Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Tamilnation > Library > Eelam Section > வன்னிக் காட்டு வசம் - ஜா. அடைக்க்க்கல ராசா

TAMIL NATION LIBRARY: Eelam

  • வன்னிக் காட்டு வசம்
    ஜா. அடைக்க்க்கல ராசா
    Vanni Kaattu Vasam
    by Rev Father J. Adaikalaraja, Thanjavur, Tamil Nadu

பக்கங்கள் : vii + 89; புத்தக அளவு : டெமி 1/8; எழுத்து : 11 புள்ளி; வெளியீடு : 2003



போதைவஸ்து ஒழிப்பு கருத்தரங்கில் ஜா. அடைக்க்க்கல ராசா

அர்ப்பணம்
நன்றி
அணிந்துரை
முன்னுரை
தமிழீழத்தில் என் பிரவேசம்
தமிழருக்கெதிரான கூட்டு சதி
கோழை வீரம்
இந்தியாவின் இரட்டை வேடம்
போதைக்கு அடிமையாகும் தமிழ் இளையோர்
தமிழீழத்தில் பெண் விடுதலை
தமிழீழ சமூகம் - எனது பார்வை
தமிழீழத்தில் கிறிஸ்தவம்
இனப்பிரச்சனைக்குத் தீர்வு

For Full Text of Book please see PDF file


அர்ப்பணம் - Dedication

என்னை ஈன்று, தமிழமுது ஊட்டி வளர்த்த எனது தாய் பிலோ ஜாண், தந்தை கலாநிதி தே. ஜாண் அவர்களுக்கு

நன்றி - Acknowledgments

நான் வன்னிக்காட்டு வசமாகிட உதவியவர்கள் . . .
 # ஊக்கம் தந்து, ஆக்கபூர்வ ஏற்பாடுகள் செய்த அண்ணன் சின்னராசா,
# அனுமதி வழங்கிய சலேசிய சபை திருச்சி மாநிலத் தலைவர் அருட்பணி. தியோபிலஸ்,
# அன்போடும், பாசத்தோடும் வழியனுப்பிய பெற்றோர், உடன்பிறந்தோர்,
# உடனிருந்து ஊக்கம் தந்த நண்பர்கள் மாறன், அகிலன், சகாயராஜ்,
# என்னை ஏற்று, வழிநடத்திய மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் மற்றும் மன்னார், யாழ்ப்பாணம் மறைமாவட்ட சகோதர குருக்கள்,
# உடனிருந்து வழிகாட்டிய அருட்பணியாளர்கள் ஜேம்ஸ் பத்திநாதர், அன்டன் மத்தியாஸ் மற்றும் எமில் அவர்கள்,
# அணிந்துரை வழங்கிய தமிழீழ கவிஞர் காசி ஆனந்தன்,
# தட்டச்சு செய்து உதவிய சுசி மற்றும் மஞ்சு.


அணிந்துரை - உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், சென்னை.

பண்பட்ட நடுநிலையாளர் அருட்பணி. அடைக்கலராசா அவர்களின் வன்னிக்காட்டு வசம் படித்தேன். வெறி கொண்ட சிங்கள அரசாலும் தமிழின எதிரிகளாலும் அடிக்கடி புதைக்கப்படும் அல்லது திரிக்கப்படும் தமிழீழம் பற்றிய உண்மைகளை வெளிச்சத்தில் வைத்திருக்கின்றார். தமிழீழத்தில் ஓராண்டு காலம் தங்கியிருக்க நேர்ந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் குருத்துவ துறவியான அவர் கண்களில் பட்டவை, நெஞ்சைத்தொட்டவை அனைத்தும் உண்மையின் தரவுகளாய் இந்நூலில் பதிவாகியுள்ளன.

அவர் கருத்து இதுதான்: “இலங்கைத் தமிழர்களின் இன்றைய உண்மையான வாழ்வும் உணர்வுகளும் வெளிப்படாமல் மறைவாகவே உள்ளன. தீவிரவாதம், பிரிவினைவாதம் என்ற முத்திரைகளோடு நம் மக்களின் வாழ்வு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.”

ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை அடிக்கடி துன்புறுத்துவதாக அவிழ்த்து விடப்படும் பச்சைப் பொய்யையும், தமிழீழ மக்களின் விடுதலை உணர்வை அழித்தொழிக்க சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்ப் பகுதிகளில் தமிழ் இளைஞர்களிடையே போதைப்பொருட்களை பரப்பி வரும் கொடுமையையும் அடிகளார் இந்நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்.

நேரில் அடைக்கலராசா அவர்கள் நெஞ்சம் உருகிடக்கண்ட - நெருப்பில் எரிந்து கருகிப் போன தமிழீழம் இதுதான். “இலங்கையின் வடக்கு கிழக்கு (தமிழீழம்) பகுதிகளில் பெருமளவு தமிழர்கள் வாழும் இடங்களில் நிலபுலன்கள், வீடுகள,; வீட்டுப்பொருட்கள் அழிக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

பலர் நிரந்தரமாக ஊனமாக்கப்பட்டனர். இலங்கை முழுவதும் வாழ்ந்த தமிழ் இளையோர், குறிப்பாக ஆண்கள் பலர் காணாமல் போயினர். சோதனை, உசாவுதல், சந்தேக தடுப்புக்காவல் என்ற பெயரில் இன்றும் பலர் தென்னிலங்கையில் சிறையில் வாடுகின்றனர். அறுபதாயிரம் அப்பாவிகள் உயிரைப்பலி கொண்டு, இலட்சக்கணக்கானோரை அகதிகளாக்கி, பெண்களை விதவைகளாக்கி, மாணவச்செல்வங்களி;ன் கல்வியை பாழாக்கி அநாதைகளாக்கிய இருபதாண்டு கால யுத்தத்தால் இறப்பு, இழப்பு, இடப்பெயர்வு என்னும் முப்பரிமாண துன்பத்திற்கு தமிழர்கள் ஆளாகியுள்ளனர்.”

சிங்கள வெறி அரசின் தமிழின ஒழிப்புப் போரை தமிழீழத்தின் விடுதலைப் போராக மாற்றி, களத்தில் மேனி சிலிர்த்து நிற்கும் மாபெரும் தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழீழத்தின் ஒரே தலைவராக அடையாளம் காட்டுகிறார் அருட்பணியாளர். விடுதலை புலிகளின் போர் ஆற்றல் பற்றி மட்டுமல்ல, நிர்வாக ஆற்றலைப் பற்றியும் ‘வன்னிக்காட்டு வசம்’ விரிவாக பேசுகின்றது.

“வன்னிக்காட்டில் நுழையும் போதே ‘தமிழீழ ஆயத் துறை’ ‘போக்குவரவு கண்காணிப்புத்துறை’ போன்றவற்றையும், வன்னிப்பகுதியில் தமிழீழ போக்குவரத்து, தமிழீழ காவல், தமிழீழ நீதிமன்றம், தமிழீழ பொருண்மியம், தமிழீழ வனவளம், தமிழீழ மருத்துவப்பணி, தமிழீழ வைப்பகம் (வங்கி), போன்ற அடிப்படை அரசியல் நிர்வாக கட்டமைப்பையும் பார்;க்கலாம்.” என்கிறார் நூல் ஆசிரியர். உண்மைத் தமிழீழத்தை அவர் உலகிற்கு காட்டுகின்றார்.

‘தெற்காசிய ஒன்றியம்’ இன்றைய முதல் தேவை என்றும் அதன் மூலமே தமிழினச் சிக்கலை தீர்க்க முடியும் என்றும் அடிகளார் நூலின் முடிவில் தெரிவிக்கும் கருத்துச் சரியானதல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றம் இசுப்பானிய நாட்டின் பாசுக்கு தேசிய இன மக்களுக்கு விடுதலை தந்ததா? வடஅயர்லாந்து மக்கள் வாழ்வில் ஒளி பாய்ச்சியதா? இல்லையே. ஓரு தேசிய இனத்தின் விடுதலை அத் தேசிய இனம் தன்னை முழமையான விடுதலைப் போரில் ஒப்படைப்பதன் மூலமே பெறப்படும். அடுத்தவன் வயலில் தமிழ் ஈழத்தின் விடுதலை என்றைக்குமே அறுவடை ஆகாது. இக்கருத்தை அருட்திரு அடிகளார் தன் நூலின் இறுதியில் குறிப்பிடாமல் இல்லை.

“மக்களின் விடுதலைக்காக உறுதியுடன், துணிவுடன் பணிபுரியும் தலைவர்களாலேயே உண்மையான விடுதலை பெற்றுத்தர முடியும். ஈழத்தமிழர்கள் அப்படியானதொரு உண்மையான தலைவரைப் பெற்றிருப்பது அவர்களின் புண்ணியமே. தமிழீழம் நிச்சயம் விடியும்” என்கின்றார் அவர்.

அருட்பணியாளரும். நடுநிலையாளரும், பண்பாளருமான அவர் வாய்ச்சொல் நனவாகட்டும். காசி ஆனந்த்தன்


முன்னுரை

இந்துமாக்கடலில் ஒரு சிறு நீர்த்துளிப் போல் காட்சிதரும் தீவு இலங்கை. இன்று உலக வரைபடத்தில் சிந்தப்பட்ட இரத்தத்துளிப் போல காட்சி தருகிறது. கடந்த முப்பது ஆண்டு காலமும் இச்சிறு தீவு மக்கள் இரத்தமும் கண்ணீருமாக வாழ்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சமூக அவலம். அதிலும் ஈழத்தமிழர்களின் வாழ்வு நெருப்பிலிப்பட்ட புழுப்போல, கர்சிக்கும் சிங்கத்தின் வாயில் அகப்பட்ட மான்போல உள்ளது. இலங்கை தமிழர்களின் இன்றைய உண்மையான வாழ்வும், உணர்வுகளும் வெளிப்படாமல் மறைவாகவே உள்ளது. தீவிரவாதம், பிரிவினை வாதம் என்ற முத்திரைகளோடு நம் மக்களின் வாழ்வு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதிக்க சக்திகளின் கைகளிலுள்ள ஊடகங்கள் உண்மையை திரித்து, பரபரப்பு செய்திகளை முதன்மைப்படுத்தி பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு தமிழீழத்தின் உண்மை நிலையை, யதார்த்த வாழ்க்கையை மூடி மறைத்துள்ளன.

