"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஒப்பியல் இலக்கியம்
ஒப்பியல் இலக்கியம்
கலாநிதி. க. கைலாசபதி M. A., Ph.D.
பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங் கொடுத்து வந்தவரும் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் முன்னோடிகளின் ஒருவரும் பிறர்மொழியிலக்கியங்களைக் கற்று மகிழ்ந்து அவற்றைத் தழுவியும் பெயர்த்தும் தமிழுக்கு அணிசெய்தவரும், பல துறை வல்லுநருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்சமர்ப்பணம்
முன்னுரை
'ஒப்பியல் இலக்கியம்' என்ற தலைப்பிலே தொகுக்கப் பெற்றுள்ள கட்டுரைகள் நான் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதியவற்றிற் சில. பொதுப்பண்புடைய இப்பதினொரு கட்டுரைகளையும் ஒன்று சேரத்தொகுத்தபோது அவை ஓரளவு காலவரையறையையொட்டி அமைந்திருக்கக் காண்கிறேன். எமக்குக் கிடைக்கும் மிகப் பழைய சான்றோர் செய்யுட்களிலிருந்து தற்காலப் பாரதி பாடல்கள் வரை எனது கண்ணோட்டம் பாய்ந்திருக்கக் காணலாம். இலக்கியத்தின் தொடர்ச்சியில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. அது போலவே இலக்கியத்தின் உலகப் பொதுமையிலும் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவன். இந்நம்பிக்கைகள் நெஞ்சிலே நெடுங்காலமாகப் பதிந்திருப்பனவாதலால் அவ்வப்போது எழுதுங்கட்டுரைகளில் அங்கங்கே வௌிப்படுவது இயல்பே.பொருளடக்கம்
ஒப்பியலின் தத்துவங்கள் - 1
தமிழில்
ஒப்பியல் ஆய்வு - 23
தமிழ் வீரயுகப் பாடல்கள் - 48
இரு கோட்பாடுகள் -
61
பெரும் பெயர் உலகம் - 79
பொற் காலமும் புதுயுகமும் - 89
காதலும் கட்டுப்பாடும் - 116
சித்தர் தத்துவம் - 137
சிந்துக்குத்
தந்தை - 160
பாரதியும் சுந்தரம் பிள்ளையும் - 196
பாரதியும்
மேனாட்டுக் கவிஞரும் - 219
உசாத் துணைநூல்கள் - 228
நூலாசிரியர்
அகரவரிசை - 242
ஆசிரியரது இதர நூல்கள்
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
தமிழ் நாவல் இலக்கியம்
அடியும்
முடியும்
1. ஒப்பியலின் தத்துவங்கள்
நவீன ஆராய்ச்சியிற் காணப்படும் முக்கிய
பண்புகளிலொன்று பல துறைகள் மாறிமாறி ஒன்றை யொன்று ஊடுருவிப் பாதிப்பதாகும்.
உதாரணமாக ஒரு காலத்தில் மொழிநூல் என்பது இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்ட மொழி
வரலாற்றாய்வாகக் கருதப்பட்டது.இன்று மொழியியலின் சில பிரிவுகளைச் செம்மையாகக்
கற்றுத் தேர்வதற்குக் கணிதவியல், புள்ளியியல், பௌதிகவியல் முதலியவற்றின் அறிவு
இன்றியமையாதிருக்கிறது. அது போலவே ஒரு காலத்தில் அகழாராய்ச்சி என்பது நிலத்தைத்
தோண்டி மறைந்து கிடக்கும் பொருள்களைக் கண்டெடுத்து விளக்கும் பயிற்சியாகக்
கருதப்பட்டது. இன்று இரசாயனம், பௌதிகம் முதலிய அறிவியற்றுறைகளின் அறிவு
பெரிதும் வேண்டப்படும் ஒரு புத்தம் புதிய ஆய்வுப் பகுதியாக அது வளர்ந்து
வருகிறது. இப்பொதுப் போக்கிற்கு இயைய இலக்கியமும் தற்காலத்திற் பிறதுறைகளின்
தாக்கத்தைப் பெற்று வருகின்றது. ஒரு காலத்தில் கவிதை என்பது கருவிலே
திருவுடையாரால் படைக்கப் பெற்று இன்பம் பயக்கும் இயல்பொன்றே அமைந்த "தூய"
கலையாகக் கருதப்பட்டது. இன்றோ பொறிமூளையாம் கணனி சுமாரான தரமுள்ள கவிதை
செய்யுமளவிற்குக் கவிதைக் கலை அறிவியலின் தாக்கத்தைப் பெற்றுள்ளது
இதில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எமது யுகம் விஞ்ஞானயுகம். விஞ்ஞானம் எமது
வாழ்க்கை முழுவதையும் எண்ணற்ற வழிகளிலும் வகைகளிலும் பாதிக்கிறது. ஆகவே
வாழ்க்கையின் விளைபொருளாகவும் இலட்சியக் கனவாகவும் அமைந்த இலக்கியம் அறிவியலின்
செல்வாக்கைத் தவிர்த்து இயங்கமுடியுமா? முடியாது. விஞ்ஞான யுகத்திலும்
இலக்கியம் தனக்கெனவோர் இடத்தைப் பெற்றே உள்ளது. ஆனால் அவ்விலக்கியத்தின் தன்மை
நிச்சயமாக மாற்ற மடைகிறது. புதிய கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் அது
ஏற்றாலன்றிச் செயற்பட வியலாது.
படைப்பிலக்கியம் ஒரு புறமிருக்க இலக்கிய
ஆய்விலும் நோக்கிலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு சிறு உதாரணம்
காட்டுவோம். சென்ற நூற்றாண்டின் பிற்கூறுவரை இலக்கிய வரலாறு எமது மொழியில் எழுத
முயன்றவர் எவருமிலர். ஏனெனில், காலவாராய்ச்சி முக்கியமாகக் கருதப்படவில்லை.
விஞ்ஞானப் பிரிவாகிய உயிரியலின் நியதியாகப் பரிணாமக் கொள்கை தோன்றியதையொட்டி
படிமுறை வளர்ச்சி என்னுங் கோட்பாடு சிந்தனையின் அங்கமாக அமைந்த காலத்திலேயே
இலக்கிய வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பொருண்மை சுட்டுவனவாயின.
இவ்வாறு இலக்கிய ஆய்வில் வந்து புகுந்த புது முறைகளில் ஒன்றே ஒப்பியல் ஆய்வு.
இலக்கியத்துக்கு முன்னதாக ஒப்பியல் நோக்கு மொழியாராய்ச்சியின் சிறப்புப் பண்பாக
இருந்தது. அதற்கும் முன்னதாக அறிவியற்றுறைகளின் தனிச்சிறப்புப்
பண்பாகவிருந்தது. ஒப்புநோக்கு மொழியாராய்ச்சியை நெறிப்படுத்திய பின்னரே மொழி
ஆய்வு, மொழியியல் ஆயிற்று. மொழியியல் அறிவியலின் (Science) அந்தஸ்தைப் பெற்றது.
மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்குமுன் மானிடவியல், சமூகவியல், பொருளியல்,
புவியியல் முதலியவற்றிற்கு அறிவியல் அந்தஸ்தைக் கொடுத்தது ஒப்பியல்
ஆய்வேயாகும். சுருங்கக் கூறின் அது சென்றவிடமெல்லாம் சிறப்புச் செய்துள்ளது
என்று கூறலாம். ஒரு வகையிற் பார்த்தால் எமது மொழியில் மட்டுமன்றி வேறு பல
மொழிகளிலும் ஒப்பியல் ஆய்வானது இலக்கியத் துறைக்குக் காலங் கடந்தே வந்து
சேர்ந்திருக்கிறது. ஒப்பியற் சட்டம், ஒப்பியல் மதம், ஒப்பியற் கல்வி, ஒப்பியல்
அரசியல் என்பன ஓரளவு வளர்ச்சிபெற்றவையாகக் காணப்பட ஒப்பியல் இலக்கியம் கடைக்
குட்டியாக இருக்கிறது எனலாம். ஆகவே அதனைக் கவனமாக வளர்க்க வேண்டியுள்ளது.
இன்னொரு வகையிற் பார்க்கும் பொழுது ஒப்பியல் நோக்கு
இலக்கியக்கர்த்தாக்களிடத்துத் தொன்றுதொட்டுக் காணப்படுகிறது. பிற நூலாசிரியனைப்
பற்றிய அறிவும் பிற நூற் பயிற்சியும் அடிப்படையில் ஒப்புநோக்குடையனவே. மிகப்
பழங்காலத்தவரான சான்றோரைக் கணக்கெடுக்காது விட்டால் எமது தலையாய நூலோரெல்லாம்
வடமொழியறிவுடையோராகவே இருந்திருக்கின்றனர். அது மட்டுமன்று. கம்பனைப் போன்ற
புலவருக்கு வடமொழியோடு கன்னடம் முதலிய திராவிட மொழிகளும் தெரிந்திருக்கலாம்
எனக் கருத இடமுண்டு. இலக்கியகாரரைவிட இலக்கணகாரரும் இலக்கணகாரரைவிடச் சமய
நூலாரும் பன்மொழிப் புலமையும் பரந்த ஒப்புநோக்கு முடையவராயிருந்தனர்.
"தேவ பாடையில் இக்கதை செய்தவர்
மூவ ரானவர்
தம்முளும் முந்திய
நாவி னார்உரை யின்படி நான்தமிழ்ப்
பாவி னால்இது
உணர்த்திய பண்பரோ"
எனக் கம்பன் நூல் வரலாறு கூறும் போது தனக்கு முன்
வடமொழியில் இராம காதையைப் பாடிய மூவரையும் அவருள்ளும் ஆதிகவியாகிய
வான்மீகியையும் சிறப்பாகக் கூறுகின்றனன். மூவரையும் ஒப்புநோக்கி அவருள்
வான்மீகியையே தான் பின்பற்றிருப்பதாகக் கூறுகிறான் கம்பன். இம்மூவரானவர்
வான்மீகி, வியாசர், அகத்தியர் என்பது மலையாள மொழியிலுள்ள ராமசரிதம் கூறுஞ்
செய்தி. நகர் நீங்கு படலத்திலே
"தென்சொற் கடந்தான் வடசொற் கலைக்கு
எல்லை
தேர்ந்தான்"
என்று கம்பன் இராமனைக் குறித்துக் கூறுவது
கம்பனது இரு மொழிநோக்குக்கு மற்றொரு சான்றாகும். ஆதிகவியின் பெருமையையும்
பேராற்றலையும் பலபடப்போற்றும் கம்பன் எத்தனையோவிடங்களில் கதையமைப்பு, பாத்திர
வார்ப்பு முதலியவற்றில் வான்மீகியிலிருந்து வேறுபடுவதற்கு ஆதி காவியத்தை
மனத்திருத்தியமையே ஏதுவாகும். கம்பனைப் போலவே எமது யுகத்தின் மகாகவியான
பாரதியும் பன்மொழிப் புலவனாகத் திகழ்ந்தான். "யாமறிந்த புலவரிலே" என்று அவன்
பாடும்பொழுது ஒப்புநோக்கியேதான் கண்ட உண்மையை உரைக்கின்றான். அதுபோலப் பாஞ்சாலி
சபதத்தைப் பாடியபோது சிற்சில இடங்களில் வியாசரிலிருந்தும் வேறுபடுவதற்கும்
ஒப்புநோக்கே ஏதுவாகும். தற்கால ஆசிரியர் சிலர் ஐரோப்பிய மொழியறிவுடையராதலால்
இலக்கியத்தைப் படைக்கும் போதும் விமர்சிக்கும்போதும் ஐரோப்பிய இலக்கியங்களை
மனத்திலிருத்திக் கொள்கின்றனர்.
இலக்கிய ஆசிரியரை விட இலக்கண நூலார்
ஒப்பு நோக்கு அதிகம் கை வந்தவராயிருக்கின்றனர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்துச்
சேனாவரையர் எழுதிய உரையிலிருந்து ஒருதாரணம் பார்க்கலாம்:
"வட சொல்லாவது
வட சொல்லோடொக்குந் தமிழ்ச் சொல்லென்றாரால் உரையாசிரியரெனின், அற்றன்று:
ஒக்குமென்று சொல்லப்படுவன ஒருபுடையனொப்புமையும் வேற்றுமைமுடைமையான் இரண்டாகல்
வேண்டும். இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒரு
சொல்லிலக்கணமுடைமையான் இரண்டு சொல்லெனப்படா: அதனால் ஒத்தல் யாண்டையது? ஒரு
சொல்லேயார்மன்பது."
சேனாவரையரது கருத்து ஒருபுறமாக, வட சொல்லையும்
தமிழ்ச் சொல்லையும் ஒப்புநோக்கி அபிப்பிராயங் கூறுந்தன்மையே இங்குக்
கவனிக்கத்தக்கது. சேனாவரையர் போன்ற வட மொழிச் சார்புடையோரது ஒப்புநோக்கு
உண்மையில் ஒப்புநோக்கும் மனோ பாவத்தினடிப்படையில் தோன்றியதல்ல என்பதையும் அதன்
உள்ளார்ந்த குறைவுபாட்டையும் பின்னர் காட்டுவேன். ஆனால் ஒப்புநோக்கின் பயன்
விபரீதமாயமைந்த போதும் ஒப்புநோக்கிற்கு இன்றியமையாததான பன்மொழிப்பயிற்சி
எக்காலத்தும் வேண்டப்படுவதே என்பதை இலக்கண உரையியற்றிய இளம்பூரணரை வன்மையாகக்
கண்டிக்கும் வட நூற்கடலும் தென்தமிழ்க் கடலும் நிலைகண்டுணர்ந்த ஆசிரியர்
சிவஞானயோகிகள் அன்னாரின் பிறமொழியறிவின்மையைக் குறிப்பாகக் குத்திக்காட்டுவது
மனங் கொளத்தக்கது. தமிழ் நூல் ஒன்றே வல்ல உரையாசிரியருள்ளிட்டோர் உரையை
ஆசிரியர் கருத்தாகக் கொண்டு பின்னுள்ளோரும் மயங்குவாராயினர். இவ்வாறு
உரையாசிரியரை மட்டந்தட்டும் சிவஞான யோகிகள் வட நூற் கடலை நிலைகண்டறிந்த
சேனாவரையர் என்று புகழ்மாலை சூட்டுவதும் குறிப்பிடத்தக்கதே.
இலக்கண
நூலார் இவ்வாறாக இவரினும் கூடியளவு ஒப்புநோக்குடையராய் இருந்தனர். சமயவாதிகள்
தருக்கம் முதலியனவற்றில் மறுக்கப்பட வேண்டியனவற்றை ஒருவர் பூர்வபக்கஞ் செய்வது
ஒப்புநோக்கின் உதவியைக் கொண்டேயாகும். மணிமேகலைக் காப்பியத்திலே பல்வேறு சமயக்
கணக்கரிடம் ஒட்டிய சமயத் துறுபொருள் கேட்கும் மணிமேகலை ஒப்புநோக்கின் பயனாக
பௌத்தத்தின் மகிமையை ஐயமின்றி அறிந்து கொள்வதாகக் காட்டுகிறார் சாத்தனார். சைவ
சித்தாந்த சாத்திர நூல்களிலொன்றான சிவஞான சித்தியாரில் பரபக்கம், சுபக்கம் ஆகிய
இரு பகுதிகளிலும் முறையே பரசமய மறுப்பும் சைவ சித்தாந்த விளக்கமும்
கூறப்படுவதற்கு ஒப்புநோக்கு இன்றியமையாதது. சமண சமயத்தவராகிய தொல்காப்பியர்
மரபியலிலே தந்திரவுத்திகளை விரித்துக் கூறுமிடத்து, ஒப்பக்கூறல், தன்கோட்கூறல்,
பிறனுடம்பட்டது தானுடம்படுதல் என்பனவற்றை சமயஞ் சார்ந்த ஒப்பியலின் வழிவந்த
தருக்கத்திலிருந்தே எடுத்தாள்கிறார். இவையாவும் சமயக் கணக்கரின் மதி வழிவந்த
ஒப்பியலுக்கு உதாரணங்கள்.
இவ்வாறு எமது முன்னோர் ஒப்பு
நோக்குடையராயிருந்திருக்கவும் அதனைப் புதுவதாகக் கூற வேண்டுங் காரணம் என்னவெனச்
சிலர் எண்ணக் கூடும். அதற்கு விடை கூறுமுகத்தான் நவீன ஒப்பியலின் தத்துவங்களை
விளக்கிக் கூறலாம்.
இக் கட்டுரையின் தொடக்கத்திலே ஆற்றல்
இலக்கியத்திலும் அறிவிலக்கியத்திலும் ஏற்பட்டுள்ள அறிவியல் தாக்கத்தைக்
குறிப்பிட்டேன். நவீன ஒப்பியல் இலக்கியம் இத்தாக்கத்தின் விளைவுகளில் ஒன்று.
நவீன ஒப்பியலைப் பண்டைய ஒப்பியலிலிருந்து (அவ்வாறு கூறக்கூடுமானால்)
வேறுபடுத்துவது அதிற்கையாளும் முறையேயாகும். விஞ்ஞான முறை விஞ்ஞானத்துக்கு
முந்தியோ பிந்தியோ தோன்றுவதல்ல. அது விஞ்ஞானத்தின் உடன் பிறவியேயாகும்.
அதுபோலவே, நவீன ஒப்பியல் நவீன முறையினின்றும் தோன்றுவது. விஞ்ஞானத்தில்
முறையையும் பொருளையும் பிரிக்க முடியாதது போல ஒப்பியல் இலக்கியத்தையும்
ஒப்பியல் முறையையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்து விட இயலாது.
நாம்
மேலே உதாரணங் காட்டிய இலக்கிய ஆசிரியரும் இலக்கண நூலாரும் சமய வாதிகளும் தத்தம்
தேவைக்கும் இயல்புக்கும் ஏற்பப் பொருள்களை ஒப்பு நோக்கினர். எனினும் அவர்களின்
பிரதான நோக்கம் தமது நம்பிக்கையை அல்லது அபிப்பிராயத்தை உயர்த்தி உறுதிப்
படுத்துவதே. சித்தியாரில் பரபக்கமும் சுபக்கமும் அமைத்ததன் நோக்கம் உண்மையில்
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வதல்ல. அது
ஓரளவிற்குத் தெரிந்து தௌிவதாகும். சமயவாதியாகிய சகலாகம பண்டிதர் மெய்ச்சமயமாகத்
தான்கைக் கொண்டிருந்த சைவத்தை நிலை நாட்டுவதற்கு இதர சமயங்களை நிராகரிக்க
வேண்டுமாதலால் பரபக்கத்தை அமைத்தார் சேனாவரையர். வட மொழியையும் தென் மொழியையும்
ஒப்பு நோக்கியதன் பயனாக இரண்டையும் மேலும் ஆழமாக அறியவில்லை. மாறாக, "தமிழ்ச்
சொல் வடபாடைக்கட் செல்லாமையானும் பட சொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும்
இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்படன வெனல் வேண்டும்" என்று ஒரு
பாற்கோடியுரைத்தார். சிவஞான யோகிகள் புகழ்வது போலச் சேனாவரையர் வடநூற் கடலை
நிலை கண்டுணர்ந்த வராயிருத்தல் கூடும். ஆயினும் தமிழையும் வட மொழியையும்
ஒப்பிட்ட போது இரண்டும் பன்னெடுங்காலமாக அருகருகே வழங்கியமையால் தமிழ்ச்
சொற்களும் வடபாடைக்குட் சென்றிருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கத் தோன்றவில்லை.
காரணம் வட மொழி தேவபாடை என்ற மூடநம்பிக்கையாகும். ஆகவே அவரது ஒப்புநோக்கு ஏலவே
மனத்திலிடம் பெற்றிருந்த ஒரு தலையான தப்ெண்ணத்துக்கு அரண்செய்வதாகவே அமைந்து
விடுகிறது. அவரது ஒப்புநோக்குப் பெயரளவில் ஒப்பு நோக்கேயன்றி உண்மையில் தவறான
முடிவுகளைத் தவிர்க்கவும் தடுக்கவும் முன்னேற்பாடுகளைக் கொண்ட தாயிருக்கவில்லை.
சேனாவரையர் வட சொல் எல்லாத்தேயத்திற்கும் பொது என்பது எத்துணைத் தவறானதோ அது
போன்றதே அதற்கு மறுதலையாகத் திராவிடம் உலக மொழிகளில் தாய் என்பது. ஒப்பியல்
மொழி என்னும் பெயரைத் தாங்கினாலும் தேவ நேயப்பாவாணர் போன்றோரது ஆய்வு நூல்கள்
ஒரு தலைப் பட்சமானவையே. பாலூர் கண்ணப்ப முதலியார் கூறியிருப்பதுபோல், தேவநேயப்
பாவாணருக்கு "இருக்கும் தமிழ்ப்பற்று அளவிடற்பாலதன்று" என நாமும் கூறலாமேயன்றி
அவரது ஒப்பியல் ஆராய்ச்சி முறையைப் பாராட்டவியலாது. கண்ணப்பமுதலியார்
கூறுகிறார்: "வட மொழி எனக் கருதப்படும் பல சொற்கள் தமிழ் சொற்களே என்று
அச்சொற்களின் அடிச் சொற்களின் வழி நிறுவிக்காட்ட வல்லவர்...தேவநேயப் பாவாணர்."
தனிப்பட்ட ஒருவரது வல்லமையல்ல முக்கியம், அவர் கைக்கொள்ளும் ஆராய்ச்சி முறை
அப்பழுக்கற்றதா என்பதே கவனிக்க வேண்டியது. சுநிதிகுமார், சட்டர்ஜி, பறோ முதலிய
மொழிநூல் ஆராய்ச்சியாளரை உதாரணத்துக்காக எடுத்துக் கொள்வோம். வட மொழியில்
வழங்கும் திராவிடச் சொற்களை இவர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். சுமார்
எழுநூற்றுக்குமதிகமான திராவிடச் சொற்கள் பல்வேறு காலப் பகுதிகளில் வட மொழியிற்
சென்றடைந்திருப்பதைப் பேராசிரியர் பறோ தொகுத்துள்ளார். ஆனால் இவர் இவ்வாறு
கூறும் பொழுது திராவிடம் உலகத் தாய்மொழி என்னும் தற்பெருமையோ அல்லது வட மொழி
தேவபாடை என்னும் அகங்காரமோ இல்லாது இருமொழிகளையும் ஒப்பநோக்கி ஒன்றையொன்று
பாதித்து வந்தமையைச் சான்று காட்டி நிறுவுவதே நோக்கமாயுள்ளது. அது மட்டுமல்லாது
மொழிகள் ஒன்றையொன்று எவ்வாறு பாதிக்கின்றன என்னும் மிகப் பொதுவான நியதியை
உணர்த்துவதும் அவ்வாய்வின் பயனாக அமைகிறது.
ஆனால் இவ்வாய்வு தனியொரு
மனிதரின் வல்லமையாகவோ, சிலருக்குத் திருப்தி தரும் முயற்சியாகவோ, இராமல்
யாவரும் ஏற்றுத் தாமும் மேற்கொள்ளக்கூடிய ஆராய்ச்சியாக இருக்க வேண்டுமாயின்,
ஆராய்ச்சி முறை மயக்கமின்றியும் அறிவியல் சார்ந்ததாயும் இருத்தல் அவசியம்.
உதாரணமாக வடமொழிக்கண் வழங்கும் திராவிடச் சொற்களை நிருணயிக்க முனைந்த பறோ சில
நடைமுறைகளை மேற்கொண்டார் வடமொழிக்கண் பயிலும் ஒரு சொல், திராவிடச்
சொல்லாயிருக்கலாம் என்னும் ஐயமேற்பட்டதும் முதலில் அச்சொல் திராவிட மொழிக்
குடும்பத்திலே எவ்வாறு பரந்து காணப்படுகின்றது என்பதனை நோக்கினார். வட திராவிட
மொழிகளிலும் அச்சொல் வழக்காறுடையதாயின் அது திராவிடச் சொல்லாக இருத்தல்
கூடுமென்று ஓரளவு துணிந்தார். அதன் பின்னர் அச்சொல் இந்தியாவிலுள்ள ஆரிய
மொழிகளில் எத்தகைய வழக்காறுடையது என்பதனை நோக்கினார். அதன் பின்னர் பிற
இந்தோ-ஆரிய மொழிகளில் எவ்வாறு வழங்குகிறது என்பதை ஆராய்ந்தார். ஆரிய
மொழிகளிலும் இந்தியாவிற்கு வௌியேயுள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் அதன் வரலாறு
திருப்திகரமாக இல்லா விட்டால் அது திராவிடத்திலிருந்தோ திராவிட
மொழியொன்றிலிருந்தோ வட மொழிக்குச் சென்றிருத்தல் வேண்டும் எனத் துணிந்தார்.
அதன் பின்னரும் வட மொழி நூல்களிலே எக்காலத்திலிருந்து அச் சொல் பயின்று
வருகிறது என்பதனை நிச்சயப்படுத்திக் கொண்டார். இவையாவற்றின் இறுதியாகவே அச்
சொல் ஏறத்தாழ இன்ன காலத்திலே தமிழிலிருந்தோ அல்லது மூலத் திராவிடத்திலிருந்தோ
வட மொழிக்குச் சென்றது என ஒருவாறு துணிந்து கூறினார்.
மேற்கூறிய
ஆராய்ச்சியைக் கவனித்தால் பேராசிரியர் பறோவுக்கு "வடமொழி எனக் கருதப்படும் சில
சொற்கள் தமிழ்ச் சொற்களே என நிறுவிக் காட்டும் வல்லமை" அன்றி ஒரு
மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் புடை பெயர்வதைக் கண்டறியும் முறை
கைவரப் பெற்றமை புலனாகும். இதை இன்னுஞ் சிறிது விளக்குவோம். தனியொரு மனிதனுடைய
தனிச் சிறப்பான ஆற்றலை மாத்திரம் இவ்வாராய்ச்சிக்கு அளவு கோலாகக் கொண்டால் அது
பொதுவான நியதிகளுக்குக் கட்டுப்படாத தொன்றாகி விடுகிறது. அவ்வாறன்றிச் சில
விதிகளினடிப்படையில் நடை முறைகள் அனுட்டிக்கப் பட்டால் அவ்விதிகளைப்
பின்பற்றும் மாணவன் எவனும் அவ்வாராய்ச்சியைச் சிறிய அளவிலேனும் செய்தல்
முடியும். முடிந்தால் அது பொதுவான பரிசீலனையாக அமைகிறது. விஞ்ஞானப் பரிசோதனைகளை
எத்தனை பேரும் எத்தனை தடவையும் செய்யலாம்; அவ்வடிப்படையிலேயே படிப்படியாக அறிவு
விருத்தியடைகின்றது.
மொழியாராய்ச்சி பற்றிய இவ்வுதாரணம் அறிவியல் முறை
எவ்வாறு செயற்படுகின்றது என்பதை ஓரளவு விளக்குகிறது என எண்ணுகிறேன்.
இலக்கியத்தில் இம்முறை பெருமளவு செயற்படுவது ஒப்பியல் ஆய்வியலாகும் எனினும் அதை
விவரிக்குமுன் மேற்கூறிய விஞ்ஞான முறையாது எனச் சுருக்கமாகக் கூற வேண்டும்.
ஒரு பொருளை அல்லது நிகழ்வை விஞ்ஞானி கூர்ந்து நோக்கிக் குறித்துக்
கொள்வனவற்றைத் தரவுகள் என்கிறோம். ஒரு பொருளைப் பற்றிய தரவுகளுடன்
பிறிதொருதொகுதித் தரவுகளை ஒப்புநோக்கும் பொழுது இயற்கையான ஒருமைப்பாடுகள்
சிலவற்றையும் பொதுக் குணங்களையும் காண்கிறோம். அதாவது பல முறை அவதானித்த
தரவுகளின்றும் சில பொது முடிவுகள் அன்றி விதிகள் வகுக்கப்படுகின்றன. சில
சமயங்களில் தரவுகளைப் பெற முன்னரே ஏதாவதொரு பொதுமுடிவை அல்லது விதியை ஊகமாகக்
கொள்கிறோம். அதனையே கருதுகோள் என்பர். பரிசோதனையின்போது கிடைக்கும் முடிவு
முதற்கொண்ட கருதுகோள் சரியா தவறா என்பதைக் காட்டும். ஆயினும் கருதுகோள்,
ஆய்விற்கு முதற்றேவையாக அமையும். விஞ்ஞானத்துக்கு ஒவ்வும் இவ்வாய்வு முறையை
ஒப்பியல் ஆராய்ச்சியின் மூலம் கலை இலக்கியத்துறைக்கும் ஏற்றதாக நாம் அமைத்துக்
கொள்ள இயலும். இதனைச் சிறிது விரித்துரைக்கலாம்.
விஞ்ஞான ஆராய்ச்சியிலே
எடுகோள் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக விஞ்ஞானிகள் இரு அடிப்படை
மெய்ம்மைகளைத் தமது ஆராய்ச்சிகளுக்கு முதற்படியாக ஏற்றுக் கொள்வர். நடப்பவைக்
கெல்லாம் காரணம் இருக்கிற தென்பதும் ஒரே தன்மையான காரணங்கள் நிலைமைகள்
மாறாதிருக்குமானால் ஒரே மாதிரியான பயனையே அளிப்பன என்பதும் அவர்கள் ஏற்கும் இரு
எடுகோள்கள். முதலாவது எடுகோள் முடிவற்ற ஆராய்ச்சிக்கு ஏதுவாகவும் நம்பிக்கையும்
ஊக்கமும் அளிக்கும் சக்தியாகவும் அமைகிறது. இரண்டாவது எடுகோளினடிப்படையில்
வெவ்வேறு விஞ்ஞானிகள் குறிப்பிட்ட பரிசோதனைகளைத் திரும்பச்செய்து சரிபார்க்க
வழி பிறக்கிறது.
இவ்விரு எடுகோள்களை இலக்கிய ஆராய்ச்சியாளனும்
முன்கூட்டியே ஏற்றுக் கொள்வதற்கு தடையெதுவுமில்லை. ஒரு நூல் குறிப்பிட்ட
காலப்பகுதியிலே தோன்றுவதற்கு ஏதுக்கள் இருத்தல் வேண்டும். உலகம் உய்ய
வேண்டுமென்பதற்காகத் திருவுளங் கொண்ட பெரியார் திடீரென அருளிச் செய்வது
இலக்கியம் என்ற ஐதீகத்தை நீக்கி, காரண காரிய நியதிக்குள் இலக்கியத்தை அடக்க
இவ்வெடுகோள் உதவுகிறது. அது முதற் பயன். காரணம் இருத்தல் வேண்டும் என்று
நம்பினால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க அயராது உழைத்தலவசியம். உதாரணமாகத் தமிழ்
இலக்கிய வரலாற்றிலே சான்றோர் செய்யுள்கள் சித்திரிக்கும் வீரயுகத்தை யடுத்து,
அறவியல் நூல்களும் அவற்றுக்கு அடிப்படையான தீமைக் கோட்பாடும் அதன் வௌிப்படையான
சிணுங்கித்தனமும் தோன்றக் காண்கிறோம். வீரயுகத்திற் காணப்பட்ட நன்னம்பிக்கைக்
கோட்பாடுகள் அதன் வௌிப்படான புலனின்ப வேட்கையும் களிப்பார்வமும்
இலக்கியத்தினின்றும் மறைந்து விடுகின்றன. அவை தோன்றுமிடத்தும்
இழித்துரைக்கப்படுகின்றன. இத்தகைய ஒழுக்கவியல் உரைக்கும் நூல்கள் தோன்றத்தக்க
காரணம் இருத்தல் வேண்டும். அதனை ஒப்புக் கொண்டால் அக்காரணத்தைக் கண்டறிய
வாய்ப்பேற்படும். பிரயாசைப் பட்டால் காரணத்தை அறிவது உறுதி. காரணத்தைத் தேட
முயலவும் வரலாற்றுப் பார்வை தவிர்க்க முடியாதவாறு வந்தமைந்து கொள்கிறது. அது
மட்டுமல்லாது வரலாற்று அடிப்படையிற் காரணகாரிய ஆய்வைப் பயன் படுத்தும்பொழுது
குறிப்பிட்ட நூல்களின் தோற்றத்திற்குப் பொருளாதார சமூக அரசியல் நிலைமைகள்
காரணிகளாக அமைகின்றன. இக் காரணிகள் புறநிலையில் வைத்து நோக்கியாராயத்தக்கன.
இயற்கை அறிவியற்றுறைக்குரிய முறைகளாம் 'சோதித்தறியும் தன்மை,' 'தற்சார்பற்ற
நிலை,' 'மயக்கமின்மை' முதலியன இக்காரணிகளுக்குப் பண்பாயமைகின்றன. இவற்றைத்
தரவுகளாகக் கொள்ளுவோம். கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அற நூல்கள்
தோன்றற்குரிய சூழமைவையும் உந்தல்களையும் நியதிகளாகக் கருதிக் கொள்கிறோம்.
இனி, மேலே கூறிய இரண்டாவது எடுகோளைக் கவனிப்போம்: ஒரே மாதிரியான காரணங்கள் ஒரே
மாதிரியான பயனையே அளிக்கும் என்பது. இது பரிசோதனைக்கு எம்மைத் தூண்டுவது தமிழ்
வீரயுகத்தைப் போலவே கிரேக்கரது வீரயுகமும் அமைந்திருந்தது. அவ்வாறாயின் அங்கும்
வீரயுகத்தையொட்டி அறநூல்கள் எழுந்தனவா எனப் பார்க்கலாம். அதாவது ஒத்த காரணங்கள்
ஒத்த பயனையளித்துள்ளனவா எனச் சரிபார்க்கலாம். அங்கும் அறநூல்கள்
தோன்றியிருக்கக் கண்டால் எமது ஊகம் அல்லது கருதுகோள் பிழையற்றது எனக் கொண்டு
அதனை இலக்கிய வரலாற்று விதிகளிலொன்றாக்கலாம். உண்மையில் வீரகாவியங்கள் பாடிய
சான்றோன் ஹோமரை யடுத்து ஹீசியொட் போன்ற அறநூற்புலவர் கிரேக்கத்திலே தோன்றினர்.
எமது அறநூலாசிரியரைப் போல அவரும் பெண் வெறுப்பு, புலனடக்கம், இறை பக்தி
முதலியவற்றைப் பெரிதும் வற்புறுத்தினர்;புராணக் கதைகள் பெருவழக்குப் பெற்றன.
கவிஞர் போதகர்களாக மாறினர். இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது தமிழிலும்
கிரேக்கமொழியிலும் ஒரே தன்மையான சூழ்நிலைகள் ஒரே மாதிரியான இலக்கிய வகையைத்
தோற்றுவித்தமை உறுதிப்படும். இதன் பயனாக இலக்கியத்துக்கு ஓர் உலகப் பொதுமை
ஏற்படுகிறது. இவ்வடிப்படையிலேயே ஒப்பியல் இலக்கியம் உலகப் பொதுவான
இலக்கியத்தோடு ஒன்றுபடுகின்றது.
ஒப்பியல் இலக்கிய ஆய்வு முன்னோடிகளில்
ஒருவரான தெயின்(Hippolyte Taine, 1828-1893), ஒப்பியல் இலக்கியம் இறுதியில் உலக
இலக்கியக் கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச் செல்லல் வேண்டும் என்றே கருதினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெயின், ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளன்
கவனஞ் செலுத்த வேண்டிய பொருள்களைக் குறிப்பிடுமிடத்து, இனம், சூழமைவு, காலம்,
மனத்திறன் என்பனவற்றை வற்புறுத்தினார். சூழமைவிலே புவியியற் காரணிகள் அடங்கும்.
இவற்றிற் சில இன்று அத்துணைச் சிறப்புடையவனாகக் கொள்ளப்படுவதில்லை. சில புதிய
காரணிகளை நாம் இன்று சேர்த்துக் கொள்ளுதல் கூடும். ஆனால் "இலக்கிய ஆராய்ச்சியை
ஒரு விஞ்ஞானப் பரிசோதனை போல நடத்தவும், அதனைச் சரிபார்க்கவும், மேலும் மேலும்
திருத்தமுறச் செய்யவும்" முடியும் என்று ஆணித்தரமாகக் கூறியவருள் ஒருவர்
தெயின்.
இக்கூற்றிலும் முறை, அழுத்தம் பெறுவதைக் கவனிக்கலாம். இதன்
முக்கியத்தை எவ்வளவு வற்புறுத்தினாலும் தகும். பழைய விஞ்ஞானத்துக்கும் புதிய
விஞ்ஞான நோக்குக்குமுள்ள வேறுபாட்டை இங்குக் கூறுதல் பொருத்தம். தொகுத்தறிமுறை
முற்காலத்திலிருந்தே வெவ்வேறு வகையில் வழங்கி வருகிறது. எமது பண்டை நூலோர்
கூறும் காட்சியளவை தொகுத்தறிமுறையைச் சேர்ந்ததே. ஆனால் பழைய தொகுத்தறிமுறையில்
கருதுகோள் முக்கியம் பெறவில்லை. அம்முறையில் இயற்கையில் யாவும் மறைந்து
கிடப்பதாகவும், அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஒருவர் செய்யக் கூடியதாகவும்
கருதப்பட்டது. இவ்வடிப்படையிலேயே பண்டைய அறிவாராய்ச்சி இயல் (Epistemology)
அமைந்தது. இது விஞ்ஞானத்தின் தோற்றத்தைப் பெற்றிருப்பது போலக் காணப்பட்டாலும்
உண்மையில் விஞ்ஞானத்துக்கு முற்பட்ட நோக்கேயாம். ஏனெனில் பண்டைய
தொகுத்தறிமுறையும் அறிவு ஆராய்ச்சி இயலும் நவீன விஞ்ஞானத்துக்குப் போதிய
அடிப்படையும், நெறியும் ஆகா. நவீன விஞ்ஞானத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று
இடையறாத பரிசோதனையாகும். இப்பரிசோதனைகளுக்கு அநுசரணையாகத் துணிகரமான
கருதுகோள்கள் கைக்கொள்ளப் படுகின்றன. இவற்றின் பயனாகத் தாமாகத் தோன்றும்
உண்மைகளேயன்றிப் புதிய உண்மைகளும் நிலை நாட்டப் படுகின்ற தொகுத்தறிமுறையும்
அறிவாராய்ச்சி இயலும் மூட நம்பிக்கைகளையும் இறைக் கோட்பாடுகளையும் விமர்சனஞ்
செய்ய உதவக் கூடும். ஆனால் புதிய புதிய கருதுகோள்களின் அடிப்படையில் தொடர்ந்து
பரிசோதனைகள் நடாத்திப் பொருள்களுக்கிடையே புதிய உறவுகளையும் தொடர்புகளையும்
காண்பதற்கு மட்டுமின்றிப் புதிய பொருள்களையே கண்டுபிடிக்க அவை உதவா.
இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட விஞ்ஞானப்புரட்சியானது அதற்கு முற்பட
நிலவிய விஞ்ஞான முறைகளை வழக்கறச் செய்தது. சார்புக் கொள்கையும், சொட்டுக்
கொள்கையும், உளப் பகுப்பாய்வியலும் புதிய ஆராய்ச்சி முறைகளை
இன்றியமையாதனவாக்கின.
எமது சம்பிரதாயமான இலக்கிய ஆய்வு முந்திய
தொகுத்தறிமுறையை ஒத்ததாகவேயுள்ளது. இலக்கியங்கள் மேதைகளால்
உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற் சிறந்த கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன.
நூற்பயிற்சியுள்ளோனொருவன் இவ்விலக்கியங்களைப் படித்தால் விஷயங்களைத் தெரிந்து
கொள்ளலாம். இதுவே பொதுவான நம்பிக்கையாய்க் காணப்படும். இதன் தருக்கரீதியான
முடிவாக ஒருவன் யாவுமுணர்ந்தவனாக இருப்பான் அல்லது ஒன்றுந்
தெரியாதவனாயிருப்பான். ஆனால் நவீன விஞ்ஞானி தான் செய்கின்ற முயற்சியெல்லாம்
ஆகக் கூடிய அளவில் உண்மையின் ஒரு பகுதியே என்று உணர்கிறான். பழைய கல்வி
முறைப்படி ஒருவன் இலக்கண இலக்கியத்தின் வரம்பு கண்டவனாகக் கொள்ளப்படலாம். ஆனால்
இன்று அவ்வாறு கருத முடியுமோ முடியாது. உதாரணமாகத் திருக்குறளை எடுத்துக்
கொள்ளுவோம். இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை என்னும் குருட்டு நம்பிக்கை ஒரு
புறமிருக்க திருக்குறளைக் கரைகண்டவராகப் பலர் புகழப் படுவதைக் காண்கின்றோம்.
குறளிலுள்ள ஆயிரத்து முந்நூற்று முப்பது பாக்களையும் ஓதியுணர்ந்தவரும் உள்ளனர்.
ஆயினும் குறள் பற்றிய பல ஆதாரச் செய்திகள் தாமும் இன்னும் எமக்குத் தௌிவாகத்
தெரிந்தில.
குறள் தோன்றிய காலம், அதன் நோக்கம், அது எடுத்துரைக்கும்
வாழ்க்கைத் தத்துவம், அதன் மொழி நிலை, அதனாசிரியர் மதம், குறள் காட்டும் சமுதாய
நோக்கு, இலட்சியம், அதன் குறைபாடுகள், முரண்பாடுகள், என்பன போன்ற
பொருள்களுக்குத் தீர்க்கமான விளக்கம் கூறப் படவில்லை. இதனைத் தனியொரு மனிதன்
செய்து முடிக்கலாம் என எண்ணுவதும் தவறு. ஏனெனில் நவீன விஞ்ஞானம் ஐயமின்றிக்
காட்டுவது போல "பூரண அறிவு எந்த ஒருவனது சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாகும்."
திருவற்றுவ மாலைப் புலவரும் தற்காலக் கருத்துரைகாரர் சிலரும் கூறியுள்ளவற்றை
மாத்திரம் குறள் பற்றிய முடிந்த முடிபாகக் கொள்ள வியலாது. அது மட்டுமல்ல. இன்று
குறள் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருக்கிறது. மாறுபட்ட கருத்துக்களுக்குக்
குறட்பாக்கள் இடமளிப்பதைக் குறள் உரையாசிரியரே எமக்குக் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் குறளாராய்ச்சி இது காலவரை, கூறியது கூறலாகவோ, அன்றிக்
குதர்க்கமாகவோ இருந்து வருகிறது. இவ்வவல நிலையிலிருந்து இருதலைக் கொள்ளி
எறும்பு நிலையிலிருந்து குறளாராய்ச்சி விடுதலையடைந்து பயனுள்ளதாய் அமைய
வேண்டுமானால் புதிய ஆய்வு முறை கைக்கொள்ளப்படல் வேண்டும். மொழியியல், வரலாறு,
சமுதாயவியல், ஒப்பியற்சமயம், மெய்யியல், அரசியல் முதலிய பல துறையைச்
சேர்ந்தவரும் ஒன்று சேர்ந்து யாவரும் அங்கீகரிக்கும் விதிமுறைகளுக்கேற்ப
ஆராய்ந்தால் ஒருவாறு உண்மை துலக்கமடையும். சுருங்கக் கூறுவதாயின் முறை
திருந்தவேண்டும். ஆனால் முறை செயற்படுவதற்கு முதற்றேவையாகக் கருதுகோள்கள்
அவசியம். கருதுகோள்கள் கனவிலே தோன்றுவனவல்ல. அந்தராத்மாவின் குரல் இது.
விஷயத்தில் அத்துணைப் பயனளிக்காது.
இவ்விடத்திலே ஒப்பியல் நோக்கும், சான்றுகளும் கைகொடுத்து உதவக் கூடியன.
திருக்குறளைப் போன்ற பிற அறநூல்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் கூர்ந்து
அவதானிக்கத் தக்கன. தம்மபதம், கொன்பூசியஸ் போதனைகள், மார்க்கஸ் ஔரேலியஸ்
சிந்தனைகள், வடமொழித் தரும சாத்திரங்கள் குறிப்பாகக் கௌடில்யரது
அர்த்தசாஸ்திரம் முதலியன குறளாராய்ச்சிக்கு உதவுவன. இவற்றைப் பற்றிய
செய்திகளையும் கணக்கெடுப்பதன் மூலம் இந்நூல்களுக்கிடையேயுள்ள ஒற்றுமை
வேற்றுமைகளை முதலிற் காண்டல் கூடும். அதன் பின்னர் இவற்றின் வளர்ச்சி ஒழுங்கு
பற்றிச் சில பொது நியதிகளை வகுக்கலாம். ஒரேதன்மை வாய்ந்த நியதிகளை ஒன்றாக
நிரைப்படுத்துவதன் மூலம் கூடிய விளக்கம் ஏற்படுகிறது. தெய்வப்புலமைத்
திருவள்ளுவனாரின் தனித்திறமையொரு புறமிருக்க "ஒரே மாதிரியான சூழ்நிலைகள்
நிலைமைகள் மாறாதிருந்தால் ஒரே மாதிரியான" நூலைத் தோற்றுவிக்கின்றன என்னும்
அடிப்படை உண்மை நிரூபணமாகிறது. அதன் வாயிலாகவே குறள் உண்மையான உலகப் பொதுமையைப்
பெறுதல் முடியும். மற்றைய நூல்களிலும் சிறந்தது என்பதனால் குறளுக்கு உலகப்
பொதுமை வராது. மற்றைய அறநூல்களிற் காணப்படும் பண்புகளே திருந்திய வடிவத்திற்
காணப்படுகின்றன என்பதனாலேயே அதற்குப் பொதுமதிப்பு ஏற்படும். அப்பொழுதுதான்
குறளின் பொதுப்பண்பும் தனிச்சிறப்பும் எவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இதுகாலவரை பெரும்பான்மையான எமது தமிழ் ஆராய்ச்சியாளர் குறள் உலகிலேயே தலை
சிறந்த வாழ்வியல் நூல் என்னுமடிப்படையிலே தமது ஆய்வுகளை நடாத்தி வந்துள்ளனர்.
இவ்வடிப்படைத் தப்பெண்ணத்தினால் ஒரேவழி காணப்ட்ட ஒப்பு நோக்கும் அர்த்தமற்றுப்
போய்விட்டது. ஏனெனில் ஒன்றைப் பற்றி அபிப்பிராயம் கூறவது விஞ்ஞான முறையன்று.
ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது போல, "உயிருள்ள பொருள்கள் மீது ஆவலும், அவை
எவ்வாறு உலகியற் பொருள்களுள் அடங்குகின்றன என்பது பற்றி ஆர்வமும்
காட்டுகின்றானேயன்றி, அவை ஏன் உயிருடன் இருக்கின்றன என்ற கேள்விக்கு விஞ்ஞானி
இடங் கொடுக்கமாட்டான். அவனுக்குப் பொருள்கள் மீதே கவனம்-அவற்றின் பெறுமதியில்
அன்று". இதனையே விடயச் சார்ச்சி அல்லது புறநிலை மெய்ம்மை என விஞ்ஞானம்
கூறுகிறது. ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சிக்கு இது மிகவும் வேண்டப்படுவது. இல்லா
விட்டால் எமது நூலாய்வு முற்றிலும் அகநிலைப்பட்டதாகிவிடும். இதனை ஒருதாரணத்தால்
விளக்குவோம். மனோன்மணீயம் பாயிரத்தில் சுந்தரம் ,பிள்ளையவர்கள்
"வள்ளுவர் செய்திருக் குறளை மறுவற
நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி"
எனப் பாடுகின்றனர். திருக்குறளையும் மநுதரும
சாத்திரத்தையும் ஒப்புநோக்கி குறள் நன்று, மநுதருமம் தீது என்கிறார் ஆசிரியர்.
இது உண்மையில் ஒப்பு நோக்கல்ல. ஏனெனில் குணத்தின் அடிப்படையில் அபிப்பிராயங்
கூறப்படுகிறது. ஆனால் பொருள்கள் நல்லவையா அல்லது கெட்டவையா என்பதை அறிவதுதான்
விஞ்ஞானத்தின் நோக்கமன்று. மநுதருமத்திற்கும் குறளுக்கும் வேறுபாடிருப்பது
உண்மையே. ஆனால் சுந்தரம் பிள்ளை கூற்றுப்படி மநுதருமம் இருள்; குறள் ஒளி; இஃது
பொருந்தாது. மநு ஒருவகையான சமூகஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டால், குறளாசிரியர்
இன்னொருவகையான ஏற்றத் தாழ்வை ஏற்றுக்கொள்ளுகிறார். ஆக இருவரும் ஏற்றத் தாழ்வை
நிராகரித்தவர் அல்லர். அதிலே பொதுமை காணப்படுகிறது. ஆனால் சுந்தரம் பிள்ளை
கூற்றுப்படி குறள் ஏற்றத் தாழ்வை ஏற்காதது எனவே அது பற்றிய ஆராய்ச்சி
அநாவசியமாய்ப் போகிறது. போகவும் குறள் பற்றிய முற்சாய்வான மனப்பதிவு
உறுதிப்படுகின்றதேயன்றிப் புதிய விளக்கம் எதுவும் பெறப்படவில்லை.
நல்லது
கெட்டது என்ற தீர்ப்பு உண்மையில் அறவியல் சம்பந்தமானது. அது மட்டுமல்ல. அவ்வாறு
தீர்ப்புக்கூறுவது நிலையியல் நோக்கின் விளைவாகமுள்ளது. ஆனால் நவீன விஞ்ஞானமோ
இயக்கவியல் நோக்கை ஆதாரமாகக் கொண்டது. உலகைக் கண்டறிந்து விவரிப்பது
மட்டுமின்றி அதனை எமக்கேற்றவாறு அமைக்கவும் நவீன விஞ்ஞானம் முயலுகிறது. அது
போலவே விழுமிய இலக்கியத்தைக் கற்றறிவது மட்டுமல்லாது அதனைப் புதிய கோணத்திற்
பார்த்துப் புதிய பொருளைக் கண்டறியும் வழி காணவேண்டும்.
இயற்கையையும்
சமுதாயத்தையும் மாற்ற விரும்புபவர்கள் அம்முயற்சிக்கு முதற்தேவையாக அவற்றின்
இயக்கவிதிகளைத் தௌிந்து தெரிவதுபோல, இலக்கியத்தைப் பூரணமாக நமதாக்குவதற்கு அதன்
இயக்கவிதிகளைத் தெரிந்து கொள்ளல் இன்றியமையாதது. இயக்கவிதிகள் விடயச்
சார்பானவை;புறநிலை மெய்ம்மையானவை. எனவே அவற்றை நன்கு விளக்கிக் கொள்ளுவதற்கு
மனத்திலே பசையிருத்தலாகாது. வைத்தியன் எத்துணை முன்னெச்சரிக்கையுடனும்,
பாதுகாப்புடனும் சத்திர சிகிச்சை செய்கின்றானோ அத்துணை தற்சார்பற்ற முறையில்
இலக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறன்றி எமது சொந்த விருப்பு
வெறுப்புகளைக் கட்டுப்படுத்தாது அவற்றைத் துணைக் கொள்வோமானால் புறநிலைக்குரிய
உண்மைகளைக் கண்டறிய வியலாது. இதனை ஒருதாரண மூலம் விளக்குவோம்.
தமிழ் வீர
யுகத்திலே அரசருக்கும் புலவருக்கும் அத்தியந்த உறவு நிலவியது. புலவரைப் போற்றி
வாழ்ந்தனர் மன்னர். அவர்களுக்கு வரையாது வழங்கினர். பாணர், விறலியர், புலவர்
முதலியோரைப் புரத்தலைப் பாண்டகன் எனக் கொண்டனர். இச் செய்திகள் சானறோர்
செய்யுட்களிலிருந்து பெறப்படுவன. இவற்றைக் கண்ணுற்ற தற்கால எழுத்தாளர் சிலர்
புலவரைப் பேணுதலும் கொடையும் கற்றோரைப் போற்றுதலும் பழந்தமிழ் மன்னரது தனிச்
சிறப்பியல்புகள் எனக் கூறவராயினர். அம்மட்டில் நில்லாது புலவரைப்போற்றி வாழ்ந்த
பண்பு பழந்தமிழ் மன்னரிடத்து மாத்திரம் காணப்படுவது என்றும் தேற்றமாகக்
கூறினர். இத்தகைய எண்ணமும் கூற்றும் இனப்பற்றிலிருந்தும் மொழிப்பற்றிலிருந்தும்
எழுவன. ஆனால் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சி வழி நின்று நோக்கும்போது தமிழ்
வேந்தர்க்கே உரிய இம்மரபு பிற சமுதாயங்களிலும் காணப்படும்.
பண்டைத்
தமிழ் மன்னர்கள் புலவரைப் போற்றியதைப் போலவே பழங்கால வெல்ஷ், ஐரிஷ், ஜெர்மானிய,
கிரேக்க அரசரும் பிறரும் புலவரைப் பெருமதிப்புடன் நடாத்தினர். எனவே தமிழ்
வேந்தரது அருங்குணத்தைப் புகழ்ந்து வீண் பெருமை கொள்ளுவதற்கப் பதிலாகப் புராதன
சமுதாயங்களிலே மண்ணாள் வேந்தரும் பிறரும் புலவரைச் சிறப்பித்தமைக்குக் காரணம்
காண முற்படுதல் விவேகமான செயலாகும். உலக இலக்கியங்கள் பலவற்றை நுணுகியாராய்ந்த
திருமதி. நோரா சாட்விக் கூறுகிறார்: எழுத்துக்கலைப் பயிற்சியற்றுப்
பெரும்பாலும் வாய் மொழி இலக்கியத்தையே பயன்படுத்தும் மக்கள் கவிதையையும் சொல்
வன்மையையும் மிக உயர்வாக மதித்தல் இயல்பே. அது மட்டுமல்லாது எமது காலத்தில்
வழங்கும் வெகுஜன சாதனங்களுக்குப் பதிலாக அச்சமுதாயங்களிற் புலவரே விளங்கினர்.
இக்கூற்றைக் கருதுகோளாகக் கொண்டு எமது சான்றோர் செய்யுட்களை ஆராய்ந்தால்
உண்மையாயிருக்கக் காண்போம். புராதன சமுதாயங்களிலே மனிதனது அறிவு முழுவதும்
செய்யுள் வடிவிலேயே இருந்தது. மந்திரம், மாயம், வானநூல், வரலாறு, புராணம்,
அறிவியல், இயற்கையறிவு முதலிய யாவும் பன்னெடுங்காலமாகச் செய்யுள் வடிவிலேயே
வழங்கி வந்தன. புலம் என்ற சொல்லின் பொருளைக் கவனித்தால் இச்செய்தி புலனாகும்.
புலம் என்றால் இந்திரியம், இந்திரிய உணர்வு, அறிவு, கூர்மதி, துப்பு, நூல்,
வேதம், இடம் என்றெல்லாம் பொருள்படும். புலமை என்பதற்குக் கல்வி, மெய்ஞ்ஞானம்
செய்யுளியற்றும் ஆற்றல் என்ற பொருளுண்டு. புலமையோர் என்றால் கவி, கமகன், வாதி,
வாக்கி என்ற நால்வகைக் கல்வியாளரும், கற்றோரும், நிபுணரும் கருதப்படுவர்.
புலவரை அறிவர் என்றும் அழைத்தனர். அது மட்டுமல்லாது கிரேக்கர் அபோலோவும்,
தமிழர் முருகனுமே புலமைக் கடவுளர் என நம்பினர். இது காரணம் பற்றியே
திருமுருகாற்றுப்படையில், "புரையநர் இல்லாப் புலமையோய்", "நன்மொழிப் புலவரேறே",
"அறிந்தோர் சொன் மலை", "நூலறி புலவ" என்றெல்லாம் பெரும் பெயர் முருகன்
துதிக்கப்படுகின்றான். புலமைத் தெய்வத்திடம் புலவர் ஆற்றுப் படுத்தப்படுதல்
இயல்பே. இவ்வாறு முருகனது பக்தர்களாகவும் வாய்மொழி வல்லவராகவும்
கட்டுரையாளராகவும் விளங்கிய புலவரைச் சர்வக்ஞராகக் கருதிப் புராதன சமுதாயம்
போற்றியதில் வியப்பெதுவுமில்லை. ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சி இவ்விளக்கம் பிறக்க
வழி செய்கிறது. அதை விடுத்துத் தமிழபிமானத்தால் மன்னரின் சிறப்பியல்பு பேசுவது
மடமை மட்டு மல்லாது உண்மைக்குப் புறம்பானதுமாகும். பற்று கண்ணை மறைக்காவிடின்
பழமைக்கும் புது விளக்கம் காணலாம்.
விஞ்ஞானத்தின் பண்புகளில் ஒன்று அது
'இருக்க வேண்டும்' 'இருக்கப்படாது' என்ற சொற்களின் பொருளுக்குக்
கட்டுப்படாததாகும். பழங்கால இலக்கிய ஆய்வு பெரும்பாலும் இலக்கணம் போல
விதிமுறையிலமைந்தது.
"அந் நிலை மருங்கின் அறமுதலாகிய
மும்முதற்
பொருட்கும் உரிய வென்ப"
அறம் பொருளின்பமென்னும் மூன்று முதற் பொருட்கும்
ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்ற நால்வகைப்பாவும் உரியன எனக் கூறுவது
விதிமுறை. 'இருத்தல் வேண்டும்'. 'இருத்தலாகாது' என்பனவற்றிற்கும் நல்லது
கெட்டது என்பனவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆகவே விஞ்ஞானி விதிப்பதிலும்
விவரித்து விளக்குவதையே சிறந்த முறை யெனக்கருதுகிறான். ஏனெனில் புதுப்
புதுச்சான்றுகளும் செய்திகளும் கிடைக்கக் கிடைக்க விஞ்ஞான விளக்கத்தை
மாற்றியமைக்கின்றான். இருத்தல் வேண்டுமென ஒரு விதியைக் கொண்டால் அது மாற்ற
முடியாததாகிறது. ஆனால் விஞ்ஞானத்தின் அடிப்படையில் ஒன்று விஞ்ஞான விதியை
எந்நேரமும் மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாம். விதிப்படி நாம்
எதிர்பார்ப்பதற்கு மாறான ஒரு நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டால் இந்நிலை ஏற்படும்.
சில சமயங்களில் அவ்விதியை அடியோடு கைவிடவேண்டியும் நேரும். புதிய நிகழ்விற்கு
ஏற்பப் புதிய விளக்கமும் விவரணமும் அமைகின்றது. இதற்கோர் உதாரணங் காட்டுவோம்:
கிரேக்க ஆதி கவியாம் ஹோமர் தமது இதிகாசத்தை எழுதினார் என்ற நம்பிக்கையே பல
காலமாகக் கிரேக்க இலக்கிய அறிஞரிடையே நிலவி வந்தது. அவ்வாறுதான் அது இருக்க
வேண்டும் என அவர்கள் விரும்பினார். உயர் தனிக் காவியமாகிய இலியாது, ஒதீசி
முதலியன நனிமிகு நாகரிகம் செழித்து வளர்ந்த காலப் பகுதியில் மகாகவியால் எழுதப்
பெற்றிருக்க வேண்டும் எனக் கொண்டனர். ஆனால் கிரேக்க உயர் தனிக் காவியங்களை
கேவலம் யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுடன் தற்செயலாக ஒப்பு நோக்கிய ஓர்
அமெரிக்க ஆராய்ச்சியாளர் அவ்விரு தொகுதிப் பாடல்களும் பெரிதும்
ஒத்திருக்கக்கண்டார். வாய் மொழிப் பாடல்களை அவர் காதாரக் கேட்டு அவற்றைப் பாடிய
புலவர்களது உத்திகளைக் காட்சியளவையால் அறிந்திருந்தார். உறுதியாகத் தெரிந்த
வாய் மொழி இலக்கியப்பண்புகள் பலவும் எழுதியனவாக நம்பப்பட்டு வந்த செம்மைசான்ற
காவியங்களில் காணப்படும் போது என்ன செய்வது? கிரேக்க காவியங்களும் வாய்மொழிப்
பாடல்களாக வழங்கி வந்து பிற்காலத்திலே எழுத்தில் பொறிக்கப்பட்டிருத்தல் கூடும்
என்ற எண்ணத்தைக் கருதுகோளாகக் கொண்டு, இரு தொகுதி நூல்களையும் மேலும்
நுணுக்கமாக ஆராய்ந்தார். ஐயத்துக்கிடமின்றிக் கிரேக்க காவியங்கள் வாய் மொழிப்
பாடல்களே என்று தெரிய வந்தது. வரவும் அதைப் புதுக் கொள்கையாக வகுத்தார்.
நம்பிக்கையில் வாழ்ந்த கிரேக்க இலக்கிய உலகம் நம்ப மறுத்தது. ஆனால் புதிய
கொள்கையை வெகுகாலம் எதிர்க்க முடியவில்லை. புதுக் கொள்கையைக் கூறிய மில்மன் பரி
விஞ்ஞான முறையை-ஒப்பியல் ஆய்வு முறையைக் கையாண்டமையாலேயே அவரது விளக்கம்
உண்மையாயமைந்தது. முதலிலே ஏளனஞ் செய்தவர்கள் பின்னர் உண்மையை ஏற்றுக் கொள்ள
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பரிக்குப் பின் வந்தோர் அவரை விஞ்ஞானியாகவே
போற்றுகின்றனர். வேட்ஜெரி என்பார் "பரி ஹோமர் ஆராய்ச்சிக்கு வாய்ந்த டார்வின்"
என்றார். காப்பென்றர் என்பர், "அவரது கண்டுபிடிப்பின் மெய்ம்மை இயுகிளிட்
நிறுவிய மெய்ப்பீடுகளின் உண்மை போன்றது" என்றார். இப்பாராட்டுகளுக்கு விளக்கம்
வேண்டாம்.
பரியின் புதிய விளக்கம் அவருக்குத் தெரிந்த அளவில்
சான்றுகளுக்கு ஏற்றாக இருந்தது. ஆனால் பரி அதனை முடிந்த முடிபாகக் கருதினார்
அல்லர். தனது "விளக்கம்" உண்மையாக இருந்து, மேலும் புதிய வினாக்களுக்கு
விடையளிக்கக்கூடிய புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் என எண்ணி மகிழ்ந்தார்.
அவரது கண்டு பிடிப்பிலும் பார்க்க இம் மனோ பாவமே அவரது விஞ்ஞான நோக்கை
வௌிக்காட்டுவதாயுள்ளது. "ஏனெனில் புதிய விஷயங்களை அறிவதில் விஞ்ஞானிக்குள்ள
ஆர்வம் ஒருபோதும் திருப்திப்படுவது கிடையாது." தமிழராய்ச்சி தற்போதுள்ள
நிலைமையைக் கண்டு மன நிறைவு அடைபவர்கள் இக்கூற்றை உன்னுதல் தகும்.
ஒப்பியலின் தத்துவங்கள் இவ்வாறாக, இவை தமிழிலே தழைத்து வளராமைக்குக் காரணங்கள்
யாவை எனச் சிறிது சிந்தித்தால் பொருத்தமாகும். தமிழரிடையே பெருவழக்காயுள்ள
தத்துவம் அவரது வரலாற்றுணர்வின் தன்மை. இன்றைய சமுதாய நிலை முதலியன இத்துறையின்
வளர்ச்சிக் குறைவுக்குக் காரணங்களாயுள்ளன. இக்காரணிகளிற் சில அடுத்து வரும்
கட்டுரைகளில் ஆராயப்பட்டிருக்கின்றன. இவ்விடத்திலே துணைக் காரணம் ஒன்றைக்
குறிப்பிட விரும்புகிறேன். எமது நவீன இலக்கியப் படைப்பும், திறனாய்வு முறைகளும்
பெரும்பாலும் ஆங்கில நூல் வழி வருவனவே. இதன் விளைவாக ஆங்கில இலக்கிய
மரபிற்காணும் குறைபாடுகள் பல எம்மத்தியிலும் பரவியுள்ளன. இவற்றில் ஒன்று
ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியின் தாழ்ந்த நிலை. பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர்,
ரஷ்யர் முதலினோருடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது ஆங்கிலேயர் இத்துறைக்கு
ஆற்றிய சேவை பெருமைப் படத்தக்கதல்ல. ஒப்பியல் இலக்கியம் என்ற சொற்றொடரை 1848இல்
புகழ் பெற்ற திறனாய்வாளர் ஆர்னல்ட் (Matthew Arnold, 1822 - 1888) ஆங்கிலத்திலே
முதன் முதலாக வழங்கினார். ஆர்னல்ட் பிரெஞ்சு இலக்கியத் திறனாய்வு முறைகளைப்
பெரிதும் மதித்தவர். அம்மொழியில் இப்பொருள் தருஞ் சொற்றொடர் எனவே, (1829)
பயன்படுத்தப்பட்டது. இவர்களுக்கும் முன்னதாக ஜெர்மானியர் 'ஒப்புமை இலக்கியத்
துறை' என்னும் சொற்றொடரைப் பிரயோகித்திருந்தனர். ஆர்னல்ட் சென்ற நூற்றாண்டின்
நடுப்பகுதியில் இக்கருத்தை ஆங்கிலேயருக்கு அறிமுகப்படுத்திய போதும் அது ஆழமாக
வேரூன்றவில்லை. ஆனால் அமெரிக்காவிலே ஒப்பியலின் குழந்தையான சமூகவியல் செழித்து
வளர்ந்தமையால் அந்நாட்டில் ஒப்பியல் இலக்கியமும் குறிப்பிடத்தக்களவு
அபிவிருத்தியடைந்தது. கிரேக்க இலக்கிய ஆராய்ச்சியில் புரட்சி செய்த மில்மன் பரி
ஓர் அமெரிக்கராயிருந்தது தற்செயல் நிகழ்ச்சியன்று. ஆயினும் இங்கிலாந்து
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியராயிருந்த எச்.எம்.சாட்விக் என்பாரும்
அவரது மாணவியும் மனைவியுமான நோரா சாட்விக் என்பாரும் சேர்ந்து எழுதிய இலக்கிய
வளர்ச்சி (The Growth of Literature) என்னும் பாரிய நூல் இந்நூற்றாண்டிலே
ஆங்கிலேயருக்கு மாத்திரமல்லாது உலகின் பல பாகங்களிலுள்ள ஆராய்ச்சியாளருக்கும்
ஆதர்ஷமாக இருந்து வந்திருக்கிறது. தமிழில் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதத்
தொடங்கிய இலக்கிய உதயம் என்ற நூலும் வேறு சிலவும் முற்கூறிய நூலினால்
உந்தப்பட்டனவே. எனினும் சுமேரிய இலக்கிய ஆய்வாளரான கிறேமர், ரஷ்ய இலக்கியம்,
கிரேக்க இலக்கியம் என்பனவற்றை ஆராய்ந்த பரி, லோட் முதலிய அமெரிக்கர் சாட்விக்
தம்பதிகளின் மகத்தான நூலைப் பயன்படுத்திப் பயனடைந்ததைப் போல ஆங்கிலேயர் எவரும்
பயனடைந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலேயரிடத்துக் காணப்படும்
இப்பெருங்குறைபாடு குடியேற்றக் கல்வியின் பயன்களில் ஒன்றாக எம்மிடையே நிலைத்து
விட்டது. இதனை உணர்ந்தால் இக்குறைபாட்டை நிவிர்த்தி செய்யச் சிலராவது
முயலக்கூடும்.
ஒப்பியல் இலக்கியம் எம்மிடையே போதியளவு வளராமையால்
விஞ்ஞான முறைகள் இலக்கியக் கல்வியில் இடம் பெறாதது மட்டுமினறி ஓரளவுக்கு
ஆங்கிலேயரிடம் காணப்படுவது போல எமது இலக்கியத்திறனாய்வும் பூரணத்துவம்
பெறமாட்டாதிருக்கிறது. இப்பொருள் குறித்து ரெனிவெல்லாக், ஓஸ்டின்வாரன் ஆகிய
இருவரும் இலக்கியக் கொள்கை (Theory of Literature) என்னும் நூலிற்
குறிப்பிடுவது பொருத்தமாகக் காணப்படுகிறது. எல். குளோறியா சுந்தரமதியின் மொழி
பெயர்ப்பைத் தருகிறேன்:
"பொதுவாக ஒர் இலக்கியத்தைப் பாராட்டுதல்,
சுவைத்தல், அதில் ஆர்வங் காட்டுதல் போன்றவை தனிப்பட்ட முறையில் இலக்கியத்தை
இரசிப்பவர்களுக்கே உரியவை என ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, திடமான இலக்கியப் புலமை
பெறும் இலக்கியக் கல்வியினின்று, இவை அகற்றப்பட்டுள்ளன;இந்நிலை வருந்தத்தக்கது.
இவ்வாறு இலக்கியப் புலமை ஒருபுறமும் இலக்கியத்தைப் பாராட்டும் நிலை மறுபுறமாக
அமைந்த இரட்டை நிலை, ஒழுங்கான அதே அளவில் இலக்கியப் போக்குடைய பாராட்டு
ஆய்விற்கு உரிய வழிவகைகளை அமைக்காது. கலையை அதிலும் குறிப்பாக இலக்கியக் கலையை
எவ்வாறு அறிந்து தௌியக்கூடிய நிலையில் கற்பது என்பதே பிரச்சினை."
இலக்கியக் கொள்கை என்ற நூலின் ஆசிரியர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை எம்மவரையும்
எதிர்நோக்குகிறது. மேற்கூறிய ஆசிரியர்கள் தாம் எழுதிய பிச்சினைக்கு இறுக்கும்
விடை திருப்திகரமானதல்ல. இலக்கியத்தின் உள்ளார்ந்த இயல்புகளை ஆராய்வதே தக்க
ஆய்வு முறையென்றும், ஒப்பியல் இலக்கிய ஆய்வு இலக்கியத்துக்குப் புறம்பான
செய்திகளையும் வகைகளையும் புகுத்துகிறது என்பதும் இவர்கள் கருத்தாகத்
தெரிகிறது. தெயின் போன்ற ஒப்பியல் இலக்கிய ஆய்வு முன்னோடிகளை
இக்கண்ணோட்டத்திலேயே இவர்கள் தள்ளி வைக்கின்றனர். ஆனால் அறிவாராய்ச்சியையும்
அழகியலையும் வேறுபடுத்தும் இரட்டை நிலை பேணப்படும் வரை இப்பிரச்சினை தீராது.
எனினும் தவிர்க்க முடியாதபடி இலக்கியங்களின் உலகப் பொதுமையை ஒப்பும்
ரெனிர்வல்லாக்கும் அவரது சகாவும் பின்வருமாறு கூறியுள்ளனர்:
"உலக
இலக்கியங்களின் வரலாறு பற்றிய கொள்கையில் சிக்கல்கள் பலவிருக்கலாம். ஆயினும்
இலக்கியத்தை முழுமையாகக் கருதுவதும் மொழி வேறுபாடுகளைக் கருதாது இலக்கியத்தின்
வளர்ச்சியைக் காண வேண்டியதும் மிக இன்றியமையாதவை. பொது இலக்கிய வரலாற்று
வல்லுநரது நோக்கங்களையும் ஆர்வங்களையும் நாம் முன்னரே பின்பற்றியிருக்க
வேண்டும். இப்போது காலம் கடந்து விட்டது. இலக்கிய வரலாற்றை ஒரு தொகுப்பு என்ற
நிலையிலும் தேச வரையறையைக் கடந்து அமைந்தது என்ற நிலையிலும் இனிமேல் தான் எழுத
வேண்டும். இப்பொருளில் நாம் ஒப்பு இலக்கியத்தை அமைப்பதனால் நமது அறிஞர்களது
மொழியியல் திறன் அதற்கு மிகத் தேவை. மேலும் நமது நோக்கை விரிவாக்க வேண்டும்.
நாட்டு உணர்வுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதை எளிதாகப் பெற இயலாது.
எனினும் கலையும் மக்களினமும் எவ்வாறு ஒன்றாக இணைந்துள்ளனவோ அது போன்று
இலக்கியமும் ஒன்றே. இக்கருத்தின் அடிப்படையிலே வரலாற்று இலக்கியத்தின்
அடிப்படைக் கருத்துக்கள், இலக்கிய உருவங்கள், இலக்கிய வகைகள் ஆகியவற்றின்
வரலாறு உலக இலக்கியங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒரு வரலாறு என்பது தௌிவு.
யாப்பமைப்பின் வரலாறு அந்தந்த மொழியின் அமைப்போடு நெருங்கிய தொடர்புடையது.
எனினும் அவையும் எல்லா மொழிகளுக்கும் பொதுவானவை...."
உன்னிடத்து உணர
வேண்டிய இக்கருத்துடன் இக்கட்டுரையை முடித்தல் விரும்பத்தக்கதாகும்.
2. தமிழில் ஒப்பியல் ஆய்வு
சமீப காலம் வரை தமிழறிஞாின் கவனம்
ஒப்பிலக்கியத்துறையிற் செல்லவில்லை. நூல்களின் காலவாராய்ச்சியிலேயே அவாின்
சிந்தனை சென்றது. சுந்தரம்பிள்ளை, சிவராசபிள்ளை, வையாபுாிப் பிள்ளை, இராகவ
ஐயங்கார், சேஷையர், கிருஷ்ணசாமி ஐயங்கார், இராசமாணிக்கனார் முதலிய தமிழிலக்கிய
ஆராய்ச்சியாளர், சான்றோர் செய்யுள்களின் கால வாராய்ச்சிலேயே தமது திறமைகளைச்
செலவிட்டனர். ஒரு வகையில் இப்போக்கு, தவிர்க்க முடியாததாய் அமைந்தது என்று
கூறலாம். சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பழந்தமிழ் நூல்கள் - அதாவது
சான்றோர் செய்யுள்கள் அச்சேறத் தொடங்கின. பெயரளவில் மட்டும் அறியப்பட்டிருந்த
பாட்டும் தொகையும் தமிழ்த் தாத்தா சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களின் அரும்
பெரும் முயற்சிகளால் உலகை எட்டிப்பார்க்கத் தொடங்கின. தாமோதரம் பிள்ளை காட்டிய
பாதையில் முன்னேறிச் சென்றார் உ.வே. சாமிநாதையர். சி.வை. தாவின் முதன் முயற்சி
1885இல் உருவம் பெற்றது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஐயர் தமது பதிப்பு
முயற்சியைத் தொடங்கினார். வௌிவந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டு பண்டைத் தமிழர்
வாழ்வியலை ஆராய்ந்தனர். வி.கனகசபைப் பிள்ளை, இவற்றிற்கு முதற்றேவையாகப்
பழந்தமிழில் நூல்களின் காலம் நிர்ணயிக்கப்பட வேண்டியதாயிற்று.
பதிப்பாசிாியருக்குப் பின்வந்தவர்கள் காலவாராய்ச்சியில் அமிழ்ந்து போயினர்.
இதன் காரணமாக இலக்கிய இரசனையும், திறனாய்வும், ஒப்பியல் நோக்கும் போதியளவு
முக்கியத்துவம் பெறவில்லை. எனினும், ஒப்பியல் இலக்கியத்தின் பண்பையும் பயனையும்
காலத்திற்குக் காலம் சிலர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இவருள் 'தமிழ் மாணவன்'
போப் பாதிாியார் தலையாயவர். 1885 இல் அதாவது சான்றோர் செய்யுள்கள் பல
அச்சுவாகனம் ஏறுமுன்னரே அவர் மேல்வருமாறு எழுதினார்:
"பழைய தமிழ்க்
காப்பியங்களைப் பார்க்கும் பொழுது, அவற்றுக்கும் அவற்றிற்குச் சமமான கிரேக்க
இலக்கியங்களுக்க முள்ள ஒற்றுமை புலனாகின்றது. உருவத்திலும், உள்ளடக்கத்திலும்,
சமுதாய நிலைமையிலும் பெரும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன."
