Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து நாட்டு மக்களின் ANZAC  தினம்

Selected Writings by Sanmugam Sabesan

அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து
நாட்டு மக்களின்
ANZAC  தினம்

25 April 2007



ஏப்பிரல் மாதத்து 25ம் திகதியானது அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான தினமாகும். 1914-1918 ஆண்டுக் காலப்பகுதிகளில் நடைபெற்ற போரில் கலந்து கொண்ட இந்நாடுகளின் போர்வீரர்களின் நினைவாக இந்த இரண்டு நாடுகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துக்களையும் இராணுவ அணியினைக் குறிக்கும் முதல் எழுத்துக்களையும் சேர்த்து ‘
ANZAC தினம்’ என்று அவுஸ்திரேலிய-நியூஸிலாந்து மக்கள் பெருமையுடன் தங்கள் தேசத்துப் போர் வீரர்களைக் கௌரவிக்கும் தினம் ஏப்பிரல் 25.

போரின் கொடுமை எவ்வாறு இருக்கும் என்பதையும் அன்றைய அவுஸ்திரேலியப் பொது மக்கள் ஓரளவு உணர்ந்தே உள்ளார்கள். 1942ம் ஆண்டு யூன் மாதம் எட்டாம் திகதி அன்று சிட்னி நகரில் உள்ள BONDI
 என்ற பிரதேசத்தில் உள்ள சிம்ப்ஸன் வீதியில் (Simpson Street)  விழுந்த ஏவுகணை ஒன்று வெடிக்காமல் போனதில் அன்றைய தினம் பல பொதுமக்கள் உயிர் தப்பினார்கள். சரியாக அதற்கு ஒரு வாரத்தின் முன்னர்தான் சிட்னித் துறைமுகம் குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானது.

இப்படிப்பட்ட பேராபத்துக்களையெல்லாம் கடந்து ஈற்றில் சமாதானம் வந்தபோது அது குறித்து அன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறு குறிப்பொன்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனைத் தமிழில் சொல்வதானால் இவ்வாறு சொல்லலாம்.

 

“போர் நிறுத்தம் - அதனால் கிடைத்திட்ட அமைதி-
ஆனால் எமது இதயத்திற்கோ அது புதிய உலகம் ஒன்றைத்தான் உணர்த்தியது.

 

தனது தாயிடமும் - தந்தையிடமும் திரும்பி வந்த தனயன்.

 

ஆருயிர் மனைவியை மீண்டும் அணைத்திட வந்திட்ட அருமைக் கணவன்.
விட்டுப் பிரிந்து சென்ற தன் செல்லக் குழந்தைகளை வந்து ஆரத்தழுவிட்ட அருமை அப்பா.
ஆகா… படுக்கைக்குப் போகும்போதும் பயமில்லாமல் படுத்திட்ட இரவுகள்.....

காலையில் எழுந்திடும்போது கலக்கமில்லாமல் எழுந்திட்ட வேளைகள்……
புதியதொரு எதிர்காலத்தைக் கட்டி எழுப்பிடுவதற்கான திடமான நம்பிக்கை…....

அதேவேளை,

இவையெல்லாவற்றையும், எமக்கு தந்த எமது போர்வீரர்களை
எம் நெஞ்சில் நிறுத்தி என்றென்றும் நன்றி சொல்லி வாழ வேண்டும்
என்ற உறுதியான உணர்வெழுச்சி.”

இவ்வாறு போர் முடிந்த பின்னர்- அவுஸ்திரேலிய வீரர்களை பற்றி - அன்று எழுதப்பட்ட சிறு குறிப்பொன்றை இயன்றவரை தமிழாக்கி இப்பொழுது தந்தேன்.

தமது நாட்டின் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் ஏராளமான அவுஸ்திரேலிய இளைஞர்கள் அன்று தங்களைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்வதில் முண்டியடித்து ஆர்வம் காட்டினார்கள். தமது நாட்டு மக்களுக்காகப் போராடுவதற்காக அந்த இளைஞர்கள் காட்டிய கடமை உணர்ச்சியை விளக்குவதற்கு ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

1915ம் ஆண்டு: அலக் காம்ப்பெல் (Alec Campbell)
என்கின்ற அவுஸ்திரேலியச் சிறுவனுக்கு அப்போது (1915ல்) 16 வயதுதான் ஆகியிருந்தது. இராணுவத்தில் தன் பாட்டில் சேர்வதென்றால் 21 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதற்கும் இளையவராக இருந்தால் பதினெட்டு வயதிற்கும் இருபத்தியொரு வயதிற்கு உட்பட்டவர்கள் தமது பெற்றோரின் சம்மதத்துடன்தான் இராணுவத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்ற சட்டம் அப்போது அவுஸ்திரேலியாவில் இருந்தது. ஆனால் அலக் காம்ப்பெலுக்கோ 16 வயதுதான் ஆகியிருந்தது.