இந்நிலையில் நம் மக்களின் உண்மை நிலையறியவும், யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளை நேரில் கண்டறியவும், நம் இன மக்களோடு கூடிய மட்டும் இணைந்து வாழ்ந்து அனுபவம் பெற விழைந்தேன். குறைந்த காலமான ஓராண்டில் நான் பெற்ற அனுபவங்களை, நேரில் கண்ட நிகழ்வுகளை, கேட்ட கதைகளை, வாசித்து பெற்ற உண்மைகளை மட்டும் தொகுத்து ஈழத்து தமிழர்களையறியாத தமிழ் நாட்டு தமிழர்களோடும் ஈழத்தமிழர்களைப் பற்றிய தவறான எண்ணங்களோடு வாழ்பவர்களுக்கும், பயணக் கட்டுரையாக வழங்க எண்ணி முயற்சித்ததே இந்நூல்.

உறுதி செய்யப்படாத விடயங்களை, வெறும் கதையாகவே உள்ள கருத்துக்களை, யாருக்கோ நடந்த நிகழ்வை வேறு ஒருவர் சொல்லியோ இங்கு எதுவும் தரப்படவில்லை. என் இனிய கற்பனையோ, பகல் கனவோ, யூகமோ இங்கு வெளிப்படாது இருக்க கடும் முயற்சி எடுத்துள்ளேன். உள்மன கிளர்ச்சிக்காகவோ, பரபரப்பாக்கவோ எவ்வித செய்தியையும் இங்கு வெளியிடவில்லை. மாறாக உண்மையை எனது மனதில்பட்டவாறு அப்பட்டமாக எடுத்துரைக்கவே விழைகின்றேன். இன்னும் நான் காணாத, கேளாத, அனுபவிக்காத பல நிகழ்வுகள் இருக்கலாம். அவற்றையும் தொகுக்க நினைத்தால் என் வாழ்நாள் போதுமா?

தனிமனிதர்களின் அரசியல் இலாபத்திற்காக, மனித நேயமின்றி தமிழின அழிப்பை மேற்கொண்ட சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளுக்கெதிராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகிம்சை வழியில் பேச்சு வார்த்தைகள் மூலமாக தீர்வுகாண முற்பட்டு தோற்றுபோன நிலையில், வேறுவழியேயின்றி ஆயுதமேந்தும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள்.

மண்ணின் மீட்புக்காக, மக்களுக்காக கடந்த இருபது ஆண்டளவாக போரிட்டு, சமபலத்தை அடைந்த பின் போர் நிறுத்தம் ஏற்படுத்தி, பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இக்கால கட்டத்தில், துப்பாக்கி வேட்டொலி இல்லாத, அமைதி நிலவும் தமிழீழத்தில், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் கண்டறிந்து என்னையே பாதிப்புக்குட்படுத்துவதன் மூலமாக அதை பிற தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் கூறும் தார்மீக பொறுப்பேற்கிறேன்.

வாருங்கள் என்னோடு; விடுதலைக்கானம் இசைக்கும் வன்னிக்காட்டுக்குச் செல்வோம் . . .


தமிழீழத்தில் என் பிரவேசம்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். என் நீண்ட நாள் கனா 2003ம் ஆண்டு தை மாதம் முதல் நாளிலே நனவானது. ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற போகிப் பண்டிகையில் சிங்கள ஆதிக்க அரசின் எல்லையைக் கடந்து புளியங்குளம் வழியாக சுதந்திர தமிழீழத்தில் பிரவேசித்தேன். 14-01-2003 அன்று மாலை சரியாக 5.30 மணிக்கு என் தமிழீழ பிரவேசம் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின், அனைத்துலகத் தொடர்பகம் சார்பாக தயா என்ற ‘பொடியன்’ என்னை வரவேற்றான்.

பின் மாங்குளத்தில் யு9 வீதி வழியாக, போரில் தரைமட்டமான கட்டிடங்களையும், வளமான கிளிநொச்சி வயல்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய குளமான இரணைமடு குளத்தையும் பார்த்துக் கொண்டே வாய்க்கால் ஊடாக சென்ற மோசமான பாதை வழியாக இரவில் பயணமானோம். சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அதாவது தைப் பொங்கல் திருநாளன்று 15-01-2003 அதிகாலையில் விடுதலைப் புலிகளால் ‘ஓயாத அலை-1’ இராணுவ நடவடிக்கையால் மீட்கப்பட்ட முல்லைத்தீவு வந்தடைந்தோம். முல்லைத்தீவின் பங்குப் பணியாளர் அருட்பணி. ஜேம்ஸ் பத்திநாதர் அனுபவமும் தமிழுணர்வும் மிக்கவர். அவரின் துணையோடும், வழிகாட்டுதலோடும் என் வன்னிக் காட்டு விஜயம் துவங்கியது.

அடிமை வரலாறு

சிலோன் என்று பாரம்பரியமாக அழைக்கப்பட்ட இலங்கை கடந்த காலங்களில் இந்திய மன்னர்களுக்கும,; போர்ச்சுகீசு, டச்சு மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழும் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு நாடு. பல்வேறு ஆதிக்கங்களின் எச்ச சொச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன. இந்திய பல்லவர்களின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குளங்கள் அவர்களின் பெயர்களை தாங்கி நிற்கின்றன. டச்சு, போர்ச்சுகீசிய கட்டிட வடிவமைப்புகள் இங்குள்ள பழமை வாய்ந்த கிறித்தவ கோயில்களில் காணப்படுகின்றன. ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இலங்கை, ஆங்கிலேயனின் சூழ்ச்சியால் சிங்கள, தமிழ், இசுலாமிய மக்களிடையே ஆண்டான் - அடிமை நிலையை ஏற்படுத்திக் கொண்டது. பொருளாதாரத்திலும், கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் சிறந்து விளங்கிய தமிழர்களை ‘வந்தேறு குடிகள்’ என்று வரலாற்றை திரித்து, சிங்கள - பௌத்த பேரினவாத கொள்கைகளை முன் வைத்து தமிழினத்தை அழித்து ஒழிக்க முற்பட்டனர்.

தமிழர்கள் வந்தேறிகள் என்பது வரலாற்றுப் பிழை, திரிபு என்பதை யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் ‘பொங்கு தமிழ்’ நிகழ்வின் சார்பாக நடத்திய கண்காட்சியில் ஆதாரத்துடன் நிரூபித்திருந்ததை கண்கூடாக கண்டேன். இலங்கை வாழ் அனைத்து தமிழர்களையும் ஓரணியில் திரட்டி, பலம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரான தந்தை செல்வா என்றழைக்கப்பட்ட திரு. செல்வநாயகம் போன்றோர் எவ்வளவோ அற வழியில் முயன்றும் தமிழர் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை.

வேறுவழியேயின்றி தமிழ் இளைஞர்கள் சிலர் ஆயுதமேந்தி போராடும் துர்நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த இருபது ஆண்டளவாக நடைபெற்று வந்த அந்த போரின் கோரவிளைவுகள் சொல்லில் அடக்க முடியா. தமிழரின் பொருட் செல்வம் மட்டுமன்று இலங்கை நாட்டின் பொருளாதாரமும் அழிந்தது. இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் பெருமளவு தமிழர்கள் வாழும் இடங்களில் நிலபுலன்கள், வீடுகள், வீட்டுப்பொருட்கள் அழிக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆயிரங்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

 பலரும் நிரந்தரமாக ஊனமாக்கப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதும் வாழ்ந்த தமிழ் இளையோர் மற்றும் ஆண்கள் பலர் காணாமல் போயினர். சோதனை, உசாவுதல், சந்தேக தடுப்புக் காவல் என்ற பெயரில் இன்றும் பலர் தென் இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். அறுபதினாயிரம் அப்பாவிகளின் உயிர்களைப் பலிகொண்டு, இலட்சக்கணக்கானோரை அகதிகளாக்கி, பெண்களை விதவைகளாக்கி, மாணவச்செல்வங்களின் கல்வியைப் பாழாக்கியதுடன், அநாதைகளுமாக்கிய இருபது ஆண்டுகால மிலேச்சத்தனமான யுத்தம் இறப்பு, இழப்பு , இடப்பெயர்வு எனற் முபப் ரிமாண துனபத்திற்கு; தமிழர்கள் ஆளானது சொல்லொண்ணா வருத்தமளிக்கிறது.

வதிவிட சேதங்கள்

வட இலங்கையில் தமிழர் பகுதியின் எல்லைப் பகுதியான வவுனியா தொடங்கி கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் வரை எல்லா கட்டிடங்களும் முழுவதுமாக சேதமாக்கப்பட்டுள்ளன. மேல் கூரைகளே காண முடியாது. கான்கிரீட் கட்டடங்கள் மற்றும் தூண்கள் உடைந்து சாய்ந்துள்ளன. பக்கவாட்டு சுவர்கள் எல்லாம் துப்பாக்கி குண்டுகளால், செல் தாக்குதலால் துளைக்கப்பட்டுள்ளன. பல வீடுகளும், நிலங்களும் இராணுவ கட்டுப்பாட்டில், ஆக்கிரமிப்பில் இன்றுமுள்ளன. பல கிராமங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன.

