எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
குறுந்தொகை [also in pdf]
( பல ஆசிரியர்கள்)
kuRuntokai - One of "eTTutokai" anthology
Etext Preparation: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland Proof
Reading : Ms. Sarala Sandirasegarane, Kanpur, India PDF and Web version: Dr.
K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 1999 -
2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to
preparation of electronic texts of tamil literary works and to distribute
them free on the Internet. Details of Project Madurai are available at the
website http://www.projectmadurai.org/ You
are welcome to freely distribute this file, provided this header page is kept
intact.
கடவுள் வாழ்த்து
தாமரை புரையுங் காமர்
சேவடிப் பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல்
எய்தின்றால் உலகே.
-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
1. குறிஞ்சி - தோழி கூற்று
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
-திப்புத் தோளார்.
2. குறிஞ்சி - தலைவன் கூற்று
கொங்குதேர்
வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய
நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும்
பூவே.
-இறையனார்.
3. குறிஞ்சி - தலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப்
பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
-தேவகுலத்தார்.
4. நெய்தல் - தலைமகள் கூற்று
நோம்என் நெஞ்சே
நோம்என் நெஞ்சே இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.
-காமஞ்சேர் குளத்தார்.
5. நெய்தல் - தலைவி கூற்று
அதுகொல் தோழி
காம நோயே வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை உடைதிரைத் திவலை அரும்புந்
தீநீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.
-நரிவெரூ உத்தலையார்.
6. நெய்தல் - தலைவி கூற்று
நள்ளென் றன்றே
யாமம் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று நனந்தலை உலகமும்
துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
-பதுமனார்.
7. பாலை - கண்டோர் கூற்று
வில்லோன் காலன கழலே
தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில்
அழுவம் முன்னி யோரே.
-பெரும்பதுமனார்.
8. மருதம் - காதற் பரத்தை கூற்று
கழனி மாஅத்து
விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன்
புதல்வன் தாய்க்கே.
-ஆலங்குடி வங்கனார்.
9. மருதம் - தோழி கூற்று
யாயா கியளே மாஅ
யோளே மடைமாண் செப்பில் தமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை
நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் கயமூழ்கு மகளிர்
கண்ணின் மானும் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் கரப்பா டும்மே.
-கயமனார்.
10. பாலை - தோழி கூற்று
யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் காஞ்சி
யூரன் கொடுமை கரந்தன ளாகலின் நாணிய வருமே.
-ஓரம்போகியார்.
11. பாலை - தலைவி கூற்று
கோடீர் இலங்குவளை ஞெகிழ
நாடொறும் பாடில கலிழும் கண்ணொடு புலம்பி ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல்
சூழ்ந்திசின் அவருடை நாட்டே.
-மாமூலனார்.
12. பாலை - தலைவி கூற்று
எறும்பி யளையிற் குறும்பல்
சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் தேர் சென்ற ஆறே அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற்
கழறுமிவ் வழுங்க லூரே.
-ஓதலாந்தையார்.
13. குறிஞ்சி - தலைவி கூற்று
மாசறக் கழீஇய யானை
போலப் பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற் பைதல் ஒருதலைச் சேக்கும்
நாடன் நோய்தந் தனனே தோழி பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.
-கபிலர்.
14. குறிஞ்சி - தலைவன் கூற்று
அமிழ்துபொதி செந்நா அஞ்ச
வந்த வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெறுகதில் அம்ம யானே
பெற்றாங் கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில் நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.
-தொல்கபிலர்.
15. பாலை - செவிலி கூற்று
பறைபடப் பணிலம் ஆர்ப்ப
இறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை
மடந்தை நட்பே.
-ஔவையார்.
16. பாலை - தோழி கூற்று
உள்ளார் கொல்லோ தோழி
கள்வர் பொன்புனை பகழி செப்பங் கொண்மார் உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும் அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.
17. குறிஞ்சி - தலைவன் கூற்று
மாவென
மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி
னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே.
-பேரெயின் முறுவலார்.
18. குறிஞ்சி - தோழி கூற்று
வேரல் வேலி
வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை ஆகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
-கபிலர்.
19. மருதம் - தலைவன் கூற்று
எவ்வி இழந்த வறுமையாழ்ப்
பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
-பரணர்.
20. பாலை - தலைவி கூற்று
அருளும் அன்பும் நீக்கித்
துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின் உரவோர் உரவோர் ஆக மடவம்
ஆக மடந்தை நாமே.
-கோப்பெருஞ்சோழன்.
21. முல்லை - தலைவி கூற்று
வண்டுபடத் ததைந்த
கொடியிணர் இடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும்
புதுப்பூங் கொன்றை கானங் காரெனக் கூறினும் யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.
-ஓதலாந்தையார்.
22. பாலை - தோழி கூற்று
நீர்வார் கண்ணை நீயிவண்
ஒழிய யாரோ பிரிகிற் பவரே சாரற் சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும் தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே.
-சேரமானெந்தை.
23. குறிஞ்சி - தோழி கூற்று
அகவன் மகளே அகவன்
மகளே மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.
-ஔவையார்.
24. முல்லை - தலைவி கூற்று
கருங்கால் வேம்பின் ஒண்பூ
யாணர் என்னை யின்றியுங் கழிவது கொல்லோ ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக் குழையக் கொடியோர் நாவே காதலர் அகலக்
கல்லென் றவ்வே.
-பரணர்.
25. குறிஞ்சி - தலைவி கூற்று
யாரும் இல்லைத் தானே
கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
-கபிலர்.
26. குறிஞ்சி - தோழி கூற்று
அரும்பற மலர்ந்த கருங்கால்
வேங்கை மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும் தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய் வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.
-கொல்லனழிசி.
27. பாலை - தலைவி கூற்று
கன்று முண்ணாது
கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங் கெனக்கு மாகா
தென்னைக்கு முதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குலென் மாமைக் கவினே.
-வெள்ளிவீதியார்.
