|
1564. |
தில்லை வளத்தார் அம்பலத்தார்
திருவேட் களத்தார் செவ்வணத்தார்
கல்லை வளைத்தார் என்றன்மனக்
கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
எல்லை வளைத்தார் தியாகர்தமை
எழிலார் ஒற்றி எனும்நகரில்
ஒல்லை வளைத்துக் கண்டேன்நான்
ஒன்றும் உரையா திருந்தாரே.
1 | |
1565. |
இருந்தார் திருவா ரூரகத்தில்
எண்ணாக் கொடியார் இதயத்தில்
பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார்
புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
விருந்தார் திருந்தார் புரமுன்தீ
விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
தருந்தார் காம மருந்தார்இத்
தரணி இடத்தே தருவாரே.
2
|
1566. |
தருவார் தருவார் செல்வமுதல்
தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
மருவார் தமது மனமருவார்
மருவார் கொன்றை மலர்புனைவார்
திருவார் புயனும் மலரோனும்
தேடும் தியாகப் பெருமானார்
வருவார் வருவார் எனநின்று
வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
3
|
1567. |
வந்தார் அல்லர் மாதேநீ
வருந்தேல் என்று மார்பிலங்கும்
தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத்
தந்தார் அல்லர் தயை உடையார்
சந்தார் சோலை வளர்ஒற்றித்
தலத்தார் தியாகப் பெருமானார்
பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும்
பரிசே தொன்றும் பார்த்திலமே.
4
|
1568. |
இலமே செறித்தார் தாயர்இனி
என்செய் குவதென் றிருந்தேற்கு
நலமே தருவார் போல்வந்தென்
நலமே கொண்டு நழுவினர்காண்
உலமே அனைய திருத்தோளார்
ஒற்றித் தியாகப் பெருமானார்
வலமே வலம்என்அ வலம்அவலம்
மாதே இனிஎன் வழுத்துவதே.
5
|
1569. |
வழுத்தார் புரத்தை எரித்தார்நல்
வலத்தார் நடன மலரடியார்
செழுத்தார் மார்பர் திருஒற்றித்
திகழுந் தியாகப் பெருமானார்
கழுத்தார் விடத்தார் தமதழகைக்
கண்டு கனிந்து பெருங்காமம்
பழுத்தார் தம்மைக் கலந்திடநற்
பதத்தார் என்றும் பார்த்திலரே.
6
|
1570. |
பாரா திருந்தார் தமதுமுகம்
பார்த்து வருந்தும் பாவைதனைச்
சேரா திருந்தார் திருஒற்றித்
திகழுந் தியாகப் பெருமானார்
வாரா திருந்தார் இன்னும்இவள்
வருத்தங் கேட்டும் மாலைதனைத்
தாரா திருந்தார் சலமகளைத்
தாழ்ந்த சடையில் தரித்தாரே.
7
|
1571. |
சடையில் தரித்தார் ஒருத்திதனைத்
தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப்
புடையில் தரித்தார் மகளேநீ
போனால் எங்கே தரிப்பாரோ
கடையில் தரித்த விடம்அதனைக்
களத்தில் தரித்தார் கரித்தோலை
இடையில் தரித்தார் ஒற்றியூர்
இருந்தார் இருந்தார் என்னுளத்தே.
8
|
1572. |
உளத்தே இருந்தார் திருஒற்றி
யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
களத்தே வதிந்தார் அவர்என்றன்
கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
இளத்தே மொழியாய் ஆதலினால்
இமையேன் இமைத்தல் இயல்பன்றே
வளத்தே மனத்தும் புகுகின்றார்
வருந்தேன் சற்றும் வருந்தேனே.
9
|
1573. |
வருந்தேன் மகளீர் எனைஒவ்வார்
வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
தருந்தேன் அமுதம் உண்டென்றும்
சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
திருந்தேன் மணாளர் எனைப்பிரியார்
என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
மருந்தேன் மையற் பெருநோயை
மறந்தேன் அவரை மறந்திலனே.
10
| | | | | | | | | |