இதை வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் பாதையோரம் பார்த்தேன். யாழ்ப்பாணம் மற்றும் தமிழீழம் முழுவதும் இதே நிலையென அறிகிறேன். சிறிய சிறிய இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளன.அப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அகதிகள் முகாம்களில் இன்றும் அவதிப்படுகின்றனர்.

வடக்கு - கிழக்கு மாவட்டங்கள் ஊடாக செல்லும் எல்லா வீதிகளும் கடந்த 20 ஆண்டளவாக பராமரிக்கப்படாமல் முற்றும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. ஐம்பது கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதிகளை கடக்க இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆகிறது. பேருந்துகள் மற்றும் சிறு வாகனங்களை விடுதலை புலிகளும், அவர்களின் அனுமதியோடு சில தனியார்களும் இயக்குகின்றனர். மின்சாரம், தொலைத் தொடர்பு வசதிகளேயில்லை. சில முக்கிய ஊர்களில் விடுதலைப் புலிகள் இரவு நேரங்களில் மட்டும் பெரிய ஜெனரேட்டர்களின் மூலமாக மின்சார வசதி தருகின்றனர். மின்சாரம் கடத்தும் பெரிய தூண்கள், கோபுரங்கள் போரில் தகர்க்கப்பட்டுள்ளன. சாலை, மின்சாரம், தொலைத் தொடர்பின்றி பொதுமக்கள் அவதிபட்டது மட்டுமின்றி, எவ்வாறு ஒரு தேசம் பொருளாதார, தொழில் முன்னேற்றம் காண இயலும்? தமிழீழ நிர்வாக கட்டமைப்பு மக்களின் இக்குறைகளைப் போக்க முயற்சிக்கிறது.

வாழ வேண்டும் என்ற துணிவும், நம்பிக்கையும் கொண்ட மறத்தமிழர்கள் எல்லாவற்றையும் இழந்துவிடவில்லை. ‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு’ என்ற பெரியாரின் சொற்படி தமிழரினம் இன்று இங்கு புதுவாழ்வைத் தொடங்கியுள்ளது. புது வீடுகள் கட்டப்படுகின்றன. சேதமடைந்த வீடுகள், கட்டிடங்கள் திருத்தப்படுகின்றன. விவசாயம் மேற்கொள்ளப்பட்டு நெல், வெங்காயம், கத்தரிக்காய் மற்றும் கடலை, சோளம், பயிறு போன்றவை பயிரிடப்படுகிறது. இயற்கை வளம் மிகுந்த தமிழீழத்தில் மிதிவெடிகள் ஆபத்து பெருமளவில் காணப்பட்டாலும் எப்போதும் இல்லா அளவுக்கு விவசாயம் செய்யப்பட்டு இந்த வருடம் தன்னிறைவு பெற்றுள்ளனர். புது படகுகள், புது இயந்திரங்கள், புது வலைகள் என கடலோர பகுதி தமிழர்கள் புது வாழ்க்கையினை மேற்கொண்டுள்ளனர். கடற்புலிகளின் பாதுகாப்பில் முல்லைத் தீவு, அளம்பில் போன்ற கிழக்கு கடற்கரை கிராம மீனவர்களின் வாழ்வு ஏற்றம் பெறுகிறது.

உளவியல் பாதிப்புகள்

கடந்த 25 ஆண்டு கால போரினால் தமிழ் சமூகம் பல்வேறு உளவியல் ரீதியான பாதிப்புக்களையும் அடைந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே வன்முறைக் கலாச்சாரம் பெருகியுள்ளது. சிறிய, அற்ப காரணங்களுக்காக பெரியவர்களை எதிர்த்து பேசுதல், உடன்பிறந்தவர்களோடு முரண்படுதல், நண்பர்களோடு சண்டையிடுதல் என்பன அதிகமாக காணப்படுகின்றன. போருக்கு முன் பிறந்தவர்கள், போர் காலத்தில் பிறந்தவர்கள் என்ற வேறுபாடு காணக்கூடியதாக உள்ளது. கடந்த 25 ஆண்டு கால போரில் தமிழ் சமூகம் கண்ட கொடுமைகள், வானிலிருந்து இடிபோல் விழும் குண்டுகள், தலைக்கு மேல் ஊசலாடும் கத்தி போல் பறக்கும் விமானப்படைப் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள். குண்டு வெடித்து சிதறும் போது சிதறும் மனித உடல்கூறுகள்.

தசைபிண்டங்கள், வழிந்தோடும் இரத்த ஆறுகள், தலையில்லா முண்டங்கள், உடலில்லா தலைகள், மண்னோடு கலந்த மனித தசைகள். . . . . . சொல்லும் போதே மனதை பிசைகின்றது. இதை பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள் எப்படி ஒரு சாதாரண மனித வாழ்வை வாழ முடியும்? தனது கண்முன்னே உயிருக்காக ஓலமிட்ட குழந்தைகள், உயிருக்காக போராடும் பெற்றோரை காப்பாற்ற இயலாது துடித்த பிள்ளைகள், கணவன் முன்னால் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இளம் பெண்கள். . . இன்னும் எத்தனையோ எத்தனை. . .

இவ்வளவு துன்பங்களை அனுபவித்தும் சராசரியான மனித வாழ்க்கையை வாழ்வது கடினமானதொன்றாகும். ஆகவே தான் இன்று பலர் மனநோயாளிகளாக, நடமாடும் பிணங்களாக வாழ்கின்றார்கள். சிலருக்கு பேய் பிடித்து விட்டது என்று ஆன்மீக வைத்தியங்கள் செய்யப்படுகின்றது. சிலருக்கு தாங்கள் என்ன செய்கின்றோம், எங்கு போகின்றோம், என்ன பேசுகின்றோம், என்ன சாப்பிடுகின்றோம் என்று கூட தெரியாமல் விலங்கினதும் கீழான வாழ்க்கை வாழ்கின்றார்கள். முல்லைத்தீவில் ஒரு சிறிய பெண் குழந்தை. மாலை நேரங்களில் தலைவலி.

தலையை வெட்டி விடலாமா என்று நினைக்குமளவுக்கு தலைவலி. பல ஆண்டுகளுக்கு பிறகு கொழும்பிலுள்ள நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் நோய்க்கான காரணம் தெரியாமல் கைவிரித்து விட்டனர். இ;க்குழந்தை தாயின் கருவில் இருந்த போது அல்லது பிறந்து கைக்குழந்தையாக இருந்த போது பெரிய குண்டு வெடித்து அதிர்ச்சியை அனுபவத்திருக்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே இங்கு மக்களிடையே ஒரு பரபரப்பான பயந்த மனநிலையை அவதானிக்கலாம். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் கலந்த மனநிலையிலேயே வாழந்து விட்டதால் இந்த பரபரப்பு இன்னும் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே நிதானமாக, திட்டமிட்டு, மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படும் தன்மை இங்கு மிகக்குறைவு. எந்த செயலுக்கு எப்போது முதலிடம் தரவேண்டும் என்று சிந்தித்து செயல்படுவதும் சற்று குறைவாக உள்ளதாக அவதானிக்கின்றேன்.

மன்னாரில் பத்தாம் ஆண்டு படிக்கும் சிறுவனுக்கு இருளைக் கண்டால் பயம். வீட்டில் எல்லோரும் கூடியிருக்கும் அறையை விட்டு ஒளி வெளிச்சம் குறைவாக இருக்கும் அடுத்த அறைக்கோ அல்லது வீட்டு முற்றத்திற்கோ செல்ல பயம். காரணம் போரினால் ஏற்பட்ட அதிர்ச்சிதான்.

சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள் எள்று அனைவருமே உளவியல் ரீதியாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கின்றார்கள். சிலருக்கு பாதிப்பு குறைவாக காணப்படுகின்றது. சிலருக்கு மருத்துவம் கைவிடும் அளவு பாரிய பாதிப்பாக உள்ளது. தமிழின அழிப்பின் ஒரு கோர முகம் இது.

உழைக்கும் சிறார்

சனவரி மாத இறுதி. மாலை வேளை, முல்லைத் தீவு கடற்பரப்பில் இளைஞர்களோடு கடலோர காற்றினை மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வினையும் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அது இறால்படு பருவம். ஒவ்வொரு மீனவக் குடும்பமும், குடும்ப சகிதமாக கடற்கரையில் படகுகளில் அமர்ந்து மீன்வலைகளிலிருந்து இறாலைப் பிரித்தெடுத்து வலைகளை கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

பெருமளவில் இறால்மீன் பிடிபட்டதால், புது படகு, இயந்திரம், வலை போன்றவைகளை வாங்க பெற்ற கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு ஆழ்கடலோடு போராடினார்கள். ஒரே நாளில் மூன்றுமுறை கடலுக்கு சென்று திரும்பி வருவாயீட்ட முயற்சித்தனர்.

இந்த நம்பிக்கை நிறைந்த கடும் உழைப்பு தமிழருக்கே உரித்தாயினும் பல சிறுவர்கள், சிறுமியர்கள் கடற்கரையில் வேலை பார்ப்பதையும் காணமுடிந்தது. முக்கிய வீதிகளில் இளம்சிறார்கள் சோளம் மற்றும் கச்சான் (வேர்க்கடலை), பாலம்பழம் (காட்டுப்பழம்) விற்பதையும் சில இடங்களில் காணமுடிந்தது. படிக்க வேண்டிய குழந்தைகள் வேலை பார்க்க வேண்டிய தூர்நிலைக்கு தள்ளபட்டது ஏன்? படிப்பை பாழாக்கிய அரசை பழிப்பதா? வறுமையினால் குழந்தைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோரை குறைசொல்வதா?