28. பாலை - தலைவி கூற்று
மூட்டு வேன்கொல்
தாக்கு வேன்கொல் ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென் உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
-ஔவையார்.
29. குறிஞ்சி - தலைன் கூற்று
நல்லுரை யிகந்து
புல்லுரை தாஅய்ப் பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம்
நீந்தி அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும் பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
-ஔவையார்.
30. பாலை - தலைவி கூற்று
கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற அளியேன்
யானே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
31. மருதம் - தலைவி கூற்று
மள்ளர்
குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்தக்
கோனை யானுமோர் ஆடுகள மகளே என்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு
குரிசிலுமோர் ஆடுகள மகனே.
-ஆதிமந்தியார்.
32. குறிஞ்சி - தலைவன் கூற்று
காலையும் பகலும்
கையறு மாலையும் ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற்
பொய்யே காமம் மாவென மடலோடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
-அள்ளூர் நன்முல்லையார்.
33. மருதம் - தலைவி கூற்று
அன்னாய்
இவனோர் இளமா ணாக்கன் தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ இரந்தூ ணிரம்பா
மேனியொடு விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.
-படுமரத்து மோசிகீரனார்.
34. மருதம் - தோழி கூற்று
ஒறுப்ப
வோவலர் மறுப்பத் தேறலர் தமியர் உறங்கும் கௌவை யின்றாய் இனியது கேட்டின்
புறுகவிவ் வூரே முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு அட்ட மள்ளர்
ஆர்ப்பிசை வெரூஉம் குட்டுவன் மாந்தை யன்னவெம் குழைவிளங் காய்நுதற் கிழவனு
மவனே.
-கொல்லிக் கண்ணனார்.
35. மருதம் - தலைவி கூற்று
நாணில மன்றவெங்
கண்ணே நாணேர்பு சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன கனைத்த கரும்பின்
கூம்புபொதி யவிழ நுண்ணுறை யழிதுளி தலைஇய தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க்
கழலே.
-கழார்க்கீரனெயிற்றி.
36. குறிஞ்சி - தலைவி கூற்று
துறுக லயலது
மாணை மாக்கொடி துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன் நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன் தாவா வஞ்சின முரைத்தது நோயோ தோழி நின்வயி
னானே.
-பரணர்.
37. பாலை - தோழி கூற்று
நசைபெரி துடையர் நல்கலு
நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.
38. குறிஞ்சி - தலைவி கூற்று
கான
மஞ்ஞை யறையீன் முட்டை வெயிலாடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன்
கேண்மை என்றும் நன்றுமன் வாழி தோழி உண்கண் நீரொ டொராங்குத் தணப்ப உள்ளா
தாற்றல் வல்லு வோர்க்கே.
-கபிலர்.
39. பாலை - தலைவி கூற்று
வெந்திறற் கடுவளி பொங்காப்
போந்தென நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
-ஔவையார்.
40. குறிஞ்சி - தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா
கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்.
41. பாலை - தலைவி கூற்று
காதலர் உழைய
ராகப் பெரிதுவந்து சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற அத்த நண்ணிய அங்குடிச்
சீறூர் மக்கள் போகிய அணிலாடு முன்றிற் புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.
-அணிலாடு முன்றிலார்.
42. குறிஞ்சி - தோழி கூற்று
காமம் ஒழிவ
தாயினும் யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.
-கபிலர்.
43. பாலை - தலைவி கூற்று
செல்வார் அல்லரென்
றியானிகழ்ந் தனனே ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே ஆயிடை, இருபே ராண்மை
செய்த பூசல் நல்லராக் கதுவி யாங்கென் அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.
-ஔவையார்.
44. பாலை - செவிலித்தாய் கூற்று
காலே பரிதப் பினவே
கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே
மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
-வெள்ளிவீதியார்.
45. மருதம் - தோழி கூற்று
காலை யெழுந்து
கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.
-ஆலங்குடி வங்கனார்.
46. மருதம் - தலைவி கூற்று
ஆம்பற் பூவின்
சாம்ப லன்ன கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.
-மாமலாடனார்.
47. குறிஞ்சி - தோழி கூற்று
கருங்கால் வேங்கை
வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை எல்லி வருநர்
களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.
-நெடுவெண்ணிலவினார்.
48. பாலை - தோழி கூற்று
தாதிற் செய்த
தண்பனிப் பாவை காலை வருந்துங் கையா றோம்பென ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும் நன்னுதல் பசலை நீங்க வன்ன நசையாகு
பண்பின் ஒருசொல் இசையாது கொல்லோ காதலர் தமக்கே.
-பூங்கணுத்திரையார்.
49. நெய்தல் - தலைவி கூற்று
அணிற்பல் அன்ன
கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை
யாயினும் நீயா கியரென் கணவனை யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.
-அம்மூவனார்.
50. மருதம் - தலைவி கூற்று
ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப் புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.
-குன்றியனார்.
51. நெய்தல் - தோழி கூற்று
கூன்முண் முண்டகக்
கூர்ம்பனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் பரக்குந் தூமணற்
சேர்ப்பனை யானும் காதலென் யாயுநனி வெய்யள் எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே.
-குன்றியனார்.
52. குறிஞ்சி - தோழி கூற்று
ஆர்களிறு மிதித்த
நீர்திகழ் சிலம்பிற் சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே நரந்த நாறுங்
குவையிருங் கூந்தல் நிரந்திலங்கு வெண்பல் மடந்தை பரிந்தனென் அல்லனோ இறையிறை
யானே.
-பனம்பாரனார்.
53. மருதம் - தோழி கூற்று
எம்மணங் கினவே மகிழ்ந
முன்றில் நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர்
களந்தொறும் செந்நெல் வான்பொரி சிதறி யன்ன எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே.
-கோப்பெருஞ் சோழன்.
54. குறிஞ்சி - தலைவி கூற்று
யானே யீண்டை
யேனே யென்னலனே ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும் கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.
-மீனெறிதூண்டிலார்.