பல
வருடங்களுக்குப் பின்னர் (1923) பேராசிாியர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார்
இதுபற்றிக் குறிப்பிடுகையில், எமது சான்றோர் செய்யுள்களில் ஒரு பகுதியான
புறப்பாடல்கள் ஹோமரது காவியத்திற்கு அடிநிலையான கதைப் பாடல்களை (Lays)
ஒத்துள்ளன என்றார். ஐயங்காரைவிட ஒரு படி மேலே சென்று ஒப்பியல் நோக்கிற்குக்
கால்கோள்விழா நடாத்தியவர் பேராசிாியர் என்.கே.சித்தாந்தா. 1927-ல் வௌி வந்த
தமது Heroic Age of India என்ற நூலிலே, புற நானூற்றுப் பாடல்கள் பிறமொழிகளிற்
காணப்படும் வீரப் பாக்களுடன் ஒப்பு நோக்கத்தக்கன என்றார். "பொருளமைதியிலும்
கவிதா நெறியிலும் தமிழிலக்கியமானது பிற மொழிகளிலுள்ள வீரயுகப் பாடல்களுடன்
ஒப்பு நோக்கி ஆராயப்பட வேண்டியது" என்றார் அவர். சித்தாந்தாவின் கூற்றைப்
பின்பற்றிப் பேராசிாியர் வையாபுாிப்பிள்ளை தமது காவிய காலம் (1952) என்ற
ஆராய்ச்சி நூலில், Heroic Age எனப்படும் வீரயுகத்தைச் சார்ந்தனவாக உள்ளன எமது
புறப்பாடல்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாது, அதே நூலில்
ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியின் இன்றியமையாமையையும் மனத்தில் பதியும் வகையில்
வற்புறுத்தியுள்ளார்.
"கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற மூன்று மொழிகளிலும் முறையே நல்ல
பயிற்சியுடைய கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும் வடமொழியிலக்கியம் பற்றிய
அளவில் தகுதியுள்ளவர்களாயிருப்பார்கள். ஆனால், தற்காலத்துள்ள தமிழறிஞர்களைக்
குறித்து இவ்வாறு சொல்ல முடியுமாதென்று அஞ்சுகிறேன். தமது தாய் மொழியைத் தவிர,
பிற திராவிட மொழிகள் பற்றிய அளவில், இந்த அறிஞர்களில் ஒவ்வொருவரும் அறியாமையாற்
பீடிக்கப் பெற்று, தம் நிலையுணராது இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வட மொழியோ இவர்களுக்கு வேம்பாக உள்ளது. வியாசர், வால்மீகி, காளிதாசன்
என்பவர்களைப் பற்றியும், வள்ளுவர், கம்பன் என்பவர்களைப் பற்றியும், திக்கண்ணா,
நன்னய்யா என்பவர்களைப் பற்றியும், பம்பா, ரன்னா, பொன்னா என்பவர்களைப்
பற்றியும், எழுத்தச்சனைப் பற்றியும், அறியாதவனைத் திராவிட மொழிகளிலொன்றிலேனும்
வல்லவனென்று எவ்வாறு கூற முடியும்? இந்த அறியாமை நமது நாட்டில்
நீடித்திருக்கும்படியாக விடக்கூடாது. திராவிட இலக்கியங்களையும் இந்திய
இலக்கியங்களையும் ஒப்புநோக்கிக் கற்றவனுடைய கல்வியறிவு மிகவும் பரந்துள்ளதாயும்
செழிப்புள்ளதாயும் இருத்தல் ஒருதலை. இந்த ஒப்புநோக்குக் கல்வி நமது அறிஞருடைய
குறுகிய மனப்பான்மை என்னும் திண்ணிய சுவரை இடித்துத் தகர்த்து விடும். அச்சுவரை
அரணாகக் கொண்டு நம் அறிஞர்கள் மறைந்து வாழ முடியாது. இவ்வகைக் கல்வியின் மேல்
எழுந்த ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பொருண்மையும் புதிய பெருமையும் ஏற்படும்.
நம்முள் ஒவ்வொரு மொழியாளரும் பிற திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலுமுள்ள சிறந்த
இலக்கியங்களையும் வட மொழி இலக்கியங்களையும் கற்று அனுபவித்துப் பரஸ்பரம்
நன்மதிப்பைத் தேடிக்கொள்ளுதல் வேண்டும்."
யாமறிந்த வரையில் வையாபுாிப்
பிள்ளை அவர்களைப் போல் சமயம் வாய்க்கும்போதெல்லாம் ஒப்பியலை வற்புறுத்திய
தமிழறிஞர் வேறு யாருமில்லை. வேறோர் இடத்தில் அவர் கூறுகிறார்:
'வடமொழி
நூல்களோடு மட்டும் இவ்வகை ஒப்பு நோக்கு அமைந்து விடக்கூடாது. ஆங்கிலம் முதலிய
முற்போக்கு மொழிகளிலும் 'காவியம்' என்ற கருத்தோடு ஒத்துள்ள இலக்கியங்கள் உள்ளன.
இவற்றின் தோற்றமும் வரலாறும் தமிழ்க் காவிய வரலாறு முதலியவற்றை உணர்தற்குப்
பயன்படுவனவாம். ஆகவே, ஒப்புநோக்கு முறை மிக விாிந்து செல்லுதல் வேண்டும்."
மேற்கூறிய பேராசிாியர் யாவரும் ஒப்பிலக்கியத்தின் சாத்தியக் கூற்றினைத்
தொட்டுக் காட்டினரேயன்றி, தாம் அப்பணியைச் செய்தனர் அல்லர். கடந்த பத்தாண்டுக்
காலத்துட் பல்கலைக் கழங்களில் நடந்தேறிய ஆராய்ச்சிகள் சில இத்துறையில்
வழிகாட்டியுள்ளன என்று கூறலாம். 'பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' என்ற ஆங்கில
நூலிலே (1953) வண. தனிநாயக அடிகள் கிரேக்க, இலத்தீன் கவிதைகளோடு தமிழியற்கைக்
கவிதைப் பகுதிகளை ஆங்காங்கு ஒப்புநோக்கிச் செல்கின்றனர். இலண்டன் பல்கலைக்
கழகத்திலே தமிழ் விாிவுரையாளரகவிருக்கும் கலாநிதி ஜே.ஆர்.மார், தமது எட்டுத்
தொகை நூல்கள் பற்றிய ஆராய்ச்சியுரையில், கிரேக்க வாய்மொழியிலக்கியத்திற்கும்
தமிழ்ப் பாடல்களுக்கமுள்ள ஒப்புமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்திய
சிந்தனையும் உராம ஸ்டோய்க்கு வாதமும் என்ற பேருரையில் (1962) வண. தனிநாயக
அடிகள், குறிப்பாகத் தமிழிலக்கியத்திலிருந்தே சான்றுகள் காட்டியுள்ளார். உரோமப்
பேரரசுக்கும் தமிழ் நாட்டிற்கும் நடந்த வாணிபத்தின் பின்னணியில் இரு
நாடுகளிலுந் தோன்றிய உயர் இலட்சியங்களின் ஒற்றுமை வேற்றுமைகளை
ஆராய்ந்திருக்கின்றார். சிஸரோ, குயின்றிலியன், செனெகா, கற்றலஸ் முதலிய உரோம
இலக்கிய கர்த்தாக்களுக்குச் சமமானவராகவும், சிற்சில பொருள்களைப் பற்றிய அளவில்
அவர்களை விஞ்சியவராகவும் தமிழ்க் கவிஞர் விளங்குகின்றனர் என்று வாதாடுகிறார்
அடிகளார். இயற்கையைப் பற்றிய நூலிற் காணப்படுவது போலவே இதிலும் விாிவாக ஆராயக்
கூடிய பகுதிகள் பல உள்ளன. 1962 - இல் டாக்டர் சுப மாணிக்கம் வௌியிட்ட தமிழ்க்
காதல் பற்றிய ஆராய்ச்சியுரையிலும், கிரேக்க இலக்கியங்கள் காட்டும் பெண்மையைத்
தமிழ்ச் சான்றுகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். இவை யாவற்றையும் விடக்கூடிய
அளவில் கிரேக்க காவியங்களையும், தமிழ்ப் புறப்பாடல்களையும், ஒப்பிட்டு
இக்கட்டுரை ஆசிாியர் எழுதிய ஆராய்ச்சியுரை 1966-இல் பர்மிங்ஹம்
பல்கலைக்கழகத்திற் கலாநிதிப் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. Tamil
Heroic Poetry என்னும் பெயாில் அது வௌிவந்துள்ளது.
இவ்விடத்திலே வேறு
சில முயற்சிகளையும் குறிப்பிடுதல் பொருத்தமாயிருக்கும். தமிழில் விமர்சனக்
கலையைத் தன்னுணர்வோடு முதன் முதலிற் கையாண்ட வ.வே.சு.ஐயர் தமது கம்பராமாயண
ஆய்வு நூலில், கம்பனையும் பிற காவிய கர்த்தாக்கள் சிலரையும் ஒப்பிட்டுள்ளார்.
ஹோமர், வெர்ஜில், மில்டன் ஆகியோர் ஐயரது கவனத்திற்குள் அகப்பட்டவர்கள்.
ஐயாின் முயற்சி பல நோக்குடையதாக விருந்தது. ஒப்பியலின் அடிப்படையில் கம்பனைத்
தூக்கி நிறுத்துவது மாத்திரமன்றி, 'காவிய சமத்காரத்தைப் பற்றி விஸ்தாரமாக
விவாித்துள்ள' மேனாட்டுத் திறனாய்வாளரைத் தமிழ் நாட்டு வாசகருக்கு
அறிமுகப்படுத்துவதும். அவரது நோக்கமாகத் தொிகிறது. இன்று பின்னோக்கிப்
பார்க்கும் போது, ஐயரது பெருமுயற்சியின் நிறைகுறைகளைப் புற நிலையில் வைத்து
ஆராய வாய்ப்பிருக்கிறது. விடுதலைக்கு வீரத்துடன் உழைத்த தீவிரவாதியான ஐயர்
விமர்சனத்திலும் தீவிரவாதியாகத் தான் இருந்தார். இராமாயணத்தை,
"கம்பநாட்டாழ்வார் எழுதிய திவ்ய கிரந்தம்" என வருணிக்கும் ஐயர், கம்பனைப்
புகழும் போது அவனை உலகின் தலையாய காவியகர்த்தா என்றே கூறுகிறார்.
"கம்பனுடைய ராமாயணமானது மற்ற கவிகள் எழுதிய ராம சாிதைகளையும் தமிழில்
எழுதப்பட்ட இதர காவியங்களிற் பெரும்பாலான வற்றையும் கூட 'வெயிலிடைத் தந்த
விளக்கொளிபோல் ஆக்கிவிட்டது. இது மாத்திரமல்ல. கம்ப ராமாயணமானது ஹோமர் எழுதிய
இலியாதையும், விர்க்கிலியன் எழுதிய ஏனயிதையும், மில்டனுடைய சுவர்க்க நஷ்டம்
என்ற காவியத்தையும், வியாஸ பாரதத்தையும் தனக்கே முதனூலாக இருந்த வால்மீகி
ராமாயணத்தையும் கூட, பெருங்காப்பிய லட்சணத்தின் அம்சங்களுள் அனேகமாய்
எல்லாவற்றிலும் வென்றுவிட்டது என்று சொல்லுவோம்."
இக்கூற்று அழுத்தந் திருத்தமாகக் கம்பனை அாியாசனத்தில் ஏற்றுந் தகைமையது
என்பதில் ஐயமில்லை. எந்தவிதமான தயக்கமுமின்றித் தமது முடிவைக் கூறி
விடுகின்றார் ஐயர். எமக்கு மகிழ்ச்சிதரும் முடிபாக இருப்பினும், ஐயரது சுதேச
பக்தி வரம்பு கடந்திருக்குமோ என்ற எண்ணம் இக்கூற்றைப் படிக்கும்பொழுது எனக்கு
ஏற்படுவதுண்டு. ஆனால், ஐயர் எடுத்துக்காட்டும் சான்றுகள் அவ்வையத்தைப்
போக்கவல்லன. எனினும், இவ்விடத்தில் ஒரு விஷயத்தைக் கூறலாம். ஐயர் இவ்வாறு
எழுதியது போலவே அவரது உற்ற நண்பனான பாரதியும்,
"யாமறிந்த புலவாிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை"
என்று உரத்துப் பாடினான். இதனைப் பார்க்குமிடத்து
மொழிப் பற்றும் தேசப்பற்றும் ஓரளவுக்கு இவர்களை உயர்வு நவிற்சியில்
ஊக்குவித்துள்ளன எனக் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் ஐயர் நுண்ணுணர்வும்
நூலறிவும் சாலப் பெற்ற விமர்சகர்; அவ்வறிவுப் பயிற்சி காரணமாக ஒருபாற் கோடாத
சமநோக்குக் கைவரப் பெற்றவர். ஆயினும் அந்நியராட்சியை எதிர்த்து நின்ற அறிஞர்
பலரைப் போல இந்தியப் பாரம்பாியத்தின் பெருமையை உலகறியச் செய்தல் வேண்டுமென்ற
அவா அவருக்குமிருந்தது. தம்மை ஆண்ட ஆங்கிலேயரையும் அவர் போன்ற பிற
ஐரோப்பியரையும் விட, தாம் பெருமை மிக்க கலை, இலக்கிய, தத்துவ பாரம்பாியத்துக்கு
வாாிசுகள் என்று காட்டுவதில் ஏறத்தாழ எல்லா இந்திய அறிஞரும் ஈடுபட்டிருந்தனர்.
திலகர், ராஜ்வாடே, ரானடே, ஐயஸ்வால், பண்டர்கார், பாஓகி, கேட்கர், கோஷால்,
மஜூம்தார் முதலிய வரலாற்றாசிாியரைக் கவனித்தால் இவ்வுண்மை தெற்றெனப் புலனாகும்.
மேனாட்டார் மிகவும் சிலாகித்துப் பேசிய குடியரசு முறை பண்டைக்கால இந்தியாவில்-
புத்தர் பிறந்த காலத்திற்கு முன்னதாக, சிறப்புற்று விளங்கியது என்று வாதிட்டார்
கே.பி. ஐயஸ்வால். அவரைப் போலவே பிறரும் வெவ்வேறு துறைகளில் புராதன இந்தியாின்
பெருமை பேசினர். மேனாட்டார் கான்ற் என்பவரைச் சிறந்த தத்துவ வாதியாகக்
கொண்டாடினால், அவாினும் சங்கரர் சிறப்பு மிக்கவர் எனவும், அதுபோலவே
ஷேக்ஸ்பியாினும் காளிதாசனும் கம்பனும் மேம்பட்டவர்கள் எனவும் இப்பேரறிஞர்கள்
வாதம் புாிந்தனர்.
"கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதைபு னைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்தோர் பாஸ்கரன் மாட்சியும்
நம்ப ருத்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்"
என்ற சுயசாிதையில் பாரதி பாடும்போது, இவர்களின்
குரலையே கேட்கிறோம். கம்பனை உலக மகாகவி என ஐயர் கூறியதைப் பின்பற்றி வேறு
சிலரும் அவ்வாறு கூறி வந்துள்ளனர். ஆனால் ஒப்பியலின் பண்பும் பயனும் எது
சிறந்தது எனத் தீர்ப்பளிப்பது மட்டும் அல்ல. ஒப்புமைககான காரணிகளைக்
கண்டறிவதும், ஒப்புமைகள் தோன்றக் காரணமாயிருந்த பகைப்புலத்தை
விளங்கிக்கொள்வதும், இலக்கியங்களைப் படைக்கும் கர்த்தர்களுக்கும்
சூழலுக்குமுள்ள பரஸ்பரத் தொடர்பினை அறிந்து கொள்வதும் ஒப்பியலின் பண்புகளாம்.
ஐயர் அவற்றை அதிகம் கவனித்ததாகத் தொியவில்லை. அந்தளவுக்கு அவரது ஒப்புநோக்குக்
குறைபாடுடையதே.
மேனாட்டு இலக்கியங்களிலுஞ் சிறந்தவை இந்திய
இலக்கியங்கள் என்று பலர் காட்ட முயன்றதைப் போலவே வட மொழிலக்கியங்களிலுஞ்
சிறந்தன தமிழிலக்கியங்கள் என்று நிறுவப் பலர் முயன்று வந்துள்ளனர்.
ஆாியர்-திராவிடர் பிரச்சினையின் வௌிப்பாடாகத் தோன்றும் இப்போதைக்கு இரு
சாராரையும் பாதித்துப் போதித்துள்ளது. சாதியினடிப்படையிலும் சமயப்
பிாிவினடிப்படையிலும் மொழியடிப்படையிலும் பெருமை பேசும் இப்போக்கு, இலக்கிய
மதிப்பீட்டைப் பெருமளவு மலினப்படுத்தியுள்ளது. கம்பராமாயணத்தையும் பொறுத்தளவில்
ஆாியர்-திராவிடர் பூசலானது. வான்மீகி-கம்பன் போட்டியாக உருவெடுத்துள்ளது.
இதனால் இன்றுவரை நிதானமான ஒப்பியல் ஆய்வு நடப்பதற்குத் தடைகள் இருந்து
வருகின்றன. பா.வே. மாணிக்கநாயக்கர் எழுதிய "கம்பன் புளுகும் வான்மீகி
வாய்மையும்", வெ.ப. சுப்பிரமணிய முதலியார் எழுதிய 'இராமாயண உள்ளுரைப் பொருளும்
தென்னிந்திய சாதி வரலாறும்' என்பன போன்ற நூல்கள் இராமாயண ஆய்வு திசை தவறிய
தன்மையைக் காட்டுகின்றன. இந்நோக்க நிலையினடிப்படையிலேயே "திராவிடனான இராவணனது"
பெருமையை உணர்த்தும் 'இராவண காவியம்' எழுந்தது. இதனாசிாியர் புலவர் குழந்தை.
இத்தகைய விபாீதப் போக்குகளையெல்லாம் பார்க்கும்போது, வ.வே.சு.ஐயர் முதற்றர
விமர்சகராக மாத்திரமின்றி, ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடியாகவும் திகழ்வதன்
காரணத்தை உணரலாம். இராமாயணத்தை மட்டுமல்லாது பிற இலக்கியங்களைச் சுவைத்தபோதும்,
ஐயரவர்கள் தமது ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி காரணமாக ஒப்புநோக்கில் ஈடுபட்டார்.
தமிழிலே ஏதேனுமொன்றைப் படிக்கும்பொழுது, அதற்கு நிகரான பிறமொழிச் செல்வங்கள்
அவருக்கு நினைவிலே தோன்றின. நாம் மேலே கூறியவாறு விவரமாக அவற்றை அவர் ஒப்பு
நோக்கினாரல்லர். ஆயினும் ஒப்புநோக்க முனைந்தமையொன்றே அவரது பரந்து விாிந்த
பார்வையைக் காட்டுவதாயுள்ளது. பூர்வ வரலாற்று முறை, சாதிச் சூழ்ச்சி முறை என்ற
நோக்கங்களுடன் இராமாயணத்தைக் கற்பவர் மலிந்த சூழலிலே, உளநூல் முறையையும் சிற்ப
முறையையும் துணைக் கொண்டு அக்காப்பியத்தை ஆய்ந்து சுவைத்த ஐயர்
தனிச்சிறப்புடையவரே. கம்பனைத் தவிர, பிற தமிழ்க் கவிஞரை ஒப்பியலின்
அடிப்படையில் ஐயர் நோக்கிய விதத்திற்கு எடுத்துக்காட்டாக நவீன மகாகவி பாரதியின்
கண்ணன் பாட்டு இரண்டாம் பதிப்பிற்கு (1920) அவர் எழுதிய முன்னுரையிற் சில
பகுதிகளைக் குறிப்பிடலாம்:
"நாயக நாயகி பாவத்தைப் பற்றி இங்குச் சில
மொழிகள் கூறாது விட முடியவில்லை. இப்பாவத்தால் பகவானை வழிபடும் முறை
தொன்றுதொட்ுப் பக்தர்களாலும் கவிகளாலும் அனுசாிக்கப்பட்டு வருகிறது. ரோமன்
கத்தோலிக்க மதத்திலே கூட அடியார் வர்க்கத்தை நாயகியாகவும் கிறிஸ்துவை
நாயகனாகவும் பாவித்து எழுதிய ஸ்தோத்திரங்கள் பல உள. நமது பாகவதத்தில்
கோபிகைகளின் உபாக்கியானங்களெல்லாம் இப்பாவத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளனவே....
ஆனால் இந்த பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப்பாகத்தின் மீது நடப்பதைப் போன்ற
கஷ்டமான காாியம். ஒரு வரம்பு இருக்கிறது: அதற்கு அப்புறம் இப்புறம்
போய்விட்டால் அசந்தர்ப்பமாகி விடும். ஸரீ பாவகதத்திலுங் கூட கோபிகா உபாக்கி
யாணங்களில் சுகபகவான் இவ்வரம்பை அங்கங்கே கடந்து விட்டிருக்கிறார் என்பது எனது
தாழ்ந்த அபிப்பிராயம்.... செயிாின்றி இப்பாவத்தைப் பாடுவது அநேகமாய்
அசாத்தியம்... நமது கவியும் சாாீரமான காதலையே அதிகமாக வர்ணிக்கிறார்... ஆனால்,
சுகப் பிரம்மமே நிறுத்த முடியாததான தராசு முனையை நம் ஆசிாியர் நிறுத்தவில்லை
என்று நாம் குறை கூறலாமா?
மேனாட்டிலக்கியங்களை மட்டுமன்றி, இந்திய
மொழிகள் பிறவற்றிலுள்ள இலக்கியங்களையும் பொருத்தமான சந்தர்ப்பத்தில்
ஒப்புநோக்கித் தாம் ஆராயும் நூலுக்கு விளக்கம் கூறினார் ஐயர் என்பதற்கு
மேற்கூறிய பகுதி தக்கவொரு திருஷ்டாந்தமாகும். ஆயினும் ஐயர் எழுதிய சிறுகதைகளை
நோக்கும் போதும், திறனாய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் நோக்கும்போதும்
படிப்போர் மனத்தைக் கவர்வது அவரது நிலையான மேனாட்டிலக்கியப் பயிற்சியாகும்.
தென்றலோடு மேல்காற்றையும் அற்புதமாகக் கலந்தூட்டியவர் ஐயர். அந்த வகையில்,
அப்பணியை வெவ்வேறு அளவிலே தொடர்ந்து செய்து வருபவரான அ.சீனிவாசராகவன்,
ரா.ஸரீ.தேசிகன், பி.ஸரீ., டி.கே.சி. க.நா.சுப்ரமண்யன், புரசு பாலகிருஷ்ணன்,
ரகுநாதன், எஸ்.இராமகிருஷ்ணன், சி.சு. செல்லப்பா, முதலியோரெல்லாம் ஐயர் மரபிலே
வந்தவர்களே. சுருங்கக்கூறின் நவீன ஆங்கில விமர்சன முறையும் உத்திகளும் ஐயர்
தமிழுக்கு அளித்த அருங்கொடைகள் என்பதில் எந்தவித ஐயப்பாடுமில்லை. ஐயரது
காலத்திற்குப் பின் மேனாட்டுக் காவியங்களைப் பற்றிய ஆய்வு பல புதிய நெறிகளிற்
சென்றுள்ளது. எனினும் அவாின் KAMBARAMAYANA - A STUDY என்ற நூல் இன்னும்
சிறப்புடன் விளங்குகின்றது.
ஐயர் இவ்வாங்கில நூலை ஏறத்தாழ நாற்பத்தேழு
ஆண்டுகளுக்கு முன்னர் (1921-22) பெலாாி சிறைக் கைதியாக இருந்த காலத்தில்
எழுதினார். என்றோ வௌி வந்திருக்க வேண்டிய இவ்வாிய ஆராய்ச்சி நூல் சுமார் மூன்று
தசாப்தங்களுக்குப் பின்னரே (1950) அச்சுவாகனமேறி வௌியுலகை எட்டிப் பார்த்தது.
ஐயர் நூலை எழுதியதற்கும் குறிப்பிடும் மேனாட்டுக் காவியங்கள் பற்றிய ஆய்வுகள்
பல்கிப் பெருகி வந்துள்ளன. சிறப்பாக கிரேக்க ஆதி கவியாம் ஹோமர் பற்றி விமர்சனம்
முற்றிலும் புதிய போக்கில் விாிந்துள்ளது. இலியாது, ஈனியித், சுவர்க்க நீக்கம்,
வால்மீகி இராமாயணம் என்பனவற்றையெல்லாம் ஒரே தன்மையனவாகக் கொண்டு ஒப்புநோக்கி
விமர்சனஞ் செய்தார் ஐயர். பெலாாி சிறையில் போதிய நூல்கள் கிடைக்காத இடர்மிகுந்த
சூழ்நிலையில் எழுதிக் கொண்டிருந்த வேளை, பிரெஞ்சு நாட்டுச் சொர்பொன் பல்கலைக்
கழகத்திலே ஆராய்ச்சி மாணவனாக இருந்த மில்மன் பாி என்ற அமொிக்கர் ஹோமர் பற்றிய
ஆராய்ச்சியைப் புரட்சிகரமான பாதையில் செலுத்திய ஆய்வுக் கட்டுரையை உருவாக்கிக்
கொண்டிருந்தார். அது காலவரை உலகெங்கிலுமுள்ள கிரேக்க இலக்கிய அறிஞர்கள் ஹோமர்
தமது காவியங்களை எழுதினார் என்று திடமாக நம்பி வந்தனர். மதக் கோட்பாடு போல
நம்பிக்கையடிப் படையில் நிலவி வந்த கருத்தை வேரோடு சாய்த்தார் பாி. செர்போ
குறோஷியன்-தென்சிலாவிக்-வாய்மொழியிலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்ந்த பாி,
அவற்றிற்கும் ஹோமரது பெயரால் வழங்கும் கிரேக்க ஆதிகாவியங்களுக்குமுள்ள
அத்தியந்த ஒற்றுமைகளைக் கண்டார். காணவும் ஹோமரைப் பற்றிய புதிய விளக்கம்
பிறந்தது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் (முப்பதுகளில்) தமது முடிபைக் கூறினார்.
கிரேக்க இலக்கிய ஆராய்ச்சியாளரும் பெரும் பேராசிாியரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் ஹோமரது படைப்பு ஏட்டிலெழுதா வாய்மொழிக் காப்பியம் என்னுமுண்மை
உணரப்படலாயிற்று. வெர்ஜிலின் ஈனியித், மில்டனது சுவர்க்க நீக்கம் முதலியன
செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட இலக்கியக் காப்பியங்கள் வியாசரது மகாபாரதத்தைப்
போல, ஹோமரது இலியாது முன்முறை இதிகாசம் அல்லது இயற்கை இதிகாசம் எனப்படும். ஒரு
கவிஞனால் ஒருமுறையில் பாடப்படாது, பலகாலமாகப் பல பிரதேசங்களில் ஆங்காங்கே
வழங்கி வந்த கவிதைப் பகுதிகள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் திரண்டு வடிவம்
பெறுவதே வளர்ச்சி இதிகாசம் எனப்படும்.
ஈனியித், சுவர்க்க நீக்கம், கம்பராமாயணம் முதலியன "கலைபற்றிய நியமங்களும்,
பாட்டியல் மரபுகளும் வரையறைப்பட்ட காலத்தில்" பிறந்தவை. தனியொரு பெருங்கவிஞனது
மேதாவிலாசத்திற்கும் கலையுணர்ச்சிக்கும் களஞ்சியமாக விளங்குவன.
இயற்கை
இதிகாசங்களும் இலக்கியக் காப்பியங்களும் பிறப்பினால் வேறானவையாதலால் அவைபற்றிய
விமர்சனங்களும் வேறானவையாயிருத்தல் வேண்டியது இயல்பே. இதனை வற்புறுத்தினார்
மில்மன் பாி. பாிக்குப் பின் வந்த பௌரா, தொம்ஸன், நெடோபோலொஸ், லோட், கேர்க்
முதலிய ஆராய்ச்சியாளர் ஹோமரது காவியங்களை வாய்மொழிப் பாடல்களாகவே கொண்டு தமது
நூதன ஆய்வுகளை நடத்தியுள்ளனர். உலக முழுவதும் பூர்வீக இலக்கியங்களைப் புதிய
நோக்கில் ஆராயவும், ஒப்பு நோக்கவும் இவர்கள் முனைந்துள்ளனர். இவற்றின் பயனாக
வாய் மொழிப் பாட்டியல் (Oral Poetics) ஆழமும் அகலமும் அடைந்து வருகிறது.
உண்மையில் ஹோமரது கவிப்பண்பு கம்பனிலன்றி, முற்காலச் சான்றோாிடத்திலேயே
காணப்படுகிறது. கம்பனை வெர்ஜிலுடனும், மில்டனுடனும், தாந்தோயுடனும் ஒப்பிடலாம்.
ஹோமருடன் ஒரே வழி ஒப்பிடலாமாயினும், அதனாற் பெறும் பயன் குறைவே.
ஐயர்
முற்குறிய பாகுபாட்டை அறியாதவராதலின், காப்பியங்கள் யாவற்றையும் ஒருசேர வைத்து
ஒப்பு நோக்கியுள்ளார். அது அவாின் குற்றமோ குறைபாடோ அல்ல. ஏனெனில் பாியின்
ஆய்வுகள் பிரசித்தமாகு முன்னதாகவே (3.6.1925) அவர் அகால மரணமடைந்தார். அவர்
செய்யத் தவறியதை அவருக்குப் பின்வந்தோர் சிலர் ஒரளவு நிவிர்த்தி செய்துள்ளனர்
எனலாம். ஆயினும் ஐயர் காட்டிய வழியில் வரும் தமிழறிஞர் பலர், இயற்கை
இதிகாசத்துக்கும், இலக்கியக் காப்பியத்துக்கும், உள்ள அடிப்படை வித்தியாசத்தைச்
செவ்வனே உணர்ந்துள்ளனர் எனக் கூறுவதற்கில்லை. ஐயருக்குப் பின்வந்தவர்கள்
எழுதியுள்ள நூல்களில் எஸ்.இராமகிருஷ்ணனின் கம்பனும் மில்டனும், சிதம்பர
ரகுநாதனின் பாரதியும் ஷெல்லியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
வி.சச்சிதானந்தன் என்பார் ஆங்கிலத்தில் பாரதியையும், விட்மன், ஷெல்லி, கீட்ஸ்
முதலியோரையும் ஒப்பிட்டு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும், இக்கட்டுரையாசிாியர்
பாரதியையும் தாகூரையும் ஒப்புநோக்கி எழுதிய இரு மகாகவிகள் என்ற நூலும்,
ஜி.வான்மீகநாதன் என்பார் மணிவாசகரையும் ரூமி என்ற பாரசீக மறைஞானக் கவிஞரையும்
ஒப்பிட்டு ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கன. இவற்றைவிட
இன்னும் என் கண்ணிற் படாதனவும் இருத்தல்கூடும்.
சிதம்பர ரகுநாதன்
எழுதியுள்ள கங்கையும் காவிாியும் குறிப்பிடத்தக்க ஒப்பியல் இலக்கிய நூலே.
தாகூரையும் பாரதியையும் ஒப்பு நோக்கி எடைபோடுகிறது இந்நூல். இவற்றைவிட,
பேராசிாியர் அ.சீனிவாசராகவன், திரு.கி.சந்திரசேகரன் ஆகியோர் அவ்வப்போது எழுதிய
சில கட்டுரைகளும் இத்துறையிலடங்குவன. ஆயினும் இவை சிறு துளிகளே.
இவ்விடத்திலே ஒப்புநோக்கு மனோபாவம் பற்றி ஓர் எச்சாிக்கை செய்யத் தோன்றுகிறது.
பழைய இலக்கியங்களை ஒப்புநோக்கி ஆய்வோர் சிலரே. ஆனால் தற்கால இலக்கியங்களைத்
திறனாய்வோர் பலர். தற்கால இலக்கிய வடிவங்களுள்ளும் புனைகதை, நாடகம்
என்பனவற்றைப் படித்து அபிப்பிராயங் கூறுவோர் இன்னும் பலர். இந்நிலையில் தமிழ்
எழுத்தாளரை மேனாட்டு எழுத்தாளருடன் தொடர்பு படுத்தியும் ஒப்பிட்டும்
மட்டுமதிப்பின்றிப் போகும் போக்கிலே பேசுவோர் பலாிருக்கின்றனர். எம்மவர்க்கு
ஆங்கிலப் பயிற்சியும் கேள்வியுமே அதிகமாதலால், ஐரோப்பிய இலக்கிய கர்தாக்களுள்
ஆங்கிலேயரே முன்மாதிாிகளாய்க் கொள்ளப்படுகின்றனர். எனினும், இடையிடையே பிற
ஐரோப்பியர் சிலரும் எடுத்தாளப்படுவதுண்டு. பழைய நாவலாசிாியர் ஸ்கொற்,
நாடகாசிாியர் பெர்னாட்ஷா, புதுமை எழுத்தாளர்கள் லோரன்ஸ், ஜோய்ஸ், காதாின்மான்ஸ்
ஃபீல்ட், ஜெர்மானிய எழுத்தாளர் காப்கா, முதலியோர் அடிக்கடி
குறிப்பிடப்படுபவர்கள். உதாரணமாக, கல்கியை வால்டர் ஸ்கொற்றுடன்
ஒப்பிட்டுள்ளனர்; ஜெயகாந்தனை டி.எச். லோரன்சுடன் ஒப்பிட்டுளளனர். ஓரளவேனும்
திட்டமான ஒப்பாய்வின் பயனாகவன்றி மேலெழுந்த வாாியான மனப்பதிவுகளாகவே இத்தகைய
ஒப்பீடுகள் அமைந்துவிடுகின்றன. போலியான இவ்வொப்பீடுகள் குறித்துப்
புதுமைப்பித்தன் ஒரு கட்டுரையிற் பின்வருமாறு நையாண்டியாக எழுதியுள்ளார்:
"ஏன் அது மேல் நாட்டுடன் ஒப்பிட வேண்டிய காாியமோ தொியவில்லை. நம்மூர் நாயர்
ஓட்டல் இட்லியையும், பரமசிவம் பிள்ளை ஓட்டல் தோசையையும் ஹட்லின் பாமர்ஸ்
பிஸ்கோத்துடன் வெற்றிகரமாக ஒப்பிட்டு வௌிவரும் கருத்துக்களைக் காணப்பெறும்
பாக்கியம் எனக்கு இதுவரை சித்திக்கவில்லை."
புதுமைப்பித்தனது
வயிற்றொிச்சல் வௌிப்படை. இவ்வாறு எழுதும் "ஆசிாியர்களைத் தமிழ்நாட்டு
பெர்னாட்ஷா, தமிழ்நாட்டு மாப்பஸான்" என்று வழங்குபவர்கள் உண்மையில் பிறநாட்டு
இலக்கிய கர்த்தாக்களோடு ஒப்பு நோக்குகிறார்கள் அல்லர்; மறைமுகமாகத் தமது
தாழ்மையுணர்ச்சியைக் காட்டிக் கொள்கின்றனர். இவர்களிற் பெரும்பாலானோர்,
இலக்கியத்தைப் பொழுதுபோக்காகக் கொள்பவர்கள். எனவே சுயதிருப்திக்காகவும்
வௌிப்பகட்டிற்காகவும் இவ்வாறு ஒப்பிட்டுரைக்கின்றனர். அது இலக்கிய
ஒட்டுக்காய்ச்சலாக எமது வாசகரைப் பீடித்து விடுகிறது.
ஒப்பியல்
ஆய்வென்பது கேவலம் பொழுதுபோக்கான ஆய்வு முறையன்று; ஒப்பியல் ஆய்வின் மூலமாகவே
ஒரு பொருளின் தனிப்பண்புகளைத் திடமாகக் கூறலாம். ஒற்றுமைக்கு மத்தியிலும்
நுண்ணிய வேறுபாடுகள் காணப்படும். அவற்றினை ஆதாரமாகக் கொண்டே ஒரு பொருளின் தனிச்
சிறப்புக்களை அறிதல் கூடும். அதாவது இரு இலக்கியங்களை ஒப்பிடும்பொழுது அவற்றின்
பொதுப்பண்புகள் யாவை, சிறப்புப் பண்புகள் யாவை என்பது தௌிவாகிறது. இத்தௌிவு,
வரலாற்றடிப்படையிலான இலக்கிய ஆராய்ச்சிக்கு ஏதுவாக அமைகின்றது. இன்று
தமிழிலக்கிய ஆராய்ச்சியானது பெருமளவிற்குக் கூறியது கூறலாகவே அமைந்து
காணப்படுவதற்கும், பழம் பெருமைச் சிறைக்குள் அடைபட்டுக் கிடப்பதற்கும் ஒப்பியல்
மனோபாவம் தக்கமுறையில் வளராமையே காரணம் என்று துணிந்து கூறலாம். ஏறத்தாழ ஒரு
நூற்றாண்டிற்கு முன்னதாக இக்குறைபாட்டை மேனாட்டுத் தமிழறிஞர் ஒருவர்
கண்டுகொண்டார்:
"ஒப்பியற் கல்வி ஒவ்வோர் அறிவியற்றுறையிலும்
ஐரோப்பாவில் பெருநலம் பயந்துள்ளது. திராவிடர்கள் (தமிழர்கள்) தங்கள் மொழிகளைப்
பிறவற்றுடன் ஒப்புநோக்க ஒருபோதும் முயன்றதில்லை. இதனால், அவர்கள் தங்கள்
மொழியைப் படிப்பதிலே கடைப்பிடித்த அக்கறையானது, மதி நுட்பத்தோடு
பகுத்துணர்வோடும் கூடிறயதாயிராமல்; நேர்மையாக எதிர்பார்த்த அளவிற்கு மிகக்
குறைந்த பயனை அளித்துள்ளது.