கல்வி நிலை

போரினால் பல கல்விக் கூடங்கள் தரை மட்டமாகிவிட்டன. போர்காலத்தில் இடம் பெயர்ந்த எல்லா குடும்பங்களும் தமது குழந்தைகளின் கல்வியை மறந்தனர். தமிழர் பகுதிகளில் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லாதுபோய்விட்டனர். குடும்ப பாரத்தை சுமக்க குழந்தைகளும் வேலைக்கு செல்ல வேண்டிய அவல நிலை. தமிழர்கள் முறையான கல்வி கற்றாலும் மேல் படிப்பிற்கோ, வேலை வாய்ப்பிற்கோ உத்திரவாதம் இல்லா சூழ்நிலையில் குழந்தைகள் கல்வியை இழந்தனர். அறிவும், திறமைகளும் கொண்ட தமிழினம் திட்டமிட்டு கல்வி மறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டது.

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் வதியிடங்களில் பல பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் இன்றும் தொடர்ந்து இருப்பதானால் குழந்தைகள் பாடசாலைக்கு செல்ல மறுக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் சபையின் உதவியாலும், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியாலும் எல்லா குழந்தைகளும் கல்வி பயிலுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். பாட புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. கலை, அறிவியல் கல்லூரிகள், விவசாயம் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளை தமிழர் பிரதேசங்களில் நிறுவ தமிழீழ கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுவருகிறது.

வழிபாட்டு தலங்கள்

சிங்களவரின் கண்மூடித்தனமான தாக்குதலில் பல கோயில்களும் தரைமட்டமாகிவிட்டன. சில இந்து கோயில்கள் பௌத்த கோயில்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. கோயில்களே தஞ்சம் என்று மக்கள் போர்காலத்தில் அடைக்கலம் புகுந்த பல கோயில்களும் தாக்கப்பட்டன. உதாரணமாக இலங்கையில் எல்லா மதத்தினரும், இனத்தவரும் புனித இடமாக கருதும் மருதமடு மாதா திருத்தலம் 1999ம் ஆண்டு போரின் உக்கிரத்தால் கோயிலில் தஞ்சமடைந்த 3000 மக்களைக் கேடயமாகக் கொண்டு திடீர் ஆக்கிரமிப்பு செய்த சிங்கள இராணுவம் மடுத்திருத்தலத்தைப் போர்முனையாக்கியதின் விளைவாக செல் தாக்கி 42 பேர், அப்பாவி மக்கள் இறந்தனர்.


இடிந்து போனவை கட்டிடங்கள் மட்டுமே - எமது வாழ்க்கையல்ல

அதில் பெரும்பாலோர் சிறு குழந்தைகள். 1995ம் ஆண்டு ஜீலை மாதம் 9ம் தேதி யாழ்ப்பாண தீபகற்பத்தில் நவாலி தூய பேதுரு ஆலயத்தில் புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் தாக்கி 141 பேர் கொல்லப்பட்டனர். குருநகர் தூய ஜேம்ஸ் ஆலயத்தில் ஏழுபேர் கொல்லப்பட்டனர். 1992ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி முல்லைத்தீவு வற்றாபளை கண்ணகி அம்மன் கோயில் மீது நடந்த எறிகணைத் தாக்குதலில் 15 பேர் இறந்தனர்.

பரந்தன் முருகன் கோயில் கிணற்றிலிருந்து அபாயகரமான வெடிமருந்துகளும், ஆர்.பி.ஜி எறிகணைகளும் மீட்கப்பட்டன. இன்னும் பல கோயில்கள் இன அழிப்பின் சாட்சியாக உருக்குலைந்து காணப்படுகின்றன. இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள தமிழர் பகுதிகளிலுள்ள இந்து கோயில்கள் சில பௌத்த கோயிலாக, இராணுவத்தினர் வழிபடும் இடமாக மாற்றபட்டுள்ளன. ஓமந்தை, மன்னார் ரோடு போன்ற இடங்களிலும் யாழ்ப்பாணம் செல்லும் வீதிகளிலும் சில கோயில்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டு பயன்பட்டு வருவதும் கண்கூடு. சனவரி மாதம் நான் தங்கியிருந்த முல்லைத்தீவு தூய பேதுரு ஆலயமும் 1995ம் ஆண்டு இராணுவ முகாமாக இருந்தது. கோயில் சுவர்களிலும், கதவுகளிலும் இராணுவ பெயர்களும், சிங்கள வார்த்தைகளும் எழுதப்பட்டுள்ளன. குண்டடிபட்டு கோயிலின் பிராதான வாயிற்கதவு சல்லடைபோல் துளைக்கப்பட்டுள்ளதும் இன்றைய வரலாற்று சின்னங்கள்.

மிதிவெடி அபாயம்

வவுனியா தொடக்கம் யாழ்பாணம் செல்லும் 193 கிலோமீட்டர் தூரம் முழுவதும் வீதியின் இருபுறமும் கண்ணிவெடி அபாயச் செய்தி காணப்படலாம். இந்த வீதிதான் தமிழீழ போராட்ட வரலாற்றில் உலக பிரசித்தி பெற்ற ‘ஆல்பா9’ (யு9) கொழும்பு - கண்டி வீதி. இலங்கை இராணுவமும் விடுதலை புலிகளும் கண்ணி வெடிகளை அதிகமாக பாவித்துள்ளனர். உலகில் எங்கெல்லாம் யுத்தம் நடந்துள்ளதோ அங்கெல்லாம் கண்ணி வெடிகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்களுக்கு புலப்படாதவாறு நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள இவ்வகை வெடிகள் மனிதர்களையும், மிருகங்களையும் வெகுவாக பாதித்து ஊனமடையச் செய்துள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளில் மட்டும் சுமார் 20 இலட்சம் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகளில் இதுவரை ஒரு இலட்சம் மட்டுமே மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்களாகவே சொந்தமாக கண்ணி வெடிகளை தயாரித்துள்ளனர்.

அவை பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்டதாகவும், மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் அமைந்துள்ளன. அதே நேரத்தில் அவை காலத்தால் விரைவில் அழியக்கூடியதாகவும் உள்ளது. சிங்கள இராணுவம் இஸ்ராயேல், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருந்து மிதிவெடிகளை இறக்குமதி செய்துள்ளது. இவை பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்டுள்ளதால் பல வருடங்களுக்கும் அழியாமல் நிலத்தில் உள்ளது. கண்ணி வெடிகளுக்கு நண்பன் யார், எதிரி யார் என்று அடையாளம் தெரியாது. மனிதருக்கும் மிருகங்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாத இவ்வகை மிதிவெடிகள் இன்றும் பொது மக்களுக்கு மிகப்பெரும் அபாயமாகத்தான் உள்ளது.

சிறுவனின் பெயர் விமல். நண்பர்கள் கூப்பிடும் பெயர் மைன்ஸ் (ஆஐNநுளு). படிப்பு ஏழாம் ஆண்டு. 1998ம் ஆண்டு மன்னார் மாவட்டம் சிலாவத்துறையில் அகதியாக வாழ்ந்த நேரம் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த போது இரும்பு பொருள் ஒன்றைக் கண்டிருக்கின்றான். அது ஏதோ விளையாடும் பொருள் என்று கண்nடுத்தவன் அதை விளையாட்டாக தரையில் எறிந்த போது ஏற்பட்ட விபரிதம் தான், “அய்யோ அம்மா” என்று தூக்கி எறியப்பட்டான். பாரிய வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த பெரியவர்கள் கூடி வந்து பார்த்த போது விமல் காலில் மூன்று பெரிய காயங்கள் ஏற்பட்டு இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.

அவன் விளையாட்டாக எறிந்த பொருள் ஒரு மிதி வெடி.


வீதிகளில் காணப்படும் மிதிவெடி அபாய அறிவிப்பு பலகைகள்

சிலாவத்துறையில் இலங்கை இராணுவம் முகாம் அமைந்து இருந்த நேரத்தில் பாதுகாப்புக்காக தங்கள் முகாம் சுற்றி வேலி போல் மிதிவெடிகளை புதைத்து வைத்து விட்டனர். முகாம்களை அகற்றிய போது கண்ணிவெடிகளை முழுவதுமாக அகற்றவில்லை. தமிழர் பகுதிதானே என்று அலட்சியம் செய்ததன் விளைவு இந்த விபத்து. இது போன்று எத்தனையோ பேர் கால்களை இழந்து அங்கவீனர்களாகவும், உயிரை இழந்தும் அழிந்தும் போயுள்ளனர். பி.பி.சி வானொலியின் தகவலின்படி மிதிவெடியினால் பாதிக்கப்பட்டவர்களில் 78 சதவீதமானோர் சிறார்கள் என்று ஐரோப்பிய மிதிவெடி அகற்றும் நிபுணர் குழு கருத்து கணிப்பு செய்துள்ளது. இவ்வாறாக எமது எதிர்கால தலைமுறையினரை ஊனமாக்கியுள்ளனர் பகைவர்கள். எமக்கு உடல் ஊனம் ஊனமேயில்லை. அண்டை நாடுகளின் உறவு

கடந்த இருபது ஆண்டுகால தமிழீழ விடுதலை போராட்டத்தில், உலக நாடுகள் தங்களையே சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திக்கு அடிமையாக்கி கொண்டனர். தென்னாப்பிரிக்க விடுதலையை ஆதரித்த உலக நாடுகள், பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தவர்கள், கொசாவோ இன விடுதலையை கை கொடுத்து மீட்டவர்கள் இலங்கையில் தமிழரின் விடுதலை போராட்டத்தை மட்டும் தீவிரவாதம் என்றனர். பிரிவினைவாதம் என்று முத்திரைக் குத்தினர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

• மேற்கத்திய நாடுகள், தென்கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு பெற அந்தந்த நாடுகளின் அரசியல் தலைமையை ஒருபோதும் பகைத்ததில்லை.