55. நெய்தல் - தோழி கூற்று
மாக்கழி
மணிப்பூக் கூம்பத் தூத்திரைப் பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக் கையற
வந்த தைவரல் ஊதையொடு இன்னா உறையுட் டாகும் சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.
-நெய்தற் கார்க்கியர்.
56. பாலை - தலைவன் கூற்று
வேட்டச்
செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சின்னீர் வளையுடைக் கைய
ளெம்மோ டுணீஇயர் வருகதில் அம்ம தானே அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.
-சிறைக்குடி ஆந்தையார்.
57. நெய்தல் - தலைவி கூற்று
பூவிடைப்
படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய
தண்டாக் காமமொடு உடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.
-சிறைக்குடி ஆந்தையார்.
58. குறிஞ்சி - தலைவன் கூற்று
இடிக்குங்
கேளிர் நுங்குறை ஆக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை
மருங்கிற் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.
-வெள்ளி வீதியார்.
59. பாலை - தோழி கூற்று
பதலைப் பாணிப்
பரிசிலர் கோமான் அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக் குவளையொடு பொதிந்த
குளவி நாறுநின் நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும் சுரம்பல விலங்கிய
அரும்பொருள் நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.
-மோசி கீரனார்.
60. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தாட் கூதளி
யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக்
கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.
-பரணர்.
61. மருதம் - தோழி கூற்று
தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின் ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல
உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப் பொய்கை யூரன் கேண்மை செய்தின்
புற்றனெஞ் செறிந்தன வளையே.
-தும்பிசேர் கீரனார்.
62. குறிஞ்சி - தலைவன் கூற்று
கோடல்
எதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ ஐதுதொடை
மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.
-சிறைக்குடி ஆந்தையார்.
63. பாலை - தலைவன் கூற்று
ஈதலும்
துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே.
-உகாய்க்குடிகிழார்.
64. முல்லை - தலைவி கூற்று
பல்லா
நெடுநெறிக் ககன்று வந்தெனப் புன்றலை மன்றம் நோக்கி மாலை மடக்கண் குழவி
அலவந் தன்ன நோயேம் ஆகுதல் அறிந்தும் சேயர்தோழி சேய்நாட் டோரே.
-கருவூர்க் கதப்பிள்ளை.
65. முல்லை - தலைவி கூற்று
வன்பரல்
தெள்ளறல் பருகிய இரலைதன் இன்புறு துணையொடு மறுவந் துகளத் தான்வந் தன்றே
தளிதரு தண்கார் வாரா துறையுநர் வரனசைஇ வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே.
-கோவூர்கிழார்.
66. முல்லை - தோழி கூற்று
மடவ மன்ற தடவுநிலைக்
கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே.
-கோவர்த்தனார்.
67. பாலை - தலைவி கூற்று
உள்ளார் கொல்லோ தோழி
கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம் புதுநாண் நுழைப்பான் நுதிமாண்
வள்ளுகிர்ப் பொலங்கல ஒருகா சேய்க்கும் நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.
-அள்ளூர் நன்முல்லையார்.
68. குறிஞ்சி - தலைவி கூற்று
பூழ்க்கா
லன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும் அரும்பனி
அற்சிரந் தீர்க்கும் மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.
-அள்ளூர் நன்முல்லையார்.
69. குறிஞ்சி - தோழி கூற்று
கருங்கண்
தாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ்
கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல்
நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
-கடுந்தோட் கரவீரனார்.
70. குறிஞ்சி - தலைவன் கூற்று
ஒடுங்கீர்
ஓதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே இனையள் என்றவட் புனையள
வறியேன் சிலமெல் லியவே கிளவி அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.
-ஓரம்போகியார்.
71. பாலை - தலைவன் கூற்று
மருந்தெனின் மருந்தே
வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப் பெருந்தோள்
நுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே.
-கருவூர் ஓதஞானியார்.
72. குறிஞ்சி - தலைவன் கூற்று
பூவொத்
தலமருந் தகைய ஏவொத்து எல்லாரும் அறிய நோய்செய் தனவே தேமொழித் திரண்ட
மென்தோள் மாமலைப் பரீஇ வித்திய ஏனற் குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.
-மள்ளனார்.
73. குறிஞ்சி - தோழி கூற்று
மகிழ்நன் மார்பே வெய்யை
யானீ அழியல் வாழி தோழி நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்று
மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.
-பரணர்.
74. குறிஞ்சி - தோழி கூற்று
விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன் யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச் சாயினன் என்பநம் மாணலம் நயந்தே.
-விட்டகுதிரையார்.
75. மருதம் - தலைவி கூற்று
நீகண் டனையோ
கண்டார்க் கேட்டனையோ ஒன்று தௌிய நசையினம் மொழிமோ வெண்கோட் டியானை சோணை
படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.
-படுமரத்து மோசிகீரனார்.
76. குறிஞ்சி - தலைவி கூற்று
காந்தள்
வேலி ஓங்குமலை நல்நாட்டுச் செல்ப என்பவோ கல்வரை மார்பர் சிலம்பிற் சேம்பின்
அலங்கல் வள்ளிலை பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத் தண்வரல் வாடை
தூக்கும் கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே.
-கிள்ளி மங்கலங்கிழார்.
77. பாலை - தலைவி கூற்று
அம்ம வாழி தோழி
யாவதும் தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும் அரிய கானஞ் சென்றோர்க்கு எளிய வாகிய
தடமென் தோளே.
-மதுரை மருதன் இளநாகனார்.
78. குறிஞ்சி - பாங்கன் கூற்று
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென
உணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.
-நக்கீரனார்.
79. பாலை - தலைவி கூற்று
கான யானை தோனயந் துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்குச் சொல்லா தகறல்
வல்லு வோரே.
-குடவாயிற் கீரத்தனார்.
80. மருதம் - பரத்தை கூற்று
கூந்தல்
ஆம்பல் முழுநெறி அடைச்சிப் பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி யாமஃ
தயர்கம் சேறும் தானஃது அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர் நுகம்படக் கடக்கும்
பல்வேல் எழினி முனையான் பெருநிரை போலக் கிளையொடுங் காக்கதன் கொழுநன்
மார்பே.