அத்தியட்சர் கால்டுவெல் அன்று குறிப்பாக
மொழியியல் பற்றிக் கூறியது இன்று இலக்கிய ஆராய்ச்சிக்கும் பொருந்தும். இதனை ஓர்
உதாரணத்தின் மூலம் விளக்கலாம். பண்டைக்கால மனித வரலாற்றை ஆராய்ந்தவர்கள்,
வீரயுகம், Heroic Age என்ற காலப் பிரிவைக் குறிப்பிட்டுள்ளனர். அநாகரிக
நிலையிலிருந்து நாகரிக நிலைக்குச் சமூகம் மாறும் ஒரு குறிப்பிட்டகால
கட்டத்தில், குழுக்களாகவும் குலங்களாகவும் இருந்த வாழ்க்கை அமைப்பைத் தனிமனிதக்
கொள்கை உடைத்தெறிந்து, வலுக்கொள்கையினடிப்படையில் அரசுகளை நிறுவும் சண்டைகள்
நிறைந்த வரலாற்று நிலையை வீரயுகம் என்றழைப்பர். மேற்கூறிய பண்புகள்
பிரதிபலிக்கும் பாக்களை வீரயுகப் பாக்கள் என்றுங்கூறுவர். இப்பாக்கள்
ஏட்டிலெழுதா வாய்மொழிப் பாக்களாகவே தோன்றி நிலவுவன. கிரேக்க, கெல்திய,
ஜெர்மானிய ஆதிகவிகளை ஆராய்ந்தவர்கள் கண்டறிந்த தரவுகளினின்றும் கணிக்கப்பட்ட
இலக்கியக் கொள்கை இது. இக்கொள்கையை ஒரு கருதுகோளாகக் கொண்டே, சித்தாந்தா,
வையாபுரிப்பிள்ளை முதலியோர் பழந்தமிழ்ப் பாடல்களும் வீரயுகத்தைச் சேர்ந்தனவாக
இருக்கலாம் என ஊகித்தனர். ஆராய்ச்சியின் பயனாகச் சேர்ந்தனவாக இருக்கலாம் என
ஊகித்தனர். ஆராய்ச்சியின் பயனாகக் கருதுகோள் சரியெனக் காணப்பட்டுள்ளது. இதுவே
ஒப்பியல் நோக்கின் பண்பும் பயனுமாகும். ஒப்புநோக்கிக் கற்காததன் காரணமாக,
புறநானூறு, பதிற்றுப் பத்து, புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூற்பாடல்கள்,
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்தகுடி" யாம் தமிழ்
மக்களின் தனிப் பெரும் வீரப்பண்பைக் காட்டுகின்றன என்று, போலிச் சிறப்புப் பேசி
திரிகின்றனர் பலர். ஒப்புநோக்கி இலக்கியத்தைப் படிக்கும் போது, "திருந்தாத"
மக்களாகக் கருதப்படும் இருண்டகண்டத்து, ஆப்பிரிக்க மக்கள் கூட வீரயுகப் பாக்களை
உடையவராயிருப்பது இலக்குவிற் புலனாகும். ஆகவே, "மதி நுட்பமும் பகுத்துணர்வும்
ஆராய்ச்சியில் இடம் பெறத் தலைப்படும் எமது அறியாமை காரணமாக, எமக்கே
(தமிழருக்கே) உரித்தானவை என்று எண்ணிக் சுயநிறை உணர்வுடன் கருதிக்கொள்ளும் பல
விஷயங்கள் பிற சமூக மக்களிடத்தும் காணப்படுகின்றன என்பதை நாம் என்று
அறிகின்றோமோ அன்றே உண்மையான அறிவு வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும் ஏற்படும்.
யுகக் கவிஞன் பாரதி இதைக் கண்டுகொண்டான்:
"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வௌிநாட்டார்
அதை
வணக்கஞ் செய்தல் வேண்டும்.
நாம் "வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" என்று
எவ்வளவுதான் உரக்கக் கூவினாலும், வௌிநாட்டார் அதற்குச் செவிசாய்க்கப்
போவதில்லை. கலை இலக்கியத்துறையைப் பொறுத்த அளவில், மேற்கூறிய ஒப்பியல் இலக்கிய
ஆய்வுகள் எமது இலக்கியச் செல்வங்களை உலகறியச் செய்வதுடன், எமது இலக்கியங்களின்
சிறப்புப் பண்புகள் யாவை, பொதுப் பண்புகள் யாவை என்பனவற்றை உணர
வழிகாட்டுவதுடன், வரலாற்றடிப்படையிலான இலக்கிய ஆராய்ச்சிக்கும் ஏதுவாக அமையும்.
கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக இயங்கிவரும் உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் ஆதரவில்
இரு கருத்தரங்குகள் நிகழ்ந்துள்ளன. முதலாவது கருத்தரங்கு குவாலாலம்பூரிலும்
(ஏப்ரல் 1966) இரண்டாவது கருத்தரங்கு சென்னையிலும் (ஜனவரி 1968) நடைபெற்றன.
வளர்ந்து வரும் தமிழியல் (Tamilology) ஆராய்ச்சிக்குத் தலையாய எடுத்துக்காட்டாக
இக் கருத்தரங்கு திகழ்கிறது எனக் கொண்டால், இன்றைய தமிழியல் ஆய்வின் முக்கிய
துறையாக ஒப்பியல் ஆய்வு விளங்குகிது எனக் கொள்ளலாம். பொதுவாகத் தமிழ்நாட்டில்
ஒப்பியல் நோக்கும், ஆய்வும் வளர்ச்சி குன்றியே காணப்படுவது பலராலும் ஒப்ப
முடிந்த செய்தியே. ஆயினும் கருத்தரங்கில் வௌிநாட்டாராய்ச்சியாளரும்
பங்குபற்றுவதனால் இத்துறைக்குப் பெருந்தூண்டுதல் கிடைத்துள்ளது. இக்
கருத்தரங்குகளிலும், ஒப்பியல் ஆய்வுத் துறையிலே, தமிழகப் பிரதிநிதிகளிலும்,
பிறநாட்டுப் பிரதிநிதிகளே பெரும்பாலான ஆய்வுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
கடல்கடந்து வாழும் தமிழாராய்ச்சியாளரைப் பொறுத்தவரையில் மலேஷியப்
பல்கலைக்கழக இந்தியவியல் துறை விரிவுரையாளர் திரு.எஸ்.சிங்காரவேலு ஒப்பியல்
ஆராய்ச்சியில் பேரூக்கத்துடன் உழைத்து வருகிறார். தென்கிழக்கு ஆசியப்
பிரதேசங்களில் இராமாயணம் பரவியுள்ளது. தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா முதலிய
தேசங்களிலெல்லாம் காணப்படும் இராம சரிதங்களை ஒப்பு நோக்கிப் பகுப்பாய்வும்
பண்பாய்வும் பரவலை ஆராயும் வகையில் இத்தகைய ஒப்பு ஆய்வும் அமைவன. முதலாவது
கருத்தரங்கிலே திரு.எஸ்.சிங்கார வேலு" A comparative study of the story of
Rama in South India and South East Asia" என்ற ஆய்வுக் கட்டுரையை
அரங்கேற்றினார். சமீப கால நுண்ணாய்வுகளில் இதற்குச் சிறப்பானவோர் இடமுண்டு.
இப்பொருள் குறித்து, பேராசிரியர் தொ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் வேறு
இரண்டொருவரும் அவ்வப்போது சில அவசரக் குறிப்புகளைக் கூறியுள்ளரெனினும் திருப்தி
தரும் வகையில் முழுமையான ஆராய்ச்சியை செய்து வருபவரும் திரு. சிங்காரவேலு
எனலாம்.
இவ்வாராய்ச்சியின் தனிப்பட்ட சிறப்பு ஒருபுறமிருக்க, இத்தகைய
ஒப்பியல் ஆய்வுகளைத் தமிழக மாணவரினும் வௌிநாட்டு மாணவர் பயனுள்ள முறையிற்
செய்துமுடிக்க பல வசதிகள் உண்டென்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழியல்
செழிப்பதற்கு இவற்றைச் செய்தல் கடன் என்பது ஒரு தலை. பல நூற்றாண்டுக் காலமாகத்
தமிழ் நாட்டிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் எத்தனையோ தொடர்புகள்
இருந்திருக்கின்றன. வரலாற்று மாணவருக்கு இச்செய்தி புதியதல்ல. ஆனால் கலை
இலக்கிய மாணவர் இத்தொடர்புகளின் விளைவான வௌிப்பாடுகளைப் போதியளவு - குறிப்பாகத்
தமிழரது நோக்கு நிலையினின்று - ஆராய்ந்திருக்கின்றனர் என்பதற்கில்லை. தமிழகத்து
அறிஞர் பலர், ' கடாரங் கைக் கொண்டு சிங்காசனத்திருந்த செம்பியன்" பெருமையைக்
கூறியும் எண்ணியும் இறும்பூ தெய்துகின்றனரேயன்றி, அக்காலங்களில் நிகழ்ந்த
பண்பாட்டுப் பரிவர்த்தனையின் நுணுக்கவிவரங்களைப் பெறுமையுடன் ஆராய்ந்து அறியும்
மனவமைதி உடையவராய்க் காணப்படவில்லை. இந்நிலையில் நாகரிகங் கலந்த இடங்களிலே
வாழுஞ் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்ற தமிழரும் பிறரும் அவ்விவரங்களைப் பகுத்தும்
வகுத்தும் தொகுத்தும் ஆராய்வது பாராட்டப்பட வேண்டியதே.
மலேஷியப்
பல்கலைக்கழக இந்தியவியற்றுறை அதிபர், வண தனிநாயக அடிகள் தமது பணியமர்வுத்
தொடக்கப் பேருரையிற் கூறிய சில வாக்கியங்கள் இங்கு நினைவுக்கு வருகின்றன:
"மலாய், இஸ்லாமிய, சீனத் துறைகளோடு நெருங்கி ஒத்துழைத்துப் புதிய விளக்கங்களைக்
காண்பதற்கு இப்பல்கலைக் கழகத்தில் இந்தியவியற்றுறையினருக்குப் பல வாய்ப்புகள்
உள்ளன. இப்பல்கலைக் கழகத்திலுள்ள இந்தியவியற்றுறையின் வரையறைகளுக்கு இயைப
மலாயச் சரித்திரம், பண்பாடு என்பவற்றை மாத்திரமன்றி, சமாத்திராவிலும்
ஜாவாவிலுள்ள டியெங் மேட்டுச் சமவௌியிலும், பாலித் தீவிலும், மிசொன், போநகர்
ஆகியவற்றின் அழிபாடுகளிலும், வியத்நாமிலுள்ள ஒல்கெயோவிலும் கம்போடியாவிலுள்ள
அங்கொர் வாட், அங்கொர்தாம், ஆகியவற்றிலும் தாய்லாந்திலுள்ள புகழ் வாய்ந்த
கட்டடங்களிலும் மொழி இலக்கியத்திலும் இந்தியவியல் சார்ந்த ஆய்வுகள் நடாத்த
வாய்ப்புண்டு. இப்பெரு முயற்சியில் மேலும் ஒரு படி சென்று, சீனச்சிந்தனையையும்,
இலக்கியங்களையும் நாம் கற்று, இதுவரை அறியாத மூலங்களையும் ஒப்புமைகளையும்
கண்டறிதல் கூடும்; அல்லது இன்னும் வடக்கே சென்று, சப்பானியக் கவிதையிற் காணும்
தங்கா, சென்பௌத்தம் ஆகியவற்றுடன் ஒப்புமைகள் காணலாம். இத்துறையில்
உழைப்பவர்க்குச் செயற்பரப்பு அகன்றது; வாய்ப்புகள் அனந்தம்."
மகத்தான
இக்குறிக்கோளுக்கிணங்க மலேஷியப் பல்கலைக் கழகத்திலே சில முயற்சிகள் மேற்
கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய அடிப்படையிலே டில்லிப் பல்கலைக்கழகத் தமிழ்த்
துறையினர் தமது பிரத்தியேகச் சூழமைவுக்கேற்ற சில ஆய்வுகளை வழி நடத்தி
வருகின்றனர். தமிழிலக்கியங்களை இந்தி நூல்களுடன் ஒப்பு நோக்கி ஆராயும் வாய்ப்பு
அங்கிருக்கிறது. பட்டப் பின்னராய்ச்சியை ஒப்பியல் இலக்கியப் பொருளிலே, அதாவது
இந்தி - தமிழ் ஒப்பாராய்ச்சியிலே நடாத்த வாய்ப்பிருப்பதால் சில நன்முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக நாலாயிர திவ்விய பிரபந்தத்திலும் சூர்சாகரிலும்
கிருஷ்ணகதை கையாளப்பட்டிருக்கும் மாற்றை ஒப்பு நோக்கி யாராய்ந்திருக்கிறார்.
கே.ஏ.யமுனா இவ்வாய்வுக் கட்டுரைக்காக அவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது.
திருவள்ளுவரையும் கபீரையும், கம்பனையும் துளசிதாசையும் ஒப்பு நோக்கி யாராயும்
முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துளசிதாஸ் படைத்த ராமசரிதமானஸ்
இந்திமொழியின் பொக்கிஷங்களிலொன்று. வ.வே.சு.ஐயர், தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்,
ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார் முதலியோர் துளசி இராமாயணத்தைக் கம்பராமாயணத்தோடு
தொடர்புபடுத்திச் சிற்சில குறிப்புக்கள் எழுதியிருக்கின்றனரேயன்றி ஆழமான ஆய்வு
எதுவும் இதற்கு முன்னர் வௌிவந்ததில்லை.
உலகத் தமிழாராய்ச்சிக்
கருத்தரங்கின்போது தமிழியலின் ஒரு பகுதியான ஒப்பியல் ஆய்வு அடைந்து வரும் துரித
முன்னேற்றத்தைக் கண்டுணரக்கூடியதாயிருந்தது. எடுத்துக்காட்டுக்கள் சிலவற்றைக்
குறிப்பிடுதல் பொருத்தமாகும். சென்னைக் கருத்தரங்கிலே "தமிழிலக்கிய வரலாற்றில்
திருப்புமுனைகள்" என்னும் பொருள் பற்றிப் பேருரை நிகழ்த்திய கேரளப் பல்கலைக்
கழகமொழியியல் துறைத்தலைவர் வி.ஜ.சுப்பிரமணியம் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியின்
இன்றியமையாமையை எடுத்து விளக்கினார்.
"மத்தியகாலத்திலும்
பிற்காலத்திலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலே எழுந்த
இலக்கியங்களுக்குப் பொதுவான இலக்கிய அடிக்கருத்துக்கள் (Themes)
காணப்படுகின்றன. இவை முனைப் பான ஒப்புமைகள் - அயற் பிரதேசங்களினது இலக்கிய
மரபுகளை அறிவது தமிழ் இலக்கிய மரபை மதிப்பிட உதவும்...அடிக்கருத்துக்கள்,
யாப்பு, இலக்கிய வகை (வடிவம்) இலக்கிய மரபு முதலியவற்றை ஆராயும் பணி
மேற்கொள்ளப்படாமல், தமிழிலக்கிய வரலாற்றிலே இன்னும் தீர்க்கப்படாப்
புதிர்களுக்குச் சில அறுதியான சான்றுகள் கிடைத்தல் கூடும்."
கண்ணகி கதை
கேரள நாட்டிலும் தமிழ் நாட்டிலும் வளர்ந்தும் தேய்ந்தும் வந்துள்ள வரலாற்றுச்
செய்திகளை உதாரண விளக்கமாகக் காட்டினார் பேராசிரியர். வாய்மொழி இலக்கியங்களைப்
பொறுத்தவரையிலும், ஆராய்ச்சியாளர் கடைப்பிடிக்கக் கூடிய சில ஒப்பியல் நெறிகளைச்
சுட்டிக் காட்டினார் அவர். அன்னாரின் மாணாக்கர் இருவர் (கே.பி.எஸ்.ஹமீத்
பி.ஆர்.சுப்பிரமணியன்) இத்துறையில் குறிப்பிடத்தக்க ஆய்வு நடத்தியுள்ளனர்.
பேராசிரியர் சுப்பிரமணியன் குறிப்பிட்ட கண்ணகி கதைப்பரவல் இலங்கையையும்
உள்ளடக்குவதே. இதனை அழுத்தந் திருத்தமாகவும் ஆணித்தரமாகவும் கோடிட்டுக்
காட்டியது. திரு.நா.சுப்பிரமணியனது ஆய்வுரை. இலங்கையரான திரு.நா.சுப்பிரணியன்
வாசித்த கட்டுரை சிலம்புச் செல்வியும் சிங்கள இலக்கியமும் என்பது.
இளங்கோவின் சிலப்பதிகாரக் கதை சிங்கள இலக்கியத்தில் எவ்வடிவத்திலே இடம்
பெற்றுள்ளது என்பதைக் காட்டுவதே கட்டுரையின் அடிப்படை நோக்கம். அந்த அளவிற்கு
அது ஒப்பிலக்கிய நோக்கினால் உந்தப் பெற்றதே. பத்தினி வழிபாடு இலங்கைக்கு இடம்
பெயர்ந்ததாகவும், அது காவல் தெய்வவழிபாடாக உருமாற்றம் அடைந்தமையும், புத்த
சமயச்சாயல் பெற்றமையும் சமுதாயவியல் சார்ந்த செய்திகள். இச்செய்திகளுக்கு
வரலாற்றுப் பின்னணியு முண்டு. இவை யாவுஞ் சேர்ந்து சிலப்பதிகாரச் செய்தியைப்
புதிய புதிய பரீசீலனைகளுக்கு ஆதாரமாக்கி விடுகின்றன. சிலப்பதிகாரச் செய்யுளை
அசைபோட்டுப் பழகிவிட்ட பலருக்கு இத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவம்
புலப்படாமலுமிருக்கலாம். ஆயினும் இவையே தமிழியற் பரப்பையும் எல்லையையும்
விரிவாக்குவன.
பழங்காலத்திலே தென்னிந்தியாவிற் சிறப்புற்று விளங்கிய சில
'தெய்வங்கள்" கடல்கடந்து பெரும் பெயர் பெற்றன. இராமன், அகத்தியன், கண்ணகி
முதலாயின இத்தெய்வங்கள். இவை தமிழர் பண்பாடு பரவிய அயல் நாடுகளிலும்
வழிபடலாயின. இவை பற்றிய இலக்கியங்களும் பாடி மாற்றங்களுடன் தோன்றின. மலேஷியக்
கருத்தரங்கிலே இராமகாதையின் பரவல் பற்றிச் சச்சிதானந்தம் சிங்கார வேலு கட்டுரை
படித்ததை மேலே குறிப்பிட்டோம். நா. சுப்பிரமணியனது கட்டுரை அத்துணை
விரிவற்றதாயினும் அதேகரத்தைச் சேர்ந்ததே. ஒப்பியலாய்வின் பயனாகச் சிலப்பதிகாரக்
கதை மாறுபட்ட சூழமைவிற்கேற்ப எவ்வாறு உருமாற்றம் பெற்றதென்பதைத்
துலக்கியுள்ளார். எஸ்.வையாபுரிப்பிள்ளை, மகாவித்துவான் மு.இராகவையங்கார்
முதலியோர் பத்தினி வழிபாட்டைப் பற்றியும், சிலப்பதிகாரக் கதையின் "மறு
அவதாரங்கள்" பற்றியும் பயனுள்ள குறிப்புக்கள் கூறியுள்ளரெனினும் சிங்கள
இலக்கியச் சான்றுகளை மூலத்திற் படித்துப் பயன்படுத்தியவரல்லர்.
திரு.நா.சுப்பிரமணியத்தின் கட்டுரை இக்குறைபாட்டை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளது.
பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியன் குறிப்பிட்டது போல, கன்னடம், மலையாளம்,
தெலுங்கு என்ற மொழிகளிலுள்ள இலக்கியங்கள் மாத்திரமின்றிச் சிங்கள இலக்கியமும்
தமிழ் மாணவர் ஒப்பு நோக்க வேண்டியதொன்றாகும்.
தமிழைத் தாய்மொழியாகக்
கொள்வோரின் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சிகள் இவ்வாறிருக்க, மேனாட்டார் சிலரின்
முயற்சிகளைக் குறிப்பிடுதல் அவசியம். "தமிழிலக்கியத்திலும் இந்தோ-ஆரிய
இலக்கியத்திலும் கார்காலம்" என்ற ஒப்பியற் கட்டுரையைப் படித்தார், ஜோர்ஜ்
எஸ்.ஹார்ட் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர். ஒப்பியல் இலக்கிய ஆய்வுக்குச்
சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது அவரது கட்டுரை, தமிழ் பாகதம், சமஸ்கிருதம்
ஆகிய மொழிகளிற் காணப்படும கார்காலத்தைப் பற்றிய அகப்பொருட்பாக்களை ஒப்புநோக்கி,
அவற்றின் ஒற்றுமை வேற்றுமைக்குக் காரணங்களைக் காட்டி, தமிழிலிருந்தே வட
மொழிக்கு இத்துறையைச்சார்ந்த பொருள் சென்றிருத்தல் வேண்டும் எனத் தக்கபடி அவர்
விளக்கினார். தொகை நூல்களிற் காணப்படும் அகத்திணைச் செய்யுட்களைச் சிறப்பாகக்
கற்க இத்தகைய ஆய்வு வழி காட்டும் என்பதில் ஐயமில்லை. ஹார்ட் போன்ற இளைய
தலைமுறையைச் சேர்ந்த மேனாட்டுத் தமிழாராய்ச்சி மாணவரிடத்திற் காணப்படும்
சிறப்பியல்பு யாதெனில் தமிழபிமானத்தையும் நிதானத்தையும் ஒருங்கிணைக்கும்
உணர்வமைதியாகும். வடமொழியிலக்கியங்களையும் தமிழிலக்கியங்களையும் ஒப்பு
நோக்குமிடத்து உணர்ச்சி நிலையில் அன்றி அறிவு நிலையினின்று நோக்கும் சமநிலை
அவர்களிடத்துக் காணப்படுகிறது. கார்கால வரவையொட்டிப் பிரிவுத் துயரினால் வாடும்
தலைவியரையும் அவர்தம் அகநிலைகளையும் இயற்கையோடு இணைத்துக் காட்டும் கவிப்பொருள்
மரபு வடமொழித் தொகை நூல்களிலும் குறிப்பாகப் பாகதச் செய்யுட்களிலும் உள்ளன.
இம்மரபு ஏறத்தாழ கி.பி.நான்காம் நூற்றாண்டளவிலேயே தமிழிலிருந்து
அவ்விலக்கியங்களுக்குச் சென்றிருத்தல் வேண்டும் என்று திரு.ஹார்ட் கூறிய போது,
அது வெறும் தமிழபிமான மாகவன்றி ஒப்பியல் ஆய்வின் வௌிப்பாடாக விருந்தது. கால
ஆராய்ச்சியும் குணநல ஆராய்ச்சியும் ஒருங்கிணைந்த பார்வை அவர் ஆய்வை
வழிநடத்தியுள்ளது.
மிகப் பழமையான தமிழ்ச் செய்யுட்களை ஹார்ட் ஒப்பு
நோக்கி ஆராய்ந்தது போல, நவீன கவிதைகளால் பாரதி படைப்புக்களை ஒப்பு நோக்கி
விளக்கினார் ரஷ்ய இந்தியவியல் ஆய்வாளர், பேராசிரியர் இ.பி.செலிஷெவ், "பாரதி
கவிதைகள் - இந்திய இலக்கிய வளர்ச்சியில் தோன்றிய புதிய போக்குகளுக்கு
எடுத்துக்காட்டு" என்ற கட்டுரையில் வட இந்திய மொழிகளிலே பாரதிக்கு நிகராகக்
கவிபாடிய சிலரை ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்தார் செலிஷெவ். இந்தியக் கவிஞரை
முதலில் மொழியடிப்படையிலோ அன்றிப் பிரதேச அடிப்படையிலோ ஒப்பிடுவதும், அதன்
பின்னர் பிற நாட்டுக் கவிஞருடன் ஒப்பிட்டாய்வதும், பயன்தரவல்ல
முயற்சியாயிருக்கும் என நினைவூட்டிய அவர், பாரதியை வட இந்தியக் கவிஞருடன் ஒப்பு
நோக்கிச் சில முடிவுகளைத் தெரிவித்தார்.
"இவ்வாறு மேற்கூறிய ஒப்பு
நோக்கின் அடிப்படையிலே, பாரதியின் தேசபக்திக் கவிதைகளை இந்தியாவின் பிற மொழிக்
கவிதைகளுடன் சீர்தூக்கிப் பார்க்குமிடத்து, தமிழகத்தின் மகாகவி தேச விடுதலை
இயக்கத்தால் உணர்வூட்டப் பெற்ற இந்திய இலக்கிய மேதைகளின் முதல் வரிசையில் இடம்
பெறுகிறார் என்பது உறுதிப்படுகின்றது"
இம்முடிவிற்குக் காரண காரிய
விளக்கங் காட்டிய செலிஷெவ், தாகூர், நஸ்ருல் இஸ்ஸாம், மைதிலிஷரண் குப்தா,
சூர்யகாந்த் திருபாதி, பாலகிருஷ்ண சர்மா, மகன்லால் சுதர்வேதி, ஹரியவுதின்
முதலிய வங்காள, இந்திக் கவிஞருக்கும் பாரதிக்கும் பொதுவுயல்புகளும்
முன்மாதிரிகளும் ஒத்த தன்மையாய் விளங்கியமைக்குச் சரித்திரக் காரணிகளை
எடுத்துக் காட்டினார். "இவ்வெழுத்தாளர்களிடையே நேரடித் தொடர்பு இல்லாமல்
இவர்களுடைய இலக்கியப் படைப்புக்களில் ஒத்த வடிவங்கள் வளரலாயின.
பொதுவியல்புகளுக்கு விளக்கங் கூறியது போலவே, "பாரதியின் தனிச் சிறப்புகளுக்கும்
விளக்கம் கூற முயன்றார் செலிஷெவ்." அரசியல் தௌிவுடன் சமுதாயப் பொருட்செறிவு
மிக்க கருத்துக்களை, ஏனைய இந்தியக் கவிஞர்களுக்கு முன்னதாக, பாரதி தமது
எழுத்துக்களிலே வௌியிட முடிந்ததற்குக் காரணம் என்ன? ஒப்பியல்
ஆராய்ச்சியாளனொருவன் அவசியம் கேட்கவேண்டியகேள்வி இது. இத்தகைய தடை விடைகளால்
பாரதியின் சிறப்பைச் சான்றுகாட்டி நிறுவிய செலிஷெவ், பாரதியிடம்
குடிகொண்டிருந்த வரலாற்றுணர்வே அவரைச் சில விஷயங்களை நன்கு உணர்ந்த முதற்பெரும்
இந்தியக் கவிஞராக்கியது என்றார். சமீப காலத்தில் வளர்ந்துவரும்
பாரதியாய்வுகளில் இக்கட்டுரை குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழாராய்ச்சிக்
கருத்தரங்குகளில் மொழியியற்றுறை பற்றிய ஒப்பியல் ஆய்வுகளே இன்றும்
பெருவழக்காயுள்ளன. ஒப்பியல் ஆராய்ச்சியொன்றால் மொழியியல் ஆய்வு என்றே பொதுவான
அபிப்பிராயமும் நிலவுகிறது. இந்தியவியலைப் பொறுத்தளவில் ஒப்பியல் ஆய்வானது
மொழியியற்றுரையில் ஆரம்பித்தமை இம்மனப்பதிவுக்குக் காரணமாயிருக்கலாம். ஆனால்
ஒப்பியல் ஆய்வென்பது உண்மையில் ஓர் ஆராய்ச்சி முறையே யாகும். மேனாட்டிற் சென்ற
நூற்றாண்டிலே சமூகவியலும் மானிடவியலும் பெருவளர்ச்சி யுற்றமைக்குக் காரணமே,
ஒப்பியல் ஆய்வு முறைதான். ஃபிறேஸர், டைலர், ஹெபட்ஸன்சிமித், ூர்க்கைம்
முதலியோர் 'உலகமளாவிய' மானிடவியற் செய்திகளை ஒப்புநோக்கியே சமூகவியக்கத்தின்
நியதிகள் பலவற்றையும் பண்டைக்காலச் சமூக நிறுவனங்களின் உண்மையையும் கண்டறிந்து
நிறுவினர். புராதன சமுதாயங்களின் வளர்ச்சிப் படிகளை வகுத்துக் கூறிய மோர்கன்
என்பார், பல நூற்றுக்கணக்கான சமூகங்களின் இயக்கப்பாடுகளை ஒப்புநோக்கியே
அவற்றிற்குப் பொதுவான விதிகளைக் கூற முற்பட்டனர். சமூகவியல் மாத்திரமன்றி,
டார்வினது பரிணாமக் கொள்கையும் அடிப்படையில் ஒப்பியல்களைத் துணையாகக் கொண்டதே.
சென்னையில் நடந்த கருத்தரங்களிலே கலை, இலக்கியத் துறைகளில் ஒப்பியல் ஆய்வு
மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்திருந்தது. மேலே குறிப்பிட்ட முக்கியமான
கட்டுரைகளைத் தவிர, திரு.சி.வி.இராஜசுந்தரம் (இலங்கை) எழுதிய "தற்காலத் தமிழ்க்
கவிதையில் மேனாட்டுச் செல்வாக்கு" திரு ஆர்.ரமணி (சிங்கப்பூர்) வாசித்த
"பண்டைத் தமிழ்ப் பட்டினங்கள் - சில முற்குறிப்புகள்" ஜனாப் கே.பி.எஸ்.ஹமித்
வாசித்த "இரு மரபுவழிக் கதைப்பாடல்களின் கட்டமைப்பு" ஹேர்மான் பேர்கெர் (மேற்கு
ஜெர்மனி) எழுதிய "ரிஷ்ய சிருங்கர் கதை ஒரு திராவிடப் பழமரபுக் கதை, டாக்டர்.
என்.வி. ராஜகோபாலன் (ஆக்ரா) சமர்ப்பித்த "பரத நாட்டியத்திலும் சமஸ்கிருதச்
செய்யுளிலும் காணும் தொல்காப்பிய அகப்பொருள் செல்வாக்கு" கருத்தரங்கையொட்டித்
திரு.பி.ஆர்.சுப்பிரமணியன் (கேரளம்) எழுதிய "மக்கள் பாடல்கள் - இலக்கியத்தின்
முன்னோடிகள்" என்ற கட்டுரைகள் பொதுவாகக் கூறுமிடத்து ஒப்பியற் கண்ணோட்டம்
உடையனவே. இவை எதிர்கால ஆராய்ச்சி பற்றி நம்பிக்கை தருவனவாக உள்ளன. ஏலவே நான்
குறிப்பிட்டுள்ளது போல ஒப்பியல் இலக்கியத்திலும் ஒப்பியல் மொழியியலே
கருத்தரங்கில் முக்கியத்துவம் பெற்றது. 'புத்தம் புதிய' கலையாகிய மொழியியல்
சிறப்பிடம் பெறுவதில் வியப்பெதுவுமில்லை. சுமார் பத்துக் கட்டுரைகள் ஒப்பு
மொழியியற் றுறையைச் சார்ந்தனவாக இருந்தன. இவற்றுள்ளும் பெரும்பான்மை பிற நாட்டு
நல்லறிஞரால் எழுதப்பட்டவை. திரு.நா.வானமாமலை ஒரு சந்தர்ப்பத்திற்
குறிப்பிட்டிருப்பது போல, "இத்தகைய ஆராய்ச்சிகளை அந்நிய ஆராய்ச்சியாளர்களிடமே
விட்டுவிட்டு நாம் வாளாவிருப்பது நமக்குப் பெருமையளிக்காது. நாமே இத்துறையில்
முன்னேற வேண்டும்.
மொழியியல், இலக்கியம் என்ற துறைகளில் ஒப்புநோக்கு
அத்தியாவசியமாய் இருப்பது போலவே, வாய் மொழி இலக்கியத் துறையிலும் அது மிக
முக்கியமானதாகும். நாடோடிப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், நாட்டுப்புறப்
பாடல்கள், மக்கள் இலக்கியம், கிராமிய இலக்கியம், பாமரர் பாடல்கள், என்றெல்லாம
நாம் சரணஞ் செய்யப்பட்டுள்ள வாய்மொழிப் பாடல்கள் ஒப்பியல் ஆய்வினால்
புத்தொளியும் புது விளக்கமும் பெறக் கூடியன. திரு.நா. வானமாலை, பேராசிரியர்
வி.ஜ. சுப்பிரமணியன், திரு.பி.ஆர். சுப்பிரமணியன், கு.அழகிரிசாமி முதலியோர்
இத்துறையில் அவ்வப்போது முயற்சிகள் கைக்கொண்டிருக்கின்றனர். இவர்களோடு செக்
நாட்டு ஆராய்ச்சி மாணவரான ஜான் பிரிப்ஸ்கியையும் குறிப்பிடலாம். தமிழ் நாட்டிற்
காணும் கட்ட பொம்மன் பாடற்பிரதிகளை ஒப்பு நோக்குவதில் ஈடுபட்டுள்ளார்
பிலிப்ஸ்கி.
செம்மை சான்ற இலக்கியங்களிலே பொதுவியல்புகள்
காணப்படுவதிலும் பார்க்க வாய்மொழிப்பாடல்களிலே உலகப் பொதுவான முனைக்
கருத்துக்கள் (Motifs) காணப்படும். புராதனவியற் பண்பு வாய்ந்த இக்கருத்துக்
கூறுகள் சமுதாயப் பொருண்மை உடையன. இவற்றையும் இவை தோன்றக் காரணமாக இருந்த சமூக
அமைப்பையும் வரையறை செய்யவும் நுண்ணாய்வு செய்யவும் ஒப்பு நோக்குப்
பேருதவியாயிருக்கும். அது மட்டுமல்லாது இவ்வாய்வுகள் இலக்கிய ஆராய்ச்சிக்கும்
துணையாயமைவன. விபுலாநந்த அடிகள், வ.குமாரசாமி, காலஞ்சென்ற பேராசிரியர்
க.கணபதிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் முதலியோர் தமிழிலக்கியங்களிற்
காணப்படும் வாய்மொழிப் பாடற் செல்வாக்கினையும், மேலே கூறிய
முனைக்கருத்துக்களையும் அங்கங்கே சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இவருள் முதல்
மூவரும் இலங்கையர், சென்னைக் கருத்தரங்களிலே பேராசிரியர் வி.ஜ.சுப்பிரமணியன்
தமது உரையிலே பின்வருமாறு கூறினார்:
"வாய்மொழிப் பாடல்களின் முக்கியத்துவத்தை எமது இலக்கிய வரலாற்றாசிரியர்கள்
காலங் கடந்தே உணர்ந்துள்ளனராயினும், பரந்துபட்ட முறையிலே தமிழிலக்கிய வரலாற்றை
எழுத இவ்வுணர்வு உதவுமெனலாம்... தமிழ் நாட்டில் வழங்கி வரும் பழமொழிகள்,
நல்லுரைகள் என்பனவற்றை யொத்தவை திருக்குறள். பழமொழி நானூறு முதலிய அற
நூல்களிலும் வேறு சில நூல்களிலும் காணப்பெறுகின்றன. சிலவற்றை வாய்மொழியாகவே
கேட்கலாம். சிலவற்றை இலக்கிய நூல்களிற் பார்க்கலாம். இவற்றை ஒப்பு நோக்கி
யாராய்ந்தால், அவை மக்களிடமிருந்து பெறப்பட்டனவா அன்றி, பாகதம், சமஸ்கிருதம்
முதலிய பிறமொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டனவா என்னுங் கேள்விக்கு விடை காண
உதவியாயிருக்கும்."
உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கு தனது
பெயருக்கியை உலக மளாவியதாயிருப்பதற்கு ஒப்பியல் ஆய்வு இன்றியமையாதது என்பதை
இதுவரை நடந்தேறிய இரு கருத்தரங்குகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வுணர்வு நல்ல
சகுனம். அவை நழுவ விடுவது எம்மவர்க்கு ஏற்றதாகாது.
3. தமிழ் வீரயுகப் பாடல்கள்
1911-ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்
பேராசிரியராக இருந்த எச்.எம்.சாட்விக் என்பார் (Heroic Age) வீரயுகம் என்ற நூலை
வௌியிட்டார். பழம் ஜெர்மானியரது காவியப் பாடல்களை ஆராய்ந்த அவர், அவற்றைக்
கிரேக்க ஆதிகவியாம் ஹோமருடைய காவியங்களுடன் ஒப்பு நோக்கி, இரு மொழியிலெழுந்த
வீரகாவியங்களும் வாய்மொழியிலக்கியமாகத் தோன்றியவை என்று பல சான்றுகாட்டி
நிறுவினார். அவரது அம்முயற்சி, பல மொழிகளிலுமுள்ள காவியங்களையும் பாடல்களையும்
ஒப்பு ஆராய்ச்சி செய்வதற்கு வழிகாட்டியது. சாட்விக் காட்டிய வழியைப் பின்பற்றி
அவரது மேற்பார்வையில் ஆராய்ச்சி நிகழ்த்திய என்.கே.சித்தாந்தா என்பார் வடமொழி
இதிகாசங்களாம் ராமாயணம், பாரதம் ஆகியன வீரகாவியங்களென்றும்,
வாய்மொழியிலக்கியங்கள் என்றும் கூறியதோடமையாது, அவற்றைப் பிற வீரகாவியங்களுடன்
ஒப்பு நோக்கியும் ஆராய்ந்தனர். சாட்விக் காட்டிய பாதையில் சிலாவிக் வீரப்
பாடல்களும் ஐஸ்லாந்து ஐதிகக் கதைகளும், நன்கு ஆராயப்பட்டன. அதன் பின்னர்
சுமேரியப் பாடல்களும் வீரகாவியங்களாக நிரூபிக்கப்பட்டன. அண்மைக்காலத்தில்
ஆப்பிரிக்கக் குலத்தவர் பலரிடையே வழங்கும் கதைப்பாடல்கள் வீரப்பாடல்கள் என்ற
வகையிலும், வாய் மொழிப் பாடல்கள் என்ற அடிப்படையிலும் அதிகமாக ஆராயப்பட்டு
வருகின்றன. இத்தகைய ஒரு பின்னணியிலேயே சான்றோர் செய்யுட்களை
வீரயுகத்துக்குரியனவாகக் கொண்டு, அவற்றைக் கிரேக்க ஆதிகாவியங்களுடன் ஒப்பு
நோக்க முனைந்தேன்.
