Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > சிறிலங்கா உண்மையிலேயே சட்டரீதியான இறைமையுள்ள நாடா?

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

சிறிலங்கா உண்மையிலேயே சட்டரீதியான இறைமையுள்ள நாடா?
உலகநாடுகளும் உண்மையாகவே சமாதானத்தை விரும்புகின்றனவா?
23  May 2006

 


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தடைகளை விதிப்பதன் மூலம் விடுதலைப்புலிகளை மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ள வைக்க முடியும் என்ற ஐரோப்பிய ஒன்றியம் கருதுவதாக தெரிகின்றது. விடுதலைப் புலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் ஏற்றுக் கொள்ளாத போதும் அந்த நாடுகளின் இணக்கத்தையும் பெறுவதற்கான முயற்சிகள் இடம் பெற்றுள்ளதாக அறிய வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா உட்பட வேறு சில உலக நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகப் பல அழுத்தங்களையும் தடைகளையும் விதிப்பதில் முனைப்பாக செயற்பட்டு வருவதையும் நாம் காணக் கூடியதாக உள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்குரிய ‘சமபங்காளிகள்’ என்று தமிழீழ விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசும் அறியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்புதான் அதனை உறுதி செய்து அமலாக்கும் வகையில் இந்த இரு தரப்பினரும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். ஆனால் சிறிலங்கா உட்பட சம்பந்தப்பட்ட இந்த உலக நாடுகள் பலவும் தமிழீழ விடுதலைப் புலிகளை சம பங்காளி என்று சொல்லாலும், செயலாலும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாம் வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது.

இன்று சமாதானப்பேச்சு வார்த்தைகள் நீதியான முறையில், நியாயமான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல முடியாமல் பின்னடித்து நிற்பதற்கு சிறிலங்கா அரசும், அதனுடைய அரசியல் இராணுவ வன்முறைகளும்தான் முழுக்காரணங்களாக இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகின்ற போதும், சம்பந்தப்பட்ட உலகநாடுகள் ஏன் இதுவரை உருப்படியான அழுத்தங்களையோ, தடைகளையோ சிறிலங்கா அரசின் மீது விதிக்கவில்லை என்ற கேள்வியும் பெரிதாக எழுந்த வண்ணம் இருக்கின்றது.

இந்தக் கேள்விக்குச் சம்பந்தப்பட்ட உலகநாடுகள் சொல்கின்ற பதிலில் உள்ள முக்கியமான காரணம் அல்லது முக்கியமான நொண்டிச்சாக்கு -என்ன?

‘சிpறிலங்கா நாடு ஓர் இறைமையுள்ள நாடு’, என்கின்ற வகையில் இந்த நாடுகள் சிறிலங்காவின் இறைமை பற்றிப் பேசி சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தி வருகின்றன. ஆனால் சிறிலங்கா என்கின்ற நாடு சட்டரீதியாக இறைமை உள்ள நாடா? அதனுடைய அரசு சட்டரீதியாக இறைமை உள்ள ஓர் அரசா? என்று நாம் இந்த வேளையில் கேள்வியொன்றை கேட்க விழைகின்றோம்.

அன்புக்குரிய வாசகர்களே!

வரலாற்று திருப்புமுனையான இந்தக் காலகட்டத்தில் இன்றைய தினம் மிகமுக்கியமான கருத்துக்களை தர்க்க்pக்க விழைகின்றோம். இறைமை குறித்தும், உரிமைப் போராட்டம் குறித்தும், புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் பரப்புரைப் போராட்டம் குறித்தும் சில சிந்தனைகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றோம்.

சிறிலங்கா என்ற நாடானது தனது இறைமையை முறையாகப் பெற்ற நாடு அல்ல! அந்த வகையில் சிறிலங்கா ஓர் இறைமையுள்ள நாடும் அல்ல! அதனுடைய அரசுகளும் இறைமையுள்ள அரசுகள் அல்ல.! மகிந்த ராஜபக்சவின் தற்போதைய அரசும் இறைமையுள்ள அரசு அல்ல.!