-ஔவையார்.
81. குறிஞ்சி - தோழி கூற்று
இவளே, நின்சொற் கொண்ட
என்சொல் தேறிப் பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப் புதுநலன் இழந்த புலம்புமார்
உடையள் உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும் நிலவும் இருளும் போலப்
புலவுத்திரைக் கடலும் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே.
-வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்.
82. குறிஞ்சி - தலைவி கூற்று
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு அழாஅல் என்றுநம் அழுதகண்
துடைப்பார் யாரா குவர்கொல் தோழி சாரற் பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி அவரை பூக்கும் அரும்பனி அச்சிரம் வாரா தோரே.
-கடுவன் மள்ளனார்.
83. குறிஞ்சி - தோழி கூற்று
அரும்பெறல்
அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை தம்மில் தமதுண்
டன்ன சினைதொறும் தீம்பழந் தூங்கும் பலவின் ஓங்குமலை நாடனை வரும்என் றாளே.
-வெண்பூதனார்.
84. பாலை - செவிலி கூற்று
பெயர்த்தனென்
முயங்கயான் வியர்த்தனென் என்றனள் இனியறிந் தேனது துனியா குதலே கழல்தொடி
ஆஅய் மழைதவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான்தண்
தணியளே.
-மோசிகீரனார்.
85. மருதம் - தோழி கூற்று
யாரினும் இனியன் பேரன்
பினனே உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூன்முதிர் பேடைக் கீனி
லிழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே.
-வடம வண்ணக்கன் தாமோதரனார்.
86. குறிஞ்சி - தலைவி கூற்று
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண் பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
-வெண்கொற்றனார்.
87. குறிஞ்சி - தலைவி கூற்று
மன்ற மராஅத்த
பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும் கொடியர் அல்லரெங்
குன்றுகெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.
-கபிலர்.
88. குறிஞ்சி - தோழி கூற்று
ஒலிவெள் ளருவி ஓங்குமலை
நாடன் சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொல்முரண் சோருந் துன்னருஞ்
சாரல் நடுநாள் வருதலும் வரூஉம் வடுநா ணலமே தோழி நாமே.
-மதுரைக் கதக்கண்ணனார்.
89. மருதம் - தோழி கூற்று
பாவடி உரல
பகுவாய் வள்ளை ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப அழிவ தெவன்கொலிப் பேதை
யூர்க்கே பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கண் தெய்வம் குடவரை
யெழுதிய நல்லியற் பாவை அன்னஇம் மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.
-பரணர்.
90. குறிஞ்சி - தோழி கூற்று
எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய மங்குல் மாமழை வீழ்ந்தெனப்
பொங்குமயிர்க் கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி வரையிழி அருவி உண்துறைத்
தரூஉம் குன்ற நாடன் கேண்மை மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.
-மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்.
91. மருதம் - தலைவி கூற்று
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை
கதூஉம் தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற் பலவா குகநின் நெஞ்சிற் படரே ஓவா
தீயு மாரி வண்கைக் கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே.
-ஔவையார்.
92. நெய்தல் - தலைவி கூற்று
ஞாயிறு பட்ட அகல்வாய்
வானத்து அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.
-தாமோதரனார்.
93. மருதம் - தலைவி கூற்று
நன்னலந் தொலைய நலமிகச்
சாஅய் இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.
-அள்ளூர் நன்முல்லையார்.
94. முல்லை - தலைவி கூற்று
பெருந்தண்
மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே மானே
மருள்வேன் தோழி பானாள் இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும் என்னா
குவர்கொல் பிரிந்திசி னோரே அருவி மாமலை தத்தக் கருவி மாமழைச் சிலை தருங்
குரலே.
-கதக்கண்ணனார்.
95. குறிஞ்சி - தலைவன் கூற்று
மால்வரை இழிதருந்
தூவெள் அருவி கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன்
பெருந்தோட் குறுமகள் நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.
-கபிலர்.
96. குறிஞ்சி - தலைவி கூற்று
அருவி வேங்கைப் பெருமலை
நாடற்கு யானெவன் செய்கோ என்றி யானது நகையென உணரேன் ஆயின் என்னா
குவைகொல் நன்னுதல் நீயே.
-அள்ளூர் நன்முல்லையார்.
97. நெய்தல் - தலைவி கூற்று
யானே ஈண்டை
யேனே யென்னலனே ஆனா நோயொடு கான லஃதே துறைவன் தம்மூ ரானே மறையல ராகி
மன்றத் தஃதே.
-வெண்பூதியார்.
98. முல்லை - தலைவி கூற்று
இன்ன ளாயினள்
நன்னுதல் என்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி
தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே.
-கோக்குள முற்றனார்.
99. முல்லை - தலைவன் கூற்று
உள்ளினென்
அல்லனோ யானே உள்ளி நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து மருண்டனென் அல்லனோ
உலகத்துப் பண்பே நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை இறைத்துணச் சென்றற்
றாஅங்கு அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.
-ஔவையார்.
100. குறிஞ்சி - தலைவன் கூற்று
அருவிப் பரப்பின்
ஐவனம் வித்திப் பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும் காந்தள் வேலிச்
சிறுகுடி பசிப்பிற் கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும் வல்வில் ஓரி
கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந் தனளே மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.
-கபிலர்.
101. குறிஞ்சி - தலைவன் கூற்று
விரிதிரைப் பெருங்கடல்
வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கிற்
சீர்சா லாவே பூப்போல் உண்கண் பொன்போல் மேனி மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.
-பரூஉ மோவாய்ப் பதுமனார்.
102. நெய்தல் - தலைவி கூற்று
உள்ளின்
உள்ளம் வேமே உள்ளா திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.
-ஔவையார்.
103. நெய்தல் - தலைவி கூற்று
கடும்புனல் தொகுத்த
நடுங்கஞர் அள்ளல் கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய் இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும் வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன்
போல்வல் தோழி யானே.
