Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation >  சைவத்தின் சமரசம் - சில குறிப்புகள்

சைவத்தின் சமரசம் - சில குறிப்புகள்
திருவாரூர். வி. கல்யாணசுந்தரனார், 1930

"சைவம் அருணெறி. அருளாளர்களே ! உலகை உற்று நோக்குங்கள்; உலகில் எந்நெறி பெருகி இருக்கிறது; அருணெறியா ? மருணெறியா ? உன்னுங்கள் ! கொலைச் சாலைகளின் பெருக்கை என்னென்று கூறுவது ! கொலைக் கருவிச் சாலைகளின் பெருக்கை என்னென்று கூறுவது ! அந்தோ ! உள்ளம் நடுங்குகிறது ! இக்கொலைப் பெருக்கிற்குக் காரணம் யாவர் ? சீவகாருண்யத்தை மூலதர்மமாகக் கொண்டுள்ள சைவர்களாகிய நீங்களல்லவா ? சைவர்களே ! உங்கள் சமயம் யாது ? நீரில் மூழ்குவதா ? நித்தம் நித்தம் துணி தோய்ப்பதா ? நீறிடுவதா ? அனுட்டானஞ் செய்வதா ? கோயில் வலம் வருவதா ? அன்று; அன்று.

இவை யாவும் புறவொழுக்கங்களாகும். சீவகாருண்ய நெறியே உங்கள் நெறி. அ·தில்லையேல், குளித்தலும் பூசனையும் பிறவும் என்னாம் ? நீங்கள் உங்கள் அருள் தொண்டை ஆற்றி இருப்பின் உலகில் உயிர்க்கொலை நிகழுமா ? புலைப் புசிப்பு நிகழுமா ? உயிர்க்கொலையும் புலைப் புசிப்பும் மடங்களையுந் தீண்டுமளவு பரவியிருப்பதைக் கவனிக்கின்றீர்களா ? சைவ உலகின் கவலையீனமென்னே ! என்னே ! இனி அருள் உலகம் மறையுமோ என்னும் அச்சம் உண்டாகிறது. உங்கள் ஒற்றுமை இன்மை, உழைப்பின்மை, சித்தாந்த ஞானத்தை உலகுக்கு அறிவுறுத்த முன் வராத 'தன்னலம்' உலகைத் துன்புறுத்துகின்றன. "நஞ்சமயம் தமிழர்க்கே உரித்து - அது தமிழ் நாட்டளவிலே கட்டுப்பட்டுக் கிடத்தல்வேண்டும்" என்னும் குறுகிய நோக்கத்தை உதறித்தள்ளுங்கள்; நானாபக்கங்களிலும் அருணெறியோம்ப முயலுங்கள்.

பரந்த நோக்குடைய ஒரு கொள்கையை - மன்பதைக்குரிய ஒரு சமயத்தைப் பிறர்க்குப் பயன்படுத்தாது அதைச் சிறைப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் அறமாமோ ? எத்துணையோ உயிர்கள் அருளுணர்வு பெறுவதை மறிப்பது மறச்செயலன்றோ ? அதனினும் வன்கண் - கொடுமை - கொலை - வேறொன்றுண்டோ ? தானத்திற் சிறந்த தானம் எது ? ஞான தானமன்றோ ? அதையா தடுப்பது ? ஆண்டவன் அருள் அமுதைப் பருகச் 'சேரவாருஞ் செகத்தீரே' என்று உங்கள் ஆன்றோர் உலகை நோக்கிக் கூவி அழைத்திருப்பதைக் கருதுங்கள்.

உங்களுக்கு என்ன இல்லை ? அறிவு நூல்கள் இல்லையா ? அன்பு நூல்கள் இல்லையா ? அருணூல்கள் இல்லையா ? எல்லாம் உண்டு. வேண்டற்பாலது எழுச்சியே. நெருப்பிடை நின்ற ஞானசம்பந்தரை நினையுங்கள்; நீற்றரையில் கிடந்து கடலில் மிதந்த நாவரையரை நினையுங்கள்; ஆண்டவனைத் தூது கொண்ட ஆண்டகையை நினையுங்கள்; ஐயனை மண் சுமப்பித்த அன்பரை நினையுங்கள். நினைந்து நினைந்து ஊக்கங்கொள்ளுங்கள். நீலகண்டர் உறுதியும், இயற்பகையின் ஈகையும், மெய்ப்பொருளின் பொறுமையும், கண்ணப்பரின் கனிவும், மங்கையர்க்கரசியின் வீரமும் எங்கே போய்விட்டன ? பிறர்க்குழைக்க நீங்கள் புறப்பட்டால் இம்மாண்புகளெல்லாம் உங்களிடத்தில் பொங்கியெழும் என்பது திண்ணம். மெய்கண்ட சாத்திரம் என்னும் ஞானவாள் இருக்கும்பொழுது உங்களுக்கென்ன அச்சம் ?

அருளுலகம் உங்களை அழைக்கிறது, செவி சாயுங்கள். அன்புளங்கொண்டு எழுங்கள். தொண்டாற்றப் புறப்படுங்கள். வித்தகம் பேசவேண்டா; பணிசெய்யப் புறப்படுங்கள். உங்கள் அருணெறி உலகெலாம் பரவப்போவது உண்மை. மேல் நாடும் கீழ் நாடும் ஒன்றுபட்டு ஈனப் போகும் உலகு உங்கள் அருணெறியையே தழுவும். அந்நெறியே அவ்வுலகிற்கு நெறியாகும். ஆதலால், அந்நெறி வளர்க்க எழுங்கள்; எழுங்கள்."


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home