Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
 Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya Bharathy Index of Works - பட்டியல் >  தோத்திரப் பாடல்கள் 1 > தோத்திரப் பாடல்கள் 2  > தோத்திரப் பாடல்கள் 3 > தோத்திரப் பாடல்கள் 4 > தோத்திரப் பாடல்கள் 5  > தோத்திரப் பாடல்கள் 6

Maha Kavi Subramaniya Bharathy
-Thothirap Padalkal 3

 சி. சுப்ரமணிய பாரதியார்
-  தோத்திரப் பாடல்கள் 3

[eText input: Govardhanan proof/read version (proof-read Kalyanasundaram) © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.]

22. வையம் முழுதும23. சக்தி விளக்கம24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம25. சக்தி திருப்புகழ26. சிவசக்தி புகழ


22. வையம் முழுதும்

கண்ணிகள்

வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்,
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே.

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்,
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே.

வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவு கின்றோம்,
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே.

உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்
தோங்கிடும் சக்தியை ஓது கின்றோம்,
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்க வென்றே.

சித்தத்தி லே நின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்,
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே.

மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடு கின்றோம்,
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே.

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி என்றுரை செய்திடு வோம்,
ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார், சுடர்
ஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார்.
 


23. சக்தி விளக்கம்

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்,
சூதில்லை காணுமிந்த நாட்டீர்! - மற்றத்
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்!
காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

காலை இளவெயிலின் காட்சி - அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி,
நீல விசும்பினிடை இரவில் - சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.

நாரண னென்று பழவேதம் - சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்,
சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு
செல்வம் அறிவு சிவபோதம்.

ஆதி சிவனுடைய சக்தி - எங்கள்
அன்னை யருள் பெறுதல் முக்தி,
மீதி உயிரிருக்கும்போதே - அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல
கற்றலில் லாதவனோர் பாவி.

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்று சக்தி என்று.
 


24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

ராகம் - பூபாளம் தாளம் - சதுஸ்ர ஏகம்

கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சாதனைகள் யாவினையுங் கூடும் - கையைச்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும்.

கண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சக்தி வழியதனைக் காணும் - கண்ணைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.

செவி, சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் - செவி
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்திதிருப் பாடலினை வேட்கும்.

வாய், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி புகழினையது முழங்கும் - வாய்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி நெறி யாவினையும் வழங்கும்.

சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் - அதச்
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி தங்ருச் சுவையினை நுகரும் - சிவ
சக்தி தாக்கே எமது நாக்கு.

மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி தருந் திறனதி லேரும் - மெய்யைச்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சாதலற்ற வழியினை தேறும்.

கண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சந்ததமும் நல்லமுதைப் பாடும் - கண்டம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியுடன் என்றும் உறவாடும்.

தோள், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
தாரணியும் மேலுலகுந் தாங்கும் - தோள்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி பெற்று மேருவென ஓங்கும்.

நெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதைத்
தாக்க வரும் வாளதுங்கிப் போகும்.

சிவ, சக்தி தனக்கே எமது வயிறு - அது
சாம்பரையும் நல்லவுண வாகும் - சிவ
சக்தி தனக்கே எமது வயிறு - அது
சக்தி பெற உடலினைக் காக்கும்.

இடை, சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடை
சக்தி தனக்கே கருவியாக்கு - நின்றன்
சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும்.

கால், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சாடியெழு கடலையுந் தாவும் - கால்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சஞ்சலமில் லாமலெங்கும் மேவும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் - மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அதில்
சாத்துவீகத் தன்மையங்னைச் சூடும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தங்யற்ற சங்ந்தனைகள் தீரும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல்
சாரும் நல்ல உறுதங்யும் சீரும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி சக்தி சக்தியென்று பேசும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல்
சார்ந்தங்ருக்கும் நல்லுறவும் தேசும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி சக்தி யென்று குதித் தாடும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சந்தமும் சக்திதனைச் சூழும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதில்
சாவுபெறும் தீவினையும் ஊழும்.

மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - எதைத்
தான் விரும்பி னாலும்வந்து சாரும் - மனம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - உடல்
தன்னிலுயர் சக்திவந்து சேரும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத்
தாரணியில் நூறுவய தாகும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - உன்னைச்
சாரவந்த நோயழிந்து போகும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - தோள்
சக்தி பெற்றுநல்ல தொழில்செய்யும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - எங்கும்
சக்தியருள் மாரிவந்து பெய்யும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி நடையாவும் நன்கு பழகும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - முகம்
சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - உயர்
சாத்திரங்கள் யாவும் நன்குதெரியும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
சத்திய விளக்கு நித்தம் எரியும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - நல்ல
தாளவகை சந்தவகை காட்டும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அறு
சக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு
சக்திபுகழ் திக்கனைக்கும் நிறுத்தும்.

மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்தி சக்தி என்று குழலூதும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்
சார்வதில்லை அச்சமுடன் சூதும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்தி யென்று வீணைதனில் பேசும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்திபரி மளமிங்கு வீசும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்தி யென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்திவந்து கோட்டை கட்டி வாழும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்தியருட் சித்திரத்தில் ஆழும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அங்கு
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சாரவருந் தீமைகளை விலக்கும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சக்தியுறை விடங்களை நாடும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
தள்ளிவிடும் பொய்ந்நெறியும் தீங்கும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சக்தியொளி நித்தமுநின் றிலகும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தாரணியில் அன்புநிலை நாட்டும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சர்வசிவ சக்தியினைக் காட்டும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சக்திதிரு வருளினைச் சேர்க்கும் - மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
தாக்கவரும் பொய்ப்புலியை ஓட்டும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சத்தியநல் லிரவியைக் காட்டும் - மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு - அதில்
சாரவரும் புயல்களை வாட்டும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சக்திவிர தத்தை யென்றும் பூணும் - மதி
சக்தி விரதத்தை யென்றுங் காத்தால் - சிவ
சக்திதரும் இன்பமும்நல் லூணும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - தெளி
தந்தமுதம் பொய்கையென ஒளிரும் - மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சந்ததமும் இன்பமுற மிளிரும்.

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தன்னையொரு சக்தியென்று தேரும் - அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தாமதமும் ஆணவமும் தீரும்.

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தன்னையவள் கோயிலென்று காணும் - அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சக்தியெனும் கடலிலோர் திவலை - அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு - சிவ
சக்தி யுண்டு நமக்கில்லை கவலை.

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும்.

சிவ, சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ
சக்திசக்தி யென்று குதித்தாடு - சிவ
சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ
சக்திசக்தி என்றுவிளை யாடு.
 


25. சக்தி திருப்புகழ்

சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி என்றோது,
சக்திசக்தி சக்தீ என்பார் - சாகார் என்றே நின்றோது.

சக்திசக்தி என்றே வாழ்தல் - சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!
சக்திசக்தி என்றீ ராகில் - சாகா உண்மை சேர்ந்தீரே!

சக்திசக்தி என்றால் சக்தி - தானே சேரும் கண்டீரே!
சக்திசக்தி என்றால் வெற்றி - தானே நேரும் கண்டீரே!

சக்திசக்தி என்றே செய்தால் - தானே செய்கை நேராகும்,
சக்திசக்தி என்றால் அ·து -தானே முத்தி வேராகும்.

சக்திசக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ?
சக்திசக்தி சக்தீ யென்றே - தாளங்கொட்டிப் பாடோமோ?

சக்திசக்தி என்றால் துன்பம் - தானே தீரும் கண்டீரே!
சக்திசக்தி என்றால் இன்பம் - தானே சேரும் கண்டீரே!

சக்திசக்தி என்றால் செல்வம் - தானே ஊறும் கண்டீரோ?
சக்திசக்தி என்றால் கல்வி - தானே தேறும் கண்டீரோ?

சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ!
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ!

சக்திசக்தி வாழீ என்றால் சம்பத் தெல்லாம் நேராகும்,
சக்திசக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும்.
 


26. சிவசக்தி புகழ்

ராகம் - தன்யாசி தாளம் - சதுஸ்ர ஏகம்

ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு ,
சக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு.

ஓம், சக்திமிசை பாடல்பல பாடு - ஓம்
சக்திசக்தி என்று தாளம் போடு.
சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே - சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு.

ஓம், சக்திதனையே சரணங் கொள்ளு - என்றும்
சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு.
சக்திபுக ழாமமுதை அள்ளு - மது
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு.

ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு - நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு.
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.

ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - இதைச்
சார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை,
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில்
தன்னமுத மாரிநித்தம் பெய்கை.

ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு,
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச்
சாதிகளெல் லமதனைக் கேட்டு.

ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு.
சக்தியருள் கூடிவிடு மாயின் உயிர்
சந்ததமும் வாழுநல்ல கிழங்கு.

ஓம் சக்திசெய்யுந் தொழில்கலை எண்ணு - நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு,
சக்திகளை யேஇழந்துவிட்டால் - இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு.

ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு,
சக்திசில சோதனைகள் செய்தால் - அவள்
தண்ணருளென் றேமனது தேறு.

ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து - சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து,
சக்தியும் சிறப்பும்மி கப்பெறுவாய் - சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து!

continued

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home