• தெற்காசியாவில் வல்லரசு நாடாக திகழும் இந்தியாவின் எந்தவொரு நிலைப்பாட்டிற்கும் எதிராக உலக நாடுகள் எப்போதும் நின்றதில்லை. எந்த நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் இதே நிலைதான்.

ஆனால் இன்று உலக நாடுகள் அனைத்தும் இலங்கைவாழ் தமிழர்களின் ஒரே பிரதிநிதி ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ தான் என்பதை ஏற்றுக் கொண்டு (பின்வரும் பக்கங்களில் இதை விரிவாக ஆராய்வோம்), அவர்களோடு கை குலுக்கி நிற்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் வன்னிக்கு விஜயம் மேற்கொண்டு புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 2003 ஜனவரி 21ம் தேதி அன்று மட்டும் அமெரிக்காவின் வேர்ல்ட் விஷன், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள், டேனிஷ் அகதிகள் பேரவை பிரதிநிதிகள் மற்றும் ஜப்பான், ஐ.நா.சபை அதிகாரிகள் தமிழீழ தாயகத்தில் வன்னி பிரதேசம் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ் செல்வன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (ஆதாரம்: ஈழநாதம், 22-01-2003)

ஐ.நா. சபையின் செயலர் திரு. கோபி அன்னான் விரைவில் தமிழீழத்திற்கு விஜயம் செய்வார் என்று பத்திரிகை செய்தி வெளியாகியிருந்தது. யூலை மாதம் யு 9 பாதையூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இலங்கைக்கான கனேடிய தூதர், அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் ஜப்பான், நோர்வே தூதர்கள் பயணமானார்கள். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் அரபு நாடுகளின் அபிவிருத்தி வங்கி போன்றவை நேரடியாக தமிழீழத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர். உலக நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டதாக இருப்பினும், இலங்கையில் தடை நீக்கப்பட்டு தமிழர் பகுதிகளில் மட்டுமல்ல தலைநகர் கொழும்புவிலும் அரசியல் அலுவலகங்களை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

“விடியல் அவசியமென்பதால் அவர்கள் சூரியனையும் நகர்த்துவார்கள். வாழ்வது சாத்தியமென்றால் அவர்கள் பூமியையும் புரட்டுவார்கள்”

ப்ரவீன் என்பவர் எழுதியதாக எங்கோ நான் வாசித்தேன் உண்மைதான் தமிழன் வாழ்வது சாத்தியமென்றால் உலக நாடுகளெல்லாம் தமிழீழம் நோக்கி வர பூமியையும் புரட்டுவார்கள். அதுதான் இன்று, இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் இன்றைய நிலை

உலகநாடுகளின் பிரதிநிதிகள் அதிலும் குறிப்பாக ஜப்பானின் விசேட தூதுவர் மற்றும் இங்கிலாந்தின் வெளியுறவு இணையமைச்சர் போன்றோர் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளோடு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, நிதியுதவிகளை தாராளமாகச் செய்ய வாக்குறுதி கொடுத்த நேரத்தில் இந்தியாவின் நிலை தர்ம சங்கடத்திற்குள்ளானது. நோர்வே, ஒஸ்லோவில் நடைபெற்ற நிதியுதவி செய்வோர்கள் மாநாட்டில், புலிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு கூட்டத்திலும் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ள நேரத்தில் இந்தியா இலங்கையின் சமாதான முயற்சியில் ஒதுங்கியிருப்பது நல்லதல்ல என்று உணர்ந்துள்ளனர்.

ஆகவேதான் இலங்கையின் வடக்குகிழக் கு பகுதியில் போரினால் சேதமுற்ற பௌத்த விகாரைகளை சீர்படுத்த இந்தியா உதவும் என்ற செய்தியானது வெளியிடப்பட்டது. இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக பிதற்றிக் கொள்ளும் பா.ஜ.க. வடஇலங்கையில் சிறுபான்மையுள்ள பௌத்த மதத்தினருக்கு கை கொடுக்க விரைந்துள்ளது.

இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் இந்து மதத்தைக் காப்பாற்றவும், உலக இந்துக்களை ஒன்று சேர்க்கவும் முயற்சிக்கும் பா.ஜ.க., வட இலங்கையில் ஆயிரங்கணக்கான இந்து தமிழர்கள் கொல்லப்பட்ட போது வாய் பொத்தி மௌனம் காத்தது ஏன்? பல இந்து கோயில்கள் இலங்கையில் தரைமட்டமான போதும், பௌத்த விகாரையாக மாறின போதும் பேசாமல், ஆதிக்க சக்திகளின் பக்கம் சாய்ந்தது ஏன்? தமிழர்களின் தாயகமான தமிழீழத்தில் அழிந்து போன பாரம்பரிய இந்து கோயில்களையும், இந்து தமிழர்களின் மறுவாழ்வையும் விட வந்தேறிகளின் பௌத்த விகாரைகளை சீர்படுத்த சிங்கள பேரினவாத அரசுக்கு நிதியுதவி செய்வதுதான் இந்தியாவின் இன்றைய தலையாயக் கடமையா?

ஆதிக்க சக்திகளோடு கை கோர்த்துக் கொள்வதுதான் பார்ப்பனிய தத்துவம். தாழ்த்தப்பட்ட இந்து மத தலித் சகோதரர்கள் இதை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். நாம் இந்துக்கள் என்று சமத்துவம் கொண்டாடினாலும், பார்ப்பனிய தலைமைத்துவம் நம்மை அடிமைப்படுத்தும்.

மாவீரர் துயிலும் இல்லங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மனநோயாளர்கள், போதை மருந்துக்கு அடிமையாகி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்றெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு இந்திய பத்திரிகையில் செய்தி வெளியானது. இத்தகைய புனைக்கதைகளை எழுதியவர்களுக்கும், அதை நம்பினவர்களுக்கும் இதோ ஓர் செய்தி.

ஆயிரங்கணக்கான தமிழ் இளையோரை பலி கண்ட கோரப் போர். படிக்க வேண்டிய வயதில், இளமை சுகங்களை அனுபவிக்க வேண்டிய பருவத்தில் மண்ணுக்காய், மக்களுக்காய் இன்னுயிரை நீத்த மாவீரர்களை, தேச தியாகிகளை விடுதலைப் புலிகள் இயக்கம் தக்க மரியாதையோடு வணக்கம் செலுத்தும் இடங்களே, மாவீரர் துயிலும் இல்லங்கள். கிறித்தவ கல்லறைகளைப் போன்று, போரில் வீரச்சாவு எய்திய வீரர்களை அடக்கம் செய்து, வருடந்தோறும் முதல் களப்பலியான போராளி சங்கர் இறந்த நவம்பர் 27ம் நாளை மாவீரர் தினமாக தமிழீழ தேசமெங்கும் கொண்டாடி வருகின்றனர். மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் வகையில் அவர்களுடைய கல்லறைகளில் ஈகஜோதி ஏற்றப்படுகிறது.

வன்னிக் காட்டில் விசுவமடுவிலும், முள்ளியவிளையிலும் யாழ்குடா நாட்டில் கோப்பாயிலும், மன்னார் மாவட்டத்தில் பண்டிவிரிச்சான், முளங்காவில், மற்றும் ஆண்டான்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை நேரில் கண்டேன். மிக அழகான கல்லறைத் தோட்டங்கள். வரிசையாக ஒரே மாதிரியான கல்லறைகள். சுற்றிலும் அழகான மலர்த் தோட்டங்கள். அருமையான பாராமரிப்பு. எந்த நாட்டிலும், நாட்டிற்காக இறந்த வீரர்களுக்கு செய்யப்படாத மரியாதை தமிழீழத்தில் மட்டுமே மாவீரர் துயிலும் இல்லங்கள், உயிர் வாழ்பவர்களின் பாசறைகள். தமிழீழம் மலரும் நாள், இவர்களின் உயிர்ப்பு பெருநாள்.

செய்யப்படுகிறது. வீரச்சாவு எய்திய மாவீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, ஈகை, போர்களத்தில் பட்ட துன்பங்கள், எல்லா வற்றுக்கும் மேலாக அவர்களுடைய இலட்சியம் மறக்கப்படாமல் தலைமுறைக்கும் நினைவுகூறப்படும். இறப்பினும் நாம் வாழ்வோம் என்ற எண்ணமே இளையோரை போராட்ட வாழ்விற்கு அழைக்கிறது. தனது பிள்ளை மாவீரன் என்பதை சில பெற்றோர் மனமுவந்து பெருமையோடு என்னிடம் கூறியுள்ளனர். முள்ளிக்குளத்தை பிறப்பிடமாக கொண்ட அந்தோனி என்ற இளைஞன் முருங்கன் பாடசாலையில் பனிரெண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோதே இயக்கத்தில் இணைந்து 2001ம் ஆண்டு முகமாலையில் நடைபெற்ற சமரில் வீரச்சாவு எய்தியுள்ளான். செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அவருக்காக இரண்டாமாண்டு நினைவு திருப்பலியை நான் முள்ளிக்குளத்தில் நிறைவேற்றிய போது அவரின் தியாகத்தை நினைத்து என்னையறியாமலே அழுதுவிட்டேன்.

