|

Literary Works of Bharathidaasan
( Kanakasubbaratnam, 1891-1964)
புரட்சி கவிஞர் பாரதிதாசன்
(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்
mutaRl tokuti - 75 kavitaikaL
- 1.kaviyam
புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி
-
75 கவிதைகள்
காவியம்
உள்ளுறை
எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா! -
அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா
- ஒரு கங்குகளில் ஏழு முகிலினமும் - வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? -
எனில் மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள் மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை காண நினைத்த முழுநினைப்பில் -
அன்னை தோளசைத்தங்கு நடம் புரிவாள் - அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான் -
ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த வையமுழுவதும் துண்டு செய்வேன் -
என நீள இடையின்றி நீநினைத்தால் - அம்மை நேர்படுவாள் உன்றன்
தோளினிலே!

1. காவியம்
1.1 சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம்
மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற் காற்றுக்
குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க
உண்டு; பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே னீக்கள் இருந்தபடி
இன்னிசைபா டிக்களிக்கும்; வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு; காட்டு
மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு. நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த
இடத்தைத்தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார்.
சஞ்சீவி
பர்வதத்தின் சாரலிலே ஓர்நாளில் கொஞ்சம் குறையமணி நான்காகும்
மாலையிலே குப்பன்எனும் வேடக் குமரன் தனியிருந்து செப்புச் சிலைபோலே
தென்திசையைப் பார்த்தபடி ஆடா தசையாமல் வாடிநின்றான். சற்றுப்பின், வாடாத
பூமுடித்த வஞ்சிவரக் கண்டான். வரக்கண்ட தும்குப்பன் வாரி
அணைக்கச் சுரக்கின்ற காதலொடு சென்றான். புதொடாதீர்கள்!மு என்றுசொன்னாள்
வஞ்சி. இளையான் திடுக்கிட்டான்.
குன்றுபோல் நின்றபடி குப்பன்
உரைக்கின்றான்: "கண்ணுக்குள் பாவையே! கட்டமுதை நான்பசியோ டுண்ணப்போம்
போதுநீ ஓர்தட்டுத் தட்டிவிட்டாய்! தாழச் சுடுவெய்யில் தாளாமல்
நான்குளிர்ந்த நீழலைத்தா வும்போது நில்என்று நீதடுத்தாய்! தொட்டறிந்த
கையைத் தொடாதேஎன் றாய்! நேற்றுப் பட்டறிந்த தேகசுகம் விட்டிருக்கக்
கூடுவதோ? உன்னோடு பேச ஒருவாரம் காத்திருந்தேன் என்னோடு முந்தாநாள் பேச
இணங்கினாய்! நேற்றுத்தான் இன்பக் கரைகாட்டினாய்! இன்று சேற்றிலே
தள்ளிவிட்டாய்! காரணமும் செப்பவில்லை"
என்றுரைக்கக் கேட்ட இளவஞ்சி,
"காதலரே! அன்றுநீர் சொன்னபடி அவ்விரண்டு மூலிகையைச் சஞ்சீவி பர்வதத்தில்
தையலெனைக் கூட்டிப்போய்க் கொஞ்சம் பறித்துக் கொடுத்தால்
உயிர்வாழ்வேன். இல்லையென்றால் ஆவிஇரா" தென்றாள். வேட்டுவன்: "கல்லில்
நடந்தால்உன் கால்கடுக்கும்" என்றுரைத்தான். "கால்இரண்டும் நோவதற்குக்
காரணமில்லை. நெஞ்சம், மூலிகை இரண்டின்மேல் மொய்த்திருப்ப தால்"
என்றாள். "பாழ்விலங்கால் அந்தோ! படுமோசம் நேரும்" என்றான் "வாழ்வில்எங்கும்
உள்ளதுதான் வாருங்கள்" என்றுரைத்தாள். "அவ்விரண்டு மூலிகையின் அந்தரங்கம்
அத்தனையும் இவ்விடத்திற் கேட்டுக்கொள்" என்றுரைப்பான்
குப்பன்: "ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது நன்றாகக் கேட்கும்;மற்
றொன்றைவா யில்போட்டால் மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி கண்ணுக்
கெதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன்; ஆதலால் மூலிகையின் ஆசை
தணிருஎன்றான். மோதிடுதே கேட்டபின்பு மூலிகையில் ஆசை" என்றாள். "என்னடி!
பெண்ணேநான் எவ்வளவு சொன்னாலும் சொன்னபடி கேட்காமல் தோஷம்
விளைக்கின்றாய். பெண்ணுக் கிதுதகுமோ? வண்ணமலர்ச் சோலையிலே, எண்ணம்வே றாகி
இருக்கின்றேன் நான்" என்று கண்ணைஅவள் கண்ணிலிட்டுக் கையேந்தி
நின்றிட்டான்.
"பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என்
கின்றீரோ? மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை? பெண்ணடிமை
தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல்
முயற்கொம்பே. ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும் ஆமை நிலைமைதான்
ஆடவர்க்கும் உண்டு புலன் அற்றபேதையாய்ப் பெண்ணைச்செய் தால்அந் நிலம்விளைந்த
பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே. சித்ரநிகர்ப் பெண்டிர்களைச் சீரழிக்கும்
பாரதநற் புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது? சற்றுந் தயங்கேன்
தனியாய்ச்சஞ் சீவிமலை உற்றேறி மூலிகையின் உண்மை அறிந்திடுவேன். மூலிகையைத்
தேட முடியாவிட் டால்மலையின் மேலிருந்து கீழே விழுந்திறக்க
நானறிவேன். ஊரிலுள்ள பெண்களெல்லாம் உள்ளத்தைப் பூர்த்திசெயும் சீரியர்க்கு
மாலையிட்டுச் சீரடைந்து வாழ்கின்றார். தோகை மயிலே! இதைநீகேள்
சொல்லுகின்றேன். நாகம்போல் சீறுகின்ற நாதரிடம் சொல்லிவிடு. பச்சிலைக்குச்
சஞ்சீவி பர்வதம்செல் வேன்" என்றாள்.
"அச்சுப் பதுமையே! ஆரணங்கே!
நில்லேடி! நானும் வருகின்றேன் நாயகியே! நாயகியே! ஏனிந்தக் கோபம்? எழிலான
காதலியே!' என்றுகுப்பன் ஓடி இளவஞ்சி யைத்தழுவி நின்றான். இளவஞ்சி நின்று
மகிழ்வுற்றாள். "அவ்விரண்டு மூலிகையில் ஆரணங்கே நீஆசை இவ்வளவு
கொண்டிருத்தல் இப்போது தான்அறிந்தேன் கூட்டிப்போய்ப் பச்சிலையைக் கொய்து
தருகின்றேன்; நீட்டாண்மைக் காரி! எனக்கென்ன நீதருவாய்?" என்று மொழிந்தான்
எழுங்காத லால்குப்பன். "முன்னே இலைகொடுத்தால் முத்தம் பிற"
கென்றாள். "என்கிளியே நீமுத்தம் எத்தனைஈ வாய்?" என்றான். "என்றன் கரத்தால்
இறுக உமைத்தழுவி நோகாமல் முத்தங்கள் நூறுகொடுப் பேன்" என்றாள். "ஆசையால்
ஓர்முத்தம் அச்சாரம் போ" டென்றான்.
"கேலிக்கு நேரம் இதுவல்ல.
கேளுங்கள் மூலிகைக்குப் பக்கத்தில் முத்தம் கிடைக்கும்" என்றாள். குப்பன்
தவித்திட்டான், காதற் கொடுமையினால். எப்போது நாம்உச்சிக் கேறித்
தொலைப்பதென அண்ணாந்து பார்த்திட்டான் அம்மலையின் உச்சிதனை! கண்ணாட்டி
தன்னையும்ஓர் கண்ணாற் கவனித்தான். வஞ்சிஅப் போது மணாளன்
மலைப்பதனைக் கொஞ்சம் அவமதித்திக் கோவை உதடு திறந்தாள். திறந்து
சிரிக்குமுன், குப்பன் பறந்தான் பருவதமேல் பாங்கியையும் தூக்கியே. கிட்டரிய
காதற் கிழத்தி இடும்வேலை விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ! கண்ணின்
கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும்
ஓர்கடுகாம். மாமலைதான் சென்னி வளைந்து கொடுத்ததுவோ? நாம்மலைக்கக் குப்பன்
விரைவாய் நடந்தானோ? மங்கையினைக் கீழிறக்கி, "மாதே! இவைகளே அங்குரைத்த
மூலிகைகள்; அட்டியின்றிக் கிள்ளிக்கொள்" என்றுரைத்தான் குப்பன். இளவஞ்சி
தான்மகிழ்ந்து சென்று பறித்தாள். திரும்பிச் சிறிதுவழி வந்தார்கள். அங்கோர்
மரத்து நிழலிலே சிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள்.