சிறிலங்கா என்கின்ற, இலங்கை என்கின்ற
CEYLON என்று அன்று அழைக்கபட்ட தேசமானது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுகின்ற காலம் அண்மித்த வேளையில் அதாவது 1944ம் ஆண்டுக் காலப்பகுதியில் சோல்பரி பிரபு என்பவரை (Lord Soulbury) இலங்கை அரசியல் யாப்பினை சீர்படுத்தும் குழுவிற்கு தலைவராக பிரித்தானிய அரசு நியமித்திருந்தது. சுதந்திர இலங்கைக்கான யாப்பில் அன்று சோல்பரி பிரபு சட்டமாக்கிய சரத்து 29ன்பிரிவு 2.B மற்றும் 2.C கீழ்வரும் விடயத்தை வலியுறுத்துகின்றது.

“No such Law shall impose any disability or confer and advantage on members of any one community only”

அதாவது, எந்த ஓர் இனத்தை மட்டும் பலவீனப்படுத்துகின்ற சட்டமோ, நீதியோ இலங்கையில் விதிக்கபடல் ஆகாது. எந்த ஓர் இனத்தை மட்டுமே மேம்படுத்துகின்ற நிலையை உருவாக்கும் சட்டமோ, நீதியோ (இலங்கையில்) விதிக்கப்படல் ஆகாது.

ஆனால் சோல்பரி பிரபு சட்டமாக்கிய அரசியல் யாப்பின் சரத்து 29இன் பிரிவு
2.B மற்றும் 2.C ஆகியவற்றைப் பின்னாளில் பண்டாரநாயக்காவின் சிறிலங்கா அரசு மீறியது. சிங்களம் மட்டும், மற்றும் தமிழ் அரச உத்தியோகத்தருக்கு சிங்கள மொழித் தேர்ச்சியின் அவசியம் போன்ற சட்டங்கள் இயற்றப் பட்டது. அத்தோடு சிங்கள இனத்தை மட்டுமே மேம்படுத்தப்படும் சட்டமும் இயற்றப்பட்டு அமலாக்கப்பட்டது.

இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டு அமலாக்கப்பட்டபோது சிறிலங்காவின் இறைமை என்பதானது, அரசியல் யாப்பின் பிரகாரம் இறைமை இல்லாத நாடு என்ற வரைவிலக்கணத்திற்குள் அடங்கி விட்டது.

இங்கே சிறிலங்காவின் இறைமை குறித்து சட்டரீதியாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டதை நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.

1962ம் ஆண்டு இலங்கை அரச ஊழியரான திரு கோடிஸ்வரன் என்பவர் சிங்கள மொழித் தேர்ச்சிக்கான பரீட்சைக்கு தோற்றுவதற்கு மறுத்தார். அதன் காரணமாக அவருடைய சம்பள உயர்வுகள் தடுக்கப்பட்டன. அதனை எதிர்த்து 1962ம் ஆண்டு திரு கோடிஸ்வரன் அவர்கள் இலங்கை அரசிற்கு எதிராகக் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

சோல்பரி பிரபுவால் இயற்றப்பட்ட அரசியல் யாப்பின் சரத்த 29ன்பிரிவு 2டீ, 2ஊ எதிராக சிங்கள அரச கரும மொழிச் சட்டம் உள்ளது என்று திரு கோடிஸ்வரன் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
O.L.DeKrestar என்பவர் திரு கோடிஸ்வரன் அவர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டு சிங்களம் மட்டும் சட்டம் என்பதானது அரசியல் யாப்பின் சட்ட வல்லமையின் நோக்கத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் இலங்கை அரசு முறையீடு செய்தது. ஓர் அரச ஊழியர் அரசிற்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்று காரணம் காட்டி இலங்கை உயர் நீதிமன்றம் இலங்கை அரசிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. ஆனால் திரு கோடிஸ்வரன் அவர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இலண்டன்
PRIVY COUNCIL ற்கு மேன்முறையீடு செய்தார்.

