1. 
				திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 
				[பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்]
				அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
				ஆனந்த பூர்த்தியாகி
				அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
				அகிலாண்ட கோடியெல்லாந்
				தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
				தழைத்ததெது மனவாக்கினில்
				தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
				தந்தெய்வம் எந்தெய்வமென்
				றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
				எங்கணும் பெருவழக்காய்
				யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
				என்றைக்கு முள்ள தெதுஅது
				கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
				கருத்திற் கிசைந்ததுவே
				கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
				கருதிஅஞ் சலிசெய்குவாம். 1.
				
				ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும்
				உறவனந் தம்வினையினால்
				உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத்
				தோஅனந் தம்பெற்றபேர்
				சீரனந் தஞ்சொர்க நரகமும் அனந்தநற்
				றெய்வமும் அனந்தபேதந்
				திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான
				சிற்சத்தியா லுணர்ந்து
				காரனந் தங்கோடி வருஷித்த தென அன்பர்
				கண்ணும்விண் ணுந்தேக்கவே
				கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநங்
				கடவுளைத் துரியவடிவைப்
				பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
				பெரியமெள னத்தின்வைப்பைப்
				பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
				பெரியபொரு ளைப்பணிகுவாம். 2.
				
				அத்துவித வத்துவைச் சொப்ரகா சத்தனியை
				அருமறைகள் முரசறையவே
				அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான
				ஆதியை அநாதியேக
				தத்துவ சொருபத்தை மதசம்ம தம்பெறாச்
				சாலம்ப ரகிதமான
				சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப
				சாந்தபத வ்யோமநிலையை
				நிர்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பொருளை
				நிர்விஷய சுத்தமான
				நிர்வி காரத்தைத் தடத்தமாய் நின்றொளிர்
				நிரஞ்சன நிராமயத்தைச்
				சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு
				திவ்யதே சோமயத்தைச்
				சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர
				தேவதையை அஞ்சலிசெய்வாம். 3.
				
				2. பரிபூரணானந்தம் 
				வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன
				மனோவாயு நிற்கும்வண்ணம்
				வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு
				மார்கத்தின் இச்சைபோல
				நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த
				நினைவையும் மறந்தபோது
				நித்திரைகொள் வேந்தேகம் நீங்குமென எண்ணிலோ
				நெஞ்சந் துடித்தயகுவேன்
				பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
				பேதைக்கும் வெகுதூரமே
				பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய
				பேரின்ப நிட்டை அருள்வாய்
				பாசா டவிக்குளே செல்லாதவர்க்கருள்
				பழுத்தொழுகு தேவதருவே
				பார்குமண்ட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
				பரிபூர ணானந்தமே. 1.
				
				தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன 
				செயற்கொண் டிருப்பனமுதல்
				தேகங்க ளத்தனையும் மோகங்கொள் பெளதிகஞ்
				சென்மித்த ஆங்கிறக்கும்
				விரிவாய பூதங்கள் ஒன்றோடொன் றாயழியும்
				மேற்கொண்ட சேடம் அதுவே
				வெறுவெளி நிராலம்ப நிறைசூன்யம் உபசாந்த
				வேதவே தாந்தஞானம்
				பிரியாத பேரொளி பிறக்கின்ற வருள் அருட்
				பெற்றோர்கள் பெற்றபெருமை
				பிறவாமை யென்றைக்கும் இறவாமை யாய்வந்து
				பேசாமை யாகுமெனவே
				பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே
				பரிபாக காலமலவோ
				பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
				பரிபூர ணானந்தமே. 2.
				
				ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
				ஐயவொரு செயலுமில்லை
				அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
				ராமென இருந்தபேரும்
				நேராக வொருகோபம் ஒருவேளை வரஅந்த
				நிறைவொன்று மில்லாமலே
				நெட்டுயிர்த் துத்தட் டழிந்துளறு வார்வசன
				நிர்வாக ரென்றபேரும்
				பூராய மாயோன்று பேசுமிட மோன்றைப்
				புலம்புவார் சிவராத்திரிப்
				போதுதுயி லோமெனற விரதியரும் அறிதுயில்
				போலேயிருந்து துயில்வார்
				பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
				பார்க்கில்நின் செயலல்லவோ
				பார்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற 
				பரிபூர ணானந்தமே. 3.
				
				அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே
				அம்மாயை யில்லாமையே
				யாமெனெவும் அறிவுமுண் டப்பாலும் அறிகின்ற
				அறிவினனை யறிந்துபார்க்கின்
				எண்டிசை விளக்குமொரு தெய்வஅரு ளல்லாமல்
				இல்லையெனு நினைவுஉண்டிங்(கு) 
				யானென தறந்துரிய நிறைவாகி நிற்பதே
				இன்பமெனும் அன்பும்உண்டு
				கண்டன எலாம்அல்ல என்றுகண் டனைசெய்து
				கருவிகர ணங்களோயக்
				கண்மூடி யொருகண மிருக்கஎன் றாற்பாழ்த்த
				கர்மங்கள் போராடுதே
				பண்டையுள கர்மமே கர்த்தா வெனும்பெயர்ப்
				பக்ஷ்ம்நான் இச்சிப்பனோ
				பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
				பரிபூர ணானந்தமே. 4.
				
				சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந்
				தன்மைநினை யன்றியில்லாத்
				தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த
				சமரச சுபாவமிதுவே
				இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய
				இயற்கைதிரு வுளமறியுமே
				இன்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை
				இதசத்ரு வாகவந்து
				சிந்தைகுடி கொள்ளுதே மலமாயை கன்மந்
				திரும்புமோ தொடுவழக்காய்ச்
				சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது
				சிரத்தைஎனும் வாளும்உதவிப்
				பந்தமற மெய்ஞ்ஞானதீரமும் தந்தெனைப்
				பாதுகாத் தருள்செய்குவாய்
				பார்க்குமிட மெங்குமொருநீக்கமற நிறைகின்ற
				பரிபூர ணானந்தமே. 5.
				
				பூதலய மாகின்ற மாயைமுத லென்பர்சிலர்
				பொறிபுலன் அடங்குமிடமே
				பொருளென்பர் சிலர்கரண முடிவென்பர் சிலர்குணம்
				போனஇட மென்பர்சிலபேர்
				நாதவடி வென்பர்சிலர் விந்துமய மென்பர்சிலர்
				நட்டநடு வேயிருந்த
				நாமென்பர் சிலர்ருவுஉருவ மாமென்பர் சிலர்கருதி
				நாடில்அரு வென்பர்சிலபேர்
				பேதமற வுயிர்கெட்ட நிலையமென் றிடுவர்சிலர்
				பேசில்அரு ளென்பர்சிலபேர்
				பின்னும்முன் னுங்கெட்டசூனியம தென்பர்சிலர்
				பிறவுமே மொழிவர்இவையால்
				பாதரச மாய்மனது சஞ்சலப் ப்டுமலால்
				பரமசுக நிட்டை பெறுமோ
				பார்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
				பரிபூர ணானந்தமே.6 .
				
				அந்தகா ரத்தையோர் அகமாக்கி மின்போல்என்
				அறிவைச் சுருக்கினவரார்
				அவ்வறிவு தானுமே பற்றினது பற்றாய்
				அழுந்தவுந் தலைமீதிலே
				சொந்தமா யெழுதப் படித்தார் மெய்ஞ்ஞான
				சுகநிட்டை சேராமலே
				சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் உண்டுண்டு
				தூங்கவைத் தவரார்கொலொ
				தந்தைதாய் முதலான அகிலப்ர பஞ்சந்
				தனைத்தந்த தெனதாசையோ
				தன்னையே நோவனொ பிறரையே நோவனோ
				தற்கால மதைநோவனோ
				பந்தமா னதுதந்த வினையையே நோவனோ
				பரமார்த்தம் ஏதுமறியேன்
				பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
				பரிபூர ணானந்தமே.7 . 
				
				வாரா தெலாமொழிய வருவன வெலாமெய்த
				மனதுசாட் சியதாகவே
				மருவநிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த
				மரபுசம ரசமாகவே
				பூராய மாயுணர வூகமது தந்ததும்
				பொய்யுடலை நிலையன்றெனப்
				போதநெறி தந்த்துஞ் சாசுவத ஆனந்த 
				போகமே வீடென்னவே
				நீராள மாயுருக வுள்ளன்பு தந்ததும்
				நின்னதருள் இன்னும் இன்னும்
				நின்னையே துணையென்ற என்னையே காக்கவொரு
				நினைவுசற் றுண்டாகிலோ
				பாராதி யறியாத மோனமே யிடைவிடாப்
				பற்றாக நிற்கஅருள்வாய்
				பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற ந்றைகின்ற
				ப்ரிபூர ணானந்தமே.8 .
				
				ஆழாழி கரையின்றி நிற்கவிலை யோகொடிய
				ஆலம்அமு தாகவிலையோ
				அக்கடலின் மீதுவட அனல்நிற்க வில்லையோ
				அந்தரத் தகி�லகோடி
				தாழாமல் நிலைநிற்க வில்யோ மேருவுந்
				தனுவாக வளையவிலயோ
				சத்தமே கங்களும் வச்ரதர னாணையில்
				சஞ்சரித் திடவில்லையோ 
				வாழாது வாழவே இராமனடி யாற்சிலையும்
				மடமங்கை யாகவிலையோ
				மணிமந்த்ர மாதியால் வேண்டுசித் திகள்உலக
				மார்கத்தில் வைக்கவிலையோ
				பாழான என்மனங் குவியஒரு தந்திரம்
				பண்ணுவ துனக்கருமையோ
				பார்க்குமிட மெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
				பரிபூர ணானந்தமே. 9 . 
				
				ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
				ஆளினுங் கடல்மீதிலே
				ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
				அம்பொன்மிக வைத்தபேரும்
				நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
				நெடுநா ளிருந்தபேரும் 
				நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
				நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
				யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
				உறங்குவது மாகமுடியும்
				உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
				ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
				பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
				பரிசுத்த நிலையை அருள்வாய்
				பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
				பரிபூர ணானந்தமே.10 .
				
				3. பொருள் வணக்கம்
				அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
				
				நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
				நிறைவாய் நீங்காச் 
				சுத்தமுமய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
				சுடராய் எல்லாம்
				வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
				மனவாக் கெட்டாச்
				சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
				சிந்தை செய்வாம்.1 .
				
				யாதுமன நினையுமந்த நினைவுக்கு நினைவாகி
				யாதநின் பாலும்
				பேதமற நின்றுயிக் குராகி அன்பருக்கே
				பேரா னந்தக்
				கோதிலமு தூற்றரும்பிக் குணங்குறியொன் றறத்தன்னைக்
				கொடுத்துக் காட்டுந்
				தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச்
				சிந்தை செய்வாம். 2 . 
				
				பெருவெளியாய் ஐம்பூதம் பிறப்பிடமாய்ப் பேசாத
				பெரிய மோனம்
				வருமிடமாய் மனமாதிக் கெட்டாத பேரின்ப
				மயமாய் ஞானக்
				குருவருளாற் காட்டிடவும் அன்பரைக்கோத் தறவிழுங்கிக்
				கொண்டப் பாலுந்
				தெரிவரிதாய்க் கலந்தெந்தப் பொருள் அந்தப் பொருளினையாஞ்
				சிந்தை செய்வாம் .3.
				
				இகபரமும் உயிர்க்குயிரை யானெனதற் றவர்உறவை
				எந்த நாளுஞ்
				சுகபரிபூ ரணமான நிராலம்ப கோசரத்தைத்
				துரிய வாழ்வை
				அகமகிழ வருந்தேனை முக்கனியைக் கற்கண்டை
				அமிர்தை நாடி
				மொகுமொகென இருவிழிநீர் முந்திறைப்பக் கரமலர்கள்
				முகிழ்த்து நிற்பாம். 4.
				
				சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத்
				தன்மை நாமம்
				ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்
				றியக்கஞ் செய்யும்
				சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான
				துறிய வாழ்வைத்
				தீதில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச்
				சிந்தை செய்வாம். 5 .
				
				இந்திரசா லங்கனவு கானலின்நீ ரெனவுலகம்
				எமக்குத் தோன்றச்
				சந்ததமுஞ் சிற்பரத்தா லழியாத தற்பரத்தைச்
				சார்ந்து வாழ்க
				புந்திமகி ழுறநாளுந் தடையறவா னந்தவெள்ளம்
				பொலிக என்றே
				வந்தருளுங் குருமெளனி மலர்த்தாளை அநுதினமும்
				வழுத்தல் செய்வாம். 6
				
				பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும்முதற் பொருளாகிப்
				போத மாகித்
				தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த
				செழந்தே னாகி
				அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ
				னந்த மாகி
				இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம்
				இறைஞ்சி நிற்பாம் .7 . 
				.
				அருமறையின் சிரப்பொருளாய் விண்ணவர்மா முனிவர்சித்த
				ராதி யானோர்
				�திரிவரிய பூரணமாய்க் காரணங்கற் பனைகடந்த
				செல்வ மாகிக்
				கருதரிய மலரின்மணம் எள்ளிலெண்ணைய் உடலலுயிர்போற்
				கலந்தெந் நாளும்
				துரியநடு வூடிருந்த பெரியபொருள் யாததனைத்
				தொழுதல் செய்வாம். 8 .
				
				விண்ணாதி பூதமெல்லாந் தன்னகத்தி லடக்கிவெறு
				வெளியாய் ஞானக்
				கண்ணாரக் கண்டஅன்பர் கண்ணூடே ஆனந்தக்
				கடலாய் வேறொன்
				றெண்ணாத படிக்கிரங்கித் தானாகச் செய்தருளும்
				இறையே உன்றன்
				தண்ணாருஞ் சாந்தஅருள் தனைநினைந்து கரமலர்கள்
				தலைமேற் கொள்வாம். 9 .
				
				விண்ணிறைந்த வெளியாய்என் மனவெளியிற் கலந்தறிவாம்
				வெளியி னூடுந்
				தண்ணிறைந்த பேரமுதாய்ச் சதானந்த மானபெருந்
				தகையே நின்பால்
				உண்ணிறைந்த பேரன்பா லுள்ளுருகி மொழிகுழறி
				உவகை யாகிக்
				கண்ணிறைந்த புனலுகுப்பக் கரமுகிழ்ப்ப நின்னருளைக்
				கருத்தில் வைப்பாம். 10 .
				வேறு
				ஆதியந்தங் காட்டாத முதலா யெம்மை
				அடியைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல
				நீதிபெறுங் குருவாகி மனவாக் கெட்டா
				நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமல மாகி
				வாதமிடுஞ் சமயநெறிக் கரிய தாகி
				மெளனத்தோர் பால்வெளியாய் வயங்கா நின்ற
				சோதியைஎன் னுயிர்த்துணையை நாடிக் கண்ணீர்
				சொரியஇரு கரங்குவித்துத் தொழுதல் செய்வாம். 1.
				
				அகரவுயி ரெழுத்தனைத்து மாகி வேறாய்
				அமர்ந்தென அகிலாண்டம் அனைத்துமாகிப்
				பகர்வனஎல் லாமாகி அல்ல தாகிப்
				பரமாகிச் சொல்லரிய பான்மை யாகித் 
				துகளறுசங் கற்பகவிற் பங்களெல்லாந்
				தோயாத அறிவாகிச் சுத்த மாகி
				நிகரில்பசு பதியான பொருளை நாடி
				கெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம். 2 
				
				4. சின்மயானந்தகுரு
				பன்னிருசீர்க்கழ � நெடிலடி யாசிரிய விருத்தம்
				
				அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப
				அன்பினா லுருகிவிழிநீர்
				ஆறாக வாராத முத்தியின தாவேச
				ஆசைக் கடற்குள் மூழ்கிச்
				சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி
				தழுதழுத் திடவணங்குஞ்
				சன்மார்க்க நெறியிலாத் துன்மர்க்க னேனையுந்
				தண்ணருள் கொடுத்தாள்வையோ
				துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள்
				தொழுதருகில் வீற்றிருப்பச்
				சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே
				சொரூபாநு பூதிகாட்டிச்
				செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர்
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே.1 .
				
				ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவிநான்
				அத்துவித வாஞ்சையாதல்
				அரியகொம் பில்தேனை முடவனிச் சித்தபடி
				ஆகும்அறி வலிழஇன்பந்
				தாக்கும்வகை யேதிநாட் சரியைகிரி யாயோக
				சாதனம் விடித்ததெல்லாஞ்
				சன்மார்க மல்லஇவை நிற்கஎன் மார்கங்கள்
				சாராத பேரறிவதாய்
				வாக்குமனம் அணுகாத பூரணப் பொருள்வந்து
				வாய்க்கும் படிக்குபாயாம்
				வருவித் துவட்டாத பேரின்ப மானசுக
				வாரியினை வாய்மடுத்துத்
				தேக்கித் திளைக்கநீ முன்னிற்ப தென்றுகாண்
				சித்தாந்த முத்திமுத்லே
				சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 2 .
				
				ஔவிய மிருக்கநா னென்கின்ற ஆணவம்
				அடைந்திட் டிருக்கலோபம்
				அருளின்மை கூடக் கலந்துள் ளிருக்கமேல்
				ஆசா பிசாபமுதலாம்
				வெவ்விய குணம்பல இருக்கஎன் னறிவூடு
				மெய்யன்நீ வீற்றிருக்க
				விதியில்லை என்னிலோ பூரண னெனும்பெயர்
				விரிக்கிலுரை வேறுமுளதோ
				கவ்வுமல மாகின்ற நாகபா சத்தினால்
				கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை
				கடிதகல வலியவரு ஞானசஞ் சீவியே
				கதியான பூமிநடுவுட்
				செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 3 .
				
				ஐவகை எனும்பூத மாதியை வகுத்ததனுள்
				அசரசர பேதமான
				யாவைவும் வகுத்துநல் லறிவையும் வகுத்துமறை
				யாதிநூ லையும்வகுத்துச்
				சைவமுத லாம் அளவில் சமயமும் வகுத்துமேற்
				சமயங் கடந்தமோன
				சமரசம் வகுத்தநீ யுன்னையான் அணுகவுந்
				தண்ணருள் வகுக்க இலையோ
				பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே
				பொய்யிலா மெய்யரறிவில்
				போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப்
				போக்குவர வற்றபொருளே
				தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 4 .
				
				ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால்
				ஆகின்ற ஆக்கைநீர்மேல்
				அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்
				அறியாத காலமெல்லாம்
				புந்திமகி ழுறவுண் டுடுத்தின்ப மாவதே
				போந்தநெறி என்றிருன்ந்தேன்
				பூராய மாகநின தருள்வந் துணர்த்த இவை
				போனவழி தெரியவில்லை
				எந்தநிலை பேசினும் இணங்கவிலை யல்லால்
				இறப்பொடு பிறப்பையுள்ளே
				எண்ணினால் நெஞ்சது பகீரெனுந் துயிலுறா
				திருவிழியும் இரவுபகலாய்ச்
				செந்தழலின் மெழுகான தங்கம் இவை என்கொலோ
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 5.
				
				காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
				கண்ணிலாக் குழவியைப்போற்
				கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங்
				காப்பிட் டதற்கிசைந்த
				பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்
				பெலக்கவிளை யமுதமூட்டிப்
				பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற
				பெரியவிளை யாட்டமைத்திட்
				டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்
				டிடருற உறுக்கி இடர்தீர்த்
				திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
				இசைந்துதுயில் கொண்மின்என்று
				சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 6.
				
				கருமருவு குகையனைய காயத்தின் நடுவுள்
				களிம்புதோய் செம்பனையயான்
				காண்டக இருக்கநீ ஞான அனல் மூட்டியே
				கனிவுபெற உள்ளுருக்கிப்
				பருவம தறிந்துநின் னருளான குளிகைகொடு
				பரிசித்து வேதிசெய்து
				பத்துமாற் றுத்தஙக மாக்கியே பணிகொண்ட
				பஷத்தை என்சொல்லுகேன்
				அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாந்தம்
				ஆதியாம் அந்தமீதும்
				அத்துவித நிலையராய் என்னையாண் டுன்னடிமை
				யான வர்க ளறிவினூடுந்
				திருமருவு கல்லா லடிக்கீழும் வளர்கின்ற
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 7.
				
				கூடுத லுடன்பிரித லற்றுநிர்த் தொந்தமாய்க்
				குவிதலுடன் விரிதலற்றுக்
				குணமற்று வரவினொடு போக்கற்று நிலையான
				குறியற்று மலமுமற்று
				நாடுதலு மற்றுமேல் கீழ்நடுப் பக்கமென
				நண்ணுதலு மற்றுவிந்து
				நாதமற் றைவகைப் பூதபே தமுமற்று
				ஞாதுருவின் ஞானமற்று
				வாடுதலு மற்றுமேல் ஒன்றற் றிறண்டற்று
				வாக்கற்று மனமுமற்று
				மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே
				வாய்மடுத் துண்டவசமாய்த்
				தேடுதலு மற்றவிட நிலையென்ற மெளனியே
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 8.
				
				தாராத அருளெலாந் தந்தருள மெளனியாய்த்
				தாயனைய கருணைகாட்டித்
				தாளிணையென் முடிசூட்டி அறிவிற் சமாதியே
				சாசுவத சம்ப்ரதாயம்
				ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்திநிலை
				ஒன்றோ டிரண்டெனாமல்
				ஒளியெனவும் வெளியெனவும் உருவெனவும் நாதமாம்
				ஒலியெனவும் உணர்வறாமல்
				பாராது பார்ப்பதே ஏதுசா தனமற்ற
				பரமஅநு பூதிவாய்க்கும்
				பண்பென் றுணர்த்தியது பாராம லந்நிலை
				பதிந்தநின் பழவடியாதஞ்
				சீரா யிருக்கநின தருள் வேண்டும் ஐயனே
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 9.
				
				போதமாய் ஆதிநடு அந்தமும் இலாததாய்ப்
				புனிதமாய் அவிகாரமாய்ப்
				போக்குவர வில்லாத இன்பமாய் நின்றநின் 
				பூரணம் புகலிடமதா
				ஆதரவு வையாமல் அறிவினை மறைப்பதுநின்
				அருள்பின்னும் அறிவின்மைதீர்த் 
				தறிவித்து நிற்பதுநின் அருளாகில் எளியனேற்
				கறிவாவ தேதறிவிலா
				ஏதம்வரு வகையேது வினையேது வினைதனக்
				கீடான காயமேதென்
				இச்சா சுதந்தரஞ் சிறிதுமிலை இகபரம்
				இரண்டினுள் மலைவுதீரத்
				தீதிலருள் கொண்டினி யுணர்த்தியெனை யாள்வையோ
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 10.
				
				பத்திநெறி நிலைநின்றும் நவகண்ட பூமிப்
				பரப்பைவல மாகவந்தும்
				பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும்
				பசிதாக மின்றியெழுநா
				மத்தியிடை நின்றும்உதிர் சருகுபுனல் வாயுவினை
				வன்பசி தனக்கடைத்து
				மெனத் திருந்தும்உயர் மலைநுழைவு புக்கியும்
				மன்னுதச நாடிமுற்றுஞ்
				சுத்திசெய் தும்மூல ப்ராணனோ டங்கியைச்
				சோமவட் டத்தடைத்துஞ்
				சொல்லரிய அமுதுண்டும் அற்பவுடல் கற்பங்கள்
				தோறும்நிலை நிற்கவீறு
				சித்திசெய் துஞ்ஞான மலதுகதி கூடுமோ
				சித்தாந்த முத்திமுதலே
				சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
				சின்மயா னந்தகுருவே. 11.
				
				5. மெளனகுரு வணக்கம்
				
				ஆசைநிக ளத்தினை நிர்த்தூளி படவுதறி
				ஆங்கார முளையைஎற்றி
				அத்துவித மதமாகி மதம்ஆறும் ஆறாக
				அங்கையின் விலாழியாக்கிப்
				பாசஇருள் தன்னிழ லெனச்சுளித் தார்த்துமேல்
				பார்த்துப் பரந்தமனதைப்
				பாரித்த கவளமாய்ப் பூரிக்க வுண்டுமுக
				படாமன்ன மாயைநூறித்
				தேசுபெற நீவைத்த சின்முத்தி ராங்குசச்
				செங்கைக் குளேயடக்கிச்
				சின்மயா னந்தசுக வெள்ளம் படிந்துநின்
				திருவருட் பூர்த்தியான
				வாசமுறு சற்சார மீதென்னை யொருஞான
				மத்தகச மெனவளர்த்தாய்
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 1.
				
				ஐந்துவகை யாகின்ற பூதமுதல் நாதமும்
				அடங்கவெளி யாகவெளிசெய்
				தறியாமை யறிவாதி பிரிவாக அறிவார்கள்
				அறிவாக நின்றநிலையில்
				சிந்தையற நில்லென்று சும்மா இருத்திமேல்
				சின்மயா னந்தவெள்ளந்
				தேக்கித் திளைத்துநான் அதுவா யிருக்கநீ
				செய்சித்ர மிகநன்றுகாண்
				எந்தைவட வாற்பரம குருவாழ்க வாழஅரு
				ளியநந்தி மரபுவாழ்க
				என்றடியர் மனமகிழ வேதாக மத்துணி
				பிரண்டில்லை யொன்றென்னவே
				வந்தகுரு வேவீறு சிவஞான சித்திநெறி
				மெளனோப தேசகுருவே
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 2.
				
				ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கென்
				அறிவன்றி யிடமில்லையோ
				அந்தரப் புட்பமுங் கானலின் நீருமோர்
				அவசரத் துபயோகமோ
				போதித்த நிலையையும் மயக்குதே அபயம்நான்
				புக்கஅருள் தோற்றிடாமல்
				பொய்யான வுலகத்தை மெய்யா நிறுத்தியென்
				புந்திக்குள் இந்த்ரசாலஞ்
				சாதிக்கு தேயிதனை வெல்லவும் உபாயம்நீ
				தந்தருள்வ தென்றுபுகல்வாய்
				சண்மத ஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த
				சமரசநிர் வாகநிலையும்
				மாதிக்கொ டண்டப் பரப்பெலாம் அறியவே
				வந்தருளு ஞானகுருவே
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 3.
				
				மின்னனைய பொய்யுடலை நிலையென்றும் மையிலகு
				விழிகொண்டு மையல்பூட்டும்
				மின்னார்க ளின்பமே மெய்யெம்றும் வளர்மாட
				மேல்வீடு சொர்க்கமென்றும்
				பொன்னையழி யாதுவளர் பொருளென்று போற்றிஇப்
				பொய்வேட மிகுதிகாட்டிப்
				பொறையறிவு துறவீதல் ஆதிநற் குணமெலாம்
				போக்கிலே போகவிட்டுத்
				தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திடத்
				தரணிமிசை லோகாயதன்
				சமயநடை சாராமல் வேதாந்த சித்தாந்த
				சமரச சிவாநுபூதி
				மன்னவொரு சொற்கொண் டெனைத்தடுத் தாண்டன்பின்
				வாழ்வித்த ஞானகுருவே
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 4.
				
				போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ
				புசித்தற் கிருக்குமதுபோல்
				புருடர்பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம்
				புகலுமதி னாலாம்பயன்
				ஞானநெறி முக்யநெறி காட்சியனு மானமுதல்
				நானாவி தங்கள் தேர்ந்து
				நான்நான் எனக்குளறு படைபுடை பெயர்ந்திடவும்
				நான்குசா தனமும்ஓர்ந்திட்
				டானநெறி யாஞ்சரியை யாதிசோ பானமுற்
				றணுபஷ சம்புபஷம்
				ஆமிரு விகற்பமும் மாயாதி சேவையும்
				அறிந்திரண் டொன்றென்னுமோர்
				மானத விகற்பமற வென்றுநிர் பதுநமது
				மரபென்ற பரமகுருவே
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 5.
				
				கல்லாத அறிவுமேற் கேளாத கேளாத கேள்வியுங்
				கருணைசிறி தேதுமில்லாக்
				காட்சியும் கொலைகளவு கட்காமம் மாட்சியாக்
				காதலித் திடுநெஞ்சமும்
				பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள்
				பொருந்துகுணம் ஏதும்அறியேன்
				புருடர்வடி வானதே யல்லாது கனவிலும்
				புருடார்த்தம் ஏதுமில்லேன்
				எல்லா மறிந்தநீ யறியாத தன்றெனக்
				கெவ்வண்ணம் உய்வண்ணமோ
				இருளையிரு ளென்றவ்ர்க் கொளிதா ரகம்பெறும்
				எனக்குநின் னருள்தாரகம்
				வல்லா னெனும்பெய ருனக்குள்ள தேயிந்த
				வஞ்சகனை யாளநினையாய்
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 6.
				
				கானகம் இலங்குபுலி பசுவொடு குலாவும்நின்
				கண்காண மதயானைநீ
				கைகாட்ட வுங்கையால் நெகிடிக் கெனப்பெரிய
				கட்டைமிக ஏந்திவருமே
				போனகம் அமைந்ததென அக்காம தேனுநின்
				பொன்னடியில் நின்றுசொலுமே
				புவிராசர் கவிராசர் தவராச ரென்றுனைப்
				போற்றிசய போற்றிஎன்பார்
				ஞானகரு ணாகர முகங்கண்ட போதிலே
				நவநாத சித்தர்களும்உன்
				நட்பினை விரும்புவார் சுகர்வாம தேவர்முதல்
				ஞானிகளும் உனைமெச்சுவார்
				வானகமும் மண்ணகமும் வந்தெதிர் வணங்கிடும்உன்
				மகிமையது சொல்லஎளிதோ
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 7.
				
				சருகுசல பட்சணிக ளொருகோடி யல்லால்
				சகோரபட் சிகள்போலவே
				தவளநில வொழுகமிர்த தாரையுண் டழியாத
				தன்மைய ரனந்தகோடி
				இருவினைக ளற்றிரவு பகலென்ப தறியாத
				ஏகாந்த மோனஞான
				இன்பநிட் டையர்கோடி மணிமந்த்ர சித்திநிலை
				எய்தினர்கள் கோடிசூழக்
				குருமணி யிழைத்திட்ட சிங்கா தனத்தின்மிசை
				கொலுவீற் றிருக்கும்நின்னை
				கும்பிட் டனந்தமுறை தெண்டனிட் டென்மனக்
				குறையெலாந் தீரும்வண்ணம்
				மதுமல ரெடுத்துனிரு தாளையர்ச் கிக்கவெனை
				வாவென் றழைப்பதெந்நாள்
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 8.
				
				ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
				ஆணவத் தினும்வலிதுகாண்
				அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது
				யாதொன்று தொடினும் அதுவாய்த்
				தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி
				தம்மொடு சமானமென்னுந்
				தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
				தன்னிலசை யாதுநிற்கும்
				ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித்
				திராவணா காரமாகி
				இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய்
				திருக்கும்இத னொடெந்நேரமும்
				வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ
				மெளனோப தேசகுருவே
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 9.
				
				பற்றுவெகு விதமாகி யொன்றைவிட் டொன்றனைப்
				பற்றியுழல் கிருமிபோலப்
				பாழ்ஞ்சிந்தை பெற்றநான் வெளியாக நின்னருள்
				பகர்ந்துமறி யேன்துவிதமோ
				சிற்றறிவ தன்றியும் எவரேனும் ஒருமொழி
				திடுக்கென் றுரைத்தபோது
				சிந்தைசெவி யாகவே பறையறைய வுதரவெந்
				தீநெஞ்சம் அளவளாவ
				உற்றுணர உண்ர்வற்றுன் மத்தவெறி யினர்போல
				உளறுவேன் முத்திமார்க்கம்
				உணர்வதெப் படியின்ப துன்பஞ் சமானமாய்
				உறுவதெப் படியாயினும்
				மற்றெனக் கையநீ சொன்னவொரு வார்த்தையினை
				மலையிலக் கெனநம்பினேன்
				மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
				மரபில்வரு மெளன குருவே. 10.
				
				6. கருணாகரக்கடவுள்
				
				நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப
				நிர்விடய கைவல்யமா
				நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன
				நிர்த்தொந்த நித்தமுக்த
				தற்பரவித் வாதீத வ்யோமபரி பூரண
				சதானந்த ஞானபகவ
				சம்புசிவ சங்கர சர்வேச என்றுநான்
				சர்வகா லமும்நினைவனோ
				அற்புத அகோசர நிவிர்த்திபெறும் அன்பருக்
				கானந்த பூர்த்தியான
				அத்துவித நிச்சய சொரூபசாட் சாத்கார
				அநுபூதி யநுசூதமுங்
				கற்பனை யறக்காண முக்கணுடன் வடநிழற்
				கண்ணூ டிருந்தகுருவே
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 1.
				
				மண்ணாதி ஐந்தொடு புறத்திலுள கருவியும்
				வாக்காதி சுரோத்ராதியும்
				வளர்கின்ற சப்தாதி மனமாதி கலையாதி
				மன்னுசுத் தாதியுடனே
				தொண்ணூற்றொ டாறுமற் றுள்ளனவும் மெளனியாய்ச்
				சொன்னவொரு சொற்கொண்டதே
				தூவெளிய தாயகண் டானந்த சுகவாரி
				தோற்றுமதை என்சொல்லுவேன்
				பண்ணாரும் இசையினொடு பாடிப் படித்தருட்
				பான்மைநெறி நின்றுதவறாப்
				பக்குவ விசேடராய் நெக்குநெக் குருகிப்
				பணிந்தெழுந் திருகைகூப்பிக்
				கண்ணாறு கரைபுரள நின்றஅன் பரையெலாங்
				கைவிடாக் காட்சியுறவே
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 2.
				
				எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே
				எல்லாமுன் னுடையசெயலே
				எங்கணும் வியாபிநீ என்றுசொலு மியல்பென்
				றிருக்காதி வேதமெல்லாஞ்
				சொல்லான் முழக்கியது மிக்கவுப காரமாச்
				சொல்லிறந் தவரும்விண்டு
				சொன்னவையு மிவைநல்ல குருவான பேருந்
				தொகுத்தநெறி தானுமிவையே
				அல்லாம லில்லையென நன்றா அறிந்தேன்
				அறிந்தபடி நின்றுசுகநான்
				ஆகாத வண்ணமே இவ்வண்ண மாயினேன்
				அதுவுநின தருளென்னவே
				கல்லாத அறிஞனுக் குள்ளே யுணர்த்தினை
				கதிக்குவகை யேதுபுகலாய்
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 3.
				
				பட்டப் பகற்பொழுதை இருளென்ற மருளர்தம்
				பட்சமோ எனதுபட்சம்
				பார்த்தவிட மெங்கணுங் கோத்தநிலை குலையாது
				பரமவெளி யாகவொருசொல்
				திட்டமுடன் மெளனியா யருள்செய் திருக்கவுஞ்
				சேராமல் ஆராகநான்
				சிறுவீடு கட்டியதின் அடுசோற்றை யுண்டுண்டு
				தேக்குசிறி யார்கள்போல
				நட்டனைய தாக்கற்ற கல்வியும் விவேகமும்
				நன்னிலய மாகவுன்னி
				நானென்று நீயென் றிரண்டில்லை யென்னவே
				நடுவே முளைத்தமனதைக்
				கட்டஅறி யாமலே வாடினே னெப்போது
				கருணைக் குரித்தாவனோ
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 4.
				
				மெய்விடா நாவுள்ள மெய்யரு ளிருந்துநீ
				மெய்யான மெய்யைஎல்லாம்
				மெய்யென வுணர்த்தியது மெய்யிதற் கையமிலை
				மெய்யேதும் அறியாவெறும்
				பொய்விடாப் பொய்யினேன் உள்ளத் திருந்துதான்
				பொய்யான பொய்யைஎல்லாம்
				பொய்யெனா வண்ணமே புகலமைத் தாயெனில்
				புன்மையேன் என்செய்குவேன்
				மைவிடா செழுநீல கண்டகுரு வேவிட்ணு
				வடிவான ஞானகுருவே
				மலர்மேவி மறையோது நான்முகக் குருவே
				மதங்கள்தொறும் நின்றகுருவே
				கைவிடா தேயென்ற அன்பருக் கன்பாய்க்
				கருத்தூ டுணர்த்துகுருவே
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 5.
				
				பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
				பாவித் திறைஞ்சஆங்கே
				பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப்
				பனிமல ரெடுக்கமனமும்
				நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில்
				நாணும்என் னுளம்நிற்றிநீ
				நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால்
				நான்பூசை செய்யல் முறையோ
				விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே
				வேதமே வேதாந்தமே
				மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
				வித்தேஅ வித்தின் முளையே
				கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே
				கதிக்கான மோனவடிவே
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 6.
				
				சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது
				தான்வந்து முற்றுமெனலால்
				சகமீ திருந்தாலும் மரணமுண் டென்பது
				சதாநிட்டர் நினைவதில்லை
				சிந்தையறி யார்க்கீது டோதிப்ப தல்லவே
				செப்பினும் வெகுதர்க்கமாம்
				திவ்யகுண மார்க்கண்டர் சுகராதி முனிவோர்கள்
				சித்தாந்த நித்யரலரோ
				இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர்
				இருக்காதி வேதமுனிவர்
				எண்ணரிய கணநாதர் நவநாத சித்தர்கள்
				இ�ரவிமதி யாதியோர்கள்
				கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவருங்
				கைகுவித் திடுதெய்வமே
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 7.
				
				துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்கர்ம
				துட்டதே வதைகளில்லை
				துரியநிறை சாந்ததே வதையாம் உனக்கே
				தொழும்பன்அன் பபிடேகநீர்
				உள்ளுறையி லென்னாவி நைவேத்தி யம்ப்ராணன்
				ஓங்குமதி தூபதீபம்
				ஒருசால மன்றிது சதாகால பூசையா
				ஒப்புவித் தேன்கருணைகூர்
				தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே
				தெளிந்ததே னேசீனியே
				திவ்யரச மியாவுந் திரண்டொழுகு பாகே
				தெவிட்டாத ஆனந்தமே
				கள்ளன் அறி வூடுமே மெள்ளமெள வெளியாய்க்
				கலக்கவரு நல்லஉறவே
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 8.
				
				உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள்
				ஊற்றென வெதும்பியூற்ற
				ஊசிகாந் தத்தினைக் கண்டணுகல் போலவே
				ஓருறவும் உன்னியுன்னிப்
				படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்
				பாடியா டிக்குதித்துப்
				பனிமதி முகத்திலே நிலவனைய புன்னகை
				பரப்பியார்த் தார்த்தெழுந்து
				மடலவிழு மலரனைய கைவிரித் துக்கூப்பி
				வானேயவ் வானிலின்ப
				மழையே மழைத்தாரை வெள்ளமே நீடூழி
				வாழியென வாழ்த்தியேத்துங்
				கடல்மடை திறந்தனைய அன்பரன் புக்கெளியை
				கன்னெஞ்ச னுக்கெளியையோ
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 9.
				
				இங்கற்ற படியங்கு மெனவறியு நல்லறிஞர்
				எக்காலமும் உதவுவார்
				இன்சொல்தவ றார்பொய்மை யாமிழுக் குரையார்
				இரங்குவார் கொலைகள்பயிலார்
				சங்கற்ப சித்தரவ ருள்ளக் கருத்திலுறை
				சாட்சிநீ யிகபரத்துஞ்
				சந்தான கற்பகத் தேவா யிருந்தே
				சமத்தஇன் பமும்உதவுவாய்
				சிங்கத்தை யொத்தென்னைப் பாயவரு வினையினைச்
				சேதிக்க வருசிம்புளே
				சிந்தா குலத்திமிரம் அகலவரு பானுவே
				தீனனேன் கரையேறவே
				கங்கற்ற பேராசை வெள்ளத்தின் வளரருட்
				ககனவட் டக்கப்பலே
				கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
				கருணா கரக்கடவுளே. 10. 
				
				7. சித்தர்கணம்
				
				திக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே
				சென்றோடி யாடிவருவீர்
				செம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே
				திகழ்துருவம் அளவளாவி
				உக்ரமிகு சக்ரதர னென்னநிற் பீர்கையில்
				உழுந்தமிழும் ஆசமனமா
				வோரேழு கடலையும் பருகவல் லீரிந்த்ரன்
				உலகும்அயி ராவதமுமே
				கைக்கெளிய பந்தா எடுத்து விளையாடுவீர்
				ககனவட் டத்தையெல்லாம்
				கடுகிடை யிருத்தியே அஷ்டகுல வெற்பையும்
				காட்டுவீர் மேலும்மேலும்
				மிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன்
				விளங்குவரு சித்திஇலிரோ
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே . 1.
				
				பாட்டளி துதைந்துவளர் கற்பகநல் நீழலைப்
				பாரினிடை வரவழைப்பீர்
				பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்
				பணிசெய்யுந் தொழிலாளர்போல்
				கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை
				கேட்டுப் பிழைப்போரையுங்
				கிரீடபதி யாக்குவீர் கற்பாந்த வெள்ளமொரு
				கேணியிடை குறுகவைப்பீர்
				ஓட்டினை எடுத்தா யிரத்தெட்டு மாற்றாக
				ஒளிவிடும் பொன்னாக்குவீர்
				உரகனும் இளைப்பாற யோகதண் டத்திலே
				உலகுசுமை யாகவருளால்
				மீட்டிடவும் வல்லநீ ரென்மனக் கல்லையனல்
				மெழுகாக்கி வைப்பதரிதோ
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே . 2.
				
				பாரொடுநன் னீராதி யொன்றொடொன் றாகவே
				பற்றிலய மாகுபோழ்து
				பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம்
				பரந்திடி னதற்குமீதே
				நீரிலுறை வண்டாய்த் துவண்டுசிவ யோகநிலை
				நிற்பீர் விகற்பமாகி
				நெடியமுகி லேழும்பரந்துவரு டிக்கிலோ
				நிலவுமதி மண்டலமதே
				ஊரென விளங்குவீர் பிரமாதி முடிவில்விடை
				ஊர்தியரு ளாலுலவுவீர்
				உலகங்கள் கீழ்மேல வாகப் பெருங்காற்
				றுலாவின்நல் தாரணையினால்
				மேருவென அசையாமல் நிற்கவல் லீருமது
				மேதக்க சித்திஎளிதோ
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே . 3.
				
				எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்
				யாதினும் அரிதரிதுகாண்
				இப்பிறவி தப்பினா லெப்பிறவி வாய்க்குமோ
				ஏதுவருமோ அறிகிலேன்
				கண்ணகல் நிலத்துநான் உள்ளபொழு தேஅருட்
				ககனவட் டத்தில்நின்று
				காலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு
				கலந்துமதி யவசமுறவே
				பண்ணுவது நன்மைஇந் நிலைபதியு மட்டுமே
				பதியா யிருந்ததேகப்
				பவுரிகுலை யாமலே கெளரிகுண் டலியாயி
				பண்ணவிதன் அருளினாலே
				விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே
				வேண்டுவே னுமதடிமைநான்
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே . 4.
				
				பொய்திகழும் உலகநடை என்சொல்கேன் என்சொல்கேன்
				பொழுதுபோக் கேதென்னிலோ
				பொய்யுடல் நிமித்தம் புசிப்புக் கலைந்திடல்
				புசித்தபின் கண்ணுறங்கல்
				கைதவ மலாமலிது செய்தவம தல்லவே
				கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க்
				கண்டதிது விண்டிதைக் கண்டித்து நிற்றலெக்
				காலமோ அதையறிகிலேன்
				மைதிகழு முகிலினங் குடைநிழற் றிடவட்ட
				வரையினொடு செம்பொன்மேரு
				மால்வரையின் முதுகூடும் யோகதண் டக்கோல்
				வரைந்துசய விருதுகாட்டி
				மெய்திகழும் அட்டாங்க யொசபூ மிக்குள்வளர்
				வேந்தரே குணசாந்தரே
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே. 5.
				
				கெசதுரக முதலான சதுரங்க மனவாதி
				கேள்வியி னிசைந்துநிற்பக்
				கெடிகொண்ட தலமாறு மும்மண்ட லத்திலுங்
				கிள்ளாக்குச் செல்லமிக்க
				தெசவிதம தாய்நின்ற நாதங்க ளோலிடச்
				சிங்காச னாதிபர்களாய்த்
				திக்குத் திகந்தமும் பூரண மதிக்குடை
				திகழ்ந்திட வசந்தகாலம்
				இசையமலர் மீதுறை மணம்போல ஆனந்தம்
				இதயமேற் கொள்ளும்வண்ணம்
				என்றைக்கு மழியாத சிவராச யோகராய்
				இந்தராதி தேவர்களெலாம்
				விசயசய சயவென்ன ஆசிசொல வேகொலு
				இருக்குநும் பெருமைஎளிதோ
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே. 6.
				
				ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை
				அகிலத்தின் மிசையுள்ளதோ
				ஆடிய கறங்குபோ லோடியுழல் சிந்தையை
				அடக்கியொரு கணமேனும்யான்
				காணிலேன் திருவருளை யல்லாது மெளனியாய்க்
				கண்மூடி யோடுமூச்சைக்
				கட்டிக் கலாமதியை முட்டவே மூலவெங்
				கனலினை எழுப்பநினைவும்
				பூணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும்
				போக்கிலே போகவிட்டுப்
				பொய்யுலக னாயினேன் நாயினுங் கடையான
				புன்மையேன் இன்னம் இன்னம்
				வீணிலே யலையாமல் மலையிலக் காகநீர்
				வெளிப்படத் தோற்றல் வேண்டும்
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே. 7.
				
				கன்னலமு தெனவுமுக் கனியெனவும் வாயூறு
				கண்டெனவும் அடியெடுத்துக்
				கடவுளர்கள் தந்ததல அழுதழுது பேய்போல்
				கருத்திலெழு கின்றவெல்லாம்
				என்னதறி யாமையறி வென்னுமிரு பகுதியால்
				ஈட்டுதமி ழென் தமிழினுக்
				கின்னல்பக ராதுலகம் ஆராமை மேலிட்
				டிருத்தலால் இத்தமிழையே
				சொன்னவ னியாவனவன் முத்திசித் திகளெலாந்
				தோய்ந்த நெறியேபடித்தீர்
				சொல்லுமென அவர்நீங்கள் சொன்னஅவை யிற்சிறிது
				தோய்ந்தகுண சாந்தனெனவே
				மின்னல்பெற வேசொல்ல அச்சொல்கேட் டடிமைமனம்
				விகசிப்ப தெந்தநாளோ 
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே. 8.
				
				பொற்பினொடு கைகாலில் வள்ளுகிர் படைத்தலால்
				போந்திடை யொடுக்கமுறலால்
				பொலிவான வெண்ணீறு பூசியே அருள்கொண்டு
				பூரித்த வெண்ணீர்மையால்
				எற்பட விளங்குகக னத்திலிமை யாவிழி
				இசைந்துமேல் நோக்கம்உறலால்
				இரவுபக லிருளான கனதந்தி படநூறி
				இதயங் களித்திடுதலால்
				பற்பல விதங்கொண்ட புலிகலையி னுரியது
				படைத்துப்ர தாபமுறலால்
				பனிவெயில்கள் புகுதாமல் நெடியவான் தொடர்நெடிய
				பருமர வனங்களாரும்
				வெற்பினிடை யுறைதலால் தவராச சிங்கமென
				மிக்கோ ருமைப்புகழ்வர்காண்
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே. 9
				
				கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் 
				கற்றும்அறி வில்லாதஎன்
				கர்மத்தை யென்சொல்கேன்மதியையென் சொல்லுகேன்
				கைவல்ய ஞானநீதி
				நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
				நாட்டுவேன் கர்மமொருவன் 
				நாட்டினா லோபழைய ஞானமுக்கியமென்று
				நவிலுவேன் வடமொழியிலே
				வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
				வந்ததா விவகரிப்பேன்
				வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியி
				வசனங்கள் சிறிதுபுகல்வேன்
				வெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த
				வித்தையென் முத்திதருமோ
				வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
				வித்தகச் சித்தர்கணமே. 10.
				
				
				8. ஆனந்தமானபரம்
				
				கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்குமக்
				குணமொன்றும் ஒன்றிலேன்பால்
				கோரமெத் தனைபட்ச பாதமெத் தனைவன்
				குணங்களெத் தனைகொடியபாழ்ங்
				கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக்
				கள்ளமெத் தனையுள்ளசற்
				காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை
				கதிக்கென் றமைத்தஅருளில்
				செல்லாமை யெத்தனைவிர் தாகோட்டி யென்னிலோ
				செல்வதெத் தனைமுயற்சி
				சிந்தையெத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற
				தேகத்தில் வாஞ்சைமுதலாய்
				அல்லாமை யெத்தனை யமைத்தனை யுனக்கடிமை
				யானேன் இவைக்கும் ஆளோ
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 1.
				
				தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ்
				சேர்ந்துவளர் சித்தாகிஅச்
				சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த்
				திரமாகி நானாவிதப்
				பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம்
				புலனுமாய் ஐம்பூதமாய்ப்
				புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப்
				போக்கொடு வரத்துமாகி
				இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி
				இன்றாகி நாளையாகி
				என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய்
				இவையல்ல வாயநின்னை
				அருளாகி நின்றவர்க ளறிவதல் லாலொருவர்
				அறிவதற் கெளிதாகுமோ
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 2.
				
				மாறுபடு தர்க்கந் தொடுக்கஅறி வார்சாண்
				வயிற்றின் பொருட்டதாக
				மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனதுழல
				மாலாகி நிற்கஅறிவார்
				வேறுபடு வேடங்கள் கொள்ளஅறி வாரொன்றை
				மெணமெணென் றகம்வேறதாம்
				வித்தையறி வார்எமைப் போலவே சந்தைபோல்
				மெய்ந்நூல் விரிக்கஅறிவார்
				சீறுபுலி போற்சீறி மூச்சைப் பிடித்துவிழி
				செக்கச் சிவக்கஅறிவார்
				திரமென்று தந்தம் மதத்தையே தாமதச்
				செய்கைகொடும் உளற அறிவார்
				ஆறுசம யங்கடொறும் வேறுவே றாகிவிளை
				யாடுமுனை யாவரறிவார்
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 3.
				
				காயிலை யுதிர்ந்தகனி சருகுபுனல் மண்டிய
				கடும்பசி தனக்கடைத்துங்
				கார்வரையின் முழையிற் கருங்கல்போ லசையாது
				கண்மூடி நெடிதிருந்தும்
				தீயினிடை வைகியுந் தோயமதில் மூழ்கியுந்
				தேகங்கள் என்பெலும்பாய்த்
				தெரியநின் றுஞ்சென்னி மயிர்கள்கூ டாக்குருவி
				தெற்றவெயி லூடிருந்தும்
				வாயுவை யடக்கியு மனதினை யடக்கியு
				மெளனத்தி லேயிருந்தும்
				மதிமண்ட லத்திலே கனல்செல்ல அமுதுண்டு
				வனமூடி ருந்தும் அறிஞர்
				ஆயுமறை முடிவான அருள்நாடி னாரடிமை
				அகிலத்தை நாடல்முறையோ
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 4.
				
				சுத்தமும் அசுத்தமும் துக்கசுக பேதமுந்
				தொந்தமுடன் நிர்த்தொந்தமும்
				ஸ்தூலமொடு சூட்சமமும் ஆசையும் நிராசையுஞ்
				சொல்லுமொரு சொல்லின் முடிவும்
				பெத்தமொடு முத்தியும் பாவமொ டபாவமும்
				பேதமொ டபேதநிலையும்
				பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும்
				பெண்ணினுடன் ஆணும்மற்றும்
				நித்தமும் அநித்தமும் அஞ்சனநி ரஞ்சனமும்
				நிட்களமும் நிகழ்சகளமும்
				நீதியும் அநீதியும் ஆதியோ டநாதியும்
				நிர்விடய விடயவடிவும்
				அத்தனையும் நீயலதெள் அத்தனையும் இல்லையெனில்
				யாங்களுனை யன்றியுண்டோ
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 5.
				
				காராரும் ஆணவக் காட்டைக் களைந்தறக்
				கண்டகங் காரமென்னுங்
				கல்லைப் பிளந்துநெஞ் சகமான பூமிவெளி
				காணத் திருத்திமேன்மேல்
				பாராதி யறியாத மோனமாம் வித்தைப்
				பதித்தன்பு நீராகவே
				பாய்ச்சியது பயிராகு மட்டுமா மாயைவன்
				பறவையணு காதவண்ணம்
				நேராக நின்றுவிளை போகம் புசித்துய்ந்த
				நின்னன்பர் கூட்டமெய்த
				நினைவின் படிக்குநீ முன்னின்று காப்பதே
				நின்னருட் பாரமென்றும்
				ஆராரும் அறியாத சூதான வெளியில்வெளி
				யாகின்ற துரியமயமே
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 6.
				
				வானாதி பூதமாய் அகிலாண்ட கோடியாய்
				மலையாகி வளைகடலுமாய்
				மதியாகி இரவியாய் மற்றுள எலாமாகி
				வான்கருணை வெள்ளமாகி
				நானாகி நின்றவனு நீயாகி நின்றிடவு 
				நானென்ப தற்றிடாதே
				நான்நான் எனக்குளறி நானா விகாரியாய்
				நானறிந் தறியாமையாய்ப்
				போனால் அதிட்டவலி வெல்லஎளி தோபகல்
				பொழுதுபுகு முன்கண்மூடிப்
				பொய்த்துகில்கொள் வான்தனை எழுப்பவச மோஇனிப்
				போதிப்ப தெந்தநெறியை
				ஆனாலும் என்கொடுமை அநியாயம் அநியாயம்
				ஆர்பால் எடுத்துமொழிவேன்
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 7.
				
				பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின்னருள்
				புலப்பட அறிந்துநிலையாப்
				புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மைபோல்
				பொருளலாப் பொருளைநாடும்
				வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன்
				வினையினேன் என்றென்னைநீ
				விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது
				வேறுகதி யேதுபுகலாய்
				துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான
				துணைவனே யிணையொன்றிலாத்
				துரியனே துரியமுங் காணா அதீதனே
				சுருதிமுடி மீதிருந்த
				ஐயனே அப்பனே எனும்அறிஞர் அறிவைவிட்
				டகலாத கருணைவடிவே
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 8.
				
				எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும்என்
				இதயமும் ஒடுங்கவில்லை
				யானெனும் அகந்தைதான் எள்ளளவு மாறவிலை
				யாதினும் அபிமானம்என்
				சித்தமிசை குடிகொண்ட தீகையொ டிரக்கமென்
				சென்மத்து நானறிகிலேன்
				சீலமொடு தவவிரதம் ஒருகனவி லாயினுந்
				தெரிசனங் கண்டும்அறியேன்
				பொய்த்தமொழி யல்லால் மருந்துக்கும் மெய்ம்மொழி
				புகன்றிடேன் பிறர்கேட்கவே
				போதிப்ப தல்லாது சும்மா இருந்தருள்
				பொருந்திடாப் பேதைநானே
				அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா
				அவனிமிசை யுண்டோசொலாய்
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 9.
				
				எக்கால முந்தனக் கென்னவொரு செயலிலா
				ஏழைநீ என்றிருந்திட்
				டெனதாவி யுடல்பொருளும் மெளனியாய் வந்துகை
				ஏற்றுநம தென்றஅன்றே
				பொய்க்கால தேசமும் பொய்ப்பொருளில் வாஞ்சையும் 
				பொய்யுடலை மெய்யென்னலும்
				பொய்யுறவு பற்றலும் பொய்யாகு நானென்னல்
				பொய்யினும் பொய்யாகையால்
				மைக்கா லிருட்டனைய இருளில்லை இருவினைகள்
				வந்தேற வழியுமில்லை
				மனமில்லை யம்மனத் தினமில்லை வேறுமொரு
				வரவில்லை போக்குமில்லை
				அக்காலம் இக்கால மென்பதிலை எல்லாம்
				அதீதமய மானதன்றோ
				அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
				ஆனந்த மானபரமே. 10.
				
				9. சுகவாரி
				
				இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன்
				எனருசித் திடவலியவந்
				தின்பங்கொ டுத்தநினை எந்நேர நின்னன்பர்
				இடையறா துருகிநாடி
				உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும்
				ஓய்ந்துயர்ந் தவசமாகி
				உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே
				உணர்வார்கள் உள்ளபடிகாண்
				கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினுங்
				கைக்கொள்வள் பக்குவத்தில்
				கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக்
				கருதிநகை யாவளதுபோல்
				சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை
				தோற்றிற் சுகாரம்பமாஞ்
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 1.
				
