Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home  > The Tamil History - History & GeographyPallavas > பல்லவர் கால வரலாறு - பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் >  Chera Dynasty > Chola Dynasty > Pandya Dynasty

பல்லவர் கால வரலாறு

பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம், எம்.ஏ., எம்.லிட்.


உலக நாடுகள் அனைத்தும் தத்தமக்கெனக் கடந்த கால வரலாறுகளைப் பெற்றிருக்கின்றன. சில நாட்டு வரலாறுகள் பழமை வாய்ந்தனவாகவும், சில காலம் கணிக்க முடியாதனவாகவும்சில இடையிடையே இருளடைந்த நிலையிலும் உள்ளமையை வரலாற்று ஆய்வாளர் நன்கு அறிவர்.

ஒரு சில மறைந்த வரலாறுகளைப் பற்றியும் அவற்றின் அடிப்படையில் காணும் பண்பாடு, நாகரிகம், சமயம், பிற வாழ்வுநிலைகள் பற்றியும் தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்ந்து அறிந்து - ஆழ்ந்து உணர்ந்து உலகுக்கு உணர்த்துகின்றனர்.

இந்திய நாட்டுச் சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டுப் பழம்பெரு நாகரிகமும் அந்த அடிப்படையில் ஆய்வுக்கு நிலைக்களன்களாக அமைந்து, பலப்பல புதுப்புது உண்மைகளை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செல்வங்களாக அமைகின்றன. அந்த அடிப்படையில், வாழ்ந்து மறைந்த சின்னங்கள், வடித்தெடுத்த சிற்பங்கள், செதுக்கி வைத்த எழுத்துக்கள், புதைத்து வைத்த தாழிகள் போன்றவை பலப்பல உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன.

வரலாறு என்பது, மேலை நாட்டு அறிஞர்கள் காட்டியபடி வெறும் அரசர் பரம்பரையினையும், அவர்கள் அரண்மனை வாழ்வையும், ஆற்றிய போரையும் மட்டும் குறிப்பிடுவதாகாது. அது மக்கள் வாழ்வொடு பிணைந்த ஒன்றாகும். ஆயினும், இவை மாறுவதற்குப் பெரும்பாலும் அரசியலே காரணமாக அமைந்தமையின் வரலாற்றை அந்த அந்த அடிப்படையிலே கணக்கிடுவர். அந்த உண்மையில் பார்க்கும்போது தமிழ்நாட்டு வரலாற்றில் - மக்கள் வாழ்வில் உண்டான எத்தனையோ மாற்றங்களை நம்மால் எண்ணாதிருக்க முடியாது. அவற்றுள் ஒன்றே சங்க காலத்துக்கும் பிற்காலப் பல்லவர் காலத்துக்கும் இடையில் உண்டான பெருமாற்றம்.

சங்க காலம் பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட முடிவின்படி கி.பி.முதல் நூற்றாண்டோடு முடிவடைவதாகும். அக்காலத்திய மக்கள் வாழ்விற்கும் ஏழாம் நூற்றாண்டில் அப்பர், சம்பந்தர் வாழ்ந்த கால மக்கள் வாழ்விற்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் காண்கிறோம். ஏன் இந்த மாற்றம்?

இந்த நான்கைந்து நூற்றாண்டுக் காலத்தைத் தமிழக வரலாற்று ஆராய்வோர் தமிழக இருண்ட காலம் என்றோ, களப்பிரர் இடையீட்டுக் காலம் என்றோ கூறுவர். தெளிந்த சமுதாய வாழ்வைக் காட்டும் சங்க காலத்துக்கும் ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட வரலாற்றை வரையறை செய்ய முடியாமையே இதற்குக் காரணம். ஏன் செய்யவில்லை? நாடு என்னாயிற்று?

கடைச்சங்க காலத்து இறுதி நிலையினையோ அன்றி முடிந்த நிலையினையோ நமக்கு விளக்குவனவே இரட்டைக் காப்பியங்கள். முடியுடை வேந்தர்கள் நிலைகெடும் காலமாக அது அமைந்துவிட்டது. சோழன் கரிகாற்பெருவளத்தானும் பாண்டியன் நெடுஞ்செழியனும் சிலப்பதிகார இறுதிக் காலத்திலே வரலாற்று வீரர்களாகிவிட்டனர்.

சேரன் செங்குட்டுவனே தமிழ் நாட்டுச் சிறந்த மன்னனாக வளங்கினான். அவன் காலம் வரையில் தமிழ் நாட்டு இலக்கிய மரபு, வாழ்க்கை நெறி, சமய மரபு முதலியன ஓரளவு முறைதவறாத வகையில் அதிக மாறுபாடுகள் இல்லாத வகையில் இருந்தன. அவன் காலத்திலேயே தமிழ் நாட்டுக்கு முற்றும் புதியனவாகிய சமயங்களும் வாழ்க்கை நெறிகளும் இடம் பெற்றுள்ளமையைக் காண்கின்றோம். அவன் காலத்துக்குப் பிறகே தமிழர் நாட்டு முடியுடை வேந்தர் மரபிலே மதிக்கக்கூடிய மன்னர் இலராயினர்.

ஆனால், அதேவேளையில் வடக்கில் சாதவாகனப் பேரரசும் அதைச் சார்ந்தும் தனித்தும் நின்ற பல சிற்றரசுகளும் தமிழ் நாட்டைத் தம் உரிமையாக்கிக் கொள்ள மறைமுகமாக முயன்று கொண்டிருந்தன. ஆந்திரரும் சாதவாகனரும் கங்கரும் வாகாடகரும் களப்பிரரும் கடம்பரும் நாகரும் (Chota Nagar) பிறரும் ஒருவர்பின் ஒருவராகத் தனித்தும் சேர்ந்தும் கி.பி. 2,3,4 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் எல்லையிலும் தமிழ்நாட்டிலும் தத்தம் கொள்கைகளையும் அவற்றையொட்டிய ஆட்சியையும் புகுத்த நினைத்தனர்.

அப்படியே வடநாட்டுச் சமயத்தவர் பலரும் உள்ளே வந்த போதிலும் அதுவரை ஆக்கம் செலுத்த முடியாதிருந்தமையின் உள்ளம் பொருமிக் கொண்டிருக்க, தடுக்க ஆளில்லாத காரணத்தால் இக்காலத்தில் தாராளமாக நுழைந்தனர். அந்த அடிப்படையிலேதான் சமணமும் பௌத்தமும் வைதிகமும் பிற சமயங்களும் தமிழ்நாட்டில் புகுந்தன. 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற உணர்விலும், அடுத்துச் சைவம் வைணவம் என்ற இரு சமயங்கள் ஒன்றினை ஒன்று தாக்கா வகையில் இணைந்தும் சென்றமையைத்தான் சங்க காலத்தில் காண முடிகின்றது.

ஆனால் செங்குட்டுவன் காலத்தை ஒட்டியும், அவனுக்கு அடுத்த சில ஆண்டுகளிலும் எழுந்த இலக்கியங்களில் சமயப் பூசல்களே இடம் பெற்றமையைக் காண்கின்றோம். அப்படியே பல்வþறு வகைப்பட்ட அரச மரபினர் தத்தம் முயற்சிக்கும் திறனுக்கும் தக்க வகையில் புகுந்தும் பிரிந்தும் நுழைந்தும் மாறியும் - ஏன் நாட்டு மக்களை மாற்றியும் தத்தம் வாழ்வு, சமய நெறி முதலியவற்றை நிலைபெறச் செய்ய முயன்றனர். அக்கால நிகழ்ச்சிகளை அரச ஆதிக்கத்துக்காக ஏற்பட்ட போராட்டங்கள் என்பதைக் காட்டிலும் கொள்கை, சமயம், ஓரளவு மொழி இவற்றின் அடிப்படையில் அமைந்த போராட்டங்கள் எனக் கொள்வது பொருத்தமாகும். இத்தகைய மாறுபாடுகளுக்கு இடையில் நாடு தன்னிலை கெட்ட காலத்தில் வந்தவருள் ஒரு மரபினரே பல்லவர் ஆவர். அவர் வருகை நாட்டில் உண்டாக்கிய மாறுதலைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்நாட்டு வரலாற்று எல்லைக்கு முற்பட்ட காலந்தொட்டு ஆண்டுவந்த பழங்குடி மக்களாகிய மூவேந்தர்களும் அவரோடு வாழ்ந்த குறுநில மன்னர்களும் வள்ளல்களும் தத்தம் நிலைகுலைந்த காலத்திலேதான், தமிழ்நாட்டு மரபுக்கு முற்றும் மாறுபட்ட பல சமுதாய மக்களும் சமய மக்களும் அவர்தம் தலைவர்களும் அலையலையாகத் தமிழ்நாட்டில் புகுந்தனர்.

அதற்கு முன்பும்கூடப் பல வடநாட்டுப் பெருமன்னர்கள் - அசோகன் உட்பட - தெற்கு நோக்கி வந்திருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டு எல்லையுள் ஆட்சிக்காகவோ, கொள்கை அல்லது சமயம் பரப்பவோ உரிமை கொண்டாடி நுழைய முடியவில்லை. ஆம்! அக்காலத்தில் எல்லாம் தமிழ்ச் சமுதாயமும் அவர்தம் மன்னரும் மாற்றாரை விரட்டி ஒட்டி நிற்கும் நிலையில் வாழ்ந்து வந்தனர். எனினும், கி.பி.முதல் நூற்றாண்டு தொடங்கி இந்த நிலை மெல்ல மெல்லத் தளர, அந்நூற்றாண்டின் இறுதியில் தாயற்ற சேயெனத் தமிழ்நாடு நிலை தளர்ந்தது. இந்தக் காரணத்தாலேயே தமிழர் தம் பேரும் புகழும் žரும் சிறப்பும், அறிவும் திறனும் பிற இயல்புகளும் கண்டு கருத்தழிந்த பலர் இந்நாட்டில் கால் வைத்தனர். அவ்வாறு வந்தவருள் பல்லவர் முக்கியமானவர்.

பல்லவர் வெளிநாட்டிலிருந்து வந்தவரே என்பதைப் பல பேரறிஞர்கள் முடிவு கட்டிக் கூறினார்கள் என்றாலும் ஒரு சிலர் அவர்கள் தமிழ்நாட்டினரே என்று சாதிக்க நினைக்கின்றனர். இப்பல்லவரைப் பற்றி இன்றைக்குச் சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன் கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கலை நலம், சமய நெறி இலக்கியம் முதலியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்த நல்லறிஞர்கள் சிறந்த வகையில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆயினும் அதற்குப் பிறகு கடந்த அரை நூற்றாண்டில் ஆய்கின்றவர்கள் யாவரும் முன் ஆய்ந்தவர் கொண்ட முடிவுகளை வைத்துக் கொண்டு சொல்வதையே சொல்லிக் கொள்ளும் வகையில் சில நூல்களை வெளியிட்டுள்ளனர். அக்கால ஆராய்ச்சி அறிஞர்களுள் திருவாளர்கள் வி. வெங்கையா, துப்ரெயில் துரை (Jounean Dubreuil) டி.ஏ. கோபிநாதராவ், ஏ.இலாங்கஸ்டு (Longhurst) ஹூல்ம்ஸ் போன்றோர் முக்கியமானவர்கள். பல்லவர் தம் செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் சில வடநாட்டு வேந்தர்களாகிய சதகர்ணி புலுமாயி போன்றோர் தம் எழுத்துக்களை ஒத்துள்ளன என அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். (Meenakshi p. 1 and 2)

பல்லவர் தமிழ்நாட்டவரே என்பார், கூறும் காரணம் பல்லவம் என்பது கொடி என்றும், கொடியால் சுற்றப்பட்டமையின் பல்லவர் குடியின் முதல்வன் அப்பெயர் பெற்றான் எனவும் காரணம் காட்டுவர் தொண்டைமான் இளந்திரையனே அவன் என்பர். பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப் படைத் தலைவனே - அத்தொண்டைமானே இக்குலத்தின் முதல்வன் என்பர். அத்துடன் ஒரு சிலர் அவன் சோழ மன்னனுக்கு வழுக்கிய வேற்றுப் பெண்ணுக்குப் பிறந்து பட்டத்துக்கு வந்தவன் என்பர். இது எப்படிப் பொருந்தும் என எண்ணிப் பார்க்க வேண்டும். பெரும்பாணாற்றுப்படை போன்ற பேரிலக்கியத்தின் தலைவன் எப்படித் தமிழ் அறியாத ஓர் அரசர் குடிக்கு முதல்வனாக இருக்க முடியும்?

தொண்டைமான் இளந்திரையனைப் பற்றி இவர்கள் கூறும் கதைக்கும் பல்லவர் மரபுக்கும் சம்பந்தமே இல்லை. சோழ மன்னன் பீலிவளை என்ற நாககன்னிகையைத் தொண்டை நாட்டில் கண்டு கூடிப் பிரியும் காலத்தில் மகன் பிறந்தால் அனுப்புமாறும் அவனை அரசனாக்கி வைப்பதாகவும் வாக்களிக்க, அப்படியே நாகநாடு சென்ற பீலிவளை தான் பெற்ற மகனை உற்ற பருவத்தில் கலத்தில் சோழ நாட்டுக்கு அனுப்பினள், கடலில் கொடுங்காற்றால் கலம் கவிழ, இளந்திரைகளுக்கிடையில் இளவரசன் கடலை நீந்திக் கரையை அடைந்தான் என்றும், அதுபோது கடற்பாசிக் கொடிகள் அவனைச் சுற்றி இருந்தமையால் அக்கொடிகளால் அவன் பல்லவன் ஆக்கப்பட்டான் என்றும், கூறுவர். (பல்லவம் தமிழ்ப் பெயரன்று) திரைகளால் தரப்பெற்றவனே தொண்டைமான் இளந்திரையன் என்பர்; எனினும் அவனைப் பாடிய பெரும்பாணாற்றுப்படையாகிய பெருநூல் இதுபற்றி ஒன்றும் குறிக்கவில்லை, மேலும் அவன் சிறந்த தமிழ் மன்னன். கொடியைப் பல்லவமாக்கி அதிலிருந்து மரபை எப்படிக் காட்ட முடியும்? நாகநாடு என்பது தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட மணிபல்லவத் தீவினுக்கு அண்மையில் இருந்த தீவுகளில் சில. இதனை மணிமேகலை நன்கு விளக்கும். மணிபல்லவத்தில் இருந்த பீடிகை சம்பந்தமாக இருநாட்டு மன்னர் போரிட்ட நிலையினை,

"கீழ்நில மருங்கில் நாகநா டாளும்
இருவர் மன்னர் ஒருவழித் தோன்றி"
(மணி 8 - காதை)

அப் புத்த பீடிகைக்கு உரிமை கொண்டாடினர் எனக் காட்டுகிறது. எனவே, இன்றைய யாழ்ப்பாணத்தை ஒட்டிய தீவுகளில்சிலவே நாகநாடு என்பது தேற்றம். ஏனெனில், மணிபல்லவம் அன்றைய காவிரிப்பூம்பட்டினத்துக்கு முப்பது யோசனைத் தூரத்தில் தெற்கே இருந்த தீவு என்பதனை மணிமேகலை:

"அத்தம் ஆறா ஆறைந்து யோசனை
தென்திசை மருங்கில் சென்றுதிரை உருத்த
மணிபல்லவத் திடை மணிமேகலா தெய்வம்
அணியிழை தன்னை வைத்த கன்றது"
(காதை - 6, கடைசி வரிகள்)


எனக் காட்டுகின்றது. அந்நாகநாடும் தமிழ் மரபோடு கூடிய மக்களையும் மன்னரையும் கொண்ட நாடாக இருந்தது தேற்றம். இன்றும் அந்நாக நாட்டினை நினைவூட்டிக் கொண்டு மணிபல்லவத்தீவில் நாகதேவதை நாகம்மையாகப் பெருங்கோயில் கொண்டு, தமிழ் மரபுக்கு ஏற்பச் சிறப்பொடு பூசனைகளை ஏற்று இருந்து வருவதைச் சென்றோர் அறிவர். புத்த பீடிகையும், புத்தர் பள்ளமாகிய கோமுகிப் பொய்கையும் அத்தீவில் ஒரு பக்கம் இலங்கைவாழ் புத்த சமயத்தினருக்குப் புனித இடமாக அமையும் அதேவேளையில், கடற்கரையை அடுத்த நாகம்மை கோயில் இலங்கை வாழ் இந்துக்களுக்குச் சிறந்த தூய்மைநிறை தெய்வ இடமாக அமைகின்றது. இத்தீவும் இதை ஒட்டிய சில தீவுகளுமே நாகநாடு எனக்கொள்ளல் பொருந்தும். எனவே, இந்நாட்டுப் பீலிவளைக்குப் பிறந்த திரையனை எக்காரணம் கொண்டும் பல்லவர் குலத் தலைவனாக்க முடியாது. நல்லவேளை இவர்கள் ஆய்வு அழகிய பல்லவர் ஆண்டதால்தான் அத்தீவு மணிபல்லவம் என்ற பெயர் பெற்றுச் சிறந்தது என்ற அளவிற்குச் செல்லாதது அமைதி தருகின்றது.

ஆம்! முதற் பல்லவர் தமிழ் மரபுக்கு மாறுபட்டவர் என்பதை அவர் தம் பிராகிருத மொழிக் கல்வெட்டுக்களே சான்று பகரும். மேலும், அவர்களே தங்களைப் பரத்துவாச கோத்திரத்தவர் என்று கூறிக் கொள்கின்றனர். இக்கோத்திரம் தமிழ் மரபுக்கு ஏற்றதன்று. பல்லவர் முதலில் பிராகிருதப் பல்லவராக இருந்து, பின் சமசுகிருதப் பல்லவராகிப் பின் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் அடிகளால் மாற்றம் பெற்ற பிறகே தமிழ்ப் பல்லவராகித் தம் கல்வெட்டுக்களைத் தமிழிற் பொறித்துள்ளனர். எனவே, பல்லவர் தமிழ் நாட்டவர் என்று கொள்வதோ சோழனுக்கு முறையற்ற வழியில் பிறந்தவர் பரம்பரையினர் என்று கொள்வதோ பொருந்தாது.

சிலர் 'பல்லவர் தொண்டையர்' எனத் திருமங்கை ஆழ்வார் போன்றோர் பாடியதைக் கொண்டும், கொடிக்கு வடமொழிப் பெயர் பல்லவம் என்றிருப்பது கொண்டும் இந்த உண்மையை நிலைநாட்ட முயல்வர். தொண்டை நாட்டை ஆண்டதால் அவர்கள் தொண்டையர் என்றும் தொண்டையர் கோன் எனவும் அழைக்கப் பெற்றார்களேயன்றி வேறன்று. 'Emperor of India' என்று ஆங்கில நாட்டு மன்னர் இருந்தார் என்பதால் அவரை யாராவது இந்தியர் என்று கூற முடியுமா? அடுத்துக் கொடி வழியாக வந்தவராயின் அதன் தமிழ்ப் பெயரை விடுத்து, வேற்று மொழிப் பெயராகிய பல்லவர் என்று அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வார் என்று நினைப்பது எவ்வளவு பொருத்தமற்ற ஒன்று. எனவே, இவற்றால் அவர்களைத் தமிழகத்தைச் சார்ந்தவர் என்று கொள்ளல் கூடாது.

