Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கி -  அலை ஒசை >  பாகம் 1- பூகம்பம் > பாகம் 2 - புயல் > பாகம் 3 - எரிமலைபாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 1 to 11 >  பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 12 to 23  > பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் - 24 to 35 > பாகம் 4 - பிரளயம் - அத்தியாயங்கள் - 36 to 43

கல்கி - அலை ஒசை: பாகம் 4 - பிரளயம்
kalki -  alai Ocai: Part IV - piraLayam
[also in pdf ]


Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.

©  Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


 உள்ளுறை -அத்தியாயங்கள்

4.012 சீதாவின் பெருமிதம் மின்பதிப்பு
4.013 ராகவன் பகற் கனவு மின்பதிப்பு
4.014 ரஜினிபூர் ராஜகுமாரி மின்பதிப்பு
4.015 கங்காபாயின் கதை மின்பதிப்பு
4.016 ரமாமணியின் தோல்வி மின்பதிப்பு
4.017 படிகள் பிழைத்தன! மின்பதிப்பு
4.018 பட்டாபியின் வெற்றி மின்பதிப்பு
4.019 பாம்புக்கு வார்த்த பால் மின்பதிப்பு
4.020 அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி மின்பதிப்பு
4.021 கண்கண்ட தெய்வம் மின்பதிப்பு
4.022 டைரக்டர் சியாம சுந்தர் மின்பதிப்பு
4.023 சீதாவின் பிரார்த்தனை மின்பதிப்பு

கல்கியின் அலை ஒசை: பாகம் 4- 'பிரளயம்'

பன்னிரண்டாம் அத்தியாயம்
சீதாவின் பெருமிதம்

"சீதா! வாடி, அம்மா! நான் சகல விஷயமும் கேள்விப்பட்டேன்! மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயிக்கிறதற்காக நீ ரொம்பப் பாடுபடுகிறாயாம், எனக்கு ரொம்ப சந்தோஷம். சொந்த மனுஷாள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்? இந்த மாதிரி சமய சந்தர்ப்பத்துக்கு ஒத்தாசை செய்வதற்காகத்தானே பந்துக்கள் வேண்டும் என்கிறது?" என்றாள் சரஸ்வதி அம்மாள். சூரியா சொன்னதிலிருந்து மாமியின் மனோபாவத்தைச் சீதா கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த போதிலும் சரஸ்வதி அம்மாள் இவ்வளவு அன்பும் ஆதரவுமாகப் பேசியது சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "மாமி! நீங்கள் வந்துவிட்டீர்கள் அல்லவா! என்னுடைய தலைப்பொறுப்பு நீங்கிற்று. இனிமேல் எல்லாம் உங்கள் பாடு! இன்னும் இரண்டு நாளில் நான் ஊருக்குப் புறப்பட வேண்டும்!" என்று சொன்னாள். "ஊருக்குக் கிளம்புகிறாயா? அழகாய்த் தானிருக்கிறது! நான் வந்துவிட்டேனே என்று சொல்கிறாயா? நான் நாளைக்கே ஊருக்குப் போய்விடுகிறேன், சீதா!...." "மாமி! மாமி! சத்தியமாய் நான் அதற்காகச் சொல்லவில்லை. உங்கள் பேரில் எனக்கு என்ன விரோதமா? எப்போதாவது உங்க ளுடைய வார்த்தையை எதிர்த்து நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா? உண்மையாகவே நான் ஊருக்குப் போக வேண்டும் என்றிருக்கிறேன்..." "எல்லாம் மாப்பிள்ளைக்கு எலெக்ஷன் ஆன பிற்பாடு போகலாம். நீ சொல்லித்தான் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறாராம். நீ மீட்டிங்கில் பேசுகிறாயாம்; பாடுகிறாயாம். உன்னால்தான் மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகப் போகிறதென்று இந்த ஜில்லாவெங்கும் பேச்சாயிருக்கிறது. அப்படியிருக்க, நீ திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்றால், மாப்பிள்ளைக்கு யார் ஒத்தாசை செய்வார்கள்?"

"உங்களுடைய மாப்பிள்ளைக்கு யாருடைய ஒத்தாசையும் வேண்டியதில்லை. அவருடைய சாமர்த்தியத்துக்கு இன்னொருத்தரின் ஒத்தாசை எதற்கு? அதிலும் என்னால் என்ன பிரமாதமாகச் செய்துவிட முடியும்? உங்களுடைய பெண் லலிதா அடிக்கடி 'அஸ்து' சொல்லாமலிருந்தால் அதுவே மாப்பிள்ளைக்கு பிரமாத ஒத்தாசையாயிருக்கும். இந்த அதிசயத்தைக் கேளுங்கள், மாமி! உங்கள் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறது பற்றி இந்த தேவபட்டணத்தில் உள்ள அத்தனை ஜனங்களும் சந்தோஷப்படுகிறார்கள். யாரிடம் இவர் போனாலும் 'உங்களுக்குத்தான் எங்களுடைய ஓட்டு!" என்று சொல்லுகிறார்கள். ஆனால் லலிதாவுக்கு மட்டுந்தான் இது ஒன்றும் பிடிக்கவில்லை. ஓயாமல் முணு முணுத்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றதனால் ஏதோ குடி முழுகிப் போய்விட்டது போல் சண்டை பிடிக்கிறாள். அவருக்கும் 'சீ!' என்று போய் விடுகிறது! அவர் மனம் வெறுத்து 'எனக்கு இந்த எலெக்ஷனும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம்! எங்கேயாவது காசி ராமேஸ்வரத்திற்குப் போய் விடுகிறேன். இல்லாவிட்டால் திருவண்ணாமலைக்குப் போய் ரமண ரிஷிகளின் ஆசிரமத்தில் சேர்ந்துவிடுகிறேன்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். இன்று ாலை முதல் பாருங்கள், இரண்டு பேருக்கும் ஒரே சண்டை!...." சரஸ்வதி அம்மாள் கோபத்தோடு தன் குமாரி லலிதாவைப் பார்த்து, "ஏண்டி லலிதா! இப்படித்தான் செய்கிறதா? அழகாயிருக்கிறதடி! உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன? யாராவது கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கூத்தடிக்கிறாயா? இனிமேல் அந்த மாதிரியெல்லாம் வாயைத் திறந்து சொல்லக் கூடாது! இல்லா விட்டால், இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு!"

"சரி, அம்மா! நான் போய்விடுகிறேன்!" என்று லலிதா விளையாட்டுப் புன்சிரிப்புடன் கூறினாள். "பார்த்தீர்களா, மாமி இவள் சொல்வதை? ஊருக்குப் போய் விடுகிறாளாம்! நன்றாயிருக்கிறதல்லவா கதை? நாளைக்கு மாப்பிள்ளை எலெக்ஷனில் ஜயித்ததும், இவளைச் 'சேர்மனுடைய ஒயிப்' என்றும், 'மிஸ்ஸஸ் சேர்மேன்' என்றும் கொண்டாடப் போகிறார்களா? வேறு யாரையாவது கொண்டாடப் போகிறார்களா? டீ பார்ட்டி களுக்கும் டின்னர்களுக்கும் இவளை அழைத்து மாலை போடப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைத்து மாலைப் போடப் பாகிறார்களா? 'எங்கள் வீட்டுக் கலியாணத்துக்கு வரவேண்டும்', 'எங்கள் வீட்டுக் கிரஹப்பிரவேசத்துக்கு வரவேண்டும்' என்று இவளை வருந்தி வருந்தி அழைக்கப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைக்கப் போகிறார்களா? குரூப் போட்டோ வில் இவள் அகத்துக்காரர் பக்கத்தில் ஜம்மென்று உட்காரப் போகிறாளா? வேறு யாராவது உட்காரப் போகிறார்களா? அதெல்லாம் தெரியாமல் இவள் ஓயாமல் ஏதாவது நிஷ்டூரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் இவளுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டும்!" "கொஞ்சம் சொல்கிறது என்ன? நிறையச் சொல்லுகிறேன். இவள் மாத்திரம்தான் இப்படி என்று நினைக்காதே. இவளுடைய அண்ணா இருக்கிறானே, உன்னுடைய அம்மாஞ்சி சூரியா, அவனும் இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறான். எலெக்ஷனுக்கு நின்று விட்டதால் ஏதோ குடி முழுகிவிட்டது போல உளறுகிறான். 'வாயை மூடிக் கொண்டிரு! மாப்பிள்ளையிடம் ஏதாவது உளறி வைக்காதே!' என்று கண்டித்து அவனை அழைத்துக்கொண்டு வந்தேன்.

அண்ணாவும் தங்கையும் ஒரே அச்சு. இரண்டு பேரும் அப்பாவைக் கொண்டு பிறந்துவிட்டார்கள்! பிதிரார்ஜித நிலங்களையெல்லாம் பிரித்து ஆட்படைகளுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார் பாரு! அப்பாவைப் போலத்தான் பெண்ணும் பிள்ளையும் இருப்பார்கள். எலெக்ஷனுக்கு நிற்கக்கூடாதாம்; பணங்காசு சம்பாதிக்க கூடாதாம். ஆனால் ஜெயிலுக்கு மட்டும் போக வேண்டுமாம்! அடியே, சீதா! உனக்கு இருக்கிற புத்தியிலே எட்டிலே ஒன்று இவர்களுக்கு இருக்கக் கூடாதா?" சீதாவின் உடல் பூரித்தது; உள்ளத்தில் கர்வம் ஓங்கி வளர்ந்தது. தன்னைக் கண்டால் வேப்பங்காயைப் போல் கசந்து கொண்டிருந்த மாமி இப்படித் தன்னைச் சிலாகிக்கும் காலம் ஒன்று வரும் என்று சீதா கனவிலும் எண்ணியதில்லை. அப்படிப்பட்ட காலம் வந்தே விட்டது! இதை நினைத்துச் சீதாவின் நெஞ்சம் பெருமிதத்தினால் வெடித்து விடும் போல் விம்மியதில் வியப்பில்லையல்லவா! லலிதாவுக்கோ அம்மாவின் பேச்செல்லாம் ஒரு விதத்தில் கசப்பாயும் இன்னொரு விதத்தில் சந்தோஷ மாயும் இருந்தது. அம்மாவின் அப்பட்டமான சுயநலப் பேச்சுக் கசப்பாயிருந்தது. தன் அருமைத் தோழியின் விஷயத்தில் அம்மாவின் மனோ பாவம் மாறியது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அளித்தது. இந்த ஒரு நல்ல பயனுக்காகவே தன் புருஷன் தேர்தலுக்கு நின்றது சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது.

"அம்மா! இத்தனை நாளைக்குப் பிறகு இப்போதாவது நீ அத்தங்காள் நல்லவள் என்றும் புத்திசாலி என்றும் ஒப்புக் கொண்டாயே? அதற்காக ரொம்ப சந்தோஷம்?" என்றாள். "அதென்ன அப்படிச் சொல்கிறாய், லலிதா! நான் எப்போதாவது உன் அத்தங்காளைப் பொல்லாதவள் என்றோ அசடு என்றோ சொல்லியிருக்கிறேனா? சீதா! நீயே சொல்லடி, அம்மா! உன்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒழுங்காகக் குடித்தனம் செய்து வாழவில்லையே என்று வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறேன். அது ஒரு தப்பா? அதுவும் ஏதோ அபிமானத்தினால்தான் சொன்னேனே தவிர, வேறு அவர்கள் பேரில் எனக்கு என்ன வருத்தம்? எனக்கு என்ன அவர்கள் கெடுதல் செய்துவிட்டார்கள்? ஊருக்குப் போகிற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம், சீதா! இந்த வீட்டில் இனிமேல் உன் இஷ்டப்படி ஏதாவது நடக்காவிட்டால் என்னைக் கேள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "மாமி! அதற்காக மட்டும் நான் சொல்லவில்லை. என் குழந்தை வஸந்தியிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, பள்ளிக்கூடம் சாத்தப் போகிறார்கள் என்று. குழந்தையைப் பார்ப்பதற்கு நான் போக வேண்டாமா?" "சூரியாவைப் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வரச் சொன்னால் போகிறது. நீ மட்டும் இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் இந்தண்டை அந்தண்டை போகக் கூடாது." "நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் போக வில்லை, மாமி! சூரியாவையே போக சொல்லுங்கள். ஆனால் உங்கள் பெண்ணிடம் மட்டும் நீங்கள் கொஞ்சம் சொல்லி வையுங்கள். அவள் அபசகுணம் போல எதற்கெடுத்தாலும் 'அஸ்து' என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது..."

"லலிதாவைப் பற்றி இனிமேல் நீ கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம். லலிதா வாயைத் திறந்தால் நீ என்னைக் கேள். நாலு அறை கொடுத்து ஒரு அறையில் தள்ளிக் கதவைப் பூட்டி விடுகிறேன். நாலு வருஷமாய் மாப்பிள்ளை வருமானமே இல்லாமலிருக்கிறார். இந்த சேர்மன் வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று நம்முடைய குல தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். சீமாச்சு மாமா மெனக்கெட்டு வந்து உன்னைப்பற்றி ஏதேதோ புகார் சொன்னார். அதை யெல்லாம் நான் கேட்பேனா? 'போங்காணும்! யார் மேலாவது கோள் சொல்வதே உமக்கு வேலை! உம்முடைய வேலையைப் பாரும்!' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். சீமாச்சு மாமாவுக்கு இப்போதுள்ள சேர்மன் ஜவுளி லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தாராம். அதிலே ரொம்பப் பணம் இவருக்கு லாபமாம். இரண்டு மச்சு வீடு கட்டியாகிவிட்டது! அதற்காகப் பழைய சேர்மனுக்கு சீமாச்சு மாமா விழுந்து விழுந்து வேலை செய்கிறாராம். சிநேகம், பந்துத்வம் எல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. இந்தக் காலத்திலே காசு பணந்தான் பெரிது. சீதா! உன்னைப் போலச் சொந்த மனுஷ்யாளிடம் அபிமானத்துடன் இருப்பவர் களை நான் பார்த்ததேயில்லை. இந்தப் பெண் தத்துப் பித்து என்று என்னவெல்லாமோ பேசியிருந்தும் நீ பொறுமையா யிருந்திருக்கிறாயே? அதைச் சொல்லு! உனக்கு இவள் என்ன வேணுமானாலும் செய்யலாம். தோலைச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலும் தகும்!" என்று சொன்னாள் சரஸ்வதி அம்மாள். சீதா சற்று முன் தான் அடைந்த மனவேதனையை அடியோடு மறந்து, குதூகலத்தினால் மெய்மறந்தாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதின்மூன்றாம் அத்தியாயம்
ராகவன் பகற் கனவு

நீலத்திரைக் கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த எஸ்.எஸ். எலிஸெபத் என்னும் பிரயாணக் கப்பல். அதில் நமது கதாநாயகன் சௌந்தரராகவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். பெரும் பிரயத்தனம் செய்து அந்தக் கப்பலில் சௌந்தரராகவன் இடம் பெற வேண்டியிருந்தது. மகாயுத்தம் முடிந்து ஒரு வருஷம்கூட ஆகவில்லை யாதலால் கப்பல்களில் பிரயாணிகளுக்கு இடம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. யுத்தம் முடிந்து சில மாதத்துக்கெல்லாம் ராகவன் இங்கிலாந்துக்குச் சென்றான். போதிய காரணமில்லாமல் தன்னைச் சர்க்கார் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடுவது இங்கிலாந்து சென்றதன் நோக்கம். என்னதான் கம்பெனி வேலை என்றாலும், அதில் சம்பளம் எவ்வளவுதான் கிடைத்தாலும், சர்க்கார் உத்தியோகத்துக்கு ஈடாகாதென்பது ராகவனுக்குச் சீக்கிரத்திலேயே தெரிந்து போய்விட்டது. மேலும் எதற்காகத் தன் பேரில் ஒரு வீண் அபாண்டம் சர்க்கார் தஸ்தாவேஜுகளில் இருக்க வேண்டும்? யுத்தத்தில் பிரிட்டன் தோற்றுப் போய் இந்தியாவில் அரசாங்கம் மாறியிருந்தாலும் ஒருவாறு மனநிம்மதி அடைந்திருக்கலாம். ஆனால் யுத்தத்தில் பிரிட்டன் ஜயித்து இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்திருக்கிறது! அவ்விதமிருக்கும்போது சர்க்கார் உத்தியோகத்தை எப்படி அவன் அலட்சியம் செய்ய முடியும்.

ஆரம்ப காலத்தில் ராகவனுடைய பொருளாதார ஞானத்தை மெச்சி உத்தியோகம் கொடுத்த துரை இங்கிலாந் திலேதான் அச்சமயம் இருந்தார். அவரிடம் தன்னுடைய கட்சியைச் சொல்லி முறையிட்டுச் சிபாரிசு பெறலாம் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அந்த ஆசை எவ்வளவு வீண் ஆசை என்பது இங்கிலாந்துக்குப் போன பிறகு தான் தெரிந்தது. யுத்தத்தின் போது ஜெர்மன் விமானங்கள் இங்கிலாந்தின் பெரும் பகுதியைப் பாழாக்கியிருந்தன. கோடானு கோடி பணம் யுத்தத்தில் செலவான காரணத்தினால் இங்கிலாந்து 'இன்ஸால்வெண்ட்' ஆகிவிடுமோ என்று பயப்படும்படியான நிலைமையில் இருந்தது. ஆங்கில மக்கள் போதிய உணவில்லாமலும், உடையில்லாமலும் மற்ற வாழ்க்கை வசதிகள் இல்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ராகவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி யார் உருகிக் கண்ணீர் வடிப்பார்கள்? அவனுடைய குறையைக் காதிலேதான் யார் வாங்கிக் கொள்வார்கள்? ராகவனுக்கு உத்தியோகம் கொடுத்து அவனைச் செல்லப் பிள்ளையைப் போல் நடத்திய துரைகூட இப்போது அவனுடைய புகாரைப் பொருட்படுத்தவில்லை. "மிஸ்டர் ராகவன்! இங்கே நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்கிற பாடே பெரும்பாடாக இருக்கிறது. பெரிய பெரிய சீமான்கள் எல்லாருமே தினந்தோறும் க்யூவில் நின்று அரை ராத்தல் ரொட்டி வாங்கிக் கொண்டு வந்து காலட்சேபம் செய்யவேண்டியிருக்கிறது; நீ உனக்கு உத்தியோகம் போனதைப் பற்றிப் பிரமாதப்படுத்துகிறாய்.

உன்னுடைய புகாரை எடுத்துக்கொண்டு நான் இங்கே யாரிடமாவது சிபாரிசு செய்யப் போனால் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்! நீ வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு வேலை கிடைத்தால் நான் கூட வந்துவிடுவேன்! இங்கே நீ வீணாக அலைந்து காலங் கழிக்காதே! இந்தியாவுக்குத் திரும்பிப் போய்க் கிடைத்திருக்கும் உத்தியோகத்தைச் சரியாகக் காப்பாற்றிக் கொள்!" என்று மாஜி வரவு செலவு இலாகாத் தலைவர் கூறிய புத்திமதி ராகவனைத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. அது மட்டுமல்லாமல் துரை இன்னொரு விஷயமும் சொன்னார்:- "ராகவன்! இனிமேல் இந்தியாவில் சர்க்கார் உத்தியோகத்துக்கு முன்னைப் போல் அவ்வளவு மதிப்பு இராது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்து விடுவது என்று இங்கே தொழிற் கட்சி மந்திரிகள் தீர்மானம் செய்து விட்டார்கள். அது சரியான தீர்மானம்! ஏனெனில் எங்களால் இனிமேல் நாற்பது கோடி ஜனங்கள் உள்ள ஒரு தேசத்தைக் கட்டி ஆள முடியாது. அதற்கு வேண்டிய ஆள் பலமும் வசதிகளும் இங்கே இல்லை. இந்தியா சுதந்திரம் பெற்றால் முதலில் காங்கிரஸ்காரர்கள்தான் அதிகாரத்திற்கு வருவார்கள். காங்கிரஸ் அதிகாரத்தின் கீழ் நீ சர்க்கார் உத்தியோகம் பார்க்க விரும்ப மாட்டாய் அல்லவா?" ராகவனுடைய உள்ளம் மேலும் குழப்பத்தை அடைந்தது. துரையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் சர்க்கார் உத்தியோகம் திரும்பக் கிடைக்கும் என்ற ஆசை போய்விட்டது! நல்லவேளை, கம்பெனி உத்தியோகத்தை அவன் விட்டுவிடவில்லை. நாலு மாதம் லீவு வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தான். திரும்பிப் போய்க் கம்பெனி உத்தியோகத்தை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.

இந்தியாவுக்குப் போகும் கப்பலில் இடம் கிடைப்பது மிகவும் பிரயாசையாயிருந்தது. கப்பலுக்காக காத்திருந்த சமயத்தில் அங்குமிங்கும் அவன் சுற்றியலைந்தான். அப்படி அலைந்த போது அவன் கண்ட காட்சிகளும் கேட்ட விஷயங்களும் அவனுடைய மனதில் ஆச்சரியமான ஒரு மாறுதலை உண்டாக்கின. ஆகா! இந்த இங்கிலீஷ்காரர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய தீரர்கள்? நாட்டின் சுதந்திரத்துக்காக என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நாட்டின் சுபிட்சத்துக்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள்? ஆனால் இந்தியாவில் நாம் இத்தனை காலமும் என்ன செய்து வந்தோம். அன்னியர்களின் கீழ் அடிமை உத்தியோகம் பார்த்து வந்தோம். அதைத் திரும்பப் பெறுவதற்காகக் கெஞ்சி மணியம் செய்ய இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். சீ! இது என்ன மானங்கெட்ட பிழைப்பு? இங்கிலீஷ் படிப்பு என்ன மாதிரி நம்முடைய புத்தியைக் கெடுத்து விட்டது? போனதற்கெல்லாம் பரிகாரமாக, இனிமேல் நடந்து கொள்ளவேண்டும். இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஏதேனும் ஒரு பிரமிக்கும்படியான காரியம் செய்ய வேண்டும்... எஸ்.எஸ். எலிஸபெத் கப்பலின் மேல் தளத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு சௌந்தரராகவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது மேற்கண்டவாறு பற்பல எண்ணங்கள் வந்துபோய்க் கொண்டிருந்தன. மனதை அதன் போக்கிலேயே விட்டபோது பதினைந்து வருஷங்களுக்கு முன் கராச்சியிலிருந்து பம்பாய்க்குக் கப்பலில் பிரயாணம் செய்ததில் வந்து மனம் நின்றது.

ஆகா! அந்தப் பிரயாணம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தது! அது பெரும்பாலும் சாமான்கள் அடுக்கிய சாதாரண நாலாந்தரமான கப்பல்தான்; இந்தக் கப்பலின் விஸ்தீரணத்திலோ கம்பீரத்திலோ அழகிலோ வசதியிலோ எட்டில் ஒரு பங்குகூட அந்தக் கப்பலில் இல்லை! ஆயினும் அந்தக் கப்பலில் அவன் அப்போது செய்த பிரயாணம் ஆகாய வெளியில் புஷ்ப ரதத்தில் தேவ தேவியர்களுக்கு மத்தியில் கந்தர்வர்களின் கானத்தைக் கேட்டுக் கொண்டு செய்த பிரயாணத்தைப் போல் ஆனந்தமயமாயிருந்தது. காரணம், அதே கப்பலில் தாரிணியும் பிரயாணம் செய்ததுதான். அடடா! என்ன தவறு செய்து விட்டோ ம்? கொஞ்சம் பிடிவாதம் பிடித்துத் தாரிணியைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்திருக்கும்? தாரிணியிடமிருந்து மனம் சீதாவிடம் பாய்ந்தது. தாரிணியைப் புறக்கணித்தது ஒரு பிசகு என்றால், சீதாவை மணந்து கொண்டது அதைவிடப் பெரிய பிசகு. கிட்டாவய்யர் மகள் லலிதாவைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இல்வாழ்க்கை நிம்மதியாகவாவது இருந்திருக்கும். லலிதாவைப் பார்க்க போன இடத்தில் இவள் குறுக்கே வந்து சேர்ந்தாள்! கண்களை அகல விரித்துப் பார்த்து நம்முடைய மதியை மயக்கிவிட்டாள்! ஒரு விஷயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கண்ணழகிலே மட்டும் சீதாவுக்கு இணையில்லைதான். தாரிணியின் கண்களைக் காட்டிலுங்கூடச் சீதாவின் கண்கள் கொஞ்சம் அதிகம் அழகானவை என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் கண்ணழகு மட்டும் ஒரு பெண்ணிடம் இருந்தால் போதுமா? போதாது என்பதற்குத் தன்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! அந்தக் கண்களின் வழியாக அவளுடைய உள்ளத்தின் இயல்பைப் பார்க்கும் சக்தி தனக்கும் இல்லாமல் போய்விட்டதே? சீச்சீ! என்ன சஞ்சலபுத்தி? என்ன சண்டை பிடிக்கும் சுபாவம்? என்ன அசூயை? என்ன ஆத்திரம்? பெண்களின் கெட்ட குணங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பிரம்தேவன் சீதாவைப் படைத்திருக்க வேண்டும்! 'சீதா' என்னும் பெயரைக் காட்டிலும் சூர்ப்பனகை என்னும் பெயர் அவளுக்கு அதிகப் பொருத்தமாயிருக்கும்.

சீச்சீ! இது என்ன எண்ணம்? தவறு முழுவதும் சீதாவினுடையதுதானா? தன் பேரிலும் தவறு இருக்கத்தான் இருக்கிறது! அவளை நடத்தவேண்டியபடி முதலிலிருந்தே நடத்தியிருந்தால் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அடங்கி நடந்திருப்பாள். புது டில்லி நாகரிக வாழ்க்கைக்கு அவளைத் தயார்ப் பண்ண யத்தனித்தது அல்லவா இப்படி வினையாக வந்து முடிந்தது? அவள் சுபாவம் கெட்டுப் போனதற்கு அந்த மடையன் சூரியாவும் ஒரு காரணம். தன்னுடைய அபிப்பிராயங்க ளைக்காட்டிலும் சூரியாவினுடைய அபிப்பிராயங்கள் அல்லவா அவளுக்கு மேலாகப் போயிருந்தன? கடைசியாக எப்படிப் பட்ட படுகுழியில் கொண்டு போய் அந்தப் படுபாவி அவளைத் தள்ளி விட்டான்? இந்த ஸ்திரீகளின் சுபாவமே அதிசயமானது தான்! சூரியாவிடம் அப்படி என்ன அழகை, அற்புதத்தை, இவர்கள் கண்டு விட்டார்களோ, தெரியவில்லை. சீதாவாவது 'அம்மாஞ்சி' என்று சொல்லி உருகிக் கொண்டிருந்தாள். தாரிணிக்கும் சூரியாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்குள் எப்படிச் சிநேகம் ஏற்பட முடியும்? ஆகா! சூரியாவைப் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்புவிப்பதற்காகத் தாரிணி எப்பேர்ப்பட்ட சாகஸமான காரியம் செய்தாள்: என்ன துணிச்சல்! என்ன தைரியம்? இரண்டு பேரும் அன்றைக்கு மறைந்தவர்கள் அப்புறம் வெளிப்படவே இல்லை! மத்திய சர்க்காரின் துப்பறியும் இலாகா எவ்வளவோ முயன்றும் பயனில்லை! எப்படி அவர்கள் மாயமாய் மறைந்திருப்பார்கள்?

இதில் ரொம்பவும் விசித்திரமான வேடிக்கை என்னவென்றால், கல்கத்தாவில் சீதாவைத் தாரிணி என்ற பெயரால் கைது செய்து பாதுகாப்பு சிறையிலே வைத்திருந்ததுதான்! இந்த விஷயம் கல்கத்தாவுக்கு வந்து, கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் ராகவனுக்குத் தெரியவந்தது. ஆனாலும் அதைப்பற்றி அவன் நடவடிக்கை ஒன்றும் எடுக்க முடியாமல் இருந்தது. அவள் தாரிணி இல்லை, சீதா என்று தான் சொன்னால், அவள் கைதியானபோது ஏன் அதைச் சொல்லவில்லை என்று கேட்பார்கள் அல்லவா? டில்லியிலிருந்து அவள் கல்கத்தா வந்த காரணம் என்னவென்று கேட்பார்கள் அல்லவா? அந்தக் கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்வது? கிடக்கட்டும், கிடக்கட்டும்! சிறையிலேயே அடைந்து கிடக்கட்டும்; நன்றாக புத்தி வரட்டும்; எல்லாருக்கும் விடுதலை கிடைக்கும்போது அவளுக்கும் விடுதலை கிடைத்து வெளி வரட்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் சீதாவுக்கு இன்னொரு 'சான்ஸ்' கொடுத்துப் பார்க்க வேண்டியதுதான்! அவளுடன் இல்லறம் நடத்த இன்னொரு பிரயத்தனம் செய்ய வேண்டியதுதான்! இவ்விதம் சௌந்தரராகவன் மனமுவந்து தயவு செய்து எண்ணிய தற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, சீதாவுடன் தான் இல்வாழ்க்கை நடத்தாவிட்டால் பாமா என்கிற பிசாசின் வாயில் விழ வேண்டியிருக்கும்! அது இரும்புச் சட்டியிலிருந்து அடுப்பு நெருப்பில் விழுவது போலாகும் இரண்டாவது காரணம், குழந்தை வஸந்தி, சீமைக்குப் புறப்படுமுன் ராகவன் சென்னைக்குத் தன் மகளைப் பார்க்கப் போயிருந்தான். அப்போது குழந்தை தன் கபடமற்ற கண்களினால் தந்தையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "அப்பா! அம்மாவை அழைத்து வரவில்லையா?" என்று கேட்டாள். அந்தக் கேள்வியில் தொனித்த ஆதங்கத்தை ராகவனால் மறக்கவே முடியவில்லை. குழந்தையை முன்னிட்டாவது மறுபடியும் ஒரு தடவை குடித்தனம் நடத்திப் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தான். மூன்றாவதாக இன்னொரு காரணமும் இருந்தது; அது கொஞ்சம் விசித்திரமான காரணந்தான்.

ராகவன் புதுடில்லியை விட்டுக் கிளம்புவதற்கு முன்னால் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வீட்டுக்குள் திடீரென்று ஒரு ஸ்திரீ வந்தாள். அவளுடைய தோற்றம் அச்சத்தை அளித்தது. அதைவிட அவள் பேச்சுப் பயங்கரமாயிருந்தது. "நான் யார் தெரியுமா?" என்று கேட்டாள். "தெரியாது!" என்றான் ராகவன். "உன் மனைவி சீதாவின் தாயார் நான்!" என்றாள் அந்த ஸ்திரீ. ராகவன் சிரித்துக் கொண்டே, "சீதாவுக்கு எத்தனை தாயார்?" என்று கேட்டான். "சிரிக்காதே! உன் சாமர்த்தியம் உன்னோடு இருக்கட்டும். சீதா என்னுடைய மகள், வயிற்றில் பெற்ற மகள் அல்ல; ஆனாலும் அதைவிட அதிகம். உன் மனைவி ஒரு ரத்தினஹாரம் போட்டுக் கொண்டிருந்தாளே? அது இருக்கிறதா? அல்லது விற்றுச் சாப்பிட்டு விட்டாயா? என்று கேட்டாள். ராகவன் சிறிது வியப்பும் அச்சமும் அடைந்தான். ஆயினும் வெளிக்கு அதைரியத்தைக் காட்டிக்கொள்ளாமல், "நீ எதற்காகக் கேட்கிறாய்? நீ யார்? உன் பெயர் என்ன?" என்று அதட்டிக் கேட்டான். "சொல்கிறேன், கேள். நான் உன் மாமியார்; என் பெயர் ரஸியா பேகம்; அந்த ரத்தின ஹாரத்தை நான் சீதாவுக்குக் கொடுத்தேன், அதனாலேதான் கேட்கிறேன். அது போனால் போகட்டும். சீதாவை நீ கஷ்டப்படுத்துகிறாய் என்று எனக்குத் தெரியும். உங்களிடமிருந்து தொல்லைப்படுவதைக் காட்டிலும் சிறையிலிருப்பது மேல் என்று எண்ணி அவள் சிறைக்குப் போயிருக்கிறாள். ஒரு நாள் வெளியில் வருவாள். அப்போது அவளை நீ சரியாக நடத்திப் பத்திரமாய்ப் பாதுகாக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உன்னை இந்தக் கத்தியால் ஒரே குத்தாகக் குத்திக் கொன்றுவிடுவேன்!" என்று சொல்லி ஒரு கத்தியை எடுத்துக் காட்டினாள். ராகவன் இப்போது உண்மையாகவே பயந்து நடுங்கிப் போனான். அவனால் வாயைத் திறக்கவே முடியவில்லை. சட்டென்று ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. "ரஜனீபூர் பைத்தியம்" என்று ஒரு ஸ்திரீ ரஜனிபூர் ராஜாவைக் கொல்லப் பார்த்தாள் என்றும் அவள் டில்லியில் திரிந்து கொண்டிருந்தாள் என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். "நீ ரஜனிபூர்...." என்று தயக்கத்துடன் அவன் கேட்க ஆரம்பித்தவுடனே, "ஆமாம்; நான் ரஜனிபூர் மகாராணிதான்! என் அருமை மகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்! இல்லாவிட்டால் உன்னை நிச்சயமாய்க் குத்திக் கொன்று விடுவேன்!" என்று சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ போய்விட்டாள். இந்தச் சம்பவம் கொஞ்ச நாள் வரையில் ராகவனுடைய மனதில் இடைவிடாமல் குடி கொண்டிருந்தது. ரஜனிபூர் பைத்தியம் என்பது யார் என்றும் அவளுக்கும் தன் மனைவி சீதாவுக்கும் என்ன சம்பந்தம் என்றும் அறிந்து கொள்ளப் பெரிதும் ஆவலாயிருந்தது. வேறு வழியில் இதைப்பற்றித் தெரிந்து கொள்ள முடிய வில்லை. சீதாவைக் கேட்டுத் தெரிந்து கொண்டால்தான் உண்டு. நாளடைவில் ரஸியா பேகத்தின் வார்த்தைகளின் வேகம் மறைந்துவிட்டாலும் இன்னமும் உண்மையை அறிந்து கொள்ளும் ஆவல் ராகவனுடைய மனதில் இருக்கத்தான் இருந்தது. அதற்காகவாவது சீதாவை மறுபடியும் கூட்டி வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.... கடற்காற்று சுகமாக அடித்துக் கொண்டிருந்தது. கடல் அலைகளின் ஓசை பின்னணி சங்கீதத்தைப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. ராகவனுக்குக் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தன்னை அறியாமல் சாய்மான நாற்காலியில் படுத்த வண்ணம் அவன் தூங்கிப் போனான்.

அந்தப் பகற் தூக்கத்தில் ராகவன் ஒரு கனவு கண்டான். ஒரு பெரிய அரண்மனை, அதில் தர்பார் மண்டபம், பளிங்கு மேடையில் முத்து விதானத்தின் கீழ் அமைந்த நவரத்தின சிம்மாசனத்தில் ராணி ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். "ரஜினிபூர் மகா ராணிக்கு ஜே!" என்ற கோஷம் எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்தது. முதலில் தூரத்தில் நின்று பார்த்த ராகவன் அந்தச் சிம்மாசனத்தை நெருங்கிப் போனான். பத்து அடி தூரத்தில் சென்றதும் மகாராணி ராகவனைப் பார்த்துப் புன்னகை புரிந்து, "நான் யார் தெரிகிறதா?" என்று கேட்டாள். "ரஜினிபூர் ராணி!" என்றான் ராகவன். "நன்றாகப் பார்!" என்றாள் ராணி! உற்றுப் பார்த்த போது ராகவனுடைய உள்ளத்தைக் கவர்ந்த வேறொரு முகமாகத் தெரிந்தது. "ஆ! தாரிணி! நீயா?" என்று கேட்டான் ராகவன். "இன்னும் நன்றாய்ப் பார்! பார்த்துச் சொல்லு!" என்றாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மாது, ராகவன் பார்த்தான். இப்போது சீதாவின் முகமாகத் தெரிந்தது. "ஆ! சீதா! நீ தானா. தாரிணி மாதிரி எப்போது மாறினாய்!" என்று கேட்டான். "நான் மாறவில்லை, உங்கள் கண்களும் மனமும் மாறிவிட்டன" என்றாள் சீதா. "நான் உன்னைக் கஷ்டப்படுத்தியதை யெல்லாம் மன்னித்துவிடு!" என்றான் ராகவன். "நான் உங்களைக் கஷ்டப்படுத்தியதற்கும் நீங்கள் என்னைக் கஷ்டப்படுத்தியதற்கும் சரியாய்ப் போயிற்று. ஆகையால் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை. குழந்தை வஸந்தி எங்கே?" என்று சிம்மாசனத்தில் கிரீடமணிந்து வீற்றிருந்த சீதா கேட்டாள்.