				அன்பின்வழி யறியாத என்னைத் தொடர்ந்தென்னை
				அறியாத ப்க்குவத்தே
				ஆசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்துநான்
				அற்றேன் அலந்தேன்என
				என்புலன் மயங்கவே பித்தேற்றி விட்டாய்
				இரங்கியொரு வழியாயினும்
				இன்பவெள மாகவந் துள்ளங் களிக்கவே
				எனைநீ கலந்ததுண்டோ
				தன்பருவ மலருக்கு மணமுண்டு வண்டுண்டு
				தண்முகை தனக்குமுண்டோ
				தமியனேற் கிவ்வணந் திருவுள மிரங்காத
				தன்மையால் தனியிருந்து
				துன்பமுறி னெங்ஙனே யழியாத நின்னன்பர்
				சுகம்வந்து வாய்க்கும்உரையாய்
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 2. 
				
				கல்லேனும் ஐயவொரு காலத்தில் உருகுமென்
				கல்நெஞ்சம் உருகவிலையே
				கருணைக் கிணங்காத வன்மையையும் நான்முகன்
				கற்பிக்க வொருகடவுளோ
				வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு
				வழக்குக் கிழுக்குமுண்டோ
				வானமாய் நின்றின்ப மழையா யிறங்கிஎனை
				வாழ்விப்ப துன்பரங்காண்
				பொல்லாத சேயெனில் தாய்தள்ளல் நீதமோ
				புகலிடம் பிறிதுமுண்டோ
				பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட் கயலுமாய்ப்
				புன்மையே னாவனந்தோ
				சொல்லால் முழக்கிலோ சுகமில்லை மெளனியாய்ச்
				சும்மா இருக்கஅருளாய்
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 3.
				
				என்பெலாம் நெக்குடைய ரோமஞ் சிலிர்ப்பஉடல் 
				இளகமன தழலின்மெழுகாய்
				இடையறா துருகவரு மழைபோ லிரங்கியே
				இருவிழிகள் நீரிறைப்ப
				அன்பினால் மூர்ச்சித்த அன்பருக் கங்ஙனே
				அமிர்தசஞ் சீவிபோல்வந்
				தானந்த மழைபொழிவை உள்ளின்பி லாதஎனை
				யார்க்காக அடிமைகொண்டாய்
				புன்புலால் மயிர்தோல் நரம்பென்பு மொய்த்திடு
				புலைக்குடிலில் அருவருப்புப்
				பொய்யல்ல வேஇதனை மெய்யென்று நம்பிஎன்
				புந்திசெலு மோபாழிலே
				துன்பமா யலையவோ உலகநடை ஐயவொரு
				சொற்பனத் திலும்வேண்டிலேன்
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 4. 
				
				வெந்நீர் பொறாதென்உடல் காலில்முள் தைக்கவும்
				வெடுக்கென் றசைத்தெடுத்தால்
				விழிஇமைத் தங்ஙனே தண்ணருளை நாடுவேன்
				வேறொன்றை யொருவர்கொல்லின்
				அந்நேரம் ஐயோஎன் முகம்வாடி நிற்பதுவும்
				ஐயநின் னருள் அறியுமே
				ஆனாலும் மெத்தப் பயந்தவன் யான்என்னை
				ஆண்டநீ கைவிடாதே
				இந்நேர மென்றிலை உடற்சுமைய தாகவும்
				எடுத்தா லிறக்கஎன்றே
				எங்கெங்கு மொருதீர்வை யாயமுண் டாயினும்
				இறைஞ்சுசுக ராதியான
				தொன்னீர்மை யாளர்க்கு மானுடன் வகுத்தஅருள்
				துணையென்று நம்புகின்றேன்
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 5.
				
				பற்றுவன அற்றிடு நிராசையென் றொருபூமி
				பற்றிப் பிடிக்கும்யோகப்
				பாங்கிற் பிராணலயம் என்னுமொரு பூமிஇவை
				பற்றின்மன மறும்என்னவே
				கற்றையஞ் சடைமெளனி தானே கனிந்தகனி
				கனிவிக்க வந்தகனிபோல்
				கண்டதிந் நெறியெனத் திருவுளக் கனிவினொடு
				கனிவாய் திறந்தும் ஒன்றைப்
				பெற்றவனு மல்லேன் பெறாதவனு மல்லேன்
				பெருக்கத் தவித்துளறியே
				பெண்ணீர்மை என்னஇரு கண்ணீ ரிறைத்துநான்
				பேய்போ லிருக்கஉலகஞ்
				சுற்றிநகை செய்யவே யுலையவிட் டாயெனில்
				சொல்லஇனி வாயுமுண்டோ
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 6.
				
				அரும்பொனே மணியேஎன் அன்பேஎன் அன்பான
				அறிவேஎன் அறிவிலூறும்
				ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்
				ஆடினேன் நாடிநாடி
				விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன்
				மெய்சிலிர்த் திருகைகூப்பி
				விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே
				வேசற றயர்ந்தேனியான்
				இரும்புநேர் நெஞ்சகக் கள்வனா னாலும்உனை
				இடைவிட்டு நின்றதுண்டோ
				என்றுநீ யன்றுயான் உன்னடிமை யல்லவோ
				யாதேனும் அறியாவெறுந்
				துரும்பனேன் என்னினுங் கைவிடுதல் நீதியோ
				தொண்டரொடு கூட்டுகண்டாய்
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 7.
				
				பாராதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற
				பரவெளியி நுண்மைகாட்டிப்
				பற்றுமன வெளிகாட்டி மனவெளியி னில்தோய்ந்த
				பாவியேன் பரிசுகாட்டித்
				தாராள மாய்நிற்க நிர்ச்சந்தை காட்டிச்
				சதாகால நிட்டைஎனவே
				சகநிலை காட்டினை சுகாதீத நிலயந்
				தனைக்காட்ட நாள்செல்லுமோ
				காரார எண்ணரும் அனந்தகோ டிகள்நின்று
				காலூன்றி மழைபொழிதல்போல்
				கால்வீசி மின்னிப் படர்ந்துபர வெளியெலாங்
				கம்மியா னந்தவெள்ளஞ்
				சோராது பொழியவே கருணையின் முழங்கியே
				தொண்டரைக் கூவுமுகிலே
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 8.
				
				பேதித்த சமயமோ ஒன்றுசொன படியொன்று
				பேசாது துறவாகியே
				பேசாத பெரியோர்கள் நிருவிகற் பத்தினால்
				பேசார்கள் பரமகுருவாய்ப்
				போதிக்கும் முக்கண்இறை நேர்மையாய்க் கைக்கொண்டு
				போதிப்ப தாச்சறிவிலே
				போக்குவர வறஇன்ப நீக்கமற வசனமாப்
				போதிப்ப தெவரையனே
				சாதித்த சாதனமும் யோகியர்கள் நமதென்று
				சங்கிப்ப ராதலாலே
				தன்னிலே தானா யயர்ந்துவிடு வோமெனத்
				தனியிருந் திடினங்ஙனே
				சோதிக்க மனமாயை தனைஏவி னாலடிமை
				சுகமாவ தெப்படிசொலாய்
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 9.
				
				அண்டமுடி தன்னிலோ பகிரண்ட மதனிலோ
				அலரிமண் டலநடுவிலோ
				அனல்நடுவி லோஅமிர்த மதநடுவி லோஅன்பர்
				அகமுருகி மலர்கள்தூவித்
				தெண்டமிட வருமூர்த்தி நிலையிலோ திக்குத்
				திகந்தத்தி லோவெளியிலோ
				திகழ்விந்து நாசநிலை தன்னிலோ வேதாந்த
				சித்தாந்த நிலைதன்னிலோ
				கண்டபல பொருளிலோ காணாத நிலையெனக்
				கண்டசூ னியமதனிலோ
				காலமொரு மூன்றிலோ பிறவிநிலை தன்னிலோ
				கருவிகர ணங்களோய்ந்த
				தொண்டர்க ளிடத்திலோ நீவீற் றிருப்பது
				தொழும்பனேற் குளவுபுகலாய்
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 10. 
				
				எந்தநாள் கருணைக் குரித்தாகு நாளெனவும்
				என்னிதயம் எனைவாட்டுதே
				ஏதென்று சொல்லுவேன் முன்னொடுபின் மலைவறவும்
				இற்றைவரை யாதுபெற்றேன்
				பந்தமா னதிலிட்ட மெழுகாகி உள்ளம்
				பதைத்துப் பதைத்துருகவோ
				பரமசுக மானது பொருப்பரிய துயரமாய்ப்
				பலகாலு மூர்ச்சிப்பதோ
				சிந்தையா னதுமறிவை என்னறிவி லறிவான
				தெய்வம்நீ யன்றியுளதோ
				தேகநிலை யல்லவே உடைகப்பல் கப்பலாய்த்
				திரையாழி யூடுசெலுமோ
				சொந்தமா யாண்டநீ அறியார்கள் போலவே
				துன்பத்தி லாழ்த்தல்முறையோ
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 11. 
				
				எந்நாளும் உடலிலே உயிராம் உனைப்போல்
				இருக்கவிலை யோமனதெனும்
				யானுமென் நட்பாம் பிராணனும் எமைச்சடம
				தென்றுனைச் சித்தென்றுமே
				அந்நாளி லெவனோ பிரித்தான் அதைக்கேட்ட
				அன்றுமுதல் இன்றுவரையும்
				அநியாய மாயெமை யடக்கிக் குறுக்கே
				அடர்ந்தரசு பண்ணிஎங்கள்
				முன்னாக நீஎன்ன கோட்டைகொண் டாயென்று
				மூடமன மிகவும்ஏச
				மூண்டெரியும் அனலிட்ட மெழுகா யுளங்கருகல்
				முறைமையோ பதினாயிரஞ்
				சொன்னாலும் நின்னரு ளிரங்கவிலை யேஇனிச்
				சுகம்வருவ தெப்படிசொலாய்
				சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
				சோதியே சுகவாரியே. 12. 
				
				10. எங்கு நிறைகின்ற பொருள்
				
				அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
				ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
				அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
				அறிந்தார்கள் அறியார்களார்
				மெளனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
				வாயாய்ப் பிதற்றுமவரார்
				மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
				வன்மையொ டிரக்கமெங்கே
				புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம்
				பூதபே தங்களெவிடம்
				பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு
				பொறைபொறா மையுமெவ்விடம்
				எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர்
				யாதுமுனை யன்றியுண்டோ
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.1.
				
				அன்னே யனேயெனுஞ் சிலசமயம் நின்னையே
				ஐயாஐயா என்னவே
				அலறிடுஞ் சிலசமயம் அல்லாது பேய்போல
				அலறியே யொன்றும் இலவாய்ப்
				பின்னேதும் அறியாம லொன்றைவிட் டொன்றைப்
				பிதற்றிடுஞ் சிலசமயமேல்
				பேசரிய ஒளியென்றும் வெளியென்றும் நாதாதி
				பிறவுமே நிலயமென்றுந் 
				தன்னே ரிலாததோ ரணுவென்றும் மூவிதத்
				தன்மையாங் காலமென்றுஞ்
				சாற்றிடுஞ் சிலசமயம் இவையாகி வேறதாய்ச்
				சதாஞான ஆனந்தமாய்
				என்னே யெனேகருணை விளையாட் டிருந்தவா
				றெம்மனோர் புகலஎளிதோ
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.2. 
				
				வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல்
				வேறுமுள கலைகளெல்லாம்
				மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே
				விரிவா யெடுத்துரைக்கும்
				ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை
				உண்டுபணு ஞானமாகும்
				ஊகம்அனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ
				துலகவா திகள்சம்மதம்
				ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போதும்
				யாதொன்று பாவிக்கநான்
				அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின்
				அத்துவித மார்க்கமுறலாம்
				ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்செய்
				எந்தைநீ குறையுமுண்டோ
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.3. 
				
				சொல்லான திற்சற்றும் வாராத பிள்ளையைத்
				தொட்டில்வைத் தாட்டிஆட்டித்
				தொடையினைக் கிள்ளல்போற் சங்கற்ப மொன்றில்
				தொடுக்குந் தொடுத்தழிக்கும்
				பொல்லாத வாதனை எனும்சப்த பூமியிடை
				போந்துதலை சுற்றியாடும்
				புருஷனி லடங்காத பூவைபோல் தானே
				புறம்போந்து சஞ்சரிக்கும்
				கல்லோ டிரும்புக்கு மிகவன்மை காட்டிடுங்
				காணாது கேட்ட எல்லாங்
				கண்டதாக காட்டியே அணுவாச் சுருக்கிடுங்
				கபடநா டகசாலமோ
				எல்லாமும் வலதிந்த மனமாயை ஏழையாம்
				என்னா லடக்கவசமோ
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.4. 
				
				கண்ணார நீர்மல்கி யுள்ளநெக் குருகாத
				கள்ளனே னானாலுமோ
				கைகுவித் தாடியும் பாடியும் விடாமலே
				கண்பனித் தாரைகாட்டி
				அண்ணா பரஞ்சோதி யப்பா உனக்கடிமை
				யானெனவு மேலெழுந்த
				அன்பாகி நாடக நடித்ததோ குறைவில்லை
				அகிலமுஞ் சிறிதறியுமேல்
				தண்ணாரு நின்னதரு ளறியாத தல்லவே
				சற்றேனும் இனிதிரங்கிச்
				சாசுவத முத்திநிலை ஈதென் றுணர்த்தியே
				சகநிலை தந்துவேறொன்
				றெண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கவே
				ஏழையேற் கருள்செய்கண்டாய்
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.5.
				
				காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு
				கல்லின்முன் னெதிர்நிற்குமோ
				கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின்
				கருணைப்ர வாகஅருளைத்
				தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ
				தமியனேற் கருள்தாகமோ
				சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ்
				சங்கேத மாய்க்கூடியே
				தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள்
				சேராமல் யோகமார்க்க
				சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்கும்என்
				சிந்தைக்கும் வெகுதூரம்நான்
				ஏகமாய் நின்னோ டிருக்குநா ளெந்தநாள்
				இந்நாளில் முற்றுறாதோ
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.6.
				
				ஒருமைமன தாகியே அல்லலற நின்னருளில்
				ஒருவன்நான் வந்திருக்கின்
				உலகம் பொறாததோ மாயாவிசித்ரமென
				ஓயுமோ இடமில்லையோ
				அருளுடைய நின்னன்பர் சங்கைசெய் திடுவரோ
				அலதுகிர்த் தியகர்த்தராய்
				அகிலம் படைத்தெம்மை யாள்கின்ற பேர்சிலர்
				அடாதென்பரோ அகன்ற
				பெருமைபெறு பூரணங் குறையுமோ பூதங்கள்
				பேய்க்கோல மாய்விதண்டை
				பேசுமோ அலதுதான் பரிபாக காலம்
				பிறக்கவிலை யோதொல்லையாம்
				இருமைசெறி சடவினை எதிர்த்துவாய் பேசுமோ
				ஏதுளவு சிறிதுபுகலாய்
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.7.
				
				நில்லாது தேகமெனும் நினைவுண்டு தேகநிலை
				நின்றிடவும் மெளனியாகி
				நேரே யுபாயமொன் றருளினை ஐயோஇதனை
				நின்றனுட் டிக்க என்றால்
				கல்லாத மனமோ வொடுங்கியுப ரதிபெறக்
				காணவிலை யாகையாலே
				கையேற் றுணும்புசிப் பொவ்வாதெந் நாளும்உன்
				காட்சியிலிருந்து கொண்டு
				வல்லாள ராய்இமய நியமாதி மேற்கொண்ட
				மாதவர்க் கேவல்செய்து
				மனதின் படிக்கெலாஞ் சித்திபெற லாஞானம்
				வாய்க்குமொரு மனுவெனக்கிங்
				கில்லாமை யொன்றினையும் இல்லாமை யாக்கவே
				இப்போ திரங்குகண்டாய்
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.8.
				
				மரவுரி யுடுத்துமலை வனநெற் கொறித்துமுதிர்
				வனசருகு வாயில்வந்தால்
				வன்பசி தவிர்த்தும்அனல் வெயிலாதி மழையால்
				வருந்தியு மூலஅனலைச்
				சிரமள வெழுப்பியும் நீரினிடை மூழ்கியுந்
				தேகநம தல்லவென்று
				சிற்சுக அபேஷையாய் நின்னன்பர் யோகஞ்
				செலுத்தினார் யாம்பாவியேம்
				விரவும்அறு சுவையினோடு வேண்டுவ புசித்தரையில்
				வேண்டுவ எலாமுடுத்து
				மேடைமா ளிகையாதி வீட்டினிடை வைகியே
				வேறொரு வருத்தமின்றி
				இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம்
				எப்படிப் பிழைப்பதுரையாய்
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.9.
				
				முத்தனைய மூரலும் பவளவா யின்சொலும்
				முகத்திலகு பசுமஞ்சளும்
				மூர்ச்சிக்க விரகசன் னதமேற்ற இருகும்ப
				முலையின்மணி மாலைநால
				வைத்தெமை மயக்கிஇரு கண்வலையை வீசியே
				மாயா விலாசமோக
				வாரிதியி லாழ்த்திடும் பாழான சிற்றிடை
				மடந்தையர்கள் சிற்றின்பமோ
				புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத
				பொன்னாட்டும் வந்ததென்றால்
				போராட்ட மல்லவோ பேரின்ப முத்திஇப்
				பூமியி லிருந்துகாண
				எத்தனை விகாதம்வரும் என்றுசுகர் சென்றநெறி
				இவ்வுலகம் அறியாததோ
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.10.
				
				உன்னிலையும் என்னிலையும் ஒருநிலை யெனக்கிடந்
				துளறிடும் அவத்தையாகி
				உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண்
				டொளிக்கின்ற இருளென்னவே
				தன்னிலைமை காட்டா தொருங்கஇரு வினையினால்
				தாவுசுக துக்கவேலை
				தட்டழிய முற்றுமில் லாமாயை யதனால்
				தடித்தகில பேதமான
				முன்னிலை யொழிந்திட அகண்டிதா காரமாய்
				மூதறிவு மேலுதிப்ப
				முன்பினொடு கீழ்மேல் நடுப்பாக்கம் என்னாமல்
				முற்றுமா னந்தநிறைவே
				என்னிலைமை யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம்
				எந்நாளும் வாழிவாழி
				இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
				எங்குநிறை கின்றபொருளே.11.
				
				11. சச்சிதானந்தசிவம்
				
				பாராதி ககனப் பரப்புமுண் டோவென்று
				படர்வெளிய தாகிஎழுநாப்
				பரிதிமதி காணாச் சுயஞ்சோதி யாய்அண்ட
				பகிரண்ட உயிரெவைக்கும்
				நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய்
				நித்தமாய் நிர்த்தொந்தமாய்
				நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத
				நிர்மலா னந்தமயமாய்ப்
				பேராது நிற்றிநீ சும்மா இருந்துதான்
				பேரின்ப மெய்திடாமல்
				பேய்மனதை ய்ண்டியே தாயிலாப் பிள்ளைபோல்
				பித்தாக வோமனதைநான்
				சாராத படியறிவின் நிருவிகற் பாங்கமாஞ்
				சாசுவத நிட்டைஅருளாய்
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.1.
				
				குடக்கொடு குணக்காதி திக்கினை யுழக்கூடு
				கொள்ளல்போல் ஐந்துபூதங்
				கூடஞ் சுருங்கிலைச் சாலேகம் ஒன்பது
				குலாவுநடை மனையைநாறும்
				வடக்கயிறு வெள்நரம் பாஎன்பு தசையினால்
				மதவேள் விழாநடத்த
				வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர்செந் நீர்கணீர்
				மலநீர்புண் நீரிறைக்கும்
				விடக்குத் துருத்தியைக் கருமருந்துக் கூட்டை
				வெட்டவெட் டத்தளிர்க்கும்
				வேட்கைமரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே
				மெய்போ லிருந்துபொய்யாஞ்
				சடக்கைச் சடக்கெனச் சதமென்று சின்மயந்
				தானாகி நிற்பதென்றோ
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.2.
				
				பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ
				பத்திநெறி யில்லைவேத
				பாராய ணப்பனுவல் மூவர்செய் பனுவலது
				பகரவோ இசையுமில்லை
				யோகத்தி லேசிறிது முயலவென் றால்தேகம்
				ஒவ்வாதி வூண்வெறுத்தால்
				உயிர்வெறுத் திடலொக்கும் அல்லாது கிரியைகள்
				உபாயத்தி னாற்செய்யவோ
				மோகத்தி லேசிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான
				மோனத்தில் நிற்கஎன்றால்
				முற்றாது பரிபாக சத்திக ளனேகநின்
				மூதறிவி லேஎழுந்த
				தாகத்தி லேவாய்க்கும் அமிர்தப் பிரவாகமே
				தன்னந் தனிப்பெருமையே
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.3.
				
				இமையளவு போதையொரு கற்பகா லம்பண்ணும்
				இவ்வுலகம் எவ்வுலகமோ
				என்றெண்ணம் வருவிக்கும் மாதர்சிற் றின்பமோ
				என்னில்மக மேருவாக்கிச்
				சுமையெடுமி னென்றுதான் சும்மாடு மாயெமைச்
				சுமையாளு மாக்கிநாளுந்
				துர்ப்புத்தி பண்ணியுள நற்புத்தி யாவையுஞ்
				சூறையிட் டிந்த்ரசாலம்
				அமையவொரு கூத்துஞ் சமைந்தாடு மனமாயை
				அம்மம்ம வெல்லலெளிதோ
				அருள்பெற்ற பேர்க்கெலாம் ஒளிபெற்று நிற்குமீ
				தருளோ அலாதுமருளோ
				சமயநெறி காணாத சாட்சிநீ சூட்சுமமாத்
				தமியனேற் குளவு புகலாய்
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.4.
				
				இனியே தெமக்குனருள் வருமோ வெனக்கருதி
				ஏங்குதே நெஞ்சம்ஐயோ
				இன்றைக் கிருந்தாரை நாளைக்கி ருப்பரென்
				றெண்ணவோ திடமில்லையே
				அனியாய மாயிந்த வுடலைநான் என்றுவரும்
				அந்தகற் காளாகவோ
				ஆடித் திரிந்துநான் கற்றதுங் கேட்டதும்
				அவலமாய்ப் போதல்நன்றோ
				கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு
				கந்தமூ லங்களேனும்
				கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்துநான்
				கண்மூடி மெளனியாகித்
				தனியே இருப்பதற் கெண்ணினேன் எண்ணமிது
				சாமிநீ அறியாததோ
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.5.
				
				மத்தமத கரிமுகிற் குலமென்ன நின்றிலகு
				வாயிலுடன் மதிஅகடுதோய்
				மாடகூ டச்சிகர மொய்த்தசந் திரகாந்த
				மணிமேடை யுச்சிமீது
				முத்தமிழ் முழக்கமுடன் முத்தநகை யார்களொடு
				முத்துமுத் தாய்க்குலாவி
				மோகத் திருந்துமென் யோகத்தின் நிலைநின்று
				மூச்சைப் பிடித்தடைத்துக்
				கைத்தல நகப்படை விரித்தபுலி சிங்கமொடு
				கரடிநுழை நூழைகொண்ட
				கானமலை யுச்சியிற் குகையூ டிருந்துமென்
				கரதலா மலகமென்னச்
				சத்தமற மோனநிலை பெற்றவர்க ளுய்வர்காண்
				சனகாதி துணிவிதன்றோ
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.6.
				
				கைத்தலம் விளங்குமொரு நெல்லியங் கனியெனக்
				கண்டவே தாகமத்தின்
				காட்சிபுரு டார்த்தமதில் மாட்சிபெறு முத்தியது
				கருதின் அனு மானமாதி
				உத்திபல வாநிரு விகற்பமே லில்லையால்
				ஒன்றோ டிரண்டென்னவோ
				உரையுமிலை நீயுமிலை நானுமிலை என்பதும்
				உபாயம்நீ யுண்டுநானுஞ்
				சித்தம்உளன் நான்இல்லை எனும்வசனம் நீயறிவை
				தெரியார்கள் தெரியவசமோ
				செப்புகே வலநீதி யொப்புவமை யல்லவே
				சின்முத்தி ராங்கமரபில்
				சத்தமற எனையாண்ட குருமெளனி கையினால்
				தமியனேற் குதவுபொருளே
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.7.
				
				காயாத மரமீது கல்லேறு செல்லுமோ
				கடவுள்நீ யாங்களடியேங்
				கர்மபந் தத்தினாற் சன்மபந் தம்பெறக்
				கற்பித்த துன்னதருளே
				வாயார வுண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர்
				வைவதுவும் எங்களுலக
				வாய்பாடு நிற்கநின் வைதிக ஒழுங்குநினை
				வாழ்த்தினாற் பெறுபேறுதான்
				ஓயாது பெறுவரென முறையிட்ட தாற்பின்னர்
				உளறுவது கருமமன்றாம்
				உபயநெறி யீதென்னின் உசிதநெறி எந்தநெறி
				உலகிலே பிழைபொருக்குந்
				தாயான கருணையும் உனக்குண் டெனக்கினிச்
				சஞ்சலங் கெடஅருள்செய்வாய்
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.8.
				
				இன்னம் பிறப்பதற் கிடமென்னில் இவ்வுடலம்
				இறவா திருப்பமூலத்
				தெழுமங்கி யமிர்தொழுகு மதிமண் டலத்திலுற
				என்னம்மை குண்டலினிபால்
				பின்னம் பிறக்காது சேயென வளர்த்திடப்
				பேயேனை நல்கவேண்டும்
				பிறவாத நெறியெனக் குண்டென்னின் இம்மையே
				பேசுகர்ப் பூரதீபம்
				மின்னும் படிக்ககண் டாகார அன்னைபால்
				வினையேனை யொப்புவித்து
				வீட்டுநெறி கூட்டிடுதல் மிகவுநன் றிவையன்றி
				விவகார முண்டென்னிலோ
				தன்னந் தனிச்சிறியன் ஆற்றிலேன் போற்றிவளர்
				சன்மார்க்க முத்திமுதலே
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.9.
				
				வேதாவை இவ்வணம் விதித்ததே தென்னின்உன்
				வினைப்பகுதி என்பன்அந்த
				வினைபேச அறியாது நிற்கஇவை மனதால்
				விளைந்ததால் மனதைநாடில்
				போதமே நிற்கும்அப் போதத்தை நாடிலோ
				போதமும் நினால்விளக்கம்
				பொய்யன்று தெய்வமறை யாவுமே நீயென்று
				போக்குவர வறநிகழ்த்தும்
				ஆதார ஆதேயம் முழுதுநீ யாதலால்
				அகிலமீ தென்னைஆட்டி
				ஆடல்கண் டவனுநீ ஆடுகின் றவனுநீ
				அருளுநீ மெளனஞான
				தாதாவு நீபெற்ற தாய்தந்தை தாமுநீ
				தமருநீ யாவுநீகாண்
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.10.
				
				கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினுங்
				குளிர்தீம் புனற்கைஅள்ளிக்
				கொள்ளுகினும் அந்நீ ரிடைத்திளைத் தாடினுங்
				குளிர்சந்த வாடைமடவார்
				வந்துலவு கின்றதென மூன்றிலிடை யுலவவே
				வசதிபெறு போதும்வெள்ளை
				வட்டமதி பட்டப் பகற்போல நிலவுதர
				மகிழ்போதும் வேலையமுதம்
				விந்தைபெற அறுசுவையில் வந்ததென அமுதுண்ணும்
				வேளையிலும் மாலைகந்தம்
				வெள்ளிலை அடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம்
				விளையாடி விழிதுயிலினுஞ்
				சந்ததமும் நின்னருளை மறவா வரந்தந்து
				தமியேனை ரட்சைபுரிவாய்
				சர்வபரி பூரண அகண்டதத் துவமான
				சச்சிதா னந்தசிவமே.11.
				
				12. தேசோ மயானந்தம்
				
				மருமலர்ச் சோலைசெறி நன்னீழல் மலையாதி
				மன்னுமுனி வர்க்கேவலமாய்
				மந்த்ரமா லிகைசொல்லும் இயமநிய மாதியாம்
				மார்க்கத்தில் நின்றுகொண்டு
				கருமருவு காயத்தை நிர்மலம தாகவே
				கமலாச னாதிசேர்த்துக்
				காலைப் பிடித்தனலை அம்மைகுண் டலியடிக்
				கலைமதியி னூடுதாக்கி
				உருகிவரும் அமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல்
				உணர்வான விழியைநாடி
				ஒன்றோ டிரண்டெனாச் சமரச சொரூபசுகம்
				உற்றிடஎன் மனதின் வண்ணந்
				திருவருள் முடிக்கஇத் தேகமொடு காண்பனோ
				தேடரிய சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 1.
				
				இப்பிறவி என்னுமோர் இருட்கடலில் மூழ்கிநான்
				என்னுமொரு மகரவாய்ப்பட்
				டிருவினை எனுந்திரையின் எற்றுண்டு புற்புதம்
				எனக்கொங்கை வரிசைகாட்டுந்
				துப்பிதழ் மடந்தையர் மயற்சண்ட மாருதச்
				சுழல்வந்து வந்தடிப்பச்
				சோராத ஆசையாங் கானாறு வான்நதி
				சுரந்ததென மேலும்ஆர்ப்பக்
				கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமுங்
				கைவிட்டு மதிமயங்கிக்
				கள்ளவங் கக்காலர் வருவரென் றஞ்சியே
				கண்ணருவி காட்டும்எளியேன்
				செப்பரிய முத்தியாங் கரைசேர வுங்கருணை
				செய்வையோ சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 2.
				
				தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ்
				சந்தையிற் கூட்டம் இதிலோ
				சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை
				சதுரங்க சேனையுடனே
				வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம்
				வஞ்சனை பொறாமைலோபம்
				வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ
				வஞ்சனையி லாதகனவே
				எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே
				இரவுபக லில்லாவிடத்
				தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே
				யானென்ப தறவுமூழ்கிச்
				சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ
				தேடரிய சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 3.
				
				ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல்விசை
				அடங்கி மனம்வீழநேரே
				அறியாமை யாகின்ற இருளகல இருளொளியும்
				அல்லா திருந்தவெளிபோல்
				கோடா தெனைக்கண் டெனக்குள்நிறை சாந்தவெளி
				கூடிஇன் பாதீதமுங்
				கூடினே னோசரியை கிரியையில் முயன்றுநெறி
				கூடினே னோஅல்லன்யான்
				ஈடாக வேயாறு வீட்டினில் நிரம்பியே
				இலகிவளர் பிராணனென்னும்
				இருநிதி யினைக்கட்டி யோகபர னாகாமல்
				ஏழைக் குடும்பனாகித்
				தேடா தழிக்கவொரு மதிவந்த தென்கோலோ
				தேடரிய சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 4.
				
				பாடாது பாடிப் படித்தளவில் சமயமும்
				பஞ்சுபடு சொல்லன்இவனைப்
				பார்மினோ பார்மினோ என்றுசபை கூடவும்
				பரமார்த்தம் இதுஎன்னவே
				ஆடாதும் ஆடிநெஞ் சுருகிநெக் காடவே
				அமலமே ஏகமேஎம்
				ஆதியே சோதியே எங்குநிறை கடவுளே
				அரசே எனக்கூவிநான்
				வாடாது வாடுமென் முக வாட்டமுங்கண்டு
				வாடா எனக்கருணைநீ
				வைத்திடா வண்ணமே சங்கேத மாவிந்த
				வன்மையை வளர்ப்பித்ததார்
				தேடாது தேடுவோர் தேட்டற்ற தேட்டமே
				தேடரிய சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 5.
				
				பிரியாத தண்ணருட் சிவஞானி யாய்வந்து
				பேசரிய வாசியாலே
				பேரின்ப உண்மையை அளித்தனைஎன் மனதறப்
				பேரம்ப லக்கடவுளாய்
				அறிவா யிருந்திடும் நாதவொலி காட்டியே
				அமிர்தப்ர வாகசித்தி
				அருளினைய லாதுதிரு அம்பலமு மாகிஎனை
				ஆண்டனைபின் எய்திநெறியாய்க்
				குறிதா னளித்தனைநன் மரவுரிகொ ளந்தணக்
				கோலமாய் அசபாநலங்
				கூறினபின் மெளனியாய்ச் சும்மா இருக்கநெறி
				கூட்டினை எலாமிருக்கச்
				சிறியேன் மயங்கிமிக அறிவின்மை யாவனோ
				தேடரிய சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 6.
				
				ஆரா ரெனக்கென்ன போதித்தும் என்னஎன்
				அறிவினை மயக்கவசமோ
				அண்டகோ டிகளெலாங் கருப்பஅறை போலவும்
				அடுக்கடுக் காஅமைத்துப்
				பேராமல் நின்றபர வெளியிலே மனவெளி
				பிறங்குவத லாதொன்றினும்
				பின்னமுற மருவாது நன்னயத் தாலினிப்
				பேரின்ப முத்திநிலையுந்
				தாராது தள்ளவும் போகாது னாலது
				தள்ளினும் போகேனியான்
				தடையேது மில்லையாண் டவனடிமை யென்னுமிரு
				தன்மையிலும் என்வழக்குத்
				தீராது விடுவதிலை நடுவான கடவுளே
				தேடரிய சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 7.
				
				கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங்
				கரடிவெம் புலிவாயையுங்
				கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்
				கட்செவி எடுத்தாட்டலாம்
				வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
				வேதித்து விற்றுண்ணலாம்
				வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
				விண்ணவரை ஏவல்கொளலாஞ்
				சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
				சரீரத்தி னும்புகுதலாஞ்
				சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்
				தன்னிகரில் சித்திபெறலாம்
				சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
				திறமரிது சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 8.
				
				எல்லாம் அறிந்தவரும் ஏதுமறி யாதவரும்
				இல்லையெனு மிவ்வுலகமீ
				தேதுமறி யாதவ னெனப்பெயர் தரித்துமிக
				ஏழைக்குள் ஏழையாகிக்
				கல்லாத அறிவிற் கடைப்பட்ட நான்அன்று
				கையினால் உண்மைஞானங்
				கற்பித்த நின்னருளி னுக்கென்ன கைம்மாறு
				காட்டுவேன் குற்றேவல்நான்
				அல்லார்ந்த மேனியொடு குண்டுகட் பிறைஎயிற்
				றாபாச வடிவமான
				அந்தகா நீயொரு பகட்டாற் பகட்டுவ
				தடாதடா காசுநம்பால்
				செல்லா தடாஎன்று பேசுவா யதுதந்த
				செல்வமே சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 9.
				
				மின்போலும் இடையொடியும் ஒடியுமென மொழிதல்போல்
				மெனசிலம் பொலிகளார்ப்ப
				வீங்கிப் புடைத்துவிழ சுமையன்ன கொங்கைமட
				மின்னார்கள் பின்ஆவலால்
				என்போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள்
				இருவர்களில் ஒருவருண்டோ
				என்செய்கேன் அம்மம்ம என்பாவம் என்கொடுமை
				ஏதென் றெடுத்துமொழிவேன்
				அன்பால் வியந்துருகி அடியற்ற மரமென்ன
				அடியிலே வீழ்ந்துவீழ்ந்தெம்
				அடிகளே யுமதடிமை யாங்களெனு நால்வருக்
				கறமாதி பொருளுரைப்பத்
				தென்பாலின் முகமாகி வடவா லிருக்கின்ற
				செல்வமே சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 10.
				
				புத்தமிர்த போகமுங் கற்பகநன் னீழலில்
				பொலிவுற இருக்குமியல்பும்
				பொன்னுலகி லயிரா வதத்தேறு வரிசையும்
				பூமண்ட லாதிக்கமும்
				மத்தவெறி யினர்வேண்டும் மாலென்று தள்ளவும்எம்
				மாலுமொரு சுட்டும் அறவே
				வைக்கின்ற வைப்பாளன் மெளனதே சிகனென்ன
				வந்தநின் னருள்வழிகாண்
				சுத்தபரி பூரண அகண்டமே ஏகமே
				சுருதிமுடி வானபொருளே
				சொல்லரிய வுயிரினிடை யங்கங்கு நின்றருள்
				சுரந்துபொரு கருணைமுகிலே
				சித்திநிலை முத்திநிலை விளைகின்ற பூமியே
				தேடரிய சத்தாகிஎன்
				சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
				தேசோ மயானந்தமே. 11.
				
				13. சிற்சுகோதய விலாசம்
				
				காக மோடுகழு கலகை நாய்நரிகள்
				சுற்று சோறிடு துருத்தியைக்
				காலி ரண்டுநவ வாசல் பெற்றுவளர்
				காமவேள் நடன சாலையை
				போகஆசைமுறி யிட்ட பெட்டியைமும்
				மலமி குந்தொழுகு கேணியை
				மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை
				முடங்க லார்கிடை சரக்கினை
				மாக இந்த்ரதனு மின்னை யொத்திலக
				வேதம் ஓதியகு லாலனார்
				வனைய வெய்யதடி கார னானயமன்
				வந்த டிக்குமொரு மட்கலத்
				தேக மானபொயை மெய்யெ னக்கருதி
				ஐய வையமிசை வாடவோ
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 1
				
				குறிக ளோடுகுண மேது மின்றியனல்
				ஒழுக நின்றிடும் இரும்பனல்
				கூட லின்றியது வாயி ருந்தபடி
				கொடிய ஆணவ அறைக்குளே
				அறிவ தேதும்அற அறிவி லாமைமய
				மாயி ருக்குமெனை அருளினால்
				அளவி லாததனு கரண மாதியை
				அளித்த போதுனை அறிந்துநான்
				பிறவி லாதவண நின்றி டாதபடி
				பலநி றங்கவரு முபலமாய்ப்
				பெரிய மாயையி லழுந்தி நின்னது
				ப்ரசாத நல்லருள் மறந்திடுஞ்
				சிறிய னேனுமுனை வந்த ணைந்துசுக
				மாயி ருப்பதினி என்றுகாண்
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 2
				
				ஐந்து பூதமொரு கானல் நீரென
				அடங்க வந்தபெரு வானமே
				ஆதி யந்தநடு வேது மின்றியரு
				ளாய்நிறைந் திலகு சோதியே
				தொந்த ரூபமுடன் அரூப மாதிகுறி
				குணமி றந்துவளர் வத்துவே
				துரிய மேதுரிய உயிரி னுக்குணர்வு
				தோன்ற நின்றருள் சுபாவமே
				எந்த நாளுநடு வாகி நின்றொளிரும்
				ஆதியே கருணை நீதியே
				எந்தை யேஎன இடைந்திடைந் துருகும்
				எளிய னேன்கவலை தீரவுஞ்
				சிந்தை யானதை யறிந்து நீயுனருள்
				செய்ய நானுமினி யுய்வனோ
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 3
				
				ஐவ ரென்றபுல வேடர் கொட்டம
				தடங்க ம்ர்க்கடவன் முட்டியாய்
				அடவி நின்றுமலை யருகில் நின்றுசரு
				காதி தின்றுபனி வெயிலினால்
				மெய்வ ருந்துதவ மில்லைநற் சரியை
				கிரியை யோகமெனும் மூன்றதாய்
				மேவு கின்றசவு பான நன்னெறி
				விரும்ப வில்லையுல கத்திலே
				பொய்மு டங்குதொழில் யாத தற்குநல
				சார தித்தொழில் நடத்திடும்
				புத்தி யூகமறி வற்ற மூகமிவை
				பொருளெ னக்கருதும் மருளன்யான்
				தெய்வ நல்லருள் படைத்த அன்பரொடு
				சேர வுங்கருணை கூர்வையோ
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 4
				
				ஏகமானவுரு வான நீயருளி
				னால னேகவுரு வாகியே
				எந்த நாளகில கோடி சிர்ட்டிசெய
				இசையு நாள்வரை யநாள்முதல்
				ஆக நாளது வரைக்கு முன்னடிமை
				கூடவே சனன மானதோ
				அநந்த முண்டுநல சனன மீதிதனுள்
				அறிய வேண்டுவன அறியலாம்
				மோக மாதிதரு பாச மானதை
				அறிந்து விட்டுனையும் எனையுமே
				முழுது ணர்ந்துபர மான இன்பவெள
				மூழ்க வேண்டும் இதுஇன்றியே
				தேக மேநழுவி நானுமோ நழுவின்
				பின்னை உய்யும்வகை உள்ளதோ
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 5
				
				நியம லட்சணமும் இயம லட்சணமும்
				ஆச னாதிவித பேதமும்
				நெடிது ணர்ந்திதய பத்ம பீடமிசை
				நின்றி லங்குமச பாநலத்
				தியல றிந்துவளர் மூல குண்டலியை
				இனிதி றைஞ்சியவ ளருளினால்
				எல்லை யற்றுவளர் சோதி மூலஅனல்
				எங்கள் மோனமனு முறையிலே
				வயமி குந்துவரும் அமிர்த மண்டல
				மதிக்கு ளேமதியை வைத்துநான்
				வாய்ம டுத்தமிர்த வாரி யைப்பருகி
				மன்னு மாரமிர்த வடிவமாய்ச்
				செயமி குந்துவரு சித்த யோகநிலை
				பெற்று ஞானநெறி அடைவனோ
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 6
				
				எறிதி ரைக்கடல் நிகர்த்த செல்வமிக
				அல்ல லென்றொருவர் பின்செலா
				தில்லை யென்னுமுரை பேசி டாதுலகில்
				எவரு மாமெனம திக்கவே
				நெறியின் வைகிவளர் செல்வ மும்உதவி
				நோய்க ளற்றசுக வாழ்க்கையாய்
				நியம மாதிநிலை நின்று ஞானநெறி
				நிட்டை கூடவுமெந் நாளுமே
				அறிவில் நின்றுகுரு வாயு ணர்த்தியதும்
				அன்றி மோனகுரு வாகியே
				அகில மீதுவர வந்த சீரருளை
				ஐய ஐயஇனி என்சொல்கேன்
				சிறிய னேழைநம தடிமை யென்றுனது
				திருவு ளத்தினிலி ருந்ததோ
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 7
				
				எவ்வு யிர்த்திரளும் உலகி லென்னுயிர்
				எனக்கு ழைந்துருகி நன்மையாம்
				இதமு ரைப்பஎன தென்ற யாவையும்
				எடுத்தெ றிந்துமத யானைபோல்
				கவ்வை யற்றநடை பயில அன்பரடி
				கண்டதே அருளின் வடிவமாக்
				கண்ட யாவையும் அகண்ட மென்னஇரு
				கைகுவித்து மலர் தூவியே
				பவ்வ வெண்திரை கொழித்த தண்தரளம்
				விழியு திர்ப்பமொழி குளறியே
				பாடி யாடியு ளுடைந்து டைந்தெழுது
				பாவையொத் தசைத லின்றியே
				திவ்ய அன்புருவ மாகி அன்பரொடும்
				இன்ப வீட்டினி லிருப்பனோ
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 8
				
				மத்தர் பேயரொடு பாலர் தன்மையது
				மருவியே துரிய வடிவமாய்
				மன்னு தேசமொடு கால மாதியை
				மறந்து நின்னடிய ரடியிலே
				பத்தி யாய்நெடிது நம்பும் என்னையொரு
				மையல் தந்தகில மாயையைப்
				பாரு பாரென நடத்த வந்ததென்
				பார தத்தினுமி துள்ளதோ
				சுத்த நித்தவியல் பாகு மோவுனது
				விசுவ மாயை நடுவாகவே
				சொல்ல வேண்டும்வகை நல்ல காதிகதை
				சொல்லு மாயையினு மில்லைஎன்
				சித்த மிப்படி மயங்கு மோஅருளை
				நம்பி னோர்கள்பெறு பேறிதோ
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 9
				
				பன்மு கச்சமய நெறிப டைத்தவரும்
				யாங்க ளேகடவு ளென்றிடும்
				பாத கத்தவரும் வாத தர்க்கமிடு
				படிற ருந்தலை வணங்கிடத்
				தன்மு சத்திலுயிர் வரவழைக்கும்எம
				தரும னும்பகடு மேய்க்கியாய்த்
				தனியி ருப்பவட நீழ லூடுவளர்
				சனக னாதிமுனி வோர்கள்தஞ்
				சொன்ம யக்கமது தீர அங்கைகொடு
				மோன ஞானம துணர்த்தியே
				சுத்த நித்தஅரு ளியல்ப தாகவுள
				சோம சேகரகிர் பாளுவாய்த்
				தென்மு கத்தின்முக மாயி ருந்தகொலு
				எம்மு கத்தினும் வணங்குவேன்
				தெரிவ தற்கரிய பிரம மேஅமல
				சிற்சு கோதய விலாசமே - 10
				
				14. ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம்
				
				ஆகார புவனமின் பாகார மாக
				அங்ஙனே யொருமொழியால் அகண்டா கார
				யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக்
				குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே
				வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன
				மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல்
				தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே
				திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே. 1.
				
				அனந்தபத உயிர்கள்தொரும் உயிரா யென்றும்
				ஆனந்த நிலையாகி அளவைக் கெட்டாத்
				தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்மேல் காட்டாச்
				சதசத்தாய் அருட்கோயில் தழைத்த தேவே
				இனம்பிரிந்த மான்போல்நான் இடையா வண்ணம்
				இன்பமுற அன்பர்பக்க லிருத்தி வைத்துக்
				கனந்தருமா கனமேதண் அருளில் தானே
				கனிபலித்த ஆனந்தக் கட்டிப் பேறே. 2.
				
				பேறனைத்தும் அணுவெனவே உதறித் தள்ளப்
				பேரின்ப மாகவந்த பெருக்கே பேசா
				வீறனைத்தும் இந்நெறிக்கே என்ன என்னை
				மேவென்ற வரத்தேபாழ் வெய்ய மாயைக்
				கூறனைத்துங் கடந்தஎல்லைச் சேட மாகிக்
				குறைவறநின் றிடுநிறைவே குலவா நின்ற
				ஆறனைத்தும் புகுங்கடல்போல் சமயகோடி
				அத்தனையுந் தொடர்ந்துபுகும் ஆதி நட்பே. 3.
				
				ஆதியந்தம் எனும்எழுவா யீறற் றோங்கி
				அருமறைஇன் னமுங்காணா தரற்ற நானா
				பேதமதங் களுமலைய மலைபோல் வந்தப்
				பெற்றியரும் வாய்வாதப் பேய ராகச்
				சாதகமோ னத்திலென்ன வடவால் நீழல்
				தண்ணருட்சந் திரமெளலி தடக்கைக் கேற்க
				வேதகசின் மாத்திரமா யெம்ம னோர்க்கும்
				வெளியாக வந்தவொன்றே விமல வாழ்வே. 4.
				
				விமலமுதற் குணமாகி நூற்றெட் டாதி
				வேதமெடுத் தெடுத்துரைத்த விருத்திக் கேற்க
				அமையுமிலக் கணவடிவா யதுவும் போதா
				தப்பாலுக் கப்பாலாய் அருட்கண் ணாகிச்
				சமமுமுடன் கலப்புமவிழ் தலும்யாங் காணத்
				தண்ணருள்தந் தெமைக்காக்குஞ் சாட்சிப் பேறே
				இமையளவும் உபகார மல்லால் வேறொன்
				றியக்காநிர்க் குணக்கடலா யிருந்த ஒன்றே. 5.
				
				ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட
				ஒளியாகி வெளியாகி உருவு மாகி
				நன்றாகித் தீதாகி மற்று மாகி
				நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி
				இன்றாகி நாளையுமாய் மேலு மான
				எந்தையே எம்மானே என்றென் றேங்கிக்
				கன்றாகிக் கதறினர்க்குச் சேதா வாகிக்
				கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே. 6.
				
				அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
				ஆரமிர்தே என்கண்ணே அரிய வான
				பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப்
				பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே
				கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்
				காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி
				இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும்
				விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே. 7.
				
				விண்ணவரிந் திரன்முதலோர் நார தாதி
				விளங்குசப்த ரிடிகள்கன வீணை வல்லோர்
				எண்ணரிய சித்தர்மனு வாதி வேந்தர்
				இருக்காதி மறைமுனிவர் எல்லா மிந்தக்
				கண்ணகல்ஞா லம்மதிக்கத் தானே உள்ளங்
				கையில்நெல்லிக் கனிபோலக் காட்சி யாகத்
				திண்ணியநல் லறிவாலிச் சமயத் தன்றோ
				செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும். 8.
				
				செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம்
				தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கை யான
				அப்பரிசா ளரும�தே பிடித்தா லிப்பால்
				அடுத்ததந்நூல் களும்விரித்தே அனுமா னாதி
				ஒப்பவிரித் துரைப்பரிங்ஙன் பொய்மெய் என்ன
				ஒன்றிலைஒன் றென்ப்பார்ப்ப தொவ்வா தார்க்கும்
				இப்பரிசாஞ் சமயமுமாய் அல்ல வாகி
				யாதுசம யமும்வணங்கும் இயல்ப தாகி. 9.
				
				இயல்பென்றுந் திரியாமல் இயம மாதி
				எண்குணமுங் காட்டியன்பால் இன்ப மாகிப்
				பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப்
				பண்புறவுஞ் செளபான பட்சங் காட்டி
				மயலறுமந் திரஞ்சிட்சை சோதி டாதி
				மற்றங்க நூல்வணங்க மெளன மோலி
				அயர்வறச்சென் னியில்வைத்து ராசாங் கத்தில்
				அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ. 10. 
				
				அந்தோஈ ததிசயமிச் சமயம் போலின்
				றறிஞரெல்லாம் நடுஅறிய அணிமா ஆதி
				வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்
				வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும்
				இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும்
				இதுவன்றித் தாயகம்வே றில்லை இல்லை
				சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத்
				தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம். 11.
				
				சன்மார்க்கம் ஞானமதின் பொருளும் வீறு
				சமயசங்கே தப்பொருளுந் தானென் றாகப்
				பன்மார்க்க நெறியினிலுங் கண்ட தில்லை
				பகர்வரிய தில்லைமன்றுள் பார்த்த போதங்
				கென்மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியே என்ன
				எச்சமயத் தவர்களும்வந் திறைஞ்சா நிற்பர்
				கன்மார்க்க நெஞ்சமுள எனக்குந் தானே
				கண்டவுடன் ஆனந்தங் காண்ட லாகும். 12.
				
				காண்டல்பெறப் புறத்தினுள்ள படியே உள்ளுங்
				காட்சிமெய்ந்நூல் சொலும்பதியாங் கடவு ளேநீ
				நீண்டநெடு மையுமகலக் குறுக்குங் காட்டா
				நிறைபரிபூ ரணஅறிவாய் நித்த மாகி
				வேண்டுவிருப் பொடுவெறுப்புச் சமீபந் தூரம்
				விலகலணு குதல்முதலாம் விவகா ரங்கள்
				பூண்டஅள வைகள்மனவாக் காதி யெல்லாம்
				பொருந்தாம லகம்புறமும் புணர்க்கை யாகி. 13.
				
				ஆகியசற் காரியவூ கத்துக் கேற்ற
				அமலமாய் நடுவாகி அனந்த சத்தி
				யோகமுறும் ஆனந்த மயம தாகி
				உயிர்க்குயிரா யெந்நாளும் ஓங்கா நிற்ப
				மோகஇருள் மாயைவினை உயிர்கட் கெல்லாம்
				மொய்த்ததென்கொல் உபகார முயற்சி யாகப்
				பாகமிக அருளஒரு சத்தி வந்து
				பதித்ததென்கொல் நானெனுமப் பான்மை என்கொல். 14.
				
				நானென்னும் ஓரகந்தை எவர்க்கும் வந்து
				நலிந்தவுடன் சகமாயை நானா வாகித்
				தான்வந்து தொடருமித்தால் வளருந் துன்பச்
				சாகரத்தின் பெருமைஎவர் சாற்ற வல்லார்
				ஊனென்றும் உடலென்றுங் கரண மென்றும்
				உள்ளென்றும் புறமென்றும் ஒழியா நின்ற
				வானென்றுங் காலென்றுந் தீநீ ரென்றும்
				மண்ணென்றும் மலையென்றும் வனம தென்றும். 15.
				
				மலைமலையாங் காட்சிகண்கா ணாமை யாதி
				மறப்பென்றும் நினைப்பென்றும் மாயா வாரி
				அலையலையா யடிக்குமின்ப துன்ப மென்றும்
				அதைவிளைக்கும் வினைகளென்றும் அதனைத் தீர்க்கத்
				தலைபலவாஞ் சமயமென்றுந் தெய்வ மென்றுஞ்
				சாதகரென் றும்மதற்குச் சாட்சி யாகக்
				கலைபலவா நெறியென்றுந் தர்க்க மென்றுங்
				கடலுறுநுண் மணலெண்ணிக் காணும் போதும். 16.
				
				காணரிய அல்லலெல்லாந் தானே கட்டுக்
				கட்டாக விளையுமதைக் கட்டோ டேதான்
				வீணினிற்கர்ப் பூரமலை படுதீப் பட்ட
				விந்தையெனக் காணவொரு விவேகங் காட்ட
				ஊணுறக்கம் இன்பதுன்பம் பேரூ ராதி
				ஒவ்விடவும் எனைப்போல உருவங் காட்டிக்
				கோணறவோர் மான்காட்டி மானை ஈர்க்குங்
				கொள்கையென அருள்மெளன குருவாய் வந்து. 17.
				
				வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை
				வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி
				ஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி
				அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை
				இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை
				யாதொன்று பற்றின்அதன் இயல்பாய் நின்று
				பந்தமறும் பளிங்கனைய சித்து நீஉன்
				பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம். 18.
				
				அறிவாகி ஆனந்த மயமா யென்றும்
				அழியாத நிலையாகி யாதின் பாலும்
				பிறியாமல் தண்ணருளே கோயி லான
				பெரியபரம் பதியதனைப் பேறவே வேண்டில்
				நெறியாகக் கூறுவன்கேள் எந்த நாளும்
				நிர்க்குணநிற்(கு) உளம்வாய்த்து நீடு வாழ்க
				செறிவான அறியாமை எல்லாம் நீங்க
				சிற்சுகம்பெற் றிடுகபந்தந் தீர்க வென்றே. 19.
				
				பந்தமறும் மெஞ்ஞான மான மோனப்
				பண்பொன்றை அருளியந்தப் பண்புக் கேதான்
				சிந்தையில்லை நானென்னும் பான்மை யில்லை
				தேசமில்லை காலமில்லை திக்கு மில்லை
				தொந்தமில்லை நீக்கமில்லை பிரிவு மில்லை
				சொல்லுமில்லை இராப்பகலாந் தோற்ற மில்லை
				அந்தமில்லை ஆதியில்லை நடுவு மில்லை
				அகமுமில்லை புறமில்லை அனைத்து மில்லை. 20.
				
				இல்லைஇல்லை யென்னினொன்று மில்லா தல்ல
				இயல்பாகி என்றுமுள்ள இயற்கை யாகிச்
				சொல்லரிய தன்மையதா யான்றா னென்னத்
				தோன்றாதெல் லாம்விழுங்குஞ் சொரூப மாகி
				அல்லையுண்ட பகல்போல அவித்தை யெல்லாம்
				அடையவுண்டு தடையறவுன் அறிவைத் தானே
				வெல்லவுண்டிங் குன்னையுந்தா னாகக் கொண்டு
				வேதகமாய்ப் பேசாமை விளக்குந் தானே. 21.
				
				தானான தன்மயமே யல்லால் ஒன்றைத்
				தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே
				போனாலுங் கர்ப்பூர தீபம் போலப்
				போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம்
				ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற
				ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்
				ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார்
				அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும். 22.
				
				அதுவென்றால் எதுவெனவொன் றடுக்குஞ் சங்கை
				ஆதலினால் அதுவெனலும் அறவே விட்டு
				மதுவுண்ட வண்டெனவுஞ் சனக னாதி
				மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தா ரென்றும்
				பதியிந்த நிலையெனவும் என்னை யாண்ட
				படிக்குநிரு விகற்பத்தாற் பரமா னந்த
				கதிகண்டு கொள்ளவும்நின் னருள்கூ ரிந்தக்
				கதியன்றி யுறங்கேன்மேற் கருமம் பாரேன். 23.
				
				பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை
				பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து
				வாராயோ என்ப்ராண நாதா என்பேன்
				வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு
				பூராய மாமேலொன் றறியா வண்ணம்
				புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே
				நீராள மாயுருகிக் கண்ணீர் சோர
				நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன். 24.
				
				ஆயுமறி வாகியுன்னைப் பிரியா வண்ணம்
				அணைந்துசுகம் பெற்றவன்பர் ஐயோ வென்னத்
				தீயகொலைச் சமயத்துஞ் செல்லச் சிந்தை
				தெளிந்திடவுஞ் சமாதானஞ் செய்வேன் வாழ்வான்
				காயிலைபுன் சருகாதி யருந்தக் கானங்
				கடல்மலைஎங் கேஎனவுங் கவலை யாவேன்
				வாயில் கும்பம் போற்கிடந்து புரள்வேன் வானின்
				மதிகதிரை முன்னிலையா வைத்து நேரே. 25.
				
