Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Festivals of the Tamil People > நவராத்தி - சரஸ்வதி பூசை

நவராத்தி - சரஸ்வதி பூசை

Dr.S.Jayabarathi (JayBee), Malaysia
28 September 2006

"நாமகளை மனமுருகிப் பிரார்த்தனை செய்தால் போதும். பணத்தைக் கொட்டிப் படாடோபமாக நீட்டி முழக்கிச்செய்யும் பூஜைகளினால்தான் அம்பிகை மனமகிழ்வாள் என்ற எண்ணம் எப்படியோ ஆழமாக வேரூன்றிவிட்டது. தனக்கே சரியாகத் தெரியாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லிக்கொண்டு, ஆயிரக்கணக்கில் செலவழித்து, பட்டுப்புடவைகளை நெய்யில் முக்கியெடுத்து நெருப்பில் போட்டு எரிப்பதால் அம்பாள் ஏமாந்துவிடுவாளா, என்ன? அவளுக்கு வேண்டியது ஆழமான, எளிமையான பக்தி. அவ்வளவே!"

[see also நவராத்திரி - Singai Krishnan ]


தமிழர்கள் பன்னெடுங்காலமாக வணங்கிவரும் தெய்வங்களில் நாமகள், கலைமகளாகிய சரஸ்வதியும் விளங்குகின்றாள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை மன்னர்களைவிட புலவர்களின் செல்வாக்கே ஓங்கியிருந்த்தது. சென்றநூற்றாண்டுவரையிலும்கூட அவர்களுக்கு செல்வாக்கு இல்லாவிடினும் கெளரவமாவது இருந்தது. தற்காலத்தில்தான் கற்றவர்களுக்குத் தமிழர்களிடையே மதிப்பு சா¢ந்துவிட்டது.

புலவர்களின் செல்வாக்காலும், கல்வியின் முக்கியத்துவத்தாலுமே நாமகளின் வழிபாடு சிறந்து விளங்கி பரவியது. வேறு தெய்வங்களை முழுமுதற்பொருளாக வணங்கி வந்த பெரும்புலவர்களும் கூட நாமகளைத்துதிக்கத் தவறவில்லை.

பெரும் விஷ்ணு பக்தராகிய கம்பரும், தீவிர சிவபக்தராகிய ஒட்டக்கூத்தரும் நாமகளை முழுமையாகப் பெற்றவர்கள். அடிக்கடி கலைமகளை நேரடியாகப் பார்க்கும் பேறு அவர்களுக்குக் கிட்டியது. ஆதி சங்கரா¢ன் பேராற்றலை மூன்றுமுறை கலைமகளே நோ¢ல் வந்து பா¢சோதித்திருக்கிறாள். அவரும் சர்வக்ஞபீடம் ஏறமுடிந்தது.

கலைமகளின் துதிகள் ஏராளமாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. சமண காப்பியமாகிய சீவகசிந்தாமணியில்கூட "நாமகள் இலம்பகம்" என்றொரு அத்தியாயம் உள்ளது.

கம்பனின் "சரஸ்வதி அந்தாதி"யும், ஒட்டக்கூத்தரின் "ஈட்டி எழுபது"ம் குமரகுருபரின் "சகல கலாவல்லி மாலை"யும் மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலைகள்.

நாமகளின் பேரருளுக்குப் பெரிதும் பாத்திரமானவர் குமரகுருபரர்.

பிறந்ததிலிருந்து பேசாமலேயே இருந்தவர் அவர். சிறு வயதில் அவருடைய பெற்றோர் அவரைத் திருச்செந்தூர் முருகனின் சன்னிதானத்தில் விட்டுவிட்டுச் சென்றனர்.

முருகனின் திருவருளால் அவர் கவிமாரியாகப் பொழிந்தார். முதற்பாட்டு முருகனின்
போ¢ல் பாடிய "கந்தர் கலிவெண்பா".

அன்றிலிருந்துதான் அவருக்குக் "குமரகுருபரன்" என்னும் பெயர் நன்கு விளங்கலாயிற்று.

திருச்செந்தூரிலிருந்து மதுரைக்கு வந்தார். அங்கு அவர் மீனாட்சியின் சன்னிதியில் "மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்" பாடினார்.

அதை மன்னர் திருமலை நாயக்கா¢ன் மடிமீது சிறு குழந்தை வடிவிலிருந்து அங்கயற்கண்ணி கேட்டுக்கொண்டிருந்தாள்.

அதில் "தொடுக்கும் பழம்பாடல் தொடையின் பயனே" என்னும் பாடலின்போது திருமலை நாயக்கரின் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி, மீனாட்சி, குருபரனின் கழுத்தில் சூட்டினாள்.

பிறமதவாதிகளுடன் வாதிட்டு வெல்வதற்காக குருபரர் தமிழ்நாட்டிலும் அதன்பிறகு பாரதநாட்டின் இதரபகுதிகளிலும் திக்குவிஜயம் செய்தார்.

அப்போது காசிக்கும் சென்றார். சைவர்களின் முக்கிய தலமாகிய காசியில் தமிழர்களுக்கு என்று ஒன்றுமேஇல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது.
ஆகவே காசியில் ஒரு மடத்தைத் தோற்றுவிக்க நிச்சயித்தார்.