ஆனால் அலக் காம்ப்பெல் வாளாவிருக்கவில்லை. போருக்காக வீரர்களைத் திரட்டுகின்ற நிலையத்துக்குச் சென்றார். தன்னுடைய வயது 18 ஆண்டுகள் 4 மாதங்கள் என்ற பச்சைப்பொய் ஒன்றைச் சொன்னார். தான் சண்டையில் இணைவதற்கும் பெற்றோர்கள் சம்மதித்து அளித்த கடிதத்தையும் இராணுவ அதிகாரிகளிடம் அவர் கையளித்தார். பெற்றோரின் சம்மதத்தைப் பெற அவர்களோடு பெரிய போராட்டம் ஒன்றை அவர் நடாத்த வேண்டியிருந்தது. அப்படி அவர்களை வற்புறுத்தி,ஒரு கடிதத்தை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு,தன்னுடைய வயதை 18 ஆண்டுகள் 4 மாதங்கள் என்று கூட்டிச் சொல்லி அவர் தன் நாட்டுக்காக, தன் தேசத்து மக்களுக்காக,ஒரு போர் வீரனாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

1915ம் ஆண்டு யூன் மாதம் 30ம் திகதியன்று அலக் காம்ப்பெலின் பெற்றோர்கள் கையெழுத்திட்ட அக்கடிதத்துடன் அவர் தன்னைப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டபோது,அவர் பற்றிய குறிப்பை அவுஸ்திரேலிய ஆவணம் இவ்வாறு பதிவு செய்துள்ளது.

ALEC WILLIAM CAMPBELL
PRIVATE NO 2731.
15th Queensland and Tasmania Battalian 4th Brigade.
Australian Imperial Force.


ஆனால் அவடைய சகவீரர்கள் அவரை அழைத்தபெயர்
THE KID. அதாவது, தமிழில் குழந்தை அல்லது சிறுவன். அந்தக் கூற்றை 1915ம் ஆண்டு சிறுவன் அலக் காம்ப்பெல் சீருடை அணிந்து துப்பாக்கியோடு நின்றிருக்கும் புகைப்படம் நிரூபணம் செய்வதாகவே அமைந்துள்ளது.  பால் மணம் மாறாத முகத்துடன் அலக் காம்ப்பெல் துப்பாக்கியுடன் காட்சியளிக்கிறார். அத் துப்பாக்கியோ அவருடைய நெற்றிக்கும் மேலாக நீண்டு உயர்ந்து நிற்கிறது.

அக்காலகட்டத்தில் அவுஸ்திரேலிய நாட்டிலிருந்து சுமார் 324,000 இளைஞர்கள் தம்மை போராட்டத்தோடு இணைத்துக் கொண்டார்கள். அவர்களில் 60,000க்கு மேற்பட்ட இளைஞர்கள் போரில் மடிந்து மாவீரர்களானார்கள்.

குழந்தைப் போர்வீரன் என்று அழைக்கப்பட்ட திரு அலக் காம்ப்பெல் 2002ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இறந்தபோது அவருக்கு வயது 103. அச்செய்தியை அறிந்த அவுஸ்திரேலியப் பிரதம மந்திரி தன்னுடைய சீன நாட்டு விஜயத்தையும் பாதியில் முடித்துவிட்டு, அவுஸ்திரேலியா திரும்பினார்.அவுஸ்திரேலியக் கண்டம் முழுவதும் அவுஸ்திரேலியத்

 

 தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. சகல தொலைக்காட்சிகளும், செய்திப் பத்திரிகைகளும் தங்களுடைய மரியாதையை அந்தக் குழந்தைப் போர்வீரனுக்கு அர்ப்பணித்தன. பூரண அரசாங்க மரியாதைகயோடு அவருடைய இறுதி ஊர்வலத்தை நடாத்துவதன் மூலம் இத்தேசம் தனது நன்றிக் கடனைச் செலுத்த விரும்புகின்றது என்று அவுஸ்திரேலிய பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இறுதி மரியாதையில் அவுஸ்திரேலிய கவர்னர்-ஜெனரல், மாநில கவர்னர்கள், பிரதம மந்திரி மற்றைய மந்திரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டார்கள்.

