான் அனைஅனையீர்
இத்தலையில் இன்னம் இனைவதுஎன்னோ - சித்தம்
கலங்கன்மின் சென்றுஇக் கணத்து அடைவன்என்றான்
இலங்குஇலைய வேலான் எடுத்து....1240

அன்னைநுமது ஆணை அகற்றினேன் அல்லஇனிப்
பின்னர் விளைதல் பெரும்பழியே - என்ன
நடந்தான் உளம்மறுகி நாயகன்பால் மன்னோ
கடம்தாழ் புனத்தில் கடிது....1241

இங்குஇருந்தால் ஆவி இறக்கும் இவண்ஒழிய
அங்குஅடைந்தால் எய்தும் அரும்பழியே - எங்கன்என
ஆவன் எருவைக்கு அரசளிக்கும் என்றுஅகன்றான்
பூவளர்வேல் கையான் புலர்ந்து....1242

இமையோர் தவத்தால் இளையான் அகலத்
தமியாள் தனிமைதனைத் தேர்ந்து - இமையாத்
தசமுகனும் வந்தான் தவமுனிவ னேபோல்
நசைபெருக உள்ளம் நனி....1243

முக்கோலன் மின்அனைய முப்புரிநூல் மார்பன்மறை
எக்காலும் ஓதி எழுதடையன் - அக்குஆர்ந்த
மூப்புஉடையன் மேல்வாங்கு மூச்சுஉடையன் எய்தினான்
நீப்புஉடைய மங்கைமுனம் நேர்ந்து....1244

கண்டான் இருபதுஎனும் கண்ணால் களிஅமுதம்
உண்டான் இளையோள் உரைத்தஎலாம் - விண்டான்
மனம்எழுந்த காம வசம்அழிந்து மாழ்கி
தனம்அடைந்தான் போன்றான் தனித்து....1245

அவ்வழியின் நல்லாள் அடியார் எனமதியா
எவ்வழி யின்நின்று இவண்உறுவீர் - கவ்வையிலீர்
புக்குஇருமின் என்று புகன்றாள் புனக்கிளியின்
அக்கபடந் தேறாள் அறிந்து....1246

நாய்அனைய தீயான் நடலையொடு நங்கைதரு
ஏய விருக்கை யிடைஇருந்தான் - ஆயபொழுது
அண்டம் அதிர்ந்தது அரும்பறவை ஆதியவும்
கண்டுஅலக்கண் எய்தியது காண்....1247

ஆரமுதம் அன்ன அணிஇழையை நோக்கிஉமது
ஊருமது பேர்உரைமின் உற்றுஉறைந்த - சீருடைய
காதலன்யார் என்றான் கணிக்கரிய காலம்எலாம்
போதருமா நின்றான்முன் போந்து....1248

பத்துத் திசையும் படரும் பரிஇரதத்து
உத்தமன்தன் காதல் ஒருமகனார் - சித்தம்மகிழ்ந்து
அன்னைஉரை மேற்கொண்டு அடைந்தான் இவண்உறைந்தான்
என்ன உரைத்தாள் இனிது....1249

அவ்வுரைகேட் டன்னம் அனையா யனங்குலவு
செவ்வி நதியால் சிறப்புஅமைந்த - எவ்வம்இலாக்
காவன்நிலம் முற்றும்ஒருக் கால்வந்தேன் கண்டிலேன்
யாவன்மகள் என்றான் எடுத்து....1250

கனகம் முதல்நிதிகள் கற்பகம்போல் ஈயும்
சனகன் மகள்யான் தவத்தோய் - வினைகடிந்த
காகுத்தன் தன்மனைவி என்றாள் கயல்நெடும்கண்
மாகக் கமலமட மான்....1251

பெயர்த்தும் அனையாள் பெரியீர் எவண்நின்று
அயர்த்துஉறுதல் செய்தீர் அறிவீர் - வெயர்த்துளிகால்
மேனியீர் என்ன விளம்பினான் ஆல்விழுதின்
கான்நிகர்தோள் வீரர்அரக் கன்....1252

வில்இருந்த செங்கேழ் நிறம்இருந்த மென்பதுமம்
புல்லிஇருந்த புராதனன்சேய் - தொல்லைமறைத்
தூயோன் மரபில்வரும் தோள்வலியான் தொல்லைஅருள்
சேயான் அனையின் திறத்து....1253

கள்இருக்கும் கொன்றை கமழ்சடையான் தன்உடனே
வெள்ளிவரை எடுத்த வீரத்தான் - நள்ளலர்கள்
எந்நாடும் இல்லான் இகன்ஆடும் வேல்உடையான்
அன்னாடு செய்வான் அரசு....1254

தேவர் அசுரர் செகம்முழுதும் போற்றிசெயும்
மூவர் மனிதர் முழுநாகர் - யாவர்களும்
முந்துரைகள் கேட்ப முறைநடத்துஞ் செங்கோலாம்
மந்தரநேர் தோளான் மதி....1255

அன்னவன்வாழ் தென்இலங்கை அன்பினொடு சில்பகல்யான்
முன்னிஉறைந்து உற்றேன் முடிவதுஎன் - அன்னன்
கருத்துணர்வான் சொற்றான் கனகமலை என்னப்
பெருத்துயர்த்த தோளான் பிடித்து....1256

பொய்உடலைப் பேணாப் புலமையீர் புன்நெறிசேர்
வெய்ய அரக்கரிடம் மேவினீர் - மைஅறுமாறு
எவ்வாறு உறைந்தீர் இழுக்குஅன்றோ என்றுஉரைத்தாள்
மைவாசக் கொந்தளக மான்....1257

நல்லாள் உரைப்ப நயமிலா நாய்அனையான்
எல்லாம் துறந்த எமைப்போல்வார் - பொல்லா
அரக்கர் எனஉன்னார் அணியிழாய் என்றான்
உருக்கரந்த தீயோன் உயிர்த்து....1258

சானகியும் மேலீர் தவத்தோர் பவநெறியில்
ஆனவர்தம் பால்உறையார் ஆகில்அவர் - ஈனர்எனத்
தீயா ரிடம்புகினும் தீயனசெய் யார்எனவே
ஆயோன் உரைத்தான் அறிந்து....1259

மாயை உருவின்அவ் வாள்அரக்கன் என்றறியா
தூய சனகி தொழுதவத்தீர் - நாயகனார்
ஈண்டுஇருக்கும் நாட்குள் இறந்துஒழிவர் ஈனர்எனத்
தீண்டரிய அப்புலையர் சேர்ந்து....1260

பின்னர் இடர்இனிஇப் பேர்உலகுக்கு இல்லைஎனச்
சொன்ன பொழுது துயரம்உறா - நன்னுதல்அக்
காளை இராவணனைக் கண்டால் நரன்வலிநுண்
பூளை வீயாகும் புலர்ந்து....1261

எட்டுக் கயத்தை இருபதுதோள் கொண்டுவென்று
எட்டுத் திசையின் இறைவரையும் - எட்டுப்
புயத்தான் வரையினையும் போரில் வென்றார்க்குண்டோ
வயத்தாழ்வு மான்அனையாய் மற்று....1262

தோள்பலவால் என்னோ தொடுகடல்சூழ் தொல்இலங்கை
ஆள்பலத்தன் தன்னை அரும்சிறையில் - நீளவைத்தோன்
ஆயிரம்தோள் அட்டா னவன்மனிதன் அல்லனோ
போய்அருதிர் என்றாள் புலர்ந்து....1263

அஞ்சிறைய அன்னம் அனையாள் அவைவிளம்ப
வெஞ்சினமீக் கொண்டான் விறல்அரக்கன் - தம்அருவம்
மாற்றினான் பத்து மணிச்சீரம்மீ தோங்கவிண்ணில்
தோன்றினான் வெய்யோன் துணிந்து....1264

கார்ஏய்ந்த பூங்குழலாள் கண்டாள் கருதிலிவர்
யாரே பெரியார் அலர்என்னப் - பார்ஆர்ந்த
வல்உழுவை முன்அணைந்த மான்போல் அலமந்தாள்
எல்இழந்த மின்போல் இருந்து....1265

அன்னவளை நோக்கி அரக்கன் அணிநடையாய்
தென்இலங்கைச் செல்வச் சிறப்புஎய்தி - என்னுடைய
காணிமுழுதுங் கரமேந்திக் காத்திஎன
நாண்இழந்து சொற்றான் நயந்து....1266

சேமம் புரிந்துசெவி செங்கரத்தால் பொத்திஅரி
நாமம் நவின்று நலம்கொடுக்கும் - ஓமவலி
நாய்வேட்ட தென்ன நகும்எயிற்று வல்அரக்கன்
நீவேட்டாய் அன்றோஎன் நேர்....1267

மின்அனைய வாழ்க்கை விரும்பி அழியாத
என்னுடைய கற்பில் இழுக்குஉறேன் - மன்னவனார்
அம்புஅடையா முன்னம் அகறிஎனச் சொற்றனள்பூங்
கொம்பர்என வெம்மோய் குழைந்து....1268

திக்கயத்தை வென்ற திறல்புயத்தில் ஓர்மனிதன்
கைக்கணைஎன் செய்யும் கயல்கண்ணாய் - மிக்க
அணங்குறும்என் காமத்து அனல்அவித்தி என்ன
வணங்கினான் பூமேல் மருண்டு....1269

அடிமேல் வணங்க அனல்வீழ் தரும்பூங்
கொடிபோல் மருண்டு குழைந்தாள் - கடிதேயென்
அன்பா இளையோய் அணுகிலிரோ என்றுஅழைத்தாள்
மின்போல் இடையாள் வெருண்டு....1270

மாசிலா மாமணியை வஞ்சகத்தோன் மேல்ஒடுகீழ்
ஓசனை ஒன்றாக ஒளிவாளால் - ஆசறவே
கீண்டான் புவியினொடும் கேடுஉறும் அக்காலமுறத்
தீண்டான் கொடியோன் செயிர்த்து....1271

மேருநேர் தேர்மேல் மிக்கொண்டு விண்வழியே
காருருவன் செல்லக் கசிந்துஉருகி - வீரையொடும்
பூனைவாய்ப் பட்டகிளி போலப் புலம்பினாள்
மானைவாய் கண்ணாள் மருண்டு....1272

மயிலே மறியே மரனே மலையே
குயிலே குருகே கொடியே - பயிலும்
உழையே உழையற் றவர்பால் உறைமின்
குழைவேன் இடர்நீர் குறித்து....1273

மாதா எனவே மகிஅனைத்தும் வாழ்விக்கும்
கோதா விரியே குழைதருவே - சேதாம்பன்
மாமலரே வண்டினமே வாய்திறந்து சொல்லீரோ
கோமகன்பால் என்திறம்நீர் கூய்....1274

மான்பின்னே போன வரதா வனத்தில்எளியேன்
பின்னே போன இளையோனே - நோன்புஇழைக்கும்
அண்ணல் பரதா அறியீரோ யான்அடைந்த
எண்ணற்கு அரிய இடர்....1275

என்றுஇனைய நங்கை எதிர்நோக்கி வாள்அரக்கன்
வென்றிஇலா மானிடரை வேண்டுவதுஎன் - நின்றுஎதிர்ந்தார்
ஆமாகில் ஆவி அவர்க்குஉடையது அன்றுஅறிநீ
ஏமாறல் என்னோ இனி....1276

என்ன விசைப்ப இதுமொழிந்தாள் என்எதிரே
புன்மதியோய் மான்ஒன்று போக்கினாய் - வின்மழையை
நீக்கினாய் வந்து நிலத்தோடு எடுத்தனைநீ
தாக்கினாய் அன்றோ சமர்....1277

உங்கை ஒளிமூக்கு ஒழித்தும் உடன்றுஎழுந்த
வெங்கண் கரன்முதலாம் வீரரைவான் - சங்கைஅறப்
போக்கியும் செய்த பொருதிறத்தைக் கேட்டுஉருத்துத்
தாக்கினைநீ அன்றோ சமர்....1278

அஞ்சி இழைத்த அதுஅல்லால் ஆயுங்கால்
வஞ்சகத்தோய் மற்றும் வகைஉளதோ - அஞ்சலையேல்
கல்ஒன்று வன்புயத்தக் காளை வருங்காறும்
நில்என்று சொற்றாள் நினைந்து....1279

வஞ்சிஇவை கூறி வகுக்கும் பொழுதுஉரகர்
அஞ்சி உலைய அருங்கானம் - பஞ்சுபட
எங்கடா போவது இனிஎன்று இருஞ்சிறகர்
அங்கெடா ஆர்த்தான் அறிந்து....1280

தேடி எடுத்த திரவியத்தைப் பாழாக்கும்
மூடர் எனவே முறைஅடைந்து - நாடுஅரிய
நற்றவங்கள் கற்புஉடைய நங்கையால் போக்குதியோ
வெற்றி உடையாய் வெறிது....1281

இம்மை அறிவோய் எவரும் பழியியம்ப
அம்மை நரகும் அடைகுவாய் - எம்மைஎலாம்
வாழ்விக்க வந்தான் மனைவிஅடா மற்றுஅவளைத்
தாழ்விக்க லாமோ தகைந்து....1282

ஏழை மதியே எவர்என்று அவரைநினைந்து
ஊழை உனதுஉயிரை உண்பதுவை - வாழி
மருந்து அனைய வாடாமலரைக் கவர்ந்தாய்
அருந்ததியே என்றுஅறிதி ஆய்ந்து....1283

மூவா முதல்வர் முழுமுதல்வர் அம்முதல்வர்
தேவேதி தேவர் திரண்டாலும் - ஆவா
இராமனைவெல் வார்உளரோ இப்புவியில் அற்பக்
கராஅனைய தீயமதி காண்....1284

என்றான் எருவைக்கு இறைவன் இடர்உறும்அக்
குன்றா முலையைக் கொடிஅனையாய் - இன்றே
இறுப்பன் இவன்ஆவி இனையல் இனிஎன்னக்
கறுத்துஎதிர்ந்தான் அன்றே கடிது....1285

எற்றிச் சிறகால் எழுதேர்மிசை மருவும்
கொற்றக் கொடியைக் குலைத்துஇறுத்துச் - சுற்றுகதிர்
மண்டலங் கணாலைந்து மன்னுதல்போல் மின்னுமணிக்
குண்டலங்கள் வீழ்த்தான் கொதித்து....1286

கண்டா நரக்கன் கதம்கொண் டடல்சிலையில்
விண்டான் மழைபோல் விறல்கணைகள் - அண்டாதங்கு
எண்சிறகால் வீசி இறுத்தான்அவ் வில்லினையும்
வண்கனக மூக்கான் மலைந்து....1287

வில்லிறுதன் நோக்கிஇனி வெம்படையால் அன்றிஇவன்
மல்அழியான் என்று மதித்துஅரக்கன் - தொல்லைவிடக்
கால்எறிந்த நெட்டுயிர்ப்புக் கான்எருவைக் காவலவன்
மேல்எறிந்தான் ஓர்கொடிய வேல்....1288

கற்பணியார் மாதர்மிசைக் காமுகர்தம் நெஞ்சம்என
வெற்புஎறியும் பந்தின் விதம்போலச் - சொற்பரவும்
ஆண்டகையார் மெய்மொழிமுன் வஞ்சமொழி யாம்எனவே
மீண்டதுஅந்த வாள்அரக்கன் வேல்....1289

அவ்வேல் இறலாங்கு அறிந்தான் அடல்அரக்கன்
இவ்வேலையில் வென்றி டுவல்எனக் - கைவேல்
எடாமுன் அவன்தே ரிசைபாகு வீழ்த்தான்
கெடாநின்று அவன்முன் கிளர்ந்து....1290

கண்டான்தீ காலக் கடைக்கால் உரும்எனவே
தண்டால் எறியத் தரைவீழ்ந்தான் - வண்டோளி
நைந்துஉளையத் தேர்கடவி நாகமிசை எழுந்தான்
கந்தரநேர் வெய்யவன்அக் கால்....1291

மேகம்போல் வெய்யோன் மிசைஎழலும் புண்டரமன்
சோகம்தீர்ந்து ஏற்றுத் துனைப்பரிசாய்த்து - ஏகவலித்
தண்டும் பறித்துத் தசமுகனைத் தாழ்த்தினான்
துண்டம்கொண்டு அன்றே துணிந்து....1292

துண்டப் படையால் துளங்கினான் சூழ்ச்சியொடும்
பண்டைப் பிழையாப் படைஅதனால் - மண்டி
எறிந்தான் எறியவிழுந்து எய்த்தான் எவையும்
அறிந்தான் எருவைக்கு அரசு....1293

அக்கால் எம்அன்னை அரும்துயரம் தாங்ககிலாள்
மைக்கர் வரைமயில்போல் மாழ்கினாள் - மிக்குஆங்கு
கொடிகொழு கொம்பில்லாத கொள்கைபோ லோய்ந்தாள்
வடுவிழிநீர் வார மருண்டு....1294

வஞ்சம் அறியாத வள்ளலைஎன் வன்மையினால்
நெஞ்சுஅறியப் போக்கி நிலைஇழந்தேன் - விஞ்சும்
விதியோ மறனோ விரகோ கொடிய
மதியோ பெரிது வசை....1295

இற்பழியான் பூணல் இயல்போ இளங்குமரா
அற்புதனே விற்கொண்டு அடல்அரக்கன் - வெற்புஅனைய
வன்தலைகள் வீழ்த்தி வலிகாட்ட வாரீரோ
என்பிழைத்தேன் என்செய்வேன் யான்....1296

என்றுஇனையும் பொன்னை யெடுத்தான் இலங்கைநகர்
சென்று கருத்திடையும் தீண்டானாய்க் - குன்றுஅனைய
மஞ்சரக்கி மார்நடுவே வாள்அரக்க மன்னன்நெடும்
சிஞ்சுபத்தின் வைத்தான் சிறை....1297

ஈண்டரக்கன் செய்கை இயம்பினாம் யாவுமினி
யாண்டிளையோன் செய்கை அறைகுவாம் - நீண்டவிழி
மான்தனிமை உன்னி மனமயர்ந்து வல்லரியிற்
கான்தனிமை சென்றான் கடிது....1298

விற்பிடித்த மேகம்என வேலைக் கலம்போல
அற்புதம்சேர் கோலத்து அபிராமன் - புற்பரந்த
கான்உருதல் கண்டான் கனகா சலமெனவே
வான்வளரும் தோள்இலக்கு வன்....1299

அண்ணலுமவ் வாண்மை அறிவன் வரவறிந்தான்
விண்ணுருமு போல விழுந்தரக்கன் - எண்ணமுறக்
கூயினவல் ஓதை குறியா மனந்தளர்வாள்
ஏயினள்போல் ஆகும் இவண்....1300

என்றுன்னி ஐயன் இளையோய் இருந்தளித்தி
நின்றுன்னி என்ன நெடுவிழியை - என்றென்
உரைகடந்து வித்தது உரையென்றான் ஆழி
வரைகடந்த தோளான் மகன்....1301

அத்தா அரக்கன் அரற்றும் உரைஅதனாற்
பித்தேறி அன்னை பிணங்கினாள் - இத்தலையில்
அஞ்சி அடைந்தேன் அலனேல் அனல்வீழாது
உஞ்சுமோ என்றான் உளைந்து....1302

மாயாவி செய்த வகைஎன்று அறிகிலாள்
நீஏ கெனவே நிகழ்த்துதலும் - நாயேன்
பணிக்கு அடங்கி வந்தேன் பரமனே என்றான்
மணிக்கிரிநேர் தோளான் மருண்டு....1303

அவ்வுரைகேட்டு ஐயன் அயர்ந்தான் அறிவுடையோய்
வெவ்விதியை மீட்டும் வினைஉண்டோ - கவ்வையுறல்
என்னோஎன் றுன்னி இவர்ந்தான் இனம்பிரிந்த
மன்னானை என்னும் வகை....1304

பொன்னுருவப் பூங்கால் பொடியழுந்தப் புக்கனனவ்
இன்னுயிரைக் கண்ணால் எதிர்ந்திலனால் - மன்னும்
வினைஒழிக்கும் கோதா விரிக்கரையின் மேவிப்
புனைமலர்த்தார்ச் சாலைப் புரம்....1305

மூவுலகம் சேர முயன்றாலும் முன்னியஎப்
பாவகமும் சேரப் பயின்றாலும் - ஆவதையீய்
புத்தேள் அருமணியைப் போக்கினான் தன்செயலே
அத்தேவும் ஒத்தான் அயர்ந்து....1306

மலைதிரிந்த ஆழி வரைதிரிந்த ஆழி
அலைதிரிந்த வானத்து அளவும் - நிலைதிரிந்த
விண்திரிந்த வெங்கதிரும் வேழமும்அவ் ஆசையிடை
கண்திரிந்த மன்னோ கரந்து....1307

மறைமுனியுங் கொல்லோ மறையோர் இயற்றுந்
துறைமுனியுங் கொல்லோ தொடர்ந்து - நிறைவளம்சேர்
அந்தரத்தைச் சீறுங்கொல் ஆஆ எனஅயர்ந்தார்
அந்தணரே ஆதியர்கள் ஆங்கு....1308

அக்கா லிளையோ னடிதொழுதுஎம் ஆரியனே
இக்கால் இடம்நீண்டு எழும்இயல்பு - மிக்கோதைத்
தேராழி யும்தெரிந்தேம் தேம்புவதென் சென்றறிதல்
பேராண்மை என்றான் பெயர்ந்து....1309

அன்னதே ஆம்என்று அமலன் பரிஇரதம்
முன்னு நெறியே முடுகினான் - தன்இளைய
தம்பியோடும் வேகத் தனுவினொடுந் தாரகமாம்
அம்பினொடும் கால்போல ஆங்கு....1310

மண்ணுறுதேர் ஆழி வடுச்சுவடு தான்மறையக்
கண்ணபிரான் உள்ளம் கலங்கினான் - எண்ணிஇது
மின்செய்த வேலோய் வெளிவிண் ணடைந்ததினி
என்செய்வது என்றான் இனைந்து....1311

தென்திசையே அத்தேர் செலும்பரிசு காட்டியது
நின்றுஇனைவது என்கொல் நிருபனே - என்றுஉரைப்ப
நன்று எனவே சென்றார் நவில்யோ சனையிரண்டு
குன்றுஅனைய தோளார் குறித்து....1312

அந்நெறியிற் கண்டார் அடல்மால் வரைஎனவே
மன்னிய பொன்வீணை வளர்கொடியை - என்னஇது
நந்தமக்காய் வானுலகோர் நாடிஎதிர்ந் தார்கொலெனச்
சிந்தை அயிர்த்தார் தெரிந்து....1313

துண்டப் படையாற் றுணிந்த திதுதுணியின்
அண்டத்து அளவும் அடைவலிசால் - பண்டை
எருவைக் கரசே எதிர்ந்திடுமா றென்றான்
கருவைக்கும் வேல்இளையோன் கண்டு....1314

மல்வலியான் எந்தை வலியுடையான் வஞ்சமனப்
புல்வலியா னோடு பொருதனனாம் - வில்வலியாய்
தாமெழா வண்ணம் தடைப்படுத்டும் அத்தலையில்
நாம்அடைவது என்றான் நனி....1315

நன்றெனவே சென்றார் நடவை இடைமுறிவில்
குன்றெனவே கண்டார் கொடுமூக்கால் - வென்றுஒடித்த
எந்தை வலியன் எனவே வியந்துரைத்தார்
மந்தரம்போற் றோளார் மதித்து....1316

மற்றும் நெறிகடந்து வான்சிகைய வன்சூலம்
கொற்றக் கணையார் கொடும்புட்டில் - வெற்றிக்
கவசம் பரிவலவன் கண்டார்கள் ஆவி
அவசம் பெறுவது அறிந்து....1317

