தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya Bharathy > Index of Works - பட்டியல் > தோத்திரப் பாடல்கள் 1 > தோத்திரப் பாடல்கள் 2  > தோத்திரப் பாடல்கள் 3 > தோத்திரப் பாடல்கள் 4 > தோத்திரப் பாடல்கள் 5  > தோத்திரப் பாடல்கள் 6

Maha Kavi Subramaniya Bharathy -Thothirap Padalkal 5
சி. சுப்ரமணிய பாரதியார் -  தோத்திரப் பாடல்கள் 5

[eText input: Govardhanan proof/read version (proof-read Kalyanasundaram) © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]

45. கண்ணனை வேண்டுதல46. வருவாய் கண்ண47. கண்ண பெருமான48. நந்த லால49. கண்ணன் பிறந்தான50. கண்ணன் திருவடி 51 வேய்ங்குழல் 52. கண்ணம்மாவின் காதல53. கண்ணம்மாவின் நினைப்பு 54. மனப்பீடம் 55. கண்ணம்மாவின் எழில56. திருக்காதல் 57. திருவேட்க58 திருமகள் துதி 59. திருமகளைச் சரண்புகுதல60. ராதைப் பாட்டு 61. கலைமகளை வேண்டுதல் 62. வெள்ளைத் தாமரை 63. நவராத்திரிப் பாட்டு 64. மூன்று காதல


45. கண்ணனை வேண்டுதல்

வேத வானில் விளங்கி அறஞ்செய்மின்
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்
தீத கற்றுமின் என்று திசையெலாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே

உண்ணுஞ் சாதிக் குற்றமும் சாவுமே
நண்ணு றாவனம் நன்கு புரந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே.

எங்க ளாரிய பூமியெனும் பயிர்
மங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்க முற்ற துணைமுகி லேமலர்ச்
செங்க ணாயநின் பதமலர் சிந்திப்பாம்.

வீரர் தெய்வதம் கர்மவிளக்கு, நற்
பார தர்செய் தவத்தின் பயனெனும்
தார விர்ந்த தடம்புயப் பார்த்தனோர்
கார ணமெனக் கொண்டு கடவுள்நீ.

நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே
மன்னுபாரத மாண்குலம் யாவிற்கும்
உன்னுங் காலை உயர்துணை யாகவே
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம்.

ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்
உய்ய நின்மொழி பற்றி யொழுகியே,
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால்.

ஒப்பிலாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும், இப்புவி யாட்சியும்,
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால்.

மற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்ந்தருள்
கொற்றவா! நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம்.

நின்றன் மாமர பில்வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்,
இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.


46. வருவாய் கண்ணா

பல்லவி

வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா!
வருவாய், வருவாய், வருவாய்!

சரணங்கள்

உருவாய் அறிவில் ஒளிர்யாய் - கண்ணா!
உயிரின் னமுதாய்ப் பொழிவய் - கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய் - கண்ணா! (வருவாய்)

இணைவாய் எனதா வியிலே - கண்ணா!
இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)

எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா!
துணையே, அமரர் தொழுவா னவனே! (வருவாய்)


47. கண்ண பெருமானே

காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே - நீ

காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே - நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே - நீ
சேற்றிலே குழம்பலென்ன? கண்ண பெருமானே - நீ
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே - நீ

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே - நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
போற்றினாரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே நீ

வேறு
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
கண்ண பெருமானே! நின்
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே!


48. நந்த லாலா

ராகம் - யதுகுல காம்போதி தாளம் - ஆதி

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா!

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா!

கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா!


