Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார் > Manimekalai > Tamil Language & Literature

 

 
maNimEkalai of cIttalaiccAttanAr

மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்
(ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று)
[see also Manimekalai of Cittalaic Cattanar]


Our sincere thanks go to Inst. of Indology and Tamil Studies, Univ of Koeln, Germany (Dr. Thomas Malten & Mr. Sascha Ebeling) for providing us with the etext file in transliterated format and to Mr. Mani Manivannan for his Text Convertor that allowed conversion to TSCII format. Proof-reading of Etext in TSCII format: Mr. Ma. Sivakumar, Chennai, Tamilnadu Etext prep in pdf format: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of  tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி
தென் திசைப் பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன் கீழ் நின்று
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு
வெந் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பாபதியினள்
செங்கதிர்ச் செல்வன் திருக் குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட

00-010

அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங் குணக்கு ஒழுகி அச் சம்பாபதி அயல்
பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கு இனிது இருந்த அருந் தவ முதியோள்
ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு ஆங்கு
ஆணு விசும்பின் ஆகாயகங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வா என
பின்னிலை முனியாப் பெருந் தவன் கேட்டு ஈங்கு
'அன்னை கேள் இவ் அருந் தவ முதியோள்

00-020

நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு' என
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி
கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை
தொழுதனள் நிற்ப அத் தொல் மூதாட்டி
கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந் நாள்
என் பெயர்ப் படுத்த இவ் விரும் பெயர் மூதூர்

00-030

நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழிய! என
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப்
பெரு விழா அறைந்ததும் 'பெருகியது அலர்' என
சிதைந்த நெஞ்சின் சித்திராபதி தான்
வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும்
மணிமேகலை தான் மா மலர் கொய்ய
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்
ஆங்கு அப் பூம்பொழில் அரசு இளங் குமரனைப்
பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும்

00-040

பளிக்கறை புக்க பாவையைக் கண்டு அவன்
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போய பின்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்
மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்
உவவன மருங்கின் அவ் உரைசால் தெய்வதம்
சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்
ஆங்கு அத் தீவகத்து ஆய் இழை நல்லாள்
தான் துயில் உணர்ந்து தனித் துயர் உழந்ததும்
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணிப் பீடிகைப்
பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்

00-050

உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
'மனம் கவல் ஒழிக!' என மந்திரம் கொடுத்ததும்
தீபதிலகை செவ்வனம் தோன்றி
மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
யாப்புறு மா தவத்து அறவணர்த் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
நறு மலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்

00-060

மற்று அப் பாத்திரம் மடக்கொடி ஏந்தி
பிச்சைக்கு அவ் ஊர்ப் பெருந் தெரு அடைந்ததும்
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று
ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆய் இழை என்றே
கொங்கு அலர் நறுந் தார்க் கோமகன் சென்றதும்
அம்பலம் அடைந்த அரசு இளங் குமரன்முன்
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி

00-070

> மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம்
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன்
ஆய் இழை தன்னை அகலாது அணுகலும்
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்
ஐ அரி உண் கண் அவன் துயர் பொறாஅள்
தெய்வக் கிளவியின் தௌிந்த வண்ணமும்
அறை கழல் வேந்தன் 'ஆய் இழை தன்னைச்
சிறை செய்க' என்றதும் சிறைவீடு செய்ததும்

00-080

நறு மலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்
ஆங்கு அவன்தன்னோடு அணி இழை போகி
ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய்
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
'நவை அறு நன்பொருள் உரைமினோ' என
சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும்
ஆங்கு அத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
பூங்கொடி கச்சி மா நகர் புக்கதும்

00-090

புக்கு அவள் கொண்ட பொய் உருக் களைந்து
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டு
'பவத் திறம் அறுக' என பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்

00-098


1. விழாவறை காதை

உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
'மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக' என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்

01-010

மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமயக் கணக்கரும் தம் துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ 'வான்பதி தன்னுள்
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்

01-020

மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க' என
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை

01-030

முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
'திரு விழை மூதூர் வாழ்க!' என்று ஏத்தி
'வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்

01-040

பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்

01-050

பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்

01-060

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
'பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!' என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்

01-072


2. ஊரலர் உரைத்த காதை

நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை 'வருக' எனக் கூஉய்
'பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை' என
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு

02-010

அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
'பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!
உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?
"வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்

02-020

தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த

02-030

ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து" என்றே
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
'நயம்பாடு இல்லை நாண் உடைத்து' என்ற
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
'காதலன் உற்ற கடுந் துயர் கேட்டு
போதல்செய்யா உயிரொடு நின்றே
பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து

02-040

நல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன்
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள்

02-050

மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்
ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்
ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி

02-060

அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடுந் துயர் கூறப்
"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக!" என்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
"உய் வகை இவை கொள்" என்று உரவோன் அருளினன்
மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த

02-070

சித்திராபதிக்கும் செப்பு நீ என
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என்

02-075


3. மலர்வனம் புக்க காதை

வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட

03-010

மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
'தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய்' என்றலும்
மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
'குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்

03-020

அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?
ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்
ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்
பாராவாரப் பல் வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்

03-030

ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி

03-040

நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்

03-050

"கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்" என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்

03-060

பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த
தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்

03-070

ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
"ஈங்கு இதன் காரணம் என்னை?" என்றியேல்
"சிந்தை இன்றியும் செய் வினை உறும்" எனும்
வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
"செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது" என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்

03-080

செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
'மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய்! யானும் போவல்' என்று
அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கணம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்

03-090

மண்ணா மேனியன் வருவோன் தன்னை
'வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்
எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!
உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன்

03-100

கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
'உண்ம்' என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்

03-110

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
பவளச் செவ் வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை

03-120

அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய

03-130

கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்
பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ
செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்
தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர

03-140

தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை
பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
'ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்
காண்மினோ' என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
'அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்

03-150

மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல'
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்

03-160

திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்

03-171


4. பளிக்கறை புக்ககாதை

'பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்!
மாசு அறத் தௌிந்த மணி நீர் இலஞ்சி
பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று
ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப

04-010

கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா
கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்!
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்
விரை மலர்த் தாமரை கரை நின்று ஓங்கிய
கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்!
மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து
தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின்

04-020

அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணிச் சிரல் காண்!' எனப்
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து

04-030

கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்கு கால் எடுத்த வங்கம் போல
காழோர் கையற மேலோர் இன்றி
பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு
இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர்
ஒரு பால் படாஅது ஒரு வழித் தங்காது

04-040

பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக்
காலவேகம் களி மயக்குற்றென
விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி
கடுங்கண் யானையின் கடாத் திறம் அடக்கி
அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன்
மணித் தேர்க் கொடுஞ்சி கையான் பற்றி
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்

04-050

நாடக மடந்தையர் நலம் கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டிகுமரன் இருந்தோன் தன்னை
'மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்!
யாது நீ உற்ற இடுக்கண்!' என்றலும்

04-060

ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
'வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல்
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலையொடு
கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது

04-070

இது யான் உற்ற இடும்பை' என்றலும்
மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி
'ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி
ஈங்கு யான் வருவேன்' என்று அவற்கு உரைத்து ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல
மாட வீதியில் மணித் தேர் கடைஇ
கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத்
தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
"சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான்" என

04-080

வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை!
ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு?' என
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் 'புகுக' என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர் இழை தன்னை

04-090

கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி
பல் மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்
பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும்
தாமரைச் செங் கண பரப்பினன் வரூஉம்
அரசு இளங் குமரன் 'ஆரும் இல் ஒரு சிறை
ஒரு தனி நின்றாய்! உன் திறம் அறிந்தேன்
வளர் இள வன முலை' மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ?
விளையா மழலை விளைந்து மெல் இயல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?

04-100

செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி
வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்?
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை? எனப்
பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி
மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்
'இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ?

04-110

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
வினை விளங்கு தடக் கை விறலோய்! கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது என உணர்ந்து

04-120

மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்'
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
சென்று அவன் உள்ளம் சேராமுன்னர்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவையின்
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்

04-125


5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து
தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி

05-010

'சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன!
எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை' என
'குருகு பெயர்க் குன்றம் கொன்றோன்' அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள்' என்றே
தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப
'சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?

05-020

செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக!' என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
'அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே
கல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை!
ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை' என
'வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!
ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்

05-030

வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய
வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு

05-040

"யாங்கனம் வந்தனை என் மகள்?" என்றே
தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்
பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி
"என் மகள் இருந்த இடம்" என்று எண்ணி

05-050

தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
"சமணீர்காள்! நும் சரண்" என்றோனை
"இவன் நீர் அல்ல" என்று என்னொடும் வெகுண்டு
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
"அறவோர் உளீரோ? ஆரும் இலோம்!" எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்

05-060

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
"என் உற்றனிரோ?" என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
சங்கதருமன் தான் எமக்கு அருளிய

05-070

எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க!' என
'அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன்

05-080

வஞ்சி நுண் இடை மணிமேகலை தனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு' என்று
அப் பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
பளிக்கறை திறந்து பனி மதி முகத்துக்
களிக் கயல் பிறழாக் காட்சியள் ஆகி
"கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி" என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?

05-090

'இதுவே ஆயின் கெடுக தன் திறம்!' என
மது மலர்க் குழலாள் மணிமேகலை தான்
சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழா அணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
மணி அறைப் பீடிகை வலம் கொண்டு ஓங்கி
'புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்

05-100

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?' என்று
எரி மணிப் பூங் கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி
பல் மலர் சிறந்த நல் நீர் அகழிப்

05-110

புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை
ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்

05-120

வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்க
பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவளச் செங் கால் பறவைக் கானத்து
குவளை மேய்ந்த குடக் கண் சேதா

05-130

> முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழிப் படர
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்

05-141


6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை

அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர் தம் கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர
ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்
வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல்
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய
உருவு கொண்ட மின்னே போல
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்

06-010

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
'ஈங்கு நின்றீர் என் உற்றீர்?' என
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
'அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்

06-020

பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கரவாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது
அங்கு நீர் போம்' என்று அருந் தெய்வம் உரைப்ப
'வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்
அம் செஞ் சாயல் நீயும் அல்லது
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்

06-030

சக்கரவாளக் கோட்டம் அஃது என
மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன்
ஈங்கு இதன் காரணம் என்னையோ?' என
ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்
'மாதவி மகளொடு வல் இருள் வரினும்
நீ கேள்' என்றே நேர் இழை கூறும் 'இந்
நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றிய
ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது
ஊரா நல் தேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும்

06-040

நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
காப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடை
உலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர்

06-050

தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில்
காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்
அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருணப் பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்
அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும்

06-060

நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும்
தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும்
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து
சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி

06-070

> நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும்
பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும்
நீள் முக நரியின் தீ விளிக் கூவும்
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின்
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி

06-080

கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து
புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்

06-090

விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை
தவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ்

06-100

அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?
ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என
சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டு

06-110

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறித்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்
கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி

06-120

இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து "ஈங்கு
எம் அனை! காணாய்! ஈமச் சுடலையின்
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன்" என

06-130

தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
"பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்
தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?
துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய்
தகவு இலைகொல்லோ சம்பாபதி!" என
மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில்

06-140

கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற
"கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
என் உற்றனையோ? எனக்கு உரை" என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
"ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்" என
"அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா

06-150

பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்" என்றலும்
"என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என்
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
"ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்?
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்

06-160

ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
'கொலை அறம் ஆம்' எனும் தொழில் மாக்கள்
அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்த ஈமப் புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்!
நிரயக் கொடு மொழி நீ ஒழிக" என்றலும்
"தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்
மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின்

06-170

யானோ காவேன் என் உயிர் ஈங்கு" என
"ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்!
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய்" என்றே
நால் வகை மரபின் அரூபப் பிரமரும்
நால் நால் வகையில் உரூபப் பிரமரும்
இரு வகைச் சுடரும் இரு மூவகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்

06-180

எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி
"அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது" எனச்
சம்பாபதி தான் உரைத்த அம் முறையே
எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே
கோதமை உற்ற கொடுந் துயர் நீங்கி
ஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின்
சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற

06-190

எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்
நால் வகை மரபின் மா பெருந் தீவும்
ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி
ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து

06-200

மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண்
இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்
இதன் வரவு இது' என்று இருந் தெய்வம் உரைக்க
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத்
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப்
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ

06-210

அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என்

06-214


7. துயிலெழுப்பிய காதை

மணிமேகலை தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட
உதயகுமரன் உறு துயர் எய்தி
'கங்குல் கழியின் என் கை அகத்தாள்' என
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
முன்னர்த் தோன்றி 'மன்னவன் மகனே!
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை

07-010

மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்
தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத் திறம் ஒழிக' என்று அவன்வயின் உரைத்த பின்
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும்
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
'இந்திர கோடணை இந் நகர்க் காண
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம்
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்

07-020

விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர்
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு
இன்று ஏழ் நாளில் இந் நகர் மருங்கே
வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர்
ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள்
ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உள
மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்

07-030

ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
"திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு" என
கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்
நாமம் செய்த நல் நாள் நள் இருள்
"காமன் கையறக் கடு நவை அறுக்கும்
மா பெருந் தவக்கொடி ஈன்றனை" என்றே
நனவே போலக் கனவு அகத்து உரைத்தேன்
ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை' என்று
அந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின்

07-040

வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்
கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்த் தீம் தொடை
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
வளை சேர் செங் கை மெல் விரல் உதைத்த
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது

07-050

உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்
விரைப் பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி
குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்
இறை உறை புறவும் நிறை நீர்ப் புள்ளும்

07-060

கா உறை பறவையும் நா உள் அழுந்தி
விழவுக் களி அடங்கி முழவுக் கண் துயின்று
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள்
கோமகன் கோயில் குறு நீர்க் கன்னலின்
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும்
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறை அழி யானை நெடுங் கூ விளியும்
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்
முழங்கு நீர் முன் துறைக் கலம் புணர் கம்மியர்

07-070

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழஞ் செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்
அர வாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து
புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம்
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும்
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலிக் கணத்து அன்னோர் பூத சதுக்கத்து
'கொடித் தேர் வேந்தன் கொற்றம் கொள்க' என
இடிக் குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும்

07-080

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
'மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க' என
நின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும்
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து
முருந்து ஏர் இள நகை நீங்கிப் பூம்பொழில்
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த

07-090

சக்கரவாளக் கோட்டத்து ஆங்கண்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவியின் ஒரு புடை இருத்தலும்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புதப் பாவை
மைத் தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ
திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின்
'இரவிவன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
தயங்கு இணர்க் கோதை தாரை சாவுற

07-100

மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்!
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே!
மாருதவேகனோடு இந் நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய்!
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
அஞ்சல்' என்று உரைத்தது அவ் உரை கேட்டு
நெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள்

07-110

காவலாளர் கண் துயில்கொள்ளத்
தூ மென் சேக்கைத் துயில் கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்
புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப
பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப
பணை நிலைப் புரவி பல எழுந்து ஆலப்
பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப்
பூம்பொழில் ஆர்கைப் புள் ஒலி சிறப்பப்
பூங்கொடியார் கைப் புள் ஒலி சிறப்பக்

07-120

கடவுள் பீடிகைப் பூப் பலி கடைகொளக்
கலம் பகர் பீடிகைப் பூப் பலி கடை கொளக்
குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக்
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும்
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
மா நகர் வீதி மருங்கில் போகி
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும்

07-130

நல் மணி இழந்த நாகம் போன்று அவள்
தன் மகள் வாராத் தனித் துயர் உழப்ப
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்
துன்னியது உரைத்த சுதமதி தான் என்

07-134


8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை

ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல்
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு
விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர்

08-010

அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளித்
துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதி
காதல் சுற்றம் மறந்து கடைகொள
வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்
கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப
'உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது!
சுதமதி ஒளித்தாய்! துயரம் செய்தனை!

08-020

நனவோ கனவோ என்பதை அறியேன்!
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்!
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல் வளை! வாராய் விட்டு அகன்றனையோ?
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்
வஞ்சம் செய்தனள்கொல்லோ? அறியேன்!
ஒரு தனி அஞ்சுவென் திருவே வா!' எனத்
திரை தவழ் பறவையும் விரி சிறைப் பறவையும்
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்
அன்னச் சேவல் அரசன் ஆக

08-030

பல் நிறப் புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
பாசறை மன்னர் பாடி போல
வீசு நீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும்
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ் துயர் எய்திய விழுமக் கிளவியின்
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி
'எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்ப

08-040

கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து
வை வாள் உழந்த மணிப் பூண் அகலத்து
ஐயாவோ!' என்று அழுவோள் முன்னர்
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி
உரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று
பதும சதுரம் மீமிசை விளங்கி
'அறவோற்கு அமைந்த ஆசனம்' என்றே
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது

08-050

பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது
தேவர் கோன் இட்ட மா மணிப் பீடிகை
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி
'எமது ஈது' என்றே எடுக்கல் ஆற்றார்
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்
தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்
'இருஞ் செரு ஒழிமின் எமது ஈது' என்றே

08-060

பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்

08-063


பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள்
காந்தள் அம் செங் கை தலை மேல் குவிந்தன
தலைமேல் குவிந்த கையள் செங் கண்
முலை மேல் கலுழ்ந்து முத்தத் திரள் உகுத்து அதின்
இடமுறை மும் முறை வலமுறை வாரா
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
'தொழு தகை மாதவ! துணி பொருள் உணர்ந்தோய்!
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம்

09-010

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டுப்
பூருவ தேயம் பொறை கெட வாழும்
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன்
மைத்துனன் ஆகிய பிரமதருமன்!
ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய்
"தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவிடை
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள்
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே!
பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந் நகர்

09-020

நாக நல் நாட்டு நானூறு யோசனை
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்பால் ஒழிக" என இரு நில வேந்தனும்
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம்
"ஆவும் மாவும் கொண்டு கழிக" என்றே
பறையின் சாற்றி நிறை அருந் தானையோடு
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி
வட வயின் அவந்தி மா நகர்ச் செல்வோன்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
சேய் உயர் பூம்பொழில் பாடி யெய்து இருப்ப

09-030

எம் கோன் நீ ஆங்கு உரைத்த அந் நாளிடைத்
தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும்
மருள் அறு புலவ! நின் மலர் அடி அதனை
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச்
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய
அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து
உலகு துயர் கெடுப்ப அருளிய அந் நாள்
அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும்
இரவிவன்மன் ஒரு பெருந்தேவி
அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று

09-040

இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
நீலபதி எனும் நேர் இழை வயிற்றில்
காலை ஞாயிற்றுக் கதிர் போல் தோன்றிய
இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்
"எட்டு இரு நாளில் இவ் இராகுலன் தன்னைத்
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால்
தீ அழல் அவனொடு சேயிழை மூழ்குவை

09-050

ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின்
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக் களி மூதூர்ச் சென்று பிறப்பு எய்துதி
அணி இழை! நினக்கு ஓர் அருந் துயர் வரு நாள்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி
அன்று அப் பதியில் ஆர் இருள் எடுத்து
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெந் திறல் நாக நாட்டு அரசர்
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு
அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து

09-060

பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி
அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இன்று யான் உரைத்த உரை தௌிவாய்" என,
சா துயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன்
"காதலன் பிறப்புக் காட்டாயோ?" என
"ஆங்கு உனைக் கொணர்ந்த அரும் பெருந் தெய்வம்
பாங்கில் தோன்றி 'பைந்தொடி! கணவனை
ஈங்கு இவன்' என்னும்" என்று எடுத்து ஓதினை
ஆங்கு அத் தெய்வதம் வாராதோ?" என
ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என்

09-071


10. மந்திரம் கொடுத்த காதை

'அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்த
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது' என
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
பொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தென
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்
முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
'உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச்
சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர்

10-010

இள வள ஞாயிறு தோன்றியதென்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம்
நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்
பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக" என்றே
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்ப்
பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி
'உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
என் பெருங் கணவன் யாங்கு உளன்?' என்றலும்
'இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு

10-020

புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்
தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத்
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச

10-030

இராகுலன் "வந்தோன் யார்?" என வெகுளலும்
விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா
"வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை" என்று அவன் தன்னொடு
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு
"அமர! கேள் நின் தமர் அலம் ஆயினும்
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாம் உன் குறிப்பினம்" என்றலும்
"எம் அனை! உண்கேன் ஈங்குக் கொணர்க" என
அந் நாள் அவன் உண்டருளிய அவ் அறம் 1

10-040

நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய
உதயகுமரன் அவன் உன் இராகுலன்
ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும் உண்டு ஆகலின்
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெங் களர் வீழ்வது போன்ம் என
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்
திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன்
இன்னும் கேளாய் இலக்குமி! நீ நின்

10-050

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி
கங்கைப் பேர் யாற்று அடைகரை இருந்துழி
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி
அறவணன் ஆங்கு அவன்பால் சென்றோனை
"ஈங்கு வந்தீர் யார்?" என்று எழுந்து அவன்
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்

10-060

"ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
பாதபங்கய மலை எனும் பெயர்த்து ஆயது
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இப்
பழுது இல் காட்சியீர்! நீயிரும் தொழும்" என

10-070

அன்று அவன் உரைத்த அவ் உரை பிழையாது
சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின்
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல்! நின்னொடு கூடினர்
அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும்

10-080

அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்
மந்திரம் கொள்க' என வாய்மையின் ஓதி
'மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள்
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
நின் 'பதிப் புகுவாய்' என்று எழுந்து ஓங்கி
'மறந்ததும் உண்டு' என மறித்து ஆங்கு இழிந்து
'சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்

10-090

இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்' என்று
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து
நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என்

10-093


11. பாத்திரம் பெற்ற காதை

மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல்லவத்திடை மணிமேகலை தான்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்
காவதம் திரிய கடவுள் கோலத்துத்
தீவதிலகை செவ்வனம் தோன்றிக்
'கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய
இலங்கு தொடி நல்லாய்! யார் நீ?' என்றலும்
'எப் பிறப்பு அகத்துள் "யார் நீ" என்றது
பொன் கொடி அன்னாய்! பொருந்திக் கேளாய்!

11-010

போய பிறவியில் பூமி அம் கிழவன்
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர்
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்
என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர இம்
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது
பூங் கொடி அன்னாய் யார் நீ?' என்றலும்
ஆய் இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவதிலகை செவ்வனம் உரைக்கும்

11-020

'ஈங்கு இதன் அயல் அகத்து இரத்தினத் தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெருங் கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின்
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு
பழுது இல் காட்சி இந் நல் மணிப் பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர் இது கேள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த

11-030

பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர்
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக
ஆங்கனம் ஆகிய அணி இழை! இது கேள்
ஈங்கு இப் பெரும் பெயர்ப் பீடிகை முன்னது
மா மலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து

11-040

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! கேளாய்
அந் நாள் இந் நாள் அப் பொழுது இப் பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேர் இழை!
ஆங்கு அதில் பெய்த ஆருயிர்மருந்து
வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்

11-050

நறு மலர்க் கோதை! நின் ஊர் ஆங்கண்
அறவணன் தன்பால் கேட்குவை இதன் திறம்'
என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி
தீவதிலகை தன்னொடும் கூடி
கோமுகி வலம் செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங் கையில்
தொழும்தகை மரபின் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைந் தொடி மடவாள்
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி

11-060

'மாரனை வெல்லும் வீர! நின் அடி
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய்! நின் அடி
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய்! நின் அடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய்! நின் அடி
எண் பிறக்கு ஒழிய இறந்தோய்! நின் அடி
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்! நின் அடி
தீ மொழிக்கு அடைத்த செவியோய்! நின் அடி
வாய்மொழி சிறந்த நாவோய்! நின் அடி
நரகர் துயர் கெட நடப்போய்! நின் அடி
உரகர் துயரம் ஒழிப்போய்! நின் அடி

11-070

வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு
அடங்காது!" என்ற ஆய் இழை முன்னர்
போதி நீழல் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவை கெட ஏத்தித்
தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்
'குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்

11-080

இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது
புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழை வளம் தருதலின் மன உயிர் ஓங்கி

11-090

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ?
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர்க் கொடை பூண்ட உரவோய் ஆகி
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும்
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்
திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி

11-100

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய
சாதுசக்கரன் தனை யான் ஊட்டிய
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன்
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய்
ஈங்கு இப் பாத்திரம் என் கைப் புகுந்தது
நாவலொடு பெயரிய மா பெருந் தீவத்து
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன்
துய்ப்போர் தம் மனை துணிச் சிதர் உடுத்து
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி

11-110

வெயில் என முனியாது புயல் என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி
தீம் பால் சுரப்போள் தன் முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து
அகன் சுரைப் பெய்த ஆருயிர்மருந்து அவர்
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை
அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்

11-120

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய்' என்று அவள் உரைப்பத்
தீவதிலகை தன் அடி வணங்கி
மா பெரும் பாத்திரம் மலர்க் கையின் ஏந்திக்
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு
வானூடு எழுந்து மணிமேகலை தான்
'வழு அறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழு நாள் வந்தது என் மகள் வாராள்!
வழுவாய் உண்டு!' என மயங்குவோள் முன்னர்

11-130

வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்
'இரவிவன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன்
வாய்வதாக மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு
அறவண அடிகள் தம்பால் பெறுமின்

11-140

செறி தொடி நல்லீர்! உம் பிறப்பு ஈங்கு இஃது
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும்!' என
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்
'பழுது அறு மாதவன் பாதம் படர்கேம்
எழுக' என எழுந்தனள் இளங்கொடி தான் என்

11-146


12. அறவணர்த் தொழுத கதை

ஆங்கு அவர் தம்முடன் 'அறவண அடிகள்
யாங்கு உளர்?' என்றே இளங்கொடி வினாஅய்
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன் உறைவிடம் குறுகி
மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி
புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்
உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும்
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும்

12-010

ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை
களிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும்
'தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால்
பூங் கொடி நல்லாய்! கேள்' என்று உரைத்ததும்

12-020

உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம்
தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும்
தெய்வம் போய பின் தீவதிலகையும்
ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்
'ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால்
கேள்' என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்
'போக' என மடந்தை போந்த வண்ணமும்
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்

12-030

மணிமேகலை உரை மாதவன் கேட்டு
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர
'பொன் தொடி மாதர்! நல் திறம் சிறக்க
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்
நின் நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த
அந் நாள் அன்றியும் அரு வினை கழூஉம்
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய
பாதபங்கய மலை பரவிச் செல்வேன்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன்

12-040

"மா பெருந் தானை மன்ன! நின்னொடும்
தேவியர் தமக்கும் தீது இன்றோ?" என
அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
புதுக் கோள் யானைமுன் போற்றாது சென்று
மதுக் களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம்
கழி பெருந் துன்பம் காவலன் உரைப்ப
"பழ வினைப் பயன் நீ பரியல்" என்று எழுந்தேன்