கான்இருளைப் போக்கும் கதிர்மணிப்பொற் குண்டலங்கள்
வன மணிபோல் வயங்கவே - தான்ஒருவன்
எந்தை யொடும்பொருதார் எண்ணிலர்கள் என்றுரைத்தான்
சுந்தரஞ்சேர் வில்லி துயர்ந்து....1318

வள்ளால் பலர்பொருத வண்ணம்அல வானவரும்
எள்ளா இருபது எணுந்தோளான் - கள்ளார்
இராவணனே என்றான் இலக்குவன்என்று ஏத்தும்
பராவருதிண் தோளான் பரிந்து....1319

நன்றுனது யூகம்என நாதன் பணித்தருகு
சென்றறிந்து கண்டான் சிலைஎன்ன - ஒன்றிக்
குருதிக் கடலிற் குலையாத வன்மை
எருவைக்கு அரசை எதிர்ந்து....1320

கள்ளவிழ்ந்த செங்கேழ்க் கரத்தை அணிபுனைவார்
வெள்ளிமலை மீதிலொரு வில்லார்ந்த - தெள்ஒளியார்
வான்விழுதல் போல்விழுந்து மாழ்கினான் வஞ்சகனாற்
கான்விழுந்தோன் தன்மேற் கவன்று....1321

உயிர்இழந்தான் என்ன உணர்விழந்தான் தம்பி
அயர்வொழியத் தன்புனல்கொண்டு ஆற்ற - மயர்வொரீஇ
அம்கமலக் கண்ணன் அனைத்துயிரு முள்அழியப்
பொங்கினான் சொற்றான் புலர்ந்து....1322

இல்லாளை வஞ்சன் எடுத்தேக நீயிறக்க
வில்லோடு நின்றேன் விளிகிலேன் - மல்ஆர்ந்த
தோள்வலியர் என்போலித் தொல்லுலகில் யாருளார்
ஆள்வலியே என்றான் அயர்ந்து....1323

மாதவர்க்கு முன்கொடுத்த வாக்கிழந்து வஞ்சமிலாச்
சீதை தனைஇழந்து தெள்அறிவில் - ஏதமிலா
நின்னை இழந்து நெகிழாஉயிர் உடையேன்
என்னில் உயர்ந்தார் எவர்....1324

என்றுபல பன்னி இனைந்தரற்றும் எம்முதலை
வென்றியுடை யோனை விழிநோக்கிப் - பொன்றும்
உயிர்உதித்தது அன்னான் உறுதிசில சொன்னான்
மயர்வொழிக்கும் வல்எருவை மன்....1325

கைதவத்தால் வந்த கருமம் இதுஎனினும்
மைதிலியை நீங்கினிரோ மக்கள்எனப் - பைதலுடன்
மான்முதலாய் வந்த வரவனைத்தும் சொற்றனன்சீர்
வான்மணியை ஒப்பான் வகுத்து....1326

விதியின் விளைவை விலக்குவார் யாவர்
மதியின் விளைவால் வருமோ - நதிபுனைந்த
தம்பிரான் மக்காள் தலைக்கலத்தில் ஏற்றுண்டான்
எம்பிரான் செய்கை இது....1327

வெங்கதிரும் பாந்தள் வினையால் அயர்வடையும்
திங்களும்தேய்ந்து அந்தரத்திற் செல்லுமால் - மங்குதலும்
வாழ்வும் வழக்கே வருவன வந்தடையும்
ஊழ்வலிஈ தன்றோ உமக்கு....1328

இன்பதுன்பம் எல்லாம் எவர்க்கும் சமம்என்பர்
அன்புடைய மேலோர் அபிராம - என்பிறஅம்
மாது தனைப்பிரித்த வஞ்சகரைக் கொன்றுஅருள்தி
மேதினியை என்றான் விரித்து....1329

இடைக்கொடியை வல்லே இராவணன் வந்துஎய்தி
எடுத்தனன்கொண்டு ஏக இடையே - தடுத்துஅவன்தன்
வாளாற் சிறகழித்திம் மண்விழுந்தேன் என்றுரைத்தான்
மாளா உலகடைவான் மற்று....1330

கேளாமுன் அவ்வுரையைக் கீறினதண் டாண்டமெலாம்
மாளாது அயர்ந்தனபல் மன்னுயிர்கள் - மீளாது
நின்றலைந்த வெங்கதிரும் நீள்மதியும் வான்சிகரக்
குன்றலைந்த கோபங் குறித்து....1331

கட்கனல்கான் றையன் கதழ்ந்தான் கதிர்சுழல
விட்புலமும் தாரகையும் வேறுளவு - முட்பதமார்
வையகமும் வாரிதியும் மற்றுளவும் இற்றுஅவியச்
செய்திடுவல் என்றான் சினந்து....1332

கண்டிருந்த வானவரைக் கட்டறுத்து வல்லாண்மை
கொண்டிருந்த தீயோர் குலம்வீட்டி - ஒண்தொடிவாய்
பெண்ணணங்கை மீட்டிடுவல் பின்என்றான் வானொடுகான்
மண்ணணல்நீ ராவான் வகுத்து....1333

அப்போது எருவைக்கு அரசன் அபிராமா
வெப்பேது உனக்கு வினைஅரக்கன் - துப்பாற்
கெடுவா யமரர் கிளர்ந்தாலும் என்ஆம்
வடுவாய் முனியேல் மதித்து....1334

பூவிருந்தோன் ஆதிமறைப் புங்கவர்கள் அவ்அரக்கன்
தாவறுசீர்ப் பத்துத் தலையறிந்தால் - நாவுலர்த்தங்கு
ஏமுறுவர் எந்தாய் எளியார்பால் இவ்வண்ணம்
நீமுனிதல் என்னோ நினைந்து....1335

என்றான் எருவைக் கிறைவன் இயம்பியசொல்
தன்தாதை சொல்லிற் றலைக்கொண்டான் - குன்றா
முனிவிகந்து தீயோரை முற்றவித்தல் நன்றென்று
இனிது மதித்தான் இருந்து....1336

அய்யன் எருவைக்கு அரசே அரிவையொடும்
பொய்யன் புகுந்த புலம்புகல்தி - நொய்தின்எனச்
சொற்றிடுமுன் சென்றான் உரவோர்க்கும் எட்டாத
செற்றமிலா சாயுச் சியம்....1337

தாதை இறந்த தனித்துயரம் தாங்ககிலான்
மாதுயரம் கொள்ளும் மணிவண்ணன் - நீதியறி
தம்பி உரையாற் றணிந்தான் தணியாத
வெம்பும்உளத் துன்ப விளைவு....1338

சந்தனமே ஆதி தருங்கார் அகில்தழுவம்
இந்தனங்கொண் டீமநெறி ஏற்றியே - தந்தையினை
மொய்அனலும் மூட்டி முடித்தான் முறையனைத்தும்
பையரவ மேய பரன்....1339

மற்றும் வினைமுடித்து வான்புனலிற் றோய்ந்தெழுந்து
நற்றவம்சேர் புண்டரமன் நாதனுக்குப் - பொற்றமலர்
கையால் அளித்தான் கடன்நீர் கடல்துயின்ற
மையாரும் பூவை வணன்....1340

நன்நால் மறைமுடிவால் நான்முகனே ஆதியரால்
என்னாளுங் காண இயலாத - பன்னாகத்து
எம்பிரான் ஈமக் கடனியற்றற் கேற்றிடுவான்
உம்பர்யான் ஓதவுறு மோ....1341

அக்கண் எருவைக் கரசுக் களித்தஅழல்
புக்கதென எங்கும் பொலியவே - செக்கர்
விடமாலை மேவ விரிகதிரோன் விழ்ந்தான்
திடமாலை மேல்பாற் றிசை....1342

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.9. அயோமுகிப் படலம்
கல்லாத புல்லர் கருத்தனைய காரிருள்வாய்
மல்லார்ந்த தோளான் வகுத்துரைத்தான் - எல்லார்
தொடிஅணியைத் தூமணியைத் தூண்டாவிளக்கை
கொடிஇடையை எண்ணிக் குழைந்து....1343

ஆதரவுஇல் லாதுஎன் அருங்காதற் கற்புடையாள்
நாதன்வரு மென்ன நவின்றாளோ - பாதகன்வாய்ப்
பட்டாளோ பாவம் பலர்நகைப்பர் என்றுஆவி
விட்டாளோ என்னோ வெறுத்து....1344

என்நினையும் என்செய்யும் யான்வருவன் என்றெண்ணி
முன்வினையு மோபின் முறையில்லான் - தன்வலிக்கே
அஞ்சினேன் என்னுமோ அன்பிலா வன்கண்மை
நெஞ்சினேன் என்னுமோ நேர்ந்து....1345

வாங்குவில்லை நோக்கும் மயங்கும் மயங்கிஉயிர்த்து
ஏங்கும் இளையோய் எனஇசைக்கும் - வீங்கியதன்
தோள்நோக்கும் மாது துயர்நோக்கும் தூவிலைய
வாள்நோக்கு மன்னோ மருண்டு....1346

முனிவர்க் குரைத்தமொழி முன்னும் முறையே
கனிவுற்ற நல்லிருளைக் காணும் - இனிதுற்ற
மாயமோ என்னும் வலியான் செயல்என்னும்
ஆயுமணி என்னான் அயர்ந்து....1347

வெங்கதிரை அந்தமிலா வைய்யோன் சிறைவைக்கக்
கங்குலாய் வந்து கலந்ததோ - திங்கள்
விடமோ அனலோ வெளிவந்தது என்னும்
படநாகம் மேய பரன்....1348

இவ்வண்ணம் வள்ளல் இருந்தினை வெய்தியக்கால்
மைவ்வண்ணக் கங்குல் வடிதரவே - பைவண்ணப்
பொற்றமணித் தேர்மேல் பொலிந்தான் புகழ்க்கதிரோன்
எற்றுத் திரைநீர் இடை....1349

பூமுகையிற் றாது புகுந்தது எனப்பொருந்திக்
காமரஞ்செய் வண்டு கஞறல்போல் - மாமலரின்
மூடவிழ்ந்த மொய்குழல்என் முன்னிலையென்று உண்மைபெற
காட்டுதலிற் பொற்கோ கனம்....1350

அக்கால் இளையோன் அடிதாழ்ந் தணங்கினைநாம்
புக்காய்ந்து அறிதல் பொருள்என்ன - மைக்கோலக்
குன்றும் குழியும் குளமும் பலகடந்து
சென்றனர்கள் கான்வாய்ச் செழித்து....1351

யோசனைஈர் ஒன்பது ஒழிந்தார் உயிர்த்துளைந்து
வாசக் குழலை வழிகாணார் - ஆசறும்ஓர்
சோலை அடைந்து துருவினார் ஆங்குஉறைந்தார்
மேலை அடைந்தான் வெயில்....1352

தட்டலிலார் சிந்தைஎன நானிலமும் வாய்த்ததிசை
எட்டும் பரந்த இருட்பொழுதில் - கட்டமைந்த
வில்லானை நோக்கி விரைந்தளித்தி நீரென்றான்
பொல்லா மணிதேர் புயல்....1353

எல்அனைய தம்பி எழுந்தான் விடைபோல
கல்அடர்ந்த கானம் கடிதேகிச் - செல்லுங்கால்
கண்டாள் அயோமுகியாம் கற்பிகந்த வல்லரக்கி
கொண்டாள் உவகை குளிர்ந்து....1354

புலிஆரம் பூண்டாள் புகைஉயிர்த்த வாயாள்
ஒலிவாரி அன்ன உருவாள் - வலியார்
அகிஅசைத்த கங்கணத்தாள் ஆலம் அனையாள்
மகிஅசைத்த திண்ணடையாள் மற்று....1355

சிங்கக் குழையாள் செயிர்ப்புடைய சீற்றத்தாள்
மங்குல் இடிஅன்ன வார்த்தையாள் - பொங்குசினத்
தாடகையை ஒப்பாள் தழைத்தெழுந்த காமத்தாள்
ஆடவரை நாடுமவள் ஆங்கு....1356

வாலி எடுக்கரிய மால்வரையை நன்குஅமைத்த
தாலிஉடையாள் தனைக் கண்டான் - மாலிருள்வாய்
யாவளடி வந்தாய் அறைகுதிநீ என்றுஉரைத்தான்
பூவைஎன எண்ணிப் புகைந்து....1357

பொன்அணைந்த தோளான் புகன்ற உரைகேட்டு
மின்அணைந்த வாளோய் விறலுடையோய் - முன்ஒருவர்
தீண்டா முலைதழுவித் தீர்ப்பாய்என் காமநோய்
ஆண்டானே என்றாள் அயர்ந்து....1358

அவ்வுரைகேட்டு ஐயன் அரக்கிஎன உணர்ந்தான்
தெவ்அடும்என் வாளால் செவிநாசி - கொய்வதன்முன்
விட்டுஅகல்தி அன்றேல் விளிதருவை என்றுரைத்தான்
கட்டுஅமைந்த வில்லான் கடுத்து....1359

உள்நினைந்த வாறே உருத்தரக்கி ஒள்ளியனை
விண்ணின்மீக் கொண்டு விசைத்தெழுந்தாள் - எண்ணும்கால்
மாகஞ்சேர் விண்மணியை வானுறவே கொண்டெழுந்த
மேகம்போல் மன்னோ விரைந்து....1360

இத்திறத்தின் ஏக இளையோன் எனையாண்ட
முத்தன் கருணை முகிலனையான் - அத்தலையில்
அப்புக்கு அடைந்தருள்தன் ஆவியனை யானைஉன்னி
வெப்புற்றான் அந்தோ மெலிந்து....1361

அப்புஅரிதோ வல்அரக்க ராயுளர்தம் போருளதோ
எப்பரிசோ எப்பழிவந்து எய்துமோ - துப்புடையேன்
சொல்லால் இனுங்கேடு சூழுமோ என்றுரைத்தான்
வல்லாளன் கோசலையார் மன்....1362

உன்னை இழந்தும் ஒளிவளைக்கை ஆர்உயிராள்
தன்னை இழந்தும் தரிப்பனோ - மின்உறும்மெய்ப்
பொன்மலையே என்னுயிரே போதகமே புண்ணியனே
வின்மலையே செய்வதெவன் மேல்....1363

ஆருயிரை மாய்ப்பனென ஆயும் பொழுதுஇளைய
வீரனிவண் மாயா விலாசியற - வீரமிலாள்
என்றுஅரிந்தான் நாசி இமையோர் தொழுதேத்த
வென்றிஉடை வாளால் வெகுண்டு....1364

அப்போது அரக்கி அரற்றும் பகுவாயின்
வெப்போதை மேவ விறல்வீரன் - துப்பார்
அரக்கிகுரல் என்னா அனற்படைகை தாங்கி
மரக்கடறு சென்றான் மதித்து....1365

ஆழி இருளகல ஆழிவரைக் கப்பாலுந்
தாழுந் தருக்கள் சடசடென - ஊழிமுதல்
வேகமொடு மேவும் விதம்கண்டான் வெவ்வரக்கி
மோகந் தடிந்த முதல்....1366

வந்தேன் அடைந்தேன் வருந்தேல் வருந்தேல்நீ
எந்தாய் எனவே இறைஞ்சினான் - மந்தாரக்
குன்றெதிர்ந்த தோளான் குலவினான் கோதறுமான்
கன்றுஎதிர்ந்தது என்னக் கசிந்து....1367

கண்ணிழந்தோன் கண்பெற்ற காட்சியினும் காரணத்தால்
விண்இழந்தோன் விண்பெற்ற மேன்மையினும் - நண்ணிஎதிர்
என்அடைந்தது என்றான் இணைத்தாள் இறைஞ்சினான்
முன்நடந்தது எல்லாம் மொழிந்து....1368

அன்னதோ என்ன அகமகிழ்ந்தான் ஆரியனும்
நின்னை உடையேன் நிலம்மீதில் - என்ன
குறைவரினும் அஞ்சேன் குலம்முழுதும் மாளாது
இறையுமினி என்றான் எடுத்து....1369

என்றான் இளையோனை என்னுயிரே அன்னவளைக்
கொன்றா யிலையோநீ கூறுகென - முன்தாழ்
குழைச்செவியும் மூக்கும் குறைத்தேன்எம் கோவே
அழைத்தனள்காண் என்றான் அதிர்ந்து....1370

ஆங்கிளையோன் கூற அறிவோய் அனைத்துயிரும்
தங்கும் மனுக்குலத்துத் தக்கதே - ஈங்கிழைத்தாய்
மாற்றரிய சீர்இதெனச் சென்றோர் வரைஇடத்தில்
வீற்றிருந்தார் வீரர் விரைந்து....1371

கல்அணைந்த சூழற் கதழ்மலரே ஆதிபுனை
மெல்அணையிற் பள்ளி விரும்பினான் - மல்அணைந்த
தம்பி அடிவருடத் தண்பாற் கடல்மிசைஓர்
பைம்புயலின் மேய பரன்....1372

தமிழ்பிறந்த தென்மலையிற் சார்ந்து வருங்கால்
உமிழ்விடத்தின் மெய்யூடு உலாவ - அமிழ்தனைய
வெண்கதிர்கள் மேல்தவழ மேனி வெதும்பாதோ
தண்கதிர்வாய் பொன்னைஇழந் தால்....1373

ஆய பொழுதில் அடல்வீரர் ஆங்குதையம்
மேய பொழுதிடையே மேவினார் - தூய்மை
தொடர்கானுங் குன்றும் சுனையும் குழியும்
படர்கானும் சென்றார் பரிந்து....1374

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


3.10. கவந்தன் வதைப் படலம்
வெம்பரிதி உச்சியிடை மேவுங்கால் யோசனைஓர்
ஐம்பதுசென்று உற்றார் அடல்வீரர் - இம்பர்இடைப்
புக்கவந்த எல்லாப் பொருளும் வயிற்றுஅடக்கும்
அக்கவந்தன் வாழும் அகம்....1375

ஆனை முதல்எறும்புஈ றானஉயிர் அத்தனையும்
ஏனை உயிரும் இரிந்துஅலைய - மானமிலா
மன்னன் புரக்கும் வளநகர்போல் ஆனதே
மன்னுக வந்தன் வனம்....1376

மேரு வளைந்த விதம்போல் விரிந்தகரத்
தாரு வளையத் தனிநடந்தோர் - வீரத்து
இராவணன்தன் சேனை எதிர்ந்ததோ என்னப்
பராவுவகை கொண்டார் பரிந்து....1377

இன்னிலங்கை உள்ளத்து இராவணனார் ஆட்சிசெயும்
தென்இலங்கை ஆகும் திறல்வீர - முன்னியதம்
காரியங்கள் முற்றும்நீ காணுதியால் என்றுஉரைத்தான்
பார்அளிப்பான் வந்த பரன்....1378

வல்அரக்கர் தானைஇது வாமேல் வளைஒலியும்
வில்ஒலியும் காணோம் விளம்பில்இது - மல்அமைந்த
வாசுகியே என்ன வளைத்துஉறுவ தென்றுஉரைத்தான்
மாசுஇலா வில்இலக்கு வன்....1379

அரியேறு அனையான் அதுநன்று எனவே
திரியோ சனைகடந்து சென்றார் - தருஅமரர்
சிந்திக்க வந்தருகு சென்றுஇறுத்தார் சீயம்என
முந்திக் கவந்தன் முனம்....1380

பாடுஅமைந்த காதவிதப் பத்திபெற வல்வயிற்றில்
சேடுஅமைந்த ஆசைத் திறல்கரியின் - கோடுஅமைந்த
வக்கிரதந் தத்தால் வளர்வாயன் மன்னியதோள்
உக்கிரதந் தத்தான் உவன்....1381

கார்வரையை ஒப்பான் கனல்உமிழும் கண்உடையான்
பார்முதல் பூதப் பருவலியான் - சோரிஓடும்
ஊன்விருப்பம் உள்ளான் உயிர்அனைத்தும் வாரிஉண்பான்
கான்விரும்பி வாழ்வான் களித்து....1382

திக்குஉறக்கை நீட்டிச் செறிந்தஉயி ரத்தனையும்
ஒக்க விழுங்கும் உதரத்தான் - கைகரிஓர்
ஆயிரம் என்றாலும் அடங்கா வரும்பசியான்
காய்எரியை ஒப்பான் கதம்....1383

கண்டார் இருவரும்அக் கார்க்கவந்தன் தன்நிலைமை
கொண்டார் வியப்புக் கொடியதிது - தண்டாது
மண்ணும் சராசரமும் மற்றுஉளவும் வாய்அடங்கும்
எண்ணும் தரம்அலவே ஈங்கு....1384

ஆண்டுஇளையோய் காண்டி அனைத்துஉயிரும் வாரிஉனும்
மூண்டதொரு பூதம் முனிதருமேல் - ஆண்டு
நெறிஅறியேம் என்ன நிகழ்த்தினான் நீண்ட
அறிவன் அயோத்திக்கு அரசு....1385

ஆவியே அன்ன அரிவை தனைப்பிரிந்து
பாவியேன் இன்னும் பரிகுவனோ - மாவலியாய்
நீஅகறி பார்இடத்தின் நீள்வாய்ப் புகுந்துஒழிவன்
ஏஎனும்முன் என்றான் எதிர்ந்து....1386

மாமிதிலை மன்னவன்பால் மண்ணில் பிறந்தருணின்
கோமகளைத் தாங்கும் குணிப்பில்லேன் - தோம்அரக்கர்
வன்சிறையில் மேவினாள் என்று வரைவதினும்
துஞ்சுதல்நன்று அன்றோ துணிந்து....1387

ஆதலினால் அய்ய அரும்பிறவித் துன்பவலை
வேதனையை ஆற்றேன் விளிகுவன்இப் - போதில்என
அன்பால் உரைத்தாற்கு அறைந்தான் அலைக்கடல்சூழ்
வன்பார் புகழ்இளைய மால்....1388

ஆண்டவஎன் அன்னை அறைந்த மொழிகடந்து
மீண்டும்நகர் உற்றால் வினைஆமோ - நீண்ட
உடம்புஎத் தனைநாள் உளவாகும் கொல்லோ
இடம்பெறா தாமோ இசை....1389

என்தாயும் யானும் எனைத்தோர் வகையாலும்
நின்தாய்க்குந் தந்தைக்கும் நேர்மைகெடாது - என்றும்
புகழ்பணியேம் என்றால் புலைஉடலைப் பேணி
இகழகிலேம் என்னாம் இசை....1390

பூதம்கெடினும் பொறி கெடினும் பொன்றாத
வேதம் கெடினும் விளியாதாய் - ஏதம்உறும்
இக்கவந்தற்கு உக்கினையோ என்றான் இணையில்லாச்
செக்கர்முகி லொப்பான் தெளிந்து....1391

என்னா உரைத்தவ் இளங்கோ எழஅவன்
முன்னோனும் முந்து முறைநோக்கி - அன்னோஎன்று
அன்பினொடு உள்ளம் அயர்ந்தார் அடல்வானோர்
என்புஉருகக் கோவாய் இருந்து....1392

அத்தலையின் மைக்கவந்தன் ஆர்வீரர் என்றுஅறைந்து
பைத்தலைய பாம்பில் படரும்கால் - அத்தொளிகால்
வாளால் தடிந்தார் வரைத்தோள் இரண்டினையும்
தாளாண்மை கொண்டார் தகைந்து....1393

தோள்இழந்து வீழ்குருதி தொட்டநெடு வாரிஉறக்
கோள்இழந்து தீமைக் குணம்இழந்து - வேள்அனையார்
காவலர்கை தீண்டக் கவந்தன் ககன்அடைந்தான்
தேவ வடிவாய்ச் சிறந்து....1394