மேலும் அவர்கள் தமிழ் மரபினராகவே இளந்திரையன் வழியினராகவே இருந்திருப்பாராயின் தமிழ்நாடு அவர் தம் ஆட்சியில் நிலைகெட்டு, மொழி கெட்டு, மரபு கெட்டு, சமயம் மாறி, பிற வகையில் எல்லாம் இருட்டடிப்புச் செய்யும் வகையில் இருந்திருக்குமா என எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும், முதற் பல்லவர் தம் வாழ்வும் பிற தொடர்புகளும் பெயரும் பிறவும் வடநாட்டவரோடு தொடர்புடையனவாகவே அமைவதையும் மறக்க முடியாது. அவர்கள் வட இந்தியாவையோ தக்கணத்தையோ சார்ந்தவரா அல்லது ஒரு சிலர் நினைக்கும்படி 'பார்த்திய நாடு' என்ற ஒரு வெளிநாட்டில் இருந்து வந்தவரா என்பதில் ஐயமிருக்கலாம். அது பற்றிய கவலை நமக்கு இங்கே தேவையில்லை. அவர்கள் முற்றும் தமிழ் இனத்துக்கு வேறுபட்டவராகித் தமிழ்நாட்டின் வடக்கே இருந்து வந்தவரே எனக் கொள்வது பொருத்தமானதாகும்.

அவர்கள் வடக்கிருந்து வந்தவர்கள் என்பதற்கு அவர்தம் குகைக்கோயில்கள் மற்றொரு சான்று பகரும் என்பர் சிலர். மராட்டிய நாட்டிலுள்ள அசந்தா, எல்லோரா போன்றவற்றையும் பிற்காலப் பல்லவர்தம் குகைக்கோயில்களையும் ஒப்பு நோக்கின், வளர்ந்த அந்த மராட்டிய நாட்டின் கலையுணர்வு பெற்ற பரம்பரையினருள் ஒருசாரார் தெற்கு நோக்கி வந்தார்களோ எனக் கொள்ள இடமுண்டு. எனினும், 7ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் அத்தகைய குகைக்கோயில்கள் இல்லாமையாலும் வடக்குள்ளவையும் காலத்தால் பிற்பட்டவை எனக் கொள்ள வேண்டி இருப்பதாலும் இக்கூற்றை அது அத்துணைப் பொருத்தமாகக் கொள்ள வழியில்லை. எனினும், அவர்கள் தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த வேற்று இனத்தவரே என்பதில் ஐயமில்லை.

பல்லவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை; எனினும், அவர்கள் எப்போது காஞ்சிக்கு வந்தார்கள் என்பதைத் திட்டமாக வரையறுக்க முடியவில்லை. பல்லவர் வாழ்வின் இறுதி எல்லை, அபராஜிதரோடும் தமிழக வரலாற்றின் திருப்பு மையமான திருப்புறம்பியப் போரோடும் அறுதியிடக்கூடிய தெளிந்த நிலை காணப்பெறினும் அவர்தம் தொடக்க எல்லை திட்டமாக வரையறுக்க முடியாததாகவே உள்ளது. இதனாலேயே இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ முதல் நூற்றாண்டின் இறுதியிலோ வாழ்ந்த தொண்டைமான் இளந்திரையனை இவர்கள் முன்னோக்கிக் கொண்டு இடர்ப்படுகின்றனர். எனினும், இவர்களுடைய ஆய்வின்படி இவர்கள் வடக்கிருந்து வந்தவர் என்பதும், அவருள் முதலாவதாகக் காஞ்சியில் ஆண்டவன் பப்பதேவன் என்பதும், அம்மரபில் ஒருவனான விஷ்ணு கோபனே வடநாட்டுப் பெருவேந்தனாகிய சமுத்திரகுப்தனின் அலகாபாத் தூணில் குறிக்கப்பெற்றவன் என்பதும் தெளிவாக விளங்குகின்றன. இந்த வழியில் நின்றே பல்லவர் காஞ்சியில் காலூன்றிய வரலாற்றைக் காண்போம்.

இப்பல்லவர், சாதவாகனப் பேரரசின் கீழ் இருந்த காஞ்சியைச் சார்ந்த நாட்டினை அவர்களுக்குப் பிறகு கைப்பற்றி ஆளத்தொடங்கினர் என்று புதுவை துப்பரே அவர்கள் விளக்கியுள்ளார்கள். (History and the institutions of Pallavas Ed. 1924-by C.S.Subramania Iyer-P.6)

வேற்று நிலத்தவர் தமிழ்நாட்டில் அலையலையாகப் புக நேர்ந்த நாட்டு நிலையினையும் காலச் சூழலையும் மேலே கண்டோம். அதே காலத்தில்தான் அண்டை நாடாகிய ஆந்திரத்தில் சாதவாகனப் பேரரசு வலுவுற்றதாக ஆக்கப்பெற்றிருந்தது. அவருடன் ஒட்டியோ அடங்கியோ, வேறு வகையாலோ வடகிழக்கிலும் தென்மேற்கிலும் மேற்கிலும் ஏறக்குறைய அதே காலத்தில்தான் படையெடுத்து வந்து வடபகுதியை வெற்றி கொண்டு ஆண்டனர் என்றும், சாதவாகனரோ அவர்தம் ஆணைவழிச் சிற்றரசரோ அவர்களை வடக்கே நெருக்க, அவர்கள் மேலும் தெற்கே சென்று பாண்டியர் நாட்டைக் கைக்கொண்டு நாட்டு நிலையை மாற்றினர் என்று அறிகிறோம். அவ்வாறு அவர்கள் தெற்கு நோக்கிச் செல்லக் காரணமானவர்களைப் பல்லவர் எனக் கொள்ளல் பொருத்தமாகும்.

திரு. கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் அப்பல்லவரை வடமொழிப் பல்லவர் எனக் குறிப்பர். (Pailavas of Kanchi - Gopalan p.XXII) பிராகிருதப் பல்லவர் எனக் கொள்ளலும் தவறில்லை. வளர்ந்துள்ள சாதவாகனப் பேரரசின் கீழ் இருந்த வாரங்கல் காகேத்தியரும் மேலை நாட்டுக் கங்கரும் ஆந்திர எல்லையில் இருந்த பல்லவரும் தத்தம் ஆணையை வலுப்படுத்திக் கொள்ளப் பல வகையில் முயன்று ஓரளவு வெற்றி பெறவே தான் சாதவாகனப் பேரரசும் தளர்ச்சியுறலாயிற்று. அடங்கிய சிறுசிறு தொகுதியினராகி அவர்வழி ஆங்காங்கே சிற்றரசர்களாகவும் எல்லைக் காவலர்களாகவும் இருந்த அரச பரம்பரையினரும் அவரைச் சார்ந்தவரும் மெல்லத் தலைதூக்கித் தனி ஆட்சி அமைக்கத் தொடங்கினர். அந்த வழியிலேதான் நெல்லூர், குண்டூர் ஆகியவற்றை ஒட்டியோ அவற்றின் மேல் பகுதியை ஒட்டியோ வாழ்ந்த இந்த மரபினர் தம் எல்லையை விரிவாக்கிக் கொண்டு தாழ்ந்திருந்த தெற்குப் பகுதியை நோக்கி, காடு அடர்ந்த தொண்டை மண்டலப் பகுதியைக் கைப்பற்றி, வேங்கடத்தில் வாழ்ந்திருந்த 'புல்லி'யின் மரபினர் முதல்வரை வென்று, காடு கொன்று நாடாக்கிக் காடவர், காடு வெட்டி என்ற பட்டங்களைப் பெற்று, இறுதியாகக் காஞ்சியையும் பற்றி ஆளத் தொடங்கினர் எனக் கொள்ளல் வேண்டும். எனவேதான் இவர்தம் பிராகிருதக் கல்வெட்டுக்கள் நெல்லூர்ப் பகுதியிலும் பிற வடக்குப் பகுதிகளிலும் இருக்கின்றன என வரலாற்று அறிஞர்கள் காட்டுகின்றனர். இதனாலேயே பின் வந்த பல மன்னர்தம் பல்லவர், மற்றவர் - கல்வெட்டுக்களில் காஞ்சியைப் 'பல்லவேந்திரபுரி' எனக் குறித்துள்ளனர். ஏறக்குறைய இந்தக் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முதற் பகுதியாக இருக்கலாம் எனக் கொள்ளுவதில் தவறில்லை. தொண்டைமான் இளந்திரையனுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் முதலியோர் ஒடுங்கிய இந்த நாளிலே பல்லவர் காஞ்சியுள் புகுந்தனர் என்று கொள்ளல் பொருந்துவதாகும் (Meenakshi P-2).

இந்த முதற் பல்லவனைப் பற்றி கே.வி.சுப்பரமணிய ஐயர் அவர்கள் தமது 'பழந்தக்கணத்தில் வரலாற்றுக் காட்சிகள்' (Historical Sketches of Deccan) என்ற நூலின் இரண்டாம் பகுதியில் இரண்டாம் பல்லவர்தம் மரபின் தோற்றத்தைக் குறிக்கும்போது தெளிவாகக் காட்டியுள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது.

இந்த விளக்கத்தின் வழி பல்லவர் யார் என்ற உண்மை திட்டவட்டமாகத் தெளிவு பெற்றுவிட்டது. மேலும் இவரது நூலின் முதற்பகுதியிலேயே (1971இல் வெளியிடப்பெற்றது) பல்லவர் வடக்குத் திசையில் யார் யாருடன் எவ்வெவ்வாறு இணைந்தும் பிணக்குற்றும் வேறுபட்டும் மாறுபட்டும் மெல்லத் தெற்கு நோக்கி வந்தனர் என்பதை விளக்கியும், அவர்தம் சமயம், மொழி முதலியவற்றைப் பற்றித் தொட்டும் காட்டியுள்ளார். (Section II Pallavas P.15) அவர்தம் எழுத்து மத்திய இந்திய எழுத்து என்ற கொள்கையையும் அதனை அவர்கள் முதன் முதலில் காஞ்சியில் வாழ்ந்த காலத்தில் கல்வெட்டுக்களில் பயன்படுத்தினர் என்பதனையும் žன யாத்திரிகர் (Beats Si Yu Ki P.226) துணைகொண்டும் டாக்டர் பர்னல் (Dr.Burnall) துணைகொண்டும் காட்டியுள்ளனர். இவற்றால் பல்லவர் வட நாட்டில் முளைத்தெழுந்த ஒரு மரபினர் எனக் கொள்ளுதலே பொருத்தமானதாகும்.

இவ்வாறு வடநாட்டு எல்லையிலிருந்து மெல்ல மெல்லக் காஞ்சியில் வந்து ஆண்ட பல்லவ மன்னர்களைப் பற்றிய ஆய்வினைப் பல அறிஞர்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்கு செய்துள்ளனர். அவ்வாராய்ச்சிகளின் வழியே பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றுள் அவர்கள் பல்லவர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் எனவும் வடமொழி அல்லது சமசுகிருதப் பல்லவர் எனவும் பிற்காலத்தவரைத் தமிழ்ப்பல்லவர் எனவும் பிரித்துள்ளனர். அவரவர் கல்வெட்டுக்களில் அமைந்த மொழிகளின் அடிப்படையில் இப்பெயர்கள் அமைந்தன. இந்தப் பரம்பரையினர் தொடர்ந்து தந்தை வழி மகன் என வந்துள்ளனர் என்றும் இடையிடையே சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றுள் ஒன்று பிற்காலப் பல்லவருள் இரண்டாம் பரமேசுவரனுக்குப் பிறகு நந்திவர்மப் பல்லவ மன்னன் பட்டத்துக்கு வந்த வரலாறாகும். பரமேசுவரனுக்குப் பரம்பரை அற்ற காரணத்தாலோ அன்றித் தக்கவர் இல்லாத காரணத்தாலோ மக்கள் மாற்றுவரிப் பல்லவர் மரபிலே ஒருவரைத் தேடவேண்டி வந்தது. பல்லவர் வரலாற்றில் இந்த முறை ஒரு சிறந்த விளக்கமாக அமைகின்றது. பரமேச்சுரன் தனக்குப் பின் இன்னார் என்று எழுதி வைத்தானா இல்லையா என்று சொல்ல முடியாது. அல்லது அவனுக்குப்பின் அவனுடைய உரிமை மக்கள் அரசேற்கத் தக்கவர் இல்லையா என்றும் தெரியவில்லை. ஆனால் பல்லவ மன்னனை மக்கள் விரும்பி ஏற்ற நிலைதான் நோக்கத்தக்கது. மன்னர் ஆட்சி மரபு இருந்த போதிலும், நாட்டில் அரசின்றி நிலைகுலைந்தபோது மக்கள் தம் மன்னரைத் தேர்ந்தெடுத்த முறையினை நமக்கு இவ்வரலாறு தெரியக் காட்டுகிறதன்றோ? சோழன் கரிகால் பெருவளத்தான் ஆட்சிக்கு வந்ததாகச் சங்க காலச் செய்தி நமக்குக் கூறும் வகையில் இந்த வரலாறும் அமைகின்றது. நந்திவர்மன் தந்தையாகிய இரணியவர்மனும் அவருடைய முதல் மூன்று மக்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்த அதேவேளையில், பன்னிரண்டு வயதே நிரம்பிய நந்திவர்மன் விரும்பி ஏற்று வெற்றி கண்ட சிறப்பு பல்லவர் வரலாற்றில் சிறந்த பகுதியாகும். அவனுடைய செயல்திறனே பல்லவர் மரபினை நாட்டில் மேலும் ஒரு நூற்றாண்டிற்கு வாழ வைத்தது. இவ்வரலாற்றைத் திரு. கோபாலன் அவர்கள் 'Dynamic Revolution' என்ற தலைப்பில் காட்டியுள்ளமை பாராட்டற்குரியது.

சிம்மவிஷ்ணுவுக்கு முன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவர் முறை முறையாக ஆண்ட மரபு நெறி நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட சிம்மவிஷ்ணுவுக்கு முன் சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஆண்ட அந்த மரபினரின் வரிசையை நம்மால் முற்றும் உணர முடியவில்லை. அவர்களே தொடர்ந்து அந்த நூற்றாண்டுகளில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்களா அன்றி வேற்று வேந்தர்களால் அடிக்கடி இடையீடுற்று இடம் மாற ஆண்டு வந்து மீண்டும் மீண்டும் தலையெடுத்தார்களா என்பதனைச் சிறந்த வரலாற்றாளரும் ஆய்ந்து உணரமுடியவில்லை. அக்காலத்திய கல்வெட்டுக்களோ இலக்கியங்களோ பிற நாணயங்கள் முதலியனவோ வரலாற்று அடிப்படைப் பொருள்களை வகைப்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பல்லவர் மரபு மூன்று நூற்றாண்டிற்கும் இடையில் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டின் இடைவரையில் காஞ்சியில் எல்லையில் தொடர்ந்து நின்றது என்பதனை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், இடைக்காலத்தில் சோழர் தலைதூக்கினார்களோ என எண்ண வேண்டியுள்ளது. அதனைப் பின்னர்க் காண்போம்.

இந்த ஆறு நூற்றாண்டுகளில் காஞ்சியில் ஆண்ட மன்னர் வரலாறே பல்லவர் வரலாறாக அமைகின்றது. அக்கால மன்னர் வரிசையினையும் ஆண்ட வகையினையும் பிறவற்றையும் பல வரலாற்றறிஞர்கள் விளக்கமாகக் காட்டிச் சென்றுள்ளனர். எனவே, அவற்றை மீண்டும் நான் இங்கே காட்ட விரும்பவில்லை. எனினும் ஒருசில அடிப்படைகளை மட்டும் தொட்டுக் காட்டிவிட்டு மேலே செல்ல நினைக்கின்றேன்.

முதற் பல்லவராகிய பிராகிருதப் பல்லவர் ஆட்சி காஞ்சியில் மட்டுமன்றி அதற்கு வடக்கேயும் கிருஷ்ணை ஆற்றங்கரை வரையிலும் பரவி இருந்ததென்பது தெளிவு. அவர்தம் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் ஆந்திர நாட்டில் உள்ளமை அறிகிறோம். அவருள் ஒருவனாகிய விஷ்ணுகோபனையே சமுத்திரகுப்தனின் அலகாபாத்துக் கல்வெட்டு கிருஷ்ணை ஆற்றங்கரையில் ஆட்சி செய்த பல்லவன் எனக் குறிக்கிறது. அவ்விஷ்ணு கோபன் நான்காம் நூற்றாண்டின் இடைக்காலத்தவன். அவனுக்கு முன் பப்பதேவன் சிவஸ்கந்த வர்மன், அங்குரன், வீரவர்மன் என்ற நான்கு முதற் பல்லவர் ஆண்டதாகக் குறிக்கின்றனர். பப்பதேவனே முதன் முதல் காஞ்சியைத் தலைநகராக்கிக் கொண்ட பல்லவனாவன். இளந்திரையனுக்குக் குறைந்தது 70 அல்லது 80 அல்லது 100 ஆண்டுகள் கழிந்து இந்நிகழ்ச்சி நிகழ்ந்திருக்கலாம். அந்த இடைக்காலமே முன் கண்ட களப்பிரர் ஆட்சிக் காலமாக இருந்திருக்கலாம். இவர்கள் காலத்திலேயே கோயில்களுக்குத் தானம் வழங்கிய மரபும் அவற்றைக் கல்வெட்டில் குறிக்கும் மரபும் உண்டாகிவிட்டன. இக்காலத்திய ஆட்சிமுறை, மக்கள் வாழ்க்கை நெறி முதலியவை பற்றிய தகவல் ஒன்றும் திட்டமாக நமக்குக் கிடைக்கவில்லை. எனவேதான் இக்காலத்தை இருண்ட காலம் எனக் கொண்டனர் போலும். இக்காலத்தைக் கோபாலன் அவர்கள் கி.பி. 200 முதல் 350 வரை எனக் கொள்கின்றனர்.

அடுத்து வரும் சமஸ்கிருதப் பல்லவர் காலத்தை அவர் கி.பி. 350 முதல் 600 எனக் கணக்கிடுவர். கி.பி. 600-இல் மகேந்திரன் பட்டமேறிய பின் பல்லவர் தம் தெளிந்த வரலாறே நமக்குக் கிடைக்கிறதன்றோ!

சமஸ்கிருதப் பல்லவர் ஆட்சியில் முறையாக யார் பின் யார் வந்தார் என்பது காணமுடியாத ஒன்றாக உள்ளது. எனினும், அக்காலத்திய கல்வெட்டு, செப்பேடு முதலியவற்றாலும் பிற யூகங்களாலும் விஷ்ணுகோபன் தொடங்கி மகேந்திரன் தந்தையாகிய சிம்மவிஷ்ணு வரையில் 19 அரசர்களை முறைப்படுத்தியுள்ளனர். இக்காலத்திலேயும் மற்றொரு நாக கன்னிகையின் மகனும் அவன் மகன் வழி அரசும் குறிக்கப் பெறுகின்றது. (Gopalan's Pallavas P.51 & 62) நாம் முன்னரே அதுபற்றி ஆய்ந்து திட்டமான முடிவைக் கூறிவிட்டமையின் மீண்டும் அதுபற்றி ஆராய வேண்டா. திரு.எசு.கே. ஐயங்கார் அவர்களும் நல்லவேளை இந்த நாககன்னியைச் சாதவாகனர்களின் கீழ்ப்பட்ட ஒரு சிற்றரசர் பரம்பரையோடு சார்த்திக் கூறியுள்ளார்.

முதற் பல்லவர் காலத்தைப் போன்றே இக்காலத்திலும் உண்டான கல்வெட்டு, செப்பேடு போன்றவை அவர்தம் ஆட்சியை நமக்குப் பெருந்துணை புரியவில்லை. இக்கல்வெட்டு, செப்பேடுகளைப் பற்றியும் அவை தரும் பொருள்கள் பற்றியும் முன்னரே பலர் ஆய்ந்து வெளியிட்டுள்ளனர். இவற்றின் வழி எத்தனையோ வகையில் அரசர் வரிசையைக் காட்டும் நிலையினையும் நம்மால் இவர்கள் தம் மரபினைப் பிரமதேவனிடத்திலிருந்து வந்ததாகக் கூறிக் கொள்வதனையும் அறிகிறோம். அந்த மரபில் பல்லவன் என்ற பெயருடனேயே ஒரு மன்னவன் இருந்ததாகவும் காண்கின்றோம். (Vayalur list Ep.Ind. Vol XVIII P.151).