மூலிகையில்
ஓர்இனத்தை முன்னே இருவருமாய் ஞாலத்துப் பேச்சறிய நாக்கிலிட்டுத்
தின்றார்கள். வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின் "நெஞ்சம்
வசமாக" நேரில்அவர் பேசுதல்போல் செந்தமிழில் தங்கள் செவியிற்கேட்
கப்பெற்றார். அந்த மொழிகள் அடியில் வருமாறு:
"இத்தாலி தேசம் இருந்து
நீஇங்கு வந்தாய். பத்துத் தினமாகப் பாங்காய் உணவுண்ண இவ்விடுதி தன்னில்
இருந்து வருகின்றாய்! "எவ்வாறு நான் சகிப்பேன் இந்தக் கறுப்பன் எனக்கெதிரே
உட்கார்ந் திருப்பதனை" என்றாய்; தனக்கெனவே நல்உணவுச் சாலைஒன்
றுண்டாக்கி அங்கவன் சென்றால் அடுக்கும் எனஉரைத்தாய்; இத்தாலிச் சோதரனே!
என்னமதியுனக்கே? செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும் இவ்வுலக மக்களிலே
என்னபே தங்கண்டாய்? செவ்வைபெறும் அன்பில்லார் தீயபே தம்கொள்வார். எங்கள்
பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித் தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய
ஒப்பார்கள்; பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ!போ!போ! பேதம்கொண் டோ ர்க்குப்
பிராஞ்சில் இடமில்லை" என்ற மொழிகள் இவர்காதில் கேட்டவுடன் நன்று
பிராஞ்சியர்க்கு நாக்குளிர வாழ்த்துரைத்தார். பின்னர் அமெரிக்கன் பேசுவதைக்
கேட்டார்கள். அன்னவன் பேச்சும் அடியில் வருமாறு:
"நல்ல அமெரிக்கன்
நானிலத்தில் வாழ்கின்ற எல்லாரும் நன்றாய் இருக்க நினைத்திடுவான். பொல்லா
அமெரிக்கன் பொன்னடைந்து தான்மட்டும் செல்வனாய் வாழத் தினமும்
நினைத்திடுவான். நல்லவனாய் நானிருக்க நாளும் விரும்புகிறேன்." சொல்லும்
இதுகேட்ட தோகையும் குப்பனும் "கொத்தடிமை யாகிக் குறைவுபடும்
நாட்டுக்கு மெத்தத்துணை யாகியிவன் மேன்மை அடைக" என்றார். இங்கிலந்து தேசம்
இருந்தொருவன் பேசினான்; இங்கிருந்து கேட்டார் இருவரும்.
என்னவென்றால்:
"ஓ!என் சகோதரரே! ஒன்றுக்கும் அஞ்சாதீர்! நாவலந் தீவு
நமைவிட்டுப் போகாது. வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி
மக்கள்என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்; ஆகையால் எல்லாரும்
அங்கே தனித்தனிதான். ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே? பேதம் வளர்க்கப்
பெரும்பெரும்பு ராணங்கள்! சாதிச்சண் டைவளர்க்கத் தக்கஇதி காசங்கள்! கட்டிச்
சமுகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக் கொட்டி அளக்கும் குருக்கள்
கணக்கற்றோர். தேன்சுரக்கப் பேசிஇந்த தேசத்தைத் தின்னுதற்கு வான்சுரரை
விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார். இந்த உளைச்சேற்றை ஏறாத
ஆழத்தை எந்தவிதம் நீங்கிநம்மை எதிர்ப்பார்? இன்னமும் சிந்தனா சக்தி
சிறிதுமின்றி மக்களுக்குத் தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி ஊறும்
பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச் சாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக்
குன்றவைத்துப் பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக் கற்கள்
கடவுள்களாய்க் காணப் படும்அங்கே. இந்த நிலையிற் சுதந்திரப்
போரெங்கே? கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே? "தேகம்
அழிந்துவிடும்; சுற்றத்தார் செத்திடுவார்; போகங்கள் வேண்டாம்; பொருள்வேண்டாம்
மற்றுமிந்தப் பாழுலகம் பொய்யே பரமபதம்போ" என்னும் தாழ்வகற்ற எண்ணுங்கால்
சாக்குருவி வேதாந்தம். சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும், நீதிப் பிழைகள்
நியமப் பிழைகளும், மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே ஓடச்செய்தால்
நமையும் ஓடச்செய்வார் என்பேன்"
இந்தப் பிரசங்கம் இவ்விருவர்
கேட்டார்கள்; சொந்த நிலைக்குத் துயருற்றார். வஞ்சி சிலைபோல் இருந்தாள்;
திகைத்தாள்; பின்நாட்டின் நிலையறிய நேர்ந்தது பற்றி
மகிழ்ந்திட்டாள்! "பச்சிலையால் நல்ல பயன்விளையும்" என்று
சொன்னாள்! பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள். "இந்த இலையால்
இனிநன்மை கொள்க" என்று சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள்
பெருவாழ்த்து. "வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி சொல்லிஎனைத்
தூக்கிவந்து சூக்ஷுமத்தைக் காட்டிய,கண் ணாளர்தாம் வாழ்வடைக" என்றாள்;
அவனுடைய தோளை ஒருதரம் கண்ணாற் சுவைபார்த்தாள். அச்சமயம் குப்பன், அழகியதன்
தாய்நாட்டார் பச்சைப் பசுந்தமிழில் பேசுவதைக் கேட்டிருந்தான். குப்பனது
தோளில் குளிர்ந்தமலர் ஒன்றுவிழ இப்பக்கம் பார்த்தான்; வஞ்சி
இளங்கையால் தட்டிய தட்டென்று சந்தேகம் தீர்ந்தவனாய்க் "கட்டிக் கரும்பே!
கவனம் எனக்கு நமது தேசத்தில் நடக்கின்ற பேச்சில் அமைந்து கிடக்கு'
தென்றான். வஞ்சி அதுகேட்டே "அன்னியர்கள் பேசுவதில் அன்பைச்
செலுத்துங்கள்; கன்னத்தை மாத்திரம்என் கையிற் கொடுங்க" ளென்றாள். "அன்பும்
உனக்குத்தான்; ஆருயிரும் உன்னதுதான் இன்பக்கிளியே! எனக்களிப்பாய் முத்த"
மென்றான்.
கையோடு கைகலந்தார்; முத்தமிடப் போகையிலே ஐயையோ! ஐயையோ! என்ற
அவலமொழி காதிலே வீழ்ந்தது! முத்தம் கலைந்ததே! "ஈதென்ன விந்தை? எழில்வஞ்சி!
கேள்" என்றான். வஞ்சி கவனித்தாள். சத்தம் வரும்வழியாய் நெஞ்சைச்
செலுத்தினார் நேரிழையும் காதலனும்.
"ஓர்நொடியிற் சஞ்சீவி பர்வதத்தை
ஓடிப்போய் வேரோடு பேர்த்துவர வேண்டுமே ஐயாவே!" இப்பாழும் வாக்கை இருவரும்
கேட்டார்கள். குப்பன் மிகப்பயந்து கோதைமுகம் பார்த்திட்டான் வஞ்சி
யவள்நகைத்தே "இன்ப மணாளரே! சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப்
பெயர்க்கும் மனிதரும் இல்லை! மலையும் அசையா தினிஅந்தச் சத்தத்தில் எண்ணம்
செலுத்தாதீர்" என்றுரைத்தாள் வஞ்சி. இதுசொல்லித் தீருமுன்,
"நன்றாக
உங்களுக்கு ராமன் அருளுண்டு; வானம் வரைக்கும் வளரும் உடலுண்டே; ஏனிங்கு
நின்றீர்? எடுத்துவரு வீர்மலையை"
என்றஇச் சத்தம் இவர்செவியில்
வீழ்ந்தவுடன் குன்று பெயர்வது கொஞ்சமும்பொய் யல்லவென்று குப்பன்
நடுநடுங்கிக் கொஞ்சுமிள வஞ்சியிடம் "மங்கையே, ராமனருள் வாய்ந்தவனாம்;
வானமட்டும் அங்கம் வளர்வானாம்; அப்படிப் பட்டவனை இந்தச்சஞ் சீவிமலை தன்னை
யெடுத்துவர அந்த மனிதன்அங்கே ஆணை யிடுகின்றான். நாலடியில் இங்கு
நடந்துவந்து நாம்மலையின் மேலிருக்கும் போதே வெடுக்கென்று
தூக்கிடுவான். இங்கு வருமுன் இருவரும் கீழிறங்கி அங்குள்ள சாரல்
அடைந்திடுவோம் வாமுவென்றான்.
'ராமனெங்கே! ராமன் அருளெங்கே!
சஞ்சீவி மாமலையைத் தூக்குமொரு வல்லமைஎங்கே! இவற்றில் கொஞ்சமும் உண்மை
இருந்தால்நாம் கொத்தவரைப் பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்ப தரிதாகி அடிமையாய்
வாழோமே? ஆண்மைதான் இன்றி மிடிமையில் ஆழ்ந்து விழியோமே?" என்றந்த வஞ்சி
யுரைத்தாள்.பின் மற்றோர் பெருஞ்சத்தம், அஞ்சுகின்ற குப்பன் அதிரச்செய்
திட்டதே!