முட்டை வெளிவந்தமுறை போல் அரும்பறவைக்
கட்டுஉடலை நீத்துக் கதிர்ஒளியாய் - எட்டக்
கரத்தானைச் சங்கக் கரத்தானைப் பொற்சக்
கரத்தானை ஏத்தும் களித்து....1395

மண்ணாய் அனலாய் வளியாய் மறைமுடிவாய்
எண்ணாய் எழுதா எழுத்தாகி - நண்ணார்
பரம்அறுப்பான் வந்த பரமாநின் பாத
வரம்அளித்தாள் என்னை மகிழ்ந்து....1396

நந்தனே எம்பரமா னந்தனே நான்மறையின்
அந்தனே மாயா அனந்தனே - முந்துபுகழ்க்
கண்ணனே செங்கமலக் கண்ணனே காயாம்பூ
வண்ணனே காத்தருள்செய் வாய்....1397

அப்பனே வெண்சுதையார் அப்பனே தீயரைக்காய்
அப்பனே எண்ணா வியப்பனே - வெப்புஉறுகார்
அங்கனே மாய்த்து அடுசாரங்கனே அம்புதநேர்
அங்கனே போற்றி அடி....1398

நாதனே வெண்சங்க நாதனே நான்மறைதேர்
போதனே உந்திஎனும் போதனே - ஆதரவாம்
மெய்யனே நாள்குவளை மெய்யனே வேதாந்தத்து
ஐயனே போற்றி அடி....1399

அய்யன் அறிந்தான் அடல்இளையோய் யாவனிவன்
வெய்துஅறிதி என்ன விசைந்துஅவனும் - எய்தியநீ
யாவன்அருள் என்ன இசைத்தான் அழியாத
தேவுலகம் சேர்வான் தெளிந்து....1400

மந்தரப்பொன் தோளீர் வரும்தனுவென் நாமத்தேன்
கந்தர்ப்பன் சாபம் கடிதூன்ற - வந்துற்றேன்
சாபம்தீர்த்து ஆண்டதனி முத்லீர் சாற்றிடுவல்
கோபம்தீர்த்து ஆள்மின் குறித்து....1401

மானகப் பொன்தோளீர் வலிஉடையீர் ஆயிடினும்
தூனகையை நாடத் துணைவேண்டும் - தானகைத்து
முப்புரத்தை மாய்த்த முதலோனும் பல்பூதத்
துப்புரங்கள் பெற்றான் தொடர்ந்து....1402

ஆயதனால் உண்மை அறிந்தீர்நம் அன்னையினும்
தூய சவரிசொலும் நெறியே - போய்அடைந்து
செங்கதிரோன் ஈன்ற சிறுவனைநட்டு ஆங்குஅவனால்
மங்கைதனை ஆய்வீர் மதித்து....1403

என்றுஉரைத்து விண்மேல் எழுந்தான் இவர்மதங்கக்
குண்றுஅணைந்து தம்வரவுட் கொண்டுஇருந்த - நன்றறியும்
மாதவத்தா ளாம்சவரி மாது தனைக்கண்டார்
போதகத்தை அன்னார் புகுந்து....1404

கண்டாள் சவரிஅரும் கற்புடையாள் காதலுளம்
கொண்டாள் குமரர் குறுகுதலும் - மண்தாவும்
வெவ்வினைகள் இன்றே விளிந்ததுஎன ஏத்தினாள்
எவ்வினையும் தீர்த்தாள் இனிது....1405

வில்உடைய ரன்னாள் விருந்து நுகர்ந்துறைந்த
நல்லவளை நோக்கி நலன்உடையோய் - எல்லவனார்
சேயினையாங் காண்பான் தெரித்திநெறி என்றுஉரைப்ப
ஆய்அவளும் சொற்றாள் அறிந்து....1406

ஏயநெறி பகர்ந்துஆங்கு எண்அரிய பல்தவத்தால்
காயம் ஒழித்துக் கதிர்என்ன - மாயைஇலா
மாசுநெறி அடைந்தாள் மண்டலம்மூன்று ஆய்ந்துஅமைந்த
யோக நெறியால் உயர்ந்து....1407

வில்ஏறு அனையார் வியந்துஅவள்தன் சொல்முறையே
கல்லா நெறிகள் கடந்துஅடைந்தார் - எல்லாரும்
கம்பார்ந்த முத்தர் கலைமதியம் போல்ஒளிரும்
பம்பா சரசின் பதம்....1408

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஆரண்ய காண்டம் முற்றும்.


4. கிட்கிந்தா காண்டம்
4.1. பம்பைப் படலம்
அளந்தனபே ரண்டம் அளந்தனநால் வேதம்
களைந்தனஎன் பாவம் கருதி - வளர்ந்தபுகழ்ச்
சுந்தரவண் ணத்தான் றுழாய்முடியான் சோதிமணிச்
சுந்தரவண் ணத்தான் கழல்....1409

கள்ளக் குறும்பு கடிந்தார் கருத்துஎனவே
தெள்ளத் தெளிந்த திரைக்கடலின் - உள்அகன்றது
ஆழ முடைய தருங்கரண்ட மாதியபுள்
வாழுவதுஅவ் வாவி வயின்....1410

விண்அடைந்த மேகம் விரிநீர்க் கடல்எனவே
உண்ணியவந்து எங்கும் உடன்உறுவது - எண்அரிய
வால்வளைகள் ஈன்ற மணிஒளிர்வது எஞ்ஞான்றும்
கால்கதிர்வாய் வெண்மதிபோல் காய்ந்து....1411

பச்சை ஒளியும் பதுமரா கத்துஒளியும்
உச்ச மணியின் உருஒளியும் - கிச்சனைய
பொன்னொளியும் மேவப் பொறிஆழி மால்வளைகொள்
மன்அரியை ஒப்பாகும் மால்....1412

பித்திகையின் ஆர்ந்து பிறங்கும்வை ரத்தொடுநல்
பத்திஉறு மாமணியின் பற்றுஉறலால் - சித்தத்
தெளிவிலார் சிந்தைஎனச் சேர்ந்துழியே அந்த
ஒளிமருவும் பொய்கை உதம்....1413

மாணிக்கம் பச்சை வயிரத் தருந்துறைசேர்
யாணர்க் கமலம் இசைந்தமர்ந்த - பாண்உற்ற
அன்னங்கள் செய்யாள் அபிராமி அங்கயல்கண்
என்னவே தோன்றும் இருந்து....1414

நன்மகிழ்தன் அன்பிலா நன்நுதலைக் கைவலியால்
பின்மருவி உள்ளம்மகிழ் பெற்றிஎன - முன்மருவி
ஆம்பல் முகையின் அளிஅறுகா லால்குடைந்து
தேம்பிரசம் உண்ணும் தெரிந்து....1415

வட்டம்உறும் வெண்தா மரைமேல் அகலவாய்த்
திட்டபண நாகம் எழிற்கலைசேர் - வெட்டவெளி
மீமருவி ஒள்ளொளிசேர் வெண்மதியைத் தீண்டும்விதம்
ஆம்உவமை கூறின் அதற்கு....1416

மாதரார் காம வசப்பட்டு அழுந்தியபுல்
ஆதர்போல் கள்உண்டு அறிவுஇழந்து - தாதுஅவிழ்ந்த
மஞ்சுளம்சேர் பொன்முகுளம் மன்னிஉளம் மாழ்கியதால்
அம்சிறைய கோலத்து அளி....1417

நெறித்துக் குழைந்தநெடு நீலம்போல் நீண்டு
மறித்துக் குமிழ்போல் மருண்டு - செறித்ததமது
எண்போல் உலாவி இலகும் பருவநல்லார்
கண்போல் உலாவும் கயல்....1418

வலம்புரியின் ஓதை மலிய அறுகால்
அலம்புரியும் தெள்ளிசைக் கால்அண்ணக் - குலம்சேர்
விதுமணம்கொண்டு ஆடும் விதம்போல் அனங்கள்
புதுமணம்கொண்டு ஆடும் பொலிந்து....1419

செக்கர வாகம் திகழ்மலர்மின் னார்நகிலிற்
சக்கர வாகந் தயங்கும்நளி - வக்கிர
சத்திரா சீவஞ் சதகோடி தோன்றுவன
அத்தரா பன்னீர் அயம்....1420

கொங்கைமுகம் கண்கால் குமிழ்நளினம் நீலம்அரத்
தங்கை இடைவா யளகநகை - இங்குலிகம்
வல்லிஅரக்கு ஆம்பல் மணிஅறல்கண் மன்னுதலால்
புல்லும்மணி மாதர்எழில் போல்....1421

சேதாம்பல் செங்கமலம் செங்குவளைப் போதருகு
மீதாம்பல் வேரி மிகக்கமழும் - தாதுஆர்ந்த
வெண்கமலம் வெண்குமுத மேய நெடும்பான்மால்
வண்குவளை தோன்றும் மலிந்து....1422

வண்னச்சங்கு ஏறி மதுமழைபெய் வான்கமலத்து
அண்ணல் பசும்பாய் அடைஅலங்க - விண்உற்ற
மீன்சோதி என்றுஉரைப்ப வெய்துஉயிர்க்கும் வெண்மதிநேர்
வான்சோதி யாற்றும் மணி....1423

நான்மறையின் உள்ள நவரசவந் தாதிமுழு
மான்முதல்என்று உள்ளம் வலித்தோரும் - தேன்மழையார்
ஊழ்வளம்செய் நாண்மலரின் ஊற்றமலி ஒண்கயத்தின்
ஆழம் அறியஅரி தால்....1424

வாளை யுகள வரால்வெடிப்ப வண்கமுகம்
பாளை கமழும் பனிமருதம் - வேளைஎலாம்
வண்டுஉறங்கும் சோலை வளநாடே ஒத்ததுதண்
கண்டுஇலகும் ஆழிக் கயம்....1425

வட்டமுலை பட்டநுத மட்டமையும் இட்டமொழி
திட்டவிடை நெட்டிலைவேல் திட்டியினார் - நட்டலுளந்
தெட்டதிலாப் பெட்டமையும் தேட்டமுளார் நாட்டம்உறும்
சட்டகமார் குட்டத் தடம்....1426

நான்முகமும் நண்ணுதலால் நற்படியைப் பெற்றிடலால்
மான்முகச் செந்தாமரைமேல் மன்னுதலால் - பான்முகம்சேர்
வாணிகழும் பாணி மருவலால் மாசில்லா
மாண்அமைவே தாஆகு மால்....1427

தேன்பெருகும் செவ்விச் செழுந்துறையில் சேர்பெரிய
மீன்கருதி வெண்ணாரை மேவுமால் - வான்கருதி
மெய்ஒழுக்கம் பூண்டவிதம் போனடித் தொழுகும்
பொய்ஒழுக்கம் பூண்டார்கள் போல்....1428

இத்தகைய பொய்கை எழில்நோக்கி எம்பிரான்
முத்துஅனைய மூரல் முகக்குயிலைச் - சித்தமதில்
எண்ணி உளைந்தான் இடருக்கு இருப்பிடமாய்
நண்ணினான் சொற்றான் நலிந்து....1429

சக்கரவா கங்காள் சலசத் துறைஅனங்காள்
புக்குஉறைந்த வெண்நாரைப் புள்இனங்காள் - மைக்கரும்கண்
செங்கனிவாய்ப் பெண்அரசென் தேவிதனைக் காணிலறிந்து
இங்குஉரையீர் கொல்லோ எனக்கு....1430

கண்வாய் முகமுமது காட்சிகொண்ட கற்புடைய
பெண்ணார் அமுதைப் பிரிந்துஉறுதல் - எண்ணாமல்
வன்கண்மை செய்தல் மரபுஅன்று எனஉரைத்தான்
மென்கமலம் நோக்கி மெலிந்து....1431

கண்ணின் மணிஅனையார் கண்ணிற் கருங்குவளாய்
உண்ணும் விடல்போல் உருத்தனைநீ - எண்ணும்
பகைஉடையார் பால்இன்றிப் பாசறைசெய்து என்னாம்
நகைஉடையது அன்றோ நவில்....1432

கயலே வளையே கமலத்து அளியே
மயலே அனமே மணியே - அயலேய்
கொடியே குயிலைக் குறியீரோ என்றான்
வடிவார் முகில்அனைய மால்....1433

மன்னங்கால் வித்துரும வண்ணம்உற மாமலர்வாழ்
அன்னங்காள் என்னோ அகமகிழ்வீர் - முன்னம்
நடைஅழகால் உம்மை நலிவித்தாள் இன்றுஎன்
இடையிலைஎன்று ஆய்ந்தோ வினிது....1434

இன்னவாறு உன்னி இரங்குறும்அக் காவலனை
பொன்னவா மேனிப் பொலிவிளையோன் - செந்நெல்வாய்
பொங்குஒலிநீர் நாட பொழுதுநெடிது ஆயதுஎன
அங்குஉரைத்தான் உள்ளம் அயர்ந்து....1435

ஆண்டுஅங்கு இளையோன் அறைதரலால் ஆய்தவமுன்
பூண்ட புதுவைப்புனல் தோய்ந்து - நீண்டவனைச்
சிந்தனைசெய்து உற்றான் செயல்வேறு பட்டுஒழிய
அந்தி யடைந்தது அவண்....1436

இவ்விர விலையன் இடர்ப்படுமென்று எண்ணிவெய்யோன்
அவ்வுதைய வெற்பின் அடைதரலும் - செவ்விஇளம்
காவலரும் சென்று கடுகினார் நற்சவரி
ஏவு நெறியே இசைந்து....1437

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.2. அனுமப் படலம்
வார்கமுகின் மாகமுகில் மன்னுமலர்ப் பொழிலும்
நீர்அரணும் சென்று நெருங்கினார் - சூரியன்தன்
நன்மகனார் வைகு நகமா டணைத்தனர்அவ்
வின்முகவேற் கையார் விரைந்து....1438

காற்றுஅனைய வேகத்த கார்முகத்தர் எய்துதல்தேர்ந்து
ஏற்றுமுறும் வாலி இஅகன்றுஏவத் - தேற்றமொடும்
புக்குஅடைந்தார் என்னப் பொருமினார் போர்ஆற்றல்
சுக்கிரிவன் ஆதியர்கள் சூழ்ந்து....1439

குன்றின் புறமும் கொடிமுழையும் பல்கழியும்
சென்றுமறையத் தெரிந்து எமைஆள் - வென்றிபெறு
மாருதிவந் தேற்று வருவாரைத் தேர்ந்துறுவல்
தேருதிர்பின் என்றான் தெளிந்து....1440

ஆணி உலகுக்கு அனையான்எம் ஆளுடையோன்
மாணி உருவுகொடு வந்துஅயலே - ஆணரியின்
நேர்வாய் வருவாரை நேர்ந்துறவா யெய்தினன்மெய்ச்
சீர்வாய் உளத்திடைமுன் சேர்ந்து....1441

மூவர்அலர் வேத முனிவரலர் முற்றுணர்ந்த
தேவர்அலர் வில்லின் திறமுடையார் - பூவுலகில்
விண்ணுலகில் மற்றும் வியன்உலகில் வேறுவமை
எண்ணும் தகைத்தோ இவர்க்கு....1442

எண்ணுவது போதம் இயல்போ கொழுங்கருணை
புண்ணியமே செய்கையது போலுமால் - நண்அரிய
சிந்தைக் குயர்பொருளைத் தேடுவார் போலுமிவர்
தந்தகை மேலாம் தரம்....1443

முன்புபின்பு காணேன் முதலாம் இவர்திறத்துஎன்
அன்புருக வென்புருகும் யாதுகொலோ - அன்புடைய
எந்தைக்கும் எந்தையோ யாரோ எனத்தெரியேன்
வந்துற்றார் என்னோ மதித்து....1444

ஏழ்புவிகள் தாங்கும் இலக்கணங்கள் தாம்உடையர்
தாழ்சடையார் மெய்த்தவத்தின் சார்புடையர் - ஊழ்வலியால்
சிந்தைக் கொருபொருளைத் தேடுவார் போலும்எனச்
சிந்தித்தான் அஞ்சனையார் சேய்....1445

வாழிஉமது வரவுஎன்று அருகு அடைந்து
பாழி அனுமன் பணிந்துஏத்த - ஊழ்முறையே
எவ்வழியின் ஈங்கியோய் யார்நீ எனவிசைத்தான்
செவ்வழியின் உள்ளத்தான் தேர்ந்து....1446

மஞ்சுஅனைய மெய்யாய் வலிஉடைய காற்றுஅரசற்கு
அஞ்சனைபால் வந்தேன் அபிதானம் - செஞ்சிலையாய்
மெய்அனுமன் இம்மலைவாழ் வெய்யோன் மகற்குஏவல்
செய்அடியன் என்றான் தெளிந்து....1447

அவ்வுரைகேட்டு ஐயன் அறிவுடையோய் ஆரமுதத்து
இவ்வுரைஅவ் வேதத்தினுக்கு உரையோ - செவ்விஇவன்
கல்லாக் கலைகள் கருதும்கால் கண்டதுஉண்டோ
எல்லாம் உணர்ந்தான் இவன்....1448

நான்முகனோ நஞ்சம்உண்ட நம்பனோ நாகரிகப்
பான்முகனார் சொல்லின் பயன்உடையான் - நூன்முகஞ்சேர்
நுண்அறிவான் என்று நுனித்தவனை நோக்கிஎதிர்
கண்ணன் மொழிந்தான் கனிந்து....1449

எப்பால் உடையான் இரவிசுதன் அன்னவன்வாழ்
அப்பால்எமைக் கொண்டு அடைதிஎனத் - துப்பார்ந்த
வாருதிநீர் தாவுமனு மான்எனவா னோர்புகழும்
மாருதியும் சொற்றான் வடித்து....1450

எந்தையினும் நல்லீர் இரவிக் குரியமகன்
வெந்திறல் வாலி வினைத்தொழிலால் - மைந்தடங்கி
ஆண்டிருந்தான் நற்றவத்தால் அன்றோநீர் வந்ததுஇனி
மாண்டிடுமோ நல்அறத்தின் மாண்பு....1451

பகைப்புலனை மாய்த்துப் பரிப்பதினு முண்டோ
வகைப்புகழ்என்று உன்னி வலியீர் - தகைப்புகழ்எம்
கோமகனுக்கு எய்துநலம் கொண்டுஅருண்மின் என்றுரைத்தான்
வீமனுக்கு முன்னோன் விரைந்து....1452

ஆர்என்று அரசர்க்கு அறைவேன் எனஇளையோன்
சோர்வின்றி ஆதிஅந்தம் சொற்றிடலும் - வீரன்மலர்த்
தாள்இறைஞ்சி நின்றான் தனிக்கழை விலாளிஎனும்
வேளிகலை வென்றான் விழைந்து....1453

என்செய்தாய் ஐய இவைஏற்குமோ மாமறையோர்
மன்செய் குலத்தினைநீ மற்றுஎன்னப் - பொன்செய்த
தோளாய் அரிகுலத்துத் தோன்றினேன் என்றுஉரைத்தான்
மாளாது வாழ்வோன் மகிழ்ந்து....1454

காலால் உலகம் கடந்த பெருமானின்
மேலாகி நின்ற விறலோனை - மாலாகிக்
கண்டா ருருமுழுதும் காண்கிலார் உட்களிப்பு
கொண்டார்மெய் ஆண்மை குறித்து....1455

ஆயவரை நோக்கிஎமை ஆளுடைய மாருதியாம்
சீய மரியின் திறல்அரசைப் - போய்அடைந்து
கூய்வருவல் இன்னே குறித்துஉறை மின்என்றான்
தூய்மையுற எண்ணித் தொழுது....1456

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.3. நட்புக் கொள் படலம்
சென்ற குரக்குத் திறல்சீயம் செங்கதிரோன்
வென்றிமகன் தன்இடம் மேவினான் - இன்றே
பகைகடந்து வாழ்வு அடைந்தோம் பண்டுபுரிந்த
தகைகடந்த நல்தவமே தான்....1457

கோள்இழைத்த தாடகைக் கோல்வாங்கிக் கொன்றுமுனி
வேள்வி புரந்து வினைநீங்கத் - தாள்மலரால்
ஆலிகைதன் சாபம் அகற்றினான் ஆடகத்தின்
நீலமலை ஒப்பான்முன் நேர்ந்து....1458

மல்அணைந்த எண்தோள் வரைப்புனிதன் கைப்பிடித்த
வில்இறுத்தான் மாமிதிலை மேவியநாள் - புல்லும்
மழுவலான் செங்கை வரிசிலையும் கொண்டான்
எழுவலார் தோளாய் எதிர்ந்து....1459

சிற்றவைதன் சொல்லால் செகமுழுதும் தம்பிபெற
முற்றருளால் அம்தவத்தான் முன்னினான் - உற்ற
விராத னொடுகவந்தன் விண்பெற்று மேவிப்
பராவும்வகை செய்தான் பரிந்து....1460

ஆயமா நாகத்தார் ஆதரிப்ப மாரீசன்
மாயமா னாக மடித்துஎழுந்தான் - தூயமனத்
தம்பியொடும் உற்றான் தருமத்தின் தாரகத்தான்
உம்பர்நலன் ஒப்பான் உனக்கு....1461

ஆயவன் தேவிதனை ஆழி இலங்கைநகர்
ஏய அரக்கன் எடுத்துஏக - மேயநெறி
நாடுவார் நின்னறிவு நாடி நயந்துறவு
கூடுறுவான் வந்தார் குறித்து....1462

ஈதுஅவர்தம் செய்கை இனிஇனையல் என்னுடனே
போதராய் என்னப் புகறலும்நீ - மாதுணையாய்
என்பால் இருக்க இடர்வருமோ என்றுஉரைத்தான்
அன்பால் அடைந்தான் அவண்....1463

பூத்தகஞ்சம் வாய்த்தோர் புயலிருந்த பொற்பமைந்த
ஆத்த னிருந்துழியே அண்மினான் - மாத்தனுவும்
என்பும் குளிர எதிர்த்தான் இணைஇல்லா
அன்புக்கு ஒருவன் அடைந்து....1464

என்முன்ஒளிர் மின்மினிபோல் இன்றோ எழில்உடையார்
பொன்மருவும் நேமி புரம்எரித்தோன் - இன்மருவும்
வச்சிரத்தான் இக்குரிசில் வாண்முகத்தின் முன்எதிர்ந்தால்
அச்சிரத்தார் ஆகார் அவர்....1465

எவ்வுருவம் நோக்கி எனதுஇருகண் இன்பம்எனும்
அவ்வுருவ வாழி அமிழ்ந்தனவே - உய்வகைவே(று)
உண்டோ உணர்வும் உளமும் உளத்தெளிவும்
கண்டேன் இருவினையைக் கட்டு....1466

முடியாத் தவங்கள் முடித்தாருக்கு எல்லாம்
அடியால் அளக்கும் அழகன் - படிஏழும்
தொட்டுண்ட செல்வத் துரையேஇத் தோன்றல்எனக்
கட்டுஉண்டான் அன்பில் கனிந்து....1467

இத்தன்மை எய்தி இரவி சுதன்அணுகச்
சித்தம் உவந்து திருநாதன் - ஒத்தமலர்க்
கைத்தலத்தால் வீற்றிருக்கை காட்டினான் காமன்எனும்
சித்தசனைப் பெற்றான் தெரிந்து....1468

அந்தம்இலா வாள்அரக்கர் ஆய விடந்தீர்க்கும்
மந்திரமும் நன்மருந்து மானவே - முந்துஎதிர்ந்த
நம்மானு நாக நவவுருக்கன் நண்ணிநின்றார்க்கு
அம்மானும் நேர்ந்தார் அமைந்து....1469