இம்மரபில் குமாரவிஷ்ணு I & II, கந்தவர்மன் I & II விஷ்ணுகோபன் (அலகாபாத் கல்வெட்டில் உள்ளவன் அல்லன்) சிம்மவர்மன், நந்திவர்மன் போன்றோர் முக்கியமானவர்களாகின்றனர். இவர்களுக்கு இடையில் ஓர் இடைவெளி இருந்து சோழர் தலைதூக்கினார்களோ என்ற ஐயமும் எழ இடமுண்டு. (Ancient History of Nellore By Venkiah - Gopalan Pallavas PP.63 and 64) இக்கருத்தைச் சிலர் மறுக்க நினைத்தாலும் இதிலும் நியாயம் உண்டு என்று கொள்ள நம் தமிழக நிலை இடம் கொடுக்கின்றது. 'எண்தோள் முக்கண் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்தோன்' என்று ஆழ்வாரால் போற்றப் பெறுபவரும் புராண வரலாற்றில் ஏற்றங் கொண்டவருமாகிய கோச்செங்கணான் என்னும் கோச்செங்கட் சோழ நாயனார் இக்காலத்தில் வாழ்ந்தவராதல் வேண்டும். அவர் திருவானைக்காவில் இறைவனை வழிபட்ட தவத்தால் மன்னனாகி அவ்விறைவனுக்குத் தமிழ் நாட்டில் பெருங்கோயில் எடுத்தவன் என நாட்டுச் சமய வரலாறு கூறுகிறது. அவன் காலத்தில் எழுந்த கோயில்களையும் அவற்றை ஒட்டி எழுந்த பிற கோயில்களையும் பின் மகேந்திரன், நரசிங்கன் காலத்தில் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும் வைணவ ஆழ்வார் ஆகிய திருமங்கையாழ்வாரும் பாடிப் பரவியுள்ளனர். காஞ்சியை உள்ளிட்ட பரந்த தமிழ்நாட்டில் அவன் இத்தனை விரிவாகச் சமயப் பணி செய்தான் என்றால் அது வேற்றுச் சமயத்தைச் சார்ந்த பல்லவர் ஆட்சியில் இருந்திருக்க முடியாது. திரு.வெங்கையா அவர்கள் குறிப்பிடுவது போன்று, ஓரிரு தலைமுறைகள் பல்லவர் காஞ்சியை விட்டு, நெல்லூரில் தம் காலூன்றி இருந்த நாளிலேதான் சோழன் கோச்செங்கணான் சைவ, வைணவப் பெருங்கோயில்களைக் கட்டி முடித்திருக்க வேண்டும். பல்லவர் பலம் இல்லையாகவே அவரது சமயத்தைச் சார்ந்தோரும் தடுக்க முடியாத நிலையில் தளர்ந்திருப்பர்.

எனினும், மறுபடியும் அப்பல்லவர் கை மேலோங்கிய காலத்தில் புதிதாக எழுந்த பெருங்கோயில்களைக் கண்ட சமணர்களும் அவர்கள் வழிநின்ற ஆறாம் நூற்றாண்டின் பல்லவ மன்னர்களும் நாட்டு மக்கள் நிலையறிந்து அவற்றைத் தகர்க்க முடியாது போக, அதற்கு மாறாகத் தம் சமயக் கோயில்களையும் மடங்களையும் ஊரெங்கும் கட்டிச் சமணத்தை வளர்த்தனர். இந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டமே அப்பர் சம்பந்தர் வரலாற்றில் விளக்கப் பெறுவது. எனவே, சமஸ்கிருதப் பல்லவர் காலத்தில் சில காலம் அவர்கள் தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் சென்றிருந்தார்கள் எனவும் அக்காலத்தில் கோச்செங்கணானும் மற்றும் ஓரிரு சோழரும் ஆண்டிருக்கக்கூடும் எனவும் கொள்வதே பொருத்தமானதாகும். எனவே, வெங்கையாவின் கூற்றை மறுக்கும் திரு. கோபாலனின் ஆய்வும் (PP. 64-65) இடையில் சோழர் ஆட்சி இருந்திருக்க முடியாது என்று காட்டும் முடிவும் பரிžலனைக்கு உரியனவேயாம்.

இவ்வளவு தெளிவற்ற நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகே மகேந்திரவர்மன் கி.பி. 600இல் காஞ்சியில் பல்லவப் பெருமன்னனாக அரியணை அமர்ந்தான். அவன் காலந்தொட்டு அபராசிதன் காலம் வரை (கி.பி.850) சுமார் இரண்டரை நூற்றாண்டுக்காலத்தில் தமிழக வரலாறு பல்லவர் ஆட்சியில் தெளிந்த நீரோடையாகப் புதுமை பூத்த சோலையாகக் காட்சி அளிப்பதைக் காண்கின்றோம். அக்காலத்தில் நாட்டில் வாழ்ந்த பல்லவப் பேரரசுகளைப் பற்றி ஆய்வதிலும் அக்காலத்தில் நாட்டில் இருந்த மாறுதல்களையே காண முடிகின்றது. கடைச் சங்க காலத்தில் தெளிந்த தமிழகத்தைக் கண்ட நமக்கு ஏழாம் நூற்றாண்டில் காணும் பல மாறுதல்களுக்குட்பட்ட தமிழகத்தை நினைக்கும்போது அந்த இடைப்பட்ட இரு பல்லவர் ஆட்சிக்கிடையில் தமிழகம் பெற்ற மாறுதல்களை எண்ணாதிருக்க முடியுமா? எனவே, இந்த மாறுதல்களைச் சிறிது கண்டு மேலே செல்வோம். தமிழ் நாட்டு மரபுக்கு முற்றும் மாறுபட்ட மன்னர் பரம்பரைகள் ஆள, முற்றிலும் மாறுபட்ட சமய நெறிகளும், வாழ்க்கை முறைகளும் பெரு வழக்காக மக்களிடையில் புக, நாடே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய நாடெனுமாறு காட்சியளித்தது.

ஆட்சி முறையில் மாற்றம் பெரும்பான்மையாகக் காண முடியவில்லை. ஒரே பரம்பரையில் தந்தைக்குப் பின் மகன் என்ற மரபு காக்கப்பெறுகிறது. சங்க காலக்கரிகாலன் போன்ற பல்லவ மல்லன், மக்கள் விருப்பப்படி அரசனாகும் மரபும் காணப்பெறுகின்றது. அரசர்களுக்கு இருந்த அமைச்சர் குழு முதலிய ஐம்பேராயமும் பிற சூழல்களும் பெரும்பாலும் மாற்றம் பெறாமலிருந்ததையும் காண்கின்றோம். அரசருடன் அரசியரும் அரசியலில் கலந்து பணிபுரிவதையும் காண முடிகிறது. எனினும், பல்லவர் காலத்தில் சமயம் அரசியலில் பங்கு கொள்வதைக் காண முடிகிறது. சங்க கால மன்னர்கள் சமயச் சார்புடையவர்களே ஆயினும் அரசியலில் அச்சமயத்தினைப் புகுத்தாது, 'ஒன்றே தேவன்' என்ற உணர்வில் அனைவரும் ஒன்றிக்கலந்து வாழ்ந்து வந்த மரபினைக் காணமுடிகிறது. ஆனால், பல்லவர் காலத்திலோ சமயமே முக்கிய இடம் வகிக்க, அரசியல் அச்சமயத் தலைவர்களை ஒட்டியே நடைபெற்றதாகக் காண முடிகிறது. மகேந்திரன் காலத்தில் காணும் இப்பெருமாற்றத்துக்குக் காரணம் இடைப்பட்ட நூற்றாண்டுகளின் மாறுதல்களே ஆகும்.

சங்க கால இறுதியிலேயே சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் கால்கொண்டு மாற்றுக் கருத்துக்களை வளர்த்தன என்பதைக் காப்பியங்கள் வழி அறிய முடிகின்றது. அசோகர் காலத்திலேயே பௌத்தமும் இலங்கை வரையில் சென்று அங்கே பெரும் சமயமாக விளங்கியதாயினும், தமிழக மக்களிடை அது கால் கொள்ளவில்லை. சைவ வைணவ சமய நெறிகளையும் கடவுளரையும் காட்டும் வகையில் எந்தச் சங்க இலக்கியங்களும் வேற்றுச் சமயங்களைச் சுட்டவில்லை. சமணம் முதன் முதல் சிலம்பிலும், பௌத்தம் முதன் முதல் மணிமேகலையிலும் பேசப்படுகின்றன. எனினும், அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் அவை இரண்டும் தமிழ் நாட்டுக்கே உரிய சைவ வைணவ சமயங்களிலும் மேம்பட்டு நின்று அக்கால அரசியல் துணை கொண்டு ஓங்கி, தமக்குள்ளேயே மாறுபட்டும், போரிட்டும் இறுதியில் பௌத்தம் நிலைகெட, 7 ஆம் நூற்றாண்டில் சமணமே மேலோங்கி நின்றதைக் காண முடிகிறது. இந்த மாற்றுச் சமயப் போராட்டங்களுக்கு இடையில்தான் சைவமும் வைணவமும் கூடத் தமக்கே அது வரையில் இல்லா வகையில் பல சடங்குகளையும் அவற்றை வளர்க்கக் கோயில்களையும் விரிவுபடுத்திக் கொண்டன. எனவே தான் அந்த அடிப்படையில் சமய இலக்கியங்கள் தனியாக வளர ஆரம்பித்தன. சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படையும் பரிபாடலில் சிலவும் தவிர்த்து வேறெங்கும் இறைவனை முன்னிறுத்திப் பாடிப் பரிசில் வேண்டும் நிலை காண முடியாததன்றோ? ஆற்றுப்படையும் பரிபாடலும் கூடக் காலத்தால் பிந்தியவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எனவே, கடமையில் கருத்திருத்திக் கடவுள் உணர்வை நெஞ்சில் நிறுவி தூய உள்ளத்தால் மக்கள் தொண்டாற்றிய தமிழகச் சமய நெறி, இந்தப் பல்லவர் காலத்திலே பல வகையில் மாற்றம் பெற்று வெறும் புறக்கோலங்களும் புகழுரையுமே சமயம் என்ற நிலையில் ஆக்கப்பெற்றுள்ளது. இந்தச் சமயப் போராட்டத்துக்கு அடிப்படைக் காரணம் பிற சமயச் சார்புடைய பிற நாட்டு அரசர்களும் அவர்களுடன் ஆணையில் பங்கு கொண்ட பிற சமயத் தலைவர்களுமேயாவர். நாம் இவை பற்றி நன்குஅறிய முடியாவிட்டாலும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் காணும் நாட்டு மொழியிலேயும்கூட இந்தப் பல்லவர் காலம் பெருமாற்றத்தைச் செய்துள்ளது. பல்லவர் கல்வெட்டுக்களே இதற்குச் சான்று பகரும். தமிழ்நாட்டில் இருந்து தமிழ் நாட்டையும், பிற எல்லைப் பகுதிகளையும் ஆண்ட பல்லவர்கள் தமிழிலன்றிப் பிராகிருதத்திலும் சமஸ்கிருதத்திலும் கல்வெட்டுக்களைப் பொறித்தார்கள் என்றால் அந்த ஆட்சியில் எப்படித் தமிழ் மொழி வளர்ந்திருக்க முடியும்? எனினும், பொதுமக்களும் தமிழகத்தின் சமயங்களாகிய சைவ வைணவ மக்களும் தமிழ்மொழியைப் பல வகையில் போற்றிக் காத்தனர். அக்காலத்தில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார், திருமூலர் போன்ற சமயத்தலைவர்களும் பதினெண்கீழ்க் கணக்கில் உள்ள சில நூல்களின் ஆசிரியர்களும் தமிழ் இலக்கியங்களையும் சமய இலக்கியங்களையும் போற்றி வளர்த்தனர். எனினும், அவர்களும் காலச் சூழலிலும் பிற சமயக் கொள்கைகளிலும் வெற்று முறைகளிலும் தம்மைப் பறிகொடுத்தவராகவே காண்கின்றனர். அவ்வளவு வேகமாக மாற்று நாகரிகமும் சமயங்களும் தமிழ்நாட்டில் ஊன்றத் தொடங்கிவிட்டன. சிலம்பின் காலத்திலேயே மாடலன் வழியே வைதீக சமயத்தின் வளர்ச்சியை அறிகிறோம். எனவே, அந்த அடிப்படையில் பல்லவர் காலத்திய சமய இலக்கியங்கள் வளர்ந்துள்ளன. அந்த இலக்கியங்கள் தூய தமிழ் நடையை விட்டுப் பிற மொழிகளையும் பின்பற்றின. சமயமும் சாதியும் போரிடத் தொடங்கி அவற்றைக் கடவுள் நெறிக்கு வழிகாட்டும் எல்லைக் கற்களெனக் காட்டும் பாடல்களைக் காண்கின்றோம். எனவே, இந்தப் பிற மொழிப் பல்லவர் ஆட்சியில் சமய அடிப்படையில் வேற்று மொழிகளும் கொள்கைகளும் பரவலாயின. 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்', 'ஆரியமும் தீந்தமிழும் ஆயினான் காண்' என்று ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டின் ஒரு மொழிக் கொள்கை மாறி இரு மொழிக் கொள்கை நிலைபெறத் தொடங்கிற்று. தமிழ் மக்கள் தமிழுக்குச் சமமாக மற்றொரு மொழியையும் தங்கள் வாழ்விடைக் கொள்ள வழி வகுத்த காலம் இப்பல்லவர் காலமேயாகும். இந்தக் கொள்கையைத் தமிழர்கள் வெறுக்காது ஏற்றுக் கொண்டதைக் கண்ட வேற்று மொழியாளர் ஒரு படி மேலே சென்றனர். அதனால்தான் நாட்டில் மொழி அடிப்படையில் - அந்த மொழிவழிச் சாதி அடிப்படையில் சண்டைகள் தோன்றி இன்று வரை வளர்ந்து வந்துள்ளன. இரண்டும் சமம் என்ற அப்பர் கொள்கையினையே சமயக் கண்கொண்டன்றி மொழிக் கண் கொண்டு ஒத்துக்கொள்ளாத நிலையில், வேற்று மொழியாளர் தமிழிலும் தம் மொழியே உயர்ந்தது என்றும், கடவுளுக்கு அம்மொழியே உகந்தது என்றும், அம்மொழி பேசுவோரே உயர்ந்தவர் என்றும் வாதிடவும் செயல்படவும் தொடங்கினர். இத்தொடக்கத்துக்கு வித்திட்ட காலம் இப்பல்லவர் காலமே. அதனாலேயே ஆழ்ந்த சமயப் பற்றுள்ள சேக்கிழாரும், 'அர்ச்சனை பாட்டே யாகும்: ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக' என்று இறைவனே சுந்தரருக்குக் கட்டளை இட்டதாகப் பாடுவர். அப்பரும் 'தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்' என்று பாடுகிறார். எனினும், இந்தப் போராட்டம் இன்றும் தீரவில்லை. இந்த மொழிப் போராட்டம் தீர்ந்தாலன்றி, தமிழ்நாட்டில் வாழ்வார் தம்மைத் தமிழராகக் கொண்டு, தமிழே சிறந்த மொழி எனக் காட்டி இணைந்து வாழ்ந்தாலன்றி, உய்வு இல்லை.

இவையன்றிச் சமுதாயத்திலும் எத்தனையோ மாறாட்டங்கள் இப்பல்லவர் காலத்தில் நிகழ்ந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. மக்கள் உடல் உழைப்பும் கடமையும் உள்ளவையாகக் கொண்டு 'தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக' வாழ்ந்து தான் மெய்ம்மை வாழ்வு என்றிருந்த நிலை மாறி, வெறும் ஆரவாரமும் மாற்று நிலைகளும் பெருக அவற்றின் துணை கொண்டு சோம்பி வாழும் வாழ்வினை மேற்கொண்டு விட்டார்கள் என்றுணர முடிகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்த சமுதாயத்தில் சாதிகளும் பிற வேறுபாடுகளும் ஆட்சிபுரியலாயின. 'செய்தொழில் வேற்றுமை யான்' என்ற வேறுபாடு மாறி, பிறப்பால் வேறுபாடுகாட்டும் காலமாக மாறிய நிலையைப் பார்க்கின்றோம். சுந்தரர் காலத்தே 'அந்தணர் வேறோர் அந்தணர்க் கடிமை யாதல் இல்லை' என்று வழக்காடும் அளவுக்கு ஒரு சாதிக்கு ஒரு நீதி என்ற கொள்கை இந்த முதற் பல்லவர் காலத்தில் வளர்ந்ததுதான். அதனாலேதான் சேக்கிழார் பாடும்போதுகூட, தமது பெரிய புராணத் தலைவர்களைச் சாதிகள் குறித்துக்காட்டுகின்றார். அத்துடன் அவ்வச்சாதிக்கு இன்னின்ன தொழில்கள் என்ற ஒரு கட்டுப்பாடும் உண்டாகி இருப்பதறிகிறோம். எனினும் இந்தச் சாதி வேற்றுமை கற்றார் மாட்டு அதிக வேறுபாட்டினைக் கற்பித்து மாறுபாட்டை உண்டாக்கவில்லை என்பதை அப்பர், சம்பந்தர், திருநீலகண்டயாழ்ப்பாணர் போன்றார் வாழ்விலிருந்து அறிந்து கொள்கிறோம்.

ஆட்சி முறையில் பல வரி விதிப்பு முதலியவை பற்றிய மாற்றங்கள் சிலவற்றை நம்மால் காண முடிகிறது. எனினும் பிற்காலப் பல்லவர்கள் காலத்தில்தான் நாட்டு ஆட்சியின் நல்ல இயல்புகளையும் முறைகளையும் பரக்கக் காண்கிறோம். தமிழராகவே ஆன சிம்மவிஷ்ணுவின் பரம்பரையினர் ஓரளவு வேற்று மக்கள் வாழ்வின் அடிப்படையில் நின்றார்களேனும், பெரும்பாலும் தமிழர்கள் என்று தம்மை நினைந்து, தமிழ்ச் சமுதாய நெறியிலேயே தம் அரசியலையும் வாழ்வியலையும் அமைத்துக் கொண்டார்கள் எனக் காண்கிறோம். எனினும் அந்த இருண்ட காலமாகிய முற்காலப் பல்லவர் காலத்தில் உண்டான சில சமுதாய மாறுதல்கள் தமிழ் மக்களிடம் வேரூன்றி நிலைத்து, இன்றளவும் அவர்களை விட்டு நீங்காமல் வாழ்கின்றன என்பது தேற்றம். இனி இந்த ஆய்வினை விட்டுப் பிற்காலப் பல்லவர் கால வரலாற்றைக் காண்போம்.

சிம்மவிஷ்ணுவின் பரம்பரையினராய மகேந்திரன் தொடங்கி இரண்டாம் பரமேசுவரன் வரையிலும் ஆண்ட அரசர் காலத்தில் நாடு சமயப் போராட்டங்களுக்கு உள்ளாகித் தெளிநிலை பெற்றமை காண்கிறோம். அதற்கு முன் வந்த பல மன்னர் பரம்பரையினர் சிதைந்தும் மாறியும் பிறழ்ந்தும் உழந்தும் தமிழ் மக்களோடு தம்மையும் உறவு படுத்திக் கொண்டு, தமிழராகவே மாறிவிட்டனர். அவர்தம் பரம்பரையினர் இன்றும் அம்மரபுப் பெயர்களைச் சிதைந்தும் உறழ்ந்தும் கொளக்கொண்டு முற்றிய தமிழர்களாக மாறிவிட்டனர். அப்படியே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாறிய பல்லவரும் தமிழ் உணர்வு பெற்றுத் தமிழ்ச் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ற பல செயல்களைச் செய்தார்கள் எனக் காண்கிறோம். இரண்டாம் பரமேச்சுரனுக்கு அடுத்து வந்த இரணியவர்மனின் பரம்பரையினரான நந்திவர்மப் பல்லவன் தொடங்கி அபராஜிதன் வரையில் நாட்டை ஆண்ட வரலாறு தெளிந்த நீரோடை போன்றே அமைகின்றது. எனவே, அக்கால எல்லையிலமைந்த அரசர்களைத் தனித்தனியாக எடுத்து ஆய்வதோ அன்றிச் செயல்களை அறுதியிடுவதோ ஈண்டுத் தேவை இல்லையென எண்ணுகிறேன். அவர்களைப் பற்றி எல்லாம் முன் ஆய்ந்த வரலாற்று அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளார்கள். எனவே, அந்த உண்மைகளை நானும் இங்கே திருப்பிச் சொல்வது தேவையற்றது.