இந்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களின் விடுதலை தாக்கத்தை சரியாக உணர்ந்து கொண்ட சிங்கள இராணுவம் யாழ்குடா நாட்டை 2000ம் ஆண்டில் கைப்பற்றிய போது கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கினர். இன்று மீண்டும் முன்னதைவிட அழகான தோற்றத்தை அது பெற்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறது.


மாவீரர் துயிலும் இல்லங்கள், உயிர் வாழ்பவர்களின் பாசறைகள்.
தமிழீழம் மலரும் நாள், இவர்களின் உயிர்ப்பு பெருநாள்.


தமிழருக்கெதிரான கூட்டு சதி

தமிழக மீனவர்கள் 100 பேரும் அவர்களுடைய மீன்பிடி படகுகளும், மீன்படி வலைகளும் இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்டன. இது தமிழகத்தில் வெளியான செய்தி. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறல். இது இலங்கையில் வெளியான செய்தி. நடந்த சம்பவம் ஒன்று, ஆனால் செய்திகளோ இரண்டு. தமிழர்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள பலரும் முன்வருவதை இந்நிகழ்வு தெளிவுபடுத்துகின்றது.

இச்சம்பவங்கள் நடந்த போது இலங்கை, மன்னார் மாவட்டத்தில் பேசாலையில் நிகழ்வு ஒன்றில் நான் கலந்து கொண்டதால் நேரடியான செய்திகளை, உண்மையை முன் வைக்கும் பொறுப்பினை இந்திய தமிழன் என்ற முறையில் ஏற்று முன்வருகிறேன். 2003, மே மாதம் 3ம் தேதி மதியம் இலங்கை, மன்னார் மாவட்டம், பேசாலை என்ற மீனவ கிராமத்தில் இந்திய படகுகள் வருவதை கண்ணுற்ற மக்கள், இந்திய படகுகளை எல்லைக்கு அப்பால் துரத்தவே சென்றனர். இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையில் அத்துமீறி நுழைந்து, தங்கள் படகுகளையும், மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துவதாகவும், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி சிறிய மீன்களையும் அடியோடு பிடித்து செல்வதால் தங்களின் மீன்வளம் குன்றுவதாகவும் இலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

 இந்திய கடற்பரப்பில் மீன்வளம் குன்றியதாலேயே இப்போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கின்றார்கள் என்று பேசாலை மீனவர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். இரவு நேரங்களில் இந்திய படகுகள் நூற்றுக்கணக்கில் வருவதாகவும், அந்த படகுகளில் எரியும் விளக்குகள் ஒரு கிராமமே கடலில் மிதப்பது போன்று தோன்றுவதாகவும் அதனை நேரடியாக பார்த்த அருட்தந்தையர்கள் கூறுகின்றார்கள்.

3ம் தேதி மாலையில் இந்துமாக்கடலில் இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் இந்திய தமிழ் மீனவர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் 17 தமிழ்நாட்டு மீனவர்களும், 4 பேசாலை மீனவர்களும் காயமுற்றனர். 70க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை மீனவர்கள் உதவியுடன் இலங்கை காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அடுத்த நாள் தலைமன்னாரில் 42 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டார்கள். 4ம் தேதி பகலில் பேசாலை கிராமத்தில் விசாரணை செய்ய வந்த இலங்கை காவலர்கள் நடைபெற்ற சம்பவத்திற்காக அப்பாவி இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்து, இந்திய படகுகளை சேதப்படுத்தியதாகவும், மீன்பிடி கருவிகளை கொள்ளளையடித்தாகவும் பொய் வழக்கு போடப்பட்டு அழைத்துச்சென்றனர். பேசாலை கிராம மக்களின் ஒற்றுமையாலும், உடனடி சாலை மறியல் போன்ற போராட்டத்தினாலும், மன்னார் ஆயர், பங்குதந்தையர்களின் முயற்சியாலும் அந்த அப்பாவி இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்திய மீனவர்களை நேரில் சந்தித்து விசாரித்த போது அவர்கள் அனைவரும் இராமேஸ்வரம் பகுதிகளை சார்ந்தவர்கள் என்பதும், கூலிக்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்கள். கச்சத்தீவு பகுதிகளில் தங்களை இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்து பிடித்ததாகவும், இரும்பு தடிகளால் தங்களை அடித்து, காயப்படுத்தியதாகவும், மயக்க நிலையில் தங்களை கடத்தி வந்ததாகவும் கூறினார்கள். கடந்த காலங்களில் பல முறை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததாகவும், இந்திய, இலங்கை அரசுகள் எவ்வித தடுக்கும் முயற்சிகளை எடுக்காமலும் இருப்பதாகவும் கூறினார்கள்.

மேலும் நடந்த சம்பவங்கள்தான் என் மனதைத் தொட்டு, உண்மையை வெளி கொணர்கிறது. சிறைபிடிக்கப்பட்ட எல்லா இந்திய மீனவர்களையும் பத்திரமாக கொண்டு வந்து, தாங்களாகவே அவர்களுக்கு உணவு சமைத்துத் தந்தார்கள் இலங்கை மீனவர்கள.; இந்திய படகுகளைத் தாங்களே கரைக்கு ஓட்டிவந்து அவைகளைப் பாதுகாப்பாக இலங்கை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள். மருத்துவமமையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, புதிய லுங்கிகளை வாங்கி கொடுத்து, ரொட்டி, பிஸ்கட் போன்ற உணவு பொருட்களையும் தொடர்ந்து கொடுத்து கொண்டு வந்தார்;கள். கடந்த இருபது ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்தபோது தமிழக மீனவர்கள்தான் தங்களை அன்புடன் வரவேற்று, உணவளித்து, உபசரித்து, பாதுகாப்பளித்ததை இன்று இலங்கை தமிழர்கள் நன்றி உணர்வுடன் நினைத்து உதவி செய்கின்றார்கள். இந்திய மீனவர்களும் தங்களைப் போலவே கூலி தொழிலாளர்கள்தான், அவர்களையும் நம்பி இந்திய கடற்கரையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருப்பதையும் இலங்கை மீனவர்கள் உணர்ந்து இந்திய படகுகளை சேதப்படுத்தாமல் பத்திரமாக காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

உண்மையில் நடப்பது என்ன? முதலாவதாக, இந்திய மீனவ முதலாளிகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உரிமம் பெற்று கூலிதொழிலாளர்களை அமர்த்தி அவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுப்புகிறார்கள். பிடிக்கப்படும் மீன் அளவுக்கு ஏற்பதான் அவர்களுக்கு கூலியும் வழங்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தமிழக அரசியல்வாதிகளைக் கொண்டு நிலமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இந்த முதலாளிகளுக்கு உண்டு.

இரண்டாவதாக, இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் இலங்கை, இந்திய கடற்படையினர் கண்டுகொள்ளாமல் அசட்டைதனமாக இருப்பதுவே வேதனைக்குரியது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறினார்களா அல்லது இலங்கை தமிழ் மீனவர்கள் இந்திய தமிழ் மீனவர்களையும், படகுகளையும் கடத்தினார்களா? என்ற உண்மை நிலை விசாரிக்கப்பட வேண்டியதொன்றாக இருந்தாலும் இந்திய, இலங்கை கடலோர காவல்படையின் செயல்பாடுகள் கேள்விக்குட்படுகின்றன.

இந்திய கடற்பரப்பிலும், அதற்கு அப்பால் சர்வதேச எல்லைகளிலும், ஒரு சிறிய துரும்பு மிதந்தாலும் அவற்றை கண்டுபிடித்து தாக்கும் ஆற்றல் வாய்ந்த இந்திய கடற்படை பல மணிநேரமாக இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் நடந்த சண்டையை பராமுகமாக இருந்தது ஏன்? நாட்டையும், நாட்டுமக்களையும் காப்பாற்ற வேண்டிய இந்திய, இலங்கை கடலோர காவற்படைகள் தனது மீனவர்கள் தாக்கப்படுவதை ஏன் கண்டு கொள்ளவில்லை? இலங்கை தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் இந்திய அரசும், இராணுவமும் தமிழக மீனவர்கள் 120 பேரும் 25 படகுகளும் இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்ட போது நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்?

இந்திய கடற்படை போலவே இலங்கை கடற்படையும் தமிழ் மீனவர்களின் பிரச்சனையில் அக்கறையில்லாதது போல் நடந்துகொள்கிறது. இந்தியாவிலிருந்து மீனவர்களும், படகுகளும் கடத்தப்படுவதைத் தடுக்கக்கூட வக்கில்லாத இலங்கை இராணுவம் அப்பாவித் தமிழர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதைத்தான் காலம்காலமாக செய்து வந்துள்ளது. யார் யாரை தாக்கினார்கள் என்ற புகார் ஏதும் இல்லாமல் 1500 மீனவ குடும்பங்கள் உள்ள பேசாலை கிராமத்தில் நால்வரை மட்டும் தேர்ந்தெடுத்து கைது செய்தது அடிப்படை மனித உரிமை மீறலாகும். கைது என்ற பெயரில் நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச நாடுகள் முன் நல்ல முகத்தை காட்டிக் கொள்ளவே இலங்கை அரசு விரும்புகிறது.