"அம்மலையை ஓர்நொடியில் தூக்கிவந் தையாவே உம்எதிரில்
வைக்கின்றேன் ஊஹுஹு உஹுஹு!"
குப்பன் பதைத்தான் குடல்அறுந்து
போனதுபோல். "எப்படித்தாம் நாம்பிழைப்போம்? ஏதும் அறிகிலேன் சஞ்சீவி
பர்வதத்தைத் தாவித் தரையோடு பஞ்சிருக்கும் மூட்டைபோல் பாவி
அவன்எவனோ தூக்குகின்றான்! வஞ்சி! சுகித்திருக்க எண்ணினையே! சாக்காடு
வந்ததடி! தக்கவிதம் முன்னமே நம்பென்று நான்சொன்ன வார்த்தையெல்லாம்
நம்பாமல் வம்பு புரிந்தாய்! மலையும் அதிர்ந்திடுதே! முத்தம் கொடுத்து
முழுநேர மும்தொலைத்தாய். செத்துமடி யும்போது முத்தம் ஒருகேடா? என்றனுயி
ருக்கே எமனாக வாய்த்தாயே! உன்றன் உயிரைத்தான் காப்பாற்றிக்
கொண்டாயா? தூக்கிவிட்டான்! தூக்கிவிட்டான்! தூக்கிப்போய்த் தூளாக ஆக்கிச்
சமுத்திரத்தில் அப்படியே போட்டிடுவான்! எவ்வாறு நாம்பிழைப்போம்? ஏடி,
இதைநீதான் செவ்வையாய் யோசித்துச் செப்பாயோ ஓர்மார்க்கம்?'
என்று
துடிதுடிக்கும் போதில், இளவஞ்சி நின்று நகைத்துத்தன் நேசனைக்கை
யால்அணத்தே "இப்புவிதான் உண்டாகி எவ்வளவு நாளிருக்கும்? அப்போது தொட்டிந்த
அந்திநே ரம்வரைக்கும் மாமலையைத் தூக்கும் மனிதன் இருந்ததில்லை. ஓமண வாளரே!
இன்னம் உரைக்கின்றேன், மன்னும் உலகம் மறைந்தொழியும் காலமட்டும் பின்னும்
மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை. அவ்வாறே ஓர்மனிதன் ஆகாயம்
பூமிமட்டும் எவ்வாறு நீண்டு வளருவான்? இல்லைஇல்லை! காதல் நிசம்இக்
கனிமுத்தம் மிக்கஉண்மை! மாதுதோள் உம்தோள் மருவுவது மெய்யாகும். நம்புங்கள்
மெய்யாய் நடக்கும்விஷ யங்களிவை. சம்பவித்த உண்மை அசம்பாவத்தால்
தாக்குறுமோ? வாழ்க்கை நதிக்கு,வீண் வார்த்தைமலை யும்தடையோ? வாழ்த்தாமல்
தூற்றுகின்றீர் வந்துநிற்கும் இன்பத்தை! பொய்யுரைப்பார் இந்தப் புவியைஒரு
சிற்றெறும்பு கையால் எடுத்ததென்பார் ஐயோஎன் றஞ்சுவதோ? முத்தத்தைக் கொள்க!
முழுப்பயத்தில் ஒப்படைத்த சித்தத்தை வாங்கிச் செலுத்துங்கள்
இன்பத்தில்." என்றுரைத்தாள் வஞ்சி. இதனாற் பயனில்லை; குன்று பெயர்ந்ததென்று
குப்பன் மனம்அழிந்தான்!
"இந்நேரம் போயிருப்பார்! இந்நேரம்
பேர்த்தெடுப்பார்! இந்நேரம் மேகத்தில் ஏறிப் பறந்திடுவார்! உஸ்என்று
கேட்குதுபார் ஓர்சத்தம் வானத்தில்! விஸ்வரூ பங்கொண்டு மேலேறிப்
பாய்கின்றார்!"
இம்மொழிகேட் டான்குப்பன்; "ஐயோ"
எனஉரைத்தான். அம்மட்டும் சொல்லத்தான் ஆயிற்றுக் குப்பனுக்கே. உண்மை
யறிந்தும் உரைக்கா திருக்கின்ற பெண்ணான வஞ்சிதான் பின்னும் சிரித்து "மனதை
விடாதீர் மணாளரே காதில் இனிவிழப் போவதையும் கேளுங்கள்"
என்றுரைத்தாள். வஞ்சியும் குப்பனும் சத்தம் வரும்வழியில் நெஞ்சையும்
காதையும் நேராக வைத்திருந்தார்:
"இப்படி யாகஅநுமார் எழும்பிப்
போய் அப்போது ஜாம்பவந்தன் ஆராய்ந்து சொன்னதுபோல் சஞ்சீவி பர்வதத்தைத்
தாவிப் பறந்துமே கொஞ்ச நேரத்தில் இலங்கையிலே கொண்டுவந்து வைத்தார். உடனே
மலைமருந்தின் சத்தியால் செத்த இராமனும் லக்ஷ்மணனும்
சேர்ந்தெழுந்தார்!"
உற்றிதனைக் கேட்டகுப்பன் "ஓஹோ மலையதுதான் சற்றும்
அசையாமல் தான்தூக்கிப் போனானே! லங்கையிலே வைத்தானே! லங்கையில்நாம்
தப்போமே!" என்றான். நடுக்கம் இதயத்தில் நீங்கவில்லை. "இன்னும் பொறுங்கள்"
எனஉரைத்தாள் வஞ்சி.
"பெரும்பாரச் சஞ்சீவி பர்வதத்தைப் பின்னர் இருந்த
இடத்தில் அநுமார், எடுத்தேகி வைத்துவிட்டு வந்தார் மறுநிமிஷம்
ஆகாமுன். செத்தார்க் குயிர்கொடுத்தார். தெண்டமும்
போட்டுநின்றார்!"
குப்பனிது கேட்டுக் குலுக்கென்று
தான்நகைத்தான். "அப்போதே நான்நினைத்தேன் ஆபத்திரா தென்று. நான்நினைத்த
வண்ணம் நடந்ததுதான் ஆச்சரியம். ஏனடி!வஞ்சி! இனியச்சம் இல்லை"
யென்றான்.
"ஆனாலும் இன்னும் அரைநிமிஷம் காத்திருங்கள்; நானும்
அதற்குள்ளே நாதரே, உம்மையொரு சந்தேகம் கேட்கின்றேன். தக்க
விடையளிப்பீர்! இந்த மலையில்நாம் ஏறிய பின்நடந்த ஆச்சரிய சம்பவந்தான் என்ன?
அதையுரைப்பீர்! பேச்சை வளர்த்தப் பிரியப் படவில்லை" என்றாள் இளவஞ்சி.
குப்பன் இசைக்கிறான்:
"என்னடி வஞ்சி! இதுவும் தெரியாதா? நாமிங்கு
வந்தோம். நமக்கோர் நலிவின்றி மாமலையை அவ்வநுமார் தூக்கி
வழிநடந்து லங்கையிலே வைத்தது! ராமன் எழுந்ததும், இங்கெடுத்து வந்தே
இருப்பிடத்தில் வைத்தது! கண்ணே! மலையைக் கடுகளவும் ஆடாமல் கண்ணாடிப்
பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல் தந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து
வைத்திட்ட அந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி!"
ஆச்சரிய சம்பவத்தைக்
குப்பன் அறிவித்தான். பேச்செடுத்தாள் வஞ்சி; பிறகும்
ஒருசத்தம்:
"இம்மட்டும் இன்று கதையை நிறுத்துகின்றேன்; செம்மையாய்
நாளைக்குச் செப்புகின்றேன் மற்றவற்றை. சத்தியரா மாயணத்திற் சத்தான
இப்பகுதி உத்தியாய்க் கேட்டோ ர் உரைத்தோர்எல் லாருமே இங்குள்ள போகங்கள்
எல்லாம் அனுபவிப்பர்; அங்குள்ள வைகுந்தம் அட்டியின்றிச் சேர்வார்கள்; ஜானகீ
காந்தஸ் மரணே! ஜயஜயராம்!"
"மானேஈ தென்னஎன்றான்" வையம்அறி
யாக்குப்பன்! "முன்புநான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே சொன்ன "ஐயையோ"
தொடங்கி இதுவரைக்கும் ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற ஏமாந்தார் காசுக்
கெசமானன் என்றுரைக்கும் பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே! ஆகியதும் இந்த
அரிய உழைப்புக்குப் பத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான். சித்தம்
மலைக்கச் சிறிதுமிதில் இல்லை" யென்று கையி லிருந்தஒரு காட்சிதரும்
மூலிகையை "ஐயா இதைவிழுங்கி அவ்விடத்திற் பாருங்கள்" என்றந்தக் குப்பனிடம்
ஈந்துதா னும்தின்றாள். தின்றதும் தங்கள் விழியால் தெருவொன்றில், மாளிகையி
னுள்ளே மனிதர் கூட்டத்தையும், ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே உட்கார்ந்
திருப்பதையும், ஊர்மக்கள் செல்வதையும், பட்டைநா மக்காரப் பாகவதன்
ரூபாயைத் தட்டிப்பார்க் கின்றதையும், சந்தோஷம் கொள்வதையும் கண்டார்கள்;
கண்டு கடகடவென் றேசிரித்தார். வண்டு விழியுடைய வஞ்சி
யுரைக்கின்றாள்:
"வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள், ஆனது
செய்யும் அநுமார்கள், சாம்பவந்தர், ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள்
உரைக்கட்டும். விஸ்வரூ பப்பெருமை, மேலேறும் வன்மைகள், உஸ்என்ற சத்தங்கள்,
அஸ்என்ற சத்தங்கள், எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும். செவ்வைக் கிருபை
செழுங்கருணை அஞ்சலிக்கை முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும்
உரைக்கட்டும். இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்? உள்ள பகுத்தறிவுக்
கொவ்வாத ஏடுகளால் எள்ளை அசைக்க இயலாது. மானிடர்கள் ஆக்குவதை ஆகா தழிக்குமோ?