"ஆகா! வஸந்தியை மறந்து விட்டேனே! இதோ போய் அழைத்து வருகிறேன்!" என்று ஓடத் தொடங்கினான். வஸந்தியை எங்கேயோ விட்டு விட்டு வந்ததாக அவனுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கே என்பது நினைவில் இல்லை. ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்று கொண்டே ஓடினான். கால் புதைந்த ஆற்று மணலைக் கடந்து ஓடினான். ஓடையில் இறங்கித் தண்ணீரில் நனைந்து கொண்டு ஓடினான். காட்டிலும் மலையிலும் ஓடினான். பெரியதொரு அரண்மனையின் மேல்மாடி முகப்பில் ஓடினான். முதலில் "வஸந்தி!" "வஸந்தி!" என்று கூச்சலிட்டுக் கொண்டே ஓடினான். பிறகு கூச்சல் போடவும் முடியாமல் தொண்டை நன்றாக அடைத்துக் கொண்டது. கால்கள் தடுமாறின; தலைச் சுற்றியது. ஒரு பெரும் பிரயத்தனம் செய்து, "ஐயோ! வஸந்தி!" என்று கூச்சலிட்டான். யாரோ தோளைப் பிடித்துக் குலுக்கினார்கள்; உடனே விழிப்பு வந்து விட்டது. கனவு மயக்கத்தில் வஸந்திதான் என்று நினைத்துக் கொண்டு, "ஆ! என் கண்மணி! வந்து விட்டாயா!" என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தான். அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கியவள் வஸந்தி அல்லவென்றும் பாமா என்றும் தெரிந்து கொண்டான். தன் மனதிற்குள்ளே, "அட பிசாசே! சற்று நேரம் என்னைச் சும்மா விடமாட்டாய்?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். அந்தக் கனவு கண்டது முதல் ராகவனுக்கு வஸந்தியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அளவின்றிப் பெருகிற்று. குழந்தையை இனிமேல் என்றைக்கும் விட்டுப் பிரிவதில்லை என்று அடிக்கடி தீர்மானித்துக் கொண்டான். கனவை நினைத்துக் கொண்டு அவளுக்கு விபத்து ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே என்று ஓயாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்.

பம்பாய்த் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கீழே இறங்கியவுடனே ஆகாய விமானத்தில் ஏறிச் சென்னைப்பட்டணத் துக்குச் சென்றான். பத்மாபுரத்தில் தன் தந்தை பத்மலோசன சாஸ்திரிகளின் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலில் வண்டி ஒன்று காத்துக் கொண்டிருந்தது. 'யாராவது ஊருக்குப் போகிறார்களா?' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். டாக்ஸி வண்டியின் சத்தத்தைக் கேட்டு அவனுடைய தாயார் வெளியில் வந்து பார்த்தாள். மகனை ஆவலுடன் வரவேற்றாள். "ஏன்டாப்பா! வருகிறதாகக் கடிதம் கூட எழுதவில்லையே!" என்று ஆவலாகச் சொன்னாள். ராகவன் அதைப்n பொருட் படுத்தாமல், "அம்மா! யாராவது ஊருக்குக் கிளம்புகிறார்களா?" என்று கேட்டான். "ஆமாண்டா, அப்பா! நீ வருகிறது தெரியாதோ இல்லையோ? சூரியா வந்திருக்கிறான். குழந்தை வஸந்தியை அழைத்துக் கொண்டு புறப்படுவதற்கிருந்தான். அதற்குள் நல்லவேளையாக நீ வந்து விட்டாய்!" என்றாள். "குழந்தையை எங்கே அழைத்துப் போவதாகச் சொன்னான்?" "தேவபட்டணத்துக்குத்தான். அங்கே அவள் அம்மா இருக்கிறாள் அல்லவா?" "ஓகோ! அப்படியா!" என்று கர்ஜித்தான் ராகவன். காமாட்சி அம்மாள், "நீ வந்துவிட்டபடியால் இன்றைக்குக் குழந்தை போவதற்கில்லை!" என்றாள். "இன்றைக்கும் இல்லை; என்றைக்கும் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். சூரியாவுடன் ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாராக நின்ற வஸந்தி அப்பாவைப் பார்த்ததும் ஒரே ஓட்டமாக ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். ராகவன் கால்சட்டைப் பையிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சூரியாவை நோக்கிக் குறி பார்த்து, "அடே காலிப்பயலே! உன்னைப் போன்ற அயோக்கிய சிகாமணியைக் கொன்றால் துளிக்கூடத் தோஷமில்லை!" என்று கர்ஜித்தான். சூரியா ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதிநான்காம் அத்தியாயம்
ரஜினிபூர் ராஜகுமாரி

சூரியா தன் திகைப்பை நீக்கிக் கொண்டு, "மாப்பிள்ளை! இது என்ன கோபம்? இங்கிலாந்தில் இருந்தபோது இங்கிலீஷ் சினிமாக்கள் அதிகமாகப் பார்த்தீர்களா, என்ன? ஒரு காரணமுமில்லாமல் துப்பாக்கியால் சுடுவேன் என்கிறீர்களே? தோட்டாக்களை வீணாக்க வேண்டாம். பின்னால் ஏதாவது அவசியமான காரியத்துக்கு உபயோகமாயிருக்கும்" என்றான். "எப்போதும் நீ அரட்டைக் கல்லித்தனமாகப் பேசுகிறதில் கெட்டிக்காரன் என்று எனக்குத் தெரியும். உன் அதிகப் பிரசங்கத்தை என்னிடம் காட்ட வேண்டாம், சீதாவை அழைத்துக்கொண்டு ஓடினவன் அல்லவா நீ? இப்போது வஸந்தியையும் `கிட்நாப்' செய்ய வந்துவிட்டாய்! உன்னைப் போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன். தப்பி ஓடப் பார்க்காதே! ஓடினால் கட்டாயம் சுட்டுவிடுவேன்!" என்றான் ராகவன். ராகவனுக்குப் பின் புறத்தில் நின்று கொண்டிருந்த காமாட்சி அம்மாள், "அப்பா! ராகவா! இது என்ன ரகளை வந்ததும் வராததுமாய்? அப்படியொன்றும் சூரியா செய்யத் தகாத காரியத்தைச் செய்யக் கூடியவன் அல்ல. நான்தான் வஸந்தியை அவள் அம்மாவிடம் அழைத்துப் போகும்படி சூரியாவிடம் சொன்னேன். வெகு நாளாக அந்தக் குழந்தை அப்பா, அம்மா இரண்டு பேரையும் பார்க்காமல் ஏங்கிக் கிடந்தது!" என்றாள்.

வஸந்தி, "சூரியா மாமா! நான் அப்பாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் சட்டென்று இங்கிருந்து ஓடிப்போய் விடுங்கள்!" என்றாள். குழந்தையின் மழலையைக் கேட்ட ராகவனுடைய மனம் சாந்தமும் சிறிது வெட்கமும் அடைந்தது. "மிஸ்டர் சூரியா! பொம்மனாட்டிகள் எல்லோருமே உன்னுடைய கட்சியில்தான் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். சரி! இந்தத் தடவை போனால் போகிறதென்று விட்டு விடுகிறேன். விடு சவாரி! நிற்காதே! கெட் அவுட்!" என்றான் ராகவன். "ஸார்! நான் போகத்தான் போகிறேன். ஆனால் போவதற்கு முன்னால் உங்கள் மனதில் உள்ள ஒரு தப்பெண்ணத்தை நிவர்த்திக்க விரும்புகிறேன். உங்கள் மனைவி சீதாவை நான் அழைத்துக்கொண்டு ஓடிப் போனதாகச் சற்று முன்பு சொன்னீர்கள். நிஜமாகவே நீங்கள் அவ்விதம் நம்புகிறீர்களா என்று தெரியவில்லை. நம்பினால் அதைக் காட்டிலும் தவறு வேறொன்றுமில்லை. ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் சீதாவைக் கைப்பற்றிக்கொண்டு போனார்கள். அதைத் தடுத்து நிறுத்தி சீதாவைக் காப்பாற்றிக் கொண்டு வருவதற்காகவே நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அப்போதுதான் போலீஸார் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். சத்தியமாகச் சொல்கிறேன்!" என்று சொன்னான் சூரியா.

"ஆமாண்டா அப்பா. ராகவா! இதையெல்லாம் சூரியா என்னிடமும் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் எனக்கு நம்பிக்கையாயிருந்தது, சீதாவும் அதே மாதிரிதான் சொன்னாள்!" என்றாள் காமாட்சி அம்மாள். "அம்மா பட்ட கஷ்டத்தை யெல்லாம் கேட்டால் அதிசயமாகவும் பய்கரமாகவும் இருக்கு, "அப்பா! அரபிக்கதைகளிலே வருகிறது போல் இருக்கு!" என்றாள் வஸந்தி. ராகவன் தன் கைத் துப்பாக்கியைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, "அப்படியானால் அதையெல்லாம் எனக்கும் விவரமாகச் சொல்லிவிட்டுப் போ! சூரியா! ஊருக்குப் போக அவசரம் ஒன்றும் இல்லை!" என்றான். "அப்படியே ஆகட்டும், மாப்பிள்ளை ஸார்! எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை!" என்றான் சூரியா. சூரியா ரஜனிபூர் ராஜாவின் ஆட்களைப் பற்றிக் குறிப்பிட்டவுடனேயே ராகவனுடைய மனதில் அதைப்பற்றிச் சூரியாவிடம் பூரா விவரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டாகி விட்டது. ஆகையால், ஸ்நானம், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் சூரியாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய பழைய மாடி அறைக்குப் போய்ச் சேர்ந்தான். "சூரியா கப்பலில் வரும்போது நான் ஒரு பயங்கரமான சொப்பனம் கண்டேன், குழந்தை வஸந்தி காணாமற் போய் விட்டது போலவும் அவளைத் தேடிக் கொண்டு நான் பூமியிலும் வானத்திலும் நீரிலும் நெருப்பிலும் புகையிலும் பனியிலும் ஓடி ஓடி அலைந்ததாகவும் கண்டேன். குழந்தையின் குரல் மட்டும் `அப்பா! அப்பா!' என்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவள் இருக்கும் இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கனவு கலைந்து எழுந்ததும் `இனி ஒரு நாளும் வஸந்தியை விட்டுப் பிரிவதில்லை!' என்று சபதம் செய்து கொண்டேன். ஆகையினால்தான் நீ வஸந்தியை அழைத்துப் போக வந்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டதும் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது! அதை நீ பொருட்படுத்த வேண்டாம்!" என்றான் ராகவன்.

"மாப்பிள்ளை, ஸார்! கனவு காண்கிற விஷயத்தில் தாங்களும் தங்களுடைய மனைவியும் போட்டி போடுவீர்கள் போலிருக்கிறது. நாம் ஆக்ராவுக்குப் போயிருந்தபோது அத்தங்காள் கனவு கண்டது பற்றிச் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் அத்தங்காளின் வாழ்க்கையில் அந்த பயங்கரக் கனவைக் காட்டிலும் பயங்கரமான பல சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்து விட்டன!" என்று சொன்னான் சூரியா. "அந்தச் சம்பவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தான் உன்னை இருக்கும்படி சொன்னேன், சூரியா! நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத் தோன்றவில்லையா? சீதாவைப் பற்றி அவளுடைய கணவனாகிய எனக்குத் தெரிந்திருப்பதைக் காட்டிலும் உனக்கு அதிகமாகத் தெரிந்திருப்பது ஆச்சரியம் அல்லவா?" என்று ராகவன் குத்தலாகக் கேட்டான். "ஆச்சரியமான விஷயந்தான்; இல்லை என்று சொல்லவில்லை. சந்தர்ப்பங்கள் அப்படி ஏற்பட்டு விட்டன. மேலும், நீங்கள் அநாவசியமாக என்னவெல்லாமோ சந்தேகப்பட்டுக் கொண்டு அத்தங்காளைப் பற்றிக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்....."

"என்னுடைய சந்தேகங்கள் அவசியமா அநாவசியமா என்பதைப்பற்றி இப்போது சர்ச்சை வேண்டியதில்லை. ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் உன் அத்தங்காளைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று ஒரு கதை சொன்னாயல்லவா?...." "அது கதையல்ல, மிஸ்டர் ராகவன்! சத்தியமாக நடந்தது?" "அப்படியே இருக்கட்டும், ரஜினிபூர் ஆட்கள் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனது எதற்காக? பிடித்துக்கொண்டு போய் என்ன செய்தார்கள். நீ சொல்லுவதை மட்டும் உண்மை என்று நிரூபித்துவிடும் பட்சத்தில் அந்த ரஜினிபூர் சமஸ்தானத்தையே ஒழித்துக் கட்டிவிட்டு மறு காரியம் பார்ப்பேன்!" என்றான் ராகவன். "என்னால் ஒன்றையும் நிரூபிக்க முடியாது, மாப்பிள்ளை! எப்பொழுதோ யாரோ செய்த காரியத்தை நான் எப்படிச் சாட்சி விட்டு நிரூபிக்க முடியும்? நான் சொல்வதை நீங்கள் நம்பினால்தான் உண்டு." "அப்படியானால் நம்பிக்கை உண்டாகும்படியாக உன்னுடைய கதையைச் சொல், பார்க்கலாம்." "மறுபடியும் `கதை' என்றே கூறுகிறீர்கள். நான் என்ன சொல்லி என்ன பிரயோஜனம்?" "நமக்குள் வீண் விவகாரம் வேண்டாம்! முதலில், ரஜினிபூர் ராஜாவின் ஆட்கள் எதற்காகச் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று சொல். ஒருவேளை காணாமற்போன ரஜினிபூர் ராஜகுமாரி என்பதாகச் சீதாவை நினைத்துக் கொண்டார்களோ?" என்று ராகவன் கேலியாகக் கேட்டான்.

"ஆமாம்; உங்களுக்குத்தான் தெரிந்திருக்கிறதே?" என்றான் சூரியா. "சூரியாவினுடைய பதில் ராகவனுடைய ஆவலை அதிகமாக்கிற்று. "நான் ஏதோ குருட்டாம் போக்காய்ச் சொன்னேன். நீ அதுதான் உண்மை என்கிறாய். நான் ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போக வேண்டியதுதான். ஆயினும் பாக்கி விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக அடியோடு ஆச்சரியக் கடலில் முழுகிப் போய்விடாமல் மேலே தலையை மட்டும் நீட்டி வைத்துக்கொண்டிருக்கிறேன்!" என்று சொன்னான் ராகவன். "இன்னும் உங்களுடைய கேலிப் பேச்சுப் போகவில்லை, மாப்பிள்ளை, ஸார்! நீங்கள் எப்போதாவது ஒரு விஷயத்தைக் கவனித்ததுண்டா? தாரிணி தேவியும் சீதா அத்தங்காளும் அசப்பிலே பார்க்கும்போது உருவ ஒற்றுமை கொண்டவர்களாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியதுண்டா?" என்று சூரியா கேட்டான். ராகவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. மனதில் பற்பல ஐயங்களும் ஊகங்களும் அலைமோதிக் கொண்டு எழுந்தன. ஆயினும் வெளிப்படையான அமைதியுடன், "இல்லை சூரியா! பெண்மணிகளின் உருவங்களையோ அவர்களுடைய உருவ ஒற்றுமை வேற்றுமைகளையோ நான் அவ்வளவாக கவனிப்பதில்லை. நீ சொல்வதுபோல் தாரிணியும் சீதாவும் ஓரளவு உருவ ஒற்றுமை உள்ளவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம் அதனால் என்ன?" என்று கேட்டான்.

"வேறொன்றுமில்லை, ரஜினிபூர் ஆட்கள் தாரிணிதேவி என்று நினைத்துக்கொண்டு சீதாவைக் கைப்பற்றிக் கொண்டு போனார்கள்!...." "ஆகா! அப்படியானால் தாரிணி....?" என்று ராகவன் ஆரம்பித்து, ஒரு பெரிய கேள்விக் குறியுடன் வாக்கியத்தை நடுவில் நிறுத்தினான். "ஆமாம்; ரஜினிபூர் ராஜகுமாரி உண்மையில் தாரிணி தேவிதான்!" என்றான் சூரியா. ராகவன் சற்றுநேரம் வியப்பினால் திகைத்திருந்தான். பிறகு, "உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? தாரிணியுடன் எத்தனையோ காலம் நான் பழகியவன். அவளும் என்னிடம் சொல்லவில்லை; நானும் சந்தேகிக்கவில்லையே?" என்றான். "தாரிணி என்னிடம் சொல்லவில்லை! நானும் சந்தேகிக்கவில்லை. சீதா அத்தங்காள் மூலமாகத்தான் எனக்கு முதலில் தெரிந்தது." "தாரிணி என்று எண்ணிக் கொண்டு சீதாவை பிடித்துப் போனார்கள் என்று எப்படி அனுமானித்தாய்?" "சீதாவை அவர்கள் கைப்பற்றிய முதல் நாள் நானும் தாரிணி தேவியும் வெள்ளி வீதிக்குப் பின்னால் உள்ள காந்தி மைதானத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்....."

அசூயை நிறைந்த குரலில் ராகவன், "என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டான். "புரட்சி இயக்கத்தை எப்படித் தொடர்ந்து நடத்துவது, இந்தியாவின் சுதந்திரத்தை எப்படிக் கைப்பற்றுவது, வெள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு எப்படி வெளியேற்றுவது - என்பது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி அவ்விடமிருந்து போன பிறகு மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களுடைய தோற்றத்தைப் பார்த்தவுடனேயே சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தெரிந்து போய்விட்டது. தாரிணியைக் கைப்பற்றுவதற்கு நான் உதவி செய்தால் லட்சம் ரூபாய் கொடுப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய நோக்கம் என்னவென்பதை அப்போது நான் அறியவில்லை. சமஸ்தான ராஜாக்களின் வழக்கத்தையொட்டி துர்நோக்கங்கொண்டு தாரிணியைக் கொண்டுபோக எண்ணுகிறார்கள் என்று எண்ணினேன். அவர்களை நன்றாகத் திட்டி அனுப்பினேன். மறுநாள் அதே காந்தி மைதானத்தில் ஏறக்குறைய அதே நேரத்தில் அதே இடத்தில் நானும் சீதா அத்தங்காளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்...."

"ஆகா! அப்படிச் சொல்ல! உத்தமியாகிய அத்தங்கா சீதா, யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டுக் கிளம்பிக் காந்தி மைதானத்திற்கு வந்தாள் அல்லவா? எதற்காக?" "மாப்பிள்ளை! நீங்கள் கோபித்துக் கொள்வதில்லையென்றால் உண்மையைச் சொல்லி விடுகிறேன்." "நான் கோபித்துக் கொள்வதானால் பொய் சொல்வாயாக்கும்." "சரி!" எப்படியானாலும் நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். ராகவன்! சற்று முன்னால் நீங்கள் என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னீர்கள். அப்படிச் செய்திருப்பின் ஒன்றும் மோசம் போயிருக்காது. ஆனால் முன்னொரு தடவை என்னைப் போலீஸில் பிடித்துக் கொடுப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தீர்கள். தங்கள் வீட்டைச் சுற்றி இரகசியப் போலீஸ் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்திருந்தீர்கள். அந்தச் சமயம் நான் கைதியாகியிருந்தால் புரட்சி இயக்கத்துக்குப் பெருந்தீங்கு நேர்ந்திருக்கும். அவ்விதம் நேராமல் தங்கள் மனைவி சீதாதான் காப்பாற்றினாள். உங்கள் வீட்டுக்கு நான் வரவேண்டாம் என்று எனக்கு எச்சரிக்கை செய்வதற்காகக் காந்தி மைதானத்துக்கு வந்தாள்....."

சீதா தன்னைத் தேடி வந்தது பற்றி முழு உண்மையையும் சூரியா சொல்லவில்லை; பாதிதான் சொன்னான். அதுவே ராகவனுடைய மனதில் கொதிப்பை உண்டாக்கப் போதுமானதாயிருந்தது. `ஆகா! அந்தச் சண்டாளி அப்படியா செய்தாள்? இந்தக் காலிப் பயலைக் காப்பாற்றிக் கொடுப்பதில் அவளுக்கு ஏன் அத்தகைய சிரத்தை ஏற்பட்டது?' என்று மனதிற்குள் எண்ணிப் பொருமினான். வெளிப்படையாக, "சூரியா! ஒரு பெண் பிள்ளையின் பேச்சை நீ இவ்வளவு தூரம் நம்பக்கூடியவன் என்று நான் எண்ணவில்லை. நான் ஏதோ தமாஷாகப் பேசியதை உண்மை என்று நினைத்துக் கொண்டு வந்து உன்னிடம் ஏதோ உளறியிருக்கிறாள்!" என்றான். "இருக்கலாம் மிஸ்டர் ராகவன்! தமாஷாகக்கூடக் கெடுதலான காரியங்களைப் பற்றிப் பேசக்கூடாதென்று இதிலிருந்து ஏற்படுகிறது. உங்களுடைய தமாஷ் பேச்சிலிருந்து எவ்வளவு விபரீதங்கள் நேர்ந்துவிட்டன, பாருங்கள்!" என்றான் சூரியா.

"அந்த விபரீதங்களைப் பற்றிய விவரத்தை இன்னும் நீ எனக்குச் சொல்லுகிற வழியாக இல்லை. அதைத் தெரிந்து கொள்வதற்கோ எனக்கு ஒரே பரபரப்பாயிருக்கிறது!" என்றான் ராகவன். "நீங்கள் சொல்லும்படி விட்டால்தானே? குறுக்கே ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தால் எப்படிச் சொல்லுவது? சற்று மௌனமாகக் கேட்டால் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்!" "சரி! இதோ மௌனம்!" என்று சொல்லி ராகவன் கேலியாகத் தன் வாயைப் பொத்திக் கொண்டான். பிறகு சூரியா, சீதாவைத் தாரிணி என்று நினைத்துக் கொண்டு ரஜினிபூர் சமஸ்தானத்து ஆட்கள் கைப்பற்றிக் கொண்டு போனது முதல் சீதா கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்து கைதியானது வரையில் எல்லாவற்றையும் சுருக்கமாகக் கூறினான். "ரஜினிபூர் ஆட்கள் செய்த தவறையே கல்கத்தா போலீஸ்காரர்களும் செய்தார்கள். சீதா அத்தங்காளைத் தாரிணிதேவி என்று கருதிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்!" என்று சூரியா சொல்லி முடித்தான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினைந்தாம் அத்தியாயம்
கங்காபாயின் கதை

சூரியா சொல்லிய கடைசி விஷயம் ராகவனுடைய எண்ணத்தை வேறு வழியில் செலுத்தியது. பலவித சந்தேகங்கள் அவன் மனதில் உதித்தின. "ரஜினிபூர்ப் பைத்தியம்" என்று சொல்லப்பட்ட ஸ்திரீ தன்னிடம் சீதாவைப் பற்றி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. இந்த விஷயத்தில் இன்னும் ஏதோ மர்மம் இருக்கிறதென்றும் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் எண்ணினான். ஒரு வேளை சீதாதான் உண்மையில் ரஜினிபூர் இளவரசியோ, என்னமோ; இந்தப் போக்கிரி சூரியாவும் அவனுடைய காதலி தாரிணியும் சேர்ந்து ஏதோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ என்னமோ? இல்லாவிட்டால் சீதா தவறாகச் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தும் இவர்கள் ஏன் அவள் தாரிணி இல்லை என்று சொல்லி அவளை விடுவிக்க முயற்சி எதுவும் செய்யவில்லை? "சூரியா! தாரிணிதேவிதான் காணாமற்போன ரஜினிபூர் இளவரசி என்று ஏதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்? ஏன் அந்த ராஜகுமாரி சீதாவாக இருக்கக்கூடாது?" என்றான் ராகவன். சூரியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. "சீதா, ரஜினிபூர் ராஜகுமாரி என்று ஏற்பட்டால், எவ்வளவோ நலமாயிருக்கும், மிஸ்டர் ராகவன்! ஏனெனில், தாரிணிக்கு அந்த 'ராஜகுமாரி' என்கிற பட்டமே வேப்பங்காயாக இருக்கிறது. எனக்கும் அப்படித்தான்; ஆனால் சீதா அத்தங்கா ரொம்பவும் 'ரொமாண்டிக்' இயல்பு உள்ளவள். தான் ராஜகுமாரி என்று ஏற்பட்டால் அத்தங்காளுக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். தங்களுக்கும் அது திருப்தியளிக்கும் என்று தெரிகிறது. அத்தங்கா பேரில் தங்களுக்குள்ள கோபத்தையெல்லாம் மறந்து சந்தோஷம் அடைவீர்கள். ஆனால் அப்படியில்லையே, என்ன செய்வது? யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவர்களுக்குப் பார்த்துக் கொடுக்கிறார்!" என்று சூரியா சொன்னான்.

"உன்னுடைய வேதாந்தம் அப்புறம் இருக்கட்டும். சீதா டில்லியை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதைச் சொல்லுகிறேன், கேட்கிறாயா?" "பேஷாகக் கேட்கிறேன்; சொல்லுங்கள்!" என்றான் சூரியா. அதன் பேரில் ராகவன், திடீரென்று ஒரு நாள் கையில் கத்தியுடன் தோன்றிச் சீதாவைச் சரியாக நடத்தவேண்டும் என்று தனக்கு எச்சரிக்கை செய்து விட்டுப்போன வெறி கொண்ட ஸ்திரீயைப்பற்றிச் சூரியாவிடம் விவரமாகச் சொன்னான். "அந்த ஸ்திரீ யார்? சீதாவைப் பற்றி அந்த வடநாட்டு ஸ்திரீக்கு ஏன் அவ்வளவு சிரத்தை உண்டாக வேண்டும்? உன்னால் சொல்ல முடியுமா?" என்று ராகவன் கேட்டான். "சொல்ல முடியும்" என்று சூரியா சொன்ன பதில் ராகவனைத் தூக்கி வாரிப் போட்டது. "அந்த ஸ்திரீயின் முதல் பெயர் ரமாமணிபாய். இப்போது அவள் பெயர் ரஸியாபேகம், சீதா அத்தங்காள் மீது அவளுக்கு வாஞ்சை ஏற்படக் காரணம் உண்டு. அது பெரிய கதை, மாப்பிள்ளை ஸார்! கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கும் கதை. எனக்கும் வெகு காலம் வரை தெரியாமல்தானிருந்தது. சில மாதத்துக்கு முன்புதான் தெரிந்து கொண்டேன். அதுவும் ரஸியா பேகம் சொல்லித்தான் தெரிந்தது. அந்தத் துர்ப்பாக்யவதி பெரும்பாலும் வெறி கொண்டு திரிகிறவள். அபூர்வமாகச் சில சமயம் அவளுடைய மனம் தெளிகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் தற்செயலாய் அவளைப் பார்த்த போது கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீதா அத்தங்காளிடங்கூட அதைப்பற்றிச் சொல்லவில்லை. தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாதலால் சொல்கிறேன்!"- இந்தப் பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்து ரஸியா பேகத்தைப் பற்றிய அபூர்வ வரலாற்றைச் சூரியா கூறினான்.

முப்பது வருஷத்துக்கு முன்னால் ரஜினிபூர் சமஸ்தானத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருந்த மகாராஜா மற்றும் பல சமஸ்தான மன்னர்களைப் போலவே சிற்றின்பப் பிரியனாயிருந்தான். இராஜ்ய காரியங்களைத் திவானும் பிரிட்டிஷ் ரிஸிடெண்டும் பார்க்கும்படி விட்டுவிட்டுத் தான் லீலா விநோதங்களில் காலங்கழித்து வந்தான். அந்த லீலா விநோதங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பல துர்மந்திரிகள் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவன் மதோங்கர். ஒரு சமயம் ரஜினிபூர் மகாராஜாவின் சபைக்கு மகாராஷ்டிர தேசத்திலிருந்து பாடகி ஒருத்தி வந்து பாடினாள்; அவள் பெயர் கங்காபாய். மகாராஜாவுக்கு அவளுடைய பாட்டு் பிடித்திருந்தது; அவளையும் பிடித்திருந்தது. பாடகியுடன் அவளுக்குத் துணையாக அவள் தமக்கையும் வந்திருந்தாள். தமக்கையின் பெயர் ரமாமணி; அவள் நல்ல தைரியசாலி. உலக விவகாரங்களில் தனக்கு மிஞ்சியவள் கிடையாது என்று அவளுக்கு எண்ணம். மகாராஜாவின் முன்னிலையில் மூன்று நாள் இன்னிசைக் கச்சேரி நடந்த பிறகு மதோங்கர் என்பவன் அந்தப் பெண்கள் தங்கியிருந்த ஜாகைக்கு வந்தான்; பாடகியை மகாராஜாவுக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாகத் தெரியப்படுத்தினான். அதற்கு ரமாமணி, "அப்படியானால் மகாராஜா என் தங்கையைக் கலியாணம் செய்து கொள்ளட்டுமே?" என்றாள். "மகாராஜாவின் உத்தேசமும் அதுதான்!" என்றான் மதோங்கர். ரமாமணி 'கலியாணம்' என்ற வார்த்தையினால் ஏமாந்து போய்விட்டாள். தன் தங்கைக்கு இதோபதேசம் செய்து சம்மதிக்கப் பண்ணினாள். "மகாராஜா எவ்வளவு பெரிய ரஸிகர் என்பதை நீயே பார்த்துத் தெரிந்து கொண்டாய். அவருடைய ராஜ்யமோ ரொம்பக் கீர்த்தி வாய்ந்தது, ஐசுவரியத்துக்கு அளவேயில்லை. இப்படிப்பட்ட அரண்மனையில் மகாராணியாயிருக்கப் பூர்வ ஜன்மத்தில் நீ தவம் செய்திருக்க வேண்டும்" என்றாள். 'கலியாணம்' என்னும் கேலிக்கூத்து நடந்தது. அது கேலிக்கூத்து என்பது அந்தப் பெண்களுக்கு அப்போது தெரியாது. கொஞ்ச நாளைக்குப் பிற்பாடுதான் மகாராஜாவுக்கு ஏற்கெனவே மூன்று கலியாணங்கள் ஆகி அரண்மனையில் மூன்று ராணிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

இதையறிந்து ரமாமணி திடுக்கிட்டாலும் ஆசையையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. அந்த மூன்று ராணிகளுக்கும் குழந்தை இல்லை என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஒருநாள் மகாராஜா கங்காபாயைப் பார்க்க வந்திருந்தபோது அவரைத் தனியாக ரமாமணி சந்தித்தாள். கத்தியைக் காட்டிப் பயமுறுத்தினாள். தன் தங்கைக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை ரஜினிபூர் இளவரசனாக்க வேண்டும் என்று வாக்குறுதி பெற்றார். அவ்விதமே மகாராஜாவிடம் ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். இதெல்லாம் மதோங்கருக்குத் தெரிந்தது. ரஜினிபூர் ராஜ்யம் யாருக்குப் போக வேண்டும் என்பது பற்றி அவனுக்கு வேறு யோசனை இருந்தது. ஆகையால் ரமாமணியின் சூழ்ச்சிக்கு அவன் பதில் சூழ்ச்சி செய்தான். ராணி கங்காபாய்க்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அதைப் பிறந்த உடனே கொன்று விடவேண்டும் என்று மருத்துவச்சியிடம் ஏற்பாடு செய்தான். மதோங்கர்! மருத்துவச்சியிடம் பேசியதை மூன்றாவது மகாராணி கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தர்ம சிந்தையும் உதாரகுணமும் படைத்த உத்தமி. ரமாமணியை அழைத்து வரச் செய்து மதோங்கரின் சிசுஹத்தி ஏற்பாட்டைப் பற்றிக் கூறினாள். பிரசவ காலம் நெருங்குவதற்கு முன்பு நாலாவது மகாராணியை பம்பாய்க்கு அழைத்துக்கொண்டு போய்விடும்படியும் அதற்கு வேண்டிய ஒத்தாசை தான் செய்வதாகவும் கூறினாள். மூன்றாவது மகாராணி கூறியது உண்மை என்பதற்கு வேண்டிய ஹேஷ்யங்கள் ரமாமணிக்குக் கிடைத்தன. மகாராஜாவோ அந்தச் சமயம் ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தார். ஆகவே ரமாமணி மூன்றாவது மகாராணியின் யோசனைப்படியே காரியம் செய்தாள். தங்கை கங்காபாயை அழைத்துக்கொண்டு மதோங்கருடைய காவலாளிகளுக்குத் தெரியாமல் பம்பாய்க்குப் பிரயாணமானாள்.

ராஜபுத்திர நாட்டு வழக்கத்தைக் கங்காபாய் மேற்கொண்டு 'பர்தா' ஸ்திரீகளுக்குரிய முகமுடி அணிந்திருந்தாள். ஆகையால் அவளை அழைத்துக்கொண்டு பிரயாணம் செய்வதில் அதிக கஷ்டம் ஏற்படவில்லை. ஆனால் வேறுவிதமான கஷ்டங்கள் ஏற்பட்டன. கையில் கொண்டு வந்திருந்த பணமும் ரயில் டிக்கட்டுகளும் வழியில் காணாமற் போய்விட்டன. ஆகையால் பம்பாய் நகரையடுத்திருந்த சின்ன ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் டிக்கட் பரிசோதனை செய்த ரயில்வே உத்தியோகஸ்தன் அந்த ஸ்திரீகளிடம் டிக்கட் இல்லையென்று கண்டு அவர்களை இறக்கிவிட்டுவிட்டான். இரண்டு பேரும் பெண்கள், ஒருத்தி ஒன்பது மாதம் கர்ப்பம். கையில் பணம் இல்லை, ஆனால் கங்காபாய் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றை விற்றால் பணம் கிடைக்கும் எங்கே, எப்படி விற்பது? ரமாமணி நகையை விற்பதற்குப் போனால் ஒன்பது மாதத்துக் கர்ப்பிணி ஸ்திரீயை எங்கே விட்டு விட்டுப் போவது? அல்லது யாரிடம் சென்று உதவி கேட்பது? அதுவோ சின்னஞ்சிறிய ஸ்டேஷன்; வேளையோ இரவு வேளை. பம்பாயை அடுத்துள்ள சிறு ஸ்டேஷன்களில் ரயில் வரும்போது கூட்டம் கசகசவென்று இருக்கும். ரயில் போனதும் ஸ்டேஷன் நிர்மானுஷ்யமாகிவிடும். ரமாமணி தங்கையை அழைத்துக் கொண்டு பிரயாணிகள் தங்கும் வெயிட்டிங் அறைக்குச் சென்றாள். கங்காபாய்க்கு நிலைமை இன்னதென்று ஒருவாறு தெரிந்து விட்டது. முகத்தை மூடியிருந்த பர்தா துணிக்குள்ளேயிருந்து விம்மல் சத்தம் கேட்கத் தொடங்கியது. ரமாமணி அவளுக்கு ஆறுதல் கூற முயன்றாள்.

