|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > Saratha
The Rape of Saratha
விசாரணையும் விடுவிப்பும்
A poem by Raj Swarnan
5 January 2000

[see also Sri Lanka Navy gang rapes and murders
Sarathambal, a Brahmin Tamil Girl.]
இலங்கையின் யாழ்ப்பாணக்குடா நாட்டை அண்டிய புங்குடுதீவுப் பகுதியில் சாரதாம்பாள் என்னும் பிராமணப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு கடித்துக் குதறப்பட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளாள். இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் படி ஸ்ரீலங்கா ஜனாதிபதி பணித்துள்ளார். எனினும் ஒரு வாரமாகியும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. இப் பகுதி இலங்கைக் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
ஓ.. நாய்களே..
கடித்துக் குதறுங்கள் - உங்கள்
காம இச்சை தீரும் வரை
நீங்கள்
என்ன செய்தாலும்
ஏது செய்தாலும்
தட்டிக் கேட்கும் தைரியம்
யாருக்குண்டு இத் தரணியில்?
நடந்த கதையைச் சொல்லி
முன்று மணித்தியாலமாய் முக்கைச் சிந்த
அப்பாவித் தமிழனிடம்
தொலைக்காட்சியா இருக்கிறது?
நாங்கள் செத்தாலும் பிழைத்தாலும்
என்ன நடந்ததென்று
எடுத்துச் சொல்லும்படி
பீபீசீ வந்து
பேட்டி காணப் போகிறதா?
விழுந்தடித்து வாருங்கள்..
விக்கினமின்றி உங்கள்
விடுவிக்கும் திருப்பணியை
விரைவாய்த் தொடருங்கள்..
எதுவும் நடக்காது..
தயங்காது வாருங்கள்..
வந்து வடிவாய் - உம்
வக்கிரத்தைத் தீருங்கள்..
எல்லாம் நடந்த பின் தான்
ஏதும் விசாரணை நடக்கும்..
கண்கெட்ட பின் தானே
பலருக்கு இங்கு
சூரிய நமஸகாரம் செய்ய வேண்டுமென்ற
சுரணையே வருகிறது..
விசாரணை முடிந்து
தீர்ப்பு வருமுன்
இன்னொரு சாரதாம்பாள்
இல்லாமலா போய்விடுவாள்?
சாமிக்குப் படையலிட்ட
சாரதாம்பாள் - இன்று
நேவிக்குத் தன்னுடலைத்
தானமாய்த் தந்தாள்..
ஆமிக்கும் நாளை மீண்டும்
அமுதாய்ப் போவதற்கு
அப்பாவிப் பெண்ணுடல்கள்
ஆயிரம் உண்டன்றோ?
விசாரணை ஒருபுறம்
நடந்து கொண்டிருக்கட்டும்..
விடுவிப்பு மறுபுறம்
தொடர்ந்து கொண்டிருக்கட்டும்..
ஓ மானுட சமுதாயமே.. - உன்
மனச்சாட்சிக்கு என்னவாயிற்று?
நானும் பெண்தான் என்று
பெண்வேடம் போட்டுப்
பேச்சுக்கு ஒப்படிக்கும்
பேடிகளின் கதையை
இன்னுமா நம்புகிறாய்?
நானும் தாய் தான் என்று
நயவஞ்சக வேடமிடும்
நரிப்பிறவிகளில் - உனக்கு
இன்னுமா நம்பிக்கை?
புத்தாயிரமாண்டில்
புகுந்துள்ள உலகமே - எம்
புங்குடு தீவுப்பக்கம்
சற்றே வந்து பார்..
உதட்டுச் சமாதானம் பேசும்
உத்தமியர் கட்டளைக்கீழ்
விடுவிக்க வந்தவரின்
விளையாட்டைக் கொஞ்சம் நீ
தட்டிக் கேட்காவிட்டாலும்
எட்டிப் பார்த்துவிட்டுப் போ..
எங்களுக்காய் எதுவும் நீ
பெரிதாய்ச் செய்ய வேண்டாம்..
உயர் மட்டங்களில் ஏதும்
உரசல் காயம் பட்டால் தானே
உரத்த சத்தம் உன்
வாய் வழி புறப்படும்..
ஆனாலும்..
உன்னிடம் ஓர் உதவி..
இருட்டறையில் இருந்து கொண்டு
இராட்சதர்களைத் தேடும்
இந்தக் குருட்டுப் பிறவிகளுக்கு - ஓர்
இலெக்றிக் லாம்பு
இனாமாகக் கொடுப்பாயா?
விஷ ஜந்துக்கள் எங்கே
விருத்தியாகின்றன என்று
இனியாவதிவர்கள்
வெளிச்சம் போட்டுப் பார்க்கட்டும்..