இப்பல்லவர் காலத்துக்கும் முற்காலப் பல்லவர் காலத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டு இப்பல்லவர் காலத்திய சமுதாய வரலாற்றினை ஓரளவு விளக்கிக் காட்டி என் பணியை முடித்துக் கொள்ள நினைக்கிறேன். அக்காலத்திய சமயம், இலக்கியம், கலை ஆகியவைப் பற்றி ஆராயத் தனித்தனியாக அறிஞர்தம் கூட்டங்கள் இன்று நடைபெறுகின்றமையின் அவற்றுள் புகுந்து துருவி ஆராய வேண்டிய தேவையும் இல்லை என்று கருதுகிறேன். எனவே, மேற்போக்காகப் பல்லவர் கால வரலாறு நமக்குக் காட்டும் ஒருசில உண்மைகளைக் கண்டு அவற்றால் தமிழ்நாடு பெற்ற பயன்களையும் மாறுதல்களையும் பிறவற்றையும் காட்டல் போதுமானதாகும்.

தமிழ்நாட்டில் முதற் பல்லவர் ஆட்சி மாற்றங்களைச் செய்தது என்றால் பிற்காலப் பல்லவர் ஆட்சி அம்மாற்றங்களை மாற்றி, நிலைத்த பல பணிகளையும் செய்துள்ளது. மகேந்திரன் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய உடனே நாட்டில் பெருங்கிளர்ச்சி உண்டாயிற்று. சிம்மவிஷ்ணுவாகிய அவன் தந்தையின் பெயரை ஒட்டி அவனை வைணவ சமயத்தைச் சார்ந்தவனாகக் கூறினும் அது ஆராய்தற்குரியது. அப்படியே அவன் மகனான நரசிம்மன் காலத்தில் அக்காலப் பாண்டிய நாட்டில் உள்ளுக்குள் புகைந்திருந்த பெருங்கிளர்ச்சி கூன்பாண்டியனுடைய சமய மாற்றத்தால் வெளியே கிளர்ந்தெழுந்து நாட்டில் பெரு மாற்றத்தை உண்டாக்கிற்று. ஒரு நாட்டு மக்களின் அடிப்படைப் பண்பாட்டிற்கு மாறுபட்ட எந்தக் கொள்கையும், அவ்வப்போது ஆணை அளித்தல், பிறவகை உதவிகள் முதலியவற்றால் ஓங்குவது போலக் காணப்படினும், கால வெள்ளத்தில் எதிர்நிற்காது மறையும் என்பதைத்தான் இந்த ஏழாம் நூற்றாண்டின் வரலாறு காட்டுகின்றது. இந்த உண்மை உணர்ந்தமையால்தான் மேலைநாட்டிலிருந்து தமிழகத்தில் தம் சமயம் பரப்பவந்த பாதிரிகள் தம்மை நடை, உடை, பாவனைகளால் மட்டும் அன்றிப் பெயர், வாழிடம் ஆகிய பிற வகைகளாலும் தமிழராகவே மாற்றிக் கொண்டனர். வரலாறு உணர்த்தும் இந்த உண்மையை இன்னும் சிலர் நாட்டில் புரிந்து கொள்ளாமையாலேதான் இன்னும் பல சண்டைகளும் மாறுபாடுகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

பல்லவர் காலத்தில் சமய மாறுபாடு உண்டானமை உண்மையே யாயினும் அம்மாறுபாடு வேறுபாடற்ற சங்க காலச் சமய நெறியினை வழங்கத் தவறிவிட்டது. வைதிகத்தோடு பிணைந்த பிறிதொரு கலவைச் சமயமே தமிழகத்தில் கால் கொண்டது. அத்துடன் புதுப்புது விதமான கடவுளரும் வழிபடு முறைகளும் புகுந்தன. விநாயகர் வணக்கம் இக்காலத்தில் ஏற்பட்டதேயாகும். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவராகிய பரஞ்சோதியார் வாதாபியை வென்று அங்கிருந்தவற்றுள் பல பொருள்களைக் கொண்டு வந்தமை போன்று பிள்ளையாரையும் உடன் கொண்டு வந்தார். அதனாலேயே 'வாதாபி கணபதிம் பஜே' என்ற வணக்கப் பாடலும் உருவாயிற்று. விநாயகர் வழிபாடு இன்றும் மேலைச் சாளுக்கியர் ஆண்ட மராட்டியப் பகுதிகளிலும் பம்பாயிலும் பிறவிடங்களிலும் மிகச் சிறந்த முறையில் விரிந்த வகையில் கொண்டாடப் பெறுவதறிகிறோம்.

பரஞ்சோதியார் விநாயகரை ஏன் கொண்டு வந்தார்? அதனை அரச மரத்தின் கீழ் ஏன் நிறுவினார்? அரச மரத்துக்கும் விநாயகருக்கும் உள்ள தொடர்பு என்ன? பௌத்த சமயக் காலத்திலே தமிழ்நாட்டில் புத்தர் அருளாளராக அடிப்படையான அரசமரத்தடியில் அவருடைய பேருருவங்களை நிறுத்தி வழிபட்டனர். அடுத்து வந்த சமணர்களும் தம் சமயத் தலைவர்களை மக்கள் மனமறிந்து, அதே நிழலில் நிறுவி வழிபட்டிருக்கக்கூடும். அசோகும் அவருக்கு அருந்துணையாக அமைந்ததன்றோ?அதே வேளையில் வாதாபியில் விநாயகரின் பேருருவைக் கண்ட பரஞ்சோதியார் இந்த விநாயகர் பேருருவை அரச மரத்தின் கீழ் நிறுத்தின் மக்கள் மன நிறைவு பெறுவர் எனக் கணித்து இங்கே கொண்டு நிறுவிவிட்டார். மக்கள் அன்று மன நிறைவு பெற்றதோடு, என்றும் அவ்விநாயகரையே முதல் வழிபடு கடவுளாகவும் கொண்டுவிட்டனர். எனவே, பரஞ்சோதியார் அரசியல் வெற்றி மட்டுமன்றித் தம் சமயக் கொள்கையிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை இவ்வரலாறு காட்டுகிறது. இப்பிள்ளையாரைப் பற்றித் தமிழ் இலக்கியத்திலேயே முதன் முதல் பரஞ்சோதியாரின் காலத்தவரான ஞானசம்பந்தர்தாம் பாடுகின்றார்.

இவ்வாறு சமய அடிப்படையில் எத்தனையோ மாற்றங்கள் நடைபெற்றன. அவற்றுள் பெரும்பாலான இன்றளவும் வாழ்கின்றன. கலையுலகில் பிற்காலப் பல்லவர் செய்த புரட்சி பெரும் புரட்சியே ஆகும். யாரும் நினைத்தறியா வகையில் குகைக்கோயில்களைப் பலவகையில் வளர்த்து கற்கோயில்களை அமைத்து அக்கோயில்களில் நிலையான கல்வெட்டுக்களையும் எழுதி, உலகப் புகழ் பெற்று விட்டார்கள். தமிழ் நாட்டில் முதன் முதல் கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் உண்டாக்கி வரலாற்றுக்கு வழி கோலிய பெருமை இப்பல்லவரையே சார்ந்ததாகும். எனவே, தமிழகத்தின் தெளிந்த வரலாற்றுக்கு அடிப்படை வகுத்த இப்பல்லவரை நாம் என்றென்றும் போற்றக் கடமைப்பட்டவராகின்றோம்.

கலை உலகில் இவர்கள் செய்த மாற்றங்கள்தாம் எத்தனை! வண்ணக் கலவைகள் ஆயிரம் ஆண்டுகள் கழியினும்அழியாதிருக்கும் வகையில் அமைத்துத் தீட்டிய சித்திரங்களை இன்றும் போற்றுகிறோம். மாமல்லபுரத்தின் எழில் மிகுந்த சிற்பங்களை எந்நாட்டவரும் வைத்த கண் வாங்காது பார்க்கும் ஒரு நிலையினைக் காண்கிறோம். கயிலையின் காட்சியையும் வைகுண்டத்தின் காட்சியையும் காஞ்சியில் அமைத்ததோடு, அக்கோயில்களில் என்றும் கண்டு மகிழும் சித்திரக் காட்சிகளையும் வரலாற்றுக் காட்சிகளையும் வடித்த பல்லவர் திறன் போற்றற்குரியதாகும். பல்லவ மல்லன் ஆட்சிக்கு வந்த வரலாற்றை வைகுந்தப் பெருமாள் கோயில் சுவர்கள் அல்லவோ இன்றும் நம்மோடு பேசி விளக்கிக்கொண்டிருக்கின்றன. 'கல்லும் சொல்லாதோ கவி' என்ற பாட்டின் அடியும் இவர்தம் வடித்தெடுத்த கல்வெட்டுக்களைப் பற்றி எழுந்த அடியாகவன்றோ கொள்ளவேண்டும். பல்லவர் சென்ற இடமெல்லாம் அவர்தம் கைவண்ணத்திறனும் அத்திறன் வளர்ச்சி அடைந்த வகையும் கொண்டன்றோ இன்றைய வரலாற்றாசிரியர்கள் அவரவர் காலத்தையும் அக்காலத்தை ஒட்டிய நாட்டு வரலாற்றையும் கணக்கிடுகிறார்கள்? இப்படி ஒரே சமயத்தில் கலையையும் வரலாற்றையும் பிணைத்து வளர்த்த அவர்தம் பெருமையை பேசாதிருக்க முடியுமா?

பிற்காலப் பல்லவர் காலத்தில் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் நன்கு வளர்ந்தன எனக் கொள்ளலாம். 'நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' என்ற மரபு வாக்கியப்படி நந்திவர்மனின் தமிழ் உணர்வை உலகு நன்குணர்ந்துள்ளது. இன்று வரையில் வாழ்ந்து சிறந்தனவாகப் போற்றப்படும் சைவ இலக்கியங்களில் ஏழு அல்லது எட்டுத் திருமுறைகளும் வைணவ நாலாயிரத்தின் பெரும்பகுதிகளும் இக்காலத்தில் எழுந்தனவன்றோ? இதனாலன்றோ அத் தெய்வ நெறி பாடும் இலக்கியத்தில் பல்லவர் இடம் பெற்றுச் சாகாவரம் பெற்று வாழ்கின்றனர். பல்லவருக்கு மாறுபட்டவரைத் தம் இறைவன் மறுக்கம் செய்து பல்லவரை வாழ வைக்க வேண்டும் என்ற உணர்வைச் சுந்தரர்,
"உரிமையால் பல்லவர்க்குத் திரைகொடா
மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமையால் புலியூர் சிற்றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே"
எனப் பாடி இறைவன் பல்லவர் வாழ வழி வகுத்தவன் என்பதைக் காட்டுகின்றாரன்றோ? 'பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி' என்று தேவார அடியவர்கள் காஞ்சியை நினைக்கும்போதே அதொண்டை நாட்டைப் பல வகையில் செப்பம் செய்த அதே வேளையில் அத்திருத்தப் பணிகளுக்கெல்லாம் பல வரிகளையும் இட்டு வசூல் செய்து நாட்டு வளத்தைப் பெருக்கிய பல்லவர் சமுதாயப் பணியை எல்லா வரலாற்றாசிரியர்களும் போற்றுகின்றனர். உத்திரமேரூர் ஏரி வற்றியபோது வண்டலை வாரியும், வற்றாதபோதும் படகுகள் கொண்டு வண்டலை வாரியும் அதனைக் கரையில் இட்டுக் கரையைப் பலப்படுத்திய நந்திவர்மன் இன்றைய 'P.W.D.' துறைக்கு வழிகாட்டியாவான். (Historical sketches of Ancient Dekhan Vo1. II P.14).

இவ்வாறு வளப்படுத்திய பகுதிகளில் சிலவற்றை அக்கால வைதிக நெறிக்கேற்பப் பல்லவ மன்னர்கள் பிரமதேயமாகவும் தேவ தானமாகவும் பிராமணர்களுக்கம் கோயில்களுக்கும் அளித்தனர் எனக் காண்கிறோம். இவர்கள் காட்டிய வழியிலேதான் பிற்காலத்திய சோழர்கள் பெருமளவில் தானங்களைச் செய்து அவற்றை வரியிலா நிலங்களாக்கினர். மக்களினத்துள் வேறுபாடு வளர்க்கும் இந்த முறை, சமுதாய வாழ்வில் காலத்தால் மறைக்கப்படும் என்ற வரலாற்று உண்மைக்கு ஏற்ப, இக்காலத்தில் முற்றும் நீக்கப்பெற்று, வேறுபாடற்ற நிலையில் அவை இன்று மக்களிடையில் வழங்கப் பெறுவதைக் காண்கிறோம்.

பல்லவர் காலத்தில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தமை அறிகிறோம். அப்படியே அளவுக்கும் -முகத்தல், தூக்கல் அளவைகளுக்கும் பல்வேறு வரையறைகள் இருந்தன எனக் காண்கிறோம். இவை யாவும் நாட்டுக்குப் புதியன அல்லவேனும் ஓரளவு இடைக்காலத்தில் சிதைந்த நிலையில் இவர்களால் செப்பம் செய்யப்பெற்றதெனக் கொள்ளலாம்.

பல்லவர் ஆட்சி முறையைப் பற்றியும் நீதி வழங்கிய நெறி பற்றியும் நாட்டுப் பிரிவுகளைப் பற்றியும் கூடப் பல அறிஞர்கள், கிடைத்த சான்றுகளைக் கொண்டு நன்கு ஆய்ந்துள்ளனர். அவற்றின் வழி பல்லவர் நாட்டைச் செம்மையாகப் பகுத்தும் நேரிய வழியில் நீதி வழங்கியும் மக்கள் வாழ்வின் அடிப்படை உணர்ந்தும் செயலாற்றினார்கள் என அறிய முடிகிறது. நா•டைப் பல கோட்டங்களாகப் பிரித்துப் பெரும்பாலான அதிகாரங்களை அம்மக்களிடமே விட்ட பெருமை பல்லவர்களுடையதே. இன்றைய மாநில சுயாட்சிக் கோரிக்கையை மறுப்பவர்க்கு இப்பல்லவர்கால ஆட்சி வரலாறு ஒரு சிறந்த பாடமாக அமையும் என நம்புகிறேன்.

வெற்றி பெற்ற பெருமன்னர்கள் தத்தம் பெயரால் மண்டலங்களையும், ஊர்களையும், நாடுகளையும் - ஏன் - ஏரிகளையும் அமைத்தமை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இன்றும் இந்தக் கொடுநோய் ஆள்வார் யாராயினும் அவர்களை விடவில்லை. இடைக்காலத்திலும் பெருமன்னர்கள் ஆகிய ராசேந்திரன் போன்றாரையும் இந்நோய் பற்றியமையை அறிகிறோம். ஆயினும் வரலாறு அது தவறு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இப்பல்லவர் அன்று வைத்த பெயர்கள் எல்லாம் இன்று எங்கே உள்ளன? பல பெயர்களே இன்றி மறைந்தன. சில சிதைந்து நிலைகெட்டன. மாமல்லபுரமும் திரையன் ஏரியும் மகாபலிபுரம் எனவும் தென்னேரி எனவும் வழங்கப்படுதல் இதற்குச் சான்றாகும். அப்படியே நாடுகளுக்கு அவர்கள் வைத்த பெயர்கள் மாறி இயற்பெயர்களே நிலைத்தமையைக் காண்கிறோம். பிற்காலத்தில் புகழுக்காக உண்டான கங்கைகொண்ட சோழபுரம் நிலைகெடாத் தொண்டால் அமைந்த தஞ்சையும் பெரியகோயிலும் இன்றளவும் புகழ்பெற்று வாழ்கின்றன அல்லவா? அண்மையில் 'டால்மியாபுரம்' கல்லக்குடியாக மாறிய கதையும் அத்தகையதே. யாரும் தங்கள் பெயரால் எதையும் அமைக்க ஒருப்படமாட்டார்கள். பேரும் புகழும் பெற்ற வரலாற்றில் வாழ்கின்ற அத்துணைப் பெருமக்களும் தம்மை மறந்து தம் நாமம் கெட்டுப் பணியாற்றியவர்கள் என்பதையும் உணர வேண்டும். இவ்வுணரவைப் பல்லவர் காலத்திய வரலாறு நமக்கு ஊட்டும் என நம்புகிறேன்.

பல்லவர் மக்கள் வாழ்வின் அடிப்படையான கல்வியை ஓம்பத் தவறவில்லை. 'கல்வியே கரையில்லாத காஞ்சி மாநகர்' என்று அக்காலத்தில் வாழ்ந்த அப்பரடிகளாலேயே காஞ்சிபுரம் கல்வியும் இணைந்து போற்றப்பட்டமை அறிகிறோம். அக்காலத்திய காஞ்சியில் கற்ற அறிஞர் பலர் வடநாட்டில் நெடுந்தொலைவில் இருந்த நாளந்தாப் பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் முக்கியப் பொறுப்பேற்றுச் சிறந்த அறிவியல் விற்பன்னர்களாக இருந்ததைக் காண முடிகிறது. மேலும், அக்காலத்தில் காஞ்சிபுரம் வந்த žன யாத்திரகராகிய யுவான்-சுவாங் இக்கல்விசேர் காஞ்சியைப் பாராட்டிய நிலையும் எண்ணத் தக்கதாகும். எனவே, மக்கள் வாழ்வின் கண் எனப் போற்றும் கல்வியைப் பிற்காலப் பல்லவர் நன்கு போற்றிப் புரந்தனர் என அறியலாம். அப்படியே மக்களை நோயணுகா வகையிலும், அணுகின் தீர்க்கும் நெறியிலும் பல நல்ல ஏற்பாடுகளைச் செய்து மக்கள் நலம் போற்றியும் பல்லவர் திறம்பட ஆண்டவர் எனக் காண்கிறோம்.

இத்துணை வகையில் உள் நாட்டில் அமைதி காத்த அதே வேளையில் புறப்பகைகளுக்கு அஞ்சாது அவர்களைப் புறமுதுகிடச் செய்த பெருமையும் பல்லவரைச் சார்ந்ததாகும். பெருமன்னன் ஆகிய ஷர்ஷனைத் தோற்கடித்த சாளுக்கிய மன்னனாகிய புலிகேசியைத் தோற்கடித்ததோடு, அவன் தலைநகரைக் கைப்பற்றிய பெருமை நரசிம்மவர்மனையும் அவன் படைத்தலைவராகிய பரஞ்சோதியாரையும் சார்ந்ததன்றோ? பல்லவ மன்னருள் போரற்று அமைதியில் வாழ்ந்தவர் ஓரிருவரே உள்ளனர் எனலாம். எனவே, அவர்கள் ஆண்ட காலத்தில் எல்லாம் புறப்பகைகளாகிய மாற்றாரைப் புறங்கொடுத்தோடச் செய்ததோடு, நாட்டு அகப் பகைகளாகிய அறியாமை, பிணி, வறுமை முதலியவற்றைப் போக்கிப் பல்லவர் செம்மையை நாட்டில் நிலைநாட்டினர் எனக் கொள்ளலாம். அதனாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்தும் அவர்தம் புகழ் ஓங்கி உயர்கின்றது. தம் ஆணையின் கீழ்ப்பட்ட மக்களின் கருத்தையும் நெறியையும் மொழியையும் பண்பாட்டையும் சமய உணர்வையும் பிற நல்லியல்புகளையும் மதித்துப் போற்றிய பிற்காலப் பல்லவர் தமிழ்நாட்டு வரலாற்றில் என்றென்றும் அழியாத நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு முன் ஆண்ட அவர்கள் முன்னோர் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே அம்மக்கள் வாழ்வுக்கு ஒவ்வாத பலவற்றைச் செய்து வந்தமையால்தான் அவர்தம் பெயர்களைக்கூட அறியமுடியாதவகையில் மெல்ல மெல்ல மறைந்தனர் - மறைகின்றனர். பல்லவர் வரலாறு கற்றுத்தரும் இந்த நல்ல பாடத்தை அறிந்து செம்மையாக நாடாள்வார் உலகில் நல்ல சிறப்புற்றுக் கால வெள்ளங் கடந்து புகழ் பெற்று வாழ்வார். அல்லாதார்..?