அந்தச் சமயத்தில், "அது என்ன விம்மல் சத்தம்?" என்று தெரிந்து கொள்வதற்காக இராத்திரி ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எட்டிப் பார்த்தார். ஒரு பர்தா ஸ்திரீயையும் பர்தா இல்லாத இன்னொரு ஸ்திரீயையும் கண்டார். அவர்கள் மகாராஷ்டிர தேசத்தவர் என்பதை அறிந்துகொண்டு மராத்தி பாஷையில், "என்ன விஷயம்?" என்று விசாரித்தார். அப்படி விசாரித்த ஸ்டேஷன் மாஸ்டர்தான் சீதாவின் தந்தை துரைசாமி ஐயர். ரமாமணிபாய் அறைக்கு வெளியே வந்து அந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் தங்கள் நிலைமையை ஒருவாறு எடுத்துக் கூறினாள். இராத்திரி தங்க இடம் வேண்டும் என்றும் மறுநாள் காலையில் தன் தங்கையை பம்பாயில் ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். "உதவி செய்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். துரைசாமிக்கு அப்போது சம்பளம் சொற்பம். அவருடைய மனைவி ராஜம்மாள் அதே சமயத்தில் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு முதல் குழந்தை பேற்றை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் செலவுக்குச் சம்பளம் போதாமல் மேல் வரும்படி ஏதாவது கிடைத்தால் தேவலை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. ஆகையினால்தான் "எனக்கு என்ன தருவீர்கள்!" என்று கேட்டார். அந்தப் பெண்களின் தோற்றத்தைப் பார்த்ததில் அவர்களிடம் பணம் நிறைய இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ரமாமணி, "நீங்கள் இந்த சமயத்தில் உதவி செய்தால் எங்களிடம் உள்ள எந்தப் பொருளைக் கேட்டாலும் கொடுத்துவிடத் தயார். என்னையே வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்!" என்று சொன்னாள். துரைசாமிக்கு வெட்கமும் வியப்பும் உண்டாயின. இந்த மாதிரி பதிலை அவர் எதிர்ப்பார்க்கவில்லை.

மனதிற்குள், "சிவ சிவா! ஒரு மனைவியைக் காப்பாற்றுவதே என்னால் முடியாத காரியமாயிருக்கிறது. உன்னையும் கட்டிக்கொண்டு என்னத்தைச் செய்வது?" என்று எண்ணிக் கொண்டார். ஆயினும் அந்தப் பெண்களின் பரிதாப நிலை அவருடைய இதயத்தை இளகச் செய்திருந்தது. "அப்படியெல்லாம் சொல்லவேண்டாம், அம்மா! எனக்குப் பிரதி பிரயோஜனம் ஒன்றும் வேண்டியதில்லை. என்னால் முடிந்த உதவியை உங்களுக்குச் செய்கிறேன்!" என்றார். மறுநாள் காலையில் தன்னுடைய மனைவியை எந்தப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாரோ, அதே ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் கொண்டுப்போய்ச் சேர்த்தார். ஆனால் இது விஷயத்தை அவருடைய மனைவியிடம் சொல்லவில்லை. சொன்னால் வீண் சந்தேகத்துக்கும் வீண் பேச்சுக்கும் இடமாகும் என்று சொல்லவில்லை. தினந்தோறும் பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தம் மனைவியைப் பார்க்கப் போனபோது ரமாமியையும் துரைசாமி பார்த்து வந்தார். ரமாமணி துரைசாமியிடம் அளவில்லாத நன்றி பாராட்டினாள். அந்த நன்றி வெகு சீக்கிரத்தில் அத்தியந்த விசுவாசமாகவும் ஆருயிர்க் காதலாகவும் பரிணமித்து வந்தது. ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இராத்திரியில் ஆஸ்பத்திரியில் குழந்தைப் பேறு அடைந்தார்கள். இதற்குள்ளே மதோங்கர் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு அந்தப் பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தான். ரமாமணிக்கு இது தெரிந்தது, மதோங்கரின் கையில் அகப்படாமல் கங்காபாயுடன் வேறு இரகசிய இடத்துக்குப் போய்விட விரும்பினாள். அதற்கும் துரைசாமியின் உதவியைக் கோரினாள். ரமாமணியின் மோக வலையில் முழுவதும் சிக்கிக் கொண்ட துரைசாமி அவளுடைய கோரிக்கைக்கு இணங்கினார். விஸ்தாரமான பம்பாய் நகரில் சுலபமாய்க் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் ஜாகை பிடித்து அவர்களைக் கொண்டு போய் வைத்தார்.

ரமாமணியும் அவள் தங்கை கங்காபாயும் குழந்தை தாரிணியும் அங்கே வசிக்கத் தொடங்கினார்கள். துரைசாமி தன்னுடைய மனைவி ராஜம்மாளுக்குத் தெரியாமல் ரமாமணியின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தார். தாரிணி பிறந்த வேளையில் பிறந்த ராஜம்மாளின் ஆண் குழந்தை சீக்கிரத்தில் இறந்து போயிற்று. அந்தத் துக்கத்தை மறப்பதற்காகத் துரைசாமி அடிக்கடி ரமாமணியின் வீட்டுக்குப் போய்த் தாரிணியை எடுத்துக் கொண்டு சீராட்டினார். இப்படியாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. ரஜினிபூர் மகாராஜா ஐரோப்பாவிலிருந்து திரும்பினார். ரமாமணி பம்பாயில் அவர் தங்கியிருந்த ஜாகைக்குச் சென்று பேட்டி காண விரும்பினாள். பேட்டி கிடைப்பதே கஷ்டமாயிருந்தது. சண்டை பிடித்துப் பேட்டி கண்டு மகாராஜாவிடம் நிலைமையை பற்றிச் சொன்னபோது ரஜனிபூர் மகாராஜா தமக்கு அவர்களைத் தெரியவே தெரியாது என்று சாதித்துவிட்டார். ரமாமணிபாய் அவர் கைப்பட எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை எடுத்துக் காட்டினாள். மகாராஜாவின் உத்தரவுப்படி அவருடைய ஆட்கள் பலவந்தமாக அந்தக் கடிதத்தை ரமாமணியிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவளை வெளியே துரத்திவிட்டார்கள். ரமாமணி அளவில்லாத துயரத்துடனும் ஏமாற்றத்துடனும் ஜாகைக்குத் திரும்பிச் சென்றாள். கங்காபாயிடம் எல்லா விவரங்களையும் சொன்னாள். கங்காபாய் மூர்ச்சித்து விழுந்தாள். அப்புறம் அவளுடைய உடல்நிலை நாளுக்கு நாள் சீர்க்கேடு அடைந்து வந்தது. சில மாதத்துக்கெல்லாம் கங்காபாய் இந்த மண்ணுலகை நீத்தாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினாறாம் அத்தியாயம்
ரமாமணியின் தோல்வி

தாரிணி உண்மையில் ஒரு ராஜகுமாரி என்று எண்ணியதும் ராகவனுடைய உள்ளம் புயற்காற்றில் அலைகடலைப் போல கொந்தளித்தது. அதுவரை அவனுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்கள் விளங்கின. தாரிணி சாதாரணப் பெண் அல்ல என்று பலமுறை தான் எண்ணியது எவ்வளவு சரியாய்ப் போயிற்று என்று நினைத்துக் கர்வம் கொண்டான். ஒரு ராஜகுமாரியின் காதலுக்குத் தான் ஒரு சமயம் உரியவனாயிருந்தது குறித்துப் பெருமிதம் அடைந்தான். அந்த அபூர்வமான காதலைத் தான் பயன்படுத்திக் கொள்ளாமல் போனதை எண்ணி ஆதங்கம் அடைந்தான். ரஜினிபூர் ராஜ்யமே தனக்கு வந்திருக்க வேண்டியது என்றும், அது அநியாயமாக நஷ்டமாகிவிட்டது என்றும் அவனுடைய அந்தரங்கத்தில் ஒரு சபல நினைவு தோன்றி மறைந்தது! தான் எவ்வளவோ முயன்றும் அறிய முடியாத தாரிணியின் பிறப்பு மர்மத்தை இந்தச் சூரியா அறிந்துகொள்ள முடிந்தது பற்றி ஒரு பக்கம் வியப்பு உண்டாயிற்று. ராஜகுமாரி தாரிணி இந்தச் சூரியாவிடம் அந்தரங்கத்தை வெளியிட்டிருப்பதை எண்ணி மனம் எரிந்தான். தாரிணி, சூரியா, சீதா - ஆகிய மூவர் மீதும் அவனுக்கு அளவில்லாத கோபம் பொங்கி வந்தது. அந்த மூன்று பேரும் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்குச் சதி செய்ததாக அவனுக்குத் தோன்றியது. ஆயினும், இன்னும் சில விவரங்களைச் சூரியாவிடம் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆகையால் தன்னுடைய கோபத்தைக் காட்டி இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்று தீர்மானித்தான். ஆத்திரத்தையும் எரிச்சலையும் அசூயையும் குரோதத்தையும் கஷ்டப்பட்டு மனத்திற்குள் அடக்கிக் கொண்டு, "சூரியா! நீ சொன்ன கங்காபாயின் கதை ஸ்காட் நாவல்களையும் டூமாஸ் நாவல்களையும் தோற்கடிக்கும் அதிசயமான கற்பனைக் கதையைப் போல இருக்கிறது. கேட்பதற்கு வெகு சுவாரஸ்யமாயிருக்கிறது!" என்றான். "கற்பனைக் கதையெல்லாம் மிஞ்சி விடும் உண்மைச் சம்பவங்கள் நம்முடைய சுதேச சமஸ்தானங்களில் எத்தனையோ நடந்திருக்கின்றன. ஆனால் எனக்கு அந்தக் கதைகள் சுவாரஸ்யமா யிருப்பதில்லை. உள்ளத்தைப் பிளக்கும் துக்கத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்குகின்றன. கங்காபாயையும் ரமாமணியையும் போல் எத்தனை ஆயிரம் பெண்கள் துர்க்கதி அடைந்தார்களோ, யாருக்குத் தெரியும்? அவ்வளவு பெண் தெய்வங்களின் சோகக் கண்ணீரும் சாபமும் நம்முடைய சுதேச சமஸ்தானங்களை இன்னும் பொசுக்கி அழித்து விடவில்லையே!" என்று சூரியா கூறினான்.

"அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை. இது கலியுகம் அல்லவா? கற்பரசிகள் சாபங் கொடுத்துப் பொசுக்கும் சக்தியெல்லாம் திரேதாயுகத்துடன் போயிற்று. இப்பொழுதெல்லாம் அக்கிரமக்காரர்களுக்குத்தான் காலம். மேலே சொல்! கங்காபாய் காலமான பிறகு ரமாமணி என்ன செய்தாள். அந்த அதிர்ஷ்டக்கார ஸ்டேஷன் மாஸ்டர் என்னுடைய அருமை மாமனார், - என்ன செய்தார்? வைசம்பாயனரைப் பார்த்து ஜனமேஜய மகாராஜன் கேட்பது போலக் கேட்கிறேன்!" என்றான் ராகவன். "மேலே சொல்லுவதற்கு அதிகம் இல்லை. ஒருவேளை என்னைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆயினும் எனக்குத் தெரியாத மீதி விவரங்களையும் சொல்லி விடுகிறேன்" என்றான் சூரியா. கங்காபாயின் சோக முடிவு ரமாமணியைக் குலுக்கிப் போட்டுவிட்டது. அவளுடைய அறிவே கலங்கிவிட்டது. அந்த நிலைமையில் ரமாமணி இருந்தபோது குழந்தை தாரிணியைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்புத் துரைசாமி ஐயருக்கு ஏற்பட்டது. இதனால் அவருக்கு அக்குழந்தையிடம் ஏற்கெனவே இருந்த பாசம் மேலும் வளர்ந்து உறுதிப்பட்டது.

ரமாமணிபாய்க்கு அறிவு கொஞ்சம் தெளிந்தபோது தன் தங்கையின் அகால முடிவுக்குக் காரணமாயிருந்த ரஜினிபூர் ராஜாவையும் அவருடைய துர்மந்திரி மதோங்கரையும் பழிக்குப் பழி வாங்குவது என்று சங்கல்பம் செய்து கொண்டாள். இந்த உத்வேகமே அவளுடைய உடலுக்கும் உயிருக்கும் வலிமையைத் தந்து எத்தனையோ கஷ்டங்களைச் சகிக்கும் சக்தியை அவளுக்கு அளித்து வந்தது. பழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் குழந்தை தாரிணியை மதோங்கர் வசத்தில் பாதுகாப்பதற்கும் ரமாமணிக்குப் புருஷத் துணை அத்தியாவசமாயிருந்தது. ஆதலின் பெண்மைக்குரிய சகல சாமர்த்தியங் களையும் பிரயோகித்து ஸ்டேஷன் மாஸ்டர் துரைசாமியின் சிநேகத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டாள். துரைசாமி ஐயரின் பாடு, ரொம்பவும் சங்கடமாகத்தான் இருந்தது. அவர் தம்முடைய சொற்ப சம்பளத்தைக் கொண்டு, பம்பாய் நகரில் இரண்டு தனிக் குடும்பங்களை நடத்தவேண்டி வந்தது. பணக்கஷ்டம் அதிகமாயிற்று, அதோடு தன் மனைவி ராஜம்மாளிடம் உண்மை நிலையைச் சொல்லுவதற்கு வழியில்லாததால், பணச் செலவுக்குப் பொய்க் காரணம் சொல்ல வேண்டியதாயிருந்தது. குதிரைப் பந்தய தினங்களில் பந்தயத்துக்குத் தான் போய் வந்ததாகவும் பணம் நஷ்டப்பட்டதாகவும் சொலலி வந்தார். முதலில் பிறந்த ஆண் குழந்தை இறந்து போனதில் ராஜம்மாள் பெருந் துயரத்துக்கு ஆளானாள். அதோடு உத்தமமான ஒழுக்கம் படைத்தவர் என்று தான் எண்ணியிருந்த கணவன் குதிரைப் பந்தயத்துக்குப் போக ஆரம்பித்திருப்பது பற்றிப் பெரிதும் வருந்தினாள். அதைத் தவிர வேறு கெட்ட நடவடிக்கைகளுக்குத் தன் கணவர் ஆளாகியிருப்பாரோ என்ற சந்தேகங்கள் அவள் மனதில் தோன்றின. அவற்றை வெளியிட்டுக் கணவரிடம் கேட்கும் தைரியம் ஏற்படவில்லை. மனதிற்குள்ளேயே துயரத்தை வைத்து வளர்த்து வந்தாள்.

இதற்கிடையில், தாரிணி பிறந்த இரண்டு வருஷத்துக்குப் பிறகு ராஜம்மாளுக்குச் சீதா பிறந்தாள். இதற்குப் பிறகாவது தன் கணவனுடைய நடவடிக்கைகள் திருந்தும் என்று ராஜம்மாள் எதிர்பார்த்தாள். அவ்வித நல்ல மாறுதல் ஏற்படாதது கண்டு மேலும் மனம் குன்றினாள். நாட்கள் வருஷங்களைப் போலவும், வருஷங்கள் யுகங்களைப் போலவும் ராஜம்மாளுக்குப் சென்று வந்தன. ரமாமணிக்கும் அப்படித்தான்; ஆனால் குழந்தைகளான சீதாவுக்கும் தாரிணிக்கும் வருஷங்கள் இறகு கட்டிக் கொண்டு பறந்து சென்றன. துரைசாமி ஐயருக்கோ கழிந்த நாட்களையும் வருஷங்களையும் கணக்குப் பண்ணுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. தாரிணிக்கு வயது வந்தபோது தன்னுடைய தாயும் தகப்பனாரும் உலகத்தில் உள்ள மற்ற தாய் தந்தையரைப் போல் மணம் செய்துகொண்டு வாழ்கிறவர்கள் அல்ல என்னும் விஷயம் தெரிய வந்தது. தன்னுடைய தாயின் மர்மமான காரியங்கள் அவளுக்குப் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஒவ்வொரு சமயம் விலை உயர்ந்த ஆபரணங்களை அவளுடைய தகப்பனாரிடம் தாயார் கொடுத்து விற்றுக்கொண்டு வரச் சொல்லுவதைக் கவனித்திருந்தாள். ஒரு நாள் தாயாரிடம் சந்தேகங்களை வெளியிட்டாள். அதன் பேரில் ரமாமணி ரஜனிபூர் ராஜாவினால் தன்னுடைய தங்கை கங்காபாய்க்கு நேர்ந்த கதியைப் பற்றியும் அதற்குப் பழிக்குப்பழி வாங்கத் தான் தீர்மானித்திருப்பது பற்றியும் தாரிணியிடம் கூறினாள். கங்காபாயின் கதையைக் கேட்டதிலிருந்து தாரிணியின் மனம் தான் பிறந்த தேசத்தின் நிலைமையைப் பற்றிச் சிந்திக்க தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்திலும் சமூகத் தொண்டிலும் ஈடுபடும் ஆர்வம் உண்டாயிற்று.

அச்சமயம் இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த உப்புச் சத்தியாகிரஹ இயக்கத்தில் கலந்து கொண்டாள். பிற்பாடு, பீஹார் பூகம்பத்தைப் பற்றிய செய்தி வந்தபோது பூகம்பத்தினால் துன்புற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகச் சென்றாள். ஏறக்குறைய இதே சமயத்தில் ராஜம்மாள் நீடித்த நோய்வாய்ப் பட்டிருந்தாள் என்றும் பிழைப்பது துர்லபம் என்றும் ரமாமணிக்குத் தெரியலாயிற்று. தன்னால் கஷ்டத்திற்கு ஆளான ராஜம்மாளையும் அவளுடைய குமாரி சீதாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரமாமணியின் மனதில் வெகு காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை நிறைவேறுவதற்கு இதுதான் தருணம் என்று எண்ணினாள். ரஜனிபூர் ஆபரணங்களில் தன்னிடம் மிச்சமிருந்த ஒரே ஒரு ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு துரைசாமி இல்லாத சமயத்தில் ராஜம்மாளைப் பார்க்கச் சென்றாள். சீதாவின் கலியாணத்துக்கு என்று ரத்தின ஹாரத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டுத் திரும்பினாள். இந்த முக்கியமான கடமை தீர்ந்த பிறகு ரமாமணி தன் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற முயன்றாள். பம்பாய்க்கு வந்திருந்த ரஜனிபூர் ராஜாவைக் கத்தியினால் குத்திக் கொல்லப் பிரயத்தனம் செய்தாள். அந்தப் பிரயத்தனம் பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்ததாகச் சிறையில் அடைக்கப்பட்டாள். சிறையில் இருந்தபோது ரமாமணியின் பைத்தியம் முற்றியது. சிறையி லிருந்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் சென்று சில காலத்துக்குப் பிறகு அங்கிருந்து விடுதலை அடைந்தாள். ரஜனிபூர் ராஜாவும் அதற்குப் பிறகு அதிக காலம் உயிரோடிருக்கவில்லை. ஆகவே விடுதலையாகி வந்த ரமாமணி அடுத்தாற்போல் தான் பழி தீர்க்க வேண்டிய மதோங்கரின் பேரில் கவனம் செலுத்தினாள். புது டில்லியின் சாலைகளில் அலைந்து திரிந்து மதோங்கரைத் தனியாகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த முயற்சியிலும் ரமாமணி தோல்வியே அடைந்தாள். ஏனெனில், அவள் மதோங்கரை வெகு காலம் தேடிக் கொண்டிருந்தது கடைசியில் ஒரு நாள் பிடித்து விட்டோ ம் என்று எண்ணிய சமயத்தில், ரமாமணிக்கு முன்பாகவே மதோங்கரின் பேரில் பழி தீர்க்க விரும்பியவன் ஒருவன் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டான்!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினேழாம் அத்தியாயம்
படிகள் பிழைத்தன!

கங்காபாய் - ரமாமணி இவர்கள் சோகக் கதையைக் கூறிவிட்டுச் சூரியா சௌந்தரராகவனைப் பார்த்து, "மாப்பிள்ளை ஸார்! யாரோ ஒரு வடக்கத்தி ஸ்திரீ வந்து சீதா அத்தங்காளைப் பற்றி எச்சரித்தாள் என்றீர்களே? அவள் ரமாமணி என்கிற ரஸியா பேகமாகத்தானிருக்க வேண்டும். சீதாவினிடம் அவள் சிரத்தை கொள்ளக் காரணம் உண்டு என்பது தெரிகிறதல்லவா?" என்றான். "தெரிகிறது, சூரியா! ஆனால் நீ என்ன, இந்தக் காலத்துக் கதை ஆசிரியர்களைப் போல், சடக்கென்று கதையை மொட்டையாக முடித்துவிட்டாயே? கதாநாயகர்களும் கதாநாயகிகளும் பிற்பாடு என்ன ஆனார்கள் என்று சொல்ல வில்லையே?" என்று ராகவன் கேட்டான். "எனக்குத் தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். நீங்கள் இன்னும் யாரைப் பற்றி என்ன கேட்கிறீர்கள்?" என்றான் சூரியா. "ஏன்? என்னுடைய அருமந்த மாமனாரைப் பற்றிக் கேட்கிறேன். என்னுடைய கலியாணத்துக்குப் பிறகு அவரை நான் ஒரு தடவை கூடப் பார்த்ததேயில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?" என்று ராகவன் கேட்டான். "அதுதான் எனக்கும் தெரியவில்லை. ரஸியா பேகம் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவர்களை நானும் தாரிணியும் எவ்வளவோ தேடித் தேடிப் பார்த்தோம்; பயனில்லை!" என்றான் சூரியா. "எதற்காகத் தேடினீர்கள்?" என்று ராகவன் கேட்டான். "தாரிணிக்குத் தன்னுடைய வரலாற்றில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்தச் சந்தேகத்தைத் தீர்க்க கூடியவர்கள் துரைச்சாமி ஐயரையும் ரமாமணியையும் தவிர வேறுயாரும் இல்லை!" என்று சூரியா சொல்லிவிட்டு, முகத்தில் புன்னகையுடன், "மிஸ்டர் ராகவன்! அதுவல்லாமல் இன்னொரு காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் பெற வேண்டியதாயிருக்கிறது! அதற்காகவும் தேடினோம். இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றான்.

சூரியாவின் குரலும் முகப்பொலியும் ராகவனுடைய மனதில் ஓர் ஐயத்தை உண்டாக்கின. "என்ன காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும்?" என்று கேட்டான். "நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். எனினும், நீங்கள் கேட்கிறபடியால் சொல்லி விடுகிறேன். எப்படியும் ஒருநாளைக்குத் தெரிய வேண்டியதுதானே? நானும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித்திருக்கிறோம்!..." ராகவன் கலகலவென்று சிரித்துவிட்டு, "அட சூரியா! உன்னைப் புத்திசாலியென்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன்!" என்றான். "அந்த அபிப்பிராயம் இப்போது தவறு என்று தோன்றுகிறதா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; இல்லாவிட்டால் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுவாயா? - இத்தனை நாள் அவளுடன் பழகிவிட்டு? இதைக் கேள், சூரியா! தாரிணியை ஒரு சமயம் நானே கலியாணம் செய்து கொள்ள எண்ணியிருந்தேன். அவளும் என்னைக் காதலிப்பதாக வேஷம் போட்டு நடித்தாள். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்." "ராகவன்! தாரிணியைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். தாரிணி வேஷம் போட்டு நடித்தாள் என்று சொன்னால் அவளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்!" "என்னைவிட அவளை நீ நன்றாக அறிந்து கொண்டிருப்பதாக எண்ணமாக்கும்!" என்றான் ராகவன். "அதில் சந்தேகமில்லை, தாரிணியை உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவளை வேஷம் போட்டாள் என்றோ, நடித்தாள் என்றோ சொல்லமாட்டீர்கள்!" "ஒரு சமயம் என்னைக் காதலித்ததாகக் கூறியவள் இப்போது உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போவது பற்றி என்ன சொல்கிறாய்? இரண்டிலே ஒன்று பொய்யாகத்தானே இருக்கவேண்டும்?"

"ஒரு நாளும் இல்லை யாருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு அல்லவா? ஏதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதைத்திருத்திக் கொள்ள வேண்டாமா? தங்களிடம் ஒரு காலத்தில் தாரிணி அன்பு கொண்டிருந்தது உண்மை. அது வேஷமும் அல்ல; நடிப்பும் அல்ல. ஆனால் பிற்பாடு தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களுக்குப் பொருத்தமில்லை என்று தெரிந்த பிறகு தங்கள் விஷயத்தில் அவளுடைய மனதை மாற்றிக்கொண்டாள், அது எப்படித் தவறாகும்?" "சூரியா! நீ வக்கீல் வேலைக்குப் போயிருக்க வேண்டும். போயிருந்தால் நல்ல பெயர் வாங்கியிருப்பாய். கெட்டிக்கார வக்கீலைப் போல் தாரிணியின் கட்சி பேசுகிறாய் ஆனால் அது வீண். தாரிணியைப் பற்றி உன்னைவிட எனக்கு நன்றாய்த் தெரியும். என்னைக் காதலிப்பதாக அவள் வேஷம் போட்டது எதற்காக என்றும் தெரியும். வேறொன்று மில்லை, கேவலம் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காகத்தான்! சுதேசராஜாக்களின் சபைகளைத் தேடிக்கொண்டு போன பாடகியின் மகள் தானே? அவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?" சூரியா கொதித்து எழுந்து, "ராகவன்! ஜாக்கிரத்தை! தாரிணியின் ஒழுக்கத்தைப்பற்றி ஏதாவது சொன்னால்....?" என்றான். மேலே பேசவரவில்லை. அவனுடைய உதடுகள் துடித்தன. "ஏதாவது சொன்னால், என்னடா அப்பா செய்வாய்? ஒரே குத்தாய்க் குத்திக் கொன்று விடுவாயோ? ரஸியா பேகத்தைப் போல!" என்று ராகவன் ஏளனம் செய்தான்.

"சரி, மாப்பிள்ளை! உங்களுடன் பேசுவதில் பிரயோஜனம் இல்லை, நான் போய் வருகிறேன்!" என்று சூரியா புறப்பட்டான். "அடடே! அப்படியெல்லாம் கோபித்துக் கொண்டு கிளம்பாதே, அப்பா! உன் அருமை அத்தங்காள்; - ஒழுக்கத்தில் சிறந்த துரைசாமி ஐயரின் செல்வப்புதல்வி, - சீதா இப்போது எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்லிவிட்டாவது போ. அவளைப்பற்றி நான் ஏதாவது சொன்னால் கூடச் சண்டைக்கு வருவாயோ என்னமோ? என்னைக் காட்டிலும் சீதாவை உனக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னாலும் சொல்லுவாய்! நான் தாலி கட்டிய புருஷன்தானே? நீ அருமை அம்மாஞ்சி அல்லவா!" சூரியா தரையை நோக்கிக் குனிந்து நின்றான். அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழேயும் விழுந்தது. "இது என்னடா, சூரியா! பெண்பிள்ளை மாதிரி கண்ணீர் விடுகிறாய்? உன் அத்தங்கா சீதாவின் பெயரைச் சொன்னதுமே இப்படி உடலும் உள்ளமும் உருகிவிடுகிறாயே? அவளுக்கும் உனக்கும் அப்படி என்ன அந்தரங்க சிநேகிதம்..." என்றான் ராகவன். சூரியா கண்களைத் துடைத்துக்கொண்டு பளிச்சென்று ராகவனை நிமிர்ந்து பார்த்து, "என்னை எது வேணுமானாலும் சொல்லுங்கள். தாரிணியைப் பற்றி வேணுமானாலும் சொல்லுங்கள். ஆனால் சீதாவின் பேரில் அவதூறு சொல்கிறவர்களின் நாக்கு அழுகிப் போகும். அத்தகைய பாதகர்கள் கொடிய நரகத்துக்குப் போவார்கள். பூமி பிளந்து அவர்களை விழுங்கி விடும்!" என்றான். சூரியா கூறிய கடுமொழிகளைக் கேட்டு, ராகவன் கூடச் சிறிது பயந்து போனான்.

சூரியா மேலும் கூறினான்:- "சீதாவைப் பற்றி எனக்கு என்ன இவ்வளவு கரிசனம் என்று கேட்டீர்கள் அல்லவா? இதோ சொல்லுகிறேன், சீதாவின் தாயார்:- என்னுடைய அத்தை - கடைசி மூச்சுப் போகும் சமயத்தில் - 'சீதாவைக் கவனித்துக் கொள்!' என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள். அது மட்டுமல்ல, உங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நடந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவன் நான். இன்று வரையில் ஒருவரிடமும் நான் சொல்லாத விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள் உங்களுடைய கலியாணத்தன்று அத்திம்பேர் துரைசாமி ஐயர் மாங்கல்யதாரணம் நடந்த பிறகு வந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஆகையினால்தான் என்னுடைய மூத்த அத்திம்பேர் சீதாவை கன்னிகாதானம் செய்து கொடுக்க நேரிட்டது. கலியாணத்தன்று முதல் நாள் என் தகப்பனாருக்கு ஒரு தந்தி வந்தது. 'சீதாவின் கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று தந்தியில் கண்டிருந்தது. துரைசாமி ஐயர் என்று கையெழுத்தும் இருந்தது. அந்தத் தந்தி என்னிடம் கிடைத்தது. அதை நான் என் தகப்பனாரிடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் இல்லை. மாப்பிள்ளை! நீங்கள் முதன் முதலில் என் தங்கை லலிதாவைப் பார்க்க ராஜம்பேட்டைக்கு வந்தீர்கள். அப்போது தற்செயலாகச் சீதாவும் நீங்களும் பார்த்துக் கொண்டீர்கள். அன்று வரையில் கற்பனை உலகத்திலே மட்டுந்தான் காதல் உண்டு என்று நினைத்திருந்தேன். வாழ்க்கையின் புருஷன் மனைவி சண்டைகளை மட்டுந் தான் பார்த்திருந்தேன். 'கண்டதும் காதல்' என்பது உங்கள் விஷயத்தில் உண்மையானதை என் கண்முன்னே கண்டு பரவசமடைந்தேன்.

அப்படி மனமொத்துக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ளும் உங்களுக்கு நடுவில் தடையாக வருவதற்குச் சீதாவின்தகப்பனாருக்குக் கூடப் பாத்தியதை கிடையாது என்று எண்ணினேன். கலியாணம் நடந்தது, அரைமணி நேரத்துக்கெல்லாம் துரைசாமி ஐயர் வந்தார். 'தந்தி வந்ததா!' என்று கேட்டார். நான் செய்ததைச் சொல்லி, திருமாங்கல்ய தாரணமும் ஆகிவிட்டது என்று சொன்னேன். 'சரி! கடவுளுடைய சித்தம் அப்படியிருக்கும் போது நான் என்ன செய்யலாம்?" என்று துரைசாமி ஐயர் கூறினார். இவ்வளவும் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் வருகிறது" என்று சொல்லி நிறுத்தினான் சூரியா. இதைக் கேட்ட ராகவனுடைய உள்ளத்தில் கோபம் மேலும் கொந்தளித்துப் பொங்கிற்று. ஆகா! இந்த அதிகப் பிரசங்கி எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையையே பாழாக அடித்துவிட்டான்? இவன் ஏன் குறுக்கிட்டுத் துரைசாமி ஐயரின் தந்தியை அமுக்கியிருக்க வேண்டும். இவன் குறுக்கிடாதிருந்தால் தன் வாழ்க்கையின் போக்கே வேறுவிதம் ஆகியிருக்கலாமல்லவா? எனினும், கோபத்தைவிட விஷயத்தை அறியும் ஆவல் அச்சமயம் ராகவனுக்கு அதிகமாயிருந்தது. "ரொம்ப சரி! உன்னுடைய செய்கையின் நியாயாநியாயத்தைப் பற்றிப் பிறகு கவனிக்கலாம். ஆனால் துரைசாமி ஐயர் எதற்காக அப்படிக் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்தி கொடுத்தார்?" என்று ராகவன் கேட்டான்.

"ரமாமணி என்கிற ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்துச் சிறை தண்டனை பெற்ற சமயத்தில் தாரிணி பீஹாரில் இருந்தாள். அவளைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகத் துரைசாமி ஐயர் பீஹாருக்குப் போனார். தாரிணி தன் தாயாரின் கதியைப் பற்றி அறிந்து அளவில்லாத துயரமும் அவமானமும் அடைந்தாள். தாரிணியின் வருங்காலத்தைப் பற்றிச் சர்ச்சை நடந்தது. தாரிணி இல்வாழ்க்கையை ஏற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று துரைசாமி ஐயர் விரும்பினார். ரமாமணியிடமிருந்து உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தபடியால் தாரிணியின் மனதை அறிய முயற்சித்தார். அதற்கு முன்னாலேயே உங்களுக்கும் தனக்கும் பொருந்தாது என்ற சந்தேக் தாரிணிக்கும் இருந்தது. தாய் சிறை புகுந்த செய்திக்குப் பிறகு உங்களை மணந்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டாள். துரைசாமி ஐயரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டார். தாரிணி வாழ்க்கையில் ஆதரவின்றித் திரியாமல் உங்களை மணந்து சுகமாயிருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தச் சமயத்தில் ராஜம்பேட்டையில் தங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நிச்சயமா யிருந்தது. ஆகையினால்தான் அப்படித் தந்தி கொடுத்தார்...."

"சூரியா! அந்தத் தந்தியை நீ அதிகப் பிரசங்கித்தனமாக அமுக்கிவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போதாவது உணருகிறாயா!" என்றான் ராகவன். "மாப்பிள்ளை! நான் தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளமாட்டேன். கடவுளுடைய சித்தம் அவ்விதம் இருந்தது. இன்னமும் நான் சொல்லுகிறேன், உங்களுக்கும் சீதாவுக்கும் தான் பொருத்தம். தாரிணிக்கும் உங்களுக்கும் இலட்சிய ஒற்றுமை ஏற்பட்டிராது. உங்களுடைய இல்வாழ்க்கையும் வெற்றியடைந்திராது!" "நானும் உன் அத்தங்காளும் வெகு ஆனந்தமான இல்வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தினோம் என்பது உன் எண்ணமாக்கும்!" "ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, மாப்பிள்ளை! எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. சீதா தங்களிடம் வருவதற்குக் காத்திருக்கிறாள். ஏற்கெனவே ஏதாவது நேர்ந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு உங்களையே தெய்வமாகப் பாவிக்கக்கூடிய நிலையில் இருக்கிறாள். அத்தங்காளுக்கு ஒரு வரி கடிதம் எழுதிப் போடுங்கள். உடனே விரைந்து ஓடி வராவிட்டால் என்னைக் கேளுங்கள்." "சூரியா! நீ சொல்வது இந்த ஜன்மத்தில் நடக்கிற காரியம் அல்ல. சீதாவை வரும்படி கடிதம் எழுதுவதைக் காட்டிலும் என்னுடைய கையையே வெட்டிக் கொண்டுவிடுவேன். அவள் பட்டாபிராமனுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு சுகமாயிருக்கட்டும். பட்டாபிராமனையே மறுமணம் வேணுமானாலும் செய்து கொள்ளட்டும்! விவாகரத்துக் கொடுக்க நான் தயார்!" என்றான் ராகவன். "ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள். சொன்னீர்கள் என்று தெரிந்தாலே சீதா பிராணனை விட்டு விடுவாள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்; போனதெல்லாம் போகட்டும். அதையெல்லாம் மறந்துவிட்டு மறுபடியும் சீதாவுடன்

இல்வாழ்க்கை ஆரம்பித்துப் பாருங்கள். நிச்சயமாகச் சந்தோஷமாக வாழ்வீர்கள். ராகவன்! நீங்களும் சீதாவும் அன்யோன்யமாக இல்லறம் நடத்தினால் அதைக்காட்டிலும் எனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய காரியம் வேறு ஒன்றும் இல்லை." ஏற்கனவே ராகவனின் உள்ளம் எரிந்து கொண்டிருந்ததல்லவா? சூரியா தாரிணியின் பெயரைக் குறிப்பிட்டது எரிகிற தீயில் குங்கிலியத்தைப் போட்டது போலாயிற்று. "சூரியா! உனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம் என்று உனக்கு எண்ணமா? நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதற்காகத் தானா?" என்று சொல்லிக் கொண்டே ராகவன் எழுந்து சூரியாவின் அருகில் வந்து நின்று கொண்டான். "அடே! முட்டாள்! ஜாக்கிரதை! எனக்கு வீணில் கோபம் மூட்டாதே!" என்று இரைந்து கத்திவிட்டுச் சூரியாவின் கண்ணத்தில் பளீர் என்று ஓர் அறை அறைந்தான். சூரியா கையை ஓங்கிவிட்டு உடனே கீழே போட்டான். "ஏன் கையை ஓங்கிவிட்டுக் கீழே போட்டாய்? மகாவீரனாயிற்றே நீ!" என்றான் ராகவன். "மாப்பிள்ளை! முன்னேயாயிருந்தால் உங்களுடைய ஓர் அறைக்கு ஒன்பது அறை கொடுத்திருப்பேன். ஆனால் நானும் தாரிணியும் சமீபத்தில் எங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டோ ம். பலாத்காரத்தினால் பயன் சிறிதும் இல்லை என்று கண்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தை அனுசரிக்கத் தீர்மானித்திருக்கிறோம். அந்தத் தீர்மானத்துக்கு முதல் சோதனை தங்களால் ஏற்பட்டிருக்கிறது....."