-வாயிலான் தேவனார்.
104. பாலை - தலைவி கூற்று
அம்ம வாழி தோழி
காதலர் நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத் தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர் பிரியும் நாளும் பலவா குபவே.
-காவன் முல்லைப்பூதனார்.
105. குறிஞ்சி - தலைவி கூற்று
புனவன்
துடவைப் பொன்போற் சிறுதினைக் கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் அறியா துண்ட
மஞ்ஞை ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் சூர்மலை நாடன்
கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.
-நக்கீரர்.
106. குறிஞ்சி - தலைவி கூற்று
புல்வீழ் இற்றிக்
கல்லிவர் வெள்வேர் வரையிழி அருவியின் தோன்றும் நாடன் தீதில் நெஞ்சத்துக்
கிளவி நம்வயின் வந்தன்று வாழி தோழி நாமும் நெய்பெய் தீயின் எதிர்கொண்டு
தான்மணந் தனையமென விடுகந் தூதே.
-கபிலர்.
107. மருதம் - தலைவி கூற்று
குவியிணர்த் தோன்றி ஒண்பூ
வன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் நள்ளிருள் யாமத் தில்லெலி
பார்க்கும் பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக் கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த ஏம இன்துயில் எடுப்பி யோயே.
-மதுரைக் கண்ணனார்.
108. முல்லை - தலைவி கூற்று
மழைவிளை யாடுங்
குன்றுசேர் சிறுகுடிக் கறவை கன்றுவயிற் படரப் புறவிற் பாசிலை முல்லை ஆசில்
வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று உய்யேன் போல்வல் தோழி யானே.
-வாயிலான் தேவனார்.
109. நெய்தல் - தோழி கூற்று
முட்கால் இறவின்
முடங்குபுறப் பெருங்கிளை புணரி இகுதிரை தரூஉந் துறைவன் புணரிய இருந்த
ஞான்றும் இன்னது மன்னோ நன்னுதற் கவினே.
-நம்பி குட்டுவனார்.
110. முல்லை - தலைவி கூற்று
வாரா ராயினும்
வரினும் அவர்நமக்கு யாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று இன்னா தெறிதரும் வாடையொடு என்னா
யினள்கொல் என்னா தோரே.
-கிள்ளிமங்கலங்கிழார்.
111. குறிஞ்சி - தோழி கூற்று
மென்தோள்
நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அதுவென உணரும்
ஆயின் ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை
நாடன் வல்லே வருக தோழிநம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே.
-தீன்மதி நாகனார்.
112. குறிஞ்சி - தலைவி கூற்று
கௌவை யஞ்சிற்
காமம் எய்க்கும் எள்ளற விடினே உள்ளது நாணே பெருங்களிறு வாங்க முரிந்துநிலம்
படாஅ நாருடை ஒசியல் அற்றே கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே.
-ஆலத்தூர் கிழார்.
113. மருதம் - தோழி கூற்று
ஊர்க்கும் அணித்தே
பொய்கை பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே இரைதேர் வெண்குரு கல்ல
தியாவதும் துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம் கூழைக் கெருமண் கொணர்கஞ்
சேறும் ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.
-மாதீர்த்தனார்.
114. நெய்தல் - தோழி கூற்று
நெய்தற் பரப்பிற்
பாவை கிடப்பி நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க செல்கம் செலவியங் கொண்மோ
அல்கலும் ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.
-பொன்னாகனார்.
115. குறிஞ்சி - தோழி கூற்று
பெருநன் றாற்றிற்
பேணாரும் உளரே ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல் மென்னடை மரையா துஞ்சும் நன்மலை நாட நின்னல
திலளே.
-கபிலர்.
116. குறிஞ்சி - தலைவன் கூற்று
யானயந் துறைவோள்
தேம்பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண்மணல் அறல்வார்ந்
தன்ன நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.
-இளங்கீரனார்.
117. நெய்தல் - தோழி கூற்று
மாரி ஆம்ப லன்ன
கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன் வாரா தமையினும் அமைக சிறியவும்
உளவீண்டு விலைஞர்கை வளையே.
-குன்றியனார்.
118. நெய்தல் - தலைவி கூற்று
புள்ளும் மாவும்
புலம்பொடு வதிய நள்ளென வந்த நாரில் மாலைப் பலர்புகு வாயில் அடைப்பக்
கடவுநர் வருவீர் உளீரோ எனவும் வாரார் தோழிநங் காத லோரே.
-நன்னாகையார்.
119. குறிஞ்சி - தலைவன் கூற்று
சிறுவெள் ளரவின்
அவ்வரிக் குருளை கான யானை அணங்கி யாஅங்கு இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.
-சத்திநாதனார்.
120. குறிஞ்சி - தலைவன் கூற்று
இல்லோன் இன்பங்
காமுற் றாஅங்கு அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியா தோயே.
-பரணர்.
121. குறிஞ்சி - தலைவி கூற்று
மெய்யே வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற கோட்டொடு போகி
யாங்கு நாடன் தான்குறி வாயாத் தப்பற்குத் தாம்பசந் தனஎன் தடமென் தோளே.
-கபிலர்.
122. நெய்தல் - தலைவி கூற்று
பைங்காற் கொக்கின்
புன்புறத் தன்ன குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.
-ஓரம் போகியார்.
123. நெய்தல் - தோழி கூற்று
இருள்திணிந் தன்ன
ஈர்ந்தண் கொழுநிழல் நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக் கருங்கோட்டுப்
புன்னைப் பூம்பொழில் புலம்ப இன்னும் வாரார் வரூஉம் பன்மீன் வேட்டத்
தென்னையர் திமிலே.
-ஐயூர் முடவனார்.
124. பாலை - தோழி கூற்று
உமணர் சேர்ந்து
கழிந்து மருங்கி னகன்றலை ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு இன்னா என்றி
ராயின் இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.