பல்லவ மன்னர் தொட்ட பல பணிகள் இன்றளவும் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன. இனியும் தொடர்ந்து நடைபெற வாய்ப்பும் உண்டு. நாடு நாடாக வேண்டுமானால் அதனை நாடாக்கும் பொறுப்பு எக்காலத்தும் ஆள்வோரைச் சார்ந்தது என்பதை உணர்த்தும் வகையில் பல்லவர் ஆட்சி அமைந்திருந்தது. மேலும், தமிழக வரலாற்றின் பொற்கலம் எனப் போற்றப்பெறும் பிற்காலச் சோழர் காலத்துக்குப் பல வகையில் பல்லவர் காலம் வழிகாட்டியாக அமைந்தது. சங்க காலத்துக்குப் பிறகு உண்டான நினைக்க முடியாத பெருமாற்றத்துக்குப் பிறகு ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் பிற்காலப் பல்லவர் வரலாறு ஆகிய உதயசூரியன் தோன்றியிராதிருந்தால், தமிழக வரலாறு மட்டுமன்றித் தமிழர்தம் வாழ்வு, வளன், பண்பாடு அனைத்தும் எப்படி எப்படியோ உருமாறி இருக்கும் பிற்காலப் பல்லவர் நாட்டு மக்கள் உளமறிந்து, தம்மை உளத்தால் தமிழராக்கிக் கொண்டுதமிழ் நாட்டுச் சமயம், இலக்கியம், பண்பாடு இவற்றைக் காவாது அவர் தம் முன்னோர் போல வேற்று வழியில் சென்றிருப்பாரேயானால், பிற்காலச் சோழர் தம் எழுச்சிக்கும் அரசுக்கும் இடமே இருந்திருக்க முடியாது. எனவே, எங்கோ சென்ற தமிழகததை அதன் நேரிய வழியில் திருப்பிய பெருமை பிற்காலப் பல்லவர்களுக்கும் அக்காலத்தில் வாழ்ந்த சமய, இலக்கியப் பேரறிஞர்களாகிய அப்பர், சம்பந்தர் போன்றார்க்கும் உரியதாகும். எனவே, இப்பல்லவர் காலம் இத்மிழக வரலாற்றின் ஒரு திருப்பு மையம் என்று கொள்ளலாம்.

நான் மேலே கூறிய இக்கால வரலாற்றை இந்த நூற்றாண்டின் தொடக்கம் தொடங்கி ஆய்ந்தவர் பலர். இன்று பல கோணங்களில் ஆய இருக்கின்ற அறிஞர்கள் பலர். எனவேதான் நான் அக்கால நிலையில் வாழ்ந்த அரசர்களையும் அவர்தம் ஆக்க அழிவுப் பணிகளையும் போர் முறைகளையும் சுட்டிக்காட்டாது, அவர்கள் சமுதாயத்தோடு தொடர்பின் நிலையின் வழியினையும் அதன் வழி உருவாகிய பணிகளையும் சுட்டிக் காட்டினேன். இதில் கூறிய ஒரு சில முடிவுகளை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறமாட்டேன். இவை பற்றிய சிந்தனைகளைக் கிளறவே இவற்றைச் சுட்டிக் காட்டினேன். அறிஞர்கள் மேலும் ஆராய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

முடிவுக்கு முன் தொல்பொருள் ஆய்வுக் குழுவிற்கும் தமிழக அரசுக்கும் சில சொல்ல நினைக்கிறேன். கல்வெட்டுக்கள் பற்றியும் தொல்பொருள் ஆய்வு பற்றியும் தமிழகத்தில் போருக்குமுன் நடைபெற்ற அத்துணைப் பெருமளவில் தற்போது நடைபெறவிலலை என நம்புகிறேன். காரணம் எதுவாயினும் இத்துறையில் கருத்திருத்தாத நிலை வருந்ததத்தக்கதே. நல்ல வேளையாகத் தற்போது பொறுப்பேற்றுள்ள இயக்குநர் இக்குறைகள் இல்லா வகையில் பல துறைகளில் இத்தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்வதோடு, அவற்றைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் நூல்களாகவும், வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் வாயிலாகவும் விளக்கி வருகின்றனர். இத்துறையில் செய்ய வேண்டுவன பல. புகார் நகரம் உள்ளமையை நிலைநாட்டும் பல உண்மைகள் அகழ்பொருள்கள் வழியே தற்போது காட்டப்பெறுகின்றன. சற்றே ஆழ்ந்து ஆய்வு செய்யும் துறை செயலாற்றின் எத்தனையோ நாம் கனவாக எண்ணும் சங்க கால வாழ்க்கை நிலைகள் உண்மைகளாக்கப் பெறும். மொகஞ்சதாரோ, ஆரப்பா போன்ற நாகரிகங்கள் பண்டைத் தமிழர் நாகரிகம் அன்று என்பாரும், தென்னிந்திய நாகரிகமே, பிற நாகரிகங்களுக்கு அடிப்படை இல்லை என்பாரும் வாய்மூடி மௌனியாகும் வகையில் பலப்பல பழமை பற்றிய புதிய உண்மைகள் வெளியாகலாம். அப்படிக் கால எல்லையில் நம் தமிழகத்தில் உண்டான மாறுதல்களையும், அவற்றின் வழியே கலை, நாகரிகம், பண்பாடு, சமயம், வாழ்வு இவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும் திட்டவட்டமாக நிறுவ முடியும். இவற்றைக் கற்பனையாகக் கூறவில்லை. காரண அடிப்படையிலேயே கூறுகிறேன். இவ்வாறு வரலாறு காணாத கால எல்லைக்கு முற்பட்டு இடையிடை விடப்பட்ட பகுதிகள் இல்லையென்னாவாறு இன்றுவரை தெளிந்த தமிழக வரலாற்றை உருவாக்க முடியும், அந்த நிலை உரவாயின் உண்மையில் தமிழினம் உலகில் உயர்ந்த நெறி போற்றிய - ஆக்கத்திறன் படைத்த இனம் என்பதை உலகோர் உணர்வர். தமிழ்நாட்டு வரலாறு பற்றிய பல நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. அவற்றை மறுபடி அச்சிட்டு உலவவிட வேண்டுவது இத்துறையின் கடமையாகும். இந்த ஆக்க நிலைக்கு அரசு ஒல்லும் வகையில் செல்லும் வாயெல்லாம் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசுக்கு ஒரு வார்த்தை. எத்தனையோ திட்டங்களில் எண்ணற்ற கோடி ரூபாய்களைச் செலவிடும் அரசாங்கம் இத்துறையில் கருத்திருத்த வேண்டும். இன்று இந்தியாவிலேயே - ஏன் - உலகிலேயே தமிழினம் தனித்த சிறப்பினை உடையது என்ற பெருமைக்குத் தமிழர்தம் பழையதிலும் பழையதாய்ப் புதியதிலும் புதியதாய் அமைந்த சமுதாய அடிப்படையே காரணம் ஆகும். இதைக் கொண்டுதான் இன்றும் தமிழ்நாடு மொழி முதலிய வகைகளில் பிற மாநிலங்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. எனவே, இவைகள் செம்மையாக்கப் பெற வேண்டுமாயின் இவற்றுக்கு அடிப்படையான தொல்பொருள் ஆய்வில் அதிகக் கருத்திருத்த வேண்டும். இத்துறையை விரிபுடுத்தி, பல துறைகளில் பலப்பல வகைகளில் ஆய்வினை வளர்த்து உலகுக்கு மறைந்து கிடக்கும் எண்ணற்ற உண்மைகளைப் புலப்படுத்த வேண்டும். நமது ஒரு சில இலக்கியங்களைக் கண்டு வியக்கும் உலகம் உண்மையில் நம் பழமை நன்கு விளக்கப்படுமாயின் நம்மை மிகமிகப் பாராட்டும். இந்த அடிப்படையிலேதான் ஆங்கில ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்ற வந்த மேல்நாட்டவர் இத்துறையில் கருத்திருத்தினர். அந்த மேலைநாட்டுப் பெரியவர்தம் உலையா முயற்சி இன்றேல் சிந்துவெளி நாகரிகமும் தென்னிந்திய நாகரிகமும் உலகுக்குத் தெரிய வழியில்லை அல்லவா? இனி இந்தப் பொறுப்பனைத்தும் தமிழக அரசினைச் சார்ந்ததாகும். ஆனால் அதற்கு ஒரு குறுக்கீடு உண்டு. என்ன? இத்துறையின் பெரும் பகுதி மத்திய அரசாங்கத்தில் இருப்பதுதான். அதனாலன்றோ பெரியகோயில் அமைத்த இராசராசன் உருகூச் சிலையைத் தமிழக அரசு விரும்பினும் அவன் அமைத்த அக்கோயிலேயே வைக்க முடியாத சங்கடமான நிலை உண்டாகின்றது. மாநில சுயாட்சி கோரும் தமிழக அரசு, முதலில் இதில் சுயாட்சி கோரி இத்துறையை முற்றும் தனதாக்கிக் கொள்ளல் வேண்டும்.

தமிழக அரசின்கீழ் இத்துறை வருவதற்கு அடிப்படை ஒன்றுண்டு. வரலாற்று அடிப்படைக்குரிய கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோயில்களில் உள்ளன. கோயில்களோ மாநில ஆட்சியில் உள்ளன. எனவே, அவற்றைப் பற்றி எழும் ஆய்வுகளும் இந்த அரசுக்கே உரிமையாக இருத்தல்தானே முறை. வேண்டுமாயின் இத்துறை வளர மத்திய அரசிடம் மானியம் பெறலாம். இத்துறைக்கெனவே தனியமைச்சகமும் ஆய்வகமும்கூட அமைக்கலாம். இத்துறை தமிழர் வாழ்வை உலகுக்கு உணர்த்த மிகமிக இன்றியமையாதது. இன்றைய தமிழக அரசாங்கமும் இந்த உண்மையை அறியாத அரசாங்கம் அன்று. அறிந்தது என்ற அடிப்படையிலேயே இந்த வேண்டுகோளை அவர்களுக்கு விடுக்கிறேன். எனவே, விரைவில் இந்தத் துறையினை மாநில அரசுக்குக் கொண்டுவருவதோடு, இதன் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும் தளராது செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும் தளராது செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை; எனினும், அவர்கள் எப்போது காஞ்சிக்கு வந்தார்கள் என்பதைத் திட்டமாக வரையறுக்க முடியவில்லை. பல்லவர் வாழ்வின் இறுதி எல்லை, அபராஜிதரோடும் தமிழக வரலாற்றின் திருப்பு மையமான திருப்புறம்பியப் போரோடும் அறுதியிடக்கூடிய தெளிந்த நிலை காணப்பெறினும் அவர்தம் தொடக்க எல்லை திட்டமாக வரையறுக்க முடியாததாகவே உள்ளது. இதனாலேயே இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ முதல் நூற்றாண்டின் இறுதியிலோ வாழ்ந்த தொண்டைமான் இளந்திரையனை இவர்கள் முன்னோக்கிக் கொண்டு இடர்ப்படுகின்றனர். எனினும், இவர்களுடைய ஆய்வின்படி இவர்கள் வடக்கிருந்து வந்தவர் என்பதும், அவருள் முதலாவதாகக் காஞ்சியில் ஆண்டவன் பப்பதேவன் என்பதும், அம்மரபில் ஒருவனான விஷ்ணு கோபனே வடநாட்டுப் பெருவேந்தனாகிய சமுத்திரகுப்தனின் அலகாபாத் தூணில் குறிக்கப்பெற்றவன் என்பதும் தெளிவாக விளங்குகின்றன. இந்த வழியில் நின்றே பல்லவர் காஞ்சியில் காலூன்றிய வரலாற்றைக் காண்போம்.

இப்பல்லவர், சாதவாகனப் பேரரசின் கீழ் இருந்த காஞ்சியைச் சார்ந்த நாட்டினை அவர்களுக்குப் பிறகு கைப்பற்றி ஆளத்தொடங்கினர் என்று புதுவை துப்பரே அவர்கள் விளக்கியுள்ளார்கள். (History and the institutions of Pallavas Ed. 1924-by C.S.Subramania Iyer-P.6)

வேற்று நிலத்தவர் தமிழ்நாட்டில் அலையலையாகப் புக நேர்ந்த நாட்டு நிலையினையும் காலச் சூழலையும் மேலே கண்டோம். அதே காலத்தில்தான் அண்டை நாடாகிய ஆந்திரத்தில் சாதவாகனப் பேரரசு வலுவுற்றதாக ஆக்கப்பெற்றிருந்தது. அவருடன் ஒட்டியோ அடங்கியோ, வேறு வகையாலோ வடகிழக்கிலும் தென்மேற்கிலும் மேற்கிலும் ஏறக்குறைய அதே காலத்தில்தான் படையெடுத்து வந்து வடபகுதியை வெற்றி கொண்டு ஆண்டனர் என்றும், சாதவாகனரோ அவர்தம் ஆணைவழிச் சிற்றரசரோ அவர்களை வடக்கே நெருக்க, அவர்கள் மேலும் தெற்கே சென்று பாண்டியர் நாட்டைக் கைக்கொண்டு நாட்டு நிலையை மாற்றினர் என்று அறிகிறோம். அவ்வாறு அவர்கள் தெற்கு நோக்கிச் செல்லக் காரணமானவர்களைப் பல்லவர் எனக் கொள்ளல் பொருத்தமாகும். திரு. கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் அப்பல்லவரை வடமொழிப் பல்லவர் எனக் குறிப்பர். (Pailavas of Kanchi - Gopalan p.XXII) பிராகிருதப் பல்லவர் எனக் கொள்ளலும் தவறில்லை. வளர்ந்துள்ள சாதவாகனப் பேரரசின் கீழ் இருந்த வாரங்கல் காகேத்தியரும் மேலை நாட்டுக் கங்கரும் ஆந்திர எல்லையில் இருந்த பல்லவரும் தத்தம் ஆணையை வலுப்படுத்திக் கொள்ளப் பல வகையில் முயன்று ஓரளவு வெற்றி பெறவே தான் சாதவாகனப் பேரரசும் தளர்ச்சியுறலாயிற்று. அடங்கிய சிறுசிறு தொகுதியினராகி அவர்வழி ஆங்காங்கே சிற்றரசர்களாகவும் எல்லைக் காவலர்களாகவும் இருந்த அரச பரம்பரையினரும் அவரைச் சார்ந்தவரும் மெல்லத் தலைதூக்கித் தனி ஆட்சி அமைக்கத் தொடங்கினர். அந்த வழியிலேதான் நெல்லூர், குண்டூர் ஆகியவற்றை ஒட்டியோ அவற்றின் மேல் பகுதியை ஒட்டியோ வாழ்ந்த இந்த மரபினர் தம் எல்லையை விரிவாக்கிக் கொண்டு தாழ்ந்திருந்த தெற்குப் பகுதியை நோக்கி, காடு அடர்ந்த தொண்டை மண்டலப் பகுதியைக் கைப்பற்றி, வேங்கடத்தில் வாழ்ந்திருந்த 'புல்லி'யின் மரபினர் முதல்வரை வென்று, காடு கொன்று நாடாக்கிக் காடவர், காடு வெட்டி என்ற பட்டங்களைப் பெற்று, இறுதியாகக் காஞ்சியையும் பற்றி ஆளத் தொடங்கினர் எனக் கொள்ளல் வேண்டும். எனவேதான் இவர்தம் பிராகிருதக் கல்வெட்டுக்கள் நெல்லூர்ப் பகுதியிலும் பிற வடக்குப் பகுதிகளிலும் இருக்கின்றன என வரலாற்று அறிஞர்கள் காட்டுகின்றனர். இதனாலேயே பின் வந்த பல மன்னர்தம் பல்லவர், மற்றவர் - கல்வெட்டுக்களில் காஞ்சியைப் 'பல்லவேந்திரபுரி' எனக் குறித்துள்ளனர். ஏறக்குறைய இந்தக் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முதற் பகுதியாக இருக்கலாம் எனக் கொள்ளுவதில் தவறில்லை. தொண்டைமான் இளந்திரையனுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் முதலியோர் ஒடுங்கிய இந்த நாளிலே பல்லவர் காஞ்சியுள் புகுந்தனர் என்று கொள்ளல் பொருந்துவதாகும் (Meenakshi P-2).

இந்த முதற் பல்லவனைப் பற்றி கே.வி.சுப்பரமணிய ஐயர் அவர்கள் தமது 'பழந்தக்கணத்தில் வரலாற்றுக் காட்சிகள்' (Historical Sketches of Deccan) என்ற நூலின் இரண்டாம் பகுதியில் இரண்டாம் பல்லவர்தம் மரபின் தோற்றத்தைக் குறிக்கும்போது தெளிவாகக் காட்டியுள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது.

இந்த விளக்கத்தின் வழி பல்லவர் யார் என்ற உண்மை திட்டவட்டமாகத் தெளிவு பெற்றுவிட்டது. மேலும் இவரது நூலின் முதற்பகுதியிலேயே (1971இல் வெளியிடப்பெற்றது) பல்லவர் வடக்குத் திசையில் யார் யாருடன் எவ்வெவ்வாறு இணைந்தும் பிணக்குற்றும் வேறுபட்டும் மாறுபட்டும் மெல்லத் தெற்கு நோக்கி வந்தனர் என்பதை விளக்கியும், அவர்தம் சமயம், மொழி முதலியவற்றைப் பற்றித் தொட்டும் காட்டியுள்ளார். (Section II Pallavas P.15) அவர்தம் எழுத்து மத்திய இந்திய எழுத்து என்ற கொள்கையையும் அதனை அவர்கள் முதன் முதலில் காஞ்சியில் வாழ்ந்த காலத்தில் கல்வெட்டுக்களில் பயன்படுத்தினர் என்பதனையும் žன யாத்திரிகர் (Beats Si Yu Ki P.226) துணைகொண்டும் டாக்டர் பர்னல் (Dr.Burnall) துணைகொண்டும் காட்டியுள்ளனர். இவற்றால் பல்லவர் வட நாட்டில் முளைத்தெழுந்த ஒரு மரபினர் எனக் கொள்ளுதலே பொருத்தமானதாகும்.