அவர் இறந்தபோது அவருடைய குடும்பம் மிகவும் விரிவடைந்திருந்தது. அவருடன் மிக நீண்ட ஆண்டுகள் இணைந்து மணவாழ்க்கையை நடாத்திய அவருடைய அன்பு மனைவி கத்லீன்,அவர்களுடைய ஒன்பது பிள்ளைகள், முப்பது பேரப் பிள்ளைகள், முப்பத்திரண்டு பூட்டப் பிள்ளைகள், அந்தப் பூட்டப்பிள்ளைகளுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று அவருடைய 103 ஆண்டு வாழ்க்கை நிறைந்திருந்தது.

ஆனால் அன்றைய தினம் - அவுஸ்திரேலியக் கண்டத்து மக்கள் அனைவரும் தலைவணங்கி மரியாதை செய்தபோது அவர்கள் இதயங்களில் அலக் காம்ப்பெல் அவர்கள் ஒரு கணவனாகத் தோற்றமளிக்க வில்லை. ஒரு தந்தையாக, பாட்டனாக, பூட்டனாகக் கூட காட்சியளிக்க வில்லை. மாறாக தங்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்காக தனது குறைந்த வயதை மறைத்து பேராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு குழந்தைப் போராளியாகத்தான் அந்த 103 வயது முதியவர் தோற்றமளித்தார்.

அவுஸ்திரேலிய நாடும், அதன் மக்களும் அதன் அரசும் அன்றைய தினம் தமது அகவணக்கத்தை நெஞ்சாரத் தெரிவித்த நேரம் அது. அவுஸ்திரேலிய அரசு ஏற்கனவே தபால் முத்திரையில் அலக் காம்பெலின் படத்தை வெளியிட்டுக் கௌரவித்திருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக பால் வடியும் முகத்தோடு சீருடையில் அவர் தன்னையும் விடப் பெரிய துப்பாக்கியோடு நிற்கின்ற தோற்றத்தை
MINT நாணயத்தில் பதித்து கன்பரா வெளியிட்டுக் கௌரவித்தது.

இன்றைய தினம் ANZAC தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில் அமரர் அலக் காம்பெலின் நாட்டுப்பற்றை அவுஸ்திரேலிய தேசம் மதித்துத் தலை வணங்குகின்றது. அந்தக் குழந்தைப் போர் வீரனைத் தனது தேசியச் சொத்தாக அவுஸ்திரேலிய தேசம் போற்றியது. அந்தக் குழந்தைப் போர்வீரனின் அர்ப்பணிப்பை ஒரு தேசியத்தின் கடமையாக, நாட்டுப்பற்றாக, தியாகமாக, அவுஸ்திரேலிய நாடும் மக்களும் மதித்துப் போற்றுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

யுத்தம் முடிந்து போர்நிறுத்தம் ஏற்பட்டு முழுமையான அமைதியும், நிரந்தரமான சமாதானமும், பூரணமான சுதந்திரமும் தனது தேசத்திற்குக் கிடைத்த பிறகு இவற்றிற்கு அடித்தளமிட்ட தம் போர்வீரர்களையும், மாவீரர்களையும் அவுஸ்திரேலிய நாடும் அதன் மக்களும் தலைவணங்கிப் போற்றுகின்றார்கள்.

இந்த நன்றியுணர்வுப் பெருக்கை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. உணர்ந்து கொள்ள முடிகின்றது. சிந்தித்துப் பார்த்தால் நம்மால்தான் - அதாவது தமிழீழத்தவர்களால்தான் - இந்த உணர்வைச் சரியாக புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

சமாதானமும், சுதந்திரமும் முழுமையாகக் கிடைக்காத இந்தக் கால கட்டத்திலேயே முழு விடுதலையின் பயனை இன்னும் அடைந்திடாத கால கட்டத்திலேயே எமது தமிழ் மக்கள் தமது மாவீரர்களைக் கௌரவிக்க ஆரம்பித்து விட்டார்கள். தமது நாட்டினதும், மக்களினதும் விடுதலைக்காகப் போராடி வித்தாகிய எமது மாவீரர்களின் தியாக சீலத்தின் மேன்மையை போராட்டக் காலத்திலேயே கண்டுணர்ந்து, கௌரவித்து வணங்கி வருபவர்கள் எமது மக்கள்.! அத்தோடு மட்டுமல்லாது, எமது தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தாங்கி நின்ற, தாங்கி நிற்கின்ற நாட்டுப்பற்றாளர்களையும் எமது தமிழினம் மதித்துக் கௌரவித்து, வணங்கி வருகின்றது.