				நேரேதான் இரவுபகல் கோடா வண்ணம்
				நித்தம்வர வுங்களைஇந் நிலைக்கே வைத்தார்
				ஆரேயங் கவர்பெருமை என்னே என்பேன்
				அடிக்கின்ற காற்றேநீ யாரா லேதான்
				பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து
				பெய்கின்ற முகில்காள்எம் பெருமான் நும்போல்
				தாராள மாக்கருணை பொழியச் செய்யுஞ்
				சாதகமென் னேகருதிச் சாற்று மென்பேன். 26.
				
				கருதரிய விண்ணேநீ எங்கு மாகிக்
				கலந்தனையே யுன்முடிவின் காட்சி யாக
				வருபொருளெப் படியிருக்குஞ் சொல்லா யென்பேன்
				மண்ணேயுன் முடிவிலெது வயங்கு மாங்கே
				துரியஅறி வுடைச்சேடன் ஈற்றின் உண்மை
				சொல்லானோ சொல்லென்பேன் சுருதி யேநீ
				ஒருவரைப்போல் அனைவருக்கும் உண்மை யாமுன்
				உரையன்றோ உன்முடிவை உரைநீ என்பேன். 27.
				
				உரையிறந்து பெருமை பெற்றுத் திரைக்கை நீட்டி
				ஒலிக்கின்ற கடலேஇவ் வுலகஞ் சூழக்
				கரையுமின்றி யுன்னைவைத்தார் யாரே என்பென்
				கானகத்திற் பைங்கிளிகாள் கமல மேவும்
				வரிசிறைவண் டினங்காள்ஓ திமங்காள் தூது
				மார்க்கமன்றோ நீங்களிது வரையி லேயும்
				பெரியபரி பூரணமாம் பொருளைக் கண்டு
				பேசியதுண் டோவொருகாற் பேசு மென்பேன். 28.
				
				ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை
				ஓட்டுதல்போல் நான்பேதை உப்போ டப்பை
				மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம்
				வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன்
				அருளுடைய பரமென்றோ அன்று தானே
				யானுளனென் றும்மனக்கே ஆணவாதி
				பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப்
				பேசியதன் றேஅருள்நூல் பேசிற் றன்றே. 29.
				
				அன்றுமுதல் இன்றைவரைச் சனன கோடி
				அடைந்தடைந்திங் கியாதனையால் அழிந்த தல்லால்
				இன்றைவரை முக்தியின்றே எடுத்த தேகம்
				எப்போதோ தெரியாதே இப்போ தேதான்
				துன்றுமனக் கவலைகெடப் புலைநா யேனைத்
				தொழும்புகொளச் சீகாழித் துரையே தூது
				சென்றிடவே பொருளைவைத்த நாவ லோய்நஞ்
				சிவனப்பா என்ற அருட் செல்வத் தேவே. 30.
				
				தேவர் தொழும் வாதவூர்த் தேவே என்பேன்
				திருமூலத் தேவேஇச் சகத்தோர் முத்திக்
				காவலுறச் சிவவென்வாக் குடனே வந்த
				அரசேசும் மாவிருந்துன் அருளைச் சாரப்
				பூவுலகில் வளரருணை கிரியே மற்றைப்
				புண்ணியர்கா ளோவென்பேன் புரையொன் றில்லா
				ஓவியம்போல் அசைவறவுந் தானே நிற்பேன்
				ஓதரிய துயர்கெடவே யுரைக்கு முன்னே. 31.
				
				ஓதரிய சுகர்போல ஏன்ஏன் என்ன
				ஒருவரிலை யோஎனவும் உரைப்பேன் தானே
				பேதம்அபே தங்கெடவும் ஒருபே சாமை
				பிறவாதோ ஆலடியிற் பெரிய மோன
				நாதனொரு தரமுலகம் பார்க்க இச்சை
				நண்ணானோ என்றென்றே நானா வாகிக்
				காதல்மிகு மணியிழையா ரெனவா டுற்றேன்
				கருத்தறிந்து புரப்பதுன்மேற் கடன்முக் காலும். 32.
				
				காலமொடு தேசவர்த்த மான மாதி
				கலந்துநின்ற நிலைவாழி கருணை வாழி
				மாலறவுஞ் சைவமுதல் மதங்க ளாகி
				மதாதீத மானஅருள் மரபு வாழி
				சாலமிகும் எளியேனிவ் வழக்குப் பேசத்
				தயவுவைத்து வளர்த்தஅருள் தன்மைவாழி
				ஆலடியிற் பரமகுரு வாழி வாழி
				அகண்டிதா காரஅரு ளடியார் வாழி. 33.
				
				15. தேன்முகம்
				
				தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும்
				நான்முகத் தேவே நின்னால் நாட்டிய அகில மாயை
				கான்முயற் கொம்பே என்கோ கானலம் புனலே என்கோ
				வான்முக முளரி என்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும். 1.
				
				வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக்
				காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இனைய வாற்றால்
				ஆண்டவ னெவனோ என்ன அறிகிலா தகில நீயே
				ஈண்டிய அல்லல் தீர எம்மனோர்க் கியம்பு கண்டாய். 2.
				
				கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக் கண்ணே
				கொண்டது பரமா னந்தக் கோதிலா முத்தி அத்தால்
				பண்டையிற் படைப்புங் காப்பும் பறந்தன மாயை யோடே
				வெண்டலை விழிகை காலில் விளங்கிட நின்றான் யாவன். 3. 
				
				விளங்கவெண் ணீறுபூசி விரிசடைக் கங்கை தாங்கித்
				துளங்குநன் னுதற்கண் தோன்றச் சுழல்வளி நெடுமூச் சாகக்
				களங்கமி லுருவந் தானே ககனமாய்ப் பொலியப் பூமி
				வளர்ந்ததா ளென்ன உள்ள மன்றென மறையொன் றின்றி. 4.
				
				மறைமுழக் கொலிப்பத் தானே வரதமோ டபயக் கைகள்
				முறைமையின் ஓங்க நாதம் முரசெனக் கறங்க எங்கும்
				குறைவிலா வணநி றைந்து கோதிலா நடனஞ் செய்வான்
				இறையவன் எனலாம் யார்க்கும் இதயசம் மதமீ தல்லால். 5.
				
				அல்லலாந் தொழில்ப டைத்தே அடிக்கடி உருவெ டுத்தே
				மல்லல்மா ஞாலங் காக்க வருபவர் கடவு ளென்னில்
				தொல்லையாம் பிறவி வேலை தொலைந்திட திருள்நீங் காது
				நல்லது மாயை தானும் நானென வந்து நிற்கும். 6.
				
				நானென நிற்கு ஞானம் ஞானமன் றந்த ஞானம்
				மோனமா யிருக்க வொட்டா மோனமின் றாக வேதான்
				தேனென ருசிக்கும் அன்பாற் சிந்தைநைந் துருகும் வண்ணம்
				வானென நிறைந்தா னந்த மாகடல் வளைவ தின்றே. 7. 
				
				இன்றென இருப்பே மென்னின் என்றுஞ்சூ னியமா முத்தி
				நன்றொடு தீது மன்றி நாமுன்னே பெறும்அ வித்தை
				நின்றது பெத்தந் தானே நிரந்தர முத்தி யென்னின்
				ஒன்றொரு வரைநான் கேட்க உணர்வில்லை குருவுமில்லை. 8.
				
				இல்லையென் றிடினிப்பூமி இருந்தவா றிருப்போ மென்னில்
				நல்லவன் சாரு வாகன் நான்சொலும் நெறிக்கு வீணில்
				தொல்லையேன் ஆகமாதி தொடுப்பதேன் மயக்க மேதிங்
				கொல்லைவந் திருமி னென்ன வுறவுசெய் திடுவ னந்தோ. 9.
				
				அந்தணர் நால்வர் காண அருட்குரு வாகி வந்த
				எந்தையே எல்லாந் தானென் றியம்பினன் எமைப்ப டைத்த
				தந்தைநீ எம்மைக் காக்குந் தலைவனே நுந்தை யன்றோ
				பந்தமில் சித்தி முத்தி படைக்கநின் அருள்பா லிப்பாய். 10.
				
				16. பன்மாலை
				
				பன்மாலைத் திரளிருக்கத் தமையு ணர்ந்தோர்
				பாமாலைக் கேநீதான் பட்ச மென்று
				நன்மாலை யாவெடுத்துச் சொன்னார் நல்லோர்
				நலமறிந்து கல்லாத நானுஞ் சொன்னேன்
				சொன்மாலை மாலையாக் கண்ணீர் சோரத்
				தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன்
				என்மாலை யறிந்திங்கே வாவா என்றே
				எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பி ரானே. 1. 
				
				கருணைமொழி சிறிதில்லேன் ஈத லில்லேன்
				கண்ணீர்கம் பலையென்றன் கருத்துக் கேற்க
				ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும்
				ஒருவாவுன் அடிமைநான் ஒருத்த னுக்கோ
				இருவினையும் முக்குணமுங் கரணம் நான்கும்
				இடர்செயுமைம் புலனுங்கா மாதி யாறும்
				வரவரவும் ஏழைக்கோ ரெட்ட தான
				மதத்தொடும்வந் தெதிர்த்தநவ வடிவ மன்றே. 2.
				
				வடிவனைத்துந் தந்தவடி வில்லாச் சுத்த
				வான்பொருளே எளியனேன் மனமா மாயைக்
				குடிகெடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மோன
				குருவேஎன் தெய்வமே கோதி லாத
				படியெனக்கா னந்தவெள்ளம் வந்து தேக்கும்
				படியெனக்குன் திருக்கருணை ப்ற்று மாறே
				அடியெடுத்தென் முடியிலின்னம் வைக்க வேண்டும்
				அடிமுடியொன் றில்லாத அகண்ட வாழ்வே. 3.
				
				வாழ்வனைத்தும் மயக்கமெனத் தேர்ந்தேன் தேர்ந்த
				வாறேநான் அப்பாலோர் வழிபா ராமல்
				தாழ்வுபெற்றிங் கிருந்தேன்ஈ தென்ன மாயந்
				தடையுற்றால் மேற்கதியுந் தடைய தாமே
				ஊழ்வலியோ அல்லதுன்றன் திருக்கூத் தோஇங்
				கொருதமியேன் மேற்குறையோ வுணர்த்தா யின்னம்
				பாழ் அவதிப் படஎனக்கு முடியா தெல்லாம்
				படைத்தளித்துத் துடைக்கவல்ல பரிசி னானே. 4.
				
				நானானிங் கெனுமகந்தை எனக்கேன் வைத்தாய்
				நல்வினைதீ வினைஎனவே நடுவே நாட்டி
				ஊனாரும் உடற்சுமைஎன் மீதேன் வைத்தாய்
				உயிரெனவு மென்னையொன்றா வுள்ளேன் வைத்தாய்
				ஆனாமை யாயகில நிகில பேதம்
				அனைத்தினுள்ளுந் தானாகி அறிவா னந்தத்
				தேனாகிப் பாலாகிக் கனியாய்க் கன்னல்
				செழும்பாகாய்க் கற்கண்டாய்த் திகழ்ந்த வொன்றே. 5.
				
				ஒன்றியொன்றி நின்றுநின்றும் என்னை என்னை
				உன்னியுன்னும் பொருளலைநீ உன்பால் அன்பால்
				நின்றதன்மைக் கிரங்கும்வயி ராக்கிய னல்லேன்
				நிவர்த்தியவை வேண்டுமிந்த நீல னுக்கே
				என்றுமென்றும் இந்நெறியோர் குணமு மில்லை
				இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ
				கன்றுமனத் துடனஆடு தழைதின் றாற்போல்
				கல்வியுங்கேள் வியுமாகிக் கலக்குற் றேனே. 6. 
				
				உற்றதுணை நீயல்லாற் பற்று வேறொன்
				றுன்னேன்பன் னாள்உலகத் தோடி யாடிக்
				கற்றதுங்கேட் டதுமிதனுக் கேது வாகுங்
				கற்பதுங்கேட் பதுமமையுங் காணா நீத
				நற்றுணையே அருள்தாயே இன்ப மான
				நாதாந்த பரம்பொருளே நார ணாதி
				சுற்றமுமாய் நல்லன்பர் தமைச்சே யாகத்
				தொழும்புகொளுங் கனாகனமே சோதிக் குன்றே. 7.
				
				குன்றாத மூவருவாய் அருவாய் ஞானக்
				கொழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி
				நின்றாயே மாயைஎனுந் திரையை நீக்கி
				நின்னையா ரறியவல்லார் நினைப்போர் நெஞ்சம்
				மன்றாக இன்பக்கூத் தாட வல்ல
				மணியேஎன் கண்ணேமா மருந்தே நால்வர்க்
				கன்றாலின் கீழிருந்து மோன ஞானம்
				அமைத்தசின்முத் திரைக்கடலே அமர ரேறே. 8.
				
				திரையில்லாக் கடல்போலச் சலனந் தீர்ந்து
				தெளிந்துருகும் பொன்போலச் செகத்தை எல்லாங்
				கரையவே கனிந்துருக்கும் முகத்தி லேநீ
				கனிந்தபர மானந்தக் கட்டி இந்நாள்
				வரையிலே வரக்காணேன் என்னாற் கட்டி
				வார்த்தைசொன்னாற் சுகம்வருமோ வஞ்ச னேனை
				இரையிலே யிருத்திநிரு விகற்ப மான
				இன்பநிட்டை கொடுப்பதையா எந்த நாளோ. 9.
				
				எந்தநா ளுனக்கடிமை யாகு நாளோ
				எந்நாளோ கதிவருநாள் எளிய னேன்றன்
				சிந்தைநா ளதுவரைக்கும் மயங்கிற் றல்லால்
				தெளிந்ததுண்டோ மெளனியாய்த் தெளிய ஓர்சொல்
				தந்தநாள் முதலின்பக் கால்சற் றல்லால்
				தடையறஆ னந்தவெள்ளந் தானே பொங்கி
				வந்தநா ளில்லைமெத்த அலைந்தே னுன்னை
				மறவாவின் பத்தாலே வாழ்கின் றேனே. 10.
				
				17. நினைவு ஒன்று
				
				நினைவொன்று நினையாமல் நிற்கின் அகம் என்பார்
				நிற்குமிட மேயருளாம் நிட்டையரு ளொட்டுந்
				தனையென்று மறந்திருப்ப அருள்வடிவா னதுமேல்
				தட்டியெழுந் திருக்குமின்பந் தன்மயமே யதுவாம்
				பினையொன்று மிலையந்த இன்பமெனும் நிலயம்
				பெற்றாரே பிறவாமை பெற்றார்மற் றுந்தான்
				மனையென்றும் மகனென்றுஞ் சுற்றமென்றும் அசுத்த
				வாதனையாம் ஆசைமொழி மன்னொருசொற் கொண்டே. 1.
				
				ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த
				ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த
				குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்
				கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்
				கருமொழியிங் குனக்கில்லை மொழிக்குமொழி ருசிக்கக்
				கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங்கண்டனைமேல்
				தருமொழியிங் குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத்
				தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே. 2.
				
				நில்லாத ஆக்கைநிலை யன்றனவே கண்டாய்
				நேயஅருள் மெய்யன்றோ நிலயமதா நிற்கக்
				கல்லாதே ஏன் படித்தாய் கற்றதெல்லாம் மூடங்
				கற்றதெல்லாம் மூடமென்றே கண்டனையும் அன்று
				சொல்லாலே பயனில்லை சொல்முடிவைத் தானே
				தொடர்ந்துபிடி மர்க்கடம்போல் தொட்டதுபற் றாநில்
				எல்லாரும் அறிந்திடவே வாய்ப்பறைகொண் டடிநீ
				இராப்பகலில் லாவிடமே எமக்கிடமென் றறிந்தே. 3.
				
				இடம்பொருளே வலைக்குறித்து மடம்புகுநா யெனவே
				எங்கேநீ யகப்பட்டா யிங்கேநீ வாடா
				மடம்பெறுபாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை
				மன்னிடமே இடம்அந்த மாநிலத்தே பொருளுந்
				திடம்பெறவே நிற்கினெல்லா உலகமும்வந் தேவல்
				செய்யுமிந்த நிலைநின்றோர் சனகன்முதல் முனிவர்
				கடம்பெறுமா மதயானை என்னவுநீ பாசக்
				கட்டான நிகளபந்தக் கட்டவிழப் பாரே. 4.
				
				பாராதி யண்டமெலாம் படர்கானற் சலம்போல்
				பார்த்தனையே முடிவில்நின்று பாரெதுதான் நின்ற
				தாராலும் அறியாத சத்தன்றோ அதுவாய்
				அங்கிருநீ எங்கிருந்தும் அதுவாவை கண்டாய்
				பூராய மாகவுநீ மற்றொன்றை விரித்துப்
				புலம்பாதே சஞ்சலமாப் புத்தியைநாட் டாதே
				ஓராதே ஒன்றையுநீ முன்னிலைவை யாதே
				உள்ளபடி முடியுமெலாம் உள்ளபடி காணே. 5.
				
				உள்ளபடி யென்னவுநீ மற்றொன்றைத் தொடர்ந்திட்
				டுளங்கருத வேண்டாநிட் களங்கமதி யாகிக்
				கள்ளமனத் துறவைவிட்டெல் லாந்துறந்த துறவோர்
				கற்பித்த மொழிப்படியே கங்குல்பக லற்ற
				வெள்ளவெளிக் கடல்மூழ்கி யின்பமயப் பொருளாய்
				விரவியெடுத் தெடுத்தெடுத்து விள்ளவும்வா யின்றிக்
				கொள்ளைகொண்ட கண்ணீருங் கம்பலையு மாகிக்
				கும்பிட்டுச் சகம்பொயெனத் தம்பட்ட மடியே. 6.
				
				அடிமுடியும் நடுவுமற்ற பரவெளிமேற் கொண்டால்
				அத்துவித ஆனந்த சித்தமுண்டாம் நமது
				குடிமுழுதும் பிழைக்குமொரு குறையுமில்லை யெடுத்த
				கோலமெல்லாம் நன்றாகுங் குறைவுநிறை வறவே
				விடியுமுத யம்போல அருளுதயம் பெற்ற
				வித்தகரோ டுங்கூடி விளையாட லாகும்
				படிமுழுதும் விண்முழுதுந் தந்தாலுங் களியாப்
				பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் வருமே. 7.
				
				வரும்போமென் பனவுமின்றி யென்றுமொரு படித்தாய்
				வானாதி தத்துவத்தை வளைந்தருந்தி வெளியாம்
				இரும்போகல் லோமரமோ என்னும்நெஞ்சைக் கனல்மேல்
				இட்டமெழு காவுருக்கும் இன்பவெள்ள மாகிக்
				கரும்போகண் டோசீனி சருக்கரையோ தேனோ
				கனியமிர்தோ எனருசிக்குங் கருத்தவிழ்ந்தோ ருணர்வார்
				அரும்போநன் மணங்காட்டுங் காமரசங் கன்னி
				அறிவாளோ அபக்குவர்க்கோ அந்நலந்தான் விளங்கும். 8.
				
				தானேயும் இவ்வுலகம் ஒருமுதலு மாகத்
				தன்மையினாற் படைத்தளிக்குந் தலைமையது வான
				கோனாக வொருமுதலிங் குண்டெனவும் யூகங்
				கூட்டியதுஞ் சகமுடிவிற் குலவுறுமெய்ஞ் ஞான
				வானாக அம்முதலே நிற்குநிலை நம்மால்
				மதிப்பரிதாம் எனமோனம் வைத்ததும்உன் மனமே
				ஆனாலும் மனஞ்சடமென் றழுங்காதே யுண்மை
				அறிவித்த இடங்குருவாம் அருளிலதொன் றிலையே. 9.
				
				18. பொன்னை மாதரை
				
				பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன்
				என்னை நாடிய என்னுயிர் நாதனே
				உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி
				தன்னை நாடுவன் தன்னந் தனியனே. 1.
				
				தன்ன தென்றுரை சாற்று வனவெலாம்
				நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன்
				இன்னம் என்னை யிடருறக் கூட்டினால்
				பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே. 2.
				
				ஆவி யேயுனை யானறி வாய்நின்று
				சேவி யேன்களச் சிந்தை திறைகொடேன்
				பாவி யேனுளப் பான்மையைக் கண்டுநீ
				கூவி யாளெனை யாட்கொண்ட கோலமே. 3.
				
				கோல மின்றிக் குணமின்றி நின்னருள்
				சீல மின்றிச் சிறியன் பிழைப்பனோ
				ஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த
				கால மெந்தை கதிநிலை காண்பதே. 4.
				
				காணுங் கண்ணிற் கலந்தகண் ணேயுனைச்
				சேணும் பாருந் திரிபவர் காண்பரோ
				ஆணும் பெண்ணும் அதுவெனும் பான்மையும்
				பூணுங் கோலம் பொருந்தியுள் நிற்கவே. 5.
				
				நிற்கும் நன்னிலை நிற்கப்பெற் றார்அருள்
				வர்க்க மன்றி மனிதரன் றேஐயா
				துர்க்கு ணக்கடற் சோங்கன்ன பாவியேற்
				கெற்கு ணங்கண் டென்பெயர் சொல்வதே. 6.
				
				சொல்லை யுன்னித் துடித்த தலால் அருள்
				எல்லை யுன்னி எனையங்கு வைத்திலேன்
				வல்லை நீ என்னை வாவென் றிடாவிடின்
				கல்லை யாமிக் கருமி நடக்கையே. 7.
				
				கையும் மெய்யுங் கருத்துக் கிசையவே
				ஐய தந்ததற் கையம் இனியுண்டோ
				பொய்ய னேன்சிந்தைப் பொய்கெடப் பூரண
				மெய்ய தாம்இன்பம் என்று விளைவதே. 8.
				
				என்றும் உன்னை இதய வெளிக்குளே
				துன்ற வைத்தன னேஅருட் சோதிநீ
				நின்ற தன்மை நிலைக்கென்னை நேர்மையாம்
				நன்று தீதற வைத்த நடுவதே. 9.
				
				வைத்த தேகம் வருந்த வருந்திடும்
				பித்த னானருள் பெற்றுந் திடமிலேன்
				சித்த மோன சிவசின்ம யானந்தம்
				வைத்த ஐய அருட்செம்பொற் சோதியே. 10.
				
				செம்பொன் மேனிச் செழுஞ்சுட ரேமுழு
				வம்ப னேனுனை வாழ்த்து மதியின்றி
				இம்பர் வாழ்வினுக் கிச்சைவைத் தேன்மனம்
				நம்பி வாவெனின் நானென்கொல் செய்வதே. 11.
				
				செய்யுஞ் செய்கையுஞ் சிந்திக்குஞ் சிந்தையும்
				ஐய நின்னதென் றெண்ணும் அறிவின்றி
				வெய்ய காம வெகுளி மயக்கமாம்
				பொய்யி லேசுழன் றேனென்ன புன்மையே. 12.
				
				புன்பு லால்நரம் பென்புடைப் பொய்யுடல்
				அன்பர் யார்க்கும் அருவருப் பல்லவோ
				என்பொ லாமணி யேஇறை யேஇத்தால்
				துன்ப மன்றிச் சுகமொன்றும் இல்லையே. 13.
				
				இல்லை உண்டென் றெவர்பக்க மாயினுஞ்
				சொல்ல வோஅறி யாத தொழும்பன்யான்
				செல்ல வேறொரு திக்கறி யேன்எலாம்
				வல்ல நீஎனை வாழ்விக்க வேண்டுமே. 14.
				
				வேண்டுஞ் சீரருள் மெய்யன்பர்க் கேயன்பு
				பூண்ட நானென் புலம்அறி யாததோ
				ஆண்ட நீஉன் அடியவன் நானென்று
				தூண்டு வேனன்றித் தொண்டனென் சொல்வதே. 15.
				
				எனக்கு ளேஉயி ரென்னஇருந்தநீ
				மனக்கி லேசத்தை மாற்றல் வழக்கன்றோ
				கனத்த சீரருட் காட்சி யலாலொன்றை
				நினைக்க வோஅறி யாதென்றன் நெஞ்சமே. 16.
				
				நெஞ்சு கந்துனை நேசித்த மார்க்கண்டர்க்
				கஞ்ச லென்ற அருளறிந் தேஐயா
				தஞ்ச மென்றுன் சரணடைந் தேன்எங்குஞ்
				செஞ்சே வேநின்ற சிற்சுக வாரியே. 17.
				
				வாரி ஏழும் மலையும் பிறவுந்தான்
				சீரி தானநின் சின்மயத் தேஎன்றால்
				ஆரி லேயுள தாவித் திரளதை
				ஓரி லேன்எனை ஆண்ட ஒருவனே. 18.
				
				ஒருவ ரென்னுளத் துள்ளுங் குறிப்பறிந்
				தருள்வ ரோஎனை ஆளுடை அண்ணலே
				மருள னேன்பட்ட வாதை விரிக்கினோ
				பெருகு நாளினிப் பேச விதியின்றே. 19.
				
				இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே
				அன்று தொட்டெனை ஆளர சேஎன்று
				நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்
				மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே. 20.
				
				வாழ்த்து நின்னருள் வாரம்வைத் தாலன்றிப்
				பாழ்த்த சிந்தைப் பதகனும் உய்வனோ
				சூழ்த்து நின்ற தொழும்பரை யானந்தத்
				தாழ்த்து முக்கண் அருட்செம்பொற் சோதியே. 21.
				
				சோதி யேசுட ரேசுக மேதுணை
				நீதி யேநிச மேநிறை வேநிலை
				ஆதி யேஉனை யானடைந் தேன்அகம்
				வாதி யாதருள் வாய்அருள் வானையே. 22.
				
				வானைப்போல வளைந்துகொண் டானந்தத்
				தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்தமெய்ஞ்
				ஞானத் தெய்வத்தை நாடுவன் நானெனும்
				ஈனப் பாழ்கெட என்றும் இருப்பவனே. 23.
				
				இரும்பைக் காந்தம் இழுக்கின்ற வாறெனைத்
				திரும்பிப் பார்க்கவொட் டாமல் திருவடிக்
				கரும்பைத் தந்துகண் ணீர்கம் பலையெலாம்
				அரும்பச் செய்யென தன்னையொப் பாமனே. 24.
				
				அன்னை யப்பனென் ஆவித் துணையெனுந்
				தன்னை யொப்பற்ற சற்குரு என்பதென்
				என்னைப் பூரண இன்ப வெளிக்குளே
				துன்ன வைத்த சுடரெனத் தக்கதே. 25.
				
				தக்க கேள்வியிற் சார்ந்தநற் பூமியின்
				மிக்க தாக விளங்கும் முதலொன்றே
				எக்க ணுந்தொழ யாவையும் பூத்துக்காய்த்
				தொக்க நின்றுமொன் றாய்நிறை வானதே. 26.
				
				ஆன மான சமயங்கள் ஆறுக்குந்
				தான மாய்நின்று தன்மயங் காட்டிய
				ஞான பூரண நாதனை நாடியே
				தீன னேன்இன்பந் தேக்கித் திளைப்பனே. 27.
				
				தேக்கி இன்பந் திளைக்கத் திளைக்கவே
				ஆக்க மாயெனக் கானந்த மாகியே
				போக்கி னோடு வரவற்ற பூரணந்
				தாக்கி நின்றவா தன்மய மாமதே. 28.
				
				அதுவென் றுன்னும் அதுவும் அறநின்ற
				முதிய ஞானிகள் மோனப் பொருளது
				ஏதுவென் றெண்ணி இறைஞ்சுவன் ஏழையேன்
				மதியுள் நின்றின்ப வாரி வழங்குமே. 29.
				
				வாரிக் கொண்டெனை வாய்மடுத் தின்பமாய்ப்
				பாரிற் கண்டவை யாவும் பருகினை
				ஓரிற் கண்டிடும் ஊமன் கனவென
				யாருக் குஞ்சொல வாயிலை ஐயனே. 30.
				
				ஐய மற்ற அதிவரு ணர்க்கெலாங்
				கையில் ஆமல கக்கனி யாகிய
				மெய்ய னேஇந்த மேதினி மீதுழல்
				பொய்ய னேற்குப் புகலிடம் எங்ஙனே. 31.
				
				எங்ங னேஉய்ய யானென தென்பதற்
				றங்ங னேயுன் அருள்மய மாகிலேன்
				திங்கள் பாதி திகழப் பணியணி
				கங்கை வார்சடைக் கண்ணுத லெந்தையே. 32.
				
				கண்ணிற் காண்பதுன் காட்சிகை யாற்றொழில்
				பண்ணல் பூசை பகர்வது மந்திரம்
				மண்ணொ டைந்தும் வழங்குயிர் யாவுமே
				அண்ண லேநின் அருள்வடி வாகுமே. 33.
				
				வடிவெ லாநின் வடிவென வாழ்த்திடாக்
				கடிய னேனுமுன் காரணங் காண்பனோ
				நெடிய வானென எங்கும் நிறைந்தொளிர்
				அடிக ளேஅர சேஅருள் அத்தனே. 34.
				
				அத்த னேயகண் டானந்த னேஅருட்
				சுத்த னேயென உன்னைத் தொடர்ந்திலேன்
				மத்த னேன்பெறு மாமலம் மாயவான்
				கத்த னேகல்வி யாதது கற்கவே. 35.
				
				கற்றும் என்பலன் கற்றிடு நூன்முறை
				சொற்ற சொற்கள் சுகாரம்ப மோநெறி
				நிற்றல் வேண்டும் நிருவிகற பச்சுகம்
				பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே. 36.
				
				பெருமைக் கேயிறு மாந்து பிதற்றிய
				கருமிக் கைய கதியுமுண் டாங்கொலோ
				அருமைச் சீரன்பர்க் கன்னையொப் பாகவே
				வருமப் பேரொளி யேயுன்ம னாந்தமே. 37.
				
				உன்ம னிக்குள் ஒளிர்பரஞ் சோதியாஞ்
				சின்ம யப்பொரு ளேபழஞ் செல்வமே
				புன்ம லத்துப் புழுவன்ன பாவியேன்
				கன்ம னத்தைக் கரைக்கக் கடவதே. 38.
				
				கரையி லின்பக் கடலமு தேஇது
				வரையில் நானுனை வந்து கலந்திலேன்
				உரையி லாஇன்பம் உள்ளவர் போலஇத்
				தரையி லேநடித் தேனென்ன தன்மையே. 39.
				
				மையு லாம்விழி மாதர்கள் தோதகப்
				பொய்யி லாழும் புலையினிப் பூரைகாண்
				கையில் ஆமல கக்கனி போன்றஎன்
				ஐய னேஎனை ஆளுடை அண்ணலே. 40.
				
				அண்ண லேஉன் னடியவர் போலருட்
				கண்ணி னாலுனைக் காணவும் வாவெனப்
				பண்ணி னாலென் பசுத்துவம் போய்உயும்
				வண்ண மாக மனோலயம் வாய்க்குமே. 41.
				
				வாய்க்குங் கைக்கும் மெளனம் மெளனமென்
				றேய்க்குஞ் சொற்கொண் டிராப்பக லற்றிடா
				நாய்க்கும் இன்பமுண் டோநல் லடியரைத்
				தோய்க்கும் ஆனந்தத் தூவெளி வெள்ளமே. 42.
				
				தூய தான துரிய அறிவெனுந்
				தாயும்நீ இன்பத் தந்தையும் நீஎன்றால்
				சேய தாம்இந்தச் சீவத் திரளன்றோ
				ஆயும் பேரொளி யான அகண்டமே. 43.
				
				அகண்ட மென்ன அருமறை யாகமம்
				புகன்ற நின்தன்மை போதத் தடங்குமோ
				செகங்க ளெங்குந் திரிந்துநன் மோனத்தை
				உகந்த பேருனை ஒன்றுவர் ஐயனே. 44.
				
				ஐய னேஉனை யன்றி யொருதெய்வங்
				கையி னால்தொழ வுங்கரு தேன்கண்டாய்
				பொய்ய னாகிலும் பொய்யுரை யேன்சுத்த
				மெய்ய னாம்உனக் கேவெளி யாகுமே. 45.
				
				வெளியில் நின்ற வெளியாய் விளங்கிய
				ஒளியில் நின்ற ஒளியாம்உன் தன்னைநான்
				தெளிவு தந்தகல் லாலடித் தேஎன்று
				களிபொ ருந்தவன் றேகற்ற கல்வியே. 46.
				
				கல்லை யுற்ற கருத்தினர் கார்நிறத்த
				தல்லை யொத்த குழலினர் ஆசையால்
				எல்லை யற்ற மயல்கொள வோஎழில்
				தில்லை யில்திக ழுந்திருப் பாதெனே. 47.
				
				திருவ ருள்தெய்வச் செல்வி மலைமகள்
				உருவி ருக்கின்ற மேனி யொருபரங்
				குருவை முக்கணெங் கோவைப் பணிநெஞ்சே
				கருவி ருக்கின்ற கன்மம்இங் கில்லையே. 48.
				
				கன்ம மேது கடுநர கேதுமேல்
				சென்ம மேதெனைத் தீண்டக் கடவதோ
				என்ம னோரதம் எய்தும் படிக்கருள்
				நன்மை கூர்முக்கண் நாதன் இருக்கவே. 49.
				
				நாத கீதன்என் நாதன்முக் கட்பிரான்
				வேத வேதியன் வெள்விடை யூர்திமெய்ப்
				போத மாய்நின்ற புண்ணியன் பூந்திருப்
				பாத மேகதி மற்றிலை பாழ்நெஞ்சே. 50.
				
				மற்று னக்கு மயக்கமென் வன்னெஞ்சே
				கற்றை வார்சடைக் கண்ணுத லோன்அருள்
				பெற்ற பேரவ ரேபெரி யோர்எலாம்
				முற்று மோர்ந்தவர் மூதுரை யர்த்தமே. 51.
				
				உரையி றந்துளத் துள்ள விகாரமாந்
				திரைக டந்தவர் தேடுமுக் கட்பிரான்
				பரைநிறைந்த பரப்பெங்ஙன் அங்ஙனே
				கரைக டந்தின்ப மாகக் கலப்பனே. 52.
				
				கலந்த முத்தி கருதினுங் கேட்பினும்
				நிலங்க ளாதியும் நின்றெமைப் போலவே
				அலந்து போயினம் என்னும் அருமறை
				மலர்ந்த வாயமுக்கண் மாணிக்கச் சோதியே. 53.
				
				சோதி யாதெனைத் தொண்டருட் கூட்டியே
				போதி யாதவெல் லாமெளப் போதிக்க
				ஆதி காலத்தி லுன்னடிக் காந்தவம்
				ஏது நான்முயன் றேன்முக்கண் எந்தையே. 54.
				
				எந்த நாளைக்கும் ஈன்றருள் தாயென
				வந்த சீரருள் வாழ்கஎன் றுன்னுவேன்
				சிந்தை நோக்கந் தெரிந்து குறிப்பெலாந்
				தந்து காக்குந் தயாமுக்கண் ஆதியே. 55.
				
				கண்ண கன்றஇக காசினியூடெங்கும்
				பெண்ணொ டாண்முத லாமென் பிறவியை
				எண்ண வோஅரி தேழை கதிபெறும்
				வண்ண முக்கண் மணிவந்து காக்குமே. 56.
				
				காக்கு நின்னருட் காட்சியல் லாலொரு
				போக்கு மில்லையென் புந்திக் கிலேசத்தை
				நீக்கி யாளுகை நின்பரம் அன்பினர்
				ஆக்க மேமுக்கண் ஆனந்த மூர்த்தியே. 57.
				
				ஆனந் தங்கதி என்னவென் னானந்த
				மோனஞ் சொன்ன முறைபெற முக்கண்எங்
				கோனிங் கீந்த குறிப்பத னால்வெறுந்
				தீனன் செய்கை திருவருட் செய்கையே. 58.
				
				கையி னால்தொழு தேத்திக் கசிந்துளம்
				மெய்யி னாலுனைக் காண விரும்பினேன்
				ஐய னேஅர சேஅரு ளேயருள்
				தைய லோர்புறம் வாழ்சக நாதனே. 59.
				
				சகத்தின் வாழ்வைச் சதமென எண்ணியே
				மிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன்
				அகத்து ளாரமு தாமைய நின்முத்திச்
				சுகத்தில் நான் வந்து தோய்வதெக் காலமோ. 60.
				
				கால மூன்றுங் கடந்தொளி ராநின்ற
				சீல மேநின் திருவரு ளாலிந்த்ர
				சால மாமிச் சகமென எண்ணிநின்
				கோல நாடுத லென்று கொடியனே. 61.
				
				கொடிய வெவ்வினைக் கூற்தைத் துரந்திடும்
				அடிக ளாம்பொரு ளேருனக் கன்பின்றிப்
				படியி லேழைமை பற்றுகின் றேன்வெறும்
				மிடியி னேன்கதி மேவும் விதியின்றே. 62.
				
				விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட
				மதியை யும்விதித் தம்மதி மாயையில்
				பதிய வைத்த பசுபதி நின்னருள்
				கதியை எப்படிக் கண்டு களிப்பதே. 63.
				
				கண்ட கண்ணுக்குக் காட்டுங் கதிரெனப்
				பண்டும் இன்றுமென் பால்நின் றுணர்த்திடும்
				அண்ட னேயுனக் கோர்பதி னாயிரந்
				தெண்டன் என்பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே. 64.
				
				வேண்டும் யாவும் இறந்து வெளியிடைத்
				தூண்டு வாரற்ற சோதிப் பிரான்நின்பால்
				பூண்ட அன்பர்தம் பொற்பணி வாய்க்குமேல்
				ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே. 65.
				
				எடுத்த தேகம் இறக்குமு னேஎனைக்
				கொடுத்து நின்னையுங் கூடவுங் காண்பனோ
				அடுத்த பேரறி வாயறி யாமையைக்
				கெடுத்த இன்பக் கிளர்மணிக் குன்றமே. 66.
				
				குன்றி டாத கொழுஞ்சுட ரேமணி
				மன்று ளாடிய மாணிக்க மேயுனை
				அன்றி யார்துணை யாருற வார்கதி
				என்று நீயெனக் கின்னருள் செய்வதே. 67.
				
				அருளெ லாந்திரண் டோர்வடி வாகிய
				பொருளெ லாம்வல்ல பொற்பொது நாதஎன்
				மருளெ லாங்கெடுத் தேயுளம் மன்னலால்
				இருளெ லாம்இரிந் தெங்கொளித் திட்டதே. 68.
				
				எங்கு மென்னை இகலுற வாட்டியே
				பங்கஞ் செய்த பழவினை பற்றற்றால்
				அங்க ணாவுன் னடியிணை யன்றியே
				தங்க வேறிட முண்டோ சகத்திலே. 69.
				
				உண்ட வர்க்கன்றி உட்பசி ஓயுமோ
				கண்ட வர்க்கன்றிக் காதல் அடங்குமோ
				தொண்ட ருக்கெளி யானென்று தோன்றுவான்
				வண்த மிழ்க்கிசை வாக மதிக்கவே. 70.
				
				மதியுங் கங்கையுங் கொன்றையும் மத்தமும்
				பொதியுஞ் சென்னிப் புனிதரின் பொன்னடிக்
				கதியை விட்டிந்தக் காமத்தில் ஆனந்தஎன்
				விதியை எண்ணி விழிதுயி லாதன்றே. 71.
				
				அன்றெ னச்சொல ஆமேன அற்புதம்
				நன்றெ னச்சொல நண்ணிய நன்மையை
				ஒன்றே னச்சொன ஒண்பொரு ளேயொளி
				இன்றெ னக்கருள் வாய்இரு ளேகவே. 72.
				
				இருவ ரேபுகழ்ந் தேத்தற் கினியராம்
				ஒருவ ரேதுணை என்றுண ராய்நெஞ்சே
				வருவ ரேகொடுங் காலர்கள் வந்தெதிர்
				பொருவ ரேயவர்க் கென்கொல் புகல்வதே. 73.
				
				புகழுங் கல்வியும் போதமும் பொய்யிலா
				அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே
				சுகவி லாசத் துணைப்பொருள் தோற்றமாங்
				ககன மேனியைக் கண்டன கண்களே. 74.
				
				கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை
				விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
				எண்ணி எண்ணி இரவும் பகலுமே
				நண்ணு கின்றவர் நான்தொழுந் தெய்வமே. 75.
				
				தெய்வம் வேறுள தென்பவர் சிந்தனை
				நைவ ரென்பதும் நற்பர தற்பர
				சைவ சிற்சிவ னேயுனைச் சார்ந்தவர்
				உய்வ ரென்பதும் யானுணர்ந் தேனுற்றே. 76.
				
				உற்ற வேளைக் குறுதுணை யாயிந்தச்
				சுற்ற மோநமைக் காக்குஞ்சொ லாய்நெஞ்சே
				கற்றை வார்சடைக் கண்ணுதல் பாதமே
				பற்ற தாயிற் பரசுகம் பற்றுமே. 77.
				
				பற்ற லாம்பொரு ளேபரம் பற்றினால்
				உற்ற மாதவர்க் குண்மையை நல்குமே
				மற்றும் வேறுள மார்க்கமெ லாமெடுத்
				தெற்று வாய்மன மேகதி எய்தவே. 78.
				
				19. ஆரணம்
				
				ஆரண மார்க்கத் தாகம வாசி
				அற்புத மாய்நடந் தருளுங்
				காரண முணர்த்துங் கையும்நின் மெய்யுங்
				கண்கள்மூன் றுடையஎன் கண்ணே
				பூரண அறிவிற் கண்டிலம் அதனாற்
				போற்றிஇப் புந்தியோ டிருந்து
				தாரணி யுள்ள மட்டுமே வணங்கத்
				தமியனேன் வேண்டிடத் தகுமே. 1.
				
				இடமொரு மடவாள் உலகன்னைக் கீந்திட்
				டெவ்வுல கத்தையு மீன்றுந்
				தடமுறும் அகில மடங்குநா ளம்மை
				தன்னையு மொழித்துவிண் ணெனவே
				படருறு சோதிக் கருணையங் கடலே
				பாயிருட் படுகரிற் கிடக்கக்
				கடவனோ நினைப்பும் மறப்பெனுந் திரையைக்
				கவர்ந்தெனை வளர்ப்பதுன் கடனே. 2.
				
				வளம்பெறு ஞான வாரிவாய் மடுத்து
				மண்ணையும் விண்ணையுந் தெரியா
				தளம்பெறுந் துரும்பொத் தாவியோ டாக்கை
				ஆனந்த மாகவே யலந்தேன்
				களம்பெறு வஞ்ச நெஞ்சினர் காணாக்
				காட்சியே சாட்சியே அறிஞர்
				உளம்பெறுந் துணையே பொதுவினில் நடிக்கும்
				உண்மையே உள்ளவா றிதுவே. 3.
				
				உள்ளமே நீங்கா என்னைவா வாவென்
				றுலப்பிலா ஆனந்த மான
				வெள்ளமே பொழியுங் கருணைவான் முகிலே
				வெப்பிலாத் தண்ணருள் விளக்கே
				கள்ளமே துரக்குந் தூவெளிப் பரப்பே
				கருவெனக் கிடந்தபாழ் மாயப்
				பள்ளமே வீழா தெனைக்கரை யேற்றிப்
				பாலிப்ப துன்னருட் பரமே. 4.
				
				பரம்பர மாகிப் பக்குவம் பழுத்த
				பழவடி யார்க்கருள் பழுத்துச்
				சுரந்தினி திரங்குந் தானகற் பகமே
				சோதியே தொண்டனேன் நின்னை
				இரந்துநெஞ் சுடைந்து கண்துயில் பெறாம
				லிருந்ததும் என்கணில் இருட்டைக்
				கரந்துநின் கண்ணால் துயில்பெறல் வேண்டிக்
				கருதினேன் கருத்திது தானே. 5.
				
				கருத்தினுட் கருத்தாய் இருந்துநீ உணர்த்துங்
				காரணங் கண்டுசும் மாதான்
				வருத்தமற் றிருந்து சுகம்பெறா வண்ணம்
				வருந்தினேன் மதியின்மை தீர்ப்பார்
				ஒருத்தரார் உளப்பா டுணர்பவர் யாவர்
				உலகவர் பன்னெறி எனக்குப்
				பொருத்தமோ சொல்லாய் மெளனசற் குருவே
				போற்றிநின் பொன்னடிப் போதே. 6.
				
				அடியெனும் அதுவும் அருளெனும் அதுவும்
				அறிந்திடின் நிர்க்குண நிறைவும்
				முடியெனும் அதுவும் பொருளெனும் அதுவும்
				மொழிந்திடிற் சுகமன மாயைக்
				குடிகெட வேண்டிற் பணியற நிற்றல்
				குணமெனப் புன்னகை காட்டிப்
				படிமிசை மெளனி யாகிநீ யாளப்
				பாக்கியம் என்செய்தேன் பரனே. 7.
				
				என்செய லின்றி யாவுநின் செயலென்
				றெண்ணுவேன் ஒவ்வொரு காலம்
				புன்செயல் மாயை மயக்கின்என் செயலாப்
				பொருந்துவே ன�தொரு காலம்
				பின்செயல் யாது நினைவின்றிக் கிடப்பேன்
				பித்தனேன் நன்னிலை பெறநின்
				தன்செய லாக முடித்திடல் வேண்டுஞ்
				சச்சிதா னந்தசற் குருவே. 8.
				
				குருவுரு வாகி மெளனியாய் மெளனக்
				கொள்கையை உணர்த்தினை அதனால்
				கருவுரு வாவ தெனக்கிலை இந்தக்
				காயமோ பொய்யெனக் கண்ட
				திருவுரு வாளர் அநுபவ நிலையுஞ்
				சேருமோ ஆவலோ மெத்த
				அருவுரு வாகி அல்லவாய்ச் சமயம்
				அளவிடா ஆனந்த வடிவே. 9.
				
				வடிவிலா வடிவாய் மனநினை வணுகா
				மார்க்கமாய் நீக்கருஞ் சுகமாய்
				முடிவிலா வீட்டின் வாழ்க்கைவேண் டினர்க்குன்
				மோனமல் லால்வழி யுண்டோ
				படியிரு ளகலச் சின்மயம் பூத்த
				பசுங்கொம்பை யடக்கியோர் கல்லால்
				அடியிலே யிருந்த ஆனந்த அரசே
				அன்பரைப் பருகும்ஆ ரமுதே. 10.
				
				20. சொல்லற்குஅரிய
				
				சொல்லற் கரிய பரம்பொருளே
				சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே
				வெல்லற் கரிய மயலிலெனை
				விட்டெங் கொளித்தாய் ஆகெட்டேன்
				கல்லிற் பசிய நாருரித்துக்
				கடுகிற் பெரிய கடலடைக்கும்
				அல்லிற் கரிய அந்தகனார்க்
				காளாக் கினையோ அறியேனே. 1.
				
				அறிவிற் கறிவு தாரகமென்
				றறிந்தே, அறிவோ டறியாமை
				நெறியிற் புகுதா தோர்படித்தாய்
				நின்ற நிலையுந் தெரியாது
				குறியற் றகண்டா தீதமயக்
				கோதி லமுதே நினைக்குறுகிப்
				பிரிவற் றிறுக்க வேண்டாவோ
				பேயேற் கினிநீ பேசாயே. 2.
				
				பேசா அநுபூ தியை அடியேன்
				பெற்றுப் பிழைக்கப் பேரருளால்
				தேசோ மயந்துந் தினியொருகாற்
				சித்தத் திருளுந் தீர்ப்பாயோ
				பாசா டவியைக் கடந்தஅன்பர்
				பற்றும் அகண்டப் பரப்பான
				ஈசா பொதுவில் நடமாடும்
				இறைவா குறையா இன்னமுதே. 3.
				
				இன்பக் கடலில் புகுந்திடுவான்
				இரவும் பகலுந் தோற்றாமல்
				அன்பிற் கரைந்து கரைந்துருகி
				அண்ணா அரசே எனக்கூவிப்
				பின்புற் றழுஞ்சே யெனவிழிநீர்
				பெருக்கிப் பெருக்கிப் பித்தாகித்
				துன்பக் கடல்விட் டகல்வேனோ
				சொரூபா னந்தச் சுடர்க்கொழுந்தே. 4.
				
				கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்
				கோவே மன்றிற் கூத்தாடற்
				கெழுந்த சுடரே இமயவரை
				என்தாய் கண்ணுக் கினியானே
				தொழும்தெய் வமும்நீ குருவும்நீ
				துணைநீ தந்தை தாயும்நீ
				அழுந்தும் பவம்நீ நன்மையும்நீ
				ஆவி யாக்கை நீதானே. 5.
				
				தானே யகண்டா காரமயந்
				தன்னி லெழுந்து பொதுநடஞ்செய்
				வானே மாயப் பிறப்பறுப்பான்
				வந்துன் அடிக்கே கரங்கூப்பித்
				தேனே என்னைப் பருகவல்ல
				தெள்ளா ரமுதே சிவலோகக்
				கோனே எனுஞ்சொல் நினதுசெவி
				கொள்ளா தென்னோ கூறாயே. 6.
				
				கூறாநின்ற இடர்க்கவலைக்
				குடும்பக் கூத்துள் துளைந்துதடு
				மாறா நின்ற பாவியைநீ
				வாவென் றழைத்தால் ஆகாதோ
				நீறார் மேனி முக்கணுடை
				நிமலா அடியார் நினைவினிடை
				ஆறாய்ப் பெருகும் பெருங்கருணை
				அரசே என்னை ஆள்வானே. 7.
				
				வானே முதலாம் பெரும்பூதம்
				வகுத்துப் புரந்து மாற்றவல்ல
				கோனே என்னைப் புரக்கும்நெறி
				குறித்தா யிலையே கொடியேனைத்
				தானே படைத்திங் கென்னபலன்
				தன்னைப் படைத்தா யுன்கருத்தை
				நானே தென்றிங் கறியேனே
				நம்பி னேன்கண் டருள்வாயே. 8.
				
				கண்டார் கண்ட காட்சியும்நீ
				காணார் காணாக் கள்வனும்நீ
				பண்டா ருயிர்நீ யாக்கையுநீ
				பலவாஞ் சமயப் பகுதியும்நீ
				எண்தோள் முக்கட் செம்மேனி
				எந்தாய் நினக்கே எவ்வாறு
				தொண்டாய்ப் பணிவா ரவர்பணிநீ
				சூட்டிக் கொள்வ தெவ்வாறே. 9.
				
				சூட்டி எனதென் றிடுஞ்சுமையைச்
				சுமத்தி எனையுஞ் சுமையாளாக்
				கூட்டிப் பிடித்து வினைவழியே
				கூத்தாட் டினையே நினதருளால்
				வீட்டைக் கருதும் அப்போது
				வெளியாம் உலக வியப்பனைத்தும்
				ஏட்டுக் கடங்காச் சொப்பனம்போல்
				எந்தாய் இருந்த தென்சொல்வேன். 10.
				
				21. வம்பனேன்
				
				வம்பனேன் கள்ளங் கண்டு மன்னருள் வெள்ள ராய
				உம்பர்பால் ஏவல் செய்யென் றுணர்த்தினை ஓகோ வானோர்
				தம்பிரா னேநீ செய்த தயவுக்குங் கைம்மா றுண்டோ
				எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனியொன்றுங் குறைவிலேனே. 1.
				
				குறைவிலா நிறைவாய் ஞானக் கோதிலா னந்த வெள்ளத்
				துறையிலே படிந்து மூழ்கித் துளைந்துநான் தோன்றா வாறுள்
				உறையிலே யுணர்த்தி மோன வொண்சுடர் வைவாள் தந்த
				இறைவனே யுனைப்பி ரிந்திங் கிருக்கிலேன் இருக்கி லேனே. 2.
				
				இருநில மாதி நாதம் ஈறதாம் இவைக டந்த
				பெருநில மாய தூய பேரொளிப் பிழம்பாய் நின்றுங்
				கருதரும் அகண்டா னந்தக் கடவுள்நின் காட்சி காண
				வருகவென் றழைத்தா லன்றி வாழ்வுண்டோ வஞ்ச னேற்கே. 3.
				
				வஞ்சனை அழுக்கா றாதி வைத்திடும் பாண்ட மான
				நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக் குருகப் பண்ணி
				அஞ்சலி செய்யுங் கையும் அருவிநீர் விழியு மாகத்
				தஞ்சமென் றிரங்கிக் காக்கத் தற்பரா பரமு னக்கே. 4.
				
				உனக்குநா னடித்தொண் டாகி உன்னடிக் கன்பு செய்ய
				எனக்குநீ தோற்றி அஞ்சேல் என்னுநா ளெந்த நாளோ
				மனக்கிலே சங்கள் தீர்ந்த மாதவர்க் கிரண்டற் றோங்குந்
				தனக்குநே ரில்லா ஒன்றே சச்சிதா னந்த வாழ்வே. 5.
				
				வாழ்வென வயங்கி என்னை வசஞ்செய்து மருட்டும் பாழ்த்த
				ஊழ்வினைப் பகுதி கெட்டிங் குன்னையுங் கிட்டு வேனோ
				தாழ்வெனுஞ் சமய நீங்கித் தமையுணர்ந் தோர்கட் கெல்லாஞ்
				சூழ்வெளிப் பொருளே முக்கட் சோதியே அமர ரேறே. 6.
				
				ஏறுவாம் பரியா ஆடை இருங்கலை உரியா என்றும்
				நாறுநற் சாந்த நீறு நஞ்சமே அமுதாக் கொண்ட
				கூறருங் குணத்தோய உன்றன் குரைகழல் குறுகி னல்லால்
				ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல் தானே. 7.
				
				தானமும் தவமும் யோகத் தன்மையும் உணரா என்பால்
				ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்கு வாயோ
				பானலங் கவர்ந்த தீஞ்சொற் பச்சிளங் கிள்ளை காண
				வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தி னானே. 8.
				
				நடத்திஇவ் வுலகை யெல்லாம் நாதநீ நிறைந்த தன்மை
				திடத்துட னறிந்தா னந்தத் தெள்ளமு தருந்தி டாதே
				விடத்திர ளனைய காம வேட்கையி லழுந்தி மாயைச்
				சடத்தினை மெய்யென் றெண்ணித் தளரவோ தனிய னேனே. 9.
				
				தனிவளர் பொருளே மாறாத் தண்ணருங் கருணை பூத்த
				இனியகற் பகமே முக்கண் எந்தையே நினக்கன் பின்றி
				நனிபெருங் குடிலங் காட்டு நயனவேற் கரிய கூந்தல்
				வனிதையர் மயக்கி லாழ்ந்து வருந்தவோ வம்பனேனே. 10.
				
				22. சிவன்செயல்
				
				சிவன்செய லாலே யாதும் வருமெனத் தெறேன் நாளும்
				அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளங்
				கவர்ந்துகொண் டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட் டையோ
				பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே. 1.
				
				பாவியேன் இனியென் செய்கேன் பரமனே பணிந்துன் பாதஞ்
				சேவியேன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி
				ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ
				சாவிபோஞ் சமயத் தாழ்ந்து சகத்திடைத் தவிக்கின் றேனே. 2.
				
				இடைந்திடைந் தேங்கி மெய்புள கிப்ப
				எழுந்தெழுந் தையநின் சரணம்
				அடைந்தனன் இனிநீ கைவிடேல் உனக்கே
				அபயமென் றஞ்சலி செய்துள்
				உடைந்துடைந் தெழுது சித்திரப் பாவை
				யொத்துநான் அசைவற நிற்பத்
				தொடர்ந்துநீ எனைஆட் கொள்ளுநா ளென்றோ
				சோதியே ஆதிநா யகனே. 3.
				
				ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம்
				யாவுமற் றகம்புறம் நிறைந்த
				சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான்
				தொண்டனேன் சுகத்திலே இருக்கப்
				போதியா வண்ணங் கைவிடல் முறையோ
				புன்மையேன் என்செய்கேன் மனமோ
				வாதியா நின்ற தன்றியும் புலன்சேர்
				வாயிலோ தீயினுங் கொடிதே. 4.
				
				வாயிலோ ரைந்திற் புலனெனும் வேடர்
				வந்தெனை யீர்த்துவெங் காமத்
				தீயிலே வெதுப்பி உயிரொடுந் தின்னச்
				சிந்தைநைந் துருகிமெய்ம் மறந்து
				தாயிலாச் சேய்போல் அலைந்தலைப் பட்டேன்
				தாயினுங் கருணையா மன்றுள்
				நாயக மாகி யொளிவிடு மணியே
				நாதனே ஞானவா ரிதியே. 5.
				
				ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்
				நாட்டமே நாட்டத்துள் நிறைந்த
				வானமே எனக்கு வந்துவந் தோங்கும்
				மார்க்கமே மருளர்தாம் அறியா
				மோனமே முதலே முத்திநல் வித்தே
				முடிவிலா இன்பமே செய்யுந்
				தானமே தவமே நின்னைநான் நினைந்தேன்
				தமியனேன் தனைமறப் பதற்கே. 6.
				
				மறமலி யுலக வாழ்க்கையே வேண்டும்
				வந்துநின் அன்பர்தம் பணியாம்
				அறமது கிடைக்கின் அன்றியா னந்த
				அற்புத நிட்டையின் நிமித்தந்
				துறவது வேண்டும் மெளனியாய் எனக்குத்
				தூயநல் லருள்தரின் இன்னம்
				பிறவியும் வேண்டும் யானென திறக்கப்
				பெற்றவர் பெற்றிடும் பேறே. 7.
				
				பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே
				பெருகிய கருணைவா ரிதியே
				நற்றவத் துணையே ஆனந்தக் கடலே
				ஞாதுரு ஞானஞே யங்கள்
				அற்றவர்க் கறாத நட்புடைக் கலப்பே
				அநேகமாய் நின்னடிக் கன்பு
				கற்றதுங் கேள்வி கேட்டதும் நின்னைக்
				கண்டிடும் பொருட்டன்றோ காணே. 8.
				
				அன்றுநால் வருக்கும் ஒளிநெறி காட்டும்
				அன்புடைச் சோதியே செம்பொன்
				மன்றுள்முக் கண்ணுங் காளகண் டமுமாய்
				வயங்கிய வானமே என்னுள்
				துன்றுகூ ரிருளைத் துரந்திடும் மதியே
				துன்பமும் இன்பமு மாகி
				நின்றவா தனையைக் கடந்தவர் நினைவே
				நேசமே நின்பரம் யானே. 9.
				
				யானெனல் காணேன் பூரண நிறைவில்
				யாதினும் இருந்தபே ரொளிநீ
				தானென நிற்குஞ் சமத்துற என்னைத்
				தன்னவ னாக்கவுந் தகுங்காண்
				வானென வயங்கி யொன்றிரண் டென்னா
				மார்க்கமா நெறிதந்து மாறாத்
				தேனென ருசித்துள் அன்பரைக் கலந்த
				செல்வமே சிற்பர சிவமே. 10.
				
				23. தன்னையொருவர்
				
				தன்னை யொருவர்க் கறிவரிதாய்த்
				தானே தானாய் எங்குநிறைந்
				துன்னற்கரிய பரவெளியாய்
				உலவா அமுதாய் ஒளிவிளக்காய்
				என்னுட் கலந்தாய் யானறியா
				திருந்தாய் இறைவா இனியேனும்
				நின்னைப் பெருமா றெனக்கருளாம்
				நிலையைக் கொடுக்க நினையாயோ. 1.
				
				நினையு நினைவுக் கெட்டாத
				நெறிபெற் றுணர்ந்த நெறியாளர்
				வினையைக் கரைக்கும் பரமஇன்ப
				வெள்ளப் பெருக்கே நினதருளால்
				மனைவி புதல்வர் அன்னைபிதா
				மாடு வீடென் றிடுமயக்கந்
				தனையும் மறந்திங் குனைமறவாத்
				தன்மை வருமோ தமியேற்கே. 2.
				
				வரும்போம் என்னும் இருநிலைமை
				மன்னா தொருதன் மைத்தாகிக்
				கரும்போ தேனோ முக்கனியோ
				என்ன என்னுள் கலந்துநலந்
				தரும்பே ரின்பப் பொருளேநின்
				தன்னை நினைந்து நெக்குருகேன்
				இரும்போ கல்லோ மரமோஎன்
				இதயம் யாதென் றறியேனே. 3.
				
				அறியுந் தரமோ நானுன்னை
				அறிவுக் கறிவாய் நிற்கையினால்
				பிறியுந் தரமோநீ என்னைப்
				பெம்மா னேபே ரின்பமதாய்ச்
				செறியும் பொருள்நீ நின்னையன்றிச்
				செறியாப் பொருள்நான் பெரும்பேற்றை
				நெறிநின் றொழுக விசாரித்தால்
				நினக்கோ இல்லை எனக்காமெ. 4.
				
				எனதென் பதும்பொய் யானெனல்பொய்
				எல்லா மிறந்த இடங்காட்டும்
				நினதென் பதும்பொய் நீயெனல்பொய்
				நிற்கும் நிலைக்கே நேசித்தேன்
				மனதென் பதுமோ என்வசமாய்
				வாரா தைய நின்னருளோ
				தனதென் பதுக்கும் இடங்காணேன்
				தமியேன் எவ்வா றுய்வேனே. 5.
				
				உய்யும் படிக்குன் திருக்கருணை
				ஒன்றைக் கொடுத்தால் உடையாய்பாழ்ம்
				பொய்யும் அவாவும் அழுக்காறும்
				புடைபட் டோடும் நன்னெறியாம்
				மெய்யும் அறிவும் பெறும்பேறும்
				விளங்கு மெனக்குன் னடியார்பால்
				செய்யும் பணியுங் கைகூடுஞ்
				சிந்தைத் துயருந் தீர்ந்திடுமே. 6.
				
				சிந்தைத் துயரென் றொருபாவி
				சினந்து சினந்து போர்முயங்க
				நிந்தைக் கிடமாய்ச் சுகவாழ்வை
				நிலையென் றுணர்ந்தே நிற்கின்றேன்
				எந்தப் படியுன் அருள்வாய்க்கும்
				எனக்கப் படிநீ அருள்செய்வாய்
				பந்தத் துயரற் றவர்க்கெளிய
				பரமா னந்தப் பழம்பொருளே. 7.
				
				பொருளைப் பூவைப் பூவையரைப்
				பொருளென் றெண்ணும் ஒருபாவி
				இருளைத் துரந்திட் டொளிநெறியை
				என்னுட் பதிப்ப தென்றுகொலோ
				தெருளத் தெருள அன்பர் நெஞ்சந்
				தித்தித் துருகத் தெவிட்டாத
				அருளைப் பொழியுங் குணமுகிலே
				அறிவா னந்தத் தாரமுதே. 8.
				
				ஆரா அமிர்தம் விரும்பினர்கள்
				அறிய விடத்தை அமிர்தாக்கும்
				பேரா னந்தச் சித்தனெனும்
				பெரியோய் ஆவிக் குரியோய்கேள்
				காரார் கிரக வலையினிடைக்
				கட்டுண் டிருந்த களைகளெலாம்
				ஊரா லொருநாட் கையுணவேற்
				றுண்டால் எனக்கிங் கொழிந்திடுமே. 9.
				
				எனக்கென் றிருந்த உடல்பொருளும்
				யானும் நினவென் றீந்தவண்ணம்
				அனைத்தும் இருந்தும் இலவாகா
				அருளாய் நில்லா தழிவழக்காய்
				மனத்துள் புகுந்து மயங்கவுமென்
				மதிக்குட் களங்கம் வந்ததென்னோ
				தனக்கொன் றுவமை அறநிறைந்த
				தனியே தன்னந் தனிமுதலே. 10.
				
				24. ஆசையெனும்
				
				ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்
				செனவும்மன தலையுங் காலம்
				மோசம் வரும் இதனாலே கற்றதுங்கேட்
				டதுந்தூர்ந்து முத்திக் கான
				நேசமும்நல் வாசமும்போய்ப் புலனாயிற்
				கொடுமைபற்றி நிற்பர் அந்தோ
				தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே
				நிராசையின்றேல் தெய்வமுண்டோ. 1.
				
				இரப்பானங் கொருவனவன் வேண்டுவகேட்
				டருள்செயென ஏசற் றேதான்
				புரப்பான்றன் அருள்நாடி இருப்பதுபோல்
				எங்குநிறை பொருளே கேளாய்
				மரப்பான்மை நெஞ்சினன்யான் வேண்டுவகேட்
				டிரங்கெனவே மெளனத் தோடந்
				தரப்பான்மை அருள்நிறைவில் இருப்பதுவோ
				பராபரமே சகச நிட்டை. 2.
				
				சாட்டையிற் பம்பர சாலம் போல்எலாம்
				ஆட்டுவான் இறையென அறிந்து நெஞ்சமே
				தேட்டமொன் றறஅருட் செயலில் நிற்றியேல்
				விட்டறந் துறவறம் இரண்டும் மேன்மையே. 3.
				
				தன்னெஞ்ச நினைப்பொழியா தறிவிலிநான்
				ஞானமெனுந் தன்மை பேச
				உன்னெஞ்ச மகிழ்ந்தொருசொல் உரைத்தனையே
				அதனைஉன்னி உருகேன் ஐயா
				வன்னெஞ்சோ இரங்காத மரநெஞ்சோ
				இருப்புநெஞ்சோ வைரமான
				கன்னெஞ்சோ அலதுமண்ணாங் கட்டிநெஞ்சோ
				எனதுநெஞ்சங் கருதிற் றானே. 4.
				
				வாழி சோபனம் வாழிநல் லன்பர்கள்
				சூழ வந்தருள் தோற்றமுஞ் சோபனம்
				ஆழி போல்அருள் ஐயன் மவுனத்தால்
				ஏழை யேன்பெற்ற இன்பமுஞ் சோபனம். 5.
				
				கொடுக்கின் றோர்கள்பால் குறைவையா தியானெனுங் குதர்க்கம்
				விடுக்கின் றோர்கள்பால் பிரிகிலா துள்ளன்பு விடாதே
				அடுக்கின் றோர்களுக் கிரங்கிடுந் தண்டமிழ் அலங்கல்
				தொடுக்கின் றோர்களைச் சோதியா ததுபரஞ் சோதி. 6.
				
				உலக மாயையி லேஎளி யேன்றனை
				உழல விட்டனை யேஉடை யாய்அருள்
				இலகு பேரின்ப வீட்டினில் என்னையும்
				இருத்தி வைப்பதெக் காலஞ்சொ லாய்எழில்
				திலக வாள்நுதற் பைந்தொடி கண்ணிணை
				தேக்க நாடகஞ் செய்தடி யார்க்கெலாம்
				அலகி லாவினை தீர்க்கத் துசங்கட்டும்
				அப்பனே அருள் ஆனந்த சோதியே. 7.
				
				முன்னிலைச்சுட் டொழிதியெனப் பலகாலும்
				நெஞ்சேநான் மொழிந்தே னேநின்
				தன்னிலையைக் காட்டாதே என்னையொன்றாச்
				சூட்டாதே சரண்நான் போந்த
				அந்நிலையே நிலையந்த நிலையிலே
				சித்திமுத்தி யனைத்துந் தோன்றும்
				நன்னிலையீ தன்றியிலை சுகமென்றே
				சுகர்முதலோர் நாடி னாரே. 8.
				
				அத்துவிதம் பெறும்பேறென் றறியாமல்
				யானெனும்பேய் அகந்தை யோடு
				மத்தமதி யினர்போல மனங்கிடப்ப
				இன்னம் இன்னம் வருந்து வேனோ
				சுத்தபரி பூரணமாய் நின்மலமாய்
				அகண்டிதமாய்ச் சொரூபா னந்தச்
				சத்திகள்நீங் காதவணந் தன்மயமாய்
				அருள்பழுத்துத் தழைத்த ஒன்றே. 9.
				
				தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க
				வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன்
				அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ்
				சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே. 10.
				
				காதில் ஓலையை வரைந்துமேற்
				குமிழையுங் கறுவிவேள் கருநீலப்
				போது போன்றிடுங் கண்ணியர்
				மயக்கிலெப் போதுமே தளராமல்
				மாது காதலி பங்கனை
				யபங்கனை மாடமா ளிகைசூழுஞ்
				சேது மேவிய ராமநா
				யகன்தனைச் சிந்தைசெய் மடநெஞ்சே. 11.
				
				அண்டமுமாய்ப் பிண்டமுமாய் அளவிலாத
				ஆருயிர்க் கோருயிராய் அமர்ந்தாயானால்
				கண்டவரார் கேட்டவரார் உன்னாலுன்னைக்
				காண்பதல்லால் என்னறிவாற் காணப்போமோ
				வண்டுளப மணிமார்பன் புதல்வனோடும்
				மனைவியொடுங் குடியிருந்து வணங்கிப்போற்றும்
				புண்டரிக புரத்தினில்நா தாந்தமெளன
				போதாந்த நடம்புரியும் புனிதவாழ்வே. 12.
				
				பொறியிற் செறிஐம் புலக்கனியைப்
				புந்திக் கவராற் புகுந்திழுத்து
				மறுகிச் சுழலும் மனக்குரங்கு
				மாள வாளா இருப்பேனோ
				அறிவுக் கறிவாய்ப் பூரணமாய்
				அகண்டா னந்த மயமாகிப்
				பிறிவுற் றிருக்கும் பெருங்கருணைப்
				பெம்மா னேஎம் பெருமானே. 13.
				
				உரையுணர் விறந்து தம்மை உணர்பவர் உணர்வி னூடே
				கரையிலா இன்ப வெள்ளங் காட்டிடும் முகிலே மாறாப்
				பரையெனுங் கிரணஞ் சூழ்ந்த பானுவே நின்னைப் பற்றித்
				திரையிலா நீர்போல் சித்தந் தெளிவனோ சிறிய னேனே. 14.
				
				கேவல சகல மின்றிக் கீழொடு மேலாய் எங்கும்
				மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பந்
				தாவிட இன்பா தீதத் தனியிடை யிருத்தி வைத்த
				தேவெனும் மெளனி செம்பொற் சேவடி சிந்தை செய்வாம். 15.
				
				நேற்றுளார் இன்று மாளா நின்றனர் அதனைக் கண்டும்
				போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம்
				ஆற்றிலேன் அகண்டா னந்த அண்ணலே அளவில் மாயைச்
				சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறிய னேனே. 16.
				
				போதம் என்பதே விளக்கொவ்வும் அவித்தைபொய் இருளாந்
				தீதி லாவிளக் கெடுத்திருள் தேடவுஞ் சிக்கா
				தாத லால்அறி வாய்நின்ற இடத்தறி யாமை
				ஏது மில்லையென் றெம்பிரான் சுருதியே இயம்பும். 17.
				
				சுருதி யேசிவா கமங்களே உங்களாற் சொல்லும்
				ஒருத னிப்பொருள் அளவையீ தென்னவா யுண்டோ
				பொருதி ரைக்கடல் நுண்மணல் எண்ணினும் புகலக்
				கருத எட்டிடா நிறைபொருள் அளவையார் காண்பார். 18.
				
				மின்னைப் போன்றன அகிலமென் றறிந்துமெய்ப் பொருளாம்
				உன்னைப் போன்றநற் பரம்பொருள் இல்லையென் றோர்ந்து
				பொன்னைப் போன்றநின் போதங்கொண் டுன்பணி பொருந்தா
				என்னைப் போன்றுள ஏழையர் ஐயஇங் கெவரே. 19.
				
				தாயுந் தந்தையும் எனக்குற வாவதுஞ் சாற்றின்
				ஆயும் நீயும்நின் அருளும்நின் அடியரும் என்றோ
				பேய னேன்திரு வடியிணைத் தாமரை பிடித்தேன்
				நாய னேஎனை ஆளுடை முக்கண்நா யகனே. 20.
				
				காந்தமதை எதிர்காணிற் கருந்தாது
				செல்லுமக் காந்தத் தொன்றா
				தோய்ந்தவிடம் எங்கேதான் அங்கேதான்
				சலிப்பறவும் இருக்கு மாபோல்
				சாந்தபதப் பரம்பொருளே பற்றுபொரு
				ளிருக்குமத்தாற் சலிக்குஞ் சித்தம்
				வாய்ந்தபொருள் இல்லையெனிற் பேசாமை
				நின்றநிலை வாய்க்கு மன்றே. 21.
				
				பொற்பு றுங்கருத் தேயக மாயதிற் பொருந்தக்
				கற்பின் மங்கைய ரெனவிழி கதவுபோற் கவினச்
				சொற்ப னத்தினுஞ் சோர்வின்றி யிருந்தநான் சோர்ந்து
				நிற்ப தற்கிந்த வினைவந்த வாறென்கொல் நிமலா. 22.
				
				வந்த வாறிந்த வினைவழி யிதுவென மதிக்கத்
				தந்த வாறுண்டோ வுள்ளுணர் விலையன்றித் தமியேன்
				நொந்த வாறுகண் டிரங்கவும் இலைகற்ற நூலால்
				எந்த வாறினித் தற்பரா உய்குவேன் ஏழை. 23.
				
				சொல்லாலும் பொருளாலும் அளவை யாலுந்
				தொடரவொண்ணோ அருள்நெறியைத் தொடர்ந்து நாடி
				நல்லார்கள் அவையகத்தே யிருக்க வைத்தாய்
				நன்னர்நெஞ்சந் தன்னலமும் நணுகு வேனோ
				இல்லாளி யாயுலகோ டுயிரை யீன்றிட்
				டெண்ணரிய யோகினுக்கும் இவனே என்னக்
				கல்லாலின் கீழிருந்த செக்கர் மேனிக்
				கற்பகமே பராபரமே கைலை வாழ்வே. 24.
				
				சாக்கிரமா நுதலினிலிந் திரியம் பத்துஞ்
				சத்தாதி வசனாதி வாயு பத்தும்
				நீக்கமிலந் தக்கரணம் புருட னோடு
				நின்றமுப் பான்ஐந்து நிலவுங் கண்டத்
				தாக்கியசொப் பனமதனில் வாயு பத்தும்
				அடுத்தனசத் தாதிவச னாதி யாக
				நோக்குகர ணம்புருடன் உடனே கூட
				நுவல்வர்இரு பத்தைந்தா நுண்ணி யோரே. 25.
				
				கழுத்திஇத யந்தனிற்பி ராணஞ் சித்தஞ்
				சொல்லரிய புருடனுடன் மூன்ற தாகும்
				வழுத்தியநா பியில்துரியம் பிராண னோடு
				மன்னுபுரு டனுங்கூட வயங்கா நிற்கும்
				அழுத்திடுமூ லந்தன்னில் துரியா தீதம்
				அதனிடையே புருடனொன்றி அமரும் ஞானம்
				பழுத்திடும்பக் குவரறிவர் அவத்தை ஐந்திற்
				பாங்குபெறக் கருவிநிற்கும் பரிசு தானே. 26.
				
				இடத்தைக் காத்திட்ட சுவாவெனப் புன்புலால் இறைச்சிச்
				சடத்தைக் காத்திட்ட நாயினேன் உன்னன்பர் தயங்கும்
				மடத்தைக் காத்திட்ட சேடத்தால் விசேடமாய் வாழ
				விடத்தைக் காத்திட்ட கண்டத்தோய் நின்னருள் வேண்டும். 27.
				
				வாத னைப்பழக் கத்தினான் மனம்அந்த மனத்தால்
				ஓத வந்திடும் உரையுரைப் படிதொழி லுளவாம்
				ஏதம் அம்மனம் யாயைஎன் றிடிற்கண்ட எல்லாம்
				ஆத ரஞ்செயாப் பொய்யதற் கையமுண் டாமோ. 28.
				
				ஐய வாதனைப் பழக்கமே மனநினை வதுதான்
				வைய மீதினிற் பரம்பரை யாதினும் மருவும்
				மெய்யில் நின்றொளிர் பெரியவர் சார்புற்று விளங்கிப்
				பொய்ய தென்பதை யொருவிமெய் யுணருதல்போதம். 29.
				
				குலமி லான்குணங் குறியிலான் குறைவிலான் கொடிதாம்
				புலமி லான்தனக் கென்னவோர் பற்றிலான் பொருந்தும்
				இலமி லான்மைந்தர் மனைவியில் லான்எவன் அவன்சஞ்
				சலமி லான்முத்தி தரும்பர சிவனெனத் தகுமே. 30.
				
				கடத்தை மண்ணென லுடைந்தபோ
				தோவிந்தக் கருமச்
				சடத்தைப் பொய்யெனல் இறந்தபோ
				தோசொலத் தருமம்
				விடத்தை நல்லமிர் தாவுண்டு
				பொற்பொது வெளிக்கே
				நடத்தைக் காட்டிஎவ் வுயிரையும்
				நடப்பிக்கும் நலத்தோய். 31.
				
				நானெனவும் நீயெனவும் இருதன்மை
				நாடாமல் நடுவே சும்மா
				தானமரும் நிலையிதுவே சத்தியஞ்சத்
				தியமெனநீ தமிய னேற்கு
				மோனகுரு வாகியுங்கை காட்டினையே
				திரும்பவுநான் முளைத்துத் தோன்றி
				மானதமார்க் கம்புரிந்திங் கலைந்தேனே
				பரந்தேனே வஞ்ச னேனே. 32.
				
				தன்மயஞ் சுபாவம் சுத்தந் தன்னருள் வடிவஞ் சாந்தம்
				மின்மய மான அண்ட வெளியுரு வான பூர்த்தி
				என்மயம் எனக்குக் காட்டா தெனையப கரிக்க வந்த
				சின்மயம் அகண்டா காரந் தட்சிணா திக்க மூர்த்தம். 33.
				
				சிற்ற ரும்பன சிற்றறி வாளனே தெளிந்தால்
				மற்ற ரும்பென மலரெனப் பேரறி வாகிக்
				கற்ற ரும்பிய கேள்வியால் மதித்திடக் கதிச்சீர்
				முற்ற ரும்பிய மெளனியாய்ப் பரத்திடை முளைப்பான். 34.
				
				மயக்கு சிந்தனை தெளிவென இருநெறி வகுப்பான்
				நயக்கு மொன்றன்பால் ஒன்றிலை யெனல்நல வழக்கே
				இயக்க முற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம்
				பயக்க வல்லதோர் தெளிவுடை யவர்க்கெய்தல் பண்போ. 35.
				
				அருள்வடி வேழு மூர்த்தம்
				அவைகளசோ பான மென்றே
				சுருதிசொல் லியவாற் றாலே
				தொழுந்தெய்வம் எல்லாம் ஒன்றே
				மருளெனக் கில்லை முன்பின்
				வருநெறிக் கிவ்வ ழக்குத்
				தெருளினமுன் னிலையாம் உன்னைச்
				சேர்ந்தியான் தெளிகின் றேனே. 36.
				
				எத்தனைப் பிறப்போ எத்தனை இறப்போ
				எளியேனேற் கிதுவரை யமைத்து
				அத்தனை யெல்லாம் அறிந்தநீ யறிவை
				அறிவிலி அறிகிலேன் அந்தோ
				சித்தமும் வாக்குந் தேகமும் நினவே
				சென்மமும் இனியெனால் ஆற்றா
				வைத்திடுங் கென்னை நின்னடிக் குடியா
				மறைமூடி யிருந்தவான் பொருளே. 37. 
				
				வான்பொரு ளாகி எங்குநீ யிருப்ப
				வந்தெனைக் கொடுத்துநீ யாகா
				தேன்பொருள் போலக் கிடக்கின்றேன் முன்னை
				இருவினை வாதனை யன்றோ
				தீன்பொருளான அமிர்தமே நின்னைச்
				சிந்தையிற பாவனை செய்யும்
				நான்பொரு ளானேன் நல்லநல் அரசே
				நானிறந் திருப்பது நாட்டம். 38.
				
				நாட்டமூன் றுடைய செந்நிற மணியே
				நடுவுறு நாயக விளக்கே
				கோட்டமில் குணத்தோர்க் கெளியநிர்க் குணமே
				கோதிலா அமிர்தமே நின்னை
				வாட்டமில் நெஞ்சங் கிண்ணமாச் சேர்த்து
				வாய்மடுத் தருந்தினன் ஆங்கே
				பாட்டாளி நறவம் உண்டயர்ந் ததுபோற்
				பற்றயர்ந் திருப்பதெந் நாளோ. 39.
				
				என்னுடை உயிரே என்னுளத் தறிவே
				என்னுடை அன்பெனும் நெறியாம்
				கன்னல்முக கனிதேன் கண்டமிர் தென்னக்
				கலந்தெனை மேவிடக் கருணை
				மன்னிய உறவே உன்னைநான் பிரியா
				வண்ணமென் மனமெனுங் கருவி
				தன்னது வழியற் றென்னுழைக் கிடப்பத்
				தண்ணருள் வரமது வேண்டும். 40.
				
				25. எனக்கெனச் செயல்
				
				எனக்கெ னச்செயல் வேறிலை யாவுமிங் கொருநின்
				தனக்கெ னத்தகும் உடல்பொரு ளாவியுந் தந்தேன்
				மனத்த சத்துள அழுக்கெலாம் மாற்றியெம் பிரான்நீ
				நினைத்த தெப்படி யப்படி அருளுதல் நீதம். 1.
				
				உளவ றிந்தெலாம் நின்செய லாமென வுணர்ந்தோர்க்
				களவி லானந்தம் அளித்தனை அறிவிலாப் புன்மைக்
				களவு நாயினேற் கிவ்வணம் அமைத்தனை கருத்துத்
				தளருந் தன்மையிங் காரொடு புகலுவேன் தக்கோய். 2.
				
				என்னைத் தான்இன்ன வண்ணமென் றறிகிலா ஏழை
				தன்னைத் தான்அறிந் திடஅருள் புரிதியேல் தக்கோய்
				பின்னைத் தானின்றன் அருள்பெற்ற மாதவப் பெரியோர்
				நின்னைத் தான்நிக ரார்என வாழ்த்துவர் நெறியால். 3.
				
				ஏது மின்றித்தன் அடியிணைக் கன்புதான் ஈட்டுங்
				காத லன்டர்க்குக் கதிநிலை ஈதெனக் காட்டும்
				போத நித்திய புண்ணிய எண்ணரும் புவன
				நாத தற்பர நானெவ்வா றுகுய்வேன் நவிலாய். 4.
				
				வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும்
				பாத நித்திய பரம்பர நிரந்தர பரம
				நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும்
				நீத நிர்க்குண நினையன்றி ஒன்றும்நான் நினையேன். 5.
				
				நெறிகள் தாம்பல பலவுமாய் அந்தந்த நெறிக்காஞ்
				செறியுந் தெய்வமும் பலபல வாகவுஞ் செறிந்தால்
				அறியுந் தன்மையிங் காருனை அறிவினால் அறந்தோர்
				பிறியுந் தன்மையில் லாவகை கலக்கின்ற பெரியோய். 6.
				
				பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்ததிற் பிறங்கும்
				உரிய பல்லுயிர் எத்தனை அமைத்தவைக் குறுதி
				வருவ தெத்தனை அமைத்தனை அமைத்தருள் வளர்க்கும்
				அரிய தத்துவ எனக்கிந்த வணைமேன் அமைத்தாய். 7.
				
				கணம் தேனுநின் காரணந் தன்னையே கருத்தில்
				உணரு மாதவர்க் கானந்தம் உதவினை யொன்றுங்
				குணமி லாதபொய் வஞ்சனுக் கெந்தைநிர்க் குணமா
				மணமு லாமலர்ப் பதந்தரின் யாருனை மறுப்பார். 8.
				
				கன்னல் முக்கனி கண்டுதேன் சருக்கரை கலந்த
				தென்ன முத்தியிற் கலந்தவர்க் கின்பமா யிருக்கும்
				நன்ன லத்தநின் நற்பதந் துணையென நம்பச்
				சொன்ன வர்க்கெனா லாங்கைம்மா றில்லைஎன் சொல்வேன். 9.
				
				தந்தை தாய்தமர் மகவெனும் அவையெலாஞ் சகத்தில்
				பந்த மாம்என்றே அருமறை வாயினாற் பகர்ந்த
				எந்தை நீஎனை இன்னமவ் வல்லலில் இருத்தில்
				சிந்தை தான்தெளிந் தெவ்வணம் உய்வணஞ் செப்பாய். 10.
				
				துய்யன் தண்ணருள் வடிவினன் பொறுமையால் துலங்கும்
				மெய்யன் என்றுனை ஐயனே அடைந்தனன் மெத்த
				நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றைநூ றாக்கும்
				பொய்ய னென்றெனைப் புறம்விடின் என்செய்வேன் புகலாய். 11.
				
				ஒன்ற தாய்ப்பல வாய்உயிர்த் திரட்கெலாம் உறுதி
				என்ற தாய்என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய
				நின்ற தாய்நிலை நின்றிடும் அறிஞஎன் நெஞ்சம்
				மன்ற தாய்இன்ப வுருககொடு நடித்திடின் வாழ்வேன். 12.
				
				தனியி ருந்தருட் சகசமே பொருந்திடத் தமியேற்
				கினியி ரங்குதல் கடனிது சமயமென் னிதயக்
				கனிவும் அப்படி யாயின தாதலாற் கருணைப்
				புனித நீயறி யாததொன் றுள்ளதோ புகலாய். 13.
				
				திருந்து சீரடித் தாமரைக் கன்புதான் செய்யப்
				பொருந்து நாள்நல்ல புண்ணியஞ் செய்தநாள் பொருந்தா(து)
				இருந்த நாள்வெகு தீவினை யிழைத்தநாள் என்றால்
				அருந்த வாவுனைப்பொருந்துநாள் எந்தநாள் அடிமை. 14.
				
				பின்னும் முன்னுமாய் நடுவுமாய் யாவினும் பெரிய
				தென்னுந் தன்மையாய் எவ்வுயிர்த் திரளையும் இயக்கி
				மன்னுந் தண்ணருள் வடிவமே உனக்கன்பு வைத்துந்
				துன்னும் இன்னல்ஏன் யானெனும் அகந்தையேன் சொல்லாய். 15.
				
				மின்னை யன்னபொய் வாழ்க்கையே நிலையென மெய்யாம்
				உன்னை நான்மறந் தெவ்வணம் உய்வணம் உரையாய்
				முன்னை வல்வினை வேரற முடித்தென்று முடியாத்
				தன்னைத் தன்னடி யார்க்கருள் புரிந்திடும் தக்கோய். 16.
				
				எம்ப ராபர எம்முயிர்த் துணைவஎன் றிறைஞ்சும்
				உம்பர் இம்பர்க்கும் உளக்கணே நடிக்கின்றாய் உன்றன்
				அம்பொன் மாமலர்ப் பதத்தையே துணையென அடிமை
				நம்பி னேன் இனிப் புரப்பதெக் காலமோ நவிலாய். 17.
				
				பாடி யாடிநின் றிரங்கிநின் பதமலர் முடிமேல்
				சூடி வாழ்ந்தனர் அமலநின் னடியர்யான் தொழும்பன்
				நாடி யேஇந்த உலகத்தை மெய்யென நம்பித்
				தேடி னேன்வெறுந் தீமையே என்னினிச் செய்வேன். 18.
				
				களவு வஞ்சனை காமமென் றிவையெலாங் காட்டும்
				அளவு மாயைஇங் காரெனக் கமைத்தனர் ஐயா
				உளவி லேஎனக் குள்ளவா றுணர்த்திஉன் அடிமை
				வளரும் மாமதி போல்மதி தளர்வின்றி வாழ்வேன். 19.
				
				வான நாயக வானவர் நாயக வளங்கூர்
				ஞான நாயக நான்மறை நாயக நலஞ்சேர்
				மோன நாயக நின்னடிக் கன்பின்றி முற்றுந்
				தீன னாய்அகம் வாடவோ என்செய்வேன் செப்பாய். 20.
				
				ஏத மற்றவர்க் கின்பமே பொழிகின்ற இறையே
				பாத கக்கருங் கல்மனங் கோயிலாப் பரிந்து
				சூத கத்தனா யாதினும் இச்சைமேல் தோன்றும்
				வாத னைக்கிட மாயினேன் எவ்வணம் வாழ்வேன். 21.
				
				தெளிவொ டீகையோ அறிகிலான் அறிவிலான் சிறிதும்
				அளியி லான்இவன் திருவருட் கயலென அறிந்தோ
				எளிய னாக்கினை என்செய்வேன் என்செய்வேன் எல்லா
				ஒளியு மாய்நிறை வெளியுமாய் யாவுமாம் உரவோய். 22.
				
				கண்ணி னுள்மணி யென்னவே தொழும் அன்பர் கருத்துள்
				நண்ணு கின்றநின் அருளெனக் கெந்தநாள் நணுகும்
				மண்ணும் விண்ணும்மற் றுள்ளன பூதமும் மாறாப்
				பெண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ற பெரியோய். 23.
				
				சகமெ லாந்தனி புரந்தனை தகவுடைத் தக்கோர்
				அகமெ லாநிறைந் தானந்த மாயினை அளவில்
				மகமெ லாம்புரிந் தோரைவாழ் வித்தனை மாறா
				இகமெ லாமெனைப் பிறந்திடச் செய்ததேன் எந்தாய். 24.
				
				ஏய்ந்த நல்லருள் பெற்றவர்க் கேவலாய் எளியேன்
				வாய்ந்த பேரன்பு வளர்க்கவுங் கருணைநீ வளர்ப்பாய்
				ஆய்ந்த மாமறை எத்தனை அத்தனை அறிவால்
				தோய்ந்த பேர்கட்குந் தோன்றிலாத் தோன்றலாந் தூயோய். 25.
				
				தக்க நின்னருட் கேளவியோ சிறிதின்றித் தமியேன்
				மிக்க தெய்வமே நின்னின்ப வெள்ளத்தில் வீழேன்
				ஒக்கல் தாய்தந்தை மகவெனும் பாசக்கட் டுடனே
				துக்க வெள்ளத்தில் ஆழ்கின்றேன் என்செய்வான் துணிந்தேன். 26.
				
				பவம்பு ரிந்திடும் பாவியேற் கருள்நிலை பதியத்
				தவஞ்செ யும்படித் தயவுசெய் தருள்வதே தருமம்
				அவம்பு ரிந்திடார்க் கானந்த அமிர்தத்தை அளிக்க
				நவங்கொள் தத்துவத் திரையெறி கடலெனும் நலத்தோய். 27.
				
				உற்று ணர்ந்தெலாம் நீயல தில்லையென் றுனையே
				பற்று கின்றனர் எந்தைநின் னடியர்யான் பாவி
				முற்று மாயமாஞ் சகத்தையே மெய்யென முதல்தான்
				அற்றி ருந்திடத் தொழில்செய்வான் தனிநிக ரானேன். 28.
				
				26. மண்டலத்தின்
				
				மண்டலத்தின் மிசையொருவன் செய்வித்தை
				அகோவெனவும் வார ணாதி
				அண்டமவை அடுக்கடுக்காய் அந்தரத்தில்
				நிறுத்துமவ தானம் போல
				எண்தரும்நல் அகிலாண்ட கோடியைத்தன்
				அருள்வெளியில் இலக வைத்துக்
				கொண்டுநின்ற அற்புதத்தை எவராலும்
				நிச்சயிக்கக் கூடா ஒன்றை. 1.
				
				ஒன்றிரண்டாய் விவகரிக்கும் விவகாரங்
				கடந்தேழாம் யோக பூமி
				நின்றுதெளிந் தவர்பேசா மெளன நியா
				யத்தைநிறை நிறைவைத் தன்னை
				அன்றியொரு பொருளிலதாய் எப்பொருட்கும்
				தான்முதலாய் அசல மாகி
				என்றுமுள்ள இன்பத்தைத் தண்ணென்ற
				சாந்தபத இயற்கை தன்னை. 2.
				
				பதமூன்றுங் கடந்தவர்க்கு மேலான
				ஞானபதப் பரிசு காட்டிச்
				சதமாகி நிராலம்ப சாட்சியதாய்
				ஆரம்பத் தன்மை யாகி
				விதம்யாவுங் கடந்தவித்தை யெனுமிருளைக்
				கீண்டெழுந்து விமல மாகி
				மதமாறுங் காணாத ஆனந்த
				சாகரத்தை மெளன வாழ்வை. 3.
				
				வாழ்வனைத்துந் தந்தஇன்ப மாகடலை
				நல்லமிர்தை மணியைப் பொன்னைத்
				தாழ்வற என் உளத்திருந்த தத்துவத்தை
				அத்துவித சாரந் தன்னைச்
				சூழ்பெரும்பே ரொளியையொளி பரந்தபர
				வெளியை இன்பச் சுகத்தை மாறா
				தேழுலகுங் கலந்தின்றாய் நாளையா
				யென்றுமாம் இயற்கை தன்னை. 4.
				
				தன்னையறிந் தவர்தம்மைத் தானாகச்
				செய்தருளுஞ் சமத்தை லோகம்
				மின்னைநிகர்த் திடஅழியாச் சொரூபானந்
				தச்சுடரை வேத மாதி
				என்னையறி வரிதென்னச் சமயகோ
				டிகளிடைய இடையறாத
				பொன்னைவிரித் திடுமுலகத் தும்பரும்இம்
				பரும்பரவும் புனித மெய்யை. 5.
				
				பரவரிய பரசிவமாய் அதுவெனலாய்
				நானெனலாய்ப் பாச சாலம்
				விரவிநின்ற விசித்திரத்தை ஐக்யபதத்
				தினிதிருத்த விவேகந் தன்னை
				இரவுபகல் நினைப்புமறப் பெனுந்தொந்தம்
				அறியார்கள் இதயம் வேதச்
				சிரமெனவாழ் பராபரத்தை ஆனந்தம்
				நீங்காத சிதாகா சத்தை. 6.
				
				அத்துவித அநுபவத்தை அனந்தமறை இன்னம்
				இன்னம் அறியேம் என்னும்
				நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தைத்
				தன்னருளால் நினைவுக் குள்ளே
				வைத்துவைத்துப் பார்ப்பவரைத் தானாக
				எந்நாளும் வளர்த்துக் காக்குஞ்
				சித்தினைமாத் தூவெளியைத் தன்மயமாம்
				ஆனந்தத் தெய்வந் தன்னை. 7.
				
				தன்னிலே தானாக நினைந்துகனிந்
				தவிழ்ந்துசுக சமாதி யாகப்
				பொன்னிலே பணிபோலும் மாயைதரு
				மனமேஉன் புரைகள் தீர்ந்தாய்
				என்னினோ யான்பிழைப்பேன் எனக்கினியார்
				உன்போல்வார் இல்லை இல்லை
				உன்னிலோ திருவருளுக் கொப்பாவாய்
				என்னுயிர்க்கோர் உறவு மாவாய். 8.
				
				உறவுடலை எடுத்தவரில் பிரமாதி
				யேனும்உனை யொழிந்து தள்ளற்
				கறவுமரி தரிதன்றோ இகபரமும்
				உன்னையன்றி ஆவ துண்டோ
				வறிதிலுன்னை அசத்தென்னல் வழக்கன்று
				சத்தெனவும் வாழ்த்து வேனென்
				சிறுமைகெடப் பெருமையினின் சென்மதே
				யத்தினில்நீ செல்லல் வேண்டும். 9.
				
				வேண்டியநாள் என்னோடும் பழகியநீ
				எனைப்பிரிந்த விசாரத் தாலே
				மாண்டுகிடக் கினும்அந்த எல்லையையும்
				பூரணமாய் வணக்கஞ் செய்வேன்
				ஆண்டகுரு மெளனிதன்னால் யானெனதற்
				றவனருள்நான் ஆவேன் பூவிற்
				காண்டகஎண் சித்திமுத்தி எனக்குண்டாம்
				உன்னாலென் கவலை தீர்வேன். 10.
				
				தீராத என்சனன வழக்கெல்லாந்
				தீருமிந்தச் சனனத் தோடே
				யாரேனும் அறிவரிய சீவன்முத்தி
				யுண்டாகும் ஐய ஐயோ
				காரேனுங் கற்பகப்பூங் காவேனும்
				உனக்குவமை காட்டப் போமோ
				பாராதி யாகஏழு மண்டலத்தில்
				நின்மகிமை பகர லாமோ. 11.
				
				27. பாயப்புலி
				
				பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகில
				மாயைப் பெரும்படைக்கேஇலக் காவெனை வைத்தனையோ
				நீயெப் படிவகுத் தாலுநன் றேநின் பெருங்கருணை
				தாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்த தற்பரமே. 1.
				
				தற்பர மாஞ்சிற் பரமாகி மன்றந் தனில்நடித்து
				நிற்பர்அம் போருகன் மால்பணி நீதரென் நெஞ்சகமாங்
				கற்பரந் தாங்குக் கரைந்திட வானொத்த காட்சிநல்கும்
				பொற்பர மாயென் வினைக்கருந் தாதைப் பொடிசெய்ததே. 2.
				
				செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கே
				கொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனே
				கையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகி
				உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே. 3.
				
				அத்தனைச் சிற்றம் பலவனை யென்னுயி ராகிநின்ற
				சுத்தனைச் சுத்த வெளியா னவனைச் சுகவடிவாம்
				நித்தனை நித்த நிராதார மாகிய நின்மலனை
				எத்தனை நாள்செல்லு மோமன மேகண் டிறைஞ்சுதற்கே. 4.
				
				கண்டா ருளத்தினிற் காலூன்றிப் பெய்யுங் கருணைமுகில்
				அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனிதன்னைக்
				கொண்டாடி னார்முனங் கூத்தாடும் மத்தன்றன்கோலமெல்லாம்
				விண்டாலம் மாவொன்றுங் காணாது வெட்ட வெறுவெளியே. 5.
				
				வெளியான நீயென் மனவெளி யூடு விரவின்ஐயா
				ஒளியாருங் கண்ணும் இரவியும் போல்நின் றுலாவுவன்காண்
				அளியாருங் கொன்றைச் சடையாட அம்புலி யாடக்கங்கைத்
				துளியாட மன்றுள் நடமாடும் முக்கட் சுடர்க்கொழுந்தே. 6.
				
				கொழுந்தா துறைமலர்க் கோதையர் மோகக் குரைகடலில்
				அழுந்தாத வண்ணம்நின் பாதப் புணைதந் தருள்வதென்றோ
				எழுந்தா தரவுசெய் எம்பெரு மான்என் றிறைஞ்சிவிண்ணோர்
				தொழுந்தா தையேவெண் பொடிபூத்த மேனிச் சுகப்பொருளே. 7.
				
				சுகமாகு ஞானந் திருமேனி யாநல்ல தொண்டர்தங்கள்
				அகமேபொற் கோயில் எனமகிழ்ந் தேமன்றுள் ஆடியகற்
				பகமேஉன் பொன்னடி நீழல்கண் டாலன்றிப் பாவிக்கிந்தச்
				செகமாயை யான அருங்கோடை நீங்குந் திறமிலையே. 8.
				
				நீங்கா துயிருக் குயிராகி நின்ற நினையறிந்தே
				தூங்காமல் தூங்கின்அல் லாதே எனக்குச் சுகமும்உண்டோ
				ஓங்கார மாம்ஐந் தெழுத்தாற் புவனத்தை உண்டுபண்ணிப்
				பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே. 9.
				
				சிவமாதி நான்முகக் கோவந்த மாமறை செப்புகின்ற
				நவமாய் இலக்கிய ஒன்றே இரண்டற்ற நன்மைபெறா
				தவமே தரும்ஐம் புலப்பொறிக் கேயென் னறிவுபொல்லாப்
				பவமே விளைக்கவென் றோவெளி மானெனப் பாய்ந்ததுவே. 10.
				
				ஆறொத் திலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய்
				வீறிப் பரந்த பரமான ஆனந்த வெள்ளமொன்று
				தேறித் தெளிந்து நிலைபெற்ற மாதவர் சித்தத்திலே
				ஊறிப் பரந்தண்ட கோடியெல் லாம்நின் றுலாவியதே. 11.
				
				நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறொரு நாட்டமின்றிக்
				கிடக்கினுஞ் செவ்வி திருக்கினும் நல்லருட் கேள்வியிலே
				தொடக்கும்என் நெஞ்சம் மனமற்ற பூரணத் தொட்டிக்குளே
				முடக்குவன் யான்பர மானந்த நித்திரை மூடிடுமே. 12.
				
				எண்ணாத தெண்ணிய நெஞ்சே துயரொழி என்னிரண்டு
				கண்ணே உறங்குக என்னாணை முக்கட் கருணைப்பிரான்
				தண்ணார் கருணை மவுனத்தி னால்முத்தி சாதிக்கலாம்
				நண்ணாத தொன்றில்லை யெல்லா நலமு நமக்குளவே. 13.
				
				நானென் றொருமுத லுண்டென்ற நான்தலை நாணஎன்னுள்
				தானென் றொருமுதல் பூரண மாகத் தலைப்பட்டொப்பில்
				ஆனந்தந் தந்தென் அறிவையெல் லாமுண் டவசநல்கி
				மோனந் தனைவிளைந் தால்இனி யாதுமொழிகுவதே. 14.
				
				தானந் தவஞ்சற்றும் இல்லாத நான்உண்மை தானறிந்து
				மோனம் பொருளெனக் கண்டிடச் சற்குரு மோனனுமாய்த்
				தீனன் தனக்கிங் கிரங்கினை யேஇனிச் சிந்தைக்கென்றும்
				ஆனந்தந் தானல்ல வோபர மேசச்சி தானந்தமே. 15.
				
				எனக்கோர் சுதந்திர மில்லையப் பாஎனக் கெய்ப்பில்வைப்பாய்
				மனக்கோ தகற்றும் பரம்பொரு ளேஎன்னை வாழ்வித்திட
				நினக்கே பரம்நின்னை நீங்காத பூரண நீள்கருணை
				தனக்கே பரமினிச் சும்மா விருக்கத் தகுமென்றுமே. 16.
				
				இடம்பெறு வீடும்மின் னார்செய் சகமும் இருநிதியும்
				உடம்பைவிட் டாருயிர் போம்போது கூடி உடன்வருமோ
				மடம்பெறு மாயை மனமே இனியிங்கு வாமவுனி
				திடம்பெற வைத்த மவுனஞ் சகாயந் தெரிந்துகொள்ளே. 17.
				
				நாற்றச் சடலத்தை ஒன்பது வாசல் நடைமனையைச்
				சோற்றுப் பசையினை மும்மல பாண்டத் தொடக்கறையை
				ஆற்றுப் பெருக்கன்ன கன்மப் பெருக்கை அடர்கிருமிச்
				சேற்றைத் துணையென்ற நாய்க்குமுண் டோகதி சேர்வதுவே. 18.
				
				பொய்யா ருலக நிலையல்ல கானற் புனலெனவே
				மெய்யா அறிந்தென்ன என்னால் இதனை விடப்படுமோ
				கையால் மவுனந் தெரிந்தேகல் லால்நிழற் கண்ணிருந்த
				ஐயாஅப் பாஎன் அரசேமுக் கண்ணுடை ஆரமுதே. 19.
				
				ஆரா அமுதென மோனம் வகித்துக்கல் லால்நிழற்கீழ்ப்
				பேராது நால்வ ருடன்வாழ்முக் கண்ணுடைப் பேரரசே
				நீரா யுருகவுள் ளன்புதந் தேசுக நிட்டையைநீ
				தாரா விடின்என் பெருமூச்சுத் தானத் தனஞ்சயனே. 20.
				
				வாயுண்டு வாழ்த்த மவுனஞ்செய் போது மவுனஅருள்
				தாயுண்டு சேயென்ன என்னைப் புரக்கச் சதானந்தமாம்
				நீயுண்டு நின்னைச் சரண்புக நானுண்டென் நெஞ்சம்ஐயா
				தீயுண் டிருந்த மெழுகல வோகதி சேர்வதற்கே. 21.
				
				கல்லால் எறிந்துங்கை வில்லால் அடித்துங் கனிமதுரச்
				சொல்லால் துதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம்
				எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன்
				கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே. 22.
				
				முன்னிலைச் சுட்டொழி நெஞ்சேநின் போதம் முளைக்கில்ஐயோ
				பின்னிலைச் சன்மம் பிறக்குங்கண் டாயிந்தப் பேய்த்தனமேன்
				தன்னிலை யேநில்லு தானே தனிச்சச்சி தானந்தமாம்
				நன்னிலை வாய்க்கும்எண் சித்தியுங் காணும் நமதல்லவே. 23.
				
				சொல்லால் மவுன மவுனமென் றேசொல்லிச் சொல்லிக்கொண்ட
				தல்லால் மனமறப் பூரண நிட்டையி லாழ்ந்ததுண்டோ
				கல்லாத மூடன் இனிஎன்செய் வேன்சகற் காரணமாம்
				வல்லாள னான மவுன சதானந்த மாகடலே. 24.
				
				ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள்மவுன
				காரண மூலங்கல் லாலடிக் கேயுண்டு காணப்பெற்றால்
				பாரணங் கோடு சுழல்நெஞ்ச மாகிய பாதரசம்
				மாரண மாய்விடும் எண்சித்தி முத்தியும் வாய்ந்திடுமே. 25.
				
				சித்த மவுனி வடபால் மவுனிநந் தீபகுண்ட
				சுத்த மவுனி யெனுமூவ ருக்குந் தொழும்புசெய்து
				சத்த மவுன முதல்மூன்று மவுனமுந் தான்படைத்தேன்
				நித்த மவுனமல் லாலறி யேன்மற்றை நிட்டைகளே. 26.
				
				கண்டேன் நினதருள் அவ்வரு ளாய்நின்று காண்பதெல்லாம்
				உண்டே யதுவும் நினதாக்கி னேன்உவட் டாதஇனபம்
				மொண்டே அருந்தி இளைப்பாறி னேன்நல்ல முத்திபெற்றுக்
				கொண்டேன் பராபர மேயெனக் கேதுங் குறைவில்லையே. 27.
				
				மேற்கொண்ட வாயுவுங் கீழ்ப்பட மூலத்து வெந்தழைச்
				சூற்கொண்ட மேக மெனவூமை நின்று சொரிவதைஎன்
				னாற்கண்ட தன்று மவுனோப தேசிய ளிக்கையினிப்
				பாற்கண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே. 28.
				
				சொல்லால் தொடர்பொரு ளால்தொட ராப்பரஞ் சோதிநின்னை
				வல்லாளர் கண்ட வழிகண்டி லேன்சக மார்க்கத்திலுஞ்
				செல்லாதென் சிந்தை நடுவே கிடந்து திகைத்துவிம்மி
				அல்லான தும்பக லானதும் வாய்விட் டரற்றுவனே. 29.
				
				அறியாத என்னை அறிவாயும் நீயென் றகம்புறமும்
				பிறியா தறிவித்த பேரறி வாஞ்சுத்தப் பேரொளியோ
				குறியாத ஆனந்தக் கோவோ அமுதருள் குண்டலியோ
				சிறியேன் படுந்துயர் கண்டுகல் லால்நிழற் சேர்ந்ததுவே. 30.
				
				எல்லாம் உதவும் உனையொன்றிற் பாவனை யேனுஞ்செய்து
				புல்லா யினும்ஒரு பச்சிலை யாயினும் போட்டிறைஞ்சி
				நில்லேன்நல் யோக நெறியுஞ்செ யேன்அருள் நீதியொன்றுங்
				கல்லேன்எவ் வாறு பரமே பரகதி காண்பதுவே. 31.
				
				ஒன்றுந் தெரிந்திட இல்லைஎன் னுள்ளத் தொருவஎனக்
				கென்றுந் தெரிந்த இவைஅவை கேள்இர வும்பகலுங்
				குன்றுங் குழியும் வனமும் மலையுங் குரைகடலும்
				மன்றும் மனையும் மனமாதி தத்துவ மாயையுமே. 32.
				
				பழுதுண்டு பாவையர் மோக விகாரப் பரவையிடை
				விழுகின்ற பாவிக்குந் தன்தாள் புணையை வியந்தளித்தான்
				தொழுகின்ற அன்பர் உளங்களி கூரத் துலங்குமன்றுள்
				எழுகின்ற ஆனந்தக் கூத்தனென் கண்மணி யென்னப்பனே. 33.
				
				அழுக்கார்ந்த நெஞ்சுடை யேனுக்கை யாநின் அருள்வழங்கின்
				இழுக்காகு மென்றெண்ணி யோஇரங் காத இயல்புகண்டாய்
				முழுக்காத லாகி விழிநீர் பெருக்கிய முத்தரெனுங்
				குழுக்காண நின்று நடமாடுந் தில்லைக் கொழுஞ்சுடரே. 34.
				
				ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண் டவர்செய்இந்த்ர
				சாலம் படைத்துத் தளர்ந்தனை யேயென்றுந் தண்ணருள் கூர்
				கோலம் படைத்துக்கல் லாலடிக் கீழ்வைகுங் கோவுக்கன்பாங்
				காலம் படைக்கத் தவம்படை யாதென்கொல் கல்நெஞ்சமே. 35.
				
				சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம்
				அம்மா நிரந்தரஞ் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே
				பெம்மான் மவுனி மொழியையுந் தப்பிஎன் பேதைமையால்
				வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந் தோஎன் விதிவசமே. 36.
				
				தினமே செலச்செல வாழ்நாளும் நீங்கச் செகத்திருள்சொப்
				பனமே யெனவெளி கண்டே யிருக்கவும் பாசபந்த
				இனமே துணையென் றிருந்தோம் நமன்வரின் என்செய்குவோம்
				மனமே நம்போல வுண்டோசுத்த மூடரிவ் வையகத்தே. 37.
				
				கடலெத் தனைமலை எத்தனை அத்தனை கன்மமதற்
				குடலெத் தனையத் தனைகடல் நுண்மணல் ஒக்குமிந்தச்
				சடலத்தை நான்விடு முன்னே யுனைவந்து சாரஇருட்
				படலத்தை மாற்றப் படாதோ நிறைந்த பராபரமே. 38.
				
				நினையும் நினைவும் நினையன்றி யில்லை நினைத்திடுங்கால்
				வினையென் றொருமுதல் நின்னையல் லாது விளைவதுண்டோ
				தனையுந் தெளிந்துன்னைச் சார்ந்தோர்க ளுள்ளச்செந் தாமரையாம்
				மனையும்பொன் மன்றமும் நின்றாடுஞ் சோதி மணிவிளக்கே. 39.
				
				உள்ளத் தையுமிங் கெனையுநின் கையினில் ஒப்புவித்தும்
				கள்ளத்தைச் செய்யும் வினையால் வருந்தக் கணக்குமுண்டோ
				பள்ளத்தின் வீழும் புனல்போற் படிந்துன் பரமஇன்ப 
				வெள்ளத்தின் மூழ்கினர்க் கேயெளி தாந்தில்லை வித்தகனே. 40.
				
				கள்ளம் பொருந்தும் மடநெஞ்ச மேகொடுங் காலர்வந்தால்
				உள்ளன் பவர்கட்குண் டோஇல்லை யேயுல கீன்றஅன்னை
				வள்ளம் பொருந்து மலரடி காணமன் றாடும்இன்ப
				வெள்ளச்செம் பாதப் புணையேயல் லாற்கதி வேறில்லையே. 41.
				
				தன்மய மானசு பாவத்தில் மெள்ளத் தலைப்படுங்கால்
				மின்மய மான சகம்யா துரைத்தென் வெளியில்உய்த்த
				சின்மய முத்திரைக் கையேமெய் யாகத் தெளிந்தநெஞ்சே
				நின்மயம் என்மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே. 42.
				
				ஆரிங் கலையுஞ் சுருதியுங் காண்டற் கரியவுனைத்
				தோயும் படிக்குக் கருணைசெய் வாய்சுக வான்பொருளே
				தாயும் பிதாவுந் தமருங் குருவுந் தனிமுதலும்
				நீயும் பரையுமென் றேயுணர்ந் தேனிது நிச்சயமே. 43.
				
				அல்லும் பகலும் உனக்கே அபயம் அபயமென்று
				சொல்லுஞ்சொ லின்னந் தெரிந்ததன் றோதுதிப் பார்கள்மனக்
				கல்லுங் கரைக்கும் மவுனா உனது கருணைஎன்பால்
				செல்லும் பொழுதல்ல வோசெல்லு வேனந்தச் சிற்சுகத்தே. 44.
				
				எல்லாஞ் சிவன்செயல் என்றறிந் தாலவன் இன்னருளே
				அல்லாற் புகலிடம் வேறுமுண் டோஅது வேநிலையா
				நில்லாய் உன்னால்தமி யேற்குக் கதியுண்டிந் நீள்நிலத்தில்
				பொல்லா மயக்கத்தி லாழ்ந்தாவ தென்ன புகல்நெஞ்சமே. 45.
				
				ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகைபொங்குங்
				களியே களிக்குங் கருத்தே கருத்தைக் கவளங்கொண்ட
				வெளியே வெளியின் விளைசுக மேசுகர் வீறுகண்டுந்
				தெளியேன் தெளிந்தவரைப் போற்றிடேன் என்ன செய்குவனே. 46.
				
				மறக்கின்ற தன்மை இறத்தலொப் பாகும் மனமதொன்றில்
				பிறக்கின்ற தன்மை பிறத்தலொப் பாகும்இப் பேய்ப்பிறவி
				இருக்கின்ற எல்லைக் களவில்லை யேஇந்தச் சன்மஅல்லல்
				துறக்கின்ற நாளெந்த நாள்பர மேநின் தொழும்பனுக்கே. 47.
				