இவ்வாறு வடநாட்டு எல்லையிலிருந்து மெல்ல மெல்லக் காஞ்சியில் வந்து ஆண்ட பல்லவ மன்னர்களைப் பற்றிய ஆய்வினைப் பல அறிஞர்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்கு செய்துள்ளனர். அவ்வாராய்ச்சிகளின் வழியே பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றுள் அவர்கள் பல்லவர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் எனவும் வடமொழி அல்லது சமசுகிருதப் பல்லவர் எனவும் பிற்காலத்தவரைத் தமிழ்ப்பல்லவர் எனவும் பிரித்துள்ளனர். அவரவர் கல்வெட்டுக்களில் அமைந்த மொழிகளின் அடிப்படையில் இப்பெயர்கள் அமைந்தன. இந்தப் பரம்பரையினர் தொடர்ந்து தந்தை வழி மகன் என வந்துள்ளனர் என்றும் இடையிடையே சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றுள் ஒன்று பிற்காலப் பல்லவருள் இரண்டாம் பரமேசுவரனுக்குப் பிறகு நந்திவர்மப் பல்லவ மன்னன் பட்டத்துக்கு வந்த வரலாறாகும். பரமேசுவரனுக்குப் பரம்பரை அற்ற காரணத்தாலோ அன்றித் தக்கவர் இல்லாத காரணத்தாலோ மக்கள் மாற்றுவரிப் பல்லவர் மரபிலே ஒருவரைத் தேடவேண்டி வந்தது. பல்லவர் வரலாற்றில் இந்த முறை ஒரு சிறந்த விளக்கமாக அமைகின்றது. பரமேச்சுரன் தனக்குப் பின் இன்னார் என்று எழுதி வைத்தானா இல்லையா என்று சொல்ல முடியாது. அல்லது அவனுக்குப்பின் அவனுடைய உரிமை மக்கள் அரசேற்கத் தக்கவர் இல்லையா என்றும் தெரியவில்லை. ஆனால் பல்லவ மன்னனை மக்கள் விரும்பி ஏற்ற நிலைதான் நோக்கத்தக்கது. மன்னர் ஆட்சி மரபு இருந்த போதிலும், நாட்டில் அரசின்றி நிலைகுலைந்தபோது மக்கள் தம் மன்னரைத் தேர்ந்தெடுத்த முறையினை நமக்கு இவ்வரலாறு தெரியக் காட்டுகிறதன்றோ? சோழன் கரிகால் பெருவளத்தான் ஆட்சிக்கு வந்ததாகச் சங்க காலச் செய்தி நமக்குக் கூறும் வகையில் இந்த வரலாறும் அமைகின்றது. நந்திவர்மன் தந்தையாகிய இரணியவர்மனும் அவருடைய முதல் மூன்று மக்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்த அதேவேளையில், பன்னிரண்டு வயதே நிரம்பிய நந்திவர்மன் விரும்பி ஏற்று வெற்றி கண்ட சிறப்பு பல்லவர் வரலாற்றில் சிறந்த பகுதியாகும். அவனுடைய செயல்திறனே பல்லவர் மரபினை நாட்டில் மேலும் ஒரு நூற்றாண்டிற்கு வாழ வைத்தது. இவ்வரலாற்றைத் திரு. கோபாலன் அவர்கள் 'Dynamic Revolution' என்ற தலைப்பில் காட்டியுள்ளமை பாராட்டற்குரியது.

சிம்மவிஷ்ணுவுக்கு முன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவர் முறை முறையாக ஆண்ட மரபு நெறி நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட சிம்மவிஷ்ணுவுக்கு முன் சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஆண்ட அந்த மரபினரின் வரிசையை நம்மால் முற்றும் உணர முடியவில்லை. அவர்களே தொடர்ந்து அந்த நூற்றாண்டுகளில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்களா அன்றி வேற்று வேந்தர்களால் அடிக்கடி இடையீடுற்று இடம் மாற ஆண்டு வந்து மீண்டும் மீண்டும் தலையெடுத்தார்களா என்பதனைச் சிறந்த வரலாற்றாளரும் ஆய்ந்து உணரமுடியவில்லை. அக்காலத்திய கல்வெட்டுக்களோ இலக்கியங்களோ பிற நாணயங்கள் முதலியனவோ வரலாற்று அடிப்படைப் பொருள்களை வகைப்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பல்லவர் மரபு மூன்று நூற்றாண்டிற்கும் இடையில் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டின் இடைவரையில் காஞ்சியில் எல்லையில் தொடர்ந்து நின்றது என்பதனை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், இடைக்காலத்தில் சோழர் தலைதூக்கினார்களோ என எண்ண வேண்டியுள்ளது. அதனைப் பின்னர்க் காண்போம்.

இந்த ஆறு நூற்றாண்டுகளில் காஞ்சியில் ஆண்ட மன்னர் வரலாறே பல்லவர் வரலாறாக அமைகின்றது. அக்கால மன்னர் வரிசையினையும் ஆண்ட வகையினையும் பிறவற்றையும் பல வரலாற்றறிஞர்கள் விளக்கமாகக் காட்டிச் சென்றுள்ளனர். எனவே, அவற்றை மீண்டும் நான் இங்கே காட்ட விரும்பவில்லை. எனினும் ஒருசில அடிப்படைகளை மட்டும் தொட்டுக் காட்டிவிட்டு மேலே செல்ல நினைக்கின்றேன்.

முதற் பல்லவராகிய பிராகிருதப் பல்லவர் ஆட்சி காஞ்சியில் மட்டுமன்றி அதற்கு வடக்கேயும் கிருஷ்ணை ஆற்றங்கரை வரையிலும் பரவி இருந்ததென்பது தெளிவு. அவர்தம் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் ஆந்திர நாட்டில் உள்ளமை அறிகிறோம். அவருள் ஒருவனாகிய விஷ்ணுகோபனையே சமுத்திரகுப்தனின் அலகாபாத்துக் கல்வெட்டு கிருஷ்ணை ஆற்றங்கரையில் ஆட்சி செய்த பல்லவன் எனக் குறிக்கிறது. அவ்விஷ்ணு கோபன் நான்காம் நூற்றாண்டின் இடைக்காலத்தவன். அவனுக்கு முன் பப்பதேவன் சிவஸ்கந்த வர்மன், அங்குரன், வீரவர்மன் என்ற நான்கு முதற் பல்லவர் ஆண்டதாகக் குறிக்கின்றனர். பப்பதேவனே முதன் முதல் காஞ்சியைத் தலைநகராக்கிக் கொண்ட பல்லவனாவன். இளந்திரையனுக்குக் குறைந்தது 70 அல்லது 80 அல்லது 100 ஆண்டுகள் கழிந்து இந்நிகழ்ச்சி நிகழ்ந்திருக்கலாம். அந்த இடைக்காலமே முன் கண்ட களப்பிரர் ஆட்சிக் காலமாக இருந்திருக்கலாம். இவர்கள் காலத்திலேயே கோயில்களுக்குத் தானம் வழங்கிய மரபும் அவற்றைக் கல்வெட்டில் குறிக்கும் மரபும் உண்டாகிவிட்டன. இக்காலத்திய ஆட்சிமுறை, மக்கள் வாழ்க்கை நெறி முதலியவை பற்றிய தகவல் ஒன்றும் திட்டமாக நமக்குக் கிடைக்கவில்லை. எனவேதான் இக்காலத்தை இருண்ட காலம் எனக் கொண்டனர் போலும். இக்காலத்தைக் கோபாலன் அவர்கள் கி.பி. 200 முதல் 350 வரை எனக் கொள்கின்றனர்.

அடுத்து வரும் சமஸ்கிருதப் பல்லவர் காலத்தை அவர் கி.பி. 350 முதல் 600 எனக் கணக்கிடுவர். கி.பி. 600-இல் மகேந்திரன் பட்டமேறிய பின் பல்லவர் தம் தெளிந்த வரலாறே நமக்குக் கிடைக்கிறதன்றோ!

சமஸ்கிருதப் பல்லவர் ஆட்சியில் முறையாக யார் பின் யார் வந்தார் என்பது காணமுடியாத ஒன்றாக உள்ளது. எனினும், அக்காலத்திய கல்வெட்டு, செப்பேடு முதலியவற்றாலும் பிற யூகங்களாலும் விஷ்ணுகோபன் தொடங்கி மகேந்திரன் தந்தையாகிய சிம்மவிஷ்ணு வரையில் 19 அரசர்களை முறைப்படுத்தியுள்ளனர். இக்காலத்திலேயும் மற்றொரு நாக கன்னிகையின் மகனும் அவன் மகன் வழி அரசும் குறிக்கப் பெறுகின்றது. (Gopalan's Pallavas P.51 & 62) நாம் முன்னரே அதுபற்றி ஆய்ந்து திட்டமான முடிவைக் கூறிவிட்டமையின் மீண்டும் அதுபற்றி ஆராய வேண்டா. திரு.எசு.கே. ஐயங்கார் அவர்களும் நல்லவேளை இந்த நாககன்னியைச் சாதவாகனர்களின் கீழ்ப்பட்ட ஒரு சிற்றரசர் பரம்பரையோடு சார்த்திக் கூறியுள்ளார்.

முதற் பல்லவர் காலத்தைப் போன்றே இக்காலத்திலும் உண்டான கல்வெட்டு, செப்பேடு போன்றவை அவர்தம் ஆட்சியை நமக்குப் பெருந்துணை புரியவில்லை. இக்கல்வெட்டு, செப்பேடுகளைப் பற்றியும் அவை தரும் பொருள்கள் பற்றியும் முன்னரே பலர் ஆய்ந்து வெளியிட்டுள்ளனர். இவற்றின் வழி எத்தனையோ வகையில் அரசர் வரிசையைக் காட்டும் நிலையினையும் நம்மால் இவர்கள் தம் மரபினைப் பிரமதேவனிடத்திலிருந்து வந்ததாகக் கூறிக் கொள்வதனையும் அறிகிறோம். அந்த மரபில் பல்லவன் என்ற பெயருடனேயே ஒரு மன்னவன் இருந்ததாகவும் காண்கின்றோம். (Vayalur list Ep.Ind. Vol XVIII P.151).

இம்மரபில் குமாரவிஷ்ணு I & II, கந்தவர்மன் I & II விஷ்ணுகோபன் (அலகாபாத் கல்வெட்டில் உள்ளவன் அல்லன்) சிம்மவர்மன், நந்திவர்மன் போன்றோர் முக்கியமானவர்களாகின்றனர். இவர்களுக்கு இடையில் ஓர் இடைவெளி இருந்து சோழர் தலைதூக்கினார்களோ என்ற ஐயமும் எழ இடமுண்டு. (Ancient History of Nellore By Venkiah - Gopalan Pallavas PP.63 and 64) இக்கருத்தைச் சிலர் மறுக்க நினைத்தாலும் இதிலும் நியாயம் உண்டு என்று கொள்ள நம் தமிழக நிலை இடம் கொடுக்கின்றது. 'எண்தோள் முக்கண் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்தோன்' என்று ஆழ்வாரால் போற்றப் பெறுபவரும் புராண வரலாற்றில் ஏற்றங் கொண்டவருமாகிய கோச்செங்கணான் என்னும் கோச்செங்கட் சோழ நாயனார் இக்காலத்தில் வாழ்ந்தவராதல் வேண்டும். அவர் திருவானைக்காவில் இறைவனை வழிபட்ட தவத்தால் மன்னனாகி அவ்விறைவனுக்குத் தமிழ் நாட்டில் பெருங்கோயில் எடுத்தவன் என நாட்டுச் சமய வரலாறு கூறுகிறது. அவன் காலத்தில் எழுந்த கோயில்களையும் அவற்றை ஒட்டி எழுந்த பிற கோயில்களையும் பின் மகேந்திரன், நரசிங்கன் காலத்தில் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும் வைணவ ஆழ்வார் ஆகிய திருமங்கையாழ்வாரும் பாடிப் பரவியுள்ளனர். காஞ்சியை உள்ளிட்ட பரந்த தமிழ்நாட்டில் அவன் இத்தனை விரிவாகச் சமயப் பணி செய்தான் என்றால் அது வேற்றுச் சமயத்தைச் சார்ந்த பல்லவர் ஆட்சியில் இருந்திருக்க முடியாது. திரு.வெங்கையா அவர்கள் குறிப்பிடுவது போன்று, ஓரிரு தலைமுறைகள் பல்லவர் காஞ்சியை விட்டு, நெல்லூரில் தம் காலூன்றி இருந்த நாளிலேதான் சோழன் கோச்செங்கணான் சைவ, வைணவப் பெருங்கோயில்களைக் கட்டி முடித்திருக்க வேண்டும். பல்லவர் பலம் இல்லையாகவே அவரது சமயத்தைச் சார்ந்தோரும் தடுக்க முடியாத நிலையில் தளர்ந்திருப்பர்.

எனினும், மறுபடியும் அப்பல்லவர் கை மேலோங்கிய காலத்தில் புதிதாக எழுந்த பெருங்கோயில்களைக் கண்ட சமணர்களும் அவர்கள் வழிநின்ற ஆறாம் நூற்றாண்டின் பல்லவ மன்னர்களும் நாட்டு மக்கள் நிலையறிந்து அவற்றைத் தகர்க்க முடியாது போக, அதற்கு மாறாகத் தம் சமயக் கோயில்களையும் மடங்களையும் ஊரெங்கும் கட்டிச் சமணத்தை வளர்த்தனர். இந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டமே அப்பர் சம்பந்தர் வரலாற்றில் விளக்கப் பெறுவது. எனவே, சமஸ்கிருதப் பல்லவர் காலத்தில் சில காலம் அவர்கள் தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் சென்றிருந்தார்கள் எனவும் அக்காலத்தில் கோச்செங்கணானும் மற்றும் ஓரிரு சோழரும் ஆண்டிருக்கக்கூடும் எனவும் கொள்வதே பொருத்தமானதாகும். எனவே, வெங்கையாவின் கூற்றை மறுக்கும் திரு. கோபாலனின் ஆய்வும் (PP. 64-65) இடையில் சோழர் ஆட்சி இருந்திருக்க முடியாது என்று காட்டும் முடிவும் பரிžலனைக்கு உரியனவேயாம்.

இவ்வளவு தெளிவற்ற நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகே மகேந்திரவர்மன் கி.பி. 600இல் காஞ்சியில் பல்லவப் பெருமன்னனாக அரியணை அமர்ந்தான். அவன் காலந்தொட்டு அபராசிதன் காலம் வரை (கி.பி.850) சுமார் இரண்டரை நூற்றாண்டுக்காலத்தில் தமிழக வரலாறு பல்லவர் ஆட்சியில் தெளிந்த நீரோடையாகப் புதுமை பூத்த சோலையாகக் காட்சி அளிப்பதைக் காண்கின்றோம். அக்காலத்தில் நாட்டில் வாழ்ந்த பல்லவப் பேரரசுகளைப் பற்றி ஆய்வதிலும் அக்காலத்தில் நாட்டில் இருந்த மாறுதல்களையே காண முடிகின்றது. கடைச் சங்க காலத்தில் தெளிந்த தமிழகத்தைக் கண்ட நமக்கு ஏழாம் நூற்றாண்டில் காணும் பல மாறுதல்களுக்குட்பட்ட தமிழகத்தை நினைக்கும்போது அந்த இடைப்பட்ட இரு பல்லவர் ஆட்சிக்கிடையில் தமிழகம் பெற்ற மாறுதல்களை எண்ணாதிருக்க முடியுமா? எனவே, இந்த மாறுதல்களைச் சிறிது கண்டு மேலே செல்வோம். தமிழ் நாட்டு மரபுக்கு முற்றும் மாறுபட்ட மன்னர் பரம்பரைகள் ஆள, முற்றிலும் மாறுபட்ட சமய நெறிகளும், வாழ்க்கை முறைகளும் பெரு வழக்காக மக்களிடையில் புக, நாடே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய நாடெனுமாறு காட்சியளித்தது.

ஆட்சி முறையில் மாற்றம் பெரும்பான்மையாகக் காண முடியவில்லை. ஒரே பரம்பரையில் தந்தைக்குப் பின் மகன் என்ற மரபு காக்கப்பெறுகிறது. சங்க காலக்கரிகாலன் போன்ற பல்லவ மல்லன், மக்கள் விருப்பப்படி அரசனாகும் மரபும் காணப்பெறுகின்றது. அரசர்களுக்கு இருந்த அமைச்சர் குழு முதலிய ஐம்பேராயமும் பிற சூழல்களும் பெரும்பாலும் மாற்றம் பெறாமலிருந்ததையும் காண்கின்றோம். அரசருடன் அரசியரும் அரசியலில் கலந்து பணிபுரிவதையும் காண முடிகிறது. எனினும், பல்லவர் காலத்தில் சமயம் அரசியலில் பங்கு கொள்வதைக் காண முடிகிறது. சங்க கால மன்னர்கள் சமயச் சார்புடையவர்களே ஆயினும் அரசியலில் அச்சமயத்தினைப் புகுத்தாது, 'ஒன்றே தேவன்' என்ற உணர்வில் அனைவரும் ஒன்றிக்கலந்து வாழ்ந்து வந்த மரபினைக் காணமுடிகிறது. ஆனால், பல்லவர் காலத்திலோ சமயமே முக்கிய இடம் வகிக்க, அரசியல் அச்சமயத் தலைவர்களை ஒட்டியே நடைபெற்றதாகக் காண முடிகிறது. மகேந்திரன் காலத்தில் காணும் இப்பெருமாற்றத்துக்குக் காரணம் இடைப்பட்ட நூற்றாண்டுகளின் மாறுதல்களே ஆகும்.