எமது மக்களுக்கு இந்த ANZAC தினத்தின் மகத்துவம் புரியும்.  சிங்கள அரச பயங்கரவாதங்களால் தமிழ் மக்களை அழிக்க முடியாமல் போனதற்கும், தமிழீழ மண்ணை முழுமையாக அபகரிக்க முடியாமல் போனதற்கும்,‘தமிழ் மக்களுக்கு ஒரு தேசியப் பிரச்சனை இருக்கின்றது - அது தீர்க்கப்பட வேண்டும’ - என்று இப்போது உலகநாடுகள் ஏற்றுக் கொள்வதற்கும் அடிப்படைக் காரணமாக எமது மாவீரர்களினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் தன்னலமற்ற, மகத்தான தியாக வரலாறு உள்ளது என்ற உண்மையை உணர்வு பூர்வமாக அறிந்தவர்கள்தான் எமது தமிழீழ மக்களும் புலம் பெயர்ந்தவர்களும்.!

இன்று தமிழீழத் தேசியம் எழுச்சி பெற்று வலிமையுடன் திகழ்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம், தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளினூடே தனது வேட்கையை அறை கூவி நிற்கின்றது. சுமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாக தமிழினத் தேசியப் பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வினை அடைவதற்காகத் தமிழினம் எதிர் நோக்கிக் காத்தும் நின்றது.

ஆனால் சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் சிறப்புப் பிரதிநிதியான, சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது அரசும், சமாதானத் தீர்வு ஒன்றில் உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை. போர்நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாகப் புறம் தள்ளி, தமிழினத்தின் மீது இராணுவத் தீர்வு ஒன்றைப் பலவந்தமாகத் திணிப்பதிலேயே மகிந்த ராஜபக்ச மிக முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றார். அது வெளிப்படையாகவே தெரிகின்றது. வெளிநாடுகளுக்கும் இப்போது புரிகின்றது.

தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையையோ அல்லது அவர்களது நாளாந்த வாழ்வியல் பிரச்சனையையோ சமாதான வழியூடாக அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கு இதுவரை எந்தச் சிங்கள அரசும் உண்மையாக முயலவில்லை என்பதை கடந்த கால வரலாறும் தெரிவித்து நிற்கின்றது. இராணுவப் பயங்கரவாதப் போர்களையும் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் கொண்டு தமிழீழத் தேசிய எழுச்சியை ஒழிப்பதையே சகல சிங்கள அரசுகளும் தமது முதற் குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வந்துள்ளன.

சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட போர்கள் இன்றுவரை கொண்டு வந்த அவலம் மட்டுமல்ல,சுனாமி ஆழிப்பேரலை தந்த பேரழிவுகள் கூட சிங்கள அரசின் மனதை மாற்றியதாகத் தெரியவில்லை. தமிழ்மக்களுக்கு நீதி இன்னும் கிட்டவில்லை. அது தாமதமாக வருவதாகக்கூட எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

கடந்த கால வரலாறு எமக்குக் கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை!

உரிய சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தமிழினத்தின் தேசியப் பிரச்சனைக்கும், அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளுக்கும் நீதியான, நிரந்தரமான, நியாயமான, கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றிற்காகத் தமிழினம் எதிர்பார்த்துக் காத்து நின்ற காலம்,முடிவுக்கு வந்துள்ளது.

ஆகவே தமிழீழ மக்களுக்கு நீதியான - நிரந்தரமான – நியாயமான - கௌரவமான சமாதானத்தீர்வு இதுவரை கிட்டாமல் போனதால், சுதந்திரத் தமிழீழத் தனியரசு ஒன்றுதான் தமிழினத்திற்கு விடிவைத் தரும் என்கின்ற உண்மை நிதர்சனமாகி விட்டது. ஆகையால் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கின்ற அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழீழ மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையைப் பிரகடனப்படுத்தி, சுதந்திரத் தமிழீழத் தனியரசை வலிமையுடன் அமைப்பதற்குரிய காலம் இப்போது கனிந்து வந்து விட்டது.

தமிழீழத்து மாவீரர்களை மட்டுமல்லாது, புலம் பெயர்ந்த நாடுகளின் சுதந்திரத்திற்காகத் தம்மை அர்ப்பணித்த அந்த நாடுகளின் மாவீரர்களையும் போற்றுகின்ற இனம், எமது இனம்! அந்த அளவிற்குச் சுதந்திரத்தின் மகத்துவத்தை நாம் புரிந்து உணர்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆகையால், புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய நாம் அனைவரும், மிக முக்கியமான இந்தக் காலகட்டத்தில் எமது அதியுயர் அரசியல் பங்களிப்பை நல்க வேண்டும்.. இந்தவேளையில் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களின் அரசியல் செயற்பாடுகள் அதிமுக்கிய இடத்தை வகிக்க வேண்டிய தேவை ஏற்படும்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home