|
Maha Kavi Subramaniya Bharathy -Thothirap Padalkal
2
சி. சுப்ரமணிய பாரதியார் - தோத்திரப் பாடல்கள்
2
[eText input: Govardhanan proof/read
version (proof-read Kalyanasundaram) © Project Madurai 1999 Project
Madurai is an open, voluntary, worldwide initiative devoted to
preparation of electronic texts of Tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website
http://www.projectmadurai.org You are welcome to
freely distribute this file, provided this header page is kept
intact.To view the Tamil text
correctly you need to set up the following: i). You need to have
Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS,
TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or
Windows XP). and ii) Use a browser that is capable of handling
UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode
Tamil font chosen as the default font for the UTF-8
char-set/encoding view. The Latha font may be downloaded from
here]
2. முருகன்
பாட்டு 3.
வேலன் பாட்டு 4. கிளி விடு
தூது 5. முருகன் பாட்டு
6. எமக்கு வேலை 7.
வள்ளிப்பாட்டு - 1 8.
வள்ளிப் பாட்டு - 2 9.
இறைவா! இறைவா! 10.
போற்றி 11.
சிவசக்தி 12.
காணி நிலம் வேண்டும் 13.
நல்லதோர் வீணை 14.
மஹாசக்திக்கு விண்ணப்பம்
15. அன்னையை வேண்டுதல்
16. பூலோக குமாரி 17.
மஹா சக்தி வெண்பா 18.
ஓம் சக்தி 19.
பராசக்தி 20.
சக்திக் கூத்து 21.
சக்தி
2. முருகன் பாட்டு
ராகம் -நாட்டைக் குறிஞ்சி தாளம் - ஆதி
பல்லவி
முருகா! முருகா! முருகா!
சரணங்கள்
வருவாய் மயில் மீதினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
அடியார் பலரிங் குளரே,
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
சுருதிப் பொருளே, வருக!
துணிவே, கனலே, வருக!
சுருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம்! சரணம்!
குமரா பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே சரணம்! (முருகா)
அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்! (முருகா)
குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)
3. வேலன் பாட்டு
ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்
வில்லினை யொத்த புருவம் வளர்த்தனை
வேலவா! - அங்கோ
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன் - சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக்
கரந்தொட்ட வேலவா!
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை - உடல்வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
செல்வத்தை - என்றும்கேடற்ற வாழ்வினை, இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்
மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா!
ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
மாகுதே, - கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும் © இங்கு
நீங்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித் தண்டங் குலுஙக
நகைத்திடுஞ் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கன
லே, வடி வேலவா!
4. கிளி விடு தூது
பல்லவி
சொல்ல வல்லாயோ? - கிளியே!
சொல்ல நீ வல்லாயோ?
அனுபல்லவி
வல்ல வேல்முரு கன்தனை -இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
சரணங்கள்
தில்லை யம்பலத்தே - நடனம்
செய்யும் அமரர்பிரான் -அவன்
செல்வத் திருமகனை - இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
அல்லிக் குளத்தருகே - ஒருநாள்
அந்திப் பொழுதினிலே - அங்கோர்
முல்லைச் செடியதன்பாற் -செய்தவினை
முற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று (சொல்ல)
பாலை வனத்திடையே - தனைக் கைப்
பற்றி நடக்கையிலே - தன் கை
வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)
5. முருகன் பாட்டு
வீரத் திருவிழிப் பார்வையும் - வெற்றி
வேலும் மயிலும்என் முன்னின்றே - எந்த
நேரத் திலும்என்னைக் காக்குமே- அனை
நீலி பராசக்தி தண்ணருட் - கரை
ஓரத்திலே புணை கூடுதே! - கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே- மலை
வாரத் திலேவிளை யாடுவான் -என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்.
வேடர் கனியை விரும்பியே- தவ
வேடம் புனைந்து திரிகுவான்- தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே -முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்- சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட - இருட்
பார மலைகளைச் சீறுவான்-மறை
யேடு தரித்த முதல்வனும் - குரு
வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.
தேவர் மகளை மணந்திடத் -தெற்குத்
தீவில சுரனை மாய்த்திட்டான், - மக்கள்
யாவருக் குந்தலை யாயினான், - மறை
அர்த்த முணர்ந்துநல் வாயினன், - தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான், - இந்தப்
பாரில் அறமழை பெய்குவான், -நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான், - நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.