சங்க கால இறுதியிலேயே சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் கால்கொண்டு மாற்றுக் கருத்துக்களை வளர்த்தன என்பதைக் காப்பியங்கள் வழி அறிய முடிகின்றது. அசோகர் காலத்திலேயே பௌத்தமும் இலங்கை வரையில் சென்று அங்கே பெரும் சமயமாக விளங்கியதாயினும், தமிழக மக்களிடை அது கால் கொள்ளவில்லை. சைவ வைணவ சமய நெறிகளையும் கடவுளரையும் காட்டும் வகையில் எந்தச் சங்க இலக்கியங்களும் வேற்றுச் சமயங்களைச் சுட்டவில்லை. சமணம் முதன் முதல் சிலம்பிலும், பௌத்தம் முதன் முதல் மணிமேகலையிலும் பேசப்படுகின்றன. எனினும், அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் அவை இரண்டும் தமிழ் நாட்டுக்கே உரிய சைவ வைணவ சமயங்களிலும் மேம்பட்டு நின்று அக்கால அரசியல் துணை கொண்டு ஓங்கி, தமக்குள்ளேயே மாறுபட்டும், போரிட்டும் இறுதியில் பௌத்தம் நிலைகெட, 7 ஆம் நூற்றாண்டில் சமணமே மேலோங்கி நின்றதைக் காண முடிகிறது. இந்த மாற்றுச் சமயப் போராட்டங்களுக்கு இடையில்தான் சைவமும் வைணவமும் கூடத் தமக்கே அது வரையில் இல்லா வகையில் பல சடங்குகளையும் அவற்றை வளர்க்கக் கோயில்களையும் விரிவுபடுத்திக் கொண்டன. எனவே தான் அந்த அடிப்படையில் சமய இலக்கியங்கள் தனியாக வளர ஆரம்பித்தன. சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படையும் பரிபாடலில் சிலவும் தவிர்த்து வேறெங்கும் இறைவனை முன்னிறுத்திப் பாடிப் பரிசில் வேண்டும் நிலை காண முடியாததன்றோ? ஆற்றுப்படையும் பரிபாடலும் கூடக் காலத்தால் பிந்தியவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எனவே, கடமையில் கருத்திருத்திக் கடவுள் உணர்வை நெஞ்சில் நிறுவி தூய உள்ளத்தால் மக்கள் தொண்டாற்றிய தமிழகச் சமய நெறி, இந்தப் பல்லவர் காலத்திலே பல வகையில் மாற்றம் பெற்று வெறும் புறக்கோலங்களும் புகழுரையுமே சமயம் என்ற நிலையில் ஆக்கப்பெற்றுள்ளது. இந்தச் சமயப் போராட்டத்துக்கு அடிப்படைக் காரணம் பிற சமயச் சார்புடைய பிற நாட்டு அரசர்களும் அவர்களுடன் ஆணையில் பங்கு கொண்ட பிற சமயத் தலைவர்களுமேயாவர். நாம் இவை பற்றி நன்குஅறிய முடியாவிட்டாலும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் காணும் நாட்டு மொழியிலேயும்கூட இந்தப் பல்லவர் காலம் பெருமாற்றத்தைச் செய்துள்ளது. பல்லவர் கல்வெட்டுக்களே இதற்குச் சான்று பகரும். தமிழ்நாட்டில் இருந்து தமிழ் நாட்டையும், பிற எல்லைப் பகுதிகளையும் ஆண்ட பல்லவர்கள் தமிழிலன்றிப் பிராகிருதத்திலும் சமஸ்கிருதத்திலும் கல்வெட்டுக்களைப் பொறித்தார்கள் என்றால் அந்த ஆட்சியில் எப்படித் தமிழ் மொழி வளர்ந்திருக்க முடியும்? எனினும், பொதுமக்களும் தமிழகத்தின் சமயங்களாகிய சைவ வைணவ மக்களும் தமிழ்மொழியைப் பல வகையில் போற்றிக் காத்தனர். அக்காலத்தில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார், திருமூலர் போன்ற சமயத்தலைவர்களும் பதினெண்கீழ்க் கணக்கில் உள்ள சில நூல்களின் ஆசிரியர்களும் தமிழ் இலக்கியங்களையும் சமய இலக்கியங்களையும் போற்றி வளர்த்தனர். எனினும், அவர்களும் காலச் சூழலிலும் பிற சமயக் கொள்கைகளிலும் வெற்று முறைகளிலும் தம்மைப் பறிகொடுத்தவராகவே காண்கின்றனர். அவ்வளவு வேகமாக மாற்று நாகரிகமும் சமயங்களும் தமிழ்நாட்டில் ஊன்றத் தொடங்கிவிட்டன. சிலம்பின் காலத்திலேயே மாடலன் வழியே வைதீக சமயத்தின் வளர்ச்சியை அறிகிறோம். எனவே, அந்த அடிப்படையில் பல்லவர் காலத்திய சமய இலக்கியங்கள் வளர்ந்துள்ளன. அந்த இலக்கியங்கள் தூய தமிழ் நடையை விட்டுப் பிற மொழிகளையும் பின்பற்றின. சமயமும் சாதியும் போரிடத் தொடங்கி அவற்றைக் கடவுள் நெறிக்கு வழிகாட்டும் எல்லைக் கற்களெனக் காட்டும் பாடல்களைக் காண்கின்றோம். எனவே, இந்தப் பிற மொழிப் பல்லவர் ஆட்சியில் சமய அடிப்படையில் வேற்று மொழிகளும் கொள்கைகளும் பரவலாயின. 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்', 'ஆரியமும் தீந்தமிழும் ஆயினான் காண்' என்று ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டின் ஒரு மொழிக் கொள்கை மாறி இரு மொழிக் கொள்கை நிலைபெறத் தொடங்கிற்று. தமிழ் மக்கள் தமிழுக்குச் சமமாக மற்றொரு மொழியையும் தங்கள் வாழ்விடைக் கொள்ள வழி வகுத்த காலம் இப்பல்லவர் காலமேயாகும். இந்தக் கொள்கையைத் தமிழர்கள் வெறுக்காது ஏற்றுக் கொண்டதைக் கண்ட வேற்று மொழியாளர் ஒரு படி மேலே சென்றனர். அதனால்தான் நாட்டில் மொழி அடிப்படையில் - அந்த மொழிவழிச் சாதி அடிப்படையில் சண்டைகள் தோன்றி இன்று வரை வளர்ந்து வந்துள்ளன. இரண்டும் சமம் என்ற அப்பர் கொள்கையினையே சமயக் கண்கொண்டன்றி மொழிக் கண் கொண்டு ஒத்துக்கொள்ளாத நிலையில், வேற்று மொழியாளர் தமிழிலும் தம் மொழியே உயர்ந்தது என்றும், கடவுளுக்கு அம்மொழியே உகந்தது என்றும், அம்மொழி பேசுவோரே உயர்ந்தவர் என்றும் வாதிடவும் செயல்படவும் தொடங்கினர். இத்தொடக்கத்துக்கு வித்திட்ட காலம் இப்பல்லவர் காலமே. அதனாலேயே ஆழ்ந்த சமயப் பற்றுள்ள சேக்கிழாரும், 'அர்ச்சனை பாட்டே யாகும்: ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக' என்று இறைவனே சுந்தரருக்குக் கட்டளை இட்டதாகப் பாடுவர். அப்பரும் 'தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்' என்று பாடுகிறார். எனினும், இந்தப் போராட்டம் இன்றும் தீரவில்லை. இந்த மொழிப் போராட்டம் தீர்ந்தாலன்றி, தமிழ்நாட்டில் வாழ்வார் தம்மைத் தமிழராகக் கொண்டு, தமிழே சிறந்த மொழி எனக் காட்டி இணைந்து வாழ்ந்தாலன்றி, உய்வு இல்லை.

இவையன்றிச் சமுதாயத்திலும் எத்தனையோ மாறாட்டங்கள் இப்பல்லவர் காலத்தில் நிகழ்ந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. மக்கள் உடல் உழைப்பும் கடமையும் உள்ளவையாகக் கொண்டு 'தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக' வாழ்ந்து தான் மெய்ம்மை வாழ்வு என்றிருந்த நிலை மாறி, வெறும் ஆரவாரமும் மாற்று நிலைகளும் பெருக அவற்றின் துணை கொண்டு சோம்பி வாழும் வாழ்வினை மேற்கொண்டு விட்டார்கள் என்றுணர முடிகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்த சமுதாயத்தில் சாதிகளும் பிற வேறுபாடுகளும் ஆட்சிபுரியலாயின. 'செய்தொழில் வேற்றுமை யான்' என்ற வேறுபாடு மாறி, பிறப்பால் வேறுபாடுகாட்டும் காலமாக மாறிய நிலையைப் பார்க்கின்றோம். சுந்தரர் காலத்தே 'அந்தணர் வேறோர் அந்தணர்க் கடிமை யாதல் இல்லை' என்று வழக்காடும் அளவுக்கு ஒரு சாதிக்கு ஒரு நீதி என்ற கொள்கை இந்த முதற் பல்லவர் காலத்தில் வளர்ந்ததுதான். அதனாலேதான் சேக்கிழார் பாடும்போதுகூட, தமது பெரிய புராணத் தலைவர்களைச் சாதிகள் குறித்துக்காட்டுகின்றார். அத்துடன் அவ்வச்சாதிக்கு இன்னின்ன தொழில்கள் என்ற ஒரு கட்டுப்பாடும் உண்டாகி இருப்பதறிகிறோம். எனினும் இந்தச் சாதி வேற்றுமை கற்றார் மாட்டு அதிக வேறுபாட்டினைக் கற்பித்து மாறுபாட்டை உண்டாக்கவில்லை என்பதை அப்பர், சம்பந்தர், திருநீலகண்டயாழ்ப்பாணர் போன்றார் வாழ்விலிருந்து அறிந்து கொள்கிறோம்.

ஆட்சி முறையில் பல வரி விதிப்பு முதலியவை பற்றிய மாற்றங்கள் சிலவற்றை நம்மால் காண முடிகிறது. எனினும் பிற்காலப் பல்லவர்கள் காலத்தில்தான் நாட்டு ஆட்சியின் நல்ல இயல்புகளையும் முறைகளையும் பரக்கக் காண்கிறோம். தமிழராகவே ஆன சிம்மவிஷ்ணுவின் பரம்பரையினர் ஓரளவு வேற்று மக்கள் வாழ்வின் அடிப்படையில் நின்றார்களேனும், பெரும்பாலும் தமிழர்கள் என்று தம்மை நினைந்து, தமிழ்ச் சமுதாய நெறியிலேயே தம் அரசியலையும் வாழ்வியலையும் அமைத்துக் கொண்டார்கள் எனக் காண்கிறோம். எனினும் அந்த இருண்ட காலமாகிய முற்காலப் பல்லவர் காலத்தில் உண்டான சில சமுதாய மாறுதல்கள் தமிழ் மக்களிடம் வேரூன்றி நிலைத்து, இன்றளவும் அவர்களை விட்டு நீங்காமல் வாழ்கின்றன என்பது தேற்றம். இனி இந்த ஆய்வினை விட்டுப் பிற்காலப் பல்லவர் கால வரலாற்றைக் காண்போம்.

சிம்மவிஷ்ணுவின் பரம்பரையினராய மகேந்திரன் தொடங்கி இரண்டாம் பரமேசுவரன் வரையிலும் ஆண்ட அரசர் காலத்தில் நாடு சமயப் போராட்டங்களுக்கு உள்ளாகித் தெளிநிலை பெற்றமை காண்கிறோம். அதற்கு முன் வந்த பல மன்னர் பரம்பரையினர் சிதைந்தும் மாறியும் பிறழ்ந்தும் உழந்தும் தமிழ் மக்களோடு தம்மையும் உறவு படுத்திக் கொண்டு, தமிழராகவே மாறிவிட்டனர். அவர்தம் பரம்பரையினர் இன்றும் அம்மரபுப் பெயர்களைச் சிதைந்தும் உறழ்ந்தும் கொளக்கொண்டு முற்றிய தமிழர்களாக மாறிவிட்டனர். அப்படியே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாறிய பல்லவரும் தமிழ் உணர்வு பெற்றுத் தமிழ்ச் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ற பல செயல்களைச் செய்தார்கள் எனக் காண்கிறோம். இரண்டாம் பரமேச்சுரனுக்கு அடுத்து வந்த இரணியவர்மனின் பரம்பரையினரான நந்திவர்மப் பல்லவன் தொடங்கி அபராஜிதன் வரையில் நாட்டை ஆண்ட வரலாறு தெளிந்த நீரோடை போன்றே அமைகின்றது. எனவே, அக்கால எல்லையிலமைந்த அரசர்களைத் தனித்தனியாக எடுத்து ஆய்வதோ அன்றிச் செயல்களை அறுதியிடுவதோ ஈண்டுத் தேவை இல்லையென எண்ணுகிறேன். அவர்களைப் பற்றி எல்லாம் முன் ஆய்ந்த வரலாற்று அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளார்கள். எனவே, அந்த உண்மைகளை நானும் இங்கே திருப்பிச் சொல்வது தேவையற்றது.

இப்பல்லவர் காலத்துக்கும் முற்காலப் பல்லவர் காலத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டு இப்பல்லவர் காலத்திய சமுதாய வரலாற்றினை ஓரளவு விளக்கிக் காட்டி என் பணியை முடித்துக் கொள்ள நினைக்கிறேன். அக்காலத்திய சமயம், இலக்கியம், கலை ஆகியவைப் பற்றி ஆராயத் தனித்தனியாக அறிஞர்தம் கூட்டங்கள் இன்று நடைபெறுகின்றமையின் அவற்றுள் புகுந்து துருவி ஆராய வேண்டிய தேவையும் இல்லை என்று கருதுகிறேன். எனவே, மேற்போக்காகப் பல்லவர் கால வரலாறு நமக்குக் காட்டும் ஒருசில உண்மைகளைக் கண்டு அவற்றால் தமிழ்நாடு பெற்ற பயன்களையும் மாறுதல்களையும் பிறவற்றையும் காட்டல் போதுமானதாகும்.

தமிழ்நாட்டில் முதற் பல்லவர் ஆட்சி மாற்றங்களைச் செய்தது என்றால் பிற்காலப் பல்லவர் ஆட்சி அம்மாற்றங்களை மாற்றி, நிலைத்த பல பணிகளையும் செய்துள்ளது. மகேந்திரன் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய உடனே நாட்டில் பெருங்கிளர்ச்சி உண்டாயிற்று. சிம்மவிஷ்ணுவாகிய அவன் தந்தையின் பெயரை ஒட்டி அவனை வைணவ சமயத்தைச் சார்ந்தவனாகக் கூறினும் அது ஆராய்தற்குரியது. அப்படியே அவன் மகனான நரசிம்மன் காலத்தில் அக்காலப் பாண்டிய நாட்டில் உள்ளுக்குள் புகைந்திருந்த பெருங்கிளர்ச்சி கூன்பாண்டியனுடைய சமய மாற்றத்தால் வெளியே கிளர்ந்தெழுந்து நாட்டில் பெரு மாற்றத்தை உண்டாக்கிற்று. ஒரு நாட்டு மக்களின் அடிப்படைப் பண்பாட்டிற்கு மாறுபட்ட எந்தக் கொள்கையும், அவ்வப்போது ஆணை அளித்தல், பிறவகை உதவிகள் முதலியவற்றால் ஓங்குவது போலக் காணப்படினும், கால வெள்ளத்தில் எதிர்நிற்காது மறையும் என்பதைத்தான் இந்த ஏழாம் நூற்றாண்டின் வரலாறு காட்டுகின்றது. இந்த உண்மை உணர்ந்தமையால்தான் மேலைநாட்டிலிருந்து தமிழகத்தில் தம் சமயம் பரப்பவந்த பாதிரிகள் தம்மை நடை, உடை, பாவனைகளால் மட்டும் அன்றிப் பெயர், வாழிடம் ஆகிய பிற வகைகளாலும் தமிழராகவே மாற்றிக் கொண்டனர். வரலாறு உணர்த்தும் இந்த உண்மையை இன்னும் சிலர் நாட்டில் புரிந்து கொள்ளாமையாலேதான் இன்னும் பல சண்டைகளும் மாறுபாடுகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

பல்லவர் காலத்தில் சமய மாறுபாடு உண்டானமை உண்மையே யாயினும் அம்மாறுபாடு வேறுபாடற்ற சங்க காலச் சமய நெறியினை வழங்கத் தவறிவிட்டது. வைதிகத்தோடு பிணைந்த பிறிதொரு கலவைச் சமயமே தமிழகத்தில் கால் கொண்டது. அத்துடன் புதுப்புது விதமான கடவுளரும் வழிபடு முறைகளும் புகுந்தன. விநாயகர் வணக்கம் இக்காலத்தில் ஏற்பட்டதேயாகும். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவராகிய பரஞ்சோதியார் வாதாபியை வென்று அங்கிருந்தவற்றுள் பல பொருள்களைக் கொண்டு வந்தமை போன்று பிள்ளையாரையும் உடன் கொண்டு வந்தார். அதனாலேயே 'வாதாபி கணபதிம் பஜே' என்ற வணக்கப் பாடலும் உருவாயிற்று. விநாயகர் வழிபாடு இன்றும் மேலைச் சாளுக்கியர் ஆண்ட மராட்டியப் பகுதிகளிலும் பம்பாயிலும் பிறவிடங்களிலும் மிகச் சிறந்த முறையில் விரிந்த வகையில் கொண்டாடப் பெறுவதறிகிறோம்.

பரஞ்சோதியார் விநாயகரை ஏன் கொண்டு வந்தார்? அதனை அரச மரத்தின் கீழ் ஏன் நிறுவினார்? அரச மரத்துக்கும் விநாயகருக்கும் உள்ள தொடர்பு என்ன? பௌத்த சமயக் காலத்திலே தமிழ்நாட்டில் புத்தர் அருளாளராக அடிப்படையான அரசமரத்தடியில் அவருடைய பேருருவங்களை நிறுத்தி வழிபட்டனர். அடுத்து வந்த சமணர்களும் தம் சமயத் தலைவர்களை மக்கள் மனமறிந்து, அதே நிழலில் நிறுவி வழிபட்டிருக்கக்கூடும். அசோகும் அவருக்கு அருந்துணையாக அமைந்ததன்றோ?அதே வேளையில் வாதாபியில் விநாயகரின் பேருருவைக் கண்ட பரஞ்சோதியார் இந்த விநாயகர் பேருருவை அரச மரத்தின் கீழ் நிறுத்தின் மக்கள் மன நிறைவு பெறுவர் எனக் கணித்து இங்கே கொண்டு நிறுவிவிட்டார். மக்கள் அன்று மன நிறைவு பெற்றதோடு, என்றும் அவ்விநாயகரையே முதல் வழிபடு கடவுளாகவும் கொண்டுவிட்டனர். எனவே, பரஞ்சோதியார் அரசியல் வெற்றி மட்டுமன்றித் தம் சமயக் கொள்கையிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை இவ்வரலாறு காட்டுகிறது. இப்பிள்ளையாரைப் பற்றித் தமிழ் இலக்கியத்திலேயே முதன் முதல் பரஞ்சோதியாரின் காலத்தவரான ஞானசம்பந்தர்தாம் பாடுகின்றார்.

இவ்வாறு சமய அடிப்படையில் எத்தனையோ மாற்றங்கள் நடைபெற்றன. அவற்றுள் பெரும்பாலான இன்றளவும் வாழ்கின்றன. கலையுலகில் பிற்காலப் பல்லவர் செய்த புரட்சி பெரும் புரட்சியே ஆகும். யாரும் நினைத்தறியா வகையில் குகைக்கோயில்களைப் பலவகையில் வளர்த்து கற்கோயில்களை அமைத்து அக்கோயில்களில் நிலையான கல்வெட்டுக்களையும் எழுதி, உலகப் புகழ் பெற்று விட்டார்கள். தமிழ் நாட்டில் முதன் முதல் கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் உண்டாக்கி வரலாற்றுக்கு வழி கோலிய பெருமை இப்பல்லவரையே சார்ந்ததாகும். எனவே, தமிழகத்தின் தெளிந்த வரலாற்றுக்கு அடிப்படை வகுத்த இப்பல்லவரை நாம் என்றென்றும் போற்றக் கடமைப்பட்டவராகின்றோம்.

கலை உலகில் இவர்கள் செய்த மாற்றங்கள்தாம் எத்தனை! வண்ணக் கலவைகள் ஆயிரம் ஆண்டுகள் கழியினும்அழியாதிருக்கும் வகையில் அமைத்துத் தீட்டிய சித்திரங்களை இன்றும் போற்றுகிறோம். மாமல்லபுரத்தின் எழில் மிகுந்த சிற்பங்களை எந்நாட்டவரும் வைத்த கண் வாங்காது பார்க்கும் ஒரு நிலையினைக் காண்கிறோம். கயிலையின் காட்சியையும் வைகுண்டத்தின் காட்சியையும் காஞ்சியில் அமைத்ததோடு, அக்கோயில்களில் என்றும் கண்டு மகிழும் சித்திரக் காட்சிகளையும் வரலாற்றுக் காட்சிகளையும் வடித்த பல்லவர் திறன் போற்றற்குரியதாகும். பல்லவ மல்லன் ஆட்சிக்கு வந்த வரலாற்றை வைகுந்தப் பெருமாள் கோயில் சுவர்கள் அல்லவோ இன்றும் நம்மோடு பேசி விளக்கிக்கொண்டிருக்கின்றன. 'கல்லும் சொல்லாதோ கவி' என்ற பாட்டின் அடியும் இவர்தம் வடித்தெடுத்த கல்வெட்டுக்களைப் பற்றி எழுந்த அடியாகவன்றோ கொள்ளவேண்டும். பல்லவர் சென்ற இடமெல்லாம் அவர்தம் கைவண்ணத்திறனும் அத்திறன் வளர்ச்சி அடைந்த வகையும் கொண்டன்றோ இன்றைய வரலாற்றாசிரியர்கள் அவரவர் காலத்தையும் அக்காலத்தை ஒட்டிய நாட்டு வரலாற்றையும் கணக்கிடுகிறார்கள்? இப்படி ஒரே சமயத்தில் கலையையும் வரலாற்றையும் பிணைத்து வளர்த்த அவர்தம் பெருமையை பேசாதிருக்க முடியுமா?