தமிழ்க் கவிதைகளுக்கும் கிரேக்கப் பாடல்களுக்கும்
ஒப்புமைகள் இருப்பது அவ்வப்போது சிலராற் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய
மொழிகளைப் பற்றி கட்டுரையொன்றெழுதிய ஜி.யூ.போப்பையர் 1885-இல் பின்வருமாறு
கூறினார்: "பழந்தமிழ்ப் பாடல்களின் உணர்வுநிலையும் அவை தோன்றிய காலத்துச்
சமுதாய நிலையும் அவற்றுச் சமமான கிரேக்க பாடல்களுடன் பெரிதும்
ஒப்புமையுடையனவாகக் காணப்படுகின்றன." 1923-இல் தென்னிந்தியாபற்றிய வரலாற்று
நூல் ஒன்று வௌியிட்ட எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் "சங்கச சான்றோர் செய்யுட்கள்,
ஹோமரது இலியாது காவியந் தோன்றுவதற்கு ஆதாரமாகவிருந்த வீரக்கதைகளை
ஒத்தனவாயுள்ளன" என்று குறிப்பிட்டார். அவரை அடுத்துச் சித்தாந்தா தமது (Heroic
Age of India) "இந்திய வீரயுகம்" என்ற நூலிலே, தமிழ்ப் புறத்திணைப் பாடல்கள்,
"பிறமொழிகளிலுள்ள வீரப்பாடல்களுடன் ஒப்பு நோக்கி ஆராயப்படுந் தகைமையுடையன"
என்றார். திரு.சித்தாந்தா தமிழரல்லாதவாதலின், புறநானூறு, புறப்பொருள்
வெண்பாமாலை முதலியனபற்றி ஆங்கில மூலம் அறிந்தவற்றைக் கொண்டு அவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய காவியங்களை நன்காராய்ந்து எழுதியவர்களான சாட்விக், டபிள்யூ.பி.கேர்,
அபெர்குரொம்பி முதலிய ஆசிரியரைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்திய
எஸ்.வையாபுரிப்பிள்ளை 1952-இல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய
காவிய காலம் என்ற சொற்பொழிவுத் தொடரில், சாட்விக்கின் வீரயுகம் என்ற நூலைக்
குறிப்பிட்டு, "வீரயுகத்திற்கு உரியனவாகச் சாட்விக் பேராசிரியரால் தமது
'ஹிரோயிக் ஏஜ்' என்ற நூலிற் கூறப்பட்டுள்ள சில இயல்புகள் அனைத்தும், முற்சங்க
இலக்கியங்கள் சித்தரிக்கும் சமுதாயத்தில் உளவாதல் காணலாம்" என்றார். 1953 ஆம்
ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் எட்டுத் தொகைபற்றி ஆய்வுரை சமர்ப்பித்த
ஜே.ஆர்.மார் கிரேக்க பாடல்களைப் போல பழந்தமிழ்ச் செய்யுட்களும்,
வாய்மொழியிலக்கியமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழ்க்
கவிதைகளின் இயற்கைபற்றி ஆராய்ந்த பேராசிரியர் தனிநாயக அடிகளாரும், பழந்தமிழ்க்
காதல் பற்றி ஆராய்ந்த கலாநிதி வ.சுப.மாணிக்கனாரும், தத்தம் நூல்களில் இடையே
கிரேக்க நூல்களிற் காணப்படும் ஒப்புமைக் கருத்துக்களைச் சுட்டிச் சென்றனர்.
போப்பையரிலிருந்து கலாநிதி மார்வரை, மேற்கண்டவாறு சில அறிஞர் கிரேக்க
இலக்கியங்களுக்கும் தமிழ் நூல்களுக்குமுள்ள ஒப்புமைகளைக் குறிப்பிட்டனரெனினும்
அப்பொருள்பற்றித் தனியாக எவரும் ஆராய்ந்தாரல்லர். அது மட்டுமன்று; கிரேக்க
ஆதிகாவியங்கள் பற்றிய ஆராய்ச்சியும் கடந்த முப்பது நாற்பது ஆண்டுக் காலத்தில்
புதுப்புது வழிகளிற் சென்றுள்ளது. அவ்வாராய்ச்சிகளின் பண்பையும் பயனையும்
கவனிப்பதும் முக்கியமானதாகும்.
இதுகாலவரை தெரியவந்துள்ள வீரயுகங்களுள் காலத்தால் முந்நியது
கிறித்துவிற்குமுன் மூவாயிரம் ஆண்டளவிலே மெஸொப்பொத்தேமியாவில் நிகழ்ந்த சுமேரிய
வீரயுகமாகும். அதற்கடுத்தபடியாகக் கிறித்துவிற்கு முன் ஈராயிரமாண்டுகளுக்கு
முன்பின்னாகக் கிரேக்கத்தில் நிகழ்ந்த வீரயுகத்தைக் கொள்ளலாம். வடஇந்தியாவில்
அடுத்தபடியாக அமைவது பழந்தமிழரது வீரயுகமாகும். இது கிறித்துவிற்கு எழுநூறு
ஆண்டுகள் முன் தொடங்கியிருக்கலாம். ஆயினும் பெரும்பாலும் கி.மு. ஆறாம்
நூற்றாண்டளவில் இது நிகழ்ந்தது எனக் கருதுவது பொருத்தமாகும். உலகின் பிற
பகுதிகளிற் காணப்படும் வீரயுகங்களும் அவற்றைச் சேர்ந்த பாடல்களும்,
கிறித்துவிற்குப் பின் பல நூற்றாண்டுகள் தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர்,
கிரேக்கர் முதலியோரின் வீரயுகங்களுடன் ஒருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது
எனலாம்.
வீரயுகத்திற்குரிய பழைய வீரப்பாடல்கள் அனைத்தும் வாய்மொழியிலக்கியமாகவே
அமைவன என்பதை முதன் முதலில் ஐயத்திற்கிடமின்றி நிறுவியவர் மில்மன் பரி என்ற
அமெரிக்கர். செம்மை சான்ற உயர் தனிக் கவிதைகளாம் கிரேக்க ஆதி காவியங்கள்
எழுத்தறிவில்லாத வாய்மொழிக் கவிஞராற் குலமரபுத் தொழிலாகப் பாடப்பெற்றன என்று
ஆணித்திரமாக 1927இல் அவர் எடுத்துக்கூறிய போது, அறிஞருலகம் திடுக்கிட்டது.
ஆயினும் காலப்போக்கில் பரியின் முடிவு சரியானதே என்பது உறுதிப்பட்டு
வந்துள்ளது. மில்மன்பரி யூகோசிலாவியாவில் காடு மேடெல்லாம் திரிந்து,
வாய்மொழியிலக்கியங்களைக் கேட்டு ஒலிப்பதிவு செய்தவர்; அவற்றை ஆழமாக ஆராய்ந்ததன்
விளைவாகவே அவற்றிற்கும் கிரேக்க ஆதிகாவியங்களுக்கும் பற்பல ஒப்புமைகள்
இருப்பதைக் கண்டார். நாட்டுப்புறத்து நாடோடிப் பாடகர்களின் கலையின் துணைகொண்டு
பண்டைப்புலவனது கலையை விளக்கினார் அவர். அந்த வகையில் ஒப்பிலக்கிய சாட்விக்,
பரி ஆகிய இருவரும் தனிச்சிறப்பானவர்கள். அவர்கள் கையாண்ட ஆராய்ச்சி முறை
பண்டைத் தமிழ்ச் செய்யுட்களை நன்கு ஆராய்வதற்கும், விளங்கிக் கொள்வதற்கும்
பேருதவியாயுள்ளது.
கிரேக்க ஆதிகாவியங்களைப் படிக்கும் பொழுது, அவற்றில்
மீண்டும் மீண்டும் வந்து வழங்கும் அடைமொழி புணர்த்த பெயர்களும் (Non-Epithets)
மரபுத் தொடர்களும் (Formulae) நிறைந்திருக்கக் காண்கின்றோம். உதாரணமாக ஓதீசி
காவியநாயகனைக் குறிப்பிடுமிடங்களில் 'நெடுநாட் கவலும் ஓடீசியஸ்' என்றும், அவனது
காவற்தெய்வத்தை 'ஒளிக்கண் அதீனி' என்றும், மானவீரன் ஹெக்டரை 'புகழ்சால்
ஹெக்டர்' என்றும், நெஸ்டொர் என்பானை 'தேருடைய கெரெனியன் நெஸ்டொர்' என்றும்
மெனெலாஓஸ் என்பானை உரத்த போர்க்குரல் மெனெலாஓஸ் என்றும், இவைபோலப் பிற
வகையிலும் கவிஞர் பாடக் காணலாம். மக்கள் மட்டும் இவ்வாறு மரபுத் தொடர்களால்
வழங்கப்படுவர் அல்லர்; பொருள்களும் அடை புணர்ந்தனவாயுள்ளன. 'பொன் மலி துரோய்'
பொற்றூண் மனை உவைன் நிறங்கருங்கடல் 'செவ்விரல் வைகறை', 'கண்ணகன்ஞாலம்' 'ஒள்ளிய
கால்கள்' 'நீள் நிழல் எஃகம்' 'தேவாமிர்த இரவு' போன்றவை பொருட்பெயர்கள்
அடைபுணர்ந்து வருவதற்கு உதாரணம். ஆயிரக்கணக்கிலுள்ள இத்தகைய மரபுச்
சொற்றொடர்களைக் கருவியாகக் கொண்டு வேகமாகப் பாடிச் செல்வதே வாய்மொழிப் புலவர்
உத்தியாகும். துரோய் நகரத்து வீரன் ஹெக்டர் என்று பாட வேண்டிய சந்தர்ப்பம்
வந்ததும், "பொன்மலி துரோய் புகழ்சால் ஹெக்டர்" என்று அழுத்தந் திருத்தமாகச்
சொற்கள் தகுந்தபடி வந்தமையும், மில்மன்பரி கூறினார்:
"பிற வாய்மொழிப்
புலவர் யாவரையும் போலவே, ஹோமருக்கும் பாடுவதென்றால் நினைவு கூர்வதாயிருந்தது;
வீரகாவியப் பாடல் மரபைத் தமக்களித்துச் சென்ற முந்தைய புலவரது சொற்கள்,
சொற்றொடர்கள், அடிகள் முதலியவற்றை நினைந்து பயன்படுத்துவதே அவரது பாடல்
முறையாயிருந்தது."
இவ்வாறு மரபுத் தொடர்களும் கருத்துக்களும் மீண்டும்
மீண்டும் வருதல் வாய்மொழி இலக்கியத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று. அதாவது
திரும்பக் கூறல் உலகெங்கிலும் வாய்மொழியிலக்கியத்தின் இன்றியமையாத கூறாகக்
கொள்ளப்படுகிறது. இதற்கு முதற்றேவையாக வாய்மொழியிலக்கியப் பாடல்கள் ஒவ்வொரு
காலப்பகுதியிலும் ஏறத்தாழ ஒரே தன்மையான யாப்பில் அல்லது பாவகையில்
அமைந்திருக்கக் காணலாம். கிரேக்க காவியங்கள் பாடப்பெற்ற அறுசீரடிப்பா
(Hexameter) பலவழிகளில் எமது அகவற் பாவை ஒத்தளது. சான்றோர் செய்யுட்கள்
பெரும்பான்மை (அகம்புறம் என்ற வேற்றுமையின்றி) அகவலில் அமைந்திருப்பதால்,
அடைமொழி புணர்த்த பெயர்களும், தொடர்களும் வெவ்வேறு கவிஞர்க்கும் பொதுவானவையாகக்
காணப்படுகின்றன. இதன் காரணமாகவே பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் மெயில்
பின்வருமாறு கூறியுள்ளார்:
"(சான்றோர் செய்யுட்களைப் பொறுத்தவரையில்)
புலவரின் தனிநடைச் சிறப்பை (Style) ஆதாரமாகக் கொள்ளக்கூடாது; ஒவ்வொரு
புலவனுக்கும் உரிய தனிப் பண்பை, நடைச் சிறப்பியல்பை, இது காலவரை கண்டறிய
முடியாதுள்ளது. யாவும் ஒரே உற்பத்திச் சாலையிலிருந்து வௌிப் போந்தன போலத்
தோன்றுகின்றன. நடைப் பொதுமை அவ்வளவு உயர்ந்து காணப்படுகிறது"
இக்கூற்றைச் சிறிது விளக்குவோம். சங்க இலக்கியங்கள் பற்றி எழுதிய தமிழறிஞர்
பலர், பரணர், கபிலர், நககீரர், ஔவையார், மாங்குடி மருதன் முதலியோர் சிறந்த
புலவர்கள் என்று கொண்டு அவரது "கவிச் சிறப்புகளை" விதந்து கூறியுள்ளனர். ஆனால்
சான்றோர் செய்யுட்களை நுணுகி ஆராயும் பொழுது, இப் பெரும்புலவர்களும், நூற்றுக்
கணக்கான பிற புலவோர் பயன்படுத்திய சொற்கள், சொற்றொடர்கள், அடிக்கருத்துக்கள்,
உவமை உருவகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கக் காணலாம். உதாரணமாக,
"பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்"
(பாரி வள்ளலின் பறம்பு
மலையிடத்துளதான குளிர்ந்த சுனையின்கண் உள்ள தௌிந்த நீர்)
என்ற
நாற்சீரடி, "பெரும்புலவர்' கபிலரால் மட்டுமன்றி, மிளைக்கந்தன் (குறுந்தொகை 196)
நன்னாகனார் (புறம் 176). முதலியோராலும் கையாளப்பட்டுளது. கிரேக்க
ஆதிகாவியங்களிற் காணப்படுவது போலவே, சான்றோர் செய்யுட்களிலும், உயர்திணைக்
குரிய மக்கள் தேவருக்கு மட்டுமன்றி அஃறிணைப் பொருட்களுக்கும் அடை
சேர்க்கப்பட்டிருக்கிறது. சில குறிப்பிட்ட அடைகள் அழகும். யாப்பின் தேவையும்
கருதிப் பலபெயர்களுக்கு அடையாகவும் அமைவதுண்டு. உதாரணமாக இயல்தேர் என்னுஞ் சீர்
மற்றொரு சீராக அமையும் பின்வரும் ஆடவரைச் சிறப்பித்தளது. பொறையன், வழுதி,
சென்னி, குமணன், வளவன், அண்ணல், குரிசில், தந்தை, குட்டுவன், கொண்கன், நன்னன்,
செழியன், பொருநன், மோரியர், அழிசி, அதியன், இப்பதினாறு பெயர்களும் நன்கு
செய்யப்பட்ட தேரையுடையவர் என்பது பொருளன்று. இயல் தேர் மரபு வழிவரும்
பயன்பாட்டு அடைத் தொடராகவே நிற்கிறது எனல் வேண்டும். இது போலவே பல பொருட்
பெயர்களுக்கும் பொதுவான அடைக்கு உதாரணம் பார்ப்போம். 'கல்லெனல்' தமிழ்ச்
செய்யுட்களில் ஆரவாரம் பரபரப்பு ஆகியவற்றை உணர்த்தும் ஓசைக் குறிப்பாகும்.
அகவற் பாலிற் முதற்சீராய், அடுத்துவரும் சீருக்கு அடையாய் நிற்பது. "கல்லென்"
என்பது பின்வரும் பொருட்களைச் சிறப்பித்துளது. பேரூர்- (இது சிலப்பதிகாரம்
போன்ற அகவல் யாப்பிலமைந்த பிற்கால நூல்களிலும் மரபுத் தொடராய் வருவது) - பாசறை,
பொருநை, சேரி, பாக்கம், கறுங்குமணி, ஞாட்பு, கௌவை, சீறூர், கம்பலை, கடம்,
துவலை, கானம், விடிவு, ஊர், கல்லென் சும்மையர் என்ற தொடரும் காணப்படுகிறது
(அகம் 86:18) இத்தகைய சான்றுகள் அடைபுணர்த்த பெயர்களும், மரபுச் சொற்றொடர்களும்
மீண்டும் மீண்டும் வருவதை ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கின்றன. இவற்றுக்கு மேலும்
சில உதாரணங்கள் காட்டுவோம் :
அடைமொழி புணர்ந்த பெயர்கள்:
வெண்கோட்டி யானை
வெண்டலைப் புணரி
நெடுந்தேர் அஞ்சி
சிறியிலை நெல்லி
வாய்வாள் வளவன்
பல்வேற் சாந்தன்
கடியுடை வியனகர்
மரபுத் தொடர்:
1. ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
2.
கருவிவானம் தண்டளி தலைஇய
3. கடும்பகட்யானை நெடுந்தேர்க் குட்டுவன்
4.
படலைக் கண்ணிப் பரேரெறுழ் திணிதோள்
5. முடலை யாக்கை முழுவலி மாக்கன்
இத்தகைய நூற்றுக்கணக்கான அடைமொழி புணர்த்த
பெயர்களும் தொடர்களும் சான்றோர் செய்யுட்களில் மீட்டும் மீட்டும் பயின்றுவரக்
காணலாம். சொற்கள், இவ்வாறு பயின்று வரவே, உவமை, உருவகம், பொருள், அடிக்கருத்து
(Themes) ஆகியனவும் மீட்டும் மீட்டும் வருதல் இயல்பேயன்றோ?
அடைமொழி
புணர்ந்த பெயர்களும் தொடர்களும் மீட்டும் மீட்டும் வருவது போலவே
அடிக்கருத்துக்களும் மீட்டும் மீட்டும் அமைந்துவருவன. இவ்வாறிருப்பதன்
காரணமாகவே சான்றோர் செய்யுட்களைத் திணை, துறை என்னும் பிரிவுகளுக்குள் தொகுத்து
வகுத்தனர் இலக்கண ஆசிரியர்களும் உரைகாரரும். குறிஞ்சித் திணைக்குப் புணர்தலும்,
பாலைக்கு உடன் போக்கும், வெட்சிக்கு ஆநிரை கவர்தலும் எனத் திணைகளுக்கு ஏற்ற
ஒழுக்கமும், அவற்றின் உபபிரிவுகளாகத் துறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. சிற்சில
குறிப்பிட்ட துறைகளை அல்லது பாடற்பொருள்களை அடிப்படையாகக் கொண்டே அக்காலக்
கவிஞர் பாடினர் என்பதனை இவ்விலக்கணப் பாகுபாடு தௌிவாகக் காட்டுகின்றது. வெல்ஷ்
வீரப்பாடல்களிலும் இத்தகைய அமைதியைக் காணலாம். தமிழ்ச் சான்றோருடன் பல துறை
ஒப்புமையுடையவராகக் காணப்படும் முற்கால வெல்ஷ் கவிஞர் வாய்மொழி யிலக்கியமாகப்
பெருந்தொகையான பாடல்களை விட்டுச் சென்றனர். அவையாவும் துறைகளாக
வகுக்கப்பட்டுள்ளன என்று Book of Leinster என்ற நூல் கூறும். படையெடுத்தல்,
எரிபரந்தூட்டுதல் காட்சி உடன்போக்கு உண்பாட்டு, காதல் முதலியன அவற்றிற் சில.
இத்தகையதொரு போக்கைப் பண்டைய ஐரிஷ் ஐதிகக் கதைகளிலும் காணலாம். தாவுகின்ற
பரிமாவின் மீதிவர்ந்து சென்று, தாணிபரும் அரிவையரும் உருவ இசை பொழிந்த
இப்பண்டைப் பாடுநகர்கள் தமது பாடல்களைத் துறைகளின் அடிப்படையிலேயே
அமைந்திருத்தனராம்.
ஆநிரை கவர்தல், வீரச்செயல்கள் புரிதல்,
தும்மைப்போர், கொள்ளையடித்தல், காதற் செயல்கள், படையெடுப்பு, உடன்போக்கு,
வெறியயர்தல், உண்டாட்டு, வெள்ளப்பெருக்கு, முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை
அவற்றுட் பல. இவற்றிற்கும் பழந்தமிழ்ச் செய்யுட்களுக்கும் உள்ள ஒப்புமை
வௌிப்படை. இத்தகைய ஒப்புமைகள் தற்செயலாக நிகழ்வன அல்ல. சான்றோர் செய்யுட்களைப்
போலவே முற்கால வெல்ஷ். ஐரிஷ் பாடல்களும் அவர்களது வீரயுகத்துக்குரியன. எனவே,
கவிமரபிலும், பொருளமைதியிலும் ஒப்புமைகள் காணப்படுவது தவிர்க்க முடியாததே,
பொருளமைதியிலும் ஒப்புமைகள் காணப்படுவது தவிர்க்க முடியாததே. பண்டைக் கிரேக்கக்
காவியப் பாடல்களும் சிற்சில அடிக்கருத்துக்களை (Themes) ஆதாரமாகக் கொண்டே
தோன்றி, காலப் போக்கிற் பெருங் காப்பியமாக உருப்பெற்றன. இலியாது, ஓதீசி
ஆகியவற்றிற் பல கிளைக் கதைகள் இருப்பதும் முன் கூறிய உண்மையை வற்புறுத்தும்.
"சங்கச்" சான்றோர் செய்யுட்கள் தொடக்கத்தில் வாய்மொழி வாயிலாகவே பிறந்து
வளர்ந்து நடந்திருத்தல் வேண்டும் என்பது போல காரணங்களால் உறுதிப்படுகின்றது.
சான்றோர் செய்யுட்களில் பாடலைக் குறிக்கும் போதெல்லாம் அவை வாயாற் பாடப்படுவன
வாகவன்றி எழுதப்படுவனாகக் குறிப்பிடப்படாமை முதற்கண் அவதானிக்கத் தக்கது. தமிழக
நிலப்பரப்பில் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்
என்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை. தமிழரது நாகரிக வளர்ச்சியைே சான்றோர்
செய்யுட்களில் காணக்கூடியதாக உள்ளது. ஒரு சிறு உதாரணங் காட்டலாம்.
புறப்பாடல்களில் தோல் என்னும் சொல் போர் வீரர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளப்
பயன்படுத்தும் கேடயத்தைக் குறிப்பது. மரத்தாலும், உலோகத்தாலும் கேடயங்கள்
செய்யப்படுமுன் மிருகங்களின் தடிப்பான கடினமிக்க தோலினாலேயே கேடயங்களைச்
செய்தனர். இந்திய ஆதிவாசிகள் மத்தியிலும், சில ஆப்பிரிக்கக் குலத்தவர்
மத்தியிலும் இத்தகைய 'தோல்' இன்னும் பயன்பாடு பொருளாயிருக்கக் காணலாம்.
சான்றோர் செய்யுட்களில் தோல், பலகை, உலோகம், ஆகியவற்றால் செய்யப்பட்ட கேடயங்கள்
பற்றிய செய்திகள் உள. பிற்காலத்தில் தோலினாற் கேடயங்கள் செய்யும் வழக்கம்
மறைந்த போதும், தோல் என்ற சொல் நிலைத்து விட்டது. இஃது மொழியியலாளர் நன்கறிந்த
உண்மை. பழங்காலத்திலே இலை, குழையினால் காதணிகள் செய்து அணிந்தனர்.
பிற்காலத்தில் பொன்னாற் செய்த காதணியையும் காதோலை, குழை என்றெல்லாம் வழங்கினர்;
கிராமப் புறங்களில் இன்றும் இச்சொற்கள் வழக்கிலுள.
பல்வேறு
காலத்துக்குரியனவான வாழ்க்கைச் செய்திகள், கதைகள், நம்பிக்கைகள், முதலியன ஒரே
பாடலிலோ, அன்றி ஒரே தொகுதியிலுள்ள பாடல்களிலோ கலந்து காணப்படும் பொழுது,
அவற்றைக் கால, இட ழு என்பதிலும், அவை மரபுச் செய்திகள், என்பதே பொருத்தமாகும்.
பல தலைமுறைகளுக்குரிய செய்திகள் செவிவழிச் செய்திகளாகவும், வாய்மொழிச்
செய்திகளாகவும் நிலவி வந்துள்ளன. சான்றோர் செய்யுட்கள் இவ்வுண்மைக்குச் சிறந்த
உதாரணங்கள் எனலாம். வாய்மொழி இலக்கிய மரபு, வழி வழி வரும் பாடுநரால் பேணி
வளர்க்கப்படுவதொன்று, அது காலத்தையொட்டிய சிற்சில மாற்றங்களுடன் பெரும்பாலும்,
மரபு நெறி பிறழாதது. வாய்மொழி இலக்கியம் பண்தொட்டு வளர்ந்து வந்ததொன்று என்பது.
"பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப"
என்ற பெருந்தலைச் சாத்தனார் சொற்களால் (புறம்.
151) புலப்படும். முன்பேயும் பாடுவார் மகிழக் கொடை கொடுத்த மன்னன் ஒருவன்
செய்தி கூறப்படும்பொழுது, அம்மன்னன் பற்றிய இலக்கிய மரபு நிலவி வந்துள்ளமை
பெறப்படுகிறது.
பண்டைத் தமிழ்ச் செய்யுட்கள் வாய்மொழி இலக்கியங்களே
என்பதை எடுத்துக்காட்ட, இன்னும் இரண்டொரு சான்றுகளைக் காட்டலாம் யாப்பு என்ற
சொல்லை எடுத்துக் கொள்வோம். 'யா' என்னும் வினையடினின்றும் அமைந்த இச்சொல்,
சுட்டுகை, செய்யுள் என்று பொருள்படுவது. யாப்பிலக்கணம், செய்யுளிலக்கணம்,
பண்டைக் காலத்திலே "பாட்டை யாத்தார்" என்றே கூறுவர். யாத்தல் என்றால்
பிணித்தல், செய்யுள் முதலியன அமைத்தல். சொல்லுதல், என்றெல்லாம் பொருள் உண்டு.
சான்றோர் இலக்கியங்கண்டு எழுந்த பேரிலக்கண நூலாம் தொல்காப்பியத்தில்
இவ்வழக்குகளைத் தௌிந்து கொள்ளலாம். உதாரணமாக, பொருளதிகாரம் மரபியலில்,
"பல்வகையானும் பயன்தெரி யுடையது
சூத்திரத்
தியல்பென யாத்தனர் புலவர்"
என்னுமிடத்து, "யாத்தனர் புலவர்" கூறினர் புலவர்"
என்றே பொருள் படும். யாப்பு என்பது வாயாற் கூறப்படும் செய்யுளாகும். மாலை
கட்டுவது போலவும், துணி தைத்தல் போலவும் சொற்களைக் கொண்டு பாட்டுக் கட்டுபவனே
வாய்மொழிப் புலவன். பண்டைய கிரேக்கத்திலும் Rhapsode என்னும் பதம்பாட்டுத்
தைப்பவன் என்றே நேர் பொருள்படும் இத்தகையோர் வாய்மொழிப் புலவராகவே இருந்தனர்.
இனி, கிளவி என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். சான்றோர் செய்யுட்களில் கிளவி,
கூற்று ஆகிய இரண்டும் ஒரு பொருளுடையவாய்ப் பயின்று வருவன. பேசுதல், மொழிதல்,
எடுத்துரைத்தல் என்று பொருள்படும் இச்சொற்கள் வாய்மொழியையே சிறப்பாகக் குறிப்பன
என்பது வௌிப்படை. கிளவி என்பது ஓர் அகப்பொருள் துறை என்பதும் மனங்கொளத் தக்கது.
கிளவி என்பது தனியொரு சொல்லினை மட்டுமன்றி ஒரு முழுப் பாடலையுமே குறித்தது.
உதாரணமாக நற்றிணைப் பாடலொன்றிலே (282) 'கிளவி' என்னுஞ் சொல்
வழங்கப்பட்டிருக்குமாற்றைக் கவனிக்கலாம்.
"அருநோய்...
வணங்குறு கழங்கின் முதுவாய்
வேலன்
கிளவியில் தணியின் நன்று மன்..."
தோழி கூற்றாய இப்பாடலில், "முருகவேளின் முன்பு
இடப்பட்ட சுழற்சிக் கொட்டையை கொண்டு ஆராய்ந்து கூறும் சிறந்தறிவு வாய்ந்த
வேலனது கூற்றால் (பாட்டால்) நோய் தணியப்படுமாயின் அது மிக நல்லதேயாம்" என்று
கூறப்படுகிறது. வேலனது வாய்மொழிப் பாடலைக் கிளவி எனப் புலவர் குறிப்பிடுவது
உற்று நோக்கத் தக்கது. சான்றோர் இலக்கியஞ் செய்த காலத்தில் கிளவி, கூற்று என்பன
ஒரு பொருட் சொற்கள். இவை சொல், பேச்சு, வாய்மொழிப் பாடல் முதலியவற்றைக்
குறித்தன.
யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுக்கிடையே ஆராய்ச்சி
செய்துள்ள பேராசிரியர் லோட் இது குறித்துப் பின் வருமாறு கூறியுள்ளார்.
"அக்கவிஞரைப் பார்த்து சொல் என்பதற்குப் பொருள் யாது என்றால், தெரியாது,
என்பர்; அல்லது ஒரு தனிச்சொல்லையோ, சொற்றொடர்களையோ உதாரணங் காட்டுவர். அவை
கூற்று எனப்படும். அதாவது கவிக் கூறுகளும், முழுக்கவிதையும் 'கிளவி' அல்லது
'கூற்று' என்றே வழங்கப்படும்.
வாய்மொழிப் புலவரது கலையை உடனிருந்து
அவதானித்து ஆராய்ந்த பேராசிரியரின் கண்டுபிடிப்பு, தொல்காப்பியர் கருத்தை
ஒத்ததாகவே உள்ளது. சான்றோர் செய்யுட்கள் வாய்மொழி இலக்கியங்கள் என்பது இதனால்
உறுதிப்படுகின்றதன்றோ?
பன்மொழிகளிலுள்ள வீரயுகப் பாடல்களை நன்கு
ஆராய்ந்துள்ள பேராசிரியர் சி.எம்.பௌரா அவற்றிற்குப் பொதுவாகப் பின்வரும் எட்டு
அம்சங்கள் இருப்பதைக் காட்டியுள்ளார்.
1. ஒரு நிகழ்ச்சியை அல்லது கதையை
எடுத்துக் கூறுவதாக இருத்தல்.
2. பெரும்பாலும் வீரயுகத்திலே
தோன்றியனவாக இருத்தல்.
3. சிறிய விஷயங்களையும் நுணுக்கமாக
வருணிப்பதாயிருத்தல்; உதாரணமாக வருவோர் போவோரை உபசரிக்கும்முறை ஆடை,
அணிகலன்கள், உண்டாட்டு, புரவி, யானை ஆகியன இயற்கையோடமைய வருணிக்கப்படுதல்,
சுருங்கக் கூறின் பருப்பொருள்கள் நன்கு சித்தரிக்கப்படுதல்.
4. கவிஞன்
தன் கூற்றாகக் கவிதை பாடியிருப்பினும் பெரும்பகுதிப்பாடல்கள் பாத்திரங்களின்
கூற்றாக இருத்தல்.
5. தொடர்கள், கருத்துக்கள் ஒரே தன்மையனவாக மீண்டும்
மீண்டும் வருதல். (அவை ஒரேவழி மாறியும் விரவியும் வரும்)
6. பாடல்கள்
அடியுடன் அடிசேரப் பொருள் நிறை பெறுமட்டும் நிமிர்ந்து செல்லுதல்.
7.
பாடலின் தலைமகன் வீரபுருடன், புகழெனின் உயிருங் கொடுக்கம் அவனது ஆண்மையும்
புகழுமே பாடலின் விழுமிய பொருளாயிருத்தல்.
8. உண்மையை உரைப்பதாகவே
அமைந்திருத்தல்; செவிவழியாகவோ அன்றிக் கண்ணாற் கண்ட புலக்காட்சியினாலோ
நிகழ்ந்தவற்றைக் கூறுவதாகவே அமைந்துகிடப்பன. அதனாலே பிற்காலக் காவியங்களிலும்,
முற்காலப் பாடல்கள் வரலாற்றுச் செய்திகளை அதிகம் உடையனவாக உள்ளன.
திரு. பௌரா கூறியுள்ள எட்டு அம்சங்களும் சான்றார் இலக்கியத்திற்
சரிவரப் பொருந்தியிருக்கக் காணலாம். மேற்கூறிய அம்சங்கள் எட்டினையும் இருபெரும்
பிரிவிற்குள் அடக்கிக் கொள்ளுதல் கூடும்.
(1) ஒன்று, பாடல்களின் மொழி
நடை, யாப்பு, காலம் இலக்கிய நெறி முதலியன சம்பந்தமானது.
(2) மற்றொன்று,
பாட்டுடைத் தலைவர்கள், அவர்தம் வாழ்வியல், குறிக்கோள் உடைமை முதலியன
சம்பந்தமானது. சுருங்கக் கூறின் வீரப்பாடல்களின் உருவமும் உள்ளடக்கமும்
ஒப்புமையுடையன வாயுள்ளன. கிரேக்க மொழியுட்படப் பிறமொழிகள் பலவற்றில் உள்ள
வீரயுகப் பாடல்கள் சில தலையாய நாயகர்களது வீரத்தையும் புகழையும் விதந்து
கூறுவனவாயிருப்பதைக் காண்கிறோம். அதுபோலத் தமிழ் வீரப்பாடல்களிலும் கரிகாலன்,
நெருஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் முதலிய சிலரே முழுமையான பாத்திரங்களாக
வார்க்கப்பட்டுள்ளமை நோக்கத் தக்கது. உதாரணமாக, தமிழ் வீரப் பாடல்களிலும்
இடம்பெறும் தலைமக்கள், பெரியோர் ஒழுக்கத்துக்கு மாறானவற்றிற்கு நாணுபவராய்,
பழியஞ்சுவராய்த் தமக்கென ஓர் அறக் கோட்பாடுடையவராய்க் காணப்படுகின்றனர். நாண்,
பழி, அறன் ஆகிய சொற்கள் ஈண்டுக் கவனிக்கத்தக்கன. கிரேக்க காவியங்களிற் பயிலும்
Aidos Nemesis, Dike ஆகிய சொற்கள் முற்கூறிய தமிழ்ச் சொற்களுக்கு நேரான
பொருளுடையன. அது போலவே சான்றோர் செய்யுட்களில் பால்வரை தெய்வம் சிறப்பானதோர்
இடத்தைப் பெற்றுள்ளது. கிரேக்கச் சொல்லான Moira எல்லா வகையிலும் இதனை
ஒத்துள்ளது. இவற்றை எல்லாம் உற்று நோக்கும் பொழுது உலகின் பல பகுதிகளிலே
தோன்றிய வீரயுகப் பாடல்களுக்கு நிகராகத் தமிழிலக்கியத்திற் சிறப்புப் பொருந்திய
சான்றோர் செய்யுட்கள் அமைந்துள்ளமை உறுதிப்படும். இறுதியாகக் குறிப்பிட்ட
சான்றோர் என்னும் சொல்லையே எடுத்து நோக்கின், அது வீரர், உயர்ந்தோர், சிறந்தவர்
என்று பொருள் படுவதைக் காணலாம். பண்டைக் கிரேக்கப் பாடல்கிலும் வழங்கும்
Agathos என்ற சொல் இதற்கு நேர்ப் பதமாகும்.
பிற மொழிகளிலுள்ள வீரயுகப்
பாடல்களைப் படிப்பதாலும், அவை பற்றிய ஆராய்ச்சிகளைத் தெரிந்து கொள்வதாலும்
ஆரம்ப நிலையிலிருக்கும் தமிழ் வீர யுகம் பற்றிய ஆராய்ச்சி பெரிதும் பயனடையும்,
அதே சமயத்திற் பிற மொழியாராய்ச்சியாளர்களும் தமிழிலக்கியச் சான்றுகளிற்
பயன்பெறுவர் என்று கூறவதில் தவறிருக்காது என்றே எண்ணுகிறேன். ஏனெனில், வீரயுகப்
பாடல்களின் ஆராய்ச்சியானது தொடக்கத்திலிருந்தே ஒப்பிலக்கிய ஆய்வாகவே இருந்து
வந்துள்ளது.
4. இருகோட்பாடுகள்
புதுமைப் பெண்ணைப் பற்றிப் பாடவந்த பாரதியார்
வீராவேசத் தோடு ஓரிடத்திலே, "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்" என்றார்.
தமது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் வீர சுதந்திரம் வேண்டி நின்ற கவிஞர்,
தமிழ்ப் பெண்கள் "விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை விரைவில் ஒழிக்க
வேண்டுமென்று குரலெழுப்பினார். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியன பல
நுற்றாண்டுக் காலமாகப் பெண்மையின் இலக்கணங்களாக எமது இலக்கியத்திலே பாராட்டப்
பெறுவதை மனத்திற் கொண்டே நவயுகக் கவியான பாரதியார், நாணும் அச்சமும் யாருக்கும்
வேண்டாம் என்றார். மேற்கூறிய மெல்லியல்புகள் நான்கனுள்ளும் நாண் என்பதே
சிறப்பாகக் கொள்ளப்பட்டு வந்தள்ளது. 'உயிரினுஞ் சிறந்தன்று நாணே" என்று
தேற்றத்துடன் கூறுகிறது தொல்காப்பியம். இவ்வாறு பெண்பாற்கரியதாகக் கூறப்படும்
நாண் சான்றோர் செய்யுட்களிலே ஆண்களுக்குரியதாகக் கூறப்படுவதை நாம் காண்கிறோம்.
சான்றார் செய்யுட்களின் வழிவந்த திருக்குறளிலும் ஒழிபு இயலிலே உயர்ந்தோருக்கு
உரிய குணங்களில் ஒன்றாக நாண் உடைமை தனி அதிகாரமாக வகுக்கப்பட்டுள்ளது.
"ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு."
இதன் பொருள்: ஊண், உடை, உறக்கம், அச்சம், காமம்
ஆகியன மக்களுயிர்க்கெல்லாம் பொது; ஆனால் நன்மக்கட்குச் சிறப்பியல்பு
நாணுவுடைமையே அவையல்ல என்பதாகும். திருவள்ளுவர் தமக்கேயுரிய முறையில் அதன்
சிறப்பைக் கூறியுள்ளார்.
"பெண்கள் விடுதலைக் கும்மி" என்னும் பாடலில்
கற்பைப் பற்றிப் பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்.
