Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > நாசூக்கான (?) செயற்திட்டங்கள்!

 

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

நாசூக்கான (?) செயற்திட்டங்கள்!
31 December 2007


மகிந்த ராஜபக்சவின் சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசு, ஒரு புறம் தமிழின அழிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு, மறுபுறம் சமாதானத் தீர்வு| என்றும் பேசிக் கொண்டு வருகின்றது. மகிந்தவின் முன்னோடிகளான முன்னைய சிங்களத் தலைவர்களும் இதே பாணியைத்தான் கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள். சுதந்திரத் தமிழீழம் மலரும் வரைக்கும், சிங்கள-பௌத்தப் பேரினவாதம் தன்னுடைய இந்தப் ப(h)ணியைக் கைவிடப் போவதில்லை என்பதே உண்மையுமாகும்!

தமிழீழப் பிரதேசங்கள் யாவற்றையும், இராணுவ நடவடிக்கைகள் மூலம் முழுமையாகக் கைப்பற்றுவோம்| - என்று மகிந்தவின் அரசு, அண்மைக் காலமாகப் பெரிதாக முழங்கி வருகின்றது. அதேவேளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் மூலம், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு| ஒன்றைக் காணப் போகின்றோம் என்றும் மகிந்தவின் அரசு கதையளந்து வருகின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளும் அரசியல் தீர்வு| குறித்துப் பேசி வருகின்றன.

சிறிலங்காவின் எந்தச் சிங்கள அரசும், தமிழீழ மக்களுக்கு ஒரு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான அரசியல் தீர்வைத் தரப்போவதில்லை என்ற பட்டறிவு தமிழீழ மக்களுக்கு உண்டு. சரியாகச் சொல்லப்போனால், சர்வதேசமும் இதனை நன்குணர்ந்துதான் உள்ளது. ஆனாலும், சிறிலங்கா அரசிற்கு முறையான அழுத்தங்களைச் செயல்வடிவம் மூலம் பிரயோகிக்காமல், வெறுமனே வார்த்தைகளை மட்டும் சர்வதேசம் உதிர்த்து வருகின்றது. சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசிற்கு எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்காத சர்வதேசம், தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தேவையற்ற அழுத்தங்களையும், தடைகளையும் பிரயோகித்து வருகின்றது.

இவை யாவற்றிற்கும் அப்பாற்பட்டு, தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்தை, நாசூக்காக| ஒடுக்குகின்ற முயற்சியிலும், இன்று சர்வதேசம் இறங்கியிருப்பதாக நாம் சந்தேகப்படுகின்றோம்.

இந்த மிக முக்கியமான விடயத்தைச் சற்று ஆழமாகக் கவனித்துச் சில கருத்துக்களை முன் வைக்க விழைகின்றோம்.

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கடந்த மாவீரர் தின உரையின்போது பல விடயங்களைச் சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்தியிருந்தார். கடந்த அறுபது ஆண்டுக் காலத்தில் சிங்களத் தலைமைகள், தமிழர் தரப்புடன் செய்து கொண்ட தீர்வு ஒப்பந்தங்கள் எதுவும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்காத ஒப்பந்தங்கள் என்பதையும், அந்த அரைகுறை ஒப்பந்தங்களைக்கூடச் சிங்கள அரசுகள் நிறைவேற்றவில்லை என்பதையும் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியிருந்தார். அத்தோடு, இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாகத் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையில் தலையீடு செய்து, தமிழ் மக்களின் சம்மதமோ, ஒப்புதலோ இன்றிச் சிங்கள அரசுடன் செய்து கொண்ட அரைகுறைத் தீர்வைக் கூடச் செயற்படுத்துவதற்குச் சிங்களப் பேரினவாதம் அனுமதிக்கவில்லை என்பதையும் தேசியத் தலைவர் விளக்கியிருந்தார்.

இவற்றோடு சேர்த்து இன்னுமொரு முக்கிய விடயத்தையும் தலைவர் சுட்டிக் காட்டித் தெளிவு படுத்தியிருந்தார். அதாவது, அன்று இந்தியா இழைத்த தவறை, இன்று சர்வதேசமும் இழைத்து நிற்பதை விளக்கிய தேசியத் தலைவர், இதன் காரணமாகச் சர்வதேசத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிககையும் இன்று தகர்ந்து போயிருக்கின்றது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகள் யாவும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கையில், இந்த இனவாதக் கட்சிகளிடமிருந்து எவரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று!| என்றும் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார்.