49. கண்ணன் பிறந்தான்

கண்ணன் பிறந்தான் - எங்கள்
கண்ணன் பிறந்தான் - இந்தக்
காற்றை யெட்டுத் திசையிலுங் கூறிடும்
திண்ண முடையான் - மணி
வண்ண முடையான் - உயிர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
புண்ணை யொழிப்பீர் - இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் - நன்கு
கண்ணை விழிப்பீர் - இனி
ஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு (கண்ணன்)

அக்கினி வந்தான் - அவன்
திக்கை வளைத்தான் - புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கங் கெடுத்தான் - சுரர்
ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,
மிக்க திரளாய் - சுரர்,
இக்கணந் தன்னில் - இங்கு
மேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் - உயிர்
கக்கி முடித்தார் - கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்)

சங்கரன் வந்தான், - இங்கு
மங்கல மென்றான் - நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்,
பங்க மொன் றில்லை - ஒளி
மங்குவதில்லை, - இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று,
கங்கையும் வந்தாள் - கலை
மங்கையும் வந்தாள், - இன்பக்
காளி பராசக்தி அன்புடனெய்தினள்,
செங்கம லத்தாள் - எழில்
பொங்கு முகத்தாள் - திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)


50. கண்ணன் திருவடி

கண்ணன் திருவடி, எண்ணுக மனமே
திண்ணம் அழியா, வண்ணந் தருமே

தருமே நிதியும், பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.

இங்கே யமரர் சங்கந் தோன்றும்
மங்கும் தீமை, பொங்கும் நலமே

நலமே நாடிற் புலவீர் பாடீர்,
நிலமா மகளின், தலைவன் புகழே.

புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே

தீர்ப்பான் இருளைப், பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர், பார்ப்பார் தவமே.

தவறா துணர்வீர், புவியீர் மாலும்
சிவனும் வானோர், எவரும் ஒன்றே.

ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி
என்றுந் திகழும், குன்றா வொளியே.


51 வேய்ங்குழல்

ராகம் - ஹிந்துஸ்தான் தோடி
தாளம் - ஏகதாளம்

எங்கிருந்து வருகு வதோ? - ஒலி
யாவர் செய்கு வதோ? - அடி தோழி!

குன்றி னின்றும் வருகுவதோ? - மரக்
கொம்பி னின்றும் வருகுவதோ? - வெளி
மன்றி னின்று வருகுவதோ? - என்றன்
மதி மருண்டிடச் செய்குதடி! - இ·து, (எங்கிருந்து)

அலையொ லித்திடும் தெய்வ - யமுனை
யாற்றினின்றும் ஒலிப்பதுவோ? - அன்றி
இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இ·தின்ன முதைப்போல்? (எங்கிருந்து)

காட்டி னின்றும் வருகுவதோ? - நிலாக்
காற்றைக் கொண்டு தருகுவதோ? - வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமி·தென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)

பறவை யேதுமொன் றுள்ளதுவோ? - இங்ஙன்
பாடுமோ அமுதக்கனற் பாட்டு?
மறைவினின்றுங் கின்னர ராதியர்
வாத்தியத்தினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து)

கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ!
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)


52. கண்ணம்மாவின் காதல்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)


53. கண்ணம்மாவின் நினைப்பு

பல்லவி

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

சரணங்கள்

பொன்னை யே நிகர்த்த மேனி மின்னையே, நிகர்த்த சாயற்
பின்னை யே! நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே)

மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ-கண்
பாரா யோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்னையே)

யாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மேவு மே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்னையே)


54. மனப்பீடம்

பல்லவி

பீடத்தி லேறிக் கொண்டாள் - மனப்
பீடத்தி லேறிக் கொண்டான்.

நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டுகூடக் கருதுமொளி
மாடத்தி லேறி ஞானக் கூடத்தில் விளையாடி
ஓடத்தி ரிந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற்றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமை செய்து
வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்கா தனத்தே
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
பெண்ணி லரசியிவள் பெரிய எழி லுடையாள்
கண்ணுள் மணியெனக்குக் காத லிரதியிவள்
பண்ணி லினிய சுவைபரந்த மொழியினாள்
உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)


55. கண்ணம்மாவின் எழில்

ராகம் - செஞ்சுருட்டி தாளம் - ரூபகம்

பல்லவி

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ,
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ,
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்.