12-050

ஆடும் கூத்தியர் அணியே போல
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ?' என
மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம்
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான்
'பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர்க் கோதாய்! நல்கினை கேளாய்
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல் அறம் பெருகாதாகி
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்கு

12-060

செயிர் வழங்கு தீக் கதி திறந்து கல்லென்று
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டது
தண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டு என உணர்தல் அல்லது யாவதும்
கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணித் துளை அகவையின்
உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும்
ஆங்கு அத் துளை வழி உகு நீர் போல
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச்
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார்

12-070

மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்
சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்
தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து
விரி கதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன
ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில்
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு
பெருங் குள மருங்கில் சுருங்கைச் சிறு வழி
இரும் பெரு நீத்தம் புகுவது போல

12-080

அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம்
உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம்
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன்
அவிர் ஒளி ாட்டும் மணியே போன்று
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீரப்
புத்த ஞாயிறு தோன்றும்காலை
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா

12-090

வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம்
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும்
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும்
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ
அந் நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர்
இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்

12-100

போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன் மடக்கொடி!
மாதர் நின்னால் வருவன இவ் ஊர்
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது
பூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்!
ஆதி முதல்வன் அருந் துயர் கெடுக்கும்
பாதபங்கய மலை பரசினர் ஆதலின்
ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி! நின்னோடு

12-110

ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கிப்
பழுது இல் நல் நெறிப் படர்குவர் காணாய்
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! பெற்றனை
மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசிப் பிணி தீர்த்தல்' என்றே அவரும்
தவப் பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின்
மடுத்த தீக் கொளிய மன் உயிர்ப் பசி கெட
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என்

12-121


13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

'மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய
ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய்
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி
தென் திசைக் குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க

13-010

தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர்
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக்
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
"ஆ மகன் அல்லன் என் மகன்" என்றே
காதலி தன்னொடு கைதொழுது எடுத்து

13-020

"நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!" என
தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையாமுன்னர்
நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்
நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்
அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில்
குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக்

13-030

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து
"கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட
நள் இருள் கொண்டு நடக்குவன்" என்னும்
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன்
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம்

13-040

கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
"ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச் சிறு மகனே! போக்கப்படுதி" என்று
அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக்
கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக்
காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்

13-050

விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை
முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?"
"பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ்

13-060

ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள்" என இகழ்தலும்
"ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?" என
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்

13-070

"ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்" என
"நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழியாட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை
'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?' என
மா மறையாட்டி வரு திறம் உரைக்கும்
'வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி

13-080

காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல் கதி உண்டோ தீவினையேற்கு?' என்று
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின்

13-090

புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்" என
ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து
"மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ?
சாலிக்கு உண்டோ தவறு?' என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
"ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்" என்றே

13-100

தாதை பூதியும் தன் மனை கடிதர
"ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழு்
தக்கண மதுரை தான் சென்று எய்தி
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி

13-110

'காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என்

13-115


14 பாத்திர மரபு கூறிய காதை

'ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை
பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி
"வயிறு காய் பெரும் பசி மலைக்கும்" என்றலும்
ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த
"கேள் இது மாதோ கெடுக நின் தீது" என
யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத்

14-010

தேவி சிந்தாவிளக்குத் தோன்றி
"ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது" என்றே
தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும்
"சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் களைவாய்!" எனத்

14-020

தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி
ஆங்கு அவர் பசி தீர்த்து அந் நாள் தொட்டு
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும்
தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப
ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி

14-030

வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி
"இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க" என
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு
எள்ளினன் "போம்" என்று எடுத்து உரை செய்வோன்
"ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்

14-040

நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர் நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை
உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ
பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்?" என்றலும்
"புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு
இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப

14-050

நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும்
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க!" என
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன்
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்
பன்னீராண்டு பாண்டி நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப்
பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின்
ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி

14-060

விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும்
நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி
ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்
"யார் இவன்?" என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை
"இருந்தாய் நீயோ!" என்பார் இன்மையின்
திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள

14-070

ஒரு தனி வரூஉம் பெருமகன் போல
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
"சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய்!" என்றலும்
"அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து" என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின்

14-080

மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத்
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்
"இழிந்தோன் ஏறினன்" என்று இதை எடுத்து
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும்
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
"மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்
சுமந்து என் பாத்திரம்?" என்றனன் தொழுது

14-090

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்
"ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று" என விடுவோன்
"அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்
உளர்எனில் அவர் கைப் புகுவாய்" என்று ஆங்கு
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி
அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன்
"என் உற்றனையோ?" என்று யான் கேட்பத்
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்
குண திசைத் தோன்றி கார் இருள் சீத்துக்
குட திசைச் சென்ற ஞாயிறு போல

14-100

மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு
சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன்
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான் என்

14-104


15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை

'இன்னும் கேளாய் இளங்கொடி மாதே!
அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத்
தண்ணென் சாவகத் தவள மால் வரை
மண்முகன் என்னும் மா முனி இடவயின்
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது
தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி
ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம்
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த
ஆன்ற முனிவன்" அதன் வயிற்று அகத்து

15-010

மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும்
குடர்த் தொடர் மாலை பூண்பான் அல்லன்
அடர்ப் பொன் முட்டை அகவையினான்" என
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தற்காத்து அளித்த தகை ஆ அதனை
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத்
தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு

15-020

ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்
பெரியோ் பிறந்த பெற்றியைக் கேள் நீ
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து
மண்அகம் எல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது
"போதி மாதவன் பூமியில் தோன்றும்
காலம் அன்றியும் கண்டன சிறப்பு" என

15-030

சக்கரவாளக் கோட்டம் வாழும்
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
"கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய
அந்தில் பாவை அருளும் ஆயிடின்
அறிகுவம்" என்றே செறி இருள் சேறலும்
"மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன்
ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும்" என்று
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும்

15-040

புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
"மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை" என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான்
துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ?
அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்
அலத்தல்காலை ஆகியது ஆய் இழை!

15-050

> வெண் திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு
வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது' என
மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான்
தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும்
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க் குறுமாக்களும்
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும்

15-060

கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய
வடித் தேர்த் தானை வத்தவன் தன்னை
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி
'உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி
பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது
திப்பியம்' என்றே சிந்தை நோய் கூர

15-070

மண மனை மறுகில் மாதவி ஈன்ற
அணி மலர்ப் பூங் கொம்பு 'அகம் மலி உவகையின்
பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெருந் தகவு உடைத்து' எனக்
'குளன் அணி தாமரைக் கொழு மலர் நாப்பண்
ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று
வான் தருகற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை
நீ புகல்வேண்டும் நேர் இழை!' என்றனள்

15-080

> வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித்
தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை
மாதவன் தன்னால் வல் வினை உருப்ப
சாவம் பட்டு தனித் துயர் உறூஉம்
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும்
காயசண்டிகை எனும் காரிகை தான் என்

15-086


16. ஆதிரை பிச்சையிட்ட காதை

'ஈங்கு இவள் செய்தி கேள்' என விஞ்சையர்
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்
'ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய்
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
அணி இழை தன்னை அகன்றனன் போகி
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
"காணம் இலி" என கையுதிர்க்கோடலும்

16-010

வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நல் மரம் பற்றிப்
போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர்
"இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல்
உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன்

16-020

சாதுவன் தானும் சாவுற்றான்" என
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
"ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்
தாரீரோ?" எனச் சாற்றினள் கழறி
சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து
முடலை விறகின் முளி எரி பொத்தி
"மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன்" என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது

16-030

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத்
"தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்
யாது செய்கேன்?" என்று அவள் ஏங்கலும்
"ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்

16-040

சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ" என
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி
பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று
மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து "என்
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக!" என
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்

16-050

விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும்
நக்க சாரணர் நயமிலர் தோன்றி
பக்கம் சேர்ந்து "பரி புலம்பினன் இவன்
தானே தமியன் வந்தனன் அளியன்
ஊன் உடை இவ் உடம்பு உணவு" என்று எழுப்பலும்
மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின்

16-060

கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள்
சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி
ஆங்கு அவர் உரைப்போர் "அருந்திறல்! கேளாய்
ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால்
போந்தருள் நீ" என அவருடன் போகி
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன் பிணவோடு இருந்தது போல
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக்

16-070

கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன்
"ஈங்கு நீ வந்த காரணம் என்?" என
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
"அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து
வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும்" என
அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
"வெவ்உரை கேட்டேன் வேண்டேன்" என்றலும்
"பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு

16-080

உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின்
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக" என
தூண்டிய சினத்தினன் "சொல்" என சொல்லும்
"மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
'நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்
உண்டு' என உணர்தலின் உரவோர் களைந்தனர்

16-090

கண்டனை ஆக!" என கடு நகை எய்தி
"உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர்
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை
செவ்வனம் உரை" எனச் சினவாது "இது கேள்
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின்
உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது

16-100

யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை
பூண்ட யாக்கையின் புகுவது தௌி நீ"
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
"கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்
தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும்

16-110

எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை" என்றலும்
"நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும்
தீத்திறம் ஒழிக!" எனச் சிறுமகன் உரைப்போன்
"ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம்
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க" எனப்
"பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை

16-120

உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை
விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு
இவை இவை கொள்க" என எடுத்தனன் கொணர்ந்து
சந்திரதத்தன் என்னும் வாணிகன்
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி
இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து
தன் மனை நன் பல தானமும் செய்தனன்
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக!" என
மனைஅகம் புகுந்து மணிமேகலை தான்

16-130

புனையா ஓவியம் போல நிற்றலும்
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
'பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக' என
ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என்

16-135


17. உலக அறவி புக்க காதை

பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத்
தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று

17-010

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி
துன்னிய என் நோய் துடைப்பாய்!' என்றலும்
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள்
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்

17-020

'மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக்
காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன்
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத்
தென் திசைப் பொதியில் காணிய வந்தேன்
கடுவரல் அருவிக் கடும் புனல் கொழித்த
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்
புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன்
பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது ஓர்
இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி

17-030

தேக்கு இலை வைத்துச் சேண் நாறு பரப்பின்
பூக் கமழ் பொய்கை ஆடச் சென்றோன்
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன்
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்
கண்டனன் என்னைக் கருங் கனிச் சிதைவுடன்
"சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது
ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது
அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்

17-040

பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்!
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித் துயர் உழந்து
முந்நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு
உண்ணும் நாள் உன் உறு பசி களைக!" என
அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம்
இந் நாள் போலும் இளங்கொடி! கெடுத்தனை!
வாடு பசி உழந்து மா முனி போய பின்
பாடு இமிழ் அருவிப் பய மலை ஒழிந்து என்

17-050

அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
"ஆர் அணங்கு ஆகிய அருந் தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை!
வானூடு எழுக" என மந்திரம் மறந்தேன்!
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு
தீம் கனி கிழங்கு செழுங் காய் நல்லன
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக
நீங்கல் ஆற்றான் நெடுந் துயர் எய்தி

17-060

ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன்
"சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லாக் கழி பெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால்
பல நாள் ஆயினும் நிலனொடு போகி
அப் பதிப் புகுக" என்று அவன் அருள்செய்ய
இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்
இந்திர கோடணை விழவு அணி வரு நாள்
வந்து தோன்றி இம் மா நகர் மருங்கே

17-070

என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமேகலை! என் வான் பதிப் படர்கேன்
துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர்
சக்கரவாளக் கோட்டம் உண்டு ஆங்கு அதில்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர்

17-080

இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்
வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக' என்று
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை
ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி
வல முறை மும் முறை வந்தனை செய்து அவ்
உலக அறவியின் ஒரு தனி ஏறி
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
தம் துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி

17-090

வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்துக்
கருவி மா மழை தோன்றியதென்ன
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுதசுரபியோடு ஆய் இழை தோன்றி
'ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது
யாவரும் வருக ஏற்போர் தாம்!' என
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே
யாணர்ப் பேர் ஊர் அம்பல மருங்கு என்

17-098


18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அகவயின்
தீத் துறு செங் கோல் சென்று சுட்டாங்குக்
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கித்
'தீர்ப்பல் இவ் அறம்!' என சித்திராபதி தான்
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
'கோவலன் இறந்த பின் கொடுந் துயர் எய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகுதக்கன்றே! நல் நெடும் பேர் ஊர்
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது!