இந்திய தமிழர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் பகைமையை உண்டாக்கி, ஒருவரையொருவர் தாக்கி அழித்து கொள்வதையே இரண்டு நாட்டு அரசுகளும் விரும்புகின்றன. தமிழர்களின் சகோதரத்துவ உணர்வை மழுங்கடிக்கச் செய்து இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் பாலம் அமைப்பதினால் என்ன பயன்? யாருக்கு பலன்? தமிழர்களுக்கெதிரான கூட்டு சதியை தமிழர்கள் உணர்ந்து செயல்படவேண்டும். ஒருவர் மற்றவரின் அடிப்படை வாழ்வாதார, மனித உரிமைகளை மதிக்க வேண்டும். உறவுப் சர்வதேச எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி ஆதிக்கம் பாலங்களைக் கட்டியெழுப்புவோம்.


கோழை வீரம்

இது என்ன, வித்தியாசமான தலைப்பு. உண்மையான தனது எதிரியைப் பிடிக்க வக்கில்லாத இலங்கை இராணுவமும், காவல் துறையும் பல நேரங்களில் அப்பாவி தமிழ் மக்களிடம் தனது வீரத்தைக் காட்டியிருக்கிறது. ஓன்றுமறியாத அப்பாவி பொது மக்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும், நோயாளிகளையும் சுட்டுக் கொன்று விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டோம் என்று கொக்கரித்துள்ளது. தேடி வளைத்துப் பிடித்த தமிழர்கள் அனைவருமே அவர்களின் பார்வையில் விடுதலைப் புலிகள். இதனை இந்திய இராணுவமும் 1987 - 1989களில் செய்துள்ளது என்பது வெட்கக்கேடானது.

உலகிலேயே மிகப் பெரிய சனநாயக நாடு, காந்தி தலைமையில் அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற நாடு, தெற்காசிய கண்டத்தில் வல்லரசாக உருவெடுக்கும் நாடு, இலங்கைக்கு மூத்த சகோதரன் போல் வலியப் போய் உதவி செய்த நாடு, யாழ் தீபகற்பத்தில் விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்க அப்பாவி தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அழித்தனர். இதனையே கோழை வீரம் என்கிறேன். தமிழ் இனத்துக்கெதிராக இரண்டு பெரிய இராணுவ கட்டமைப்புக்கள் இத்தகைய கோழைதனமாக வீரத்தை காட்டியிருக்கிறார்கள் என்பது சென்ற நூற்றாண்டின் அவலங்களில் ஒன்று. மன்னாரில் நான் பதினொரு மாதங்கள் தங்கினேன்.

 மன்னார் மறைமாவட்ட பேராலயப் பங்கில் தங்கியிருந்த போது அங்குள்ள பேராலய இளைஞர்கள் கதையாக சொன்ன ஒரு நிகழ்வு. இலங்கை இராணுவத்தினர் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்பட்டவர்களை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, மன்னார் வீதிகளில் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தி தமிழர்களை துன்புறுத்தி, அவமானப்படுத்தி வந்த காலகட்டம் அது. பேராலயத்தின் முகப்பில் ஒளிந்திருந்து கொரில்லா தாக்குதல் மூலம் மூன்று சிங்கள இராணுவத்தினர் பேராலய முன் சந்தியில் கொல்லப்பட்டனர். கொலை செய்தவர்களை பிடிக்க முடியாமற் போகவே இலங்கை இராணுவம், மன்னார் தெருக்களில் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் பேராலய வளவுக்குள் இளம்குரு மாணவர்களுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த இளைஞர்களுக்கு ஆங்கிலம் போதித்துக்கொண்டிருந்த ஆசிரியர், தனது மனைவிக்கும், குடும்பத்திற்கும் என்ன ஆனதோ என்ற பயத்தில் வீட்டிற்கு செல்ல முற்பட்ட போது குருமாணவர்கள் ஆசிரியரை வற்புறுத்தி தங்களோடு தங்குமாறு கேட்டிருக்கிறார்கள். காரணம் குருமாணவர்களுக்கு பொறுப்பான குருக்கள் அந்த நேரத்தில் அங்கில்லை. மேலும் தாங்கள் இளைஞர்கள் என்பதால் இலங்கை இராணுவம் தங்களை விடுதலைப் புலிகள் என்று தவறாக நினைத்து துன்புறுத்துவார்கள் என்பதற்காகவும் ஆசிரியருக்கு சிங்களமும் தெரியும் என்பதாலும் அழுது கெஞ்சி ஆசிரியரை தங்களோடு தங்க செய்துள்ளார்கள்.

அந்த இளம் குருமாணவர்கள் நினைத்தது போலவே இராணுவம் கோயில் வளவுக்குள் விடுதலைப் புலிகளைத் தேடி வந்துள்ளது. அங்கு அந்நேரம் உதவியாளராக இருந்த ஒரு சகோதரரை (இன்று ஓர் இளம் குருவாக மன்னாரில் பணியாற்றுகிறார்) பிடித்து இழுத்துச் சென்று கோயிலின் பின்புறம் உள்ள சக்கரிஸ் (கோயில் திருபண்ட அறை) அறையில் மூடிவைத்து அடித்துள்ளார்கள். பின்னர் சில பெரியவர்கள் வந்து அந்த சகோதரரைக் காப்பாற்றியுள்ளனர். இருப்பினும் அன்றிரவு சில இராணுவத்தினர் கோயிலில் இருந்த ஒரு மரத்தினுள் ஏறி மறைந்திருந்து குருக்களையும், சகோதரர்களையும் நோட்டம் கண்டு அச்சுறுத்தி சென்றுள்ளனர். ஓடுற பாம்பை மிதிக்கிற வயசில, செத்த பாம்பை எட்டி நின்று அடிக்கிற வீரச் செயல் போன்றது இது. பாயும் புலிகளுக்கு இவர்கள் எம்மாத்திரம்?

இதே போன்று யாழ்ப்பாணத்தில் 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதியன்று அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள், பணிபுரிந்த மருத்துவர்கள், தாதியர்கள் பணியாளர்கள் உட்பட 21 பேரை படுகொலை செய்துள்ளனர். மீண்டு;ம் அடுத்த நாளே 47 பேர் கொல்லப்பட்டனர். காரணம் அந்த மருத்துவமனையில் காயப்பட்ட போராளிகள் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதுதானாம். சமாதானத்தையும், சரணடைவதையும் உணர்த்தும் வகையில், மருத்துவப் பணியாளர்கள் கைகளை உயரத் தூக்கியபடி நின்றபோதும், இந்திய அமைதிப்படையினர் நேரெதிரில் நின்று அவர்களைச் சுட்டு வீழ்த்தி எறிகுண்டுகளையும் அவர்கள் மீது வீசியிருக்கிறார்கள்.

 நோயாளிகள் எதுவித எரிச்சலூட்டும் செயலைச் செய்யாத போதிலும், இந்திய இராணுவக் காட்டு மிராண்டித்தனத் தாக்குதலில் மருத்துவமனைப் பணியாளரும், நோயாளிகளுமாக ஐம்பத்தியொருவர் கடுங்காயம் அடைந்திருக்கிறார்கள் என்கிறார் ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலின் ஆசிரியர் திருமதி அடேல் பாலசிங்கம், இந்த இழிவான நிகழ்வின் போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து காயமுற்றோருக்கு மருத்துவம் பார்த்தவர்களில் இவரும் ஒருவர். திரு. நாவண்ணன் அவர்கள் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற குறுநாவல் மேல்குறிப்பிட்ட நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்ட குறுநாவல்.

இந்த நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளவர் வைத்திய கலாநிதி(டாக்டர்) எஸ். பி. ஆர். சீர்மாறன். இவர் இச்சம்பவத்தின் போது மருத்துவமனையின் எக்ஸ் - ரே பிரிவுக்குள் மறைந்திருந்து தப்பி பிழைத்தவர். ஓரு யுத்த களத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட, நடு நிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படல் வேண்டும் என சர்வதேசச் சட்டங்களும் தர்மங்களும் கூறுகின்ற வேளையில் ஒரு மருத்துவமனை, அதனுள் சீருடைகளில் தாதிகள், ஊழியர்கள், டாகடர்கள், காயத்துடனும், வேறு நோய்களுடனும் இருக்கின்ற நோயாளிகள் என்கின்ற மனிதநேயம் இல்லாமல் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்கிறார். இதுவே நாவண்ணன் அவர்கள் காந்த்த்திய நாட்டி;டி;டின் காட்டு;டு;டுமிராண்டி;டி;டிகள் என்று இந்திய அமைதிப் படையினரை அழைக்க வைத்துள்ளது. இந்த ஆசிரியரை நான் சனவரி மாதம் முல்லைத்தீவில் வைத்து சந்தித்து உரையாடிய போது நான் ஒரு இந்தியன் என்று தெரிந்தும், என்னோடு கரிசினையோடும், மரியாரையோடும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒரு இன அழிப்பையே மேற்கொண்ட இந்தியாவின் இச்செயலால் தமிழர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளானார்கள் என்பது உண்மை. இந்திய அமைதிப்படையை ஆங்கிலத்தில் ஐனெயைn Pநயஉந முநநிiபெ குழசஉந என்பதை சுருக்கி ஐ.P.மு.கு என்பார்கள.; இதனுடைய உண்மையான மற்றொரு விரிவாக்கம் ஐnழெஉநவெ Pநழிடந முடைடiபெ குழசஉந என்பதாகும் என்று இந்தியனாகிய என்னிடம் பகிடிக்காக சொன்னவர் ஒரு நண்பர். வெட்கி தலைகுனிந்தேன். காந்தி தாத்தா அகிம்சை வழியில் விடுதலை வாங்கி தந்ததாகக் கூறப்படும் இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்பட்டேன். இரண்டு வருடங்களாக இந்திய அமைதிப் படை, அமைதியின் பெயரால் தமிழர்களை கொன்று குவித்து, பெண்களை மானபங்கப்படுத்தி, வீடுகளையும், சொத்துக்களையும் சூறையாடி, அழித்து தனது கோழை வீரத்தை வெளிக்காட்டியுள்ளது.