"ஓஹோ அப்படியா? மகாத்மாவின் கட்சியைச் சேர்ந்து விட்டாயா? 'ஒரு கன்னத்தில் அடித்தவர்களுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு' என்கிற ஏசுநாதரின் போதனைதானே மகாத்மாவின் போதனையும்! அப்படியானால் இதையும் வாங்கிக் கொள்!" என்று இன்னொரு கன்னத்தில் இன்னொரு அறை அறைந்தான். சுளீரென்று கன்னம் வலித்தது; தலை முதல் கால் வரையில் அதிர்ந்தது. சூரியா பல்லைக் கடித்துக் கொண்டு, "உங்களுக்கு இப்போதாவது திருப்தி ஆயிற்று அல்லவா? மனம் குளிர்ந்து விட்டது அல்லவா? போய் வருகிறேன்!" என்றான். "எனக்கு இன்னும் திருப்தி இல்லை, அப்பனே! சுலபத்தில் என்னுடைய மனம் குளிர்ந்து விடாது!" என்று சொல்லி ராகவன் சூரியாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். "இதோ பார்! சூரியா! இனிமேல் தாரிணியையாவது சீதாவையாவது நீ பார்த்துப் பேசுவதில்லை என்று சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன்னை இந்த நிமிஷமே கொன்று விடுவேன்!" என்றான். "மாப்பிள்ளை! நீங்கள் கேட்பது கொஞ்சம்கூட நியாயம் இல்லை. சீதாவை நான் பார்ப்பதில்லை என்று ஏன் சத்தியம் செய்ய வேண்டும்? என் மனதில் கல்மிஷம் ஒன்றும் கிடையாது. தாரிணி விஷயத்தில் எந்தவிதமான வாக்குறுதியும் நான் கொடுக்க முடியாது.

நீங்கள் வேணுமானால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். சீதா அத்தங்காளும் தாரிணியும் உங்கள் தாயாரும் குழந்தை வஸந்தியும் உங்கள் காரியத்தைப் பற்றிச் சந்தோஷப்படுவார்கள். வாசலில் காத்திருக்கும் சி.ஐ.டி.க் காரனும் சந்தோஷப்படுவான்!" என்றான் சூரியா. "அடே! முட்டாள்! என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தலாம் என்றா பார்க்கிறாய்?" என்று ராகவன் சொல்லி விட்டுப் பூரண பலத்துடன் சூரியாவைப் பிடித்துத் தள்ளினான். சூரியா மச்சுப் படியில் உருண்டு கொண்டே போய் நடுவில் இருந்த திருப்பத்தில் சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். இதற்குள் சூரியா விழுந்த சத்தத்தைக் கேட்டுவிட்டு வஸந்தியும் பாட்டியும் ஓடிவந்தார்கள். "இதென்ன சூரியா மாமா? மச்சிலிருந்து விழுந்து விட்டாயா என்ன? ஐயையோ?" என்றாள் வஸந்தி. "ஆமாம் கால் தடுக்கி விழுந்து விட்டேன்!" என்றான் சூரியா. "வஸந்தி! சூரியா தடுக்கி விழுந்து விட்டான். நல்லவேளையாக அதனால் மச்சுப்படிகளுக்குச் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை; படிகள் பிழைத்தன!" என்று ராகவன் கூறி விட்டு, தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே 'ஹே!' என்று சிரித்தான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினெட்டாம் அத்தியாயம்
பட்டாபியின் வெற்றி

தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. "பட்டாபிராமன் வாழ்க! கறுப்பு மார்க்கெட் வீழ்க!" என்ற கோஷம் மூலை முடுக்குகளிலெல்லாம் எழுந்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் தலை நரைத்த வயோதிகர்கள் வரையில் அன்று நடந்த அதிசயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். கறுப்பு மார்க்கெட் வியாபாரத்தில் கொள்ளைப்பணம் சம்பாதித்த பழைய சேர்மன் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் முப்பதினாயிரம் ரூபாய் வாரி இறைத்திருந்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருந்தது. வோட்டு ஒன்று நூறு ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கப் பழைய சேர்மன் பிரம்ம பிரயத்தனம் செய்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆனாலும் அவருக்கு எதிராக நின்ற பட்டாபிராமன் பெரும்பான்மை வோட்டுக்கள் பெற்று வெற்றி அடைந்தான் பொது ஜன அபேட்சகராகிய பட்டாபிராமன் வெற்றியடைந்தது பற்றித் தேவபட்டணத்துப் பொது மக்கள் எல்லோரும் அளவிலாத ஆனந்தமடைந்தார்கள். பலவிதங்களிலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பட்டாபிராமன் வெற்றி பெற்றதாக வோட்டு முடிவு வெளியானவுடனே ஜயகோஷங்கள் வானளாவ எழுந்தன. "பட்டாபிராமன் எங்கே?" என்று கேட்கும்படியாகப் பூமாலைகள் அவனுடைய தலைக்குமேலே எழுந்து அவன் முகத்தையே மறைத்து விட்டன. முன் ஏற்பாடு எதுவும் இல்லாமலே ஊர்வலம் ஒன்று ஆரம்பமாயிற்று. திறந்த மோட்டார் வண்டி ஒன்றில் பட்டாபிராமனைப் பலவந்தமாகப் பொதுஜனங்கள் ஏற்றி வைத்தார்கள். எங்கிருந்தோ நாதஸ்வர வாத்தியமும் பாண்டு கோஷ்டியும் வந்து சேர்ந்தன. ஊர்வலமும் தேவபட்டணத்து வீதிகளில் எல்லாம் சாவகாசமாகச் சுற்றி வந்து கடைசியில் பட்டாபிராமனுடைய வீட்டில் அவனைக் கொண்டு வந்துவிட்ட பிற்பாடு கலைந்தது.

பொது ஜனங்கள் எல்லாரும் போன பிற்பாடு சில ஆப்த நண்பர்களும் பிரமுகர்களும் பட்டாபிராமனைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள்ளே வந்தார்கள். பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்த நாற்காலிகளில் எல்லாம் அவர்கள் உட்கார்ந்தும் இடம் போதாமல் பலர் ஜன்னல் விளிம்புகளிலும் உட்கார வேண்டியிருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியே பட்டாபிராமனைப் பாராட்டினார்கள். "பட்டாபிராமன் சேர்மன் ஆவது நிச்சயம்" என்று சபதம் கூறினார்கள். சில பெரியவர்கள் வயதின் உரிமை எடுத்துக் கொண்டு, "மிஸ்ஸஸ் பட்டாபிராமன் எங்கே?" என்று கேட்டார்கள். சந்தோஷம் ஒரு பக்கமும் சங்கோசம் ஒரு பக்கமும் பிடுங்கித்தின்ன, ஸ்ரீ மதி லலிதா அங்கே வந்து சேர்ந்தாள். "இந்த வெற்றியெல்லாம் உங்களுடைய அதிர்ஷ்டபலத் திலேதான்!" என்று லலிதாவைப் பார்த்துத் தனித்தனியாகப் பலர் உபசாரம் சொன்னார்கள்.லலிதா அங்கிருந்துபோன பிறகு ஒருவர், "அந்த அம்மாளுக்கு உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். பட்டாபிராமனுடைய முகம் சுருங்கிற்று. "பரவாயில்லை!" என்று சொன்னான். "சீதா அம்மாளைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்? அவருடைய உடம்புக்கு என்ன வந்தது? மனதுதான் ரொம்பவும் நொந்து போயிருக்கும்!" என்றார் இன்னொரு நண்பர். "பொது வாழ்க்கை என்றால் இந்த மாதிரி எத்தனையோ தான் இருக்கும். வம்புக்காரர்களுடைய பொய்களுக்கெல்லாம் பயந்து விடவும் கூடாது; மனதைச் சோர்வடைய விட்டு விடவும் கூடாது!" என்றார் எதிர் வீட்டுத் தாமோதர முதலியார். "மிஸ்டர் பட்டாபிராமன்! நீங்கள்தான் சீதா அம்மாளுக்கு தைரியம் சொல்லித் தேற்ற வேண்டும்" என்றார் அட்வகேட் அப்பாராவ்.

"என்ன இருந்தாலும் இந்த மாதிரி அயோக்கியத்தனமாகவா அவதூறு சொல்கிறது? எனக்கு என்னமோ நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது!" என்றான் பட்டாபிராமன். "அப்பா, பட்டாபி! அப்படியெல்லாம் இரத்தத்தைக் கொதிக்கும்படி விட்டு விடாதே! நீ எலெக்ஷனுக்கு நிற்க உத்தேசித்தபோது நான் உனக்கு எச்சரிக்கை செய்யவில்லையா? எலெக்ஷன் என்றால் இப்படித்தான் குப்பை கூளம் எல்லாம் வெளியில் வரும். அதற்காக, 'ஆஹா ஊஹூ' என்று அலறுவதில் பிரயோசனமில்லை!" என்று சொன்னார் தாமோதர முதலியார். "அதெல்லாம் இல்லை, ஸார் இந்த மாதிரி காலிப்பயல்களைச் சும்மா விட்டுவிடக் கூடாது. துண்டுப் பிரசுரம் போட்டவனைக் கோர்ட்டுக்கு இழுத்துச் சந்தி சிரிக்க அடிக்க வேண்டும்!" என்றார் ஒரு ஆக்ரோஷக்காரர். "கோர்ட்டுக்குப் போவது பிசகு, அவதூறு கேஸுகளில் புரூப் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பது நமக்குத் தெரியாதா என்ன? பேசாமல் 'பினீத் கண்டெம்ட்' என்று விட்டுவிடுவது தான் சரி!" என்றார் அட்வகேட் அப்பாராவ். "அதுதான் ஸார், சரி! சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் சந்திரனுக்கு என்ன குறைவு வந்துவிடும்?" என்றார் ஒரு சாந்தமூர்த்தி. "நமக்கு அப்படித் தோன்றுகிறது ஆனால் சந்திரனுக்கு என்ன தோன்றுகிறதோ, என்னமோ!" என்றார் ஒரு ஹாஸ்யப் பிரியர். கடைசியாக, பட்டாபிராமன் அவனுடைய மகத்தான வெற்றியைக் குடும்பத்தோடு சேர்ந்து அனுபவிக்கட்டும் என்று விட்டு விட்டு எல்லாரும் போய்ச் சேர்ந்தார்கள்.

மேற்கூறிய சம்பாஷணையில் சீதாவைப்பற்றிக் கூறப்பட்ட அனுதாப வார்த்தைகள் வாசகர்களுக்கு அவ்வளவாக விளங்காமலிருக்கலாம். விஷயம் என்னவென்று கேட்டால்:- வோட்டுப் போடும் தினத்துக்கு முதல் நாளைக்கு முன்னாள் பட்டாபிராமனை ஆதரித்துக் கடைசிப் பெரும் பொதுக் கூட்டம் நடந்தது. கேவலம் முனிஸிபல் தேர்தல் கூட்டங்களில் சாதாரணமாகக் கண்டிராத பெரும் கூட்டம் கூடியிருந்தது, சுமார் ஐயாயிரம்பேர் இருக்கும். மேடையில் அபேட்சகர் பட்டாபிராமனோடு இன்னும் பல பிரமுகர்களும் பெண்மணிகளும் அமர்ந்திருந்தார்கள். பெண்மணிகளிலே சீதாவும் இருந்தாள். சென்ற ஒன்றரை மாதமாகத் தேர்தல் வேலை செய்ததில் சீதா பிரமாதமான பிரசங்கி ஆகிவிட்டாள். அவளுடைய பேச்சிலே தேசபக்தி ததும்பிற்று; ஆவேசம் பொங்கிற்று; வீரசுதந்திரம் தாண்டவ நர்த்தனம் செய்தது; கறுப்பு மார்க்கெட் சின்னாபின்னமடைந்தது; அக்கிரமமும் அநீதியும் அதோகதி அடைந்தன. பட்டாபிராமனை ஆதரித்த சீதாவின் வார்த்தைகள் அன்பும் ஆதரவும் உருக் கொண்டவையாக வெளிவந்தன. எதிரி அபேட்சகரைத் தாக்கி அவளுடைய சொற்களோ இராமபாணங்களைப்போல் விர்ரென்று பாய்ந்து சென்று அக்கிரமத்தின் உயிர் நிலையில் தைத்தன. ஆகையால் சபையோர் எல்லோரும் வீராங்கனையான ஸ்ரீ மதி சீதாதேவி எப்போது பேசப் போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டி ருப்பது வழக்கமாகி விட்டது. மற்றவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் ஏதோ சகித்துக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் கடைசியாக நடந்த பெரும் பொதுக் கூட்டத்தின் போது சபையோர் பெரும் ஏமாற்றம் அடையும்படி நேர்ந்தது. ஏனெனில் ஸ்ரீ மதி சீதாவின் பேச்சு அன்று நடைபெறவில்லை. வழக்கம்போல் சீதா எழுந்தது என்னமோ உண்மைதான். ஆனால் மூன்று நாலு வாக்கியங்களுக்குமேல் பேசவில்லை; பேச முடியவில்லை. அந்த மூன்று நாலு வாக்கியங்களையும் சீதா விம்மலுடன் பேசினாள் பிறகு குபீரென்று பெரிய அழுகையாக வந்துவிட்டது. எனவே பேச்சை நிறுத்திக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். நல்ல வேளையாகக் கூட்டத்தில் குழப்பம் எதுவும் ஏற்படாமல் மேடையில் இருந்த பிரமுகர்களும் ஸ்திரீகளும் அங்கிருந்து கலைந்து போக முடிந்ததைப் பற்றியே அனைவரும் சந்தோஷப்பட வேண்டியதாயிற்று. சீதாவின் விபரீத நடவடிக்கைக்குக் காரணமாயிருந்தது இதுதான்:- அன்று பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஜனக் கூட்டத்தின் ஓரப் பக்கங்களில் யாரோ ஒருவன் ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தான். அதைக் கையில் வாங்கிப் படித்தவர்கள் எல்லாரும் மேடைமீதிருந்த சீதாவை உற்றுப் பார்க்கலானார்கள். மேற்படி துண்டுப் பிரசுரங்கள் கைமாறி மாறிக் கூட்டத்தில் பரவிக் கொண்டேயிருந்தன. அநேகருடைய கவனம் மேடையில் நின்று பேசுகிறவர்கள் மீதோ அவர்களுடைய பேச்சிலோ செல்லவேயில்லை. திரும்பத் திரும்ப சீதாவையே அவர்கள் நோக்கிக் கொண்டிருந்தார்கள். சிலருடைய நோக்கில் பரிதாபம் இருந்தது; சிலருடைய பார்வையில் ஆத்திரம் அதிகம் இருந்தது; வேறு சிலருடைய பார்வையில் ஏளனமும் கலந்திருந்தது.

இப்படிக் கூட்டத்தில் பலர் ஏதோ ஒரு பிரசுரத்தைப் பார்ப்பதும் பிறகு தன்னைப் பார்ப்பதுமாயிருந்ததைச் சீதாவும் சிறிது நேரத்தில் கவனிக்கும்படி நேர்ந்தது. இன்னது என்று விளக்கமில்லாத கவலையும் பீதியும் அவள் மனதில் உதித்தன. அந்தப் பிரசுரத்தை வாங்கிப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் பிரசுரத்தை விநியோகித்தவன் பிரசங்க மேடைக்கு அருகில் வந்து அதை விநியோகிக்கத் தொடங்கினான். அப்படி விநியோகிக்கக் கூடாதென்று சிலர் ஆட்சேபித்தார்கள். அந்தப் பையன் நாலுத் துண்ுப் பிரசுரத்தை மேடையில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான். கை மாறி மாறி ஒரு பிரசுரம் சீதாவுக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தது. சீதா அதை கைநீட்டி வாங்கிக் கொண்டாள்; வாங்கிப் படிக்கவும் தொடங்கினாள். முதல் நாலைந்து வரிகளைப் படித்ததுமே அவளுடைய நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது போலிருந்தது. மேலே படித்ததும் இதயம் வெடித்துவிடும் போல் தோன்றியது. படித்து முடித்ததும் உடம்பெல்லாம் ஆயிரம் தேள்கள் கொட்டினாற் போன்ற துன்பம் உண்டாயிற்று. துன்பத்தோடு கலந்து சொல்ல முடியாத கோபமும் ஆத்திரமும் எழுந்தன. அந்தத் துண்டு பிரசுரத்தில் சீதாவைப் பற்றி அவ்வளவு நிந்தனையாக எழுதியிருந்தது. அவளுடைய ஒழுக்கத்தைக் குறை கூறியிருந்தது. அவள் தன் புருஷனை விட்டு விட்டு அம்மாஞ்சி சூரியாவோடு ஓடி வந்தவள் என்று எழுதியிருந்தது. அவள் தேசத் தொண்டில் சிறைபுகவில்லையென்றும் ரயிலில் திருடியதற்காகத் தண்டிக்கப்பட்டவள் என்றும் கண்டிருந்தது. அப்படிப்பட்ட ஜாலக்காரியின் மாயப் பேச்சில் மயங்கும் முட்டாள்களுக்கு நன்றாக டோ ஸ் கொடுத்து விட்டு அந்தத் துண்டுப் பிரசுரம் முடிவுற்றது.

ஒரு பெண்ணின் மனதைப் பாதித்து வேதனைக்குள்ளாக்குவதற்கு வேறு என்ன வேண்டும்? வேதனையிலிருந்து பொங்கி எழுந்த ஆத்திரம் காரணமாகச் சீதா பேச எழுந்தாள். அந்தத் துண்டு பிரசுரத்தைக் குறிப்பிட்டு அதைச் சின்னாபின்னமாக்கி அதை எழுதியவனுடைய மதியீனத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்ற ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தாள். அவளுடைய நோக்கம் நிறைவேறவில்லை. நாலைந்து வாக்கியங்கள் பேசுவதற்குள்ளேயே அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தபடியால் பேச்சை நிறுத்திவிட்டு உட்காரும்படி நேர்ந்தது. அடுத்த இரண்டு நாளும் சீதா வெளிக்கிளம்பவேயில்லை. கேட்டவர்களுக் கெல்லாம் பட்டாபிராமன் சீதாவுக்கு உடம்பு சரியில்லை என்று பதில் சொல்லிக்கொண்டு வந்தான். மேற்படி சம்பவத்தினால் பட்டாபிராமனுடைய மனமும் வேதனை அடைந்திருந்தது. கோபமோ சொல்ல முடியாமல் வந்தது. எனினும் எலெக்ஷன் முயற்சியில் அவன் சோர்ந்து விடவில்லை. மேற்படி சம்பவம் தேர்தலில் வெற்றி பெறுவதில் அவனுடைய ஆத்திரத்தை அதிகமாக்கி விட்டது. அம்மாதிரி பட்டாபிராமனுக்கு வேலை செய்தவர்களும் அதிக ஊக்கம் கொண்டார்கள். இந்தத் தேர்தலில் ஜெயிக்காவிட்டால் தங்கள் மானமே போய்விடும் என்றும் பிறகு தேவபட்டணத்துப் பொது வாழ்க்கையில், தாங்கள் தலைகாட்ட முடியாதென்றும் அவர்கள் எண்ணி முன்னைவிட ஆவேசமாக வேலை செய்தார்கள். பொது ஜனங்கள் - வோட்டர்கள் மனதில் மேற்படி துண்டுப் பிரசுரம் எந்தவித மாறுதலையும் உண்டாக்கவில்லை. பொது ஜனங்களை முட்டாள்கள் என்று சொல்லி யாராவது அவர்களுடைய ஆதரவைப் பெற முடியுமா? வேறு என்ன விதமாகத் தங்களைத் திட்டினாலும் பொது ஜனங்கள் பொறுத்துக் கொள்வார்கள். "நீங்கள் முட்டாள்கள்" என்று சொல்லி யாரும் அவர்களுடைய ஆதரவைப் பெறலாம் என்று எதிர்பார்க்க முடியாது! "நாங்களா முட்டாள்கள்? துண்டுப் பிரசுரம் எழுதிய நீதான் முட்டாள் என்பதை நிரூபித்து விடுகிறோம்!" என்று தேவபட்டணம் பொது ஜனங்கள் தீர்மானித்தார்கள்.

மேலும், கறுப்பு மார்க்கெட்டில் பணம் சேர்த்த பழைய பெருச்சாளி இப்படியெல்லாம் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறைக் கிளப்பிவிட்டுத் தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான் என்ற அபிப்பிராயமும் பொது மக்களிடையே பரவியது. அந்தப் பொதுஜன அபிப்பிராயத்தையே வோட்டுகளும் பிரதிபலித்தன. முடிவில், பட்டாபிராமன் பெரும் வெற்றி அடைந்தான். அந்த மகத்தான வெற்றியானது பட்டாபிராமனுக்கு நியாயமாக அளித்திருக்கவேண்டிய ஆனந்தத்தை அளிக்கவில்லை. 'தெள்ளிய பாலில் சிறிது நஞ்சையும் சேர்த்துவிட்டது போல், அவனுடைய வெற்றி குதூகலத்தைச் சீதாவைப் பற்றிய அவதூறு பிரசாரம் பாதித்துவிட்டது! யாருடைய தூண்டுதல் அந்த எலெக்ஷனில் அவன் நிற்கும்படியான ஊக்கத்தை அளித்ததோ, யாருடைய மகத்தான முயற்சி அவனுடைய வெற்றிக்குக் காரணமாயிருந்ததோ, யார் அவனுக்குச் சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் ஆறுதல்கூறி, உற்சாகமூட்டி வந்தாளோ, அத்தகைய சீதா வெற்றிக் கொண்டாட்டக் குதூகலத்தை அவனுடன் பகிர்ந்து அனுபவிக்க முடியவில்லை. இரண்டு நாளாக மச்சு மேலிருந்து கீழே இறங்காமலேயே இருந்து வருகிறாள். சீதாவும் சேர்ந்து கொண்டாட முடியாத இந்த வெற்றியினால் என்ன பிரயோஜனம்? இவ்விதம் பட்டாபிராமன் மனச் சோர்வுக்கு ஆளாகியிருந்த போது லலிதா தன்னுடைய தாயாருடன் பட்டாபிராமனின் ஆபீஸ் அறைக்கு வந்தாள். பட்டாபிராமன் வெற்றியடைந்ததில் அவனுடைய மாமியாரைப் போல் சந்தோஷமடைந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது! முதல் தடவையாக மாப்பிள்ளையிடம் சங்கோசத்தை விட்டுச் சரஸ்வதி அம்மாள் கலகலப்பாகப் பேசினாள்.

சந்தோஷத்தை பலவிதத்திலும் தெரிவித்த பிறகு, "இந்த வைபவத்தையெல்லாம் பார்க்க அவர் இல்லாமற் போய்விட்டாரே என்று நினைத்தால் மட்டும் மனது வேதனைப்படுகிறது!" என்று சொல்லிக் கொண்டு இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டாள். உடனே, இந்தச் சமாசாரத்தைப் பிரஸ்தாபித்து விட்டதற்காக வெட்கப்பட்டவளாய் விரைந்து சமையற்கட்டுக்குப் போய்விட்டாள். "நீங்கள் என்ன வேணுமோ சொல்லுங்கள். அம்மாவுக்கு உங்கள் பேரில் உள்ள பாசம் வேறு யாரிடமும் கிடையாது!" என்றாள் லலிதா. "யார் இல்லை என்றார்கள்? உன் அம்மாவுக்கு என்பேரில் ரொம்பப் பாசந்தான். ஆனால் அந்தப் பாசம் எனக்குப் பிராண சங்கடமாயிருக்கிறது!" என்றான் பட்டாபிராமன். "அது போனால் போகட்டும், சீதா இப்படி இரண்டு நாளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள், நீங்களும் எலெக்ஷன் மும்முரத்தில் இருந்து விட்டீர்கள். இப்போது மாடிக்குப் போய் அவளுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வரலாம், வாருங்களேன்!" என்றாள் லலிதா. "என்ன சமாதானத்தைச் சொல்வது? வீண் பிடிவாதத்துக்கு நாம் என்ன செய்யமுடியும்? யாரோ வழியிலே போகிறவன் என்னமோ பிதற்றினான் என்பதற்காகப் குப்புறப்படுத்து ஓயாமல் அழுது கொண்டிருக்கிறதா? என்ன இருந்தாலும் பெண்பிள்ளை என்பது சரியாயிருக்கிறது. இப்படிப்பட்ட கோழை மனதுள்ளவர்கள் பொது வேலைக்கு வரவே கூடாது!" என்றான் பட்டாபிராமன். "சூரியாவும் அன்றைக்கு அப்படித்தான் சொன்னான். எலெக்ஷன் தொல்லைக்குப் பெண்பிள்ளைகள் போகக்கூடாது என்றான்...." "சூரியா என்ன உளறினால் இப்போது என்ன? அவன் என்னை எலெக்ஷனுக்கே நிற்கக்கூடாது என்று சொன்னான். நின்றதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? இன்றைக்கு ஊரெல்லாம் 'ஜே' கோஷம் செய்கிறதோ இல்லேயோ" என்று பட்டாபி கர்வம் ததும்பப் பேசினான்.

"அதற்கு என்ன ஆட்சேபணை? வெறுமனேயா ஜயகோஷம் செய்கிறார்கள்? 'பட்டாபிராமனுக்கு ஜே!' என்றுதான் கோஷிக்கிறார்கள்! நம்முடைய கலியாணத்தன்று எல்லாரும் என்னைப் பிடிவாதம் செய்ததின் பேரில் 'மாமவ பட்டாபிராமா' என்று நான் பாடினேன். அது இன்றைக்குத்தான் நிஜமாயிற்று. இன்று தானே உங்களுக்கு பட்டாபிஷேகம்!" என்று லலிதா அன்பு ததும்ப பதில் கூறினாள். "சரி சரி! நீ உன்னுடைய பழைய பெருமையைப் பீத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டாயாக்கும். இன்னும் எனக்குப் பட்டாபிஷேகம் ஆகவில்லை இன்றைக்குத் துவஜாரோகணந்தான் நடந்திருக்கிறது. சேர்மன் வேலையும் கிடைத்த பிறகுதான் பட்டாபிஷேகம் நடந்தது என்று சொல்லலாம்." "அதற்கு என்ன பிரமாதம்? இது ஆனதுபோல் அதுவும் ஆகிவிடுகிறது! என் வாக்குப் பொய்யாகாது; நீங்கள் வேணுமானால் பாருங்கள்!" "ரொமப லட்சணந்தான். உன்னுடைய திருவாக்கின் மகிமையினாலேதான் எனக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தது என்று உன் எண்ணமாக்கும்! எலெக்ஷனுக்கே நான் நிற்கக் கூடாது என்று நீ முரண்டு பிடித்ததை மறந்து விட்டாயாக்கும்! அந்தச் சமயம் சீதா மட்டும் என்னுடைய கட்சியில் நின்று பேசியிராவிட்டால்....." "அதைப்பற்றி யார் என்ன சொன்னார்கள்? சீதா அத்தங்கா இந்தத் தேர்தலில் நமக்குச் செய்த ஒத்தாசையை மறக்க முடியுமா?" "அப்படியொன்றும் உன் அத்தங்கா பிரமாத ஒத்தாசை எனக்குச் செய்துவிடவில்லை. அவள் இல்லாவிட்டால் நான் ஜெயித்திருக்க மாட்டேன் என்கிறாயா?"

"அழகாய்த்தானிருக்கிறது! நான் அப்படி சொல்வேனா என்ன? உங்களுடைய தியாகத்தினாலும் செல்வாக்கினாலும் நீங்கள் ஜயித்தீர்கள்; அதைப் பற்றிச் சந்தேகமில்லை. ஆனால் சீதா அத்தங்காவும் எவ்வளவோ பாடுபட்டு ஒத்தாசை செய்திருந்தாள் அதை நாம் மறக்கக்கூடாது. கொஞ்சம் மேலேபோய் அத்தங்காவைப் பார்த்துவிட்டு வரலாம். வாருங்கள், நீங்கள் இரண்டு வார்த்தை 'உன்னால்தான் ஜெயித்தேன்' என்று சொல்வதினால் ஒன்றும் முழுகிப் போய்விடாது, அவளுக்குத் திருப்தியாயிருக்கும்." "அவளுடைய திருப்திக்காவா நான் ஜன்மம் எடுத்திருக்கிறேன்? அதெல்லாம் முடியாத காரியம். ஊரெல்லாம் திரண்டு வந்து ஊர்வலம் நடத்தி எனக்கு வாழ்த்து சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே யிருந்துகொண்டு இவளுக்கு மச்சுப்படி இறங்கி வரக்கூட முடியவில்லை! அவள் இறங்கிவந்தால் வரட்டும்; வராவிட்டால் போகட்டும். நான் போய் அவளுடைய முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்ச முடியாது! தெரிகிறதா?" இப்படி பட்டாபிராமன் ஆத்திரமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ மச்சுப்படி இறங்கிவரும் சத்தம் கேட்டது. உடனே அந்தத் தம்பதிகள் பேச்சை நிறுத்தினார்கள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சீதா அறைக்குள்ளே பிரவேசித்தாள். "அத்தங்கா! உனக்கு நூறு வயது!" என்றாள் லலிதா. "வாருங்கள்! வாருங்கள்! இப்போதுதான் மாடிக்கு வந்து உங்களைப் பார்க்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் நீங்களே இறங்கி வந்துவிட்டீர்கள். தலைவலி இப்போது எப்படியிருக்கிறது?" என்றான் பட்டாபிராமன். "உங்களுடைய வெற்றிச் செய்தி கேட்டதும் தலைவலி பறந்து போய்விட்டது! ரொம்ப சந்தோஷம்!" என்றாள் சீதா. "எல்லாம் நீங்கள் கொடுத்த ஊக்கத்தினாலும் செய்த ஒத்தாசையினாலுந்தான். உங்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன்!" என்றான் பட்டாபிராமன். "நான் என்ன அப்படிப் பிரமாத ஒத்தாசை செய்து புரட்டிவிட்டேன்? லலிதாவின் அதிர்ஷ்டத்துக்கு எல்லாம்தானே நடக்கும்!" என்று சீதா சொல்லிவிட்டு லலிதாவின் கன்னங்களைத் தடவிக் கொடுத்துத் திருஷ்டி கழிக்கும் பாவனையாக நெற்றியில் கையை வைத்து நெரித்துக் கொண்டாள்.

லலிதாவுக்கு ஆனந்தமாயிருந்தது. சீதா மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்ததை நினைத்துக் களிப்படைந்தாள். தன் கணவரோ சற்றுமுன் கடுமையாகப் பேசியதை மறந்து அவளிடம் மரியாதையாகப் பேசுகிறார். பட்டாபிராமனுடைய வெற்றியினால் லலிதாவுக்கு ஏற்பட்ட குதூகலம் இப்போது பூர்த்தியாகிவிட்டது. "அத்தங்கா! இந்த மனுஷருடைய பேராசையைக் கேள். இவருக்கு இந்த எலெக்ஷனில் வெற்றி கிடைத்தது போதாதாம். சேர்மன் பதவியும் கிடைத்தால்தான் சந்தோஷப்படலாமாம்?" என்றாள் ஸ்ரீ மதி லலிதா. "உன் அதிர்ஷ்டத்துக்கு அதுவும் தானே நடக்கிறது!" என்று சீதா கூறினாள். அப்போது பட்டாபி குறுக்கிட்டு, "இவள் சொல்கிறதை நீங்கள் நம்பாதீர்கள், இவளுக்கு 'சேர்மன் ஒயிஃப்' என்று தன்னை எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது! அந்தப் பழியை என் தலையின் பேரில் போட்டுவிடப் பார்க்கிறாள்!" என்று சொன்னான். "லலிதா அப்படி ஆசைப்படுவதில் என்ன தவறு? எனக்குக் கூடத்தான் நீங்கள் சேர்மன் ஆகிப் பார்க்கவேண்டும் என்று ஆசையாயிருக்கிறது!" என்று பரிவுடன் கூறினாள் சீதா. "அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் நீங்கள் முன்போல் எனக்கு உதவி செய்யவேண்டும். மாடியிலே போய்ப்படுத்துக் கொள்ளக்கூடாது." "இனிமேல் என்னால் உங்களுக்கு உபகாரம் கிடையாது. ஒருவேளை அபகாரம் நேர்ந்தாலும் நேரும். இரண்டு நாளாக நான் தீவிரமாக யோசனை செய்து பார்த்தேன். ஸ்திரீகள் எலெக்ஷன் முதலிய பொதுக் காரியங்களில் தலையிடவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பொது ஜனங்கள் ரொம்பப் பொல்லாதவர்கள்!" என்றாள் சீதா. "நீங்கள் சொல்வது சுத்தத் தப்பு. இன்றைக்கு என்னை வாழ்த்துக்கூற வந்தவர்கள் எல்லோரும் தங்களைப்பற்றி அன்புடன் விசாரித்தார்கள், ஒருவராவது தவறாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை." "இன்றைக்கு ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள்; ஆனால் நாளைக்குச் சொல்வார்கள்." "பொது ஜனங்கள் பேரில் ஏன் உங்களுக்கு இவ்வளவு அவநம்பிக்கையோ தெரியவில்லை எவனோ ஒரு காலிப்பயல் என்னமோ பிதற்றினால் அதற்காக எல்லாரையும் சேர்த்துக் குறை சொல்லலாமா?"