போக்குவதைத் தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும். மக்கள் உழைப்பில்
மலையாத நம்பிக்கை எக்களிக்க வேண்டும் இதயத்தில்! ஈதன்றி நல்லறிவை நாளும்
உயர்த்தி உயர்த்தியே புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும். மக்கள்
உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ? எக்கா ரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ
? மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை நாடா திருப்பதற்கு நானுங்
களையின்று சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன். தற்செயலாய் அஞ்சும் நிலைமையே
அங்கே நிகழ்ந்ததுண்டாம். உங்கள் மனத்தில் உறைந்து கிடந்திட்ட பங்கஞ்செய்
மூடப் பழக்க வழக்கங்கள் இங்கினிமேல் நில்லா எனநான்
நினைக்கின்றேன். தங்கள்கை நீட்டித் தமியாளை முன்னரே சாரலிலே முத்தம்
தரக்கேட்டீர், சாயவில்லை. ஈர மலையிலே யான்தந்தேன். ஏற்கவில்லை. சத்தத்தை
எண்ணிச் சலித்தீர்.அச் சத்தத்தால் முத்தத்தை மாற்ற முடியாமற்
போனாலும் உம்மைப் பயங்காட்டி ஊளையிட்ட சத்தத்தால் செம்மைமுத்தம்
கொள்ளவில்லை. சேர்ந்துமுத்தம் கொள்வீரே!"
"ஏஏஏ நான்இன்றைக் கேளனத்துக்
காளானேன். நீயேன் இதையெல்லாம் நிச்சயமாய்ச் சொல்லவில்லை? ராமா யணமென்ற
நலிவு தருங்கதை பூமியிலி ருப்பதைஇப் போதே அறிகின்றேன். நம்பத் தகாதவெலாம்
நம்பவைத்துத் தாங்கள்நலம் சம்பா திக்கின்ற சரித்திரக் காரர்களால் நாடு
நலிகுவதை நான்இன்று கண்டுணர்ந்தேன். தோடு புனைந்த சுடர்க்கொடியே
நன்றுசொன்னாய்! நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கைநதி, வெல்லத்
தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை, செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத்
தோட்டங்கள், தின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள், இன்பம்
செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில் முப்பத்து முக்கோடி மாந்தர்கள்
மொய்த்தென்ன? செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன? மூடப் பழக்கம்,
முடிவற்ற கண்ணுறக்கம் ஓடுவ தென்றோ? உயர்வதென்றோ? நானறியேன். பாரடி
மேற்றிசையில் சூரியன் பாய்கின்றான். சார்ந்த ஒளிதான் தகத்தகா
யக்காட்சி! மாலைப் பொழுதும் வடிவழகு காட்டுதுபார்! சாலையிலோர் அன்னத்தைத்
தன்பேடு தேடுதுபார். என்னடி சொல்கின்றாய் ஏடி இளவஞ்சி? என்நெஞ்சை
உன்நெஞ்சம் ஆக்கிப்பார்" என்றுரைத்தான்.
தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும்
மலர்போலே கன்னி யுடல்சிலிர்க்கக் "காதலரே நாம்விரைவாய்ச் சாரல் அடைவோமே,
காதலுக்கு தக்கஇடம். சாரலும் தண்மாலை நாயகியைச் சாரக் குயில்கூவிக்
கொண்டிருக்கும்; கோல மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாச
முடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்கள் உண்டு;
கனிமரங்கள் மிக்கஉண்டு; பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும்
சென்றுதே னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும். அன்பு மிகுந்தே
அழகிருக்கும் நாயகரே இன்பமும் நாமும் இனி!"

1.2 புரட்சிக் கவி
(பில்கணீயம் என்ற வடமொழி
நூலைத் தழுவியது)
அகவல்
அரசன் அமைச்சர்பால் அறிவிக்
கின்றான்: "அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்! தமிழிலக் கியங்கள் தமிழிலக்
கணங்கள் அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்; ஆர்ந்த ஒழுக்கநூல்,
நீதிநூல் அறிந்தாள்; அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள் கவிதை புனையக்
கற்றா ளில்லை. மலரும், பாடும் வண்டும், தளிரும், மலையும், கடலும்,
வாவியும், ஓடையும், விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும், மேலோர்
மேன்மையும், மெலிந்தோர் மெலிவும் தமிழின் அமுதத் தன்மையும்,
நன்மையும், காலைஅம் பரிதியும், மாலை மதியமும் கண்ணையும் மனத்தையும் கவர்வன;
அதனால் என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப் புறத்தில் பிறர்க்குப்
புலப்படுத் துதற்குச் செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்! ஏற்றஓர் ஆசான்
எங்குளான்? தோற்றிய வாறு சொல்க அமைச்சரே!"
எண்சீர்
விருத்தம்
தலைமைஅமைச் சன்புகல்வான்: 'எனது மன்னா,
சகலகலை வல்லவன்;இவ் வுலகோர் போற்றும் புலவன்; உயர்கவிஞன்; அவன்பேர்
உதாரன்!
புதல்விக்குத் தக்கஉபாத் தியாயன் அன்னோன். இலையிந்த நாட்டினிலே அவனை
ஒப்பார்!
எனினும்,அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன். குலமகளை அன்னவன்பால் கற்க
விட்டால்
குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!
ஆனாலும் நானிதற்கோர்
மார்க்கம் சொல்வேன்;
அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது தேனிதழாள் தனைஅவனும், அவனைப்
பெண்ணும்
தெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க! பானல்விழி மங்கையிடம் "உதார
னுக்குப்
பார்வையில்லை குருட" னென்று சொல்லி வைக்க! ஞானமுறும் உதாரனிடம் "அமுத
வல்லி
நலிகுஷ்ட ரோகி" என எச்சரிக்க!"
தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்!
"ஆம்ஆம்
தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை; பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர்"
என்றான்.
பேச்சுவல்ல அமைச்சர்பலர் சென்ற ழைத்தார். தேர்வாய்ந்த புவிராஜன் போலே
யந்தச்
செந்தமிழ்த்தீங் கவிராஜன் உதாரன் வந்தான். பார்வேந்தன் நிகழ்த்தினான்;
உதாரன் கேட்டுப்
"பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம்" என்றான்.
சிந்து
கண்ணி
மன்னவன் ஆணைப்படி - கன்னி
மாடத்தைச் சேர்ந்தொரு பன்னரும் பூஞ்சோலை - நடுப்
பாங்கில்ஓர் பொன்மேடை! அன்னதோர் மேடையிலே - திரை
ஆர்ந்த மறைவினிலே மின்னொளி கேட்டிருப்பாள் - கவி
வேந்தன் உரைத்திடுவான்!
யாப்புமுறை உரைப்பான் - அணி
யாவும் உரைத்திடுவான்; பாப்புனை தற்கான - அநு
பவம்பல புகல்வான். தீர்ப்புற அன்னவளும் - ஆசு
சித்திரம் நன்மதுரம் சேர்ப்புறு வித்தாரம் - எனும்
தீங்கவிதை யனைத்தும்,
கற்றுவர லானாள்! - அது
கால பரியந்தம் சற்றும் அவன்முகத்தை - அவள்
சந்திக்கவில்லை! விழி அற்றவனைப் பார்த்தால் - ஓர்
அபசகுன மென்றே! உற்றதோர் நோயுடையாள் - என்
றுதாரனும் பார்த்தில்லை!
இவ்விதம் நாட்கள்பலப் - பல
ஏகிட ஓர்தினத்தில் வெவ்விழி வேலுடையாள் - அந்த
மேடையிற் காத்திருந்தாள். அவ்வம யந்தனிலே - விண்
அத்தனையும் ஒளியால் கவ்வி உயர்ந்ததுபார் - இருட்
காட்டை அழித்தநிலா!
எண்சீர் விருத்தம்
அமுதவல்லி காத்திருந்த
மேடை யண்டை
அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே, இமையாது நோக்கினான் முழு நிலாவை!
இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்! சுமைசுமையாய் உவப்பெடுக்க,
உணர்வு வெள்ளம்
தூண்டிவிட ஆஆஆ என்றான்; வாணி அமைத்திட்டாள் நற்கவிதை! மழைபோற்
பெய்தான்!
அத்தனையும் கேட்டிருந்தாள் அமுத வல்லி!
"நீலவான் ஆடைக்குள் உடல்
மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்! கோலமுழு தும்காட்டி விட்டால்
காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ! காலைவந்த செம்பரிதி கடலில்
மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!
அந்தியிரு ளாற்கருகும் உலகு
கண்டேன்;
அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்; பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த
துண்டோ ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்! சிந்தாமல் சிதறாமல் அழகை
யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றேஇயற்கை அன்னை
வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ!
உனைக்காணும் போதினிலே என்னு
ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ
தில்லை;
நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த
மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
உன்னைஎன திருவிழியாற் காணு
கின்றேன்;
ஒளிபெறுகின் றேன்;இருளை ஒதுக்கு கின்றேன்; இன்னலெலாம் தவிர்கின்றேன்;
களிகொள் கின்றேன்;
எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்! அன்புள்ளம் பூணுகின்றேன்;
அதுவு முற்றி
ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்! இன்பமெனும் பால்நுரையே! குளிர்
விளக்கே!
எனைஇழந்தேன், உன்னெழிலில் கலந்த தாலே!"
வேறு சிந்து
கண்ணி
இவ்வித மாக உதாரனும் - தன
தின்குர லால்வெண் ணிலாவையே திவ்விய வர்ணனை பாடவே - செவி
தேக்கிய கன்னங் கருங்குயில், "அவ்வறிஞன் கவி வல்லவன் - விழி
அற்றவ னாயின், நிலாவினை எவ்விதம் பார்த்தனன், பாடினன்? - இதில்
எத்துக்கள் உண்டெ"ன ஓடியே,
சாதுரியச் சொல் உதாரனை - அவன்
தாமரைக் கண்ணொடும் கண்டனள்! ஓதுமலைக் குலம் போலவே - அவன்
ஓங்கிய தோள்களைக் கண்டனள்! "ஏதிது போன்றஓ ராண்எழில் - குறை
இன்றித் திருந்திய சித்திரம்? சோதி நிலாவுக்கும் மாசுண்டாம் - இச்
சுந்தரனோ கறை ஒன்றிலான்!"
என்று வியப்புடன் நின்றனள்; - அந்த
ஏந்திழை தன்னெதிர் நின்றதைத் தன்னிக ரற்ற உதாரனும் - கண்டு
தன்னை மறந்தவ னாகியே "என்ன வியப்பிது? வானிலே - இருந்
திட்டதோர் மாமதி மங்கையாய் என்னெதிரே வந்து வாய்த்ததோ? - புவிக்
கேதிது போலொரு தண்ஒளி!
மின்னற் குலத்தில் விளைந்ததோ? - வான்
வில்லின் குலத்திற் பிறந்ததோ? கன்னற் றமிழ்க்கவி வாணரின் - உளக்
கற்பனையே உருப் பெற்றதோ? பொன்னின் உருக்கிற் பொழிந்ததோ? - ஒரு
பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?" என்று நினைத்த உதாரன்தான் - "நீ
யார்?"என்ற ஓர்உரை போக்கினான்.
"அமுதவல்லி யன்றோ!" என்றாள் -
"அந்த
அமைச்சனும் முடி வேந்தனும் நமைப் பிரித்திடும் எண்ணத்தால் - உனை
நாட்டம் இலாதவன் என்றனர்! சமுச யப்பட நீஇன்று - மதி
தரிசன மதைப் பாடினை! கமலங்கள் எனும் கண்ணுடன் - உனைக்
காணப் பெற்றதென் கண்" என்றாள்.
எண்சீர் விருத்தம்
"இன்னொன்று
கேளாயோ அமுத வல்லி!
என்னிடத்தில் உன்தந்தை "என்மகட்கு முன்னொன்று தீவினையால் பெருநோய்
வந்து
மூண்டதெருனச் சொல்லிவைத்தான்! அதனா லன்றோ மின்ஒன்று பெண்ணென்று புவியில்
வந்து
விளைந்ததுபோல் விளைந்தஉன தழகு மேனி இன்றுவரை நான்பார்க்க எண்ண
வில்லைமு
என்றுரைத்தான்; வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்:
புகாரிருளால்
சூரியன்தான் மறைவ துண்டோ ?
கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை
யாமோ?
பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ ? நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச்
சிறையிற் போட்டால்
நிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ? சீரழகே! தீந்தமிழே! உனைஎன்
கண்ணைத்
திரையிட்டு மறைத்தார்கள்!மு என்று சொன்னான்.
பஃறொடை
வெண்பா
"வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும் மோனத் திருக்கும்
முதிர்சோலை மெய்சிலிர்க்க ஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும் நானோக்கி
நோக்கி நலிதலினைக் காணாயோ? சித்தரித்த ஆணழகே, சென்றுபடர்
முல்லையினைக் கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும், சத்தமிட்ட வண்டு
தடாகத்தின் அல்லியினை முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல
முடிவும், உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்? தணலைத்தான் வீசுகின்றான்
சந்திரனும் என்மேல்! குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற் பிணமாக்கித்
தாங்கள் பிழைக்க நினைப்பாரோ?" என்றுதன் காதல் எரிதழலுக்
காற்றாமல் சென்றுதன் னெஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்! "நன்று மடமயிலே!
நான்பசியால் வாடுகின்றேன்; குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு
தென்னெதிரில்! உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும் வண்ணமுடிச் செல்வாக்கும்
வந்து மறிக்குதடி! எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான் உண்ணும்
மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல் நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்;
அன்னவற்றில் மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம் நீயன்றோ பெண்ணே!
நினைப்பை யகற்றிவிடு! நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு! வேல்விழியால்
என்றன் விலாப்புறத்தைக் கொத்தாதே! பால்போல் மொழியால் பதைக்கஉயிர்
வாங்காதே! கண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதே;
போபோ மறைந்துவிடு! காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன் சாதிஎனும்
சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ! பாளைச் சிரிப்பில்நான் இன்று
பதறிவிட்டால் நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்? கொஞ்சு
தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை அஞ்சுவ தஞ்சாமை பேதமையன்
றோஅணங்கே? ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக் காணிக்கை நீவைத்தால்
காப்பரசர் வாராரோ? பட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும்
உன்சிரிப்புக் கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ?" என்றழுதான்
விம்மி இளையான், கவியரசன். குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும்
நெஞ்சிளகும்! ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர் பாழான நெஞ்சும்
சிலசமயம் பார்த்திரங்கும்! சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறி
கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்? ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம்
ஏனிரங்கும்? அத்தருணம் அந்த அமுதவல்லி ஏதுசொல்வாள்: "வாளை உருவிவந்து
மன்னன் எனதுடலை நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும், காளைஉன் கைகள்எனைக்
காவாமல் போகட்டும், தாளை அடைந்தஇத் தையல்உள்ளம் மாறாதே! ஆதரவு காட்டாமல்
ஐய!எனை விடுத்தால் பாதரக்ஷை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி, வேறு கதியறியேன்;
வேந்தன் சதுர்வருணம் சீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும்
சீறிடுமோ? ஆரத்தழுவி அடுத்தவினா டிக்குள் உயிர் தீரவரும் எனிலும் தேன்போல்
வரவேற்பேன்! அன்றியும்என் காதல் அமுதே! நமதுள்ளம் ஒன்றுபட்ட பின்னர்
உயர்வென்ன தாழ்வென்ன? நாட்டின் இளவரசி நான்ஒருத்தி! ஆதலினால் கோட்டை
அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை! கோல்வேந்தன் என்காதற் கொற்றவனைக்
கொல்லவந்தால், சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்! சாதிஉயர்
வென்றும், தனத்தால் உயர்வென்றும், போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா
ளர்சமுகம் மெத்த இழிவென்றும், மிகுபெரும்பா லோரைஎல்லாம் கத்தி முனைகாட்டிக்
காலமெல்லாம் ஏய்த்துவரும் பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர் ஆவி
களையேனும் அர்ப்பணம்செய் வோம்! இதனை நெஞ்சார உன்மேலே நேரிழையாள்
கொண்டுள்ள மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு
விள்ளுகின்றேன்! இன்னும்என்ன?" என்றாள். உதாரன் விரைந்தோடி அன்னத்தைத்
தூக்கியே ஆரத் தழுவினான். இன்ப உலகில் இருவர்களும் நாள்
கழித்தார். பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம் மாறுபடக் கண்டு
மனம்பதறித் தோழியர்கள் வேறு வழியின்றி வேந்தனிடம் ஓடியே "மன்னவனே! உன்அருமை
மங்கை அமுதவல்லி தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ? காதல்எனும் இன்பக்
கடலில் குளித்துவிட்ட மாதிரியாய்த் தோன்றுகிறாள்; மற்றிதனை
மேன்மைச் சமுகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்" என்றார். அமைதி யுடைய அரசன்
அதன்உண்மை கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே அண்டியிருந் தான்இரவில்
ஆரும் அறியாமல்! வந்த உதாரன்எழில் மங்கைக்குக் கைலாகு தந்து, தமிழில்
தனிக்காதலைக் கலந்து பேசினதும், காத்திருந்த பெண்ணரசி
வேல்விழியை வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும் கண்டான் அரசன்!