				காட்டிய அந்தக் கரணமும் மாயைஇக் காயமென்று
				சூட்டிய கோலமும் நானா இயங்கத் துறையிதனுள்
				நாட்டிய நான்றனக் கென்றோர் அறிவற்ற நான்இவற்றைக்
				கூட்டிநின் றாட்டினை யேபர மேநல்ல கூத்திதுவே. 48.
				
				பொல்லாத மாமர்க் கடமன மேஎனைப் போல்அடுத்த
				எல்லாவற் றையும்பற்றிக் கொண்டனை யேயென்னை நின்மயமா
				நில்லாய் அருள்வெளி நீநான்நிற் பேன்அருள் நிட்டையொரு
				சொல்லாற் பதிந்து பரிபூர ணானந்தந் தோய்குவனே. 49.
				
				வாராய்நெஞ் சேயுன்றன் துன்மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டிங்
				காராய் அடிக்கடி சுற்றுகின் றாயுன் அவலமதிக்
				கோரா யிரம்புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓகெடுவாய்
				பாரா யுனைக்கொல்லு வேன்வெல்லு வேன்அருட் பாங்குகொண்டே. 50.
				
				மாதத்தி லேயொரு திங்களுண் டாகி மடிவதைநின்
				போதத்தி லேசற்றும் வைத்திலை யேவெறும் புன்மைநெஞ்சே
				வேதத்தி லேதர்க்க வாதத்தி லேவிளங் காதுவிந்து
				நாதத்தி லேயடங் காதந்த வான்பொருளே நாடிக்கொள்ளே. 51.
				
				எங்கும் வியாபித் துணர்வாய் உனக்கென் இதயத்துள்ளே
				தங்குந் துயரந் தெரியாத வண்ணந் தடைசெய்ததார்
				அங்கங் குழைந்துள் ளுருகுமன் பாளர்க் கணைகடந்து
				பொங்குங் கருணைக் கடலேசம் பூரண போதத்தனே. 52.
				
				வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயைமல
				மெய்யையும் மெய்யென்று நின்னடி யார்தம் விவேகத்தையும்
				ஐயமில் வீட்டையும் மெய்ந்நூலை யும்பொய்ய தாகஎண்ணும்
				பொய்யர்தம் நட்பை விடுவதென் றோபரி பூரணமே. 53.
				
				அளியுங் கனியொத் தருவினை யால்நொந் தயர்வுறுவேன்
				தெளியும் படிக்குப் பரிபாக காலமுஞ் சித்திக்குமோ
				ஒளியுங் கருணையும் மாறாத இன்பமும் ஓருருவாய்
				வெளிவந் தடியர் களிக்கநின் றாடும் விழுப்பொருளே. 54.
				
				அடையார் புரஞ்செற்ற தேவேநின் பொன்னடிக் கன்புசற்றும்
				படையாத என்னைப் படைத்திந்தப் பாரிற் படர்ந்தவினைத்
				தடையால் தளையிட்டு நெஞ்சம்புண் ணாகத் தளரவைத்தாய்
				உடையாய் உடைய படியன்றி யான்செய்த தொன்றிலையே. 55.
				
				ஆடுங் கறங்குந் திரிகையும் போல அலைந்தலைந்து
				காடுங் கரையுந் திரிவதல் லால்நின் கருணைவந்து
				கூடும் படிக்குத் தவமுய லாத கொடியர்எமன்
				தேடும் பொழுதென்ன செய்வார் பரானந்த சிற்சுடரே. 56.
				
				கற்றும் பலபல கேள்விகள் கேட்டுங் கறங்கெனவே
				சுற்றுந் தொழில்கற்றுச் சிற்றின்பத் தூடு சுழலின்என்னாங்
				குற்றங் குறைந்து குணமே விடுமென்பர் கூட்டத்தையே
				முற்றுந் துணையென நம்புகண் டாய்சுத்த மூடநெஞ்சே. 57.
				
				நீயென நானென வேறில்லை யென்னும் நினைவருளத்
				தாயென மோன குருவாகி வந்து தடுத்தடிமைச்
				சேயெனக் காத்தனை யேபர மேநின் திருவருளுக்
				கேயென்ன செய்யுங்கைம் மாறுள தோசுத்த ஏழையனே. 58.
				
				ஆத்திரம் வந்தவர் போல்அலை யாமல் அரோகதிட
				காத்திரந் தந்தென்னை யேஅன்னை போலுங் கருணைவைத்திம்
				மாத்திரம் முன்னின் றுணர்த்தினை யேமவு னாஇனிநான்
				சாத்திரஞ் சொன்ன படிஇய மாதியுஞ் சாதிப்பனே. 59.
				
				28. உடல்பொய்யுறவு
				
				உடல்பொய் யுறவாயின் உண்மையுற வாகக்
				கடவாரார் தண்ணருளே கண்டாய் - திடமுடனே
				உற்றுப்பார் மோனன் ஒருசொல்லே உண்மைநன்றாய்ப்
				பற்றிப்பார் மற்றவெல்லாம் பாழ். 1.
				
				பாராதி பூதமெல்லாம் பார்க்குங்கால் அப்பரத்தின்
				சீராக நிற்குந் திறங்கண்டாய் - நேராக
				நிற்குந் திருவருளில் நெஞ்சேயாம் நிற்பதல்லால்
				கற்குநெறி யாதினிமேற் காண். 2.
				
				மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும்
				பொய்யான தன்மை பொருந்துமோ - ஐயாவே
				மன்னும்நி ராசைஇன்னம் வந்ததல்ல உன்னடிமை
				என்னும்நிலை எய்துமா றென். 3.
				
				அறியாமை மேலிட் டறிவின்றி நிற்குங்
				குறியேற் கறிவென்ற கோலம் - வறிதேயாம்
				நீயுணர்த்த நான்உணரும் நேசத்தா லோஅறிவென்
				றேயெனக்கோர் நாமமிட்ட தே. 4.
				
				ஏதுக்குச் சும்மா இருமனமே என்றுனக்குப்
				போதித்த உண்மைஎங்கே போகவிட்டாய்-வாதுக்கு
				வந்தெதிர்த்த மல்லரைப்போல் வாதாடி னாயேயுன்
				புந்தியென்ன போதமென்ன போ. 5.
				
				சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
				சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா-திகபரத்தும்
				விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
				கட்டுக்குள் ஆவதென்றோ காண். 6.
				
				கற்கண்டோ தேனோ கனிரசமோ பாலோஎன்
				சொற்கண்டா தேதெனநான் சொல்லுவேன் - விற்கண்ட
				வானமதி காண மவுனிமவு னத்தளித்த
				தானமதில் ஊறும்அமிர் தம். 7.
				
				கேட்டலுடன் சிந்தித்தல் கேடிலா மெய்த்தெளிவால்
				வாட்டமறா வுற்பவநோய் மாறுமோ-நாட்டமுற்று
				மெய்யான நிட்டையினை மேவினர்கட் கன்றோதான்
				பொய்யாம் பிறப்பிறப்புப் போம். 8.
				
				மாயா சகத்தை மதியாதார் மண்முதலா
				யேயான தத்துவத்தில் எய்துவரோ-நேயானு
				பூதிநிலை நிற்கப் பொருந்துவர்கள் அன்னவர்தம்
				நீதியையே ஓர்மனமே நீ. 9.
				
				இகமுழுதும் பொய்யெனவே ஏய்ந்துணர்ந்தா லாங்கே
				மிகவளர வந்தஅருள் மெய்யே-அகநெகிழப்
				பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தைச்
				சேரீர் அதுவே திறம். 10.
				
				ஆரணங்கள் ஆகமங்கள் யாவுமே ஆனந்த
				பூரணமே உண்மைப் பொருளென்னுங்-காரணத்தை
				ஓராயோ உள்ளுள்ளே உற்றுணர்ந்தவ் வுண்மையினைப்
				பாராயோ நெஞ்சே பகர். 11.
				
				நேராயம் மெளனநிலை நில்லாமல் வாய்பேசி
				ஆராய் அலைந்தீர்நீர் ஆகெடுவீர்-தேரீர்
				திரையுந் திரையுநதிச் சென்னியனை நாவால்
				கரையுங் கரையுமனக் கல். 12.
				
				அற்ப மனமே அகிலவாழ் வத்தனையுஞ்
				சொற்பனங்கண் டாயுண்மை சொன்னேன்நான்-கற்பனையொன்
				றில்லா இடத்தே எனைச்சும்மா வைத்திருக்கக்
				கல்லாய்நீ தானோர் கவி. 13.
				
				ஏதுந் திருவருளின் இச்சையாம் என்றென்றெப்
				போதும் பொருந்தும் புனிதர்பால்-தீதுநெறி
				செல்லுமோ செல்லாதே செல்லுமிடம் இன்பமலால்
				சொல்லுமோ வேதத் தொனி. 14.
				
				கல்லேறுஞ் சில்லேறுங் கட்டியே றும்போலச்
				சொல்லேறப் பாழ்த்த துளைச்செவிகொண்-டல்லேறு
				நெஞ்சனென நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே
				வஞ்சனல்லேன் நீயெ மதி. 15.
				
				அப்பொருளும் ஆன்மாவும் ஆரணநூல் சொன்னபடி
				தப்பில்லாச் சித்தொன்றாஞ் சாதியினால்-எப்படியுங்
				தேரில் துவிதஞ் சிவாகமமே சொல்லுநிட்டை
				ஆருமிடத் தத்துவித மாம். 16.
				
				வேத முதலாய் விளங்குஞ் சிவவடிவாம்
				போத நிலையிற் பொருந்தாமல்-ஏதமிகு
				மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சேஇத்
				தேகாதி மெய்யோ தெளி. 17.
				
				நோக்கற் கரிதான நுண்ணியவான் மோனநிலை
				தாக்கற் குபாயஞ் சமைத்தபிரான்-காக்குமுயிர்
				அத்தனைக்கும் நானடிமை ஆதலினால் யானெனதென்
				றித்தனைக்கும் பேசஇட மில். 18.
				
				ஒன்றுமற நில்லென் றுணர்த்தியநம் மோனகுரு
				தன்துணைத்தாள் நீடுழி தாம்வாழ்க-என்றென்றே
				திக்கனைத்துங் கைகுவிக்குஞ் சின்மயராந் தன்மையர்க்கே
				கைக்குவரும் இன்பக் கனி. 19.
				
				மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன
				இனத்தாரே நல்ல இனத்தார்-கனத்தபுகழ்
				கொணடவரும் அன்னவரே கூறரிய முத்திநெறி
				கண்டவரும் அன்னவரே காண். 20.
				
				கண்ணொளியே மோனக் கரும்பே கவலையறப்
				பண்ணொளிக்கும் உள்ளொளியாம் பான்மையினை-நண்ணிடவுன்
				சித்த மிரங்கிலதென் சித்தந் தெளியாவே
				றித்தனைக்கும் ஆதரவும் இல். 21.
				
				அறியாமை சாரின் அதுவாய் அறிவாம்
				நெறியான போததுவாய் நிற்குங்-குறியால்
				சதசத் தருளுணர்த்தத் தானுணரா நின்ற
				விதமுற் றறிவெனும்பேர் மெய். 22.
				
				குருலிங்க சங்கமமாக் கொண்டதிரு மேனி
				கருவொன்று மேனிநம்பாற் காட்டா-தருளென்று
				கண்டவர்க்கே ஆனந்தங் கண்டுகொள லாம்அலது
				கொண்டவர்க்கிங் கென்னகிடைக் கும். 23.
				
				புலியின் அதளுடையான் பூதப் படையான்
				பலியிரந்தும் எல்லாம் பரிப்பான்-மலிபுனல்சேர்
				பொன்முடியான் முக்கட் புனிதன் சரண்புகுந்தோர்க்
				கென்முடியா தேதுமுள தே. 24.
				
				சொல்லுக் கடங்காச் சுகப்பொருளை நாமெனவே
				அல்லும் பகலும் அரற்றுவதென்-நல்லசிவ
				ஞானமயம் பெற்றோர்கள் நாமில்லை என்பர்அந்தோ
				மோனமய மான முறை. 25.
				
				ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
				மெய்யாக வோர்சொல் விளம்பினர்யார்-வையகத்தோர்
				சாற்றரிதென் றேசற்றார் தன்னனையாய் முக்கண்எந்தை
				நாற்றிசைக்கும் கைகாட்டி னான். 26.
				
				காதற்றுப் போனமுறி கட்டிவைத்தால் ஆவதுண்டோ
				தீ தற்ற காயமும்அச் செய்கையே-போதமாய்
				நிற்பரல்லால் இச்சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினுந்
				தற்பரமாக் கண்டிருப்பார் தாம். 27.
				
				வெள்ளங் குலாவுசடை வெள்ளக் கருணையினான்
				கள்ளங் குலாவுவஞ்சக் கள்ளனேன் - உள்ளத்தில்
				இல்லனென்றால் அன்னவன்றான் எங்கும் வியாபகத்தான்
				அல்லனென்றுஞ் சொல்லவழக் காம். 28.
				
				தத்துவப்பே யோடே தலையடித்துக் கொள்ளாமல்
				வைத்த அருள்மோன வள்ளலையே-நித்தம்அன்பு
				பூணக் கருதுநெஞ்சு போற்றக் கரமெழும்பும்
				காணத் துடிக்குமிரு கண். 29.
				
				தொல்லைவினைக் கீடாய்ச் சுழல்கின்ற நானொருவன்
				எல்லையிலா நின்கருணை எய்துவனோ-வல்லவனாம்
				மோன குருவே முழுதினையுந் தானுணர்ந்த
				ஞான குருவே நவில். 30.
				
				மூன்றுகண்ணா முத்தொழிலா மும்முதலா மூவுலகுந்
				தோன்றக் கருணைபொழி தோன்றலே-ஈன்றஅன்னை
				தன்னைப்போல் அன்பு தழைத்தோய் ஒருதெய்வம்
				உன்னைப்போ லுண்டோ வுரை. 31.
				
				நேசிக்குஞ் சிந்தை நினைவுக்குள் உன்னைவைத்துப்
				பூசிக்குந் தான்நிறைந்து பூரணமாய்-யோசித்து
				நின்றதல்லால் மோனா நிருவிகற்ப நிட்டைநிலை
				என்றுவரு மோஅறியே னே. 32.
				
				அறிவில் அறியாமை அற்றறிவாய் நின்று
				பிறிவறஆ னந்தமயம் பெற்றுக்-குறியவிழ்ந்தால்
				அன்றைக் குடல்வேண்டேன் ஐயாஇவ் ஆக்கையையே. 
				என்றைக்கும் வேண்டுவனே யான். 33.
				
				உடலைப் பழ்�த்திங் குணவுங் கொடாமல்
				விடவிடவே நாடுவரோ மெய்யைப்-படபடென
				வேண்டுவேன் இந்தவுடல் மெய்யுணராப் பொய்யன்நான்
				ஆண்டநீ தானே அறி. 34.
				
				அறியாயோ என்னையுநீ ஆண்டநீ சுத்த
				வெறியாய் மயங்கவுமேன் விட்டாய்-நெறிமயங்கிக்
				குன்றுஞ் செடியுங் குறுகுமோ ஐயாவே
				கன்றுகெட்டால் தாயருகே காண். 35.
				
				ஏதுக் குடற்சுமைகொண் டேனிருந்தேன் ஐயனே
				ஆதிக்க மோன அருள்தாயே-சோதியாம்
				மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்டையிலே
				பின்னமற நில்லாத பின். 36.
				
				பின்னும் உடற்சுமையாப் பேசும் வழக்கதனால்
				என்னபலன் நாமுற் றிருந்தோமே-அன்னதனால்
				ஆனந்தந் தானேதாம் ஆகுமெம் ஐயனே
				ஏனிந்தத் துன்பம் இனி. 37.
				
				துன்பக் கடலில் திளைந்ததெலாந் தீர்ந்ததே
				இன்பக் கடலில் இருமென்ன-அன்பில்
				கரைந்து கரைந்துருகிக் கண்ணருவி காட்ட
				விரைந்துவரும் ஆனந்தே மே. 38.
				
				கரைந்து கரைந்துருகிக் கண்ணீரா றாக
				விரைந்தே நிருவிற்கப மெய்த-நிரந்தரமும்
				நின்னையே ச்�ந்திக்க நீகொடுத்தாய் மோனாநான்
				என்னைமுழு துங்கொடுத்தே னே. 39.
				
				அல்லும் பகலும்பே ரன்புடனே தானிருந்தால்
				கல்லும் உருகாதோ கல்நெஞ்சே-பொல்லாத
				தப்புவழி என்நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த
				எய்ப்பிலே ஆனந்த மே. 40.
				
				கொடுத்தேனே யென்னைக் கொடுத்தவுடன் இன்பம்
				மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே-அடுத்தேனே
				பெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்மஅல்லல்
				இற்றேனே ஏழைஅடி யேன். 41.
				
				பெற்றோம் பிறவாமை பேசாமை யாயிருக்கக்
				கற்றோம் எனவுரைக்கக் காரியமென்-சற்றேனும்
				நீக்கற்ற இன்ப நிலைபொருந்தி ஏசற்று
				வாக்கற்றாற் பேசுமோ வாய். 42.
				
				காலன் தனையுதைத்தான் காமன் தனையெரித்தான்
				பாலன் பசிக்கிரங்கிப் பாற்கடலை-ஞாலமெச்சப்
				பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்
				கென்னே நடக்கை யினி. 43.
				
				விண்ணருவி மேன்மேல் விளங்குவபோ லேஇரண்டு
				கண்ணருவி வெள்ளமொடு கைகூப்பித்-தண்ணயிர்த
				வெள்ளமே ஆனந்த வெற்பே எனத்தொழுவோர்
				உள்ளமே ஞான வொளி. 44.
				
				பிள்ளைமதிச் செஞ்சடையான் பேசாப் பெருமையினான்
				கள்ளவிழும் பூங்கொன்றைக் கண்ணியான்-உள்ளபடி
				கல்லாலின் கீழிருந்து கற்பித்தான் ஓர்வசனம்
				எல்லாரும் ஈடேற வே. 45.
				
				புலனைந்துந் தானே பொரமயங்கிச் சிந்தை
				அலமந் துழலும் அடிமை - நலமிகுந்த
				சித்தான மோன சிவனேநின் சேவடிக்கே
				பித்தானால் உண்டோ பிறப்பு. 46.
				
				நிறைகுடந்தான் நீர்கொளுமோ நிச்சயமா மோன
				முறையுணர்ந்தார் யாதை முயல்வார்-பிறையணிந்த
				மிக்ககயி லாயமலை வித்தகனே வேதியனே
				செக்கரணி மேனியனே செப்பு. 47.
				
				துங்கமழு மானுடையாய் சூலப் படையுடையாய்
				திங்களணி செஞ்சுடையாய் சேவுடையாய்-மங்கையொரு
				பாலுடையாய் செங்கட் பணியாய்என் சென்னியின்மேல்
				காலுடையாய் நீயே கதி. 48.
				
				இனிய கருணைமுகில் எம்பிரான் முக்கட்
				கனியமிர்த வாரியின்பக் கட்டி-தனிமுதல்வன்
				நித்தன் பரமன் நிமலன்நிறை வாய்நிறைந்த
				சுத்தன் நமக்கென்றுந் துணை. 49.
				
				நீதியாய்க் கல்லாலின் நீழலின்கீ ழேயிருந்து
				போதியா உண்மையெல்லாம் போதித்தான் - ஏதில்
				சனகாதி யாய தவத்தோர்க்கு ஞான
				தினகரனாம் மவுன சிவன். 50.
				
				தேகச் செயல்தானுஞ் சிந்தையுட னேகுழையில்
				யோகநிலை ஞானிகளுக் கொப்புவதோ-மோகநிலை
				அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீயற்ற
				எல்லையிலே சும்மா இரு. 51.
				
				சும்மா இருக்கச் சுகமுதய மாகுமே
				இம்மாயா யோகமினி ஏனடா-தம்மறிவின்
				சுட்டாலே யாகுமோ சொல்லவேண் டாங்கன்ம
				நிட்டா சிறுபிள்ளாய் நீ. 52.
				
				நீயற்ற அந்நிலையே நிட்டையதில் நீயிலையோ
				வாயற் றவனே மயங்காதே போயற்
				றிருந்தாலும் நீபோகாய் என்றுமுள்ளாய் சும்மா
				வருந்தாதே இன்பமுண்டு வா. 53.
				
				வாவாவென் றின்பம் வரவழைக்குங் கண்ணீரோ
				டாவாவென் றேயழுத அப்பனே-நீவாடா
				எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி
				நில்லாய் அதுவே நிலை. 54.
				
				நில்லாப் பொருளை நினையாதே நின்னையுள்ளோர்
				சொல்லாப் பொருட்டிரளைச் சொல்லாதே-கல்லாத
				சிந்தை குழைந்துசுகஞ் சேரக் குருவருளால்
				வந்தவழி நல்ல வழி. 55.
				
				வழியிதென்றும் அல்லா வழியிதென்றுஞ் சொல்லில்
				பழிபழியாம் நல்லருளாற் பார்த்தோர்-மொழியுனக்கே
				ஏற்றிருக்கச் சொன்னவன்றே எங்கும் பெருவெளியாம்
				பார்த்தவிட மெல்லாநீ பார். 56.
				
				பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல்
				ஆருந் துறக்கை அரிதரிது-நேரே
				மனத்துறவும் அப்படியே மாணா இவற்றில்
				உனக்கிசைந்த வாறொன்றே ஓர். 57.
				
				ஓராம லேஒருகால் உன்னாமல் உள்ளொளியைப்
				பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால்-வாராதோ
				பத்துத் திசையும் பரந்தெழுந்தா னந்தவெள்ளந்
				தத்திக் கரைபுரண்டு தான். 58.
				
				தானான தன்மைவந்து தாக்கினால் அவ்விடத்தே
				வானாதி மாயை வழங்காதோ-ஞானாகேள்
				உன்னுள்ளே தோன்றா வுறவாகி நின்றதென
				என்னுள்ளே யென்று மிரு. 59.
				
				என்னையுன்னை இன்னதிது என்னாமல் நிற்குநிலை
				தன்னையரு ளென்ற தருணத்தில்-அன்னைபெற்ற
				பிள்ளைக்குஞ் சொல்லாத பெற்றிகண்டாய் ஐயனே
				உள்ளத்தின் உள்ளே உணர். 60.
				
				சொன்னவர்தாம் நிட்டை தொகுத்திரார் நிட்டையிலே
				மன்னினவர் போதியார் மாமவுனன்-தன்னுள்
				விருப்பாகக் கைகாட்டி மிக்கவட நீழல்
				இருப்பான் நிருவிகற்பத் தே. 61.
				
				இந்த நிருவிகற்பத் தெந்தை யிருக்கநிட்டை
				சிந்தைநீ தேறாய் செகமனைத்தும்-வந்ததொடர்ப்
				பாடுகெட அன்றோவோர் பாத்திரத்துக் காடல்அல்லால்
				ஆடுவதேன் ஆட்டு மவன். 62.
				
				அவனே பரமும் அவனே குருவும்
				அவனே அகில மனைத்தும்-அவனேதாம்
				ஆனவரே சொன்னால் அவனே குருவெனக்கு
				நான்அவனாய் நிற்பதெந்த நாள். 63.
				
				நாளவங்கள் போகாமல் நாள்தோறும் நந்தமையே
				ஆளவந்தார் தாளின்கீழ் ஆட்புகுந்தாய்-மீளஉன்னைக்
				காட்டாமல் நிற்குங் கருத்தறிந்தால் நெஞ்சேஉன்
				ஆள்தானான் ஐயமில்லை யால். 64.
				
				யான்தான் எனல்அறவே இன்பநிட்டை என்றருணைக்
				கோன்றா னுரைத்தமொழி கொள்ளாயோ-தோன்றி
				இழுக்கடித்தாய் நெஞ்சேநீ என்கலைகள் சோர
				அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய். 65.
				
				எங்குஞ் சிவமே இரண்டற்று நிற்கில்நெஞ்சே
				தங்குஞ் சுகநீ சலியாதே-அங்கிங்கென்
				றெண்ணாதே பாழி லிறந்து பிறந்துழலப்
				பண்ணாதே யானுன் பரம். 66.
				
				மெய்யைப்பொய் என்றிடவும் மெய்யணையாப் பொய்ந்நெஞ்சே
				பொய்யைத்தான் மெய்எனவும் போகுமோ-ஐயமறத்
				தன்மயத்தை மெய்யெனவே சார்ந்தனையேல் ஆனந்தம்
				என்மயமும் நின்மயமு மே. 67.
				
				பூங்கா வனநிழலும் புத்தமுதுஞ் சாந்தபதம்
				வாங்காத ஆனந்த மாமழையும்-நீங்காவாஞ்
				சொல்லிறந்து மாண்டவர்போல் தூமவுன பூமியினான்
				இல்லையென நின்ற இடம். 68.
				
				இடம்கானம் நல்லபொரு ளின்பம் எனக்கேவல்
				அடங்காக் கருவி அனைத்தும்-உடனுதவ
				மந்தார தாருவென வந்து மவுனகுரு
				தந்தானோர் சொற்கொண்டு தான். 69.
				
				தானந் தவம்ஞானஞ் சாற்றரிய சித்திமுத்தி
				ஆனவையெல் லாந்தாமே யாகுமே-மோனகுரு
				சொன்னவொரு சொல்லாற் சுகமா யிருமனமே
				இன்ன மயக்கமுனக் கேன். 70.
				
				உன்னை உடலை உறுபொருளைத் தாஎனவே
				என்னை அடிமைக் கிருத்தினான்-சொன்னஒரு
				சொல்லை மறவாமல் தோய்ந்தால்நெஞ் சேஉன்னால்
				இல்லை பிறப்பதெனக் கே. 71.
				
				எனக்கும் உனக்கும்உற வில்லையெனத் தேர்ந்து
				நினைக்கஅரி தானஇன்ப நிட்டை-தனைக்கொடுத்தே
				ஆசான் மவுனி அளித்தான்நெஞ் சேஉனையோர்
				காசா மதியேன்நான் காண். 72.
				
				ஆனந்த மோனகுரு வாமெனவே என்னறிவின்
				மோனந் தனக்கிசைய முற்றியதால்-தேனுந்து
				சொல்லெல்லாம் மோனந் தொழிலாதி யும்மோனம்
				எல்லாம்நல் மோனவடி வே. 73.
				
				எல்லாமே மோனநிறை வெய்துதலால் எவ்விடத்தும்
				நல்லார்கள் மோனநிலை நாடினார்-பொல்லாத
				நானெனஇங் கொன்றை நடுவே முளைக்கவிட்டிங்
				கேனலைந்தேன் மோனகுரு வே. 74.
				
				மோன குருவளித்த மோனமே யானந்தம்
				ஞானம் அருளுமது நானுமது-வானாதி
				நின்ற நிலையுமது நெஞ்சப் பிறப்புமது
				என்றறிந்தேன் ஆனந்த மே. 75.
				
				அறிந்தஅறி வெல்லாம் அறிவன்றி யில்லை
				மறிந்தமனம் அற்ற மவுனஞ்-செறிந்திடவே
				நாட்டினான் ஆனந்த நாட்டிற் குடிவாழ்க்கை
				கூட்டினான் மோன குரு. 76.
				
				குருவாகித் தண்ணருளைக் கூறுமுன்னே மோனா
				உருநீ டுயிர்பொருளும் ஒக்கத்-தருதியென
				வாங்கினையே வேறும்உண்மை வைத்திடவுங் கேட்டிடவும்
				ஈங்கொருவர் உண்டோ இனி. 77.
				
				இனிய கருப்புவட்டை என்னாவி லிட்டான்
				நனியிரதம் மாறாது நானுந்-தனியிருக்கப்
				பெற்றிலேன் மோனம் பிறந்தஅன்றே மோனமல்லால்
				கற்றிலேன் ஏதுங் கதி. 78.
				
				ஏதுக்குஞ் சும்மா இருநீ எனவுரைத்த
				சூதுக்கோ தோன்றாத் துணையாகிப்-போதித்து
				நின்றதற்கோ என்ஐயா நீக்கிப் பிரியாமல்
				கொன்றதற்கோ பேசாக் குறி. 79.
				
				குறியுங் குணமுமறக் கூடாத கூட்டத்
				தறிவறிவாய் நின்றுவிட ஆங்கே-பிறிவறவுஞ்
				சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோனநின்பால்
				கைம்மாறு நானொழிதல் காண். 80.
				
				நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால் என்னாணை
				வானதான் எனநிறைய மாட்டாய்நீ-ஊன்றாமல்
				வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து
				துய்த்துவிடும் ஞான சுகம். 81.
				
				ஞானநெறிக் கேற்றகுரு நண்ணரிய சித்திமுத்தி
				தானந் தருமந் தழைத்தகுரு-மானமொடு
				தாயெனவும் தந்தென்னைத் தந்தகுரு என்சிந்தை
				கோயிலென வாழுங் குரு. 82.
				
				சித்துஞ் சடமுஞ் சிவத்தைவிட இல்லைஎன்ற
				நித்தன் பரமகுரு நேசத்தாற்-சுத்தநிலை
				பெற்றோமே நெஞ்சே பெரும்பிறவி சாராமல்
				கற்றோமே மோனக் கரு. 83.
				
				29. ஏசற்ற அந்நிலை
				
				ஏசற்ற அந்நிலையே எந்தைபரி பூரணமாய்
				மாசற்ற ஆனந்த வாரி வழங்கிடுமே
				ஊசற் சுழல்போல் உலகநெறி வாதனையால்
				பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே. 1.
				
				பாழாகி அண்டப் பரப்பை எலாம் வாய்மடுத்தும்
				ஆழாழி இன்பத் தழுந்தப் படியாயோ
				தாழாயோ எந்தையருள் தாள்கீழ்நெஞ் சேஎனைப்போல்
				வாழாது வாழ்ந்தழியா வண்ண மிருப்பாயே. 2.
				
				இருப்பாய் இருந்திடப்பே ரின்பவெளிக் கேநமக்குக்
				குருப்பார்வை யல்லாமற் கூடக் கிடைத்திடுமோ
				அருட்பாய் நமக்காக ஆளவந்தார் பொன்னடிக்கீழ்
				மருட்பேயர் போலிருக்க வாகண்டாய் வஞ்சநெஞ்சே. 3.
				
				வஞ்சமோ பண்டையுள வாதனையால் நீஅலைந்து
				கொஞ்சமுற் றாயுன்னைக் குறைசொல்ல வாயுமுண்டோ
				அஞ்சல் அஞ்சல் என்றிரங்கும் ஆனந்த மாகடற்கீழ்
				நெஞ்சமே என்போல நீயழுந்த வாராயோ. 4.
				
				வாரா வரவாய் வடநிழற்கீழ் வீற்றிருந்த
				பூராயம் ந்ம்மைப் புலப்படுத்த வேண்டியன்றோ
				ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து
				பாராயோ அவ்வுருவைப் பார்க்கநிறை வாய்விடுமே. 5.
				
				வாயாதோ இன்பவெள்ளம் வந்துன் வழியாகப்
				பாயாதோ நானும் பயிராய்ப் பிழையேனோ
				ஓயாமல் உன்னி உருகுநெஞ்சே அந்நிலைக்கே
				தாயான மோனனருள் சந்திக்க வந்திடுமே. 6.
				
				வந்த வரவை மறந்துலகாய் வாழ்ந்துகன்ம
				பந்தமுற உன்னைப் படிப்பிக்கக் கற்றவர்யார்
				இந்தமதி ஏன்உனக்கிங் கென்மதிகேள் என்னாலே
				சந்ததநெஞ் சேபரத்திற் சாரின்இன்பம் உண்டாமே. 7.
				
				இன்பமய மாயுலக மெல்லாம் பிழைப்பதற்குன்
				அன்புநிலை என்பார் அதுவும்நினை யன்றியுண்டோ
				உன்புலத்தை ஓரின்அருட் கொப்பாவாய் நெஞ்சேநீ
				தென்புலத்தா ரோடிருந்து செய்பூசை கொண்டருளே. 8.
				
				அருளேயோ ராலயமா ஆனந்த மாயிருந்த
				பொருளோடு யானிருக்கப் போயொளித்த நெஞ்சேநீ
				மருள்தீர் முயற்கோடோ வான்மலரோ பேய்த்தேரோ
				இருள்தீர நீயுறைந்த தெவ்விடமோ காணேனே. 9.
				
				எவ்விடத்தும் பூரணமாம் எந்தைபிரான் தண்ணருளே
				அவ்விடத்தே உன்னைநெஞ்சே ஆராயிற் கண்டிலனே
				அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமுஞ்
				செவ்விடமே நீயுஞ் செனனமற்று வாழியவே. 10.
				
				30. காடுங்கரையும்
				
				காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட் டோட அதன்பிறகே
				ஓடுந் தொழிலாற் பயனுளதோ ஒன்றாய்ப் பலவா யுயிர்க்குயிராய்
				ஆடுங் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற் கன்புநிலை
				தேடும் பருவம் இதுகண்டீர் சேர வாருஞ் சகத்தீரே. 1.
				
				சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளைக்
				கைவந் திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப்
				பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்திதருந்
				தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே. 2.
				
				காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ
				போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய்
				ஏக வுருவாய்க் கிடக்குதையோ இன்புற் றிடநாம் இனிஎடுத்த
				தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே. 3.
				
				31. எடுத்த தேகம்
				
				எடுத்த தேகம் பொருளாவி மூன்றும்நீ
				எனக்கொன் றில்லை எனமோன நன்னெறி
				கொடுத்த போது கொடுத்ததன் றோபினுங்
				குளறி நானென்று கூத்தாட மாயையை
				விடுத்த வாறுங்கண் ணீரொடு கம்பலை
				விலகு மாறுமென் வேட்கைப்ர வாகத்தைத்
				தடுத்த வாறும் புகலாய் சிரகிரித்
				தாயுமான தயாபர மூர்த்தியே. 1.
				
				நோயும் வெங்கலிப் பேயுந் தொடரநின்
				நூலிற் சொன்ன முறைஇய மாதிநான்
				தோயும் வண்ணம் எனைக்காக்குங் காவலுந்
				தொழும்பு கொள்ளுஞ் சுவாமியு நீகண்டாய்
				ஓயுஞ் சன்மம் இனியஞ்சல் அஞ்சலென்
				றுலகங்கண்டு தொழவோர் உருவிலே
				தாயுந் தந்தையும் ஆனோய் சிரகிரித்
				தாயு மான தயாபர மூர்த்தியே. 2.
				
				32. முகமெலாம்
				
				முகமெ லாங்கணீர் முத்தரும் பிடச்செங்கை முகழ்ப்ப
				அகமெ லாங்குழைந் தானந்த மாகநல் லறிஞர்
				இகமெ லாந்தவம் இழைக்கின்றார் என்செய்கோ ஏழை
				சகமெ லாம்பெற நல்லருள் உதரமாச் சமைந்தோய். 1.
				
				33. திடமுறவே
				
				திடமுறவே நின்னருளைச் சேர்த்தென்னைக் காத்தாளக்
				கடன்உனக்கென் றெண்ணிநின்னைக் கைகுவித்தேன் நானலனோ
				அடைவுகெட்ட பாழ்மாயை ஆழியிலே இன்னமல்லல்
				படமுடியா தென்னாவிப் பற்றே பராபரமே. 1.
				
				ஆராமை கண்டிங் கருட்குருவாய் நீயொருகால்
				வாராயோ வந்து வருத்தமெல்லாந் தீராயோ
				பூராய மாகஅருட் பூரணத்தில் அண்டமுதல்
				பாராதி வைத்த பதியே பராபரமே. 2.
				
				வாழாது வாழஉனை வந்தடைந்தோர் எல்லாரும்
				ஆழாழி என்னஅரு ளானார் அழுக்காற்றோ
				ளேழாய் எனவுலகம் ஏசுமினி நானொருவன்
				பாழாகா வாறுமுகம் பார்நீ பராபரமே. 3.
				
				உள்ளத்தி னுள்ளே ஒளித்தென்னை ஆட்டுகின்ற
				கள்ளக் கருணையையான் காணுந் தரமாமோ
				வெள்ளத்தை மாற்றி விடக்குண்பார் நஞ்சூட்டும்
				பள்ளத்தின் மீன்போற் பதைத்தேன் பராபரமே. 4.
				
				வாவிக் கமலமலர் வண்டாய்த் துவண்டுதுவண்
				டாவிக்குள் நின்றவுனக் கன்புவைத்தார்க் கஞ்சலென்பாய்
				பூவிற்கும் வான்கடையிற் புல்விற்போர் போலஒன்றைப்
				பாவிக்க மாட்டேன் பதியே பராபரமே. 5.
				
				விண்ணாறு வெற்பின் விழுந்தாங் கெனமார்பில்
				கண்ணாறு பாய்ச்சிடுமென் காதல்வெள்ளங் கண்டிலையோ
				தண்ணாறு சாந்தபதத் தற்பரமே நால்வேதப்
				ப்ண்ணாறும் இன்பப் பதியே பராபரமே. 6.
				
				கூடியநின் சீரடியார் கூட்டமென்றோ வாய்க்குமென
				வாடியஎன் நெஞ்சம்முக வாட்டமும்நீ கண்டிலையோ
				தேடியநின் சீரருளைத் திக்கனைத்துங் கைகுவித்துப்
				பாடியநான் கண்டாய் பதியே பராபரமே. 7.
				
				நெஞ்சத்தி னூடே நினைவாய் நினைவூடும்
				அஞ்சலென வாழுமென தாவித் துணைநீயே
				சஞ்சலமாற் றினைஇனிமேல் தாய்க்குபசா ரம்புகன்று
				பஞ்சரிக்க நானார் பதியே பராபரமே. 8.
				
				புத்திநெறி யாகஉனைப் போற்றிப் பலகாலும்
				முத்திநெறி வேண்டாத மூடனேன் ஆகெடுவேன்
				சித்திநெறிக் கென்கடவேன் சீரடியார்க் கேவல்செயும்
				பத்திநெறிக் கேனும்முகம் பார்நீ பராபரமே. 9.
				
				கண்டறியேன் கேட்டறியேன் காட்டும்நினை யேஇதயங்
				கொண்டறியேன் முத்தி குறிக்குந் தரமுமுண்டோ
				தொண்டறியாப் பேதைமையேன் சொல்லேன்நின் தொன்மை
				பண்டறிவாய் நீயே பகராய் பராபரமே. 10.
				
				34. தன்னை
				
				தன்னை அறியத் தனதருளால் தானுணர்த்தும்
				ம்ன்னைப் பொருளெனவே வாழாமற் பாழ்நெஞ்சே
				பொன்னைப் புவியைமடப் பூவையரை மெய்யெனவே
				என்னைக் கவர்ந்திழுத்திட் டென்னபலன் கண்டாயே. 1.
				
				35. ஆக்குவை
				
				ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாள
				நீக்குவை நீக்க மில்லா நினைப்பொடு மறப்பு மாற்றிப்
				போக்கொடு வரவு மின்றிப் புனிதநல் லருளா னந்தந்
				தாக்கவுஞ் செய்வா யன்றோ சச்சிதா னந்த வாழ்வே. 1.
				
				36. கற்புறுசிந்தை
				
				கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறோர்
				இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வுந்
				தற்பொறி யாக நல்குந் தலைவநின் னலதோர் தெய்வம்
				பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணா னந்த வாழ்வே. 1.
				
				முருந்திள நகையார் பார முலைமுகந் தழுவிச் செவ்வாய்
				விருந்தமிர் தெனவ ருந்தி வெறியாட்டுக் காளாய் நாளும்
				இருந்தலோ காய தப்பேர் இனத்தனாய் இருந்த ஏழை
				பொருந்தவுங் கதிமே லுண்டோ பூரணா னந்த வாழ்வே. 2.
				
				தீதெலாம் ஒன்றாம் வன்மை செறிந்திருட் படலம்போர்த்த
				பாதகச் சிந்தை பெற்ற பதகனுன் பாத நீழல்
				ஆதர வடைய உள்ளன் பருளகிலை யாயின் மற்றியார்
				போதனை செய்ய வல்லார் பூரணா னந்த வாழ்வே. 3.
				
				நாதனை நாதா தீத நண்பனை நடுவாய் நின்ற
				நீதனைக் கலந்து நிற்க நெஞ்சமே நீவா என்றால்
				வாதனை பெருக்கி என்னை வசஞ்செய்து மனந்துன் மார்க்க
				போதனை செய்தல் நன்றோ பூரணா னந்த வாழ்வே. 4.
				
				எண்ணிய எண்ண மெல்லாம் இறப்புமேற் பிறப்புக் காசை
				பண்ணிஎன் அறிவை எல்லாம் பாழக்கி எனைப்பா ழாக்குந்
				திண்ணிய வினையைக் கொன்று சிறியனை உய்யக் கொண்டால்
				புண்ணியம் நினக்கே யன்றோ பூரணா னந்த வாழ்வே. 5.
				
				பத்திநீ பத்திக் கான பலனுநீ பலவாச் சொல்லுஞ்
				சித்திநீ சித்தர் சித்தித் திறமுநீ திறமார் மோன
				முத்திநீ முத்திக் கான முதலுநீ முதன்மை யான
				புத்திநீ எனக்கொன் றுண்டோ பூரணா னந்த வாழ்வே. 6.
				
				தாயினும் இனிய நின்னைச் சரணென அடைந்த நாயேன்
				பேயினுங் கடைய னாகிப் பிதற்றுதல் செய்தல் நன்றோ
				தீயிடை மெழுகாய்நொந்தேன் தெளிவிலேன விணே காலம்
				போயின தாற்ற கில்லேன பூரணா னந்த வாழ்வே. 7.
				
				37. மலைவளர்காதலி
				
				பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்
				பக்கமுண் டெக்காலமும்
				பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம
				படரெனுந் திமிர மணுகாக்
				கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு
				காயசித் திகளுமுண்டு
				கறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்
				கருத்தொன்றும் உண்டாகுமேல்
				நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர
				ஞானஆ னந்தஒளியே
				நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே
				நானெனும் அகந்தைதீர்த்தென்
				மதியுண்ட மதியான மதிவதன வல்லியே
				மதுசூ தனன்தங்கையே
				வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
				வளர்காத லிப்பெண்உமையே. 1.
				
				தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
				சிற்றிடையி லேநடையிலே
				சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
				சிறுபிறை நுதற்கீற்றிலே
				பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த
				பொடியிலே அடியிலேமேல்
				பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
				புந்திதனை நுழைய விட்டு
				நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே
				நின்னடியர் கூட்டத்திலே
				நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
				ஞேயத்தி லேயுன்இருதாள்
				மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ
				வளமருவு தேவை அரசே
				வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
				வளர்காத லிப்பெண்உமையே. 2.
				
				பூதமுத லாகவே நாதபரி யந்தமும்
				பொய்யென் றெனைக்காட்டிஎன்
				போதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத
				போகபூ ரணவெளிக்குள்
				ஏதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை
				எல்லாஞ்செய் வல்லசித்தாம்
				இன்பவுரு வைத்தந்த அன்னையே நின்னையே
				எளியேன் மறந்துய்வனோ
				வேதமுத லானநல் லாகமத் தன்மையை
				விளக்கும்உள் கண்இலார்க்கும்
				மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
				வீறுவா தம்புகலுவாய்
				வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
				மாமருந் துக்கமிர்தமே
				வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
				வளர்காத லிப்பெண்உமையே. 3.
				
				மீடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும்
				மெய்யெலாம் உள்ளுடைந்து
				வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய்
				வேதனைக ளுறவேதனுந்
				துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான்
				தொடரிட்ட தொழில்க ளெல்லாந்
				துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன
				தொண்டர்பணி செய்வதென்றோ
				அடியிட்ட செந்தமிழின் அருமையிட் டாரூரில்
				அரிவையோர் பரவைவாயில்
				அம்மட்டும் அடியிட்டு நடைநடந் தருளடிகள்
				அடியீது முடியீதென
				வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே
				வளமருவு தேவைஅரசே
				வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
				வளர்காத லிப்பெண்உமையே. 4.
				
				பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
				புராந்தகி த்ரியம்பகிஎழில்
				புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
				புஷ்பமிசை வீற்றிருக்கும்
				நாரணி மனாதீத நாயகி குணாதீத
				நாதாந்த சத்திஎன்றுன்
				நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
				நானுச்ச ரிக்கவசமோ
				ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
				அகிலாண்ட கோடிஈன்ற
				அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
				ஆனந்த ரூபமயிலே
				வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
				வளமருவு தேவைஅரசே
				வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
				வளர்காத லிப்பெண்உமையே. 5.
				
				பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன்மல
				பரிபாகம் வரவும்மனதில்
				பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப்
				பாவியேன் பாபரூப
				தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ்
				சிந்தியேன் பேரின்பமோ
				சேரஎன் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ்
				சிந்திக்கு தென்செய்குவேன்
				மோகமோ மதமோ குரோதமோ லோபமோ
				முற்றுமாற் சரியமோதான்
				முறியிட் டெனைக்கொள்ளும் நிதியமோ தேடஎனின்
				மூசுவரி வண்டுபோல
				மாகமோ டவும்வல்லன் எனையாள வல்லையோ
				வளமருவு தேவைஅரசே
				வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
				வளர்காத லிப்பெண்உமையே. 6.
				
				தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந்
				தொக்கினுட் சிக்கிநாளுஞ்
				சுழலேறு காற்றினிடை அழலேறு பஞ்செனச்
				சூறையிட் டறிவைஎல்லாம்
				நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றின்
				நட்பேற உள்ளுடைந்து
				நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே
				நானிலந் தனில் அலையவோ
				வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
				விரையேறு மாலைசூடி
				விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
				வெருட்டிய கருங்கூந்தலாய்
				வாளேறு கண்ணியே விடையேறும் எம்பிரான்
				மனதுக் கிசைந்தமயிலே
				வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
				வளர்காத லிப்பெண்உமையே. 7.
				
				பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
				புந்திமுத லானபேய்கள்
				போராடு கோபாதி ராட்சசப் பேய்களென்
				போதத்தை யூடழித்து
				வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன்
				விதித்தானிவ் வல்லலெல்லாம்
				வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய
				வித்தையை வியந்தருள்வையோ
				நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே
				நாதாந்த வெட்டவெளியே
				நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
				ஞானஆ னந்தமயிலே
				வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வரிய
				மகிமைபெறு பெரியபொருளே
				வரைரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமலை
				வளர்காத லிப்பெண்உமையே. 8
				
				38. அகிலாண்ட நாயகி
				
				வட்ட மிட்டொளிர்பி ராண வாயுவெனு
				நிகள மோடுகம னஞ்செயும்
				மனமெ னும்பெரிய மத்த யானையைஎன்
				வசம டக்கிடின் மும் மண்டலத்
				திட்ட முற்றவள ராச யோகமிவன்
				யோக மென்றறிஞர் புகழவே
				ஏழை யேனுலகில் நீடு வாழ்வன்இனி 
				இங்கி தற்கும்அனு மானமோ
				பட்ட வர்த்தனர் பராவு சக்ரதர
				பாக்ய மானசுப யோகமும்
				பார காவிய கவித்வ நான்மறை
				பராய ணஞ்செய்மதி யூகமும்
				அட்ட சித்தியுந லன்ப ருக்கருள
				விருது கட்டியபொன் அன்னமே
				அண்ட கோடிபுகழ் காவை வாழும்அகி
				லாண்ட நாயகியென் அம்மையே. 1.
				
				39. பெரியநாயகி
				
				காற்றைப் பிடித்துமட் கரகத் தடைத்தபடி
				கன்மப் புனற்குளூறுங்
				கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக்
				காயத்துள் எனையிருத்திச்
				சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத்
				துருத்திக்குள் மதுஎன்னவே
				துள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேன்அருள்
				தோயநீ பாய்ச்சல்செய்து
				நாற்றைப் பதித்ததென ஞானமாம் பயிரதனை
				நாட்டிப் புலப்பட்டியும்
				நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்று
				நாடுசிவ போகமான
				பேற்றைப் பகுத்தருளி எனையாள வல்லையோ
				பெரியஅகி லாண்டகோடி
				பெற்றநா யகிபெரிய கபிலைமா நகர்மருவு
				பெரியநா யகியம்மையே. 1.
				
				40. தந்தைதாய்
				
				தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கை
				சகமனைத்தும் மவுனியருள் தழைத்த போதே
				இந்திரசா லங்கனவு கானல் நீராய
				இருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே. 1.
				
				என்னைநான் கொடுக்கஒருப் பட்ட காலம்
				யாதிருந்தென் எதுபோய்என் என்னை நீங்கா
				அன்னைபோல் அருள்பொழியுங் கருணை வாரி
				ஆனந்தப் பெருமுகிலே அரசே சொல்லாய். 2.
				
				அரசேநின் திருக்கருணை அல்லா தொன்றை
				அறியாத சிறியேன்நான் அதனால் முத்திக்
				கரைசேரும் படிக்குனருட் புணையைக் கூட்டுங்
				கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன். 3.
				
				கண்டேனிங் கென்னையும்என் றனையும் நீங்காக்
				கருணையும்நின் றன்னையும்நான் கண்டேன் கண்டேன்
				விண்டேன்என் றெனைப்புறம்பாத் தள்ள வேண்டாம்
				விண்டதுநின் அருட்களிப்பின் வியப்பா லன்றோ. 4.
				
				ஓவென்ற சுத்தவெளி யொன்றே நின்றிங்
				குயிரையெல்லாம் வம்மினென உவட்டா இன்பத்
				தேவென்ற நீகலந்து கலந்து முத்தி
				சேர்த்தனையேல் குறைவாமோ செகவி லாசம். 5.
				
				செகத்தையெல்லாம் அணுவளவுஞ் சிதறா வண்ணஞ்
				சேர்த்தணுவில் வைப்பைஅணுத் திரளை எல்லாம்
				மகத்துவமாப் பிரமாண்ட மாகச் செய்யும்
				வல்லவா நீநினைத்த வாறே எல்லாம். 6.
				
				சொல்லாலே வாய்து டிப்பதல்லால் நெஞ்சந்
				துடித்திருகண் நீரருவி சொரியத் தேம்பிக்
				கல்லாலே இருந்தநெஞ்சுங் கல்லால் முக்கட்
				கனியேநெக் குருகிடவுங் காண்பேன் கொல்லோ. 7.
				
				41. பெற்றவட்கே
				
				பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
				பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
				உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
				உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1.
				
				ஆவாவென் றழுதுதொழுங் கைய ராகி
				அப்பனே ஆனந்த அடிக ளேநீ
				வாவாவென் றவர்க்கருளுங் கருணை எந்தாய்
				வன்னெஞ்சர்க் கிரங்குவதெவ் வாறு நீயே. 2.
				
				நீயேஇங் கெளியேற்குந் தாக மோக
				நினைவூடே நின்றுணர்த்தி நிகழ்த்த லாலே
				பேயேற்குந் தனக்கெனவோர் அன்பு முண்டோ
				பெம்மானே இன்னமன்பு பெருகப் பாராய். 3.
				
				பாராயோ என்துயரம் எல்லாம் ஐயா
				பகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன்
				வாராயோ இன்னமொரு காலா னாலும்
				மலர்க்காலென் சென்னிமிசை வைத்தி டாயோ. 4.
				
				வைத்திடுங்கா லைப்பிடித்துக் கண்ணின் மார்பில்
				வைத்தணைத்துக் கொண்டுகையால் வளைத்துக் கட்டிச்
				சித்தமிசைப் புகஇருத்திப் பிடித்துக் கொண்டு
				தியக்கமற இன்பசுகஞ் சேர்வ தென்றோ. 5.
				
				சேராமற் சிற்றினத்தைப் பிரிந்தெந் நாளுந்
				திருவடிப்பே ரினத்துடனே சேரா வண்ணம்
				ஆராக நான்அலைந்தேன் அரசே நீதான்
				அறிந்திருந்தும் மாயையிலேன் அழுந்த வைத்தாய். 6.
				
				வைத்தபொருள் உடலாவி மூன்றும் நின்கை
				வசமெனவே யான்கொடுக்க வாங்கிக் கொண்டு
				சித்தமிசைப் புகுந்ததுதான் மெய்யோ பொய்யோ
				சிறியேற்கிங் குளவுரையாய் திகையா வண்ணம். 7.
				
				திகையாதோ எந்நாளும் பேரா னந்தத்
				தெள்ளமுதம் உதவாமல் திவலை காட்டி
				வகையாக அலக்கழித்தாய் உண்டு டுத்து
				வாழ்ந்தேன்நான் இரண்டுகால் மாடு போலே. 8.
				
				மாடுமக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை
				வைத்தகன தனமேடை மாட கூடம்
				வீடுமென்பால் தொடர்ச்சியோ இடைவி டாமல்
				மிக்ககதி வீடன்றோ விளங்கல் வேண்டும். 9.
				
				விளங்கவெனக் குள்ளுள்ளே விளங்கா நின்ற
				வேதகமே போதகமே விமல வாழ்வே
				களங்கரகி தப்பொருளே யென்னை நீங்காக்
				கண்ணுதலே நாதாந்தக் காட்சிப் பேறே. 10.
				
				நாதமே நாதந்த வெளியே சுத்த
				ஞாதுருவே ஞானமே ஞேய மேநல்
				வேதமே வேதமுடி வான மோன
				வித்தேயிங் கென்னையினி விட்டி டாதே. 11.
				
				42. கல்லாலின்
				
				கல்லாலின் நீழல்தனில் ஒருநால் வர்க்குங்
				கடவுள்நீ உணர்த்துவதுங் கைகாட் டென்றால்
				சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந் தன்மை
				துரும்புபற்றிக் கடல்கடக்குந் துணிபே யன்றோ. 1.
				
				அன்றோஆ மோஎனவுஞ் சமய கோடி
				அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே
				நின்றாயே நினைப்பெறுமா றெவ்வா றாங்கே
				நின்னருள்கொண் டறிவதல்லால் நெறிவே றுண்டோ. 2.
				
				நெறிபார்க்கின் நின்னையன்றி அகிலம் வேறோ
				நிலநீர்தீக் கால்வானும் நீய லாத
				குறியாதும் இல்லையென்றால் யாங்கள் வேறோ
				கோதையொரு கூறுடையாய் கூறாய் கூறாய். 3.
				
				கூறாய ஐம்பூதச் சுமையைத் தாங்கிக்
				குணமிலா மனமெனும்பேய்க் குரங்கின் பின்னே
				மாறாத கவலையுடன் சுழல என்னை
				வைத்தனையே பரமேநின் மகிமை நன்றே. 4. 
				
				நன்றெனவுந் தீதெனவும் எனக்கிங் குண்டோ
				நானாகி நீயிருந்த நியாயஞ் சற்றே
				இன்றெனக்கு வெளியானால் எல்லாம் வல்ல
				இறைவாநின் அடியருடன் இருந்து வாழ்வேன். 5.
				
				வாழ்வெனவுந் தாழ்வெனவும் இரண்டாப் பேசும்
				வையகத்தார் கற்பனையாம் மயக்க மான
				பாழ்வலையைக் கிழித்துதறிச் செயல்போய் வாழப்
				பரமேநின் ஆனந்தப் பார்வை யெங்கே. 6.
				
				எங்கேயெங் கேஅருளென் றெமையி ரந்தான்
				ஏழையிவன் எனவுமெண்ணி யிச்சை கூரும்
				அங்கேயங் கேயெளிவந் தென்னை ஆண்ட
				ஆரமுதே உனைக்காண்பான் அலந்து போனேன். 7.
				
				போனநாட் கிரங்குவதே தொழிலா இங்ஙன்
				பொருந்துநாள் அத்தனையும் போக்கி னேன்என்
				ஞானநா யகனேநின் மோன ஞான
				நாட்டமுற்று வாழ்ந்திருக்கும் நாளெந் நாளோ. 8.
				
				நாள்பட்ட கமலமென்ன இதயம் மேவும்
				நறுந்தேனே துன்மார்க்க நாரி மார்கண்
				வாள்பட்ட காயமிந்தக் காய மென்றோ
				வன்கூற்றும் உயிர்பிடிக்க வருமந் நீதி. 9.
				
				நீதியெங்கே மறையெங்கே மண்விண் எங்கே
				நித்தியராம் அவர்களெங்கே நெறிதப் பாத
				சாதியெங்கே ஒழுக்கமெங்கே யாங்க ளெங்கே
				தற்பரநீ பின்னுமொன்றைச் சமைப்ப தானால். 10.
				
				ஆனாலும் யான்எனதிங் கற்ற எல்லை
				அதுபோதும் அதுகதிதான் அல்ல வென்று
				போனாலும் யான்போவன் அல்லால் மோனப்
				புண்ணியனே வேறுமொரு பொருளை நாடேன். 11.
				