"அந்த நோட்டீசை நீங்கள் பார்த்தீர்களோ என்னமோ தெரியவில்லை. பார்த்திருந்தால் உங்களுக்கும் என்னைப்போல் இரத்தம் கொதித்திருக்கும். அம்மாதிரியெல்லாம் எழுதியவனை வெட்டிப் போட்டு விடலாம் என்று தோன்றியிருக்கும்!" இந்தச் சமயத்தில் லலிதா குறுக்கிட்டு, "போதும் இந்தப் பேச்சு! சந்தோஷமான சமயத்தில் அந்த அக்கிரமத்தைப் பற்றி எதற்காகப் பேசவேண்டும்! சாப்பிடப் போகலாம், வாருங்கள்!" என்று சொன்னாள். மூன்று பேரும் சாப்பிடுவதற்குப் போனார்கள். சாப்பிடு கிறபோது சிரிப்பும் விளையாட்டுமாயிருந்தது. உணவு அருந்தியதும் சீதா மச்சு அறைக்கும் பட்டாபிராமன் வாசல் திண்ணைக்கும் போனார்கள். பிறகு சரஸ்வதி அம்மாள் லலிதாவிடம், "இந்தப் பெண் இனிமேல் இங்கே அதிக காலம் இருப்பது நன்றாயிராது. சீக்கிரம் ஊருக்குக் கிளம்பிப் போனால் நன்றாயிருக்கும்!" என்றாள். "நன்றாயிருக்கிறதடி, அம்மா நீ சொல்லுகிறது; காரியம் ஆகிறவரை காலைப்பிடி என்று சொல்வதுபோல அல்லவா இருக்கிறது? அத்தங்கா மட்டும் வந்திராவிட்டால் உன் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றிருக்கமாட்டார், ஜயித்துமிருக்கமாட்டார். நீயே எத்தனையோ தடவை அவ்விதம் சொல்லியிருக்கிறாய். இப்போது 'சீதா சீக்கிரம் ஊருக்குப் போனால் தேவலை' என்கிறாயே?" "அவள் செய்ததை நான் இல்லை என்றா சொல்கிறேன்? ஏதோ ஒத்தாசை செய்தாள்; வாஸ்தவந்தான். ஆனால் கடைசியில் பெரிய கல்லாகத் தூக்கிப் போட்டுவிட்டாள்!" "வீணாகப் பழி சொல்லாதே! அவள் என்ன செய்தாள், பாவம்!"

"அவள் என்ன செய்தாளோ என்னமோ எனக்கு எப்படித் தெரியும்? புகை உள்ள இடத்தில் நெருப்பு இல்லாமற் போகாது. ஏதோ அவளுடைய நடத்தையில் கல்மிஷம் இல்லாமற் போனால் அப்படித் துணிந்து அச்சுப் பிரசுரம் போடு வார்களா?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "அம்மா! அம்மா! அத்தங்காளைப்பற்றி அவதூறு சொல்லாதே! சொன்னால் உனக் குத்தான் பாவம்!" "நான் சொல்லவில்லையடி, அம்மா, நான் சொல்லவில்லை! என் வாயை வேணுமானால் நீ மூடலாம்; ஊர் வாயை மூட முடியுமா? அடுத்தபடி இன்னொரு பெரிய வேலை இருக்கிறதே, சேர்மன் வேலை. இது மாப்பிள்ளைக்கு ஆக வேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருக்கிறது. சீதா நல்ல எண்ணம் உள்ளவளாயிருந்தால் இரண்டு நாளில் கிளம்பிப் போய்விடுவதுதான் நியாயம். அவளுக்கும் ஒரு புருஷன் இருக்கிறான். ஒரு குழந்தையும் இருக்கிறாள் அல்லவா? இன்னொருவர் வீட்டிலேயே இவள் வந்து உட்கார்ந்து கொண்டிருந்தால், இவளுடைய குடும்பம் என்ன ஆகிறது? நீ இப்படிப் போய் இன்னொருவர் ீட்டில் இருப்பாயா? யோசித்துப்பார்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். அம்மா சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்று லலிதாவுக்கு தோன்றியது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பத்தொன்பதாம் அத்தியாயம்
பாம்புக்கு வார்த்த பால்

பட்டாபிராமனுடைய மாமியாரின் மனோரதம் வீண் போகவில்லை. தேவபட்டணத்து முனிசிபல் சேர்மன் பதவிக்கு நடந்த தேர்தலிலும் பட்டாபிராமனுக்கே வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி தனியாக வரவில்லை. இடி, மின்னல், பெருமழை, பிரளயம், இவற்றுடன் சேர்ந்து வந்தது. சீதாவுக்கு ஏற்பட்ட மனச் சோர்வு இரண்டு மூன்று தினங்களிலேயே மறைந்து போய்விட்டது. சரஸ்வதி அம்மாள் அடிக்கடி முணுமுணுத்ததைப் பொருட்படுத்தாமல் பட்டாபிராமனும் லலிதாவும் சீதாவை உற்சாகப்படுத்துவதில் முனைந்தார்கள். முதல் தேர்தலில் ஏற்பட்ட வெற்றிக்காக நடந்த உபசார விருந்துகளுக்கும் வாழ்த்துக் கூட்டங்களுக்கும் சீதாவையும் தவறாமல் உடன் அழைத்துப் போனார்கள். சென்ற இடங்களில் எல்லாம் சீதா தன்னுடைய கலகலப்பான சுபாவத்தினாலும் சாதுர்யமான பேச்சுகளினாலும் அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தி வந்தாள். எதிரி மனப்பான்மை கொண்டவர்கள் சிலரும் பொறாமைக்காரர்களும் தங்களுக்குள் ஏதோ அப்படி, இப்படி என்று பேசிக் கொண்டது உண்மைதான். ஆனால் அது ஒன்றும் பட்டாபிராமன் காது வரையில் வந்து எட்டவில்லை. நாளாக ஆக, பட்டாபிராமனுக்குச் சேர்மன் பதவி நிச்சயம் என்று ஏற்பட்டது. சேர்மன் தேர்தல் தினம் நெருங்க நெருங்க, பட்டாபிராமன், லலிதா, சீதா - ஆகிய இவர்களின் உற்சாகமும் உச்சத்தை அடைந்து வந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்குச் சரியாக இரண்டு நாள் இருக்கும்போது லலிதாவின் தலையில் இடி விழுந்தது போன்ற ஒரு திடுக்கிடும் சம்பவம் ஏற்பட்டது.

அன்று காலையில் பட்டாபிராமன் வெளியிலே போயிருந்தான். சீதா தன்னுடைய மாடி அறையில் உட்கார்ந்து, ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். அச்சமயம் தபால்கள் வந்தன. லலிதா தபால்களை வாங்கிக்கொண்டு வந்து பட்டாபி ராமனுடைய மேஜையின் மேல் வைத்தாள்.பிறகு தனக்கு ஏதாவது கடிதம் உண்டா என்று பார்ப்பதற்கு அசிரத்தையாகத் தபால்களைப் புரட்டினாள். அவளுடைய பெயருக்கு ஒரு கடிதம் இருந்தது. சாதாரணமாய் விலாசத்தைப் பார்த்ததும் யாரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதென்று அவளுக்குத் தெரிந்துவிடுவதுண்டு. ஏனெனில் அவள் பெயருக்குக் கடிதம் எழுதக் கூடியவர்கள் வெகு சிலர்தான், சூரியா ஒருவன். சீதா டில்லியிலிருந்தபோது அடிக்கடி எழுதுவான். கல்கத்தாவிலிருந்து சித்ரா எழுதுவாள், இன்னும் இரண்டொருவர்தான். ஆனால் இந்தக் கடிதத்தின் மேல் விலாசத்திலிருந்து அதை எழுதியது யார் என்று தெரியவில்லை. ஆகையால் வழக்கத்தைக் காட்டிலும் சிறிது ஆர்வத்துடனேயே உறையை உடைத்தாள். ஏனோ தெரிய வில்லை; அவளுடைய நெஞ்சம் கொஞ்சம் பலமாகவே அடித்துக் கொண்டது. உறைக்குள்ளே கடிதம் ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாக அச்சடித்த பத்திரிகைத் துண்டு ஒன்று இருந்தது. லலிதா திரும்பவும் உறைக்குள் பார்த்தாள். மடித்திருந்த பத்திரிகைத் துண்டைப் பிரித்து அதற்குள் ஏதாவது கடிதம் இருக்கிறதோ என்று பார்த்தாள். தவறிக் கீழே விழுந்திருக் கிறதோ என்று பார்த்தாள் இல்லையென்று நிச்சயமாயிற்று. ஏதோ தவறுதலாகக் கடிதத்தை வைப்பதற்குப் பதில் இந்தப் பத்திரிகையை வைத்து விட்டாற் போலிருக்கிறது.

அப்படி வைத்தது யாராக இருக்கும்!' என்று எண்ணிக்கொண்டே அச்சுத்தாளைப் பார்த்தாள். அதில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த ஒரு தலைப்பு அவளுடைய கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. "பட்டாபிராமன் லீலைகள்" என்ற அந்தத் தலைப்பைப் பார்த்ததும் அவளுடைய மனது பதறியது; உடம்பு நடுங்கியது. இரண்டு வரி படித்ததும் பதறலும் நடுக்கமும் அதிகமாயின. அதற்குமேல் அங்கேயிருந்து படிக்கக்கூடாது என்று தோன்றியது. ஒருவேளை பட்டாபிராமன் அங்கு வந்துவிட்டால்? அல்லது சீதாதான் வந்துவிட்டால்? அவர்களுடைய கண்ணிலே இது படக்கூடாது! நிச்சயமாய்க் கூடாது! ஆகையால் அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் ஓடிச் சென்று கதவையும் தாள் போட்டுக் கொண்டாள். ஜன்னல் ஓரமாக நின்று படித்தாள். பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை கண்களில் கொதிக்கும் வெந்நீரைப் போன்ற, உஷ்ணத்துடன் கரகரவென்று ஜலம் கொட்டத் தொடங்கிக் கண்களை அடியோடு மறைத்துவிட்டது. அடிவயிற்றி லிருந்து வெப்பமான புகை போல ஏதோ கிளம்பி மார்பை அடைத்துக் கொண்டு மேலேறி மூச்சுத் திணறும்படி செய்து தலைக்குள்ளே பிரவேசித்தது. தலை கிறுகிறுவென்று சுழலத் தொடங்கியது. மயக்கம் வந்து கீழே தள்ளி விடுமோ என்று தோன்றியது. அந்த நிலைமையில் லலிதா ஆச்சரியமான மனோதிடத்துடன் அந்தப் பத்திரிகைத் துண்டைத் தன் பெட்டிக் குள்ளே வைத்துப் பூட்டினாள். பிறகு கட்டிலின் மேலே மெத்தையின் மீது தொப்பென்று விழுந்தாள். சிறிது நேரம் கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நின்றது. மனமும் தெளிவடைந்தது,"சீச்சீ! யாரோ அயோக்யன், பொறாமைக்காரன், எதையோ கன்னா பின்னாவென்று எழுதி அச்சுப் போட்டு விட்டதற்காக நம்முடைய மனதை மீற விட்டுவிடலாமா?" என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.

பிறகு எழுந்து கண்களையும் முகத்தையும் நன்றாகத் துடைத்துக் கொண்டு நிலைக்கண்ணாடியில் பார்த்து நெற்றிப் பொட்டையும் சரிப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். "அம்மா! சமையல் ஆகிவிட்டதா? அவர் வரும் நேரமாகி விட்டதே" என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குச் சென்ற லலிதாவின் முகத்திலோ குரலிலோ சற்று முன் அவள் அநுபவித்த கொடிய வேதனைக்கு அடையாளம் கொஞ்சம் கூட இருக்கவில்லை. இப்படி லலிதாவுக்கு நரக வேதனை அளித்த விஷயம் என்னவென்று கேட்டால்:- கொஞ்ச காலமாகத் தேவபட்டணத்தில் 'மஞ்சள் பத்திரிகை' ஒன்று நடமாடிக் கொண்டிருந்தது. அதில் அந்த ஊர்ப் பிரமுகர்களுடைய சொந்த வாழ்க்கையில் உள்ள ஊழல்களையெல்லாம் வெளிப்படுத்து கிறது என்னும் வியாஜத்தில் சொல்லவும் எழுதவும் தகாத ஆபாச விஷயங்களையெல்லாம் எழுதித் தள்ளிக் கொண்டி ருந்தார்கள். அந்த ஆபாசப் பத்திரிகை பெரும்பாலும் இரகசியமாகப் பரவிக் கொண்டிருந்தது. நல்ல மனிதர்கள், நாகரிகமான மனிதர்கள் அதை வாங்குவதற்கும் படிப்பதற்கும் லஜ்ஜைப்பட்டார்கள். ஆயினும் பலருடைய மனதில் தங்களைப் பற்றி ஏதாவது அவதூறு வந்திருக்கிறதோ என்ற பீதி குடிகொண்டிருந்தது. சிலர் அந்த ஆபாசப் பத்திரிகையை இரகசியமாக வாங்கிப் படிப்பதும், மற்றவர்களைப் பற்றிக் கேவலமாக எழுதியிருப்பதைப் படித்து விட்டுச் சந்தோஷப்படுவதும், தங்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்து விட்டு அவஸ்தைப்படுவதும் அதை வேறு யாரும் படிக்காமலிருக்க வேண்டுமே என்று கவலைப்படுவதுமாயிருந்தார்கள். இந்த முட்டாள்தனப் படுகுழியில் விழாதிருந்தவர்களில் பட்டாபிராமன் ஒருவன். அந்தப் பத்திரிகையை அவன் பார்த்ததுமில்லை; படித்ததுமில்லை. யாராவது அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தாலும் உடனே அவன் தன்னுடைய அருவருப்பை வெளியிட்டு அந்தப் பேச்சை அடக்கிவிடுவான். ஆகவே பட்டாபிராமனுடைய வீட்டுக்குள்ளே அந்த மஞ்சள் பத்திரிகை அதுவரையில் பிரவேசியாமலிருந்ததில் ஆச்சரியம் இல்லையல்லவா?

அந்த மாதிரி ஒரு ஆபாசப் பயங்கரப் பத்திரிகை நடந்து வருகிறதென்று லலிதா பராபரியாகக் கேள்விப்பட் டிருந்தாள். அவளுக்குத் தெரிந்த இரண்டொரு மனிதர்களைப் பற்றி அதில் கேவலமாக எழுதியிருந்ததென்பதும் அவள் காதில் விழுந்திருந்தது. அதையெல்லாம் கேட்ட போது, 'இதுவும் ஒரு பத்திரிகையா? இப்படியும் எழுதுவதுண்டா?' என்று அவள் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் இப்போது அந்தப் பத்திரிகையிலிருந்து வெட்டி எடுத்தத் துண்டைத் தானே படித்துப் பார்க்க நேர்ந்தபோது அவள் ஆச்சரியப்பட முடியவில்லை. ஆச்சரியத்துக்குப் பதிலாக ஆத்திரமும் துயரமும் அளவிலாத குரோதமும் பொங்கி எழுந்து அவளைத் திக்குமுக்காடும்படி செய்தன. கர்மசிரத்தையாக யாரோ வெட்டி எடுத்து அவளுக்கு அனுப்பி யிருந்த பத்திரிகைப் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் காதலர்கள் என்றும், சீதாவை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் லலிதா ஒரு முழுமூடம் என்றும், இப்பேர்ப்பட்ட ஒழுக்கத்திற் சிறந்த பட்டாபிராமனைத்தான் தேவபட்டணத்து மகாஜனங்கள் நகர சபைத் தலைவராகப் பெறும் பாக்கியத்தை அடையப் போகிறார்கள் என்றும் எழுதியிருந்தது. கட்டுரையில் பாதிவரையில் இந்த அருமையான விஷயங்கள் இருந்தன. அதற்கு மேலே படிக்க முடியாமல் லலிதா நிறுத்தி விட்டாள். ஆனால் அந்த ஆபாசக் குப்பையை உடனே தீயில் போட்டுக் கொளுத்தாமல் பெட்டிக்குள் பூட்டி வைத்த காரணம் என்ன? அவளுடைய அந்தரங்கத்துக்கும் அவளைப் படைத்த கடவுளுக்குந்தான் தெரியும்! பத்திரிகையைப் படித்த உடனே ஏற்பட்ட முதல் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் பிறகு லலிதாவின் பேச்சும் நடவடிக்கையும் முன்னைக் காட்டிலும் அதிக உற்சாகமா யிருந்தன. அத்தகைய ஒரு பயங்கரமான விஷயத்தைப் படித்த பிறகும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் முன் மாதிரியே நடந்து கொள்கிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எக்களிப்பை ஊட்டியது; அவளுடைய நடத்தையில் காணப்பட்ட அதிகப்படி குதூகலத்தைத் தேர்தல் தினம் நெருங்கியதால் ஏற்பட்டது என்று மற்றவர்கள் எண்ணினார்கள்.

ஆனால் யாரேனும் கூர்ந்து கவனித்திருக்கும் பட்சத்தில் லலிதா வெளிக்கு எவ்வளவு குதூகலத்தைக் காட்டினாலும் அவளுடைய மனதில் ஏதோ ஒரு வேதனை அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பார்கள். அதோடு சீதாவின் விஷயத்தில் அவள் நடந்து கொண்டதிலும் ஒரு மாறுதல் இருப்பதைக் கண்டிருப்பார்கள். இந்த நிலைமையில் சேர்மன் தேர்தல் நாளும் வந்தது, தேர்தலும் நடந்தது. பட்டாபிராமன் மகத்தான வெற்றியை அடைந்தான். அது காரணமாக மறுதடவை தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. பொதுஜன வெற்றிக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு முக்கியமான நண்பர்கள் பட்டாபியின் வீட்டுக்கு வந்து வெகு நேரம் இருந்து பசிக்கொண்டிருந்து விட்டுப் போனார்கள். இன்றைக்கும் ஸ்ரீ மதி சீதாதேவி வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதைப்பற்றி ஒரு நண்பர் பிரஸ்தாபித்தபோது இன்னொருவர் அவர் தோளைத் தொட்டுத் தன்னுடைய மூக்கின் பேரில் விரலை வைத்து எச்சரித்தார். "நீச மனிதர்களின் அவதூறுகளையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. பொருட்படுத்தினால் அந்த நீசர்களுக்குத் தான் கௌரவம் கொடுத்த தாக முடியும். இந்த விஷயத்தை வீட்டுப் பெண்களுக்கும் சொல்லி வைக்க வேண்டும்!" என்று மற்றொரு நண்பர் கூறினார். இதெல்லாம் பட்டாபிராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று பட்டாபிராமன் கேட்டதற்கு, "அந்த 'அல்கா' விஷயங்கள் இந்தச் சந்தோஷ சமயத்தில் என்னத்திற்கு?" என்று இன்னொருவர் சொல்லி முடித்து விட்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டாபிராமனைத் தனியே விட்டு விட்டுச் சிநேகிதர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.

நண்பர்கள் இருக்கும்போதே பட்டாபிராமனின் எண்ணம் அடிக்கடி லலிதா - சீதாவின் பேரில் சென்றுகொண்டிருந்தது. இரண்டு பேருக்கும் இன்றைக்கு என்ன வந்துவிட்டது என்று ஆச்சரியப்பட்டான். நண்பர்கள் போன பிறகு, "லலிதா! லலிதா!" என்று கூப்பிட்டான். அதற்குப் பிறகு லலிதா "சாப்பிடப் போகலாமா!" என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள். அவசரமாகக் கண்ணைத் துடைத்துக்கொண்டு வந்தவளின் முகம்போல அவள் முகம் காணப்பட்டது. "இது என்ன? முகம் ஏன் அழுது வடிகிறது? நான் ஜயித்து விட்டேனே என்று ஒரு குரல், அழுதாயா, என்ன!" என்று பட்டாபிராமன் காரமாகக் கேட்டான். "நான் ஒன்றும் அழவில்லை; என் முகத்தைப் பார்த்தால் உங்களுக்கும் ஒருவேளை அழுது வடிகிறாப் போலத்தான் இருக்கும்!" என்று லலிதாவும் குரோதமாகப் பதில் சொன்னாள். "உங்கள் எல்லோருக்கும் இன்றைக்கு என்ன வந்து விட்டது?" என்று பட்டாபிராமன் கேட்டான். "உங்கள் எல்லோருக்கும் என்று யாரைச் சொல்கிறீர்கள்? என் ஒருத்தி விஷயந்தான் எனக்குத் தெரியும்!" என்றாள் லலிதா. "யாரைப் பற்றிக் கேட்கிறேன் என்று உனக்குத் தெரியவில்லையா? உன் அருமைத் தோழி இல்லை. ஒரு வேளை உங்கள்...." "யாருடைய தோழியாயிருந்தாலும் இருக்கட்டும். அவளுக்கு என்ன வந்துவிட்டது? அன்றைக்கு நான் ஜயத்துடன் வந்தபோதும் மச்சிற்குப் போய்க் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தாள். இன்றைக்கும் அப்படியே செய்கிறாளே?" என்றான் பட்டாபிராமன். "அவள் சமாசாரம் எனக்குத் தெரியாது. நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்." "உனக்கும் இன்றைக்கும் உடம்பு சரியில்லை போலிருக்கிறது. ஒருவேளை உன் அம்மாவுக்கு ஏதாவது தெரியுமா என்று கேள். இன்றைக்கு ஏதாவது பலமாக மண்டகப்படி செய்தாளோ, என்னமோ?" "என் அம்மாவின் தலையை எதற்காக உருட்டுகிறீர்கள்? அவள் ஒருவரையும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. நாளைக்கே அவளை ஊருக்குப் போய்விடச் சொல்கிறேன். நானும் வேணுமானாலும் போய் விடுகிறேன். எந்த நாய் இந்த வீட்டில் இருக்க வேண்டுமோ இருக்கட்டும்."

பட்டாபிராமன் லலிதாவை எரித்து விடுகிறவனைப்போல் பார்த்தான். அடுத்த நிமிஷம், 'இந்த அசட்டுச் சண்டையை வளர்த்துவதில் பிரயோஜனமில்லை' என்று தீர்மானித்தவனாய்ச் சமையலறையை நோக்கி நடந்தான். சில நாளாக அவனுடைய மனதில் ஒரு சந்தேகம் தோன்றிக் கொண்டிருந்தது. தன் மாமியார் சீதாவைப்பற்றி அடிக்கடி நிந்தனை பேசி நிஷ்டூரம் சொல்கிறாள் என்றும் அதற்கு லலிதாவும் இடங்கொடுத்து வருகிறாள் என்றும் ஐயங்கொள்ள ஏதுக்கள் இருந்தன. அந்தச் சந்தேகம் இப்போது உறுதிப்பட்டது நேற்று வரையில் நல்ல உற்சாகத்துட னிருந்தவள் இன்றைக்கு மச்சிலிருந்து கீழே இறங்காமல் இருக்கும் காரணம் என்ன? சீதாவின் காது கேட்கத் தன் மாமியார் ஏதோ நிந்தைமொழி சொல்லியிருக்க வேண்டும். அதைக் குறித்துச் சீதா லலிதாவைக் கேட்டிருக்கலாம். லலிதா தன் தாயாருக்குப் பரிந்து பேசியிருக்கலாம். சீதா மனம் நொந்து போயிருக்கிறாள். வேறு காரணம் ஒன்றும் இருப்பதற்கில்லை. உண்மை அப்படியிருப்பதினாலேதான் லலிதாகூட இன்றைக்குச் சீதாவைப் பற்றிக் கடுமொழி பேசுகிறாள். ஐயோ! பாவம்! அநாதை சீதா இவர்களுடைய வாயில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.மாமியார் ஒரு ராட்சஸி என்பதில் சந்தேகம் இல்லை. தன்னிடம் அவள் பயபக்தியுடன் இருப்பதாக நடிப்பதெல்லாம் வெறும் பாசாங்கு.ராட்சஸியின் பெண்ணிடம் ராட்சஸ குணம் இல்லாமற் போகுமோ? தாடகையும் சூர்ப்பனகையும் போன்ற இரண்டு ராட்சஸிகளிடம் அகப்பட்டுக் கொண்டு பேதை சீதா தவிக்கிறாள்! அடாடா! அவளுடைய தலை விதியை என்னவென்று சொல்வது? அங்கே தாலி கட்டிய புருஷன்தான் பரம முட்டாளாயிருக்கிறான். பெண்டாட்டியைத் திண்டாட விட்டுவிட்டுக் கெட்டலைகிறான் என்றால், தஞ்சம் புக வந்த இடத்திலும் சீதாுக்கு இந்தக் கதியா நேர வேண்டும்? அதிலும் அவளால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளையெல்லாம் உத்தேசிக்கும் போது, தன்னுடைய சொந்த வீட்டில் அவளுக்கு அவமதிப்பும் மனத்துயரமும் ஏற்படலாமா? கடவுளுக்கு அடுக்குமா?

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே பட்டாபிராமன் சாப்பிட்டு முடித்தான். லலிதாவுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. சாப்பிட்டானதும் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது விரித்திருந்த படுக்கையில் படுத்துக்கொண்டான். சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதா வந்து சேர்ந்தாள். அவள் வந்ததையே கவனியாதிருந்தவன் போலிருந்தான் பட்டாபிராமன். ஐந்து நிமிஷம் சும்மா இருந்து பார்த்துவிட்டு, "ஏன்னா? என் பேரில் ஏதாவது கோபமா?" என்று லலிதா கேட்டாள். "கோபம் என்ன வந்தது, கோபம்!" என்றான் பட்டாபிராமன். "கோபம் இல்லாததற்கு அடையாளமா இப்படிவெடுக்கென்று பேசுகிறீர்கள்?" "முட்டாள்கள் நிறைந்த இந்த வீட்டில் வேறு எப்படிப் பேசுவது?" என்றான் பட்டாபிராமன். லலிதா சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "ஏன்னா? இன்று நடந்த சேர்மன் எலெக்ஷனில் உங்களுக்கு எவ்வளவு வோட்டு? எதிரிக்கு எவ்வளவு வோட்டு?" என்று கேட்டாள். "எவ்வளவு வோட்டாயிருந்தால் உனக்கு என்ன?" "எனக்கு ஒன்றும் இல்லையா?" பட்டாபிராமன் மௌனம் சாதித்தான். "உங்களுடைய ஜயத்தில் எனக்கு ஒன்றும் பாத்தியதை கிடையாதா? நிஜமாக என்னைப் பார்த்துச் சொல்லுங்கள்!" "பாத்தியதை உள்ளவளைப் போல் நீ நடந்து கொண்டாயா?" "என்ன விதத்தில் நடந்து கொள்ளவில்லை? சொல்லுங்களேன்!" "எனக்கு இன்றைக்குச் சேர்மன் பதவி கிடைத்தது. இனி மூன்று வருஷத்துக்கு இந்த ஊருக்கே நான் ராஜா மாதிரி. அவ்வளவு பெரிய வெற்றியுடன் நான் இன்று வீட்டுக்குத் திரும்பி வந்தேன். நீ எப்படி என்ன வரவேற்றாய்? அழுதுவடிய முகத்தைக் காட்டிக் கொண்டு நின்றாய்!" "என் முகத்தில் எப்போதும் இருக்கிற இலட்சணந்தானே இருக்கும்? புதிதாக எப்படி வந்துவிடும்?"

"இலட்சணத்தைப் பற்றி இப்போது யார் என்ன சொன்னார்கள்? நீ சந்தோஷமாக என்னை வரவேற்றாயா என்று கேட்டேன்." "நான் சந்தோஷமாகத்தானிருந்தேன். உங்களுக்கு அழுது வடிகிறது போலத் தோன்றியது. சீதா சந்தோஷமா வந்து வரவேற்கவில்லையே என்று உங்களுக்குக் கோபம். அந்தக் கோபத்தை என் பேரில் காட்டினீர்கள்." "அப்படித்தான் வைத்துக்கொள்." "அந்த நீலி மாடி அறையில் குப்புறப் படுத்துக்கொண்டு அடம்பிடித்தாள், அதற்கு நான் என்ன செய்வேன்?" "அவளை சாக்ஷாத் லக்ஷ்மி என்றும் சரஸ்வதி என்றும் நீதான் சொல்லிக் கொண்டிருந்தாய் இப்போது நீலியாகி விட்டாளா?" "நான் கபடமில்லாதவள்; அவளையும் என்னைப்போல் நல்லவள் என்று நம்பி ஏமாந்து போய் விட்டேன்." "அவள் நல்லவள் இல்லை - கெட்டவள் என்று எப்போது தெரிந்தது?" லலிதா மௌனம் சாதித்தாள். "நேற்று வரையிலேகூட உற்சாகமாக இருந்தாளே? இன்றைக்குத் திடீரென்று அவளுக்கு என்ன வருத்தம் வந்து விட்டது?" என்று பட்டாபிராமன் மறுபடியும் கேட்டான். "எனக்கு என்னமாய்த் தெரியும்? என்னிடம் அவள் சொல்லவில்லை!" என்றாள் லலிதா. "நீயே யோசித்து உத்தேசமாகச் சொல்லேன் பார்க்கலாம்." "அவளுக்கு புருஷன், குழந்தை, குடும்பம் உண்டு அல்லவா? அவர்களோடு போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும்." "அவள் போவதை யார் வேண்டாம் என்றார்கள்?" "வேண்டாம் என்று சொல்லாதிருந்தால் போதுமா? புறப்பட்டுப் போவதற்கு ஏதாவது செய்து கொடுத்தால்தானே போவாள்? அதைத்தான் அம்மாவும் சொல்கிறாள்!"

பட்டாபிராமன் மௌன சிந்தனையில் ஆழ்ந்தான். ஆஹா! நாம் சந்தேகித்தது சரிதான், மாமியாரின் வேலைதான் இது! பெண்ணின் மனத்தையும் கெடுத்து இருக்கிறாள். இரண்டு பேரும் சீதாவை ஏதோ சொல்லியிருக்கிறார்கள்! இந்தப் பரிதாபத்துக்கு என்ன பரிகாரம்? கணவனால் கைவிடப்பட்ட அந்த அநாதைக்கு என்ன கதி? "ஏன்னா? 'யமதூதன்' என்கிற பத்திரிகையை நீங்கள் பார்த்தீர்களா?" என்று லலிதா கேட்டதும் பட்டாபிராமன் திடுக்கிட்டான். தன்னை வீட்டுக்கு கொண்டுவிட வந்திருந்த நண்பர்கள் ஏதோ ஜாடைமாடையாகச் சொன்னது ஞாபகம் வந்தது, ஓகோ! அப்படியா சமாசாரம்? அந்தக் குப்பைப் பத்திரிகையில் ஏதோ எழுதியிருக்கிறதாக்கும்! அதை மெனக்கட்டு யாரோ வந்து லலிதாவிடம் சொல்லி அவளுடைய மனதைக் கெடுத்திருக்கிறார்கள்! "நான் கேட்டதற்கு நீங்கள் பதில் ஒன்றும் சொல்லவில்லையே?" என்று லலிதா தூண்டினாள். "அந்தக் கந்தலை நான் படிக்கவில்லை; படிக்கப் போவதுமில்லை." "நீங்கள் படிக்காவிட்டால் ஊரெல்லாம் படிக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா?" "ஏது, பேச்சு ரொம்ப பலமாயிருக்கிறதே! நீ இருக்கிற வரையில் உலகம் அஸ்தமிக்காது!" "உங்களுக்கு என்னைக் கேலி செய்யத்தான் தெரியும். ""ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறதது" "ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறதா? எதற்காக?"

"'யமதூதன்' பத்திரிகையில் எழுதியிருப்பதைப் பற்றித்தான். அண்டை வீட்டு அம்மாமி, எதிர்வீட்டு அம்மாமி எல்லாரும் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனார்கள். ஊரெல்லாம் தெரிந்துதானிருக்கிறது. உங்களுக்கு மட்டுந்தான் தெரியாது." "அப்படியா சமாசாரம்? 'யமதூதன்' பத்திரிகையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறதாம்? உனக்குத் தெரியுமா விஷயம்?" "எல்லாம் தெரியும்." "அப்படியானால் சொல்லேன்." "வாயினால் சொல்லவே முடியாது, அவ்வளவு அசிங்கமான விஷயம். அவரவர்களே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்." பட்டாபியின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. "அந்தப் பத்திரிகை உன்னிடம் இருக்கிறதா?" என்று கேட்டான். "இருக்கிறது" என்றாள் லலிதா. பட்டாபிராமனுக்கு அளவில்லா கோபம் வந்தது. காரியார்த்தமாகக் கோபத்தை அடக்கிக் கொண்டு, "எங்கே? அதைப் போய் எடுத்து வா, பார்க்கலாம்?" என்றான். "இங்கேதான் இருக்கிறது!" என்று சொல்லி விட்டு லலிதா மின்சார விளக்கை ஏற்றிப் பெட்டியைத் திறந்து அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொடுத்தாள். பட்டாபிராமன் எழுந்து நின்ற வண்ணம் அதைப் படித்தான். படிக்கும்போது அவனுடைய ரத்தம் கொதித்தது என்றால் அது மிகையாகாது. அந்தக் கந்தல் பத்திரிகையில் அச்சாகியிருந்த ஆபாசக் கட்டுரையில் முதற் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் கள்ளக் காதல் செய்வதாகவும் லலிதா சுத்த முழு மூடம் என்றும் கண்டிருந்தது. பிற்பகுதியில் சூர்யாவுக்கும் சீதாவுக்கும் ஏற்கெனவே இருந்த நேசத்தைப் பற்றியும், சூரியா சீதாவுக்காக அவளுடைய கணவனிடம் தூது சென்றது பற்றியும் சௌந்தரராகவன் தூதனைச் செம்மையாக உதைத்து அனுப்பி விட்டது பற்றியும் எழுதியிருந்தது.

பல்லைக் கடித்துக் கொண்டு எல்லாவற்றையும் படித்து முடித்த பிறகு, "நெருப்புப் பெட்டி இருக்கிறதா?" என்று பட்டாபிராமன் கேட்டான். "எதற்கு?" என்றாள் லலிதா. "கொடு, சொல்கிறேன்!" லலிதா எடுத்துக் கொடுத்தாள். நெருப்புக் குச்சியைக் கிழித்து அந்தப் பத்திரிகைத் துண்டைப் பட்டாபிராமன் கொளுத்தப் போனான். "ஐயையோ! அதைக் கொளுத்தாதீர்கள்!" "ஏன்?" "அதில் பாதிதான் படித்திருக்கிறேன். பாக்கிப் பாதி படிக்க வேண்டும்" என்றாள் லலிதா. "அது வேறேயா?" என்று சொல்லிக்கொண்டே பட்டாபி அதைக் கொளுத்திச் சாம்பலாக்கினான். "அது என்ன அவ்வளவு அவசரம்? நான் சொன்னது உங்களுக்கு இலட்சியமில்லையா! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது சரியாயிருக்கிறதே!" பட்டாபிராமன் லலிதாவிடம் நெருங்கி வந்து பளீர் என்று அவளுடைய கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான். "இந்தக் குப்பைையெல்லாம் வாங்கவும் கூடாது; படிக்கவும் கூடாது என்று நான் சொல்லவில்லையா? என்னமாய்த் துணிந்து வாங்கினாய்?" என்றான். லலிதா திக்பிரமையிலிருந்து விடுபட்டுத் தேம்பிக் கொண்டே, "நான் ஒன்றும் வாங்கவில்லை; தபாலில் வந்தது" என்றாள். "தபாலில் அனுப்பியது யார்?" "யாரோ தெரியாது." "இந்த மாதிரி ஒன்று தபாலில் வந்ததும் ஏன் என்னிடம் சொல்லவில்லை? பெட்டிக்குள்ளே வைத்து எதற்காகப் பூட்டினாய்? இது பொக்கிஷமா வைத்துப் பாதுகாப்பதற்கு?" "அப்புறம் சாவகாசமாகச் சொல்லலாம் என்று இருந்தேன்."