கவியும் கவிப்பொருளும் காட்சியும்அக் காட்சி
சவியும் தகையும் தயையும் - பவமறவே
நட்டதென நட்டார் நலஞ்சிறந்த நானிலத்தோர்
இட்டமெலாம் எய்த எதிர்ந்து....1470

இம்மலையின் உள்ளாய் எனச்சவரி மாதுஉரைத்த
அம்மொழியால் வந்தேம் அடல்வீர - விம்மல்இனி
நின்னால் ஒழியும்எனும் நீண்டவனுக் குற்றுரைத்தான்
மன்னாகத் தேரோன் மகன்....1471

நின்அழகும் நின்குணமும் நெஞ்சுறைய நேர்மையிலா
என்உளமும் என்உறவும் இன்பம்உற - நன்னலஞ்சேர்
மாச்செல்வம் பெற்று மகிழ்ந்துளர்போல் ஆயினேம்
பூச்செல்வ நாதா பொலிந்து....1472

அண்டப் புறத்தின் அளவும் எனைக்கடிந்து
பண்டைப் பலத்தால் பருவாலி- மண்டிப்
பொரவழிந்தேன் நன்கு புரந்தருடி என்றான்
மருமலர்ந்தார் வெய்யோன் மகன்....1473

நின்உறவும் என்உறவே நின்பகையும் என்பகையே
என்உறவும் நின்உறவே என்றுஐயன் - சொன்னவில்கால்
வானரங்கள் ஆர்த்த மழைபொழிந்த பொன்மாரி
வானவர்கள் ஆர்த்தார் மகிழ்ந்து....1474

அக்கால் அடல்அனுமன் ஆண்தகையை முன்வணங்கி
இக்கானும் கோயில் இடைஎய்தித் - தக்க
அருள்புரிதி என்ன அமலன் அவரோடு
மருவினன்தன் தம்பியொடு மற்று....1475

மாருதியும் செங்கதிரோன் மைந்தனும் பன்னாகவலி
வீரரும்உற் றேத்த விழுத்தடமும் - காரியைந்த
கன்னாட்டும் சாரல் கடையும் கடந்தடைந்தார்
பொன்னாட்டை ஒக்கும் பொழில்....1476

வான்அரம்பை மாதர் மருவும் மணித்தடமும்
கான்அரம்பை ஆர்த்த கடிபொழிலும் - தூநரம்பின்
இன்ஒலியும் இன்றி இலவேறு பொற்சிகரம்
துன்னும் இடங்கள் தொறும்....1477

இப்பொழிலின் எய்தி இருந்தார் மலரணைமேல்
ஒப்பரிய காயும் உறுகனியும் - செப்பரிய
நீர்தோய்ந்து அருந்தி நெடுவருந்தும் ஆயினான்
பார்தோய்ந்த பாதப் பரன்....1478

ஆய பொழுதில் அறிவன் அகன்மனையை
நீயும் பிரிந்தனையோ நேரத்ததுஎன்னச் - சாய்வில்
வலத்தனுமன் நின்று வணங்கினான் சொற்றான்
சொலத்தருவ துண்டுஎனவே சூழ்ந்து....1479

அந்தகற்கும் ஆணை அறைவான் அரியமணி
விந்தமலை மேலும் மிகஉயர்ந்தான் - மந்தரமும்
வாசுகியும் தேயமணி யார்கடல் கடைந்த
ஏசறு பொற்றோளான் இவன்....1480

மேய விபாகரனின் மேயார் அடல்வரத்தில்
தாய விபாகந் தரக்கொள்வான் - ஏயதிசை
அட்டம் அடைந்தே அரன்பூசை ஆற்றிடுவான்
மட்டுஅமையா மெய்யான் வளர்ந்து....1481

காற்றின் கடியான் கனலிற் கடும்கோபன்
கூற்றில் கொடியான் குலப்பகையான் - மாற்றவன்தன்
வால்செலா நின்ற வலத்தே இராவணன்தன்
கோல்செலா செல்லாக் குடை....1482

அன்னவன்மெய் ஆண்மை அரிகுலத்து வேந்தனுக்கு
முன்னவனாய் வந்து முளைத்துறைநாள் - இன்னவனை
மாயாவி என்னும் வலியோன் எதிர்த்துஉடன்றான்
மாயா வரத்தான் மலைந்து....1483

ஒட்டிப் பொரலும் உலைந்துஅவுணன் ஓர்பிலத்துள்
கிட்டிப் பொருதக் கிளர்வாலி - எட்டிப்
புகுங்காலும் மேதினியைப் போற்றுகநீ என்ன
நகும்கார்போல் சென்றான் நனி...1484

ஈதுஉரைத்து வெம்பிலனும் எய்தி இருதிரண்டேழ்
மோதும் அமர்பொருது மூளும்கால் - நீதியுறச்
சோகம் உறும்இவனைச் சூழ்ந்துஆற்றி இவ்வரசின்
ஆகுதிநீ என்றேம் அடைந்து....1485

முன்னவனைக் கொன்ற முரணியனை ஏற்றிடுவல்
அன்னவனைக் கோறற்கு அடையாமல் - என்உயிரைப்
போற்றலன்யான் என்னப் புகுவானை மாமதியோர்
ஆற்ற அமைந்தான் அரசு....1486

அக்காலை வாள்அவுணன் ஆர்த்துவரும் என்றுவரை
புக்காய்த் தடுக்கிப் புகும்உளைவாய் - எக்காலும்
ஈறுஇன்று எனஇருந்தேம் இவ்வேலை அன்னவனைக்
கோறல் புரிந்தான் கொதித்து. ...1487

ஊழிக் கனல்போல் உருத்தவுணர்க் கொன்றுடனே
பாழிக் கனல்போல் படர்வாலி - வாழிதிருத்
தம்பி அரசியற்றும் தன்மைஇது நன்றுஎனவே
வெம்பி மொழிந்தான் வெகுண்டு....1488

புக்குஅடைந்த வெற்பைப் புழுங்கி உதைத்திடலும்
திக்குஅனைத்தும் சென்றிடவே தீப்பறக்க - நக்குஎதிர்ந்து
தம்பி தனைத்துகைத்தான் தானவனைக் கட்டொழித்தான்
தும்பிபோல் மன்னோ தொடர்ந்து....1489

குற்றம் இலைஎனவும் கொள்ளான் கொடுமைசெயப்
பொற்றவரை ஆழிப் பொருப்பிடத்தே - உற்றுஉறைய
ஆங்குஅடைந்தும் இன்னல்செய அற்றம்பெற்று இம்மலைமேல்
நீங்கி இருந்தான் நெகிழ்ந்து....1490

வெஞ்சாபம் உற்ற விதத்தால்இம் மாமலைமேல்
அஞ்சா திருந்தான் அதுவன்றி - மஞ்சார்
குழல்மாது உரிமையையும் கொண்டான் நின்பாதம்
நிழலே துணைஎன்றான் நேர்ந்து....1491

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.4. துந்துபிப் படலம்
நாவலரே ஆதியர்கள் நாடிப் புகழ்ந்துஏத்தும்
நாவலே ஆதி நவில்தருக்கள் - மீவளரும்
மெய்ச்சினைகள் தாங்கி வெளிமறைத்த வித்தருவின்
கைச்சினைஒன்று ஒவ்வா கலந்து....1492

மன்மதியும் தாரகையும் வண்கவியும் மால்கதிரும்
மின்மினிபோல் அத்தருவின் மேவுமால் - என்மருவு
பூவணம்வாய் பொன்னகரில் பொற்பணைகள் ஆர்ந்தடைந்து
காவணம்போல் தோன்றும் கமழ்ந்து....1493

வெம்பிறவி தன்னின் மிகுமடைய விண்ணவரும்
இம்பர் உறுதற்கு இயல்புடைய - பைம்பொன்
வரையடுத்த திண்கரியின் மாட்சியன வான
வரைஅடுத்த தம்பமன வார்ந்து....1494

அம்மரங்கள் நோக்கி அனகன் அடற்சிலைநாண்
விம்மல்உற வானோர் விரைந்துஏற்றிக் - கைம்மலரால்
ஓர்வாளி எய்தான் உரும்அனையது ஒள்ளியது
நீர்வாயும் செல்வதும்முன் நேர்ந்து....1495

ஏழ்கடலும் ஏழ்உலகும் ஏழ்கிரியும் ஏழ்முகிலும்
ஏழ்பரியும் ஏழ்பெயர்சால் எவ்வெவையும் - தாழ்வுறுமோ
என்றுஉலையக் குன்றநிகர் என்றமரம் ஏழும்இடை
சென்றுஉருவிற்று அன்றே செயிர்த்து....1496

அப்போது வெய்யோன் அடல்புதல்வன் ஆர்அமுதம்
ஒப்பான மேனி ஒருமுதலை - இப்பாரில்
எப்பொருளும் நீயே எனக்குஅரியது எண்ணும்கால்
எப்பொருளே என்றான் எடுத்து....1497

மற்றும்உள வானரர்க்கு மாருதியே ஆதியர்க்கும்
உற்ற உவகை ஒருசிறிதோ - வெற்றிஇனி
என்றார் வியந்தார் எழுந்தார் சிறிதுஎல்லை
சென்றார் அடைந்தார் செறிந்து....1498

ஆய பொழுதில் அமலன் அவருடனே
மேய பொழுதுஅவ் விலங்கன்மேன் - மீயுயர்ந்த
மாவரையில் துந்துமிதன் வல்உடலம் தோன்றுதலும்
யாவதுஅறை என்றான் இறை....1499

சுந்தரப்பொன் தோளாய் சுடுசினத்தன் துந்துமிப்பேர்
மந்தரப்பொன் தோளான் வலிஅவுணன் - அந்தரத்தை
மீதுறுபொற் கோடுடையான் மேரு கிரிஅனையான்
ஏதிலர்க்குஏறு அன்னான் இவன்....1500

ஆழிகடந்து உற்ற அரவுஅணையான் மாடுஅணுகி
வாழி அமர்புரிவான் வாஎன்ன - ஊழிமுதல்
கூற்றுஉதைத்த பாதக குழகனே நின்வலிமைக்கு
ஏற்றவன்காண் என்றான் எதிர்ந்து....1501

வம்பாரும் வெள்ளி வரைகுறுகி வஞ்சகத்தோன்
கொம்பால் எடுத்துக் குறுகுதலும் - அம்பார்ந்த
எஞ்சடையோன் எய்தினன் நின்சிந்தை எவன்என்றுஉறைப்ப
வெஞ்சமநேர் என்றான் வெருண்டு....1502

வென்றியாய் நின்வலிக்குஅவ் விண்ணவரே தக்கவர்கள்
என்றேவ வேகி எதிர்கஎன்னக் - குன்றாத
வானவர்கள் வாலிபால் மன்னுக எனவாழ்த்தினார்
மானவனும் போந்தான்இம் மண்....1503

மண்ணிடையில் வந்துவய வாலியொடு பொருதான்
விண்ணும் திசையும் வெருக்கொளுமாறு - எண்ணுமதி
ஈராறு சென்றும் இகல்வெஞ் சமர்முனைந்தார்
வீராதி வீரர் வெறுத்து....1504

வாலி உருத்தான் மயன்மகனை வால்அசைத்து
மூலம்உறு கொம்பர் முறித்துஎளிதாய்க் - கால்பிடித்துச்
சுற்றினான் விட்டான் சுடர்மண்ட லத்தடைவும்
முற்றினான் வீழ்ந்தான் முடிந்து....1505

இம்மலையில் வீழ இருந்தவன்தன் சாபத்தால்
அம்ம இருந்தேன் அழியாமே - விம்மல்இனி
நீக்குவாய் என்று நிகழ்த்தினான் நீள்விசும்பின்
மாக்கதிரோன் பெற்ற மகன்....1506

இற்றது என்னா இளவல்முகம் நோக்குதலும்
உற்ற கழல்விரலால் உந்தினான் - மற்றதுவும்
மாண்ட கமல மலரோன் உலகுஅடைந்து
மீண்டதுவே மன்னோ விரைந்து....1507

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.5. வாலி வதைப் படலம்
அங்குஅடைந்த வானரங்கள் ஆர்த்ததுவிண் மண்அதிர
எங்கள் முதல்வன் இனிதுஏகி - மங்குல்தவழ்
சோலைவாய் வீற்றுஇருப்பச் சொல்லுவதுஒன்று உண்டுஎனவே
மேலவன்சேய் சொற்றான் விழைந்து....1508

இக்குன்றம் மீதி லிருந்தேம் இருந்தபொழுது
அக்குன்றம் ஒத்த அடல்அரக்கன் - மைக்குன்றம்
விண்எழுந்தது என்ன விரைந்தான் அவன்இடையோர்
பெண்இருந்தாள் அன்றே பெயர்ந்து....1509

தன்னரத்தை யாரும் தணிப்பார்என்று எண்ணியோ
மின்னலி டையாள் மிளிரிழைகண் - மன்னரிய
மேகலையில் வேய்ந்து விடுத்தாள் விழைபசும்பொன்
நாகமுகில் அன்னாய் நயந்து....1510

ஏயகலன் இதுவென்று ஏந்தி இருகரத்தால்
தூயன்எதிர் காட்டத் துகள்இல்லா - நாயகனும்
கண்டான் இருவிழியால் கஞ்சமகள் வந்தனள்போல்
கொண்டான் உவகை குளித்து....1511

காலணியும் கைஅணியும் காதணியும் மூக்கணியும்
மாலணியும் அல்குல் மலரணியும் - நீலமணிச்
சிங்கஏறு அன்ன சிலைவலிஎம் சேவகற்குஅவ்
வங்கமே ஆயது அமைந்து....1512

உயிர்க்கும் உளைக்கும் உடல்சோரும் உன்னி
அயிர்க்கும் வெயர்க்கும் அயரும் - செயிர்க்கும்
அழும்முனியும் நாணும் அறிவுஅழியும் அந்தோ
எழும்இருக்கும் ஒன்றோ இயல்பு....1513

இத்துயருக் கேதுகரம் யான்என்ன வெம்முதலை
அத்தலையில் வெந்துயரம் ஆற்றுவான் - சித்தம்
கலங்கினான் சொற்றான் கவிவேந்தன் என்னும்
உலம்பொருவு தோளான் உளைத்து....1514

அண்டத்தின் அப்புறத்தின் அல்லா இடந்தனிலும்
ஒண்டொடியை நாடி உதவுவேன் - மண்டலம்சூழ்
ஆழி அனையாய் அரிகுலத்தார் எண்ணிலர்கள்
வாழியாய் உள்ளேன் மயர்ந்து....1515

அரன்ஆதி தேவர் அனகாநின் ஆணை
உரன்மீற வல்லர் உளரோ - சிரமீரைந்து
உற்றானும் ஓர்பகழி உள்உறத்தன் ஆவிஇழந்து
இற்றானும் ஆவான் இனி....1516

மன்னியதிண் வாலி வயமுடித்தன் மாதவனே
பின்னர் உறுக பெயர்ந்துஏகி - மின்அணியை
நாடுவதே பெற்றிஇது நன்றுஅறிதி என்றுஉரைத்தான்
ஆடல்வலி ஆனனவேந் தாங்கு....1517

செங்கதிரோன் ஈன்ற சிறுவன் உரைதெருண்டு
மங்குல் அனைய வடிவழகன் - அங்கயலின்
மன்னும்விழி மின்னல்இடை வண்ணம்உறு கண்மணியை
உன்னிஇவை சொற்றான் உயிர்த்து....1518

எத்தகைய வீரர் எனினும் அவர்உயிர்கொள்
அத்தகைய வில்என் அயல்இருக்கப் - புத்தம்உறப்
பொற்பணியை நீத்திடுதல் பெற்போ பொலிவுடைய
கற்பணியார்க்கு என்றான் கடுத்து....1519

வேலை விரித்தார் விறல்சுவைத்தார் விண்ணதியின்
மாலை அழித்தார் வரும்பறவை - சீலம்உற
அங்கம் அரிந்தார் அவர்குலத்துள் தோன்றினேன்
பங்கம் அடைந்தேன் பரிந்து....1520

என்றுஉரைத்து மாழ்கும் இராமபிரான் ஏற்றதுணை
வன்திறல்சேர் வெய்யோன் மகன்உரையால் - நன்றுஎனவே
தேறி இருந்துழிஅத் திண்திறல்சேர் மாருதியும்
கூறினான் அங்கை குவித்து....1521

மன்அரிய வாலிதனை மாட்டி இரவிசுதன்
தன்உரிமை ஈய்ந்து தனித்தானை - துன்னுறவே
கூட்டினால் அன்றிக் கொடிஇடையைக் கொண்டல்அனாய்
தேட்டருதல் ஈங்குஅருமை தேர்....1522

அண்டத்தோ அப்புறத்தோ ஆணை அரக்கர்உறை
கண்டத்தை யார்அறியும் காட்சியார் - வண்டுற்ற
தன்மை படஒருங்கு தான்அறிதல் வேண்டும்என
நன்மைபட உறைத்தான் நன்கு....1523

மாதவனும் நன்றுஇனிநாம் வாலிபால் எல்லீரும்
போதும்என ஆதரவால் புக்கனன்சீர் - நீதிபெறு
மன்இளைய கோவும் வலிவீர வானரரும்
மன்னி யுடன்சூழ் வர....1524

வண்டுஉறங்கும் பூவில் மயில்உறங்கும் மாமரத்தில்
கொண்டல் உறங்கும் குலச்சிகரம் - அண்டிஎதிர்
நாகமொடு நாக நனிஉறங்கு நற்குணத்தார்
ஏகுநெறி எல்லாம் இசைந்து....1525

மாக்குறவர் வன்றழல்கல் வண்ணம்உறும் வார்கமுகில்
மேக்குயரும் தேன்இறால் வீழ்ந்துடைப்ப - ஆக்கம்உறும்
தேன்அருவி பாயச் செழுநீர் மதுக்கடலில்
தான்இலகும் கஞ்சத் தடம்....1526

இவ்வரைவா யோசனைஒன் றேறி இகல்வாலி
வெவ்விடத்தை உற்று மிடல்வீரர் - இவ்விடத்தில்
என்செய்வது என்ன இசைத்தான் இணைஇல்லா
பொன்செய்த மேனிப் புயல்....1527

சட்டகஞ்சேர் வாலிதனை அழைத்துத் தாக்கினையேல்
ஒட்டி மறைந்துஉற்று ஒருவாளி - விட்டிடுமாறு
எண்ணினேன் என்ன இதுவே கருமம்எனக்
கண்ணினான் சென்றான் கடிது....1528

வான்முறுக்கி மேனிமிர்த்து வன்தோள் புடைத்தெதிர்ந்தான்
ஊன்முறுக்கி உன்உயிரை உண்பன்எனத் - தான்முறுக்கி
ஆரவா ரித்தான் அயல்உளோர் அஞ்சிடவே
வீரவா ரத்தால் விளித்து....1529

பூஅணையில் வெள்ளிப் பொறைபோல் துயில்புரியும்
மாவலியான் வாலி மணிச்செவிவாய் - மேவியது
மல்லுறுதோள் மன்னன் வலிந்துஒலித்த வாய்ஓதை
வல்இடியின் ஓசைபட வந்து....1530

திண்கால் அரிமுழக்கம் தேர்ந்த சினக்கதழ்ஏறு
எண்கால் உடைப்புள் எனவெகுண்டான் - வண்காரும்
விண்டலமும் மற்றும் விதிர்ப்புறக்கண் வாய்புகைதீ
மண்டநகை செய்தான் மதித்து....1531

கைவேகக் காலும் கனக வரைஅனைய
மெய்வேகக் காலும் மிடைதரலான் - மைவரையும்
மிக்கார் தருவினமும் வேர்பறிய வெய்தெழுந்து
புக்கான் விடம்போல் புகைந்து....1532

இந்திரனும் என்பதத்துக் கீறுறுமோ என்றழிந்தான்
சந்திரனும் அற்றே சலித்தனனால் - அந்தகனும்
அஞ்சிக் குலைந்தான் அயல்உளார் ஆற்றுவரோ
நெஞ்சுலைந்தார் தேவர் நினைந்து....1533

அப்பொழுதில் தாரை அவன்மனைவி ஆரமுதம்
ஒப்புடைய சொல்லால் உழையனையாள் - செப்பரிய
விண்நடந்த மேனியனை மென்சாயல் மாமயிலின்
நண்ணி இவைசொற்றாள் நயந்து....1534

நின்தோற்றம் வன்மை நிலையறியான் அல்லன்இவன்
முன்தோற்ற பின்னோன் முனிந்துஎதிர்ந்தான் - பின்தோற்ற
முற்றுஎதிர்ந்தான் அல்லன் உறுதவங்கள் செய்துவரம்
பெற்றுஎதிர்ந்தான் அல்லன் பிடித்து....1535

சாபத்தால் நீஅடையாத் தாமமலை மேல்மருவி
ஆபத்தால் மேவி அறிவுஇழந்தோன் - கோபத்தான்
நன்றுஉற்றது தெரியின் நல்துணையால் என்றுஉரைத்தாள்
மன்றல்குழல் கயல்கண் மான் ....1536

தேவா சுரர்கள் திரிக்க முடியாத
மூவா மலையை முறைவலித்துச் - சாவா
மருந்துஅளித்த வண்மை மறந்தனைநீ கொல்லோ
கருந்தடங்கண் பெண்ணேஅக் கால்....1537

ஆர்படைத்த சூலத்து அரன்கொடுத்த நல்வரத்தால்
வார்படைத்த என்தோள் மலைவாரேல் - தார்படைத்த
பற்றார் பெறும்வலத்தில் பாகம்எனக்கு உள்ளதுஅன்றோ
முற்றா விளைமுலையாய் முன்....1538

அரிஅனையான் கூறஅரி வையும்என் அன்ப
வரிஅனையார்க்கு எய்தும் வலிதான் - கரியநிறக்
காகுத்தன் என்றுஉரிமைக் காதலர்பால் கேட்டுஉணர்ந்தேன்
மாகத்தோள் வீர மதி...1539

என்று உரைப்பப் பேதமையால் எவ்வுரைநீ சொற்றனையால்
நன்றறிவான் புன்குரங்கின் நட்பமைந்து - வென்றிபெற
என்மேல் பகழி எயுமோ எனஉரைத்தான்
மின்மேல் கொதித்தான் வெகுண்டு....1540

அன்னை உரையால் அரசுஉரிமை யாவையும்தன்
பின்னவனுக்கு ஈய்ந்து பெரும்கானில் - துன்னரிய
நற்றவமேற் கொண்டு நடந்தானை நன்குஅறியாய்
சொற்றனைநீ அன்றோ துணிந்து....1541

பாரிடந்த பாழிப் பணைமாவும் பண்டுஅவுணன்
மார்பிடந்த வெற்றி வலத்துஅரியும் - கார்கடந்த
மந்தரமும் என்ன வருவான் செயல்அறிந்தான்
கந்தநீர் வான்ஆவான் கண்டு....1542

தம்பிமுகம் நோக்கித் தறைசலிப்பத் தான்அடையும்
நம்புமுகம் நோக்குதிநீ நண்றுஎன்ன - வெம்பகையால்
முன்னவனைக் கோறல் முயன்றான்என்று உள்வருந்த
என்னறிவேன் என்றான் இருந்து....1543

என்நலத்தில் சேர்ந்தார் இவர்மரபின் ஆயுங்கால்
உன்அரிய பாதகத்தின் ஒன்றாவார் - நன்நலம்சேர்
எம்பி பரதனைப்போ லேவரின்இம் மண்ணுலகின்
நம்பி எனவுரைத்தா னால்....1544

ஆய உரைநிகழும் அவ்வுழிச்சென்று அண்மினார்
காஎரிகண் காலக் கடுகினார் - போய்எதிர்ந்து
முட்டினார் மோதினார் மூண்டார் முனிந்துஅதிர்ந்து
கிட்டினார் ஏற்றார் கிளர்ந்து....1545

