Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan >  Remembering July 1983 > Black July 1983 - the Charge is Genocide

Remembering July 1983
எண்பத்து முன்று ஜூலை..

A poem in Tamil by Raj Swarnan
20 July 1999

Black July 1983 - the Charge is Genocide


எண்பத்து முன்று ஜூலை..
ஈழத்தமிழர் தம்
இதயங்களில்
உணர்வுகளைத் தட்டி
உசுப்பேற்றிவிட்ட
உன்னத மாதம்..

ஏலவே எரிந்த
இனவாத நெருப்பால்
காலத்துக்குக் காலம்
கருகிக் கொண்டிருந்தவர்கள்
காணும் காணும் எனக்கூறிக்
கண்விழிப்பதற்குக்
காரணமாயிருந்தது
எண்பத்து முன்று..

உயிர்வாழ விரும்பினால் - நீ
உனக்கென ஒருதேசம்
சமைத்திடு என்று
உறைப்பாக உணர்த்தியது
எண்பத்து முன்று..

அதுவரை காலமும்
தந்ததையெல்லாம் வாங்கித்
தலைகுனிந்து கொண்டிருந்தான்
தமிழன்..

பொறுத்துப் பொறுத்து
அவனது பொறுமைக் குணகம்
மீள்தன்மை மட்டை
மீறத் தொடங்கியது..

அதன்பின் தான்
அவன்
நியூட்டனின்
முன்றாம் விதியைச்
சரிபார்க்கத் தொடங்கினான்..

எண்பத்து முன்று ஜூலை
என்னதான் செய்தது?

அன்று..

சிறைச் சாலைகள்
மறச்சாலைகளாயின..
தன் தேசத்தின் விடிவுகாணத்
துடித்த கண்கள்
காடைக் கரடிகளால்
துருவியெடுக்கப் பட்டன..

தலைநகர வீதிகளில்
தமிழர் தலைகள்
தட்டுப்பாடின்றித்
தாராளமாய்க் கிடந்தன..
கொல்லாமை போதிக்கும்
புத்தன் பூமி
ரத்த வெறிகொண்டு
முட்டிய வேள்வியில்
தமிழர்தம் மெய்கள்
நெய்யாகிச் சொரிந்தன..

வானொலியில் உத்தமர்
வடிவாகச் செப்பினார்
"உமது பாதுகாப்பை
நீவிரே உறுதி செய்வீர்"
இன்று
தனது பாதுகாப்பைத்
தானே உறுதி செய்ய
முடியாது தவிக்கிறது
தலைநகர்..

பத்தடிக்கொரு
பாதுகாப்பு அரண்..
நட்ட நடுநிசியில்
நாய்களின் ஓலத்தை
நயமாகக் கேட்டபடி
வீட்டுக்கு வீடு
சுற்றிவளைப்பு, சோதனை..

நிம்மதியான நித்திரை
நித்தமும் குலைவது
தமிழருக்கு மட்டுமல்ல..

இன்று
தலைநகரில்
தங்கியிருக்கும்
சகலருக்குமே..

என்ன காரணம்?
யாரிந்தப் பெரு நெருப்பை
எரியூட்டி வளர்த்தவர்கள்?
தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்..
நீவிர்
முட்டிய பெருநெருப்பு
நித்தமும்
உம்மைச் சுடும்..

மீண்டிட வழி வேண்டின்
ஆண்டிட உரிமை கொடும்..
மூண்ட பெரு நெருப்பை
முழுதாய் அணைத்திடலாம்..

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home