நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, 
		வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! 
		வாய்ச் சொல்லில் வீரரடி. 
		
		கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, 
		நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! 
		நாளில் மறப்பா ரடீ 
		
		சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் 
		அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! 
		அகலிகளுக் கின்ப முண்டோ? 
		
		கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற 
		பெண்களின் கூட்டமடீ! - கிளியே! 
		பேசிப் பயனென் னடீ 
		
		யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், 
		மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! 
		மாங்கனி வீழ்வ துண்டோ! 
		
		உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் 
		செப்பித் திரிவா ரடீ! - கிளியே! 
		செய்வ தறியா ரடீ! 
		
		தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் 
		நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே! 
		நம்புத லற்றா ரடீ! 
		
		மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் 
		பேதைகள் போலு யிரைக் - கிளியே 
		பேணி யிருந்தா ரடீ! 
		
		தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய 
		ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே 
		அஞ்சிக் கிடந்தா ரடீ! 
		
		அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் 
		உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே 
		ஊமைச் சனங்க ளடீ! 
		
		ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா 
		மாக்களுக் கோர் கணமும் - கிளியே 
		வாழத் தகுதி யுண்டோ? 
		
		மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் 
		ஈனர்க் குலகந் தனில் - கிளியே! 
		இருக்க நிலைமை யுண்டோ? 
		
		சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் 
		வந்தே மாதர மென்பார்! - கிளியே! 
		மனத்தி லதனைக் கொள்ளார் 
		
		பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் 
		பழமை இருந்த நிலை! - கிளியே! 
		பாமர ரேதறி வார்! 
		
		நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் 
		தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! 
		சிறுமை யடைவா ரடீ! 
		
		சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் 
		சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! 
		செம்மை மறந்தா ரடீ! 
		
		பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் 
		துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! 
		சோம்பிக் கிடப்பா ரடீ! 
		
		தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் 
		வாயைத் திறந்து சும்மா - கிளியே! 
		வந்தே மாதர மென்பார்!