Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > மு. மேத்தா - Mu Mehta

Speeches in Tamil at Mu.Mehta's Kanneer Pookal Vizha in Chennai - World Tamil News
1.  
Vaanampadi Kavinjar  Sirpi quoting in Tamil, Kahlil Gibran's observation "Keep me away from the wisdom which does not cry, the philosophy which does not laugh and the greatness which does not bow before children"
2. Kavinjar Vaali
, August 2004

மு. மேத்தா

கவிதை, திரைப்பாடல் என்ற இரண்டு தண்டவாளங்களிலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இளைப்பாறாமல் ஓடிக்கொண்டிருக்கிற இலக்கிய ரயில் மு. மேத்தா!

தேகமழை நானாகும்
தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக
மேனியை மூடுவேன்.

என்று உருகி உருகி நெகிழ்கிற இந்தக் கவிஞர், ஒரு கல்லூரிப் பேராசிரியர்.

''சிறு வயதில் சினிமா பெரிய கனவு. வீட்டில் அழுது அடம்பிடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களைக் கொட்டக் கொட்டக் கண்விழித்துப் பார்த்திருக்கிறேன். பிற்பாடு தீவிர இலக்கியத்தில் நுழைந்து கவிதையில் புகழ்பெற்ற பிறகு, சினிமா ஆசை போய்விட்டது. ஆனால், சினிமாவில் பாட்டு எழுதுபவர்கள்தான் இன்று கவிஞர்கள் என்று அறியப்படுகிற சூழ்நிலையில், நண்பர்கள் என்னை சினிமாவை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு பாடல் வாய்ப்பு என் வீடு தேடிவந்தது'' என்று சிரித்தபடி பழைய நினைவுகளில் மூழ்குகிறார்.

''அப்போ நாடக உலகில் பிரபலமாயிருந்த உடையப்பா என்பவர் 'அனிச்சமலர்' என்`றாரு படம் தயாரித்தார். அவருடைய

மகன் சுப்பிரமணியம் என் கல்லூரி நண்பர். என் கவிதைகளைப் படித்திருந்த உடையப்பா, அவரது படத்தில் நான் ஒரு பாடல் எழுத வேண்டுமென்று விரும்பி, என்னை சங்கர்-கணேஷிடம் அறிமுகப்படுத்தினார். சுற்றிலும் சினிமாக்காரர்கள். முற்றிலும் அறிமுக மாகாத சூழ்நிலை. பாடல் எழுத சரியான பயிற்சியில்லாத நான் சங்கர்- கணேஷ் தந்த அந்த மெட்டை என் தமிழால் தட்டுத்தடுமாறி தடவிப் பார்த்தேன். அதுதான் -

காத்து வீசுது புது காத்து வீசுது

இங்கே
கதிர்கள்கூட வயல்வரப்பில்
காதல் பேசுது
என்ற எனது முதல் பாடல். அந்தப் படம் ஓடவில்லை. எனது பாடலும் பிரபலமாகவில்லை.

அதற்குப் பிறகு பாட்டெதுவும் எழுதாமல் விலகியிருந்த என்னைத் திரும்பவும் சினிமாவுக்குள் அழைத்தவர் கமல்ஹாசன்தான். கமலும் பாலகுமாரனும்தான் என்னை மனோபாலாவிடம் அறிமுகப்படுத் தினார்கள். மனோபாலா மூலமாக இளையராஜாவின் நட்பு கிடைத்தது. என் வாழ்க்கையின் திருப்புமுனை அது. ரஜினி நடித்த 'வேலைக்காரன்' படத்தில் ஆறு பாடல்களை எழுதும் வாய்ப்பை எனக்குத் தந்தார் இளைய ராஜா.

பக்கத்து வீட்டுக்காரன் முகம் கூட தெரியாத இந்த நகரத்து மனிதர்களின் அவசர வாழ்க்கையும், மக்களை ஏமாற்றிப் பிழைக்கிற அரசியல் சுயநலமும் என்னை எப்போதும் ரணப்படுத்துகிற விஷயம், அதுதான்...

சிங்காரமா ஊரு... இது
சென்னையின்னு பேரு
ஊரச் சுத்தி ஓடுதையா
கூவம் ஆறு!


கட்சிகளும் வாங்கி இங்கே
கட்டிடங்கள் வெச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்
கட்டாந்தரை தானிருக்கு.
என்று என்னை எழுத வைத்தது. அதே படத்தில் 'வா.. வா.. வா... கண்ணா வா'ன்னு ஒரு காதல் பாடல். மென்மையான அந்தப் பாட்டில் அழுத்தமாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன்.

காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னைக் கண்டால்
சீதை என்று துள்ளுவான்
- இப்படிப் போகிற பாடலின் இறுதியில்,

தாஜ்மகாலின் காதிலே
இராம காதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்றுசேரலாம்.
என்று மத ஒற்றுமையைச் சொல்கிற மாதிரி எழுதினேன். ஒரு பாடலாசிரியனாக எனக்கிருக்கும் எல்லைக்குள் சமூகம் சார்ந்த விஷயங்களைச் சொல்லவேண்டும் என்ற துடிப்பு எப்போதும் எனக்கிருக்கிறது.

ஆதாம்-ஏவாளின் காதல்தான் இந்த உலகம். என்னுடைய காதல் கவிதைகள் ஏராளமான இதயங்களை எனக்குத் தந்திருக்கின்றன. 'ரெட்டைவால் குருவி' படத்துக்காக பாலுமகேந்திரா அழைத்துப் பேசினார். ஒருவனுக்கு இரண்டு காதலிகள் என்று சூழலை அவர் விவரித்த போதே கிறுகிறுத்து விட்டது. நான் எழுதிக்கொண்டு சென்ற இரண்டு, மூன்று பல்லவிகளில் 'ராஜராஜ சோழன்'தான் கம்பீரமாக இருப்பதாக அதை எடுத்துக் கொண்டார்.