இலண்டன் PRIVY COUNCIL இது குறித்து வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானதாகும். இலங்கை, அரசியல் யாப்பினை மீறுகின்றதா என்பதனைப் பார்க்க வேண்டும் என்று PRIVY COUNCIL தீர்ப்பு வழங்கியது. அதாவது அரசியல் யாப்பினை நீதித்துறை கட்டுப்படுத்த முடியாது என்று PRIVY COUNCIL கூறியது. ஆனால் திரு கோடிஸ்வரனின் வழக்கு இலங்கை உயர் நீதிமன்றத்தின் முன் மீண்டும் வரமுடியாமல் போனது. காரணம் 1970ல் பதவிக்கு வந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா PRIVY COUNCILற்கு முறையீடு செய்யும் வழக்கத்தை இரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்துக்கும், நீதிக்கும் இறைமைக்குப் புறம்பாக 1972ம் ஆண்டு இலங்கை அரசியல் யாப்பினை மாற்றியமைத்தார்.

1947ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் யாப்பை சிறிமாவோ பண்டாரநாயக்கா 1972ல் முற்றாக மாற்றியமைத்தார். இதில் தமிழர்களின் பங்களிப்போ அல்லது ஆதரவோ இருக்கவில்லை. உலக வரலாற்றில் சதி மூலமாகவோ அல்லது புரட்சி மூலமாகவோதான் இவ்வாறு அரசியல் யாப்புகள் மாற்றப்பட்டுள்ளன. அன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் சகல உரிமைகளையும் பறிப்பதற்காக இலங்கைத் தீவைக் குடியரசாக்கி அரசியல் யாப்பினையும் மாற்றுகின்ற முயற்சியை சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டு வெற்றி பெற்றார்.

இதன் மூலம் இலங்கை தன்னுடைய இறைமையை சட்டரீதியாகவும், அரசியல்யாப்பு ரீதியாகவும் இழந்து விட்டது.

ஏனெனறால் அன்று இவ்வாறு அரசியல் யாப்பினை மாற்றுவதற்கு பிரித்தானிய அரசின்
queen in council அல்லது அரசியின் அனுமதியோடு பிரித்தானியப் பாராளுமன்றம் கொடுக்கின்ற ஒப்புதலோடுதான் சிறிமாவோ பண்டாரநாயக்கா தன்னுடைய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத காரணத்தினால் 1972ம் ஆண்டு இலங்கை அரசு கொண்டு வந்த புதிய அரசியல் யாப்பு என்பதானது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பானது என்பதால் அதற்கு இறைமை என்பது கிடையாது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில்
foremost constitutional authority on commonwealth constitutions Professor S.A.D Smith  என்பவர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அந்த அரசியல் யாப்பினை கண்டித்து இருக்கின்றார். வெள்ளையரான பேராசிரியர் S.A.D Smith அவர்கள் சிறிலங்காவின் யாப்பு சட்டவிரோதமானது (illegal) என்று அன்றே கண்டனம் தெரிவித்திருந்தார்.

1972ம் ஆண்டிலும், 1978ம் ஆண்டிலும் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் இயற்றப்பட்டு அமலாக்கப்பட்டபோது தமிழர்கள் பங்களிப்பும் தரவில்லை, ஆதரவும் தரவில்லை.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தனி ஒருவர் எழுப்பிய உரிமைப் பிரச்சனைக்காக (அவர் தமிழராக இருந்த காரணத்தினால்) சிறிலங்காவின் யாப்பே மாற்றப்பட்டது. இந்த நிலை மேலும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. இருக்கின்ற யாப்பினுக்காகச் சட்ட ரீதியாகப் போராடிப் பெற்ற வெற்றியை இழக்கச் செய்வதற்காகப் புதிய யாப்பு ஒன்று உருவாக்கப் பட்டது. சிறிலங்கா அரசோடு பேசி எந்தச் சமாதானத் தீர்வைப் பெற்றாலும் அடுத்த சிங்கள அரசு மீண்டும் யாப்பை திருத்தி நிலைமையை பழைய பாதாளத்திற்குள் தள்ளும் என்பதில் சந்தேகமில்லை. சிங்கள பௌத்தப் பேரினவாதத்திற்குத் தேவைப்படும் பட்சத்தில் 'நீதித்துறையின் நீதியரசர்கள் தமது பதவிக்கான சத்தியப் பிரமாணத்தை எடுக்கும்போதோ அரசியல் யாப்பைக் காப்பாற்றுவோம் என்றுதான் சத்தியப் பிரமாணம் செய்து கொள்கின்றார்கள் எத்தகைய பெரிய முரண்பாடு இது!. இந்தவிதமான கையாள்கைக்குச் ‘சுனாமி நிதி விவகாரம் ஓர் எடுத்துக்காட்டு!