கடுகடுத்தான்! ஆயிரந்தேள் மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து மாளிகைக்குச்
சென்றான். மறுநாள் விடியலிலே வாளில் விஷம்பூசி வைத்திருக்கச்
சொல்லிவிட்டுச் சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர ஏவினான். அவ்வா
றிழுத்துவந்தார் வேந்தனிடம். இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்; அச்சமயம்
எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார். ஆர்ந்த கவியின் அரசனுயிர்
இன்றோடு தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும். ஈடற்ற நற்கவிஞன்
இந்நிலைமை, அக்கன்னி மாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம். அங்கே
உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான், சிங்கா தனத்திலே சேர்ந்து:
"கொற்றவன்
பெற்ற குலக்கொடியைக் கவி
கற்க உன்பால் விடுத்தேன் - அட குற்றம் புரிந்தனையா இல்லையா இதை
மட்டும் உரைத்து விடு! வெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று
மேவிட ஆள்பவன் நான் - அட இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை
என்னென்று தானினைத்தாய்?
வாள்பிடித் தேபுவி ஆளுமிராசர் என்
தாள்பிடித் தேகிடப்பார்! - அட ஆள்பிடித் தால்பிடி ஒன்றிருப்பாய் என்ன
ஆணவமோ உனக்கு? மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை
வெல்லத் தகுந்தவனோ? - இல்லை மாள்வதற்கே இன்று மாள்வதற்கே!" என்று
மன்னன் உரைத்திடவே,
"மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
வார்க்கும் மழைநாடா! - குற்றம் ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே!
குற்றம்
அன்றெனில் அவ்விதமே! கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள்
கொள்ளை வனப்பினிலே - எனைக் காமனும் தள்ளிடக் காலிட றிற்றுக்
கவிழ்ந்தவண்ணம் வீழ்ந்தேன்!
பழகும் இருட்டினில் நானிருந்தேன்
எதிர்
பால்நில வாயிரம்போல் - அவள் அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்
அடியேன்செய்த தொன்றுமில்லை. பிழைபுரிந் தேனென்று தண்டனை போடுமுன்
பெற்று வளர்த்த உன்றன் இழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக் குள்ள
இன்னல் மறப்ப துண்டோ ?"
நொண்டிச் சிந்து
கவிஞன் இவ்வா
றுரைத்தான் - புவி
காப்பவன் இடியெனக் கனன் றுரைப்பான்: "குவிந்த உன் உடற்சதையைப் - பல
கூறிட்டு நரிதின்னக் கொடுத் திடுவேன். தவந்தனில் ஈன்ற என்பெண் - மனம்
தாங்குவ தில்லையெனிற் கவலை யில்லை! நவிலுமுன் பெரும் பிழைக்கே - தக்க
ராச தண்டனை யுண்டு! மாற்ற முண்டோ ?
அரசனின் புதல்வி அவள் - எனில்
அயலவ னிடம்மனம் அடைத லுண்டோ ? சரச நிலையி லிருந்தீர் - அந்தத்
தையலும் நீயும், அத் தருணமதில் இருவிழி யாற் பார்த்தேன்! - அறி
விலி, உனதொரு குடி அடியோடே விரைவில்என் ஆட்சி யிலே - ஒரு
வேர்இன்றிப் பெயர்த்திட விதித்து விட்டேன்!
கொலைஞர்கள் வருகரு என்றான்
- அவன்
கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார். "சிலையிடை இவனை வைத்தே - சிரச்
சேதம் புரிக" எனச் செப்பிடு முனம் மலையினைப் பிளந்திடும் ஓர் - சத்தம்
வந்தது! வந்தனள் அமுத வல்லி! "இலை உனக் கதிகாரம் - அந்த
எழிலுடையான் பிழை இழைக்க வில்லை.
ஒருவனும் ஒருத்தியு மாய் - மனம்
உவந்திடில் பிழையென உரைப்ப துண்டோ ? அரசென ஒரு சாதி - அதற்
கயலென வேறொரு சாதி யுண்டோ ? கரிசன நால் வருணம் - தனைக்
காத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான் தரும்படி அவனை இங்கே - நீ
தருவித்த வகையது சரிதா னோ?
என்மனம் காதல னைச் - சென்
றிழுத்தபின் னேஅவன் இணங்கின தால் அன்னவன் பிழையில னாம்! - அதற்
கணங்கெனைத் தண்டித்தல் முறை யெனினும், மன்ன!நின் ஒருமகள் நான் - எனை
வருத்திட உனக்கதி கார மில்லை! உன்குடிக் கூறிழைத் தான் - எனில்
ஊர்மக்கள் இடமதை உரைத்தல் கடன்!"
என்றபற் பல வார்த்தை - வான்
இடியென உரைத்துமின் னென நகைத்தே முன்னின்ற கொலைஞர் வசம் - நின்ற
முழுதுணர் கவிஞனைத் தன துயிரை மென்மலர்க் கரத்தாலே - சென்று
மீட்டனள் வெடுக்கெனத் தாட்டி கத்தால். மன்னவன் இரு விழியும் - பொறி
வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடு வான்:
கும்மி
"நாயை இழுத்துப்
புறம்விடுப்பீர் - கெட்ட
நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே! - இந்தப் பேயினை நான்பெற்ற பெண்ணெனவே
சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்! - என் தூய குடிக்கொரு தோஷத்தையே -
தந்த
துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை - தன்னில் போய்அடைப் பீர்!அந்தப் பொய்யனை
ஊரெதிர்
போட்டுக் கொலைசெய்யக் கூட்டிச் செல்வீர்!"
என்றுரைத் தான்.
இருசேவகர்கள் - அந்த
ஏந்திழை அண்டை நெருங்கி விட்டார்! - அயல் நின்ற கொலைஞர், உதாரனை யும்
"நட
நீ"என் றதட்டினர்! அச்சமயம் - அந்த மன்றி லிருந்தஓர் மந்திரிதான் -
முடி
மன்னனை நோக்கி யுரைத்திடுவான் - "நீதி அன்றிது மங்கைக் கிழைத்திருக்கும்
தண்டம்;
அன்னது நீக்கி யருள்க" என்றான்.
எண்சீர் விருத்தம்
"காதலனைக்
கொலைக்களத்துக் கனுப்பக் கண்டுங்
கன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட நீதிநன்று மந்திரியே! அவன்
இறந்தால்
நிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்! சாதல்எனில் இருவருமே சாதல்
வேண்டும்,
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்; ஓதுகஇவ் விரண்டி லொன்று
மன்னவன்வாய்!
உயிர்எமக்கு வெல்லமல்ல!" என்றாள் மங்கை.
"என்ஆணை மறுப்பீரோ சபையி
லுள்ளீர்!
இசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார் பின்நாணும் படிசும்மா இருப்ப துண்டோ
?
பிழைபுரிந்தால் சகியேன்நான்! உறுதி கண்டீர்! என்ஆணை! என்ஆணை! உதார
னோடே
எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக் கன்மீதி லேகிடத்திக் கொலைசெய்
வீர்கள்
கடிதுசெல்வீர்! கடிதுசெல்வீர்!" என்றான் மன்னன்.
அவையினிலே அசைவில்லை
பேச்சு மில்லை;
அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்! சுவையறிந்த பிறகுணவின்
சுகம்சொல் வார்போல்
தோகையவள் "என்காதல் துரையே கேளாய்! எவையும்நமைப் பிரிக்கவில்லை; இன்பம்
கண்டோ ம்;
இறப்பதிலும் ஒன்றானோம்! அநீதி செய்த நவையுடைய மன்னனுக்கு நாட்டு
மக்கள்
நற்பாடம் கற்பியா திருப்ப தில்லை.
இருந்திங்கே அநீதியிடை வாழ
வேண்டாம்
இறப்புலகில் இடையறா இன்பங் கொள்வோம்! பருந்தும், கண்மூடாத நரியும்
நாயும்,
பலிபீட வரிசைகளும் கொடுவாள் கட்டும் பொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேச்சை
மன்னன்
பொருந்தட்டும்; பொதுமக்கள் ரத்தச் சேற்றை அருந்தட்டும்!" என்றாள்.
காதலர்கள் சென்றார்!
அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக் கின்றேன்:
கொலைக்களத்தில் கொலைஞர்களும்
அதிகா ரங்கள்
கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்; அலைகடல்போல் நாட்டார்கள் வீடு
பூட்டி
அனைவருமே வந்திருந்தார். உதார னுக்கும் சிலைக்குநிகர் மங்கைக்கும் "கடைசி
யாகச்
சிலபேச்சுப் பேசிடுக" என்றுசொல்லித் தலைப்பாகை அதிகாரி விடைதந்
திட்டான்; தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான்:
"பேரன்பு
கொண்டவரே, பெரியோ ரே,என்
பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்! நீரோடை நிலங்கிழிக்க, நெடும
ரங்கள்
நிறைந்துபெருங் காடாக்கப், பெருவி லங்கு நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக்
கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம் போராடும் பாழ்நிலத்தை அந்த
நாளில்
புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கிச்
சிற்றூரும், வரப்பெடுத்த
வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி
ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கனிகள்
வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை? பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு
லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?