"அப்புறமாவது, சொல்லவாவது? தரித்திரம் பிடித்த மூதேவி நீ! உன் மனது அசிங்கத்துக்கு ஆசைப்படுகிறது. ஆகையினாலேதான் இதைப் பெட்டியில் வைத்துப் பூட்டினாய்", லலிதா மௌனமாயிருந்தாள். விளக்கை அணைத்துவிட்டு வந்து பட்டாபிராமன் மறுபடியும் படுத்துக் கொண்டான். லலிதா, "நான் செய்தது பிசகுதான்; தயவு செய்து மன்னித்து விடுங்கள்!" என்று சொன்னாள். "ரொம்ப சரி, இனிமேல் இப்படி எனக்குத் தெரியாமல் ஒரு காரியமும் செய்யாதே. இப்போது பேசாமல் படுத்துக் கொண்டு தூங்கு" என்றான் பட்டாபி. அவ்வாறே லலிதா படுத்துக்கொண்டாள், ஆனால் தூக்கம் வரவில்லை. தேம்பலும் அழுகையும் வந்தது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். கொஞ்ச நேரம் கழித்து, "ஏன்னா! சேர்மன் வேலை என்றால் தினம் ஆபீஸுக்குப் போக வேண்டியிருக்குமோ?" என்று கேட்டாள். "ஆமாம், ஆமாம். 'எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்' என்று நீ எதிர்வீட்டு அம்மாமி, பக்கத்து வீட்டு அம்மாமி எல்லாரிடமும் பெருமையடித்துக் கொள்ளலாம்." "அதற்காக ஒன்றும் நான் கேட்கவில்லை. தினந்தினம் அப்படி என்ன வேலை இருக்கும் என்று தெரிந்து கொள்ளக் கேட்டேன்." "தூக்கம் வருகிறது; என்னைத் தொந்தரவு செய்யாதே! எல்லாம் நாளைக்குச் சொல்கிறேன்." தூங்குவதற்கு லலிதா மனப்பூர்வமான முயற்சி செய்தாள் எனினும் தூக்கம் வரவில்லை. ஆகவே பட்டாபியின் தூக்கத்தைக் கெடுக்காதிருக்கும் பொருட்டுத் தூங்குவது போலப் பாசாங்கு செய்தாள். மணி பதினொன்று அடித்தது.

கடிகாரத்தின் நிமிஷ முள் முழு வட்டத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்தது. மணி பன்னிரெண்டு அடித்தது, எங்கிருந்தோ ஒரு விம்மல் சத்தம் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும்படியான சோகமும் வேதனையும் நிறைந்த விம்மல் சத்தம் அது. தூக்கமின்றிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பட்டாபிராமன் காதில் அது விழுந்து திடுக்கிடச் செய்தது. மறுபடியும் அந்த விம்மல் சத்தம். மேல் மாடியிலிருந்துதான் அந்த விம்மல் வருகிறது; சீதாதான் விம்முகிறாள்; சந்தேகம் இல்லை. தன்னுடைய உள்ளத்தை இந்த உலகத்தில் உண்மையாக உணர்ந்தவள் சீதாதேவி ஒருத்திதான். தன்னுடைய ஆசாபாசங்களில் பூரண அநுதாபம் உள்ளவள் அவள். தனக்கு வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஊட்டியவள் அவள்.தன் வாழ்க்கைக்கே ஓர் ஆதர்சத்தை அளித்தவள் அவள். அத்தகைய சீதா தன்னந்தனியாகப் படுத்துக் கொண்டு விம்மி அழுகிறாள். நெஞ்சு உடையும்படியான வேதனையினால் துடிக்கிறாள். நள்ளிரவு ஆகியும் தூங்காமல் தவிக்கிறாள். அவளுக்கு என்ன துயரமோ, என்னமோ? தன் மாமியாரும் மனைவியும் கூறிய நிந்தை மொழிகள்தான் அவளை இப்படி வதைக்கின்றனவோ? அல்லது வேறு ஏதேனும் துயரச் செய்தி கிடைத்திருக்கிறதோ? ஆகா! இந்தச் சந்தர்ப்பத்தில் அவளுக்கு ஆறுதல் கூறாவிட்டால் தான் உயிரோடிருந்து என்ன பயன்? அவள் தனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கெல்லாம் வேறு எந்த விதத்தில் நன்றி செலுத்தப் போகிறோம்? லலிதாவை எழுப்பி அழைத்துக் கொண்டு போகலாமா? கூடவே கூடாது! அவள் சீதாவை விரோதிக்கத் தொடங்கி பயனில்லை. அவளை அழைத்துக் கொண்டு போவதில் பயனில்லை. ஒருவேளை அவளாலேயேதான் இந்தத் துக்கம் சீதாவுக்கு நேர்ந்திருக்கிறதோ, என்னமோ? பட்டாபிராமன் சத்தம் போடாமல் எழுந்து கட்டிலிலிருந்து இறங்கினான்.

அறையின் கதவைச் சத்தமில்லாமல் திறந்து வெளியேறினான். சத்தமின்றி அடிமேல் அடி வைத்து மாடிப்படி மீது ஏறத் தொடங்கினான். தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த லலிதா படுக்கையிலிருந்து எழுந்தாள். திறந்திருந்த கதவு வழியாக வெளி வந்து வாசற்படிக்கருகே நின்றாள். பட்டாபிராமன் மேலே ஏறுவதைப் பார்த்துக்கொண்டு திக்பிரமை பிடித்து நின்றாள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் லலிதாவின் தாயார் திடீரென்று லலிதாவின் பின்னால் வந்து நின்றாள். லலிதா திரும்பிப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்டாள். சரஸ்வதியம்மாள் இரகசியம் பேசுகிற குரலில், "பார்த்தாயாடி, பெண்ணே! பாம்புக்குப் பாலை வார்த்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும் என்று நான் முட்டிக் கொள்ளவில்லையா? அந்தச் சண்டாளி என்ன செய்து விட்டாள் பார்த்தாயா? உன் குடியைக் கெடுத்து விட்டாளே!" என்று தூபம் போட்டாள். "லலிதா, 'உஷ்!' என்று வாயில் விரலை வைத்துச் சரஸ்வதி அம்மாளை அடக்கினாள். பட்டாபி மச்சுப்படி ஏறும் சத்தம் நின்றது. அறையின் கதவைத் திறக்கும் 'கிறீச்' சத்தம் கேட்டது. மின்சார விளக்குப் போடும் 'கிளிக்' சத்தம் கேட்டது. பின்னர் கதவைச் சாத்தும் சத்தமும் கேட்டது. "போடி, பெண்ணே, போ!" என்று சரஸ்வதி அம்மாள் தூண்டினாள். ஆனால் லலிதாவுக்கு அச்சமயம் தூண்டுதல் அவசியமாயிருக்கவில்லை. ஆவேசம் வந்தவளைப் போல் மச்சுப்படிகளில் வேகமாக ஏறிப் போனாள். மேல்மாடித் தாழ்வாரத்தின் வழியாகச் சென்று சீதாவின் அறைக் கதவை இலேசாகத் திறந்தாள். உள்ளே பார்த்த காட்சி அவள் ஒருவாறு எதிர்பார்த்ததே. ஆனாலும் அவளை ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது. பட்டாபிராமன் சீதாவின் முகவாய்க் கட்டையைத் தன் கையினால் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். சீதாவின் கண்களில் ததும்பிய கண்ணீர்த் துளிகள் மின்சார விளக்கின் மங்கலான ஒளியில் நல்முத்துக்களைப் போல் பிரகாசிக்கின்றன. லலிதா தன் வாழ்நாளில் என்றும் அநுபவித்திரா ரௌத்ராகாரத்தை அடைந்தாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபதாம் அத்தியாயம்
அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி

பொதுக் கூட்டத்தில் சீதாவைப் பற்றி அவதூறாக எழுதிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டதல்லவா? அதனால் மனம் நொந்து போன சீதாவுக்கு மற்றொரு அதிர்ச்சி அடுத்து ஏற்பட்டது. அது சூரியாவிடமிருந்து வந்த கடிதந்தான். அந்தக் கடிதத்தில், "சென்னைக்கு நான் போய்ச் சேர்ந்த அன்றைக்கே எதிர்பாராத விதமாகச் சௌந்தரராகவனும் சீமையிலிருந்து திரும்பி வந்துவிட்டார்!" என்று சூரியா எழுதியிருந்ததைப் படித்ததும் சீதாவுக்கு ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. அது வியப்புடன் மகிழ்ச்சியும் கலந்த அதிர்ச்சி. அந்த வாக்கியத்தைப் படித்தவுடன் சீதாவுக்குத் தன்னுடைய துன்பங்களெல்லாம் தீர்ந்து விட்டதாகத் தோன்றியது. உடனே பறந்துபோய்ச் சௌந்தரராகவனை அடைந்துவிட வேண்டும் என்னும் அளவிலா ஆவல் உண்டாயிற்று. ஆனால் மேலே சூரியா எழுதியிருந்ததைப் படித்ததும் ஏமாற்றமும் துயரமும் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டது. சூரியா தனக்கு நேர்ந்த அனுபவங்களைச் சுருக்கமாகச் சொல்லி விட்டுக் கடிதத்தைப் பின்வருமாறு முடித்திருந்தான்:- "அத்தங்கா! உன் கணவர் திரும்பி வந்ததும் உன்னை அவரிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று எவ்வளவோ ஆசை கொண்டிருந்தேன். உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தப்பபிப்பிராயங்களையெல்லாம் என்னுடைய சாமர்த்தியமான பேச்சினால் போக்கிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். இனிமேல் உங்களுக்கு என்றைக்கும் சச்சரவு ஏற்படாதபடி சிநேகம் செய்து வைக்க வேண்டும் என்று ஆவலாயிருந்தேன். அதெல்லாம் வெறும் பகற்கனவாக முடிந்தது. "பல காரணங்களினால் எனக்குத் தற்சமயம் ஊருக்குத் திரும்பி வர கஷ்டம் இல்லை. இங்கிருந்து டில்லிக்குப் பிரயாணமாகிறேன். அங்கிருந்து மறுபடியும் கடிதம் எழுதுகிறேன்.

"ஒருவேளை கல்கத்தா போன பிறகு உன்னுடைய கணவரின் மனம் மாறி உனக்கு ஏதாவது கடிதம் எழுதினால் உடனே எனக்குத் தெரியப்படுத்தக் கோருகிறேன். என்னுடைய டில்லி விலாசந்தான் உனக்குத் தெரியுமே? "கடைசியாக ஒரு விஷயம், நான் சொல்லப்போவது உனக்குப் பிடிக்காவிட்டால் மன்னித்துவிடு. பட்டாபிராமன் தேர்தல் சேற்றில் இறங்கியதும் எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்காக நீ தேர்தல் வேலை செய்வதையும் நான் விரும்பவில்லை. கூடியவரையில் நீ வெளியில் கிளம்புவதை நிறுத்திக் கொள்வது நலம். உலகம் பொறாமை நிறைந்த பொல்லாத உலகம். தேவபட்டணமோ ரொம்பவும் சிற்றறிவு படைத்த மக்கள் நிறைந்தது. இதற்குமேல் நான் சொல்ல வேண்டியதில்லை." இதைப் படித்து முடித்ததும் சீதாவுக்கு வந்த துயரத்தையும் ஆத்திரத்தையும் சொல்ல முடியாது. உலகத்தின் பேரிலும் கடவுள் பேரிலும் கோபம் வந்தது. அதைக் காட்டிலும் தான் பெற்ற பெண்ணாகிய வஸந்தி கண்மணியின் பேரிலும் கோபம் வந்தது. அம்மா வேண்டியதில்லையென்று எண்ணித்தானே வஸந்தி அப்பாவுடன் கல்கத்தா போய்விட்டாள்? அவள் இனிமேல் எனக்குப் பெண் இல்லை என்று கூறும் வரைக்கும் சீதாவின் கோபம் வரம்பு மீறிப் பொங்கியது. இந்தச் சூரியா எனக்கும் அவருக்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்து வைக்கப் பார்த்தானாம்! இவன் யார் மத்தியஸ்தம் செய்வதற்கு? அவருக்கு மனைவி வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டால் எனக்குப் புருஷன் வேண்டியதில்லை! அவ்வளவு அகங்காரமும் வைஷம்யமும் உள்ள புருஷனிடம் போய்ச் சேர்ந்து தான் என்ன பிரயோஜனம்? எவ்வளவு நாளைக்கு ஒத்து வாழ முடியும்? இத்தனை நாள் பிரிந்திருந்ததினால் அவருடைய உள்ளத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. நான் மட்டும் எதற்காகப் போய் அவர் காலில் விழுந்து சரணாகதி அடையவேண்டும்? வேண்டவே வேண்டாம்.

இந்தச் சூரியாவின் புத்தியைப் பார்! நான் தேர்தல் வேலையில் தலையிடுவது இவனுக்குப் பிடிக்கவில்லையாம்! எதற்காக இவனுக்குப் பிடிக்கவேண்டும்? அந்தத் தாரிணி என்ன செய்தாலும் சூரியாவுக்குப் பிடிக்கும்! அவள் ஆண் பிள்ளைகளைப் போல் வேஷ்டி கட்டிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தாலும், 'அடாடா! என்ன தைரியம்!' என்பான். நான் எது செய்தாலும் அவனுக்குப் பிடிக்காது. எதற்காகப் பிடிக்க வேண்டும்? இவனுக்குப் பிடிக்கிற காரியத்தைச் செய்யத்தானா நான் பெண்ணாகப் பிறந்திருக்கிறேன்? நான் மேடையில் ஏறி நாலு வார்த்தை பேசினாலும் அதற்காகச் சந்தோஷப்பட்டு மெச்சுகிறவர்கள் இல்லாமற் போகவில்லை! அவர்களுடைய அன்பும் அபிமானமும் எனக்குப் போதும்!....இத்தகைய மனோபாவத்துடனேயே சீதா தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் சகித்துக் கொண்டு மறுபடியும் வெளிப்படையாகக் குதூகலமாயிருக்கத் தொடங்கினாள். பட்டாபிராமனுடன் பார்ட்டிகளுக்கும் கூட்டங்களுக்கும் போகலானாள். சூரியாவினிடமிருந்து வந்த கடிதத்தை அவள் யாரிடமும் காட்டவில்லை. ஆயினும் சூரியா தன் குழந்தையை அழைத்து வராததின் காரணத்தை மட்டும் சொல்வது அவசியமாயிற்று. சௌந்தரராகவன் சீமையிலிருந்து திரும்பி வந்து வஸந்தியை அழைத்துக் கொண்டு கல்கத்தா போய்விட்டதாகவும் அதனாலே தான் சூரியா குழந்தையை அழைத்துக்கொண்டு வரவில்லையென்று லலிதாவிடம் கூறினாள். லலிதா மற்றதையெல்லாம் ஒருவாறு ஊகித்துக் கொண்டு முன்னைக் காட்டிலும் சீதாவை அதிக அபிமானத்துடன் நடத்தி வந்தாள்.

ஆனால் லலிதாவின் தாயாருக்கு விஷயம் தெரிந்த போது அவளுடைய வாய் சும்மா இருக்கவில்லை. பட்டாபிராமனும் லலிதாவும் போட்ட வாய்ப்பூட்டு உத்தரவு சரஸ்வதி அம்மாளிடம் செல்லவில்லை. எது எப்படியிருந்தாலும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் புருஷனோடு போய் இருக்க வேண்டிய அவசியத்தைப்பற்றி ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டிருந்தாள். அது சீதாவுக்குப் தெரிந்தபோது அவளுக்கு லலிதாவின் பேரில் கோபம் வந்தது. தன்னை அவமானப்படுத்துவதற்காகவே லலிதா தன் தாயாரை அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருப்பதாக நினைத்தாள். மாமி என்ன வேண்டுமானாலும் உளறட்டும்; லலிதா என்ன வேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். பட்டாபிராமன் தன்னை இந்த வீட்டின் ராணியாக மதித்து மரியாதை செய்து கொண்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது தான் யாருக்கு பயப்பட வேண்டும்? இப்படிச் சீதாவின் உள்ளத்தில் சண்டமாருதம் சுழன்று சுழன்று அடித்து அவளை அப்படியும் இப்படியும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்க, நாட்கள் சென்று கொண்டிருந்தன. சேர்மன் தேர்தல் தினம் நெருங்கி வந்தபோது ஒன்றன் பின் ஒன்றாகச் சீதாவுக்குப் பல அதிர்ச்சிகள் ஏற்பட்டு அவளைக் கதிகலங்கச் செய்தன. டில்லியிலிருந்து கடிதம் வந்தது, சூரியா எழுதியிருந்தான். "தாரிணியிடம் கலந்து ஆலோசித்தேன், உனக்கும் உன் புருஷனுக்கும் மத்தியில் மற்றவர்கள் தலையிடுவதால் தீமைதான் விளையும் என்று தாரிணி அபிப்பிராயப்படுகிறாள். நீயே கல்கத்தாவுக்குச் சென்று அவரிடம் மனம் விட்டுப் பேசி விடுவது தான் நல்லது என்று கருதுகிறாள். அத்தங்கா! முன்னொரு சமயம் நீ இப்படிச் செய்வதென்று தீர்மானித்திருந்தாய். உன் கணவரிடம் போய், 'போனதெல்லாம் போகட்டும்; இனிப் புதிய வாழ்க்கை தொடங்குவோம்' என்று சொல்லிக் கொள்ள எண்ணியிருந்தாய். யாரும் எதிர்பாராத காரணத்தினால் அது தடைபட்டு விட்டது. அந்தத் தீர்மானத்தை இப்போது ஏன் நிறைவேற்றக் கூடாது?

நீ உடனே கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போவதுதான் நல்லது என்று எனக்கும் தோன்றுகின்றது. இங்கே புது டில்லியில் மாஜி திவானுடைய குமாரிகள் இருவர்கள் இருந்தார்களே, ஞாபகம் இருக்கிறதா? அவர்கள் கல்கத்தாவுக்குப் போயிருப்பதாக அறிகிறேன். இதனால் என்னுடைய கவலை அதிகமாயிருக்கிறது. இந்த நிலைமையில் நீ கல்கத்தாவுக்கு உடனே புறப்படுவது நல்லதல்லவா?" இதைப் படித்ததும் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலாயிற்று சீதாவுக்கு. "அப்படியா சமாசாரம்? அவர் 'வா' என்றுகூட அழைக்காமல் நானாகப் போய் அவர் காலில் விழ வேண்டுமா? முடியவே முடியாது! அவர் எந்தப் பேய் பிசாசை வேண்டுமானாலும் கட்டிக் கொண்டு அழட்டும்! எனக்கு என்ன வந்தது? நான் மேடை மீதேறினால் கண் கொட்டாமல் என்னைப் பார்த்து நான் சொல்லும் வார்தையைப் பயபக்தியுடன் கேட்பதற்கு ஆயிரம் பதினாயிரம் பேர் காத்திருக்கிறார்கள். புது டில்லியில் ஒன்றும் அறியாத பெண்ணாயிருந்த பழைய சீதா அல்ல நான்! ஒருவர் காலிலும் போய் விழுந்து கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை எனக்கு!"..... சேர்மன் தேர்தல் நடந்த தினத்தன்று சீதாவுக்கு இரு கடிதங்கள் வந்தன. அவற்றில் ஒன்று கல்கத்தாவிலிருந்து வந்திருந்தது. பின்வருமாறு சித்ரா எழுதியிருந்தாள்:- "என் அருமை சிநேகிதியே! உன்னை எவ்வளவோ புத்திசாலி என்று நான் நினைத்திருந்தேனே! இது என்ன பைத்தியக்காரத்தனம்! உன் கணவர் இங்கே எங்களுக்கு எதிர் வீட்டு மச்சிலேதான் இருக்கிறார். காலையிலும் மாலையிலும் அவர் ஜன்னல் ஓரமாக வந்து உட்கார்ந்து பிரமை பிடித்தவர் போல் இருப்பதைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. என் கணவர் அவரைச் சிரமப்பட்டுச் சிநேகம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டொரு நாள் நானும் இவருடன் போய் உன் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தேன். என்ன அதிசயமான குழந்தையடி அது? அப்படிப்பட்ட அருமைக் குழந்தையை நீ என்னமாக விட்டுப் பிரிந்திருக்கிறாய்?

"ஒரு நாள் வஸந்தி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். என் வாய் சும்மா இருக்கக்கூடாதா! 'உன் அம்மா எப்போ வரப் போகிறாள்?' என்று கேட்டு விட்டேன். 'எங்க அம்மா வரவே மாட்டாள்' என்றாள் குழந்தை. 'ஏன்?' என்றேன். 'எங்க அம்மாவுக்கு அப்பாவைக் கண்டால் பிடிக்காது' என்றாள். 'உனக்கு யாரைப் பிடிக்கும்?' என்று கேட்டேன். 'எனக்கு அப்பாவையும் பிடிக்கும்; அம்மாவையும் பிடிக்கும்' என்றாள். 'அப்படியானால் நீ அப்பாவோடேயே இருக்கிறாயே? அம்மாவைப் பார்க்க ஆசையாக இல்லையா?' என்றேன். 'ஆசையாகத்தான் இருக்கிறது; அதற்கு என்ன செய்கிறது? எங்க அப்பா தனியாக இருக்கிறாரே? அவரை விட்டு விட்டு எப்படிப் போகிறது?' என்றாள் சீதா! இந்தக் குழந்தையைப் பெற்ற தாய் நீதானே? குழந்தைக்கு இருக்கும் ஈவிரக்கத்தில் பத்தில் ஒன்றாவது உனக்கு இராமற் போய்விடுமா? "இரண்டு நாளைக்கு முன்னால் உன் கணவர் உன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை இவர் தெரிந்து கொண்டார். சில நாளாக இரண்டு அதி நாகரிகப் பெண்மணிகள் எதிர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வெகு நேரம் உன் கணவரிடம் பேசிவிட்டுப் போகிறார்கள். என் கணவருக்கு இது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. ஒரு நாள் 'அந்தப் பெண்கள் யார்?' என்று கேட்டாராம். 'டில்லியில் எனக்குத் தெரிந்தவர்கள்!' என்றாராம். 'ரொம்ப நெருங்கிய சிநேகிதம் போலிருக்கிறது!' என்று இவர் கேட்டாராம். 'இன்னும் ரொம்ப நெருங்கிய சிநேகமாக வேணும் என்று பார்க்கிறார்கள். என்னைக் கலியாண வலையில் சிக்கவைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள்!' என்றாராம். அவருடைய மனதை இன்னும் நன்றாய் அறிவதற்காக இவர், 'நீங்களும் எத்தனை காலம் தனியாக வாழ்க்கை நடத்த முடியும்? இரண்டு பேரில் ஒருவரைக் கலியாணம் செய்து கொள்வது தானே?' என்று கேட்டதற்கு உன் கணவர் என்ன பதில் சொன்னார், தெரியுமா? 'தெய்வம் இருந்த கோயிலில் பிசாசைக் குடியேற்றச் சொல்கிறீர்களா?' என்றாராம்.

"என் அருமை சிநேகிதியே! உன்னை உன் கணவர் 'தெய்வம்' என்று வாய் திறந்து சொல்லியிருக்கிறார். நீ எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கிறாய். இந்த வெட்கக்கேட்டை நான் என்னவென்று சொல்வது? "அதெல்லாம் போகட்டும் நேற்று முதல் வஸந்திக்குச் சுரம் அடிக்கிறதாம். குழந்தை தூக்கத்தில் 'அம்மா வரமாட்டாள்' என்று பிதற்றுகிறாளாம். உன் மனதில் கொஞ்சமாவது ஈரம் என்பது இருந்தால் உடனே புறப்பட்டு வந்து சேரு!" இந்தக் கடிதம் சீதாவைக் கலங்க வைத்து விட்டதில் ஆச்சரியம் இல்லையல்லவா? சித்ரா எழுதியிருப்பதெல்லாம் உண்மையாயிருக்குமா? அல்லது என்னை வரவழைப்பதற்காகக் கற்பனை செய்து எழுதியிருக்கிறாளா? அவர் தன்னைத் 'தெய்வம்' என்று குறிப்பிட்டது நிஜமா? அப்படியானால் 'உடனே புறப்பட்டு வா!' என்று ஒரு வரி ஏன் எழுதிப் போடக் கூடாது? குழந்தைக்குச் சுரம் என்பதும் பொய்தானோ, என்னமோ? ஒருவேளை உண்மையாக இருந்துவிட்டால்?.... கடவுளே! என் குழந்தையைக் காப்பாற்று! நான் செய்திருக்கும் பாவங்களுக் காக எனக்கு என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். என் குழந்தைக்கு ஒன்றும் நேராமல் இருக்கட்டும். சித்ரா எழுதியிருப்பது உண்மையானாலும் கற்பனையானாலும் உடனே புறப்பட்டுப் போக வேண்டியது தான். இனிமேல் தாமதிக்கக் கூடாது, இன்றிரவே லலிதாவிடமும் பட்டாபிராமனிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டியதுதான். இவ்விதம் எண்ணிக்கொண்டே சீதா தன் பெயருக்கு வந்திருந்த இன்னொரு உறையைப் பிரித்தாள். அதற்குள்ளே அச்சடித்த பத்திரிகைத் துண்டு ஒன்று இருந்தது. இரண்டு நாளைக்கு முன்பு லலிதாவுக்கு வந்த அதே பத்திரிகைத் துணுக்குத் தான். லலிதா மட்டும் அதைப் பார்த்து சீதா பாராமல் இருந்துவிடப் போகிறாளே என்ற கவலையினால் யாரோ ஒரு புண்ணியவான் கர்ம சிரத்தையாக அதைச் சீதாவுக்கும் அனுப்பி வைத்திருந்தான்! அந்தப் பத்திரிகைத் துணுக்கைப் படித்த போது சீதாவுக்கு கண்கள் இரண்டும் பற்றி எரிவது போலத் தோன்றியது. அவமானம் பொறுக்க முடியவில்லை. பூமி பிளந்து அதற்குள்ளே தான் போய்விடக் கூடாதா? அந்த மாதிரி பாக்கியம் ஜனக மகாராஜனுடைய புத்திரியாகிய சீதா தேவிக்குக் கிடைத்தது. மகாபாவியாகிய தனக்கு அந்தப் பாக்கியம் எங்கே கிடைக்கப் போகிறது?

சொல்ல முடியாத, சகிக்க முடியாத அவமானத்தினால் சிறிது நேரம் பிரமை பிடித்திருந்த பிறகு கொஞ்சங் கொஞ்சமாகச் சீதாவுக்குச் சுய உணர்வு வந்து சிந்தனா சக்தி ஏற்பட்டது. இரண்டு நாளாக லலிதாவின் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாறுதலுக்கு இதுதான் காரணமோ? இந்த மாதிரி ஒரு விஷயம் வந்திருப்பதைப் படித்த பிறகும் லலிதா தன்னை இந்த வீட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தாளா? அப்படியானால் அவள்தான் சீதை, சாவித்திரி, தமயந்தி எல்லாரும்! அவளுடைய முகத்தில் தான் இனி விழிக்க முடியாது. பட்டாபிராமனையும் ஏறெடுத்துப் பார்க்க முடியாது. அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பிட வேண்டியதுதான்; இரவில் எல்லாரும் படுத்துத் தூங்கியான பிறகு! தான் செய்ய வேண்டியதைப் பற்றிச் சீதாவுக்குச் ஏதாவது கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், அன்றிரவு பத்து மணிக்கு மேல் கீழ்க்கட்டில் நடந்த ரகளையினால் அது தீர்ந்து போய்விட்டது. அது சின்ன வீடு, லலிதாவுக்கும் பட்டாபிராமனுக்கும் படுக்கையறையில் நடந்த சம்பாஷணையோ உரத்த சத்தத்தில் நடைபெற்றது. அதில் பாதிக்குமேல் சீதாவின் காதில் விழுந்து அவளை இந்த உலகத்திலேயே நரக வேதனைக்கு உள்ளாக்கியது. புருஷனும் மனைவியும் எப்போது தூங்கப் போகிறார்கள் என்று சீதா காத்திருந்தாள். பேச்சுக் குரல் அடங்கி ஒரு மணி நேரத்துக்குப் புறப்பட எண்ணினாள். அதுவரையில் படுக்கையிலே குப்புறப் படுத்துக்கொண்டு தான் பெண்ணாய் பிறந்தது முதல் நாளது வரையில் அநுபவித்த துன்பங்களையெல்லாம் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக் கொண்டாள். உலகத்தில் எத்தனையோ பெண்கள் பிறந்து வாழ்கிறார்களே? அவர்களில் யாராவது தன்னைப் போலக் கஷ்டப்பட்டதுண்டா? தன்னை மட்டும் கடவுள் ஏன் இப்படிச் சோதனை செய்கிறார்? ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் கதாநாயகி 'பேதையாய்ப் பிறந்த நாளாய்' என்று பாடியிருப்பது சீதாவுக்கு நினைவு வந்தது. அந்தச் சோகக் கட்டத்துப் பாட்டு அவள் துயரத்தை அதிகமாக்கிற்று. அவளை அறியாமல் விம்மல் வந்தது. கீழே இருப்பவர்களுக்குக் கேட்காமலிருக்க வேண்டுமே என்ற நினைவினால் விம்மலை அடக்கப் பார்த்தாள். எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியவில்லை. குப்புறப் படுத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் விம்மல் வந்து கொண்டிருக்கும் என்று எழுந்து பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட யத்தனித்தாள்.

இந்தச் சமயத்தில் மச்சுப்படியில் யாரோ ஏறிவரும் காலடிச் சத்தம் கேட்டது. ஏதோ ஒரு விபரீதம் மாடி ஏறி வருகிறது என்று அவள் உள் உணர்வுக்குத் தோன்றி நெஞ்சு பதைபதைத்தது. அறையின் கதவு திறந்தது, வந்தவன் பட்டாபிராமன்தான் என்று மனதுக்குத் தெரிந்துவிட்டது. ஐயோ! இவன் எதற்காக இங்கே, இந்த வேளையில் தனியாக வருகிறான்! தன்னைக் கொலை செய்வதற்கு வருகிறானா? இல்லையென்றால் தன்னுடைய ஆத்மாவைக் கொலை செய்வதற்கு வருகிறானா? இவனை எப்படித் திரும்பிப் போகச் செய்வது? குப்புறப் படுத்தவண்ணம் தூங்குவதுபோல் அசையாம லிருக்கலாம். தூங்குவதாக எண்ணிக்கொண்டு ஒருவேளை திரும்பிப் போய்விடமாட்டானா? சீதாவின் ஆசை நிராசையாயிற்று. அவள் தூங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு பட்டாபிராமன் திரும்பிப் போகவில்லை; உள்ளே வந்தான். அவள் அருகிலும் வந்தான், வந்து அவள் தோள்களைத் தொட்டு மெதுவான குரலில், "சீதா" என்றான். சீதா தள்ளி எழுந்து அவன் கைகளை உதறித் தள்ளிவிட்டு உட்கார்ந்தாள். "பயப்படாதே, சீதா! நான்தான்!" என்றான் பட்டாபிராமன். பிறகு அவன் ஏதேதோ சொன்னான். சீதா கேட்டுக் கொண்டேயிருந்தாள். முதலில் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. ஆகா! அந்தப் பத்திரிகையிலே யாரோ எழுதியிருந்தது சரியாய்ப் போய் விட்டது! இவன் தன்னிடம் காதலை வெளியிடுகிறான். தனக்காக, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்கிறேன் என்கிறான். தனக்காக வீடு வாசலையும் சேர்மன் வேலையையும் விட்டுவிட்டு இலங்கைக்கோ ஆப்பிரிக்காவுக்கோ அந்தமான் தீவுக்கோ வரத் தயாராயிருக்கிறானாம்! தன்னுடைய விம்மல் சத்தம் இவனுடைய இதயத்தைப் பிளந்து விட்டதாம். இவனுடைய மனைவியும் மாமியாரும் செய்த அநீதிகளுக்கெல்லாம் பரிகாரம் செய்து விடுவானாம்! வாயைத் திறந்து 'சரி' என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதுமாம்! கடவுளே! இவனுடைய மூளை இப்படியா பிசகிப் போக வேண்டும்; புருஷர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்களோ? இவனை எப்படி இங்கிருந்து அனுப்புவது? என்ன வார்த்தை சொன்னால் போவான்? இவனுடைய பேச்சுக் குரலை கேட்டு லலிதா எழுந்து வராமலிருக்க வேண்டுமே? வந்தால் எவ்வளவு அவமானமாயும் விபரீதமாயும் முடியும்? ஐயோ! இவன் எதற்காகத் தன் முகவாய்க் கட்டையைத் தொடுகிறான்? தொட்டுக் கொண்டு என்னமோ உளறுகிறானே?...

அறைக் கதவு மறுபடி திறந்தது. லலிதா வந்து வாசற்படியில் ரௌத்ராகாரமாக நின்றாள். சீதாவுக்குச் சப்த நாடியும் விட்டது. கொஞ்ச நஞ்சமிருந்த சிந்தனா சக்தியும் போய்விட்டது. மனது ஒன்றையும் நினைக்க முடியவில்லை. உடம்பையும் அவளால் அசைக்க முடியவில்லை. ஆனால் காது தீக்ஷண்யமாயிருந்தது. நெருப்பைக் கக்கிக்கொண்டு வரும் அக்கினி அஸ்திரங்களைப் போல் லலிதா கூறிய கொடிய மொழிகள் காதில் விழுந்தன. "அடிபாவி! சண்டாளி! இப்படியா எனக்குத் துரோகம் செய்வாய்? 'பாம்பை வீட்டிலே வைத்துப் பால் வார்க்கிறாயே?' என்று அம்மா சொன்னாளே? அவள் வாக்கு உண்மையாகி விட்டதே! உன்னை இதற்காகவா இங்கே அழைத்து வந்தேன்? என் குடியைக் கெடுத்து விட்டாயே? அடி, குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! அன்றைக்கு என்னைப் பெண் பார்க்க வந்தவனைக் குறுக்கே நின்று மறித்துக் கலியாணம் செய்து கொண்டாய், அதற்காக நான் சந்தோஷப்பட்டேன். அவனோடு வாழத் தெரியாமல் ஓடிவந்தாய், அப்படியும் எனக்குப் புத்தி வரவில்லை. உன்னை மறுபடியும் என் வீட்டுக்கு அழைத்து வந்து சீராட்டித் தாலாட்டினேன். என் கழுத்துக்கே கத்தி வைத்துவிட்டாய்! நீ நன்றாயிருப்பாயா? ஆனால் உன்னைச் சொல்லி என்ன பிரயோஜனம்? இந்தப் பாவி இப்படிப்பட்ட கள்ளத்தனம் செய்யும் கிராதகனாக இருக்கும் போது நீ என்ன செய்வாய்? உன்னைச் சொல்லி உபயோகமில்லை. இந்தச் சண்டாளனைத் தேடிப் பிடித்து என்னைக் கொண்டு வந்து தள்ளினார்களே, அவர்களைச் சொல்ல வேண்டும்....!" இத்தனை நேரமும் பேச முடியாமல் திகைத்திருந்த பட்டாபிராமன் இப்போது துள்ளிப் பாய்ந்து, "லலிதா! வாயை மூடு ஜாக்கிரதை!" என்றான். "என்னங்காணும் அதட்டுகிறீர்! செய்கிறதையும் செய்து விட்டு இது வேறேயா?

