Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > வரலாற்றின் தீர்ப்பு

Selected Writings by Sanmugam Sabesan

வரலாற்றின் தீர்ப்பு
6 April  2005


இந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதியுடன் இலங்கைத் தீவின் பொதுத் தேர்தல் நடைபெற்று ஓராண்டு முழமை அடைந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மூன்று ஆண்டுகளும,; ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் கூட்டணி அதிகாரத்துக்கு வந்து ஓராண்டும் ஆகியுள்ள இந்த வேளையில், ‘தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கும், வாழ்வியல் பிரச்சனைக்கும் எதுவிதமான நியாயமான தீர்வும் கிட்டவில்லை’ என்ற யதார்த்த நிலையை நாம் உணரக் கூடியதாக உள்ளது.

அது மட்டுமல்லாது எந்தச் சிங்களக்கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைகளுக்கு ஒரு நியாயமான-நிரந்தரமான-நீதியான-கௌரவமான தீர்வு கிடைக்கப் போவதில்லை என்ற கசப்பான உண்மையை, கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாறும் சேர்ந்து உணர்த்தி நிற்கின்றது.

இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக, சிறிலங்கா அரச பயங்கரவாதப் போர்களுக்கும், உணவு, மருந்து, பொருளாதாரத் தடைகளுக்கும் முகம் கொடுத்துப் போராடி, இன்னலும், உணவு, துயரமும் மிக்க வாழ்க்கையை மேற் கொண்டிருந்த தமிழீழ மக்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய ஆழிப்பேரலை அனர்த்தத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினார்கள்.

ஆனால் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கடும்போக்கை இந்த ஆழிப்பேரலையினால் கூட மாற்றி விட முடியவில்லை. மாறாக சிங்கள பௌத்த பேரினவாத அரசு, இந்த அனர்த்த வேளையிலும் தமிழீழ மக்கள் மீது தனது அராஜகத்தை மேலும் கடுமையாக காட்டியது. புனர்வாழ்வு-புனருத்தாரணத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களைத் தமிழர் தாயகத்திற்கு அனுப்பி வைக்காமலும், நிவாரண நிதிகளைக் கொடுக்காமலும் இருந்ததோடு மட்டுமல்லாது, தமிழர் தாயகப் பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கோபி அனான் போன்ற பிரமுகர்கள் செல்வதையும் தடை செய்தது.

ஆகவே சிறிலங்காவின் தற்போதைய அரசு பூர்த்தி செய்துள்ள ஓராண்டுக்காலமும், முன்னைய அரசினால் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூன்றாண்டுக் காலமும், மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள பௌத்த அரசுகள் தமிழினத்தின் மீது இனஅழிப்பை மேற்கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுக்காலமும் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்பு, சிங்கள அரசுகள் தமிழினத்தின்மீது அரசியல்-இராணுவ அடக்கு முறைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுக் காலமும் ஏன்-ஆயிரம் ஆண்டுகளில் ஒரு தடவை வரக்கூடிய-ஆழிப்பேரலை அனர்த்தமும், ஒரு விடயத்தை-ஒரே ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி நிரூபித்து நிற்கின்றன.

“சிங்கள-பௌத்த பேரினவாத அரசுகள் தமிழீழ மக்களுக்கு நீதியான, நியாயமான, நிரந்தரமான கௌரவமான தீர்வை ஒரு போதும் தரப்போவதில்லை.”

காலம் தாழ்த்தப்படும் நீதியானது, உண்மையில் அநீதியானதாகும்.