அவ்வமயம் இந்துஸ்தானத்தின் பேரரசராக ஷா ஜஹான் இருந்தார். அவருடைய பிரதிநிதியாக அவருடைய மூத்தமகனாகிய தாரா ஷிக்கோ நவாப் பதவியில் அவுத் என்னும் ஊரில் இருந்து வந்தார். அவரைக் காணச் சென்றார் குருபரர்.

சித்தராகிய குருபரர் போகும்போதே சிங்கமொன்றின் மீது சவாரி செய்து சென்றார்.
நவாபு இந்துஸ்தானி மொழியில் பேசினார். ஆனால் அம்மொழி குருபரருக்குத் தெரியாது.

ஆகவே சரஸ்வதியைத் தியானித்து "சகல கலாவல்லி மாலை" எனும் பாடலைப்
பாடினார். நாமகளுடைய அருளால் குருபரருக்கு இந்துஸ்தானியில் பேசும் ஆற்றல்
ஏற்பட்டது.

இவ்வகை சித்தியை "Gift of Tongues" என்று கூறுவார்கள். இக்காலத்தில் கூட சில கிருஸ்தவ சமயபோதனையாளர்களுக்கு இறையருளால் வேற்றுமொழியறிவு ஏற்படும். மற்ற சமயங்களில் சாதாரணமாகத்தானிருப்பார்கள். நவாபிடம் இந்துஸ்தானியில் சரளமாகஉரையாடித் தம் வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்.

மனமகிழ்வுற்ற நவாபு காசியில் மடம் கட்டிக்கொள்ள இனாமாக நிலம் ழங்கினார். அன்றிலிருந்து குமரகுருபரா¢ன் மடத்தைக் "காசிமடம்" என்றும், அவருடைய வழியில் வந்த மடாதிபதிகளைக் "காசிவாசி" என்றும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
எளிமையாகக் கலைமகளை வழிபடுவது எப்படி?

சில புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சிக்கலான பூஜை முறைகளும் சமஸ்கிருதமந்திரங்களும் தோத்திரங்களும்தான் இருக்கின்றன.
ஆள்வைத்துச் செய்வது என்பது சிரமம் அல்லவா?

ஆகவே,

சரஸ்வதி படத்தை வைத்துக்கொண்டு அதன் அருகே விளக்கேற்றிவைத்து, முன்னால் ஒரு வெண்ணிறத் துணியை விரித்து, அதன்மீது புத்தகங்கள், எழுதுகருவிகள், மற்றபடிக்கு ஸ்டெதாஸ்கோப்பு போன்ற தொழிலுக்குரிய சாதனங்கள், ஆகியவற்றை வைக்கவேண்டும். ஏதாவது பலகாரங்கள், சுண்டல் போன்றவை யதேஷ்டம். ஊதுபத்தி. சாம்பிராணி. மலர்கள். கற்பூற தீபம். வெற்றிலைபாக்கு, மஞ்சள், குங்குமம், விபூதி என்று கிடைப்பதை வைக்கலாம். கிடைத்தால் சா¢. ஓஸ்லோ போன்ற இடங்களில் இதற்கெல்லாம் எங்கு போவதாம்?

கணினி, பெரிய கருவிகள், வாகனங்கள் போன்றவற்றை ஆங்காங்கு விட்டுவைக்கலாம்.

முக்கியமாக "சகல கலா வல்லி மாலை"யைப் படித்துப் பூஜை செய்யலாம்.

அதற்குமுன் புத்தகபீடத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்யவேண்டும்.

என்னமோ, ஏதோ என்று பயந்துவிடக்கூடாது. ஒன்றுமில்லை. முழுமனத்துடன் கலைமகளை நினைத்து அந்த பீடத்தில் இருப்பதாக வேண்டிக்கொள்ளவதுதான் அது. தமிழிலோ தெலுங்கிலோ எம்மொழியிலும் நினைக்கலாம். சரஸ்வதிக்கு இந்த மொழிகளெல்லாம் நிச்சயம் தொ¢யும்.

சகலகலாவல்லிமாலையைச் சொல்லமுடியாவிட்டலும் கவலையுறவேண்டாம்.

நாமகளை மனமுருகிப் பிரார்த்தனை செய்தால் போதும். பணத்தைக் கொட்டிப் படாடோபமாக நீட்டி முழக்கிச்செய்யும் பூஜைகளினால்தான் அம்பிகை மனமகிழ்வாள் என்ற எண்ணம் எப்படியோ ஆழமாக வேரூன்றிவிட்டது. தனக்கே சரியாகத் தெரியாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லிக்கொண்டு, ஆயிரக்கணக்கில் செலவழித்து, பட்டுப்புடவைகளை நெய்யில் முக்கியெடுத்து நெருப்பில் போட்டு எரிப்பதால் அம்பாள் ஏமாந்துவிடுவாளா, என்ன? அவளுக்கு வேண்டியது ஆழமான, எளிமையான பக்தி. அவ்வளவே!