18-010

காதலன் வீய கடுந் துயர் எய்திப்
போதல்செய்யா உயிரொடு புலந்து
நளி இரும் பொய்கை ஆடுநர் போல
முளி எரிப் புகூஉம் முது குடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம்
கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே
பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்
நறுந் தாது உண்டு நயன் இல் காலை
வறும் பூத் துறக்கும் வண்டு போல்குவம்

18-020

வினை ஒழிகாலைத் திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்
தாபதக் கோலம் தாங்கினம் என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே?
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக்
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப்
பிச்சை மாக்கள் பிறர் கைக் காட்டி

18-030

மற்று அவன் தன்னால் மணிமேகலை தனைப்
பொன் தேர்க் கொண்டு போதேன் ஆகின்
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர்
மனைஅகம் புகாஅ மரபினன்' என்றே
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகையுயிர்த்து
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழக்
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள்

18-040

கடுந் தேர் வீதி காலில் போகி
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறைப்
பவழத் தூணத்து பசும் பொன் செஞ் சுவர்த்
திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
துளங்கும் மான் ஊர்தித் தூ மலர்ப் பள்ளி
வெண் திரை விரிந்த வெண் நிறச் சாமரை
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச

18-050

இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தித்
திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன்
'மாதவி மணிமேகலையுடன் எய்திய
தாபதக் கோலம் தவறு இன்றோ?' என
'அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப
ஒரு தனி ஓங்கிய திரு மணிக் காஞ்சி
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நல் நலம் கவினிக்
காமர் செவ்விக் கடி மலர் அவிழ்ந்தது
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய

18-060

விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்ப்
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
வாழ்க நின் கண்ணி! வாய் வாள் வேந்து!' என
ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன்
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன்
"மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது
ஓவியச் செய்தி" என்று ஒழிவேன் முன்னர்
காந்தள் அம் செங் கை தளை பிணி விடாஅ
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம்
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த

18-070

முத்துக் கூர்த்தன்ன முள் எயிற்று அமுதம்
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பியதூஉம்
மா இதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக்
காய் வேல் வென்ற கருங் கயல் நெடுங் கண்
"அறிவு பிறிதாகியது ஆய் இழை தனக்கு" என
செவிஅகம் புகூஉச் சென்ற செவ்வியும்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவை "என்
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு" என்று
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப்

18-080

பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல் காட்டிச் "செய் தவம் புரிந்த
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றனள்
தெய்வம்கொல்லோ? திப்பியம்கொல்லோ?
எய்யா மையலேன் யான்! என்று அவன் சொலச்
சித்திராபதி தான் சிறு நகை எய்தி
'அத் திறம் விடுவாய் அரசு இளங் குருசில்!
காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்?
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி

18-090

ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும்
மேருக் குன்றத்து ஊரும் நீர்ச் சரவணத்து
அருந் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
பெரும் பெயர்ப் பெண்டிர்பின்பு உளம் போக்கிய
அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆய்த்
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்?
கன்னிக் காவலும் கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவுறின் காவலும்
நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது

18-100

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்
செருக் கயல் நெடுங் கண் சுருக்கு வலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையின் பிணித்துப் படிற்று உரை அடக்குதல்

18-110

கோன்முறை அன்றோ குமரற்கு?' என்றலும்
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து
விரை பரி நெடுந் தேர்மேல் சென்று ஏறி
ஆய் இழை இருந்த அம்பலம் எய்தி
காடு அமர் செல்வி கடிப் பசி களைய
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போலத்
தீப் பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப்
பாத்திரம் ஏந்திய பாவையைக் கண்டலும்
இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி
'உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என்

18-120

நெஞ்ச் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? என
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பு' எனச் சென்று
'நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது?
சொல்லாய்' என்று துணிந்துடன் கேட்ப
'என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
தன் அடி தொழுதலும் தகவு!' என வணங்கி
'அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்

18-130

இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும்
தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல்
நன்றி அன்று!' என நடுங்கினள் மயங்கி
'கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு

18-140

பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ
கேட்டனை ஆயின் வேட்டது செய்க!' என
வாள் திறல் குருசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு
'ஆடவர் செய்தி அறிகுநர் யார்?' எனத்
தோடு அலர் கோதையைத் தொழுதனன் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய்
மணிமேகலை தான் வந்து தோன்ற

18-150

அணி மலர்த் தாரோன் அவள்பால் புக்குக்
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்
'பிச்சைப் பாத்திரம் பெரும் பசி உழந்த
காயசண்டிகை தன் கையில் காட்டி
மாயையின் ஒளித்த மணிமேகலை தனை
ஈங்கு இம் மண்ணீட்டு யார் என உணர்கேன்?
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்!
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்!
பவளச் செவ் வாய்த் தவள வாள் நகையும்

18-160

அஞ்சனம் சேராச் செங் கயல் நெடுங் கணும்
முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனைக்
கவை முள் கருவியும் ஆகிக் கடிகொள
கல்விப் பாகரின் காப்பு வலை ஓட்டி
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
புதுக் கோள் யானை வேட்டம் வாய்ந்தென
முதியாள்! உன் தன் கோட்டம் புகுந்த
மதி வாள் முகத்து மணிமேகலை தனை
ஒழியப் போகேன் உன் அடி தொட்டேன்
இது குறை' என்றனன் இறைமகன் தான் என்

18-172


19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை

முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற
'ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன்
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை' என
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
உதயகுமரன் உள்ளம் கலங்கி
பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி
"அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்

19-010

பை அரவு அல்குல் பலர் பசி களையக்
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
"முத்தை முதல்வி அடி பிழைத்தாய்" எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின்
பின் அறிவாம்' எனப் பெயர்வோன் தன்னை
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு
நீல யானை மேலோர் இன்றிக்

19-020

காமர் செங் கை நீட்டி வண்டு படு
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போய பின்
உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட
மறு இல் செய்கை மணிமேகலை தான்

19-030

'மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிடலீ யான்!'
காய்பசியாட்டி காயசண்டிகை என
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
"ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து" என்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம்' என
முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த
அமுதசுரபியை அங்கையின் வாங்கிப்

19-040

பதிஅகம் திரிதரும் பைந் தொடி நங்கை
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆர் உயிர் மாக்களை
வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும்
'ஊட்டிய பாத்திரம் ஒன்று' என வியந்து
கோட்டம் காவலர் 'கோமகன் தனக்கு இப்
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்
யாப்பு உடைத்தாக இசைத்தும்' என்று ஏகி

19-050

நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அந் நாள்
நீரின் பெய்த மூரி வார் சிலை
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
சீர்த்தி என்னும் திருத் தகு தேவியொடு
போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக்
கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டக்
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய
வரிக் குயில் பாட மா மயில் ஆடும்
விரைப் பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும்

19-060

புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மட மயில் பேடையும் தோகையும் கூடி
இரு சிறைக் விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி
'மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை இஃது ஆம்' என நோக்கியும்
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையைச்
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்திப்
பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம்' என்றும்

19-070

அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த
பிணவுக் குரங்கு ஏற்றி பெரு மதர் மழைக் கண்
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும்
பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு
வால் வீ செறிந்த மராஅம் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என
தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும்
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர்

19-080

பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர்
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர்
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர்

19-090

ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து
குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்து நகை செய்து
குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும்
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும்
'வம்' எனக் கூஉய் மகிழ் துணையொடு தன்
செம்மலர்ச் செங் கை காட்டுபு நின்று
மன்னவன் தானும் மலர்க் கணை மைந்தனும்

19-100

இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திரக் கிணறும் இடும் கல் குன்றமும்
வந்து வீழ் அருவியும் மலர்ப் பூம் பந்தரும்
பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும்
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக்
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினைப்

19-110

பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
கோணச் சந்தி மாண் வினை விதானத்துத்
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி

19-120

முறம் செவி யானையும் தேரும் மாவும்
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்
சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி!
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி!
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை!
கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர்

19-130

யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம்
மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்
அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ!' என்றலும்
'வருக வருக மடக்கொடி தான்' என்று
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்

19-140

வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று
'ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய!' எனத்
'தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்?
யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை?' என்று
அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும்
'விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி!
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர்
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை!
வானம் வாய்க்க! மண் வளம் பெருகுக!
தீது இன்றாக கோமகற்கு! ஈங்கு ஈது

19-150

ஐயக் கடிஞை அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது' என
'யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு?' என்று
வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும்
'சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்குமது வாழியர்!' என
அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த
பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என்

19-162


20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை

அரசன் ஆணையின் ஆய் இழை அருளால்
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்
தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான்
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப்
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக
ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு
வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம்

20-010

சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி 'அத் தோட்டு ஆர் குழலியை
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன்' என்றே
மதுக் கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய

20-020

உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
'மழை சூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக்
கழை வளர் கான் யாற்று பழப் வினைப் பயத்தான்
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள்
காயசண்டிகை!' எனக் கையறவு எய்தி
காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூ மரச் சோலையும்
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும்

20-030

தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை
மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு ஆங்கு
'இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய
வான வாழ்க்கையர் அருளினர்கொல்?' எனப்
பழைமைக் கட்டுரை பல பாராட்டவும்
விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி
உதயகுமரன் தன்பால் சென்று
நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி

20-040

தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய்
இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர்க் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து போயின

20-050

இலவு இதழ்ச் செவ் வாய் காணாயோ நீ
புலவுப் புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளைத் தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய்த் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர்த் தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்

20-060

வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
ஆவக் கணைக்கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்!' என
விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும்

20-070

'தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும்
மதுக் கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி
பவளக் கடிகையில் தவள வாள் நகையும்
குவளைச் செங் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை
ஈங்கு ஒழிந்தனள்' என இகல் எரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள்
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன்

20-0810

காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன்
ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும்
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
'வளை சேர் செங் கை மணிமேகலையே
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ்
வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
வந்து அறிகுவன்' என மனம் கொண்டு எழுந்து

20-090

வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை
கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி
ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெந் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த

20-100

ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்
'ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்' என்றே
வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத்
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன்
சுரும்பு அறை மணித் தோள் துணிய வீசி
'காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம்
போகுவல்' என்றே அவள்பால் புகுதலும்
நெடு நிலைக் கந்தின் இடவயின் விளங்கக்

20-110

கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
'அணுகல் அணுகல்! விஞ்சைக் காஞ்சன!
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள்
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
வானம் போவழி வந்தது கேளாய்
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசைப் போகார்
போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம்
விந்தம் காக்கும் விந்தா கடிகை

20-120

அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள்
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய்
வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன!
அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்'
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என்

20-129


21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை

கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின்
குடவயின் அமைத்த நெடு நிலை வாயில்
முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த
மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன்
மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில்
கந்து உடை நெடு நிலைக் கடவுள் பாவை
அங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்
கேட்டனள் எழுந்து 'கெடுக இவ் உரு' என
தோட்டு அலர்க் குழலி உள்வரி நீங்கித்

21-010

'திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்பால் உள்ளம்
தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி
என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும்

21-020

யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக்
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல!
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின்
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ!' என
விழுமக் கிளவியின் வெய்து உயிர்த்துப் புலம்பி
அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்
'செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!
அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்!
நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்

21-030

பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்!
என்று இவை சொல்லி, இருந் தெய்வம் உரைத்தலும்
பொன் திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்
'பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய
தெய்வம் நீயோ? திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன்
திட்டிவிடம் உணச் செல் உயிர் போயதும்

21-040

நெஞ்சு நடுங்கி நெடுந் துயர் கூர யான்
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம்
அறிதலும் அறிதியோ? அறிந்தனை ஆயின்
பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு!' என
'ஐ அரி நெடுங் கண் ஆய் இழை! கேள்' எனத்
தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்
'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்
பிரமதருமனைப் பேணினிராகி

21-050

"அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்
விடியல் வேலை வேண்டினம்" என்றலும்
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி
காலை தோன்ற வேலையின் வரூஉ
நடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை
சீலம் நீங்காச் செய் தவத்தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்
தோளும் தலையும் துணிந்து வேறாக
வாளின் தப்பிய வல் வினை அன்றே

21-060

விரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடு
இராகுலன் தன்னை இட்டு அகலாதது
"தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய
அவல வெவ் வினை" என்போர் அறியார்
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது
ஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலைத்
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்
ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனை

21-070

ஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்தது
இன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்!
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக்
காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும்
இடு சிறை நீக்கி இராசமாதேவி
கூட வைக்கும் கொட்பினள் ஆகி
மாதவி மாதவன் மலர் அடி வணங்கித்
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு

21-080

காதலி நின்னையும் காவல் நீக்குவள்
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால்
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
தீவதிலகையின் தன் திறம் கேட்டு
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்
ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய்

21-090

பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை
ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும்
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
"இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும்
முறைமையின் படைத்த முதல்வன்" என்போர்களும்
"தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன்
அன்னோன் இறைவன் ஆகும்" என்போர்களும்
"துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
இன்ப உலகு உச்சி இருத்தும்" என்போர்களும்
"பூத விகாரப் புணர்ப்பு" என்போர்களும்

21-100

பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
"இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
அறனோடு என்னை?" என்று அறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி"
எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்கு
ஒள்ளியது உரை!" என உன் பிறப்பு உணர்த்துவை
"ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க
காம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை"

21-110

என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்!
"அன்று" என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
"தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
வாயே" என்று மயக்கு ஒழி மடவாய்
வழு அறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் பேசா என்பது
அறிதலும் அறிதியோ? அறியாய்கொல்லோ?
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்!
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும்

21-120

முது மர இடங்களும் முது நீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி
காப்பு உடை மா நகர்க் காவலும் கண்ணி
யாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்து
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்கு அத் தெய்வதம் அவ் இடம் நீங்கா
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்
என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்!
மன் பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்!

21-130

துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின்
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்
மாந்தர் அறிவது வானவர் அறியார்
ஓவியச்சேனன் என் உறு துணைத் தோழன்
ஆவதை இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ?
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம்
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின்

21-140

மணிமேகலை! யான் வரு பொருள் எல்லாம்
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு' என
"தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள்
ஈறு கடைபோக எனக்கு அருள்?" என்றலும்
துவதிகன் உரைக்கும்' சொல்லலும் சொல்லுவேன்
வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்!
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்
ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த

21-150

தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்
தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகி
அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்
செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவை
அறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப்
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி
வறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம்
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை
ஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும்
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள

21-160

பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்
அறவணன் தனக்கு நீ உரைத்த அந் நாள்
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
"மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும்காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
இத் தலம் நீங்கேன் இளங்கொடி! யானும்
தாயரும் நீயும் தவறு இன்றுஆக

21-170

வாய்வதாக நின் மனப்பாட்டு அறம்!" என
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய்
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின்
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத்
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை!