				பொருளேநின் பூரணமே லிட்ட காலம்
				போக்குவர வுண்டோதற் போத முண்டோ
				இருள்தானுண் டோஅல்லால் வெளிதான் உண்டோ
				இன்பமுண்டோ துன்பமுண்டோ யாமங் குண்டோ. 12.
				
				உண்டோநீ படைத்தவுயிர்த் திரளில் என்போல்
				ஒருபாவி தேகாதி உலகம் பொய்யாக்
				கண்டேயும் எள்ளளவுந் துறவு மின்றிக்
				காசினிக்குள் அலைந்தவரார் காட்டாய் தேவே. 13.
				
				தேவரெலாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட்
				செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப் பாக
				மூவர்சொலுந் தமிழ்கேட்குந் திருச்செ விக்கே
				மூடனேன் புலம்பியசொல் முற்று மோதான். 14.
				
				முற்றுமோ எனக்கினியா னந்த வாழ்வு
				மூதறிவுக் கினியாய்நின் முளரித் தாளில்
				பற்றுமோ சற்றுமில்லை ஐயோ ஐயோ
				பாவிபடுங் கட்கலக்கம் பார்த்தி லாயோ. 15.
				
				பார்த்தனவெல் லாமழியும் அதனாற் சுட்டிப்
				பாராதே பார்த்திருக்கப் பரமே மோன
				மூர்த்திவடி வாயுணர்த்துங் கைகாட் டுண்மை
				முற்றியென தல்லல்வினை முடிவ தென்றோ. 16.
				
				என்றுளைநீ அன்றுளம்யாம் என்பதென்னை
				இதுநிற்க எல்லாந்தாம் இல்லை யென்றே
				பொன்றிடச்செய் வல்லவன்நீ யெமைப்ப டைக்கும்
				பொற்புடையாய் என்னின்அது பொருந்தி டாதே. 17.
				
				பொருந்துசகம் அனைத்தினையும் பொய்பொய் யென்று
				புகன்றபடி மெய்யென்றே போத ரூபத்
				இருந்தபடி யென்றிருப்ப தன்றே யன்றோ
				எம்பெருமான் யான்கவலை யெய்தாக் காலம். 18.
				
				காலமே காலமொரு மூன்றுங் காட்டுங்
				காரணமே காரணகா ரியங்கள் இல்லாக்
				கோலமே எனைவாவா என்று கூவிக்
				குறைவறநின் அருள்கொடுத்தாற் குறைவோ சொல்லாய். 19.
				
				சொல்லாய தொகுதியெல்லாங் கடந்து நின்ற
				சொரூபானந் தச்சுடரே தொண்ட னேனைக்
				கல்லாகப் படைத்தாலும் மெத்த நன்றே
				கரணமுடன் நான்உறவு கலக்க மாட்டேன். 20.
				
				கலங்காத நெஞ்சுடைய ஞான தீரர்
				கடவுளுனைக் காணவே காய மாதி
				புலம்காணார் நானொருவன் ஞானம் பேசிப்
				பொய்க்கூடு காத்ததென்ன புதுமை கண்டாய். 21.
				
				கண்டிலையோ யான்படும்பா டெல்லாம் மூன்று
				கண்ணிருந்துந் தெரியாதோ கசிந்துள் ளன்பார்
				தொண்டரடித் தொண்டனன்றோ கருணை நீங்காச்
				சுத்தபரி பூரணமாஞ் சோதி நாதா. 22.
				
				சோதியாய் இருட்பிழம்பைச் சூறை யாடுந்
				தூவெளியே எனைத்தொடர்ந்து தொடர்ந்தெந் நாளும்
				வாதியா நின்றவினைப் பகையை வென்ற
				வாழ்வேஇங் குனைப்பிரிந்து மயங்கு கின்றேன். 23.
				
				மயக்குறுமென் மனமணுகாப் பாதை காட்டி
				வல்வினையைப் பறித்தனையேவாழ்வே நானென்
				செயக்கடவேன் செயலெல்லாம் நினதே என்று
				செங்கைகுவிப் பேன்அல்லாற் செயல்வே றில்லை. 24.
				
				வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
				விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்
				மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன
				வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா. 25.
				
				அம்மாஈ ததிசயந்தான் அன்றோ அன்றோ
				அண்டநிலை யாக்கிஎன்னை அறிவாம் வண்ணஞ்
				சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே
				சுகமயமாய் இருப்பதல்லாற் சொல்வான் என்னே. 26.
				
				என்னேநான் பிறந்துழல வந்த வாறிங்(கு)
				எனக்கெனஓர் செயலிலையே ஏழை யேன்பால்
				முன்னேசெய் வினையெனவும் பின்னே வந்து
				மூளும்வினை யெனவும்வர முறையேன் எந்தாய். 27.
				
				தாயான தண்ணருளை நிரம்ப வைத்துத்
				தமியேனைப் புரவாமல் தள்ளித் தள்ளிப்
				போயான தென்கொல்ஐயா ஏக தேசம்
				பூரணத்துக் குண்டோதான் புகலல் வேண்டும். 28.
				
				புகலரிய நின்விளையாட் டென்னே எந்தாய்
				புன்மையறி வுடையஎன்னைப் பொருளாப் பண்ணி
				இகல்விளைக்கும் மலமாயை கன்மத் தூடே
				இடருறவுஞ் செய்தனையே இரக்க மீதோ. 29.
				
				இரக்கமொடு பொறைஈதல் அறிவா சாரம்
				இல்லேன்நான் நல்லோர்கள் ஈட்டங் கண்டால்
				கரக்குமியல் புடையேன்பாழ் நெஞ்சம் எந்தாய்
				கருந்தாதோ வல்லுருக்கோ கரிய கல்லோ. 30.
				
				43. பராபரக்கண்ணி
				
				சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல்
				பாராதி யாண்ட பதியே பராபரமே. 1.
				
				கண்ணாரக் கண்டோர் கருப்பொருள்கா ணாமலருள்
				விண்ணூ டிருந்தஇன்ப வெற்பே பராபரமே. 2.
				
				சிந்தித்த எல்லாமென் சிந்தையறிந் தேயுதவ
				வந்த கருணை மழையே பராபரமே. 3.
				
				ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்
				பேராறே இன்பப் பெருக்கே பராபரமே. 4.
				
				ஆரறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்
				பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே. 5.
				
				உரையிறந்த அன்பருளத் தோங்கொளியா யோங்கிக்
				கரையிறந்த இன்பக் கடலே பராபரமே. 6.
				
				எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்
				தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே. 7.
				
				திக்கொடுகீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்
				கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே. 8.
				
				முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
				சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே. 9.
				
				கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
				விண்ணேஆ னந்த வியப்பே பராபரமே. 10.
				
				வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்
				தாக்காதே தாக்குந் தனியே பராபரமே. 11.
				
				பார்த்தஇட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
				வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே. 12.
				
				வானந்த மண்ணினந்தம் வைத்துவைத்துப் பார்க்கஎனக்(கு)
				ஆனந்தம் தந்த அரசே பராபரமே. 13.
				
				அன்பைப் பெருக்கிஎன தாருயிரைக் காக்கவந்த
				இன்பப் பெருக்கே இறையே பராபரமே. 14.
				
				வான்மெல் லாங்கொண்ட மெளனமணிப் பெட்டகத்துக்
				கானபணி யான அணியே பராபரமே. 15.
				
				ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்
				நாடும் பொருளான நட்பே பராபரமே. 16.
				
				சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ்
				உத்தமர்கட் கான உறவே பராபரமே. 17.
				
				போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசய போற்றியெனும்
				வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே. 18.
				
				முத்தாந்த வீதி முளரிதொழும் அன்பருக்கே
				சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே. 19.
				
				ஈனந் தருமுடலம் என்னதுயான் என்பதற
				ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே. 20.
				
				என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்து
				அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே. 21
				
				சுத்த அறிவாய்ச் சுகம்பொருந்தின் அல்லால்என்
				சித்தந் தெளியாதேன் செய்வேன் பராபரமே. 22.
				
				மாறா அனுபூதி வாய்க்கின்அல்லால் என்மயக்கந்
				தேறாதென் செய்வேன் சிவமே பராபரமே. 23.
				
				தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்
				தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே. 24.
				
				அப்பாஎன் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன்போற்றிஎன்று
				செப்புவதல் லால்வேறென் செய்வேன் பர்ரபரமே. 25.
				
				உற்றறியும் என்னறிவும் உட்கருவி போற்சவிமாண்
				டற்றும்இன்பந் தந்திலையே ஐயா பராபரமே. 26.
				
				சொல்லால் அடங்காச் சுகக்கடலில் வாய்மடுக்கின்
				அல்லால்என் தாகம் அறுமோ பராபரமே. 27.
				
				பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை
				தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே. 28.
				
				ஓயாதோ என்கவலை உள்ளேஆ னந்த வெள்ளம்
				பாயாதோ ஐயா பகராய் பராபரமே. 29.
				
				ஓகோ உனைப்பிரிந்தார் உள்ளங் கனலில்வைத்த
				பாகோ மெழுகோ பகராய் பராபரமே. 30.
				
				கூர்த்தஅறி வத்தனையுங் கொள்ளைகொடுத் துன்னருளைப்
				பார்த்தவன்நான் என்னைமுகம் பாராய் பராபரமே. 31.
				
				கடலமுதே தேனேயென் கண்ணே கவலை
				படமுடியா தென்னைமுகம் பார்நீ பராபரமே. 32.
				
				உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான்ஏழை
				தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே. 33.
				
				கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலஎனக்
				கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே. 34.
				
				எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம்
				புண்ணாகச் செய்ததினிப் போதும் பராபரமே. 35.
				
				ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை
				பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே. 36.
				
				கற்றஅறி வால்உனைநான் கண்டவன்போற் கூத்தாடில்
				குற்றமென்றென் நெஞ்சே கொதிக்கும் பராபரமே. 37.
				
				ஐயோ உனைக்காண்பான் ஆசைகொண்ட தத்தனையும்
				பொய்யோ வெளியாப் புகலாய் பராபரமே. 38.
				
				துன்பக்கண் ணீரில் துளைந்தேற்குன் ஆனந்த
				இன்பக்கண் ணீர்வருவ தெந்தாள் பராபரமே. 39.
				
				வஞ்சனையும் பொய்யும்உள்ளே வைத்தழுக்கா றாயுளறும்
				நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே. 40.
				
				பாசம்போய் நின்றவர்போற் பாராட்டி யானாலும்
				மோசம்போ னேன்நான் முறையோ பராபரமே. 41.
				
				நன்றறியேன் தீதறியேன் நானென்று நின்றவனார்
				என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே. 42.
				
				இன்றுபுதி தன்றே எளியென் படுந்துயரம்
				ஒன்றும்அறி யாயோ உரையாய் பராபரமே. 43.
				
				எத்தனைதான் சன்மமெடுத் தெத்தனைநான் பட்டதுயர்
				அத்தனையும் நீயறிந்த தன்றோ பராபரமே. 44.
				
				இந்தநாள் சற்றும் இரங்கிலையேற் காலன்வரும்
				அந்தநாள் காக்கவல்லார் ஆர்காண் பராபரமே. 45.
				
				உற்றுற்று நாடி உளம்மருண்ட பாவியைநீ
				சற்றிரங்கி ஆளத் தகாதோ பராபரமே. 46.
				
				எள்ளளவும் நின்னைவிட இல்லா எனைமயக்கில்
				தள்ளுதலால் என்னபலன் சாற்றாய் பராபரமே. 47.
				
				பாடிப் படித்துலகிற் பாராட்டி நிற்பதற்கோ
				தேடி யெனையடிமை சேர்த்தாய் பராபரமே. 48.
				
				சொன்னதைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்
				கென்னததைச் சொல்வேன் எளியேன் பராபரமே. 49.
				
				சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
				அல்லும் பகலுமெனக் காசை பராபரமே. 50.
				
				நேச நிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்
				காசையுண்டோ நீயறியா தன்றே பராபரமே. 51.
				
				துச்சனென வேண்டாஇத் தொல்லுலகில் அல்லல்கண்டால்
				அச்சம் மிகவுடையேன் ஐயா பராபரமே. 52.
				
				கண்ணாவா ரேனும்உனைக் கைகுவியா ராயின் அந்த
				மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே. 53.
				
				கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஓங்க
				எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே. 54.
				
				எத்தாற் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே
				பித்தானேன் மெத்தவுநான் பேதை பராபரமே. 55.
				
				வாயினாற் பேசா மவுனத்தை வைத்திருந்துந்
				தாயிலார் போல்நான் தளர்ந்தேன் பராபரமே. 56.
				
				அன்னையிலாச் சேய்போல் அலக்கணுற்றேன் கண்ணார
				என்னகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே. 57.
				
				உற்றுநினைக் கில்துயரம் உள்ளுள்ளே செந்தீயாய்ப்
				பற்றநொந்தேன் என்னைமுகம் பார்நீ பராபரமே. 58.
				
				பொய்யன் இவன் என்றுமெள்ளப் போதிப்பார் சொற்கேட்டுக்
				கைவிடவும் வேண்டாமென் கண்ணே பராபரமே. 59.
				
				எண்ண மறிந்தே இளைப்பறிந்தே ஏழைஉய்யும்
				வண்ணந் திருக்கருணை வையாய் பராபரமே. 60.
				
				நாட்டாதே யென்னையொன்றில் நாட்டி யிதமகிதங்
				காட்டாதே யெல்லாம்நீ கண்டாய் பராபரமே. 61.
				
				உன்னைநினைந் துன்நிறைவின் உள்ளே உலாவும்என்னை
				அன்னைவயிற் றின்னம்அடைக் காதே பராபரமே. 62.
				
				பரமுனக்கென் றெண்ணும் பழக்கமே மாறா
				வரமெனக்குத் தந்தருள்என் வாழ்வே பராபரமே. 63.
				
				வந்தித்து நின்னை மறவாக் கடனாகச்
				சிந்திக்க நின்னதருள் செய்யாப் பராபரமே. 64.
				
				எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கவும்நின்
				தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே. 65.
				
				வெட்டவெளிப் பேதையன்யான் வேறுகப டொன்றறியேன்
				சிட்டருடன் சேர்அனந்த தெண்டன் பராபரமே. 66.
				
				இரவுபக லற்றவிடத் தேகாந்த யோகம்
				வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே. 67.
				
				மால்காட்டிச் சிந்தை மயங்காமல் நின்றுசுகக்
				கால்காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே. 68.
				
				எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத
				வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே. 69. 
				
				சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்
				றெம்மா லறிதற் கெளிதோ பராபரமே. 70.
				
				முன்னொடுபின் பக்கம் முடியடிநாப் பண்ணறநின்
				தன்னொடுநான் நிற்பதென்றோ சாற்றாய் பராபரமே. 71.
				
				மைவ்வண்ணந் தீர்ந்த மவுனிசொன்ன தெய்வண்ணம்
				அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே. 72.
				
				வித்தன்றி யாதும் விளைவதுண்டோ நின்னருளாஞ்
				சித்தன்றி யாங்களுண்டோ செப்பாய் பராபரமே. 73.
				
				ஆங்கார மற்றுன் அறிவான அன்பருக்கே
				தூங்காத தூக்கமது தூக்கும் பராபரமே. 74.
				
				சிந்தை அவிழ்ந்தவிழ்ந்து சின்மயமா நின்னடிக்கே
				வந்தவர்க்கே இன்பநிலை வாய்க்கும் பராபரமே. 75.
				
				சொல்லாடா வூமரைப்போற் சொல்லிறந்து நீயாகின்
				அல்லால் எனக்குமுத்தி ஆமோ பராபரமே. 76.
				
				பேச்சாகா மோனம் பிறவா முளைத்ததென்றற்
				காச்சாச்சு மேற்பயனுண் டாமோ பராபரமே. 77.
				
				கெட்டியென்றுன் அன்பர்மலங் கெட்டயர்ந்தோர் பூரணமாந்
				தொட்டிலுக்குட் சேய்போல் துயின்றார் பராபரமே. 78.
				
				காட்ட அருள்இருக்கக் காணா திருள்மலத்து
				நாட்ட மெனக்குவரல் நன்றோ பராபரமே. 79.
				
				எத்தன்மைக் குற்ற மியற்றிடினுந் தாய்பொறுக்கும்
				அத்தன்மை நின்னருளும் அன்றோ பராபரமே. 80.
				
				எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
				சித்துருவே இன்பச் சிவமே பராபரமே. 81.
				
				மண்ணொடுவிண் காட்டி மறைந்துமறையா அருளைக்
				கண்ணொடுகண் ணாகஎன்று காண்பேன் பராபரமே. 82.
				
				பஞ்சரித்து நின்னைப் பலகால் இரந்ததெல்லாம்
				அஞ்ச லெனும்பொருட்டே அன்றோ பராபரமே. 83.
				
				எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
				அங்கங் கிருப்பதுநீ அன்றோ பராபரமே. 84.
				
				அனைத்துமாய் நின்றாயே யான்வேறோ நின்னை
				நினைக்குமா றெங்கே நிகழ்த்தாய் பராபரமே. 85.
				
				நின்போதத் தாலே நினைப்பு மறப்புமென்றால்
				என்போதம் எங்கே இயம்பாய் பராபரமே. 86.
				
				ஒன்றைநினைந் தொன்றைமறந் தோடுமனம் எல்லாம்நீ
				என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே. 87.
				
				கொழுந்தில் வயிரமெனக் கோதறவுள் ளன்பில்
				அழுந்துமவர்க் கேசுகமுண் டாகும் பராபரமே. 88.
				
				பற்றும் பயிர்க்குப் படர்கொழுந்து போற்பருவம்
				பெற்றவர்க்கே நின்னருள்தான் பேறாம் பராபரமே. 89.
				
				யோகியர்க்கே ஞானம் ஒழுங்காம்பே ரன்பான
				தாகியரும் யோகம்முன்னே சார்ந்தோர் பராபரமே. 90.
				
				அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
				சொல்லும் பொருளுஞ் சுமைகாண் பராபரமே. 91.
				
				எச்சிலென்று பூவை யிகழ்ந்தோர்க் குனைப்போற்றப்
				பச்சிலையுங் கிள்ளப் ப்டுமோ பராபரமே. 92.
				
				அந்தக் கரணம் அடங்கத் துறப்பதுவே
				எந்தத் துறவினும்நன் றெந்தாய் பராபரமே. 93.
				
				தன்னை அறிந்தால் தலைவன்மேற் பற்றலது
				பின்னையொரு பற்றும்உண்டோ பேசாய் பராபரமே. 94.
				
				அன்பாற் கரைந்துகண்ணீர் ஆறுகண்ட புண்ணியருக்
				குன்பால் வரவழிதான் உண்டோ பராபரமே. 95.
				
				தன்னை அறிந்தருளே தாரகமா நிற்பதுவே
				உன்னை அறிதற் குபாயம் பராபரமே. 96.
				
				கற்றகலை யால்நிலைதான் காணுமோ காண்பதெல்லாம்
				அற்றவிடத் தேவெளியாம் அன்றோ பராபரமே. 97.
				
				கண்மூடிக் கண்விழித்துக் காண்பதுண்டோ நின்னருளாம்
				விண்மூடின் எல்லாம் வெளியாம் பராபரமே. 98.
				
				நேரே நினதருளென் நெஞ்சைக் கவரின்ஒன்றும்
				பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே. 99.
				
				வான்காண வேண்டின் மலையேற லொக்கும்உன்னை
				நான்காணப் பாவனைசெய் நாட்டம் பராபரமே. 100.
				
				வாதனைவிட் டுன்னருளின் மன்னினல்லால் வேறுமொரு
				சாதனைதான் உண்டோநீ சாற்றாய் பராபரமே. 101.
				
				பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பதருள்
				தாரகத்தைப் பற்றியன்றோ சாற்றாய் பராபரமே. 102.
				
				விளக்குந் தகளியையும் வேறென்னார் நின்னைத்
				துளக்கமறச் சீவனென்று சொல்வார் பராபரமே. 103.
				
				பாராதி நீயாப் பகர்ந்தால் அகமெனவும்
				ஆராயுஞ் சீவனுநீ யாங்காண் பராபரமே. 104.
				
				பொய்யைப்பொய் யென்றறியும் போதத்துக் காதரவுன்
				மெய்யருளே அன்றோ விளம்பாய் பராபரமே. 105.
				
				வருவான்வந் தேன்எனல்போல் மன்னியழி யுஞ்சகத்தைத்
				தெரிவாக இல்லையென்ற தீரம் பராபரமே. 106.
				
				மாயா சகமிலையேல் மற்றெனக்கோர் பற்றுமிலை
				நீயேநான் என்றுவந்து நிற்பேன் பராபரமே. 107.
				
				வானாதி நீயெனவே வைத்தமறை என்னையும்நீ
				தானாகச் சொல்லாதோ சாற்றாய் பராபரமே. 108.
				
				வெள்ளக் கருணைமத வேழமாம் நின்னருட்கென்
				கள்ளக் கருத்தே கவளம் பராபரமே. 109.
				
				வண்டாய்த் துவண்டு மவுன மலரணைமேல்
				கொண்டார்க்கோ இன்பங் கொடுப்பாய் பராபரமே. 110.
				
				மாயைமுத லாம்வினைநீ மன்னுயிர்நீ மன்னுயிர்தேர்ந்
				தாயும்அறி வானதுநீ அன்றோ பராபரமே. 111.
				
				என்னறிவும் யானும்என தென்பதுவு மாம்இவைகள்
				நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே. 112.
				
				பாரறியா தண்டப் பரப்பறியா துன்பெருமை
				யாரறிவார் நானோ அறிவேன் பராபரமே. 113.
				
				அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக் கப்பாலுங்
				கொண்டநின்னை யாரறிந்து கொள்வார் பராபரமே. 114.
				
				ஒப்புயர்வொன் றின்றி ஒலிபுகா மோனவட்டக்
				கப்பலுக்காம் வான்பொருள்நீ கண்டாய் பராபரமே. 115.
				
				என்போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும்
				உன்போல் வலியவரும் உண்டோ பராபரமே. 116.
				
				பார்க்கின்அண்ட பிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே
				யார்க்குஞ் செயலிலையே ஐயா பராபரமே. 117.
				
				ஒன்றே பலவே உருவே அருவேயோ
				என்றே அழைப்பதுன்னை என்றோ பராபரமே. 118.
				
				செப்புவதெல் லாஞ்செபம்நான் சிந்திப்ப தெல்லாம்நின்
				ஒப்பில் தியானமென ஓர்ந்தேன் பராபரமே. 119.
				
				ஆரிருந்தேன் ஆர்போய்என் ஆரமுதாம் நின்னருளின்
				சீரிருந்தால் உய்வேன் சிவமே பராபரமே. 120.
				
				வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்
				அஞ்சி உனையடைந்தேன் ஐயா பராபரமே. 121.
				
				எந்தப் படியுன் இதயம் இருந்ததெமக்
				கந்தப் படிவருவ தன்றோ பராபரமே. 122.
				
				எந்தெந்த நாளும் எனைப்பிரியா தென்னுயிராய்ச்
				சிந்தைகுடி கொண்டஅருள் தேவே பராபரமே. 123.
				
				அஞ்சல் அஞ்சல் என்றடிமைக் கப்போதைக் கப்போதே
				நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே. 124.
				
				என்னையுன்றன் கைக்களித்தார் யாவரென்னை யான்கொடுத்துப்
				பின்னை யுன்னாற் பெற்றநலம் பேசேன் பராபரமே. 125.
				
				வாய்பேசா யூமையென வைக்கவென்றோ நீமவுனத்
				தாயாக வந்தருளைத் தந்தாய் பராபரமே. 126.
				
				தன்னைத்தந் தென்னைத் தடுத்தாண்ட நின்கருணைக்
				கென்னைக்கொண் டென்னபலன் எந்தாய் பராபரமே.127.
				
				மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டைஉன்னிப்
				பார்க்கின்அன் பர்க்கென்ன பயங்காண் பராபரமே.128.
				
				சுட்டியுண ராமல் துரியநிலை யாய்வெளியில்
				விட்டநின்னை யானோ வியப்பேன் பராபரமே.129.
				
				சூதொன்று மின்றியென்னைச் சும்மா இருக்கவைத்தாய்
				ஈதொன்றும் போதாதோ இன்பம் பராபரமே.130.
				
				வாயொன்றும் பேசா மவுனியாய் வந்தாண்ட
				தேயொன்றும் போதாதோ இன்பம் பராபரமே. 131.
				
				என்று மிருந்தபடிக் கென்னை யெனக்களித்த
				தொன்றும்போ தாதோ உரையாய் பராபரமே. 132.
				
				எண்திசைக்கீழ் மேலான எல்லாம் பெருவெளியாக்
				கண்டவிடத் தென்னையும்நான் கண்டேன் பராபரமே.133.
				
				பித்தனையே தும்மறியாப் பேதையனை ஆண்டவுனக்
				கெத்தனைதான் தெண்ட னிடுவேன் பராபரமே.134.
				
				தாயர்கர்ப்பத் தூடன்னமுந் தண்ணீருந் தந்தருளும்
				நேயவுனை யாரோ நினையார் பராபரமே.135.
				
				விரிந்த மனமொடுங்கும் வேளையில்நா னாகப்
				பரந்தஅருள் வாழி பதியே பராபரமே.136.
				
				சிந்தனைபோய் நானெனல்போய்த் தேக்கஇன்ப மாமழையை
				வந்து பொழிந்தனைநீ வாழி பராபரமே.137.
				
				தந்தேனே ஓர்வசனந் தந்தபடிக் கின்பமுமாய்
				வந்தேனே யென்றனைநீ வாழி பராபரமே.138.
				
				மண்ணும்விண்ணும் வந்து வணங்காவோ நின்னருளைக்
				கண்ணுறவுட் கண்டவரைக் கண்டாற் பராபரமே.139.
				
				என்றுங் கருணைபெற்ற இன்பத் தபோதனர்சொல்
				சென்றசென்ற திக்கனைத்துஞ் செல்லும் பராபரமே.140.
				
				ஆடுவதும் பாடுவதும் ஆனந்த மாகிநின்னைத்
				தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே.141.
				
				பொங்கியநின் தண்ணருளைப் புட்கலமாப் பெற்றவர்கட்
				கெங்கெழுந்தென் ஞாயி றியம்பாய் பராபரமே.142.
				
				பாலரொடு பேயர்பித்தர் பான்மையென நிற்பதுவே
				சீலமிகு ஞானியர்தஞ் செய்கை பராபரமே.143.
				
				உண்டுடுத்துப் பூண்டிங் குலகத்தார் போல்திரியுந்
				தொண்டர்விளை யாட்டே சுகங்காண் பராபரமே.144.
				
				கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி
				எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே.145.
				
				காயநிலை அல்லவென்று காண்பார் உறங்குவரோ
				தூயஅருட் பற்றாத் தொடர்வார் பராபரமே.146.
				
				அப்பும்உப்பும் போன்ற அயிக்யபரா னந்தர்தமக்
				கொப்புவமை சொல்லவும்வாய் உண்டோ பராபரமே.147.
				
				சித்தந் தெளிந்து சிவமானோ ரெல்லோர்க்குங்
				கொத்தடிமை யான குடிநான் பராபரமே.148.
				
				தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்ணருள்கூர்
				செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே.149.
				
				விண்ணுக்கும் விண்ணாகி மேவும்உனக் கியான்பூசை
				பண்ணிநிற்கு மாறு பகராய் பராபரமே.150.
				
				நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்அன்பே
				மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே.151.
				
				கெட்டவழி ஆணவப்பேய் கீழாக மேலான
				சிட்டருனைப் பூசை செய்வார் பராபரமே.152.
				
				கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின்
				மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே.153.
				
				பஞ்சசுத்தி செய்துநின்னைப் பாவித்துப் பூசைசெய்தால்
				விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே.154.
				
				அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
				இன்பநிலை தானேவந் தெய்வதும் பராபரமே.155.
				
				மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
				வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.156.
				
				விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
				அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.157.
				
				தானந் தவந்தருமஞ் சந்ததமுஞ் செய்வர்சிவ
				ஞானந் தனையணைய நல்லோர் பராபரமே.158.
				
				சொன்னத்தைச் சொல்லித் துடிக்கின்ற ஆணவப்பேய்க்
				கின்னல் வருவதெந்நாள் எந்தாய் பராபரமே.159.
				
				இன்றே இருவினைவந் தேறியது நானென்றோ
				அன்றே விளைந்ததன்றோ ஆற்றேன் பராபரமே.160.
				
				எண்ணமுந்தான் நின்னைவிட இல்லையென்றால் யான்முனமே
				பண்ணவினை யேது பகராய் பராபரமே.161.
				
				என்னைஇன்ன தென்றறியா ஏழைக்கும் ஆகெடுவேன்
				முன்னைவினை கூடல் முறையோ பராபரமே.162.
				
				அறியாநான் செய்வினையை ஐயாநீ கூட்டுங்
				குறியே தெனக்குளவு கூறாய் பராபரமே.163.
				
				என்னைக் கெடுக்க இசைந்த இருவினைநோய்
				தன்னைக் கெடுக்கத் தகாதோ பராபரமே.164.
				
				வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன்
				இல்லையெனின் எங்கே இருக்கும் பராபரமே.165.
				
				முக்குணத்தால் எல்லாம் முளைக்கப் பிரகிருதிக்
				கிக்குணத்தை நல்கியதார் எந்தாய் பராபரமே.166.
				
				ஆற்றப் படாதுதுன்பம் ஐயஎன்னால் என்மனது
				தேற்றப் படாதினிஎன் செய்வேன் பராபரமே.167.
				
				பூராய மாய்மனதைப் போக்கஅறி யாமல்ஐயோ
				ஆராய் அலைந்தேன் அரசே பராபரமே.168.
				
				சினமிறக்கக் கற்றாலுஞ் சித்தியெல்லாம் பெற்றாலும்
				மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே.169.
				
				வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் பாழ்த்தமனம்
				ஏதுக்குக் கூத்தாடு தெந்தாய் பராபரமே.170.
				
				சூதாடு வார்போல் துவண்டு துவண்டுமனம்
				வாதாடின் என்னபலன் வாய்க்கும் பராபரமே.171.
				
				கொள்ளித்தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க்குரங்காய்க்
				கள்ளமனந் துள்ளுவதென் கண்டோ பராபரமே.172.
				
				வந்ததையும் போனவையும் வைத்துவைத்துப் பார்த்திருந்தால்
				சிந்தை இதமகிதம் சேரும் பராபரமே.173.
				
				ஏறுமயிர்ப் பாலம்உணர் விந்தவிட யங்கள்நெருப்
				பாறெனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே.174.
				
				பொறிவழியே ஏழை பொறியாய் உழல்வதுநின்
				அறிவின் விதித்தவிதி ஆமோ பராபரமே. 175.
				
				பாசசா லங்கள்எலாம் பற்றுவிட ஞானவைவாள்
				வீசுநாள் எந்நாள் விளம்பாய் பராபரமே.176.
				
				எந்தவுட லேனும் எடுத்தவுடல் நல்லதென்று
				சிந்தைசெய வந்ததிறஞ் செப்பாய் பராபரமே.177.
				
				பொய்யெல்லாம் ஒன்றாய்ப் பொருத்திவைத்த பொய்யுடலை
				மெய்யென்றான் மெய்யாய் விடுமோ பராபரமே.178.
				
				மின்னனைய பொய்யுடலை மெய்யென்று நம்பிஐயோ
				நின்னை மறக்கை நெறியோ பராபரமே.179.
				
				நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடற்
				கித்தனைதான் துன்பமுண்டோ என்னே பராபரமே.180.
				
				தேகம்இறும் என்றுசடர் தேம்புவதென் நித்திரையில்
				ஊகமறிந் தாற்பயந்தான் உண்டோ பராபரமே.181.
				
				ஏதைச் சுமையா எடுப்பார் எடுத்தவுடல்
				சேதமுறின் யாதுபின்னே செல்லும் பராபரமே.182.
				
				தோற்பாவை நாலாட் சுமையாகுஞ் சீவனொன்றிங்
				கார்ப்பால் எடுத்ததெவ ராலே பராபரமே.183.
				
				ஞாலத்தை மெய்யெனவே நம்பிநம்ப நாளுமென்றன்
				காலத்தைப் போக்கியென்ன கண்டேன் பராபரமே.184.
				
				பொய்யுலக வாழ்க்கைப் புலைச்சேரி வாதனைநின்
				மெய்யருளின் மூழ்கின் விடுங்காண் பராபரமே.185.
				
				நூலேணி விண்ணேற நூற்குப் பருத்திவைப்பார்
				போலே கருவிநன்னூற் போதம் பராபரமே.186.
				
				சின்னஞ் சிறியார்கள் செய்தமணற் சோற்றையொக்கும்
				மன்னுங் கலைஞான மார்க்கம் பராபரமே.187.
				
				வாசகஞா னத்தால் வருமோ சுகம்பாழ்த்த
				பூசலென்று போமோ புகலாய் பராபரமே.188.
				
				கேட்டதையே சொல்லுங் கிளிபோல நின்னருளின்
				நாட்டமின்றி வாய்பேசல் நன்றோ பராபரமே.189.
				
				வெளியாய் அருளில் விரவும்அன்பர் தேகம்
				ஒளியாய்ப் பிறங்கியதும் உண்டோ பராபரமே.190.
				
				காலமொரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலும்அதை
				ஞாலந் தனக்குரையார் நல்லோர் பராபரமே.191.
				
				கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற்
				றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே.192.
				
				இல்லாத காரியத்தை இச்சித்துச் சிந்தைவழிச்
				செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே.193.
				
				ஏதுவந்தும் ஏதொழிந்தும் என்னதுயான் என்னார்கள்
				போதநிலை கண்ட புலத்தோர் பராபரமே.194.
				
				ஆயிரஞ்சொன் னாலும் அறியாதவஞ்சநெஞ்சப்
				பேயரொடு கூடிற் பிழை காண் பராபரமே.195.
				
				மாய மயக்கொழிந்தார் மற்றொன்றை நாடுவரோ
				நேய அருள்நிலையில் நிற்பார் பராபரமே.196.
				
				நித்திரையிற் செத்தபிணம் நேருமுடற் கிச்சைவையாச்
				சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே.197.
				
				எந்நெஞ்ச மேனும் இரங்குமே நின்னருட்குக்
				கன்னெஞ் சரும்உளரோ காட்டாய் பராபரமே.198.
				
				மந்தஅறி வாகியின்பம் வாயா திருந்தலைந்தால்
				சிந்தைமயங் காதோஎன் செய்வேன் பராபரமே.199.
				
				தேடினேன் திக்கனைத்துந் தெண்டனிட்டேன் சிந்தைநைந்து
				வாடினேன் என்மயக்கம் மாற்றாய் பராபரமே.200.
				
				மடிமையெனும் ஒன்றை மறுத்தன்றோ என்னை
				அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே.201.
				
				காலர்பயந் தீரஇன்பக் காற்கபய மென்றெழுந்த
				மாலை வளர்த்தனையே வாழி பராபரமே.202.
				
				நீர்ப்புற் புதமாய் நினைவருட்கே நின்றழியப்
				பார்ப்பதல்லால் வேறுமொன்றைப் பாரேன் பராபரமே.203.
				
				நீர்க்குமிழி போலென் நினைவுவெளி யாக்கரையப்
				பார்க்குமிடம் எல்லாம்என் பார்வை பராபரமே.204.
				
				ஆடிஓய் பம்பரம்போல் ஆசையுடன் எங்கும்உனைத்
				தேடிஓய் கின்றேன்என் செய்வேன் பராபரமே.205.
				
				வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும்
				நாதாந்த மோன நலமே பராபரமே.206.
				
				ஆனந்த மானநின்னை அன்றியொன்றை உன்னாத
				மோனந் தமியேற்கு முத்தி பராபரமே.207.
				
				ஏதுக்கும் உன்னைவிட இல்லையென்றால் என்கருத்தைச்
				சோதிக்க வேண்டாநான் சொன்னேன் பராபரமே.208.
				
				முத்தியிலுந் தேகமிசை மூவிதமாஞ் சித்திபெற்றார்
				எத்தனைபேர் என்றுரைப்ப தெந்தாய் பராபரமே.209. 
				
				நீயன்றி நானார் நினைவார்என் நெஞ்சகமார்
				தாயன்றிச் சூலுமுண்டோ சாற்றாய் பராபரமே.210.
				
				அங்கமே நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ
				எங்கும்ஏன் ஏனென்ற தென்னே பராபரமே.211.
				
				கொள்ளைவெள்ளத் தண்ணருள்மேற் கொண்டுகழித் தார்த்திழுத்தால்
				கள்ளமனக் கப்பலெங்கே காணும் பராபரமே.212.
				
				எக்கலையுங் கற்றுணர்ந்தோ மென்றவர்க்குஞ் சம்மதஞ்சொல்
				வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே.213.
				
				கல்லெறியப் பாசி கலைந்துநன்னீர் காணும்நல்லோர்
				சொல்லுணரின் ஞானம்வந்து தோன்றும் பராபரமே.214.
				
				நின்னை யுணர்ந் தோர்கடமை நிந்தித்த பேயறிஞர்
				என்ன கதிபெறுவார் எந்தாய் பராபரமே.215.
				
				என்னதுயான் என்னல்அற்றோர் எங்கிருந்து பார்க்கினும்நின்
				சன்னிதியாம் நீபெரியசாமி பராபரமே.216.
				
				சோற்றுத் துருத்திச் சுமைசுமப்பக் கண்பிதுங்கக்
				காற்றைப் பிடித்தலைந்தேன் கண்டாய் பராபரமே.217.
				
				உள்ளபடி யொன்றை உரைக்கின்அவர்க் குள்ளுறவாய்க்
				கள்ளமின்றி அன்பாய்க் களிப்பேன் பராபரமே.218.
				
				அடுத்தஇயல் பாகவொன்றை யான்பகர்வ தல்லால்
				தொடுத்ததொன்றை யான்வேண்டிச் சொல்லேன் பராபரமே.219.
				
				உள்ளமறி யாதொருவர் ஒன்றைஉன்னிப் பேசில்ஐயோ
				துள்ளியிளங் கன்றாய்த் துடிப்பேன் பராபரமே.220.
				
				எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
				அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே.221.
				
				முன்னாள்மெய்ஞ் ஞான முனிவர்தவம் ஈட்டுதல்போல்
				இந்நாளிற் காணஎனக் கிச்சை பராபரமே.222.
				
				கன்மமென்ப தெல்லாங் கரிசறவே மெய்ஞ்ஞான
				தன்மநிலை சார்ந்ததன்பர் தன்மை பராபரமே.223.
				
				கண்துயிலா தென்னறிவின் கண்ணூடே காட்சிபெற
				மண்டிய பேரொளிநீ வாழி பராபரமே.224.
				
				நானான தன்மையென்று நாடாமல் நாடஇன்ப
				வானாகி நின்றனைநீ வாழி பராபரமே.225.
				
				அகத்தூ டணுவணுவாய் அண்டமெல்லாந் தானாய்
				மகத்தாகி நின்றனைநீ வாழி பராபரமே.226.
				
				காரகமாங் கர்ப்பஅறைக் கண்ணூடும் என்கண்ணே
				வாரம்வைத்துக் காத்தனைநீ வாழி பராபரமே.227.
				
				புரந்தோர்தந் தேசமென்பார் பூமியைப்போ ராடி
				இறந்தோருந் தம்மதென்பார் என்னே பராபரமே.228.
				
				மூர்த்தியெல்லாம் வாழியெங்கள் மோனகுரு வாழிஅருள்
				வார்த்தையென்றும் வாழிஅன்பர் வாழி பராபரமே.229.
				
				சொல்லும் பொருளுந் தொடரா அருள்நிறைவில்
				செல்லும் படிக்கருள்நீ செய்தாய் பராபரமே.230.
				
				இற்றைவரைக் குள்ளாக எண்ணரிய சித்திமுத்தி
				பெற்றவர்கள் எத்தனைபேர் பேசாய் பராபரமே.231.
				
				நாடும் நகரும்நிசா னாட்டிய பாளயமும்
				ஈடுசெயு மோமுடிவில் எந்தாய் பராபரமே.232.
				
				தேடுந் திரவியமுஞ் சேர்ந்தமணிப் பெட்டகமும்
				கூட வருந்துணையோ கூறாய் பராபரமே.233.
				
				தேடாத தேட்டினரே செங்கைத் துலாக்கோல்போல்
				வாடாச் சமனிலையில் வாழ்வார் பராபரமே.234.
				
				நீராய்க் கசிந்துருகி நெட்டுயிர்த்து நின்றேனைப்
				பாராத தென்னோ பகராய் பராபரமே.235.
				
				உள்ளபொருள் ஆவி உடல்மூன்றும் அன்றேதான்
				கொள்ளைகொண்ட நீயென் குறைதீர் பராபரமே.236.
				
				ஆழ்ந்தாயே யிவ்வுலகில் அல்லலெல்லாந் தீர்ந்தருளால்
				வாழ்ந்தாயே என்றனைநீ வாழி பராபரமே.237.
				
				தாரா அருளையெல்லாந் தந்தெனையும் நின்னருளின்
				வாராயோ என்றனைநீ வாழி பராபரமே.238.
				
				ஆசையுன்மீ தல்லால் அருளறிய வேறுமொன்றில்
				பாசம்வையேன் நின்கருணைப் பாங்காற் பராபரமே.239
				
				ஆதியந்த நீகுருவாய் ஆண்டதல்லால் நின்னையன்றிப்
				போதனையும் உண்டோ புகலாய் பராபரமே.240.
				
				தானாக வந்து தடுத்தாண் டெனையின்ப
				வானாகச் செய்தஇன்ப வானே பராபரமே.241.
				
				பற்றற் றிருக்குநெறி பற்றிற் கடல்மலையுஞ்
				சுற்ற நினைக்குமனஞ் சொன்னேன் பராபரமே.242.
				
				படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத்
				துடிப்பற்றார்க் கன்றோ சுகங்காண் பராபரமே.243.
				
				சத்தாகி நின்றோர் சடங்க ளிலிங்கமென
				வைத்தாரும் உண்டோயென் வாழ்வே பராபரமே.244.
				
				சித்த நிருவிகற்பஞ் சேர்ந்தார் உடல்தீபம்
				வைத்தகர்ப்பூ ரம்போல் வயங்கும் பராபரமே.245.
				
				ஆதிகா லத்தில்எனை ஆண்டனையே இப்பால்நீ
				போதியெனில் எங்கேநான் போவேன் பராபரமே.246.
				
				நாவழுத்துஞ் சொல்மலரோ நாளுதிக்கும் பொன்மலரோ
				தேவையுனக் கின்னதென்று செப்பாய் பராபரமே.247.
				
				கன்னல்தரும் பாகாய்க் கருப்புவட்டாய்க் கற்கண்டாய்
				இன்னமுதாய் என்னுள் எருந்தாய் பராபரமே.248.
				
				சிற்பரமே தற்பரமே தெய்வச் சுருதிசொன்ன
				அற்புதமே அன்பே அறிவே பராபரமே.249.
				
				அறிவிப்பான் நீயென்றால் ஐம்புலன்க டந்தந்
				நெறிநிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே.250.
				
				அந்தக் கரணமெனும் ஆகாத பேய்கள்எனை
				வந்துபிடித் தாட்ட வழக்கோ பராபரமே.251.
				
				ஐவரொடுங் கூடாமல் அந்தரங்க சேவைதந்த
				தெய்வ அறிவே சிவமே பராபரமே.252.
				
				அருளாகி நின்றசுகம் ஆகாமல் ஐயோ
				இருளாகி நிற்க இயல்போ பராபரமே.253.
				
				அன்பரெல்லாம் இன்பம் அருந்திடவும் யான்ஒருவன்
				துன்புறுதல் நன்றோநீ சொல்லாய் பராபரமே.254.
				
				சந்ததமும் நின்கருணை சாற்றுவதல் லால்வேறு
				சிந்தைஅறி யேன்உன்றன் சித்தம் பராபரமே.255.
				
				நான்நான் எனக்குளறும் நாட்டத்தால் என்னைவிட்டுப்
				போனாலும் உன்னைவிட்டுப் போகேன் பராபரமே.256.
				
				இக்காயம் பொய்யென்றோர் ஈட்டத் துனக்கபயம்
				புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே.257.
				
				தானாதல் பூரணமே சாருமிடம் உண்டுயிரும்
				வானாதி யும்ஒழுங்காய் மன்னும் பராபரமே.258.
				
				உன்னுமனங் கர்ப்பூர வுண்டைபோ லேகரைய
				மின்னும்ஆ னந்த விளக்கே பராபரமே.259.
				
				நாட்பட் டலைந்த நடுக்கமெலாந் தீரவுனக்
				காட்பட்டுந் துன்பம்எனக் காமோ பராபரமே.260.
				
				பாவிபடுங் கண்கலக்கம் பார்த்துமிரங் காதிருந்தால்
				ஆவிக் குறுதுணையார் ஐயா பராபரமே.261.
				
				நின்னிறைவே தாரகமாய் நின்றுசுகம் எய்தாமல்
				என்னிறைவே பாவித்தேன் என்னே பராபரமே.262.
				
				நின்னைச் சரண்புகுந்தால் நீகாக்கல் வேண்டுமல்லால்
				என்னைப் புறம்விடுதல் என்னே பராபரமே.263.
				
				மாறாத துன்பமெல்லாம் வந்துரைத்தால் நின்செவியில்
				ஏறாத வாறேது இயம்பாய் பராபரமே.264.
				
				விஞ்சுபுலப் பாடனைத்தும் வீறுதுன்பஞ் செய்யவந்த
				அஞ்சுபுல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே.265.
				
				கன்னங் கரியநிறக் காமாதி ராட்சசப் பேய்க்
				கென்னையிலக் காகவைத்த தென்னே பராபரமே.266.
				
				சித்திநெறி கேட்டல் செகமயக்கஞ் சன்மமற
				முத்திநெறி கேட்டல் முறைகாண் பராபரமே.267.
				
				சிந்தை சிதையச் சிதையாத ஆனந்தம்
				எந்தவகை யாலேவந் தெய்தும் பராபரமே.268.
				
				கூர்த்தஅறி வால்அறியக் கூடா தெனக்குரவன்
				தேர்த்தபடி தானே திரிந்தேன் பராபரமே.269.
				
				பத்த ரருந்தும் பரமசுகம் யானருந்த
				எத்தனைநாள் செல்லும் இயம்பாய் பராபரமே.270.
				
				தீர்த்தி னால்துறவு சேராமல் இவ்வுலகில்
				பாரத் தனம்பேசல் பண்போ பராபரமே.271.
				
				இந்த வெளியினையுண் டேப்பமிடப் பேரறிவாத்
				தந்தவெளிக் கேவெளியாய்ச் சார்ந்தேன் பராபரமே.272.
				
				உணர்த்தும்உனை நாடா துணர்ந்தவையே நாடி
				இணக்குறுமென் ஏழைமைதான் என்னே பராபரமே.273.
				
				உண்டுபோல் இன்றாம் உலகைத் திரமெனவுள்
				கொண்டுநான் பெற்றபலன் கூறாய் பராபரமே.274.
				
				உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே
				கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே.275.
				
				சித்த மவுனஞ் செயல்வாக் கெலாமவுனஞ்
				சுத்த மவுனம்என்பால் தோன்றிற் பராபரமே.276.
				
				எண்ணில்பல கோடிஉயிர் எத்தனையோ அத்தனைக்குங்
				கண்ணிற் கலந்தஅருட் கண்ணே பராபரமே.277.
				
				எனக்கினியார் உன்போலும் இல்லையென்றால் யானும்
				உனக்கினியா னாகா உளவேன் பராபரமே.278.
				
				அண்டபிண்டங் காணேன் அகமும் புறமும் ஒன்றாக்
				கண்ட என்னை நீகலந்த காலம் பராபரமே.279.
				
				எத்தனையோ கோடி யெடுத்தெடுத்துச் சொன்னாலுஞ்
				சித்தம் இரங்கிலைஎன் செய்வேன் பராபரமே.280.
				
				அன்றந்த நால்வருக்கும் அற்புதமாய் நீயுரைத்த
				தொன்றந்த வார்த்தையெனக் குண்டோ பராபரமே.281.
				
				அப்பனென்றும் அன்னையென்றும் ஆரியனென் றும்உனையே
				செப்புவதும் உன்னிலையின் சீர்காண் பராபரமே.282.
				
				கட்டுங் கனமும்அந்தக் காலர்வரும் போதெதிர்த்து
				வெட்டுந் தளமோ விளம்பாய் பராபரமே.283.
				
				பேசாத மோனநிலை பெற்றன்றோ நின்னருளாம்
				வாசாம கோசரந்தான் வாய்க்கும் பராபரமே.284
				
				கற்றாலுங் கேட்டாலுங் காயமழி யாதசித்தி
				பெற்றாலும் இன்பம்உண்டோ பேசாய் பராபரமே.285.
				
				கண்டவடி வெல்லாங் கரைக்கின்ற அஞ்சனம்போல்
				அண்டமெல்லாம் நின்னருளே அன்றோ பராபரமே.286.
				
				தன்செயலால் ஒன்றுமிலை தானென்றால் நான்பாவி
				நின்செயலாய் நில்லா நினைவேன் பராபரமே.287.
				
				கொலைகளவு கட்காமங் கோபம்விட்டால் அன்றோ
				மலையிலக்கா நின்னருள்நான் வாய்க்கும் பராபரமே.288.
				
				தன்னைஅறி யாதுசகந் தானாய் இருந்துவிட்டால்
				உன்னை அறியஅருள் உண்டோ பராபரமே.289.
				
				ஒன்றிரண்டென் றுன்னா உணர்வுகொடுத் துள்ளபடி
				என்றும்என்னை வையாய் இறையே பராபரமே.290.
				
				கருதும்அடி யார்கள்உளங் காணவெளி யாகுந்
				துரியநிறை வான சுகமே பராபரமே.291.
				
				பொய்குவித்த நெஞ்சன்அருட் பொற்பறிந்து திக்கனைத்துங்
				கைகுவித்து நிற்பதெந்தக் காலம் பராபரமே.292.
				
				அத்துவித மான அயிக்ய அனுபவமே
				சுத்தநிலை அந்நிலையார் சொல்வார் பராபரமே.293.
				
				வைத்த சுவரலம்பின் மண்போமோ மாயையினோர்க்
				கெத்தனைபோ தித்தும்என்னாம் எந்தாய் பராபரமே.294.
				
				பூட்டற்றுத் தேகமற்றுப் போகுமுன்னே நின்னருளைக்
				காட்டாத் தகாதோஎன் கண்ணே பராபரமே.295.
				
				சொல்லிற் பதர்களைந்து சொல்முடிவு காணாதார்
				நெல்லிற் பதர்போல் நிற்பார் பராபரமே.296.
				
				அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கியபுன் மாக்கள்
				இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே.297.
				
				தேகாதி பொய்யெனவே தேர்ந்தவுப சாந்தருக்கு
				மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே.298.
				
				சாதனையெல் லாம்அவிழத் தற்போதங் காட்டாதோர்
				போதனைநீ நல்குவதெப் போதோ பராபரமே.299.
				
				ஒன்றுமறி யாவிருளாம் உள்ளம் படைத்தஎனக்
				கென்று கதிவருவ தெந்தாய் பராபரமே.300.
				
				சிந்திக்குந் தோறும்என்னுள் சிற்சுகமாய் ஊற்றூறிப்
				புந்திக்குள் நின்றஅருள் பொற்பே பராபரமே.301.
				
				என்றும்அடைந் தோர்கட் கிரங்கார் குறிப்பனைத்துங்
				கன்றையுதை காலி கதைகாண் பராபரமே.302.
				
				குற்றங் குறையக் குணமே லிடஅருளை
				உற்றவரே ஆவிக் குறவாம் பராபரமே.303.
				
				ஓருரையால் வாய்க்குமுண்மைக் கோரனந்த நூல்கோடிப்
				பேருரையாற் பேசில்என்ன பேறாம் பராபரமே.304.
				
				சொல்லுஞ் சமயநெறிச் சுற்றுக்கு ளேசுழலும்
				அல்லல் ஒழிவதென்றைக் கையா பராபரமே.305.
				
				பிடித்ததையே தாபிக்கும் பேராணவத்தை
				அடித்துத் துரத்தவல்லார் ஆர்காண் பராபரமே.306.
				
				நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவுடையார்
				ஆசைக் கடலில் அழுந்தார் பராபரமே.307.
				
				கள்ளாது கட்டுணவுங் காரியமோ நானொருசொல்
				கொள்ளாத தோடமன்றோ கூறாய் பராபரமே.308.
				
				சென்றவிட மெல்லாந் திருவருளே தாரகமாய்
				நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே.309.
				
				நீட்சி குறுகல்இல்லா நித்யசுகா ரம்பசக
				சாட்சியாம் உன்னைவந்து சார்ந்தேன் பராபரமே.310.
				
				வானாதி தத்துவமாய் மன்னிநின்ற காரணநீ
				நானாகி நிற்பதெந்த நாளோ பராபரமே.311.
				
				காட்டத்தில் அங்கி கடையவந்தால் என்னவுன்னும்
				நாட்டத்தின் ஊடுவந்த நட்பே பராபரமே.312.
				
				நித்திரையாய்த் தானே நினைவயர்ந்தால் நித்தநித்தஞ்
				செத்தபிழைப் பானதெங்கள் செய்கை பராபரமே.313.
				
				இன்பநிட்டை எய்தாமல் யாதெனினுஞ் சென்றுமனந்
				துன்புறுதல் வன்பிறவித் துக்கம் பராபரமே.314.
				
				பொய்யகல மெய்யான போதநிலை கண்டோர்க்கோர்
				ஐயமிலை ஐயமிலை ஐயா பராபரமே.315.
				
				மந்திரத்தை உன்னி மயங்கா தெனக்கினியோர்
				தந்திரத்தை வைக்கத் தகாதோ பராபரமே.316.
				
				விண்கருணை பூத்ததென்ன மேவி உயிர்க்குயிராய்த்
				தண்கருணை தோன்றஅருள் தாய்நீ பராபரமே.317.
				
				தன்மயமாய் நின்றநிலை தானேதா னாகிநின்றால்
				நின்மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே.318.
				
				ஏங்கி இடையும்நெஞ்சம் ஏழையைநீ வாவென்றே
				பாங்குபெறச் செய்வதுன்மேற் பாரம் பராபரமே.319.
				
				ஆண்டநின்னை நீங்கா அடிமைகள்யாம் ஆணவத்தைப்
				பூண்டதென்ன கன்மம் புகலாய் பராபரமே.320.
				
				எங்கணும்நீ யென்றால் இருந்துபடி எய்தாமல்
				அங்குமிங்கும் என்றலையல் ஆமோ பராபரமே.321.
				
				கற்குமது வுண்டு களித்ததல்லால் நின்னருளில்
				நிற்குமது தந்ததுண்டோ நீதான் பராபரமே.322.
				
				அண்டபகி ரண்டம் அறியாத நின்வடிவைக்
				கண்டவரைக் கண்டாற் கதியாம் பராபரமே.323.
				
				கலக்கமுற நெஞ்சைக் கலக்கித் திரும்பத்
				துலக்குபவன் நீயலையோ சொல்லாய் பராபரமே.324.
				
				சிந்தையும்என் போலச் செயலற் றடங்கிவிட்டால்
				வந்ததெல்லாம் நின்செயலா வாழ்வேன் பராபரமே.325.
				
				பந்தமெலாந் தீரப் பரஞ்சோதி நீகுருவாய்
				வந்த வடிவை மறவேன் பராபரமே.326.
				
				தானந்த மான சகச நிருவிகற்ப
				ஆனந்த நிட்டைஅருள் ஐயா பராபரமே.327.
				
				அல்லலெல்லாந் தீரஎனக் கானந்த மாகவொரு
				சொல்லைஎன்பால் வைத்ததையென் சொல்வேன் பராபரமே.328.
				
				சிந்தை மயக்கமறச் சின்மயமாய் நின்றவுன்னைத்
				தந்தவுனக் கென்னையும்நான் தந்தேன் பராபரமே.329.
				
				மைகாட்டு மாயை மயக்கமற நீகுருவாய்க்
				கைகாட்ட வுங்கனவு கண்டேன் பராபரமே.330.
				
				மால்வைத்த சிந்தை மயக்கறஎன் சென்னிமிசைக்
				கால்வைக்க வுங்கனவு கண்டேன் பராபரமே.331.
				
				மண்ணான மாயையெல்லாம் மாண்டுவெளி யாகஇரு
				கண்ணார வுங்கனவு கண்டேன் பராபரமே.332.
				
