Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > தமிழ் எழுத்துக்கள் - அன்று முதல் இன்று வரை - சா. கணேசன்

தமிழ் எழுத்துக்கள் - அன்று முதல் இன்று வரை
சா. கணேசன்


தமிழ்மொழியின் எழுத்துக்கள் தொடக்க முதலே இன்று காணப்பெறுவது போன்ற வரிவடிவத்தையே கொண்டிருந்தனவா? இல்லை என்றால், பண்டைய வடிவம் எப்படி இருந்தது? தொடக்க காலத்து எழுத்து இன்றுள்ள நிலைக்கு வருவதற்கு இடையில் ஓரிரு மாற்றங்களையே அடைந்தனவா, அல்லது பல மாற்றங்களை அவ்வப்பொழுது பெற்றே இன்றைய நிலைக்கு வந்தனவா?

இவற்றையெல்லாம் நாம் தெரிந்து கொள்ளுவது பயனுடையதாக இருக்குமல்லவா? பண்டைய எழுத்துக்கள் எப்படி இருந்தன என்பதை எங்ஙனம் அறிய முடியும்? அகத்தியன், தொல்காப்பியன், வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோர் எழுதிய ஏடுகள் இருந்தால் அவற்றை நோக்கி அறியலாம். ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் வரை ஏடுகளைக் கெடாமல் காப்பாற்ற முடிந்திருந்தால் அக்காலத்து எழுத்துக்களை இன்றும் நாம் காணற்கூடும். ஆனால், அவைதாம் அழிந்து போய்விட்டனவே! எனவே, வேறு வழியைத்தான் நாடவேண்டும்.

அப்படியானால் வேறு வழி என்ன? "இளமையிற் கல்வி சிலையின் எழுத்து" என்ற முதுமொழியைக் கேட்டிருக்கிறீர்களல்லவா? அதன் பொருள் என்ன? "பாலப் பருவத்திலே கற்ற கல்வி, கல்லில் தோண்டிய எழுத்தைப்போல, அழியாமல் நிலைபெறும்" என்பதுதானே? இதிலிருந்து கல்லில் எழுதும் முறையொன்று உண்டு என்பதும், அது அழியாத தன்மையுள்ளது என்பதும், தெரிய வருகிறதல்லவா? ஆம்; நம் முன்னோர் நிலையாக இருக்க வேண்டிய செய்திகளை மலைப்பாறைகளிலும், குகைகளிலும், குடைவரைகளிலும், கோயிலின் கற்சுவர்களிலும் பொறித்து வைத்துள்ளார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட எழுத்துக்கள், கல்லில் பொறிக்கப்பட்டதாலேதான், இன்றும் அழியாமல் நிலைத்து விளங்குகின்றன. அவற்றை வரலாற்றுத் துறையினர் 'கல்வெட்டு', 'கல்லெழுத்து', 'சிலாசாசனம்' என்றெல்லாம் கூறுவர்.

அவற்றுள் மிக மிகப் பழமையானவை என்று கருதப்படுபவை பண்டைக் குகைகளில் காணப்படும் எழுத்துக்களாகும். அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று கல்வெட்டாராய்ச்சியாளர் கணித்துரைப்பார்கள். அதாவது, அவை சுமார் 2300 ஆண்டுகட்கு முந்தியவை. இவற்றைப் பிராமி எழுத்துக்கள் என்று பல அறிஞர்கள் தொடக்க காலத்தில் மயங்கினர். ஆனால், அவை தமிழ் எழுத்துக்களே என்று சான்றுகளுடன் முதலில் உலகுக்குப் புலப்படுத்தியவர் கே.வி.சுப்ரமணிய ஐயர் அவர்களே. அவற்றை முற்காலத்தில் 'தாமிழி' என்று பிற மொழியினர் வழங்கினர். இந்தத் 'தாமிழி' எழுத்தே பிற பல மொழிகட்கும் வரிவடிவை அளித்தன என்றும் ஒரு சார் அறிஞர் கருதுவர்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டை ஒட்டிய அவ்வகை எழுத்துக்கள் சித்தன்னவாசல், மாங்குளம், அழகர் மலை முதலிய இடங்களில் உள்ள பாறைகளில் காணப்படுகின்றன. அவ்வகை எழுத்துக்களைப் பின்னே காட்டப்பட்டிருக்கும் எழுத்துப் படங்கள் இரண்டிலும் முதல் வரியில் காணலாம்.


கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வரிவடிவில் குறிப்பிடத்தக்க பெருமாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டை ஒட்டிக் குறிப்பிடத்தக்க மாற்றம் பெறத் தொடங்கியதைக் காணுகிறோம். ஆனால், மெய், உயிர்மெய் எழுத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் உயிர் எழுத்தில் ஏற்படவில்லை. உயிர் எழுத்தில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டியே மாற்றம் ஏற்படலாயிற்று எனத் தெரிகிறது. அதன்பின் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் யாவும் படிப்படியாய் வளர்ச்சி பெறத் தொடங்கியிருப்பது நன்கு புலப்படுகிறது.

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home