அதாவது சிங்களப் பேரினவாத அரசுகளோடு, போடப்படுகின்ற ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தங்களைக்கூட சிங்களப் பேரினவாதம் தூக்கி எறியும் என்பதையும், அந்த அரைகுறை ஒப்பந்தங்கள் தமிழர் தரப்போடு போடப்பட்டிருந்தாலும் சரி, இந்தியா போன்ற பிராந்திய வல்லரசோடு போடப்பட்டிருந்தாலும் சரி, அவற்றைச் சிங்களப் பேரினவாதம் தூக்கி எறியத் தயங்காது என்பதையும் தமிழீழத் தேசியத் தலைவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

இதன்மூலம், இதய சுத்தியாக, நேர்மையாக நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்குத் தமிழர் தரப்புத் தயார். ஆனால் இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம், தமிழின அழிப்புப் போரை நடாத்தி வருகின்ற மகிந்த ராஜபக்ச போன்ற அரசுகளுடன் பேசுவதனால் பலனில்லை| என்ற நிலைப்பாட்டைத் தேசியத் தலைவர் வெளிப்படுத்தியிருந்தார்

தமிழீழத் தேசியத் தலைவரின் தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்த அவரது மாவீரர் தின உரையை அடுத்து, சிங்கள தேசமும், சில உலக நாடுகளும் திரை மறைவில், சில நாசூக்கான செயற் திட்டங்களை| மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக நாம் அறிகின்றோம்.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தைத் தூசு தட்டும் வேலையைச் செய்யச் சிலர் ஆரம்பித்துள்ளார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதானது, தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய அரு மருந்து என்றும், அந்த அரிய வாய்ப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தவறவிட்டு விட்டார்கள் என்றும் ஒரு சாரார் பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்று கிடப்பில் போடப்பட்டு, வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, சட்ட விரோதமானது என்று சிறிலங்காவின் நீதித்துறை அறிவித்த பின்னரும் கூட, இவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தூக்கிப் பிடிப்பதன் காரணம் என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள், அமைதி வழியில், அரசியல் இலக்குகளை அடையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை| என்ற பொய்ப் பரப்புரையைப் பரப்பி, அதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் வெற்றி கொள்வதன் மூலமே, இலங்கைத் தீவில் சமாதானத்தைக் கொண்டு வரலாம் என்ற கருத்துருவாக்கத்தைத் திணிப்பதுதான், இவர்களுடைய உள் நோக்கமாக உள்ளது.

இந்தக் கருத்துருவாக்கத்தைப் பாரிய அளவில் பரப்புரை செய்து, அதனூடாக, தமிழ் மக்கள் மீதான போரை நியாயப்படுத்துவதற்காக, ஒன்றுக்கும் உதவாமல் போன ஒப்பந்தங்ளைச் சிலர் தூக்கித் திரிய ஆரம்பித்துள்ளார்கள்.

இது அவர்களுடைய முதல் கட்டத் திட்டமாகும்!

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் வெல்கின்ற அதேவேளை, இந்தப் போரின் ஊடாகத் தமிழ் மக்களின் வாழ்வை அவல நிலைக்குத் தள்ளி, அவர்களைக் கையறு நிலைக்குக் கொண்டு வருவது, இந்தச் சிலரின் திட்டமாக இருக்கின்றது. தமிழர்களைக் கையறு நிலைக்கு கொண்டு வருவதன் மூலம், அவர்கள் மீது, ஓர் அரைகுறைத் தீர்வுத் திட்டத்தைத் திணிப்பதுதான் இவர்களது எண்ணமாகும்.

இது அவர்களுடைய இரண்டாவது கட்டத் திட்டமாகும்!