21-180

ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்!
ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே
உவவன மருங்கில் நின்பால் தோன்றி
மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என
துவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கி
அவதி அறிந்த அணி இழை நல்லாள்
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என்

21-190


22. சிறை செய் காதை

கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப
நெடு நிலைக் கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப
சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து
மாதவர் எல்லாம் மணிமேகலை தனை
'இளங்கொடி! அறிவதும் உண்டோ இது-' என
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும்
ஆங்கு அவள் தன்னை ஆர் உயிர் நீங்கிய
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து

22-010

மா பெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து
கோயில் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு
'உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதிபோல
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய!
வேலும் கோலும் அருட்கண் விழிக்க!
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி!
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே!
இன்றே அல்ல இப் பதி மருங்கில்
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து

22-020

பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும்
நல் தவப் பெண்டிர்பின் உளம் போக்கியும்
தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்
பார் ஆள் வேந்தே! பண்டும் பலரால்
"மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ" எனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
"இந் நகர் காப்போர் யார்?" என நினைஇ
"நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக்
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன்

22-030

இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன்
ககந்தன் ஆம்" எனக் காதலின் கூஉய்
"அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும்
ககந்தன் காத்தல்! காகந்தி" என்றே
இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு ஈங்கு
உள்வரிக் கொண்டு அவ் உரவோன் பெயர் நாள்
தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம்

22-040

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
"நீ வா" என்ன நேர் இழை கலங்கி
"மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்" என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்

22-050

"கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ" எனச் சேயிழை அரற்றலும்
மா பெரும் பூதம் தோன்றி "மடக்கொடி!
நீ கேள்" என்றே நேர் இழைக்கு உரைக்கும்
"தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை" என்ற அப்

22-060

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு
விசி பிணி முழவின் விழாக் கோள் விரும்பி
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல்! ஏவ மழையும் பெய்யாது
நிறை உடைப் பெண்டிர் தம்மே போல
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை!
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்

22-070

கட்டாது உன்னை என் கடுந் தொழில் பாசம்
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
பின்முறை அல்லது என் முறை இல்லை
ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு" என
இகந்த பூதம் எடுத்து உரைசெய்தது அப்
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன்
இன்னும் கேளாய் இருங் கடல் உடுத்த

22-080

மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே!
தருமதத்தனும் தன் மாமன் மகள்
பெரு மதர் மழைக் கண் விசாகையும் பேணித்
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக்
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்
"மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனர்" என்றே ஊர் முழுது அலர் எழ
புனையா ஓவியம் புறம் போந்தென்ன
மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை
உலக அறவியினூடு சென்று ஏறி

22-090

"இலகு ஒளிக் கந்தின் எழுதிய பாவாய்!
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ" என
"மா நகருள்ளீர்! மழை தரும் இவள்" என
நா உடைப் பாவை நங்கையை எடுத்தலும்
"தெய்வம் காட்டித் தௌித்திலேன் ஆயின்
மையல் ஊரோ மன மாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன்
இப் பிறப்பு இவனொடும் கூடேன்" என்றே
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின்

22-100

தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெரு நகர் தன்னைப் பிறகிட்டு ஏகி
"தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய்" என
நா உடைப் பாவையை நலம் பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழுப் பெருஞ் செல்வத்துத்
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின்
தருமதத்தனும் "தன் மாமன் மகள்
விரி தரு பூங் குழல் விசாகையை அல்லது
பெண்டிரைப் பேணேன் இப் பிறப்பு ஒழிக!" எனக்
கொண்ட விரதம் தன்னுள் கூறி

22-110

வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி
நீள் நிதிச் செல்வன் ஆய் நீள் நில வேந்தனின்
எட்டிப் பூப் பெற்று இரு முப்பதிற்று யாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்
அந்தணாளன் ஒருவன் சென்று "ஈங்கு
என் செய்தனையோ இரு நிதிச் செல்வ?
'பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர்' என்பது
கேட்டும் அறிதியோ? கேட்டனைஆயின்
நீட்டித்திராது நின் நகர் அடைக!" எனத்

22-120

தக்கண மதுரை தான் வறிது ஆக
இப் பதிப் புகுந்தனன் இரு நில வேந்தே!
மற்று அவன் இவ் ஊர் வந்தமை கேட்டு
பொன் தொடி விசாகையும் மனைப் புறம்போந்து
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்பால் சென்று
"நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன
ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என்
நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன

22-130

இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?
உளன் இல்லாள! எனக்கு ஈங்கு உரையாய்
இப் பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன்
அப் பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன்
இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது
வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத் துணை ஆவது
தானம் செய்' என தருமதத்தனும்
மாமன் மகள்பால் வான் பொருள் காட்டி

22-140

ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம்
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால்
குமரி மூத்த அக் கொடுங் குழை நல்லாள்
அமரன் அருளால் அகல் நகர் இடூஉம்
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண்
கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறந் தாழ்ந்த
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி

22-150

"தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம்" என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செங் கை
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்
"ஏறிய செங் கை இழிந்திலது இந்தக்
காரிகை பொருட்டு" எனக் ககந்தன் கேட்டுக்
கடுஞ் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ! என்று

22-160

மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன்
"இன்றே அல்ல" என்று எடுத்து உரைத்து
நன்று அறி மாதவிர்! நலம் பல காட்டினிர்
இன்றும் உளதோ இவ் வினை? உரைம்' என
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
'தீது இன்று ஆக செங்கோல் வேந்து!' என
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
'முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்
கடியப் பட்டன ஐந்து உள அவற்றில்

22-170

கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் "தம்பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்" என
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே!
தாங்கா நரகம் தன்னிடை உழபபோர்
சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள்
காதலன் உற்ற கடுந் துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்
மற்று அவள் பெற்ற மணிமேகலை தான்

22-180

முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
"செய்குவன் தவம்" என சிற்றிலும் பேர் இலும்
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்
ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும்
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின்
காயசண்டிகை தன் கணவன் ஆகிய

22-190

> வாய் வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி
"ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன்" என
ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின்
மதி மருள் வெண்குடை மன்ன! நின் மகன்
உதயகுமரன் ஒழியானாக
ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து
காயசண்டிகை தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
"விஞ்சை மகள்பால் இவன் வந்தனன்" என

22-200

வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து
ஈங்கு இவன் தன்னை எறிந்தது" என்று ஏத்தி
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்
சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி
'யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத்
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் `
"மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர்

22-210

துயர் வினையாளன் தோன்றினான்" என்பது
வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி
கணிகை மகளையும் காவல் செய்க' என்றனன்
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என்

22-215


23. சிறை விடு காதை

மன்னவன் அருளால் வாசந்தவை எனும்
நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும்
திரு நிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும்
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்
பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள்
இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி
கலங்கு அஞ்அர் ஒழியக் கடிது சென்று எய்தி
அழுது அடி வீழாது ஆய் இழை தன்னைத்
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி

23-010

'கொற்றம் கொண்டு குடி புறங்காத்து
செற்றத் தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும்
தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து
"செருப் புகல் மன்னர் செல்வுழிச் செல்க" என
மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு
நாப் புடைபெயராது நாணுத் தகவுடைத்தே
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது?
மன்பதை காக்கும் மன்னவன் தன் முன்
துன்பம் கொள்ளேல்' என்று அவள் போய பின்

23-020

கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து
'வஞ்சம் செய்குவன் மணிமேகலையை' என்று
அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள்
'பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன்
கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச்
சிறை தக்கன்று செங்கோல் வேந்து!' எனச்

23-030

'சிறப்பின் பாலார் மக்கள் அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு' என்பது
அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னைச்
செறிந்த சிறை நோய் தீர்க்க' என்று இறை சொல
'என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்' என்று
அங்கு அவள் தனைக் கூஉய் அவள் தன்னோடு
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு
'அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம்
எறிதரு கோலம் யான் செய்குவல்' என்றே

23-040

மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆகக்
கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய்
'வல்லாங்குச் செய்து மணிமேகலை தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப்
புணர் குறி செய்து "பொருந்தினள்" என்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை' என்றே
காணம் பலவும் கைந் நிறை கொடுப்ப
ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த
பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும்

23-050

'தேவி வஞ்சம் இது' எனத் தௌிந்து
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப
காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி
'அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார்
நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன்' என்று
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்
'மகனை நோய் செய்தாளை வைப்பது என்?' என்று
'உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள்' என
பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப

23-060

ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி
செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன் நேர் அனையாய்! பொறுக்க" என்று அவள் தொழ
'நீலபதி தன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை
அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள்

23-070

யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு?
பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை
உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது
அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி!
எவ் உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
மற்று உன் மகனை மாபெருந்தேவி

23-080

செற்ற கள்வன் செய்தது கேளாய்
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே
"யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ? எனின்
பூங் கொடி நல்லாய்! புகுந்தது இது என
மொய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா
தெய்வக் கட்டுரை தௌிந்ததை ஈறா
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து

23-090

மற்றும் உரை செயும் மணிமேகலை தான்
'மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லாக் கயவன் கார் இருள் தான் வர
நல்லாய்! ஆண் உரு நான் கொண்டிருந்தேன்
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது?
அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும்
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதலற் பயந்தோய்! கடுந் துயர் களைந்து

23-100

தீது உற வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால்
தையால்! உன் தன் தடுமாற்று அவலத்து
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய்
ஆள்பவர் கலக்குற மயங்கிய நல் நாட்டுக்
காருக மடந்தை கணவனும் கைவிட
ஈன்ற குழவியொடு தான் வேறாகி
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி
புதல்வன் தன்னை ஓர் புரி நூல் மார்பன்
பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க
ஆங்கு அப் புதல்வன் அவள் திறம் அறியான்

23-110

தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்
நீர் நசை வேட்கையின் நெடுங் கடம் உழலும்
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓடக்
கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி
பயிர்க் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செங் கண் உகுத்த நீர் கண்டு
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்
கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி
கடாஅ யானைமுன் கள் காமுற்றோர்

23-120

விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ?
'களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந் துயர்
இள வேய்த் தோளாய்க்கு இது' என வேண்டா
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்
கற்ற கல்வி அன்றால் காரிகை!

23-130

செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்து ஏர் எல் வளை! செல் உலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர்
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்' என
ஞான நல் நீர் நன்கனம் தௌித்து
தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 2

23-140

அகம் சுடு வெந் தீ ஆய் இழை அவிப்ப
தேறு படு சில் நீர் போலத் தௌிந்து
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி
ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள்
தான் தொழுது ஏத்தி 'தகுதி செய்திலை'
காதலற் பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந்தேவி' என்று எதிர் வணங்கினள் என்

23-147


24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை

மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி
மாதவி மகள் தனை வான் சிறை நீக்கக்
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு
'அரவு ஏர் அல்குல் அருந் தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும்
ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
மா இரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும்

24-010

ஆங்கு அவன் புதல்வனோடு அருந் தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்
திருக் கிளர் மணி முடித் தேவர் கோன் தன் முன்
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்
ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இத்
தோன்று படு மா நகர்த் தோன்றிய நாள் முதல்
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்
மாபெருந்தேவி! மாதர் யாரினும்
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்

24-020

பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
அரங்கக் கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடகக் கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின்
மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்!
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற

24-030

பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை
தானே தமியள் ஒருத்தி தோன்ற
"இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்?" என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக்
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும்
உற்று உணர் உடம்பினும் வெற்றிச் சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில் இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த
மலர் வாய் அம்பின் வாசம் கமழப்

24-040

பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொரு அறு பூங்கொடி போயின அந் நாள்
"யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி!" என்றே
வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
"என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்?