கடல்சுழல வானக் கதிர்சுழலக் காணும்
திடர்சுழலத் தாரகையும் சிந்த - உடல்வலியான்
மட்டிகிரி என்றுஉரைப்ப வந்தார் நெடுஞ்சாரி
ஒட்டிப் பொருதார் உயிர்த்து....1546

விண்மேல் செலுவர் விசைத்துருத்து வேகமுடன்
மண்மேல் செலுவர் வயக்கதிர்போல் - எண்மேலும்
எட்டுத் திசையும் இவர்வரி டித்துரப்பர்
கட்டிப் புரள்வர் கடித்து....1547

கன்றியபொற் கண்ணனொடு காசினியை முன்னிடந்த
பன்றி எதிர்பொருத பான்மைபோல் - நின்று
பொருசமரம் முற்றிப் பொருதிடுவர் பொங்கித்
திருகுவர்மேன் மேலும் சினந்து....1548

வாலால்வரிந்து உடலம் மண்ணில் எடுத்துஎறிவர்
காலால் உதைப்பர் கடித்துஉருப்பர் - ஆலாலம்
என்ன விழிப்பர் இடிப்பர் எடுத்துஎறிவர்
மின்இடியை ஒப்பார் வெகுண்டு....1549

ஆயிடையில் வாலி அருக்கன் றரும்புதல்வன்
ஓய்வுறநீள் கையால் உரும்உறவே - வாயினிடைச்
சோரி பெருகத் துகைத்தான் துணைஇல்லா
மூரி வரிபோல் முனிந்து....1550

ஆற்றல் இழந்தான் அனகன்தன் மாடுஅணுகி
ஏற்றது உரைப்ப இரவிசேய் - வேற்றுமைநும்
பால்அறியோம் ஓர்கொடிப்பூப் பற்றிமிலைந்து உற்றனைநீ
மேல்அமர்செய்க என்றான் விரைந்து....1551

கலைஅணிந்த திங்கள் கதிர்அனைய காட்சி
மலர்அணிந்து பின்னும் மருவி - வலன்அமைந்த
மாக்கரத்தால் தாக்கி மலைந்தான் மலரனைய
ஆக்கை உடையான் அனன்று....1552

பூங்கொடிதன் சென்னி புனைந்தான் புரண்டுஆவி
நீங்க இழைப்பல்என நேர்ந்துஉருத்தான் - ஓங்கியதன்
தோளாற்றல் கொண்டு துகைத்தான் கடுசினத்தின்
ஆளாற்றல் உற்றான் அயிர்த்து....1553

வச்சிரத்தில் சான்ற வயிரத்திண் மார்பின்இடைப்
பச்சிரத்தஞ் சோரப் படுபகழி - நச்சரவ
நாகுற்ற தன்மைஎன நஞ்சரிய நஞ்சம்எனப்
போகுற்றது அன்றே புகைந்து....1554

வாய்வழியும் நாசி வழியும் வழிகுருதி
பாய நிலமேல் படுப்பல்என - மேயவன்மேல்
விட்டான் ஒருபகழி வெய்யோன் குலமுதல்வன்
வட்டா கரவில் வளைத்து....1555

பற்றியதீ வாய்ப்பற் பணியோடும் பார்மிசை
முற்றும் கலையார் முழுமதியம் - வெற்றியற
வீழ்ந்தது எனவிழுந்தான் வெங்காலத் திண்பகழி
போழ்ந்துஉயர்ந்த மார்பில் புக....1556

வெம்பி இவன்உயிரை வீய்ப்பன்என வெந்தறுகண்
தம்பி உடல்பிடித்த தாழ்தடக்கை - அம்புமுனை
உன்றுஅகன்ற மார்பின்இடை ஊடுறுவ ஒட்டாது
பற்றியது தேவர் வியப்ப....1557

அச்சுதன்தன் ஆழியோ அன்றேல் அதழ்புனைத்தான்
முச்சிரத்துச் சூல முழுப்படையோ - வச்சிரமும்
ஏகுமே என்மார்பு எதிர்ந்தார்இன்று யாவரோ
சேருடையார் யாரோ சினந்து....1558

மூவர்இது செய்ய முறையுளதோ முற்றிகலால்
ஏவல்இது செய்ய இகல்உளார் - தாவரிய
வில்லால் எடுத்துஎய்து விட்டதுஇது வாகுமோ
புல்லோ அவற்குஇப் பொருள்...1559

என்றுஉரைத்துக் கையால் இணைக்கழலால் வால்வலியால்
குன்றருவி என்னக் கொழுஞ்சோரி - நின்றுஒழுக
பற்றிப் பறித்தான் பருவலியால் பர்விண்இடைக்
கொற்றக் கொருவன் கொதித்து....1560

வானவரும் மற்றுளரும் மாமறைதேர் வாணரும்இவ்
வானரத்தின் கொற்றம் மகிழ்ந்துரைப்பத் - தானமுறும்
அக்கரத்தின் சீர்மை அறிதருவன் என்றுஉரைத்தான்
செக்கர்முகில் ஒப்பான் தெளிந்து....1561

வேதப் பொருட்கெல்லாம் வித்தாய் அனாதியாய்
சோதிப் பொருளாய்த் துளக்கம்இலா - ஆதிமனு
மூலமாய் நின்ற முழுநாமம் கண்இணையால்
வாலி அறிந்தான் மதித்து....1562

குலங்கெடுத்தான் வாய்மை குணமொழுக்க மான்ற
நலங்கெடுத்தான் வஞ்சகமு நண்ணிச் - சலங்கொடுத்தென்
தம்பிக்கும் எற்கும் சமர்மூட்டித் தான்மறைந்தோர்
அம்புய்த்தான் என்னோ அறம்....1563

என்றுஉரைத்த வாலிமுனம் இந்திரவில் நீலமணிக்
குன்றுஎதிர்ந்தால் என்னக் குலவுத்தோள் - வென்றிபுனை
மானச் சிலையான் வரநோக்கி ஈதுஉரைத்தான்
தானக் கரிஅனையான் தான்....1564

மானம் தருமம் வலிமை தயவுஒழுக்கம்
தானம் பொறுமை தவமேன்மை - ஆனஎலாம்
நும்குலத்துக் கேஉரிமை நோன்கழல்கால் வில்வலியோய்
எங்குஉலப்ப வந்தாய் இவண்....1565

மனுமுதலா நீதி வழக்குடையாய் வாய்மை
தனுவலிஎன் பால்கொளுவல் சால்போ - வனிதைதனை
நீக்கியபின் நீதி நினையாதே நீபுரிந்தால்
ஆக்கமோ சொல்லாய் அறிந்து....1566

புறத்தொருவன் செய்த புகழிலா வன்மை
மறத்துறையை எண்ணி வலியால் - அறத்துறையோய்
காயிலையுண் வாழ்க்கைக் கவியுறைக் கட்டனைநீ
மாயுமோ விந்த வசை....1567

வாரிதியைத் தந்து வரநதியை மீக்கொணர்ந்து
பார்வளத்தைத் தந்தும் பரித்தனர்கள் - ஆர்வமிக
ஆய குலத்தில் அவதரித்தாய் ஆண்டகைநீ
தாய்அலவோ எவ்வுயிர்க்குந் தான்....1568

வஞ்சகமாய் எம்பி வரவழைத்த போரினிடை
அஞ்சலைநீ போலும் அயல்இருந்தே - வெஞ்சிலையில்
வாளிஒன்று விட்டாய் மறைநூல் முறைப்படியோ
ஆளியன்ன மொய்ம்போய் அறிந்து....1569

பேர்ஆண்மை வீரம் பிறிதுஎவருக்கு உண்டுகொலோ
போர்ஆண்மை உற்ற புயல்அனையாய் - தாரார்மை
அல்லேந்தும் கூந்தல் அரிவை தனைஇழந்து
வில்ஏந்தி நின்றதுஅன்றோ வீறு....1570

பாவம் பழிஅச்சம் பாராய் பகைமூட்டும்
கோவமதை எண்ணாய் குலம்அறியாய் - நீவலிமை
உற்றாய் எனஅறிவேன் ஊழ்வலியால் வென்றதுஅன்றி
எற்றால் எனமதியால் எண்....1571

என்னுரைஒன்று உன்பேர் இழைஅணியைப் பெற்றிடச்செய்து
இன்னல்எலாம் நீக்கும் இதுஅன்றி - முன்மறைத்தம்பு
ஏவினான் என்னும் இழுக்கும்இலை ஈதுஅறியா
நீவிலைக்கொண் டேநின்றாய் நேர்....1572

ஈதுஉரைப்ப ஐயன் எதிர்நோக்கி ஏறுஅனையாய்
மோதவுணன் போரிடை நீமூளும்கால் - நீதிஇவன்
மீள்கிலைநீ என்னா வெறுத்தான் வெறுத்தானை
ஆளுதிநீ என்றார் அரசு....1573

அவ்அரசு கொள்ளாது அயர்வானை ஆறுஅடைந்தார்
வெவ்வுரையால் அஞ்சியது மேற்கொண்டான் - தெவ்வமரை
முற்றி யடைந்து முனிந்திடநீ மூதுரையால்
குற்றமிலை என்றான் குறித்து....1574

அஞ்சி உரைத்தல் அறிந்தும் அவன்ஆவி
எஞ்சும் படிக்கே இயற்றினாய் - நஞ்சுஅனையாய்
தாரமும் கொண்டாய் தருக்கால் தகவிந்தாய்
ஈரம்இலாநெஞ் சோடு இருந்து....1575

தம்பியுடன் பிறந்த தன்மைஉண ராதவன்கொள்
அம்பர் விழிமயிலை ஆதரித்து - வெம்பிஇது
வாரமோ வீரமோ மானமோ வண்மைபெறும்
காரமோ என்றான் கடுத்து....1576

தெட்பமிலாச் செய்கைச் செயலாலும் உம்பிமுனம்
நட்பமைந்த தானும் நனிபடுத்தேன் - கொட்புடையோய்
சால எனக்குத் தகுமாறு இதுஎனலும்
வாலி உரைத்தான் வடித்து....1577

உங்கள்குலத் தான்ற ஒழுக்க மணத்துரிமை
எங்கள் குலத்துக்கு இயல்புஉண்டோ - சங்கைஅற
நேர்ந்தவாறு அன்றி நெறியின்று எனமொழிந்தான்
காந்துகனல் விழியால் கண்டு....1578

விண்ணவரில் தோன்றி விடம்உண்ட நாற்பெருந்தோள்
அண்ணல் வழிபட்ட டல்அமைந்த - எண்அரிய
வெவ்வரங்கள் பெற்று மிகப்பேசும் பெற்றியைநீ
எவ்விலங்குஎன் றாவாய் இனி....1579

மன்னிடங்கர் வாய்ப்பட்டு மாழாந் தொருபொருளை
உன்னி அழைத்த ஒருகரியும் - முன்னி
அழியா நெறிஅடைந்த ஐயனும் மெய்யற்றாய்
பழியா விலங்குஅன்றோ பார்....1580

நன்றுஇதுதீது என்றுஉணரார் நாகா திபர்எனினும்
வென்றியாய் புன்மை விலங்காமால் - நன்றறிதல்
வெவ்விலங்கே ஆயிடி னுமேசி லிமையோரே
கவ்வைஇலா நூல்ஆயுங் கால்....1581

இத்தன்மை ஐயன் இயம்ப எதிர்வாலி
அத்தன்மை ஆகில் அபிராமா - எத்திஎனை
நீமறைந்துஅம்பு எய்யும் நிபம்யாது எனஇளைய
கோமகனும் சொற்றான் குறித்து....1582

தம்பிசரண் அடையத் தாழ்வித்த நின்னையோர்
அம்பில் படுப்பல் எனஅறைந்தான் - வெம்பர்வாய்
நீயும் சரண்என்ன நேர்வாய் எனமறைந்துஅம்பு
ஏயினவாறு என்றான் எதிர்ந்து....1583

அச்சொல் செவிவந்து அடைதரலும் அய்யன்வெறும்
கொச்சைத் தனம்அதனில் கூடுமோ - நச்சுஅரவப்
பாயல் உடைய பரன்இவனே என்றுஉணர்ந்து
வாயின் உரைத்தான் மதித்து....1584

ஆரணமும் காணா அமலா அகண்டபரி
பூரணா ஆனந்தப் பொருளேஓர் -காரணமாய்
அப்பால்விட்டு இப்பால் அடைந்தாய் உனைஅறிவது
எப்பால்கொண் டப்பா இனி....1585

உன்உருவம் உன்பெருமை உன்செயல்இவ் வாறுஎனநின்
பொன்உருவம் காட்டுதியோ போர்வில்லாய் - மன்னறிவால்
காண்பார் அறிவாரே காண்பார் கணக்குஇறந்தாய்
மாண்பார் பொருளாகு வாய்....1586

செய்வது செய்கென்னத் திரமுடையோய் யாவருக்கும்
பொய்தவிர்வான் துய்ய புலன்காட்டி - ஐயம்அற
ஆண்டுஅருள வந்த அழகா அடியேற்குத்
தாண்டரிய நல்வரங்கள் தா....1587

நாயினேன் புன்சொல் நவைதீர்த்து உனதுபதத்
தூய கமலத் துணைசேர்த்து - மாயைஇலா
வீடுஅளிப்ப வேண்டும் இதுவேஎன் விண்ணப்பம்
நாடுஅளிப்ப வேண்டும் நனி....1588

மெய்வாய்ந்த எம்பி வினைஅறியான் வேறுபிழை
செய்வான் எனினும் சினந்துஎன்மேல் - எய்வாளி
ஏவாது அருள்தி இறைவா இறவாத
தேவாதி தேவா தெரிந்து....1589

யான்உரிமை செய்ய இலனேனும் இந்தஅனு
மான்உரிமை செய்ய வலன்கண்டாய் - வான்உரிமை
எம்பியும்நின் தம்பிஎன எண்ணுதியால் எம்பிரான்
தம்பமிலை நீயே சரண்....1590

என்றுஉரைத்து முன்னர் இருந்த இளையோனைத்
தன்துணைக்கை கூட்டித் தழுவிநீ - ஒன்றுரைப்பல்
கேண்மோ உறுதிஇனிக் கேடுஇலைஎன்று ஓதினான்
சேண்மேக வாகனனார் சேய்...1591

காண்பார்க்கும் காணும் கருத்தார்க்கும் கற்பகத்தின்
மாண்பாய் ஒளியாய் மறைமுடிவாய்ச் - சேண்பாரும்
விள்ளும் பொருளே வெளிவந்தது என்றுஅறிஇவ்
வள்ளலைநீ ஐயா மகிழ்ந்து....1592

பவப்புணரிக் கோடம் பகருதற்கொண் பாகு
தவச்செயலுக் கன்பளிக்குந் தாரு - நவத்துறையார்
மெய்யினுக்கோர் வித்து வெளிவந் தருண்மழையைப்
பெய்யு முகிலனையான் பேர்....1593

செங்கோல் அரசின் திருவால் மயங்கினைநீ
வெங்காம முன்னி விளைவறியாய் - மங்காத
மாமணி ஒப்பானை வழிபடாய் என்னில்இனிப்
பாமரனே யாவாய் அப்பா....1594

இன்ன பலவும் இயம்பி எழில்உடையான்
தன்னை எதிர்நோக்கித் தனிமுதலே - என்இளைய
இச்சிறுவன் நின்சரணம் என்றே எதிரில்லான்
உச்சிகரம் வைத்தான் உவந்து....1595

முன்னும் இளையோன் முகம்நோக்கி மொய்கழலோய்
நின்மகனை ஈண்டுஅழைத்தி நேர்என்ன - முன்னியவன்
முந்துஅழைப்ப வந்தான் முழுமதிய மாம்எனவே
மந்தரநேர் வாலி மகன்....1596

பாற்கடலின் மீதோர் பனிமதிய மாம்எனவே
மாற்கிரியின் மேல்கிடந்த வாலிமேல் - கோக்குமரன்
கண்ணனீர் சோரக் கசிந்தான் விழுந்துஅழுதான்
எண்ணரிய துன்பத்தி னைந்து....1597

அய்யனே எங்கட்கு அரசனே அண்டருக்கோர்
மெய்யனே நிற்குஇதுவும் மேவுமோ - பையமற
அந்தகனும் அஞ்சாதுஉன் ஆவி கவர்ந்தானோ
எந்தைஇனி எப்பால் இடம்....1598

காராடு நான்கு கடலும் கடிதுஅடைந்து
நீராடி மெய்யரனை நேசிப்பாய் - போராடும்
அன்களத்து வீழ்குருதி மாக்கடலின் ஆடினையோ
மின்கணிந்த மெய்யாய் விழுந்து....1599

என்று புலம்பும் இளவல் தனைஎடுத்து
நின்றுஅயர்வாய் அல்லைஇனி நீவருந்தேல் - வென்றி
இராமபிரான் செய்து அருளும்ஏற்றம் ஈதுஐய
துராலுறுதல் என்பயனோ சொல்....1600

இப்புவியில் தோன்றல் இறத்தல் இவைஇயற்கை
அப்பொருளுக் குள்அழியு மாறுஎன்னோ - துப்புஅமையும்
எந்தைக்கும் நிற்கும் எனக்கும் இதினூங்கு
வந்திடுமோ பேருதவி மாண்பு....1601

எனக்குஇறுதி செய்தான் இவன்என்று இகழ்ந்து
மனத்திடையும் எண்ணேல் மதியோய் - வனத்துளப
மாதவனே இந்த மணிவண்ணன் வண்ணமலர்ப்
பாதம் புகழ்தி பணிந்து....1602

இன்னது உரைத்தான் இமையோர் பதிமதலை
மன்னன் முகம்நோக்கி மணிவண்ணா - இன்னவனப்
புல்லலர்க்கேறு அன்னான் புகலான்பொய் என்மகன்நின்
இல்லடையாம் என்றான் எடுத்து....1603

என்றலுமே ஐயன் இகலுடைவாண் நீட்டிஇது
வன்திறலோய் தாங்குதிநீ மற்(று)என்ன - அன்றவனும்
தாழ்ந்து பொறுத்தான் தருநீழல் வாழ்அமரர்
வாழ்ந்தனம்என்று ஏத்த மகிழ்ந்து....1604

கரநெகிழ வாலி கடைக்கால் உருமின்
உரமுருவி வாளி உயரும் - பரமன்உலகு
உற்றான் ஒளியாய் உலகாசை மூன்றும்அறப்
பற்றடையார் வாழ்த்தப் பணிந்து....1605

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.6. அரசியற் படலம்
அப்பால் இராமன் அருக்கன் புதல்வனொடும்
ஒப்பாரும் இல்லா ஒருவனொடும் - தப்பாமெய்
அங்கதன்என்று ஏத்தும் அரியோடும் போய்ஒருசார்
தங்கி யிருந்தார் சரித்து....1606

நஞ்சவிழித் தாரை நணுகினாள் நண்ணியொரு
வஞ்சக மின்கொடியின் மாழ்கினாள் - நெஞ்சயர்ந்து
மாமயில் பேடைஒரு மாமலைமேல் வீழ்ந்ததென
மாமகிழ்னன் மேல்விழுந்தாள் வந்து....1607

குழல்சரியப் பூவின் கொடிபோல் புரண்டாள்
அழகுலைய ஆரமுத நாண - மழலைமொழிச்
சொற்கிளியின் மாழ்கித் துணைக்கரியைத் தான்இழந்த
நற்பிடியின் நைந்தாள் நலிந்து....1608

இன்பத்துக் கெல்லாம் இணையா யியல்பில்லாத்
துன்பத்துக் கெல்லாம் துணையாகி - அன்புற்ற
நாதா எனைஇருத்தி நாகருற வுற்றனையோ
ஏதோ பிழைஎன் னிடம்....1609

ஆகச் செருவில் அடர்வா ரடல்வரத்திற்
பாகத்தின் மேய பலம்எல்லாம் - மேகத்தின்
வந்துஎதிர்ந்த மேகத்தின் வண்ணனொடு போயிற்றோ
எந்தவிதம் தேறேன் இது....1610

ஏய பலவும் இசைத்தரற்றும் இன்னகையைத்
தூயஅனுமன் சொலும் உறையால் - ஆயிழையார்
கொண்டடைந்தார் கோயில் குடபால் குறிஎனவே
விண்டடைந்தான் வெய்யோன் விரைந்து....1611

அன்றுஇரவில் ஐயன் அருக்கன்மகன் ஆதி
வென்றிதரும் துணைவர் மேவவே - மன்றன்மலர்ப்
பள்ளி துயின்றான் பதமா மலர்வருட
வள்ளல் இளையோன் மகிழ்ந்து....1612

தன்மகனுக்கு உற்ற தனிப்பேறு காண்டருவான்
வன்மகர் நீர்மேல் மருவினான் - பொன்மருவும்
செய்யார் மலர்அலர்ந்து தேறல் துளிசிதற
வெய்யோன் குணபால் விரிந்து....1613

இவ்வேலை வல்ஏறு இளவல் முகம்நோக்கி
அவ்வேளை வந்தோன் அடல்மகற்குச் - செல்வேநீ
மாமகுடஞ் சூட்டி வருவாய் எனஉரைத்தான்
கோமகுடம் நீத்தஅருள் கோ....1614

அண்ணல் இளையோன் அருளின் முறைஅடைந்து
மண்ணும் அயல்முதலா மங்கலங்கள் - கண்ணரிய
மாருதிதந் தீய்தரலும் மற்றும் வினைமுடித்தான்
ஆரணநூன் மாமுறையே ஆய்ந்து....1615

அந்தரத்தோர் வாழ்ந்தனம்என் றாதரிப்ப வந்தணர்கள்
முந்தறங்கள் ஓங்க முறையறிந்து - செந்தனிக்கோல்
அய்யன் கவித்தான் அருக்கன் மகன்முடிமேல்
செய்யமணி மகுடம் தேர்ந்து....1616

கவிக்குலத்து நாதன் கவித்தமுடி யோடும்
செவிக்குணவு தேடித் திருமால் - நவப்பதமா
தேவனத்தில் தாழத்திரு நோவப் புல்லினான்
பூவனத்தின் மேய பொருள்....1617

காதல் உளத்தடங்காக் காவலன்அக் கோக்கவிக்கு
நீதி பலவும் நிகழ்த்தினான் - போதத்து
துறையாதி சொல்லின் துணிபொருளுக் கேற்ற
மறையாதி நூலின் வழி....1618

அரசுரிமை செய்தல் அறியுங்கால் ஐய
திரைசெய் புவியில் சிறிதோ - உரைசெய்
பகையின்றி நட்பின்றிப் பாலித்தல் அன்றோ
தகையரசுஎன் றாய்திமனத் தால்....1619

அங்கிக் குணம்பெற்று அவரவர்க்கும் தாரகமாய்
செங்கமலம் என்னத் திகழ்வதனம் - சங்கலர்க்கும்
ஏற்றவர்க்கும் ஒப்ப இருந்துஅங்கு அரசியற்றல்
கோதருமம் கண்டாய் குறித்து....1620

இம்மைக்கும் கேடாம் இடருக்கு இருப்பிடமாம்
அம்மைக்கும் தீமை அளிக்குமே - செம்மைக்
குணங்கண்டார் உள்ளம் குறிக்கொளா தாற்றும்
அணங்குஅணையார் காமத்து அனல்....1621

வேதனைஉண் டாக்கும் வினைவிளைக்கும் வெய்யபகை
போதப் பெருக்கும் பொருள்அழிக்கும் - நீதியற
மாதுஎன்ப துண்டா மதியோர் விரும்புவரோ
சூதுஎன்பது ஐயா துணிந்து....1622