இந்த ஒன்றுக்கும் உதவாத அரைகுறைத் திட்டத்தைத் தமிழர்கள் சார்பில் ஏற்றுக் கொள்வதற்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி வைக்க வேண்டும். அதற்காக மிதவாதத் தமிழர்கள்| என்ற பெயரில் தமிழ்த் துரோகிகளை ஒன்றிணைத்து, அவர்களிடம் இந்தத் தீர்வுத் திட்டத்தைக் கொடுத்து, அவர்களது ஒப்புதலைப் பெற்று, தமிழர்களின் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட்டது என்று அறிவிப்பதாகும்.

இது அவர்களுடைய மூன்றாவது கட்டத் திட்டமாகும்!

இதனடிப்படையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் மூலம் ஓர் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன் வைக்கும் முயற்சியானது, மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி, சம~டி ஆட்சி, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்ற எத்தனையோ சொல்லாடல்களுக்கு அப்பால்|, மிதவாதியான| டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தீர்வுத் திட்டத்தின் மூலம், தான் வட-கிழக்குப் பகுதிகளின் முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என்று தன் ஆசையையும் வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட 55 தடவைகள் கூடி ஆலோசனைகளை நடாத்தியிருக்கின்ற இந்த அனைத்துக் கட்சிக்குழு, இப்போது ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்த நாடுகளின் அரசியல் யாப்புக்களையும் ஆராயப் போவதாக அறியப்படுகின்றது. இவையெல்லாம் வெறும் கண் துடைப்புக்களேயாகும்!

சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தி, தமிழ் மக்களை ஒடுக்க வேண்டுமென்றால், முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம் கட்ட வேண்டும். இந்த இரண்டு விடயங்களில் ஒன்றையாவது செய்து விடவேண்டும் என்ற துடிப்பில் சிங்கள தேசம் முனைப்பாக நிற்கின்றது. அதற்குச் சர்வதேசம் தொடர்ந்தும் உதவி வருகின்றது.

இன்று உலகில், எத்தனையோ நாடுகள் விடுதலையடைந்து வருகின்றன. இ ன் று விடுதலையாகும் நாடுகளுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பல நாடுகள் செயற்பட்டிருக்கின்றன. ஆனால் உலக நாடுகளின் இந்த எதிர் வினைகளுக்கு அப்பால், இன்று இந்த நாடுகள் சுதந்திரம் அடைந்து வருவதைப் பார்க்கின்றோம். ஒப்பீட்டளவில் தமிழினம், இந்த நாட்டு மக்களையும் விடத் தொன்மையான இனமாகும். ஓப்பீட்டளவில், விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் சாதனைகளைப் படைத்து, புதிய பரிமாணங்களைக் கண்ட இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகும். காலத்தின் கொடையாகத் தமிழீழ மக்களுக்குக் கிடைத்திட்ட தலைவன்தான் எங்களுடைய தலைவனாவான் ! நாளைய வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி, புதிய பாடமாக வைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்தக் காலகட்டத்தில் வாழுகின்ற புலம் பெயர் வாழ் தமிழர்களாகிய எம்மிடம், மலையையும் புரட்டக் கூடிய மகத்தான சக்தி உண்டு.

எமது தேசியத் தலைவர் கேட்டுக் கொண்டபடி, புலம் பெயர் வாழ் தமிழர்களாகிய நாம் உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுந்தால், தமிழீழ விடுதலைப் போராட்டம் விரைவிலேயே வெற்றி பெறும். சர்வதேசமும், சிங்களமும் நாசூக்காகவும்,| வெளிப்படையாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குகின்ற செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்ற இவ்வேளையில் நாம் மனம் வைத்தால், எமது மக்களின் விடுதலைப் போராட்டம், புதிய பரிமாணங்களை அடைந்து விரைவில் வெற்றி பெறுவது உறுதியாகும்.

நமக்குள்ளேயே இந்த உலகம் இருப்பதையும் நாம் உணர்வோமாக! தமிழீழ விடுதலைப் பேராட்டத்திற்கு எதிராகத் தீட்டப்படும் பரப்புரைகளையும் திட்டங்களையும் முறியடிப்பதற்குரிய பலமும், அறிவும் புலம் பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு. அவற்றிற்குச் செயலுருவம் கொடுப்பதற்காக, நாம் யாவரும் முழுமையாக ஒருங்கிணைவோம்! செயல்படுவோம்!!

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home