"கற்பு நிலையென்று சொல்லவந்தார் - இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்."
கற்பைப் பற்றி பேசினால் அது ஆணுக்கும்
பெண்ணுக்கும் பொதுவாக இருத்தல் வேண்டும் என்றார். பிற்காலத்தில் எவ்வாறாக
அமைந்திருந்தாலும் சான்றோர் செய்யுட்களில் நாண் இரு கட்சிக்கும் பொதுவில்"
வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சான்றோர் செய்யுட்கள் தமிழகத்து வீரயுகத்தை பிரதிபலிக்கும் சொல்லோவியங்கள்.
போரின் அடிப்படையிலேயே அன்றைய சமுதாயம் வாழ்ந்தது. இடைவிடாத போரின் மத்தியில்
சில இலட்சியங்கள் நிலவத்தான் செய்தன. கற்றானைக் கற்றான் காமுறுவதுபோல் வீரனை
வீரன் மதிக்கும் பண்பு வீரயுகத்தின் இலட்சியமாக இருந்தது. போரென்பது வாழ்க்கை
முறையாக அமைந்துவிடவே அதற்குச் சில விதிகளும், ஒழுங்குகளும், ஏற்பாடுகளும்,
அத்தியாவசியமாயிருந்தன. இவை ஏட்டில் வரையப்பட்ட சட்டதிட்டங்களல்ல. சமூகத்திலே
யாவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை விதிகள். சமயங்களின்
வளர்ச்சியைத் தொடர்ந்து தர்மம், அதர்மம், பாவம், புண்ணியம் முதலிய கோட்பாடுகள்
மனிதனது சிந்தனைகளையும், செயல்களையும் பாதிப்பது போல வீரயுகத்திலே மனிதரது
உறவுகளினடிப்படையிலே எழுந்த சில நம்பிக்கைகள் அவர்களின் செயல்களைப் பாதித்தன.
அத்தகைய நம்பிக்கைகளில் ஒன்றுதான் நாண்.
நாண் என்றால் என்ன? சாதாரணமாக
வெட்கம், கூச்சம் என்று பொருள் கூறப்படும். ஆயினும் எதற்காக, வெட்கப்படுவது,
கூச்சப்படுவது என்று கேட்பது இயல்பே. பழைய உரையாசிரியரான இளம்பூரணர்
மேல்வருமாறு விளக்கந் தந்துள்ளார்.
"ஒப்பு முதலாக நுகர்ச்சியீறாக
அவ்வழிவரும் சொல்லெல்லாம் நாட்டின் வழங்குகின்ற மரபினானே பொருளை மனத்தினான்
உணரினல்லது மாணாக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி ஆசிரியன் காட்டலாகாத
பொருளுடைய 'நாண்' என்றது பெரியோர் ஒழுக்கத்து மாறாயின் செய்யாமைக்கு நிகழ்வதோர்
நிகழ்ச்சி; அதுவும் காட்டலாகாது."
அதாவது நாண் என்றால் இன்னது எனக்
காட்ட முடியாதென்றும், அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலே பிறந்து வளர்ந்தவர்
அனுபவத்தின் மூலம் உணர்ந்தறிவதென்றும் கூறுகின்றார், உரையாசிரியர்.
"ஒழுக்கமும், வாய்மையும், நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார். (குறள் 952)
என்னும் குறளுக்கு உரை கூறப்புகுந்த பரிமேலழகர்
மேல்வருமாறு கூறுகிறார்.
"உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தமக்குரிய
ஒழுக்கம், மெய்மை, நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும் கல்வியான் அன்றித் தா
மாகவே வழுவார்."
இவ்விடத்திலே நாணோடு தொடர்புடைய பழி என்னுஞ் சொல்லையும்
சிறிது நோக்குவோம். நாணைப் போலவே பழியென்னும் கோட்பாடும் ஒருவனுடைய செயல்களைக்
கட்டுப்படுத்துந் தன்மை யுடையது. ஆயினும் இரண்டும் ஒருவேறு நிலையிலுள்ளன.
நாண் என்பது ஒருவன் தனது செயலைப் பற்றித் தான் மனத்திலே கொள்ளும்
உணர்ச்சியாகும். அந்த வகையில் அது மனச்சாட்சி போன்றது. நாண் மனத்திலுள்ளவன்
இவ்வாறு ஒழுகமாட்டான் எனக் கூறும் பொழுது அது ஒருவனுடைய அக நிலையைக்
குறிக்கின்றது. ஈழத்துப் பூதன் தேவனார் அகநானூற்றுப் பாடலொன்றில் (231) இவ்வகை
நிலையினைத் தௌிவாக வர்ணித்துள்ளனர்.
"நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்"
'நல்ல புகழைக் கருதிய நாணையுடைய மனத்தர்' என்று தலைவன் தோழி வாயிலாகப்
புகழப்படுகிறான். மான உணர்ச்சிமிக்க வீரரை 'நாணுடை மறவர்' எனப் புலவர் பல
இடங்களில் வருணித்துள்ளனர்.
"போர்ப்பறை கேட்டவுடன் தாமதியாது புறப்பட்டுச் செல்பவர்கள் மானமிக்க
மறவீரர் என்றும், பூக்கோள் குறித்த தண்ணுமை ஒலி கேட்கும்பரை தாமதித்துச்
செல்பவர்கள் நாணுடைந்த மாக்கள்" என்பதும் அக்காலக் கொள்கை. உதாரணமாக, நொச்சி
நியமங்கிழார் பாடிய புறப்பாடலில் (293) 'நாணுடைய மாக்கள்' என்னுந் தொடர்,
நாணுடைந்த மாக்களைக் குறிக்கும் எதிர்மறைக் குறிப்பு மொழியாக அமைந்துள்ளது.
நாணுடைந்தவர்களை 'மாக்கள்' எனக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. மாக்கள்,
மக்களினின்றும் வேறுபடுவர்; அவர் பகுத்தறிவிலார்; 'மாவு மக்களும் ஐயறிவினவே'
என்பது தொல்காப்பியம். மக்கள் ஐம்பொறியுணர்வோடு மனவறிவுமுடையவர். இதனாலேயே
"நாணுடை மனத்தர்" என்றார் பூதன் தேவனார். "நாணுடை நெஞ்சம்" என்பர்
கழாத்தலையார். இவற்றை நோக்கும் போது நாண் என்பது ஒருவனது மனப்பக்குவம்
சம்பந்தமானதாகத் தோன்றுகிறது. இதனை மனங்கொண்டே பொய்யாமொழியாரும்,
"நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி யற்று"
என்றார். அதாவது, "நெஞ்சத்தே" நாணில்லாத மக்கள்
இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது உயிரியக்கம் அன்று" என்பதாம். எனவே
நாண் என்பது தான் சம்பந்தமானது எனலாம். இது குறளிலே கட்டுரைக்கப்பட்டுள்ளது
"பிறர் நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து."
காண்பவரும் கேட்பவருமாகிய பிறர் நாணத்தக்க பழியை
ஒருவன் தான் நாணாது செய்வானேயானால், அது அவனைவிட்டு அறம் அகன்றுவிடத்தக்க
குற்றமாகும். பரிமேலழகர் கூறுகின்றார்: "தான் எனச் செய்வானைப் பிரிக்கின்றார்
ஆகலின் 'பிறர்' என்றார். நாணொடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்."
பிற்காலக் கருத்துக்களையுஞ் சேர்த்துக் கூறுகின்றாரெனினும், நாண், பழி, புகழ்,
அறம் ஆகியவற்றுக்கிடையுள்ள தொடர்பையும் பிணைப்பையும் தௌிவாக்கியுள்ளார் உரை
ஆசிரியர்.
பழி என்பது ஒருவன் தனது செயலைப்பற்றிப் பிறர் யாது
கருதுவரோவெனக் கொள்ளும் அச்சமாகும். நாண் ஒருவன் தனது செயல் குறித்துக்
கூச்சப்படும் உணர்ச்சியாயின், பழி அது குறித்து அவன் உலகிற்கு அஞ்சுவதாகும்.
இதனடிப்படையிலேயே பழியஞ்சுவது என்னுந் தொடரும் வழங்குவதாயிற்று. பிற்காலத்திலே
சமயக் கருத்துக்கள் வேரூன்றிய பின்னர், பழியொடு பாவம் என்னும் கோட்பாடும்
சேர்ந்து 'பழிபாவம்' என்னும் தொடர் மொழி நிலவலாயிற்று.
"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல்
அறிவார் தொழில்"
என்ற குறளின் உரையில், "பாவமும் பழியும் கேடும்
முதலாக அஞ்சப்படுவன பலவாயினும்" எனக் கூறிச் செல்லும் பரிமேலழகர்,
பாவத்தினையும் பழியினையும் இணைத்துச் சொல்வதும் கவனிக்கத்தக்கது. எனவே பழி,
என்பது பிறர் சம்பந்தமானது எனலாம். வீரயுகத்திலே புலவர்கள், மன்னர் முதலியோரது
செயல்களை எடைபோடும்பொழுது, நாண், பழி, புகழ் முதலிய கோட்பாடுகளின்
அடிப்படையிலேயே தமது கருத்துக்களைக் கூறினர். இப்பண்புகள் தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியனின் "குடிபழிதூற்றுங் கொடுங்கோன்மையும், புலவர் பாடும்
புகழ் பெறாமையும் இரவலர்க்கீயாமையும் ஒரு வேந்தனைக் கீழ்மைப்படுத்துவன" என்னும்
உணர்வுடன் கூறிய புறப்பாட்டில் (72) தௌிவாகத் தெரிகின்றன.
"நகுதக்கனரே நாடுமீக் கூறுநர்
இளைய னிவனென
வுளையக் கூறி
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தான்
நெடுநல் யானையும்
தேரும் மாவும்
படையமை மறவரும் உடையும் யாமென்
றுறுதுப் பஞ்சா
துடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ்
சிதையத் தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎனாயிற் பொருந்திய
என்னிழல்
வாழ்நர் சென்னிழற் காணாது
கொடிய னெம்மிறை யெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றம் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி
மருதன் றலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது
வரைகவென் னிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா வின்மை
யானுறவே."
நாண் இல்லாதவனுக்கும், பழியஞ்சாதவனுக்கும் புகழ்
சேராது என்பது அக்கால நம்பிக்கை. அக்கால மக்களைப் பொறுத்தவரையில் புகழையே
உயிரினும் மேலாக மதித்தனர். எனவே புகழுக்குத் தடையாக இருக்கும் செயல்களை
இயல்பாகவே விடுத்தனர். நடைமுறையின் வீரர் யாவரும் இவ்வுயரிய இலட்சியங்களைக்
கைப்பிடித்தனரென்று நாம் துணிந்து கூறு முடியாது. இத்துணை நெடுங்காலத்திற்குப்
பின் உண்மையறிவது இலகுவன்று. ஆயினும் சான்றோர் செய்யுட்களில் இவ்விலட்சியங்களே
பெரிதும் போற்றப்படுகின்றன. எந்த ஒரு சமூகமும் சட்டதிட்டங்களும் நடைமுறை
ஒழுக்கங்களுமின்றி நிலைத்து வாழ முடியாதாகலின், வீரயுகத்திலே மேற்கூறிய
நம்பிக்கைகள் பெரும்பாலும் நிலவின எனக் கருதலாம். அதே சமயத்தில் புலவர்களும்
இவ்விலட்சியங்களைப் பிரசித்தப்படுத்தினர் என்பதனை நினைவுகூர்தல் தகும்.
அகநானூற்றுப் பாடலொன்றிலே "புலவர் புகழ்ந்த நாண்" என்று கூறப்படுகிறது.
புகழ், பழி முதலியவற்றுக்குள்ள பிணைப்பைப் புறநானூற்றுப் பாடலொன்று
தௌிவாகக் காட்டுகின்றது. இளம் பெருவழுதி என்பான் பாடிய அப்பாடல்" "உண்டா
லம்ம..." எனத் தொடங்குவது.
"புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்."
பழியச்சத்திற்கு ஓர் உதாரணம் பார்க்கலாம்.
நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய வீரன் சபதம் செய்கிறான். 'வஞ்சினம்' என்று அது
கூறப்படும். தன்னை இகழ்ந்துரைத்த மன்னரைப் போரில் வென்று அவர் தம் முரசினையும்,
கொடி, குடை முதலியவற்றையும் கைப்பற்றாவிடின் தான் குடிகள் பழிதூற்றும்
கொடுங்கோலனாக மதிக்கப்படக் கடவது என்கின்றான். பழிக்கு அஞ்சும் பான்மை
வஞ்சினவாயிலாகத் துலக்கமாகின்றது.
போர்க்களத்தில் மட்டுமின்றி அக ஒழுக்கத்திலும் தலைமக்களுக்கு நாண்
வற்புறுத்தப்படுகின்றது. களவொழுக்கத்தை நீட்டித்துத் திருமணத்திலே சிரத்தை
காட்டாத ஆண்மகனுக்கு நாண் என்ற உணர்ச்சியின்பேரில் புத்திபுகட்ட
முற்படுகின்றாள் தோழி. சிறைப்புறத்தேயுள்ள தலைவன் கேட்டு வரையும் பொருட்டுத்
தோழியொருத்தி தலைவியை நோக்கிப் பின்வருமாறு கூறத் தொடங்குகிறாள்:
"பேணுப பேணார் பெரியோ ரென்பது
நாணுத்
தக்கன்றது காணுங் காலை." (நற். 72)
அதைப்போலவே, களவொழுக்கத்தின் கண்ணே தலைவியின்
நிலைமை இன்னல் நிறைந்ததாய் உள்ளதென்று தோழி கூறக்கேட்ட தலைவன் அந்நிலையிலே
தலைவியை வைத்தற்கு நாணினன் என்று குறுந்தொகைப் பாடலொன்று காட்டும்.
"நன்னர் நெஞ்சத்தன் தோழி
நின்னிலை
யான்றனக் குரைத்தனெ னாகத்
தானா ணினனிஃ தாகாவாறே...."
"நல்ல நெஞ்சத்தையுடையனான தலைவன், இவ்வொழுக்கம்
நான்றாகாமையை நினைத்து பெரிதும் நாணமுற்றனன்" என்பது தோழியின் கூற்று.
கருவூர்க் கதப்பிள்ளை என்னும் சான்றோர் பாடிய இப்பாட்டின் முற்பகுதியிலே
இவ்வாறு நன்னெஞ்சத்தோடு நாணிய தலைமகனுக்கு உவமை கூறப்படுகிறது.
"பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல...."
இதன் பொருள்: "முன்னரும் தாமறிந்துள்ள
நடுவுநிலைமையுடைய பெரியோரைக் கண்டவிடத்துத் தமது கடமைகளையறிந்த
நன்மக்களைப்போல".
தலைவன் களவொழுக்கத்திலிருப்பினும் தோழி வரைவு
கடாதலைக் குறிப்பாகச் சொன்ன அளவிலே, தனது கடமையை உணர்ந்து கொண்டான் என்பதற்கு
விளக்கமாக, "கடனறிமக்கள்" போல என்றார் புலவர். புலவர் கூறும் 'கடனறிதல்'
என்பதற்கும், இளம் பூரணர் கூறும் விளக்கத்திற்கும் பெரிதும் ஒப்புமை இருப்பதைக்
கவனிக்கலாம்.
நாண் என்பது அகத்தினும் புறத்தினும் வருவதாயினும்
புறத்திலேயே வீரயுகப் பண்பிற்கு இயைபுடையதாய் அமைந்துளது. அகத்திணைப்
பாடல்களிலே நாண் என்பதன் பொருள் விரிவடைந்து பொருட் செறிவிழந்தது என்று
கூறலாம். அவருக்கு நாணுதல் முதலியன இத்தகையதே. புறப்பொருள் வெண்பாமாலை
கைக்கிளைப் படலத்தில்,
"ஒன்றார் கூறு முறுபழி நாணி
மென்றோ ளரிவை
மெலிவொடு வைகின்று"
என்னும் கொளு, மெல்லியளான தலைவி பொருந்தாதார்
சொல்லும் அவருக்கு நாணி வாட்டமுறுவதைக் குறிக்கின்றது. அவருக்கு நாணுவதைப்
போலவே இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைமகன் முன்னின்று நலம்பாராட்டக் கேட்ட
தலைமகன், அவன் முன் நிற்கமாட்டாளாய், நாணி ஒரு மருங்கு ஒதுங்கிக் கண்களைப்
புதைத்தலாகும். நாணிக் கண்புதைத்தல் அல்லது இடையூறு கிளத்தல் என்று இதனை ஒரு
துறையாக அமைத்தனர் ஐந்திணைக் கோவையாசிரியர். நூற்றுக் கணக்கான துறைகளில்
ஒன்றாகவிருந்த இதனையே விதந்தெடுத்து, ஒரு துறைக்கோவையாக நானூறு செய்யுட்கள் பாட
முற்பட்டனர் பிற்காலக் கவிராயர்கள். இவருள் பதினேழாம் நூற்றாண்டில் இரகுநாத
சேதுபதிமீது ஒருதுறைக் கோவை பாடிய அமிர்த கவிராயர் பிரசித்தமானவர். அளவற்ற
கற்பனையும் நாணறற மொழியும் நிறைந்த இதுபோன்ற நூல் படிப்பார் நாணிக் கண்புதைக்க
வேண்டியவராயுள்ளனர் என்கிறார் டாக்டர் சுப.மாணிக்கனார். இலக்கிய நெறியில்
ஏற்பட்ட மாற்றத்தை மாத்திரமன்றி நாண் முதலிய கோட்பாடுகள்பற்றி நிகழ்ந்த
கண்ணோட்ட மாற்றத்தையும் இத்தகைய பிற்கால நூல்கள் காட்டி நிற்கின்றன எனலாம்.
அகத்துறையில் பிறர் புகழ்ச்சிக்கு நாணுவது போலவே, புறப்பாடல்களில் தலைமக்கள்
தம்மைப் பிறர் பாராட்டுங்கால் நாணுவர். உதாரணமாக வன்பரணர் பாடலில் (புறம் 152)
"மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பிக்
கோவெனப் பெயரிய காலை யாங்கது
தன்பெய ராகலி னாணி..."
என்னுமடிகளிலே பாணர் கூட்டம் தன் பெயரைச்
சொல்லிப் புகழ்ந்தபோது நாணிய வல்விலோரிபற்றிக் குறிப்பிடப்படுகிறது. நல்லோர்
தங்கள் முன்னர் பிறர் தம்மைப் புகழ்வதை நாணுவர் என்னுங் கருத்தைச்
சூத்திரம்போலக் கூறுகிறது குறுந்தொகைப் பாடல் ஒன்று.
"சான்றோர்,
புகழு முன்னர் நாணு
பழியாங்
கொல்பவோ காணுங்காலே." (குறுந்.252)
நெய்தற்கலியிலே (2) மரங்கள் துயிலும் காட்சிக்கு
உவமையாக.
"தம்புகழ் கேட்டார்போல் தலை சாய்த்து"
என்று வருகிறது. பிறபாடல்களிலும் (புறம் 258)
இத்தகைய கருத்துக்களைக் காணலாம். இயற்பண்புடன் விளங்கும் இத்தகைய வருணனைகள்
பிற்காலத்தில் கேவலம் வெறும் வருணனை மரபாகியதால் பொருட்சிறப்பிழந்து
சொற்சிலம்பங்களாயின.
கடமையின்னதென்று சொல்லித் தெரிந்தால் அதிலே
சிறப்பில்லை. நாணென்பதும் தன்னைத்தானே நல்லது கெட்டதிற்கூடாகச் செலுத்த உதவும்
கோட்பாடாகும். கடமையுணர்ச்சிபோல அது உணர்வுபூர்வமானது என்பது சான்றோர்
செய்யுட்களின் உட்கிடை கடமையைப்பற்றிப் பாரதியார் கூறுவதும் இவ்விடத்திற்
பொருத்தமாக உள்ளது.
"கடமையாவன தன்னைக் கட்டுதல்
பிறர்துயர்
தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்."
இதுகாறும் கூறியவற்றால் 'நாண்' என்பது பண்டைத்
தமிழகத்திலே ஆண்மைக்குரிய பண்புகளிலொன்றாகக் கொள்ளப்பட்டதென்றும், பழியஞ்சுதல்
என்னும் கோட்பாட்டிற்கும் அதற்கும் நெருங்கிய தொடர்புண்டென்றும். அவ்விரண்டும்
அக்கால மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தின என்றும், காலப் போக்கில் அவை
சமயக்கோட்பாடுகளுடன் கலந்தனவென்றும் அறிந்து கொள்ளலாம்.
நாண், பழி,
புகழ், அறம் முதலிய கருத்துப் படிவங்களும் அவைபற்றிய இலக்கிய வழக்காறும்
பண்டைக் கிரேக்க இலக்கியத்திலும் காணப்படுகின்றன. இவ்வொற்றுமை எதிர்பார்க்கக்
கூடியதொன்றே. ஆதி கிரேக்க நூல்களும் வீரயுகம் ஒன்றனுக்குரியனவாதலால் இரு
தரப்பிலும் ஒத்த கருத்துக்களும் இலக்கியப் போக்குகளும் காணப்படுவது இயல்பே. அது
மட்டுமல்ல; வீரயுகத்தையடுத்த காலப் பகுதிகளிலும் இரு நாட்டு இலக்கியங்களின்
நோக்கும் போக்கும் பெருமளவில் இயைபடையனவாகவே உள்ளன. உதாரணமாக, வீரயுகத்தைத்
தொடர்ந்து அறவியற் கருத்துக்கள் சார்ந்த பனுவல்கள் இரு மொழிகளிலும்
முக்கியத்துவம் பெற்றன.
நாண், பழி ஆகிய இரண்டும் கிரேக்க மொழியில் முறையே Aidos, Namesis என்னுஞ்
சொற்களாற் குறிக்கப்படுவன. இவை ஒன்றற்கொன்று நேர்ப்பதங்கள். இவ்விரு
சொற்களையும் அவற்றின் பொருளாழத்தையும் தௌிந்தாலன்றிக் கிரேக்க
சான்றோரிலக்கியத்தை முழுமையாக என்று கிரேக்க இலக்கிய அறிஞர் கூறுவர்.
இவ்விரண்டும் ஒன்றையொன்று வேண்டி நிற்கும் இரட்டைக் கருத்துப் படிவங்களாம்.
நாண், பழி ஆகியனவும், அவற்றை ஆதாரமாகக் கொண்ட புகழும் யாவரிடத்துச் சிறப்பாகச்
செயற்படும் என்பது பற்றி, கிரேக்கர் கருதியது இங்குக் குறிப்பிடத்தக்கது. அவை
சுதந்திரமுடையார்கண்ணே குடிகொண்டு விளங்குவன என அவர்கள் கொண்டனர். இற்பிறந்தார்
மாட்டு இவ்வியல்புகள் சிறப்பாக அமைவன என்றே வள்ளுவரும் கூறியுள்ளதை ஏலவே
பார்த்தோம். அதனுடைய விகற்பமாகவே சுதந்தரரைக் குறிப்பிடுகின்றார், கிரேக்க
நூலாசிரியர். "ஒரு மனிதன் சுதந்தரமாக இருக்கும்போதே இவை செயற்படுகின்றன;
நிர்பந்தம் இருத்தலாகாது" என்கிறார் பேராசிரியர் கில்பெர்ட் மறே. அதாவது
பிறரேவலின்றிச் சுய உணர்வினால் இவற்றைக் கடைப்பிடிப்பவன் சுதந்தரன் என்பது
அவர்கள் கொள்கை. இத்தகைய கருத்து விளக்கம் தமிழிலும் காணப்படுகிறது. உதாரணமாக
அகனைந்திணைக்கு உரிய தலைமக்களை விவரிக்குமிடத்து உரையாசிரியர் இளம்பூரணர்
பின்வருமாறு கூறுகிறார்.
"அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின்
வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக்
குற்றவேல் செய்வோர்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடைய
ராகலானும்....இன்பம் இனிது நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதானாலும்,
இவர் புறப்பொருட் குரியராயினார்."
பிறரேவல் செய்வார்
நாணுக்குறைபாடுடையவர் என்பதனால், அதன் மறுதலையாகச் சுதந்தரமாக வாழ்பவா நாண்வேலி
(குறள். 1016) உடையவர் என்பது பெறப்படும்.
நாண் என்பதற்கு இளம்பூரணர் விளக்கங்கூறியவிடத்து, அதனையொருவன்
'மனத்தினால் உணரினல்லது வேறுபடுத்திக் காட்டலாகாது' என்று கூறியதைப்
பார்த்தோம். இவ்வாறே கிரேக்கரும் கூறினர். பேராசிரியர் மறே எழுதுகிறார்:
"அயிடோஸ் (நாண்) என்பது மன உணர்வேயாகும்; ஆகவே அதனை அளவிடமுடியாது; வகுக்க
முடியாது; கொள்கையாகக் காட்ட முடியாது. அது தன்னளவில்தானே இயங்கி வளர்வது.
அதற்கு வரம்பு கிடையாது. அதனை உடையோன் உள்ளமே அதன் எல்லை." அடிமைகள்
நாணுக்குறைபாடுடையவர் என்று இளம்பூரணர் கூறியதைப் போலவே கிரேக்கரும்
அடிமைகளிடத்து நாண் இல்லையென்றனர். இன்பியல் நாடகாசிரியன் இயூரிபிடீஸ் இதற்குச்
சமாதானம் கூற முனைந்தான். "இரக்கமின்மையே நியதியாயுள்ள இடத்தில் நாணைப் பற்றி
ஏன் பேசவேண்டும்?"
இற்குடிப்பிறந்தானொருவன் தனக்கு இயல்பாயுள்ள
நாணுடைமை காரணமாக அடிமைகளைப் பரிவுடன் நடத்தக்கூடும். ஆனால் அடிமைக்கு நாண்
இருப்பதாகக் கிரேக்க ஆசிரியர்கள் கூறினாரல்லர். இதனடிப்படை சிறிது சிந்திக்கத்
தக்கது. நாணும் பழியும் ஒழுகலாறு சம்பந்தமானவை. கிரேக்க இலக்கியங்களின்படி
தலைவன் ஒருவன் சில செயல்களைச் செய்யும்பொழுது மனங்கூசுவதே இவ்வடிப்படை.
அச்செயல்களை யாது காரணத்தாலோ செய்தால் அவற்றிற்காக நாணுகின்றான்;
செய்யாவிட்டால் அவற்றைத் தவிர்க்க முயல்கிறான். எனவே, சில செயல்களைச்
செய்யாதிருக்க அவனுக்குச் சுதந்தரம் இருத்தல் அவசியம். உதாரணமாக, பெண்ணைக்
கொல்லுதல் நாணத்தக்க செயல் என்று உணரும் சுதந்தரன் கொல்லாது விடுகிறான். ஆனால்
தலைவன் ஆணையிட்டால் அடிமை அக்கொடிய செயலைச் செய்தேயாக வேண்டும். அவனைப்
பொறுத்தவரையில் நாண் பொருளற்றுப் போகிறது. தட்டிக் கேட்க ஒருவரும்
இல்லாதவிடத்தும் தானே உணர்ந்து சில செயல்களைத் தவிர்ப்பதற்கு உள்ளார்ந்த
நாணுர்வு காரணம் என்று கிரேக்கர் கூறினர்.
ஹோமான் இலியாது காவியத்தில்
இதற்கோர் உதாரணம் பார்ப்போம். மாவீரன் அக்கிலீஸ் ஈற்றியனது நகர்மீது
போர்தொடுத்தபோது, அங்கு நிறைந்திருந்த சிலிசியரையும் ஈற்றியனையும் கொன்று,
நிதிக் குவைகளைச் சூறையாடினான். ஆயினும் ஈற்றியன் அணிந்திருந்த கவசம்
முதலாயவற்றை மாசுபடுத்தாது விட்டான். அவன் நெஞ்சில் நிறைந்திருந்த நாண் அவ்வாறு
செய்வதற்கு இடங்கொடுக்கவில்லை. அது மட்டுமல்ல. போரில் இறந்த ஈற்றியனைத் தகுந்த
சிறப்புடன் சிதையில் வைத்து எரித்தான். நாணுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக
இதனைக் கொண்டனர். நாணோடு கலந்து காணப்படும் மென்மையும் அக்கிலீசின் செயலிற்
புலப்படுகிறது. ஈற்றியனுக்கு இவ்வாறு மரியாதை காட்டியதால் அக்க்லீசுக்கு லாபமோ
நட்டமோ கிடையாது. ஈற்றியனது சிறப்புமிக்க போர்க்கவசத்தைச் சிதைத்திருப்பினும்
அவனைக் கண்டிக்க யாருமில்லை. போரில் பகைவரது பொருட்களைச் சிதைப்பது சர்வ சாதாரண
நிகழ்ச்சிதான். ஆயினும் அக்கிலீஸ் அகத்து இருந்த நாண் தடையாக விளங்கிற்று.
"இதுவே தூய, உயர்ந்த நாணுர்வு" என்கிறார் மறே.
இதே அக்கிலீஸ் ஒரு
சந்தர்ப்பத்தில் கோபாவேசத்திலே தன்னை மறந்து நாணத்தக்க செயலைப் புரிந்து
பழிக்கு ஆளாகும் நிலையையடைந்துவிடுகிறான். தனது ஆருயிர் நண்பன் பட்ரோகிளஸ்
போரில் இறந்தபோது, அவன் வஞ்சின முரைத்துப் போர்க்களம் புகுகின்றான். "உன்னைக்
கொன்ற ஹெக்டரது போர்க்கவசத்தைக் கொண்டு வந்து, உனது, பாடைக்க முன் பன்னிரு
டிரோஜ இளைஞரைப் பலிகொடுத்த பின்னரே உரிய மரியதைகளுடன் உனக்கு ஈமக் சடங்குகளைச்
செய்வேன்" என்று நீள்மொழி உரைக்கின்றான். அடுத்து நிகழும் கடும் போரிலே தனது
சபதத்தின் பெரும் பகுதியை நிறைவேற்றுகிறான். ஹெக்டரது தலையைக் கொய்வதற்குத்
தெய்வத்தலையீடு தடையாயிருந்தது. ஆனால் இறந்த ஹெக்டரது சடலத்தைத் தேரிற் கட்டிப்
புழுதியெல்லாம் இழுத்து மாசுபடுத்துகிறான். தன்னைக் கட்டுப்படுத்தும் உணர்வுகளை
உதாசீனஞ் செய்கிறான். இது கண்ட தேவர்களே கோபப்படுகின்றனர். "அக்கிலீஸ்
நாணத்தையும் இரக்கத்தையும் இழந்து விட்டான்" என்று அபோலோ கூறுவது நாண் பற்றிய
விளக்கத்தை மேலும் தௌிவாக்குகிறது. நாண் கடைப்பிடிக்கப்படாவிட்டால் அது பற்றித்
தண்டனையில்லை. அது உணர்வானைப் பொறுத்தது.
இதனைப் புறநானூற்றுப் பாடல்
ஒன்று (36) சித்திரிக்குமாற்றைப் பார்ப்போம்:
அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந்
தறிதிநின் புரைமை, வார்கோல்
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்
தண்ணான் பொருதை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்ல னரஞ்செயவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமர் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
ஆங்கினி திருத்த வேந்தனோ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க.
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே.
கதை இதுதான்: கிள்ளிவளவன் என்னும் சோழன் கருவூரை
முற்றுகை யிட்டிருந்தான். கருவூர் மன்னன் போரிட விரும்பாது கோட்டைக்குள்ளே
அடைப்பட்டிருந்தான். சோழனுடைய வீரர் நெடிய கையையுடைய கூரிய வாயுடைய கோடரிகளால்
தனது காவலிலுள்ள கடிமரங்களை வெட்டி வீழ்த்தும் ஓசைதான் (மானமின்றி) இனிதாக
இருந்த அரண்மனைக்கண் ஒலிக்கக் கேட்டும் வாளாயிருந்த வேந்தனுடன் போர் புரிவது
தூய வீரர்க்கு நாணுத் தருவதாகும். இனி, கொல்வாயாயினும், கொல்லாமல்
விடுவாயாயினும் அவற்றால் உனக்கு வரும் பெறுபேறுகள் யாம் சொல்ல வேண்டா. நீயே
எண்ணி அறிவை. இது ஆலத்தூர் கிழார் கூற்றாக அமைந்துள்ளது. "மானமற்று (வாழ்வே
பெரிதென்று) மறைந்திருந்த மன்னனுடன் பொருதா யென்பது நாணும் தகுதியை யுடைத்து"
என்று புலவர் எடுத்துரைப்பது நாண் பற்றிய நல் விளக்கமாக அமைந்திருக்கிறது.
இதனாலேயே "புலவர் புகழ்ந்த நாண்" எனப்பட்டது. இப்போரைக் கிள்ளிவளவன் தொடர்ந்து
நடத்தினானோ அல்லது கைவிட்டானோ என்பது நமக்குத் தெரியாது. ஆனால் போரிலே நாண்
எத்தகைய இடத்தை வகிக்கிறது என்பது எமக்குப் புலனாகிறது.
நாணத்தக்க
பழிசூழும் செயல்களைப் பிறர் காணச் செய்யக் கூசினர் கிரேக்க வீரர். ஆனால் மனிதர்
எவரும் பார்க்காத விடத்தும் இயற்கைச் சக்திகள் பார்ப்பதாக அவர்கள் நம்பினர்.
எனவே, நாணத்தக்க செயலைச் செய்தவன் பூமியையும் சூரியனையும் முகங் கொடுத்துப்
பார்க்கத் தயங்குவான். யார் கண்ணுக்குத் தப்பினாலும் நிலம், நீர், காற்று
முதலிய தெய்வங்களின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென்று ஹோமரும், ஹீசியொட்டும்
கருதினர். பழி என்பது பிற்காலத்திலே சமயத் தொடர்பினால், கர்ம வினை
முதலியவற்றுடன் பிணைப்புண்டு பொருள் விரிவு பெற்றது. கிரேக்க ஆதி
இலக்கியங்களிலே அது ஒருவனது செயல் பற்றிப் பிறரது கணிப்பாகவே கருதப்பட்டது.
கொன்றானைத் தொடர்ந்து பற்றும் கொலைப் பாவம் முதலிய கருத்துகள்
பிற்காலத்துக்குரியன. பேராசிரியர் மறே கூறுவது போல "பழி என்பது துன்பத்துக்கு
ஆளாகியவனது நேரடியான கோபம் அன்று; அச்செயலைப் பார்த்த மூன்றாம் நபருடைய குற்றச்
சாட்டாகும்."
நாண், பழி முதலியன சான்றோர் இலக்கியத்திலே சமயச்
சார்பற்றனவாகவும் வாழ்க்கையோடு நேரடியான தொடர்புடையனவாகவும் காணப்படுகின்றன.
கிரேக்க இலக்கியத்திலும் இவ்வாறேயிருக்கக் காணலாம்.
தெய்வ சாபம், தெய்வ
நீதி முதலியவற்றுக் கஞ்சியன்றி, போரின் தேவைகளையும் நியதிகளையும் ஒட்டியே நாண்,
பழி முதலியவற்றை வழங்கினர். உதாரணமாக, போருக்கு அஞ்சுபவன் நாணமற்றவனாகக்
கருதப்பட்டான். 'நாணுடைந்த மாக்கள்' என்ற தொடரை மேலே பார்த்தோம். கிரேக்கரும்
கோழைத்தனம் நாணுத்தகவுடையது எனக் கருதினர்.
"ஆகிவியர்களே நாணமில்லையா? எதிர்
நின்று
போர் புரிய மாட்டீர்களா?"
என்றும்
"போரிடப் பின்னிடாதீர்கள் உங்கள் நெஞ்சில்
நாணும் பழியும் நிறைந்திருக்கட்டும்"
என்றும் கூறப்படும்பொழுது போரின் மத்தியில் இவை
பயனீட்டுக் கோட்பாடுகளாக வழங்குவதைக் காணலாம். உதாரணமாக நிராயுதபாணியாய் வந்து
தஞ்சமடைந்தவனைக் கொல்லுதல் நாணுத்துறந்த செயலாகக் கருதப்பட்டது. உதவியற்றோரைக்
கொல்வதும் பழிச்செயலாகக் கொள்ளப்பட்டது. இவ்வடிப்படையிலேயே கிரேக்க
ஆதிகாவியங்களில் விருந்தினர். இரவர், முதியோர் என்றிவர்களுக்குத் தீங்குச்
செய்வது நாணற்ற செயலாக கூறப்படுகிறது. 'திக்கற்ற வர்க்குத் தெய்வமே துணை'
என்பது போல, கிரேக்கரும் திக்கற்றவரைத் தேவர்களின் அதிபதியான சீயஸ் கவனித்துக்
கொள்கிறான் என எண்ணினர்.
சுருங்கக் கூறுவதாயின், பழந்தமிழ்ச் செய்யுட்களிற் காணப்படுவதுபோலவே
கிரேக்க ஆதிகாவியங்களிலும் பழி என்பது பாவனத்தினின்றும் வேறாக உள்ளது.
வீரயுகத்தில் பாவம் என்னும் கொள்கை தோன்றவில்லை. ஏனெனில் பாவம் கருத்து
வடிவானது; காரணகாரியத் தொடர்பில் அமைந்தது. நாண், பழி என்பன தம்மளவில் தாமே
நிறையுடையன, ஆனால் கிரேக்க இலக்கிய வரலாற்றிலும் ஹீசியொட் காலத்துக்குப்
பின்னர், நாணத்தக்க செயல்கள் பாவச் செயல்களாகவே குறிக்கப்படலாயின. உதாரணமாக
ஹீசியொட் தனது வேலைகள் என்னும் நூலிலே பஞ்சமா பாவங்களைக் குறிப்பிடுகிறான்:
(1)"திக்கற்றோருக்கும் இரவலருக்கும் தீங்கு இழைப்போன்; (2) தனது உடன்
பிறந்தானின் மனைவியைப் பெண்டாளுபவன் " (3) "அனாதைக் குழந்தைகளுக்குத் துன்பம்
செய்பவன்;" (4) "வயோதிக காலத்தில் தந்தையைத் துன்புறுத்துபவன்; இவர்கள் யாவரும்
ஒரே நிலையிலுள்ளவரே, இவர்களைச் சீயஸ் தெய்வமும் பொறுக்கமாட்டாது."