தீவளர்த் தேபழ வேதியர் - நின்றன்
சேவகத் தின்புகழ் காட்டினார், - ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார், - நின்றன்
மேன்மையி னாலறம் நாட்டினார், - ஜய!
நீவள ருங்குரு வெற்பிலே - வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம் - வரம்
ஈவள் பராசக்தி யன்னை தான் - உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)
6. எமக்கு வேலை
தோகைமேல் உலவுங் கந்தன்
சுடர்க்கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவது எமக்கு வேலை.
7. வள்ளிப்பாட்டு - 1
பல்லவி
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ, சிறு கள்ளி!
சரணங்கள்
(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயுனைக் கூடி -நின்றன்
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி - குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
யோரத்திலே அன்பு சூடி - நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்
பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)
வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரிந்து மொழிவது கண்டாய் - ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பிணி லேயொன்று பட்டு - நின்றன்
பிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம்
பின்ன மறச் செல்லவிட்டு - அடி
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! . நினைச்
சேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்)
வட்டங்க ளிட்டுங் குளமக லாத
மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல - நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின்
மேனி தனைவிட லின்றி - அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
இரவியைப் போன்ற முகத்தாய்! - முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்த நேரமும்)
8. வள்ளிப் பாட்டு - 2
ராகம் -கரஹரப்ரியை தாளம்-ஆதி
பல்லவி
உனையே மயல் கொண்டேன் -வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்! (உனையே)
சரணம்
எனை யாள்வாய், வள்ளீ! வள்ளீ
இளமயி லே! என் இதயமலர் வாழ்வே!
கனியே! சுவையுறு தேனே
கலவியி லேஅமு தனையாய், - (கலவியிலே)
தனியே, ஞான விழியாய்! - நிலவினில்
நினமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயா கிடவே வந்தேன். (உனையே)
9. இறைவா! இறைவா!
பல்லவி
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ - எத்தனை)
சரணங்கள்
சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)
முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள
பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)
10. போற்றி
அகவல்
போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய்!
கனியிலே சுவையும், காற்றிலே இயக்கமும்
கலந்தாற் போலநீ, அனைத்திலும் கலந்தாய்,
உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி!
அன்னை போற்றி! அமுதமே போற்றி!
புதியதிற் புதுமையாய், முதியதில் முதுமையாய்
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,
உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே
நானெனும் பொருளாய் நானையே பெருக்கித்
தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,
கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்,
பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,
யானென தின்றி யிருக்குநல் யோகியர்
ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய்,
செய்கையாய் ஊக்கமாய், சித்தமாய் அறிவாய்
நின்றிடும் தாயே, நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி!
சக்தி, போற்றி! தாயே, போற்றி!
முக்தி, போற்றி! மோனமே, போற்றி!
சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி!
11. சிவசக்தி
இயற்கை யென்றுரைப்பார் - சிலர்
இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார்,
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர்,
வியப்புறு தாய்நினக்கே - இங்கு
வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும்
நயப்படு மதுவுண்டே? - சிவ
நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்.
அன்புறு சோதியென்பார் - சிலர்
ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார்,
இன்பமென் றுரைத்திடுவார் - சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்,
புன்பலி கொண்டுவந்தோம் - அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி - எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.
உண்மையில் அமுதாவாய் - புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்,
வண்மைகொள் உயிர்ச்சுடராய் - இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்,
ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்
அண்மையில் என்றும் நின்றே - எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்.
தெளிவுறும் அறிவினை நாம் - கொண்டு
சேர்த்தனம், நினக்கது சோமரசம்,
ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்,
களியுறக் குடித்திடுவாய் - நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்,
குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.
அச்சமும் துயரும் என்றே - இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்,
துச்சமிங் கிவர்படைகள் - பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்,
இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு
பெருநகர் உடலெனும் பெயரினதாம்.
கோடிமண் டபந்திகழும் - திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைந்தும்
நாடிநின் றிடர்புரிவார் - உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்,
சாடுபல் குண்டுகளால் - ஒளி
சார்மதிக் கூட்டங்கள் தகர்த்திடுவார்
பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள்
பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்.
நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே,
பொன்னவிர் கோயில்களும் - எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்,
அன்னநல் லணிவயல்கள் - எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே - அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம்.
எம்முயி ராசைகளும் - எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்
செம்மையுற் றிடஅருள்வாய் - நின்றன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்.
மும்மையின் உடைமைகளும் - திரு
முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்,
அம்மைநற் சிவசக்தி - எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்.
12. காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
13. நல்லதோர் வீணை
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
14. மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு,
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு,
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
ஊனைச் சிதைத்துவிடு,
ஏகத் திருந்துலகம் - இங்குள்ள
யாவையும் செய்பவளே!
பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு,
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு,
இந்தப் பதர்களையே - நெல்லா மென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே!
உள்ளம் குளிராதோ? பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? - அம்மா! பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே - அனைத்திலும்
மேவி யிருப்பவளே!
15. அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்,
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல்லறிவு வேண்டும்,
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போலே,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திட வேண்டும் அன்னாய்!
16. பூலோக குமாரி
பல்லவி
பூலோக குமாரி ஹே அம்ருத நாரி!
அனுபல்லவி
ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே
கால பய குடாரி காம வாரி, கன லதா ரூப கர்வ திமிராரே.
சரணம்
பாலே ரஸ ஜாலே, பகவதி ப்ரஸீத காலே,
நீல ரத்ன மய நேக்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே
லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ, நிரந்தரே நிகில, லோகேசாநி
நிருபம ஸ¤ந்தரி நித்யகல்யாணி, நிஜம் மாம் குருஹே மன்மத ராணி.
17. மஹா சக்தி வெண்பா
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி - அன்னை
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்.
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை, - தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
வையகத்துக் கில்லை! மனமே! நினைக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன் - பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர்.
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணியதோர்
சக்தியே நம்மை சமைத்ததுகாண், நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு.
18. ஓம் சக்தி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம்,
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.
நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்,
அல்லது நீங்கும் என்றே யுலகேழும்
அறைந்திடுவாய் முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு
சொல்லு மவர் தமையே!
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.
நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பி விட்டோம்
கும்பிட்டெந் நேரமும் சக்தி யென் றாலுனைக்
கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.
பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்,
அன்னை பராசக்தி என்றுரைத் தோம், தளை
அத்தனையுங் களைந்தோம்,
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை, காண்,
இன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்,
எள்ளத் தனைபொழுதும் பயனின்றி
இரா தென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்!
19. பராசக்தி
கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்,
காவி யம்பல நீண்டன கட்டென்பார்,
விதவி தப்படு மக்களின் சித்திரம்
மேவி நாடகச் செய்யுளை வேவென்பார்,
இதயமோ எனிற் காலையும் மாலையும்
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,
எதையும் வேண்டில தன்னை பராசக்தி
இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே.
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப் பாடன் றொரு தெய்வங் கூறுமே,
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே யறங் காட்டெனு மோர்தெய்வம்,
பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே.
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானி லத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்
பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்Y
முட்டும் அன்புக் கனலொடு வாணியை
முன்னு கின்ற பொழிதி லெலாங்குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.
மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்
வானி ருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழைய லாம்இடையின் றிஇவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
"மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்!
வாழ்க தாய்!" என்று பாடுமென் வாணியே.
சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்,
அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்,
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்
கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
பூத லத்தில் பராசக்தி தோன்றுமே!
20. சக்திக் கூத்து
ராகம் - பியாக்
பல்லவி
தகத் தகத் தகத் தகதகவென் றோடோமோ? - சிவ
சக்தி சக்தி சக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)
சரணங்கள்
அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள் - அவள்
அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)
புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே - அது
குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே. (தகத்)
மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர - உன்
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினிலுள்ளே மனிதரெல்லாம் நன்றுநன்றென -நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டு மொன்றொன (தகத்)
21. சக்தி
துன்ப மங்லாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி,
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி,
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி,
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
தெயவத்தை எண்ணும் நினைவே சக்தி,
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
பாட்டினில் வந்த களியே சக்தி,
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
மாநிலங் காக்கும் மதியே சக்தி,
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை யளக்கும் விரிவே சக்தி,
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.
continued
|