125. நெய்தல் - தலைவி கூற்று
இலங்குவளை நெகிழச் சாஅ யானே உளெனே வாழி தோழி சாரல் தழையணி அல்குல்
மகளி ருள்ளும் விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற் பறைவலந் தப்பிய பைதல் நாரை
திரைதோய் வாங்குசினை யிருக்கும் தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.
-அம்மூவனார்.
127. மருதம் - தோழி கூற்று
குருகுகொளக் குளித்த
கெண்டை அயலது உருகெழு தாமரை வான்முகை வெரூஉம் கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர்நீ அகன்றிசி
னோர்க்கே.
-ஓரம் போகியார்.
128. நெய்தல் - தலைவன் கூற்று
குணகடல் திரையது
பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை அயிரை ஆரிரைக் கணவந்
தாங்குச் சேயல் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.
-பரணர்.
129. குறிஞ்சி - தலைவன் கூற்று
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண்
திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் புதுக்கோள்
யானையிற் பிணித்தற்றால் எம்மே.
-கோப்பெருஞ்சோழன்.
130. பாலை - தோழி கூற்று
நிலந்தொட்டுப்
புகாஅர் வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாட்டின் நாட்டின்
ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரும் உளரோநம் காதலோரே.
-வெள்ளி வீதியார்.
126. முல்லை - தலைவி கூற்று
இளமை பாரார்
வளநசைஇச் சென்றோர் இவணும் வாரார் எவண ரோவெனப் பெயல்புறந் தந்த பூங்கொடி
முல்லைத் தொகுமுகை இலங்கெயி றாக நகுமே தோழி நறுந்தண் காரே.
-ஒக்கூர் மாசாத்தியார்.
131. பாலை - தலைவன் கூற்று
ஆடமை
புரையும் வனப்பிற் பணைத்தோள் பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே நெடுஞ்சேண் ஆரிடை
யதுவே நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓரேர் உழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே.
-ஒரேருழவனார்.
132. குறிஞ்சி - தலைவன் கூற்று
கவவுக்
கடுங்குரையள் காமர் வனப்பினள் குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க் கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி
தாய்காண் விருப்பி னன்ன சாஅய்நோக் கினளே மாஅ யோளே.
-சிறைக்குடியாந்தையார்.
133. குறிஞ்சி - தலைவி கூற்று
புனவன்
துடவைப் பொன்போற் சிறுதினை கிளிகுறைத் துண்ட கூழை யிருவி பெரும்பெய
லுண்மையி னிலையொலித் தாங்கென் உரஞ் செத்தும் உளெனே தோழியென் நலம்புதி துண்ட
புலம்பி னானே.
-உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
134. குறிஞ்சி - தலைவி கூற்று
அம்ம வாழி தோழி நம்மொடு பிரிவின் றாயின் நன்றுமற் றில்ல
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப் பூவுடை அலங்குசினை புலம்பத்
தாக்கிக் கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி நிலங்கொள் பாம்பின் இழிதரும்
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.
-கோவேங்கைப் பெருங்கதவனார்.
135. பாலை - தோழி கூற்று
வினையே
ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவர் உயிரென நமக்குரைத் தோருந்
தாமே அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.
-பாலைபாடிய பெருங் கடுங்கோ.
136. குறிஞ்சி - தலைவன் கூற்று
காமங் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை குளகுமென் றாள்மதம் போலப் பாணியும்
உடைத்தது காணுநர்ப் பெறினே.
-மிளைப்பெருங் கந்தனார்.
137. பாலை - தலைவன் கூற்று
மெல்லியல்
அரிவைநின் னல்லகம் புலம்ப நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந் திரவலர் வாரா
வைகல் பலவா குகயான் செலவுறு தகவே.
-பாலை பாடிய பெருங் கடுங்கோ.
138. மருதம் - தோழி கூற்று
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே எம்மி லயல தேழி லும்பர் மயிலடி
யிலைய மாக்குர னொச்சி அணிமிகு மென்கொம் பூழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி
கேட்டே.
-கொல்லன் அழிசி.
139. மருதம் - தோழி கூற்று
மனையுறை கோழிக்
குறுங்காற் பேடை வேலி வெருகின மாலை யுற்றெனப் புகுமிட னறியாது தொகுபுடன்
குழீஇய பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழிய ரையவெந் தெருவே.
-ஒக்கூர் மாசாத்தியார்.
140. பாலை - தலைவி கூற்று
வேதின
வெரிநின் ஓதிமுது போத்து ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும் சுரனே
சென்றனர் காதலர் உரனழிந்து ஈங்கியான் தாங்கிய எவ்வம் யாங்கறிந் தன்றிவ்
வழுங்க லூரே.
-அள்ளூர் நன்முல்லையார்.
141. குறிஞ்சி - தலைவி கூற்று
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர் செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த குறுங்கை
யிரும்புலிக் கொலைவல் ஏற்றை பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் ஆரிரு
ணடுநாள் வருதி சாரல் நாட வாரலோ எனவே.
-மதுரைப் பெருங்கொல்லனார்.
142. குறிஞ்சி - தலைவன் கூற்று
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட் பள்ளி யானையி னுயிர்த்தென் உள்ளம் பின்னுந்
தன்னுழை யதுவே.
-கபிலர்.
143. குறிஞ்சி - தோழி கூற்று
அழிய லாயிழை அன்பு
பெரிதுடையன் பழியும் அஞ்சும் பயமலை நாடன் நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
தங்குதற் குரிய தன்றுநின் அங்கலுழ் மேனிப் பாய பசப்பே.
-மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
144. பாலை - செவிலித்தாய்
கூற்று
கழிய காவி குற்றும் கடல வெண்டலைப் புணரி யாடியும் நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப் பரல்பாழ்
படுப்பச் சென்றனள் மாதோ சென்மழை தவழும் சென்னி விண்ணுயர் பிறங்கல்
விலங்குமலை நாட்டே.
-மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்.
145. நெய்தல் - தலைவி கூற்று
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் துஞ்சா துறைநரொ டுசாவாத் துயிற்கண்
மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.
-கொல்லனழிசியார்.