				மண்ணீர்மை யாலே மயங்காதுன் கையால்என்
				கண்ணீர் துடைக்கவும்நான் கண்டேன் பராபரமே.333.
				
				உள்ள துணரா வுணர்விலிமா பாவியென்றோ
				மெள்ளமெள்ளக் கைநெகிழ விட்டாய் பராபரமே.334.
				
				எல்லாம் நினதுசெயல் என்றெண்ணும் எண்ணமும்நீ
				அல்லால் எனக்குளதோ ஐயா பராபரமே.335.
				
				பந்த மயக்கிருக்கப் பற்றொழிந்தேன் என்றுளறும்
				இந்த மயக்கம் எனக்கேன் பராபரமே.336.
				
				காட்சியெல்லாங் கண்ணைவிடக் கண்டதுண்டோ யாதினுக்கும்
				ஆட்சி உனதருளே அன்றோ பராபரமே.337.
				
				எட்டுத் திசையும்ஒன்றாய் இன்பமாய் நின்றவுன்னை
				விட்டுப் பிரியவிடம் வேறோ பராபரமே.338.
				
				பிரியா துயிர்க்குயிராய்ப் பின்னமற வோங்குஞ்
				செறிவே அறிவே சிவமே பராபரமே.339.
				
				ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீயிரங்காச்
				சூதே தெனக்குளவு சொல்லாய் பராபரமே.340.
				
				கற்பனையாப் பாடுகின்றேன் கண்ணீருங் கம்பலையுஞ்
				சொற்பனத்துங் காணேன்என் சொல்வேன் பராபரமே.341.
				
				வன்பொன்று நீங்கா மனதிறப்ப மாறாப்பேர்
				அன்பொன்றும் போதும்எனக் கையா பராபரமே.342.
				
				ஏதுந் தெரியா எளியேனை வாவெனநின்
				போதநிலை காட்டிற் பொறாதோ பராபரமே.343.
				
				ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்குன் தெய்வஅருள்
				தாரா திருக்கத் தகுமோ பராபரமே.344.
				
				மோனந் தருஞான மூட்டி எனக்குவட்டா
				ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே.345.
				
				வாடுமுகங் கண்டென்னை வாடாம லேகாத்த
				நீடுங் கருணை நிறைவே பராபரமே.346.
				
				புந்தியினால் நின்னடியைப் போற்றுகின்ற மெய்யடியார்
				சிந்தையிறப் போநின் தியானம் பராபரமே.347.
				
				உனக்குவமை யாக்கருணை உள்ளவரும் வன்மைக்
				கெனக்குவமை யானவரும் இல்லை பராபரமே.348.
				
				தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தார்போல் எவ்விடத்தும்
				நீயிருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே.349.
				
				வாயாற் கிணறுகெட்ட வாறேபோல் வாய்பேசிப்
				பேயானார்க் கின்பமுண்டோ பேசாய் பராபரமே.350.
				
				பாவமென்றால் ஏதும் பயமின்றிச் செய்யஇந்தச்
				சீவனுக்கார் போதந் தெரித்தார் பராபரமே.351.
				
				இன்ப நிருவிகற்பம் இன்றேதா அன்றெனிலோ
				துன்பம் பொறுப்பரிது சொன்னேன் பராபரமே.352.
				
				கற்குநிலை கற்றால் கருவியவி ழாதருளாய்
				நிற்குநிலை கற்பதுவே நீதம் பராபரமே.353.
				
				காச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப்
				பேச்சற் றவரே பிறவார் பராபரமே.354.
				
				பற்றொழிந்து சிந்தைப் பதைப்பொழிந்து தானேதான்
				அற்றிருப்ப தென்றைக் கமைப்பாய் பராபரமே.355.
				
				உருவெளிதான் வாதவூர் உத்தமர்க்கல் லாலினமுங்
				குருவழிநின் றார்க்குமுண்டோ கூறாய் பராபரமே.356.
				
				தேகம்யா தேனுமொரு சித்திபெறச் சீவன்முத்தி
				ஆகுநெறி நல்லநெறி ஐயா பராபரமே.357.
				
				உலகநெறி போற்சடலம் ஓயஉயிர் முத்தி
				இலகுமெனல் பந்த இயல்பே பராபரமே.358.
				
				பரமாப் பரவெளியாப் பார்ப்பதல்லால் மற்றெவர்க்குந்
				திரமேது மில்லைநன்றாய்த் தேர்ந்தேன் பராபரமே.359.
				
				தேடுவேன் நின்னருளைத் தேடுமுன்னே யெய்தில்நடம்
				ஆடுவேன் ஆனந்த மாவேன் பராபரமே.360.
				
				உள்ளங் குழைய வுடல்குழைய வுள்ளிருந்த
				கள்ளங் குழையஎன்று காண்பேன் பராபரமே.361.
				
				பட்டப் பகல்போலப் பாழ்த்தசிந்தை மாளின்எல்லாம்
				வெட்டவெளி யாக விளங்கும் பராபரமே.362.
				
				பார்க்கின்அணுப் போற்கிடந்த பாழ்ஞ்சிந்தை மாளின்என்னை
				யார்க்குச் சரியிடலாம் ஐயா பராபரமே.363.
				
				பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்தங்கள்
				நீட்டுக்கெல் லாங்குறுகி நின்றாய் பராபரமே.364.
				
				முத்தாந்த வித்தே முளைக்குநில மாயெழுந்த
				சித்தாந்த மார்க்கச் சிறப்பே பராபரமே.365.
				
				உன்னா வெளியாய் உறங்காத பேருணர்வாய்
				என்னாவிக் குள்ளே யிருந்தாய் பராபரமே.366.
				
				தத்துவமெல் லாமகன்ற தன்மையர்க்குச் சின்மயமா
				நித்தமுத்த சுத்த நிறைவே பராபரமே.367.
				
				உள்ளக் கொதிப்பகல வுள்ளுள்ளே ஆனந்த
				வெள்ள மலர்க்கருணை வேண்டும் பராபரமே.368.
				
				என்னைப் புறப்பதரு ளின்கடனாம் என்கடனாம்
				நின்னிற் பணியறவே நிற்கை பராபரமே.369.
				
				தானேயா நன்னிலையைத் தந்தஅருள் ஆனந்த
				வானே மனாதீத வாழ்வே பராபரமே.370.
				
				மண்ணாதி பூதமெல்லாம் வைத்திருந்த நின்னிறைவைக்
				கண்ணாரக் கண்டு களித்தேன் பராபரமே.371.
				
				அறியாமை ஈதென் றறிவித்த அன்றேதான்
				பிறியா அருள்நிலையும் பெற்றேன் பராபரமே.372.
				
				தீதெனவும் நன்றெனவுந் தேர்ந்ததுநான் தேர்ந்தபடி
				ஏதும் நடக்கவொட்டா தென்னே பராபரமே.373.
				
				கண்ட அறிவகண்டா காரமென மெய்யறிவில்
				கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே.374.
				
				ஈறாக வல்வினைநான் என்னாமல் இன்பசுகப்
				பேறாம் படிக்கடிமை பெற்றேன் பராபரமே.375.
				
				பெற்றார் அநுபூதி பேசாத மோனநிலை
				கற்றார் உனைப்பிரியார் கண்டாய் பராபரமே.376.
				
				நீயேநான் என்று நினைப்பும் மறப்புமறத்
				தாயே அனையஅருள் தந்தாய் பராபரமே.377.
				
				சஞ்சலமற் றெல்லாம்நீ தானென் றுணர்ந்தேன்என்
				அஞ்சலியுங் கொள்ளாய் அரசே பராபரமே.378.
				
				பூதமுதல் நாதவரை பொய்யென்ற மெய்யரெல்லாங்
				காதலித்த இன்பக் கடலே பராபரமே.379.
				
				வாக்குமனம் ஒன்றுபட்ட வார்த்தையல்லால் வெவ்வேறாய்ப்
				போக்குடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே.380.
				
				வன்மையின்றி எல்லாம் மதித்துணர்வாய்க் காகெடுவேன்
				தன்மையொன்றுந் தோயாத் தடையோ பராபரமே.381.
				
				பத்தர்சித்தர் வாழிபரி பக்குவர்கள் வாழிசெங்கோல்
				வைத்தவர்கள் வாழிகுரு வாழி பராபரமே.382.
				
				கல்லாதேன் ஆனாலுங் கற்றுணர்ந்த மெய்யடியார்
				சொல்லாலே நின்னைத் தொடர்ந்தேன் பராபரமே.383.
				
				சொல்லிறப்பச் சற்குருவாய்த் தோன்றிச் சுகங்கொடுத்த
				நல்லவர்க்கே கொத்தடிமை நான்காண் பராபரமே.384.
				
				முத்திக்கு வித்தான மோனக் கரும்புவழி
				தித்தித் திடவிளைந்த தேனே பராபரமே.385.
				
				நித்திரையும் பாழ்த்த நினைவும்அற்று நிற்பதுவோ
				சுத்த அருள்நிலைநீ சொல்லாய் பராபரமே.386.
				
				மண்ணும் மறிகடலும் மற்றுளவும் எல்லாம்உன்
				கண்ணில் இருக்கவும்நான் கண்டேன் பராபரமே.387.
				
				பூட்டிவைத்து வஞ்சப் பொறிவழியே என்றனைநீ
				ஆட்டுகின்ற தேதோ அறியேன் பராபரமே.388.
				
				பொய்யுணர்வா யிந்தப் புழுக்கூட்டைக் காத்திருந்தேன்
				உய்யும் வகையும் உளதோ பராபரமே.389.
				
				44. பைங்கிளிக்கண்ணி
				
				அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்
				சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே. 1.
				
				அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்
				சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே. 2.
				
				ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்
				பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே. 3.
				
				ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து
				சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே. 4.
				
				ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்
				கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே. 5.
				
				இன்பருள ஆடையழுக் கேறும்எமக் கண்ணல்சுத்த
				அம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே. 6.
				
				உன்னாமல் ஒன்றிரண்டென் றோராமல் வீட்டுநெறி
				சொன்னான் வரவும்வகை சொல்லாய்நீ பைங்கிளியே. 7.
				
				ஊருமிலார் பேருமிலார் உற்றார்பெற் றாருடனே
				யாருமிலார் என்னை அறிவாரோ பைங்கிளியே. 8.
				
				ஊறைப்பா ராமல்எனக் குள்ளகத்து நாயகனார்
				சீரைப்பார்த் தாற்கருணை செய்வாரோ பைங்கிளியே. 9.
				
				என்று விடியும் இறைவாவோ என்றென்று
				நின்றநிலை எல்லாம் நிகழ்த்தாய்நீ பைங்கிளியே. 10.
				
				எந்தமட லூடும் எழுதா இறைவடிவைச்
				சிந்தைமட லாலெழுதிச் சேர்ப்பேனோ பைங்கிளியே. 11.
				
				கண்ணுள்மணி போல்இன்பங் காட்டி எனைப்பிரிந்த
				திண்ணியரும் இன்னம்வந்து சேர்வாரோ பைங்கிளியே. 12.
				
				ஏடார் மலர்சூடேன் எம்பெருமான் பொன்னடியாம்
				வாடா மலர்முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே. 13.
				
				கல்லேன் மலரேன் கனிந்தஅன்பே பூசைஎன்ற
				நல்லோர்பொல் லாஎனையும் நாடுவரோ பைங்கிளியே. 14.
				
				கண்டதனைக் கண்டு கலக்கந் தவிரெனவே
				விண்டபெரு மானையும்நான் மேவுவனோ பைங்கிளியே. 15.
				
				காணாத காட்சி கருத்துவந்து காணாமல்
				வீணாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே. 16.
				
				காந்தம் இரும்பைக் கவர்ந்திழுத்தா லென்னஅருள்
				வேந்தன் எமைஇழுத்து மேவுவனோ பைங்கிளியே. 17.
				
				காதலால் வாடினதுங் கண்டனையே எம்மிறைவர்
				போதரவா யின்பம் புசிப்பேனோ பைங்கிளியே. 18.
				
				கிட்டிக்கொண் டன்பருண்மை கேளாப் பலவடிகொள்
				பட்டிக்கும் இன்பமுண்டோ சொல்லாய்நீ பைங்கிளியே. 19.
				
				கிட்டூராய் நெஞ்சிற் கிளர்வார் தழுவஎன்றால்
				நெட்டூர ராவர்அவர் நேசமென்னோ பைங்கிளியே. 20.
				
				கூறுங் குணமுமில்லாக் கொள்கையினார் என்கவலை
				ஆறும்படிக்கும் அணைவாரோ பைங்கிளியே. 21.
				
				சின்னஞ் சிறியேன்றன் சிந்தைகவர்ந் தார்இறைவர்
				தன்னந் தனியே தவிப்பேனோ பைங்கிளியே. 22.
				
				சிந்தை மருவித் தெளிவித் தெனையாள
				வந்தகுரு நாதன்அருள் வாய்க்குமோ பைங்கிளியே. 23.
				
				சொல்லிறந்து நின்ற சுகரூபப் பெம்மானை
				அல்லும் பகலும் அணைவேனோ பைங்கிளியே. 24.
				
				தற்போதத் தாலே தலைகீழ தாகஐயன்
				நற்போத இன்புவர நாட்செலுமோ பைங்கிளியே. 25.
				
				தன்னை அறியுந் தருணந் தனிற்றலைவர்
				என்னையணை யாதவண்ணம் எங்கொளித்தார் பைங்கிளியே. 26.
				
				தாங்கரிய மையலெல்லாந் தந்தெனைவிட் டின்னருளாம்
				பாங்கியைச்சேர்ந் தார்இறைக்குப் பண்போசொல் பைங்கிளியே. 27.
				
				தாவியதோர் மர்க்கடமாந் தன்மைவிட்டே அண்ணலிடத்
				தோவியம்போல் நிற்கின்எனை உள்குவரோ பைங்கிளியே. 28.
				
				தீராக் கருவழக்கைத் தீர்வையிட்டங் கென்னைஇனிப்
				பாரேறா தாண்டானைப் பற்றுவனோ பைங்கிளியே. 29.
				
				தூங்கிவிழித் தென்னபலன் தூங்காமல் தூங்கிநிற்கும்
				பாங்குகண்டால் அன்றோ பலன்காண்பேன் பைங்கிளியே. 30.
				
				தொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாத
				எல்லைஇலா இன்பமயம் எய்துவனோ பைங்கிளியே. 31.
				
				நன்னெஞ்சத் தன்பரெல்லாம் நாதரைச்சேர்ந் தின்பணைந்தார்
				வன்னெஞ்சத் தாலேநான் வாழ்விழந்தேன் பைங்கிளியே. 32.
				
				நானே கருதின்வர நாடார்சும் மாஇருந்தால்
				தானே அணைவரவர் தன்மைஎன்னோ பைங்கிளியே. 33.
				
				நீர்க்குமிழி போன்றவுடல் நிற்கையிலே சாசுவதஞ்
				சேர்க்கஅறி யாமல் திகைப்பேனோ பைங்கிளியே. 34.
				
				நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின்வே றென்றணையார்
				வஞ்சகத்தார் அல்லரவர் மார்க்கமென்னோ பைங்கிளியே. 35.
				
				பன்முத் திரைச்சமயம் பாழ்படக்கல் லாலடிவாழ்
				சின்முத் திரைஅரசைச் சேர்வேனோ பைங்கிளியே. 36.
				
				பச்சைகண்ட நாட்டிற் பறக்கும்உனைப் போற்பறந்தேன்
				இச்சைஎல்லாம் அண்ணற் கியம்பிவா பைங்கிளியே. 37.
				
				பாசபந்தஞ் செய்ததுன்பம் பாராமல் எம்மிறைவர்
				ஆசைதந்த துன்பமதற் காற்றேன்நான் பைங்கிளியே. 38.
				
				பாராசை அற்றிறையைப் பற்றறநான் பற்றிநின்ற
				பூராய மெல்லாம் புகன்றுவா பைங்கிளியே. 39.
				
				பேதைப் பருவத்தே பின்தொடர்ந்தென் பக்குவமுஞ்
				சோதித்த அண்ணல்வந்து தோய்வாரோ பைங்கிளியே. 40.
				
				பைம்பயிரை நாடும்உன்போற் பார்பூத்த பைங்கொடிசேர்
				செம்பயிரை நாடித் திகைத்தேன்நான் பைங்கிளியே. 41.
				
				பொய்க்கூடு கொண்டு புலம்புவனோ எம்மிறைவர்
				மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே. 42.
				
				பொய்ப்பணிவேண் டேனைப் பொருட்படுத்தி அண்ணலென்பால்
				மெய்ப்பணியுந் தந்தொருகால் மேவுவனோ பைங்கிளியே. 43.
				
				மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளஎ லாமுறங்குங்
				கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே. 44.
				
				மட்டுப்படாத மயக்கமெல்லாந் தீரஎன்னை
				வெட்டவெளி வீட்டில்அண்ணல் மேவுவனோ பைங்கிளியே. 45.
				
				மாலைவளர்ந் தென்னை வளர்த்திறைவர் பன்னெறியாம்
				பாலைவனத் தில்விட்ட பாவமென்னோ பைங்கிளியே. 46.
				
				மெய்யில்நோய் மாற்றவுழ்தம் மெத்தவுண்டெம் அண்ணல்தந்த
				மையல்நோய் தீர்க்க மருந்தும்உண்டோ பைங்கிளியே. 47.
				
				மேவுபஞ்ச வண்ணமுற்றாய் வீண்சிறையால் அல்லலுற்றாய்
				பாவிபஞ்ச வண்ணம் பகர்ந்துவா பைங்கிளியே. 48.
				
				வாய்திறவா வண்ணமெனை வைத்தாண்டார்க் கென்துயரை 
				நீதிறவாச் சொல்லின் நிசமாங்காண் பைங்கிளியே. 49.
				
				வாட்டாப் படாத மவுனஇன்பங் கையாலே
				காட்டிக் கொடுத்தானைக் காண்பேனோ பைங்கிளியே. 50.
				
				வாரா வரவாக வந்தருளும் மோனருக்கென்
				பேராசை எல்லாம்போய்ப் பேசிவா பைங்கிளியே. 51.
				
				விண்ணவர்தம் பாலமுதம் வேப்பங்கா யாகஎன்பால்
				பண்ணியதெம் அண்ணல்மயல் பார்த்தாயோ பைங்கிளியே. 52.
				
				விண்ணுள் வளியடங்கி வேறற்ற தென்னஅருள்
				கண்ணுள் அடங்கிடவுங் காண்பேனோ பைங்கிளியே. 53.
				
				விண்ணார் நிலவுதவழ் மேடையிலெல் லாருமுற
				மண்ணான வீட்டிலென்னை வைத்ததென்னோ பைங்கிளியே. 54.
				
				உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந்தென் கள்ளமெல்லாம்
				வள்ளல்அறிந் தால்எனக்கு வாயுமுண்டோ பைங்கிளியே. 55.
				
				ஆகத்தை நீக்குமுன்னே ஆவித் துணைவரைநான்
				தாகத்தின் வண்ணந் தழுவனோ பைங்கிளியே. 56.
				
				தானே சுபாவந் தலைப்படநின் றான்ஞான
				வானோ னவரும் வருவாரோ பைங்கிளியே. 57.
				
				கள்ளத் தலைவரவர் கைகாட்டிப் பேசாமல்
				உள்ளத்தில் வந்த உபாயமென்னோ பைங்கிளியே. 58.
				
				45. எந்நாள்கண்ணி
				
				1. தெய்வ வணக்கம்
				
				நீர்பூத்த வேணி நிலவெறிப்ப மனறாடுங்
				கார்பூத்த கண்டனையான் காணுநாள் எந்நாளோ. 1.
				
				பொன்னாரும் மன்றுள்மணிப் பூவைவிழி வண்டுசுற்றும்
				என்னா ரமுதின்நலன் இச்சிப்ப தெந்நாளோ. 2.
				
				நீக்கிமலக் கட்டறுத்து நேரே வெளியிலெம்மைத்
				தூக்கிவைக்குந் தாளைத் தொழுதிடிநாள் எந்நாளோ. 3.
				
				கருமுகங்காட் டாமல்என்றுங் கர்ப்பூரம் வீசுந்
				திருமுகமே நோக்கித் திருக்கறுப்ப தெந்நாளோ. 4.
				
				வெஞ்சே லெனும்விழியார் வேட்கைநஞ்சுக் கஞ்சினரை
				அஞ்சேல் எனுங்கைக் கபயமென்ப தெந்நாளோ. 5.
				
				ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்றிலங்கும்
				வீறு பரைதிருத்தாள் மேவுநாள் எந்நாளோ. 6.
				
				பச்சைநிற மாய்ச்சிவந்த பாகங் கலந்துவகை
				இச்சையுடன் ஈன்றாளை யாங்காண்ப தெந்நாளோ. 7.
				
				ஆதியந்தங் காட்டா தகண்டிதமாய் நின்றுணர்த்தும்
				போதவடி வாம்அடியைப் போற்றுநாள் எந்நாளோ. 8.
				
				கங்கை நிலவுசடைக் காட்டானைத் தந்தையெனும்
				புங்கவெண்கோட் டானைபதம் புந்திவைப்ப தெந்நாளோ. 9.
				
				அஞ்சமுகங் காட்டாமல் ஆறுமுகங் காட்டவந்த
				செஞ்சரணச் சேவடியைச் சிந்தைவைப்ப தெந்நாளோ. 10.
				
				தந்தைஇரு தாள்துணித்துத் தம்பிரான் தாள்சேர்ந்த
				எந்தைஇரு தாளிணைக்கே இன்புறுவ தெந்நாளோ. 11.
				
				2. குமரமரபின் வணக்கம்
				
				துய்ய கரமலரால் சொல்லாமல் சொன்னவுண்மை
				ஐயனைக்கல் லால்அரசை யாமணைவ தெந்நாளோ. 1.
				
				சிந்தையினுக் கெட்டாத சிற்சுகத்தைக் காட்டவல்ல
				நந்தியடிக் கீழ்க்குடியாய் நாமணைவ தெந்நாளோ. 2.
				
				எந்தை சனற்குமர னாதிஎமை ஆட்கொள்வான்
				வந்த தவத்தினரை வாழ்த்துநாள் எந்நாளோ. 3.
				
				பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித
				மெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ. 4.
				
				பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகவுண்மை
				சாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ. 5. 
				
				சிற்றம் பலமன்னுஞ் சின்மயராந் தில்லைநகர்க்
				கொற்றங் குடிமுதலைக் கூறுநாள் எந்நாளோ. 6.
				
				குறைவிலருள் ஞானமுதல் கொற்றங் குடியடிகள்
				நறைமலர்த்தாட் கன்புபெற்று நாமிருப்ப தெந்நாளோ. 7.
				
				நாளவங்கள் போகாமல் நன்னெறியைக் காட்டிஎமை
				ஆளவந்த கோலங்கட் கன்புவைப்ப தெந்நாளோ. 8.
				
				என்னறிவை உள்ளடக்கி என்போல் வருமவுனி
				தன்னறிவுக் குள்ளேநான் சாருநாள் எந்நாளோ. 9.
				
				ஆறுளொன்றை நாடின்அதற் காறுமுண்டா மென்றெமக்குக்
				கூறும் மவுனியருள் கூடுநாள் எந்நாளோ. 10.
				
				நில்லாமல் நின்றருளை நேரேபா ரென்றவொரு
				சொல்லால் மவுனியருள் தோற்றுநாள் எந்நாளோ. 11.
				
				வைதிகமாஞ் சைவ மவுனிமவு னத்தளித்த
				மெய்திகழ்ந்தென் அல்லல் விடியுநாள் எந்நாளோ. 12.
				
				வாக்குமன மற்ற மவுனிமவு னத்தருளே
				தாக்கவும்என் அல்லலெல்லாந் தட்டழிவ தெந்நாளோ. 13.
				
				3. அடியார் வணக்கம்
				
				வெம்பந்தந் தீர்த்துலகாள் வேந்தன் திருஞான
				சம்பந் தனையருளாற் சாருநாள் எந்நாளோ. 1.
				
				ஏரின் சிவபோகம் இங்கிவற்கே என்னஉழ
				வாரங்கொள் செங்கையர்தாள் வாரம்வைப்ப தெந்நாளே. 2.
				
				பித்தரிறை என்றறிந்து பேதைபால் தூதனுப்பு
				வித்த தமிழ்ச்சமர்த்தர் மெய்புகழ்வ தெந்நாளோ. 3.
				
				போதவூர் நாடறியப் புத்தர்தமை வாதில்வென்ற
				வாதவூர் ஐயன்அன்பை வாஞ்சிப்ப தெந்நாளோ. 4.
				
				ஓட்டுடன்பற் றின்றி உலகைத் துறந்தசெல்வப்
				பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வ தெந்நாளோ. 5.
				
				கண்டதுபொய் என்றகண்டா காரசிவம் மெய்யெனவே
				விண்டசிவ வாக்கியர்தாள் மேவுநாள் எந்நாளோ. 6.
				
				சக்கர வர்த்தி தவராச யோகியெனும்
				மிக்கதிரு மூலன்அருள் மேவுநாள் எந்நாளோ. 7.
				
				கந்தரநு பூதிபெற்றுக் கந்தரநு பூதிசொன்ன
				எந்தைஅருள் நாடி இருக்குநாள் எந்நாளோ. 8.
				
				எண்ணரிய சித்தர் இமையோர் முதலான்
				பண்ணவர்கள் பத்தரருள் பாலிப்ப தெந்நாளோ. 9.
				
				4. யாக்கையைப் பழித்தல்
				
				சுக்கிலமும் நீருஞ் சொரிமலமும் நாறும்உடல்
				புக்குழலும் வாஞ்சையினிப் போதும்என்ப தெந்நாளோ. 1.
				
				நீர்க்குமிழி பூணமைத்து நின்றாலும் நில்லாமெய்
				பார்க்குமிடத் திதன்மேற் பற்றறுவ தெந்நாளோ. 2.
				
				காக்கைநரி செந்நாய் கழுகொருநாள் கூடியுண்டு
				தேக்குவிருந் தாம்உடலைச் சீஎன்ப தெந்நாளோ. 3.
				
				செங்கிருமி யாதி செனித்தசென்ம பூமியினை
				இங்கெனுட லென்னும் இழுக்கொழிவ தெந்நாளோ. 4.
				
				தத்துவர்தொண் ணூற்றறுவர் தாமாய்வாழ் இந்நாட்டைப்
				பித்தன்நான் என்னும் பிதற்றொழிவ தெந்நாளோ. 5.
				
				ஊனொன்றி நாதன் உணர்த்தும்அதை விட்டறிவேன்
				நானென்ற பாவிதலை நாணுநாள் எந்நாளோ. 6.
				
				வேலையிலா வேதன் விதித்தஇந்த்ர சாலவுடல்
				மாலைவியா பார மயக்கொழிவ தெந்நாளோ. 7.
				
				ஆழ்ந்து நினைக்கின் அரோசிகமாம் இவ்வுடலில்
				வாழ்ந்துபெறும் பேற்றை மதிக்குநாள் எந்நாளோ. 8.
				
				மும்மலச்சே றான முழுக்கும்பி பாகமெனும்
				இம்மலகா யத்துள் இகழ்ச்சிவைப்ப தெந்நாளோ. 9.
				
				நாற்றமிகக் காட்டு நவவாயில் பெற்றபசுஞ்
				சோற்றுத் துருத்தி சுமைஎன்ப தெந்நாளோ. 10.
				
				உருவிருப்ப வுள்ளேதான் ஊறும் மலக்கேணி
				அருவருப்பு வாழ்க்கையைக்கண் டஞ்சுநாள் எந்நாளோ. 11.
				
				5. மாதர் மயக்கருத்தல்
				
				மெய்வீசு நாற்றமெலாம் மிக்கமஞ்ச ளால்மறைத்துப்
				பொய்வீசும் வாயார் புலையொழிவ தெந்நாளோ. 1.
				
				திண்ணியநெஞ் சப்பறவை சிக்கக் குழற்காட்டில்
				கண்ணிவைப்போர் மாயங் கடக்குநாள் எந்நாளோ. 2.
				
				கண்டுமொழி பேசிமனங் கண்டுகொண்டு கைவிலையாக்
				கொண்டுவிடு மானார்பொய்க் கூத்தொழிவ தெந்நாளோ. 3.
				
				காமனைவா வென்றிருண்ட கண்வலையை வீசும்மின்னார்
				நாமம் மறந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 4.
				
				கண்களில்வெண் பீளை கரப்பக் கருமையிட்ட
				பெண்கள்மயல் தப்பிப் பிழைக்குநாள் எந்நாளோ. 5.
				
				வீங்கித் தளர்ந்து விழுமுலையார் மேல்வீழ்ந்து
				தூங்குமதன் சோம்பைத் துடைக்குநாள் எந்நாளோ. 6.
				
				கச்சிருக்குங் கொங்கை கரும்பிருக்கும் இன்மாற்றம்
				வைச்சிருக்கும் மாதர் மயக்கொழிவ தெந்நாளோ. 7.
				
				பச்சென்ற கொங்கைப் பரப்பியர்பா ழானமயல்
				நச்சென் றறிந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 8.
				
				உந்திச் சுழியால் உளத்தைச் சுழித்தகன
				தந்தித் தனத்தார் தமைமறப்ப தெந்நாளோ. 9.
				
				தட்டுவைத்த சேலைக் கொய்சகத்திற் சிந்தைஎல்லாங்
				கட்டிவைக்கும் மாயமின்னார் கட்டழிவ தெந்நாளோ. 10.
				
				ஆழாழி என்ன அளவுபடா வஞ்சநெஞ்சப்
				பாழான மாதர்மயல் பற்றொழிவ தெந்நாளோ. 11.
				
				தூயபனித் திங்கள் சுடுவதெனப் பித்தேற்றும்
				மாய மடவார் மயக்கொழிவ தெந்நாளோ. 12.
				
				ஏழைக் குறும்புசெய்யும் ஏந்திழையார் மோகமெனும்
				பாழைக் கடந்து பயிராவ தெந்நாளோ. 13.
				
				விண்டு மொழிகுளறி வேட்கைமது மொண்டுதருந்
				தொண்டியர்கள் கட்கடையிற் சுற்றொழிவ தெந்நாளோ. 14.
				
				மெய்யிற் சிவம்பிறக்க மேவும்இன்பம் போல்மாதர்
				பொய்யிலின் பின்றென்று பொருந்தாநாள் எந்நாளோ. 15.
				
				6. தத்துவ முறைமை
				
				ஐம்பூதத் தாலே அலக்கழிந்த தோடமற
				எம்பூத நாதனருள் எய்துநாள் எந்நாளோ. 1.
				
				சத்தமுத லாம்புலனிற் சஞ்சரித்த கள்வரெனும்
				பித்தர்பயந் தீர்ந்து பிழைக்குநாள் எந்நாளோ. 2.
				
				நாளும் பொறிவழியை நாடாத வண்ணம்எமை
				ஆளும் பொறியால் அருள்வருவ தெந்நாளோ. 3.
				
				வாக்காதி யானகன்ம மாயைதம்பால் வீண்காலம்
				போக்காமல் உண்மை பொருந்துநாள் எந்நாளோ. 4.
				
				மனமான வானரக்கைம் மாலையாக் காமல்
				எனையாள் அடிகளடி எய்துநாள் எந்நாளோ. 5.
				
				வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணமனக்
				காட்டைத் திருத்திக் கரைகாண்ப தெந்நாளோ. 6.
				
				உந்து பிறப்பிறப்பை உற்றுவிடா தெந்தையருள்
				வந்து பிறக்க மனமிறப்ப தெந்நாளோ. 7.
				
				புத்திஎனுந் துத்திப் பொறியரவின் வாய்த்தேரை
				ஒத்துவிடா தெந்தையருள் ஓங்குநாள் எந்நாளோ. 8.
				
				ஆங்கார மென்னுமத யானைவா யிற்கரும்பாய்
				ஏங்காமல் எந்தையருள் எய்துநாள் எந்நாளோ. 9.
				
				சித்தமெனும் பெளவத் திரைக்கடலில் வாழ்துரும்பாய்
				நித்தமலை யாதருளில் நிற்குநாள் எந்நாளோ. 10.
				
				வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டோடச்
				சுத்தபர போகத்தைத் துய்க்குநாள் எந்நாளோ. 11.
				
				சுத்தவித்தை யேமுதலாத் தோன்றுமோர் ஐந்துவகைத்
				தத்துவத்தை நீங்கிஅருள் சாருநாள் எந்நாளோ. 12.
				
				பொல்லாத காமப் புலைத்தொழிலில் என்னறிவு
				செல்லாமல் நன்னெறியிற் சேருநாள் எந்நாளோ. 13.
				
				அடிகளடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணங்
				குடிகெடுக்கும் பாழ்மடிமைக் கூறொழிவ தெந்நாளோ. 14.
				
				ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்றுளவும்
				போனவழி யுங்கூடப் புல்முளைப்ப தெந்நாளோ. 15.
				
				அந்தகனுக் கெங்கும்இரு ளானவா றாஅறிவில்
				வந்தஇருள் வேலை வடியுநாள் எந்நாளோ. 16.
				
				புன்மலத்தைச் சேர்ந்துமல போதம் பொருந்துதல்போய்
				நின்மலத்தைச் சேர்ந்துமல நீங்குநாள் எந்நாளோ. 17.
				
				கண்டுகண்டுந் தேறாக் கலக்கமெல்லாந் தீர்வண்ணம்
				பண்டைவினை வேரைப் பறிக்குநாள் எந்நாளோ. 18.
				
				பைங்கூழ் வினைதான் படுசாவி யாகஎமக்
				கெங்கோன் கிரணவெயில் எய்துநாள் எந்நாளோ. 19.
				
				குறித்தவித மாதியாற் கூடும்வினை எல்லாம்
				வறுத்தவித்தாம் வண்ணம்அருள் வந்திடுநாள் எந்நாளோ. 20.
				
				சஞ்சிதமே யாதி சரக்கான முச்சேறும்
				வெந்தபொரி யாகஅருள் மேவுநாள் எந்நாளோ. 21.
				
				தேகமுதல் நான்காத் திரண்டொன்றாய் நின்றிலகும்
				மோகமிகு மாயை முடியுநாள் எந்நாளோ. 22.
				
				சத்த முதலாத் தழைத்திங் கெமக்குணர்த்துஞ்
				சுத்தமா மாயை தொடக்கறுவ தெந்நாளோ. 23.
				
				எம்மை வினையை இறையைஎம்பாற் காட்டாத
				அம்மை திரோதை அகலுநாள் எந்நாளோ. 24.
				
				நித்திரையாய் வந்து நினைவழிக்குங் கேவலமாஞ்
				சத்துருவை வெல்லுஞ் சமர்த்தறிவ எந்நாளோ. 25.
				
				சன்னல்பின்ன லான சகலமெனும் குப்பையிடை
				முன்னவன்ஞா னக்கனலை மூட்டுநாள் எந்நாளோ. 26.
				
				மாயா விகார மலமொழிசுத் தாவத்தை
				தோயா அருளைத் தொடருநாள் எந்நாளோ. 27.
				
				7. தன் உண்மை
				
				உடம்பறியும் என்னும்அந்த ஊழலெல்லாந் தீரத்
				திடம்பெறவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 1.
				
				செம்மையறி வாலறிந்து தேகாதிக் குள்ளிசைந்த
				எம்மைப் புலப்படவே யாமறிவ தெந்நாளோ. 2.
				
				தத்துவமாம் பாழ்த்த சடவுருவைத் தான்சுமந்த
				சித்துருவாம் எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 3.
				
				பஞ்சப் பொறியைஉயி ரென்னும் அந்தப் பஞ்சமறச்
				செஞ்செவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 4.
				
				அந்தக் கரணமுயி ராமென்ற அந்தரங்க
				சிந்தைக் கணத்தில்எம்மைத் தேர்ந்தறிவ தெந்நாளோ. 5.
				
				முக்குணத்தைச் சீவனென்னும் மூடத்தை விட்டருளால்
				அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ. 6.
				
				காலைஉயிர் என்னுங் கலாதிகள்சொற் கேளாமல்
				சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வ தெந்நாளோ. 7.
				
				வான்கெடுத்துத் தேடும் மதிகேடர் போலஎமை
				நான்கெடுத்துத் தேடாமல் நன்கறிவ தெந்நாளோ. 8.
				
				8. அருளியல்பு
				
				ஈனந் தருநா அதுநமக்கு வேண்டாவென்
				றானந்த நாட்டில் அவதரிப்ப தெந்நாளோ. 1.
				
				பொய்க்காட்சி யான புவனத்தை விட்டருளாம்
				மெய்க்காட்சி யாம்புவனம் மேவுநாள் தெந்நாளோ. 2.
				
				ஆதியந்தங் காட்டாமல் அம்பரம்போ லேநிறைந்த
				தீதில் அருட்கடலைச் சேருநாள் எந்நாளோ. 3.
				
				எட்டுத் திசைக்கீழ்மேல் எங்கும் பெருகிவரும்
				வெட்டவெளி விண்ணாற்றின் மெய்தோய்வ தெந்நாளோ. 4.
				
				சூதான மென்று சுருதிஎல்லாம் ஓலமிடும்
				மீதான மானவெற்பை மேவுநாள் எந்நாளோ. 5.
				
				வெந்துவெடிக் கின்றசிந்தை வெப்பகலத் தண்ணருளாய்
				வந்துபொழி கின்ற மழைகாண்ப தெந்நாளோ. 6.
				
				சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயஞ்சோதிப்
				பூரணதே யத்திற் பொருந்துநாள் எந்நாளோ. 7.
				
				கன்றுமன வெப்பக் கலக்கமெலாந் தீரஅருள்
				தென்றல்வந்து வீசுவெளி சேருநாள் எந்நாளோ. 8.
				
				கட்டுநமன் செங்கோல் கடாவடிக்குங் கோலாக
				வெட்ட வெளிப்பொருளை மேவுநாள் எந்நாளோ. 9.
				
				சாலக் கபாடத் தடைதீர எம்பெருமான்
				ஓலக்க மண்டபத்துள் ஓடுநாள் எந்நாளோ. 10.
				
				விண்ணவன்தா ளென்னும் விரிநிலா மண்டபத்தில்
				தண்ணீர் அருந்தித் தளர்வொழிவ தெந்நாளோ. 11.
				
				வெய்யபுவி பார்த்து விழித்திருந்த அல்லலறத்
				துய்ய அருளில துயிலுநாள் எந்நாளோ. 12.
				
				வெய்ய பிறவிவெயில் வெப்பமெல்லாம் விட்டகல
				ஐயனடி நீழல் அணையுநாள் எந்நாளோ. 13.
				
				வாதைப் பிறவி வளைகடலை நீந்தஐயன்
				பாதப் புணைஇணையைப் பற்றுநாள் எந்நாளோ. 14.
				
				ஈனமில்லா மெய்பொருளை இம்மையிலே காணவெளி
				ஞானமெனும் அஞ்சனத்தை நான்பெறுவ தெந்நாளோ. 15.
				
				எல்லாம் இறந்தவிடத் தெந்தைநிறை வாம்வடிவைப்
				புல்லாமற் புல்லிப் புணருநாள் எந்நாளோ. 16.
				
				சடத்துளுயிர் போலெமக்குத் தானுயிராய் ஞானம்
				நடத்துமுறை கண்டுபணி நாம்விடுவ தெந்நாளோ. 17.
				
				எக்கணுமாந் துன்ப இருட்கடலை விட்டருளால்
				மிக்ககரை ஏறி வெளிப்படுவ தெந்நாளோ. 18.
				
				9. பொருளியல்பு
				
				கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போல் மெய்ஞ்ஞான
				மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்ப தெந்நாளோ. 1.
				
				கேடில்பசு பாசமெல்லாங் கீழ்ப்படவுந் தானேமேல்
				ஆடுஞ் சுகப்பொருளுக் கன்புறுவ தெந்நாளோ. 2.
				
				ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐவகையாக்
				காணவத்தைக் கப்பாலைக் காணுநாள் எந்நாளோ. 3.
				
				நீக்கப் பிரியா நினைக்கமறக் கக்கூடாப்
				போக்குவர வற்ற பொருளணைவ தெந்நாளோ. 4.
				
				அண்டருக்கும் எய்ப்பில்வைப்பாம் ஆரமுதை என்அகத்தில்
				கண்டுகொண்டு நின்று களிக்கும்நாள் எந்நாளோ. 5.
				
				காட்டுந் திருவருளே கண்ணாகக் கண்டுபர
				வீட்டின்ப மெய்ப்பொருளை மேவுநாள் எந்நாளோ. 6.
				
				நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்
				தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ. 7.
				
				சிந்தை மறந்து திருவருளாய் நிற்பவர்பால்
				வந்தபொருள் எம்மையுந்தான் வாழ்விப்ப தெந்நாளோ. 8.
				
				எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் வியாபகமாய்
				உள்ளஒன்றை உள்ளபடி ஓருநாள் எந்நாளோ. 9.
				
				அருவுருவம் எல்லாம் அகன்றதுவா யான
				பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ. 10.
				
				ஆரணமுங் காணா அகண்டிதா காரபரி
				பூரணம்வந் தெம்மைப் பொருந்துநாள் எந்நாளோ. 11.
				
				சத்தொடுசித் தாகித் தயங்கியஆ னந்தபரி
				சுத்த அகண்டசிவந் தோன்றுநாள் எந்நாளோ. 12.
				
				எங்கெங்கும் பார்த்தாலும் இன்புருவாய் நீக்கமின்றித்
				தங்குந் தனிப்பொருளைச் சாருநாள் எந்நாளோ. 13.
				
				அடிமுடிகாட் டாதசுத்த அம்பரமாஞ் சோதிக்
				கடுவெளிவந் தென்னைக் கலக்குநாள் எந்நாளோ. 14.
				
				ஒன்றனையுங் காட்டா உளத்திருளைச் சூறையிட்டு
				நின்றபரஞ் சோதியுடன் நிற்குநாள் எந்நாளோ. 15.
				
				எந்தச் சமயம் இசைந்தும்அறி வூடறிவாய்
				வந்தபொரு ளேபொருளா வாஞ்சிப்ப தெந்நாளோ. 16.
				
				எவ்வாறிங் குற்றுணர்ந்தார் யாவர் அவர்தமக்கே
				அவ்வாறாய் நின்றபொருட் கன்புவைப்ப தெந்நாளோ. 17.
				
				பெண்ணாண் அலியெனவும் பேசாமல் என்அறிவின்
				கண்ணூடே நின்றஒன்றைக் காணுநாள் எந்நாளோ. 18.
				
				நினைப்பும் மறப்பும்அற நின்றபரஞ் சோதி
				தனைப்புலமா என்னறிவிற் சந்திப்ப தெந்நாளோ. 19.
				
				10. ஆனந்த இயல்பு
				
				பேச்சுமூச் சில்லாத பேரின்ப வெள்ளமுற்று
				நீச்சுநிலை காணாமல் நிற்குநாள் எந்நாளோ. 1.
				
				சித்தந் தெளிந்தோர் தெளிவில் தெளிவான
				சுத்த சுகக்கடலுள் தோயுநாள் எந்நாளோ. 2.
				
				சிற்றின்பம் உண்டூழ் சிதையஅனந் தங்கடல்போல்
				முற்றின்ப வெள்ளம்எமை மூடுநாள் எந்நாளோ. 3.
				
				எல்லையில்பே ரின்பமயம் எப்படிஎன் றோர்தமக்குச்
				சொல்லறியா ஊமர்கள்போற் சொல்லுநாள் எந்நாளோ. 4.
				
				அண்டரண்ட கோடி அனைத்தும் உகாந்தவெள்ளங்
				கொண்டதெனப் பேரின்பங் கூடுநாள் எந்நாளோ. 5.
				
				ஆதியந்த மில்லாத ஆதிஅ நாதிஎனுஞ்
				சோதிஇன்பத் தூடே துளையுநாள் எந்நாளோ. 6.
				
				சாலோக மாதி சவுக்கியமும் விட்டநம்பால்
				மேலான ஞானஇன்பம் மேவ்ய்நாள் எந்நாளோ. 7.
				
				தற்பரத்தி னுள்ளேயுஞ் சாலோக மாதியெனும்
				பொற்பறிந்தா னந்தம் பொருந்துநாள் எந்நாளோ. 8.
				
				உள்ளத்தி னுள்ளே தான் ஊறுஞ் சிவானந்த
				வெள்ளந் துளைந்து விடாய்தீர்வ தெந்நாளோ. 9.
				
				கன்னலுடன் முக்கனியுங் கற்கண்டுஞ் சீனியுமாய்
				மன்னும்இன்ப ஆரமுதை வாய்மடுப்ப தெந்நாளோ. 10.
				
				மண்ணூ டுழன்ற மயக்கமெல்லாந் தீர்ந்திடவும்
				விண்ணூ டெழுந்தசுகம் மேவுநாள் எந்நாளோ. 11.
				
				கானற் சலம்போன்ற கட்டுழலைப் பொய்தீர
				வானமுத வாவி மருவுநாள் எந்நாளோ. 12.
				
				தீங்கரும்பென் றால்இனியா தின்றால் இனிப்பனபோல்
				பாங்குறும்பே ரின்பம் படைக்குநாள் எந்நாளோ. 13.
				
				புண்ணியபா வங்கள் பொருந்தாமெய் யன்பரெல்லாம்
				நண்ணியபே ரின்பசுகம் நானணைவ தெந்நாளோ. 14.
				
				11. அன்புநிலை
				
				தக்கரவி கண்ட சரோருகம்போல் என்னிதயம்
				மிக்கஅருள் கண்டு விகசிப்ப தெந்நாளோ. 1.
				
				வானமுகில் கண்ட மயூரபட்சி போலஐயன்
				ஞானநடங் கண்டு நடிக்குநாள் எந்நாளோ. 2.
				
				சந்திரனை நாடுஞ் சகோரபட்சி போல்அறிவில்
				வந்தபரஞ் சோதியையான் வாஞ்சிப்ப தெந்நாளோ. 3.
				
				சூத்திரமெய்ப் புற்றகத்துக் குண்டலிப்பாம் பொன்றாட்டுஞ்
				சித்தனைஎன் கண்ணால் தரிசிப்ப தெந்நாளோ. 4.
				
				அந்தரத்தே நின்றாடும் ஆனந்தக் கூத்தனுக்கென்
				சிந்தை திறைகொடுத்துச் சேவிப்ப தெந்நாளோ. 5.
				
				கள்ளனிவன் என்றுமெள்ளக் கைவிடுதல் காரியமோ
				வள்ளலே என்று வருந்துநாள் எந்நாளோ. 6.
				
				விண்ணாடர் காணா விமலா பரஞ்சோதி
				அண்ணாவா வாவென் றரற்றுநாள் எந்நாளோ. 7.
				
				ஏதேது செய்தாலும் என்பணிபோய் நின்பணியாம்
				மாதேவா என்று வருந்துநாள் எந்நாளோ. 8.
				
				பண்டுங்கா ணேன்நான் பழம்பொருளே இன்றும்உனைக்
				கண்டுங்கா ணேன்எனவுங் கைகுவிப்ப தெந்நாளோ. 9.
				
				பொங்கேத மான புழுக்கமெலாந் தீரஇன்பம்
				எங்கேஎங் கேஎன் றிரங்குநாள் எந்நாளோ. 10.
				
				கடலின்மடை கண்டதுபோற் கண்ணீ ராறாக
				உடல்வெதும்பி மூர்ச்சித் துருகுநாள் எந்நாளோ. 11.
				
				புலர்ந்தேன் முகஞ்சருகாய்ப் போனேன்நிற் காண
				அலந்தேன்என் றேங்கி அழுங்குநாள் எந்நாளோ. 12.
				
				புண்ணீர்மை யாளர் புலம்புமா போற்புலம்பிக்
				கண்ணீருங் கம்பலையுங் காட்டுநாள் எந்நாளோ. 13.
				
				போற்றேனென் றாலும்என்னைப் புந்திசெயும் வேதனைக்கிங்
				காற்றேன்ஆற் றேனென் றரற்றுநாள் எந்நாளோ. 14.
				
				பொய்ம்முடங்கும் பூமிசில போட்டலறப் பூங்கமலன்
				கைம்முடங்க நான்சனனக் கட்டறுவ தெந்நாளோ. 15.
				
				கற்குணத்தைப் போன்றவஞ்சக் காரர்கள்கை கோவாமல்
				நற்குணத்தார் கைகோத்து நான்திரிவ தெந்நாளோ. 16.
				
				துட்டனைமா மாயைச் சுழல்நீக்கி அந்தரமே
				விட்டனையோ என்று வியக்குநாள் எந்நாளோ. 17.
				
				12. அன்பர் நெறி
				
				அத்துவா எல்லாம் அடங்கச்சோ தித்தபடிச்
				சித்துருவாய் நின்றார் தெளிவறிவ தெந்நாளோ. 1.
				
				மூச்சற்றுச் சிந்தை முயற்சியற்று மூதறிவாய்ப்
				பேச்சற்றோர் பெற்றஒன்றைப் பெற்றிடுநாள் எந்நாளோ. 2.
				
				கோட்டாலை யான குணமிறந்த நிர்க்குணத்தோர்
				தேட்டாலே தேடுபொருள் சேருநாள் தெந்நாளோ. 3.
				
				கெடுத்தே பசுத்துவத்தைக் கேடிலா ஆனந்தம்
				அடுத்தோ ரடுத்தபொருட் கார்வம்வைப்ப தெந்நாளோ. 4.
				
				கற்கண்டால் ஓடுகின்ற காக்கைபோல் பொய்ம்மாயச்
				சொற்கண்டால் ஓடும்அன்பர் தோய்வறிவ தெந்நாளோ. 5.
				
				மெய்த்தகுலங் கல்விபுனை வேடமெலாம் ஓடவிட்ட
				சித்தரொன்றுஞ் சேராச் செயலறிவ தெந்நாளோ. 6.
				
				குற்றச் சமயக் குறும்படர்ந்து தற்போதம்
				அற்றவர்கட் கற்றபொருட் கன்புவைப்ப தெந்நாளோ. 7.
				
				தர்க்கமிட்டுப் பாழாஞ் சமயக் குதர்க்கம்விட்டு
				நிற்குமவர் கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ. 8.
				
				வீறியவே தாந்தமுதல் மிக்க கலாந்தம்வரை
				ஆறுமுணர்ந் தோருணர்வுக் கன்புவைப்ப தெந்நாளோ. 9.
				
				கண்டஇட மெல்லாங் கடவுள்மயம் என்றறிந்து
				கொண்டநெஞ்சர் நேயநெஞ்சிற் கொண்டிருப்ப தெந்நாளோ. 10.
				
				பாக்கியங்க ளெல்லாம் பழுத்து மனம்பழுத்தோர்
				நோக்குந் திருக்கூத்தை நோக்குநாள் எந்நாளோ. 11.
				
				எவ்வுயிருந் தன்னுயிர்போல் எண்ணுந் தபோதனர்கள்
				செவ்வறிவை நாடிமிகச் சிந்தைவைப்ப தெந்நாளோ. 12.
				
				13. அறிஞர் உரை
				
				இருநிலனாய்த் தீயாகி என்றதிருப் பாட்டின்
				பெருநிலையைக் கண்டணைந்து பேச்சறுவ தெந்நாளோ. 1.
				
				அற்றவர்கட் கற்றசிவன் ஆமென்ற அத்துவித
				முற்றுமொழி கண்டருளில் மூழ்குநாள் எந்நாளோ. 2.
				
				தானென்னை முன்படைத்தான் என்ற தகவுரையை
				நானென்னா உண்மைபெற்று நாமுணர்வ தெந்நாளோ. 3.
				
				என்னுடைய தோழனுமாய் என்ற திருப்பாட்டின்
				நன்னெறியைக் கண்டுரிமை நாஞ்செய்வ தெந்நாளோ. 4.
				
				ஆருடனே சேரும் அறிவென்ற அவ்வுரையைத்
				தேரும் படிக்கருள்தான் சேருநாள் எந்நாளோ. 5.
				
				உன்னில்உன்னும் என்ற உறுமொழியால் என்னிதயந்
				தன்னில்உன்னி நன்னெறியைச் சாருநாள் எந்நாளோ. 6.
				
				நினைப்பறவே தான்நினைந்தேன் என்றநிலை நாடி
				அனைத்துமாம் அப்பொருளில் ஆழுநாள் எந்நாளோ. 7.
				
				சென்றுசென் றேயணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாகி
				நின்றுவிடும் என்றநெறி நிற்குநாள் எந்நாளோ. 8.
				
				ஆதியந்த மில்லா அரியபரஞ் சோதிஎன்ற
				நீதிமொழி கண்டதுவாய் நிற்குநாள் எந்நாளோ. 9.
				
				பிறிதொன்றி லாசையின்றிப் பெற்றிருந்தேன் என்ற 
				நெறியுடையான் சொல்லில்நிலை நிற்குநாள் எந்நாளோ. 10.
				
				திரையற்ற நீர்போல் தெளியஎனத் தேர்ந்த
				உரைபற்றி உற்றங்கு ஒடுங்குநாள் எந்நாளோ. 11.
				
				அறியா அறிவில் அவிழ்ந்தேற என்ற
				நெறியாம் உரையுணர்ந்து நிற்குநாள் எந்நாளோ. 12.
				
				எனக்குள்நீ என்றும் இயற்கையாப் பின்னும்
				உனக்குள்நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ. 13.
				
				அறிவை அறிவதுவே யாகும் பொருளென்று
				உறுதிசொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ. 14.
				
				14. நிற்குநிலை
				
				பண்ணின் இசைபோலப் பரமன்பால் நின்றதிறன்
				எண்ணி அருளாகி இருக்குநாள் எந்நாளோ. 1.
				
				அறிவோ டறியாமை அற்றறிவி னூடே
				குறியி லறிவுவந்து கூடுநாள் எந்நாளோ. 2.
				
				சொல்லால் மனத்தால் தொடராச்சம் பூரணத்தில்
				நில்லா நிலையாய் நிலைநிற்ப தெந்நாளோ. 3.
				
				செங்கதிரின் முன்மதியந் தேசடங்கி நின்றிடல்போல்
				அங்கணனார் தாளில் அடங்குநாள் எந்நாளோ. 4.
				
				வானூ டடங்கும் வளிபோல இன்புருவாங்
				கோனூ டடங்குங் குறிப்பறிவ தெந்நாளோ. 5.
				
				செப்பரிய தண்கருணைச் சிற்சுகனார் பூரணத்தில்
				அப்பினிடை உப்பாய் அணையுநாள் எந்நாளோ. 6.
				
				தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
				தீயில் இரும்பென்னத் திகழுநாள் எந்நாளோ. 7.
				
				தீதணையாக் கர்ப்பூர தீபமென நான்கண்ட
				சோதியுட னொன்றித் துரிசறுவ தெந்நாளோ. 8.
				
				ஆராருங் காணாத அற்புதனார் பொற்படிக்கீழ்
				நீரார் நிழல்போல் நிலாவுநாள் எந்நாளோ. 9.
				
				எட்டத் தொலையாத எந்தைபிரான் சந்நிதியில்
				பட்டப் பகல்விளக்காய்ப் பண்புறுவ் தெந்நாளோ. 10.
				
				கருப்புவட்டா வாய்மடுத்துக் கண்டார்நாப் போல்
				விருப்புவட்டா இன்புருவை மேவுநாள் எந்நாளோ. 11.
				
				துச்சப் புலனால் சுழலாமல் தண்ணருளால்
				உச்சிக் கதிர்ப்படிகம் ஒவ்வுநாள் எந்நாளோ. 12.
				
				இம்மா நிலத்தில் இருந்தபடி யேயிருந்து
				சும்மா அருளைத் தொடருநாள் எந்நாளோ. 13.
				
				தானவனாந் தன்மைஎய்தித் தண்டமென அண்டமெங்கும்
				ஞான மதயானை நடத்துநாள் எந்நாளோ. 14.
				
				ஒன்றிரண்டு மில்லதுவாய் ஒன்றிரண்டு முள்ளதுவாய்
				நின்ற சமத்துநிலை நோபெறுவ தெந்நாளோ. 15.
				
				பாசம் அகலாமல் பதியில் கலவாமல்
				மாசில் சமத்துமுத்தி வாய்க்குநாள் எந்நாளோ. 16.
				
				சிற்றறிவு மெள்ளச் சிதைந்தெம்மான் பேரறிவை
				உற்றறியா வண்ணமறிந் தோங்குநாள் எந்நாளோ. 17.
				
				தந்திரத்தை மந்திரத்தைச் சாரின்நவை யாம் அறிவென்
				றெந்தையுணர் வேவடிவாய் எய்துநாள் எந்நாளோ. 18.
				
				போக்குவர வற்றவெளி போல்நிறைந்த போதநிலை
				நீக்கமறக் கூடி நினைப்பறுவ தெந்நாளோ. 19.
				