24-050

சொல்லுமின்" என்று தொழ அவன் உரைப்பான்
"கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்
"இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும்" எனக் கணி எடுத்து உரைத்தனன்
ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது

24-060

பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள்
தீவகச் சாந்தி செய்யா நாள் உன்
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
மணிமேகலை தன் வாய்மொழியால் அது
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக்
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழாக் கோள் மறவேல்" என்று
மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக்

24-070

காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
தன் பெயர் மடந்தை துயருறுமாயின்
மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என
அஞ்சினேன் அரசன் தேவி!' என்று ஏத்தி
'நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை
என் மனைத் தருக' என இராசமாதேவி
'கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை
புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி

24-080

நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள்
என்னொடு இருக்கும்' என்று ஈங்கு இவை சொல்வுழி
மணிமேகலை திறம் மாதவி கேட்டு
துணி கயம் துகள் படத் துளங்கிய அதுபோல்
தௌியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன்
மற வேல் மன்னவன் தேவி தன்பால் வரத்
தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்

24-090

எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளைக் கையால்
தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க
'அறிவு உண்டாக' என்று ஆங்கு அவன் கூறலும்
இணை வளை நல்லாள் இராசமாதேவி
அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி
திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்த பின்
"யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என்
காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது
நாத் தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து
மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு!' என

24-100

'தேவி கேளாய்! செய் தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்
பிறந்தார் "மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார்" என்கை இயல்பே இது கேள்
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப் பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்
அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர்

24-110

"பேதைமை என்பது யாது?" என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்று இரு வகையான்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி

24-120

வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்
"தீவினை என்பது யாது?" என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ முன்றும்
பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்

24-130

பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்
"நல்வினை என்பது யாது?" என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கித்தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர்

24-140

அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்!
புரை தீர் நல் அறம் போற்றிக் கேண்மின்
மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ!
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்'
என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
'தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின்

24-150

இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
"மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
"எனக்கு இடர் உண்டு" என்று இரங்கல் வேண்டா
மனக்கு இனியீர்!" என்று அவரையும் வணங்கி
வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த
அந்தி மாலை ஆய் இழை போகி

24-160

உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை
இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர்
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து
ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி
'இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும்
மன்னவன் யார்?" என மாதவன் கூறும்
'நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன்

24-170

ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும்
ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல்' என
தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன்
அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என்

24-176


25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை

அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து
தருமசாவகன் தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார்?' என்ன

25-010

காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
'நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம்
கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக்
கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகி
காவிரிப் படப்பை நல் நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்
ஆங்கு அவள் இவள்! அவ் அகல் நகர் நீங்கி
ஈங்கு வந்தனள்' என்றலும் இளங்கொடி

25-020

'நின் கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது
மன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய்
அப் பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்று
இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ?
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது
பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்
ஆங்கு வருவாய் அரச! நீ' என்று அப்
பூங் கமழ் தாரோன்முன்னர்ப் புகன்று
மை அறு விசும்பின் மடக்கொடி எழுந்து
வெய்யவன் குடபால் வீழாமுன்னர்

25-030

> வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்
பூ நாறு அடைகரை எங்கணும் போகி
மணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடி
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழுது வலம் கொள்ள அத் தூ மணிப்பீடிகைப்
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த
'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்

25-040

'விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்கு அஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின்
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன்
உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும்
அந் நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை
மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம்' எனச் சாற்றிக் காட்டி

25-050

நாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர்
அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
"பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகை
கரியவன் இட்ட காரணம் தானும்
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
என் பிறப்பு உணர்த்தலும் என்?" என்று யான் தொழ
"முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது

25-060

வானவன் வணங்கான் மற்று அவ் வானவன்
பெருமகற்கு அமைத்து 'பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக' என்றே
அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும்
இருள் அறக் காட்டும்" என்று எடுத்து உரைத்தது
அன்றே போன்றது அருந் தவர் வாய்மொழி
இன்று எனக்கு' என்றே ஏத்தி வலம் கொண்டு
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்
ஆங்கு அப் பொழில் விட்டு அகநகர் புக்கு
தந்தை முனியா தாய் பசு ஆக

25-070

வந்த பிறவியும் மா முனி அருளால்
குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்
அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
மா முனி அருளால் மக்களை இல்லோன்
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்
ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும்
தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்தி
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து
'செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க

25-080

அரைசு வீற்றிருந்து புரையோர்ப் பேணி
நாடகம் கண்டு பாடல் பான்மையின்
கேள்வி இன் இசை கேட்டு தேவியர்
ஊடல் செவ்வி பார்த்து நீடாது
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி
மதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக்
கருப்பு வில்லி அருப்புக் கணை தூவ

25-090

தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து
தூ அறத் துறத்தல் நன்று' எனச் சாற்றி
'தௌிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது
மணிமேகலை தான் காரணம் ஆக' என்று
அணி மணி நீள் முடி அரசன் கூற
'மனம் வேறு ஆயினன் மன்' என மந்திரி
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
'எம் கோ வாழி! என் சொல் கேண்மதி
நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்

25-100

பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெங் கோடையில் கார் தோன்றியதென
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா
நீ ஒழிகாலை நின் நாடு எல்லாம்

25-110

தாய் ஒழி குழவி போலக் கூஉம்
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ!
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே!
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்
மதி மாறு ஒர்ந்தனை மன்னவ!' என்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
'மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த

25-120

தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்
அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும்
ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன்' என
'கலம் செய் கம்மியர் வருக' எனக் கூஉய்
இலங்கு நீர்ப் புணரி எறி கரை எய்தி
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை
தங்காது அக் கலம் சென்று சார்ந்து இறுத்தலும்
புரை தீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும்

25-130

தே மலர்ச் சோலைத் தீவகம் வலம் செய்து
'பெருமகன்! காணாய் பிறப்பு உணர்விக்கும்
தரும பீடிகை இது' எனக் காட்ட
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை உயர் மணிப் பீடிகை
கைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தை
மை அறு மண்டிலம் போலக் காட்ட
'என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்
தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்!
மாரி நடு நாள் வயிறு காய் பசியால்

25-140

ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்
"நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
ஏடா! அழியல் எழுந்து இது கொள்க" என
அமுதசுரபி அங்கையில் தந்து என்
பவம் அறுவித்த வானோர் பாவாய்!
உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும்
மணி திகழ் அவிர் ஒளி மடந்தை! நின் அடி
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும்

25-150

நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
மறந்து வாழேன் மடந்தை!' என்று ஏத்தி
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து
தென் மேற்காகச் சென்று திரை உலாம்
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்
தூ மலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப
ஆபுத்திரனோடு ஆய் இழை இருந்தது
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி
'அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு

25-160

பெருந் துயர் தீர்த்த அப் பெரியோய்! வந்தனை
அந் நாள் நின்னை அயர்த்துப் போயினர்
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப
ஆய் மலர்ப் புன்னை அணி நிழல் கீழால்
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய

25-170

என்பு உடை யாக்கை இருந்தது காணாய்
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கிப்
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
கொலைவன் அல்லையோ? கொற்றவன் ஆயினை!
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய
மடவரல் நல்லாய்! நின் தன் மா நகர்
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள்
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப் பகை வானவன் வழியில் தோன்றிய

25-180

புனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இத்
தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்ட
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து
"கொற்றவன் மகன் இவன் கொள்க" எனக் கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி
பழுது இல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத்
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள்

25-190

இலங்கு நீர் அடைகரை அக் கலம் கெட்டது
கெடு கல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
நல் மணி இழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
"அணி நகர் தன்னை அலை கடல் கொள்க" என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்

25-200

கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தடக் கை வானவன் போல
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க
ஒரு தனி போயினன் உலக மன்னவன்
அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள்
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்
முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன்

25-210

அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால்
மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை' என்று
அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின்
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்
துன்னிய தூ மணல் அகழத் தோன்றி
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கித்
தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து

25-220

'என் உற்றனையோ இலங்கு இதழ்த் தாரோய்?
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது
மன்னா! நின் தன் மறு பிறப்பு உணர்த்தி
அந்தரத் தீவினும் அகன் பெருந் தீவினும்
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு?
"அறம் எனப்படுவது யாது?" எனக் கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

25-230

கண்டது இல்' எனக் காவலன் உரைக்கும்
'என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்
நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன்
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை
நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான்' என
'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்
மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும்
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்று
அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என்

25-239


26 வஞ்சி மாநகர் புக்க காதை

அணி இழை அந்தரம் ஆறா எழுந்து
தணியாக் காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து
வணங்கி நின்று குணம் பல ஏத்தி
'அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது
கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது
அருளல் வேண்டும்' என்று அழுது முன் நிற்ப
ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள்

26-010

'எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மா பெருந் தெய்வம்
"இது நீர் முன் செய் வினையின் பயனால்
காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத்
தாய மன்னவர் வசுவும் குமரனும்
சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும்
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப்

26-020

பல் கலன் கொண்டு பலர் அறியாமல்
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
பண்டக் கலம் பகர் சங்கமன் தன்னைக்
கண்டனர் கூறத் தையல் நின் கணவன்
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும்
தீத் தொழிலாளன் தெற்றெனப் பற்றி
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
குற்றம் இலோனைக் கொலைபுரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி

26-030

இட்ட சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது" எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்
மேற் செய் நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ் வினை இறுதியின் அடு சினப் பாவம்
எவ் வகையானும் எய்துதல் ஒழியாது
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு
யாங்கணும் இரு வினை உய்த்து உமைப் போல
நீங்கு அரும் பிறவிக் கடலிடை நீந்தி

26-040

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்
"மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
ஒரு பெருந் திலகம்" என்று உரவோர் உரைக்கும்
கரவு அரும் பெருமைக் கபிலை அம் பதியின்
அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து
துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றிப்
போதிமூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும்

26-050

இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி
எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும்
அண்ணல் அறக் கதிர் விரிக்கும்காலை
பைந்தொடி! தந்தையுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி
அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
துறவி உள்ளம் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்
அத் திறம் ஆயினும் அநேக காலம்

26-060

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
நறை கமழ் கூந்தல் நங்கை! நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இவ் இயல்பு' எனத் தாய் எடுத்து உரைத்தலும்
"இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உருக் கொள்க" என
மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த

26-070

மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய
நில நாடு எல்லை தன் மலை நாடென்ன

26-080

கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க
தேரும் மாவும் செறி கழல் மறவரும்
கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ
கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து
கனக விசயர் முதல் பல வேந்தர்
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத்
தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச்
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க
பொன் கொடிப் பெயர்ப் படூஉம் பொன் நகர்ப் பொலிந்தனள்
திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின்
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என்

26-094


27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை

'நவை அறு நன் பொருள் உரைமினோ' என
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்தி 'நின் கடைப்பிடி இயம்பு' என
'வேத வியாதனும் கிருதகோடியும்
ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்
தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்
காண்டல் கருதல் உவமம் ஆகமம்
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு

27-010

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு
எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால்
பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி

27-020

பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும்
கருத்து அளவு ஆவது
குறிக்கொள் அனுமானத்து அனுமேயத்
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம்
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்

27-030

கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்
உடங்கு "எழில் யானை அங்கு உண்டு" என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல்
முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு
"இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்

27-040

உவமம் ஆவது ஒப்புமை அளவை
"கவய மா ஆப் போலும்" எனக் கருதல்
ஆகம அளவை அறிவன் நூலால்
"போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல்
அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கை
இருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல்
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்து
எய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தௌிதல்

27-050

அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத்
தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல்
மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்
எட்டு உள பிரமாண ஆபாசங்கள்
சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம்
தேராது தௌிதல் கண்டு உணராமை
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல்

27-060

நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது
எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல்
திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல்
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
மையல் தறியோ? மகனோ? என்றல்
தேராது தௌிதல் செண்டு வௌியில்
ஓராது தறியை மகன் என உணர்தல்
கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று
அண்டலை முதலிய கண்டும் அறியாமை

27-070

இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன
சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப்
புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல்
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று
பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள்
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்

27-080

தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
உவமானம் அருத்தாபத்தி அபாவம்
இவையே இப்போது இயன்று உள அளவைகள்'
என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' என
நின்ற சைவ வாதி நேர்படுதலும்
'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன
'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க்

27-090

கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன்
'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர்
தேவன் இட்ட முட்டை' என்றனன்
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன்
'கற்பம் கை சந்தம் கால் எண் கண்

27-100

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும்
வேதியன் உரையின் விதியும் கேட்டு
'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற
எத் திறத்தினும் இசையாது இவர் உரை' என
ஆசீவக நூல் அறிந்த புராணனை
'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என
'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்

27-110

புல்லிக் கிடந்து புலப்படுகின்ற
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும்
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே
வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து

27-120

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத்
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால்
ஆதி இல்லாப் பரமாணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
முது நீர் அணு நில அணுவாய்த் திரியா
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா

27-130

அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம்
வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்
நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும்

27-140

துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே
இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச்
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திடமாட்டா
ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்
மாலைப் போதில் ஒரு மயிர் அறியார்
சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும்
கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும்

27-150

பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் ிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி
பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர்
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்
அழியல் வேண்டார் அது உறற்பாலார்
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்
அது மண்டலம் என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்

27-160

பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும்
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது
மற்கலி நூலின் வகை இது' என்ன
சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை 'நீ உரை நின்னால்
புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை,
அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்பு' என விளம்பல் உறுவோன்

27-170

'இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்
அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும்
தீது இல் சீவனும் பரமாணுக்களும்
நல்வினையும் தீவினையும் அவ் வினையால்
செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த
ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும்
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே

27-180

தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்
நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம்
பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம்
இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத்
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித்தாகி அதன் மாத்திகாயமும்
எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 2

27-190

காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
சீவன் உடம்போடு ஒத்துக் கூடி
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்
சீர்சால் நல்வினை தீவினை அவை செயும்
வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய்
அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல்

27-200

அது வீடு ஆகும்' என்றனன் அவன்பின்
'இது சாங்கிய மதம்' என்று எடுத்து உரைப்போன்
'தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய்
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்
எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச்
சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து
மான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டு
அதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு அதன்கண்
வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கி
ஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின்

27-210

தன்மை வௌிப்பட்டு அதில் மண் வௌிப்பட்டு
அவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டு
ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும்
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும்
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய்
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என

27-220

ஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்த
பூத விகாரத்தால் மலை மரம் முதல்
ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவை சென்று அடங்கி
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்
அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி
எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி
அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்

27-230

ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்' எனச்
செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு

27-240

'வைசேடிக! நின் வழக்கு உரை' என்ன
'பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது
குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப்
பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான்
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்

27-250

சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
மாசு இல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம்
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்
போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின்
சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை

27-260

ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
'பூத வாதியைப் புகல் நீ' என்னத்
'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின்
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும்
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்

27-270

அவ் அப் பூத வழி அவை பிறக்கும்
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்'
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
'நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின்
அறிந்தோர் உண்டோ?' என்று நக்கிடுதலும்

27-280

'தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை' என்றலும் 'நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்?
மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய
ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்' என
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என்

27-289


28. கச்சி மாநகர் புக்க காதை

ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வே்று மன்னரும் உழிஞை வெம் படையும்
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து
சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர்
கருங் குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும்
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள்
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும்