146. குறிஞ்சி - தோழி கூற்று
அம்ம வாழி தோழி
நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர்
வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்னு மாக்களோ டின்றுபெரி தென்னும் ஆங்கண
தவையே.
-வெள்ளி வீதியார்.
147. பாலை - தலைவன் கூற்று
வேனிற் பாதிரிக்
கூன்மல ரன்ன மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை நுண்பூண் மடந்தையைத் தந்தோய்
போல இன்றுயில் எடுப்புதி கனவே எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.
-கோப்பெருஞ் சோழன்.
148. முல்லை - தலைவி கூற்று
செல்வச் சிறாஅர்
சீறடிப் பொலிந்த தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக் காசி னன்ன போதீன் கொன்றை
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும் காரன் றென்றி யாயிற்
கனவோ
மற்றிது வினவுவல் யானே.
-இளங் கீரந்தையார்.
149. பாலை - தலைவி கூற்று
அளிதோ தானே நாணே
நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே இனியே வான்பூங் கரும்பின் ஓங்குமணற்
சிறுசிறை தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாவே.
-வெள்ளி வீதியார்.
150. குறிஞ்சி - தலைவி கூற்று
சேணோன் மாட்டிய
நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின் இமைக்கும் ஓங்குமலை நாடன்
சாந்துபுல ரகலம் உள்ளின் உண்ணோய் மல்கும் புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்
-மாடலூர் கிழார்.
151. பாலை - தலைவன் கூற்று
வங்காக் கடந்த
செங்காற் பேடை எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது குழலிசைக் குரல் குறும்பல
அகவும் குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது மறப்பருங் காதலி யொழிய இறப்ப
லென்பதீண் டிளமைக்கு முடிவே.
-தூங்கலோரியார்.
152. குறிஞ்சி - தலைவி கூற்று
யாவதும் அறிகிலர்
கழறு வோரே தாயின் முட்டை போலவுட் கிடந்து சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தே
யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே.
-கிளிமங்கலங்கிழார்.
153. குறிஞ்சி - தலைவி கூற்று
குன்றக் கூகை
குழறினும் முன்றிற் பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் அஞ்சுமன்
அளித்தெ னெஞ்ச மினியே ஆரிருட் கங்குல் அவர்வயிற் சாரல் நீளிடைச் செலவா
னாதே.
-கபிலர்.
154. பாலை - தலைவி கூற்று
யாங்கறிந் தனர்கொல் தோழி
பாம்பின் உரிநிமிர்ந் தன்ன உருப்பவி ரமையத் திரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்திற் குறுநடைப் பேடை பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்
தயங்க விருந்து புலம்பக் கூஉம் அருஞ்சுர வைப்பிற் கானம் பிரிந்துசே
ணுறைதல் வல்லு வோரே.
-மதுரைச் சீத்தலைச் சாத்தனார்.
155. முல்லை - தலைவி கூற்று
முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான் றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி
மரம்பயில் இறும்பி னார்ப்பச் சுரனிழிபு மாலை நனிவிருந் தயர்மார்
தேர்வரும் என்னும் உரைவா ராதே.
-உரோடகத்துக் காரத்தனார்.
156. குறிஞ்சி - தலைவன் கூற்று
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக்
கற்பி னின்சொல் உள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ
மயலோ விதுவே.
-பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.
157. மருதம் - தலைவி கூற்று
குக்கூ வென்றது கோழி அதன்எதிர் துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.
-அள்ளூர் நன்முல்லையார்.
158. குறிஞ்சி - தலைவி கூற்று
நெடுவரை
மருங்கிற் பாம்புபட இடிக்கும் கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக் காலொடு
வந்த கமஞ்சூல் மாமழை ஆரளி யிலையோ நீயே பேரிசை இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர் அளியர் பெண்டிர் இஃதெவனோ.
-ஔவையார்.
159. குறிஞ்சி - தோழி கூற்று
தழையணி அல்குல் தாங்கல்
செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொ டுசாவாக் கவலை மாக்கட்டிப் பேதை யூரே.
-வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்.
160. குறிஞ்சி - தலைவி கூற்று
நெருப்பி னன்ன செந்தலை யன்றில் இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர் கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார் இஃதோ தோழிநங் காதலர் வரவே.
-மதுரை மருதனிள நாகனார்.
161. குறிஞ்சி - தலைவி கூற்று
பொழுதும்
எல்லின்று பெயலும் ஓவாது கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப் புலிப்பல்
தாலிப் புதல்வர்ப் புல்லி அன்னா வென்னும் அன்னையு மன்னோ என்மலைந் தனன்கொல்
தானே தன்மலை ஆரம் நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே.
-நக்கீரனார்.
162. முல்லை - தலைவன் கூற்று
கார்புறத் தந்த
நீருடை வியன்புலத்துப் பலர்புகு தரூஉம் புல்லென் மாலை முல்லை வாழியோ முல்லை
நீநின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவை போலக் காட்டல் தகுமோ
மற்றிது தமியோர் மாட்டே.
-கருவூர்ப் பவுத்திரனார்.
163. நெய்தல் - தலைவி கூற்று
யாரணங்
குற்றனை கடலே பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன மீனார் குருகின்
கானலம் பெருந்துறை வெள்வீத் தாழை திரையலை நள்ளென் கங்குலுங் கேட்குநின்
குரலே.
-அம்மூவனார்.
164. மருதம் - காதற்பரத்தை கூற்று
கணைக்கோட்டு
வாளை கமஞ்சூல் மடநாகு துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் தொன்றுமுதிர்
வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி மனையோள் மடமையிற்
புலக்கும் அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே.
-மாங்குடி மருதனார்.
165. குறிஞ்சி - தலைவன் கூற்று
மகிழ்ந்ததன்
றலையும் நறவுண் டாங்கு விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை அருங்கரை நின்ற
உப்பொய் சகடம் பெரும்பெய றலையவீந் தாங்கியவள் இரும்பல் கூந்தல் இயலணி
கண்டே.
-பரணர்.