				காண்பானுங் காட்டுவதுங் காட்சியுமாய் நின்றஅந்த
				வீண்பாவம் போய்அதுவாய் மேவுநாள் எந்நாளோ. 20.
				
				வாடாதே நானாவாய் மாயாதே எங்கோவை
				நாடாதே நாடி நலம்பெறுவ தெந்நாளோ. 21.
				
				ஆடலையே காட்டிஎன தாடலொழித் தாண்டான்பொன்
				தாள்தலைமேல் சூடித் தழைக்குநாள் எந்நாளோ. 22.
				
				மேலொடுகீ ழில்லாத வித்தகனார் தம்முடனே
				பாலொடுநீர் போற்கலந்து பண்புறுவ தெந்நாளோ. 23.
				
				அறியா தறிந்தெமையாள் அண்ணலை நாமாகக்
				குறியாத வண்ணங் குறிக்குநாள் எந்நாளோ. 24.
				
				ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம்பரனைப்
				பாராமற் பார்த்துப் பழகுநாள் எந்நாளோ. 25.
				
				ஊன்பற்றும் என்னோ டுறவுபற்றும் பூரணன்பால்
				வான்பற்றுங் கண்போல் மருவுநாள் எந்நாளோ. 26.
				
				ஆண்டான் மவுனி அளித்தஅறி வாலறிவைத்
				தூண்டாமல் தூண்டித் துலங்குநாள் எந்நாளோ. 27.
				
				ஆணவத்தொ டத்துவித மானபடி மெஞ்ஞானத்
				தாணுவினோ டத்துவிதஞ் சாருநாள் எந்நாளோ. 28.
				
				15. நிலைபிரிந்தோர் கூடுதற் குபாயம்
				
				கன்மநெறி தப்பிற் கடுநரகென் றெந்நாளும்
				நன்மைதரு ஞானநெறி நானணைவ தெந்நாளோ. 1.
				
				ஞானநெறி தானே நழுவிடினும் முப்பதத்துள்
				ஆனமுத்தி நல்குமென அன்புறுவ தெந்நாளோ. 2.
				
				பன்மார்க்க மான பலஅடிபட் டேனுமொரு
				சொன்மார்க்கங் கண்டு துலங்குநாள் எந்நாளோ. 3.
				
				அத்துவுத மென்ற அந்நியச்சொற் கண்டுணர்ந்து
				சுத்த சிவத்தைத் தொடருநாள் எந்நாளோ. 4.
				
				கேட்டல்முதல் நான்காலே கேடிலா நாற்பதமும்
				வாட்டமற எனக்கு வாய்க்குநாள் எந்நாளோ. 5.
				
				என்னதுயான் என்பதற எவ்விடமும் என்னாசான்
				சந்நிதியாக் கண்டுநிட்டை சாதிப்ப தெந்நாளோ. 6.
				
				நாம்பிரம மென்றால் நடுவேயொன் றுண்டாமால்
				தேம்பிஎல்லா மொன்றாய்த் திகழுநாள் எந்நாளோ. 7.
				
				முச்சகமே யாதி முழுதுமகண் டாகார
				சச்சிதா னந்தசிவந் தானென்ப தெந்நாளோ. 8.
				
				எவ்வடிவும் பூரணமாம் எந்தையுரு வென்றிசைந்த
				அவ்வடிவுக் குள்ளே அடங்குநாள் எந்நாளோ. 9.
				
				சிந்தித்த தெல்லாஞ் சிவபூ ரணமாக
				வந்தித்து வாழ்த்தி வணங்குநாள் எந்நாளோ. 10.
				
				தாங்கியபார் விண்ணாதி தானேஞா னாக்கினியாய்
				ஓங்குமி யோகவுணர் வுற்றிடுநாள் எந்நாளோ. 11.
				
				ஆசனமூர்த் தங்க ளறஅகண்டா காரசிவ
				பூசைசெய ஆசை பொருந்துநாள் எந்நாளோ. 12.
				
				அஞ்செழுத்தின் உண்மை அதுவான அப்பொருளை
				நெஞ்சழுத்தி ஒன்றாகி நிற்குநாள் எந்நாளோ. 13.
				
				அவ்வுயிர்போல் எவ்வுயிரும் ஆனபிரான் தன்னடிமை
				எவ்வுயிரு மென்றுபணி யாஞ்செய்வ தெந்நாளோ. 14.
				
				தேசிகர்கோ னான திறன்மவுனி நந்தமக்கு
				வாசி கொடுக்க மகிழுநாள் எந்நாளோ. 15.
				
				குருலிங்க சங்கமமாக் கொண்ட திருமேனி
				அருள்மயமென் றன்புற் றருள்பெறுவ தெந்நாளோ. 16.
				
				46. காண்பேனோ என்கண்ணி
				
				சிந்திக்குந் தோறுந் தெவிட்டா அமுதேஎன்
				புந்திக்குள் நீதான் பொருந்திடவுங் காண்பேனோ. 1.
				
				கேவலத்தில் நான்கிடந்து கீழ்ப்படா தின்பஅருள்
				காவலன்பால் ஒன்றிக் கலந்திடவுங் காண்பேனோ. 2.
				
				துரியங் கடந்தஒன்றே தூவெளியாய் நின்ற
				பெரியநிறை வேஉனைநான் பெற்றிடவுங் காண்பேனோ. 3.
				
				மாசற்ற அன்பர்நெஞ்சே மாறாத பெட்டகமாத்
				தேசுற்ற மாமணிநின் தேசினையுங் காண்பேனோ. 4.
				
				மாயா விகார மலமகல எந்தைபிரான்
				நேயானு பூதி நிலைபெறவுங் காண்பேனோ. 5.
				
				பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும் பொய்யெனவே
				மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே காண்பேனோ. 6.
				
				வாலற்ற பட்டமென மாயா மனப்படலங்
				காலற்று வீழவும்முக் கண்ணுடையாய் காண்பேனோ. 7.
				
				உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்றுசுகங்
				கொள்ளும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ. 8.
				
				காட்டுகின்ற முக்கட் கரும்பே கனியேஎன்
				ஆட்டமெல்லாந் தீரஉன தாடலையுங் காண்பேனோ. 9.
				
				தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின்நிறைவில்
				நீங்காமல் நிற்கும் நிலைபெறவுங் காண்பேனோ. 10.
				
				வாதவூ ராளிதனை வான்கருணை யால்விழுங்கும்
				போதவூ ரேறேநின் பொன்னடியுங் காண்பேனோ. 11.
				
				சாட்டைஇலாப் பம்பரம்போல் ஆடுஞ் சடசால
				நாட்டமற எந்தைசுத்த ஞானவெளி காண்பேனோ. 12.
				
				மன்றாடும் வாழ்வே மரகதஞ்சேர் மாணிக்கக்
				குன்றேநின் தாட்கீழ்க் குடிபெறவுங் காண்பேனோ. 13.
				
				பொய்யென் றறிந்தும்எமைப் போகவொட்டா தையஇந்த
				வையங் கனமயக்க மாற்றிடவுங் காண்பேனோ. 14.
				
				தாயினும் நல்ல தயாளுவே நின்னை உன்னித்
				தீயின்மெழு கொத்துருகுஞ் சிந்தைவரக் காண்பேனோ. 15.
				
				என்செயினும் என்பெறினும் என்னிறைவா ஏழையன்கான்
				நின்செயலென் றுன்னும் நினைவுவரக் காண்பேனோ. 16.
				
				எள்ளத் தனையும் இரக்கமிலா வன்பாவி
				உள்ளத்தும் எந்தை உலவிடவுங் காண்பேனோ. 17.
				
				வஞ்சகத்துக் காலயமாம் வல்வினையேன் ஆகெடுவேன்
				நெஞ்சகத்தில் ஐயாநீ நேர்பெறவுங் காண்பேனோ. 18.
				
				தொல்லைப் பிறவித் துயர்கெடவும் எந்தைபிரான்
				மல்லற் கருணை வழங்கிடவுங் காண்பேனோ. 19.
				
				வாளாருங் கண்ணார் மயற்கடலில் ஆழ்ந்தேன்சற்
				றாளாக எந்தை அருள்செயவுங் காண்பேனோ. 20.
				
				பஞ்சாய்ப் பறக்குநெஞ்சப் பாவியைநீ கூவிஐயா
				அஞ்சாதே என்றின் னருள் செயவுங் காண்பேனோ. 21.
				
				ஆடுகறங் காகி அலமந் துழன்றுமனம்
				வாடுமெனை ஐயாநீ வாவெனவுங் காண்பேனோ. 22.
				
				சிட்டர்க் கெளிய சிவனேயோ தீவினையேன்
				மட்டற்ற ஆச்சை மயக்கறவுங் காண்பேனோ. 23.
				
				உள்நின் றுணர்த்தும் உலப்பிலா ஒன்றேநின்
				தண்ணென்ற சாந்தஅருள் சார்ந்திடவுங் காண்பேனோ. 24.
				
				ஓடுங் கருத்தொடுங்க உள்ளுணர்வு தோன்றநினைக்
				கூடும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ. 25.
				
				வாக்கால் மனத்தால் மதிப்பரியாய் நின்னருளை
				நோக்காமல் நோக்கிநிற்கும் நுண்ணறிவு காண்பேனோ. 26.
				
				இவ்வுடம்பு நீங்குமுனே எந்தாய்கேள் இன்னருளாம்
				அவ்வுடம்புக் குள்ளே அவதரிக்கக் காண்பேனோ. 27.
				
				நித்தமாய் ஒன்றாய் நிரஞ்சனமாய் நிர்க்குணமாஞ்
				சுத்தவெளி நீவெளியாய்த் தோன்றிடவுங் காண்பேனோ. 28.
				
				கண்ணிறைந்த மோனக் கருத்தேஎன் கண்ணேஎன்
				உள்நிறைந்த மாயை ஒழிந்திடவுங் காண்பேனோ. 29.
				
				அத்தா விமலா அருளாளா ஆனந்த
				சித்தா எனக்குன்அருள் செய்திடவுங் காண்பேனோ. 30.
				
				வீணே பிறந்திருந்து வேசற்றேன் ஆசையறக்
				காணேன் இறைநின் கருணைபெறக் காண்பேனோ. 31.
				
				சட்டையொத்த இவ்வுடலைத் தள்ளுமுன்னே நான்சகச
				நிட்டையைப்பெற் றையா நிருவிகற்பங் காண்பேனோ. 32.
				
				எல்லாந் தெரியும் இறைவாஎன் அல்லலெலாஞ்
				சொல்லாமுன் நீதான் தொகுத்திரங்கக் காண்பேனோ. 33.
				
				அண்டபகி ரண்டம் அனைத்து மொருபடித்தாக்
				கண்டவர்கள் கண்டதிருக் காட்சியையுங் காண்பேனோ. 34.
				
				ஊனிருந்த காயம் உடனிருப்ப எந்தைநின்பால்
				வானிருந்த தென்னவுநான் வந்திருக்கக் காண்பேனோ. 35.
				
				தினையத் தனையுந் தெளிவறியாப் பாவியேன்
				நினைவிற் பரம்பொருள்நீ நேர்பெறவுங் காண்பேனோ. 36.
				
				துன்பமெனுந் திட்டனைத்துஞ் சூறையிட ஐயாவே
				இன்பவெள்ளம் வந்திங் கெதிர்ப்படவுங் காண்பேனோ. 37.
				
				47. ஆகாதோ என்கண்ணி
				
				கல்லாத நெஞ்சங் கரைந்துருக எத்தொழிற்கும்
				வல்லாய்நின் இன்பம் வழங்கினால் ஆகாதோ. 1.
				
				என்னை அறிய எனக்கறிவாய் நின்றருள்நின்
				தன்னைஅறிந் தின்பநலஞ் சாரவைத்தால் ஆகாதோ. 2.
				
				பொய்ம்மயமே யான புரைதீர எந்தைஇன்ப
				மெய்ம்மயம்வந் தென்னை விழுங்கவைத்தால் ஆகாதோ. 3.
				
				மட்டில்லாச் சிற்சுகமாம் வாழ்வேநின் இன்பமயஞ்
				சிட்டர்போல் யானருந்தித் தேக்கவைத்தால் ஆகாதோ. 4.
				
				அத்தாநின் பொற்றா ளடிக்கே அனுதினமும்
				பித்தாகி இன்பம் பெருகவைத்தால் ஆகாதோ. 5.
				
				மெல்லியலார் மோக விழற்கிறைப்பேன் ஐயாநின்
				எல்லையில்ஆ னந்தநலம் இச்சித்தால் ஆகாதோ. 6.
				
				சுட்டழகா யெண்ணுமனஞ் சூறையிட்டா னந்தமயக்
				கட்டழகா நின்னைக் கலக்கவைத்தால் ஆகாதோ. 7.
				
				சோதியே நந்தாச் சுகவடிவே தூவெளியே
				ஆதியே என்னை அறியவைத்தால் ஆகாதோ. 8.
				
				நேசஞ் சிறிதுமிலேன் நின்மலனே நின்னடிக்கே
				வாசஞ் செயஇரங்கி வாவென்றால் ஆகாதோ. 9.
				
				என்னறிவுக் குள்ளே இருந்ததுபோல் ஐயாவே
				நின்னறிவுள் நின்னுடன்யான் நிற்கவைத்தால் ஆகாதோ. 10.
				
				ஆதிப் பிரானேஎன் அல்லல் இருளகலச்
				சோதிப்ர காசமயந் தோற்றுவித்தால் ஆகாதோ. 11.
				
				ஆசைச் சுழற்கடலில் ஆழாமல் ஐயாநின்
				நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. 12.
				
				பாசநிக ளங்களெல்லாம் பஞ்சாகச் செஞ்செவே
				ஈசஎனை வாவென் றிரங்கினால் ஆகாதோ. 13.
				
				ஓயாவுள் ளன்பாய் உருகிவாய் விட்டரற்றிச்
				சேயாகி எந்தைநின்னைச் சேரவைத்தால் ஆகாதோ. 14.
				
				ஆதியாம் வாழ்வாய் அகண்டிதமாய் நின்றபரஞ்
				சோதிநீ என்னைத் தொழும்பனென்றால் ஆகாதோ. 15.
				
				விண்ணாரக் கண்ட விழிபோற் பரஞ்சோதி
				கண்ணார நின்நிறைவைக் காணவைத்தால் ஆகாதோ. 16.
				
				சேராமற் சேர்ந்துநின்று சின்மயனே நின்மயத்தைப்
				பாராமற் பாரெனநீ பட்சம்வைத்தால் ஆகாதோ. 17.
				
				கண்ணாடி போலஎல்லாங் காட்டுந் திருவருளை
				உள்நாடி ஐயா உருகவைத்தால் ஆகாதோ. 18.
				
				மூலஇருள் கால்வாங்க மூதறிவு தோன்ற அருட்
				கோலம்வெளி யாகஎந்தை கூடுவித்தால் ஆகாதோ. 19.
				
				சாற்றரிய இன்பவெள்ளந் தாக்குமதில் நீமுளைக்கில்
				ஊற்றமுறு மென்னஅதில் உண்மைசொன்னால் ஆகாதோ. 20.
				
				கையுங் குவித்திரண்டு கண்ணருவி பெய்யஅருள்
				ஐயநின்தாள் கீழே அடிமைநின்றால் ஆகாதோ. 21.
				
				48. இல்லையோ என்கண்ணி
				
				ஏதுந் தெரியா தெனைமறைத்த வல்லிருளை
				நாதநீ நீக்கஒரு ஞானவிளக் கில்லையோ. 1.
				
				பணியற்று நின்று பதைப்பறஎன் கண்ணுள்
				மணியொத்த சோதிஇன்ப வாரிஎனக் கில்லையோ. 2.
				
				எம்மால் அறிவதற எம்பெருமான் யாதுமின்றிச்
				சும்மா இருக்கஒரு சூத்திரந்தான் இல்லையோ. 3.
				
				நாய்க்குங் கடையானேன் நாதாநின் இன்பமயம்
				வாய்க்கும் படிஇனியோர் மந்திரந்தான் இல்லையோ. 4.
				
				ஊனாக நிற்கும் உணர்வைமறந் தையாநீ
				தானாக நிற்கஒரு தந்திரந்தான் இல்லையோ. 5.
				
				அல்லும் பகலும் அகண்டவடி வேஉனைநான்
				புல்லும் படிஎனக்கோர் போதனைதான் இல்லையோ. 6.
				
				49. வேண்டாவோ என்கண்ணி
				
				கண்டவடி வெல்லாநின் காட்சிஎன்றே கைகுவித்துப்
				பண்டுமின்றும் நின்றஎன்னைப் பார்த்திரங்க வேண்டாவோ. 1.
				
				வாதனையோ டாடும் மனப்பாம்பு மாயஒரு
				போதனைதந் தையா புலப்படுத்த வேண்டாவோ. 2.
				
				தன்னை அறியத் தனிஅறிவாய் நின்றருளும்
				நின்னைஅறிந் தென்அறிவை நீங்கிநிற்க வேண்டாவோ. 3.
				
				அள்ளக் குறையா அகண்டிதா னந்தமெனும்
				வெள்ளமெனக் கையா வெளிப்படுத்த வேண்டாவோ. 4.
				
				அண்டனே அண்டர் அமுதேஎன் ஆருயிரே
				தொண்டனேற் கின்பந் தொகுத்திரங்க வேண்டாவோ. 5.
				
				பாராதே நின்று பதையாதே சும்மாதான்
				வாரா யெனவும் வழிகாட்ட வேண்டாவோ. 6.
				
				50. நல்லறிவே என் கண்ணி
				
				எண்ணிறைந்த மேன்மைபடைத் தெவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்க்
				கண்ணிறைந்த சோதியைநாங் காணவா நல்லறிவே. 1. 
				
				சித்தான நாமென் சடத்தைநா மென்னஎன்றுஞ்
				சத்தான உண்மைதனைச் சாரவா நல்லறிவே. 2.
				
				அங்குமிங்கும் எங்குநிறை அற்புதனார் பொற்பறிந்து
				பங்கயத்துள் வண்டாய்ப் பயன்பெறவா நல்லறிவே. 3.
				
				கான்றசோ றென்னஇந்தக் காசினிவாழ் வத்தனையுந்
				தோன்ற அருள்வெளியில் தோன்றவா நல்லறிவே. 4.
				
				51. பலவகைக்கண்ணி
				
				என்னரசே கேட்டிலையோ என்செயலோ ஏதுமிலை
				தன்னரசு நாடாகித் தத்துவங்கூத் தாடியதே. 1.
				
				பண்டொருகால் நின்பாற் பழக்கமுண்டோ எந்தைநினைக்
				கண்டொருகாற் போற்றக் கருத்துங் கருதியதே. 2.
				
				கண்டனவே காணுமன்றிக் காணாவோ காணாஎன்
				கொண்டறிவேன் எந்தைநினைக் கூடுங் குறிப்பினையே. 3.
				
				கல்லா லடியில்வளர் கற்பகமே என்னளவோ
				பொல்லா வினைக்குப் பொருத்தந்தான் சொல்லாயோ. 4.
				
				தப்பிதமொன் றின்றியது தானாக நிற்கஉண்மை
				செப்பியது மல்லால்என் சென்னியது தொட்டனையே. 5. 
				
				மாசான நெஞ்சன்இவன் வஞ்சனென்றோ வாய்திறந்து
				பேசா மவுனம் பெருமான் படைத்ததுவே. 6.
				
				கற்பதெல்லாங் கற்றேம்முக் கண்ணுடையாய் நின்பணியாய்
				நிற்பதுகற் றன்றோ நிருவிகற்ப மாவதுவே. 7.
				
				முன்னளவில் கன்மம் முயன்றான் இவனென்றோ
				என்னளவில் எந்தாய் இரங்கா திருந்ததுவே. 8.
				
				நெஞ்சகம்வே றாகி நினைக்கூட எண்ணுகின்ற
				வஞ்சகனுக் கின்பம்எந்தாய் வாய்க்குமா றெவ்வாறே. 9.
				
				பள்ளங்கள் தோறும் பரந்தபுனல் போல்உலகில்
				உள்ளம் பரந்தால் உடையாய்என் செய்வேனே. 10.
				
				முன்னினைக்கப் பின்மறைக்கும் மூடஇருள் ஆகெடுவேன்
				என்னினைக்க என்மறக்க எந்தை பெருமானே. 11.
				
				வல்லாளா மோனாநின் வான்கருணை என்னிடத்தே
				இல்லாதே போனால்நான் எவ்வண்ணம் உய்வேனே. 12.
				
				வாக்கும் மனமும் மவுனமுற எந்தைநின்னை
				நோக்கும் மவுனமிந்த நூலறிவில் உண்டாமோ. 13.
				
				ஒன்றாய்ப் பலவாய் உலகமெங்குந் தானேயாய்
				நின்றாய் ஐயாஎனைநீ நீங்கற் கெளிதாமோ. 14.
				
				ஆவித் துணையே அருமருந்தே என்றனைநீ
				கூவிஅழைத் தின்பங் கொடுத்தாற் குறைவாமோ. 15.
				
				எத்தனையோ நின்விளையாட் டெந்தாய்கேள் இவ்வளவென்
				றத்தனையும் என்னால் அறியுந் தரமாமோ. 16.
				
				தேடுவார் தேடுஞ் சிவனேயோ நின்திருத்தாள்
				கூடுவான் பட்டதுயர் கூறற் கெளிதாமோ. 17.
				
				பற்றினதைப் பற்றும்எந்தாய் பற்றுவிட்டாற் கேவலத்தில்
				உற்றுவிடும் நெஞ்சம்உனை ஒன்றிநிற்ப தெப்படியோ. 18.
				
				ஒப்பிலா ஒன்றேநின் உண்மையொன்றுங் காட்டாமல்
				பொய்ப்புவியை மெய்போற் புதுக்கிவைத்த தென்னேயோ. 19.
				
				காலால் வழிதடவுங் காலத்தே கண்முளைத்தாற்
				போலே எனதறிவிற் போந்தறிவாய் நில்லாயோ. 20.
				
				தன்னரசு நாடாஞ் சடசால பூமிமிசை
				என்னரசே என்னை இறையாக நாட்டினையோ. 21.
				
				திங்களமு தாநின் திருவாக்கை விட்டரசே
				பொங்கு விடமனைய பொய்ந்நூல் புலம்புவனோ. 22.
				
				உன்னஉன்ன என்னைஎடுத் துள்விழுங்கு நின்நிறைவை
				இன்னமின்னங் காணாமல் எந்தாய் சுழல்வேனோ. 23.
				
				ஆரா அமுதனைய ஆனந்த வாரிஎன்பால்
				தாராமல் ஐயாநீ தள்ளிவிட வந்ததென்னோ. 24. 
				
				52. நின்றநிலை
				
				நின்றநிலை யேநிலையா வைத்தா னந்த
				நிலைதானே நிருவிகற்ப நிலையு மாகி
				என்றுமழி யாதஇன்ப வெள்ளந் தேக்கி
				இருக்கஎனைத் தொடர்ந்துதொடர்ந் திழுக்கு மந்தோ. 
				
				இருக்காதி மறைமுடிவுஞ் சிவாகம மாதி
				இதயமுங்கை காட்டெனவே இதயத் துள்ளே
				ஒருக்காலே யுணர்ந்தவர்கட் கெக்கா லுந்தான்
				ஒழியாத இன்பவெள்ளம் உலவா நிற்கும்.
				
				கற்றதுங்கேட் டதுந்தானே ஏதுக் காகக்
				கடபடமென் றுருட்டுதற்கோ கல்லால் எம்மான்
				குற்றமறக் கைகாட்டுங் கருத்தைக் கண்டு
				குணங்குறியற் றின்பநிட்டை கூட அன்றோ.
				
				53. பாடுகின்ற பனுவல்
				
				பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே
				நாடுகின்ற ஞானமன்றில் ஆடுகின்ற அழகனே. 1.
				
				அத்தனென்ற நின்னையே பத்திசெய்து பனுவலால்
				பித்தனின்று பேசவே வைத்ததென்ன வாரமே. 2.
				
				சிந்தையன்பு சேரவே நைந்துநின்னை நாடினேன்
				வந்துவந்து னின்பமே தந்திரங்கு தாணுவே. 3.
				
				அண்டரண்டம் யாவுநீ கொண்டுநின்ற கோலமே
				தொண்டர்கண்டு சொரிகணீர் கண்டநெஞ்சு கரையுமே. 4.
				
				அன்னைபோல அருள்மிகுத்து மன்னுஞான வரதனே
				என்னையே எனக்களித்த நின்னையானும் நினைவனே. 5.
				
				54. வண்ணம்
				
				அருவென் பனவுமன்றி யுருவென் பனவுமின்றி
				அகமும் புறமுமின்றி-முறைபிறழாது
				குறியுங் குடிணமுமன்றி நிறைவுங் குறைவுமன்றி
				மறையொன் றெனவிளம்ப-விமலம தாகி
				அசலம் பெறவுயர்ந்து விபுலம் பெறவளர்ந்து
				சபலஞ் சபலமென்றுள் அறிவினர் காண
				ஞானவெளியிடை மேவுமுயிராய்,
				
				அனலொன் றிடவெரிந்து புகைமண் டிடுவதன்று
				புனலொன் றிடவமிழ்ந்து மடிவில தூதை
				சருவும் பொழுதுயர்ந்து சலனம் படுவதன்று
				சமர்கொண் டழிவதன்றோர்-இயல்பின தாகும்
				அவனென் பதுவுமன்றி யவளென் பதுவுமன்றி
				யதுவென் பதுவுமன்றி-எழில்கொ டுலாவும்
				ஆருமிலையறி யாதபடியே, 1/4 
				
				இருளென் பதுவுமன்றி யொளியென் பதுவுமன்றி
				எவையுந் தனுளடங்க-ஒருமுத லாகும்
				உளதென் பதுவுமன்றி இலதென் பதுவுமன்றி
				உலகந் தொழவிருந்த அயன்முத லோர்கள்
				எவருங் கவலைகொண்டு சமயங் களில்விழுந்து
				சுழலும் பொழுதிரங்கி-யருள்செயு மாறு
				கூறரியசக மாயையறவே,
				
				எனதென் பதையிகழ்ந்த அறிவின் திரளினின்றும்
				அறிவொன் றெனவிளங்கும் உபயம தாக
				அறியுந் தரமுமன்று பிறியுந் தரமுமன்று
				அசரஞ் சரமிரண்டின் ஒருபடியாகி
				எதுசந் ததநிறைந்த தெதுசிந் தனைஇறந்த
				தெதுமங் களசுபங்கொள்-சுகவடி வாகும்
				யாதுபரமதை நாடியறிநீ, 1/2
				
				பருவங் குலவுகின்ற மடமங் கையர்தொடங்கு
				கபடந் தனில்விழுந்து-கெடுநினை வாகி
				வலையின் புடைமறிந்த மறியென் றவசமுண்டு
				வசனந் திரமுமின்றி-அவரித ழுறல்
				பருகுந் தொழிலிணங்கி இரவும் பகலும்இன்சொல்
				பருகும் படிதுணிந்து-குழலழ காக
				மாலைவகைபல சூடியுடனே, 
				
				பதுமந் தனைஇசைந்த முலையென் றதையுகந்து
				வரிவண்டெனவுழன்று-கலிலென வாடுஞ்
				சிறுகிண் கிணிசிலம்பு புனைதண் டைகள்முழங்கும்
				ஒலிநன் றெனமகிழ்ந்து-செவிகொள நாசி
				பசுமஞ் சளின்வியந்த மணமுந் திடமுகந்து
				பவமுஞ் சிடவிறைஞ்சி-வரிசையினூடு
				காலில் மிசைமுடி சூடிமயலாய், 3/4
				
				மருளுந் தெருளும்வந்து கதியென் பதைமறந்து
				மதனன் சலதி பொங்க-இரணம தான
				அளிபுண் தனைவளைந்து விரல்கொண் டுறவளைந்து
				சுரதஞ் சுகமிதென்று-பரவச மாகி
				மருவுந் தொழில்மிகுந்து தினமும்விஞ்சி
				வளரும் பிறைகுறைந்த படிமதி சோர
				வானரமதென மேனிதிரையாய்,
				
				வயதும் படஎழுந்து பிணியுந் திமிதிமென்று
				வரவுஞ் செயலழிந்துள்-இருமலு மாகி
				அனமுஞ் செலுதலின்றி விழியுஞ் சுடர்களின்று
				முகமுங் களைகளின்று-சரியென நாடி
				மனையின் புறவிருந்த இனமுங் குலைகுலைந்து
				கலகஞ் செயஇருண்ட-யமன்வரும் வேளை
				ஏதுதுணைபழி காரமனமே. 1
				
				
				55. அகவல்
				
				திருவருள் ஞானஞ் சிறந்தருள் கொழிக்குங்
				குருவடி வான குறைவிலா நிறைவே
				நின்ற ஒன்றே நின்மல வடிவே
				குன்றாப் பொருளே குணப்பெருங் கடலே
				ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாஞ்
				சோதியே சத்தே தொலைவிலா முதலே
				சீர்மலி தெய்வத் திருவரு ளதனால்
				பார்முத லண்டப் பரப்பெலாம் நிறுவி
				அண்டசம் முதலாம் எண்தரு நால்வகை
				ஏழு பிறவியில் தாழா தோங்கும்
				அனந்த யோனியில் இனம்பெற மல்க
				அணுமுத லசல மான ஆக்கையுங்
				கணமுத லளவிற் கற்ப காலமுங்
				கன்மப் பகுதித் தொன்மைக் கீடா
				இமைப்பொழு தேனுந் தமக்கென அறிவிலா
				ஏழை உயிர்த்திரள வாழ அமைத்தனை 
				எவ்வுடல் எடுத்தார் அவ்வுடல் வாழ்க்கை
				இன்ப மெனவே துன்ப மிலையெனப்
				பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க
				ஆதர வாகக் காதலும் அமைத்திட் 
				டூக மின்றியே தேகம் நானென
				அறிவு போலறி யாமை இயக்கிக்
				காலமுங் கன்மமுங் கட்டுங் காட்டியே
				மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும்
				மாலற வகுத்தனை ஏலும் வண்ணம்
				அமையாக் காதலிற் சமய கோடி
				அறம்பொரு ளாதி திறம்படு நிலையில்
				குருவா யுணர்த்தி யொருவர்போ லனைவருந்
				தத்தம் நிலையே முத்தி முடிவென
				வாத தர்க்கமும் போத நூல்களும்
				நிறைவிற் காட்டியே குறைவின்றி வயங்க
				அங்கங்கு நின்றனை எங்கு மாகிச்
				சமயா தீதத் தன்மை யாகி
				இமையோர் முதலிய யாவரும் முனிவருந்
				தம்மைக் கொடுத்திட்டெம்மை யாளென
				ஏசற் றிருக்க மாசற்ற ஞான
				நலமும் காட்டினை ஞானமி லேற்கு
				நிலையுங் காட்டுதல் நின்னருட் கடனே.
				
				56. ஆனந்தக்களிப்பு
				
				ஆதி அனாதியு மாகி - எனக்
				கானந்த மாயறி வாய்நின்றி லங்குஞ்
				சோதி மவுனியாய்த் தோன்றி-அவன்
				சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி-சங்கர 1.
				
				சொன்னசொல் லேதென்றுசொல்வேன்-என்னைச்
				சூதாய்த் தனிக்கவே சும்மா இருத்தி
				முன்னிலை ஏது மில்லாதே-சுக
				முற்றச்செய் தேஎனைப் பற்றிக்கொண் டாண்டி-சங்கர 2.
				
				பற்றிய பற்றற உள்ளே-தன்னைப்
				பற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே
				பெற்றதை ஏதென்று சொல்வேன் - சற்றும்
				பேசாத காரியம் பேசினான் தோழி-சங்கர 3.
				
				பேசா இடும்பைகள் பேசிச்-சுத்தப்
				பேயங்க மாகிப் பிதற்றித் திரிந்தேன்
				ஆசா பிசாசைத் துரத்தி-ஐயன்
				அடியிணைக் கீழே அடக்கிக்கொண் டாண்டி-சங்கர 4.
				
				அடக்கிப் புலனைப் பிரித்தே-அவ
				னாகிய மேனியில் அன்பை வளர்த்தேன்
				மடக்கிக்கொண் டான்என்னைத் தன்னுள்-சற்றும்
				வாய்பேசா வண்ணம் மரபுஞ்செய் தாண்டி-சங்கர 5. 
				
				மரபைக் கெடுத்தனன் கெட்டேன் - இத்தை
				வாய்விட்டுச் சொல்லிடின் வாழ்வெனக் கில்லை
				கரவு புருஷனும் அல்லன் - என்னைக்
				காக்குந் தலைமைக் கடவுள்காண் மின்னே-சங்கர 6.
				
				கடலின் மடைவிண்ட தென்ன - இரு
				கண்களும் ஆனந்தக் கண்ணீர் சொரிய
				உடலும் புளகித மாக - என
				துள்ளமுருக உபாயஞ்செய் தாண்டி - சங்கர 7.
				
				உள்ளது மில்லது மாய்முன் - உற்ற
				உணர்வது வாயுன் னுளங்கண்ட தெல்லாந்
				தள்ளெனச் சொல்லிஎன் ஐயன் - என்னைத்
				தானாக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி - சங்கர 8.
				
				பாராதி பூதநீ யல்லை-உன்னிப்
				பாரிந் திரியங் கரணநீ யல்லை
				ஆராய் உணர்வுநீ என்றான் -ஐயன்
				அன்பாய் உரைத்த சொல் லானந்தந் தோழி - சங்கர 9.
				
				அன்பருக் கன்பான மெய்யன் - ஐயன்
				ஆனந்த மோனன் அருட்குரு நாதன்
				தன்பாதஞ் சென்னியில் வைத்தான் - என்னைத்
				தானறிந் தேன்மனந் தானிறந் தேனே - சங்கர 10.
				
				இறப்பும் பிறப்பும் பொருந்த - எனக்
				கெவ்வணம் வந்ததென் றெண்ணியான் பார்க்கில்
				மறப்பும் நினைப்புமாய் நின்ற - வஞ்ச
				மாயா மனத்தால் வளர்ந்தது தோழி - சங்கர 11.
				
				மனதேகல் லாலெனக் கன்றோ - தெய்வ
				மவுன குருவாகி வந்துகை காட்டி
				எனதாம் பணியற மாற்றி - அவன்
				இன்னருள் வெள்ளத் திருத்திவைத் தாண்டி - சங்கர 12.
				
				அருளால் எவையும்பார் என்றான் - அத்தை
				அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்
				இருளான பொருள்கண்ட தல்லால்-கண்ட
				என்னையுங் கண்டிலன் என்னேடி தோழி - சங்கர 13.
				
				என்னையுந் தன்னையும் வேறா - உள்ளத்
				தெண்ணாத வண்ணம் இரண்டற நிற்கச்
				சொன்னது மோஒரு சொல்லே-அந்தச்
				சொல்லால் விளைந்த சுகத்தைஎன் சொல்வேன் - சங்கர 14.
				
				விளையுஞ் சிவானந்த பூமி - அந்த
				வெட்ட வெளிநண்ணித் துட்ட இருளாங்
				களையைக் களைந்துபின் பார்த்தேன் - ஐயன்
				களையன்றி வேறொன்றுங் கண்டிலன் தோழி - சங்கர 15.
				
				கண்டார் நகைப்புயிர் வாழ்க்கை - இரு
				கண்காண நீங்கவுங் கண்டோந் துயில்தான்
				கொண்டார்போற் போனாலும் போகும் - இதிற்
				குணமேது நலமேது கூறாய்நீ தோழி - சங்கர 16.
				
				நலமேதும் அறியாத என்னைச் - சுத்த
				நாதாந்த மோனமாம் நாட்டந்தந் தேசஞ்
				சலமேதும் இல்லாமல் எல்லாம் - வல்லான்
				தாளால்என் தலைமீது தாக்கினான் தோழி - சங்கர 17.
				
				தாக்குநல் லானந்த சோதி - அணு
				தன்னிற் சிறிய எனைத்தன் னருளாற்
				போக்கு வரவற் றிருக்குஞ் - சுத்த
				பூரண மாக்கினான் புதுமைகாண் மின்னே - சங்கர 18.
				
				ஆக்கி அளித்துத் துடைக்குந் - தொழில்
				அத்தனை வைத்துமெள் ளத்தனை யேனுந்
				தாக்கற நிற்குஞ் சமர்த்தன் - உள்ள
				சாட்சியைச் சிந்திக்கத் தக்கது தோழி - சங்கர 19.
				
				சிந்தை பிறந்ததும் ஆங்கே - அந்தச்
				சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே
				எந்த நிலைகளும் ஆங்கே - கண்ட
				யான்றான் இரண்டற் றிருந்தும் ஆங்கே - சங்கர 20.
				
				ஆங்கென்றும் ஈங்கென்றும் உண்டோ - சச்சி
				தானந்த சோதி அகண்ட வடிவாய்
				ஓங்கி நிறைந்தது கண்டால் - பின்னர்
				ஒன்றென் றிரண்டென் றுரைத்திட லாமோ - சங்கர 21.
				
				என்றும் அழியும்இக் காயம் - இத்தை
				ஏதுக்கு மெய்யென் றிருந்தீர் உலகீர்
				ஒன்றும் அறியாத நீரோ - யமன்
				ஓலை வந்தாற்சொல்ல உத்தரம் உண்டோ - சங்கர 22.
				
				உண்டோ நமைப்போல வஞ்சர் மலம்
				ஊறித் ததும்பும் உடலைமெய் யென்று
				கொண்டோ பிழைப்பதிங் கையோ - அருட்
				கோலத்தை மெய்யென்று கொள்ளவேண் டாவோ - சங்கர 23.
				
				வேண்டா விருப்பும் வெறுப்பும் - அந்த
				வில்லங்கத் தாலே விளையும் சனனம்
				ஆண்டான் உரைத்த படியே - சற்றும்
				அசையா திருந்துகொள் ளறிவாகி நெஞ்சே - சங்கர 24.
				
				அறிவாரும் இல்லையோ ஐயோ - என்னை
				யாரென் றறியாத வங்கதே சத்தில்
				வறிதேகா மத்தீயிற் சிக்கி - உள்ள
				வான்பொருள் தோற்கவோ வந்தேன்நான் தோழி - சங்கர 25.
				
				வந்த வரவை மறந்து - மிக்க
				மாதர்பொன் பூமி மயக்கத்தில் ஆழும்
				இந்த மயக்கை அறுக்க - எனக்
				கெந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான் - சங்கர 26.
				
				வாளாருங் கண்ணியர் மோகம் - யம
				வாதைக் கனலை வளர்க்குமெய் என்றே
				வேளா னவனுமெய் விட்டான் - என்னில்
				மிக்கோர் துறக்கை விதியன்றோ தோழி - சங்கர 27.
				
				விதிக்கும் பிரபஞ்ச மெல்லாஞ் - சுத்த
				வெயில்மஞ்ச ளென்னவே வேதாக மங்கள்
				மதிக்கும் அதனை மதியார் - அவர்
				மார்க்கந்துன் மார்க்கஞ்சன் மார்க்கமோ மானே - சங்கர 28.
				
				துன்மார்க்க மாதர் மயக்கம் - மனத்
				தூயர்க்குப் பற்றாது சொன்னேன் சனகன்
				தன்மார்க்க நீதிதிட் டாந்தம் - அவன்
				தானந்த மான சதானந்த னன்றோ-சங்கர 29.
				
				அன்றென்றும் ஆமென்றும் உண்டோ - உனக்
				கானந்தம் வேண்டின் அறிவாகிச் சற்றே
				நின்றால் தெரியும் எனவே - மறை
				நீதிஎம் மாதி நிகழ்த்தினான் தோழி - சங்கர 30.
				
				தாயுமான அடிகள் பாடல்கள் முற்றிற்று.
				
				--------------------------------------------------------------------------------
				
				உ
				திருச்சிற்றம்பலம்
				
				தாயுமனவடிகள் மாணாக்கர்
				அருளையர்
				அவ்வடிகளைத் தொழுத
				
				அருள்வாக்கிய அகவல்
				
				திருவளர் கருணைச் சிவானந்த பூரணம்
				ஒருவரும் அறியா ஒருதனிச் சித்து
				நவந்தரு பேதமாய் நாடக நடித்துற்
				பவந்தனை நீக்கிப் பரிந்தருள் பராபரம்
				கண்ணுங் கருத்துங் கதிரொளி போல 5.
				
				நண்ணிட எனக்கு நல்கிய நன்மை
				ஒன்றாய்ப் பலவாய் ஒப்பிலா மோனக்
				குன்றாய் நிறைந்த குணப்பெருங் குன்றம்
				மண்ணையும் புனலையும் வளியையும் கனலையும்
				விண்ணையும் படைத்த வித்திலா வித்துப் 10.
				
				பந்த மனைத்தையும் பாழ்பட நூறிஎன்
				சிந்தையுட் புகுந்த செழுஞ்சுடர்ச் சோதி
				விள்ளொணா ஞானம் விளங்கிய மேலோர்
				கொள்ளைகொண் டுண்ணக் குறைவிலா நிறைவு
				தாட்டா மரைமலர்த் தாள்நினைப் பவர்க்குக் 15.
				
				காட்டா இன்பங் காட்டிய கதிநிலை
				வாக்கான் மனத்தான் மதித்திட அரிதென
				நோக்கா திருக்க நோக்கிய நோக்கம்
				ஆதியாங் அறிவாய் அகண்டமாய் அகண்ட
				சோதியாய் விரிந்து துலங்கிய தோற்றம் 20.
				
				பரவெளி தன்னிற் பதிந்தஎன் னுளத்தின்
				விரவி விரவி மேற்கொள்ளும் வெள்ளம்
				சுட்டுக் கடங்காச் சோதி யடியார்
				மட்டுக் கடங்கும் வான்பெருங் கருணை
				எல்லைக் கடங்கா ஏகப் பெருவெளி 25.
				
				தில்லைப் பொதிவில் திருநடத் தெய்வம்
				வாதவூர் எந்தையை வரிசையாய் விழுங்கும்
				போதவூர் மேவுகர்ப் பூர விளக்குச்
				சுகரை அகண்டத் தூவெளி எல்லாந்
				திகழவே காட்டுஞ் சின்மய சாட்சி 30.
				
				செழுந்தமிழ் அப்பரைச் சிவலிங்க மாகி
				விழுங்கிய ஞான வித்தக வேழம்
				எழில்தரு பட்டினத் திறைவரை யென்றும்
				அழிவிலா இலிங்க மாக்கிய அநாதி
				சாந்த பூமி தண்ணருள் வெள்ளம் 35.
				
				ஆர்ந்த நீழ லசையாக் ககனம்
				பரவுவார் நெஞ்சிற் பரவிய மாட்சி
				இரவுபக லற்ற ஏகாந்தக் காட்சி
				ஆட்சிபோ லிருக்கும் அகிலந் தனக்குச்
				சாட்சியா யிருக்குந் தாரகத் தனிமுதல் 40.
				
				ஆணும் பெண்ணும் அலியுமல் லாததோர்
				தாணுவாய் நின்ற சத்தாந் தனிச்சுடர்
				எள்ளும் எண்ணெயும் எப்படி அப்படி
				உள்ளும் புறம்பும் உலாவிய ஒருபொருள்
				அளவிலா மதந்தொறும் அவரவர் பொருளென 45.
				
				உளநிறைந் திருக்கும் ஒருபொற் பணிதி
				துள்ளு மனப்பேய் துடிக்கத் தறிக்கக்
				கொள்ளு மோனவாள் கொடுத்திடு மரசு
				பெரிய பேறு பேசாப் பெருமை
				அரிய உரிமை அளவிலா அளவு 50.
				
				துரிய நிறைவு தோன்றா அதீதம்
				விரியுநல் லன்பு விளைத்திடும் விளைவு
				தீராப் பிணியாஞ் செனன மறுக்க
				வாரா வரவாய் வந்தசஞ் சீவி
				ஆலைக் கரும்புபா கமுதக் கட்டிநீள் 55.
				
				சோலைக் கனிபலாச் சுளைகத லிக்கனி
				பாங்குறு மாங்கனி பால்தேன் சருக்கரை 
				ஓங்குகற் கண்டுசேர்த் தொன்றாய்க் கூட்டி
				அருந்திய ரசமென அறிஞர் சமாதியில்
				பொருந்திய இன்பம் பொழிசிற் சுகோதயம் 60.
				
				எங்கணும் நிறைந்த இயல்பினை எனக்குச்
				செங்கையால் விளங்கத் தெரித்தமெய்த் தேசிகன்
				தன்னையறி வித்துத் தற்பர மாகி
				என்னுளத் திருந்தருள் ஏக நாயகன்
				அடிமுடி இல்லா அரும்பொருள் தனக்கு 65.
				
				முடியடி இதுவென மொழிந்திடும் முதல்வன் 
				மெய்யலான் மற்றவை மெய்யல வெல்லாம்
				பொய்யென அறியெனப் புன்னகை புரிந்தோன்
				அருளும் பொருளும் அபேதமா யிருந்தும்
				இருதிற னென்னும் இயலுமுண் டென்றோன் 70.
				
				அருளுனக் குண்டேல் அருளும் வெளிப்படும்
				பொருள்மயந் தானே பொருந்துமென் றுரைத்தோன்
				சத்தசத் திரண்டு தன்மையுந் தானே
				ஒத்தலாற் சதசத் துனக்கென உரைத்தோன்
				ஆணவம் அறாவிடின் அருளுறா தென்னக் 75.
				
				காணரு நேர்மையாற் காணவே உரைத்தோன்
				சென்மமுள் ளளவுந் தீரா திழுக்குங் 
				கன்மம் விடாதெனக் காட்டிய வள்ளல்
				உளதில தெனவும் உறுதலான் மாயை
				வளமில தெனவும் வகுத்தினி துரைத்தோன் 80.
				
				இல்லறத் திருந்தும் இதயம் அடக்கிய
				வல்லவன் தானே மகாயோகி என்றோன்
				துறவறத் திருந்துஞ் சூழ்மனக் குரங்கொன்
				றறவகை யறியான் அஞ்ஞானி என்றோன்
				இறவா மனந்தான் இறக்க உணர்த்திப் 85.
				
				பிறவா வரந்தரும் பேரறி வாளன்
				அத்தன தருளால் அனைத்தையும் இயக்குஞ்
				சுத்தமா மாயையின் தோற்றமென் றுரைத்தோன்
				இருள்மல மகல இசைந்ததில் அழுந்தும்
				பொருளருட் டிரோதைப் பொற்பெனப் புகன்றோன் 90.
				
				வீறு சிவமுதல் விளம்பிய படியே
				ஆறு மநாதிஎன் றறிஞருக் குரைப்போன்
				கொல்லா விரதங் குவலயத் தோர்கள்
				எல்லாம் பெறுமினென் றியம்பிய தயாநிதி
				தருமமுந் தானமுந் தவமும் புரிபவர்க் 95.
				
				குரிமையா யவரோ டுறவு கலப்பவன்
				தன்னுயிர் போலத் தரணியின் மருவிய
				மன்னுயி ரனைத்தையும் வளர்த்திடும் வேந்தன்
				களவுவஞ் சனைகள்செய் கருமிகள் தமக்குந்
				தெளிவுவந் துற அருள் செய்திடுந் திறத்தோன் 100.
				
				தான்பெறும் பேறு சகமெலாம் பெறவே
				வான்பெறுங் கருணை வழங்கிய மாரி
				தஞ்சமென் றடைந்த தாபதர் தம்மை
				அஞ்சலென் றாளும் அறிஞர் சிகாமணி
				சீவ கோடிகளுஞ் சித்த கோடிகளும் 105.
				
				யாவரும் புகழ யாவையும் உணர்ந்தோன்
				யானென தென்னா இறைவனெம் பெருமான்
				தானவ னாகிய தலைவனெங் கோமான்
				அருண கிரியார்க் காறு முகன்சொல்லும்
				பொருள்நல மல்லது பொருளென மதியான் 110.
				
				பூத முதலாப் பொலிந்திடு நாத
				பேதமுங் கடந்த பெருந்தகை மூர்த்தி
				மூலா தார முதலா யுள்ள
				மேலா தாரமும் வெறுவெளி கண்டவன்
				மண்டல மூன்றிலும் மன்னிய உருவிலும் 115.
				
				கண்டவை யத்திலுங் கடவுளாய் நின்றோன்
				பகர்சம யந்தொறும் பரமே யிருந்து
				சுகநடம் புரியுந் தொழிலெனச் சொன்னோன்
				பேத அபேத பேதா பேத
				போத மிதுவெனப் புகன்றிடும் புண்ணியன் 120.
				
				அதுநா னெனவே யாற்றிடும் அனுபவஞ்
				சதுர்வே தாந்தத் தன்மையென் றுரைத்தோன்
				அல்லும் பகலும் அறிவா னோர்க்குச்
				சொல்லும் பொருளுஞ் சுமைஎனச் சொன்னோன்
				சுதனே குருவாஞ் சுவாமிநா யகற்கெனின் 125.
				
				அதிகமெய்ஞ் ஞான மல்லவோ வென்றோன்
				நேசயோ கத்துறு நிருபரெல் லாந்தொழும்
				இராசயோ கத்திறை இராசயோ கத்தான்
				பொறுமை தெளிவு புனிதவா சாரம்
				மறுவிலா வண்மை வாரம் இயற்கை 130.
				
				தண்ணமர் சாந்தந் தயங்கிய கீர்த்தி
				எண்ணெண் கலைபயில் இணையிலாக் கல்வி
				நல்ல இரக்கம் நடுநிலை சத்தியம்
				இல்லைஎன் னாமல் எவர்க்குந் தருங்கொடை
				நற்குண னெல்லாம் நண்ணிய பெருந்தகை 135.
				
				சிற்குண வாரி திருவருட் செல்வன்
				கரமே லெடுத்துக் கருத்துற வணங்கிப்
				பரமே யுனக்குப் பரமெனப் பகர்ந்தோன்
				ஆலடி மேவும் அரசினை அடுத்தே
				சீலமெய்ஞ் ஞானந் தெளிந்தன னெனவுஞ் 140.
				
				சித்த மவுனி திடசித்த மாக
				வைத்த நிலையின் வளர்ந்தன னெனவும்
				மூலன் மரபின் முளைத்த மவுனிதன்
				பாலன்யா னெனவும் பரிவொடும் பகர்ந்தோன்
				வடமொழி இயற்கையின் மகிமையை உணர்ந்து 145.
				
				திடமுற முப்பொருள் திறத்தையுந் தெளிந்து
				கண்டமு தென்னக் கனிரச மென்னத்
				தண்டமிழ் மாரி தன்னைப் பொழிந்து
				சித்தியும் முத்தியுஞ் சிறந்தருள் கொழிக்கும்
				நித்திய நிரஞ்சன நிராலம்ப நிறைவைப் 150.
				
				பாடியும் நாடியும் பணிந்தெழுந் தன்பால்
				ஆடியும் அரற்றியும் அகங்குழை வெய்தியும்
				உடலங் குழைய உரோமஞ் சிலிர்ப்ப
				படபடென் றுள்ளம் பதைத்துப் பதைத்துப்
				பாங்குறு நெட்டுயிர்ப் பாகிப் பரதவித் 155.
				
				தேங்கி ஏங்கி இரங்கி இரங்கி
				ஓய்ந்தபம் பரம்போ லொடுங்கியே சிறிதும்
				ஏய்ந்த விழிக ளிமைப்பது மின்றிச்
				சோர்ந்து சோர்ந்து துவண்டு துவண்டுமெய்
				யார்ந்த அன்போ டவசமுற் றடிக்கடி 160.
				
				உள்நடுக் குறவே உருகியே சற்றுத்
				தண்ணமர் மொழியுந் தழுதழுத் திடவே
				உள்ளும் புறம்பும் ஒருமித் துருகி
				வெள்ள நீர்போல் விழிநீர் பெருக்கிக்
				கன்று பசுவைக் கருதிக் கதறிச் 165.
				
				சென்றுசென் றோடித் திகைப்பது போல
				என்புநெக் குடைய இருகரங் குவித்துப்
				புன்புலால் யாக்கை பொருந்தா தினிஎன
				உணர்ந்துணர்ந் தன்பா யுவகைமேற் கொண்டினிக்
				கணம்பிரி யேனெனக் கருதியே குறித்துத் 170.
				
				திருவுரு வெல்லாந் திருநீ றிலங்க
				இருகர நளினம் இயன்முடி குவித்துப்
				பூரண சந்திரன் போலொளி காட்டுங்
				காரண வதனங் கவின்குறு வெயர்வுற
				இளநிலா வெனவே இலங்கிய சிறுநகை 175.
				
				தளதள வென்னத் தயங்கி எழில்பெற
				இத்தன்மை எல்லா மிசைந்து மிவனருட்
				சித்தெனச் சிவகதி தேர்ந்தவ ருரைப்பப்
				பாத்திர மாடப் பரிவுட னாடிச்
				சாத்திரங் காட்டித் தயவுசெய் தருளும் 180.
				
				வல்லவ னெனவே மன்னுயிர்க் காக
				எல்லையி லன்ப னிவனென விளங்கி
				ஈன வுலகத் தியற்கைபொய் யென்றே
				ஞானநூல் மெய்யென நவின்றினி திரங்கிக்
				கேவல சகலங் கீழ்ப்பட மேலாய் 185.
				
				மேவருஞ் சுத்த மெய்யினை நல்க
				அருளே உருவுகொண் டவனியில் வந்த
				பொருளே இவனெனப் பொலிந்திடும் புனிதன்
				சைவஞ் சிவனுடன் சம்பந்த மென்பது
				மெய்வளர் ஞானம் விளக்குமென் றிசைத்தோன் 190.
				
				கதிர்விழி யொளியுறக் கலத்தல்சித் தாந்த
				விதிமுறை யாமென விளம்பிய மேலோன்
				முடிவினில் ஆகம முறைமையி னுண்மையை
				அடியரைக் குறித்துரைத் தருளிய அண்ணல்
				சிதம்பர நேர்மை திறமா வுரைத்திறை 195.
				
				பதம்பர வெனப்பகர் பரமமெய்ஞ் ஞானி
				முத்திபஞ் சாக்கர முறைமையி லயிக்கியஞ்
				சத்திய மிதுவெனச் சார்ந்தவர்க் குரைத்தோன்
				அஞ்செழுத் துள்ளே அனைத்தையுங் காட்டிஎன்
				நெஞ்சழுத் தியகுரு நீதி மாதவன் 200.
				
				எல்லா நிறைந்த இறைவன் செயலெனக்
				கல்லா எனக்குங் கருணைசெய் கடவுள்
				குருவரு ளாலே கூடுவ தல்லால்
				திருவரு ளுறாதெனத் தெரிந்திட உரைத்தோன்
				குருவுரு வருளெனக் கொண்டபின் குறையாப் 205.
				
				பொருள்மய மாமெனப் புகன்றிடு போதன்
				எந்தமூர்த் திகளையு மெழிற்குரு வடிவெனச்
				சிந்தையில் தியக்கறத் தேர்ந்தவர்க் குரைத்தோன்
				சதாசிவ மென்றபேர் தான்படைத் ததுதான்
				எதாவதே பொருளென் றேடுத்தெடுத் துரைத்தான் 210.
				
				கல்லானை கன்னல் கவர்ந்திடச் செய்தவன்
				எல்லாம் வல்லசித் தெம்மிறை என்றோன்
				எவ்வுயிர் தோறும் இறைமே வியதிறஞ்
				செவ்விய பிரம்படி செப்பிடு மென்றோன்
				எவ்வண மெவரெவ ரிசைத்தன ரவரவர்க் 215.
				
				கவ்வண மாவனெம் மானென அறைந்தோன்
				ஒருபாண னுக்கே யொருசிவ னாட்படின்
				வருமடி யார்திறம் வழுத்தொணா தென்றோன்
				சிவனடி யாரைச் சிவனெனக் காண்பவன்
				எவனவன் சிவனே என்றெடுத் துரைத்தோன் 220.
				
				விருப்பு வெறுப்பினை வேரறப் பறித்துக்
				கருப்புகா தென்னைக் காத்தருள் சேய்தோன்
				இருசொல் லுரையா தியானின்ப மெய்த
				ஒருசொல் லுரைத்த உயர்குண பூதரன்
				அத்துவா மார்க்கம் ஆறையு மகற்றித் 225.
				
				தத்துவா தீதத் தன்மையைத் தந்தோன்
				திருமகள் மருவிய திகழ்வள மறைசையில்
				வருமுணர் வாளன் மருளிலா மனத்தான்
				எண்ணிய எண்ணமெல் லாந்தெரிந் தெனக்குந்
				தண்ணருள் செய்தவன் தாயு மானவன் 230.
				
				ஒருமொழி பகர்ந்த உதவியா லவன்றன்
				இருபத முப்போ திறைஞ்சிவாழ்த் துவனே.
				
				திருச்சிற்றம்பலம்
				
				அருள்வாக்கிய அகவல்
				
				முற்றிற்று