28-010

மேலை மாதவர் பாதம் விளக்கும்
சீல உபாசகர் செங் கை நறு நீரும்
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால்
செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும்
என்று இந் நீரே எங்கும் பாய்தலின்
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி
தாமரை குவளை கழுநீர் ஆம்பல்

28-020

பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த
வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன
நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும்
கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு
கடை காப்பு அமைந்த காவலாளர்
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும்

28-030

பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர்
கள் நொடையாட்டியர் காழியர் கூவியர்
மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும்
செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும்
பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்
மாலைக்காரரும் காலக் கணிதரும்

28-040

நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப
நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும்
பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு
இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும்
வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின்
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்
பால் வேறு ஆக எண் வகைப் பட்ட
கூலம் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்

28-050

போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோர் அருந் தொழில் குறையா மறுகும்
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்
எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும்

28-060

கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்
வேணவா மிகுக்கும் விரை மரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும்
சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்
இந்திர விகாரம் என எழில் பெற்று

28-070

நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர்
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள்
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்
தானப் பயத்தால் சாவக மன்னவன்
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்
செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள

28-080

அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு
இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் தன் நாடு எய்த
தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும்
புக்க பின் அந்தப் பொய் உருவுடனே
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்

28-090

சொல்லினள் ஆதலின் 'தூயோய்! நின்னை என்
நல்வினைப் பயன்கொல் நான் கண்டது?' எனத்
'தையல்' கேள் நின் தாதையும் தாயும்
செய்த தீவினையின் செழு நகர் கேடுற
துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன்
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன்

28-100

புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம்
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்
குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள்
துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும்
இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்
இலங்கா தீவத்துச் சமனொளி என்னும்
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர்

28-110

அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின்
புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து
கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி
முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப்
பங்கயச் சேவடி விளக்கி பான்மையின்
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம்
பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை

28-120

இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல்
துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள்
நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை
முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு
நீங்காக் காதல் பாங்கன் ஆதலின்
தாங்க நல் அறம் தானும் கேட்டு
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி
தன்னான் இயன்ற தனம் பல கோடி
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய

28-130

வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம்
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத்
தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக்
"காவிரிப் பட்டினம் கடல் கொளும்" என்ற அத்
தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது
இன்னும் கேளாய் நல் நெறி மாதே!
"தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்
தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால்
ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப்

28-140

பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம்
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக்
காதலி தன்னொடு கபிலை அம் பதியில்
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும்" என்று
அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச்
சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும்
அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்
நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ?
தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன்

28-150

ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது
பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின்
மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள்
பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர்
அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய்
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய்
ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின்

28-160

கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன்' என
அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித்
திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக்
கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி
வட திசை மருங்கின் வானத்து இயங்கித்
தேவர் கோமான் காவல் மாநகர்
மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய
பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை
பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு

28-170

நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து
தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி
செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப்
பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக
தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்
வையம் காவலன் தன் பால் சென்று
கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
'கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள்

28-180

> அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு
தங்காது இப் பதித் தருமதவனத்தே
வந்து தோன்றினள் மா மழை போல்' என
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி
'கந்திற்பாவை கட்டுரை எல்லாம்
வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்தி
ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று
'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ
கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ
நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம்

28-190

அலத்தல்காலை ஆகியது அறியேன்
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி
"உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர்
காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின்
ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்
தாங்கா மாரியும் தான் நனி பொழியும்
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால்
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது

28-200

பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என
பொய்கையும் பொழிலும் புனைமின்" என்று அறைந்து அத்
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது
இவ் இடம்" என்றே அவ் இடம் காட்ட அத்
தீவகம் போன்ற காஅகம் பொருந்திக்
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்
'பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய
அங்கு அப் பீடிகை இது என' அறவோன்

28-210

பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து
தீவதிலகையும் திரு மணிமேகலா
மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப்
பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை
வைத்து நின்று 'எல்லா உயிரும் வருக' என
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்

28-220

மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும்

28-230

சீர் பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப
வசித் தொழில் உதவி வளம் தந்தது என
பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச்
செல்லும்காலை தாயர் தம்முடன்
அல்லவை கடிந்த அறவண அடிகளும்
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்
சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி
'நன்று' என விரும்பி நல் அடி கழுவி

28-240

ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப்
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின்
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து
'வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம்' என
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என்

28-245


29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை

இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
'வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
தன் மகள் பீலிவளை தான் பயந்த
புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி
தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும்
வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக்
கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது

29-010

அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வுற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்
தன் விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்
நின் உயிர்த் தந்தை நெடுங் குலத்து உதித்த
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங் கம்பளத்துத்
துன்னியதென்னத் தொடு கடல் உழந்துழி
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா
வழுவாச் சீலம் வாழ்மையின் கொண்ட

29-020

பான்மையின் தனாது பாண்டு கம்பளம்
தான் நடுக்குற்ற தன்மை நோக்கி
"ஆதி முதல்வன் போதி மூலத்து
நாதன் ஆவோன் நளி நீர்ப் பரப்பின்
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர்" எனப்
பவ்வத்து எடுத்து "பாரமிதை முற்றவும்
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும்
பிறவிதோறு உதவும் பெற்றியள்" என்றே
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரைத்

29-030

தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும்
அன்றே கனவில் நனவென அறைந்த
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும்
பகரும் நின் பொருட்டால் இப் பதிப் 'படர்ந்தனம்'
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி
'பொன் திகழ் புத்த பீடிகை போற்றும்
தீவதிலகையும் இத் திறம் செப்பினள்
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே

29-040

வேற்றுருக் கொண்டு வெவ் வேறு உரைக்கும்
நூல் துறைச் சமய நுண் பொருள் கேட்டே
அவ் உரு என்ன ஐ வகைச் சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள்! மெய்ப்பொருள் அருளுக' என்ன
'நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச்
சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி
விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள்

29-050

மற்று அவை அனுமானத்தும் அடையும் என
காரண காரிய சாமானியக் கருத்து
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது
கனலில் புகைபோல் காரியக் கருத்தே
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில்
பக்கம் "இம் மலை நெருப்புடைத்து" என்றல்
"புகையுடைத்து ஆதலால்" எனல் பொருந்து ஏது

29-060

"வகை அமை அடுக்களை போல்" திட்டாந்தம்
உபநயம் "மலையும் புகையுடைத்து" என்றல்
நிகமனம் "புகையுடைத்தே நெருப்புடைத்து" என்றல்
"நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்
பொருத்தம் இன்று புனல்போல்" என்றல்
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்
வைதன்மிய திட்டாந்தம் ஆகும்
தூய காரிய ஏதுச் சுபாவம்
ஆயின் "சத்தம் அநித்தம்" என்றல்
பக்கம் "பண்ணப்படுதலால்" எனல்

29-070

பக்க தன்ம வசனம் ஆகும்
"யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது
அநித்தம் கடம் போல்" என்றல் சபக்கத்
தொடர்ச்சி "யாதொன்று அநித்தம் அல்லாதது
பண்ணப் படாதது ஆகாசம் போல்" எனல்
விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது
"இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை" என்றல்
செவ்விய பக்கம் "தோன்றாமையில்" எனல்
பக்க தன்ம வசனம் ஆகும்

29-080

"இன்மையின் கண்டிலம் முயற்கோடு" என்றல்
அந் நெறிச் சபக்கம் "யாதொன்று உண்டு அது
தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்" எனல்
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்
இவ்வகை ஏது பொருள் சாதிப்பன
"என்னை காரியம் புகை சாதித்தது?" என்னின்
"புகை உள இடத்து நெருப்பு உண்டு" என்னும்
அன்னுவயத்தாலும் "நெருப்பு இலா இடத்துப்
புகை இல்லை" என்னும் வெதிரேகத்தாலும்
புகஈ நெருப்பைச் சாதித்தது என்னின்

29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்
மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்
அன்னுவயம் சாதிக்கின் "முன்னும்
கழுதையையும் கணிகையையும்
தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை

29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா" "நெருப்பு
இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்" என்னின்
"நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்
நரி வாலும் இலையா காணப்பட்ட
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்
அரிதாம்" அதனால் அதுவும் ஆகாது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
திட்டாந்தத்திலே சென்று அடங்கும்

29-110

பக்கம் ஏது திட்டாந்தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில்
வௌிப்பட்டுள்ள தன்மியினையும்
வௌிப்பட்டுள சாத்திய தன்மத்திறம்
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும்
தன்கண் சார்த்திய நயம் தருதல் உடையது
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான்
"சத்தம் அநித்தம் நித்தம்" என்று ஒன்றைப்
பற்றி நாட்டப்படுவது தன்மி
சத்தம் சாத்திய தன்மம் ஆவது

29-120

நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
"ஒத்த அநித்தம் கட ஆதி போல்" எனல்
விபக்கம் விளம்பில் "யாதொன்று யாதொன்று
அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது

29-130

ஆ அகாசம் போல்" என்று ஆகும்
பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும்
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு
மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க
ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என
சாதன்மியம் எனப்படுவது தானே
"அநித்தம் கட ஆதி அன்னுவயத்து" என்கை
வைதன்மிய திட்டாந்தம் "சாத்தியம்

29-140

எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை"
இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன
தீய பக்கமும் தீய ஏதுவும்
தீய எடுத்துக்காட்டும் ஆவன
பக்கப் போலியும் ஏதுப் போலியும்
திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்
பக்கப்போலி ஒன்பது வகைப்படும்
பிரத்தியக்க விருத்தம் அனுமான
விருத்தம் சுவசன விருத்தம் உலோக
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர

29-150

சித்த விசேடணம் அப்பிரசித்த
விசேடியம் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் என
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
"சத்தம் செவிக்குப் புலன் அன்று" என்றல்
மற்று அனுமான விருத்தம் ஆவது
கருத்து அளவையை மாறாகக் கூறல்
"அநித்தியக் கடத்தை நித்தியம்" என்றல்
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்

29-160

"என் தாய் மலடி" என்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
"இலகு மதி சந்திரன் அல்ல" என்றல்
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல்
அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
"அநித்தியத்தை நித்தியம்" என நுவறல்
அப்பிரசித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக்
குறித்து "சத்தம் விநாசி" என்றால்

29-170

அவன் அவிநாசவாதி ஆதலின்
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
அப்பிரசித்த விசேடியம் ஆவது
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனைக் குறித்து "ஆன்மாச் சைதனியவான்"
என்றால் அவன் அநான்ம வாதி
ஆதலின் தன்மி அப்பிரசித்தம்
அப்பிரசித்த உபயம் ஆவது
மாறு ஆனோர்க்குத் தன்மி சாத்தியம்

29-180

ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்
பகர் வைசேடிகன் பௌத்தனைக் குறித்து
"சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம்
ஆன்மா" என்றால் சுகமும் ஆன்மாவும்
தாம் இசையாமையின் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்
மாறு ஆம் பௌத்தற்கு "சத்த அநித்தம்"
கூறில் அவன்ன் கொள்கை அஃது ஆகலில்
வேறு சாதிக்க வேண்டாது ஆகும்

29-190

ஏதுப் போலி ஓதின் மூன்று ஆகும்
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்ம் என
உபய அசித்தம் அன்னியதர அசித்தம்
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம்
என நான்கு அசித்தம் உபய அசித்தம்
சாதன ஏது இருவர்க்கும் இன்றி
"சத்தம் அநித்தம் கண் புலத்து" என்றல்
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்
"சத்தம் செயலுறல் அநித்தம்" என்னின்

29-200

சித்த வௌிப்பாடு அல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்த அசித்தம் ஆவது
ஏது சங்கயமாய்ச் சாதித்தல்
ஆவி பனி என ஐயுறா நின்றே
"தூய புகை நெருப்பு உண்டு" எனத் துணிதல்
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
"ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம்" என்னின்
"ஆகாசம் பொருள் அல்ல" என்பாற்குத்

29-210

தன்மி அசித்தம் அநைகாந்திகமும்
சாதாரணம் அசாதாரணம் சபக்கைக
தேசவிருத்தி விபக்க வியாபி
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி உபயைகதேச விருத்தி
விருத்த வியபிசாரி என்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும்
ஏதுப் பொதுவாய் இருத்தல் "சத்தம்
அநித்தம் அறியப்படுதலின்" என்றால்
"அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்

29-220

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ?
ஆகாசம் போல நித்தத்து அறிவோ?"
என்னல் அசாதாரணம் ஆவது தான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்
சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல்
"சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்"
என்னின் "கேட்கப்படல்" எனும் ஏதுப்
பக்கத்து உள்ளதாயின் அல்லது
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம்

29-230

சபக்கைகதேச விருத்தி விபக்க
வியாபி ஆவது ஏதுச் சபக்கத்து
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும்
உண்டாதல் ஆகும் "சத்தம் செயலிடைத்
தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்"
என்றால் "அநித்தம்" என்ற ஏதுச்
செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம்
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் "கடம் போல்

29-240

அழிந்து செயலில் தோன்றுமோ? மின் போல்
அழிந்து செயலில் தோன்றாதோ?" எனல்
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி ஆவது ஏது விபக்கத்து
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல்
"சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம் ஆதலின்" எனின்
அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு
விபக்க ஆகாயத்தினும் மின்னினும்
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது
சபக்கக் கட ஆதிகள் தம்மில்