நல்லதும் தீதுஎனவே நாட்டுவிக்கும் நானிலத்தில்
அல்லதுவும் நன்மைஎன ஆட்டுவிக்கும் - வல்லமையால்
சொல்லா தனமொழியும் சொல்லுவிக்கும் தூயவலி
கல்லார் விரும்பியபுன் கள்....1623

ஊழ்இலர்என்று உன்னி ஒருவர்க் கிடர்புரிதல்
வாழி ஒழுக்க வரம்புஅன்றால் - ஏழைஎனக்
கோள்இழைப்பக் கூனிஎதிர் கோள்இழைத்த வாறுணர்தி
ஆளியேறு அன்னாய் அறி....1624

தாயும் உடன்பிறந்த தையலரும் என்றுஉளத்தில்
ஆயுதிநீ ஆர்வம் அடையாதே - தூயஎழில்
கன்னியரை மற்றுஒருவர் கற்புஅழியாக் காமருறும்
பன்னியரை ஐயா பரிந்து....1625

ஏற்ற இடந்தனிலும் ஏலா இடந்தனினும்
மாற்றஅரிய தீமை வரும்எனவே - தோற்றம்உறும்
கோபக் கரியைக் குலைத்தறிவாம் அங்குசத்தால்
ஆபத்தின் நீங்குதிநீ யால்....1626

அறத்தினை உண்டாக்கும் அருள்பெருக்குந் தீய
மறத்தினைவேர் கல்லு மகிமேற் - திறத்தினையே
போதப் பெருக்கும் புலனளிக்கும் பொற்புறுத்தும்
வேதப் பொருள்அனைய மெய்....1627

சூதுபகை அச்சம் சுபம்இன்மை காமமடம்
வேதனைஉண் டாக்கும் வினைபெருக்கும் - நீதியிலாக்
கற்பனைக்கு வித்தாம் களிப்புஅகற்றும் காசினியில்
பொற்புஅழிக்கும் புன்மையுறும் பொய்....1628

அந்தணரை மெய்த்தவரை ஆரியரை அன்பினரை
முந்தறனை ஆவை முதன்மறையை - அந்தரம்சேர்
சிந்தையரை மற்றும் செயலுளோர் தம்மைஎலாம்
வந்தனைசெய்து ஆளுதலே வாழ்வு....1629

வல்உருவம் பெற்று வளரும் தருவினுக்குஓர்
புல்உருவி என்று புகலுவார் - மல்லலுறும்
சேடார் குணக்குழுவில் சேர்ந்தார்க்குச் செம்மையினில்
கூடாவு லோபக் குணம்....1630

ஆயது அறிந்தே அரசியற்றி அன்புடையோய்
தூய மழைநாள் தொலைந்தமேல் - நீயனிகார்
தன்னோடும் எய்திடுக தாழாதுஎன் றான்கருணைப்
பொன்னோடும் மன்னு புயல்....1631

என்னலும்அவ் வெய்யோன் இருஞ்சுதன்நம் ஆரியனை
நின்னை ஒருபொழுது நீங்கேன்நான் - மின்அணியை
நாடலாங் காறும் நனிஈண்டு இருத்திஎன
வாடினான் உள்ளம் மருண்டு....1632

தெய்வக் குரக்குரையைத் தேர்ந்த செகநாதன்
எய்துற்ற பெற்றி எவைகண்டாய் - வெய்துற்ற
மாவிரதி யானேன்நின் மண்ணரசின் பால்இருத்தல்
ஏவந்தான் அன்றோ இனி....1633

அன்றியும்நின் பால்இருந்தே மாயின்எமைப் போற்றிடவே
சென்றிடுமா னாள்கள் திறம்பாதோய் - நின்றனையே
வேண்டினே நான்மதியின் மேவுகநீ என்றுஉரைத்தான்
ஆண்டகைஏறு அன்னான் அறிந்து....1634

பின்உரைகள் கூறான் பிணிப்புண்ட பாசத்தான்
பன்னும் எமது பரதன்என - முன்இறைஞ்சிப்
போயினான் வாலி புதல்வன்எதிர் தோன்றினன்அத்
தூயோன் கழற்கால் தொழுது....1635

அன்னவனை நோக்கி அறிவுடையோய் தாதையினின்
மன்னவன்பால் அன்புற்று வாழுகநீ - பின்னமற
வென்றவனைப் போக்கி எதிர்இறைஞ்சு மாருதிக்கோர்
நன்றுரைகேள் என்றான் நயந்து....1636

ஆற்றல் உடையோய்நின் ஆழம் உடைக்கருத்துத்
தோற்றுதலான் நின்போல் துணைஇன்றி - ஏற்றம்உறச்
செய்அரசு மெய்அரசு சேரா தவற்சேர்தி
ஐயநீ என்றான் அறிந்து....1637

ஈதே பணிஎன்று எதிர்தாழ்ந்து எமைப்புரந்த
காதல் அனுமான் கடந்ததற்பின் - ஆதரவாம்
தம்பியொடும் சென்றுறைந்தான் தண்ணம் பொழில்மருவி
வம்பவிழும் வேறோர் மலை....1638

அண்ணல் உரையால் அடைந்த அருக்கன்சேய்
எண்ணும் கிளையோடு இனிதாகப் - புண்ணியம்சேர்
பொன்உலக வேந்திற் புரந்தான் புகழ்மருவ
மன்னும் அரசின் வளம்....1639

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.7. கார்காலப் படலம்
வடதிசையி னின்றும் வருகதிரோன் தென்பால்
படர்திசையின் மேவப்பரூ உத்தாட் - கடகரியின்
ஆகாயம் எல்லாம் அடைந்ததே அஞ்சனத்தின்
வாகாய மேக வகுப்பு....1640

கல்லார்தம் உள்ளத்தில் காரிகையார் கண்ஒளியில்
புல்லார் நடையில் புடைபரந்து - நல்லார்
உளம்போல மின்னி ஒருங்கிமயம் என்னும்
வளம்சேர் மலைமேல் மலிந்து....1641

அயந்திரகத் தாடகம்கொண்டு ஆயும் தவத்தோர்
நயத்திரத நற்பணியின் நண்ணிக் - கயத்திரத
முந்நீர் முகத்து முழங்கித் திசைமேகம்
நன்னீர் பொழிந்தனவாம் நன்கு....1642

ஊதியத்தை யுன்னி உஞற்றா உணர்வுடைய
மேதையரின் மேகம் விளங்கியே - நீதியொடும்
பெய்யு மழையால் பெருஞ்செல்வப் பேறுஉடைய
வையஞ் சிறந்த வளம்....1643

ஊதியம்சேர்த் தீந்தார்க்கு உதவுவரில் ஒன்றாகி
ஆதரவாய் உண்ட அணிமேகம் - போதப்
பொழிந்த புனல்இரட்டி பொங்கோதை கொண்டு
கழிந்ததே மாநீர்க் கடல்....1644

சிலைநுதல்பொன் னாகம் செலும்சே வகனில்
தொலைவில் வளம்கள் தொலைந்த - மலைமுதலாம்
வண்கான் இடங்கள் வயம்பெருக மன்னியது
தன்காமர் மன்னோ தகம்....1645

சொற்றாலும் எண்ணித் தொடர்ந்தாலும் துன்பமுற
உற்றாலும் வெம்மை உறும்பாலை - கற்றாயும்
மாருதியின் பூங்கருணை மன்னியநன் மாந்தர்எனச்
சீருதைய மானதுவே சேர்ந்து....1646

நாயகரின் ஊடியபொ னங்கையரில் பூங்குவளை
ஆய்தரும்ஒண் பாடலமும் அல்லல்உற - மேயவரில்
காந்தளும்பொற் பூவார் கடுக்கையும்வெல் கூதளமும்
ஏந்தலுறக் காமர் இசைந்து....1647

குயில்ஒதுங்கி வாழக் குரண்டமொடு சாயல்
மயில்மகிழக் கோப மலிய - வெயில்விரிந்த
பச்சை ஒளியில் பசும்புல் பரந்துஇலக
நச்சரவம் ஒல்க நனி....1648

வண்டும் நிமிறும் மகரமும் வண்கரும்பும்
தண்தமிழி னாய தனிப்பாடல் - விண்டுஇசைப்பக்
கன்னல் சிலைஉருவக் காமன் களிஅரும்ப
மன்னியது கார்ப்பருவம் வந்து....1649

இவ்வழியில் அய்யன் இணைக்கரும்கண் பூங்குமுத
செவ்வழிவாய்த் தோகைதனைச் சிந்தியா - வெவ்வழியான்
காமன் மலர்க்கணையால் கள்ளுண்டு அறிவிழந்தார்
ஆமெனவே சொல்வான் அறிந்து....1650

தண்ணீர் உடையாய் தரும்காதல் தானுடையாய்
மண்ணோர் புகழ மணிநிறத்தாய் - எண்ணாய்
பகையேது உனக்குப் பரிவுஉறுத்திக் கொல்லும்
வகைஏது சொல்வாய் மழை....1651

இடித்துக் கறுத்துரங்கொண்டு ஏறிவிசும்பு எங்கும்
தடித்துப்பல் தோற்றமொடு தாக்கி - வடித்தசர
மாரி பொழிந்து வருதலால் வாள்அரக்கர்
நேர்உவமை ஆகும்மழை நீ....1652

மண்பெற்ற கோல வடிவாள் மருக்குழலும்
பொன்பெற்ற மின்னின் பொலிவதனான் - முன்பெற்ற
நுண்இடையும் காட்டுதலான் நுன்பால்விண் என்னுயிராம்
கண்ணிருந்தா ளாகும் கலந்து....1653

கண்மாரி ஆக்கிஉறு கண்விளைவு காட்டிஉடன்
மண்மாசு பட்டமைய மாயஞ்செய்து - ஒண்மாக்
குயில்மொழிநீங் கச்சலமும் கொண்டனைநீ அன்றோ
புயல்எனும்பேர் கொண்டாய்இப் போது....1654

உன்வாய் திறந்தால் உயிர்நடுங்கும் உம்பரினின்று
என்மாரி பெய்தா லிடத்தணங்கின் - பொன்மேவும்
மெய்எலாம் புண்ணீர் மிகுந்தடித்தால் விண்ணவரும்
செய்ய விழியிமைப்பார் தேர்ந்து....1655

அப்போது இளையோன் அறைவான் அருள்நிறைந்த
மைப்போதகம் அனைய மாதவனே - வெப்பால்
உளைந்திடுவது என்னோ உனைநீ அறியாய்
களைந்திடுதி இத்துயரம் காண்....1656

சீதை பிரிந்த சிறுமையோ தேர்அரக்கர்
வாதை நினைந்த வருத்தமோ - கோதுஇலா
மன்னன் கவிக்கோ மகனார் வராமையோ
என்னவிதம் உற்றாய் இடர்....1657

மலைகலங்கி னாலும் மனம்கலங்கா மன்ன
நிலைகலங்க னீயோ நினைதி - தொலைவுறுமிம்
மாரி யவதி வருந்தேல் எனமொழிந்தான்
சூரியனை ஒப்பான் துணிந்து....1658

ஆயோன் உரையாம் அமிர்தால் அயர்வுஆறிச்
சேயோன் இருப்பச் செறிதரும்கார் - மாயை
ஒழிந்தார் உளம்போல் ஒளிர்ந்ததே காமம்
விழைந்தார் உடல்போல் விளர்த்து....1659

எய்தும் பொருள்இல்லான் ஈயான் கொடைபோலப்
பெய்தல் ஒழிந்த பெருமேகம் - வெய்தினவன்
தன்புகழின் மாய்ந்த தடித்துத் தகைமுழக்கும்
என்பிறயாஞ் சொல்வது எடுத்து....1660

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.8. கிட்கிந்தைப் படலம்
ஆய பருவம் அகல அருள்நாதன்
தூயன் எனவே சொலிப்போன் - சேய்கதிரோன்
மைந்தன் இதுகாறும் வராதிருத்தல் யாதுஎனவே
சிந்தனைகள் செய்தான் சினந்து....1661

செய்நன்றி கொன்றான் திரம்அறியான் சிந்தைஇடை
மெய்நன்றி யில்லான் விளைவுஅறியான் - பொய்நன்றி
செய்தான் நமதுபால் தேர்வாய செய்துமுன்
எய்தா விதமே இது....1662

அய்ய நிகழ்வது அறியின் அரும்பொருள்தம்
கைஅடையும் காறும் கனிந்துஉரைப்பர் - மெய்அடைவே
வந்துஉற்றார் பின்னை மதியார் எனஉரைத்தான்
கொந்துற்ற தாரான் கொதித்து....1663

வாலி உயிர்கவர்ந்த வாளி பலஉளது
காலன்முகம் காணக் கருத்துஉளதேல் - ஞாலமிசைப்
புன்குரங்கின் சீலம் பொறுத்தி எனஇசைப்பாய்
மின்கணித்த வேலோய் விரைந்து....1664

பொய்மொழிந்தோர் தீமை புரிந்தோர் புவியின்இடை
மெய்மொழியார் நன்றி வினைமறந்தோர் - கைதவஞ்சேர்
உள்ளத்தார் ஈங்குஇவர்பால் உள்ளன்பி லோம்எனவே
எள்ளுற்றான் தன்பால் இசை....1665

என்றுஇயம்ப ஐயன் இளையோன் தொழுதுவிடை
நன்றுஎனவே பெற்று நனிநடந்தான் - ஒன்றும்
நெறியடையான் வாய்த்த நெறியே அடைந்தான்
குறிஎதிரே கொண்டான் குறித்து....1666

மேகவண்ணன் வாளிஎன வேகமொடும் எய்தியசெம்
நாகவண்ணன் கண்டுஅடலார் நாகம்எலாம் - சோகம்உற
இந்திரனார் காதற்கு இசைத்தார் இவணிளையோன்
வந்தனன்காண் என்றார் மருண்டு....1667

அங்கதனும் கேட்டான் அருக்கன் ஒளிஇலக
வெங்கதம்கொண்டு எய்தும் விரைவோர்ந்தான் - இங்குஅணுகித்
தாதைபால் சொல்வல்எனச் சார்ந்தான்நற் றாதுஅவிழும்
கோதைதாழ் மார்பன் குறித்து....1668

வளஞ்சிறந்த மண்டபத்தோர் மாலணையின் மீதாய்
உளஞ்சிறந்த தென்றல் உலாவக் - களம்சிறந்த
மங்கையர்கள் பாதம் வருடத் துயில்புரியும்
அங்கவனைக் கண்டான் அடைந்து....1669

அடைந்தோன் அனந்தர் ஒழிப்பான் அறிவோய்
இடந்தான் அதிர இளையோன் - படஞ்சேர்
வயர்சேடன் அஞ்ச வருதல் அறிந்துஇப்பார்
உயர்த்தேக என்றான் உணர்ந்து....1670

கண்மயக்கா னும்கதிர்கால் காமர்முடி பெற்றசெல்வத்
துண்மயக்கானும் கொலுறை யறியான் - எண்மயக்கால்
உற்றானை ஒன்றும் உரையான் நடந்தனநூல்
கற்றாய்த் தொழுகனுமன் கண்....1671

அன்னவன்த னோடும் அனைபால் அடைந்திதனைச்
சொன்ன பொழுது துணுக்கம்உறா - மின்னனைய
தாரைஎனும் நல்லாள் தரியாள் இவைமொழிந்தாள்
ஈரம்உற யார்க்கும் இனிது....1672

நன்றிமறந்தீர் நலன்மறந்தீர் நாயகனார்
வென்றி மறந்தீர் வினைமறந்தீர் - அன்றியும்நீள்
செல்வச் செருக்கால் திகைத்தீர் செருக்கடைந்தீர்
கல்விப் பயன்அறியீர் காண்....1673

கெட்டீர் கெடுவீர் கெடாதீர் கெழீஇயநலம்
விட்டீர் வெறும்கள் வெறியுடையீர் - மட்டவிழும்
காரிகையார் காமக் கலைமுயன்றீர் காட்சியிலீர்
சீர்ஒழிந்தீர் என்றாள் சினந்து....1674

ஈதுஉரைக்கும் எல்லை எழில்தோ ரணவாயில்
சாதகம்செய் திண்கதவம் சாத்தினார் - பூதரத்தான்
முட்டுறுத்தித் தாரு முகம்கொடுத்துக் காத்ததுமெய்க்
கட்டுஅமைத்த மற்கடங்கள் கண்டு....1675

கொண்டான் இளையோன் குறுமுறுவல் பூத்தமணித்
தண்டாமரைக் கழலால் தாக்குதலும் - விண்டாரை
வாய்வழியே சென்று மறிகடல்வாய் வீழ்ந்தனவால்
வாய்வழியே சூழ்ந்த மலை....1676

கண்டிருந்த வானரங்கள் கண்மறைந்து சென்றனதிக்கு
எண்டிரிந்த வானத் தெயில்வரையும் - விண்டொடிந்தது
ஓசனை ஒன்பானோடும் ஒன்றுஒழிந்த வானுலகத்து
ஓசைபட வல்இடியின் ஊங்கு....1677

ஆய பொழுதில் அமலன் அணிநகர்வாய்
மேய பொழுது விறலுடையார் - தூயையினி
என்செய்வது என்ன இனைந்தார் இனையுளியப்
பொன்செய்தாள் இன்ன புலர்ந்து....1678

நீர்அகல்மின் என்றுஉரைத்து நேரிழையார் தங்களொடும்
தாரை எதிர்செல்லத் தனிஇளையோன் - போரரசர்
வீதிகடந்து விரைந்து அரசன் கோயில்இடை
போதருதல் உற்றான் புகுந்து....1679

மங்கையரால் வீதி மறைத்தாள் மருவுதலும்
கங்கை தவழும் கடல்நாடன் - செங்கமலத்
தண்வதனம் சாய்த்துத் தரைநோக்கித் தான்உறைந்தான்
பெண்வதனம் பாரான் பெயர்ந்து....1680

பொன்அணைந்த தாரான் பொதுநோக்கு மின்றியே
முன்அணைந்து நிற்ப முனிவின்றி - மின்இயன்ற
தாரை உரைத்தாள் தளிரங்கம் தான்நடுங்க
ஆர்அமுதம் என்கொல்என ஆய்ந்து....1681

வானவர்க்கும் எட்டா வரவோய் மணிநிறத்து
மானவனை நீங்கி வரல்என்னோ - தேன்உகுசெம்
பூந்தாள்இப் புன்மனையில் போதுதற்குப் பூன்றதவஞ்
சார்ந்தேமோ என்றுஉரைத்தாள் தாழ்ந்து....1682

அவ்வுரையார் என்ன அமலன் அருள்ஊறக்
கவ்வைஉறு கோபம் கடல்ஏறச் - செவ்விஉறும்
தாரை முகம்மோக்கித் தளர்ந்தான் தனித்தாயர்
தாரை நினைந்தான் தளர்ந்து....1683

மங்கலங்கள் இல்லாத வண்பூகமாங் கழுத்தும்
குங்குமங்கள் கோட்டாக் குவிமுலையும் - கொங்கவிழும்
வண்மல ரில்லாது வனைகுழலும் கண்டுஇணைந்து
கண்முத்து உதித்தான் கசிந்து....1684

தாயர் எனநினைந்து தையால் அருக்கன்சேய்
வேயனைய தோள்மயிலை வேவுகரால் - ஆய்தலின்றித்
தாழ்ந்தான் அறிதிஎனச் சார்ந்தேன் தனிஅருளால்
சூழ்ந்தாய்தி என்றான் துரை....1685

முனிதருவாய் அல்லை முளரிமலர்க் கண்ணன்
இனிதருளை எண்ணாது இவனால் - அனிகமெலாம்
ஊறுமா நோக்கி உறைந்தான் உயர்தேவர்
வேறுவேறு ஏவி விரைந்து....1686

உற்ற சமயத்து உதவி புரிந்தீர்நும்
கொற்றம் தெரியாத கோடரமோ - மற்றுஇனிஎன்
எம்பால் உளதுபிழை என்றாலும் நீபொறுத்தி
நம்பா எனஉரைத்தான் நன்கு....1687

நல்அமுதச் சொல்செவியில் நாட்டம்உற நாணமொடும்
மல்லல் அருள்பெருக வல்இளையோன் - தொல்லை
மரைமலர்ந்த திண்டோள்எம் மாருதியும் எய்தி
அருகுஇறைஞ்சி நின்றான் அணைந்து....1688

செயிர்ப்பறுத னோக்கிஇடை சேர்ந்தானை நோக்கி
அயர்த்தனையே நீயும்என ஐயன் - மயல்கொடியார்
அங்கயல்கண் நோக்கு மலர்அம்பும் எய்தாத
அங்கன்இவை சொற்றான் அறிந்து....1689

எப்பான்மை யான இருவினையும் நீத்திடலாம்
அப்பாசெய் நன்றிஅது கொன்றார்க்கு - இப்பாரின்
மாற்றலாம் என்ற வழிஅறிந்தது இல்லைஇல்லை
தேற்றலாம் என்னும் செயல்....1690

முன்செய்த செய்கை முதலோனே முன்னும்கால்
என்செய்கை அன்றோ இரவிசேய் - வன்செய்த
வானரங்கள் கூட்டி வரும்அளவும் தாழ்ந்திருந்தான்
நீமுனியல் ஐயா நினைந்து....1691

தேடுவார்த் தேடித் திரிந்தீர் செயல்உடையீர்
நாடுவார்க் கெய்தும் நலமுடையீர் - கூடி
அருளியற்றோம் என்னில் அடியோமில் யாரே
மருளியற்றாங் கண்டாய் மதித்து....1692

என்றுஅனுமன் கூற இளையோன் முனிவுஆறி
நின்ற பொழுதின் நெடுவாலி - தன்தனையன்
மாமதிபோல் வந்து வணங்குதலும் என்வரவு
நீமொழிதி என்றான் நினைந்து....1693

நன்றுஎனவே சென்றான் நலந்தருமத் தாதைவயின்
பொன்றகைய பாதப் பொலம்போது - நின்று
வருடி யிளையோன்நின் வாயிலா னென்றான்
வெருவரும்வெஞ் சீற்றம் மிக....1694

மயர்ஒழிந்து மன்னன் மதியோயா மேதும்
அயர்வியற்றே மாக அவர்க்கு - வெயில்வெகுளி
உற்றவாறு என்என்றான் ஓரா யிரம்கதிரோன்
பெற்றசேய் என்பான் பெயர்ந்து....1695

யாம்உரைத்த நாளவதி யானதுஎன்றும் ஆர்வமிக
மாமகுடந் தாங்கியபின் வாழ்வடைந்து - சேமம்உற
மாற்றினோம் என்றும் வரையாவெங் கோபம்உற
ஆற்றினான் நம்அனுமான் ஆங்கு....1696

என்று முதலும் முடிவும் இயல்பாக
நன்றுஉரைக் கூறி நளிர்முடியோய் - சென்றமலற்
காண்டிநீ என்றான் கடல்கடைந்த கையுடைய
மாண்டகையான் பெற்ற மகன்....1697

எற்குஉதவி எண்ணி எவராலும் செய்வரிய
நற்பொருடந் தார்பால் நலன்மறந்தேன் - அற்பம்எனும்
தெள்ளுண் டிடாத சிறியார் மிகவிரும்பும்
கள்ளுண்டது அன்றோஇக் கால்....1698

ஐவினையின் ஒன்றாம்அது என்று அறிந்தும்அதைச்
செய்வினைஎன் றேசில் திருவோடும் - எய்தியயான்
ஐயன்பால் எவ்வாறு அடைவேன்என மொழிந்தான்
மையறுபொற் றேரோன் மகன்....1699