அக்கால உலகிருட்டைத் தலைகீ
ழாக்கி
அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்! இக்கால நால்வருணம் அன்றி
ருந்தால்
இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப் புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்
புனலுக்கும் அனலுக்கும் சேற்றி னுக்கும் கக்கும்விஷப் பாம்பினுக்கும்
பிலத்தி னுக்கும்
கடும்பசிக்கும் இடையறா நோய்க ளுக்கும்,
பலியாகிக் கால்கைகள் உடல்கள்
சிந்தும்
பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச் சலியாத வருவாயும் உடைய தாகத்
தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம் எலியாக முயலாக இருக்கின் றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோ ன் புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக்
கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?
அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண்
டாக
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான் சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும்
நானும்
சாவதென்ற தீர்ப்பளித்தான்; சாவ வந்தோம்! ஒருமனிதன் தேவைக்கே இந்தத்
தேசம்
உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்! இருவர் இதோ சாகின்றோம்! நாளை
நீங்கள்
இருப்பதுமெய் என்றெண்ணி யிருக்கின் றீர்கள்!
தன்மகளுக் கெனைஅழைத்துக்
கவிதை சொல்லித்
தரச்சொன்னான், அவ்வாறு தருங்கா லிந்தப் பொன்மகளும் எனைக்காதல் எந்தி
ரத்தால்
புலன்மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பி விட்டேன்! என்உயிருக் கழவில்லை!
அந்தோ! என்றன்
எழுதாத சித்திரம்போல் இருக்கு மிந்த மன்னுடல்வெட் டப்படுமோர் மாப
ழிக்கு
மனநடுக்கங் கொள்ளுகின்றேன்! இன்னும் கேளீர்;
தமிழறிந்த தால்வேந்தன்
எனை அழைத்தான்;
தமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள்! அமுதென்று சொல்லுமிந்தத்
தமிழ்,என் னாவி
அழிவதற்குக் காரணமா யிருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ ? உமைஒன்று வேண்டுகின்றேன்.
மாசில் லாத
உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!
அரசனுக்குப் பின்னிந்தத் தூய
நாட்டை
ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ?
அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான்! சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது
போக்கும்
சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை! அரசன்மகள் தன்நாளில் குடிகட்
கெல்லாம்
ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்!
ஐயகோ சாகின்றாள்! அவளைக்
காப்பீர்!
அழகியஎன் திருநாடே! அன்பு நாடே! வையகத்தில் உன்பெருமை தன்னை, நல்ல
மணிநதியை, உயர்குன்றைத் தேனை அள்ளிப் பெய்யுநறுஞ் சோலையினைத் தமிழாற்
பாடும்
பேராவல் தீர்ந்ததில்லை! அப்பே ராவல் மெய்யிதயம் அறுபடவும், அவ்வி ரத்த
வெள்ளந்தான் வெளிப்படவும் தீரு மன்றோ?
வாழியஎன் நன்னாடு பொன்னா
டாக!
வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே! வீழியபோய் மண்ணிடையே விண்வீழ்
கொள்ளி
வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி! ஏழையினேன் கடைசிமுறை வணக்கம்
செய்தேன்!
என்பெரியீர், அன்னையீர் ஏகு கின்றேன்! ஆழ்கஎன்றன் குருதியெலாம் அன்பு
நாட்டில் ஆழ்கமுஎன்றான்! தலைகுனிந்தான் கத்தி யின்கீழ்!
படிகத்தைப்
பாலாபி ஷேகம் செய்து
பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம் அடிசோர்தல் கண்டார்கள் அங்கி
ருந்தோர்!
ஆவென்று கதறினாள்! "அன்பு செய்தோர் படிமீது வாழாரோ?" என்று சொல்லிப்
பதைபதைத்தாள்! இதுகேட்ட தேச மக்கள் கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்;
அந்தக்
கொலையாளர் உயிர்த்தப்ப ஓட லானார்!
கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி
தந்தார்!
காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்; "புவியாட்சி தனிஉனக்குத் தாரோம்
என்று
போயுரைப்பாய்" என்றார்கள்! போகா முன்பே, செவியினிலே ஏறிற்றுப் போனான்
வேந்தன்!
செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டா ருக்கே நவையின்றி யெய்துதற்குச் சட்டம்
செய்தார்!
நலிவில்லை! நலமெல்லாம் வாய்ந்த தங்கே!

1.3. வீரத்தாய்
காட்சி
1 [மணிபுரி
மாளிகையில் ஓர் தனி இடம். சேனாபதி காங்கேயனும் மந்திரியும்
பேசுகின்றனர்]
சேனாபதி: மன்னன் மதுவினில் ஆழ்ந்து
கிடக்கின்றான்! மின்னல்நேர் சிற்றிடை ராணி விஜயா நமக்கும் தெரியாமல்
எவ்விடமோ சென்றாள். அமைப்புறும் இந்த மணிபுரி ஆட்சி எனக்கன்றோ! அன்றியும்
என்னரும் நண்ப! உனக்கே அமைச்சுப் பதவி உதவுவேன்!
மந்திரி: ஒன்றுகேள்
சேனைத் தலைவ! பகைப்புலம் இன்றில்லை; ஆயினும் நாளை முளைக்கும். அரசியோ
வீரம், உறுதி அமைந்தாள்! தரையினர் மெச்சும் சர்வ
கலையினள்!
சேனாபதி: அஞ்சுதல் வேண்டாம் அவளொரு
பெண்தானே!
மந்திரி: நெஞ்சில்நான் பெண்ணை எளிதாய்
நினைக்கிலேன்.
சேனாபதி: ஆடை, அணிகலன், ஆசைக்கு வாசமலர் தேடுவதும்,
ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும், அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல்
வாழுவதும் கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம், மானிடர் கூட்டத்தில்
வலிவற்ற ஓர்பகுதி! ஆனமற் றோர்பகுதி ஆண்மை எனப்புகல்வேன்! எவ்வாறா
னாலும்கேள்! சேனையெலாம் என்னிடத்தில்! செய்வார்யார் நம்மிடத்தில் சேட்டை?
இதையோசி!
மந்திரி: [சிரித்துச் சொல்வான்] மானுஷிகம் மேல்என்பார்,
வன்மை உடையதென்பார் ஆன அதனை அளித்ததெது ? மீனக் கடைக்கண்ணால் இந்தக்
கடலுலகம் தன்னை நடக்கும்வகை செய்வதெது? நல்லதொரு சக்தி வடிவமெது? மாமகளிர்
கூட்டமன்றோ? உன்சொற் கொடிது! குறையுடைத்து! மேலும் அதுகிடக்க; மன்னன்
இளமைந்தன் எட்டு வயதுடையான், இன்னும் சிலநாளில் ஆட்சி
எனக்கென்பான்!
சேனாபதி: கல்வியின்றி யாதோர் கலையின்றி,
வாழ்வளிக்கும் நல்லொழுக்க மின்றியே நானவனை ஊர்ப்புறத்தில் வைத்துள்ளேன்;
அன்னோன் நடைப்பிணம்போல் வாழ்கின்றான். இத்தனைநாள் இந்த இரகசியம்
நீயறியாய்!
மந்திரி: ஆமாமாம் கல்வியிலான் ஆவி யிலாதவனே! சாமார்த்திய
சாலி தந்திரத்தில் தேர்ந்தவன்நீ! உன்எண்ணம் என்னசொல்? நான்உனக்
கொத்திருப்பேன்! முன்னால் செயப்போவ தென்ன
மொழிந்துவிடு!
சேனாபதி: ராசாங்கப் பொக்கிஷத்தை நாம்திறக்க
வேண்டும்;பின் தேசத்தின் மன்னனெனச் சீர்மகுடம் நான்புனைந்தே ஆட்சிசெய
வேண்டும்என் ஆசையிது! காலத்தை நீட்சிசெய வேண்டாம்; விரைவில்
நிகழ்விப்பாய்!
மந்திரி: பொக்கிஷத்தை யார்திறப்பார்? பூட்டின்
அமைப்பைஅதன் மிக்க வலிமைதனைக் கண்டோ ர் வியக்கின்றார். தண்டோ ராப் போட்டுச்
சகலர்க்கும் சொல்லிடுவோம் அண்டிவந்து தாழ்திறப்பார்க் காயிரரூ
பாய்கொடுப்போம்.
சேனாபதி: தேவிலை!நீ சொன்னதுபோல் செய்துவிடு
சீக்கிரத்தில் ஆவி அடைந்தபயன் ஆட்சிநான் கொள்வதப்பா!