29-250

எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல "மின் போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றாதோ? கடம்போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றுமோ? எனல்
உபயைகதேச விருத்தி ஏதுச்
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி
ஓர் தேசத்து வர்த்தித்தல் "சத்தம்
நித்தம் அமூர்த்தம் ஆதலின்" என்னின்
அமூர்த்த ஏது நித்தத்தினுக்குச்
சபக்க ஆகாச பரமாணுக்களின்
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம்

29-260

பரமாணுவின் நிகழாமையானும்
விபக்கமான கட சுக ஆதிகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று
"அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ?
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ?" எனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
"சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின்
ஒத்தது" எனின் அச் செயலிடைத் தோன்றற்குச்

29-270

சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க
"சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
சத்தத்துவம் போல்" எனச் சாற்றிடுதல்
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும் அத்

29-280

தன்மச் சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் "சத்தம் நித்தம்
பண்ணப்படுதலின்" என்றால் பண்ணப்
படுவது அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட
ஏதுச் சாத்திய தன்ம நித்தத்தை விட்டு
அநித்தம் சாதித்தலான் விபரீதம்
தன்ம விசேட விபரீத சாதனம்
சொன்ன ஏதுச் சாத்திய தன்மம்
தன்னிடை விசேடம் கெடச் சாதித்தல்

29-290

"கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்
சயன ஆசனங்கள் போல" என்றால்
"தொக்கு நிற்றலின்" என்கின்ற ஏதுச்
சயன ஆசனத்தின் பராத்தம்போல் கண் முதல்
இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்துச்
சயன ஆசனவானைப் போல் ஆகிக்
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்ச்
சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள
ஆன்மாவைச் சாவயவமாகச்

29-300

சாதித்துச் சாத்திய தன்மத்தின்
விசேடம் கெடுத்தலின் விபரீதம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை
ஏதுத் தானே விபரீதப்படுத்தல்
"பாவம் திரவியம் கன்மம் அன்று
குணமும் அன்று எத் திரவியம் ஆம் எக்
குண கன்மத்து உண்மையின் வேறாதலால்
சாமானிய விசேடம்போல்" என்றால்
"பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்

29-310

நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால்" என்று
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத்து இல்லாமையினும்
திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம்
போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும்
பாவம் என்று பகர்ந்த தன்மியினை
அபாவம் ஆக்குதலான் விபரீதம்
தன்மி விசேட விபரீத சாதனம்
தன்மி விசேட அபாவம் சாதித்தல்

29-320

முன்னம் காட்டப்பட்ட ஏதுவே
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம்
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம்
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன
தாமே திட்டாந்த ஆபாசங்கள்
திட்டாந்தம் இரு வகைப் படும் என்று முன்
கூறப்பட்டன இங்கண் அவற்றுள்
சாதன்மிய திட்டாந்த ஆபாசம்
ஓதில் ஐந்து வகை உளதாகும்

29-330

சாதன தன்ம விகலமும் சாத்திய
தன்ம விகலமும் உபய தன்ம
விகலமும் அநன்னுவயம் விபரீதான்
னுவயம் என்ன வைதன்மிய திட்
டாந்த ஆபாசமும் ஐ வகைய
சாத்தியா வியாவிருத்தி
சாதனா வியாவிருத்தி
உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம்
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்
சாதன தன்ம விகலம் ஆவது

29-340

திட்டாந்தத்தில் சாதனம் குறைவது
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
ஆதலான் காண்புற்றது பரமாணுவில்" எனின்
திட்டாநதப் பரமாணு
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான்
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச்
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும்
சாத்திய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்தில்

29-350

சாத்திய தன்மம் குறைவுபடுதல்
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
புத்திபோல்" என்றால்
திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம்
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும்
உபய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே

29-360

சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
அன்றியும் அது தான் சன்னும் அசன்னும்
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள
உபய தன்ம விகலம் ஆவது
உள்ள பொருட்கண் சாத்திய சாதனம்
கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
கடம் போல்" எனின் திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகிச்

29-370

சாத்தியமாய் உள நித்தத்துவமும்
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்
அசன்னா உள்ள உபய தன்ம விகலம்
இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம்
என்னும் இரண்டும் குறையக் காட்டுதல்
"சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம்
ஆகாசம் போல்" எனும் திட்டாந்தத்து
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்

29-380

இரண்டும் "ஆகாசம் அசத்து" என்பானுக்கு
அதன்கண் இன்மையானே குறையும்
"உண்டு" என்பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்
"சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம்" எனும்
அன்னுவயம் சொல்லாது "குடத்தின்கண்ணே

29-390

கிருத்த அநித்தம் காணப்பட்ட"
என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
விபரீதான்னுவயம் வியாபகத்துடைய
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்
"சத்தம் அநித்தம் கிருத்தத்தால்" எனின்
"யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்" என
வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது
"யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம்" என
வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை

29-400

இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்
வைதன்மிய திட்டாந்தத்துச்
சாத்தியா வியாவிருத்தி ஆவது
சாதன தன்மம் மீண்டு
சாத்திய தன்மம் மீளாதுஒழிதல்
"சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால்
"யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்" எனின்
அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின்

29-410

சாதன அமூர்த்தம் மீண்டு
சாத்திய நித்தம் மீளாதுஒழிதல்
சாதனா வியாவிருத்தி ஆவது
சாத்திய தன்மம் மீண்டு
சாதன தன்மம் மீளாது ஒழிதல்
"சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால்
"யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது
அமூர்த்தமும் அன்று கன்மம்போல்" என்றால்
வைதன்மிய திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கன்மம்

29-420

அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
சாத்தியமான நித்தியம் மீண்டு
சாதனமான அமூர்த்தம் மீளாது
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
வைதன்மிய திட்டாந்தத்தினின்று
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்
உண்மையின் உபயா வியாவிருத்தி
இன்மையின் உபயா வியாவிருத்தி
என இருவகை உண்மையின்
உபயா வியாவிருத்தி உள்ள பொருட்கண்

29-430

சாத்திய சாதனம் மீளாதபடி
வைதன்மிய திட்டாந்தம் காட்டல்
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்"
என்றாற்கு "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல்" என்றால்
"வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
ஆகாசம் பொருள்" என்பாற்கு
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்

29-440

உபயா வியாவிருத்தி ஆவது
"சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்"
என்ற இடத்து "யாதொன்று யாதொன்று அநித்தம்
மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல்" என
வைதன்மிய திட்டாந்தம் காட்டில்
"ஆகாசம் பொருள் அல்ல" என்பானுக்கு
ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
மீட்சியும் மீளாமையும் இலையாகும்
அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம்

29-450

இல்லா இடத்துச் சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் "சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால்" என்றால்
"யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப்படுவது அல்லாது அதுவும்
அன்று" எனும் இவ் வெதிரேகம் தெரியச்
சொல்லாது "குடத்தின்கண்ணே பண்ணப்
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்"
என்னின் வெதிரேகம் தெரியாது
விபரீத வெதிரேகம் ஆவது

29-460

பிரிவைத் தலைதடுமாறாச் சொல்லுதல்
"சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்"
என்றால் என்று நின்ற இடத்து
"யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ்
இடத்து மூர்த்தமும் இல்லை" எனாதே
"யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ்
இடத்து நித்தமும் இல்லை" என்றால்
வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால்
காட்டும் அனுமான ஆபாசத்தின்
மெய்யும் பொய்யும் இத்திற விதியால்
ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என்

29-472


30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

தானம் தாங்கிச் சீலம் தலைநின்று
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
புத்த தன்ம சங்கம் என்னும்
முத் திற மணியை மும்மையின் வணங்கி
சரணாகதியாய்ச் 'சரண்' சென்று அடைந்தபின்
முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்
'அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப
துடிதலோகம் ஒழியத் தோன்றி
போதி மூலம் பொருந்தியிருந்து

30-010

மாரனை வென்று வீரன் ஆகி
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை
இறந்த காலத்து எண் இல் புத்தர்களும்
சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்ச்
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும்
இலக்கு அணத் தொடர்தலின்
மண்டில வகையாய் அறியக் காட்டி
எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி

30-020

ஈங்கு து இல்லாவழி இல்லாகி
ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின்
தக்க தக்க சார்பின் தோற்றம் எனச்
சொற்றகப்பட்டும் இலக்கு அணத் தொடர்பால்
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய்
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய்
தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய்
குற்றமும் வினையும் பயனும் விளைந்து
நிலையில வறிய துன்பம் என நோக்க

30-030

உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி
ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய்
நின்மதி இன்றி ஊழ்பாடு இன்றிப்
பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய்
பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்
யானும் இன்றி என்னதும் இன்றி

30-040

போனதும் இன்றி வந்ததும் இன்றி
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர்
அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர்

30-050

"பேதைமை என்பது யாது?" என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்று இரு வகையால்
சொல்லப்பட்ட கருவில் சார்தலும்

30-060

கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி
வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்
"தீவினை என்பது யாது?" என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று

30-070

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்
"நல்வினை என்பது யாது?" என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி

30-080

மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே
அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப
வாயில் ஆறும் ஆயுங்காலை
உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும்
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்

30-090

வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை
பற்று எனப்படுவது பசைஇய அறிவே
பவம் எனப்படுவது கரும ஈட்டம்
தரும் முறை இது எனத் தாம்தாம் சார்தல்
பிறப்பு எனப்படுவது அக் கருமப் பெற்றியின்
உறப் புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய்
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும்

30-100

தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்
சாக்காடு என்பது அருஉருத் தன்மை
யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல்
பேதைமை சார்வா செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சார்வா அரூரு ஆகும்
அருஉருச் சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்

30-110

வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவல் இல் துன்பம் தலைவரும் என்ப
ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி
பேதைமை மீள செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும்

30-120

உணர்ச்சி மீள அருஉரு மீளும்
அருஉரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீள பற்று மீளும்
பற்று மீள கருமத் தொகுதி
மீளும் கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச்

30-130

சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்று இக் கடை இல் துன்பம்
எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி
ஆதிக் கண்டம் ஆகும் என்ப
பேதைமை செய்கை என்று இவை இரண்டும்
காரண வகைய ஆதலானே
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன
முன்னவற்று இயல்பான் துன்னிய ஆதலின்

30-140

மூன்றாம் கண்டம் வேட்கை பற்று
கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை
மற்று அப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
குற்றமும் வினையும் ஆகலானே
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம்
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின்
பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி

30-150

கன்மக் கூட்டத்தொடு வரு பிறப்பிடை
முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி
மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே
தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும்
உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும்
உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப்
புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்
காலம் மூன்றும் கருதுங்காலை
இறந்த காலம் என்னல் வேண்டும்

30-160

மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்றம் என்று இவை சொல்லுங்காலை
எதிர்காலம் என இசைக்கப்படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவலம் அரற்று கவலை கையாறுகள்
குலவிய குற்றம் எனக் கூறப்படுமே
அவாவே பற்றே பேதைமை என்று இவை

30-170

புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும்
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிறப்பு மூப்புப் பிணி சாவு இவை
நிகழ்ச்சிப் பயன் ஆங்கே நேருங்காலை
குற்றும் வினையும் பயனும் துன்பம்
பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா
எப்பொருளுக்கும் ஆன்மா இலை என
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே

30-180

அவலம் அரற்றுக் கவலை கையாறு என
நுவலப் படுவன நோய் ஆகும்மே
அந் நோய் தனக்குப்
பேதைமை செய்கை அவாவே பற்றுக்
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும்
துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவது
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன

30-190

அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின்
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச்
சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இந்

30-200

நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும்
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல்
இயைந்துரை என்பது எழுத்துப் பல கூடச்
சொல் எனத் தோற்றும் பல நாள் கூடிய
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல்
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயற்கோடு
உள்ளது சார்ந்த உள் வழக்காகும்
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி

30-210

உள்ளது சார்ந்த இல் வழக்காகும்
சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை
இல்லது சார்ந்த உண்மை வழக்காகும்
காரணம் இன்றிக் காரியம் நேர்தல்
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும்
முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல்
நான்கு நயம் எனத் தோன்றப்படுவன
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க
காரண காரியம் ஆகிய பொருள்களை
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம்

30-220

வீற்று வீற்றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும்
பொன்றக் கெடா அப் பொருள் வழிப்பொருள்களுக்கு
ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத்
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல்
புரிவின்மை நயம் எனப் புகறல் வேண்டும்
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல்
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள்பயன்
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும்
அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும்

30-230

செய்வானொடு கோட்பாடு இலை என்றும்
எய்து காரணத்து ஆம் காரியம் என்றும்
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
வினா விடை நான்கு உள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை எனத்
"தோன்றியது கெடுமோ? கெடாதோ?" என்றால்
"கேடு உண்டு" என்றல் துணிந்து சொலல் ஆகும்
"செத்தான் பிறப்பானோ? பிறவானோ?"

30-240

என்று செப்பின்
"பற்று இறந்தானோ? அல் மகனோ?" எனல்
மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர்
வினாவின் விடுத்தல் "முட்டை முந்திற்றோ
பனை முந்திற்றோ? எனக் கட்டுரை செய்"
என்றால் "எம் முட்டைக்கு எப் பனை" என்றல்
வாய் வாளாமை "ஆகாயப் பூப்
பழைதோ, புதிதோ?" என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
கட்டும் வீடும் அதன் காரணத்தது

30-250

ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என
தனித்துப் பார்த்துப் பற்று அறுத்திடுதல்
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக!
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக!
இந் நால் வகையான் மனத்திருள் நீங்கு!' என்று

30-260

முன் பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீபம் நன்கனம் காட்டத்
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப்
'பவத் திறம் அறுக!' எனப் பாவை நோற்றனள் என்

30-264


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home