பிற்காலப் பல்லவர் காலத்தில் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் நன்கு வளர்ந்தன எனக் கொள்ளலாம். 'நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' என்ற மரபு வாக்கியப்படி நந்திவர்மனின் தமிழ் உணர்வை உலகு நன்குணர்ந்துள்ளது. இன்று வரையில் வாழ்ந்து சிறந்தனவாகப் போற்றப்படும் சைவ இலக்கியங்களில் ஏழு அல்லது எட்டுத் திருமுறைகளும் வைணவ நாலாயிரத்தின் பெரும்பகுதிகளும் இக்காலத்தில் எழுந்தனவன்றோ? இதனாலன்றோ அத் தெய்வ நெறி பாடும் இலக்கியத்தில் பல்லவர் இடம் பெற்றுச் சாகாவரம் பெற்று வாழ்கின்றனர். பல்லவருக்கு மாறுபட்டவரைத் தம் இறைவன் மறுக்கம் செய்து பல்லவரை வாழ வைக்க வேண்டும் என்ற உணர்வைச் சுந்தரர்,

"உரிமையால் பல்லவர்க்குத் திரைகொடா
மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமையால் புலியூர் சிற்றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே"

எனப் பாடி இறைவன் பல்லவர் வாழ வழி வகுத்தவன் என்பதைக் காட்டுகின்றாரன்றோ? 'பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி' என்று தேவார அடியவர்கள் காஞ்சியை நினைக்கும்போதே அதொண்டை நாட்டைப் பல வகையில் செப்பம் செய்த அதே வேளையில் அத்திருத்தப் பணிகளுக்கெல்லாம் பல வரிகளையும் இட்டு வசூல் செய்து நாட்டு வளத்தைப் பெருக்கிய பல்லவர் சமுதாயப் பணியை எல்லா வரலாற்றாசிரியர்களும் போற்றுகின்றனர். உத்திரமேரூர் ஏரி வற்றியபோது வண்டலை வாரியும், வற்றாதபோதும் படகுகள் கொண்டு வண்டலை வாரியும் அதனைக் கரையில் இட்டுக் கரையைப் பலப்படுத்திய நந்திவர்மன் இன்றைய 'P.W.D.' துறைக்கு வழிகாட்டியாவான். (Historical sketches of Ancient Dekhan Vo1. II P.14).

இவ்வாறு வளப்படுத்திய பகுதிகளில் சிலவற்றை அக்கால வைதிக நெறிக்கேற்பப் பல்லவ மன்னர்கள் பிரமதேயமாகவும் தேவ தானமாகவும் பிராமணர்களுக்கம் கோயில்களுக்கும் அளித்தனர் எனக் காண்கிறோம். இவர்கள் காட்டிய வழியிலேதான் பிற்காலத்திய சோழர்கள் பெருமளவில் தானங்களைச் செய்து அவற்றை வரியிலா நிலங்களாக்கினர். மக்களினத்துள் வேறுபாடு வளர்க்கும் இந்த முறை, சமுதாய வாழ்வில் காலத்தால் மறைக்கப்படும் என்ற வரலாற்று உண்மைக்கு ஏற்ப, இக்காலத்தில் முற்றும் நீக்கப்பெற்று, வேறுபாடற்ற நிலையில் அவை இன்று மக்களிடையில் வழங்கப் பெறுவதைக் காண்கிறோம்.

பல்லவர் காலத்தில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தமை அறிகிறோம். அப்படியே அளவுக்கும் -முகத்தல், தூக்கல் அளவைகளுக்கும் பல்வேறு வரையறைகள் இருந்தன எனக் காண்கிறோம். இவை யாவும் நாட்டுக்குப் புதியன அல்லவேனும் ஓரளவு இடைக்காலத்தில் சிதைந்த நிலையில் இவர்களால் செப்பம் செய்யப்பெற்றதெனக் கொள்ளலாம்.

பல்லவர் ஆட்சி முறையைப் பற்றியும் நீதி வழங்கிய நெறி பற்றியும் நாட்டுப் பிரிவுகளைப் பற்றியும் கூடப் பல அறிஞர்கள், கிடைத்த சான்றுகளைக் கொண்டு நன்கு ஆய்ந்துள்ளனர். அவற்றின் வழி பல்லவர் நாட்டைச் செம்மையாகப் பகுத்தும் நேரிய வழியில் நீதி வழங்கியும் மக்கள் வாழ்வின் அடிப்படை உணர்ந்தும் செயலாற்றினார்கள் என அறிய முடிகிறது. நா•டைப் பல கோட்டங்களாகப் பிரித்துப் பெரும்பாலான அதிகாரங்களை அம்மக்களிடமே விட்ட பெருமை பல்லவர்களுடையதே. இன்றைய மாநில சுயாட்சிக் கோரிக்கையை மறுப்பவர்க்கு இப்பல்லவர்கால ஆட்சி வரலாறு ஒரு சிறந்த பாடமாக அமையும் என நம்புகிறேன்.

வெற்றி பெற்ற பெருமன்னர்கள் தத்தம் பெயரால் மண்டலங்களையும், ஊர்களையும், நாடுகளையும் - ஏன் - ஏரிகளையும் அமைத்தமை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இன்றும் இந்தக் கொடுநோய் ஆள்வார் யாராயினும் அவர்களை விடவில்லை. இடைக்காலத்திலும் பெருமன்னர்கள் ஆகிய ராசேந்திரன் போன்றாரையும் இந்நோய் பற்றியமையை அறிகிறோம். ஆயினும் வரலாறு அது தவறு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இப்பல்லவர் அன்று வைத்த பெயர்கள் எல்லாம் இன்று எங்கே உள்ளன? பல பெயர்களே இன்றி மறைந்தன. சில சிதைந்து நிலைகெட்டன. மாமல்லபுரமும் திரையன் ஏரியும் மகாபலிபுரம் எனவும் தென்னேரி எனவும் வழங்கப்படுதல் இதற்குச் சான்றாகும். அப்படியே நாடுகளுக்கு அவர்கள் வைத்த பெயர்கள் மாறி இயற்பெயர்களே நிலைத்தமையைக் காண்கிறோம். பிற்காலத்தில் புகழுக்காக உண்டான கங்கைகொண்ட சோழபுரம் நிலைகெடாத் தொண்டால் அமைந்த தஞ்சையும் பெரியகோயிலும் இன்றளவும் புகழ்பெற்று வாழ்கின்றன அல்லவா? அண்மையில் 'டால்மியாபுரம்' கல்லக்குடியாக மாறிய கதையும் அத்தகையதே. யாரும் தங்கள் பெயரால் எதையும் அமைக்க ஒருப்படமாட்டார்கள். பேரும் புகழும் பெற்ற வரலாற்றில் வாழ்கின்ற அத்துணைப் பெருமக்களும் தம்மை மறந்து தம் நாமம் கெட்டுப் பணியாற்றியவர்கள் என்பதையும் உணர வேண்டும். இவ்வுணரவைப் பல்லவர் காலத்திய வரலாறு நமக்கு ஊட்டும் என நம்புகிறேன்.

பல்லவர் மக்கள் வாழ்வின் அடிப்படையான கல்வியை ஓம்பத் தவறவில்லை. 'கல்வியே கரையில்லாத காஞ்சி மாநகர்' என்று அக்காலத்தில் வாழ்ந்த அப்பரடிகளாலேயே காஞ்சிபுரம் கல்வியும் இணைந்து போற்றப்பட்டமை அறிகிறோம். அக்காலத்திய காஞ்சியில் கற்ற அறிஞர் பலர் வடநாட்டில் நெடுந்தொலைவில் இருந்த நாளந்தாப் பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் முக்கியப் பொறுப்பேற்றுச் சிறந்த அறிவியல் விற்பன்னர்களாக இருந்ததைக் காண முடிகிறது. மேலும், அக்காலத்தில் காஞ்சிபுரம் வந்த žன யாத்திரகராகிய யுவான்-சுவாங் இக்கல்விசேர் காஞ்சியைப் பாராட்டிய நிலையும் எண்ணத் தக்கதாகும். எனவே, மக்கள் வாழ்வின் கண் எனப் போற்றும் கல்வியைப் பிற்காலப் பல்லவர் நன்கு போற்றிப் புரந்தனர் என அறியலாம். அப்படியே மக்களை நோயணுகா வகையிலும், அணுகின் தீர்க்கும் நெறியிலும் பல நல்ல ஏற்பாடுகளைச் செய்து மக்கள் நலம் போற்றியும் பல்லவர் திறம்பட ஆண்டவர் எனக் காண்கிறோம்.

இத்துணை வகையில் உள் நாட்டில் அமைதி காத்த அதே வேளையில் புறப்பகைகளுக்கு அஞ்சாது அவர்களைப் புறமுதுகிடச் செய்த பெருமையும் பல்லவரைச் சார்ந்ததாகும். பெருமன்னன் ஆகிய ஷர்ஷனைத் தோற்கடித்த சாளுக்கிய மன்னனாகிய புலிகேசியைத் தோற்கடித்ததோடு, அவன் தலைநகரைக் கைப்பற்றிய பெருமை நரசிம்மவர்மனையும் அவன் படைத்தலைவராகிய பரஞ்சோதியாரையும் சார்ந்ததன்றோ? பல்லவ மன்னருள் போரற்று அமைதியில் வாழ்ந்தவர் ஓரிருவரே உள்ளனர் எனலாம். எனவே, அவர்கள் ஆண்ட காலத்தில் எல்லாம் புறப்பகைகளாகிய மாற்றாரைப் புறங்கொடுத்தோடச் செய்ததோடு, நாட்டு அகப் பகைகளாகிய அறியாமை, பிணி, வறுமை முதலியவற்றைப் போக்கிப் பல்லவர் செம்மையை நாட்டில் நிலைநாட்டினர் எனக் கொள்ளலாம். அதனாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்தும் அவர்தம் புகழ் ஓங்கி உயர்கின்றது. தம் ஆணையின் கீழ்ப்பட்ட மக்களின் கருத்தையும் நெறியையும் மொழியையும் பண்பாட்டையும் சமய உணர்வையும் பிற நல்லியல்புகளையும் மதித்துப் போற்றிய பிற்காலப் பல்லவர் தமிழ்நாட்டு வரலாற்றில் என்றென்றும் அழியாத நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு முன் ஆண்ட அவர்கள் முன்னோர் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே அம்மக்கள் வாழ்வுக்கு ஒவ்வாத பலவற்றைச் செய்து வந்தமையால்தான் அவர்தம் பெயர்களைக்கூட அறியமுடியாதவகையில் மெல்ல மெல்ல மறைந்தனர் - மறைகின்றனர். பல்லவர் வரலாறு கற்றுத்தரும் இந்த நல்ல பாடத்தை அறிந்து செம்மையாக நாடாள்வார் உலகில் நல்ல சிறப்புற்றுக் கால வெள்ளங் கடந்து புகழ் பெற்று வாழ்வார். அல்லாதார்..?

பல்லவ மன்னர் தொட்ட பல பணிகள் இன்றளவும் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன. இனியும் தொடர்ந்து நடைபெற வாய்ப்பும் உண்டு. நாடு நாடாக வேண்டுமானால் அதனை நாடாக்கும் பொறுப்பு எக்காலத்தும் ஆள்வோரைச் சார்ந்தது என்பதை உணர்த்தும் வகையில் பல்லவர் ஆட்சி அமைந்திருந்தது. மேலும், தமிழக வரலாற்றின் பொற்கலம் எனப் போற்றப்பெறும் பிற்காலச் சோழர் காலத்துக்குப் பல வகையில் பல்லவர் காலம் வழிகாட்டியாக அமைந்தது. சங்க காலத்துக்குப் பிறகு உண்டான நினைக்க முடியாத பெருமாற்றத்துக்குப் பிறகு ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் பிற்காலப் பல்லவர் வரலாறு ஆகிய உதயசூரியன் தோன்றியிராதிருந்தால், தமிழக வரலாறு மட்டுமன்றித் தமிழர்தம் வாழ்வு, வளன், பண்பாடு அனைத்தும் எப்படி எப்படியோ உருமாறி இருக்கும் பிற்காலப் பல்லவர் நாட்டு மக்கள் உளமறிந்து, தம்மை உளத்தால் தமிழராக்கிக் கொண்டுதமிழ் நாட்டுச் சமயம், இலக்கியம், பண்பாடு இவற்றைக் காவாது அவர் தம் முன்னோர் போல வேற்று வழியில் சென்றிருப்பாரேயானால், பிற்காலச் சோழர் தம் எழுச்சிக்கும் அரசுக்கும் இடமே இருந்திருக்க முடியாது. எனவே, எங்கோ சென்ற தமிழகததை அதன் நேரிய வழியில் திருப்பிய பெருமை பிற்காலப் பல்லவர்களுக்கும் அக்காலத்தில் வாழ்ந்த சமய, இலக்கியப் பேரறிஞர்களாகிய அப்பர், சம்பந்தர் போன்றார்க்கும் உரியதாகும். எனவே, இப்பல்லவர் காலம் இத்மிழக வரலாற்றின் ஒரு திருப்பு மையம் என்று கொள்ளலாம்.

நான் மேலே கூறிய இக்கால வரலாற்றை இந்த நூற்றாண்டின் தொடக்கம் தொடங்கி ஆய்ந்தவர் பலர். இன்று பல கோணங்களில் ஆய இருக்கின்ற அறிஞர்கள் பலர். எனவேதான் நான் அக்கால நிலையில் வாழ்ந்த அரசர்களையும் அவர்தம் ஆக்க அழிவுப் பணிகளையும் போர் முறைகளையும் சுட்டிக்காட்டாது, அவர்கள் சமுதாயத்தோடு தொடர்பின் நிலையின் வழியினையும் அதன் வழி உருவாகிய பணிகளையும் சுட்டிக் காட்டினேன். இதில் கூறிய ஒரு சில முடிவுகளை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறமாட்டேன். இவை பற்றிய சிந்தனைகளைக் கிளறவே இவற்றைச் சுட்டிக் காட்டினேன். அறிஞர்கள் மேலும் ஆராய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

முடிவுக்கு முன் தொல்பொருள் ஆய்வுக் குழுவிற்கும் தமிழக அரசுக்கும் சில சொல்ல நினைக்கிறேன். கல்வெட்டுக்கள் பற்றியும் தொல்பொருள் ஆய்வு பற்றியும் தமிழகத்தில் போருக்குமுன் நடைபெற்ற அத்துணைப் பெருமளவில் தற்போது நடைபெறவிலலை என நம்புகிறேன். காரணம் எதுவாயினும் இத்துறையில் கருத்திருத்தாத நிலை வருந்ததத்தக்கதே. நல்ல வேளையாகத் தற்போது பொறுப்பேற்றுள்ள இயக்குநர் இக்குறைகள் இல்லா வகையில் பல துறைகளில் இத்தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்வதோடு, அவற்றைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் நூல்களாகவும், வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் வாயிலாகவும் விளக்கி வருகின்றனர். இத்துறையில் செய்ய வேண்டுவன பல. புகார் நகரம் உள்ளமையை நிலைநாட்டும் பல உண்மைகள் அகழ்பொருள்கள் வழியே தற்போது காட்டப்பெறுகின்றன. சற்றே ஆழ்ந்து ஆய்வு செய்யும் துறை செயலாற்றின் எத்தனையோ நாம் கனவாக எண்ணும் சங்க கால வாழ்க்கை நிலைகள் உண்மைகளாக்கப் பெறும். மொகஞ்சதாரோ, ஆரப்பா போன்ற நாகரிகங்கள் பண்டைத் தமிழர் நாகரிகம் அன்று என்பாரும், தென்னிந்திய நாகரிகமே, பிற நாகரிகங்களுக்கு அடிப்படை இல்லை என்பாரும் வாய்மூடி மௌனியாகும் வகையில் பலப்பல பழமை பற்றிய புதிய உண்மைகள் வெளியாகலாம். அப்படிக் கால எல்லையில் நம் தமிழகத்தில் உண்டான மாறுதல்களையும், அவற்றின் வழியே கலை, நாகரிகம், பண்பாடு, சமயம், வாழ்வு இவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும் திட்டவட்டமாக நிறுவ முடியும். இவற்றைக் கற்பனையாகக் கூறவில்லை. காரண அடிப்படையிலேயே கூறுகிறேன். இவ்வாறு வரலாறு காணாத கால எல்லைக்கு முற்பட்டு இடையிடை விடப்பட்ட பகுதிகள் இல்லையென்னாவாறு இன்றுவரை தெளிந்த தமிழக வரலாற்றை உருவாக்க முடியும், அந்த நிலை உரவாயின் உண்மையில் தமிழினம் உலகில் உயர்ந்த நெறி போற்றிய - ஆக்கத்திறன் படைத்த இனம் என்பதை உலகோர் உணர்வர். தமிழ்நாட்டு வரலாறு பற்றிய பல நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. அவற்றை மறுபடி அச்சிட்டு உலவவிட வேண்டுவது இத்துறையின் கடமையாகும். இந்த ஆக்க நிலைக்கு அரசு ஒல்லும் வகையில் செல்லும் வாயெல்லாம் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசுக்கு ஒரு வார்த்தை. எத்தனையோ திட்டங்களில் எண்ணற்ற கோடி ரூபாய்களைச் செலவிடும் அரசாங்கம் இத்துறையில் கருத்திருத்த வேண்டும். இன்று இந்தியாவிலேயே - ஏன் - உலகிலேயே தமிழினம் தனித்த சிறப்பினை உடையது என்ற பெருமைக்குத் தமிழர்தம் பழையதிலும் பழையதாய்ப் புதியதிலும் புதியதாய் அமைந்த சமுதாய அடிப்படையே காரணம் ஆகும். இதைக் கொண்டுதான் இன்றும் தமிழ்நாடு மொழி முதலிய வகைகளில் பிற மாநிலங்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. எனவே, இவைகள் செம்மையாக்கப் பெற வேண்டுமாயின் இவற்றுக்கு அடிப்படையான தொல்பொருள் ஆய்வில் அதிகக் கருத்திருத்த வேண்டும். இத்துறையை விரிபுடுத்தி, பல துறைகளில் பலப்பல வகைகளில் ஆய்வினை வளர்த்து உலகுக்கு மறைந்து கிடக்கும் எண்ணற்ற உண்மைகளைப் புலப்படுத்த வேண்டும். நமது ஒரு சில இலக்கியங்களைக் கண்டு வியக்கும் உலகம் உண்மையில் நம் பழமை நன்கு விளக்கப்படுமாயின் நம்மை மிகமிகப் பாராட்டும். இந்த அடிப்படையிலேதான் ஆங்கில ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்ற வந்த மேல்நாட்டவர் இத்துறையில் கருத்திருத்தினர். அந்த மேலைநாட்டுப் பெரியவர்தம் உலையா முயற்சி இன்றேல் சிந்துவெளி நாகரிகமும் தென்னிந்திய நாகரிகமும் உலகுக்குத் தெரிய வழியில்லை அல்லவா? இனி இந்தப் பொறுப்பனைத்தும் தமிழக அரசினைச் சார்ந்ததாகும். ஆனால் அதற்கு ஒரு குறுக்கீடு உண்டு. என்ன? இத்துறையின் பெரும் பகுதி மத்திய அரசாங்கத்தில் இருப்பதுதான். அதனாலன்றோ பெரியகோயில் அமைத்த இராசராசன் உருகூச் சிலையைத் தமிழக அரசு விரும்பினும் அவன் அமைத்த அக்கோயிலேயே வைக்க முடியாத சங்கடமான நிலை உண்டாகின்றது. மாநில சுயாட்சி கோரும் தமிழக அரசு, முதலில் இதில் சுயாட்சி கோரி இத்துறையை முற்றும் தனதாக்கிக் கொள்ளல் வேண்டும்.

தமிழக அரசின்கீழ் இத்துறை வருவதற்கு அடிப்படை ஒன்றுண்டு. வரலாற்று அடிப்படைக்குரிய கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோயில்களில் உள்ளன. கோயில்களோ மாநில ஆட்சியில் உள்ளன. எனவே, அவற்றைப் பற்றி எழும் ஆய்வுகளும் இந்த அரசுக்கே உரிமையாக இருத்தல்தானே முறை. வேண்டுமாயின் இத்துறை வளர மத்திய அரசிடம் மானியம் பெறலாம். இத்துறைக்கெனவே தனியமைச்சகமும் ஆய்வகமும்கூட அமைக்கலாம். இத்துறை தமிழர் வாழ்வை உலகுக்கு உணர்த்த மிகமிக இன்றியமையாதது. இன்றைய தமிழக அரசாங்கமும் இந்த உண்மையை அறியாத அரசாங்கம் அன்று. அறிந்தது என்ற அடிப்படையிலேயே இந்த வேண்டுகோளை அவர்களுக்கு விடுக்கிறேன். எனவே, விரைவில் இந்தத் துறையினை மாநில அரசுக்குக் கொண்டுவருவதோடு, இதன் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும் தளராது செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும் தளராது செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home