எத்தனை நாளாக உம்முடைய லீலைகளை நடத்தி வருகிறீர்! அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்ததற்கு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிட்டதே! நான் அந்தப் பத்திரிகையைத் தொட்டதற்காக ஆத்திரம் பொங்கி வந்ததே! அதில் எழுதியிருந்ததெல்லாம் உண்மைதானே! என் கைப்பட நானே அந்தப் பத்திரிகைக்குக் கடிதம் எழுதுகிறேன். இதோ தெரு வாசலுக்குச் சென்று கூச்சலிட்டு ஊரைக் கூட்டுகிறேன்.பட்டாபிராமனுக்கு ஒரு நொடியில் என்னவெல்லாமோ பயங்கரமான எண்ணங்கள் உதித்து மறைந்தன. "லலிதா! வாயை மூடுகிறாயா, இல்லையா? மூடாவிட்டால் இதோ உன்னைக் கொன்றுவிடுவேன்!" என்று சொல்லிக் கொண்டே அருகில் இரண்டடி எடுத்து வைத்தான். "கொன்று விடுங்கள்! பேஷாகக் கொன்று விடுங்கள்! உம்! ஏன் கொல்லாமல் சும்மா நிற்கிறேள்?" என்று லலிதா கூச்சலிட, பட்டாபிராமன் விகாரமான முகத் தோற்றத்துடன் கையைப் பயங்கரமாக ஆட்டிக் கொண்டு வந்து லலிதாவை நெருங்கி அவளுடைய கழுத்தில் கையை வைத்தான். கழுத்தில் அவன் கை பட்டதோ இல்லையோ, லலிதா, "ஐயோ! அம்மா! என்னைக் கொல்லுகிறார்களே! உன் மாப்பிள்ளையும் சீதாவும் சேர்ந்து மென்னியைப் பிடித்துக் கொல்லுகிறார்களே!" என்று பயங்கரமாய்க் கூவிக் கொண்டே கீழே தடால் என்று விழுந்தாள். அவளுடைய உதடுகளும் கை கால்களும் பயங்கரமாகவும் கோணல் மாணலாகவும் இழுத்தன. கண்கள் செருகிக் கறுப்பு விழி மறைந்து வெள்ளை விழி மட்டும் தெரிந்தது, வாயிலிருந்து நுரை வந்தது. தொண்டையிலிருந்து களகளவென்று ஒரு சத்தம் உண்டாகிப் பயங்கரத்தை அதிகப்படுத்தியது. பட்டாபிராமன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து தன் இரண்டு கைகளாலும் லலிதாவைத் தூக்கி எடுத்துக் கொண்டான். அச்சமயம் அவனுடைய மாமியார் குறுக்கே வந்து, "என் பெண்ணை ஒருவரும் தொட வேண்டாம் அவளைக் கீழே விடும்!" என்றாள். "ஏ மூதேவி! விலகிப் போ!" என்று சொல்லிக் கொண்டே மாமியாரை ஒரு இடி இடித்து அப்பாற்படுத்திவிட்டுப் பட்டாபிராமன் கீழே சென்றான். கட்டிலில் கொண்டு போய் லலிதாவைக் கிடத்தி அவள் முகத்தில் தண்ணீரை விசிறித் தெளித்துச் சிகிச்சை செய்யத் தொடங்கினான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்தொன்றாம் அத்தியாயம்
கண்கண்ட தெய்வம்

சீதாவின் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர்த் துளிகள் உலர்ந்து போயின. அவளுடைய மனதில் குடிகொண்டிருந்த பெரும் பாரம் இறங்கி விட்டது. கலக்கம் தீர்ந்து மனதில் தெளிவு ஏற்பட்டிருந்தது. தான் இனி கடைப்பிடிக்க வேண்டிய பாதைதான் என்ன என்பதைப்பற்றி அவள் ஒரு தீர்மான முடிவுக்கு வந்திருந்தாள். லலிதா தன்னுடைய கூரிய சொல்லம்புகளை எய்து கொண்டிருந்த அதே சமயத்தில் சீதாவின் மனதில் அந்த உறுதியான தீர்மானம் ஏற்பட்டு விட்டது. ஆகவே சமீப காலத்தில் அவள் அறிந்திராத மனச் சாந்தியும் ஏற்பட்டிருந்தது. கைப்பெட்டியில் மாற்றி உடுத்திக் கொள்வதற்கு வேண்டிய இரண்டொரு சேலைகளை எடுத்து வைத்துக் கொண்டாள். கைவசம் இருந்த பணத்தையெல்லாம் திரட்டி எடுத்து வைத்துக் கொண்டாள். மேஜை டிராயரைத் திறந்து அதிலிருந்த கடிதங்களையெல்லாம் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டாள். அன்று தபாலில் வந்த பத்திரிகைத் துண்டை அணு அணுவாகப் போகும் வரையில் கிழித்து எறிந்தாள். பிறகு புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கீழ் வீட்டில் சந்தடி அடங்கட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் வரையில் கீழே ஏக ரகளையாகத்தானிருந்தது பட்டாபிராமனுடைய அதட்டல், சரஸ்வதி அம்மாளின் கோபக் குரல் - இவற்றுடன் குழந்தைகள் பட்டு, பாலுவின் அழுகைச் சத்தமும் கலந்து கேட்டது. பாவம்! அந்த அர்த்த ராத்திரிச் சந்தடியில் குழந்தைகள் விழித்தெழுந்து அம்மா மூர்ச்சையாகிக் கிடந்ததைப் பார்த்துவிட்டு அழத்தொடங்கின. சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதாவின் தீனக்குரல் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தடி அடங்கியது, விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் அந்த வீட்டில் நிசப்தம் குடிகொண்டது. மேலும் சிறிது நேரம் சீதா காத்திருந்தாள். வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் போகலாமா என்ற எண்ணம் எழுந்து தொந்தரவு செய்தது. ஆனால் நேரம் ஆக ஆக அவளுடைய பொறுமை குறைந்து வந்தது. அந்த அறையின் நாலு பக்கத்துச் சுவர்களும் அவளை நோக்கி நெருங்கி நெருங்கி வருவதாகத் தோன்றியது. இன்னும் சற்றுநேரம் அறையில் இருந்தால் அந்தச் சுவர்கள் அவளை நெருங்கி வந்து நாலாபுறமும் அமுக்கி மூச்சுத் திணற அடித்துக் கொன்றுவிடும் என்ற பீதி உண்டாயிற்று.

அந்தப் பீதியிலிருந்து விடுவித்துக் கொள்ளச் சீதா விரைந்து எழுந்தாள். மேஜையிலிருந்து ஒரு காகிதம் எடுத்து அதில் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினாள். ஒரு வரி, இரண்டு வரி எழுதிக் கிழித்துப் போட்டாள். கடிதம் எழுதுவது சாத்தியமில்லை என்று தீர்மானித் தாள். கைப்பெட்டியையும் மணிபர்சையும் எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் புறப்பட்டாள். அடிமேல் அடிவைத்துச் சத்தமின்றி மெதுவாக நடந்து மச்சுப் படிகளில் இறங்கினாள். கீழ்க்கட்டுத் தாழ்வாரத்தில் நீலவர்ண மின்சார தீபம் எரிந்து கொண்டிருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் அவளுக்கு எதிரே இருந்த சுவரில் ஒரு படம் தென்பட்டது. அந்தப் படத்தில் காந்தி மகாத்மாவின் திருஉருவம் இருந்தது. சாந்தி நிறைந்து புன்னகை தவழ்ந்த மகாத்மாவின் திருமுகமும் கருணை ததும்பிய கண்களும் காந்திஜி உண்மையிலே அங்கு வீற்றிருந்து அவளை ஆசீர்வதிப்பது போன்ற தெய்வீக உணர்ச்சியைச் சீதாவுக்கு உண்டாக்கிற்று. அது ஒரு நல்ல சகுனம் என்றும் அவளுக்குத் தோன்றியது. "கலியுகத்திலே கண்கண்ட தெய்வம் காந்திமகான்தான்" என்று சீதாவின் தாயார் அவளுடைய இளம்பிராயத்தில் அடிக்கடி சொல்லியிருந்தது அவளுடைய மனதில் நன்கு பதிந்து நிலை பெற்றிருந்தது. பெட்டியைத் தரையில் வைத்துவிட்டுச் சீதா மகாத்மாவின் திருவுருவத்தின் முன்னால் நமஸ்கரித்தாள். எழுந்ததும் ஒரு நிமிஷம் கைகூப்பி நின்று, "எந்தையே! என்னை ஆசீர்வதியுங்கள். வாழ்க்கையில் நான் புதியதாக மேற்கொள்ளப் போகும் பாதையில் என்றும் உறுதி தவறாமல் நடப்பதற்கு வேண்டிய மனோபாவத்தை எனக்கு அளியுங்கள்!" என்று வேண்டிக் கொண்டாள். அப்படி வேண்டிக்கொண்டதோடு மட்டும் அவளுடைய மனம் திருப்தி அடைந்துவிடவில்லை. இன்னும் ஏதோ மனக் குறை இருந்தது, சிறிது நேரம் சிந்தனை செய்தாள். உடனே தன் மனக்குறையைத் தீர்க்கும் மருந்து இன்னதென்று புலப்பட்டது.

"காந்தி என்னும் கருணைத் தெய்வமே! 'தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டைவிட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன். இனி நான் நடக்கப் போகும் பாதையில் எனக்கு எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்யமாட்டேன். எப்படிப்பட்ட நிலைமையிலும் எந்தக் காரியத்தையும் 'இதை காந்தி மகாத்மா ஒப்புக்கொள்வாரா?' என்று எனக்கு நானே கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன். இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன். இந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றும் சக்தியையும் தாங்கள்தான் எனக்கு அருளவேண்டும்!" இவ்விதம் சீதா மனதிற்குள் தெளிவாகச் சிந்தித்து பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு மகாத்மாவின் படத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தரையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு மறுபடி புறப்பட்டாள். வாசற்கதவைச் சத்தமின்றித் திறந்துகொண்டு வெளியேறினாள். வெளியேறும்போது அவளுடைய மனம், "இந்த வீட்டில் நான் புகுவதற்கு முன்னால் அன்பும் சாந்தமும் நிலவின. என்னால் விளைந்த குழப்பம் என்னோடு போகட்டும். இனி முன்போலவே அமைதி நிலவட்டும். இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்பேரில் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள்: அதற்கெல்லாம் பதிலாக நான் பெரும் அபசாரம் செய்துவிட்டேன். கடவுள் என்னை மன்னிப்பாராக!" என்று எண்ணமிட்டது.

பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் அரை மைல் தூரத்தில் இருந்தது. சீதா அந்தத் தேவபட்டணத்துக்கு வந்த புதிதில் வெள்ள நிவாரண வேலை செய்ததிலும் பிறகு தேர்தல் வேலை செய்ததிலும் அந்நகரின் தெருக்கள், சந்துபொந்துகள், மூலைமுடுக்குகள் எல்லாம் அவளுக்கு நன்றாகத் தெரிந்து போயிருந்தன. ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நேராகச் சென்ற குறுக்குப் பாதையில் அவள் இப்போது நடந்தாள். வீதிகளிலும் சந்துகளிலும் ஜன நடமாட்டமே இல்லை. காலை மூன்று மணிதான் உலகமே நன்றாய்த் தூங்கும் நேரம் என்று தோன்றியது. திருடர்கள் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்துவதற்கு அதுவே சரியான நேரம். யாராவது தன்னை அடித்துப் பிடுங்குவதற்கு வந்து சேர்ந்தால்?... சேச்சே! அப்படியெல்லாம் எதற்காகத் தனக்கு நேரப்போகிறது? அப்படியெல்லாம் நேராதா? ஏன் நேராது? தான் துரதிருஷ்டத்துக்கும் துன்பத்துக்குமே பெண்ணாய் பிறந்தவள் ஆயிற்றே? யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் போலிருக்கிறதே? நெருங்குவதற்குத் தயங்கிக் கொஞ்ச தூரத்திலேயே வருகிறது போல் காணப்படுகிறதே? வருகிறவர் ஒருவரா அதிகம் பேரா? எதற்காகத் தன்னை அவர்கள் தொடர்ந்து வரவேண்டும்? ஒருவேளை அவர்களும் தன்னைப் போல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம் அல்லவா? தான் அநாவசியமாக ஏன் பீதிக்கொள்ள வேண்டும்?

பீதி அநாவசியந்தான்! யார் தன்னை என்ன செய்துவிட முடியும்? ஒன்றும் முடியாதுதான்! ஆயினும் நெஞ்சம் படக் படக், என்று அடித்துக் கொள்வதில் குறைவில்லை. காலடிச் சத்தத்துக்கு மேல் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே! கடவுளே! காந்தி மகாத்மா! இந்தப் பேதையைக் காப்பாற்றுங்கள்! இது என்ன பைத்தியம்? யாரிடமிருந்து எதற்காகக் கடவுளும் காந்திஜியும் தன்னை இப்போது காப்பாற்ற வேண்டும்? தனக்கு என்ன பயம்? தனக்குக் கெடுதல் செய்வதில் யாருக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? அப்படியும் நினைப்பதற்கில்லை, இந்த ஊரில் தனக்கு யாரோ விரோதிகள் இருக்கிறார்கள். இருக்கிறதினாலேதான் தன்னைப் பற்றி அப்படித் துண்டுப் பிரசுரம் போட்டார்கள். பிற்பாடு பத்திரிகையில் தன்னையும் பட்டாபிராமனையும் பற்றி அவ்வளவு கேவலமாக எழுதினார்கள். அப்படிப்பட்ட பரம விரோதிகள் என்னதான் செய்யமாட்டார்கள்? ஒற்றர்களை வைத்திருந்து தான் தனியாக வெளிக் கிளம்புவதைக் கவனித்துப் பின்தொடர்ந்து வருகிறார்களா என்ன? பின்தொடர்ந்து வந்து ஒருவேளை தன்னை வெட்டிப் போட்டு விடுவார்களோ? அப்படிச் செய்துவிட்டால் ரொம்ப நல்லதாகப் போய்விடும்! இந்த வாழ்க்கையாகிற பாரத்தை மேலும் சுமக்க வேண்டியிராது? ஆனால் அந்தக் கிராதகர்கள் அப்படிச் செய்வார்களா? அல்லது தான் தனியாகக் கிளம்பிச் சென்றதைக் கவனித்து வைத்துக் கொண்டிருந்து இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து மறுபடியும் பத்திரிகையில் ஏதாவது பயங்கரமாக எழுதுவார்களா? அப்படியெல்லாம் எழுதித் தன்னை அவமானப்படுத்துவதைக் காட்டிலும் ஒரு வழியாகக் கொன்று போட்டு விட்டால் நிம்மதியாகப் போய்விடும்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்னும் பாதி தூரம் இருக்கும் போது பின்னால் யாரோ தன்னைத் தொடர்ந்து வருவதாகச் சீதா சந்தேகித்தாள். ரயில்வே ஸ்டேஷனைக் கிட்டத்தட்ட நெருங்கியபோது அவளுடைய பீதி ஒருவாறு குறைந்து தைரியம் மிகுந்தது. வருகிறது யார் என்று தெரிந்துகொள்ளும் எண்ணத்தோடு முனிசிபல் விக்கு மரம் ஒன்றின் அடியில் நின்றாள். நின்று பரபரப்புடன் தான் வந்த வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தின் திருப்பத்தில் திரும்பி ஒரு ஆசாமி வந்தான். அவன் வேறு யாரும் இல்லை; சூரியாவின் தம்பி சுண்டுதான்! சீதாவின் மனத்திலிருந்த பயம் என்கிற பாரம் விலகியது. பயம் இருந்த இடத்தில் கோபம் குடிபுகுந்தது. இவன் எப்படி திடீரென்று இங்கே வந்து முளைத்தான்? தன்னை எதற்குப் பின்தொடர்ந்து வந்தான்? வந்ததுதான் வந்தானே, சட்டென்று வந்து தனக்குத் துணையாகச் சேர்ந்து கொள்ளக் கூடாதா? பின்னாலேயே வந்து தன்னை இப்படிப் பயமுறுத்துவானேன்? அசட்டுப் பிள்ளை! கிட்டா மாமாவின் பிள்ளைகளில் சூரியா ஒருவன்தான் கொஞ்சம் சமர்த்து; மற்றவர்கள் எல்லாரும் மோசந்தான். அசட்டுச் சிரிப்புடன் அருகில் நெருங்கி வந்த சுண்டுவைப் பார்த்துச் சீதா, "எதற்காக அப்பா, என்னைப் பின்தொடர்ந்து வருகிறாய்? உனக்கு வேலை இல்லையா அல்லது உன் அம்மா நான் திரும்பி வந்து விடாதபடி ரயிலில் ஏற்றி விட்டு வருவதற்கு உன்னை அனுப்பி வைத்தாளா? யாரோ திருடன் தொடர்ந்து வருகிறானாக்கும் என்று எண்ணியல்லவா பயந்து போய் விட்டேன்?" என்றாள். "இப்படித்தான் உலகத்தில் பல தவறுகள் ஏற்படுகின்றன. ஏதோ சூரியா எழுதியிருக்கிறானே என்பதற்காக நான் உன்னுடைய துணைக்கு வந்தேன். நீ என்னைத் திருடன் என்று எண்ணிப் பயந்து கொண்டாய்! அநாவசியமாக என் அம்மாவையும் வைகிறாய்!" என்றான் சுண்டு. "அது போனால் போகட்டும், சுண்டு! சூரியா கடிதம் எழுதியிருக்கிறானா?" என்று சீதா ஆவலுடன் கேட்டாள். சூரியா ஒருவனாவது தன்னுடைய நன்மையில் உண்மையான கவலை கொண்டவனாயிருக்கிறானே என்று எண்ணிச் சீதா அத்தனை துயரத்துக்கிடையிலும் சிறிது ஆறுதல் பெற்றாள்.

"சூரியா டில்லியிலேயிருந்து எழுதியிருந்தான். ஒருவேளை நீ கல்கத்தாவுக்குப் புறப்படலாம் என்றும், அப்படியானால் நான் சென்னை வரையிலாவது போய்க் கல்கத்தா ரயிலில் உன்னை ஏற்றி விடும்படியும் எழுதியிருந்தான். நீ விரும்பினால் கல்கத்தா வரையிலே கூடப்போகும்படி எழுதியிருந்தான். ஆனால் நீ இப்படி அர்த்தராத்திரியில் ஒருவருக்கும் தெரியாமல் வீட்டுக் கதவைத் திறந்து போட்டு விட்டுப் புறப்படுவாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை....." இத்தனை நாளும் நீ எங்கே இருந்தாய் சுண்டு! உன்னை நான் பார்க்கவே இல்லையே? திடீரென்று இன்றைக்கு எப்படி வந்து முளைத்தாய்?" "உனக்கு எங்கே எலெக்ஷன் தடபுடலில் என்னைப்பற்றிக் கவனிக்க நேரம் கிடைக்கப் போகிறது? இத்தனை நாளும் நான் ராஜம்பேட்டையில் இருந்தேன். இந்த மார்ச்சு பரீட்சையில் தவறிவிட்டேன். அம்மா, சூரியா இரண்டு பேரும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள் அல்லவா? அதற்காக என்னைப் போய் அங்கே இருக்கச் சொன்னார்கள். சூரியாவின் கடிதம் வந்ததும் புறப்பட்டு வந்தேன். அதோடு சேர்மன் தேர்தலின்போது இங்கே இருந்து அத்திம்பேர் வெற்றி பெற்றால் வாழ்த்துக் கூற விரும்பினேன். ஆனால் வாழ்த்துக் கூற அவசியமில்லாமலே போய் விட்டது. சேர்மன் வேலை ஆனதற்காக அத்திம்பேருக்கு அனுதாபம் தான் சொல்லவேண்டும்." "வா ஸ்டேஷன் பக்கம் நடந்து கொண்டே பேசலாம்" என்று சொல்லிச் சீதா நடக்கத் தொடங்கினாள். ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருந்தது, ரயிலோ நாலரை மணிக்குத்தான். ஆகையால் மெள்ள மெள்ளப் பேசிக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். "ராத்திரி நடந்ததெல்லாம் உனக்குத் தெரியுமா, என்ன? எங்கேயிருந்தாய் நீ?" என்று சீதா கேட்டாள். வெட்கத்தோடு முழுவதும் அவனுக்குத் தெரிந்திருக்க முடியாது என்று எண்ணினாள். "எதிர் வீட்டுத் தாமோதரம் பிள்ளை வீட்டில் படுத்திருந்தேன். பிள்ளையும் நானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரகளையில் பெரும் பாகம் எங்களுக்குக் கேட்டது. மிச்சத்தை இட்டு நிரப்பிக் கொண்டோ ம். சந்தடி ஓய்ந்து சிறிது நேரத்திற்குப் பிறகு நான் தூங்கிவிட்டேன். ஆனால், பாவம் தாமோதரம் பிள்ளை தூங்கவேயில்லை அவருக்கு ரொம்ப வருத்தம். நீ வெளிக் கிளம்புவதை அவர்தான் பார்த்துக் கொண்டிருந்து என்னை எழுப்பி விட்டார்....."

"பாவம்! தாமோதரம் பிள்ளை ரொம்ப நல்ல மனிதர். அவர் அப்போது சொன்னதைக் கேட்காமற் போனோம்; அவர் சொன்னதைக் கேட்டு இந்த எலெக்ஷன் தொல்லையில் இறங்காமலிருந்தால் இப்படியெல்லாம் ஏற்பட்டிராது. என்ன தவறு செய்து விட்டேன்!" "அத்தங்கா! இதெல்லாம் ஒரு தவறு ஆகாது. நீ செய்த அடிப்படையான தவறு பன்னிரண்டு வருஷத்துக்கு முன் ராஜம்பேட்டையில் நடந்தது. ஏதோ அந்தச் சௌந்தரராகவன் திடீரென்று சொன்னதற்காக நீ அவனைக் கலியாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நியாயமாக நீ சூரியாவைக் கலியாணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாயானால் இரண்டு பேரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் இரண்டு பேருமே சந்தோஷமின்றிக் கஷ்டப்படுகிறீர்கள்." "நீ சொல்வது தப்பு, சுண்டு! நானும் சூரியாவும் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாயிருந்திராது." "ஏன் அப்படிச் சொல்கிறாய் அத்தங்கா! சூரியாவுக்கு உன்பேரில் உள்ள அபிமானம் உனக்குத் தெரியாதா, என்ன? நீ நடந்த பூமியை அவன் பூஜை செய்கிறவன் ஆயிற்றே! உன்னுடைய கஷ்டங்களை நினைத்து இரவு பகல் இப்போதுகூட உருகிக் கொண்டிருக்கிறானே? இல்லாவிட்டால் பரீட்சைக்குப் படிக்கும் எனக்கு உன்னைப் பற்றிக் கடிதம் எழுதுவானா?" "சூரியாவுக்கு என் பேரில் அபிமானம் அதிகம் என்பது எனக்குத் தெரியும், சுண்டு! ஆனால் அபிமானம் வேறு விஷயம்,

கலியாணம் வேறு விஷயம். வாழ்க்கையில் அவனுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. அவனுக்கு யாருக்காவது உபகாரம் செய்து கொண்டிருந்தால் போதும்; தேசத்துக்கு ஏதேனும் தொண்டு செய்து கொண்டிருந்தால் போதும். புகழிலும் பெயரிலும் அவனுக்கு ஆசையே கிடையாது.எனக்கோ, யாராவது நாலுபேர் என்னை எதற்காவது மெச்சிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது நான் இருக்கும்போது வேறு யாரையாவது பாராட்டினால் எனக்குப் பிடிப்பதில்லை. நான் பிரசங்க மேடையில் ஏறிப் பேசும்போது நாலுபேர் என்னைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் நின்றால், என்னுடைய பேச்சை மெச்சிக் கை தட்டினால் எனக்கு என்னமோ பட்டாபிஷேகம் பண்ணியது போலிருக்கும். சூரியாவுக்கோ இதிலெல்லாம் ஆசையே கிடையாது. எங்களுடைய வாழ்க்கை எப்படிச் சந்தோஷமாயிருக்க முடியும்?" "நீ சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது, அத்தங்கா! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படி உலகத்தில் ஒத்த மனத்தோடு தம்பதிகள் எங்கே அமைகிறார்கள்!" "புது டில்லியில் ஒருத்தி இருக்கிறாள், சுண்டு! அவள் பெயர் தாரிணி. சூரியாவுக்கும் அவளுக்கும் ரொம்பப் பொருத்தம் எனப் பல சமயம் நான் எண்ணியதுண்டு."

"சூரியாகூட என்னிடம் சொல்லியிருக்கிறான், அந்தத் தாரிணியைப் பற்றி! ஆனால் அவளுக்கு இந்த ஜன்மத்தில் கலியாணம் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே அவர்கள் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்! எப்படி இருக்கிறது கதை! இந்தியாவாவது சுதந்திரம் அடையவாவது? இந்த ஜன்மத்தில் இல்லை! உன்னிடம் சொன்னால் என்ன, அத்தங்கா! இந்தச் சூரியாவுக்குக் கலியாணம் ஆகாத காரணத்தினால், என்னுடைய கலியாணமும் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது....!" சீதாவுக்கு அவளை அறியாமல் சிரிப்பு வந்தது. "நாங்கள் எல்லாரும் கலியாணம் செய்து கொண்ட கஷ்டப்படுவது போதாதா சுண்டு! எல்லாக் கூத்தையும் நீ பார்த்துக் கொண்டுதானேயிருக்கிறாய்?" என்று கேட்டாள். "நீங்கள் செய்த தவறையே நானும் செய்வேனா, என்ன? முன்னால் போகிறவன் குழியில் விழுந்தால் பின்னால் வருகிறவனுக்குத் தீவர்த்தி பிடித்த மாதிரி அல்லவா? எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே கிடையாது. விளையாட்டுக்காகச் சொன்னேன்?" என்றான் சுண்டு.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்திரண்டாம் அத்தியாயம்
டைரக்டர் சியாம சுந்தர்

எப்போதும் கலகலவென்று பற்பல குரல்களும் விதவித சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் கூட அந்த இரவு மூன்றரை மணிக்கு நிசப்தமாயிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் அலங்கோலமாகப் படுத்துத் தூங்கினார்கள். சுண்டுவும் சீதாவும் பிளாட்பாரத்துக்குள் சென்று அங்கே கிடந்த ஒரு மர பெஞ்சியில் உட்கார்ந்தார்கள். "வெகு நாளாக உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று எனக்கு எண்ணம். அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை; இப்போது சொல்லட்டுமா?" என்று சுண்டு கேட்டான். "பேஷாகச் சொல், கேட்கிறேன் பொழுதும் போக வேண்டும் அல்லவா?" என்றாள் சீதா. "அத்தங்கா! ஒவ்வொருத்தருக்கும் இந்த உலகத்தில் பெயரும் புகழும் அடைவதற்கு என்று கடவுள் ஒரு வழியை வகுத்திருக்கிறார். அதை விட்டு விட்டு வெளியே போனால்தான் இல்லாத கஷ்டங்கள் எல்லாம் வந்து சேருகின்றன. இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. 'சதுரத்தில் வட்டத்தைத் திணிக்க முயல்வதைப் போல' என்பார்கள். அது முடியாத காரியம். அதைச் செய்ய முயற்சிப்பதால் வீண் உபத்திரங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரும் கடவுள் தங்களுக்கு வகுத்திருக்கும் வழி இன்னதென்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதிலே தான் ஒருவனுடைய சாமர்த்தியம் இருக்கிறது. அத்தங்கா! நீ எதற்காக இந்தப் பூவுலகில் பிறந்தாயோ அதை நீ இன்னும் தெரிந்து கொள்ளவில்லையென்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்...."

"ரொம்ப உண்மை, சுண்டு! நான் இந்த உலகில் ஏன் பிறந்தேன் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லைதான்!" "நீ உன் கஷ்டங்களினால் மனங்கசந்து இவ்விதம் சொல்கிறாய். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. வாழ்க்கையில் உன்னுடைய துறை இன்னது என்பதை நீ இன்னமும் அறிந்து கொள்ளவில்லையென்றுதான் சொல்கிறேன். நான் கூறப் போவதில் உனக்கு ஒருவேளை நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். அல்லது நான் சொல்லுவதை ஒருவேளை நீ விளையாட்டாக எடுத்துக் கொண்டு கேலிப் பேச்சுப் பேசலாம். அதனாலெல்லாம் என்னுடைய முடிவில் மாறுதல் ஏற்படப் போவதில்லை. உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பதாகத் தீர்மானித்துக் கொள்வேன்...." "நான் கேலி ஒன்றும் செய்யவில்லை, சுண்டு! நான் கெட்ட கேட்டுக்குக் கேலி வேறேயா? உன் கருத்தைச் சொல்லு!" "அத்தங்கா! நீ நடிப்புக் கலைக்காகப் பிறந்தவள் என்பது என் தீர்ந்த அபிப்பிராயம். நாடக மேடையில் ஏறி நீ நடித்தாயானால் உனக்கு இணை இந்தியாவிலே யாரும் இல்லையென்று புகழ்பெறுவாய். சினிமாத் துறையில் பிரவேசித்தாயானால் கிரேடா கார்போவையும், ரீடா ஹேவொர்த்தையும், நர்மாஷியரையும் போல உலகப் பிரசித்தியே அடைந்துவிடுவாய். உன்னுடைய முகத்தைக் கடவுள் சினிமாத் திரைக்கு என்றே அமைத்திருக்கிறார்." சீதாவின் உள்ளத்தில் பழையபடி சபலம் முளைவிட்டு எழுந்தது. சுண்டுவின் சமத்காரமான பேச்சு அவளுடைய தற்பெருமை உணர்ச்சியைத் தூண்டி விட்டது. "இது வரையில் என்னை அழகானவள் என்று யாருமே சொல்லவில்லை. எனக்கும் வயது இருபத்தெட்டு ஆகப் போகிறது. நீதான் முதன் முதலாகச் சொல்கிறாய்!" என்றாள்.

"நானும் உன்னை அழகி என்று சொல்லவில்லை. அழகு யாருக்கு வேண்டும், அத்தங்கா! பெரும்பாலும் அசடுகள்தான் அழகாயிருப்பார்கள். அழகு வேறு; முகத்தில் ஜொலிக்கும் அறிவின் களை வேறு. நாடக மேடைக்கும் சினிமாத் திரைக்கும் வேண்டியது அழகு அல்ல; முகவெட்டுத்தான் வேண்டும் அது உன்னிடம் இருக்கிறது." "என் முகத்தில் ஒரு வெட்டுக் காயம் கூட இல்லையே, சுண்டு!" "பார்த்தாயா? கேலி செய்கிறாயல்லவா? அதனால்தான் உன்னிடம் சொல்லத் தயங்கினேன்." "கோபித்துக் கொள்ளாதே சுண்டு! நான் கேலி செய்தது தப்புத்தான். மேலே நீ சொல்ல உத்தேசித்திருந்ததைச் சொல்லு." "வெள்ளித் திரைக்கு மிகவும் பொருத்தமான முகவெட்டு உனக்கிருக்கிறது. இந்த முகவெட்டைக் கொண்டு நீ உலகத்தையே வென்று விடலாம். முகவெட்டு மாத்திரம் அல்ல; உள்ளத்தின் உணர்ச்சிகளையெல்லாம் தெள்ளத் தெளிய முகத்தில் வெளியிடும் சக்தியும் உனக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நீ சம்பாஷணை செய்யும் போதும், மேடையில் பிரசங்கம் செய்யும் போதும் நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். ஆத்திரமோ, கோபமோ, சோகமோ, மகிழ்ச்சியோ - எந்த உணர்ச்சியானாலும் உன் முகத்திலே பளிச்சென்று தெரிகிறது. நீ வாய் திறந்து பேசவேண்டிய அவசியமில்லை. உன்னுடைய கண்கள் பேசுகின்றன; உன் புருவங்கள் பேசுகின்றன; உன் நெற்றியின் சுளிப்புப் பேசுகிறது; உன் உதடுகளின் துடிப்புப் பேசுகிறது.

இது மாத்திரந்தானா? உன்னுடைய நடையின் அழகைப் பற்றி யாராவது உனக்குச் சொல்லியிருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. உன் நடையின் அழகோடு எந்த ஹாலிவுட் சினிமா நட்சத்திரத்தின் நடை அழகையும் ஒப்பிட முடியாது. அன்னப்பட்சி தண்ணீரில் 'கிளைட்' பண்ணுவது போல நீ நடக்கிறாய். நம்முடைய நாட்டுப் பழங்காலக் கவிகள் 'அன்ன நடை' யைப் பெண்களின் நடையோடு ஒப்பிட்டிருப்பதின் பொருத்தம் உன்னுடைய நடையைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இன்றைக்குக்கூட நான் உனக்குக் கொஞ்சம் பின்னாலேயே வந்து கொண்டிருந்ததின் காரணம் அதுதான். உன் நடையின் அழகைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே வந்தேன். இந்த மாதிரி நடையுள்ளவள் ஒருத்தியை ஹாலிவுட் டைரக்டர்கள் கண்டால் விடவே மாட்டார்கள். தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள்!" "சுண்டு! நீ மட்டும் என்னைவிட நாலு வயது பெரியவனாயிருந்து என்னைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் எனக்கு இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் ஒன்றும் வந்திராது." "அத்தங்கா! முதலிலேயே நான் சொல்லிவிட்டேனே! காதல், கலியாணம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று.

உண்மையில் எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. கலைத்தேவியை நான் மணந்து கொண்டு விட்டேன். வேறு மானிடப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே எனக்குக் கிடையாது. நீ எதற்காகப் பிறந்தாய் என்பதை நான் தெரிந்து கொண்டிருப்பது போலவே நான் பிறந்த காரணத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் சினிமாக் கதையை உதாரணம் செய்வதற்காக நான் பிறந்தவன். தென்னிந்தியாவில் அறிவாளிகள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால் அவர்களில் யாரும் இதுவரையில் சினிமாக் கலையில் கவனம் செலுத்தவில்லை. அசடர்களும் துர்த்தர்களும் பிழைப்புக்கு வழியில்லாதவர்களுந்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஏதோ பி.ஏ. பரீட்சையை முடித்துத் தொலைக்க வேண்டுமென்பதற்காகப் படிக்கிறேன். பி.ஏ. பாஸ் செய்ததும் சினிமாத் துறையில் இறங்குவேன். நீயும் என்னோடு ஒத்துழைத்தால் தென் இந்தியாவை மட்டுமல்ல. இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே நாம் வெற்றி கொள்ளலாம். நான் இன்றைக்குச் சொல்லுகிறேன், கேள்! டைரக்டர் சியாம சுந்தர் எடுக்கப் போகும் முதல் படம் உலகப் பிரசித்தி அடையப் போகிறது. ஹாலிவுட் அகாடமி பரிசு அதற்கு நிச்சயம் கிடைத்தே கவேண்டும்...." "சுண்டு! டைரக்டர் சியாம சுந்தர் என்பது யார்?" "யாரா! நான்தான்! என்னுடைய முதல் படத்தில் நீ கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டால் நான் சொல்ல முடியாத சந்தோஷம் அடைவேன், என்னால் நீ எவ்வளவு பெயரும் புகழும் அடையப் போகிறாய் என்பதை நீயே பார்க்கப் போகிறாய்!"

சீதாவின் உள்ளத்தில் முதலிலேயே சபலம் ஏற்பட்டிருந்தது. இப்போது அது கொழுந்துவிட்டு எரிந்தது. எதற்காக நம்மை மதிக்காத அன்பில்லாத புருஷனிடம் போய்க் கஷ்டப்பட வேண்டும்? வாழ்க்கையை ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும்? இப்படி நம்மிடம் தேவதா விசுவாசம் வைத்திருப்பவனுடைய முயற்சியில் ஏன் சேர்ந்து உதவி செய்யக் கூடாது? இப்படி எண்ணமிட்ட போது பட்டாபிராமனுடைய வீட்டுச் சுவரில் கண்ட காந்தி மகாத்மாவின் முகம் சீதாவின் மனதின் முன்னிலையில் வந்தது. காந்திஜியின் கருணை ததும்பும் கண்கள் அவளை உற்று நோக்கின. "பேதைப் பெண்ணே! பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அரைமணி நேரங்கூட ஆகவில்லையே? அதற்குள் இந்தச் சஞ்சலமா? என் முன்னிலையில் கடவுள் சாட்சியாக எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையைக் காற்றில் விடப் போகிறாயா?" என்று கேட்பதுபோல இருந்தது. சீதா ஆகாசத்தை நோக்கினாள்; வானமெங்கும் ஒரு அங்குல இடம் காலியின்றிச் சிதறிக்கிடந்த நட்சத்திரச் சுடர் மணிகள் அவ்வளவும் கண்ணைச் சிமிட்டிச் சீதாவை எச்சரித்தன. அடுத்த ஸ்டேஷனில் ரயில் வண்டி கிளம்பி விட்டது என்பதற்கு, அறிகுறியாக டிங் டிங் என்று ஸ்டேஷன் மணி அடித்தது. சீதா கூறினாள்: "சியாம சுந்தர், உன்னுடைய அபிமானத்தையும் நீ என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நான் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டேன். என்னுடைய கணவருக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையென்றும், அதனாலேதான் எனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் வந்தன என்றும் உனக்குத் தெரியுமல்லவா? இன்னும் ஒரு தடவை அவருடன் குடும்ப வாழ்க்கை நடத்திப் பார்ப்பது என்றும், கூடிய வரையில் ஒத்துப்போகப் பார்ப்பது என்றும், பிரதிக்ஞை செய்தேன். மகாத்மா காந்தியின் உருவப் படத்தில் முன்னால் அவ்வாறு சபதம் செய்தேன். அதை இவ்வளவு சீக்கிரத்தில் கைவிட மனம் வரவில்லை. கல்கத்தாவுக்குப் போய் அவரைப் பார்த்து இன்னொரு தடவை அவருடன் வாழ்க்கை நடத்த முயற்சிப்பேன். ஆனால் இதுதான் கடைசித் தடவை. இதிலும் ஒன்றும் சரிக்கட்டி வராவிட்டால் உன்னிடம் வந்து சேருகிறேன்" என்றாள் சீதா.