எங்கோன் இராமன் இணைத்தா மரைஆணை
வெங்காலி கொள்ளேன் விரதம்என - நங்கோனை
எய்தற்கு உரியனகொண்டு எய்துகநீ என்றுஇசைத்து
வெய்தின் எழுந்தான் விழைந்து....1700

தன்கிளையும் யூகத் தலைவரும்தற் சூழ்ந்தியங்க
மின்குலவும் வாயில் இடம்மேவியே - பொன்குலவு
மாமுடியான் நின்றான் மதியோடும் வந்துஎதிரும்
கோமணியை நேராய்க் குறித்து....1701

குடைமுரசு சங்கம் கொடியோடு காளம்
வடிகவரி தீப மலர்கள் - கடிமருவு
சுண்ண நறுமணமார் தூபம் இவைமருவ
வண்ணமறுகு எல்லாம் மலிந்து....1702

கால்வழங்கும் ஆலவட்டம் காரிகையார் ஒண்கவிகை
மேல்விளங்க வேண்டுவன மேவவே - மால்விளங்க
இந்திரன்போல் எய்தினான் எம்பிரான் தம்பிஎதிர்
மைந்துடைய சூரன் மகன்....1703

தம்புயங்கள் ஆரத் தழுவினார் தண்கதிரும்
அம்பரம் சேரும்கதிரும் ஆகவே - பொன்புரிந்த
மாளிகையின் உற்றார் மதியோர் புடைசூழ
வாளி அனையார் அணைந்து....1704

ஆய்ந்தொருபொற் பீட மதின்அமர்தி என்றுஅரியின்
வேந்தன் உரைப்ப விறல்அரசே - ஏந்தல்எம்முன்
பூமே லிருக்கஇது போற்றுவனோ என்றுஉரைத்தான்
மாமேவும் வில்இளங்கோ மான்....1705

ஆயது உரைப்ப அறிவுளோர்ஆற் றவொணாது
ஏய இடர்க்கு இடமானான் - சேயமணிக்
கண்முத்து உதிர்த்துக் கலங்கினான் காதலுளார்
தண்மைக் குணம்இதுவே தான்....1706

மன்பட்ட வானரர்கள் மற்றுளார் மங்கையர்கள்
என்பட்டார் நொந்துஅங்கு இரங்கினார் - பொன்பட்ட
வள்ளல் முகநோக்கி மறுத்தும் எடுத்துரைத்தான்
தெள்ளுமணிச் சுக்கிரிவன் தேர்ந்து....1707

மஞ்சனங்கள் ஆடி மணிஅமுதம் கண்டு அருளின்
உஞ்சனம்என்று ஏத்த உயர்தவத்தோன் - மஞ்சின்
மருக்குழலை மீட்டிலமேல் வானரமன் னாயெனைநீ
அருந்தியதேன் என்றான் அயர்ந்து....1708

பச்சைமணி வண்ணன் பவளவாய் கொண்டுஅருந்து
மிச்சில் ஒழிய மிசைவனேல் - எச்சில்தனை
நாயுண்ட தாகு நனிஅறிதி என்றுஉரைத்தான்
தீயுண்ட வேலோன் தெரிந்து....1709

ஆயதுவும் அன்றி அரசேநின் முன்னவன்யார்
மேயரிய காயும் விழுப்பலமும் - தூயனவாய்த்
தந்திலனேல் உண்டொழினும் தான்இன்றென மொழிந்தான்
மந்தரத்தோள் கோசலையார் மன்....1710

கேட்டலும்உள் என்பு கிடைந்துதைப்பக் கேழ்கிளரும்
வாட்கரத்தாய் புன்குரங்கின் மாண்புஇதுவே - நாட்டம்இனி
என்உண்டே இன்னே எழுமினோ என்றுஇசைத்தான்
பொன்உண்ட தாரான் புலர்ந்து....1711

மாருதியை நோக்கி மதியோய்நீ சேனையொடும்
சேருதிஆங்கு என்னஇவை செப்பியே - வீரர்ஒரு
கோடிஒன்பான் ஆயிரவர் கூடவிளங் கோனொடும்
நாடி நடந்தான் நனி....1712

கொடிக்கதலி கொற்றக் குடைகுழுமப் பொன்னம்
சுடர்ச்சிலிகை சூழத் துனைந்து - விடத்தழல்வாய்
உண்டபொழுது இருந்தான் ஒப்பவே உற்றிருந்தான்
கண்டுஇறைஞ்சி நின்றான் கனிந்து....1713

தண்ணத் துளவத் தடமார் புறத்தழுவி
நண்ணும் கருணையொடு நாடியே - பெண்ணும்
முனிவாறி யேய்ந்த முறையோடு இருக்கை
கனிவாய் அளித்தான் களித்து....1714

நின்உறவும் நின்கிளையும் நின்அரசும் நின்குடையும்
என்நலமும் நன்னலமே என்றுஇசைப்ப - உன்அருளெற்கு
உண்டா மெனினிடரும் உண்டோ எனஉரைத்தான்
வண்டேறு தாரான் மகிழ்ந்து....1715

தேவிதனை நாடிச் சிறைமீட்டிலேன் அளியன்
ஆவிதனை ஈய்ந்த தறிகிலேன் - பாவியேன்
என்நன்றி காட்டினேன் எம்பெருமான் என்றுஅழுதான்
மன்ஒன்று தார்க்கவிக்கோ மான்....1716

அவ்வுரைகேட்டு ஐயன் அறிவோய் அயன்முதலோர்
வெவ்விதியை மீட்டும்வகை மேவினரோ - இவ்வகையால்
நீஅயர்ந்த தாமோ நினைந்தயரேல் என்றுஉரைத்தான்
மாய்தல்இலா வண்புகழ்க்கோ மான்....1717

மன்னும் புகழ்உடைஎம் மாருதிஎப் பாலன்என
பின்னும் புகலப் பெருந்திசைக்கண் - முன்னும்
வலிமுகங்க ளோடு வரும்நாளை இன்று
மெலியல்நீ என்றான் விரித்து....1718

உற்றதுகேட்டு ஐயன் உளம்உவந்து நாளைஉன்
கொற்றமொடும் வெற்றியொடு கூடுகஎன - அற்றதுவே
செய்வல் எனஎழுந்தான் சேனை புறஞ்சூழ
நெய்தவழும் வேல்உடையான் நேர்....1719

அரிக்குலத்து வேந்தன் அருகணைந்தது எல்லாம்
விரிந்துரைத்தி என்று விளம்பத் - தெரிந்ததனை
அன்றுஅறைந்தா ராக அரிவெங் குலச்சேனை
அன்றுஅடைந்தார் வேலைஎன ஆர்த்து....1720

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.9. நாட விட்ட படலம்
> ஆயிரப்பத் தானை அடல்வான ராதிபரோர்
ஆயிரவர் சூழ அடுதிறலான் - தூய
சதவலியன் வந்தான் சதகோடி வீரர்
மதவலியர் சூழ்ந்து வர....1721

தூதகப்பொன் திண்தோள்சு சேடணன்வன் பொன்கிரியைத்
தான்எடுக்கும் திண்டோள் தறுகண்ணாக - வானரத்தின்
ஆடல்உறும் வன்சேனை ஐயிருநூ றாயிரத்தோர்
கோடியொடும் வந்தான் குறித்து....1722

சதகோடி மொய்ம்பின் தருக்குடையர் ஐம்பான்
சதகோடி சூழத் தகையார் - இதகோடி
மாசரிதன் ஆகியவெம் மாருதியைப் பெற்றுஎடுத்த
கேசரியும் வந்தான் கிளர்ந்து....1723

அல்அவிரும் மெய்யவிரண் டாயிரகோ டிப்படைகள்
கல்லமைந்த வன்தோள் கரடியொடும் - எல்லமைந்த
தாம வணியலங்கல் சங்கநிறத் திண்கரிநேர்
தூமிரனும் வந்தான் துணிந்து....1724

காலால் உலகுஅளக்கும் கையால் கடல்குடிக்கும்
வாலால் ககனளக்கும் வன்மையன - ஆலோலத்
தார்ப்பொலிய பன்னிரண்டா மாயிரத்தின் கோடியொடு
மாப்பனசன் வந்தான் மகிழ்ந்து....1725

தாண்மலைபோல் சூழத் தனிமேரு வென்றிசைக்கும்
நீண்மலைபோல் வந்தான் நெடுநீலன் - ஆண்மை
விதித்தைந்து பூத வலிபெற் றன்ன
பதிற்றைந்து கோடிப் படை....1726

ஓராயிரத் தறுநூறு ஒண்கோடி மாப்படைகள்
காரார் கடல்போல் கனன்றுவரத் - தாராரும்
கற்சாம்புத் தோளான் கடுகினான் கைவரைநேர்
மற்சாம்பன் என்பான் மதித்து....1727

பேறிலக் கமான பெரும்படைக ளைஐந்தாம்
நூறிலகஞ் சூழ நுவலரிய - வாறுஉடைத்தண்
வாருதியும் நாணநெடு மந்தரப்பொன் மால்வரைபோல்
மாருதியும் வந்தான் மகிழ்ந்து....1728

பாரிலக்க மாகப் படர்வா னரச்சேனை
ஓர்இலக்கங் கோடி உடனாக - வீரத்து
உளன்என்பான் வெள்ளி உயர்வரையை ஒப்பான்
நளன்என்பான் வந்தான் நணி....1729

மற்றும்உள வீரரும்தம் வான்படைகள் தம்முடனே
உற்றனர்கள் வேலை உலகுஅடங்க - முற்றும்உயர்
வான்உலகத் தூளியுற வந்தனர்கள் மாதவன்பேர்
நானவின்று மன்னோ நனி....1730

ஆறுபத்தேழ் கோடி அடல்வான ராதிபர்கள்
நீறுபடப் பூவுலக நேர்நிரையே - வீறுபட
வாழிஎன வந்து வணங்கினார் வண்ணமணி
ஆழி யுடையான் அடி....1731

அப்பொழுது வானத் தருக்கன்சேய் எய்தினன்கார்
ஒப்பமைந்த வீரன் உபயபதம் - செப்பரிய
மாமுடியில் தீண்டி மருவியநின் சேனைஎலாம்
கோமகனே என்றான் குறித்து....1732

நன்றுஎனவே ஐயன் நயந்தோர் வரைக்குடுமி
சென்றுஇருந்து நோக்கித் திறவீரர் - இன்றுநெடும்
பாற்கடல்மீது ஓங்கிப் படர்ந்ததோ என்றுஇசைத்தான்
மாற்கடல்நேர் வண்ணன் மதித்து....1733

தேசு பெறும்வடக்குத் தெற்கிருந்து தென்முகமா
யோசனை மூவைந்தகல மூறியே - வீசலைபோல்
வந்தபெருஞ் சேனை வகைநோக்கி மன்னவர்கோன்
சிந்தை வியந்தான் சிறந்து....1734

தம்பி முகம்நோக்கித் தகையோய்இத் தாரணியில்
உம்பர் உலகி லுணருங்கால் - அம்பரம்போல்
உற்றபெரும் சேனைக்கு உறையிடுவார் யாவர்என
மற்றும் உரைத்தான் வடித்து....1735

வல்இளைய கோமான் மதியோய்இவ் வான்படைநின்
தொல்உருவே ஆகும் துணைஎவனோ - நல்லறநம்
பால்உளது மேல்உளவப் பான்மைகுறி என்றுஉரைத்தான்
நூலுளது கண்டான் நுனித்து....1736

ஆயதுவே என்ன அமலன் அரிக்குலத்து
நாயகனை நோக்கி நலமுடையோய் - மேயவிதற்கு
எல்லைஉண்டோ என்றான் இறையோன் எடுத்துஇசைத்தான்
வல்லார் தொகையின் வழி....1737

விழுமியநூல் எண்ணின் விதமாக வெள்ளம்
எழுபதுஎன வான்றோர் இசைப்பர் - பழுதுஅறவே
ஆயுங்கால் எண்ணி அறிந்தார் இவண்உளரோ
மாயுங்கால் இல்லாய் மதித்து....1738

பின்னும் கருணைப் பெருமான் அரிஅரசின்
தன்வதனம் நோக்கித் தகையுடையோய் - மன்னும்
நெறிஇழைக்கும் தன்மை நிகழ்த்துகென நெஞ்சில்
அறிவுறுத்தி நின்றான் அவற்கு....1739

அனுமனைநீ ஐய அயர்ந்தனைஎன் ஆழித்
தனுவலன்நீ அன்றோ சமரில் - உனைஒருவர்
வெல்வார் உளரோ விளியா வரம்உடையோய்
சொல்வார் உளரோநின் சொல்....1740

அரக்கன்நகர் தென்திசையே ஆனது அறிந்தாய்
குரக்கினத்து வேந்தர்குழு வோடு - உரத்துடைய
வெள்ளம் இரண்டொடுநீ மேவுதியால் என்றுஉரைத்தான்
வள்ளல் கதிரோன் மகன்....1741

வெள்ளம் இரண்டினொடு மேலைத் திசைவடபால்
தெள்ளும் குணக்குத் திசையடைவே - வள்ளுறுதோள்
வாளச் சுசேடணனும் மானச் சதவலியும்
காளை வினதனும்செல் க....1742

ஆயிரத்தின் மாமுடியார் ஆழி வரைஅனைய
சேயொளியார் விந்தம் தெரிந்தப்பாற் - போயளியார்
நாட்கமல மேய நருமதையும் முன்னிடுவீர்
கோட்படா மெய்யீர் குறித்து....1743

அந்ததிகண் டப்பா லவிர்ஏம கூடமலை
மன்னிநெடும் பொய்கை வழிக்கொண்டார் - பொன்அனைய
தாக்குஅணங்கை நாடித் தனிவிதர்ப்பம் சார்ந்துஉறுதிர்
ஆக்கம்உறு வீரர் அமைந்து....1744

அன்னாடு பின்னாக ஆய்ந்தணங்கை அன்பாக
பன்னாடு சென்று பயன்உடைத்தாய் - முன்னாடு
முண்டகத்து வாழும் முதலோன் அனையவர்வாழ்
தண்டகத்தைச் சார்திர் தழைந்து....1745

அப்பொழுதின் ஏற்றம் அறைவார்யார் ஆண்டொருவி
வைப்புடைய பாண்டு மலைமருவித் - துப்பினமும்
கோதறுசெம் பொன்னும்ஒளிர் கோதா விரிஅணுகி
மாதுதனைத் தேர்திர் மதித்து....1746

அப்பால் அறுமுகத்தோன் ஆய்ந்துஉறையும் அம்மலையும்
வெப்பார் இரவி விதுப்பெயர்வாய் - துப்பார்மெய்க்
காந்த வரையும் கருடற்கு ஒதுங்கிநெடும்
பாந்தள் உறைபதியும் பார்த்து....1747

ஆரணங்கள் பாடும் அருந்ததிஒண் மால்வரையும்
வாரணஞ்சேர் மாகதத்திண் மால்வரையும் - பூரணமாய்
அம்மனையை நாடி அடலுடையீர் செல்கவுளம்
விம்மல் உறாது விரைந்து....1748

தென்சொற்குந் தெய்வச் செழுஞ்சொற்கும் எல்லையாய்
முன்சொற்பெற் றெம்மான் முடியுறைய - வன்சொற்போர்த்
தீங்கடருஞ் செல்வத் திருவேங்கடம் அடைதிர்
போங்கொடிய பாவப் புணர்ப்பு....1749

புலிப்போத்தும் புல்வாயும் போர்இன்றி வாழ
சொலித்தோங்கும் பொற்சிகரந் தோறும் - கலித்தோங்கும்
பூஞ்சுனையும் நாடிதறும் பொன்னியணி நாட்டுஉறுதிர்
தேஞ்சொலியை நாடித் தெளிந்து....1750

அப்பொன்னி நாடுகடந்து அப்பால் மணிஅலம்பும்
துப்பணியார் நற்பொருளை துன்னியே - செப்பு
மலைநாடு மேவி மயேந்திரமும் சார்திர்
கலைநாட வல்லீர் கதித்து....1751

இங்கு நிகழ்த்தும் இடம்முழுதும் நாடிஒரு
திங்கள் அவதிக்குள் சேர்ந்துஉறுமின் - சங்கையறச்
சென்மினோ என்றுவிடை செப்பினான் செங்கதிரோன்
மன்மகனார் ஆங்கு அவருக்கு....1752

ஆயபொழுதில் அனுமன் தனைக் கூவிச்
சேய கமலச் செழுங்கண்ணன் - நாயகியைக்
காண்டருதி என்னில் கழறும் குறிக்கொள்என
ஈண்டுஉரைத்தான் வேறாய் இருந்து....1753

விளர்த்துக் கறுத்து வெளிப்பட்டு மின்னிக்
களித்துச் செருக்கிக் கதித்துத் - தெளித்தமழை
மஞ்சணங்கும் காமர் மலர்க்குழற்கு நேரெனற்கென்
நெஞ்சிணங்கள் எவ்வாறு நேர்ந்து....1754

தேய்ந்து வளரும் சிறுபிறையை நங்கைநுதற்கு
ஆய்ந்து உரைக்கலாகும் அழகன்றால் - வாய்ந்த
கருப்பஞ் சிலைஉருவக் காட்சி எனநோக்க
விருப்பம்உறாது அன்றோ விழைந்து....1755

மானோ மரையோ வடுவோ மறிகடலோ
தேனோ குவளைச் செழுமலரோ - யான்ஓதல்
என்னோ அறிதி இனிக்கருணை வாய்ந்ததிரு
மின்னேர் தரும்பொன் விழி....1756

தேயாது வள்ளுறையில் சேராது தீஅழலில்
காயாது வன்மை கலவாது - மாயாதோர்
வேல்உளதேன் மங்கை விழிக்குவமை யாகும்என்பார்
நூல்அருமை தேர்ந்தோர் நுனித்து....1757

வண்குமிழும் எள்மலரும் வாடாது உளஎனினும்
பெண்கொடியின் மூக்குஉவமை பேசுவரோ - தண்கமலப்
பொற்றொடிவாய் செம்பவளம் போலுளதுஎன் றாலும்நகைக்கு
எற்றுவமை சொல்வாம் எடுத்து....1758

தேனோ குயிலோ தெவிட்டாத தெள்அமுதோ
வானார் கரும்போ வனக்கிளியோ - மானாரும்
கெண்டைநேர் அஞ்சனக்கட் கிண்கிணிவாய்க் இஞ்சுகப்பொற்
தொண்டைவாய்ச் சிற்றிடையாள் சொல்....1759

பிள்ளைக் குயில்மொழியாள் பெண்மைப் பெருந்திருவாள்
வள்ளைச் செவிநிகர்வ மற்றுஉண்டோ - தெள்ளுமணிக்
கண்ணாடி தன்னைக் கதுப்புக்கு உவமைஎன
உண்ணாடு வார்எவரோ ஊங்கு....1760

களங்கம் கனிந்து கலைநிரம்பித் தேய்ந்து
விளங்க உடல்விளர்த்து வெள்கித் - துளங்குமதி
முற்றா முலையாள் முகம்போல் மொழிவதற்குக்
கற்றார் துணிந்துஉரையார் காண்....1761

வலம்புரியும் எய்த்து மணிஅழகு வாய்ந்து
பொலம்புரியும் பூகத்தின் பொற்பும் - கலம்புரிந்த
நங்கைகழுத் துஉவமை நாட்டலாம் நாட்டில்இனிச்
செங்கை மலர்க்குஉமை தேர்....1762

கோங்கரும்போ செம்பொன் குடமோ மடல்அவிழாத்
தேங்கமல வண்ணச் செழுமுகையோ - பாங்குபெறும்
வல்லோ பவள மணிவாயாள் தனக்குஉவமை
வல்லோய் எவர்அறிவார் மற்று....1763

ஆன்றோர் அறியா உருஅருவன் ஆகும்எனத்
தோன்றாது தோற்றும் துடியிடையை - வான்தோயும்
நூல்அறிந்த வாற்றான் நுனித்துஅறிதி நோன்கழல்கால்
மால்அமைந்த நுண்மதியாய் மற்றும்....1764

செம்பொற் கமலத் திருமலரில் வீற்றுஇருக்கும்
அம்பொற் கொடிநிகரும் ஆயிழையின் - பைம்பொன்
மடிக்குஉவமையால் இலையே மற்றுஉளதோ முன்னூல்
கடற்குஅளவு கண்டனைநீ காண்....1765

ஏழைகுறங்குக் கிணையரம்பை என்று உரைப்பர்
மாழைஒளி அமையும் மாட்சிமைசால் - சூழுமணி
தாமரைப்போது அன்றிவிழிச் சஞ்சரிகச் செஞ்சொன்மயில்
காமரடிக் கேதுஉவமை காண்....1766

இன்ன இலக்கணங்கள் இம்பருளார்க்கு ஏற்றதன்றி
அன்ன நடையாட்கு அடைவின்றால் - சின்னம்எலாம்
கண்டு உணர்தியாது இக்கலைஎலாம் கண்டுஉணர்ந்த
திண்திறலாய் அன்றோநீ தேர்....1767

வன்னமா டஞ்சூழ் மணிமிதிலை மாநகர்வாய்க்
கன்னி மாடத்திடையே கண்டதுவும் - மன்னுநிறத்
தொண்மணியில் தன்உருக் கண்டுஊடியதும் உற்றுரைத்தி
வண்ணக் கொடிக்கு மகிழ்ந்து....1768

தாய்உரைமேல் கொண்டு தடமா நகர்கடந்து
போய பொழுது புனமிதுவோ - நாயகனே
சொற்றருடி என்று சொலும்உரையும் சொல்லுகநீ
கற்றுஅறிந்த மேலோய் கணித்து....1769

கல்இறுத்த தண்வரையில் காதல்பெறும் காகக்காய்ப்
புல்இறுத்து முன்னம் புரந்தவும் - சொல்லி
அடைதிஎன ஆழி அளித்தான் கருணை
மடைதிறந்த கண்ணான் மதித்து....1770

அங்கதனும் மற்றை அடல்வீரர் ஆதிபரும்
கொங்குஅலர்ந்த தாமரைக்கண் கோவினையும் - தங்கள்குல
வேந்தனையும் தாழ்ந்திறைஞ்சிப் பெற்றார் விடைஅகன்றார்
பூந்திருவை நாடும் பொருட்டு....1771

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.10. மகேந்திரப் படலம்
மற்றையருந் தந்தமக்கு வாய்த்த நெறிப்படியே
உற்றனர்கள் தென்பால் உறுமுரவோர் - செற்றங்
களைவுங் கருத்துங் கதியுங் கதித்த
விளைவுமேற் சொல்வாம் விரித்து....1772

வன்கதியிற் சென்றார் மணிவிந்த மாதியதாய்
முன்கரைந்த நல்லிடங்கண் முன்னினார் - பொன்புரையு
மாதுதனை நாடி வருந்தினார் வந்தடைந்தார்
வாதைதரும் பாலை வனம்....1773

ஒழியா வறுமை யொடுமூப் புயர
பழியா எவரும் பறைய - விழியால்
அடர்வெறுக்கைப் பெற்றிழந்தான் அன்பிலா நெஞ்சிற்
சுடும்அழல்கை மாறாச் சுரம்....1774

நாவுலர்ந்து மெய்கருகி நாட்டம் புகைந்துருகிப்
பாவுகழல் வெந்து பயப்பயவே - தாவரிய
நீர்நசைய ராகிநெடு துயிர்த்து நீங்கரிய
ஓர்பிலனை யுற்றார் உலைந்து....1775

இப்பிலனை அன்றி இயங்கலரிது என்றுணரா
அப்பிலனுட் சென்றார் அடல்வீரர் - வெப்பிரவிக்கு
அஞ்சி ஒதுங்கி யமர்வதென வாங்குறைந்தது
எஞ்சலிலா தோங்கு மிருள்....1776