இலங்கைப் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்து ஓராண்டு ஆகிவிட்ட போதிலும் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கும், வாழ்வியல் பிரச்சனைக்கும், எந்தவிதமான உருப்படியான தீர்வையும் தற்போதைய சிறிலங்கா அரசு தந்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால் இப்பிரச்சனைகளுக்குரிய தீர்வை. இப்பொதுத்தேர்தலின் பெறுபேறுகள் சுட்டிக் காட்டியிருந்தன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2004 பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த தீர்மானங்களை ஏகமனதாக ஏற்று வாக்களித்திருந்தார்கள். பொதுத்தேர்தல் முடிந்து ஓராண்டாகியுள்ள இவ்வேளையில் இப்பொதுத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைகளை நினைவில் கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

இலங்கைப் பொதுத்தேர்தல் கடந்த ஆண்டு நடைபெறுவதற்கு முன்னர், இடைத்தேர்தல் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியிருந்ததை இப்போது சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

“தமது அபிலாஷைகளை, வேட்கைகளை கொள்கை ரீதியாக வெளிப்படுத்துகின்ற ஒரு தேர்தலாக இந்தப் பொதுத் தேர்தலை மாற்றியமைப்பதற்குத் தமிழர்கள் விரும்புகிறார்கள். எந்த இலட்சியத்திற்காக, எந்தக் கொள்கைக்காக ஒன்றுபட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் தாங்கள் ஐக்கியப்பட்டு நிற்கின்றார்கள.; அதனை இம்முறை சர்வதேச சமூகத்திற்கு நிலைநிறுத்தி நிரூபிக்கும் ஆயத்தப்பாட்டுடன் தமிழர்கள் இருக்கின்றார்கள “.

- என்று திரு சு.ப தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். திரு சு.ப தமிழ்ச்செல்வனின் கருத்தில் அமைந்துள்ள சொல்லாக்கல்களைச் சற்று ஊன்றிக் கவனித்தால் பல முக்கிய விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். ‘இப்பொதுத்தேர்தலை மாற்றியமைப்பதற்குத் தமிழர்கள் விரும்புகின்றார்கள்’ என்று திரு தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். வழமையாக எந்தப் பொதுத்தேர்தலிலும் குறிப்பிட்ட சாரார் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும், அல்லது ஆட்சியில் பங்கேற்பதிலும் அல்லது சில பதவிகளை - அதிகாரங்களை - அமைச்சுக்களைப் பெற்றுக் கொள்வதிலுமே முக்கிய அக்கறை காட்டுவதைக் காண கூடியதாக இருக்கும். ஆனால் இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் அவ்வாறு கருதவில்லை. மாறாக “தமது அபிலாஷைகளைக் கொள்கை ரீதியாக வெளிப்படுத்துகின்ற ஒரு தேர்தலாக மாற்றியமைப்பதற்காகத் தமிழர்கள் விரும்புகிறார்கள் “- என்று திரு தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.

திரு தமிழ்ச்செல்வன் கூறிய மற்றைய சொல்லாக்கங்களையும் இப்போது கருத்தில் கொள்வோம். இத்தேர்தலை இவ்வாறு மாற்றியமைப்பதன் மூலம் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் தாங்கள் ஐக்கியப்பட்டு நிற்பதை சர்வதேச சமூகத்திற்கு நிலைநிறுத்தி நிரூபிக்கும் ஆயத்தப்பாட்டுடன் தமிழர்கள் இருக்கின்றார்கள்-என்று தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.
அதாவது தமிழ் மக்கள் தாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கியப்பட்டு நிற்பதை நிரூபிக்கும் ஆயத்தப்பாட்டுடன் இருக்கின்றார்கள் என்பதைக் கூறிய திரு தமிழ்ச்செல்வன் அதனை தமிழ் மக்கள் யாருக்கு நிரூபிக்க இருக்கின்றார்கள் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தார்-அது வருமாறு.:

“அதனை இம்முறை சர்வதேச சமூகத்திற்கு நிலைநிறுத்தி நிரூபிக்கும் ஆயத்தப்பாட்டுடன் தமிழர்கள் இருக்கின்றார்கள்.”

அதாவது “இலங்கைத்தீவில் நடைபெறுகின்ற இத்தேர்தலின் முடிவுகள் மூலம் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திற்கு ஒரு செய்தியை, ஒரு முடிவைச் சொல்ல விரும்புகின்றார்கள்” என்பதை திரு சுப.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திற்கு ஏகமனதாகச் சொன்ன அந்தச் செய்தியில் அந்த முடிவில் வேறு பல விடயங்களும் அடங்கியிருந்தன. அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றை ஏற்றுத் தமிழ் மக்கள் தங்கள் தீர்ப்பினை வழங்கியிருந்தார்கள்.

அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்த சில முக்கியமான தீர்மானங்களை இத்தருணம் குறிப்பிட விரும்புகின்றோம்.

எ “தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம்-தேசியம்-தன்னாட்சி-சுயநிர்ணய உரிமை- ஆகிய
மூலதாரக் கொள்கைகளை ஏற்று அவற்றின் அடிப்படையில் தமிழ்த்தேசியப் பிரச்சனைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டும்.

எ தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கைகள் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு, இராணுவ
ஆக்கிரமிப்பும், அரச அடக்கு முறையும் மீண்டும் தொடருமானால் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் தமிழர் இறைமையும் சுதந்திரமும் நிலைநிறுத்தப்படுவது தவிர்க்கப்பட முடியாத யதார்த்தம் ஆகிவிடும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.

எ தமிழீழ மக்களது சுதந்திரமான-கௌரவமான-நீதியான வாழ்விற்காக தமிழீழ விடுதலைப்
புலிகளின் தலைமையின் கீழ் தமிழ் மக்களை சாதி-மத பேதங்களுக்கு அப்பால் ஒரே அணியில் ஒரு தேசமாக அணி திரட்டி உறுதியாக உழைப்போம். தமிழ் பேசும் மக்களது பாதுகாப்பிற்காகவும,; சுதந்திரமான வாழ்விற்காகவும், போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசியல் போராட்ட முன்னெடுப்புக்களுக்கும் உறுதுணையாக இருந்து செயற்படுவோம்.

அன்புக்குரிய நேயர்களே!

எவ்வளவோ இடர்ப்பாடுகளுக்கும், துரோகங்களுக்கும் இடையில் ஓராண்டுக்கு முன்னர் தமிழீழ மக்கள் தெளிவான-ஏகமனதான தீர்ப்பைத் தந்ததன் மூலம் தீர்க்கமான தமது ஆணையை வழங்கி விட்டார்கள். இது குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது 2004 மாவீரர்தின உரையின் போது தெட்டத்தெளிவாக விளக்கியிருந்தார்.
தேசியத்தலைவர் அவர்கள் தனது உரையின் போது பொதுத்தேர்தல் ஏற்படுத்திய பிரிவு குறித்தும் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். தேசியத் தலைவரின் கருத்தையும், எமது பார்வையையும் ஒருங்கிணைத்துத் தரவிரும்புகின்றோம்.

பொதுத்தேர்தல் தந்த அங்கீகாரம்

“பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்கள பௌத்த மேலான்மை வாதம் வலுப்பெற்ற அதேசமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில் ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த தேசியம் எழுச்சி பெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்துக்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்துக்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சனநாயக சக்தியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது”, என்று தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

அன்புக்குரிய நேயர்களே!

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவும், அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளே, தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அங்கீகாரமும் கிடைத்ததைத் தலைவர் இ;வ்வாறு சுட்டிக் காட்டி இருந்தார்.


இந்த அடிப்படையான அதேவேளை மிக வெளிப்படையான விடயங்களைத் தேசியத்தலைவர் சுட்டிக்காட்டியதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அவற்றைக் கீழ்வரும் வார்த்தைகள் மூலம் தேசியத் தலைவர் வெளிப்படுத்தினார். தமிழீழ மக்களின் ஆதரவையும், அங்கீகாரத்தையும் மனுவையும் மட்டும்தானா இந்தத் தேர்தல் பெற்றுத் தந்தது.?

இல்லை! - இந்தத் பொதுத்தேர்தல் இன்னுமொரு முக்கிய விடயத்தை மிக-மிக-முக்கிய விடயத்தையும் மறைமுகமாகத் தெரிவித்து நின்றது. அதனை எமது தேசியத்தலைவர் அன்றே வெளிப்படையாகத் தெளிவு படுத்தியிருந்தார்.