உல்லாச மேடை மேலே
ஓரங்க நாடகம்..
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்.


கள்ளூரப் பார்க்கும் பார்வை
உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
சல்லாபமே


வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே.
அற்புதமான இசையும் ஜீவனுள்ள வரிகளும் சேர்ந்து இன்றைக்கும் அந்தப் பாடல் என் மனக் குளத்தில் கல்லெறிகிறது.

பாடலாசிரியராக இருப்பதில் இருக்கக்கூடிய சங்கடங்களும் நெருக்கடிகளும் வெளியில் பெரிதாகத் தெரியாது. இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் ரொம்பப் பிரபலமாக இருந்த நேரம் அது. அவர் படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கிடைப்பதே பெரிய விஷயம். அந்த நேரத்தில் அவரே அழைத்து ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். வரிகள் நன்றாக அமைந்து போகவே, மேலும் சில பாடல்களைத் தந்தார். அதில் ஒரு பாடல் ஏற்கெனவே ஒரு கவிஞருக்குச் சென்று அவர் சரியாக எழுதாததால், என்னை எழுதித் தருமாறு கேட்டார்கள். ஆனால், அதை நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். அது இன்னொரு கவிஞரைக் காயப்படுத்துகிற மாதிரி ஆகிவிடும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

இந்த மாதிரியான விஷயங்களில் நான் என்றுமே சமரசம் செய்துகொண்டது கிடையாது. இந்த என்னுடைய குணத்தால்தான் அதிகமான பாடல்கள் எழுத முடியவில்லை என்று இன்றைக்கும் என் நண்பர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பதில் சொல்கிற மாதிரி 'காசி' படத்தில் வருகிற 'என் மன வானில் சிறகு விரிக்கும்' பாடலில் எழுதினேன் -

நான் பாடும் பாடல்
எல்லாம்
நான் பட்ட பாடே
அன்றோ
பூமியில் இதை யாரும்
உணர்வாரோ
மனதிலே
மாளிகைவாசம்
கிடைத்ததோ மரநிழல்
நேசம்
எதற்கும் நான்
கலங்கியதில்லை
இங்கே.
இந்தத் திரையுலக வாழ்க்கையில் எனக்கு நான் உண்மையாக இருந்திருக்கிறேன். அது போதும் எனக்கு.

பாடல்களைப் பொறுத்த வரைக்கும் எங்கேயோ, எப்போதோ நாம் கேட்டு ரொம்பவும் பாதித்த ஒரு வார்த்தையோ, விஷயமோ நம்மையும் அறியாமல் பாட்டுக்குள்ளே வந்து விழுந்துவிடும். 'சூர்யவம்சம்' படத்தில் வருகிற 'நட்சத்திர ஜன்னலில்' பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பேன் -

சித்திரங்களை பேசச்
சொல்லலாம்
தென்றலை அæசல்
ஒன்று போடச்
சொல்லலாம்
புத்தகங்களில்
முத்தெடுக்கலாம்
பொன்னாடை
இமயத்திற்கும்
போர்த்திவிடலாம்.
ரெக்கார்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்ரமன் என்னைக் கட்டிப் பிடித்துப் 'பிரமாதம்' என்று பாராட்டினார். 'அப்படின்னா நீங்க கலைஞரைத்தான் பாராட்டணும்!' என்று சொன் னேன். திருக்குறளுக்கு உரை எழுதும்போது 'திருக்குறளுக்கு நான் விளக்கவுரை எழுதமுடியாது. இமயமலைக்குப் பொன்னாடை போர்த்த முடியுமா?' என்று கலைஞர் எழுதியிருந்தார். ஒருவர் வார்த்தைகளின் மேல் உள்ள அதிகப்படியான பிரியத்தால் இப்படி நேர்ந்துவிடுவது உண்டு. சரியான இடத்தில் கையாண்டிருப்பதாக கலைஞரே அதைப் பாராட்டினார்.

'பாரதி' படத்தில் எழுதிய 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் என்னை மிகவும் திருப்திப்படுத்திய பாடல். பவதாரிணிக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்தது அந்தப் பாடல் என்பதில் எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. இந்தப் பாடலில் வருகிற -

தங்க முகம் பார்க்க அந்த சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனை தரலாம்...
என்ற வரிகள் கவிதையாக இருப்பதாக இலக்கிய நண்பர்கள் சொன்னார்கள். அதே நேரத்தில், பாடலின் சூழ்நிலைக்கேற்ப இறங்கிவந்து,

பர்மா பஜார்.. சைனா பஜார்
பளபளக்குது பாண்டி பஜார்
பையன் போட நிஜாரில்லையே
குடியரசு ஆட்சி கண்டு
வருஷம் ரெண்டு பெப்பர்மெண்டு
வழங்குவதில் நியாயமில்லையே...
என்று சமூகத்துக்கு ஏதேனும் செய்தி தர விரும்புகிறேன்.

'காஷ்மீர்' படத்துக்காக சமீபத்தில் எழுதிய பாடலின் பல்லவி இது -

மலைகளில் அருவி பாடும் பாடல்
மேகங்கள் எழுதியதோ
மனிதர்கள் பூமியில் பாடும் பாடல்
தாகங்கள் எழுதியதோ?
மனிதனுடைய தேடல்தான் இசை, கவிதை எல்லாமே. என்னுடைய தேடல்கள்தான் பாடல்களாகி இருக்கின்றன. நான் எப்போதும் தேடுபவனாகவே இருப்பேன்.''

சந்திப்பு: ராஜுமுருகன்
படம்: என். விவேக்
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home