Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Tamil  Music >  Nammakal Kavingar on Thamizh Isai

Nammakal Kavijnar on Thamizh Isai

[see also One Hundred Tamils - Nammakal Kavinjar V.Ramalingam Pillai]

தமிழிசையின் தத்துவம்

'இசை'எனல் கருத்துடன் ஓசையும் இசைவதாம்.
'கற்றலில் கேட்டலே நன்றெ'னும் கட்டுரை
படிப்பிற்கு மட்டுமா? பாட்டிற்கும் உண்டு.

படித்துக் கற்றிடும் அறிவைப் பார்க்கினும்
கேட்டுக் கற்றிடும் அறிவே கெட்டியாம்.
என்னும் தத்துவம் இசையினால் பலம்பெறும்
செவிவழி நுழைந்தே உணர்ச்சியைத் திரட்டி
அறிவைத் தேடும் ஆவலுண் டாக்கி
எண்ணச் செய்கிற ஓசையே இசையாம்.

ஓசைகள் மட்டுமே உணர்ச்சிஉண் டாக்கலாம்.
அழுவதற் கென்றோர் ஓசையை அறிவோம் ;
சிரிப்பதைக் காட்டும் சத்தமும் தெரிவோம் ;
அச்சம் குறிக்கிற ஒலியையும் அறிவோம் ;
அதிசயப் பட்டால் அதற்கொரு தனிஒலி ;
ஐயம் வினாக்களும் ஓசையால் அறியலாம் ;
அபயக் குரலையும் ஓசையால் அளக்கலாம் ;
எல்லா உணர்ச்சியும் ஓசையால் எழலாம் ;
எனினும் ஓசையே இசை ஆகாது.

'சங்கீதம்' என்பது ஓசையின் சங்கதி.
சப்த சுரங்களைச் சமர்த்தாய்க் கலந்து
நீட்டலும் குறுக்கலும் தெளித்தலும் செய்து
நிரவல் செய்து பரவல் நிரப்பிக்
கற்பனை மிகுந்த ஓசைகள் காட்டலே
சாமான்ய மாகச் 'சங்கீதம்' என்பது.

அதிலே மட்டுமோர் ஆனந்த மிருக்கலாம்.
நாதப் பிரம்மமும் அதிலே நாடலாம் ;
அதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி இல்லை ;
ஓசையை மட்டும் ரசிப்பவர் உண்டு.

ஆனால் அவர்கள் அதற்கெனப் பழகினோர்.
அப்படிப் பழகினோர் மிகச்சிலர் ஆவர் ;
அவர்களைப் பற்றியும் அக்கறை இல்லை.

பொதுஜன மனத்தில் அறிவைப் புகட்ட
இனிய ஓசையால் உணர்ச்சியை எழுப்பப்
'பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.

இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.

அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.

புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.

தத்துவம் இதனை மனத்தில் தாங்கி,
புதுப்புது 'மெட்டை'யும் இசையிற் புகுத்திப்
பழைய 'சிந்துகள்' 'பதங்கள்' 'வண்ணமும்',
தமிழின் சொந்தச் சந்தம் பலவும்
அழிந்துபோ காமல் அவற்றையும் போற்றித்
'தமிழிசை' வளர்ப்பது தமிழன் கடமையாம்.

சங்கீ தத்தையும் தமிழன் கைவிடான்.
சரித்திரம் அறிந்த சத்தியப் படிக்கு
யாழின் விதங்களும், குழலினம் அனைத்தும்,
வாத்தியக் கருவிகள் வகைகள் பலவும்,
ஏழு சுரங்களை இயக்கும் விதமும்,
'கர்நா டகத்துச் சங்கீதம்' என்றே
அழைக்கப் படுகிற அந்தக் கலையும்
தமிழன் ஆதியில் வளர்த்துத் தந்ததே.
இன்றைய தினத்திலும் இந்தக் கலைகளில்
தலைசிறந் துள்ளவன் தமிழனே யல்லவா?

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home