அவ்விருள்வாய்ச் சென்றா ரடல்வீர ராற்றலுளார்
தெவ்வடுமெய் வீரர் தெருமந்தார் - இவ்வழிநீ
காத்தருள்வாய் என்னக் கலங்கினார் மாருதியை
நாத்தழும் பூற நயந்து....1777

அஞ்சன் மினென்னாஓ ராறிரண்டு யோசனைய
செஞ்செவிய மேனி திகழவே - மஞ்சுறுமென்
வாலதிநீர் பற்றி வருக வென நடந்தான்
மாலதிநேர் மேனி அனுமான்....1778

குண்டலம்வில் வீசக் கொடுநிசியும் பேர்ந்தொழிய
மண்டமரின் வல்லோர் வழியேகிக் - கண்டனர்வண்
பொன்னகரம் நண்ணியது பொன்னவிர மென்னுமொரு
நன்னகரங் கண்டார் நனி....1779

பூவுந் தளிருமணிப் பொன்னுருக்கொள் கற்பகமுங்
காவுங் கமலத் தடங்காடும் - தாவில்
விலையிலா முத்து மிளிர்மணியுஞ் சேரக்
கலையுலா மெங்குங் களித்து....1780

கூவுங் கிளியுங் குயிலுங் குலமயிலுங்
காவுங் கலையிற் கரைந்தபல - ஓவியமும்
மற்றுமுள ஆடவரு மாதர்களு மில்லைஅன்னார்
உற்றுழியின் ஏங்கும் உயிர்த்து....1781

அன்னகரந் தன்னை அடைந்தா ரதுதானப்
பொன்னகர மென்று புகன்றனர்கள் - மன்னுஞ்
சுயம்பிரபை யென்னுமொரு தோகைதனைக் கண்டார்
வயம்பிரபை யுற்றார் மகிழ்ந்து....1782

ஊருவி டையல்குல் ஒடுக்கி யொளிருமணிப்
பாரமுலை மாசு படரவே - வார்சடைகள்
மண்ணிடையிற் செல்ல மதமாதி வன்பகைகள்
எண்ணிடையி னில்லா திருந்து....1783

வலக்கரந்தன் ஊரு வலம்படர மன்னுங்
குலக்கொடியை நோக்கிக் குணித்தார் - வலத்துயர்ந்த
மாருதியை நோக்கியிவண் மைதிலியோ வென்றறிந்து
தேருதிகா ணென்றார் தெளிந்து....1784

இம்மணியை அம்மணிக்குஓர் ஈடியம்பில் வான்மருவு
அம்மணியும் மின்மினி நேராகுமே - அம்மவினி
எக்குணமும் எக்குறியும் இல்லை யெனமொழிந்தான்
நக்கர்மலை ஒப்பான் நகைத்து....1785

அப்பொழுதி லன்னா ளறிந்தா ளறிந்துமுனிந்
திப்பொழுனின் யாவர் பணிஎய்தினீர் - துப்புடையீர்
என்முன் அடைதல் இயல்பன் றெனமொழிந்தாள்
மின்மிளிரும் மெய்யாள் வெறுத்து....1786

மங்கா யிராமன் வயத்தூதர் யாமாயை
வெங்கோல் அரக்கன் வினைபுரியக் - கொங்கார்
குழலணங்கை நாடிவருங் கோளினேம் என்றார்
கழலணங்குங் காலார் அக்கால்....1787

என்னாமுன் நங்கை இருந்துநடஞ் செய்வலென
உன்னா உவகையுளங் கொண்டாள் - பொன்னார்
வரைத்தோள் ராமன் வலியனோ என்றாள்
மரைக்கொடியை நேராகு வான்....1788

அன்னபொழுதில் அனுமான் முதலீறாய்ச்
சொன்ன பொழுது சுகமனையாள் - இன்அடிசில்
ஊட்டினாள் உண்டுவந்தார் உள்ளத் திடைஅன்பு
காட்டினார் வீரர் களித்து....1789

அனுமனு மன்னா னடிவணங்கி யம்ம
வனிதைஇவ ணுற்ற வரவும் - இனிதுறும்இவ்
ஊர்அரசன் பேரு முரைஎன்பாற் கோதினாள்
காரமர்ந்த கண்ணாள் கனிந்து....1790

இன்னகரம் பெற்றேன் இசைவாலி சைந்தமட
வன்னமுறு போகத் தமர்ந்தனனாற் - பன்னருநா
நான்முகனை நோக்கி நலஞ்சேர் தவமியற்றி
மான்முகனார் என்னும் மயன்....1791

பன்னான்மேல் விண்ணவர்கோன் பாசிழையை நாடியவம்
மன்னா உலகின் மருவியே - பொன்னான
மான்முகனை வீட்டி வதனமதி யென்னிகழ்ந்த
தேன்மறைத்தாய் என்றான் இறை....1792

என்னா னிகழ்ந்த தெனக்கண் எடுத்துரைப்ப
அன்னான் முனிவோ டறிந்தெனைநீ - இன்னாடு
நின்றளித்தி யென்றான் நினைந்தே இதற்குமுடிவு
என்றுரைத்தி என்றேன் இனைந்து....1793

வள்ளல் இராமன் வயத்தூதர் வந்தணுகில்
அள்ளல்முடிவு என்ன அருளினான் - விள்ளுறுமா
நன்கடைந்தேன் இன்றே நலனடைந்தேன் என்றிசைத்தாள்
அன்பொருவா நங்கை யவள்....1794

பின்னும் உரைசெய்வாள் பெரியோய் இப்பேருலகின்
மன்னுதுயர் கொண்டுதனி வாழ்வனோ - அன்னதுயர்
நீங்குமாறு உண்டெனில்நீ நேர்ந்தருள்தி என்றிசைத்தாள்
வாங்குமிடை ஓங்குமுலை மான்....1795

ஈதோர் பொருளோ எனக்கருதி மாருதியும்
போதார் வரையிற் புயமோங்கப் - பூதானோர்
பாத மளந்த பரந்தாமன் போல்வளர்ந்தான்
கோதுகுலங் கொள்ளக் கொடி....1796

வாரேனம் பாரிடந்த வண்ணம்போல் வன்கரத்தால்
பாரோர் புகழப் பனிமலைநேர் - சீராளன்
யோசனைநூறு ஒன்றொழித்தா னொண்வடமே லாசைவளர்
காசறும்வெண் முத்தார் கடல்....1797

கண்டா ளுவந்துதனிக் கற்புடையா ளாய்ந்துதுதி
விண்டாள்விண் வேந்துலக மேவினாள் - தண்டாத
வீரரும்எம் மாருதியின் வீறதைக்கொண் டாடிநெடுந்
தூரம் அகன்றார் துனைந்து....1798

பொய்கைஎனுந் தெய்வப் புனிதத் தலமடைந்தார்
வெய்யவனும் உச்சியிடை மேவினான் - ஐயமற
அக்கரை யினுண்டா ரயமு மருங்கனியுந்
தொக்கிருந்தார் கொண்டார் துயில்....1799

அத்தலையில் அங்கதன்தன் ஆடுஅலங்கன் மார்பிடைப்
பைத்தலைய பாம்பின் படர்ந்துஉருத்துக் - குத்தினான்
பொய்கையென தென்று புழுங்கினான் போராற்றற்
செய்கைசேர் வாளவுணன் சேர்ந்து....1800

துயிலுணர்ந்து தென்இலங்கைத் தோன்றலே யென்ன
அயலிருந்த வாளவுணன் அஞ்சி - உயிரிறங்க
எற்றினான் னெற்ற இடிபோல் அரற்றியவன்
முற்றினான் ஆவி முடிந்து....1801

ஆவி முடிந்தான் அரற்றுந் தொனியோதை
காவிற்று யின்மற் கடவீரர் - யாவதெனத்
துண்ணென் றெழுந்தார் தொடர்ந்தரிபோற் சுற்றினார்
விண்ணின்ற மெய்யார் விரைந்து....1802

யாரிழைந்த தென்ன வனுமன றியனெனத்
தாரைசேய் சொல்லத் தனிச்சாம்பன் - பாரவலிக்
காள மனையான் கடுந்தூ மிரனென்னும்
வாளவுண னென்றான் மதித்து....1803

உதையப் பொருப்பில் உதையதரன் ஓங்கக்
கதியிற் சிறந்த கழலார் - மதிவழியே
பெண்ணைநா டிப்புகழ்ப் பெண்ணைநா டப்புகுந்தார்
மண்ணைநா டிக்கடிது வந்து....1804

அன்னதியுந் தாண்டி அருந்தசன வப்பெயர்சால்
பன்னரிய பொற்சம்ப கப்பொழிலும் - பொன்னவனேர்
சுங்கன் உதித்தவளத் தொன்னகரும் நாடினார்
சிங்கவே றன்னார் செறிந்து....1805

தண்டகமும் மற்றும் தடவினார் தானமுறும்
விண்டுவெனும் பாண்டுவெனும் வெற்பினுடன் - தண்டமிழ்போல்
கொள்ளும் புனல்பெருகும் கோதா விரிநதியும்
கள்ளவிழுங் காவுங் கடந்து....1806

கொங்கணங்கள் ஏழும் குறுகினார் கூர்அமுதச்
சங்கமணியும் நெய்த றனைத்தவிர்த்தார் - பொங்கும்
அருந்ததியும் நாடி அடைந்தார் அரும்பொற்
கருஞ்சிமைய நீள்வேங் கடம்....1807

மாதவரும் வானவரும் மன்னவரும் வந்துநிதம்
பாதகங்கள் தீர்ப்பான் படர்வாரும் - சோதி
வளையாழி தாங்கு மணிவண்ணன் சேவை
அளைவாரும் கண்டார் அடைந்து....1808

வருக்கை உடைந்து வழிநறவம் உண்டு
மருக்கமழ்ந்த பூவை மணாளன் - திருப்புகழைப்
பேடைப்புட் கோதும் பெருஞ்சிறப்புங் கண்டுவந்தார்
நாடித் திருவை நடந்து....1809

தண்டகத்தை நீங்கித் தனிப்பொன்னி நாடுகடந்து
அண்டர் பரவும் அடும்பொருனை - ஒண்டமிழின்
நாடு கடந்துமலர் நங்கை தனைநாடினார்
நீடுவரை ஒப்பார் நிறைந்து....1810

கண்டிலர்கள் நெஞ்சங் கலங்கினார் காரிகையை
விண்டலதும் ஓங்கி மிளிர்சிகரம் - தண்டரிய
வானுலவும் செல்வ மயேந்திரத்தில் வந்திருத்தார்
கானுலவும் தாரார் கலந்து....1811

வருந்தலீர் மைதிலியென் மாடுஇருந்தாள் என்று
விரிந்த திரைக்கரங்கள் வீசி - இரைந்துஅங்கு
அழைப்பதே போன்ற அகழாழி கண்டார்
கழைக்கிரியை ஒப்பார் கலந்து....1812

நாற்றிசையும் வேறாய் நடந்தோரும் அம்மலையே
தோற்றினர் தங்கள் துணையோடும் - கோற்றொடியைக்
கண்டிலேம் என்று கரைந்தார்அக் காளையரும்
விண்டிடார் ஒன்றும் விதிர்ந்து....1813

திங்கள் அவதி திருந்திழையை நாடியுற
வங்க னிகழ்த்தி யடைந்தனம்யாம் - இங்கன்
நிகழ்ந்ததிது வாமே நிகழ்த்துவதெ னென்றே
யிகழ்ந்தனர் கடம்மையி ருந்து....1814

நம்இறைபால் நண்ணி அறியோம்நல் நாயகியை
எம்மகியும் தேடினோம் என்றியம்பி - விம்மலொடும்
வாழ்துமோ அன்றேல் மதியுடையீர் இவ்வாழி
வீழ்துமோ என்பார் வெறுத்து....1815

ஆயிடையி லங்கதப்பே ராற்றற் களிறனையான்
நாயகன்முன் சொற்றபடி நாம்புரியேம் - மாயுதல்ஒன்று
அன்றி உறுதி அயலறியேன் என்றுரைத்தான்
பொன்திகழ்ந்த தோளான் புலர்ந்து....1816

ஆய பொழுதில் அடற்சாம்பன் அங்கதனே
நீஉயிரை நீத்திடுதல் நீதியோ - வேயெனுமுன்
புக்கிடுக நம்இறைபாற் போய்உரைத்து மாய்துமென
நெக்குருகச் சொற்றான் நினைந்து....1817

யாமிறந்த னங்கோ னறியுமே லாங்கிறக்கும்
கோமுதலு மாளுமிளங் கோவற்றே - நாமமுறும்
அந்த ணயோத்தி யனைவோரு மாங்கிறப்பர்
எந்தவிதம் உய்வேம் இனி....1818

அவையனைத்தும் கேட்ட அனுமனும்மா லாழிப்
புவியனைத்தும் போந்தனமோ புக்குக் - கவனமிலர்
போலவே மாழ்கினீர் போலுமால் உங்கள்வலி
சாலுமா என்றான் தகைத்து....1819

நாற்றிசையும் நாடி நளினத் திருமகளைக்
காற்றெனவே சென்று கணியேமேல் - ஆற்றலுடன்
வீய்ந்த சடாயுவைப்போல் வீய்துநா மென்றான்நூல்
தோர்ந்த உணர்வுடையான் சூழ்ந்து....1820

அவ்வுரையைக் கேட்டாண்டு அயலிருந்த சம்பாதி
வெவ்விடியைக் கேட்ட விடஅரவிற் - கவ்வையுறா
வங்க மலைபோல் மருவினான் வானரத்திண்
சிங்கவே றன்னார் முன்சேர்ந்து....1821

இருந்த நெடுவீரர் இரிந்தா ரனுமன்
பொரிந்தெழுவெந் தீயிற் புழுங்கி - முருந்தனைய
வானகைப்பொற் றோண்மயிலை வஞ்சித்த வாள்அரக்கன்
தானெனவே கொண்டான் தகைந்து....1822

நீரருவிக் கண்ணன் நெடிதுயிர்ப்ப னெக்குருகி
சோர்வொடுந் தன்மேனி துளங்குவான் - நேர்முகமா
எய்தினனைக் கண்டான் எழுந்தமுனி வாறினான்
செய்தவத்து மாருதியும் தேர்ந்து....1823

ஆயிடையி லெய்தி யறவோய் அரியகுண
மேயசடாயு விதி வசத்தால் - வீய்தருதல்
ஏவரால் என்ன இராவணனால் என்றுரைத்தான்
மாவலியான் வீரஅனு மான்....1824

அச்சொற் செவிவந் தடையாமுன் ஆழ்துயரால்
பிச்ச ரெனவே பிதற்றினான் - முச்சிகரக்
குன்றுபோல் வீழ்ந்தான் கொடியேன்நான் இன்னும்உயிர்
பொன்றிலேன் என்றான் புலர்ந்து....1825

வீழ்ந்தழுத வெண்கழுகின் வேந்தனுமன் மெய்யுரையால்
ஆழ்ந்ததுயர் ஆறி அறவோனே - தாழ்ந்த
இராவணனால் ஏற்று இறப்பதற்குஎன் என்றான்
பராவும்உடல் பெற்றான் பரிந்து....1826

எங்கோ னிராமன் எழிற்கிசைந்த வில்லுடையாள்
செங்கோ லுடையான் திருமகளை - வெங்கோலான்
மாயை கொடிதுஇயற்றி வவ்வினான் தேரின்மிசை
ஏய்எனும்முன் சென்றான் எழுந்து....1827

அறிவன் அறங்கடவான் ஆற்றலுறும் உம்பி
எறிவ னிவனையென எண்ணிக் - கறுவிக்
கடும்போர் புரிந்தானைக் காலவா ளோச்சிப்
படும்பாவி சென்றான் பரிந்து....1828

என்றலுமே ஐய இராமபிரான் ஏதுவினால்
சென்றிறந்தான் என்னில் சிறியதோ - என்றும்
குறைவிலா நல்லுணர்வைக் கூடினான் என்று
பொறையனையான் சொற்றான் புகழ்ந்து....1829

முறைமுடித்து வீரர் முகம்நோக்கி மொய்ம்பீர்
குறைமுடிக்கும் கொள்கைக் குணத்தீர் - பொறைசேர்
இராமன்பேர் சொல்லில் இறைவளரும் என்றான்
பராவுவலச் சம்பாதி பார்த்து....1830

ஆயிடையில் அற்புதமும் ஆதரவும் எய்தினர்வான்
நாயகனார் நாமம் நவின்றிடலும் - சேயொளிசேர்
பொற்சிறகர் ஓங்கப் பொலிந்தான்ஓர் பொன்மலைவான்
நற்சிறகர் பெற்றதென நன்கு....1831

கண்டுநெடு வானரத்திண் காவலர்கள் காதலுளங்
கொண்டு புகழ்ந்தார்எங் கோமுதலைப் - புண்டரிக
மன்னன் வதன மதிநோக்கி மாருதியும்
இன்னஉரை தந்தான் இருந்து....1832

அப்பாதிற்கு உற்ற தருள்தி அறியஎன
பொய்யாத அன்பு புரிதவத்தோய் - மெய்யார்ந்த
எம்பியொடு யானும்விசும்பு எல்லை அறிதருவான்
உம்பர்மிசைச் சென்றேம் உவந்து...1833

அப்பொழுது வெய்யோன் அழலுங்கால் எம்பிஅறிந்து
இப்பொழுது காவென்று எடுத்தேத்தத் - துப்புடையான்
வேண்டாது சென்றேன் விழுந்தேன் சிறகிழந்து
மாண்டார் எனஇம் மலை....1834

ஈதரோ முன்நிகழ்ந்தது என்றானும் பின்னவரைக்
காதலுற நோக்கிக் கருத்துடையீர் - போதருதல்
எவ்வாறு எனவே இசைத்தாற்கு இயல்புடையார்
இவ்வாறு சொன்னான் எடுத்து....1835

வல்அரக்கர் கோமான் மணிவண்ணன் மாடிருந்த
வில்லுடையாள் தன்னை எடுத்தேக - மல்லுடையாய்
தென்றிசையே என்னத் தெரிந்துறுவேம் என்றிசைத்தார்
குன்றிசைந்த தோளார் குறித்து....1836

சொல்லும் பொழுதுதிற் துனைத்துஅரக்கன் தோகையொடு
செல்லும் பொழுது தெரிவுற்றேன் - வல்விலங்கல்
தென்இலங்கை மேவிச் சிறைவைத்தான் தேருமினோம்
மன்னிலங்கு தோளீர் மதித்து....1837

கருவாயும் தெண்ணீர்க் கடல்கடக்கும் வல்லீர்
ஒருவீரே சென்றங்கு உலவித் - திருவாளை
தேர்ந்துஉறுதீர் என்றிறைமை செய்குவான் செல்வன்எனப்
பேர்ந்தகன்றான் வானம் பிறழ்ந்து....1838

புட்கரமன் சொற்ற பொருள்கேட்டுப் பூரித்தார்
நட்பமைந்தான் மெய்யுரையை நம்பினார்பெட் - பமைந்து
வல்லீர் நடமினோ மற்றென் வருந்தலென்றார்
கல்லாரும் தோளார் கலந்து....1839

உயிர்ஒழித்தற் கானேம் ஒழியும் வகையுற்றேம்
மயர்தல்இனி என்னோ வலியீர் - அயமுடைத்தெண்
ஆழி கடத்தற்கு அடலுடையீர் சென்மின்கள்
வாழியீர் என்றார் மகிழ்ந்து....1840

நீலன்முதல் வீரர் நெடும்கடல்தாய் மீளும்விறற்
சால்பிலம்யாம் என்றார் தடங்கிரிநேர் - வாலி
தருங்குமரன் வாரிதனைத் தாண்டுவேன் மீண்டும்
வருந்தகையின்று என்றான் மதித்து....1841

மாவலிபால் நம்பகவன் மண்ணளந்த நாட்பறைவைத்
தேவரும் தேர்ந்தார் இசைத்துஉறுநாள் - மாவரைதான்
மோத விளைத்தேன் முடியாது எனால்என்றான்
வேத னளித்தவிறல் வேந்து....1842

மற்றவரும் தத்தம் வலியுரைத்தார் வன்கரடிக்
கொற்றவனாம் சாம்பன்உளங் கொண்டிருந்து - சொற்றனலால்
வாருதுநீர் தாவி வரும்ஆற்றல் தானுடையான்
மாருதிஎன் றோர்ந்தான் மனத்து....1843

மன்றற் கமல மலர்மேல் அயன்முதலோர்
பொன்றும் பொழுதிடையும் பொன்றாதீர் - வன்திண்மை
வேளாண்மை என்ற விருதுஉடையீர் மெய்வரத்தீர்
தாளாண்மை கொண்டீர் தவம்....1844

மாமறையும் மற்றுஉரைசெய் மாக்கலையும் வானின்இடைக்
கோமணிமுன் கற்றுக் குலவுவீர் - மாமணிநேர்
வண்ணன்பால் நட்பமைந்தீர் வானுலகம் செல்வீர்
எண்ணுருவா னெராத்தீர் இசைந்து....1845

கருவிழியார் காமக்கடல் கடந்தீர் காட்சிப்
பொருள்அறியும் பூட்சிமையும் பூண்டீர் - இருளகத்து
நுண்புரையும் செல்வீர் நுனிக்கும் கருத்துடையீர்
கண்புரையும் நட்புடையீர் காண்....1846

உதிக்கும்கால் வச்சிரத்தால் ஊறுபடா மெய்யீர்
மதிக்கும்காற் றேர்வரிய மாண்பீர் - துதிக்கும்கால்
எம்மனோர்க்கு எட்டா இரும்புகழீர் யாம்அடைந்த
விம்மனோய் தீர்ப்பீர் விரைந்து....1847

கண்டம் கறுப்புடையான் கண்ணம் கமலத்தான்
அண்டர் பலரா லழிவிலீர் - தெண்திரைநீர்
ஆழிகடந்து எம்அரும் துயரம் தீர்த்தருள்க
வாழியீர் என்றான் வடித்து....1848

எண்கரசு சொன்மொழிகேட்டு ஏடுஅலர்தார் மாருதியும்
தண்வதனம் சாய்த்து தரைநோக்கி - எண்கருதி
நான்முகனை ஒத்த நலமுடையீர் கேண்மின்என
கான்மகனும் சொற்றான் களித்து....1849

அன்புடையீர் நும்மருளும் ஆரியன்தன் மெய்யருளும்
என்புடையே சூழ விருங்கடல்தாய் - பொன்புரையும்
தண்ணங் கமலத் தனியணங்கைக் கண்டுறுவன்
எண்ணுறும்முன் என்றான் எழுந்து....1850

விடைதருவன் இன்னே விரைவன் எனவிண்ணின்
புடைஉயர்ந்த மானப் பொருப்பில் - முடியின்மிசை
உற்றான் கமலத் துறைஅயனை ஆதியோர்
பொற்றார்கள் தூவப் பொலிந்து....1851

அயன்உலகம் தானும் அடியளவு தோன்ற
வியன்வடிவங் கொண்டு மிளிர்ந்தான் - பயனால்
அருவடிவன் வானமளந்து அருளும் அம்பொன்
திருவடிஎன் றேத்தச் சிறந்து....1852

வேதம் எனவும் விரிஞ்சன் அளித்தபெரும்
பூதம் எனவும் பொலிந்தானால் - ஓது
மகேந்திரனும் நம்உலகில் வந்தன னோஎன்ன
மகேந்திரமேல் நின்றான் வளர்ந்து....1853

கிட்கிந்தா காண்டம் முற்றும்.

continued
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home