சரணங்கள்

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்,
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்,
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறிகுழல், இவள் நாசி எட் பூ. (எங்கள்)

மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று,
மதுர வாய் அமிர்தம், இத ழமிர்தம்,
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை,
சாய வரம்பை, சதுர் அயிராணி. (எங்கள்)

இங்கித நாத நிலைய மிருசெவி
சங்கு நிகர்த்த கண்டம் அமுர்த சங்கம்,
மங்களக் கைகள் மஹா சக்தி வாசம்!
வயி றாலிலை, இடை அமிர்த வீடு. (எங்கள்)

சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்,
தாமரை யிருந்தாள் லக்ஷ்மீ பீடம்!
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம். (எங்கள்)


56. திருக்காதல்

திருவே! நினைக்காதல் கொண் டேனே - நினது திரு
உருவே மறவாதிருந் தேனே - பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே - நினக்கு மனம்
வாடித் தினங்களைத் தேனே - அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே - இடை நடுவில்
பையச் சதிகள்செய் தாயே - அதனிலுமென்
மையல் வளர்தல் கண்டாயே - அமுத மழை
பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே - பெருமை கொண்டு
வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே - அடியெனது
தேனே! என்திரு கண்ணே - எனையுகந்து
தானே! வருந் திருப் - பெண்ணே


57. திருவேட்கை

ராகம் - நாட்டை தாளம் - சதுஸ்ர ஏகம்

மலரின் மேவு திருவே! - உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்,
நிலவு செய்யும் முகமும் - காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன்.

கமல மேவும் திருவே! நின்மேல்
காத லாகி நின்றேன்.
குமரி நினை இங்கே - பெற்றோர்
கோடி யின்ப முற்றார்.
அமரர் போல வாழ்வேன் - என்மேல்
அன்பு கொள்வை யாயின்,
இமய வெற்பின் மோத - நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன்.

வாணி தன்னை என்றும் - நினது
வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ? - என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வையமெல்லாம் - நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்
பொறிக ளாவ ரன்றோ?

பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் - பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ - திருவே!
என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் - தழுவி
நிக ரிலாது வாழ்வேன்.

செல்வ மெட்டு மெய்தி - நின்னாற்
செம்மை யேரி வாழ்வேன்,
இல்லை என்ற கொடுமை - உலகில்
இல்லை யாக வைப்பேன்,
முல்லை போன்ற முறுவல் - காட்டி,
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்.


58 திருமகள் துதி

ராகம் - சக்ரவாகம் தாளம் - திஸ்ர ஏகம்

நித்தமுனை வேண்டி மனம்
நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப் போல் வாழ்வதிலே
பெருமை யுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்!
செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தம நிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேத முரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே! திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய், திருவே!

உன்னையன்றி இன்ப முண்டோ
உலக மிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே, திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வண்ண முடைய தாமரைப் பூ
மணிக்குள முள்ள சோலைகளும்;
அன்னம் நறுநெய் பாலும்
அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன், திருவே!

ஆடுகளும் மாடுகளும்
அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
விரைவினிலே தருவாய்
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண்டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ?
நாடுமணிச் செல்வ மெல்லாம்
நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
பெருங்களியே, திருவே!



59. திருமகளைச் சரண்புகுதல்

மாதவன் சக்தியினைச் - செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்!
போதுமிவ் வறுமையெலாம் - எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும் - உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை - அன்னை
மாமக ளடியிணை சரண்புகுவோம்.

கீழ்களின் அவமதிப்பும் - தொழில்
கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல் - செய்யும்
முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர் - பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கஇக்கொடு நோய்தான் - வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?

பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்!
வேற்கரு விழியுடையாள் - செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.

நாரணன் மார்பினிலே - அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும் - பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும் - உடல்
வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.

பொன்னிலும் மணிகளிலும் - நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் - மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

மண்ணினுட் கனிகளிலும் - மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
புண்ணிய வேள்வியிலும் - உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை - எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.