ஹீசியொட்டின் குரலிலே பாவ, புண்ணிய தொனி தெரிகிறதாயினும், அவன் குறிப்பிடும்
பஞ்சமா பாதங்கள் ஒருண்மையை எமக்கு நினைவூட்டுகின்றன. பாபச் செயல்கள் என அவன்
குறிப்பிடுபவை, உண்மையில் பழைய குலமரபுக்கிளைகளிலே விலக்கப்பட்ட 'சமூக விரோத'ச்
செயல்களின் அடிப்படையில் எழுந்தவை. குற்றங்களைப் புரிபவனுக்குச் சமய
நம்பிக்கையின் பேரில் தண்டனை கூறப்படுகிறதாயினும், குறிக்கப்படும் குற்றங்கள்
சமுதாயத்தில் தவிர்க்கப்பட வேண்டியனவாயிருப்பது கவனிக்கத் தக்கது.
வீரயுகத்தையடுத்து தோன்றிய "இருண்ட காலப் பகுதி"யில் (சங்க மருவிய காலமென்றும்,
களப்பிரர் காலமென்றும் வெவ்வேறு பெயரிட்டு இக்காலப் பகுதியை இலக்கிய
வரலாற்றாசிரியர் வழங்குவர்) எழுந்த அறநூல்களில், இனியது, இன்னாதது என்று
புலவர்கள் அடுக்கிக் கொண்டுபோவதைப் பார்க்கும்போது, எமக்கு ஹூசியொட்டின் நினைவு
தோன்றாமற் போகாது. சீருஞ் சிறப்பும் பொருந்திய வீரயுகத்திற்குப் பின் உலகில்
'செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த'தாக ஹீசியொட் நம்பினான்.
தான் வாழும் யுகமாகிய இரும்புக் காலத்திலே இரும்பு மாக்கள் மத்தியில் வாழ
ஒருப்படாது நாணும் பழியும் நல்லோர் வாழும் என்ற நூலிற் குறிப்பிடுகின்றான்.
எவ்வாறாயினும் கிரேக்க ஆதிகாவியங்களுக்குப்பின் இக்கோட்பாடுகள் மெல்ல மெல்லச்
செல்வாக்கிழந்தன.
கிரேக்க மொழியிலே பிற்பட்டுத் தோன்றிய ஒழுக்கவியலை நோக்கும்பொழுது
அதில் நாண் சிறு வழக்கினதாகவே காணப்படுகிறது. பிளேட்டோ, அரிஸ்டோட்டில் முதலிய
தத்துவவாதிகள் அதனை ஒரோவழி குறிக்கின்றனரெனினும், அவர்களது சிந்தனையில் அது
சிறப்பிடம் பெறவில்லை. மனிதவாழ்க்கையை நெறிப்படுத்தும் தார்மீக சக்தி அதற்கு
இல்லாது போய்விட்டது. அரிஸ்டோட்டில் போன்றோர் அதனை விரும்பத்தக்க நற்பண்புகளில்
ஒன்றாகக் குறிப்பினும், உணர்ச்சிமிக்க அச்சொல்லை வற்புறுத்தினார் அல்லர்.
தமிழிலும் இத்தகையதொரு போக்கைக் காணலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே நாண்,
பழி முதலியன இடம்பெற்றபோதும், அவை வாழ்க்கையோடு தொடர்புடைய உணர்ச்சி ஆழமிக்க
சொற்களாகவன்றி எடுத்துரைக்கப்படும் கொள்கைகளாக அமைந்துள்ளன. நாண் முதலிய
"கிளவியெல்லாம் காட்டலாகப் பொருள்" என்றார் தொல்காப்பியர். அதனையே விளக்கி
"மாணாக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி ஆசிரியன் காட்டலாகாத பொருளுடையது"
நாண் என்றார் இளம்பூரணர். ஆனால் அறப்போதனை செய்த கீழ்க் கணக்கு நூல்களோ
தம்மியல்புக்கியைய நாணையும் காட்டும் பொருளாக வரைகின்றன. இதுவொன்றே
காலவேறுபாட்டைக் காட்டப்போதுமான தன்றோ? உதாரணமாக நல்லாதனாரின் திரிகடுகத்தில்
(செய்யுள் 6) பின்வருமாறு நாண் தொகுத்துக் கூறப்படுகிறது :
"பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலம், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அறவினையைக்
கார் ஆண்மைபோல ஒழுகலும் -
இம்மூன்றும்
ஊராண்மை என்றும் செருக்கு"
இதிலே பொறை முதலியவற்றுடன் நாண்
சேர்க்கப்பட்டுள்ளமை பொருத்தமாகக் காணப்படவில்லை. அது போலவே கபிலதேவரது இன்னா
நாற்பதிலும்,
"சூலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;
நிலத்து இட்ட நல்வித்து நாறாமை இன்னா;
நிலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு
இன்னா,
கலத்தல் குலம் இல்வழி."
இத்தகைய செய்யுட்கள் வாழ்க்கையைத் தூர நின்று
நோக்கிப் போதிக்கும் தன்மையன. எனவே உணர்வும் சுவையும் சிறப்பின்றியுள்ளன.
கிரேக்க மொழியிலும் தமிழிலும் நாண் காலப்போக்கில் தனது புராதண சக்தியை
இழப்பதற்கக் காரணம்:
சமுதாய மாற்றமே அடிப்படைக் காரணம். வீரயுகத்திலே
தனிச்சொத்துரிமை தலைகாட்டத் தொடங்கியிருந்தது. தனியொருவனது வீரமும், மானமும்,
ஆண்மையும், வினைத்திறனும் விளங்க வல்லான் வகுத்ததே வாய்க்காலாக இருந்தது. பழைய
குலமரபுக் குழுக்கள் முட்டிமோதிப் புரண்டு கொண்டிருந்தன. வர்க்க பேதமுள்ள
சமுதாயம் பிறந்துகொண்டிருந்தது. ஆட்சிமுறை சீராக உருப்பெற்றிருக்கவில்லை. சட்ட
திட்டங்கள் வகுக்கப்படவில்லை. குலமரபுக் குழுக்களில் வழங்கிய உணர்வுபூர்வமான
ஒழுக்க முறைகள் சிற்சில மாற்றங்களுடன் கைப்பிடிக்கப்பட்டது. முன்னர்
கழுவுக்கும், கணத்திற்கும், பொதுவாக இருந்த 'சகோதரத்துவ' ஒழுகலாறு இப்பொழுது
தலைநிலையெய்திய 'பெருஞ் செய்யாடவர்' ஒழுகலாறாக மாறியது. இரத்த உறவுகள் மாறி
அல்லது வலுக்குறைந்து பொருளுறவுகள் தோன்றின. அக்காலக் கட்டத்திலே
தவிர்க்கமுடியாத நடைமுறை விதிகளாக அமைந்தனவே நாண், பழி, அறம் முதலியன.
அக்காலத்திலே புலவராக மட்டுமின்றி அறியவராகவும், வரலாற்றாசிரியராகவும்,
போதனாசிரியராகவும் விளங்கிய கவிஞர் இந்தநடைமுறை விதிகளைப்
பிரசித்தப்படுத்தினர். சமுதாயம் முழுவதற்கும் பொதுவானவையல்ல இவ்விதிகள்.
தலைமக்களுக்கிடையேயுள்ள "கண்ணியமான" உடன்பாடே இவ்விதிகளின் அடிப்படையெனலாம்.
வீரயுகத்தைத் தொடர்ந்து புதிய-வர்க்க சமுதாயம் தோன்றிய பின்னர், இந்நடைமுறை
ஒழுங்குகள் வேண்டாவாயின. கட்டுப்பாடற்ற சமுதாயத்திலே நாண் முதலியன மனிதரது
ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தும் தோன்றாச் சட்டமாய் விளங்கியது. வீரயுகத்தில்
நிகழ்ந்த இடைவிடாத கோரப் போர்களின் விளைவாகப் புதிய அரசுகள் தோன்றியதும்
அவற்றின் உடன் பிறப்பாக இராணுவம், சட்டம், நீதிமன்றம், அரச கட்டளை முதலியன
தோன்றின. தோன்றவும் உருவற்ற நாண் உள்ளங்களிலிருந்து மறைந்தது. ஆயினும் அது பழைய
கோட்பாடாதலின் வெறும் அலங்காரக் கருத்தாக நின்று இலட்சிய வடிவிற் போற்றப்படும்
நற்பண்புகளில் ஒன்றாக இலங்கிற்று. அரசு தோன்றிய பின் சமயமும் அதற்குப்
பக்கத்துணையாகியது. இகலோகக் கோட்பாடாக விருந்த பழி பரலோகத் தொடர்புடையதாக
மாறியது. ஆனால் அது வேறு கதை.
5. பெரும் பெயர் உலகம்
சான்றோர் செய்யுட்களில் ஒரு பகுதியான
புறப்பாடல்கள் அமர்க்களத்து அஞ்சா நெஞ்சுடன் போர்புரிந்து அழியாப் புகழ்பெற்ற
வீரரின் விழுப்புகழைப் பேசுகின்றன என்பது பலருமறிந்ததொன்றே. தொல்காப்பியர்
வகுத்துக் காட்டும் புறத்திணையுள் பல துறைகள் காணப்படினும் வீர மரணத்திற்குச்
சிறப்பானதோர் இடமுண்டு.
போரிலே விழுப்புண்பட்டு வீழ்ந்த 'அருஞ்
செய்யாடவர்' வீரருக்கென்றே அமைந்த துறக்கத்தற்குச் செல்வர் என்ற நம்பிக்கை
அக்காலத்திற் பெருவழக்காயிருந்தது. சான்றோர் செய்யுட்கள் காட்டும் சமுதாயமும்
சமுதாய இலட்சியங்கும் வீரயுகம் எனப்படும் வரலாற்றுக் காலப்பகுதியைச் சேர்ந்தன.
வீரயுகத்துக்குரிய சில சிறப்பான நம்பிக்கைகளுள் ஒன்று வீர வணக்கம். பிற
காலங்களிலும் இஃது ஒரேவழி காணப்படுமாயினும் வீரயுகத்திலே பெருவழக்குடையது. வீர
வணக்கத்தின் அடிப்படை, வீரர்கள் மற்றையோரினும் தலைசிறந்தவர் என்பது, வாழ்வில்
மட்டுமன்றி மரணத்திலும், அவர்கள் தனிச்சிறப்புடையவர்கள் என்பதே வீர வணக்கத்தின்
உட்கிடையாகும். பிற்காலத்திலே நாம் தேவர்களின் உரையுளாகக் கருதும் உலகமாக
வீரயுகத்திற் கருதப்பட்டது. அது வீரயுகத்தின் ஆழமான நம்பிக்கைகளில் ஒன்று.
சங்கச் செய்யுட்கள் என்று வழங்கும் சான்றோர் செய்யுட்களிலே வீரர்கள்
மரணத்தின்பின் சென்றடையும் துறக்கம் பலவாறு குறிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக,
உயர்ந்தோர் உலகம்
மேலோர் உலகம்
அரும்
பெறல் உலகம்
தொய்யா உலகம்
வாரா உலகம்
பெரும் பெயர் உலகம்
தேவர்
உலகம்
முதலிய சொற்றொடர்களைக் காட்டலாம். இவை யாவும் ஒரே
பொருளைக் குறிப்பன - அதாவது "தம் புகழ் நிறிஇத் தாமாய்ந்த" வீரருக்குரிய இறுதி
'வீட்டைக்' குறிப்பன. உண்மையில் வீரயுகத்துச் சான்றோரின் இலட்சியம் புகழ்படைத்த
பெருவாழ்வே. அதனாலேயே "புகழெனின் உயிருங் கொடுக்குவர்!" என்றார் புலவர்.
காலப்போக்கில் புகழ் பலவகையான சிறப்புகளையும் குறிக்கலாயிற்று. கல்விப் புகழ்,
பக்திப் புகழ், கொடைப்புகழ் முதலியன வெவ்வேறு காலங்களில் முக்கியத்துவம் பெற்ற
மதிப்பீடுகளுக்கு ஏற்ப அமைந்தன. அறப்புகழ், மறப்புகழ் இரண்டிலும் மறப்புகழே
வீரயுகச் சான்றோர் வேண்டியது. இதனாலேயே வருபடையெதிர் தாங்கி வீழ்ந்தவனை, "புகழ்
வெய்யோன்" என்று பேரெயின் முறுவலார் பாடினார். வீரயுகத்தைப் போன்றவொரு
காலத்திற்பாடிய கம்பனும் இராவணன் கூற்றாக, "புகழுக்கும் இறுதி உண்டா?" எனக்
கேட்டான். சான்றோர் செய்யுட்களிலே புகழ் என்னும் சொல்
பயன்படுத்தப்பட்டிருக்குமாற்றைச் சிறிதளவு கவனித்தால் அதன் முக்கியத்துவம்
புலப்படும்.
மறப்புகழ் |
மாயால் பல் புகழ் |
பலர் புகழ் |
வான்புகழ் |
மறம் வீங்கு புகழ் |
விண் பொருள் புகழ் |
ஓங்கு புகழ் |
உரை சால் புகழ் |
பெரும் புகழ் |
சேண் விளக்கு புகழ் |
வீயா விழுப் புகழ் |
வயங்கு புகழ் |
வண்புகழ் |
பல் புகழ் |
விறற்புகழ் |
கேடில் விழுப் புகழ் |
விளங்கிய புகழ் |
மலி புகழ் |
உதாரணமாகக் கொண்ட இவ்வடை புணர்த்த தொடர்கள்
புகழின் பன்முகப் பாட்டை எடுத்துக்காட்டுவனவாயுள்ளன. இவ்வாறு உயிரினும் மேலாக
மதிக்கப்பட்ட புகழை அடைவதற்குக் காரணமாகவும் அதன் காரியமாகவும் அமைந்தன
வீரமரணமும் அதன் பயனாக துறக்க வாழ்வும். பிற்காலத்திலே சமய நம்பிக்கைகளின்
அடிப்படையில் நல்வினைப் பயனுடையோர் வீடுபேறெய்துவர் என்ற கருத்து எத்துணை
வலிமையுடையதாய் விளங்கியதோ, அத்துணை வலிமையுடையதாக வீரயுகத்தில் வினை
செய்யாடவர் 'வீரசுவர்க்கம்' புகுவர் என்ற எண்ணம் நிலவியது.
"நீளிலை யெஃக
மறுத்த உடம்போடு
வாராவுலகம் புகுதல்"
என்று பாடியுள்ளார் பரணர். நீண்ட இலையையுடைய
வேற்படையால் உண்டாக்கப்பட்டு வடுப்பட்ட காயத்தோடேயே மேலுலகு புகுவது வீரருக்கு
உகந்த இலட்சியமாகக் கொள்ளப்பட்டது. வீர மரண மடைந்தால், உயர்ந்தோர் உலகம் அல்லது
அரும் பெறல் உலகம் பெறலாம் என்ற நம்பிக்கை அக்காலத்திலேயே பலரைக் 'களமஞ்சா
வீரர்' ஆக்கியது என்பதில் ஐயமில்லை. மரணம் என்று குறிப்பிடப்படினும் மரணத்தை
வெல்வதே வீர மரணமாகக் கொள்ளப்பட்டது. இறவாப்புகழ் பெற்றவர்கள் இறப்பிலோர் என்று
நம்பினர். அதன் பயனாக இறப்பைத் துச்சமாகக் கருதினர். வேறு இன மக்களிடையேயும்
இத்தகைய நம்பிக்கை காணப்பட்டது. உதாரணமாக 'டுருயிட்ஸ்' (Druids) எனப்படும்.
கெல்திய அறிஞரின் போதனைகள் உயிர் அறிவற்றது எனக் கூறின. அதனாற் கவரப்பட்ட
புராதன பிரித்தானிய வீரர் உயிரையே ஒரு பொருட்டாகக் கருதாது மறப்போர் புரிந்தனர்
என்று யூலியஸ் சீசர் குறிப்பிட்டார். புலவர் நாவில் நிலைபேறடைவதும் வீரரின்
இலட்சியமாக இருந்திருக்கிறது. புலவரோ வீரசுவர்க்கம் எய்தியோரையே விதந்து
பாடினர். இவ்வாறு புகழ், வீரசுவர்க்கம், வீர மரணம் காரண காரியத் தொடர்புடன்
இயங்கின.
பழந் தமிழ்ச் செய்யுட்கள் கூறும் இவ்வீரர் உலகத்தை
நோக்குமிடத்து, பண்டைக்கால வட ஜெர்மானியக் கூட்ட மக்களிடையே (Gothics) வழங்கிய
வீரசுவர்க்கத்திற்கும் அதற்கும் நெருங்கிய ஒப்புமை இருப்பது புலனாகும்.
வல்ஹல்லா (Val-Halla) என்பது ஜெர்மானிய மக்களது வீரசுவர்க்கம், உலகிலுள்ள
புராதன மக்கள் யாவரும் மரணத்துக்குப் பிற்பட்ட வாழ்க்கையைக் கற்பனை
செய்யும்பொழுது, அவ்வாழ்க்கையை வெறும் கருத்துப் பொருளாக அன்றிப்
பருப்பொருளாகவே கருதினர். பிற்காலத்திலெழுந்த சமய சாத்திர பரிபாஷையின்
பழக்கத்தால், தூல சரீரம், சூக்கும சரீரம் என்னும் பாகுபாட்டை இங்குக் கருதுதல்
தவறு. புராதன எகிப்தியர், சுமேரியர், கிரேக்கர், இந்தோ-ஆரியர் முதலிய யாவரும்
மறு உலகத்தை - ஊனும் உதிரமும் கொண்ட மக்கள் உலாவும் உலகமாகவே கற்பித்தனர். எமது
பூதவுலகிற்கும் அதற்கும் முக்கிய வேறுபாடொன்று உண்டு. இங்கு இன்பமும்
துன்பமும், வீரமும் வீரமின்மையும், விரவிக் காணப்படுவன. அங்கு இன்பமும் வீரமும்
கலப்பின்றிக் காணப்படுவன. வல்ஹல்லாவில், கன்னியர் ஏவல் செய்யக் களத்தில்
வீழ்ந்த பெருஞ் செய்யாடவர் நிரந்தர இன்பத்தில் மூழ்கிக்களித்திருப்பர். இச்
செய்தியை நோக்கும் பொழுது புறநானூற்றுப் பாடலொன்று கூறும் கருத்து நினைவிற்கு
வருகிறது.
"படினே
மாசின் மகளிர்
மன்ற னன்றும்
உயர்நிலை யுலகத்து
நுகர்ப்..."
'போர்க்களத்தில் வீழ்ந்துபட்டால் வீரர்
சென்றடையும் துறக்க உலகத்துக்குக் குற்றமில்லாத துறக்க மகளிரை மணந்து,
பேரின்பம் நுகர்வர்' என்பது பொருள். வல்ஹல்லா என்றால் (போரில்) இறந்தவர்
மண்டபம் என்பது பொருள். மண்டபம் ஐயத்துக்கிடமின்றிப் புலன்களால் உணரக்கூடிய
பொருள் அன்றோ? நோர்திக் பழமரபுக் கதைகளில் அம்மண்டபத்தைப்பற்றிய மோகனமான
வருணனைகள் உள. தேவர்கள் பணிபுரிந்த இலங்கையைக் கம்பன் வருணிப்பது சிலருக்கு
நினைவு வரலாம். எங்கும் இன்பமயம். புறநானூறு குறிக்கும் துறக்க மகளிருக்குச்
சமமானவராக வல்ஹல்லாவின் அதிபதியான ஒடின் என்பானது பணிப்பெண்கள் அமைந்துள்ளனர்.
நல்லழகியரான அக்கன்னியர் கொம்புகளில் நறவம் ஏந்தி இடைவிடாது அங்குள்ள வீரருக்கு
வார்த்து விடுவர். சுருங்கக் கூறின் ஒடின் தலைமையில், 'வல்க்கிறீஸ்' எனப் பெரிய
அவ்விளம் பெண்கள் வாட்போர் புரிந்து காலங்கழிக்கும் அவ்வீரருக்கு மனமுவந்து
உபசாரம் செய்து கொண்டிருப்பர்.
வல்ஹல்லா என்ற வீரர்க்குரிய வீட்டைக் கூறும் பண்டை ஜெர்மானியப் பழங்கதைகள்,
எமது சான்றோர் செய்யுட்களைப் போலவே வீரயுகமொன்றினைப் பிரதிபலிப்பன. ஆகவே
அவையிரண்டுக்கும் ஒப்புமை காணப்படுகின்றது. பண்டைய வடமொழி இலக்கியங்களிலும்
இத்தகைய கருத்துக் காணப்படுகிறது. போர் மலிந்த நூலாம் மகாபாரதத்தில்
வீரசுவர்க்கம் பற்றிய வருணனைகளும் குறிப்புகளும் நிறைய உள. துரோண பருவத்திலே
சக்ரவியூகத்துள் சிக்கி மரணமடைந்த அபிமன்யுவின் வீரமரணம் எய்திய அவன் நிச்சயமாக
இந்திரலோகத்துக்குச் சென்றிருக்க வேண்டுமென்கிறார். மீண்டும் ஓரிடத்தில்
யுதிட்டிரர் கூறுகிறார்: "கடும் போரிலே மன மகிழ்ச்சியுடன் மரணத்தை எதிர்நோக்கிய
மகா வீரர்கள் இந்திரலோக பதவியை அடைந்துள்ளனர்". தாம் செய்த சிறிதளவு பாவத்தின்
பயனாகத் தொடக்கத்தில் நரகத்தையனுபவித்த பாண்டவ வீரர்கள், பின்னர் துறக்கத்தை
யடைந்ததும், தேவரும் கந்தருவரும் ஏவலுக்குக் காத்திருக்க, அழகிய அப்சரசியர்
பணிபுரியும் நித்திய இன்ப நிலையை எய்துகின்றனர். ஒருவகையிற் பார்த்தால்
வல்ஹல்லாவில் ஓடின் வீற்றிருப்பதைப் போலவே இங்கு இந்திரன் அதிபனாயுள்ளான்.
வல்ஹல்லாவில் சிறப்பிடம் பெற்ற வீரர்கள் பகல் முழுவதும் போர்புரிந்தும் இரவு
நேரங்களில் விருந்துண்டும் தமது பொழுதைக் கழிப்பவராயுள்ளனர். ஆனால் இந்திரனது
மாளிகை அத்தனை வீரப் பண்பு பொருந்தியதாகத் தோன்றவில்லை. இந்திய வீரயுகம்
என்னும் நூலிலே பேராசிரியர் என்.கே.சித்தாந்தா கறுகிறார்: "இந்திரனது
ஆணைக்குட்பட்ட சொர்க்கத்தைப்பற்றிய வருணனைகளில் வீரஉணர்வு பொலிவதாகக்கூறு
முடியாது. உண்மையாகக் கூறுவதானால், சீர்குலைவுற்ற சிற்றின்ப லோலனான சிற்றரசன்
ஒருவனது அரண்மனை போலவே அது காட்சியளிக்கிறது. முற்பட்ட காலத்தில் வீர
சுவர்க்கம் இதனிலும் வீரமும் வீறும் படைத்ததாய் இருந்திருக்கும் என நாம்
கொள்ளலாம். காலப் போக்கில் இந்நாட்டு அரச வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப
வீரரிலும் களிமக்களே சித்திரிக்கப்படலாயினர் எனலாம்." இவ்விடத்தில் இன்னொரு
செய்தியும் நினைவுகூரத் தக்கது. வடமொழி இலக்கிய, சமய வரலாற்றில் இந்திரனது
ஏற்றமும் இறக்கமும் தௌிவாகக் காணக்கூடியன. ஆரியர் இந்திய உபகண்டத்துட் புகுந்த
காலப்பகுதியில் சோமபானம் அருந்தி எதிரிகளின் கோட்டை கொத்தளங்களைத்
தகர்த்தெறிந்த வீரருக்குத் தலைமை தாங்கிய புரந்தரன் காலப்போக்கிற் சமய
வளர்ச்சியில் ஏற்பட்ட சில மாற்றங்களின் விளைவாகத் தனது முதலிடத்தை இழந்தான்.
சுத்த வீரனாக ஆதியில் விளங்கிய இந்திரன் பிற்காலத்தில் போக புருஷனாயும்
'சொகுசு'க்காரனாயும் குணமாற்றம் பெறுகின்றான். வளர்ச்சி முறை இதிகாசமாம்
பாரதத்திற் சித்திரிக்கப்படும் இந்திரன் இம் மாற்றத்தைப் பிரதிபலிக்கிறான்
என்பதில் ஐயம் இல்லை.
வீரமரணம் பற்றிய ஆழ்ந்த நம்பிக்கைக்கு இன்னுமோர்
உதாரணம் காட்டலாம். "குழவி பிறப்பினும்" என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலைப்
பற்றிப் பேசாத தமிழ் அன்பர்கள் குறைவு. வீரமறக்குலத்திற் பிறந்தவர்கள் பிள்ளை
இறந்து பிறந்தாலும் தசைத் தடியாகிய பிண்டம் பிறந்தாலும் அவற்றை ஆள் வல்ல என்று
கருதாது வாளால் வெட்டியே அடக்கஞ் செய்வர் என்பது பாடற்பொருள். பலபுறப்
பாடல்களைப் பாடியுள்ள மாமூலனார் அகப்பாட்டொன்றில் (61) பின்வருமாறு
கூறியுள்ளார்:
"நோற்றோர் என்ற
தாமே கூற்றம்
கோளுற
விளியார் பிறர்
கொள விறிந்தோர்"
கூற்றம் கொள்ள வெறுமனே மடியாமல், பிறரால்
கொல்லப்பட்டோர் நிச்சயமாக நோற்றவராவர் என்று தலைவிக்குத் தலைவன்
வற்புறுத்துவதாகப் பாடல் அமைந்துள்ளது. இத்தகைய செய்திகளைக் கொண்டு பண்டைத்
தமிழர் தனிச் சிறப்புடைய வீரபுருஷராய் இருந்தனர் என்று எம்மவர் பெருமைப்படுவர்.
"பண்டைத் தமிழ் வேந்தர், குழவியிறப்பினும், உறுப்பில் பிண்டம் பிறப்பினும்,
மூத்து விளியினும், நோயுற்றிறப்பினும் வாளாற் போழ்ந்து அடக்கினர்" என்று
எழுதுகின்றார் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை.
இத்தகையதொரு வழக்கம்
வீரயுகத்தைச் சேர்ந்த ஜெர்மானியக் குலங்கள் சிலவற்றின் மத்தியிலும்
காணப்படுகிறது. நோய் காரணமாகவோ அன்றி முதுமை காரணமாகவோ மறக்குல வீரனொருவனை
மரணம் நெருங்குவது தெரிந்ததும் அவன்மீது படைக்கலத்தின் கூர் நுனியினால்
அடையாளமிடுவர் என்றும், கட்டாரியாற் குத்துவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் எச்.எம்.சாட்விக் பின்வருமாறு கூறுவர்:
"போரினால் விழுப்புண் பட்டு வீழ்வதற்குப் பதிலாகச் செய்யும் ஒரு சடங்காகவே இது
தோன்றுகிறது." அதாவது போரில் மடியாத ஒருவன் வீரசுவர்க்கத்தை அடைய
வாய்ப்பேற்படாது போகுமாதலால் படைக்கலப் புண்ணைச் செயற்கையாக வேனும்
உண்டாக்குவது மரபாக முகிழ்ந்திருத்தல் வேண்டும். புறநானூற்றுப் பாடலொன்று (93)
இவ்வுண்மையை உறுதிப்படுத்துகிறது.
"நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதன்
மறந்தவர் தீதுமகுங்கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசம்புற் பரப்பினர் கிடப்பி
மறங் கந்தாக நல்லமவர் வீழ்ந்த
நீள் கழன் மறவர் செவ்வுழிச்செல்கென
வாழ் பேழ்ந் தடக்கலும் உய்ந்தனர்
மாதோ...."
பைசாந்தியப் பேரரசுக் காலத்திலே பெலிஸாரியஸ் என்ற
புகழ்பூத்த தளபதியுடன் போர்களங்களுக்குச் சென்ற புரோகோப்பியஸ் என்னும்
வரலாற்றாசிரியன் (கி.பி 6-ம் நூற்றாண்டு) எருளி என்ற ஜெர்மானிய மக்களிடத்து
இத்தகையதொரு வழக்கம் நிலவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளான். எருளி குலத்தில் நோய்
காரணமாக ஒருவன் மரணமுறுந் தருவாயில் அவன் தமரில் ஒருவன், "காதல் மறந்து" அவன்
பழி நீங்கும் பொருட்டுக் கத்தியால் குத்துவன். "இது வல்ஹல்லாவிற்கு அவன் போக
உதவி செய்வதாகும்" என்கிறார் சாட்விக். இச் செய்திக்கும் மேற்கூறிய சான்றோர்
பாடல்கள் கூறும் செய்திகளும் உள்ள ஒப்புமை விசதமன்றோ? "எஃகம் அறுத்த உடம்பொடு"
வீரர்கள் வாராவுலகம் போவதாகப் புறநானூற் றுப் பாடல் கூறுவதை ஏலவே பார்த்தோம்.
அதாவது காயம்படுதலே புகழின் சின்னமாகவும் துறக்கத்துக்குத் திறவுகோலாகவும்
அமைகிறது. போர்க்காயம் 'விழுப்புண்' எனச் சிறப்பிக்கப்பட்டது. இதற்கு உரை கூறிய
பரிமேலழகர் "விழுப்புண்: முகத்திலும் மார்பினும் பட்ட புண்" என்றார்.
வல்ஹல்லாவிற்கு விருந்தினராக அழைக்கப்படுபவர்களும் 'விழுப்புண்' பட்டு
வீழ்ந்தோர் ஆவர்.
சான்றோர் செய்யுட்கள் இலட்சியப்படுத்தும் உயர்ந்தோர்
உலகத்திற்கும் ஜெர்மானியப் பழமரபுக் கதைகள் வருணிக்கும் வல்ஹல்லாவிற்கும்
நெருங்கிய ஒப்புமை காணப்படுவதற்குக் காரணம், இரண்டும் பொதுப் பண்புகள் பெற்ற
சமுதாயங்களிலே தோன்றியமையேயாகும்.
இவ்விடத்திலே ஒருதாரணம் கூறலாம்.
வல்ஹல்லா உயர்குடிப் பிறந்த பெருஞ் செய்யாடவருக்கே இடமளிப்பது. 'தவமும்
தவமுடையார்க்கே' என்பது போல மேலுலகமும் மேற்குடிப் பிறந்தாருக்கே என்பது
வல்ஹல்லா காட்டும் சமுதாயத் தத்துவம். போரிற் பட்ட எல்லோருக்கும் உரியதன்று
வல்ஹல்லா. இது குறித்து, திருமதி எல்லிஸ் டேவிட்ஸன் பின்வருமாறு கூறுவர்:
"புகழ்பூத்த தலைமக்களும், மன்னரும், இளங்கோக்களுமே போரிற் பட்டபின் அங்குச்
சென்றனர்."
சான்றோர் செய்யுட்களிலே வீரசுவர்க்கத்தை அல்லது
துறக்கத்தைக் குறிக்குஞ் சொற்றொடர்களில், "உயர்ந்தோர், மேலோர் பெரும் பெயர்,
உயர்நிலை, அரும்பெறல்" முதலிய பெயரடைகளை உற்றுநோக்கும் போது அவற்றின்
முக்கியத்துவம் நன்கு புலப்படும். உலகியலில் புகழ்பூத்த ஆடவரைச் சிறப்பிக்கப்
பயன்படும் பெயரடைகளே துறக்கத்தைத் குறிக்கவும் பயன்படுகின்றன. உதாரணமாக,
பாண்டியன் கீரஞ்சாத்தனைப் "பெரும் பெயர்ச் சாத்தன்" என்கிறார் ஆவூர்
மூலங்கிழார். 'பெரும் பெயர் உலகம்' என்பது வீரசுவர்க்கத்திற்கும் மற்றொரு பெயர்
என்பதை ஏலவே பார்த்தோம்.
இதனை எண்ணும்போது, நிலவுலகில் ஏற்றம்
பெற்றோருக்கு ஏற்ற வகையிலேயே மறுவுலகமும் சித்திரிக்கப்பட்டமை தௌிவாகின்றது.
மனித சிந்தனைகள் புறநிலையிலுள்ள சமுதாய உண்மைகளைப் பிரதிபலிப்பன என்ற நியதியை
நினைவுகூருமிடத்துப் பழந்தமிழ்ச் சமுதாயத்திற் கிழாராகவும் தலைமக்களாயும்
விளங்கியோருக்கே வீரசுவர்க்கம் அமைந்தது எனத்தோன்றுகிறது. வரலாற்றறிஞர்
பி.டி.சீநிவாச ஐயங்கார் தமிழர் வரலாறு என்னும் நூலிற் கூறியிருப்பது போல,
"சாதாரண மாந்தருக்கு வீரமிக்க செயல்களைச் செய்யும் வாய்ப்பு அருமையாகவே
கிட்டியிருக்கும்; பொதுவாகப் புகழும் பேரும் தலைமக்களுக்கே கிட்டும்.
அகப்பாட்டின் தலைமக்களும் உயர்குடிப் பிறந்தோரே. ஏனெனில் தாழ்ந்த நிலையிலுள்ள
மக்களைக் கவிஞன் பாடவில்லை." ஸக்ஸோ (Saxo) என்னும் இடைக்கால ஐரோப்பிய
இதிகாசகாரனும் இக்கருத்தையே கூறியுள்ளான். "வடிவேல் எறிவதும் வரிவில்
ஏந்துவதும் மன்னர்தம் குமாரர்க்கன்றி மற்றவர்க்காகுமோ? போர்த் தொழில்
உயர்குடிப் பிறந்தாரது தனிச் சிறப்புரிமை யாகும். தொல்குடிப் பிறப்பினரே போரினை
நடத்துபவர்கள்." உயர்ந்தோருலகுக்குச் செல்லும் தகுதி படைத்தோர் சிலரே என்று
புறப்பாடல்கள் ஐயத்துக்கிடமின்றிக் கூறுகின்றன. சோழன் நலங்கிள்ளியைப் புகழும்
பாடலொன்று இதனைத் தௌிவாக்குகிறது.
"சேற்றுவர் தாமரை பயந்த வொண் கேழ்
நூற்றித
ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந்
தோரை யெண்ணுங் காலை
உரையும் பாட்டு முடையோர் சிலரே
மரையிலை போல
மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா
வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்து...."
தாமரை மலரின் நூற்றுக்கணக்கான நிரையைப் போல
உயர்ந்த குடியிற்பிறந்து சிறப்பாக இருந்தவருள்ளும் உரையும் பாட்டும் உடையோர்
சிலரே என்பது வற்புறுத்தப்படும் கருத்து. புகழே, உரை, பாட்டு என இருவகையாய்
நின்றது. இது குறித்துப் பிற்காலப் புலவரான பொய்யாமொழியார் பாடியதற்கு,
பரிமேலழகர் கூறியுள்ள உரை நோக்கத்தக்கது. "புகழ்தான் உரையும் பாட்டும் என
இருவகைப்படும். அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய
வழக்கினையே எடுத்தாரயினும், இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும்
கொள்ளப்படும்; படவே, 'பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம்' என்பதூஉம் பெற்றாம்."
பல வழிகளில், சான்றோர் செய்யுட்களின் வடிசாறாக விளங்கும் திருக்குறளில் புகழ்,
மானம் முதலிய அதிகாரங்களில் மேற்கூறிய கருத்துக்கள் அறிவியற் சாயல் பெற்றுத்
திகழ்வது கவனிக்கத்தக்கது. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலே வீரயுகப் பண்புகள்
தமது "தூய்மை" இழந்து நல்லொழுக்கம், நல்லறம் ஆகிய கோட்பாடுகள் வழிவருவதைக்
குறிப்பிட வேண்டும். இஃது இலக்கிய வரலாற்றிற் காணும் பெருமாற்றமாம். ஒருதாரணம்
பார்க்கலாம்: போரிற் பலரைப் புறங்கண்டு வீரமரணம் எய்தியவர்கள் "தொலையா நல்லிசை
உலகமொடு நிற்பர்" என்று மலைபடுகடாம் கூறுவது சான்றோர் செய்யுட்களுக்குச் சிறந்த
எடுத்துக்காட்டு. ஆனால் அறநூலில் ஒன்றான திரிகடுகம் பின்வருமாறு அதனைக் கூறும்:
"மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசில்
சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றாலும், உண்ணுநீர்க்
கூவல்
குறைவின்றித் தொட்டானும்-இம்மூவர்
சாவா உடம்பு எய்தினார்."
புகழ் தரும் வாயில்கள் விரிவடைந்து விட்டதை
இப்பாடல் காட்டும். அதே வேளையில், வாழ்க்கைத் தத்துவமும் மாறிவிட்டதைக்
காட்டுகிறது. ஆனால் படுகாயமுற்றுப் புகழுடம்புடன் வாரா உலகஞ் சென்றவர்கள்,
வல்ஹல்லாவுக்குச் சென்றவரைப்போல, பத்தும் பெற்ற தலைமக்களாவர். வாராவுலகத்தையும்
வல்ஹல்லாவையும் ஒப்பு நோக்கும்போது அவை இரண்டும் தோன்ற ஏதுவாயிருந்த வீரயுக
இலட்சியங்களும் உயர்குடிப் பிறந்தோர் தலைமை பெற்று வாழ்ந்த சமுதாய நிலையும்
தெற்றெனப் புலனாகின்றன.