166. நெய்தல் - தோழி கூற்று
தண்கடற் படுதிரை
பெயர்த்தலின் வெண்பறை நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும் ஊரோ நன்றுமன் மரந்தை
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே.
-கூடலூர் கிழார்.
167. முல்லை - செவிலித்தாய் கூற்று
முளிதயிர்
பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண்
குய்ப்புகை கழுமத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.
-கூடலூர் கிழார்.
168. பாலை - தலைவன் கூற்று
மாரிப் பித்திகத்து
நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து பெரும்பெயல்
விடியல் விரித்துவிட் டன்ன நறுந்தண் ணியளே நன்மா மேனி புனற்புணை யன்ன
சாயிறைப் பணைத்தோள் மணத்தலுந் தணத்தலு மிலமே பிரியின் வாழ்தல் அதனினும்
இலமே.
-சிறைக்குடி யாந்தையார்.
169. மருதம் - தலைவி கூற்று
சுரஞ்செல்
யானைக் கல்லுறு கோட்டிற் றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம் நும்மொடு நக்க
வால்வெள் ளெயிறே பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல எமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே.
-வெள்ளிவீதியார்.
170. குறிஞ்சி - தலைவி கூற்று
பலவும் கூறுகவஃ
தறியா தோரே அருவி தந்த நாட்குர லெருவை கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.
-கருவூர்கிழார்.
171. மருதம் - தலைவி கூற்று
காணினி வாழி தோழி
யாணர்க் கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட மீன்வலை மாப்பட் டாஅங்
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே.
-பூங்கணுத்திரையார்.
172. நெய்தல் - தலைவி கூற்று
தாஅ வலஞ்சிறை
நொப்பறை வாவல் பழுமரம் படரும் பையுன் மாலை எமிய மாக ஈங்குத் துறந்தோர்
தமிய ராக இனியர் கொல்லோ ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த உலைவாங்கு
மிதிதோல் போலத் தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
173. குறிஞ்சி - தலைவன் கூற்று
பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணட் டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப இன்னள் செய்த
திதுவென முன்னின் றவள் பழி நுவலு மிவ்வூர் ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா
றுளெனே.
-மதுரைக் காஞ்சிப்புலவன்.
174. பாலை - தலைவி கூற்று
பெயன்மழை
துறந்த புலம்புறு கடத்துக் கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி துதைமென்
தூவித் துணைப்புற விரிக்கும் அத்தம் அரிய என்னார் நத்துறந்து பொருள்வயிற்
பிரிவா ராயினிவ் வுலகத்துப் பொருளே மன்ற பொருளே அருளே மன்ற ஆருமில் லதுவே.
-வெண்பூதியார்.
175. நெய்தல் - தலைவி கூற்று
பருவத் தேனசைஇப்
பல்பறைத் தொழுதி உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை நனைந்த புன்னை மாச்சினை
தொகூஉம் மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற் கிரங்கேன் தோழியீங் கென்கொ
லென்று பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங் கமைக அம்பலஃ தெவனே.
-உலோச்சனார்.
176. குறிஞ்சி - தோழி கூற்று
ஒருநாள் வாரலன்
இருநாள் வாரலன் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த
பின்றை வரைமுதிர் தேனிற் போகி யோனே ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னன்னாட்டுப் பெய்த ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே.
-வருமுலையாரித்தியார்.
177. நெய்தல் - தோழி கூற்று
கடல்பா
டவிந்து கானல் மயங்கித் துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே மன்றவம் பெண்ணை
மடல்சேர் வாழ்க்கை அன்றிலும் பையென நரலும் இன்றவர் வருவர்கொல் வாழி தோழி
நாந்தப் புலப்பினும் பிரிவாங் கஞ்சித் தணப்பருங் காமம் தண்டி யோரே.
-உலோச்சனார்.
178. மருதம் - தோழி கூற்று
அயிரை பரந்த அந்தண்
பழனத் தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட்
டாங்கிவள் இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி
யாநுமக் கரிய மாகிய காலைப் பெரிய தோன்றினிர் நோகோ யானே.
-நெடும்பல்லியத்தையார்.
179. குறிஞ்சி - தோழி கூற்று
கல்லென்
கானத்துக் கடமா வாட்டி எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன செல்லல் ஐஇய
உதுவெம் மூரே ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த குவையுடைப் பசுங்கழை
தின்ற கயவாய்ப் பேதை யானை சுவைத்த கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.
-குட்டுவன் கண்ணனார்.
180. பாலை - தோழி கூற்று
பழூஉப்பல் அன்ன
பருவுகிர்ப் பாவடி இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந் தறைமடி
கரும்பின் கண்ணிடை யன்ன பைத லொருகழை நீடிய சுரனிறந்து எய்தினர் கொல்லோ
பொருளே யல்குல் அவ்வரி வாடத் துறந்தோர் வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
181. மருதம் - தலைவி கூற்று
இதுமற்
றெவனோ தோழி துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி இருமருப் பெருமை
ஈன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியி னகலாது பாஅற் பைம்பயிர் ஆரு மூரன்
திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே.
-கிளிமங்கலங் கிழார்.
182. குறிஞ்சி - தலைவன் கூற்று
விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல் மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ கலிந்தவிர் அசைநடைப் பேதை மெலிந்தில
ணாம்விடற் கமைந்த தூதே.
-மடல் பாடிய மாதங்கீரனார்.
183. முல்லை - தலைவி கூற்று
சென்ற
நாட்ட கொன்றையம் பசுவீ நம்போற் பசக்குங் காலைத் தம்போற் சிறுதலைப் பிணையிற்
றீர்த்த நெறிகோட் டிரலை மானையுங் காண்பர்கொல் நமரே புல்லென் காயாப்
பூக்கெழு பெருஞ்சினை மென்மயில் எருத்தில் தோன்றும் கான வைப்பிற் புன்புலத்
தானே.
-ஔவையார்.
184. நெய்தல் - தலைவன் கூற்று
அறிகரி பொய்த்தல்
ஆன்றோர்க் கில |