வெற்றிகொள் படையினிலும் - பல
விநயங்கள் அறிந்தவர் கடையிலும்,
நற்றவ நடையினிலும் - நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
கருணை நல்லொளி பெறக் கலிதவிர்ப்போம்.


60. ராதைப் பாட்டு

ராகம் - கமாஸ் தாளம் - ஆதி

பல்லவி

தேகி முதம் தேகி ஸ்ரீராதே, ராதே!

சரணங்கள்

ராக ஸமுத்ரஜாம்ருதே ராதே, ராதே!
ராஜ்ஸ்ரீ மண்டல ரத்ந, ராதே, ராதே!
போக ரதி கோடி துல்யே ராதே, ராதே! ஜயஜய (தேகி)

பூதேவி தப; பல ராதே, ராதே!
வேத மஹா மந்த்ர ரஸ ராதே, ராதே!
வேத வித்தியா விலாஸினி ஸ்ரீ ராதே, ராதே!
ஆதிபரா சக்தி ரூப ராதே, ராதே!
அத் யத்புத ச்ருங்காரமய ராதே, ராதே! (தேகி)

தமிழ்க்கண்ணிகள்

காதலெனுந் தீவினிலே, ராதே ராதே! அன்று
கண்டெடுத்த பெண்மணியே! ராதே, ராதே! (தேகி)

காதலெனுஞ் சோலையிலே ராதே ராதே! நின்ற
கற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே! (தேகி)

மாதரசே! செல்வப் பெண்ணே, ராதே, ராதே! - உயர்
வானவர்க ளின்ப வாழ்வே ராதே, ராதே! (தேகி)


61. கலைமகளை வேண்டுதல்

நொண்டிச் சிந்து

எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது
இன்னுயிரே! என்றன் இசையமுதே!
திங்களைக் கண்டவுடன் - கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்,
கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு
காலையில் இரவியைத் தொழுதவுடன்,
பொங்கு வீர் அமிழ்தெனவே - அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.

மாதமொர் நான்காநீர் - அன்பு
வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்;
பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன்
பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொ டெப்பொழுதும் என்றன்
நாவினிலே பொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர் - அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!

கண்மணி போன்றவரே! இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் - சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்,
வண்மையில் ஓதிடுவீர் - என்றன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! - இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

தானெனும் பேய்கெடவே - பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே - நல
வாய்மையி லேமதி நிலைத்திடவே
தேனெனப் பொழிந்திடுவீர்! - அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! - நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!

தீயினை நிறுத்திடுவீர் - நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே - உம்மை
மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் - பொறை
சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; - இனி
மறக்கிலேன், எனை மறக்ககிலீர்!


62. வெள்ளைத் தாமரை

ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி ய·திங் கெளிதென்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளி பெறு நாடு;
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழத் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்,
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்,
மான மற்று விலங்குக ளப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்)

நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்)


63. நவராத்திரிப் பாட்டு

(மாதா பராசக்தி)

பராசக்தி

(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே !
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

வாணி

வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

பார்வதி

மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.


64. மூன்று காதல்

முதலாவது சரஸ்வதி காதல்

ராகம் - ஸரஸ்வதி மனோஹரி தாளம் - திஸ்ர ஏகம்

பிள்ளைப் பிராயத்திலே - அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே - மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் - அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதம் - கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத் தேன் - அம்மா!

ஆடிவரு கையிலே - அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில்
ஏடு தரித்திருப்பாள் - அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால் - பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், "இன்று
கூடிமகிழ்வ" மென்றால் - விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள், அம்மா!

ஆற்றங் கரைதனிலே - தனி
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை
ஏற்று மனமகிழ்ந்தே - "அடி
என்னோ டிணங்கி மணம்புரி வாய்" என்று
போற்றிய போதினிலே - இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாள், அம்மா!

சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் - பகற்
பேச்சும் &