காட்சி 2
[சேனாதிபதி அரச குமாரனாகிய சுதர்மனை மூடனாக்கி வைக்கக் கருதிக்
காடுசேர்ந்த ஓர் சிற்றூரில் கல்வி யில்லாத காளிமுத்து வசத்தில் விட்டு
வைத்திருக்கிறான். கிழவர் ஒருவர் காளிமுத்தை நண்பனாக்கிக்கொண்டு உடன்
வசிக்கிறார்.]
காளிமுத்து: என்னா கெழவா? பொடியனெங்கே?
இங்கேவா! கன்னா பின்னாஇண்ணு கத்துறியே என்னாது? மாடுவுளை மேய்க்கவுடு!
மாந்தோப்பில் ஆடவுடு! காடுவுளே சுத்தவிடு! கல்விசொல்லித்
தாராதே!
கிழவர்: மாட்டினொடும் ஆட்டினொடும் மன்னன்
குமாரனையும் கூட்டிப்போய் வந்திடுவேன்; குற்றமொன்றும் நான்புரியேன்! மன்னன்
மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ ஒன்றும் வராமேஉன் உத்தரவு
போல்நடப்பேன்!
காளிமுத்து: ஆனாநீ போய்வா, அழைச்சிப்போ
பையனையும் ஓநாயில் லாதஇடம் ஓட்டு!
காட்சி 3 [கிழவர் ஓர்
தனியிடத்தில் சுதர்மனுக்கு வில்வித்தை கற்றுக்
கொடுக்கிறார்.]
கிழவர்: விற்கோலை இடக்கரத்தால் தூக்கி,
நாணை விரைந்தேற்றித் தெறித்துப்பார்! தூணீ ரத்தில், பற்பலவாம் சரங்களிலே
ஒன்றை வாங்கிப் பழுதின்றிக் குறிபார்த்து, லட்சி யத்தைப் பற்றிவிடு!
மற்றொன்று, மேலும் ஒன்று படபடெனச் சரமரரி பொழி! சுதர்மா, நிற்கையில்நீ
நிமிர்ந்துநிற்பாய் குன்றத் தைப்போல்! நெளியாதே! லாவகத்தில் தேர்ச்சி
கொள்நீ!
சுதர்மன்: கற்போர்கள் வியக்கும்வகை இந்நாள்
மட்டும் கதியற்றுக் கிடந்திட்ட அடியே னுக்கு மற்போரும், விற்போரும், வாளின்
போரும் வளர்கலைகள் பலப்பலவும் சொல்லித் தந்தீர்! நற்போத காசிரியப்
பெரியீர், இங்கு நானுமக்குச் செயும்கைம்மா றொன்றும் காணேன்! அற்புதமாம்!
தங்களைநான் இன்னா ரென்றே அறிந்ததில்லை; நீரும்அதை விளக்க
வில்லை.
கிழவர்: இன்னாரென் றென்னைநீ அறிந்து கொள்ள இச்சையுற
வேண்டாங்காண் சுதர்மா. என்னைப் பின்னாளில் அறிந்திடுவாய்! நீறு
பூத்த பெருங்கனல்போல் பொறுத்திருப்பாய்; உன் பகைவன் என்பகைவன்; உன்னாசை
என்றன் ஆசை! இஃதொன்றே நானுனக்குச் சொல்லும் வார்த்தை மின்னாத வானம்இனி
மின்னும்! அன்பு வெறிகாட்டத் தக்கநாள் தூர மில்லை!
காட்சி 4
[சுதர்மனும் கிழவரும் இருக்குமிடத்தில் தண்டோ ராச் சத்தம்
கேட்கிறது.]
தண்டோ ராக்காரன்: அரசாங்கப் பொக்கிஷத்தைத் திறப்பா
ருண்டா? ஆயிரரூபாய் பரிசாய்ப் பெறலாங் கண்டீர்! வரவிருப்பம் உடையவர்கள்
வருக! தீம்!தீம்! மன்னர்இடும் ஆணையிது தீம்தீம்
தீம்தீம்!
கிழவர்: சரிஇதுதான் நற்சமயம்! நான்போய் அந்தத் தறுக்குடைய
சேனாதி பதியைக் காண்பேன் வரும்வரைக்கும் பத்திரமாய் இரு!நான்
சென்று வருகிறேன் வெற்றிநாள் வந்த தப்பா!
காட்சி 5
[மந்திரியின் முன்னிலையில் கிழவர் அரசாங்கப் பொக்கி ஷத்தைத்
திறந்தார். மந்திரி கிழவரைக் கூட்டி கொண்டு சேனாதிபதியிடம்
வந்தான்.]
மந்திரி: தள்ளாத கிழவரிவர் பொக்கி ஷத்தின் தாழ்தன்னைச்
சிரமமின்றித் திறந்து விட்டார்!
சேனாபதி: கொள்ளாத ஆச்சரியம்! பரிசு
தன்னைக் கொடுத்துவிடு! கொடுத்துவிடு! சீக்கி
ரத்தில்!
மந்திரி: விள்ளுதல்கேள்! இப்பெரியார் நமக்கு
வேண்டும். வேலையிலே அமைத்துவிடு ராசாங் கத்தில்!
சேனாபதி: உள்ளதுநீ
சொன்னபடி செய்க, (கிழவரை நோக்கி) ஐயா, ஊர்தோறும் அலையாதீர்! இங்கி
ருப்பீர்!
கிழவர்: அரண்மனையில் எவ்விடத்தும் சஞ்ச
ரிக்க அனுமதிப்பீர்! என்னால்இவ் வரசாங் கத்தில் விரைவில்பல ரகசியங்கள்
வெளியாம்! என்று விளங்குகின்ற தென்கருத்தில்! சொல்லி
விட்டேன்.
சேனாபதி: பெரியாரே, ஆவ்வாறே! அட்டி
யில்லை.
மந்திரி: பேதமில்லை, இன்றுமுதல் நீரு மிந்த அரசபிர
தானியரில் ஒருவர் ஆனீர். அறிவுபெற்ற படியாலே எல்லாம்
பெற்றீர்!
காட்சி 6 [சேனாபதி காங்கேயன், தானே மணிபுரி
அரசனென்று நாளைக்கு மகுடாபிஷேகம் செய்துகொள்ளப் போகிறான்.
வெளிநாட்டரசர்களும் வருகின்ற நேரம். மந்திரி நாட்டின் நிலைமையைச்
சேனாபதிக்குத் தெரிவிக்கிறான்.]
மந்திரி: மணிபுரி மக்கள்பால் மகிழ்ச்சி
யில்லை! அணிகலன் பூண்கிலர் அரிவை மார்கள்! பாடகர் பாடிலர்! பதுமம்
போன்ற ஆடவர் முகங்கள் அழகு குன்றின! வீதியில் தோரணம் விளங்க
வில்லை! சோதி குறைந்தன, தொல்நகர் வீடுகள்! அரச குலத்தோர் அகம்
கொதித்தனர்! முரசு எங்கும் முழங்குதல் இல்லை!
சேனாபதி: எனக்குப்
பட்டம் என்றதும், மக்கள் மனத்தில் இந்த வருத்தம் நேர்ந்ததா? அராஜகம்
ஒன்றும் அணுகா வண்ணம் இராஜ சேவகர் ஏற்றது செய்க! வெள்ளி நாட்டு வேந்தன்
வரவை, வள்ளி நாட்டு மகிபன் வரவைக் கொன்றை நாட்டுக் கோமான் வரவைக் குன்ற
நாட்டுக் கொற்றவன் வரவை ஏற்றுப சரித்தும் இருக்கை தந்தும் போற்றியும்
புகழ்ந்தும் புதுமலர் சூட்டியும் தீதற நாளைநான் திருமுடி புனைய ஆதர வளிக்க
அனைத்தும் புரிக!
மந்திரி: ஆர வாரம்! அதுகேட் டாயா? பாராள் வேந்தர்
பலரும் வரும்ஒலி!
சேனபதி: லிகிதம் கண்ட மன்னர் சகலரும் வருகிறார்
சகலமும் புரிகநீ!
காட்சி 7 [அயல்நாட்டு வேந்தர்கள் வந்தார்கள்;
சேனாபதி அவர்களை வரவேற்றுத் தனது மகுடாபிஷேகத்தை ஆதரிக்க
வேண்டுகிறான்.]
சேனாபதி: மணிபுரியின் வேந்தனார் மதுவை
யுண்டு மனங்கெட்டுப் போய்விட்டார்; விஜய ராணி தணியாத காமத்தால் வெளியே
சென்றாள். தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான், அணியாத அணியில்லை!
அமுதே உண்பான். அருமையுடன் வளர்த்துவந்தும் கல்வி யில்லை. பிணிபோல
அன்னவன்பால் தீயொ ழுக்கம் பெருகினதால் நாட்டினரும் அமைச்சர்
யாரும்
என்னைமுடி சூடுகென்றார். உங்கட் கெல்லாம் ஏடெழுதி னேன்நீரும்
விஜயம் செய்தீர்; சென்னியினால் வணங்குகின்றேன். மகுடம் பூணச் செய்தென்னை
ஆதரிக்க வேண்டு க |