6. பொற்காலமும் புதுயுகமும்
சென்னை உயர்நீதி மன்றத்து நீதிபதிகளில் ஒருவராக
இருந்த டி.எல். வெங்கட்ராம ஐயர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் "வட
துருவத்திலுள்ள பெரும் பனி மலைகளுக்குத் தீ வைத்துவிடலாம்; தமிழிலே புதுமைப்
புரட்சியேற்படுவது அதைவிடக் கடினம்" என்று கூறினாராம். வாய்மொழியாக வழங்கும்
இக்கூற்றின் உண்மை பொய் எவ்வாறாக இருப்பினும், அடிப்படையான ஒரு நம்பிக்கை
வரட்சியை இக்கூற்று எடுத்து விளக்குவதாக உள்ளது. பழமைப் பற்றும், தன்னிறைவு
உணர்வும் தமிழ்ச் சமுதாயத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன என்பதே
பொதுவாகக் காணப்படும் கருத்து. மாற்றமடையாத-தேங்கி நிற்கும் சமுதாயங்களில்
(Stagnant Society) இத்தகைய பழமையாதிக்கம் காணப்படுவது உலகெங்கும் பொதுவான
நியதி. உண்மையான பொருளாதார மாற்றத்தை ஆதாரமாகக் கொண்ட சமுதாயப் புனரமைப்பினைத்
தொடர்ந்தே புதுமை பூத்துக் குலுங்கும்; அதுவும் ஒரு வரலாற்று நியதிதான்.
இவ்விடத்திலே எமது சமுதாயத்திற் காணப்படும் பழமைப் பிடிப்பின் ஓர் அமிசத்தைச்
சிறிது ஆராயலாம். பழமையாதிக்கத்தைக் கருத்தளவில் ஆராய்ந்து பார்க்கின், அதன்
ஊற்றை இனங் கண்டு கொள்ள முடியும் எமது வரலாற்றின் தொடக்கத்திலே மகோன்னதமான
பொற்காலம் ஒன்று நிலவியது என்றும், அதன்பின் வரவர இழி நிலை வளர்ந்து வந்துள்ளது
என்று ஐதீகம் ஒன்று கருத்துலகிலே ஆழப் பதிந்துள்ளது. உதாரணமாக தமிழ்நூல் வரலாறு
என்ற நூலிலே திருவாளர் பாலூர் கண்ணப்ப முதலியார் பின்வருமாறு எழுதுகிறார்:
"பழங்காலம் பொற்காலம் ஆகும். அக்காலத்து மக்கள் நனிநாகரிகராய் வாழ்ந்தனர்.
தங்கள் வாழ்வை இயற்கையோடு இணைத்து வாழ்ந்தனர். இலக்கிய வளத்தில்
சிறந்துவிளங்கினர்." எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் இலட்சியவாதிகள் சிலர்
குறைபாடெதுவுமற்ற கற்பனையுலகம் ஒன்றைப் பற்றுக்கோலாகக்கொள்வது போலச் சென்ற
காலத்தின் ஒரு பகுதியை நிறைவான சமுதாயம் இயங்கிய பொற்காலமாகச் சிலர் கொள்வர்.
இம்மனப் பதிவு அறிவின் துணையாற் பெறப்படுவதன்று; அரைகுறைச் செய்திகளின்
அடிப்படையிலும், ஒரு வகையான மயக்க உணர்வின் அடிப்படையிலுமே பெறப்படுவது.
ஆயினும் இதற்கும் கோட்பாட்டு அடிப்படை ஒன்றுள்ளது. அதனைச் சுருக்கமாக
விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பெரும்பாலான தமிழரைப்
பொறுத்தளவில், ஈடிணையற்ற ஏகாதிபத்தியப் பெருமையுடன் "அவனி முழுதாண்ட" சோழப்
பெருமன்னர் மதிப்புக்குரியவராயிருப்பினும், 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த'
முடியுடை மூவேந்தர் அரசோச்சிய காலப் பகுதியே பொற்காலமாகக் கொள்ளப்படுகிறது.
பழமைக்கும் பழமையானதே பாராட்டுக்குரியது போலும். அது மட்டுமன்று. பிற்காலத்திலே
தென்னகத்தில் எழுந்த, சேர, பாண்டிய அரசுகளோடும், சோழப் பேரரசோடும்
ஒப்பிடும்போது "சங்ககால" முடியுடை மூவேந்தர் குறுநில மன்னராகவே
காட்சியளிக்கின்றனர். கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திலிருந்த
செம்பியரான இடைக்காலச் சோழப் பெரு மன்னரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில்
புறநானூற்றுப் பாடல்கள் புகழும் சோழமன்னர்கள் சிறுநிலக் கிழாராகவே தோன்றுவர்.
அதைப்போலவே திரிபுவனச் சக்கரவர்த்திகள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட இரண்டாம்
பாண்டிய பேரரசின் பெருமன்னரோடு ஒப்பிடுமிடத்து, சங்ககாலப் பாண்டிய மன்னர்
மன்னராகவே தோன்றுகிறார்கள் அல்லர். அவ்வாறிருந்தும், இடைக்காலத்தில் புகழொடு
விளங்கிய பாண்டிய சோழப் பெரு மன்னர்கள் வீரயுகத்தில் வாழ்ந்த தத்தம் மூதாதையரது
'உலகளந்த சிறப்புக்கு'த்தாம் அருகதையற்றவர் என்றே கருதினர். அந்தளவுக்கு
வீரயுகம் ஈடியணையற்தொன்றாகப் பிற்காலத்தவர் கருத்தில் வேரூன்றியிருந்தது.
இக்காலத்திலும் தமிழபிமானத்தோடு பெயர் மாற்றிச் சூட்டிக் கொள்பவர்கள் வீரயுக
மன்னர் பெயர்களையும் அவை போன்றவற்றையுமே விரும்புவது கண்கூடு. சுருங்கக் கூறின்
ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களாக வீரயுகம்-சான்றோர் வாழ்ந்த காலம் - கழிந்த
பொற்காலமாகக் கருதப்பட்டு வருகிறது.
இலக்கிய மரபை எடுத்து நோக்கிலும்
வீரயுகத்தைப் பாடிய முற்காலப் புலவரைச் சான்றோர் என்றும் அவருக்குப்
பின்வந்தோரைப் பிறசான்றோர் என்றும் வேறுபடுத்துவர் உரையாசிரியர்கள். சான்றோர்
என்னுஞ் சொல்லின் பொருளை உணரும்போது அதனைப் பழங்காலப் புலவருக்குப் பரியாயச்
சொல்லாக வழங்குவதன் சிறப்புத் தெரியவரும். சங்கச் சான்றோரையே 'நல்லிசைப்
புலவர்' என்றும் கூறுர். "தொல்லாசிரியர் நல்லாணை" பற்றிப் பேசும் இன்றைய
நவசான்றோரும் பாட்டும் தொகையுமே செய்யுளுக்குப் பிரமாணமாகக் கூறுவர்.
உலகமென்பது உயர்ந்தோர் மேற்றே எனக் கொள்ளும் இலக்கியப் பாதுகாவலர்கள்
அவ்வுயர்ந்தோர் சங்கச் சான்றோர் என்றே வாதிடுவர். இவற்றையெல்லாம்
பார்க்கும்பொழுது முடியுடை மூவேந்தர் அரசோச்சிய வீரயுகம் தமிழ் மரபிற் பசுமரத்
தாணிபோல் இறுகப் பதிந்திருப்பது வௌிப்படை.
இப்பழமைப் பற்று நன்மைக்கும்
தீமைக்கும் ஏதுவாக உள்ளது. நியாயமான புராதனப் பெருமை, நியாயம் அற்ற அகங்காரம்,
அர்த்தமற்ற தூய்மை வாதம் முதலியவற்றிற்கும் ஆதாரமாக அமைந்து விடுகிறது. இதற்கு
காரணம் பொற்காலத்தைப் பற்றிய பெருமித உணர்வேயாகும்.
கிரேக்க
இலக்கியங்களிலும் இத்தகைய ஒரு நம்பிக்கையைக் காணலாம். தமது 'இன' வரலாற்றுத்
தொடக்கத்தில் இயற்கையின் மத்தியில் மக்கள் இன்பமாக வாழ்ந்த பொற்காலம் (Golden
Age) ஒன்று இருந்தது எனக் கிரேக்க ஆதிகவிகளே நம்பினர்.
ஹோமருக்குப் பின்
வந்த பௌராணிகக் கவிஞனான ஹுசியொட் ஐந்து யுகங்களைக் குறிப்பிடுகின்றனன். அவை
முறையே பொற்காலம், வெள்ளிக் காலம், வெண்கலக் காலம், வீரர் காலம், இரும்புக்
காலம் ஆகியன. தான் வாழும் காலம் ஒளியற்ற இரும்புக் காலம் என்பது ஹீசியொட்டின்
கருத்து. முற்கூறிய காலங்கள் படிப்படியாகத் தரங்குன்றித் தகைமையிழந்திருப்பதாக
அவன் கருதினான். ஹோமருக்குப் பின்வந்த ஹீசியொட் கிரேக்க ஆதி கவியின்
படைப்புகளுக்கு உரிய இடம் வழங்குமுகமாகக் காவிய நாயகர்களுக்கு ஒரு காலத்தைத்
கற்பித்து, தனது காலத்துக்கு முன் செருகினான் என்று சில ஆராய்ச்சியாளர்
கருதுவர். அவர்கள் கருத்துப்படி, நான்கு உலோகங்களினடியாகப் பெயரிய யுகங்களே
ஒழுங்கானவை என்றும், அவை கிரேக்க நாகரிக வளர்ச்சியை அடியொட்டி அதனைப்
பிரதிபலிப்பதாக உள்ளன என்றும் விளக்கம் கூறப்படுகிறது. இது சர்ச்சைக்குரிய
விஷயம். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்ற நிலப் பாகுபாடும் அதனடியாகப்
பிறந்த ஒழுக்கப் பாகுபாடும் புராதன வேட்டுவ நிலையிலிருந்து, வாணிபம்
செழித்தோங்கிய பட்டின நாகரிகம்வரை தமிழர் கண்ட வாழ்வியல் வளர்ச்சியை
எடுத்துக்காட்டுவதாகப் பலர் கொள்வதில்லையா? அது போலவே மனிதன் ஆதிகாலத்தில்
பொன், வெள்ளி, வெண்கலம் முதலிய உலோகங்களைப் பயன்படுத்திய பின்னரே இரும்பின்
பயன்பாட்டை அறிந்தானாதலால் ஹீசியொட்டின் இப்பாகுபாடு வரலாற்று உண்மையை
உட்கொண்டது என்று சிலர் வற்புறுத்துவர். இங்கே நாம் கவனிக்கத் தக்கது யாதெனில்,
பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியன பயன்பாட்டுடனேயே மனித நாகரிக வரலாறு
உறுதியாக முன்னேறத் தொடங்கியதென்று நாம் கூறக் கூடுமாயினும், ஹீசியொட் அவ்வாறு
எண்ணினானல்லன்.
வேலைகளும் நாட்களும் (பஞ்சாங்க முறையிலமைந்தது) என்னும்
நூலிலே கூறுகிறான், "ஐந்தாம் காலப்பகுதியைச் சேர்ந்த மாந்தரிடையே நான் வாழ
வேண்டுமென்பது தெய்வ சங்கற்பமாயில்லாது போனால், நான் இக்காலத்துக்கு முந்தியோ
அல்லது பிந்தியோ வாழவே விரும்புவேன். ஏனெனில் இப்பொழுது இரும்பு இனமனிதர்
வாழுகின்றனர்." இரும்பு இன மக்கள்மேல் கவிஞனுக்குள்ள மனவெறுப்பு துலாம்பரம்.
ஆதி கிரேக்க மெய்யியல் என்னும் நூலில் ஆசிரியர் பேணற் கூறும் செய்திகள் இங்கு
பொருத்தமாகக் காணப்படுகின்றன. கடவுளரையும் அக்கிய தலைவரையும் குதூகலத்துடன்
பாடிய ஆதிகவி ஹோமரைக் கூறிவிட்டு, பேணற் பின்வருமாறு எழுதுகிறார்:
"ஹுசியொட் எழுதியவற்றைப் பார்க்கும் போது நாம் வேறார் உலகுக்கு
வந்துவிட்டாற் போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகின்றது. ஹோமரது காவியங்களுக்கும்
தனது காலத்திற்மிடையேயிருந்த வேற்றுமையை அவர் உணர்ந்திருந்தனர். ஹோமரது
காவியங்களிற் காணப்படும் களிப்புணர்வை இங்குக் காணோம். கடவுள்களைப்பற்றிய
உண்மையைக் கூறுவது முக்கியமென இங்கு கருதப்படுகிறது. ஹோமரது காலத்திற்குப்
பிந்திய, வளங்குன்றிய காலம் தன்னுடையது என்பதையும் ஹீசியொட் உணர்ந்திருந்தார்.
ஹோமராற் பாடப்பட்ட அக்கிய அரசர்கள் ஹீசியொட்டின் காலத்தில் பொதுமக்களோடு
தொடர்பில்லாதவர்களாகவும், செம்மையற்ற சட்டங்களை இயற்றுபவர்களாகவும் விளங்கினர்.
ஆகவே பழைய சாதியினராகிய மந்தை மேய்ப்போர், கமஞ் செய்வோர் என்போரை நோக்கியே
ஹீசியொட் பாடினார். 'அக்கிய மத்திய கால'த்தின் வளமும் ஆடம்பர வாழ்வும் என்று
பொதுமக்களது நிலைக்கு அப்பாற்பட்டனவாக இருந்தன. உலகம்பற்றிய பண்டைய கருத்து
அவர்களிடையேயிருந்து அற்றுப்போகவில்லை"
பேராசிரியர் பேணற்றின் கூற்று
கூர்ந்து கவனிக்கத்தக்கது. தனது காலத்தைப் பெருமையற்ற இரும்புக் காலம் என
வருணிக்கும் புலவன், முந்திய காலங்களைப்போல 'வளமும் ஆடம்பரவாழ்வும்' தனது
காலத்திலில்லை எனக் கவல்வது தெரிகிறது. முந்திய காலங்களிற் காணப்பட்ட வளங்கள்
அக்கிய உயர் குடியினருக்கேயன்றிச் சாதாரண கிரேக்க மக்களுக்கும் உரியனவாக
இருக்கவில்லை என்று கவிஞன் சிந்திக்க வில்லை. தனது காலத்துத் துன்பங்களை -
அவற்றின் காரணங்களை அறியமாட்டாதவனாய்-முந்திய காலங்களின் கற்பனையான இன்பங்களோடு
ஒப்பிட்டு, "அந்த நாளும் வந்திடாதோ" என ஏங்குகின்றான். ஆனால் சுற்றிச்
சூழ்ந்துள்ள துயரங்களைத் தாங்க அப்பழங்கால இனிமை நினைவு உதவியது எனலாம்.
ஹீசியொட்டுக்குப் பின்வந்த கிரேக்க கவிஞர் மட்டுமன்றித் தத்துவ
வாதிகளும் இப்பொற்கால உணர்வைத் தமது தத்துவ விளக்கங்களுக்குள் அமைத்துக்
கொண்டனர். உதாரணமாக உலக இயக்கத்துக்கு விளக்கம் கூற முயன்றவரில் ஒருவரான
எம்பிடோக் கிளிஸ் காதல் மூலகங்களை ஒன்று சேர்த்த நிமித்த காரணமாய் இருந்தது
எனக் கொண்டு, காலக் கிரமத்திற் பூசல் அதிகமாக மூலங்கள் வேறாகப் பிரியும் நிலை
ஏற்படுகிறது என்றார். பூசல் முற்றாகச் செயற்பட்டபின் மீண்டும் காதல் தனியாட்சி
செய்யும் காலத்தையே பொற்காலம் என்றான் எம்பிடோக்கிளிஸ். தனது காலத்தில்
"சாவும், சினமும், அழிவின் படைகளும் நிறைந்து" இருப்பதாகவும் தனது நாடு "துயர்
மிகு நாடு" என்றும் அவன் நம்பினான். எம்பிடோக்கிளிஸ் கூறியது பற்றிக்
குறிப்புரை கூறிய அரிஸ்டோட்டில் "எமது காலத்திற் பூசல் மிகுந்து
கொண்டிருக்கிறது என்றும், முன்பு காதற் காலத்தில் இருந்த அதே நிலையில் இப்போது
பூசற் காலத்தில் உலகம் இருக்கிறது" என்றும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் பேணற் கூறுகிறார்: "உலகம் மேலும் சிறப்படைவதற்குப் பதிலாகக்
குன்றிக் கொண்டு போகிறதென்னும் பிற கற்பனைகளோடும் இக்கருத்து நன்கு
பொருந்துவதாயுள்ளது."
ஹீசியொட் போன்றோர் தமது காலத்தில் சீவித்த
'சாதாரண' மனிதரிலும் பண்டைய இதிகாச புருஷர்கள் பன்மடங்கு பலசாலிகள் என்று
நம்பினர்; செல்வமிக்கவரா யிருந்தனர் என்றும் எண்ணினர்.
தமிழிலக்கிய
மரபிலே இதுபோன்ற எண்ணம் நன்கு வேரூன்றியுள்ளது. ஒரு சிறு உதாரணம் போதும்.
பட்டினப் பாலையிலே,
"நேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
கோழி
யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்"
என வருகிறது. அதாவது, நகையணிந்த மகளிர்
முற்றத்தில் உலருகின்ற நெல்லைத் தின்னும் கோழியை எறிந்த பொன்னாற் செய்த மகரக்
குழை, பூணணிந்த காலினையுடைய சிறுவர் கையாலுருட்டும் மூன்றுருளைச் சிறுதேரினது
வழியின் முன்பை விலக்கும் செல்வச் செழிப்புக் கற்பித்துக் கூறப்படுகறது.
இதுபோலப் பலவிடங்களில் முடியுடை மூவேந்தர் காலத்து 'வளமும் ஆடம்பரமும்'
வருணிக்கப்படுவதை வரலாற்றுண்மையெனக் கொண்டு, நன்னூல் உரைகாரர் மயிலை நாதரைப்
போன்று,
"குழை கொண்டு கோழியெறியும் வாழ்க்கையவரென்ற வழி, ஒன்றானும்
முட்டில் செல்வத்தாரென்றவாறு" எனக் கூறுவது மட்டுமன்றி, 'சங்க' காலத் தமிழகமே
இவ்வாறு பொன் மலிந்த நாடாக மிளிர்ந்தது என உரைப்பாரும் உளர். "பொன் மலிந்த
விழுப்பண்டம் நாடு ஆர" என்றும் கூறும் மதுரைக் காஞ்சி. அதாவது, பொன்
மிகுதற்குக் காரணமாகிய சீரிய சரக்குகளை நாட்டிலுள்ளார் நுகரும்படியாக வந்து
சேர்ந்த நாவாய்கள் குறிப்பிடப்படுகின்றன. நாவாய்களும், பொன்னும்,
பிறபண்டங்களும் இருந்தனவென்பது உண்மையே. ஆனால் அவை நாடு முழுவதும் பொங்கி
வழிந்து யாவர்க்கும் சொந்தமாயிருந்தன என்பது ஐதீகமே. அதனடிப்படையிலே பொற்காலம்
சிருஷ்டிக்கப்பட்டது.
"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலாச்
செல்வரும் சேர்வது நாடு"
என்றும்,
"பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து"
என்றும் வள்ளுவர் கூறியது அன்றைய தமிழகத்தின்
நேர்முக வருணனையன்று. அவர் சார்ந்து நின்ற வணிக வர்க்கத்தின் நோக்கில் சிறப்பான
ஒரு நாட்டின் இலட்சிய வடிவமேயாம். பொற்காலத் தமிழகம், அதாவது 'சங்க' காலத்
தமிழகம் "பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரந்து" விளங்கியது
என்பது கலப்பற்ற மூட நம்பிக்கையேயாம். கிரேக்க கவிஞரது இலட்சியமான பொற்காலத்தை
ஒத்ததே இதுவும்.
புலவர் முதலான பரிசிலரின் நிலைமையை சமுதாய யதார்த்த
நிலை என்று கூற இயலாது என்பது என் கருத்து, ஏனெனில் புலவர் முதலான ஏனையோர்
யதார்த்த மனநிலையினரல்லர். எனவே அவரது வறுமைநிலையைக் கொண்டு சமுதாயப் பொருளாதார
நிலையைக் கணிப்பின் அது முறையான ஒன்றாக அமையாது என்பது என் கருத்து.
சான்றோர் செய்யுட்களாகக் கொண்டமையால் அன்றைய சாதாரண மக்களின் உண்மை நிலையை
அறிந்து கொள்வது கடினம். ஆயினும் கொடை வள்ளல்களின் வண்மையைச்
சிறப்பிக்குமுகமாக, அவரது ஆதரவைப் பெற்ற பரிசிலர் பல பாடல்களில் துணைப்
பாத்திரங்களாகத் தோற்றமளிக்கின்றனர். பெரும்பாலான ஆற்றுப் படை நூல்களிற் காணும்
இரவலர் கூட்டங்களைப் பார்க்கும்போது, அன்றைய யதார்த்த நிலை ஒருவாறு
புலப்படுகிறது.
"ஆடுபசி உழந்த இரும்பேர் ஒக்கல்"
"நீடுபசி
ஒராஅல் வேண்டின்"
"அழிபசி வருத்தம் வீட"
"பழம்பசி கூர்ந்தஎம்
இரும்பேர் ஒக்கல்"
"கடும்பின் கடும்பசி தீர"
"ஒல்குபசி உழந்த ஒருங்கு
நுண் மருங்குல்"
முதலிய சொற்றொடர்களை மேல் நோக்காகப்
பார்ப்பவர்க்கும் 'கொடிய வறுமையின் எல்லையை' எட்டிய குடும்பங்களின் அவல நிலை
நெஞ்சில் தைக்காமற் போகாது. ஆனால் 'சங்க' காலம் பொற்காலம் என்ற முற்சாய்வுடன்
படிக்கும் எம்மவரிற் பெரும்பாலானோர் இதனை எண்ணும் பொறுமையுடையவர் அல்லர்.
வேறுவகையிலும் எமது இலக்கியங்கள் வளர்ந்து வந்துள்ள பொற்கால உணர்வு
புலப்படுகிறது. உதாரணமாக முச்சங்க வரலாற்றினை நோக்குவோம். தலைச்சங்கம்,
இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் பாண்டியர் நிறுவினர் என்ற கதை
யாவரும் அறிந்ததொன்றே. அம்மூன்று சங்கங்களும் இறங்கு வரிசையில்
கற்பிக்கப்பட்டுள்ளமை தௌிவு. முதற் சங்கம் இருந்தாருள் திரிபுரமெரித்த
விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த முருகவேளும், நிதியின் கிழவனும்,
அகத்தியனாரும் அடங்குவர். இவர்கள் தேவரும் முனிவரும் தலைச்சங்கப் புலவரோடு உறவு
கொண்டாடியதற்கு எடுத்துக்காட்டு. இடைச் சங்கத்தில் தெய்வாம்சம் பொருந்தியவர்
அகத்தியனார் ஒருவரேபோலும். கடைச்சங்கத்தில் சிறுமேதாவியார் முதலிய மானிடப்
புலவர் மாத்திரம் இருந்தனராம். வரவர நிலைமை குன்றுவதை இது காட்டுகிறதன்றோ!
இவ்வாறு இலக்கிய மரபில் ஆழமாகப் பதிந்துள்ள நம்பிக்கை எம்மவரைப்
பின்னோக்குபவராகவே வைத்துளது. இருபதாம் நூற்றாண்டிலும்-முன்னேற்றத்தைக் கண்ணாற்
காணக்கூடிறய வேளையிலும்-பலர் "கழிந்தது மன்னே" எனக் கவலையடைகின்றனர். உதாரணமாக,
தற்காலக் கவிஞரான கலைவாணன் சென்ற காலத்தின் சிறப்பையெண்ணி ஏங்குகிறார்.
"அம்புவியின் மத்தியிலே
ஆண்டுபல முன்னிருந்தால்
கம்பனைப் போற்
கவிக்குரலைக்
காற்றினிலே நாமொலிக்கப்
பம்பரம்போல்
கேட்ட நிலம்
பரவசத்திலே சுழலும்
வம்பறியா அந் நாளில்
வரத் தவறி இன்று வந்தோம்."
தனது காலத்துச் சமுதாய ஒழுங்குடன் 'ஒட்ட' இயலாது
விரக்தியடைந்த கலைஞனொருவனது குரல் இது. கம்பன் வாழ்ந்து பாடிய 'வம்பறியா
அந்நாள்' வாராதோ என்று ஏங்குகிறான் கவிஞன். 'வம்பறியா' என்று தொடர்ந்து
கூர்ந்து கவனிக்கற்பாலது.
சென்னையில் நடைபெற்ற 'உலகத் தமிழ்
மகாநாட்டின் 'போது, "புகாரில் ஒரு நாள்" என்று கவிதைப் போட்டி நிகழ்ந்தது.
இன்று புகார் 'பொன்னகரமாகக்' கருதப்படுவதற்கு இக்கவிதைப் போட்டியே சிறந்த
சான்று. பரிசு பெற்ற பத்துக் கவிஞரில் ஒருவரான ந.சந்தானம் பின்வருமாறு
பாடுகிறார்.
"வீதியினில்
பொன்னோ மணியோ, புனைவடமோ
மற்றுமுள
தென்னோ அவையெல்லாம் இங்குண்டாம் இந்நகரில்
இல்லாத
தொன்றில்லை இந் நகரின் மாண்புகளைச்
சொல்லாதா ரில்லையினிச் சொல்வதற்கும்
எல்லையிலை.
.............................
பொற்கால மேன்மையெலாம் பொய்யில்லை
என்றெடுத்துத்
தற்காலம் காட்டல் தமிழர் கடனன்றோ."
"பொற்கால மேன்மைகள் பொய்யில்லை" என்று அடித்துக்
கூறுகிறார் புலவர். ஆனால் அதே புகார்ப் பட்டினத்திலே இன்னல் மிகுந்திருந்ததைக்
காணலாம். 'இரட்டைக் காப்பியங்'களில் ஒன்றான மணிமேகலை எமக்குக்
காட்டியிருப்பதுபோலப் (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், பக் 143) "பொருளாதார
முரண்பாட்டின் காரணமாக நாட்டிலே பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது; பசியுறும்
ஆருயிர் மக்கள் பலராவர்." இது சாத்தனார் தீட்டும் காட்சி. ஆயினும், "இந்நாளில்
இல்லாததொன்றில்லை" என்று புலவர் சந்தானம் பாடும்பொழுது புகாரைப்பற்றிய பொய்ச்
செய்தியே பொற்கால உணர்வுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது புலனாகிறது. முரண்படு
கருத்து.
பட்டினப்பாலையிலே வணிகர் சிறப்புக் கூறும் பொழுது,
"கொள்வதூஉ மிகை கொளாது
கொடுப்பதூஉங் குறை
கொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்"
நல்லவர்களைக் குறிப்பிடுகிறார் புலவர்; இதன்
எதிரொலியைத் திருக்குறளிற் காண்கிறோம்:
"வணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்."
இதற்குப் பரிமேலழகர் உரை வருமாறு:
"பிறர்
பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின், வாணிகஞ் செய்வார்க்கு நன்றாய
வாணிகம் ஆம். பிறவும் தம்போற் செய்தலாவது கொள்வது மிகையும் கொடுப்பது குறையும்
ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல்."
வணிக வர்க்கத்தாருக்குரிய அறிவுரையை
நிதர்சனமாகக் கொண்டு, அக்காலத்து "நீதிநேர்மை" பேசுவோர் பொற்காலத்தைக்
கனவுலகமாகக் கொண்டு வாழ்கின்றனர் என்பது உண்மை.
பொற்காலத்தை நினைந்து ஏங்கிய கிரேக்க இலக்கிய கர்த்தாக்களும் அப்பொற்காலம்
சூதுவாது அறியாத குற்றமற்ற காலம் (Age of Innocence) என்றே விளக்கங் கூறினர்.
கவிஞனான கலைவாணன் கவியரசன் கம்பன் வாழ்ந்த காலத்தை எண்ண ஏங்கலாம். ஆனால்
இராம காதை பாடிய கம்பனும் குற்றமற்ற கற்பனை உலகம் ஒன்றை எண்ணி ஏங்கியவனே. அவன்
காலத்து அவைப் புலவர் பலரோ 'சங்ககால' மன்னனான கரிகாலன் காலத்தைப் பெருமையுடன்
நினைந்து, 'அந்த நாளும் வந்திடாதோ' என ஏங்கினர். ஆக, யாவரும் பொற்காலமாக
அக்காலத்தை மானஸிகமாக அனுபவிக்கின்றனர் என்பது தௌிவு.
பொற்காலம் என
ஒன்றை வருணிக்கும்போது சிறப்பெல்லாம் அக்காலத்துடன் முடிந்துவிட்டது என்னுங்
கருத்து உட்கிடை. அச்சிறப்பை மீண்டும் பெறத்துடிப்பதே செயலின் உந்துதலாக
அமைகின்றது. இவ்வுணர்விற்கு இந்திய வைதிக சமயக் கோட்பாடுகளும்
ஆதாரமாயமைந்துள்ளன. ஞானிகள் சமய உண்மைகளை இறைவாயிலாகப் பெற்றுவிட்டனர் என்றும்,
இனிப் பெறக்கூடியது இல்லை என்றும் வேத வழக்கைப் பிரமாணமாகக் கொள்வோர் கூறுவர்.
திரு.கி.வா. ஜகந்நாதையர் இதுபற்றிக் கூறுவது நல்ல எடுத்துக்காட்டு.
"பாரமார்த்திக வாழ்வை வேதகால முதல் அறிந்து வாழ்ந்தவர்கள் அனுபூதிமான்களாக
இருந்து வந்திருக்கிறார்கள். இனிப் புதியதாக உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்
என்பது இல்லை. கிடைத்த உண்மையைக் கடைபிடித்து வாழ்ந்து, அதனால் வரும் இன்பத்தை
நுகர்வதே நம்முடைய கடமையாகும்."
பாரமார்த்திக உண்மைகளே ஐயர் அவர்களால் விதந்து கூறப்படினும், சென்ற
காலத்தின் சிறப்பு யாவற்றிற்கும் பொருந்துவதாகவே மேலோர் கூறுவர். முற்காலத்தவரை
வருணிக்கையில் "பிணிதபு நோன்பும் பெருகுறு வாழ்நாளு முழுதுணர் வலியுமுடைய
முற்காலத்தார்" என்றும், "சில்வாழ்நாளும் பல்பிணியுஞ் சிற்றறிவுமுடைய
பிற்காலத்தார்" என்றும் வாய்பாடாகக் குறிப்பது உரைகளிற் காணப்படுவதொன்று.
முற்காலத்திலிருந்த சில நூல்கள் அழிந்துபோனமைக்குக் காரணம் கூறிப்போந்த
மரபுவழித் தமிழறிஞரும், திருவாவடுதுறை ஆதீனமகாவித்துவானாக வீற்றிருந்தவருமான
யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் திராவிடப் பிரகாசிகை என்னும் நூலிலே
பிற்காலத்தவரது ஆற்றலின்மையையே விதந்து கூறுவார்.
"செந்தமிழ் மொழி
தோன்றுங்காலத்து உடன் தோன்றிற்றாய் அதற்குப் பேராதாரமாய் முச்சங்கத்தும் நிலவிய
முதனூலாகிய அகத்தியங் கடைச்சங்கம் ஒடுங்கி பிற்றை ஞான்று வழங்கற் பாடின்றி
மறைதற்குக் காரணந்தான் யாதெனின், கூறுதும், அகத்தியம் பல் வாழ்நாளுஞ்
சில்பிணியும் பேரறிவுமுடைய அக்காலத்தார் கற்றுப் பிறருடன் பயின்று அறிவு
நிரப்புதற் பொருட்டுச் செய்யப்பட்டதொரு பெரு நூலாதலின், சின்னாளும்,
அவற்றுள்ளும் பல்பிணியும், சிற்றறியும் உடையராகிய இக்காலத்தார், தாம் அதனைக்
கற்றலும் பலருடன் பயிறலுஞ் செய்து கல்வி நிரப்புதல் முடியாதென்று கைவிட்டு,
அதன் வழிச் சுருங்கித் தோன்றிய தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையே
கைக்கொண்டு போற்றிப் பயில்வாரானமையின் அது எடுத்தெழுதிப் படித்துப்
பயில்வாரின்றி வைகரி வடிவிற்றீர்ந்து, மத்திமை வடிவு நேர்ந்து, பைசந்தி
வடிவிற்றாகிப் பரமயோகிகட்கே புலனாதற்குரிய சத்த சூக்கும நாதமாய்
ஒடுங்கிற்றென்க. அவ்வாறு பாதுகாத்துப் பயில்வார் கைவிட்டமையால், வடமொழியின்
மாமறையாகமச் சுருதிகளுள்ளும் அவற்றின் வழிநூல்களுள்ளுங் காலந்தோறும் ஒடுங்கின
பல; இன்னும், அவ்வாறு பாதுகாத்துப் பயில்வார் கைவிடுதலாற் றென்மொழியில் தேவாரச்
சுருதிகளுள்ளுந் தெய்வச் சங்கமரீஇய நூல்களுள்ளுங் காலந்தோறும் ஒடுங்கின பல...
மாபுராணம் பூதபுராணம் இசைநுணுக்க மென்பன மறைதற்குக் காரணமென்மையெனின், அவையும்
பரந்து பட்ட பொருண்மையவாய் வாழ்சில் நாட் பல்பிணிச் சிற்றறிவின் மக்கட்கு
உபகாரப்படாமையின் அவர் தம்மாற் கைவிடப்பட்டு மறைந்தன வென்க."
பண்டைத்
தமிழ் நூல்கள் மறைந்தமைக்குக் காரணங்கள் பல. பலகாலமாக இலக்கியங்கள் வாய்மொழியாக
வந்ததுவும், அவை எழுதப்பட்ட போதும் எளிதில் அழியவல்ல பனையோலையாற் செய்த ஏட்டில்
எழுதப்பட்டதுவும், பொதுப்படையாகக் கல்வியறிவு பெருகாமல் இலக்கிய அறிவு சிற்சில
குடும்பங்களில் அடைபட்டுக் கிடந்ததுவும், சமயக் காழ்ப்புக் காரணமாக நூல்கள்
அழிக்கப்பட்டதுவும், அந்நியர் வருகையால் அமைதி தலைதடுமாறியதுவும் இன்னோரன்ன பிற
காரணங்களும் நூல்கள் மறையக் காரணமாயின. அவ்வாறிருக்கவும் சபாபதி நாவலர் மனித
ஆற்றலின் வீழ்ச்சியைக் காரணமாகக் கூறுவது வேடிக்கையாகத் தான் இருக்கிறது. ஆனால்
அவரது நம்பிக்கை அப்படிக் கூறவைக்கிறது. எனினும் ஆசிரியர் பத்தொன்பதாம்
நூற்றாண்டில் வாழ்ந்தவராதலால் மனத்தின் ஒரு மூலையிற் சிறிது ஐயப்பாடு
எழுந்ததுபோலும். சுற்று முற்றும் நவீன ஆராய்ச்சிக் கருத்துக்களும் பகுத்தறிவு
வாதமும் பெருகி வந்த நேரத்தில், ஆதீன வித்துவானாக இருந்தவருக்கும் ஐயம்
தோன்றுதல் உதாரணங்களும் காட்ட விரைகிறார்:
"வடநூலாரும் 'முற்காலத்தில்
தைவ வியாகரணங்களும் ஆரிட வியாகரணங்களும் பல வழங்கின. கலிகாலத்தில் மக்கட்கு
ஆயுளும் அறிவுங் குன்றுதலின், அவற்றினை யெல்லாங் கற்று அறிவு நிரப்ப மாட்டாது
வடமொழியை வழுமலைதர வழங்குவாராயினர். அது கண்ட பாணினி முனிவர் அருந்தவமிருந்து
சிவபிரான் திருவருள் பெற்று அத்தைவ ஆரிட வியாகரணங்களைச் சுருக்கி அட்டாத்தியாயி
என ஓரிலக்கண நூல் செய்தருளினார்' என்றுரைப்பாராதலின் யாம் கால பேதத்தோடு
படுத்தோதும் இவ்வரலாறு மற்றவராலும் ஒப்பப் பாலதேயாமென்பது."
இவ்வாறு
சுழன்று சுழன்று பொற்கால மேன்மை பேசுகிறார், மகாவித்துவான். இந் நம்பிக்கை
இன்றும் பலமுள்ளதாகக் காணப்படுகின்றது. உதாரணமாக எமது முந்தையோர் நூறாண்டு
வாழ்ந்தனர் என்று நம்பினார் மறைமலையடிகள். இக்காலச் 'சிற்றறிவுடையோரும்'
அதனையறிந்து வாழ்வாங்கு வாழும் பொருட்டு, யுமக்கள் நூறாண்டு வாழ்வதெப்படி?ரு
என்றொரு நூலை எழுதினர்.
சில தமிழறிஞர்கள் திருக்குறளைப் பொற்கால நூல்
எனக் கொள்வர். அதனாலேயே அது இன்றும் தமிழர் வாழ்க்கைத் தத்துவ வழிகாட்டியாக
விளங்க வேண்டும் எனக் கூறுவர். பன்னெடுங்காலமாக மாற்றமடையாதிருந்து வந்த
சமுதாயத்தில் திருக்குறள் அறிவுக்கு அந்தமாகக் கருதப்பட்டது இயல்பே. ஆனால்
கண்ணாரக் காணப் பல்வேறு மாற்றங்கள் நிகழும் இற்றை நாளிலும் அதுவே. 'வேதம்'
என்பதுகால முரணாக மட்டுமன்றி கண்மூடித்தனமாகவும் இருக்கிறது. திருவள்ளுவ
மாலையில், மதுரைத் தமிழ் நாகனார் பாடியதாகப்பின்வருஞ் செய்யுள் உள்ளது:
"எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்-சொல்லால்
பரந்தபா வால்என் பயன்வள்
ளுவனார்
சுரந்தபா வையத் துணை"
தமிழ் நாகனாரின் கூற்று இன்றும் பொருத்தமுடையதே என வாதிக்கும் திருக்குறள் அன்பர்கள் பொற்கால மயக்கமுடையவர்களாகவே இருப்பார்கள். வாழ்வியல் சம்பந்தமாகத் திருக்குறள் அன்றையக் கண்ணோட்டத்திற் பல ஒழ