"அத்தங்கா! நான் சொல்கிறேன், கேள்! உன் கணவன் சௌந்தரராகவன் மட்டும் அறிவுடையவனாயிருந்தால் உன்னைக் குடும்ப வேலை செய்வதற்கு வைத்துக்கொள்ளமாட்டான். சினிமாக் கலைக்கு உன்னை அர்ப்பணம் செய்வான். குடும்ப வேலை பார்க்க லட்சம் கோடி ஸ்திரீகள் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளித் திரையில் நடித்துப் பெயர் வாங்கக் கோடியில் ஒருவராலேதான் முடியும். அது போனால் போகட்டும்; உன் தலைவிதியின்படி நடக்கிறது. இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? உன்னோடு கல்கத்தாவுக்கு வரட்டுமா? மதராஸ் வரையிலாவது வரட்டுமா?" "வேண்டாம் சியாம சுந்தர்! உன்னோடு பேசிக்கொண்டே போனால் என்னுடைய சஞ்சல மனது மாறிப் போய்விடும். இங்கேயே டிக்கட் வாங்கிக் கொடுத்துப் பெண் பிள்ளைகள் வண்டியில் என்னை ஏற்றி விட்டுவிடு; அதுவே போதும்!" என்றாள் சீதா. "சூரியா என் பேரில் நிச்சயம் கோபித்துக் கொள்ளப் போகிறான்" என்றான் சுண்டு. "எதற்காகக் கோபித்துக்கொள்ள வேண்டும்? சூரியா ராஜம்பேட்டைக்குத் திரும்பி வந்ததும் அவன் என் விஷயத்தில் எடுத்துக் கொண்ட சிரத்தைக்காக என்னுடைய வந்தனத்தை அவனுக்குத் தெரியப்படுத்து." "ராஜம்பேட்டைக்கு அவன் திரும்பி வருவானா என்பதே சந்தேகமாயிருக்கிறது."

"ஏன் அப்படிச் சொல்கிறாய்? ராஜம்பேட்டைக் கிராமத்தைச் சொர்க்கமாக்கிவிடப் போகிறேன் என்று சூரியா சொன்னானே?" "அந்த முயற்சியில் சூரியாவுக்குத் தோல்விதான் உனக்குத் தெரியுமா அத்தங்கா! தபால்கார பாலகிருஷ்ணன் வேலையை விட்டுவிட்டு இப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டான். நம்ம பக்கத்தில் வேலை செய்து வருகிறான். சூரியாவின் முயற்சியை உருப்படாமல் அடிப்பதே அவனுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது. சூரியா எங்கள் ஆட்களுக்கெல்லாம் முன்னைப்போல் ஒட்டிக்கு இரட்டி கொடுத்தும் பயனில்லை; அவர்களுக்குத் திருப்தி இல்லை. 'நிலம் உழுகிறவனுக்குச் சொந்தம்' என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஊரில் எல்லோருடைய நிலமும் சாகுபடியாகி விட்டது. நம்முடைய நிலம் மட்டும் பாதிக்குமேல் தரிசாகக் கிடக்கிறது. சூரியாவின் மனது ரொம்பவும் ஓடிந்து போய் விட்டது." "அந்தப் பாலகிருஷ்ணன் பேரில் எனக்கு எப்போதும் சந்தேகந்தான். அவன் ரொம்பப் பொல்லாதவன் எங்களைப் பற்றி ஒரு குப்பைப் பத்திரிகையில் கன்னா பின்னாவென்று எழுதியிருந்ததல்லவா? அதெல்லாம்கூடப் பாலகிருஷ்ணனுடைய வேலையோ என்னமோ?" "இல்லவே இல்லை, அத்தங்கா! வீண் பழி சுமத்தாதே! பாலகிருஷ்ணனிடம் வேறு என்ன குற்றம் இருந்தாலும் உன்னைப் பற்றிய அவதூறு அவன் எழுதவில்லை. உன்னிடம் அவனுக்குள்ள மதிப்பையும் அபிமானத்தையும் பலமுறை என்னிடம் தெரிவித்திருக்கிறான். உன்னைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப ஆசை." "அந்த மட்டில் சந்தோஷந்தான்."

"உன்னைப்பற்றித் துண்டு பிரசுரம் போட்டதும் மஞ்சள் பத்திரிகையில் எழுதியதும் யார் என்று எனக்குத் தெரியும். எல்லாம் நம்ம ஊர் சீமாச்சுவய்யர் செய்யும் வேலை!" "ஐயையோ! நம்ம சீமா மாமாவா அப்படியெல்லாம் எழுதுகிறார்? நம்ப முடியவில்லையே." "நம்பத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது? எனக்கு நிச்சயம் தெரியும். பிளாக்மார்க்கெட்டில் இவ்வளவு நாள் சம்பாதித்தது சீமா மாமாவுக்குப் போதவில்லை. அவருக்கு வேண்டிய ஆசாமி சேர்மனாக வர வேண்டும் என்று ரொம்பவும் பாடுபட்டார். அப்படி வருவதற்கு நீ தடையாயிருந்தாய். அதனாலேதான் அவ்விதமெல்லாம் எழுதப் பண்ணினார். ஒரு நாளைக்கு என்னிடம் சீமா மாமா சிக்கிக்கொள்ளப் போகிறார். அப்போது செம்மையாக அவருக்குப் புத்தி கற்பிக்கப் போகிறேன்!" "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், சுண்டு! ஏதாவது எழுதி விட்டுப் போகட்டும்! அவர் மேல் எனக்கு இல்லாத கோபம் உனக்கு என்னத்திற்கு?" "உனக்குக் கோபம் இல்லையென்றால் நான் விட்டு விடுவேனா? ஒரு கை பார்க்கத்தான் போகிறேன். அத்தங்கா! நீ மட்டும் இங்கு இருந்திராவிட்டால் அத்திம்பேருக்கு ஒரு நாளும் சேர்மன் வேலை ஆகியிராது. அதை என் அம்மாவும் அக்காவும் எண்ணிப் பாராததை நினைத்தால் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அம்மா எப்போதும் ஒரு மாதிரி என்பது தெரிந்த விஷயம். லலிதா எதனால் இவ்வளவு கொடுமையுள்ளவளாகி விட்டாள் என்பதுதான் தெரியவில்லை. உன்னை அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டுக் கிளம்பும்படி செய்து விட்டாளே!" "லலிதாவைப் பற்றி ஒன்றும் சொல்லாதே, சுண்டு! அவளைப் போல் உத்தமி உலகத்திலேயே கிடைக்கமாட்டாள். என்னுடைய காலத்தின் கோளாறு, நான் இப்படிக் கிளம்ப வேண்டி ஏற்பட்டது." தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம் 'புஃப் புஃப்' என்று புகை விட்டுக் கொண்டும், 'கிறீச்' என்று கத்திக் கொண்டும் ரயில் வந்தது. பெண்பிள்ளை வண்டியில் சீதா ஏறி உட்கார்ந்து சுண்டுவிடம் விடை பெற்றுக் கொண்டாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து மூன்றாம் அத்தியாய்
சீதாவின் பிரார்த்தனை

கல்கத்தா மெயிலில் இரண்டு தினங்கள் சீதா பிரயாணம் செய்தாள். அந்த இரண்டு நாளும் இரண்டு யுகங்களாகத் தோன்றின. சீதா ஏறியிருந்த அதே மாதர் வண்டியில் கல்கத்தாவுக்குச் செல்லும் இன்னும் சில மதராஸி ஸ்திரீகளும் ஏறியிருந்தார்கள். அந்த ஸ்திரீகளில் ஒருத்தி ஹாவ்ராவில் ஜாகை உடையவள்; சீதாவுக்கு அவள் சிநேகமானாள். பொழுது போவதற்கு அவளுடைய பேச்சுத் துணை கொஞ்சம் உதவியாயிருந்தது. வண்டி ஹாவ்ரா ஸ்டேஷனை அடைவதற்கு வழக்கத்தைக் காட்டிலும் தாமதமாயிற்று. அன்று காலையிலிருந்து ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஜனங்கள் கூடிக்கூடி ஏதோ கசமுசாவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த வண்டியிலிருந்த பிரயாணிகளிடையிலும் ஏதோ கிளர்ச்சி ஏற்பட்டி ருப்பதாகத் தெரிந்தது. ஆனால் ஸ்திரீகளின் வண்டிக்குத் தகவல் ஒன்றும் எட்டவில்லை. ஹாவ்ராவுக்கு முதல் ஸ்டேஷனில் வேறு வண்டியிலிருந்த தென்னிந்தியர் ஒருவர் இறங்கி வந்து மாதர் வண்டியிலிருந்தவர்களைப் பார்த்து, "உங்களுக்கெல்லாம் புருஷத்துணை இருக்கிறதா? அல்லது ஹாவ்ரா ஸ்டேஷனுக்காவது புருஷர்கள் வருவார்களா? தனியாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையாகப் போகவேண்டும். கல்கத்தாவிலே ஏதோ கலாட்டாவாம்!" என்று சொன்னார். இது சீதாவின் மனதில் எந்த விதமான கலக்கத்தையும் உண்டு பண்ணவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ கலாட்டாக்களை அவள் பார்த்தாகிவிட்டது. கல்கத்தாவுக்குப் புதிதாகப் போய் இறங்கிய அன்றைக்கே பெரும் அபாயத்துக்கு அவள் உட்பட நேர்ந்தது. அதையெல்லாம் விட இப்போது என்ன அதிகம் இருந்துவிடப் போகிறது?

ஆனால் ஹாவ்ரா ஸ்டேஷனில் போய் இறங்கியவுடனே தான் நினைத்தது எவ்வளவு தவறு என்று சீதாவுக்குத் தெரிந்துவிட்டது. அன்று 1946- ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி நரகத்தில் வாழும் பேய்கள் அன்றைக்குக் கல்கத்தாவுக்கு விஜயம் செய்து தங்களுடைய நாச வேலைகளை நடத்திக் கொண்டிருந்தன. குழந்தைகள் என்றும், வயோதிகர்கள் என்றும், ஸ்திரீகள் என்றும் பாராமல் அந்தப் பேய்கள் கொன்று தின்றுவிட்டுப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்தன. அந்த ஊளைச் சத்தங்களுக்கிடையே `பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்னும் கோஷம் சில சமயம் கேட்டது. கிரேதாயுகத்திலே வாழ்ந்த இரணியன், இரணியாட்சன் ஆகிய அரக்கர்களும், திரேதா யுகத்தில் இருந்த இராவணன், கும்பகர்ணன், மகோதரன், விருபாட்சன் முதலிய ராட்சதர்களும், துவாபர யுகத்திலே பிறந்த கம்ஸன், சிசுபாலன், தந்தவக்கிரன், பகாசுரன், ஜராசந்தன் ஆகிய மனிதப் பேய்களும் ஒரே சமயத்தில் கல்கத்தாவில் வந்து பிறந்து ஆயிரம் பதினாயிரம், லட்சம் எனப் பெருகித் தங்களுடைய கோர கிருத்தியங்களை நடத்தியதாகத் தோன்றியது. ஸ்திரீகளின் வயிற்றில் கத்தியை செலுத்திக் குடலை வெளியில் எடுத்தல், குழந்தைகளைக் காலைப் பிடித்து வீசி எறிந்து கொல்லுதல். உயிரோடு மனிதர்களைப் பிடித்து எரியும் நெருப்பிலே போடுதல், முதலிய அசுரச் செயல்கள் அன்று கல்கத்தாவில் சர்வசாதாரணமாயிருந்தன.

ஹாவ்ரா ஸ்டேஷனில் சீதா இறங்கியபோது கல்கத்தா நகரத்துக்குள்ளேயிருந்து ஆயிரம் நகரங்களிலிருந்து வருவது போன்ற கோர சத்தம் வருவது கேட்டது. லட்சக்கணக்கான மனிதர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும் ஓலமிடும் குரலும், ஆயிரக்கணக்கான பேய் பிசாசுகள் ஊளையிடும் குரலும், வீடுகள் தீயிட்டு எரியும் சத்தமும், எரிந்து விழும்போது எழும் சத்தமும், மக்கள் இங்குமங்கும் ஓடும் சத்தமும், துப்பாக்கி வேட்டுச் சத்தமும், துருப்புக்களின் ஆர்ப்பாட்டச் சத்தமும் சேர்ந்து வந்து ரயிலிலிருந்து இறங்கியவர்களின் உடம்பையும் உடம்புக்குள் எலும்பையும் நடுநடுங்கச் செய்தன. சீதாவுக்கு ரயிலில் சிநேகமான ஸ்திரீயை அழைத்துப் போவதற்காக மனுஷர்கள் வந்திருந்தார்கள். கல்கத்தாவில் பயங்கரமான கலகம் நடப்பதாகவும் ஆகையால் யாரும் ஹாவ்ரா பாலத்தைத் தாண்டி அப்பாலே போக முடியாது என்றும் சொன்னார்கள். அந்த ஸ்திரீ தனியாக வந்திருந்த சீதாவைப் பற்றி அவர்களிடம் சொன்னாள். சீதாவும் ஹாவ்ராவுக்கு வந்து இருக்கலாம் என்றும், கலகம் அடங்கிய பிறகு அவளுடைய மனுஷர்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு போகலாம் என்றும் சொன்னார்கள். இதைக் கேட்ட சீதாவுக்கு உள்ளம் கலங்கி உலகம் சுற்றியது. சிறிது நிதானித்துக் கொண்டு, "இல்லை; நான் எப்படியும் இன்றைக்குப் போக வேண்டும், எனக்கு ஒன்றும் வராது" என்றாள். "அப்படியானால் போய்ப் பாருங்கள்!" என்றனர் ஹாவ்ராக்காரர்கள். சீதா தட்டுத் தடுமாறி ஹாவ்ரா ஸ்டேஷனிலிருந்து கொஞ்ச தூரத்திலிருந்து பாலம் வரையில் சென்றாள். அங்கிருந்து ஸ்டேஷன் பக்கத்தில் ஓடிவந்த ஒரு பெரும் கூட்டம் அவளைத் தள்ளிக் கொண்டு வந்து ஸ்டேஷன் வாசலில் சேர்த்தது. அதுவரை காத்திருந்த ஹாவ்ராக்காரர்கள் அவளையும் சேர்த்துத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போனார்கள்.

ஹாவ்ராவில் தங்கியிருந்த நாலு தினங்களும் சீதா அநுபவித்த மன வேதனையைச் சொல்லி முடியாது. இன்னும் ஒரு நாள் முன்னால் வராமற் போனோமே, வந்திருந்தால் இத்தகைய பயங்கரமான அபாய காலத்தில் கணவனோடும் குழந்தையோடும் சேர்ந்திருக்கலாமே என்று எண்ணி ஏங்கினாள். ஒவ்வொரு நிமிஷமும் கணவனுக்கு என்ன நேர்ந்ததோ குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று நினைத்து விம்மினாள். இவ்வளவு தூரம் வந்த பிறகு கடைசியில் அவர்களைப் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று எண்ணியபோது அவளுடைய நெஞ்சை வாளால் அறுப்பது போலிருந்தது. கல்கத்தாவில் நடக்கும் சம்பவங்களைப்பற்றிக் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை வந்துகொண்டிருந்த செய்திகள் அவளுடைய மனப் புண்ணில் அடிக்கடி கொள்ளிக் கட்டையால் சுடுவது போன்ற துன்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. முக்கியமாகப் பச்சிளங் குழந்தைகளைத் தூக்கி எறிந்து கொல்லுகிறார்கள் என்றும், தீயிலே போட்டு வதைக்கிறார்கள் என்றும் வந்த செய்திகள் அவளுக்கு எல்லையில்லாத துன்பத்தை உண்டுபண்ணின. அந்த மாதிரி கதி தன் அருமைக் குழந்தைக்கு ஒருவேளை நேர்ந்திருக்குமோ, நேர்ந்து விடுமோ என்று எண்ணி எண்ணி அவளுடைய மண்டை வெடித்து விடும் போலிருந்தது. இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தால் இனி என்றைக்கும் எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தையை விட்டுப் பிரிவதில்லையென்று மனதிற்குள் ஆயிரந்தடவை சபதம் செய்து கொண்டாள். இந்தத் தடவை தன் கணவன் உயிர் பிழைத்திருந்து தனக்கும் அவருக்கும் சமாதானமாகி விட்டால் அப்புறம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவருடன் சண்டையிடுவதில்லையென்றும் பிரதிக்ஞை செய்துகொண்டாள்.

ஆனால் அவர் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமே? தன்னைக் கண்டதும் "எங்கே வந்தாய்? ஏன் வந்தாய்?" என்று கேட்காமலிருக்க வேண்டுமே? அப்படி அவர் கேட்டாலும் கேட்கட்டும். அதற்காக இவள் இனிமேல் பின்வாங்கப் போவதில்லை. ஏதாவது எப்படியாவது சொல்லிச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர் பிழைத்திருக்க வேண்டுமே? அவருக்கும் குழந்தைக்கும் அபாயம் ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே? இந்தப் பாவியின் அதிர்ஷ்டம் எப்படியிருக்குமோ தெரியவில்லையே? மூன்று நாள் பகலும் இரவும் சீதா தூங்கவேயில்லை. தப்பித்தவறிச் சிறிது கண்ணயர்ந்தாலும் பயங்கரச் சொப்பனங்கள் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள். அவள் படும் துன்பத்தைப் பார்த்து அந்த வீட்டுக்காரர்கள் அவளிடம் மிகவும் அநுதாபம் காட்டி ஆறுதல் கூறினார்கள். ஹாவ்ராவில் வசித்த தென்னிந்தியர்களுக்குக் கவலையில்லாமற் போகவில்லை. கல்கத்தாவில் நடக்கும் பயங்கரக் கலகம் பாலத்தைத் தாண்டி ஹாவ்ராவுக்குள்ளும் வராது என்பது என்ன நிச்சயம்? இது மட்டுமல்ல, அவர்களிலே பலர் உத்தியோகம் பார்த்த ஆபீஸுகள் கல்கத்தாவிலேதான் இருந்தன. அந்த ஆபீஸுகளின் கதி என்ன ஆகிறதோ? கலகம் அடங்கிய பிறகாவது ஆபீஸைத் திறப்பார்களோ என்னமோ? அப்படித் திறந்தால்தான் என்ன? ஷுஹரவர்த்தி ஆட்சி புரியும் நகரத்தில் இனி நிம்மதியாக வாழ முடியுமா?

இவ்வாறெல்லாம் முதல் இரண்டு நாளும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் கலகம் ஆரம்பித்த மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் உற்சாகம் காட்ட ஆரம்பித்தார்கள். ஏனெனில் கலகத்தின் போக்கு மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் மாறத் தொடங்கியது. முதல் இரண்டு நாளும் ஹிந்துக்களின் படுகொலையாகவே நடந்தது. மூன்றாம் நாள் பீஹாரிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து குடியேறியிருந்த பால்கார முண்டர்களும் சீக்கியர்களும் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள். பழிக்குப்பழி வாங்கும் கோஷம் எங்கெங்கும் கிளம்பியது. முதல் இரண்டு நாளும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஷுஹரவர்த்தியும், அவருடைய சகாக்களும் இப்போது கலவரத்தை அடக்கவும் கல்கத்தாவின் நல்ல பெயரை நிலைநாட்டவும் பெருமுயற்சி செய்தார்கள். ஐந்தாம் நாள் அவர்களுடைய முயற்சி பலன் தந்தது; கலவரம் அடங்கியது. சீதா ஹாவ்ரா ஸ்டேஷனில் வந்திறங்கி ஒரு வாரம் சொல்ல முடியாத மன வேதனைகளை அநுபவித்த பிறகு எட்டாம் நாள் அமரநாத்தின் வீட்டை அடைந்தாள். அமரநாத்தின் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் அவளுடைய கணவனும் குழந்தையும் வசித்தார்கள் என்று சித்ராவின் கடிதத்திலிருந்து அவளுக்குத் தெரிந்திருந்ததல்லவா? ஆனால் இப்போது ராகவனும் வஸந்தியும் எதிர் வீட்டில் இல்லை. அமரநாத்தின் வீட்டிலேயே மேல் மச்சில் இருந்தார்கள் என்று தெரிந்தது. அவர்கள் மட்டுமா? புருஷர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளுமாகத் தென்னிந்தியர்கள் சுமார் நூறு பேர் அந்த வீட்டில் இருந்தார்கள். கலகம் நடந்த பிரதேசங்களிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள்தான் அத்தனை பேரும். அவர்களில் பெரும்பாலோரை அபாயங்களிலிருந்து தப்புவித்து அழைத்துக் கொண்டுவந்து சேர்த்தது தன் கணவன் சௌந்தரராகவன்தான் என்பதை அறிந்தபோது சீதாவின் உள்ளம் பூரித்தது. அப்போது தான் பக்கத்திலிருந்து அவருக்கு உதவி செய்யக் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கமும் கூட ஏற்பட்டது.

சௌந்தரராகவன் செய்த சேவையைப் பற்றியும் அமரநாத்தின் வீடு தென்னிந்தியர்களின் அடைக்கலம் ஆனது பற்றியும் ஹாவ்ராவிலேயே சீதா தெரிந்து கொண்டிருந்தாள். ஆகையால் நேரே அமரநாத் வீட்டுக்குச் சென்று சித்ராவை தேடிப் பிடித்தாள். சித்ரா சீதாவைப் பார்த்ததும், "வந்தாயா, மகராஜி! ஏதோ இந்த மட்டும் இப்போதாவது வந்து சேர்ந்தாயே? உன் புருஷனாச்சு, நீயாச்சு! மேல் மாடியில் படுத்துக் கிடக்கிறார்! போய்க் கவனித்துக் கொள்!" என்றாள். சீதா நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள, "அவருக்கு என்ன? ஏன் படுத்திருக்கிறார்?" என்று கேட்டாள். "அவருக்கு என்னவா? 105 டிகிரி காய்ச்சல், ஜன்னி, பிதற்றல் எல்லாந்தான்! இந்த ஏழு நாளும் அவர் செய்திருக்கிற வேலைக்கு சுரம் வந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சுரம் தெளியாமல் அவர் செத்துப் போனாற்கூடப் பரவாயில்லை. நூறு பேரைக் காப்பாற்றிய மனுஷன் அப்புறம் இருந்தால் என்ன? போனால் என்ன?" என்றாள் சித்ரா. கல்கத்தா படுகொலையின்போது அந்த நகரில் வசித்தவர்கள் சாவைப்பற்றி இப்படி அலட்சியமாய்ப் பேசுவது இயற்கையேயல்லவா? ஆனால் சீதா அப்படி நினைக்கவில்லை, "சித்ரா! உனக்குப் புண்ணியம் உண்டு, இப்படியெல்லாம் பேசாதே. நிஜமாக அவருக்கு அபாயம் ஒன்றும் இல்லையல்லவா? பிழைத்துக் கொள்ளுவார் அல்லவா?" என்றும் கேட்டாள். "அது உன்னுடைய சமர்த்து; உன் பெண்ணின் சமர்த்து. நீங்கள் இரண்டு பேரும் செய்கிற சிசுருஷையில் இருக்கிறது அவர் பிழைக்கிறது. டாக்டர் அப்படித்தான் சொல்கிறார். உன் பெண் வஸந்தி இருக்கிறாளே? மகா சமர்த்து. இந்த ஏழு நாளும் எப்படி எனக்கு ஒத்தாசையாயிருந்தாள் என்று நினைக்கிறாய்? கொஞ்சமாவது பயப்படவேண்டுமே? கிடையாது!

எல்லாரும் குலைநடுங்கிக் கொண்டிருந்தபோது அவள் மட்டும் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டும் குஷிப்படுத்திக் கொண்டும் இருந்தாள். இப்பேர்ப்பட்ட புருஷனையும் பெண்ணையும் விட்டுவிட்டுத் தேவபட்ட ணத்தில் உனக்கு என்னடி வைத்திருந்தது? போனால் போகட்டும், உடனே இப்போதாவது போய்க் கவனி. வஸந்திக்குக் கை வலித்துப் போயிருக்கும் ஐஸ் வைத்து வைத்து! ஆனாலும் குழந்தை அலுக்காமல் சலிக்காமல் முணுமுணுக்காமல் அப்பாவுக்குச் சிசுருஷை செய்துகொண்டிருக்கிறாள். இந்த வீட்டுக்கு வந்திருக்கும் நூறு பேரைப் பார்த்துக் கொள்வதும் சரி, உன் புருஷன் ஒருவருக்குச் சிசுருஷை செய்வதும் சரி. வேலை செய்தாலும் அப்படி வேலை செய்கிறார்; சுரமாய்ப் படுத்தாலும் அப்படிப் படுத்துகிறார். போ மச்சுக்கு!..." என்று இன்னும் ஏதோ சொல்லிக்கொண்டே சித்ரா விரைந்து போய்விட்டாள். சீதா கவலையும் ஆவலும் முன்னால் தள்ளவும் கூச்சமும் தயக்கமும் பின்னால் இழுக்கவும் தட்டுத் தடுமாறி மச்சுக்குப் போய்ச் சேர்ந்தாள். அங்கேயும் ஒரே ஜனக் கூட்டமும் சந்தடியுமாக இருந்தது. ஆனால் ஒருவரும் சீதாவைக் கவனிக்கவில்லை. அவரவர்கள் தங்கள் தங்களுடைய சொந்த விசாரத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

மேல் மாடியில் சந்தடியில்லாத அறை ஒன்றே ஒன்று இருந்தது. அதில்தான் ராகவன் இருக்க வேண்டும் என்று எண்ணிச் சீதா வெறுமனே சாத்தியிருந்த கதவை மெதுவாகத் திறந்தாள். அவள் நினைத்தபடிதான் இருந்தது. அந்த அறையில் போட்டிருந்த கட்டிலில் ராகவன் படுத்திருந்தான். அவனுடைய கண்கள் மூடியிருந்தன; உணர்ச்சி இல்லாத நிலையில் ஏதோ முனகிக் கொண்டிருந்தான். தலைமாட்டில் வஸந்தி உட்கார்ந்து அப்பாவின் தலையிலும் நெற்றியிலும் ஐஸ் வைத்துக் கொண்டி ருந்தாள். கதவைத் திறந்துகொண்டு சீதா உள்ளே நுழைந்ததும் வஸந்தி குனிந்திருந்த முகத்தைத் தூக்கி அவளை நிமிர்ந்து பார்த்தாள். சொல்லமுடியாத ஆவலும் வியப்பும் அன்பும் ஆத்திரமும் இரக்கமும் கோபமும் அவளுடைய கண்ணின் பார்வையில் கலந்திருந்தன. அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. சீதாவுக்குப் பேச நா எழவில்லை; தயங்கித் தயங்கிக் கட்டிலண்டை போனாள். ராகவனுடைய உள்ளங்காலை இலேசாகத் தொட்டாள்; ஜில்லென்று இருந்தது, பிறகு இன்னும் சிறிது நகர்ந்து உள்ளங் கைகளைத் தொட்டுப் பார்த்தாள்; கைகளும் ஜில்லென்று இருந்தன. மேலும் சிறிது நெருங்கிக் கழுத்தின் கீழே மார்பில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தாள். அடுப்பில் போட்ட இரும்புச் சட்டியைப் போல் கொதிக்கிறது. ஜுரம் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று ஐயமின்றித் தெரிந்தது. இதற்கிடையில் வஸந்தி அம்மா முகத்தையும் அப்பா முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீதா வஸந்தியைச் சந்தித்ததும் என்னவெல்லாமோ சொல்லவேணும் என்று நினைத்திருந்தாள். "என்னைப் பார்க்க வராமல் உன் அப்பாவுடன் போய்விட்டாய் அல்லவா? நீ எனக்குப் பெண் இல்லை!" என்று சொல்வதாகக்கூட உத்தேசித்திருந்தாள். அதற்கெல்லாம் இப்போது சந்தர்ப்பமில்லாமல் போயிற்று.

"வஸந்தி! ஐஸ் பையைச் சற்று என்னிடம் கொடு! உனக்குக் கையை வலிக்குமே?" என்றள் சீதா. "வேண்டாம், அம்மா! எனக்குக் கை வலிக்கவில்லை. உனக்கு ஐஸ் பை சரியாக வைக்கத் தெரியாது. நெற்றி முழுதும் படும்படி வைக்க வேண்டும்" என்றாள் வஸந்தி. "எனக்குத் தெரியுமடி கண்ணே! தெரியாமற் போனால் நீதான் பக்கத்தில் இருக்கிறாயே, சொல்லிக் கொடு!" என்றாள் சீதா. அவ்வாறே வஸந்தி தன் பக்கத்தில் இருக்க, சீதா ஐஸ் பையை ராகவனுடைய நெற்றியில் வைத்துக் கொண்டிருந்தாள். தாயாரும் பெண்ணும் கொஞ்ச நேரம் ஒருவரையொருவர் பார்ப்பதோடு இருந்தார்கள். வஸந்தியின் முகத்தில் சிறிது நேரத்துக்குப் பிறகு புன்னகை மலர்ந்தது. "அம்மா! நீ இனிமேல் என்னையும் அப்பாவையும் விட்டு விட்டுப் போகவே மாட்டாயே?" என்றாள். சீதாவின் முகமும் சிறிது மலர்ச்சி அடைந்தது. "போகமாட்டேனடி, கண்ணே! முன்னேகூட நான் வேண்டுமென்றா போனேன்? வேறு வழியில்லாமல் போனேன். அப்பாவும் நீயும் என்னை அழைத்துக் கொள்ளாமல் இங்கே வந்துவிட்டீர்கள்!" "அது போனால் போகட்டும், அம்மா! இனிமேல் நீ எங்களை விட்டுவிட்டுப் போகமாட்டாயே!" "போகமாட் டேன்." "ஐந்தாறு நாளாக இந்த ஊரிலே கலகம் பலமாக நடந்தது. கல்கத்தா பட்டணத்திலே உள்ளவர்கள் அவ்வளவு பேரும் கூண்டோ டு கைலாசமாய்ச் செத்துப்போக வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டார்கள், அப்போது எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? சொல், பார்க்கலாம்!"

"தெரியவில்லை, கண்ணே! நீதான் சொல்ல வேண்டும்." "சாகிறதுக்கு முன்னால் உன்னை ஒரு தடவை பார்க்காமல் செத்துப்போக வேண்டியிருக்கிறதே என்று தோன்றியது. அப்படிச் செத்துப் போய்விட்டால்கூட ஆவி ரூபத்தில் நீ இருக்கு மிடம் வந்து உன்னை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று தோன்றியது" என்றாள் குழந்தை. "அப்படியெல்லாம் சொல்லாதே வஸந்தி! நல்ல பேச்சாகப் பேசு!" என்றாள் சீதா. "சாவு என்றால் உனக்கு என்னமோ போல் இருக்கிறதாக்கும். இங்கே ஏழு எட்டு நாளாய் ஓயாமல் சாவைப் பற்றித்தான் பேச்சு. அது எங்களுக்குச் சகஜமாய்ப் போச்சு, அம்மா!" "அது இருக்கட்டும், குழந்தை! அப்பாவின் உடம்பைப் பற்றி டாக்டர்கள் என்ன சொன்னார்கள்? என்ன சுரம் என்றார்கள்?" "ஷாக்'கினால் வந்த ஜுரம் என்றுதான் சொன்னார்கள். ரொம்பக் கடுமையாய்த்தான் வந்திருக்கிறது; ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்கள். ஆனால் எனக்கென்னமோ ஒரு அசட்டுத் தைரியம். அப்பா கட்டாயம் பிழைத்துவிடுவார் என்று. ஏழு நாளாக எத்தனை கண்டத்துக்கு அவர் தப்பிப் பிழைத்திருக்கிறார் தெரியுமா?"

"அப்பா செய்ததைப் பற்றி எல்லாரும் சொல்கிறார்களே! அப்படி என்ன செய்தார், வஸந்தி!" "அப்பா செய்ததை யெல்லாம் சொல்வதாயிருந்தால் ஒரு ராமாயணமும் பாரதமும் எழுத வேண்டும் அம்மா! அவ்வளவு செய்திருக்கிறார். ஒன்று சொல்கிறேன் கேள்; ஒரு வீட்டைக் கலகக்காரர்கள் சூழ்ந்து கொண்டு கதவைத் திறக்காவிட்டால் வீட்டுக்கு நெருப்பு வைத்து விடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். இது தெரிந்ததும் அப்பா என்ன செய்தார் தெரியுமா? கவர்ன்மெண்ட் ஆபீஸரை டெலிபோனில் கூப்பிட்டு ஒரு முஸ்லீமின் வீட்டை ஹிந்துக்கள் தாக்குவதாகச் சொன்னார் - அப்படிச் சொன்னால்தான் கவர்ன்மெண்டார் போலீஸை அனுப்புவார்கள் என்று; போலீஸும் வந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு அப்பாவே நேரில் போய் அந்த வீட்டிலிருந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தார். இது தெரிந்தவுடனேயே கலகக்காரர்கள் அப்பாவை அடையாளம் வைத்துக் கொண்டு அவரைக் கொன்றுவிடப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய ஜம்பம் சாயவில்லை....." இந்தச் சமயத்தில் சௌந்தரராகவன் வெறி வந்தவன் போல் பிதற்றத் தொடங்கினான். "ஓகோ! என்னை யார் என்று நினைத்தீர்கள்! கிட்ட வந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவேன். கத்திக்குக் கத்தி, துப்பாக்கிக்குத் துப்பாக்கி, கொலைக்குக் கொலை, பழிக்குப் பழி - தெரியுமா? என்னையும் மகாத்மா காந்தி என்று எண்ணிவிடாதீர்கள்!" என்று கூச்சல் போட்டுக் கொண்டே எழுந்து உட்கார முயன்றான்.

சீதாவும் வஸந்தியும் அவனை மெதுவாகப் பிடித்து மறுபடியும் படுக்கவைத்தார்கள். அப்போது ராகவன் சீதாவை விழித்துப் பார்த்தான். ஆனால் அவள் யார் என்று கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.படுக்கையில் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டு விட்டான். அப்போது சீதா தன் மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்:- "சுவாமி பகவானே! இவர் ஒருவேளை இந்தச் சுரத்தில் இறந்து போவதாயிருந்தாலும் ஒரே ஒரு தடவையாவது என்னைப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொள்ளட்டும். நான் வந்துவிட்டேன், இவருக்கு சிசுருஷை செய்கிறேன் என்பதை அறிந்து கொள்ளட்டும். கடவுளே! இந்த ஒரு வரமாவது எனக்குத் தரவேண்டும்!" இவ்விதம் மனப்பூர்வமாக மன்றாடிப் பிரார்த்தித்தாள் சீதா. ஆனால் அவள் பயந்தது போல் ஒன்றும் நடந்துவிடவில்லை. ராகவனுக்கு நாளுக்கு நாள் உடம்பு குணமாகி வந்தது. நாளுக்கு நாள் அறிவும் தெளிவடைந்து வந்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home