பொதுத்தேர்தல் ஏற்படுத்திய பிரிவு

இந்தப் பொதுத்தேர்தல் சிங்கள தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டினை மேலும் கூர்மையடையச் செய்தது. சமாதானத்திற்கும் இன இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்களப் பௌத்த பேரினவாத சக்திகள் என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல் அரங்கில் மேலாண்மை வகிக்க இப்பொதுத் தேர்தல் வழிவகுத்தது.

இப்பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ் சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும,; உணர்வாலும், இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள் சமூகங்களாகப் பிரிவுறச்செய்தது.

ஆகவே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கைத் தீவில் வேறுபட்ட இரண்டு தேசங்கள் இருப்பதை இப்பொதுத் தேர்தல் நிரூபித்து நிற்கின்றது. அது மட்டுமல்ல இந்த இரண்டு தேசங்கள் தமக்கிடையே பிளவு பட்டு நிற்பதையும் இந்தப் பொதுத்தேர்தல் தெளிவு படுத்தி நிற்கின்றது. அதுமட்டுமல்லாது இந்த இரண்டு தேசத்து மக்களும்-கருத்தாலும் உயர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு மாறுபட்டு முரண்பட்டு நிற்கும் இரண்டு மக்கள் சமூகங்களாப் பிரிவுபட்டு நிற்பதையும் தெளிவாக காட்டி விட்டது.! இந்த முக்கிய விடயத்தைத்தான் தமிழீழ தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த விடயத்தைச் சற்று விரிவாக தர்க்கித்துப் பார்ப்போம். தொடர்ந்து நடைபெற்ற போர்களினால் இலங்கைத்தீவு இரண்டு தேசங்களாகப் பிரிவுற்று இருப்பதைத்தான் இவ்வளவு காலமும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளார்கள். ஆனால் ஆயுதப் போராட்டம் மட்டும் அல்ல, ஜனநாயக வழிமுறை கூட இலங்கைத் தீவில் வேறுபட்ட முரண்;பட்ட இரண்டு தேசங்கள்-இனங்கள் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளதை இங்கே தலைவர் தெளிவு படுத்துகின்றார். ஆகவே தமிழரின் தேசியப் பிரச்சனையை எந்தக் கோணத்திலும் இருந்து பார்த்தாலும் அவை இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் இரண்டு தேசிய இனங்கள் தனித்து பிரிவுற்று இயங்குவதையே புலனாக்குகின்றன. ஆகவே போர்க்காலத்திலும் சரி, சமாதானத்திற்கான காலத்திலும் சரி இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள், இரண்டு தேசிய இனங்கள் இருப்பதை அவற்றின் இருப்பை இந்தப் பொதுத்தேர்தல் சுட்டிக் காட்டி விட்டது. இது அதாவது இந்தப் பொதுத்தேர்தல் ஜனநாயக ரீதியாக ஏற்படுத்திய பிரிவு ஆகும். இந்த மிக முக்கியமான விடயத்தைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது கூர்மையான சிந்தனையூடாக தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.

அன்புக்குரிய நேயர்களே! போர்நிறுத்த மீறல், நிவாரண உதவி மறுத்தல், உரிமைகளைத் தரமறுத்தல் என்று சிங்கள அரசு மீண்;டும், மீண்டும் அராஜகமாக நடந்து கொண்டு வருகின்ற இவ்வேளையில் மீண்டும் தமிழ் மக்கள் மீது வலிந்து ஒரு யுத்தம் திணிக்கப்படுகின்ற வேளை நெருங்கிவிடுமோ என்று நாம் அச்சப்படுகின்றோம். தமிழீழ மக்கள் கடந்த பொதுத்தேர்தல் மூலம் சிறிலங்கா அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் ஒரு தெளிவான ஆணையைத் தந்து விட்டார்கள். அந்த நியாயமான, நேர்மையான கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு புலம் பெயர்ந்துள்ள எமக்கு உண்டு. அதனை அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் பணியை நாம் அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home