அடுத்து "சகல கலாவல்லி மாலை".....

அன்புடன்
ஜெயபாரதி


சரஸ்வதி பூஜை
சகலகலாவல்லிமாலை
குமரகுருபரர்
[see also
Works of Kumarakuruparar at Project Madurai]

1.

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

2.

நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

3.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

4.

தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

5.

பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

6.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

7.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!

8.

சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

9.

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!

10.

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

பொருள்:

1. உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றை
அழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும் கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கே அல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதி இல்லையோ?

2. தாமரை மலரால் ஆன ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற பசுமையான பொற்கொடியாளே! குன்று போன்ற தனங்களையும், ஐந்து வகையாகப் புனையப்பெற்ற கூந்தல் வனத்தைச் சுமந்துள்ள கரும்பனைய சகலகலாவல்லியே! சொற்சுவை பொருட்சுவை தோய்ந்த நால்வகை கவிகளாகிய ஆசு, மதுரம்,சித்திரம், வித்தாரம் ஆகியவற்றைப்பாடும் பணியை எனக்கு அருள் புரிவாய்! சகலகலாவல்லியே!

3. உள்ளம் கனிந்து, தெளிவாகப் பனுவல்களைத் தெளிக்கும் புலவர்களின் கவிமழை
பொழியக்கண்டு களிப்படையும் தோகைமயிலாளே! சகலகலாவல்லியே! நீ அருளிய
செழிப்பான செழுந்தமிழ் அமுதத்தை அருந்தி, உன்னுடைய அருள் நிறைந்த கடலில்
குளிப்பதற்கு என்னால் இயலுமோ?

4. இனிமையான செந்தமிழ்ச் செல்வத்தையும் சமஸ்கிருதக் கடலையும் அடியார்களின்
சிறப்பான நாவினில் வீற்றிருந்து காக்கும் கருணைக்கடலான சகலகலாவல்லியே!
சீர்தூக்கிப்பெறுகின்ற பலநூல் துறைகளிலும் சார்ந்த கல்வியையும், சொற்சுவைநிறைந்த வாக்கையும் எனக்குப் பெருகும்படி அருள்புரிவாயாக!

5. நெடும் தண்டு உடைய தாமரையைக் கொடியாகக் கொண்ட பிரம்மனின் செம்மையான நாவிலும், அவன் மனத்திலும், உன்னுடையவெண்தாமரை மலர் ஆசனத்தைப்போன்று கருதி வீற்றிருக்கும் சகலகலாவல்லியே! நன்மையளிக்கின்ற செம்பஞ்சு போன்ற சிவந்த அழகுமிக்க உன் பொற்பாதங்களாகியதாமரை மலர்கள் என் நெஞ்சமாகிய தடாகத்தில் மலராதது ஏனோ?

6. விண்ணிலும்,மண்ணிலும்,நீரிலும் நெருப்பிலும், காற்றிலும், வேதத்திலும், அன்பர்
கண்ணிலும், கருத்திலும் நிறைந்திருக்கும்சகலகலாவல்லியே!முத்தமிழான பண்ணும்
பரதமும் கல்வியும் இனிமையான கவிதையும் நான் நினைக்கும்போது எளிதில் எய்துமாறு எனக்கு அருள் புரிவாயாக!

7.கலைத்தமிழாகிய சுவையான பால் அமுதத்தை, மனம் உவந்து தொண்டர்கள்
படைக்கின்றனர்; அதனைத் தெளிவுறசெய்யவல்ல வெண்ணிறப் பெண் அன்னம் போன்ற சகலகலாவல்லியே! பாடலையும் அதன் பொருளையும், பொருளால் ஏற்படக்கூடிய பயனையும் என்னிடத்தில் சேருமாறு உன் கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

8. தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமிக்கு அரிது என்பதால் நீ, எக்காலத்திலும்
அழியாத தன்மையை நல்கும் கல்வியாகிய பெருஞ்செல்வத்தின் பயனான சகலகலாவல்லியே! சிறப்பு மிகு சொல் திறமையும், அவதானம் புரியும் ஆற்றலும், கல்வி போதிக்கத்தக்க புலமையும் எனக்கு அளித்து ஆட்கொள்வாயாக!

9.பூமியைத்தொடக்கூடிய துதிக்கையையுடைய பெண்யானையோடு ராஜ அன்னமும்கூட நாணும் வண்ணம் நடைபயிலுகின்றாய்!தாமரையைபோன்ற திருத்தாள்களையுடைய சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகியமெய்ஞானத்தின் காட்சியாகத் திகழக்கூடிய உன்னை நினைக்கக்கூடிய திறமைசாலி யார்?

10. பிரம்மா முதலான தெய்வங்கள் பலகோடி இருந்தாலும்கூட உன்னைபோன்ற
கண்கண்ட தெய்வம் வேறு உளதோ? சகலகலாவல்லியே! குடைநிழலில் வீற்றிருந்து, நிலவுலகைஆட்சி செய்யும் மன்னர்களும் என்னுடைய பாடல்களைக் கேட்ட உடனே அவர்கள் என்னைப் பணியுமாறு செய்து அருள்வாய்!

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home