இந்திய அமைதிப்படை ஒரு இராணுவ நடவடிக்கை ரீதியில் மாபெரும் தோல்வி கண்ட நிலையிலேயே இன அழிப்பை மேற்கொண்டுள்ளது என்பதனையும் உறுதிப்படுத்தலாம். ஓருவன் செய்த வரலாற்று பிழையால் ஒரு இனமே அழியவிடலாமா? அப்பிழை செய்தவனை தண்டித்ததே ஒரு வரலாற்று பிழையாகுமா? அந்த ஓர் உயிர் மட்டும்தான் உயிரா? எங்கோ பார்த்த ஒரு புத்தகத்தின் தலைப்பு இது.


இந்தியாவின் இரட்டை வேடம்

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற அறிஞர் அண்ணாவின் கூற்று இந்திய மைய அரசின் போக்கை தெளிவுபடுத்துகிறது. தமிழினமே தன் காலுக்கடியில் உள்ள எண்ணத்தோடே (உலக வரைபடத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்) இந்திய அரசாங்கம் செயற்படுகிறதை தமிழர்கள் காலம் காலமாக உணர்ந்து வந்துள்ளார்கள். இருப்பினும் இந்திய தமிழர்களுக்கு போதிய அளவு ரோசம் - மானம் இல்லாத காரணத்தினாலே தமிழ்நாடு என்ற வெறும் பெயரோடு, இன்றளவும் இந்தி – ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நானும் ஒரு இந்திய தமிழன் என்றாலும் இப்போது நான் வாழ்ந்துக்கொண்டிருப்பது வீரம் விளையும் வன்னிக் காடு என்பதாலேயே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறேன்.

இந்தியாவைப் பற்றிய எத்தகைய ஒரு எண்ணத்தோடு இலங்கை தமிழர்கள் இருந்தார்கள் என்பதை திருமதி அடேல் பாலசிங்கம் தனது சுதந்திர வேட்கை என்ற புத்தகத்தில் அழகாக எழுதியிருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாகக் குடியேற்றவாத சுரண்டலுக்கு உள்ளாகி, போராட்டம் மூலமே சுதந்திரத்தை வென்றெடுத்த ஒரு நாடு என்ற வகையில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பல ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மட்டில் இந்தியா அனுதாபம் காட்டியது.

அத்துடன் அப்போராட்டங்களுக்கு தார்மீக ரீதியாகவும் இந்தியா ஆதரவு வழங்கியது. அனைத்துலக மட்டத்தில் கண்டிக்கப்பட்ட அப்பார்தைட் இன ஒடுக்கல் முறைக்கு எதிராகப் போராடிய ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதில் முதல்நிலை நாடாக இந்தியா திகழ்ந்தது. அத்தோடு ஆபிரிக்காவின் ஏனைய விடுதலைப் போராட்டங்களுக்கும் முதல்நிலை ஆதரவு வழங்கியது. பாலஸ்தீன போராட்டம் பயங்கரவாதம் என்று கருதப்பட்ட அரசியல் ராஜதந்திர உலகில், பலஸ்தீன விடுதலை இயக்கமான PLO (Palestine Liberation Organisation)வுக்கு இந்தியா வலுவான ஆதரவு வழங்கியது.

இது பலஸ்தீன மக்களுக்கு பெரியதொரு தார்மீக உந்துதலாக விளங்கியது. ஏனைய கண்டங்களிலும், பிரதேசங்களிலும் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களுக்குத் தாராள மனப்பான்மையுடன் வெளிப்படையாக தார்மீக, ராஜதந்திர உதவிகளை வழங்கி வந்த இந்தியா, தனது கொல்லைப் புறத்தில் நிகழ்ந்த போராட்டங்கள் சம்பந்தப்பட்டவகையில் சந்தர்ப்பவாதத்தையும், பிரதேச நலன் பேணும் சாணக்கியத்தையுமே கடைப்பிடித்தது.

இந்தியாவின் மைய அரசை இரும்பு பெண்மணி இந்திரா காந்தி ஆட்சி செய்த போதும், தமிழ்நாட்டை நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சி செய்த போதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வெளிப்படையான இராணுவ, ஆயுத, நிதியுதவி செய்துவந்துள்ளார்கள். அதன் உள்நோக்கம் இலங்கையை தன் கைப்பிடிக்குள் கொண்டு வரலாம் என்றதாக இருந்திருந்தாலும் அவர்களின் உதவியை ஈழத் தமிழர்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள். நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்கின்படி வாழ்பவர்கள் மறத்தமிழர்கள். ஆனால் அவர்களுக்குப் பிறகு நடந்த ஆட்சி மாற்றம், அதிகாரிகள் மாற்றம் இந்தியாவின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்தியம்பியது. அதன்பின் இலங்கையிலும், இந்தியாவிலும் நடந்த துக்கமான வரலாற்று நிகழ்வுகளை நாம் நன்றாக அறிவோம்.

நான் இலங்கையில் இருந்தபோது அதாவது 2003 மே மாதம் இலங்கையின் தென் கிழக்கு பகுதிகளில் பலத்த காற்று, புயல், மழை வந்தது. மிகுந்த பொருட்சேதம் ஏற்பட்டது. 250 பேர் வெள்ளத்தினால், மண் சரிவினால் இறந்தார்கள். குறிப்பாக இரத்தினபுரி மாவட்டம் பெரும் அழிவுக்குள்ளானது. அடுத்த நாளே இந்தியா தனது ஆதரவு கரங்களை நீட்டியது. பெரும் அளவிலான மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்காக இராணுவக் கப்பல், உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) மற்றும் இராணுவ மருத்துவர்கள், மருந்து, உணவு பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தது. இந்த மனிதாபிமான செயலை, கேட்பதற்கு முன் உதவும் நட்பினை பாராட்டியாக வேண்டும். ஆனால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகால போரினால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்த போதிலும், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் தாயகமெங்கும் வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்ட போதும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? ஒரு இனம் மற்றொரு இனத்தை அழித்துக் கொண்டிருப்பதை உள்நாட்டு பிரச்சனை என்று மௌனம் காத்து வேடிக்கைப் பார்ப்பது சரிதானா?

மேற்கத்திய நாடான நோர்வே இங்குவந்து சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த, தனக்கு எதுவும் தெரியாதது போல் கண்டும் காணாமலும் இருந்துவிட்டால் கூட நலம், இலங்கையின் எதிர்கட்சி உறுப்பினர்களை அழைத்து சமாதானத்தைக் குழப்பாமல் இருந்தால். ஓவ்வொரு முறையும் சமாதானப் பேச்சுக்கள் நடந்தால், நிதியுதவி மாநாடுகள் நடந்தால் உடனே தனக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்து காத்திருப்பது போல, இலங்கை அரசு தூதுவர்களும், நோர்வே அதிகாரிகளும் இந்தியாவின் ஆட்சியாளர்களைக் கண்டுகொள்ள வேண்டும்.

எங்கே தனக்கு தெரியாமல் இலங்கையும், சர்வதேச நாடுகளும் விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்டு விடுவார்களோ என்ற பயத்துடனேயே இந்தியா விழி பிதுங்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்சமயம் இலங்கை அரசு தயாரித்துள்ள இடைக்கால நிர்வாக சபைப்பற்றிய தனது அச்சத்தையும், அதனால் விடுதலைப்புலிகள் பெறும் அங்கீகாரத்தையும் இந்தியா மிகுந்த கவலையோடு வெளிப்படுத்தியுள்ளது.

திருவிவிலியத்தில் வரும் ஊதாரி மைந்தன் கதையில் தந்தை இளைய மகனை மன்னித்து அன்பு செய்வதை ஏற்காத மூத்த மகனைப் போல இலங்கையும், சர்வதேச நாடுகளும் விடுதலைப் புலிகளை மதித்து தமிழர்களின் பிரதிநிதிகளாக ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமாதானமாக வாழ்வதை விரும்பாத இந்தியா, இலங்கையில் சமாதானத்தைக் குழப்புவோரை வெளியே அழைத்து, விசாரித்து அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பது தலைகுனிய வைக்கும் அவமானச் செயல். இதன் அடிப்படையிலேயே சமாதானப் பேச்சுவார்த்தை முறிந்தால் புலிகளை ஒடுக்க இந்தியா உதவும் என்று இங்கு அரசியல்வாதிகள் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பிறந்த பௌத்த மதத்தை இந்தியாவிலிருந்து துரத்தி விட்ட இந்தி – ஆரியர்கள், இலங்கையில் தமிழர்களின் வாழ்விடமான வடக்கு பகுதிகளில் எத்தனையோ இந்து, கிறிஸ்தவ கோயில்கள் போரினால் அழிந்து போயுள்ள நிலையில் அதே வடகிழக்கில் அழிந்துபோன பௌத்த விகாரைகளைத் திருத்த நிதியுதவி செய்கிறார்களாம். இந்தியாவின் இரட்டை வேடம் உலக அரங்கில் அரங்கேற்றப்பட்டுள்ளது. கூத்தாடி ஆரியனின் ஆரியக்கூத்தை வாய்பிளந்து நின்று இரசிக்க ஈழத்தமிழனென்ன இளிச்சவாயனா? எமக்கு தேவை நிதியுதவியல்ல, நிரந்தர சமாதானத்துடன் கூடிய நிம்மதியான வாழ்க்கையே!

For Full Text of Book please see PDF file

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home