சிறிலங்கா அரசுகள் தங்களின் மேலாண்மைக்காக சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் மேலாண்மைக்காக தொடர்ந்தும் யாப்புகளை எழுதலாம் எழுதிய பின்பு மீண்டும் மாற்றலாம் என்றால் ஏன் தமிழர்களும் தங்களுக்கு என்று ஒரு யாப்பை எழுதக் கூடாது என்று நாம் கேட்க விரும்புகின்றோம்.

சிறிலங்காவின் சட்டரீதியான இறைமை குறித்து புலம் பெயர்ந்த எமது சட்டவியலாளர்கள் தகுந்த கரிசனை எடுக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொள்கின்றோம். இறைமை முறையின்படி கொடுக்கப்பட்டதா? முறைப்படி செயல்படுகின்றதா முறைப்படியாக இருக்கின்றதா என்பது கேள்விகளுக்கு உரிய பதிலை எமது சட்டவியலாளர்கள் உலகளாவிய விதத்தில் தர்க்கிக்க வேண்டும் இது உண்மையில் இறைமைதானா?

இன்று சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்ற தமிழ் இனப் படுகொலைகளை மேற்குலக நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் கண்டு கொள்வதில்லை. சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதச் செயல்களை இவர்கள் காண முயற்சிப்பதில்லை. சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவது குறித்தும், இந்த மேற்குலக நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் அக்கறை கொள்வதில்லை. பச்சிளம் தமிழ்க் குழந்தைகளை சிறிலங்கா அரசு கொன்று குவிப்பது குறித்தும் இந்த உலக நாடுகள் கவலைப்பட வில்லை.

அப்படியென்றால் சிறிலங்கா அரசிற்கும் இந்த சம்பந்தப்பட்ட உலக நாடுகளுக்கும் என்னதான் வித்தியாசம் இருக்கின்றது? உண்மையான சமாதானத்தை இந்த உலகநாடுகள் உண்மையாகவே விரும்புகின்றன என்பது உண்மையானால் சிறிலங்கா அரசிற்கு உரிய அழுத்தங்களையும் தடைகளையும் வித்pக்க வேண்டும். மீண்டும் போர் தொடங்கினால் படைக்கல உதவிகள் உட்பட எந்தவித உதவிகளையும் செய்ய மாட்டோம் என்று இந்த உலக நாடுகள் சிpறிலங்காவிற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

அரசியல் ரீதியான பொருளாதார ரீதியான அழுத்தங்களை தடைகளை சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விதித்திருக்க வேண்டும். மாறாக சிpறிலங்கா அரசு எது செய்தாலும் அவற்றிற்கு நாம் ஆதரவு அளிப்போம் என்கின்ற வகையில் இந்த உலக நாடுகள் நடந்து கொள்கின்றன. இது சிறிலங்காவிற்கு உற்சாகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாது உண்மையான சமாதான முயற்சிகளுக்கு எதிராக சிறிலங்கா முழு மூச்சாக செயல்படவும் தூண்டும்.

உண்மையில் இந்த உலக நாடுகளின் உள்நோக்கம்தான் என்ன? ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு வருகின்ற மக்கள் மீது மேலும் அழுத்தங்களை போட்டு அவர்களைப் பணிய வைப்பதற்கு ஏன் இந்த உலகநாடுகள் முயல்கின்றன. ஏன் இந்த உலகநாடுகள் பாதகமான பக்கத்திலேயே நிற்கின்றன. ஏன் இந்த உலக நாடுகள் தொடர்ந்தும் தவறான கருத்துக்களையே கூறி வருகின்றன.?

எந்த உலக போராட்டங்களின் போதும், உரிமைப் பேராட்டங்களின் போதும் தங்களின் நலன் கருதி மட்டுமே செயல்படுவது அந்த உலகநாடுகளின் பழக்கமாகும். தம்முடைய அரசியல் பொருளாதார மற்றும் பிராந்திய நலன்களை மட்டுமே முன்னிறுத்தி அவற்றின் ஊடாக இப்போராட்டங்களின் பக்க சார்பு நிலையை இந்த உலக நாடுகள் எடுத்து வந்திருக்கின்றன. இன்றும் எடுத்து வருகின்றன. என்பதை நாமும் தொடர்ந்து வலியுறுத்தியே வந்திருக்கின்றோம்.

மதிப்புக்குரிய திரு நெல்சன் மண்டெலா அவர்கள் தன்னுடைய மக்களுக்காக நடாத்திய ஒரு நெடிய போராட்டத்தின்போது பெரும்பான்மையான உலகநாடுகள் திரு நெல்சன் மண்டெலா மீதும் அவரது போராட்டத்தின் மீதும் எத்தகைய கெடுபிடிகளை நெருக்குவாரங்களையும் மேற்கொண்டன என்பதை வரலாறு சொல்லும். இப்போதும் நடைமுறையில் இருக்கும் இன்னுமொரு போராட்டமான பாலஸ்தீன மக்களின் போராட்டமும் சம்பந்தப்பட்ட சில நாடுகளால் இன்னமும் நெருக்குவாரங்களுக்கு ஆளாகி வருகின்றன.

இலங்கைத்தீவில் சமாதானத்தை ஏற்படுவதற்காக முழுமையாகச் செயற்பாடுகளில் இறங்கியிருந்த நோர்வே நாடும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் ஒரு விடயத்தை தெளிவாக சொல்லியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ள நோர்வே நாடும், போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவும் கள யதார்த்தத்தை புரிந்தவர்கள். சமாதானப் பணியில் முன்னிற்பவர்கள், ஆனால் அவர்களின் எதிர்ப்பையும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் சட்டை செய்யவில்லை. அதாவது உண்மையான சமாதானம் குறித்து அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கவலை கொள்வதாக தெரியவில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு ஒரு விடயத்தை தெளிவாக காட்டி நிற்கின்றது. விடுதலைப்புலிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் போடப்படுமிடத்து அவர்கள் கடும் போக்கைக் கடைப்பிடித்துள்ளார்கள் என்பதை நாம் கண்டிக்கின்றோம். உதாரணத்திறகு அன்றைய இந்திய அரசின் தலையீட்டைக் குறிப்பிடலாம். அதேபோல் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றால் சிறிலங்கா அரசு தடையை அகற்ற வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கோரியதை அன்று சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல் இந்தச் சமாதானப் பேச்சுக்களில் நியாயமான முறையில் பங்களிக்கவோ, அல்லது சம்பந்தப்படவோ விரும்புகின்ற நாடுகள் தம்மீதான தடையை அகற்ற வேண்டும் என்று விடுதலைப்புலிகள் எதிர்பார்க்க கூடும் அது அவ்வாறாக ஆகும் பட்சத்தில் விடுதலைப் புலிகள் கடும்போக்கைக் கடைப்பிடிக்க கூடும் என்றே நாம் கருதுகின்றோம்.

இதற்கு அப்பாற்பட்டு ஒரு விடயத்தையும் நாம் மேலோட்டமாகச் சொல்லி வைக்க விரும்புகின்றோம். அமெரிக்காவினதும், மற்றும் ஐரோப்பிய நாடுகளினதும் இந்தக் கெடுபிடிகளையும் மீறி சில உலக நாடுகள் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதிரிக்கும் வேளை நெருங்கியும் வரக்கூடும் அப்போது வேறு விதமான அரசியல் சமநிலையை நாம் காணக்கூடியதாக இருக்கும்.

இந்தக்காலகட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் ஒரு விடயத்தில் மிகத்தெளிவாகவும், துணிவாகவும் இருக்கவேண்டும். எத்தகைய தடைகள் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, நாம் ஒரு விடயத்தில் மிக உறுதியாக இருக்க வேண்டும், அது நியாயத்தின் பால், நீதியின் பால் நாம் உறுதியாக ஒற்றுமையாக இருக்கின்றோம் என்கின்ற விடயத்தை இந்த உலகின் கண்களுக்கு தெரிய வைப்பது ஆகும். நியாயத்திற்கு எதிராக, நீதிக்கு எதிராக எத்தகைய தடைகள் வந்தாலும் நாம் அவற்றைக் கண்டிக்கவோ, எதிர்க்கவோ தயங்க மாட்டோம் என்பதையும் நாம் உலகிற்கு புரிய வைக்க வேண்டும்.!

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home